ஊசிமுறி நூலறிமுகம்

ஊசிமுறி ஒன்பத்தாறு

என்ற

சங்கப்பாட்டு

இடைக்காடன் பாடியது

ஆறைப் பொயிலான் உரை

நூலறிமுகம்:

‘ ஊசிமுறி ’ என்னும் சொல்லை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஊசிமுறி என்னும் சொல்லுக்கு இணையதளத்தில் விக்கிப்பீடியாவில் நாம் காண்பது :

“ ஊசிமுறி என்பது ஒரு தொகைச் சொல். ஊசியும் முறியும் என்பது இதன் விரி. ஊசி என்பது எழுத்தாணி. முறி என்பது எழுதும் ஓலை. ஒரு பாடலை எழுதும்போது அது முடிவதற்குள் இடையிலே ஊசி முறிந்து போன பாடல் ஒன்றுக்கு  ஊசிமுறி  என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. “ என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

சங்க காலத்துப் புலவர் பெருமக்களுள் ஒருவர் இடைக்காடர். இடைக்காடு என்னும் இடத்தைச் சேர்ந்தவர். { திருவண்ணாமலைச் சித்தர் இடைக்காடர் என்பவர் வேறு } சங்கத் தொகை நூல்களில் இவர் பாடியதாக பத்துப் பாடல்கள் கிடைக்கப் பெருகின்றன அவை : அகநானூற்றில் 6 பாடல்களும் {139, 194, 274, 284, 304, 374 } குறுந்தொகையில் ஒரு பாடலும் { 351 } நற்றிணையில் இரண்டு பாடல்களும் { 142, 316 } புறநானூற்றில் ஒரு பாடலும் { 42 } ஆகும். இவை தவிர “ ஊசிமுறி யொன்பத்தாறு “ என்ற நூலையும் யெழுதியுள்ளார். ஒன்பத்தாறு என்பது 9 x 6 = 54 பாடல்களைக் கொண்டது.   

இந்த 54 பாடல்களையும் ஓராறெடுப்பு, ஈராறெடுப்பு, மூவாறெடுப்பு என ஒன்பத்தாறெடுப்பு வரை ஒவ்வொரு எடுப்புக்கும் ஆறு ஆறு பாடல்களாகப் பகுத்திருக்கிறார் இடைக்காடர். எடுப்பு என்பது ஆறு பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு என்பதை நம் பண்டிதமணி யவர்கள் எழுதிய “ இடைக்காடர் வரலாறு “ என்கிற நீண்ட நெடிய கட்டுரையின் மூலம் தெரியவருகிறது.

தனிப்பாடற்றிரட்டு என்னும் நூலில் “ கம்பர் தனிப்பாடல் “ என்ற பக்கத்தில்

56 – 60 என்கிற பாடல் தொகுப்பில் 60 வது பாடலாக :

“ இடைக்காடர் பாடிய ஊசிமுறி

            ஆற்றங் கரையினருகி ருக்கு மாமரத்திற்

            காக்கை யிருந்து வெனக்காக்கைதனை

            எய்யக் கோலில்லாமல் . . . . என்றானே

            வையக் கோனாரின் மகன் “  —

என்றிருக்கிறது. ஊசிமுறி என்ற நூலைப் பற்றி நமக்குக் கிடைக்கக்கூடிய செய்தி இது மட்டுமே. முழுமையான ஊசிமுறி நூல் கிடைக்கவில்லை என் கிற நிலையில், நம் பண்டிதமணியவர்களுக்கு ஊசிமுறி யொன்பத்தாறு “ என்ற இந் நூல் “ ஆறைப் பொயிலான் “ என்பவர் உரையுடன் ஓலைச் சுவடி வடிவில் கிடைத்திருக்கிறது. அதனைப் பதிப்பிக்கும் பொருட்டு ஏட்டிலிருந்து காகிதத்தில் படி யெடுத்துப் பிறகு அப் படியுளுள்ள சொற்களை ஆராய்ந்தறிந்து நெறிப்படுத்தி யெழுதியும் இருக்கிறார்.

இதில் பாயிரமாக ஒரு வெண்பா நீங்கலாகப் பதினெட்டுப் பாடல்கள் கொண்ட மூவாரறெடுப்பு வரை நெறிப்படுத்தி யெழுதியிருக்கிறார்கள். ஏனைப் பகுதிகள் ஏட்டுச் சுவடிப் படியாகவே இருக்கிறது. ஏதோ ஓர் காரணத்தால் அப் பணி முற்றுப்பெறவில்லை. ஊசிமுறி யொன்பத்தாறு நூல் வடிவம் பெற்று அச்சில் வராமைக்கு தமிழ் மாந்தரின் தவக்குறைவே என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும் 54 பாடல்களில் 22 பாடல்களுக்கு மட்டுமே மூலமும் உரையும் கிடைக்கப்பெறுகின்றன. ஏனையப் பாடல்களும் உரையும் முழுமையாகக் கிடைக்கவில்லை யென்பதை ஏட்டுப்படியை முழுமையாக நோக்கும் போது தெரியவருகிறது. கிடைக்கப் பெறாத அப் பகுதிகள் கரையான் அரித்தோ அல்லது வேறு வகையிலோ சிதிலமடைந்திருக்கக் கூடும்.

ஏட்டிலிருந்து அச்சுப்பதிப்பது என்பது அவ்வளவு எளிய செயலன்று.

