கணபதி  துணை

திருச்சிற்றம்பலம்

                                மாணிக்கவாசக  சுவாமிகள்

                                               அருளிச்செய்த

திருவாசகம்  –  திருவெம்பாவை

                                         கதிர்மணி  விளக்கம்

                                                                  என்னும் பேருரை

                                            மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

                                                சைவசித்தாந்த வித்தகர்  பண்டிதமணி

                                                                மு.  கதிரேசச்செட்டியார்

                                                                              இயற்றியது.

                                     பண்டிதமணியின்  வரலாறு

             பண்டிதமணி மு . கதிரேசச்செட்டியார் அவர்கள் தலைசிறந்த தமிழ் மணி. நகரத்தார் மரபில் தோன்றிய பெருமணி . புலவர்க்கெல்லாம்  புலவராய் விளங்கிய அறிவு மணி. இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியருள் ஒப்பற்ற புகழ்மணி.

           பண்டிதமணி மகிபாலன்பட்டியில்  16-10-1881 ல்  பிறந்தனர். கல்வியில் ஆராக்காதல்  கொண்டு தமது சொந்த முயற்சியால் கணக்கற்ற  நூல்களைத் தாமே கற்றனர்.  தென்மொழி, வடமொழியாகிய மொழிகளில் கற்றுத்துறை போகிய காரணத்தால்  அறிஞரின் அன்பையும் மதிப்பையும் பெற்றனர். எம் சபையினரால் பண்டிதமணி என்ற  பட்டத்தையும்,  புலவர் பெருமக்களால் முதுபெரும் புலவர்  என்ற  பட்டத்தையும்  அரசினரால்  மகாமகோபாத்தியாயர் என்ற  அரிய  பட்டத்தையும்  பெற்றனர்.

              இவர்கள்  பண்டையத்  தமிழ்ச் சங்கம்  போல  ஒரு  சங்கம்  அமைத்துத் தமிழும்,  சைவமும்,  நலனும்,  வளனும்  பெற்று  ஓங்க அவாவினர். அவ் விருப்பமே மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபை   தோன்ற  வித்தாயிற்று . இன்று  இச்சபை  நாளும்  வளர்ந்து,  தனித் தமிழ்ப் புலவர்  கல்லூரியாம்  கணேசர் செந்தமிழ்க் கல்லூரி முதலாய  உறுப்புக்களோடு சிறந்து  பண்டிதமணி அவர்களின் பெரும்  நினைவுச்சின்னமாக  நிலவுகிறது .

                இச்சபையின் வாயிலாகவே, பண்டிதமணியின்  நூல்கள் முதன் முதலில்  வெளிவந்தன.  சபையின்  வளர்ச்சியிலும் ,  வாழ்விலும்  பண்டிதமணி ஊன்றிய  பற்றும்  ,  உறுதியான  அன்பும்  கொண்டு ஒல்லும் வகையெல்லாம் உதவினர். ஆதலின்  சன்மார்க்கசபையார் , தம்  அன்பையும் நன்றியையும் காட்டும்  முகத்தான் அன்னாருக்கு  மகாமகோபாத்தியாய  டாக்டர் உ. வே. சாமிநாதஐயர்  அவர்கள் தலைமையில்   பண்டிதமணி  என்ற  பட்டத்தை வழங்கினர்.  இச்சிறப்புப்பெயரே  பின்னர் கதிரேசனாரின்  இயற்பெயரினும்  மிகுதியாக  வழங்கிற்று .

                  இவர்கள் தம்  நுண்ணிய மதியால் நூல்கள் சிலவற்றிற்கு உரை  வகுத்தனர் . வடமொழியினின்றும்  சில  பெரும் நூல்களைத் தமிழாக்கம்  செய்தனர். சமயத்துறையின் தெளிந்த அறிவால் தேர்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினர் . இலக்கியங்களைச் சுவைபடவும் , நகைச்சுவை ததும்பவும் சொற்பெருக்காற்றுவதில் இவர்களுக்கு ஈடு இவர்களேயாவர்.  இவர்கள்  ஏறாத மேடையோ, தலைமை வகிக்காத மாநாடுகளோ அந்நாளில் இல்லை எனலாம் .

                   இவர்களால் , திருவாசகத்தின்  பகுதிகளாகிய  திருச்சதகம் , நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகியவற்றிற்குப் பேருரையும், , மண்ணியல் சிறு தேர் , சுக்கிர நீதி , சுலோசனை, உதயனசரிதம் , கௌடிலீயம் , மாலதீ மாதவம், பிரதாபருத்திரீயம் ஆகிய  மொழிபெயர்ப்பு நூல்களும், உரைநடைக்கோவை, சமயக்கட்டுரைகள் , நாட்டுக்கோட்டை நகரத்தாரின் சீர்திருத்தம், சுவாமிநாத  விநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய பல பனுவல்களும் , தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக்  கிடைத்தன .

                      பரந்த  புகழும்  , செறிந்த  அறிவும்  கொண்டு விளங்கிய  பண்டிதமணியவர்களை , அண்ணாமலையரசர்  விரும்பி அழைத்துத் தமது பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கட்டிலில் அமர்த்தி அக்கழகத்திற்குப் பெருமை  சேர்த்தனர்.

                       பண்டிதமணியவர்கள்  சங்கப் புலவர்கள் போல செம்மாப்பும் , கீர்த்தியும் , செல்வாக்கும் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்தனர் . ஏறத்தாழ ஐம்பது  ஆண்டுகள் இடையறாது தமிழ்ப்பணி புரிந்த  “கதிர்மணி” 24-10-53ல் திடீரென ஒளிக்கற்றைகளைச் சுருக்கி மறைவதாயிற்று . இறைவனை எந்நாளும் வழுத்திய  நெஞ்சும் , திருவாசக உரையை அயராது எழுதிய திருக்கைகளும் இவ்வுலகில் ஓய்வு பெற்றுச் சென்று சிவன்  திருவடிக்கீழ் உய்தி பெற்றன.

                        “ சொல்லிய  பாட்டின்  பொருளுணர்ந்து சொல்லுவார்,

                           செல்வர்  சிவபுரத்தின்  உள்ளார்  சிவனடிக்கீழ்ப்

                            பல்லாரும் ஏத்தப்  பணிந்து”

                                                       —————————–

                                                                        சிவமயம்

                                                                    திருவெம்பாவை

                                                                         நூல்முகம்

                                              தமிழ்க்கடல்  ராய.  சொக்கலிங்கம்  அவர்கள்

                                           இயக்குநர், ஆராய்ச்சித்துறை , அழகப்பா  கல்லூரி.

                 இறைவனோடு  பாடலால் நேராகப்பேசும் பேறு பெற்றவர்களுள் மணிவாசகப்பெருமானை நிகர்த்தார் எவருமிலர். தன்னை அடியார்க்குத்  தந்து  அடியாரைத்  தான்  கொண்டதில் சிவபெருமானைவிடத்  தானே சதுரப்பாடு  உடையவர் என்று மணிவாசகர் வழுத்துவது  முகமன் . மணிவாசகரை  ஆட்கொண்டு  , திருவாசகம்  என்ற  எய்ப்பில்  வைப்பைப் பெறும் பேறு  பெற்ற  சிவபெருமானே  சதுரப்பாடுடையார்  என்பது  தேற்றம் . திருவாசகத்தைப்  போன்ற  ஒரு  நுலை  யாரும்  பெற  முடியுமா ? “பாவெனப்படுவது  உன்  பாட்டு “ என்று  மணிவாசகரைப்பார்த்து  , சிவப்பிரகாசர் கூறுவது  முழு  உண்மை. திருவாசகத்தைப்  போற்றாத  புலவர்  இலர் . அதற்குள் நுழைந்தால்   அளவு  கடக்கும் .

                திருவாசகத்திற்கு  ஓர்  பேருரை  இன்றியமையாதது.  “திருவாசகத்திற்கு  உரை  காணக்கூடாது “ என்று  சிலர்  சொல்லுவர் . எனினும்  ஏறத்தாழ  எழுபது  ஆண்டுகட்கு  முன்னரேயே  திருவாசகத்திற்கு  உரை  காணப்பெற்று அச்சாகி  இருக்கின்றது . சொல்லிய பாட்டின் பொருள்  உணர்ந்து  சொல்லுதல்  வேண்டும்  என்பதே  திருவாசக  ஆசிரியர்  கருத்து . எனவே உரை காண்டல்  நூல்  ஆசிரியர்  கருத்துக்கு  மாறுபட்டதன்று .

                   திருவாசகத்திற்கு  விரிவுரை  காணும்  பணியை  முதலில்  மேற்கொண்டவர்  மறைமலை  அடிகள் . திருவாசகத்தின் முதல் நான்கு  பெரிய  பாடல்கட்கும் விரிவுரை எழுதி அடிகள் வெளியிட்டார். ஐந்தாவது  பகுதியாகிய  திருச்சதகம் நூறு  பாடல்களுக்கும் , ஆறாவது  பிரிவாகிய நீத்தல் விண்ணப்பம்  ஐம்பது பாடல்களுக்கும் ,  ஏழாவது  திருவெம்பாவை  இருபது  பாடல்கட்கும் பேருரை  செய்து  , மகாமகோபாத்தியாய-முதுபெரும்புலவர்- சைவசித்தாந்த  வித்தகர்  – பண்டிதமணி- மு. கதிரேசச் செட்டியார் வெளியிட்டார். அப்பேருரையின்  மூன்றாவது  பகுதியாகிய  திருவெம்பாவையின் பதிப்பு  இப்போது  வெளிவருகின்றது .

                      கதிரேசனாரின்  திருவாசக  உரை  விரிந்த  பேருரையாகும் . இவ்வுரைக்கு , “கதிர்மணி  விளக்கப்   பேருரை “ என்று  உரை  ஆசிரியரே  பெயர்  கொடுத்திருக்கின்றார் .  ஒளிமிக்க  திருவாசக  மணியை விளக்கிக்காட்டும்  பெரிய  உரை  என்றும்  கதிரேசனார்  விளக்கிய  பேர்  உரை  என்றும் அமையும் .

                       திருவாசகத்தின்  பகுதியாகிய  இத்  திருவெம்பாவை , நங்கைமார்  பலர்  கூறுந்துறையான்  அமைந்த  கற்பனைக்களஞ்சியம்  . திருவெம்பாவை  இருபது  பாடல்கள்  கொண்டது . இவ் விருபது  பாடல்களின்  விரிவுரையே  இந்நூல், உரை  ஆசிரியர்  தம்  நுண்ணறிவிற்கேற்ப  உரை  கண்ட திட்பத்தை  உரையினுள்  ஆங்காங்குக்  காணலாம்.  அதற்குள் நுழைந்து  மதிப்பிடப்  புகுந்தால்  நூல்முகமும்  , ஒர்  பேருரை  ஆகிவிடும்  என்று  அஞ்சி அப்பணியை  யான் மேற்கொண்டேன் அல்லேன். 

                          திருவெம்பாவை  , யாப்பு  வகையில்  பார்க்குங்கால்  வெண்தளையால்  வந்த  எட்டு  அடிக்  கொச்சக்  கலிப்பா  ஆம் . இதனைப்  பேராசிரியர்  ஒப்புக்கொண்டதாக  , திருவெம்பாவைக்குப்  பேருரை  கண்ட  பண்டிதமணியே  கூறுகின்றார் . எனினும்  எட்டடியாகப்  பதிப்பிக்காமல்  நாலடிப்பாடல்  என்று  கொள்ளுமாப்போல்  , அடிமடக்கித்  தாமும்  பதித்திருப்பது  , முன்னையோர்  முறையைப் பின்பற்றி  , என்று  அவர்  இயம்புகிறார்  இது  உரை  ஆசிரியரின்  பழமைப்பற்றைக்  காட்டுகின்றது  .

                            கதிர்மணி  விளக்கப்  பேருரை  தந்த  இருமொழிப்  புலமைக்  கதிரேசனாருக்குத்  தமிழ்நாடு  பெரிதும்  கடமைப்பட்டிருக்கிறது  . இவ்வுரையின்  சிறப்பைப்பற்றி,  மாசற்ற  உள்ளம்  படைத்த  கவிமணி  தேசிக  விநாயகனார்  பாராட்டிச்  சொல்லிய  சில  பாடல்களை  ஈண்டுக்  காண்போம் .

                     “வையகம்  போற்றுதிரு  வாசகத்தின்  உட்பொருளைக்

                      கையிற்  கனியாகக்  காட்டினனால் – செய்யதமிழ்ப்

                      பேரா  சிரியர்  பெருமான்  கதிரேசன் 

                       ஆராய்ந்து  முற்றும்  அறிந்து “

                       வாசகம்  எல்லாம்  மணிவா  சகமாமோ?

                      காசெல்லாம்  காணும்பொற்  காசாமோ? – பேசுலகில்

                      மன்னுஉரை  எல்லாம்  மகிபால  மாநகரான்

                      சொன்ன  உரைக்கு  ஈடாமோ  சொல்? “

 

                   

                 என்று  இயம்பிய     கவிமணியுடன்  சேர்ந்து  கதிர்மணி  விளக்கப்  பேருரையை  நானும்  பாராட்டுகின்றேன் .  பண்டிதமணியோடு  நேரில்  அவ்வளவு  நெருங்கிப்பழகாத    கவிமணி  , கதிர்மணி  விளக்கப்  பேருரையைப்  படித்து , பண்டிதமணிபால்  எல்லையற்ற  மதிப்பு  வைத்திருந்தார்  என்பதை  ,  பண்டிதமணி  கதிரேசனார்  இவ்வுலக  வாழ்வு  நீத்தபோது  , கவிமணி  பாடிய  பின்வரும்  ஓர்  அரிய  வெண்பா  எடுத்துக்காட்டும் .

                      “என்று  வருவான்  எமனென்று  எதிர்நோக்கி

                        நின்று  தளர்கின்றேன்  நித்தலுமே – மன்றில் 

                         நடங்கண்ட   ஈசன்  நடராசன்  பாதத்து 

                         இடங்கண்டு  வைநீ  எனக்கு .”

                     இந்த  இணையற்ற  பாட்டு  , பண்டிதமணி  இறைவன்  திருவடி நிழலை  எய்தினார்  என்ற  கவிமணியின்  நம்பிக்கையையும் , உயிருக்கும்  உடலுக்கும்  இடையில்   ஊசலாடிக் கொண்டிருக்கும்   தாங்க  முடியாத  தமது  ஆற்றாமையையும்  தெள்ளெனக்  காட்டுகின்றது .

 

                    “ கல்லைப்  பிசைந்து  கனியாக்க  வல்லான் எம்

                       தில்லைப்  பெருமான்  திருவருளால் – நல்லஒரு

                       வாடா  விளக்காக  வாழ்க  மணிவிளக்கம்

                       நீடாழி  சூழும்  நிலத்து .”

 

                   என, கவிமணியைப்  போலவே  கதிர்மணி விளக்கத்தை நானும்  வாழ்த்துகின்றேன் .

                                                                                                                         ராய. சொ.

                                                                                                                         கரைக்குடி

                                                                                                                          26-08-64

                                                  ——————————————–

கணபதி துணை

பதிப்புரை

“பாட்டுக்  குருகும்  பரமன்  திருவருளை

வேட்டுப்  புகழ்ந்துருகும்  மெய்யன்பர் – பாட்டின்

பொருளுணர்ந்து  கூறப்  புகலருமவ்  வண்ணல்

திருவடியை  நெஞ்சமே  செர்.”

தமிழ்  மொழி  மாண்பையும்  சைவ  சமய  உண்மைகளையும்  அழுந்தியுணர்ந்து  பொதுவாக  இவ்வுலகத்திற்கும்  , சிறப்பாகத்  தமிழ்  நாட்டிற்கும்  சிறந்த  பயன்  விளையும்  வண்ணம்  திருவாசகம்  அருளிச்  செய்த  அருள்  வள்ளளாகிய  மாணிக்கவாசக  சுவாமிகளின்  பெருமை  இவ்வுலகம்  அறிந்ததொன்று  . அவர்கள்  சிவானுபவத்தில்  தலைநின்று  கல்லும்  கரையும்  வண்ணம்  திருவாய்  மலர்ந்தருளிய  இனிய  திருவாசகப்  பாட்டுக்கள்  ஓதுவார், கேட்பார்  எல்லோரையும்  கரையிலா  இன்பக்  கடலுள்  திளைப்பித்து  இம்மை, மறுமை,  வீடு  ஆகிய  மும்மை  நலங்களையும்  விளைக்கும்  இயல்பின; இசை  நலத்திற்கேற்ற  இனிமை  மிக்க  சொற்றொடர்களும்  பொருணுட்பங்களும்   அமையப்பெற்றன.  நவிறோறும்  நூனயம், புதியன  புதியனவாகத்   தோற்றிப்  பரவசப்படுத்தும்  பான்மைய.  இத்தகைய  இன்பப்  பாட்டுக்களாலாகிய  திருவாசகத்தை  யான்  பண்டை  நல்வினை  வயத்தால்  பலகாலம்  ஆராய்ந்து பயின்று  வருங்கால்  அதன் கட் கண்ட  அரியவுண்மைகளை  இயன்றளவு  சொற்பொழிவு  முகமாகவும்  கட்டுரை  வடிவிலும்  வெளிப்படுத்தியதுண்டு . பின்  அன்பர்கள் குறிப்பின்  வண்ணம்  கதிர்மணி  விளக்கம்  என்னும்  பெயரால்  திருச்சதகம்  , நீத்தல்  விண்ணப்பம்  என்னும் பகுதிகளுக்கு  உரை  எழுதி  வெளியிட்டேன்  . மேன்மேலும்  அறிவுடையார் ஆதரவு  ஊக்கமுறுத்தி  வந்ததால் இப்பொழுது  திருவெம்பாவைக்கு  உரை  எழுதி  வெளியிடலானேன் .

இவ்வுரையை  எழுதிமுடித்து  அச்சிட  எண்ணியிருக்கும்  பொழுது  அன்பு  முறையில்  என்  உடல்  நலம்  வினாதற்கு  இங்கு  வந்த  கொத்தமங்கலம்  என்  நண்பர்  திருவாளர்  சி. ராம. மு. லெ. இலக்குமணச்  செட்டியார்  அவர்கள்  இதன்  வெளியீட்டிற்கு  வேண்டும்  பொருட்  செலவைத்  தாமே  செய்வதாகக்  கூறி  உதவினார்கள் . அவர்கள்  கல்வி  கேள்விகளில்  ஆர்வமும் , கடவுட்பத்தி  முதலிய  சைவ  ஒழுக்கமும்,  அறிவுடையோர்  குழுவில்  கூடி  மகிழும்  பெருமையும்  உடையவர்கள். எனக்கு  நெடுநாட்  பழக்கமுடைய  நண்பர் . கற்றோரை  மதித்துப்  பெருமைப்படுத்தும் குணமுடைய  அவர்கள் செய்த  இந்த நல்லுதவி  என்றும்  நினைவுகூறத்தக்கது . அவர்கள் இன்னும்  பல்லாண்டு  சிவநெறி  நின்று , அறம்பல  புரிந்து , உடல் நலமும்,  உள நலமும்  பெற்று  வாழும்  வண்ணம்  இறையருளை  வேண்டுகின்றேன் .

என்  இனிய  நண்பர்  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்துத்  தமிழாசிரியர்  வித்துவான்  திரு. க. வெள்ளைவாரணனார்  அவர்கள்  சிறந்த  முகவுரை  எழுதி  உதவினர். இவ்வுரைநூலை  அச்சிடுங்கால்  பிழை  நேராவண்ணம்  ஆராய்ந்து  திருத்தி  உதவியவர்கள்  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்துத்  தமிழாசிரியரும்  என்பால்  என்றும்  பிறழாத  மெய்யன்புடையாருமாகிய  வித்துவான்  திரு. மு . அருணாசலம்  பிள்ளையவர்கள்  ஆவர் . அன்புரிமைபற்றி  உதவிபுரிந்த  இவர்கள்  எல்லோருக்கும்  என்  நன்றியறிவைப்  புலப்படுத்திக்கொள்கிறேன் .

இவ்வரிய  பணியை  நிறைவேற்றியருளிய  ஆண்டவன்  திருவருளையும்  , சிறியேன்  நினைவிற்றோன்றி  பொருளுண்மை  தெளிவித்த  அடிகளின்  அருட்  பெருக்கையும்  நினைந்து  நினைந்து  இன்புறுகின்றேன் .

                                                                                                                         மு. கதிரேசன் 

மகிபாலன்பட்டி,

18 – 01 – 1953

குறிப்பு –  பாவைப் பாட்டும்  , அம்மானைப்  பாட்டும்  நான்கு  அடியினகந்து   பத்தடியளவும்  வரும்  கொச்சகமாகும்  என்று  பேராசிரியர் [பக்கம் -4]  கூறியபடி  இத்திருவெம்பாவைப்பாட்டு  எட்டு  அடியான்  வந்த  கொச்சகமாகும் . ஆயினும்  முன்னையோர்  பதிப்பித்த  முறையைத்  தழுவி  ஈண்டுப்  பதிப்பிக்கலாயிற்று. 

குன்றக்குடி  திருவண்ணாமலையாதீனம்

மகாசந்நிதானம்

அருட்டிரு.  தெய்வசிகாமணி  அருணாசல  தேசிக  பரமசாரிய

சுவாமிகள்  வழங்கிய

வாழ்த்துரை

                திருவாசகம்  தமிழகத்தின்  தவநூல் ;  ஞானப்  பனுவல் ; பத்திப்பெருநூல் ; தத்துவக்  கருவூலம் ; உணர்ந்த  உள்ளத்திலிருந்து  எழுந்த  உயர்ஞான  மொழிகள் ; அறிவாற்  சிவனேயாய  மணிவாசகரின்  மணிமொழிகள் ; காதலால்  கசிந்து  கண்ணீர்  மல்கிய  வாதவூரரின்  வண்மைத்  தமிழ்; ஆணவமல  வெப்பத்தைத்  தணிவிக்கும்  தண்ணருள்  நிறைந்த  திருமொழி ; பிறவிப்  பெருநோய்  தீர்க்கும்  பெருமருந்து .

                   துணையின்றி  அறியமுடியாத  பசு  அறிவாலும்  பாச  அறிவாலும்  முதல்வனை  அறிய  முடியாது .  இவ்விரு  அறிவாலும்  அறியப்படாத  முதல்வனை  அம்முதல்வனுடைய  திருவடிஞானத்தால்  உயிராகிய  தன்னறிவின்  கண்ணே  ஆராய்ந்து  அறிதல்  வேண்டும்  . அதாவது , அவன்  திருவடி  ஞானத்தால்  அவனை  அறிதல்  வேண்டும்  என்பதாகும் . இப்படி  ஆராய்ந்து  அறிந்த  ஞானச் செல்வர்  மணிவாசகர் ; சித்தம்  சிவமேயாயவர் ;   காணும்  கரணங்களெல்லாம்  சிவகரணமேயாயவர் ; எங்கும்  சிவமேயாய  காட்சியில்  திளைத்த  திருவருட் செல்வர். மணிவாசகரின் மணிமொழிகள்  ஊன்  கலந்து  உயிர்  கலந்து  உவட்டாமல்  இனிக்கும்  தகையன;  எழுமைக்கும்  இறவாத  இன்ப  உணர்ச்சியை  ஊட்டுவன.

                     திருவாசகத்துள்  திருவெம்பாவை  இன்பப்பெருக்கை  இனிதூட்டும்  பாடல்களைக்கொண்ட  பகுதி . பாச  இருள்  நீக்கி, நீங்காத  பேரருளைத்  தந்து  தலையளி  செய்யும்  சிவனது  பேரருளை  வியந்த  பகுதி.  “எங்கை  உனக்கல்லாது  எப்பணியும்  செய்யற்க”  என்ற  உறுதிமொழியைக்  கொள்க  என்று  உயிர்களுக்கு  உணர்த்தும்  திருப்பாடல்  திருவெம்பாவையிலே  அமைந்துள்ளது. அருமையில்  எளிய  அழகுடன்  பல்பொருள்  செறிவுற்றுச்  சிறந்தினிது  விளங்கும்   திருவாசகத்தைப்  பொருளுணர்ந்து  அனுபவித்தல்  பெரும்  பயன் தரும் . அத்தகு   அனுபவத்திற்கு  வழிசெய்து  கொடுக்கின்ற  சிவபுண்ணியச்  செயலை  நமது  பண்டிதமணி  சைவசித்தாந்த  வித்தகர்  அவர்கள்  செய்து  வருகின்றார்கள்.  அவர்களுடைய  நுண்மாண் நுழைபுலம்  வியந்து  பாராட்டுதற்குரியது . நுணுகிய  நிலையில் உரைகாணும்  அவர்களது  திறனை  இக்கதிர்மணி  விளக்கத்தில் பரக்கக்  காணலாம் . மெய்கண்ட  சாத்திரங்களின்   அடிப்படையிலே  நின்று  மாணிக்கவாசகரிடத்தும்  அவர்தம்  திருநூலிடத்தும்  அளவுகடந்த  பத்திநிறைந்த  உள்ளத்துடன் உரையை  எழுதி  வருகின்றார்கள். 

“ஓத வுலவா ஒரு தோழந் தொண்டருளன்” என்ற பகுதிக்குக்

கோடற்  பகுதியில்  கொண்டவுரை  கொள்ளத்தக்கது . அதாவது  ஒப்பற்ற  மிகுதியான  தொண்டரையுடையான்  எனக்கூறுவது  .  மற்றும் , 

                        “ பைங்குவளைக்   கார்  மலராற்  செங்கமலப்  பைம்போதால்

                      அங்கங்  குருகினத்தாற்  பின்னும்  அரவத்தால்

                      தங்கண்  மலங்கழுவார்  வந்து  சார்தலினால்

                            எங்கள்  பிராட்டியும்  எங்கோனும்  போன்றிசைந்த”

என்ற  பகுதியின்  உரை  உணர்ந்து  இன்புறத்தக்கது . “இப்பகுதிகள்  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிப்  பக்குவமுள்ள  உயிர்களுக்குச்  செய்யும்  தீக்கை  முறைகளையும்  குறிப்பன”  என்று  கூறி  , பைங்குவளைக்கார்மலர்  நயனதீக்கையையும்  , செங்கமலப்பைம்போது  மானசிக தீக்கையையும்   அங்கங்குருகினம்  பரிசதீக்கையையும்    அரவம்   வாசிகதீக்கையையும்  குறிக்கும்  எனச்  சாத்திர  நுட்பங்களுடன்  எடுத்துக்காட்டியிருப்பது  அவர்களுடைய  சாத்திர  நூற்  பயிற்சிக்கும்  பெரும்  புலமைக்கும்  எடுத்துக்காட்டு.  “வேத  விழுப் பொருள்” “விண்ணுக்கு  ஒரு  மருந்து”  போன்ற  சில  சொற்றொடர்கள்  பண்டிதமணியவர்களின்  புலமைத்  திறத்தால்  அரும்  பெரும்  தொடர்களாகக்  காட்சியளிக்கின்றன.

                 மனங்கரைத்து  மலங்கெடுக்கும்   மணிவாசகத்திற்கு  மாண்பொருளுரை  கண்டு  வழங்கும்   பண்டிதமணியவர்களுக்குத்   தமிழகத்தின்  கைம்மாறு  யாது ? படித்துப்பயன்  பெறுவதுதான் அவர்கள்  விரும்பும்  கைம்மாறு  . தமிழகம்  தக்கவாறு  பயன்  கொண்டு  பண்டிதமணியவர்களை  வாழ்த்தும்  என்று  நம்புகின்றோம்.  கருத்தறிந்து  முடிக்கின்ற  கண்ணுதற்  பெருமானின்  திருவருள், கதிர்மணி  விளக்கப்  பேருரை  முழுவதையும்  தமிழகம்  பெறச்சுரந்து,  பண்டிதமணியவர்களைத்  தமைப்போலவே  இன்பப்பேறுகள்  பலவற்றுடன்  மண்மீது  நிலை பெறுத்துக  என்று  இறைஞ்சுகின்றோம் ; வாழ்த்தி  வணங்குகின்றோம்.

                   நமது  கதிர்மணி  விளக்கப்  பேருரையைச்  சைவத்  தமிழ்  வளர்க்கும்  தொண்டர்  குலத்தைச்  சார்ந்த  நமது  கலைத்தந்தை  திரு.  கருமுத்து . தியாகராசச்  செட்டியார்  அவர்களுக்கு  உரிமைப்படுத்தியிருப்பது  பண்டிதமணியவர்களுடைய  உளப்  பண்பிற்கு  எடுத்துக்காட்டு.

                    தமிழ்க்குடியின்  தனிப்பெருநூலும்  நமது  உயிர்  நூலுமாகிய  திருவாசகத்திற்கு  நவில்தொறும்  நன்னயம்  பயக்கும்  பேருரை  தந்துதவுகின்ற  சைவ  சித்தாந்த  வித்தகர்  அவர்களுக்கு  நமது  நெஞ்சங்  கலந்த  வாழ்த்து .

வாழ்க  மணிவாசகரின்  புகழ் ! வளர்க  நல்லறம் !

வாழ்க  பண்டிதமணி ! வளர்க  கதிர்மணி  விளக்கம் .

 

முகவுரை

திரு. க . வெள்ளைவாரணனார்

தமிழாராய்ச்சித்துறை  விரிவுரையாளர்,

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

இன்பம்  பெருக  எழிற்றிருவெம்  பாவைக்கு

                        நன்புலவர்  போற்றுமுரை  நன்கமைத்தான் – அன்பால்

             மதிசேரும்  பண்டிதநன்  மாமணி  யென்றேத்துங்

                               கதிரேசன்   செந்தமிழோர்  கண்

           யாவர்க்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையானாகிய  இறைவனது  திருவருள்  பெற்ற  செம்புலச்செல்வர்  திருவாதவூரடிகள்  திருவாய்  மலர்ந்தருளிய  திருவாசகம் , திருச்சிற்றம்பலக்கோவை  யென்னும்  இரண்டனுள்  கோவைத்  திருவாசகத்திற்குப்  பேராசிரியர்  திட்பம்  நுட்பஞ்செறிய  அழகியதோர்   உரை  வகுத்துள்ளார்.  அவரது  உரை  முறையைத்  தழுவி  அன்பு  நெறிக்குச்  சிறந்த  இலக்கியமாகத்    திகழும்  திருவாசகத்திற்கும்  அரியதோருரை  புலத்துறை  முற்றிய  பெரியாரொருவரால்   இயற்றப்  பெறுதல்   வேண்டுமென  நெடுங்காலமாகத்  தமிழ்  மக்கள்  விரும்பி  வந்தார்கள்.  அங்ஙனம்  இயற்றப்பெறும்  உரை  தமிழிலக்கண  இலக்கியங்களைக்  கற்றோர்க்கேயன்றி  மற்றையோர்க்கும்  பயன்படும்  வண்ணம்  எளிமையும்  இனிமையும்  உடையதாதல்  வேண்டும்  என்பது  தமிழன்பர்களது   பெருவேட்கையாக  இருந்து  வருகிறது  .

             தமிழரது  நற்றவப்  பயனாக  இப்பெருவேட்கையினை  நிறைவேற்றுதற்கு  முன்வந்த  புலமைச்  செல்வர்  நமது  பேராசிரியப்  பெருந்தகை  மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்  சைவசித்தாந்த  வித்தகர்  பண்டிதமணி  திரு. மு. கதிரேசச்  செட்டியார்  அவர்கள்  ஆவர் .  செந்தமிழும்  ஆரியமுமாகிய  இருமொழிகளிலும்  நிரம்பிய  புலமையுடையராய்க்  காவியச்சுவை  நலங்களை  நுகர்ந்து  தாம்  இன்புற்றும்  அச்சுவை  நலங்களை  நல்லோர்  குழீஇய  பேரவைகளிலே  இனிமையும்  தெளிவும்  பொருந்த  எடுத்துரைத்துப்  பிறரை  இன்புறுத்தியும்  தமிழ்நாடெங்குஞ்  சென்று  தமிழ்  வளர்க்கும்  பேராசிரியராகிய  நம்  பண்டிதமணியவர்கள்  திருவாசகம்  என்னும்  அருளாரமுதப்  பெருங்கடலில்  திளைத்துமுழுகி  அதனகத்து  அமைந்த  அரும்  பெறல்  நன்மணிகளை  வாரி  வழங்குபவர்கள்.  சொல்லிய  பாட்டின்  பொருளுணர்ந்து அரும் பொருள்களைக்  கேட்போர்  மகிழச்  சுவைபெற  விரித்துரைக்கும்  மதிநலம்  வாய்ந்த  பண்டிதமணியவர்கள்  வாயிலாகத்  திருவாசகம்  முழுவதற்கும்  விரிவுரையொன்று  எழுதப்  பெறுதல்  வேண்டுமென்பது  தமிழ்  மக்களது  பெரு  விருப்பமாகும். இவ்விருப்பத்தை நிறைவேற்றக்  கருதிய  நம்  பண்டிதமணியவர்கள்  தமது  முதுமைத்  தளர்ச்சியை  ஒரு  சிறிதும்  பொருட்படுத்தாமல்  திருவாசகத்திற்குக்  கதிர்மணி  விளக்கம்  என்னும்  பேருரையினை  யெழுதிவருகின்றமை  தமிழ்  மக்களது  நற்பேறேயாகும் . 

பண்டிதமணியவர்களால்  எழுதப்பெற்று  வெளிவந்துள்ள  திருச்சதகவுரையும்  ,  நீத்தல்  விண்ணப்பவுரையும்  புலவர்  பாராட்டும்  அருமையும்  பொது  மக்களனைவரும்  விரும்பிப்  பயிலும்  எளிமையும்  ஒருங்கமைந்து  அருமையில்  எளிய  அழகுடையனவாய்ப்  போற்றிப்  பயிலப்  பெற்றுவருதலை  யாவரும்  உணர்வர்.  இவ்வுரையினைத்  தொடர்ந்து  திருவெம்பாவைக்குரிய  விரிவுரையும்  இப்பொழுது  வெளியிடப்  பெறுகின்றது  .  திருவெம்பாவையின்   வரலாற்றையும்  தைந்நீராடல்  மார்கழி  நீராடல்  பற்றிய  செய்திகளையும்  உரைமுகத்தே  பண்டிதமணி  அவர்கள்  தெளிவாக  விளக்கியுள்ளார்கள் .

திருச்சதகத்திற்  பொதுவாகக்  கூறப்பட்ட  பத்திவைராக்கிய  விசித்திரங்களுள்  வைராக்கியத்தின்  சிறப்பியல்பினை  நீத்தல்  விண்ணப்பத்திலும் பத்தியின் விளைவிற்குத்  துணைபுரியும்   உமையம்மையின்  பேருபகாரச்செயலை  இத்திருவெம்பாவையிலும்  அடிகள்  விளக்கியருள்கின்றார்.  இவ்வியைபினைப்  புலப்படுத்தி  நம்  பண்டிதமணியவர்கள்  இத்திருவெம்பாவையுரையினைத்  தொடங்குகின்றார்கள்.  இச்சிறப்பினையுற்று  நோக்குவோர்  பரிமேலழகரது  உரைத்திறம்  இவர்கள்பால்  அமைந்திருத்தலை  நன்குணர்வர்

பண்டைக்காலத்தில்  வாழ்ந்த  சைவ  வைணவக்  கன்னிப்பெண்கள்  மழைவளங்குறித்தும்  சிறந்த  கணவரைப்  பெறுதற்  பொருட்டும்   மார்கழித்திங்கள்  வைகறையில்  நீராடிப்  பராசத்தி யாகிய    உமையம்மையாரை  வழிபட்டு  நோன்பு  மேற்கொண்டொழுகினர்  என்னும்  உண்மையை  விளக்குமுகமாக  இத்திருவெம்பாவைக்குரிய  “சத்தியை வியந்தது” என்னும்  உள்ளுரைப்  பொருளைப்  புலப்படுத்திய  சிறப்பு  நம்  பண்டிதமணியவர்களுக்கேயுரியதாகும்.  அறிவனூற்  பொருளும்  உலகநூல்  வழக்கும்  என  இருபொருளும்  அமையப்பாடிய  திருவாதவூரடிகளது  உளக்கருத்தைத்  தெளிவாக  விளக்கும்  நிலையில்  இத்திருவெம்பாவையுரை  யெழுதப்பெற்றுள்ளமை  வியந்து  போற்றத்தக்கதாகும் .

ஐந்தாண்டு  முதல்  பன்னீராண்டுத்  தொடக்கம்  வரை  ஆண்டு  வகையால்  வேறுபட்ட  கன்னிமைப்  பருவத்து  மகளிர்  எண்மரும்  பாவை  நோன்பினை  மேற்கொள்ளுதற்குரியரெனவும் , பன்னீராண்டுத்  தொடக்கத்தினராய  பெண்கள்  தாமே  துயிலுணர்ந்தெழுந்து  தம்மை யொத்த  பருவத்தினளான  ஒருத்தியை  யெழுப்பினரெனவும் , இம்முறையே பதினொன்று,  பத்து , ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து  என்னும்  வயதினராகிய  மகளிர்  எழுப்பப்பட்டனரெனவும்  திருவெம்பாவையில்   ஒன்று முதல்  எட்டுவரையுள்ள  பாடல்களுக்குப்   பண்டிதமணியவர்கள்  கூறிய  விளக்கம்  வியந்து  பாராட்டத்தக்கதாகும் . இவ்வாறு  திருவெம்பாவைப்  பாடல்கள்  இருபதினையும்  வகைப்படுத்திக்கொண்டு  இவர்கள்  கூறும்  பொருளும் , அப்பாடல்கள்  ஒன்றன்பின்  ஒன்றாகப்  பாடப்பெறுதற்குரிய  இயைபினைப்  புலப்படுத்தும்  முறையும் , பாடல்தோறும்  கூறப்படும்  சொல்நயங்களும்  இலக்கியச்சுவை  நலங்கள்யுணர்வாருக்கு  இனிய  நல்விருந்தாக  அமைந்துள்ளது.

“வாட்டடங்கண்”  எனக்  கண்ணுக்கு  அடைமொழி  கூறியது , வைகறைப்பொழுதில்  ஒளியுடைமையும் அகற்சியும்  இயல்பின்  அமையுமாறு  விழிக்கத்தக்க  கண்கள் , எதிர்மறையான  இருளுடைமையும்  சுருக்கமும்  அமைய  மூடப்பட்டுக் கிடத்தல்  தக்கதன்று  என்னுங்  குறிப்புத்தோன்ற  நின்றது “ எனவும் , மாயாகாரியமாகிய  உலகமெல்லாம்  தோன்றி யொடுங்குதற்குத் தான்  நிலைக்களனாதலன்றித்  தனக்குத்  தோற்றமும்  இறுதியும் இல்லாதவன்  இறைவன்  என்பார்  “ஆதியும்  அந்தமும்  இல்லா என்றார்” எனவும் , இறைவன்  ஞாயிறு  திங்கள்  விண்மீன்  முதலிய  அண்டவெளியாகவும் உடம்பொடு  கூடிய  உயிரறிவோடு  உடனாய்ப்  பிண்டவொளியாகவும்  அங்கிங்கெனாதபடி  எங்கும்  பிரகாசமாய்  விளங்கும்  பேரொளிப்பிழம்பாகிய  அகண்ட  வொளியாகவும்  திகழவும்  மாயாகாரியமாகிய  உலகப்பார்வையுடைய  ஆன்மாக்களால்  உணர்தற்கு  அரியனாவன்  என்பது  தோன்ற   “அரும்பெருஞ்சோதி” என்றார்  எனவும்    “யாம்  என்றது , மன மொழி மெய்களுக்கு  எட்டாத  இறைவன்  திருப்புகழை  யுணர்ந்து  பாடுதற்குத்தகுதியற்ற  மானுடச்சிறுமியராகிய  யாங்கள்  என்பது  பட நின்றது”  எனவும்  முதலாந்  திருப்பாடலில்  கூறப்படும்  விளக்கம்  திருக்கோவையார்க்குப்  பேராசிரியர்  கூறும்  உரைத்திறத்தை  நினைவுபடுத்துகின்றது  . இவ்வாறே  பாடல்  தோறும்  பண்டிதமணியவர்கள்  கூறும்  விளக்கவுரைப்பகுதிகளும்  சொல் நயமும்  “சத்தியை வியந்தது” என்னும்  உள்ளுரைப்பொருளின்  தொடர்பாகக்  கூறும் மெய்ந்நூற்  கருத்துகளும்  மீண்டும் மீண்டும்  படித்து  இன்புறுதற்குரியனவாம் .

            அவ்வப்  பருவத்து  மகளிர்  உளநிலைக்கேற்ப  அவர்கள்  ஆண்டவன்பாற்  கொள்ளவேண்டிய  அன்பினைப்  புலப்படுத்தி  அவர்  தம்  உரையாடற்  பொருளை  விரித்துரைக்கும்  முறையில்  இவ்வுரை  அமைந்துள்ளது .  இவ்வுரையாசிரியர்  ஒவ்வொரு  பாடலிலும்  அதனைக்  கூறினோர்  கேட்டோர்  ஆகியவர்களின் மனநிலையினையும்  பிறசூழல்  நிலைகளையும்  பாட்டின்கண்  அமைந்த  சொற்குறிப்பின்  துணை  கொண்டு   உலகியல்  நிலைக்கேற்ப   விரித்துரைக்குந் திறம்  வியந்து  போற்றுதற்குரியது.

               இறைவன்  செய்யும்  ஐந்தொழில்களைக்  குறித்துப்  பன்னிரண்டாம்  பாடலுரையிலும்  இருபதாம்  பாடலுரையிலும்  இவ்வாசிரியர்  கூறும்  விளக்கம்  உளங்கொளத் தக்கதாகும்.  சைவ  சித்தாந்த   சமயத்தினர்  கூறும்  தீக்கை  வகைகளுள்  நயனத்தீக்கை  மானததீக்கை , பரிச தீக்கை , வாசிக தீக்கை  என்பவை  பற்றிய  குறிப்புக்கள்  “பைங்குவளைக்  கார்  மலரால்”  எனத் தொடங்கும்  பாடலில்  அமைந்துள்ளனவாக  நம்  பண்டிதமணியவர்கள்  உய்த்துணர்ந்து  விளக்கிய  நயம்  நுண்ணறிவுடையோர்  வியந்து  பாராட்டத்தக்கதொன்றாம்.  மூன்றாந்  திருப்பாடலில்  “முத்தன்ன  வெண்ணகையாய் “ எனப்  பல்லாகிய  பொருளுக்கு  அடைமொழி  புணர்த்தும் , நான்காந்  திருப்பாடலில்   “ஒண்ணித்தில  நகையாய்”  எனப்  பல்லுக்கு  உவமையாய்  வந்த  நித்திலத்திற்கு  அடைமொழி  புணர்த்தும்  கூறியதற்கு  இவர்கள்  கூறும் நயம்  பெரிதும்  சுவைபயப்பதாம். “எழுப்பியவர்  பேச்சு  எழுப்பப்பட்டவளுக்குக்  கடுமொழியாக  இருந்தமையால்  அவள்  “என் தோழிமாராகிய  நும்முள்  இனிமையாகப் பேசுவாரும்  உளரே.  அன்னார்  இக்குழுவில்  இலரோ”  என்பாள்  “வண்ணக்கிளி  மொழியார்  எல்லாரும் வந்தாரோ”  என்றாள்  என நான்காந்திருப்பாடலிற்  கூறிய  நயம் , உரையாடலில்  மகளிர்க்குரிய  கூர்த்த  நுண்மதியைப்  புலப்படுத்துகின்றது .

                    “முன்னிக் கடலை”  யெனத்  தொடங்குந்திருப்பாட்டில்  “கேவல நிலையிற்  கிடக்கும்  உயிர்த்தொகுதிகளையுடைமையாகக்  கொண்ட  நிலையில்  அன்னை, “உடையாள்” எனவும் , பின்  சகல  நிலையில்  பிறப்பில்  உழலும்  நமக்குத்  தனுகரண  முதலியவற்றைத் தந்து  சிறிது  அளவு  விளங்கச்செய்து  ஆட்கொள்ளுந்  தகுதியளித்தலின்  அந்நிலை  நோக்கி  “எம்மையாளுடையாள்” எனவும் , பின்  சுத்த  நிலையில்  பஞ்சமலங்களும்  நீங்கிச்  சிவத்தோடு  கூடி  இன்புறுதற்கு  உதவிபுரியும்  இயல்பு  நோக்கித்  தலைவியாயினாள் என்பார் “எம்பிராட்டி”  எனவும் சிவசத்தி  கூறப்பட்டாள்”  என விளக்குவர்  உரையாசிரியர் . இப்பாடலின்  உரையில்  கேவல  சகல  சுத்தம்  என்னும்  மூன்று  நிலைகளிலும்   சிவசத்தி  உயிர்களுக்குத்  துணைசெய்து  அன்னையாய்  விளங்கும்  திறத்திற்குக்   “காரிட்ட  ஆணவக்  கருவறையில்”  எனத்  தொடங்குந்  தாயுமானார்  திருப்பாடலை  மேற்கோளாக  எடுத்துக்காட்டி  விளக்கியமுறை   சைவசித்தாந்த  நுண்பொருளை  யெளிதில்  உளங்கொளச்  செய்வதாகும் .

                         நீராடப்போந்த  கன்னியருள் ஒருத்தி , உலகியலை  மறந்து  மன மொழி மெய்கள்  இறைவன்பால்  ஈடுபட்டுத்  தன்  வயமிழந்து  நிற்கும்  தலையன்பினளாகிய  மற்றொருத்தியின்  இயல்பை  ஏனைப்  பெண்கள்  உணரும்  வண்ணம்  எடுத்துரைப்பது  “ஓரொருகால்”  எனத்  தொடங்குந்  திருப்பாட்டாகும் . இதன்கண் “இவள்  இறைவன்  திருவடி  முதலியவற்றின்  உறுப்பழகை  அகக்கண்ணாற்  கண்டு  கண்ணீரில்  ஆடினாள்.  அத்தகுதி  நமக்கு  இன்றெனினும்  அவ்வுறுப்புக்களை  உவமைமுகமாகக் காட்டும்  அழகிய  தோற்றமுடைய   மலர்களைப்  புறக்கண்ணாற்  கண்டு  நாம்  தண்ணீரிலேனும்  ஆடுவோமாக  என்பாள்  “ஏருருவப்  பூம்  புனல்  பாய்ந்தாடு”  என்றாள்” என  இவ்வுரையாசிரியர்  கூறும்  விளக்கம்  படிப்போர்  உள்ளத்தையுருக்குவதாகும் .

                           இவ்வுரை  உரிய  இடங்களில்  சைவத்  திருமுறைகளையும்   சித்தாந்த  நூல்களையும்  மேற்கோளாகக்காட்டி  அவற்றின்  நுண்  பொருளையும்  வகுத்துணர்கின்றது . இஃது  அந்நூல்களைக்  கற்பதில் பேரீடுபாட்டினை  விளைப்பதாகும் . இன்றியமையாத  இடங்களிற்  பொருள்  விளக்கத்தை  யுட்கொண்டு  காட்டப்பெறும்  இலக்கணக்குறிப்புகள்  பாட்டின்  பொருளுணர்ச்சிக்குத்   துணை  செய்வனவாக  உள்ளன.  பொருட்டெளியும்  சொல்  வரையறையும்  நவில்தொறும்  சுவைமிகப்  பயக்கும்  நூல்  நயமும்  ஒருங்கமைந்த  கதிர்மணி  விளக்கமென்னும்  இப்பேருரை  சைவசித்தாந்த  நூற்பொருளை  ஒரு  நாடகக்  கதை  யுருவில்  வைத்து  விளக்கும்  இலக்கியமாக  மிளிர்கின்றது .  புலமைக்  கருவூலமாகத்  திகழும்  இப்பேருரையை  யியற்றி  யுதவிய  பண்டிதமணியவர்களிடத்து   மாணவனாகப்  பயிலும்  வாய்ப்பளித்த  திருவருளை  உளமார  இறைஞ்சிப்  போற்றுகின்றேன்.  ஊன்கலந்து   உயிர்கலந்து  உவட்டாமல்  இனிக்கும்  திருவாசகத்திற்குப்  பேருரை  காணும்  திருப்பணியில்  ஈடுபட்டுள்ள  மகாமகோபாத்தியாய  பண்டிதமணியவர்கள்  உளநலமும்  உடல் நலமும்  ஒருங்குபெற்று  இத்திருவாசகப்  பேருரையை  நிறைவு  செய்தருள்வார்களாக  எனத்  தில்லையம்பலவன்  திருவடிகளை  இறைஞ்சிப்  போற்றுகின்றேன்.

                       மண்ணுலக  மெல்லாம்  மழையாற்  குளிர்கவென

                       அண்ணா  மலையான்  அடியிறைஞ்சிப் – பெண்ணினல்லார்

                        மார்கழிநீ  ராடல்  வழுத்துதிரு  வெம்பாவைச்

                         சீருரைத்தார்  வாழ்வார்  சிறந்து.

                                                      ————————————–

கணபதி  துணை

திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

திருவெம்பாவை

வரலாறு

             தெய்வத்தன்மை  வாய்ந்த  “எம்பாவாய்”  என்னுந்தொடர்  மொழியை  யீற்றிலுடைமையால்  இருபது  திருப்பாட்டுகள்  அமைந்த  இப்பகுதி  திருவெம்பாவை  என்னும்  பெயருடையதாயிற்று.  திரு  வென்பது  தெய்வத்  தன்மை  யென்னும்  பொருளுடைய  மங்கல  அடைமொழியாகும் . திருவம்மானை  முதலிய  மற்றைப்  பகுதிகளுக்கும்  இஃதொக்கும்  . மாணிக்கவாசக  அடிகள், சிவபெருமான்  திருக்கோயில்   கொண்டெழுந்தருளியிருக்கும்  பல  தலங்களுக்குஞ்  சென்று  திருவண்ணாமலையையடைந்து  அங்கே  தங்கியிருக்குங்கால் , முன்பனிப்  பருவத்தொடக்கமாகிய  மார்கழித்திங்கள்  வந்தது . அப்பொழுது , மணஞ்செய்யப்படாத  பெண்கள்  பலர்  திருவாதிரைக்கு  முன்  பத்து  நாட்டொடங்கி  அதிகாலையாகிய  வைகறைப்  பொழுதில்  துயிலுணர்ந்தெழுந்து , ஒருத்தியும்  பலருமாக  இல்லங்கடோறும்  சென்று  தம்  தோழிகளையும்  துயிலுணர்த்தி  யெழுப்பியதையும் , அவ்வெல்லோரும்  ஒருங்கு   சேர்ந்து  சிவபெருமான்  திருப்புகழை  வாயாரப்பாடிக்கொண்டு   நீர்  நிலைக்குச்  சென்று  நீராடியதையும் , உலகன்னையாகிய   பார்வதி  தேவியின்  திருவுருவைத்  தூய  ஈர  நுண்மணலாற் சமைத்து  வழிபட்டுப்  பொதுவுஞ்  சிறப்புமாகிய  பயன்  வேண்டியதையும்  நேரிற்  கண்டு , அப்பெண்கள் புகன்றதாகப்  பாடியருளியது  இத்திருவெம்பாவையாகும் , இவ்வுண்மையை, 

மாதர்கொண்  மாத  ரெல்லாம்  மார்கழித்  திங்கள்  தன்னில்

ஆதிரை  முன்னீ  ரைந்தே   யாகிய  தினங்க  ளெல்லாம்

மேதகு  மனைக  டோறும்  அழைத்திருள்  விடிவ  தான

போதிவர்  தம்மிற்  கூடிப்  புனற்றடம்  ஆடல்  செய்வார்”

எனவும்,

“அன்னவ  ரியல்பு  கண்டார்  ஆங்கவர்  புகன்ற  தாக

மன்னிய  திருவெம்  பாவை  வாசகம்  பேசி”  எனவும்

                திருவாதவூரடிகள்  புராணங்  கூறுமாற்றானறிக . இங்ஙனம்   உலகியல்  நிகழ்ச்சியாகிய  மகளிர்  விளையாட்டு  முதலிய  செயல்களில்  வைத்து  அவர்தங்  கூற்றாக  அடிகள்  அருளிச்  செய்த  திருவாசகப்  பகுதிகள்  திருவம்மானை  முதலிய  பலவாகும் .

                    இத்  திருவெம்பாவை  திருப்பெருந்துறையில்  அருளிச்செய்யப்பட்டதெனத்  திருவாலவாயுடையார்   திருவிளையாடற் புராணமும்  திருவண்ணாமலையில்  அருளிச்செய்யப்பட்டதெனத்  திருவாதவூரடிகள்  புராணமும்  கூறுகின்றன.  இவ்விரண்டினுள்  பின்னதே  வலியுடைய  தென்பதற்கு   அகச்சான்றுகளுஞ்  சிலவுள.

“அண்ணா  மலையான்  அடிக்கமலஞ்  சென்றிறைஞ்சும் விண்ணோர்

மாலறியா நான்முகனுங் காணா மலையினை”

என வெளிப்படையாகவும்,

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை

பாதாள  மேழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர் 

போதார்  புனைமுடியும்   எல்லாப்  பொருள்முடிவே”

எனக்  குறிப்பாகவும்  புலப்பட  ஓதியருளிய  திருவாக்குகளே  சான்றாவனவாம் .

                       வாதவூரடிகள்  புராணத்தில்   நீராடியதுவரை  கூறப்பட்டதேயன்றிப்  பார்வதி  வழிபாடு  கூறப்பட்டிலதேயெனின் , அதற்கு  விடை  பின்வருவனவற்றால்  அறியலாம்.

                         பண்டைக்காலத்தில்  தமிழ்நாட்டில்  சைவ  வைணவக்  கன்னிப்  பெண்கள்  மழைவளங்  குறித்தும் , சிறந்த  கணவரைப்  பெறுதற்  பொருட்டும்  மார்கழித்திங்களில்  வைகறையில்  நீராடிப் , பராசத்தியாகிய  கௌரியை  வழிபட்டு  , நோன்பு  மேற்கொண்டொழுகினரென்பது . அடிகளருளிய  இத்திருவெம்பாவையாலும்  திருமால்  பத்தியிற்  சிறந்த  ஆண்டாள்  அருளிய  திருப்பாவையாலும்  அறியத்தக்கது.

                          இந்  நோன்பிற்கு  நூற்பிரமாணம்  இன்றெனவும்  ஆன்றோராசாரமே  பிரமாணமெனவுங்  கூறுப.  ஆயினும் , பாகவத  புராணத்தில்  கண்ணனை  மணவாளனாகப்  பெற  விரும்பிய  ஆயர்குலக் கன்னியர் , இந் நோன்பை  மேற்கொண்டு  மார்கழித்திங்களில்  வைகறையில்  நீராடிப்  பார்வதிதேவியை  வழிபட்டன ரென்னும்   செய்தி  கூறப்பட்டுள்ளது . இதனை,

“இன்ன  தண்பனிப்  பருவநல்  லிளநறா  வொழுகும்

கன்னி  யந்துழாய்க்  கண்ணனெங்  கணவனா  கென்ன

அன்ன  மென்னடை  யாயர்தங்  கன்னியர்  நோற்றார்

மன்னு  வெம்பனி  மால்வரைக்  கன்னியைத்  தொழுதே”

எனவும் ,

பனிநி  லாக்கதிர்  பரப்பிய  முத்தவெண்  மணலால்

பனிவ  ரைக்கொடி  திருவுருட்  பாற்பட  வகுத்துப்

பனிம  லர்த்தொடை  சூடியும்  பரவியு  நோற்றுப்

பனியி  றப்பினிற்  படர்புன  லாடுவான்  படர்ந்தார்”

எனவுங்  கூறிய  செய்யுட்களாலறிக.

                      இச்செய்யுட்களில்  “பனிமால்வரைக்  கன்னி “  யெனவும்  , “பனிவரைக்கொடி”  யெனவும்  கூறியது ,  பார்வதிதேவியை  யென்பது  வெளிப்படையாகும் . நல்ல  மணாளனை  யடைதற்குக்  கௌரி  நோன்பே  சிறந்ததெனக்  கொண்டு  வைணவப்  பெண்கள்  நோற்றனரென்றால்,  சைவப்  பெண்கள்  இந்  நோன்பை  மேற்கோடல்  மிகவும்  பொருத்தமாமென்பது  நன்கு  விளங்கும் . இங்கே  பாவையென்றது  , பார்வதி  யுருவமாக  மணலாற்  சமைத்த  தெய்வப்  படிவத்தை  யென்பது  கருதத்தக்கது. அதனாலே  இது  பாவை  நோன்பாயிற்றென்க . “சத்தியை  வியந்தது”  என  இப்பகுதிக்கு  உள்ளுரைப்பொருள்  குறித்திருத்தலும்  இதனை  வலியுறுத்துவதாகும்.  சத்தி  என்றது , இங்கே  பார்வதி  தேவியை  யெனக்  கொள்ளல்வேண்டும் .

                        இத்  திருவெம்பாவையைப்  போன்ற  பிரபந்தங்களைப்  “பாவைப்பாட்டு”  என்று  முன்னோர் வழங்கினரென்பது  “சிறுபான்மை  பாவைப்  பாட்டும்  அம்மானைப்  பாட்டும்  முதலாயின  நான்கு  அடியினிகந்து  வருவனவாயின “ எனவும்  ,  “சிற்றெல்லையாகிய  பத்தடியளவும்  பாவைப்பாடலும்  அம்மானைப்பாடலும்  போலும்  தரவுகொச்சகம் வரும் “ எனவும்  பேராசிரியர்  கூறுமாற்றானறியலாம் . யாப்பருங்கலவிருத்தி  93-ஆம் சூத்திரவுரையில்  ,

“கோழியுங்  கூவின  குக்கில்  அழைத்தன

தாழியுள்  நீலத்  தடங்கணீர்  போதுமினோ

ஆழிசூழ்  வையத்  தறிவ  னடியேத்திக்

கூழை  நனையக்  குடைந்துங்குளிர்புனல்

ஊழியுண்  மன்னுவோ  மென்றேலோ  ரெம்பாவாய்”

என்னும்  பாட்டொன்று  அவிநயனார்  காட்டிய  பாட்டென்று  எடுத்துக்காட்டப்பட்டுள்ளது .

                        பண்டைக்  காலத்துத்  தமிழ் நாட்டில்  கன்னிப்பெண்கள்  தைந்நீராடலைப்  பற்றிக்  கலித்தொகை , ஐங்குறுநூறு , நற்றிணை , பரிபாடல்  முதலிய  சங்கச்  செய்யுட்களில்  விளக்கமாகக்  காணலாம் . மார்கழித்திங்கள்  திருவாதிரையில்  தொடங்கும் நீராடல்  பூர்ணிமாந்த  முறைப்படி  தைத்  திங்களிலும்  தொடர்ந்து  நடைபெறுமாதலின் , மார்கழி  நீராடலும்  தைந்நீராடலும்  ஒன்றென்ப . ஆயினும் , திருவாதவூரடிகள்  புராணத்துக்  கூறப்பட்டபடி  மார்கழி  நீராடல்  திருவாதிரைக்குப்  பத்து  நாட்கள்  முன்  தொடங்கித்  திருவாதிரையில்  முடிவுபெறுமென்பதும் , தைந்  நீராடல்  மார்கழித்திருவாதிரையில்  தொடங்கி  நடைபெறுமென்பதும்  இங்கே  கண்ட  வேறுபாடாகும் , நூற்  பிரமாண  முள்ளனவும்  இல்லனவுமாய்  மக்கள்  வழக்க  வொழுக்கங்களிற்  காணப்படும்  இன்னோரன்ன  நிகழ்ச்சிகள், இங்ஙனம்  காலாந்தரத்திற்  சிறிது  சிறிது  வேறுபாடெய்தல்  இயல்பே . இதற்கு  மற்றொரு  சான்றும்  ஈண்டுக்  கருதத்தக்கது .  பிங்கலந்தையில்  ஐந்து  முதல்  ஒன்பது  ஆண்டு  வரையுள்ள  சிறு  கன்னிப்  பெண்களே  பனிநீர்  தோய்தற்கும்  பாவையாடற்கும்  உரியர்  என்று  கூறப்பட்டுள்ளது . சங்ககாலத்துச்  சான்றோர்  பாடல்களிலும்  இவ்விதி தழுவப்பட்டிருத்தல்   அறியலாம் . அங்ஙனமாகவும்  திருவெம்பாவையிலும் ,  திருப்பாவையிலும்  முறையே

“கொங்கைகள்  பொங்கக்  குடையும்  புனல்பொங்க”

புற்றர  வல்குற்  புனமயிலே  போதராய்”    என்பன

                          முதலிய  குறிப்புக்களுண்மையால் , ஒன்பதாண்டுக்கு  மேற்பட்ட  கன்னிப்பெண்களும்  இந் நீராடலிற்  கலந்துகொண்டனரென்பது  புலனாம் .

                           இனி, இம்மார்கழி  நீராடலால்  விரும்பப்பட்ட  பயன்  பொதுவும்  சிறப்புமாக  இருவகைப்படும்  என்பர் . பொதுப்பயன்  நாடு  செழிக்க  மழை  பெய்தல்  . இதனைப்  பதினாறாம்  திருப்பாட்டில்  பராசத்தியைப்  பாராட்டி  மழையை  முன்னிலைப்படுத்தி ,

“முன்னி  யவள்நமக்கு  முன்சுரக்கும்  இன்னருளே

யென்னப்  பொழியாய்  மழையேலோ  ரெம்பாவாய்”

என்று  கூறியிருத்தலானறியலாம்.  தைந்  நீராடல்  பற்றிக்கூறிய  பரிபாடலில்  “வெம்பாதாக  வியனில்  வரைப்பென” [ இப்  பெருநிலம்  மழையால்  வெம்மை  நீங்கப்   பெற்றுக்  குளிர்வதாக ] என்று  கூறியிறுத்தலும்  இதனை  வலியுறுத்தும்.  சிறப்புப்பயன்  கன்னியர்  சிறந்த  கணவரைப்  பெறுதல்  .  இதனை,

“உன்னடியார்  தாள்பணிவோம்  ஆங்கவர்க்கே  பாங்காவோம்

அன்னவரே  யெங்கணவ  ராவார்”  எனவும் ,

“எங்கொங்கை  நின்னன்ப  ரல்லார்தோள்  சேரற்க “ எனவுங் 

                              கூறியிருத்தலான்   அறியலாம் .  இங்ஙனம்  உலகியலில்   வைத்துச்  சைவ  சமய  வுண்மைகள்  பலவற்றையும்  புலப்படுத்து  அடிகளால்  அருளிச்  செய்யப்பட்டது  இத்  திருவெம்பாவை  யென்பது  தெளிவாம் .

சத்தியை    வியந்தது

                        திருவெம்பாவையின்    உள்ளுறைப்    பொருளாகக்  குறிக்கப்பட்டது  . சத்தியை  வியந்தது  என்பது .  சத்தி  யென்றது  பராசத்தியாகிய  உமையம்மையை  . அம்மையப்பனாகிய  இறைவனை  அடைதற்குரிய  நெறிகள்  பலவற்றுள்ளுஞ்  சிறந்தது  அன்பு  நெறி . அந்நெறியொழுகத்  தலைப்படுவாரெல்லோரும்  முதலில்  அம்மையை  வழிபட்டு  அவள்  மூலம்  அப்பனையடைதல்  வேண்டுமென்பது  பெரியோர்  கண்டவுண்மை .  கடவுட் பத்தியாகிய  பேரன்புண்டாதற்கு,  அருள்வடிவினளாகிய  இறைவியின்  வழிபாடு  முதலில்  வேண்டத்தக்கதென்ப .  “ஆங்கவனருளாற்  பத்திநன்குண்டாம்” என்பது  வாயுசங்கிதை.  ஈண்டு  அருளென்றது  சத்தியை . “அருளது  சத்தியாகும்  அரன்றனக்கு”  என்பது  சிவ  ஞான  சித்தி.  இறைவியுடனாக  இறைவனை  உள்ளத்தமைத்து  வழிபடும்  சிவாநுபவப்  பெருஞ்செல்வரே  நம்  அடிகள் . இவ்வுண்மையை ,

“உடையாள்  உன்றன்  நடுவிருக்கும்  உடையாள்  நடுவுள்  நீயிருத்தி

அடியே  னடுவுள்  இருவீரும்  இருப்ப  தானால்  அடியேனுன்

அடியார்  நடுவுள்  இருக்கும்  அருளைப்  புரியாய் “

என்று  கூறிய  அடிகள்  திருவாக்கான்  உணர்க . அருட்குணமிக்க  இறைவனைத்  தலைவனாகவும் , அன்பு  முதிர்ந்த  உயிரைத்  தலைவியாகவும்  கொண்டு , உலகியலிற்  காணப்படும்  தலைமக்களுடைய  காதல்  ஒழுக்கத்தை  யேறிட்டு  ஞானானுபவப்  பொருள்  தோன்றச்  சமயக்குரவர்  ஆழ்வார்  முதலியோர்  பாடலருளிச்  செய்திருத்தலைப்  பரக்கக் காணலாம் .  “முன்னம்  அவனுடைய  நாமங்  கேட்டாள்”  என்னுந்  தமிழ்  மறைப்  பாடலிறுதியில்  “ தலைப்பட்டாள்  நங்கை  தலைவன்  றாளே “  என்று  கூறப்பட்டுள்ளது .  இங்கே  நங்கை  என்பது  பக்குவமுள்ள  உயிரையும்  தலைவன்  என்பது  இறைவனையுங்  குறித்து  நிற்றலறிக . இம்முறையில்  அடிகள்  தம்மைத்  தலைமகளாகவும்  , இறைவனைத்  தலைமகனாகவும்  கொண்டு  திருவாசகத்தில்  பல  திருப்பாட்டுக்கள்  அருளிச்  செய்துள்ளார் .  அம்முறையின்  தொடக்கம்  இத்திருவெம்பாவையே  யாகும் . இதன்  பின்வரும்  திருவம்மானை  முதலிய  பல  பகுதிகளும்   இக் குறிப்பினவாம் . 

                 இத் திருவெம்பாவையில் , ஆன்மநாயகனாகிய    இறைவனை யடைதற்குரிய   பக்குவமுதிர்ந்த  உயிர்களையே  கன்னிப்பெண்களாகவும்  , ஆணவமலவிருளிற்  பிணிப்  புண்டிருத்தலையே  உறங்கிக் கிடத்தலாகவும் ,   மலவாற்றலொழியப்பெறும்   நிலையே  துயில்  நீத்தெழும்  நிலையாகவும்  ,  மலபரிபாகமுடையவுயிர்கள்  அஃதில்லாத வுயிர்களை யுணர்த்தி  அன்புநெறிப்படுத்து  இறையருளிற்றோய்வித்தற்கு  அழைத்தலையே  நீராட  அழைத்ததாகவும்  அமைத்துக்கொண்டு இஃது  அருளிச் செய்யப்பட்டதென்க  இந் நுண்பொருள் ,

“மலவிருளுற்  றுறங்காமல்  மன்னுபரி  பாகரருள்

செலமுழுக  வருகவெனச்  செப்பல்திரு  வெம்பாவாய்”

என்னும்  திருவாசக வுண்மையில்  தெளிவிக்கப்பட்டிருத்தல்  அறிக.  பரமான்மாவாகிய  இறைவனைத்  தலைமகனாகப்  பெற்று  மணந்து  ,  பேரின்பவாழ்க்கையிற்றலைப்படுதற்கு  விரும்பும்  கன்னிப்பெண்களுள்  தம்மையும்  ஒருத்தியாக  அடிகள்  கொண்டு  கூறியபடியாம் .

பராசத்தியாகிய  அம்மையின்  பெருமை  இத்திருவெம்பாவையில்  ,

“எங்கள்  பிராட்டியும்  எங்கோனும்  போன்றிசைந்த

               பொங்குமடு”  எனவும்

“பேதித்து  நம்மை  வளர்த்தெடுத்த  பெய்வளைதன் 

                 பாதத்  திறம்பாடி”  எனவும் ,

முன்னி  யவள்நமக்கு  முன்சுரக்கும்  இன்னருளே

                  யென்னப்  பொழியாய்  மழை “  எனவும்   போந்த

               திருப்பாடற்  பகுதிகளில்  வெளிப்படையாகவும்  மற்றைத்  திருப்பாட்டுக்களிற்  குறிப்பாகவும்  பாராட்டப்பட்டிருத்தல்  காண்க . இவ்வுண்மை  அவ்வப்பாடல்களின்  இறுதியில்  விளக்கிக்கூறப்படும் .

                இனி , இத்திருவெம்பாவைக்குத்  தத்துவப்பொருள்  கூறும்  ஒரு  சாரார்  இத்  திருவெம்பாவையில்  முதல்  எட்டுத்  திருப்பாட்டுக்கள்வரை  ஒவ்வொரு  திருப்பாட்டிலும்  ஒவ்வொரு  பெண்ணே  யெழுப்பப்பட்டனராக,  அவ்வெண்மரோடு  முதலில்  யெழுப்பிய  ஒருத்தியையுஞ்  சேர்த்துக்கணக்கிட   ஒன்பதின்மராதலின்  அவ்வொன்பதின்மரும்  நவசத்திகளாவரெனவும்,  மனோன்மணி,  சருவபூததமணி,  பலப்பிரமதனி,  பலவிகரணி  ,  கலவிகரணி  , காளி,  இரெளத்திரி,  சேட்டை ,  வாமை  என்னும்  அவ் வொன்பது  சத்திகளும்  உலகப்  படைப்பு  நிமித்தம்  முறையே  முன்னது  பின்னதைப்  பிரேரித்  துணர்த்திய  குறிப்பே  முதல்  எட்டுத்  திருப்பாட்டுக்களில்  உள்ளதெனவும்  ,  இச்சத்திகளின்  இயக்கத்தால்  மாயை  காரியப்பட்டுப்  பிருதிவி  முடிவான  பிரபஞ்சகாரியம்  நடைபெறுதலையே  இத்  திருவெம்பாவை  குறிப்பிற்  புலப்படுத்துமெனவும் ,  இது  குறித்தே  சத்தியை  வியந்தது  என்னும்  உள்ளுரை  குறிக்கப்பட்டதெனவும்  கூறுவர்  .  பிரபஞ்ச  சிருட்டிக்குறிப்பை  இங்கே  புலப்படவைத்தற்கு  உரிய  காரணம்  இன்னதென்று  யாரும்  விளக்கினாரல்லர் .  அங்ஙனமாயின்  ஈண்டு  இயைபுடைய  வேறுகருத்து  என்னையெனிற்  கூறுதும். 

                         தமிழ் நாட்டில்  பெண்களுக்கு  ஐந்து  முதல்  ஏழாண்டு வரை  பேதைப்  பருவமென்றும் , எட்டு  முதல்  பதினோராண்டு  வரை  பொதும்பைப்  பருவமென்றும் , பன்னிரண்டாம் ஆண்டு மங்கைப்  பருவத்  தொடக்கம்  என்றும்  தமிழ்  நூலார்  கூறுவர் .  ஐந்தாண்டுக்கு  முற்பட்ட  காலம்  குழந்தைப்  பருவமாதலின்  அது  பெண்மைப்  பருவத்துள்  வைத்துக்  கணக்கிடப்படவில்லை .  ஆகவே  ஐந்து  முதல்  பன்னீராண்டுத்  தொடக்கம்  வரை  கன்னிமைக்குரிய  காலமென்பது  தெளிவாம் ,  தமிழ்  அகப்பொருணூலாரும்  பதினோராண்டும்  பத்துத்  திங்களும்  கழிந்தபின்றை  மணப்பருவம்  கொண்டமை  ஈண்டுக்  கருதத்தக்கது .  ஆகவே  ஐந்து  முதல்  பன்னிரண்டுவரை  ஆண்டுகள்  எட்டாகும் .  இதனாற்  கன்னியர்  ஐந்தாண்டு  முதல்  பன்னீராண்டுத் தொடக்கம்வரை  ஆண்டு  வகையால் எண்வகைப் படுவரென்பது  விளங்கும் .  ஈண்டுப்  பாவை  நோன்பு  மேற்கொண்டவர்  இவ்வெண்வகையினரே. முதலில்  பன்னிராண்டுத்  தொடக்கமுடைய  பெரிய கன்னிப்பெண்கள்  சிலர்  தாமே  விடியுமுன்  துயில்  நீத்தெழுந்து  உடல்  தூய்மை  செய்துகொண்டு  இறைவன்  புகழைப்பாடிக்கொண்டு  தம்மோடொத்த  பருவத்தினளான  பன்னீராண்டுத்  தொடக்கப்பருவத்து  ஒரு  பெண்ணை  யெழுப்பினர்  எனவும் ,  பின்னர்  முறையே  பதினொன்று  பத்து  ஒன்பது  எட்டு  ஏழு ஆறு  ஐந்து  ஆண்டுகளான  பொதும்பைப்  பருவத்தினரையும்  பேதைப்  பருவத்தினரையும்  எழுப்பினரெனவும்  கொள்ளல் வேண்டும்  . 

                          ஆகவே  ஒன்று  முதல்  எட்டுத் திருப்பாட்டுக்களிலும்   ஒவ்வொரு  பருவத்துப்  பெண்களே எழுப்பப்பட்டனர்  எனக்கொள்ளுதல்  பொருந்தும்  . ஆண்டில்  மூத்த ,  பெரிய  பெண்கள்  விடிதற்குச்  சில  நாழிகை  முன்னரே  துயில்  நீத்தெழுந்தனரென்பதும்    ஆண்டில்  இளைய  ,  சிறு  பெண்கள்  நாழிகை  ஆக  ஆக  எழுப்பப்பட்டனரென்பதும்   பொருத்தமாகும் .  மேலும் ,  முதற்றிருப்பாட்டில்   “ஈதேயெந்  தோழி  பரிசு “  என்றமையால்  அவள் யெழுப்பியவர்  பருவத்தோடொத்த  பருவத்தினள்  ஆவாளென்பதும் ,  இரண்டு  மூன்று  நான்காம்  திருப்பாட்டுக்களில்  எழுப்பப்பட்டார் மாற்றங் கூறினர்  என்று  கூறப்பட்டிருத்தலானும்  அத் திருப்பாட்டுக்களிலும்  ஐந்தாந்  திருப்பாட்டிலும்  அன்னார்  அறிவும்  அறியாமையும்  பொருந்தியவராகப்  புலப்படுக்கப்பட்டிருத்தலானும்  அவர்  பெதும்பைப்  பருவத்தினர்  ஆவரென்பதும் , ஆறு  ஏழு  எட்டாம்  திருப்பாட்டுக்களில்  எழுப்பப்பட்டவர்   மாற்றங்கூறாமையானும் ,  எழுப்பியவர்  “மானே”  யெனவும்  “அன்னே” யெனவும்  விளித்தலானும் , ஏழாம்  திருப்பாட்டில் பருவத்தாற்  பேதையேயன்றி  இறை  புகழில்  ஈடுபடாத  “வன்னெஞ்சப்  பேதையர்போல்  வாளாகிடத்தியால்”  என்று  கூறப்பட்டிருத்தலானும்  அவர்  பேதைப்  பருவத்தினராவ  ரென்பதும்  குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறறிக . மேலும்  எட்டாந்  திருப்பாட்டில்   எழுப்பப்பட்டவள்  ஐந்தாண்டுச்  சிறுமியாதலின்    அவளை  எழுப்புங்கால்  “கோழி சிலம்பச்  சிலம்புங் குருகெங்கும்”  என்று  வைகறைப்  பொழுதின்  இறுதிப்பகுதி  குறிக்கப்பட்டிருத்தலும்  கருதத்தக்கது . ஈண்டு  ஐந்து  முதல்  பன்னீராண்டுத்  தொடக்கம்  வரை  எழுப்பப்பட்டவர்  ஒவ்வொருவரெனக்  கூறப்பட்டிருப்பினும்  உபலக்கணத்தாற்  பலராக்  கொள்ளல்  வேண்டும் . பின்னர்  எல்லோரும்  ஒருங்கே  கூடி  இறைவனை  முன்னிலைப்படுத்துப்  புகழ்ந்து  பாடி  நீராடினரென்பது  கூறப்பட்டுள்ளது . இடையிடையே  உமாதேவியைப்  புகழ்ந்து பாராட்டி யிருத்தல்   காணப்படுதலின்    சக்தி  வழிபாடு  செய்தமையும்   பெறப்பட்டவாறறிக .

                            ஐந்து  முதல்  பன்னிரண்டு ஆண்டுப்  பருவத்தினர்  சிறுமியராக  இருத்தலின்,   வைகறையில் அன்னார்  எழுந்து  நீர்த்துறை  சென்று  நீராடற்கு  எங்ஙனந்துணிவர்  என்று சிலர் ஐயுறக்கூடும்  . இவ்விளம்  பெண்கள்  நீராடச்செல்லுங்கால்,  தாய்மாரும்  உடன்  செல்லுவர்  எனவும், தாயருகே  நின்று  நீராடுதலின்  இஃது  அம்பாவாடலாகுமெனவும் பரிபாடல் கூறும்.  “   அம்பாவாடலின்  ஆய்தொடிக்  கன்னியர் “  என்பது  பரிபாடல்  [11—81]  ஆதலின்  இந்  நோன்பிற்குரியார்  கன்னியராயினும்  ,  அவரைப்  பாதுகாக்கும்  நிமித்தம்  அன்னார்  தாய்மாரும் உடன்  சென்று  துணைபுரிவரென்பது  வெளியாதலின்   சிறுமியர்  துணிவிற்குத்  தடையின்றென்பது  புலனாகும் . 

                               திருச்சதகத்திற்  பொதுவாகக்  கூறப்பட்ட  பத்தி  வைராக்கிய விசித்திரங்களுள், வைராக்கியத்தின்  சிறப்பியல்பு  நீத்தல்  விண்ணப்பத்தில்  தெளிவிக்கப்பட்டது.  ஏனைப் பத்தியின்  சிறப்பியல்பு   கூறத்தொடங்கி  அப்  பத்தியின்  விளைவிற்குத்  துணைபுரியும்  உமையம்மையின்  பேருபகாரச்   செயல்  இதன்கட்  பாராட்டப்படுகின்றது .  இதனால்  நீத்தல்  விண்ணப்பத்திற்கும்  இதற்கும்  உள்ள  இயைபு  புலனாதல்  அறிக.

                                                —————————————-

திருவெம்பாவை

வெண்டளையான்  வந்த  இயற்றரவிணைக்

கொச்சகக்  கலிப்பா

திருச்சிறம்பலம்

ஆதியும்  அந்தமும்  இல்லா  அரும்பெருஞ்

            சோதியை  யாம்பாடக்  கேட்டேயும்  வாட்டடங்கண்

மாதே  வளருதியோ  வன்செவியோ  நின்செவிதான்

             மாதேவன்  வார்கழல்கள்  வாழ்த்திய  வாழ்த்தொலி  போய்

வீதிவாய்க்  கேட்டலுமே  விம்மிவிம்மி  மெய்ம்மறந்து

              போதா  ரமளியின்மேல்  நின்றும்  புரண்டிங்ஙன்

ஏதேனும்  ஆகாள்  கிடந்தாளென்   னேயென்னே

                யீதேயெந்  தோழி  பரிசேலோர்  எம்பாவாய்.

கருத்துரை;-  இதன்  முன்னர்க்  கூறப்பட்ட  நீத்தல்  விண்ணப்பத்தின்  இறுதித்திருப்பாட்டில்  வைதல்  வாழ்த்துதலாகிய  இருதிறத்தானும்  தாம்  கூறும்  பாராட்டுக்களால்  நிகழுங்  குற்றத்தைப்  பொருத்தருள  வேண்டுமென்று  ஆண்டவனை  நோக்கி  விண்ணப்பஞ்  செய்துகொண்ட  அடிகள்,  திருவெம்பாவையின்  தொடக்கத்  திருப்பாட்டாகிய  இதன்கண்   முதலும்  ஈறுமில்லாத  அரிய  பேரொளிப்   பிழம்பாகவுள்ள  இறைவனது  இயல்பு வரையறை  செய்து  பாராட்டுதற்கு  அரிய  தொன்றென்பதும்  ,  அதனால்   அக்குற்றம்  பொறுக்கத்தக்கதென்பதும்  , இயன்றாங்குச்  செய்யப்படும்  வாழ்த்து  ,  வாழ்த்துவோரையும்  கேட்போரையும்  இறையன்பிலீடுபடுத்தும்  இயல்பின  தென்பதும் , அதனால்  அஃது  உயிர்த்தொகுதிகளால்  மேற்கொள்ளத்தக்கதென்பதும்  ஆகிய  இவை  குறிப்பாகவும்  வெளிப்படையாகவும் புலப்பட  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-  வாள்தடம்  கண்  மாதே = ஒளி  பொருந்திய  அகன்ற  கண்களையுடைய  நங்காய்

ஆதியும்  அந்தமும்  இல்லா  அரும்  பெரும்  சோதியை :-  தொடக்கமும்  இறுதியும்  இல்லாத  அரிய  பெரிய  ஒளிப்பிழம்பாகவுள்ள  இறைவனை 

யாம்  பாடக்கேட்டேயும்  :-  யாங்கள்  புகழ்ந்து  பாடக்கேட்டுக்கொண்டும் 

வளருதியோ :-  துயில்கின்றாயோ,

நின்செவிதான்  வன்செவியோ :-  அல்லது  நின்  செவிகள்  தாம்  செவிட்டுச்செவிகளோ

வீதிவாய் :-  தெருவில்  ,

மாதேவன்  வார்கழல்கள் வாழ்த்திய  வாழ்த்து  ஒலி  போய் :-  சிவபெருமானுடைய  நெடிய  சிலம்பணிந்த  திருவடிகளையாங்கள்  புகழ்ந்து  பாடிய  வாழ்த்துப்  பாடல்களின்  ஒலி  சென்று  ,

கேட்டலுமே :-  கேட்கப்பட்ட  அளவிலே, [ சிவபக்தி  மிக்க  இவள் ]

போது  ஆர்  அமளியின்மேல்  நின்றும்  புரண்டு :-  மலர்  நிறைந்த  படுகையிடத்து    நின்றும்  புரண்டு  எழுந்து  ,

விம்மி விம்மி மெய்மறந்து :- [ பத்தி  மிகுதியால்  ] தேம்பித்  தேம்பியழுது  பின் தன்  வயமிழந்து,

ஏதேனும்  ஆகாள்  இங்ஙன்  கிடந்தாள் :-  வேறு  எச்  செயற்கும்  ஆளாகாமல்  இவ்வாறு  கிடந்தாள். [இவள்  செயல்  அவ்வாறாக]

எந்தோழி  பரிசு ஈதே :- எங்கள்  தோழியாகிய  நின்  தன்மை  இத்தகையதாகவுள்ளது ,

என்னே என்னே :-  ஈதென்ன  வியப்பு  வியப்பு  என்பது .

