சுக்கிர  நீதி

சுக்கிர  நீதி

மகா  மகோபாத்தியாய  முதுபெரும்  புலவர்

சைவசித்தாந்த  வித்தகர்

பண்டிதமணி

மு .  கதிரேசச்  செட்டியார்

மொழிபெயர்த்  தியற்றியது 

முகவுரை

என்னிற்  பிரியா  தெனதுள்ளத்  தாமரையின்

மன்னித்  திகழ்களிற்று  மாமுகத்தெம்  —  முன்னவனைப்

பெற்றே  னவனடியே  பேணினே  னாதலினால்

எற்றே  செயற்கரிய  தெற்கு .

அமிழ்தினு மினிய  தமிழ்மொழியை அணிசெய்து  நிற்கும்  நூல்கள்  முதனூல்  வழிநூல்  என  இருதிறத்து ளடங்குவனவாம்  .  வழி நூல், தொகுத்தல்  விரித்தல்  தொகைவிரி  மொழிபெயர்த் ததர்ப்பட  யாத்தல் என  நான் கு  வகைப்படுமென்ப.  இவற்றுள்  இறுதியதாகிய  மொழிபெயர்த் ததர்ப்பட  யாத்தலென்பது  வேற்றுமொழியிலுள்ள  பொருளை  அது  கிடந்தவாற்றானே  தமிழ் நூலாகச் செய்வதாம் . மொழி பெயர்த்த லென்றதனானே  பொருள்  பிறழாமைச்  செய்யவேண்டுமென்பது  போதரும் . தமிழ் மொழியின் ஆக்கங்கருதிய  ஆசிரியர்  அதற்கு   வேற்றுமொழிப்  பொருளைத்  தமிழில்  மொழி பெயர்த் துரைத்தலையும்  ஒன்றாக  எண்ணி  அதனை  வழியின்  வகை யுட்படுத்துரைப்பாராயின் , இம் மொழிபெயர்ப்பின்  இன்றியமையா மையைப்  பற்றிப்  பிற கூறவேண்டுவதென் ? மொழிபெயர்க்கப்படும்  நூல்  பெயர்த்துரைக்கப்படும்  மொழிக் கண்ணுள்ள  குறையை  நிரப்புவதாக  இருத்தல் வேண்டும் . அதுவே  அதன்  பயனாகும். ஆன்றோரருளிய  நூல்கள்  அறம்  பொருளின்பம்  வீடுகளை  நுதலுந்திறத்தான்  நான்கு  வகையினவாம் . இவ்வுறுதிப்  பயன்க ளெல்லாவற்றையும்  ஒருங்கே  கூறுவனவும், தனித்தனி எடுத்து  விளக்குவனவுமாக   நூல்கள்  பல  திறப்படும் . தனித்தனியே  கூறும்  பகுதியில்   பொருளைப் பற்றித்  தனியே  கூறுந்  தமிழ்நூல்  இற்றை ஞான்று  அரிதாமென்பதைப்  புலமுடையார்  யாவரும்  உணர்வர் .  திருக்குறண்  முதலிய  நீதி  நூல்களுட்  பொருட்பகுதி  கூறப்பட்டிருப் பினும்   பொருளையே  சிறப்பாக  விதந்தெடுத்துக்   கூறுந்  தனி  நூலிற் போல  அதன்கண்  விளக்கமாகக்  காண்டற் கியலாது . பொருணூல்  தனியே  தமிழில்  இல்லாத  இக் குறையை  நிரப்ப  எண்ணிய  பொழுது  வடமொழிக்கணுள்ள  பொருணூல்கள்  நினைவிற்றோன்றின . வடமொழிக்கட்  பொருணூலியற்றினார்  வியாழன் , வெள்ளி , சாணக்கியன்  முதலியோராவர் . அவர்  இயற்றிய  நூல்களுள் , பாரு கற்பத்தியம் , ஒளசநசம் , கெளடிலீயம்  என்னும்  இம்மூன்றும்  சிறந்தனவாக  ஆன்றோரான்  மேற்கொள்ளப்பட்டன.  இவற்றுள்  ஒளசநசம் என்பது  சுக்கிரனால்  இயற்றப்பட்டது .  அது  விரிந்து பரந்த  நூலாதலின்  அதன்  சுருக்கமாகத்  தொகுக்கப்பட்டது  சுக்கிரநீதி யாகும்  ஆகவே , கருத்து  வகையில்  ஒளசநசத்தின் சாரமாக  இஃது  அமைந்துள்ள தென்பது போதரும் . அதுபற்றியே  இதற்குச்  சுக்கிரநீதி சாரம்  என்னும்  பெயரும்  நிலவுவதாகும் . பொருணூலியற்றிய  ஆசிரியர்களுள்ளே   சுக்கிரர்  தலைவராக  மதிக்கப்பட்டனர்  என்பதைக்  கெளடிலீயமென்னும்  பொருணூற்றொடக்கத்தில்  “சுக்கிரற்கும்  பிருகற்பதிக்கும்  வணக்கம் “ என்று  அதன்  ஆசிரியராகிய  சாணக்கியரும் , “வெள்ளியும்  பொன்னும்  என்போர்  விதிமுறை”  என்று  கம்ப  நாடரும்  முறைப்படுத்து  முதற்கட்  கூறுமாற்றான்  நன்குணர்தல்  கூடும் .

       இந்  நீதிநூல்  அறநூல்களுக்கு  மாறுபடாமல்  இயற்றப்பட்ட  பொருணூலாகும் .  பொருளும்  இன்பமும்  அறத்திற்கு  மாறுபடலாகா தென்பது  பெரியார்  துணிபு . இவ்வாசிரியரும் இதனை  வற்புறுத்திக்  கூறியுள்ளார் . இவ்வுண்மையை   4 – ஆம்  அத்,  5 ஆம்  பிர  44 . 274  ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . அறம்  பொருளின்பங்களுள்  நடுவணதெய்த  இருதலையுமெய்துமாதலின் , பொருள் , வாழ்க்கைக்கு  இன்றியமையாத தொன்றென்பது  போதரும் . இவ்வுண்மையை , இவ் வாசிரியர்  , “மனிதன்  பொருட்கு  அடிமையாவான்; பொருள் எவர்க்கும்  அடிமையாகாது .  ஆதலின்  மனிதன்  எப்பொழுதும் சோர்வின்றிப்  பொருளீட்ட  முயலவேண்டும் . அப்பொருளால்  அறமும்  இன்பமும்  வீடும்  மனிதர்க்குண்டாவனவாம் . “  என்று  விளக்கிக்  கூறுவர் .  இது  பற்றியே  இன்னோரன்ன  பொருணூல்கள்  தேவாசுரர்களின்  ஆசிரியர்முகமாக  இவ்வுலகத்திற்கு  வெளிப்பட்டன .  “வேதம் அறநூல் களுக்கு  முரணாமல்  அரசனது செங்கோன்முறை  முதலியவற்றை  வரையறுத்துக்   கூறுவதும் , பொருளீட்டுதற்குரிய  சிறந்த  உபாயங்களை  விளக்கிக்  காட்டுவதும்  பொருணூலென்று  கூறப்படும்”  என்று  இவ்வாசிரியர்  கூறிய  இலக்கண  முறைப்படியே  இஃது  இயற்றப்பட்டதென்பது  இதனை  யாராய்வர்க்கெல்லாம்  புலனாம் . இதன்கண்  அரசனுங்  குடிமக்களும்  மேற்கொள்ள  வேண்டிய  ஒழுக்கவகைகள்  விரிவாகக்  காணப்படுகின்றன . “அரசன் குடிகளிடத்தினின்றும்  தனக்குரிய  அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலால்  அக் குடிகளுக்கு  ஏவலாளந்  தன்மையை  எய்தப் பெற்றவனாவான் “  எனவும் , “பூமரத்தை  வளர்த்து  மலர்  பறித்து மாலைகட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்பக்  குடிபுறந்தந்து  அவர்பால்  அரசிறை  பெறவேண்டும் “  எனவும், “அங்ஙனமன்றி  அம்மரத்தை  எரித்துக்  கரி  செய்து  பயன்  பெறுதல்  போலக்  குடிகளைக்  கெடுத்துச்  சிறுபயன்  கோடலாகாது .” எனவுங்  கூறப்பட்டுள்ளன .  இதனால்  அரசன்  அரசியலை  மேற்கொள்வது தன்பயன்  குறித்தன்றென்பதும் , குடிகளின்  நலங்குறித்தேயா மென்பதும்  நன்கு வற்புறுத்தப்பட்டன . குடிமக்கள்  மேற்கொள்ளத்தக்க  ஒழுக்கவகைகள் இதன்மூன்றாம்  அத்தியாயத்தில்  தெளிவாகவும்  விளக்கமாகவும்  கூறப்பட்டுள்ளன.

         சுக்கிரர்  அசுரகுருவாதலின்  அசுரர்களின்  வழக்க  ஒழுக்கங் களை  உற்றுணர்ந்து  அவர்  ஏற்றுக்கொள்ளத்தக்க  முறையில்  இவ்வரசிய னூலைத் திறம்பட  ஆக்கியருளினர் . கட்காமஞ்  சூது  முதலிய  விதனங்களெல்லாம்  அறவே  நீக்கப்பட வேண்டியவை  என்பதை  ஆங்காங்கே  இவ்வாசிரியர்  வற்புறுத்துக்  கூறுகின்றாரா யினும் , ஓரோவிடங்களில்  அவற்றை அளவோடு  மேற்கொள்வதால்  விளையும்  நலங்கள்   இன்னவென்றுங்  கூறுகின்றார் . அங்ஙனங்  கூறுதற்குக்  காரணம்  கள்ளுண்டலில்  வேட்கைமிக்க  அசுரர்கள்  உளங்கொளும் வகை இதமாக உபதேசிக்க  வேண்டுமென்னும்  எண்ணமேயாம் . இதனை  முதல் அத்தியாயம் –109—116 ஆம்  சுலோகங்களிற்  காண்க . “சிறிதளவு  உண்ணப்படும்  கள்  மதி  நுட்பத்தையும் , தூய  அறிவையும், அஞ்சாமையையும்  , மனவுறுதியையும்  தருவதாகும் “ என்பது  முதலிய  இந்நூற் கருத்துக்  களை  யுட்கொண்டே  , கலித்தொகை  என்னும்  சிறந்த  சங்க இலக்கியத்தில் , அதன்  ஆசிரியர்  “நறவினை  வரைந்தார்க்கும்  வரையார்க்கு  மவையெடுத், தறவினை யின்புறூஉம்  அந்தண ரிருவ ரும் “  மருதக்கலி – 36  என்று  கூறினர் . ஈண்டு  நறவினை  வரைந்தார் . தேவரும் , அதனை  வரையார்  அசுரருமாவர் . அவ்விரு திறத்தார்க்கும்  வரைதலும்  வரையாமையுமாகிய  அவ்விரண்டினையுங்  கைக்கொண்டு  அறத்தொழிலாக  இன்புறுத்திய  அந்தணரிருவர்  வியாழனும்  வெள்ளியு மாவர் . விலக்கத்தக்கதொன்று   அறமாதல்  உலகத்துப்  பலரான்  மேற்கொள்ளப்பட்டமையான்  ஆம்  என்பது  இவ்வாசிரியர்  துணிபாகும் . இதனை , “எச்செயல்  பலராலும்  பாராட்டப்படுகின்றதோ அஃது  அறமாகும் .  எச்செயல்  பலராலும்  பழிக்கப்படுகின்றதோ  அது  மறமாகும் .  ஆராய்ந்து  துணிதற்கரிய  அறத்தினியல்பை  எவரும்  அறிதற்கு  ஆற்றலுடையரல்லர் “  என்று  இவ்வாசிரியர் கூறுமாற்றான் அறியலாம் . விலக்கற்பாலன ஒரு  காரணம் பற்றி விதியாகக்  கூறப்படினும் , அங்ஙனங்  கூறும் ஆசிரியரின் உட்கோளை  யுணர்ந்தே  விதிவிலக்குக்களைத்  துணிதல்  வேண்டும் . இவ்வாசிரியர்  வேட்டையாடல் , கள்ளுண்டல் முதலியவற்றை  ஏற்றுக்கொள்வார்  நிலை  பற்றி  ஓரோவிடங்களிற்  சிறுபான்மை  விதிபோலக்  கூறியுள்ளாரேனும்  , “எப்பொழுதும்  புழு, எறும்பு முதலிய  சிற்றுயிர்களையும்  தன்னைப்  போற்  பார்த்தல்  வேண்டும் “ எனவும், “அரசர்களுக்கு  வேட்டை யாடலுஞ்  சூதாடலுங்  கட்குடித்தலுமாகிய  இவை  வெறுக்கற்பாலனவாம் . இம்மூன்றானும்  முறையே  பாண்டுவும் , நளனும், யாதவர்களும்  துன்ப மெய்தினர்,”  எனவும்  பலவிடங்களில்   உயிர்க்குறுகண்  செய்தல் , கள்ளுண்டல்  முதலியவற்றால் விளையுந்  தீமைகளை  எடுத்துக்காட்டி  அவை  அறவே  விலக்கத்தக்கன  என்று  வற்புறுத்துக் கூறுகின்றமையான் , இவர்  உட்கிடை  இன்னதென்பது நன்கு  வெளியாம் . சீவதயை  முதலிய  உயர்குணங்களைச்  சிறந்த  பிறபயன்  நோக்கிக்  கேட்போரை  ஏற்றுக்கொள்ளச்செய்தல் இவ்வாசிரியர்க்கு  இயல்பாம் . இத்திறன்  அரசியனூல் இயற்றும்ஆசிரியர்க்கு  இன்றியமையாத தொன்றே . அரசர்  பொதுவாகப்  பிறரைத்  தம்  வயப்படுத்தாளுதலில்   அவாவுடையராதலும் , அதற்குரிய  உபாயத்தை  ஆராய்தலும்  அவர்க்கு  இயல்பே . அந்நிலை நோக்கி இவ்வாசிரியர் “பிறரை  வயப்படுத்தற்கு  உயிர்களிடத்து  அருளும் , நட்புரிமையும் , கொடையும் , இன்சொல்லுமாகிய  இவைகளை  யொப்ப  மற்றொன்று இம் மூன்றுலகத்திலும்  இன்றாம் . “    என்று , தம்  உட்கிடையாகிய  உயர்ந்த  ஒழுக்கங்களை அவர்  விரைந்து  ஏற்றுக்கொள்ளும்  வண்ணம்  உபாயமாக  வெளியிடுகின்றார் . இதனால் ஒரு  பெருங்குழு வினர்  அடிபட்டு  மேற்கொண்ட  சில  ஒழுக்கங்கள்  விலக்கத்  தக்கவெனினும்  அவ்விலக்கினை  அவர்  ஏற்றுக்கொள்ளுமாற்றான் நயம்பட  உரைத்தல் நலமென்பது போதரும் . வேதநடை போல  அறநூல்களுட்  கூறப்படுவதன்றித்  தாமேயறிந்து  செய்யுந்தன்மைத் தாகிய  ஒப்புரவு என்னும்  உலகநடையை  இவ்வாசிரியர்  உடன்படுகின்றார் . காலவேற்றுமையால் உலகம்  நடைபெறும் நிலையை நுனித்துணர்ந்து செய்வன தவிர்வன மேற்கொள்ளவேண்டு மென்பதை வற்புறுத்துகின்றார் . உலகியலுணர்ச்சி  கைவரப் பெறுதற்கு  இவ்வுலகத்தையே  ஆசிரியனாகக்  கொள்ளவேண்டு மென்பதை ,”அறிவுடையோர்க்கு எல்லாச் செயல்களிலும்  உலகமே  ஆசிரியனாகும் ; ஆதலின் , பகுத்துணருமறிஞன்  உலகியலுணர்தற்  பொருட்டு  அவ்வுலகத்தையே  பின்பற்றல்  வேண்டும் “  என்பதனால்  விளக்கியுள்ளார் . பொருளுணர்ச்சியின்றி  வேதங்களை  அத்தியயனஞ்  செய்பவர்க்கு  உலகியலறிவு  இருப்பதில்லை  யென்பதை  இக்காலத்திற்  கண்கூடாகக்  கான்கின்றோம் . இவ்வுண்மையை  இவ்வாசிரியர்  “வேதாநுவாக படனப்  பயிற்சியான்  மழுங்கிய அறிவு மற்றை உலகியல் வழக்குகளிற் றிறனுடைய தாகாது” என்று  வெளிப்படுத்துகின்றார் . இங்ஙனங்  கூறியது  வேதபடன  முடையார்  எல்லா முணர்ந்தேமென்று  செருக்குற  லாகா  தென்பதையும் , வேதபடனத்தினுஞ்  சிறப்பாக   உலகிய லுணர்ச்சி  கைவரப்  பெறவேண்டுமென்பதையும்  வற்புறுத்தற்   பொருட்டேயாம் .  

             திருக்குறட்  கருத்துக்களும் , பரிமேலழகர்  உரைக்கருத்துக்க ளும்  இதன்கட்  பலவிடத்துங்  காணலாம் .  இந்நூற்கருத்துக்கள் திருக்குறளாசிரியர்க்குத்  துணையாகவுள்ளனவென்று  பரிமேலழகர்  கூறுவர் . இதனை , “தேவர்க்கும்  அசுரர்க்கும்  அமைச்சுப்  பூண்ட   வியாழ  வெள்ளிகளது துணிபு  தொகுத்துப்  பின்  நீதி  நூலுடையார்  கூறியவாறு  கூறுகின்றமையின்  “  என  அவர்  கூறுமாற்றானுணர்க . பிறாண்டும்  இக்கொள்கை  துணியப்படும் . துணிபு  தொகுத்துக்  கூறப்பட்டபின்  நீதிநூல்  இச்சுக்கிரநீதி ,  கெளடிலீயம் , காமாந்தக  நீதி  என்னும்  இவைகளாக  இருக்கலாமென்று  ஊகித்தற்கு  இடனுண்டு .  காலம்  பற்றி  முன்னாகப்  பின்னாகத்  தோன்றினும்  திருக்குறள் முதலிய  தமிழ்  நூல்களிற்  சுருக்கமாகக்  காணப்படும்  பொருள்களை  விளக்கமாக  வுணர்ந்துகோடற்கும் , அவற்றிற்  காணப்படாத  புதிய  பொருள்களைக்  கண்டு  மேற்கோடற்கும்  , இது  தக்க  கருவியாதலை  யுணர்ந்து  தமிழகத்தார்  இன்புறுவரென்னும்  பணிவுடையேன் .  

           இன்னும்  இதன்கட்  காலமுணர்த்தும்  பொறியாகிய  நாழிகை  வட்டில் , நீர்ப்பொறி , இசைப்பொறி (Gramophone} , காற்றியக்கும் பொறி (Electric Fan) , கம்பிவழிச் செய்தி யனுப்புங்கருவி (Telegraph) , நீராவியால் இயக்கப்படும் பொறிகள் (Train),  முதலிய  இக்காலத்துக்  காணப்படும் அரிய இயந்திரத்  தொழில்களைப்  பற்றியுங்  கூறப்பட்டுள்ளன . சில  செயல்களுக்கு  உவமை  கூறுங்கால்  செய்வினைக்கேற்றபடி  கூறியிருத்தல்  வியக்கத்தக்கதே .  நடைவழி ( Road ) ஆமை  முதுகு போல் இருக்க வேண்டுமென்கின்றார் . “புதல்வர்ப்  பேற்றை  விரும்பும்  பெண்மக்கள்  வயிரமணியை  அணிதலாகாது “ என்று  கூறுகின்றனர் . இன்னோரன்ன  புதிய  செய்திகள்  பல  இதன்கட்  டிகழ்ந்து இன்புறுத்துகின்றன .

             இன்னும்  இந்நூல்  நுதலிய  பொருள்களும் , இதன் அமைப்பின்  மாண்பும்  என்  அரிய  நண்பர்களாகிய  திருவாளர்  அட்வொகேட் கா . சுப்பிரமணியப் பிள்ளை  M. A ., M . L . அவர்களாலும் , திருவாளர்  ஹைகோட்டு  வக்கீல்  ச .  சோமசுந்தர பாரதியார் M.A., B L., அவர்களாலும்  எழுதப்பட்டு  இதனுடன்  சேர்க்கப்பெற்றிருக்கும்  ஆராய்ச்சி  மதிப்புரைகளால்  நன்கு  விளங்குமாதலின்   யான்  இங்கு  விரித்துக்  கூறத் துணிந்திலேன் . அவ் ஆராய்ச்சி  மதிப்புரைகளை  ஆராய்ந்து  படிப்பார்க்கு  இந்நூல்  நலங்கள்  உள்ளத்திற்  பதிந்து இன்புறுத்துமென்னும்  துணிவுடையேன் .

               இனி , இந் நீதி நூல்  பெரும்பான்மை  அரசியலைப்பற்றியும் , சிறுபான்மை  மக்களின்  வருணாசிரம  தருமங்களைப்  பற்றியும் கூறுவதாகும் . இது  பிறப்புப்  பற்றி  மக்களுக்குச்  சிறப்பு  இழிவு  கூறும் நூல்கள்  போலாது , “பிறப்பொக்கும்  எல்லா வுயிர்க்குஞ்  சிறப்பொவ்வா,  செய்தொழில்  வேற்றுமையான்.”   “பெருமைக்கு  மேனைச்  சிறுமைக்குந்  தத்தங் , கருமமே  கட்டளைக்  கல் .”   என்று  பொய்யில்  புலவர் தம்  பொருளுரையாகிய  திருக்குறளிற்  கூறியாங்குக்  குணஞ்  செயல்களாலும்  அறிவினாலுமே  மக்கள்  மாட்சியுடையராவர்  என்னும்  உயரிய  நோக்கத்தை  உட்கோளாக  உடையதாகும். இவ்வுண்மையை  “அறிவுடையார்பால்  அந்தணர்   “மாணொளியுளது”  எனவும், “இவ்வுலகத்தில்  அந்தணராதலும் , வணிகராதலும்  சூத்திரராதலும்  மிலேச்சரராதலும் பிறப்பினாலில்லை; குணஞ்  செயல்களாலேயே   வேறுபடுக்கப்பட்டனர்.”  எனவும் , “சாதியினாலும்  தாய் தந்தையராலும் பிராமணத் தன்மை  எய்தற்பாலதன்று.”   எனவுங்  கூறுமாற்றானறிக .  இக்கருத்தைப்  பிறாண்டும்  ஆங்காங்குப்  புலப்படுத்தியுள்ளார். ஆயினும்  பிறப்புப்பற்றிச்  சிறப்பு  இழிவு  கூறுதலையும்  அறவே  விலக்கினா ரல்லர்  ;  அதுவும்  மக்கட்  பகுதியினரின்   ஏற்றத்  தாழ்விற்கு  ஒருவாறாக  ஏதுவாதல் பற்றி , பிறப்பொன்றையே  கடைப்பிடித்துப்  பெருமை  சிறுமை  கருதி  நீதி  வழங்கல்  தக்கதன்றாகலின் , அம்முறையை  இவ்வாசிரியர்  மேற்கொண்டிலர் .  ஆயினும்  இந்நூலிற்  சிலவிடங்களிற்  பிறப்புப் பற்றிய  சிறப்பு இழிவுகள் கடுமையாகவும்  வற்புறுத்தப்பட்டுள்ளன . அத்துணைக்  கடுமை  இவ்வாசிரியர்  கொள்கைக்கு  ஏற்றதன்றாகலின்  அங்ஙனங்  கூறிய  சில  சுலோகங்கள் பிற்காலத்தவரால்  இடைச்செருகப்பட்டனவாக இருத்தல் கூடுமென்று  எண்ணுதற்கிடனுண்டு .  இக்கருத்து  நிலையுறுதற்குத்  தக்கசான்று  இந்நூலின்கண்ணே  காணப்படுகின்றது . இந் நீதிநூல்  இரண்டாயிரத்திருநூறு  சுலோகங்களாணக்கப்பட்டதென்று  இதன்  சுலோகத்திற்  கூறப்பட்டுள்ளது . இதற்கு  மாறாக  இற்றை ஞான்றுள்ள  இந்நூற் சுவடியில்  இரண்டாயிரத்தைஞ் ஞூற்றறுபது  சுலோகங்களுக்குமேல்  உள்ளன . இத்துணையென்று  அறுதியிட்டுரைக்கப்பட்டன  போக  எஞ்சிய  மேற்பட்ட  சுலோகங்கள்  நாளடைவிற்  புதியனவாக  எழுதிச்சேர்க்கப்பட்டிருக்கலாம் . அப்புதியன  இன்னவென்று  பகுத்துணர்தல்  அரிதாகலின்  , இருந்தபடியே  எல்லாச் சுலோகங்களும் மொழிபெயர்க்கப்பட்டன. இம்மிகுதியே  இந்நீதி  நூலாசிரியர்  கொள்கைக்கு  மாறுபாடான  கருத்துடையவாக  நினைக்கத்தக்கனவாம் .

          இத்தகைய  சிறந்த  பொருணூலாகிய  சுக்கிரநீதியைத்  தமிழில்  மொழிபெயர்க்க  எண்ணி , மேலைச்சிவபுரிச்  சன்மார்க்க  சபைத்  தலைவராக  இருந்து  சிவபதம்  எய்திய  திருவாளர்  வ. பழ . சா . அண்ணாமலைச்  செட்டியாரவர்களிடம்  தெரிவித்தேன் . அவர்கள்  இச்செயலை  மனமுவந்து  உடன்பட்டுச்  சிறிதுங் காலந் தாழ்த்தாமல் வடமொழியிற்  சாகித்திய  சிரோமணி  வகுப்பிற்  தேர்ச்சி  பெற்ற  தின்னியம்  பிரம்மஸ்ரீ  டி . எஸ் . சுப்பிரமணிய  சாஸ்திரிகளை  எனக்கு  உதவியாக இருந்து வரும்படி செய்தனர் .  சன்மார்க்கசபை  வெளியீடுகளில்  ஒன்றாக  இஃது  என்றும் நின்று  விளங்கும்  வண்ணம்  மொழி  பெயர்த்தியற்றலானேன் . இதனை  மொழிபெயர்க்குங்கால்  முதனூற்  பிரதியாகப்  பெற்றது பண்டித குலபதி ஜீவானந்த வித்தியாசாகரர்  பி . ஏ ., அவர்கள் உரையோடு  கல்கற்றா நகரத்தில் அச்சிடப்பட்டதாகும் . அது மூலத்திற்  சிலவும் உரையிற்  பலவுமாகிய  பிழைகளையுடையதாகும் . பிழைபட்ட  பகுதிகளைக்  கூடியவரை  முன்பின்  ஆராய்ச்சிகளாலும்  பிற  நூல்களின்  உதவியாலுஞ்  செப்பஞ்  செய்துகொண்டு  மொழிபெயர்க்கலானேன் . அங்ஙனஞ்  செய்தும் முற்காலத்திருந்து இக்காலத்து வழக்கொழிந்த  சில  செய்திகளின்  உண்மை  காண்டற்கரிதாயிற்று . அவ்விடங்களில்  என்  மொழி பெயர்ப்புத் தவறியிருத்தலியல்பே . அதுபற்றிப்  பெரியார்  வெறாது பொறுத்தருள்வரென்பது என்றுணிவு . மூலத்தில்  விளக்கமாக இல்லாதவைகளுக்குச்  சுலோக  எண்ணிட்டுக்  கீழே  குறிப்பு  எழுதி விளக்கியிருக்கின்றேன் .  ஒத்த  கருத்துக்களையுடைய  திருக்குறட்  செய்யுட்களும் , பரிமேலழகர்  உரைப்பகுதிகளும், பிறவும்  ஆங்காங்கு  எடுத்துக்  காட்டப்பட்டுள்ளன . மொழிபெயர்ப்பிலுள்ள   சில  சங்கேதச் சொற்களும்  குறியீடுகளும்  அரும்பதங்களும் வடமொழிக்கண்  எவ்வாறுள்ளனவென்று  படிப்போர்  அறிந்து  கொள்ளுதற்கு  உபயோகப்படும்  வண்ணம்  இறுதியில் அரும்பத முதலியவற்றின் அகராதியை எழுதிச் சேர்த்திருக்கிறேன் . அவ்வகராதி வடசொற்களா கவே  வடவெழுத்து வரிசையாகக்  காட்டப்பட்டது  அச்சொல்லுருவந்  தெரிதற் பொருட்டேயாம் . 

              இவ்வரிய  செயலில்  எத்துணையுந்  தகுதியற்ற  யான்  முயன்றிரத்தலைக்  கண்டு  நேரிலுங்  கடித  வாயிலாகவும்  வேண்டுவன  கூறி  யூக்கி யுதவியவர்கள் மஹா மஹோபாத்தியாய  தாக்ஷிணாத்ய  கலாநிதி  பிரம்மஸ்ரீ வே . சாமிநாதையரவர்கள் .  ஸ்ரீமத்  ஐயரவர்களும் , சேது  ஸமஸ்தான  மஹாவித்வான்  ஸ்ரீ  உப. வே . ரா . இராகவையங்காரவர்களும்  இந்நூற்குச்  சிறந்த  சிறப்புப்  பாயிரச்  செய்யுட்களை  யுதவிப்  பெருமைப்படுத்தினர் .  இந்நூலின்  நுண்பொருள்களைப்  படிப்பார் உணர்ந்து  இன்புறும்  வண்ணம்  ஆராய்ச்சியுரையெழுதி யுதவ வேண்டுமென்று விரும்பியபடி  என்  நண்பர்களும் ஆங்கிலத்திலும் தமிழிலும்  சிறந்த  பயிற்சியுடையவர் களுமாகிய  சென்னைச்  சட்டக்  கலாசாலைப்  பேராசிரியர்  அட்வொகேட் திருவாளர்  கா . சுப்பிரமணியப்பிள்ளை M.A., M .L ., அவர்களும் , மதுரை ஹைகோர்ட்டு  வக்கீல் , திருவாளர் ச.  சோமசுந்தர  பாரதியார் M.A ., B. L. அவர்களும்  இந்நூல்  முற்றும் பார்வையிட்டுத்  தம்  மதிவலியால்  நுனித்துணர்ந்து இதற்குச்  சிறந்த  ஆராய்ச்சி  மதிப்புரை  வரைந்துதவினார்கள் . மற்றும்  வடமொழியிலும்  ஆங்கிலத்திலும்  தமிழிலுஞ் சிறந்த  பல  பெரியார் இந்நூலைப் பார்வையிட்டுத்  தம்  கருத்துறு பொருள்களைத்  தெரிவித்துக்காட்டி  அபிப்பிராய  பத்திரங்களுதவினர் . இவர்களெல்லோரும்  என்  சிறு  பணியை  இங்ஙனம்  பெருமைப்ப டுத்தியதற்குக்  காரணம்  இன்னோரன்ன  தம் மொழி வளர்ச்சியிற்  பணி  செய்யவேண்டுமென்னும்  நல்லுணர்ச்சியும் , எம்மாட்டுள்ள  உண்மையன்புமேயாகும் .  வினையாளை  வேலை  முடிவிற்  பாராட்டி  இன்புறுத்தும் இயல்புவாய்ந்த  இப்பெரியாரெல்லோர்க்கும்  என்  உளமார்ந்த  வணக்கத்தைச்  செய்தலோடு இவர்கள் நன்றியை என்றும் மறவாக் கடப்பாடுமுடையேன் .

                இந்நூல்  மொழிபெயர்ப்புத்  தொடக்கமுதல் முடியும்வரை  என்னுடனிருந்து துணைபுரிந்தவர் தின்னியம் சிரோமணி  பிரம்ம ஸ்ரீ    T. S. சுப்பிரமணிய சாஸ்திரிகளாவர்.  இவர்கள் வடமொழியிற்  சிறந்த அறிவு  படைத்திருத்தலோடு  தமிழிலும்  வேண்டிய  அளவிற்  பயிற்சி பெற்றிருத்தல்  எனக்கு  மிகவும் உதவியாயிற்று . இன்னோரன்ன  பண்டிதர்களே மொழிபெயர்ப்புச் செயற்கு மிகவும் தகுதியுடையராவர். இவர்கள் உதவி  மிகவும் பாராட்டற்பாலது .  

                  சென்னை அடையாற்றுக்  காலேஜ்  தலைமைத்  தமிழ்ப்  பண்டிதரும் , என்  இனிய  நண்பருமாகிய  பிரம்மஸ்ரீ  பண்டித அ . கோபாலையரவர்கள்  என்  வேண்டுகோட்கு  இணங்கி  இதன்  அச்சு வேலையில் எனக்குச்  சிறிதும் சிரமம்  உண்டாகாவாறு  சலியா  முயற்சி மேற்கொண்டு , எழுத்துப்பிழை  முதலியன  நேராமல்  உற்றுநோக்கி உதவி புரிந்தமைக்கு என்றும் அவர்கள் நன்றியை நினைவுகூறுங்  கடப்பாடுடையேன் . இந்நூல்  அச்சு வனப்புற  வமைந்ததற்கு இவர்கள் உதவியே  காரணமாகும் .  

                     இம்மொழி  பெயர்ப்புத்  துறையில் யான்  தலைப்பட்டுப்  பணி  செய்தற்கு முக்கிய  காரணம்  மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையாரின் தூண்டுதலேயாகும் . இச்சபை  புதுக்கோட்டை  ஆட்சியுட் பட்ட   மேலைச் சிவபுரிக்கணுள்ளது .  இது  தோன்றி  இற்றைக்குப்  பதினேழு  ஆண்டுகளாயின . இது  தன்  பாலப்பருவமாகிய  மூன்றாம்  ஆண்டில்  முதற்றலைவராகிய  திருவாளர் வ . பழ . சா . பழனியப்ப செட்டியாரவர்களையும் , இளமைப்  பருவமாகிய  பதினைந்தாம்  ஆண்டில்  இரண்டாந்தலைவரும்  முதற்றலைவரின் இளைய  சகோதரருமாகிய  திருவாளர்  அண்ணாமலைச் செட்டியாரவர் களையும் பிரிந்துளதாயினும் , இவ்யெளவன  பருவத்தில் தன்னைப் பாதுகாக்கும் அறிவும் ஆற்றலும் பருவமுங்  குணங்களும் நிரம்பப்பெற்றவரும் , முதற்றலைவரின்  பிரதம குமாரருமாகிய  திருவாளர்  வ . பழ . சா .  சாமிநாதன்  செட்டியாரவர்களைத்  தலைவராகப்  கிடைக்கப்பெற்று, நாணாளும்  தன்  நோக்கங்களை இனிது  நிறைவேற்றித்  திகழ்கின்றது . என்பால்  உண்மையன்புமிக்க  சபைத் தலைவராகிய  திரு.  சாமிநாதன் செட்டியார் யான்  செய்து வந்த இத்தமிழ்ப்பணியை அடுத்தடுத்துக்  கண்டு  தாம்  இன்புறுத லோடு  என்னையும்  இத்துறையில் மேன்மேலும் ஊக்கியின்புறுத்தி வந்தனர் . சன்மார்க்க சபையின்  புகழ்  என்றும் நின்று நிலவுதற்கு இப்புத்தக வெளியீடு ஏற்றதாகும் என்னும்  உண்மையை இவர்கள் நன் குணர்ந்தவர்கள் . அருமை யறியாரகத்து  எத்துணைச்  சிறந்த  காரியமும் பயனுடையதாகத் தோன்றாது .  அருமையுணர்வாரகத்துச் சிறிய நற்செயலும் பெரும் பயனுடையதாகத் திகழும் . அருமை யுணர்ந்தின்புறூஉம்  சிறந்த  குணத்தை இச்சபைத்  தலைவர்பாற்  கண்டு  உவகையுற்று வருகின்றேன் . ஆரிய  மொழிக்கணுள்ள  வேதம், உபநிடதம் , சிவாகம  முதலிய  உயரிய  நூல்களை யெல்லாம் தக்க  பண்டிதர்களைக் கொண்டு  மொழிபெயர்த்துச் சன்மார்க்க சபை வெளியீடாக அடுத்தடுத்து வெளிப்படுத்த வேண்டுமென்னும் அவா இவர்கள்பால்  மிக்குள்ளது . இச்சிறந்த  எண்ணங்களுக்கு மற்றையோரும் உதவியதால் அன்றித் தடைசெய்யாதிருத்தலாகிய  இவற்றுளொன்று செய்வாராயின் திருவருட்பாங்கால் , தமிழ் மொழி  இந்நலங்களைப் பெற்றுப் பீடுற்று விளங்குவதாகும் .  இச் சன்மார்க்க சபை தான்றோன்றிய சிலவாண்டுகளுள்ளே  பல மாணாக்கர்களுக்குச்  சிறந்த தமிழ்க்  கல்வியை யூட்டியும் , அறிவுடைப் பெரியார் உபந்நியாசங்களால்  தமிழகத்தை யின்புறுத்தியும் , இன்னோரன்ன  நூல் வெளியீடுகளைச் செய்தும் தமிழ் நலம் வளர்க்குந்  தகைமை பாராட்டற்பாலதே . இந்நூல் சன்மார்க்க சபையின் வெளியீடாக வருதல் அதன்  பெருமைக்கு ஏற்றதே . சபைக்குத்  தக வமைந்த தலைவரும் , அவர்தம் அருமைச் சகோதரர்களும் , மற்றைச்  சபையின்  நிருவாகர்களும் இந்நூல்  வெளியீட்டிற்  காட்டும் சிரத்தையை மிகவும் பாராட்டுகின்றேன் .  ஒரு தமிழ் நிலையம் சிறந்த புகழையும் , புண்ணியத்தையும் பெறவேண்டுமாயின் அதற்குப்  புதிய  பல  நூலுரைகளின் வெளியீடே  சிறந்த  கருவியாகும் . இந்நற்செயலில் தமிழ் நாட்டுச் செல்வர்களும் , தமிழ்  வடமொழி  ஆங்கிலம்  வல்ல  புலவர்களும், தமிழ்ச்சங்கங்களும்  தலைப்பட்டுப்  பெருமை பெறவும் , அச்செல்வரும் , புலவரும் , சங்கங்களும்  புலமை , செல்வம் , சோர்வின்மை முதலிய  நலங்களைப் பெற்றுத்  திகழவும் எல்லாம் வல்ல சிவபிரான்றிருவருள் புரிவாராக.

                   ஒன்றுக்கும்  பற்றாத  சிறியேனை இவ்வரிய செயலிற் புகுத்தி நிறைவேற்றியருளிய  திருவருளை நெஞ்சார  வாழ்த்துகின்றேன் .

செய்வினைக்கட்  குற்றந்  தெரிந்து பொறுத்தருளன்

மையில் புலமுடையார் மாண்பாகுஞ் – செய்தி

பெறுதி யெனக்கிடைக்கப் பெற்றே  னதனால்

உறுதி பெரிதுடையே னூங்கு.

உள்ளக் கமலத் தொருவன் றிருவடியைக்

கொள்ளக்  குறையுங்  குறைகளெலாம்  —  வெள்ளி

புலத்திற் றிகழும் பொருணூல் தமிழி

னலத்திற் கியைதருமா னன்று .

மகிபாலன்பட்டி .                                               இங்ஙனம்

 30 – 05 – 1926                                                      மு . கதிரேசன்

சிறப்புப்பாயிரம்

சிதம்பரம் ஸ்ரீ மீனாக்ஷி தமிழ்க் காலேஜ் பிரின்ஸிபாலாகிய

உத்தமதானபுரம்

மஹா  மஹோ பாத்தியாய  தாக்ஷிணாத்ய  கலாநிதி

பிரம்மஸ்ரீ  வே . சாமிநாதையரவர்கள்

இயற்றியது

நேரிசை யாசிரியப்பா

பூமலி  நான்முகப்  புத்தேள் படைத்த

மாமலி  புவியுறு  மக்கட்  கெல்லாம்

உறுதியா  மறமுதற்  பெறுதியீங்  கிவையென

மனுமுதற்  பெரியோர்  முனநவில்  நூல்களுள்

மழைக்கோ  டன்னுடை  மாணவர்க்  கருளிய

அரச  நீதிமுன்  னாகிய  வெல்லாந்

தொகுக்கப்  பெற்ற  சுக்கிர  நீதியாம் 

வடநூற்  பொருளை  மாண்புறத்  தமிழிற்

றேனெனப்  பாலெனத்  தேன்விராய்  பாலெனக்

கழிபெருஞ்  சுவைத்தா  மொழிபெயர்த் திட்டே

அரும்பொருள்  விளக்கமு  மவணவண்  அமைத்தே

பொருணயங்  கண்ட  புலவர்க  ளிந்நூல் 

பாட  சாலயிற்  பயிலுமா  ணவர்க்கு

நல்லறி  வதனை  நல்கு  மெனவும்

இக்கா  லத்திற்  கேற்புற  விலகு

வசன  நடையா  வாய்ந்ததிஃ  தெனவும்

சொன்னயம்  பொருணயந்  தொகுமிதி   லெனவும்

முப்பால்  முதலா  வெப்பா  னூலினும் 

உள்ள வைய  மொழிந்தே  மெனவும்

காணாப்  பலபொருள்  கண்டே  மெனவும்

நகரத்  தார்புரி  நல்லற  மெனவும்

தந்த  மனத்திற்  கொத்தது  புகன்று

பலபட  விழைந்துபாராட்டும்  வண்ணம்

எழுதா  வெழுத்தி  லியைவித்  தளித்தனன்

அன்னவன்  யாரெனிற்  பன்னுது  முன்னுவோர்

ஆசகற்  றுறுமணி  வாசகப்  பெருமான்

எழிற்சிவ  லோக   மெனவெடுத்  தியம்புஞ்

சேண்டிகழ்  பெருமைப்  பாண்டிநன்  னாட்டிற்

சிவபுண்  ணியமே  செய்துசெய்  தோங்கும்

மங்கல  மிகுதன  வைசியர்  மரபிற்

பொங்கர  வேணிச்  சங்கர  னென்றும்

இன்பான்  மேவிய  வொன்பான்  கோயிலுட்

செயிரவந்  தீர்க்கும்  வயிரவன்  கோயிற்

குரிய   தாகிய  பெரிய  வகுப்பிற்  

சீருடைச்  சிறுகுளத்  தூருடை  யான்குலத்

துண்மையு  மன்பு  முறுசிவ  பத்தியும்

வண்மையுந்  தண்மையு  மற்றும்  வாய்ந்த

முத்துக்  கருப்ப  முகில்புரி  தவத்தால்

உதித்த  செல்வன்  கதித்த  வறத்தின்

மேலன்  புறுநர்  மிகுத்துள  வளமகி

பாலன்மா  நகரைப்  பதியாக்  கொண்டோன்

நன்னயச்  சுகுணச்  சின்னய  வேளைப்

பின்னவ  னாக்கொள்  பெரும்பாக்  கியவான்

செந்தமிழ்க்  கணியாந்  திருவள்  ளுவர்முதல்

முந்தமை  நூல்களு  மொழியவற்  றுரைகளும்

நன்றாய்ந்  தறிந்த  குன்றா  வுணர்ச்சியன்

விழைவட  மொழியிலும்  வேண்டுவ  பயின்றோன்

வடமொழி  வாணருந்  தென்மொழி  வாணரும்

ஆங்கிலப்  பயிற்சியி  லோங்கிய  நிபுணரும்

வேட்டுப்  பலமுறை  கேட்டுச்  சிரகர

கம்பிதஞ்  செய்திடக்  கவின்பிர  சங்கம்

பரிதரு  திறலினன்  புலவர்க்  கருந்துணை

கத்திய  நடையொடு  பத்திய  நடையினூல்

அழகுற  வியற்றப்  பழகிய  குருசில்

தமிழ்மொழி  நாளுந்  தழைத்திட  வெண்ணி

அன்பரைக்  கொண்டே  யின்புற  வவணவண் 

பாட  சாலைகள்  பலவமைந்  தவற்றைப் 

பாலனஞ்  செயப்புரி  சீலம  துடையோன்

அவமகன்  மேலைச்  சிவபுரி  யவைக்கண்

இவையும்பிறவு  மியலபா  வமைந்தமை

கண்டித  மணிபல  பண்டித  ரளித்த

பண்டித  மணியென்னும்  பட்டம்  பெற்றோன்

சிவனடி  யவரைச்  சிவனென  மதிக்கும்

மாசிலாப்  புகழ்க்கதி  ரேசன்

என்னும்  பெயர்கொண் டிலங்குசீ  ரியனே.

&&&&&&&&&&&&&

ஆராய்ச்சி  மதிப்புரை

சென்னை  நியாய  கலாசாலைப்  பேராசிரியர்

திருவாளர்  கா.  சுப்பிரமணிய பிள்ளை  M . A., M.L.,

அட்வொகேட்  அவர்கள்  எழுதியது .

               சுக்கிர நீதி  யென்னும்  இவ்வரியநூல்  அரசியற்குரிய  நன்முறைகள்  யாவற்றையும்  விளக்குவான்  இரண்டாயிரத்  திருநூறு  சுலோகங்களால்  அமையப்பெற்றுள்ளதோர்  வடநூலின்  மொழி பெயர்ப்பாகும் . “மூன்றுலகங்களிலும்  இந்  நீதி  நூலுக்  கொப்பான  நூல்  வேறில்லை” யென்று  இதன்  நான்காவது  அத்தியாயத்தின் முடிவில்  கூறியதொரு  புறமிருப்ப, தற்காலத்திலே   சாணக்கியருடைய  அர்த்த  சாத்திரத்தையும்  அதன்  சுருக்கமாகிய  காமாந்தக  நீதி  என்னும்  நூலையும்  இதனோடு  ஒத்துப்பார்த்த  வங்காளக்  கலை  நிபுணராகிய  பினாய்க்குமார  சர்க்கார்  எம் . ஏ . என்பார் , அவற்றினும்  இதுவே  மிகவும்  விரிவாகவும்  விளக்கமாகவும்  இந்திய  அரசியல்  நாகரிகத்தைக் கூறும்  பெருநூலென்று  மொழிந்தமை  உற்று  நோக்கத்தக்கது .  அவர்  இந்நூலைப்  பல்லாற்றாலும்  வகுத்து வகுத்து ஆய்ந்து  கண்ட  முடிபுகளை ஆங்கிலத்தில் “சுக்கிரநீதித் தோற்றுவாய்”  அல்லது  “இந்திய  சமுதாய  வாழ்க்கை யடிப்படை”  என்னும்  நூலில்  வெளியிட்டுள்ளார் .  அதனுட்  போந்த  பல  காரணங்களால்   சுக்கிரநீதி  என்பது  கீழை  இந்திய  நாட்டில்  ஒரு   தக்க  அறிஞரால்  செம்மையாய்  அரசியல்  இவ்வாறிருத்தல்  வேண்டுமென்று  தனதுள்ள  விலாசத்திற்  கண்ட  முறையில்  எழுதப்பெற்ற  நூலென்று  ஊகிக்கப்படுகின்றது .

            ஆதியில்  கிரேக்க  நாட்டில்  பிளேட்டோ  என்னும்  பேரறிஞரும்  சுமார் ஐந்நூறு  ஆண்டுகட்குள்ளாக  ஆங்கில  நாட்டின்  மூர், ஆரிங்டன்  என்னும்  இருபெரும்  புலவரும்  இதுபோன்ற  நூல்கள்  இயற்றியுள்ளார்கள் . இந்  நூல்  எழுதிய  காலம்  வங்காளத்தில்  பாலர்  என்னும்  அரசரும் , தென்னாட்டில்  இராஜராஜன்   முதலிய  சோழரும்  அரசாண்ட  காலம்  என்பது  பல  குறிப்புக் களால்  அறியக்  கிடக்கின்றது .  அக்காலம்  பத்தாவது  அல்லது  பதினோராவது  நூற்றாண்டு ஆகும் . கி.பி . எண்ணூறு  முதல்  ஆயிரத்திருநூறுவரை  உள்ள காலப்பகுதியே  வங்காளத்தில்  தந்திர  நூல்  காலம்  எனப்படும் .  இத்தந்திரநூற்  காலத்திலேதான் அகத்திய  மதம்  என்னும்  நூலுள்  நவக்கிரகம்  அல்லது  ஒன்பது  கோள்களைத்  திருத்தி செய்தற்பொருட்டு  நவமணிகளைப்  பயன்படுத்த  வேண்டுமென்ற  குறிப்பும்  காணப்படுகிறது . பத்தாவது  நூற்றாண்டில்  எழுந்த  விஷ்ணு  தருமோத்தர  புராணம் என்பதனுள்  நவமணிகளே  மகாரத்தினங்கள்  என்று  கூறப்பட்டிருக்கின்றன . அக்காலத்தில்  ஸ்ரீபதி என்னும்  வானநூல்  வல்லவரால்  இயற்றப்பட்ட  ஜோதிஸ்  ரத்தினமாலா  என்னும்  நூலுள்  நவமணிகளைக்  கோள்களுக்கு  உகந்தனவாகக்  கூறிய  வண்ணமே  சுக்கிர நீதியுள்ளும்  கூறப்படுகின்றது . இத்தந்திரநூற்  காலத்திற்கு  முன்புள்ள  நூல்களுள்  வராகமிகிரருடைய  பிருகத்சம்ஹிதாவில் இருபத்திரண்டுக்கு  மேற்பட்ட  மணிகள்  குறிக்கப்பட்டிருப்பினும், அவற்றுள்  ஐந்தே  விதந்தோதப் பட்டன. தந்திர  நூற்காலத்திற்றான்  ஒன்பது  மணிகள்  ஒன்பது  கோள்கட்குச்  சிறந்தன  என்ற  கருத்து  நிலைபெற்றது . அங்ஙனம்  நிலைபெற்ற  கருத்தே சுக்கிரநீதியுட்  காணப்படுதலின்  அஃது  அக்காலத்ததென்பது  ஊகிக்கப்படும் . இன்னும்   அக்காலத்திற்றான்  திருமால் , சிவபிரான் , கணபதி , சூரியன் , அம்பிகை  என்னும்  ஐந்து  தெய்வங்களையும் ஒருங்கு  வழிபடும்  தந்திர  வழக்கம்  வடநாட்டில் ஏற்பட்டதென்று  தந்திரதத்துவம் என்னும்  நூலின்  முகவுரையிற்  கூறிய  காரணங்களால்  தெரியக்  கிடக்கின்றது . ( இத்  தந்திர  தத்துவத்தின் ஆங்கிலமொழிபெயர்ப்பு  ஸர்  ஜான்  உட்ராவ்  என்னும்  கல்கத்தா  ஹைகோர்ட்டு  நீதிபதியால்  வெளியிடப்பட்டுள்ளது. )  அவ்வழிபாட்டு  முறையே  சுக்கிரநீதி  நாலாவது  பிரகரணத்துள்  63 வது  சுலோகத்தில் கூறப்பட்டது  காண்க . சாணக்கியரது  அர்த்த  சாத்திரத்தில் நகரத்தினடுவே  அபராஜிதர், அப்பிரதிகதர் , ஜயந்தர் , வைஜயந்தர் , சிவன் , வைசிரவணன் , அசுவினிதேவர் என்னும்  இவர்கட்குக்  கோயிலும்  , மதுகிரகமும்  (கள் வீடும்)  இருத்தல்  வேண்டுமென்று கூறப்பட்டிருத்தல்   காண்க .  இதனாலும்  சுக்கிர நீதி தந்திரநூற்  காலத்தென்பது  தெளியப்படும் . மேலும்  அக்காலத்திலே  சோழரது ஆட்சி  இமயமலையடி  வரையில் பரவியிருந்ததாகவும் , திருக்குறள்  முதலிய  தமிழ்நூல்களின்  விழுமிய  கொள்கைகளும் , தமிழ் நாட்டு  மருத்துவ  நூலிற்  கூறப்படும்  உலோக  நீற்று  முறைகளும்  வடநாடெங்கும்  பரவியதாகவும்  தெரிகின்றோம் . இந்நாட்டில்  ஆங்கிலக்  கருத்துக்கள்  ஆங்கில  அரசாட்சி  காரணமாக  நிலவுவதொப்பத்   தமிழரசரது  ஆட்சி  வடநாட்டில்  நிலைபெற்றிருந்த  காலத்தில்  தமிழ்நூற்  கருத்துக்களும் ஆண்டு  நிலவியிருத்தல்  இயல்பே . அக்காலத்து  எழுந்த  வங்கநாட்டுத்  தந்திரங்களிலே  விரிந்த  நோக்கங்கள்  தோன்றித்  திகழ்ந்தனவென்றும் , அக் கருத்துக்கள், வைதிகக்  கிரியா  நூலுட்  காணப்படும்  ஒடுங்கிய கருத்துக்களுக்கு முரணானவை என்றும்  ஆனரபிள்  ஸர்  ஜான்  உட்ராவ்  மேற்கூறிய  தந்திர தத்துவம் என்னும்  நூலின்  முகவுரையுட்  கூறியுள்ளார் . சுக்கிர நீதியுள் தமிழ்நாட்டு உயரிய கருத்துக்கள் காணப்படுதற்கு  உதாரணம்  வருமாறு : “பிறப்பொக்குமெல்லா வுயிர்க்குஞ்  சிறப்பொவ்வா  , செய்தொழில்  வேற்றுமையான்” என்ற  திருக்குறளின் கருத்தே, சுக்கிரநீதியுள் முதலத்தியாயத்து  38 ,39  வது  சுலோகங்களில்  காணப்படுகின்றது . அவை  வருமாறு –“இவ்வுலகத்து  அந்தணராதலும் அரசராதலும்  வணிகராதலும்  சூத்திரராதலும்  மிலேச்சரராதலும் பிறப்பினால்  இல்லை ;  குணஞ்செயல்களாலே  வேறுபடுத்தப்பட்டனர்.” “பிரமனிடத்துத்  தோன்றியது பற்றி  எல்லோரும்  எங்ஙனம்  பிராமணராவர் ?  சாதியினாலும்  தாய்த்  தந்தையராலும்  பிராமணத் தன்மை எய்தற்பாலதன்று”   இவ்வாறே  இந் நூலுட்போந்த  ஊழைப்  பற்றிய  கொள்கையும்  திருக்குறட்  கருத்தோடு  பெரிதும் ஒற்றுமையுடையதே . அரச  அங்கங்களைப்  பற்றிச்  சுக்கிரநீதி  பகர்வது திருக்குறட் கருத்தே .  அதன்  முதல்  அத்தியாயம்  61 வது சுலோகத்தில் திருவள்ளுவ  நாயனார் கூறிய  ஆறு  அங்கங்களோடு  அரசையும்  சேர்த்து  அரசியற்குரிய  அங்கங்கள் ஏழென்று  சுட்டப்பட்டது . சாணக்கியரும்  இவ்வாறே  சொற்றனர் .  

               சுக்கிரநீதியையும்  திருக்குறளையும்  ஒப்பிட்டுப்பார்ப்போர்   திருக்குறள்  கி. பி . இரண்டாவது  நூற்றாண்டுக்கு முந்தைய  நூலென்றும் , சுக்கிரநீதி  கி.பி. பத்தாவது  நூற்றாண்டில்  எழுந்த  நூலென்றும்  அறிந்து கொள்ளற்பாலர் .தென்னாட்டுக்  கருத்தைப்  பெரிதும்  தழுவிக்  கூறும்  காரணத்தினாலே   சுக்கிரநீதி  என்னும்  நூல்  அப்  பெயர்த்தாயிற்றுப்  போலும் .  

             சிறந்த  அரசநீதிகளைத்  தொகுத்துரைப்பான்  புகுந்த  ஆரிய  ஆசிரியர் தமது  நூலைத்  தேவகுருவின்  பெயரால்  வியாழநீதி  என்னாது அசுரகுருவின்  பெயரால்  சுக்கிர நீதி  என்றது  உற்றுநோக்கத்தக்கது .  அசுரருள்  தலையாயவன்  சூரபன்மன் .  அவன்  ஆண்ட  இடம்  தென்கடலிடை   நிவந்த வீரமகேந்திரம் . அவனது  குருவின்  பெயரே  சுக்கிரர் .  இதனாலும்  சுக்கிரநீதிக்  கருத்துக்கள்  தென்னாட்டுக்  கருத்துக்கள்  எனபது  ஒருவாறு  ஊகிக்கப்படும் .  

             திருக்குறள் சுருக்கமாகக்கூறிய  உண்மைகளுக்குச்  சுக்கிரநீதியுள்   விளக்கமாகிய  உதாரணங்கள்  கிடைக்கின்றன . அரண்  அதிகாரத்துள் “உயர்வகலந்  திண்மை  யருமையிந்  நான்கின் , அமைவர  ணென்றுரைக்கு  நூல் “  என்றதன்  விளக்கத்தைச் சுக்கிரநீதி  முதல்  அத்தியாயம்  238 ஆவது   சுலோகத்துட்  காண்க. “எல்லாப்பொருளு முடைத்தா” யென்றதற்கேற்ப , எல்லாவகைப்  பொறிகளும் , எல்லாவகைப்  படைகட்கும்  இருப்பிடமும் , எல்லாப் பொருள்கட்கும்  பண்டசாலையும்  அரணுள்  அமைத்தல்  வேண்டுமென்று   சுக்கிரநீதியார்  கூறுவாராயினார் . முதல் அத்தியாயம்  248  முதல்  258  வரை  காண்க .  

                அரசற்குக்  கண்ணோட்டம்  வேண்டுமென்பது  “ஒறுத்தாற்றும்  பண்பினார் கண்ணுங்கண்ணோடிப்  ,பொறுத்தாற்றும் பண்பே  தலை”   என்பதனாற்  பெறப்படும் . இப் பொருளுண்மையை  உட்கொண்டு  சுக்கிரநீதியாம்  நாடிழந்த  பகைவர்க்கு  வாழ்க்கை  நிமித்தம்  பொருளுதவும்  முறைகளை  நாலாவது  அத்தியாயம்   ஏழாம்  பிரகரணத்துள் 397  முதல்  401  வரை  உள்ள  சுலோகங்களால்  விளக்கியுள்ளார் .   

                இவ்வாறே  பல  பகுதியுள்ளும்  கண்டுகொள்க . சிலவிடங்களில்  இரு நூற்  கருத்துக்களுக்கும்  ஒரு  சிறிது  வேறுபாடு  காணப்படும் . இறைமாட்சி யுள்  “அஞ்சாமை  யீகை  யறிவூக்க  மிந்நான்கும் , எஞ்சாமை  வேந்தற் கியல்பு.”  “கொடையளி  செங்கோல் குடியோம்ப  னான்கு முடையானாம்  வேந்தர்க்கொளி.”  என்ற  குறட்கருத்துக்களை முதல்  அத்தியாயம்  124 ஆவது  சுலோகத்திலும்  பிறாண்டும்  அமைத்திருத்தல்  காண்க . இச்சுலோகத்துள்  தீயோரை  ஒறுத்தலாகிய  செங்கோன்மையும் , குடியோம்புதலும் , ஈகையும்  கூறப்பட்டன . அளி  என்பது  பகைவர்க்கிரங்குதல் ; அது மேற்சுட்டினாம் .  ஊக்கமென்றதனையே  பொருளீட்டுவதாகச்  சுலோகம்  மொழிகின்றது . அறிவு  என்பதனைக்  குணங்  குற்றங்களை  யறிதல்  என்னும்  பொருட்டாகக்  கொண்டு  பல  சுலோகங்களடங்கிய   ஓர்  பிரிவாக  வகுத்தனர்  நீதி  நூலார்  .  அஞ்சாமை என்பதனையே  பகைவரைத்  தொலைத்தலும் , மேன்மேலும்  நிலப்பகுதி கோடலுமாகிய  இரு  செயல்களாக  அவர்  கூறிப்  போந்தனர் .  கொடை  யென்பதனை  அவர்  வேள்வியாகக்  கருதினார் போலும் .  இறை மாட்சியுள்  வேள்வி  அரசன்  கடமையாகக்  கூறப்படவில்லை .  ஆனால்  சுக்கிரநீதியுள்   இராஜசூயம் முதலிய  வேள்விகளை  வேட்டல் அரசனுடைய  தொழில்களுள் ஒன்றாக  வைத்து எண்ணப்பட்டது .  (வறியவர்க்குக்  கொடுத்தல்  ஈகை ; தக்கார்க் கீதல்  கொடை  என்ப. )

               அரசன்  கடுஞ்சொல்லனாயிருத்தல்  கூடாதென்று  சுக்கிரநீதி  நன்கு தெரிவிக்கின்றது . காட்சிக்கு  எளியனாதல்  வேண்டுமென்று   அது  குறிப்பதாகத்   தெரியவில்லை .  இவ்விரண்டும்  ஒருங்கே  இறைமாட்சியுள்  கூறப்பட்டது  காண்க. “காட்சிக்கெளியன்  கடுஞ்சொல்லனல்லனேல் , மீக்கூறு  மன்ன  னிலம். “  பிறவும்  அன்ன  இதனால்  திருக்குறட்  பொருட்பாலினை  ஆராய்தற்குத்  தக்கதோர் கருவி  நூலாகச்  சுக்கிரநீதி  அமைகின்றதென்பதனைத்  தமிழறிஞ ருணர்ந்து அதனைப் பாராட்டுவாராக .  

             இனிச்  சுக்கிரநீதியுட்  போந்த  பொருள்களை ஒருவாறு தொகுத்துச்  சுட்டுதும் . இந்நூல்  ஐந்து  அத்தியாயமுடையது . முதல்  அத்தியாயத்தின்  ஒரு  பகுதியுள் நீதிநூலறிவு  பொதுவாக  மக்களது  ஒழுக்கங்கள்  நிலைபெறுவதற்கும் , சிறப்பாக  அரசியன்முறை  தழைப்பதற்கும்  இன்றியமையாத தென்பதும் , ஊழ்  முயற்சி  யென்னும்  இரண்டனுள்  முயற்சியையே  சிறப்பாகக்  கைக்கொள்ள  வேண்டுமென்பதும், அரசிற்குரிய  அங்கங்களின்ன  வென்பதும் , அரசனானவன்   அயன்  இந்திரன்  வாயு  இயமன்  ஞாயிறு  தீ  வருணன்  மதி  நிதிக்  கிழவன்  என்பாருடைய  கூறுகளையுடையான்  என்ற  கொள்கையின்  விளக்கமும் , குடிகளுக்குதவுமுகத்தால்  அவன்  அவர்கட்குத்  தந்தை  தாய்  ஆசிரியன்  உடன்பிறந்தார்  உறவினன்  குபேரன்  இயமன்  என்னும்  எழுவரைப்  போல்வா னென்பதும்  அரசர்க்கு  ஐம்பொறியடக்கத்தின்   இன்றியமையாமையும்   இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறுமாகியவற்றால்  பெருந்தீங்கு  விளையு மென்பதும் , அரசனுடைய  அறிவும்  செயலும்  இனையவென்பதும் , குடிகளைத்  துன்புறுத்தாமல்  இறைகொள்ளும்  தன்மைக்கும்  வருவாயின்  அளவிற்கும்  அதிகார  அளவிற்கும்  ஏற்ப  அரசர்  பலவகைப்படுவரென்பதும்  கூறப்பட்டன .  

              பின்னர்  நிலத்தின்  அளவுவகைகள்  கூறப்பட்டுள்ளன . கிராமமென்பது  ஒரு குரோச  அளவுற்றதும்   ஆயிரங்கருடம்  அளவுள்ள  வெண்பொற்காசுகள்  அரசிறையாகப்  பெறத்தக்கதும்  ஆம்  என்றும் , ஒரு குரோசம் 5000 முழம்  ஆகுமென்றும் விளக்கப்பட்டன . இதனால்  ஆதியில்  எவ்வளவு  அளவுள்ள   இடத்தைக்  கிராம  மென்றார்கள்  என்பது  தெரியும் . அங்குலம் , கோல் , நிவர்த்தனம் , பரிவர்த்தன,  புயம்  முதலியவைகளுக்கு  இலக்கணம்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளது .  இவை  தமிழிலே   கணித  நூலினும் , சோதிடப்பகுதியான  இரேகை  நூலினும்   விரிவாக  விளக்கப்பட்டுள்ளன .

                பின்னர்  அரச  நகர்  அமைப்பும் , அரண் அமைப்பும் , அரசவீதியமைப்பும்  மிகவும்  அழகாக  நவிலப்பட்டுள்ளன . இப்பகுதி  சிலப்பதிகாரம்  முதலிய  சங்க  நூல்களில்  காவிரிப்பூம்பட்டினம்  மதுரை  முதலிய  நகர்கட்குக்  கூறிய  வனப்பை  நினைவூட்டுகின்றது .  அறச்சாலைகள்  வழிச்செல்வோர்க்கே  ஆதியில்  அமைந்ததாகவும்  , புதிதாக  வருபவரை நன்கு  உசாவி   அவருக்குத்  தங்குமிடங்களை  அதிகாரிகள்  உதவினதாகவும்  270  முதல்  274  வரையுள்ள  சுலோகங்களால்  அறிகின்றோம் . தற்காலத்தில்  புது நகர்  அமைப்பினைப்  பற்றி  ஆங்கிலவாணர்  கூறும்  முறைகளும்  இப் பகுதியோடு  ஒத்துப்  பார்க்கத்தக்கன .  

                  பின்னர்  அரசர்கள்  நாடோறும்  நேரத்தைப்  பலபடப்  பகுதி  செய்து  ஒவ்வொரு  பொழுதிலும்  செய்யவேண்டிய  கடமைகளையும்  , குடிகளது  நன்மையின்  பொருட்டு   அவர்கள்  விதிக்க  வேண்டிய  கட்டளைகளையும் , அவ்விதிகளை  யாவர்க்கும்  வெளிப்படுத்து  முறையினையும் , போர்புரிதல் , வேட்டை,  விளையாடல், ஒற்றாடல் முதலியவற்றின்  இயல்புகளையும்  கற்பார்க்கு  இன்பந்தரும்  வண்ணம் விளக்கியிருத்தல்  காண்க .   

                 நஞ்சுகலந்த  உணவைச்  சோதிக்கும்  உபாயம்  பிறவுயிர்க்கு  இறுதி செய்யாத  நலமான  முறையிற்  சுட்டப்பட்டது . நச்சுணவைக்  கண்டவுடன் அன்னம் , வண்டு , மயில்  முதலியவைகள் இன்ன  இன்ன  செயல்களைக்  காட்டும்  என்று  அறிவுறுத்தினமை  காண்க .  இந்நூல்  விழுமிய  நோக்க  முடையதாகலின்  வேட்டையாடல்  பிறவுயிர்க்குத்  துன்பம்  விளைத்தல் பற்றி  நல்ல தன்றெனக்  கூறுகின்றது. அரசியற்குரியாரைத்   தெரிந்தெடுத்தலும் , அரசவையமைப்பும் , அரசுரிமை  யடையாளங்களைக்  காத்தலும்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளன . குடிகளுக்கு  எல்லாவிதக்  கல்விகளையும்  பயிற்று வித்தல்  வேண்டுமென்ற  கருத்தும் , நெடுந்தூரத்திலுள்ள  செய்திகளை  விரைவில்  அறிந்துகொள்ள  வேண்டுமென்ற  கருத்தும் , அரசன்  உவகையும்  சுறுசுறுப்பும்  படைக்கலப்  பயிற்சியும்  உடையனாதல்  வேண்டுமென்ற  கொள்கையும்  பாராட்டத்தக்கன . அரசிலக் கணங்களில்லாத  அரசன்  புலவர்களால்  நாயோடொப்ப  வைத்து  எண்ணப்படுவானென்றுங்  கூறப்பட்டது . அரசன்  கற்புடைய  இல்லாளோடு  இன்புறுதலின்றிப்  பிறன்மனை  நயத்தல்  கூடாதென்பதும் , அவன்  நிலைகுலைதல்  பற்களும் , மயிர்களும், உகிர்களும் தமக்குரிய  இடம்விட்டுப்  பெயர்தலை  யொக்கும்  என்ற  கருத்தும்  உற்று நோக்கத்தக்கன . “தலையி னிழிந்த  மயிரனையர்  மாந்தர், நிலையனிழீந்தக்  கடை “  என்பது  திருக்குறள் . “ஊழின்  வலியால்  தன் முயற்சியனைத்திற்கும்  பயன்  காணாதவழி  ஒருவன்  தவஞ் செய்து மேலுலக மெய்தக்கடவன்”  என்று  கூறும் பகுதி பண்டைத்  தமிழரசருட்  சிறந்த  வீரர்  தமது  முயற்சி  கடைபோகா  வழி  வடக்கிருந்த  வழக்கத்தை  நினைப்பூட்டுகின்றது .  

               இனி , இரண்டாம்  அத்தியாயத்துள் அரசனக்கு  நன்னட்பினா லாந்  நன்மையும் , தீநட்பினாலாந்  தீமையும்  முதற்கட்  கூறப்பட்டன . இளவரசிற்குரியா ரின்னாரென்பதும் , அவர் கடமையும் , அரசன்  அவரையும்  மற்றை ஞாதிகளையும்  நடத்தும்  முறையும்  விளக்கப் பட்டன. “ இதனை  யிதனாலிவன்  முடிக்கு மென்றாய்ந்  ததனை யவன்கண் விடல்”   என்ற  திருக்குறளாற்  பெறப்படும்  கருத்துக்கள னைத்தும்   இந்நூலுள்  அமைச்சர், புரோகிதர் ,  பிரதிநிதி, நீதிபதி , யானைப்பாகன் , படைத்தலைவர் , சத்திரத்தலைவர் , பரீக்கைத்  தலைவர் , தண்டத்தலைவர் முதலியோரதிலக்கணங்களையும், அவரை  ஆய்ந்தமைக்கு  முறைகளையும்  கூறும்  பகுதியுள்  விரிவாகக்  காணப்படும் .  அமாத்தியன் , அமைச்சன் , மந்திரி  முதலியோர்களுக்கு வெவ்வேறு  கடமைகள்  இதனுட்  கூறப்பட்டன . இப்பகுதி  அக்காலத்து  அரசமைப்பில்  இத்துணை  அதிகாரிகளும்  தொழிலாளர்களும்  இருந்தனரென்று  அறிதற்குப்  பெரிதும்  பயன்படுகின்றது . அக்காலத்தில்  உரிமைகளைப்  பாதுகாக்க  ஆவணங்க ளெழுதப்பட்டனவென்றும் , அவைகள்  ஆஞ்ஞாபத்திரம்  பிரஞ்ஞாபனபத்திரம்  சாசனப்பத்திரம்  பிரசாத  பத்திரம்  முதலிய  பலவகைப்பட்டு  வழங்கினவென்றும் , அரசனுக்குரிய  வரவு  செலவு  கணக்குகள்  எழுதி  வைக்கும்  முறை  இன்னவென்றும் , அரசன்  முதலிய  அதிகாரிகள்  பத்திரங்களை  ஒப்பிட்டுக்  கையெழுத்திடுமுறை  இன்னவென்றும் , இவ்வத்தியாயம்  விதந்தோதுகின்றது . எண்ணலளவைக்  குறியீடுகளும்  , சாந்திரம்  செளரம்  சாவனம்  என்னும்  காலவளவைகளும் , மாதச்சம்பளங்கொடுத்தல்  கடன் கொடுத்தல் நாட்கூலி  கொடுத்தல்  முதலியவற்றிற்கு  முறையே  வெவ்வேறு  காலவளவைகள்  பயன்பட்டன வென்பதும்  இவ்வத்தியாயத்துள்  விளக்கப்பட்டன .

               இனி, மூன்றாம்  அத்தியாயத்துள்  எல்லார்க்குமுரிய  ஒழுக்க முறைகள்  விரிவாகக்  கூறப்பட்டுள்ளன . கல்வியினாலும்  வீரத்தாலும்  பொருளாலும்  உயர்குடிப்பிறப்பாலும்  வலிமையாலும்  மானத்தாலும்  ஒருபொழுதும்  செருக்குறலாகா  தென்றும் , அங்ஙனம்  செருக்குறுவார்க்  கின்ன  தீமை  விளையுமென்றும் , கல்வி  முதலியவற்றின்  பயன்  இன்னவென்றும் கூறும்  பகுதி  மிகவும்  அழகுற  அமைந்துள்ளது . குடிகள்  தமது  வாழ்க்கையை  நயம்  பெற  நடத்திக்  கொள்வதற்கு  இவ்வத்தியாயத்துட்  கண்ட  விதிகளைக்  கற்றல்  இன்றியமையாதது . உலக  வாழ்க்கையில்  உடல்  நலமும்  ஒற்றுமையும்  எய்துதற்குரிய  பல  நற்பழக்கங்கள் இதன்கண்  விதந்தோதப்பட்டன . திருவள்ளுவர்  பொதுவாகக்  கூறிய  உண்மைகளின்  நயம்  இவ்வத்தியாயத்திற்  கூறிய  சிறப்பு  விதிகளால்  நன்கு விளங்கும் .  தமிழில்  ஆசாரக்கோவை   முதலியவற்றுள்ளும் , சைவ  சமய  நெறி  முதலிய  நூல்களிலும்  கூறப்படும்  ஒழுக்க  விதிகள்  இவற்றோடு  ஒத்துப் பார்க்கத்தக்கன .

        இனி , நான்காம்  அத்தியாயம்  முதற்பிரகரணத்துள்  , இயற்கை  நண்பர் , செயற்கை  நண்பர் , இயற்கைப் பகைவர் , செயற்கைப் பகைவர்  என்னும்  இவர்களினிலக்கணமும் , இவர்கள்  மாட்டுச்  சாம பேத தான தண்டங்களை  மேற்கொள்ளு  முறையும்  கூறப்பட்டன.  பின்னர் , தண்டத்தின்  வகையும்  பயனும்  கூறும்  பகுதியுள்  அக்காலத்துத்  தண்டோபாயங்கள்  சிறைப்படுத்தல்   அடித்தல்  அபராதப்பணம்  விதித்தல்  கடுமொழி  கூறல் மானக்கேடு  செய்தல்  உறுப்புக் குறைத்தல்  கொலைபுரிதல்  என்பனவாமென்றறிகின்றோம் . “கடிதோச்சி  மெல்ல  வெறிக” வென்பதன்  கருத்தும்  ஆண்டு  விளக்கப்  பட்டுள்ளது . அரசன்  உள்ளத்தே  யிரக்கமும் , புறத்தே  வன்கண்மையுமுடையனாய்த்  தன்  குடிகளைப்  பொறுத்தல்  வேண்டு மென்றது காண்க . குணத்தாலும்  குலத்தாலும்  பொருளாலும்  வேறுபடுவார்க்கு  வேறுவேறு  தண்டங்கள்  அக்காலத்து  விதிக்கப்பட்டன வென்றறிகின்றோம் . உயிர்களைக்  கொலை  செய்தலாகாதென்று  வேதங்கள்  வற்புறுத்திக் கூறுகின்றன  வென்னும்  , 93 வது  சுலோகத்தில்  உயிர்க்கொலை  என்பதற்கு  மக்கட்கொலை என்றாதல், வேள்வி யொழிந்த  பிறவிடத்துக்  கொலையென்றாதல்  பொருள்  கொள்ளவண்டும் . வேதங்கள்  என்பதற்கு  உயர்ந்த  நூல்களென்ற  பொருளே  கொள்ளற்பாலது .  

          இரண்டாம்  பிரகரணத்துள் , கருவூலம்  அமைக்கின்ற  முறையும், கருவூலப்  பொருளைப்  பயன்படுத்து  முறையும் , சற்பாத்திரமாவார்  இன்னாரென்பதும் , அசற்பாத்திரமாவார்  இன்னாரென்பதும் , பொருளைச்  சேர்க்குமுறை  பற்றி  அரசர்  தலையாயார்  இடையாயார்  கடையாயார்  எனப்படுவரென்பதும் , தானியங்களைத்  தொகுத்து  வைக்குமுறையும்  முதற்கட்  கூறப்பட்டன . பின்னர்  நவமணிகளின்  இலக்கணம்  கூறுமிடத்து  ஆசிரியர்  வயிரமே  எல்லாவற்றிற்கும்  சிறந்ததென்றார் . முத்துக்கள்  தோன்றுமிடமும்  அவற்றைச்  சோதிக்கு  முறையும்  இதனுள்  இனிது  கூறியுள்ளார் . இரத்தினங்களுக்குரிய  நிறுத்தலளவைகளும்  விரித்தோதப்பட்டன . பின் , பொன்  முதலிய  உலோகங்களைச்  சோதித்து  அவற்றிற்கு  விலை  ஏற்படுத்து  முறையும்  இப்பிரகரணத்துள்  கூறப்பட்டுள்ளது .

               மூன்றாம்  பிரகரணத்துள்  பிரமனால்  தொழில்  பற்றிச்  சாதிகள்  வகுக்கப்பட்டன வென்பதும் , இழிதொழில்  காரணமாகச்  சாதிக்குப்  பங்கமேற்படுமென்பதும் , நான்கு  வருணத்தாற்க்குரிய  தொழில்கள்  இன்னவென்பதும் விளக்கிய  பின்னர் , வேதமுதலிய  முப்பத்திரண்டு  வித்தைகளினியல்பும் , தொழிற்றிறனமைந்த  அறுபத்துநான்கு  கலைகளினியல்பும்  இப்பிரகரணத்துள்  கூறப்பட்டுள்ளன . வித்தையென்பது  ஆங்கிலத்தில்  ( Science ) சயின்ஸ்  என்னும்  சொற்பொருளை  ஒருவாறு  விளக்குவதாகவும் , கலை  என்பது ( Art )  ஆர்ட்  என்னும்  சொல்லின்  பொருளை  விளக்குவதாகவும்  தோன்றுகின்றது . வித்தையென்பது அறிவுநூலாகவும் , கலையென்பது  செயற்கை  நூலாகவும் கொள்வது  இழுக்காகாது . இங்கு  கூறப்பட்ட  கலைகள்  பிழைப்பின்  பொருட்டுச்  செய்யப்படும்  பலவகைத்  தொழில்களைக்  குறிப்பனவேயன்றி  அனற்கட்டு  புனற்கட்டு  முதலியனவாகக்  கூறப்படும்  அதிசயக்  கலைகளல்லவா  மென்றுணர்க.

                இனி , நான்காம்  அத்தியாயம்   நான்காம்  பிரகரணத்துள்  நால்வகை  ஆச்சிரமங்கட்குரிய  விதிகள்  சுருக்கமாகக்  கூறப்பட்டுள்ளன . மகளிர் , சூத்திர ரென்பாரது  கடமை  விதந்தோதப்பட்டன .  யவன   ரென்பார்  நால்வகை  வருணத்தாரின்  வேறாய்ந்  தமக்கென  வேறு  மத நூல்களும்   நீதி நூல்களுமுடைய ரென்பது  குறிக்கப்பட்டது . இவர்கள்  வடதிசை  மேற்றிசைகளில்  இருப்பதாகத்  தெரிந்தமையின்  இந்திய நாட்டுக்கப்பாலுள்ள  பாரசீகர்,  கிரேக்கர் , துலுக்கர்  முதலியோரை  யவனரென்ற  சொல்  சுட்டிய தென்றுணர்க.  “சிறப்புப்  பிறப்பாலன்று;  குணத்தாலாம் “  என்றதற்கும்  இதனுள்  உதாரணங்கள்  கூறப்பட்டன . சிற்பி  முதலிய  தொழிலாளரைக்  காக்க வேண்டுமென்று , கூறியவிடத்துக்  கட்கடை  ஊருக்கு  வெளியே  இருக்க வேண்டுமென்றும் , எம்மனிதனும்  பகற்காலத்தில்  கட்குடித்தலாகதென்றும் விதிக்கப்பட்டது . பின்னர் , பொழில்களமைக்கு  முறை  கூறியாங்கே  திருக்கோயிலமைக்கு  முறையும் , சாத்துவிகம் , இராசதம் , தாமதம்  எனப்படும்  தெய்வத்  திருவுருவங்களமைக்கு  முறையும், அவற்றினளவும்  விதந்தோதப்  பட்டன . தெய்வங்களுக்கு  ஊர்திகளியற்று  முறையும்  சுருக்கமாக  கூறப்பட்டது . ஆகமத்திற்  கூறியபடி  அமைக்கப்பெற்ற  திருவுருவங்க ளெல்லாம்  அழகுடையனவேயாம் . அங்ஙனம்  அமைக்கப்படாதன வெல்லாம்  அழகில்லாதனவாகுமென்றமையால்  இப்பகுதி  ஆகமத்தைப்  பெரிதும்  தழுவி  நிற்கின்றது .  

              இனி , ஐந்தாம்  பிரகரணத்துள்  வழக்காராயு முறையும் , நியாயமன்றமைக்கு  முறையும் , நியாய  மன்றத்தினங்களும் , வழக்குத்  தீர்த்தற்குரிய  விவாதங்களும்  , நீதிமன்றத்திற்கு  அழைக்கப்படத்தக்கவரும்   தகாதவரும் , பிணைவாங்கு  முறையும் ,  முறையீடு  எதிர்வாத  மென்பவற்றினிலக்கணமும் , ஆட்சி  ஆவணம்  சாட்சி  என்னும்  சாதனங்களினியல்பும் , வழக்குத்  தீர்ப்பு  முறைகளும், உலோகங்களை  வஞ்சிப்போர்க்கிடுந்  தண்ட  முறைகளும் , பிறவும்  ஓதப்பட்டமையால்  அக்காலத்துச்  சட்ட  ஆராய்ச்சிக்கு  இப்பகுதி  பெரிதும்  பயன்படுவதாகும் .  

              ஆறாம்  பிரகரணத்துள்  “மணிநீரு  மண்ணு   மலயு  மணிநிழற், காடுமுடைய  தரண் .”  என்பதன்  விரிவுரை  காணப்படுகின்றது .

              ஏழாம்  பிரகரணத்துள்  படையியல்பு  கூறுமிடத்து  அதன்  பலவகைகளும்   இனிது  விளக்கப்பட்டன . தேர் , யானை , குதிரை  இவற்றிலக்கணங்களும் , குதிரைகளின்  நடை  வகைகளும் , குதிரை  எருது  ஒட்டக  முதலியவற்றின்  ஆயுள் வரையறையும்  யானை  முதலியவற்றை  அடக்கிக்  காக்கும் முறையும் , போர்க்குரிய  ஆயுதங்களும் , ஆயுதங்களுட்  சிறப்பாகப்  பீரங்கி போன்ற  நெருப்புப் பொறிகளும்  விவரமாக   விளக்கப்பட்டுள்ளன . அம்பு  முதலியவற்றாற்  செய்யப்படும்  போர்  தெய்விகமென்றும் , துப்பாக்கி  முதலிய  பொறிகளாற்  செய்யப்படும் போர்  ஆசுரமென்றும் , வாள்  முதலிய  கைப்படைகளாலும்  யாக்கை  யுறுப்புக்களாலும்  செய்யப்படும்  போர்  மானவமென்றுங்  கூறியது  காண்க . இதனால்  தற்காலத்தில்  ஐரோப்பியர்  செய்யும்  போர்  ஆசுரமாதல்  தெளிக . போர்  புரியச்  செல்லும்  அரசன்  வினைவலியும்  தன்  வலியும்  மாற்றான்வலியும்  துணை வலியும்  ஆய்ந்து  செல்லல்  வேண்டுமென்று  கூறியது  மிகவும்  பாராட்டத்தக்கது . ஏழாம்  பிரகரணத்தோடு  நான்காம் அத்தியாயம்  முடிவு  பெறுகிறது .

       இனி , ஐந்தாம்  அத்தியாயத்துள்  அரசர்  வெற்றியின்  பொருட்டுக்  கைக்கொள்ள  வேண்டும் பல  உபாயங்களும்  தெளிவாக ஓதப்பெற்றன .  

        இந் நீதி  நூன்  மொழிபெயர்ப்பு  பொதுக்கொள்கைகளை  மாத்திரங்கூறும்  திருவள்ளுவர்  முதலிய  பெரு  நூலாராய்ச்சிக்குப்  பெரிதும்  துணைபுரிவதைத்  தமிழறிஞர்  நன் குணர்ந்து, இதனைப் போற்றுதல் வேண்டும் . இந்நூன்  மூலம்  எத்துணை  நயமுடைத்தோ  அத்துணை நயமுடைத்து  இம்மொழிபெயர்ப்புமெனக்  கொள்க. உரைநடையில்  மொழிபெயர்ப்பு  வடிவிலுள்ள  நூல்களனைத்திற்கும்  இதுவே  தலைமணி  நூலாக  விளங்குகின்றது . ஆசிரியர்  சிவஞான  சுவாமிகளது  மொழிபெயர்ப்பு  நூல்கள்  தமிழிலே  ஏற்பட்ட  காலத்திற்குப்பின்  இச்  “சுக்கிரநீதி”  மொழிபெயர்ப்பே  மிகவும்  போற்றத்தக்கதாக  அமைந்துள்ளது . இதற்குக்  காரணம்  இதன்  ஆசிரியராகிய  பண்டிதமணி  மு . கதிரேசச்  செட்டியாரவர்களது  இணையற்ற  தென்மொழி  வடமொழித்  தேர்ச்சியேயாம் . இக்காலத்தில்  இவரைப் போல இரு மொழியிலும்  நுண்மாணுழைபுல முள்ள  கலைஞரைக்  காண்டல்  அரிது .  தமிழில்  இன்னும்  மொழிபெயர்ப்பு  இயற்றக்  கருதுபவர்கள்  இவ்வாசிரியரையே  தங்கட்குத்  தக்கதோர்  வழிகாட்டியாகக்  கருதற்பாலர் . சுக்கிரநீதியை  மொழிபெயர்த்ததைப் போலவே  வடமொழியிலுள்ள  வேதம்  உபநிடதம்   ஆகமம்  முதலிய  அரிய  நூல்களைத்  தமிழிலே  யாத்தற் பொருட்டு   இந்  நல்லாசிரியர்க்குத்  தக்க  ஊக்கமும்  உதவியு  மளித்தல்  தமது  தாய்மொழிக்கட்  பற்றுடையராய்  அதனை  வளர்க்கும்  உண்மை  நோக்கமுடைய  பெருஞ்  செல்வவான்கட்கும்   பிற  அறிஞர்க்கும்  ஒரு  தலையாய  கடமையாகும் .  தமிழறிந்தார்  யாவரும்  இப் புத்தகத்தை  வாங்கிக் கற்பார்களாயின்   இவ்வாசிரியரது  சிறந்த  அறிவாற்றலின்  பயனைத்  துய்த்தின்புறுவது  திண்ணம் . தமிழுலகத்திற்கு  இத்தகைய  பெருநன்மையினை  மேன்மேலும்  புரிந்து கொண்டிருக்கும்  பொருட்டு  எல்லாம்  வல்ல  இறைவன்  இவ்வாசிரியர்க்குக்  குன்றாத  ஊக்கமும்  திண்ணிய  நல்லுடலும்  நீண்ட  ஆயிளும்  தக்க  துணை வலியும்  நிலைபெற்ற  பெருஞ்  செல்வமும்  செவ்விதின்  அருளும்  வன்ணம்  திருவருளை  வேண்டுகின்றேன் .

