ஊசிமுறி ஒன்பத்தாறு

ஊசிமுறி ஒன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

இடைக்காடன் பாடியது

ஆறைப்பொயிலான் உரை

தேனறா மகிழ்த் தொடையலு மௌலியுந் திருக்கிளர் குழைக்காதுங்

கானறா மலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயு

மோனமாகிய வடிவமு மார் பமு முத்திரைத் திருக்கையும்

ஞானதேசிகன் சரண : தா மரையுமென் னயனம் விட்டகலாவே.

திருஞானமுத்திரை துணை

நாவுண்டு நீயுண்டு நாமந் தரித்தோதப்

பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ – தேமுண்டு

வண்டுறங்குஞ் சோலை மதிளரங்கத் தெப்போழ்து

முண்டுறங்கு வானொருவனுண்டு

             – ஆறைப்பொயிலான் வாழ்த்து

திருஞானமுத்திரை துணை

ஊசிமுறி யொன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

ஆறைப்பொயிலான் உறை

பொதியத்தமர்ந்த மலையமாதவன் அடிபோற்றி நக்கீரனுள்ளிட்டோர் நாற்பத்தொன்பதின்மர் கூடலிற் சங்கம் பரித்து வரு நாளிற், புத்தியலாப் புகுந்தோர் ஏனையருடன் கூடிச் செருக்குற்று, அறைபோயடிப்பட்ட ஒலியெழுத்தாளரைப் பழுக்கச் செய்து, பாடியரங்கேற்ற வருநர் பாடல் ஏளுவாறு, கன்மாப்பலகையேறித் தோற்பித்துப், பழம்பாட்டென ஏடவிழித்துக்காட்டி, அவருள்ள மாழ்கச் செய்விக்க வேத்தூணியோர் அல்லற்பட்டு ஆற்றாது கண்ணீர் வாரச் சொற்ற பாட்டு :-

வேத்தூணியோர் – அரசவை நாடியுண்ணும் பரிசிற் புலவர்.

1. ஓதியென மாறி யுயர்போங்கும் பெட்பணாஅ

யோதியுந் தேரையும் போ லோர்துறையின் – றுஅதி.

நடைமயிலா னாடி நமரொழியச் சேர்வா

கிடையாற் கடையா லிழி.

ஓதி – ஓந்தி. அணாஅய் – சங்கப்பலகை: விளி. நடைமயில் – ஔவை. சேர்வு – தொழிற்பெயர். ‘ஆ’முதனிலையா(க)க் கொள்வர் இவ்வாசிரியர்: ஈண்டு ‘ஆகு’ கொள்க. இடை – இடைக்காடன். கடை – திருவள்ளுவன்.

தலைத்தட்டு -.- [ஓராறெடுப்பு

அண்ணாந்தேகிய சங்கத்தினர் அவ்வியாண்டு ஆனித்திங்கள் வள்ளுவனாலும் ஔவையாலும் வீறு இழிந்து தாழப் பிற்றை நாள் அவ்விருவரையும் கூட்டிப் பலகை குலைவித்து மூழ்குவிப்பான், வேண்டியதனுழைப் போந்தான் இடைக்காடன் மாட்டு வீற்றிருந்தான் போக்கியான் “நீயிர் யா[வ]ரேயோ” என்றாற்கு இவன் சொற்ற பாட்டு:-

2. இடைக்காட் டுறைவெ னி(ய்) ரியோஒஒஒ றீஇஇஇ படைக்கைப் பறியோலை தட்டி:- இடைக்காடன் வந்தோஞ் சிறுபலகைத் தாலிப் பெருக்கெண்ணித்தொந்தொந்தோந் தொந்தொந்தோந் தோம்.

“இய்ரியோ” – இடையன் கூப்பீடு: ஒலி சுட்டியது: ஒகரம் மூன்றும் இகரம் மூன்றும் அளபெடை. “பறியோலை” – அவற்குரியது. “தட்டி” – ஒன்றுபோற் காட்டி[1]” [திருக்குறள் – நிலையாமை ] எனப் பெயராய் நின்றது. “காடன் வந்தோம்” தன்மைப்பன்மை மயக்கம் இடவமைதி.[2] “பன்மைக் காகு மிடனுமா ருண்டே” [தொல்.சொல் – எச்சவியல்] என்பது பற்றி: ஏனையரைக் கூட்டிக் கூறியதூ உமாம். “தாலிப்பெருக்கு” – மங்கலச் சொல்: குலைவு காடியது. ஈற்றடி இவன் குறிப்பு வழங்குமொழி.