விளக்கவுரை :-  பாவை  நோன்பு  மேற்கொண்ட கன்னியருள்,  வைகறையில்  தாமே  துயிலுணர்ந்தெழுந்து  உடற்றூய்மை  செய்துகொண்டு  நீராடப்  போதுவார்  சிலர் ,  அந்நோன்பு  மேற்கொண்டு  நீராடுதற்கு  உடன்  வருவதாக  முன்னே  நாளிற்கூறி  உரிய  நேரத்தில்  எழாமல்  உறங்கும்  ஒருத்தியைத்  துயிலுணர்த்துமுகமாக  அருளிச்செய்யப்பட்டது  இத் திருப்பாட்டு . “வாட்டடங்கண்”  எனக்  கண்ணுக்கு  அடைமொழி  கூறியது  , வைகறைப்  பொழுதில்  ஒளியுடைமையும்    அகற்சியும்  இயல்பின்  அமையுமாறு  விழிக்கத்தக்க  கண்கள் , எதிர்மறையான  இருளுடைமையும்  சுருக்கமும்  அமைய  மூடப்பட்டுக்கிடத்தல்  தக்கதன்று  என்னும்  குறிப்புத்தோன்ற  நின்றது  விழிப்பு  நிலையில்  ஒளியுடைமையும்   அகன்றிருத்தலும்   , துயிலும்  நிலையில்  ஒளியின்மையும்  சுருங்கியிருத்தலும்  கண்களுக்கு உளவென்பது  எளிதினறியத்தக்கது .  ஆதி  — தொடக்கம் ; ஈண்டுத்  தோற்றமென்னும்  பொருட்டு  .  மாயா  காரியமாகிய  உலகமெல்லாம்  தோன்றி   யொடுங்குதற்குத்  தான்  நிலைக்களனாதலன்றித் தனக்குத்  தோற்றமும்  இறுதியும்  இல்லாதவன் இறைவன்  என்பார் , “ஆதியும்  அந்தமும்  இல்லா “ என்றார்    திருச்சதகத்தில் ,

“ போற்றியெவ்  வுயிர்க்குந்  தோற்ற  மாகிநீ  தோற்ற  மில்லாய்

   போற்றியெல்  லாவு  யிர்க்கும்  ஈறாயீ  றின்மை யானாய் “  என்று

               அடிகள்  அருளிச் செய்திருத்தலும்  காண்க.  இங்ஙனம் ஆதியும்  அந்தமுமில்லாப்  பரம்பொருளை  மெய்யுணர்வுடையார்  பேரொளிப் பிழம்பாக  வுணர்ந்து  அநுபவித்தன  ரென்ப .  ஒளி  நிலையைத்  திருமூலர்  அண்டவொளி, பிண்டவொளி, அகண்டவொளியென  மூவகைப் படுத்துக்கூறுவர்.  அண்டவொளி   ஞாயிறு  திங்கள்  விண்மீன்  முதலியவற்றிலுள்ளது.   பிண்டவொளி  உடம்போடு  கூடிய  வுயிரறிவிலுள்ளது. அகண்டவொளி  ஞானமயமாகிய  இறைவன்பாலுள்ளது . “அங்கிங்கெனாதபடி  எங்கும் பிரகாசமாய்  “  என்று  தாயுமானவர்  கூறியதுங்  காண்க . ஒற்றுமை  நயத்தால்  அகண்டவொளியாகவே  இறைவனைக்  குறிக்கொண்டு  பரஞ்சோதியெனவும்  பெருஞ்சோதியெனவும் , பேரொளிப்பிழம்பு  எனவும்  பெரியோர்  வழங்குவர். இங்ஙனம்  இறைவன்  பேரொளிப்பிழம்பாகத் திகழவும் ,மாயாகாரியமாகிய  உலகப்  பார்வையுடைய  ஆன்மாக்கள்  உணர்தற்கு அரியனாவன்  என்பது  தோன்ற , “அரும்பெரும்  சோதியை “என்றார் , அருமை –  பாசஞான  பசு ஞானங்களாகிய  வாக்கு  மனங்களுக்கு  எட்டாத  தன்மை ; பதிஞானமாகிய  அனுபவ  வுணர்வுக்கே  புலப்படும்  இயல்பினன்  என்பதாம் . “வாக்கு  மனாதீத  கோசரமாய்  நின்ற  அதுவே  “  என்னும்  சிவஞானபோதக்  கருத்தும்  ஈண்டு  அறியத்தக்கது .  மனவாக்கினிற்றட்டாமல்  நின்றதெது “  என்பதும்  இக்  குறிப்பினதே . அரும் பெருஞ்சோதியாக  விளங்கும்  இறையியல்பைக் குறித்துச்   சிவானந்தலகரி  யென்னும்  வடமொழி  நூலில்  சங்கராசாரிய  சுவாமிகள்  கூறிய  ஒரு சுலோகக்  கருத்து  இங்கே ஒப்பு  நோக்கி யின்புறத்தக்கது .

                  அதன்  மொழி பெயர்ப்பு  வருமாறு :-  பசுபதியாகிய  இறைவ !  தாமரை  நாயகனாகிய  ஒரு  சூரியன்  விண்  மண்  முழுதும்  நிறைந்த  பெரிய  இருட்குழுவை  யோட்டிக்  காண்பார்  கண்களுக்கும்  புலனாகின்றான் ; நீ  கோடி  சூரியவொளி   யுடையவனாக  இருந்தும் ,  கண்களுக்கும்  புலனாகாமையோடு  சிறிய  என்  அகவிருளையும்  போக்குகின்றாயல்லை . என்  அகவிருள்  நின்னால்  ஒழிக்க  இயலாத  அத்துணை வலியை  எங்ஙனம் உடையதாகும்? ஆதலின் அஞ்ஞானம்  முழுதையும்  ஒழித்துக்  காட்சி  தந்தருளுவாயாக “ என்பது

                          இனி ,  திருமாலும்  பிரமனும்  அடியும்  தேடியறிய  இயலாதபடி  பேரொளிப்பிழம்பாக  இறைவன்  நின்ற  வரலாறு  திருவண்ணாமலையில்  நிகழ்ந்ததெனப்  புராணம்  கூறுமாதலின்  , அவ்வுண்மையை  “ஆதியும்  அந்தமும்  இல்லா  அரும்பெருஞ்சோதி  “யென்னும்   தொடர்  குறிப்பிற்  புலப்படுத்து  நிற்றலும் அறிக .  யாம்  என்றது,  மனமொழிகளுக்கு   எட்டாத  இறைவன்  திருப்புகழையுணர்ந்து  பாடுதற்குத் தகுதியற்ற  மானுடச்  சிறுமியராகிய  யாங்கள்  என்பது  படநின்றது . பாடுதற்குத் தகுதியில்லே  மாயினும்  ,  “பத்திவலையிற்  படுவோன் “என்பது  கேட்டிருக்கின்றோமாதலின்  ,அன்பினாற்  பாடலானே மென்பார் ,  “யாம்பாட” எனவும் ,  நீயும்  வைகறையில்  விழித்தெழுந்து  எங்களுடன்  கூடி  இறைவன்  திருப்புகழைப் பாடவேண்டியது   கடமையாகவும் ,  அதனைச்  செய்யாமையோடு ,  யாங்கள்  நின்  வாயிலில்  வந்து  பாடுதலைக்  கேட்டுக்கொண்டும் ,  விழித்தெழாது   பொய்யுறக்கங்  கொள்ளுகின்றனையோ என்பார் , “ கேட்டேயும்   வளருதியோ”  எனவுங்  கூறினாரென்க .  கேட்டேயும்  என்புழி  ஏகாரம்  இசை  நிறை .  கேட்டும்  என்றபடி .  வளர்தல் – கண்   வளர்தல் ; துயிலுதல்  “ ஆலிலையின்  மேலன்று  நீ  வளர்ந்தது “ என்புழி  அப்பொருட்டாதல்  அறிக .  இனி ,  “மாதே” யென  விழித்து  வாட்டடங்கண்  வளருதியோ  வெனக்  கோடலுமாம் .  வன்செவி  — தனக்குரிய  ஓசையாகிய  புலனைப்  பற்றுதற்குரிய  உணர்ச்சியற்ற  செவி . பொய்  யுறக்க  மின்றேல்  கேட்டற்குரிய  நின்  செவிகள்  தாம்  செவிடோ  வென்றாரென்பது. 

வளருதியோ , வன்செவியோ  என்னும்  ஈரிடத்தும்  ஓகாரம்  எதிர்மறை ; உறக்கமுமன்று ; செவிடுமன்று  என்பதை யுணர்த்தி நின்றது .  யாம் பாடக்கேட்டுத்  துயிலுணர்ந்தும்  , விழித்தெழாமைக்குக்  காரணம்  நீராட  வருதலில் விருப்ப  மின்மையே  யாமென்று  கருதினாரென்பது .

                         இனி , ஆண்டவனிடத்து  அப்  பெண்ணுக்குள்ள  அன்பின்  குறையை  அவள்  உணருமாறு  அவளோடொத்த  மற்றொரு  பெண்ணின்  பேரன்பை  யெடுத்துக்காட்டி  யுணர்த்துவராயினர் . அப்பேரன்பினளாகக்  கருதப்படும்  பெண்ணைக்  குறிப்பிட்டு , “இவளைத்  துயிலுணர்ந்த  முன்னர்ச்  சென்றோம் ; செல்லுங்கால்  இவள்  இல்லத்தை  யணுகுதற்கு  முன்  தெருவில்  யாம்  கூடி  அரும்  பெருஞ்  சோதியைப்  பாடத்  தொடங்குதற்குக்  காப்பாக  அப்பெருமான்  திருவடிகளை  வாழ்த்தத்  தொடங்கினோம் “ என்பார், ”மாதேவன்  வார் கழல்கள்  வாழ்த்திய  வாழ்த்தொலி”  யென்றார் என்க. மாதேவன்  என்பதும்  பேரொளிப்  பிழம்பாக வுள்ளவன்  என்னும்  பொருளுடைய  தாயினும்  , “ஆதியும்  அந்தமுமில்லா  அரும்  பெருஞ் சோதி”  என்பது  இறைவனுடைய   சொரூபலக்கணம்  எனப்படுஞ்  சிறப்பியல்பு  பற்றியும் ,  மாதேவன்  என்பது  தடத்த  லக்கணம்  எனப்படும்  பொதுவியல்பு  பற்றியும்  கூறப்பட்டன  வென்பது  கருதத்தக்கது*, அரும்பெருஞ் சோதியைப்  பாடுதற்கு  அப் பெருமான்  திருவடிகளே  காப்பாகத் தக்கனவென்பது  கருத்து  ஆன்றோர்  நூன்முகத்துக்  கூறப்படும்  கடவுள்  வாழ்த்தாகிய  மங்கல  வாழ்த்து  ,  வாழ்த்தும்  வணக்கமும்  பொருளியல்புரைத்தலும்   என  மூவகைப்படுமென்ப . 

——————————————————————————————————*பாசஞான  பசுஞானங்களால்  அறியப்படாமல்  பதி ஞானத்தால்  அறியப்படும்  சிவசத்தாதல்  இறைவனுக்குச்  சொரூபலக்கண  மெனப்படும் சிறப்பியல்பும்,  சத்தியுடன்  கூடி  உலகெலாமாகி  வேறாயுடனுமாய்  நின்று  படைப்பு முதலிய  அருட் செயல்களைப் புரியும் பதியாதல்  தடத்த  லக்கணமெனப்படும்  பொதுவியல்புமாகும்.  இவற்றை  முறையே  சிவஞானபோதம் ஆறாம்  மற்றும்  இரண்டாம்  சூத்திரத்தாலும் உணர்க.

——————————————————————————————————

அதற்கிணங்க  இப் பெண்கள்  தாம் பாடத் தொடங்குதற்குக்   காப்பாகக்  கூறியதும்  வாழ்த்தின்  பாற் படுதலறியத்தக்கது .  தெருவினின்று  யாங்கள்  மெல்ல வாழ்த்திய வாழ்த்தொலி  சென்று   கேட்கப்பட்ட  அளவில்  என்பார்  , வீதிவாய்  வாழ்த்திய  வாழ்த்தொலி   போய்க் கேட்டலும்  என்றார் .  கேட்டல்—கேட்கப்படுதல்  ,  அமளி—படுக்கை .  படுக்கை  வன்மையுடையதாக  இருப்பின் ,  அஃது   உறக்கத்திற்கு  இடையூறாக  இடையிடையே  விழிப்புண்டாதற்கு    ஏதுவாதலுங்  கூடும் .  இவள்  படுக்கை  யன்னதன்று ; மிக  மெல்லிய  பூவிதழ்களால் அமைந்த  தென்பார் ,  “போதாரமளி”  எனவும் ,  அது நன்கு  துயிலுதற்கு  ஏற்றதாக இருந்தும்  வாழ்த்தொலி கேட்டதும்  துயிலுணர்ந்தெழுந்தது  , இவள்  பத்திமையைப்  புலப்படுத்துமென்பார் , “அமளியின்மேல் நின்றும்  புரண்டு” எனவுங்கூறினர்.  புரளுதல் – விழிப்புண்டாதற்குத்  தொடங்கும்   முதற்  செயல் . அஃது  ஈண்டு  இலக்கணச் சொல்லாக நின்று  எழுதலைக்  குறிக்கும் . எழுந்து ,  “முன்னம்  அவனுடைய  நாமங்கேட்டாள்”  என்றபடி  வாழ்த்தொலியைக்  கேட்டதும்  ,  அன்பின்  மிகுதியால்  கண்ணீர்  வடியத்  தேம்பித்   தேம்பி  யழலானாள் என்பார் ,  “விம்மி  விம்மி “ யெனவும் ,  அந்நிலையின்  முதிர்ச்சியில்  தன்வய  மிழந்தனள்  என்பார் ,  “மெய்ம்மறந்து “  எனவும் ,  மெய்ம்மறந்த  நிலையில்  உலகியற்  செயல்களுள்  எதன்கண்ணும்  தலைப்படாளாய்  இறைவன்  திருவடிகளிலுறைத்துக்   கிடந்தாள்  என்பார் , “ஏதேனுமாகாள்  கிடந்தாள்”  எனவுங்கூறினர் .  ஆகாள்  என்பது  முற்றெச்சம்.  இவ்வநுபவம் , 

“முன்னம்    அவனுடைய    நாமங்    கேட்டாள்

                மூர்த்தி   யவனிருக்கும்   வண்ணங்   கேட்டாள்

பின்னை   யவனுடைய   ஆரூர்  கேட்டாள்

                  பெயர்த்தும்   அவனுக்கே   பிச்சி   யானாள்

அன்னையையும்    அத்தனையும்    அன்றே    நீத்தாள்

                    அகன்றாள்   அகலிடத்தார்   ஆசா   ரத்தைத் 

தன்னை    மறந்தாள்    தன்   நாமங்   கெட்டாள்

                      தலைப்பட்டாள்    நங்கை   தலைவன்    றாளே “

ஏன்னும்   தமிழ்மறைக்கு   இலக்காக  வுள்ளதென்பது  உணர்ந்தின் புறத்தக்கது. “ இங்ஙன்”  என்பது  இவ்வாறு  என்னும்  பொருட்டு .  இப்பெண்ணை  யெழுப்ப  இவள்  இல்லத்திற்குச்  செல்லுதற்கு  முன்னரே  தெருவில்  யாங்கூடிக்  கடவுள்   வாழ்த்தைக்  கூறினேமாக ,  அம்  மெல்லிய   வொலியை  இவள்  கேட்டதும்  துயில்நீத்தெழுந்து   பத்தியால்  உருகி  மெய்ம்மறந்து  கிடந்தாள் ;  இவள்  இயல்பு  இங்ஙனமாக ,  எம்  தோழியாகிய  நின்  தன்மை  ,  யாங்கள்  நின்  இல்லத்து  வாயிற்படியில்  வந்து  உரத்த  குரலில்  பாடியதைக்  கேட்டும்  எழாமல் ,  பொய்யுறக்கங்  கொள்ளுதலாகிய  இத்  தன்மையாகவுள்ளதே ! ஈதென்ன  பெருவியப்பு  என்பார் , “ஈதேயெந்தோழி  பரிசு  என்னே  யென்னே”  யென்றனர் .  பரிசு – தன்மை  .  இறைவன்  திருவடியை  வாழ்த்திக்கொண்டு  சென்ற  பெண்கள்  வாழ்த்தொலி  கேட்ட  அளவில் ,  பத்திவயப்பட்டு  உருகி  மெய்ம்மறந்து  கிடந்தாளை  அவள்  இல்லத்திற்கண்டு  அவளையும்  உடனழைத்துக்கொண்டு  சென்றனராதலின் ,  அவளைச்  சுட்டி  இவள்  என்னாது  “ஏதேனும்  ஆகாள்  இங்ஙன்  கிடந்தாள்” என்று  கூறி  முடித்தனர் . தம்  குழுவிற்  கூடியிருத்தலின்  ,  சுட்டுப்பெயராகிய  எழுவாயின்றிச்  சுட்டிக்  கூறிப்பயனிலையளவில்   அவள்  செயல் கூறப்பட்டதென்க .  இவள்  என்னும்  சுட்டுப்  பெயர்  ஈண்டுத் தோன்றா எழுவாயாகும் .

          திருப்பாட்டுக்களின்  ஈறுதோறும்  வரும்  “ஏலோரெம்பாவாய்”  என்னுந்  தொடற்கு  எங்கள்  பெண்ணே  யாங்  கூறுவதை  யேற்றுக்கொள் ; ஆராய்ந்துபார்  என்று  பொருள்கூறி  எழுப்பப்படுபவள்   மேலேற்றி  விளியாகவும்  ஏவலாகவும்  கூறுதல்  ஈண்டும் , இன்னுஞ்சில  திருப்பாட்டுக்களில்  கன்னி  யொருத்தியை  முன்னிலைப்படுத்திக்கூறும்  இடங்களிலும்  பொருந்தும் . ஆயினும் ,  எல்லாத்  திருப்பாட்டுக்களிலும்  பொருள்  முடிபோடு  இயைவதன்று .  கன்னிப்பெண்களைத்  தனித்தனியாகவன்றிக்  குழுவாக  முன்னிலைப்படுத்தும்  ,  இறைவனையும்  மழையையும்  முன்னிலைப்படுத்தும்  கூறப்பட்டிருத்தலின் பொருள்  முடிவும் அவற்றோடியைய  ஆங்காங்கு  வேறாகக்  கொள்ளல்  வேண்டும் .  ஆதலின் ,  இறுதிதோறுமுள்ள  “ஏலோரெம்பாவாய்”  என்புழி  ஏழும்  ஓரும்  அசையெனவும் , எம்பாவாய்  என்பது  நோன்பிற்கு  அதிட்டான  தெய்வமாகிய  பார்வதி தேவியை அடிக்கடி  நினைவு  கூர்தற்குரிய நன்மொழி  யெனவுங்  கொள்ளல்  வேண்டும்,  சிலப்பதிகாரம்  29 – வது வாழ்த்துக்காதையில்   “வீங்குநீர்  வேலி”  என்பது முதலியவற்றின்   ஈற்றில்  “பாடேலோர்  அம்மானை “  என்புழி, ” ஏலும்  ஓரும்  அசை”   என்று  அரும்பதவுரையாசிரியர்  கூறியிருத்தலும்  அறிக.  மகளிர்  மேற்கொண்ட  நோன்பு  பாவை  நோன்பு  ஆதலின்  அதற்கேற்ப  அப்பெயராலே  யொருவரை  யொருவர்  விளிகொள்ளலானாரென்பதும்  ஆம் .  பெண்கள்  விளையாட்டு  நிகழ்ச்சியில்  தம்  இயற்பெயரைவிட்டு  விளையாட்டிற்குரிய  பெயரையிட்டு வழங்குதலை  உலகியலிற்  காணலாம்.  திருவம்மானை  முதலிய  வற்றிலும்  இவ்வாறு  வழங்கப்பட்டிருத்தல்  காண்க.  ஆகவே  ஏலோரெம்பாவாயென்பது ,  இனிய  ஓசையுடையதாய்  மேற்கொண்ட  நோன்பிற்குரிய   தெய்வ  மந்திமாக  விளங்கும்  அடிநிறைவென்பது புலனாம். எல்லாத்  திருப்பாட்டுக்களுக்கும்  இஃதொக்கும் .  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்ட  முத்திறத்துக்  கன்னியருள் ,  வாழ்த்தொலி  கேட்ட  துணையானே  மெய்ம்மறந்து  கிடந்தவள்  தலையன்பினளென்பதும் ,  இறைவனைப்  பாடித்  துயிலுணர்த்த  முற்பட்டவர்  இடையன்பினரென்பதும்   துயிலுணர்த்தியும்   படுக்கையினின்று  எழாமற்  கிடந்தவள்  கடையன்பினள் என்பதும்  புலப்படலால்   தலை யிடை கடையாய  முத்திறத்துப்  பக்குவமடைய  உயிர்களின்  இயல்பு   இதனால்   தெளிவிக்கப்பட்டபடியாம் .

             இதன்கண் “ மாதேவன்  வார்கழல்கள்  வாழ்த்திய வாழ்த்து”  என்றதனால்  சத்தியை  வியந்தது  என்னும்  உள்ளுரை குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறாம் .  என்னை ?  இறவன்  திருவடி  இறையருளாகிய  சிவசத்தியைக்  குறிக்குமாதலின் ,  திருவடி  வாழ்த்துச்  சத்தியை  வாழ்த்தியதாகு  மென்பது .  சிவசத்தியாகிய  பராசத்தியை  அருளுருவினளெனச்  சைவ  நூல்  கூறும்  .  “அருளது  சத்தியாகும்  அரன்றனக்கு”  என்பது  சிவஞானசித்தி. இறைவன் திருவடியை  இறயருளாகிய  சிவசத்தியென்று  சிவஞானபோத  மாபாடியங்  கூறும் .  இதனைச்  சிவஞானபோதம் ஆறாம்  சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில்  “எண்ணிய சத்தன்றசத்தன்றாம்”  என்னும்  திருவெண்பாவின்  “அறிவறியாமெய்சிவன்  தாளாம்  “ என்னும்  ஈற்றடியானும்  , அதற்கு  “அறிவினாலறியப்படாத  மெய்ப்பொருள்……அநுபவமாத்திரையில்   கோசரிப்பதென்று  ஓதப்படும்  சிவன்தாளாம்  “  எனவும் ,  “பெயர் நிலைக்  கிளவியின்  அஅகு நவும் “ என்றது  ஒத்தாகலின் ,  சிவன்தாள்  எனச்  சிவசத்தியின்  மேல்  வைத்து  உயர்த்துக்கூறினர்.  “இறைவனார்  கமலபாதம்  என்பதும்  அது “  எனவுங்  கூறிய  மாபாடிய  வுரையானும் உணர்க .  வரும் திருப்பாட்டுக்களுள்  இறைவன் திருவடிக்  குறிப்புப்  பற்றி  உள்ளுறை  கூறப்படும் இடங்களுக்கும்  இஃது ஒக்குமென்பது .

பாடல்  2

பாசம்   பரஞ்சோதிக்   கென்பாய்   இராப்பகல்நாம்

                பேசும்போ  தெப்போதிப்  போதா   ரமளிக்கே

நேசமும்   வைத்தனையோ  நேரிழையாய்   நேரிழையீர்

                  சீசி   யிவையுஞ்   சிலவோ   விளையாடி   

யேசும்   இடமீதோ   விண்ணோர்கள்   ஏத்துதற்குக்  

                   கூசும்   மலர்ப்பாதந்   தந்தருள   வந்தருளுந் 

தேசன்   சிவலோகன்   தில்லைச்சிற்   றம்பலத்துள்

                     ஈசனார்க்   கன்பார்யாம்    ஆரேலோ    ரெம்பாவாய்

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில் ,  மற்றமனங்கழிய  நின்ற  இறைவன்  திருவடியை  வரையறைப்  படுத்துக்  கூறல்  இயலாத  தொன்றாயினும்,  இயன்றாங்கு  வாழ்த்துதல்  வாழ்த்து வோரையும்  கேட்போரையும்  இறையன்பில்   ஈடுபடுத்தும்   ஆதலின், அஃது  உயிர்களால்  மேற்கொள்ளத்தக்கது  என்பது  புலப்படக்கூறியருளிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அதற்கு  ஏதுவாக  அத்  திருவடியின்  அருமையிலெளிய  அழகை  யருளிச்  செய்கின்றார் .  “விண்ணோர்களேத்துதற்குக்  கூசுமலர்ப்பாதம் “  என்றதனால்  அருமையும்  “தந்தருள  வந்தருளும் “  என்றதனால்   எளிமையும்  புலப்பட  வைத்தவாறறிக . 

பதவுரை:-  நேர்  இழையாய்  = தகுதியான  அணிகலன்களையுடைய  பெண்ணே,

நாம்  பேசும்போது  எப்போதும்  =  நாம்  உரையாடும்  பொழுதெல்லாம்,

இரா  பகல்  பாசம்  பரஞ்சோதிக்கு  என்பாய் = இரவும்  பகலும்  என் அன்பு  மேலான  ஒளிப்பிழம்பாக  உள்ள  இறைவன்  பொருட்டே  நிகழும்  என்று  கூறுவாய்,

இப்போது  ஆர்  அமளிக்கு  நேசமும்  வைத்தனையோ ;- 

இப்பொழுது  மலர்  நிறைந்த  இப்  படுக்கையின்  பொருட்டும்  அன்பு  வைத்தனையோ (என்று  இவ்வாறு  துயிலுணர்த்த  வந்த  பெண்கள்  கூறக்கேட்ட  அப்பெண்  கூறுவாள் )

நேரிழையீர் :-  தகுதியான  அணிகலன்களையுடையாய் 

சீசி  இவையும்  சிலவோ ;-  சீச்சீ  நும்  வாக்கில்  இங்ஙனம்  எள்ளிக்  கூறுஞ்சில சொற்களும் சில வுள்ளனவோ,

 விளையாடி  ஏசும்   இடம்  ஈதோ :-  விளையாட்டு  முகமாகப்  பழித்துரைத்தற்கு  உரிய  காலமும்   இதுவா? (என்று  கூறக்கேட்ட  அம்மகளிர்  கூறுகின்றார்கள்),

விண்ணோர்கள் ஏத்துதற்குத்  தந்தருளக் கூசு மலர்ப்பாதம் :- 

தேவர்கள்  புகழ்ந்து  பாராட்டுதற்பொருட்டுத்   தருதற்கு   நாணும்  மலர்  போன்ற  திருவடிகளை

தந்தருள  வந்தருளும்  தேசன் :-  எளியேம்  பொருட்டுத்  தருதற்கு  இந்  நிலவுலகத்தில்  எழுந்தருளி  வந்த  ஞானாசிரியனும்,

சிவலோகன் :-  சிவலோக  நாயகனும்,

தில்லைச்  சிற்றம்பலத்துள்  ஈசனார்க்கு  :-  தில்லைத்தலத்தின் கண்  உள்ள  திருச்சிற்றம்பலத்தின்  கண்ணே  ஈசனும்  ஆகிய  பெருமான்  பொருட்டுச்  செய்யப்படும்  ,

அன்பு  ஆர்  யாம்  ஆர் :-  அன்பு  எத்தகையது ; யாம்  எத்தகையோம் ? என்பது .

விளக்கவுரை:-        முன்னர்த்   துயிலுணர்ந்து  வந்தவரும் , உணர்த்தப்பட்டு  எழுந்தவளும்  ஆகிய  பெண்கள்  எல்லோரும்  ஒருங்குகூடி  மற்றொரு கன்னியின்  இல்லத்தைச்  சார்ந்து  அவளியல்பு  கூறி  யெழுப்புகின்றனர் , இவ்வாறே  எட்டாந்  திருப்பாட்டு  வரை  எழுப்பப்பட்டவர்  இறுதியில்  எழுந்து  எழுப்பியவரோடு  கூடிப்  பிரிதோர்  இல்லத்தைச்  சார்ந்து  மற்றொரு  கன்னியை  எழுப்பியதாகக்  கொள்ளல்  வேண்டும்.  நேரிழை  = தகுதியான  அணிகலன்,  ஈண்டுத்  தகுதி  கன்னிமைக்குரியதாகும் . இது  நேரிழையீர்  என்பதற்கும்  ஒக்கும்.  பேசும்போது  என்பது  உரையாடும்  ஒரு  காலத்தையும்,  எப்போதும்  என்பது,  எத்தனை  முறை  யுரையாட  வாய்ப்பினும்  அப்பொழுதெல்லாம்   என  அக்காலப்  பன்மையையும் குறிப்பினவாம் . எப்போதும்  என்புழி  உம்மை  விகாரத்தாற்றொக்கது.  பாசம் =  பத்தி ,  உடலோம்  புதற்  பொருட்டு  உறங்குதற்குரிய   இரவிலும்  உண்டல்  முதலிய  செயல்களுக்குரிய  பகலிலும்  அவற்றைப்  பொருட்படுத்தாமல்  இறைவனை  நினைந்து  பத்தி  செய்தலே  கடமையாக  மேற்கொள்ளப்பட்டது   என்பது தோன்ற  நாள்  முழுது மென்னாது  இராப்பகலென்றனர்.  இராப்பகல்  என்புழி  எண்ணுமைகள்  தொக்கு  நின்றனர் . பகல்  முழுதும்  உழைத்து  இரவில்  அவ்  வுழைப்பினாலுண்டாகிய   இளைப்பை  யொழித்தற்குத்  துயிலுதல்  இயல்பாகவும்   அவ்விரவிலும்    இளைப்பாறுதலின்றி   உழைக்கலானேன்  என்னுங்  கருத்துத் தோன்ற,  இராப்பகலாக  வுழைத்தேன்  என்று  உலகியலிற்  கூறுதல்  போல.  அன்பு  வழிபாடு  செய்தற்குரிய  பகலிலன்றி  இளைப்பாறுதலுக்  குரிய  இரவிலும் பத்திமையுடையேன்  என்று  கூறுவாய்  என்பார் . பகலும்  இரவும்  என்னாது  “இராப்பக” லென  இரவை  முற்கூறினர்.  அமளிக்கே  என்புழி  ஏகாரத்தைப்பிரித்துப்  பரஞ்சோதிக்கு  என்பதனோடு  கூட்டுக ; இறைவனுக்கன்றி  வேறு  எப்பொருளிலும்  பற்றில்லையென்பது  தோன்ற  நிற்றலின்  ஈண்டு  ஏகாரம் தேற்றப்பொருட்டு  என்பாய்  – என்று  கூறுவாய்.  என்பாய்  என்பதற்கு  எலும்பாகக்  கரையுமாறு  எனப்பொருள்  கூறுவாருமுளர்.  முன்னும் பின்னும்  உள்ள  சொற்களால்  பொருட்டொடர்பு   சிறவாமையின்  அது  பொருளன்று  இப்போதரமளி  என்புழி  இகரச்சுட்டு  அணிமையையுணர்த்து  மாதலின்  துயிலெழுப்ப  வந்தவர்  எழுப்பப்படுபவளின்  அருகில்  நின்று  கூறினரென்பது  புலனாகும்.  போது – மலர் ,  போதாரமளியென்றது.  நேசம் வைத்தற்கு  ஏதுக்  கூறியபடியாம் . நேசமும்  என்புழி  உம்மையைப்  பிரித்து  அமளிக்கு  என்பதனோடு  இயைக்க. இறைவனிடத்தன்றிப்  படுக்கைக்கும்  பத்தி பூண்டனையோ  என்பது  பெறப்படுதலின்  உம்மை  ஈண்டு  எச்சப்பொருட்டாம்.

             பாசம்  பரஞ்சோதிக்கு  எனச்  சொல்லளவிற்  கூறிச்  செயலளவில்  படுக்கைக்கண்ணே  வைக்கப்பட்டது  போலும்  என்பார்  “என்பாய்”  எனவும்  “வைத்தனையோ”  எனவுங்  கூறினரென்க   இஃது  “அறங்கூறான்  அல்ல  செயினும் “  என்பது   போல  நின்றது . 

             அறமென்று  சொல்லுவதுஞ்  செய்யாது  பாவங்களைச்  செய்யுமாயினும் “ என்பது  அத்தொடரின்  பொருள் .  வைத்தனையோ  என்புழி  ஓகாரம்  வினாப்  பொருட்டு.  துயிலுணர்த்திய  காலம்  இரவின்  இறுதியும்  பகலின் தொடக்கமுமாகிய  வைகறைப் பொழுதாகலானும் அஃது இரவும் பகலுமாகிய காலக்  கூறு  இரண்டையும்  பற்றி  நிற்றலானும்,  இறைவனை  நினைந்து  பத்தி  செய்தற்குரிய  இந்நேரத்தில்  துயில்  நீத்தெழாத  நீ “இராப் பகல்  பாசம் பரஞ்சோதிக்கு “  என்று கூறியது  எத்துணை  யுண்மையாகுமென்று  கூறி  நகையாடியபடியாம்.  “வைகறைத்  துயிலெழு”  என்பதற்கு  மாறுபட  அக்காலத்து  உறங்குதல்  இரவும்  பகலும்  தூங்கியதாகுமென்பது   கருத்து .

                இவ்வாறு  எழுப்பிய பெண்கள்  கூறக்கேட்டுத்  துயிலுணர்ந்து  எழுந்தவள்  கூறுகின்றாள்.  தோழிகாள்!  நும்  செயல்  இகழத்தக்கது  என்பாள்  “சீசி”  எனவும் ,  இறைவன்  திருப்புகழைப்  பாடுதற்குரிய  தூய்மையுள்ள  நும்  வாயில்  இங்ஙனம்  எள்ளிக்  கூறுதலாகிய  இழிசொற்களும்  உள்ளனவோ வென்பாள்  “இவையுஞ்சிலவோ”  எனவும்  கூறினள் .  இவையும்  என்புழி  உம்மை  இழிவு சிறப்பு  .  “அமளிக்கு  நேசமும்  வைத்தனையோ”  என்னும்  வினாவால் வைத்திருக்கமாட்டா  யென்பது  எம்  உட்கோளாகும் .  ஆதலின்  இவ்வாறு  வினாவியது  இகழ்ந்துரைத்தலாகாது ;  விளையாட்டாகக்  கூறியதாகும்  என்றார்க்கு  விடையாக  “விளையாடியேசுமிடம்  ஈதோ” என்றாளென்க.   இடம்  ஈண்டுக்காலத்தின் மேற்று  .  ஆண்டவன்  திருப்புகழைப்பாடி  உள்ளமுருக  வேண்டிய  இவ்வமயத்தில்  ஒருவரையொருவர்  இகழ்ந்து  கூறி  விளையாடுதல்  தக்கதன்று  என்பது  கருத்து.  இனி  “நாம்  பேசும்போது  எப்போது “ என்பதற்கு  நாம்  பாராட்டிப்பேசுங்காலம்  அதற்குரிய வைகறைப்  பொழுதன்றி   வேறு  எப்பொழுதாகும்  எனக்கூறினார்  எனக்கொண்டு  அதற்கு  மாற்றமாக  நீயிர்  விளையாடி  எள்ளிக்  கூறுங்காலம் இதுதானா  என்றாளெனக்  கூறினுமாம்  . இங்ஙனம்  எழுப்பப்பட்டவள்  கூறினாளாக  , அதற்கு  மாற்றமாக  எழுப்பிய  கன்னியர்  பின்னுங்  கூறுகின்றனர் .  “விண்ணோர்கள்  ஏத்துதற்குத்  தந்தருளக் கூசுமலர்ப்பாதம் “  எனத்  தந்தருள  வென்பதையீண்டும்  இயைக்க .  கூசுதல் =  நாணுதல்  , அஃது  ஈண்டுத்  திருவுள்ளம்  உடன்  படாமையைக் குறிக்கும் .  “பொக்க  மிக்கவர்  பூவு  நீருங்கண்டு,  நக்கு  நிற்பன்  அவர்தமை  நாணியே” என்புழி  நாணுதல்  அப்  பொருட்டாதலறிக.  தேவர்கள்  புண்ணியப்  பயனுகர்வோர்  ஆயினும்  “வாழ்த்துவதும்  வானவர்கள்தாம்  வாழ்வான்” என்றபடி  அவர்  ஏத்துதல்  மேன்  மேலும்  தம்  போகநுகர்ச்சி  கருதி யென்பது   வெளிப்படுதலின்  அவர்க்குத்  தன்  திருவடியைத்  தந்தருள  இறைவனுக்குத்  திருவுள்ளமின்றென்பது  கருத்து .  நல்வினைப்  பயனால்  உயர்ந்த  தேவர்கள்  தன்  அணிமையில்  வந்து பல்கால்  வேண்டவும்  அவர்க்குத்  தந்தருள  உடன்படாத  தன்  திருவடிகளை,  நல்வினை  தீவினைப்பயன்  இரண்டனாலும்  பிணிப்புண்ட  மக்கட்  பிறப்புடைய  சிருமியராகிய  நம்  பொருட்டு  எளிமையில் தந்தருள  நாம்  இருக்கும்  இடத்தில்  வந்து  காட்சியளிக்கும்  வண்மைக் குணமிக்க  ஒளிப்பிழம்பாகவுள்ளவன்  என்பார். “விண்ணோர்க  ளேத்துதற்குக்  கூசு  மலர்ப்பாதம்  தந்தருள  வந்தருளுந்  தேசன்”  என்றார் .  தேவர்கள்  சென்று  பாராட்டியும்  பெறுதற்கரிய  தன் திருவடிகளை  மானுடப்பெண்கள்  எழுதிற்பெற  இறைவன்  வந்தருளினான்  என்னும்  சிறந்த  இக்கருத்தை  அடிப்படையாகக்  கொண்டே  இராமலிங்க  அடிகள், 

ஒருமுடி  மேற்பிறை  வைத்தோய்  அயனரி  யொண்மறைதம்

பெருமுடி  மேலுற  வேண்ட  வராதுனைப்  பித்தனென்ற

மருமுடி  யூரன்  தலமேன்  மறுப்பவும்  வந்ததவன் 

திருமுடி  மேலென்ன  ஆசைகண்  டாய்நின்  றிருவடிக்கே      

என்று  விளக்கிக்  கூறியுள்ளார் . 

                       தேசன்  என்பது  ஒளிப்பிழம்பாக  வுள்ளவன்  என்னும்  பொருளுடையதாகலின் ,  இறைவனது  சொரூப  இலக்கணம்  பற்றியும் , சிவலோகன்  என்பது  தடத்த  இலக்கணம்  பற்றியும்  கூறப்பட்டனவாம்  . ஒளிமயமான  நிலையும்  சிவலோக  நாதனாம்  நிலையும்  நாம்  சென்று  காண்டற்கு  அரியனவாமென்று  திருவுளங்  கொண்டு  இந்நிலவுலகில்  தில்லை  நகர்க்கண்  திருச்சிற்றம்பலம்  என்னுந்  திருக்கோயிலில் எழுந்தருளிக்  காட்சிதரும்   பெருமான்  என்பார்  “தேசன்  சிவலோகன்  தில்லைச் சிற்றம்பலத்து  ளீசன்“ என்றார் .  இங்ஙனம்  அருமையிலெளிய  அழகு  படைத்த சிவபெருமான்  பொருட்டு  மேற்கொள்ளத்தக்க  அன்பு  எத்துணை  யுயர்ந்தது  என்பார்  “ஈசனாற்கு  அன்பு  ஆர் “ எனவும் ,  அவ்வன்பை  மேற்கொள்ளுதற்குரிய  அடிமைகளாகிய  நாம்  எத்தகையோம்  (எள்ளி  நகையாடும்  இயல்பினம்  அல்லேம்)  என்பார்  “யாம்  ஆர்“ எனவுங்  கூறின ரென்க.  அன்பார்  என்புழி  ஆர்  அஃறிணைக்கண்  வந்தது .  திணை  வழுவமைதியாகும் .  இனி  அன்பார்  யாம்  ஆர்  என்பதற்கு  அன்பு நிறைந்த  யாம்  ஆர்  எனக்கொண்டு  பொருள்  கூறலுமாம் .  எழுப்பப்பட்ட  பெண் “சீசி  யிவையுஞ்  சிலவோ  விளையாடி  யேசுமிட  மீதோ” என்றதற்கு  விடையாக  எழுப்பிய  கன்னியர்  இவ்வாறு   கூறினர்  என்பது   வெறுக்கத்தக்க  இழிமொழிகளைக்  கூறும்  இயல்பு இறை  யன்பலீடுபட்ட  நம்மனோர்  பால்  எங்ஙனம்  உண்டாம் ?  உண்டாகாதென்பதாம் . “ஒழுக்க முடையவர்க்  கொல்லாவே  தீய,  வழுக்கியும் வாயாற்  சொலல்  “  என்னும் பொருளுரையும்  ஈண்டு நினைக்கத்தக்கது.

                     ஆண்டவனிடத்து  எனக்கு  அன்புண்டு  என்று  ஒருவன்  வாயளவிற்  கூறுதலினும்  செயலளவில்  மேற்கோடலே  சிறந்ததென்பதும் , இறை  வழிபாடு  செய்தற்குரிய காலத்தை  அது  செய்யாமல்  வேறு  நிகழ்ச்சிகளால்  கழித்தல்  கூடாதென்பதும் , தேவர்க்கும் அரிய இறைவன் அன்பிற்கு எளியனாவன் என்பதும், இறையன்பி லீடுபட்டு   ஒழுகுவோர் நிலை என்றும் இழிந்த தாகாதென்பதும்  பிறவும்  இத் திருப்பாட்டால்  புலப்படுக்கப்பட்ட படியாம் ,

                        இதன்கண்  “விண்ணோர்களேத்துதற்குக்   கூசுமலர்ப் பாதம் “ என்று  திருவடிச்  சிறப்புக்  கூறப்பட்டது, சத்தியை  வியந்ததாகும் .  இது  பற்றிய  விளக்கத்தை  முன்னைத்  திருப்பாட்டிற்  காண்க.

                                    ———————————————————-

பாடல்  3 

முத்தன்ன  வெண்ணகையாய்  முன்வந்  தெதிரெழுந்தென்

               அத்தனா   னந்தன்  அமுதனென்  றள்ளூறித்

தித்திக்கப்   பேசுவாய்   வந்துன்   கடைதிறவாய்

                 பத்துடையீர்   ஈசன்   பழவடியீர்   பாங்குடையீர்

புத்தடியோம்   புன்மைதீர்த்   தாட்கொண்டாற்   பொல்லாதோ

                 எத்தோநின்   அன்புடைமை   எல்லோம்    அறியோமோ

சித்தம்   அழகியார்   பாடாரோ   நஞ்சிவனை

                  இத்தனையும்  வேண்டும்  எமக்கேலோ    ரெம்பாவாய்

கருத்துரை:-   முன்னைத்  திருப்பாட்டில்     இறைவனது   அருமையில்   எளிய   அழகைப்  புலப்படுத்தருளிய   அடிகள்,  இத்திருப்பாட்டில்   அவ்வருமையில்  எளிமை   அன்பு    செய்வார்க்குப்பயன்  படுமுறையைப்  புலப்படுத்தத்  தொடங்கி  முதலில்  மொழியால்  பாராட்டுதற்குரிய  எளிமையை  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை:-   முத்து   அன்ன   வெள்   நகையாய் =  முத்தைப்  போன்ற  வெள்ளிய  பற்களையுடைய   பெண்ணே,

முன் :-     முன்னைக்   காலத்தில் 

முன்  எழுந்து   எதிர்   வந்து  :-  எங்களுக்கு   முன்னரே  அமளியினின்றும்  துயில்  நீத்து  எழுந்து   எம்  எதிரே   வந்து  ,

என்  அத்தன்   ஆனந்தன்    அமுதன்   என்று  :-    எனக்குத்   தந்தை ;   இன்ப   வடிவினன் ;   அழிவற்ற  கடவுள்   என்று .

அள்ளூறித்   தித்திக்கப்   பேசுவாய்  :-  வாயூறியினிக்கப்  பாராட்டியே   பேசுவாய் , 

வந்து  உன்  கடை  திறவாய் :-  இப்பொழுது  எழுந்து  வந்து  உன்   அமளியறையின்   வாயிலையாதல்   திறக்கின்றாயில்லை,  ஈதென்ன?  (என்று  இவ்வாறு  எழுப்பவந்த  பெண்கள்  கூறக்கேட்ட   அப்பெண்  எழுந்து   வந்து  கூறுவாள்)

பத்துடையீர்   ஈசன்   பழ   அடியீர்  பாங்கு  உடையீர் :-  நீவிர்  ஆண்டவனிடத்துப்  பேரன்புடையீர்  ;  இறைவனுக்குப்  பழமையான  அடிமையுடையீர்  ;  எனக்குத்  தோழமையுடையீர் ( அத்தகைய  நீவிர் )

புத்து   அடியோம்   புன்மை   தீர்த்து   ஆட்கொண்டால்    பொல்லாதோ :- 

புதிய  தொண்டுடையேம்   ஆகிய   எம்   குற்றத்தை  நீக்கி  அடிமை  கொண்டால்   அது   தீங்காகுமா? (என்று  இவ்வாறு  எழுப்பப்பட்டவள்  கூறக்கேட்ட எழுப்பிய  பெண்கள்   கூறுவார்கள்); 

நின்  அன்புடைமை   எதுஓ:-   உனது  அன்புடைமை   வேறெவ்   வகையினதோ,

எல்லோம்   அறியோமோ :-  அதனை   யாமெல்லாம்  அறிய  மாட்டேமா

நம்  சிவனை  சித்தம்  அழகியார்  பாடாரோ :-  நம்  சிவபெருமானைத்  தூய  

நன்னெஞ்சுடையார்  புகழ்ந்து  பாடாமலிருப்பாரோ,

எமக்கு  இத்தனையும்  வேண்டும்  :-   நின்னையழைக்க  வந்த   எங்களுக்கு  இவ்வளவும்  வேண்டியதே  என்பது 

விளக்கவுரை :-  எழுப்பப்படும்   பெண்   முன்னைக்  காலங்களில்  தன்னைப் பிறர்   எழுப்புதற்கு   முன்னரே   துயில்   நீத்தெழுந்து  பல்  விளக்கி உடலைத்  தூய்மை  செய்து கொண்டு   திருநீறணிந்து   வெளிப்படுவாள்   என்னுங்   குறிப்புத்   தோன்ற  “முத்தன்ன  வெண்ணகையாய்  “  என்று  விளித்தனர் .  நகை =  பல்  . உவமையாகிய  முத்துக்கு  அடையின்றிப்  பொருளாகிய   நகைக்கு   அடையாகப் பொதுத்தன்மையாகிய  வெண்மை   புணர்க்கப்பட்டது   அறிக .   பல்லின்  தூய்மை   கூறவே  உபலக்கணத்தால்  ஏனை  உடற்பகுதிகளின்   தூய்மையும்   திருநீறணிந்தமையும்   கொள்ளப்படுமென்பது .  முன்  என்பது  காலத்தைக்குறிக்கும்  .  அது   கடந்த   ஆண்டு   மார்கழித்திங்களின்  மேலது .   அதனை   மீண்டும்  ஒரு  முறையோதி  யாம்   எழுதற்கு  முன்னரே   யெனவும்   கொள்ளல்   வேண்டும் .  வந்து   எதிரெழுந்து   என்பது ,  எழுந்து   எதிர்   வந்தென  மாற்றியுரைக்கப்பட்டது   யாங்கள்  இறைவன்  புகழைப்  பாடிக்கொண்டு   நின்   இல்லத்தின்   வாயிலை   அடைதற்கு   முன்னரே  நீ  வாயிலைக்  கடந்து   திருவீதிக்கண்   வந்து  எதிர்ப்படுவை   யென்பார்  “எதிர்  வந்து “  என்றனறென்க  .  வரும்பொழுதே   இறைவன்  புகழையும்   நினக்கு     இனியனாதலையும்   உளங்கனிந்து   வாயில்  நீரூறக்   கேட்போர்   செவிக்கு   இனிமையுண்டாகப்   பாடிக்கொண்டு   வருவாய்   என்பார் .  “என்  அத்தன்  ஆனந்தன்   அமுதன்   என்றள்ளூறித்தித்திக்கப்  பேசுவாய் “   என்றனர் .  

                            எல்லா  வுயிர்களுக்கும்   தந்தையாகவுள்ள   இறைவனைக்குறித்து    அவன்   அன்பர்  பலர்  ஒருங்கு  கூடிப்  பேசுங்கால்  நம்   அத்தன்  என்று   உளப்படுத்துக்   கூறுதலே   இயைபுடையதாகும் .   இத்திருப்பாட்டில்   எழுப்பிய  பெண்கள்  “நம்  சிவனை”  என்று   பின்னர்க்   கூறுதலும்  உணர்க.  அங்ஙனமாகவும்,   என்   அத்தன் என்று  எழுப்பப்பட்டவள்  கூற்றாகக்  கொண்டு  எழுப்பியவர்   கூறியது .   தம்மினும்   சிறப்புரிமை  அவளுக்கு   உண்டென்பது   புலப்படவைத்தற்கென்க .   சார்ந்தார்க்கு   அழிவிலாப்   பேரின்பத்தை   அருளும்   இன்பவடிவின   நாதலின்  இறைவனை  “ஆனந்தன்”  என்றாளென்பது.  இறைவன் இன்பவடிவினனாக   இருந்தே   இன்பத்தை   அருள்பவன்   என்னும்   உண்மையை  “ஆனந்தத்  தேன்  சொரியுங்  குனிப்புடையான்  “   எனவும் ,  இன்பமா  கடலே”  எனவும்  எழுந்த  திருவாக்குகளான்   அறியலாம் .  தந்தையின்  செல்வம்   மக்கட்குரியதென்பது   உலகியலிற்   கண்டது.   அவ்வாறே   இறைவனது  பேரானந்தப்   பெருஞ்செல்வப்  பேற்றுக்கு  உரிமை  தனக்கு  உண்டென்பது   புலப்பட  அத்தன்  என்பதற்கு  அடுத்து “ஆனந்தன் “ என்றாளென்பது .  “அமுதன்”   என்றது  அழிவில்லாதவன்  என்னும்  பொருட்டு  ,   உலகியற்  பொருள்களால்  எய்தும்  இன்பம்  அழிவுடையதாலின்  அன்னவியல்பிற்றன்று  இவ்வின்பம் ;  என்றும்  அழியா  இயல்பிற்று  என்பது  தோன்ற  அடுத்து  “அமுதன்“ என்றாள்  என்பது .  “உவப்பிலாவானந்தமாய  தேனினைச்  சொரிந்து”  என்றதனால்  இவ்வுண்மை  புலனாயவாறறிக .

                           இங்ஙனம் “என்  அத்தன்   ஆனந்தன்   அமுதன்  “  என்று  கூறத்  தொடங்கும்  பொழுதே  அச்  சொற்களின்  இனிமையால்  வாயில்  நீரூறப்  பொருளின்  இனிமையால்  உளம்  இனிக்கப்  பாராட்டுவாய்  என்பார்  “அள்ளூறித்  தித்திக்கப்  பேசுவாய்” என்றனர் . “அள்ளூறித்தித்திக்க”  என்பதைக்  கேட்போர்  மேலும்  ஏற்றியுரைக்க. இனிய  சுவைப்  பொருளை நினைப்பினும்  காண்பினும்   கேட்பினும்  வாயில்  நீரூறி   உள்ளம்  இனிக்கும்  என்பது  உலகியலிலும்  கண்டது .   அது  பேரின்பப்  பொருளாகவுள்ள   இறையனுபவத்தில்  இன்னுஞ்  சிறப்பாகத்  தோன்றுமென்பது,

“நினைத்தொறும்  காண்டொறும்  பேசுந்தோறும்  எப்போதும் 

அனைத்தெலும்   புண்ணெக  வானந்தத்   தேன்சொரியுங்

குனிப்புடையான்  “

என்னுந்   திருவாக்கான்   உணரத்தக்கது   இங்ஙனம்   முன்னைக்  காலத்தில்   மார்கழி   நீராடுதற்கு   யாங்கள்   எழுதற்கு   முன்னரே   துயில்   நீத்தெழுந்து   உடற்றூய்மை   செய்துகொண்டு   எம்   எதிரே வெளிப்போந்து   இறைவன்   திருப்புகழை   வாயார   உளம்   இனிக்கப்   பாடிக்கொண்டுவரும்   இயல்புடைய   நீ ,  இன்று  யாம்  எழுந்து  நின்  அமளியறையின்  அணிமையில்   வந்து  எழுப்பவும்  எழாமலும்  வாயிற்கதவைத்   திறவாமலும்   இருக்கின்றாய்  ஈதென்னை ? என்பார்  “தித்திக்கப்   பேசுவாய்   வந்துன்  கடை   திறவாய்”  என்றனர் .  இவ்வாறு   தன்குறை   கூறக்கேட்ட   பெண்   எழுந்து  வந்து   வாயிலைத்   திறந்து   எழுப்பிய   பெண்களை  நோக்கிக்   கூறுகின்றாள்.  பத்துடையீர்   என்பது   முதலாகப்   பொல்லாதோ என்பது  வரை  அவள்   கூற்றாம்  என்பது .  பத்து  = பத்தி  “பத்திலனேனும்  “  என்புழி  அப்பொருட்டாதல்  காண்க .  இனித்  தொண்டர்க்குரிய  பத்துச்  செயல்களும்   உடையீர்  என்பதுமாம் .  “பத்துக்கொலாம்  அடியார்  செய்கைதானே”  என்பது  தமிழ்மறை  .  இறைவனுக்குத்  தொண்டு  பூண்டு  ஒழுகும்  பரம்பரைக்  குடியிற்  பிறந்தாரும்  ஒருபிறப்பில்  நெடுநாள்  தொண்டு  செய்வாரும்  பழைய  வடியாராவர்.  ஈசன்  என்பது  இடைநிலை  விளக்காக  நின்று  ஈரிடத்தும்  இயையும். பாங்குடையீர்  என்பது  எனக்குத்  தோழமையுடையீர்  என்பதாம் .  இம்மூன்று  விளிகளும்  பின்வரும்  வேண்டுகோட் பயனுக்கு  ஏதுவாதல்  உணர்க .  நீவிரோ  பழவடியீர்; யானோ  புத்தடியேன்.  எனக்குத்  தோழமையுடைய  யீராதலின்  என்பாலுள்ள  பத்தின்மையாகிய  குற்றத்தை  யொழித்தற்குக்  கடமையுடையீர்  என்பது  தோன்ற  “புன்மை  தீர்த்து” என்றாளென்க  “ஆழிவி  னவைனீக்கி   யாறுய்த்தல்”  என்றபடி   நட்டார்க்குற்ற  நவையொழித்தல்  கடனாமென்பது .  “பத்துடையீரீசன்  பழவடியீர்”  என்பது  ஆட்கொள்ளுதற்குரிய  தகுதியைக்  குறிக்கும்.  எனக்குத் தோழமை  யுடையீராகவும்   என்  புன்மை  தீர்த்து,  ஈசன்  பழவடியீராகவும்   பத்துடையீராகவும்  இருத்தலின்  புத்தடியேனாகிய  என்னை  ஆட்கொள்ளுதற்குரியராகவும்  ,  அது  செய்யாமை  யென்னையோ?  தகுதியைப்   பயன்படுத்தல்  தக்கதாகவும்   என்னளவில்  செய்தல்  தீங்கு  என்று ஒழிக்கப்பட்டதோ  என்பாள்  “பொல்லாதோ”  என்றாள்   என்பது  .  ஈண்டுப்  புத்தடியோம்   எனப்  பன்மை   கூறியது  ,  தன்னைப்போன்றார்   பலரையும் உளப்படுத்தற்கென்க.

                      இவ்வாறு  எழுப்பப்பட்டவள்   கூறக்கேட்ட   எழுப்பிய   பெண்கள்   கூறுவர்.   தோழி!   முன்னை  நாளில்  நின்  பத்திமை  எம்மினும்  பன்மடங்கு   முற்பட்டு  நிகழ்வதுண்டு.  இப்பொழுதோ   பிற்பட்டதாக  மேற்கொள்ளுகின்றாய் ;  ஆதலின்  நின்  அன்புடைமையின்   இயல்புதான்  யாதாங்கொல்  என்பார்  “எத்தோ நின்  அன்புடைமை”  எனவும் ,  நின்  மெய்யன்பின்   பெருமையை  யாமெல்லாம்   அறிந்துளேமென்பது   தோன்ற  “எல்லோமறியோமோ “ எனவுங்  கூறினறென்பது .  நெஞ்சிற்கு  அழகு  தூய்மை  யாதலின்  தூய  நெஞ்சுடையார் “சித்தமழகியார் “  என்னப்பட்டனர்  .  மனந் தூயராய்ப்  பத்தி நெறியிற்றலைப்பட்டார்  உரிய  காலத்தில்  இறைவன்  புகழைப்  பாடாமலிரார்.  நின் அன்புடைமையோ  சிறந்தது .  இந்நிலையில்  எம்மினு  முற்பட்டு  இறைவன் புகழ் பாடவேண்டிய  நீ அது  செய்யாமை  குறித்தும் தோழமையுரிமை  கொண்டும்  நின்னை மொழியளவில்  குறை  கூறலானேம்  என்னுங்  குறிப்புப்  புலப்பட  “சித்தமழகியார்  பாடாரோ  நஞ்சிவனை”  யென்றனரென்பது .  பத்திமையில்  எம்மினுஞ்  சிறந்த  நின்னைத்  தோழமையுரிமை  பற்றிக்கூறிய  சிறு  குறை  காரணமாக  “பத்துடையீரீசன் பழவடியீர்  பாங்குடையீர்”  முதலிய  சொற்களாற்  குறிப்பில்  பரிகசித்தனை ;  அன்பு  நெறியில்  வழுவிய  எமக்கு  இப்பரிகாசச்  சொற்கள்  எல்லாம்  பொருத்தமானவைகளே  என்பார்  “இத்தனையும்  வேண்டும்  எமக்கு” என்றாரென்பது  .

“ஒழுக்கம்  உடையவர்க்கு  ஒல்லாவே  தீய

வழுக்கியும்  வாயார்  சொலல்”  என்னும் 

     பொருளுரைப்படி  நல்லன  மொழியும்  நாநலமுடையார்  எக்காரணத்தாலும்  தீயன  மொழிதலாகதென்பது  இத் திருப்பாட்டற்  புலப்படுக்கப்பட்ட  படியாம். 

         இதன்கண்  “அத்தன்   ஆனந்தன்  “  என்புழி  அன்னையுடனாய  அத்தன்  என்பது  பெறப்படும் . “அன்னையு  மத்தனுமாவாயழல்வணா  நீயலையோ”  என்னும்  தமிழ்  மறையும்  கருதத்தக்கது .  இதனால்  சத்தியை  வியந்தது   குறிப்பிற்  பெறப்படும் .  தாயுமானவர்  என்னும்  திருப்பெயரும்   இக்  குறிப்பினதே. 

                                               ——————————————

பாடல் 4 .

ஒண்ணித்  திலநகையாய்  இன்னம்  புலர்ந்தின்றோ

                வண்ணக்  கிளிமொழியா  ரெல்லாம்  வந்தாரோ

எண்ணிக்கொ  டுள்ளவா  சொல்லுகோம்  அவ்வளவும் 

                 கண்ணைத்  துயின்றவமே  காலத்தைப்  போக்காதே

விண்ணுக்  கொருமருந்தை  வேத  விழுப்பொருளைக்

                  கண்ணுக்  கினியானைப்  பாடிக்  கசிந்துள்ளம்

உண்ணெக்கு  நின்றுருக  யாமாட்டோம்  நீயேவந்

                   தெண்ணிக்  குறையில்  துயிலேலோ  ரெம்பாவாய்

கருத்துரை:-    முன்னைத்  திருப்பாட்டில்  இறைவனது  அருமையில்  எளிய  அழகிலே  மொழியாற்  பாராட்டுதற்குரிய   எளிமையைப்  பெண்மக்கள்  மொழி  மூலம்  புலப்பட  அருளிச்  செய்த   அடிகள்,  இத்திருப்பாட்டில்  நெஞ்சத்தால்  நினைந்து  உருகுதலாகிய  எளிமையை  அவ்வாறே  அருளிச்  செய்கின்றார். 

பதவுரை:-  

ஒள்  நித்திலம்  நகையாய் = ஒளி   பொருந்திய   முத்துப்போன்ற   பற்களையுடைய   பெண்ணே,

இன்னம்  புலர்ந்தின்றோ =  இன்னும்   விடியவில்லையா, (எழுப்பவந்த  பெண்கள்   இவ்வாறு   கூறக்கேட்டு   எழுப்பப்பட்டவள்   படுக்கையிற்   கிடந்தவாறே   மாற்றம்   உரைக்கின்றாள்)

வண்ணம்   கிளிமொழியார்  எல்லாரும்   வந்தாரோ =   அழகிய  கிளியினது   மொழி   போன்ற   மொழியினையுடைய    பெண்கள்   எல்லாரும்   இங்கு   வந்தனரா?; (என்று   இவ்வாறு   கூறக்கேட்டு   எழுப்பவந்தவர்   பின்வருமாறு   கூறுவாராயினர்)

உள்ளவா   எண்ணிக்கொடு   சொல்லுகோம் =  வந்தாரைக்   கணக்கிட்டு  உள்ளவாறு   எண்ணித்   தெரிவிப்போம் ,

அவ் அளவும்  =   கணக்கிட்டுத்   தெரிவிக்கும்   அத்துணை   நேரமளவும்  ,

கண்ணைத்  துயின்று  =  நின்கண்களைத்   துயில்  வித்து , 

காலத்தை  அவமே   போக்காது  =   இறைவன்   புகழைப் பாடுதற்குரிய   காலத்தை   வீணாகக்   கழியாமல் , 

விண்ணுக்கு   ஒரு   மருந்தை  =  தேவர்களுக்கு   ஒப்பற்ற   அமிழ்தமாக   உள்ளவனும் ,  வேத  விழுப்பொருளை   மறையாகமங்களின்  சிறந்த   பொருளாக   உள்ளவனும்   ,

கண்ணுக்கு  இனியானை  =  காண்பவர்கள்   கண்களுக்கு   இனிய   காட்சியளிப்பவனும்   ஆகிய   சிவபெருமானை,

பாடி  =  புகழ்ந்து   பாடி  ,

உள்ளம்   நின்று   உள்  நெக்கு  கசிந்து  உருக  =  நெஞ்சம்   அசைவற்று   நிற்ப  உள்ளே   நெகிழ்ந்து   கசிந்து   உருகுவாயாக (என்று   இவ்வாறு   எழுப்பிய   பெண்கள்   கூறக்கேட்டும்   எழுப்பப்பட்டவள்   படுக்கையினின்றும்  எழாமல்  துயிலும்   நிலையில்   கிடத்தலைக்   கண்டு   பின்னருங்  கூறுவர்)

யாம்  மாட்டோம்  =   வந்தாரைக்   கணக்கிட்டு   எண்ணிக்   கூறுவதற்கு   யாம்   இசையோம்  , 

நீயே  வந்து  =  நீயே  எழுந்து   வந்து  ,

எண்ணி   குறையில்  துயில்  =  கணக்கிட்டெண்ணிக்  குறைவு    காணப்படுமாயின்   மீண்டும்   துயில்வாயாக  என்பது.

விளக்கவுரை :-   மிக்க   தூக்கமுடையாளாய்த்  தன்னை    மறந்து   படுக்கையிற்   கிடக்கும்   ஒருத்தியை  ,  எழுப்ப வந்த  பெண்கள்   பார்க்குங்கால் ,  அவள்   வாயைச்  சிறிது  திறந்து   பற்கள்   வெளிப்படக்கிடந்த   நிலையைக்கண்டு   “ஒண்ணித்திலநகையாய்”   என்று   விளித்தனர்   என்க  .  இதன்  முன்னைத்  திருப்பாட்டில்    கூறப்பட்ட   பெண்ணை   விளிக்குங்கால்  ,  அவள்   பண்டை   நிகழ்ச்சியைக்   குறிக்கொண்டு ,  பல்விளக்கி    நீராடி   உடற்றூய்மையுடையளாம்   இயல்பு   குறித்து   உவமைக்கு   அடையின்றிப்  பொருளுக்கு   அடைபுணர்ந்து   “முத்தன்ன  வெண்ணகையாய்”   என்று   விளித்தனர் .  இதன்கண்   பல்லின்   இயற்கை   நிறம்   காணப்பட்டமையால்   பல்  விளக்குதல்   முதலிய   தூய்மை  யின்மை   தோன்ற   உவமைக்கு   ஒளியுடைமையாகிய   அடையைக்   கூறிப்  பொருளுக்கு   ஏதும்   அடைபுணர்க்காமற்   கூறி   விளித்தனர்   என்க. 

                           புலர்தல்  –  விடிதல் .   இன்னும்   விடியவில்லையோ  என்ற   குறிப்பு   இருணீங்கி     விடியும்   நிலையிலும்   மிக்க   உறக்கத்திற்   கிடைத்தலைப்   புலப்படுப்பதாகும் .   புலர்ந்ததின்று   என்பது   விகாரத்தால்   புலர்ந்தின்று   என்றாயிற்று. ஓகாரம் வினாப்பொருட்டு; எதிர்மறையுமாம். இவ்வாறு கூறிய   அளவில்  படுக்கையிற்   கிடந்தவள்   எழாமல்   கிடந்தவாறே   வந்தவர்களை   நோக்கி   என்னை   எழுப்ப   இத்துணைப்பேர்   வருவோமென்று   சொன்னீர்களே  அத்துணைப்  பெண்களும்   வந்துவிட்டார்களோ   என்பாள்  “எல்லாரும்  வந்தாரோ”   என்றாள்   என்க .  இவ்வினா   மீண்டும்   துயிலுதலின்   விருப்பத்தைப்   புலப்படுத்துவதாகும் . எழுப்பியவர்   பேச்சு   எழுப்பப்பட்டவளுக்குக்   கடுமொழியாக   இருந்தமையால்   அவள்  “என்   தோழிமாராகிய   நும்முள்   இனிமையாகப்   பேசுவாரு  முளரே   அன்னார்   இக்குழுவில்   இலரோ”   என்பாள்    “வண்ணக்கிளிமொழியார் “  என்றாள்   என்பது  .  வண்ணம்   மகளிர்க்கும்   பொருந்துவதாகும்  .  அழகுடையவர்   என்றது  , “இலங்கெழிலளவு   குணமெனவுரைப்பர் “  என்றபடி  நற்குணங்களையும்   புலப்படுத்துங்   குறிப்பாகும்  .  ஆகவே   நற்குணங்களும்   இனியன   மொழிதலுமுடையார்   இக்கூட்டத்திற்   கலந்திலர்   என்பது   வினாவின்  குறிப்பாகும்  .  இவ்வாறு   வினவிய   பெண்ணின்  இயல்பு   உணர்ந்து  அவளுக்குத்   தக்கவாறு   எழுப்பியவர்   விடை   கூறுவாராயினர் . யாம்  முதலில்   எண்ணிக்   கணக்கிட்டுக்  கொண்டு  பின்னர்   நினக்குத்   தெரிவிப்போம்   என்பார் “எண்ணிக்  கொடுள்ளவா  சொல்லுகோம்”  என்றனர்.  . 

                           “   கொண்டு   “  என்னும்   துணைவினை  “கொடு”   என்றாயிற்று.   வரவேண்டியவரெல்லோரும்   குறைவற வந்தனர்   ஆயினும்   வரையறுத்து  வினவும்   நினக்கு   விடையிறுக்க  எண்ணிக்கொண்டு   தெரிவிப்பதே   நலம்   என்று  அவர்   கருதினர்  என்பது   வந்தவர்   தம்மவரை   எண்ணிக்   கணக்கிட்டாலும்   சொல்லுதலில்   தவறின்றாமோ   என்னும்   ஐயந்தோன்று  மாதலின்,  அதனைப்   பரிகரிக்க   உள்ளவா  சொல்லுகோம்   என்றனர்  என்க ., “உள்ளவாறு  “   என்பது  விகாரத்தால்   உள்ளவா  என்றாயிற்று  .  எண்ணிக்கணக்கிட்டுச்  சொல்லும்   அத்துணைக்காலம்   வரையும்   நீ  பொய்யுறக்கங்கொண்டு  இறைவன்  புகழ்   பாடுதற்குரிய  இவ்  அருமைக்  காலத்தைப்  பயனின்றிக்  கழித்தல்  ஆகாதென்பார் ,  “அவ்வுளவுங்   கண்ணைத்   துயின்று   அவமே   காலத்தைப்   போக்காது   “  என்றனர்   என்பது . “கண்ணைத்துயின்று  என்புழித்துயில்வித்து   எனப்  பிறவினையாகக்கோடல் வேண்டும் . பொய்யுறக்கங்  கொண்டு  என்பது  கருத்து. 

                                   அவம்  – வீண்.  “போக்காதே”  என்புழி   ஏகாரம்   அசை  .  போக்காது  என்னும்   எச்சம்  “கசிந்துருக”  என்பதைக்கொண்டு  முடியும் .  அக்காலத்தை   வீணாக்காமல்   செய்யத்தக்கன  என்னை  யென்பதற்கு  விடையாக  இறைவனைப்   பாடியுருக   வேண்டுமென்றனர்.

                                    “ விண்”  ஆகு  பெயர்  .   பாற்கடலில்   தோன்றிய   அமுதம்   தன்னை   உண்டார்க்குச்  சிற்றின்பத்தை  விளைவிப்பதோடு  இறப்பைத்  தடை  செய்யும்  ஆற்றலின்மையும்  உடையது .  இறைவனாகிய  அமிர்தம்  பேரின்பம்  விளைத்தலோடு  மரணமிலாப்  பெருவாழ்வில்  வாழச்செய்யும்  இயல்புடையது. அதனால் “விண்ணுக்கு  ஒரு  மருந்து”  என்றார் . மேலும்  பாற்கடலில்  தோன்றிய  அமிழ்தம்  நஞ்சுடன்   தோன்றிற்றாக,  அந்நஞ்சை   அதன்   குணம்  வெளிப்படாவாறு  தன்னுளடக்கி   இன்பம்   செய்யும்   அமிழ்தமாக  இறைவன்  விளங்குதலின்  “ஒரு  மருந்து” என்றார்  எனினுமாம்.  “அடியாராம்  இமையவர்தங்   கூட்டமுய்ய  அலைகடல்வாய்  நஞ்சுண்ட  அமுதே”  என்பர்   சேக்கிழார்.  மறைகளின்   இதயத்தானத்தில்   விளங்கும்  மந்திரப்   பொருளாவான்   இறைவனே  யென்பது  புலப்பட  “வேதவிழுப்பொருளை”  யென்றார்.

“மும்மறையுள்  நடுமறையின்  முனிவிலெழு  காண்டத்தில்

செம்மைதரு   நடுக்காண்டஞ்  சேர்ந்தவெழு  சங்கிதையில் 

அம்மநடுச்   சங்கிதையின்  ஆதியீ   றொழித்துநடுப்

பொம்மலுற  அமர்மனுவின்  பொருளாவான்  எவன்மைந்த”

என்பதனாலும்   இவ்வுண்மை   தெளிக.  இச்செய்யுளில்  மனுமந்திரம் ;  சிவாயநம;  என்பது .  ஈண்டு  வேதமென்றது  சிவாகமங்களையும்  குறிக்கும்.  “யாம்  வேத  சிவாகமங்களுக்கு  வேறுபாடு  கண்டிலம் ;  வேதமே  சிவாகமம்”  என்னும் பெரியார்  உரையானுமுணர்க.  வேதங்களில்  சிறப்பிடங்களிலும்   சிவாகமங்களில்  யாண்டும்  சிவபரத்துவம்  கூறியிருத்தல்  தெளிவாம் .

              விண்ணுக்கு   ஒரு  மருந்தாகவுள்ள  இறைவன்  மண்ணுலகத்தவர்க்கு  அபர  ஞானமாகிய  நூலறிவானும்  பரஞானமாகிய  அநுபவ  அறிவானும்  உணரத்தக்கவன்   என்பது  புலப்பட  “வேத  விழுப்பொருளை”  என்பதை  அடுத்து  “கண்ணுக் கினியானை”  என்றனர்  என்க.  கண்  அகக்கண்ணும்  புறக்கண்ணுமாகும் .  இறைவன்  திருவுருவத்தைப்  புறக்கண்ணாகிய  முகக்கண்ணாற்  காண்டலினும்  அகக்கண்ணாற்  காண்டல்  சிறந்தது  என்ப.  “முகத்திற்  கண்கொண்டு  காண்கின்ற  மூடர்காள்,  அகத்திற்  கண்கொண்டு  காண்பதே யானந்தம்” என்பது  திருமந்திரம் .  அகப்புறக்  காட்சிகளுக்கு  இனியனாதல்  அன்பானினை  வாரது  உள்ளக்  கமலத்தின்  கண்  அவர் நினைந்த வடிவோடு தோன்றுதலானும் மக்களுருவில் ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சியளித்தலானுமாம் .  வேத  விழுப்பொருள்  என்பது  அபார ஞானத்தால்  உணரத்தக்கவன்  என்பதையும்  கண்ணுக்கினியான்  என்பது பரஞானத்தால்  உணரத்தக்கவன்  என்பதையும்  புலப்படுப்பனவாம் . வேத  விழுப்பொருளை  என்பதற்கேற்ப  அப்பெருமானை  என்ற  முதலிய   புகழ்ப்பாடல்களால்  பாடவேண்டுமெனவும் , கண்ணுக் கினியானை  என்றதற்கேற்ப,  கசிந்துள்ளம்  உள்நெக்கு  நின்றுருக  வேண்டுமெனவும்   கூறப்பட்டன.  உள்ளம்   நின்று  உள்நெக்கு  கசிந்து  உருகவென்று   இயைத்துப்  பொருள்  கொள்க.  உள்ளம்  அலையாமல்  நிற்ப  இறைவனை  நினைந்து  உள்ளே  நெகிழ்ந்து  கசிந்து  உருகவேண்டும்  என்பது  கருத்து .  நிற்பவென்பது  நின்று  எனத்  திரிந்து  நின்றது. 

                  முதலில்  உள்ளம்  புறச்செயல்களைப்  பற்றாமல்  அசைவற்று  நிற்றல்  வேண்டுமென்பதும்,  பின்  இறையுருவில்  ஈடுபட்டு  உட்கசிவுண்டாக  நெகிழ்ந்து  உருகவேண்டும்  என்பதும்  புலனாயவாறு  அறிக .  உருகுக  என்பது  உருக  என்றாயிற்று.  உருகு  என்னும்  பகுதியில்  வியங்கோளீறாகிய  அகரம்  தனக்குப்  பற்றுக்கோடாகிய  மொய்யைவிட்டு  இயைந்து  உருக  வென்றாயிற்றென்பது  அகரம்  வியங்கோளீறாக  வரும்  என்பதைத்  தொல்காப்பியச்  சொல்லதிகாரத்து   வினையியல்  29  -ஆம்  சூத்திர  உரையில்   “எழுத்தோத்தினுள்  ‘ ஏவல்  கண்ணிய  வியங்கோட்  கிளவியும்’  (எழு-210) (என  அகரவீற்றுள்  எடுத்தலாற்  பொருந்திய  மெய்யூர்ந்து  அகர  வீறாக  வருதலும் “  என்று  சேனாவரையர்  கூறிய  வுரையானும்  ,  தொல்காப்பியப்  பொருளதிகாரத்து,  “அவளறிவுறுத்துப்  பின்வர  வென்றலும் “ (தொல் – பொருள்  சூ.  114)  என்னும்  சூத்திரப்  பகுதியிலுள்ள  “பின்வர”  என்றதற்குப்  “பின்னர்  வருக “  என்று  நச்சினார்க்கினியர்  கூறியவுரையானும்  அறிக.

              இவ்வாறு  எழுப்பிய  பெண்கள்  கூறக்  கேட்டும்  எழுப்பப்பட்டவள்  படுக்கையினின்றும்  எழாமல்  கிடத்தலைக்  கண்டு , முன்னர்க்கூறியபடி  வந்தவர்கள்  யெண்ணிக்கணக்கிடும்  வேலையை  யாங்கள்  செய்யமாட்டோம்  என்பார்  “யாமாட்டோம்” என்றனர் .  இறைவன்  புகழ்பாடும்  இக்காலத்தில்  யாம்  கணக்கிடும்  வேலையில்  தலைப்படுங்கால்  அத்துணை  நேரமும்  வீணாகாமல்  நீ  உறக்கத்தினின்று  எழுந்து  இறைவன்  புகழைப்பாடி  உருகவேண்டும்  என்று  கூறினாராக ,  கிடந்தவள்  அவ்வாறு  செய்யாமல்  மீண்டும்  உறங்கும்  நிலையிற்  கிடத்தலை  அறிந்து  இந்நற்காலத்தை  யாமும்  வீணாக்குதல்  கூடாதென்று  கருதி  யாம்  எண்ணும்  வேலையைச்  செய்ய  மாட்டோம்  ,  நீ  இறை  புகழ்  பாடாவிட்டாலும்  எண்ணிக்  கணக்கிடும்  வேலையையாவது  செய்யவேண்டும்  என்பார்  “யாமாட்டோம்  நீயே வந்து எண்ணி”  எனவும்; எண்ணுங்கால் வரவேண்டிய  பெண்களுள்   குறைவு  நேருமாயின்    பின்  நீ விரும்பியபடியே  உறங்கலாமென்பார்  , “குறையில்  துயில்”  எனவுங்  கூறினர் .  குறை  நேர்ந்தால்  மீண்டும்  உறங்குவாயாக  வென்று  கூறிய  நயம்  உணர்ந்து  இன்புறத்தக்கது.

                 இனி,  இத்  திருப்பாட்டிற்கு  எண்ணிக்கொடுள்ளவா  சொல்லுகோம் ;  அத்துணைக்காலம்  வரை  சிவபெருமானைப் பாடி  உள்ளம்  கசிந்துருக  எமக்கு  இயலாதாகும்  .  ஆதலின்  கண்ணைத்  துயின்று  அவமே  காலத்தைப்  போக்காமல்  நீயே  எழுந்து  வந்து  எண்ணிக்  குறையில்  துயில் ,  என  இயைத்துப்  பொருள்  கோடலும்  ஒன்று .  இவ்வாறு  கொள்ளுங்கால்  உருக  என்பது  எச்சமாய்  நின்று  யாம்மாட்டோம்  என்பதைக்  கொண்டு  முடியும்  . 

                   இதன்கண்   “கண்ணுக்  கினியானை “  என்றதனால்  இறைவனுக்குத்  திருமேனி  யுண்டென்பது  புலப்படுக்கப்  படுதலின்  , அத்  திருவுருவுக்கு  இடனாகிய  சத்தியை  வியந்தது  பெறப்படும் . “ காயமோ  மாயையன்று காண்பது  சத்தி தன்னால்”  என்பது  சிவஞானசத்தி . 

பாடல் 5.

மாலறியா   நான்முகனுங்   காணா   மலையினைநாம்

             போலறிவோ   மென்றுள்ள   பொக்கங்க   ளேபேசும்

பாலூறு   தேன்வாய்ப்   படிறீ   கடைதிறவாய்

              ஞாலமே   விண்ணே   பிறவே   யறிவரியான்

கோலமும்   நம்மையாட்   கொண்டருளிக்   கோதாட்டுஞ்

                சீலமும்   பாடிச்  சிவனே   சிவனேயென்

றோல   மிடினும்   உணரா   யுணராய்காண்

                 ஏலக்   குழலி   பரிசேலோ   ரெம்பாவாய்

கருத்துரை:-   முன்னைத்   திருப்பாட்டில்   இறைவனது  அருமையில்  எளிய  அழகில்  ,  நெஞ்சத்தால்  நினைந்து  உருகுதலாகிய  எளிமையைப்   பெண்மக்கள்  வாயிலாகப்  புலப்படுத்திருளிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அப் பெருமான்  திருமேனியில்   தம்  கண்கள்  ஈடுபட்டு  இன்புறும்  எளிமையை  அவ்வாறே  அருளிச்செய்தனர்.

பதவுரை: –   மால்  அறியா  நான்முகனும்   காணா  மலையினை

திருமாலால்  அறியப்படாத  அடியினையும்  பிரமனால்  காணப்படாத  முடியினையுமுடைய  மலையுருவாய்  நின்ற  இறைவனை ,

நாம் அறிவோம்   என்று  உள்ள  பொக்கங்களே =  நாம்  உணர்வோம்  என்று  இவ்வாறு  உளவாகிய  பொய்களையே, 

ஊறு  பால்  தேன்போல்  பேசும்  வாய்  படிறீ =  சுரக்கின்ற  பாலையும்  தேனையும்  போல்  இனிமை  தோன்றப்  பேசும்  வாயினையுடைய  வஞ்சகி, 

கடை  திறவாய் =  கடைவாயிலைத்  திறப்பாயாக,

ஞாலமே  விண்ணே  பிறவே  அறிவு  அரியான் =  நிலவுலகத்துள்ளார்   வானுலகத்துள்ளார்   பிறவுலகத்துள்ளார்   ஆகிய   யாரானும்   அறிதற்கரிய   அப்பெருமானுடைய,

கோலமும் = திருவுருவத்தையும் .

நம்மை  ஆட்கொண்டருளிக்  கோதாட்டும்  சீலமும்  பாடி =   எளியேமாகிய  நம்மையும்  ஆளாகக்  கொண்டருளிச்  சீராட்டும்  அருட்  குணத்தையும்  புகழ்ந்து  பாடி.

சிவனே  சிவனே  என்று  ஓலம்  இடினும் =  சிவபெருமானே  சிவபெருமானே  யென்று  ஓலமிட்டுக்  கூவியும் ,

உணராய்  உணராய்  =  அறிந்திலை;  துயில்  நீத் தெழுந்தாயும்  இல்லை,

ஏலம்  குழலி  பரிசு =  மயிர்ச்சாந்தணிந்த  கூந்தலையுடைய  நின்  தன்மை  என்னே!  என்பது .

விளக்கவுரை :-  “பாதாள  மேழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர்

போதார்  புனைமுடியும்  எல்லாப்  பொருண்முடிவே”

என்னும்படி  ஒளிமலையாக  வெளிப்பட்ட  இறைவனுடைய  அடியையும்  முடியையும்  முறையே  திருமால்  விலங்குருக்கொண்டு  நிலம்  அகழ்ந்தும்,  நான்முகன்  பறவையுருக்கொண்டு  விண்ணிற்  பறந்து  சென்றும்  அறிய  வியலாமல்  வலியிழந்து  நின்றனரென்பது  புராணக்கதை.   இந்  நிகழ்ச்சி  திருவண்ணாமலையைப்  பற்றியதென்ப   இஃது  இறைவனது  பரம்பொருட்டன்மையைப்  புலப்படுப்பதாகும் .  இனி  மயக்கவுணர்வுடையோரால்  அறியப்படாதவன்  என்பதும் , மனத்தை  ஒருமுகப்படுத்தாமல்  பல  முகமாகச்  செலவிடுவோரால்  காணப்படாதவன்  என்பதும்  ஆகிய  குறிப்புப் பொருள்  தோன்ற .  “மாலறியா  நான்முகனுங்காணா  மலையினை”  யென்றாரெனினுமாம். .  மலையாக  வெளிப்பட்டும்  அறிந்திலர்  என்பது  ஒரு  நயம் .