         *********************************

உள்ளுறை   விளக்கம்

முதல்  அத்தியாயம்

  1. நீதிநூன்  மாட்சி     
  2. அரசர்க்கு  நீதி  நூலறிவா னுண்டாம்  பயன்
  3. அரசன்  காலத்துக்குக்  காரணம்
  4. அறத்தின்  மாட்சி
  5. அரசர்  சாத்துவிக  முதலிய  குணங்களான் மூவகைப்படுவர்
  6. கன்மமே  எல்லாவற்றிற்குங்  காரணம்
  7. அரசியற்குரிய  ஏழு  அங்கங்கள்
  8. அரசன்  கடவுட்  கூறுடையனாதல்
  9. குடிகளை  யின்புறுத்தும் அரசனுக்குரிய  எழுவகைக்  குணங்கள் 
  10. பொறியடக்கத்தின்  இன்றியமையாமை
  11. சூது  முதலிய  விதனங்கள்
  12. அரசனுடைய  எண்வகைத்  தொழில்கள்
  13. அரசனுடைய  குணங்குற்றங்கள்
  14. அறிவுநூல்  முதலியவற்றின்  இலக்கணங்கள்
  15. நல்லார்  இணக்கம்
  16. இன்சொற் கூறல்
  17. அரசர்களைப் பற்றிய  வகைகள் 
  18. நிலத்தின்  அளவு  வகைகள்
  19. இராசதானி  யமைத்தல்
  20. தனித்தனி  இல்லம்  அமைத்தல்
  21. அரண் அமைத்தல்
  22. இராசவீதி  யமைத்தல்
  23. வழிச்செல்வோர்  தங்குதற்குரிய  அறச்சாலை   யமைத்தல்
  24. அரசன்  முகூர்த்தந்தோறுஞ்  செய்யவேண்டிய  அவசிய  நித்திய  கன்மங்கள்
  25. யாமங்காப்போர்  செய்யவேண்டுவன
  26. குடிகளுக்கு  அரசன்  இடுங்  கட்டளைகள்
  27. அரசன்  செய்யவேண்டியவை
  28. நஞ்சு  முதலியவை  கலந்த  உணவைச்  சோதித்தல்
  29. வேட்டை  விளையாடல்  முதலியன
  30. ஒற்றாடல்
  31. அரசர்  குலத்தில்  அரசிற்குரியவனைத்  துணிதல்
  32. சுற்றத்தார்  முதலியோர்பால்  அரசன்  இடுங் காரியங்கள் 
  33. அரசவை  அமைப்பு
  34. அரசுரிமை  அடையாளங்களைக்  காத்தல்
  35. யாண்டுதோறும்  நாட்டைச்  சுற்றிப்பார்த்தல்

இரண்டாம்  அத்தியாயம்          

       1 அரசனுக்கு  நற்றுணையானாம்  சிறப்பு

        2 அரசனுக்குத்  தீந்துணையானாங்  கேடு

        3 இளவரசுக்குரியார்

        4 ஒழுக்கக்கேடுடைய  புதல்வர்  முதலியோரை  நடத்துமுறை

        5 இளவரசர்  கடமை

        6 அமைச்சர்  முதலியோரை  ஆராய்ந்தமைத்தல்

        7 புரோகிதன் முதலியோரின்  சிறப்பு முறை

        8 புரோகிதன் முதலியோர்களின் இலக்கணங்களும்              காரியங்களும்

        9 மற்றை  அதிகாரிகளின்  இலக்கணங்களும்  காரியங்களும்

       10 யானைப்பாகன் முதலியோரின்  இலக்கணங்களும்  காரியங்களும் 

        11 படைத்தலைவர்  முதலியோ ரிலக்கணம்    

         12 கருவூலத்  தலைவன்  முதலியோ ரிலக்கணம்

         13 அரசன்  திருமுன்  அரசியல்  வினைசெய்வார்  ஒழுகுமுறை

         14 எழுதப்படும்  பத்திரங்களின்  வகைகள்

         15 அரசனுக்குரிய  வரவு  செலவு  முதலியன

         16 அரசன் முதலியோர்  கையெழுத்திடுமுறையும் , கணித பத்திரம்  எழுது முறையும்

         17 அளவைகள்

         18 கால  அளவை

         19 வேதன  விளக்கம்

         20 அரசன்   வினைசெய்வாரை  இன்புறுத்துமுறை

மூன்றாம்  அத்தியாயம்    

1 எல்லோர்க்கும்  உரிய  நல்லொழுக்கங்கள்

2 பிறநாட்டுச்  செலவு , அரசவை  புகுதல் , நூலாராய்ச்சி  முதலியன

3 உலகத்தைத்  தன்வயப்படுத்தும்  வழி

4 மகளிர்பால்  இயற்கையாக  நிகழும்  பிழைகள் 

5 மகட்கொடை  முறை

6 கல்வி செல்வங்களை யடையும்  வழி

7 தந்தை வழிப் பொருளைக் கூறுசெய்யு முறை

8 கொடை மாட்சி

9 குணஞ்  செயல்களின்  நன்மை  தீமைகள்

10 நல்லொழுக்க  மிக்க  அந்தணர்  பெருமை

11 தொழில்களின்  தலைமை  முதலியவைகள்

12 அறிவின்  மாட்சி

நான்காம்  அத்தியாயம்          

முதற் பிரகரணம் (பகுதி)   

1 நட்டார் பகைவர் இலக்கணங்கள்

2 சாம  முதலிய  உபாயங்களை  மேற்கொள்ளுமுறை

3 தண்டத்தின்  வகையும்  பயனும்

4 குற்றங்களும்  அவற்றிற்குரிய  தண்டங்களும்

இரண்டாம்பிரகரணம்

1 கருவூலம் அமைக்கு முறை

2 தானியங்களைத்  தொகுத்து வைக்கு முறை

3 நவமணிகளின்  ஆராய்ச்சி

4 அரதனங்களின்  விலையளவு

5 பொன்  முதலிய  உலோகங்களின்  விலை

6 பசு  முதலியவற்றின்  விலையளவு

7 இறைப்பொருள்  கொள்ளுமுறை

மூன்றாம்  பிரகரணம்

1 சாதி  ஆராய்ச்சி

2 அந்தணர் முதலியோர்  தொழில்கள்

3 வேத  முதலியவற்றின் வகைகள்

4 முப்பத்திரண்டு  வித்தைகளின்  இலக்கணங்கள்

5 அறுபத்து நான்கு கலைகள்

நான்காம்  பிரகரணம்

1 நால்வகை  ஆச்சிரமங்கள் 

2 மகளிர்   ஒழுக்கமுறை

3 சூத்திரர்களின்  ஒழுக்கவகைகள்

4 யவனர்களின் ஒழுக்கவகைகள்

5 சிறப்புப்  பிறப்பாலன்று ;  குணத்தாலாம்

6 சிற்பி  முதலிய  தொழிலாளரைக்  காத்தல்

7 மரங்களை  யுண்டாக்கி  வளர்க்கும்  முறை

8 மரங்களைப்  பயன் விளைக்கச்  செய்யுமுறை

9 காட்டு  மரங்களை   யுண்டாக்கு  முறை

10 கிணறு  வெட்டல்  அணை கட்டல்  முதலியன

11 திருக்கோயில்  முதலியன  அமைத்தல்

12 தெய்வத்  திருவுருவங்கள் இயற்று முறை

13 தெய்வ  ஊர்திகள்  இயற்று முறை

14 கணபதியின் திருவுரு  வமைக்கு  முறை

15 சத்தியுருவம்  பாலதெய்வப்  படிவங்கள்  அமைக்கு  முறை

16 ஏழு தாலமுதலிய  அளவில்  தெய்வப்படிவங்கள்  அமைக்கு முறை

ஐந்தாம்  பிரகரணம்

1 அரசன்  நீதியியல்பு  அறிதல்

2 நியாயமன்றம் அமைக்கு  முறை

3 நியாயமன்றத்தின்  பத்து  அங்கங்கள்

4 வழக்காராயு  முறைகள்

5 சலங்கள்

6 விவாதத்  தானங்கள்

7 அரசனது  ஆணைமேற்கொண்டு  தடுத்தல்

8 நீதிமன்றத்திற்கு  அழைக்கப்படுபவரும்  அழைக்கப்படாதவரும்

9 பிணை  வாங்குமுறை

10 பக்க  நிரூபண முதலியன

11 எதிர்மொழியின்  ( உத்திரத்தின் )  வகைகள்

12 சாதனங்களின்  இயல்பு

13 இலிகித  வகைகள்

14 சான்று  கூறுவோர் இயல்பு

15 சான்று  கொள்ளுமுறை

16 நெடுங்கால  அநுபவப்  பொருள்களின்  நிலைமை

17 தெய்விக  சாதன  வகைகள்

18 வழக்குகளின்  தீர்ப்பு  வகைகள்

19 அதிகார  உரிமை  ஆராய்ச்சி

20 கூடிவினை  செய்தல்

21 உலோகங்களை வஞ்சிப்போர்க்கு  இடும்  தண்ட  முறை

ஆறாம்  பிரகரணம்

1 அரணியல்

ஏழாம்  பிரகரணம்

1 படையியல்

2 நால்வகைப்  படைகளின் அளவு வகைகள்

3 அரசர்க்குரிய செலவு  வகைகள்

4 தேர் யானைகளின் வகைகள்

5 யானைகளின் அளவு வகைகள்

6 குதிரைகளின் அளவு இலக்கண முதலியன

7 குதிரைக்கு வேண்டுவன செய்து நடத்து முறை

8 குதிரைகளின் அறுவகை நடைகள்

9 எருது ஒட்டகங்களின் இலக்கணம்

10 மனிதர்க்கும் யானைகளுக்கும் உரிய வாணாள் வரையறை

11 குதிரை , எருது , ஒட்டகங்களின் ஆயுள் வரையறை

12 யானை முதலியவற்றை  யடக்கிக் காக்கு முறை

13 போர் வென்றிகொள்ளு முறை

14 போர்க்குரிய நாளிகக் கருவிகள்

15 நெருப்புப்பொடி யுண்டாக்கு  முறை

16 மற்றை விடுபடை  விடாப்படைகளின்  வகைகள்

17 போரில் விருப்பமுள்ள அரசர்க்குக் காலம் இடமுதலியன அறியும்வகை

18 சந்தி விக்கிரக முதலிய அறுவகைக் குணங்கள்

19 போர் குறித்துச் செல்லுதலின் வகைகள்

20 படை வகுப்புக்களும் அவற்றின் செயல்களும்

21 பகைவரை முற்றுகையிட்டுத்  தடைசெய்தல்

22 போரிற்  சாம முதலிய உபாயங்களை மேற்கோடல்

23 போரிற்  புறங்கொடாமை

24 அம்பு வாள் முதலியவற்றாற் செய்யப்படும் போர்ச் செயலின் வகைகள்

25 மற்போரும் அதன் வகைகளும்

26 போர்ச் செயற்குரிய நியமங்கள்

27 போர்க் களத்திற் கொல்லத்தகாதவர்

28 பகைவரை வென்றிகொள்ளு முறை

29 அமைச்சர் கழக முறை

30 படைவீரர்க்குப் பண்ட முதலியன வமைக்குமுறை

31 படைவீரர்க்குக் கட்டளையிடு முறை

32 படைவீரரின் வேதன முறை

33 நாடிழந்த பகைவர்க்கு வாழ்க்கை நிமித்தம் உதவும் பொருள் வகைகள்

34  யாமிகர்களை அமைக்கு முறை

35  அரசன் அறத்தின் வழுவாது நின்று குடிகளை இன்புறுத்தல்

36  இந் நீதிநூன் மாட்சி

ஐந்தாம்  அத்தியாயம்

1 கிலநீதி

கணபதி துணை

சுக்கிர  நீதி

முதல் அத்தியாயம்

( அரசியற்  காரிய  நிரூபணம்)

1. நீதிநூன்  மாட்சி

     சுக்கிராசாரியார்  எல்லாவுலகங்களுக்கும் தலைவரும் , படைத்தல், காத்தல்  அழித்தலைச்  செய்பவரும் ஆகிய  கடவுளை வணங்கி வழிபட்டு , தம்மையடைந்து முறைப்படி வணங்கி வாழ்த்தி வழிபட்டுக் கேட்ட அசுரர்களுக்கு  நீதிகளின்  சாரத்தைக்  கூறுகின்றார் .

     பகவானாகிய  பிரமதேவர் நூறு இலக்கம் சுலோக அளவுள்ள நீதி நூலை உலகம் நலமடைதற் பொருட்டுக் கூறினார்.

     பின்னர் , வசிட்டர் முதலிய எம்மனோரால் , சில்  வாழ் நாளையுடைய அரசர் முதலியோர்  பொருட்டு , நலம் பெருக அந்நீதி நூலின் சாரம் சுருக்கிப் பொருந்துமாற்றா னமைத்துத் தொகுக்கப்பட்டது .                                                                                       1 -3

   ஒரு சில பொருள்களைத் தனித்தனியெடுத்துச் சிறப்பித்துக் கூறும் பிற நூல்கள் பலவுள . இந் நீதி நூல் மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததும் , உலக  நிலையை வரம்புட்படுத்துவதும் , அறம் பொருள் இன்பங்களை யுணர்த்துவதும் , வீட்டின்பத்தை யருளுமென்று கருதப்படுவதுமாக இருத்தலின் , இதனை அரசர்கள் எப்பொழுதும் முயற்சி மேற்கொண்டு  பயிலல் வேண்டும் .                                      4—5

அரசர் முதலியோர் , நீதிநூலறிவாற் பகைவரை வெல்பவராவர் ; மக்களுக்கு இன்பம் விளைவிப்பவராவர் ; நல்ல நீதி நுட்பங்களை   எப்பொழுதும் நுனித்துணர்பவராவர் .                                                    6

   இலக்கண நூலுணர்ச்சியின்றியுஞ் சொற்பொருள்களினறிவும் , தருக்க நூலுணர்ச்சியின்றியும் மாயாகாரியப் பொருள்களினறிவும் , மீமாஞ்சை நூலுணர்ச்சியின்றியும்  நித்தியகன்மங்களின் நியம உணர்வும் , வேதாந்த உணர்ச்சியின்றியும் யாக்கை நிலையாமை யுணர்வும் உண்டாதல்  கூடும் .                                                                                        7—8

( மாயாகாரியப்  பொருள்கள்  —  நிலம் நீர்  முதலியன )

   அந் நூல்கள் , தத்தங் கொள்கைகளை நன்கு அறிவிப்பனவாக வுள்ளன . அவ்வக்கொள்கைகளின் ஒழுகு மக்கள் , அவ்வந் நூல்களை  எப்பொழுதும்  மேற்கொள்வர் .  உலகியலுணர்ந்து  ஒழுகுவோர்க்கு, இந்நீதிநூலா னுண்டாம்  நுண்ணுனர்வு , அந்நூல்களான் எங்ஙன முண்டாகும் ?                                                                                                  9—10

(அந்நூல்கள் — இலக்கணம்  தருக்க  முதலியவை )

மக்களுக்கு உணவின்றி உடல் நிலையாவாறு போல , நீதிநூலானன்றி எல்லாவுலகங்களின் ஒழுக்கங்களும் நிலைபெறா .                                 11

2 . அரசர்க்கு  நீதிநூலறிவா னுண்டாம்  பயன்

   நீதிநூல்  எல்லோர்க்கும் விரும்பியதை நிறைவேற்றுவதாகும் ; யாவரானும் ஏற்றுக்கொள்ளற் பாலதாகும் ; அரசன்  யாவர்க்கும்  இறைவனாதலின் , அவனுக்கு  இன்றியமையாது பயன்படுவதாகும் . 12

   மாறுபட்ட வுண்டியை உண்பார்க்கு  நோயுண்டாதல் போல நீதியில்லாத அரசனுக்கு  அப்பொழுது சில பகைவரும் , நாளடைவிற்  சில பகைவரும்  தோன்றுவர் . மாறுபாடில்லா வுணவை யுண்பாரிடத்து நோயின்றாதல் போல , நீதியுடையார்க்கு  அப்பொழுதும் நாளடைவிலும்  பகைவ ரிலராவர் .                                                                 13

   அரசனுக்கு  எப்பொழுதும்  நன்மக்களைக்  காத்தலும் , கொடியவர்களை  யொறுத்தலும்  சிறந்த  அறங்களாகும். இவ்விரண்டும்  நீதியுணர்வின்றி  உண்டாகா .                                            14

   அரசனுக்கு  நீதியின்மையே  பிறர்  புகுதற்கு  வழியாகும் ; எப்பொழுதும்  அச்சந்தருவதாகும் ; பகைவர்க்கு  ஆக்கந்தருவதாகும்  ; தன்  ஆற்றற்குப்  பெரிதும்  அழிவு செய்வதாகும் .                                      15

(பிறர்புகுதல்  —  பகைவர்  எளிதிற் புகுந்து கேடு  செய்தல் )

   நீதியை  யிகந்து  தன்  விருப்பின்படி  செல்கின்ற  அரசன்  துன்புறுவான் . நீதியில்லாத  அவ்வரசன்மாட்டு அணுகி  வினை  செய்வோன் , வாட்படையின்  கூரிய  நுனியை நாவால்  நக்குபவனாவான் .                                                                                               16  

   நீதியுடைய  அரசனை யாவரும்  போற்றுவர் ; அல்லாதவனை  யாரும்  போற்றார் . எவன்மாட்டு  நீதியும் பலமும்  உள்ளனவோ , அவன்பால்  திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள் .                                                  17

( திருமகள் பல்லாற்றானும்  வந்தெய்தல் —  பகைவர் தருந்திறை , அரசிறை , சுங்க முதலியவற்றாற்  பொருள்வரல் )

   அரசன்  தன்  நாட்டிலுள்ளாரனைவரும் , ஏவப்படாமலே  நல்லன  புரியும்படி  நீதியைத்  தன்  நலங்குறித்து  மேற்கொள்ளற் பாலன் .      18

   அரசனுக்கு நீதி  தவறுதலான்  எப்பொழுதும்  தன்  நாடு  வேறுபடும் ;  பலம் வேறுபடும் ; அமைச்சர்  முதலியோரும்  வேறுபடுவர் .  இங்ஙனமாதல்  அவன்  ஆளுந்திற னிலனாதலை வெளிப்படுத்துவதாகும் .                                     19

   அரசன்  தவவன்மையால்  ஒளியை யடைகின்றான் . மக்களை  நன்னெறிப்படுத்துபவனும் , காப்பவனும் , இன்பம் பயப்பவனும் ஆகிய அவ்வரசன், தன் முன்னைத் தவவலியானும் ,  நீதி  யாராய்ச்சியானும் , இவ்வுலகத்தைத்  தாங்குகின்றான் .                         20

3 . அரசன் காலத்துக்குக்  காரணம்

     மழை, குளிர், வெயில், நாள், கோள்  முதலியவற்றின்  நியமங்களாலும் , அவற்றின் இயற்கைகளாலும்  உலகத்திற்கு ஒத்தனவும்  ஒவ்வாதனவும் , மிக்கனவும் , குறைந்தனவுமாகிய  அரசனுடைய  ஆசாரங்களாலும் , காலமானது  வேறுபடுகின்றது . 21

(மழை , குளிர் , வெயில், இம் மூன்றுட்  பெரும்பொழுது ஆறும்  அடங்குவனவாம் .

இவற்றால்  வேறுபடுதல் – ஆண்டு , அயனம் , இருது , மாதம் , பக்கம் , நாள் , இரவு , பகல்  முதலியவாதல் , அரசனுடைய ஆசாரங்களுள்  உலகிற்கு  ஒத்தன – குடிகளின் விருப்பத்திற்கியைந்தன ;  ஒவ்வாதன – விருப்பத்திற்கியை யாதன  . மிக்கன  — வேண்டும் அளவின் மிக்கன . குறைந்தன – வேண்டுமளவிற்  குறைந்தன . இவற்றாற் காலம் வேறுபடுதல் – இவ் வாசாரங்களாலுண்டாம்  நன்மை  தீமைகளைக்  காலத்தின் மேல்  ஏறிட்டு இன்புறுதலும்  பற்றியாம் . அரசனுடைய  ஒழுக்கங்களுங்  காலவேற்றுமைக்குக்  காரணமாகு மென்பது கருத்து )

     அரசன் , ஆசாரங்களை  நடத்துபவனாவான் . அரசனொழுக்கமே  காலத்துக்குக்  காரணமாகும் . காலமே ஒழுக்கங்களை வரையறுப்ப தாயின் , காரியத்தைச் செய்பவர்பால் எங்ஙனம் வினைப்பயன்  நிலைபெறும் ?                                                                                                  22

(காலமே எல்லாவற்றையும் நடத்துவதாயின் கருத்தாவுக்குச்  சுதந்திரம்  இன்றாம் ; இன்றாகவே அவனுக்கு  வினைப்பயனுகர்தல் கூடாததாக  முடியுமாதலின் , அரசனே ஒழுக்கங்களை  நடத்துபவனாவானென்பது பொருந்தும் .)

4 . அறத்தின்  மாட்சி

      மக்கள், அரசன் ஒறுத்தற்கஞ்சித்  தங்  கடமைகளிற்  பற்றுடையவர் களாகின்றார்கள் . இவ்வுலகத்தில் தன் கடமையிற்  பற்றுடையவனே ஒளியுடையவனாகின்றான் .                                                                             23

       ஒருவனுக்குத்  தன்  கடமையே  பெருந்தவமாகும் . ஆதலின் , தன்  கடமையைச்  செய்தலினன்றி  நலம்  உண்டாகாது . இடைவிடாது தம் கடமையாகிய  தவத்தைச் செழிக்கச் செய்கின்றவர்க்குத்  தேவர்கள்  ஏவலாளராவரெனின்  , இந்நிலத்து மக்கள் எங்ஙனமாவர் ?                    24

         அரசன்  குலவழியாக  முடிசூட்டப்பட்டு  வந்தவனாயினும் , அஃதின்றி  வந்தவனாயினும்  , அறிவினாலும் , பலத்தினாலும் , வீரத்தாலும்  அரசியலை  யடைந்துளானாயின் ,  அவன்  தன்    கடமையிற் பற்றுடையவனாய்க்  குற்றமிலானாய்ச் செங்கோலனாய்  எல்லோரையும் நீதிமுறையாற்  காத்து , மிகவும் அஞ்சத்தக்க  செவ்விய  தண்டங்களான் மக்களை எப்பொழுதுந்  தத்தங்  கடமைகளிற் பற்றுடையவர்களாக  இருக்கும்படி செய்தல் வேண்டும் . இன்றேல் , அவன்  ஒளி குன்றும் .                                                                                           27

( குலவழியாக  முடி சூட்டப்பட்டுவருதல்  —  முன்னை  அரசனால்  அபிடேகஞ்  செய்யப்பட்டு வருதல் )

     எப்பொழுதும் நுண்ணறிவாற்  காரியம்  புரியும்  அரசனுக்குச் சுருங்கிய செல்வமும்  பெரும்  செல்வமாக  வளரும் . வீரம் , நீதி , பலம் , பொருள்  என்னும்  இவற்றால்  விலங்கினங்களும்  தன் வயத்தனவாகும் .            28

5 . அரசர் சாத்துவிக  முதலிய  குணங்களான் மூவகைப்படுவர்

தவம் , சாத்விகம் , இராசதம் ,  தாமதம்  என்று  மூவகைப்படும் . இவற்றுள் ஒன்றனை மிகுதியாகச்  செய்தவன்  அத்  தவப்பயனை யுடைய  அரசனாகின்றான் .                                                                               29

தன்  கடமையிற்  பற்றும்  , குடிகளைக் காத்தலும்  , எல்லா  வேள்விகளையும்  வேட்டலும்  , பகைவர்களையும்  நன்நெறிப் படுத்தலும் , கொடைக்குணமும்  , பொறுமையும் , ஆண்மையும், புலன்களிற்   பற்றின்மையும் , காம  முதலியன  வின்மையும்  எவன்பாலுள்ளனவோ  அவன் சாத்துவிக அரசனாவான் ; இறுதியில் வீட்டின்பம் எய்துவான்.                                                                                       31

(முதலியன வென்பதால்  காமமொழிந்த ஏனைவிதனங்களையுங் கொள்க )

     முற்கூறிய  அறங்களின்  எதிர்மறைக்குணஞ் செயல்களையுடை யவனும் , அருளற்றவனும் , களித்து  மயங்குபவனும்  பிறரைத்  துன்புறுத்துபவனும் , பொய்யனுமாகிய  அரசன்  தாமத  அரசனாவான். அவன் இறுதியில்  நகரத்துக்காளாவான் ,                        32

     இடம்பனும்  , உலோபியும்  புலனுகர்ச்சியிற்  பற்றுடையவனும் , வஞ்சகனும் , தூர்த்தனும் , மனம் வாக்குக் காயங்களால் வேறுபட்டவனும் , கலகப்பிரியனும் , இழிந்தோர்க்கு அன்பனும் ,தன்  மனம்  சென்றவழி  நடக்கின்றவனும் , நீதியில்லாதவனும் , தீவினையாளனுமாகிய  தாழ்ந்த  அரசன்   இராசத அரசனாவான் . அவன்  இறுதியில்  விலங்கின்  கதியையும் , நிலையியற்  பொருட்டன்மையையும்  எய்துவான் .                                                           33

      சாத்துவிக  குணமும்  தாமதகுணமுந்  தம்முளொத்துநிற்பின்  மக்கட்பிறப்புண்டாகும் , மனிதன்  எதனைப் பற்றி யொழுகுகின்றானோ  ஊழ்வலியால்  அதற்குத்  தக  ஆகின்றான் .   34                                             

( 36 . மனிதப்பிறப்பு சத்துவ  தமோ  குணங்களின் கலப்பாலுண்டா வதாகும் . இப்பிறப்புடைய  ஒருவன் , முக்குணங்களுள்  எதனை எதனை  மிகுதியாக  அடைகின்றானோ , அவ்வக்குணத்திற்குரிய  தன்மையை எய்துவானாதலின் , 35 – ஆம்  சுலோகத்திற் கூறப்பட்டபடி  மனிதப்பிறப்புடைய  அரசன் , தேவ இராக்கத  மனிதத்  தன்மைகளைக்  குணவயத்தாலெய்துவானென்றது இதனோடு முரணாமையுணர்க .)

6  . கன்மமே  எல்லாவற்றிற்குங்  காரணம்

     இவ் வுலகவாழ்க்கையில்   நற்பிறப்புக்குந்  தீயபிறப்பிற்குங்  கன்மமே  காரணமாகும் . முற்பிறப்பிற்  செய்யப்பட்டதுங்  கன்மமே  . ஒரு  கணமேனுஞ்  செயலின்றி யிருப்பவன்  யாவன்?                         37

     இவ்வுலகத்தில் அந்தணராதலும் , அரசராதலும்  , வணிகராதலும்   சூத்திரராதலும் , மிலேச்சராதலும்  பிறப்பினாலில்லை ; குணஞ்  செயல்களாலேயே  வேறுபடுக்கப்பட்டனர் .                                           38

( இக் கருத்தை “பிறப்பொக்கு மெல்லா  வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா , செய்தொழில் வேற்றுமையான் “  “பெருமைக்கு  மேனைச்  சிறுமைக்குந்  தத்தங்  கருமமே  கட்டளைக் கல் “   என்னுந்  திருக்குறள்களிலுங்  காண்க . )

     பிரமனிடத்துத்  தோன்றியது  பற்றி  எல்லோரும்  எங்ஙனம்  பிராமணராவர் ?  சாதியினாலும்  தாய்  தந்தையாராலும்  பிராமணத் தன்மை   எய்தற்பாலதன்று .                                                                             39

     ஞானம்  கன்மம்  தவம்  முதலிய  குணஞ்  செயல்கள் , கடவுள்  வழிபாட்டிற்  பற்று , பொறிகளை  வெல்லல் , அருள் , அடக்கம்  என்னுமிவைகளை  யுடையவனை  அந்தணனாகப்  பிரமன்  இயற்றினான் .                                                                                                         40

     உலகத்தைக்  காப்பதிற்றிறமையும் , வலிமையும் , இந்திரியங்களினடக்கமும் , வீரமும் , தீயவர்களை  யொறுக்குஞ் சீலமும்  உடையவனே  அரசனாவான் .                                                           41

     எப்பொழுதும் பொருள்களைக்  கொள்ளல்  விற்றல்  இவைகளிற்  றிறமையும்  பண்டமாற்று  முதலிய  வாணிகத்  தொழில் களால்  வாழ் தலும் , பசுவோம்பலும் , உழவு செய்தலுமுடையவர்கள்  இந்நிலத்தில்  வைசியர்களாகப்  புகழ்ந்துரைக்கப்படுவர் .                                               42

     இருபிறப்பாளர்களிடத்து வணக்கமும் , அவர்களுக்கு  ஏவற்றொழில்  செய்தலிற்  பற்றும் , வலிமையும் , நல்லொழுக்கமும் , இந்திரியங் களைத்  தம்  வயப்படுத்தலும் , கலப்பை  விறகு  புல்  என்னும்  இவற்றைச்  சுமத்தலாகிய  சிறு  தொழில்  புரிதலும்  உடையவர்கள்  சூத்திரர்  எனப்படுவர் .                                                                                        43

     தத்தங்  கடமையைச்  செய்யாதொழிதலும் , அருளின்மையும் , பிறர்க்குத்  துன்பஞ் செய்தலும் , வெகுளி மேற்கோடலும் , எப்பொழுதும்  தீய செயலே  இயற்கையாதலும் , பகுப்புணர்வின் மையும் ஆகிய  இவைகளையுடையார்  மிலேச்ச ரெனப்படுவார் . 44

     மக்களுக்கு முன்னைச்  செய்த   வினைப்பயனை  நுகர்தற்குத்  தக்கதாகவே  அறிவுண்டாகும் . இன்றேல் , நல்வினை  தீவினைகளின்   முற்படுதற்கு  ஆற்றலின்றாம் .                                                                   45

( முன்னை  வினை  நிகழ்ச்சியை  யொத்தே  ஒருவன்  அறிவு இம்மையில்  நல்வினை தீவினைகளிற் செல்லுமென்பது  கருத்து . “தவமுந் தவம்  உடையார்க்கு  ஆகும்  அவம்  அதனை அஃது இலார் மேற்கொள்வது “ என்னுந்  திருக்குறள் ஈண்டு  நினைக்கத்தக்கது . )

     வினைப்பயன்  விளைதல்  எங்ஙனமோ  அங்ஙனமே  ஒருவனுக்கு  அறிவுண்டாம் . ஊழ்வலி  எவ்வளவினுள்ளதோ   அவ்வளவாகவே  துணைக்கருவிகள் கிடைக்கும் .                                                                 46

     நன்று  தீதனைத்தும்  முன்னை  வினைப்படியே  உண்டாகுமென்று  துணியப்படுமாயின் , தக்கவின்ன   தகாதன வின்னவென்றுணர்த்தும்  முதுமொழிகள் பயனில்லனவாக ஒழியும் .                                             47

     யாவரானும்  போற்றப்படும்  ஒழுக்கமும்  அறிவும் உடைய  பெரியார் , முயற்சியை  ஊழினும்  பெரிதாகக்  கருதுவர் .. முயற்சியைச் செய்தற்கு ஆற்றலில்லாத  பேடியனையார், முன்னை  வினைப்பயனைக்  கூட்டுவிக்கும்  ஊழையே  கடைப்பிடிப்பர்.       48

     எல்லாம்  ஊழைப்பற்றியும்  முயற்சியைப்  பற்றியு முண்டாவனவாம் . தொடங்கப்படும்   வினைக்குப்  பயன்  விளைத்தற்குரிய  சாதனம்  முன்னைப்  பிறப்புகளிற்  செய்த வினைப்பயனாகிய  ஊழும் , இப்பொழுது மேற்கொண்ட  முயற்சி யுமென  இரு வகைப்படும் .                                                                           49

( இக்கருத்து  மிகப்  பாராட்டற்பாலது )                                                                          

     என்றும்  வலியவன், எளியவனுக்கு  ( அவன்  நட்டோனாயின்) நன்றும் , ( பகைவனாயின்)  தீதுஞ்  செய்பவனாவான் . அங்ஙனஞ்  செய்தற்குக்  காரணம் .  அவன் (தன்மாட்டும்  பிறனிடத்துமுள்ள) வலிமை  யெளிமைகளை  ஆராய்ந்தறியும் அறிவும் , அதனால்  விளையும் பயனுமுடையனாதல் . இன்றேல் , அங்ஙனம்  நன்று  தீது  செய்தற்குரியனாகான் .                                                                                   50

     பயன்  எய்துதற்குக்  காரணம்  காட்சியிற்  காணப்படுவதன்று முற்செய்வினையே காரணமாகும் .  இன்றேல்   பயன்  எய்துதல் இன்றாமென்பது  துணியப்படும் .                                                                 51

( இன்றேல்  —  முற்செய்வினை யின்றேல் )                                                          

     மக்களுக்குச்  சிறு  முயற்சியாற்  பெரும்பயன்  விளைகின்றது : அதற்குக்  காரணம்  முற்செய்  வினையேயாகும் . சிலர்  முற்செய் வினையும்  இம்மையிற்  செய்யப்படும்  முயற்சியுங்கூட  அப்பெரும் பயனை விளைவிக்கு மென்ப .                                                                         52

     சிலர் , மக்களுக்கு  இம்மையிற்  செய்யப்படு  முயற்சிகளாலேயே (எல்லாவற்றையுஞ்  செய்து முடிக்கும் ) திறமையுண்டாகுமென்ப . நெய் தோய்ந்ததிரியைப்  பற்றி  நிற்கும்  விளக்கைக்  காற்று  அவித்து விடாது காத்தல் முயற்சியினாலேயே யாகும் .                                            53

     ஒருதலையாக  வரற்பாலனவற்றைத்  தடுத்தற்கியலாது . ஆயினும் , ஒருவன்  தனக்குள்ள  அறிவின்  வன்மைக்குத்  தக்கவாறு பகை  நோய்முதலிய  தீங்குகளைப்  போக்கமுயல்வதே  நன்றாகும் .               54

     ஆதலின் , அரசன்  தனக்கு  வரும்  நலந்தீங்காகிய  பயன்கள்  , சிறுமை  நடுத்தரம்  பெருமையுடையனவாக  இருத்தலான், அவற்றிற் கியைய  ஊழையும்  மூவகைப்படுத்துணர்தல்  வேண்டும் .                    55

     இராவணனுக்கு  ஒரு ( அனுமான் )  குரங்கினால்  வனம்  அழிதலாகிய  தீங்கும் , வீடுமன்  முதலியோர்க்கு  ஒரு  (அருச்சுனன் ) மனிதனால்  நிரை  மீட்டலாகிய  தீங்கும்  ஏற்பட்டன  வென்று அறிதல் வேண்டும் .                                                                                                               56     

     இராமனுக்கும் , அருச்சுனனுக்கும்  நலம்  பயப்பதிற்  காலம்  துணை செய்ததென்பது நன்கு  வெளியாம் .  ஊழ்  நல்லதாங்கால்  சிறு  முயற்சியும்  நற்பயனை விளைவிக்கும் .                                                       57

     ஊழ்  தீயதாங்கால்  பெரிய  நற்செயலுந்  தீயபயனை  விளைவிக்கும் . மகாபலியும் , அரிச்சந்திரனும் கொடையினாலேயே  துன்பமுற்றனர் .                                                                                                     58

(57 – 58 . இச்சுலோகங்களின்  கருத்தை “நல்லவை யெல்லாஅந் தீயவாந்  தீயவு, நல்லவாஞ்  செல்வஞ்  செயற்கு “  என்னுந்  திருக்குறளிற்  காண்க. மகாபலி திருமாலுக்கும் , அரிச்சந்திரன் விசுவாமித்திர  முனிவர்க்குஞ்  செய்த தானங்களாற் பெரிதுந்  துன்புற்றனரென்பது பிரசித்தம் )                                                                                                    

     நற்செயலால்  இன்பமும்  , தீச்செயலாற்  றுன்பமும்  உண்டாம் . ஆதலின் , அறநூல்  வாயிலாக  நல்லனவிவை  தீயனவிவை  யென வுணர்ந்து , தீயனவற்றை  யொழித்து நல்லனவற்றையே  மேற்கொள்ளல் வேண்டும் .                                                                                 59

     அரசன்  காலத்திற்குக்  காரணமாதலால் , நற்செயல்  தீச்செயல் களுக்கும் அவனே  காரணமாவான் . ஆதலின் , அவன்  தன்  அரசியற்  காரியமுகமான  முயற்சியாலும்  , ஒறுத்தலாலும்  மக்களைத்  தத்தங் கடமைகளில்  நிலைப்படுத்தல்  வேண்டும்.                                                  60

7 . அரசியற்குரிய  ஏழு  அங்கங்கள்

     அரசியல் , அரசு அமைச்சு, நட்பு , பொருள்,  நாடு , மதில் , படை  என்னும்  ஏழு  உறுப்புகளையுடைத்து .  அவற்றுள்  அரசு தலையாக  மதிக்கப்படுவதாகும் .                                                                                         61

( இச் சுலோகத்தின்படி “படை குடி கூழமைச்சு நட்பரணாறும்  உடையான ரசருள் ஏறு “  என்னுந்  திருக்குறள்  அமைந்திருத்தல்  காண்க . பொருள்  நாடு  என்பன இக் குறளிற்  கூழ்  குடி  என்று  கூறப்பட்டன . இவ்வுண்மையைப்  பரிமேலழகர்  இதற்கெழுதிய  உரையானுணர்க.  ஈண்டு  அரசியலின் உறுப்புக்களாகக்  கூறப்பட்ட  ஏழனுள்  அரசும்  ஒன்றாம் . திருக்குறளில்  அரசனுடைய உறுப்புக்களாக மற்றை ஆறுங் கூறப்பட்டன . )

     அமைச்சுக்  கண்ணாகவும் , நட்புச்   செவியாகவும் , பொருள்  முகமாகவும் , படை  மனமாகவும் , மதில்  கையாகவும் , நாடு  காலாகவும்  இவ்வாறு  அரசியல்  உறுப்புக்கள்  எண்ணப்படு                     வனவாம் .                                                                                                              62

     எப்பொழுதும் நலங்களைத்  தருவனவும் , தம்மொடு நன்கு  பொருந்திய அரசர்களைப் பெருமைப்படுத்துவனவுமாகிய   இவ்வங்கங்களின் குணங்களை முறையே கூறுவேன் .                          63

     பெரியோர்களைப்பற்றி  யொழுகுகின்றவனும்  கடலைச்  சந்திரன்  மகிழ்விப்பது  போல  மக்கள் கண்களுக்கு இன்பஞ் செய்கின்றவனு மாகிய  அரசன், இவ்வுலக  நலம் வளர்தற்குக்  காரணமாகின்றான் . 64

     அரசன்  காரியங்களைச்  செவ்வையாகச்  செய்திலனாயின் , அவன்  கீழ்  வாழுங்  குடிகள் , கடலில்  மீகாமனில்லாத  மரக்கலம்  போலக்  கேட்டினை யெய்துவர் .                                                                                      65

( மீகாமன் —  மாலுமி )

     இந்நிலத்தில் , குடிகள்  அரசனையின்றித்  தத்தங்  கடமைகளில்   நிலைபெறுவாரல்லர் . அரசனும்  குடிகளையன்றி  விளக்கமுறான் .  66

     அரசன்  செங்கோலனாயின் , தன்னையும்  குடிகளையும்  அறம்  பொருள்  இன்பங்களோடு   பொருந்தச் செய்வான் .  அன்றிக்  கொடுங்கோலனாயின்  , உறுதியாகத்  தனக்குங்  குடிகளுக்கும்  அழிவு  செய்பவனாவான் .                                                                                               67

     யுதிட்டிரன்  ( இந்நிலத்தில் )  துவைதவன மென்னுங்  காட்டிலிருந்து அறம்  புரிந்தமையால் , துறக்கவின்பத்தை  யடைந்தான் . நகுடன்   (துறக்கமுற்றும் ) மறம் புரிந்தமையால் , இரசாதலத்தை  யெய்தினான் .

( யுதிட்டிரன்  —  தருமபுத்திரன் .  நகுடன்  இந்திரலோகத்தையடைந்தும்  இந்திராணி யின்பால்  வைத்த  காமத்தால் , தன்னைச்  சுமந்து செல்லும்  முனிவரைக்  கடிந்து ஏவ , அதனால்  வெகுண்ட  அகத்தியர் , “மலைப்பாம்பாகுக”  எனச் சபித்தனர் . அச் சாபம்  பெற்று  அவன்  மேலுலகத்தினின்று  மிழிந்து பாதாலத்தை யெய்தினான் . )

     வேனன்  என்னும்  அரசன்  அதருமத்தை மேற்கொண்டமையால்  அழிவெய்தினான் .  பிருது  என்னும்  அரசன்  தருமத்தை மேற்கொண்டமையால்  ஆக்கமெய்தினான் . ஆதலின் , அரசன் அறத்தின்  வழியே பொருளீட்ட  முயலல் வேண்டும் .                              69

( வேனன் — சுவாயம்புவின்  வம்மிசத்து அங்கனுக்குக் கனிதையிடம் பிறந்தவன் . தீயொழுக்கமுடையவனாய்  இருடிகளாற்  சபிக்கப்பட்டு  அழிவெய்தினான் .                                                                                                   பிருது —  அவ்வேனனுடைய  புதல்வன் . இவன் அறவழிச் செங்கோல்  செலுத்தியவன் . சனற்குமாரரால்  உபதேசிக்கப்பட்டவன் . இவன்  காலத்தில் ஒருமுறை வற்கடம்  வந்து  அதனாற் பூமி  புற்பூண்டின்றி வறிதாயிற்று . அது கண்ட  இவன் இந் நிலமகளை யழிக்க  ஆயுதத்தோடு  எழுந்தான் . நிலமகள்  அஞ்சித்  தான்  ஒரு  பசுவாகிச்  சுவாயம்பு மனுவைக் கன்றாகக் கொண்டு  வெளிப்பட்டுச் சராசரங்களுக்கு  உணவூட்டி  இவன்  கோபத்தை ஆற்றினாள் . இதனால் , இப்பிருது தரும மேற்கொண்டு உலகத்தைக்  காத்து ஆக்கமெய்தியது புலப்படும். )

8 . அரசன்  கடவுட் கூறுடையனாதல்

     அறத்திற் பற்றுடைய  அரசன்  கடவுட்கூறனாவான் . அங்ஙனமல்லாதவனும் , குடிகளுக்குத்  துன்பஞ் செய்பவனுமாகிய  அரசன்  இராக்கதக்   கூறுடையனாவான் .                                             70

(கடவுட் கூறு —  தெய்வாமிசம் )                                             

     எல்லாவுலகங்களும்  அரசனின்றி அச்சத்தால்  எப்பக்கங்களிலும்  சிதறுண்டிருக்குங்கால் , அவ்வெல்லாவற்றையுங்  காத்தற்பொருட்டுப்  பிரமதேவன்  இந்திரனும் , வாயுவும் , இமயனும் , சூரியனும் , அக்கினியும் , வருணனும் , சந்திரனும் , குபேரனுமாகிய  இவர்களுடைய  அழிவில்லாத  கூறுகளைக்  கொண்டு  அரசனைப் படைத்தான் .                                                                                                   71 – 72

( இந்திரன்முதலிய தேவர்களின் கூறுகளையுடையனாய்ப்  பிறப்பவனே  அரசனாவானென்பது  கருத்து )

     இந்திரன்  தன்  தவவன்மையால் இயங்கியல் நிலையியற்  பொருள்களுக்குத்  தலைவனாய்த்  தனக்குரிய  பாகத்தை யேற்றுக் காத்தல் போல , அரசனும்  அங்ஙனமாய்த்  தனக்குரிய ஆறில் ஒரு கூற்றைப்  பெற்றுக்  குடிகளைப் புரப்பதில்  திறமையுடைய             னாவான்.                                                                                                         73                                                                                                                                     

( இயங்கியற் பொருள்  —  சங்கமம் .  நிலையியற் பொருள் —  தாவரம் . இந்திரனுக்குரிய  பாகமாவது  இவ்வுலகில்  அவனைக் குறித்து  வேள்வியிற் கொடுக்கப்படும் அவிப்பாகமாகும் . )

     வாயு  மணத்தைப்  பரப்புவனாவான் . அங்ஙனமே  அரசன்  தீயவைகளை யொழித்து நல்ல  செய்கைகளைச்  செய்விப்பவ னாவான் . சூரியன்  இருளையோட்டி  ஒளி  செய்தல்போல  அரசன்  அதருமத்தைப்  போக்கித்  தருமத்தில் நிலைப்படுத்துபவனாவான் .  74

( வாயு  நறுநாற்றம்  தீநாற்றமாகிய  இவைகளை வெளிப்படுத்தித்  தீநாற்றத்தில் வெறுப்பும்  நறுநாற்றத்தில்  விருப்பமுறச்  செய்தல் போல , அரசன்  நல்லன  தீயனவற்றை மக்களுக்கு  அறிவித்துத்  தீயனவொழித்து நல்லன மேற்கொள்ளச் செய்பவனாதலின்  இவ்வாறு  கூறப்பட்டது )

     இயமன்  தண்டஞ் செய்வோனாதலின்  தீயன  புரிவோரை யொறுக்கும்  அரசன் அவ்வியமன் கூறாவான் . அக்கினி  தூய்மை யுடையவனாய்த்  தேவர்க்குரிய  எல்லா  அவிப்பாகங்களையும் நுகர்தல் போல, அரசன்  தூயனாய்  எல்லோரையுங்  காத்தற்  பொருட்டு  அவர்  மாட்டுப்பெறத்தக்க  கடமையை அனுபவிப்பவனாவான் .                                                                                      75

(அக்கினி  பிற தேவர்களுக்குரிய  அவிகளெல்லாவற்றையுஞ்  சுவைத்துப் பின் அவரவர்க்குக்  கொடுத்தல்போல , அரசனும்  மற்றைக்  குடிகளுக்குரிய  நுகர்  பொருள்கள்ளெல்லாவற்றினும்  கூறுகொண்டு  , பின் அவரர்பாற்  சேர்ப்பிப்பனென்பது  கருத்து )

     வருணன்  எல்லாவுலகங்களையும்   நீர்ச்சுவையால்  வளர்த்தல்  போல , அரசன்  தன்  பொருள்களால்  வளர்ப்பவனாவான் . சந்திரன்  தன்  கிரணங்களால்  மகிழ்விப்பதுபோல, அரசன்  தன்  நற்குண  நற்செயல்களால்  மகிழ்விப்பவனாவான் .                                                     76

     குபேரன்  நிதிகளைப்  பேணுவதில்  திறனுடையனாதல் போல  அரசன்  பொருட்பெருக்கைக்  காப்பதில்  திறனுடையனாவான். சந்திரன் தன்  கலைக்கூற்றி லொன்று  குறையினும் நிறைமதி யாதல்  கூடாதவாறுபோல , வேந்தன்  இவ்வெல்லாக்  கூறுகளும் நிரம்பப்  பெற்றாலன்றி விளக்கமுறான் .                                                                         77

9 . குடிகளை  யின்புறுத்தும் அரசனுக்குரிய எழுவகைக்  குணங்கள்

     தந்தை,  தாய்,  ஆசிரியன், உடன்பிறந்தான் , சுற்றம் ,குபேரன் , இயமன்  இவ்வெழுவரின்  குணங்களை யென்றுமுடையவனே  அரசனாவான் . அவையில்லாதவன்  அரசனாகான் .                              78

     அரசன்  தன்  குடிகளுக்குத்  தந்தையைப் போல  நற்குணங்களைப்  பயிற்றுவதிற் பற்றுடையனாகின்றான் . தாயைப்போலக்  குடிமக்களை  வளர்த்து அவர்கள்  புரியுங்  குற்றங்களைப் பொறுக்கின்றான் .         79

     ஆசிரியன்  மாணாக்கர்களுக்கு  நல்ல  கல்வியைப் பயில்வித்து இதோபதேசஞ்  செய்தல்போல , அரசன்  தன்  குடிகளுக்குக்  கல்வியைக்  கொடுத்து  நன்நெறியைப்  போதிப்பவனாகின்றான் .  உடன்  பிறந்தான்  தந்தையின்  பொருளினின்று   அறநூல்  விதிப்படி  மற்றைச் சோதரர்க்கு  உத்தாரக்கூறிடல்  போல , அரசன்  குடிகளுக்கு  அவ்வாறு  செய்பவனாகின்றான் .                                                                 80

( உத்தாரம் —  எடுகூறு  —  பாகநிருணயம் – இதன்  விரிவை  மனுதரும  சாத்திரம்  9 ஆம்  அத்தியாயத்திற் காண்க .)  

     அரசன்  நண்பனைப்   போலத்  தன்னையும் , பெண்களையும் , பொருள்களையும் , மறைபொருள்களையும்  பாதுகாத்தலாற்  சுற்றமாகின்றான் . பொருளைப்  பிறர்க்குக்  கொடுப்பதாற்  குபேரனும் முறைப்படி  தண்டஞ்செய்வதால் , இயமனும்  ஆகின்றான் .                 81

(இக் கருத்து “உடுக்கையிழந்தவன்  கைபோல வாங்கே  யிடுக்கண்  களைவதா நட்பு”  என்னுந் திருக்குறளை  நினைப்பூட்டுவதாகும் .)

     செல்வச்  சிறப்புமிக்க  சீரிய  அரசனிடத்து இக்குணங்கள்  தங்கியிருக்கும் . ஆதலின் , அரசனால்  ஒரு பொழுதும் இவ்வேழு குணங்களும்  விடற்பாலனவல்ல .                                                                  82

     எவன்  வலியனாயிருந்தே குடிகள் செய்யுங்  குற்றத்தைப்  பொறுக்கின்றானோ, அத்தகைய  அரசன் குடிகளை  யடக்கி யாள்வதிற் றிறனுடையவனாவன் . பிற  எல்லா  நற்குணங்களும் அமையப்பெற்றவனாயினும் , பொறுமையில்லாத  அரசன்  சிறப்புறான் .                                                                                                          83

     எவ்வரசன்  தன்னைப்  பற்றிப்  பிறர்கூறும் பழிப்புரையைப்  பொறுத்துக்கொண்டு , தன்பாலுள்ள தீயகுணங்களை  யொழித்து, எப்பொழுதுங்  கொடையாலும் , பெருமைப்படுத்தலாலும் , ஆதரவாலும்  தன்கீழ்  வாழுங்  குடிகளை  மகிழ்வுறுத்தி , பொறியடக்கமும் , வீரமும் , படைக்கலத்திறனும் , பகைவரை  வெல்லுதலும் , அறநூல்வழி  யொழுகுதலும் , ஆராய்ந்தறிதலும் , அறிவும் , மெய்யுணர்தலும் , கயவர்களோடு கலவாமையும் ,நெடிது சூழ்ந்துணர்தலும் , பெரியோரைப் பின்பற்றுதலும் , நடுவுநிலை மையும் , புலவர்களோடு  அளவளாவுதலுமாகிய  இவ்வெல்லா வற்றையு முடையவனாயிருக்கின்றானோ  அவனைக்  கடவுட்கூறனாய்  அவதரித்தவனென்று  அறிதல்  வேண்டும் .    86

     இவற்றிற்கு  மாறுபட்ட  குணஞ் செயல்களையுடைய  அரசன்  இராக்கதக்கூறு  உடையனாவன் . அவனே  நரகம்  எய்துவோனாவான் . எவ்வரசன்  எக்கூற்றை யுடையவனோ  அவனைச்  சார்ந்த பரிவாரங்களும் அங்ஙனமே யாவர் .                                                   87

     அரசன்  தன்  துணைவர்  புரியுங்  காரியங்களை  நோக்கி , அவர்கள்  ஊழ்  நல்லதாக விருப்பின் , அவற்றை யேற்று மகிழ்ச்சி யடைகின் றான் .  அன்றி அவ்வூழ்  தீயதாகவிருப்பின் , அவர்தம் செயல்களை  யேற்றுக்  கோடலும் , அதனால்  மகிழ்வடைதலும் இலனாகின்றான் . 88

     செய்வினைப்  பயன்கள்  சாந்தியில்வழி மனிதர்களால்  ஒருதலையாக  நுகரற்பாலனவே . சாந்தி  செய்யப்படுமாயின் , அங்ஙனம் நுகரற்பாலன வல்ல .                                                                       89

( ஒருவன் தான்  செய்த தீவினையின் பயனைக் கடவுளர்க்குச்  செய்யும்  பூசைகளாற் பரிகாரிக்கலாமென்பது  கருத்து )

     மருந்தினால்  நோய்  நீங்கப்பெற்றவன்  இன்ப நுகர்தற்கு உரிமையுடையனாதல் போலச்  சாந்தியாற்  றீவினைப்பயனீங்கப்  பெற்ற  அரசன்  இன்பம்  எய்துவன் . துன்பத்திற்கு ஏது வின்னதென்று ணர்ந்து   வைத்தும் , அதனைச்  செய்தற்கு முயல்பவன்  யாவன் ?  (ஒருவனுமிலன்  என்பதாம் )                                                                               90

( அதனை —  அத்துன்ப காரணத்தை )

     நல்வினைப்  பயனில்  மனம்  இன்புறும் ; தீவினைப்பயனில்  எவர்க்கும்  மனம்  இன்புறுவதில்லை . நன்று  தீதுகளைத் தெள்ளிதிற் புலப்படுத்தும்  அறநூல்களைப்  பார்த்து  ஒழுகல்  வேண்டும் .               91

     நீதி  வழங்குதற்கு  விநயங்  காரணமாகும் . நூல்களின்  உண்மைப்  பொருட்டுணிவால்  உண்டாகும் விநயத்திற்குப்  பொறியடக்கங்  காரணமாகும் . அப்பொறிகளை யடக்கியாளும் ஆற்றலுடையவன் நூல்களின்  உண்மைப்  பொருள்களை யறிபவனாவன் .                         92

     அரசன்  முதலில்  தான்  பணிவுடையனாய் , அதன்பின்  முறையே  புதல்வரையும் , அமைச்சரையும் , மற்ற  வினைசெய்வாரையும் , குடிகளையும்  பணிவுடையவர்களாகப்  பயிற்றுவித்தல்  வேண்டும் .  93

     வேந்தன் ( தான்  ஒழுகிக்  காட்டாது ) பிறர்க்குபதேசிக்குமளவில்  திறனுடையனாக  விருத்தல் கூடாது .  அங்ஙனம்  பிறர்க்கு உபதேசிக்குங்  குணம்  படைத்தும் , ஓரோவமயத்திற் குடிபுரந்தருதலில்  தவறுடையனாதலுங்  கூடும்.                                                                             94

( புரந்தரல் —  காத்தல் .  ஈண்டு “ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்துந்  தானடங்காப்,  பேதையிற் பேதையாரில்”  என்னுந்  திருக்குறள் நினைவுகூறுதற்பாலது .)

     குடிகளை  தீயகுணங்களை  யுடையவர்களாயினும் , தமக்கு  ஓர்   அரசனையின்றி  இருக்கமாட்டார்கள் . இந்திராணி  என்பாள்  என்றுந்  தலைவனை  யுடையவளாக விருத்தல்  போல , குடிகளும் என்றும் அரசனை  யுடையவர்களாகவே  இருப்பார்கள் .                                          95

     எவ்வரசனுக்கு  அடக்கமில்லாத  அமைச்சரும் , வணக்கமில்லாத  தாயத்தாரும் ,கொடியவராகிய  புதல்வர்  முதலியோரும்  உள்ளாரோ , அவ்வரசனது அரசுரிமை திருவிழந்ததாகும் .                                                96

     என்றுந்  தன்பால்  அன்பு  பூண்டொழுகும்  அமைச்சர் முதலியோரை  யுடையவனும் , குடிகளைப்  புரப்பதில்  விசேடப்  பற்றுடையவனும் , வணக்கமுடையவனுமாகிய  அரசன்  மிக்கசெல்வத்தை  அனுபவிப்பவனாவான் .                                                                                       97                                                                                       

10 . பொறியடக்கத்தின்  இன்றியமையாமை

     புலன்களாகிய  பெருங்காட்டில்  ஓடித் திரிவனவும் , அடக்க வொண்ணாதனவுமாகிய  பொறிகளென்னும்  யானைகளை , அறிவென்னுந்  தோட்டியால் அடக்கி  வயப்படுத்தல்  வேண்டும் .          98       

( இச் சுலோகத்தின்  கருத்து “உரனென்னுந்  தோட்டியா னோரைந்துங்  காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து “  என்னுந்  திருக்குறளை நினைவுறுத்துகின்றது )

     மனம்  புலன்கலாகிய  நுகர்பொருள்களில்  வைத்த  பேரவாவினாற்  பொறிகளைச்  செலுத்துகின்றது . ஆதலின்

, பெரிதுமுயன்று அம் மனத்தை  யடக்கல்  வேண்டும் . மனம்  அடங்கிற்  பொறியடக்க முடையனாவன் .                                                                                                   99

     ஒரு மனத்தை  யடக்கி  யாள்வதில்  ஆற்றலில்லாத  அரசன்  கடல்  சூழ்ந்த இந் நிலவுலகத்தை  எங்ஙனம்  தன்  வயப்படுத்தி  ஆளக்கடவன் ?                                                                                                      100

     வினைமுடிவிற்  றுன்பம்  விளைவிப்பனவும் , தோற்ற மாத்திரத்தில்  மனத்தைக்  கவர்வனவுமாகிய  புலன்களின் வயப்பட்ட  மனத்தையுடைய  அரசன் ( புலன்களின் வயப்பட்டுக் கட்டுண்ணும்) யானையைப்  போற்  பிறரால்  அகப்படுத்தப்படுவன்.                            101

     ஓசை , ஊறு , ஒளி , சுவை , நாற்றம்  எனப்  புலன்கள் ஐந்துள . இவற்றுள் ஒவ்வொன்றே  அழிவெய்துதற்குப்  போதியதாகும்              102

( ஓசை முதலிய ஐம்புலனுகர்ச்சியா  லழிவெய்து முயிர்களைப்  பின்வரும்  ஐந்து  சுலோகங்களிலும் முறையே  காண்க )

     தூய்மையும்  தருப்பைப்புன்  முளை யுணவும் , நெடுந்தூரம் ஓடுதலில் வன்மையும்  உடைய  மான்கள்  வேடனது  உரத்த இசைப்பாட்டினால்  மயங்கித்  தமக்கு  அழிவினைத் தேடுகின்றன . 103

( இஃது ஓசையா லழிவெய்தும்  உயிரைக் குறிப்பதாகும் )

     பெரிய மலைச் சிகரம் போன்ற உருவமுடையதும் , விளையாட்டால்  மரங்களை வேறுடன் பிடுங்குவதும் ஆகிய  யானை,  பெண்  யானையின் ஊற்றின்பத்தால் மயங்கிக்  கட்டுண்டு  அகப்படுத்தப்படுகின்றது .                                                                               104

( இஃது ஊற்றின்பத்தா லழிவெய்தும்  உயிரைக்  குறிப்பதாகும் )

     நெய்யினால்  எரியும்  விளக்கின்  சுடரைப்  பார்ப்பதனால்  மயக்க முற்ற கண்களையுடைய விட்டில் , அம்மயக்கத்தால் விரைந்து அவ்விளக்கில்  வீழ்ந்து இறக்கின்றது .                                                           105

(இஃது ஒளியாலழிவெய்தும்  உயிரைக்  குறிப்பதாகும்)

     ஆழமாகிய  நீரில்  முழுகித்  திரியும் மீன் , செம்படவனுக்குச் சேய்மையிலிருந்தும்  அவனால்  இடப்படும் தூண்டிலின்கண்  உள்ள  ஊனையுண்டு  அழிவெய்துகின்றது .                                                            106

(இது சுவையா லழிவெய்தும்  உயிரைக் குறிப்பதாகும் )

     வண்டு  பூவிதழ்களைக்  கடித்து  உதிர்க்குந்  திறமையும் , வெளிச் செல்லுதற்குரிய  இறகுகளின் துணையும் உடையதாயிருந்தும் , மணத்தின்  மயக்கத்தால் தாமரைப்  பூவினுட் படுகின்றது .                107

(இது  நாற்றத்தால் மயக்கும்  உயிரைக்  குறிப்பதாகும்)

     தனித்தனியே  கேடு  விளைக்கும் நஞ்சையொத்த புலன்கள் ஐந்தும் ஒன்றுசேரின்  யாதுதான்  செய்யா ? தின்ணமாக  அழிவு   செய்வனவாம்.                                                                                                      108

11 . சூது  முதலிய  விதனங்கள்      

(விதனங்களை    “வேட்டங்  கடுஞ்சொன்  மிகுதண்டஞ் சூதுபொரு ளீட்டங்கட்   காமமோடேழு”  என்பதனான்  அறிக )

     சூதாடலும் , பெண்விளைச்சும் , கட்குடித்தலுமாகிய இம் மூன்றும்  பலவகைத்  துன்பங்களை விளைவிப்பனவாதலின் , மேற்கொள்ளத் தகாதவைகளாம் . இம்மூன்றும் பொருந்துமாற்றான் அளவோடு செய்யப்படின் முறையே பொருளையும் , மகப் பேற்றையும் , அறிவையுந்  தருவனவாம் .                                                                             109

     நளன் தருமபுத்திரன் முதலியோர் சூதாடலைக்  கபடமின்றி மேற்கொண்டமையால் , நாடு  முதலியன இழந்து துன்பமுற்றனர் . ஆதலின் , அவ்வுபாயத்தை யறிந்தவர்க்குக்  கபடத்தோடு கூடிய  சூதே பொருளைத் தருவதில் வலியுடையதாகும் .                                                110

(நளனும் , தருமபுத்திரன்  முதலியோரும் , வஞ்சகமின்றிச் சூதாடலை மேற்கொண்டமையால் முறையே வஞ்சகராகிய புட்கரனாலும்  துரியோதனாதிகளாலும்  நாடு  முதலியன கவரப்பட்டு வருந்தினரென்பது பிரசித்தம் )

     பெண்களின் பெயரைக் கூறுமளவில் அதுவே இன்பம் விளைவித்து மனத்தை விகாரப்படுத்துவதாகும் . அங்ஙனமாயின, இன்ப  விளையாட்டான்  மகிழ்வுறுத்தும் புருவங்களையுடைய அம்மகளிரின் காட்சி  யாதுதான்  செய்யாது ?                                                                      111

     மறைவில்  தன்  உள்ளக்  கருத்தை வெளிப்படுத்துவதிற்  றிறமை வாய்ந்தவளும் , மெல்லிய  குரலாற் றடைப்பட்டு  பேசுகின்றவளும் , சிவந்த  கடைக்கண்களையுடைய வளுமாகிய  பெண்மகட்கு ஆடவருள்  வயப்படாதவன்  யாவன் ?                                                           112

     பெண்பாலார் பொறிகளை வென்ற முனிவரர்  மனத்தையும் நிச்சயமாகக்  காமுறச் செய்வரெனின் , வேறு கூறற்பாலது யாதுளது? பொறிவழி யுள்ளம் போக்குவார் நிலை யாதாய்   முடியும் ?                  113

     அங்ஙனம் எப்பொழுதும் மகளிர்பால்  அவா  மேற்கொண்டொழுகிய  இந்திரன் , தண்டகன் , நகுடன் , இராவணன்  முதலிய இப்பலரும் கேடெய்தித்  துன்பமுற்றனர் .                                                                          114                                                                 

( இந்திரன் அகலியையோடு கரவிற்  புணர்ந்தமையால்  கெளதம முனிவராற் சபிக்கப்பட்டுத் துன்பமுற்றான் . தண்டகன்  என்னும்  அரசன்  பார்க்கவரது  ஆச்சிரமத்திலிருந்த அவர்  புதல்வியாகிய அரசையை வலிந்து பற்றினமை காரணமாக  , அப்பார்க் கவர் சாபமிட , அதனால்  அவன்  நாடு  எரிந்து சாம்பராயிற்று.  அவனும்  புதல்வர் முதலியோரோடு  மரணம் எய்தினன் . நகுடனும்  இராவணனும்  முறையே இந்திராணியையும்  சானகியையும்  காமுற்றுக்  கேடெய்தினர்)

     காமம்  ஒன்றையே  பற்றி  யொழுகாத  ஆண்மகனுக்கே  கற்புடையாள்  என்றும்  இன்பந்தருபவளாவள் . அத்தகையாளையன்றி  மனைவாழ்க்கையிற்  றுணைசெய்பவள்  வேறொருத்தியுமிலள் .      115

     கள்ளை மிகுதியாகக்  குடிப்பவனுக்கு அறிவு கெடும் .  சிறிதளவு உண்ணப்படும்  மதிநுட்பத்தையும் , தூய அறிவையும் அஞ்சாமையையும் , மனவுறுதியையும் தருவதாகும் . இன்றேல்,  இவ்வெல்லாவற்றையும் அழிப்பதாகும்.  காமமும்  வெகுளியும்  மிக்க  மதத்தினைச்  செய்வனவாதலின் , விதிப்படி வேண்டிய அளவு கொள்ளற்பாலனவாம் .                                                                           116 , 117

     அரசன் மக்களைப்  பெற்று  வளர்ப்பதற்குக்  காமத்தையும் , வெற்றி  விருப்பத்தாற்  பகைவரை  யடக்குதற்கு  வெகுளியையும், படைகளைக்  காத்தற்குப்  பேரவாவையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .

     பிறர்மனை  நயத்தலிற்  காமமும் , பிறர்  பொருள்  கவர்வதிற்  பேரவாவும் , தங்கீழ்  வாழுங்  குடிகளை  யொறுப்பதில் வெகுளியும் , அரசர்கள்  என்றும்  மேற்கொள்ளற்பாலன வல்ல                                   119

     பிறர்மனை   நயத்தலையுடையானை  இல்வாழ்வானெனவும் , தன்  கீழ்  வாழுங்குடிகளை  அலைப்பானை  வீரனெனவும், பிறர்  பொருளைக்  கவர்ந்து  தொகுத்தவனைப்  பொருளுடையானெனவுங்  கூறுதல் பொருந்தாது .                                                                                     120

     தேவர்கள்  காத்தற்றொழிலை  மேற்கொள்ளாத  அரசனையும் , தவஞ்செய்தலில்லாத  அந்தணனையும் , ஈதலில்லாத  பொருளுடை யானையுங்  கீழ்வீழ்த்தி  யழிப்பர்.                                                               121

     தலைவனாதலும் , கொடையாளியாதலும் , பொருளுடையனா தலுமாகிய  இவை  நல்வினைப்  பயன்களாம் .  ஏவலாளனாதலும் , இரப்போனாதலும் , வறியவனாதலுமாகிய  இவை  தீவினைப்  பயன்களாம் .                                                                                                       122

     ஆதலின் , அரசன்  நீதி நூல்களை  யாராய்ந்து , தன்னை  நன்னெறிப் படுத்தி , இம்மை  மறுமைகளில்   இன்பம்  விளைத்தற்குரிய  தன்  அரசியற்றொழிலை  விதிப்படி  செய்தல்  வேண்டும் .                             123

12 . அரசனுடைய  எண்வகைத்  தொழில்கள்

     தீயோரை  யொறுத்தலும் , ஈதலும் , குடிகளைக்  காத்தலும் , இராசசூய  முதலிய  வேள்விகளை  வேட்டலும் , அறநெறி  பிறழாது  பொருளீட்டலும் , பிற  அரசர்களைத்  திறைதரச் செய்தலும் , பகைவரைத்  தொலைத்தலும் , மேன்மேலும்  நிலப்பகுதி  கோடலுமாகிய  இவ் வெட்டும்  அரசர்க்குரிய  தொழில்களாம் . 124 –125

( திறை – சிற்றரசர்  பெருநிலவேந்தர்க்குக்   கொடுக்குங்  கப்பம் )

     தம்  படைகளைப்  பெருக்காதவரும் , பிறவேந்தர்களைத்  திறை  செலுத்தச்  செய்யாதவரும் , குடிகளை  நன்கு  ஓம்பாதவருமாகிய  அரசர்கள் பேடியை  யொப்பர்.                                                                    126

13 . அரசனுடைய  குணங்குற்றங்கள்

     குடிகள்  தன்றொழிலைப்  பழித்துத்  தன்னை  வெறுக்க  ஒழுகுவோனும் , அறிவுடையோராலும்  பொருளுடையோராலும்  விலக்கப்படுபவனுமாகிய  அரசன்  மிக  இழிந்தவனாவான்            127

     நடரும் , இசைபாடுவோரும்,  வரைவின் மகளிரும் , மல்லரும் , அலிகளும் , தாழ்குலத்தோருமாகிய  இவர்களிடத்து  மிக்கபற்று  வைத்தொழுகும்  அரசன் , யாவராலும்  பழிக்கப்பட்டுப்  பகைவர்  முகத்தில்  இருப்பவனாவான் .                                                                     128

( பகைவர்  முகத்திலிருத்தல் – அவர் வெல்லுதற்கெளியனாதல் )

     எப்பொழுதும்  நல்லறிவுடையோரை  வெறுத்தும் , தீயவர்களோடு  கூடி  மகிழ்ந்தும்  தன்பாலுள்ள  தீயகுணங்களை  யறியாமலும்  ஒழுகுகின்ற  அரசன் , தனக்குத்  தானே அழிவு  செய்பவனாவான்.  129

     பிறர்  பொருளைக்  கவர்பவனும் , குடிகளுக்குத்  துன்பம்  இழைப்பவனும் , கொடிய  தண்டம்  விதிப்பவனுமாகிய  அரசன்   தன்  தீயகுணங்களைக்  குடிகள்பாற்கேட்டு , அதனால்  அக்குடிகளைத்  தீங்கு  செய்தவர்களாக  எப்பொழுது  எண்ணுகின்றானோ , அப்பொழுதே  உலகம்  கலக்கமுற்று  வேறுபடும் . ஆதலின் , அவன்  அங்ஙனம் உலகம்  கலக்கமுற்று  வேறுபடுதற்குரிய  தன்  ஒழுக்கத்தை, நன்குணர்ந்த அமைச்சர்  முதலியோர்க்கு  மறைவிற் கண்டு  சொல்லும்  ஒற்றர்களால்  அறிவித்து , அவ்வமைச்சர்  முதலியோருள்  யாவர்  பழித்துரைக்கின்றனர் . யாவர்  எக்கருத்தாற்  புகழ்ந்துரைக்கின்றன  ரென்பதும், தன்  தீய   குணங்களையும் நற்குணங்களையு  முணர்ந்து  யார்யார்  தன்மாட்டு  எத்தகைய  விருப்பு  வெறுப்புடையவர்களாக  இருக்கின்றனரென்பதும் ஆகிய  எல்லாவற்றையும்  அவ்வொற்றர்கள் மறைவிற்கண்டு  கூறக்கேட்டும், அவற்றை  உலகத்தாரால்  எப்பொழுதும்  உணர்ந்தும் , நல்ல  புகழ்  என்றும்  நிலைபெறுதற்  பொருட்டுத்  தன்பாலமைந்த  தீய  குணங்களை  யொழித்தல்  வேண்டும். அதுபற்றித்   தன்  குடிகளை  அவமதித்தல்  கூடாது .”வேந்த ! நின்னை  உலகம்  பழிக்கின்றது” என்று  ஒற்றர்கள்  சொல்லக்  கேட்ட  அளவில்  தன்  தீய  இயற்கையால்  வெகுளி  மேற்கொள்ளுவானாயின் , அவன்  தன்  தீய  குணங்களை   மறைப்பவனாவான் .  இராமபிரானாற்  கற்பிற்  சிறந்த  சீதை , உலகம்  கூறும்  பழிச்சொற் காரணமாக  விலக்கப்பட்டாள் .  அவ்விராமபிரான்  மிக்க  பலசாலியாகவிருந்தும்  அப்பழிச் சொல்லை  வெளிப்படுத்திய  வண்ணானை  ஒரு  சிறிதுந்  தண்டித்திலன் .  அவ்வரசர்  பெருமானாகிய  இராமன்  உலகியலறிவோடு  தத்துவஞானமுடையவ னாதலின், அவ்வண்ணானுக்கு  அபயம்  அருளினான் .

( ஒரு  வண்ணான்  வேற்றிடஞ்  சென்று  வந்த  தன்  மனைவியை  நோக்கி, “ இராவணனாற்  கவரப்பட்டு  மீண்டு  வந்த  சீதையை  யேற்றுக்கொண்ட  இராமன்  யான்  அல்லன் ; ஆதலின்  நின்னை  ஏற்றுக்  கொள்ளேன் “  என்று  கூறிய  சீதாபவாதத்தை  மறைவிற்  கண்டு  கூறும்  ஒற்றன்  முகமாகக்  கேட்ட  இராமபிரான், அதுபற்றி  அவ்வண்ணானைச்  சினவாது , சீதாபிராட்டியாரை  மீண்டும்  வனத்தை  யடைவித்தாரென்பது  புராண கதை.)

     அரசனது  பெருங்குற்றத்தையும்  அவன்  முன்னிலையிற்  கூறுதற்கு  உலகம்  அஞ்சும் . திருமால்  முதலிய  தேவர்களெல்லோரும்  புகழ்ச்சியில்  விருப்பமுடையவர்களென்று  வேதங்  கூறும் .  அங்ஙனமாயின்  , மனிதர்களைப்  பற்றிக்  கூறுவதென்? இதனால், என்றும்  ஒருவர்க்குப்  பிறர்கூறும்  பழிப்பினாற்  கோபமுண்டாகு மென்பது  போதரும்.  ஆதலின் , அரசன்  என்றும்  பகுத்துணர்ந்து  தண்டிப்பவனாகவும் , மிக்க  பொறுமையுடையவனாகவும்  குடிகளை  இன்புறுத்துபவனாகவும்  இருத்தல்  வேண்டும் .                                 137-138

     இளமையும் , வாழ்க்கையும் , மனமும் , உடலொளியும் , திருவும் , தலைவனாந்தன்மையுமாகிய  இவ்வாறும்  நிலையுடையனவல்ல  வென்றுணர்ந்து  அறத்திற்  பற்றுடையனாதல்  வேண்டும் .                   139

( சாயை {மூலத்தின்  மாயா} என்பது  ஈண்டு  உடலின்  ஒளியை  உணர்த்திற்று.)

     அரசன்பால்  கொடையின்மையும், பிறரை  அவமதித்தலும் , கபடமும் , வன்சொல்லும் , மிகப்  பெருந்தண்டமும்  அமைந்திருப்பின்  அவனைக்  குடிகள்  ஒழித்துவிடுவர் .                                                           140

     மாறுபட்ட  இக்குணங்களால்  அரசனைக்  குடிமக்கள்  பரம்பரையாக  வெறுப்பர் . தீயகுணம்  ஒன்றே  மிக்க  பழியை  யுண்டாக்குமாயின்  அக்குணம்  பலவாக  அமையின்  யாது  செய்யா?

( இச்சுலோகத்தில்  முற்பாதிக்கு  “முன்னர்க்  கூறிய  தீய  குணங்களுக்கு  மாறுபட்ட  கொடை  முதலிய  நற்குணங்களால்  அரசனைக்  குடிகள்  பரம்பரையாகப்  போற்றுபவராவர் “ என்று  வேறு  விதமாகவும்  பொருள்  கூறலாம் . )

     அரசர்களுக்கு  வேட்டையாடலும் , சூதாடலும் , கட்குடித்தலுமாகிய  இவை  வெறுக்கற்பாலனவாம் . இம்மூன்றானும்  முறையே  பாண்டுவும் , நளனும் , யாதவர்களும்  துன்பமெய்தினர் .                   142

( பாண்டு  வேட்டையாடுங்கால் , மானுருக்கொண்டு  புணர்ந்து  இன்பம்  நுகர்ந்த  கிந்தம முனிவரையும் , அவர்  மனைவியையும்  அம்பெய்து  வீழ்த்தான் . அப்பொழுது அம்முனிவர்  பாண்டுவை  நோக்கி , “நீயும்  நின்  மனைவியோடு  கூடி  இன்பந்துய்க்குங்கால்  உயிர்  நீக்கக் கடவை “  என்று  சபித்தனர் . நளன்  சூதாடி  நாடு  நகரங்களை யிழந்து, நடுநிசியிற்  காட்டிற்  றன்  மனைவியையும்  பிரிந்து  துன்புற்றான்.  யாதவர் – கண்ணன்  குலத்தவர் , இவர்கள்  ஒன்று  கூடித்  தவஞ்  செய்யும்  முனிவரைப்  பரிகசித்தமையால், அம்முனிவர்  சபித்தனர். அச்சாபப்  பயனாக  இவருள்  ஒருவன்  வயிற்றினின்று  இருப்புலக்கை யொன்று  பிறந்தது . அதனை அராவிக்  கடலில்  எறியும்படி  கண்ணன்  கூற  அங்ஙனமே  செய்யப்பட்ட  அவ்விருப்புத் துகள் , சம்பங்கோரைகளாக  முளைத்தன.  பின்னொரு  சமயம்  கடற்கரைக்கு  விளையாடச்  சென்ற  இவ் யாதவரனைவரும் , நிரம்பக்  கள்ளுண்டு  களித்துத்  தம்முட்  கலாம்விளைத்து , அங்கு  முளைத்திருந்த  கோரைப் புற்களைப்  பிடுங்கி  அடித்துக்கொண்டு  மாண்டனர் . )

அரசன் காமம், வெகுளி, மோகம், உலோபம், மானம், மதம் என்னும் இவ்வறுவகைக் குற்றங்களையும் களைதல் வேண்டும். இவை  அங்ஙனம்  களையப்படின்  அவன்  இன்பம்  நுகர்பவனாவான் .

( இவ்வறுவகைக்  குற்றங்களுள் , மோகத்தை  உவகை யெனவும் , உலோபத்தைக்  கடும்பற்றுள்ள  மெனவும்  பரிமேலழகர்  கூறுவர் . {திருக்குறள் , 44  ஆம்  அதிகார அவதாரிகை}.  இவற்றை  முறையே  சிறுமை , சினம் , மாணாவுவகை , இவறல் , மானம்,  செருக்கு  என்று  திருவள்ளுவர்  கூறுவர் . { திருக்குறள் , 44  ஆம்  அதி – 1, 2  செ .})

     காமத்தால்  தண்டகனென்னும்  அரசனும் , கோபத்தாற் சனமே  சயனும் , உலோபத்தால்  அயிலனென்னும்  இராசவிருடியும் , மோகத்தால்  வாதாபி  என்னும்  அசுரனும் , மானத்தாற்  புலத்திய  குமாரனாகிய  இராவணனும் , மதத்தினால்  தம்போற்பவனென்னும்  அரசனும்  அழிவெய்தினர்                                                                     144-145

( தண்டகன் – இக்ஷுவாகுவின்  புதல்வன். இவன்  விந்தியத்திற்கும்  சைவலத்திற்கும்  இடையேயுள்ள  நாட்டை யாண்டவன் . சுக்கிரரின்  புதல்வியாகிய  அரசையை  வலிதிற்  புணர்ந்த  காரணத்தால்  அச்சுக்கிரரார்  சபிக்கப்பட்டுத்  தன்  நாட்டில்  மண்மாரி  பொழியத்  தானும்  அழிவெய்தினான் .  உலோபம் – ஈண்டுப்  பிறர்  பொருளைப்  பெறுதற்கண்  உண்டாம்  பேரவா. அயிலன்  –  இளையின்  புதல்வன்  , அம்பிகையின்  தவவனத்தை  யறியாமல்  அடைந்த  வைவசுவத  மனுவின்  புதல்வருள்  ஒருவன் , இளையெனும்  பெயர்  மடவரலாயி னன். அவ் இளையின்பால்  சந்திரன்  புதல்வனாகிய  புதனுக்குப்  பிறந்த  புரூரவா  என்பவனே  அயிலனாவான் . இவன்  பொருளாசை  மேற்கொண்டு , சனற்குமாரர்  முதலிய  பெரியோர்களின்  உபதேசங்களையும் ஏற்றுக்கொள்ளாமல்  , அந்தணர்களுடைய  இரத்தின  முதலிய  பொருள்களையெல்லாங் கவர்ந்து கொண்டு , அது  காரணமாக  முனிவராற்  சபிக்கப்பட்டு  அழிவெய்தினான் . வாதாபி – அசமுகியின்பால்  துருவாசகருக்குப்  பிறந்த  ஓர்  அசுரன் . இவனை  ஆடாக்கி  இவன்  சகோதரன்  முனிவர்  பலர்க்கு  விருந்திடுதலும்  , இவன்  அம்  முனிவர்  வயிற்றைக்  கிழித்து  வெளிவருதலும்  வழக்கம் . அம்முறையே  அகத்திய  முனிவர்க்கு  விருந்திட  , அவரால்  உண்டு  சீரணிக்கப்பட்டான் . மானமாவது , கருதியது  செய்யத்  தகாததா யினும்  அதனை  முடித்தேவிடுந்  தீயகுணம்  . இதனால்  இராவணன்  அழிவெய்தினானென்பது வெளிப்படை . தம்போற்பவன் –  இவன்  செல்வ முதலியவற்றாற்  களித்து  நாராயணராற்  பங்கமடைந்தவன் . )

     ஆண்மையிற்  சிறந்த  பரசுராமனும் , செல்வப்பெருமை மிக்க  அம்பரீடனும்  இவ்வாறுவகைப்  பகைகளையுந்  துறந்து  நெடுங்காலம்  இந்நில வுலகத்தை ஆட்சி  செய்தனர் .                                                    146

( பரசுராமர் —  இவர்  சமதக்கினி  புதல்வர் ; திருமாலின்  அம்மிசாவ தாரம் , சிவபிரானை  நோக்கித்  தவம்புரிந்து  பரசு  பெற்றவர் . வீரத்தாலும் , தவத்தாலும்  சிறந்தவர் . இவர் ஒரு காரணத்தால் சூரிய வம்சத்து அரசர்களை யழித்துப் பூமியை யாண்டு  பின்  காசிபருக்குத்  தானஞ்செய்தனர் . அம்பரீடன் – இவன்  சூரிய  வம்மிசத்து  நாபகன்  புதல்வன் . திருமால்  பத்தியிற்  சிறந்தவன் . திருமாலின்  ஆழிப்படை  யுதவியால்  துருவாசரும்  தன்பால்  அடைக்கலமெய்தப்பெற்றவன் . )

     அரசன்  முயற்சியாற்  பொறியடக்கமுடையனாகவும் ; இந்நிலவுலகத்தில்  நல்லறிவுடையார்  ஒழுகிய  நெறிநின்று , அறம் பொருள்களை  வளர்த்துப்  பெரியோர்களிடத்து  வணக்கமுடையனா கவும்  இருத்தல்  வேண்டும் .                                                                           147

     ஆசிரியனையடுத்தல்,  நூலுணர்ச்சி  யெய்தற்  பொருட்டாம் . அந்நூலுணர்வு , பணிவுடைமை  மேற்கொள்ளுதற்பொருட்டாம் . இங்ஙனம்  கல்வி  பணிவுடைமையாகிய  இரண்டனையுடைய  அரசன்  பெரியோர்களின்  அன்பிற்கு  உரியனாவன் .                                           148

எவ்வரசன்  தீயொழுக்க முடையவர்களால்  ஏவப்பட்டுத்  தகாத  செயல்களிற்புகாமலும் , வேதமும் , அறநூலும் , உலகியலுமாகிய  இவைகளின்  முகமாக  நெஞ்சத்தான்  நன்கு ஆராய்ந்து  துணியப்பட்ட  அறமெனப்  பெயரிய  நற்செயலை  முயன்று  கடைப்பிடித்தும் , கொள்வனவுங்  கொடுப்பனவுமாகிய  கூறுகளில்  திறமை  பூண்டும்  ஒழுகுகின்றானோ  அவன்  பண்டிதனாவான் .                                    149-150

( கொள்வனவாகிய  கூறுகள் – பிற  அரசர்  தரும்  திறை , குடியிறை , சுங்க  முதலியன . கொடுப்பனவாகிய  கூறுகள் – குடிமக்களின்  நலங் குறித்துக்  கல்வி  உழவுத்தொழில்  வாணிக முதலியவற்றிற்கு  உதவி  புரிதல் .)

     பொறியடக்கமுடையவனாய்  நீதி  நூல்  வழியொழுகும்  அரசனுக்குச்  செல்வம்  வளரும் .  அங்ஙனம்  அவன்  புகழ்  விட்புலத்தையுந்  தொட்டு  நிற்கும் .                                                             151

14 .அறிவுநூல்  முதலியவற்றின்  இலக்கணங்கள்

     ஆன்வீட்சிகி , திரையீ , வார்த்தை , தண்டநீதி  ஆகிய  பழமையான  இந்நான்கு  வித்தைகளையும்  அரசன்  எப்பொழுதும்  பயிலவேண்டும் .

( ஆன்வீக்ஷிகீ – வேதங்கள்  பயின்ற  பின்னர்  ஆராய்தற்குரியது.  திரையீ – மும்மறை.  தண்டநீதி – செங்கோன் முறை.)

     ஆன்வீட்சிகியில் , நுனித்துணரப்படும் வேதாந்த  முதலிய  அறிவுநூல்கள்  விரித்து  விளக்கப்பட்டன.  திரையீயினுள்  தருமமும் , அதருமமும் , விருப்பும் , வெறுப்புமாகிய  இவை  விளக்கப்பட்டன . 153

     வார்த்தை  என்பதனுள்  பொருளீட்டு  நெறியும் , அதன்  இடையூற்றையொழிக்கு முறையும்  விரித்துரைக்கப்பட்டுள்ளன . தண்ட நீதியில்  நீதி  அநீதிகளை  யுணர்ந்து  செய்வனசெய்தல்  கூறப்பட்டுள்ளது . இவ்வித்தைகளில்  அந்தணர்  முதலியோரின்  குலவொழுக்கங்களும் , பிரமசரிய  முதலிய  ஆச்சிரம  ஒழுக்கங்களும்  விரித்துரைக்கப்பட்டன .                                                                                 154

     நான்கு  வேதங்களும் , அவற்றின்  அங்கமாகவுள்ள  நூல்களும் , மீமாஞ்சையும் , விரிந்த  தருக்க  நூல்களும் , மனுமுதலிய  அறநூல்களும்  , புராணங்களுமாகிய  இவ்வெல்லாம்  திரையீ  யென்று  கூறப்படும் .                                                                                                        155

     வட்டித் தொழில் , உழவுத்தொழில் , பண்டமாற்று , பசுவோம்பல்  முதலியவை  வார்த்தை யென்று  சொல்லப்படும். இவ்வார்த்தையை யுடைய  நல்லோர்க்கு  வாழ்க்கையிற்  சிறிதும்  அச்சமின்று .             156

( “உழவு  பசுக்காவல்  வாணிகம்  என்னும்   வார்த்தையுமாம்” என்பர்  பரிமேலழகர் [[திருக்குறள் . 512 – உரை]] )

     தீயோரை  யொறுத்தலே  தண்டமாகும் . அதனைச்  செய்யும்  அரசன்  அதனால் (காரிய  காரண  அபேதத்தால் ) தண்டம்  என்று கூறப்படுவன. அவ்வரசனது  நீதியே  தண்ட  நீதி  என்பதாம் . நன்று  தீது  துணிதற்குரிய  கருவி  நீதி  யெனப்படும் .                                                 157

( தண்டம் – செங்கோல்.)

     அறிவுநூற்பயிற்சியால்  ஆன்மஞானமும் , அதனால்  இன்பத்  துன்பங்களின்  ஒழிவும்  உண்டாம் . விதிப்படி  வேத  முதலியவற்றின்  நெறியொழுகுவோன்  இம்மை  மறுமை  இன்பங்களை  யெய்துவான்.

     எல்லா  வுயிர்களுக்கும்  அருட்குணமே  சிறந்த  அறமாகும் . ஆதலின், அரசன்  அவ்வருளினாலேயே  எளியோரைக்  காத்தல்  வேண்டும் .   159

     அரசன்  தனக்கு  இன்பம்  விழைந்து  அதனிமித்தம்  எளியோரைத்  துன்புறுத்தலாகாது. துன்புறுத்துவானாயின் , துன்புறூஉம்  எளியோன்  தன்  இறப்பால்  அவ்வரசனை  யழிப்பவனாவன் .                                    160

15 . நல்லார் இணக்கம்

நல்லோன்  அறமும்  இன்பமுமாகிய  இவற்றின்  பொருட்டு  நன்மக்களோடு  பழகுதல்  வேண்டும் . நன்மக்களாற்  சூழப்படுவோன்  மிக்க  விளக்கமெய்துவான் .                                                                          161

     தண்கதிர்ச்  செல்வனாகிய  சந்திரன்  புதிய  குவளை  மலர்களை  யலர்த்தி ஓடையை  விளங்கச்  செய்தல்போல் , நல்லோர்  தம்  உயர்ந்த  செயற்களாற்  றம்மை  அடுப்பவர்களின்  மனத்தை  இன்புறச்செய்வர்.