3. பலகை அவனைத் தள்ளி இடக்குறுக்கஞ்செய்ய அடுத்துள்ள பெருந்தேவன் “இடையனேயோ, புத்தி பிடரியேயோ” என முறுமுறுப்பச் சொன்ன பாட்டு:-

யாற்றங் கரையி னருகிருக்கு மாமரத்திற்

காக்கை யிருந்து கஃஃகஃஃகெனக் – காக்கைதனை

யெய்யக்கோ லில்லாமை த்த்த்த்த்தெனவெய்தான்

வையக்கோ னானென் மகன்.

கஃஃ மிடற்றொலி காட்ட. தகரமெய் ஆறும் நாக்குட் கொட்ட. ஒலியெழுத்தாளர் எழுத்தாணியூசியால் முறியில் எடுப்பியாவாறு இங்ஙனம் பாடுகின்றான் ஆசிரியன். மேல்வருவனவும் இது. [2]

4. பலகை அவனையும் அங்ஙனமாக்க இடப்பக்கமுள்ள மலாடன் – மற்றையான், “நீ ஓரான்” எனக் கைக்குறி காட்டியவளவை பாடியது:-

எங்குமுளோ | னிங்ங்ங்குண்டு. | த்த்தொத்தொத் | த்தொதென்னுங்ங்ங்கி நையாடிக் கண்கொட்டல்:- பங்ங்ங்கிட்டெஃகெக்கெஃ | கெஃகெஃகெஃ | கெஃகென வாட்டி யஃகிவரச் செய்வே னதை.

“த்தொத்” – இதழ்குவித்துக் கூற. “என் நுங்கு” – என் = வினா. நையாடி இக்காலத்து நையாண்டி என வழங்கும். “கொட்டல்” – எதிர்மறை முற்று. பின்னடியில் உள்ளது உள்ளிழுப்பு. “அதை” பலகையைச் சுட்டியது. அஃது ஆளாவட்டத்திற் றன்பழைய அளவிற் குறுக்கஞ் செய்யலை இப்பாட்டாற் காட்டினான்.                                                 

5. மறுத்து அவன் வீழ, நாகன்றேவன் தலையாட்டிப் போந்தான் – “பாடும் பாட்டடிப்போம்” என்றாற்குக் காடன் வயிறுதைஇ ஏப்பமிட்டு நாக்குதப்பிச் சொன்ன பாட்டு:-

“பாட்டுக்குப் பாட்டு: நும்பாட்டடியைத் தூக்கி யெம் மீட்டுக் கலையத்து ளேஎவ்வ்வ்வென – போஒட்ட்ட்டோவ்வ்வ்வ் வோவ்வ்வ்வ் வோவ்வ்வ் வுறிஞ்சிடுவா மூவ்வ்வ்வ் வென்றொரு மூச்சு.

“பாட்டுக்குப் பாட்டு” – வினா. “ஈட்டுக்கலையம்” – காணத்தைத் துவைத்து ஆக்கிய வுணவு சிரட்டை யுண்மூடியாவிட்டு மேலிருப்பதைக் குறித்தது.

“ஏவ்” – புளியேப்பக்காரன் புறமிட்டாற் போற் கூறுக. ஓவ் என்ற மூன்றாமடி ஒலியுயிர்ப்பீடு. பின்னையது உள்ளிழுப்பு. மூன்றாமடியுள் முதலிரு சீரும் நான்கன்றலைச் சீரும் ஐந்து மாத்திரையாகக் கூற. “ஊவ்” நன்கு குவித்திழுக்க. ஒருமூச்சாய் உறிஞ்சிடுவாமென்க.