              தேவருட்  சிறந்த  திருமால்  பிரமன்  இவர்களால்  அறிய  இயலாத  இறைவனை  நாம்  அறிவோமென்று  எழுப்பப்பட்டவள்  கூறியது,  விளையாட்டாகக்  கூறிய  பொய்யுரையாகும்.  இன்னோரன்ன  பொய்யுரைகளை  அவள்  பேசும்போது  சொற்கள்  இனியனவாக  இருந்தன  வென்பார்,  “பாலூரு  தேன்வாய் “  என்றனர் .  ஊறுதலைப் பாலுக்கு  ஏற்றுக .  “போலறிவோம்”  என்புழியுள்ள “போல்”  என்பதை  “பாலூறு  தேன் “  என்பதனோடு  இயைத்துத்  தேன்போல்  பேசும்  வாய்  எனக்கொண்டு  பொருள்  கொள்க ;  அன்றி  ஆண்டுப்போல்  என்பதை  அசையாக்கி,  ஈண்டுப்  போல்  என்னும்  உவமவுருவை  விரித்துக்  கோடலுமாம்.  சொல்லில்  இனிமையும்  பொருளில்  பொய்மையுந்  தோன்றக் கூறுதல்  வஞ்சகர்  இயல்பாதலின் , “படிறீ” என  விளிக்கப்பட்டாள்  என்பது . இறைவனை  நாம்  அறிவோம்  என்று  வாயளவில்  பொய்யுரை  கூறிவிட்டு  இறைவன்  புகழ்  பாடுதற்குரிய  இக்காலத்தில்  யாம்  வந்து  அழைக்கவும்  எழாமல்  துயில்கின்றனை;  இனியாவது  உன் கட்கடையைத்  திறந்து  பார்த்து  வாயிற்கடையினையாவது  திறப்பாயாக  வென்பார்  “கடைதிறவாய்”  என்றனர் . 

                     அவனருளே  கண்ணாகக்  காணினல்லால்  இந்நிலவுலகத்தவர்  ஆயினும்   விண்ணுலகத்தவராயினும்   ஏனையுலகங்களில்  உள்ளவராயினும்  யாம்  காண்போம்  என்று  தம்  வன்மையால்  முயலின்  காண்டற்கு  அரியனாவான்  என்பது  தோன்ற  “ஞாலமே  விண்ணே  பிறவே  யறிவரியான்”  என்றனர் .  ஏகாரங்கள்  எண்ணுப்பொருளன .  அப்பெருமான்  மாட்டு  அன்பு  செய்தற்கு  உரிய  சாதனம்  அவன்  திருமேனியைக்கண்டு  இன்புறுதலும்  அவன்  அளப்பரும்   அருட்குணத்தில்   ஈடுபடுதலுமாம்  என்பார், “கோலமும்  நம்மையாட்கொண்டருளிக்  கோதாட்டுஞ்சீலமும்  பாடி “ என்றார்.  இறைவனுக்குத்  திருமேனி  உருவம்  அருவம்  அருவுருவம்  என  முத்திறப்படும்  என்ப.  இதனை

உருமேனி  தரித்துக்  கொண்ட  தென்றலும்  உருவி  றந்த

அருமேனி  யதுவுங்  கண்டோம்  அருவுரு  வான  போது

திருமேனி   யுபயம்  பெற்றோஞ்  செப்பிய  மூன்று  நந்தங்

கருமேனி  கழிக்க  வந்த  கருணையின்  வடிவுதானே”

என்னும்  சிவஞானத்தித்  திருவிருத்தத்தாலும்    உணர்க.  இம்மூன்றனுள்  உருவ  வழிபாடே  நமக்கு  இயைந்த தென்பார்,  “கோலமும்”  எனவும் ,  அப் பெருமானுடைய  அளப்பரும்  அருட்குணங்களுள்  பெண்மக்களாகிய  நம்மை  அடிமைகொண்டு  நம் குற்றத்தை  யொழித்துச்  சீராட்டுங் குணமே  நம்  அநுபவத்தால்  அறியத்தக்க தென்பார்  “நம்மை  ஆட்கொண்டருளிக்  கோதாட்டுஞ் சீலமும் “  எனவுங்  கூறினர்  என்க.  முதலில்  கண்களுக்கு  இனிய  திருமேனியின்  பொலிவில்  இன்புறுதலும் ,  பின்  கரணங்களுக்கு  இனிய  அருட்  குணங்களில்  ஈடுபடுதலும்  இறைவனது  அருமையில்  எளிய  அழகின்  பயனாக  நிகழும்  என்பது  கருத்து. 

                   இவ்வாறு  அப் பெருமானுடைய  திருக்கோலத்தையும்  அருட்  செயலாகிய  சீலத்தையும்  புகழ்ந்து  பாடிச்  சிவபெருமானே  சிவபெருமானே  எம்மைக்  காத்தருள்க  என்று  அபயம்  வேண்டுங்  குறிப்பு  மொழியாற்  கூவி  யழைத்தும்  என்பார், “ சிவனே  சிவனே  யென்றோலமிடினும் “  என்றனர் .         ஓலம் = அபயம்  வேண்டிக்  கூவும்  குறிப்பு  மொழி .  யாம்  சிவபெருமானை  வேண்டி  ஓலமிட்டுக்  கூவியும்  அறிந்திலை  என்பார் “உணராய்”  எனவும் ;  இறைவன்  திருப்பெயர்ப்  பெருமையை   யுணராமையாகிய  அவ்வளவினன்றி    எங்கள்  பேரொலி  கேட்டும்  துயில்  நீத்தனையோ  வெனின்  அதுவுமின்றென்பார்  பின்னும்  “உணராய்காண்”  எனவுங்கூறினர் . 

காண் = முன்னிலையசை .  ஏலம் = மயிர்ச்சாந்து ; கூந்தற்கிடும்  வாசனைச் சாந்து .  இஃது  அவள்  தன்னை  அலங்கரித்துக் கொண்டு  கிடத்தற்கு  உபலக்கணம் .  கூந்தற்கு  மயிர்ச்சாந்து  பூசுதல்  முதலியவற்றால்  தன்னை  அலங்கரித்துக் கொண்டு  தூங்குகின்ற  நின்  தன்மை  யிருந்தவாறு  என்னேயென்பார்  “ஏலக்குழலி  பரிசு”  என்றனர் .  யாரானும்  காண்டற்கரிய  இறைவன்  நமக்கு  இரங்கி  எழுந்தருளியிருக்கும்  திருமேனியை  அலங்கரித்துக்  கண்குளிர  மனங்குளிரக்  கண்டு  இன்புறாமல்  புழுக்கூடாகிய  இவ்வுடலை  யலங்கரித்து  இன்புறும்  நின்  நிலை  இரங்கத்தக்கது  என்னுங்  கருத்தால்  “ஏலக்குழலி”  எனச்  சுட்டுவாராயினர் . 

                 இதன்கண் “ ஞாலமே  விண்ணே  பிறவே  யறிவரியான்” என்றதனால்  இறைவனது  சொரூபநிலையும்  , “கோலம்”  என்றதனால்  தடத்த  நிலையும்  பெறப்படுதலின்  ,  அக்கோலங்கோடற்கு  இடனாகிய  சத்தியை  வியந்தது  குறிப்பிற்  புலனாதல்  அறிக .  சிவன்  உருக்கோடற்குச்  சத்தி  காரணம்  யென்பதை  “காயமோ  மாயையன்று  காண்பது  சத்தி  தன்னால் “  என்னுஞ்  சிவநெறிப்  பனுவலானுந்  தெளிக. 

பாடல்  6.

மானே  நீ  நென்னலை  நாளைவந்  துங்களை

              நானே  யெழுப்புவன்  என்றலும்  நாணாமே

போன  திசைபகராய்  இன்னம்  புலர்ந்தின்றோ

               வானே  நிலனே  பிறவே  யறிவரியான்

தானேவந்  தெம்மைத்  தலையளித்தாட்  கொண்டருளும் 

                வான்வார்  கழல்பாடி  வந்தோர்க்குன்   வாய்திறவாய்

ஊனே   யுருகாய்  உனக்கே  யுறுமெமக்கும் 

                 ஏனோர்க்குந்  தலைகோனைப்  பாடேலோ  ரெம்பாவாய் .

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டுக்களில்  இறைவனது  அருமையில்  எளிய  அழகில் ,  முறையே  மொழி  மனம்  செயல்களுக்கு  எளியனாதலைப்  புலப்படுத்திருளிய  அடிகள், இத்திருப்பாட்டில்  அப்பெருமான்  முக்கரணங்களாலும்  தன்னை  எளிமையில்  வழிபாடு  செய்யும்  மெய்யன்பரை  வலிய  வந்து  அடிமை  கொண்டு  அன்னார்க்குத்தலையளி  புரிவன்  என்பதைப்  புலப்படுத்தருளுகின்றார். 

பதவுரை:-  மானே  நீ  நென்னல் =  மருண்ட  நோக்கத்தால்  மான்  போன்றவளே  நீ  நேற்று  ,

நாளை  நானே  வந்து  உங்களை  எழுப்புவன் =   நாளை  நீயிர்  எழுதற்கு  முன்னரே  யானே  எழுந்து  வந்து  உம்மை  எழுப்புவேன் , 

என்றலுமே  =   என்று  சொன்ன  அளவிலே (போய்    விட்டாய் ), 

நாணாமே  போன  திசை  பகராய் =  அவ்வாறு  நாணமின்றிப்  போன  திசையைச்  சொல்லுவாயாக, 

இன்னம்  புலர்ந்தின்றோ =  இன்னும்  இருள்  விடியலில்லையா?, 

வானே  நிலனே  பிறவே  அறிவரியான்  =   வானுலகத்தவரும்  மண்ணுலகத்தவரும்  பிறவுலகத்தினரும்  ஆகிய  எவரானும்  அறிதற்கு  அரியவனாகிய  சிவபெருமான் .

தானே  வந்து  =  தானே  வலிய  நம்பால்  வந்து ,

தலையளித்து  எம்மை  ஆட்கொண்டருளும்  =  தலையளிசெய்து  நம்மை  அடிமை  கொண்டருளுதற்குரிய, 

வான்வார்  கழல்  பாடி  வந்தோர்க்கு  =  அழகிய  நெடிய  வீரக்  கழலணிந்த  திருவடிகளைப்  புகழ்ந்து  பாடி  வந்தவர்களாகிய எம்பொருட்டு 

உன்  வாய்  திறவாய் =  உன்  வாயைத்  திறக்கின்றாயல்லை  ,

ஊன்  உருகாய்  =  உடல்  உருகப்  பெறுகின்றாயுமல்லை  ,

உனக்கே  உறும்  =  இந்நிலை  உனக்கே  பொருந்துவதாகும்  ,

எமக்கும்  ஏனோர்க்கும்  தம் கோனைப்பாடு  =  எங்களுக்கும்  மற்றெல்லோர்க்கும்  தலைவனாகிய  அப்பெருமானைப்  பாடுவாயாக  என்பது .   

விளக்கவுரை :-  மான்  –  உவம  ஆகு  பெயர்; பெண்ணை  யுணர்த்திற்று .  கன்னியரெல்லோரும்  முன்னை  நாளில்  ஒருங்கே    கூடிப் பாவை  நோன்பு குறித்து   விடியுமுன்  நீராடப்போதல்  பற்றிச்  சூழ்ந்த  பொழுது  இப்பொழுது  எழுப்பப்படும்  பெண்  யானே  விடியுமுன்  எழுந்து  வந்து  நும்  எல்லோரையும்  எழுப்புவேன்  என்று  சொல்லிவிட்டுப்போய்ப்  பின்  அதனை  மறந்து  மற்றெல்லோரும்  தன்  கடைவாயிலில்  வந்து  இறைவன்  புகழ்  பாடுதலைப்  படுக்கையிற்  கிடந்தவாறே  அறிந்து  நாணத்தால்  அஞ்சி  நோக்கினளாதலின், அக்குறிப்பறிந்த  மகளிர்  மருட்சி  நோக்குக்  குறித்து,  “மானே”  யென்று  அழைப்பாராயினர் .  சமணர்  வஞ்சகச்  சூழ்ச்சியால்  மனம்  வருந்தியிருந்த  மங்கையர்க்கரசியாரை  நோக்கி  அக்குறிப்பை  யுணர்ந்த  திருஞானசம்பந்தர்  “மானி  னேர்விழிமாதராய்”  என்று  அழைத்ததும்   ஈண்டுக்  கருதத்தக்கது .   நென்னல்  –  நேற்று.  அஃது ,  “என்றலுமே”  என்பதோடு  இயையும் .  ஐ  –  சாரியை.  நாளை  நானே  வந்து  எனக்கூட்டுக.  எழுப்புவன்  என்று  சொல்லிய  பின் ,  அச்சொல்லும்  நீயும்  போனதிசை  எம்மால்  அறிய  முடியவில்லை  யென்றது ,  சொன்னபின்  இந்நிகழ்ச்சியிற்  சிறிதும்  ஈடுபட்டிலை  யென்பது  பற்றி .   இறைவன்  புகழ்  பாடி  இறைவியின்  நோன்பிற்  கலந்துகொள்ள  முதலில்  வருவதாகச்  சொல்லியபடி  நடந்து  கொள்வது இன்றியமையாததாகவும்  அதனைப்  புறக்கணித்து  மறந்துவிட்டனையென்பார்  “நாணமே  போனதிசை  பகராய்” என்றனர் .        “என்றலும்  நாணமே”  என்பதும்  பாடம் . இப்பொழுது  நின்பக்கலில்  வந்து இறைவன்  புகழைப்பாடியும்  எழவில்லை .  இந் நிகழ்ச்சியில்  இத்துணைப்  புறக்கணிப்பிருப்பினும்,  இயல்பாகத்  துயில்  நீத்தெழ  வேண்டிய  காலம்  வந்தும் உணர்ந்திலை  யென்பார்  “இன்னம்  புலர்ந்தின்றோ”  என்றனர் . 

               இதன்  முன்னைத் திருப்பாட்டில்  “ஞாலமே  விண்ணே  பிறவேயறிவரியான்”  எனவும்,  இத்திருப்பாட்டில்  “வானே  நிலனே  பிறவே  யறிவரியான்”  எனவும்  கூறியவற்றின்  பொருளொன்றேயாயினும்,  அத்  திருப்பாட்டில்  இறைவன்  திருமேனி தரித்துக்கொண்டு  எழுந்தருளிக்  காட்சியளித்து  இன்புறுத்தியதற்கு  இடனாதல்  பற்றி  ஞாலத்தை  முதற்கண்ணும்,  இத்திருப்பாட்டில்  வானுலகத்திற்கும்  அப்பாலுள்ள  சிவலோகத்திலிருந்து  வானுலகத்துள்ள  தேவர்க்கும்  அரியனாய்  ஏழைகளாகிய  தம்மை  யாட்கொள்ள  வருதற்கு  வான்வழி  இடனாதல்  பற்றி  வானை  முதற்கண்ணும்  கூறினாரென்பது .  எங்கும்  நிறைபொருளாகிய  இறைவனுக்கு  ஓரிடமும்  அவ்விடம்  பெயர்ந்து  பிறிதோரிடத்தை  அடைதலுமாகிய  நிகழ்ச்சிகள்  புராண  முதலியவற்றிற்  கேட்கப்பட்டமையாலும்  ,  பத்திமை  மிகுதியாலும்  அக்கன்னியரால்  மேற்கொள்ளப்பட்டன வென்பது. 

                      அரியதவம்  புரிந்து  அறிதற்கரிய  இறைவனை  அடைதற்குரிய  தவ  வன்மை  இல்லாத  நம்மாட்டுப்  பேரருள்  காரணமாகத்  தானே    வந்ததோடு  சிறந்த  கருணைக்கு  நம்மை  இடனாக்கி  ஆளாக  ஏற்றுக்கொண்டருளினன்  என்பார், “தானே வந்தெம்மைத் தலையளித்தாட்  கொண்டருளும்  “  எனவும்,  அங்ஙனம்  நம்மை  ஆட்கொண்டருளுதற்குரிய  சிறந்த  கருவி  அப்பெருமான்  திருவடியே  யென்பார்  “ஆட்கொண்டருளும்……கழல்”  எனவுங் கூறினர்.  அவ்விறைவன்  திருவடி  தம்  நெஞ்சத்தைக்  கவர்ந்தது பற்றியும்  தமக்குக்  கேடு  வாராது  பாதுகாப்பது  பற்றியும்  முறையே  அழகும்  வீரமும்  அமைந்தன வென்பது   தோன்ற  “வான்வார்கழல்”  என்றனர் .  வான்  –  அழகு .  கழல்  – ஆகுபெயர்  உலகியற்  செய்தி  குறித்து  நின்னோடு  பேச வந்தேமாயின் , நீ  பொருட்படுத்தாமல்  ஏதும்  பேசாதிருக்கலாம்;  எல்லாம்  வல்ல  ஆண்டவன்  எளியேமாகிய     நம் பொருட்டு  இரக்கமுற்று  வலிய வந்து   ஆட்கொண்ட  திறத்தைக்  குறித்து  அப்பெருமான்  புகழை  மனங்குளிர்ந்து  பாடிவந்த  எம்மோடு  பேசுவதற்கு  வாய் திறவாமலிருத்தல்  தக்கதோ  என்பார்,  “ கழல்பாடி  வந்தோர்க்குன்  வாய்திறவாய்” என்றனர் .  திறவாய்  என்பது  திறவாமலிருக்கின்றாய்  என்னும்  பொருட்டு .  ஒருவாறு  இறைபுகழைக்கேட்டு  மெளன  நிலையில்  நினைந்து  மனம்  உருகுதலால்  பேச  நாவெழா மலிருக்கின்றனையோ  வென்றால் , “பத்தியால்  நெஞ்சுருகப்  பெற்றார்க்கு  உடலுருகிக்  கண்ணீரும் வெளிப்படுமாதலின் ,  அவ்வாறில்லாமையால்  அதுவுமில்லை  யென்பார், “ஊனேயுருகாய்”  என்றனர் .  இறைவனை  நெஞ்சம்  நினைந்துருகுங்கால்  உடலுங் குழைந்துருகுமென்பதை, “புன்புலால் யாக்கை  புரைபுரை கனியப் பொன்னெடுங்  கோயிலாப்  புகுந்தென்,  என்பெலா முருக்கி “ யென  அடிகள் பிறிதோரிடத்துத்  தம்  அநுபவநிலை  கூறியதனால்  அறிக. 

                   இவ்வாறு  நாளைவந்துங்களை  நானே  எழுப்புவன்  என்ற  சொல்லைக்  கடிதின்  மறத்தலும் ,  இறைவன்  புகழ்பாடி  வந்த  எம்மைப்  புறக்கணித்து  வாய்திறந்து  பேசாமலிருத்தலும்  , நெஞ்சம்  உருகி  உடல்  குழையாமலிருத்தலும்    ஆகிய  இந்நிலை  அன்புடையார்  பிறரிடத்துக்  காண்டற்கரியது ; நினக்கே  பொருந்துவதாகும்  என்பார், “உனக்கே  யுறும் “ என்றனர் .  ஏகாரம்  பிரிநிலை;  தேற்றமுமாம் .  இனியாவது  படுக்கையினின்றும்  எழுந்து  நமக்கும்  பிறர்க்கும்  தலைவனாகிய  இறைவனை  எம்மோடு  சேர்ந்து  பாடுவாயாக  என்பார், “எமக்கும்  ஏனோர்க்குந்  தங்கோனைப்பாடு” என்றனர் .  தங்கோன்  என்பது  தலைவன்  என்னும்  பொருட்டு  பாடுக  என்புழி  வியங்கோளீறு  தொக்கது ; பின்வருவனவற்றிற்கும்  ஒக்கும் . 

                இதன்கண்    “வான்வார்கழல்பாடி “  என்றதனால்  திருவடியாற்  குறிக்கப்படும்  சத்தியை  வியந்தது  பெறப்படும் .  “ஆதியும்  அந்தமும் “  என்னும்  திருப்பாட்டின்  இறுதியில்  இதனைப்பற்றிய  குறிப்பைக்  காண்க .

பாடல் 7.

அன்னே  இவையுஞ்  சிலவோ  பலவமரர்

             உன்னற்  கரியான்  ஒருவன்  இருஞ்சீரான்

சின்னங்கள்  கேட்பச்  சிவனென்றே  வாய்திறப்பாய்

             தென்னாவென்  னாமுன்னந்  தீசேர்  மெழுகொப்பாய்

என்னானை  யென்னரையன்  இன்னமுதென்  றெல்லோமுஞ்

              சொன்னோங்கேள்  வெவ்வேறா  யின்னந்  துயிலுதியோ

வன்னெ  ஞ்சப்  பேதையர்போல்  வாளா  கிடத்தியால்

              என்னே  துயிலின்  பரிசேலோ  ரெம்பாவாய்

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்புடையார்  செய்யும்  எளிய  வழிபாட்டிற்கிரங்கி  வலிய வந்து  தலையளிபுரியும்  இறைவன்  இயல்பைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அப்பெருமான்மாட்டுச்  செய்யப்படும்  தலையன்பின்  திறத்தை  வெளிப்படுத்து  அருளுகின்றார் . 

பதவுரை:-   அன்னே  = தாயே, 

இவையும்  சிலவோ  =  நின்  செயல்களுள்  இவைகளும்  சிலவுளவோ.

பல  அமரர்  உன்னற்கு  அரியான்  =  பல  தேவர்களாலும்  நினைத்தற்கும்  அரியவனும் , 

ஒருவன்  =  ஒப்பற்றவனும் ,

இரும்  சீரான்  =  மிக்க  பெருமையுடையவனும்  ஆகிய  இறைவனைப்  பற்றிய, 

சின்னங்கள் கேட்ப  சிவன்  என்றே  வாய்திறப்பாய் =

எக்காளம்  சங்கு  முதலியவற்றின்    ஒலிகளைக்கேட்ட  அளவில்  சிவ  சிவ  வென்றே  சொல்லி  வாயைத்திறப்பாய்  ,

தென்னா  என்னா  முன்னம்  தீ  சேர்  மெழுகு  ஒப்பாய் =

தென்னவனே  என்று  பிறர்  சொல்லும்முன்  அனலிடைப்  பட்ட  மெழுகுபோல்  உருகுவாய் ,(இப்பொழுதோ)

என்னானை  என் அரையன்  இன் அமுது  என்று  எல்லோரும்  வெவ்வேறாய்ச்  சொன்னோம்  கேள்  =

எனக்குத்  தந்தை  எனக்கு  அரசன்  இனிய  அழிழ்தம்  என்று  யாமெல்லோரும்  தனித்  தனியாகவும்  கூறினோம்   அவற்றைக்  கேட்பாய்,

இன்னம்  துயிலுதியோ =

கேட்டும்  இன்னும்  உறங்குகின்றாயோ?,

வல் நெஞ்சம்  பேதையர்போல்  வாளா  கிடத்தி   =

இறைவன்  பொருட்டுக்  குழைதலில்லாத  நெஞ்சம்  படைத்த  அறிவிலார்  போலச்  சும்மா  கிடக்கின்றாய்

துயிலின்  பரிசு  என்னே =

உறக்கத்தின்  தன்மைதான்  எத்தகையது? என்பது.

விளக்கவுரை :-  எழுப்பியவர்  ஆண்டால்  மூத்தவராகவும்  எழுப்பப்பட்டவள்  இளையவளாகவும்  குறிக்கப்படுதலின்  “அன்னே”  எனச்  செல்வ  மொழியால்  அழைப்பார்  ஆயினர் .  “இவையுஞ்  சிலவோ”  என்புழி “இவை”  யென்பது  அன்பினால்  இறைவனிடத்து  ஈடுபடுதலும்  அன்பிலள்போலக்  கிடத்தலுமாகிய  ஒன்றுக்கு  ஒன்று  முரணான  செயல்களைச்  சுட்டும் .  இப்படியும்  சில  செயல்கள்  நின்பாலுள்ளனவோ  என்பது  குறிப்பு .  “பல  அமரரும் “  என்புழி  முற்றும்மையும்  உன்னற்கும்  என்புழி  எச்சவும்மையும்  செய்யுள்  விகாரத்தாற்றொக்கன.  நினைப்பிற்கு  அரியனாங்கால்  சார்தற்கு  அரியன்  என்பது  கூறாமலே  தெளியப்படும் .  “ஓப்புடையனல்லன்  ஒருவமனில்லி”  யாதலின்  ஒருவன்  என்றார்.  நல்வினைப்  பயனே  துய்க்கும்  தேவர்  பலர்க்கும்  நினைத்தற்கு  அரியனாதலும்,  ஈடும்  எடுப்புமில்லாமையும்  பெருமைக்குரிய  குணங்களாயினும்  அத்துணைப்  பெரியோன்  நம்மைப்  போன்ற  எளியவர்க்கிரங்கி  யாட்கொள்ளும்  அருஞ்செயலுடைமையால்,  மிக்க  பெருமையுடையான்  என்பது  தோன்ற  “இருஞ்சீரான்”  என்றார் , பிறராற்  செய்தற்கரிய  செயலைச்  செய்தல்  பெருமைக்குணத்தின்  இயல்பென்பது  உணரத்தக்கது.

                    சின்னங்கள்  என்ற  பன்மையால்  இறைவன்  எழுச்சியை  நினைப்பூட்டும்  எக்காளத்தோடு  சங்கு  முதலியனவுங்  கொள்ளப்படும் .  இம் மங்கல வொலியைக்  கேட்ட  அளவில்  சிவ  சிவ  என்னும்  மகாமந்திரத்தைச்  சொல்லிக்கொண்டே  வாய்  திறக்கும்  இயல்பினை  யென்பார் , “சின்னங்கள்  கேட்பச் சிவனென்றே  வாய் திறப்பாய்” என்றனர் .  இனி  சின்னங்கள் –  அடையாளப்  பொருள்களெனவும் ,  கேட்டடல்  இலக்கணையாற்  காண்டலை  யுணர்த்து  மெனவுங்  கொண்டு  திருநீறு  கண்மணி  புனைந்த  சிவனடியாரைக் கண்ட  அளவில்  சிவனெனவே  கூறுவாயெனக்  கோடலுமாம்.

                  தென்னன்  –  பாண்டியன் .  வழுதி  மருமகனாகி  மீனநோக்கின் , மடவரலை மணந்துலக  முழுதாண்ட “  சுந்தரனாதலின்  இறைவனைத்  தென்னன்  எனப்  பலவிடத்துங்  கூறுவர் .  எந்நாட்டவர்க்கும்  இறைவனாயினும்  நேரில்  ஆட்சி  புரிந்த  சிறப்புரிமை  தோன்றத்  தென்னாடுடைய  சிவன்  எனக்கூறியதும்  ஈண்டு  உணரத்தக்கது .  இறைவன்   இறைவி   முருகன்  இம்மூவரும்  அரசு  புரிந்த  பெருமை  இப்பாண்டி  நாட்டிற்கேயுரியது என்பதை , 

“உலகம்  யாவையும்  ஈன்றவன்  உம்பரு  ளுயர்ந்த

திலக  நாயகி  பரஞ்சுடர்  சேயென  மூன்று 

தலைவ  ரான்முறை  செய்தநா  டிஃதன்றிச்  சலதி

சுலவு   பாரினுண்டாகுமோ  துறக்கத்து  மஃதே”

 என்பதனாலும்  அறிக.  எக்காரணத்தை  முன்னிட்டாவது  தென்னன்  என்று  பிறர்  கூறக்  கேட்ட  அளவில்  அச்சொல்  முடிதற்குமுன்  தீயிடைப்பட்ட  மெழுகு  போல  உருகும்  இயல்பினை  யென்பார் , ”தென்னா  வென்னாமுன்னந்  தீசேர் மெழுகொப்பாய்”  என்றனர் .  வாச்சிய  ஒலி  கேட்ட  துணையானே  சிவநாமங்  கூறுதலும்,  சிவநாமங்கேட்ட  துணையானே  நெஞ்சம்  உருகுதலும்  உடைய  நீ இப்பொழுது  யாம்  உளங்கனிந்து  அன்பு உரைகள்  பல  பகர்ந்தும்,  துயில்  நீத்தெழாமலிருப்பது  என்னையோ  என்றனரென்பது .  யாங்கள்  ஒருங்கே  சேர்ந்தும்  இறைபுகழைப்  பாடினோம் .  கூட்டொலி  நின் செவிக்குத் தெளிவாகக்  கேட்கப்படாமலிருத்தல்  கூடுமோ  என்னும்  ஐயத்தால்  பின்னர்த்  தனித்தனியாகவும்  “என்னானை  என்னரையன்  இன்னமுதென்  றெல்லோமும்”  வெவ்வேறாய்ப்  பாடலானோம்  எனவும் ,  வந்தவர்களாகிய  யாங்கள்  கூறிய  இந்நல்லுரைகளைக்  கேட்பாயாக  என்பார், “சொன்னோங் கேள் “  எனவுங்  கூறினர்  என்க.   என்னானை  –  என்  தந்தை  “என்”  என்பதன்பின்  “ஆன்”  சாரியை.  ஐ  –  தந்தை .  எனக்குச்  சிறப்புரிமைப்  பாதுகாப்பு  நோக்கத்  தந்தையாவானெனவும் .  பொதுவாட்சி  நோக்க  எனக்கு  அரசனாவானெனவும்   இன்புறுத்தலின்  அமுதாவானெனவும்  கூறினரென்பது.  தனித்தனிக்  கூற்றாதல் பற்றி  என்  தந்தை  என்  அரையன்  என  ஒருமையாகக்  கூறப்பட்டனவென்க. 

                இவ்வினிய  மொழிகளை  நின்  அருகில்  வந்து  கூறக்கேட்டும்   இன்னும்  உறங்குகின்றாயோ  என்பார் ,  “இன்னந்  துயிலுதியோ”  என்றனர்   நீ  பருவத்தாற்  பேதையேயல்லது  அறிவின்மையாற்  பேதையல்லை ; அங்ஙனமிருந்தும்  மனம்  உருகத்தக்க  இறைபுகழைப் பாடக்கேட்டும்  வலிய  நெஞ்சு  படைத்த  அறிவிலிகளைப்  போல  வாய்  பேசாமற்  கிடக்கின்றாயே   ஈதென்னையென்பார்  “வன்னெஞ்சப்  பேதையர்  போல்  வாளா  கிடத்தியால்” என்றனர் .  இறைவன்  புகழுரை  கேட்ட  அளவிலே  ஈடுபட்டுக்  குழையும்  உள்ளமுடைய  நீ  இங்ஙனம்  உருக்கம்  சிறிதுமின்றி  உறக்கத்தில்  ஆழ்ந்து  கிடத்தலை  நினையுங்கால்  உறக்கத்தின்  இயல்பு  மிகவலியது  போலும்  என்பார்  “என்னே  துயிலின்  பரிசு “  என்றனர் .  “யோசிக்கும்  வேளையிற்  பசிதீர  உண்பதும்  உறங்குவதுமாக முடியும் “  என்று  பெரியோர்  கூறியது  உலகியலில்  உயிர்  போகு   பொது  நெறி  பற்றியதாகலின் ,  நின்னைப்போன்ற   இறையன்பிலீடுபட்டாரைப்  பற்றியதன்று  என்பதாம் . 

                  இதன்கண்  “தென்னா  வென்னாமுன்னந்  தீ  சேர்  மெழுகொப்பாய் “ என்றதனால்  சிறந்த  பத்திக்கு  ஏதுவாகிய  தென்னன் என்னுஞ்  சொல்  மீன நோக்கின்  மடவரலை  மணந்து  பெற்றது  என்பது  பெறப்படுதலின்  ,  சத்தியை  வியந்தது  புலனாயவாறறிக. 

பாடல் 8.

கோழி  சிலம்பச்  சிலம்புங்  குருகெங்கும் 

            ஏழில்  இயம்ப  இயம்பும்  வெண்  சங்கெங்கும் 

கேழில்  பரஞ்சோதி   கேழில்  பரங்கருணை

            கேழில்  விழுப்பொருள்கள்  பாடினோங்  கேட்டிலையோ

வாழியீ   தென்ன   வுறக்கமோ  வாய்திறவாய்

             ஆழியான்  அன்புடைமை  யாமாறும்  இவ்வாறோ

ஊழி  முதல்வனாய்  நின்ற  வொருவனை

              யேழைபங்  காளனையே  பாடேலோ  ரெம்பாவாய்

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்பாற்  செய்யப்படும்  தலையன்பின்  திறத்தைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  தலையன்பு  செய்தற்கேற்ற   அவ்  இறைவனது  நிகரற்ற  பெருமையையும்  தலைமையையும்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை:-   கோழி  சிலம்ப  எங்கும்  குருகு  சிலம்பும்  =

கோழி  கூவ  எங்கும்  பறவைகள்  ஒலி  செய்யும் . 

ஏழில்  இயம்ப வெண்மை  சங்கு  எங்கும்  இயம்பும்  =

நாகசுரம்  வாசிக்குமாறு  வெள்ளிய  சங்கங்கள்  யாண்டும்  ஒலிக்கும் ,

கேழ்  இல்  பரம்சோதி   = 

ஒப்பற்ற  பரம்பொருளாகிய  ஒளியுருவினனுடைய  ,

கேழ்  இல்  பரம்  கருணை   =

ஒப்பற்ற  மேலான  கருணை  முதலிய ,

கேழ்  இல்  விழுப்பொருள்கள் = 

ஒப்பற்ற  சிறந்த  பொருள்கள்  அமைந்த  புகழ்ப்  பாடல்களை,

பாடினோம் , கேட்டிலையோ  = 

நீ  கேட்டாயல்லையோ,

வாழி  = 

வாழ்வாயாக,

ஈது  என்ன  உறக்கமோ = 

ஈது  எத்தகைய  தூக்கமோ

வாய்  திறவாய் =

நின்  வாயைத்  திறக்கின்றாயல்லை  ,

ஆழியான்  அன்புடைமை  ஆம்  ஆறும்  இவ்வாறோ  =

அருட்கடலாகிய  சிவபெருமான்  மாட்டு  அன்பு  செய்யும்  நெறியும்  இம்முறைதானோ, (இனியாவது)

ஊழி  முதல்வனாய்  நின்ற  ஒருவனை  = 

பேரூழியின்  இறுதியில்  தலைவனாய்த்  தான்  ஒருவனே  அழிவில்லாமல்  நின்றவனும் ,

ஏழை  பங்காளனையே =

அம்மையை  ஒரு  கூற்றிலுடையவனும்  ஆகிய  பெருமானையே  ,

பாடு  =  பாடுவாயாக  என்பது .

விளக்கவுரை :-   கோழி  –  சேவல் .  இருள்புலர்  காலத்தை  யறிவிப்பது  சேவல்  கூவுதல்.   சிலம்புதல்  –  ஒலித்தல் .  கோழி  கூவியவுடன்  காக்கை  முதலிய  பறவைகள்  விழித்தெழுந்து  ஒலிப்பனவாம் .   குருகு  –  பறவைப்பொது .           ஏழில் –  ஏழிசைகளுக்கும்  இடனாயது;  நாகசுரம்  என்னும்  துளைக்கருவி  .  திருக்கோயில்களில்  அதிகாலையில்  முதலில்  சங்கு  முழக்கஞ்  செய்யப்படும்.  அவ்வொலி  கேட்ட  துணையானே  நாகசுரம்  வாசித்தல்  முறையாதலின்  , “ஏழில்  இயம்ப  இயம்பும்  வெண்சங்கு  எங்கும்” என்றனர். “ஏழிலியம்ப”  என்புழி  இயம்ப  வென்பது  காரியப் பொருளில்  வந்த  வினையெச்சம் .  எங்கும்  என்பது  ஈரிடத்தும்  முறையே  நாளா  பக்கங்களையும்   திருக்கோயில்களையும்  உணர்த்தும் .  சிலம்புதலும்  இயம்புதலும்  விடியலைக்  குறிப்பனவாம் ,  கேழ்   –  ஒப்பு  ,  கேழில்  என்றது  ஈடும்  எடுப்பும்  இல்லாத  என்றபடி .  இது  பின்வருவனவற்றிற்கும்  ஒக்கும் .  மாயாகாரியமாகிய  ஒளியனீக்குதற்கு ,  “பரஞ்சோதி”  என்னப்பட்டது.  இறைவனை  ஒளியுருவமாகப்  பெரியோர்  கூறுதலைப்  பலவிடத்துங்  காணலாம். 

                     இறைவனது  அளப்பரும்  பேரருட்  குணத்தைக்  “கேழில்”  பரங்கருணை”  யென்றனர்    .  விழுப்பொருள்கள்  என்றது  சிறந்த  பொருளமைந்த  புகழ்ப்பாடல்களை  யுணர்த்தும் .  இறைவன்  புகழே  பொருள்சேர் புகழ்  எனப்படும் .  ஏனையோரைப்  பற்றினவெல்லாம்  அன்னவாகா  என்பது.  இதனை , “இருள்சே ரிரு  வினையுஞ்  சேரா விறைவன்,  பொருள்சேர்  புகழ்புரிந்தார்  மாட்டு “  என்புழி  “இறைமைக்  குணங்கள்  இலராயினாரை  உடையரெனக்  கருதி  அறிவிலார்  கூறுகின்ற  புகழ்கள்  பொருள்  சேராவாகலின் ,  அவை முற்றுமுடைய  இறைவன்  புகழே  பொருள்  சேர்  புகழ்  எனப்பட்டது “  என்று  பரிமேலழகர்  கூறிய  வுரையானு  முணர்க.  ஒப்பற்ற  இறைவனது  சிறந்த  கருணை  முதலிய  பொருளமைந்த  புகழ்ப்  பாடலை  யாம் பாட  நீ  கேட்டனை  யென்பார், “யாம்பாடக்  கேட்டிலையோ”  என்றனர்.  கேட்டிலையோ  என்புழி  ஓகாரம் எதிர்மறைப்  பொருட்டு .  அங்ஙனம்  கேட்டும்  வாளாவிருக்கும்  நீ  எத்தகைய  தீங்கும்  வாழக்கடவையென  வாழ்த்துவார் , “வாழி”  யென்றனர் .  இவள் பேதைப் பருவத்துச்  சிறுமியாதலின் அவள்  பாலுள்ள  அன்பினால்  ஆண்டின் முதிர்ந்த  பெண்கள் இவ்வாறு  கூறுவாராயினர்  என்பது  கருத்து .

                  யாம்பாடிய  பாடலோ  இறைவன்  பொருள்சேர்  புகழமைந்த  பாடல்;  பாடின  காலமோ  இருள்புலர்  காலை;  இடமோ  நின்பக்கல்.  அப்பாடலைக்கேட்டும்  கண்  திறந்தாயே  யன்றி  வாயைத்  திறந்து  எம்மோடு  சேர்ந்து  பாடினாயல்லை ;  இங்ஙனம்  கண்  திறந்தும்  வாய்  திறவாமலிருக்கும்   இந் நிலையும்  நின்  தூக்கத்தின்  ஒருவகை  கொலோ  என்பார். “ஈதென்ன  வுறக்கமோ  வாய் திறவாய்”  என்றனரென்பது.  வாய்திறவா  யென்றதனாலும் ,  என்ன  வுறக்கமோ  என்றதனாலும்  கண்  திறத்தல்  பெறப்பட்டது  .  மேலும் ,  அருட்பெருங்  கடலாகிய  இறைவன்பால்  நினக்குள்ள  அன்பு  நெறியும்  இங்ஙனம்  யாம்  இறை புகழ்பாடுதலாகிய  இந் நிலையிலும்   நீ  வாய் திறவாமை  விருத்தலாகிய   இம்முறைதானோ  வென்பார்,  “ஆழியானன்புடைமை   யாமாறுமிவ்வாறோ”  என்றனர் .  அடியார்  ஆண்டவனிடத்து  வைக்கும்  காதல்  அன்பும் ,  ஆண்டவன்  எல்லாவுயிர்கள்  மாட்டுஞ்  செலுத்தும்  கருணை  அருளுமாகும் .  இங்கே “ஆழியானன்புடைமை”  என்புழி  அடிமையின்  அன்பு  குறிக்கப்பட்டமையின்  அதற்கேற்ப  ஆண்டவன் திருவருளை  யியைத்து  அருளாழியெனக்  கொள்ளுதல்  பொருத்தமாகும். 

                    “பரங்கருணைத்தடங்கடலை”  என்பது  அடிகள்  திருவாக்கு . அருட்பெருங்கடலாகிய  இறைவன் பால்  வைக்கும் அன்பு தலையன்பாதல்  வேண்டுமென்பது  கருத்து .  இனி,  ஆழியான்  –  திருமாலெனக்கொண்டு  ,  திருமால்  இறைவனிடத்தே  அன்பு  செய்யும்  நெறியும்  இவ்வாறு கொல்  எனப்  பொருள்கூறி  ,  அறிதுயில்  மேற்கொண்டு  ,  நீயும்  அன்பு  செய்கின்றனை  போலும்  என்பது  கருத்தாகக்  கோடலும்  ஒன்று . மகாசங்காரகாலமாகிய  பேரூழியின்  இறுதியில்  மாயாகாரியமாகிய  எல்லாம்  அழிந்து  ஒடுங்கியபின்,  சிவபெருமான்  ஒருவனே  முதல்வனாக  அழியாப்  பொருளாக  நிலைபெற்றுப்  பின்னரும்  படைப்பாதி  தொழில்  செய்தற்கு  நாத  தத்துவத்தை  யெழுப்பி  நிற்பன்  என்னும்  உண்மை  தோன்ற , “ஊழி முதல்வனாய்  நின்ற  ஒருவனை  “ என்றார். 

“ஓதத்  தொலிமடங்கி  யூருண்டேறி 

         யொத்துலக  மெல்லாம்  ஒடுங்கியபின் 

வேதத்  தொலிகொண்டு வீணை  கேட்பார்   

           வெண்காடு  மேவிய  விகிர்த  னாரே “   என்னும் 

             தமிழ் மறையானும்  இவ்வுண்மை  தெளிக .  இத்துணை  உயரிய   பரம்பொருளாகவுள்ள  பெருமான்  ஏழையேமாகிய  நம்பொருட்டு  அம்மையொரு  கூறனாகத்  திருமேனி  கொண்டெழுந்தருளிப்  பாதுகாக்கும்  இயல்பினன்  என்னும்  பொருடோன்ற “ஏழை  பங்காளன்”  என்று  கூறினர் .      ஏழை  –  பெண் ;  உமையம்மை .  ஏகாரம்  –  பிரிநிலை .  நம்மாற்  பாடப்படுபவர்  மற்றைத்  தேவரல்லர்  என்னும்  பொருள்  தோன்ற  நிற்றலின்  தேற்றமுமாம் .

               இதன்கண்  “ஏழைபங்காளனையே  பாடு “  என்றமையால்  சத்தியை  வியந்தது  கூறப்பட்டமையறிக. 

  பாடல்  9 .

முன்னைப்  பழம்பொருட்கும்  முன்னைப்  பழம்பொருளே

                   பின்னைப்  புதுமைக்கும்  பேர்த்துமப்  பெற்றியானே

உன்னைப்  பிரானாகப்  பெற்றவுன்  சீரடியோம் 

                    உன்னடியார்  தாள்பணிவோம்  ஆங்கவர்க்கே  பாங்காவோம் 

அன்னவரே   யெங்கணவ  ராவார்   அவருகந்து 

                     சொன்ன  பரிசே   தொழும்பாய்ப்   பணிசெய்வோம்

இன்ன   வகையே   யெமக்கெங்கோன்    நல்குதியேல் 

                      என்ன   குறையும்   இலோமேலோ   ரெம்பாவாய்

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  அடியார்  தலையன்பு  செய்தற்கு  ஏற்ற  இறைவனுடைய  அளப்பரும்  பெருமையையும்  தலைமையையும்   அருளிச்  செய்த  அடிகள் ,  அவற்றுள்  எல்லாவற்றையும்  தன்னுளடக்கிநிற்கும்    காலத்தாலும்  இடத்தாலும்  அளப்பரிய  பெருமையின்  இயல்பைக்  கூறுவான்  தொடங்கி  இத்திருப்பாட்டில்   காலத்தால்  அளவிடற்கரிய  முதன்மையைப்  புலப்படுத்தருளுகின்றார் . 

பதவுரை :-  முன்னைப்  பழம்  பொருட்கும்  முன்னைப்  பழம்  பொருளே = 

முற்பட்டவனாகிய  பழைய  பொருள்கள்  எல்லாவற்றிற்கும்   முற்பட்ட  பழைய  பொருளாகவுள்ளவனே, 

பின்னை  புதுமைக்கும்  பேர்த்தும்  அப்பெற்றியனே =

பிற்பட்டனவாகிய  புதிய  பொருள்கள்  எல்லாவற்றிற்கும்  மீண்டும்  அப்புதுப்  பொருட்டன்மை  வுடையவனே,

உன்னை  பிரான்  ஆகப்  பெற்ற  உன்  சீர்  அடியோம்  =

உன்னை  ஆண்டவனாகக்  கிடைக்கப்பெற்றமையால்  உன்  சிறப்பு  மிக்க  அடிமைகளாகிய  யாங்கள்,

உன்  அடியார் தாள்  பணிவோம் =

நின்  அடியாருடைய  திருவடிகளை  வணங்குவோம் ,

ஆங்கு  அவர்க்கே  பாங்கு  ஆவோம்  =

அங்ஙனமே  நின்  அடியார்க்கே  உரிமையுடையவர்கள்  ஆவோம்  ,

அன்னவரே  எம்  கணவர் ஆவார்=

அவ்வடியார்களே  எங்களுக்குக்  கணவராவார் ,

அவர்  உகந்து  சொன்ன  பரிசே =

அவ்வடியார்  மனமுவந்து  இட்ட  கட்டளைப்  படியே  ,

தொழும்பாய்  பணி  செய்வோம்  = 

அவர்க்கு  அடிமையாய்  நின்று  ஏவல்  கேட்போம் ,

எங்கோன்  எமக்கு  இன்னவகையே  நல்குதியேல் =

எங்கள்  பிரானாகிய  நீ  எங்களுக்கு  இங்ஙனமே  அருள்புரிவையாயின்  ,

என்ன  குறையும்  இலோம்  =

எத்தகைய  குறைபாடும்  இல்லாதவராவோம் என்பது .

விளக்கவுரை :-   இதன்கண்   எழுப்பியவரும்  எழுப்பப்பட்டவரும்   ஆகிய  கன்னிப்  பெண்கள்   எல்லோரும்  ஒருங்கே  கூடி  இறைவனை  முன்னிலைப்படுத்துப்  புகழ்ந்து  பாடிப்  பயன்  வேண்டுதல்  கூறப்படுகின்றது. முன்பின்  பழமை  புதுமை  என்னும்  இவ்வழக்குகள்  காலதத்துவத்தின் பின்  தோன்றியவை .  இறைவன்  அக்காலத்தத்துவத்திற்கும்    அப்பாற்பட்ட  பொருள் .  ஆயினும் , காலதத்துவத்தின்  பிற்பட்ட  பொருள்களில்  வைத்தே  முதலில்  மக்களாராய்ச்சி  நிகழ்வது  இயல்பாதலின்  முன்னைப்  பழம்  பொருள்  என்பது  கால  தத்துவத்துளடங்கிய   முற்பட்ட  பழைய  பொருள்  களைக்  குறிக்கும் .  இதுகாறும்  வெளிப்பட்ட  மாயாகாரியமாகிய  விசித்திரப்  பொருள்கள்  எல்லாவற்றிற்கும்  முற்பட்ட  பழைய  பொருளாவானும்  அவ்விறைவனே :  இதுகாறும்  வெளிப்படாத  புதிய  பொருள்களெவற்றிற்கும்   புதிய  பொருளாக  ஒன்று  தோன்றுமாயின் ,  அப்பொருளில்  அமைந்துள்ள  புதுமைத்  தன்மையுடையானும்    அப்பெருமானே  யென்பார் ,

              “முன்னைப்  பழம்பொருட்கும்  முன்னைப்  பழம்பொருளே

                பின்னைப்  புதுமைக்கும்    போர்த்துமப்  பெற்றியனே”

என்றார் .    பெற்றியன்  –  புதுமைத்  தன்மையுடையவன் .    “உலகெலாமாகி  வேறாயுடனுமாய் “  நின்ற  இறையிலக்கணத்துள்  உலகெலாமாகி  நின்ற  நிலை பற்றியே  சிற்றறிவினராகிய   மக்களுக்கு  ஆராய்ச்சி  நிகழ்வது  இயல்பாதலின்  அம் முறைபற்றிக்  கூறப்பட்டது   இது  வென்க.   பழமையென  ஒன்று  துணியப்படுமாயின்  அதற்கும்  பழமையாய் ,  புதுமையென  ஒன்று  தோன்றுமாயின்    அதற்கும்  புதுமையாயுள்ள  பொருள்  இறைவனே  என்பது  கருத்து.

                    “வேதக்  காட்சிக்கும்  உபநிடத்  துச்சியில்  விரித்த

                       போதக்  காட்சிக்குங்  காணலன்  புதியரிற்  புதியன்

                        மூதக்  கார்க்குமூ  தக்கவன்  முடிவிற்கு  முடிவாய் 

                         ஆதிக்  காதியா  யுயிர்க்குயி   ராய்நின்ற  வமலன் “

என்று  கூறியதும்  இக்கருத்துப்  பற்றியே  யென்க. 

                 இனி,  இறைவன்  தனக்குப்  பின்றோன்றிய  யாக்கையுடையாரனைவரும்   மூப்பவும் , தான்  நிலைபெற்ற  இளமைத்தன்மையுடையனாயிருத்தலின்    புதுமைத்  தன்மையுடையன்  எனவும்  ,  எல்லாயாக்கைக்கு  முன்னே  தனது  இச்சையாற்  கொள்ளப்பட்ட  திருமேனியை  யுடையனாதலின்   பழம்  பொருளாதலும்  உடையான்  எனக்  கருத்துக்  கோடலும்  ஒன்று .  பழமையைப்  பெருமையென்று  கருதுவார்க்குப்  பழமையாற்  பரம்பொருளாதலும் , பழமையிற்குறை  கருதிப்  புதுமையை   விரும்புவார்க்குப்  புதுமையிற்  புதுப் பொருளாதலும்  உடைய  நின்னை  ஆண்டவனாய்ப்  பெற்றமையால்  அறிவிற்  சிறியேமாயினும்  நின்  அடிமையிற்  சிறந்தவராயினே  மென்பார் , “உன்னைப்  பிரானாகப்  பெற்றவுன்  சீரடியோம்“  என்றனர்.  “பெற்ற”  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு  .  இறைவ!  நினக்கு  அன்பு செய்து நின் அடிமைப் பேறு பெற்றதன் பயனாக நின் அடியவராகிய  மெய்யன்பர்களின்  திருவடியை  வணங்கப்பெற்றே  மென்பார் , “உன்  சீரடியோம்  உன்னடியார்  தாள்  பணிவோம் “  என்றனரென்க. .  சிறந்த  மெய்யடியாரை  வணங்கும்  பேறு, இறை வணக்கத்தின் பயனாக  நிகழக்கூடுமென்பதைத்  திருஞானசம்பந்தர்  திருக்காளத்தி  இறைவனை  வணங்கியபின்   அதன்  பயன்  கைவரப்  பெற்றது  போலக் கண்ணப்ப நாயனார்   திருவுருவைக்  கண்டு  வணங்கப்பெற்றனர்  என்பதனாலறியலாம் .   இதனை ,

                             “ வீழ்ந்தெழுவார்  கும்பிட்ட  பயன்கண்   பார்போல்

                               மெய்வேடர்  பெருமானைக்  கண்டு  வீழ்ந்தார்”

எனவும்  ,  அதற்கு  ஏதுவாக,

                                 உள்ளத்திற்  றெளிகின்ற  அன்பின் மெய்ம்மை 

                                           யுருவினையும்   அவ்வன்பி   னுள்ளே   மன்னும் 

                                  வெள்ளச்செஞ்   சடைக்கற்றை  நெற்றிச்  செங்கண்    

                                  விமலரையும்   முடன்கண்ட     விருப்பம்  “      

எனவும்  சேக்கிழார்  கூறியவற்றானுணர்க .

                         சிவனடியாரை  வணங்குதலேயன்றி  எம்  உடல்  பொருள்  ஆவி  மூன்றையும்  அவர்க்கே  யுரிமைப்படுத்தலும்  செய்வோமென்பார் , “ஆங்கவர்க்கே  பாங்காவோம் “  என்றனர்.   தாள்  பணிதல்  சாதனமும்  பாங்காதல்  சாத்தியமுமாம்  .  ஈண்டுச்  சாதனம்  வேற்றுமையிலும்  சாத்தியம்  ஒற்றுமையிலும்  வைத்து  உணரத்தக்கன.  ஞானானுபவ  நிலையில்  உடல்  பொருளாவிகளை  ஆசிரியன்  பால்  ஒப்புவித்து  ஞானானுபவ  இன்பம்  பெற  விழையும்  மாணவர்  போல ,  உலகியல்  நிலையில் தம்   உடல்  பொருளாவிகளைச்  சிவனடியார்பால்  ஒப்புவித்து  இன்பம்  பெற  விழையும்  கன்னிப்  பெண்கள்  அதற்கேதுவாக  அவ்வடியாரையே  தமக்குக்  கணவராக  வேண்டுவராய், “ அன்னவரே  யெங்கணவ  ராவார் “  என்றனர் .  தலைவர்  அடிமைக்குக்  கட்டளையிடுதல்  அதிகார  முறையிலும்  விருப்பின்றியும்  நிகழ்தல்  கூடும்; அங்ஙனம்  இல்லாமல்  உள்ள  மகிழ்ந்து  இடும்  கட்டளையாதல்  வேண்டுமென்பார் , “அவருகந்து  சொன்ன  பரிசே” எனவும் , பொருண்  முதலிய  காரணம் பற்றியும்  பணி  செய்தல்  கூடுமாதலின் ,  அதனை  விலக்குதற்குத்  “தொழும்பாய்ப்  பணி  செய்வோம் “  எனவும்  கூறினர் .  “பரிசே”  என்புழி  ஏகாரம்  தேற்றப்பொருட்டு.  தொழும்பு  என்பது  கடமையாக  மேற்கொள்ளும்  அடிமைத்தன்மை .  அங்ஙனமாயின் ,  கணவராகப்  பெற்றும்  பணிசெய்தலால்  பெறும்பயன்  இன்னதென  வேண்டப்பட்டிலதேயெனின்  , 

                          என்கடன்  பணிசெய்து  கிடப்பதே

                          தன்கடன்     அடியேனையுந்   தாங்குதல்”

என்னும்  தமிழ்மறைப்படி  அது  செய்தல்  இறைவன்  கடமையாதலின்  கூறப்பட்டிலதென்க  .  மேலும்  ,

                            “அன்பர்பணி  செய்யவென்னை  யாளாக்கி  விட்டுவிட்டால்

                              இன்பநிலை   தானேவந்   தெய்தும் “

என்று   பெரியார்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  எங்கள்  ஆண்டவனாகிய  நீ  இங்கே  யாம்  தெரிவித்துக்கொண்ட  முறைப்படி  எமக்கு  அருள்  செய்வையாயின் ,  யாங்கள்  ஏதும்  குறையிலராய்  இனிது  வாழ்வோம்  என்று  கூறினாரென்பது . 

                           இதன்கட்   கூறப்பட்டபடி   இறைவன்  முன்னைப்  பழம்  பொருட்கு   முன்னைப்பழம்  பொருளாகவும் ,  பின்னைப்  புதுமைக்கும்  பின்னைப்  புதுப்பொருளாகவும்   வெளிப்படுதல்    சத்தியோடு    கூடிய  வழியல்லது  நிகழாமையின்  சத்தியை  வியந்தது   புலப்படுக்கப்பட்டவாறறிக.

பாடல்  10.

பாதாளம்   ஏழினுங்கீழ்   சொற்கழிவு   பாதமலர் 

               போதார்   புனைமுடியும்    எல்லாப்   பொருண்முடிவே

பேதை  யொருபாற்   றிருமேனி   யொன்றல்லன் 

                வேதமுதல்   விண்ணோரும்    மண்ணுந்   துதித்தாலும் 

ஓத   வுலவா   ஒருதோழன்    தொண்டருளன் 

                கோதில்   குலத்தான்    றன்   கோயிற்   பிணாப்பிள்ளைகாள்

ஏதவனூர்   ஏதவன்பேர்    ஆருற்றார்   ஆராயலார்

                 ஏதவனைப்   பாடும்   பரிசேலோ    ரெம்பாவாய்

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  காலத்தாலும்  இடத்தாலும்   அளவிடற்கரிய    இறைவன்  பெருமையுள்  காலத்தால்  அளவிடற்கரிய  முதன்மையைப்   புலப்படுத்தருளிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில்    இடத்தால்  அளவிடற்கரிய  தலைமையை   அருளிச்செய்கின்றார் . 

பதவுரை :-    பாதமலர்  =   இறைவன்   திருவடிமலர் ,

பாதாளம்  ஏழினும் கீழ் சொல்கழிவு  =   கீழுலகம்  ஏழிற்கும்  கீழாகச்  சொல்லில்  அடங்காத  நிலையினது ,

போது  ஆர்  புனைமுடியும்  எல்லாப்  பொருள்  முடிவே =  

மலர்கள்  நிறைந்து   அணிசெய்யப்பட்ட  திருமுடியும்  எல்லாப்  பொருள்களின்  முடிவாக வுள்ளது ,

பேதை  ஒருபால்  =  பெண்  ஒரு  கூற்றிலுள்ளான் ,

திருமேனி  ஓன்று   அல்லன்  =   ஒருவகைப்பட்ட  திருமேனியை  யுடையானல்லன் ,

தொண்டர்  =  தன்  அடியார்க்கு  ,

வேதம்  முதல்  விண்ணோரும்  மண்ணும்  துதித்தாலும்  =

மறை  முதலாக  விண்ணுலகத்தினரும்  மண்ணுலகத்தினரும்  புகழ்ந்து  பாராட்டினாலும் , 

ஓத  உலவா  ஒரு  தோழன்  உளன்  = 

புகழ்ச்சி  முற்றுப்பெறாத  ஒப்பற்ற  தோழனாகவுள்ளான்  ,

அரன்  தன்கோயில்   =

அத்தகைய  சிவபெருமானுடைய  திருக்கோயிலிலுள்ள  ,

கோது  இல்  குலத்து  பிணாப்பிள்ளைகாள் =

குற்றமற்ற  நலத்தினையுடைய  பெண்  மக்களே,

அவன்  ஊர்  ஏது  அவன்   பேர்   ஏது  =

அப்பெருமானுக்கு  ஊர்  யாது ?  அவன்  பெயர்  யாது ?,

உற்றார்   ஆர்   அயலார்  ஆர் = 

அவனுக்கு  உறவினர்  ஆவார்  யாவர்  ?  அயலார்   யாவர்? 

அவனைப்  பாடும்   பரிசு   ஏது =

அவ்விறைவனைப்  புகழ்ந்து  பாடும்   தன்மை   யாது?,  என்பதாம் .

விளக்கவுரை :  –   ஒருங்கு  சேர்ந்த  கன்னிப்  பெண்களனைவரும் ,  அதிகாலையில்  சிவபெருமானுடைய   திருக்கோயிற்பணி  புரிந்து   கொண்டிருக்கும்   பெண்மக்களை  விளித்து   இறைவன்பால்   தம்மினும்   அவர்க்குள்ள  அணுக்கங்கருதிப்   பாடுதற்குரிய  சில  செய்திகளை   வினவுகின்றனர் . 

                     திருமாலும்  பிரமனும்  தனித்தனியே   யாம்  பிரமம்  என்று  செருக்குற்ற  ஞான்று  ,  மலையுருக்கொண்டு    வளர்ந்த  சிவபெருமானுடைய  அடி முடிகளைக்  காணுமாறு  பணிக்கப்  பட்டனராக;  அவ்விருவரும்  முறையே  பன்றியுருவையும்   அன்னப்பறவை  யுருவையும்  கொண்டு  அகழ்ந்தும்  பறந்தும்  அடிமுடிகளைக்   காணமுடியாமல்   செருக்கடங்கினரென்னும்    புராண   கதையையுட்  கொண்டு  கூறுகின்றார் .  இறைவன்  திருவடி மலர்  பாதாளத்தின்  கீழ்  உள்ளது  என்று  கூறுதலே  யமைவுடையதாக வும்  “ பாதாளம்  ஏழினுங்கீழ்”  என்றது  இவ்வண்டத்தின்  கீழுலகம்  ஏழென்று  கூறப்பட்டிருத்தலின் ,  அத்துணையும்  சொல்லால்  அளவிடுதற்கு  உரியதென்னும்  கருத்துப்பற்றியாம் .  கீழேழுலகங்  கட்கும்  கீழ்  என்றால்  கீழ்  யாண்டுளது  எனின்,  அந்நிலை  சொற்களால்  அளவிடுதற்கு  இயலாதென்னும்  பொருடோன்ற  “சொற்கழிவு”  என்றனர் . 

                       இறைவன்  திருமுடி  மிக  மேலோங்கிய  நிலையினதாயினும்  மெய்யன்பர்  சாத்தும்  மலர்க்கு  எளிவரும்  இயல்பிற்று  என்னும்  குறிப்புப்புலப்பட, ”போதார்  புனைமுடியும் “  என்று   கூறப்பட்டது.  அஃது  எல்லாப்  பொருள்களின் முடிவாகவுள்ளது   என்றது   சொற்களாலறிதற்குரிய  பொருள்களின்  எல்லையைக்  கடந்த  நிலையிலுள்ளது   என்பது  குறித்து .  சொல்லளவைக்  கடந்தது  திருவடியெனவும்   பொருளளவைக்  கடந்தது  திருமுடியெனவுங்   கூறியது ,  சொல்  ஆதாரமாகக்  கீழ்  நின்று  தாங்குவதும் ,  பொருள்   ஆதேயமாக  மேல்  நின்று தாங்கப்படுவதுமாகிய   இயைபு  பற்றியென்க .  திருமேனியின்  ஒரு   கூற்றில்   அம்மையுள்ளாள்  ஆதலின்  “பேதையொருபால்”  எனவும்,  அதனால்  இறைவன்  திருமேனி  ஆணுரு   அல்லது   பெண்ணுருவென்னும்  இரண்டனுள்  ஒன்றாக   அமையாமல் “திருமேனியொன்றல்லன்”  எனவும்  கூறப்பட்டன .  அம்மையையொரு  கூற்றிலுடைய  பரம்பொருளை   ஒருவனென்றாதல்  ஒருத்தியென்றாதல்   கூறுதற்கு   இயலாமையாற்  போலும்  ஒருவர்  என்னும்  சொல்  வழங்கலாயிற்றென்பர்   பெரியார் . 

                    “பாட்டான்  மறைபுகழும் “  என்றபடி  மறை , உண்மையுருவாய   இறைவன்   புகழ்மாலையாக  அமைந்தது .  அப்புகழ்  மாலையாகிய  மறைப்  பாடல்களைப்  பாடி  இன்புறுவார்  தேவரும்  மக்களுமேயாவர் . அங்ஙனம்  மறைகளும்  அவற்றை  எடுத்தியம்பிப்   பொருள்  விளக்கும்  தேவரும்  மக்களும்   எத்துணைக்காலம்  புகழினும்   அப்புகழுரைகளால்   அளவிட்டு  உரைக்க  முடியாத  பெருமை  வாய்ந்தவன்  இறைவன் .  அத்துணைப்  பெரியோன்  தன் தொண்டர்க்குச்  சிறந்த  நண்பனாவான்  என்பார் ,”ஓதவுலவா  ஒரு  தோழந்  தொண்டருளன்“  என்றார்.  “தொண்டருளன் “  என்புழி   நான்கனுருபை   விரித்து ,  தொண்டர்க்கு  எனக்கொண்டு  ஒரு  தோழன்  என்பதனை  அதனோடியைத்  துரைத்துக்கொள்க .  இனி ,  “ஒரு  தோழந்  தொண்டருளன்”   எனப்  பாடங்கொண்டு ,  ஒப்பற்ற  மிகுதியான  தொண்டரையுடையான்   எனக்  கோடலும்  ஒன்று .  தோழம்  –   பேரெண்  “ஒருதோழந்தேவர்  விண்ணிற்  பொலிய“  என்பது  தமிழ்  மறை.  சிவபெருமான்  திருக்கோயிலிற்  பணிபுரியும்  பேறு  பெற்ற  பெண்மக்களை  நோக்கி , “அரன்றன்  கோயிற்பிணாப்பிள்ளைகாள்”  என்றனர்,   பிணா  –  பெண்.  பிள்ளை, மக்கள்  என்னும்  பொருட்டு .  அப்பெண்மக்கள்  ஊனடைந்த  உடம்பின்  பிறவி  தானடைந்த  வுறுதியைத்  திருக்கோயிலிலே  தொண்டு  செய்யும்  பேற்றினால்  பெற்றமை  குறித்து  “கோதில்  குலத்து”  என்றனர் .   குலம்  –  நன்மை .

                          சிவத்  தொண்டு  ஒன்றே  குற்றமற்ற  நலம்  பயப்பது.  அந்நலத்தை  யெளிமையிற்  பெற்றிருத்தல்  குறித்து  அவ்வாறு கூறப்பட்டனர்   அப்பெண்களுக்கு   இறைவன்  பாலுள்ள  அணுக்கங்குறித்து   அவரை  வினவலாயினர் . திருக்கோயிற்  பணிபுரிவார்  ஆண்  பெண்  இருபாலாருமுளர்  அவருள்   பெண்மக்களை  விளித்து வினாவ  முற்பட்டதற்குக்  காரணம்  தம்  பெண்மைக்கு  ஒத்த  தோழமை  குறித்தென்க .  ஊர்  என்பது  பூகோளத்தில்  ஒரு  சிறு  கூற்றிலமைந்த  சிறு  கிராமமாகும் .  இறைவன்  அடியும்  முடியும்  கீழ்  மேல்   எல்லைகளைக்கடந்துள்ளன .  அத்துணைப்பெரிய  பொருளில்  அடங்கிய  ஒரு  சிறு  கூறாகிய  இடத்தில் அவன்  எவ்வாறு  அடங்குவான்  என்பார்,” ஏதவனூர்”  என்றனர் . பெயர்  திருமேனி  குறித்து   இடப்படுவது .  அவன்  திருமேனியோ  ஆணுமல்ல  பெண்ணுமல்ல  அங்ஙனமாயின்  எப்பெயரால்  குறிப்பிடலாமென்பர் “ ஏதவன்பேர் “  என்றனர் . 

                                 “ஒருநாமம்   ஓருருவம்  ஒன்றுமில்லார்க்  காயிரம்

                                    திருநாமம்  பாடிநாத்   தெள்ளேணங்   கொட்டாமோ”

என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருந்தலும்  உணர்க.   உலகப்  பொருணுகர்ச்சியிலீடுபடாமல்  இறைபணி  புரிதலே  கடமையெனவுணர்ந்து  ஒழுகும்  தொண்டர்க்குச் சிறந்த  நண்பனாதலேயன்றி  வேறு  உறவு  பகை  நொதுமல்  இல்லாதவன்  என்பார் “ஆருற்றார்  ஆரயலார் “  என்றனர்  .  வேதங்களும்  விண்ணவரும்  மக்களும்  எத்துணைக்காலம்   புகழ்ந்து  பாடினாலும்  ஓதவுலவாப்  பெருமை யுடையானைப்  பெண்  மக்களாகிய  யாம்  பாடுதல்  எவ்வாறு  என்பார், “ஏதவனைப்  பாடும்  பரிசு “  என்றனர் .  இங்ஙனம்  இப்பாடலின்  மூன்றடிகளாலும்   கூறப்பட்ட  இறைவன்  பெருமைகளை  ஏதுவாக்கி  ஈற்றடிக்குப்  பொருள்  கூறுதலே  சிறப்புடைத்து  என்பது . 

                இதன்கண்  “பேதையொருபால்  திருமேனி  யொன்றல்லன்”  என்பதனால்   அம்மையின்  பெருமை  வெளிப்படுதலின்    சத்தியை  வியந்தது  பெறப்பட்டவாறறிக . 

பாடல்  11.

                       மொய்யார்  தடம்பொய்கை  புக்கு  முகேரென்னக் 

                                        கையாற்  குடைந்து  குடைந்துன்  கழல்பாடி

                       ஐயா  வழியடியோம்   வாழ்ந்தோங்காண்   ஆரழல்போற்

                                         செய்யாவெண்   ணீறாடி  செல்வா  சிறுமருங்குன்

                        மையார்  தடங்கண்   மடந்தை   மணவாளா

                                          ஐயா  நீ  யாட்கொண்  டருளும்  விளையாட்டின் 

                          உய்வார்கள்   உய்யும்   வகையெல்லாம்  உய்ந்தொழிந்தோம்

                                           எய்யாமற்   காப்பா  யெமையேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டுக்களில்   காலத்தாலும்   இடத்தாலும்  அளவிடற்கரிய  இறைவன்  பெருமையை  அருளிச்  செய்த  அடிகள் ,  இத்திருப்பாட்டில்  அத்துணைப்பெரியோன் ,  காலம்  இடங்களினுட்பட்ட   சிறியனவாகிய  (மக்கள்)  உயிர்களையாட்கொண்டருளுதல்    கருணை  காரணமாக  உண்டாகிய  அவன்  விளையாட்டாகும்  என்பதை  அருளிச்  செய்கின்றார் . 

பதவுரை :-    ஆர்  அழல்போல்  செய்யா =    செறிந்த  தீயையொத்த  செம்மை  நிறம்  உடையவனே ,

வெண்மை  நீறாடி   =   வெள்ளிய  திருநீற்றை  நிறைய  அணிந்தவனே ,

செல்வா  =  வீட்டுத்  திருவினையுடையாய் , 

சிறு  மருங்குல்  மை  ஆர்  தடம்  கண்  மடந்தை  மணவாளா  = 

சிறிய  இடையையும்   மை  தீட்டப்  பெற்ற  அகன்ற  கண்களையும்  உடைய  உமையம்மையின்  கணவனே ,

ஐயா  =   எங்கள்  தலைவனே,

மொய்  ஆர்  தடம்  பொய்கைபுக்கு  =   வண்டுகள்  நிறைந்த  அகன்ற  திருக்குளத்தில்   புகுந்து , 

முகேர்  என்னக்  கையால்  குடைந்து  குடைந்து  உன்  கழல்பாடி  = 

முகேர்  என்று  ஒலியுண்டாகும்படி  கையினால்  இறைத்து  முழுகி  நின்  திருவடிகளைப்  புகழ்ந்து பாடி  ,

வழி  அடியோம்  வாழ்ந்தோம்  =  வழி  வழி  அடிமைகளாகிய  யாங்கள்   நல்வாழ்வு  எய்தினோம்  , 

ஐ  ஆம்  நீ  ஆட்கொண்டு  அருளும்   விளையாட்டின்   =  ஆண்டவனாகிய  நீ   உயிர்களை  அடிமைகொண்டு  காத்தருளும்  திருவிளையாட்டினால் ,

உய்வார்கள்  உய்யும்  வகையெல்லாம்  உய்த்தொழிந்தோம்  = 

உய்தி  பெறுவார்  உய்யும்  வகைகள்  எல்லாவற்றானும்  பிழைத்துவிட்டோம் ,

எய்யாமல்  எமை  காப்பாய்  =    இனி,  யாம்  இளைத்து  விடாதபடி  எம்மைக்  காத்தருள்வாயாக  என்பது.

விளக்கவுரை:-    இனி  அக்கன்னிப்பெண்களெல்லோறும்    ஒருங்கு  சேர்ந்து  நீராடத்தொடங்கி   இறைவனை  முன்னிலைப்படுத்துத்   தமக்கு  காப்பு  வேண்டுகின்றனர் . 

                    செம்மை  வெண்மையிரண்டும்  முறையே  இராசதம்  சாத்துவிகம்  என்னும்  குணங்களைக்  குறிப்பாலுணர்த்துவனவாதலின்   அக்குணங்களில்  நின்று  படைத்தல்   காத்தல்களைச்  செய்பவனும்  நீறுடைமையால்  ஒடுக்கத்திற்குரிய  தலைவனும்  சிவபெருமானே  யென்பார், ”ஆரழல்  போற்  செய்யா  வெண்ணீறாடி“  என்றனர் .  “முக்குணங்களின்  மூவரைத்  தோற்றி  மூவர்க்கு  முத்தொழில்  வகுத்தருளி ,  அக்குணங்களுக்கதீதமாய்  நிறைவாய் ……..நின்றனை”  என்று  சிவஞான  முனிவர்  கூறிய  கருத்தும்  ஈண்டு  நோக்கத்தக்கது .  செல்வம்  –  வீட்டுத்திரு;  மோஷ  ஐசுவரியம்  என்பர்  வடநூலார். 

                       இஃது  யோகியாயிருந்துயிர்க்கு   யோகத்தைப்  புரிபவன்  என்னும்  குறிப்பையும்  “மையார்  தடங்கண்  மடந்தை  மணவாளா”  என்றது  யோகியாயிருந்துயிர்க்குப்   போகத்தைப்  புரிபவன்  என்னும்  குறிப்பையும்  புலப்படுத்துநிற்பன.  இங்ஙனம் படைப்பு  முதலிய  தொழிற்றலைவனும்  போக  மோக்க  காரகனும்  ஆகிய   பெருந்தலைவனாகிய   நீயே  எளியேமாகிய  எமக்கும்  தலைவனாயினையென்னும்  உவகை  பற்றி  “ஐயா”  என்றனர் ,   மொய்  –  வண்டு .  மொய்த்தற்றொழில்  பற்றி  வண்டு  மொய்  என்னும்  பெயருடைத்  தாயிற்று .  பொய்கை  அகன்று  என்றும்   நீரறா  வளமுடமையால்   தாமரை  குவளை  முதலியன  செழித்துப்படர்ந்து  பூத்திருந்தமையின்   அம்மலர்களிலுள்ள   தேனை  நுகரும்  பொருட்டு  வண்டுகள்  நிறைந்திருத்தல்  பற்றி  “மொய்யார்  தடம்  பொய்கை “  என்றனர்.  பனிப்பருவத்  தொடக்கமாதலின்  மலர்கள்  வாட்டம்  அடைந்தில  வென்பது   கருத்து .   “முகேர் “  என்பது  கையால்  நீரைக்  குடையுங்கால்  உண்டாம்  ஒலிக்குறிப்பு. மொய்யார்  தடம்  பொய்கை  யாதலின்  மலரிதழ்  வண்டுகள்  முழுகும்  இடத்தைவிட்டு   ஒதுங்குதற்  பொருட்டும் , நீர்  விளையாட்டு  நிகழ்ச்சி  பற்றியும்  முழுகுதற்குமுன்  கையினால்  நீரைத்  தட்டி  இறைத்தல்  பற்றி “கையாற்குடைந்து”  எனவும் , பின்  முழுகி  நீராடினோம்  என்பது குறித்து  :குடைந்து”  எனவும்  கூறினர் . 

                வாழையடி  வாழையெனச் சிவத்தொண்டு   செய்து  வந்த  மரபில்  தோன்றிய  அடிமைகளாகிய  யாம்  என்பார் , “வழியடியோம்”  என்றனர் .  நீராடுங்கால்  எல்லோரும்  சேர்ந்து  இறைவன்  திருவடிகளைப்  புகழ்ந்து  பாடிக்கொண்டே  ஆடினரென்பது.  “வாழ்ந்தோம்”  என்றது  கருதியபடி  மார்கழி  நீராடற்கு  உரிய  நேரத்தில்  எழுந்து    வாயார  இறை  புகழ்  பாடி  நீராடக்கிடைத்த  பேறு  பற்றிய  உவகை  மொழியாகும்.  தொடங்கிய  காரியத்தின்  பயன்  பின்  விளைவாயினும்  அக்காரியம்  கைகூடுதலும்  மக்களுக்கு  மகிழ்ச்சி  விளைக்கு மென்பது  உலகியலிற்  காணப்படுவது .  காண்  –  முன்னிலையசை. 

                    பொதுவாக  மக்கள்   தேவர்  முதலிய  பல்லுயிர்களையும்   பக்குவம்  நோக்கி  அடிமை  கொண்டு  அருள்புரியும்  நின்  திருவிளையாட்டில்   என்பார், “நீ  யாட்கொண்டருளும்   விளையாட்டின்  “  என்றார் .  உயிர்களைப்  படைத்தும்  காத்தும்  ஒடுக்கியும்  மறைத்தும்  அருளுதல்  இறைவனுக்கு   ஒருவிளையாட்டுப்போலும்  எளிமையிற்  செய்யப்படுஞ்செயல்  என்பார்  “விளையாட்டின்“  என்றாரென்பது.  இக்கருத்தை   “ஒரு  சாரார் , “ ஐயா  நீ  யாட்கொண்டருளும்   விளையாட்டின்“…… என்பது  முதலிய  திருவாக்குக்கள்   பற்றி  விளையாட்டென்றது , ஐங்கலப்   பாரஞ்  சுமத்தல்  சாத்தனுக்கு  விளையாட்டென்பது போல  அத்துணை  யெளிதிற்  செய்யப்படுதலை  நோக்கியேயாகலின்  அக்கருத்தும் ,  உயிர்கட்குப்   பெத்தகாலத்துச்  சுவர்க்காதி  போகமும்  பத  முத்திகளும்   முத்தி  காலத்து  வீடுபேறும்  கொடுத்தற் பயத்ததென்பர் “ என்னும்  சிவஞான சித்தி  யுரையானும்  தெளிக. 

                      இடையறவின்றிப்   பெய்யும்  மழைநீரை   மேட்டு  நிலம்  வறிதே  கழிப்பப்  பள்ளிநிலம்  தாங்கிப்பயன்  விளைத்தல்  போல   ஆண்டவன்  திருவிளையாட்டாற்   பெய்யும்  அருளமுதத்தைத்    தூய்மை  பெறாத  உள்ளத்தினர்  விட்டொழிக்க  மெய்யன்பினால்   தூய்மை  பெற்ற  நன்னெஞ்சினோர்  பெற்றுப்  பயன்பெறுவர்  ஆதலின் ,  அம்முறையில்  இறையருளை   வேட்டு  நிற்போரே  உய்வார்களாவர் . உய்யும்  வகை   பாசப்  பிணிப்பை  யொழித்துத்  திருவருட்பேற்றைப்   பெறுதற்குரிய  சிவத்தொண்டு  முதலிய  தவநெறிகளாம் . அந்நெறிகளையே  சாதனமாக  மேற்கொண்டு  உய்திபெற்றுள்ளோம்  என்பார் “உய்யும்  வகையெல்லாம்  உய்ந்தொழிந்தோம்”  என்றனர் .  உய்ந்தொழிதல்  என்புழி  ஒழிதல்  துணைவினையாகும் ;  துணிதற் பொருட்டு . “வழியடியோம்  வாழ்ந்தோம் “  என்று முன்னர்க்  கூறியது   நீராடத்  தொடங்கியது   நிறைவேறியமையால்   உண்டாம்  உவகை  பற்றி.  உய்ந்தொழிந்தோம்  என்று  பின்னர்க்கூறியது  இறைவன்  திருவருட்பேற்றிற்கு   இலக்காயது  பற்றி. 

                  ஆண்டவனே  ! இதுகாறும்  எல்லாவகையாலும்  நின்  தொண்டில்  நழுவாமல்  ஈடுபட்டுப்  பிழைத்தோம் .  இனி  நின்  திருவருட்  பேற்றினாலாம்  பயனையெய்துதற்கு   யாம்  சலித்தொழியாமல்  கடைபோக   எம்மைக்  காத்தருள  வேண்டுமென்பார்  “எய்யாமற்  காப்பாயெமை”  என்று  கூறினரென்பதாம்  .

                    இதன்கண்  “சிறு  மருங்குன்  மையார்தடங்கண்  மடந்தை  மணவாளா”  என்றதனால்  சத்தியை  வியந்தது  பெறப்பட்டவாறறிக.   

பாடல்  12.

                              ஆர்த்த   பிறவித்    துயர்கெடநாம்   ஆர்த்தாடுந்

                                         தீர்த்தனற்   றில்லைச்சிற்   றம்பலத்தே   தீயாடுங்

                              கூத்தனிவ்   வானுங்   குவலயமும்   எல்லோமுங்

                                         காத்தும்  படைத்துங்   கரந்தும்  விளையாடி 

                               வார்த்தையும்   பேசி   வளைசிலம்ப   வார்கலைகள்

                                       ஆர்ப்பரவஞ்   செய்ய   அணிகுழன்மேல் வண்டார்ப்பப்

                               பூத்திகழும்  பொய்கை   குடைந்துடையான்   பொற்பாதம்

                                        ஏத்தி   யிருஞ்சுனைநீர்   ஆடேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :–    முன்னைத்  திருப்பாட்டில்   மக்களை  ஆட்கொண்டருளுதல்  இறைவனுக்குத்   திருவிளையாட்டாகும்  என்பதை  அருளிச்  செய்த   அடிகள் ,  இத்  திருப்பாட்டில்  மக்களேயன்றி   விண்ணுலகம்   மண்ணுலகம்  முதலிய  எல்லாவுலகங்களையும்   படைத்தல்   முதலிய   தொழிற்படுத்தலும்   இறையருள்  விளையாட்டே  யென்பதைப்  புலப்படுத்தருளுகின்றார்.     