     முதிர்வேனிற்  காலத்துக்  கதிரவன்  கிரணங்களால்  வெதும்புவதும் , மிக்க  அச்சத்தை  விளைவிப்பதும், அணுகவொண்ணாததுமாகிய  பாலை  நிலத்தைப்  போல , மிக்க  கேட்டினை விளைவிக்கும்  தீயோர்  கூட்டுறவை  யொழித்தல்  வேண்டும் .                                                     163

     தீயோர்கள்  சேர்க்கையிலும் , மூச்சுக்  காற்றுக்களால்  வெளிப்படும்  தீயின்  புகையினாற்  கருதிய  செவ்வியநிறம்  வாய்ந்த  முகங்களையு டைய  நச்சுப்பாம்புகளோடு  பழகுதல்  நன்றாம் .                                 164

     நலத்தை  விரும்புவோன்  யாவராலும்  மதிக்கப்படும்  நல்லோர்க்குச்  செய்யும்  வணக்கத்திலும்  விசேடமாகத்  தீயோர்க்குச்  செய்தல்   வேண்டும் .                                                                                                          165

( தீயோர்களை  இன்சொற்களால்  மகிழ்வித்து  விலக்கல்  வேண்டுமென்பது கருத்து .)

16 . இன்சொற் கூறல்

     இன்சொற்களால்  எப்பொழுதும்  உலகத்தை  மகிழ்வித்தல் வேண்டும்.  கடுஞ்சொற்  கூறுவோன்  கொடையாளனாயினும்  உயிர்களை  வெறுக்கச்  செய்பவனாவன் .                                                 166

     நல்லறிவுடையோன்  தான்  பிறராற்  றுன்புறுத்தப்படினும் , அவரை  நோக்கி  நெஞ்சத்தைப்  பிளப்பதுபோல்  மிக்க  வெதுப்பஞ்  செய்யும்  கடுஞ்சொற்களைக்  கூறலாகாது .                                                                  167

     மயில்  தனக்கு  இயற்கையாக  வாய்ந்த  கேகை  யென்னும்  இனிய  ஒலியையே  யாண்டுஞ்  செய்தல்போல , நல்லோர்  நட்டோரிடத்தும்  பகைவரிடத்தும்   என்றும்  விரும்பத்தக்க  இன்சொற்களையே  கூறுவர்.                                                                                                                   168

     களிப்பு  மிக்க  அன்னம் , குயில் , மயில்  என்பவற்றின்  ஒலி யினுஞ்  சிறக்கப்  புலவர்கள்  கூறும்  இன்சொற்கள்  நன்கு  பிறர்  மனத்தைக்  கவர்வனவாம் .                                                                                                 169

     பிறரை  மகிழ்வித்துப்  பெருமைப்படுத்துவதில்  விருப்பமும்  இன்சொற்கூறுதலும்  உடையார் , மனிதவுடலைப்  பெற்றும் , யாவரானும்  பாராட்டப்படும்  இயல்பு  வாய்ந்த  பெருஞ்  செல்வர்களாகிய  தேவராவர் .                                                                  170                                                                                                   

( இக்கருத்தை  “வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையுந்  தெய்வத்துள்  வைக்கப்படும் “ என்னுந்  திருக்குறளிலுங்  காண்க )

     பிறரை  வயப்படுத்துதற்கு  உயிர்களிடத்து  அருளும் , நட்புரிமையும்  கொடையும்  இன்சொல்லுமாகிய  இவைகளை யொப்ப  மற்றொன்று  இம்மூன்றுலகத்திலு மின்றாம் .                                                                     171

     அரசன்  கடவுளுண்மையை  மேற்கோடலாற்  றூய்மை யுடையனாய்க்  கடவுளை  யென்றும்  வழிபடல்  வேண்டும் . கடவுளை   யொப்ப  இருமுது  குரவர்  முதலியோரையும் , தன்னையொப்பச்  சுற்றத்தார்  நட்டோர்  முதலியோரையும் , வைத்துப்  பேணல்  வேண்டுமென்பது  மறையின்  றுணிபாம் .                                              172

     அரசன்  வேதவேதாங்கங்களை  யுணர்ந்தவர்களாற்  சூழப்பட்டுப்  பெரியோர்களையும்  குரவர்களையும்  வணக்கத்தினாலும் , தனக்கு  நலம்  உண்டாதற்பொருட்டுத்  தேவர்களை  நற் கருமத்தாலும்  அனு கூலர்களாகச்  செய்துகோடல்  வேண்டும் .                                             173

     நண்பரையும்  சுற்றத்தாரையும்  நல்லெண்ணத்தாலும் , மகளிரை  அன்பினாலும் , ஏவலாளரை  விசேட  உபகாரத்தாலும் , மற்றை  மக்களைக்  கண்ணோட்டத்தாலும்  வயப்படுத்தலாம் .                      174

    வலிமையும் , மதிநுட்பமும் , வீரமும் , வேண்டிய அளவு  மேற்கொள்ளும்  பராக்கிரமமுடைய  அரசன்  பெருநிலவேந்தனாய்ச்  செல்வம்  நிறைந்த  இந்நிலவுலகத்தை  அனுபவிப்பவனாவன் .      175

     பராக்கிரமும்,  வலிமையும் , மதிநுட்பமும் , வீரமுமாகிய  இவைகளே  சிறந்த  குணங்களாம் . இவைகள்  வாய்க்கப்  பெறாமல்  இவற்றிற்கு  வேறான  குணங்கள்  அமையப்பெற்ற  அரசன்  மிக்க  பொருளுடைய னாயினும் , நிலப்பகுதியின்  ஒரு  சிறு  கூற்றையும்  அனுபவிப்பா னல்லன் . அதுவன்றி , விரைந்து  இராச்சியத்தினின்றும்  நழுவிடுவான். அரசர்கட்குரிய  வலிமை  முதலிய  இக்குணங்களாலேயே  சிற்றரசனும்  தவறாத  ஆணையும்  ஒளியும்  உடையனாய்  அக்குணங்களமையப்  பெறாத  பெரும்பொருள்  படைத்த  வேந்தனினும்  சிறப்புற  விளங்குவான் . மற்றைச்  சாமானிய  மக்கள்  நிலத்தை யடக்கியாள் வதிற்  றிறமையற்றவராவர்.                                                                    176-178

     இவ்வுலகம்  எல்லாப் பொருட்கும் இருப்பிடமாதலின் , இதன்  பொருட்டே  தேவதானவர்களின்  போர்  நிகழ்ந்தது . அரசர்கள்  இந்நிலத்தின்  பொருட்டே  தம்  உயிரையும்  விடத்துணிகின்றனர்.  179

     எவ்வரசன்  தன்  அனுபவத்தின்  பொருட்டுப்  பொருளையும்   உயிர்வாழ்தலையும்  பேணி , நிலத்தைக்  காவாதொழிகின்றானோ , அவ்வரசனுக்கு  அப்பொருளானும் , உயிர்வாழ்தலாலும்  வரக்கடவதாகிய  பயன்  யாது?                                                                     180

     ஒருவனுக்கு  மேன்மேலும்  வருவாயின்றேல் , இருப்புப்பொருள்  விரும்பியவாறு  மிகுதியாகச்  செலவு  செய்தற்குப்  போதியதாகாது . உண்மையாகவே  குபேரனுக்கும்  அவ்வாறாம் .                                      181

     இத்தகைய  குணங்கள்  வாய்க்கப்  பெற்ற  அரசனே  பாராட்டப்படு வான் . அரசர்  குலத்திற்  பிறந்ததனால்மட்டிற்  பாராட்டப்படுவா னல்லன் . வலிமை , வீரம் , பராக்கிரம  முதலிய  குணங்களாலுண்டாம்  பெருமை  குலப்பிறப்பாற்  பெறத்தக்கதன்று .                                           182

17 . அரசர்களைப்  பற்றிய  வகைகள்

     குடிகளைத்  துன்புறுத்தாமல்  ஒவ்வோராண்டிலும்  ஓர்  இலக்கம்  கருடம்  என்னும்  அளவுள்ள வெண்பொற்  காசுகளை  யுறுதியான  வருவாயாகவுடைய  அரசன்  சாமந்தன் என்று  சொல்லப்படுவான் . அக் காசு  ஓர்  இலக்கத்திற்கு  மேல்  மூன்றிலக்கம்  அளவு  யாண்டு  தோறும்  வருவாயாகவுடையவன்  நிருபன்  என்று  கூறப்படுவான் . அதற்குமேல்  அக்காசு  பத்திலக்கம்  வரை  யாண்டுதோறும்  வருவாயாக  வுடையவன்  மாண்டலிகன்  என்று  கூறப்படுவான் .183-184

( கருடம் – இது வடமொழியில் ‘ கர்க்ஷம்’  எனப்படும் ; பத்து மாட  அளவினது. மாடம் ஒன்று . பத்துக்  குன்றிமணி  எடை  கொண்டதாகும் . இதனை  2 ஆம்  அத்தியாயம்  385  ஆம்  சுலோகத்திற்  காண்க . வெண்பொன் – வெள்ளி . )

     பத்தின் மேல்  இருபது இலக்கம்  வரை அக்காசு  யாண்டுதோறும்   வருவாயாகவுடையவன்  அரசன்  எனப்படுவான் . இருபதின்  மேல்  ஐம்பது  இலக்கம்  வரை  யாண்டு  தோறும்  வருவாயாகவுள்ளவன்  பேரரசன்  என்று  கூறப்படுவான் .                                                                  185

     ஐம்பது  இலக்கமுதல்  ஒரு கோடிவரை  வருவாயாகவுடையவன்  சுராட்டு  எனப்படுவான் .  ஒரு  கோடி முதல்  பத்துக்கோடிவரை  வருவாயாகவுடையவன்  சம்மிராட்டு  என்று  சொல்லப்படுவான் .  பத்துக்கோடி  முதல்  ஐம்பது  கோடிவரை  வருவாயாகவுள்ளவன்  விராட்டு  எனப்படுவான் . அதற்குமேல்  ஏழு  தீவங்களையுமுடைய  நிலமுழுதையும்  தன்வயப்படுத்தாள்பவன்  சார்வபெளமன்  என்னும்  சக்கரவர்த்தியாவன் .                                                                          186 -187

     தனக்குரிய  அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலாற்  குடிகளின்  ஏவலாளாந் தன்மையெய்திய  அரசன் , எப்பொழுதும்   குடிகளைக்  காத்தலாற்  றலைவனாகப்  பிரமனாற்  செய்யப்பட்டான் .

( குடிகளையோம்புதலே  அரசன்  கடமையாதலின் , அது குறித்துக்  குடிகள்பாற்  பெறும்  இறை  அவனுக்கு   வேதனமாம் என்பதும் , ஏவலாளாந்தன்மை யுடையானென்பதுங்  கருத்து .)

     இவ்வுலகில்  வேதனத்தினிமித்தம்  காத்தற்றொழிலை  மேற்கொண்டு  சாமந்தன்  முதலியவர்களை  யொப்ப  அரசியற் றொழில்  புரியும்  அதிகாரிகள் , முறைப்படி  அரசனுக்குரிய  இறைப்பொருள்களைக்  கொள்வோராய்ச் , சாமந்தன்  முதலிய  பெயர்களையும்  உடையராவர் .                                                                  189

( சாமந்தன்  என்னும்  பெயர் , ஓர்  அரசன்கீழ்  வேதனம்  பெற்று  அவ்வரசனுக்குரிய  கூறுகளையும்  இறைப்பொருள்களையும்  குடிக ளிடத்தினின்றும்  வாங்கி  அரசனுக்குச்  செலுத்தும்  அதிகாரிகளுட்  சிலர்க்கும்  பொருந்துவதாகும் .  அவ்வதிகாரிகள்  முற்கூறிய  சாமந்த  அரசனுக்குரிய  வருவாயளவு  பொருள்களை  வரவு செலவு  செய்பவராக  இருக்கவேண்டுமென்பது  கருத்து . )

     சாமந்தன் முதலிய  நிலைகளினின்றும்  பிறழ்ந்தவர்களாயினும் , பேரரசன்  முதலியோரால்  அவ்வந்  நிலைக்குத்தக  வேதனந்தந்து  காக்கப்படுவோர்  ஈன  சாமந்தன்  முதலிய  பெயர்களையுடை யவராவர் .                                                                                                             190

     நூறு  சிற்றூர் (கிராமங்)  களுக்குத்  தலைவனாகவுள்ளவனும்  சாமந்தன்  என்னும்  பெயரையுடையவனாவான் . அரசனால்  நூறு  சிற்றூர்களுக்கு  அதிபதியாக  நியமிக்கப்படுபவன்  அநுசாமந்தனாவான் .                                                                                        191

( அநுசாமந்தனாவான் –  அரசனிடத்தினின்று  வேதனம்  பெற்று  நூறு  கிராமங்களுக்கு  அதிகாரியாயினான் . )

     பத்து  சிற்றூர்களுக்கு  அதிபதியாக  நியமிக்கப்படுபவன்  நாயகன்  என்று  சொல்லப்படுவான் .  பதினாயிரம்  ஊர்களின்  அரசிறைப் பொருள்களைக்  கொண்டு  சேர்ப்பவன்  திக்குப்பாலன்   எனவும்  சுராட்டு  எனவுங்கூறப்படுவான் .                                                                    192

18 . நிலத்தின்  அளவு  வகைகள்

     ஒரு  குரோச  அளவுள்ளதும் , ஆயிரங்கருட அளவுள்ள  வெண் பொற்  காசுகள்  அரசிறையாகப்  பெறத்தக்கதும் கிராமமென்று  சொல்லப்படும் .  அக்கிராமத்தின்  அரைக்கூறு  பல்லி  எனவும் , அதனின்  அரைக்கூறு  கும்பம்  எனவுங்  கூறப்படும் .                       193                         

     ஐயாயிர  முழம்  ஒரு  குரோசமாகுமென்று  பிரசாபதியினாலும் , நாலாயிரமுழம்  ஒரு  குரோசமாகுமென்று  மனுவினாலுஞ் சொல்லப்பட்டன .

பிரசாபதி – பிரமன் .)

     பிரமாவின்   கொள்கைப்படி  இரண்டரைக்கோடி  முழங்களாதல்  இரண்டாயிரத்தைஞ்ஞூறு  சதுர  நிவர்த்தனங்களாதல்   ஒரு  குரோசத்தின்  சதுர  அளவாகும் .                                                                  195

( இதன்  முற்சுலோகத்தில் பிரமன் கொள்கைப்படி  ஐயாயிர முழம் ஒரு குரோசமாகுமென்றமையால் , அவ்வையாயிரத்தைச்  சதுர  அளவில்  வைத்துப்  பெருக்க  இரண்டரைக்கோடி  முழமாதலும் , நிவர்த்தனம்  ஒன்றுக்கு  முழம்  நூறாதலின் , அந்நூற்றைச்  சதுர  அளவிற்  பெருக்க  அந்நிவர்த்தனம்  ஒன்றுக்கு  முழம்  பதினாயிரமாதலும் , அப்பதினா யிரத்தை   இரண்டாயிரத் தைஞ்நூற்றாற்  பெருக்க  முற்குறித்த  இரண்டரைக் கோடி  முழம்  பொருத்தமாதலுங்  காண்க . முதனூலா சிரியர்  சதுர  அளவுள்ள  நிலத்தைக்  கேத்திரம்  என்ப . முழத்தின்  அளவையும் , நிவர்த்தன அளவையும்  197 , 200 , 202  – ஆம்  சுலோகங்களிற்  காண்க )

     நடுவிரலின்  நடுவண்  உள்ள  இரண்டு  கணுக்களின்  நடுப்பாக  நீளம்  அங்குலமென்று  கூறப்படும் . யவமென்னும்  தானியத்தின்  நடுப்பாகம்  எட்டுக்கொண்ட  நீளமும்  அதன்  ஐந்து  கொண்ட  அகலமும்  ஓர்  அங்குலமாகும் .                                                                       196

(அங்குலத்துக்குக்  கூறிய  அகலம்  அளவையிற்  பயன்படுவதன்று . சிற்பத்துக்கிது  கருவியாதலின் , செய்கையாங்கால்  பயன்படவுங்  கூடும் . “நூறுமுழநீள அகலத்தின்  ஓரில்லம்  அமைக்க” என்று  சுருக்கிக்  கூறுங்கால்  , யவம்  எட்டுக்கொண்ட  அங்குலம்  இருபத்து நான்கு ஒரு முழமாக  நீளத்திலும், யவம் ஐந்து கொண்ட அங்குலம் இருபத்தி நான்கு முழமாக அகத்திலும்  அளப்பிற்கிழமேல்  நீண்டும்  தென்வடல்  குறுகியும்  இருக்கும் . )

     அவ்வங்குலம்  இருபத்துநான் கு  கொண்டது  ஒரு  முழமாகும் என்று  பிரசாபதியால்  எண்ணப்பட்டது . நில அளவையில்  இம்முழ அளவே  சிறந்ததாகும் . இஃதன்றி  மற்றை  முழ அளவுகள்  தாழ்ந்தனவாக  எண்ணப்பட்டன .                                                                                                 197

     நான்கு  முழங் கொண்டது  ஒரு  கோல் எனவும் , ஐந்து  முழங்  கொண்டது  இலகு  எனவும்  கூறப்படும் . அக்கோலுக்குரிய  அங்குலம்  ஒன்று , ஐந்து  யவதானியத்தின்  நடு  அளவு  அறுநூறு  கொண்டது  ஒரு  கோலாகுமென்பது  மனுவின்  கருத்தாகும் .                                               198

( கோலை  முதனூலார்  தண்டமென்ப .)

     யவதானியத்தின்  நடுப்பாகம்  எழுநூற்றறுபத்தெட்டுக்  கொண்டது  ஒரு  கோலாகுமென்பது  பிரசாபதியின்  கருத்து . யவதானியத்தின்  நடு  அளவு  அறுநூறு  கொண்டது ஒரு  கோலாகுமென்பது  மனுவின்  கருத்தாகும் .                                                                                                          199

( பிரசாபதி கருத்தின்படி  யவம்  எட்டுக்  கொண்டது  ஓர்  அங்குலமும், அவ்வங்குலம்  இருபத்து  நான்கு  கொண்டது  ஒரு  முழமுமாகுங்கால் , அம்முழம்  நான்கு  கொண்ட  கோல்  ஒன்றுக்கு  யவதானியம்  எழுநூற்றறுபத்தெட்டு  ஆதல்  காண்க . மனுவின் கொள்கைப்படி  யவம்  ஐந்து  கொண்டது  ஓர்  அங்குலமும் , அவ்வங்குலம்  இருபத்து நான்கு  கொண்டது  ஒரு  முழமுமாகுங்கால் , அம்முழம்  ஐந்து  கொண்ட  கோல்  ஒன்றுக்கு  யவதானியம்  அறுநூறாதல்  காண்க . இதனால்  ஐந்து  முழங்  கொண்டது  ஒரு  கோலாகுமென்பது  மனுவின்  கொள்கை  யென்று  புலப்படுகின்றது . )

     மனு  பிரசாபதி  இவ்விருவர்களின்  கொள்கைப்படி  இருபத்தைந்து  கோல்கள்  கொண்டது  நிவர்த்தனமென்று  கூறப்படும் . மனுவின்  கொள்கைப்படி  மூவாயிரம்  அங்குலங்களாதல் , பதினையாயிரம்  யவதானியத்தின்  அளவாதல் , நூற்றிருபத்தைந்து , முழமாதல்  ஒரு  நிவர்த்தனமாகும் .                                                                                             200

( மனுவின்  கொள்கைப்படி  கோல்  ஒன்றுக்கு  முழம்  ஐந்தாகக்  கோல்    இருபத்தைந்திற்கு  முழம்  நூற்றிருபத்தைந்தாதலும் , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  நூற்றிருபதாகக்  கோல்  இருபத்தைந்திற்கு  அங்குலம்  மூவாயிரமாதலும் , அங்குலம்  ஒன்றிற்கு  யவதானியம்  ஐந்தாகப்  பதினையாயிரமாதலுங்  காண்க .)

     பிரசாபதியின்  கொள்கைப்படி  பத்தொன்பதினாயிரத்து   இரு  நூறு  யவதானியத்தின்  அளவாதல் , இரண்டாயிரத்து  நானூறு அங்குலங்களாதல் , நூறு  முழமாதல்  ஒரு  நிவர்த்தனமாகும் .             202

( பிரசாபதி  கொள்கைப்படி  கோல்  ஒன்றிற்கு  முழம்  நான்காகக்  கோல்  இருபத்தைந்திற்கு  முழம்  நூறாதலும் , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  தொண்ணூற்றாறாகக் கோல்  இருபத்தைந்திற்கு  அங்குலம்  இரண்டாயிரத்து  நானூறாதலும் , அங்குலம்  ஒன்றிற்கு  யவதானியம்  எட்டாகப்  பத்தொன்பதினாயிரத்து  இருநூறாதலுங்  காண்க . )

     பிரசாபதி  மனு  இவ்விருவர்களின்  கொள்கைகளின்படி  அறு  நூற்றிருபத்தைந்து  கோலாதல் , இருபத்தைந்து  நிவர்த்தனங்களாதல்  கொண்டது  பரிவர்த்தனமென்று  கூறப்படும் .                                          203

     மனுவின்  கொள்கைப்படி  எழுபத்தையாயிரம்  அங்குலமும் , பிரசாபதியின் கொள்கைப்படி  அறுபதினாயிரம்  அங்குலமும்  கொண்டது  பரிவர்த்தனமாகும் .                                                                    204

( மனுவின்  கொள்கைப்படி  ஐந்து  முழங்கொண்ட  கோல்  அறுநூற்றிருபத்தைந்திற்கு , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  நூற்றிருபதாக  அங்குலம்  எழுபத்தையாயிரமாதல்  காண்க . பிரசாபதியின்  கொள்கைப்படி  முழம்  நான்கு  கொண்ட  கோல்  அற்நூற்றிருபத்தைந்திற்கு , கோல்  ஒன்றிற்கு  அங்குலம்  தொண்ணூற்றாறாக  அறுபதினாயிரமாகும் .)  

     மனுவின்  கொள்கைப்படி  மூவாயிரத்து  நூற்றிருபத்தைந்து  முழமாதல் , முந்நூற்  றெழுபத்தையாயிரத்து  யவதானியத்தின்  அளவாதல்  பரிவர்த்தனமாகும் .                                                          205-206

( மனுவின்  கொள்கைப்படி  கோல்  அறநூற்றிருபத்தைந்திற்குக்  , கோல்  ஒன்றிற்கு  முழம்  ஒன்றிற்கு  ஐந்தாக  முழம்  மூவாயிரத்து  நூற்றிருபத்தைந்தாலும் , முழம்  ஒன்றிற்கு  யவம்  முந்நூற்றெழுபத் தையாயிரமாதலுங்  காண்க . பிரசாபதியின்  கொள்கைப்படி  கோல்  அறுநூற்றிருபத்தைஞ்நூறாதலும் , முழம்  ஒன்றிற்கு  யவம்  நூற்றுத் தொண்ணூற்றிரண்டாக  யவம்  நானூற்றெண்பதினாயிர  மாதலுங்  காண்க . )       

     மனுவைப்  பின்பற்றி  யொழுகும்  வேறு  சிலர்  முப்பத்திரண்டு  நிவர்த்தனங்களாதல் , நாலாயிர  முழங்களாதல் ,எண்ணூறு  கோல்களாதல்  ஒரு  பரிவர்த்தனமாகுமென்று  கூறுவர் .                207

( இதன் கட்  கூறிய  பரிவர்த்தன  அளவு  நன்றாகும் . )          

     அப்பரிவர்த்தன  அளவுவிடயத்தில்  , இருபத்தைந்து  கோல்கள்  கொண்டது  ஒரு  புயமாகும் .  அப்புயத்தின்  சதுர அளவு  பதினாயிர  முழங்களாகும் .                                                                                             208

( இதன்  முற்சுலோகத்தில்  பரிவர்த்தனமாகிய  பேரளவிற்கு  அங்கமாக  முழம்  கோல்  நிவர்த்தனங்கள்  கூறப்பட்டன . இதன்கண் , அப்பேரளவிற்கு  அங்கமாகப் ‘புயம்’  என்பதொன்றைப்  புதிதாகக்  கூறுகின்றார் . பெயரளவில்  வேறுபட்டிருப்பினும் , எண்ணில்  நிவர்த்தனமும்  புயமும்  ஒன்றாகும் . கோல்  ஒன்றுக்கு  முழம்  நான்காகக் கோல்  இருபத்தைந்திற்கு  முழம்  நூறாகும் . அந்நூற்றைச்  சதுர  அளவிற்  பெருக்க  முழம்  பதினாயிரமாதல்  காண்க .

பிரசாபதி                                    மனு                                               அளவு

யவம்-8                                          யவம்-5                                          அங்குலம்-1

அங்குலம்-24                                அங்குலம்-24                                முழம்-1

முழம்-4                                          முழம்-5                                         கோல்-1

கோல்-25                                       கோல்-25                                       நிவர்த்தனம்-1

நிவர்த்தனம்-25                           நிவர்த்தனம்-25                          பரிவர்த்தனம்-1

முழம்-5000                                    முழம்-5000                                   குரோசம்-1

     நான்கு  புயங்கனின்  அளவுள்ளது  உழவுநிலப்  பரிவர்த்தனமென்று  கூறப்படும் . அரசன்  நிலப்பரப்பை எப்பொழுதும்  பிரசாபதியின்  அளவுப்படி  அளத்தல்  வேண்டும் . தனக்குக்  கேடுவிளையுங்கால்  மனுவின்  அளவை  மேற்கொள்ளல்  வேண்டும் . வேறுவிதமாக  அளத்தல்  கூடாது . பேராசையால்  நில அளவை  வேறுபடுத்துக்  குடிகளைத்  துன்புறுத்தும்  அரசன்  தன்  குலத்தோடு  கேடெய்துவான் .

( கேடு  விளையுங்கால்  மனுவின்  அளவைக் கொள்ளவேண்டுமென்பது  அவ்வளவின்  குறைவு  பற்றிப்  போலும் . )

     அரசன்  இரண்டங்குல  அளவுள்ள  நிலத்தையேனும்  பிறர்  பொருட்டுக்  கொடுத்தலாகாது .  அன்றிக்  கொடுக்க  நேர்ந்தால் , பெறுவோன்  வாழ்நாள்  அளவுஞ்  சீவித்தற்  பொருட்டுத்  தன்  உரிமையை  விட்டுக்கொடுக்கலாம் .                                                       211

     நற்குணமுள்ள  அரசன்  தேவாலயங்  கட்டுதற்பொருட்டு  எப்பொழுதும்  நிலங்கொடுத்தல்  வேண்டும் . அங்ஙனமே  இல்லறத்  தொழுதுவோரை  யாராய்ந்து  அவர்  வீடு  கட்டுதற்  பொருட்டேனும் , ஆராமம் [பூந்தோட்டம்] அமைத்தற்பொருட்டேனும்  நிலங்கொடுத்தல்  வேண்டும் .                                                                                                         212

19 . இராசதானி யமைத்தல்

     பலவகை  மரங்கொடிகள் அடர்ந்ததும் , விலங்கினம்  பறவைத்  தொகுதிகளையுடையதும் , மிக  நிரம்பிய  நீர்வளத்தையும்  தானியங்களையுமுடையதும், எப்பொழுதும் புல்  விறகுகள்  எளிதிற்  பெறத்தக்கதும் , கடல்வரை  தோணிகளால்  சென்று வருதற்குரிய  சாதனங்கள்  அமைந்ததும் , மிக்க  அணிமையில்  மலையினை யுடையதுமாகிய அழகிய  சமநிலத்தில்  இராசதானித்  தலைநகர்  அமைத்தல்  வேண்டும் .                                                                             213-214

     நிறைமதியின்  அரைக்கூறு , வட்டம் , சதுரம்  என்னுமிவற்றுள்  ஒன்றன்  வடிவமைந்து  எழில்  வாய்ந்ததாகவும் , அரணும்  அகழியும்  கிராம  முதலிய  பகுதிகளும்  இடையிடையே   மன்றங்களுமாகிய  இவற்றையுடையதாகவும் , கிணறு  ஓடை  ஊருணி  முதலிய  நீர்  நிலைகளும்  நாற்புறமும்  பெருவாயில்களும்  அழகிய  தெருக்களும்  உபவன  வரிசைகளும்  உறுதியான  தேவாலயங்களும்  மடங்களும்  வழிச்செல்வோர்  தங்குமிடங்களுமாகிய  இவற்றால்  விளங்குவதாகவும்  இராசதானித்  தலைநகரை  யமைத்து , அதன்கண்  அரசன்  எப்பொழுதும்  காவலையுடையனாய்ப்  புதல்வர்  முதலியவர்களோடு  கூடியிருந்து  வாழ்தல்  வேண்டும் .                  215-217

     அத்தலைநகரில்  அமைக்கப்படும்  அரண்மனை  நடுவண்  அத்தாணி  மண்டபத்தையுடையதாகவும், பசு , குதிரை , யானை  என்பவற்றின்  சாலைகள்  அமையப்பெற்று  அழகிய  வாவி  கிணறு  நீர்ப்பொறி  முதலியவற்றால்  நன்கு  திகழ்வதாகவும், எப்புறத்தும்  ஒத்த  அளவினவாகிய  பக்கங்களையுடையதாகவும் , தென்பாலுயர்ந்து வடபால்  தாழ்ந்ததாகவும் , ஒன்றுக்கொன்று  எதிர்முகமாகவமைந்த  நான்கு  பெரிய  அறைகளையுடைய  இல்லமல்லாத  மற்றைச்  சாலைகள்  பலபக்கங்களையுடையனவாக  விருப்பின்  பெரும்பாலும்  நலமில்லாதனவாமாதலின்  அச்சாலைகட்கின்றி  ஒற்றைப்படையான  பலபக்கங்கள் அமையப்பெற்றதாகவும் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலங்களைத்  தாங்கி  நிற்கும்  வீரர்களாற்  காக்கப்படும்  மதிற்சுவர்களையும்  சிறந்த  நாளிக  முதலிய  எந்திரப்படைகளை யுமுடையதாகவும் , மூன்று  கட்டுக்களோடு  கூடியதாகவும் , நாற்புறத்தும்  நன்கு  அலங்கரிக்கப்பட்ட  நான்கு  வாயில்களையுடையதாகவும், அம்பு  வாள்  முதலிய  படைக்கலங்களைத்  தாங்கி  நிற்கும்  யாமங்காப்போர்  நால்வராதல்  ஐவராதல்  அறுவராதல் மாற்றுமுறைப்படி  பகலிலும்  இரவிலும்  ஒவ்வொரு  கட்டிலும்  நின்று  என்றுங்  காக்கப்படுவதாகவும், பல்வகை  உருவமைந்த  இல்லங்கள்  காழகவில்லங்கள்  மேன்மாளிகைகள்  என்பவற்றோடு  கூடியதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                218-222

( காழகவில்லம் – ஆடையானமைந்த  வீடு .)

20. தனித்தனி  இல்லம்  அமைத்தல்

         ஆடை  முதலியன  ஒலித்தல்  நீராடல்  வேள்வி  முதலிய  தேவகாரியஞ்  செய்தல்  உண்டல்  அடுதல்  என்னும்  இவற்றிற்குரிய  இல்லங்களைக்  கீழ்பால்  அமைத்தல்  வேண்டும் .                                223

     துயிலல்  விளையாடல்  குடித்தல்  அழுதல்  தானியம்  வைத்தல்  திரிகை  முதலியன  வமைத்தல்  பணிப்பெண்கள்  ஏவலாளர்  இருத்தல்  மலமூத்திரம்  விடுதல் என்னுமிவற்றிற்குரிய  இல்லங்களை  முறைப்படி  தென்பால்  அமைத்தல்  வேண்டும் . பசுநிரை , மான் , ஒட்டகம் , யானை  என்னுமிவற்றின் பொருட்டுத்  தனித்தனிக்  கிருகங்கள்  மேல்பால்  அமைத்தல்  வேண்டும் .                               224-225

     தேர் , குதிரை , அம்பு , வாள்  முதலிய  படைக் கலங்களாகிய  இவற்றிற்கும் , உடற்பயிற்சி  செய்தற்கும் , யாமிகர்  இருத்தற்கும் , ஆடை , பொன் , பொருள்களைக்  காத்தற்கும் , கல்விப்பயிற்சி செய் தற்குமுரிய  இல்லங்களைக்  காவல்  நன்குடையனவாகவும்  அழகமைந்தனவாகவும்  வடபால்  அமைத்தல்  வேண்டும் . அன்றி , அரசன்   தன்  நலத்திற்குரியவாறு  இங்குக்கூறிய  இல்லங்களை அமைத்துக்கோடலும்  பொருந்தும் .                                                     226-227

     நீதிமன்றம்  சிற்பசாலை  யென்னுமிவற்றை  அரண்மனையின்  வடபால்  அமைத்தல்  வேண்டும் . அவ்வில்லங்களிலெடுக்குஞ்  சுவர், அவ்வில்லங்களின்  அகலத்தில்  ஐந்திலொருகூறு  மிகுதியான  உயரமுடையதாக  இருத்தல்  வேண்டும் .                                               228

( ஓர்  அறையின்  அகலம்  ஐந்து  முழமாயிருக்குமாயின்  அவ்வறையில்  எடுக்கப்படும்  சுவர்  அவ்வறையின்  அகலத்தின்  ஐந்திலொரு  கூறான  ஒரு  முழங்கூட்டி  ஆறு  முழ உயரமாக  எடுக்கப்படவேண்டுமென்பது  கருத்து . )

     அச்சுவரின்  அகலம் , அவ்வக் கோட்டங்களின்    அகலத்தில் ஆறில்  ஒருகூறு  அளவுடையதாக  விருத்தல் வேண்டும் . யாண்டும்  ஒரு  மேற்றளத்தினையுடைய  இல்லத்திற்கு  இவ்வுயர்ச்சியின் அளவே  சிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.                                                                229

( இவ்வுயர்ச்சியின்  அளவென்றது  முற்சுலோகத்திற்  கூறப்பட்ட  வுயரத்தை  மேற்றளம் – இட்டிகையும்  சுண்ணாம்புஞ்  சேர்த்துப்  படுத்த  இல்லத்தின்  மேற்பரப்பு  இதனை  முதனூல் ‘பூமிகை’  என்று  கூறும் . )  

     தூண்களானாதல்  சுவர்களானாதல்  வேறுபடுத்து  இல்லப்பகுதி களை  யமைத்தல்  வேண்டும் . அவ்வில்லம்  மூன்று  கோட்டங்களை    யுடையதாகவாதல் , ஏழு  கோட்டங்களை  யுடையதாகவாதல்  அமைக்கப்பட்டு , வாயிலின்பொருட்டு  எண் கூறாகப்  பகுக்கப்படல்  வேண்டும் .   நாற்புறங்களிலும்  வாயிலின்  கூறாகவுள்ள  நடுப்பாகம்  இரண்டிரண்டாக  நிருமிக்கப்படுமாயின் , அவை  மக்களுக்குப்  பொருட்பேறு  புதல்வர்ப்பேறுகளைப்  பயப்பனவாம் .               230-231

( கோட்டம் – இல்லத்தின்  நடுப்பாகம் ; அறை . பின்வரும்  இடங்களிலும்  இவ்வாறே  கொள்க . ஒரு  கோட்டத்தின்  ஒவ்வொரு  பக்கத்தையும்  இரண்டிரண்டு  கூறாக்க  எண் கூறாகும் . வாயிலின்  கூறாகவுள்ள  நடுப்பாகம்  இரண்டு  என்றது , இரண்டு  கூறுபடுத்தப்பட்ட  ஒரு  பக்கத்தின்  நடுவினின்று  வாயிலினிமித்தம்  இருமருங்குங்  கொள்ளப்பட்ட  இரண்டு  கூறுகளை ; நாற்புறமு நோக்கி  இரண்டிரண்டாக  என்று  கூறப்பட்டது . நாற்புறத்திலும்  நான்கு  வாயில்கள்  அமைக்க  வேண்டுமென்பதும்  , ஒவ்வொரு  பக்கத்திலும்  நடுவிடம்  தொடங்கி  இருமருங்கும் ஒத்த  அளவு  கொண்டு  வாயில்  அமைக்க வேண்டுமென்பதும்  கருத்து . )  

     அங்ஙனம்  பிரிக்கப்பட்ட  கூறுகளிலேயே  வாயில்கள்  அமைத்தல்  வேண்டும் . வேறு  ஓரிடத்தில்  ஒருபொழுதும்  அமைத்தல்  கூடாது . அங்ஙனமே  அப்பகுதிகளில்  இன்பநுகர்தற்கு  வேண்டுமளவிற்  சாளரங்களை  வெவ்வேறாக  அமைத்தல்  வேண்டும் .                     232

     ஓரில்லத்தின்  வாயில் , மற்றோரில்லத்தின்  வாயிலோடு  எதிர்ப்பட்டதாகவும் , அங்ஙனமே  மற்றொரு  வீட்டின்  கோணத்தாலும், தூணினாலும், வழிப்பீடத்தாலும் , கிணற்றினாலும்  தடைப் படும்படியாகவும்  அமைத்தலகாது .                                                       233                                                                                        

( கோணம் – கோடி,  வழிப்பீடம் –  வழிச்செல்வோர்  இளைப்பாறி  யிருத்தற்  பொருட்டு  வழிக்கட்  சுமைதாங்கியோடு  நிழன்மரத்தடி யிலமைக்கப்படும்  பீடம் . தெருக்களில்  சிறிய  தெய்வங்களை  வழிபடுதற் பொருட்டு  அமைக்கப்படுவதுமாம் . இவற்றிற்கெதிராக  ஓரில்லத்திற்கு  வாயில்  அமைத்தலாகாதென்பது  கருத்து . )       

     அரசர்குலம், தேவகுலம்  இவற்றின் வாயில்களுக்கு  எதிரேயுள்ள  வழி  தடைப்படலாகாது. அக்கோயிற்றளம்  அதன்  உயரத்தின்  நான்கிலொரு  கூறு  உயரமுடையதாக  வமைத்தல்  வேண்டும் .         234

( அரசகுலம் – அரண்மனை . தேவகுலம் – திருக்கோயில் , இவற்றின்  வாயில்களுக்கெதிரே  பிற  இல்லமுதலியன  இருத்தலாகாதென்பது  கருத்து . )   

     வேறு  சிலர்  அவ்வரசகுல  தேவகுலங்களின்  தளம்  அவற்றின்  உயரத்திற்  பாதியளவுடையதாக  அமைத்தல் வேண்டுமென்பர் . ஓரில்லத்தின்  சாளரம்  மற்றோரில்லத்தின்  சாளரத்திற்கு  எதிர்முகமாக  இருக்கும்படி  யமைதல்  கூடாது .                                     235

     சுடுமண்களாலாகிய  மேன்மூடல்  அமைக்குங்கால் ,அதன்பால்  விழும்  நீர்  தடையின்றிக்  கீழ்ச்செல்லுமாறு  அவ்வில்லத்தினது  அகலத்து  அளவின்  அரைக்கூறு  நடு  உயர்ந்திருத்தல்  வேண்டும் . அம் மேன்மூடல்  அவ்வுயரத்திற்  குறைவாகவும்  பள்ளமாகவும்  இருத்தலாகாது . அங்ஙனமே  இல்லத்தின்  உட்பரப்பும்  வலியற்றதாகவும்  தாழ்வாகவும்  இருத்தலாகாது .                                   236

( சுடுமண் – ஈண்டு  ஓடு . மேன்மூடல் – அவ்வோடுகளால் மேலிடத்தை  வேய்ந்து  மறைத்தல் ; இதனை  மதனூல்  ‘சதி’  என்று  கூறும் . அரைக்கூறு  நடு உயர்ந்திருத்தலாவது – ஓரில்லத்தின்  அகலம்  ஐந்து  முழமாயின்  அவ்வில்லத்திலெடுக்கப்படும்  சுவரின்  மேலிடத்தினின்று  முகட்டின்  நடு  இரண்டரை  முழம்  உயர்ந்திருத்தல்

21 .  அரண்  அமைத்தல்   

     மதிற்சுவரின்  அடிப்படை , அதன்  உயரத்தின்  சம  அளவாதல் , பாதி  அளவாதல் , மூன்றிலொரு கூறாதல் இருத்தல் வேண்டும் . அதன்  அகலம் , உயரத்தின்  பாதியளவு  இருத்தல்  வேண்டும்.  அதன்  உயரம்  கள்வராற் கடக்க  முடியாவண்ணம்  வேண்டிய  அளவு  உயர்ந்திருத்தல்  வேண்டும் .                                                                                                           238

     அம்மதிலை , யாமங்காப்போரால்  எப்பொழுதுங்  காக்கப்படுவதாகவும் , நெருப்பிறைக்கும்  பொறி  முதலியன , வன்மைமிக்க காவலாளர்க்குரிய  பல  இருப்பிடங்கள் , அழகிய  சாளர  வரிசைகள்  இவற்றையுடையதாகவும் , பகைவர்  மதில்களிலும்  உயர்ந்ததாகவும் , அணிமையில்  மலையில்லாததாகவும்  அமைத்தல்  வேண்டும் .                                                                                                             239

( யாமங்காப்போரை – 290 –ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க .)        

     அம்மதிலின்  வெளிப்புறத்தே அகழியமைத்தல்  வேண்டும் . அஃது  ஆழத்தின்  அளவிலும்  இருமடங்கு  அகலமுடையதாகவும் , மிக்க  அணிமையில்  மதில்  இல்லாததாகவும் , அழகிய  நீர்ப் பெருக்கினை யுடையதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                       240

     போர் செய்தற்குரிய  கருவிகளின்  றொகுதியும் , போர்த்திறன் வாய்ந்த  நல்ல  வீரர்களுமின்றி  அரசன்  அரணுள்  இருத்தல்  நலந்தருவதன்று ;  சிறைப்பட்டிருப்பதாகும் .                                            241

     அரசன்  அத்தாணி  மண்டபத்தை  அழகியதாகவும் , நன்கு  காக்கப்படுவதாகவும் , மூன்று கோட்டம்   ஐந்து கோட்டம்  ஏழு  கோட்டங்களாகப்  பிரிக்கப்பட்டதாகவும் , தென்வடல்  அகன்ற தாகவும், கீழ்மேல்  நீண்டதாகவும் , அன்றி  அகற்சியினும்  இரு  மடங்காதல்  மும்மடங்காதல்  நீண்டதாகவும் , தான்  விரும்பிய  வண்ணம்  ஒன்று  அல்லது  இரண்டு  மூன்று  மேற்றளங்களை யுடையதாகவும் , காழகவில்லம்  மேன்மாளிகைகளோடு  கூடிய  தாகவும் , ஒவ்வொரு  கோட்டமும்  நாற்புறத்துஞ்  சாளரங்களால்  விளங்குவதாகவும்  அமைத்தல்  வேண்டும் . நடுக் கோட்டத்தின்  அகலம் , பக்கத்துக்  கோட்டங்களிலும்  இருமடங்கு  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் .                                                                                242-245

( ஒன்று  அல்லது  இரண்டு  மூன்று  மேற்றளங்களென்பன  பொதுவாக  அப்பரப்புக்களை  யுணர்த்தும் , மேன்மாளிகைகளென்பன . அத்தளப் பரப்புக்களில்  செய்யப்படும்  கிருகவிசேடங்களையுணர்த்தும் .

அத்தாணி  மண்டபத்தின்  நடு  அறையில்  எடுக்கப்படும்  சுவர்  அதன்  அகலத்தின்  அளவோடு  ஐந்திலொரு  கூறு  மிகுதியான  உயரமுடைய தாகவிருத்தல்  வேண்டுமென்பதாம் . அகலம்  பத்து  முழமாயின் , சுவரின்  உயரம்  பன்னிரண்டு  முழமாகும் . )       

     நடுக்கோட்டத்தின்  உயரம் , அதன்  அகலத்தின்  ஐந்திலொருகூறு  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் . அவ்வுயரம்  அகலத்தின்  அளவோடு  ஒத்ததாகவேனும் , அகலத்தின்  ஐந்திலொருகூறு  மிகுதியாக  வேனும்  அமைத்தல்  வேண்டுமென்று  வேறு  சிலர்  கூறுவர் .                             246

     கோட்டங்களுக்கு  மேற்றளத்தினையாதல் , மேன்மூடலையாதல்  செய்வித்தல் வேண்டும் . இருமருங்குமுள்ள  கோட்டங்கள் , தனித்தனி  இரண்டிரண்டு  மேற்றளங்களையுடையனவாக  எடுக்கப்படுமாயின் , நடுக்கோட்டம்  ஒரே  மேற்றளத்தை  யுடையதாக  இருத்தல்  வேண்டும்.

( மேற்றளத்தையும்  மேன்மூடலையும்  முறையே  229-236  ஆம்  சுலோகக்  குறிப்புக்களிற்  காண்க . பக்கத்துக்  கோட்டங்கள்  இரண்டு  தளங்களையுடையவாக  எடுக்கப்படுமாயின்  நடுகோட்டம்  ஒரே  தளமாக  இருக்க  வேண்டுமென்றது, அதன்  அகற்சிக்குத்  தக்க  உயரம்  வேண்டுமென்பது  குறித்தாம் .  நடுக்கோட்டத்தின்  அகலம்  பக்கத்துக்  கோட்டங்களிலும்  இருமடங்கு  மிகுதியாக  இருக்கவேண்டு மென்று  245 ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்டது . )   

     இன்னும்  அவ்வரசமன்றத்தை , தூண்களின்  நடுவண்  அமைந்த  தனிமையான  ஓர்  அழகிய  கோட்டத்தினையுடையதாகவும் , போக்குவரத்திற்குரிய  நான்கு  அழகிய  வாயில்களையுடையதாகவும்  நீரை  மேல்நோக்கிச்  செலுத்தி  வீழ்த்தும்  பொறிகள் , இனிய  இசையை  வெளிப்படுத்தும்  பொறிகள் , போதிய  அளவு  வாயுவை  இயங்கச்  செய்யும்  பொறிகள் , காலமுணர்த்தும்  பொறிகள்  ஆகிய  இவற்றையுடையதாகவும் , நல்ல  கண்ணாடிகளும்  பிரதிமைகளும்  வைக்கப்பட்டதாகவும் , சூழ்தற்கும்  காரியங்களைச்  செய்தற்குமுரிய தாகவும்   அமைத்தல்  வேண்டும்  .  அங்ஙனமே  அரண்மனையினின் றும் நூறு  முழ  அளவு  நிலத்திற்கு  அப்பால்  அமைச்சர்களுக்கும் , எழுத்தாளர்களுக்கும் , மன்றக்  குழுவினர்க்கும் , மற்றை  அரசியல்  அதிகாரிகளுக்கும்  உரிய  இவ்வில்லங்களைத்  தனித்தனியாக  அமைத்தல்  வேண்டும் .                                                                             248-251

( மன்றக் குழுவினர் – அரசன்  பக்கலிருந்து  காரியங்களை  யாராய்ததற்குத்  துணை  செய்பவர் . )                                                                                                                         

     அறிஞனாகிய  அரசன்  முதலில்  அரண்மனைக்கு  அணிமையில்  வடபால்  இருநூறு  முழ  அளவு  நிலத்திற்கு  அப்பால்  எப்பொழுதும்  படைவீரர்கள்  இருத்தற்குரிய  சாலைகளையும் , அவற்றின்  புறத்தே  நான்கு  திக்கினும்  சூழ  முறையே  குடிமக்களுக்குப்  பொருட்சிறப் பானும்  குலச்சிறப்பானும்  வரிசைப்படுத்திய  இல்லங்களையும்  அமைத்தல்  வேண்டும் ,                                                                            252-253

     முதலிற்  குடிமக்களுள்  தலைவர்களுக்கும் , பின்னர்  அவர்க்கு  அடுத்த  நிலையிலுள்ளவர்க்கும் , அதன்பின்  அரசியல்  வினை  செய்வார்க்கும் , அதன்பின் படைத்தலைவர்களுக்கும் , அதன்பின்  காலாட்படைகளுக்கும் , அதன்பின்  குதிரைகளோடு  கூடிய  வீரர்களுக்கும்  அதன்பின்  யானைகளோடு  கூடிய  வீரர்களுக்கும், அதன்பின்  பெரிய  நாளிக  யந்திரமென்னும்  பொறிப்படையாளர் களுக்கும் ,  அதன்பின்  தனக்குரிய  குதிரைக் கூட்டங்களுக்கும் , அதன்பின்  தன்காவலாளர்களுக்கும் , அதன்பின்  காட்டு  வாழ்க்கையுடை யார்க்கும்  தன்  நகரத்தில்  முறைப்படி  அழகிய  இல்லங்களை  அமைத்தல்  வேண்டும் .                             254-256                                                                                  

( நாளிகயந்திரம் –  நெருப்போடு  இருப்புத்  திரளைகளைச்  செலுத்தும்  அகன்ற  வாயினையுடைய  போர்க்கருவி . இதனைப்  பீரங்கியென  இக்காலத்தில்  வழங்குப .)

     அதன்பின்  வழிச்செல்வோர்  தங்குதற்பொருட்டு  நல்ல  நீர்  நிலங்களையும் , காவலையுமுடைய  இருப்பிடங்களை  யமைத்தல்  வேண்டும் . இன்னும்  நகரத்திலும் கிராமத்திலும்  வரிசையாக  ஒத்த  குலத்தவர்களின்  வீடுகளைக்  கிழக்குமுகமாகவேனும்  வடக்கு  முகமாகவேனும்  சேர்ந்திருக்கும்படி  அமைத்தல்  வேண்டும் .  அங்ஙனமே  கடைத்தெருவில்  ஓரினப்பட்ட  விலைப்பொருள்களை யுடைய  கடைகளை  முறைப்படி  யமைத்தல்  வேண்டும் .      257-258

     இன்னும்  இராசவீதியின் இருபக்கங்களிலும் முறைப்படி பெருஞ்  செல்வர் முதலியோர்களை நிலைப்படுத்தல்  வேண்டும் . அரசன்  இங்ஙனமே  பட்டினத்தையும்  சிற்றூரையும்  அமைத்தல்  வேண்டும் . 259

22 . இராசவீதி யமைத்தல்

     அரண்மனையின்  நாற்புறத்தும்  இராசவீதிகளை  யமைத்தல்  வேண்டும் . முப்பது  முழ  அளவு  அகன்ற  இராசவீதி  தலையாயதாகும். 260

     இருபது  முழ  அளவு  அகலம்  இடையாயதாகும் . பதினைந்து  முழ  அளவு  அகலம்  கடையாயதாகும் . அங்ஙனமே  பட்டினங்களிலும்   சிற்றூர்களிலுமுள்ள  கடைவீதிகளையும்  அமைத்தல்  வேண்டும் . 261

      சிற்றூர்களிலும்  நகரங்களிலும்  மூன்று  முழ  அளவு  அகலமுள்ளது  நடைவழி  யெனவும் , ஐந்து  முழ  அளவு  அகலமுள்ளது  வீதியெனவும் , பத்து  முழ  அளவு  அகலமுள்ளது  மார்க்கமெனவுங்  கூறப்படும் .     262

     அரசன்  கிராமத்தின்  நடுவணின்று  கிழக்கு  மேற்குத்  தெற்கு  வடக்குகளைக்  கண்டு  அவ்வழிகளை  யமைத்தல்  வேண்டும் . அங்ஙனமே  பட்டினத்தை  நோக்கி  அழகிய  பல  இராசவீதிகளை  யமைத்தல்  வேண்டும் .                                                                                     263

     இராசதானித்  தலைநகரில்  ஐந்துமுழ  அகலமுள்ள  வீதியையும், மூன்று  முழ  அகலமுள்ள  நடைவழியையும்  அமைத்தலாகாது . ஆறு  யோசனை  தூரம்  அகன்ற  காட்டின்  புறத்தே  தலையாய  இராசமார்க்கத்தை  யமைத்தல்  வேண்டும் .                                             264

( நான்கு  குரோசங்கொண்டது  ஒரு  யோசனை . தலையாய  இராசமார்க்கம் – முப்பது  முழ அளவு  அகலமுடையது .)

     அக்காட்டின்  நடுப்பாகத்தில்  இடையாய  இராசமார்க்கத்தையும் , அவற்றின்  நடுவிற்  கடையாய  இராசமார்க்கத்தையும்  அமைத்தல்  வேண்டும் . ஒவ்வொரு  கிராமத்திற்கும்  பத்து  முழ  அளவுள்ள  மார்க்கம்  எப்பொழுதும்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .              265

( அவற்றின்  நடுவில்  –  தலையாயதும்  இடையாயதுமாகிய  இராசமார்க்கங்களின்  இடையிடையே . )

     கிராமத்தில்  வாழும்  மனிதர்கள்  போக்குவரவிற்குரிய  வழியிடத்தை  ஆமை  முதுகு  போல்  நடுவிடம்  உயர்த்தியும் , இருமருங்கும்  அழகிய  வரம்பெடுத்தும்  அமைத்தல்  வேண்டும் .  அதன்  இருமருங்கும்  நீர்வீழ்ந் தோடுதற்குரிய  வாய்க்கால்வழி  ஏற்படுத்தல்  வேண்டும் .                                                                                   266

     எல்லா  இல்லத்து  முகங்களும்  இராசவீதியின்பால்  இருத்தல்  வேண்டும் . ஒவ்வொரு  வீட்டின்  பின்புறத்திலும்  மலங்கழித்தற்குரிய  இடத்தையும் , சிறுவழியையும்  அமைத்தல்  வேண்டும் .                     267

     ஒவ்வொரு  தெருவின்  இருபக்கங்களிலும்  வரிசையாக  இல்லங்களை  யமைத்தல்  வேண்டும் . குற்றமிழைத்துச்  சிறைப்பட்டாரைக்  கொண்டாதல் , கிராமத்துக்  குடிகளைக்  கொண்டாதல்  ஒவ்வோராண்டும்  வழிகளைச்  சுண்ணாம்புக்  கற்களால்  இறுகுறப்படுத்தல்  வேண்டும் .                                               268

23 . வழிச்செல்வோர்  தங்குதற்குரிய  அறச்சாலை  யமைத்தல்

     அரசன்  ஒவ்வொரு  கிராமத்திலுமேனும் , அன்றி  இரண்டு  கிராமங்களுக்கு  இடையிலேனும்  வழிச்செல்வோர்  தங்கும்  அறச்சாலை  அமைத்தல்  வேண்டும் . அஃது  எப்பொழுதும்  அலகிடன்  முதலியவற்றால்  தூயதாகவும் , கிராமத்  தலைவர்களால்  நன்கு  காக்கப்படுவதாகவும்  இருத்தல்  வேண்டும் . எப்பொழுதும்  அச்சாலைத்  தலைவன்  அங்கு  வருவாரைப்  பின்வருமாறு  தனித்தனி  வினவுதல்  வேண்டும் .                                                                                     270

     “வழிச்செல்வோய் !  எவ்விடத்தினின்று  எதற்காக  வந்தாய்  ?  எங்குச்  செல்கின்றாய் ? துணையோடு  வந்தனையா ?  அன்றித்  தனிமையாக  வந்தனையா ? ஆயுதம்  இருக்கின்றதா ? ஊர்தி  யுண்டா?  நின்  சாதி  குலம்  யாவை ?  பெயர்  யாது ? நின்  நீண்டநாள்  வாழ்கை  யாண்டுள்ளது ? உண்மையாகச்  சொல் “  என்றிவ்வாறு  கேட்டு  எல்லாவற்றையும்  எழுதிக்கொள்ளல்  வேண்டும் . மாலைப்  பொழுதில்   அவன்  வைத்திருக்கும்  ஆயுதத்தை  வாங்கிக்கொண்டு , “சாவதான  மனமுடையனாய்  உறங்குக “  என்று  அவனுக்குத்  தெரிவித்தல்  வேண்டும் . அதன் பின்  அங்கிருக்கும்  வழிச்செல் வோரை  எண்ணிக்கொண்டு  அவ்வறச்சாலையின்  வாயிற்கதவை  யடைத்து  யாமங்காப்பவர்களைக்  கொண்டு  நன்கு  காத்தல்  வேண்டும் . காலையிற்  கதவைத்  திறந்து , அவர்களை  எழுப்பி , அவரவர்க்குரிய  ஆயுதங்களைக்  கொடுத்து , எண்ணிக்  கணக்கிட்டு  வெளிப்போம்படி  செய்தல்  வேண்டும் . கிராமத்தில்  உள்ளார்  எப்பொழுதும்  வழிச்செல்பவர்களுக்குத்  தம்  கிராம  எல்லைவரை  உடன்  சென்று  துணை  செய்தல்  வேண்டும்                                                         271-274

24 . அரசன்  முகூர்த்தந்தோறுஞ்  செய்ய  வேண்டிய

அவசிய  நித்திய   கன்மங்காள்

     அரசன்  தலைநகரிலிருந்து  நாடோறுஞ்  செய்ய  வேண்டிய  கடமைகளை  முறைப்படி  செய்தல்  வேண்டும் .                                  275

     அரசன்  இரவின்  கடையாமத்திலெழுந்து , [1,2]  இரண்டு  முகூர்த்த  நேரம்வரை  வரவு  செலவு  நிமித்தம்  துணியப்பட்ட  பொருளின்  அளவு  எவ்வளவு  எனவும் , கருவூலத்துள்ள பொருளிற் செலவு எவ்வளவாயிற்று எனவும், வழங்குதற்பொருட்டு   முத்திரையிடப்பட்ட  பொருளின்  வரவு  செலவுகளில்  எஞ்சியது   எவ்வளவு  எனவுமாராய்ந்து , அவற்றைக்  காட்சி  அளவையானும்  எழுத்து  மூலமாகவும்  அறிந்து , இப்பொழுது  நேரும்  செலவு  எவ்வளவாகு மென்பதையு  மாராய்ந்து , அதற்குத்  தக்க  அளவு  பொருளைக்  கருவூலத்தினின்றும்  வெளிப்படுத்து  வைத்தல்  வேண்டும் .                                                                           276-278

( முகூர்த்தம் – ஈண்டு  இரண்டு  நாழிகையாகக்  கணக்கிடப்பட்டுள்ளது.  இது  முதல்  284  வரையுள்ள  சுலோகங்களில்  ஒரு  நாளை  முப்பது  முகூர்த்தங்களாகக்  கூறிட்டு , ஒவ்வொரு  முகூர்த்தத்திலும்  அரசன்  செய்யவேண்டிய  காரியங்கள்  இன்னஇன்ன வென்று  விளக்கிக்  கூறப்படுகின்றன . )

     வரவு  செலவுகளைத்  திட்டஞ்செய்த  பின்னர் , [3] ஒரு  முகூர்த்த  நேரம்  வரை  மலமூத்திரங்கழித்து  நீராடல்  வேண்டும் . அதன்பின்  சந்தியாவந்தனம்,  புராணபடனம் , தானம்  இவைகளின்  பொருட்டு     [4,5] இரண்டு  முகூர்த்த  நேரஞ்  செலவிடல்  வேண்டும் .  அதன்பின் , காலை [9]  ஒரு  முகூர்த்த  நேரத்தை  எருது  குதிரை  முதலிய  ஊர்திகளில்  ஏறிச்  செல்லன்  முதலிய  உடற்  பயிற்சியாற்  போக்கல்  வேண்டும் .                                                                                                       279

     அதன்பின் , அறிவுமிக்க  அரசன்  தன்னையடுத்துப்  பிழைப்பவர் களுக்குப்  பரிசில்  ஈதலால் [ 7 ] ஒரு  முகூர்த்தப்  பொழுதையும் , அதன்பின்  தானியம் , ஆடை , பொன் , இரத்தினம் , படை , நிலம்  இவற்றின்  அளவு  முதலியவைகளை  நன்றாக  ஆராய்ந்து , அமைச்சனைக்  கொண்டு  எழுதிக்  கணக்கிட்டு  அவற்றின்  வரவு  செலவுகளைக்  காண்டலால் [ 8 , 9 , 10 , 11 ]   நான்கு  முகூர்த்தங்களை யும், அதன்பின்  கவலையற்ற  மனத்தினனாய்  விருந்து , ஒக்கல்  சூழ  விருந்து  உணவு  செய்தலால்  [12 ] ஒரு  முகூர்த்தப்  பொழுதையுங்  கழித்தல்  வேண்டும் .                                                                          280-281

     அதன்பின் , பழையனவும்  புதியனவுமாகிய  பொருள்களை  நேரிற் காண்டலால் [ 13 ] ஒரு  முகூர்த்தப் பொழுதையும் , அதன்பின் , தன்னால்  நியமிக்கப்பட்ட   நியாயாதிபதிகள்  தெரிவித்துக்கொள்ளும் வழக்காராய்ச்சியால் [ 14, 15 ] இரண்டு  முகூர்த்தங்களையும் , அதன்பின்  வேட்டையாடல்களால்  [ 16, 17 ] இரண்டு  முகூர்த்தங்களை யும் , அதன்பின்  படைகளை  அணிவகுத்துக்  காண்டலால்  [18] ஒரு  முகூர்த்தத்தையும்  அதன்பின்  மாலைக்கால  சந்தியாவந்தனத்தால் [19] ஒருமுகூர்த்தத்தையும் , அதன்பின்  இராவுணவு  செய்தலால் [20] ஒரு  முகூர்த்தத்தையும், அதன்பின்  மறைவிற்  கண்டு  ஒற்றர்கள்  மூலமாகச்  கேட்குஞ்  செய்திகளால்  [ 21, 22]  இரண்டு  முகூர்த்தங் களையும் , அதன்பின்  உறங்குதலால்  [ 23, 30 ] எட்டு  முகூர்த்தங்களை யும்  கழித்தல்  வேண்டும் .                                                                     282-284

     இவ்வாறு  காலங்கழிக்கும்  அரசனுக்கு  நலம்  உண்டாகும் . முற்கூறியாங்கு  முப்பது  முகூர்த்தகால  அளவால் , இன்ன  காலத்தில்  இன்னது  இன்னது  செய்தல்  வேண்டுமென்று  பகலையும்  இரவையும்  பிரித்து , அவ்வச்  செயல்களால்  அவ்வக்காலத்தைப்  போக்குதல்  வேண்டும் . பெண்களோடு  கூடிக்காமவின்ப  நுகர்ந்து , கட்குடித்தும் , பயனின்றிக்  காலத்தைக்  கழித்தல்  கூடாது.  எக்காலத்தில்  எக்காரி யத்தைச்  செய்தல்  தகுதியோ , அக்காலத்திலேயே  அச்செயலை ஐயமின்றி  விரைந்து  செய்தல்  வேண்டும் . இங்ஙனஞ்  செய்யின் , உரிய  காலத்திற்  குடிகளைக்  காத்தற்குத்  தக்கவாறு  மழை  பெய்யும். இன்றேற்  குடிகளுக்குக்  கேடுவிளைக்கத்தக்க  மிகுபெயல் , பெயலின்மைகளுண்டாவனவாம் . நீதியின்  சிறப்பையும்  அநீதியின்  தாழ்வையும்  அறிந்த  அரசன் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலங் களில்  வல்ல  சிறந்த  யாமங்காப்போர் , நால்வர் , ஐவர் , அன்றி  அறுவர்களால்  எப்பொழுதும்  எல்லாக்  காரிய  நிலையங்களையும்  எப்பக்கத்துங்  காத்தல்  வேண்டும் .                                                      285-288

     அவ்வக்  காரியாலயங்களில்  நாடோறும்  நிகழுங்  காரியங்களைத்  தலைமை  யெழுத்தாளர்களிடம்  கேட்க  வேண்டும் . நாடோறும்  யாமங்  காப்பவர்களை  மாற்றி மாற்றி  நியமித்தல்  வேண்டும் .   289

25 . யாமங்காப்போர்  செய்ய  வேண்டுவன  

( யாமங்காப்போர் – நகரங்களையும்  இல்லங்களையும்  நாடோறும்  யாமம்  யாமமாக  வகுத்துக்  கொண்டு  காவல்  புரிபவர் . இவரை  முதனூல்  “யாமிகர்”  என்று  கூறும் . இவர்களை  மாற்றியமைக்கு  முறையை , 4-ஆம்  அத்  7- ஆம்  பிரகரணம் 403-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க )

          யாமங்காப்போர்  எப்பொழுதும்  இல்லறவாழ்க்கையுடையாரின்  வரிசையாகவுள்ள  இல்லங்களின்  எதிரில்  நின்று  வாயில்களைக்  காவல்  செய்தல்  வேண்டும் . இல்லறத்தார்  உதவும்  வேதனங்களாற்  பரிபாலிக்கப்படும்  அவ்யாமங்காப்பவர்கள்  முகமாக  அவ்வில்லறத் தார்களைப்  பற்றிய  செய்திகள்  அரசன்  கேட்டறிதல்  வேண்டும் .   290

     கிராமத்தினின்றும்  வெளிச்செல்வோரும்  கிராமத்தின்  உட்புகுவோ ருமாகிய  இவர்களை  நன்றாக  முயன்று  சோதித்தபின்  பிணை கொடுக்கச்செய்து  வெளிப்புறத்தும்  உட்புறத்தும்  விடல்  வேண்டும்  . எல்லோராலும்  போற்றப்படும்  நல்லொழுக்கமுடைய  பெரியாரைச்  சோதிக்காமலே  விடல்  வேண்டும் .                                                             291

இரவில்  கள்வரையும் , பிறர்மனை  அரையாமத்திற்கொருமுறை  யாமங்காப்போர்  சுற்றிப்பார்த்து  என்றும்  காவல்  செய்தல்  வேண்டும்.

26.  குடிகளுக்கு  அரசன்  இடுங்  கட்டளை   

     அரசன்  குடிகளின்  பொருட்டுப்  பின்வருங்  கட்டளைகளை  என்றுஞ்  செய்தல்  வேண்டும் . “நம்  நாட்டில்  வாழுங்  குடிமக்கள்  தம்  ஏவலர்  தம்முதவி  பெறுவோர் , இல்லாள் , புதல்வர் , மாணாக்கர்  இவர்களிடத்துக்  கடுஞ்சொற்  கூறுதலையும் , கடுந்தண்டமிடுதலை யும்  மேற்கொள்ளலாகாது ; துலை  முதலிய  நிறுத்தலளவைகள் , முத்திரைக்காசுகள்,  மரத்தினின்றும்  வடித்தெடுக்கும்  பெருங்காய  முதலியவைகள் , ஒத்தமாற்றுக்களை யுடைய  பொன்  வெள்ளி  முதலியன , நெய் , தேன் , பால் , இறைச்சி , மா , என்னும்  இவை  முதலியவற்றில்  வஞ்சகம்  செய்தல்  கூடாது ; வலிந்து  பத்திரமெழுதுத லையும், கைக்கூலி  வாங்குதலையும் , தம்  தலைவர்களுக்கு வஞ்சகமிழைத்தலையும்  ஒழித்தல்  வேண்டும் ; தீயொழுக்கமுடையார் கள்வர் , பிறர்மனை  நயப்போர், நம்மிடத்து  வெறுப்புடையோர் , நம்பகைவர் , மறைவிற்  றீங்கிழைக்கும்  மற்றை  மனிதர்களாகிய  இவர்களை  ஒருவரும்  துணை  செய்து  காத்தலாகாது . தாய் , தந்தை, ஆசிரியர்  முதலியோர் , புலவர்கள்  நல்லொழுக்கத்திற்  பற்றுடை யாராகிய இவர்களை  அவமதித்துப்  பரிகசித்தல்  கூடாது . கணவன், மனைவி , தலைவன் , ஏவலாளன் , அண்ணன்  தம்பி , ஆசிரியன்  மாணாக்கன் , தந்தை  மகன்  ஆகிய  இவர்களுக்குள்  மனவேற்றுமை யுண்டாக்குதல்   கூடாது . ஊருணி, கிணறு , பூஞ்சோலை, எல்லைநிலம் அறச்சாலை , திருக்கோயில் , நடைவழி  ஆகிய  இவற்றிற்கும் , உறுப்பறைகள் , உறுப்புவலியற்றோர்  ஆகிய  இவர்களுக்கும்  கேடு  விளைத்தல்  கூடாது . பணயம்  வைத்துச்  சூதாடல் , கட்குடித்தல் , வேட்டையாடல் , ஆயுதந்தரித்தல் , பசு , யானை , குதிரை  ஒட்டகம், எருமை , ஆளடிமை , நில  முதலிய  நிலையிற்  பொருள்கள் , வெள்ளி , பொன் , இரத்தினம் , மயக்கமுண்டாக்கும்  பொருள்கள் , நஞ்சு  என்னுமிவற்றை  விலைகொடுத்துக்  கொள்ளல் , விற்றல் , கள் வடித்திறக்குதல் , கிரயபத்திரம் , தானபத்திரம்,  கடன்பத்திரம்  மருத்துவஞ்  செய்தல்  ஆகிய  இவற்றை  நம் [அரசன்] அனுமதியின்றி  யாருஞ்  செய்தலாகாது . செய்யாதவன்  மேற்  பெரும்பாவச்  செயலை  ஏறிடல் , புதை  பொருள்  கொள்ளுதல் , புதிய  சமாசம்  உண்டு  பண்ணுதல் , அரசியைபின்றித்  துணியப்படாத  பொருளைத்  துணிதல், சாதியைக்  குற்றம்  கூறிப்  பழித்தல் , தலைவனற்ற  பொருளையும்  களவுப்  பொருளையுங்  கொள்ளுதல் , மறைவுச்  செய்திகளை  வெளிப்படுத்தல் , அரசனுடைய  தீயகுணங்களை  வெளிப்படுத்திப்  பேசுதல்  ஆகிய  இவற்றை  ஒருபொழுதுங்  குடிமக்கள்  செய்தலாகாது . தம்  கடமையை  விட்டொழிதல் , பொய்கூறல் , பிறர்மனை  நயத்தல் , பொய்ச்சான்று  கூறல் , பொய்ப்  பத்திர  மெழுதல் , மறைவிற்பொருள்பெறுதல் , துணியப்பட்ட  அளவிற்கு  மேற்  குடிகளிடத்து  இறைப்பொருள்  வாங்குதல் , களவாடல் , வலிந்து  பற்றுதல் , தலைவனுக்குத்  தீங்கிழைத்தலாகிய  இவற்றை  மனத்தாலும்  நினைத்தல்கூடாது . வேதனத்தாலும் , சுங்கப் பொருளாலும் , வட்டித்  தொழிலாலும் , இறுமாப்பாலும் , ஆற்றலாலும் , வஞ்சகத்தாலும் , ஒருபொழுதும்  எவர்க்கும்  துன்பஞ்  செய்தலாகாது. நீட்டலளவையும் , நிறுத்தலளவையும் , முகத்தலளவையுமாகிய  இவற்றின்  கருவிகளை  அரசியன்  முத்திரையிட்டு  உபயோகித்தல்  வேண்டும் . எல்லாக்  குடிமக்களும்  நற்குணங்களை  யீட்டுதலிற்  றிறமையுடையராயிருத்தல்  வேண்டும் . வலிந்து  செய்தன்  முதலிய  கடுஞ்  செயல்கள்  வெளிப்பட்டுழி   அவற்றைச்  செய்த  ஆததாயியைப்  பிடித்திழுத்து , அரசன்  பக்கல்  சேர்த்தல்  வேண்டும் ; எவர்களால்  அறங்  கருதி  எருது  முதலியன  விடப்பட்டனவோ , அவர்களே  அவற்றைக்  கட்டிக்காத்தல்  வேண்டும் ; இங்குக்  கூறப்பட்ட  என்  கட்டளைகளைக்  கேட்டும்  எவர்கள்  மாறாக  நடக்கின்றார்களோ  அத்தகைய  கொடியவர்களைப்  பெருந்தண்டத்தால்  ஒறுத்திடுவேன்  “  என்றிவ்வாறு  அரசன்  குடிமக்களுக்கு  நாடோறும்  பறைசாற்றி  அறிவித்தல்  வேண்டும் .                                                                         293-312

( மறைவிற்  பொருள்  பெறுதல் – ஒருவனிடத்தினின்றும்  அவனைச்  சார்ந்தாரறியாமலிருக்கும்  வண்ணம்  அவன்  பொருளைக்  கொள்ளுதல் .

ஆததாயிகள் – தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , பிறர்  நிலங்கவர்வார் , பிறனில்விழைவாரென  அறுவகைப் படுவர் . மூன்றாம்  அத்தியாயம் 41 ஆம் சுலோகத்திற்  காண்க )

27 . அரசன்  செய்ய  வேண்டியவை     

     அரசன்  நாற்சந்திதோறும்  தன்  கட்டளைகளை யாவருங்  காண  எழுதிவைத்தல்  வேண்டும் . தீயவர்களிடத்தும்  பகைவர்பாலும்  எப்பொழுதும்  தண்டோபாயத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .   313

( இக் கருத்தை  “ஒல்லும்  வாயெல்லாம்  வினை  நன்றே  யொல்லாக்காற் , செல்லும்  வாய்  நோக்கிச்  செயல் “  என்னுந்  திருக்குறளிலுங்  காண்க . வினை – ஈண்டுத்  தண்டோபாயம் . )

     அரசன்  நீதிமுறைப்படி  குடிகளைப்  புரத்தல்  வேண்டும் ; வழிச்செல்வோர்  நலங்குறித்து  வழியிடங்களைக் காத்தல்  வேண்டும் .

                                                                                                                           314         

     வழிச்செல்வோரைத்  துன்புறுத்துபவர்  யாவராயினும்  அவர்களை  முயன்று  கண்டுபிடித்துக்  கொல்லல்  வேண்டும் .  அரசன்  தனக்குரிய  ஆண்டு  வருவாயில்  மூன்று  கூறு  படைகளைக்காத்தற்கும் , அரைக்கூறு  தானத்திற்கும் , அரைக்கூறு  அரசியற்றொழில்புரியும்  மற்றவர்களுக்கும் , அரைக்கூறு  தன்  வாழ்க்கைக்கும்  செலவிட்டு , எஞ்சிய  ஒரு  கூறைத்  தன்  கருவூலத்து  வைப்பு  நிதியிற்  சேர்த்தல்  வேண்டும் .                                                                                                     315-316

( இச்சுலோகங்களுக்கு  உரைவரைந்தாரொருவர்  ஆண்டு  வருவாயை  எண்கூறுபடுத்துப்  படைகளைக்  காத்தற்கு  மூன்றும் , மற்றவகை  ஐந்திற்கு  ஐந்து  கூறுமாகக்  கணக்கிட்டுக்  கூறினர் . ‘ அவர்  அர்த்தாம்சம் ‘  என்பதற்கு , வருவாயிற்  பாதியில்  நான்கிலொரு   கூறு  எனக்  கூறினர் . அவ்வாறு  கூறுதற்குச்  சொற்பொருள்  இடந்தராமையானும் , 317-ஆம்  சுலோகத்தில்  வருவாயை  ஆறு  கூறிடல்  வேண்டுமென்று  நூலாசிரியரே  கூறுதலானும் , கருவூலத்தில்  சேர்க்கப்படுவதை  “அர்த்தாம்சம்”  என்று  கூறாமையானும்  அவ்வுரை  பொருந்தவில்லையென்று  தோன்றினமையால் , முன்பின்  இயைபு  நோக்கி  வேறுவிதமாகப்  பொருந்துமாறு  இவை  மொழிபெயர்க்கப்  பட்டன . பிறாண்டும்  இங்ஙனமே  உரைவரைந்தாரின்  பிறழ்ச்சியை  யறிந்து  முன்பின் இயைபு  நோக்கி  மொழிபெயர்க்கப்பட்ட  சுலோகங்கள்  பலவுள . )

     இங்குக்  கூறப்பட்ட  வண்ணம்  வருவாயை  ஆறு  கூறிட்டு  யாண்டுதோறும்  செலவிடல்  வேண்டும் . முற்கூறிய  சாமந்தன்  முதலியோர்களுக்கும்  இந்நியமம்  பொருந்துவதாகும் . அச்சாமந்தன்  முதலியோரிற்  றாழ்ந்தவர்களுக்கு  இந்நியமம்  ஒரோவமயம்  பொருந் தாததாகவுங்  கூடும் .                                                                                         317

     அரசன் , தன் நாடு , புகழ் , புகழ்விளைக்குங்காரியம் , பொருள் , குணம்  என்னுமிவற்றைக்  காப்பதிலும் , வேற்றுநாட்டைக்  கவர்வதிலும்  முயற்சியுடையனாதல்  வேண்டும் . அங்ஙனங்  கவர்ந்த  வேற்று  நாட்டை  நன்கு  பாதுகாப்பதிலும் , மேன்மேலும்  வேற்றுநாடு  கொள்வதிலும்  எப்பொழுதும்  தளர்தலில்லா  முயற்சியை  மேற்கொள்ளக்  கடவன் .                                                                        318

     அரசன்  எப்பொழுதும்  செளரியம் , புலமை , சொல்வன்மை , வண்மை, ஆற்றல் , பராக்கிரமம் , இடையறவில்லாமுயற்சி  ஆகிய  இவற்றை  ஒழித்தல்  கூடாது .                                                                  319

     எவன்  போரில்  தன்  உடற்  பொருட்டாதல் , தன்றலைவன்  பொருட்டாதல்  உயிர்க்கு  அஞ்சுதலையொழித்து , மனத்தளர்வின்றிப் போர்  செய்கின்றானோ  அவனே  சூரனாவான் .                               320

     எவன்  காய்தல் , உவத்தலின்றிச்  சிறுவன்  கூறியதெனினும்  பொருளுரையை  முயன்று  கொண்டு  அதன்கண்  உள்ள  தருமத்தின்  உண்மையை  உள்ளவாறு  அறிகின்றானோ  அவனே  பண்டிதனாவான்.                                                                                          321

     அரசனுடைய  தீயகுணங்களை  அவன்  முன்னிலையிற்  கலக்கமின்றி  எடுத்துச்  சொல்லுதலையும் , அத்  தீயகுணங்களை  நற்குணங்களோடொப்பவைத்து  ஒருபொழுதும்  பாராட்டாமையை யுமுடையவனே  சொலல்  வல்லனாவான் .                                             322

     எவனுக்கு  மனைவி , மக்கள் , பொருள் முதலிய  யாவுங்  கொடைக்குரியவாக வுள்ளனவோ , எவன்  சற்பாத்திரத்திற்குத் தன்னையும்  வழங்குகின்றானோ  அவனே  வள்ளலாவான் .            323

     ஒருவன்  செயற்பாலதை  உறுதியாகத்  திறமையுடன்  செய்தற்குத்  துணைநிற்கும்  குணமே  ஆற்றலாகும் .                                                    324

     வேற்றரசர்  முதலியவர்களை  ஏவலாளரையொப்பச்  செய்து  கோடற்குத்  துணையாக  நிற்குங்  குணமே  பராக்கிரமமாகும் .       324

     போர்  செய்தற்கு  அனுகூலமாக  நிற்பது  முயற்சியாகும் .              325

28 . நஞ்சு  முதலியவை  கலந்த  உணவைச்  சோதித்தல்

     உணவில்  நஞ்சு  கலந்திருக்குங்கொல்  என்னும்  அச்சத்தாற்  குரங்கு  கோழி  முதலியவைகளாற்  சோதித்து  ஆராய்ந்தபின்  அறுவகைச்  சுவையோடுங்  கூடிய  அவ்வுணவை  எப்பொழுதும்  உண்ணல்  வேண்டும் . சோதனை  வருமாறு :-  நஞ்சு  கலந்த  அன்னத்தைக்  கண்ட  அளவிலேயே  அன்னப்பறவை  தடுமாறி  விழும் ; வண்டுகள்  குழறி  ஒலிக்கும் ; மயில்கள்  நிலைபிறழ்ந்து  துள்ளி  ஆடும் ; கோழிகள்  விரைந்து  கத்தும் ; அன்றிற்புள்  மயக்கமெய்தும் ; குரங்கு  மலங்கழிக்கும்  ; காடைப்பறவை  மயிர்  சிலிர்க்கும் ; நாகணவாய்ப்புள்  எதிரெடுக்கும்  ; ஆதலின் , இவற்றால்  உணவுப்பொருள்களைச்  சோதித்து  ஆராய்தல்  வேண்டும் . இரண்டு  சுவை  மூன்று  சுவைகளோடு  மாத்திரங்கூடிய  உணவையும் , வேண்டிய அளவின் மிகுதல் குறைதற் சுவையுள்ள உணவையும், காழ்ப்பு , இனிப்பு , உவர்ப்பு , இம்மூன்றும்  ஒருங்குசேரக்  கலந்த  உணவையும்  உண்ணலாகாது . யாரேனும்  ஒன்றை  அறிவிப்பின்  அதனை  அமைச்சர்களோடிருந்து கேட்டல்  வேண்டும் .                                 326-329

( அறுசுவையாவன – தித்திப்பு , புளிப்பு , உவர்ப்பு , துவர்ப்பு , காழ்ப்பு , கைப்பு  என்பன . )

(எதிரெடுத்தல் – வாந்தி  பண்ணுதல் .)

29 . வேட்டை  விளையாடல்  முதலியன

     அரசன்  பூஞ்சோலை  முதலிய  இன்ப  நிலங்களில்  மற்றை  அரச  குமாரர்கள் , மகளிர் , ஆடுவோர் , பாடுவோர் , வைதாளிகர் , இந்திரசால  விச்சை  செய்வோராகிய  இவர்களோடு  கூடி  உரிய  காலங்களில்  விழிப்புடையனாகிய  விளையாடல்  வேண்டும் .      330

     நாடோறும்  காலை  மாலைகளில்  , யானை , குதிரை , தேர்   இவைகளிலேறிச்  செல்லுதலைப்  பழகல்  வேண்டும் . காலாட்படைகளை  அணிவகுத்துப்  பழகும்படி  பயிற்றுதலும் , பயிற்றுவித்தலுஞ்  செய்தல்  வேண்டும் .                                                  331

     வேட்டையாடுதலால்  எப்பொழுதும்  தறுகண்மை , குறிவைத் தெய்யுந்தறமை , அஞ்சாமை , அம்பு  வாள்  முதலியவற்றை  விரைந்து  செலுத்தலாகிய  இக்குணம்  செயல்கள்  பெருக்கம்  அடைவனவாம். இவை  வேட்டையாடலால்  விளையும் நலங்கள்  போற்றோன்றுவன ; ஆயினும் , அதனால்  விளையும்  பிறவுயிர்க்குத்  துன்பஞ்  செய்தலாகிய  தீவினையொன்றே  மிகப்பெரிதாகும் . ( ஆதலின்  வேட்டையாடல்  செய்யாதிருத்தலே  நன்றென்பது  கருத்து . )           333

30. ஒற்றாடல்

     அரசன்  அம்பு  வாள் முதலிய  படைப்பயிற்சியில்  திறமையையும்  சோர்வில்லாமனத்தினையும்  உடையனாகி , தனக்குக்  கேடுவிளை யுங்  காலத்தில் , குடிகளுடையவும் , அரசியற்றொழில்  புரிவோருடையவும் , அமைச்சர்  முதலிய  தலைவர்களுடையவுமாகிய  உள்ளக்  குறிப்புக்களையும் , செயல்களையும் , பகைவர்  படைவீரர்  நீதிபதிகள் , சுற்றத்தார்  உவளகத்து மகளிராகிய  இவர்களின்  எண்ணங்களையும்  மறைவிற்  கண்டுகூறும்  ஒற்றர்கள்  முகமாக  நாடோறும்  இரவில்  முயன்று  கேட்டல்  வேண்டும் . அக்கேட்டவற்றை  நன்றாக  எழுதிக்கொள்ளவும்  வேண்டும் .                                         334-336

( கேடுவிளையுங்  காலத்திற்  கேட்டலென்பது ,”கேட்டினுமுண்டோ ருறுதி  கிளைஞரை , நீட்டியளப்பதோர்  கோல்” , என்னுந்  திருக்குறளை  ஒத்திருத்தல்  காண்க . )

     மறைவிற்  கண்டுகூறும்  ஒற்றன்  பொய்  கூறுபவனாயின்,   அவனைத்  தக்கவாறு  ஒறுத்தல்  வேண்டும் . அங்ஙனம்  செய்யாத  அரசன்  குடிமக்களின்  உயிரையும்  பொருளையும்  கவரும்  ‘மிலேச்சன்’  என்று  கூறப்படுவான் .                                                           337

     பிரமசாரி , வானப்பிரத்தன் , சந்நியாசி , போலிச்சித்தன்  ஆகிய  இவர்களின்  வேடத்தைத்  தாங்கித்  திரியும் ஒற்றர்களின்  நிலையை  அரசன்  காட்சியளவையானும்  மறைவானுஞ்  சோதித்தறிதல் வேண்டும் .                                                                                                            338

( மறைவானறிதல் – ஓர்  ஒற்றனை  மற்றோர்  ஒற்றனைக்  கொண்டு  சோதித்தல்.)

     அங்ஙனஞ்  சோதித்தறியாத  அரசன்  உண்மையறிதல்  இலனாவன் ; உண்மைச்செய்தியும்  வாராது ; அவன்  மாட்டுப்  பொய்  கூறுதலில்  அவர்  சிறிதும்  அச்சங்கொள்ளார். அமைச்சர்  முதலியோரும்  மற்றை  அரசியற்றொழில்  புரிவோரும்  தீங்கு  செய்யா  வண்ணம்  ஒற்றனை  நன்கு  காத்தல்  வேண்டும் .                                                                     339

( ஒற்றன் , அமைச்சர்  முதலியோர்களின்  நிலையையும்  உணர்ந்து  அரசனுக்குத்  தெரிவிப்பானாதலானும் , அது  குறித்து  அமைச்சர்  முதலியோர்  அவ்வொற்றனுக்குத்  தீங்கிழைக்க  எண்ணவுங்  கூடுமாதலானும் , அத்தீங்கு  வாராவண்ணம்  அரசன்  காக்கவேண்டும்  கரத்து . )

31 . அரசர்  குலத்தில்  அரசிற்குரியவனைத்  துணிதல்

     எப்பொழுதும்  ஆளப்படும்  நாட்டை  ஒரு  தலைவனுடையதாகவே  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் . பல  தலைவர்களையுடையதாகச்  செய்தலாகாது .                                                                                                    340

     அரசன்  ஒருபொழுதும்  தன்  நாட்டைத்  தலைவன்  இல்லாததாகச்  செய்தலாகாது . அரசர்  குலத்தில்  ஆண்மக்கள்  பலர்  இருப்பார்களாயின் , அவருள்  ஆண்டினாலும்  அறிவினாலும்  முதிர்ந்தவனே  அரசனாவான் . மற்றையோர்  அவனுக்குக்  காரியத்துணைவர்களாய் , எல்லாத்  துணைவர்களினுஞ்  சிறந்தோராய் , அவ்வரசன்  நலம்  வளர்தற்கு  வேண்டுவன  புரிபவராவர்.                                                                                                341-342

     மூத்தவனும்  செவிடு , தொழுநோய் , ஊமை , குருடு , அலித்தன்மை இவைகளுள்  ஒன்றையுடையனாயிருப்பின் , அவன்  அரசனாதற்குத்  தகுதியில்லாதவனாவான். அங்ஙனமே  அவன்  உடன்  பிறந்தாகும்  புதல்வர்களும்  முற்கூறிய  குற்றமுடையராயிருப்பின் , அரசிற்குரியராகார் .                                                                                        343

     மூத்தவன்  இல்லையாயின்  இளையோர்  அரசெய்தற்குரிய  ராவராதலின் , அரசனுக்குத்  தம்பியும்  தமையன்  புதல்வனும்  முற்கூறிய  குற்றமிலராயின்  அரசிற்குரியராவர் . உடன்பிறந்தார்  முதலியவர்களோடு  ஒன்றுபட்டு  வாழ்தல்  அரசனுக்கு  மிக்க  நலம்  பயப்பதாகும் .                                                                                                       344

     உடன்பிறந்தார்  முதலியவர்களோடு  வேறுபடுதல்  தன்  நாட்டிற்கும்  குலத்திற்கும்  அழிவு  செய்யுமாதலின் , அரசன்  தடையின்றிச்  செல்லும்  ஆணையுடையனாய்த்  தன்  உடன்  பிறந்தார் முதலியவர்களை  வெண்கொற்றக்குடை  அரியணை  முதலியவைக ளால்  மகிழ்வித்தல்  வேண்டும் . தன்னைப்போல்  அவர்களும்  வாழ்க்கையின்ப முடையவர்களாகும்படி  செய்தல்  வேண்டும் .         345

( அரியணை  முதலியன  உதவல் – தன்  நாட்டினுள்  அடங்கிய  சிறு  பகுதிகளுக்குத்  தலைவராம்படி  செய்தல் .)