ஓலைச்சுவடிகள் சிதைந்த நிலையில் பிரித்தவுடன் “ பொல பொல “ வென்று

உதிர்ந்து கொட்டும். கட்டை அவிழ்க்கும் போது கட்டுக் கயிற்றோடு பிய்த்துக்கொண்டு வரும் ஏடுகள் பல.  ஏட்டைப் புரட்டினால் நூல்கள் ஒடிந்து கீழே உதிரும். ஒட்டிக்கொண்டுள்ள இரண்டு ஏடுகளைப் பிரிக்க முயன்றால் இரண்டும் கிழிந்து போகும். இத்தனை அவதிகளையும் பட்டு நூலை முறைப் படுத்திப் பார்க்கும் போது பக்க எண்கள் இல்லாமல் ஏடு முன்னும் பின்னுமாக இருக்கும். ஒரு பக்கத்தில் அல்லது ஓலையின் கடைசி யெழுத்தை வைத்துக் கொண்டு அடுத்த ஓலையின் முதல் யெழுத்தையும் வைத்துக்கொண்டு இதற்கடுத்து இதுதானா என்று ஆராய்ந்து உறுதி கொண்டு இணைக்க வேண்டும். இவ்வாறு கடினப்பட்டுத்தான் பழந்தமிழ் நூல்களைப் பதிப்புச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார் என்று முக்தா சீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

பதிப்புப் பணியில் ஏற்படும் சிக்கல்களை டாக்டர் உ வே சா அவர்கள் தாம் யெழுதிய “ என் சரிதம் “ என்கிற தன் வரலாற்று நூலில் கீழுள்ளவாறு யெழுதி நமக்கு அறிவிக்கின்றார் :

  “ மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு இரா.  “ர” கரத்துக்கும்  “ற” கரத்துக்கும், காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் , சாபமாகத் தோற்றும்.  ஓரிடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையினை நான் சாடு என்றே பல காலம் எண்ணியிருந்தேன். தரனென்பதைத் தானென்றே நினைத்தேன். குருதி யென்பதைக் குந்தி யென்றெண்ணித் தடுமாறினேன். உரை இது , மூலம் இது , மேற்கோள் இது என்ற வேறூபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. “

     இவ்வாறு பதிப்புப் பணியில் ஏற்படும் சிக்கல்கள் நம் பண்டிதமணியவர் களுக்கும் ஏற்ப்பட்டிருக்கக்கூடும். இருந்தும் அவர்கள் ஏட்டுப் படியிலிருந்து பத்தொன்பது பாடல்களையும் அத்துடன் கூடிய உரையையும் நெறிப்படுத்தி யெழுதியிருக்கிறார்கள்.

ஊசிமுறியில் உள்ள பாடல்களுக்கு உரையாசிரியர் ஆறைப் பொயிலான் உரையெழுதும் போது  பாடல்களுக்குப் பொருள் சொல்லாது இலக்கணம் மட்டுமே எழுதிச்  செல்கிறார், சில சொற்களுக்கு மட்டும் பொருளுரைக்கிறார். எனவே இதனை ஓர் இலக்கண நூல் என்றே சொல்லலாம். உரையில் வரும் சொற்களுக்கு ஆங்காங்கே பண்டிதமணியவர்கள் அடிக்குறிப்பு யெழுதியுள்ளார் {உ.ம்}  ஓராறேடுப்பில் முதற்பாடலில் வரும் “ பறியோலை தட்டி “ என்பதற்கு ஆறைப் பொயிலான் உரை யெழுதும்போது “ தட்டி “ – “ஓன்றுபோற்காட்டி” யெனெ யெழுதுவார். அதற்குப் பண்டிதமணியவர்கள் :

  நாளென வொன்று போற் காட்டி யுயிரிரும்

   வாள துணர்வார்ப் பெரின் “ இக் குறளில் வரும் “காட்டி” என்னும் சொல்லை எச்சமாகக்கொண்டு பரிமேலழகர் உரை கூறியுள்ளார். அவர் பாடந் தர உரையுள் இக் கருத்து வெளிப்படுவதையும், அதனை மறுத்து அவர் உரைப்பதையும் காண்க.

ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி

  பன்மைக் காகு மிடனுமா ருண்டே

என்று அடிக்குறிப்பு யெழுதுகிறார்.

மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்கள்” என்னும் தலைப்பில் புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் ஒரு பட்டியலைத் திரட்டித் தந்துள்ளார்கள் { இணைய தளம் விக்கிப்பீடியாவில் காண்க.} அதில் இடைக்காடர் பாடிய “ ஊசிமுறி “ யும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஓலைச்சுவடியிலிருந்து காகிதத்தில் கையெழுத்துப் படியாக்கி அவற்றில் காணப்படும் பாட வேறுபாடுகளையும் பல சங்கப்பாடல்கள் வழி ஒப்பிட்டு உண்மை வடிவம் கண்டு பொருளுணர்ந்து நெறிப்படுத்தி யெழுதிய பண்டிதமணியவர்களின் உழைப்பு வீணாகாமல் ஏடு பெயர்த்தெழுதியதை அப்படியே கணினியில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

தற்காலத் தமிழறிஞர்கள் யாரேனும் பண்டிதமணியவர்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்து “ஊசிமுறி”யில் உள்ள அனைத்துப் பாடல்களுக்கும் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தகுந்த பொருள் கூறுவார்களேயானால் அவர்களின் அச் சிறந்த பணியைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்றுப் பாராட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Leave a comment