6. பெயர்த்து நத்தத்தன் வட்டியேறியான், கைகாட்டி “உழையனையுந் தன்னையும் பின்னோனையும் தொட்டு ஏக் கழுத்தம் செய்து நோக்கினார்க்குச் சொன்ன பாட்டு:-

[3]அஅவனு மிவனு முஉவனுங் கூஉடி

லெஎவனை வெல்லா ரிகலென்பி – ரொஒஒரு

கல்லெறியிற் காகாகா காக்காக்காக் காவென்

செல்லுமே யாயிரங்காக் கை

குறிற் சுட்டு மூன்றும் வினாவும் ஒருமையெண்ணும் அளபெடுப்பு. மூன்றாமடி ஒலி காக்கையின் குரல்: உரப்பிக் கூற. எனவென்னெச்சம் என் என நின்றது. மேல் வருவனவற்றிற்கும் முன்னதற்கும் இஃது ஒக்கும்.  

7. தொடர்ந்து அவன் வீழ்வாக அடுத்துக் கல்லாடன் வந்தமர்ந்து நால்விரன் மேற்பெருவிரல் வைத்து நெற்றி தொட்டீர்ப்பப் பாடியது:-

பூளைப்பஞ் சொப்ப்ப்ப்ப்ப்பூ உஉஉஉஉ | உஉஉதிச்

சூளைச்சாம் பற்பூசுஞ் சொல்வலீர் – கூஉழ்ழ்ழ்ழ்ப்

பப்பன்று நாஅம்ம் பயன்மனமேற் றாலன்றி

யொப்பாது நும்மறைச்சொல் லுண்ம்ம்

உகரத்திற் கெட்டும் ழகரமெய் க்கு நான்கும் கூட்ட பூஉதிச் சாம்பலென்க. பெயரொட்டுப் பண்புத்தொகை. மூன்றாமடியுட் கண்டது கொள்வோன் மனனுணர்வின்றி மறைமொழி பயன் கொடாதென்பது அற்றேல் தொல்காப்பிய காக்கைபாடினியர் ஒருவன் தாழவும் வாழவும் முறையே கூறினாரால் எனின் அவை அவர் மறைக் கூற்றான் வந்தவல்ல. அன்னோர் சொல் பழுதாகா நிலைமையுடைமையான் நேர்ந்தவை என்க. பப்பு – பருப்பு. பயல் – பையல மருஉ. மறைச்சொல் – மந்திரமொழி. செய்யுளியலுடையார் கூறியது நோக்கி உணர்க. உண்ம்ம் – உள்ளும் – இடைக்குறைத்திரிபளபெடை.

ஓராறெடுப்பு முற்றிற்று.

ஈராறெடுப்பு

8. மேல் அவனும் அங்ஙனமாக மாமூலன் வந்து வாயெடுப்ப நாமகள் வாயடைப்ப அவன் மனமுளைந்து சிலகுறி காட்டிச் சேற எண்ணி உழையரொடு பையப் பேசப் பாடியது.

இல்ல்ல்ல்ல் ல்ல்ல்ல்ல் ல்ல்ல் | லெனுமேர

லிஞ்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞ்ஞ்ஞ்ஞ் ஞ்ஞ்ஞ் ஞெனுங் கறிஞ்சா

னெய்ய்ய்ய் | ய்ய்ய்ய் | யென : மொய்க்கு | மோத்தறிவீர் |

பெய்யக் குளளுதிர் பாய்ம்.

முதல் இரண்டடி பதின்மூன்று மாத்திரையளபெடுத்தன: அதற்கேற்றமாக் கொள்ள வோத்தில்லாமையின். “ஏரல்” – நத்தையில் ஓர்வகை. “கறிஞ்சான்” – ஓர்மரவண்டின் பெயர் வகை. மூன்றமடியுள் எட்டுமாத்திரை அளபெடை. “பாயும் பலகை விட்டு பாய்ந்தோடிப்போம்: திரிந்து நின்றது ஓசை நோக்கி.

9. பின்னர் வந்த நக்கீரன் அடடா எனப் பலகையினின்றுங் கையை மார்பின் புறமாக மடக்கி முன்னீட்டி வலிப்பப் பாடியது:-

ஏலேஎஎ | லய்யாஅஅ வேலேஎஎ லய்யாஅஅ

வேலேஎ | லெனக் கூறி யீழ் பரவ | —ரோஒஒஒல

மிட்டாழும் நாவாய்க் கயிறிசுப்ப ரித்திறமே.

யோஒஒஒஒ வுன்குலமஃ தோர்.