     பிரிக்கப்படுதலாற்  சுருங்கிய  நாட்டைப்  பகைவர்  கவர்ந்து  கொள்ள  விரும்புவராதலின்  அரசர்களுக்கு  நாட்டின்  பிரிவால்  நலமுண்டாகாது .                                                                                                 346

32 . சுற்றத்தார்  முதலியோர்பால்  அரசன்  இடுங்  காரியங்கள் 

          அரசன்  உடன்பிறந்தார்  முதலியவர்களுக்கு  இராச்சியத்தின்  நான்கிலொரு  கூறு  உதவி , நாட்டைச்  சுற்றிலும்  இருக்கச்செய்தல் வேண்டும் . அன்றி  அவரைத்  தன்  நாட்டின்  நாற்புறத்துமுள்ள  சிறிய  நாடுகளுக்குத்  தலைவராக்கல்  வேண்டும் . இன்றேல் , பசு , யானை , குதிரை , ஒட்டகம்  பொருட்கருவூலம்  இவைகளின்  அதிகாரச்செயலில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . தாயையாதல் , அன்றித்  தாயை யொத்த  மற்றொருத்தியையாதல்  அடுக்களையில்  தலைமையாக  நியமித்தல்  வேண்டும் .                                                                             347-348

     அரசன்  தன்  சுற்றத்தார்களையும் , மைத்துனர்களையும்  எப்பொழுதும்  படைத்தலைமை  அதிகாரத்தில்  நியமித்தல்  வேண்டும். குரவர்களையும்  நண்பர்களையும்  தன்பாலுள்ள  குற்றங்களை  யறிந்து  எடுத்துக்காட்டும்  தொழிலில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                       349

     பெண்பாலாரை  ஆடை , அணிகலன் , பாத்திரம்  என்னுமிவற்றை  நன்கு  பார்த்துக்கொள்ளும்படி  செய்தல்  வேண்டும் . தான்  எல்லாவற் றையும்  ஆராய்ந்துகொண்டு , முறைப்படி  அவற்றில்  தன்  அடையாள  முத்திரை  இடல்  வேண்டும் .                                                                         350

33 .  அரசவை  அமைப்பு 

     இரவிலேனும்  பகலிலேனும்  தூய்மை  செய்யப்பட்டதும்  வேற்று  மனிதர்  இல்லாததுமாகிய  இல்லத்தின்  உள்ளாதல் , காட்டிலாதல்  அமைச்சர்களோடு  கூடியிருந்து  வரக்கடவ  காரியத்தைச்  சூழ்தல்  வேண்டும் .                                                                                                            351

( இது  மறைவிற்  சூழ்தல் )

     அரச  மன்றத்திருந்து  நட்டார் , உடன்  பிறந்தார், புதல்வர் , சுற்றத்தார் , படைத்தலைவர் , நீதியதிபர்  இவர்களோடு  கூடி  அரசியற்  காரியங்களை  என்றுஞ்  சூழ்தல்  வேண்டும் .                                            352

( இது  வெளிப்படையிற்  சூழ்தல் )

     அத்தாணி  மண்டபத்தில்  மேற்பாதியின்  நடுவண்  அரசனுக்குரிய  அரியணை  யிருத்தல்  வேண்டும் . அதற்குத்  தென்பாலிற்  சிலரும்  வடபாலிற்  சிலரும்  இருத்தல்   வேண்டும் . மற்றையோர்  படித்துக்  கோட்டங்களில்  இருத்தல்  வேண்டும் .                                                        353

( இதனால்  அத்தாணிமண்டபம்  கிழக்குமுகமுடையதாக  இருத்தல்  வேண்டுமென்பது  போதரும் . )

      புதல்வர் , பெயரர் , உடன்பிறந்தார் , மருகர் , தெளகித்திரராகிய  இவர்கள்  தன்  பின்புறத்தில்  வலப்பக்கம்  தொடங்கி  இடப்பக்கமாக  முறையே  இருத்தல்  வேண்டும் .                                                                    354

( மருகர் – சகோதரிகளின்  புதல்வர் . தெளகித்திரர் – மகள்  வயிற்றிற்  பிறந்த  ஆண்மக்கள்  )

     தன்  தந்தையுடன்  பிறந்தார் , தன்குலத்துப்பெரியார் , நீதியதிபர் , படைத்தலைவர்  ஆகிய  இவர்கள்  முறையே  ஒருவர்க்கொருவர்  கீழ்பாலாகத்  தன்  முன்னிலையில்  வலப்பக்கத்தில்  தனித்  தனி   இருக்கையில்  இருத்தல்  வேண்டும் .                                                         355

     தாய்வழிப்பாட்டன் , அக்குலத்துப்  பெரியார் , அமைச்சர் , சுற்றத்தார் , மாமன்மார் , மைத்துனன்மார் , மற்றை  அரசியற்றொழில்  புரிவோர்  ஆகிய  இவர்கள்  முறையே  ஒருவர்க்கொருவர்  கீழ்பாலாகத்  தன்  முன்னிலையில்  இடப்பக்கத்தில்  தனித்தனி  இருக்கையில்  இருத்தல்  வேண்டும் .                                                                                       356

    மருமகன்  இடப்பக்கத்தும் , உடன்பிறந்தாள்  கணவன்  வலப்பக்கத்தும் இருத்தல்  வேண்டும் . தன்னையொத்த  இன்னுயிர்  நண்பன்  மிக்க  அணிமையிலாவது , தன்  இருக்கையின்  பாதியிலாவது  உடனிருத்தல்  வேண்டும் .                                                  357

( மருமகன் – புதல்வியின்  கணவன் . )

     தத்தபுத்திரன்  முதலியோர் , தெளகித்திரர்  மருகர்  இவர்கட்குரிய  இடத்தில்  இருத்தல்  வேண்டும் . அங்ஙனமாயின் , மருகரும்  தெளகித்திரரும்   புதல்வன்  முதலியோர்க்குரிய  இடத்தையடைதல்  வேண்டும் .                                                                                                            358

( முதலியோர்  என்றதனால்  ஒளரசன்  அல்லாத  மற்றைக்  கிருத்திரிமன்  முதலிய  புதல்வரையுங்  கொள்ளல்  வேண்டும் . புதல்வன்  என்றது  ஈண்டு  ஒளரச  புத்திரனை .  ஒளரச  புத்திரன்  இல்லாத  அரசனுக்கே  தத்தபுத்திரன்  முதலியோர்  இருப்பாராதலின் , அந்த  தத்தபுத்திரன்  முதலியோர் , தெளகித்திரர் , மருகர்  இவர்க்குரிய  விடங்களையடையுங்கால் , அத்  தெளகித்திரர் , மருகரும்  புதல்வர்க்கும்  பெயரர்க்குமுரிய  விடங்களிலிருத்தல்  வேண்டுமென்பது   கருத்து . புதல்வரை  ஒளரசன் , ஷேத்திரஜன் , தத்தன் , கிருத்திரிமன் , கூடோற்பன்னன் , அபவித்தன்  எனவும் , கானீனன் , சகோடன் , கிரீதன் , பெளனர்ப்பவன் , சுயந்தத்தன் , செளத்திரன்  எனவும்  பன்னிரண்டு  வகைப்படுத்து  மனு  கூறுவர் . அவர்  தம்  இலக்கணங்களை  மனுதரும சூத்திரம் 9-ஆம்  அத்தியாயம்  169  முதல்  179 – வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க . )  

     தந்தையும்  ஆசிரியனும்  இருபக்கத்து  முற்கூற்றில்  அரசனிருக்கையோடு  ஒத்த  இருக்கையிலாவது , அன்றி  அதனினுஞ்  சிறந்த  இருக்கையிலாவது  இருத்தல்  வேண்டும் . எழுத்தாளரனை வரும் அமைச்சர்களின்  பின்புறத்தே  நிற்றல்  வேண்டும் .                   359

     ஏவலாளரனைவரும்  முற்கூறப்பட்ட  எல்லோர்க்கும்  பின்புறத்தே  நிற்றல்  வேண்டும் . காரியத்தை  முன்னிட்டு  வருவோருடைய  வரவையும்  வணக்கத்தையும்  தெரிவிப்பவரும் , பொற்றடி  தாங்கு கின்றவருமாகிய  இரண்டு  சேவர்கள்  பக்கத்தில்  நிற்றல்  வேண்டும் .

34 . அரசுரிமை  அடையாளங்களைக்  காத்தல்  

     அம்பு  முதலிய  படைக்கலப்பயிற்சியிற்  றிறமைவாய்ந்த  அரசன்  அரசனுக்குரிய  சிறப்படையாளங்களையுடையனாய்ச்  சிறந்த  அணிகலன்களையணிந்து , அழகிய  கவசம்  தரித்து , நல்லாடைகளை  யுடுத்து , முடிசூடி , உறையின்  உருவிய  வாளேந்தி , எப்பொழுதுஞ்  சுருசுருப்பான  மனமுடையனாய்த்  தன்  அரசிருக்கையில்  உவகையோடு  வீற்றிருத்தல்  வேண்டும் .                                                  361

     ‘ நீயே  எல்லோரினுஞ்  சிறந்த  வள்ளலும்  சூரனும்  அறமுடை யோனும்  ஆகின்றாய் ‘  என்று  புனைந்து  கூறுவார்  சொற்களைக்  கேட்டலாகாது .  அரசியற்  காரியஞ்  சூழுங்கால் , அதனைக் கேட்போர்  வஞ்சகர்களாயிருப்பின்  அவர்களையும் , தன் [அரசன்] பாலுள்ள  பிரியத்தாலும்  பொருட்பற்றாலும் , அச்சத்தாலுங்  கழறிக்கூறாது  ஊமைபோல்  வாய்வாளாதிருக்கும்  அமைச்சர்களையும் , அரசன்  அவ்வரசியற்காரிய  நிறைவேற்றத்தில்  துணை  செய்பவர்களாக  ஏற்றுக்கொள்ளலாகாது .                                                                            362-363

( இதன்கண்  “கேட்போர்”  என்பதற்குப்  பிறர்  கூறுங்  காரியங்களைக்  கேட்பவர்களெனவும் , பிரியம் , பொருட்பற்று , அச்சம்  இவை  காரணமாக  அமைச்சர்கள்  ஊமைபோல்  வாய்வாளாதிருத்தல்  அரசன்பாற்  காரியங்கருதி  வருவோர்களைக்  குறித்தாம்  எனவும்  உரைவரைந்தாரொருவர்  கூறினார் . அரசியற்  காரியஞ்  சூழ்தலே  ஈண்டு  எடுத்துக்  கொள்ளப்பட்டதாகலானும் , “ராஜக்ஞ”  என்னுஞ்  சொல்லை  அவ்வுரையாளர்  ஒழித்துப்  பொருள்  கொண்டமையானும்  அச்சொல்லை  இயைத்துப்  பொருள்கொள்ளுங்கால்  அவர்  கருத்துப்  பொருந்தாமையானும்  வேறுவிதம்  பொருள்  கொண்டு  மொழி பெயர்க்கப்பட்டது .  கழறிக்கூறல் –  அரசன்  நெறி  பிறழுங்கால்  இடித்துக்கூறல் )

     ஒரு  காரியத்தைத்  துணிவதிற்  காரணத்தோடுகூடிய  அமைச்சர்களின்  கருத்துக்களைத்  தனித்தனி  எழுதிக்கொண்டு ,அவற்றைத்  தன்  கருத்தோடு  இயைத்துச்  சூழ்தல்  வேண்டும் . பலருக்கும் உடன்பாடாயதைச் செய்தல் வேண்டும்.        364

     அறிவு  மிக்க  அரசன்  காரியஞ்  செய்தற்குரிய  ஆற்றல்  வாய்ந்த  யானை , குதிரை , தேர் , பசு , முதலியவைகளையும் , வினை  செய்வாரையும் , ஏவலாளரையும்,  பயன்படும்  மற்றைப்பொருள்  களையும் , காலாட்  படைகளையும் , அறிந்து , நாடோறும்  முயன்று  நன்கு  காத்தல்  வேண்டும் . மிகவும்  ஆற்றலில்லாத  அவ்யானை  முதலியவற்றையும் , வினைசெய்வார்  முதலியோரையும்  அறிந்து  விலக்கல்  வேண்டும் .                                                                                         366

( ஆற்றல்  வாய்ந்த  என்னும்  விசேடணத்தை  வினைசெய்வார் முதலியோர்க்கும்,  பொருள்  படைகளுக்குங்  கொள்ளல்  வேண்டும் . விலக்கல்  வேண்டும்  என்பதற்கு  ஈண்டு  உரிய  செயல்களில்  நியமித்தலாகாதென்பது  கருத்து . “கார்யக்ஷமாந்”  என்ற  பாடம்  இங்குக்  கொள்ளப்பட்டது . )

     பதினாயிரங்  குரோசத்திற்கு  அப்பாலுள்ள  செய்தியை  ஒரே  தினத்தில்  வரச்செய்தல்  வேண்டும் . குடிமக்களை  வேதனமுதவி  எல்லாவித்தைகளையும்   கலைகளையும்  பயிலும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                                     367

( இது  மின்சாரவாற்றலாற்  கம்பி  வழியாகவும்  விண்வழியாகவும்  செய்திகளைப்  போக்குவரவு  செய்தற்குரிய  இக்காலத்துப்  புதிய  கருவிகளை   [Telegraph ] நினைவுறுத்தும் . )

     அவருட்  கல்வி  நிரம்பப்  பெற்றவர்களை  நன்றாகத்  தெரிந்தெடுத்து  அக்கல்வி  சம்பந்தமான  காரியங்களிற்  கணக்காயர்  முதலியோராக  நியமித்தல்  வேண்டும் . அவருள்  வித்தைகளிலும்   கலைகளிலும்  தேர்ந்தவர்களை  யாராய்ந்தறிந்து  அவருக்கு  யாண்டுதோறும்  பரிசில்  கொடுத்துச்  சிறப்பித்தல்  வேண்டும் .     368

( கணக்காயர் – உபாத்தியாயர் .)

     அரசன்  எப்பொழுதும்  வித்தைகளையும் , கலைகளையும்  வளர்த்தல்  வேண்டும் . அச்சந்தரும்  வேடத்தையும் , வணக்கத்தையும் , நீதியின்  திறமையையும் , படைப்  பயிற்சியையுமுடைய  வீரர்கள் , கையில்  உறையொருவிய  வாட்படையைத்  தாங்கி  முன்னும்  பின்னும்  அணிமையிற்  சூழ்ந்து  செல்லத் , தான்  யானைமீதிவர்ந்து , குடிகளை  இன்புறுத்தற்  பொருட்டுத்  தன்  நகரத்தில்  நாடோறுஞ்  சுற்றிவரல்  வேண்டும் .                                                                              369-370

( வித்தை – வேதசாத்திர  அறநூல்  புராணமுதலியன  . கலை – நாட்டியம்  சிற்பம்  முதலிய  அறுபத்துநான்குமாம் . இவற்றின்  விரிவை  4-ஆம்  அத்தியாயம் 67-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . சுற்றிவரல் – உலாப்  போதல் . )

     அரசனுக்குரிய  ஊர்தியில்  ஏறியிருக்கும்  நாயும்  அரசனை  யொத்ததாக  ஏன்  ஆகாது ? [ பற்றுக்கோட்டின் சிறப்பால்  அரசனுக்கொப்பாகவே  மதிக்கப்படும்.]  அங்ஙனமே  முடி , குடை , ஊர்தி , அணிகலன் , பரிசன  முதலிய  அரசிலக்கணங்களில்லாத  அரசனும் , புலவர்களால்  உண்மையாகவே  நாயோடொப்ப  வைத்து  எண்ணப்படுவான் .                                                                                            371

( அரசனுக்குரிய  ஊர்தியில்  இருத்தலால்  நாயும்  அரசனுக்கொப்பாக  மதிக்கப்படுமெனவும் , முடி  குடை  முதலிய  அரசிலக்கணங்களில்லா மையால்  அரசனும்  நாய்க்கு  ஒப்பாக  மதிக்கப்படுவானெனவும்  கூறியவாறாம் . இதனால்  அரசன்  என்றும்  அரசியல்  அடையாளங் களை யுடையவனாய்ப்  பரிசனங்கள்  சூழத்  தனக்குரிய  ஊர்தியில்  இவர்ந்து  செல்லவேண்டுமென்பது  போதரும் . )

     ஆதலின்  அரசன் , தன்னொடொத்த  குணஞ்  செயல்கள்  வாய்க்கப்பெற்ற  தன்  சுற்றத்தார் , நண்பர் , தன்மாட்டு  அன்புடைய  மற்றையார்  ஆகிய  இவர்களோடு  நகரத்தில்  உலாவச்  செல்லல்  வேண்டும் . ஒரு  பொழுதும்  தாழ்ந்தவர்கள்  சூழச்  செல்லலாகாது . 372

     எப்பொழுதும்  பொய்யொழுக்கமுடையாரை  இழிந்தாரெனவும் உண்மை  யொழுக்கமுடையாரை  உயர்ந்தாரெனவும்  முறையே  கொள்ளல்  வேண்டும் . இழிந்தார்  நல்லோரினுஞ்  சிறப்ப  மென்மைக் குணத்தை  நன்கு   வெளிப்படுத்திக்   காட்டுவர் .                           373

( பொய்யொழுக்கமுடையார் , தம்மை  நல்லோரையொப்ப  மதிக்கும்  வண்ணம்  தம்பால்  உயர்ந்த  குணங்கள்  இருப்பனவாக  உலகத்துக்கு  வெளிப்படுத்திக்  காட்டுவர் ; அது  பற்றி  அவரை  உயர்ந்தவராக  மதிக்கலாகாதென்பது  கருத்து )

 35. யாண்டுதோறும்  நாட்டைச்  சுற்றிப்  பார்த்தல்

     அரசன்  ஆண்டுதோறும்  சிற்றூர்களையும் , பட்டினங்களையும், நாடுகளையும் நன்றாகத்  தானே  நேரிற்  பார்த்தும் , தன்னால்  நியமனம்  பெற்ற  அதிகாரிகளால்  குடிகளுள்  யாவர்  இன்புறுத்தப்  பட்டனர் ; யாவர்  துன்புறுத்தப்பட்டனரென்று  அன்னார்  நிலைகளை  நேரிற்  கண்டும் , அந்நிகழ்ச்சிகளை  உண்மையாக  வுணர்ந்து  உள்ளத்தமைத்துக்  கொள்ளல்  வேண்டும் . அதிகாரிகள்  பக்கலின்றிக்  குடிகள்பால்  நன்னோக்கமுடையனாதல்  வேண்டும் .                    374-375

     குடிகள்  பலராற்  குற்றங்கூறி  வெறுக்கப்படும்  அதிகாரியை  அரசன்  விலக்கிவிடல்  வேண்டும் . ஒருமுறை  நீதிநெறியிற்  றவறிய  அமைச்சனைக்  கண்டுபிடித்துத்  தனிமையிற்  றண்டித்தல்  வேண்டும்.  மீண்டும்  மீண்டுங்  குற்றம்புரியும்  அமைச்சனை  வெளிப்படையாகத்  தண்டித்து  விலக்கிவிடல்  வேண்டும் . அறவழி  பிழைத்தொழுகும்  மற்றைச்  சிற்றரசர்களுடைய  அரசியலையும் , பிற  பொருள்  முதலியவைகளையும்  அரசன்  கவர்ந்து  கொள்ளலாம் .                376-377

     தோற்ற  அரசர்களுடைய  நாட்டில்  எப்பொழுதும்  நீதிமன்றம்  அமைத்தல்  வேண்டும் . எல்லாப்பொருளையும்  இழந்து  தோல்வி  யெய்தினார்க்கு  அவரவர்  நிலைமைக்குத்  தக்கவாறு  வேதனங் கொடுத்து  உதவல்  வேண்டும் .                                                                 378

     தன்மாட்டுப்  பேரன்பும் , கட்டழகும் , அழகிய  ஆடையும்  இன்சொல்லும் , உயர்ந்த  அணிகலன்களும் , சிறந்த  கற்பொழுக்க முமாகிய  இவற்றையுடைய  இல்லாளோடு  கூடி  இன்புறல்  வேண்டும்

     இரண்டு  யாமம்  வரை  சயனிப்போன்  மிக்க  நலத்தை  யடைவான்.  தன்  நிலையினின்றும்  நீங்கலாகாது . நீதியினாற்  பகைவர்  கூட்டத்தை  வெல்லல்  வேண்டும் .                                                               380

     பற்களும்  மயிர்களும்  உகிர்களும்  தமக்குரிய  இடங்களினின்றும்  இழிந்தக்கால்  விளக்கம்  எய்தா . அங்ஙனமே  அரசனும்  தன்னிலையி னின்றும்  இழிந்தக்கால்  விளக்கமுறான் .  அரசன்  கடக்கமுடியாத  கேடு  நேர்ந்துழி , மலையரண்  வாய்ந்த  இடத்தையடைதல்  வேண்டும்.

( இக்கருத்தை , “ தலையி னிழிந்த மயிரனையர்  மாந்தர் , நிலையினிழிந்தக் கடை “  என்னுந்  திருக்குறளிற்  காண்க .  உகிர் – நகம் .) 

     அம்  மலையரணுள்  இருந்து , கள்வர்  தொழில்  மேற்கொண்டு , மீண்டும்  தன்  நாட்டைப்  பெறல்  வேண்டும் . அங்ஙனம்  கள்வர்  தொழில்  மேற்கொண்டுள்ள  அரசன் , விவாகம்  தானம்  வேள்வி  இவைகளின்  பொருட்டு  வைக்கப்பட்டனவல்லாத  பிறர்   பொருள்களில்  எட்டிலொரு  கூறு  அவர்  உணவிற்கு  விட்டு  எஞ்சிய வற்றையும் , கயவர்களுடைய  பொருள்   முழுதையும்  எவ்வாற்றானும்  கவர்ந்து  கொள்ளலாம் . எப்பொழுதும்  ஒரே  இடத்தில்  இருத்தலாகாது எவனிடத்தும்  நம்பிக்கை  வைத்தலாகாது .                                        382-383

( கள்வர்  தொழில்  மேற்கோடலாவது – பகைவர்  கைப்பற்றிய  நாட்டை  மீண்டும்  பெறுதற்குப்  பிறர்  காணாதவாறு  வேண்டியவை  செய்தல் . பிறர்பொருள் – நல்லோர்பொருள் .)

     எப்பொழுதும்  விழிப்புடையனா யிருத்தல்  வேண்டும் . தன்  உயிருக்கு  அழிவை  நினைத்தலாகாது . தறுகட்செயலும் , இடையறா  முயற்சியும்  தான்  மேற்கொண்ட  கள்வர்  தொழிலில்  வன்கண்மையும்  பிறர்மனை   நயவாமையும் , குலகன்னிகளை  வலிந்து  பற்றாமையுமாகிய  இக்குணஞ்  செயல்களை  யுடையவனாயிருத்தல்  வேண்டும். தன்  நியமனம்  பெற்ற  அதிகாரிகள் , புதல்வர்களைப்  போல்  பரிபாலிக்கப்  பட்டவராயினும், ஒரோவமயம்  பகைமை  யெய்தவுங்  கூடும் .                              385-385                                                                                                       

     முயற்சிக்குப்  பயனின்றாதல்  ஊழ்வலியானாம் . அதுபற்றி  முயற்சி  குற்றமுடையதாகாது . தன்முயற்சி  யனைத்தும்  எவ்வாற்றானும் பயனின்றிக்  கழிதலைக்  காணின் , எஞ்சிய  வாழ்நாளில்  தவஞ்செய்து  மேலுலகம்  எய்தக்கடவன்.                                                  386

( இக்கருத்தை,”பொறியின்மை  யார்க்கும்  பழியன்  றறிவறிந், தாள்வினையின்மை  பழி “  என்னும்  திருக்குறளிற்  காண்க .)

     அரசர்க்குரிய  காரியங்கள்  ஈண்டுச்  சுருக்கிக்  கூறப்பட்டன . இவற்றின்  விரிவை , இந்நூலின்  மிச்சிராத்தியாயமாகிய  நான்காம் அத்தியாயத்திற்  கூறுவேன் . அரசியற்  காரியங்களை  நிரூபித்துக் காட்டும்  முதல்  அத்தியாயம்  இவ்வளவிற்  கூறப்பட்டது .                    387

( நான்காம்  அத்தியாயம் , ஏழு  பிரகரணங்களை  யுடையதாய்ப்  பலவகை அரசியற்  காரியங்களையுங்  கூறுதலால்  அது  மிச்சிராத்தியாயம்  என்று  கூறப்பட்டது . )

சுக்கிர நீதியில்

“அரசியற்  காரிய  நிரூபணம்”  என்னும்

முதல்  அத்தியாயம்  முற்றிற்று .

                            ********************************************************

இரண்டாம்  அத்தியாயம் 

( இளவரசன்  முதலியோர்  இலக்கணங்களுங்  காரியங்களும் )    

  1. அரசனுக்கு  நற்றுணையானாம்  சிறப்பு   

     மிகச்  சிறிய  காரியமெனினும்  அதனைத்  துணையின்றி  ஒருவன்  செய்ய  முடியாது . அங்ஙனமாயின்  மிகப்  பெரிய  அரசியற்  காரியத்தைப்  பற்றிக்  கூறற்பாலது  யாதுளது ?                                       1

     அரசன்  எல்லாவிச்சைகளிலுந்  திறமையும்  நல்ல  சூழ்ச்சியறிவு  முடையனாயிருப்பினும் , அமைச்சர்களின்றித்  தானொருவனாகவே  தனித்திருந்து  சூழ்ச்சிப்பொருளைப்  பற்றி  ஆராய்தல்  கூடாது .        2

     சிறந்த  அறிவுள்ள  அரசன் , புரோகிதர் , அமைச்சர்  முதலிய  பிரகிருதிகள்  மன்றக்குழுவினர்  மற்றை  அதிகாரிகள்  அவைக்களத் துள்ளாராகிய  இவர்களுடைய  நல்ல  கொள்கைகளிலேயே  எப்பொழுதும்  நிற்றல்  வேண்டும் . தன்  கருத்தின்   வழி  ஒருபொழுதும்  ஒழுகுதல்  கூடாது .                                                                                                3

( மன்றக்குழுவினர் ; 1 ஆம்  அத்தியாயம்  251-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க)

     அரசன்  தன்  கருத்தின்  வழி  ஒழுகுவானாயின்  தன்  நாட்டினராலும்  பிரகிருதிகளாலும்  அப்பொழுதே  வேறுபடுக்கப்படுவான் ; அதனால்  அவன்  துன்பத்திற்கே  யாளாவான் .                                                                4

     பெரியோருடைய  உபதேச  மொழிகளாலும் , அனுபவங்களாலும் , ஆகமங்களாலும் , அநுமானத்தாலும்  ஒவ்வொரு  மனிதனிடத்தும்  அறிவு  விளக்கம்  வெவ்வேறு  இயற்கையுடையதாகக்  காணப்படும் . ஒப்புமைகளாலும் , ஆராய்ச்சியில்லாத  செயல்களாலும் , வஞ்சகங் களாலும் , ஆற்றல்களாலும் , உண்டாகும்  மனிதரின்  வழக்க  ஒழுக்கங்களின்  பற்பல  வேறுபாடும் , பெருமை  சிறுமைகளானும்  ஏற்றத்தாழ்வும்  காட்சியளவையாலறியப்படும் .                                      5-6

( இவ்விரண்டு  சுலோகங்களாலும்  முறையே  மனிதர்களின்  அறிவு  விளக்கமும்  வழக்க  ஒழுக்கங்களும்  பல்வேறு   வகையினவா மென்பது  போதரும் . )

     அவ்வெல்லாவற்றையும்  ஒரு  மனிதன்  தனிமையாக  அறிந்து  கொள்ளல்  இயலாததாகலின் , அரசன்  தன்  அரசியல்  வளர்ச்சி யெய்தற்பொருட்டுத்  தக்க  துணைவர்களை  ஆராய்ந்து  அமைத்துக்கொள்ளல்  வேண்டும் . அத்  துணைவராவார் , நற்குடிப்பிறப்பு , சிறந்த  குணவொழுக்கங்கள் , வீரம் , தலைவனிடத் தன்பு, இன்சொற்கூறல் , இதோபதேசஞ்  செய்தல் , துன்பம்  பொறுத்தல் , எப்பொழுதும்  அறத்திற்  பற்றுடைமை, தீநெறிக்கட்  செல்லும்  அரசனையும்  அறிவினாற்  றாங்கும்  ஆற்றல் , தூய்மை, அழுக்காறின்மை , காமமின்மை , வெகுளியின்மை , உலோபமின்மை , மடியின்மையாகிய  இவைகளை  யுடையராவார் .                                 7-9

                    2 . அரசனுக்குத்  தீத்துணையானாங்  கேடு

     அரசன்  தீயதுணையால்  தன்  கடமைகளையும்  அரசியலையும்  இழந்து  விடுவான் . திதிபுதல்வர்களாகிய  அசுரர்கள்  தீய  துணைவராலும்  தீச்செயல்களாலும்  அழிவெய்தினர் .                            10

     துரியோதனன்  முதலிய  அரசர்கள்  வீரமும்  ஆற்றலும்  மிகவுடையராயிருந்தும் , தீயதுணைவர்களாற்  கேடெய்தினர் . ஆதலின்  அரசன்  “யானே  எல்லாவற்றையும்  அறிந்துள்ளேன் “  என்னுஞ்  செருக்கொழிந்து  நல்ல  துணைவர்களையுடையனா யிருத்தல்  வேண்டும் .                                                                                          11

( தீயதுணைவர்கள் – சகுனி  முதலியோர் .)

3 . இளவரசுக்குரியார்

     இளவரசனும்  அமைச்சர்களும்  அரசனுக்கு , முறையே  வலம்  இடமாகிய  பக்கங்களிலுள்ள  தோள்களும் , கண்களும் , செவிகளுமாக   எண்ணப்படுவர் .                                                                                                 12                                                                                          

( இளவரசன்   அரசனுக்கு  வலப்பக்கத்துள்ள  தோளும் , கண்ணும் , செவியுமாவன்  எனவும் , அமைச்சர்  இடப்பக்கத்துள்ள  தோளும் , கண்ணும் , செவியுமாவர்  எனவும்  கொள்க . )

     அவ்விளவரசனையும்  அமைச்சரையு   மில்லாத  அரசன்  தோள், செவி, கண்  இவையில்லாதவனாவான் . ஆதலின் , அவ்விரு  பகுதியினரையும்  ஆராய்ந்தமைத்தல்  வேண்டும் . இன்றேற்  பெருங்கேடு  விளையும் .                                                                                     13

     எல்லா  அரசியற்காரியங்களையும்  எப்பொழுதும்  மடியின்றிச்  செய்தற்குரிய  ஆற்றலுடையனாய்த்  தன்  தருமபத்தினியிடம்  பிறந்த  ஒளரசபுத்திரனை  இளவரசனாகச்  செய்தல்  வேண்டும் .                       14

( ஒளரசபுத்திரன் – ஒருவனுக்கு  விதிப்படி  மணந்த  மனைவியிடத்துப்  பிறந்த  மகன் .)

     இன்றேல்  அத்தகைய  ஆற்றல்  வாய்ந்த  தன்  தம்பியையாதல் , ஆண்டினால்  தனக்கு  இளைய  சிறிய  தந்தையையாதல் , தன்  தமையன்  மகனையாதல் , தத்தபுத்திரனையாதல் , அபிமான  புத்திரனையாதல்  இளவரசுக்குரியனாகச்  செய்யலாம் .                       15

( தத்தபுத்திரன் – புத்திரனில்லாமல்  வருந்தும்  ஒருவனுக்குத்  தாய் தந்தை யிருவராலும்  மனமுவந்து  கொடுக்கப்பட்ட  புதல்வன் . அபிமான  புத்திரன் –  புதல்வனில்லாத  ஒருவன்  பிறராற்  பெறாமல் , தானே  அன்பினால்  வைத்து  வளர்க்கப்படுவன . இவனைக்  கிருத்திம புத்திரன்  என்று  மனு  கூறுவர் . [ மநு. அத் . 9 . 4-16-6]  )

     இங்குக்  கூறப்பட்டவர்களும்  இல்லையாயின் , தெளகித்திரனை யாதல் , தனக்குப்  பிரியமான  மற்றொருவனையாதல்  நியமனஞ்  செய்யலாம் .  தனக்கு  நலமுண்டாதற்பொருட்டு  இவ்விளவரசர்களுக்கு  மனத்தாலுங்  கேடு  நினைத்தலாகாது .            16

( தெளகித்திரன் – புதல்வியின்  மகன் .)

     தங்கடமையிற்  பற்றும் , வீரமும் , அன்பும் , நீதியுமுடைய  இராசகுமாரர்கள் இளைஞராக  விருப்பினும் , அன்னாரை  மிக்க  முயற்சியோடு  எப்பொழுதுங்  காத்தல்  வேண்டும் .                                 17

     அவ்  விளவரசர்  காக்கப்பட்டிருப்பினும் , அரசன்பால்  எங்ஙன மாயினும்  புரைநெறி  கண்டு  அவனையழிக்கும்  இயல்புடைய ராவரெனினும் ,  காக்கப்பட்டிலரேல் , அரசன்  செல்வங்களில்  வேட்கையுடையராய் , அவனை  யழித்துவிடக்  கருதுவரென்பது  கூறாமலேயமையும் .                                                                                           18

( புரைநெறி – பிழைவழி .)

     தோட்டியால்  அடக்கவொண்ணாதனவும் , மதக்களிப்புமிக்கனவு   மாகிய  களிறுகளை  யொத்த  அரசிளங்குமரர் , சிங்கம்  யானையைக்  கொல்லுதல்  போலத்  தம்மைக்  காக்கும்  அரசனை  விரைந்து  கொல்லும்  இயல்பினராவர் .                                                                             19

     அவ்  வரசிளங்குமரர் , தந்தைமாரையும்  உடன்பிறந்தாரையுங்   கொல்லத்துணிவரெனின் , மற்றையோரைப்  பற்றிச்  சொல்லவேண்டுவதென் ?  அறிவில்லாத  பாலனும்  தலைமையை  விரும்புவானாயின்  , காளைப்  பருவமுடையாரைப்  பற்றிக்  கூறற் பாலது  யாதுளது ?                                                                                                 20

     அரசன்  எப்பொழுதும்  தானே தன்  அன்பிற்குரிய  வினை செய்வோர்களால்  அவ்வரசிளங்குமரர்  மனக்கருத்துக்களைத்  திறமையானறிந்து , இடையறாமல்  அவரைத்  தன்  அணிமையில்   வைத்துக்  காக்கக்  கடவன் .                                                                               21

     அரசன்  அமைச்சர்  முதலியவர்களைக் கொண்டு ,தன்  புதல்வர்களை  நல்ல  நீதி  நூல்களிலும்  வில்வித்தைகளிலும்  திறமையும் , எப்பொழுதும்  இடுக்கணழியாமையும், சொல்லானும்  தண்டத்தானும் , ஒறுத்தலில்  அனுபவமும் , வீரத்தோடு  போருஞற்றுவதிற்  பற்றும் , எல்லாக்  கலைகளிலும்  வித்தைகளிலுந்  தேர்ச்சியும் , காரியத்திற்  சுறுசுறுப்பும் , நல்ல  வணக்கமுமாகிய  இவற்றை யுடையராயிருக்கும்படி  செய்வித்தல்  வேண்டும் .            22-23

( இடுக்கணழியாமை – துன்பம்  வந்துழி  மனங் கலங்காமை . கலைகள்- ஓவியம்  சிற்பம்  முதலியன . வித்தைகள் – வேதவேதாங்க முதலியன . )

     அரசன்  தன்  புதல்வர்களை  நல்ல  ஆடை  அணிகலன்களால் அணிசெய்து , அழகிய  விளையாட்டுப்  பொருள்களால்  மகிழ்வித்து இருக்கையீதல்   முதலியவைகளாற்  சிறப்பித்து , இனிய  உண்டிகளால்  வளர்த்து , இளவரசுக்குரியவர்களாகச்  செய்து  அப்பதவியில்  முடிசூட்டல்  வேண்டும் . பயிற்சி  செய்விக்கப்படாத  புதல்வர்களுடைய  குலம்  விரைந்து  அழிவெய்தும் .                                                                  24-25

    4 . ஒழுக்கக்கேடுடைய  புதல்வர்  முதலியோரை  நடத்துமுறை

     இராசகுமாரன்  மிக்க  தீயொழுக்கமுடையனாயினும் , அவனை  விலக்குதல்  கூடாது . அங்ஙனம்  விலக்கப்படின் , அதனாற்  றுன்புற்ற  அவன் , பகைவரைச்  சார்ந்து  தந்தையைக்  கொல்லத்  துணிவான் .  26

     காம  முதலிய  தீயொழுக்கம்  மேற்கொண்டிருக்கும்  புதல்வனை , அவ்வொழுக்கமுடைய  பிறரைக்  கொண்டு  துன்புறுத்தல்  வேண்டும் . மதச்செருக்கு  மிக்க  யானைப்  போற்  கட்டுக்கடங்காப்  புதல்வனை , இதத்தால்  அடக்கி  வயப்படுத்தல்  வேண்டும் .                                           27

( பிறரைக்கொண்டு  துன்புறுத்தலாவது  – அத்தீயொழுக்கமுடையார்  தம்  குழுவில்  இவனைப்  பெருமைப்படுத்தவாறு  செய்தல் .)

     மற்றைஞாதிகள்  தீயொழுக்கமுடையராயிருப்பின் , அவர்களை  முயன்று  புலி  முதலியவைகளாலும் , பகைவர்களாலும் , வஞ்சகச் செயல்களாலும்  நாட்டின்  நலங்குறித்துக்  கொன்றுவிடலாம் .              28

     அங்ஙனங்  கொலை  செய்தொழிக்காவிட்டால் , அத்தாயத்தார்  அரசனுக்குங்  குடிகளுக்குங்  கேடு  சூழ்பவராவர் . ஆதலின் , ஞாதிகள் தம்  சிறந்த  குணங்களால்  வேந்தனை  எப்பொழுதும்  மகிழ்வித்தல்  வேண்டும் . இன்றேல்  அவர்கள்  அரசன்பாற்  பெறும்  உதவியினின்றும்  உயிர்  வாழ்க்கையினின்றும்  விலக்கப்படுபவராவர் .                             29

     வேந்தன் , சபிண்டகரல்லாத  வேற்றுக்குடியிற்  பிறந்த  தத்தபுத்தி ரன்   முதலியவர்களைத்  தன்  புதல்வர்களாக  நெஞ்சத்தாலும்  நினைத்தலாகாது ; அவர்கள்  பொருள்மிக்க  மனிதனை  நோக்கித்  தத்தகத்  தன்மையை  விரும்புவராதலின் .                                                31

( சபிண்டகன் – ஏழுதலைமுறைக்  குட்பட்ட  சந்ததியிற்  றோன்றினவன் தத்தகத்தன்மை – தத்தபுத்திரனாந்தன்மை  . அதனைப்பொருள்  கருதி  விரும்புவாரைப்  புதல்வராகக்  கோடல்  நலமின்  றென்பது  கருத்து . )

     மனிதர்க்கு  ஆண்மகனை  யொப்பப்  பெண்மகளும்  தம்  ஒவ்வோருறுப்புக்களினின்றும்  தோன்றுகின்றாளாதலின் , தம்  குலத்திற்  பிறந்த  பெண்களுடைய  புதல்வர்,  முற்கூறிய  மற்றைத்  தத்த  புத்திரர்களினுஞ்  சிறந்தவராவர் .                                                      32

     ஆதலின் , பிண்டதானத்தில்  புத்திரனுக்கும்  தெளகித்திரனுக்கும்  பேதமின்றாம் . அரசன் , அத்தெளகித்திரனும்  இல்லையாயின் , நிலத்தையுங்  குடிகளையுங்  காத்தற்பொருட்டுத்  தத்தபுத்திரனைப்  பேணல்  வேண்டும் .                                                                                           33

( பிண்டம் – பிதிர்க்களை  நோக்கியிடும்  சோற்றுத்திரளை.)

     வேந்தன்  மிக்க  பொருளுடையனாயின் , குடிகளைக்  காத்தற்பொருட்டு  மற்றொருவனுக்குப்  பிறந்த   மகனைத்  தன்  மகனாக  எண்ணி , அத்  தத்தபுத்திரனுக்கு  எல்லாவற்றையுங்  கொடுத்தல்  வேண்டும் . பொருளிலனாயின்  அங்ஙனஞ்  செய்தல்  வேண்டா .                                                                                                               34

     இவ்வுலகத்திற்  பொருளைத் [தத்த  புத்திரர்க்கேனுங்  காத்து  வைப்பதன்றி ]  தானம்  தேவ  காரியம்  இவற்றிற்கு  உபயோகப்படுத்த எண்ணினார் . இதன்கண்  வியப்பு  யாதுளது ? ஒருவன்  இளவரசனாகியும்  வேறுபாடு  எய்தல்  தக்கதன்று .                                 35

     வேந்தன்  தன்  தந்தை ,  குரு , தமையன் , தம்பி , தமக்கை , தங்கை, தன்மாட்டன்புடைய  மற்றை  நண்பராகிய  இவர்களுள் , எவர்க்கேனும்  தன்  பெருஞ்  செல்வத்தைக்  கொடுத்தலாகாது .                                        36

( பெருஞ்  செல்வத்தைக்  கொடுத்துவிடிற்  பின்  அப்பொருட்குறைவால்  தலைமையின்  சிறப்புக்  குன்றிவிடுமென்பது  கருத்து . )

5 . இளவரசர்  கடமை

     இராச  குமாரர்  நாட்டிலுள்ள உயர்குடிக்கட்  பிறந்தாரை   அவமதித் தலுமாகாது ; துன்புறுத்தலுமாகாது .  பெருஞ்  செல்வத்தை  யெய்தினும்  தந்தையின்  ஆணைவழி  ஒழுகல்  வெண்டும் .                                        37

     புதல்வனுக்குத்  தந்தையின்  ஆணையே  சிறந்த  அணியென்று  கூறப்படும் . ஆகலானன்றே , [ தந்தையின்  சொற்படி ]  பரசுராமன்  தாயைக்  கொன்றான் . இராமன்  வனத்தை  யடைந்தான் .                  38

     பரசுராமன்  இராமனாகிய  இவ்விருவரும் , தந்தையர்  வன்மையால்  முறையே  தாயையும்  அரசியலையும்  மீண்டும்  எய்தப்பெற்றனர் . ஒன்னார்த்  தெறலும்  உவந்தாரை  ஆக்கலுமாகிய  ஆற்றல் மிக்க  தந்தையினது  ஆணை  மிகச்  சிறந்ததாகும் .                                            39

( தெறல் – சபித்தல் , ஆக்கல் – அநுக்கிரகித்தல் , பரசுராமர் , தம்  தாய்  இரேணுகை  நெஞ்சத்தாற்  பரபுருடனை  நினைந்த  குற்றத்திற்குக்  கழுவாயாக  அவளைக்கொன்றுவிடும்  வண்ணம்  தந்தை  சமதக்கினி  முனிவர்  இட்ட  கட்டளையைத்  தன்  உடன்பிறந்தார்  மறுத்துவிட , தாம்  நிறைவேற்றினர் , பின்  தந்தையை  வேண்டித்  தாயை  உயிர்ப்பித்தனர் . இராமபிரான் , தந்தை  சொல்  ஏற்று  நாட்டைத்  துறந்து  காடெய்திப்  பின்  மீண்டும்  அரசியலை  யெய்தினர் . )

     தன்னுடன்  பிறந்தாரெல்லாரிடத்தும் , தன்  செல்வப்  பெருக்கையாதல்  அதிகாரத்தையாதல்  காட்டலாகாது . தாய பாகத்திற்குரிய  தருமபுத்திரன்  முதலியோர்களை  அவமதித்தமையால்  துரியோதனன்  அழிவெய்தினான் .                        40

( பாண்டவர்க்குத்  தாயபாகங்  கொடுக்க  மறுத்தமையால்  துரியோதனன்  கேடெய்தினானென்பது  பிரசித்தம் . )

     இந்நிலவுலகத்தில் , இராசகுமாரர்  சிலர்  உயர்ந்த  நிலைமை  யெய்தியும் , தந்தையின்  ஆணையைக்  கடந்தமையால் , அந்நிலையினின்றும் இழிந்து  அடிமை  போலாயினர் . இந்நிகழ்ச்சிக்கு  யயாதியின்  புதல்வர்களும்  விசுவாமித்திர  முனிவரின்  புதல்வர்களும்  எடுத்துக்காட்டாவர் . ஆதலின் , புதல்வர்  மன  மொழி   மெய்களால்  எப்பொழுதும்  தந்தையின்பால்  வணங்கி  யொழுகுவதிர்  பற்றுடையராயிருத்தல்  வேண்டும் .                                                          41-42

( யயாதியின்  புதல்வன்  –  யது , துருவசு , திருகியு , அனு , பூரு , என்னும்  ஐவராவர் . யயாதி  சுக்கிரரால்  முதுமைத்  துன்பம்  எய்தச்  சபிக்கப்பட்டுப்  பின்  அதனை  ஏற்று  இளமை  தரும்படி  தன்  புதல்வர்களைத்  தனித்தனி  வேண்ட , இவர்களுள் , பூரு  வொழிந்த  மற்றை  நால்வரும்  மறுத்து  விட்டனர் . அதனால்  அந்நான்கு  புதல்வர்களும் , இராச்சிய  சுகமிழந்து  பாவிகளாய்ப்  பலவகைத்  துன்பங்களையும்  அடையுமாறு  அவ் யயாதியாற்  சபிக்கப்பட்டனர். அம்பரீடன்  நரமேத  யாகஞ்  செய்யத்  தொடங்கி  விசுவாமித்திரரின்  மருமகனும்  இருசிகன்  புதல்வனுமாகிய  சுனச்சேவனை  விலைக்கு  வாங்கிச்  செல்லுங்கால் , அச்  சுனச்சேபன்  விசுவாமித்திரரிடம்  குறை யிரப்ப , அவர்  அவனுக்குப்  பிரதியாகப்  போம்படி  தம்புதல்வர்  நால்வர்க்குங்  கட்டளையிட்டும், அப்புதல்வர்  உடம்படாமையால் , அவர்களெல்லோரையும்  வேடராகும்படி  சபித்தனர் . )

     புதல்வன்  எச்செயல்  தந்தைக்கு  மகிழ்ச்சிதரத்தக்கதோ  அச்செயலையே  உறுதியாகச்  செய்தல்  வேண்டும் . எச்செயல்  தந்தைக்குச்  சிறிதேனும்  வருத்தந்தரத்தக்கதோ , அதனைச்  செய்தலாகாது .                                                                                            43

     தந்தை  எவன்பால்  அன்புபூண்டுளானோ , அவனிடத்துத்  தானும்  அன்புடையனா  யொழுகுதல்  வேண்டும் . தந்தை  எவன்பால்  வெறுப்பு  மேற்கொண்டுளானோ   அவனைத்  தானும்  வெறுத்தொதுக்கல்  வேண்டும் .                                                                                                        44

     தந்தைக்கு  உடன்பாடில்லாததும்  முரணாகவுள்ளதுமாகிய  காரியத்தைத்  தான்  மேற்கொள்ளலாகாது . மறைவிற்  கண்டு  கூறும்  ஒற்றர் , சூசகராகிய  இவர்களுடைய  பிழைச்  சொற்களால் , தந்தை  மாறுபாட்டறிவுடையனாங்கால் , அமைச்சர்  முதலியோர்களின்  கருத்துக்கியைந்ததை  ஆராய்ந்து  செய்து , பின்னர்த்  தனிமையில்  வைத்துத்  தந்தையை  யறிவுறுத்து  மகிழ்வித்தல்  வேண்டும் . அங்ஙனம்  செய்தும்  தந்தை  மகிழ்ந்திலனாயின் , அச்சூசகர்களை  எப்பொழுதும்  பெருந்தண்டத்தால்  ஒறுத்தல்  வேண்டும் .               45-46

( சூசகர் – பிறர்  குற்றத்தை  யாராய்ந்து  அரசனுக்கு  அறிவிப்போர்  4-ஆம்  அத் . 5 – ஆம்  பிரகரணம் , 72-ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     இளவரசன்  எப்பொழுதும்  அமைச்சர்  முதலிய  தலைமை  யதிகாரிகளின்  வஞ்ச  மனத்தை  யறிந்து  கொள்ளல்  வேண்டும் ; நாடோறும்  காலையில் , தந்தை  தாய்  ஆசிரியனாகிய  இவர்களை  வணங்கி , பின்னர்த்  தன்னால்  எவ்வெக்காரியஞ்  செய்யப்பட்டனவோ  அவற்றை நாடோறும்  அரசனுக்கு  அறிவித்தல்  வேண்டும் . இங்ஙனம்  குடும்ப  விரோதமின்றிக்  குடும்பத்தில்  இருத்தல்  வேண்டும் .      47-48

     வள்ளன்மையும் , வாய்மையும்  வாய்ந்த  இளவரசன் , கல்வி , செயல்  குணம்  இவற்றாற்  குடிகளை  இன்புறுத்தி , எல்லா  மக்களையும்  மகிழ்வித்து , எளிதில்  தன்வயப்படுத்துக்கொள்ளல்  வேண்டும் .        49

     அரசிளங்குமரன்  முற்பக்கத்துத்  திங்களஞ்செல்வனைப்  போல்  நாணாளும்  மெல்லமெல்ல  வளர்ச்சியெய்தல்  வேண்டும் . அவன்  பகைமையின்றி  அரசியலை  யெய்தினானாயினும் , தக்க  துணைவர்களையும்  அமைச்சர்களையும்  முடையனாயிருத்தல்  வேண்டும் . இங்ஙனம்  ஒழுகுவோன்  நெடுங்காலம்  இந்நிலவுலகத்தை  யனுபவிப்பான் . இளவரசனுக்கு  நலம்  பயக்குங்  காரியங்கள்  இங்குச்  சுருக்கமாகக்  கூறப்பட்டன .                                                                     50-51

( வளர்ச்சி – ஈண்டு  நற்குணம்  நற்செயல்  அதிகாரங்களின்  பெருக்கம்)

(சாதியையுங்  குலத்தையுமாத்திரம்  ஆராய்தலாகா  தென்றதனால்  குணஞ்செயல்களையே  முக்கியமாகச்  சோதித்தறிய  வேண்டுமென்பது  போதரும் . )

6 . அமைச்சர்  முதலியோரை  ஆராய்ந்தமைத்தல்

     இனி  அமைச்சர்  முதலியவர்களின்  செயல்களும்,  இயற்கையின்  வன்மை  மென்மைகள் , சிறந்த  எடுத்துக்காட்டாக  எண்ணப்படுந் தன்மை , குலநலம் , சொல்வன்மையாகிய  இவை  முதலியவற்றோடு  கூடிய  அவர்தம்  இலக்கணங்களும்  சுருக்கிக்  கூறப்படும் .                52

     சோதனை  செய்வோர்  பொன்னை  உருவாக்கி  ஆராய்வர். அங்ஙனமே  அமைச்சர்  முதலியோரைச்  செயல் , உடன்பழகுதல் , குணம்  ஒழுக்கம் , குலப்பிறப்பு  முதலியவற்றால்  எப்பொழுதும்  ஆராய்ந்து  தெளிதல்  வேண்டும் . தெளிந்தபின்  நம்புதற்குரியாரை  நம்புதல்  வேண்டும். சாதியையும்  குலத்தையும்  மாத்திரம்  ஆராய்தலாகாது .                                                                                            53-54

     ஒருவனுடைய  செயல்  ஒழுக்கம்  அறிவு  முதலிய  குணங்களாகிய  இவைகளே  பாராட்டப்படுவனவாம் .  உயர்ந்த  சாதியுடைமை  நற்குடிப்பிறப்பு  ஆகிய  இவற்றால்  மாத்திரம்  ஒருவன்  சிறப்படைய மாட்டான் . விவாகத்திலும் உணவிலுமே  என்றும்  சாதி  குலங்களை  ஆராய்தல்   வேண்டும் .                                                                                   55

     அமைச்சர்  முதலிய  அரசியற்றொழில்  புரிவோர்க்குரிய  இலக்கணங்களாவன :  உண்மையுரைத்தல் , உயர்குணமுடைமை , புகழுடைமை , உயர்குடிப்பிறப்பு , பொருளுடைமை , நல்லொழுக்கம் , நற்செயல் , மடியின்மை , தங்காரியத்திற்குரிய  முயற்சியினும்  நான்கு    மடங்கு  மிகுதியான  மனமொழி  மெய்  முயற்சிகளால்  தலைவன்  காரியத்தைச்  செய்தல் , வேதனத்தளவின்  மகிழ்தல் , இன்சொற்கூறல்,  காரியத்திறமை , தூய்மை , அசைவின்மை , பிறர்க்குதவிசெய்தலில்  விருப்பு , பிறர்க்குக்  கேடு  விளைவித்தலில்  வெறுப்பு , தலைவனுக்குக்  குற்றமிழைத்தோன்  தந்தையாயினும்  மகனாயினும்  அவனை  வெளிப்படுத்திக்  காட்டல் , தலைவன்  நெறி  பிழைத்தொழுகு வானாயின்  அவனை  மிக  முயன்று தடுத்து  நன்நெறிக்கட்  செல்லும்  வண்ணம்  அறிவுறுத்தல் , அவன்  சொல்லைத்  தடுத்துரையாமை ,  அவன்பாலுள்ள  குறைகளை  வெளிப்படுத்தாமை , நற்செயற்கண்  விரைதல் , தீச்செயற்கண்  தாழ்த்தல் , தலைவனுடைய  மனைவி மக்கள்  நண்பராகிய  இவர்கள்பால்  ஒருபொழுதும்  புரைகாணாமை, தலைவனிடத்துப்போல  அவன்  மனைவி  மக்கள்  சுற்றத்தாரிடத்தும்  மதிப்பு  மேற்கோடல் , தற்புகழ்ச்சியின்மை , பிறரை  அவமதிக்கவிரும் பாமை , அழுக்காறின்மை , பிறர்பழி  தூற்றாமை , பிறர்  அதிகாரத்தை  விரும்பாமை , அவாவின்மை , எப்பொழுதும்  மலர்ச்சியுடைமை , தலை வனாற் றரப்பட்ட   ஆடை  அணிகலன்களைத்   தரித்து  எப்பொழுதும்  அவன்  முன்னிருத்தல் , வேதனத்திற்கு  ஒப்பச்   செலவிடல் , பொறியடக்கம் , அருளுடைமை , அஞ்சாமை , தலைவனது  தகுதியில்லாச் செயலைத்  தனிமையில்  எடுத்துக்காட்டி  யறிவுறுத்தல்  ஆகிய  இக்குணஞ் செயல்களாம்  இவற்றையுடையார்                    சிறந்தவராவர் .                                                                                               56-64

இங்குக்  கூறப்பட்ட  குணஞ்செயல்களுக்கு  மாறான  குணஞ்செயல் களையுடைய அமைச்சர்  முதலியோர்  பழிக்கப்படுவர் . வேதனம்  பெற்று  அரசியற்றொழில்  புரிவோருள்  மிகக்  குறைந்த  வேதனம்  பெறுவோர் , அடிக்கடி  குற்றம்  புரிந்து  தண்டத்தாற்  றுன்புறுத்தப் பட்டார் ,  வஞ்சகர் , அச்சமுடையார் , பிறர்பொருளில்  அவாவுடையார் , தலைவன்  முன்னிலையிற்  புகழ்ந்துரைப்போர் , கள்ளுண்டு  களிப்போர் , காமம்  வேட்டையாடல்  முதலிய  குற்றமுடையார் , நோய்கோட்பட்டார் , கைக்கூலி  விருப்பமுடையார் , சூதாடுவார் , மறுமை  முதலியன  இல்லையென்பார் , பிறரை   அவமதிப்பார் , கடுஞ்  சொற்களாற்  பிறர்  நெஞ்சைப்  பிளப்பார் , பகைவனுடைய  நண்பர், பகைவனுடைய  சேவகர் , முன்னைப்  பகைமைத்  தொடர்ச்சியுடை யார் , சினமுடையார் , ஆராயாது  காரியம்  புரிவார் , அறமில்லார் , ஆகிய  இவர்கள்  நல்ல  சேவகர்களாகமாட்டார்கள் . அமைச்சர்  முதலியோரிலக்கணங்களின்  நன்றுதீதுகள்  சுருக்கமாக  இங்குக்  கூறப்பட்டன .                                                                                                65-68

( மிகக்  குறைந்த  வேதனம்  பெறுவோர்  கைக்கூலி  பெற  விரும்புவராதலின் , அவரை  உயர்ந்த  காரிய  நிருவாகங்களில்  நியமிக்க லாகாதென்பது கருத்து . )

7 . புரோகிதன்  முதலியோரின்  சிறப்பு  முறை

இனி, புரோகிதன்  முதலியோரின்  இலக்கணங்கள்  சுருக்கிக் கூறப்படும் . புரோகிதன் , பிரதிநிதி , பிரதானன் , சசிவன் , மந்திரி , நீதியதிபன் , பண்டிதன் , சுமந்திரன் , அமாத்தியன் , தூதன்  ஆகிய  இப்பதின்மரும்  அரசனுடைய  பிரகிருதிகளாவார் .                          69-70

( பிரகிருதிகள் – அரசனிடத்து  வேதனம்  பெற்று  அரசியற்றொழில்  புரிவோருள்  தலைவராவார் . இவரைப்  “பகுதிகள்”  என்பர்  திருக்குறள்  ஆசிரியர் .)

     தூதனை  இறுதியாகவுடைய  புரோகிதன்  முதலிய  பதின்மரும்  கீழுள்ளார்க்குரிய  அளவினின்றும்  மேலுள்ளார்  முறையே  பத்திலொருகூறு  மிகுதியான  வேதனம்  பெறுபவராவர் . அரசன்  எப்பொழுதும்  சுமந்திரன் , பண்டிதன் , மந்திரி , பிரதானன் , சசிவன் , அமாத்தியன் , நீதியதிபன் , பிரதிநிதியாகிய  இவ்வெட்டுப்  பிரகிருதிகளை  யுடையனாவானென்றும்  சில  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                                           71-72

( புரோகிதன்  முதலிய  பதின்மரும்  முறையே  பத்திலொருகூறு  அதிக  வேதனம்  பெறுதலாவது : தூதனது  வேதனத்தினின்றும்  அமாத்தியனது  வேதனம்  பத்திலொருகூறு  மிகுதியாக   விருத்தல்  வேண்டும் . அமாத்தியனது  வேதனத்தினின்றும்  சுமந்திரனது  வேதனம்  பத்திலொருகூறு மிகுதியாகவிருத்தல் வேண்டும். இங்ஙனமே மற்றவர்க்கும் முறையே பத்திலொருகூறு விழுக்காடு  கணக்கிட்டுக்கொள்க . அஃதாவது , தூதனுக்கு  நூறு  பொன்  வேதனமாயின் , அமாத்தியனுக்கு  நூற்றுப்பத்துப்  பொன்  வேதனமாதல்  வேண்டும் . பிறவும்  இவ்வாறு  உணர்க.)

     அக்கொள்கைப்படி  அரசனுடைய  பிரகிருதிகளாகிய  இவ்வெண்மரும் , எப்பொழுதும்  ஒத்த  அளவினையுடைய  வேதனம்  பெறுபவராவர் . பிறருடைய  இங்கிதம்  ஆகாரங்களின்  உண்மையை  யறியுந்  திறன்  வாய்ந்த  தூதன் , அரசனுக்கும்  பிரகிருதிகளுக்கும்  உடனிருந்து  துணைசெய்பவனாவானென்று  கருதப்படுவான் .         73

( இங்கிதம் – குறிப்பால்  நிகழும்  உறுப்பின்றொழில்  . ஆகாரம் – குறிப்பின்றி  நிகழும்  வேறுபாடு . இச்சுலோகங்களின்  கருத்துக்கள்  வேறு  சிலர்  கொள்கையாகக்  கூறப்பட்டவாதலின்  பிரகிருதிகள்  பதின்மர்  என்பதனோடு  முரணாமை யுணர்க . )

புரோகிதன்  அரசனது  நாட்டை  இடையூறணுகா வண்ணம்  தாங்குவோனாதலின் , பிரதிநிதி  முதலிய  எல்லோரினும்  சிறந்தவனாய் , முதற்கண்  வைத்து  எண்ணப்படுவான் . அவனுக்குப்பின்  பிரதிநிதியும் , அவனுக்குப்பின்  பிரதானும் , அவனுக்குப்பின்  சசிவனும் , அவனுக்குப்பின்  மந்திரியும் , அவனுக்குப்பின்  நீதியதிபனும் , அவனுக்குப்பின்  பண்டிதனும் , அவனுக்குப்பின்  சுமந்திரனும் , அவனுக்குப்பின்  அமாத்தியனும் , அவனுக்குப்பின்  தூதனுமாகிய  இவர்  முறைப்படுத்திக்  கூறப்படுவர் . இவர்கள்  பின்னுள்ளவரை  நோக்கமுன்னுள்ளவர்  முறையே பதவியிற்  சிறந்தவராவர் .                                                                                                 74-77

            8 . புரோகிதன்  முதலியோர்களின்  இலக்கணங்களும் காரியங்களும்

     மந்திரானுட்டானம்  புரிதல் , வேதங்களெல்லாவற்றையும்  ஓதி யுணர்தல் , கன்மங்களை  விரைந்து  செய்யும்  ஆற்றல் , பொறியடக்கம் , சினமின்மை , உலோப  மோகங்களின்மை, வேதங்  கங்களான  ஆறு  சாத்திரங்களையும்  அங்கங்களோடுங்  கூடிய  தநு  வேதத்தையும்  அறநூலையும்  பொருணூலையும்  பயின்றறிதல் , தன்  சினத்திற்கு  அஞ்சி  அரசனும்  தரும  நீதிகளிற்  பற்றுடையனாம்படி  செய்தல் , நிதி  நூற்பயிற்சி , அம்பு  வாள் முதலிய  படைக்கலங்களைப் பற்றிய  நூற்பயிற்சி , படைகளை  அணிவகுக்குந்  திறமை , சாபானுக்கிரகவன்மை  ஆகிய  இவ்வெல்லாம்  அமையப்  பெற்றவன் புரோகிதனாவான் . அவனே  ஆசிரியனுமாவான் .                               77-80

     முற் கூறப்பட்ட  பிரகிருதிகளின்  நல்ல  சூழ்ச்சி  யின்றேல் , அரசியல்  நிச்சயமாக  அழிவெய்தும் . அரசன்  தீநெறிக்கட்  சேறலில்  தடையுமின்றாம் . ஆதலின்  அப்பிரகிருதிகள்  நல்ல  சூழ்ச்சியறிவு  உடையவர்களாக  இருத்தல்  வேண்டும் .                                                     81

     அரசன்  அஞ்சி  நடத்தற்குரிய  தகுதியில்லாத  புரோகிதன்  முதலியவர்களால்  அரசியல்  எங்ஙனம்  வளர்ச்சி  யடையும் ! அத்தகைய  பிரகிருதிகள் , ஆடை  அணிகலன்கள்  முதலியவைகளால்  அணிசெய்யப்பட்ட  மகளிரை  யொப்பர் .                                                   82

     நாடு , குடி , படை , பொருள் , நல்ல  அரசியல்  ஆகிய  இவை  வளர்ச்சியெய்தற்கும் , பகை  கெடுதற்குமுரிய  சூழ்ச்சி  அமையப்பெறாத  அமைச்சர்  முதலியவர்களால்  வரக்கடவ  பயன்  யாதுளது?                                                                                                                83

     செய்யத்தக்கன  இன்ன  தகாதன  இன்னவென்று  நன்றாக  அழுந்தி  ஆராயும்  அறிவுடையோன்  பிரதிநிதியென்று  சொல்லப்படுவான் . அரசியற்  காரியம்  எல்லாவற்றையும்  பார்ப்போன்  பிரதானனாவான் . போர்க்குரிய  படையியல்பு  அறிந்தோன்  சசிவனாவான் .                     84

     நீதிநூல்  ஆராய்ச்சியிலும் , அதன்வழி  யொழுகுதலிலும்  திறமை  வாய்ந்தவன்  மந்திரியாவான் . அறத்தின்  உண்மையை  யறிந்தவன்  பண்டிதனாவான் . எப்பொழுதும்  உலகியலையும் , நூன்  முறையையும் , நீதியையும்  அறிந்தவன்  நீதிபதி  யாவான் .                85

     காலம் , இடங்களை  நன்றாக  அறிபவன்  அமாத்தியன்  என்று  கூறப்படுவான் . பொருளின்  வரவு  செலவுத்  தொழிலில்  நல்ல  பயிற்சியுடையவன்  சுமந்திரனாவான் .                                                       86

     பிறருடைய  இங்கிதம்  ஆகாரம்  செயல்களையறிதல் , மறதியின்மை , காலம்  இடம்  அறிந்து  செயல் , சந்தி  விக்கிரக  முதலிய  ஆறு  குணங்களையுமாராய்ந்தறிதல் , சொல்வன்மை  அஞ்சாமையாகிய  இவற்றையுடையோன்  தூதன்  என்று  கூறப்படுவான் .                                                                                                   87

    பிரதிநிதி , ஒரு செயல்  தீயதெனினும் , அது  தாழ்த்தலின்றி  எவ்வமயஞ்  செய்தற்குரிமையுடையதோ  அவ்வமயம்  அதனையும்  ஒரு  செயல்  நல்லதெனினும் , அஃது  எவ்வமயம்  செய்தற்குரிமையில்லாததோ  அவ்வமயம்  அதனையும் , தகுதி  தகுதியின்மை  நோக்கி  அரசனுக்கு  அறிவித்தல் , தான்  செய்தல்  செய்வித்தல் , அறிவியாதிருத்தல் , செய்யாதிருத்தலாகிய  இவற்றை  எப்பொழுதும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                               88

( செய்தற்குரியமையுடையதனைத்  தகுதி  நோக்கியறிவித்தல்  செய்தல்  செய்வித்தல்  வேண்டுமெனவும் , செய்தற்குரித்தல்லாததனைத்  தகுதியின்மை  நோக்கி  அறிவியாதிருத்தல்  செய்யாதிருத்தல்  வேண்டுமெனவும்  இயைத்துப்  பொருள்  கொள்க.  ஒரு  செயல்  தீதெனினும் , வேண்டுங்காலத்திற்  செய்ய  வேண்டுமென்பதுங்  கூறப்பட்டன . தான்  செய்யக்  கருதாததொன்றைப்  பிறர்  செய்யும் வண்ணம்  உடன்படானென்பது  எளிதிற்  கிடைத்தலின் , செய்யாதிருத்தல்  ஈண்டுக்  கூறப்பட்டிலது .)

     பிரதானன் , எல்லோருடைய  அரசியற்  றொழில்களுக்குள்  யாது  யாது  உண்மையாக  வுள்ளது , யாது  யாது  பொய்மையா  வுள்ளது  என்று  துணிதற்குரியவாறு  அவற்றை  ஆராய்தல்  வேண்டும் .            89

      சசிவன் , யானை , குதிரை , தேர் , காலாட்படை , வன்மை  மிக்க  ஒட்டகம் , எருது ஆகிய  இவற்றினுள்ளும்  பல்வேறு  வகைப்பட்ட  ஆயுதக்  கூட்டங்களினுள்ளும்  காரியத்திற்குத்  தகுதிவாய்ந்தன , அத் தகுதியில்லாதன  பழையன  புதியன  எவ்வளவுள்ளன  வென்பதையும், வாத்தியங்களின்  மொழிகளாற்  குறிக்கப்படும்  சங்கேதங்களாற்  படைகளை  அணிவகுக்கும்  திறன்  வாய்ந்தோர் , கிழக்கு , மேற்கு  முதலிய  எப்பக்கத்தும்  வினைகுறித்துச்  செல்வோர் , அரசியலடையாளமுள்ள  அம்பு  வாள்  முதலிய  படைக்கலங்களைத்  தாங்கி  நிற்போர் , கடை , இடை , தலையாகிய  வினைகளைப்  புரியும்  ஏவலாளர் , குதிரை  வீரர்  ஆகிய  இவர்களுள்  காரியத்திற்குத்  தகுதி  வாய்ந்தோர் , அத்தகுதி  யில்லாதார், பழையர் , புதியர் , எத்துணையர்  உள்ளார்  என்பதையும் , வாள்  முதலிய  கைப்படைகள்  இருப்புக்  கோளங்கள் , நெருப்புப்பொடிகள் முதலிய  போர்க்குரிய  பண்டங்கள்  எவ்வளவுள்ளன  வென்பதையும்  நன்றாக  ஆராய்ந்து  அவற்றைப் பற்றிய  காரியங்களை  அரசனுக்கு  அவ்வப்போது  விளக்கமாக  அறிவித்தல்  வேண்டும் .                                                                                90-94

     மந்திரி , சாமம் , தானம் , பேதம் , தண்டம்  என்னுமிவற்றை  எவர்பால்  எப்பொழுது  எவ்வாறு  செய்தல்  வேண்டுமென்பதும் , அவற்றால்  வரும்  பயன்   மிகுதி  நடுத்தரம்  குறைவு  என்னுமிவற்றுள்  எவ்வளவாமென்பதும்  ஆகிய  இவ்வெல்லாவற்றையும்  நன்றாக  ஆராய்ந்து  துணிந்து  வேந்தனுக்கு  அறிவித்தல்  வேண்டும் .              95

( இவ்வுபாயங்களைப்  பரிமேலழகர்  தான  சாம  பேத  தண்டமென்று  முறைப்படுத்தி  அவற்றை  முறையே  கொடுத்தல் , இன்சொற்சொல்லல் , வேறுபடுத்தல் , ஒறுத்தல்  என்று  கூறுவர் [ 467 – திருக்குறள்] )

     நீதிபதி , நீதிமன்றத்தின்கண்  எப்பொழுதும்  உரிய  அவையோர்  சூழவிருந்து  கற்பிக்கப்பட்டனவும் , உண்மையாக  நிகழ்ந்தனவுமாகிய  மக்களைப்  பற்றிய  வழக்குகளைப்  பொய்யாயினவும்  உண்மையாயினவுமாகிய  சான்று  இலிகிதம்  அநுபவம்  என்னும்  மாநுடசாதனங்களாலும் , நெருப்பு  முதலிய  தெய்வீக  சாதனங்களாலும் , ஆராய்ந்து , எவ்வழக்குகளில்  எச்சாதனங்கள்  சிறப்புடையன  வென்பதையும்  அறிந்து , பொருந்துமாற்றானும்  காட்சி  அனுமான  உபமான  அளவைகளானும் , உலகியலறிவானும் , நீதி நூலறிவானும், பலர்க்கும்  ஒப்ப  முடிந்தவைகளை  நன்கு  துணிந்து  அரசனுக்கு  அறிவித்தல்  வேண்டும் .                                                96-98                                                                      

( மாநுட  தெய்விக  சாதனங்களை  4-ஆம்  அத்தியாயம்  5-ஆம்  பிரகரணம்  164-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க ,)

     பண்டிதன் , பண்டை  அறங்களுள்  , எவை  மக்களால்  நிகழ்காலத்திற்குரியனவாக  மேற்கொள்ளப்பட்டன  வென்பதும் , எவ்வறங்கள்  நூல்களிற்  கூறப்பட்டும்  இப்பொழுது  மக்களுக்கு  ஒவ்வாதனவென்பதும் , எவ்வறங்கள்  நூல்களுக்கு  ஒவ்வாதனவாகியும்  மக்களான்  மேற்கொள்ளப்பட்டன  வென்பதுமாகிய  இவற்றை   நன்றாக  ஆராய்ந்து , இம்மையினும் , மறுமையினும்  நலம்  பயக்கும்  அறங்களை  அரசனுக்கு  உணர்த்தல்  வேண்டும் .                               99-100

     சுமந்திரன் , புன்  முதலிய  அசையாப்  பொருள்களிலும் , பசு  முதலிய  அசையும்  பொருள்களிலும்  இவ்வளவு  இவ்வாண்டில்  தொகுத்துச்  சேர்க்கப்பட்டனவெனவும் , செலவாயின்  இவ்வளவெனவும் , எஞ்சியவை  இவ்வளவிருக்கின்றன வெனவும்  அரசனுக்கு  விளங்க  தெரிவித்தல்  வேண்டும் .                                         101

( புன்  முதலிய  அசையாப்பொருள் – புறத்தே  காழ்ப்புடையனவாகிய  தெங்கு  பனை  முதலியனவாம் .  அகத்தே  காழ்ப்புடையன  மா , பலா , முதலிய  மரங்களாம் . இதனை  “புறக்காழனவே  புல்லென  மொழிப , அகக்காழனவே  மரனென  மொழிப “  என்னும்  தொல்காப்பியச்  சூத்திரத்தானு  முணர்க .  அசையாப்பொருள் – தாவரம் . அசைபொருள் – சங்கமம் . )

     அமாத்தியன் , நாட்டில் , நகரம்  சிற்றூர்  காடு  இவை  எவ்வளவு  விருக்கின்றன  வென்பதும் , யார்  யாரால்  எவ்வளவுள்ளன  வென்பதும்,  உழவு  செய்யப்படாத  நிலம்  எத்துணையவென்பதும் , ஆண்டுதோறும்  சுங்கம்  தண்டம்  முதலியவற்றாற்  கிடைக்கும்  பொருள்  எவ்வளவென்பதும் , உழவு  முதலியன  செய்யப்படாமல்  நிலத்தினின்றும்  உண்டாய  விளைபொருள்  எவ்வளவென்பதும் , காட்டி னின்றுங்கிடைத்த  பொருள்  எவ்வளவென்பதும் , சுரங்கத்தினின்று  முண்டாய  பொருளும்  உரியவரின்னாரெனத்  துணிதற்கியலாமல்  நிலத்தினின்றும்  எடுக்கப்பட்ட  பொருளும்  எவ்வளவென்பதும் , உரியாரில்லாத  பொருளும்  தீயோரை  இழப்பித்தலால்  அடையப்பட்ட  பொருளும்  கள்வர்பாற்  கொண்ட  பொருளும்  எவ்வளவென்பதும்  ஆகிய  இவ்வெல்லாவற்றையும்  நன்றாக  ஆராய்ந்து  துணிந்து  அளவிட்டு  வேந்தன்பால்  அறிவித்தல்  வேண்டும் .                                                                                                      102-105

     புரோகிதன்  முதலிய  பிரகிருதிகள்  பதின்மரின்  இலக்கமுஞ்  செயலுஞ்  சுருக்கிக்கூறப்பட்டன . அரசன்  அவ்வக்காரியங்களைப்  பார்ப்போரால்  நேராகவும்  அவர்களின்  எழுத்து  மூலமாகவும்  எல்லாவற்றையும்  அறிந்து  கொள்ளல்  வேண்டும் .                               106

     ஒருவன்  மற்றொரு  தொழிலையும்  அதற்குரியான்  பிறிதொரு  செயலையும்  பார்க்கும்படி  இவ்வாறு  இப்பிரகிருதிகளை  மாற்றி  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                   107

( பிரகிருதிகளை  மாற்றி  நியமித்தலாவது – சிலவாண்டுகளுக்கொருமுறை  சுமந்திரனை  அமாத்தியத்  தொழிலிலும்  அமாத்தியனைச்  சுமந்திரத்  தொழிலிலுமாக  இங்ஙனம்  ஏனையோரையும்  மாற்றி  நியமனஞ்  செய்தல் )

     இவ்வதிகாரிகளை , அரசன்  தன்னினுஞ்  சிறந்த  செல்வாக்குடைய வர்களாக  இருக்கும்படி  ஒருபொழுதுஞ்  செய்தலாகாது . இப்பிரகிருதி கள்  பதின்மரையும்  தம்முள்  ஒத்த  ஆற்றலுடையராயிருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                     108

9 . மற்றை  அதிகாரிகளின் இலக்கணங்களுங்  காரியங்களும்

இலக்கணங்களுங்  காரியங்களும்

     ஓர்  அதிகாரச்  செயலில்  எப்பொழுதும்  மூவரை  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . அவருள் , ஒருவன்  மிகச்  சிறந்தவனாகவும்  உயர்ந்த  அறிவுள்ளவனாகவும்  இருத்தல்  வேண்டும் .                   109                                      

     அச்செயலில்  துணைவராக  இருவர்  இருத்தல்  வேண்டும் . மூன்று  ஐந்து  ஏழு  பத்து  ஆண்டுகளுக்கு  ஒரு  முறையாதல்  அத்துணைவரை  மாற்றி  நியமித்தல்  வேண்டும் .                                                                     110

( முதனூலில் “தரிசகர்” என்பது  துணைவர்  என  மொழிப்  பெயர்க்கப்பட்டது . தரிசகர் – காரியதரிசிகளாக  விருந்து  துணை  செய்வோர் .[ Secretaries ] )

     அவ்விரு  துணைவரின்  செயலையும்  திறனையும்  நோக்கி , அவரை  அங்ஙனம்  மாற்றி  நியமித்தல்  வேண்டும் . அரசன்  என்றும்  எத்தகைய  ஒருவனையும்  ஓர்  அதிகாரத்திலேயே  நெடுநாள்  வைத்தலாகாது .                                                                                                 111

     ஒருவன்  எவ்வதிகாரத்திற்குரிய  ஆற்றல்  அமைந்துள்ளானென்று  கண்டு , அவ்வதிகாரத்தில்  அவனை  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . நெடுநாள்  அதிகாரத்திற்  களித்து  மயங்காதவன்  யாவன் ?  [ எல்லோரும்  மயங்குவராதலின்  ஒரே  அதிகாரத்தில்  யாரையும்  நெடுநாள்  இருக்கச்  செய்தலாகாதென்பதாம். ]                                     112

      ஆதலின் , ஓர்  அதிகாரத்திற்  சிலவாண்டு  இருந்தவனைக்  காரியத்திறன்  நோக்கி  அச்செயலினின்றும்  மாற்றி  வேறொரு  செயலில்  நியமித்தல்  வேண்டும் .  அங்ஙனம்  மாற்றி  நியமிக்குங்கால்  மாற்றப்படுஞ்  செயலில்  திறன்  வாய்ந்தவனும்  அத்தகைய  பதவியிலிருக்கின்றவனுமாகிய  மற்றொருவனை  நியமித்தல்  வேண்டும் . முன்னை  வினை  புரிவோன்  மகன் , தந்தையை  யொத்த  குணஞ்  செயல்களை யுடையனாயின் , அவனை  அவ்வினைக்கண்  நியமனஞ்  செய்யலாம் .                                                                             113-114

     புதிய  வினைவலானொருவன் , எவ்வெச்சிறந்த  பதவிகளுக்கு  எவ்வெப்பொழுது  தகுதியுடைய  னாகின்றானோ  அவ்வப்பதவிகளில்,   அவன்  முறையே  மேலும்மேலும்  நியமிக்கற்பாலன் . இறுதியில்  அவனைப்  பிரகிருதிகளுள்  ஒருவனாகச்  செய்தல்  வேண்டும் .          115

     அதிகாரச்செயல்களின்  மிகுதி  நோக்கித்  தக்கவாறு  துணைவர்  பலரை  நியமிக்கலாம் . அன்றித்  துணைவரில்லாமலே  காரியங்களைத்  திறமையுடன்  செய்யும்  அதிகாரியைத்  தனிமையாகவும்  நியமிக்கலாம் .                                                                  116

                          10 . யானைப்பாகன்  முதலியோரின் இலக்கணங்களுங்  காரியங்களும்

     இங்குக்  கூறப்பட்டவர்களையன்றி  மற்றை  வினைத்திறன்  வாய்ந்த  எல்லோரையும்  யானை , குதிரை , தேர் , காலாட்படை , பசு , ஒட்டகம் , மற்றை  விலங்கினம் , பறவைக்கூட்டம் , பொன் , அரதனம் , வெள்ளி , ஆடையாகிய  இவற்றிற்கும் , தானியம் , அடுக்களை , ஆடற்  பூஞ்சோலை , மேன்மாளிகையோடு கூடிய  இல்லங்கள் , பலவகைப்  பண்டங்கள் , திருக்கோயிற்  பூசை , தானம்  ஆகிய  இவற்றிற்கும்  தனித்தனி  அதிபராகவும் , கள்வர்  முதலிய  தீயோரைத்  தண்டிக்கும்  அதிபராகவும் , சிற்றூர்த்  தலைவராகவும் , இறைப்பொருள்  கொள்ளு வோராகவும் , எழுத்தாளராகவும் , சுங்கம்  வாங்குவோ ராகவும் , வாயில்  காப்போராகவும் , அவரவர்  தகுதிக்கேற்ப  அவ்வச்  செயல்களில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . தீயோரைத்  தண்டிக்கும்  அதிபர்  முதலிய  ஆறுவகையினரையும் , கிராமங்க டோறும்  நகரங்கடோறும் நியமனஞ்  செய்தல்  வேண்டும் . 117-121                                          

( அடுக்களை – பாகசாலை . சுரங்கம்: 273-ஆம் சுலோகக் குறிப்பிற் காண்க. பொருள் – பொற்காசு , வெண்பொற்காசு  முதலியன. )

     அரசன்,  தவம்புரிவார் , கொடைக்குணம் வாய்ந்தார் , வேதம்  அறநூல்வல்லார் , பெளராணிகர் , வியாகரண  முதலிய  நூல்களை  யுணர்ந்தார் , ஒளிநூல்வல்லார் , மாந்திரிகர் , மருத்துநூல் வல்லார் , கன்ம  காண்டமுணர்ந்தார் , சைவாகம  முணர்ந்தார் , மற்றை  நற்குணமுடையார் , பெரியார் , மதிநுட்பம்  வாய்ந்தார் ,பொறிபுலன் களை  வென்றார் ஆகிய  இவ்வெல்லோரையும்  தானங்களாலும் , சிறப்புக்களாலும் , நன்றாகப்  பெருமைப்படுத்தித் , திங்கள்  வேதனம்  உதவிப்  பரிபாலித்தல்  வேண்டும் . இன்றேல்  அரசன்  அரசியல்  பிறழ்ந்து  பழியும்  எய்துவான் .                                                                122-124

( ஒளிநூல் – சோதிட  நூல் )

பலர்  கூடி  முடிக்கத்  தக்க  காரியங்களை யுணர்ந்து , அவ்வக்காரி யங்களிற்  றிறமை  வாய்ந்த  முற்கூறப்பட்ட  அதிகாரிகளை , அவற்றின்  அதிபராக  நியமித்தல்  வேண்டும் .                                          125

     மந்திரத்தன்மை  யில்லாத  எழுத்தும் , மருந்தாந்தன்மை யில்லாத  வேரும் , ஒன்றிற்கும்  தகுதியில்லாத  மனிதனும்  இல்லை . ஆயினும் , தகுதி  யுணர்ந்து  கூட்டிப்  பயன்படுத்துவோனே  அரியன் .                  126

( பயன்படுத்தும்  அறிவுடையானானால்  எல்லாவெழுத்துக்களும்  மந்திரங்களாம் எனவும், எல்லா  வேர்களும்  மருந்துகளாம் எனவும் , எல்லா  மனிதரும்  காரியம்  புரியும்  தகுதியுடையராவர்  எனவுங் கூறியவாறு . ) 

     யானைகளின்  பிரபத்திர  முதலிய  சாதி வேறுபாடும் , அவற்றைப்  பழக்குமுறையும் , காக்குமுறையும், நாவின்  அடி  நுனி  நகம்  இவற்றால்  அவற்றின்  குணங்களும் , நடையின்  இயல்பும் , ஏறு  முறைமையும் , நோய்களும் , அவற்றைத்  தணிக்கும் மருந்துமுறையுமாகிய  இவற்றை  நன்கறிந்த வனையே  யானைக்காப்பில்  நியமித்தல்   வேண்டும் . அத்தகைய  யானைப்பாகனே  யானைகளின்  மனத்தை  வயப்படுத்து   பவனாவான்                                                                                                   127-128

     குதிரைகளின்  உள்ளக்  கருத்துகளையும்  சாதி  நிறம்  சுழிகளால்  அவற்றின்  குணங்களையும் , நடை , பயிற்றுமுறை , வன்மை , தகுதி , அளவு , பாரம்  இழுக்கும்  ஆற்றல் , பற்களின்  இயல்பு , ஆண்டினளவு , நோய்நிலை , அது  தீர்க்குமருந்துமுறை , நலம்  தீங்குணர்ந்து  உணவு  கொடுக்கு  முறையாகிய  இவற்றையும்  அறிந்து , படைகளை  அணிவகுக்குந்  திறனோடு  சிறந்த  அறிவும்  வீரமும்  வாய்க்கப்  பெற்றவனையே , குதிரைத் தலைவனாக  நியமித்தல்  வேண்டும் .  130

     அக்  குதிரைத்  தலைவனுக்குரிய  குணங்களும் , சுமந்து  செல்லுங்  குதிரையின்  ஆற்றல் , தேரின்  வண்மை , தேர்ச் செலவு , தேர்ச்சுழற்சி , மாறுதல்  இவைகளைப்  பற்றிய  அறிவும் , அம்பு , வாள் முதலியன  தாங்கி  எதிர்க்கும்  பகைவர்  தன்  தேர்க்கண்  உள்ள  தலைவனைக்  குறிவைத்தெய்யுங்கால்  அதனைத்  தேர்ச்செலவால்  விலக்குத்  திறனும் , பகைவர்  குதிரையோடு  கலங்குங்கால்  தன்  குதிரைகளைக்  காக்கும் மறிவுமாகிய  இவற்றையுடையவன்  தேர்ப்பாகனாவான் . 132

     தறுகண் , படைகளை  அணிவகுக்குமறிவு , குதிரைகளின்  செலவைப்  பற்றிய  அறிவு , மதிநுட்பம் , அம்பு  வாள்  முதலியவற்றாற் போர்  புரியுந்  திறமையாகிய  இவற்றையுடையார்  குதிரை  வீரராவார் .                                                                                                         133

     சக்கிரதம் , இரேசிதம் , வற்கிதம் , தெளரிதம் , ஆப்புலுதம் , துரம் , மந்தம் , குடிலம் , சருப்பணம் , பரிவருத்தனம் , ஆற்கந்திதம்  என்னும்  இப்பதினொருவகைப்படுங்   குதிரை   நடைகளை  யறிந்து , அக்குதிரைகளின்  ஆற்றலுக்குத்  தக்கவாறு  அவற்றை  நன்றாகப்  பயிற்றுவோன்  குதிரைப்பயிற்சி  செய்பவனாவான் .                      134-135

( சக்கிரிதம் – வட்டமாகச்  சுழன்று  செல்லல் . இரேகிதம் – சிறிது  துள்ளித்  துள்ளித்  தொடர்ந்து  நடத்தல் . வற்கிதம் – அசைந்து  செல்லல். தெளரிதம் –  கால்களை  வளையாமல்  விரைந்து  அழகாகச்  செல்லல் . இதனை  4-ஆம்  அத்தியாயம்  7-ஆம்  பிரகரணம்  148-ஆம்  சுலோகத்தில்  தெளரீதகம்  என்பர் . ஆப்புதலுதம் – நான்கு  கால்களாலும்  துள்ளிச்செல்லல் . துரம் – விரைந்தோடல். மந்தம் – மெல்லிய நடை.  குடிலம் – வளைந்து  செல்லல் . பரிவருத்தனம் – பின்பாற்  செல்லல் . ஆற்கந்திதம் – முன்னோக்கிச்  செல்லல் . இங்குக்  குதிரை  நடை பதினொருவகையாகக்  கூறப்பட்டன . 4-ஆம் அத்தியாயம் 7-ஆம் பிரகரணம் 144-ஆம் சுலோகத்தில், ஆறுவகைப்படுமென்று கூறுவர்; இப் பதினொருவகையும் அவ் வறுவகையில் அடங்கும் போலும்.)