      பதவுரை :-    ஆர்த்த  பிறவித்  துயர்கெட  =

நம்மை  அநாதியே  கட்டிய  பிறவித்துன்பம்    ஒழியும்படி , 

நாம்  ஆர்த்து  ஆடும்  தீர்த்தன்   = நாம்  உவகையால்  ஆரவாரித்து  முழுகும்  தூய  நீரையுடையவனும்  ,

நல்  தில்லைச்  சிற்றம்பலத்தே  தீ  ஆடும்  கூத்தன்  =  நல்ல  தில்லைநகரின்கண்  உள்ள  ஞானவெளியில்   அனலையேந்தி  ஆடுகின்ற  அருட்கூத்துடையவனும்  ,

இக்குவலயமும்   வானும்  எல்லோமும்  =   இந்  நிலவுலகத்தையும்  விண்ணுலகத்தையும்   நம்  எல்லோரையும்  ,

படைத்தும்  காத்தும்  கரந்தும்  விளையாடி  =   ஆக்கியும்  அளித்தும்  ஒடுக்கியும்   விளையாடுகின்றவனும்  ஆகிய  சிவபெருமானது ,

வார்த்தையும்  பேசி  =  திருப்புகழையும்  பாடிக்கொண்டு  ,

வளை  சிலம்ப  =  கை  வளையல்  ஒலிக்கவும் ,

வார்கலைகள்  ஆர்ப்பரவம்  செய்ய  =  (இடையில்)  நீண்ட  மேகலை  முதலிய  அணிகலன்கள்  ஆரவாரித்  தொலிசெய்யவும்  ,

அணி  குழல்மேல்  வண்டு  ஆர்ப்ப  =  அழகிய  கூந்தலின்  மேல்  வண்டுகள்  எழுந்து   முழங்கவும் ,

பூ  திகழும்  பொய்கை  குடைந்து  =   மலர்கள்   விளங்குகின்ற  திருக்குளத்தில்  முழுகி ,

உடையான்  பொன்பாதம்  ஏத்தி  =   எல்லாமுடைய  இறைவனது  பொன்போன்ற   திருவடிகளைப்  புகழ்ந்து  பாராட்டி,

இரும்  சுனை  நீர்  ஆடு  =  பெரிய  சுனை  நீரிலும்  முழுகுவோமாக  என்பது .

விளக்கவுரை :-    இது,  நீராடும்  நிகழ்ச்சியில்  இறைவன்  புகழைப்  பாடி யாடுதல்   கூறுகின்றது .  உயிர்  இருவினைப்  பாசங்களாலும்   மும்மலக்  கல்லொடு   பிணிக்கப்பட்டுப்  பிறவிப்  பெருங்கடலுள்   வீழ்த்தப்படுதலின்  “ஆர்த்த  பிறவி “  எனவும் ,  பிறவி  ,  வினைப்பயனை  நுகர்ந்து கழிப்பதற்கு ஏதுவாதல் பற்றி நலம் பயப்பதாயினும் தீவினைப்பயனை நுகருங்கால்  உயிர்  துன்புறுதலின்  “பிறவித்துயர் “  எனவும் , அத்துன்பமாகிய  வெப்பம்  ஒழிய   முழுகுதற்குரிய   தூய  தண்ணிய  நீரையுடையான்  இறைவனென்பார்  “துயர்கெட  நாம்  ஆர்த்தாடுந்தீர்த்தன்  “  எனவுங்  கூறினர் .  ஆர்த்தல் ,  பிறவித்  துயரொழிவிற்குரிய   சாதனப்பேறு  குறித்து  உண்டாகிய  உவகையானாயது.

                   கடலொடு  காவிரி  கலக்குமிடத்தில்  அவ்விரு வகை  நீரிலும்  தோய்வாரைக்குறித்து .  “தீதுநீங்கக்  கடலாடியும் ,  மாசுபோகப்  புனல்படிந்தும்  என்று  கடியலூர்  உருத்திரங்கண்ணனார்   கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.   அகக்குற்றம்  நீங்கக்  கடலாடினவர்  கடலாடுதலாலுண்டாம்   புறக்குற்றமும்  நீங்கக்  காவிரிப்புனலிலும்  தோய்ந்தனரென்னும்   அது.  வினையொழியப்  பிறவிப்பெருங்கடலுள்  மூழ்கினார்  அப்பிறவித்  துயரும்  ஒழிய  நல்ல  தூயநீரிலும்  ஆடினர்  என்னும்  இக்கருத்தைக்  குறிப்பிற்  புலப்படுத்து  நிற்றலறிக.  இனி  “ஆர்த்தாடுந்  தீர்த்தன்”  என்பதற்கு    ஆரவாரித்து  இன்பக்கூத்தாடுதற்கு  ஏதுவாகிய  கடவுள்  எனப் பொருள்கோடலும்  ஆம் .  ஞானவெளியை  யுடைமையால் , “நற்றில்லை” யென்னப்பட்டது .  திருச்சிற்றம்பலம்   –  நுண்ணிய  ஞானப்பரவெளி    தூலவுடலுடைய  மக்களுக்கேற்பத்    தூலவெளியில்  இனிது  நீராடுதற்குத்  தண்ணிய  நறுநீரையுதவிய  அருளாளன் , தான்  சூக்கும  வெளியில் வெய்ய  தீயை  யேந்தி  ஆடினன் என்னும்  இதனால் ,  வார்ந்த  நஞ்சயின்று  வானோர்க்க  முதமீந்த  அப்பெருமானது  வண்மைக்குணம்  ஈண்டும்  புலனாயவாறறிக .  தீ  ஞானத்தைக்  குறிப்பது. அதனை  யேந்திக்   கூத்தாடியது    ஞானத்தால்  தன்னைக்  காண விழைவார்க்குக்  காட்சியளிப்பவன்   என்பதைக்  குறிப்பதாகும்  .  கூத்து  அருட்செயல்  ஐந்தையும்  புலப்படுத்து  நிகழ்வது . 

                       “இவ்வானும்”  என்புழிச்  சுட்டை  அணிமையிலுள்ள  குவலயத்திற் கேற்றுக ,  நுண்ணிய  ஞானப்  பரவெளியில்  நெருப்பை  யேந்திக்  கூத்தாடுதலே  யன்றி  இந்  நிலவுலகத்தினரையும்  வானுலகத்தவரையும்  நம்  எல்லோரையும்   ஆக்கியும்  அளித்தும்  மறைத்தும்   விளையாடுபவன்  என்பார்  “இவ்வானுங்  குவலயமு மெல்லோமும்    காத்தும்  படைத்துங்  கரந்தும்  விளையாடி “  என்றார்:   காணப்படாத  பொருள்களைப்  படைத்துக்காட்டலும்,  காட்டியவற்றைச்  சிலநேரம்  நிலைபெறச்  செய்தலும்,  பின்  மறையச்  செய்தலும்  இந்திரசாலவித்தை  யென்ப.  அவ்வித்தைகாட்டி  விளையாடுதல்போல ,  மருட்கேவல   நிலையிலுள்ள வுயிர்களை  உடல்  முதலியன  படைத்து  வெளிப்படச்செய்தலும்,  வினையளவு   வரையறுக்கப்பட்ட   காலம்  வரை  அவற்றை  நிலைபெறுத்தலும் ,  பின்  ஒடுக்கி  மறைத்தலும்    ஆகிய  உலக  முத்தொழிற்படுத்தல்  இறைவனுக்கு  விளையாட்டாம்  என்பது  கருத்து . 

                    படைத்தும்  காத்தும்  எனற்பாலது  செய்யுள்நோக்கி  மாறி  நின்றது.  விளையாடி  யென்பது  பெயர் ;  “மதி  மயங்கி “  என்பதுபோல.  “இவ்வானுங்  குவலயமும்  “  என்புழிக்  கூறுகின்ற  பெண்கள்  குவலயத்து  ளடங்கினராகவும்  “எல்லோமும்”  என்று  தம்மைப்  பிரித்துக்  கூறியது  தம்மாற்  சுட்டியுணரப்படும்  பிரபஞ்சத்தினின்று  தாம்  வேறல்லர்  என்பது  குறித்து.  விளையாடி  வார்த்தையும்  என்புழி  ஆறனுருபு  தொக்கது .  நீராடுதற்கு  முன்னும்  பின்னுமன்றி  நீராடுதல்  நிகழுங்காலும்  இறைபுகழ்  பாடப்பட்டதென்பார்  “வார்த்தையும்  பேசி “  என்றார் .  நீராடுங்கால்  கையால்  நீரைத்தட்டியிறைத்தலும் ,  நீர்நிலையில் அங்கும்  இங்கும்  சேறலும் , முழுகுதலும்  ஆகிய  செயல்கள்  நிகழுமாதலின்,  அம்  மூன்றும்  புலப்பட  முறையே  “வளை  சிலம்ப, வார்கலைகளார்ப்  பரவஞ்செய்ய ,  அணிகுழன்  மேல்  வண்டார்ப்ப”   என்றார் .  கலைகள்  மேகலை  முதலிய  அணிகள்.  கூந்தலின் மேலணிந்த  மலர்களிலுள்ள  தேனை  நுகரும் வண்டுகள்  தலைமுழுகுங்கால்    எழுந்து  ஆர்த்தன  வென்பது  கருத்து .  பூத்திகழும் பொய்கை  யென்றது  அம்மலர்  விளக்கத்தில்  ஈடுபட்ட  மகளிர் அப்  பொய்கையினின்றும்  பிறிதொரு  நீர்நிலைக்கு  மாறுதலின் அருமை  புலப்படுக்கப் பட்டபடியாம் .

                      பொய்கை  நீராடியதும்  அடுத்துள்ள  சுனைநீராடுதற்குத் தொடங்கும்  பெண்கள்  சுனையாடுதற்கண்  இடையூறணுகாமைப்  பொருட்டு  இறைவன்  திருவடியை  மீண்டும்  வேண்டினரென்பார்  “பொய்கை  குடைந்துடையான்  பொற்பாத  மேத்தி “ என்றனர் .  பெண்கள்  பலர்  ஆடுதற்கு  அகன்ற  சுனையே  பொருந்துமாதலின்  “இருஞ்சுனைநீர்”  என்றனர் .  “ஆடுக”  என்புழி  வியங்கோளீறு   தொக்கது .  ஆடுவோமாக  என்றவாறு .   பேசி,  சிலம்ப,  அரவஞ்செய்ய,  ஆர்ப்ப ,  குடைந்து ,  ஏத்தி,  ஆடுக  என  வினைமுடிபு  கொள்க.

                      இதன்கண்  “உடையான்  பொற்பாதம்  ஏத்தி “  யென்றதனால்   திருவடியாற்  குறிக்கப்படும்  சத்தியை  வியந்தது  புலனாயவாறறிக. 

பாடல் 13.

                    பைங்குவளைக்   கார்மலராற்   செங்கமலப்  பைம்போதால்

                               அங்கங்   குருகினத்தாற்  பின்னும்  அரவத்தால்

                    தங்கண்   மலங்கழுவு   வார்வந்து  சார்தலினால்

                               எங்கள்  பிராட்டியும்   எங்கோனும்  போன்  றிசைந்த

                   பொங்கு  மடுவிற்  புகப்பாய்ந்து    பாய்ந்துநஞ்

                               சங்கஞ்  சிலம்பச்  சிலம்பு   கலந்தார்ப்பக்

                     கொங்கைகள்  பொங்கக்  குடையும்  புனல்பொங்கப்

                               பங்கயப்  பூம்புனல்பாய்ந்   தாடேலோ  ரெம்பாவாய்

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்   எல்லாவுலகங்களையும்   முத்தொழிற்படுத்தலும்  இறையருள்  விளையாட்டேயென  அருளிய  அடிகள்,  இத்  திருப்பாட்டில்  அப்பெருமானை  யடைதற்குத்  தூய  அன்பு  நெறியால்   தகுதி  வாய்ந்த  உயிர்கள்  தாமும்  விளையாட்டுப்  போன்ற  செயல்களால்  இறையருட்கு  இலக்காகி  இன்புறலாம்  என்னும்  உண்மையைக்  குறிப்பிற்  புலப்படுத்தருளிச்  செய்கின்றார் .  பாசப்பிணிப்பை  யொழித்தற்குரிய  நயனதீக்கை  முதலிய  சாதனங்களே  இங்கே  நுண்ணிதின்  அறியப்படும்  குறிப்புகளாம் .

பதவுரை :-     பசுமை  குவளைக்  கருமை  மலரால்  =

குளிர்ந்த  குவளைகளின்  கரிய  மலர்களையுடைமையாலும்  ,

செம்மை  கமலம்  பசுமை  போதால் =    செந்தாமரையின்  அழகிய  மலர்களையுடைமையாலும் , 

அம் கம் குருகு இனத்தால்  =  அழகிய  நீர்வாழ்  பறவைகளையுடைமையாலும்,

பின்னும்  அரவத்தால்  =  பின்னியெழும்  அலையொலிகளை  யுடைமையாலும்,

தங்கண்  மலம்  கழுவுவார்  வந்து  சார்தலினால்  = 

(மடுநீராகிய)  தம்மிடத்து  அழுக்கைக்  கழுவக்கருதுவார்   வந்தடைதலினாலும்  ,

எங்கள்  பிராட்டியும்  எம்கோனும்  போன்று  இசைந்த  பொங்கும்  மடுவில் = 

எங்கள்  இறைவியையும்  எம்  இறைவனையும்  ஒத்துப்  பொருந்திய  நீர்  நிறைந்த  பொய்கையில்  ,

பாய்ந்து  பாய்ந்து  புக =  தாவித்  தாவிப்  புகுதலால் ,

நம்  சங்கம்  சிலம்ப =  நம்  கைவளையல் ஒலிக்கவும் ,

சிலம்பு  கலந்து  ஆர்ப்ப  =  சிலம்புகள்  அவ்வொலியோடு  கலந்து  ஒலிக்கவும்,

கொங்கைகள்  பொங்க  =  நகில்கள்  குலுங்கவும்  ,

குடையும்  புனல்பொங்க  =  நீராடுதற்குரிய  நீர்  மேலெழவும்  ,

பங்கயப்  பூ  புனல்  பாய்ந்து  ஆடு  =   தாமரை  மலர்களால்  பொலிந்து  விளங்கும்  பொய்கையில்  குதித்து  நீராடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-    இதுவும்  அது . (நீராடும்  நிகழ்ச்சியில்  இறைவன்  மாண்பு  கூறியாடுதலைக்  கூறுகின்றது)  பொய்கை  இறைவியும்  இறைவனும்  இயைந்து  விளங்குதல்போல   விளங்குதற்கு  ஏது  பைங்குவளைக்  கார்  மலர்  முதலியனவாம் .  கார் மலர்   செம்போது  என்புழிக்  கருமையும்  செம்மையும்  இனம்  விளங்குதற்கு  வந்த  அடைமொழிகளாம் . அம்மையையும்  செந்தாமரை   மலர்  தீவண்ணனாகிய  அப்பனையும்  குறிப்பன .  குவளையின்  முதலுக்கும்  தாமரையின்  சினைக்கும்  பசுமையடை  புணர்த்தது, “அருளதுசத்தியாகும்  “ என்றபடி  இறைவி  அருள்வடிவினள்  என்பதையும் ,  இறைவன்  அதனையுடையவனென்பதையும்  குறிப்பிற்  புலப்படுத்தற்கென்க.

அங்கம்  –  உறுப்பு ;  கை,.  குருகு  –  வளையல்  .  அங்கம்  குருகு  இனம்  என்பது, கையில்  வளையல்  குழுவையுடைய  இறைவியையும் ,  பின்னும்  அரவம்  என்பது ,  பின்னிக்கிடக்கின்ற  பாம்பணிகளையுடைய  இறைவனையும்  குறிப்பனவாம் .  வடமொழி  மதம்  பற்றித்  தம்  என  நீர்  பன்மையாகக்  கூறப்பட்டது . ஈண்டுத்தங்கண்  அம்மையப்பராகிய   தம்மிடத்து  என்றபடி.

      இனி,  தங்கள்  மலங்கழுவுவார்  எனப்  பதப்பிரிவு  கொண்டு  தம்முடைய  அழுக்கைப்  போக்குவார்  எனப்  பொருள்  கோடலுமாம்.   மலம்  –  ஆணவ  முதலியன .  மலங்கழுவுவார்  வந்து  சார்தல்  –  பாசப்பிணிப்பைப்  போக்குவார்  வந்து  அடைதல் .  இஃது  இருவர்க்குமாம்.  இவ்வேதுக்களால்  இறைவியும்  இறைவனும்  இயைந்ததுபோற்  காணப்படும்  பொய்கை  யென்றபடி .  இனி  இவ்வேதுக்கள்  சைவசித்தாந்த  முறைப்படி   ஆணவ  முதலிய  பாசங்களை  யொழிப்பதற்கு  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிப்  பக்குவமுள்ள  உயிர்களுக்குச் செய்யும்  தீக்கைக்கிரியைகளையும்  குறிப்பனவாம் .  சிவநெறித் தீக்கைகள்  பலதிறப்படும்  .  அவற்றுள்  உபலக்கணமாகச்  சில  தீக்கைக்  குறிப்புக்கள்  ஈண்டுள்ளன.

                பைங்குவளைக்  கார்மலர்  என்பது   நயனதீக்கையைக்  குறிக்கும்.  நயனத்தீக்கையாவது  மாந்திரிகள்  பாம்பினாற்  கடிக்கப்பட்டவனைக்  கருடபாவனையாலே  பார்த்து  நஞ்சையொழித்தல் போல  ஆசிரியன்  திருநோக்கத்தால்  பாசத்தையொழித்தலாகும்.  கண்ணப்பநாயனாரை  ஆண்டவன்  ஆட்கொண்டதும்  இந்நெறியே.   இவ்வுண்மையை,  “கண்ணால்  நோக்கிக்  கண்ணப்பர்  பணியுங்கொள்  கபாலியாரே”  என்னும்  அருளுரையானும் ,  “அங்கணர்  கருணைகூர்ந்த  அருட்டிரு  நோக்கமெய்தி “ எனவும்,  “முன்பு  திருக்காளத்தி  முதல்வனார்  அருள்நோக்கின்  “  எனவும்  சேக்கிழார்  கூறுமாற்றானும்  தெளிக.  

                  செங்கமலப்  பைம்போது  என்றது,  மானசீக  தீக்கையைக்  குறிக்கும்.  மானசீக  தீக்கையாவது   பாவனையினால்  ஆசிரியன்  மாணவனது  இதயக்கமலத்தில்   புகுந்து  அவன்  அறிவை  வாங்கித்  தன்  இதயக்கமலத்தில்  கலந்ததாகக்கொண்டு   பின்  அவன்பால்  நிலைப்படுத்தலாம் .  இஃது  ஆமை  தன்  சினையை  நினைத்த அளவிற்  காப்பதுபோலப்  பாவனையினாற்  காப்பதாம்.  ஈண்டுத்  தாமரைமலர்   ஆசிரியனுடைய   இதயக்கமலத்தைக்   குறித்தல்  அறிக.

                      அங்கங்குரு கினம்  என்பது   பரிசதீக்கையைக்  குறிப்பதாகும் . பரிசதீக்கையாவது  பறவை  தனது  சினையைச்  சிறகால்  தழுவிக்காத்தல்போல   ஆசிரியன் தன்  கையினால்  மாணவனது  தலைமுதல்  எங்கும்  பரிசித்துப்  பாசத்தை  யொழித்துக் காத்தலாம் . இதனைச்  சிவஹஸ்த  மஸ்தகசையோகம்  என்ப.   குருகு  –  கோழி  முதலிய  பறவையைக்  குறிக்கும்.  அங்கம்  –  சிறகு .  இனம் –  குஞ்சு .  ஆகவே  பறவைகள்  சிறகாற்  பார்ப்பைத்  தழுவுதல்போல்வ  தென்பது  குறிப்பு . 

                        அரவம்  –  ஒலி ;  இது  வாசிகதீக்கையைக்  குறிக்கும்.  வாசிகமாவது  திருவைந்தெழுத்தை   உபதேசித்து  நலம்புரிதல் ,  இங்ஙனம்  மனம்  வாக்குக்  காயம்  கண்  முதலியவற்றாலாம்   தீக்கையால்  பாசத்தை  யொழிப்பவராகிய  பக்குவமுள்ளவுயிர்கள்   அம்மையப்பவராகிய  தம்மிடத்து  வந்து  சேர்தலினால்  என  உமையொருபாகற்குக்  கொள்ளல்  வேண்டும் .  இவ்வேதுக்களால்  எங்கள்  பெருமாட்டியாகிய  அம்மையையும்  எங்கள்  பெருமானாகிய  அப்பனையும் போல்  இயைந்த  பொய்கையென்றார் .  ஈண்டு  அம்மையை  முற்கூறியது,  மெய்யருளாம்  தாயுடன்  சென்று  தந்தையையடைய  வேண்டுமென்னும்  நுண்பொருள்  புலப்படவென்க.   பொங்குதல்  –  நீர்மிகுதல், “புகப் பாய்ந்து  பாய்ந்து”  என்பதை  பாய்ந்து  பாய்ந்து  புக  எனக்  கொள்ளல்வேண்டும் .  புக  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு ,  சங்கம்  ஆகுபெயரால்  வளையலையுணர்த்தும் . சிலம்பொலி  வளையல்களின்  ஒலியோடு  கலந்தொலிக்கவென்பது,  பொய்கைக்  கரையாகிய  நிலத்தினின்றும்   தாவிப்  புகுதலால்  கைவளையல்களோடு  காற்சிலம்புகள்  ஒலிசெய்தனவென்பது   கருத்து.   “கொங்கைகள்  பொங்க “   என்புழிப்  பொங்குதல்  இலக்கணையால்  குலுங்குதலையுணர்த்தும் .   “குடையும்  புனல்  பொங்க”  என்றதனால்  மகளிர்  நெருங்கிப்   பாய்ந்தாட  நீர்  அளவின்மிக்கு   மேலெழுந்ததென்பது   போதரும்   தாமரைமலர்களாற்  பொலிவுபெற்று  விளங்கும்  என்றது  இருள்  புலர்காலத்தைக்  குறிப்பது .  பாய்ந்து  பாய்ந்து புக  சிலம்ப   ஆர்ப்ப  பொங்க  பொங்க  பாய்ந்தாடுக   என  வினை  முடிவு  கொள்க. 

                    இதன்கண்  “எங்கள்  பிராட்டியும்  எங்கோனும்  போன்றிசைந்த  பொங்குமடு “  என்றதனால்  சத்தியை  வியந்தது  புலப்படுக்கப்பட்டபடியாம் . 

பாடல்  14.

                  காதார்   குழையாடப்   பைம்பூண்   கலனாடக் 

                                கோதை   குழலாட   வண்டின்   குழாமாடச் 

                  சீதப்    புனலாடிச்   சிற்றம்   பலம்பாடி

                                 வேதப்   பொருள்பாடி   யப்பொருளா   மாபாடிச் 

                   சேரதி   திறம்பாடிச்   சூழ்கொன்றைத்   தார்பாடி 

                                  ஆதி   திறம்பாடி   யந்தமா   மாபாடிப் 

                    பேதித்து   நம்மை   வளர்த்தெடுத்த   பெய்வளை   தன்

                                  பாதத்   திறம்பாடி   யாடேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்   தூய  அன்புளதேல்  விளையாட்டுப்போன்ற  செயல்களும்  இறைவனையடைதற்கு   ஏதுவாம்  என்னும்  நுண்பொருளைக்  குறிப்பிற்  புலப்படுத்த  அடிகள்  ,  இத்திருப்பாட்டில்  அச்செயல்களும்  இறைவனுடைய  பெருமைக்  குணங்களுக்கு  மாறுபடாமலிருக்க  வேண்டும்  என்னும்  குறிக்கோளைப்  புலப்படுத்து  அருளிச்செய்கின்றார் .

பதவுரை:-   காது  ஆர்  குழை  ஆட  =  காதிலணிந்த  தோடு  அசைய ,

பூண்  பசுமை  கலன்  ஆட  = உடம்பிலணிந்த   பிற  அழகிய  அணிகலங்கள்  அசைய, 

குழல்  கோதை  ஆட   =  கூந்தலில்  அணிந்த  மாலைகள்  அசைய,

வண்டின்  குழாம்  ஆட =  வண்டுக்கூட்டம்  எழுந்து  சுழல ,

சீதம்  புனல்  ஆடி  =  குளிர்ந்த  நீரில்  முழுகி,

சிற்றம்பலம்   பாடி  =  பின்  ஞானசபையைப்  புகழ்ந்து  பாடி

வேதப்பொருள்பாடி   =  மறைப்  பொருளமைந்த  புகழ்பாடலைப்பாடி ,

அப்பொருள் ஆமா[று] பாடி  =  இறைவன்  அப்பொருளாக  விளங்குதலைப்பாடி

சோதி  திறம் பாடி  =  ஒளி வடிவாகவுள்ள  அப்பெருமான்  பெருமையைப்  பாராட்டிப்  பாடி 

சூழ்கொன்றத்தார்  பாடி  =  சுற்றியணிந்த  கொன்றைமலர்  மாலையைப்  புகழ்ந்து  பாடி 

ஆதி  திறம்  பாடி  =   அப்பெருமான்  எப்பொருட்கும்  முதலான  முறையைப்  பாடி 

அந்தம்  ஆமா[று]  பாடி  =  எவற்றிற்கும்  ஈறானதன்மையையும்  பாடி

பேதித்து  நம்மை  வளர்த்து  எடுத்த  பெய்வளைதன்  பாத்திறம்  பாடியாடு =

வேறுபடுத்து  நம்மைப்  பாதுகாத்து  ஆட்கொண்ட  வளையலை  அணிந்த  கைகளையுடைய  உமையம்மையின்  திருவடி  மாண்பைப்  பாடி  நீராடுவோமாக   என்பது . 

விளக்கவுரை :-   இதுவும்  அது .  (நீராடுங்கால்  இறைபுகழ்  பாடுதலையும்  நிகழும்  செயல்களையும்  கூறுகின்றது.)  மகளிர்  நிலத்தினின்றும்   நீர்நிலையிற்  புகுந்து  நீராடுமுறையில்  நிகழ்வனவற்றை  முறையே  குறிப்பிடுகிறார் .  முதலில்  நீராடுதற்கு   ஏற்ற  முறையில்  எழுந்து  நின்று  நீரிற்  பாயத்தொடங்கியவுடன்  காதுகளில்  அணிந்த  தோடுகள்  அசைந்தன  வென்பார்  “காதார்  குழையாட” எனவும் ,  நிலத்தினின்று  நீர்நிலைக்கு  விரைந்து  செல்லுங்கால்  உடம்பில்  அணிந்த  ஏனை  அணிகலன்கள்  ஒலித்தனவென்பார்  “பைம்பூண்கலனாட”  எனவும்  , நீருட்  புகுந்து  நீராடத் தொடங்குங்கால்  கூந்தலிலணிந்த  மலர்  மாலைகள்  அசைந்தனவென்பார்.

  “கோதை  குழலாட”  எனவும், நீருள்  முழுகத்  தொடங்குங்கால்  கூந்தலிலணிந்த  மலர்  மாலைகளில்  உள்ள  தேனை  நுகரும்  வண்டினங்கள்  எழுந்து  ஆரவாரித்தனவென்பார்  “வண்டின்குழா மாட”  எனவும்,  முறைப்படுத்துக்  கூறினர்.  இங்ஙனம்  நிகழாநிற்க ,  குளிர்ந்த  நீர்  நிலையில்  நீராடினர்  என்பார், “சீதப்புனலாடி”  என்றனர் .  பொய்கை  நீர்  இயல்பாகவே  குளிர்ந்ததாயினும்   சீதப்புனல்  என்றது ,  பனிப்பருவத்து   வைகறைப்  பொழுதில்  மிக்க  குளிர்ச்சியுடைமை  பற்றி ,  சீதப்புனலாடிப்   பாடியாடுக  என்றமையால்  நீர்  விளையாட்டு  நிகழ்ச்சியில்  இறைவனையும்  இறைவியையும்  புகழ்ந்து  பாராட்டிப்  பாடினரென்பது .   அங்ஙனம்  புகழ்ந்து  பாடத்தொடங்குங்கால்  முதலில்  “சிற்றம்பலம் பாடி”  என்றார் .  “சிற்றம்பலம்  நுண்ணிய  ஞானப்பரவெளி .  ஆவின்  உடல்முழுதும்  நிறைந்த  பால் ,  கன்றின்  பொருட்டுச் சுரந்து  வெளிப்படுதற்குச்  சுரக்கும்  உறுப்பு  இடனாயவாறு  போல,  எங்கும்  நிறைந்த  இறைவிளக்கம்  அன்பர்  பொருட்டுப் புலப்படுதற்கு   இடங்கூறியபடியாம். 

                     “வேதப்பொருள்பாடி”   என்றது  மறைப்பொருளை  இசைத்தமிழாக  இயைத்துப்பாடியமைபற்றி.  இசையின்  தோற்றத்திற்குச்  சாமவேதம்  இடனென்ப  வடமொழிவாணர்.  அப்பொருள்  ஆமா  என்புழி  ஆமாறு  என்பதன்  ஈறுதொக்கது.  சாமவேத  சம்பந்தமான  கேநோபநிடதத்தில் ,  பிரமப்பொருள்  தாம்தாம்  என்று  கருதிய  தேவர்கள்  செருக்கடங்கப்  பிரம்ம  ஓர்  இயக்கவுருக்கொண்டு  வந்ததென்றும் ,  அவ்வியக்கனால்  இடப்பட்ட  ஒரு  சிறு  துரும்பை  எரிக்கமுயன்று  அக்கினிதேவனும் ,  அசைக்க  முயன்று  வாயுதேவனும்    இயலாதொழிய,  இந்திரன்  சென்று  இவ்வியக்கன்  யாராக  இருக்கலாமென்று  திகைப்புற்றிருக்கும்  நிலையில்  இயக்கன்  மறைந்து  விட்டான்  என்றும்,  அவ்வமயம்  விண்ணில்  இமவான்  புதல்வியாகிய  உமை  தோன்றி  “இவ்வியக்கன்  பிரமம்“  என்று  தெளிவித்தாளென்றும்  கூறப்பட்டுள்ளன.  இதுபோன்ற  குறிப்புக்களே  வேதப்பொருளென்றதனாற்  பெறப்படும்  “அப்பொருள்  ஆமாறு  பாடி”  என்றது. 

                        பரமசிவன்   அப்பொருளாகியவிதத்தைப்  பாராட்டி  யென்றபடி .  கேநோபநிடதக்  குறிப்பில்  வெளிப்படையாகச்  சிவபெருமான்  பரம்பொருளாவான்   என்பது  கூறப்பட்டிலது .  இவ்வியக்கன்  பிரமம்  என்று  உணர்த்திய  சத்தி  சிவசத்தியாதலின்,  அச்  சத்திக்குரிய  சிவபெருமானே  பிரமம்  ஆவான்  என்பது  போதரும்.  இத்தெளிபொருளையே  அப்பொருளாமாறு  என்பதனாற்  புலப்பட  வைத்தாரென்பது .  இறை  விளக்கத்திற்கும்  பெருமை  புலப்படற்கும்   உரிய  இடங்களாகிய  சிற்றம்பலத்தையும்  மறைப்பொருளையும்  பாடிப்  பின்  மெய்யன்பர்  பொருட்டுத்  திருமேனிகொண்டருளும்  நிலையைப்  பாடத்தொடங்குகின்றார்.

                         இறைவன்  அன்பர்  பொருட்டுக்  கொள்ளும்  திருமேனி  முதலில்  ஒளிவடிவம்  என்பது  பெரியோர்கண்டது. “சோதியாய்த்  தோன்று  முருவமே”  என்னும்  திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .  ஒரு  கோடி  கதிரவர்  ஒருங்குதோன்றிய  தொப்பப்  பேரொளிப்பிழம்பாகத்  திகழ்பவன்  என்ப.  இவ்வுண்மை  கருதியே  “சோதிதிறம்பாடி” என்றனர் .  திறம்  –  வழிபடும்  உயிர்களின்  பக்குவத்திற்கேற்பக்  கொள்ளும்  திருமேனியின்  வகை.  தார் மாலை   கண்ணியென்னும்  வகையெல்லாம்  இறவனுக்குக்  கொன்றைமலர்  ஆதலின்  “சூழ்கொன்றைத் தார் பாடி”  என்றனர் .  மேலும் ,  புறத்தே  ஐந்து  இதழும்  நடுவண்  ஓங்காரவடிவமான  அகவிதழும்  உடைமையால்  பிரணவத்தையுட்பொதிந்த  திருவைந்தெழுத்தைப்  புலப்படுத்து  விளங்குதலின்  கொன்றைமலர்  இறைவர்க்கு  உவந்ததாயிற்றென்ப.  யாவர்க்கும்  எவைக்கும்  முதற்கடவுளாதல்  பற்றி  “ஆதி திறம் பாடி”  என்றார் . “முளைத்தானை யெல்லார்க்கும்  முன்னே”  என்பது  தமிழ்மறை.  யாவரும்  எவையும்  ஒடுங்குதற்கு  நிலைக்களனாதல்   பற்றி  “அந்தம்  ஆமாறு பாடி” என்றனர்  .  ஆகவே  எல்லாம்  தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும்  காரணனாதல்  கூறப்பட்டபடியாம் .  முதல்  ஈறு  கூறவே  இடைப்பட்ட  காத்தற்றொழிலும்  அவன்பாலதாதல்  பெறப்படுமென்பது. 

“தோற்றுவித்   தளித்துப்   பின்னுந்

         துடைத்தருள்  தொழில்கள்  மூன்றும்

போற்றவே  யுடையன்   ஈசன் “

என்னும்  சிவநெறிப்பனுவலானும்   தெளிக.

                         இறைவனுடைய  அருட்செயல்கள்  ஐந்தும்  சிவசத்தியால்  நிகழ்வன.  அவற்றுள்  மறைத்தலைச்  செய்யும்  நிலையில்  அச்சத்தியைத்  திரோதாயி  என்று  கூறுப.  அஃது  உயிர்களுக்கு  மலபரிபாகத்தை  யுண்டாக்கிப்   பாசநீக்கத்தில்   அருட்சத்தியாக  நின்று  உபகரிப்பதாகும்  ;  தாய்  தன்  மக்கள் பாற்  குற்றங்கண்டவிடத்துக்  குணங்கண்டு   அறக்கருணை காட்டி  இன்புறுத்துமாறு போல வென்பது  .  இக்கருத்தை  உட்கொண்டே  “பேதித்து  நம்மை  வளர்த்தெடுத்த  பெய்வளை”  என்றார்.  பேதித்தல்   கன்மநுகர்ச்சியில்  ஈடுபடுமாறு  வேறுபடுத்தல்.  இது  மறைத்தலாகும்  .  பின்  அக்  கன்மக்கழிவில்  வளர்த்தெடுத்தல்  அருளலாகும்.  இவ்வுண்மையைச் சிவப்பிரகாசம் இரண்டாஞ் சூத்திரம் இரண்டாம் செய்யுட்கு மதுரைச்  சிவப்பிரகாசர்  எழுதிய  விளக்கவுரையானும்  உணர்க .  பெய்வளை  ஆகுபெயராய்  உமையம்மையையுணர்த்தும்.  பெய்வளையெனக்  கைகளைக்  குறித்தது ,  அஞ்சற்கவென  அபயமுத்திரை  காட்டி  ஆட்கொள்ளும்  இயல்பு  நோக்கி  யென்க.  ஆகவே  இறைவனுடைய  படைத்தல்   முதலிய  அருட்செயல்கள்  ஐந்தும்  புலப்படுக்கப்பட்டபடியாம்.  தாயின்  திருவடிப்புகழ்ச்சி   தந்தையின்  திருவுள்ளத்தை  உவப்பிக்கும் என்னும்  உறுதிகொண்டு  “பெய்வளைதன்  பாத்திறம் பாடி”  என்றனர்  என்பது. 

                           இதன்கண்  “பேதித்து  நம்மை  வளர்த்தெடுத்த  பெய்வளைதன்  பாத்திறம்பாடி “  என்றதனால்  சத்தியை  வியந்தது  வெளிப்பட்டு  இன்புறுத்தல்  அறிக.

                                         ……………………………………………………………..

பாடல்  15. 

            ஓரொருகால்  எம்பெருமான்  என்றென்றே  நம்பெருமான்

                      சீரொருகால்  வாயோவாள்  சித்தங்  களிகூர

           நீரொருகால்  ஓவா  நெடுந்தாரை  கண்பனிப்பப்

                   பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்  தான்பணியாள்

           பேரரையற்  கிங்ஙனே  பித்தொருவ  ராமாறும் 

                    ஆரொருவ  ரிவ்வண்ணம்  ஆட்கொள்ளும்  வித்தகர்தாள்

           வாருருவப்  பூண்முலையீர்  வாயார  நாம்பாடி

                     யேருருவப்  பூம்புனல்பாய்ந்  தாடேலோ  ரெம்பாவாய்.

கருத்துரை:-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்புடையார்  விளையாட்டுப்போன்ற  செயல்களும்  இறைவன்  பெருமைக்  குணங்களுக்கு    மாறுபட  நிகழ்தலாகாவென்னுங்  குறிக்கோளைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்விறையருட்குணங்களில்  ஈடுபட்டு  அனுபவிக்குங்கால்   நிகழும்  மெய்ப்பாடுகளைப் புலப்படுத்தருளுகின்றார் .

பதவுரை :-  வார்  உருவம்  பூண்முலையீர்  =  கச்சணிந்த  அழகிய  அணிகலன்புனைந்த  நகில்களையுடையீர் ,  (சிவாநுபவ  நிலையினளாகிய  இப்பெண்)

ஓர்  ஒருகால்  எம்பெருமான்  என்றென்றே  நம்பெருமான்  சீர்   ஒருகால்  வாய்  ஓவாள்  =

ஒவ்வோரமயத்தில்  எம்பெருமானே  யென்று  பலமுறை  கூறி  நம்  தலைவனாகிய  சிவபெருமானுடைய  புகழ்மொழிகளை  ஒரு  பொழுதும்  வாய்  ஓயாமல்  பேசுவாள், 

சித்தம்  களிகூர =  உள்ளம்  களிப்பு மிக  ,

கண்நீர்  ஒருகால்  ஓவா  நெடும்தாரை பனிப்ப  =   கண்களில்  நீர்  ஒருகாலும்  வற்றாத  நெடிய  தாரையாகப்  பொழிய  ,

பார்  ஒருகால்  வந்தனையாள்  =  நிலத்தில்  ஒரே  முறையான  வணக்கத்தை  மேற்கொள்ளுவாள்,

விண்ணோரைத் தான்  பணியாள்  =  மற்றைத்  தேவரைக்குறித்து  வணங்கமாட்டாள்,

பேர்  அரையற்கு  ஒருவர்  பித்து  ஆமாறும்  இங்ஙனே  =  கடவுட்பேரரசனாகிய  சிவபெருமான் பொருட்டு  ஒருவர்  மாலுடையராதலும்  இவ்வாறுகொல்,

இவ்வண்ணம்  ஆட்கொள்ளும்  வித்தகர்  ஒருவர்  ஆர் =   இம்முறையில்  இவளை  ஆட்கொள்ளவல்ல   திறமையுடையவர்  ஒருவர்  யாரோ  அவருடைய, 

தாள்  வாயார  நாம்  பாடி  =  திருவடிகளை  வாய்நிறைய  நாம்  பாடிக்கொண்டு ,

ஏர்  உருவம்  பூம்புனல்  பாய்ந்து  ஆடு  =  அழகிய  தோற்றமுடைய  மலர்கள்  நிறைந்த  நீரில்  வீழ்ந்து  ஆடுவோமாக  என்பது.

விளக்கவுரை :-    இதுவும்  அது .  நீராடப் போந்த  கன்னியருள்  ஒருத்தி ,  உலகியலை  மறந்து  மனமொழிமெய்கள்  இறைவன்பால்  ஈடுபட்டுத்  தன் வயமிழந்துநிற்கும்   தலையன்பினளாகிய  மற்றொருத்தியின்  இயல்பை  ஏனைப்  பெண்கள்  உணரும்  வண்ணம்  காட்டுமுகமாகக்  கூறியது.  வாருருவப்  பூண்முலையீர்  என்று  கன்னியருள்  ஆண்டிற்  பெரிய  பெண்களை  விளித்தது ,  அப்பருவத்தில்  உலகியலின்பநுகர்ச்சியினும்  இறையன்பில்  ஈடுபடுதல்  சிறந்தது என்னும்  உட்கோளை  யுணர்த்துற்கென்க.  சிவாநுபவ நிலையில்  ஈடுபட்ட  இப்பெண்  ஒவ்வோரமயத்தில்  இறைவன்  திருநாமத்தைக்  கூறத்தொடங்கினால்  எம்  இறைவன்  எம்  இறைவன்  என்று  பலமுறை  வாய்  ஓயாமல்  பேசுவாள்  எனவும் ,  ஒழிவில்லாத  அப்பேச்சில்  இறைவனைப்  பற்றிய  புகழ்மொழிகள்  பல  அடுக்கடுக்காக வெளிப்படும்  எனவும்  கூறுகின்றவள் ,  இறைவனைச்  சுட்டுங்கால்  தன் கூற்றாக  நம் பெருமான் எனவும் ,  அவள்  கூற்றாக  அநுவதிக்குங்கால்    எம்பெருமான்  எனவும்  முறையே  பொதுவும்  சிறப்புமாகக்  கூறியது,  தம்மினும்  அவள் பத்திமை  மிகச்  சிறந்ததென்பதைப்  புலப்படுத்தற்கென்க . 

                       சீரொருகால்  என்புழி  ஒருகாலென்பது  காலத்தின்  மேற்று;  உம்மையை  விரித்துரைக்க .  பின்  நீரொருகால்  என்புழியும்  ஈதொக்கும் .  இறைவன்,  சித்தத்துள்  தித்திக்கும்  தேனாதலின்  சிவானந்தமாகிய  அத்  தேனுகர்ச்சியிலீடுபட்டு  இன்புறுதலின்,  “சித்தங்களிகூர” என்றார் .  கூர்தல்  –  மிகுதல்   கூர  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு.  களிகூர்தலின்  காரியமாகக்  கண்கள்  இடையறாது  நீர்பொழிந்தன வென்பார், “நீர்  ஒருகாலோவா  நெடுந்தாரை  கண்பனிப்ப”  என்றார் .  ஓவாமையும்  நெடுமையும்  முறையே  இடையீடின்மையையும்   மிகுதியையும்  உணர்த்தி நின்றன.

                         கண்களினின்று  நீர்  தாரையாக  ஒழுகப்பெற்ற  நிலையில்  எழுந்து ,  சிவபெருமானே  நம்  பரமபதி யென்னும்   ஒரேமுறையை  மேற்கொண்டு   நிலத்தில்  வீழ்ந்து  வணங்குவாள்  என்பார்  “பாரொருகால்   வந்தனையாள்”  என்றார் .  வந்தனை  –  வணக்கம் ,  ஒருகால்  –  ஒரே முறை ;  ஒரே நியமம்.  இதனால்  சிவபெருமானையன்றி  வேறு தேவரைக்குறித்து   வணங்கமாட்டாள்  என்பது  பெறப்படினும்  மேலும்  அவள்  உறுதியான  நிலையை  வற்புறுத்துதற்கு   “விண்ணோரைத்  தான்  பணியாள் “ என  எதிர்  மறை  முகத்தானுங்கூறப்பட்டது  .  மற்றைத்தேவரை  விண்ணோர்  என்றது ,  இந்திரன்  முதலிய  தேவர்கள்  நல்வினைப்பயனாக  விண்ணுலக  வாழ்க்கை பெற்றவரேயன்றி  வினையினீங்கி  விளங்கிய  அறிவின்  முனைவனாகக்  கருதத்தக்கவரல்லரென்பது  குறித்து .

                       ஈண்டு  வாயோவாள்  என்றதனால்  மொழியும்  சித்தங் களிகூர  என்றதனால் மனமும்,  வந்தனையாள்  என்றதனால்  மெய்யும்  ஆகிய  முக்கரணங்களும்  இறைவன்பால்  ஈடுபட்டமை  புலப்படுக்கப்பட்டபடியாம்  . மனம்  ஈடுபடுதல்  இல்வழி  நிகழும்  சொற்களும் செயல்களும்  பயனிலவாய்  முடியுமாதலின் ,  “சித்தங்களிகூர”  என்பது  முன்னும்  பின்னும்  ஏதுவாக  இயையுமாறு  இடைக்கட் கூறப்பட்டதென்க.  வாயோவாள்,  களிகூர, வந்தனையாள்  என்னும்  மூன்றுமே  முறையே  வாக்கு  மன மெய்களைக்  குறிப்பனவாக, இடைப்பட்ட  சித்தங்களிகூர  என்பதனையடுத்துக்  கண்பனிப்ப  என்று  கூறியது,  உள்ளக்குழைவு  புலனாயவாறு  உணர்த்தற்கென்க.

“நாயகன்  சேவடி  தைவரு  சிந்தையும்  நைந்துருகிப்

பாய்வது  போலன்பு  நீர்பொழி  கண்ணும்”

என்று  சேக்கிழார்    கூறியதும்  இங்கே  நினைக்கத்தக்கது . 

                  பேரரையன்  என்றது  படைப்போன்    முதலிய  தலைவர்க்கெல்லாம்  தலைவனாக விளங்கும்   கடவுட்பேரரசனாகிய  சிவபெருமானை.  பித்து,  அஃதுடையார்  மேனின்றது .  மிகப்பெரிய  கடவுட்பேரரசன்  மாட்டு  ஒரு  சிறுமி  மால்கோடல்  பெரிதும்  வியக்கத்தக்கதென்பார்  “பேரரையற்  கிங்ஙனே  பித்தொரு  வராமாறும்”  என்றனர் . ஒருவர்  பித்து  ஆமாறும்  இங்ஙனே  என  இயைக்க.  இங்ஙனேயென்பது  இத்தன்மைகொல்  என  வியப்புக்  குறிப்புணர நின்றது.  உயிர்  எத்துணைத்  தகுதியுடையதாயினும் ,  இறைவன்  அருளில்  வழித்  தலையன்பில்   தலைப்படல்  கூடாதாகலின்,  இங்ஙனம்  முதிர்ந்த  பத்திமையுடையளாம்  வண்ணம்  இவளை  ஆட்கொள்ளவல்ல  சிறந்த  சதுரப்பாடுடையன்  சிவபெருமான்  ஒருவனேயாதல் வேண்டுமென்பார் . .”ஆரொருவரிவ்வண்ணம்   ஆட்கொள்ளும்  வித்தகர்  “  என்றார் .  இங்ஙனம்  தலையன்பினராம்  வண்ணம்  நம்மையும்  ஆட்கொண்டருளுமாறு  அப்பெருமான்  திருவடிகளை  வாயாரப்பாடி  நீராடுவோமாக  வென்பாள்  “தாள் வாயார  நாம்பாடி ………புனல்  பாய்ந்தாடு” என்று  கூறினாளென்பது .  பத்திமையிற்  சிறந்த  இந்நங்கை  வாக்கு  மனம்  மெய்  மூன்றானும்  ஈடுபட்டாள்;  இங்ஙனம்  ஒருங்கு  நிகழ்தல்  நமக்கு  அரிதாயினும்  மொழிப்பணியையேனும்   முந்துறச்  செய்வோமாக  என்பது  கருத்து .  இவள்  இறைவன்  திருவடி  முதலியவற்றின்  உறுப்பழகை  அகக்கண்ணாற்கண்டு  கண்ணீரிலாடினாள் .  அத்தகுதி நமக்கு  இன்றெனினும்  அவ்வுறுப்புக்களை   உவமைமுகமாகக்  காட்டும்  அழகிய  தோற்றமுடைய  மலர்களைப்  புறக்கண்ணாற்கண்டு   நாம்  தண்ணீரிலேனும்  ஆடுவோமாக  வென்பார்  “ஏருருவப்  பூம்  புனல்  பாய்ந்தாடு “ என்றாள்  என்பது . 

                          இதன்கண்   “ஆரொருவரிவ்வண்ணம்  ஆட்கொள்ளும் வித்தகர் தாள்”  என  இறைவன்  திருவடிப்பெருமை  கூறப்படுதலின்  சத்தியை  வியந்தது  பெறப்பட்டவாறு  அறிக.

பாடல்  16. 

முன்னிக்கடலைச்   சுருக்கி   யெழுந்துடையாள்

             என்னத்   திகழ்ந்தெம்மை   யாளுடையா   ளிட்டிடையின்

மின்னிப்   பொலிந்தெம்   பிராட்டி   திருவடிமேற்

              பொன்னஞ்   சிலம்பிற்   சிலம்பித்   திருப்புருவம் 

என்னச்   சிலைகுலவி    நந்தம்மை   யாளுடையாள்

               தன்னிற்   பிரிவிலா   வெங்கோமான்   அன்பர்க்கு 

முன்னி   யவணமக்கு   முன்சுரக்கும்    இன்னருளே

               யென்னப்   பொழியாய்   மழையேலோ   ரெம்பாவாய்.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இறையருளில்   ஈடுபட்டு  அநுபவிக்குங்கால்   நிகழும்  மெய்ப்பாடுகளைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்வநுபவப்பயனாக  இறைவன்   சத்திமூலமாக  மெய்யன்பர்க்குச்  சுரக்கும்   அருட்பெருக்கை  வருணித்து   அருளிச் செய்கின்றார். 

பதவுரை :–    மழை  =  முகிலே , 

கடலை  முன்னிச்  சுருக்கி  எழுந்து  உடையாள்  என்னத்  திகழ்ந்து  = 

நீ  கடலைச்  சார்ந்து  அது  குறைய  நீரை  முகந்து  விண்ணில்  எழுந்து  எம்மையுடையவளாகிய  உமையம்மையைப்  போல  நீலநிறம்  பெற்று  விளங்கி,

எம்மை  ஆளுடையாள்  இட்டு  இடையின்  மின்னிப்  பொழிந்து  =    

எங்களை  ஆட்கொண்டருளிய  அவ்வம்மையின்  சிறிய  இடையைப்  போல  மின்னுதலைச்  செய்து  விளக்கமுற்று  ,

எம்  பிராட்டி   திருவடிமேல்  பொன்  அம்  சிலம்பின்  சிலம்பி  = 

எங்கள்  தலைவியின்  திருவடிமேல்  அணிந்த  பொன்னாலாகிய  அழகிய  சிலம்பைப்  போல  ஒலித்து ,

திரு  புருவம்  என்னச்  சிலை  குலவி   =

அவ்வம்மையின்  அழகிய  புருவம்  போல  (வான)வில்  விளங்கச் செய்து,

நம்  தம்மை  ஆளுடையாள்  தன்னில்  பிரிவு  இல்லா  எம்  கோமான்  அன்பர்க்கும்  = 

நம்மை  அடிமையாக  வுடையவளாகிய  பெருமாட்டியினின்றும்   பிரிதலில்லாத   எம்பெருமானுடைய  அன்பர்க்கும்  ,

நமக்கும்  =  சிறியேமாகிய  நமக்கும்  ,

அவள்  முன்  முன்னி  சுரக்கும்  இன்னருளே  என்னப்  பொழியாய்  = 

அவ்வம்மை  முற்படத்  திருவுளங்கொண்டு  சுரந்தருளும்  இனிமைமிக்க  அருட்  பெருக்கைப்போலப்  பொழிவாயாக  என்பது. 

விளக்கவுரை :-   இஃது  இப்பாவை  நோன்பினால்  விரும்பப்படும்   பொதுவும்  சிறப்புமாகிய   பயன்களுள்,  நாடு  செழிக்க   மழை  பெய்தலாகிய  பொதுப்பயனைவேண்டிக்  கன்னிப்பெண்கள்  கூறியதாக  அருளிச்  செய்யப்பட்டது , “வெம்பாதாக  வியினிலவரைப்  பென”  (இப்பெருநிலம்  மழையால்  வெம்மை  நீங்கப்  பெற்றுக்  குளிர்வதாக)  என்று  11 ஆம்  பரிபாடலிற்  கூறியதும்  இவ்வுண்மையைக்குறிக்கும் .  முன்னுதல்  –  அடைதல்   சுருக்குதல்  –  நீரை  முகந்து  கடலைக்  குறைத்தல். 

“ நெடுங்கடலுந்   தன்னீர்மை   குன்றும்  தடிந்தெழிலி

தானல்கா   தாகி   விடின்”

என்புழி ,  தடிந்து  என்பதற்குக்  குறைந்து  எனப்  பொருள்  கொண்டு  “ஈண்டுக்  குறைத்தலென்றது  முகத்தலை ;  அது  “கடல்  குறை  படுத்தநீர்  கல்குறைபட வெறித்து”  என்பதனானும்  அறிக” என்று  பரிமேலழகர்  எழுதியவுரையும்    ஈண்டுக்  கருதற்பாலது .  நீருண்டமேகம்  நீலநிறம்  பெற்றுத்  தோன்றுமாதலின்  அஃது   அம்மையின்  திருவுருவம்போல  விளங்கியதென்பார்  “உடையாளென்னத்திகழ்ந்து“  என்றார்.  “நாமும்  அரனுடைமை”  என்றபடி  எல்லாப்  பொருள்களையும்  உடைமையாகக் கொண்டு  உடையானாக  விளங்கும்  இறைவனின்  வேறுபாடின்மைபற்றி  இறைவி  உடையாள்  என்னப்பட்டாள் .  அடைமொழியின்றி  வரும்  உடையான் ,  உடயாள்  என்னுஞ்  சொற்கள்  முறையே  இறைவனையும்  சத்தியையும்   குறிப்பனவாம் . 

“உடையா  ளுன்றன்  நடுவிருக்கும்

உடையாள்  நடுவுள்  நீயிருத்தி”

என்று  பிறிதோறிடத்து  அடிகள்  கூறியிருத்தலும்  உணர்க.  முகில்  நீருண்டு  விளங்குநிலைக்குச்  சத்தியின்  அருள்சூற்  கொண்டநிலை  உவமையாயிற்று. கருக்கொண்டமுகில்  மின்னலிட்டு  ஒலித்தல்  இயல்பு .  அவற்றிற்கு  முறையே அம்மையின்  சிறிய  இடையையும்   அவள்  திருவடிச்சிலம்பையும்   உவமையாக்கி  “எம்மை  ஆளுடையாள்  இட்டிடையின் மின்னி”  எனவும் ”எம்பிராட்டி   திருவடிமேற்  பொன்னஞ்சிலம்பிற்  சிலம்பி “  எனவும்  கூறுவராயினர். 

                 ஈண்டு  உவமமாகக்  கொள்ளப்பட்ட  உலகன்னையைச்  சுட்டுங்கால்  “உடையாள்”  எனவும்  “எம்மையாளுடையாள்”  எனவும் , “எம்பிராட்டி” எனவும்  முறையின்  கூறிய  உட்கோள்  என்னையெனின்,  கூறுதும்.  உயிர்த்தொகுதிகளின்  நிலைகளைப்  பற்றிச்  சிவநெறிப்பனுவல்  கூறுங்கால்  அவைகள்  காரணாவத்தை  காரியாவத்தை யெனப்  பகுத்து  விரித்து  விளக்கப்பட்டன.  அவற்றுள்  காரணாவத்தை  கேவலம்  சகலம்   சுத்தம்  என  மூவகைப்படும் .  அநாதிநித்தியமான  உயிர்  எல்லாம்  ஒடுங்குங்காலத்து  மாயாகாரணத்திலே  யொடுங்கி,  படைப்புக்காலமளவும்  ஆணவமலத்தாலே  மறைப்புண்டு ,  ஒன்றும்  அறியாமற்கிடக்கும்  நிலை  கேவலமாகும் .  படைப்புத்தொடங்கி  எல்லாம்  ஒடுங்குங்காலம்    வரை  உடல்  கரணம்  இடம்  நுகர்வுகளைப்பெற்றுப்  பிறந்திறந்துழலும்   நிலை  சகலமாகும் .  இங்ஙனம்  கேவல  சகலப்பட்டுப்  பிறந்திறந்து   திரியும்  நிலையில்  திருவருளாலே  ஆணவமலபாகம்  வர,  இருவினையொப்பும். சத்திநிபாதமும் ,  குருவருளும்,  ஞானசாதனமும்,  மும்மலநீக்கமும்,  சிற்றறிவொழிவும்  பெற்று  ஞானப்பெருக்கத்தால்  இறைவன்  திருவருளைக்கூடிப் பேரின்புறும்நிலை  சுத்தமாகும் . இவ்வுண்மையை ,                    

கேவலஞ்  சகலஞ்  சுத்த  மென்றுமூன்  றவத்தை  யான்மா

மேவுவன்  கேவ  லந்தன்  னுண்மைமெய்  பொறிக  ளெல்லாம்

காவலன்  கொடுத்த  போது  சகலனாம்  மலங்க  ளெல்லாம்

ஓவின  போது  சுத்த  முடையனுற்  பவந்து  டைத்தே”

என்னும்  சிவஞானசித்தித்  திருவிருத்தத்தால்  உணரலாம் .  இந்நிலைகளெல்லாம்  உயிர்நலங்கருதிய  இறை யருட்சத்தியால்  நிகழ்வனவாம்.  இவ்வுண்மையை  அநுபவமுடைய  ஞானதேசிகராகிய  தாயுமான  அடிகள்  கூறிய  பின்வரும்  செய்யுளாலும்  உணர்க.

காரிட்ட  ஆணவக்  கருவறையி  லறிவற்ற

             கண்ணிலாக்  குழவி  யைப்போற்

கட்டுண்  டிருந்தவெமை  வெளியில்விட்  டல்லலாங்

              காப்பிட்  டதற்கி    சைந்த

பேரிட்டு  மெய்யெனப்  பேசுபாழ்ம்  பொய்யுடல்

             பெலக்கவினை  யமுத   மூட்டிப்

பெரியபுவ  னத்தினிடை  போக்குவர  வுறுகின்ற

              பெரியவிளை  யாட்ட  மைத்திட்

டேரிட்ட  தன்சுருதி  மொழிதப்பில்  நமனைவிட்

               டிடருற  வுறுக்கி  யிடர்தீர்த்

திரவுபக  லில்லாத  பேரின்ப  வீட்டினில்

               இசைந்துதுயில்  கொண்மி  னென்று

சீரிட்ட  வுலகன்னை  வடிவான  வெந்தையே

                சித்தாந்த  முத்தி  முதலே

சிரகிரி  விளங்கவரு  தக்ஷிணா  மூர்த்தியே 

                சின்மயா   னந்த      குருவே”

      இதன்கண்  , “காரிட்ட”  என்பது  முதல்   “கட்டுண்டிருந்தவெமை”  என்பது  வரை  கேவலநிலையாகவும்  “வெனியில்  விட்டு”  என்பது  முதல்  “நமனைவிட்டு  இடருற  வுறுக்கி “ என்பதுவரை  சகலநிலையாகவும்  “இடர்  தீர்த்து “  என்பது  முதல்  “சீரிட்ட”  என்பது  வரை  சுத்தநிலையாகவும்   உய்த்து உணர்ந்து  கொள்ளத்தக்கன.  “உலகன்னை  வடிவான  எந்தை”  என்பது  இவ்வெல்லாம்  சிவசத்தியால்  நிகழ்வன வென்பதைக்  குறிப்பிற்  புலப்படுப்பதாம்.  

                 இம்முறையிற்  கேவலநிலையிற்  கிடக்கும்  உயிர்த்தொகுதிகளை   யுடைமையாகக்  கொண்ட  நிலையில்  அன்னை,  “உடையாள்”  எனவும் ,  பின்  சகலநிலையில்  பிறப்பில்  உழலும்  நமக்குத்  தனுகரண  முதலியவற்றைத்  தந்து  சிறிது  அறிவு  விளங்கச்    செய்து  ஆட்கொள்ளுதற்குத்  தகுதியளித்தலின்  அந்நிலை நோக்கி  “எம்மையாளுடையாள்”  எனவும் ,  பின்  சுத்தநிலையில்  பஞ்சமலங்களும்  நீங்கிச்  சிவத்தோடு  கூடி  இன்புறுதற்கு  உதவி  புரியும்  இயல்பு  நோக்கித்  தலைவியாயினாள்  என்பார்  “எம்பிராட்டி”  எனவும்  கூறப்பட்டாள்  என்க.   சகலநிலை  கருதி  “எம்மையாளுடையாள்  இட்டிடையின்  மின்னிப்  பொலிந்து “  என்றதும்,  சுத்தநிலை  கருதி  “எம்பிராட்டிதிருவடி” என்றதும்  குறிக்கொளத்தக்கன.

                     கருக்கொண்ட  மேகம்  மேலெழுந்து  மின்னிக்  குமுறி  வில்லிடல்  இயல்பாதலின்  “திருப்புருவம்  என்னச்  சிலைகுலவி”  என்றார் . திருவென்னும்  அடையால்  புருவம்  பிரட்டியினுடையது  என்று  கொள்ளல் வேண்டும் .  இது  முத்திநிலையிற்  சேர்க்கும்  நயன தீக்கையைக்  குறிப்பதாகும் .  அதன்மேல்  மழை  பொழிதற்கு  அம்மையின்  அருட்பொழிவை  உவமம்  ஆக்கிக்  கூறினர், “நம்தம்மை  யாளுடையாள்  தன்னிற்  பிரிவில்லா  எங்கோமான்”  என்றது  இறைசெயலெல்லாம்  சத்தியையின்றி  யமையாமை  குறிப்பிடற்கு என்க.  “சத்தியுஞ்  சிவமுமாய  தன்மை “  என்னும்  சிவஞான  சித்திச்செய்யுளில்   “அவளால்  வந்த  ஆக்கம்  இவ் வாழ்க்கை யெல்லாம் “  என்று  கூறியதும்  ஈண்டு  கருத த்தக்கது.  “எங்கோமான்  அன்பர்”  என்றது,  இறையருட்கு  ஆளாகி  மலபரிபாகம்  இருவினையொப்பு  முதலியன  பெற்றுச்  சீவன்முத்தராய்த்  திகழும்  பேரன்பரை.  “நமக்கும்” என்றது  அத்துணையன்பில்லாத  எளியேமாகிய  நம்மனோர்க்கும்  என்றபடி.  அன்பர்க்கும்  நமக்கும்  என்புழி  உம்மைகள்  எண்ணுப்  பொருளன.  “சிறைவான்  புனற்றில்லைச்  சிற்றம்பலத்துமென்  சிந்தையுள்ளும், உறைவான்”  என்புழிப்போல  முறையே  உயர்வு சிறப்பு  இழிவுசிறப்பு  உம்மைகளாகவும்  கொள்ளலாம் .  முன்  முன்னி  என  இயையும்.  இருதிறத்தார்க்கும்  முற்படத் திருவுளங்கொண்டு  என்பது பொருள் .  மெய்யன்பராகிய  அடியாரோடு  அத்துணை  அன்பில்லாத  நம்மையும் ஒப்பக்கருதி  யென்றபடி .  சுரத்தல்  மேன்மேலும்  பெருகுதல் ;  தன்  கருணை  அள்ளக்குறையாமை.  அம்மையின்  அருட்பெருக்குப்  பாசவெப்பத்தை  யொழித்துத்  தண்ணென்று  இனிமைபயந்து  நிற்றலின்  “இன்னருள்”  என்னப்பட்டது. “இன்னருளே  என்னப்  பொழியாய் “  என்புழி  ஏகாரம்  தேற்றப்பொருட்டு;  பயன்விளைதல்  நோக்கிப்  பொழிய  வேண்டுமென்பது.  “உயர்ந்ததன்மேற்றே  யுள்ளுங்காலை”  என்றபடி,  உலக நலங்குறித்துப்  பொழியும்  மழைக்கு  உயிர்  நலங்குறித்துச் சுரக்கும்  அம்மையின்  திருவருள்  ஒப்பாயிற்றென்பது.  பாவை நோன்பில்  பொதுவும்  சிறப்புமாகவுள்ள   பயனிரண்டனுள்  பொதுப்பயனாக  மழை  வளத்தை  வேண்டியது  மிகவுஞ்  சிறந்தது. “நீரின்றமையாதுலகு” “மழையின்றி   மாநிலத்தார்க்கில்லை”  என்பன  பொருளுரை .

                      இதன்கண்   உலகத்திற்கு  இன்றியமையாது  வேண்டப்படும்  மழைக்கு  உவமையாகச்  சிவசத்தியின்  அருட்பெருக்கைக்  கூறியிருத்தலின்  “சத்தியை  வியந்தது”  வெளிப்படையிற்  புலனாயவாறறிக.

                                                      ****************************

பாடல் 17.

செங்க  ணவன்பாற்  றிசைமுகன்பாற்  றேவர்கள்பால்

             எங்கு  மிலாததோ ரின்பம்நம் பாலதாக்

கொங்குண்  கருங்குழலி  நந்தம்மைக்  கோதாட்டி

            இங்குநம்  மில்லங்க  டோறும்  எழுந்தருளிச்

செங்கமலப்  பொற்பாதந்  தந்தருளுஞ்  சேவகனை

            அங்க  ணரசை  யடியோங்கட்  காரமுதை

நங்கள்  பெருமானைப்  பாடி  நலந்திகழப்

              பங்கயப்  பூம்புனல்பாய்ந்  தாடேலோ  ரெம்பாவாய்.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  சத்தி  மூலமாக  மெய்யன்பர்க்குச்  சுரக்கும்  அருட்பெருக்கைப்  புலப் படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்வருளமுதத்தால்   விளையும்  இன்பத்தின்  அருமையைப்  பாராட்டி  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  கொங்கு  உண் கருமை குழலி  =  மணம்  தங்கிய  கரிய  கூந்தலையுடைய  பெண்ணே,

செங்கணவன் பால்  திசைமுகன்பால்  தேவர்கள்பால்= 

திருமாலிடத்தும் ,  பிரமனிடத்தும்,  இந்திரன்  முதலிய  தேவர்களிடத்தும் ,

எங்கும்  இல்லாதது  ஓர்  இன்பம்  நம்பாலதாக =  மற்றெவ்விடத்து   உள்ளார்பாலும்   இல்லாத தாகிய  ஒப்பற்ற  பேரின்பம்  எளியேமாகிய  நம்மிடத்ததாக  , 

நம்தம்மைக்  கோதாட்டி  =  நம்மை  வினை மாசு களைந்து,

இங்கு  நம்  இல்லங்கள்  தோறும்  எழுந்தருளி = 

இந்  நிலவுலகத்தில்  நம்  வீடுகள்தோறும்  எழுந்தருளி  வந்து ,

செங்கமலம்  பொன்பாதம்  தந்தருளும்  சேவகனை  =

செந்தாமரை  மலர் போன்ற  அழகிய  திருவடிகளை  எளிமையில்  தந்தருளும்  வீரனை , 

அம்  கண்  அரசை  =  அழகிய  அருணோக்கமுடைய  இறைவனை ,

அடியோங்கட்கு  அருமை  அமுதை = 

அடிமைகளாகிய  நமக்குக்  கிடைத்தற்கரிய  அமுதமாக  உள்ளவனை,

நங்கள்  பெருமானைப் பாடி  =

நம்முடைய  தலைவனைப்  புகழ்ந்து  பாடி ,

நலம்  திகழ  =  நம்மனோர்க்கும்  நன்மை  சிறக்க,

பங்கயப்  பூம்  புனல்  பாய்ந்துஆடு  = 

தாமரைமலர்  முதலியவற்றால்  பொலிந்து  விளங்கும்  நீரிற்குதித்து  ஆடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-  இது  நீராடுங்கால்  ஒருத்தியை  நோக்கிக்  கன்னியர்  பலருங்கூறியதாக  அருளிச்செய்யப்பட்டது,  இப்பகுதியில்  மகளிரை  முன்னிலைப்படுத்திய  பிற  இடங்களிலெல்லாம் “வாட்டடங்  கண்மாதே” (1) “நேரிழையாய் “  (2)  “முத்தன்ன  வெண்ணகையாய்”  (3)  “ஒண்ணித்திலநகையாய்”  (4)  “தேன்வாய்ப்படிறீ”  (5)  “வாருருவப்பூண்முலையீர் “ (6) என்று  அவர்  தம்  முன்னழகு  சுட்டப்பட்டன .  அவ்வாறாகவும்  ஈண்டு  “கொங்குண்  கருங்குழலி”  எனப்  பின்னழகைச்  சுட்டிக் கூறியது,  விளிக்கப்பட்டவள்  இறைவனுடைய  அருட்பெருக்கையும்   பேருபகாரத்தையும்  விளையாட்டுநிலையில்  புறக்கணிப்பது  போல்  திரும்பி  நின்றாளாக ,  அந்நிலையில்  அவள்  கூந்தலழகைப்  புகழ்வது  போலச்  சுட்டிக்கூறி  வற்புறுத்தியபடியாம் .

              திருமால் , நான்முகன் , இந்திரன்  முதலிய  தேவர்கள் பாலும்  மற்றெவ்விடத்துள்ளார்  பாலும்  அமையாத  ஒப்பற்ற  சிவானந்த மென்பார்      “செங்கணவன்   பால்  திசைமுகன் பால் ,  தேவர்கள் பால்   எங்குமிலாதது  ஓர்  இன்பம்  “  என்றார் .  திருமால்  முதலிய  தேவர்கள்  சிவபுண்ணியமிகுதியால்   அதிகாரநிலையங்களைப்  பெற்று  அம்முறையில்  ஒரோவமயம்  சிவபெருமான் பக்கல்  அணுகும்  பேறு  பெற்றவராயினும் ,  அதிகாரச்  செருக்கால்  உயிர்முனைப்புடன்  தத்தம்  செயல்களில்   தலைப்படும்  இயல்புடையராதலின்  இறைவனது  பேரானந்தப்  பெருஞ்செல்வத்தை  அநுபவிக்கும்  பெறலரும்பேறு பெற்றிலரென்ப .  இவ்வுண்மையை ,

“இந்திரனு  மாலயனும்  ஏனோரும்  வானோரும்  

அந்தரமே  நிற்கச்   சிவனவனி  வந்தருளி”     

என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலானும்  அறிக.  இங்ஙனம்  இறைவன்  தன்  அணிமையில் இருக்கும்  திருமால்  முதலியோரைக்  கடந்து  மெய்யன்பரை  ஆட்கொள்ளும்  நிமித்தம் நிலவுலகத்துக்கு  எழுந்தருளி வருதலால்  திருமாலும்  நான்முகனும்  விண்ணுலகைவிட்டு  நிலவுலகிற்  பிறக்கும்  பேறு  பெற்றிலமே  யென்று  ஏக்கமுற்று  இவ்வுலகிற் பிறக்கப்  பெரிதும்  விருப்புற்றனர்  என்று  அடிகள்  அருளியிருத்தலும்  ஈண்டுக்  கருதத்தக்கது. 

                    திருமால்  ஓரமயம்  தன்  கண்ணிடந்து   அருச்சித்தும்  அதன்  பயனாக  இறைவன்பாற்பெற்றது  சக்கரப்படையேயன்றிச்  சிவானந்தப்பேறன்று  என்பது  குறித்து  ஈண்டுச்  “செங்கணவன்”  என்றும் ,  பிரமன்    நான்குமுகங்களாலும்  மறைபாடி  வழுத்தியும்  பெற்றது  முப்புரம்  அழிப்புழி  இறையவர்க்குச்  சாரதியாம்  அத்துணையேயன்றி  வேறு  இன்றென்பது  தோன்றத்  “திசைமுகன் “  என்றும்,  இந்திரன்  முதலியோர்  ஒளியுருவம்  பெற்றும்  பேரொளிப்பிழம்பாகிய   இறைவனை  வேண்டிப்பெற்றது  நரை  திரை  போக்கவல்ல  அமுதவுண்டியானாய  சிற்றின்பமேயன்றிப்  பிறிதின்றென்பது  புலப்படத்   “தேவர்கள்  என்றும்  சுட்டப்பட்டனரென்க .  “எங்கும்”  என்றது  ஆகுபெயர்; விண்ணுலகத்தன்றிப்  பிறவிடங்களிலுள்ள  முனிவர்  முதலியோரிடத்தும்  என்றபடி.  “ஓர்  இன்பம்”  என்றது  ஈடும்  எடுப்புமில்லாத  நித்திய  இன்பத்தை.  சிறந்த  தவமுதலியன  செய்து  தகுதிவாய்ந்தவராலும்  பெறுதற்கரிய  இன்பம்.  அத்துணைத்தகுதி  ஒருசிறிதுமில்லாத  ஏழைப்பெண்மக்களாகிய  நம்மிடத்து  நிலவென்பார் “நம்பாலதாக“  என்றனரென்க.  கோதாட்டுதல்  –   குற்றங்களைதல்.  இறைவனது  பேரானந்தம்  நம்பால்  தங்குதற்குத்   தடையாகவுள்ள  வினைமாசு  போக்கியென்பது  கருத்து .  நல்லின்பமாகிய  அமுது  பெய்து  வைத்தற்குக்  கொள்கலம்  தூய்மைசெய்தபடியாம்.  இங்கு  –  இந்நிலவுலகத்தில்.  “நாம்  இல்லங்கள்தோறும்  எழுந்தருளி”  என்றதனால்  திருமால்  முதலிய  தேவர்களெல்லாம்  இறைவன்  எழுந்தருளியிருக்கும்  சிவலோகத்தே  சென்று  அவன்  திருக்கோயிற்கண்ணே  வழிபட  முயன்று  செவ்விபார்த்திருப்ப,  இறைவன்  அன்னார்காட்சிக்கு  அரியனாய்  இந்நிலவுலகத்தே  போந்து  மெய்யன்பர்  உறையும்  சிறிய  குடில்கள்  தோறும்  வலிய  எழுந்தருளி  அவர்க்கு  எளிமையிற்  காட்சியளிக்கும்  இயல்பினன்  என்னும் உண்மை  புலனாயவாறு  அறிக .

“முந்திய  முதனடு  விறுதியு  மானாய்

           மூவரு  மறிகில  ரியாவர்மற்  றறிவார் 

பந்தணை  விரலியும்  நீயும்நின்  னடியார்

             பழங்குடில்  தொறுமெழுந்  தருளிய  பரனே”      

என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  ஈண்டு  நோக்கத்தக்கது.

              ஒரு  பேரரசன்  தன்  தலைநகரைவிட்டுப்  பிறிதோரிடத்துக்கு  வரனேர்ந்தால்  வந்து  தங்கும் நேரம்  மிகச்சிறிதாயினும்   அவ்விடத்தில்  அலங்காரமாளிகையமைத்தல்  உலகயில்பு .  மேலும்  அவ்வரசன்  தன்  மனைவியோடு  வந்து  தங்குவதனால்  இன்னும்  சிறப்பாக  இடம்  அமைக்கவேண்டுமென்பது  கூறவேண்டா.  அங்ஙனமாகவும்  இங்கே  இறைவன்  எழுந்தருளிய     இடம்  குடில்  எனவும் ,  அதுவும்  பழமையானதெனவும்,  ஆண்டு  எழுந்தருளுங்கால்  உலகன்னையாகிய  தேவியாரொடு  எழுந்தருளினான்  எனவும்,  கூறிய  அருமை  நினைந்து  இன்புறத்தக்கது .  நம்  இல்லங்களுக்கு  எழுந்தருளிய  அளவிலன்றி  அப்பெருமான்  தன்பொன்  போன்ற  திருவடிகளையும்  தந்தருளினான்  என்று  கருணைமிகுதியைப்  பாராட்டினரென்பது.  கோதாட்டித்  திருவடியளித்தல் ,  வினைமாசொழித்துச்  சிவஞானம்  அருளிய  குறிப்பைப்  புலப்படுக்கும்  .  சேவகன்  –  வீரன்  ;  ஈண்டுக்  கொடைவென்றியான்  மேம்பட்டவன்  என்பது .  திருமால்  முதலியோர்க்கும்  கிடைக்காத  இன்பம்  ஏழைகளாகிய  மக்களிடமாக  அவர்தம்  இல்லங்களுக்கு  வலிய  வந்து  சிவஞானம்  வழங்கிய  பெருங்கொடையாளன்  என்பது  கருத்து.  நம்பாலதாகக்   கோதாட்டி  எழுந்தருளித்  தந்தருளும்  சேவகன்  என  முடிக்க.  இதனால்  பேரின்ப  விளைவிற்குக்  காரணமாகச்  சிவஞானம்  அருளினன்  என்பது  புலனாம் , கண்ணுக்கு  அழகு  கண்ணோட்டமாதலின்   அம்கண்  –  அருணோக்கம்  என்று  கூறப்பட்டது .  கொடைவீரனாகிய  அரசனாதலின்  அவன்பால்  அருட்குணம்  உண்டாயிற்றென்பதும்,  அக்குணம்  உண்மையானே  அரிய  அமுதமாகநின்று  பயன்விளைத்தனன்  என்பதும் ,  அப்பயனை  நமக்குச்  சிறப்பு  முறையில்  வழங்கியமையால்  நம்  உண்மைத்தலைவனாயினன்  என்பதும்  உணர்ந்து   ”அங்க  ணரசை  அடியோங்கட்  காரமுதை  நங்கள்  பெருமானை”  என்றனரென்க. அத்தகைய  பெருமானைப்  புகழ்ந்து  பாடுதலானே  நம்மனோர்க்கு  எல்லாநலங்களும்   வெளிப்படையில்  உண்டாம்  என்பார், “பாடி  நலந்திகழ” என்றார் .  நலம்  விளங்கும்  வண்ணம்  தாமரை  மலர்களாற்  பொலிவு  பெற்ற  நீர்  நிலையில்  மகிழ்ச்சி  மீக்கூர்ந்து  குதித்து நீராடுவோமாக  என்றனர்  என்பது.

                இதன்கண்  “ செங்கமலப்  பொற்பாதந்  தந்தருளுஞ்  சேவகன்” என்றதனால்  திருவடியாற்  பெறப்படும்  சத்தியை  வியந்தது   புலனாயவாறறிக . 

     முதல்  திருப்பாட்டின் இறுதியில்  விளக்கம்  காண்க .

                                             *********************************

பாடல்  18.

அண்ணா  மலையா  னடிக்கமலஞ்  சென்றிறைஞ்சும்

         விண்ணோர்  முடியின்  மணித்தொகைவீ  றற்றாற்போற் 

கண்ணா  ரிரவி  கதிர்வந்து  கார்கரப்பத் 

          தண்ணார்  ஒளிமழுங்கித்  தாரகைகள்  தாமகலப் 

பெண்ணாகி  யாணா  யலியாய்ப்  பிறங்கொளிசேர்

           விண்ணாகி  மண்ணாகி  யித்தனையும்  வேறாகிக் 

கண்ணா  ரமுதமுமாய்  நின்றான்  கழல்பாடிப் 

            பெண்ணேயிப்  பூம்புனல்பாய்ந்  தாடேலோ ரெம்பாவாய்.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  திருவருளால்  விளையும்  இன்பத்தின்  அருமையைப்  பாராட்டியருளிய  அடிகள்,  இத்  திருப்பாட்டில்  அவ்வின்பப்  பேற்றிற்குரிய  உயிரின்  பக்குவநிலைக்கு  ஏற்றவாறு வெளிப்பட்டு  நின்று   இறைவன்  அருளும்  முறையைப்  புலப்படுத்தருளுகின்றார்.

பதவுரை :-  அண்ணாமலையான்  அடிக்கமலம்  சென்று  இறைஞ்சும்  = 

திருவண்ணாமலையில்  எழுந்தருளி யிருக்கும்   இறைவனுடைய  திருவடித் தாமரை  மலர்களைச்  சார்ந்து  வணங்கும் ,

விண்ணோர்  முடியின்  மணித்தொகை  வீறு  அற்றாற்போல் = 

தேவர்கள்  முடியணிக்கண்  உள்ள  பலவகை  மணித்தொகைகளும்  பொலிவிழந்து  ஒளிமழுங்கியொழிந்தமை  போல, 

கார்  கரப்ப கண்  ஆர்  இரவி கதிர் வந்து =

இருள்  நீங்க  எங்கணும்  பரவிய  கதிரவன்  ஒளி  வெளிப்பட்டமையால், 

தாரகைகள்  தண் ஆர் ஒளி மழுங்கி  அகல  =

விண்மீன்கள்  தம்  மெல்லிய  ஒளி  பொலிவிழந்து  மழுங்கி  மறைய, (இந்நிலையில்)

பெண் ஆகி  ஆண் ஆய்  அலி  ஆய் பிறங்கு  ஒளிசேர்  விண்  ஆகி  மண்  ஆகி  =

பெண்ணாகியும்  ஆணாகியும்  அலியாகியும்  ஒளிவிளங்கும்  ஆகாயமாகியும்   நிலமாகியும்,

இத்தனையும்  வேறு  ஆகி  = 

இத்துணைப்  பொருள்களினின்றும்  வேறுபொருளாகியும்  ,

கண் ஆர் அமுதமும்  ஆய்  = 

ஞானானுபவத்திற்கு  அமுதமயமாகியும்  ,

நின்றான்  கழல்பாடி  = 

நிலைபெற்று  நிற்கும்  சிவபெருமானுடைய  திருவடிகளைப்  புகழ்ந்து  பாடி ,

பெண்ணே =  பெண்ணே

இப்பூம்புனல்  பாய்ந்து  ஆடு  = 

பொலிவு  பெற்ற  இந்நீர்நிலையிற்  குதித்து  ஆடுவோமாக  என்பது .

 விளக்கவுரை :-  இது  நீராடுங்கால்  ஒருத்தியை நோக்கிக்  கூறுமுகமாகக்  கதிரவன்  தோன்றிய  குறிப்பைப்  புலப்படுத்துக்  கூறுகின்றது.  திருவண்ணாமலை  ஒருகாலத்து  ஒளிவடிவினதாக  ஓங்கி  நின்றதென்ப  இதனை, 

“கடல் வண்ணனும்  வேதக்,

கிளர்தாமரை  மலர்மேலுறை  கேடில்புக  ழோனும்

அளவா  வணம்  அழலாகிய  அண்ணாமலை”

என்பர்  திருஞானசம்பந்தர்.  இங்ஙனம்  பேரொளிப்பிழம்பாகவுள்ள  மலை யுருவில்  விளங்கிய  இறைவனுடைய  திருவடிகளைச்  சார்ந்து வணங்கும்  தேவர்களின்  தலையிலணிந்த  முடிகளில்  பாதிக்கப்பட்டுள்ள  பலவகை  இரத்தினங்களெல்லாம்   அத்திருவடிப்  பேரொளிமுன்,  தமக்குப்  பொலிவுதரும்  சிற்றொளிகளை  யிழந்தொழிந்தது  போலவென்பது  உவமை.  அழலுருவாய  அண்ணலின்  திருவடிகளை  “சோதியுஞ்  செஞ்சுடர்  ஞாயிறு  மொப்பன”  என்று  கூறும்  தமிழ்மறை .  அணுகிவணங்குதல் முடிமணிகளின்  ஒளி  அறவே  மழுங்கியொழிதற்கு  ஏதுவாம்  என்பார்,  “சென்றிறைஞ்சும்”  என்றார் .  வீறு  –  பொலிவு .  “சாறயர் களத்து  வீறுபெறத்  தோன்றி”  என்புழி  அப்பொருட்டாதல்  அறிக.  கன்னியர்  நீராடுங்காலம்  இருள்புலர்  காலையாதலின்,  “கார்கரப்ப” என்றார்.  கார்  ஆகுபெயர் .  கரப்ப  என்னும்  எச்சம்  காரியப்பொருட்டு.  விண்  மண்  முதலிய  எங்கனும்  பரவிய  கதிரவன்  ஒளியென்பார்.  “கண்ணார்  இரவிகதிர்”  என்றார் .  இரவிகதிர்  என்றது  குழவிகை  என்பது  போல  மிகாதாயிற்று .  வந்து  என்னும்  எச்சம் காரணப்  பொருள்  குறித்து  நின்றது .  கதிரவன்  ஒளி  சிறிது  வெளிப்பட்ட  துணையானே  விண்மீன்கள்   ஒளிமழுங்கி  யொழிதல்  கண்கூடு  தண்மை  ஈண்டு  மென்மைப்  பொருட்டு.  “முயக்கிடைத்  தண்வளி போழ”  என்புழித்  “தண்மை  ஈண்டு  மென்மை  மேனின்றது “என்பர்  பரிமேலழகர்.  தாம்  –  அசை ,  வல்லொளியாகிய  கதிரொளிமுன்  மெல்லொளியாகிய  விண்மீன்  ஒளிமழுங்குதல்  இயல்பே.  வீற்றுதலாகிய  உவமவினையைப்  பொருளினும் , மழுங்கி,  அகல  என்னும்  பொருள்  வினைகளை  உவமையினும்  இயைத்துக்கொள்க . 