“அடடா” என்றற் கொருவாறு ஏலேயென இழித்து விளித்தவாறுந்தோன்றிற்று. அவன் குலவியல்பற்றி இவ்வாறிக் குறியிட்டொலி காட்டினான் ஆசிரியன் என்றறிக. ஈழ் – மது: புலைத்திறனுமாம்.                               [அ]

10. அடுத்துவருங் கபிலன் “ஏனையே | இத்துணை வம்பு: சும்மேபோம்” என்றாற்குப் பாடியது :-

போம் போம் போம் போம் போம் போ மென்றீராற் புன்பறைகள்

பும் பும் பும்  பும் பும் மெனப் பூரீக்ச் – சாங்ங்ங்ங்ங்

கா[ல் ந]மக் கீ | தன்று கடிதே பிறப்போரும்

வாலறிந்து நூலறியும் வாண்ம்ம்.

பும் என்ற ஒலிக்குறிப்பைந்தும் பறையொலி. தனிச்சீர் ஙகரவொற்றைந்து. ஈதன்று உகரக்குறுக்கம்: அலகுவிலக்க. வாண்ம்ம் – வாழ் – பகுதி. “கிளந்தவல்ல செய்யுளுட்டிரிநவும்” [தொல் – எழுத் – குற்றிய. எயஅ] என்பதாலமைக்க.

“நிலமிசை | வாண | ரலமர | றீர” [புறம் – 43] என்பதும் அது. “பிறப்போரும்” என்றமை பக்கல் நின்ற ஔவை துணைவராயினமை நோக்கி.     

11. அவனும் முன்னிலை யேயாகப் பரணன் வந்து “ஈண்டுள்ளார் புலவரல்லரோ? மதித்துரையாடும்” என்றாற்குச் சொற்றது :-

என்பக்க னிற்போ னிரும்புலவ னியாமதியேம்

புன் புலவீர் நும்மை. புலையரே | — யன்பின்றி

யேமாற்ற | விர்க் கிர்க் கிர்க் | கிர்க்கிர்க்கிர் | கென்றெழுதல்

காமாட்டிப் பையா அற்பாற் காட்டு.

“என்பக்கல் நிற்போன்” – வள்ளுவன். புலையர் – ஈண்டுக் குலஞ் சுட்டாது ஈரமின்மை குறித்து நின்றார்க்காயிற்று. “இர்க்” ஆறும் எழுத்தாணி ஊசிமுறிபாற் பூட்டி எழுத நேரும் ஒலி. காமாட்டி – இழிசினர்மொழி. மதிப்பிறக்கிக் கூறியதூஉமாம்: ஒன்றும் பற்றா விடரும் தூர்த்தரும் வேழம்பரும் நடரும் இம்மொழியான் அழைக்கப்படுதல் உண்மையாகவும். அன்னோர்பாற் காட்டென்றலின்.                               

12. பின்னர் அரிசில்கிழான் “நில்லாதேயும்: உட்காரும் கட்டவிழ்க்காதேயும்” எனக் கூறியாற்குப் பாடியது :-

கட்டவிழ்த் தேற்றைக் கழனியேர்ப் பூண்மாட்டி

யட்டியுற | நின்றல்க் லக் | லக்லக் லக் | லக்கென

னெட்டித் தழுநீரிர் | நீரிவ | ணில்லாதி

ருட்காரு மெட்டிப்போ யோர்ந்து.

ஏற்றை – காளை. ஆற்றலொடு புணர்ந்தவற்றிற்கெல்லாம் ஏற்றைக்கிளவியுரித்து”[4] என்றமையாற் கொள்க: இரண்டன்றொகை விரிக்க. அதனை ஓட்டுவோர் வாயொலிக் குறிப்பு “அல்கல்க்” என்பது: வலப்புறம் நுனி நாவொட்டி யுயிர்க்க. ஒலி ஆறு. நெட்டித் தழு நீரீர் என்றார் உழுவித்துண்ணும் வேளாளர் குலமெனினும் பொதுமை நோக்கி. நீரிர் – விளி. நீர் – தன்மை.                                                   [யக]

13. தொடர்ந்து மருத்துவன் தாமோதரன் எழுந்து சங்கங்குலையினும் ஒளிபோகாது என்னப் பாடியது:-

சங்கஞ் சுட் டொண்ணொளிபார் தாமோ தரவோடு

பங்கிட் டொழியுமியல் பார்த்தறிக —வங்ங்ங்கம்

நீறி லுயர்தங்கம் நீராடி னூறிழைக்குங்

கூறிற் குயக்குலச் சேய் கூறு.