     குதிரைக்குரிய  பணியில்  திறமையும் , கல்லணை  முதலியன  அமைத்து  அணிசெய்யுமறிவும் , வலிய  உடலும் , வீரமும்  உடையானைக்  குதிரைக்குரிய  வேலையாளாகச்   செய்தல்  வேண்டும் .                                                                                                             136

( கல்லணை – குதிரை  மேலிடுந்  தவிசு . )

11 . படைத்தலைவர்  முதலியோரிலக்கணம்

     வெற்றியை  விரும்பும்  அரசன் , செய்யத்தக்கன  இன்ன  தகாதன  இன்னவென்று  பகுத்துணரும்  அறிவும் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்  பயிற்சியும் , படைகளை  அணிவகுத்தல்  முதலியவற்றிற்  றிறமையும் , பகைவரைப்  பணியச்செய்யும்  வன்மையும் , பாலப்  பருவமின்மையும் , காளைப்பருவம்  எய்துதலும் , தறுகண்மையும் , அடக்கமும் , வன்மைமிக்க  உடலும் , தம்  கடமையிற்  பற்றும் , எப்பொழுதும்  தம்  தலைவர்பால்  அன்பும் , பகைவர்பால்  வெறுப்பும்  ஆகிய  இக்குணஞ்  செயல்  வாய்ந்தோர்  சூத்திரராயினும் , அரச  குலத்தவராயினும் , வணிகராயினும் , மிலேச்சராயினும் , பிரசாதிக்  கலப்பிற்  பிறந்தவராயினும்  அவர்களைப்  படைத்  தலைவராகவும்  காலாட்படைகளாகவும்  செய்தல்  வேண்டும் .                                 137-139

     ஐந்து  அல்லது  ஆறு  காலாட்களுக்குத்  தலைவன்  பத்திபாலன்  என்று  கூறப்படுவான், முப்பது  காலாட்களுக்குத்  தலைவன்  கெளன்மிகனாவான் .                                                                                     140

     நூறு  காலாட்களுக்குத்  தலைவன்  சதானிகனாவான் . அவனோடு  சிறந்த  அநுசதிகன் , சேனானி , எழுத்தாளனாகிய  இவரும்  அந்நூறு  காலாட்களைக்  குறித்துத்  தலைவராவர் . அங்ஙனமே  சாகச்சிரிக னையும்  பெருமை  மிக்க  ஆயுதிகனையும்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                                     141-142

( அநுசதிகன் , சேனானி , எழுத்தாளன்  என்னும்  இம் மூவரும்  சதானிகனுக்கு  உடனிருந்து  துணை செய்பவராவர் . ஆதலின் , அவரும்  தலைவரென்று  கூறப்பட்டனர் . சாகச்சிரிகன்  –  ஆயிரங்காலாட் படைகளுக்குத்  தலைவன் ; சகச்சிரம் – ஆயிரம் . ஆயுதிகன் – பதினாயிரங்  காலாட்படைகளுக்குத்  தலைவன் ; ஆயுதம் – பதினாயிரம் .)

     காலையிலும்  மாலையிலும்  படைகளை  அணிவகுத்துப்  பழக்குதலும் , அங்ஙனமே  நன்கு  போர்  புரிதற்குரிய  முன்  ஏற்பாடுகளை  யறிதலும்  சதானிகன்  காரியங்களாம் .                        143

     அத்தகைய  செயல்களை  மேற்கொண்டு , சதானிகற்குத்  துணை  செய்பவன்  அநுசதிகனாவான் . போர்க்குரிய  கருவிகளையும் , பொருள்களையும் , போர்  செய்தற்குத்  தகுதியான  போர்  வீரர்களை யும்  அறிதலும்  யாமங்காப்போரை  நியமித்து , அவர்  செய்யுங்  காரியங்களைக்  கட்டளை  யிடுதலும் , சேனானியின்  தொழில்களாம் . அவ்  யாமங்காப்போரை  , அவர்தம்  செயலின்  மாற்றி  யமைத்தல்  பத்திபாலன்  தொழிலாம் .                                                                         144-145

( யாமங்காப்போர் – இரவிலும்  பகலிலும்  நகரைக்  காவல்  புரிவோர் . இவர்  செயன்முறைகளை  4-ஆம்  அத்தியாயம்  7-ஆம்  பிரகரணம்  402-முதல் 409-வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க .)

     யாமங்காப்போர் , தம்  செயலில்  விழிப்புடையராயிருத்தலைக்  கெளன்மிகன்  அறிதல்  வேண்டும் .                                                         146

     எழுத்தாளன் , படைவீரர் , எவ்வளவுள்ளார் ? அவர்  பெற்ற  வேதனம்  எவ்வளவு?  அவருள்  பழையராய்  வலியிழந்தவர்  யாவர்?  வேற்றிடங்களில்  யாண்டு  எத்துணையோர்  சென்றிருக்கின்றனர் ?   என்னுமிவற்றைக்  கணக்கிட்டறிதல்  வேண்டும் . இருபது  யானை களுக்கும்  இருபது  குதிரைகளுக்கும்  தலைவன்  நாயகனென்னும்  பெயரையுடையவன் .                                                                                     147

     இங்குக்கூறப்பட்ட  பத்திபாலன்   முதலிய  பெயருடையாரை  அவரவர்க்குரிய  அடையாளப்  பொருள்களால்  அடையாளமிட்டு  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                  148

     வெள்ளாடு , செம்மறியாடு , பசு , எருமை , மான் , மற்றை  விலங்கினமாகிய  இவற்றிற்கு  அதிபராக , அவை  பெருக்கமடைதற்குத்  தக்கவாறு  உணவு  முதலியன  ஈந்து  காக்கும்  திறமையும் , அவற்றின்பால்  நெருங்கிய  நட்புரிமையுமுடையோரை  நியமித்தல்  வேண்டும் . அங்ஙனமே  அத்தகைய  குணஞ்  செயல்  வாய்ந்தோரை , யானை  ஒட்டக  முதலியவற்றிற்குத்  தலைவராகவும் , அவற்றின்  பணியாளராகவும்  நியமித்தல்  வேண்டும் .                        149

     சிச்சிலி  முதலிய  பறவைகளைப்  போர்ச் செயலில்  உதவி  செய்யும்  வண்ணம்  பயிற்றுந்  திறமையுடையாரையும்  , உணவு  முதலியன  உதவி  வளர்ப்பாரையும் , கிளி  முதலியவற்றிற்கு  நன்றாக  மொழி  பயிற்றுவோரையும் , பருந்து  முதலியவற்றிற்கு  வீழ்ச்சி  யறிவிப் போரையும் , அவ்வவற்றின்  உள்ளக்  கருத்துக்களை  எப்பொழுதும்  நன்றாக  அறியுந்திறன்  வாய்ந்தவர்களாக  ஆராய்ந்து , அவ்வச்  செயல்களில்  நியமித்தல்  வேண்டும் .                                                         150

12 . கருவூலத்  தலைவன்  முதலியோ ரிலக்கணம்

     அரதனங்கள் , பொன் , வெள்ளி , முத்திரைக்காசு  என்னும்  இவற்றை  அவற்றின்  அளவு , வடிவம் , ஒளி , நிறம் , சாதி , ஒப்புமைகளால்  விலைமதித்தறிபவன்  அவற்றின்  அதிபனாவான் .                                  151

     வணக்கமுடைமை , பொருளுடைமை , உலகியலறிவு , உயிரைப் போற்   பொருளைக்  கருதுதல் , ஈகையின்மையாகிய  இவை  வாய்க்கப்பெற்றவனே  பொருட்  கருவூலத்தின்  தலைவனாவான் .  152

     நாட்டின்  வேறுபாடு , சாதி  வேறுபாடு , பருமை , நுண்மை , வன்மை , மென்மையாகிய  இவற்றால்  பட்டு  முதலிய  ஆடைகளின்  அளவையும்  விலையையும்  நன்கறிபவன்  ஆடையதிபவனாவான் . 153

( நாடு – நெய்தவிடம் . சாதி – பட்டுப்பருத்திகளின்  வகைகள் . பருமை  முதலிய  நான்கும்  இழையின்  குணங்கள் . )

     குடில்  குப்பாயம்  கூத்தரங்கம்  என்னும்  இவை  முதலியவற்றை  அளவுணர்ந்து  செய்தலையும் , தைத்தற்றொழிலின்  திறமையால்  அமளி  விதான  முதலியவற்றை  அமைத்தலையும் , வண்ணமிடு தலையும் , ஆடை  முதலியன  சீர்படுத்துதலையும்  செவ்வையாக  அறிபவன்  அவ்விதான  முதலியவற்றின்  அதிபனாவான் .        154-155

( குடில் – ஓலை  முதலியவற்றான்  வேயப்படும்  சிற்றில்லம் .    குப்பாயம் – சட்டை . அமளி – படுக்கை . விதானம் – மேற்கட்டி. வண்ணமிடுதல்  – செம்மை  முதலிய  நிறங்களுண்டாகத்  தீற்றுதல் .)

     நெல்  முதலிய  தானியங்களின்  சாதி , அளவு , விலை , உறுதி , கூறு , கொள்ளுமுறை , தூற்றித்  தூய்மையாக்குமுறை  இவற்றை  யறிபவன்  தானியங்களுக்கு  அதிபனாவான் .                                                                156

     கழுவப்பட்டதும் , கழுவப்படாததுமாகிய  பொருள்களின்  சிறந்த  பக்குவத்தையும் , அறுவகைச்   சுவைகளின்  கலப்பு  வேறுபாட்டையும், உணவுப்பொருள்களின்  குணங்களையும்  நன்கறிந்து , மடைத்தொழிலில் திறன்  வாய்ந்தவன்  அத்தொழிற் றலைவனாவான்.

( கழுவுதல் – தூய்மை  செய்தல் . மடைத்தொழில் – உணவாக்குந்தொழில் .)

     மரஞ்செடிகளுக்கு  மண்ணிடல்  நீர்பாய்ச்சன்  முதலியவற்றால்  மலர்  பழம்  இவை  மிகுதற்குரிய  சாதனங்களையும் , புதியனவாக  உண்டாக்குதலையும் , தூய்மைப்படுத்துதலையும்  காலந்தோறுஞ்  செய்யுமறிவும் , புழு  முதலியவைகளான்  உண்டாகும்  நோயைப்  போக்கு  மருந்தறியும்  திறமையும்  உடையவன்  ஆடற்  பூஞ்சோலையின்  தலைவனாவான்.                                                             158

     திருக்கோயில் , அரண்மனை , அகழி , மதில் , பிரதிமை , இயந்திரங்கள் , அணைக்கட்டு , வாவி , கிணறு , தடாகம் , புட்கரிணி , குண்டம்  நீர்  முதலியவற்றை  மேனோக்கிச்செலுத்தும்  பொறி  முதலியனவாகிய  இவற்றைச்  சிறந்த  சிற்பநூன்  முறைப்படி  நன்றாகவும்  அழகாகவும்  அமைக்கும்  அறிவுடையவனே  இல்ல  முதலியவற்றின்  அதிபனாவான் .                                                          159-161

( இருபது  முழ  நீள  அகலங்களையுடையது  புட்கரிணி  எனவும் , நாற்பத்தைந்து  முழ  நீள  அகலங்களையுடையது  தடாக மெனவுங்  கூறப்படும் . குண்டம்  என்பது  நீர்நிலை  விசேடங்களுள்  ஒன்றாகும் .)

     வேந்தனுடைய  காரியங்கட்கு  வேண்டுவனவாகிய  உபகரணப்  பொருள்களை  உண்மையாக  அறிந்து  அவ்வக்  காலத்திற்  சேர்த்து  வைப்பவன்  உபகரணப்  பொருள்  அதிபனாவான் .                                162

     தன்  கடமை  வழி  யொழுகுதலிற்  பற்றும் , கடவுளுக்குச்  செய்யும்  தொண்டில்  அன்பும் , அவாவின்மையும்  உடையவனைக்  கடவுட்  பூசைத்  தலைவனாக  நியமித்தல்  வேண்டும் .                                          163

     கொடைக்குணம் , அவாவின்மை , பிறர்  குணமறிதல் , மடியின்மை , அருள் , இன்சொல் , தானத்திற்குத்  தகுதியுடையாரையறிதல் , வணக்கம் , இரப்போர்  முகம்  ஒருபொழுதும்  வேறுபடச்செய்யாமை , தான்  கவர்ந்து  கொள்ளாமை  யாகிய  இக்குணஞ்  செயல்களை  என்று  முடையவன்  தானாதிகாரி   யாவான் .                                   164-165

     எல்லாச்  சாதியாரிடத்துமுள்ள  கடன்கோடன்  முதலிய  வழக்குகளை  யறிதல் , புலமை , ஒழுக்கம் , அன்பு , அருள்  முதலிய  உயர்குணங்கள் , பகைவரையும்  நட்டாரையும்  ஒப்ப  மதித்தல் , அறமுணர்தல் , உண்மையுரைத்தல் , மடியின்மை , சினமின்மை , காமமின்மை , உலோபமின்மை , இன்சொற்  கூறலாகிய  இக் குணஞ்  செயல்களையும் , அவைக் களத்திற்குத்  தகுதியையும் , யாண்டு  முதிர்ச்சியையுமுடைய  பெரியார் , அரசவைக்கண்  வீற்றிருந்து  அரசியற்  காரியஞ்  சூழ்வோராவர் .                                                       166-167

     மன்னுயிரனைத்தையும்  தன்னுயிர்  போல்  எண்ணல்  , அவாவின்மை,  எப்பொழுதும்  விருந்தோம்பல் , கொடைக்குணம்  ஆகிய  இவற்றை யுடையோன் சத்திரத்  தலைவனாவான் .              168                                                

( சத்திரம் [சத்ரம்] என்னுஞ்சொல்  பலநாள்  முயன்று  செய்யப்படும்  வேள்வியையுமுணர்த்தும் . ஈண்டு , அவ்வேள்வித்  தலைமைக்குரிய  சிறப்பிலக்கணங்கள்  கூறப்படாமையால் , இச்சொற்கு  அன்னசாலையென்று  பொருள்  கொள்ளல்  வேண்டும் . )

     பிறர்க்குதவி  புரியும்  விருப்பம் , பிறர்பழி  தூற்றாமை , அழுக்காறின்மை , பிறர்  குணங்கோடல் , பிறர்  குணமறிந்து   மகிழ்தலாகிய  இவற்றையுடையான்  பரீக்கைத்  தலைவனாவான் .  169

( பிறர்   குணங்கோடல்  என்றமையால் , குற்றம்  அறிந்து  விலக்கல்  எளிதிற்  புலப்படும் . )

     குடிகள்  அழிவெய்தாவாறு  தண்டம்  விதித்தல் , மிக்கவன்  கண்  இன்மை ,  மிக்க  இரக்கமின்மையாகிய  இவற்றையுடையான்  கள்வர்  முதலியோரை  ஒறுக்கும்  தண்டத்  தலைவனாவான் .                           170

     துன்புறுத்தும்  கள்வராலும்  தீயொழுக்கமுடைய  அதிகாரிகளாலும்  இடுக்கண்  விளையாவண்ணம் , குடிகளைத்  தாய்  தந்தையரை  யொப்பப்  பாதுகாக்கும்  திறன்வாய்ந்தோன்  கிராமத்  தலைவனாவான் .                                                                                               171

     மரஞ்செடிகளை  முயன்று  வேண்டுவன  ஊட்டி  நன்கு  வளர்த்து அவற்றினின்றும்  மலர்பழ  முதலியவற்றைக்  கொள்ளுந்  தாட்டேத் தலைவனைப்  போலக்   குடிகளுக்கு  வேண்டுவன  உதவி , நலஞ்  செய்து ,  அவர்பாற்  குடியிறை  கொள்ளுவோன்  இறைப்  பொருட்டலைவனாவான் .                                                                                 172

     கணக்கின்  திறமை , நாடு மொழி  இவற்றின்  வேறுபாடறிதல் , ஐயந்தோன்றாவாறு  மறைபொருளின்றி  விளக்கமாக  எழுது  முறையாகிய  இவற்றையுடையான்  எழுத்தாளனாவான் .                    173

     அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்  பயிற்சியில்  திறமையும் , உடல்  வன்மையும் , மடியின்மையும் , வணக்கமு முடையனாய் [ ப்பிறரை ]த்  தகுதி  நோக்கி  யழைப்போன்  வாயில்  காப்போனாவான் .                174

     வாணிகம்  புரிவோரின்  மூலப்பொருட்குக்  கேடு  பயவா  வண்ணம்  அவர்  பெறும்  ஊதியத்தில்  அரசனுக்குரிய  கூறுகொள்ளுவோன்  சுங்கம்  வாங்குவோனாவான் .                                                                        175

     மந்திரசெபம் , பட்டினியிருத்தல் , விரதங்காத்தல் , மற்றை  நாட்கடன் , தியானம் , பொறிவென்றி , பொறுமை , அவாவின்மையாகிய  இவற்றை  எப்பொழுதும்  பேணிச்  செய்பவன்  தவஞ்செய்வோனாவான் .                                                                                  176

     மனைவி  மக்கள்  பொருட்டு  ஒரு  சிறிதுஞ்  சேர்த்துவையாமல்  எல்லாப்பொருள்களையும்  இரப்போர்க்கு  ஈயுங்  குணம்  வாய்ந்தோன்  கொடையாளி  யாவான் .                                                                                   177

( இச்  சுலோகத்திற்கு  ‘தன்  பொருளையும்’ மனைவி  மக்கள்  முதலியோரையும்  இரப்போர்க்கு  ஈதலும்  , பிறரிடத்தினின்றும்  ஒரு  சிறிதுங்  கொள்ளாமையும்  உடையான்  கொடையாளியாவான்  என்றும்  பொருள்  கொள்ளலாம் . )

     வேதம் , அறநூல் , புராணம் , இவற்றைப்  பயிலுதலிலும்    பயில்வித்தலிலும்  திறமை  வாய்ந்து , அப்பயிற்சியால்  விளக்கமுறுவோர்  வேதமுணர்ந்தோராவர் .                                              178

     காப்பிய  நூல்களில்  திறமையும் , இசைப்பயிற்சியும் , இனிய  குரலும் , உலகத்தோற்ற  முதலிய  புராண  இலக்கணங்கள்  ஐந்தையுமுணர்தலுமாகிய  இவற்றையுடையார்  பெளராணிகராவர்

( புராண  இலக்கணம்  ஐந்தாவன : உலகத்  தோற்றம் , ஒடுக்கம் , முனிவர்  அரசர்களின்  மரபு , அம் மரபின்  பின்வரலாறு , மனுவந்தரம்  என்பனவாம் . )

     மீமாஞ்சை  தருக்கம்  வேதாந்தம்  வியாகரண  முதலிய  நூல்களிற்  சிறந்த  அறிவும் , உய்த்துணர்வும் , பிறரை  உண்மையாகப்  பயிற்றும்  திறமையுமாகிய  இவற்றை  யுடையான்  அங்கநூல்  வல்லோனாவான் .

     சங்கிதை  ஓரை  கணிதம்  என்னும்  மூன்றனையும்  உண்மையாக  வுணர்ந்து  முக்காலமும்  அறியும்  திறன்  வாய்ந்தோன்  ஒளிநூல்  வல்லோனாவான் .                                                                                             181

(எண்ணூல் – கணிதநூல் . ஒளிநூல் – சோதிடநூல் .)

     மூலமந்திர முறையாக  மந்திரங்களின்  நலந்தீங்குகளையறிந்து , அம்மந்திரங்களைச்  செவ்விதிற்  பயின்று , தெய்வசித்தி  வாய்க்கப்  பெற்றோன்  மாந்திரிகனாவான் .                                                                182                                                        

காரணங்களாலும் , குறிகளாலும் , மருந்துகளாலும் , நோய்களின்  உண்மை  துணிந்து , அவற்றுள்  தீர்க்கத்தக்கன  இன்ன  தீர்க்கத்தகாதன  இன்னவென்றுணர்ந்து  மருத்துவஞ்  செய்யத்  தொடங்குவோன்  மருத்துவனாவான் .                                                          183

( காரணம் – ஒத்ததல்லாத  உண்டி  வேறுபாடு  முதலியன. குறி – நோயால்  உறுப்புக்களில்  நிகழும்  மாறுபாடு . )

     வேதம் , அறநூல்  ஆகமபுராண  முதலியவைகளிற்  கூறப்பட்ட  மந்திரங்களைப்  பயின்று , அவற்றாற்  கடவுள்  வழிபாடு  புரிதல்  நலம்  பயப்பதென்றெண்ணி , அதனைச்  செய்ய  முயல்பவன்  தாந்திரிகனாவான் .                                                                                           184

     உண்மையுரைத்தல் , ஒப்பனை  கோடல் , இன் சொற் கூறல் , நற்குடிப்பிறப்பு , நல்லுருவாகிய  இவற்றையுடைய  அலிகளை  எப்பொழுதும்  உவளகக்  காவலாளராக  நியமித்தல்  வேண்டும் .      185

( ஒப்பனை கோடல் – அலங்கரித்துக்கொள்ளுதல் . உவளகம் – அந்தப்புரம் . )

     தம்  தலைவனிடத்து  அன்பு , பிறர்பாற்  சாராமை , கடமை  மேற்கோடல் , உடல்  வன்மை , பாலப் பருவமின்மை , காளைப்பருவம் , பணி  செய்யுமுறையறிதல் , இழிசெயல்  எவையாயினும்  அவற்றைச்  செய்யும்  மனஒருப்பாடு  ஆகிய  இவற்றையுடையராய் , எப்பொழுதும்  அரசன்  கட்டளைகளை   நிறைவேற்றுவோரே  அரசனுக்குரிய  ஏவலாளராவர் .                                                                                              186-187

( இழிசெயலைச்செய்தல் – அரசனுக்குரிய  ஏவலாளருள்  ஒருவன் , தன்னிற்  றாழ்ந்தான்  செய்யும்  பணிகளைத்  தான்  செய்தல் .)

     பகைவர் , குடிமக்கள் , வினை செய்வார்  ஆகிய  இவர்களின்  செய்திகளைத்  திறமையாக  வுணர்ந்து , அங்ஙனம்  உண்மையாகக்  கண்டுணர்ந்தவைகளை  அரசனுக்கு  மறைவில்  அறிவிப்போர்  ஒற்றராவர் .                                                                                                         188

( இக்கருத்தை “ வினை  செய்வார்  தஞ்சுற்றம்  வேண்டா  தாரென்றாங்  கனைவரையு  மாராய்வ தொற்று”  என்னுந்  திருக்குறலிலுங்  காண்க .)

     வணக்க முதலியவற்றில்  நல்ல  பயிற்சி பெற்று , அரசன்  பக்கல்  வருவோர்க்கு  வணங்கு  முறையையும் , இருத்தற்குரிய  விடத்தையும்  அறிவுப்போரைப்  பொற்றடி  பிரப்பங்கோல்  இவை  தாங்கி  நிற்கச்  செய்தல்  வேண்டும் .                                                                                          189

     மிடற்றினும்  யாழ்  முதலியவற்றின்  நரம்புகளிலும்  தோன்றும்  ஏழு  சுரங்களையும்  இடவேறுபாடறிந்து  வெளிப்படுத்தல் , சேர்க்கப்படுவனவும்  பிரிக்கப்படுவனவுமாகிய  சுரங்களை  நன்றாக  அறிதல் , பண்ணமைய  இன்னிசை  பொருந்தத்  தாளத்துடனாதல்  அன்றி  அவற்றோடு  ஆடலோடாதல்  பாடுதலாகிய  இவை  வாய்க்கப்  பெற்றோன்  இசைபாடுவோர்  தலைவனாவான் .                              190-191

     அரசன்  தன்  மன  மகிழ்தற்பொருட்டு , முற்கூறிய  ஆடல்  பாடல்களாகிய  இசைப்பயிற்சியின்  திறமை , நாணமின்மை , காதற்  கிழமையைப்  புலப்படுத்துங்  குறிப்பு , இன்பச்சுவையின்  உண்மை யுணர்ச்சி , அழகமைந்த  உடல் , பிறர்  மனத்தைக் கவரும்  ஆற்றல் , புத்திளம்பருவம் , உயர்ந்து  திரண்ட  தனங்கள் , அழகிய  புன்முறுவலோடுங்  கூடிய  பார்வை  ஆகிய  இந்நலங்களமைந்த  விலைமகளிரை  வேண்டுவன  உதவிக்  காத்தல்  வேண்டும் . அங்ஙனமே  மனத்தை  இன்புறுத்துவனவாகிய  வியக்கத்தக்க   செயல்களைப்  புரிவதிற்  றிறன்  வாய்ந்த  பிறரையும் , நல்ல  ஏவலாளரையும்  காத்தல்  வேண்டும் .                                                   192-193

     துயிலெடை  பாடுவோர் , சிறந்த  கவிகள் , பிரப்பங்கோல்  தடி  தாங்கி  நிற்குங்  காவலாளர் , சிற்பிகள் , இன்பநூல்  வல்லார் எப்பொழுதும்  பிறர்க்குதவி  செய்வோர், பிறர்  குற்றங்களை  வெளிப்படுத்தி  அதனால்  நகைச்சுவை  விளைவிப்போர் , பலவகை  வேடந்தாங்கி  ஆடல்  செய்வோர் , ஆடற்   பூஞ்சோலை  செயற்கையிற்  காட்டும்  ஒப்பனைச்  சோலை , அரண்  இவற்றை  யுண்டாக்குவோர் , மகாநாளிகமென்னும்  பொறியினின்று  நெருப்புமயமான  திரளைகளாற்  குறிவைத்தெய்து  பகைவரைத்  தொலைப்போர் , சிறு  பொறிப்படை  நெருப்புண்டாக்குந்  துகள்  அம்பு  திறளை வாள்  ஆகிய  இவற்றையாக்குவோர் , வேறுபல  பொறிப்படைகள்  விடுபடை  விடாப்படைகள் வில்  அம்பறாத்தூணியாகிய  இவை  முதலியவற்றைச்  செய்வோர் , பொன்  அரதனங்களால்  அணிகலன்  செய்யும்  பொற்கொல்லர் , தேரியற்றுவோர் , கற்பணி  செய்வோர் , கரும்பொற்கொல்லர் , வண்ணம்  பூசுவோர் , குயவர் , கன்னார் , தச்சர்  நடைவழி யாக்குவோர் , மயிர்  விளைஞர் , வண்ணார் , விறகு  வெட்டுவோர் , மலமூத்திர  முதலியன  வெளிப்படுத்துவோர் , செய்தி தாங்கிப் போக்குவரவு புரிவோர், துன்னகாரர், அரசியல்  அடையாளப்  பொருள்களை  முன்னிற்றாங்குவோர் , படைகளை  யணிவகுப்போர் , போர்முரசு  படகம்  இரலை  சங்கு  வேய்ங்குழல்  முதலிய  இயங்களின்  ஒலிகளாற்  பகைவரை  எதிர்த்துச்  சேறல் , அவர்  பானின்று  திரும்பி  வருதல் , அவரோடு  பொருதன்  முதலிய  செயல்களை  யறிவிப்போர் , தோணி  இயக்குவோர் , மண்தோண்டுவோர் , வேடர் , குறவர் , சுமையெடுப்போர் , ஆயுதங்களைத்  தீட்டிக்  கூர்மைப்படுத்துவோர் , நீரெடுப்போர் , தானியம்  எடுப்போர் ,  பண்டமாற்றுத்  தொழில்  புரிவோர் , வரைவின்  மகளிர் , இசைக்கருவியாலும்  மகளிராலும்  சீவிக்கும்  நடர்  முதலியோர், நெய்தற்றொழில்  செய்வோர் , பறவைகளாற்  சீவிப்போர் , ஓவியம்  வரைவோர் , தோற்றுன்னர் , இல்லங்களை  யலகிடுவோர் , பாத்திரம்  தானியம்  ஆடை  இவற்றைத்  தூய்மை  செய்வோர் , அமளிவிதானம்  விரிப்பு  இவற்றை  யுண்டாக்குவோர் , அரசன்  ஆணையை  நடத்துவோர் , வியர்தோன்றாதவாறு  நறுமணப்புகை  யுண்டாக்கும்  பொருள்  செய்வோர் , அடைப்பை  யேந்துவோர், இழிதொழில்  புரிவோர் , சிறு  தொழில்  புரிவோராகிய  இவ்வெல்லோரையும்  அரசன்  அவ்வக்  காரியங்களுக்கேற்ப  நியமித்தல்  வேண்டும் .                   194-204

( துயிலெடை பாடுவோர் – வைதாளிகர் : வைகறைப்  பொழுதில்  அரசனைத்  துயிலெழுப்பப்  பாடுவோர் .

அரண் – நீர் , நிலம் , மலை ,காடு  இவைகளாற்  செய்யப்படும் தலைநகர்க்  காப்பு.

திரளை – திரண்ட  வடிவமுள்ள  கோளம் , குண்டு ,

மகாநாளிகம் – இது  பீரங்கியாகும் .

நெருப்பு  உண்டாக்குந்  துகள் – வெடிமருந்து .

மயிர்  வினைஞர் – நாவிதர் .

துன்னகாரர் – தையற்காரர் .

இரலை- ஊதிடு  கொம்பு .

இயம்  – வாத்தியப்பொது .

தோற்றுன்னர் – சக்கிலியர் .

அலகிடல் –துடைப்பத்தால்  இடத்தை  விளக்கல் .

வியர்தோன்றாமை – வெப்பமின்மையானாம் .

வினைசெய்வார் – வேதனம்  பெற்றுக்  காரியம்  புரிவோர் .)

வாய்மை  கூறல்  பிறர்க்குதவி புரிதலாகிய  இவ்விரண்டுஞ்  சிறந்த  அறங்களாகக்  கூறப்படும் . ஆதலின்  அரசன் , இவ்விரண்டினையு முடைய  வினைசெய்வாரை  என்றுங் காத்தல்  வேண்டும் .             205

     எல்லாத்  தீவினைகளினுஞ்  சிறந்தது  பிறர்க்குத்  துன்பஞ்  செய்தலாகும் . அதனினுஞ்  சிறந்தது  பொய்  கூறுதலாம் . ஆதலின்  அரசன்   இவ்விரண்டினையுமுடைய  வினைசெய்வாரை  ஒழித்துவிடல்  வேண்டும் .                                                                                                        206

     எவ்வமயம் , எக்காரியம்  செய்தற்கும்  சொல்லுதற்கும்  தகுதியுடையதோ , அவ்வமயம்  அதனை  அரசனுக்கு  அறிவித்துச்  சொல்லியுஞ்  செய்தும்  விரைந்து  முடிக்கும்  சிறந்த  வினை  செய்வான்  மிகவும்  பாராட்டப்படுபவனாவான் .                                  207

 13 . அரசன்  திருமுன்  அரசியல்  வினைசெய்வார்  ஒழுகுமுறை  

     அரசியல்வினை  செய்வான் , இரவிற்  கடையாமத்தில்  துயில்  நீத்தெழுந்து , இல்லத்திற்  செயற்பாலனவற்றை  யாராய்ந்து , பின்  மலமூத்திரம்  ஒழித்துத்  திருமாலை  நினைந்து  நீராடி , அதன்பின்  மூன்று  நாழிகையளவிற்  காலைக்கடனை  முடித்து  விட்டுத்  தன்  காரியாலயத்தை  யடைந்து  செய்யத்  தக்கன  தகாதனவற்றை  யாராய்தல்  வேண்டும் .                                                                             208-209

     வாயில்காப்போன் , அரசன்  கட்டளை  பெறாமல்  அரண்மனையினுட்  புகுவோனை  உறுதியாகத்  தடுத்துவிடல்  வேண்டும் . பின்னர்ச்  சொல்ல  வேண்டிய  காரியத்தை  அரசனுக்கு  அறிவித்து  அரசன்  அனுமதி  பெற்று  அவனை  உட்புகும்படி  விடல்  வேண்டும் .                                                                                                          210

     கையிற்  கோல்  தாங்கி  நிற்கும்  வாயில்காப்போன்  அரசவை  நடு வண்  அடைந்தோரைக்  கண்டு , முறைப்படி  அவர்  வணக்கங்களை  அரசனுக்கு  அறிவித்துப்  பின்னர்  அன்னாரிருத்தற்குரிய  இடங்களையுங்  குறிப்பிடல்  வேண்டும் .                                                   211

     அதன்பின்  அங்குச்செல்வோன்  அரண்மனையை  யடைந்து  கட்டளை  மேற்கொண்டு  அரசன்  திருமுன்  எய்தல்  வேண்டும் . எய்தி , மற்றொரு  திருமாலைப்போல்  வீற்றிருக்கின்ற  வேந்தனை  முறைப்படி  வணங்கி , அருட்குணமும்  பிறருள்ளக்  குறிப்பு  உணருந்திறனும்  வாய்ந்த  அம்மன்னவனது  இருக்கையின்  பாதியில்  பார்வையைச்  செலுத்தல்  வேண்டும் . மற்றொப்புறத்தினும்  பார்த்தலாகாது .                                                                                          212-213

( இருக்கையின்  பாதியிற்  பார்வையைச்  செலுத்தல் – அரசியற்கையை  முகங்கவிழ்ந்து  அவ்விருக்கையின்  கீழ்ப்  பாதியில்  நாட்டத்தைச்  செலுத்திப்  பணிவு  தோன்ற  நிற்றல். )

     வணக்க  முதலியன  நன்கு  பயின்ற  அவன் , உயிர்க்கும்  பொருட்கும்  தலைவனும்  பிரபுவுமாகிய  வேந்தனை  எரிகின்ற  நெருப்பைப்  போலவும் , சினமிக்க  பாம்பைப்  போலவுங்  கருதி , அவன்  பக்கல்  அணுக  வேண்டும் .                                                            214

( இக்கருத்து , “அகலா  தணுகாது  தீக்காய்வார்  போல்க , இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் “  என்னுந்  திருக்குறளிற்  புலப்படல்  காண்க . )

     எப்பொழுதும்  வேந்தனை   முயன்று  உபசரித்தல்  வேண்டும் . “யான்  தன்வயத்தனாவேன்”  என்று  கருதலாகாது . வேந்தன்  கொள்கையை  உறுதிப்படுத்தி  அவற்கு  நலந்தருஞ்  சொற்களைக்  கூறல்  வேண்டும் . நன்கு  ஆராய்ந்து  துணியப்பட்ட  பொருளை  வேந்தன்  ஆணை  வழிநின்று  மொழிய  வேண்டும் .                              215

     மனத்திற்கு  உவகைதரும்  விளையாட்டுக்  கூட்டங்களில்  ஒருவர்க்கொருவர்  வழக்கு  நேர்ந்துழி  அவ்வழக்கின்  முடிவை  அறிந்துளானாயினும் , தன்  தலைவன்  தீர்மானித்த  கொள்கையை  எதிர்த்து  ஒன்றுங்   கூறலாகாது .                                                                   216

     அரசனால்  அழைக்கப்பட்டோன் , எப்பொழுதும்  பணிவு  மிக்க  வேடமுடையனாய்ச்  சென்று  கைகூப்பி  நிற்றல்  வேண்டும் . தன்  உடலின்  முன்பாகத்தை  ஆடையான்  மறைத்து , வணக்கமுடையனாய், முதலில்  அம்மன்னவன்  மொழியைக்கேட்டு , அவன்  கட்டளையை  ஏற்றுப்  பின்னர்  மீண்டும்  வணங்கித்  தன்  காரியங்களைத்  தெரிவித்துக்  கொள்ளல்  வேண்டும் . அவ்வேந்தன் தன்  பக்கங்களிலாதல்  முற்பக்கத்தாதல்  { அவன்  கட்டளை  கடவாமைப்  பொருட்டு  இருக்கையைக்  கையாற்  றொடல்  வேண்டுமென்பது  கருத்து }                                                                   217-218                                                                                          

     பெருநகை  புரிதல் , இருமுதல் , உமிழ்தல், துரும்பு  கிள்ளன்  முதலிய  வீண்  செயல் , ஆவித்தல் , உடம்பு  முறித்தல் , கணுக்களை  நொடித்தலாகிய  இவற்றை  ஒழித்தல்  வேண்டும் .                                  219

( ஆவித்தல் – கொட்டாவி  விடுதல் . உடம்பு  முறித்தல் – உடம்பை  ஒலியுண்டாம்படி  இயக்கல் )

 அரசன்  கட்டளையிட்டருளிய  இடத்தை  யடைந்து  மகிழ்ச்சி யுடையனாயிருத்தல்  வேண்டும் . அனுபவ   முதிர்ச்சியும்  சிறந்த  அறிவுமுடையனாயினும் , அரசன்  முன்னிலையில்  இறுமாப்பை  யொழித்தல்  வேண்டும் .                                                                                 220

( அரசன்  கட்டளையிட்ட  இடமென்றது – அவன்  இருமருங்கும்  முன்னிலையுமல்லாத  இடமாகும் . 218 – ஆம்  சுலோகத்தில்  அரசன்  பக்கங்களிலும்  முற்பக்கத்திலும்  அவன்  கட்டளையிடினும்  இருத்தலாகா தென்றமையான் )

     நலத்தை  விரும்புவோன் , தன்  தலைவனுக்குக்  கேடு  நேருங்காலத்திலும் , அவன்  நெறிபிறழ்ந்து  செல்லும்  பொழுதும் , காரியத்திற்குரிய  அமயங்  கடக்குங்காலங்களிலும் , அவனால்  வினாவப்படாமலே  நயம்  பயக்குஞ்  சொற்களைக்  கூறலாம் .      221

     மகிழ்ச்சி  செய்வனவும் , உண்மையானவும் , நெறி  பிறழாதனவும் ,  அறம்  பொருள்  பயப்பனவுமாகிய  சொற்களைக்  கூறல் வேண்டும் . அளவைகளான்  இயன்ற  சொற்களால்  வேந்தற்கு  இதம்  பயப்பனவற்றை  யறிவித்தல்  வேண்டும் .                                                222

மற்றை  அரசர்களின்  புகழையாதல் , நீதியின்  பயனையாதல்  எடுத்துரைத்தல்  வேண்டும் . இன்னும் , “வேந்தர்   பெரும! நீயே  வள்ளலும் , அறவோனும் , வீரனும் , நீதியாளனுமாகின்றாய் . ஒருபொழுதும்  நின் நெஞ்சத்தில்  அநீதி  இருப்பதின்று “  எனவும் , அநீதியால்  இழிவெய்திய  அரசன்  இன்னார்  இன்னா  ரெனவும்  அவன்  முன்னிலையில்  என்றுங்  கூறல்  வேண்டும் .                                      223-224

( “வேந்தர்   பெருமை ……………இருப்பதின்று” என்னும்  பாராட்டுரைகள் வஞ்சத்தாற்   கூறப்படுவனவல்ல . அரசன்  நல்வழிப்படுத்தற்  பொருட்டாம் ; பின்  அநீதியால்  இழிவெய்திய  அரசரை  எடுத்துக்  காட்டுதலின் . )

     அரசரெல்லோரினும்  நீயே  உயர்ந்தவனென்று  சிறப்பித்துரைத்த லாகாது . காலம்  இடங்களை  யுணர்ந்து , உரிய  காலத்திலும் உரியவிடத்திலும்  பிறர்  காரியத்தைச்  செய்து  முடித்தல்  வேண்டும்.

     பிறர்  காரியத்திற்குக்  கேடு  விளையாவண்ணம்  அரசன்பால்  என்றும்  பேசுதல்  வேண்டும் . குடிகளின்  காரியத்தைக்  குறித்து  அரசன்  பற்றில்லாதவனாக  இருக்கும்  வண்ணம்  செய்தலாகாது .   226

     சிறந்த  அறிவுடையான் , பசிப்  பிணியாற்  பற்றப்பட்டுக்  கட்டையைப்  போல்  உலர்ந்து  வற்றினானாயினும் , கேடு  பயக்குந்  தொழிலை  ஒரு  பொழுதும்  விரும்பலாகாது .                                           227

     எவன்  எச்செயலில்  நியமிக்கப்பட்டானோ  அவன்  அச்செயலில்  மிகவும்  பற்றுடையனாக  விருத்தல்  வேண்டும் . பிறனொருவனது  அதிகாரத்தை  விரும்புதலாகாது . அங்ஙனமே  யார்  மாட்டும்  அழுக்காறு  கொள்ளலுமாகாது .                                                                  228

     எவன்மாட்டுங்  குறை  கண்டு  வெளிப்படுத்தலாகாது . அக்குறையைத்  தன்  ஆற்றலாற்  போக்கி  நிறைவித்தல்  வேண்டும் . எப்பொழுதும்  பிறர்க்குதவி  செய்தலினுஞ்  சிறந்ததாக  நட்புரிமையை  யுண்டாக்குவது  வேறொன்றுமின்று .                                                         229

     ஒருவனுக்கு  ‘நின்  காரியத்தைச்  செய்து  தருவேன்”  என்று  உறுதி  கூறி  அதனைச்  செய்யாமல்  தாழ்த்தலாகாது .  ஆற்றலுடையனாயின்  விரைந்து  முடித்தல்    வேண்டும் . அவர்  மேற்கொண்டு  நெடுநாட்  காத்திருக்குமாறு  செய்தலாகாது .                                                                230

     தன்  தலைவனுடைய  இரகசியச்  செயலையும்  சூழ்ச்சியையும்  வெளிப்படுத்தலாகாது .  அவற்குப்  பகைமையினையும்  கேட்டினையும்  நெஞ்சத்தால்  நினைத்தலுங்  கூடாது .                            231

     ‘ அரசன்  எனக்கு  உரிமை  நண்பனாவான் ‘  என்று  உறுதியாக  நினைத்துக்  கொள்ளலாகாது .  வேந்தன்  விருப்பத்திற்குரிய  மகளிர் , தீயொழுக்கமுடையார் , விலக்கப்பட்டார் , பகைவராகிய  இவர்களோடு  கலத்தலையும் , கலந்து  பேசுதலையும் , கலந்து  காரியஞ்  செய்தலையும்  ஒழித்து  விடல்  வேண்டும் . அரசனுடைய  வேடத்தினையும்  மொழியினையும்  பிறர்  நகையாடுமாறு  ஒத்துக்காட்டலாகாது .                                                                                232-233

(ஒத்துக்காட்டல் – பரிகாசஞ்  செய்தல் )

     ஒருவன்  தான்  நிறைந்த  செல்வமும்  பேரறிவுமுடையனா யிருப்பினும் , அரசன்  குணங்களை  அவமதிக்க  விரும்புதலாகாது . நற்செயல்  நல்லுணர்ச்சியுடையனாய்த்  தன்  தலைவனுடைய  விருப்பு  வெறுப்புக்களையும் , இங்கிதம்  ஆகாரம்  செயல்களால்  அவன்  உள்ளக்  கருத்தையும்  அறிந்து  கொள்ளல்  வேண்டும் .                        234

     தன் மாட்டுப்  பற்றில்லாத  அரசனை  விட்டுப்  பற்றுமிக்க  வேந்தன்பால்  இருத்தல்  வேண்டும் . பற்றில்லாத  அரசன் , தனக்குக்  கேட்டினையும்  தன்  பகைவனுக்கு  நலத்தையும்  விளைவிப்பவனாவான் .                                                                             235-236

     அவாவை  மிக  வளர்வித்தும்  பயன்  விளையாவாறு  வஞ்சித்தல் , சினமில்லாதவனாயும்  அஃதுடையான்  போலாதல், அருண்  முகங்காட்டியும்  பயன்  செய்யாதொழிதல் , இறுமாப்பு  மிக்க  சொற்களைக்  கூறுதல் , வாழ்க்கைத்  தொழிற்குக்  கேடு  விளைவித்தல் , தன்  குணங்கள்  பாராட்டப்படுங்காலத்தும்  முகம்  வேறுபடத்தோன்றல் , அதனோடு  வேற்றிடத்திற்  செய்யப்படும்  மற்றொரு  செயலில்  நோக்கத்தைச்  செலுத்தலாகிய  இவை  பற்றில்லாத  அரசனுக்குரிய  இலக்கணங்களாம் .                           237-238

இனி ,பற்றுமிக்க  வேந்தன்  இலக்கணங்  கூறப்படும் . தன்பால்  வருவோனைப்  பார்த்ததளவில்  மலர்ச்சி  யுடையனாதல் , அவன்  கூருஞ்சொற்களை  அன்போடு  கேட்டல் , நல  முதலியன வினாவல்  இருக்கையீதல் , அவனுக்குத்  தனிமையிற்  காட்சி  கொடுத்தல் , தனிமையில்  அவனை  ஐயுறாமை , அவன்  செய்திகளைக்  கேட்டு  முகமலர்ச்சியுடையனாய்த்  தோன்றல் , அவன்பாலுள்ள  வேறு சில  செயல்கள்  தனக்குப்  பிரியமில்லாதனவாயினும்  அவற்றை  மகிழ்ந்து  ஏற்றுக்கொள்ளல் , அவன்  தரும்  கையுறை  சிறுவிலையுடைய  தெனினும்  அவற்றைப்பெறுதல் , வேறுபல  நிகழ்ச்சிகளுக்கிடையில்  மலர்ந்த   முகமுடையனாய்  அவனை  நினைந்து  பாராட்டல்  ஆகிய  இவை  பற்றுமிக்க  அரசனிலக்கணங்களாம் . இவ்விலக்கணம்  வாய்ந்த  அரசன்பால்  வினைசெய்தலே  தக்கதாம் .                   229-243

     அவ்வரசியல்  வினைசெய்வான் , அரசன்  உதவிய  ஆடை, அணி  முதலிய  அரசியல்  அடையாளப்  பொருள்களை  எப்பொழுதும்  அணிந்து  கொள்ளல்  வேண்டும் . தன்  அதிகாரச்செயலில் உள்ள  குறைவுமிகுதிகளை  எப்பொழுதும்  தலைவற்கு  அறிவித்தல்  வேண்டும் . தலைவனைப்பற்றிய  செய்திகளைப்  பாராட்டல்  வேண்டும் . அவன்  கூறுஞ்  சொற்களைக்  கேட்க வேண்டும் .          244

     ஒற்றராலும்  சூசகராலும்  நேர்ந்த   பிழையால்  அரசன்  மாறுபட்டுப்  பேசுவானாயின் , அச்சொல்லை  வாய்வாளாமை  மேற்கொண்டு  கேட்க  வேண்டும் . ஆனால்  அச்சொல்லை  உண்மையைப்போல்  ஏற்று  உடன்படலாகாது .                                                                                245

( சூசகர் – இவரை  45-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க)

     பற்றுமிக்க  வேந்தன்  கேடெய்தி யிருப்பின் , அவனை  ஒருபொழுதும்  விலக்கலாகாது . ஒருவன்  அன்போடளித்த  சோற்றை  ஒரு  பொழுது  உண்ணினும்  , அது  குறித்து  அவன்  நலத்தை  என்றும்  நினைத்தல்  வேண்டும் . அங்ஙனமாயின்  தன்னை  முழுதுங்  காக்கும்  தலைவனுக்கு  யாதுதான்  செய்யத்  தகாதது ?                                  246-247

     தலைவனுக்குத்  தக்க  காலத்தில்  மிகுதியான  பணியைச்  செய்தலால் , தாழ்ந்தவனும்  உயர்ந்தவனாவான் ; பணியியற்றுவதில்  மடி  முதலியன  மேற்கோடலான்  உயர்ந்தவனும்  தாழ்ந்தவனாவான் .

     எப்பொழுதும்  பணி  செய்வதிற்  பற்றுடைய  வினை  செய்வான் , வேந்தன்  அன்பிற்குரியனாவான் .  அவன்  தன்  அதிகாரத்திற்குரிய  காரியங்களை  விரைந்து  செய்தலால்  அரசன்  மனம்  இன்புறும் .  249

     வினைசெய்வான் , தன்நிலைக்குத்  தகாத  இழிந்த  செயலை  ஆராயாமற்  செய்தலாகாது . அரசனும்  அவனை  அங்ஙனஞ்  செய்யும்  வண்ணம்  கட்டளையிடலாகாது . அவ்வழி  தொழில்  செய்தற்குரிய  பணியாளில்லாதிருப்பின் , அவ்வமயம்  செய்தற்குரிய  அவ்விழிதொழிலை  உயர்ந்தவனும்  அரசன்  பொருட்டுச்  செய்யக்கடவன் . எக்காரியத்தில்   அரசன்  பிரியமுடையனாயிருக் கின்றானோ  அச்செயலைத்  தனக்கு  விருப்பமில்லாததாக  எண்ணலாகாது . தன்  அதிகாரத்தின்  பெருமையை  ஒரு பொழுதும்   வெளிபடுத்தலாகாது .                                                                               250-252

     அரசனால்  அதிகாரம்  பெற்று  வினைசெய்வார் , தத்தம்  அதிகாரங்களைக்  காத்தற்பொருட்டுத்  தம்முள்  ஒருவர்க்கொருவர்  அழுக்காறெய்தலாகாது .  ஒருபொழுதும் மனம்  வேறுபடுதலுமாகாது .

     எந்நாட்டில்  வினைசெய்வார்  குழுவும்  வேந்தனுமாகிய  இருதிறத்தாரும்  தம்முள்  அன்பு  பூண்டு  நல்லொழுக்க  முடையராய்  இருக்கின்றார்களோ , அந்நாட்டில்  திருமகள்  அளவிலளாய்ச்  செழித்து  வளர்ந்து  துணை  நிற்பவளாவாள் .                                                            254

     ஒருவன் , மற்றொருவன்  அதிகாரத்தில்  நிகழ்ந்த  பிழையை  அறிந்துளனாயினும் , அதனை   அரசனுக்கு  உரைத்தலாகாது . அரசனும்  வினைசெய்வான்  ஒருவன்  முகமாக  மற்றொரு  வினைசெய்வான்  செயலை  ஒருபொழுதும்  கேட்டலாகாது .               255

     அரசனுக்கு  நல்லன  இன்ன  தீயன  இன்னவென்ற  அறிவியாத  அதிகாரிகள் , வினைசெய்வார்  தன்மையை  மேற்கொண்டு  மறைந்தொழுகும்  பகைவராவர் .                                                                  256

     அமைச்சர்  முகமாக  நல்லன  தீயனவற்றைக்  கேட்டுணராத  அரசன்  அரசுருவமாக  நின்று  குடிகளின்  பொருள்களைக்  கவர்ந்து  கொள்ளுங்  கள்வனாவான் .                                                                             257

     அரசிளங்குமரர்களால்  அரசியற்  செய்திகளைப்  பற்றி  நன்கு  வினாவப்பட்ட  அமைச்சர்கள்,  அது  குறித்து  அவர்களோடு  பகைமை  மேற்கொள்ளுவாராயின்  அவ்வமைச்சர்  மறைந்தொழுகுங்  கள்வராவார் .                                                                                                        258

     அரசிளங்குமரர்  சிறுவராயினும்  அவரை  அமைச்சர்கள்  சிறுமையாக  எண்ணலாகாது . எப்பொழுதும்  அழகிய  பன்மைச்  சொற்களால்  அவரை  விழிப்புடன்  பெருமைப்படுத்தழைத்தல்  வேண்டும் .                                                                                                             259

     அவ்விளவரசனின்  தீயசெயல்களை  ஒருபொழுதும்  அரசனுக்கு  அறிவித்தலாகாது . மகளிர்பாலும்  புதல்வர்மாட்டும்  உள்ள  மையற்  பற்று  மிக்க  வலியுடையதாகும் . ஆதலின்  அவ்விருவரையும்  பற்றிப்  பழித்துரைத்தல் , உரைப்போனது  நலத்திற்குக்  கேடு  விளைவிப்பதாகும் .                                                                                            260

அரசியல்  வினைசெய்வான் , மிகவும்  இன்றியமையாததும்  உயிர்  வாழ்க்கையில்  ஐயமுறச்  செய்வதுமாகிய  ஒரு  சிறந்த  காரியத்தை  “யான்  உறுதியாகச்  செய்து  முடிப்பேன் “  எனவும் ,  “கட்டளை  தருக “  எனவும்  அரசன்  முன்னிலையிற்  சூளுற்றறிவித்து, விரைந்து  தன்  ஆற்றற்கு  ஏற்றவாறு  அதனைச்  செய்ய  முயலல்  வேண்டும் .            261

( உயிர்வாழ்க்கையில்  ஐயமுறச்  செய்தலாவது – தொடங்கப்பட்ட  காரியம்  நிறைவேறுவதற்குள் , தொடங்கினவன்  உயிர்  நீங்கிவிடுங்கொலோவென்று  ஐயமுறுத்துவது,   சூளுறல் – சபதஞ்  செய்தல் )

     அரசியல்  வினைசெய்வான் , தன்  குடும்பத்தைக்  காக்கும்  நிமித்தம்  ஓர்  அரிய  பெரிய  காரியத்தில்  அரசன்  பொருட்டுத்  தன்  உயிரையுங்  கொடுத்துவிடலாம் . குடும்பத்தைக்  காக்கும்  நிமித்தம்  இன்றேல் , ஒரோவமயம்  அங்ஙனம்  உயிரைக்  கொடுத்தல்  வேண்டுமென்பது  அவசியமின்று .                                                                262

     அரசியல்  வினை  செய்வாரெல்லோரும்  காரணங்காட்டி  அரசன்  பாற் பொருள்  கொள்ளுவோராவர் . அரசனும்  சில  காரணத்தால்  அவ்வினை  செய்வார்  உயிரைக்  கொள்பவனாவான் . அரசன்  போர்ச்செயன்  முதலிய  மிகப்  பெருங்  காரியம்  நேர்ந்துழி , வேதனங்களால்  அவ்வினை  செய்வார்  உயிர்களைக்  கொள்ளலாம் . அவ்வினை  செய்வாரும்  வேதனமுகமாகவே  அரசன்  பொருளைக்  கொள்ளல்  வேண்டும் . வேற்று  வழியிற்  கொள்ளலாகாது . அவ்வரசனும்  வினைசெய்வாரும்  இங்குக்  கூறிய  முறைமையின்  அன்றி , வேற்று  முறைமையால்  உயிரையும்  பொருளையும்  கொள்வாராயின் , தமக்குத்தாமே  அழிவு  செய்பவராவர் .             263-265

     அமைச்சர்  முதலியோரால்  அரசன்  எப்பொழுதும்  தலைமையாக  மதிக்கப்படுபவனாவன் . அரசனுக்கு  அடுத்தபடியாக  வைத்து  இளவரசன்  மதிக்கப்படுவான் . அவனுக்கு  அடுத்தபடியாக  அமைச்சனை  இறுதியாகவுடைய  ஒன்பதின்மரும்  மற்றை  வினை  செய்வாரான்  மதிக்கப்படுவர் . அவர்க்கு  அடுத்தபடியாக  வைத்து  மற்றை  அரசியற்றொழில்  புரிவார்  மதிக்கப்படுவர் . ஆயுதிகன்  மந்திரியையொப்ப  மதிக்கப்படுவான் . அவனுக்கு  அடுத்தபடியாகச்  சாகச்சிரிகன்  மதிக்கப்படுவான் .                                                              266

( ஆயுதிகன் – சாகச்சிரிகன்  இவ்விருவரிலக்கணங்களை  இவ்வத்தியாயத்து  142 –ஆம்  சுலோகக்குறிப்பிற்  காண்க .)

      அரசனோடு  கூடி  விளையாடலாகாது . அங்ஙனம்  விளையாட  நேரின்  வேந்தனைச்  சிறப்பித்தல்  வேண்டும் . அரசனுடைய  மனைவி புதல்வி  இவர்களை  அமைச்சர்  அவமதித் தெண்ணலாகாது .         267

( சிறப்பித்தலாவது : வியையாட்டில்  வேந்தன்  தோல்வியுறும்படி  செய்யாமை . )

அரசியல்  வினை  செய்வார் , அரசனுடைய  சுற்றத்தாரையும்  நண்பர்களையும் அவரவர்  தகுதிக்குத்  தக்கவாறு  பெருமைப்படுத்தல்  வேண்டும் . வேந்தன்  அழைப்பின் , பெரிய  காரியம்  பலவிருப்பினும்  அவற்றை விட்டு  விரைந்து  போதல்  வேண்டும்.                                   268                                       

     நன்றாகச்  சூழ்ந்து  துணியப்பட்ட  அரசியற்  காரியத்தை  நெருங்கிய  நண்பனுக்குங்  கூறலாகாது . வேதனத்தையன்றி  வேந்தன்  பொருளில்  தமக்குத்  தரப்படாத  தொன்றை  விரும்புதலாகாது .       269

     அரசன்  கட்டளையின்றித்  தாம்  மேற்கொண்ட  காரியத்தை  நிறைவேற்றுதற்கிடையில் , அக்காரியத்திற்குரிய  வேதனத்தைப் பெற  விரும்பலாகாது . பொருட்கண்ணுள்ள  அவாவினால்  எவனுடைய  நற்செயற்குங்  கேடிழைக்கலாகாது .                                                             270

     அரசியல்  வினைசெய்வான்  தன்  மனைவியையும் , மக்களையும் , பொருளையும் , உயிரையும் , இழக்க  நேரினும்  தக்க  காலத்தில்  அரசனை நன்கு  காத்தல்  வேண்டும் . கைக்கூலி  வாங்குதலை  அறவே  யொழித்தல்  வேண்டும் . வேந்தனை  மாறுபடப்  போதித்தலாகாது .  271

     முறைகடந்து  தண்டித்தலையும்  எப்பொழுதும்  கடுந்தண்டம்  இழைத்தலையு முடைய  அரசனைத்  தனியிடத்திருத்தி , அரசியல்  அழியாமைப்  பொருட்டு  நன்கு  இடித்துக்கூறல்  வேண்டும் .               272         

     புதிய  இறைப்பொருள்  சுங்கம்  விதித்தலால் , குடிகள்  வேந்தனிடத்து  மிக்க  நடுக்கங்கொள்வாராதலின் , அங்ஙனம்  குடிகளுக்குத்  தீங்குபயக்குமுகமாக  அரசனுக்கு  நலம்  பயக்குங்  காரியத்தைச்  செய்தலாகாது .                                                                       273

( இறைப்பொருள் – குடிகளின்  வருவாயில்  அரசனுக்குரிய  ஆறிலொரு  கூறு  முதலியன  .  சுங்கம் – மரக்கலத்திலும் , வண்டியிலும்  வரும்  பண்டங்கட்கு  வாங்கும்  இறை . வாணிகம் – புரிவார்க்கு  அதனாற்  கிடைக்கும்  ஊதியத்தில்  அவ்வரசனுக்குரிய  இறைக்கூறுமாம் . )

     வேந்தன்  உயர்குலத்  துதித்தோனாயினும் , குணம்  நீதி  பலம் இவற்றில்  வெறுப்புள்ளவனாகவும்  அறமில்லாதவனாகவும்  இருப்பானாயின் , நாட்டிற்கு  அழிவு  செய்யும்  அவ்வேந்தனை  யொழித்து  விடலாம் .                                                                                     274                                                                                          

     புரோகிதன் , பிரதிநிதி  முதலிய  தலைமையதிகாரிகளின் உடன்பாடு  பெற்று , அவ்வேந்தன்  வழித்தோன்றிய  நற்குணமிக்கா னொருவனை  அரசியலைக்  காத்தற்பொருட்டு  அவ்வேந்தன்  பதவியில்  வைத்து  முடிசூட்டல்  வேண்டும் .                                              275

     விடுபடையாளன், அரசன்பால்  நின்று  ஒர்  அம்பு  வீழ்தற்குரிய  சேய்மையிடத்து  வெளிப்புறத்தே  எப்பொழுதும்  நிற்றல்  வேண்டும் . வாள்  முதலிய  விடாப்படையுடையான் , பத்து  முழ  அளவுள்ள  தூரத்தில்  நிற்றல்  வேண்டும் . அரசன்  அன்பிற்குரியார்  அவன்  கட்டளையிட்ட  இடத்திலும் , அமைச்சரும் , எழுத்தாளரும்  ஐந்து  முழ  அளவுள்ள  தூரத்திலும்  எப்பொழுதும்  இருத்தல் வேண்டும் . அரசன்  படைத்தலைவரோடன்றித்  தானே  ஆயுதங்களைத்  தாங்கி  அரசவைக்கட்  புகுதலாகாது .                                                                  276-277

( முழம்  என்னும்  நீட்டலளவையை  முதல்  அத்தியாயம்  197-ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     புரோகிதன்  எல்லாரினும்  மிகச்  சிறந்தவனாவான் . படைத்தலைவன்  அவனுக்கு  அடுத்துச்  சிறந்தவனாக  எண்ணப்படுவான் . நண்பரும்  உறவினரும்  தம்முள்  ஒப்பாவார் . அமைச்சர்  தலையாயராக  நினைக்கப்படுவர் .                                     278

     மற்றை  அரசியல்  வினைசெய்யும்  அதிகாரிகள்  இடையாயராவர் . தரிசகரும்  எழுத்தாளரும்  கடையாயராவர் . வேதனம்  பெற்றுப்  பணிபுரியும்  ஏவலாளர்  மிகவும்  கடையாயராக  அறியப்படுவர் . இழிதொழில்புரிவோர்  அவ்வேலாளரினும்  தாழ்ந்தவராக  அறியப்படுவர் . இழிதொழில்  புரிவோர்  அவ்வேவலாளரினும்  தாழ்ந்தவராக  எண்ணப்படுவர் .                                                                  279

     அரசன்  புரோகிதன்  முதலியோர்க்கு , முறையே  இருக்கையினின்றெழுதல் , எதிர்செல்லல் , சிறந்த  இருக்கையில்  இருக்கச்செய்தல் , நலமுசாவல் , புன்முறுவலோடு  பார்த்தலாகிய  இச்சிறப்புக்களைச்  செய்தல்  வேண்டும் . மற்றை  அரசியற்றொழில்  புரிவார்  முதலியோர்க்கு , அத்தாணி  மண்டபத்து  இருக்கையிலிருந்த வண்ணமே  மடிமையின்றி  அன்போடு  கூடிய  பார்வையைச்  செய்தல்  வேண்டும் .                                                                                                 280 -261

     அரசன்  புலவர்பாற்  கூதிர்  காலத்துத்  திங்கள்  போலவும் , பகைவர்பால்  முதிர்வேனிற்  காலத்துத்  கதிரவன்  போலவும்  குடிகள்பால்  இளவேனிற்  காலத்துக்  கதிரவன்  போலவும் , இங்ஙனம் முத்திறத்தார்  மாட்டும்  இம்மூன்று  தன்மைகளையுமுடையனாதல்  வேண்டும் .                                                                                                             282

( அரசன்  சரற்காலத்துச்  சந்திரனைப்போற்  புலவரிடத்து  மிகவும்  தட்பமுடையனாகவும், கடும்  வெயிற்காலத்துச்  சூரியனைப்  போற்  பகைவர்பால்  மிகவும்  வெப்பமுடையனாகவும் , இளவெயிற்காலத்துச்  சூரியனைப்போற்  குடிகள்  மாட்டு  ஒத்த  தட்ப  வெப்பங்களை யுடையனாகவும்  இருத்தல்  வேண்டுமென்பது   கருத்து . )

     அரசன் , அந்தணர் , அரசர்  வணிகர்  ஆகிய  இவ்விருபிறப்பாளரிடத்தன்றி  ஏனையோரிடத்து  எளிமையை  மேற்கொள்ளலாகாது . அங்ஙனம்  மேற்கொள்ளின் , அவ்விழிந்தோர், பாகர் யானையை  யடக்கி  வயப்படுத்தல்போல்  அவ்வரசனையும்  வயப்படுத்து  அவமதிப்பர் .                                                                           283

     அரசன், தன்  கீழ்ப்பட்ட  வினைசெய்வாரோடு  விளையாடுதலையும்  எள்ளி  நகையாடுதலையும்  மேற்கொள்ளலாகாது . அங்ஙனம்  விளையாடலும்  நகையாடலும்  அரசனுக்கு  எப்பொழுதும்  அவமதிப்பையும்  அச்சத்தையும்  உண்டாக்குவனவாம் .                    284

     உடன்  விளையாடுவோராகிய  அவ்வினை  செய்வாரனைவரும்  தம்  காரியத்திற்  பற்றுடையராய்  அதனையே  சிறந்ததாக  ஏற்றுக்கொள்ளும்படி  செய்து  தம்  காரியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளுதற்பொருட்டு  அரசனைத்  தனித்தனியே  சூழ்ந்து  கொள்வர் .

     எள்ளிநகையாடல் , மிக்க  பொறுமை , விளையாடலாகிய  இவற்றால்  அரசனுக்கு  உண்டாம்  தீங்குகளாவன : அங்ஙனம்  விளையாடும்  வினைசெய்வார்  வேந்தன்  சொல்லை  விவாதித்தொழித்தல் , பழித்துரைத்தல் , கடத்தல் , வேந்தர்குரிய  நுகர்ப்பொருள்களை  அவன்  உடன்பாடின்றி  நுகர்தல் , தம்  நிலைக்குத்  தக   ஒழுகாமை , அரசன்  சூழ்ச்சிச்  செய்திகளையும்  கூடாவொழுக்கத்தையும்  வெளிப்படுத்தல் , அரசனுக்குரிய  வேடம்  பூணல் , எப்பொழுதும்  அரசனை  வஞ்சித்தல் , அரசன்  பொருட்டு  மகளிரைத்  திட்டஞ்  செய்தல் , அரசன்  சினமுடையனாங்கால்  அவன்  முன்னின்று  நகைத்தல் , நாணின்றிப்பேசுதல் , சிறிது  பொழுதில்  அரசனைக்  கீழ்ப்படியச் செய்தல் , அவன்  ஆணையைக்  கடத்தல் , தகாத  செயல்களிலும்  அஞ்சாமை  ஆகிய  இவைகளாம் .        286 – 289

14 . எழுதப்படும்  பத்திரங்களின்  வகைகள்

     வினை செய்வான்  எப்பொழுதும்  அரசனது  எழுத்து  மூலமான  கட்டளையின்றி  ஒரு  காரியத்தையுஞ்  செய்தலாகாது . அரசனும்  காரியஞ்  சிறிதெனினும்  பெரிதெனினும்  எழுத்தான்  அன்றிக்  கட்டளையிடலாகாது.                                                                                       290

     எல்லா  மனிதர்க்கும்  மயக்கம்  இயற்கையாதலின் , எழுதப்படும்  பத்திரமே  சிறந்த  பிரமாணமாகும் . அப்பத்திரத்தாலன்றிக்  கட்டளையிடும்  அரசனும் , அஃதின்றி  அரசியற்றொழில்  புரியும்  வினை  செய்வானுமாகிய  இவ்விருவரும்  எப்பொழுதும்  கள்வராவர். அரசனது  அடையாளமிடப்பட்ட  பத்திரமே  அரசனாகும் , அரசன்  அரசனல்லன் .                                                                                               291 -292

( எழுத்தினாலேயே  அரசியற்காரியம்  அனைத்தும்  செய்யப்படுதலின்  இவ்வாறு  கூறப்பட்டது .)

அரசியன்  முத்திரையிட்டு  அரசனால்   எழுதப்படும்   பத்திரமே  மிகச்சிறந்த  தலையாயதாகும் . அம்முத்திரையின்றி  அவனால்  எழுதப்படுவது  தலையாயதாகும் . அமைச்சர்  முதலியோரால்  எழுதப்படுவது  இடையாயதாகும் . நகரத்து  மக்களால் எழுதப்படுவது  கடையாயதாகும் . இவ்வெல்லாம்  காரிய  நிறைவேற்றத்திற்கு  உரிய  துணைகளாம் .                                                                                                     293

     அரசனால்  நியமனஞ்  செய்யப்பட்டுத்  தத்தமக்குரியவாகிய  அவ்வத்  தொழில்களை  மேற்கொண்டிருக்கும்  அமைச்சரோடு  கூடிய  இளவரசன்  முதலாயினர் , தாம்  புரிந்த  செயன்  முறைகள்   வரையப்பட்ட  நாட்குறிப்புகளையும்  , திங்கட்  குறிப்புகளையும்  ஆண்டுக்குறிப்புகளையும் , பலவாண்டுக்  குறிப்புகளையும்  முறையே  அரசனுக்கு  நன்கு  அறிவித்தல்  வேண்டும் .                                 294 – 295

     காலம்  கடப்பின்  மக்களுக்கு  மறதியும்  மயக்கமும்  உண்டாகுமாதலின் , வினை  செய்வார் , அரசன்  முதலியோர்  அடையாளமிட்டருளிய  பத்திரங்களைப்  பற்றிய  ஞாபகக்  குறிப்பைப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                 296

     முற்காலத்தில்  பிரமன்  , செய்த  காரியங்களை நினைவு  கூர்தற்பொருட்டு  முயன்று  சொற்களுக்குரிய  எழுத்து  ஒலிகளால்  நன்கு  அடையாளஞ் செய்யப்பட்ட  பத்திரத்தை  அமைத்து  வைத்தனன் .                                                                                                       297

     செயன்முறைப்  பத்திரம்  எனவும்  வரவு  செலவுப்  பத்திரம்  எனவும் , பத்திரம்  இருவகைப்படும்  . வழக்க  ஒழுக்கங்களின்  வேறுபாட்டால்  அவ்விரண்டும்  இன்னும்  பலவகைப்படுவனவாம் .                                298

     உண்மையாகக்  கூறப்பட்ட  விவாத  விடயத்தையும் , பிரதிவாதியின்  எதிர்வாதமாகிய  உத்தரத்தையும் ,  ஆராய்ந்து  துணிந்த  தீர்மானத்தையுமுடையது  வெற்றிப்பத்திரம் (சய  பத்திரம்)  என்று  கூறப்படும் .                                                                                              299

( இது  நீதிபதியால்  வாதி  பிரதிவாதிகளின்  வழக்குகளை  யாராய்ந்து  முடிவு  செய்யப்படும்  விடயத்தைக்  குறிக்கும்  பத்திரமாகும் . )

     சாமந்தர்க்கும் , நாடுகாவலன்  முதலிய  அரசியல்  வினை  செய்வார்க்கும்  அன்னார்  செய்ய  வேண்டிய  காரியங்களைப்  பற்றிக்  கட்டளையிடும்  பத்திரம்  ஆஞ்ஞா  பத்திரம்  என்று  கூறப்படும் .        300

     வேள்வி  செய்வோர், புரோகிதர் , ஆசிரியர் , மற்றைப்  பெரியோராகிய  இவர்கள்பால்  வணக்கத்தோடு  தெரிவித்துக்கொள்ளுங்  காரியம்  வரையப்படும்  பத்திரம்  பிரஞ்ஞாபன  பத்திரம்  என்று  கூறப்படும் .                                               301

( பிரஞ்ஞாபனம் – வணக்கத்தோடு  அறிவித்துக்கொள்ளல் )

     “நீவிர்  எல்லீரும்  எனது  ஆணைவழி  நின்று  உறுதியாகச்  செயற்பாலவற்றைக்  கேண்மின்” என்றிவ்வாறு  கூறி  அரசன்  தன்  கையெழுத்தோடு  காலத்தையுங்  குறிப்பிட்டு  எழுதி  வெளிப்படுத்தும்  பத்திரம்  சாசன  பத்திரம்  என்று  கூறப்படும் .                                        302

( சாசனம் – கட்டளை .)

     அரசன்  ஒருவன்  செய்த  பணியானதால்  வீரச்  செயன்  முதலிய  வற்றானாதல்  மகிழ்ச்சியுடையனாய் , அவனுக்கு  அவற்றின்  அறிகுறியாக  வழங்கும்  நில  முதலியவற்றைக்  குறிப்பிடும்  பத்திரம்  பிரசாத  பத்திரமாகும் .                                                                                     303

     ஒருவனுக்கு  “நீ  இப்பொருளை  அனுபவித்துக்  கொள்” என்று  அப்பொருளைப்பற்றி  எழுதிக்கொடுக்கப்படும்  பத்திரம்  போகபத்திர மாகும் . இவனுக்கு  இவ்வளவு  இறைப்பொருள்  என்று  குறிப்பிட்டு  எழுதிக்  கொடுக்கப்படும்  பத்திரம்  கரதபத்திரமாகும் . கையுறையாகக்  கொடுக்கப்படும்  பொருளைப்  பற்றியது  உபாயன  பத்திரமாகும் . இப்பொருள்  ஒருவன்  அன்றி  இருவர்  மூவர்  மக்களால்  அனுபவிக்கற்பாலது  என்று  அளவிட்டு  எழுதிக்கொடுக்கப்படும்  பத்திரம்  புருடாவதிக  பத்திரமாகும் . காலத்தைக்  குறிப்பிட்டு  எழுதிக்  கொடுக்கும்  பத்திரம்  காலாவதிக  பத்திரமாகும் .                                  304

( கரதம் – அரசிறை  கொடுத்தல் . புருடாவதிகம் – புருடரின்  அளவை  அறுதியிடுவது . காலாவதிகம் – காலத்தின்  அளவை  அறுதியிடுவது . )

     உடன்பிறந்தார்  முதலியோர்  மன ஒற்றுமையோடு  தம்  குடும் பத்துப்  பொருளைக்  கூறிட்டுக்  கொண்டு  அது  பற்றித்  தம்முள்  எழுதிக்  கொள்ளப்படுவது  பாக  பத்திரமாகும் .                                      305

     இல்லம்  நில  முதலியவற்றை  இடையூறின்றியும்  பொய்யுரையின்றியும்  வெளிப்படையாகவும் , ஒருவனுக்கு  நன்கொடையாக  உதவி  எழுதிக்  கொடுக்கப்படுவது  தான  பத்திரமாகும் .                                                                                                      306

        இல்லம்  நில  முதலியவற்றை  அவற்றிற்குத்  தக்க அளவுள்ள  விலைப்பொருள்  பெற்றுக்கொண்டு  விற்று  எழுதிக்கொடுக்கப் படுவது  கிரய  பத்திரமாகும்.                                                                          307                                                                                             

     இயங்கியற்  பொருள்  நிலையியற்  பொருள்களை  ஈடாக  வைத்துப் பாதுகாத்து  அனுபவித்தலாகிய  செயலைக்  குறிப்பிட்டு  எழுதிக்  கொடுக்கப்படுவது  சாதி  பத்திரமாகும் .                                                   308

(சாதி  பத்திரம் – இஃது  ஒற்றிப்  பத்திரமாகும் . )     

     சிற்றூர்களும் , பெரிய  நாடும்  ஒருங்கு  கூடித்  தம்முள்  ஒற்றுமை  குறித்தெழுதிக்  கொள்ளும்  பத்திரம்  சத்திய  லேக்கியம்  என்று  கூறப்படும் . அரசர்கள்  தம்முட்  பகைமையின்றி  அரசியலறங்களைப்  பேணுதற்பொருட்டு  எழுதிக்கொள்ளும்  பத்திரம்  சம்விற்பத்திரமாகும்.                                                                                        309

     வட்டி  கொடுப்பதாகப்  பொருள்  பெற்றுக்கொண்டு  நல்ல  சான்றுகளோடு  எழுதிக்கொடுக்கப்படுவது  கடன்  பத்திரமென்று  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                 310

     ஒருவனைப்பற்றிய  பழி , ஆதாரமின்மையால்  விலக்கப்பட்டுழிச்  சான்றுகளோடு  எழுதிக்  கொடுக்கப்படுவதும் , கழுவாய்  செய்யப்படுங்கால்  சான்றுகளோடு  எழுதிக் கொடுக்கப்படுவதும்  சுத்தி  பத்திரம்  என்று  அறிவுடையோராற்  கூறப்படும் .                       311

( கழுவாய்- பிராயச்சித்தம் )         

     வாணிகம்  புரியும்  முயற்சியுடையார் , தத்தம்  பங்குப்  பொருள்களைத்  தொழிற்பொருட்டு  ஒன்று  கூட்டிச்  சேர்த்து , அது  குறித்து  எழுதிக்கொள்ளும்  பத்திரம்  சாமயிக  பத்திரமென்று  கூறப்படும் .                                                                                                           312

     நீதிமன்றத்தவர்  , அமைச்சர் , முதலிய  பிரகிருதிகள் , மற்றை  அரசியல்  அதிகாரிகள் , வழக்கறிஞர்  முதலிய  அவைக் களத்துள்ளோராகிய  இவர்களால்  எழுதப்படாமல் , வாதி  பிரதிவாதிகள்  தம்முள்  உடன்பட்டு  எழுதிக்கொள்வது  சம்மதி  பத்திரமென்று  அறியப்படும் .                                                                        313

     ஆண்டான்  அடிமை  என்னும்  இவ்விருவருடைய  தன்மைகளையும்  புலப்படுத்துதற்  பொருட்டு , “திரு”, “மங்கலம்”  என்றெழுதப்படுஞ்  சொற்களோடு  கூடித்  திகழ்வதும் , தடை  விடைகளையுடையதும் , ஐயமொழிப்பதும் , வெளிப்படையான  பொருளையுடையதும் , விளக்கமான  எழுத்துக்களையுஞ்  சொற்களையுமுடையதும் , மற்றை  யோரினின்று  வேறுபடுத்துச்  சிறப்பின்  உணருமாறு  ஆண்டான்  அடிமை  இவ்விருதிறத்தினரின்  தந்தை  முதலியோரின்  பெயர்களையுடையதும் , ஒருமை  இருமை  பன்மை  மொழிகளால்  தகுதிக்குத்  தக்கவாறு  பாராட்டப்படுவதும் , ஆண்டு  திங்கள்  பக்கம்  நாள்  பெயர்  சாதி  முதலியன  குறிக்கப்படுவதும் , காரியத்தைப்  பலப்படுத்துவதும் , இயைபுடையதும் , அடிமையின்  வணக்கத்தையும்  தலைவன்  வாழ்த்தினையுமுடையதும் , தலைவனையும்  பணியாளனையும்  அவன்  வினையையுங்  குறிப்பிட்டு  அத்தலைவனும்  பணியாளனும்  தம்முள்  எழுதிக்  கொள்வதுமாகிய  பத்திரம்  மங்கல  பத்திரமென்று  கூறப்படும் .                                  314-317

( மங்கலபத்திரம் – இதனை  ஷேம பத்திரம்  என்று  கூறுவர் )

     முற்கூறிய  குணங்கள்  வாய்ந்ததும் , ஒருவன்  தனக்குப்  பிறர்  செய்த  தீங்கை  விளக்கமாக  அறிவிப்பதுமாகிய  பத்திரம்  அபியோக  பத்திரமெனவும் , துன்பநிலை  யுணர்த்தும்  பத்திரமெனவுங்  கூறப்படும் .                                                                                                          318

( அபியோகபத்திரம் – இதனைப்  பாஷாபத்திரம்  என்று  கூறுவர் )

     இதுகாறும் , காரிய  நிகழ்ச்சிகளைப்  பற்றிய  பத்திர  வகைகளின்  இலக்கணங்கள்  சுருக்கிக்  கூறப்பட்டன . இனி , வரவு  செலவு  எச்சங்களை  அறிவிக்கும்  ஆயவிய  பத்திர  வகைகள்  சுருக்கிக்  கூறப்படும் .

15 . அரசனுக்குரிய  வரவு  செலவு  முதலியன

     அவ் வரவு  செலவுப் பத்திரம் , வியாப்பிய  வியாபக  வேறுபாட்டாலும் , தனித்தனி  சிறந்த  குறியீடுகளாலும் , உண்மையான  விலை  அளவு  முதலியனவற்றாலும்  பல்வேறு  வகைப்படும் .                                                                                          320

( இங்குக்  கூறிய  வியாப்பியம்  வரவு  செலவுகளின்  சிறு  பிரிவுகளையும்  குறைவையும் , வியாபகம்  பெரும்பிரிவுகளையும்  மிகுதியையும்  உணர்த்துவனவாம் . பின்  வரும்  சுலோகங்களிலுள்ள  வியாப்பிய  வியாபகங்களுக்கும்  இங்ஙனமே  ஏற்ற  பெற்றி பொருள்  கொள்க . வியாப்பிய  வியாபகங்கள்  இன்னவென்பதைப்  பின்வரும்  374-ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     யாண்டுதோறும்  திங்கடோறும்  நாடோறும்  தனக்குரியனவாக  வரும்  பொன் , பசு , நெல் , முதிரை முதலிய  பொருள்கள்  வரவு [ஆயம் ] என்னும்  பெயரினவாம் . பிறர்க்குரியனவாகச்  செய்யப்படும்  அப்பொன்  முதலியன  செலவு [வியம் ] என்னும்  பெயரினவாம் .   321

( முதிரை – துவரை , பயிறு  முதலியன .)

     வரவு , புதியதெனவும்  பழையதெனவும்  இருவகைப்படும்  அவற்றுட்  பழையது  சஞ்சிதம்  என்னும்  பெயரினைவுடையதாம் . செலவு  நுகரப்படுவதெனவும்  பொருண்மாற்றெனவும்  இருவகைப்படும் . 322

     சஞ்சிதப்  பொருள்  வரவு  பிறர்க்குரியதெனத்  துணியப்  பட்டதும் , இன்னார்க்குரியதெனத்  துணியப்பட்டதும் , தனக்குரியதெனத்  துணியப்பட்டதும்  என  மூன்று  வகைப்படும்.                                          323

     அவற்றுள் , பிறர்க்குரியதெனத்  துணியப்பட்ட  வரவுப் பொருள்  ஒளபநிதிகம்  யாசிதகம்  ஒளத்தமர்ணிகம்  என  மூவகைப்படும் .    324

( ஒளபநிதிகம் – உபநிதியாக  வைக்கப்பட்டது . ஒளத்தமர்ணிகம் – கடனாக  வாங்கியது . உத்தமர்ணன் –  கடன்  கொடுப்பவன் . )

     நல்லோரால்  நம்பி  அடைக்கலமாக  வைக்கப்பட்ட  பொருள்  ஒளபநிதிகமாகும் . வட்டி  முதலியன  வின்றிக்  கொடுப்பதாகப்  பிறர்பால்  வேண்டிப்  பெற்ற  பொருளும் , அங்ஙனம்  பெற்ற  பிறர் அணிகலன்  முதலியனவும்  யாசிதகமென்று   கூறப்படும் .                 325

     வட்டியோடு  தருவதாகப்  பேசிக்  கடனாக  வாங்கிய  பொருள்  ஒளத்தமர்ணிகமாகும் .  வழி  முதலியவற்றிற்  கண்டெடுக்கப்பட்ட  பொருள்  முதலியன  இன்னார்க்குரியவெனத்   துணியப்படாதனவாகும் .                                                                                326

     தனக்குரியதெனத்  துணியப்பட்ட  பொருள்  இயல்பினாயது  மிகுதி  என  இருவகைப்படும்.                                                                                       327

     தாயப்  பொருளினின்றும் , தன்றொழின்  முயற்சியினின்றும் , நாடோறும்  திங்கடோறும்  ஆண்டுதோறும்  உறுதியாகக்  கிடைத்து  வரும்  ஊதியம்  இயல்பினாயது  என்று  கூறப்படும் . தாயப்பொருளும்  தானத்தாற்  கிடைக்கும்  பொருளும்  இயல்பினாம்  பொருள்களுள்  மிகச்  சிறந்தனவாகும் .                                                                                     328

     கொண்டுவிற்றலின்  ஊதியமாகக்  கிடைக்கும்  பொருளும் , வட்டியாற்  கிடைக்கும்  பொருளும் , வேள்வி  செய்வித்தன்  முதலியவற்றாற்  பெறும்  பொருளும் , பரிசிலாக வந்த பொருளும், வேதனமாகப் பெறும் பொருளும், போரில்  வெல்லுதன்  முதலியவற்றால்  அடைந்த  பொருளும் , தனக்குரியவெனத்  துணியப்பட்ட  பொருள்  வகையில்  மிகுதியின்பாற்படுவனவாம் . இவையல்லாத  பிறவெல்லாம்  இயல்பியனாய  தன்பாற்     படுவனவாம் .                                                                                               329 -330

     தனக்குரியனவாய  எல்லாச்  சஞ்சிதப்  பொருளும்  முன்னை  ஆண்டின்  எஞ்சியதெனவும் , நிகழும்  ஆண்டின்  உண்டாயதெனவும்  இருவகைப்படும் .                                                                                               331

     மிகுதி  இயல்பினாயது  என்னும்  இருவகைத்தாய  அப்பொருள்  பார்த்திவம்  அதனின்  வேறு  எனப்  பின்னரும்  இருவகைப்படும் . நிலப்  பகுதிகளினின்று  உண்டாகும்  ஊதியம்  பார்த்திவமென்று  கூறப்படும் .                                                                                                          332

     அப்  பார்த்திவப்  பொருள்  இயற்கையாகப்  பெய்யு  மழைநீர்  முதலியவற்றாலும்  செயற்கையாக  அமைக்கப்படும்  ஏரி  குள  முதலியவற்றின்  நீராலும் , நாடு  நகரம்  சிற்றூர்களாலும் , தனித்தனி  நிலப்  பகுதிகளாலும்  பல்வேறு  வகைப்படும் . இன்னும்  அது , மிகுதி  நடுத்தரம்  சுருக்கமாகிய  பயங்களாலும் பல  பிரிவுகளை  யுடையதாகும் .                                                                                                     333

     அப்  பார்த்திவத்தின்  வேறான  வரவு  வாணிகம்  புரிவோர்பாற்  பெறும்  சுங்கங்களாலும் , தண்டங்களாலும் , சுரங்கங்களாலும் , அரசிறைகளாலும் , வாடகைகளாலும் , காணிக்கை  முதலியவற்றாலும்  எய்துவதாகுமென்று  அதனை  யறிந்த  எழுத்தாளர்கள்  கூறுவர் .                                                                                334

     எதனை  முன்னிட்டு  வரவு  நேர்ந்துள்ளதோ  செலவும்  அதனை  முன்னிட்டதாக  இருத்தல்  வேண்டும் . அச்செலவும்  வரவைப்  போல  வியாப்பிய  வியாபகங்களை  யுடையதாகுமென்று  கூறப்படும் .      335

( அரசனுக்கு  எவ்வெத்துறைகளினின்றும்  வருவாய்  உண்டாகுமோ , அவ்வத்துறைகளைப்  பற்றிய  செலவும்  இவ்வளவென்று  ஆங்காங்குக்  குறிப்பிட்டு  எழுதவேண்டுமென்பது  கருத்து . உதாரணம் – உழவு  நிலங்களுக்கு  நீர்  விடுத்தற்பொருட்டுக்  கொள்ளும்  இறைப்பொருள்  இவ்வளவெனவும் , அதுபற்றிய  செலவு  இவ்வளவெனவும்  எழுதி , எஞ்சிய  வரவு  செலவு  அறிதல்  வேண்டும்  இங்ஙனமே  வழி  நடை  [road]  முதலியவைகளைப்  பற்றிய  வரவு  செலவுகளையுமுணர்க .)

     அச்செலவு  தன்பான்  மீண்டு  வருவதெனவும் , தன்  உரிமை யொழி வதெனவும்  இருவகைப்படும் . அவற்றுள் , நிதியாக  வைக்கப்பட்ட  பொருளும் , உபநிதியாகச்  செய்யப்பட்ட  பொருளும் , பண்டமாற்றுப்  பொருளும் , வட்டியோடாயினும்  அஃதின்றியாயினுமுள்ள  ஆதமர்ணிகப்  பொருளும்  ஆகிய  இவை  மீண்டும்  வருவதன்  பாற்படுவனவாம் .                                                                                               336

( ஆதமர்ணிகம் – அதமர்ணனுக்குக்  கொடுக்கப்படுவது . அதமர்ணன் – கடன்  வாங்குவோன் . நிதி  உபநிதி  முதலியவற்றைப்  பின்வரும்  சுலோகங்களிற்  காண்க . )

     நிதியாவது , நிலத்திற்றோண்டிப்  புதைத்து  வைக்கப்பட்டதாகும் . உபநிதியாவது , மற்றொருவன்பால்  நம்பி  அடைக்கலமாக  வைக்கப்பட்டதாகும் . பண்டமாற்றுவது , ஒரு  பொருளைப்  பெறுதற்கு  விலையாகக்  கொடுக்கப்படும்  பிரிதொரு  பொருளாகும் .                  337

     ஆதமர்ணிகமாவது , வட்டியுடனாதல்  அஃதின்றியாதல்  பெற்றுக்  கொள்வதாகக்  கொடுக்கப்பட்ட  பொருளாகும் . வட்டியோடு  பெறுவதாகக்  கொடுக்கப்பட்ட  பொருள்  கடன்  என்று  கூறப்படும் . வட்டியின்றிப்  பெறுவதாகக்  கொடுக்கப்பட்ட  பொருள்  யாசிதகமாகும் .                                                                                                   338

     தன்னுரிமை  யொழிவதாகிய  செலவு  இம்மையது , மறுமையது  என  இருவகைப்படும் .                                                                                       339                                                                             

     அவற்றுள் , இம்மைச்செலவு  பிரதிதானம் , பரிசில் , வேதனம் , போக்கியமென  நான்கு  வகைப்படும் . மறுமைச்செலவு  அளவின்றிப்  பல்வேறு  வகைப்படும் .                                                                                    340

     இவையன்றி  மற்றைச்  செலவனைத்தும்  எப்பொழுதும்  மீண்டுவருவதன்  பாற்படுவனவாம் . பிரதிதானமாவது  ஒன்றற்கு  விலையாகக்  கொடுக்கப்படும்  பொருளாகும் .                                       341

( இங்குக்கூறிய  பிரதிதானத்திற்கும், 337-ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்ட  பண்டமாற்றிற்கும்  வேறுபாடுண்டு . பண்டமாற்று – பண்டங்களுள்  ஒன்றைக்  கொடுத்து  மற்றொன்றை  வாங்குதல், அது  கொடுக்கப்பட்ட  அளவு  வேறு  வடிவத்தோடு  தன்பான்  மீண்டுவருதலால்  மீண்டு  வருவதன்பாற்  பாடுவதாயிற்று . பிரதிதானம்  ஒரு பண்டத்தின்  விலையாகக்  கொடுக்கப்படும்  பொருளாதலாலும் , கொடுக்கப்படுவது  பண்டமின்றாதலாலும் , அது  மீண்டுவராமையாலும் , தன்னுரிமை  யொழிவதன்பாற்  படுவதாயிற்று . )

     பரிசிலாவது  பணிசெய்தல்  குறித்தும்  வீரமுதலியன  குறித்தும்  ஒருவனுக்கு  உவகையோடு  கொடுக்கப்படுவதாகும் . கூலியாகக்  கொடுக்கப்படுவது  வேதனமென்று  கூறப்படும் .                                    342

( முதலியனவென்றதால் , பல்வகைக்  கல்விகளையும்  ஓவியஞ்  சிற்ப  முதலிய  கலைகளையுங்  கொள்க .)