                இந்நிகழ்ச்சி  கன்னியர்  நீராடத்தொடங்கி  நெடுநேரமாயிற் றென்பதையும் , ஞாயிறு  கதிர்பரப்பியெழும்  இருள்புலர்காலம்  தொடங்கிற்று  என்பதையும் ,  விரைவில்  நீராடுதலை  முடித்துக்கொள்ள வேண்டு மென்பதையும் ,  குறிப்பிற்  புலப்படுத்தவாறறிக.  ஈண்டுக்  கன்னிப்பெண்கள்,  நெடுநேரம்  இறைவன்  திருப்புகழைப்  பாடி  நீராடினராக,  அந்நிலையில்  கதிரவன்  ஒளி  தோன்றியதும் ,  இருள்  நீங்கப்பெற்று ,  விண்மீன்கள்  ஒளிமழுங்கி  அக்கதிரொளியில்  இயைந்து  மறைந்தன வென்னும்  இவ்வருணனையால் ,  இறையருட்  பேற்றிற்குரிய  கடவுட்பத்தியைப்   பலகாலம்  மேற்கொண்ட  உயிர்களுக்குச்  சிவஞானம்  தோன்றியதும் ,  அவ்வுயிர்கள்  பாசம்  நீங்கப்பெற்று,  உயிரறிவு  மடங்கி  இறையருள்  நிறைவில்  இரண்டறக் கலந்து  இன்புறுவனவாம்  என்னும்  சைவசித்தாந்த  உண்மை  குறிப்பிற்  புலனாதலும்  உணர்க. 

                  இனி  இறைவன் உலகெலாமாகி  வேறாயுடனுமாய்  நின்று  உயிர்களுக்கு  அருளுமுறையைப்  புலப்படுத்துகின்றார்.  உலகம்  இயங்கியற்  பொருட்பகுதி,  நிலையியற்  பொருட்பகுதியென்னும்  இருதிறத்ததாம்.  இங்குப்  “பெண்ணாகி யாணாயலியாய்” என்பது  இயங்கியற்  பொருட்கூற்றுக்கும், “விண்ணாகி மண்ணாகி” என்பது நிலையியற் பொருட்கூற்றுக்கும்  எடுத்துக்காட்டாகும்.  ஏனையவற்றை  உபலக்கணத்தாற்  கொண்டு  இவ்விருதிறத்துள்  அடக்கிக்  கொள்ளல்  வேண்டும்.  இயங்கியற்பொருள்  ஆண்  பெண்  அலி  என்னும்  முக்கூற்றுள் அடங்கும்.  உயர்திணை  அஃறிணை  இரண்டற்கும்  ஈதொக்கும்.  ஆண்  பெண்  என்பதே  முறையாயினும்  ஈண்டுப்  புகழ்ந்து  பாடுவார்  கன்னியராதலின்,  அவர்  நிலைக்குத்  தாய்மையன்பே  முற்படுமென்பது  குறித்து , “பெண்ணாகியாணாய்” என்று  கூறப்பட்டது .  “அன்னையும்  அத்தனு மாவாய் “  என்பது  தமிழ்மறை .  இறைவன்  சத்தியாய்ச்  சிவமாய்  வெளிப்பட்டருளியது  பற்றிப்  “பெண்ணாகியாணாய்”  எனவும்,  பிரமப்பொருளாகப்  பாவிக்கப்படுதலின்  “அலியாய்“  எனவும்,  கூறுவராயினர். அலி,  ஆணாகவும்  பெண்ணாகவும்  இல்லாமல்  ஆண்மையும்  பெண்மையும்  திரிந்தவுருவாகும்.  அது  பொருள்வகையால்  உயர்திணையாயினும்  சொல்வகையால்   அஃறிணைப்பாற்படும் .  வடமொழியில்  பிரமம்    என்னும் சொல்லும்  அவ்வாறே  நபுஞ்சகலிங்கமாதல்   ஈண்டுக் கருதத்தக்கது .

              இனி  நிலையியற்  பொருளுக்கு  எடுத்துக்காட்டாக  “விண்ணாகி  மண்ணாகி”  என்றார் .  பூதங்களுள்  ஒருகுணமுடைய  விண்ணையும்  ஐந்து  குணங்களுடைய  மண்ணையும்  கூறவே , இடைப்பட்ட  ஏனைய  பூதங்களும்    அவற்றின்  கலவையாகிய  மரஞ்செடி  முதலியனவும் கொள்ளப்படும்.  ஞாயிறு  திங்கள்  விண்மீன்  முதலிய  ஒளிமண்டிலங்களுக்கெல்லாம்  இடனாதல்  பற்றி,   “பிறங்கொளிசேர்விண்”  என்னப்பட்டது  மணி  பொன்  கல் மண்  மர  முதலிய  பொருள்களைக்கொண்டு  இறைவன்  திருவுருவமைத்து  வழிபடுவார்க்கு ,  அத்திருவுருவங்களின்   முகமாகவும்  இறைவன்  வெளிப்பட்டு    அருளுதலின்,  அவற்றிற்கு  மூலமாகிய  பூதங்களாகவும்  கூறினார்.

                 இங்ஙனங்  கூறியது  உடலின்  உயிர்போலக்  கலப்பினால்  உலகெலாமாகியென்பது  புலனாதற்கு  எனவும்,  இத்தனையும்  வேறாகி  என்றது,  கண்ணின்  அருக்கன்  போலப்  பொருட்டன்மையால்  வேறாதல்  புலப்படுதற்கு  எனவும்,  கண்ணாரமுதமுமாய்  என்றது  உயிற்கு  உயிராதற்றன்மையால்,  கண்ணொளியின்  ஆன்மபோதம்  போல  உடனாதல்  புலப்படுதற்கெனவும்  கொள்ளல்  வேண்டும்.  இஃது  இறைவனுக்குத்  தடத்தலக்கணமெனப்படும்  பொதுவியல்பாகும் .  கண்  –  அறிவு .  ஆர்தல்  –  அநுபவித்தல்,  அமுதம்  –  நுகர்பொருள்.  உயிர்கள்  வினைப்பயன்களை  அநுபவிக்குங்கால்  அவற்றிற்கு  முன்னிலையாகிய  நுகர்பொருள்களில்  அவ்வுயிர்களோடு இறைவன்  பிரிப்பின்றிச்  சேறலே   உடனாதலாகும்.    இப்பொருளைக் குறிப்பிற்  புலப்படுத்தற்கே  “கண்ணாரமுதமுமாய்  நின்றான்”  என்றார் .  இங்ஙனம்  உலகெலாமாகி  வேறா யுடனுமாய்  நின்று  உயிர்களுக்கு  உபகரித்து  வரும்  சிவபெருமான் திருவடிகளைப்  புகழ்ந்துபாடி  யென்பார் , “நின்றான் கழல்பாடி” யென்றார்.  இஃது  ஒருத்தியை  விளித்துக்  கூறப்பட்டதாயினும்  கதிரவன்  தோன்றுதற்கு  முன்  நீராடுதலை  முடித்துக்கொள்ளவேண்டிய  நாம்  கதிரொளி  வெளிப்படத்  தொடங்கி விட்டபடியால்   இனிக்  காலந்தாழ்த்தல்  ஆகாது : விரைந்து  நீராடுதலைச்  செய்து  கொள்வோமாக  என்று  வற்புறுத்தலின்,  எல்லோரையுஞ்  சுட்டிக்  கூறியதாகக்  கொள்ளல்  வேண்டும். 

         இதன்கண்  “நின்றான் கழல்பாடி”  என்றமையால்  “சத்தியை  வியந்தது”  புலப்படுக்கப்பட்டபடியாம்.  இறைவன்  திருவடி  சத்தியைக்  குறித்து  என்பதை  முதல்  திருப்பாட்டின்  உரையிறுதியிற்  காண்க . 

                                              *****************************************

பாடல்  19. 

உங்கையிற்  பிள்ளை  யுனக்கே  அடைக்கலமென

           றங்கப்  பழஞ்சொற்  புதுக்குமெம்  அச்சத்தால்

எங்கள்பெருமான்  உனக்கொன்  றுரைப்போங்கேள்

           எங்கொங்கை  நின்னன்ப  ரல்லார்தோள்  சேரற்க

எங்கை  யுனக்கல்லா  தெப்பணியுஞ்  செய்யற்க

            கங்குல்  பகலெங்கண்  மற்றொன்றுங்  காணற்க

இங்கிப்  பரிசே  யெமக்கெங்கோன்  நல்குதியேல் 

           எங்கெழிலென்   ஞாயி  றெமக்கேலோ  ரெம்பாவாய்

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  உயிரின்  பக்குவநிலைக்கு  ஏற்றவாறு  வெளிப்பட்டருளும்  முறையைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  அவ்வாறு  வெளிப்பட்டு  இன்புறுத்தும்  இறைவனுக்கு  உயிர்கள்  தாம்  செய்யக்கடவ  அன்புப்பணிகள்  நிறைவேறுதற்பொருட்டும்  அவ்விறைவன்  துணை  இன்றியமையாதது என்பதை  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  எங்கள்  பெருமான்  =  எங்கள்பெருமானே,

உம்கையில்  பிள்ளை  உனக்கே  அடைக்கலம் என்று  =  உன்  கையிற்  சேர்ப்பிக்கப்பெறும்  இப்பெண்  உனக்கே  அடைக்கலப்பொருளாவாள்  என்று

அங்கு  அப்பழஞ்சொல்  =  திருமணக்காலத்தில்  பண்டைக்காலமுதல்   வழங்கி  வரும்  சொல்லை, 

புதுக்கும்  எம்  அச்சத்தால் =  புதுப்பிக்குமுகமாக  எழுந்த  எம்  அச்சங்காரணமாக  ;

உனக்கு  ஒன்று  உரைப்போம் கேள்  =  உனக்கு  ஒரு  விண்ணப்பம்  செய்வோம்  கேட்டருள்வாயாக,

எம்  கொங்கை  நின்  அன்பரல்லார்  தோள்  சேரற்க  = 

எங்களுடைய  கொங்கைகள்  நின்  அன்பரல்லாதார்  தோள்களைத்  தழுவாதொழிக,

எம்  கை  உனக்கல்லாது  எப்பணியும்  செய்யற்க  =  எம்  கைகள்  நினக்கன்றி  வேறு  யார்க்கும்  எத்தகைய  தொண்டும்  செய்யாதொழிக,

எம்  கண்  கங்குல் பகல்  மற்று  ஒன்றும்  காணற்க  =

எம்முடைய  கண்கள்  இரவும்  பகலும்  நின்னையன்றிப்  பிறிது  ஒரு  பொருளையும்  காணாதொழிக  ,

இங்கு  இப்பரிசே  எமக்கு  எம் கோன்  நல்குதியேல்  =  இவ்வுலகத்தில்  இவ்வாறே  எங்களுக்கு  எங்கள்  தலைவனாகிய  நீ  அருள்செய்வாயாயின்  ,

ஞாயிறு  எங்கு  எழில்  எமக்கு  என் = 

கதிரவன்  கீழ்த்திசையிலன்றி  வேறு  எத்திசையில்  தோன்றினாலும்    எமக்கு  வரக்கடவதென்னை ?.(யாதும்  இன்று) என்பது . 

விளக்கவுரை :-   உன்  கை  எதுகை  நோக்கி  உங்கை  யென்றாயிற்று .  இப்பழமொழி  திருமணக்காலத்தில்  மணமகளை   மணமகன்பால்  ஒப்பிடுதற்பொருட்டுப்    பெற்றோர்  கூறுங்கூற்றாகப்  பண்டு  வழங்கியது  என்ப. மணமகன்  கைப்பிடித்த  ஞான்றே  அவனுக்கு  அப்பெண்  உரியவளாகவும்,  அவளைப்  பெற்றோர்  தம்  ஆர்வத்தால்  சிறப்புமுறையிலும்  பாதுகாக்கும்  கடமை  நின்பாலதே என  வற்புறுத்துக்  கூறுமுகமாக  எழுந்ததாகும்  இப்பழமொழி.  என்னை  சிறப்பு  எனின் ,  ஒருவன்  தனக்கு  உரிமைப்பொருள் ,  தன்பால்  வைக்கப்பட்ட  அடைக்கலப்பொருள்  என்னும்  இரண்டனுள்,  உரிமைப்பொருளினும்  பாதுகாக்கத்தக்க  பெருமை  அடைக்கலப்பொருட்கு  உண்மையே.  இவ்வாறு  கருதுதல்  உயர்ந்தோர்  கொள்கை.  கவுந்தியென்னும்  தவச்செல்வியால்   அடைக்கலமாக  ஒப்புவிக்கப்பட்ட  கண்ணகி  யென்னுங்  கற்பரசியை  இழந்த  மாதரியென்பாள்    அது  பொறாது   தன்னுயிர்  நீத்தனள்  என்ப.  “அடைக்கலமிழந்து  உயிரிழந்த  இடைக்குலமகள்” (காதை – 29)  என்பது  சிலப்பதிகாரம்  .

                 அங்கு  என்றது  கற்பொழுக்கமாகிய  திருமண  நிகழ்ச்சியைக்  குறிக்கும் .  வதுவைச்சடங்கு  நிகழ்த்தி ,  கொள்ளுதற்குரிய  முறைமையினை யுடைய மணமகன்,  கொடுத்தற்குரிய  முறைமையினையுடைய  இருமுதுகுரவர்  முதலாயினோர்  கொடுப்ப  மணமகளை   ஏற்றுக்கொள்ளுவதே  உலகியலிற்  பண்டு  தொட்டு  வழங்கிவரும்  திருமணமாகும்.  இதனை, 

“கற்பெனப்  படுவது  கரணமொடு  புணரக்

கொளற்குரி  மரபிற்  கிழவன்  கிழத்தியைக் 

கொடைக்குரி  மரபினோர்  கொடுப்பக்கொள்  வதுவே” 

என்னும்  தொல்காப்பிய  விதியாலும்,  “இவளை   இன்னவாறு  பாதுகாப்பாயெனவும்,  இவற்கு  இன்னவாறே  நீ  குற்றேவல்  செய்தொழுகெனவும்….கற்பிக்கப்படுதலில்……கற்பென்றார்”  என  அதற்கு  நச்சினார்க்கினியர்  எழுதிய  விளக்கவுரையாலும்  உணரலாம்.  பருவமடைந்த  மகளிரை  உரியகாலத்தே  மணஞ்செய்து  கொடுத்தல்  தங்கள்  கடமையெனப்  பெற்றோர்கள்  கருதுவது  இயல்பு,  அம்முறையில்  எம்மைப்  பெற்றோரும்  எம்மை  மணஞ்செய்து  கொடுக்குங்கால்  அப்பழஞ்சொல்  அவர்களாற்  கூறப்படுமே  யென்பார், “புதுக்கும்”  எனவும்,  அந்நிலையில்  எங்களுக்குக்  கணவராக  வர  இருக்கின்றவர்கள்  குடிப்பிறப்பு  உருவம்  பருவம்  அறிவு  திரு  ஆண்மை  அன்பு  முதலியவற்றால்  ஒத்து  உலகத்தார்  மதிக்கும்  தகுதிகள்  பலவுடையராயினும்   எங்கள்  பெருமானாகிய  நினக்கு  அன்பராம்  சிறப்புடைத்  தகுதியில்லாதவராயின்  எங்கள்  வாழ்க்கை  பயனுடையதாகாதே யென்ற  அச்சமே  எங்கள்  உள்ளத்திற்  குடிகொண்டுள்ள தென்பார் “எம்  அச்சத்தால்  “  எனவும்,   இவ்வச்சங்காரணமாக  நின்திருமுன்   யாங்கள்  கூறும்  ஒருசெய்திக்குத்  திருச்செவிசாய்த்  தருளல்வேண்டுமென்பார்  “அச்சத்தால் உனக்கொன்றுரைப்  போங்  கேள்”  எனவும்  கூறினர்  என்க.

                  இவர்கள்  கூறிய  செய்திகள்  பலவாகும்.  அவ்வாறாகவும்  “ஒன்று  உரைப்போம் “  என்றது,  இறைவன்  எளிதிற்  செவியேற்றற்கென்க.  மிகவும் தகுதிவாய்ந்த பெரியோனிடத்து எளியவன் ஒருவன் தன்குறை பற்றிப் பல சொல்ல முற்படுங்கால், காலச் செலவும், தன்  அரிய  செயற்கு  இடையறவும்  கருதிப்  பல  சொற்கேட்டலில்  அப்பெரியோன்  புறக்கணிக்கக்  கூடுமென்று  அஞ்சிக்  கூறுபவன்,  “ஒரு  வார்த்தை  தெரிவித்துக்கொள்வேன்; இடந்தரல்வேண்டும்”  என்று  நயம்படவுரைத்துப்  பின்  விரைவிற்  பலவற்றையுங்  கூறுதலை  உலகியலிற்  காண்கின்றோம்.  அம்முறையே  மேற்கொண்டே  “ஒன்றுரைப்போம்”  என்றனர்  என்பது.  விண்ணப்பம்  செய்துகொள்ளுங்  கன்னியர்  பலராதலின்  “எம்கொங்கை”  என்றும்,  ஒவ்வொருத்திக்கும்  தனித்தனியே  நல்ல  கணவன்  வேண்டுதலின்  “நின்  அன்பர்”  எனவும்  பன்மையாகக்  கூறினர்  என்க.   இப்பாவை  நோன்பின்  பயனாக  விரும்பும்  கணவர்  சிவனிடத்து  அன்புடையராக  இருப்பின் ,  அவரோடுகூடி  இல்லறம்  நடாத்துங்கால்  இருதிறத்தாரும்  சிவத்தொண்டில்  ஈடுபட்டு  இன்புறலாமென்னுங்  குறிக்கோளுடையராய்   “நின்னன்பரல்லார்  தோள்  சேரற்க”  என  வேண்டுவாராயினர் .  குறிக்கோள்  அதுவென்பது  அடுத்துத்  தம்  கைகளும்  கண்களும்  செயற்பாலவற்றைக்  குறிப்பிடுமுகமாகவும்   உணரத்தக்கது.  “அவர்  தோள்  சேர்க”  எனற்பாலதனை  “அல்லார்தோள்  சேரற்க”  என  எதிர்மறைமுகத்தாற்  கூறியது  அன்பரின்  இன்றியமையாமையை  வலியுறுத்தற்கு  பின்வருவனவற்றிற்கும்  ஈதொக்கும்.  “உள்ளேன்  பிறதெய்வம்  உன்னையல்லாது”  என்று  அடிகள்   பிறிதோரிடத்துக்   கூறிய  திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

               எம் கைகள்  உனக்கல்லாமல்  வேறு  யார்க்கும்  எப்பணியும்  செய்யாதொழிக  என்பதனோடு மேல்  ஒன்பதாம்  திருப்பாட்டில்  “நின்னடியார்  சொன்ன  பரிசே  தொழுப்பாய்ப்  பணிசெய்வோம்”  என்பது  முரணாகாதோவெனின் , ஆகாது;  என்னை?  அப்பெண்கள்  சிவனடியாரைச்  சிவனெனக்  காணும்  கருத்தினராதலின் என்க . மேலும் , கற்பெனப்படுவது  சொற்றிறம் பாமையாகலானும்,  சிவனடியார்  கணவராயின்  அவர்  கட்டளையிடுவது  சிவத்தொண்டாகவே  முடியுமாகலானும்  “அவர்  சொன்ன பரிசே  தொழும்பாய்ப்  பணிசெய்வோம்”  என்று  ஆண்டுக் கூறியது  மிகப்  பொருத்தமுடையதே.    ஒன்பதாந்திருப்பாட்டிற்   கூறியதையே  ஈண்டும்  கூறியது  மிகையாகாதோ எனின்,  ஆகாது. என்னை?  அஃது  இம்மை  மறுமைகளைக் குறிக்கொண்டு  கூறியது.  இஃது  இம்மை  மறுமை  வீடு  என்னும்  மும்மைநலங்களையும்  குறிக்கொண்டு  கூறியது  ஆதலின்  என்க.   

                     இரவும்  பகலும்  நின்  திருவுருவத்தையே  எம்  கண்கள்  காண வேண்டும்  என்றதனால்  கனவிலும்  நனவிலும்  நின்  திருவுருவக்  காட்சியே  முன்னிற்க  வேண்டுமென  வேண்டினாரென்பது  இறைவன்  திருவடியைக்  கனவிற்  காண்டலும்  சிறந்த  பேறாகுமென்பதைத்  திருவாசகத்தில்  தோய்ந்தவுள்ளமுடைய  இராமலிங்க  அடிகள், 

பண்ணேறு  மொழியடியார்  பரவி  வாழ்த்தும் 

           பாதமலர்  அழகினையிப்  பாவி  பார்க்கிற்

கண்ணேறு  படுமென்றோ  கனவி  லேனுங்

            காட்டென்றாற்  காட்டுகிலாய்  கருணை  யீதோ

என்று  அது  பெறாமைமுகமாகப்  பரிந்து  கூறிய  அன்புரையால்  அறியலாம். ஈண்டுக்கண்ணைக்  குறிப்பிட்டது   ஏனைப்  பொறிநுகர்  புலன்களும்  சிவாகாரமாகவே  நிகழவேண்டுமென்பது  குறித்து  “ஐந்து  பேரறிவுங்  கண்களே  கொள்ள”  என்னும்  அருண்மொழித்தேவர்  அருளிய  கருத்து  இங்கே  நினைக்கத்தக்கது .  “எம் கொங்கை  நின்னன்பரல்லார்  தோள்  சேரற்க”  என்றதனால்  இம்மைப் பயனும் ,  “எம் கை  உனக்கல்லாதெப்பணியும்    செய்யற்க”  என்றதனால்  மறுமைப்பயனும் ,  “கங்குல் பகல்  எம்கண்  மற்றொன்றுங் காணற்க”  என்றதனால்  வீட்டின்பமும்  வேண்டினாரென்பது  குறிப்பிற்  புலப்படுமாறு  அறிக .

                    ஆண்டவனே!  இவ்வுலகத்தில்  இங்ஙனம்  நின்பால்  அன்புடையடியவரைக்  கணவராகப்பெற்று  இல்லறத்தியைந்து  நினக்குத்  தொண்டு  செய்து  நின்தரிசனப்  பேறெய்தி வாழும்  வண்ணம்  அருள்புரிவையாயின்  இப்பொழுது  கீழ்த்திசையில்  தோன்றிய  கதிரவன்  வேறு  எத்திசையில்  தோன்றினும்  எமக்கு  வரக்கடவ  தீங்கு  யாதுமின்று  என்பார்,  “இங்கிப்  பரிசே  யெமக்கெங்கோன்  நல்குதியேல் ,  எங்கெழிலென்  ஞாயிறு  எமக்கு “  என்றனர் .

                       “என் கடன்  பணிசெய்து  கிடப்பதே,  தன்கடன்   அடியேனையுந்தாங்குதல்”  என்றபடி  தொண்டு  செய்தல்  முதலிய  செயல்களெல்லாம்  உயிர்களின்  கடமையாகவும் பயனளித்தல்  இறவன்  கடமையாகவும்   கூறியிருப்ப ,  ஈண்டு  அச்செயல்களுக்கும்  இறைவனைத்  துணைவேண்டுதல்  பொருந்துமோவெனின்.  வினைக்கு  ஈடாகப்  பயனளிக்கும்  இறைவன்  பக்குவமுள்ள  உயிர்களுக்கு  நல்வினை  செய்யவும்   கருணை  புரிந்து  பின் பயனும்  அளிப்பன்  என்பது  சைவசித்தாந்த  உண்மையாதலின்  பொருந்துமென்க.  இவ்வுண்மையை ”ஆங்கவனருளாற்  பத்திநன் குண்டாம்  பத்தியால்  அவனருள்  உண்டாம்“  என்னும்  வாயுசங்கிதையானும் , 

“என்னை  நினைந்தடிமை  கொண்டென்  இடர்கெடுத்துத்

தன்னை  நினையத்  தருகின்றான் “

என்னும்  நம்பியாண்டார்  நம்பிகள்  திருவாக்கானும்  உணர்க; இதற்கு  முன்னுள்ள  திருப்பாட்டில்  கதிரவன்  தோன்றிவிட்டான்,  விரைவில்  நீராடுதலை  முடிக்கவேண்டுமென்னுங்  குறிப்புத்  தோன்றக்  கூறிய  பெண்கள்,  பின்னர்  இறைவன்  நமக்கு  இவ்வாறு  அருளுவானாயின்  கீழ்பால்  தோன்றிய  இக்கதிரவன்  யாண்டுத்  தோன்றினாலும்  நமக்காவதென்  என்றனர் என்பது .

           இனி  இத்திருப்பாட்டிற்போந்த  “உன்கையிற் பிள்ளை  உனக்கேயடைக்கலம்  “  என்னும்  பழமொழி  ஒருதாய்  தன்  குழந்தையைக்  கையிலேந்தியிருக்குங்கால்   பிறரொருவர்  கூற்றாக  எழுந்ததென்பாரும், பெற்றோர்  தம்  குழந்தையைப்  பாதுகாக்கும்  நிமித்தம்  மற்றோர்பால்  கையடைப்படுத்துநிலையிற்  கூறியதாக  எழுந்ததென்பாரும்    உளர் . 

              இதன்கண்,  இறையன்பில்  ஈடுபட்ட  கன்னியர்  தமக்குக்  கணவராந்தன்மையுடையார்    இன்ன  தகுதியினராதல்  வேண்டுமெனத்  தம்  தாயாரிடம்  முறையிட்டுக்கொள்ளுதல்  போன்று,  தாயினுமினிய  பெருமானைத்  தாய்மை  நிலையில்  வைத்து  “எம் கொங்கை  நின்னன்ப ரல்லாதார்  தோள்  சேரற்க”  என்பது  முதலாகவுள்ள  தம்  குறிக்கோளை  விண்ணப்பித்துக்  கொண்டமையின்  சத்தியை  வியந்தது  குறிப்பிற்  புலனாயவாறு  அறிக.

                                                *****************************************

பாடல் 20. 

போற்றி  யருளுகநின்  ஆதியாம்  பாதமலர்

                போற்றி  யருளுகநின்  அந்தமாஞ்  செந்தளிர்கள்

போற்றியெல்  லாவுயிர்க்கும்  தோற்றமாம்  பொற்பாதம்

                 போற்றியெல்  லாவுயிர்க்கும்   போகமாம்  பூங்கழல்கள்

போற்றியெல்  லாவுயிர்க்கும்  ஈறாம்  இணையடிகள்

                 போற்றிமால்  நான்முகனுங்  காணாத  புண்டரிகம்

போற்றியா  முய்யவாட்  கொண்டருளும்  பொன்மலர்கள்

                  போற்றியா  மார்கழிநீ  ராடேலோ  ரெம்பாவாய்.

கருத்துரை :_-  முன்னைத்  திருப்பாட்டில்  பயன்  அளித்தற்கே  யன்றி,  அதற்கு  ஏதுவாக  உயிர்கள்  செய்யும்  அன்புப்பணிகள்  நிறைவேறுதற்கும்  இறையருள்  இன்றியமையாதது  என்னும்  உண்மையைப்  புலப்படுத்தருளிய  அடிகள்,  இத்திருப்பாட்டில்  உயிர்களைக்கொண்டு  தனக்குத்  தொண்டு  செய்வித்துப்  பயனளிக்குங்கடமையை  இறைவன்  மேற்கொண்டது . அவ் வுயிர்களுக்கு  உடலைப்  படைத்துக்  காத்து  அழித்து  மறைத்து  அருளும்  ஐந்தொழிற்  குறிப்பின்பாற்பட்டு  அவற்றிற்கு  இனமாமென்பதை  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  எம்கோன்  =  எங்கள்  தலைவனே,

போற்றி  ஆதியாம்  நின்  பாதமலர்  அருளுக  =  எம்மைப்  பாதுகாத்து  எப்பொருட்கும்  முதலாகிய  நின்  திருவடிமலர்களை  அருள்வாயாக,

போற்றி  அந்தம்  ஆம்  நின்  செம்மை  தளிர்கள்  அருளுக = 

எம்மைப்  பாதுகாத்து  எப்பொருட்கும்  முடிவாகிய  நின்  செவ்விய  திருவடிகளை  அருள்வாயாக ,

எல்லா  உயிர்க்கும்  தோற்றம்  ஆம்  பொன்பாதம்  போற்றி  =

எல்லா  உயிர்களுக்கும்  தோன்றுவதற்கு  ஏதுவாகிய  பொன்போன்ற  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க  ,

எல்லா  உயிர்க்கும்  போகம்  ஆம்  பூ  கழல்கள்  போற்றி  =

எல்லா  உயிர்களுக்கும்  நுகர்தற்குரிய  காப்பாகும்  அழகிய  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க

எல்லா  உயிர்க்கும்  ஈறு  ஆம்  இணையடிகள்  போற்றி  =

எல்லாவுயிர்களுக்கும்  ஒடுக்கத்திற்கு  ஏதுவாகிய  இரண்டு  திருவடிகளும்  எம்மைக்  காத்தருள்க  ,

மால்  நான்முகனும்  காணாத  புண்டரிகம்  போற்றி  =  திருமாலும்  நான்முகனும்  காண  இயலாத  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க. 

யாம்  உய்ய  ஆட்கொண்டருளும்  பொன்மலர்கள்  போற்றி  =  நாம்  எல்லாம்  உய்யும்  வண்ணம்  அடிமை  கொண்டு  இன்பம்  அருளும்  பொன்  போன்ற  திருவடிகள்  எம்மைக்  காத்தருள்க,

யாம்  ஆடும்  மார்கழி  நீர்  போற்றி  =  நாம்  ஆடுகின்ற  இம்மார்கழி  நீர்  எம்மைக்  காத்தருள்க  என்பது .

விளக்கவுரை :-    இத்  திருப்பாட்டு  நீராடல்   நிறைவேறியதும்  அதன் பயனாகப்  பெண்களெல்லோரும்  ஒருங்கே  சேர்ந்து  தம்மைப்  பாதுகாக்கும்படி  ஐந்தொழிற்கும்  தலைவனாகிய  சிவபெருமானையும்,  அவனைப்  புகழ்ந்து  பாடியாடுதற்கு  வாயிலாகிய  மார்கழிநீரையும்  வேண்டிக்கோடலாக  அருளிச்செய்யப்பட்டதாகும்.  இத்திருப்பாட்டில்  சிவபெருமானுக்கே  உரிய  அருட்செயல்கள்  ஐந்தும்  கூறிப்  புகழப்பட்டிருத்தலின்   அதற்கேற்ப  இதற்கு  முன்னுள்ள  திருப்பாட்டில்  உள்ள  “எங்கோன்”  என்பதையே  ஈண்டும்  விளியாகக்  கொள்ளலாயிற்று.  இதன்கண் “போற்றி”  என்னும்  சொற்கள்  எட்டு  வந்துள்ளன .  அவற்றுள்  முதலிரண்டும்  எச்சங்களாகவும்,  ஏனைய  ஆறும்  இகரவீற்று  வியங்கோளாகவும்  கொண்டு  பொருள்  கூறப்பட்டன.  எச்சங்களுக்கு   அருளுக  என்பன  முடிவாகும்.  எப்பொருட்கும்  இறைவனுடைய  திருவடியே  முதலும்  ஈறுமாகுமென்ப. “ஆதியும் அந்தமுமான  ஐயாறன்  அடித்தலமே”  என்பது  தமிழ்மறை.  திருவடிக்கு  முதன்மை கூறுங்கால்   மலரெனவும்,  ஈறு   கூறுங்கால்  செந்தளிர்கள் எனவும்  கூறியது, “ஒடுங்கியுளதாம்”  என்னும்  சைவவுண்மை  புலப்படற்கென்க  தளிரினின்றே  மலர்  தோன்றும்  உண்மை  கருதத் தக்கது.  இறைவன்  திருவடிகள்  “சிந்திப்பவர்க்குச்   சிறந்து  செந்தேன் ,  முந்திப்  பொழிவன  முத்திகொடுப்பன”  என்றபடி  உயிர்களுக்குப்  போகம்  வீடுகளை  யருளும்  இயல்பினவென்பது.  ஈண்டுச்  செந்தேன்  என்றது  போகத்தைக்  குறிக்கும்.  முந்திப்  பொழிவன  என்றதனால்  முத்தியளித்தல்  முடிவில்  என்பது  பெறப்படும்.  பாதுகாத்தல்  முறையே  இம்மை மறுமைகளில்  போக  நுகர்ச்சிக்கும்,  பின்  வீட்டின்பத்திற்கும்  ஏதுவாகிய  பொருள்,  அறம், ஞான ங்களுக்குத்  தடைகள்  நேராமைப்  பொருட்டாம் .  ஆதியாம்  நிலையிற்  போகமும்,  அந்தமாம் நிலையில்  வீடும்  வேண்டப்பட்டனவாம் .

                  முதலிற்  கூறிய  ஆதியந்தம்  நான்முகன்  முதலிய  தேவர்களைப்  படைத்துக்  காத்து  அழித்தலையும்,  பின்வரும்  அடிகளிற்  குறிப்பிடும்  முத்தொழில்கள்  அத்தேவரை  அதிட்டித்து  நின்று  மற்றை  உலகுயிர்களைப்  பற்றிச்  செய்தலையும்  புலப்படுப்பன .  இவ்வுண்மையை  “முந்திய  முதல்  நடுவிறுதியுமானாய்” என்று அடிகள்  பிறிதோறிடத்துக்  கூறியமையானும்  உணர்க .  இங்கே  “முந்திய”  என்னும்  அடையால் அம்  முதல்  நடு  இறுதி  பெரும்  படைப்பு  முதலியவற்றைக்  குறிக்குமென்பதும் ,  பிந்திய  படைப்பு  முதலியனவும்   உள்ளனவென்பதும்   பெறப்படுமாறறிக.  பிந்திய  படைப்பு  முதலியவற்றை   இடைப்பட்ட  முத்தொழில்கள்  என்ப .  அவற்றை  அயன்  முதலியோர்  இறைவன்  ஆணை  பெற்று  அவன்  முன்னிலையிற்  செய்வர்  என்பது.  இதனை  “மூவண்ணல்   தன் சந்நிதி  முத்தொழில்  செய்ய  வாளா,  மேவண்ணல்”  என்பதனாலும்  அறிக. 

                         இறைவன்  திருவடி  சத்தியைக்  குறிக்கும்  என்பது  முதல்  திருப்பாட்டு  உரையிறுதியில்  விளக்கப்பட்டுள்ளது.  தீயின்  சத்தியொன்றே  சுடுதல்  அடுதல்  முதலிய  தொழில்  வேறுபட்டால்  சுடுஞ்சத்தி  அடுஞ்சத்தியெனப்  பல  திறப்படுமாறு  போல,  சிவசத்தியொன்றே  காரிய  வேறுபாட்டால்  பரை  முதலியவாய்ப்  பல்வேறு   வகைப்படுமென்ப.  அவற்றுள்,  படைப்பு  முதலிய  தொழில்களைச்  செய்வன  செனனி  முதலிய  சத்திகளெனச்  சிவாகமங்கள்  கூறும்.  அவ்வுண்மை  குறித்தே  படைப்பு  முதலிய  அருட்செயல்கள்  ஐந்திற்கும்  வினை முதல்  தன்மை  இறைவன்  திருவடி  மேல்  ஏற்றி  ஈண்டுக்  கூறப்பட்டது.  எல்லாவுயிர்களும்  தோன்றுதற்கு   ஏதுவாகிய  திருவடிகள்  என்றது,  படைப்புத்  தொழிற்கு  வினை  முதலாதலைக்  குறிக்கும்.  போகம்  –  வினைப்பயன்களை  நுகர்தல் .  அஃது  ஈண்டுக்  காத்தற்றொழிலைக்  குறிக்கும்.  ஆதலின்  போகம்  ஆம்  என்றது,  காத்தற்கு  வினை  முதலாகிய  என்றபடி.   ஈறு  –  அழித்தல் ;  ஒடுக்கம்  ஆம்  என்பதற்கு  முன்னுரைத்தாங்கு    உரைக்க.  இத்துணையும்  ஆக்கல்  அளித்தல்  அழித்தலாகிய  முத்தொழில்களும்  கூறப்பட்டன.

                              இனி  மறைத்தல்  அருளல்  கூறப்படும்.  அவ்விரண்டனுள்,  மறைத்தலாவது   உயிர்கள்  தம்  வினை முடியும்  வரை  உண்மையை யறியாமல்  பயனுகர்ச்சியில்  ஈடுபட்டு  மயங்கச்  செய்தலாதலின் ,  அம்மயக்கம்  திருமால்  பிரமன்  முதலியோர்க்கும்  உண்டு  என்பதைப் புலப்படுத்தற்கே  அவர்பாலேற்றி  “போற்றிமால்  நான்முகனுங்  காணாத  புண்டரிகம் “ என்றார்.  அருளல்  –  கட்டொழித்து  வீடுபெறச்  செய்தல்.  அப்பேற்றுக்குத்  தம்மை  ஆட்கொண்ட  கருணையே  காரணமாகக்  குறிப்பிட்டுப்  “போற்றி  யாமுய்ய  ஆட்கொண்டருளும்  பொன்மலர்கள்”  என்றனர்.  இவ்வருட்செயல்கள்  ஐந்தும்  இறைவன் உயிரின்கண்  மேல்  வைத்த  கருணையால்  நிகழ்வனவாம்.

                    இவற்றுள்,  அருளல்  ஒழித்து  ஒழிந்த செயல்களெல்லாம்  பிறப்பிறப்புக்களிற்   படுத்துத்  துயருறுத்துவனவாகலின்,  அவற்றைச்  செய்வது   அருளாமாறு   யாங்ஙனம்  எனின் ,  அதற்கு  விடையாகச்  சிவஞான  சித்தியார்  என்னும்  நூலில் ,  ஒடுக்கமாவது  பிறப்பிறப்புக்களிற்  சுழன்று  வருந்தும்  உயிர்களுக்கு  இளைப்பாற்றலும், தோற்றமாவது   உயிர்களின்  கன்மங்கழியு  முகத்தால்  மலபரிபாகம்  வரச்செய்தலும்  ,  காப்பாவது  கன்மங்  கழியும்படி  நுகர்வித்தலும்,  மறைப்பாவது  இருவினையொப்பு  வருவித்து   மலங்களை  முதிர்வித்தலும்,  அருளாவது  சுட்டொழித்து  இன்புறுத்தலும்  ஆதலின்,  ஆராயுங்கால் இவ்வைந்து  தொழிலும்  அருட்செயலை   என்னும்  பொருள்  தோன்ற,

“அழிப்பிளைப்  பாற்ற  லாக்கம்  அவ்வவர்  கன்மமெல்லாம்

               கழித்திடல்  நுகரச்  செய்தல்  காப்பது  கன்மவொப்பில்

தெழித்திடல்  மலங்க  ளெல்லா  மறைப்பருள்  செய்திதானும் 

                 பழிப்பொழி  பந்தம்வீடு  பார்த்திடி  னருளே  யெல்லாம்”

என்று  கூறப்பட்டிருத்தல்  அறிக. 

“எக்கிர  மத்தி  னாலும்  இறைசெய  லருளே  யென்றும்”  என்பதும்  ஈண்டுக்  கருதத்தக்கது .  சிவப்பிரகாசம்  என்னும்  நூலில்  “ஏற்றவிவை  யரனருளின்” என்னும்  பதினெட்டாஞ்  செய்யுள்  உரையில்  ,  சிவபெருமானே  பஞ்சகிருத்தியஞ்  செய்பவன்  என்பதற்குப்  பிரமாணமாக  மதுரைச்  சிவப்பிரகாசர்  இத்திருப்பாட்டை  யெடுத்துக்காட்டியிருத்தலும்  ஈண்டு  நினைவுகூறத்தக்கது. 

              இவ்வளவில்  பெண்கள்  எல்லோரும்  பாவை  நோன்பு  குறித்து  நீராடியதன்  பயனாகத்  தம்மைக்  காத்தருளும்  வண்ணம்  இறைவனை  வேண்டி,  முடிவில்  இறைவன்  திருவருட் பேற்றுக்குச்  சாதனமாக  மேற்கொண்ட  அம் மார்கழி  நீராடலைக்  குறித்தும்  காப்பு  வேண்டுவாராய்  “போற்றியாம்  மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்”  என்று  முடித்தனரென்பது .

                இதன்கண்  இறைவன்  திருவடியைப்  பலமுறை  புகழ்ந்து  காப்பு   வேண்டியிருத்தலின்  சத்தியை  வியந்தது   பெறப்பட்டவாறறிக . 

                  திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகத்  திருமறைக்கண் உள்ள  திருவெம்பாவைக்குப்  பாண்டிவள  நாட்டில்  பூங்குன்ற  நாட்டுத்  தலைநகராகிய   மகிபாலன்பட்டி ,  மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்   சைவசித்தாந்த  வித்தகர்  பண்டிதமணி  மு .  கதிரேசச் செட்டியார்  இயற்றிய    கதிர்மணி  விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப்பெற்றது.                                     

கடைச்சங்க நிலைகுலைவு

கடைச்சங்க நிலைகுலைவு*

அல்லது

இடைக்காடர் வரலாறு

ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசனார்

தொடக்கம்:- திருவருள் துணையாக மூன்றாம் முறையாகக் கூட்டப்பெற்ற இச்சங்கம் இக்காலத்து சிறந்து விளங்கும் மதுரை நகரில் தோற்றமுற்றது. அதனை முதன்முதல் தொடக்கி நிலை நாட்டியவன் முடத்திருமாறன் என்னும் பாண்டியன். அவன் இடைச் சங்கம் நிலைகுலைவுற்ற இறுதிக்காலத்து விளங்கிய பேரரசன்: அவனே அக்காலம் பாண்டிய நாடனைத்தையும் அரசு செலுத்திச் சிறப்புற்றிருந்தான். அவன் கூட்டிய சங்கத்தைக் கடைச்சங்கமென்பர் – பிற்காலத்தவர்.

அக்கடைச்சங்கத்தினைப் பற்றி இறையனார் கலவியல் உரைக்காரர் கூறுமாறு:-

I. “இனிக் கடைச்சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தார் சிறுமேதாவியாரும்,[1] சேந்தன்பூதனாரும்,[2] அறிவுடையரனாரும்,[3] பெருங்குன்றூர்க்கிழாரும்,[4] இளந்திருமாறனும்,[5] மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும்,[6] மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதிமர் (49) என்ப.

பிறிதோர் சாரார் கூறுமாறு:-

I.

1  பருங்கடைச் சங்கமிருந்தோர் யாரெனில்

    சிறுமே தாவியார், சேந்தம் பூதனார்

    அறிவுடையரனார், பெருங்குன்றூர் கிழார்,

    பாடல் சான்ற இளந்திருமாறன்,

5   கூடல் ஆசிரியர் நல்லந்துவனார்

    பரவு தமிழ் மதுரை மருதனிள நாகர்,

    அவிர் கணக்காயர் நவில் நக்கீரர்

    கீரங்கொற்றர் கிளர் தேனூர் கிழார்

    ஒருங்கலை மணலூராசிரியர்

10  நல்லூர்ப் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்,

    செல்லூராசிரியர் முண்டப் பெருங்குமரர்

    முசிறியாசிரியர் நீலகண்டனார்,

    அசைவிரி குன்றத் தாசிரியரன்றி

    நாத்தலங் கணிக்குஞ் சீத்தலைச் சாத்தர்

15  முப்பால் உணரும் உப்பூரி குடி கிழார்

    உருத்திரசன்மர் மருத்துவராகிய

    நாம நாற்கலைத் தாமோதரனார்

    மாதவனனாரொடு ஓதும் இளநாகர்

    கடியுங் காமப் படியங் கொற்றனார்

20  அருஞ் செயிலூர் வாழ் பெருஞ் சுவனாருடன்

    புவிபுகழ் புலமைக் கபில, பரணர்,

    இன்னாத் தடித்த நன்னாகர், அன்றியும்

    ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்துக்கு

    உரையிடை யிட்ட விரகர் கல்லாடர்

25   பேர் மூலமுணரும் மாமூலர், தம்மொடு

    விச்சை கற்றிடு நச்சென்னையார், முதல்

    தேனூர் றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர்

    நானூற்றுவர் முதல் நாற்பத்தொன்பதின்மர்;

II.

“பீடுபெற உலகிற் பாடிய செய்யுள்

முத்தொள் ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை,

அகநா னூறு புற னூறு

குறுந்தொகை சிற்றிசை பேரிசை வரியொடு

அறம்புகல் பதிற்றுப்பத்து ஐம்பதோடிருபான்

பெரும் பரிபாடலும், குறுங்கலி நூற்றைம்

பது, முதலாகிய நவையறுங்கலைகள்.”

III.

“அக்காலத்து அவர்க்கு அகத்தியம் அதனொடு

மிக்காம் இலக்கணம் விளங்கு தொல்காப்பியம்,

எண்ணூர் கேள்வியர் இருந்ததாயிரத்துத்

தொளாயிரத்தைம்பது வருடமென்ப”.

IV.

“இடர்ப்படாதிவர்களைச் சங்கம் இரீஇயினார்

முடத்திரு மாறன் முதலா உக்கிரப்

பெருவழுதி ஈறாப் பிறங்கு பாண்டியர்கள்

நரபதிகளாகும் நாற்பத்தொன்பதின்மர்

இவருட் கவியரங் கேறினார் மூவர்.

புவியிற் சங்கம் புகழ் வட மதுரை” என்பது.

கடைச்சங்க அமைப்பு

ஒரு சாரார் கூறுமாறு:-

கடைச்சங்க உறுப்பினர் 49 பெயர்களாகும். அவருள் சிறுமேதாவியார் முதலிய எண்மர் உட்கழக உறுப்பினர். சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது (1850) வருடம் நடைபெற்றது. அதனை அத்துணை காலம் ஆதரித்தவர் நாற்பத்தொன்பது பாண்டியர்; அவருள் மூவர் கவியரங்கேறினார் என்பது.

அரசஞ் சண்முகனார் கூறுமாறு:-

I. ஒரு தலைமுறைக்குச் சிறிது ஏறக்குறைய முப்பத்தெட்டியாண்டாகப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மர் காலம் வரை ஆயிரத்து எண்ணூற்றைம்பதிற்றியாண்டு அச்சங்கம் நிலைபெற்றது என்பதூஉம்.

II. தலைமுறைக்கு ஒருவராகப் பாண்டியர்க்குப் பக்கத் துணையாக இருந்து சங்கம் நடாத்தினமையிற் சங்கமிருந்தார் நாற்பத்தொன்பதின்மர் ஆயினர் என்பதூஉம்.

III. ஏனைச் சங்கத்துப் புலவரினும் மிக அருகிக் காணப்பட்டாராகலின் அச்சங்கம் போல யாண்டிற்கு ஒருவர் கவியரங்கேறித் தலைவர் ஆகாமல் சில காலம் ஐந்து யாண்டிற்கு ஒருவரும் பின்னர் நான்கு யாண்டிற்கு ஒருவரும் ஆகத் தலைமை பெற்றமையாற் பாடினோர் நானூற்று நாற்பத்தொன்பதிமர் ஆயினர் என்பதூஉம் விளங்கும் என்பது.

பாண்டியன் மதிவாணன்

இனி இக் கல்விக் கழகத்தை நன்கு பேணிப் போற்றிய பாண்டியர்களுள் மூவர் புலத்துறை முற்றியவராய்க் கவியரங்கேறியுள்ளார் என்பது மேற்காட்டப்பட்டது. அத்தகைய மூவருள் மதிவாணன் என்பான் ஒரு பெருவேந்தன்; முத்தமிழும் நன்கு கற்றவன்; நாடக இயலில் கைபோயவன். ஆகவே தன் காலத்துக்கு முன் உள்ள பேரறிஞர் இயற்றிய நாடக இலக்கணத்தின் பகுதியாக உள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து இயன்ற மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்ற நூல் ஒன்றினை இயற்றிக் கவியரங்கேற்றினான்.

வங்கிய சேகர பாண்டியன்

இப்பெயர் பெற்ற பாண்டியன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவனாக எண்ணப்படுவான்; இவன் ஆட்சிக்காலத்தினைச் சிறிது முன் ஒட்டி ஓர் பஞ்சம் பாண்டிய நாட்டில் நிகழ்ந்தது. பன்னிரண்டுயாண்டு மழையின்றி அந்நாடு மிகவும் வருந்தியது. உணவுப் பொருள் இன்றிப் பசி கடுகிக் குடிகள் நலிவுற்றனர். பல உயிர்கள் மடிந்தன. அரசன் பெரிதும் தயங்கிப் புலவர்களையெல்லாம் கூவி “வம்மின் யான் உங்களைப் புரந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது; நீயிர் போய் நுமக்கு அறிந்தவாறு புக்கு நாடு நாடாயின ஞான்று என்னை உள்ளி வம்மின்” என்றான். மணிமேகலை நூலாசிரியரும் இப்பஞ்சத்தினையும் அதன் கொடுமையினையும்

“பன்னீராண்டு பாண்டி நன்னாடு

மன்னுயிர் மடிய மழை வளமிழந்து”

(மணி: 14ஆம் காதை 55.56)

எனக் கூறியுள்ளார்.

அப் பன்னிரண்டாண்டும் சங்கப்புலவர் கூடலில் இலராயினர். பாண்டிய அரசன் கட்டளைப்படி அவனை விடுத்து அன்னோர் புறநாடு போதந்தார்; அவருள் ஒரு சாரார் சேரநாடு அடைந்து அங்குள்ள ஆலஞ்சேரி மயிந்தன் என்னும் ஓர் வேளிர் தலைவனைச் சார்ந்து அவன்பெரிதும் பேண வாழ்ந்து வந்தனர்.

சில ஆண்டு கழிந்ததும் பாண்டிய அரசன் புலவர்களின் பிரிவால் வருந்தி மிகவும் மனம் தளர்ந்து அவர்களின் வளப்பம் இருக்கை முதலியன தூதல் மூலம் உசாவினான். உயிரோடிருக்கும் எஞ்சிய தமிழ்ப் புலவர்க்குத் திருமுகம் அனுப்பினான். புலவர்கள் வற்கடக் கொடுமையினையும், தாங்கள் அஃது அறியாது ஆலஞ்சேரிமயிந்தன் பால் வாழ்ந்து செவ்வனே இருத்தலையும், அம்மயிந்தனின் பெருமை வள்ளற் றன்மைகளையும் பற்றிப் பாண்டிய அரையற்கு ஓலைத் தூக்கு ஒன்று எழுதி அனுப்பி வைத்தனர். அன்னோர் எழுதிய தூக்கில் பொறித்தது வருமாறு:-

காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி

வேலையுங் குளனும் வெடிபடச் சுவறி

விழித்தவிழி யெல்லாம் வேற்று விழியாகித்

தந்தையை மக்கண் முகம் பாராமே

5. வெந்த சரகம் வெவ்வே றருந்திக்

குணமுள தனையுங் கொடுத்து வாழ்ந்த

கணவனை மகளிர் கண்பாராமே

யறவுரை யின்றி மறவுரை பெருகி

யுறை மறந் தொழிந்த வூழி காலத்திற்

10. றாயில் லவர்க்குத் தாயே யாகவுந்

தந்தையில் லவர்க்குத் தந்தையே யாகவு

மிந்த ஞாலத் திடுக்கண் தீர

வந்து தோன்றினன் மாநிதிக் கிழவன்

நீலஞ் சேரு நெடுமால் போல்வன்

15. [7]ஆலஞ் சேரி மயிந்த னென்பான்

(ஊருண் கேணி நீரோ ரொப்பான்)

தன்குறை சொல்லான் பிறர்பழியுரையான்

மறந்தும் பொய்யான் வாய்மையுங்குன்றான்

இறந்து போகா தெம்மையுங் காத்தான்

வருந்த வேண்டா வழுதி!

20. யிருந்தனெ மிருந்தென மிடர் கெடுத் தின்னே

(தமிழ் நாவலர் சரிதை)

என்பது.

இவ்வாறு பன்னிரண்டு யாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது. அரசன் நாடு நாடாயினமையால் தமிழ் நூல் வல்ல புலவர்களைத் தேடிக் கொணர்க என்று பல்லிடமும் ஆட்களையனுப்பி, அத்தகைய புலவரை ஒருங்கு கூட்டினான். தமிழ்ச் சங்கத்தைப் பழையபடி உருவாக்கினான். சங்கத்தார் உறைய மதுரையின் வடமேற்றிசையில் தமிழ்க் கழக மண்டபம் ஒன்று நிருமித்தான். அம் மண்டபம் தேவ குலத்தை அடுத்திருந்தது. நீராழி அதன் உட்புறம் அமைந்துள்ளது. அப்பாண்டியனே பின்னும், சங்கப்புலவர் புலமையியல் நன்கு மதிக்கப்படுமாறு சங்கப் பலகை ஒன்றை அமைப்பித்தான். அப்பலகை இறைவன் அருளால் பெறப்பட்டதாம். தெய்வத்தன்மை வாய்ந்தது என்பர் ஒரு சாரார். பொறி-கிறிகளின் நுட்பம் சிறக்க அமைந்துள்ளது என்பர் பிறிதோர் சாரார். அப்பலகை ஒரு முழ அளவினதென்பர் ஒரு சாரார். ஒருச் சாண் அளவினதென்பர் பிறிதொர் சாரார். அதற்கு முத்தாழி என்றும் கடிஞை என்றும் பெயர் வழங்கப்படும். கல்லினால் ஆக்கப்பட்ட பெரும் பரப்புள்ள பலகையாதலின் கன்மாப்பலகை என்றும் ஒரு சாரார் கூறுப. பிறிதோர் சாரார் மகிமை வாய்ந்த பெரிய பலகை என்ற பொருளில் கனமாப்பலகை என்பர். மற்றோர் சாரார் கன்மா – மாமரத்தில் ஒரு வகை; வைரமிக்குள்ளது; அதனால் இயற்றப்பட்ட பெருந்தட்டு என்பர்; கல்மூங்கில் – என முற்றிய மூங்கிலில் வைரம் பாய்ந்ததைக் கூறுவது போன்ற வழக்கு என்பாரும் அவரே.

சங்கப்பலகை

இப்பலகை பிச்சா பாத்திர வடிவாய் (கடிஞை) மூன்று பகுதியதாய் விளங்கிற்று. இஃது “இறைவன் தன் திருக்கரத்தில் அடியவர்க்கு அருளுமாறு கொண்டுள்ள திரு ஓடு ஒப்ப விளங்கியது” என்பர் சைவர். அதில் மூன்று தட்டு உண்டு. அம்முத்தட்டும் முறையே தலைத்தட்டு, இடைத்தட்டு, கடைத்தட்டு எனப் பெயர் பெறும். ஒவ்வோர் தட்டுக்கும் மும்மூன்று கண்ணாறுகள் உண்டு. அக்கண்ணாறுகள் எடுப்பு எனப் பெயர் உற்றவை. புலவர் அறுவர் ஒருங்கு இருக்கத்தக்கதாய் அமையப்பட்ட ஒரு எடுப்பில் ஆறு இருக்கைகள் உண்டு. ஒவ்வோர் இருக்கைக்கும் ஒவ்வோர் புலவர் வீற்றிருப்பர்.. அங்ஙனம் ஆறு புலவர் சேர்ந்திருக்கும் ஓர் எடுப்பின் பின்புறமாக ஒலி எழுத்தாளர் பலர் (shorthand writers) மறைந்திருப்பர். இவ்வாறே ஒவ்வோர் தட்டிலும் புலவரும் மறைந்துள்ள ஒலியெழுத்தாளரும் இருப்பார்கள். ஒலி எழுத்தாளர் ஒளிந்து இருப்பதைச் சங்க மண்டபம் நோக்கி வருவார் அறியார். அவ்வாறு அவர் இருக்கையானது பின் அணியாகத் தாழவில் மறைத்து அமைக்கப்படிருந்தது. கழக மண்டபத்தின் நடுவுள்ள நீராழி மண்டபத்தில் இம்முத்தட்டுகளையும் இயக்கவல்ல உட்பொறியாத்த பலகை ஒன்றிருந்தது. அதுவே இறைவனால் அளிக்கப்பட்டதென்பர் ஒரு சாரார். சங்கம் காண வருவார் வலமாகச் சென்று அங்குள்ள புலவரையும் நூனிலையத்தையும் சொற் கிழத்தியின் உலைவிலா உருவத்தையும், நீராழியின் தோற்றத்தையும் சுற்றினோக்கித் திரும்புவர். (அஃதாவது இடது கைப்புற வழியாய்ப் போய் வலது கைப்புற வழியாய்த் திரும்புதல்) ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு எடுப்பின் பக்கமாக கற்படிக்கட்டுகள் அமைந்திருந்தன. (அக்கடிக மண்டப விளக்கத்தின் படம் ஒன்று இத்துடன் கோக்கப்பட்டிருப்பதை நோக்க).

பொருள் இலக்கணம்

இத்தகைய மண்டபத்தே இப் பெற்றித்தாய இருக்கையினைக் கையாண்ட புலவர் நுண்ணறிவுடையராயிருந்தார். எனினும் தமிழ் மொழிக்கு இன்றியமையாத பொருள் இலக்கணத்தில் (தமிழ் ஆராய்ச்சிக்குப் போதிய) புலமை நிரம்பியுள்ளவர் அருகிக் காணப்பட்டனர். அதன் காரணம், பன்னீரியாண்டு நிகழ்ந்த பெரும் பஞ்சத்தில் ******  புலமை வாய்ந்த பலர் ஆண்டாண்டு சிதறியும் மடிந்தும் போயினமையே என்ப. அகப்பொருள் இலக்கணம் காணற்கும் அருமையாக இருந்தது. அஃதில்லாக்குறை தமிழ் ஆராய்ச்சியினை முட்டுப்படுத்தியது. சங்கத்தினைப் பேணிப் போற்றிய பாண்டியனும் இஃதறிந்து பெரிதும் கவலுற்றான். புலவரும் இயற்றுவதி யாது என அறியாது சோம்பியிருந்தனர். அந்நிலையில் இறையனார் (மதுரை பெருமானடிகள்) திருவுளங் கொண்டு தாமாகவே தம் பெயரால் “இறையனார் களவியல்” என்ற அகப்பொருள் இலக்கண நூல் ஒன்றினை அறுபது சூத்திரத்தால் யாத்தருளினார். அது வெளிப்போந்த வரலாறு பின்வருமாறு:-

இறையனார் அகப்பொருள் வரலாறு

மதுரை ஆலவாயில் அழல் நிறக் கடவுள் சிந்திப்பான் ‘என்னை பாவம்! அரசர்க்குக் கவற்சி பெரிதாயிற்று: அது தானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற்பாலம்” என்று இவ்வறுபது சூத்திரத்தையும் செய்து மூன்று செப்பிதழ் அகத்தெழுதிப் பீடத்தின் கீழ் இட்டான்.

“இட்ட பிற்றை ஞாண்று தேவர்குலம் வழிபடுவான் தேவர் கோட்டத்தை எங்கும் துடைத்து, நீர் தெளித்துப் பூ விட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதான் அன்று தெய்வத் தவக்குறிப்பினான் அலகிடுவன் என்று உள்ளங்குளிர அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போந்தன. போதரக் கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத்தோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று.”

“காட்டப் பார்ப்பான் சிந்திப்பான்: ‘அரசன் பொருள் அதிகாரமின்மையிற் கவல்கின்றான் என்பது பட்டுச் செல்லா நின்றதுணர்ந்து நம் பெருமான் அருளிச் செய்தானாகும்’ என்று தம் அகம் புகாதே கோயில் தலைக் கடைச் சென்று நின்று கடைக்காப்பார்க்கு உணர்த்தக், கடைக்காப்பார் அரசர்க்கு உணர்த்த, அரசன் புகுதருக என்று பார்ப்பானைக் கூவச், சென்று புக்குக் காட்டக் கொண்டு நோக்கி ‘இது பொருளதிகாரம்! நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தானாகற்பாலது’ என்று அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று சங்கத்தாரை கூவுவித்து ‘நம் பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்த பொருளதிகாரம்! இதனைக் கொண்டு போய்ப் பொருள் காண்மின் என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப் பலகை ஏறியிருந்து ஆராய்வுழி எல்லாருந் தாந்தாம் உரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ்ச் சென்றன”.

இறையனார் அகப்பொருள் உரை வரலாறு

“செல்லவே நாம் இங்ஙனம் எத்துணை உரைப்பினும் ஒருதலைப்படாது நாம் அரசுனுழைச் சென்று நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டுமெனக் கொண்டு போந்து, அவனால் பொருளெனப் பட்டது பொருளாய், அன்றெனப்பட்டது அன்றாய் ஒழியக் காண்டும் என, எல்லாரும் ஒருப்பட்டு அரசனுழச் சென்றார். செல்ல அரசனும் எதிர் எழுந்து சென்று ‘என்னை! நூற்குப் பொருள் கண்டீரோ’ என ‘அது காணுமாறு எமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டு’ மெனப் போமின்! நுமக்கோர் காரணிகளை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின்மர் ஆயிற்று. நுமக்கு நிகர் ஆவர் ஒருவர் இம்மையின் இன்றே’ என்று அரசன் சொல்லப், போந்து பின்னையும் கன்மாப் பலகை ஏறியிருந்து ‘அரசனும் இது சொல்லினான் யாங்காரணிகளைப் பெறும் ஆறு என்னை கொல் என்று சிந்தித்திருப்புழிச் சூத்திரம் செய்தான் ஆலவாயில் அவிர்சடைக் கடவுளன்றே! அவனையே காரணிகனைத்தால் வேண்டும் என்று சென்று வரங்கிடத்தும்’ என்று சென்று வரங்கிடப்ப இடையரமத்து.

உருத்திரசன்மன்

“இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான் பைங்கண்ணன்: புன்மயிரன்: ஐயாட்டைப் பிராயத்தினன்: ஒரு மூங்கைப்பிள்ளை: உளன்: அவனை அன்னன் என்று இகழாது கொண்டு போந்து ஆசனமேல் இரீஇக் கீழ் இருந்து சூத்திரப் பொருள் உரைத்தால் கண்ணீர் வார்த்து மெய்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்டவிடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளா இருக்கும்: அவன் குமாரதெய்வம்: அங்கோர் சாபத்தினால் தோன்றினான்” என முக்கால் இசைத்த குரல் எல்லார்க்கும் உடன்பாடாயிற்று.”

நக்கீரர் உரை

“ஆக எழுந்திருந்து தேவர் குலத்தை வலங் கொண்டு போந்து உப்பூரி குடி கிழாருழைச் சங்கமெல்லாம் சென்று இவ்வார்த்தை எல்லாம் சொல்லி ‘ஐயனாவான் உருத்திரசன் மனைத்தரல் வேண்டும்” என்று வேண்டிக் கொடுபோந்து வெளியது உடீஇ வெண்பூச்சூட்டி வெண்சாந்து அணிந்து கன்மாப்பலகை ஏற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளாயிருந்து மதுரை மருதன் இளநாகனார் உரைத்தவிடத்து ஒரோவழிக் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்தவிடத்துப் பதந்தோறும் கண்ணீர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான்.”

“இருப்ப ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு என்றார்” (இறை. களவி. பாயிர உரை)

சண்பகபாண்டியன்

இவ்வாறு தமிழ்ச்சங்கமானது பொருள் இலக்கணம் பெற்றுப் பல ஆண்டுகளாகத் தமிழ் ஆராய்ந்து வருங்காலை வங்கிய சேகரன் கால்வழியில் வந்த சண்பகபாண்டியன் என்பான் அரசாட்சியடைந்து செங்கோல் செலுத்தி வந்தான் (இவன் வங்கிய சூடாமணி என்றும் அழைக்கப்படுவான்) அக்காலத்து ஒரு நாள் மாலை தன் பட்டமகிஷியுடன் அரண்மனை மேன்மாடத்துத் தென்றல் வீசும் சீர்மை நோக்கி உலவி வருங்கால் நறுமணம் ஒன்று (அவன்) நுகர நேர்ந்தான். அந்நறுமணம் தென்றலால் உந்தப்பட்டு வந்ததெனினும் அவன் தன் அருகே தன் பெருங்கோமகள் அன்றிப் பிறர் இல்லாமையின், அக்கோமகள் கூந்தலினின்றும் வருகின்றது என அறிந்தனன். அப்பொழுதைக்கு அவள் தன் கூந்தலில் பூ ஒன்றும் அணிந்திராமையாலும், விரத ஒழுங்கினைக் கைக்கொண்டு சின்னாள் அவள் நறும்பூ முடியாதிருந்தமையாலும், அரசன் தான் நுகர்ந்த நறுமணம் அவள் கூந்தலினின்றும் இயற்கையாகவே உண்டாயது என யூகித்துச் செயற்கையால் உண்டாயது அன்று எனத் தெளிந்தான். தெளிந்த அரசன் பெரிதும் இறும்பூதெய்தி, “என் மனக் கோளை உள்ளது உள்ளவாறு கண்டு இனிய கவி ஒன்று இயற்றி உரைப்பார் எவரேயாயினும் அவர்க்கு ‘ஆயிரம் பசும்பொன் பரிசாக அளிப்பல்’ என்று நகரில் முரசு அறைவிக்கச் செய்து சங்கமண்டபத்தில் ஆயிரம் பசும்பொன் முடித்த கிழி ஒன்றைத் தூக்கினன். எண்ணிறந்த புலவரும் – அவர் ஒப்பாரும் – பிறரும் தத்தமக்குத் தோன்றியவாறு கவி இயற்றி அரசர்க்குக் காட்டினர். அக்கவிகள் அரசன் உள்ளக் கருத்தினுக்கு ஏலாவாயின. அக்கிழியும் பல திங்கள் கட்டியபடியே தூங்கிற்று.

தருமி – இறையனார்

அந்நாள் அம்மதுரையம்பதியில் வாழும் மறையவர் குலத்து உதித்த தருமி என்னும் பெயருடையான் ஒருவன் – தாய்தந்தையர் இல்லாதான் – பெரிதும் நல்குரவுடையான். சிவ வழிபாடுடையான்: மறந்தும் புறந்தொழா மாண்புடையான். சிவபெருமானை வணங்கித் தன் குறைவினை வெளியிட்டுத் தான் அப்பெருநிதி பெறுமாறு அரசன் கருத்துக்கேற்ற கவி ஒன்று இயற்றித் தருக என வேண்டினான்.

அப்பெருமானும் அவன் வேண்டுகோட்கு இணங்கி அரையன் உள்ளக்கிடக்கையை ஞான சமாதியால் அறிந்து அடியிற் கண்ட அருஞ் செய்யுள் ஒன்றினை யாத்தளித்தனன்.

அக் கவி வருமாறு:-

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சரைத் தும்பி!

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே” என்பது.

இதன் பொருள்:- பூந்தாது தேரும் வாழ்க்கையினையும், அழகிய சிறகுகளையுமுடைய வண்டே! (என்னிடம் வைத்த) விருப்பத்தினால் சொல்லாது (உண்மையாகக்) கண்டதையே சொல்: நீ அறியும் புஷ்பங்களுக்குள், பழக்கம் மிக்க நட்பையும் மயிலின் சாயலையும் நெருங்கிய பல்லையும் உடைய (இவ்) அரிவை (ப் பருவமுடைய பெண்) கூந்தலைக் காட்டிலும் மணமுடைய பூக்கள் உண்டோ? என்பது.

இக் கவியைத் தருமி பெற்றுக்கொண்டு சங்கப் புலவர் பலரிடமும் காட்ட அன்னோர் பொறாமையால் ஒன்றுங் கூறாது அவன் கொடுத்தபடி அவனிடமே திருப்பினர். அவன் நேரே அரையானிடஞ் சென்று அதனைக் காட்டினான். அரசன் உள்ளக் களிப்புடன் பேருவுவகை பூத்து, இக்கவி ஆக்கினான் யாவனே எனினும் ஆகுக. அவன் பொற்கிழி பெற்றுக் கொள்வானாக எனச் சங்கமண்டபத்துக்கு அவனைப் போக்கினன். தருமி  ஆங்குச் சென்று சித்திரத் தூணத்தின்பால் கட்டிதூக்கிய அப்பொற்கிழியை அவிழ்த்து எடுக்கப் போந்தான்.

அந்நிலையில் அருகே சங்கப்பலகையில் வீற்றிருந்த நக்கீரன் – “வேதியனே! அக் கிழியை நீ தொடாதை. உனக்கு இக்கவி எழுதியளித்த புலவனைக் கூட்டி வருக. இக்கவியிற் குற்றமுண்டு” என்றான். தருமி மனமழுங்கி இறைவன் பாலேகி ஓலமிட இறையனார் புலவனாகி நக்கீரனுடன் வாது புரிந்தருள வந்தார்.

நக்கீரன் ஒடுக்கம் நடுக்கமின்றித் தன் உட்கோளை நிறுவினன். இறுதியில் இறையனார் “ஞானப் பூங்கோதை” கூந்தற்காயினும் இயற்கை மணம் உளதன்றோ என, அவன் அதனையும் மறுக்க, இறையனார் வெகுண்டு நெற்றிக் கண்ணால் அவனை வெதுப்பினார். அத்துடன்

(உத்தம ஜாதிப் பெண்களுக்கு)

“வளந்தரும் மடம் நாண் முன்னா வரும் குணம் நித்தமாயே

உளங்கவர் வாசம் தேசு உரியன: நித்தமாகும்”

என்று தம் கோளையும் நாட்டினார்.

இறுதியில் தருமி பொற்கிழி பெற்றான். கீரனும் அல்லல் உற்று இறைவன் அருள் பெற்று உயர்ந்தான். அகத்தியனார் அக்கீரனுக்கே அதுவரை புலனாகாதிருந்த அரிய இலக்கணங்களை இறைவன் கட்டளைப்படி வரன்முறையாக உபதேசித்தனர். கீரனும் அவற்றைக் கற்று புலத்துறையில் தெளிந்தோனாயினன்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

இவ்வாறு சங்கம் பல ஆண்டு வளர்ந்து வருகையில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அரையனாயினான். இவன் கானப் பேர் எயில் – (காளையார் கோவில்) கடந்த உக்கிரப்பெருவழுதி எனப்படுவான்[8]. இவன் அகநானூறு என்ற நெடுந்தொகையினைத் தொகுக்கும்படி செய்தான். அத்தொகையினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மனார். இவ்வரசன் காலத்திலேயே பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு என்பவைகளும் தொகுக்கப்பட்டன. சங்கப்புலவர்களால் மதிப்பிடப்பட்ட திருக்குறளுக்குச் சாற்றுகவி அளித்தவனும் இவனே என்ப. இவன் காலத்திலே கடைச்சங்கம் நிலைகுலைந்ததாம்.

கடைச்சங்க நிலைகுலைவு

முடத்திருமாறன் கால முதல் பல பாண்டியர் தலைமுறையாக இவ்வுக்கிரப் பெருவழுதி காலம் வரை மேலையில் உயர்ந்து ஓங்கி நடைபெற்று வளர்ந்த இத்தமிழ்ச் சங்கம் இவ்வரையன் காலத்து நிலை தளரலாயிற்று. இதன் காரணம் சங்கப் புலவர் செய்வினையேயாகும். அன்னோர் இறைவன் கவிக்கே குறை கூறி வாதாடியுள்ளேம் என்றும், பாண்டிய அரசர் பெருஞ்சுட்டு மிக்கு வாய்த்துள்ளோம் என்றும், தம்மை ஒப்பாரும் மிக்காருமாய பிறர் இம்மையில் இலராயினார் என்றும் பலவாறாக எண்ணி அடலேறு அனைய செருக்கில் ஆழ்ந்துவிட்டனர்.

அங்ஙனம் ஆழ்ந்தவர் அரசவை நாடிப் பரிந்து பாடிவரும் பிற புலவரைப் புறக்கணித்து வந்தனர். பாடி அரங்கு ஏற்ற வருபவர் கவிகளை ஒலியெழுத்தாளர் துணையால் பாடிடுவர் பாடி முடிக்கு முன்னர் எழுதுவித்துக் கூட்டி ஏடு ஒன்று உருப்படுத்தி “இப்பாட்டுக்களை முன்னரே யாம் கேள்விப்பட்டுள்ளோம். இவை பழம் பாட்டுக்களேயாகும்” என்று தாம் எழுதுவித்த புதிய சுவடியை அவிழ்த்துக் காட்டுவர்; காட்டவே ஏனையர் மனம் அழுங்கி, அரசனிடம் பரிசிலும் பெறாமையால் வயிறு எரிந்து, காடு மலை கடந்து வந்தும் ஒன்றும் பெறாது ஏங்கிச் செல்லும் தம் விதியினை வெறுத்து இச்சங்கம் குலைய வசை பாடிப்போவர்.

அரையனிடம் பாடிப் பரிசில் பெறுபவர் அரிதாகி வந்தனர். அங்ஙனம் பெறாது வெறுங்கையாளராய் வெறுக்கை பெறாது அல்லற்பட்டு ஆற்றாமே தாம் வந்தவழி மீண்டேகுபவர் திறனும், அன்னோர் வயிறெரிந்து கூறிய கூற்றும், கடைச்சங்க நிலைகுலைவுக்குக் காரண வித்துகள் ஆயின.

இந் நிலையில் சமயவாதிகள் பலர் ஒன்றுகூடி சங்கமண்டபத்திற்குத் தெற்கே ஓர் பட்டி மண்டபம் நிறுவி சமய நூல் ஆராய்ந்து வந்தனர். அன்னோருள் ஒருசாரார் தமிழ் மொழியின் பெற்றி அறியாது சமய நூல் பல்கிக் கிடக்கும் வடமொழியே மதிக்கத்தக்கதென்றும் தமிழ் மொழிப் பொருள் நன்மையற்றதென்றும், பிறவும் பேசித் தமிழைக் குறை கூறி வந்தனர்.

இதனை வாதிக்க ஒரு நாள் நக்கீரர் ஆண்டுச்சென்றார். பிறர் பட்டிமண்டப வாயிலைச் சாத்தி அவரை உட்புகாவாறு செய்தனர். அன்னோர் செயலைக் கண்டு நக்கீரர் வெகுண்டு அவருள் தலைவனாக உள்ள வேள் என்னும் பட்டம் பெற்ற குயக்கொண்டான் என்பவனை ஓர் அங்கத வெண்பாப் பாடி அவன் சாகுமாறு செய்தார். அப்பாட்டு வருமாறு:

“முரணில் பொதியில் முதற் புத்தேழுள் வாழி

பரண கபிலரும் வாழி – யரணிலா

ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்

ஆனந்தஞ் சேர்க சுவாகா” என்பது.

பின்னர் சான்றோர் பலர் கூடி நக்கீரர் வெகுளியை அமர்த்திக் குறையிரந்து அவனைப் பிழைப்பூட்ட வேண்டினர். நக்கீரரும் மனோ சாந்தமுற்றவராய்

“ஆரியம் நன்று தமிழ் தீதென உரைத்த

காரியத்தால் காலக் கோட்பட்டானைச் – சீரிய

வந்தண் பொதியில் அகத்தியனா ராணையினாற்

செந்தமிழே தீர்க்க சுவாகா”

என்ற வெண்பா அருளினார். அவன் பிழைத்து எழுந்தான். நக்கீரர் இவ்வாறு செய்த அருஞ்செயல் ஏற்கனவே செருக்கில் அமிழ்ந்துள்ள தமிழ்ச் சங்கப் புலவர்க்குக் கொழுக் கொம்பாகி விளங்கியது.

புலவர் எத்துணையோர் எப்பெற்றியினராயவரினும் அன்னோர் மதிப்பிழந்தே செல்வாராயினர். அரையன் இஃதறிந்தும் யாது சொல்வதென அறியாதிருந்தான்.

சங்க நிலைகுலைவு

தமிழ்ச் சங்கம் வந்து வறிதே பெயரும் புலவர் அல்லற்பட்டு ஆற்றாது அழுங்கிச் சென்ற நிலையும் அவர் சேர்ந்து கூறிய செய்யுளும் ஊசிமுறி ஒன்பத்தாறு என்ற நூலில் காணப்படுகின்றன. சங்கப்பாட்டு என்ற பெயருடைய நூலும் இதுவே. ஆறைப்போயிலான் என்பவர் அதன் உரை ஆசிரியர். அவர் கூறுமாறு:

“பொதியத்து அமர்ந்த மலையமாதவன் அடி போற்றி. நக்கீரன் உள்ளிட்டோர் நாற்பத்தொன்பதின்மர் கூடலில் சங்கம் பரித்து வருநாளில் புத்தியலாப் புகுந்தோர் (புதிதாக்க் கழக உறுப்பினராகி வந்தவர்) ஏனையருடன் கூடிச் செருக்குற்று அறை போய் அடிப்பட்ட ஒலி எழுத்தாளரை (experts in shorthand) பழுக்கச் செய்து (மிகவும் அதிகப்படுத்தி) பாடி அரங்கேற்ற வருநர் பாடல் ஏறாவாறு கன்மாப்பலகை ஏறித் தோற்பித்துப் “பழம் பாட்டு” என ஏடவிழ்த்துக் காட்டி அவர் உள்ள மாழ்கச் செய்விக்க வேத்தூணியோர் (அரசவை நாடி உண்ணும் பரிசிற் புலவர்) அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வாரச் சொன்ன பாட்டு:-

ஓதி என மாறி உயர் போங்கும் பெட்பணா அய்

ஓதியும் தேரையும் போல் ஓர்துறையின்று ஆஅதி

நடை மயிலால் நாடி நமரொழியச் சேர்வாகு

இடையாற் கடையால் இழி.

(ஊசிமுறி பாயிரம் உரை) என்பது.

இதன் பொருள்: ஓந்தியைப் போல (வேளைக்கு ஒவ்வோர் விதமாக) மாறி, உயர்ச்சி மிக்கு விரும்பிய சங்கப் பலகையே (நீ) ஓந்தியைப் போலவும் தேரையைப் போலவும் ஒருவயப்படாது (அலை வழிவு) ஆகுக: (யாவர்களால் இவ்வழிவு நிலை அடைவாய் என்றால்) ஔவையாராலும் நம்மைப் போன்றவர் அன்றி (நின்னிடம்) தேடி அடையவரும் இடைக்காடராலும் திருவள்ளுவராலுமே” என்பது.

ஓதி – ஓந்தி; அணாய் – சங்கப்பலகை; விளி.  நடைமயில் – ஔவை. சேர்வு – தொழிற்பெயர்; ஆ முதனிலையாகக் கொள்வர் இவ்வாசிரியன்பின். ஈண்டு ஆகு கொள்க. இடை – இடைக்காடன்; கடை – திருவள்ளுவன். (ஆறைப்பொயிலான் குறிப்புரை [ஊசிமுறி பாயிரம்] காட்டியது.)

மூவர் வரவு

இந் நிலையில் பரிசிற் புலவர் படும் பாடு சான்றோர் காதினை எட்டி அன்னோரையும் மன வருந்தச் செய்த்து. இறுதியில் அன்னோர் ஆதரணைப் பெற்று, இறைவன் திருவருள் செயலை முன்னிட்டு இடைக்காடனார் ஔவையாரும், திருவள்ளுவரும், சங்கப் புலவர் கர்வத்தினை ஒடுக்கிச் சங்கப் பலகையினைக் குலைக்க மதுரைக்குப் போதந்தார். அவர் சங்கம் குலைக்க வந்த காலம் ஆனித் திங்கள் என்பர் (ஆறைப்பொயிலான்) ஊசிமுறி உரையாசிரியர்.

திருவள்ளுவரும் சங்கத்தாரும்

அக்காலத்து திருவள்ளுவர் ஔவையாருடன் முதலில் சங்க மண்டபம் சேர்ந்தார். “அவரை அச்சங்கத்திலுள்ள புலவர்கள் நீர் எந்த ஊர் என்று கேட்கத் திருவள்ளுவர் –

“எந்தவூ ரென்றீரிருந்தவூர் நீர் கேளீர்

அந்த ஊர்ச் செய்தியறியீரோ – அந்தவூர்

முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்

அப்பாழும் பாழா யறும்” (தமிழ் நாவலர் சரிதை)

என்னும் பாடலைக் கூறியருளினார்.

அது கேட்ட புலவர்கள் இவர் ஞானி என்றனர். அதற்கு விடையாக வள்ளுவர்:

“ஞானவா னென்றீ ரென்னை நாதவிந்துவுங் கடந்து

கானிலை வரையுஞ் சுட்டுக் கடுவெளி பரமானந்தந்

தானெனு மறிவு தானுந் தவிந்து தன் வசமுங் கெட்டு

மோனமுங் கடந்திட் டப்பால் முடிந்தவர் ஞானியாவார்.”

என்னும் பாடலைக் கூறியருளினார்.

உடனே புலவர்கள் இவரை ஐயர் என்றனர். அதற்கு விடையாக வள்ளுவர்:

“ஐயரென்றுரைக்க நாயேற் கடுக்குமோ வருளிலான் மா

உய்யமும் மலங்களைதிட் டுயிர் பர வெளியிலாக்கிப்

பொய்யொடு களவு மற்றைய புலன்களை யொடுக்கு வானின்

வெய்யவன் மதியம் போல விரவுவ னாய ராவார்”

என்னும் பாடலைக் கூறலும் புலவர்கள் கேட்டு மிக மகிழ்ச்சியுற்று இரும் என்று உபசரித்தனர்.

அதற்கு உத்தரமாக:

“இரு மென உரைத்தீ ரென்னை யேற்குமோ வேழை யேற்குத்

தரும் பொரு ளுணர்ந்து சைவ சமையமு மளைந்து நீங்கி

மருடரு வினையும் போக்கி மாசிலா வுண்மை ஞானம்

பெருகின ரிருப்ப ரீது பெறாதவ ரிருப்பரோதான்”

என்னும் பாடலை வள்ளுவ நுண்ணுணர்ச்சியாலே கூறியதைக் கேட்டுப் புலவர்கள் போம் என்று சொல்லினர்.