சங்கம் – சங்குவளை: மணியாக் கட்டுப்படாது கவசத்துண்ணின்றும் பிளந்து புகைந்தோடும் இயல்புடைத்தென வங்கத்தியல்பு கூறியவாறு. வங்கம் – ஈயவிரசம்: வெண்பொன் அன்று. ஊறு – கொடுமை. குயக்குலம் – குலஞ்சுட்டியது. குயக்குலஞ் சேய் எனப்பாடங் கொள்வார் குயக்குலன் என்பான் சேய் என்ப.                                            

ஈராறெடுப்பு முற்றிற்று

மூவாறெடுப்பு

14. வீணை அவனையும் வீழ்த்திச் சுருங் கமுறையே சீத்தலை சாத்தன் ஏறித் தன் தலை காட்டி[5] உரம் தட்டி அமரச் சொற்றது:-

மார்பு தட்டும் பாஅல்ல் வணிக விருங்குரீஇ(க்)

கீர்ந்து கீஇஇஇஇஇஇக் கெக்கரிக்குஞ் –சோஒஒர்ந்து

போகே எ | றினையழியும் போ ஒதி புனங் கொல்லை

வேங் கையும் | வீட்டு மரும்பு.

பால்வணிகன் – வாணியவகுப்புளொன்று. குரீஇ – குருவி: அதனோசை கூட்டியொலிக்க. ஈகாரவளபெடைஆறு. “வேங்கை மலரத்தினைமுற்றும்” என்றல் காலநோக்கிய வழக்கு. அரும்பு வீட்டும் என மாற்றுக. வீட்டும் – மலரும்

15. பின்னர் வந்த கோதமன் “அத்துனை வல்லிரேயோ எங்கள் நாற்பத்தொன்பதிமரைவிட” என்றற்குக் கொட்டம் அடங்கப் பாடியது :-

ஓரொற்றாற் கீழ்வீடு மோத்துணராப் பார்ப்பானே[ய்]

போஒஒஒ யோஒஒஒ போஒஒஒ யோஒஒஒ

சோஒஒஒ காஅப்பா காஅஅஅ தேஎஎஎ

நோஒ மறையை நுவல்.

முதலடி பார்ப்பான் மெய்யாற்றல் கூறியவாறு. “ஏலாதான் பார்ப்பான்” [நான்மணி.] என்றார் பிறரும். ஒகரம் சீர் ஒன்றுக்கு மூன்றாக வளபெடுத்தது. நொ சோகாப் பாகாதே போ என்க. மறையைநுவல் பிறிதோர் தொடர். நொ – குற்றெழுத்தளபெடை.                                        

16. சிறுகருந்தும்பியான் “குலத்துக் குத்தக் ககோலம் வேண்டாமா” என்றாற்குப் பாடியது :-

கள்ளெங்குண் டங்ங்கேய் கருந்தும்பி பாய்ந்தூதுந்

தொள்ளை | வடித்த துணைக்காதா – சொள்ளைச்

சிறகடித்தோ ரீயார் சிவனார் தலையிற்

பறத்தலென் பாழ்மதியா பார்.

“தொள்ளைவடித்ததுணைக்காது” என்றது ஈழநாட்டுச் சான்றோராகலின் அவன் வடிவங்குறிப்பது. துணை – இரண்டு துளையெனவுங்கூறுப. ஈயார் – ஈ – திணைவழுவமைதி. அதனிழிவு நோக்கிச் சொள்ளைச் சிறகடித்தென்றார். தலையிலும் என்றது [ம்மை] தொக்கது. என் – வினா. பார் – அசை.

17. வெள்ளி வீதியார் வந்து பெரியோரே | முன்னிறையருள் கூட்டுவிக்க நாங்கள் இயைந்தோம் அல்லமோ என்றாற்குப் பாடியது:-

அம்ம்ம்ம்ம் மண்ண்ண்ண்ண் ணீஇஇஇஇ யிங்கறைவ

தெம்ம்ம்ம்ம் போல்ல்ல்ல்ல் வார்க்க்க் கியைபன்று

வம்ம்ம்ம் பணியார் வளைக்குழலி போம்ம்ம்ம்நுந்

தங்ங்ங்ங்ங் கொண் கரழைத் தார்.