     நெல்  முதிரை  முதலிய  தானியங்கள் , ஆடை , இல்லம் , பூஞ்சோலை , பசு , யானை  தேர் , கல்வி , அரசியல் , பொருள்  ஆகிய  இவை  முதலியவற்றை  ஈட்டுதற்பொருட்டும்  காத்தற்பொருட்டும் , செலவு  செய்யப்படும்  பொருள்  உபபோக்கிய  மென்று  கூறப்படும் .

     அரசன்  தன்  நுகர்ச்சியின்  நிமித்தம்  பொன்  அரதனம்  வெள்ளி  பொற்காசு  என்னுமிவற்றிற்கும் , தேர் , குதிரை , பசு , யானை , ஒட்டகம் வெள்ளாடு , செம்மறியாடு  என்னுமிவற்றிற்கும் , இயம்  அம்பு  வாள்  முதலிய  படைக்  கலங்கள்  ஆடை  தானியம்  மற்றைப்  பண்டங்களா கிய  இவற்றிற்கும்  சூழ்ச்சி  சிற்பம்  நாட்டியம் மருத்துவம்  விலங்கு  பறவை  அடிசிலாகிய  இவற்றிற்கும் , தனித்தனியே  சாலைகள்  அமைத்தல்  வேண்டும் . அச்சாலைகளின்  பொருட்டுச்  செய்யப்படும்  செலவு  போக்கியமென்று  கூறப்படும் .                                            344-345

     மறுமைச்செலவு , செபம்  ஓமம்,  அருச்சனை,  தானம்  என  நான்கு  வகைப்படும் .                                                                                                345 இ

     விசேட  வரவின்  நிமித்தம்  செய்யப்படுஞ்  செலவு  புனர்யாதம்  நிவிர்த்தம்  எனவும் , விசேடச்  செலவினாலுண்டாகும்  வரவு  ஆர்வத்தகம்  நிவர்த்தி எனவும் தனித்தனி இரண்டு வகைப்படும் . 346

     எழுத்தாளன்  ஆவர்த்தகம்  ஒழிந்த  வரவு  செலவுகளை  எழுதி  வைத்தல்  வேண்டும் .                                                                                      347

     நம்பிக்கையுள்ள  எழுத்தாளன் , விற்றல் , கடன்  கொடுத்தன்   முதலிய  பிற  எல்லா  நிகழ்ச்சிகளிலும்  தானே   எழுதிக்  கொண்டு  பொருளைக்  கொடுத்தலும் , பொருளை  பெற்றுக்கொண்டு  எழுதிக்  கோடலும்  செய்தல்  வேண்டும் .                                                                   348

     இவ்வாறு  வரவு  செலவுகளை  எழுதி  வைத்தலால்  அவை  கூடுதல்  குறைதலில்லாதனவாகும் .                                                                              349

     இங்குக்  கூறியனவல்லாத  மற்றை  வரவு  செலவுகள்  தனித்தனிக்  காரணங்களாலும் , காட்சி  முதலிய  அளவைகளாலும் , இயைபுகளாலும் , காரிய  உறுப்புக்களாலும் , வியாப்பிய  வியாபகங்களாலும்  நீட்டல்  எண்ணல்  எடுத்தல்  முகத்தலாகிய  அளவைகளாலும்  பல்வேறு  வகைப்படுவனவாம்.                                  350

     அளவை  முதலியன  அறிந்தோர்க்கு  வழங்குதற்பொருட்டுச்  சிலவிடத்து  எண்ணலளவையும் , சிலவிடத்து  நீட்டலளவையும்,  சிலவிடத்து எடுத்தலளவையும் , சிலவிடத்து  முகத்தலளவையும்  சிலவிடத்து  எண்ணன்  முதலிய  எல்லா  அளவைகளும்  உடன்  பாடாவனவாம் .                                                                                                  351

     அங்குலம்  முழம்  முதலிய  அளவை  நீட்டலளவையாகும் . துலையளவை  எடுத்தலளவையாகும் . படி  முதலிய  பாத்திரங்களின்  அளவை  முகத்தலளவையாகும் . ஒன்று  இரண்டு  முதலிய  எண்கள்  எண்ணலளவையாகும் . இவ்வளவை  எவ்விடத்து  எவ்வாறு  வழங்கப்படுமோ , அவ்விடத்து  அவ்வாறு  வழங்கும்  வண்ணம்  அரசன்  செய்தல்  வேண்டும் .                                                                                 352 – 353

( துலை – தராசு .)

     உலகத்தில்  வழங்குதற்பொருட்டு  அரசியன்  முத்திரையிடப்பட்ட  பொன்  வெள்ளி  செம்பு  முதலிய  காசுகள்  மக்களால்  வழங்கற்பாலனவாம் . பலகறைமுதல்  இரத்தினம்  இறுதியாக  வுள்ளன வெல்லாம்  திரவியம்  என்று  கூறப்படும் . பசு , தானியம் , ஆடை  முதல்  புல்  இறுதியாக  வுள்ளனவெல்லாம்  தனம்  என்னும்  பெயரினவாம் .                                                                                                     354

( பலகறை – சோகி . திரவியத்தைப்  பொருளெனவும் , தனத்தைச்  செல்வமெனவுங்  கூறுதல்  பொருந்தும் . )

     வழங்குதற்பொருட்டுத்  துணிவு  செய்யப்பட்ட  பொன்  முதலியன  விலைத்  தன்மையை  யெய்தும் .                                                                   355

( பொன்  முதலியன , ஈண்டு  அரசியன்  முத்திரையிடப்பட்ட  காசுகளைக்  குறிப்பனவாம் . அவை  ஒரு  பண்டத்தை  விலைக்குக்  கொள்ளுங்கால்  கொடுக்கப்படுமாதலின்  விலைத்தன்மையை  யெய்தும்  என்றார் . )

     இந்நிலத்திற்  காரண  முதலியவற்றின்  கூட்டுறவால்  பொருள்கள்  உண்டாகின்றன . ஒரு  பொருளை  ஆக்குதற்கு  நேருஞ்  செலவே  அப்பொருளின்  விலையாகும் .                                                                      356

( ஒரு   பண்டத்தை  உண்டாக்கல் , கொணர்தல் , பாதுகாத்தன்  முதலியவற்றால்  ஏற்படும்  பொருட்செலவே  அதன்  விலையாகு மென்பதாம் . )

     பொருள்களின்  விலை , அவற்றின்  எய்தற்கெளிமை  யருமைகளாலும்  குணமின்மையாலும் , அஃதுடைமையானும்  வேண்டியாங்குக்  குறைவு  மிகுதிகளை  யுடையதாகும் .                      357

     அரசன்  இரத்தினங்களுக்கும் , பொன்  வெள்ளி  முதலியவற்றிற்கும்  யாண்டும்  விலையைக்  குறைவாக  அமைத்தலாகாது . இவ்விரத்தினம்  பொன்  முதலியவற்றிற்கு  விலைக்குறைவு  வேந்தன்  பிழையாலுண் டாவதாகும் .                                                                                                         358

   16 . அரசன்  முதலியோர்  கையெழுத்திடு  முறையும்  கணித   பத்திரம்  எழுதும்  முறையும்

     வியாப்பிய  வியாபகமான  விடயங்களைப்  பற்றி  யெழுதுங் கால், எழுதப்படும்  நீண்ட  பத்திரத்தை  நான்கு  கூறிட்டு , அவற்றுள்  முறையே  முக்காற்கூறு , அரைக்கூறு , காற்கூறுகள்  நிரம்பவும் , நடுவிடத்தைப்  பொருந்திக்  குறுக்காகவும்  இருக்கும்  வண்ணம்  சொற்களைப்  பத்திபட  எழுதல்  வேண்டும் .                                            359

( இது  முதல்  361-  வரையுள்ள  சுலோகங்களிற்  பண்டைக்  காலத்துக்  கணக்குப்  பத்திரம்  எழுதுமுறைகள்  கூறப்படுகின்றன . ஈண்டுப்  பத்திரமென்றது  ஓலையை . முக்காற்கூறு  என்றது  அவ்வோலையின்  நீளத்தை  நான்கு  கூறிட்டு  இடப்புறத்தாதல்  வலப்புறத்தாதல்  காற்கூறொழித்து  எஞ்சியதை . அரைக்கூறு  என்றது  இடப்புறத்தும்  வலப்புறத்தும்  காற்  காற்  கூறொழித்து  எஞ்சிய  நடுப்பாகத்தை . காற்கூறென்றது  அங்ஙனமே  இருபுறத்தும்  காலே  அரைக்கால்  காலே  அரைக்காற்  கூறொழித்து  எஞ்சிய  நடுப்பாகத்தை . நடுவிடத்தைப்  பொருந்தி  என்பது , அவ்வோலையின்  மேலுங்கீழுஞ்  சிறிதிடம்  விட்டு எழுதவேண்டுமென்பதையும் ,  குறுக்காக  வென்பது , வேறு  சில  மொழியாளர்  போல்  பத்திரத்தின்  கீழ்த்தொடங்கி  மேலாக  வாதல் மேற்றொடங்கி  நீண்ட  வயமாக  எழுதவேண்டுமென்பதையும்  புலப்படுத்துவனவாம் .)

     அம்மூவகைச்  சொன்னிரைகளுள் , இடப்புறத்தில்  நடுவிடம்  பொருந்த  முக்காற்பங்கு  நிரம்புமாறு  எழுதப்படுஞ்  சொற்பத்தி  சிறந்ததாகும் . வலப்புறத்தின்  முக்காற்பங்கு  நிரம்புமாறு  எழுதப்படுஞ் சொற்பத்தி  மேலதனை  நோக்கச்  சிறிது  தாழ்ந்ததாகும். அரைக்கூறு நிரம்ப எழுதப்படுவது அதனிற் சிறிது தாழ்ந்ததாகும்.  காற்கூறு  நிரம்ப  எழுதப்படுவது  அதனிற்  சிறிது  குறைந்ததாக  மதிக்கப்படும் .                                                                                                360

( ஈண்டு  நடுவிடம்  பொருந்த  என்பதற்கு  மேலுரைத்  தாங்குப்  பொருள்  கொள்க .)

     அழகிய  இடை  வெளிகளமைய  எழுதப்படும்  ஒத்த  சொற்களிலுள்ள  எழுத்துகள் , வடிவத்தால்  வேறுபடாதனவாகவும் ஒத்த  அளவினவாகவும்  இருத்தல்  வேண்டும் . அப்பத்திரத்தின்  தொடக்கத்திலும்  இறுதியிலுங்  குறிக்கப்படுங்  காரியங்கள்  எப்பொழுதும்  ஒத்தனவாக  விருத்தல்  வேண்டும் .                               361

( காரியங்கள்  ஒத்தனவாக  இருத்தல் – ஒரு  விடயத்தைப்பற்றி  யெழுதப்படும்  பத்திரத்திற்  பிறவிடயங்கள் கலவாவண்ணஞ்  செய்தல் )

     அரசன்  தன்பால்  வரும்  பத்திரத்தைப்  பார்த்து  ஆராய்ந்து , அதன்கண்  எழுதப்பட்ட  பொருட்கேற்ப  விரும்பிய  வண்ணம்  தன்  கையெழுத்தடையாளத்தைச்  செய்தல்  வேண்டும் .                             362

( அரசன்  விருப்பின்  வண்ணம்  பத்திரத்தின்  தகுதிகேற்பச்  சுருக்கமாகவும்  விளக்கமாகவுங்  கையெழுத்திடலாமென்பது  கருத்து .)

     மந்திரி , நீதிபதி , பண்டிதன் , தூதனாகிய  இவர்கள்  அரசன்  காண்டற்பொருட்டு , “எம்  அதிகாரத்திற்கு  முரணாததாகும்  இப்பத்திரம் “  என்று  அதன்கண் முதலில்  எழுதல்  வேண்டும் .          363

     அமைச்சன் , “இது  நன்றாக  எழுதப்பட்டுள்ளது .”  என்று  முதலில்  எழுதல்  வேண்டும் . அதன்பின்  சுமந்திரன் , “இது  நன்றாக  ஆராய்ந்து  பார்க்கப்பட்டது “ என்று  எழுதல்  வேண்டும் .                                           364

     பிரதானன் ,  “இஃது  உண்மைப்  பொருளுடையதாகும்” என்று  தானே  எழுதல்  வேண்டும் . அதன்பின்  பிரதிநிதி ,  “இஃது  அரசனால்  ஏற்றுக்கொள்ளத்  தகுதியுடையதாகும் “ என்று  எழுதல்  வேண்டும் .  365

     இளவரசன், “இஃது  ஏற்றுக்  கொள்ளற்பாலதாகும் “  என்று  எழுதல்  வேண்டும் . புரோகிதன் ,  “இப்பத்திரம்  எனக்குடன்பாடாகும் “என்று  எழுதல்  வேண்டும் .                                                                                             366

     இங்ஙனம்  மந்திரி  முதலியோர்  எழுதிப்  பத்திரத்தின்  இறுதியில்  தந்தமுத்திரைகளால்  அடையாளமிடல்  வேண்டும் . அதன்பின்  அரசன்  “இஃது  ஏற்றுக்கொள்ளப்பட்டது “என்று  எழுதித்  தன்  பெயரடையாள  முத்திரையையிடல்  வேண்டும் .                                                                     367

     இளவரசன்  முதலியோர் , தமக்குப்  பிறகாரியங்களில்  மனம்  பற்றி  நிற்பது  குறித்துத்  தம்மால்  அப்பத்திரம்  நன்கு  படித்துப்பார்க்க கூடவில்லையாயின் , அப்பொழுது  அவர்கள்  “இன்னானால்  நன்கு  ஆராய்ந்து  பார்க்கப்பட்டது”  என்று  எழுதல்  வேண்டும் .                    368

     மந்திரி  முதலிய  எல்லோரும்  தத்த  முத்திரைகளோடு  எழுதிய  பின்னர் , அரசன்  அப்பத்திரத்தை  நன்கு  படித்துப்பார்ப்பதற்கு  அவகாசமில்லாதிருப்பின்  , மந்திரி  முதலியோரிடத்துள்ள  நம்பிக்கையால் , தாழ்த்தலின்றிப்  “பார்க்கப்பட்டது” என்று  எழுதல்   வேண்டும் .                                                                                                             369

     முதற்கண்  வரவை  நன்றாக  எழுதிப்  பின்னர்  நேர்ந்த  வண்ணஞ்  செலவையும்  எழுதல்  வேண்டும் . பத்திரத்தின்  இடப்பக்கத்தில்  வரவையும்  வலப்பக்கத்திற்  செலவையும்  வரைதல்   வேண்டும் .    370

( இது முதல்  383 –ஆம்  சுலோகம்  வரை  செலவுக்  கணக்குகளைப்  பத்திரங்களில்  எழுதும்  முறையைப் பற்றிக்  கூறுகின்றார் . இம்முறைகளுட்  சில  இக்காலத்திற்கு  ஒத்தனவாகவும்  சில  ஒவ்வாதனவாகவும்  உள்ளனவாதலின் , ஒவ்வாதனவாக  இங்குக்  கூறப்பட்ட  பண்டைக்  காலத்து  முறைகள்  சில  செவ்வித்திற்  புலப்பட்டில. ) 

     எப்பத்திரத்தில்  எழுதப்படும்  இரண்டு  விடயங்கள்  வியாப்பிய  வியாபகங்களாகவாதல்  ஆதார  ஆதேயங்களாகவாதலுள்ளனவோ , அப்பத்திரத்தில்  அவற்றை  முறையே  இடப்பக்கத்து  மேலிடத்திற்  குறிப்பிடல்  வேண்டும் . அவ்  வெண்  காலநியமத்தைப்  பற்றியதாகும் .

     அப்பத்திரத்தில்  வியாபகப்  பொருளை  இடப்பக்கத்துக்  கீழ்க்  கீழ்  முறையே  எழுதல்  வேண்டும் . வியாப்பியப்பொருள்களின்  விலை  அளவு  முதலியவற்றை அவ்வியாப்பியத்திற்குரிய   பத்தியில்  வரைதல்  வேண்டும் .                                                                                                          372

( 371-372  கீழ்க் கீழ்  முறையே  எழுதல் :  370-ஆம்  சுலோகத்தில்  வரவு  இடப்புறத்திற்  குறிப்பிடவேண்டுமென்று  கூறியபடி , இயங்கும்  வியாபக  வியாப்பியங்களையும்  ஆதார  ஆதேயங்களையும்  இடப்புறத்தில்  வரைதல்  வேண்டுமென்று  குறிப்பிடுவதால்  இச்சுலோகங்களிரண்டிலுமுள்ள  வியாபக  வியாப்பியங்களும்  ஆதார  ஆதேயங்களும்  வரவைப்  பற்றினவாகத்  தோன்றுகின்றன . )

     எப்பத்திரத்தில்  வியாப்பிய  வியாபகங்களான  பொருள்கள்  மிகுதியான  எண்களை  யுடையனவாக வுள்ளனவோ , ஆண்டு  மேலிடத்துள்ள  அவற்றின்  எண்களைக்  கீழ்ப்  பத்தியில்  அமைத்தல்  வேண்டும் .                                                                                                        373

     மிகுதியைப்   பற்றி  நிற்பது  வியாபகமாகும் . குறைவைப்  பற்றி  நிற்பது  வியாப்பியமாகும் . உறுப்புக்கள்  வியாப்பியமெனவும்  உறுப்பிகள்  வியாபகமெனவுங்  கூறப்படுவனவாம் .                          374

( இதன் கண்  வியாபக  வியாப்பியங்கள்  இன்னவென்று  கூறப்பட்டன .)

     ஒத்த  சாதிப்  பொருள்களைக்  குறிப்பிடுங்கால் , ஓரிடத்திலேயே  தொகுத்தெழுதல்  வேண்டும் . மற்றைப்  பல்வேறு  சாதிப்பொருள் களைக்  குறிப்பிடுங்கால் , நேர்ந்தவாறே  முதலிறுதிகளிலும்  தொகுத்தும்  எழுதலாம் .                                                                               375

      யாண்டுப்  பொருள்களும்  நிலங்களும்  மிகுதியாகவுள்ளனவோ  ஆண்டு  வரவு  செலவுகளை  எப்பொழுதுங்  காலந்தாழ்த்தலின்றி  எழுதல்  வேண்டும் .                                                                                          376

     நிலங்களைப்  பற்றிய  குறிப்பு  விளக்கம்  ஒன்றாகும் . அதனின்  வேறாகப்  பொருட்குழுவைப்  பற்றிய  குறிப்பு  விளக்கம்  மற்றொன்றாகும் . முற்கூறியவற்றுள்  மிகப்  பெரியதாகவுள்ள  வரவு  செலவுப்  பத்திரம்  விசிட்டம்  என்னும்  பெயரினை  யுடையதாகும் . 377

( நிலத்தைப்  பற்றிய  குறிப்பு  விளக்கம் , பல்வேறு  நிலப்பகுதிகளை  எல்லை  காட்டி  விளக்குவதாம் . பொருட்குழுவைப் பற்றிய  குறிப்பு  விளக்கம் , மணி பொன்  நெல் முதலிய  பொருள்களைப்  பற்றியதாகும். )

     வரவு  எவ்வளவு?  செலவு  எவ்வளவு ? எப்பொருளின்  எஞ்சியது எவ்வளவுள்ளது ? என்னும்  இவற்றைப்பற்றிய  தெளிவுணர்ச்சி விசிட்டம்  எனப்  பெயரிய  பத்திரங்களா  லுண்டாவதாகும் .           378                       

     முதலில்  வரவு  செலவுகளை  நேர்ந்தவண்ணம்  வரைந்து , அதன்பின்  அவற்றின்  எண்களைக்  குறித்தல்  வேண்டும் . மிகுதியான  பொருளையும்  நிலத்தையும்  பற்றி  எழுதுங்கால் , அவற்றிற்குத்  தக்கவாறு  விளக்கக்  குறிப்புகளோடு  எழுதல்  வேண்டும் .                   379

     மற்றை  வரவு  செலவுகளைப்  பற்றிய அறிவு , முறையே  அவ்வவற்றைக்  குறிப்பிடும்  பத்திரங்களாலுண்டாவதாகும் . மிகப்  பெரிய  நிலத்தின்  வரவு  செலவைப்பற்றிய  விசேட  அறிவு, அந்  நிலப்பகுதியைப்  பற்றிய  ஆராய்ச்சியாலுண்டாகும்.                           380

     பொருளளவிற்கு  நில அளவு சுருங்கியும்  நில  அளவிற்குப் பொருளளவு  சுருங்கியும்  இருப்பதுண்டு . எழுதுங்கால்  மக்கள்  விருப்பின்  வண்ணம்  திதி  முதலியன  குறிக்கப்பட்டுப்  “பிறர்க்குரியதெனத்  துணியப்பட்டது”  முதலிய  வரவைப்  பற்றி  நிற்கும்  பத்திரங்களும் , அங்ஙனமே  திதி  முதலியன வரையப்பட்டு  “மீண்டு  வருவது”  முதலிய  பிறரைச்  சார்ந்து  நிற்கும்  செலவைப்  பற்றிய  பத்திரங்களும் பிறர்  கையெழுத்தை  யிறுதியிலுடையனவாய்  விசிட்ட  மென்னும்  பெயரினவாய் , முடிவில்  வியாபக  எண்களை  யுடையனவாம் .                                                                                          381-382

( சுருங்கிய  நிலப்  பகுதியில்  அதனளவின் மிகுதியாகப்  பொருளுண்டாதலும் , விரிந்த  நிலப்  பகுதியில்  அதனளவிற்  குறைவாகப்  பொருளுண்டாதலும்   இயல்பாமென்பது  கருத்து . திதி  முதலியன  குறிக்கப்படுதல்  பிறர்க்குரியதெனத்  துணியப்பட்டது  முதலிய  வரவுகளுக்கும் , மீண்டும்  வருவது  முதலிய  செலவுகளுக்கும்  உரிய  கொடுக்கல்  வாங்கற்  காலத்தை  உணர்த்துதற்கென  வுணர்க . பிறர்க்குரியதெனத்  துணியப்பட்டது  முதலிய  வரவை  324-ஆம்  சுலோகத்திலும் , மீண்டு  வருவது  முதலிய  செலவை  336-ஆம்  சுலோகத்திலும்  காண்க . பிறர் – பெற்றுக்கொள்வோரும்  மீண்டு  தருவோருமாவர் .)

     முதலிற்  பிரமாணபலத்தை  இச்சையினாற்  பெருக்கி , அதன்  பின்  அவ்வெண்ணைப்  பிரமாணத்தால்  வகுக்க  வேண்டும் . அங்ஙனம்  வகுக்கப்படுங்காற்  கிடைக்கும்  வகுப்புத்தான  எண்  மனிதர்க்கு  இச்சாபலமாகும் .                                                                                              383

( இது  திரைராசிக  விதியினால்  வரவு  செலவு  கணக்குகளை  யறியு முறையைக்  கூறுகின்றது . திரைராசிகமாவது – இச்சை , பிரமாணம் , பிரமாண  பலம்  என்னும்  மூன்றனையும்  கொண்டு  முடிவது . பத்துப்  பெயர்க்குக்  கூலி  பதினைந்து  வெண்பொற்காசுகளானால் , பதினெட்டுப்  பெயர்க்கு  எவ்வளவாம் ? என்புழிப்  பதினெட்டு  என்னும்  எண்  இச்சையாகும் .  பத்தென்னும்  எண்  பிரமாணமாகும்.  பதினைந்து  என்னும்  எண்  பிரமாண  பலமாகும் . பிரமாண  பலமாகிய  15-ஐ  இச்சையாகிய  18-ஆற்  பெருக்க  270  ஆகும்  . அதனைப்  பிரமாணமாகிய  10-ஆல்  வகுக்க  அவ்வகுப்புத்தான  எண்  27-ஆகும் . இவ்விருபத்தேழே  இச்சாபலமாகும் . ஆகவே  இச்சுலோகத்திற்  கூறியது  10-பெயர்க்கு  15-  என்றால்  18 – பெயர்க்கு  27-ஆகுமென்று  அறிதலேயாகும் . இங்ஙனமே  வரவினுங்  கணக்கிட்டுக்கொள்க .)

     இது காறும்  எல்லோர்க்கும்  நினைவுகூர்தற்கு  ஏதுவாக  எண்   முதலியன  வரையு  முறைகள்  சுருக்கிக்  கூறப்பட்டன .                    384

17 . அளவைகள்

     குன்றி , மாடம் , கருடம் , பதார்த்தம் , பிரத்தம்  ஆகிய  இவை  முறையே  ஒன்றினொன்று  பதின்மடங்கு  அளவு  மேம்பாடுடையனவாம் . பிரத்தம்  ஐந்து  கொண்டது  ஆடகமாகும் . 365

( குன்றி  பத்துக் கொண்டது  மாடம் ; மாடம்  பத்துக்கொண்டது  கருடம் ; கருடம்  பத்துக்  கொண்டது  பதார்த்தம் ; பதார்த்தம்  பத்துக்  கொண்டது பிரத்தமாகும் . பிரத்தமென்பது  இக்காலத்து  வழங்கும்  வெண்பொற்காசு [ரூபாய்] நூறு  கொண்ட  எடையென்று  தோன்றுகின்றது . அங்ஙனமாயின் , அது  முகத்தலளவையில் ஏறக்குறைய  ஒரு  படியாகும். )

     ஆடகம்  எட்டுக் கொண்டது  அருமணமெனவும் , அருமணம்  இருபது  கொண்டது  காரிகை  யெனவுங்  கூறப்படும் . நாடுகடோறும்  இவ்வளவை  வேறுபட்டனவாகும் .                                                                386

     ஐந்தங்குல  ஆழமும்  நான்கங்குல  அகலமும்  உள்ள  பாத்திரம்  முகத்தலளவையிற்  காற்பிரத்த  மாகுமென்று  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                                                 387

( காற்பிரத்தம் – காற்படி .)

     மேலிடத்துள்ள  எண்ணலளவைக்குறி , குறிப்பிட்ட  அளவேயாகும் . அதன்  கீழாக  இடப்புறத்து  வரையப்படும்  எண்குறி , முன்னதிற்  பத்து  மடங்கு  மிகுதியுடையதாகும் . இங்ஙனம்  பின்னரும்  இடப்படும்  எண்குறிகள் , முறையே  ஒன்றை  நோக்க  மற்றது  பதின்மடங்கு  மிகுதி யுடையதாகப்  பரார்த்தம்  இறுதியாகக்  கூறப்படுவனவாம் . 388

     காலத்திற்கு  எல்லையின்றாதலின் , பரார்த்தத்திற்கு  மேலும்  எண்ணலளவைக்  குறியிட்டாளக்  கூடவில்லை . பிரமதேவனுக்கு  வாழ்நாள்  இரண்டு  பரார்த்த  அளவாகுமென்று  அறிவுடையோர்  கூறுவோர் .                                                                                                           389

( பரார்த்தத்திற்கு  மேல்  எண்ணலளவைக்  குறியின்மையால்  இரண்டு பரார்த்தம்  என்று  கூறப்பட்டது .)

     ஒன்று , பத்து , நூறு , ஆயிரம் , பதினாயிரம் , இலக்கம் , [நியுதம்] பத்திலக்கம் , [பிரயுதம்]  கோடி , பத்துக்கோடி , [அர்ப்புதம்]  நூறு கோடி, [அப்ஜம்]  ஆயிரங்கோடி , [கர்வம்] பதினாயிரங்கோடி, [நிகர்வம்] இலக்கங்கோடி, [பதுமம்]  பத்திலக்கங்கோடி , [சங்கம்]  நூறிலக்கங்கோடி , [அப்தி]  மத்தியம் , அந்தம் , பரார்த்தம்  என்னுமிவை  எண்ணலளவைக்  குறியீடுகளாம் .                                    390

18 . கால   அளவைகள்

     காலத்தின்  அளவு  சாந்திரம் , செளரவம் , சாவனம் , என   மூன்று  வகைப்படும் . திங்கள்  வேதனங்கள்  கொடுக்குங்காற்  செளரமானத்தையும் , கடன்கோடல்  கடன்கொடுத்தன்  முதலியவற்றிற்  சாந்திரமானத்தையும் , நாட்பணி  செய்வோர்க்குக்  கூலிகொடுக்குங்காற்  சாவனமானத்தையும்  அவ்வக்கால  இறுதியில்  வைத்து  எப்பொழுதும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                391

( சாத்திரம் – பூருவ  பக்கத்துப்  பிரதமை  தொடங்கி  அமாவாசை  இறுதியாக  வுள்ள  காலம் . செளரம் – சூரியன்  ஓர்  இராசியிற்  புகுதல்  தொடங்கி  மற்றோர்  இராசியிற்  பிரவேசிக்கும்  வரையுள்ள  காலம் . சாவனம் – சூரியன்றோன்றி  மறையும்  வரையுள்ள  காலம் . )

19 . வேதன  விளக்கம்

     வேதனம்  காரியமானம் , காலமானம் , காரிய காலமானம்  என  மூவகைப்படும். இம்மூன்றனுட்  பேசிக்  கொள்ளப்பட்டதொன்றின்படி  அது  கொடுக்கற்பாலது .                                                                               392

     ஒருவன்  மற்றொருவனை  நோக்கி , “ நீ  இச்சுமையைச்  சுமந்து  கொண்டு  இன்ன  இடத்தில்  வைத்தல்  வேண்டும் ; அதற்காக  யான்  இவ்வளவு  கூலி  தருவல் “  என்றிவ்வாறு  பேசிக்  கொள்ளப்படுவது  காரியமானம்  என  அக்கூலியை  யறுதியிடுவோர்  கூறுவர் .           393

     ஆண்டுதோறுமாதல் , திங்கடோறுமாதல் , நாடோறுமாதல்  “இவ்வளவு  வேதனம்  நினக்கு  யான்  தருவேன்”  என்று  பேசிக்கொள்ளப்படுவது   காலமானமாகும் .                                          395

     கூலி  கொடாமையும் , அதனை  உரிய  காலத்துக்  கொடாது  தாழ்த்தலுஞ்  செய்தலாகாது . ஒருவன் , தன்னால் , அவசியம்  காக்கப்படுபவராகிய  தாய்  தந்தை  முதலிய  சுற்றத்தாரோடு  பிறரையும்  உதவிக்  காத்தற்குத்  தக்கவாறு  பெறும்  வேதனம்  தலையாயதாகும் . அவசியம்  காக்கப்படுபவராகிய  தாய்  தந்தை  முதலியோரை  ஓம்புதற்கும் , தனக்கு  வேண்டிய  உண்டி  உடுக்கைகளுக்கும்  போதிய  அளவு  பெறும்  வேதனம்  இடையாயதாகும் . தற்காப்பளவிற்  பெறும்  வேதனம்  கடையாயதாகும் .                                                                                       396-397

     அரசன் , தன்  பணியாளன்  எத்துணை  எத்துணைக்  குணமிக்கானோ  அத்துணை  அத்துணை  அவனுக்குத்  தன்  நலங்  குறித்து  வேதனம்  உயர்த்திக்  கொடுத்தல்  வேண்டும் .                        398

     பணியாளனொருவன் , அவன்  தாய்  தந்தை  முதலியோரைக்  காத்தல்  இன்றியமையாக்  கடனாக  விருப்பின் , அப்பணியாளனுக்கு  அதற்குத்தக்கவாறு  வேதனங்கொடுத்து  உதவல்  வேண்டும் .             399

     மிகச்சிறு  வேதனம்  பெறும்  பணியாளர்  தலைவன்  காரியத்தை  யொத்துப்  பிறர்க்கு  வினைபுரிதல் , அவன்பாற்  புரைவழி  கண்டு  செல்லவெண்ணுதல் , அவன்  பொருளைக் கவர்தல் , குடிகளைத்  துன்புறுத்தலாகிய  இவற்றை  மேற்கொள்வராதலின் , அன்னார்  அரசனாற்றானே  யாக்கிக்  கொள்ளப்பட்ட  பகைவராவர் .                  400

     இழிகுலத்தார்க்கு  உண்டியுடுக்கைகளுக்கு  வேண்டிய  அளவிற்  கூலி  கொடுக்க  வேண்டும் . அங்ஙனமின்றி , அவ்வளவின்  மிகுதியாகக்  கொடுத்தலாற்  புலாலுண்ணும்  அவ்விழிகுலத்தாரைக்  காக்குந்  தலைவன்  அன்னார்  பாவப்பயனை  எய்துபவனாவான் .   401

     அந்தணனாற்  கவரப்பட்ட  பொருள்  அப்பொருளுடையானுக்கு  மறுமை  நலம்  தருவதாகும் . இழிந்தோன்  பொருட்டுக்  கொடுக்கப்பட்ட  பொருள்  அப்பொருளுடையானை  நரகத்தில்  வீழ்த்துவதாகும் .                                                                                                 402

     வினைசெய்வார்  சீக்கிரன் , மத்தியன் , மந்தன்  என  மூவகைப்படுவர் . அவர்க்குக்  கொடுக்கப்படும்  வேதனமும்  முறையே  தலை , இடை , கடை என  மூவகையாகக்  கூறப்படும் .                          403

     இரவும்  பகலும்  பணிசெய்யும்   ஏவலாளர்க்கு , அவர்தம்  வீட்டுக்  காரியநிமித்தம்  பகலில்  ஒரு  யாமமும் , இரவில்  மூன்று  யாமங்களும்  ஒழிவு  கிடைக்கும்படி  நாடோறும்  விடல்  வேண்டும் . பகலின்  மாத்திரம்  ஏவற்றொழில்  செய்வோர்க்கு , வீட்டுக்காரிய  நிமித்தம்  அரையாமம்  அவகாசங்கொடுத்தல்  வேண்டும் .                                   404

     அரசன்  , மணமுதலிய  விழாக்காலங்களல்லாத  மற்றை  நாட்களில், முற்கூறிய  வினைசெய்வாரைக்  கொண்டு  காரியஞ்  செய்வித்தல்   வேண்டும் . விழாக்காலங்களுள்ளும் , தென்புலத்தார்  கடன்  இறுக்கும்  நாளினன்றி  மற்றைக்  காலங்களில்  இன்றியமையாது  செயற்பாலதாகிய  காரியத்தைச்  செய்வித்துக்  கொள்ளலாம் .        405

( அரசன்  தன்பால்  என்றும்  வினைசெய்வோரையே  விழாக் காலங்களிலும்  வினைசெய்யும்படியும்  ஏவலாகாதென்பதும் , விழாக்  காலங்களுக்கெனப்  புதிய  பணியாளரை  நியமிக்க  வேண்டுமென்பதும் , அவசியமாயின்  பிதிர்க்கடன்   அல்லாத  மற்றைக்  காரியங்களில்  பழைய  பணியாளரையும்  நியமிக்கலாமென்பதும் , பிதிர்க்கடன்  இறுக்குங்கால்  அங்ஙனஞ்  செய்யலாகாதென்பதுங்  கூறியவாறு . )

     வினை  செய்வானொருவன்  சில  திங்கள்  வரை  நோய்  கோட்பட்டிருப்பின்  அவனுக்கு  முக்காற்பங்கு  வேதனமும் , ஓர்  யாண்டுவரை  நோய்  கோட்பட்டிருப்பின்  மூன்று  திங்கள்  வேதனமுங்  கொடுத்தல்  வேண்டும் . ஐந்து  யாண்டு  தொழில்  செய்தோன்  நோய்  கோட்படின் , அவனுக்கு  அந்நோயின்  கால  அளவிற்குத்  தக்கவாறு  வேதனம்  குறைத்துங்  கூட்டியும்  கொடுக்கலாம் .                                  406

     ஒருவன்  நெடுங்காலம்  நோய்   கோட்பட்டிருப்பானாயின் , அவனுக்கு  ஆறு  திங்கள்  வேதனங்கொடுத்தல்  வேண்டும்.  அதற்கு  மேற்கொடுத்தலாகாது  . ஒரு  வாரம்  நோய் கோட்பட்டிருப்போனுக்குச்  சிறிதும்  வேதனம்  பிடித்தலாகாது .                                                              407

     ஒருவன்  ஓர்  யாண்டுவரை  நோய்  கோட்பட்டிருப்பானாயின் , அவனுக்குப்  பிரதிநிதியாக  அவன்பானின்றே  மற்றொருவனை  ஏற்றுக்  கொள்ளலாம் . அங்ஙனம்  நோய்கோட்பட்டிருக்கும்  வினைவலான் , குணங்களாற்  சிறந்துளானாயின் , அவனுக்கு  அரக்கூறு  வேதனம்  ஏற்படுத்தல்  வேண்டும் .                                          408

     அரசன்  வினைசெய்வார்க்கு  வேலை  கொள்ளாமல்  ஓர் யாண்டிற்  பதினைந்து  நாட்களுக்குரிய  வேதனங்   கொடுத்தல்  வேண்டும் .     409

     வினை  செய்வானோருவன்  நாற்பது  யாண்டுகள்  வரை  அரசனுக்குத்  தொழில்  செய்திருப்பானாயின் , அதன்பின்  அவனுக்கு  அவன்  வாழ்நாள்காறும்  அரசன்  [ வேலை  கொள்ளாமலே  அரைக்கூறு  வேதனம் ]  உதவிவரல்  வேண்டும் . அவன்   மகன்  தொழில்  செய்யும்  ஆற்றலில்லாதவனாக  விருப்பின்  வாழ்நாள் வரையும் , ஆற்றலுடையனாயிற்  பாலப்பருவம்  நீங்குங்காறும் , அவனுக்கு  அவன்  தந்தையின்  வேதனத்தின்  பாதியிற்  பாதியாகிய  காற்கூறு  வேதனம்  உதவல்  வேண்டும் . அவன்  மனைவி  நல்ல  கற்புடையளாயின்  அவட்கு  வாழ்நாள்வரையும் , அவன்   மகள்  கன்னிகையாயின்  அவட்குக்  கன்னிப்பருவம்  நீங்கும்  வரையும் , அக்காற்கூறு  வேதனம்  உதவல்  வேண்டும் . அரசன்  இங்ஙனம்  உதவல்  தன்நலம்  வளர்தற்  பொருட்டாம் .                                         410-411

     யாண்டுதோறும்  வினைசெய்வோர்க்கு  அவன்  வேதனத்தில்  எட்டில்  ஒரு  கூறு  பரிசிலாக  உதவல்  வேண்டும் . அவன்  மிகுதியான  காரியங்களை  விரைவிற்  செய்து  முடிப்பானாயின் , அக்காரிய  முடித்தற்குச்  செலவாகும்  பொருளில்  எட்டில்  ஒரு  கூறு  அவனுக்குப்  பரிசிலாக  உதவல்  வேண்டும் .                                                                  412

( எட்டிலொரு  கூறு  என்றது , ஓராண்டிற்குரிய  வேதனத்தில்  எட்டிலொரு  பாகத்தை )

     எவன்  தன்  தலைவன்  காரியத்தின்  பொருட்டு  உயிர்  நீங்கப்பெற்றானோ , அவன்  வேதனத்தை  அவன்  மகன்  பாலப்பருவம்  நீங்கும்வரை  முழுதும்  அடைதற்குரியனாவான் . பாலப்பருவங்  கடந்தபின்  அப் புதல்வன்  தகுதி  நோக்கி  வேதனங்கொடுத்தல்  வேண்டும் .                                                                                                          413

     வினை  செய்வானது  வேதனத்தில்  ஆறிலொரு  கூறாதல் , நான் கிலொரு  கூறாதல்  பிடித்துப்  பாதுகாத்தல்  வேண்டும் . இரண்டு  அல்லது  மூன்று  யாண்டுகளின்  பின்னர்  அத்தொகையின்  பாதியையாதல் , முழுதையுமாதல்  அவனுக்குக்  கொடுத்துவிடல்  வேண்டும் .                                                                                                             414

20 . அரசன்  வினைசெய்வாரை  இன்புறுத்து முறை

     அரசன்  கடுஞ்சொற்களாலும் , வேதனத்தைக்  குறைத்தலாலும் , கொடுந்தண்டத்தாலும் , மானத்திற்குக்  கேடிழைத்தலாலும், வினைசெய்வானை  எப்பொழுதும்  பகைவனாம்  வண்ணம்  பயிற்றுபவனாகின்றான் .                                                                                 415

     வேதனம்  குறையாது  கொடுத்தலால்  மகிழ்ச்சியும் , மானத்தாற்  சிறப்பும் , இன்சொற்களாற்  சாந்தமும்  எய்தற்பெற்ற  வினைவலார்   தம்  தலைவனை  விட்டொழியார் .                                                                 416

     கடையாயர்  பொருளையே விரும்புவர் . இடையாயர்  பொருளையும்  மானத்தையும்   விரும்புவர் . தலையாயர்  மானத்தையே  விரும்புவர் . மானமே  பெரியோர்க்குப்  பொருளாகும் .                                                 417

     அரசன்  தன்பால்  வினை  செய்வோரையும் , தன்கீழ்  வாழுங்  குடிகளையும்  அவரவர்  தகுதிக்கேற்பச்  சிலரை  ஏதாவது  சிறிது  கொடுத்தலாலும் , வேறு  சிலரை  அதனினுஞ்  சிறிது  மிகுதியாகக்  கொடுத்தலாலும் , மற்றுஞ்  சிலரை  மலர்ந்த  பார்வையாலும் , சிலரைப்  புன்முறுவலாலும் , இன்சொற்களாலும் , நிறைந்த  உண்டிகளாலும் ,  அழகிய  ஆடைகளாலும் , தாம்பூலம்  ஈதலாலும் , பொருள் கொடுத்தலாலும், சிலரை  நலம்  வினாவலாலும் , அதிகாரக்  கொடையினாலும் , யானை  குதிரை  முதலிய  ஊர்தி  கொடுத்தலாலும் , தக்க  அணிகலன்  முதலியன  ஈதலாலும் , குடை  கவரி  விளக்கு  முதலியன  கொடுத்தலாலும் , பிழை  பொறுத்தலாலும் , பெரியோரை  வணங்குதலாலும் , பெருமைப்படுத்தலாலும் , உடன்  செல்லுதலாலும் , பூசித்தலாலும் , நூலாராய்ச்சியறிவினாலும் , விருப்பமிக்க  முயற்சியாலும், அடக்கத்தாலும் , அன்பினாலும் , அருகிருத்தலாலும் , தன்  இருக்கையிற்  பாதி   ஈதலாலும் , தன்  இருக்கை  முழுதும்  ஈதலாலும் , புகழ்ந்துரைத்தலாலும் , செய்ந்நன்றி  யறிந்து  பாராட்டுதலாலும்  இன்புறுத்தல்  வேண்டும் .          418-422                               

( வணங்குதல்  முதலியனவாக  இங்குக்  கூறப்பட்டனவெல்லாம்  குரவர்  நட்டோர்  முதலிய  பெரியோர்களைக்  குறித்துச்  செய்யப்படுவனவாம்  ஈண்டுக்  கூறிய  குடை  கவரிகள்    அரசனுக்குரிய  சிறந்த  அடையாளங்களல்லாதன .)

     அரசன்  தன்  வினைசெய்வாருள்  இன்னார்  இன்னகாரியத்தில்  நியமிக்கப் பட்டிருக்கின்றனரென்று   அன்னாரைத்  தெரிந்து  கொள்ளுதற்பொருட்டு , அவர்  தகுதிகேற்ப  இரும்பு , செம்பு , பித்தளை, வெள்ளி , பொன் , இரத்தினமாகிய  இவற்றாற்  செய்யப்பட்ட  தன்  முத்திரையோடுங்  கூடிய  காரிய  அடையாளப்  பொருள்களால்  இலச்சினையிடல்  வேண்டும் .                                                                         423

     ( காரிய  அடையாளம் – அதிகாரச்செயலைக்குறிப்பது ,  இலச்சினை – அடையாளம் )

அரசன்  தன்வினை  செய்வாரைச்  சேய்மையினின்று  உணர்ந்து  கொள்ளுதற்  பொருட்டு  ஆடைகளாலும்  தலைச்சாத்துக்களாலும் , இயக்கங்களின்  வேறுபாட்டாலும் , ஊர்திகளின்  வேறுபாட்டாலும்  தனித்தனி  சிறப்படையாளமுடையோராகச்  செய்தல்  வேண்டும் . தனக்குரிய  குடை , கவரி  முதலிய  சிறந்த  அடையாளங்களை  எவர்க்குங்  கொடுத்தலாகாது ,                                                               424-425

( இயம் –  வாத்தியம் )

     புரோகிதன்  முதலாகக்  கூறப்பட்ட  பிரகிருதிகள்  பதின்மரும்  அந்தணராக  இருத்தல்  வேண்டும் , அவரில்லையாயின் , அரசர்  குலத்தவராக  இருத்தல்  வேண்டும் . அவரும்  இல்லையாயின்  , வணிகர்களாக  இருத்தல்  வேண்டும் . சூத்திரர்கள்  குணமிக்கோரா யினும்  அன்னாரை  அப் பதவியில்  அரசன்  நியமித்தலாகாது .  426-427

     மன்னர்  குலத்தவனை  அரசிறைப்பொருள்  வாங்குவோனாகவும் , தண்டத்  தலைவனாகவும்  நியமித்தல்  வேண்டும் . அந்தணனைக்  கிராமத்  தலைவனாகவும் , காரியத்தனாகவும் , எழுத்தாளனாகவும்  நியமித்தல்  வேண்டும் .                                                                                     428

( காரியத்தன் – கணக்கு  வேலை  பார்ப்போன் . ”காரியத்தனை  எழுத்தாளனாகவும் “  எனவும்  பொருள்  கொள்ளலாம் . அங்ஙனம்  கொள்ளுங்கால் ‘காரியத்தன்’  என்பது  ஒரு  சாதியைக்குறிப்பதாகும் . அச்சாதி  இக்காலத்தில்  வடநாட்டிலுள்ளது . )

     வைசியனைப்  பண்டமாற்று  முதலியவற்றின்  சுங்கங்  கொள்பவனாகவும் , சூத்திரனை  வாயில்  காப்போனாகவும்  நியமிக்கலாம். அரசர்  குலத்தவனைப்  படைத்  தலைவனாக  நியமித்தல்  வேண்டும் . அவன்  இல்லையாயின்  அந்தணனை  அப்பதவியில்  நியமிக்கலாம் .                                                                       429

     வைசியனையும் , சூத்திரனையும் , அச்சமுடையானையும்  படைத்தலைவராக்கலாகாது . எல்லாச்  சாதிகளிலும்  வீரமிக்கவனே  படைத்  தலைவனாக  நியமிக்கத்  தக்கவனாவான் .                              430

     சங்கர  சாதிகளோடு   கூடிய  நால்வகைச்  சாதி  மக்களுக்கும் , படைத்தலைமை  ஏற்றலாகிய  இக்கடமை  தூய்மையுடையதன்று . அரசன்  எக்குலத்தவனோ  அக்குலம்  நலம்  எய்துவதாகும் .                431

( படைத்தலைமை  ஏற்றர்  வீரர்க்குரியதாயினும்  , அதனாற்  கொலைத்தொழிலாகிய  பெரும் பாவம்  நேர்தலால்  அது  தூய்மையுடையதாகாதென்பது  கருத்து . )

    எவ்வரசன்பால்  செய்ந்நன்றி  மறத்தல் , நற்பணி  கண்டு  மகிழாமை  பிற  நிகழ்ச்சிகளுக்கிடையில்  நினைவுகூராமை , ஐயுறல் , பயனின்றிப்  பேசுதல் , கலக்கமுற்றுப்  பிறரைத்  துன்புறுத்தலாகிய  இவை  யுள்ளனவோ  அவ்வரசனை  வினைசெய்வார்  விட்டொழிதல்  வேண்டும் .                                                                                                            432

     இளவரசன்  முதலியோரின்  இலக்கணங்களுங்  காரியங்களும்  சுருக்கமாக இங்குக்  கூறப்பட்டன .                                                                433

சுக்கிரநீதியில்

“இளவரசன்  முதலியோரின்  இலக்கணம் “ என்னும்  இரண்டாம்

அத்தியாயம்  முற்றிற்று

  •    *       *       *       *

மூன்றாம்  அத்தியாயம்

(அரசனுக்கும்  குடிகளுக்கும்  உரிய  பொதுநீதிகள் )

1 . எல்லோர்க்கும்  உரிய  நல்லொழுக்கங்கள்

     இனி  அரசன்  குடிகள்  முதலிய  எல்லோர்க்கும்  பொதுவான  நீதிகள்  கூறப்படும் . எல்லா  உயிர்த்  தொகுதிகளின்  காரிய  முயற்சிகளனைத்தும்  இன்பத்தின்  பொருட்டே  உள்ளனவாம்                1

     அறமின்றி  இன்பம்  உண்டாகாது . ஆதலின் , மனிதன்  அறத்திற்  பற்றுடையனாக  விருத்தல்  வேண்டும் . அறம்  பொருள்  இன்பங்கள்  இல்லாத  காரியத்தைத்  தொடங்கலாகாது . அவற்றோடு  முரணாது  நடுநிலையுடையனாய்  எல்லாக்  காரியங்களிலும்  அடிதோறும்  பின்றொடர்ந்து  செல்லல்  வேண்டும் .                                                              2

( அடிதோறும்  தொடர்தல் – முரணின்மையையும்  நடுவு  நிலைமையையும்  இடையறாது  மேற்கொள்ளல்.)

     ஒவ்வொருவனும்  குறைந்த  அளவினையுடைய  மயிர் , நக , மீசைகளையும் , கழுவுதலாற்  றூயனவாகிய  காலடிகளையும் , அழுக்குக்களை  வெளிப்படுத்தும்  இருவகைப்  பொறிவாயில்களையும் , நீராடும்  நியமத்தையும்  நறுமணக்  கலவை  பூசுதலையும் , நல்லாடை  யுடுத்தலையும் , இறுமாப்பின்றி  விளங்கும்   தோற்றத்தினையும்  உடையனாய் , மணி , மந்திரசித்தி , உயர்ந்த  மருந்து  ஆகிய  இவற்றை  எப்பொழுதும்  வைத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                           3

( “குறைந்த  அளவினையுடைய”  என்னும்  விசேடணத்தை  நகம்  மீசைகளுக்கும்,  “கழுவுதலாற்  றூயனவாகிய”  என்னும்  விசேடணத்தை  இருவகைப்  பொறிவாயில்களுக்கும்  கொள்க . இருவகைப்  பொறிவாயில்கள்  –  ஞானேந்திரிய  கன்மேந்திரிய  துவாரங்கள் . மயிர்  நகம்  மீசைகளை  மிகுதியாக  வளரவிடாமல்  அடிக்கடி  களைய  வேண்டுமெனவும் , கால்களையும்  பொறிவாயில்களையும்  அடிக்கடி  நீராற்  கழுவவேண்டுமெனவும்  கூறியவாறு)

     வெளிச்செல்லுங்கால்  குடை  செருப்புக்களையுடையனாய்  ஒரு  நுகத்தடியளவு  நீளம்  நிலத்தில் கண்  செலுத்தி  நடத்தல் வேண்டும் . இரவிலும்,  தீயகாரியம்  நேர்ந்தவிடத்தும் , தடியையும்  தலைச்சாத்தினையுமுடையனாய்த்  துணையாட்களுடன்  போதல்  வேண்டும் .                                                                                                                 4

( மிகுதூரப்  பார்வையாற்  கால்  தடுமாறும் . ஆதலின் , நுகத்தடியளவிற்  கண்  செலுத்திச்  செல்லல்  வேண்டுமென்றனர் . தீய காரியம் – உயிர்  பொருள்  முதலியவற்றிற்கு  அழிவு  பயக்கும்  வினை  . தலைச்சாத்து – தலைப்பாகு .)

     ஒரு  காரியத்தில்  விரைந்து நிற்குங்கால் , பிறிதொரு  காரியத்திற்  புகுதலாகாது . விரைந்து  வரும்  பொருள்களை  வலிமையாற்  றடுத்தலாகாது . பகைவரைப்  பொருந்தாது  தூர  விலகி  நல்ல  நண்பர்களை  யடுத்து  அவர்பால்  அன்பு   மேற்கொண்டொழுகல்  வேண்டும் .                                                                                                             5

( மூலத்திலுள்ள   “வேகிதன்”  என்பதற்கு  விரிவுடையான்  என்பது  பொருள் . ஆதலின்  மல  மூத்திரங்களை  விரைந்து  வெளிப்படுத்தும்  நிலையிலுள்ளவன் . அவற்றை  யடக்கிக்கொண்டு  பிற  காரியத்திற்  புகுதலாகாதென்று  பொருள்  கொள்ளுதலும்  பொருந்தும் . விரைந்து  வரும்  பொருள் – ஒருவன்  எதிரில்  வரும்  விலங்கு  முதலிய  இயங்கியற்  பொருளும் , பிறரால்  எறியப்பட்டு  வரும்  கல்  முதலிய  நிலையியற்  பொருளுமாம் . அவை  வேகமாக  வருங்கால் அவற்றிற்கெதிரே  செல்லலாகாதென்பது  கருத்து. )

     உயிர்க்கொலை , களவு , நெறிதவறிய  காமம் , குறளை , கடுஞ்சொல், பொய் , அறம்  பொருள்  இன்பங்களின்  வேறுபட்டுப்  பிறர்  மனத்தைக்  கலக்கும்  பயனில்சொல் , அடக்கமின்மை , நாத்திகம் , மாறுபட்டுணர்தல்  ஆகிய  மனமொழி  மெய்களால் நிகழும்  இப்பத்துத்  தீவினைகளையும்  ஒழித்தல்  வேண்டும் .            6

( இப்  பத்துத்  தீவினைகளுள்  கொலை , களவு , காயம் , இம்மூன்றும்  உடலால் நிகழ்வனவாம் ; குறளை , கடுஞ்சொல், பொய் , பயனில் சொல், இந் நான்கும்  மொழியால்  நிகழ்வனவாம் ; மற்றைய   மூன்றும்  மனத்தால்  நிகழ்வனவாம் . அடக்கமின்மையால்  விருப்பமும் , தான்  விரும்பின  பொறாமையால்  வெகுளியும்  உண்டாம் . வெகுளி  நிகழுங்கால் , கடவுளும்  அறமும்  மறுமையின்பம்   முதலியனவும்  இல்லையென்னும்  நாத்திகக் கொள்கை  தோன்றுமாதலின்  “நாத்திகம்”  என்பது  வெகுளியைப்  புலப்படுத்துவதாகும் . மாறுபட்டுணர்தல் – மயக்கம் . இங்ஙனம்  மன மொழி  மெய்களால்  நிகழும்  தீவினைகளை  மணிமேகலை  நூலாசிரியர் “தீவினையென்ப  தியாதென  வினவின் ,  ஆய்தொடி  நல்லாய்  ஆங்கது  கேளாய் , கொலையே  களவே  காமத்  தீவிழை , வுலையா  வுடம்பிற்  றோன்றுவ  மூன்றும் , பொய்யே  குறளை  கடுஞ்சொற்  பயனில்  சொல்லெனச்  சொல்லிற்  றோன்றுவ  நான்கும் , வெஃகல்  வெகுளல்  பொல்லாக்  காட்சி யென்றுள்ளந்தன்னிலுருப்பன  மூன்றுமெனப்  பத்துவகையால்”  என்றிங்ஙனங்  கூறி  விளக்கியுள்ளார் . [ மணிமே 30-ஆம்  காதை,   64-72]

     மனிதன்  ஓரறச்  செயலைச்  செய்யத்  தன்  ஆற்றலால்  முயன்றும்  அது  நிறைவேறப்  பெற்றிலனாயினும் , அவன்  அவ்வறப்  பயனாகிய  புண்ணியத்தை  உறுதியாக  அடைவான்.  இதன்கட்  சிறிதும்  ஐயமின்று .                                                                                                                7

(இச்  சுலோகத்தின்  நுண்பொருள்  “அறஞ்செய  விரும்பு”  என்னும்  ஒளவை  முதுமொழியிற்  புலப்படுத்தல்  காண்க . ஈண்டுச்  “செய்”  என்னாது  “செயவிரும்பு”  என்றது  உய்த்துணரர்பாலதாகும் . )

     ஒருவன்  தீவினையை  நெஞ்சத்தால்  நினைத்தாலும் , செயலிற்  காட்ட  விரும்புதலுமாகா.  அங்ஙனம்  நினைப்பினும்  விரும்பினும்  அதன்  பயனை  அவன்  எய்துவான்  என்று  அறநூலுணர்ந்தோர்  கூறுவர் .                                                                                                                   8

( தீவினையை  ஒருவன்  செய்தலேயன்றி , நினைப்பினும்  செய்ய விரும்பினும்  அதன்  பயனை  அவன்  அநுபவிப்பான்  என்பது  கருத்து .)

     வாழ்க்கைக்குரிய  தொழில்  அற்றார்க்கும் , நோய்  கோட்பட்டார்க்கும் , துன்பமுடையார்க்கும்  தன்  ஆற்றற்கியைந்தவாறு  துணை  நின்று  உபகரித்தல்  வேண்டும் . எப்பொழுதும்  புழு , எறும்பு  முதலிய  சிற்றுயிர்களையும்  தன்னைப் போற்  பார்த்தல்  வேண்டும் .                                                                               9

     தனக்குத்  தீங்கிழைக்கும்  பகைவனுக்கும்  உதவி  செய்யுங்  குணத்தையும் , தனக்கு  வரும்  வாழ்விலுந்  தாழ்விலும்  ஒரு  நிலைப்பட்ட  மனத்தினையும்  உடையனாக  விருத்தல்  வேண்டும். மற்றொருவனுக்கு  நேரும்  பயன்  கண்டு  அழுக்காறு  கொள்ளலாகாது; அப்பயன்  விளைதற்கு  முன்னாகவுள்ள  ஏதுவிற்  பொறாமை  கொள்ளல்  வேண்டும் .                                                                                        10

     ஒருவன்  மற்றொருவன்  மாட்டு  இறுமாப்பின்றி   முற்படப்  பேசுதல் , முகமலர்ச்சி , நல்லொழுக்கம் , அருட்குணம்  ஆகிய  இவற்றையுடை யனாய் , உரிய  காலத்தில்  நலம்  பயப்பனவும்  அளவுட்பட்டனவும் , இயைபுடையனவும் , இனிமையாயினவுமாகிய  சொற்களைக்  கூறுதல்  வேண்டும் .                                                                                           11

( முற்படப்பேசுதல் – பிறரோடு  உரையாட  நேருங்கால்  தன்  பெருமை  குறித்து  அவர்  பேசுங்காறுந்  தாழ்க்காது  முன்  மொழிதல் .)

     ஒருவனுக்குத்  தன்னளவில்  இன்பம்  நுகர்தலும் ,எல்லோரிடத்திலும்  நம்பிக்கையை  மேற்கொள்ளுதலும்,  எல்லோரையும்  ஐயமுறுதலுங்  கூடாவாம் .                                                                                                            12

     இன்னான்  எனக்குப்  பகைவனாவான்  என்றாவது , இன்னானுக்கு  யான்  பகைவனாவேன்  என்றாவது  வெளிப்படுத்தலாகாது . தன் றலைவனால்  தனக்கு  நேர்ந்த  அவமானத்தையும் , அவன்  தன்பால்  அன்பில்லாதிருத்தலையும்  வெளிப்படுத்தலாகாது .                                 13

     பிறரை  இன்புறுத்தும்  அறிஞன், பிறர்  எண்ணங்களை யுணர்ந்து  யார்  எவ்வாற்றான்  மகிழ்ச்சி  யடைவரோ  அவரை  அவ்வாற்றானே  பின்பற்றி  மகிழ்வித்தல்  வேண்டும் .                                                         14

     கண்  முதலிய  பொறிகளை  அவ்வப்  புலனுகர்ச்சியிற்  செல்ல  வொட்டாது  அறவே  தடுத்தலுங்  கூடாது , கலக்கஞ்  செய்யும்  இயல்பினவாகிய  அப் பொறிகள்  மனத்தை  வலிந்து  தன்வயப்  படுத்துமாதலின் , அவற்றை  அந்நுகர்ச்சியில்  மிகவும்  ஈடுபடும்படி  செய்தலுமாகாது .                                                                                              15

( பொறிகளைப்  புலன்களிற்  செல்லவொட்டாமல்  அறவே  தடுத்தலும் , மிகுதியாகச்  செல்லவிடுதலும்  ஆகாவென்பது  கருத்து .)

     மான் , யானை , விட்டில் , வண்டு , மீன் ,ஆகிய  இவ்வைந்தும்  முறையே  ஓசை , ஊறு , ஒளி , நாற்றம் , சுவை  ஆகிய  இப் புலங்களாற்  கேடெய்துவனவாம் .                                                                                           16

( மான்  முதலிய  இவ்வைந்தும்  புலன்களாற்  கேடெய்துதலை  முதல்  அத்தியாயம்  102 – முதல் 107  வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க .)

     இவ் வைம்புலன்களுள்ளும் , அழகிற்  சிறந்த  மகளிற்பால்  நுகரும்  ஊற்றின்பம்   முனிவரது  மனத்தையும்  ஈர்ப்பதாகும் . ஆதலின்  களித்து  மயங்குதலின்றித்  தக்க  அளவு  புலன்களை  நுகர்தல்  வேண்டும் .                                                                                                              17

     தாயுடனாதல் , தங்கை  தமக்கை  மாரோடாதல் , மகளோடாதல் , ஒருவருமில்லாத  இடத்தில்  தனித்துறைதலாகாது . தனக்குரிய  மனைவியையும்  பிறர் மனைவியையும் அழைக்குங்கால் , இயைபின்வண்ணம்  முறையே  “சுபேக”  எனவும் , “பகினி”  எனவுஞ்  சொல்லியும்  ஆறுதலளித்தும்  அழைத்தல்  வேண்டும் .                          18                                                                                  

( தன்  மனைவியை  அழைக்குங்கால்  “சுபேக”  யெனக்  கூறி  யழைத்தல்  வேண்டும் . பிறர்  மனைவியை  அழைக்குங்கால்  “பகினி”  என  ஆறுதலளித்து  அழைத்தல்  வேண்டும் . பகினி – உடன்பிறந்தாள் . சுபகா – பாக்கியவதி .)

     பெண்கள்  பிற   ஆடவரோடு  உடனுறைதலையும் , அவரோடு  உரையாடுதலையும்  வெளிப்படையாகவுஞ்  செய்தலாகாது . அங்ஙனமே  ஒரு  கணப்  பொழுதேனும்  சுதந்திரத்தன்மை  மேற்கொள்ளுதலும் , பிறரில்லத்  திருத்தலுமாகாவாம் .                          19

 ( வெளிப்படையாகவும்  என்றதனால்  தனிமையில்  அறவே  கூடாதென்பது  எளிதிற்  புலப்படும் .)

     பெண்பாலர்க்கு  அவர்தம்  கணவர் , தந்தையர் , அரசன் , புதல்வர் , மாமன்மார் , உறவினர் , ஆகிய  இவர்கள்  வீட்டுக்காரியங்கள்  செய்யாமலிருக்குமாறு  ஒரு  கணப்  பொழுதேனும்  அவகாசங்  கொடுத்தலாகாது .                                                                                            20

     மகளிர்  தம்  கணவர்  கொடிய  தன்மையுடையராகவும் , அலிகளாகவும் , தண்டஞ்  செய்வோர்களாகவும் , பற்றில்லாதவராகவும்  நீண்ட  காலம்  பிரிந்து  வேறிடத்து  வாழ்பவராகவும் , மிக்க  வறுமையாளராகவும் , நோயாளராகவும் , எப்பொழுதும்  பிற  மகளிரிடத்துப்  பற்றுடையராகவும்  இருக்கக்  காண்பாராயின் , அவர்பாற்  பற்றற்றிறுப்பர்; அன்றி , அக்கணவரை  யொழித்துப்  பிற  ஆடவரை  விரும்பி  யடைபவராவர் . ஆதலின் , மனிதர்கள்  இங்குக்  கூறிய  கொடுந்தன்மை  முதலிய  தீய  குணங்களை  முயன்று  ஒழித்துப்  பெண்   மக்களைக்  காத்தல்  வேண்டும் .                            21-22

     ஆடவர் , தம்  பெண்டிரையும் , மக்களையும்  உண்டி  உடுக்கை  அணிகலன்களாலும் , அன்பினாலும் , இன்சொற்களாலும் மகிழ்வித்து மிகவும்  தம்பக்கலில்  வைத்துத்  தம்  மாலியன்றவரை  காத்தல்  வேண்டும் .                                                                                                              23

     தெருவிலுள்ள  கடவுட்டன்மை  வாய்ந்த  மரங்கள் , கொடி , மரம் , இழிபிறப்புயிர்த்  தொகுதி  ஆகிய  இவற்றின்  நிழலையும் , தாய்  தந்தை  ஆசிரியன்  முதலிய  பெரியோர்களின்  நிழலையும்  சாம்பல் , உமி , தூயனவல்லாப் பொருள்கள் , கற்றுண்டு , ஓடு  வழிபாட்டிற்குரிய  பொருள்கள் , நீராடுமிடம்  ஆகிய  இவற்றையும்  மிதித்துச்  செல்லலாகாது .                                                                                                    24

( கடவுட்டன்மை  வாய்ந்த  மரங்கள் – சுற்றிலும்  திண்ணை  கட்டப்பட்டு  வழிபடுதற் பொருட்டுப்  பிரதிட்டை  செய்து  அமைக்கப்பெற்ற  அரசு  முதலியனவாம் . தூயனவல்லாப் பொருள்கள் —  எலும்பு , மலம் , எச்சில்  முதலியன . )

     கைகளால்  ஆறு  முதலியவற்றில்  நீந்திச்  செல்லலாகாது . மறைந் திருக்கும்  நெருப்பிற்கு  நேராகச்  செல்லலாகாது . கடக்கும்  ஆற்றிலில்  ஐயமுறுதற்குரிய  தோணியிலும் , தாங்கும்  வன்மையில்  ஐயமுறுதற்குரிய  மரத்திலும் , அடங்காக்குணம்  வாய்ந்த  குதிரை  முதலிய  ஊர்திகளிலும்  ஏரலாகாது ,                                                            25

     மூக்கை  மிகுதியாக  வருடுதலும் , நிலத்தைக்  காரணமின்றிக்  கீறுதலும் , இரண்டு  கைகளையுஞ்  சேர்த்துக்  கொண்டு  தலையைச்  சொறிதலுங்  கூடாவாம் .                                                                                   26

     உறுப்புக்களை  மாறுபட  இயக்கலாகாது . ஒன்றைப்பெற  வேண்டுமென்னும்  அவாவை  நெடிது  மேற்கொண்டிருத்தலாகாது . மன மொழி மெய்கட்குத்  துன்பம்  நேருமுன்னரே  அவற்றின்  செயல்களை  யொடுக்கிவிடல்  வேண்டும் .                                                 27

( மனமொழி மெய்களின்  செயல்கள்  அளவின்  மேற்படுமாயின்  அவற்றிற்குத்  துன்பமுண்டாமாதலின் , அச்  செயல்களை  அளவோடு  செய்ய  வேண்டுமென்பது கருத்து .)

     முழந்தாளை  நெடுநேரம்  உயர்த்து  வைத்தலாகாது . இரவில்  மரங்களினடியிலும் , இல்லத்து  முற்றங்களிலும் , சிறு  தெய்வ நிலையங்களிலும் , நாற்றெருக்  கூடுமிடங்களிலும் , திருக்கோயில்களிலும்  இருத்தலாகாது .                                                       28

( இரவில்  என்பதைப்  பின்னுள்ளவற்றிற்குங்  கூட்டிக்கொள்க .)

     பாழுங்  காட்டினையும் , பாழும்  இல்லத்தினையும் , சுடலையையும்  பகலிலும்  அடைதலாகாது . கதிரவனை  உற்றுப்  பார்த்தலும்  சுமையைத்  தலையாற்  சுமத்தலுங்  கூடாவாம் .                                        29

( பகலினும்  என்றமையால்  இரவில்  அடைதலாகாதென்பது  எளிதிற்  புலப்படும்  மிகு   சுமையைத்  தலையாற்  சுமப்பின்  கழுத்து  நரம்பு  முதலிய  உறுப்புக்கள்  பிறழ்ந்து  துன்புறுத்துமென்பது  கருத்து . )

     நுண்ணிய  பொருளையும் , மிக்க  ஒளியுடைப்  பொருளையும் , தூயனவல்லாப்  பொருள்களையும் , வெறுப்புண்டாக்கும்  பொருளையும்  எப்பொழுதுங்  காண்டலாகாது .                                         30

     சந்தியா  காலங்களில்  உணவு  கொள்ளல் , பெண்புணர்ச்சி, உறங்குதல் , படித்தல் , ஆராய்தல் , கட்குடித்தல் , கள்விற்றல் ,  கள்ளிறக்கல் , கொடுத்தல் , வாங்குதல்  ஆகிய  இவற்றைச்  செய்தலாகாது .                                                                                                       31

( முதனூலிலுள்ள  ‘சம்நாதம்’  என்பது  “கள்ளிறக்கல்”  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . “வில்லில்  அம்பு  பூட்டி  எய்தல் “  என்றும்  பொருள்  கொள்ளலாம் .)

     அறிவுடையார்க்கு  எல்லாச்  செயல்களிலும்  உலகமே  ஆசிரியனாகும் .  ஆதலின்  பகுத்துணரும்  அறிஞன், உலகியல்  உணர்தற்  பொருட்டு  அவ்வுலகத்தையே  பின்பற்றல்  வேண்டும் .   32

( உலகம்  என்பது  ஈண்டு  உயர்ந்தார்  மேலதாம் . இச்  சுலோகத்தின்  கருத்து, திருக்குறள், “ஒப்புரவறிதல்”  என்னும்  அதிகாரத்தின்  பொருளை  நினைவுறுத்துவதாகும் . )

     இராச  தருமம் , தேயதருமம் , குலதருமம், ஞாதிதருமம் , ஆன்றோர் தருமம்   ஆகிய  இவற்றைப்  பழித்தலாகாது . தான்  ஆற்றலுடையனாயினும்  உலகியலாசாரத்தைக்  கடக்க  மனத்தாலும் எண்ணலாகாது .                                                                                                    33

( இங்குக்  கூறப்பட்ட  தருமங்களில்  விதிவிலக்கிறந்தன  சிலவுள வெனினும் , அவை   தேயம்  குலம்  முதலியவற்றின்  வேறுபாடு  பற்றிப்  போற்றற்பாலவாம்  என்பது  கருத்து .)

      ஒருவன்  தான்  செய்த  தகுதியில்லாத  செயலையும் , கூறிய   தகுதியில்லாத  சொல்லையும்  முறையே  தன்  ஆற்றலாலும் , ஏதுவினாலும்  நிலைப்படுத்த  முயலலாகாது .                                             34

     ஒருவன்  எதிரில்  அவன்  தீய  குணங்களை  எடுத்துரைப்பார்  மிகச்  சிலரே  யாவர் . ஆதலின் , அறிவுடையான் , உலகியலாலும்  நூலுணர்ச்சியாலும்  மெய்ம்மை  பொய்ம்மைகளை  யறிந்து, விலக்கற்பாலனவற்றை விலக்கல்  வேண்டும் . நீதியல்லாத தொன்றை  நீதியையொப்ப  நெஞ்சத்தாலும்  எண்ணலாகாது .                                    35

     “இம்மனிதன்  ஆயிரங்  குற்றங்களை யுடையனாக  இருக்கின்றான் . யான்  செய்யும்  ஒரு  குற்றத்தால்  வரக்கடவதென் ?”   என்று  கருதி  ஒருவன்  சிறிதும்  பாவ  கன்மத்தைச்   செய்ய  எண்ணலாகாது ; என்ன? நீர்த்திவலைகள்  பல  வீழின்  குடமும்  நிறையுமாகலான் .                      36

     ஒருவன்  “இப்பொழுது  யான் எத்தகைய நிலைமையிலிருந்து பகல்  இரவுகளைப்  போக்குகின்றேன் “  என்றிவ்வாறு  நாடோறும் இடை விடாது  எண்ணுவானாயின்  அவன்  துன்பம்  எய்துவானல்லன்.          37

( ஒருவன் , தன்  வாழ்நாள்  எவ்வாறு  கழிகின்றது  என்று  நாடோறும்  தான்  செய்த  நன்று  தீதுகளை  யாராய்வானாயின் , அப்பொழுது  அவனுக்குத்  தீயனவொழித்து  நல்லன  புரிதற்கு  விருப்பம்  நிகழுமாதலின்  இவ்வாறு  கூறப்பட்டது . )

     அறிவுமிக்க  மனிதன் , வேதம்  அறநூல்  புராணங்களிலுள்ள  துதி  அருத்தவாதங்களையும் , அன்மொழித்தொகை  முதலிய  சொல்லியைபுகளாலும்  விசேட  ஊகங்களாலும்  ஏது  முதலியவைகளாலும்  தான்  விரும்பிய  கொள்கையை  நிலைப்படுத்துதலையும்  ஒழித்து , முயன்று  சாரமான  பாகத்தைக்  கண்டு , ஆன்றோர் மேற்கொண்டொழுகும்  அறவினைகளைச்  செய்தல்  வேண்டும் ; என்னை? அறத்தினுண்மை  யறிதற்கரியதாகலின் .                                                                         38-39

( துதி – மந்திரம் . அருத்தவாதம் – புனைந்துரை .)

அரசன் , தன்  நண்பர்  புதல்வர்  குரவர்  என்னுமிவர்கள்  மறநெறி  யொழுகுவாராயின்  அவர்களையும் , கள்வனையும் , ஆததாயிகளையும் , தன்னாட்டில்  வைத்துக்கொள்ளலும்  அவரைக்  காத்தலுஞ்  செய்தலாகாது .                                                                             40

     இல்ல  முதலியவற்றில்  நெருப்பிடுவாரும் , நஞ்சிடுவாரும் , ஆயுத  முதலியவற்றாற்  கொலை  புரிவாரும் , பிறர்  பொருளை  அறவே  கவர்வாரும் , பிறர்  நிலத்தை   யபகரிப்பாரும் , பிறர்மனைநயப்பாரும்  ஆகிய  இவ்வறுவரும்  ஆததாயிகள்  ஆவர் .                                              41

( இவரைப்  பற்றிப்  பரிமேலழகர்  பின்வருமாறு  கூறுவர் : “கொடியவர்   என்றது- தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார், சுருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார்  என்றிவர்  முதலாயினாரை . இவரை  வடநூலார்  ஆததாயிகளென்ப “ [குறள், 550-உரை] )

     அறிவுமிக்க  மனிதன்  தன்  மனைவி , குழந்தை , வேலையாள்  ஆகிய  இவர்களையும் , நோய் , பசு , பொருள் , கல்விப்பயிற்சி, பெரியார்  வணக்கம்  ஆகிய  இவற்றையும்  ஒரு  கணப்  பொழுதேனும்  பொருட்படுத்தாமலிருத்தலாகாது .                                                                 42

     எந் நாட்டில்  ஒருவனுக்கு  அரசனும் , பெரும்  பொருளாளரும் , அந்தணரும் , மருத்துவரும்  ஆகிய  இவர்கள்  பகைமை யுடையராயிருக்கின்றனரோ , எந் நாட்டின்  இயல்பும்  ஒழுக்க  வழக்கங்களும்  அவனுக்கு  மாறுபட்டிருக்கின்றனவோ , அந் நாட்டில்  அவன்  ஒரு  நாளேனும்  இருத்தலாகாது .                                                      43

     எந் நாட்டில்  அலிகளும் , பெண்களும் , சிறுவரும் , சினமிக்காரும் , அறிவில்லாரும் , பகுப்புணர்ச்சியில்லாரும்  ஆகிய  இவர்கள்  அதிகாரிகளாக  இருக்கின்றனரோ , அந் நாட்டில்  ஒரு  நாளேனும்  வாழ்தலாகாது .                                                                                                      44

     எந் நாட்டில்  அரசன்  விவேகமற்றவனாகவும் , அரசவைக்கண்ணுள்ளார்  ஒருதலைச்  சார்புள்ளவராகவும் , புலவர்கள்  நல்லொழுக்கமில்லாதவராகவும் , சான்று  கூறுவார்  பொய்யராகவும்  உள்ளாரோ ; தீயோர்க்கும் , பெண்களுக்கும் , இழிந்தோர்க்கும்  செல்வாக்குண்டோ ; அந் நாட்டில்  ஒருவன் , பொருள் , மானம் , இருப்பு , வாழ்க்கை  ஆகிய  இவற்றுள்  ஒன்றனையும்  விரும்பலாகாது .        45-46

     தாய்  சிறு  பருவத்திற்  காத்திலளாயினும் , தந்தை  நன்றாகக்  கல்விப் பயிற்சி  செய்வித்திலனாயினும் , அரசன்  பொருளைக்  கவர்ந்து  கொள்ளுவானாயினும் , இந்  நிகழ்ச்சிகளில்  வருந்துவதாற்  பயனென் ?                                                                                                               47

     ஒருவன் , தன்  நண்பர்  உறவினர்  அரசன்   ஆகிய  இவர்களிடத்துச்  செவ்வையாக  ஒழுகவும்  அவர்  சினங்கொள்ளுவராயினும் , தன்  இல்லம்  தீயினாலும்  இடியினாலும்  அழியுமாயினும் , இந் நிகழ்ச்சிகளில்  வருந்துவதாற்  பயனென்?                                                   48

     பெரியோர்களுடைய  சொற்களைப்  பொருட்படுத்தாமற்  செருக்கினாற்  செய்யப்படுங்  காரியம் , தனக்குக்  கேடுபயக்கும் பயனை  விளைவிக்குமாயின் , அது  குறித்து  வருந்துவதிற் பயனென்?

     அரசனையும் , கடவுளரையும் , குரவர்களையும் , அக்கினியையும் , தவஞ்செய்வாரையும் , அறத்தின்  முதிர்ந்தாரையும் , அறிவின்  முதிர்ந்தாரையும்  வியப்புமிக்க  மனமுடையனாய்  நன்கு  வழிபடல்  வேண்டும் .                                                                                                               50

     தாய் , தந்தை , குரு , தலைவன் , உடன்பிறந்தார் , புதல்வர் , நண்பர்  ஆகிய  இவர்களிடத்து  ஒரு  பொழுதுஞ்  சிறிதும்  நெஞ்சத்தாலும்  மாறுபடலாகாது . அவர்க்குத்  தீங்கிழைத்தலுமாகாது .                             51

     தன்  சுற்றத்தாரோடு  பகைகொள்ளலாகாது . வலியவனுக்கு  மானக்கேடு  செய்ய  விரும்பலாகாது . பெண்கள் , சிறுவர் , கிழவர் , அறிவிலார்  ஆகிய  இவர்களோடு  கலகஞ்  செய்தலாகாது .                    52

     சுவை  மிக்க  பொருளைத்  தனியனாக  இருந்து  உண்ணுதலும் , செயற்பாலனவற்றைத்  தனிமையாக  இருந்து  ஆராய்தலும்  தனியனாக  வழி  நடத்தலும் , பலர்  உறங்குங்கால்  அவர்களுக்கிடையில்  தனியனாக  விழித்திருத்தலுமாகாவாம் .          53

     பிறர்  கடமையைத்  தான்  மேற்கொள்ளலாகாது . ஒரு  பொழுதும்  பிறர்க்குத்  தீங்கு  செய்தலாகாது . எவ்விடத்தும்  இழிந்த  குணஞ்  செயல்களையுடைய  தீயவர்களோடும்  பெண்களோடும்  ஒரே  இருக்கையில்  உடனிருத்தலாகாது .                                                                54

     இந்  நிலவுலகத்திற்  செல்வத்தை  விரும்பும்  மனிதன் , துயில் , மனத்தளர்ச்சி , அச்சம் , சினம் , மடிமை , காலந்தாழ்த்தல்  ஆகிய  இவ்வறுவகைக்  குற்றங்களையும்  ஒழித்தல்  வேண்டும் . இன்றேல்  இக்குற்றங்கள்  காரியங்களுக்கு  இடையூறு  விளைவிப்பனவாம் . இதன்கண்  ஐயமின்று .                                                                                        55

     உபாயஞானம் , காரியத்தைக்  கூட்டி  முடிக்குந்  திறமை , உண்மையுணர்ச்சி , புதிது  புதிதாகப்  பொருள்களை  யாராய்ந்து  காணும்  அறிவு , எப்பொழுதும்  தன்  கடமையிற்  பற்று , பிறர்மனை  நயவாமை , சொல்வன்மை , நுண்ணுணர்வு , இன்சொல் , தட்டின்றி  நிரல்படப்  பேசல்  ஆகிய  இவற்றை  என்றும்  உடையனாக  இருத்தல்  வேண்டும் .                                                                                                            56

( புதிதுபுதிதாகப்  பொருளை  ஆராய்ந்து  காணும்  அறிவை  “பிரதிபை”  என்ப .)

     எப்பொழுதும்  ஒரு  பொருளை  விரைவின்றி  விளக்கமாகக்  கேட்டல்  வேண்டும் . கேட்டதனை  விரைந்து  தெளிதல்  வேண்டும் . அங்ஙனந்  தெளிந்தபின்  அதனைச்  செய்கையின்  மேற்கொள்ளல்   வேண்டும் . ஒருபொழுதும்  தான்  விரும்பியவாறு  ஒழுகலாகாது ,                              57

     விலைக்கு   வாங்கல்  விற்றல்களிற்  பேரவாவினையும் , தன்  எளிமையையும்  வெளிப்படுத்தலாகாது . பிறர்  இல்லத்தில்  அவர்  அறியப்படாத  நிலையிலும் , காரியமின்றியும்  புகுதலாகாது .             58

( வாங்குதலிற்  பேரவா – ஒரு  பண்டத்தை  விலைக்குக்  கொள்ளுங்கால்  அதனை  அவ்விலையளவின்  மிகுதியாகக்  கொள்ள  விரும்புதல் . விற்றலிற்  பேரவா – அங்ஙனங்  கொண்ட  பண்டத்தை  விற்குங்கால்  அதனை  விலையளவிற்  குறையக்  கொடுக்க  விரும்புதல் .)

     ஒருவன்  வினவாதிருக்க  அவன்பால்  தன்  வீட்டுக்  காரியங்களைப்  பற்றிச்  சொல்லலாகாது . காரிய  நிறை வேற்றத்திற்றுணையாவனவும் சிலவகை  யெழுத்திற்  பல்வகைப்  பொருளைச்   செறித்துக்  காட்டுவனவுமாகிய  சொற்களால்  உரையாடல்  வேண்டும் .                 59

     தனக்கு  அனுபவமில்லாத  பொருளைப்  பற்றித்  தன்  கருத்து இன்னதென்று  வெளியிடலாகாது . பிறர் கருத்தை  நன்றாக வுணர்ந்து  அவர் எளிதில் விளங்கிக்  கொள்ளுமாறு விடை கூறுதல் வேண்டும்.    60

( அநுபவம் – அழுந்தியறிதல் . இச் சுலோகத்தின்  பிற்கூறு  “எண்பொருளவாகச்  செலச் சொல்லித்  தான்  பிறர்வாய் , நுண்பொருள்  காண்பதறிவு “  என்னுந்  திருக்குறட்பொருளை  நினைவுறுத்தல்  காண்க . )

     கணவன்  மனைவி , தந்தை  மகன்  இவர்  தம்முட்  கலகம்  நேர்ந்துழி  அதன்கட்  சான்று  கூறலாகாது . தன்  காரியச்  சூழ்ச்சிகளை  மறைத்துப்  பேணல்  வேண்டும் . தன்பால்  அடைக்கலம்  புகுந்தானை  விலக்கலாகாது .                                                                                                    61

     தன்  ஆற்றற்  கியைந்தவாறு  காரியங்களைச்  செய்ய  விரும்புதல்  வேண்டும் . அங்ஙனஞ்  செய்யுங்கால்  இடையூறு  கண்டு  கலங்கலாகாது . எவர்க்கும்  உயிர்நிலைக்கு  ஊறு  செய்தலும், பழமொழி  பகர்தலுங்  கூடாவாம் .                                             62

     பிறர்க்கு  எளிமை , நாண் , அருவருப்பு  முதலியவற்றை  யுண்டாக்குஞ்  சொற்களையும் , பொருளில்லாத  மொழியையும்  ஒரு  சிறிதுங்  கூறலாகாது .                                                                                         63

     அறத்தின்பாற்  பட்டதொரு  காரியம்  உலகத்தாராற்  பழிக்கப்படுமாயின் , அஃது  உம்பருலகின்பம்  தாராது . [ஆதலின்  அதனைச்  செய்யலாகாதென்பது  கருத்து .] ஒரு  பொழுதும்  எவன்   சொற்களையும்  தன்னுடைய  ஏதுக்களால்  அழித்தலாகாது .                64

( ஒரு  காலத்தில்  அக்  காலவியல்பு  நோக்கி  அறநூலில்  விதிக்கப்பட்டதொரு  காரியம்  பின்னொரு  காலத்தில்  உலகத்தாற்  பழிக்கப்படுமாயின் , அதனை  அறநூலில்  விதித்தது  பற்றி  மேற்கொள்ளாமல் , உலகம்  பழித்தது  பற்றி  விலக்கல்  வேண்டுமென்பது  கருத்து . தன்னுடைய  ஏதுக்களால்  அழித்தலாவது – பேசுவோன்  சொற்களையும்  பிறபெரியோர்  மொழி  நூன்முறைகளையும்  ஏதுக்களாக  எடுத்துக்காட்டாது  தன்  கருத்திற்  றோன்றியவற்றையே  ஏதுவாகக்  காட்டி  விலக்கல் .)