அதற்கு அத்தியற்புதமாக வள்ளுவர்:-

போமென வுரைத்தீரென்னைப் பொறியொடு புலன்களைந்து

மாமெனு மசபை யோடு மங்ஙனே நிறுத்திக் கொண்டே

யேமமும் யாம மற்றே யிரவொடு பகலு மற்றுச்

சோமனார் பதியை விட்டுத் துறந்தவர் போவரன்றே”.

என்னும் பாடலைக் கூறியருளினார்.

பின்னும் புலவர்கள் “நில்லும்” எனச் சொல்லினர்.

அதற்கு விடையாக –

“நில்லு மென்று ரைத்தீ ரென்னை நேசபா சங்களைந்து

புல்லறி விடும் பாங் காரம் புலை கொலை களவு மற்றுச்

சொல்லிய வுண்மை ஞானச் சுழுமுனை முடிவின் மீதே

யெல்லையுங் கடந்திட் டப்பர லேகமானவர் கணிற்பார்”.

என்னும் பாடலை வள்ளுவர் கூறினார். (செந்தமி 7 vol. 373, 74)

ஔவையாரும் சங்கத்தாரும்

இவற்றால் புலவர்கள் ஒன்றும் வள்ளுவரிடம் பேச அறியாது திகைத்து அவருடன் வந்த ஔவையரை நோக்கினார். ஔவையார் புலவர்களை நோக்கித் தம்முடைய ஐந்து விரல்களையும் குவித்தும் மூடியும் கொஞ்சம் திறந்தும் சுட்டு விரல் ஒன்றை மாத்திரம் நீட்டியும் ஐந்து விரல்களையும் அகலத் திறந்தும் இவ்வாறான சில குறிகளைக் காட்டி, “இவற்றிற்குப் பொருள் என்னை?” என்று வினவினர். அவர்கள் அவர் கருத்து அறியாதவர்களாய் ஒரு பெண்ணின் நிலையை வர்ணித்து ஒரு வெண்பாச் சொல்லினர்[9]. அது கேட்ட ஔவையார், “நீங்கள் சொல்லியது தவறு” என்று அவர்கள் மனம் புழுங்கி வெட்கம் அடையும்படி –

“ஐயமிடுமின் அறனெறியைக் கைப்பிடியின்

இவ்வளவே னும்மன்னம் இட்டுண்மின் – தெய்வம்

ஒருவனே என்றும் உணரவல் லீரேல்

அருவினை களைந்தும் அறும்.”

என்னும் வெண்பாவால் தாம் கருதிய பொருளை வெளியிட்டார் [அவ்வையார் 1919 அனவரத நாயகம் பிள்ளையவர்கள் பதிப்பு, பக்கம் 34]

இவ்வாற்றால் புலவர் தலைகவிழ்ந்து ஒன்றும் பேசாது தமிழ்க் கழக மண்டபம் விட்டு அகன்றனர்.

மறுநாள் இடைக்காடர், ஔவையாரையும் திருவள்ளுவரையும் கூட்டிக்கொண்டு சங்கமண்டபம் வந்தார். அவர் சென்ற ஆற்றினையும் அங்கு நிகழ்ந்தவற்றையும் ஆறைப்போயிலான் கூறுமாறு:-

அண்ணாந்து ஏகிய சங்கத்தினர் அவ்வாண்டு ஆணித் திங்கள் வள்ளுவனாலும், ஔவையாலும் வீறிழிந்து தாழப் பிற்றைநாள் அவ்விருவரையும் கூட்டிப் பலகை குலை(வி)த்து மூழ்குவிக்க அதனுழைப்போந்த இடைக்காடன் மாட்டு

அது சங்கப்பலகை வீற்றிருந்தான் போக்கியான் “நீயிர் யாரேயோ என்றாற்கு இவன் (இடைக்காடன்) சொற்ற பாட்டு[10]:-

“இடைக்காட்டுறைவேன் யிரியோ ஒஒஒ றீ இஇஇ

படக்கைப் பறியோலை தட்டி – இடைக்காடன்

வந்தோம் சிறுபல கைத் தாலிப் பெருக்கெண்ணித்

தொந் தொந் தோந் தொந்தொன் தோந்தோம்”

                                  (ஊசிமுறி 1)

இப்பாட்டின் கருத்து:

இரியோ ஒஒஒறீஇஇஇ என்று ஒலி செய்து கையிலுள்ள பறியோலைத் தட்டுபவன். இடைக்காட்டில் உறைவேன். பெயர் இடைக்காடன்: சங்கப்பலகை குலைவிக்க வந்தேன் தொம் தொம் தோம் தொம் தொம் தோம் தொம் என்பது.

இவ்வாறு ஒலிக்குறிப்பைக் காட்டியது, மறைந்திருக்கும் ஒலி எழுத்தாளர் எழுத்தாணியால் ஓலைமுறியில் எழுதமுடியாவாறு செய்வதற்கேயாம்.

இங்ஙனம் மறுமொழி கூறியவுடனே தமிழ்ச் சங்கப் பலகை போக்கியானைக் கீழே தள்ளி இடக் குறுக்கம் செய்து கொண்டது.

உடனே அடுத்துள்ள பெருந்தேவன் “இடையனேயோ! புத்தி பிடரியேயோ” என முனுமுனுப்ப இடைக்காடன்

ஆம் ஆம் யாற்றங்கரையிலிருந்த ஓர் மாமரத்தில் ஓர் காக்கையானதிருந்து க்ஃக்ஃக்ஃஃ என்று கரைந்தது – அதை என் மகன் வையக்கோன் த் த் த் த் த் த் என்று எய்யும் அம்பு இல்லாமல் எய்தான் என்ற கருத்தடங்கிய ஓர் செய்யுளைக் கூறினான்.

சங்கப்பலகை அப்புலவனையும் கீழே தள்ளி இடங்குறுகிக் கொண்டது.

கொண்டதும் மலாடன் என்னும் ஓர் புலவன் இடைக்காடரை நோக்கி “ நீ ஓரான்” எனக் கைக்குறி காட்டினான்.

இவர் “எங்கும் உள்ள இறைவன் என்னிடமும் அமர்ந்துள்ளான். த் த் தொத் தொத் த் த் தொத் தொத் என்று கேலி செய்து கண்ணடிக்க வேண்டாம். சங்கப் பலகையை எஃகெஃகெஃகெஃகெஃகெஃ என வாட்டிக் குறுக்கி வைப்பேன் என்றார்.

அவனும் அப்படியே விழச் சங்கப் பலகை குறுகிவிட, நாகன் தேவன் என்னும் புலவன் தலையாடிக் கொண்டு – “பாடும் பாட்டடிப்போம்” என்று கூறினான். இடைக்காடனார் தம் தொந்தி வயிற்றைத் தடவி ஏப்பமிட்டுக் கொண்டு நாக்கு உதப்பி –

“பாட்டுக்கு பாட்டடிப்பாயோ? உன் பாட்டியைத் தூக்கி என் கஞ்சிக் கலயத்துள்ளே டு எவ்வ்வ் எவ்வ் என்று போட்டு ஓவ்வ்வ்வ் ஓவ்வ்வ்வ் ஓவ்வ்வ்வ் என்று உறிஞ்சிடுவேன் பார்” என்ற கருத்துள்ள செய்யுள் ஒன்றைக் கூறினார்.

அவனும் கீழே விழ பலகை குறுகி ஒட்டியது. அடுத்து நத்தத்தன் என்னும் புலவன் சங்கப்பலகை ஏறி – உழையனையும் தன்னையும் பின்னோனையும் தொட்டு ஏக்கழுத்தஞ் செய்து நோக்கினான்.

அதற்கு இடைக்காடர்:

“ஓரு கல்லெறிந்தால் கா கா கா கா க் காக் காக் காக் கா கா என்று சப்தமிட்டுக் கொண்டு ஆயிரம் காக்கை பறந்து விடும். அவனும் இவனும் உவனும் கூடினாலும் பகை வெல்லாது” என்ற கருத்துடைய செய்யுள் ஒன்றைச் செப்பினார். இதைக் கேட்டதும் பலகை அவனையும் கீழே தள்ளித் தன் அளவிற் குறுகியது.

மேல் கல்லாடன் வந்தமர்ந்து “நால் விரல் மேல் பெருவிரல் வைத்து நெற்றி தொட்டு ஈர்ப்ப இடைக்காடர்.

“பூளைப் பஞ்சைப் போல பூ உ உ உ உ உ உ உ திச் சூளைச் சாம்பலைப் பூசுபவரே! உம்மறைச் சொல் நம்மிடம் செல்லாது: என் மனம் கொண்டாலன்றி உம் மந்திரம் பயன்படாது என்ற கருத்துள்ள பா ஒன்று கூறினார்.

இவ்வளவில் ஓராறு எடுப்பாயுள்ள சங்கப் புலவரிருக்கை குலைந்து ஒழிந்தது. மறைவேயிருந்த ஒலி எழுத்தாளர் அடுத்த எடுப்புக்குள் ஓடி மறைந்தார்கள். இடைக்காடர் மேல் எடுப்புக்குச் சென்றார்.

அவ்வெடுப்பில் (ஈராறெடுப்பில்) உள்ள பலகையில் மாமூலன் என்னும் புலவன் இருந்தான். அவன் இவரைக் கண்டதும் பேச வாயெடுத்தான். நாமகள் வாயடைத்தாள். உடனே மனம் உழைந்து சில குறிகளை இவரிடம் மெதுவாய்க் காட்டிப் பேசினான்.

இடைக்காடர் “இ ல் ல் ல் ல் ல் ல் ல் ல் என்று ஒலிக்கும் ஏரல் என்ற ஜலசரம்; கறிஞ்சான் என்ற மரவண்டு இ ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் ஞ் என்று ஒலிக்கும். ஒய்ய் ஒய்ய்ய்ய்ய் என மொய்த்தும் ஓதப்படுவதை அறிபவரே! பையக் குளர வேண்டாம். பாய்ந்தோடிப்போம்” என்ற கருத்தடங்கிய செய்யுளைக் கூறினார்.

இடைக்காடர் இங்ஙனம் செவிப்புலனாகும் அணுத்திரள் ஒலியை வரிவடிவில் எழுதவொண்ணாதவாறு பலவாறாகப் பாடவே, ஒலியெழுத்தாளர் இவர் உரைப்பதை எழுத இயலாமல் தட்டழிந்து தடங்கெட்டு ஆண்டாண்டுள்ள பிறபிற எடுப்பில் மறைந்து பதுங்கிச் சென்றார்கள்.

ஒவ்வொரு புலவரும் வினவிய தொடைக்கெல்லாம் இடைக்காடர்  விடையிறுத்த அளவிலே, சங்கப்ப பலகையும் தொடர்ந்து தொடர்ந்து தன் அளவில் குறுகிக் கொண்டே வந்தது. அப்பலகை மேல் வீற்றிருந்த புலவரும் அமர இடமின்றி முறை முறையே தவறித் தவறிக் கீழ் இழிந்து போயினர்.

இவ்வாறே முத்தட்டு அமைந்த சங்கப் பலகையுள், ஒவ்வோரிருக்கையுங் குலைந்து, ஒவ்வோர் எடுப்பும் ஒடுங்கி, இரு தட்டும் சாய்ந்து விடவே சொச்சமுற்ற மூன்றாம் தட்டுள் முதல் எடுப்பு ஒழிய ஏனையவும் வெற்றிடமாகி புலவர் இன்றிக் கிடந்தன. கர்வபங்கமுறாது எஞ்சிய சங்கப் புலவர் சிலர் உரையாமே உரையாமே பறையாமே ஓடோடி வெளிப்போந்தார். இரண்டொருவர் இடைக்காடரை வஞ்சனை செய்து சங்க மண்டபம் விட்டு வெளியோட்டப் பலமாய் கைகளைச் செய்தனர். வேண்டிய அளவு மறைவிடமிருந்து பொற்காசு வாரி இறைத்தனர். காதற் பரத்தையரை விட்டு வலிதிற் பற்றி காடர் உள்ளக் கருத்துத் திரும்புமாறு செய்தனர்.

ஒன்றினாலும் அவரைத் திருப்பக் கூட வில்லை. எத்தகைய மாயமாலங்கள் இயற்றினும் இடைக்காடரோ ஒன்றுக்கும் மனம் மயங்கிலர்.

மும்மத வேழம் ஒன்றை விட்டு அவரை மாய்க்க வழி தேடினார்கள். இவரைக் கண்டதும் அது வீறிழிந்து ஓலமிட்டு ஓடியது. மந்திரதந்திர ஒட்டிய வகைகளைப் பிரயோகித்தனர். அவைகளால் இயற்றிய அப்புலவர்களே துன்பமுற்றனர். கிள்ளை ஒன்றால் கேலி செய்வித்தார். இடைக்காடனார் அதனைப் பொருட்படுத்தாது, அது கூட்டைவிட்டுப் பறந்தோடச் செய்தார். அத்துடன் வெற்றிடமாய சங்கப்பலகை ஒவ்வொன்றையும் தொட்டுக் குலையும்படி செய்து வந்தார். பின்னர் அதன் அட்டவணையைக் கைப்பற்றிச் சுற்றி வலம் வந்து, அஃது அமைந்துள்ள சூக்கும இயலை அறிந்தார்.

இறுதியில் “வல்லே தொல்லையொடு” சங்க அணை இறுகப் பற்றி (தேவகுலத்தோர் பொய்கையுள்) நீராழியுள் அஃது அமிழும்படி பாடினார். அது வருமாறு:-

“கத்திரி கெல்லெஃகங் கண்கூடாக் கண்ட்த்தைக்

கத்திரிப்பா டொட்டுங் கதையாமா __ளித்துலைக்கே

வஞ்சியான் பொய்யா மொழியான் வருமளவைத்

தஞ்சின்றி நீரமிழ்ந்து தாழ்” என்பது.

இதன் கருத்து:- கத்திரி என்ற செடியைக் கெல்ல அளித்த ஓர் இரும்பாயுதத்தைத் தன் கழுத்தை வெட்டுதற்குச் செலுத்தியது போல் ஆயிற்று (புலவர்களின் கவித்திறத்தை ஆய்ந்துணர்வதற்கு அளிக்கப்பட்ட இச்சங்கப்பலகையைத் தகாத வழியே செலுத்தினார்கள் சங்கப்புலவர்கள்). ஆகவே வஞ்சி நகர் பொய்யாமொழி என்ற பெருந்தகையார் இனி உலகில் தோன்றுமளவும் சங்கப்பலகையே நீ இந்த நீராழியுள் அமிழ்ந்து வாழ்க என்பது.

இங்ஙனம் சங்கப் பலகையைக் குலைத்து அதன் அடிமூலத்தை நீராழியுள் அமிழ்த்திய இடைக்காடர் வினாயமூர்த்தியை வாழ்த்தினார்.

அவ்வாழ்த்து வருமாறு:-

“ஓதிலென் ஓதா விடிலென்னை நால்வாய!

மோதகமே நாம் படைக்கின் முன்னாவாய் – ஆதன்

அறிஞரெனத் தேராரை யற்றொழியக் காட்டுஞ்

சிறிய பெரிய வாழ் தே எத்து”

இதன் கருத்து: நால்வாயனே! சிறிய உருவினால் பேர் அருள் புரிபவனே! உன்னை தியானித்தால் – (சஞ்சலத்தால் போதப்படுகின்ற மனதில் உன்னை உருவாக்கிக் கொண்டால்) நீ வெளிப்படுவாய்: அறிவில்லாதவன் என்றும் அறிஞன் என்றும் அறியாத சங்கத்தவரை கர்வபங்கம் செய்து ஒடுக்க வழிகாட்டியவனே! நீ வாழ்க என்பது.

“மோதகம் நாம் படைக்கின்” – என்றதற்கு ஓருரையாசிரியர், “மோதகம் என்ற உணவை உன்முன் படைத்துவிட்டால்” என்று உரை கூறியுள்ளார்.

இந்நிலையில் கடைச்சங்கப் புலவராகவும், அவர் காலத்தினை ஒட்டியவராகவும் உள்ள தமிழ்ப்புலவர்களுள் ஐஞ்ஞூற்று முப்பத்துமூவர் பெயர் இக்காலம் காணப்படுகின்றன.

முச்சங்க வரலாறு இவ்வளவில் எழுதப்பட்டு முடிவாயிற்று. இதில் எவ்வாற்றானும் ஆதாரமற்ற கதைகளும், இடக்கரடக்கர் எனக் கருதிய சொற்பொருள் கட்டுரைகளும் ஒழிக்கப்பட்டுள்ளன.

********************


* This copyright is reserved to the author. இது “தமிழ்ச்சங்கப் புலவர் வரலாறு” (Tamil Men of Letters) என்ற நூலின் முன்னுரையாக எழுதிய “சங்க வரலாற்றின்” ஒரு பகுதியாம். ஆராய்ச்சியும் இத்துடன் அடுத்து வரும்.

[1] அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் (449) என்ப.

[2] அவர்களாற் பாடப்பட்டன:- நெடுந்தொகை நானூறும் (அகநானூறு), குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது (150) கலியும் (கலித்தொகை), எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும் சிற்றிசையும், பேரிசையும் என்னும் இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமென்ப.

[3] அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப.

[4] அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் (49) என்ப.

[5] அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப.

[6] அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது உத்தரமதுரை என்ப என்பது.

[7] இவ்விரண்டடிகள் தொல். அகத்தி.சூ. நச். உரைமேற்கோள்.

[8] வேங்கை மார்பன் என்பவன் கானப் பேரெயிலின் தலைவன். பெரிய காட்டால் அரணாகச் சூழப் பெற்றிருந்தமையின், அவன் ஊர் கானப் பேரெயில் எனப்பட்டது. அத்தலைவனை வென்று புகழ் பெற்றமையின் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனவும் கூறப்பட்டான்.

[9] அவ்வெண்பா தனிப்பாடற்றிரட்டில் வந்துள்ளது:-

“இவ்வளவு கண்ணுடையாள் இவ்வளவு சிற்றிடையாள்

இவ்வளவு நல்ல இளமுலையாள் – இவ்வளவால்

நைந்த விடையின் நலமேவு மன்மதன்றன்

ஐந்து கணையால் வாடினள்.”

[10] இப்பாட்டின் குறிப்பாக உரைகாரர் காட்டியவற்றுள் சில “காடன் வந்தோம் தன்மை பன்மை மயக்கம்” இடவமைதி “பன்மைக்காகு மிடனுமாருண்டே” (தொல். சொல்.) என்பது பற்றி….தாலிப்பெருக்கு – மங்கலச்சொல். குலைவுகாட்டியது. ஈற்றடி இவன் குறிப்பு வழங்குமொழி – தட்டி “ஒன்றுபோற் காட்டி” – (திருக்குறள்) எனப் பெயராய் நின்றது.

ஊசிமுறி நூலறிமுகம்

ஊசிமுறி ஒன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

இடைக்காடன் பாடியது

ஆறைப் பொயிலான் உரை

நூலறிமுகம்:

‘ ஊசிமுறி ’ என்னும் சொல்லை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஊசிமுறி என்னும் சொல்லுக்கு இணையதளத்தில் விக்கிப்பீடியாவில் நாம் காண்பது :

“ ஊசிமுறி என்பது ஒரு தொகைச் சொல். ஊசியும் முறியும் என்பது இதன் விரி. ஊசி என்பது எழுத்தாணி. முறி என்பது எழுதும் ஓலை. ஒரு பாடலை எழுதும்போது அது முடிவதற்குள் இடையிலே ஊசி முறிந்து போன பாடல் ஒன்றுக்கு  ஊசிமுறி  என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. “ என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

சங்க காலத்துப் புலவர் பெருமக்களுள் ஒருவர் இடைக்காடர். இடைக்காடு என்னும் இடத்தைச் சேர்ந்தவர். { திருவண்ணாமலைச் சித்தர் இடைக்காடர் என்பவர் வேறு } சங்கத் தொகை நூல்களில் இவர் பாடியதாக பத்துப் பாடல்கள் கிடைக்கப் பெருகின்றன அவை : அகநானூற்றில் 6 பாடல்களும் {139, 194, 274, 284, 304, 374 } குறுந்தொகையில் ஒரு பாடலும் { 351 } நற்றிணையில் இரண்டு பாடல்களும் { 142, 316 } புறநானூற்றில் ஒரு பாடலும் { 42 } ஆகும். இவை தவிர “ ஊசிமுறி யொன்பத்தாறு “ என்ற நூலையும் யெழுதியுள்ளார். ஒன்பத்தாறு என்பது 9 x 6 = 54 பாடல்களைக் கொண்டது.   

இந்த 54 பாடல்களையும் ஓராறெடுப்பு, ஈராறெடுப்பு, மூவாறெடுப்பு என ஒன்பத்தாறெடுப்பு வரை ஒவ்வொரு எடுப்புக்கும் ஆறு ஆறு பாடல்களாகப் பகுத்திருக்கிறார் இடைக்காடர். எடுப்பு என்பது ஆறு பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு என்பதை நம் பண்டிதமணி யவர்கள் எழுதிய “ இடைக்காடர் வரலாறு “ என்கிற நீண்ட நெடிய கட்டுரையின் மூலம் தெரியவருகிறது.

தனிப்பாடற்றிரட்டு என்னும் நூலில் “ கம்பர் தனிப்பாடல் “ என்ற பக்கத்தில்

56 – 60 என்கிற பாடல் தொகுப்பில் 60 வது பாடலாக :

“ இடைக்காடர் பாடிய ஊசிமுறி

            ஆற்றங் கரையினருகி ருக்கு மாமரத்திற்

            காக்கை யிருந்து வெனக்காக்கைதனை

            எய்யக் கோலில்லாமல் . . . . என்றானே

            வையக் கோனாரின் மகன் “  —

என்றிருக்கிறது. ஊசிமுறி என்ற நூலைப் பற்றி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி இது மட்டுமே. முழுமையான ஊசிமுறி நூல் கிடைக்கவில்லை என் கிற நிலையில், நம் பண்டிதமணியவர்களுக்கு ஊசிமுறி யொன்பத்தாறு “ என்ற இந் நூல் “ ஆறைப் பொயிலான் “ என்பவர் உரையுடன் ஓலைச் சுவடி வடிவில் கிடைத்திருக்கிறது. அதனைப் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டிலிருந்து காகிதத்தில் படி யெடுத்துப் பிறகு அப் படியுளுள்ள சொற்களை ஆராய்ந்தறிந்து நெறிப்படுத்தி யெழுதியும் இருக்கிறார்.

இதில் பாயிரமாக ஒரு வெண்பா நீங்கலாகப் பதினெட்டுப் பாடல்கள் கொண்ட மூவாரறெடுப்பு வரை நெறிப்படுத்தி யெழுதியிருக்கிறார்கள். ஏனைப் பகுதிகள் ஏட்டுச் சுவடிப் படியாகவே இருக்கிறது. ஏதோ ஓர் காரணத்தால் அப் பணி முற்றுப்பெறவில்லை. ஊசிமுறி யொன்பத்தாறு நூல் வடிவம் பெற்று அச்சில் வராமைக்கு தமிழ் மாந்தரின் தவக்குறைவே என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும் 54 பாடல்களில் 22 பாடல்களுக்கு மட்டுமே மூலமும் உரையும் கிடைக்கப்பெறுகின்றன. ஏனையப் பாடல்களும் உரையும் முழுமையாகக் கிடைக்கவில்லை யென்பதை ஏட்டுப்படியை முழுமையாக நோக்கும் போது தெரியவருகிறது. கிடைக்கப் பெறாத அப் பகுதிகள் கரையான் அரித்தோ அல்லது வேறு வகையிலோ சிதிலமடைந்திருக்கக் கூடும்.

ஏட்டிலிருந்து அச்சுப்பதிப்பது என்பது அவ்வளவு எளிய செயலன்று.

ஓலைச்சுவடிகள் சிதைந்த நிலையில் பிரித்தவுடன் “ பொல பொல “ வென்று

உதிர்ந்து கொட்டும். கட்டை அவிழ்க்கும் போது கட்டுக் கயிற்றோடு பிய்த்துக்கொண்டு வரும் ஏடுகள் பல.  ஏட்டைப் புரட்டினால் நூல்கள் ஒடிந்து கீழே உதிரும். ஒட்டிக்கொண்டுள்ள இரண்டு ஏடுகளைப் பிரிக்க முயன்றால் இரண்டும் கிழிந்து போகும். இத்தனை அவதிகளையும் பட்டு நூலை முறைப் படுத்திப் பார்க்கும் போது பக்க எண்கள் இல்லாமல் ஏடு முன்னும் பின்னுமாக இருக்கும். ஒரு பக்கத்தில் அல்லது ஓலையின் கடைசி யெழுத்தை வைத்துக் கொண்டு அடுத்த ஓலையின் முதல் யெழுத்தையும் வைத்துக்கொண்டு இதற்கடுத்து இதுதானா என்று ஆராய்ந்து உறுதி கொண்டு இணைக்க வேண்டும். இவ்வாறு கடினப்பட்டுத்தான் பழந்தமிழ் நூல்களைப் பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார் என்று முக்தா சீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

பதிப்புப் பணியில் ஏற்படும் சிக்கல்களை டாக்டர் உ வே சா அவர்கள் தாம் யெழுதிய “ என் சரிதம் “ என்கிற தன் வரலாற்று நூலில் கீழுள்ளவாறு யெழுதி நமக்கு அறிவிக்கின்றார் :

  “ மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு இரா.  “ர” கரத்துக்கும்  “ற” கரத்துக்கும், காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் , சாபமாகத் தோற்றும்.  ஓரிடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையினை நான் சாடு என்றே பல காலம் எண்ணியிருந்தேன். தரனென்பதைத் தானென்றே நினைத்தேன். குருதி யென்பதைக் குந்தி யென்றெண்ணித் தடுமாறினேன். உரை இது , மூலம் இது , மேற்கோள் இது என்ற வேறூபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. “

     இவ்வாறு பதிப்புப் பணியில் ஏற்படும் சிக்கல்கள் நம் பண்டிதமணியவர் களுக்கும் ஏற்ப்பட்டிருக்கக்கூடும். இருந்தும் அவர்கள் ஏட்டுப் படியிலிருந்து பத்தொன்பது பாடல்களையும் அத்துடன் கூடிய உரையையும் நெறிப்படுத்தி யெழுதியிருக்கிறார்கள்.

ஊசிமுறியில் உள்ள பாடல்களுக்கு உரையாசிரியர் ஆறைப் பொயிலான் உரையெழுதும் போது  பாடல்களுக்குப் பொருள் சொல்லாது இலக்கணம் மட்டுமே எழுதிச்  செல்கிறார், சில சொற்களுக்கு மட்டும் பொருளுரைக்கிறார். எனவே இதனை ஓர் இலக்கண நூல் என்றே சொல்லலாம். உரையில் வரும் சொற்களுக்கு ஆங்காங்கே பண்டிதமணியவர்கள் அடிக்குறிப்பு யெழுதியுள்ளார் {உ.ம்}  ஓராறேடுப்பில் முதற்பாடலில் வரும் “ பறியோலை தட்டி “ என்பதற்கு ஆறைப் பொயிலான் உரை யெழுதும்போது “ தட்டி “ – “ஓன்றுபோற்காட்டி” யெனெ யெழுதுவார். அதற்குப் பண்டிதமணியவர்கள் :

  நாளென வொன்று போற் காட்டி யுயிரிரும்

   வாள துணர்வார்ப் பெரின் “ இக் குறளில் வரும் “காட்டி” என்னும் சொல்லை எச்சமாகக்கொண்டு பரிமேலழகர் உரை கூறியுள்ளார். அவர் பாடந் தர உரையுள் இக் கருத்து வெளிப்படுவதையும், அதனை மறுத்து அவர் உரைப்பதையும் காண்க.

ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி

  பன்மைக் காகு மிடனுமா ருண்டே

என்று அடிக்குறிப்பு யெழுதுகிறார்.

மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்” என்னும் தலைப்பில் புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் ஒரு பட்டியலைத் திரட்டித் தந்துள்ளார்கள் { இணைய தளம் விக்கிப்பீடியாவில் காண்க.} அதில் இடைக்காடர் பாடிய “ ஊசிமுறி “ யும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஓலைச்சுவடியிலிருந்து காகிதத்தில் கையெழுத்துப் படியாக்கி அவற்றில் காணப்படும் பாட வேறுபாடுகளையும் பல சங்கப்பாடல்கள் வழி ஒப்பிட்டு உண்மை வடிவம் கண்டு பொருளுணர்ந்து நெறிப்படுத்தி யெழுதிய பண்டிதமணியவர்களின் உழைப்பு வீணாகாமல் ஏடு பெயர்த்தெழுதியதை அப்படியே கணினியில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

தற்காலத் தமிழறிஞர்கள் யாரேனும் பண்டிதமணியவர்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்து “ஊசிமுறி”யில் உள்ள அனைத்துப் பாடல்களுக்கும் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த பொருள் கூறுவார்களேயானால் அவர்களின் அச் சிறந்த பணியைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பாராட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஊசிமுறி ஒன்பத்தாறு

ஊசிமுறி ஒன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

இடைக்காடன் பாடியது

ஆறைப்பொயிலான் உரை

தேனறா மகிழ்த் தொடையலு மௌலியுந் திருக்கிளர் குழைக்காதுங்

கானறா மலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயு

மோனமாகிய வடிவமு மார் பமு முத்திரைத் திருக்கையும்

ஞானதேசிகன் சரண : தா மரையுமென் னயனம் விட்டகலாவே.

திருஞானமுத்திரை துணை

நாவுண்டு நீயுண்டு நாமந் தரித்தோதப்

பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ – தேமுண்டு

வண்டுறங்குஞ் சோலை மதிளரங்கத் தெப்போழ்து

முண்டுறங்கு வானொருவனுண்டு

             – ஆறைப்பொயிலான் வாழ்த்து

திருஞானமுத்திரை துணை

ஊசிமுறி யொன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

ஆறைப்பொயிலான் உறை

பொதியத்தமர்ந்த மலையமாதவன் அடிபோற்றி நக்கீரனுள்ளிட்டோர் நாற்பத்தொன்பதின்மர் கூடலிற் சங்கம் பரித்து வரு நாளிற், புத்தியலாப் புகுந்தோர் ஏனையருடன் கூடிச் செருக்குற்று, அறைபோயடிப்பட்ட ஒலியெழுத்தாளரைப் பழுக்கச் செய்து, பாடியரங்கேற்ற வருநர் பாடல் ஏளுவாறு, கன்மாப்பலகையேறித் தோற்பித்துப், பழம்பாட்டென ஏடவிழித்துக்காட்டி, அவருள்ள மாழ்கச் செய்விக்க வேத்தூணியோர் அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வாரச் சொற்ற பாட்டு :-

வேத்தூணியோர் – அரசவை நாடியுண்ணும் பரிசிற் புலவர்.

1. ஓதியென மாறி யுயர்போங்கும் பெட்பணாஅ

யோதியுந் தேரையும் போ லோர்துறையின் – றுஅதி.

நடைமயிலா னாடி நமரொழியச் சேர்வா

கிடையாற் கடையா லிழி.

ஓதி – ஓந்தி. அணாஅய் – சங்கப்பலகை: விளி. நடைமயில் – ஔவை. சேர்வு – தொழிற்பெயர். ‘ஆ’முதனிலையா(க)க் கொள்வர் இவ்வாசிரியர்: ஈண்டு ‘ஆகு’ கொள்க. இடை – இடைக்காடன். கடை – திருவள்ளுவன்.

தலைத்தட்டு -.- [ஓராறெடுப்பு

அண்ணாந்தேகிய சங்கத்தினர் அவ்வியாண்டு ஆனித்திங்கள் வள்ளுவனாலும் ஔவையாலும் வீறு இழிந்து தாழப் பிற்றை நாள் அவ்விருவரையும் கூட்டிப் பலகை குலைவித்து மூழ்குவிப்பான், வேண்டியதனுழைப் போந்தான் இடைக்காடன் மாட்டு வீற்றிருந்தான் போக்கியான் “நீயிர் யா[வ]ரேயோ” என்றாற்கு இவன் சொற்ற பாட்டு:-

2. இடைக்காட் டுறைவெ னி(ய்) ரியோஒஒஒ றீஇஇஇ படைக்கைப் பறியோலை தட்டி:- இடைக்காடன் வந்தோஞ் சிறுபலகைத் தாலிப் பெருக்கெண்ணித்தொந்தொந்தோந் தொந்தொந்தோந் தோம்.

“இய்ரியோ” – இடையன் கூப்பீடு: ஒலி சுட்டியது: ஒகரம் மூன்றும் இகரம் மூன்றும் அளபெடை. “பறியோலை” – அவற்குரியது. “தட்டி” – ஒன்றுபோற் காட்டி[1]” [திருக்குறள் – நிலையாமை ] எனப் பெயராய் நின்றது. “காடன் வந்தோம்” தன்மைப்பன்மை மயக்கம் இடவமைதி.[2] “பன்மைக் காகு மிடனுமா ருண்டே” [தொல்.சொல் – எச்சவியல்] என்பது பற்றி: ஏனையரைக் கூட்டிக் கூறியதூ உமாம். “தாலிப்பெருக்கு” – மங்கலச் சொல்: குலைவு காடியது. ஈற்றடி இவன் குறிப்பு வழங்குமொழி.

3. பலகை அவனைத் தள்ளி இடக்குறுக்கஞ்செய்ய அடுத்துள்ள பெருந்தேவன் “இடையனேயோ, புத்தி பிடரியேயோ” என முறுமுறுப்பச் சொன்ன பாட்டு:-

யாற்றங் கரையி னருகிருக்கு மாமரத்திற்

காக்கை யிருந்து கஃஃகஃஃகெனக் – காக்கைதனை

யெய்யக்கோ லில்லாமை த்த்த்த்த்தெனவெய்தான்

வையக்கோ னானென் மகன்.

கஃஃ மிடற்றொலி காட்ட. தகரமெய் ஆறும் நாக்குட் கொட்ட. ஒலியெழுத்தாளர் எழுத்தாணியூசியால் முறியில் எடுப்பியாவாறு இங்ஙனம் பாடுகின்றான் ஆசிரியன். மேல்வருவனவும் இது. [2]

4. பலகை அவனையும் அங்ஙனமாக்க இடப்பக்கமுள்ள மலாடன் – மற்றையான், “நீ ஓரான்” எனக் கைக்குறி காட்டியவளவை பாடியது:-

எங்குமுளோ | னிங்ங்ங்குண்டு. | த்த்தொத்தொத் | த்தொதென்னுங்ங்ங்கி நையாடிக் கண்கொட்டல்:- பங்ங்ங்கிட்டெஃகெக்கெஃ | கெஃகெஃகெஃ | கெஃகென வாட்டி யஃகிவரச் செய்வே னதை.

“த்தொத்” – இதழ்குவித்துக் கூற. “என் நுங்கு” – என் = வினா. நையாடி இக்காலத்து நையாண்டி என வழங்கும். “கொட்டல்” – எதிர்மறை முற்று. பின்னடியில் உள்ளது உள்ளிழுப்பு. “அதை” பலகையைச் சுட்டியது. அஃது ஆளாவட்டத்திற் றன்பழைய அளவிற் குறுக்கஞ் செய்யலை இப்பாட்டாற் காட்டினான்.                                                 

5. மறுத்து அவன் வீழ, நாகன்றேவன் தலையாட்டிப் போந்தான் – “பாடும் பாட்டடிப்போம்” என்றாற்குக் காடன் வயிறுதைஇ ஏப்பமிட்டு நாக்குதப்பிச் சொன்ன பாட்டு:-

“பாட்டுக்குப் பாட்டு: நும்பாட்டடியைத் தூக்கி யெம் மீட்டுக் கலையத்து ளேஎவ்வ்வ்வென – போஒட்ட்ட்டோவ்வ்வ்வ் வோவ்வ்வ்வ் வோவ்வ்வ் வுறிஞ்சிடுவா மூவ்வ்வ்வ் வென்றொரு மூச்சு.

“பாட்டுக்குப் பாட்டு” – வினா. “ஈட்டுக்கலையம்” – காணத்தைத் துவைத்து ஆக்கிய வுணவு சிரட்டை யுண்மூடியாவிட்டு மேலிருப்பதைக் குறித்தது.

“ஏவ்” – புளியேப்பக்காரன் புறமிட்டாற் போற் கூறுக. ஓவ் என்ற மூன்றாமடி ஒலியுயிர்ப்பீடு. பின்னையது உள்ளிழுப்பு. மூன்றாமடியுள் முதலிரு சீரும் நான்கன்றலைச் சீரும் ஐந்து மாத்திரையாகக் கூற. “ஊவ்” நன்கு குவித்திழுக்க. ஒருமூச்சாய் உறிஞ்சிடுவாமென்க.

6. பெயர்த்து நத்தத்தன் வட்டியேறியான், கைகாட்டி “உழையனையுந் தன்னையும் பின்னோனையும் தொட்டு ஏக் கழுத்தம் செய்து நோக்கினார்க்குச் சொன்ன பாட்டு:-

[3]அஅவனு மிவனு முஉவனுங் கூஉடி

லெஎவனை வெல்லா ரிகலென்பி – ரொஒஒரு

கல்லெறியிற் காகாகா காக்காக்காக் காவென்

செல்லுமே யாயிரங்காக் கை

குறிற் சுட்டு மூன்றும் வினாவும் ஒருமையெண்ணும் அளபெடுப்பு. மூன்றாமடி ஒலி காக்கையின் குரல்: உரப்பிக் கூற. எனவென்னெச்சம் என் என நின்றது. மேல் வருவனவற்றிற்கும் முன்னதற்கும் இஃது ஒக்கும்.  

7. தொடர்ந்து அவன் வீழ்வாக அடுத்துக் கல்லாடன் வந்தமர்ந்து நால்விரன் மேற்பெருவிரல் வைத்து நெற்றி தொட்டீர்ப்பப் பாடியது:-

பூளைப்பஞ் சொப்ப்ப்ப்ப்ப்பூ உஉஉஉஉ | உஉஉதிச்

சூளைச்சாம் பற்பூசுஞ் சொல்வலீர் – கூஉழ்ழ்ழ்ழ்ப்

பப்பன்று நாஅம்ம் பயன்மனமேற் றாலன்றி

யொப்பாது நும்மறைச்சொல் லுண்ம்ம்

உகரத்திற் கெட்டும் ழகரமெய் க்கு நான்கும் கூட்ட பூஉதிச் சாம்பலென்க. பெயரொட்டுப் பண்புத்தொகை. மூன்றாமடியுட் கண்டது கொள்வோன் மனனுணர்வின்றி மறைமொழி பயன் கொடாதென்பது அற்றேல் தொல்காப்பிய காக்கைபாடினியர் ஒருவன் தாழவும் வாழவும் முறையே கூறினாரால் எனின் அவை அவர் மறைக் கூற்றான் வந்தவல்ல. அன்னோர் சொல் பழுதாகா நிலைமையுடைமையான் நேர்ந்தவை என்க. பப்பு – பருப்பு. பயல் – பையல மருஉ. மறைச்சொல் – மந்திரமொழி. செய்யுளியலுடையார் கூறியது நோக்கி உணர்க. உண்ம்ம் – உள்ளும் – இடைக்குறைத்திரிபளபெடை.

ஓராறெடுப்பு முற்றிற்று.

ஈராறெடுப்பு

8. மேல் அவனும் அங்ஙனமாக மாமூலன் வந்து வாயெடுப்ப நாமகள் வாயடைப்ப அவன் மனமுளைந்து சிலகுறி காட்டிச் சேற எண்ணி உழையரொடு பையப் பேசப் பாடியது.

இல்ல்ல்ல்ல் ல்ல்ல்ல்ல் ல்ல்ல் | லெனுமேர

லிஞ்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞ்ஞ் ஞெனுங் கறிஞ்சா

னெய்ய்ய்ய் | ய்ய்ய்ய் | யென : மொய்க்கு | மோத்தறிவீர் |

பெய்யக் குளளுதிர் பாய்ம்.

முதல் இரண்டடி பதின்மூன்று மாத்திரையளபெடுத்தன: அதற்கேற்றமாக் கொள்ள வோத்தில்லாமையின். “ஏரல்” – நத்தையில் ஓர்வகை. “கறிஞ்சான்” – ஓர்மரவண்டின் பெயர் வகை. மூன்றமடியுள் எட்டுமாத்திரை அளபெடை. “பாயும் பலகை விட்டு பாய்ந்தோடிப்போம்: திரிந்து நின்றது ஓசை நோக்கி.

9. பின்னர் வந்த நக்கீரன் அடடா எனப் பலகையினின்றுங் கையை மார்பின் புறமாக மடக்கி முன்னீட்டி வலிப்பப் பாடியது:-

ஏலேஎஎ | லய்யாஅஅ வேலேஎஎ லய்யாஅஅ

வேலேஎ | லெனக் கூறி யீழ் பரவ | —ரோஒஒஒல

மிட்டாழும் நாவாய்க் கயிறிசுப்ப ரித்திறமே.

யோஒஒஒஒ வுன்குலமஃ தோர்.

“அடடா” என்றற் கொருவாறு ஏலேயென இழித்து விளித்தவாறுந்தோன்றிற்று. அவன் குலவியல்பற்றி இவ்வாறிக் குறியிட்டொலி காட்டினான் ஆசிரியன் என்றறிக. ஈழ் – மது: புலைத்திறனுமாம்.                               [அ]

10. அடுத்துவருங் கபிலன் “ஏனையே | இத்துணை வம்பு: சும்மேபோம்” என்றாற்குப் பாடியது :-

போம் போம் போம் போம் போம் போ மென்றீராற் புன்பறைகள்

பும் பும் பும்  பும் பும் மெனப் பூரீக்ச் – சாங்ங்ங்ங்ங்

கா[ல் ந]மக் கீ | தன்று கடிதே பிறப்போரும்

வாலறிந்து நூலறியும் வாண்ம்ம்.

பும் என்ற ஒலிக்குறிப்பைந்தும் பறையொலி. தனிச்சீர் ஙகரவொற்றைந்து. ஈதன்று உகரக்குறுக்கம்: அலகுவிலக்க. வாண்ம்ம் – வாழ் – பகுதி. “கிளந்தவல்ல செய்யுளுட்டிரிநவும்” [தொல் – எழுத் – குற்றிய. எயஅ] என்பதாலமைக்க.

“நிலமிசை | வாண | ரலமர | றீர” [புறம் – 43] என்பதும் அது. “பிறப்போரும்” என்றமை பக்கல் நின்ற ஔவை துணைவராயினமை நோக்கி.     

11. அவனும் முன்னிலை யேயாகப் பரணன் வந்து “ஈண்டுள்ளார் புலவரல்லரோ? மதித்துரையாடும்” என்றாற்குச் சொற்றது :-

என்பக்க னிற்போ னிரும்புலவ னியாமதியேம்

புன் புலவீர் நும்மை. புலையரே | — யன்பின்றி

யேமாற்ற | விர்க் கிர்க் கிர்க் | கிர்க்கிர்க்கிர் | கென்றெழுதல்

காமாட்டிப் பையா அற்பாற் காட்டு.

“என்பக்கல் நிற்போன்” – வள்ளுவன். புலையர் – ஈண்டுக் குலஞ் சுட்டாது ஈரமின்மை குறித்து நின்றார்க்காயிற்று. “இர்க்” ஆறும் எழுத்தாணி ஊசிமுறிபாற் பூட்டி எழுத நேரும் ஒலி. காமாட்டி – இழிசினர்மொழி. மதிப்பிறக்கிக் கூறியதூஉமாம்: ஒன்றும் பற்றா விடரும் தூர்த்தரும் வேழம்பரும் நடரும் இம்மொழியான் அழைக்கப்படுதல் உண்மையாகவும். அன்னோர்பாற் காட்டென்றலின்.                               

12. பின்னர் அரிசில்கிழான் “நில்லாதேயும்: உட்காரும் கட்டவிழ்க்காதேயும்” எனக் கூறியாற்குப் பாடியது :-

கட்டவிழ்த் தேற்றைக் கழனியேர்ப் பூண்மாட்டி

யட்டியுற | நின்றல்க் லக் | லக்லக் லக் | லக்கென

னெட்டித் தழுநீரிர் | நீரிவ | ணில்லாதி

ருட்காரு மெட்டிப்போ யோர்ந்து.

ஏற்றை – காளை. ஆற்றலொடு புணர்ந்தவற்றிற்கெல்லாம் ஏற்றைக்கிளவியுரித்து”[4] என்றமையாற் கொள்க: இரண்டன்றொகை விரிக்க. அதனை ஓட்டுவோர் வாயொலிக் குறிப்பு “அல்கல்க்” என்பது: வலப்புறம் நுனி நாவொட்டி யுயிர்க்க. ஒலி ஆறு. நெட்டித் தழு நீரீர் என்றார் உழுவித்துண்ணும் வேளாளர் குலமெனினும் பொதுமை நோக்கி. நீரிர் – விளி. நீர் – தன்மை.                                                   [யக]

13. தொடர்ந்து மருத்துவன் தாமோதரன் எழுந்து சங்கங்குலையினும் ஒளிபோகாது என்னப் பாடியது:-

சங்கஞ் சுட் டொண்ணொளிபார் தாமோ தரவோடு

பங்கிட் டொழியுமியல் பார்த்தறிக —வங்ங்ங்கம்

நீறி லுயர்தங்கம் நீராடி னூறிழைக்குங்

கூறிற் குயக்குலச் சேய் கூறு.

சங்கம் – சங்குவளை: மணியாக் கட்டுப்படாது கவசத்துண்ணின்றும் பிளந்து புகைந்தோடும் இயல்புடைத்தென வங்கத்தியல்பு கூறியவாறு. வங்கம் – ஈயவிரசம்: வெண்பொன் அன்று. ஊறு – கொடுமை. குயக்குலம் – குலஞ்சுட்டியது. குயக்குலஞ் சேய் எனப்பாடங் கொள்வார் குயக்குலன் என்பான் சேய் என்ப.                                            

ஈராறெடுப்பு முற்றிற்று

மூவாறெடுப்பு

14. வீணை அவனையும் வீழ்த்திச் சுருங் கமுறையே சீத்தலை சாத்தன் ஏறித் தன் தலை காட்டி[5] உரம் தட்டி அமரச் சொற்றது:-

மார்பு தட்டும் பாஅல்ல் வணிக விருங்குரீஇ(க்)

கீர்ந்து கீஇஇஇஇஇஇக் கெக்கரிக்குஞ் –சோஒஒர்ந்து

போகே எ | றினையழியும் போ ஒதி புனங் கொல்லை

வேங் கையும் | வீட்டு மரும்பு.

பால்வணிகன் – வாணியவகுப்புளொன்று. குரீஇ – குருவி: அதனோசை கூட்டியொலிக்க. ஈகாரவளபெடைஆறு. “வேங்கை மலரத்தினைமுற்றும்” என்றல் காலநோக்கிய வழக்கு. அரும்பு வீட்டும் என மாற்றுக. வீட்டும் – மலரும்

15. பின்னர் வந்த கோதமன் “அத்துனை வல்லிரேயோ எங்கள் நாற்பத்தொன்பதிமரைவிட” என்றற்குக் கொட்டம் அடங்கப் பாடியது :-

ஓரொற்றாற் கீழ்வீடு மோத்துணராப் பார்ப்பானே[ய்]

போஒஒஒ யோஒஒஒ போஒஒஒ யோஒஒஒ

சோஒஒஒ காஅப்பா காஅஅஅ தேஎஎஎ

நோஒ மறையை நுவல்.

முதலடி பார்ப்பான் மெய்யாற்றல் கூறியவாறு. “ஏலாதான் பார்ப்பான்” [நான்மணி.] என்றார் பிறரும். ஒகரம் சீர் ஒன்றுக்கு மூன்றாக வளபெடுத்தது. நொ சோகாப் பாகாதே போ என்க. மறையைநுவல் பிறிதோர் தொடர். நொ – குற்றெழுத்தளபெடை.                                        

16. சிறுகருந்தும்பியான் “குலத்துக் குத்தக் ககோலம் வேண்டாமா” என்றாற்குப் பாடியது :-

கள்ளெங்குண் டங்ங்கேய் கருந்தும்பி பாய்ந்தூதுந்

தொள்ளை | வடித்த துணைக்காதா – சொள்ளைச்

சிறகடித்தோ ரீயார் சிவனார் தலையிற்

பறத்தலென் பாழ்மதியா பார்.

“தொள்ளைவடித்ததுணைக்காது” என்றது ஈழநாட்டுச் சான்றோராகலின் அவன் வடிவங்குறிப்பது. துணை – இரண்டு துளையெனவுங்கூறுப. ஈயார் – ஈ – திணைவழுவமைதி. அதனிழிவு நோக்கிச் சொள்ளைச் சிறகடித்தென்றார். தலையிலும் என்றது [ம்மை] தொக்கது. என் – வினா. பார் – அசை.

17. வெள்ளி வீதியார் வந்து பெரியோரே | முன்னிறையருள் கூட்டுவிக்க நாங்கள் இயைந்தோம் அல்லமோ என்றாற்குப் பாடியது:-

அம்ம்ம்ம்ம் மண்ண்ண்ண்ண் ணீஇஇஇஇ யிங்கறைவ

தெம்ம்ம்ம்ம் போல்ல்ல்ல்ல் வார்க்க்க் கியைபன்று

வம்ம்ம்ம் பணியார் வளைக்குழலி போம்ம்ம்ம்நுந்

தங்ங்ங்ங்ங் கொண் கரழைத் தார்.

ஈரடி, மகர ணகர லகர மெய்கள் அவ்வைந்தாவந்தன. நீ அளபெடை நான்கு. பின்னடிக் ககர மகர வொற்றுக்களுமது. ஙகர மெய்யைந்து. குழலி – விளி. அம்மணி குழலி நீ இங்கறைவது எம்போல் போல்வார்க் கியைபன்று நுங்கன வரழைத் தாராகப் போமென்றார் என்க.                          

18. அடுத்துக் கீரந்தையான் உறுத்தெழச் சொற்றது :-

காட்டேல் வணிக காளையார் சோர்ந்தீர்க்கு

மோட்டைச்செக் குர்ர்ர்ர்ர் ருர் ரென்னப் – போ | ஒட்ட்ட்ட்ட

காட்டி வெளித்தள்ளக் கண்பிழிவைக் காட்டிடேன்

மூட்டுக மூக்கணைப்பா மூறு

காளையார் – எருது : வழுவமைதி. ரகரமெய் ஆறு.

போட்ட – பெயர், அளபெடை நான்கு, பலவின் விகுதி வினையணைந்தது, உள்ளிட்டபொருள். கண் – ஆகுபெயர்: பழஞ்சீரை. உறுத்தெழுந்தோன் வாணியனாக அவன் குலத்தொழில் கூறிப் பஞ்சுப்பழன்சீரையான் எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயல் கூறினர். மூக்கணைப்பா – மூக்கணாங்கயிறு: நாலன் தொகை, ஈற்றிற்றொக்க் வுகரக் குறுக்கம் போந்தது செய்யுள் விகாரம்; மூறுக்கு மூட்டுக என்க. மூறு – எருது. ஆறையார் இக்காலத்துங் கூறுப. ஆறை – கொற்கையடுத்தவோரூர்.                                

19. செல்லூர்க் கொடுஞ் செங்கண்ணன் முனைந்து எதிர்ந்து கனைத்து வந்தமரப்பாடியது:-

கொக்கோஒஒ | கோஒஒஒஒ | கொக்கோஒஒ | கோஒஒஒஒ | கொக்கொக்கொக் | கென்னக் | குரலெழுப்புங் கோஒஒழிஇ – விக்கிக்

கனைத்தெழுந்து கால்போகக் காலன் வரும்போழ்

முனைந்தெதிர் காட்டேன் முறுக்கு.

ஐந்து சீரிரண்டாமடியுட் கொண்டார். “ஐஞ்சீரடியுமுளவென மொழிப” [தொல். செய்யு.]

வைகறை யெழுந்த கோழி யெழுப்புங் குரலியல் கூறி நோக்க. பின்னடியுள் ஐயப்பகுதி கடைக்காலத்தெழுந்து மேனோக்கி வளி ஈர்ப்ப வெழலைக் காலன் வாயாக் கூறியவாறு காண்க. போழ் – பொழுது. முனைந்தெதிர் – ஏவன்முற்று.

மூவாறெடுப்பு முற்றிற்று

தலைத்தட்டுலைவு கோப்பாடு


[1] “நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வால துணர்வார்ப் பெறின்” – இக்குறளில் வரும் “காட்டி” என்னும் சொல்லை எச்சமாகக் கொண்டு பரிமேலழகர் உரை கூறியுள்ளார். அவர் பாடாந்தர உரையுள் இக்கருத்து வெளிப்படுவதையும், அதனை மறுத்து அவர் உரைப்பதையும் காண்க.

[2] “ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே”

[3] இதன் முதலிரண்டடிகள் யா. காரிகையில் குணசாகரரால் உரைமேற்கோளாக எடுத்தாளப்பட்டுன. யா. விரு. அசையோத்து. எ. மேற்கோள்.

[4] தொல். மரபி.

[5] “வள்ளுவன் முப்பாலாற் – றலைக்குத்து தீர்வு சாத்தற்கு” என்ற [திருவள். மருத்துவன் தாமோதரன் வாக்கை ஈண்டு நோக்கிக் கொள்க.

மாலதீமாதவம் – முதல் அங்கம்

மாலதீமாதவம்

பிரகரணம்[1]

முதல் அங்கம்

(5/11/1931)

முடியின் அணிகலனாயிலங்குங் கபாலங்களி[2]னிறைந்து ஒழுகுங் கங்கை நீரையுடையனவும், மின்னலை நிகர்த்த நெற்றிக்கணங்கியின் சுவாலைகளுடன் கலந்து செவ்விய காந்தி பொருந்தியனவும், சிறிதலர்ந்த தாழைமடலோ! என ஐயுறத்தக்க இளம்பிறையமைந்தனவும், கொடிபோன்ற அரவங்களாகிற கொண்டைமாலைகளாற் கட்டப்பட்டனவுமாகிய பசுபதியினுடைய சடைகள்[3] உம்மைக் காக்கவேண்டும். (1)

சிவபெருமான் தாண்டவம் புரியுங்கால் நந்தி தேவனால் முழக்கப்பட முரசொலியால் அழைக்கப்பட்டு வரும் குமரக்கடவுளது மயிலைக்கண்டச்சத்தால், தனதுடலைச் சுருக்கிக்கொண்டு, கயமுகக் கடவுளது நாசிப்புழையில் அவருடைய அரவம் களிப்புடன்[4] நுழைய, கன்னங்களினின்றும் பறந்த வண்டினங்களின் ஒலியால் திசைமுழங்கப் பிளிறொலியுடன் கூடிய அவரது முகத்தின் அசைவுகள்[5] உங்களை என்றும் காக்கவேண்டும். (2)

பிரமனது[6] கபாலங்களிற் புகுந்து தடைப்படுதலாற் பெருக்கமடைகின்றனவும், பல்வரிசைகளுட் புகுந்து சுழலுதலாற் கலகலவென வொலிக்கின்றனவும், கண்மூக்குச் செவிகளாகுஞ் சிறுபுழைகளுட் புகுதலாற் குமிழி செய்தொலிக்கின்றனவும் கன்னத்தில் அடிபடுதலாற் சிதறிய திவலைகளையுடையனவுமாகிய ஈசனுடைய வேணியணி கங்கையின் அலைகள் உங்களைக் காத்தல் வேண்டும். (3)

எந்தக்கண்ணினுடைய இமைகளின் செம்மைக்கு, மின்னற்குழு யாவும் ஒருசிறிதளவா அமையுமோ, சிறிது திறந்திருக்கும் எந்த அழற்கண்ணில் காலனாகிற இயமானன், உலகமனைத்தையும் ஓமஞ் செய்பவனாவனோ, அத்தகைய, சுவாலைகளான் மிகவுமெரிக்கப்பட்டு சடைமதியினின்றொழுகும் அமுதப்பெறுக்காற் சிறிது “சீத்” எனவொலிக்கும் கடைவிழியுடையதும் காமனையெரித்ததுமாகிய புராரியினுடைய நுதற்கண் உங்களைக் காத்தல் வேண்டும். (4)

நாந்தி[7]யின் முடிவில்

சூத்திரதாரன்[8] – போதும், போதும். உலகமனைத்துக்கும் விளக்கனைய கதிரவன் முற்றிலும் உதயமாயினான். ஆதலின் அவனைப் புகழ்ந்து வணங்குவேன். (வணங்கி) உலகையே தனதுருவமாகக் கொண்ட தேவனே! நீர் மங்கலவொளிகளுக்கு நிலைக்களனாகிறீர். எல்லா நன்மைகளையும் பயக்கும் நற்றிருவை யென்பால் நிலைப்படுத்தியருளவேண்டும். உலகபதியான பகவனே! உன்னை வணங்கியவென் தீவினையனைத்தயும் விலக்கி, மங்கலத் தொடர்புடை மங்கலங்களைத் தந்தருள வேண்டும். (5)

வேடசாலை[9]யை எதிர்நோக்கி

மாரிட[10]! அரங்கமங்கலங்கள் சீர்பெறச் செய்யப்பட்டுள்ளன. காலப்பிரியநாதனாகிய[11] சிவபெருமான் பவனி விழாக் காரணமாக மக்கள் பலதிசையானும் வந்து குழுமியுள்ளார். பரத நூல் வல்லுனராகிய நமது நடிகர் அதனைப் பொருட்படுத்தாதிருத்தலென்னை? இதுபொழுது “நீ புதியதொரு நாடகத்தை நடித்து எங்களையின்புறுத்துக” என அறிஞரவையினாற் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆதலின் அவராற் குறிக்கப்பட்ட குணங்கள் நிறைந்த ஒரு சரிதத்தை நடித்து அவரை யின்புறுத்துவோமாக.

நடன் – (பிரவேசித்து) பாவ[12]! பல்கலையுணர்ந்த பெருமைசாலாரிய[13] மறையவர் எடுத்துக் கூறும் அக்குணங்கள் யாவை?

சூத்திர – பெரும்பாலுமறிதற்கரிய[14] இரசங்களுடைய பிரயோகங்களும் இயற்கையன்பினால் அழகு பொருந்திய செயல்களும், பெருந்தன்மையும்[15], நன்கு பொருந்திய காமசூத்திரமும்[16], வியக்கத்தக்க காதையமைப்பும்[17], சொல்திறனும், ஆகிய இவை அவர் கூறுங் குணங்களாம். (6)

நடன் – பாவ! அத்தகைய குணங்கள் நிரைந்த நாடகம் புலப்படுவதரிதாகலின் அஃது எங்ஙனமுளது?

சூத்திர – (ஆலோசித்து) நினைவு கூரப்பட்டது; தக்கண தேயத்தில் பதுமபுரமென்னும் பதியுளது. அதில் தித்திரசாகையினரும்[18], பந்திபாவனரும்[19], காசியபருடைய கோத்திரவழி வந்தாரும், ஐந்தங்கி[20]வழிபடுவாரும், சோமரசம்[21] பருகுவாரும், அநுட்டானவொழுக்கமுள்ளாரும் உதும்பரமென்னும் பெரியகுலத்தாரும் ஆன்மஞானிகளுமாகிய சில மறையவர் உளர்.

அத்தகைய சுரோத்திரியர்களான[22] அவர் ஐயமற உண்மைப்பொருள் தெளிதற்பொருட்டே எஞ்ஞான்றும் நிலைத்த கல்வியிற் கேள்விமுயலுகின்றனர். இட்டம்[23], பூர்த்தம்[24], இவற்றைச் செயற்கருதியே பொருளையும், மகவு கருதி மனையையும், தவங்கருதி ஆயுளையும் பெறவிரும்புகின்றனர். (7)

அக்குடியிற் பிறந்த பெருமைசால்பட்ட கோபாலனுடைய பேரனும், தூய புகழ் படைத்த நீலகண்டர், சாதுகருணியென்னு மிருமுது குரவர்க்குமுதித்த நற்புதல்வரும், இலக்கணம், மீமாஞ்சை, தருக்க முதலிய நூல்களையுணர்ந்தவரும், சிரீகண்டரெனு மியற்பெயரியராய்ப் பவபூதி[25]யெனப் புகழ்படைத்தவருமாகிய தனிக் கவியொருவர், முற்கூறியாங்கு குணநல நிரம்பியதாய்த் தாமியற்றிய நாடகத்தை நம் போலிய நடிகர் பாலியற்கையன்பு கொண்டு நம்பாலிட்டனர்.

எந்த நாடகத்தில் இவ்வுரை நடை மிளற்கின்றதோ!

(8) “இந்த நமது நாடகத்தையிகழ்ந்து[26] பேசுமொருசிலர் அறியும் பொருள் யாதெனவுரைத்தலரிது; ஆதலின், அவர் பொருட்டு எனது முயற்சி பொருந்தாது. இவ்விரு நிலத்தின்கண் முடிவற்ற காலத்தில், என்னை நிகர்த்த ஓரரும்பெரும்புலவர் ஒரோவிடத்துண்டாதல் கூடும்.”

ஆதலின், “அந்நாடகத்தை நடித்தற் பொருட்டு வாச்சியங்களுடன் கூடிய ஆடல்பாடல்களிலும், வேடம் பூட்டலிலும், நீவிர் ஊக்கமுறல் வேண்டும்” என இசைபாடுவோரிடம் கூறுவாயாக. ஆக்கியோன் பெருமையைத் தாமே வருமாறு கூறியுள்ளார்.

தகைமைசேர் “ஞானநிதி”[27]யென்னும் எனதாசிரியர், அவர்தம் அறிவின் றிறனால் அப்பெயர் காரணப்பெயராவமையப்பெற்றாரெனின், அவருடைய குணங்களைப் புகழ்தலால் அவரது மாணவனாகிய இவனது குணங்களும் வெளிப்படும். (9)

மேலும்; “வேதம், உபநிடதம்[28], சாங்கியம்[29], யோகம்[30] ஆகிய இவற்றின் பயிற்சியால் அறிவு நிரைந்தவன்” எனப்புகழ்ந்து கூறுவது பயனற்றதாகும்; ஏனெனில் அவையிந்நாடகவியலுக்கு யாதொரு பயனும் பயக்கமாட்டா. கொண்ட பொருளை யுணர்த்துந் திறனும், ஓசையுடைமையும்[31], ஆழமுடைமை[32]யும், சொற்களுக்கு அமையுமாயின், அவ்வமைப்பே கலைவன்மை[33]க்கும் கவிவன்மைக்குந் தோற்றுவாயாகும். (10)

நடன் – வேடவுறுப்புக்களியாவுந் தன்னடிகர்களுக்குத் தம்மால் நன்கு பயில்விக்கப்பட்டுள்ளன. புத்த மதத்தைச் சார்ந்து துறவறம் பூண்ட கிழமைப்பருவத்தளான காமந்தகியின் முதல் வேடப்பகுதியைத் தாங்களே பயின்றவர். யானுமவன்தன் மாணவியாகிய அவலோகிதையின் வேடத்தைப் பயின்றவன்.

சூத்திர – அதனால் என்னை?

நடன் – இந்நாடகத்தின் றலைவனும், மாலதியின் மணாளனுமாகிய மாதவனது வேடத்தைப் புனைதல் யாங்ஙனம் அமையுமென்பது எனது ஐயப்பாடு.

சூத்திர – கலகஞ்சன், மகரந்தன், இவர் பிரவேசிக்கும் அமையமே மாதவனது பிரவேசமாதலின், இங்கு அதைச் சிந்தித்தல் வேண்டாம். ஆதலின் யாவும் நன்கு அமைக்கப்பட்டுள்ளனவேயாம்.

நடன் – ஆயின், அந்நூலை நடித்து இவ்வவையினரை யின்புறுத்துவோமாக.

சூத்திர – ஆம் அங்ஙனமே செய்வோம். இதுபொழுதே யான் காமந்தியாயினேன்.

நடன் – அங்ஙனமே யானுமவலோகிதை.

என்றுரையாடிச் சென்றனர்.

பிரத்தாபனை[34]

உட்புகுதலை நடித்து காஷாயச் சீலையுடுத்திய வேடம் பூண்டு இருக்கை நிலையிற் பிரவேசிக்கின்றனர்.

காம – குழந்தாய்! அவலோகிதையே!!

அவ – பெரியோய்! கட்டளையிடல் வேண்டும்.

காம – மங்கலனிறைந்தவரும்[35], பூரிவசு[36], தேவராதன்[37] இவர்களது மக்களும் ஆகிய மாலதீ[38]மாதவற்கு விரும்பத்தக்க[39] திருமணவினை யாங்ஙனங் கூடும்.

(களிப்புடனிடக்கண் துடித்தலை நடித்து)

எனதுள்ளக் கிடக்கையினுண்மையையறிந்து எதிர்கால நலத்தை  வெளியிடுவது போன்ற கண் வாமமாயினும்[40], தாட்சிண்யத்தையடைகிறது.[41] (11)

அவ – பெரியோய்! தங்களுடைய இம்மனக்கவலை மிகையே!! இது விந்தையினும் விந்தை; சீரசீவரத்தை[42] யுடுத்துமியல்புடையாரும், ஐயமேற்றுண்டு[43] வாழ்வாருமாகிய துறவுநிலையிலுள்ள தங்களையும், அமைச்சர் பூரிவசு, இத்தகைய துன்பந்தருஞ் செயல்களில் நியமனஞ் செய்கிறார். தாங்களும் இன்னிலையிடரை[44] வலிந்திருக்கும் நன்முயற்சிகளையுமிவண்பாற் படுத்துகின்றீர்கள்.

காம – இங்ஙனங் கூறலாகாது. பூரிவசு என்னுமப்பெரியார், செயற்குரிய விடயத்தில்[45] என்னை நியமித்தானென்பது; நட்பின் பயனும், அன்பின் பிழம்புமாகும். ஆதலின், நம்மித்திரன் பெறவிரும்புமது, எனதுயிரானும் அல்லது அதனிற் சிறந்த தவத்தானும், அவர்கைவரப்பெற்றிடின் அதுவே எற்குச் சிறந்த செயற்பயனாம்.[46] (12)

இதனை நீ யறிந்திலையோ! கல்விபயிலும் பொருட்டுப் பலவிடத்தும் எங்கட்குடனிருக்கை நிகழ்ந்த அக்காலம், நமது சௌதாமினியின் முன்னிலையில், பூரிவசுதேவராதன் இவர்களுக்கு “நம்மால் மக்களின் றிருமணத்தொடர்பு கட்டாயஞ் செய்யத்தக்கது” என ஓர் உறுதிப்பாட்டை யானே செய்வித்தேன். அது கருதியன்றே இப்பொழுது விதர்ப்ப நாட்டரசனது மந்திரியான தேவராதன் தன் மகன் மாதவனை யான்வீட்சிகீயைப்[47] பயிலுதற்பொருட்டு குண்டின நகரத்தினின்றும் பதுமாவதிப்பதிக்கு அநுப்பியப் பிரதிக்கினையை நிறைவேற்றினான். ஆதலின்

(13) மக்கள் மணவினைகுறித்த இவ்வுடன்பாடும் அன்பிற்சிறந்த நண்பனாகிய பூரிவசுவுக்கு நினைவுறுத்தப்பட்டதுடன், அவரையூக்கற்[48] பொருட்டும், தன்மைந்தனும் உலகில் ஒப்புயுர்வற்ற குண நலனிறைந்தவன் எனவும், வெளியாக்கப்பட்டான்.

அவ – அமாத்தியன், மாலதியை மாதவனுக்கு ஏன் தானே மணஞ் செய்வித்தல் கூடாது? எது கருதியிக்களவு மணத்திற்றங்களைத் தலைப்படுத்துகின்றார்?

காம – அரசனுடைய காமத்துணைவனாகிய நன்தனன் என்பான் அவ்வரசன் மூலமாக மாலதியை மணக்க விரும்பி யவளைக் கோறுகின்றான்; அதனை வாய்மொழியாக மறுத்திடின் அரசன் சினமுறும். ஆதலின் இவ்வுபாயம்[49] நலம் பயப்பதாகும். (14)

அவ – என்னே! என்னே!! அமாத்தியர் மாதவனது பெயரையு மறிந்திலராய் அவனிடத்து விருப்பமற்றவராகவே காணப்படுகிறார்.

காம – குழந்தாய்! அது பாசாங்கடியாகும்[50]. அங்ஙனமே, மாதவனும் மாலதியும், வாலிபராதலின்[51] வெளிப்போந்த மெய்ப்பாட்டுக் குறியினராயினும் தங்கள் மனப்பான்மையைப் பெரிதும் மறைத்தல் வேண்டும். (15)

இக்குழந்தைகளின் காதற் செய்தியை உலகமறியும்; அதனால்[52], அரசனையும் நந்தனனையும் வஞ்சித்து நாம் நலம் பெறுதலெளிதே.(16)

பார்! அறிந்த ஒருவன்[53] பிறிதொரு செயலில் முயன்றவன் போல எவ்வாற்றானுந்[54] திறலமைந்து அழகு பொருந்தப் பேசுமியல்பினனாய், பிறராலூகித்துணரத்தக்க மிக நுண்ணிய தன் செயல்களையு மவரறியாவண்ணம் மறைத்து, யாவரையுந் தந்திரத்தான் வஞ்சித்து, நடுவன் போலக் காணப்பட்டுத் தனது பொருளைச் சாதித்துக் கொள்வானும், அவண் மோன நிலையை யெய்துவானுமாவன். (17)

அவ – தங்கள் கட்டளைப்படியானும் அந்தந்த முறை[55]யாகக் கூறிப் பூரிவசு மந்திரத்தை யணித்துள்ள[56] இராச வீதியில் மாதவனை நடமாடச் செய்தேன்.

காம – மாலதியினது செவிலித் தாயின் புதல்வி[57]யான இலவங்கிகையினால் மேல்வருஞ் செய்தி யெற்குக் கூறப்பட்டது.

“அருகிலிருக்குமிராச வீதியில் அடிக்கடி நடமாட்டஞ் செய்யும் மாதவனை, மாலதி தனதில்லத்தின் மேன்மாடத்தமைத்திருக்குஞ் சாலேகத்தின் வாயிலாகப் புதிய மன்மதனை[58] நோக்கும் இரதிதேவி போல அவனைப் பலகாலும் கண்டு வேட்கைப்பெருக்குண்டு[59] அதனால் நைந்துருகும் மெல்லிய தன் அவயவங்களுடன் வருந்துகின்றாள் என்று. (18)

அவ – உண்மையே! அதுபற்றியே, காமநோயைத் தணித்தற்பொருட்டு மாலதியாலெழுதப்பட்ட மாதவனது வடிவத்தை, யிலவங்கிகை யிப்பொழுதே மந்தாரிகையினிடம் கொடுத்தனள்.

காம – (ஆலோசனை செய்து) நன்கு செய்தனள் இலவங்கிகை! மாதவனது அடிமையாகிய கலகஞ்சன் புத்தராலயத் தாதியாகிய மந்தாரிகையை மணக்க விரும்புகின்றான். ஆதலின் இங்ஙனஞ் செய்யின், மாலதியின் றிருமணமினிது நிறைவேறுதற் கேதுவாக இப்படிவம் மாதவன்பாற் சேரும்; என்பது அவள் கருத்து.

அவ – மாதவனுக்குப் பேரவா விளைவித்துக் காமவிழா நிகழும் பூந்தோட்டத்திற்கு இன்று காலைப்பொழுதிலவனை யனுப்பியுள்ளேன். அங்ஙனம் மாலதியுஞ் செல்லுவாள். ஆதலின் அங்கு ஒருவர்க்கொருவர் காட்சியும் நேரும்.

காம – நல்லது குழந்தாய்! நல்லது!! யான் விரும்பத்தக்க இப்பெருமுயற்சியால் எனது முதன் மாணவி சௌதாமினியை நினைவுறுத்துகின்றாய்.

அவ – பெரியோய்! அச்சௌதாமினி வியக்கத்தக்க பல மந்திர சித்தி பெற்றவளாய், இதுபொழுது சிரீபரூப்பதத்தில் காபாலிக விரதத்தை யநுட்டிக்கின்றாள்.

காம – இச்செய்தி யெங்ஙனம் நீயறிந்தனை?

அவ – இந்நகரத்தின் முதுகாட்டிற்கருகில் கராளை யென்னுங் காளி கோயில் உளது.

காம – ஆம் அக்காளி தேவீ உயிர் பெலியில் விருப்பமுள்ளவள் எனப் பிடிவாதிகளின் வழக்குமுளது.

அவ – அந்தச் சிரீபரூப்பதத்திலிருந்து வந்து இதற்குச் சமீபித்திருக்கும் அம்முது காட்டிற்றங்கி தலையோடுகளைத் தரித்துக் கொண்டு மந்திரசித்தி செய்யும் அகோரகண்டன் என்பவனுடைய சிறந்த மாணவியாகிய கபாலகுண்டலை யென்பாள், மாலைப்பொழுது தோரும் இங்கு வருவாள். அவள் கூற இதனை யான் அறிந்தேன்.

காம – இவையாவுஞ் சௌதாமினி யானிகழ்ந்தனவென ஊகித்துணரக்கிடக்கின்றன.

அவ – இவனைக் குறித்துப் பேசியது போதும். பெரியோய்! மாதவனைப் பிரியாது உடனிருக்கும் வாலிப நண்பனாகிய மகரந்தனும், நந்தனனுடைய சகோதரி மதயந்திகையை மணப்பானாயின்; அதுவும் மாதவனுக்கு இரண்டாவது விருப்பம் நிறைவேறியதாகும்.

காம – அதிலும் எனதன்பிற்குரிய தோழி புத்தரக்கிதை முன்னரே யென்னால் நியமனஞ் செய்யப்பட்டுள்ளாள்.

அவ – அறிவிற் சிற பெரியோய்! நன்கு செய்தமைத்தீர்கள்.

காம – இனி எழுக; மாதவன் செய்தியைச் சென்றறிந்து மாலதியையே காணுவம்.

(என எழுகின்றனர்)

காம – (ஆலோசித்து) மாலதியோ பிறர் அறிதற்கரிய ஆழ்ந்த கருத்துடையவள். ஆதலின் இதிற் சிறந்த தூதையமைத்து இம்முயற்சியைச் சிறப்புறச் செய்தல் வேண்டும். முற்றிலும் மங்கலனிறைந்த மாலதி நற்குடிப் பிறந்த தன் காதலனை, யாம்பலை யின்புறச் செய்யும் சரற்கால நிலவுபோல இன்புறுத்துக. காளைப்பருவ மெய்து மவனும்[60] நற்பேறு பெறுக. இருவர்க்கும் ஒத்த குணங்களைப் படைக்கும் திறலமைந்த பிரமனது சிறப்புறுஞ் செயலும் நற்பயன் பெற்று யாவரானும் புகழத்தக்கதாகுக. (19)

(எனச் சென்றனர்)

விட்கம்பம்[61]

(கலகஞ்சன் ஓவியத்தைக் கையிலேந்திக்கொண்டு பிரவேசிக்கிறான்)

கலகஞ்சன் – காமனைப் பழிக்கும் கட்டழகினால் மாலதியின் மனப்பான்மையைக் கவர்ந்த மாதவனை யெங்குக் காணலாம்; (சிறிது சென்று) வாட்டமடைந்துள் ளேனாதலின், இப்பூம்பொழிலிற் சிறிது இளைப்பாறிய பின்னர் மகரந்தன் றுணைவனாகிய மாதவனைக் காண்பேன்.

(பொழிலுட்புக்கு உட்காருகிறான்)

(மகரந்தன் பிரவேசிக்கிறான்)

மகரந்தன் – மாதவன் காமற் பொழிற்குச் சென்றனன் என்று அவலோகிதை கூறினள்; ஆகுக; யானு மங்ஙனமே செல்வேன். (நடந்து நோக்கி) நந்துணைவன் இங்ஙனமே வருகின்றான். (கூர்ந்து நோக்கி)

(20) இவனிடத்து, நடை மந்தமாகவும் கண் சூனியமாகவும்[62] யாக்கை செம்மையற்றும்[63] நெட்டுயிர்ப்பமைந்து[64] மிருத்தற்குக் காரணம் யாதாயிருத்தல் கூடும்? இஃதன்றி வேறென்னை? உலகிற் காமனாணை யுலவுகின்றது; காளைப்பருவமுங் காமக்கவலையை விளைக்கின்றது; இயற்கையழகும் மனக்கவர்ச்சியும் பொருந்திய பொருள்களும்[65] மனவலியைக் கெடுக்கின்றன.

(இங்ஙனங் குறித்த நிலையின் மாதவன் வருகிறான்)

(21) மாதவன் – மதியன்னவழகொழுகு முகத்தவளை நெடிது நோக்கி, யெனது மனம், வெட்கத்தை விடுத்து விநயத்தைத் தடுத்து, தன்வலியைக் களைந்து முதற்கட் பார்வையிலேயே, தக்கவின்ன தகாதனவின்ன, என்னும் உணர்வற்றுக் கூற வொண்ணாது மாறுபடுகின்றது.

 (22) விந்தை! அவள் முன்னிலையில், எந்த எனது மனம், ஒப்புயர்வற்ற வடிவழகைக் காண்டலின் உண்டாம் மகிழ்ச்சியால் வியந்தசைவற்றதும், இதனிலும் அறிதற்குரிய பொருள் பிறிதொன்றுமில்லை யென்றே கருதுவதும், அமுதக் கடலின் மூழ்கியாங்கு, களிப்பெய்திப் பிற செயலற்றதும் ஆயினதோ! அம்மனமே, அவள் இல்லாதொழிந்துழியழற்சுட்டாங்கு வருந்துகின்றது.

மகரந்தன் – (மாதவன் பக்கலணுகி) நண்ப! மாதவ! நண்பகல் வருத்துகின்றது; ஆதலின் இவண் வருக; இப்பொழிலிற் சிறிது நேரம் அமர்வோம். (இருவரும் செல்லுகின்றனர்)

கலகஞ்சன் – மாதவனும், அவர்க்குத் துணைவரான மகரந்தனும் இப்பொழிற் கணிகலனாயிங்ஙனமே யிலங்குகின்றனரா? காமவேட்கையான் வருந்தும் மாலதியை யின்புறுத்து மிவர்படிவத்தை யிவர்க்குக் காட்டுவேன்; அன்றேல், இவரிளைப்பாறிச் சுகமுறுக; பிறகு காட்டுவேன்.

மகரந்தன் – அப்பொழுதலர்ந்த மலரிதழ்களின், துவர்த்துக்[66] குளிர்ந்த நறுமணங் கமழு மிச்சோலையிற் சாம்பேயத் தருவினடியிலமர்வோம்.

(இருவரும் அங்ஙனமே யிருக்கின்றனர்)

மகரந்தன் – அன்ப! மாதவ! நகரமகளிர் யாவரானும் நிகழ்த்தப்பட்ட விழாக்காணும் பொருட்டு அழகிய காமற்பொழிற் சென்றுவந்த வுன்னை, அயலானைப் போலவே யான் கருதினேன்; அங்குக் காமற்கணைக்கு நீ யிலக்காயினையோ?

(மாதவன் வெட்கித் தலைகுனிந்து நிற்கிறான்)

மகரந்தன் – (நகைத்து) செவ்விய மரைமலரனைய நினது வதனத்தை, யேன் குனித்து நிற்கின்றனை? பார்.

(23) உலகம் படைத்த பிரமனிடத்தும், சிவபெருமானிடத்தும், மயக்கமுற்றிய ஏனைய உயிர்களிடத்தும், ஒத்த செயலமைந்த அச்சித்தசன் பெருமைப் பிரசித்தமே; ஆதலின், நாணத்தாற் றன்னுள்ளக் கிடக்கையை மறைக்க முயலுதல் வேண்டாம்.

மாதவன் – அன்ப! உன்னிடங் கூறத் தகாததென்னே? கேள்; யான் அவலோகிதையால் ஆவலுற்றுக் காமற்கோயிலெய்தினேன். அங்குத் தேமணங்கமழ்தலின், வந்து கூடும் வண்டினங்களான் மொய்க்கப்பட்ட அரும்புகளையே யலங்காரமாகவுடையதும் அக்கோயிலின் வெளிப்புறத்தில் அழகுற விளங்குவதுமாகிய இளம் மகிழ்த்தருவின் பாத்தியின் பக்கத்தில் அமர்ந்தேன்; அங்கு நெருங்கி வீழ்ந்த மலர்களை இயல்பானெடுத்துத் தொடுத்தற்கு முயன்றேன். அவ்வமயம், வாலைப்பருவத்திற்குரியதாய் அழகுபடச் சிறந்திலங்கும் வேடத்தைப் பூண்டிருத்தலான், உய்த்துணரத் தகுங் குமரியாந்தன்மையுடையவளும், பெருமை சாலியல்புடையவளும் ஆகிய ஒரு மடந்தை, திறமை வாய்ந்த சேடியருடன் அக்கோயிலினின்றும் வெளிப்போந்து, மூவுலகையும் வென்ற காமதேவனது வெற்றிக்கொடியே வடிவெடுத்து வருவது போல எனதிருக்கையே நோக்கி வருவாளாயினள்.

(24) அவள், இலாவண்ணிய நிலைக்களத்திற்கு அதிகார தேவதையும், அழகின் குழுவுக்கு உறைவிடமும் ஆவள். நண்ப! அவளைப் படைத்தலிற் காமன் கருத்தாவும், சந்திரகலையுந் தாமரைத் தண்டும் நிலவும் கரணமுமாக அமைவனவாம்.

மேலும், அவளது அன்புடைமைக்குரியாரும், பூக்கொய்தற் கேளியில் விருப்பமுடையாருமாகிய சேடியரான், வேண்டப்பட்டு, அவள் அம்மகிழயே நாடிவந்தனள். நல்வினைப் பயனெய்து மொருவனைக் குறித்து நாளடைவில் வேறூன்றிய காமவேட்கையை யான் அவளிடத்துக் கண்டேன். ஏனெனில்;

(25) இம்மாலதி யினுடலம், தேம்பிய தாமரைத் தண்டென வாடியது; சூழ்தரும் பாங்கியின் பரிவுறூஉஞ் சொற்களானீராடன் முதலிய செயல்களில் இவள் வருந்தியே முற்படுகின்றாள்; அன்றிறுத்த கரிக்கோடெண்ணக் கவினுறுங்கபோலம், மறுவிலா மதியினெழினலத்தை யெய்தியது. அவயவங்கள் நீரைப் பிறிந்த தாமரைத் தண்டு போல வாடியமையும், சேடிகளது இன்சொற்களான் ஒவ்வொரு செயலையும் அவள் தளர்ந்து புரிதலும், அன்றிருத்த யானைமருப்பென வெளிறிய கபோலம் மறுவிலா[67] மதியினொளியை வீசுதலுமாகிய இவை, அவளது காமவேட்கையை அறிவுறுத்தா நிற்கும். யான், அவளைக் கண்டது முதல் அமுத மை தீட்டுந் தூலிகை போல அவள் எனது கண்களுக்கு எல்லையற்ற இன்பத்தை விளைத்து இரும்பைக் காந்தம் போல என்னுள்ளத்தைக் கவர்ந்து கொள்ளை கொண்டாள். மிகைபடக் கூறிடிற் பயன் யாது?