ஈரடி, மகர ணகர லகர மெய்கள் அவ்வைந்தாவந்தன. நீ அளபெடை நான்கு. பின்னடிக் ககர மகர வொற்றுக்களுமது. ஙகர மெய்யைந்து. குழலி – விளி. அம்மணி குழலி நீ இங்கறைவது எம்போல் போல்வார்க் கியைபன்று நுங்கன வரழைத் தாராகப் போமென்றார் என்க.                          

18. அடுத்துக் கீரந்தையான் உறுத்தெழச் சொற்றது :-

காட்டேல் வணிக காளையார் சோர்ந்தீர்க்கு

மோட்டைச்செக் குர்ர்ர்ர்ர் ருர் ரென்னப் – போ | ஒட்ட்ட்ட்ட

காட்டி வெளித்தள்ளக் கண்பிழிவைக் காட்டிடேன்

மூட்டுக மூக்கணைப்பா மூறு

காளையார் – எருது : வழுவமைதி. ரகரமெய் ஆறு.

போட்ட – பெயர், அளபெடை நான்கு, பலவின் விகுதி வினையணைந்தது, உள்ளிட்டபொருள். கண் – ஆகுபெயர்: பழஞ்சீரை. உறுத்தெழுந்தோன் வாணியனாக அவன் குலத்தொழில் கூறிப் பஞ்சுப்பழன்சீரையான் எண்ணெய் பிழிந்தெடுக்கும் இயல் கூறினர். மூக்கணைப்பா – மூக்கணாங்கயிறு: நாலன் தொகை, ஈற்றிற்றொக்க் வுகரக் குறுக்கம் போந்தது செய்யுள் விகாரம்; மூறுக்கு மூட்டுக என்க. மூறு – எருது. ஆறையார் இக்காலத்துங் கூறுப. ஆறை – கொற்கையடுத்தவோரூர்.                                

19. செல்லூர்க் கொடுஞ் செங்கண்ணன் முனைந்து எதிர்ந்து கனைத்து வந்தமரப்பாடியது:-

கொக்கோஒஒ | கோஒஒஒஒ | கொக்கோஒஒ | கோஒஒஒஒ | கொக்கொக்கொக் | கென்னக் | குரலெழுப்புங் கோஒஒழிஇ – விக்கிக்

கனைத்தெழுந்து கால்போகக் காலன் வரும்போழ்

முனைந்தெதிர் காட்டேன் முறுக்கு.

ஐந்து சீரிரண்டாமடியுட் கொண்டார். “ஐஞ்சீரடியுமுளவென மொழிப” [தொல். செய்யு.]

வைகறை யெழுந்த கோழி யெழுப்புங் குரலியல் கூறி நோக்க. பின்னடியுள் ஐயப்பகுதி கடைக்காலத்தெழுந்து மேனோக்கி வளி ஈர்ப்ப வெழலைக் காலன் வாயாக் கூறியவாறு காண்க. போழ் – பொழுது. முனைந்தெதிர் – ஏவன்முற்று.

மூவாறெடுப்பு முற்றிற்று

தலைத்தட்டுலைவு கோப்பாடு


[1] “நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும் வால துணர்வார்ப் பெறின்” – இக்குறளில் வரும் “காட்டி” என்னும் சொல்லை எச்சமாகக் கொண்டு பரிமேலழகர் உரை கூறியுள்ளார். அவர் பாடாந்தர உரையுள் இக்கருத்து வெளிப்படுவதையும், அதனை மறுத்து அவர் உரைப்பதையும் காண்க.

[2] “ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே”

[3] இதன் முதலிரண்டடிகள் யா. காரிகையில் குணசாகரரால் உரைமேற்கோளாக எடுத்தாளப்பட்டுன. யா. விரு. அசையோத்து. எ. மேற்கோள்.

[4] தொல். மரபி.

[5] “வள்ளுவன் முப்பாலாற் – றலைக்குத்து தீர்வு சாத்தற்கு” என்ற [திருவள். மருத்துவன் தாமோதரன் வாக்கை ஈண்டு நோக்கிக் கொள்க.

Leave a comment