     நன்றாக  ஆராய்ந்து  விடைகூறல்   வேண்டும் . ஒரு பொழுதும்  விரைந்து  கூறலாகாது . பகைவனாயினும்  அவன் பாட்டுள்ள  குணங்களைக்  கொள்ளுதலும் , குருவாயினும்  அவன்பாலுள்ள  குற்றங்களைத்  தள்ளுதலும்   வேண்டும் .                                                     65

     உயர்வாகிய  இன்பநிலையும் , இழிவாகிய  துன்பநிலையும்  ஒருவன்பால்  நித்தியமாக  விருப்பனவல்ல . எஞ்ஞான்றும்  முற்பிறப்பிற்  செய்த  வினைவயத்தாற்  பொருளுடையனாதலும் , அஃதிலனாதலுங்  கூடும் . ஆதலின்  எல்லா  வுயிர்களிடத்தும்  அன்புரிமையை  விலக்கலாகாது .                                                            66-67

     எக்காலத்தும்  நெடிது  ஆராய்ந்து  செய்தலையும் , இடையறாத  அறிவு  விளக்கத்தையும்  உடையனாதல்   வேண்டும் . ஆராயாது  செய்தலையும் , சோம்பலையும் , காலந்தாழ்த்தலையும்  ஒரு  பொழுதும்  மேற்கொள்ளலாகாது .                                                                68

     செய்தற்கரிய  காரியத்தை  அறிந்து  விரைந்து  செய்யமுயல்பவன் , முதலில்  நெடிதாராய்ந்து  உணர்தல்  வேண்டும் . அங்ஙனம்  உணர்ந்து  செய்வான்  அக்காரியத்தால்  நலம்  எய்துவான் .                                      69

     இடயறாத  அறிவு  விளக்கமுடையான்,  நேர்ந்த  ஒரு காரியத்தை  நெடிதாராயாமல் விரைந்து  செய்ய  முயல்வானாயின், அக்காரியங் கைவரப்  பெறுதல் அதன் பெருமையாலும்  தன்  மனத் தளர்ச்சியாலும் [சித்தியாங்கொல் என்னும்] ஐயத்தின்பாற்படுவதாகும்.                        70

     எவன் , சோம்பலுடையனாய்  உரிய  காலத்திற்  செயற்பாலவற் றைச்  செய்ய  முயன்றிலனோ , அவனுக்கு  எச்செயலினுஞ்  சித்தியின்றாம் . குலத்தோடும்  அழிவெய்துவான் .                                 71

     எவன் , பயனை  யறியாமல்  வினையின்கண்  முயல்கின்றானோ , பகுப்புணர்வில்லாத  அவன் , அவ்  வினையினானாதல்  அதன்   பயனானாதல்  துன்பத்தை  யடைவான் .                                                    72

( அவ்வினையினாற்  றுன்பமுறுதல் – அதனைக்கொண்டு  முடித்தற்குரிய  பொருள்   ஆற்றல்  முதலியன  வின்மையாலும் , அதன்  பயனாற்  றுன்பமுறுதல்  விரும்பியதற்கு  மறுதலையாகிய  பயன்  விளைதலாலுமாம் . )

     காலந்தாழ்த்துச்செய்யும்  இயல்புடையவன் , மிகுதியான  கால  அளவிற்  சிறிய  கன்மத்தைச்  செய்து  முடிப்பான் .  அச்  சிறு  செயலால்  விளையும்  சுருங்கிய  பயனாற்  றுன்பமும்  எய்துவான் . ஆதலின்  அவற்றை  நெடிதாராய்ந்து  செய்யும்  பகுப்புணர்வுடையனா தல்  வேண்டும் .                                                                                                  73

( அவற்றையென்றது  காலம்  கன்மம்  பயன்களை )

     ஆராயாது  செய்யும்  வினை , ஒரோவமயம்  நற்பயனையும்  விளைவிக்கும் . நன்கு  ஆராய்ந்து  செய்யப்படும்  வினை  ஒரோவமயம்  பயனின்றியும்  ஒழியும் . அங்ஙனமாயினும் , ஆராயாது  செய்யும்  வினை  தன்  விருப்பத்திற்கு  மறுதலைப்  பயனை  விளைவிக்குமாதலின்  அதனைச்  செய்ய  எண்ணுதலாகாது . செய்யத்தகாத  செயலினின்றும்  ஒரோவமயம்  தான்  விரும்பிய  பயன்  விளையுமாயினும்  அதனைச்   செய்தலாகாது . நற்செயலினின்றும்  தான்  விரும்பியதல்லாத  பயன்  விளையுமாயினும் , அது , செய்யத்தகாத  செயலைச்  செய்யும்  வண்ணம்  தூண்டுவதாக  மேற்கொள்ளலாகாது .                                                                                  74-76

( நன்கு  ஆராய்ந்து  செய்யப்படும்  வினை  ஒரோவமயம்  பயனின்றி  யொழியினும்   தீய  பயனைப்  பயவாதென்பது  கருத்து .

 நற்செயலினின்றும்  வேண்டாப்பயன்  விளைதல் , காகதாலீயம்  போல  ஒரோவமயம்  பிற  காரணங்களானாம் ; அதுபற்றி  அந்  நற்செயலை  வெறுக்கலாகாதென்பது  கருத்து .)

     வேலைக்காரன் , உடன்பிறந்தார் , புதல்வர் , மனைவி  ஆகிய  இவர்களாற்  செய்யப்படாத  காரியத்தை  நண்பர்கள்  ஐயுறவின்றிச்  செய்பவராவர் .                                                                                                    77

( இதனால்  நட்பின்  சிறப்புக்  கூறப்பட்டது .)

     ஒருவன்  நட்புரிமையை  உண்மையாக  அறியாமல்  நல்ல  நண்பன்  என்று  கருதி  அவன்மாட்டு  ஒரு  காரியத்தை  வைக்கும்  அறிவிலான்  அக்காரியம்  அழிவெய்தக்கண்டு  வருந்துவான் .                                     78

( இச்  சுலோகத்தால்  நட்பை  யாராய்ந்து   கொள்ள வேண்டுமென்பது  புலப்படும் .)

     எந்த  மனிதனுடைய  உள்ளக்  கிடக்கையையும்  உள்ளவாறறிய  முடியாது . ஆதலின் , நல்ல  நண்பனை  யடைதற்பொருட்டு  மிகவும்  முயலவேண்டும் . மனிதர்களுக்கு  நல்ல  நண்பரைப்  பெறுதலே  எப்பேறுகளிலுஞ்  சிறந்ததாகும் .                                                               79

     அரசன் , தான்  நம்புதற்குரிய  புதல்வர் , உடன்பிறந்தார் , மனைவி , அமைச்சர் , மற்றை  வினைசெய்வார்  என்னும்  இவருள்  எவர்பாலும்  எப்பொழுதும்  மிகவும்  நம்பிக்கை  கொள்ளலாகாது .                         80

     உலகத்து  மக்கள்  எல்லோர்க்கும்  பொருள்  விருப்பம் , பெண் விருப்பம் , அரசியல்  விருப்பம்  ஆகிய  இவை  மிக்கிருத்தல்  இயல்பாம். ஆதலின் , காட்சி  முதலிய  அளவைகளாற்றுணியப் பட்டவனும்  , நன்கு  பழகினவனும் , தனக்கு  நலத்தை  விரும்புகின்றவனும்  ஆகிய  ஒருவனை  ஆராய்ந்து  நம்புதல்  வேண்டும் .                                                                                                            81

( நம்புதற்குரிய  என்னும்  விசேடணத்தை  உடன்பிறந்தார்  முதலியோர்க்குங்  கொள்க . )

     தன்னைப்போல்  தன்  நண்பனையும்  நம்பிப்  பின்னர்  அவன்  செயல்களைப்  பற்றி  மறைவிடத்திலிருந்து  தானே  ஆராய்தல்  வேண்டும் . அங்ஙனம்  ஆராய்ந்து  நம்பப்பட்டோன்  கூறுஞ்  சொற்களை  ஐயுற்று  அவை  கேடுபயப்பனவாகவும் , மாறுபட்டனவாகவும்  கொண்டு  தருக்கித்து  எண்ணலாகாது .            82

     தனக்குரிய  கடமையிலும்  நீதியிலும்  திறமை  வாய்ந்த  ஒருவன் , தன்னால் , நம்பப்பட்டோன்  தன்  காரியத்தின்  அறுபத்து  நான்கில்  ஒரு  கூற்றிற்குக்  கேடு  செய்வானாயின் , அதுபற்றி  அவனை  வெறாது  பொறுத்தலோடு , அவன்பால்  வைத்த  நட்புரிமையையும்  காத்தல்  வேண்டும் .                                                                                                              83

     நன்கு  போற்றற்பாலராகிய  பெரியாரை  எப்பொழுதுங்  கொடையாலும் , பெருமைப்படுத்தலாலும் , பனிசெய்தலாலும்  போற்றி  யொழுகல்  வேண்டும் .                                                                       84

     கொடுந்  தண்டமிடுதலையும் , வன்சொல்  வழங்குதலையும்  ஒரு  பொழுதும்  மேற்கொள்ளலாகாது . வன்சொற்  கூறல் , கொடுந்தண்டமிடுதல்  ஆகிய  இவற்றால்  தன்  மனைவி  மக்களும்  வெறுப் பெய்துவர் .                                                                                              85

     புல்  முதலியன  கொடுத்தாலும் , இன்சொற்களாலும்  பசு  முதலியனவும்  அடங்கிய  வயப்பட்டொழுகுவனவாம் .                            86

     கல்வியினாலும் , வீரத்தாலும் , பொருளாலும் , உயர்குடிப் பிறப்பாலும் , வலிமையாலும்  மானத்தாலும்  ஒரு பொழுதுஞ்  செருக்குறலாகாது .                                                                                               87

( இதன்கட்  கூறிய  கல்விச்  செருக்கு  முதலியவற்றாலாம் குற்றங்களையும் , அச் செருக்கின்  வழி  அக் கல்வி  முதலியவற்றாலாம்  பயன்களையும்  அடுத்துவரும்  சுலோக  முதல்  முறைப்படுத்துக்  கூறுதல்  காண்க . மானமாவது -நிலையிற்றாழாமையும்  தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர்  வாழாமையுமாம்.)

     கல்விச்  செருக்குள்ளவன் , தனக்குத்  தோன்றிய  ஏதுக்களைக்  கொண்டு , தன்னாற்  போற்றப்படும்  பெரியோர்களின்  உபதேச  மொழிகளை  நன்கு  அறிந்து  கொள்வானல்லன் . தன் கொள்கை கேடுபயப்பதெனினும்  அதனை  உண்மைப்  பொருளை   யொப்பக்  கருதுவன் .                                                                                                              88

( பெரியாருபதேசங்களைத்  தனக்குத்  தோன்றிய  மாறுபட்ட  ஏதுக்களால்  விலக்கி  விடுவானென்பது  கருத்து .)

     பெரியார்  மேற்கொண்ட  நெறியைத்  தன்  வலிமையால்  விலக்கி  வீரத்தாற்  செருக்குற்ற  ஒருவன் , படைகளின்  அணிவகுப்பு  முதலிய  போர்த்  திறமையை  மேற்கொள்ளா  தொழித்துக்  கைப்படை  தாங்கி  விரைந்து  போர்  செய்து  தன்  உயிரைப்  போக்கிக்  கொள்வான் .      89

     பொருட்  செருக்குள்ள  மனிதன் , ஆடு  தன்  மூத்திரத்தால்  தன்  முகத்தை  நனைத்துக்கொண்டு  அம்மூத்திர  நாற்றத்தையு முணராமை  போலப்  பழியின்  மூழ்கி  அப்  பழியையும்  அறிவானல்லன் .                                                                                                   90

     உயர்குடிப்பிறப்பாற்  செருக்குற்றவன் , குணஞ்  செயல்களாற்   றன்னினுஞ்  சிறந்த  பிறரெல்லோரையும்  அவமதிப்பான் ; செய்யத்தகாத  காரியத்தில்  தன்  அறிவை  நன்கு  செலுத்துவான் .  91

     வலிமையாற்  செருக்குற்றவன் , விரைந்து  போர்  செய்தலில்  மனத்தைச்  செலுத்துவான் . இன்றேல் , மற்றை  மக்களையும் , பசு  முதலிய  உயிர்களையும்  தன்  வலிமையாற்  றுன்புறுத்துவான் .        92

     மானத்தாற்  செருக்குற்றவன் , எல்லா  வுலகத்தையும்  துரும்பை  யொப்ப  எண்ணுவான் ; உயர்ந்த  விலைமதிப்புள்ள  இருக்கையில்  இருத்தற்குத்  தான்  தகுதியில்லாதவனாயினும் , மற்றை  எல்லோரினும்  மிகுதியாக  அதனைப்  பெற  விரும்புவான் .                   93

     இங்ஙனங்  கூறிய  கல்வி  முதலியவை  பொல்லார்க்கு  வாய்ப்பின் , செருக்கை  யுண்டாக்குவனவாம் ; நல்லார்க்கு  வாய்ப்பின்  , பணிவு  முதலிய  உயர்குணங்களை  உண்டாக்குவனவாம் .                                  94

     கல்வியின்  பயன்  அறிவும் , பணிவுமாம் . செல்வத்தின்  பயன்  கொடையும்  வேள்வியுமாம் . வலிமையின்  பயன்  பெரியாரைக்  காத்தல்  என்று  கூறப்படும் .                                                                              95

     வீரத்தின்  பயன்  பகைவரை  வணங்கலும் , அவர்பால்  அரசிறை  பெறுதலுமாம் . உயர்குடிப்பிறப்பின்  பயன்  சமமும்  தமமும்  நேர்மையுமாம் . மானத்தின்  பயன்  பிறரெல்லோரையும்  தன்னை  யொப்பக்  கருதலாம் .                                                                                         96

( சமம் – மன முதலிய  அகக்  கரணங்களை  யடக்கல் .  தமம் – பொறிகளைப்  புலன்களிற்  செல்லவிடாமல்  றடுத்தல் .  தன்னை  யொப்பக்  கருதலாவது – பிறரைத்  தன்னிலும்  இழிந்தவராகக்  கருதாமல்  மேம்பட  நினைத்தல் . )

     காரியத்திற்  கண்ணுடையான்  தன்  பெருமையைப்  பொருட்படுத்தாமல் , தாழ்ந்த  குலத்தவன்  பானின்றும்  சிறந்த  கல்வியையும் , மந்திரங்களையும் , மருந்தையும் , அழகுநிறைந்த  பெண்ணையும்   மிகமுயன்று  பெற்றுக்  கொள்ளலாம் .                          97

     கைவிட்டுப்  போன  பொருளைப்  பற்றிச்  சிந்தித்தலாகாது . வரக்கடவ  பொருளைக்  கொள்ளல்  வேண்டும் . குழந்தைகளையும் , பெண்களையும் மிகுதியாகப்  பாராட்டுதலும் , மிகுதியாக  அடித்துத்  துன்புறுத்தலுங்  கூடாவாம் . அவ்விருவரையும்  முறையே  கல்விப்  பயிற்சியிலும்  வீட்டு  வேலையிலும்  சேர்ப்பித்தல்  வேண்டும் .            98

     பிறர்  பொருள்  சிறிதாயினும்  அவராற்  கொடுக்கப்படாமல்  தானே  கவர்ந்து  கொள்ளலாகாது . எவனுடைய  பாவத்தையுஞ்  சிறிதும்  பேசுதலாகாது . பெண்களைப்  பழித்தலாகாது .                                          99

     பொய்ச்சான்று  கூறலாகாது . உண்மைச்சான்றை  மாறுபடக்  கூறலாகாது . உயிர்  போகுந்தறுவாயிலும் , மிகப்  பெருங்  காரியத்தைக்  கடைபோக்குங்  காலத்தும்  பொய்  கூறலாம் .           100

( உயிர்  போகும்  நிலையிலும்  மிகப்  பெரிய  காரிய  நிறைவேற்றத்திலும்  பொய்   கூறலாமாயினும் ,  அப்பொய்யால்  இந்நன்மைகளே யன்றிப்  பிறர்  யார்க்குந்  தீங்கு  விளைத்தலாகாதென்பது  கருத்து . இதனைப் “பொய்ம்மையும்  வாய்மையிடத்த  புரைதீர்ந்த , நன்மை  பயக்குமெனின்”  என்னுந்  திருக்குறளானு முணர்க .)

     மகட்கொடுப்போன்பாற்  பொருளில்லாதவனையும் , கள்வன்  பாற்  பொருளுடைய  மனிதனையும் , கொலை  செய்ய  விரும்புவோன்  பால்  மறைந்திருக்கும்  மனிதனையும் , அறிந்திருந்தாலுங்  காட்டிக்  கொடுத்தலாகாது .                                                                                            101

( பொருளில்லாதவனைக்  காட்டலாகாதென்பது – பெண்   கொடுப்போனிடத்து , அவனாற்  கருதப்பட்ட  மணமகன்  பொருளில்லாதவன்  என்று  தனக்குத்  தெரிந்திருப்பினும் , அதனை  வெளிப்படுத்தாமையாம் .)

     கணவன் , மனைவி , தாய் , தந்தை , தமையன் , தம்பி , தலைவன் , ஏவலாளன் , தங்கை , தமக்கை , நண்பர் , ஆசிரியன் , மாணாக்கன்  ஆகிய  இவர்களுக்குள்  மனவேற்றுமை  யுண்டாம்  வண்ணம்  செய்யலாகாது .                                                                                                   102

( தாய்  தந்தையார்க்கு  மனவேற்றுமை  செய்யலாகாதென்பது  புதல்வனை  நோக்கிக்  கூறியதாகும் .   அது  பிறனொருவன்  செயலாயின்  “கணவன்  மனைவி “  என்பதனுள்  அடங்கும் . ஆனால்  பிறவெல்லாம்  மற்றொருவன்  செயலாகக்  கூறி  இவ்வொன்றை  மாத்திரம்  புதல்வன்  செயலாகக்  கூறுதல்  பொருத்தமாகத்  தோன்றவில்லை . ஆதலின் , தாய்  தந்தை  என்புழிப்  புதல்வனைக்  குறித்துக்  கூறியதாகக்  கொண்டு , தாய்  தந்தையர்க்கும்  மகனுக்கும்  மனவேற்றுமை  யுண்டாக்கலாகாதென்பது  கருத்தாகக்  கொள்ளுதல்  பொருத்தமாகத்  தோன்றுகிறது .)

     இருவர்  பேசிக்  கொண்டிருக்கும்பொழுதும் , கூடியிருக்குங்காலும் , அவர்தம்  நடுவண்  செல்லலாகாது . நண்பர் , உடன்பிறந்தார் , சுற்றத்தார் , ஆகிய  இவர்களை  எப்பொழுதும்  தன்னைப்போற்  கருதி  உபசரித்தல்  வேண்டும் .                                                                                   103

     தன்  இல்லத்திற்கு  வந்தோன்   தாழ்ந்தவனாயினும் , அவனைத்  தகுதிக்குத்  தக்கவாறு  அவனது  நலத்தை  வினவுதலாலும் , நீர்முதலியன  கொடுத்தலாலும் , பொருட்கொடையாலும்  தன்னால்  இயன்றவரை  எப்பொழுதுஞ்  சிறப்பித்தல்  வேண்டும் .                       104

     புதல்வரை  யுடையான்  ஒருவன் , புத்திரவதியான  தன்  மகளையும் , கணவரோட  கூடியிருக்குந்  தங்கை  தமக்கைமார்களையும்  எப்பொழுதும்  தன்  இல்லத்தில்  வைத்துக்  கொள்ளலாகாது . அவ்விரு  பகுதியினரும்  சார்பற்றவராக  விருப்பின்  அவர்களைப்  பரிபாலித்தல்  வேண்டும் .                                                                                                            105

(  அவர்களைத்  தன்  இல்லத்தில்  வைத்துக்கொள்ளுவானாயின்  அவர்க்கும்  தன்  மருகியர்க்குங்  கலகம்  விளையுமென்பது  கருத்து . சார்பற்ற  அவரைக்  காக்குங்காலும்  தன்  இல்லத்தில்  வைத்துக்  காக்க  வேண்டுமென்று  கூறாமையும்  அது  நோக்கியேயாம் . )

     பாம்பு , நெருப்பு , நோய்  ஆகிய இவற்றையும் , தீயவன் , அரசன்  மருமகன் , உடன்  பிறந்தாள் , மகன்  பகைவன்  ஆகிய  இவர்களையும்  முறையே  சிறியனவென்றும் , சிறியவரென்றுங்  கருதிப்  பழகுங்காற்  பொருட்படுத்தாமல்  இருத்தலாகாது .                                                           106

     கொடுந்தன்மை  குறித்துப்  பாம்பையும் , சுட்டெரிக்குந்  தன்மை  குறித்து  நெருப்பையும் , தீய  இயற்கை  குறித்துத்  தீயோனையும் , தலைமை  குறித்து  அரசனையும் , மகட்குத்   துன்பம்  நேருமென்னும்  அச்சங்காரணமாக  மருமகனையும் , தன்  முற்றோன்றிய  பிதிர்களுக்குப்  பிண்டங்கொடுத்தல்  பற்றி  உடன்  பிறந்தாள்  மகனையும் , மிகுதல்  குறித்து  நோயையும் , அச்சம்  நோக்கிப்  பகைவனையும்  பொருட்படுத்தல்  வேண்டும் .                                         107

( பொருட்படுத்தல்  வேண்டுமென்பதற்கு , அரசன்  மருமகன்  உடன்பிறந்தாள்  மகன் என்னும்  இவரைக்  குறித்து  விழிப்புடையனாய்ச்  சிறப்பிக்க  வேண்டுமெனவும் , பாம்பு  நெருப்பு  நோய்  என்னும்  இவற்றை  குறித்தும் , தீயவன்  பகைவன்  என்னும்  இவரைக்  குறித்தும்  முறையே  அவற்றாலும் , அவராலும்  நேரும்   தீங்குகளைச்  சோர்விலனாய்  நின்று  ஒழித்தல்  வேண்டுமெனவும்  பொருள்  கொள்க . )

     கடன்  எச்சமும் , நோய்  எச்சமும் , பகை  எச்சமும்  வைத்துக் கொள்ளலாகாது . இரப்போர்  முதலியோர்  இரவுவரை  கூறி  வேண்டுங்கால் , அவர்க்கு  வன்சொற்களால்   விடை  கூறலாகாது. ஆற்றலுடையனாயின் , அவ்விரப்போர்க்கு  வேண்டுவன  செய்தலும் , இன்றேல்  செய்வித்தலும்  வேண்டும் .                                                    108

( எச்சம் – குறை , சேடம் .)

     வள்ளல் , அறவோர் , வீரர்   ஆகிய  இவர்களைப்  பற்றிய  புகழ்  மொழிகளை  எப்பொழுதும்  முயன்று  கேட்டல்  வேண்டும் . இவர்கள் பாற்  புரைவழி  காண்டலாகாது .                                                                109

( புரைவழி – குற்றங்காணும்  நெறி .)

     மனிதன் , உரிய  காலத்தில்  நலம்பயப்பதும்  அளவுபட்டதுமாகிய  உண்டியையும் , சிற்றின்ப  நுகர்ச்சியையும் , கடவுள்  முதலியோர்க்கு  நிவேதித்து  எஞ்சியதுண்டலையும் , நல்லுறக்கத்தையும் , எளிமையின்மையையும் , தூய்மையையும்  எப்பொழுதும்  உடையனாயிருத்தல்  வேண்டும் .                                                                110

( நலம் பயத்தலையும் , அளவுட்படுதலையும்  சிற்றின்ப  நுகர்ச்சிக்குங் கொள்க .)

     எப்பொழுதும்  மக்கள்  இயக்கமில்லாத  இடத்திலேயே  சிற்றின்ப நுகர்தலையும் , உணவுட்கொள்ளுதலையும் , மல மூத்திரம்  ஒழித்தலையும்  செய்தல்  வேண்டும் . இடைவிடாது  முயற்சியுடையனாகவும் , வண்மை  நலம்  உண்டாதற்  பொருட்டு  உடற் பயிற்சியுடையனாகவும்  இருத்தல்  வேண்டும் .                         111                      

     சோற்றைப்  பழித்தலாகாது . உடல்  நலமுடையனாயிருக்குங்கால் , பிறர்  அன்போடளிக்கும்  நிமந்திரண  உணவு  முதலிய  உண்டிகளை  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் . அறுவகைச்சுவையுடன்  கூடியதும் , இனிப்புச்சுவை  மிக்கதும்  ஆகிய  உணவையே  சிறந்ததாக  அறிதல்  வேண்டும் .                                                                                                           112

( நிமந்திரண  உணவு – சிராத்தத்திற்  பிதிர்  தேவதைகளைக்  குறித்துக்  கொடுக்கப்படுவதாகும் . அது  பலவகைப்  பொருளாலும்  ஆக்கப்பட்டு  மிகுதியாக  இருக்குமாதலின் , அதனை  உண்ணுங்கால்  உடல்நலம்  இருக்கவேண்டுமென்பது  இன்றியமையாததே . இனி , மூலத்திலுள்ள  “பிரீதி  போஜநம்”  என்னும்  சொற்கு  பிறர்  அன்போடு  செய்யும்  விருந்துணவு  என்று  பொருள்  கோடலும்  பொருந்தும் .)

     தன்  மனைவியோடு  கூடி  இன்பம்  நுகர்தல்  வேண்டும் . விலைமாதரோடு  ஒருபொழுதுங்  கூடலாகாது . திறமை  மிக்காரோடு  மற்போர்  செய்தலும் , வணக்க  முதலியவற்றால்  உடற் பயிற்சி  செய்தலுஞ்  சிறந்தனவாம் ,                                                                        113

( வணக்கம் – சூரிய  நமஸ்காரம்  முதலியன .)

     இரவில்  முதல்  யாமத்தையும் , கடை யாமத்தையும் ஒழித்து  இடைநின்ற இரண்டு  யமங்களிலும் துயில்  கொள்ளல்  சிறந்ததாகும் . வறியவரையும் , குருடரையும் , முடவரையும் , செவிடரையும்  ஒரு  பொழுதும்  எள்ளி  நகையாடலாகாது .                                                     114

     செய்யத் தகாத  காரியத்தில்  அறிவைச்  செலுத்தலாகாது. காரிய   நிறைவேற்றத்திற்  கண்ணுடையான் , தன்  பெருமையை  விட்டு  முயற்சியினாலும் , வலிமையினாலும் , அறிவினாலும் , அஞ்சாமையினாலும் , பராக்கிரமத்தினாலும் , நேர்மையினாலும்  தான்  மேற்கொண்ட  காரியத்தைச்  சுறுசுறுப்போடு  விரைந்து  முடித்தல்  வேண்டும் .                                                                                                           115

     ஒரு  கலகம்  பொருட்பேற்றைத்  தருவதாயின் , அதனை  மேற்கொள்ளுதல்  நன்றாம் . இன்றேல் , அக் கலகம்  வாழ்நாளையும், பொருளையும் , நட்பையும் , புகழையும் , பிற  நலங்களையுங்  கொடுப்பதாகும் .                                                                                               116

( “பொருள்  வருவாயுளதாயின்  கலகத்தை மேற்கொள்ளலாம் “  என்னும்  இஃது  ஏற்புழிக்கோடலால்  அரசனுக்கு  உரியதாகக்  கருதப்படுவதாகும் . அரசன்  அங்ஙனம்  கலகம்  விளைத்தலும்  மற்றைப்  பகை  அரசரோடன்றிக்  குடிகளோடு  அன்றென்பதும்  ஈண்டுக்  கருதற்பாலது . )

     எவனிடத்தும்  வருத்தம்  விளைவிக்குஞ்  சொற்களைக்  கூறுதலும் , எவன்பாலுங்  குற்றநெறி  காண்டலுங்  கூடாவாம் . ஒரு  பொழுதும்  பெரியோர்களுடையவும் , அரசனுடையவுமாகிய  ஆணைகளைக்  கடத்தலாகாது .                                                                                                   117

     இழிந்த  காரியத்தில்  ஏவுவோன்  குருவாயினும் , அவனை  அது    தீதென்று  அறிவுறுத்தல்  வேண்டும் . நல்ல  காரியத்தை  அறிவிப்போன்  தாழ்ந்தவனாயினும் , அவன்  மொழியைக்  கடத்தலாகாது .                                                                                                    118

     ஒருவன் , இளம்பருவத்தளாகிய  தன்  மனைவியைத்  தான்  காவாது, சுதந்திரமுடையவளாக   விட்டுப்  போதலாகாது . பெண்கள்  பொதுவாகக்  கேட்டிற்குக்  காரணமாவர் . அங்ஙனமாயின் , அயலாரோடு  கூடியிருக்கும்  இளம்  பெண்களைப்  பற்றிக்  கூறற்பாலதென் ?                                                                                                119

     மதத்தை  விளைவிக்கும்  பொருள்களாற்  களித்து  மயங்குதலும் , கெட்ட  புதல்வனிடத்து  மகன்மை  அபிமானம்  மேற்கொண்டு  மயங்குதலும்  ஆகா .                                                                                          120

     கற்பிற்  சிறந்த  மனைவி , மாற்றாந்தாய் , தாய் , மருகி , மணஞ்செய்யப்படாத  மகன் , தந்தை ஆகிய  இவர்களையும் , கணவனும்  புதல்வனும்  இல்லாத  கைம்மை  நோன்பினராகிய  மகள் , தமக்கை , தங்கை , மாமி , தமயன் , தம்பிமார்களின்  மனைவியர் , தந்தையுடன்  பிறந்தவள் , தாயுடன்  பிறந்தவள் ஆகிய  இவர்களையும் , சந்ததியில்லாதவராகிய  தாய்வழிப்பாட்டன் , குரு , மாமன் , அம்மான் , ஆகிய  இவர்களையும், தந்தை  யில்லாதவரும், சிறுவருமாகிய  தெளகித்திரன் , தம்பி , உடன்  பிறந்தாள் புதல்வன் , ஆகிய  இவர்களையும்  இயன்றவரை  முயன்று  அவசியம்  பரிபாலித்தல்  வேண்டும் .                                                                                                   121-123

 ( மாற்றாந்தாய் – தாயல்லாத, தந்தையின்  மற்றொரு  மனைவி . “கற்பிற்சிறந்த”  என்பது  மனைவி  முதலிய  நால்வரையும் ,  “கணவனும்  புதல்வனுமில்லாத கைம்மை  நோன்பினர் “  என்பது  மகள்  முதலிய  எல்லோரையும் , “சந்ததி  இல்லாதவர்”  என்பது  தாய்வழிப்பாட்டன்  முதலிய  எல்லோரையும் , “தந்தையில்லாதவரும்  சிறுவருமாகிய “  என்பது   தெளகித்திரன்  முதலிய  எல்லோரையும்  பற்றி  நிற்கும்  அடைமொழிகளாம் . )

     செல்வம்  இல்லாதபொழுதும்  முற்கூறப்பட்டாரைக்  காத்தல்  வேண்டும் . செல்வம்  நிறைந்திருக்குமாயின்  தன்பால்  அன்புமிக்க  தந்தை  குலத்தவரையும் , தாய்  குலத்தவரையும்  மனைவி  பிறந்த  குலத்தவரையும் , அடிமையாள் , அடிமைப்பெண் , வேலைக்காரர்  ஆகிய  இவர்களையும்  காத்தல்  வேண்டும் .

     உறுப்பறைகளையும் , துறவிகளையும்  வறியவரையும் , சார்பில்லாதவரையும்   காத்தல்  வேண்டும் .                                           125

( உறுப்பறைகள் – அங்கவீனர்கள்.)

     எவன்  தன்  குடும்பத்தைக்  காப்பதில்  முயற்சியில்லாதவனாக இருக்கின்றானோ  அவனுக்குக்  கல்வி  முதலிய  பிற  குணங்களாலாகும்  பயன்  யாது ? அவன்  உயிரோடு  கூடிநின்றே  இறந்தவனாவான் .                                                                                            126

     எவன்  தன்  குடும்பத்தைத்  தாங்காமலும் , பகைவரை  யழிக்காமலும் , உள்ள பொருளைக்  காவாமலும்   இருக்கின்றானோ  அவனுக்கு  உயிர்  வாழ்க்கையாலாகும்  பயன்  யாது ?                          127

     எப்பொழுதும்  பெண்களால்  வயப்படுத்தப்பட்டவனும் , கடனாளியும் , மிக்க  வறுமையாளனும் , இரப்பவனும் , இழிகுணத்தவனும் , இழிந்த  பொருள்  வருவாயுள்ளவனும்  ஆகிய  இவர்கள்  உயிர்  வாழ்க்கையோடு  கூடியிருந்தும்  இறந்தவராவர் .128

( இச்  சுலோகத்தில்  அறவே  பொருளில்லாதவனைத்  தரித்திரன்  என்று  கூறியபடியால்  “அர்த்தஹீநன்”  என்பது  இழிந்த  பொருள்  வருவாயையுடையவன்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . எப்பொழுதும்  என்பதனை  எல்லாவற்றிற்கும்  அடையாகக்  கொள்க .)

     ஒருவன்  தன்  வாழ்நாளின்  அளவு , பொருள்நிலை , இல்லத்தில்  நிகழும்  பிழை , மந்திரம் , பெண்புணர்ச்சி , மருந்து , கொடை , மானம் , அவமானம்  ஆகிய  இவ்வொன்பதையும்  வெளிப்படுத்தலாகாது .  129

2 . பிறநாட்டுச்  செலவு , அரசவை  புகுதல், நூலாராய்ச்சி  முதலியன

     பிற  தேய  யாத்திரை , அரசவை  புகுதல் , பல  நூல்களை யாராய்தல், பொருட்பெண்டிர்  முதலியோரைக்  காண்டல் , புலவரோடு  நட்புக்  கொள்ளல்  ஆகிய  இவற்றை  மடியின்றிச்  செய்தல்  வேண்டும் .

(பொருட்பெண்டிர்  முதலியோரைக்  காண்டல் – அவர்   இயல்பை  ஒரு  பயன்  குறித்து  ஆராய்தல்  அப்  பயனைப்  பின்வரும்  136 –ஆம்  சுலோகத்திற்   காண்க)

     ஒருவன்  பிற  தேய   யாத்திரையால் , பலவகைப்பட்ட  வழக்க ஒழுக்கங்களையும் , பொருள்களையும் , விலங்கு  முதலியவற்றையும்,  மனிதர்களையும் , மலைகளையும்  காட்சியளவையில்  வைத்து  நன்கு அறிந்து  கொள்ளலாம் .                                                                                     131

( பலவகைப்பட்ட  என்பது  பின்னுள்ள எல்லாவற்றிற்கும்  அடையாகும் . இச் சுலோகக்  கருத்து : “மண்மிசைக்  கிடந்தன  மலையுங்  கானமும் , நண்ணுதற்கரியன  நாடும்  பொய்கையும் , கண்மனங்  குளிர்ப்பன வாறுங்  காண்பதற் , கெண்ணமொன்றுளதெனக்  கிலங்கு  பூணினாய்”  “ஊற்றுநீர்க்  கூவலுள்  உறையும்  மீனனார் . வேற்று  நாட்டதன்  சுவை  விடுத்தன்  மேயினார்”  என்னும்  சீவகச்  சிந்தாமணிச்  செய்யுட்களை  நினைவுறுத்துகின்றது .)

     ஒருவனுக்கு  அரச  மன்றம்  புகுதலால் , அரசியற்  காரியம்  புரியும்  அமைச்சன்  முதலியோர்  எத்தகையர் ? நியாய  அநியாயங்கள்  எத்தகையன ?  பொய்கூறுவார்  யார்? உண்மை  மொழிவார்  யாவர்?  நியாய  நூன்முறை  உலகியல்களின்படி  நடைபெறும்  கடன் கோடல்  முதலிய  வழக்குகளின்  நிலைமைகள்  எத்தகையன ?  என்னும்  இன்னோரன்ன  ஆராய்ச்சியறிவு  உண்டாகும் .                               132-133

     பல  நூல்களின்  உண்மை  யாராய்ச்சிகளால்  அறங்களின்  உண்மையைக்  காண்டலும் , செருக்கின்மையும்  உண்டாவனவாம் . ஒரு  நூலை   மாத்திரம்  பயின்றவன் , காரியங்களின்  உண்மையைத்  துணிந்தறியான் .                                                                                             134

     பல  நூல்களை  யாராய்ந்தறிபவன் , மிக்க  உலகிய லுண்மைகளை யறியுந் திறனுடையனாவான். ஆதலின்  அறிவுடையான்  சோம்பலின்றி  எப்பொழுதும்  பலவகைப்பட்ட  நூல்களையும்  பயிலல்  வேண்டும் .                                                                                                           135

     விலைமகள் , ஒரு  மனிதனுடைய  பொருளைக்  கவர்ந்துகொண்டும்  அவன்  வயப்படமாட்டாள் . அங்ஙனந்  தான்  வயப்படாமலிருந்தும் , அம்மனிதனைத்  தன்  வயப்படுத்துவதில்  திறனுடையளாவள் , அதுபோல , ஒருவன்  தான்  யார்க்கும்  வயப்படாமல்  இவ்வுலகத்தைத்  தன்  வயமாம்  வண்ணஞ்  செய்தல்  வேண்டும் .                                       136

     புலவர்  பழக்கத்தால்  வேதம் , அறநூல் , புராணம்  முதலியவற்றின்  பொருளுணர்ச்சியும்  சிறந்த  மதி  நுட்பமும்  உண்டாம் .                       137

     ஒருவன் , கடவுளர்  பிதிரர்  விருந்தினர்  ஆகிய  இவர்க்கு  அன்னங்  கொடாமல்  ஒரு  பொழுதும்  தான்  உண்ணலாகாது . எவன்  அறியாமையால்  தன்பொருட்டு  அடிசில்  ஆக்குகின்றானோ  அவன்  பின்னர்  நரகத்திற்கு  ஆளாதற்  பொருட்டு   உயிர்  வாழ்பவனாவன். 138

( இக்கருத்து  “தமக்கென  றுலையேற்றார்”  என்னும்  நீதிச்  செய்யுளை  நினைவூட்டுவதாகும்.)

     தாய்  தந்தை  ஆசிரியன்  முதலிய  குரவர்களுக்கும் , வலியவர்க்கும் , நோயாளர்க்கும்  பிணஞ்  சுமந்து  வருவார்க்கும் , அரசர்க்கும் , பெரியார்க்கும் , தவஞ்  செய்வார்க்கும் , ஊர்தி  முதலியவற்றில்  ஏறி  வருவார்க்கும்  வழிவிட்டு  விலகல்  வேண்டும் .                                          139

     வண்டிக்கு  ஐந்து  முழ  தூரமும் , குதிரைக்குப்   பத்து  முழ  தூரமும் , யானைக்கு  நூறு  முழ  தூரமும் , எருதுக்குப்  பத்து  முழ  தூரமும்  விலகிச்செல்லல்  வேண்டும் .                                                                          140

     கொம்புகளையுடைய   எருது  முதலியன  , நகங்களையுடைய  புலி  முதலியன , வளைந்த  பற்களையுடைய  பன்றி  முதலியன,  வெள்ள மிக்க  ஆறு  முதலியன  ஆகிய  இவற்றின்  பக்கலிலும்,  தீயோர்பாலும்,  பெண்களிடத்தும்  நம்பிக்கை  வைத்தலாகாது .                                       141

     தின்றுகொண்டு  வழி  நடத்தலும் , சிரித்துக்கொண்டு  பேசுதலும் , சென்றதற் கிரங்கலும் , தான்  செய்த  காரியத்தை  வெளிப்படுத்திக்  கூறுதலுங்  கூடாவாம் .                                                                                      142

     தன்னால்  ஐயுறப்பட்டோன்  பக்கல்  இருத்தலையும் , இழிந்தவரிடத்து  வேலை  செய்தலையும்  ஒழித்து  விடல்  வேண்டும் . எவருடைய  பேச்சையும்  மறைந்து  கொண்டு  எப்பொழுதுங்  கேட்டலாகாது .                                                                                                  143

  பெரியோர்கள்  தன்னோடு  கலந்து  செய்ய  உடன்படாத  காரியத்தைத்  தானே  அவரோடு  கலந்து  செய்ய  விரும்பலாகாது ; என்னை? தேவர்கள்  ஏற்றுக்  கொள்ளாதிருப்பவும்  அவரோடு  கூடி  அமிர்தம்  உண்டமையால்  இராகுவின்  தலை  அறுக்கப்               பட்டதாகலின்                                                                                                    144                                                                                                                                          

     நல்லோரான்  மேற்கொள்ளப்படாததொரு  காரியத்தை  ஒரு  பெரியான் செய்வானாயின் , அவனுக்கு   அஃது  அணிகலனாகும்; என்னை?   பிறரெல்லோர்க்கும்  மரணத்தை  விளைவிக்கும்  நஞ்சு  சிவபிரானுக்கு  அணிசெய்து  திகழ்தலின் .                                                145

( மேற்கண்ட  இரு  சுலோகங்களாலும் முறையே  பெரியோர்  அனுமதியின்றி  இழிந்தவன்  ஒரு  காரியத்தைச்  செய்வானாயின் , அது  நல்லதாயினும் , அவனுக்குத்  தீங்கு  பயக்குமென்பதும் , செய்யத்  தகாததொன்றைப்  பெரியோன்  செய்வானாயின் அவனுக்கு  அஃது  அழகு  செய்யுமென்பதும்  புலப்படுதல் காண்க . )

     தவ  வன்மையால்  ஒளிமிக்க  பெரியான் , பாவமற்ற  நெருப்பைப்போல்  எல்லாவற்றையும்  அழிக்கும்  ஆற்றலுடையனாவான். குரு , அரசன் , சிறப்புமிக்கான்  ஆகிய  இவர்களின்  எதிரில்  நிற்றலாகாது .                                                            146

( தவ  வன்மையுடையார்  வெகுளி,  நெருப்பைப்  போல்  அழிக்கும்  ஆற்றலுடையதாகுமென்பது  கருத்து . “குணமென்னுங்  குன்றேறி  நின்றார்  வெகுளி  கணமேயுங்  காத்தலரிது”  என்னுந்  திருக்குறளிலும்  இக்கருத்து  வந்திருத்தல்  காண்க . அருத் தாபத்தியால்  அருளும்  ஆற்றலுமுடையனாவான்  என்பதும் , ஆற்றலுடையனாவான்  என்றமையால்  நேர்ந்தவிடத்தன்றி  எஞ்ஞான்றும்  அவன்  அவ்வழித்  தற்றொழிலை  மேற்கொள்ளுவானல்லன்  என்பதும்  போதரும் . )

     அரசன்  நமக்கு  நண்பனாவனென்று  கருதித்  தன்  மனம்  விரும்பியவாறு  காரியஞ்  செய்யலாகாது . அறிவிலார்க்குத்  தலைமைத்  தன்மையும்  அடிமைத்தன்மையும்  ஈதலும் , பெரியவர்களோடு  பகைத்தலும் , அற்ப  அறிவினால்  இறுமாந்திருப்பவனை  மகிழ்வித்தலும்  விரும்பத் தகாதனவாம் .   147

     அறிவுடையான்  தான்  செய்ய  நேர்ந்துள்ள  மிகவும்  இன்றியமையாத  காரியத்தையும் , அங்ஙனமல்லாத  காரியத்தையும்  முறையே  முன்னும்  பின்னும்  விரைந்துந்  தாழ்ந்துஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                                           148

(இன்றியமையாத  காரியத்தை  விரைந்து  முற்படச்செய்ய  வேண்டுமெனவும் , அங்ஙனமல்லாத  காரியத்தைத்  தாழ்த்துப்  பிற்படச்செய்ய வேண்டுமெனவும்  கூறியவாறாம் .)

     கெளதம  புத்திரரான  சதானந்தர் , செய்யத்தகாத  காரியமாகிய  தாய்க்கொலையில் , தந்தையின்  கட்டளை  பெற்றுங்  காலந்தாழ்த்தலை  மேற்கொண்டனர் . அக்காலத்  தாழ்வு  மிகவும்  பாராட்டப்படுவதாயிற்று.                                                                                149

( கெளதமர்  தம்  மனைவியாகிய  அகலியை  தேவேந்திரனோடு  காமவின்பந்துய்த்தமை  பற்றி  அவளைக்  கொன்றுவிடும்படி  தம்  புதல்வராகிய  சதானந்தர்க்குக்  கட்டளையிட்டனர் . அவர்  செய்யத்தகாத  அத்தாய்க்கொலையில்  மனங்கவன்று  காலந்தாழ்ந்தனர் . அதன்பின்  கெளதமர்  சினந்தணிந்து  கொலை  செய்விக்காது  சபித்தனர் . இச்செய்தியால்  அக்காரியத்தில்  காலந்தாழ்த்தல்  நன்மை  பயக்குமென்பது  போதரும் . )

3 . உலகத்தைத்  தன் வயப்படுத்தும்  வழி

     ஒருவன்  எப்பொழுதும்  அன்பினாலும் , அருகிருத்தலாலும் ,  புகழ்ந்து கூறுதலாலும் , வணக்கத்தாலும் , பணிசெய்தலாலும் , திறமையாலும் , இசை  முதலிய  பல்வகைக்  கலைகளாலும் , கதைகளாலும், ஞானோபதேசத்தாலும், ஆதரவாலும், நேர்மையாலும், வீரத்தாலும் , கொடையாலும் , கல்வியாலும் , இருக்கையினின் றெழுதலாலும் , எதிர்செல்லுதலாலும் , இன்பம்  விளைவிக்கும்  புன்முறுவலோடு  கூடிய  இன்சொற்களாலும்  , உதவி  புரிதலாலும்  நல்ல  உள்ளப்  பண்பாலும்  உலகத்து  மக்களைத்  தன்  வயப்படுத்துக்   கொள்ளல்  வேண்டும்.                                                                  150-151                                                                                                                                                                                                           

     பிறரை  வசீகரித்தற்குரிய  அன்பு  முதலிய  இவ்வுபாயங்கள் , தீயவர்பாற்  பயன்  செய்யாதனவாம் ; அறிவுடையான்  அத்தீயவர்  சேர்க்கையை  ஒழித்துவிடல் வேண்டும் . தான்  ஆற்றலுடையனாயின்  தண்டோபாயங்களாலும் , வஞ்சகவுருவமான  முற்கூறிய  அன்பு  முதலிய  உபாயங்களாலும்  அத்தீயோரை  வெல்லல்  வேண்டும் .      152

     வியாகரண முதலிய  ஆறு  அங்கங்களோடு  கூடிய  வேதம்  அற நூல்  புராணங்களையும்  , பல்வகைக்  கலைகளோடுங்  கூடிய  தநுவேத  முதலிய  உபவேதங்களையும்  இடையறாது  பயிலுதல்  மனிதர்க்கு  நலம்  பயப்பதாகும் .                                                                                           153

( பல்வகைக்  கலைகளாவன – ஓவியம் , சிற்பம்  முதலியன )

     மனிதர்க்கு  வேட்டையாடல் , சூதாடல் , பெண்புணர்ச்சி , கட்குடித்தல்  ஆகிய  இவை  எப்பொழுதும்  மேற்கொள்ளப்படுமாயின், துன்பம்  பயப்பனவாம் . ஆதலின் , இந்நான்கனையும்  என்றும்  மேற்கொள்ளாமல்  ஒரோவமயம்  பொருந்துமாற்றாற்   சிறிதளவு  மேற்கொள்ளலாம் .                                                                                           154

     எவன்மாட்டும்  வஞ்சகமாகப்  பேசுதலும் , எவனுக்கேனும்  வாழ்க்கைக்  கேடு  விளைத்தலுமாகா . பிறர்க்குப்  பொல்லாங்கு  செய்தலை  ஒரு  பொழுதும்  நெஞ்சத்தாலும்  நினைத்தலாகாது .      155

     ஒருவன் , தனக்கு  நிகழ்கால  எதிர்காலங்களில்  உறுதியான இன்பத்தை விளைவிப்பதும் , தான் இறந்தபின்  தனக்கு  விட்புல  வாழ்க்கையைத்  தருவதும் , நிலையான  நல்ல புகழை யுண்டாக்கு வதுமாகிய  காரியத்தைத்  தெரிந்து  செய்தல் வேண்டும் .                   156                                                                                                                                                                                                                                                                                                                                            

     கவலையுடையான் , உள்ளநோயாலும்  உடல்நோயாலும்  பற்றப்பட்டான் . சோரநாயகன் , கள்வன் , வலியவனோடு  பகைத்தவன் , காமுகன் , பொருளிற்  பேரவாவுடையான் , இழிந்த  துணைவனை  யுடையான் , உள்ளம்  வேறுபட்டொழுகும்  அமைச்சரையும்  நண்பரையும்  குடிகளையுமுடைய  இழிந்த  அரசன்  ஆகிய  இவர்களுக்கு  விழிப்பின்றி  உறக்கம்  நேராது . ஆதலின் , மனிதன்  இன்னோரன்ன  தீங்குகள் அணுகாவண்ணம் , நன்கு  ஆராய்ந்து  இன்பம்  நெடிது   நிலைக்குமாறு  துயிறற்குரிய  காரியத்தைச்  செய்தல்  வேண்டும் .                                                      157-158

     அரசனுடையனவும் , பிற  சான்றோருடையவும்  ஆகிய  வழக்க  ஒழுக்கங்களை  ஒத்து  நடித்துக்  காட்டலாகாது . ஒருவன்  பாம்பும் , புலியும் , கள்வரும்  எதிரே வருங்கால்  தடுத்தற்குத்  தனியே  செல்லலாகாது .                                                                                                    159

( ஒத்து  நடித்துக்  காட்டுதல் , பிறர்க்கு  நகைச்சுவை யுண்டாக்குதற்  பொருட்டாம் .)

     தன்னைக்  கொல்ல  விரும்புவோனாகவும் , ஆததாயியாகவும் இருப்பவன்  குருவாயினும்  அவனைக் கொன்றுவிடலாம் . கலகம்  நேர்ந்துழி  ஒரு  பக்கச்  சார்புடையனாதலாகாது . பலர்க்குத்  தலைவனாக  இருப்பவனைக்  காத்தல்  வேண்டும் .                                160

     தந்தை  தாய்  முதலிய  குரவர்கள் , அரசன்  இவர்கள்  முன்னர்  உயர்ந்த  இருக்கையில்  இருத்தலாகாது . அங்ஙனமே  இருக்கையிலேற்றிய  காலை  யுடையனாய் , அவர்தம்  சொற்களைத்  தருக்க  ஏதுக்களான்  மறுத்து  விகாரப்படுத்தலுமாகாது .                      161

     உயர்ந்த  மனிதன் , செயற்பாலனவற்றையும் , செய்தவற்றையும்  பற்றி  வெளிப்படுத்துக்  கூறமாட்டான் . இழிந்த  மனிதன் , செய்யத்தக்கன  இன்னவென்று  ஒருசிறிதும்  அறியான் ; செய்ததையே  அறிபவனாவன் .                                                                                                 162

4 . மகளிர்பால்  இயற்கையாக  நிகழும்  பிழைகள்

     ஒருவன்  தன்றாய் , மருகி , உடன்  பிறந்தாருடைய  மனைவியர்  , தன்னுடைய  மற்றொரு  மனைவி  ஆகிய  இவர்களைப்  பற்றித்  தன்  மனைவி  குற்றங்  கூறுவாளாயின் , அதனைத்  தான்  நேரிற்  கண்டாலன்றி  உண்மையென  எண்ணலாகாது .                                     163

     பொய்யுரை  மொழிதல் , ஆராயாது  வலிந்து  செய்தல் , வஞ்சகம் , அறிவின்மை , பேராசை , தூய்மையின்மை , இரக்கமின்மை, செருக்கு , ஆகிய  இவ்வெட்டும்  மகளிர்பால்  இயற்கையாக  உள்ள  பிழைகளாகும் .                                                                                                   164

     தன்  புதல்வனைப்  பதினாறு  யாண்டுகளின்  பின்னரும் , மகளைப்  பன்னிரண்டு  யாண்டுகளின்  பின்னரும்  அடித்தொறுத்தலாகாது . மருமகள்  முதலியோரைக்  கொடுஞ்  சொற்களாற்  றுன்புறுத்தலாகாது.                                                                                           165

     தெளகித்திரர்களையும் , தங்கை , தமக்கைமாருடைய  புதல்வர்களையும் , உடன்  பிறந்தாரையும்  தன்  புதல்வரினுஞ்  சிறப்பாகவும் , உடன்  பிறந்தார்  மனைவிமாரையும்  மருகியையுங்  தங்கை , தமக்கை  மாரையும்  தன்  புதல்வியினும்  சிறப்பாகவும்  காத்தல்  வேண்டும் .                                                                                           166

     ஒரு  தலைவன் , தன்  குடும்பத்தை  யோம்புதற் பொருட்டுப்  பொருள்  ஈட்டுதலிலும் , அதனைக்  காத்தலிலும் , இடையறாது  முயற்சியுடையனாயிருத்தல்  வேண்டும் . என்னை?  அத்தலைவன்  அல்லாத  மற்றையோர்  அப்பொருளைக்  கவருங்  கள்வரை  யொப்பாவராதலின் .                                                                                          167

     மகளிர்பாற்  பொய்மை , பகுத்தாராயாச்  செய்கை , அறிவின்மை, மிக்க  காமம்  ஆகிய  இவையுள்ளனவாதலின் , காமவின்பங் குறித்தன்றி  அம்மகளிரோடு  ஒரே  படுக்கையில்  துயிலலாகாது .     168

5 . மகட் கொடை முறை

     பொருள் , குலம் , ஒழுக்கம் , உருவம் , கல்வி , வலிமை , யாண்டு  ஆகிய  இவற்றின்  ஒப்பு நோக்கி   ஒருவனுக்கு  மகட்கொடுத்தல்  வேண்டும். அங்ஙனங்கொள்ளுவோன்  தலையாயோனாயின்  அவன்பால்  தனது  நட்புரிமையைச்  செய்தல்  வேண்டும் .            169

     ஒருவன்,  தன்  மகளை  மனைவியாக  விரும்பும்  மணவாளன்  இளமை , கல்வி , உருவம் , இவற்றை  யுடையனாயிருப்பின்  அவன்  வறியனாயினும்  அவனை  யழைத்து  மகட்கொடுத்தல் வேண்டும். உருவ  மாத்திரத்தாலும் , பருவ  மாத்திரத்தாலும் , பொருள்  மாத்திரத்தாலும்  பெண்  கொடுத்தலாகாது .                                       170

     முதலில்  குலத்தையும் , அதன்பின்  கல்வியையும் , அதன்பின்  பருவத்தையும் , அதன்பின்  ஒழுக்கத்தையும்,  அதன்பின்  பொருளையும்,  அதன்பின்  உருவத்தையும்,  அதன்பின்  இடத்தையும்  ஆராய்ந்தறிந்து  மணஞ்  செய்து  கொடுத்தல்  வேண்டும் .               171

     பெண்  உருவத்தை விரும்புவள் . தாய்  செல்வத்தையும் , தந்தை  கல்வியையும் , சுற்றத்தார்  குலத்தையும்  விரும்புவர் , மற்றையோர்  இனிய  அறுசுவைமிக்க  நல்ல   உணவை  விரும்புவர் .                      172

     தனக்கு  ஒத்த  இருடி  கோத்திரம்  இல்லாதவளும் , உடன்பிறந்த  ஆண்மக்களை  யுடையவளும் , நற்குலத்தி லுதித்தவளும் , தாய்  தந்தைவழிக்  குற்றமில்லாதவளும்  ஆகிய  பெண்மக்களை  இல்லறக்  கிழத்தியாக  அடைதல் வேண்டும் .                                                            173

6 . கல்வி  செல்வங்களை  யடையும்  வழி

     கணந்தோறுஞ்  சிறிது சிறிதாகக்  கல்வியையும், பொருளையும்  ஈட்டல்  வேண்டும். அங்ஙனங்  கல்வியையும்  பொருளையும்  ஈட்ட   விரும்புவோனால்  எப்பொழுதும்  அக்கணப் பொழுதும், அக்கல்வி  செல்வங்களின் சிற்றளவும் பொருட்படுத்தாமல் விடற்பாலனவல்ல. 174                                                                                       

( கல்வியையும்  செல்வத்தையும்  சிறிது  சிறிதாக  ஈட்டுதலில்  வெறுப்புறலாகாது  என்பது  கருத்து . )

     நல்ல   மனைவி,  மக்கள் , நண்பர்  ஆகிய  இவர்  பொருட்டும் , தானஞ்  செய்தற்  பொருட்டும் , இடையறாது  பொருளீட்டல்  நலமாகும் . இம்  மனைவி  மக்கள்  முதலியோர்  பொருட்டன்றிப்  பொருளாலும் , பணியாளர்களாலும் , வரக்கடவதாகிய  பயன்  யாதுளது?                    175

     எதிர்காலத்தில்  தனக்கு  வரக்கடவ  காரியங்களை  நிறைவேற்றுதற்குத்  தக்க  அளவு  பொருளை  முயன்று   காத்தல்  வேண்டும் . கல்வி  செல்வங்களை  யீட்டுங்கால் , “யான்  நூறு  யாண்டு  வாழ்ந்திருப்பேன் ; பொருட்  பெருக்கான்  மகிழ்ச்சி  யெய்துவேன் “  என்றிவ்வாறு  நினைவு  மேற்கொண்டு , இருபத்தைந்து  யாண்டு  வரையேனும் , அன்றி  அவ்வளவிற்  பாதியாகிய பன்னிரண்டரை  யாண்டுவரையேனும் , அவ்வளவிற்  பாதியாகிற  ஆறேகால்  யாண்டு  வரையேனும் , கல்வி  முதலியவற்றையும் , பொருளையும் , இடைவிடாது  ஈட்டித்  தொகுத்து  வைத்தல்  வேண்டும் .                  176-177

( ஒருவன்  கல்விச்  செல்வங்களை  ஈட்டுங்கால்  தன்  வாழ்நாள் நெடிதிருப்பதாகக்  கருதி  முயலவேண்டுமென்பதும் , அங்ஙனமின்றி  வாழ்நாளின்  குறுமை  கருதப்படுமாயின்  ஈட்டு  முயற்சி  தளர்ந்து  பயன்  செய்யாதென்பதுங்  கருதற்பாலன .)

     கல்விப்  பொருளொன்றே  எப்பொருளினு  மிகச்சிறந்ததாகும் , மற்றைப்பொருளெல்லாம்  அக்கல்வியை  மூலமாகக்  கொண்டு  உண்டாவனவாம் . அக்கல்விப்பொருள் , என்றுந்  தானத்தால்  வளர்ச்சி  யெய்துவதாகும் ; உடையார்க்குச்  சுமையுமாகாது ; பிறராற்  கவரப்படுவது மன்று .                                                                                      178

     ஒருவன்  நிறைந்த  பொருளுடையனா  யிருக்குங்காறும் , அவனை  யெல்லோருங்  கொண்டாடுவர் . பொருள்  ஒழிந்து  வறியனாயிருப்பின் நற்குணமுடையனாயினும் அவனை அவன் மனைவி, மக்கள் , முதலியோரும்  வெறுத்து  நீக்குவர் . இதனாற்  குடும்ப  வாழ்க்கைக்குப்  பொருளே இன்றியமையாச் சிறப்புடையதாகக் கருதப்படுவதாகும் . ஆதலின் மனிதரனைவரும் , உபாயங்களாலும் , துணிவுச் செயல்  களாலும்  அப்பொருளை  யடைவதற்கு  முயல  வேண்டும்.        179-180

     உயர்ந்த  குணமிக்க  மக்களும் , பொருளுடையாரது  வீட்டு  வாயிலில்  ஏவலாளரை  யொப்ப  நிற்கின்றனராதலின் , நல்ல  கல்வியினாலும் , உயர்ந்த  தொண்டுகளாலும் , வீரத்தாலும் , வட்டி  ஊதியத்தாலும் , வாணிகத்தாலும் , ஓவியம் , சிற்பம் , முதலிய  கலைகளாலும் , தானம்  பெறுதலாலும் , பிற  எத்தகைய  தொழில்களாலும்  நிறைந்த  பொருளை யுடையனாயிருக்கும்  வண்ணம்  முயன்றொழுகல்  வேண்டும் .                                            181-182

     பொருளுடையான்  குற்றங்களும்  குணங்களைப்  போலாகின்றன . பொருளில்லாதவன்  குணங்களுங்  குற்றங்களைப்  போலாகின்றன . ஆதலின் , பொருளற்ற  வறிய  மனிதன்  பிறரெல்லாராலும்  பழிக்கப்  படுவனாகின்றான் .                                                                                        183

     ஆற்றொணா  வறுமையை யடைந்தோருட்  சிலர்  மரணமெய்தினர்.  சிலர்  அயல்நாட்டை  யடைந்தனர் . வேறு  சிலர்  மலைக்கண்  எய்தினர் . மற்றுஞ்  சிலர்  தற்கொலையை  மேற்கொண்டனர் .           184

     பொருள் நிமித்தஞ்  சிலர்  அறிவு  மயக்க மெய்தினர் . வேறு  சிலர்  பகைவர்  வயப்பட்டனர் . மற்றுஞ்  சிலர்  பகைவரின்  ஏவலாளராயினர்

     ஒருவன் , தன்  பொருள்  இன்ன  இடத்தில்  இவ்வளவு  சேர்த்து  வைக்கப்பட்டிருக்கின்ற தென்பதைத்  தன்  மனைவி , மக்கள் , நண்பர்  ஆகிய  இவர்கள்  அறியாமலிருக்கும்  வண்ணம்  கடன்  கொடுத்து  எழுதிவாங்கும்  பத்திரங்களால்  அப்பொருளைப்  பேணிக்  காத்தல்  வேண்டும் .                                                                                                             186

( ஒருவனுக்குரிய  பொருள்  அவன்  மனைவி  முதலியோரால்  அறியப்படுமாயின்  அவர்   செலவிடக்  கருதுவராதலின்  அதனை  மேன்மேலும்   வளர்த்துக்  காத்தற்கியலாதென்பது  கருத்து . )

     கொடுக்கல்  வாங்கல்  செய்வோர்க்கு  எழுத்து  மூலமான  பத்திரங்களையன்றி  நினைவுறுத்துவது  வேறொன்று  மின்று . ஆதலின்  அப்  பத்திரமின்றி  அறிவுடையான்  ஒரு  பொழுதுங்  கொடுக்கல்  வாங்கல்  செய்தலாகாது .                                                       187

     ஒருவன் , தான்  திரட்டிச் சேர்த்த  பொருளை  உலோப  குணமில்லாதவன்பாலும் , பொருளாளன்பாலும் , வேந்தன்பாலும் , நம்பிக்கையுள்ளவன்பாலும் , பொறுமை  முதலிய  குணங்களாற்  சிறந்தவன்பாலும் , பத்திரமெழுதி  வாங்கிக்கொண்டு  வைத்துப்   போற்றல்  வெண்டும் .                                                                                       188

     ஒருவன்  மற்றொருவனுக்கு  நட்புரிமை  பற்றி  எப்பொழுதும்  வட்டியின்றி  யாசிதப் பொருள்  கொடுத்தல்  வேண்டும் . அந்  நண்பன்பால்  மிகுபொருள்  அங்ஙனம்  கொடுத்து  வைக்கப்பட்டிருக்குமாயின்  அவை  கேடில்லாதனவாம் .                      189

( யாசிதம் – இதனை  2-ஆம்  அத்தியாயம்  325 –ஆம்  சுலோகத்திற்  காண்க .)

     கடன்  கொள்ளுவோன்  வட்டியோடு  கொடுக்கல்  வாங்கல்  செய்தற்கு  ஆற்றலுடையனாதலை யறிந்து , எப்பொழுதும்  ஈடு குறித்தாதல்  பிணையினானாதல்  தக்க  சான்றுகளோடு  பத்திரம்  எழுதி  வாங்கிக்கொண்டு  , அப் பொருள்  மீண்டும்  வருங்கால் , எளிதாகவிருக்கும்  வண்ணம்  அளவின்  தகுதிநோக்கிப்  பொருள்  கொடுத்தல்  வேண்டும் . வட்டி  ஊதியத்தின்  பேராசையால் “எங்ஙனமாயினுமாக”  என்று  கருதிக்  கொடுத்தலாகாது . அங்ஙனங்  கொடுப்பின்  முதற்  பொருட்குக்  கேடுண்டாம் .                                190-191

 (ஈடு – பந்தகம் . இது  கொடுக்கப்படும்  கடன்  தொகைக்குத்  தகுதியான  நில  முதலிய  அடைமானமாகும் .)

      உண்டி  கொள்ளுங்காலும் , கடன்  கொடுத்தல்  முதலிய  வாணிகச்  செயல்களிலும்  நாணை  யொழித்த  மனிதன்  நலமுடையனாவான் . பொருளைக்கொடுத்தல்  நம்புரிமையை  உண்டாக்கும் . அது  கொடாமை  பகைமையை  உண்டாக்கும் .                                                192

( முதனூலிலுள்ள  “வியவஹாரம்”  என்ற  சொல்  கடன்  கொடுத்தல்  முதலிய  வாணிகச்செயல்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது ; உண்டியோடு  உடனெண்ணப்பட்டமையால்  சிற்றின்ப  நுகர்ச்சி  எனவும்  பொருள்  கொள்ளலாம். )

     மனிதன்  தன்னுள்ளத்தில்  வள்ளன்மையையும் , வெளியில்  ஈகையின்மையையும்  மேற்கொண்டு , உரிய   காலத்திற்  றகுதியான  செலவைச்  செய்தல்  வேண்டும் . உரியதல்லாத  காலமும் , தகுதியின்மையும்  நேர்ந்துழிச்  செலவிடலாகாது .                                  193

     மனிதன்  தன்  நன்மனைவி , புதல்வர் , நட்பாளர் ,ஆகிய  இவர்களைத்  தன்னாலியன்றவாறு   பொருள்  முதலியவற்றார்  காத்தல்  வேண்டும் . தன்  உடல்  அழியின்  அது  மீண்டும்  வாராமையானும் , தான்  உயிரோடு  கூடியிருப்பின்  பலவகை  நலங்களைக்  கண்டு  இன்புறக்  கூடுமாதலானும் , மனைவி  முதலியோர்  மீண்டும்  மீண்டும்   பெறற்பாலராதலானும்  அவ்வெல்லோரானுந்  தான்  காக்கப்படல்  வேண்டும் .                          194

7 . தந்தைவழிப்  பொருளைக்  கூறுசெய்யுமுறை

     நலத்தை  விரும்பும்  தந்தை , மனைவிமாரோடு  கூடி , வாழ்க்கையை  நடத்தும்  ஆற்றல்  வாய்ந்த  புதல்வர்களுக்கு , விரைந்து  தன்  பொருளைக்  கூறிட்டுக்  கொடுத்து , அவரைப்  பிரித்து  வைத்தல்  வேண்டும் .                                                                                        195

     மனைவிமாரோடு  கூடி  வாழ்க்கையை  நடத்துந்  திறன்  வாய்ந்த  தமையன்  தம்பிமார் , ஒரு  வயிற்றிற்  பிறந்தவராயினும், அவர்  தம்முட்  பிரிந்து  வாழ்தல்  நன்று . இன்றேற்  பெரும்பாலும்  அப்பிரிவின்மை   கேடு  விளைவிப்பதாகும் .                                            196                                                                      

( பிரிந்து  வாழ்தல்  –  தந்தைவழிப்பொருளை  முறைப்படி  கூறு  செய்து  கொண்டு  தனித்தனியே  குடும்ப  வாழ்க்கை  நடாத்தல் . இன்றேற்  கலகம்  விளையுமென்பது  கருத்து . )

     ஒரு  மனிதனுடைய  மனைவியர்  இருவர்  ஓரிடத்திற்  கூடி  இரார் . பொலி  எருதுகள்  இரண்டு  ஓரிடத்தில்   கூடி  இரா . அங்ஙனமாயின்  பெண்கள்  பலர்  தம்முட்  கூடி  வாழ்தலும் , எருதுகள்  பல  தம்முட்  கூடியிருத்தலும்  எங்ஙனம்  கூடும் ?                                                             197

இச் சுலோகப்பொருள், இதன்  முன்னுள்ள  சுலோகப்  பொருட்கு  ஏதுவாய்  நின்று  அப் பொருளை  வலியுறுத்தல்  காண்க.  இச்சுலோகத்தின் பிற்பாதிக்கு  “பசுக்கள்  பல  ஓரிடத்திற்  கூடிவாழும் ; மனிதர்  இருவர்  அங்ஙனம்  வாழ  ஒருப்படார்”  என்று  பொருள்  கோடலும்  பொருந்தும் . ) 

          ஒரு  குடும்பத்தலைவன் , வட்டி  ஊதியங்  கருதிப்  பிறர்பாற்  கடனாகக்  கொடுத்து  வைத்த  பொருளையும் , அங்ஙனமே  பிறர்பாற்  கடனாகக்  கொண்ட  பொருளையும்,  அவன்  புதல்வர்  கூறிட்டுக்  கொள்ளலாகாது .                                                                                                198

     ஒருவன் , எவனோடு  சிறந்த  நட்புரிமையைப்  பெற  விரும்புகின்றானோ  அவனுடைய  பொருளைப்  பெற  அவாவுதலும் , அவனது  மறைவிடத்தில்  அவன்  அறியாமற்  செல்லுதலும் , அவன்  மனைவியோடு  தனிமையில்  உரையாடுதலுங்  கூடாவாம் .  [அங்ஙனஞ்  செய்யின்   நட்புக்  கெடுமென்பது  கருத்து. ] இன்னும்  அவன்பாற்  குறையேறிட்டுக்  காண்டலும் , அவனுக்கு  எதிர்மறை யாகப்  பேசுதலும், அவன்  காரியத்திற்குத்  துணை  செய்யாமையும்  அவனுக்குத்  தீங்கு  நேர்ந்துழிப்  புறக்கணித்தலுமாகாவாம் .      199-200

     ஒருவன் , தன்  நண்பன்பால்  வட்டியுடனாதல் , அஃதில்லாமலாதல் , கடன்  வாங்கிய  பொருளைத்  திரும்பிக்  கொடுக்குங்கால் , இருவருடைய  நட்புரிமைக்குங்  கேடு  பயவாவண்ணஞ்  சான்றுகள்  இல்லாமலும் , கடன்  பத்திரத்தின்  பின்புறத்தில்  எழுதாமலும் , கடன்  கொண்டு  கொடுப்பதுபோல்  இல்லாமலும்  எளிதிற்   கொடுத்துவிடல்  வேண்டும் .                                                                                                      201-202

( உண்மையாக  ஆராய்ந்து  செய்த  நட்புரிமையுடையார்  தம்முட்  கடன்  கொண்டு  கொடுக்குங்கால் , சான்று  முதலியன  இல்லாமல்  நம்பிக்கை  மேற்கொண்டு  ஒழுகவேண்டுமென்பதும் , இன்றேல்  அந்  நட்புரிமைக்கு  இழுக்குண்டாமென்பதும்  தோன்றுதல்  காண்க .)

     தன்  குணங்களாலும் , தந்தை  தாயாரின்  குணங்களாலும்  பெருமையுடையவன்  உத்தமோத்தமனாவான் . தன் குணங்களான் மாத்திரம் பெருமையுடையான் தலையாவான். தன்  தந்தை  குணங்களான  மாத்திரம்  பெருமையுடையான்  இடையாவான் . தாய்  குணங்களான்  மாத்திரம்  பெருமையுடையான்  கடையாவான் . உடன்  பிறந்தாரின்  குணங்களான்  மாத்திரம்  பெருமையுடையான்  கடையிற்  கடையாவான் . தன்  மகள் , மனைவி , உடன் பிறந்த  பெண்மக்கள் , ஆகிய  இவர்களாற்  பெருமையுடைய  மனிதன்  மிக  இழிந்தவனாகக்  கருதப்படுவான் .                                                       203-204

8 . கொடை மாட்சி

     அறிவுடையான் , பொருள்  மிகவுடையனாய்த்  தன்னாற்  காக்கப்  படுங்  குழுவை  நன்கு  காத்தல்  வேண்டும் . பிறர்க்குச்  சிறிதேனும்  ஈயாமல்  ஒரு  நாளையேனும்  வறிதாகக்  கழித்தலாகாது .              205

     “யான்  கூற்றுவன்  வாயில்  இருக்கின்றேன் ; என்  வாழ்நாள்  ஒரு  கணமேனும்  நிலையுறுதல்  உடைத்தன்று ; தானம்  தருமம் இவை  களையன்றி  மறுமையில்  எனக்குத்  துணையாவன  பிறவில்லை; இவ்  வுலகம்  கொடைக்குணம்  வாய்ந்தோரைப்  பற்றி நிலைபெறுவதாகும். அக்குணம்  இல்லாத  தீயோரைப்  பற்றி  நிலைபெறுவதன்று “  என்றிவ்வாறு  எண்ணித்  தான்  விரும்பியவாறு  ஒல்லும்  வகையால்  தான  தருமங்களை  நன்கு  செய்தல்  வேண்டும் .                              206-207

     கொடையாற்  பகைவரும்  நண்பராவரெனின்  மற்றையோரைப்  பற்றிக்  கூறவேண்டுவதேன் ?                                                                        208

     கடவுளர்க்கும் , வேள்விக்கும் , அந்தணர்க்கும் , பசுவோம்பற்கும்  கொடுக்கப்படும்  பொருள்  மறுமையின்பம்  பயப்பதாகும் . அது [சம்வித்தத்தம்] அறிவுடைக் கொடையென்று  கூறப்படும் .                    209

     வந்தியர் , மாகதர்  மல்லர்  முதலியோர்க்கும் , ஆடல்  பாடல்களுக்கும்  கொடுக்கப்படும்  பொருள் [பாரிதோஷிகம்] பரிசிற்  கொடையாகும் . புகழ்ப்பயன்  கருதிக்  கொடுக்கப்படும்  பொருள் [சிரீதத்தம்] செல்வக்  கொடையென்று  கூறப்படும் .                                210

( வத்தியர் – புகழ்வோர். மாகதர் – இருந்தேத்துவர் . மல்லர் – மற்போருஞற்றுவோர் .)

     நண்பர் , சம்பந்திமார் , உறவினர் , ஆகிய  இவர்களிடத்தும், விவாக  முதலிய  காரியங்களிலும் , ஆன்றோராசாரப்படி  உபாயனமாகக்  கொடுக்கப்படும்  பொருள் [லஜ்ஜா தத்தம்] நாண் கொடை யென்று கூறப்படும் .                                                                                                           211

(உபாயனம் – பெரியோரைக்  காணும்பொழுதும்  நற்காரியங்களிலும்  மகிழ்ச்சியுண்டாதற்பொருட்டுக்  கொடுக்கப்படும்  உபகாரப்பொருள் . இதனைச்  சேதுபுராணம்- சேதுப்படலம் 90-ஆம்  செய்யுளிற்  காண்க .)

     அரசனுக்கும் , வலியவர்க்கும் , காரியம்  நிறைவேறுதற்பொருட்டு  அக்காரியத்திற்குக்  கேடு  விளைப்போர்க்கும்  கொடுக்கப்படும்  பொருளும் , கொடாதிருப்பிற்  பாவம்  நேரிடுமென்னும்  அச்சங் காரணமாகக்  கொடுக்கப்படும்  பொருளும்  [பய தத்தம்] அச்சக்கொடை  என்று  கூறப்படும் .                                                              212

     மக்களுக்குத்  துன்பம்  விளைவிக்குந்  தீய  விலங்குகளுக்கும்  பிறர்  மனைவியரைப்  புணர்தற்பொருட்டுங்  கொடுக்கப்படும்  பொருளும் , சூது  முதலியவற்றால்  இழந்த  பொருளும் , கற்வராற்  கவரப்பட்ட  பொருளும் [பாப தத்தம்] தீவினைக்கொடை யென்று கூறப்படும். 213

     எத்தெய்வத்தை  வழிபடுகின்றானோ  அத்தெய்வத்தை  மற்றைத்  தெய்வங்களிலும்  மிகச்  சிறந்ததாகப்  பாராட்டிக்  கூறல்  வேண்டும் . அத்தெய்வத்திற்குக்  குறை  கருதலாகாது . அத்தெய்வத்தின்  பொருட்டு  மகிழ்ச்சியோடு  வணக்கஞ்  செய்தல்   வேண்டும் .          214

     கொடை , நேர்மை ஆகிய  இவ்விரண்டுமன்றிப்  பிறரைத்  தன்வயப்படுத்தும்  உபாயம்  மற்றொன்று  இந்நிலவுலகத்தில்  இன்று . இதனாலன்றே , கொடையாற்  குறைந்தவனும் , மீண்டும்  மீண்டும்  வளர்ச்சி  யெய்தும்  இயல்பினனுமாகிய  திங்களஞ்  செல்வன் , கோட்ட முடையோனாயினும்  நலமுடையவனாகவே  கருதப்படுகின்றான் . 215

( கொடையாற்  குறைதல் – தேவர்கள்  தன்  கலைகளை  உண்ணக்கொடுத்தலாற்  குறைதல் . கோட்டம் – வளைவு .) 

      நட்பினையாதல் , பகையினையாதல்  ஆராய்ந்து   தெளிந்துகொள்ளல்  வேண்டும் . அங்ஙனங்  கொண்டபின்  பிறழ்தலும்  நட்டோர்க்குத்  தீங்கு  செய்தலும் , பகைவர்க்கு  உதவி  செய்தலுங்  கூடாவாம் . அங்ஙனஞ்  செய்யின்  அவ்விருதிறத்தாருந்  துன்பம்  விளைவிப்பவராவர் .                                                                                          216

     மிக்க  வன்கண்மை , மிக்க  வஞ்சகம் , மிக்க  எளிமை , மிகைபடப்  பேசல், ஒரு  காரியத்தின்  மிகுபற்று , கடுஞ்சினம்  ஆகிய   இவற்றை  மேற்கொள்ளலாகாது .                                                                                      217

     எல்லாம்  அளவின்  மிகுதல்  அழிவிற்குக்  காரணமாகும் , ஆதலின் , எவற்றினும்  மிகையாதலை  யொழித்துவிடல்  வேண்டும் . மனிதர்  மிக்க  வன் கண்மை  கண்டுழி  நடுக்கமெய்துவர் ; தகுதி  நோக்கியும்  பொருளைச்  செலவிடாது  திரட்டி  வைக்கும்  விருப்பங்கண்டுழி  மிகவும்  பழித்துரைப்பர் .                                                                                 218

     மிக்க  எளிமை  கண்டுழிப்  பொருட்படுத்தெண்ணார் . மிகைபடப்  பேசுதலான்  மானக்கேடும் , மிக்க  கொடையால்  வறுமையும் , மிக்க  உலோபத்தால்  இகழ்ச்சியும்  உண்டாவனவாம் .                                      219

     கடுஞ்சினத்தான்  மனிதர்க்கு  அறிவின்மை  யுண்டாம் . ஆசார மின்மையால்  அறத்திற்குக்  கேடும் , அளவின்மிக்க  ஆசாரத்தால்  மூர்க்கத்தன்மையும்  உண்டாவனவாம் .                                                      220

( மூர்க்கத்தன்மை – அறிவின்மை .)

     அறிவுமிக்க  மனிதன் , “யானே  எல்லோரினும்  மேம்பட்டவன்”  என்றும் , “யானே  எல்லோரினுஞ்  சிறந்த  அறிவுள்ளவன் “  என்றும் , “அறத்தின்  உண்மை  இதுதான் “  என்றுங்  கருதலாகாது .                221

( பல்வகை  அறப்பகுதிகளை  யாராய்ந்து  அவற்றுள்  ஒன்று  மற்றொன்றோடு  முரணாமல்  இயைத்து  உண்மை  துணிதல்  மிக  அரிதாகலின் , அறிவுடையோன்  அறத்தின்  உண்மை  இதுதான்  என்று  ஆராய்ச்சியின்றி  எளிதில்  துணிந்துவிடலாகாதென்பது  கருத்து . )

     கடல்  நீரில்  வாழும்  திமி  எனப்  பெயரிய  பெரிய  மீனை   விழுங்குவது  திமிங்கிலமாகும் ; அத்  திமிங்கிலத்தையும்  விழுங்கும்  திமிங்கிலகில  மென்னும்  மீனும்  உள்ளது ; அதனையும்  விழுங்கும்  இராகவம் எனப் பெயரிய ஒரு பிராணியு முள்ளது. அதனையும் விழுங்கும் மற்றொரு  பெரிய  பிராணியும்  இருக்கின்றது  என்னு மிவ்வுண்மையை  யுணர்ந்து  எப்பொழுதும்  நினைவுகூர்தல்  வேண்டும் .                                                                                                        222

( இதனால் , ஒருவன்  எவ்வெத்துறைகளிற்  சிறந்துளானாயினும்  அவ்வத்துறைகளில்  தன்னினுஞ்  சிறந்தார்  இருப்பரென்னும்  உண்மையையுணர்ந்து  அடங்கி  நடத்தல்  வேண்டும்  என்பது  புலப்படும் .)

     ஒருவன்  கடவுளர்க்கும் , பசுக்களுக்கும் , அந்தணர்களுக்குந்  தலைவனாயிருக்குந்  தன்மையை  விரும்பலாகாது . அங்ஙனம்  விரும்புவானாயின் , அஃது  அவன்  குலமுழுதுங்  கெடுத்து  மிக்க  துன்பம்  விளைவிப்பதாகும் .                                                                           223

( பசுக்களுக்குத்  தலைவனாயிருக்குந்  தன்மையை  விரும்பலாகாதென்றது , பசுவின்   உடம்பு  முழுதிலும்  தேவர்கள்  வாழ்கின்றனரென்று  முதுநூல்  கூறுகின்றமையால் , அப்பசுவை  வைத்திருப்போன்  அதனை   வேண்டுவன  உதவிக்காத்து , அதன்  பயனைப்  பெற  வேண்டுமேயன்றித்  தனக்கு  அடிமைப்பட்டதாகக்  கருதித்  தான்   நினைத்தவாறெல்லாம்  வருத்தலாகாதென்பது  பற்றியாம் .)

     அக்கடவுளர்  முதலியோர்பால்  முறையே  எப்பொழுதும்  பத்தி  பூண்டொழுகல் , பூசித்தல் , பணிவிடை  செய்தல்  ஆகிய  இவற்றை  விரும்பல்  வேண்டும் . எவர்மாட்டு  எத்தகைய  பிரமதேசசு  நிலை  பெற்றிருக்கின்ற தென்பது  அறியக்கூடாததொன்றாகும் .                   224

( கடவுளர்பால்  பத்தி  செய்தலும் , பசுக்களைப்  பூசித்தலும் , அந்தணர்க்குப்  பணிவிடை  செய்தலும்  வேண்டுமென்பதாம் . அறியக்கூடாததொன்றென்பது  , ஆராய்ந்தறிந்து  செய்தலின்  அருமையையும் , ஆராய்ச்சியின்றியே  இவ்வொழுக்கங்களை  மேற்கொள்ள வேண்டுமென்பதையும் , அங்ஙன  மேற்கொள்ளின்  அத்  தேசசு  யாண்டேனும்  ஓரிடத்திலிருந்து  நலஞ்   செய்தல்  கூடுமென்பதையும்  புலப்படுத்தி  நிற்பதாம் . )

     இளம்  பெண்ணையும் , பொருளையும் , சுவடியையும் , பிறர்  ஆட்சியில்  வைத்தலாகாது . அங்ஙனம்  வைக்கப்பட்டுத்  தெய்வவயத்தான்  மீண்டெய்துங்கால்  முறையே  இளம்  பெண்  கற்பிழந்தும் , பொருள்  கேடுற்றும் , சுவடி  கசக்குண்டும்  வரும் . 225

     அறிவுடையான்  சிறு  காரணத்தை  முன்னிட்டுப்  பெரும்  பொருளைச்  செலவிடலாகாது . ஒரு  பொழுதும்  அபிமானத்தாற்  பெரும்பொருளை  செலவிட்டுச்  சிறிய  காரியத்தை  நிறைவேற்ற  முயலலாகாது .                                                                                                226

(ஒத்ததன்மை-முறையே  நன்மையாகவும் , தீமையாகவும்  கொள்ளப்பட்டமையாலாகிய  வேற்றுமையின்மை )

     பெரும்பொருள்  செலவாகிவிடுமென்னும்  அச்சத்தால்  நல்ல  புகழை  எப்பொழுதும்  இழந்துவிடலாகாது . படைவீரர்  தகாத  சொற்களைக்  கூறின் , அது  குறித்துப்  பொறாமை  மேற்கொண்டு அவர்மாட்டுச்  சினங்  கொள்ளலாகாது .                                                 227

     அறிவுடையான் , தன்  நண்பனுக்கு  நாண்  விளைப்பதும் , வேறுபாடுண்டாகுவதும் , மனத்தைத்  துன்புறுத்துவதும்  ஆகிய  சொல்லை  விளையாட்டு  நிமித்தமாகவும்  ஒரு  சிறிதும்  கூறலாகாது .

     எவன்பால்  நன்மொழியும் , தீ மொழியும்  , பயனின்றி  ஒத்ததன்மை  யெய்துவனவோ , அவன்பால்  அறிவுடையான்  செவிடனிடத்து  இசை  பாடுவோனைப்  போல  ஒன்றும்  பேசலாகாது .                                       229

     தன்  நண்பன்  கள்  காம  முதலிய  தீய  ஒழுக்கங்களிற்  றலைப்படின் , அவனை  அவற்றினின்றுந்  தன்னாலியன்றவரை  இதங்கூறி  மீட்டல்  வேண்டும் . அங்ஙனம்  மீட்க  முயன்றிலனேல்  அவனை  அறிவுடையார்  இரக்கமற்றவனென்று  எண்ணுவர் .             230

     உடன்பிறந்தார்  முதலிய  சுற்றத்தினர் , தம்முண்  மன  வேற்றுமை  யடைந்திருக்குங்கால் , அவர்தம்  நண்பர்  எவ்வாற்றாலும்  ஒருதலைச்  சார்பின்றி  நடுநிலையை  மேற்கொள்ளல்  வேண்டும் . இன்றேல்  அவரை யறிவுடையார்  நட்புரிமையுடையவராக  மதியார் .                 231                    

     மக்கண்மனம் , தன்பாலழுந்திய  கடுஞ்  சொல்லாகிய  அம்பின்  கூறிய  நுனியைப்  பிடுங்கியெடுக்கும்  ஆற்றலுடையதன்றாதலின்,  பிறந்த  நாட்டொட்டுப்  பயிலப்பட்டதும் , கொடையினாலும் , பிற  சிறப்புக்களாலும்  காக்கப்பட்டதும் , ஆகிய  நட்புரிமையை  யுடையார், கடுஞ்சொற்  கூறுதலான் , அப்பொழுதே  அந்நிலை  மாறிப்  பகைமை  யெய்துவர் .                                                                                                          232

( தன்பால் – மனத்தின்பால் .)

     ஒருவன் , தன்னாற்றலினும்  மேம்பட்ட  ஆற்றலுடையவனாகத்  தன்  பகைவன்  இருக்குங்காறும்  அவனைத் தன் றோளினாற்  றாங்கல்  வேண்டும் . அப்பகைவன்  ஆற்றற்கு  அழிவு  நேரக்கண்டவிடத்துக்  கல்லிற்  குடத்தை  மோதித்  தகர்த்தல்போல்  அப்பொழுதே  அவனைத்  தொலைத்துவிடல்  வேண்டும் .                                                                      233

9 . குணஞ்  செயல்களின்  நன்மை  தீமைகள்

     ஒருவனுக்கு  நன்மக்கட்டன்மையாகிய  குணமே  சிறந்த  அணிகலனாகும் . மற்றை  அணிகலன்களும் , அரசியலும் ஆண்மையும் , கல்வியும் , பொருளும்  அத்துணைச்  சிறந்த  அணிகலன்களாகா .                                                                                          234

( நன்மக்கட்டன்மை – இதனை “ஸெளஜந்யம்”  என்று  முதனூல்  கூறும் .)