(26) எனது மனம், காமநோய்ப்பெருக் கெய்தியதன் பயனாக யான் உயிர் நீத்தற் பொருட்டே! காரணத்தை யாராய்ந்தறியாது, அவளைப் பின்பற்றி நிற்கின்றது; எல்லாம் வல்ல ஊழ்வினையே உயிர்களுக்கு நல்லவை, அல்லவை யிவற்றை யளித்தற்கு வலிதாகலின் யான் எய்தும் பயன் யாதோ அறியகில்லேன்.

மகரந்தன் – இயனட்பும்[68], செயனட்பும் எதிர்மறைப் பண்புகளாகலின், இவை யோரிடத்துப் பொருந்தா; பார்.

(27) அறிதற்கரிய மிக  நுண்ணிய ஒரு ஏது, பொருள்களை ஒன்றுக்கொன்று சேர்த்தமைக்கின்றது. உலகில், பகலவன் றோன்ற மரைமலரலர்தலும், தண் கதிர்ச் செல்வன் விண்கணுதிக்கச் சந்திரகாந்தந்தாரை நீருகுத்தலும் இயல்பன்றோ? இனிப்பின்னுங் கூறுவாயாக.

மாதவன் – பின்னர் அவ்வமயம்,

(28) புருவனெரிதர, அவனேயிவனென்று நினைவு கூரறிவு[69]டையார் போல என்னை நோக்கியவளது காமக்கலை பயிலுந் தோழியராற் புன்முறுவலமுதொழுக ஒருவர்க்கொருவரே கடைக்கணிக்கப்பட்டனர்.

மகரந்தன் – (தனக்குள்) முன் றுய்க்கப் பெறாததொன்றில் நினைவு கூரறிவு யாங்ஙனம் அமையும்?

மாதவன் – பிறகு, அத்தோழிமார் கைகளைத் தூக்கிக் கொட்டி யார்ப்பரித்துழி, வளையலசைந்தொலிப்பவும், அச்சுறுமன்னப்பெடை நடைபயிலக் கலகலவென்னக் குலவு சிலம்பொலி கலந்திலங்கு மேகலைமணி யொலிப்பவும், இலீலையுடன்[70] றிரும்பிக் கோமகளே! நல்வினைப் பயனெய்தினராயினோம். யாவளுக்கோ! யாவனோ! ஒரு மணமகன் இங்கண் வதிந்துள்ளான்; என்று எற்குறித்து விரற்சுட்டிக் கூறினர்.

மகரந்தன் – அந்தோ! வேறூன்றிய முதற்காதலின் வெளியீடு.

கலகஞ்சன் – இவரைக் குறித்துக் கூறும் அம்மகளிருரை, பேரழகு பெரிதும் வாய்ந்துளது.

மகரந்தன் – பிறவும் கூறுவாயாக.

மாதவன் – (29) இதற்கிடையில் சொல்லொணா வியப்புடையனவும், நன்கு விளங்கும் விப்பிரமங்களை[71]யுடையனவும், மிக மலிந்த சாத்துவிகச்[72] செயல்களையுடையனவும், மனவுறுதியைக் கெடுப்பனவும், வென்றிசேரியல்புடையனவும், ஆகிய காமனையாசிரியனாகக் கொண்ட சிலகுறிகள் அவ்விசால விழியாளிடத்துக் காணப்பட்டன. மேலும்,

(30) அசைவற்று விரிந்தனவும், விளங்கும் புருவங்களை யுடையனவும், காதனிறைந்து குவிந்தனவும் கடைவிழி விரிந்தனவும், யானவளை நோக்குழிச் சிறிது கடைகுவிந்தனவும், ஆகிய அம்மடவரலின் பார்வைகளுக்கு யான் பல்வேறு பாத்திரனாக[73] ஆயினேன்.

(31) அலசம்[74], வலிதம், முத்தம், சினித்தம், நிட்பந்தம், மந்தம் என்னும் வடிவினவும், மீக்கூர்ந்[75] துள்ளெழும் வியப்பினால் விரிந்த[76] கருமணிகளையுடையனவும் மீதூர்ந்தியைந்த[77] இமைகளையுடையனவும் ஆகிய அவளது கடைவிழிகளால்[78] எனது மனம் வேறு பற்றுக்கோடற்றதாய்க்[79] கவரப்பட்டும்[80], புண்படுத்தப்பட்டும், பருகப்பட்டும், அழிக்கப்பட்டும் ஆயது.

எல்லாவற்றானும் என் மனதைக் கவர்ந்த அப்பெண்மணி மருங்கில், அவளது குணத்தைக் கண்ட யான் அவள் வயத்தனாயினும் அமைதியின்மையை மறைத்தற் கெண்ணி, முன்றொடங்கிய மகிழ மாலையினையே மீண்டும் மிக முயன்று தொடுத்தேன். பின்னர், வயது முதிர்ந்த ஆடவரடிமைகள் கையிற் பிரம்பேந்திப் புடைசூழ, அவள் பெண்யானை மீதமர்ந்து நகர் செலும் வழியிற் போந்தனள்.

(32) செல்லுங்கால் அடிதொறுங் கழுத்தைத் திருப்பிப்பார்த்தலாற், காம்பிழந்த கமலம் போன்ற முகத்தையுடைய அப்பெண்ணால், அவளது கடைவிழி, அமுதத்தினும், விடத்தினுங்[81] தோய்க்கப்பட்டு எனது இதயத்தில் வலிந்து பதிக்கப்பட்டது போல இருந்தது. அது தொடங்கி.

(33) இத்தன்மைத்தென அளவுபடுக்கத் தகாததும், எல்லாவுரைநடையானும்[82] குறிப்பிடத்தகாததும், இம்மையினுதுகாறுந் துய்த்தற்கரியதும், பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பெருமயக்களித்ததும் ஆகிய காமக் கவலை, யெனதுள்ளத்தைச் சடமாக்கித்[83] தாபத்தையும்[84] வளர்க்கின்றது.

மேலும்;

(34) புலன்கள் பொறிமுன்னிருப்பினும், இஃதின்னதென்று அளந்தறியக்கூடவில்லை. நன்கு அறியப்பட்ட தொன்றிலும் மாறுபட்ட தோற்றமும் எழுகின்றது. நளிரிருமோடையினும், குளிர்மிகுமிந்துவினும் வேட்கைத் தணியற்பாலதன்று. மனம், ஒரு நிலையற்றதாய் விரைந்தலைந்து எதனையோ சிந்தித்தொழிகின்றது.

கலகஞ்சன் – உறுதியாக இவர், யாவளாலேனுங் கவரப்பட்டவராதல் வேண்டும்; அங்ஙனமிவரைக் கவர்ந்தவள் மாலதியாயின் நலனே!.

மகரந்தன் – (தனக்குள்) அந்தோ! விதனம்! எனதன்பனை யிதினின்றும் யாங்ஙனந் தடைப்படுத்துவேன். அன்றேல்;

(35) காமன், உன்னகத்தே பிறந்து உன்னை மயக்கல் வேண்டாம்! உனது சீறிய அறிவும் மாசுறுங் காமக்கவலை வயத்ததாய்தல் வேண்டாம்! தெரியில்; இத்தகைய நன்மொழி யாவும் பயனற்றனவேயாம்[85]. ஏனெனில், காமனுங் காளைப்பருவமுமிவன்பாற் பெருமித வேட்கையைப் பயக்குமியல்பின.

(வெளியீடாக)

அன்ப! அம்மடவரலது குலமும் பெயரும் அறியப்பட்டனவா?

மாதவன் – கேள்! அவள் பிடிமீதமருமமயத்திலே அவளது தோழிக் குழுவினொருவளாகிய தாசியொருத்தி பின்றங்கிப் பூக்கொய்தன் முறை பற்றி எனதருகு வந்து, தலைமலரணிதலே தலைக்கீடாக என்னைக் கைகூப்பி வணங்கி, பெருந்தகைப் பெரியோய்! இத்தொடர் நற்குண மியைதலிற்[86] பொற்புறுகின்றது. நங்கோமகளிதிற்[87] பேரவாவெய்தினள். பூவிற் செயலதிற்[88] புத்துருவாகி விசித்திரமே யாதலின் மாலைச்[89] செயற்றிறன் மாணலமெய்துக; படைப்பினணியும்[90] பயன் பெறுக; என்றுங்குன்றா மன்றன்மாலையும்[91] இவளது கண்டத் தணியாம் பெருவிலை பெறுக; என்று கூறினள்.

மகரந்தன் – அவளது சொல்லமைப்பு மிக்க வியக்கத்தக்கதே.

மாதவன் – இவளது திருநாம மென்னை? இவள் எக்குடிப்பிறந்தவள்? என யானவளை வினவ, அவள் அமாத்திய பூரிவசுவின் புதல்வி, மாலதியென்னுந் திருநாமம் பூண்டவள் என்றும், தானும் அவளது அருளுடைமைக்குரிய செவிலித்தாயின் மகளான இலவங்கிகை யென்றுந் தெரிவித்தாள்.

கலகஞ்சன் – மாலதியென்றா தெரிவித்தாள்! ஆனந்தம்! மலர்க்கணைத் தேவனும், மகிழ்வுறும் நாமும் வெற்றி பெற்றோம்.

மகரந்தன் – (தனக்குள்) அமாத்திய பூரிவசுவின் புதல்வி யென்னுமாத்திரையில் இவள் வெகு மதித்தற்குரியளல்லள்; அன்றியும், மாலதி! மாலதி! யென்று காமந்தகியும் அவளை நாளும் புகழ்ந்து வாழ்த்துகின்றாள். அம்மாலதியை அரசன்றன் காமத்துணைவன் நந்தனன் பொருட்டுக் கோருகின்றான் என்ற உலக வதந்தியுஞ் செவிக்கேறுகின்றது.

(வெளியீடாக) பிறவுங் கூறுவாயாக.

மாதவன்அவள் அம்மாலையினைப் பெற விரும்பி மீண்டுங் கோரினமையின், அதையென் கண்டத் தினின்றுங் கழற்றி யவள் பொருட்டுக் கொடுத்தேன். அம்மாலை, மாலதியின் வதனத்தைக் கண்ட மேற் கைநடுக்கமுற்றுத் தொடுக்கப்பட்ட சிலபாகம், சீர்மையற்றிருப்பினும், இவள் ஆழ்ந்த நோக்கத்துடன் அத்தொங்கலை மிகப்புகழ்ந்து பெருமைசால் அருட்பேறென்ன அதனை யேற்றுக்கொண்டனள். பிறகு, எஞ்சிய விழாவை நடாத்தற் பொருட்டுக் குழுமிய பட்டணத்து மக்களின் நெருக்கடியால் அவள் என்னிற் பிரிந்த பின்னர், யான் இவணெய்தினேன்.

மகரந்தன் – அன்ப! மாலதியின் காதற்குணமும் அறியக்கிடக்கின்றமையின் இது பொருத்தமே. கபோலம் வெளிறுபடன் முதலிய எந்தக் காதற்குணங்கள் உன்னாலறியப் பட்டனவோ! அவை யாவும் நினதடியாக நிகழ்ந்தனவென்பது வெள்ளிடைமலை. முன்னர், அம்மாலதியால் யாங்ஙனம் நீ காணப்பட்டாய் என்னு மிஃதொன்றே அறியக் கூடவில்லை. ஊழ்வினைப் பயனால் நற்பிறப்பெய்தினரும் ஒரேவிடத்து மனப்பற்றுள்ளாருமாகிய அத்தகைய மகளிர், பிறிதொருவரைக் கண்ணெடுத்தும் பாரார். மேலும்;

(36) தோழிமார் ஒருவர்க்கொருவரை கடைக்கணித்து “யாவளுக்கோ யாவனோ கணவன் இங்கு வதிந்துள்ளான்” என்னு மப்பாங்கியரறிவிப்பும், உன்னிடத்திற் பொருந்திய அம்மாலதியின் முதற் காதற்குறிப்பாகும்;

மாதவன் – மற்றும் வேறென்னை!

மகரந்தன் – செவிலித்தாயின் மகள் இலவங்கிகையின் அகப்பொருட் பொருந்தியவுரையுமாம்.

கலகஞ்சன் – (நெருங்கி) இஃதும் (என்று படிவத்தைக் காண்பிக்கின்றான்)

(இரு பேரும் பார்க்கின்றனர்)

மகரந்தன் – கலகஞ்ச! மாதவனது இப்படிவம் யாவரால் வரையப்பட்டது?

கலகஞ்சன் – இவரது மனம் யாவராற் கவரப்பட்டதோ!

மகரந்தன் – இது மாலதியினால் வரையப்பட்டதா?

கலகஞ்சன் – ஆம்.

மாதவன் – நினது ஊகம்[92] தெளிவுற்றதேயாம்.

மகரந்தன் – கலகஞ்ச! உனக்கு இப்படிவம் எங்ஙனம் கிடைத்தது?

கலகஞ்சன் – எனக்கு மந்தாரிகையிடத்திருந்தும், அவளுக்கு இலவங்கிகையிடத்திருந்தும்.

மகரந்தன் – மாதவனது ஓவியத்தை மாலதி வரைந்தமை, யாது பயன் கருதியென்று, மந்தாரிகை கூறியுள்ளாளாயின் உரைத்திடுக.

கலகஞ்சன் – காமவேட்கையைத் தணித்தற் பொருட்டென்று கூறினாள்.

மகரந்தன் – அன்ப மாதவ! தெளிக;

(37) எவள் உனது கண்களுக்கு நிலவாய் அமைந்தனளோ! அவளது உறுதியான காதற்கு நற்பிறப்பெய்திய நீயும் நிலைக்களனாக ஆகிறீர். நண்ப! அவளது புணர்ச்சியில் ஊழ்வினையும், காமனும் வலிந்து முயல்கின்றனராதலின் அதிற் சிறிது மையமில்லை. உன்னை காமக் கவலைக் குட்படுத்திய அவளது வடிவழகுங் காணத்தக்கதேயாதலின், இங்ஙனமே யவள்படிவத்தையும் வரைக.

மாதவன் – அன்பன் விரும்பியவாறே செய்வேன்.

 (வரைகிறான்)

நன்ப! மகரந்த!

(38) எழுகின்ற கண்ணீர்ப்பெருக்கு எனது கண்களை அவ்வப்பொழுது மறைக்கின்றது. உடலும், அவளது உருவெளித்தோற்றத்தான் விளையுஞ் சாட்டியத் தானிலைப்படுகின்றது. எனது கரமும் யானவளைக் கருத்துட் கொள்ளுந்தொறும் வியர்த்து இடையறா நடுக்கமுற்ற விரல்களையுடைத் தாகிறது; என் செய்வேன். ஆயினும் கூர்ந்து நோக்கியே வரைவேன்.

(எனக் காலந்தாழ்த்தெழுதிக் காண்பிக்கிறான்)

மகரந்தன் – (ஓவியத்தை உற்று நோக்கி) நம்தம் நண்பனது காமவேட்கை மிகப்பொருத்தமே (ஆவலுடன்) சுருங்கிய நேரத்திலிவனாலொரு கவியும் இயற்றப்பட்டதே! (படிக்கிறான்)

(39) இயலழகு பொருந்தியனவும், பிரிந்தோரைத் தன்வயப்படுத்துவனவும், ஆகிய உவாமதி முதலிய அவ்வப் பொருள்களும், மாலதியன்றி மனங்கவரும் பிற பொருள்களும் உலகினுள்ளனவே; ஆயினும், கண்களுக்கு நிலவெனத் திகழுமிவள் எனது கட்பொறிக்குப் புலனாயினள்; என்னுமிஃதொன்றே இம்மையிலெற்குப் பெருவிழாவாகும்.

(பிரவேசித்து)

மந்தாரிகை – கலகஞ்ச! கலகஞ்ச! திருட! திருட! அடிச்சுவடிற் பிடிபட்டனை. (வெட்கி) என்னை! அப்பெரியோரும் இங்ஙனமே யுள்ளார்களா! (அவரருகிற் சென்று) வணங்குகின்றேன்.

இருவரும் – மந்தாரிகே! இவண்வருக.

மந்தாரிகை – கலகஞ்ச! ஓவியத்தைக் கொணர்க.

கலகஞ்சன் – இதனைப் பெறுக.

மந்தாரிகை – யாவரால் யாது குறித்து மாலதி யிங்கு வரையப்பட்டனள்?

கலகஞ்சன் – மாலதியால் யாவர் யாது குறித்து வரையப்பட்டனரோ; அவரால்

மந்தாரிகை – (களிப்புடன்) ஆனந்தம்! பிரமனது படைத்தற் றொழிற்றிறனும் பயனுடைத்து.[93]

மகரந்தன் – இப்படிவத்தைக் குறித்து உனது கணவன் கூறுவது உண்மையாகுமா?

மந்தாரிகை – பெரியோய்! ஆம்; அஃதுண்மையே.

மகரந்தன் – மாலதி, மாதவனை முன்னர் எவ்வழிக் கண்டனள்?

மந்தாரிகை – மேன்மாடத்திலிருந்து பார்த்தனள்; என்று இலவங்கிகை கூறுகின்றாள்.

மகரந்தன் – அமாத்தியரது இல்லத்தருகிலுள்ள தெருவிற் பலகாலும் உலாவியுள்ளோம்; ஆதலின் இது பொருந்தும்.

மந்தாரிகை – பெருந்தகைய காமதேவனது இத்திருவிளையாடலை[94] எனதன்புரிமைக்குரிய தோழி யிலவங்கிகையின்பாற் றெரிவித்தற்குத் தாங்கள் கட்டளையிடல் வேண்டும்.

மகரந்தன் – இது தக்க தருணமே; இஃதுணக்குச் செயற்குரியதேயாம்.

(மந்தாரிகை படிவத்தைப் பெற்றுச் செல்கிறாள்)

மகரந்தன் – நண்பகலும் கழிகின்றது; ஆதலின் வருக. இல்லத்திற்கே செல்வோம்.

(எழுந்து செல்கின்றனர்)

மாதவன் – இவ்வாறு யான் கருதுகிறேன்.

(40) செவ்விய நயனங்களையுடைய அம்மாலதியின் றாதியரால் காலைப்பொழுதில் அவளது கன்னங்களிற் செஞ்சாந்தினாற் றீட்டப்பட்ட அலங்காரங்கள், இப்பொழுது வியர்வைத் திவலைகளான் நனைந் தழிந்து, அவை விளக்கமற்றொழியும். மேலும்.

(41) மலர்ந்திலங்கு முகிழ் நிறைந்த குருந்தத்தினின்றிழி தரு, மரந்த மணங்கமழு மந்தமாருதமே! சிறிதியங்கு நாட்டத்தவளும், வலைந்திலங்கு மெய்யினளுமாகிய மாலதியைத் தழுவி, அங்ஙனமே எனதுறுப்புக ளொவ்வொன்றையும் தழுவுக.

மகரந்தன் – (தனக்குள்)

(42) மும்மைத்தாய தோடங்களின் மிகையான் மிகக்கொடிய கூடபாகலம்[95] என்னும் பிணியானது வேழத்தை விரைவிற் றுன்புறுத்தாங்கு, யாவரானுந் தடைப்படுத்தவியலாத காமனுஞ் சேயிளம் மேனியனாயிலங்கும் இம்மாதவனை, அந்தோ! பெரிதும் வருத்துகின்றான்.

ஆதலின் நம்மைக் காப்பவள் அப்பெருந்தகைப் பெரியாராகிய காமந்தகியே!

மாதவன் – (தனக்குள்)

(43) விரிந்தலர்ந்த சேயிதழ் பொற்கமலம் போன்றதும், என்னிற் பற்றுக்கோடுற்றுக் குறுக்கடியிற் றிரும்பு நாட்டமுள்ளதுமாகிய வதனத்தையுடைய அப்பெண்மணியை எனதருகிலும் முற்புறமும், பிற்புறமும், உட்புறமும், வெளிப்புறமும், நாற்புறமும் உருவெளித் தோற்றத்தானமைய, அவளைக் காண்கின்றேன்.

(வெளியீடாக)

அன்ப! இத்தருணம் எனது நிலைமை;

(44) என்னை வாட்டமுறச் செய்யுஞ் சொல்லணா வுடலெரிவு பரவுகின்றது. எற்குண்டாகும் மாழாத்தலும் பொறிகளின் புலனுகர்ச்சியை மறைக்கின்றது. எனது மனமும் வேட்கைப் பெருக்கெய்திக் காமக் கனலிற் கொதித்து எரிதருகின்றதாயினும், அம்மாலதியு ருவாந்தன்மை[96]யையு மெய்துகின்றது.

(என்று எல்லவரும் போந்தனர்)

பவபூதி யென்னு மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் முதல் அங்கம் முற்றிற்று.


குறிப்பு

[1] தலைவன், தலைவி, காதையமைப்பு, இவற்றை நூலாசிரியற் றன் கருத்திற்கியைய அமைத்து நூதனமாகச் செய்யப்படு நூல்; அதிற்றலைவன், அறம்பொருளின்பப்பற்றும் உபாய அறிவும் பொருந்தி, “தீரப்பிரசாந்தனு”டைய இலக்கண அமைதியில் மந்திரி, அந்தணர், வைசியர் இவருள் ஒருவனுமாதல் வேண்டும் எனப்பரத நூல் கூறும்.

[2] கபாலங்கள் – தலையோடுகள்; ஈண்டுப்பிரளயகாலங்களில் இறந்துபட்ட பிரமனாதியருடைய தலையோடுகளைக் குறிக்கும்.

[3] பசுபதியினுடைய சடைகள் பசுபதியை எழுவாயாகக் கோடாது ஆறனுருபமைத்து விசேடணமாக்கிச் சடைகளை எழுவாயாக்கினமையின் தலைவன் தான் பெற விரும்பும் பொருளைத் தன் செயலாற் பெறவியலாமையும், பிறருதவியாற் பெறலும் உணர்த்தப்பட்டது. சடைகள் எனப் பன்மையாகக் கூறினமையான் தலைவன் றலைவியொருவரே யன்றி பிறருமுளர் என்பதும், இதிற் சடைமுடி தரித்தவீசனைப் புகழ்ந்திருத்தலின் சாந்திரசம் தோற்றுவதால் இந்நூலிற்குத் தலைவனாவான் தீரப்பிரசாந்தன் என்பதும் போதரும்.

[4] களிப்புடன் – அவ்வரவம் நுழைதற்கு அங்கு புழையொன்று மின்மையின் நாசிப்புழையே எளிதிற் கிட்டியதாகலின்.

[5] விநாயகர் இடையூறுகளுக்கு இறைவனாகலின் அவர் செயல்களான அசைவுகளும் ஊறுகளைந்து பேறுவிளைக்கும் என்பது கருத்து.

[6] இது முதல் இரண்டு சுலோகங்கள் முன் உரையாசிரியராற் பொருள் கூறப்படாமையின் இவை இடையிற்ச் செறிந்தனவெனச் சிலர் கருத்து.

[7] நாந்தி – புகழ்ந்து பாடுங் கவி; இது நாடகம் இடியூறின்றியினிது நிறைவேறுதற் பொருட்டு அத்தொடக்கத்தில் இசைபாடுவோராற் பாடத்தக்கது; இது ஆசியாதல், வணக்கமாதல் அமைய வேண்டுமென்றும் எட்டுச் சொற்களாலாதல், பன்னிரண்டு சொற்களாலாதல் அமைக்க வேண்டுமென்றும், மங்கலச் சொற்களான சங்கு, சக்கிரம், சந்திரன், தாமரை, ஆம்பல், சக்கிரவாகம் முதலிய சொற்களுடன் அமைந்திருத்தல் வேண்டுமென்றும் கூறுவர். ஒருசாராசிரியர் பத நியமம் வேண்டாமென்ப; இது நந்தி தேவர்க்குப் பிரீதியாகும்.

[8] சூத்திரதாரன் – நாடகத்திற்கு இன்றியமையாத பொருள்களை மேற்கொண்டு, அதனை நடத்துபவன். சூத்திரம் – ஈண்டு நடித்தற்குரிய சரித்திரப்பொருள்.

[9] வேடசாலை – நாடகம் நடிக்குமிடம்; அஃது அவைக்களத்திற்குப்பின் திரைகளான் மறைக்கப்பட்டு வேடம் பூட்டற்குரியதாய் இசைபாடுவோரிருக்குமிடம்.

[10] மாரிடன் – தாங்குந்திறலமைந்தவன்; அவன் சூத்திரதாரனாலிடப்படுங் கட்டளையை மேற்கொண்டொழுகுதற்குரிய நடன்; இச்சொல் சூத்திரதாரனால் அவனையழைக்கப்படும் மரியாதைப் பெயருமாம்.

[11] காலப்பிரியநாதன் – மகாகாளமென்னுஞ் சேத்திரத்திற்குப் பதி; இதனால் இந்நாடகம் நிகழுமிடம் மகாகாளம் எனக் குறிப்பிடப்பட்டது.

[12] பாவ! – நடிகர்கள் சூத்திரதாரனை அழைக்கும் மரியாதைச் சொல்.

[13] ஆரியர் – பெரியோர்; குலம், ஒழுக்கம், அருளுடைமை, கொடை, அறம், வாய்மை, நன்றியறிதல், கேடு விளையாமை யென்னுமிவை பொருந்தியவர் ஆரியரெனப் பரதமுனி கூறுவர்.

[14] அறிதற்கரிய ரசங்களுடைய பிரயோகங்கள் – அங்கம், அங்கி, யென்னுமுறைபற்றி நிகழும் சிருங்காரம் முதலிய இரசங்களுடைய அபிநயங்களைக் கூரிய அறிஞரேயன்றி மற்றையோராலறிதற்கரியது;

“பத அறிவு பொருளறிவு, இம்மாத்திரையில் இரசத்தை யறிதலமையாது; நூற்பொருளுண்மை தெளிகுனர் அதனையறிவார்” எனத் துவனி நூலார் கூறுவர்.

இதனால் இந்நூல் இத்தகைய இரசங்கள் நிரைந்துள்ளதென்பது விளங்கும்.

[15] பெருந்தன்மை – ஈண்டுத்தலைவன் சிருங்கார ரசத்தைப்பற்றியவனாயினும் பிற இரசங்களையும் பற்றுதல்; இது மாகாமாமிசத்தை விலைப்படுத்தலிலும் அகோரகண்டனுடன் பேசுமிடத்தலிலும், பீபற்சம், ரௌத்திரம், இவற்றை மேற்கொண்டு, முக்கியமான சிருங்கார ரசத்தையனுபவித்தற்குரிய மாலதியைப் பெறுதல் நூலில் விளங்கும்.

[16] காமசூத்திரம் – இடையறாக்காதல்; இது வத்திரத்திற்கு நூல் முதற்காரணமாதல்போல தலைவன், தலைவி இவருடைய வேறுபாடற்ற மனவொற்றுமைக்கு இக்காதல் முதற்காரணமாதலாற் காமசூத்திரம் என்ப.

[17] வியக்கத்தக்க காதையமைப்பு – மதிவன்மையாற் புதிதாகத் தொகுத்தமைக்கப்பட்ட காதையமைப்பு.

[18] தித்திரசாகை – தித்திரியென்னுமிருடி, சிச்சிலிக்குருவியுருவெடுத்துக் கூறிய வேதமாகிய சுர்வேதம்.

[19] பந்திபாவனன் – யசுர்வேதம், சாமவேதம் இவற்றை முற்றுங்கற்ற ஒருவன் அதருவ சிரசு என்னும் வேதத்தையும் பயிலுவானாயின் அவனைப் பந்திவானன் என்ப.

[20] ஐந்தங்கி – தக்கணம், காருகபத்தியம், ஆகவநீயம், சப்பியம், ஆவசத்தியம் என ஐவகையாகும்; இவை சுவர்க்கமேதம் முதலிய வேள்விகளிற் பயன்படுவனவாம்.

[21] சோமரசம் – சோமம் – ஓர்பூடு; அதனை இன்றியமையாத கருவியாக் கொண்ட வேள்வியில் அதன் சாற்றைப்பருகல் அவ்வேள்வியின் மரபு.

[22] சுரோத்திரியர் – அங்கங்களுடன் மறைபயின்று அப்பொருளறிவும், அதற்குத் தக நல்லொழுக்கமும் உள்ளாராய் உயர்குடிப்பிறந்தோராவர்

[23] இட்டம் – தேவர்களைக் குறித்துச் செய்யும் வேள்வி முதலியன.

[24] பூர்த்தம் – பசுக்களைக் குறித்துச் செய்யப்படும் தடாக முதலிய தருமம்.

[25] பவபூதி – இவர்க்குத் தந்தையராலிடப்பட்ட பெயர் சிரீகண்டர் என்பதாம்; இவர் “தன்கணவன் றவசினிலையை யெய்தினன்; என்று முறுவல் செயுமுகத்தினையுடையபோல (பவபூதிசிதாநநௌ) ஈசனது திருநீற்றினால் வெள்ளிய முலைக் கண்களையுடைய கௌரியின் இரு கொங்கைகளை வணக்கஞ் செய்கிறேன்” என்னுஞ் சுலோகத்தை யியற்றிய பின்னரே இவர்க்கு இப்பெயர் பட்டப் பெயராயமைந்ததெனப் பலருங் கூறுவர்.

[26] இந்தச் சுலோகத்திற்கு இது உட்கருத்து:- உலகில், மனிதர் அறிவிலர், காப்பிய இரசத்திற் பற்றிலாத ஆன்மஞானிகள், காப்பியச்சுவையிற்றலைசிறந்த அறிவுடைய பெரியோர், என முத்திறத்தவராவர்; முதற்கூறியவிரு திறத்தினரும் முறையே காப்பியச் சுவையறியச் செயலற்றவரும், இதனையறிந்தும் பயன் பெறாதவருமாவராதலின், அவரிதனை யிகழ்தலியற்கையே; அவர் பொருட்டிம் முயற்சி பயன்பெறாது. மூன்றாம் திறத்தினராகிய எம்போலியோர் பொருட்டே இஃதமையுமென்பதாம்.

[27] ஞானநிதி – அறிவுக்கு நிலைக்களன் என்னும் பொருள் பற்றியிது காரணப்பெயராகும்.

[28] உபநிடதம் – வேதத்தின் உட்கருத்து.

[29] சாங்கியம் – பிரகிருதி, புருடன் முதலிய இருபத்தைந்து தத்துவங்களின் இயல்புகளை விரித்து விளக்குவது; இதனாசிரியர் கபிலராவர்.

[30] யோகம் – இயமம், நியமமுதலிய எண்வகை யோகவுறுப்புக்களை விளக்குவது; இதனாசிரியர் பதஞ்சலியாவர்.

[31] ஓசையுடைமை – மென்சொற்களாலாந்தன்மை; அது செவி, நா இவற்றிற்கு இனிமைபயப்பது.

[32] ஆழமுடைமை – வியங்கியமாக உணரத்தக்க பொருளுடைமை; வியங்கியம் – குறிப்பு.

[33] கலைவன்மை – கவிவன்மை – இவற்றை முறையே வடநூலார் பாண்டித்தியம், வைதக்தியம் என்று கூறுவர்.

[34] பிரத்தாபனை – வெளிப்படுத்தல்; நடீ, நடன், விதூடகன், பாரிபாருசுவகன், இவர்களில் ஒருவன் சூத்திரதாரனுடன் நடிக்கப்புகும் நாடகத்தைப் பற்றிய சிலவற்றைப் புகழ்ந்து பேசி யப்பொருள்களை வெளிப்படுத்தல் பிரத்தாபனையென்ப.

[35] வயது, உருவம், நல்வினை, அழகு, குலம், ஒழுக்கம் முதலிய மங்கல குணங்கள், ஒருவர்க்கொருவர் ஒப்ப நிறைந்தவர்.

[36] பூரிவசு – மிகுந்த செல்வப்பெருக்குள்ளவன்; அவற்கு உரிய மணமகனைத் தேடிக் கோடலியல்பு.

[37] தேவராதன் – தேவன் போலக் கொடுக்குமியல்புள்ளவன்; இவ்விருவர் பெயெர்க்குறிப்பும் சம்பந்தப் பொருத்தத்தை யுணர்த்தும்.

[38] மாலதீ – முல்லை; மாதவன் – வைகாசி மாதம்; இம்மலர், இம்மாதத்தில் மலர்தலான் இஃது இம்மாதத்திற்குரியதாதல் கருதி யிப்பெயரமைக்கப்பட்டது. இதனால் மாதவனுக்குரிய மனைவி மாலதியென்றும், அவளுக்குரிய கணவன் மாதவன் என்றும் யிடையருக் காதலமைந்தவரென்றும் பெறப்பட்டது.

[39] திருமணம் – பெற்றோர், சுற்றத்தார், ஏனைய பெரியோர், இவர்களுக்கு விரும்பத்தக்கதாதல் வேண்டுமென்பது கருத்து.

[40] வாமம் – ஈண்டு இடப்பக்கத்தையும், விரோதத்தையுமுணர்த்தும்.

[41] தாட்சிண்யம் – வலப்பக்கத்தையும், விரோதமின்மையையும், காரியசித்தியையுமுணர்த்தும்.

[42] சீரம் – தெருக்களிற் சிதைந்து கிடக்குங் கந்தைத்துணி. சீவரம் – நீலவண்ணப்புடவை.

[43] ஐயம் – பிச்சை; அது கலத்திலாதல், கையிலாதல், வாயிலாதல் – அளிக்கப்படும் அன்னக் கவளத்தைச் சுவைக்காது மருந்து போலுண்டு பசிப்பிணியைத் தீர்த்தலையுணர்த்தும்.

[44] இல் – நிலை – இல்லறம்; அஃதாகிய இடர் என விரியும்.

[45] பூரிவசு, தன் குமாரி மாலதியை, வாலிப நண்பனாகுந் தேவராதனுடைய புதல்வன் மாதவனுக்கு மணம்புரிவிக்க விருப்பமுடையனாய், அதற்கிடையூறாக அரசன் தங்காமத் துணைவனாகிய நந்தனன் பொருட்டுக்கோருனிலையை யோர்ந்து, அவர்க்கஞ்சி வெளிப்படையாக மணவினையாற்றவியலாது, அதை மறைவிற் செயலே செயற்குரிய விடயமாகும்; அதிற் காமந்தகியை நியமித்தான் என்பது மேல்விளங்கும்.

[46] செயற்பயன் – தவங்களானெய்தற்பாலதாகிய வீட்டின்பத்தினும், இஃதொன்றே சிறந்ததெனக் கருத்து.

[47] ஆன்வீட்சிகீ – பொருளுண்மைகளை யாராய்தற்குரிய வேதுக்களை யெடுத்துக் கூறுனூல்.

[48] ஊக்கற்பொருட்டு – ஊக்கல் – எழுப்புதல்; மாதவனது குண நலன்களைக்கண்டு, அவன் மணவினையில் பூரிவசுவுக்கு உற்சாகத்தையுண்டாக்கற் பொருட்டும், காதலி, காதலன் ஆகுமிவர்க்கும் காதற்குணத்தை யெழுப்புதற் பொருட்டுமாம்.

[49] இவ்வுபாயம் – களவு மணமாகுமுபாயம்; நண்பனது தொடர்பாகும் விருப்பமெய்துவதற்கும், அரசனது பகைமையாகும் வெறுப்பு விலகுவதற்கும் ஏதுவாகலின் நலம் பயப்பதென்றார்.

[50] பாசாங்கடி – இல்லதை உள்ளதாய்க் காட்டலும், உள்ளதை யில்லதாய்க் காட்டலுமாகிய பாவனை.

[51] வாலிபர் – ஈண்டுக் காளைப் பருவத் தொடக்கத்திலுள்ளாரையுணர்த்தும்; அப்பருவத்தினியல்புகள்:- ஒழுங்கு. ஒழுங்கின்மை, அடக்கம், இவற்றினறியாமை, காமன் ஆணைக்கு வயப்படுதல், பெரியோரையுங் கடந்து தன் விருப்பைப் பெற முற்படல் ஆகிய இவையாகலின், வெளிப்போந்த மெய்ப்பாட்டுக் குறியினர் எனக் கூறப்பட்டது. மெய்ப்பாடு – குறிப்பை வெளிப்படுக்குந் தோற்றம்.

[52] அதனால் – உலகமறிந்தமையால்; இக்களவுமணம் நிகழ்ந்த மேல், இஃது இக்கொடிய பிட்சுகியான் முடிந்ததென நந்தனனும் அரசுனுஞ் சினமுற்றாலும், “காதற்பற்றுக் காரணமாகத்தாமே வலிந்து புணர்ந்தனர்; இதனை யுலகமறியும்” எனக் கூறுமாற்றால் அவரை வஞ்சித்தலான் குற்றம் உண்டாகாதென்பது கருத்து.

[53] அறிந்த ஒருவன் – தனக்குரிய காரியங்களைப் பெறற்குத்தக்க வுபாயங்களை யறிந்தவன்.

[54] எவ்வாற்றானும் – நடையுடையுரை முதலியவற்றானும்.

[55] அந்தந்த முறை – எந்த முறையானும் மாதவனைக் கண்டு பிறர் ஐயுராதமுறை.

[56] அணித்துள்ள – என்றதனால் மாலதியின் காட்சி தெள்ளிதிற் கூடும் என்பது கருத்து.

[57] செவிலித் தாயின் புதல்வி – யென்றதனால், முலையுண்டல், புழுதியாடன் முதலியவற்றான் மிகக் கூடிப் பழகினமையின் மாலதியின் உள்ளக்கிடக்கை யாவையும் இவள் நன்குணர்ந்தவள் என்பது போதரும்.

[58] புதிய மன்மதன் – கண்ணுதற்கடவுளானெரிக்கப்பட்டு அவனருளான் மறுபிறப்பெய்தியனமையையுணர்த்தும்; அது நோக்கத்தின் ஆர்வத்தை வலியுறுத்தும்.

[59] வேட்கைப்பெருக்கு. வேட்கை – காமநோய்; இதனை உத்கண்டையென்று வடநூலார் கூறுவர். பெண்ணொருவளால் தன் பொறிகள் யாவும் இவனாலின்புறு மெனக்கருதப்படுமொருவனை யெவ்வாற்றானுந் தானடைந்தே தீருவதெனும் விருப்பமே உத்கண்டையாம்; மனத்துட் புணர்ச்சி, அத்திசை நோக்கம், அவயவவாட்டம், மனநெகிழ்ச்சி, மனோராச்சியம், முழந்தாள் கை இவற்றில் முகத்தையணைத்தல், முகம் செம்மையுறல், வியர்த்தல், சொல்தளர்ச்சி இவை யாவும் அவ்வேட்கையின் செயல்களாமென்றும் பாவப்பிரகாசிகை கூறும்.

[60] உம்மை – மாலதியும் நற்பேறு பெறலையுணர்த்தும்.

[61] விட்கம்பம் – விரிவுபடுத்தல்; இதனிலக்கணம் நடந்தனவும் நடப்பனவும் ஆகிய சரித்திர பாகங்களை விரித்து விளக்குவது என்று கூறப்படும்.

[62] கண்சூனியமாதல் – ஈண்டுத் தன்புலனைப் பற்றாதொழிதல்; இதனிலக்கணம், கருவிழி இமைகள் இவையசைவற்றும், ஒரு பொருளை முயன்று சிந்தித்தலான் புலனுகர்ச்சி யற்றும், கருமை நிறம் பெற்றும் அமைவதேயாம்.

[63] யாக்கையின் செம்மையற்ற நிலை – உறுப்புக்கள் தத்தம் தொழிலைச் செய்யத் திறலற்ற நிலை.

[64] நெட்டுயிர்ப்பு – பெருமூச்செரிதல் ; இது யாக்கை மெலுவு, துக்கம், மயக்கம் இவற்றையுணர்த்தும்; குறிப்பிட்ட இம்மூன்றும் மூன்றாங்காமாவத்தையான அநுமிருதியைக் குறிப்பனவாம். இதனிலக்கணம், நெட்டுயிர்ப்பும், மனத்துட் பல தோற்றமும், வேற்றுச் செயல் வெறுப்புமாகிய இவையாம்.

[65] பொருள்கள் – ஈண்டுக் காமவேட்கையை மிகைப்படுத்தற்குரிய பொழின்மதி முதலியன.

[66] துவர்த்தல், குளிர்தல் இவை இரசத்தின் பண்பாயினும் ஈண்டு இரசத்துடன் மணத்தையும் ஒருபொருட் படுத்தி, இவற்றை மணக்குணமாக வுபசரித்தார்.

[67] மறுவிலா மதி – முதலிரண்டடியினுங் கூறியுள்ள சரீரத் தளர்ச்சியும், செயல்களில் ஊக்கமின்மையும், காமவேட்கையானன்றிப் பிறவற்றானும் நிகழ்வுறுமாதலின் அவற்றையொழித்து மறுவிலாமதியென்னு மிவ்வுவமையான், இத்தகைய வெளிறுபடுந் தன்மை யதற்குப் பொதுவறப் பொருந்துமியல்பெனக் குறிப்பிடப்பட்டது; இதிற் சிருங்கார ரசத்தின் இன்றியமையாத முதற்பகுதிகளான அங்கத்தளர்வு முதலியனவே கூறப்பட்டிருப்பினும் இவற்றைப் பிரியாது நிகழ்வனவும், அவற்றை விரிவுபடுத்துவனவும் ஆகிய விருப்பு, வெறுப்பு முதலிய வியபிசாரி பாவங்களும், அதனைத் தூண்டுதற்குரிய காமற்பொழின் முதலிய உத்தீபன விபாவங்களும், நல்வினைப் பயன் எய்துமொருவனைப் பற்றுக்கோடாகவுடைய ஆலம்பன விபாவங்களும் ஆகிய இவற்றாற் சிறந் திலங்கு மிரதியென்று உள்ள நெகிழ்ச்சி பொருந்தும் விப்பிரலம்ப சிருங்கார ரஸம் இங்குத் துவனிக்கின்றது.

[68]  ந ட்பு – காரணமின்றி யுண்டாகும் நட்பு இயனட்பு என்றும், அதைப்பற்றி நிகழ்வது செயனட்பு எனவும் இருவகைத்தாம்; இவற்றுண் முறையே உயிருள்ளனவும் நிலைப்பதும், காரணமறைந்தொழிய தன் காரியமாகிய இதுவும் நிலையாது போம் என்றும் பாவப்பிரகாச நூல் கூறும்.

[69] நினைவு கூரறிவு – எதிரிலிருக்குமொரு பொருளைப் பார்த்துழி முன்னர்க் கண்ட பொருளினது நினைவுண்டாதலேயாம்.

[70] இலீலை – கடைக்கணித்தலான் விரும்பிய பொருளைப் பற்றுதல். அதாவது அன்பின் ஊக்கப்பட்ட மனம், இன்சொல், உறுப்பியக்கம் இவற்றால் விரும்பிய பொருளைப் பற்றுதல்; இஃதிருபாலருக்கும் பொதுவாம்.

[71] விப்பிரமம் – காதலியக்கம்; அது விரும்பிய பொருளைக் கண்டுழி உரை, செயல், மனம் இவற்றின் வேறுபாடும், அணிகலன் அணிதற்குரிய உறுப்புக்களின் வேறுபாடுமாம்; இவை, அங்க பரபரப்பினிகழ்வனவாம்.

[72] சாத்துவிகச் செயல் – அசைவற்றிருத்தல், வியர்த்தல், மயிர்சிலிர்த்தல், ஓசை மாறுதல், நடுங்குதல், நிறமாறுதல், கண்ணீருகுத்தல், மூர்ச்சித்த லென்னு மிவ்வெட்டுமாம்.

[73] பல்வேறு பாத்திரம் – பார்வை அச்சம், நாணம், வியப்பு முதலியவைகளுடன் கூடியிருத்தலின், அவ்வவற்றிற்குத்தக தனித்தனியே பல்வேறு பாத்திரமெனக் கூறினர். பாத்திரம் – தகுதி.

[74] அலசம் முதலிய ஆறும், காமவேட்கையினியைந்த பார்வையினது பேதங்களாம்; அவற்றின் இலக்கணம் பின்வருமாறு காண்க:-

அலசம் – விரும்பிய பொருளிற் பார்வையை நிலைப்படுத்திப் பின் நாணத்தாலதனைத் திருப்பிக் கோடல்.

வலிதம் – அங்ஙனந் திருப்பிய பார்வையை மீண்டுங் குறுக்காகச் செலுத்தல்.

முத்தம் – இயல்பினழகு பெற்ற அப்பார்வையாற் றனது உள்ளக்கிடக்கையைக் குறிப்பினுணர்த்தல்.

சினித்தம் – அன்புருக்கொடு காதற்பெருக்கிலியைந்திருத்தல்.

நிட்பந்தம் – விரும்பிய பொருளினன்றி, அதனுவமைப் பொருளொன்றினுங் கூடாது, அஃதொன்றிலே சலனமின்றி நிலைப்படுதல்.

மந்தம் – விரும்பிய பொருளினும் கூர்மையின்றி நிலவுதல். இவை காரிய காரணத்தான் இயைய நிறுத்த முறையானே தொகுக்கப்பட்டுள்ளன; அவ்வியைபினை விரிக்கிற் பெருதூஉம் ஆதலின் அதனை யறிஞர் உய்த்துணர்க.

[75] மீக் கூர்தல் – மிகுதல்

[76] வியப்பினால் விரிந்த விழி – வியப்பின் வயப்பட்டு, இமைப்பின்றி விரிந்திருத்தல்; இதனை விம்மித திருட்டி என்ப வடநூலார்.

[77] மீதூர்தல் – நெருங்குதல்.

[78] கடைவிழி – கண்களின் கடைப்புறத்திற் கருவிழிகளையமைத்தல்; இஃது ஈண்டு அதன் செயலாகிய பார்வையை யுணர்த்தும்.

[79] பற்றுக்கோடற்றதாய் – மனம், கடைக்கணித்தலின் வயத்ததாகலின், தற்செயற்கூடாமையானும், காத்தற்குரிய காவலன் இவளையன்றிப் பிறரின்மையானும், பிறராற்க் காக்க வியலாமையானும் இங்ஙனங் கூறினர்.

[80] கவரப்பட்டும் – கூரிய அம்பை நிகர்த்த கடைவிழி, மாதவனது மனத்தை வலிந்து பற்றிப் புண்படுத்தி, அதனால் நெக்குருகிய அம்மனத்தைப் பருகினமையும் அழித்தமையும், மாலதிப்பொருட்டு மாதவனது மனமழிந்து நிற்கு நிலையை உயர்வு நவிர்ச்சியான் உணர்த்தும்.

[81] அமுதத்தினும் விடத்தினும் – கடைக்கண் சென்றுழி, எல்லையற்ற இன்பத்தைத் தருதலானும், நாளும் உயிர்த்தற்கு ஏதுவாகலானும், அமுதத்தினும் என்றும், பிரிவாற்றாமையா னுண்டாகுந் தாங்கொணாத் துன்பத்திற்கு ஏதுவாகலான் விடத்தினும் என்று கூறினர்.

[82] எல்லாவுரை – என்பது பெயர்ச்சொல். இலக்கணைச்சொல் முதலியவற்றை யுணர்த்தும்.

[83] சடமாக்கி – இது சாட்டியமென்னுங் காமநோயின் நிலையையுணர்த்தும். இதனிலக்கணம்:- எப்பொழுது மெச்செயலினும் அறிவின்மை, விருப்பு வெறுப்புக்களையும் இன்பதுன்பங்களையுமறியாமை, வினாவிற்கு விடைகொடாமை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் புலனுகர்ச்சியின்மை. ஓலமிடல், காரணமிலாது உறுமுதல், உறுப்புக்கள் வாடுதல், இளைத்தல், நிறமாறுதல், நெட்டுயிர்த்தல் முதலியன நிகழ்தல் சாயதயமென்னுங் காமநோயினிலக்கணமாம்.

[84] தாபத்தையும் – இது வெப்பின் மிகுந்த சுவரம் என்னுங் காம நோயையுணர்த்தும்; இதன் இலக்கணம் அழல் நதியுழத்தலன்னத் தாங்கொணாத் தாங்கலெய்து நிலையாம்.

[85] பயனற்றனவே – கள்வராற் கவரப்பட்டுப் பொருட் சிறிதுமில்லானைக் குறித்து, இவ்வுழிக்கள்வருளர் ஆதலின் இவ்வழிச்சேறலடாத்து; என்று கூறற்போல, நீ காமற்கணைக்கிலக்காகாதொழிக; என மாதவனைக் குறித்துக் கூறலுமாம்.

[86] இத்தொடர் நற்குணமியைதலென்பது – மாலை, மெல்லிய நூல் கொண்டு தொகுக்கப்பட்டிருத்தலையும், தலைவன், தலைவி யிவர்கள் தொடர்பும், இவரது காதல் ஒழுக்க முதலிய நற்குணங்களை யமையப் பெற்றிருத்தலையு முணர்த்தும்.

[87] இதில் – என்பது இம்மாலையிலும் மாதவனை மணத்தலிலும் பேரவாவையுணர்த்தும்.

[88] பூவிற்செயல் – என்பது பூக்களானாகிய மாலையின் செயலையும், மலர்களை வில்லாகவுடைய காமனது செயலையு முணர்த்தும்; இதனால் மாலதிக்குப் பலவிதமான காமநோய்கள் நிகழ்ந்தன வென்றும் குறிப்பிடப்பட்டது.

[89] மாலைச் செயற்றிறன் – தொங்கலைச் செய்யுந் திறனையும் மாலதிக்கு மயக்கைச் செய்யுந் திறனையுமுணர்த்தும்.

[90] படைப்பின் அணி – இம்மாலையின் றொகுத் தலழகையும், பொருத்தமான மணமக்களின் சிருட்டியழகையு முணர்த்தும்.

[91] குன்றாமன்றன்மாலையென்பது – என்றுங் குன்றா நறுமணங்கமழும் மகிழமலர்களானாகிய மாலையையும், மணவினைக்குரிய மாலையையுமுணர்த்தும்; மன்றல் – நறுமணம், திருமணம்.

[92] ஊகம் – மாதவனிடத்து மாலதி காதற் பற்றுள்ளவள் என்னுமூகம்.

[93] இவ்விருவரையும் அழகுறப் படைத்தமைத்தமை, அவர் ஒருவர்க்கொருவர் காதற்பற்றை யெய்தினமையின் பயனுடைத்தாயிற்று.

[94] திருவிளையாடல் – என்பது மாதவன் மாலதியின் படிவத்தை வரைந்தமையும், இங்கு நிகழ்ந்த செய்திகளையும் உணர்த்தும்.

[95] கூடபாகலம் – வேழத்திற்கு நிகழ்கின்ற ஒருவகை நோய்; இது, வேடன், மறைவிற் சென்று விரைவின் விலங்குகளைக் கோறற்போல, பாகன் முதலியோர் அறியாவண்ணம் சென்றடைந்து யானையை விரைவிற் கொல்லுவதாம்.

[96] மாலதியு ருவாந்தன்மை – இதனால் மாதவன் மிகக் கொடிய காமவேட்கைகளுக் காட்பட்டு ழல்வானாயினும், அவன் மனம், அருமருந்தனைய மாலதியு ருவாந்தன்மை யெய்தி, யின்புற்று அவன் உயிர்த்தற் கேதுவாய தென்பது குறிப்பிடப்பட்டது.

மாலதீமாதவம் – இரண்டாம் அங்கம்

இரண்டாம் அங்கம்

(சேடிகளிருவர் பிரவேசிக்கின்றனர்)

முதலாமவள்ஏடீ சங்கீதசாலையின் உண்மருங்கில் தேவி காமந்தகீ அவலோகிதையுடன் தனித்திருந்து எதனையோ ஆலோசித்துக் கொண்டிருந்தனள்; நீயவளுடன் உரையாடியதென்னை?

இரண்டாமவள் – தோழீ! மாதவனது அன்பிற்குரிய நண்பன் மகரந்தனால் காமற்பொழிலினிகழ்ந்த செய்தியாவும் காமந்திகையின்பாற் றெரிவிக்கப்பட்டன வாதலின், அத்தேவியரால் நங்கோமகள் மாலதியைக் காண்டற் கெண்ணி யவளது நிலைமையை யறிதற்பொருட்டு அவலோகிதை யனுப்பப் பட்டாள். யானும் அம்மாலதி, இலவங்கிகையுடன் தனித்திருக்கின்றாள்; என்று கூறினேன்.

முதலாமவள்தோழீ! இலவங்கிகை மகிழ மலர்களைக் கொய்து வருவேன் என்று காமற் பொழிலிற் றங்கினளே; இப்பொழுது மீண்டும் அவள் வந்தனளா?

இரண்டாமவள்ஆம்! இலவங்கிகை வருநிலையிலேயே அவளைக் கைப்பற்றி யுடன்வருந் தாதியரையுந் தடுத்து நங் கோமகள் கோபுரவாயிற் றிண்ணையின் மார்க்கமாக மேன்மாடத்திற்கெய்தனள்.

முதலாமவள் – இஃதுறுதியே! அப்பெருந்தகைப் பெரியோனாகும் மாதவனது செய்திகளைக் கேட்டுள மகிழ்ந்தின்புறுவள்.

இரண்டாமவள் (நெட்டுயிர்த்து) இவட்கு உளமகிழ்ச்சி யாங்ஙனம்? இப்பொழுது அம்மாதவன் செய்தியை முற்றிலுமுணர்ந்து அவளது காமவேட்கை கரைகடந்ததாகும். அன்றியும், இற்றை வைகறைப்பொழுதிலேயே அரசன் அமாத்தியரிடம் நந்தனன் பொருட்டு மாலதியைக் கோர, அவரானும் இங்ஙனம் விடையிறுக்கப்பட்ட்து.

முதலாமவள்என்னென்று?

இரண்டாமவள்“தம்மைச் சார்ந்த கன்னியர்க்குத் தாமே உடைமையாளர்” என்று; ஆதலின் மாலதிக்கு அவளிறுதிகாறும் மாதவன் காதல் உண்ணச் சாவமையுமெனக் கருதுகிறேன்.

முதலாமவள் – அக்காமந்தகிப் பெரியோர் தமது பெருந்திறலை இங்ஙனம் வெளிப்படுத்துமோ?

இரண்டாமவள்அடி மாறுபட்ட தோற்றமுடையவளே! வருக.

எனச் சென்றனர்[1]

பிரவேசகம்[2]

மாலதீதோழீ! மேலும்[3], மேலும்.

இலவங்கிகை – பின்னர், அப்பெருந்தகையாரால் இம்மகிழமாலை நிற்களிக்கப்பட்டது.

(என்று கொடுக்கிறாள்)

மாலதீ – (அம்மாலையைப் பெற்றுக் களிப்புடன் உற்று நோக்கி) தோழீ! இக்கோர்வை யோர்புறத்தின் மாறுதலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

இலவங்கிகை – இங்ஙனஞ் சீர்மையின்மையில் நீயே குற்றவாளி.

மாலதீ – அஃதெங்ஙனம்.

இலவங்கிகை – பசும்புல்லனைய அப்பசிய மேனியன் உன்னிமித்தம்[4] அங்ஙனம், கைத்தடுமாற்றமெய்தினன்.

மாலதீ இலவங்கிகே! நீ என்னை யெப்பொழுது மின்புருத்து மியல்பினளாகவே காணப்படுகிறாய்.

இலவங்கிகை – இன்புறுத்துந்தன்மை யென்னிடத்தென்னை? நான் கூறுவேன்; இளங்காற்றினாலசைந் தலர்ந்த மரைமலரனையவும், முன்றொடங்கிய மகிழமாலையைத் தொகுத்தலே தலைக்கீடாகத் தனது வேட்கைக் குறியை மறைத்தற்கு மிக முயலுதலின் விரிந்தனவும் ஆகிய தனது கண்களால், மிகுந்தெழு வியப்பான் அசைவற்ற நீண்டகடைவழி நிலைப்படுத்தப்பட்டு விளங்கும் புருவங்களால் உய்த்துணரக்கிடக்குங் காமவேட்கையின் அழகு பொருந்த அவன் உன்னைக் காண, அங்ஙனமே யுன்னாலும் அவன் காணப்பட்டான்.

மாலதீ – (இலவங்கிகையைத் தழுவி[5]) ஆம்! அன்புடைத் தோழீ! சிறிது நேரம் என் முன்னே தோன்றி யென்னை வஞ்சித்த அவனது செயல்கள் இயற்கையினமைந்தனவா? அன்றேல், நீ எவ்வாறு கருதுகின்றனை?

இலவங்கிகை – (பொறாமையுடன்) நீயும் அக்கணமே யியற்கையிற்பாடலின் றியாடற்[6] புரிந்தனை.

மாலதீ – (வெட்கமுடன் நகைத்து) என்னையிது? மேலுங் கூறுக.

இலவங்கிகை – பிறகு திரும்பிவரும் விழாக் குழுவினருழம்பலின் மாதவன் மறைந்தொழிய, யான் மந்தாரிகையின் வீட்டிற்குச் சென்றேன்; விடியற்பொழுதிற் படிவத்தையும் அவன் கரத்திலிட்டேன்.

மாலதீ – எது கருதி?

இலவங்கிகைஅம்மந்தாரிகையை மாதவனது ஊழியன் கலகஞ்சன் காதலிக்கின்றான்; அவன்பால் இவள் இதனைத் தெரிவிப்பாள் என்று; அதற்கு மந்தாரிகையும் உடன்பட்டாள்;

மாலதீ – (தனக்குள் களிப்புடன்) கலகஞ்சனால் இப்படிவம் நங்காதலற்குத் தெரிவிக்கப்படும் என்பது நிச்சயம். (வெளியீடாக) தோழீ! உன் விருப்பம் யாது?

இலவங்கிகை – தானும் வருந்தி உன்னையும் வருத்தி கிடைத்தற்கரிய உன்னிடத்து விருப்பப் பிணிப்புண்டுமுழலு மனமுடைய மாதவற்குச் சிறிதளவு காமவேட்கையைத் தணிவுறுத்தும் உனது படிவ மிஃதொன்றே யெனது விருப்பம்[7].

(என ஓவியத்தைக் காட்டுகின்றாள்)

மாலதீ – (களிப்புடனும் நெட்டுயிர்ப்புடனும் நெடிது நோக்கி) அந்தோ! எனது மனம் இப்பொழுதும் இன்புறவில்லை; ஏனெனில் இப்படிவம் இன்புறுத்தற்குரிய தாயினும் என்னை வஞ்சித்தொழியுமென்றே கருதுகின்றது. என்னே! சில சொற்களும் காணப்படுகின்றனவே!

(இயலழகு பொருந்தியனவும் என்ற முதல் அங்கம் 39ஆம் சுலோகத்தின் சொற்களைப் படிக்கின்றாள்)

(களிப்புடன்) பெரியோய்! நினது செயலினும் உரையினும் இனிமை யொப்புடைத்து. காட்சியோ! அவ்வளவில் இன்புறுத்தி யஃதில்வழி மிகு துன்புறுத்துமியல்பினது. நின்னைக் காணாதவரும், கண்டுந் தம்மனத்தை யொரு  நிலைப்படுத்துவாருமாகிய மடவரல்களே! நல்வினைப்பயனெய்தினராவர்.

இலவங்கிகை – எவ்வாற்றானும் நீயின்புறுவதில்லை.

மாலதீ – அதனை நீ யெங்ஙனமறிந்தனை?

இலவங்கிகை – எவனைக் குறித்து தாதவிழ்ந்த அசோகமலர் போல வாடிய மனத்தினளாய் நீ மெலிவுறும் பிச்சிமலர்போலக் காமனாலிளைப் பெய்துகின்றனையோ; அவனும் அக்காமனால் தாங்கொணா நிலையை யெய்தியுள்ளான்.

மாலதீ – தோழீ! இப்பொழுது அப்பெரியோர் சுகம் பெறுக; எற்குத் தேறுதலமைவதரிது. (கண்ணீருகுத்து வடமொழியிற் கூறுவாள்.)

(1) மிகக் கொடிய எனது மனவேட்கை, நாடிகள் யாவற்றினுமிடையறாது பரவும் விடம் போலத் துன்புறுத்துமியல்புடைத்தாய், தூமமின்றி வீசப்படுமங்கிபோல எரி தருகின்றது. ஆதலின் அது மிகுதியான வெப்பு நோய் போல ஒவ்வொரு உறுப்புக்களையும் அகத்தும்புறத்தும் வருத்துகின்றது. இந்நோயினின்று என்னை காத்தற்கு எனதிருமுதுகுரவரும்[8] நீயும் ஆற்றகில்லீர்.

இலவங்கிகை – பெரியோரிணக்கம், காட்சியளவையில் இன்பத்தையும் அஃதில்வழித் துன்பத்தையும் அளிக்குமியல்பினது. ஆதலின் அன்புடைத் தோழீ! சாளரத்தின் வாயிலாக எவனைக் கடைக்கணித்த அளவில் உனது சரீர நிலை, உவாமதியெழுச்சியை எரிதருமழலெனக் கொண்டு கருணையிகந்த காமன் செயலினால் ஐயுறத்தகு முயிர்த்தலையுடையதாயிற்றோ அவனை யிப்பொழுது சிறப்புறக் காண்டலின் வருந்துகின்றனை யென்பதிற் கூறுவதென்னை? ஆதலின்[9], பெருமை வாய்ந்ததும் ஒத்ததும் ஆகிய காதற்பற்றுள்ள பெருந்தகைக் காதலன் புணர்ச்சியே, உலகிற்குப் புகழத்தக்கதும் கிடைத்தற்கரியதுமாகிய விருப்பின் பயனாம் என்னு மிவ்வளவே யாமறிவோம்.

மாலதீ – அடி, மாலதியின் உயிரே பெரிதென விரும்பி யடாதுரைப்பவளே[10]! செல்லுதி; (கண்ணீருகுத்து) இன்றேல்! அவனைப் பலகாலும் பார்த்து நிலைதிரிந்து பின் நிலைப்படு முறுதிப்பாடெய்து மிதயங்காரணமாக நாணம் மிகவொழிந்து தீ நெறிப்புக்குழலும் யானே யிதிற் குறைபாடுற்றவளாகுவேன்[11]; ஆயினும் அன்புடைதோழீ! (வடமொழியில்)

(2) கலை நிறை மதியம்[12] கங்குற்பொழுதெலாம் வானிடை யெரிக; காமனும் என்னைக் கடிதே சுடுக; இவர், இறத்தலையன்றி யெற்கியற்றுமாறென்னை? சிறந்த நற்றாதையும், மறுவிலா மரபுடைத்தாயரும், பழுதிலாக் குலமுமே யெற்கு விரும்பற்பாலனவன்றி இவ்வாண்மகனு மின்னுயிருமங்ஙனமின்று.

இலவங்கிகை – (தனக்குள்) இதற்குரிய உபாயம் யாதோ?

(வேடசாலையினின்றும் சிறிது வெளிவந்து)

பிரதீகாரி – காமந்தகிப்பெரியார்[13] வந்துள்ளார்.

இருவரும் – பெருமைசேர் காமந்தகியா?

பிரதீகாரிகோமகளைக் காண விரும்பி வந்தனர்.

இருவரும் – ஏன் தாமதிக்கவேண்டும்?

(பிரதீகாரி சென்றனள்) (மாலதீ படத்தை மறைக்கிறாள்)

இலவங்கிகை – (தனக்குள்) நலமே நிகழ்ந்தது.

(காமந்தகியும் அவலோகிதையும் வருகின்றனர்)

காமந்தகீ – நல்லது பூரிவசுவே! நல்லது. ”தனது கன்னிமார்க்குத் தாமேயுடைமையாளர்” என்னுமிருவகை யுலகங்கட்கும் முரண்படாமல்[14] விடையிறுக்கப்பட்டது. இப்பொழுது காமற்பொழிற் செய்தியால் திருவருட்பாங்குமுளதென, அறிகுவேன். மகிழமாலை, மாதவன் படிவம் இவற்றின் கொண்டு கொடுத்தலும் சொல்லொணா வியப்பையும் களிப்பையும் அளிக்கின்றது. ஒருவொர்க்கொருவர்பாலியைந்த காதற்பெருக்கமே மணவினைக்கட் சாலச் சிறந்த நலம் பயப்பதாம். இதனையே பிருகற்பதியும் “மனம் கண் இவை நிலைப்படும் ஒரோவழி எல்லா நலனுமினிதோங்கும்” என்றுங் கூறினர்.

அவலோகிதை – இவளே மாலதி.

காமந்தகீ – (கூர்ந்து நோக்கி)

(3) மிகவும் இளைத்த உறுப்புக்களை யுடையவளும் ஈரமுள்ள வாழையுண்மருங்க[15]ன்ன அழகுடையவளும், ஒரு கலை[16]யளவில் எஞ்சிய சந்திரனைப் போலக் கட்பொறிக்குக் கழிபேருவகையளிப்பவளும், காமனாம் தீயின் வெப்பினானைந்த உடனிலையுறுவாளுமாகிய இம்மங்கல மடவரல் நம்மனத்திற்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஒருசேரத்[17] தருகின்றாள். மேலும்

(4) மாசடைந்து வெளிறிய கபோலங்களையுடைய முகத்தையுடையவளாயினும் கவினுறும் பான்மை பெற்றனள். இயலழகு பொருந்துவாரிடத்து அழகுபெறப் பரவுங் காமனது செயலும் விளக்கமுறலியல்பே. மனத்தோற்றத் தானிகழ்ந்த காதலன் புணர்ச்சியை நுகர்கின்றனள். இஃதுண்மையே; ஏனெனில்,

(5) துகின்முடி நெகிழ்தலும், இதழ் துடிதுடித்தலும், வாகு சோர்வுறுதலும், மெய்வியர்த்தலும், கண்கள் மசிருணம்[18], முகுளம், ஆகேகரம், சினிக்குதம், முக்குதம் என்னும் பார்வையை யெய்தலும், மெய்நிலைப்படுதலும் பூமொட்டனைய தனங்களும் கச்சைக் கடந்து விம்முதலும், இடம்படுகன்னம் மயிர்க்குச்செரிதலும், மயக்கமும், இயக்கமும் ஆகிய இவற்றை இவள் எய்துகின்றாள்.

(காமந்தகி மாலதியின் அருகிற் செல்லுகின்றாள்)

(இலவங்கிகை மாலதியை அறிவுறுத்துகிறாள்.)

(இருவரும் இருக்கையினின்றெழுகின்றனர்)

மாலதீ – பெரியோய்! வணங்குகின்றேன்.

காமந்தகீ – நல்வினைப்பிறவியின் பயனைப் பெறுதற்கு நீ தகுதியாகுக.

இலவங்கிகை – பரிசுத்தமான இவ்வா தனத் தமர்க.

(எல்லவரும் அமர்கின்றனர்)

மாலதீ – தங்களுக்கு நலமோ?

காமந்தகீ – (நெட்டுயிர்த்து) நலம் போலும்.

இலவங்கிகை – (தனக்குள்) இது கபட நாடகத்திற்குத்[19] தொடக்கமாம். (வெளியீடாக) மிகுந்து வரும் கண்ணீர்பெருக்கை, மங்கலத்தைக் கருதி தடைப்படுத்தலான் அது கண்டத்துட்டடைப்பட்டு மெலிந்த ஒலியுடன் தங்கள் சொற்கள் தளர்ந்துள்ளன போலும்; அத்தளர்ச்சிக்குக் காரணம் யாதோ?

காமந்தகீ – சீரசீவரத்திற்குப்[20] பொருந்தாத இப்பழக்கமேயாகும்.

இலவங்கிகை – அஃதெங்ஙனம்?

காமந்தகீ – நீயு மிதனை யறிந்திலையா?

(6) காமனது கணைகள் வென்றிசேரியல்பின; என்றும் இயலழகினுக்கு நிலைக்களனாகும் இவளது உடலம், பொருத்தமிலா மணமகற்கு அளிக்கப்படுதலால் வருந்திய தனியலணியாவும் வறிதே கழியுமென்றும் மனந்தளர்ந்தேன்.

(மாலதி துக்கக்குறிப்பை நடிக்கின்றாள்)

இலவங்கிகை – இஃதுமுளது; அமாத்தியன் அரசன் சொற்களுக்கு உடன்பாடெய்தி, அவரால் நந்தனற்கு மாலதியளிக்கப்பட்டாள் என்று யாவரும் அவரை வெறுக்கின்றனர்.

மாலதீ – (தனக்குள்) என்னே! யான் எனது தந்தையால் அரசனுக்குப் பலியிடப்பட்டுள்ளேனா[21]?

காமந்தகீ – விந்தை!

(7) குணங்களை ஆராய்ந்தறியாமல் அமாத்தியனால் இஃதெங்ஙனம் தொடங்கப்பட்டது; அன்றேல்; தீயசூழ்ச்சியில் திறலமைந்த மனத்தருக்கு மகப்பேரன்பு யாங்ஙனம் கூடும்? அரசனது காமத்துணைவனாகிய நந்தனனுக்குத் தன் புதல்வியை மணம் புரிவித்தலான் அவன் தனக்கு நண்பனாகுவன் என்னுமிஃதொன்றே யவர் கருத்தாகும்.

மாலதீ – அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள்.

இலவங்கிகை – பெரியோய்! தாங்கள் தெரிவித்த வண்ணமே அது; அன்றேல், காளைப்பருவத்தையுங் கடந்த உருவிலியான அம்மணமகனிடத்தில் அமைச்சன் ஏன் ஒன்றனையும் ஆராய்ந்திலன்?

மாலதீ – (தனக்குள்) அந்தோ அழிவெய்தினேன். யான் பாக்கியமிழந்து நிகழ்வுறுங் கொடுமையா மிடி யேற்றினுக்கிலக்காயினேன்.

இலவங்கிகை – ஆதலின் அருளுக; பெரியோய் பிழைப்புறு மிறப்பெனும் இந்நிலையினின்றும் எனதன்புடைமைக்குரிய தோழியைப் பாலித்தருளல் வேண்டும்; இவள் தங்களுக்கும் புதல்வியேயாவள்.

காமந்தகீ – அடி ஒழுங்கியல்பினளே! என்னாற் செயற்பாலதென்னை? கன்னியர்க்கு அவர்தமூழ்வினையும் பெற்றோருமே பெரிதும் உரிமையுடையவராவர்.

காமந்தகீ – குசிகன் புதல்வியான சகுந்தலை துசியந்தனையும், உருப்பசியென்னு தெய்வமகளொருத்தி புரூரவனையும் விரும்பிப் புணர்ந்தனர். வாசவதத்தையும் தந்தையால் சஞ்சயன் என்னும் அரசனுக்கு மணம்புரிவிக்கப்படினும், தான் உதயனனுக்கே வாழ்க்கைப்பட்டனள் என்றும் சரித்திரமுணர்வார் சாற்றுவர்; எனினும் அவற்றை யுபதேசித்தல் தக்கதன்று.  முற்றிலும்;

(8) அமாத்தியன், அரசனுக்கு அன்பனும்[22] நண்பனுமாகிய[23] நந்தனனுக்கு தன் புதல்வியை யளித்து இன்புறுக; இவளும், தூமகேது[24] வோடியையு மாசிலாக் கலைபோலக் கொடுந்தோற்றத்திவனுடனியைக.

மாலதீ – (தனக்குள்) அந்தோ! தந்தையே! எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையால் தோல்வியுற்றீர்.

அவலோகிதை – பெரியோய்! காலங்கடக்கின்றது; அப்பெருந்தகை மாதவன் மனப்பிணியுள்ளவன் என்பதைத் தெரிவிக்கின்றேன்.

காமந்தகீ – இக்கணமே செல்வோம்; குழந்தாய் எற்குச் செலவு கொடுப்பாயாக.

இலவங்கிகை – (மாலதியையணுகி) தோழி மாலதி! இப்பொழுது இப்பெரியாரிடத்திருந்தே அப்பெருந்தகை மாதவன் செய்தியையுமுணர்வோம்.

மாலதீ – எற்கும் பேரவாவுளது.

இலவங்கிகை – தாங்களும் இங்ஙனம் அன்பு மீக்கூர்ந்த பெருமுயற்சி யெய்துமத்தகைய மாதவன் என்பார் யாவர்.

காமந்தகீ – கூறவொண்ணாத மிகவிரிந்த பெருங்கதை.

இலவங்கிகை – ஆயினும், விரித்துரைத்தருள வேண்டும்.

காமந்தகீ – கேட்பாயாக; சிறப்புறுமாடவர்க்குழுச் சிரோமணியாய்த் திகழுறுந் தேவராதன் என்னும் விதர்ப்ப நாட்டு வேந்தற்கு, அமைச்சனொருவனுளன். உலகெலாம் பரவு மூழ்வினைப் பயனுடையவனை, “இவன் யாவன்? எத்தகைத்தவன்?” என்று உடன் கல்விபயின்றமையின் உன்றந்தையே யுணகுவர். மேலும்.

(9) வெள்ளிய புகழ்களால் விளங்குந் திசை முடிவுடையாரும், மிகச் சிறந்த நல்வினைப் பயன்கட்கும், மங்கலங்கட்கும் நிலைக்களனும், எண்ணரிய பெருமை வாய்ந்தவருமாகிய அத்தகைப் பெரியார் இவ்வுலகில், எங்ஙனமேனு முதிக்கின்றனர்.

மாலதீ – (களிப்புடன்) தோழீ! நம் பெரியாராற் புகழப்படும் திருநாமத்தைப் பெறுமவரை, நம் தந்தை பலகாலும் நினைவதுண்டு.

இலவங்கிகை – தோழீ! நம் பெரியாரோடு அவ்விருவரும் ஒரே ஆசானிடத்துக் கலைபயின்றனரென அக்காலத்தவர் கூறுகின்றனர்.

காமந்தகீ – (10) விளங்கு நற்குணங்களாகுந்[25] தேசுடையழகனும், கலைசிறக்கப்பெற்றவனும், இளம்பிறையை நிகர்த்தவனும் ஆகிய இவன், இவ்வுலகில் கண்ணுடையார்க்குக் கழிபேருவகையின் காரணமாக உதயகிரியினின்றும் மதியுதித்தன்ன உதித்தனன்.

இலவங்கிகை – (திரும்பி) இவன் ஒருகால் மாதவனாகுவனோ?

காமந்தகீ – (11) கல்வியாற் கவினுறு மிவன் வாலிபனாயினும், இப்பொழுது இங்ஙனம் வந்துள்ளான். சரற் காலத்து வாமதியனைய வதனத்திவனைப்பார்த்த அளவில் இந்நகரம், மடவரல்களுடைய காதற்பற்றுடன் கலக்கமுற்ற கடைவிழிகளால் ஆம்பல்[26] நிறைந்த சாளரங்களையுடையது போலக் காணப்படுகின்றது. இங்ஙனம் தனது வாலிப நண்பனாகிய மகரந்தனுடன் ஆன்வீட்சிகீயைப் பயிலுமவனே மாதவன்.

மாலதீ – (களிப்புடனருகில்) தோழீ இலவங்கிகையே! இப்பெருமகன் பெருங்குடிப்பிறந்தவனாம். கேட்டனையா?

இலவங்கிகை – பாரிஜாதம் பாற்கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்கும்.

காமந்தகீ – காலம் மிகவும் கடந்தது. இப்பொழுது;

(12) அச்சத்தால் நடுங்குஞ் சக்கிரவாகங்கள் புணர்ச்சியனீங்கி யிளைப்பாறுதற்பொருட்டு முதற்கண் அவைகளின் துயில்நிலையை யொழிப்பதும், அரண்மனையின் மேன்மாடங்களிற்புக்கு எதிரொலித்தலின் மிகுந்ததும், ஆகிய இம்மாலைச்சங்கின் பேரொலி முழக்கம் வானிடை யுலவுகின்றது. குழந்தாய்! சுகம் பெறுக. (என எழுகின்றாள்)

மாலதீ – (திரும்பி) என்னே எனது தந்தையால் அரசனுக்குப் பெலியிடப்பட்டுள்ளேனா? அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள். (கண்ணீர் பெருக) அந்தோ தந்தையே! எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையால் தோல்வியுற்றொழிந்தீர். (களிப்புடன்) அப்பெருமகன் பெருங்குடிப்பிறந்தவனா? பாரிஜாதம் பாற்கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்குமென்று நன்கு கூறினள் இலவங்கிகை. மீண்டும் அவரை யான் பார்க்கமாட்டுவேனா?

இலவங்கிகை – ஒன்றுக்கொன்று எதிர்முகமாயமைந்த நான்குவாயில் பொருந்து மிவ்வில்லத்தின் வாயிலாகச் செல்வோம்.

காமந்தகீ – (திரும்பி) அவலோகிதே. இப்பொழுது என்னால் நடுநிலையிலிருப்பவள் போல மாலதியைக் குறித்துச் செயற்பாலதாகிய தலைத்தூதரின் செயற்பெருமை சிறிது குறைக்கப்பட்டது ஏனெனில்.

(13) பிறிதொரு மணமகன்பாற் குற்றமும் தந்தைபால் ஐயுறவும் உண்டாக்கப்பட்டது. இதிகாசங்களையும் வெளிப்படுத்தலாற் செயன்முறையுங் கூறப்பட்டது. குலத்தானும் குணத்தானும் சிறந்திலங்கும் மாதவனது பெருந்தகைமையும் முறையே புகழ்ந்து கூறப்பட்டது. ஆதலின் இனிச் செயற்குரியது புணர்ச்சியொன்றேயாகும்

(என்று எல்லவரும் போந்தனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் இரண்டாம் அங்கம் முற்றிற்று.


[1] எனச்சென்றனர் – மகரந்தன் காமந்தகிக்கு மாதவன் செய்தியைத் தெரிவித்தமை, இலவங்கிகையின் வருகை, மாலதி, இலவங்கிகை யிவர்கள் மேன்மாடத்திற் புகுந்தமை, மாலதியினிலை யறிதர்க்குக் காமந்திகையின் வருகை, அவளாற் றொடங்கப்படும் நந்தனன் செய்தி யென்னுமிவற்றைக் குறிப்பின் உணர்த்திச் சென்றனர்.

[2] பிரவேசகம் – இழிந்த வேடத்தவர்களான நடன், நடி முதலியோரான் அளவளாவிப் பேசப்படலேயன்றிப் பிறவிலக்கணம், விட்கம்பத்திற்குக் கூறியாங்கு ஒக்கும்.

[3] மேலும் மேலும் என இரட்டித்துக்கூறினமை, காமற்பொழிலிற் றங்கி மாதவன் மருங்கு சென்றமை, அகப்பொருட் பொருந்து மின் சொற்களான் மாலையைப் பெற்றமை, ஆகிய இவற்றைக் கூறு மிலவங்கியை மீண்டுமூக்கற் பொருட்டு என்க.

[4] உன்னிமித்தம் – மாதவன் மனம் மிக்க வலிதாயினும் மாலதியின் வடிவழகினால் அது கவரப்பட்டமையின், அவன் முயன்ற செயல் குறைவுபாடெய்தற்கு இம்மாலதியே யேதுவாகலின், உன்னிமித்தம் எனக்கூறி, யிதனால் மாதவனுக்கு மாலதியிடம் காதன் மிகுந்திருத்தலுங் குறிப்பிடப்பட்டது.

[5] இலவங்கிகை, மாலதியின் உள்ளக்கிடக்கையை யறிந்துரைத்தலின் மாலதிக்கு உண்டான கழிபேருவகையே யவளைத் தழுவலினிமித்தமென்க.

[6] ஆடற்குப்பாடலுறுப்பாகலின் அதற்கு அஃது இன்றியமையாதது; பாடலின்றி யாடலாவது, உறுப்புக்கள் காமன் வயத்தனவாய்த் தஞ்செயலற்று நோயின்பாற் பட்டுலைவுறுஞ் செயலேயாம். இதனால் இவர் செயல்கள் இயற்கையினன்றிக் காமவேட்கையின்பாற் பட்டனவென்பதும், ஒருவர்பாலொருவர் காதன்மேற் கொண்டுள்ளார் என்பதும் போதரும்.

[7] மாதவன் காட்சியின்றி மாலதி உயிர்த்திருக்க வியலாதவளாய், அவள் அவனது உருவத்தை வரைந்தாதல் உயிர்த்திருக்கக் கருதியாங்கு, மாதவனும் இவளுருவத்தை வரைந்தனன்; என்னுமாற்றால் இவர்கட்குண்டான காதற் பெருக்கமே இலவங்கிகையின் விருப்பமென்பது கருத்து.

[8] இருமுதுகுரவர் – தந்தை, யென்பாலன்புமிக்காரேனும், அரசன் விருப்பிற் கடைப்பாடுடையாரும், தாய், ஆண்மகவினும் பெண்மகவிலன்புடையாரேனும், கற்பின் வழிப்பட்டுத் தந்தைவயத்தருமாதலின் காவற்றிறலற்றவர் என்பதும், பூழியாடன் முதலியவற்றால் இன்பதுன்பங்களில் ஒத்தவரும், கள்ளமற்ற உள்ளம் போன்றவருமாகிய தோழிகள் தாய்தந்தையரினுஞ் சிறந்தவர்; அவருள் நீ சாலச்சிறந்தவள் எனினும் யான் தன்வயத்தளாகாமையின் அங்ஙனம் நீயும் காத்தலரிது என்பதும், எற்காக்குங் காவலன், இறந்தவரை யெழுப்பும் மருந்தனைய மாதவனேயாவன்; அவனையான் யெய்தப்பெறாதொழியின் இறத்தலேயன்றி பிறிதொன்று மெய்தற்பாலதின்று என்பதுங் கருத்து. இச்சுலோகத்தில் விடம், அங்கி, வெப்பு நோயென்னு மும்மையாமுவமையைக் கோடல் மனவேட்கையின் கொடுமையை உவமையொன்றிற் கூறவியலாதென இதனால் அதன் பெருமிதம் குறிப்பிடப்பட்டது.

[9] இத்தொடரான் மாலதியே, தான் சேர விரும்புங் காதலனை வலிந்து பற்றுவாளாயின் அவள் இன்புறுவள்; அன்றேல் துன்புற்றொழிகுவள் என்பது குறிப்பிடப்பட்டது.

[10] அடாதுரைப்பவள் – உயிர் நசையின் கன்னியர்க்குத் தகாததும், உற்றாரானும் பெற்றாரானுங் கொள்ளத்தகாததும், மரபினை மாசுபடுத்துவதுமாகிய செய்தியைக் கூறுபவள்.

[11] குறை – குலக்கன்னியரது வரையறை யிகந்து பலகாலும் மாதவனைக் காண்டலே குறையென்பது கருத்து.

[12] இச்சுலோகத்தில் – கங்குற்பொழுதெலாம் – என்பது கிருட்டினம், சுக்கிலம் என்னும் இருபக்கத்து இரவுகளிலும் காலவரையறையை நீக்கி, கலைக்குறைவின்றி மதி விளங்குதலைக் குறிக்கும். எரிக என்பது தண்கதிர்ச் செல்வனாயினும் பிரிவெய்தினோரை வெப்புறச் செயல் இவனது இயல்பெனக் குறிக்கும். இவ்வாண்மகனும் இன்னுயிரும் என்னுமிவற்றால் கன்னியர்க்குத் தன்னொழுக்கத்தைக் காத்து நன்னெறி நடத்தலே யின்றியமையாத கடமையாம் என்பதும் குறிப்பிடப்பட்டது.

[13] உபாயம் யாதென மனத்தில் ஆலோசிக்க, காமந்தகி வந்தனள் என்னும் சொல் நேர்ந்தமையின் இதற்குபாயம் அவளேயாவள் என்னும் சுப நிமித்தமும் குறிப்பிடப்பட்டது.

[14] இருவகை யுலகங்கட்கு முரண்படாமை – எனது குடியே தமக்கு அடிமையாகலின் தங்கருத்திற்கியைவன செய்க; என்னும் பொருள்படும் விடையினால் இன்பந் துய்த்தற்குரிய மண்ணுலகிற்கு முரண்படாமையும், தங்கன்னியர்க்கே யன்றிப் பிறர் கன்னியர்க்குத் தாம் உடைமையானரல்லர் என்னும் எதிர்மறைப் பொருள்படுதலான் அகந்தூய்மையமையும் வாய்மையானும், முன்னர்ச் செய்யப்பட்ட நட்புறுதிப்பாட்டின் முறிவாகுந் தோடமின்மையானும், விண்ணுலகிற்கு முரண்படாமையும் ஆம்.

[15] வாழையுண்மருங்கு – இவ்வுவமையால் மென்மை, செம்மை, வெண்மை முதலியன குறிக்கப்படுகின்றன.

[16] ஒருகலை மதி – என்பது கதிரவன் கலையில் முற்றும் கலந்து ஒளியிழந்து தோன்றாதொழியு நிலையில் இருக்கும் சுமையின் முதனாட்பிறையினை யுணர்த்தும்.

[17] தன் செயற்குக் கருவியான காமவேட்கையில் இவள் நிலைப்படுதலால் இன்பத்தையும், இத்தகைய காமநோயின் வயத்தளாய் ஒருகால் இறந்துபடுமோ என்னுமச்சத்தால் துன்பத்தையும் இவள் ஒருசேரத் தருகின்றனள் என்பது கருத்து.

[18] மசுருணம் முதல் ஐந்தும், புணர்ச்சியினிகழுங்கட்பொறிச் செயல்களது குறியீடுகளாம்; அவற்றுள், மசுருணம் – காதலினிடத்துக் காதன்மிகையால் கண் செம்மையுற்றுக் கலக்கமுறப் பார்த்தல்; முகுளம் – இன்ப நுகர்ச்சியில் இமையைக் குவித்து கருவிழியைச் சிறிது அலர்த்திப் பார்த்தல்; ஆகேகரம் – சிறிது கடைகுவிந்து குறிப்புடன் பொருந்தும் இமைத்தலுடன் கருவிழியை மிகச் சுழற்றிப் பார்த்தல்.

சினிக்குதம், முக்குதம் இவற்றின் இலக்கணம் முதலங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இச்சுலோகத்தினால் இன்ப நுகர்ச்சியையுணர்த்து முகத்தான் சம்போக சிருங்கார ரசம் குறிப்பிடப்பட்டது.

[19] கபடநாடகம் – தகுதியற்ற ஒருவனுக்கு வாழ்க்கைப் படுதலைக் கூறுமுகத்தான் அச்சத்தை விளைவித்து மாலதியின் மனத்தைக் களவு மணத்தில் முயல்வித்தலாகும் செயலாம்; அதன் றொடக்கமாவது நெட்டுயிர்த்து நலம்போலும் என்று கூறிய சொல்.

[20] சீரசீவரம் – முதலங்கத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது.

[21] ஒருவன் துர்க்கை முதலிய தெய்வங்களுக்கு ஆடுகோழி முதலியவைகளைப் பலிகொடுத்து தன் கோருதலை நிறைவேற்றிக் கொள்ளுதல் போல அமாத்தியன் செயலுமாம்.

[22] அன்பன் – உண்மையுரைப்பவனும், நேர்மையான மனப்பான்மையுள்ளவனும், உதவிபுரிபவனும், இனியவை கூறுபவனும், ஆகித் தானுமின்புறு மொருவன் அன்பன் என்றும்,

[23] நண்பன் – துக்கம், ஆபத்து, மயக்கம், செயற்குரிய காலம் கெடுதல், இவற்றில் நன்மையே நாடிச் செய்யு மொருவன் நண்பனாகும், என்றும் பரதநூல் கூறும்.

[24] தூமகேது – உற்பாதம்; இதனைக் கண்ட அளவில் தீங்கு நேருவது போல மாலதிக்குத் தீங்கு நேரும் என்றும் மதியை உவமித்தலான் அத்தீங்குங் கடிதில் நீங்கியவள் இன்புறுவாள் என்றும் குறிப்பிடப்பட்டது.

[25] இந்தச் சுலோகத்திற் கூறப்பட்ட அடைமொழிகள் மாதவனுக்கும் சந்திரனுக்கும் ஒக்கும்.

[26] ஆம்பல் – மாதவன் மதியை நிகர்த்தவன் ஆதலின் அவனைக் கண்டு மகளிரது கடைவிழியாகும் ஆம்பலும் அலர்தரலியல்பு.

மாலதீமாதவம் – மூன்றாம் அங்கம்

மூன்றாம் அங்கம்

(புத்தரக்கிதை பிரவேசிக்கின்றாள்)

புத்தரக்கிதை – (நடந்து ஆகாயத்தை நோக்கி[1]) அவலோகிதே! காமந்தகியார் எங்ஙனமிருக்கிறார் என்பதை நீ யறிகுவையோ!

அவலோகிதை – (பிரவேசித்து) புத்தரக்கிதே! என்னே மதிமயங்குகின்றனை? சின்னாட்களாக அப்பெரியார் இரந்துண்ணும் அமயத்தையும் விடுத்து மாலதிக்குத் தேருதலைச் செய்து வருகின்றனர்.

புத்தரக்கிதைஆம் நீ எங்குச் செல்லப் புறப்பட்டனை?

அவலோகிதை – “சங்கரபுரத்தைச் சார்ந்த காமற்பொழிற்குச் சென்று குன்றிப் புதரின் மருங்கிலிருக்கும் செவ்வசோகின் மறைவில் இருத்தல் வேண்டும்” என்னும் காமந்தகியின் கட்டளையை மாதவன்பாற் றெரிவித்தற்பொருட்டு அவர்களால் அனுப்பப்பட்டேன்; மாதவனும் அங்குச் சென்றனன்.

புத்தரக்கிதைஎது குறித்து மாதவன் அங்ஙனம் அனுப்பப்பட்டான்.

அவலோகிதை – இற்றை நாள் கிருட்டினசதுர்தசி[2] யென்று மாலதி தன் றாயுடன் சங்கரபுரத்திற்கேகுவாள்; அதனால் இத்தகைய மங்களங்கள் வளர்ந்தோங்குமென்றும், கடவுள் வழிபாடு காரணமாகத் தானே மலரெடுத்தலைக் குறித்து இலவங்கிகையுடன் அப்பொழிற்கே வரச் செய்வாள்; அங்கு ஒருவர்க்கொருவர் பார்வையும் நேருமென்றும் அனுப்பப்பட்டான். நீ எங்குச் செல்ல புறப்பட்டனை?

புத்தரக்கிதை சங்கரபுரத்திற்கே செல்பவளாகிய எனதன்புடைமைக்குரிய தோழி மதயந்திகையால் யானுமழைக்கப்பட்டேன்; ஆதலின் காமந்தகியாரின் சரணங்களில் வணங்கிப் பின்னர் அங்ஙனமே யானும் வருவேன்.

அவலோகிதை – காமந்தகியாற் கட்டளையிடப்பட்டு நீ முயன்ற செயலின் செய்தி என்னை?

புத்தரக்கிதையான் காமந்தகியின் கட்டளைப்படி அன்பிற்குரிய மதயந்திகையுடன் நட்புரையாடும் அமயங்களில், “இத்தகையன், அத்தகையன்” என மகரந்தனைப் புகழ்ந்து கூறி அவளுக்கும், “அவனையான் காண்பனோ” என்னும் பேராவலுண்டாகுமாறு பரோட்சத்திலும் அவனிடத்துக் காதற்பெருக்கை விளைவித்தேன்.

அவலோகிதை – நல்லது! புத்தரக்கிதே நல்லது; வா! செல்லுவோம்.

(பிரவேசகம்)

(காமந்தகி பிரவேசிக்கிறாள்)

(1) மாலதி, அத்தகைய நன்னடையின் வயத்தளாயினும்,[3] எனது உபாயத்தாற்[4] பாங்கிமாரிடத்துண்டாகும் நம்பிக்கையால்[5] தேறுதற்படுத்தற்குரிய நிலையைச் சின்னாட்களில் அடைவிக்கப்பட்டாள். இப்பொழுதும்

(2) நமது பிரிவில் மனத்துன்பத்தையும் உடனிருக்கையில் மனக்களிப்பையு மெய்துகின்றாள்; தனிமையில் என்னுடன் விளையாடுகின்றாள். எப்பொழுது மினியவை கூறியென்னை வழிபடுகின்றாள்; யான் செல்லுங்கால் என் கண்டத்திலணைந்தவளாய் என்னால் மறுதளிக்கப்பட்டு, உடன் வணங்கி உறுதிமொழி[6]களான் எனது வரவையிரந்து நிற்கின்றாள்.

இஃதும் எனது பேராசைக்குத்[7] தக்கதோர் சான்றாகும்.

(3) பிறரைக் கருத்துட் கொண்டன்ன சொற்களால்[8] விரித்து விளக்கப்பட்ட சாகுந்தள முதலிய இதிகாசங்களைச் செவியேற்று என்மடிக்கணிலைப்படுத்திய[9] உறுப்புக்களையுடையவளாய் நெடிதாராய்தலான்[10] அசைவற்றிருக்கு நிலையை யெய்துகின்றாள்.

இனிமேற் செய்யவேண்டுவன யாவும் மாதவன் முன்னிலையிற் றொடங்குவோம்.

(வேடசாலைக் கெதிரினின்று நோக்கி)

குழந்தாய் இங்கண் வருக.

(மாலதியும் இலவங்கிகையும் வருகின்றனர்.)

மாலதீ – (தனக்குள்) என்னே! எனது தந்தையால் பலியிடப்பட்டுள்ளேனா? அரசனையின்புறுத்தலே தந்தைக்குப் பெரிது; அங்ஙனம் மாலதியாகாள். (கண்ணீர் பெருக) அந்தோ! தந்தையே எனதுயிரையும் பொருட்படுத்தாமல் தற்பயனசையாற் றோல்வியுற்றொழிந்தீர். (களிப்புடன்) அப்பெருமகன் பெருங்குடிப் பிறந்தவனா? பாரிசாதங் கடலினன்றிப் பிறிதெங்ஙனம் பிறக்குமென்று நன்றே கூறினள் இலவங்கிகை. மீண்டும் அவரை யான் பார்க்கமாட்டுவேனா?

இலவங்கிகை – இனிய தேனிறைப்பூங்கொத்துக்களைப் புசித்து விளையாடுங் குயிலினங்களின் பேரொலியால் அலைவுறு மாமரத்தினு நியினின்று பறந்தரற்றும் வண்டினங்கள் சண்பகத்திற் சேர, அவற்றின் நெருக்கத்தினால் விரிந்தலர்ந்த மலர்களின் மணங்கமழுவதும், சமவட்டமான அல்குற் பருமையைத் தாங்கலான் அயர்ந்த துடைப்பருமையால், மேடுபள்ளமானவிடங்களில் இடர்ப்படுமடிவைப்பினால் உண்டாகும் வியர்வைத் திவலைகளாகின்ற அமுதபிந்துக்களான் விளங்குறுமுனது அழகிய வதன மதியினுக்குச் சந்தணம் போற் குளிர்ந்ததுமாகிய இக்காமற்பொழிற்காற்று, உன்னைத் தழுவுகின்றது; ஆதலின் அன்புடைத் தோழீ! இங்ஙனம் செல்வோம்.

(என்று பூந்தோட்டத்துட் செல்லுகின்றனர்)

(மாதவன் பிரவேசிக்கிறான்)

மாதவன் – ஆனந்தம்! காமந்தகியும் நேரில் வந்தனள்; இவளும்,

(4) வெப்பத்தினால் வாடிய ஆண்மயிலினுக் கெதிரில் மழைக்கு முன்னம், அதைத் தெரிவிக்கும் மின்னலன்ன[11], காதலிக்குமுன்னரே யென்முன்றோன்றி எனது இதயத்தை யுயிர்த்திருக்கச் செய்கின்றனள்.

என்னே! இலவங்கிகையுடன் மாலதியும் வருகின்றனளே!

(5) இக்குவளைவிழி யணங்கினுடைய மறுவிலா மதிமுகமுதித்தலான், எனது மனம் சடத்தன்மையெய்தி[12], பருப்பதத்தைச் சார்ந்த சிறந்த சந்திரகாந்த மணிபோல நெக்குருகுகின்றது; இது வியப்பாம்[13]. இப்பொழுது மாலதி மிகுவனப்பெய்தியுள்ளாள்[14]. ஏனெனில்:-

(6)இவள், வாட்டமுற்ற சண்பகமாலை போன்றனவும், செயற்றிறலற்றனவும், ஆகிய உறுப்புக்களாற் காமத்தீயை யெரிதரச் செய்கின்றனள். இதயத்தைக் களிப்புறச் செய்கின்றனள். கண்ணைக் கவினுறச் செய்கின்றனள்.

மாலதீ – தோழீ! கொடிகளடர்ந்த இப்புதரில்[15] மலர்களைக் கொய்வோம்.

(7) மாதவன் – காதலியின் இனிய சொற்களை, முதன்முதலாய்ச் செவியேற்றலான் எனதுடலம் மயிர்க்கூச்செறிந்து, அதனால் யான், கார்காலத் தொடக்கத்தில் மழைத்துளி சொரிந்த அப்பொழுது முகிழ்தருங் கடம்புபோல ஆயினேன்.

இலவங்கிகை – இங்ஙனமே செய்வோம்.

(பூக்கொய்தலை நடிக்கின்றனர்)

மாதவன் – காமந்தகிப் பெரியாரின் போதனாமுறை[16], அலகிலா வியப்புடைத்து.

மாலதீ – பிறிதோரிடத்திலும் மலர்களைப் பறிக்குவோம்.

காமந்தகீ – (மாலதியைத் தழுவி) அடி மாலதீ! ஒழிக; ஒழிக; அலையுமாற்றலற்றனை?

(8) நன்னுதலாய்! உனது மெய்வருத்தம் சொற்களைத் தழுதழுக்கச்செய்கின்றது; உறுப்புக்கடோறுஞ் சென்றடைகின்றது; வியர்வை பிந்துக்களை மதிமுகத்தில் விளக்குகின்றது; கண்களை முகிழ்த்துகின்றது; ஆதலின் இது முற்றிலும், காதலன் காட்சி[17]யோடப்ப உன்பால் விளங்குகின்றது.

(மாலதி வெட்கத்தை நடிக்கிறாள்)

இலவங்கிகை – தங்கள் கட்டளை மங்கலமுடையது.

மாதவன் – இப்பரிகாச வார்த்தை மனத்தை யின்புறுத்துகின்றது.

காமந்தகி – ஆதலின், அமர்க. கூறவேண்டுவன சில கூற விரும்புகின்றேன்.

(எல்லோரும் அமர்கின்றனர்)

காமந்தகீ – (மாலதியின் மோவாயை நிமிர்த்து) திருவளர் செல்வி! இவ்வியப்பைக் கேள்[18].

மாலதீ – கருத்துடனிருக்கிறேன்.

காமந்தகீ – உன்னைப்போல எனது இரண்டாம் மனப்பிணிப்பாகிய மாதவன் என்னும் பெயரிய வாலிபன் உளன் என முன்னம் ஒருகால் சொற்றொடர்பில் யான் கூறியுள்ளேன்.

இலவங்கிகை – ஆம் நினைவு கூறுகிறோம்.

காமந்தகீ – அவன் காமற்பொழிலினிகழ்ந்த விழா நாண்முதற் றுன்புறு மனத்தினனாய் உடல் வெப்பினாற் றன்வயமற்றவன் போலக் காணப்படுகிறான். அங்ஙனமே;

(9) மதியினிடத்தாதல், அன்புடைமைக்குரியாரிடத்தாதல், இவன் மனமகிழ் வெய்தவில்லையாதலின், திறம்படு மனப்பான்மையுடையனாயினும் தாங்கொணா மனத்தாபத்தை வெளியிடுகின்றான்; தினையணைய கரிய மேனியனாயினும் மிக வெளுத்து மிகவிளைத்திருக்குமினிய வுடலைத் தாங்குகின்றான்; எனினும், மனங்கவர் வனப்புடையவனாகின்றான்[19].

இலவங்கிகை – இஃதும் அவ்வமயத்தில் “மனப்பிணியன் மாதவன்” என்று அவலோகிதையினாற் றங்களைத் துரிதப்படுத்து முகமாகக் கூறப்பட்டது.

காமந்தகீ – இவனது காமவேட்கைக்குக் காரணம் மாலதியென்று கன்ன பரம்பரையாகக் கேட்டு யானுமதனையே உறுதி செய்தேன்; ஏனெனில்,

(10) இம்மதிவதனம்[20], இம்மாதவனது[21] ஆழ்ந்த நோக்கத்திற் கிலக்காந் தன்மை யெய்தியது; இஃதுண்மையே! ஆதலின் ஆழ்ந்த கருத்துடை யிவனது மனம், திரையிலாக் கடலும் திங்களைக் கண்டமேல் அதன் நீர் போல, உற்கலிகை[22]களாற் சலித்துக் கலக்கமுறுகின்றது.

மாதவன் – என்னே! இச்சொற்பொழிவின் றூய்மை; என்னே! என்னைப் பெருமைப்படுத்தலிற் பெருமுயற்சி. அன்றேல்,

(11) சாத்திரங்களின் ஐயந்திரிபற்ற உறுதிநிலையும், இயற்கையறிவும்[23], சொல்வன்மையும், குணங்களிற்[24] பயின்ற சொற்களும், காலத்திற்கேற்ப ஒழுகலும், புத்தறிவு[25]மாகிய இக்குணங்கள், செயற்பயனைச் சுரந்தளிப்பனவாம்.

காமந்தகீ – இவன் உயிர்த்திருத்தலினடுக்கமுற்று செயற்கரிய எதனையுஞ் செய்தே தீருகின்றான்; அங்ஙனமே!

(12) முகிழ் நிறைந்து[26] குயிலினங் கூவுமினிய தேமாவிற் கண்னை நிலைப்படுத்துகின்றான். உடலை, மகிழ்மணங் கமழு மந்தமாருதத்தின்[27] வழிப்படுத்துகின்றான்; பசுமையான தாமரையிலையையே மேற்போர்வையாகக் கொண்டும் வருந்து மெய்யினனாய் இறத்தற்பொருட்டே[28] வெப்பினை விரும்பி[29]ப் பலகாலும் சந்திரன் கதிர்களை நத்திமேற்கொள்வன்.

மாலதீ – (தனக்குள்) இங்ஙனம், அவர் செயலருஞ் செயலாற்றவும் முற்படுகின்றாரா?

காமந்தகீ – இயலழகமைந்து[30] இரங்கற்குரியவிக் குமரன்[31] முன்னரொருபோழ்தும் இத்தகைய துன்பமெய்தப்பெற்றிலனாதலின், ஒருகால் இவன் உயிர் துறக்கவுங் கூடும்.

மாலதீ – தோழீ! இந் நிலவுலகிற்கணிகலனா யிலங்குமிவற்கு, என்னிமித்தம் விளைவுறுமெதனையோ[32] யான் சிந்தித்தலாற் பேய் பிடித்தாங்கு இதற்குரிய மறுமொழி யெதையுமறிந்திலேன்.

மாதவன் – ஆனந்தம். காமந்தகிப்பெரியாரால் அருள்புரியப்பெற்றேன்.

இலவங்கிகை – பெரியோய்! தாங்கள் இங்ஙனங் கூறுமாற்றால் யானுங் கூறுவேன்; எங்கள் கோமகளோ, இல்லத்திற்கணித்துள்ள தெருவிற்குச் சிறுபொழுது அலங்காரமாயிலங்கு மவனையே பலகாலுங் கண்ணாரக்கண்டு, இரவியின் கதிரோடியைந்தலர் கமலமன்ன உறுப்புக்களினொளியால் உய்த்துணரக் கிடக்கின்ற காமவேட்கையின் விதனமெய்தி வனப்புடையளாயினும், பாங்கியரை யலமரச் செய்கின்றனள். ஆடல், பாடல் இவற்றையும் விரும்பவில்லை. தளிரனைய செங்கரம் வாட்டமுற, அதிற் கபோலத்தை யமைத்தவண்ணமா யிந்நாட்களைக் கடத்துகின்றாள். மேலும், அலர்ந்த செந்தாமரையின் வழிந்தொழுகு மகரந்தமணங்கமழ்வதும், குருந்தம், மாகந்த மிவற்றின் சிறிதலர்ந்த மலர்களின் றேன்றுளிக் குவியலைக் கொணர்வதுமாய மந்திரப் பூம்பொழிலின் மந்தமாருதத்தானும் மிகநைந்துருகுவாள். மற்றும் அற்றை ஞான்று, வஞ்சத்தாலிவர் ஒருவர்பாலொருவர் கடைக்கணித்த காலை, வெப்புற்று வருந்தும் மனத்தில் விரைந்தெழுங் காமவேட்கையால் விளங்குமுறுப்புக்கள், அச்சத்தாலசைவற்றுச் செயலற்றிருந்துழி நிகழ்வனவாகிய வியர்வைப் புளக நடுக்கம் இவற்றாற் பாங்கிமாரனைவருங் களிப்பததனாது திருவிழாப் பெருமையைக் காண்டற் பொருட்டு காமற்பொழிற்கணிகலனா யுருக்கொண்டுவந்த காமதேவனேயனைய அம்மாதவனது பற்பல விலாசங்களான், விளைந்த காதற்றொடர்பாலினிது நிறைவுறும் யௌவனத் தொடக்கத்தை யுடையளாய், ஒருவர்க்கொருவரின் காட்சியின்பத்தை இவளெய்தப்பெற்றதுமுதல், முற்றிலுங் தாங்கொணாத் துயரத்தான் மிகக் கொடிய மாறுபட்ட நிலையை யநுபவித்து, உவாமதியெழுச்சியாற் சிறிது நேரத்தில் வாடிய சேயிளங் கமலமென்ன வாட்டமுறுகின்றாளாயினும், இறைப்பொழுதில் மனத்தே வலிந்து நிருமிக்கப்படுங் காதலன் புணர்ச்சியால், மிகுமழை பொழிதலானனைந்த நிலமெனத் தண்ணியளாகுவளென அறிகுவேன்; ஏனெனில், இதழ் துடிதுடித்தலால் விளங்கும் முத்தனைய பற்களின் ஒளியானன்கிலங்குவதும், இடையறாதிலகு புளகத்தாற் பருத்தகபோலத்திற் றியங்கும் மாலிநீர்ப் பெருக்குடையதும், சிறிது வளைவுற்றும் அசைவற்றுமிருத்தலின் மேனோக்குற்ற கருவிழியுடன் மசிருணம், முகுளம் என்னும் பார்வையமைந்த குவளை விழிகளையுடையதும், நிறைந்தரும்பிய வெப்புநீர்த்திவலைகட் பொலிவுறும் பிறைநுதலாற் றிகழ்வதுமாகிய வதனகமலத்தைத் தரிப்பாளாதலின், அகப்பொருட்டுறையிற் சீரிய மதிநுட்பம் வாய்ந்த பாங்கியரால் ஐயுறத்தகும் வாலைப் பருவத்தை[33]யுடையவளாகிறாள். மேலும், தடைப்படாது விளங்குந் திங்கட்கதிர்கற்றையோடியைந்து இடையறாது நீரைப்பெருக்கு மதிமணியாரமணிந்தும், மிகுந்த பச்சைக்கருப்பூரம், முற்றிலும் குளிர்ந்த சந்தனக் குழம்பு – இவை தொடர்ந்து தெளிக்கப்பட்டு அவை நிறைவுறும் வாழைக்குருத்திற் படுத்தும், காற்பிடித்தன் முதலிய தொண்டாற்றலில் விரைந்து முற்படும் பாங்கியர்க் குழுவாற் றாமரையிலையாகும் நீரினனைந்த விசிறி கொண்டு வீசப்பட்டும் உறக்கமின்றியே கங்குலைக் கடத்துகின்றாள். உறக்கின்பத்தை யொருகாலெய்தினும் காதலன்புணர்ச்சியைக் கனவிற் கண்டுழி, தளிர்க்கால் வியர்த்தலான் அலத்தகமழிதர, மிகத்துடிதுடிக்குந் துடையடிப்புறத்திற்றுகின் முடி நெகிழ் தர, கலக்கமுற்றி தயங்கரை கடந்துயிர்த்தலின் பலபலவாகப் பெருமிதங் கொண்டு புளகனிறைந்த தனங்களின் மீது நடுக்குறுங் கரத்தாற் கட்டியணைக்குவள். அங்ஙனமாக, விரைவின் விழிப்புறுமமயத்திற் றன்னமளியைக் கடைக்கணிக்க அங்குக் காதலனைக் காணாது கண்டவெலாம் பாழ்த்த அளவிற் கண்களுஞ் சோர மயக்குறுவள். அஞ்ஞான்று பரபரப்புறும் பாங்கியரின் பெருமுயற்சியால் அம்மயக்கந் தெளிதருங் காலை, நிகழ்வுறு நெட்டுயிர்த்தலான் இனிப்பிழைப்புறுமென அப்பாங்கியரிவளுயிரிலவாவுறுவர். ஆயினும் செய்வதியாதென்றறியாது இவட்கு முன்னரே தாம் உயிர் நீத்தலே சிறப்பென அதனையே வேண்டி விலக்கற்கரிய விதியின் கொடுமையை வெறுத்தலே வினையாக் கொண்டொழிவாராவர். ஆதலிற் றகையீர்! தக்கன காண்க; நிறைந்த பேரழகினமைப்பான் மிகுமென்மைத்தாய இவ்வுறுப்புக்களிற் கொடுஞ் செயற் புரியுங் காமன், எத்துணைப் பொழுதிற் காதலனை யியைவித்து இவளை யின்புறுத்துவன்? காதலன் கலவியிற் பிணங்கிய கேரளமகளிரது கபோலம்போலச் செம்மையுற்றுக் கரைகடந்த மாசறு நிலவினா லிருட்பிழம்பறவே யொழிந்தனவாகிய இவ்வந்திப் பொழுதுகளும், துலங்கு பாற்பெருக்கனைய தூய நிலவொளியினால் விளக்கமுறும் வானவெளியும், மணங்கமழ் பாதிரிமலரினைக் குடைந்து அவற்றினறுமணங்கொண்டு நிறைவுற்று மோப்பிற்கினிய தென்றல் வீசும் பத்துத் திசைகளும், பொருந்தி முதிர்ந்த கங்குற்பொழுதுகளும்[34] எனதன்புடைத் தோழிபாற் றீங்கியிழைக்காவா யாங்ஙனம் அமையும்.

காமந்தகீ – (13) இக்காதற் பிணிப்பு அவனைப்பற்றியதாமேல், துலங்கும் இஃதே சீர்மையையுணரும் பான்மையின் பயனாம் என்று எனதிதயம் இன்புறுமெனினும்[35] இவளது இக்கொடிய அவத்தையாற் றுன்புறுகின்றது.

மாதவன் – காமந்தகியின் மனக்கவலை மிகப்பொருத்தமே.

காமந்தகீ – என்னே மோசம்!

(14) இயற்கையில் இலலிதமான[36] இவளது உடலம், இயலழகையே சத்தாகவுடையதென்பதும், இவ்வைங்கணைக் கிழவனும் மிகக்கொடியனென்பதும் உண்மை; ஆகுக; இக்காலமோ வீசுகின்ற தென்றலால் அலைவுறு மாமலர்களை யுடையதாய், தண்கதிர்ச்செல்வனைத் தலையணியாக்கித் திகழ்வுறுகின்றது; அதலினிகழ்வது யாதோ?

இலவங்கிகை – பெரியோய்! பிறிதொன்றுமறிதல் வேண்டும்; இது மாதவனது உருவப்படம்; (மாலதியின் மார்ச்சேலையை விலக்கி) கண்டத்திலணியப்பட்ட இவ்வகுளமாலையும் அம்மாதவனது கரத்தாற் றொடுக்கப்பட்டதாகலின் எனதன்புடைத் தோழியை உயிர்ப்பிக்கின்றது. (என்று மகிழமாலையைக் காட்டுகிறாள்[37]).

மாதவன் – (15) தோழீ![38] வகுளமாலையே நீயே யிந்நிலவுலகில் வெற்றிபெற்றனை. ஏனெனில், நீ இவளது அன்பிற்குரியையாய்[39], முதிர்ந்த தாமரைத் தண்டின் கணுக்கள்போல வெளிறிய தனங்களின் இடம்படு மேன்மையைத் தெரிவிக்குந் துகிற்கொடியாவமைகின்றனை.

(வேடசாலையிற் கலகலவொலியெழுகின்றது)

(எல்லவருஞ் செவிகொடுக்கின்றனர்)

ஓ!ஓ! சங்கரபுரவாசி மக்களே! கொடியதோர் வேங்கை, காளைப்பருவம் நிறைந்து தாங்கொணா வியற்கைச் சினமும், அவ்வமயத்தானிகழ்ந்த சினமும் ஒருமித்து இருப்புக்கூட்டை வலிந்துடைத்துத் திறந்து வெளிவருங்கால், அதன் காற்சங்கிலி யக்கூட்டிற் சிக்குண்டு நழுவுற மகிழ்வுற்றுத் தன்வயத்ததாய்த் துள்ளிக் குதித்துத் தன் விருப்பிற்குரிய வாலதியாங் கொடுந் துகிற் கொடியை யுயர்த்திவீசிக் காண்டற்கியலாது அச்சுறத்தகும் பருத்த உடலமைப்பையுடையதாய், மடத்தனின்று வெளிப்போந்த அக்கணத்திற் பல பிராணிகளினுறுப்புக்களை யாவலுடன் புசித்து அவ்வுறுப்புக்களினிடைச் செறிந்த வலிய என்புக்களைத் திற்றிப்பற்களாற் கடித்தலான், ஈர்வாளெனக் கடகடவெனவொலிக்குமத்தகைப் பற்கணிறைந்து மலைமுழையனைய வாயினையுடையதும், விகாரமாகப் பாய்த்துழி விரனீண்ட முன்னங் கால்களான் வெருவுறுத்தி மனிதர், குதிரையிவற்றை வலிந்தடித்து அவற்றின் உதிரத்துடன் கூடிய விறைச்சிகளை வாய்மடுப்ப அவை தொண்டை நிரம்பிச் சிதறுதலாற் கரகரச் சத்தமுடன் அவ்விறைச்சிகளைப் புசிக்குங்காலை வெகுண்டு கர்ச்சிக்குமவ் வொலி நீண்டு இனிய தாயாகாய வெளியிற் பரவவும், சிலரையடித்துஞ் சிலரைப் பொடியாக்கியுஞ் சிலரைக் கண்ணாற் காண்டற்கரியராக்கியுஞ் சிலரைத் துறத்தியும், கூரிய கிர்களாகு மாயுதத்தினாற் பற்றியிழுத்துக் கோறலான் அவற்றின் உடலுறுப்புக்களினின்று பெருகுமுதிரங்களானடைவழியினைச் சேறாக்கியுங் காலனாடலைச் செய்கின்றது; ஆதலாற் றம்முயிரை யியன்றவரைக் காத்துக்கொள்க; என்று.

புத்தரக்கிதை – (பரபரப்புடன் பிரவேசித்து) காத்தருள வேண்டும். நன்தனன் சகோதரியான நமது அன்புடைத் தோழீ மதயந்திகை, இக்கொடிய புலியினால் அவளது பாங்கியரிற் சிலர் கொல்லப்பட்டும், சிலர் துறத்தப்பட்டும் போயினராதலின் தனித்திருந்து மிகத் துன்புறுகிறாள்.

மாலதீ – தோழீ இலவங்கே! இது முற்றிலும் மோசம்.

மாதவன் – புத்தரக்கிதே! இப்புலி யெங்ஙனமிருக்கிறது?

மாலதீ – (களிப்புடனும் அச்சத்துடனும்) என்னே! இவரும் இங்ஙனமேயா?

மாதவன் – (தனக்குள்) ஆனந்தம்! புண்ணியப்பேற்றைப் பெற்றவனாகுவேன்; ஏனெனில், எதிர்பார்க்கப்படாத நிலையினிகழ்ந்த எனது பார்வையால் வியப்பையும் களிப்பையு மொருங்கேயெய்திய இவளால் யான்.

(16) மலர்ந்த கண்களாகுந் தாமரைக் கயிற்றினால் இடைவிடாது கட்டப்பட்டவன்[40] போலவும், அக்கண்களான் முற்றிலும் விழுங்கப்பட்டவன் போலவும், நிறைந்த பாற்பெருக்கில் மூழ்கியவன் போலவும், அமுதமாரி பொழியுமடர்ந்த புயலான் வலிந்து நனைக்கப்பட்டவன் போலவுமாயினேன்.

புத்தரக்கிதை – பெருந்திறலோய்! இப்புலி, பொழிற்கு வெளிப்புறத் தெருவின் றொடக்கத்திலிருக்கின்றது.

மாதவன் – (பரபரப்புடன்) மிகு கவலை கொண்டுள்ளேன்.

மாலதீ – இலவங்கிகே! ஐயப்பாடே[41] நிகழ்வுறுகின்றது.

மாதவன் – (அருவருப்புடன்) அடா!

(17) இப்புலி நடந்த மார்க்கம், இடையிற் செடிகொடிகளிற் சிக்குண்டு, அறுபட்டுச் சிதறி விழுந்த நரம்புக்கற்றைகட் செறிந்ததும், பலபுறத்துஞ் சிதைந்து கிடக்குந் தலையோடுகளின் கண்டங்களையுடையதும், உதிரப்பெருக்கு மிகக் கலந்து கணுக்காலளவையிற் சேறுடையதுமாதலின் மிக நடுக்கத்தை விளைக்கின்றது. என்னே! மோசம்.

(18) நாமோ! மிகுதொலையிலிருக்கின்றோம்; அக்கன்னிகையோ, அப்புலியின் ஓரடியளவிலிருக்கின்றாள்.

எல்லவரும் – அடி, மதயந்திகே!

காமந்தகியும் மாதவனும் – (உட்கருத்துடனும்[42] களிப்புடனும்) என்னே!

மகரந்தன், அப்புலியாற் கொலையுண்டு கிடக்குமொருவனது படைக்கலத்தைக் கையிலேந்தி அக்கணமே யெங்ஙனமிருந்தோ விரைந்து வந்து இங்கணிடையில் வதிந்தனன்.

மற்றவர்கள் – நல்லது! வென்றிசேர் வீர! நல்லது!

காமந்தகியும் மாதவனும் – இவன் இப்புலியினால் மிகவலியப் புடைப்புண்டானாயினும் இவனாலது உயிர் நீத்து வீழ்ந்தது.

மற்றவர்கள் – பேரச்சம் விளைந்தது.

காமந்தகீ – (உட்கருத்துடன்) என்னே! குழந்தை மகரந்தன் புலியின் கூருகிறாற் கீறப்பட்டு உதிரம் பெருக்கெடுத்தோட வாணுதியைத் தரையிலூன்றி யசைவற்று மயக்குறு மதயந்திகையைத் தாங்கியவனாய்த் தளர்வுறுகின்றான்.

மற்றவர் – அந்தோ! விதனம்! இப்பெருமகன், புலியினாற் புண்படுத்தப்பட்டுச் சோர்வுறுகின்றான்.

மாதவன் – என்னே! மயக்கமுற்றனனா? பெரியோய்! என்னைக் காத்தருளல்[43] வேண்டும்.

காமந்தகீ – குழந்தாய்! மிகவும் நடுக்கமுறுகின்றனை; வருக; அவனைக் காண்போம்.

(எல்லவரும் சென்றனர்)

பவபூதியென்னு மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் மூன்றாம் அங்கம் முற்றிற்று.


[1] ஆகாயத்தை நோக்கி – வேடசாலையின் வெளிமருங்கில் வராதவருடன் உரையாடுதலை “ஆகாயபாடிதம்” என்ப.

[2] கிருட்டினசதுர்தசி – அமையின் முதற்றினம்; இந்நாள், “மகாசிவராத்திரி” யென வழங்கப்படும்; இதிற் சிவபூசனை யாற்ற, இருமையின்பமும் பயக்குமென்பது சாத்திரமரபு.

[3] அத்தகைய நன்னடை பெரியோரைப் பேணலும் குலக்கன்னியர்க்குரிய அச்சம் நாணம் முதலியனவுமாம்.

[4] உபாயம் – எப்பொழுதும் அவள் பாங்கிருத்தல், அழகு பொருந்த மயிர்க்குழற்சி வகுத்தல், தனம், கன்னம், இவற்றை செஞ்சாந்தினால் சித்தரித்தல், சோழியாடல், பரிகாசம் பேசல், புதிய பொருளீதல் முதலியனவாம்.

[5] நம்பிக்கை – அச்சம், நாணம், ஐயம், இவற்றை விடுத்து தன்னுள்ளக்கிடக்கை யாவையுந் தெரிவித்தல், காமந்தகி கூறிடில் உயிரிழத்தற்குமுடன்படல் அவளை விட்டுப் பிரியாதிருத்தல் முதலிய வடிவினது.

[6] உறுதிமொழி – இப்பொழுதே விரைந்து நீர் வாராதொழிவிரேல், தன்னாசிரியரைத் தானே கொலை செய்துவளாகுவீர் என்பதும், எற்கும் தீங்கிழைத்தவளாகுவீர் என்பதுமாம்.

[7] இவள் முற்றிலும் தனது சொற்படி நடப்பள் என்னும் பேராசை.

[8] சொற்கள் – வெளித்தோற்றத்திற்குப் பிறரைக் குறிக்கு மியல்பினவாயினும், உண்மையில் மாலதியைக் குறித்தனவேயாம்.

[9] மடிக்கணிலைப்படுத்திய உறுப்புக்கள் – இதனால் யான் நின்வயத்தள். தன் கருத்திற்கியைவன செய்க; என மாலதி யிருத்தற்கும் இறத்தற்கும் காமந்தகியே நிமித்தமாதலின் இங்ஙனங் கூறப்பட்டது.

[10] சகுந்தளை தானே கணவனை வலிந்து பற்றியாங்கு மாலதியும் தானே மாதவனை மணந்து கோடல் தகுதியா? வென்பது அவளது ஆராய்ச்சி.

[11] “மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை” யாகலின் இவ்வுவமை மாலதியின் காட்சியை யுறுதிப்படுத்துகின்றது.

[12] சடத்தன்மை – ஈண்டுச் செயற்றளர்ச்சியையும், நீராகுந்தன்மையையுமுணர்த்தும்.

[13] பருப்பதத்தைச் சார்ந்த சந்திரகாந்தமணி யென்பது, மாதவனும் பருப்பதத்தை நிகர்த்த உறுதிப்பாடுடையன் எனத் தோற்றுவித்தலான் அத்தகைய அவனது மனமும் நெக்குருகுதல் வியப்பினிமித்தம்.

[14] முன்பார்த்த நிலைமையினும், இப்பொழுது காமவேட்கை நன்கு புலனாவதாலும், அதுவும் தன்பொருட்டென்று துணியப்படுவதாலும், மிகுவனப்பெய்தினள் என்று கூறப்பட்டது.

[15] சுட்டு – புதர் தாழ்திருத்தலின் கடவுள் வழிபாட்டிற்குரிய மலர்களை மாலதியே தன் கரத்தாற் கொய்தற்கு எளிதாகுமென்பதை யுணர்த்தும்.

[16] போதனாமுறை – கற்பிக்குமுறை; – இதனால் இப்பூந்தோட்டத்தில், தனித்து மலர்பறித்தலிற் பரபரப்பினால் இடைத் துகினழுவுதலையும் அறியாமல் உறுப்புக்கள் யாவும் நன்துலங்க இவள் நிற்றலான் மாதவன் மறைந்திருந்து இவளை யச்சமின்றிக் கூர்ந்து பார்த்தற்கும் அதனால் விளையுமின்ப வாரிதியில் இவன் மூழ்குதற்கும், அப்போதனாமுறையே காரணமாகலின், அலகிலா வியப்புடைத்தென்று கூறப்பட்டது.

[17] காதலன் காட்சி – ஈண்டுக் காட்சித்தொழிலில் காதலன், எழுவாயுஞ் செயப்படுபொருளுமாய் அமையும். ஆதலின், காதலனைக் காண்டலானுண்டாகுமிந் நிகழ்ச்சி யாவும் மெய்வருத்தத் தானும் நிகழ்ந்தன வென்ற பரிகாச வசனமாகும்.

எழுவாயாகக் கோடலான் மாதவனும் மாலதிக்குத் தெரியாமல் மறைவிலிருந்தே யிவளைக் காணுனிலைமையும் வியங்கியமாகக் குறிப்பிடப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சிகள் மாதவன் இவளைக் காண்டலானிகழ்ந்தனவேயன்றிப் பூக்கொய்தற் கிரமத்தானன்று. அதனால் பார்க்கும் மாதவனை யிவளறியாளாயினும், அவனது பார்வையை மேற்கொண்ட மாத்திரையில் சந்திரன் கதிர்பெருஞ் சந்திரகாந்தம்போல இவள்பால் இத்தகைய நிகழ்ச்சிகள் நேர்ந்தனவென வஞ்ச  நவிற்சியணியும் ஈண்டு குறிப்பிணுணர்த்தப்பட்டது.

மேலும், இவள் பல காவலராற் காக்கப்படினும் காமந்தகியின் உபாயமொன்றானே மாதவனது பார்வைக்கு இவள் இலக்காயினளேயன்றி இலவங்கிகையாலன்று என்றும் ஒருபொருள் துவனிக்கின்றது. மாலதி மாதவனைக் காணாவிடத்தும், அவளை மாதவன் பார்த்தளவிலே மாலதியைக் காமவேட்கைப்படுத்தும் பெருந்திறல்வாய்ந்தவன் இவன் என்றும் இதனால் துவனிக்கின்றது.

[18] திருவளர் செல்வி! இவ்வியப்பைக் கேள். இத்தொடரை, கூறப்புகும் இன்பமொழிகளுக்குத் தலைமொழியாகக் கோடல், காதலனது காமவேட்கையை காதலிபாற் கூறுந் தூதுவரின் கடமையென்னும் இன்ப நூன் மரபினையுணர்த்தும்.

[19] மனங்கவர் வனப்புடையவன் என்னுமாற்றால் மாதவனிடத்து நிகழ்ந்த இவையாவும் மாலதியின்பாற்பட்ட காமவேட்கையானன்றிப் பிணியின்பாற்பட்டனவல்ல வென்பது மாலதிக்கு அறிவுறுத்தப்பட்டது.

[20] அன்பின் மிகுந்து மாலதியின் மோவாயை யுயர்த்தினமையை யிச்சுட்டு உணர்த்தும்.

[21] இச்சுட்டு – சொல்லியைபின் அமைந்தவனையும், காமந்தகியாலறியப்பட்டுப் பிறரறியா வண்ணம் இங்கட் கொடிமறைவிலிருக்கும் அவளையுமுணர்த்தும்.

[22] உற்கலிகை – ஈண்டு, காமவேட்கைகளையும், அலைகளையுமுணர்த்தும்; இதனால் சந்திரனாலன்றிப் பிரிதொன்றானும் கடல் கலக்கமுறாவாறுபோல இம்மாலதியொருவளானே மாதவனது மனம் கலங்கியதென்பது குறிப்பிடப்பட்டது.

[23] இயற்கையறிவு – பயிலப்படாதவனாகிய மிக நுண்ணிய விடயங்களிலும் புக்கு அவற்றை யறிதற்குரியது.

[24] குணங்கள் – ஈண்டுத் தெளிவு, இனிமை முதலியன.

[25] புத்தறிவு – அவ்வப்பொழுது ஆராய்ந்து நவம் நவமாகக் கண்டுணருமாற் றலமைந்தது; இக்குணங்கணிறைந்த அக்காமந்தகிப் பெரியார்க்குச் சொற்பொழிவிற் றூய்மையமைதலில் என்னே வியப்பென்பது கருத்து.

[26] முகிழ் நிறைந்து குயிலினங் கூவும், என்னும் விசேடணத்தால் பிரிந்தோரைத் துன்புறுத்துங் காமனுக்கு இம்மொட்டுக்கள் கூரிய கணைகளாகவும், அவை பொருந்தும் மாமரஞ் சரக்கூடாகவும், அங்ஙனமிருந்து கூவுங் குயிலினம் படைகளாகவும், அவற்றின் ஒலி, யப்படையின் கோலாகலமாகவும், குறிப்பிடப்பட்டு, அப்பேரொலிச் செவிக்கேறுமிடத்தளவினும் பிரிந்தோர் சேறவொண்ணாதெனில், அதனைக் கண்ணாற் கண்டுழியவர்க்கு யாது நேருமோவென்பதும் வியங்கியத்தாற் போதரும்.

[27] மந்தமாருதம் – என்பதனாற் காமன், தென்றற் றேருடையனாதலின் பிரிந்தோர் அத்தேர்க்காலின் வழிப்பட்டு மிகத் துன்புறுவரெனக் குறிப்பிடப்பட்டது.

[28] இறத்தற்பொருட்டே என்பது, இங்குக் கூறப்பட்ட பயனிலை யொவ்வொன்றினுமியையும்.

[29] வெப்பினை விரும்பி – தாமரையிலை முதலியவற்றான் மாதவனது காம நோயினைத் தணிக்க எத்துணை மருத்துவஞ் செய்யினும், அவன் எட்டுணையுந்தணிப்பிலனாய், உயிர்த்திருத்தலில் வெருப்புற்று மிகு வெப்பமேற்கொண்டேனும் உயிர் துறப்பான் கருதி நிலவிற் காய்ந்தனன் என்பது கருத்து; இதனாற் பிரிந்தோர்க்குத் திங்களின் தண்கதிர் தீ நிகர்வனவாம் என்பதும் பெறப்பட்டது.

[30] இயலழகு – இது தலை, இடை, கடையென மூவகைத்து; அவற்றுள், தலை – மலர், தளிர் இவைபோல ஊறுபொறாதாய்க் கண்கவர் வனப்புடனிருப்பது. இத்தகைய பேரழகை மாதவன் பெற்றிருத்தலின் அவன் இரங்கற்குரியவன் என்பது கருத்து. முதனூலில், இதற்கு மூலம், “தபஸ்வீ” தவசி யென்று காணப்படுகின்றது; அதற்கு, மாலதியின் மணவினையாகும் பெரும்பயன் கருதியவளது பிரிவாற்றாமை யாலுண்டாகுங் காமநோயின் அனுபவமாகுந் தவத்தைப் புரிபவன் என்று பொருள் கூறினும் பொருந்தும்.

[31] குமரன் – இதனால், மாதவனிதுகாறும் பிறிதொரு மகளிரைப் பேணி மணந்திலன் என்பதும், நலனுறு மிருமுதுகுரவரையுடய னென்பதும் போதருகின்றது.

[32] எதனையோ – என்பது இறத்தலை யுணர்த்தும்; அங்ஙனங் கூறலமங்கலமென அதனை யொழித்து எதனையோவெனக் கூறப்பட்டது.

[33] ஐயுறத்தகும் வாலைப்பருவம் – இங்குக் கூறியுள்ள குறியீடுகள் வாலைப்பருவத்திற்குப் பொருந்தாவாகலின் பாங்கியர் ஐயப்பாடெய்தியிவள் உண்ணிகழ்ச்சியிற் காதலன் புணர்ச்சியை களிப்புடனெய்தினளெனத் துணிந்தனர் என்பது கருத்து.

[34] இங்கு கங்குற்றொடக்கத்தையும் அதன் முதிர்ச்சியான நள்ளிரவையும் கூறினமையான், இரவு பகலிரண்டினும் இவள் துன்புறுவளென்பது உணர்த்தப்பட்டது.

[35] இன்புறுமெனினும் – காமந்தகியாற் றொடங்கப்பட்ட களவு மணத்திற்கு இக்காதற் பிணிப்புக் கருவியாகலின் இன்புறலும், இவள் படும் வேட்கைத் துயரான் ஒருகால் இறந்துபடுமோவென்றஞ்சித் துன்புறலுமாம்.

[36] இலலிதம் – என்பது யௌவனத் தொடக்கத்தில் சிருங்கார ரசம் உண்டாதற்குரியவாறு மாறுபடுமுடனிலையை யுணர்த்தும்.

[37] இலவங்கிகை ஓவியத்தையும் மகிழமாலையினையும் கண்பித்தலான், மாலதியின் காதற்பெருக்கம் மாதவன்பாற் பட்டதே; இதில் ஐயுறல் வேண்டாமெனக் காமந்தகிக்கு அறிவுறுத்தி யிவளை மாதவனோடியைத்தற்குத் தக்கவுபாயத்தையும் விறைவிற்றேட வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டது.

[38] மாலையைத் தோழீயென விளித்தமை இது இயற்கையில் கண்டத்தணியாயினும், இதுபொழுது மாதவனது காதலியின் கண்டத்தணியாகி, யவன் விருப்பத்தை நிறைவேற்ற முற்பட்டு நிற்றலானென்க

[39] அன்பிற்குரியையாய் – தன்னிடத்துள்ள காதற்பெருக்கை வெளிப்படுக்கு முவகைப்பார்வைக்கு யானிலக்காகுவேனோ? இவளது புணர்ச்சியான் விளையுந் திருத்தியான் மனநிறைவுறுவேனோ? இவளது கண்டத்தைச் சிறிதளவேனு மிறுகத்தழுவலாகும் பெருவிழாவினால் எனதுயிரைப் பயன்படுத்துவேனோ? எனப் பொழுதெலாம் மாதவன் விரும்புமிவற்றைப் பெறுமுகத்தானே, இம்மாலை மாலதியாற் கூர்ந்து நோக்கப்பட்டும், அவளது கண்டத்திற்குந் தனங்களுக்கும் அணிகலனாயிலங்கியும் எனதன்புடைத் தோழி யிஃதொன்றேயென அவளாற் பாராட்டப்பட்டும் அவள்பாற் பொருந்தினமையானென்க.

[40] கட்டப்பட்டவன் – என்பது கண்கள், மாதவனைத் தொடர்ந்து பற்றலாற் கயிரனையவாம்; இவற்றாற் இவன் பிணிப்புண்டுத் தற்செயலற்றிருத்தலை யுணர்த்தும்.

[41] ஐயப்பாடு – புலியை யெதிர்த்துச் செல்லும் மாதவன் அப்புலி வாயினின்று மீண்டு வருவனோ அல்லது அதனாலடியுண்டு துன்புறுவனோ என்பதாம்.

[42] மகரந்தனாற் செய்யப்படும் மதயந்திகைனுயிர்க் காவலாகும் பேருதவி யிவ்விருவரது மணவினைக்குக் கருவியாய் நிற்குமென்பது காமந்தகியின் உட்கருத்தென்பதும் வேங்கையை வதைத்து இம்மெல்லியலாளைப் பிழைப்பித்தலான் மாதவனது களிப்பென்பதும் கருத்து.

[43] நண்பனது மயக்கத்தாற் றானும் மயக்கெய்தி யிவ்வாறு கூறினன் என்க.

மாலதீமாதவம் – நான்காம் அங்கம்

நான்காம் அங்கம்

(மதயந்திகை, மாலதியிவர்களான் முறையே கைலாகு கொடுக்கப்பட்டவரும் மயக்கமுற்றவருமாகிய மகரந்தன் மாதவன் இவர்களும் பரபரப்படைந்தவர்களான காமந்தகீ, புத்தரக்கிதை, இலவங்கிகை யிவர்களும் பிரவேசிக்கின்றனர்.)

மதயந்திகை – பெரியோய்! அருள்புரிக; இம்மதயந்திகை யினிமித்தந் துன்புற்று ஐயுறத்தகும் பிழைப்புடையனாய் இரங்கற்குரிய இப்பெருமகனைக் காத்தருள வேண்டும்.

மற்றவர் – அந்தோ! கொடுமை! நம்மாலிப்பொழுது இங்குக்காண்டற்பாலதாய், யாது நேருமோ!

காமந்தகீ – (கமண்டலு நீராற்றெளித்து) அடீ! நீவிர், சேலை முன்றானையாலிவனை வீசுங்கள்.

(மாலதி முதலியோர் அங்ஙனமே வீசுகின்றனர்)

மகரந்தன் – (கனைதீர்ந்து கண்விழித்து) நண்ப! மிகவும் நடுக்கமுறுகின்றனை; என்னையிது? அன்ப! யானிடர்ப்பாடின்றிச் சுகமேயிருக்கின்றேன்.

மதயந்திகை – ஆனந்தம்! மகரந்தனாகுங் கலைநிறைமதியம்[1] இப்பொழுது உதயமாயினான்.

மாலதீ – (மாதவனது நெற்றியிற் கரத்தை வைத்து[2]) பெருந்தகைப்பெரும! திருவருட்பாங்கால் திகழ்வுறுகின்றீர்; யான் கூறுவேன்; இப்பெருமகன் மயக்கந்தீர்ந்து நினைவெய்தினன்.

மாதவன் – அன்ப! வீரச் செயலோய்! வருக; வருக; (எனத் தழுவுகின்றான்).

காமந்தகீ – (இருவரையும் உச்சிமுகர்ந்து) ஆனந்தம்! குழந்தைகள் பிழைக்கப்பெற்றேன்.

மற்றவர் – நமக்கும் இன்பம் விளைந்தது.

(எல்லவருங் களிப்பை நடிக்கின்றனர்)

புத்தரக்கிதை – (மதயந்திகையினருகில்) தோழீ! மதயந்திகே! இவனே; அவன்.[3]

மதயந்திகை – தோழீ! யானுமறிந்தேன்; இவன், மாதவன்; இவனும் அவன்[4] என்று.

புத்தரக்கிதை – யான் மெய்யுரைத்தவள் ஆயினேனா?

மதயந்திகை – நும்போல்வார் எம்போன்றவரிடத்து அன்பொன்றனையே மேற்கொண்டவராகார்; தோழீ! மாலதியும், இப்பெரியோனிடத்துக் காதற்பெருக்கை யெய்தியுள்ளாளென்னும் வார்த்தையும் பொருத்தமே[5].

(என்று மகரந்தனையே யாவலுடன் பார்க்கிறாள்.)

காமந்தகீ – (தனக்குள்) மதயந்திகை, மகரந்தன் இவ்விருவர்க்கும் நிகழ்ந்த இக்காட்சி, திருவருட்செயலான் அழகுற்று உறுதிப்பாடெய்தியது[6]; (வெளியாக) மதலாய்! மகரந்த! நீண்ட ஆயுளைப் பெறுக; மதயந்திகையின் உயிரைக் காத்தற் பொருட்டுத் திருவருள், எங்கிருந்துன்னை யிங்குக் கூட்டி வைத்தது?

மகரந்தன் – இப்பொழுது பதியிலுலவுமொரு செய்தியைச் செவியுற்று, அச்செய்தியால் மாதவன் மனம் மிக வருந்துமென்றதனையோ சிந்தித்து, காமனுய்யானச் செய்தியாவும் அவலோகிதைபாற் றெளிந்து, இங்ஙனமே விரைந்து வருகலுற்றேன். அங்ஙனம் வந்துழி வேங்கையாற் றுன்புறும் இவ்வுயர்குடி மங்கையின் பாங்கரெய்தினேன்.

(மாலதியும் மாதவனும் ஆராய்கின்றனர்[7])

காமந்தகீ – (தனக்குள்) இச்செய்தி[8], மாலதியின் மணவினையைப்பற்றியதாதல் வேண்டும்; (வெளியீடாக) குழந்தாய் மாதவ! ஆனந்தம்! மாலதியாலின்புற்றனையாதலின், அவட்கு நன்கொடை யளித்தற்குத் தருணமிஃதே.[9]

மாதவன் – பெரியோய்! இம்மாலதி,

(1) வேங்கையாற் புண்படுத்தப்பட்ட நண்பனது மயக்கத்தாற் றியக்கமுறுமென்னை, யருள்கூர்ந்து பிணியற்றவனாகச் செய்தனள்; ஆதலின், இவள் எனது இதயத்தையும்[10], உயிரையும் பரிசிலாம் நிலையில் வலிந்து பற்றி இயைவன செய்தற்குரியவளாகுவள்.

இலவங்கிகை – நமதன்புடைத் தோழியால் இவ்வருட்பேரு விரும்பப்பட்டதே!

மதயந்திகை – (தனக்குள்) இவ்வாண்மகன், ஆராய்ந்தறிந்து அழகுபொருந்த விடையிறுத்தற்குத் தெரிந்தவன்.

மாலதீ – மகரந்தன், நகரிற் கேள்வியுற்ற வருத்த நிமித்தம் யாதாகுமோ?

(பிரவேசித்து)

புருடன் – குழந்தாய் மதயந்திகே! உனது மூத்த சகோதரன் அமாத்திய நந்தனன் கட்டளையிடுகின்றனர்; “இப்பொழுது பெருமைசாலரசன், நம்மில்லத்திற்கெய்தி, பூரிவசுவின்பால் விசுவாசத்தையும், நம்பாலருட்பெருக்கையும் வெளிப்படுத்தித் தாமே மாலதியையெற்களித்தனர்; ஆதலின் வருக; அவ்வருட்பேற்றைப் பெற்றின்புறுவோம்” என்று.

மகரந்தன் – இஃதே! அச்செய்தி.

(மாலதியும் மாதவனும் துயரத்தை நடிக்கின்றனர்.)

மதயந்திகை – (களிப்புடன் மாலதியைத் தழுவி) தோழீ மாலதீ! நீ யொருபதியில் வதிதலாற் பூழியாடன் முதலாய் எற்கு அன்புடைத்தோழியும் சகோதரியுமாயினை; இது பொழுதில் நம்மில்லத்திற்கே அணிகலனாயினை.

காமந்தகீ – குழந்தாய் மதயந்திகே! நின் சகோதரனுக்கு மாலதி கிடைத்தமையாற் பெருமை யெய்துகின்றனை.[11]

மதயந்திகை – யாவும் தங்களாசி யருளானே; தோழி இலவங்கிகே! நீவிர்[12] எமக்குக் கிடைத்தமையின் எமது விருப்பங்கள் யாவும் நிறைவேறின.

இலவங்கிகை – எம்மாலும் இவ்வுரை[13] கூறத்தக்கது.

மதயந்திகை – தோழீ புத்தரக்கிதே! வருக; இப்பெருவிழாவிற் கலந்தின்புறுவோம்.

(என்று எழுகின்றனர்)

இலவங்கிகை – (காமந்தகியை யணித்து) பெரியோய்! மதயந்திகை, மகரந்தன் இவரது இயைந்த பார்வைகள், இதயத்தினிறைந்து வழிந்தொழு வியப்பானுங் களிப்பானுங் கவினுறச் சுழல்வனவாய், தங்காதற் குறிப்பை மறைத்தற் பொருட்டு அவரால் நிலைப்படுத்தப்பட்டும், அலர்ந்த கருநெய்தலனைய ஒளிமிகப் பொருந்திக் கடைவிழியழகுற்று மிருத்தலான், இவர் சங்கற்பத்தானிகழும் புணர்ச்சியின்ப நுகர்ச்சியை யெய்துகின்றார்களென்று கருதுகிறேன்.

காமந்தகீ – (நகைத்து) இவர் ஒருவர்க்கொருவர் மனத்தோற்றத்தானிகழ்ந்த கலவி மயக்கமெய்துகின்றனர். அங்ஙனமே;

(2) சிறிது குறுக்காக அசைதலான் வக்கிரித்தும், பக்கத்தில் முக்காற்பாகம் குவிந்ததும், வெளிப்படையான காதலால் அசைவற்று அன்பு மீக்கொண்டதும், சிறிது வளைந்த புருவங்களையுடையதும், உள்ளுவகை நுகர்ச்சியாற் கலங்கியதும், இமையாது சரிந்த இமைகளையுடையதும் ஆகிய ஆகேகரம்[14] என்னுமிப்பார்வையே யிவர்களது சங்கற்பப் புணர்ச்சியை விளக்கமாகத் தெரிவிக்கின்றது.

புருடன் – குழந்தாய் மதயந்திகே! இவணிவண் வருக.

மதயந்திகை – தோழீ புத்தரக்கிதே! எற்கு உயிரணித்த இத்தாமரைக் கண்ணனை மீண்டும் யான் காண்பனோ?

புத்தரக்கிதை – திருவருட் கூட்டிவைக்குமேல் கூடும்;

(என்று சென்றனர்)

மாதவன் – (மறைவாக)

(3) மாலதி கிட்டுவாளென்னுமாசாபாசம் அறுபடுமியல்புடைத் தாமரைநூல் போல அறுபட்டொழிக; தாங்கரும் அகப்பிணியும், புறப்பிணியும், எல்லையில்லனவாய் இக்கணமேயெழுந்து பரவுக. மிகுந்தெழு வெறுப்பும் என்னிடத் திடர்ப்பாடின்றி நிலைப்படுக; ஊழ்வினை வலியதாகுக; காமனுஞ் செய்வினை செய்க. அன்றேல்;

(4) ஒத்த அன்புடையளாய்ப் பெறலருமொருவளைக் கோரும் எந்தனுக்கு ஊழ்வினை யிடர்ப்பாடியற்றலான் இத்தகைய மாறுபட்ட நிலையுண்டாதல் தகுதியே; ஆயினும், என்னில் வேறுபட்ட இவன்பாற்றான் அளிக்கப்படுஞ் செய்தியையிவள் கேட்ட அப்பொழுதே யிவளது வதனம், வைகறை மதியமன்ன ஒளி மழுங்கி, யென்னை யுள்ளுறச் சுடுகின்றது.

காமந்தகீ – (தனக்குள்) சிறுவனும் சிறுமியுமாகிய மாதவனும் மாலதியும் இவ்வாறு என்னை வருத்துகின்றனர். இம்மாலதி ஆசையற்று உயிர்த்திருக்கிறாள் என்பது அருமை. (வெளியீடாக) ஆயுள் நிறைவுடைய[15] குழந்தாய் மாதவ! உன்னை யான் வினாவுகின்றேன்.[16] பூரிவசுவே மாலதியை அளிப்பர் என்று கருதுகின்றனையா?

மாதவன் – (வெட்கமுடன்) இல்லை; இல்லை;[17]

காமந்தகீ பூரிவசுவும் முன்னிலமைக்குச்[18] சிறிதுங் குறைந்திலன்.

மகரந்தன் – மாலதி முன்னரே கொடுக்கப்பட்டாள்[19]; என்று ஐயுறப்படுகின்றது.

காமந்தகீ – அச்செய்தியை[20] யானுமறிவேன்; நன்தனற் குறித்து மாலதியைக் கோருமரசர்க்குத் “தங்கன்னியர்க்குத் தாமேயுடமையாளர்” என்று பூரிவசு விடைபகர்ந்ததும் வெள்ளிடைமலை.

மகரந்தன் – இஃதுள்ளது.

காமந்தகீ – மேலுமித்தருணமே அரசன் தானே மாலதியை நன்தனற்கு அளித்தானென்று புருடனாலுந் தெரிவிக்கப்பட்டது. ஆதலின் குழந்தாய் இல்லற வழக்குக்களும்[21], மக்களின் சொற்களைப் பற்றுக்கோடாகவுடையன; நல்வினைத் தீவினைகட்கு ஏதுக்களான வரையறைகளும் முற்றிலும் அம்மக்களது சொற்களின் வயத்தனவாம்; ஆதலின் பூரிவசுவின் அவ்வுரை பொய்யுரையேயாகும்; மாலதியும் அப்பேரரசனது சொந்தப்புதல்வியாகாள். கன்னியரை மணம் புரிவித்தலில் அரசர்களே சான்றாகும்; என்றிங்ஙனம் அறனூற் கடைப்பாடுமிலது; ஆதலின், யான் கூறுமிதுவே நிலைபெறுவதாம். எவ்வாற்றானும் எந்தனைப் பற்றற்றவளாக் கருதுகின்றனையா? பார்.

(5) இவளிடத்தும் உன்னிடத்தும் நிகழுமென்று எண்ணத்தகும் எத்தீமையும் பகைவரிடத்தும் நிகழவேண்டாம்[22]; ஆதலின் உங்கள் மணவினைப்பொருட்டு உயிரினைவிட்டும் யான் முற்றிலும் முயல்வேன்.

மகரந்தன் – தங்களால் யாவும் நன்கு பொருத்தமுறக் கூறப்படுகின்றன; மேலும்

(6) பெரியோய்! தமக்குச் சொந்தமான இந்தக் குழந்தைகளிடத்தமையும் அருளும், அன்பும், தங்களது இல்லறப்பற்றற்ற மனத்தையும் நெகிழ்த்துகின்றனாதலின், துறவு நிலையொழுக்கங்களுக்கு முரண்பட்ட முயற்சியும் தங்களான் மேற்கொள்ளப்பட்டது. இதற்குமேல் அவரவர் ஊழ்வினையே வலியதாகும்.

(வேடசாலையில்)

காமந்தகிப் பெரியோய்! மாலதியை அழைத்துக்கொண்டு விரைந்து வருக; என நந்தலைவி கட்டளையிடுகின்றார்கள்.

காமந்தகீ – குழந்தாய்! எழுக! எழுக!

(எல்லவரும் எழுந்து செல்லுகின்றனர்)

(மாலதியும் மாதவனும் வருத்தமுடனும் காதற்பற்றுடனும் ஒருவர்பாலொருவர் பார்க்கின்றனர்.)

மாதவன் – மாதவனுக்கு மாலதியுடன் கூடிவாழுமுலக வாழ்க்கை இவ்வளவின் முடிந்ததால் இது மிகு துன்பமே பயக்கும். அம்ம! என்னே! வியப்பு!

(7) ஊழ்வினை, நண்பன்போல முதலில் ஒருபடித்தான உதவியை[23] வெளிப்படுத்தி யின்பந்தருமியல்பினதாய்ப் பின்னர் திடீரென முரண்பட்டுக் கொடியதாகி மனப்பிணியையே யெஞ்சியதாகச் செய்கின்றது.

மாலதீ – (மறைவாக) பெருந்தகைப் பெரும! கண்ணிற்களிதருவோய்[24]! இவ்வளவிற் காணப்பட்டீர்.

இலவங்கிகை – அந்தோ! கொடிது! அமாத்தியரால் நந்தோழியினுடலம் ஐயுறவெய்தியது[25].

மாலதீ – பிழைப்பு[26] நசையாங்கனியும் இப்பொழுது பழுத்தது; தந்தையின் வன் கண்மையால் அவரிடத்துக் காபாலிகர் செயலும் நிலைப்பட்டது. தீய ஊழ்வினையின் கொடுஞ் செயலும் நிறைவேறியது; ஆதலின் நல்வினை குன்றிய யான் யாவரைக் கடிந்துகொள்வேன்; புகலற்ற யான் யாவரையடைக்கலமாவேன்.

இலவங்கிகை – தோழீ! இவணிவன் வருக;

(செல்லுகின்றனள்)

மாதவன் – (தனக்குள்) காமந்தகீ, இயல்பான அன்பின் மாத்திரையில் அச்சுற்றுக் கூறுமிவை யென்னை யின்புறுத்தற் பொருட்டேயாம். (வருத்தமுடன்) அந்தோ! மாலதிப் புணர்ச்சியாகும் இம்மைப்பயனற்றவனாயினேன். இனிச் செய்வதியாது? (ஆராய்ந்து) மகாமாமிசத்தை[27] விலைப்படுத்தலினன்றி வேறுபாயமொன்றனையு மறிந்திலேன். (வெளியீடாக) அன்ப! மகரந்த! நீ மதயந்திகையைக் காதலிக்கின்றனையா?

மகரந்தன் – ஆம்

(8) புலியாற் புடைப்புண்டு உதிரம் பெருக்குறுமென்னை, மதயந்திகை பார்த்து மேற்சேலை நழுவினமையுங் கருதாது வெருவுறுமோராண்டு மானிளங்கன்று போலச் சுழல்வுறு விழியினளாய் அமுதப்பெருக்கிற்றோய்ந்தன்ன வுறுப்புக்களானிறுகத் தழுவினள்; என்னுமிஃதொன்றே யென்மனத்தைப் புண்படுத்துகின்றது.

மாதவன் – புத்தரக்கிதையின்[28] அன்புடைத் தோழியான அவள் கிடைத்தற்கரியளல்லள்; மேலும்

(9) மதயந்திகை, கொடும்புலியால் இறக்குந் தருவாயில் அதனைக் கொன்று, அவளைப்பாலித்த உனது புணர்ச்சியை அவளடைந்தும், பிறரை யாங்ஙனமவள் விரும்புவள்; அங்ஙனமே! அந் நளின நாட்டத்தவளது விழிகளின் செயலும் உன்பாலமைந்த அன்பை விளக்கி அழகு பொருந்த நெடிது அசைவற்றுமிருந்தது. எழுக! வரதை, சிந்துவென்னும் நதிகளின் சங்கமத்தின் மூழ்கி நகர்க்குளேகுவோம்.

(எழுந்து செல்கின்றனர்)

மகரந்தன் – அப்பெருயாறுகள் கூடுமிடமிக்ஃதே;

(10) முழுகிய அப்பொழுதே வெளிப்போந்தாரும் வத்திரங்களில் நீர்மிகுந்தொழுகலான் அச்சேலைகள் உறுப்புக்களிற் படிந்து அவ்வுறுப்புக்களின் மேடுபள்ளங்கள் விளக்கமுறுவாகும், பொற்குடம் போலழகுற்றுப் பருத்துயர்ந்த தனங்களிற் கரங்களை மாறுபடக் குறுக நெறுக்கியமைத்தவருமாகிய மானகர் மகளிரனைவரும் குழுமிய தடமுடையதாய் இச்சங்கமம் காணப்படுகின்றது.

(எல்லவருஞ் சென்றனர்)

பவபூதியென்னும் மகாகவியாலியற்றப்பட்ட மாலதீமாதவத்தில் நான்காம் அங்கம் முற்றிற்று.


[1] மகரந்தனைக் கலைநிறை மதியமாக உருவகப்படுத்தினமை மதயந்திகையின் மனதைக் களிப்புறுத்து மிவன்பானிகழ்ந்த அவளது காதற் பெருக்கையுணர்த்தும்.

[2] நெற்றியிற் கரத்தை வைத்தல் – கரத்தின் அமிழ்தினு மினியபரிசத்தினால் மயக்கத்தைத் தீர்த்து மாதவனை யின்புறுத்தற் பொருட்டென்க; இம்மாத்திரையில் மகளிர்க்குப் பொருந்தா அச்சமின்மை மாலதியின்பாற்படுமெனில், அற்றன்று; துன்பந் தவிர்க்கு மாற்றாற் செயப்படு மெச்செயலும் உதவியா அமையுமன்றிக் குற்றமாகாதென்பவாகலின்.

[3] தேற்றம் – புத்தரக்கிதை யமயத்திற்கேற்ப, “மகரந்தன் மதயந்திகைபாற் காதற்பற்றுள்ளவன்” என முன்னரே யவனைப் புகழ்ந்துரைத்தமையை யுணர்த்தும்.

[4] மாதவன் பெயரை மாத்திரம் குறித்து மகரந்தன் பெயரைக் கூறாது, “இவனும் அவன்” எனக் குறித்தமை, தனக்குக் காதலனாகுனிலமை கருதியென்க; இதனால் புத்தரக்கிதையாற் கூறப்பட்ட உறுப்பமைப்பு ஒத்திருத்தலானும், தனதுயிரையும் பொருட்படுத்தாது இவன் இவளது உயிரைக் காத்தற்கு முயன்று முன்னின்றமையானும், காமந்தகி முதலியோரின் வழக்குமுறையானும், “மகரந்தன் தன்பாற் காதற்பற்றுள்ளவன்”, என மதயந்திகையாலறியப்பட்டதென்பது கருத்து.

[5] வார்த்தையும் பொருத்தமே – இதனால் மதயந்திகையின் உடன்பிறந்தானாகிய நந்தனனது விருப்பம் நிறைவுறாதென்பது குறிப்பிடப்பட்டது.

[6] அழகுற்று உறுதிப்பாடெய்தியது – பரபரப்பினால் வத்திரம் நழுவ, அதனால் ஒருவர்க்கொருவர் உறுப்புக்களின் சீர்மையைத் தெளிந்துகோடலானும், அச்சமே தலக்கீடாக இறுகத்தழுவி, அப்பெருவிழாவின் றொடர்புடையராதலானும் இக்காட்சியழகுடைத்தென்பதும், விலக்கற்கரிய கொடிய விடர்ப்பாடுகளை விலக்குந் திறலமைந்த திருவருளானன்றி நஞ்செயன் முயற்சியாலிக்காட்சி யுறுதிப்படாதென்பது கூறப்பட்டது.

[7] இன்பத்துன்பங்கள் இருவர்க்கும் ஒத்தனவாதலின் இருவரும் ஆராய்கின்றனர் என்பது கருத்து.

[8] இச்செய்தி – மாலதியை நந்தனனுக்கு மணம்புரிவிக்க, அரசனால் நிச்சயிக்கப்பட்ட செய்தி.

[9] இத்தொடரால் – இங்ஙனம் தெளிந்த காமந்தகீ, இவர்களையழைத்துப் போதற்கு ஊழியர் விரைந்துவரும் முன்னரே மாலதியின் மனத்தையுறுதிப்படுத்தற் பொருட்டு மாதவன் முகத்தானேயவன் கருத்தை அவட்குத் தெளிவுறச் செய்தனள் என்பது போதரும்.

[10] இதனால் – மாதவனது மனமும் உயிரும் முன்னரே மாலதியின் வயத்தனவாய், அவளிடத்தே நிலைப்பட்டிருத்தலானும், இவற்றினுஞ் சீரிய பொருளொன்றுமில்லை யாதலானும், இவற்றைப் பரிசலாகவளித்தமையான், அவளது விருப்பிற்கேற்ப மணம் புரிந்துகோடற்கு அவாக்கொடிருக்கு நிலையுணர்த்தப்பட்டது.

[11] பெருமை யெய்துகின்றனை யென்பது, வருஞ் செய்தியைச் சிறிதேனுமுணராத மதயந்திகையை நோக்கிக் கூறிய எள்ளலுரையாம்.

[12] நீவிரெனும் முன்னிலைப் பன்மை இலவங்கிகை முதலிய தோழிகளுடன் கூடிய மாலதியையுணர்த்தும்.

[13] இச்சுட்டு – மதயந்திகைக்கு மகரந்தன் காதலனாகப் போவதால் அம்மதயந்திகையே தனது தோழியருடன் இலவங்கிகை முதலியோர்க்குக் கிடைப்பது உறுதியேயன்றி மதயந்திகை கூறியாங்கு நந்தனனுக்கும் மாலதிக்கும் மணவினை கூடாதென்பதை குறிப்பான் உணர்த்தும்.

[14] ஆகேகரம் – குவளை குவிந்து, அரைவிழி மலர்ந்து கருவிழி சுழன்று பொருந்தும் பார்வையை, ஆகேகரம் என்ப.

[15] ஆயுள் நிறைவுடைய குழந்தாய் என்று விளித்தமையான் மாதவனது மணவினையிற் காமந்தகி முயன்று முற்பட்டிருத்தலான் இவனது ஆயுளில் ஐயமில்லை யென்பது குறிப்பிடப்பட்டது.

[16] முன்னிலும் இப்பொழுது வருந்தற்குக் காரணம் யாதென்றும் பூரிவசுவே தனக்கு மாலதியை யளிப்பாரென்று துணிந்து இதுகாறு முயிர்த்திருந்தனையோவென்றும், வினாவின் கருத்து; இதனால், மாதவன் இளமைப்பருவத்திற் கியல்பான சாபலத்தினால் மாலதிபாற் காதற்பற்றுள்ளவனே யன்றித் “தன் புதல்வியைத் தருவேன் வருக”, வென்று பூரிவசுவினாலழைக்கப்பட்டு இங்கிவன் வந்தவனல்லனாதலின் இங்ஙனம் இவன் வருத்தமுற்றற் றகாதென்பது குறிப்பிடப்பட்டது.

[17] பூரிவசு, மாதவனது பெயரையு மறியாதவராதலின் இவனுக்கு மாலதியை மணம் புரிவிப்பேன் என்று இவர் யாங்ஙனம் கூறவியலும் என்பது கருத்து.

[18] முன்னிலைமை – இதனாற், பூரிவசு, தனக்கு மாலதியை அளிப்பார் என்னும் நம்பிக்கை மாதவனுக்கு முன்னரும் இல்லை; இப்பொழுதுமில்லையாதலின் மனவருத்தம் மிகைபடற்குக் காரணம் சிறிதுமில்லையென்றும், இவ்விருவர்க்கும் நிகழ்ந்த காதற்பற்றும், இவர்களிதுகாறும், இனிமேலும் உயிர்த்திருத்தற்குரியதாய்க் குறைபாடின்றி முன்போலவே நிலைப்பட்டிருக்கின்றதென்றும், இனி வருத்தமுறல் வேண்டாமென்றுங் குறிப்பிடப்பட்டது.

[19] முன்னரே கொடுக்கப்பட்டாள் – இதனால் பூரிவசு, மாதவனுக்குத் தன் புதல்வியை யளிப்பேனெனவுரைக்கவில்லை; மாதவனுமவ் வுரைநசையுடனிருக்கவுமில்லை; ஆயினும், மாலதி யிதுகாறுமொருவர்க்கும் தந்தையால் அளிக்கப்படவில்லை யென்றும், தானுமவளைப் பெறற்குத் தகுதியுள்ளவனென்றும் இவ்வளவிலவாக்கொண்ட இம்மாதவன், இப்பொழுது பூரிவசு, அரசனாற் கோரப்பட்டு நந்தனன் பொருட்டுத் தன் புதல்வியை அளித்தனன்; என்னுமிச் செய்தியைச் செவியுற்றுச் செயலற்றுத் தனது வாவழிந்து வருந்துவனாதலால் முன்பின் கால முரணைக் கருதித் தீங்கு நேருமென்பது ஐயுறவாற் குறிப்பிடப்பட்டது.

[20] மாலதியைக் கொடுத்த அரசர்க்குப் பிறர் பொருளை யொருவர்க்களிக்க வுரிமையில்லாமையானும், அங்ஙனம் உரிமையுள்ள தந்தையால், இவள் முழுமனதுடன் அளிக்கப்படாமையானும், இப்பொழுதும் முன்போலவே அவ்வாசை குன்றாதிருக்க இடனுளது. ஆதலின் இவ்வார்த்தையளவில் அச்சுறல் வேண்டாம் என்பது குறிப்பிடப்பட்டது.

[21] அரசன் நந்தனனுக்கு மாலதியைத் தானே யளித்தானாயினும், பூரிவசு கூறியுள்ள வார்த்தையால் அவரும் இம்மணவினையிலுடன்பட்டவராவரெனினும், அரசனை வஞ்சித்தற் பொருட்டே அச்சொற்கள் கூறப்பட்டனவென வெளிப்படுத்தற்கு உலகவழக்கைச் சான்றாகக் கூறி, அறனூலனைத்தும், அவற்றைக் கடைப்பிடித் தொழுகுமுலகுஞ் சொல்லளவில் அடங்குமாதலின், இவருரை அத்தன்மைத்தாகாது, இவர்தனதுட்கருத்திலங்க உரைத்தமை காண்க; எனக் காமந்தகி, அப்பூரிவசுவின் சொற்களை யெடுத்துக்காட்டி யெதிர்கால நலத்தைக் குறிப்பானுணர்த்தினாளென்பது இத்தொடரின் கருத்து.

[22] தீமைகள், பகைவர்பால் விளைக; என நினைவது உலகினியல்பாயினும், பகைவரிடத்தும் அவை விளைய வேண்டாம் என நவின்றமை, இவர்பால் விளையும் தீமையின் உயர்வு நவிற்சியாமென்பது கருத்து.

[23] உதவி – மாலதி, மாதவன்பாற் காதற்பெருக்கெய்தி அவளிடத்து விளையும் வேட்கையாவும் மாதவனது ஊழ்வினையாலியற்றப்படும் உதவியாம்.

[24] இவ்விளியானும், வினையானும், இனியானுயிர்த்திருக்க வியலாமையின் காட்சியளவிற் கட்பொறிக்கின்பத்தை யளித்து மனத்திற்குத் தாங்கொணாத் துன்பத்தையளிக்கிறீர் என்பது குறிப்பிடப்பட்டது.

[25] இத்தொடர், பெற்றோரின் பற்றுதலைக் கடந்து காமந்தகியே இப்பேரபாயத்திலிருந்து இவளைக் காத்தல் வேண்டும் என்பதை காமந்தகிக்கு அறிவுறுத்தும்.

[26] இத்தொடரால் மாதவனையும் காமந்தகியையுங் குறித்து, உங்கள் முன்னிலையில் யானித்தகைய துன்பமெய்தி வருந்துவனோ? ஆதலின் நீவிர் இதற்குத்தக முயலுதல் வேண்டுமென்பதைத் தெரிவித்தற் பொருட்டே யவர் முன்னிலையில் நாணமின்றி வாய்விட்டரற்றினாளென்பது போதரும்.

[27] இஃது ஐந்தாமங்கத்தில் விரித்து விளக்கப்படும்.

[28] புத்தரக்கிதை – காமந்தகிக்கு மனமுவந்ததோழியும், மதயந்திகைக்கு அந்தரங்கப் பாங்கியுமாகலின், உனக்கு அவளை மணம்புரிவிப்பதிற் றுணை நிற்பள்; அதனால் இவள் கிடைத்தற்கரியளல்லள் என்பது கருத்து.