     குதிரைக்கு  விரைந்து  செல்லுதலும் , எருதுக்குச்  சுமை  தாங்கலும் , பசுக்களுக்கு  மிக்க  பால்வளமும் , இரத்தினத்திற்கு  ஒளியும் , அரசர்க்குப்  பொறுமையும் , விலைமகட்குக்  காமக்குறிப்பும்   அதனைப்  புலப்படுத்தும்  இன்பச்செயலும் , இசை  பாடுவார்க்கு  இனிய  குரலும் , பொருளுடையார்க்குக்  கொடைக்குணமும் , போர்  வீரர்க்குப்  பராக்கிரமும் , தவஞ்செய்வார்க்குப்  பொறி  யடக்கமும் , புலவர்க்குச்  சொல்லாற்றலும் , அவைக்களத்  திருப்போர்க்கு  ஓராங்  கூறாமையும் , சான்று  கூறுவார்க்கு  உண்மை  யுரைத்தலும் , ஏவலாளர்க்குத்  தம்  தலைவன்பாற்  சிறப்பன்பும் , அமைச்சர்க்கு  நலந்தரு  சொற்  கூறலும் , அறிவிலார்க்கு  வாய்வாளாதிருத்தலும் , பெண்களுக்குக்  கற்புடைமையும்  சிறந்த  அணிகலன்களாம் . இங்குக்கூறிய  குதிரை  முதலிய வற்றிற்கும்  அரசன்  முதலியோர்க்குங்  கூறப்பட்ட  குணஞ் செயல்கள்  மாறுபட்டிருப்பின் , அவை  அவற்றிற்கும்  அவர்க்கும்  நலனழிக்கும்  பெரிய  விகாரப்  பணிகளாகும் .                                                                                            235-238

     ஒரு  தலைவனுடைய  இல்லம் , பல  குடும்பங்களாலும் , விளக்குகளாலும் , பசுக்களாலும் , அழகிய  குழந்தைகளாலும்  எப்பொழுதும்  விளக்க  முறுவதாகும்  . பல  தலைவர்களையுடைய  இல்லம்  அங்ஙனம்  விளங்குவதின்று .                                                       239

     ஆற்றலுடையான்  பொல்லாங்கு  புரியும்  உயிர்களைப்  பொருட்படுத்தாமலிருத்தலாகாது . அவ்வுயிர்களைக்  கண்ட  அக்கணத்தே  கொன்றுவிடல்  வேண்டும் .                                                 240

     பிற  நற்குணங்களெல்லாம்  நிரம்பிய  ஒருவனிடத்துக்  குறளை  கூறல் , கொடுந்தன்மை , கனவு , அழுக்காறு , மிக்க  உலோபத்தன்மை , பொய்மை , காரியக்கேடு  விளைவிக்குந்  தன்மை , சோம்பல்  ஆகிய  இவற்றுள்  ஒன்றிருப்பினும்  அஃது  அவன்  நற்குணங்களனைத்தையும்  மறைத்துத்  தானே  முன்னின்று  மிக்க   தீங்கை  விளைவிக்கும் .      241

     ஒருவன்  பாலப்பருவத்தில்  தாயை  இழத்தலும் , காளைப்பருவத்தில்  காதலியை  இழத்தலும் , முதுமைப்பருவத்தில்  புதல்வரையும்  பொருளையு  மிழத்தலும்  அவனுடைய  பெரிய  தீவினைப்  பயன்களாம் .                                                                                   242

( பாலப்பருவம்  காளைப்பருவம்  முதுமைப்பருவங்களில்,  முறையே  தாயையும், மனைவியையும் , புதல்வரையும் , பொருளையும்  இழத்தலால் , வளர்க்கப்படுதலும்  இன்ப  நுகர்ச்சியும்  உற்றிடத்துதவலும்  இல்லாமல்  கவர்ச்சி  யெய்தநேருமாதலின் , அவை  பெரிய  தீவினைப்  பயன்களாம்  என்றார் . )

     பொருளுடையார்க்குப்  புதல்வர்ப்  பேறின்மையும் , வறியவர்க்கு  அறிவில்லாத்  தன்மையும் , பெண்களுக்கு  ஆடவர்  அலியாயிருத்தலும் விரும்பிய  பொருள்  கைகூடாமையும்  நலஞ்  செய்வன வல்லவாம் . 243

     ஒருவனுக்குத்  தன்  புதல்வன்  அறிவிலனாகவிருத்தல் , புதல்வி  அறிவிலளாகவிருத்தல் , மனைவி  மிக்க  சினமுடையவளாகவிருத்தல் , வறுமை , இழிந்தோரிடத்துப்  பணிசெய்தல் , என்றுங்  கடனாளியாயிருத்தல்  ஆகிய  இவ்வாறும்  நலந்தருவனவல்லவாம் . 244

     பிறர்க்குக்  கல்வி  பயிற்றுதலிலும் , தான்  கல்வி  பயிலுதலிலும் , தேவர்களிடத்தும் , குரவர்பாலும் , அந்தணரிடத்தும் , ஓவியஞ்  சிற்பம்  முதலிய  கலைகண்மாட்டும் , இசையின்   கண்ணும் , பணி செய்தலிலும் , காவிய  முதலியவற்றினும்  எவன்  மனம் இன்புறு தலில்லையோ  அவன்  துறவியாக , அன்றிக்  கயவனாக , அன்றி  மனித  வுருவந்  தாங்கிய  விலங்காக  இருத்தல்  வேண்டும்.         245-246

( குரவர் ஈண்டுத் துறவியை  நோக்க  ஞானாசிரியனல்லாத  வித்தியாகுரு , கிரியாகுரு , தந்தை , தாய்  முதலியோராவர் . துறவியின் மனம்  கல்வியி லின்புறாமையை  “கற்றாரை  யான்  வேண்டேன்  கற்பனவு  மினியமையும் “  “கல்வியென்னும்  பல்கடற்பிழைத்தும்”  என்னுந்  திருவாக்குக்களானறிக . அவர்  மனம்  தேவர்களிடத்து  இன்புறாமை – இந்திரன்  முதலிய  இறையவர்  பதங்களை  விரும்பாமை . அந்தணர்,  ஈண்டு  வருணத்தைக்  குறிப்பதாகும் . அவரிடத்தின்புறாமை – பற்றறத்   துறந்தார்க்கு  வருண  வேறுபாடு  பற்றிய  உணர்வின்மையானாம் . தவம் , ஈண்டு  அணிமா  முதலிய  எண்வகைச்  சித்திகளையும்  அளிக்கவல்லது . அதன்கண்  மனம்  இன்புறாமை  முற்றத்  துறந்தார்க்கு  இயல்பாகும் . )

     பிறர்  ஆக்கங்கண்டு  பொறாமையும் , பிறரிடத்துப்  புரைவழி  காண்டலும் , பிறர்   பழி  தூற்றலும் , பிறர்க்கின்னா  செய்யுங்  குணமும் , மலர்ந்த  முகமும் , இருண்ட  அகமும்  உடையவன்  கயவனென்று  கூறப்படுவான் .                                                         247                                                                                              

     பிரமாண்டத்திற்  றோன்றியுள்ள  எல்லாப்பொருள்களும்  பேரவாமிக்க  ஒருவனது  விருப்பத்தை   நிறைவிக்கச்  சிறிதும்  போதியன  வாகாவாம் .                                                                             248

     அவா  மிக்குடையான்  செய்யத்தகாத  காரியத்தைச்  செய்வான் ; பிறரையும்  அத்தகாத  காரியத்தைச்  செய்யும்படி  போதிப்பான் ; அத்தகாத  செயலை  நோக்கி  மகிழ்ச்சியும்  அடைவான் .               249

     படிற்றொழுக்க முடையார்  எப்பொழுதும்  பிறர்க்கு  உபதேசிக்குங்கால்  மிகவும்  நல்லவராக  இருப்பர் . பின்னர்  அவர்கள்  தம்பொருட்டு  நேர்ந்துழிச்  செய்யத் தகாத  காரியங்களெல்லாவற்றையும்  தானே  துணிந்து  செய்வர் .            250

( படிறு – வஞ்சகம் .)

     தந்தை  தாயார்  ஆணைவழி  நிற்பவனும் , அவர்க்குப்  பணிவிடை  செய்வதிற்  சோம்பலில்லாதவனும் , அவரை  நிழல்போற்  பிரியாது  எப்பொழுதும்  பின்றொடர்ந்து  செல்பவனும் , பொருள்  வருவாயில்  முயல்பவனும் , எல்லாக்  கலைகளிலுந்  திறமை  வாய்ந்தவனும்  ஆகிய  புதல்வன் , அவ்விரு  முதுகுரவர்க்குப்  பெரிதும்  இன்பஞ்  செய்பவனாவன் . இங்குக்  கூறியவற்றின்  மாறுபட்ட  தீய  குணங்களையும் , பொருட்கு  அழிவு  செய்தலையும்  உடைய  புதல்வன்  தந்தை  தாயார்க்கு  என்றுந்  துன்பஞ் செய்பவனாவன் .             251-252

     கணவன்பால்  எப்பொழுதும்  உண்மைக் காதலையும் , வீட்டுக்  காரியங்களில்  திறமையையும் , புதல்வரைப்  பெறுதலையும் , சிறந்த  கற்பொழுக்கத்தையும் , நல்ல  யெளவனத்தையும்  உடைய  பெண்  தன்  தலைவனுக்கு  இன்பஞ்  செய்பவளாவள் .                                      253

     தன்  மக்களைப்  போற்றி  வளர்ப்பவளும் , அம்மக்கள்  செய்யுங்  குற்றங்களைப்  பொறுத்துக் கொள்பவளும்  ஆகிய  தாய்  எப்பொழுதும்  மக்களை  இன்புறுத்துபவளாவள் . இவற்றின்  மாறுபட்ட  குணங்களையுடைய  கற்பொழுக்கிறந்த  தாய் , தன்  மக்களுக்கு  எப்பொழுதும்  மிக்க  துன்பந்  தருபவளாவள் .                                         254

     புதல்வனுடைய  கல்வி  வளர்ச்சியின்  பொருட்டும் , அவன்  வாழ்க்கையின்  பொருட்டும்  முயற்சியை  மேற்கொள்ளுபவனும் , எப்பொழுதும்  புதல்வனை  நல்லன  கூறி  நன்னெறிப்படுத்துபவனும் , கடன்  எச்சமில்லாதவனும்  ஆகிய  தந்தை  புதல்வனுக்கு  இன்பஞ்  செய்பவனாவன் .                                                                                                255

     எப்பொழுதுந்  துணை  செய்தல் , எவன்மாட்டும்  மாறுபடப்  பேசாமை , உண்மையானவும்  நலம்பயப்பனவுமாகிய  சொற்களைக்  கூறுதல்  ஆகிய  இவற்றை யுடையோனே , நட்புரிமையை  யெய்துபவனும் , அதனைப்  பிறர்க்குக்  கொடுப்பவனும் , அதனைப்  பிறர்பானின்றும்  பெறுபவனும்  ஆவன் .                                                    256

     கீழ்மக்களோடு  நெருங்கிப்  பழகுதலும் , பிறர்  இல்லத்திற்கு  எப்பொழுதுஞ்   செல்லுதலும் , சாதியிலுங்  குழுவிலும்  மாறுபட  ஒழுகுதலும்  வறுமையையும்  மானக்கேட்டையும்  விளைவிப்பனவாம் .

( சாதியில்  மாறுபட  ஒழுகல் – அவ்வச்சாதிகளில்  விதித்த  நியமங்களில்  தப்புதல் . குழுவில்  மாறுபட  ஒழுகல் – இன்ன  இன்ன  நியமங்களின்படி  ஒழுகல்  வேண்டுமென்று  தீர்மானித்த  கூட்டத்தில்  இசைந்து  சேர்ந்த  ஒருவன்  இடைக்கண்  அந்  நியமம்  தவறி  நடத்தல் . )

     வேந்தனையடுத்துப்  பணிசெய்தல்  பற்றிப்  பிறரை  மதியாது செருக்குறுதல்  நலம்  விளைப்பதன்று . அங்ஙனமே  புலி , நெருப்பு பாம்பு , மற்றைத்துன்பம்  விளைவிக்கும்  உயிர்கள்  ஆகிய  இவற்றோடு  நெருங்கிப்  பழகுதலும் நலந்தருவதன்றாம் . அரசன்  எவற்குத்தான்  நட்பாளனாவன் ?   புலி  முதலியனவும்  எவற்கு  நட்புரிமையுடையனவாம்? [அரசனும்  ஒருவன்  வயப்படான் ; புலி  முதலியனவும்  ஒருவன்  வயப்படா  என்றபடி.]                                            258

நட்டோர்  தம்முள்  மனவருத்தம்  நேர்தலும் , எப்பொழுதும்  பகைவர்க்கு  மேம்பாடுறுதலும் , புலவர்  மாட்டு  வறுமையும் , வறுமைக்காலத்துப்  புதல்வர்  பலரைப்  பெறுதலும் , பொருளுடையார்  குணமுடையார்  மருத்துவர்  அரசன்  இவர்களில்லாத  நீர்வளமற்ற  இடத்தில்  என்றும்  வாழ்தலும் , தாய்  தந்தையர்க்குப்  பெண்  மகவு  ஒன்றே  பிறத்தலும் , இறத்தலும்  துன்பந்  தருவனவாம் .                 259-260

( அரசன்  என்பது  ஈண்டு  அரசனையும் , அரசியற்றொழில்  புரியும்  மற்றை  அதிகாரிகளையும் , அரசாட்சியையும்  புலப்படுத்துவதாகும் .)

     தலைவன் , தான்  சிறந்த  அழகும் , நிறைந்த  பொருளும்  , புலமையும் , மிக்க  வலிமையும்  உடையனாயினும்  பெண்கள்  விரும்பியவண்ணம்  தன்  காதற்  கிழமையைப்  புலப்படுத்திலனேல் , அவன்  அப்பெண்களுக்கு   இன்பம்  விளைவிப்பவனாகான் .               261

     தலைவன் , பெண்கள்  விரும்பியவாறு  தன்  காதற்  கிழமையைப்  புலப்படுத்தியொழுகுவானாயின் , மடித்தல்  முதலியவற்றிற்   றாங்குதலாலும் , சீராட்டலாலும்  குழந்தைகள்  ஒருவனுக்கு  வயப்படுதல்  போல்  அவனுக்கு  அப் பெண்கள்  வயப்படுவர் .             262

     அறிவுமிக்க  மனிதன் , ஒரு  காரியத்தைச்  செய்யுங்கால்  அதற்குத்  துணையாக  வேண்டுவனவற்றையும் , அதற்குரிய  செலவையும் , அதனாலுண்டாகும்  பயனையும்  நன்கு  துணிந்து  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் . அங்ஙனமாராயாது  ஒரு  சிறு  காரியத்தையும்  ஒரு  பொழுதுஞ்  செய்தலாகாது .                                                                  263

     அறிவுடையான் , மிகுந்த  செலவிற்  குறைந்த  ஊதியந்   தரத்தக்க  காரியத்தைச்  செய்தற்கு  விரும்பலாகாது . முயற்சியுடையார்  குறைந்த  செலவில்  மிகுந்த  ஊதியந்  தரத்தக்க  காரியத்தைச்  செய்தல்  வேண்டும் . எப்பொழுதும்  விலைப்  பண்டங்களின்  அளவினையும்  விலையையும்  உண்மையாக  விசாரித்தறிதல் வேண்டும் .                                                                                                         264

     ஒருவன்  தவஞ்செய்தலிலும் , தன்  மனைவியின்பால்  இன்பம்  நுகர்தலிலும் , உழவுத்தொழில்  செய்வதிலும் , ஆலய  வழிபாடு  முதலிய  பணிகளிலும் , உணவு  செய்வதிலும் , மற்றை  நுகர் பொருள்களிலும்  தனக்குப்  பிரதிநிதியாக  மற்றொருவனை  நியமனஞ்  செய்தல்  தக்கதன்று . இவையல்லாத  பிற  காரியங்களில்  அப் பிரதிநிதி  நியமனம்  எப்பொழுதும்  பொருந்துவதாகும் .    265                   

     இனிய  உணவை  உண்ண  விரும்புவோனும். மறைந்தொழுகுங்  காமுகனும் , கள்வனும் , எப்பொழுதும்  மக்கள்  வழங்குதலில்லாத  இடத்தை  விரும்புவர் . வலிமை  மிக்க  பகைவரை  யுடையான்  துணையையும் , விலைமகள்  பொருண்மிக்காரின்  நட்புரிமையையும், இழிந்த  அரசன்  வஞ்சகத்தையும் , இழிந்த  ஏவலாளன்  தலைவன்  பொருளையும் , அறிவுடையான்  உண்மைப் பொருளையும் , தேவர்கள்  வழிபட்டுச்  சீவிப்போன்  இடம்பம் , தவம் , நெருப்பு  , ஆகிய  இவற்றையும்  விரும்புவர் .                                                                        266-267

 ( தேவர்களை  வழிபட்டுச்  சீவிப்போன் – வேள்வி  முதலியன   செய்வித்துப்  பொருள்  பெறுவோன் . ) 

     கற்புடையவள்  தன்  கணவனையும் , அஃதில்லாதவள்  சோர  நாயகனையும் , நோய்  கோட்பட்டான்  மருத்துவனையும் , விலைப் பண்டமுடையான்  விலையளவின்  மிகுதியையும் , இரப்பவன்  வள்ளன்மை யுடையானையும் , அச்சமுடையான்  காப்பவனையும் , தீயவன்  பிழைநெறியையும்  விரும்பித்  தேடுவர் .                                   268

     அறிவிலான் , கொடுந்தன்மையையும் , கலகத்தையும் , மிகுதுயிலையும் , களிப்பு  மயக்கந்  தரும்  பொருளை  உண்ணுதலையுமுடையனாய் , வீண்  செயலையும் , தன்  விருப்பத்திற்குக்  கேடு  விளைக்குங்  காரியத்தையுஞ்  செய்வான் . 269

10 . நல்லொழுக்க  மிக்க  அந்தணர்  பெருமை

     அரசரைப்பற்றிய  மாணொளி  தமோகுணத்தை  மிகுதியாக வுடையது . அந்தணரைப்  பற்றிய  மாணொளி  சத்துவகுணத்தை  மிகுதியாக வுடையது . இவரை யல்லாத  மற்றையோரைப்  பற்றி  நிற்கும்  மாணொளி  இராசதகுணத்தை  மிகுதியாக வுடையது . இம்மூவகை  மாணொளிகளுள்  சத்துவ  குணத்தை  மிகுதியாக வுடையதே  சிறந்ததாகும் .                                                                          270

( மாணொளி – தேசசு.)

     அந்தணன்  தனக்குரிய  ஒழுக்கங்களால்  மற்றை  எல்லோரினுஞ்  சிறந்தவனாவான் . அவ்வந்தணனது  மாணொளியிற்  சிறிது  குறைந்த  மாணொளிகள்  அரசர்  முதலியோரிடத்து  உள்ளனவாம் .              271

     அந்தணனொருவன்  தன்  கடமையிற்  பிறழாதொழுகுதலைக்   கண்டுழி  அரசர்  முதலிய  பிறரெல்லோரும்  அச்சமெய்துவர். அவ்வந்தணன்  பிறப்பொழுக்கங்  குன்றுவானாயின்  பிறர்  அங்ஙனம்  அஞ்சுவாரல்லர்  . ஆதலின் , அந்தணன்  தன்  ஒழுக்கத்தை  நன்கு  போற்றல்  வேண்டும் .                                                                                   272

11 . தொழில்களின்  தலைமை  முதலியவைகள்

          வாழ்க்கைக்குரிய  தொழில்களுள் , யாது  ஒருவன்  கடமைக்குக்  கேடு  விளைக்காததோ  அதுவே  சிறந்ததாகும் . தன்   குடும்பத்தை  எல்லா  வழியாலுங்  காத்தற்கு  எவ்விடம்  தகுதி  வாய்ந்துள்ளதோ  அவ்விடமே  சிறந்ததாகும் .                                                                           273

     ஆற்றுநீரைத்  தாயகமாகவுடைய  உழவுத்  தொழிலே  தலையாய  தொழிலாகக்  கருதப்படும். பண்டமாற்று  முதலிய  வாணிகத்  தொழில்  இடையாயதாம் . பிறர்  ஏவின்  செய்யுஞ்  சூத்திரர்  தொழில்  கடையாயதாம் .                                                                                              274                                                                           

     இரத்தற்றொழில்  கடையிற்  கடையாயதாம் . துறவொழுக்கமுடை யார்க்கு  அவ்  விரத்தற்றொழில்   தலையாயதாக  எண்ணப்படும் . ஒரோவமயம்  அறநெறி  யொழுகும்  அரசன்பால்  அவன்  ஏவின்  செய்தலும்  தலையாய  தொழிலாம் .                                                          275

     வேள்வித்தொழில்  செய்யும்  அத்துவரியு முதலியோராக  இருந்து  அவ்வேள்வி  வினைகளைச்  செய்து  அதன்கட்  பெறும்  வேதனம்  எங்ஙனம்  பெரும்  பொருளாகும் ? வாணிகத்தான்  ஈட்டும்  பொருளும்  பெரும்  பொருளாதற்குப்   போதியதாக  எங்ஙனம்  ஆகும் .                  276

( அத்துவரியு – வேள்வி  வினை  இயற்றுவோருள்  ஒருவன் . )

     இராசசேவை  யின்றி  மிகுபொருள்  உண்டாகாது . இராச  சேவையும்  செவ்விதிற்  செய்தல்  மிக  அரியதாகும் . அஃது  அறிவின்றிறம்  வாய்ந்தவர்களுக்கன்றி  மற்றையோர்க்குச்  செய்ய  இயலாததாகும் . அவ்விராச சேவை  வாளின்  கூர்மை  போல்வது ; ஆதலின் , அறிவிலாரால்  எப்பொழுதுஞ்  செய்தற்கு  இயலாததொன்றாம் .        277

12 . அறிவின்  மாட்சி

     பாம்பு  பிடிப்பவன்  பாம்பை  மந்திரவன்மையால்  தன் வயப்படுத்துதல்  போல் , அமைச்சனும்  மந்திரவன்மையால்  அரசனைத்  தன்  வயப்படுத்துவான் . அறிவுடையார்  அரசன்பாற்  பெரிதும்  அஞ்சி  யொழுகல்  வேண்டும் .                                                   278

( மந்திரவன்மைகளுட்  பின்னது  சூழ்ச்சித்திறன் .)

     அறிவுடையார்பால்  அந்தணர்  மாணொளியும் , அரசன்பால்  அரசர்  மாணொளியும்  உள்ளனவாம் . அறிவுடையான்  சேய்மைக்கண்  இருந்தும்  எப்பொழுதும்  அணிமையிலேயே   இருப்பவனாவான் . அவன்  தன்னறிவாகிய  கயிறுகளால்  அரசனைப்  பிணித்து  ஈர்த்தலும் ஆட்டுவித்தலுஞ்  செய்வான் . துணை  செய்யும்  விதம்  இன்னதென்றுணராத  அறிவிலான்  அணிமையிலிருந்துஞ்  சேய்மைக்கண்  இருப்பவனாவான் .                                                     279-280

( அறிவுடையார்  எவ்  வருணத்தவராயினும்  அவர்பாற்  பிரமதேசசு  நிலைபெறுமெனவும் , வேந்தன்  எவ்வருணத்தவனாயினும்  அவன்பால்  க்ஷத்திரிய  தேசசு  நிலைபெறுமெனவுங்  கொள்க . அரசனுக்குச்  சேய்மைக்கண்  எனவும்  அரசனுக்கு  அணிமையில்  எனவுமியைக்க .)

     வேதாநுவாக  படனப் பயிற்சியான  மழுங்கிய  அறிவு  மற்றை  உலகில்  வழக்குக்களில்  திறனுடையதாகாது . ஆதலின்  எவ்வறிவு  வேத நுவாக படனப் பயிற்சியான்  மழுக்க  மெய்தியுள்ளதோ  அவ்வறிவு  யாண்டுஞ்  செல்லாதென்பது  போதரும் .                       281                                               

( அநுவகம் – வேதத்திலுள்ள  சிறு  பிரிவுகள் . வேதாத்தியயனம் மாத்திரம்  உள்ளார்  உலகியலை  நன்கு  அறியாரென்பதாம் .)

     ஒருவனுக்கு  முதலில்  வறுமையும்  பின்னர்ச்  செல்வமும்  நேர்தலும்,  அங்ஙனமே  முதலிற்  கால்நடையிற்  செல்லவும் , பின்னர்  ஊர்திகளிலிவர்ந்து  செல்லவும்  நேர்தலும்  சிறப்புடன்  இன்பந்தருவனவாம் . இங்குக்கூறியவற்றின்  மாறாக  முதலிற்  செல்வமும்   ஊர்தியிற்  செலவும்  நேர்தலும் , பின்னர்  வறுமையும்  கால்நடைச்  செலவும்  சேர்தலும்  துன்பம்  பயப்பனவாம் .                  282

     ஒருவன் , பிறந்தவுடன்  இறந்துபோம்  புதல்வரைப்  பெறுதலினும்  எப்பொழுதும்  புதல்வர்  பேறில்லாதவனாதலும் , பொல்லாத  ஊர்திகளில்  ஏறிச்  செல்லுதலினும்  கால்நடையிற்  செல்லுதலும் , ஒருவனோடு  பகை  கொள்ளுதலிலும்  நடுநிலை  மேற்கொள்ளுதலும்  சிறந்தனவாம் .                                                                                                 283

     ஒருவன் , தான்  நடந்து  செல்லுதற்பொருட்டு  எல்லா  இடத்தையும்   துணி  முதலியவற்றான்  மறைப்பதினும் , செருப்பினால்  தன்  கால்களைக்  காத்தல்  சிறந்ததாகும் . சிற்றறிவாற்  செருக்குறுதலினும்  அறிவின்றியிருத்தல்  சிறந்ததாகக்   கருதப்படும் .                              284                            

     பிறரில்லத்தின்  வாழ்தனினுங்,  காட்டில்  வாழ்தல்  சிறந்ததாகும் . பொல்லாத  மனைவியோடு  கூடி    இல்லறத்தில்  வாழ்தலினும்  துறவு  மேற்கொள்ளுதல் , அன்றி  இறந்துவிடுதல்  சிறந்தனவாம் .                285

     நாய்களின்  புணர்ச்சியும் , கடன்  வாங்குதலும் , கருப்பமுண்டாக் கலும் , ஒரு  காரியத்திற் றலைமை  ஏற்றலும் , கயவரோடு  நட்புக்கொள்ளலும் , நலமில்லுணவும்  தொடக்கத்திலின்பத்தையும்  இறுதியிற்  றுன்பத்தையுஞ்  செய்வனவாம் .                                              286

     இழிந்த  அமைச்சரால்  அரசனும் , இழிந்த  மருத்துவரால்  நோயாளியும் , இழிந்த  அரசாற்  குடிமக்களும் , இழிந்த  அறிவால்  அஃதுடையானும்  எப்பொழுதும்  குறைவெய்துவர் . இழிந்த  புதல்வனால்  அவன்  பிறந்த  குலமுங்  குறைவெய்தும் .                        287

     யானை , குதிரை, எருது , கிளி என்னுமிவை  தம்மைப்பயிற்றுவோன்  குணங்களைப்பற்றி  நிற்பனவாம் . அங்ஙனமே  பாலரும்  பெண்களும்  தம்மைப்  பயிற்றுவோரின்  குணங்களைப்  பற்றி  நிற்பர் .                   288

     அமய  மறிந்து  பேசுதலால்  வெற்றியுண்டாம் . அழகிய  ஆடைகளாற்  காண்டன்  மாத்திரத்தில்  அழகுண்டாம் . கல்வியால்  அவைக்களத்திற்  பெருமை யுண்டாம் . ஒருவன்  அதிகாரியாயிருக்குமளவில்  இம்மூன்று முண்டாம் .                               289

     இல்லறவாழ்க்கை யுடையார்க்கு  நல்ல  மனைவியும், நன்மக்களும் , சிறந்த  கல்வியும் , சிறந்த  பொருளும் , நண்பரும் , நல்ல  பணிசெய்வானும் , பணிப்பெண்ணும் , நோய்  முதலியன  இல்லாத  உடலும் , அழகிய  இல்லமும் , நல்ல  அரசனும்   வாய்த்தல்  அவர்  நலத்திற்குரியதாம் . இங்குக்கூறப்பட்ட  மனைவி  முதலியோரும் , கல்வி  முதலியனவும்  மாறுபட்டிருப்பின்  அஃது   அவர்க்குக்  கேடு  விளைவிப்பதாகும் .                                                                                           290

     யாண்டு  முதிர்ச்சியும் , நற்குணங்களும் , நம்பிக்கையும் , நல்லொழுக்கமும்  வாய்ந்த  பெண்களையாதல் , ஆண்மக்களையாதல்  அலிகளையாதல்  உவளகத்திலிருக்கும்  வண்ணம்  நியமனஞ்  செய்தல்   வேண்டும் . இளமைமிக்க  ஆண்மகன் , தனக்குரிய  நண்பனாயினும்  அவனை  அங்ஙனம்  உவளகத்திலிருக்க  நியமனஞ்  செய்தலாகாது .                                                                                               291

( உவளகம் – அந்தப்புரம் . ) 

     இன்ன  காலத்தில்  இன்னது  செய்வதென்று  காலத்தை  வரையறைப்படுத்திக்  காரியம்  புரிதல்  வேண்டும் . அங்ஙனம்  காலவரையறை  செய்யாமல்  ஒன்றுஞ்  செய்தலாகாது . பசு  முதலியவைகளைத்  தன்னைப்போல்  ஓம்புதல்  வேண்டும் . மனிதன்  அறம்  பொருளீட்டுதற்குத்  தன்னையும் , உண்டியமைத்தற்குத்  தாயையும் , தன்னை   நன்னெறியிற்  பயிற்றுதற்கு  ஆசிரியனையும்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                                                  292

( அறம் பொருளீட்டுவதற்குத்  தன்னை  நியமனஞ்  செய்தலாவது – – தன் மனத்தை அவ்வறம் பொருளீட்டத்தில் விருப்பமுறச் செய்தல். )

     மனிதன் , நியமமின்றித்  தன்  மகளிர்  உறையும்  உவளகத்திற்கு  அடுத்தடுத்துச்  செல்லல்  வேண்டும் .                                                        293

( அடுத்தடுத்து   உவளகத்திற்  செல்லவேண்டுமென்பது – அங்கு  உறையும்  மகளிர்  கற்பொழுக்கம்  மாசுபடாமைப்  பொருட்டும் , அம்மகளிர்  மன  ஒற்றுமையோடு  கூடியிறுத்தற்  பொருட்டுமாம் .)

     மனிதர்க்கு  அயலிடஞ்  செல்லுங்கால் , புதல்வரை யில்லாத  மனைவியும் , சிறந்த  ஊர்தியும் , சுமை  தாங்குவோனும் , நல்ல  காவலாளும் , பிறர்  துன்பங்களை  நீக்குதற்குரிய  கல்வியும் , சோம்பலில்லாத  பணியாளும்  வாய்த்தல்  எப்பொழுதும்  நலந்தருவதாகும் .                                                                                             294

    ஒருவன்,  ஆற்றலுடையனாயினும்  அவன்  ஒருபொழுதும்  மக்கள்  வழங்கும்  வழியில்  தடை  செய்து  இருத்தலாகாது . நல்ல  ஊர்தியாயினும்  அதன்கண்  ஏறி  அரசன்  கடைத்  தெருவிற்  செல்லலாகாது .                                                                                                   295

( அரசன்  கடைத்தெருவிற்  செல்லின்  வாணிகம்  புரிவோர்க்கு  எழுந்து  உபசரித்தல்  முதலியவற்றால்  வாணிகத்திற்கு  இடையூறு  நேருமென்பது  கருத்து . பொல்லாத  வூர்தியிற்  செல்லின் , அதுவே  வழிக்கண்  வரும்  மக்களுக்குத்   துன்பம்  விளைக்குமாதலின் , “நல்ல வூர்தியாயினும்”  என்றார் . )

     வழிச்செல்வோன்  எப்பொழுதுந்  துணையோடு  செல்லல் வேண்டும் துணையின்றிப்போதல்  கூடாது . அவன்  தங்குங்கால்  அணிமையில்  நல்ல  வழியையும் , நீர்வளத்தையும் , அச்சமின்மையையும்  உடைய  கிராமத்தில்  இருத்தல்  வேண்டும் . அத்தகைய தல்லாத  வழியிலும் , காட்டிலுந்  தங்கியிருந்து  இளைப்பாறுதல்  கூடாது .                               296

     மிகுநடை , உணவின்மை , மிக்க  பெண்  புணர்ச்சி , மிக்க  வேலை செய்து  அலுத்தல்  ஆகிய  இவை  எல்லோர்க்கும்  விரைந்து  பெருங்  கிழத்  தன்மையை  உண்டாக்குவனவாம் .                                           297-298

     பல்வகைக்  கல்விகளிலும் , ஒவியம் , சிற்பம்  முதலிய  பல்வகைக்  கலைகளிலும்  மிகப்பயின்று  இளைத்தலும்  கிழத்  தன்மையை உண்டாக்குவதாம் .                                                                                            299

     எவன்  உலகத்தவரின்  தீய  குணங்களை  நற்குணங்களாக  ஏறிட்டுப்  பாராட்டுகின்றானோ , அவன்  மக்கள்  அன்பிற்குரியனாவன்.  எவன்  குணமிகுதியைப்  புகழ்ந்து  பாராட்டுகின்றானோ  அவன்  எங்ஙனம்  உலகத்தவர்க்கு  நண்பனாகாமல்  இருப்பான்?                                                                         300

     ஒருவனது  உண்மையான  தீய  குணத்தை  எடுத்துச்  சொல்லுபவன்  அவனுக்கு  அன்பனாயினும்  அவனால்  வெறுக்கப்படுபவனாவன் . அங்ஙனமாயின் , ஒருவனது  நற்குணத்தைத்  தீய  குணமாக  ஏறிட்டுத்  தூற்றுவோன்  எங்ஙனம்  அவன்  அன்பிற் குரியனாவன்? [சிறிதும்  ஆகான்  என்றபடி.]                                                                                               301

     கடவுளரும்  குணம்  பாராட்டலால்  விரைந்து  ஒருவன் வயமாவர் . அங்ஙனமாயின் , மக்களைப்  பற்றிக்  கூறவேண்டியதென்?  எவனும் ஒருவன்  முன்னிலையில்  அவன்  தீய  குணங்களை  எடுத்துக் கூற மாட்டான் . ஆதலின் , ஒருவன் தன்பாலுள்ள தீய குணங்களை உலகிய லாலும் , நூலுணர்ச்சியாலும்  தானே  ஆராய்ந்தறியக்  கடவன்.   302-303                                                                                                                                                                                                           

     தன்  தீயகுணங்களைப்  பிறர்  சொல்லக்கேட்ட  அளவில்  மகிழ்ச்சியடைதலையும்  அதுபற்றிச்  சினங் கொள்ளாமையையும் , தன்  பிழைகளை  நன்றாக  அறிந்துகொள்வதில்  முயற்சியையும் , பிறர்வாய்க்  கேட்டவுடன்  அப்பிழைகளை  ஒழித்தலையும் , எப்பொழுதும்  தன்  குணங்களைப்  பிறர்  சொல்லக்கேட்ட  அளவில்  செருக்குறாமற்  சமநிலை  எய்துதலையும் , “யானே  தீய  குணங்களுக்கெல்லாம்  உறைவிடமாவேன்; என்மாட்டு  எங்ஙனம்  நற்குணங்கள்  நிலைபெறும்?  என்பாலே  அறியாமைக்  குணமுளதாம்“  என்றிவ்வாறு  எண்ணுதலையுமுடையான் , எல்லோரினும்  உயர்ந்தோனாவான் . அவனே  பெரியான்  . தேவர்களும்  அவன்  கலைகளின்  ஒரு  சிறு  கூற்றையும்  எய்துவாரல்லர் .                     304-306

     நல்லோர்க்குச்  செய்யும்  உதவி  சிறிதெனினும்  என்றும்  பெரியதாகும் . தீயோன்  தனக்குப்  பிறர்  செய்த  உதவி  பெரிதெனினும்  அதனைக்  கடுகளவினுஞ்  சிறியதாக  எண்ணுவான் .

( இச்சுலோகத்தின்  முற்பகுதி , “தினைத்துணை  நன்றி  செயினும்  பனைத்  துணையாக் கொள்வர் பயன்றெரிவார்”  என்னுந்  திருக்குறட்  கருத்தை  ஒத்திருத்தல் காண்க.)

     நல்லோன்  பொறுமையுடையானை  ஆற்றலுடையவனாக  எண்ணுவான் . தீயோன்  அவனை  ஆற்றலில்லாதவனாக எண்ணுவான்.  ஆதலின் , நல்லோன்  கூறுங்  கடுஞ்சொற்களையும்  பொறுத்தல்  நன்றாம் . தீயோன்  கூறுங்  கடுஞ்சொற்களை  அங்ஙனம்  பொறுத்துக்  கொள்ளலாகாது .                                                                                             308  

( நல்லோனும்  தீயோனும்  தாம்  கூறும்  கடுஞ்சொற்களைப்  பொறுத்தல்  பற்றி, ஒருவனை  முறையே  ஆற்றலில்லாதவனாகவும்  ஆற்றலுடையவனாகவும்  எண்ணார்  என்பது  கருத்து. )                                                                                     

     எவரோடுங்  கலகம்  விளைக்கத்தக்க  விளையாடல்களைச்  செய்தலாகாது . ஒருவனை  நோக்கி “நின்  மனைவி  கற்பில்லாதவள்”   என்று  விளையாட்டிலுங்  கூறலாகாது .                                                     309

     எவர்மாட்டும்  நட்புரிமை  பற்றியும்  கடுஞ்சொற்கள்  கூறத்தகாதனவாம் . உண்மை  நண்பன்பால்  இரகசியச்  செய்தியையும்  மறைத்தலாகாது . அந்  நண்பனது  இரகசியச்  செய்தியைச்  சிறிதும்  வெளிப்படுத்தலுங்  கூடாது .                              310

     நட்டோனொருவன்  பின்னர்ப்  பகைவனாயினும் , முன்னர்  நண்பனாயிருக்குங் காலத்தில்  அவனாற்  சொல்லப்பட்டனவும் , அன்றி  அவன்பால்  தன்னாலறியப்பட்டனவும்  ஆகிய  பொல்லாங்குகளை  ஒருபொழுதும்  எவ்வாற்றானும்  வெளிப்படுத்திக்  கூறலாகாது .                                                                                                        311

     ஒருவன்  தற்காப்புச்   செய்து  கொண்டு  பகைவரோடு  எதிர்க்க  முயலல்  வேண்டும் . அங்ஙனமே  எதிர்வினையுஞ்  செய்தல்  வேண்டும்.                                                                                                            312

( எதிர்வினை – ஒருவன்  செய்த  காரியத்திற்கு  மாறாகச்  செய்யப்படும் செயல்.)

     வலியவருடைய  மாறுபட்ட  ஒழுக்கம்  உண்மையாயினும்  அதனைக்கூறலாகாது . ஒரோவமயம்  அது  காணப்பட்டதாயினும்  காணாதவன்போலவும் , கேட்கப்பட்டதாயினும்  கேளாதவன்  போலவும்  இருத்தல்  வேண்டும் .                                                                    313

( இச்சுலோகத்தின்  முற்பகுதிக்கு “மிக்க  விபரீதச்  செயலொன்று  நிகழ்ந்தது  உண்மையாயினும்  அதனைக்  கூறலாகாது “  என்று  பொருள்  கோடலும்  பொருந்தும் .)

     மனிதன்  தனக்குக்  கேடுநேர்ந்த  காலத்தில்  ஊமனாகவும் , குருடனாகவும் , செவிடனாகவும், முடவனாகவும்  இருத்தல்  வேண்டும் . இன்றேல்  உலகியலினின்றும்  விலக்குண்டவனாவான் ; துன்பமெய்துவான் .                                                                                         314

( இதனால்  ஒருவன் , தனக்குக்  கேடு  நேர்ந்துழிப்  பிறரைப்  பற்றி  மிகுதியாகப்  பேசுதலும் , அத்தகைய  சொற்களைக்  கேட்டலும் , பிறரைக்  காண்டலும் , பிறவிடங்கட்குச்  செல்லுதலுங்  கூடாவென்பதும் , அங்ஙனம்  பேசுதன்   முதலியவற்றை  மேற்கொள்ளின்  உலகத்தவரால்  இழிக்கப்பட்டுத்  துன்புறுவன்  என்பதும்  புலப்படுதல்  காண்க .)

     அறிவின்  முதிர்ந்த  பெரியார்க்கு  மாறுபடாத  சொற்களைக்  கூறல்  வேண்டும் . எப்பொழுதும்  சிறார்களையொப்பப்  பேசுதலாகாது . பிறர்  இல்லத்துட்  புகுந்தவன்  அவர்தம்  மனைவியரைப்  பார்த்தலாகாது . 315

     வறியவனிடத்தினின்றும்  அவன்  உடன்படாத  தலைமைத்  தன்மையை  எக்காரியத்திலுங்  கவர்ந்து  கொள்ளலாகாது . தன்  சிறுவர்க்கும்  பிறர்  சிறார்க்கும்  விளையாட்டுக்  கலகம்  நேர்ந்துழித்  தன்   சிறுவரை  அறிவுறுத்து  ஒறுத்தல்  வேண்டும் . பிறர்  சிறுவர்  குற்ற மிழைத்தவராயினும்  அவரை  அங்ஙனஞ்  செய்தலாகாது .     316

( வறியவன் , தன்  சீவனநிமித்தம்  ஒரு  காரியத்திற்  றலைப்பட்டிருக்குங்கால் , அவன்  அநுமதி  பெறாமல்  மற்றொருவன்  அக்காரியத்  தலைமையை  அபகரித்தலாகாதென்பது  கருத்து .)    

மறநெறியிற் பற்று , நீதி பிழைத்தல் , நிலையில்லாத மனம் , பிறர் பொருளை வலிந்து பற்றுதல், கொடுந் தண்டமிடுதல் ஆகிய இவற்றையுடையானது கிராமத்தில் வாழ்தலை யொழித்து யாதாயினும் மற்றோரூரில் வாழ்தல் வேண்டும்.                                    317

     ஒருவன்  வழக்காளி  எதிர்  வழக்காளியாகிய  இருவருடைய  கருத்துகளையும்  உண்மையாக  உணர்ந்துளானாயினும் , அரசனாலாதல் ,  மற்றை  அதிகாரிகளாலாதல்  கேட்டுக்  கொள்ளப்படாமல்  தானே  அவர்  வழக்கின்  இயல்பைப்  பற்றி  ஒன்றுங் கூறலாகாது ; என்னை? அங்ஙனங்  கூறின்  அவ்வழக்கில்  தோல்வி  யெய்தினோன்  தனக்குப்  பகைவனாவனாதலின் .       318                                                                             

     பிறன்  ஒருவனுடைய  வழக்கை  ஏற்றுக்கொண்டு  மற்றெவனோடுங்  கலகஞ்  செய்தலாகாது . கூட்டங்கூட்டமாகத்  திரண்டு  அரசியற்  சூழ்ச்சியைப்  பற்றி  ஆராய்தலாகாது .                   319

     சோதிடத்தைப் பற்றியும் , அறத்தின்  உண்மையைப்  பற்றியும் , நீதியைக்  குறித்தும் , தண்டத்தைக்  குறித்தும் , மருத்துவத்தைப்  பற்றியும் , கழுவாயைப்  பற்றியும்  அவ்வந்  நூல்களைப்  பயின்றுணராத  ஒருவன்  ஒன்றுங்  கூறலாகாது .                                    320

( கழுவாய் – பிராயச்சித்தம்)

     பிறர்  வயப்பட்டிருத்தலினும்  மேலான   துன்பமுமில்லை ; தன்  வயப்பட்டிருத்தலினும்  மேலான  இன்பமுமில்லை . தன்  நாட்டில்  வாழ்பவனும் , தன்  வயத்தனாயிருப்பவனும் , இல்லற  வாழ்க்கை யுடையவனும் , எப்பொழுதும்  இன்பம்  எய்துவர் .                                 321                                     

     புதியனவும்  பழையனவுமாகிய  மக்கள்  வழக்க  ஒழுக்கங்களை  அறிந்தவர்களுடைய  அறிவினால்  கணந்தோறும்  புதியபுதிய  வழக்க  ஒழுக்கங்கள்  உண்டாகின்றன . ஆதலின்  அவற்றை  முற்றும்  ஆராய்ந்து  பெரும்பாலும்  அறுதியிட்டுக்  கூற  இயலாது . காட்சியளவையானும் , வழியளவையானும் , உவமை யளவையானும் , பெரியோரருளிய  நூலளவையானும்  அவ்வழக்க  ஒழுக்கங்களின்  இயல்பை   அறிந்து  கொள்ளல்  வேண்டும் .                                    322-323

( வழியளவை- அநுமானப் பிரமாணம் )

     அரசனுக்கும்  நாட்டில்  வாழும்  மக்களுக்கும்  இதுகாறும்  பொதுவாகச்  சுருக்கிக்  கூறப்பட்ட  இந்  நீதிநூல்  அன்னார்  நலத்திற்குரியதாகும்.; இதன்கட்  சிறப்பாகக்  கூறப்பட்டவை  அரசற்குரியவாம்   என்று  கருதற்பாலன .                                               324

சுக்கிர நீதியில்

“அரசனுக்கும் குடிகளுக்கும் உரிய பொது  நீதிகள்” என்னும்  மூன்றாம்

அத்தியாயம்  முற்றிற்று .

                   ********************************************************************

நான்காம்  அத்தியாயம்

முதற்  பிரகரணம்

(நண்பர்  முதலியோர்  இலக்கணங்கள்)

1. நட்டார்  பகைவர்  இலக்கணங்கள்

     இனிப்  பலவகைப்  பொருள்களைப்  பற்றிய  மிச்சிராத்தியாயத் திலுள்ள  முதற்பிரகணத்தைச்  சுருக்கிக்  கூறுவேன் . அவற்றுள் , முதலில்  நட்டோர்  முதலியோரின்  இலக்கணங்களைச்  சுருக்கமாகக்  கேட்பீர்களாக .                                                                                                       1

( கேட்பீர்களாக  வென  அரசர்களை  முன்னிலைப்படுத்திச்  சுக்கிராசிரியர்  கூறினாரென வுணர்க. )

     உபகாரணத்தால்  நட்டோரும் , அபகாரத்தாற்  பகைவரும்  செய்பவன் , செய்விப்பவன் , உடன்படுவோர், துணையாளனெனத்  தனித்தனி    நான்கு  வகைப்படுவர் .                                                               2

     எப்பொழுதும்  பிறர்  துன்பங்  கண்டுழி  மனமுருகுதல் , பிறர்க்கு  விருப்பமான  பொருளைக்  கூட்டுவிக்கு  முயற்சி,  வேண்டிக்  கோடலின்றிப்  பிறர்க்குபகரித்தல் , உரிய  காலத்தில்  தம்  நட்டோற்கும்  அவன்  மனைவிக்கும்  பொருட்கும்  மற்றை  மறைபொருள்களுக்கும்  புகலிடமாதலாகிய  இந் நான் கிலக்கணங்  களையுமுடையார்  தலையாய  நண்பரென்று  கூறப்படுவர் . மற்றையோர்  இவற்றுள்  முதலிற்  கூறிய  மூன்றிலக்கணங்களை யுடையாரெனவும் , முதல்  இரண்டிலக்கணங்களை  யுடையாரெனவும், ஓரிலக்கணமுடையாரெனவும்  பலதிறப்படுவர் .                                    3-4

( பொருளும்  மறைபொருளும்  அந்நட்டோனுடையனவாம் . மறைபொருள் – இரகசியவிடயம் . மனமுருகுதல்  கூட்டுவிக்கு  முயற்சி  பிறர்க்கு  பகரித்தலாகிய  இம் மூன்றனையுமுடையாரெனவும் , மனமுருகுதல்  கூட்டுவிக்கு  முயற்சி  ஆகிய  இவ்விரண்டினையுமுடையாரெனவும் , மனமுருகுதன்  மாத்திர  முடையாரெனவும்  பின்னையோர்  மூவகைப்படுவர்  என்பதாம் .)

     ஒரு  பொருளைப்பற்றி  இது  பிறர்க்கின்றி  எனக்குரியதென்று  இருவர்  தனித்தனியே  தம்முண்  மாறுபட்டு  விரும்புதலும் , பிறர்  விரும்பும்  பொருட்குக்  கேடு செய்தலுமாகிய  இவ்விரண்டும்  பகைமையின்  இலக்கணங்களாம் .                                                               5

     “உடன்பிறந்தான்  இல்லையாயின்  தந்தையின்  பொருண்  முழுதும்  எனக்கே  உரியதாகும் “  எனவும் , “இவ்வுடன் பிறந்தானுக் குரிமையாதல்  கூடாது “  எனவும் , “இவ்வுடன்  பிறந்தான்  என்  வயப்பட்டிருத்தல்  வேண்டும் “  எனவும் , “இவ்வெல்லாப் பொருள்களையும்  பிறர்க்கின்றி  யானே  நுகர்வல்”  எனவும்  இருவர்  தனித்தனி  மாறுபட்டு  எண்ணுவாராயின் , அவர்  தம்முட்  பெரும்  பகைவராவர் .  வெறுப்பவன்  வெறுக்கப்படுபவன்  ஆகிய  இவ்விருவரும்  ஒருவர்க்கொருவர் பகைவரென்னும்  பெயரை யுடையராவர் .                                                                                                   6-7

( இல்லையாயின்  என்னும்  இதனால்  உடன்பிறந்தான்  இருத்தல்  உணரப்படும் .)

     வீரம், முயற்சியின்  எழுச்சி , வலிமை , நீதியாகிய  இவற்றை யுடையார்  மாட்டு  எப்பொழுதும்  உட்பகை  யுடையராய்க்  காலத்தை  எதிர்பார்த்திருக்கும்  அரசனைவரும் , நட்புரிமை யுடையரா யிருப்பரென்னும்  இதன்கண்  வியக்கற்பாலது  யாதுளது ?அவ் வேந்தரரெல்லோரும்  அரசியல்  விருப்பம்  உள்ளாரே  யாவர் . அரசனுக்கு  எவனும்  நண்பனாகான் . அரசனும்  எவனுக்கும்  நண்பனாகான் .                                                                                               8-9

( உட்பகையுடையராய்க்  காலங்  கருதியிருத்தலின்  நண்பராவர் , என்பதில்  வியப்பின்றென்பதும் , வேந்தன்  காலம்  நேர்ந்துழி  நட்புரிமையைப்  பொருட்படுத்தானென்பதும்  புலப்படுதல்  காண்க .)

     அரசனுங்  குடிமக்களும்  பெரும்பாலும்  தம்முட்  காரியம் கருதியே நட்புரிமை யுடையராயிருப்பர் . ஒருவனுக்குச்  சிலர்  இயற்கையாகவே  நண்பராவர் . சிலர்  இயற்கையாகவே  பகைவராவர் .                            10

( இயற்கை  நண்பரையும்  இயற்கைப்  பகைவரையும்  பின்வருஞ்  சுலோகங்களிற்  காண்க .)

     ஒருவனுக்கு  அவன்  தாய் , தாயின்  குலத்தவர் , தந்தை , தந்தையின்  தந்தைதாயர் , தந்தையின்  சிறிய  தந்தை , பெரிய  தந்தையர் , தன்  புதல்வி , தன்  மனைவி , மனைவி  பிறந்த  குலத்தவர் , தன்  தந்தையின்  உடன்  பிறந்தாள் , தாயின்   உடன்  பிறந்தாள் , தன்னுடன்  பிறந்த  தங்கை , தமக்கையர் , அவர்தம்  பெண்மக்கள் , அவர்  பின்வழித்  தோன்றல்கள், அரசன் , குரு , ஆகிய  இவர்கள்  இயற்கையான  நண்பராவர் .                                                                                                      11-12

( முதனூலில்  சந்ததி  என்றது  பின்வழித்  தோன்றல்கள்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . அதற்குப்  புதல்வன்  என்றும்  பொருள்  கொள்ளலாம் . 14-ஆம்  சுலோகத்தில்  நல்ல  புதல்வனையும் , 17-ஆம்  சுலோகத்தில்  தீய  புதல்வனையும்  விதந்து  கூறினமையால்  ஈண்டுப்  பொதுவாகப்  புதல்வனென்று  கூறுதலும்  பொருந்தும் .)

     கல்வியுடைமை , வீரம் , திறமை , வன்மை , அஞ்சாமை யாகிய  இவ்வைந்தும்  ஒருவனுக்கு  இயற்கையாக வுள்ள  நட்புரிமைக்  குணங்களாம் . இவற்றானே  யறிவுடையார்  வாழ்க்கை யுடையராகின்றனர் .                                                                                          13

     தாய்  தந்தையாரின்  ஆணைவழி  கடவாது  ஒழுகும்  மகனே  பொருளொடு  பொருந்தும்  பெயரை யுடையனாவன் . நற்குணமிக்க  புதல்வன்  ஒருவனே  சிறந்தவனாவன் . குணமிலிகளாகிய  புதல்வர்  நூற்றுக்கணக்காகவிருப்பினும்  அவரால்  வரக்கடவ   தாம்  பயன்  யாது ?                                                                                                                      14

( மகன்மைப்  பொருட்குரியனாவான்  என்பதாம் .)

     பிறரைத்  துன்புறுத்துதலையும்  தீயொழுக்கத்தையும்  கடன்  கோடலையுமுடைய  தந்தை, கற்பிழந்த  தாய் , கற்பிழந்த  மனைவி , தன்  தமையன்  தம்பிமார் , சிற்றப்பன்  பெரியப்பன்மார் ,  அவர் தம்  மனைவியர் , அவர்தம்  புதல்வர்கள் , மருகி , மாமி , மாற்றவள் , நாத்தூணங்கை , கொழுந்தன்மார்  மனைவியர் , அறிவில்லாத  புதல்வன் , இழிந்த  மருத்துவன் , மனைவியைக்  காவாத  கணவன் , சினமிக்க  தலைவன் , சினமிக்க  குடிமக்கள் , ஈகையில்லாத   பொருளாளன்  ஆகிய  இவர்கள்  இயற்கையாகவே  பகைவராவர் .15-17

( மருகி  முதலிய  ஐவரும்  ஒரு  பெண்பாலைக்  குறித்து  அவட்குப்  பகைவராவரெனவும் , மனைவியைக் காவாத கணவன் மனைவிக்குப் பகைவனாவானெனவும், சினமிக்க  தலைவன்  ஏவலாளர்க்குப்  பகைவனாவானெனவும் , சினமிக்க  குடிகள்  அரசனுக்கு  பகைவராவரெனவும்  கொள்க . மாற்றவள் – கணவனுடைய   மற்றொரு  மனைவி . நாத்தூணங்கை – கணவனுடன்  பிறந்தவள் . )

     தீயவற்கு  அரசனும் , கற்பொழுக்கமில்லாத  பெண்களுக்குக்  கற்புடையாரும் , கீழ்மக்களுக்கு  நல்லோரும் , அறிவிலார்க்கு  நற்பொருளை யறிவிப்போரும்  பகைவராவர் .                                          18

     அறிவிலார்க்குச்  செய்யும்  உபதேசம்  அவர்தம்  சினத்தை  வளர்த்தலே  யன்றி  அடக்கத்தை யுண்டுபண்ண  மாட்டாது.  பாம்புகளுக்கு  அருத்தும்  பால்  அவற்றின்  நஞ்சைப்  பெருக்குதலேயன்றி   அமிருதத்தை யுண்டாக்காது .                                  19

     ஓரரசனுக்கு  நாற்புறத்தும்   யாண்டுஞ்  சூழ்ந்திருப்போரும்  குறைந்த  வலிமையும்  பகைமையு  முடையாருமாகிய   மற்றை  அரசர்களுள் , மிக  அணிமையிலிருப்போரும் , அவர்க்கு அப்பாலி  ருப்போரும், அவர்க்கு  அப்பாலிருப்போரும் முறையே  இயற்கையான  பகைவராகவும் , நொதுமலராகவும் , நண்பராகவும்  இருப்பர் . அன்றி  நாற்புறத்தும்  அணிமையிலிருப்போர் , அதற்கப்பாலிருப்போர் , அதற்கப்பாலிருப்போராகிய  அரசர்கள்   முறையே  பகைவராகவும் , நண்பராகவும் , நொதுமலராகவும் , இருப்பாரெனக்  கோடலும்  பொருந்தும் . அங்ஙனமே  தன்னால்  துன்புறுத்தப்பட்டுத்  தனக்கு  மிகவும்  அணிமையிலிருக்கின்ற  ஏவலாளரும்  அமைச்சர்  முதலியோரும்  பகைவராக  அறியப்படுவர் .                                   20-22

(நொதுமலர் – விருப்பு  வெறுப்பின்றி  நடுநிலை   மேற்கொண்டிருப்போர். ஓரரசனுக்கு  அண்மையிலுள்ள  மற்றோரரசன்  வலிகுறைந்தவனாக விருப்பின்  அவன்  தான்  நினைத்தவண்ணம் ஒன்றுஞ்  செய்யமுடியாமையாற்  பகைவனாவானென்பது  கருத்து .)

     ஆற்றல்  குறைந்த  நண்பனையும்  ஆற்றல்  மிக்க  நண்பனையும்  முறையே  உயர்த்தியுந்  தாழ்த்தியும்  நடத்தல்  வேண்டும் .                 23

2. சாம  முதலிய  உபாயங்களை  மேற்கொள்ளு  முறை

     சாம  தான  பேத  தண்டங்கள்  என்னும்  நால்வகை  உபாயங்களாலும்  இப்  பகைவரெல்லோரையும்  வேறுபடுத்தலும் , வசீகரித்தலும் , துன்புறுத்தலும் , அழித்தலும்  செய்யலாம் .               24

     ஒருவன்  உபாயத்தால்  பாம்பு  யானை  சிங்கம்  ஆகிய  இவற்றை  வயப்படுத்துதல்  போலத்  தக்க  உபாயங்களால்  நண்பரையும்  பகைவரையும்  வசீகரித்துத்  தன்வயப்படுத்தல்  வேண்டும் . உபாயத்தினாலேயே  இந்  நிலவுலகத்துள்ளார்  அடைதற்கரிய  துறக்கத்தை  யடைகின்றனர் ; பிளத்தற்கரிய  வயிரத்தைப்  பிளக்கின்றனர் .                                                                                       25-26

     சாம  தான  பேத  தண்டங்களாகிய  இந்  நான்கு  உபாயங்களையும்  நண்பர் , சம்பந்திமார் , பெண்கள் , புதல்வர் , குடிமக்கள் , பகைவராகிய  இவர்கள்  மாட்டுத்  தனித்தனி  பொருந்துமாற்றான்  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .                                                             27

( பொருந்துமாறு – யுக்தி .)

     ஒழுக்கம் , பருவம் , கல்வி , குலம் , பழக்கம் , வாழ்க்கைத்தொழில் , ஆகிய  இவற்றை  நேர்மையாக  வுடையார்  தம்முட்  கூடுங்கால்  நட்புண்டாமாயின் , அவர்  தம்முள்  ஒருவன்  மற்றொருவனை  நோக்கி  “எனக்கு  நின்னையொத்த  நண்பன் , வேறொருவனாம்  இலன் “  என்று  இவ்வாறு  கூறுதல்  நட்புப்  பற்றிய  சாமம்  என்னும்  உபாயமாகும் .  அத்தகைய  நண்பன்பால்  “என்னுடைய  வாழ்க்கைக்குரிய  எல்லாப்  பொருள்களும்  நின்னுடையவே  யாகும் “  என்று  கூறுதல்  நட்புப்  பற்றிய   தானம்  என்னும்  உபாயமாகும் .                                           28-29

     ஒரு  நண்பன்  பாற்  பிற  நண்பர்களின்  நற்குணங்களை  ஒருவன்  பாராட்டிப்  பேசுவானாயின் , அஃது  அந்நண்பனது  மனத்தை  வேறுபடுத்துமாதலின்  நட்புப்  பற்றிய  பேதம்  என்று  கூறப்படும் . ஒருவன்  தன்  நண்பனை  நோக்கி “நீ  இத்தகையனாயின்  யான்  நின்னோடு  நட்புக்  கொள்ளேன்”  என்றிவ்வாறு  கூறுதல்  நட்புப்  பற்றிய  தண்டம்  என்று  கூறப்படும் .                                                        30

     எவன்  பிறர்க்கு  நன்மை  செய்யாமலும்  பிறர்க்கு  வரும்  தீமையைப்  பொருட்படுத்தாமலும்  இருக்கின்றானோ  அவன்  நொதுமலனாவான் . அந்  நொதுமலனும்  இன்சொற்  கூறுதலாகிய  சாமோ  பயத்தால்  நன்கு  வசீகரிக்கத்தக்க  பகைவனாகான்  கொல்?  [பகைவனாவானென்றபடி ]                                                                            31

( நொதுமலனைத்  தன்  வயப்படுத்துக்  கோடற்கு  உபாயங்  கூறியவாறு )

     ஒருவன்  தன்  பகைவனை  நோக்கி, “ நீயும்  யானும்  ஒருவர்க்கொருவர்  கேடு  செய்ய  எண்ணுதலாகாது ; துணை  செய்பவராதல்  வேண்டும் “  என்றிவ்வாறு  கூறுதல்  பகைமை  பற்றிய  சாமமென்னும்  உபாயமாகும் .                                                                      32

     ஒருவன்  தனக்குரிய  பகைவர்  பலருள் , வலிமை  மிக்க  பகைவனை  ஆண்டுதோறும்  இவ்வளவென்றளவிடப்பட்ட  அரசிறைப்பொருள்  கொடுத்தும்  சிற்றூர்  பல  ஈந்தும்  மகிழ்வித்தல்  பகைமை  பற்றிய  தானம்  என்று  கூறப்படும் .                                                                             33

     பகைவர்க்குத்  துணையாகவுள்ள  பொருள்  முதலிய  கருவிகளுக்குக்  குறைவு  செய்தலும் , அப்பகைவரினுஞ்  சிறந்த  வலியுடையாரைச்  சார்ந்திருத்தலும் , அப்பகைவரிற் றாழ்ந்தாரை   வலியுடையராகச்  செய்தலும்   பகைமை  பற்றிய  பேதம்  என்று  கூறப்படும் .                                                                                                         34

பகைவரைக்  கள்வராற்  றுன்புறுத்தலும் , அப்  பகைவருடைய  பொருள்  தானியங்களைக்  கெடுத்தலும் , அவர்பாற்  புரைநெறி  கண்டு  அது  காரணமாக  அவரினுஞ்  சிறந்த  வலியுடையரால்  நீதி முறை  பற்றி  அச்சுறுத்தலும் , போர்த்தொழில்  நேர்ந்துழிப்  புறமுதுகிடாத  வீரர்களால்  நடுக்கஞ்  செய்தலும்  பகைமை  பற்றிய  தண்டம்  என்று  கூறப்படும் .                                                                            35

     இச்  சாம  முதலிய  உபாயங்கள்  வினை  வேறுபாடு  குறித்து  அவரவர்  தகுதிக்குத்  தக்கவாறு  செய்யப்படுதலின், பல்வறு  வகைப் படுவனவாம் .                                                                                                          36

     நீதியுணர்ந்து  நிலம்  புரக்கும்  வேந்தன்  இச்  சாம  முதலிய  எல்லா  உபாயங்களாலும்  தன்  நண்பர் , பகைவர் , நொதுமலராகிய  இவர்கள் தன்னிலும்  மிக்க  வலியுடையரா  யில்லாதவாறு  செய்தல்  வேண்டும்.

     முதலிற்  சாமோபாயமே  சிறந்ததாகும் . அதனாற்  காரியம்  முடிந்திலதாயின்  பின்  தானோபாயத்தையும் , அதனாலும்  முடிந்திலதாயின், பின்னர்  எவ்வாற்றானும்  பேதோபாயத்தையும் , அதனாலும்  இயன்றிலதாயின்  உயிர்க்கு  இறுதி  நேர்ந்துழிப்  பகைவர்பால்  தண்டோபாயத்தையும்  மேற்கொள்ளல்  வேண்டும் . 38

     பகைவன்  பேராற்றலுடையனாயின்  அவன்பாற்  சாம  தான  உபாயங்களையும் , தன்னின்  மிக்க  வன்மையுடையனாயின்  அவன்  மாட்டுச்  சாம பேத  உபாயங்களையும் , தனக்கு  ஒத்த  பகைவனாயின்  அவன்பால்  பேத  தண்ட  உபாயங்களையும் , தன்னிற்  றாழ்ந்தோனாயின்  அவன்பால்  தண்டோபயத்தையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                               39

     நண்பன்பாற்  சாம  தான  உபாயங்களே  செயற்பாலனவாம் . ஒரு  பொழுதும்  பேத  தண்ட  உபாயங்கள்  மேற்கொள்ளற்பாலனவல்ல . 40

     பகைவருடைய  குடிகளை  வேறுபடுத்தி  அவரைத்  துன்புறுத்தல்  ஒருவனுக்கு  வெற்றி  தருவதாகும் . பகைவரால்  துன்புறுத்தப்பட்ட  நற்குண  மிக்கோரைச்  சாம  தான  உபாயங்களால்  தன்வயப்படுத்திக் கொள்ளல்  வேண்டும் . தீயோரைத்  தன்  நாட்டினின்றும்  வெளிப்படுத்தல்  எப்பொழுதும்  நலம்  பயப்பதாகும் .                            41

     எப்பொழுதும்  முயற்சி  மேற்கொண்டு  சாம  தான  உபாயங்களால்  தன்  குடிகளைக்  காத்தல்  வேண்டும் . பேதோபாயத்தையும்  தண்டோபாயத்தையும்  அவர்பொருட்டு  மேற்கொள்ளலாகாது .        42        

     தன்  கீழ்  வாழுங்குடிகள்  மாட்டுத்  தண்டோபாயமும்  பேதோபாயமுஞ்  செய்யப்படுமாயின்  தன்  அரசியற்கு  அழிவுண்டாம். ஆதலின் , தன்  குடிகள்  மிக்க  எளிமையுடையராகவும் , மிக்க  வலிமையுடையராகவும் இல்லாமலிருக்கும்  வண்ணம்  அவரை  எப்பொழுதுங்  காத்தல்  வேண்டும் .                                                                43

     உயிர்த்தொகுதிகள்  தீய  ஒழுக்கங்களினின்று  மீளுதலும்  அடங்கி  நடத்தலும்  தண்டோபாயத்தினாலேயாம் . ஆதலின் எவ்வுபாயத்தினாலே  உயிர்த்  தொகுதிகள்  நன்கு  அடக்கப்படுகின் றனவோ , அதுவே  தண்டோபாய மென்று  கூறப்படும் .                           44

3. தண்டத்தின்  வகையும்  பயனும்

     கடுஞ்சொற் கூறி  விலக்கல் , மானக்கேடு  செய்தல் , உணவின்றி  இருக்கச்செய்தல் , தளையிட்டுச்  சிறைப்படுத்தல் , அடித்தல் , பொருள்  கவர்தல் , நகரத்தினின்றும்  வெளிப்படுத்தல் , உடலில்  என்றும்  நிலைத்திருக்கும்  அடயாளமிடுதல் , மாறுபட  மழித்தல் , கழுதை  முதலிய  தீய  ஊர்திகளிலேற்றிப்  போக்கல் , கை  கால்  முதலிய  உறுப்புக்களைக்  குறைத்தல் , கொலைபுரிதல் ,  பொருதல்  ஆகிய இவைகளெல்லாம்  தண்டோபாயத்தின்  வகைகளாகக்  கூறப்படுவனவாம் .                                                                                         45-47

     தண்டோபாயத்தாற்  குடிகள்  அறத்திற்  பற்றுடையராவார் ; எளியவரைத்  துன்புறுத்துதலையும்  பொய்  கூறுதலையும்  மேற்கொள்ளார் . இன்னும்  அவ்வச்சத்தானே  வன்கண்ணர்  அருளுடையராவர் ; தீயவர்  தீங்கினை  யொழிப்பர் ; பசுக்கள்  வயப்படுவனவாம் ; கள்வர்  சேய்மைக்கண்  ஓடுவர் ; குறளை  கூறுவோர்  வாய்வாளாதிருப்பர்; ஆததாயிகள்  அச்சமெய்துவர்; அரசிறை  கொடாதவர்  அவ்  விறைப்பொருளைக்  கொடுப்பர் ; மற்றையோர்  மிகவும்  நடுங்குவர் . ஆதலின் , அரசன்  அறத்தைக்  காத்தற்  பொருட்டு  எப்பொழுதுந்  தண்டத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                        48-50

     செய்யத்தக்கன  வின்ன  தகாதன  வின்ன  வென்று  அறியாமற்  செருக்குற்று  நெறிபிழைத்  தொழுகுவோன்  குருவாயினும்  அவனுக்குத்  தண்டம்  செயற்பாலதாம் .                                                        51

     அரசர்களுக்குத்  தண்டத்தோடுங்  கூடிய  நீதியினாலேயே , எல்லாக்  காரியங்களும்  நிறைவேறுகின்றன . ஆதலின் , அறங்கள்  எல்லாவற்றிற்கும்  தண்டமே  சிறந்த  புகலிடமாக  எண்ணப்படும் .    52

     வேதத்திற்  கூறியபடி  வேள்வியிற்  பசுக்கொலை  புரிதல்  கொலைத்  துன்பம்  ஆகாதவாறுபோல , தீயவர்களைத்  தண்டத்தால்  ஒறுத்தல்  துன்பஞ்  செய்ததாகா தென்பதாம் .                                                                53

     ஒறுத்தற்குரிய  குற்றமுடையாரை  ஒறாமல்  விடுதலும் , ஒறுத்தற்குரிய  குற்றமில்லாதவரை  ஒறுத்தலும் , அளவின்  மிக  ஒறுத்தலு முடைய  வேந்தனை  விட்டு  அறிவுடையார்  விலகுவர் . அவ்  வேந்தன்  தீவினையாளனுமாவன் .                                                                 54

     மக்கள்  தானதருமங்களிற்  பற்றுடைய ராதற்  பொருட்டுச்  சிறு  கொடையாற்  பெரும்  பயன்  விளயுமென்று  முனிவரால்  அறநூல்  களிற்  கூறப்பட்டது . அங்ஙனமே  உலகத்துள்ள  மக்கள்  அச்சமுற்று  நன்னெறிக்கண்  ஒழுகுதற்பொருட்டு  நூன்முறைப்படி  தண்டஞ்  செய்தலாற்  பெரும்பயன்  விளையுமென்பதுங்  கூறப்பட்டுள்ளது .    55

     பரிமேத  முதலிய  வேள்விகளானாலும்  புண்ணியம்   தோத்திர  பாடங்களான்  எங்ஙனமுண்டாம்? பொறுமையினாலுண்டாம்  புண்ணியம்  தண்டமிடுதலா லெங்ஙன முண்டாம்? [[உண்டாகாதென்றபடி. ]                                                                                     56

     தன் கீழ்  வாழுங்  குடிகளைத்  தண்டித்தலால்  அரசனுக்கு  எங்ஙனம்  நலமுண்டாகும் .? அக் குடிகளைத்  தண்டித்தலால்  அரசனுடைய  புகழ் , பொருள் , புண்ணியமாகிய  இவைகளுக்கு  அழிவுண்டாம் .                   57

     கிருதயுகத்தில்  அறம்  நிறைவுற்றிருந்தமையால் , அரசனுக்குத்  தண்டம்  அறவே  வேண்டாததாயிற்று . திரேதாயுகத்தில்  குடிகள்  காற்கூறு  அதன்ம முடையராயிருந்தமையால் , அரசன்  தண்டத்தை  முற்றும்  மேற்கொள்ளவேண்டியதாயிற்று . துவாபர யுகத்தில்  அரைக்கூறு  அறமுடைமையான் , முக்காற்கூறு  தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது . கலியுகத்தில்  அரசன்  முறை  பிறழ்ந்து  ஒழுகுதலானும் , அதனாற்  குடிகள்  பொருளற்று வறியவரா யிருத்தலானும்  அரைக்கூறு  தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது .       58-59

( அறம்  முக்காற்கூறு  நிலைபெறும்  இரண்டாம்  யுகத்தில்  மக்கள்  தீங்கு  செய்தல்  பெரிதுந்  தவறுடைத்தாதலின்  அது  நோக்கி  முழுத்  தண்டம்  விதிக்கப்பட்டுள்ளது . மூன்றாம்  நான்காம்  யுகங்களிலும்  இக் கருத்துப்  பற்றியே  முக்காற்கூறு  அரைக்கூறு  தண்டங்கள்  விதிக்கப்பட்டன வென்பதும்  உய்த்துணரற்பாற்றாம் . )

   உலகத்து  மக்களை  அறத்தினும்,  மறத்தினும்  ஆணையிட்டு  நடத்துபவன்  அரசனாதலின் , அவனே  கிருதயுக  முதலிய  யுகங்களையும்  நடத்துபவனாவான்.  ஆதலின்,  தீங்கு  நிகழ்தற்குக்  காரணம்  யுகங்களின்  குற்றமுமன்று ; குடிகளின்  குற்றமுமன்று ; அரசனது  குற்றமேயாம் .                                                                                 60

     எச்செயல்  கண்டு  அரசன்  மகிழ்ச்சி  யெய்துகின்றானோ, அச்செயலையே  அவாவினாலும்  அச்சத்தினாலும்  குடிகள்  மேற்கொண்டொழுகுவர் . அங்ஙனமாயின் , அரசன்  ஆணையிட்டுரைத்த  தொன்றைக்   குடிகள்  எங்ஙனம்  மேற்கொள்ளாதிருப்பர் ?                                                                                  61

     எந் நாட்டில்  அரசன்  அறமுடையனாக வுள்ளானோ  அந் நாட்டிற்   குடிகளும்  அறமுடையராவர்  . எந் நாட்டில்  அரசன்  பெருந்  தீவினையாளனாக  வுள்ளானோ , அந்  நாட்டிற்  குடிகளும்  தீவினையாளராவர் .                                                                                           62

     அரசன்  அறமுடையோனல்லாக்கால்  மழை  உரிய  காலத்திற்  பெய்யாது . நிலம்  பெரும்  பயன்  விளைக்காது ; அரசியற்குக்  குறைவும் , பகைவர்க்கு  ஆக்கமும் , பொருட்கு  அழிவும்  உண்டாவனவாம் .                                                                                                 63

     அரசன்  கட்குடித்தலால்  இழிந்தவனாகான் ; மகளிர்  காமத்தாலும்  கடுஞ்சினத்தாலும்  இழிவுடையோனாவான் . கடுஞ்சினமுடைய  வேந்தன்  குடிகளை  மிகவுந்  துன்புறுத்துபவனாவான் . மகளிர்பாற் காமமுடைய  அரசன் , கலப்புச்  சாதிகளை யுண்டு  பண்ணுதலால்  அந்தணர்  முதலிய  சாதிகளைக்  கெடுப்பவனாவான் . கட்குடிப்போன்  தான்  ஒருவனே  அறிவொழுக்கங்களிற்  பிறழ்வன் . [ குடிகளைப்  பிறழ்விப்பானல்லன். ] காமம் , வெகுளி , இவ்விரண்டும்  அறிவை  மயக்கும்  பொருள்களெல்லாவற்றுள்ளும்  மிகவுஞ்  சிறந்தனவாம் . [ஆதலின்  கள்ளினுங்  கொடியன  காமம்  , வெகுளிகள்  என்பது  போதரும் .]                                                                                                          64-65

     அரசன்  மிக்க  உலோபத்தாற்  குடிகளின்  பொருளையும்  உயிரையும்  கவர்பவனாவான் .  ஆதலின் , வேந்தன்  காமம் , வெகுளி , உலோபமாகிய  இம்மூன்றனையும்  ஒழித்துத்  தண்டத்தைத்  தாங்குவோனாக  இருத்தல்  வேண்டும் .                                                         66

( உலோபம் – ஈண்டுப்  பிறர் பொருட்கட்  செல்லும்  பேரவா .)

     அரசன்  உள்ளத்தே  இரக்கமும்  புறத்தே  வன்கண்மையுமுடைய னாய்த்  தன்  குடிகளை  ஒறுத்தல்  வேண்டும் . இயற்கையாகவே  உயிர்களுக்குத்  தீங்கு  செய்வோரைக்  குறித்து  அரசன்  மிகக்  கொடுந்  தண்டம்  செய்பவனையொப்ப  இருத்தல்  வேண்டும் .                             67

     இயற்கையாகவே  குறளை  கூறுவோரால்  அரசியற்கு  என்றுங்  கேடு  விளைவதாகும் . ஆதலின் , அரசன்  குறளை  கூறுவோரால்  அறிவிக்கப்படினும் , செய்யத்தக்க  காரியங்களை  முயன்று  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .                                                                     68

     தலையாய  அரசன்  தன்னுடையனவும்  குடிகளுடையனவுமாகிய  குற்றங்களைக்  காண்பவனாவான் . ஆதலின்  அவ்வரசன்  முதலிற் றன்னையும் , அதன்பின்  அமைச்சர்  முதலிய  வினை செய்வாரையும் , அதன்பின்  குடிகளையும்  நன்கு  அடக்கி  ஆளுதல்  வேண்டும் .            69

4. குற்றங்களும்  அவற்றிற்குரிய  தண்டங்களும்

     உடலைப்  பற்றியதும் , மொழியைப்  பற்றியதும் , மனத்தைப்  பற்றியதும் , சேர்க்கையானாவதும்  எனக்  குற்றம்  நான்கு  வகைப்படும் . அஃது  அறிந்து  செய்தல்,  அறியாது  செய்தல்  எனப்  பின்னும்  இரண்டு  வகைப்படும் .                                                                    70

அக்குற்றம்  செய்விக்கப்படுவது , உடன்பட்டு  மகிழ்வது  என  மீண்டும்  இருவகையாகவும் , ஒருமுறை   செய்யப்படுவது , பன்முறை செய்யப்படுவது , செயற்கையிற்  செய்யப்படுவது , இயற்கையிற்  செய்யப்படுவது எனப் பின்னரும் நான்கு வகையாகவும் கூறப்படும். 71

     கண்  முகம்  முதலியவற்றின்  விகாரத்  தோற்றங்களான்  மனத்தின்கண்  நிகழும்  குற்றத்தையும், செயலால்  உடலின்கண்  நிகழுங்  குற்றத்தையும் , கடுஞ்சொற்களாற்  சொல்லின்கண்  நிகழுங்குற்றத்தையும் , உடன்  பழகுவோரால்  சேர்க்கையால்  நேருங்  குற்றத்தையும்  உணர்ந்து , அவற்றின்  வன்மை  மென்மைகளைச்  சீர்தூக்கி , நிகழ்ந்தனவும்  நிகழ்வனவுமாகிய  தீவினைகளுக்குத்  தாக்கவாறு  தண்டம்  செய்தல்  வேண்டும் .                                             72-73

     தலையாயோன்  கடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  பிரதம  சாகச  தண்டத்திற் குரியனாவன்  . அன்றி  முதலில் , “இத் தீச்செயல்  நீ  செய்ததன்றே ; இங்ஙனஞ்  செய்தல்  அறமாகுங்கொல்? “  என்று  வினவி  ஒறுத்துரைத்தற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  முற்கூறியாங்குப்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னரும்  அக்குற்றத்தையே  செய்வானாயின்  குற்றத்திற்குத்  தக்கவாறு  அப்  பிரதம சாகசத்தின்  இரு  மடங்கு  மும்மடங்கு  தண்டங்களுக்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                      74

( சாகசமென்பது  ஈண்டுத்  தண்டப்பணத்தின்  அளவைக்  குறிப்பதாகும் . இது  பிரதமசாகசமெனவும் , மத்திமசாகசமெனவும் , உத்தமசாகசமெனவும் , மூன்று  வகைப்படும் . இவற்றின்  பண  அளவு  முதலியவற்றை  இப்  பிரகரணத்தின்  116-ஆம்   சுலோகம்  முதலியவற்றிற்  காண்க . முதநூலில்  இதுமுதல்  87-ஆம்  சுலோகம்  வரை  குற்றங்களையும் அவற்றிற்குரிய தண்டங்களையும் “ஸாஹூம்” என்னும் ஒரு சொல்லாற்  குறிப்பிடுவர் . ”அன்றி”  எனத்   தொடங்கிக்  கூறுவன  கொள்கை  வேறுபாடாகும் . இங்ஙனமே  பின்னரும்  இவ்வாறு  “அன்றி”  எனத்  தொடங்கிக்  கூறப்படுவனவெல்லாவற் றையுங்  கொள்க .)

     தலையாயோன்  இடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  மத்திம சாகச  தண்டத்திற்  குரியனாவன் , அன்றி , முதலில்  இகழ்ந்துரைத்தலாகிய  சொல்லளவுத்  தண்டத்திற்கும் , அதன்பின்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும் அக்குற்றத்தைச் செய்வானாயின்  முற்கூறியாங்கு  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னருஞ்  செய்வானாயின்  குற்றத்தின்  மிகுதிக்கேற்ப  மிக்க  தண்டத்திற்கும்  உரியனாவான்  என்பதுமாம்.                                 76

     தலையாயோன்  தலையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  உத்தம  சாகச  தண்டத்திற்குரியனாவன் . அன்றி , முதலில்  பிரதம   சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  உத்தம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  அவ்  வுத்தம  சாகச  தண்டத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , சிறைப்படற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                                                     77-78

     அறிந்து  செய்யும்  மனிதக்கொலை யல்லாத  பிற  குற்றங்களுக்கே  இங்குக்  கூறிய  பிரதம  சாகச  முதலிய  தண்டங்கள்  விதிக்கப்பட்டுள்ளன .                                                                                          79

     இப்  பிரகணத்திற்  கூறப்படும்  தலையாய  தன்மை  இடையாய  தன்மை  கடையாய  தன்மைகள்  முக்கியமாகக்  குணத்தாலும்  குலத்தாலும்  பொருளாலுமாம் .                                                                      80

     இடையாயோன்  கடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  பிரதம  சாகச  தண்டத்திற் குரியனாவான் . அன்றி  முறையே  இகழ்ந்துரைத்தலாகிய  சொல்லளவுத்  தண்டத்திற்கும் , அரைக்கூறு  தண்டத்திற்கும் , முழுத்தண்டத்திற்கும் , பின்னரும்  அக்  குற்றத்தையே  செய்வானாயின்  குற்றத்திற்குத்  தக்கவாறு  பிரதம  சாகசத்தின்  இருமடங்கு  மும்மடங்கு  தண்டங்களுக்கும் , அதன்பின்  சிறைப்படற்கும் , இழிதொழில்  புரிதற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                                                                                           81

     இடையாயோன்  இடையாய  குற்றம்  புரிவானாயின் , மத்திம  சாகச  தண்டத்திற்குரியனாவான் . அன்றி , முதலிற்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்  பின்னருஞ்  செய்வானாயின்  அம் மத்திம  சாகச  தண்டத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , அடித்தொறுத்தல் , விலங்கிடல் , உடலின்கண்  என்றும்  நிலைத்திருக்கும்  குற்ற  அடையாளமிட்டு  நகரத்தினின்றும்  வெளிப்படுத்தலாகிய  தண்டங்களுக்கும்  உரியனாவான்   என்பதுமாம் .                                      82

     இடையாயோன்  தலையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  உத்தம  சாகச  தண்டத்திற்குரியனாவான் . அன்றி , முதலில்  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  உத்தம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  அவ்வுத்தம  சாகச  தண்டத்தின்  இரு  மடங்கு  மும்மடங்கு  மிக்க  தண்டங்களுக்கும் , அதன்பின்  வாழ்நாள்காறும்  தளைபூண்டு  சிறைப்படற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                      83

     கடையாயோன்  கடையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  பிரதம  சாகச  தண்டத்திற் குரியனாவான் . அன்றி , முதலில்  அப் பிரதம  சாகச  தண்டத்தின்   அரைக்கூறு  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்குப்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் ,          அதன்பின்னரும்  அக்  குற்றத்தைச்  செய்வானாயின்  அப்  பிரதம  சாகசத்தின்  இருமடங்கு  மும்மடங்கு  மிக்க  தண்டங்களுக்கும்  தளைபூண்டு  சிறைப்படற்கும்  உரியனாவான் என்பதுமாம் .                84

     கடையாயோன்  இடையாய  குற்றம்   புரிவானாயின் , அவன்  மத்திம  சாகச  தண்டத்திற்குரியனாவான் . அன்றி , முதலில்  பிரதம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைச்  செய்வானாயின்  அம்  மத்திம  சாகசத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , சிறைப்பட்டு  நாடோறும்  தெருவலகிடன்  முதலிய  இழிதொழில்  புரிதற்கு  முரியனாவான்  என்பதுமாம் .                                                                          85

     கடையாயோன்  தலையாய  குற்றம்  புரிவானாயின் , அவன்  உத்தம  சாகச  தண்டத்திற் குரியனாவான் . அன்றி , முதலில்  மத்திம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்  முற்கூறியாங்கு  உத்தம  சாகச  தண்டத்திற்கும் , அதன்பின்னரும்  அக்குற்றத்தைப்  புரிவானாயின்  அவ்வுத்தம  சாகசத்தின்  இருமடங்கு  தண்டத்திற்கும் , வாழ்நாள் காறும்  தலை பூண்டு  சிறைப்பட்டு  இழிதொழில்களையே  செய்தற்கும்  உரியனாவான்  என்பதுமாம் .                                             86-87

     ஒருவன்  பொருட்  செருக்கால்  தீங்கு  புரிவானாயின் , முதன்முறை  அவன்  பொருளினின்றும்  காற்கூறு  கோடலும் , இரண்டாமுறை  அரைக்கூறு  பொருள்  கோடலும் , மூன்றாம்  முறை  அவன்  பொருள்  முழுதுங்  கோடலும்  அவனுக்குச்  செய்யுந்  தண்டங்களாம் . அதன்மேலுங்  குற்றம்  புரிவானாயின்  அவனை  வாழ்நாள்காறும்  விலங்கிட்டு  ஒறுத்தல்  வேண்டும் .                                                                88

     வலிய  துணையுடைமையானாதல் , கல்விச்  செருக்கானாதல் , உடல்  வலிமையானாதல்  தீங்கு  புரிவாரை , எப்பொழுதும்  விலங்கிட்டுச்  சிறைப்படுத்தியும்  அடித்தும்  தண்டித்தல்  வேண்டும். 89

     ஒருவன்  தன்  மனைவி , புதல்வர் , உடன்பிறந்த  பெண்கள் , மாணாக்கர் , ஏவலாளர் , மருமகள் , தம்பி  ஆகிய  இவர்கள்  குற்றம்  செய்யின் , அவர்களைச்  சிறிய  கயிற்றினாலும்  சிறு  மூங்கிற்  கோலாலும் , அவர்தம்  உடலின்  பிற்புறத்தில்  அடிக்கலாம் . ஒரு  பொழுதும்  தலைக்கண்  அடித்தலாகாது . இங்ஙனமின்றி  வேறுவிதமாக  அடிப்பானாயின்  அவன்  கள்வனை  யொப்ப  அரச  தண்டத்திற் குரியனாவான் .                                                                        90-91

     குற்றம்  புரிவாரை  ஒரு  திங்களாதல் , மூன்று  திங்களாதல் , ஆறு  திங்களாதல் , ஓராண்டாதல்  வாழ்நாள்  மாறுகாதல்  விலங்கிட்டுச்  சிறைக்கோட்டம்  புகுவித்து  இழிதொழில்  செய்யும்படி  தண்டிக்கலாம் . இவருள்  எவனும்  கொலைத்  தண்டத்திற்குரியனா கான் .                                                                                                                 92

     உயிர்களைக்  கொலை  செய்தலாகாதென்று  வேதங்கள்  வற்புறுத்திக்  கூறுகின்றன . ஆதலின் , அரசன்  எவ்வாற்றானுமுயன்று  கொலைத்  தண்டத்தை  ஒழித்தல்  வேண்டும் .                                      93

( ஈண்டுக்  கொலைத்  தண்டத்தை  ஒழித்தல்  வேண்டுமென்பது  அறிந்து  செய்த  மனிதக்  கொலை  யல்லாத  பிற  குற்றங்களுக்கென வுணர்க . இதனை  79-ஆம்  சுலோகக்கருத்தானும் , 47-ஆம்  சுலோகத்தில்  தண்ட  பேதங்களுள்  ஒன்றாகக்  கொலையையுங்  கூறினமையாலும்  உய்த்துணர்க . ) 

     குடிகள்  குற்றம்   புரிவாராயின்  அவரை  அரசன்  சிறைப்படுத்தியும்  விலங்கிட்டும்  அடித்தும்  ஒறுத்தல்  வேண்டும் . உலோபத்தால்  அவர்தம்  பொருளைக்  கொள்ளுதலாகிய  தண்டம்  செய்து  துன்புறுத்தலாகாது .                                                                                           94

     ஒருவன்  குற்றம்  புரிவானாயின் , அவனுக்குத்  துணைசெய்யாத  அவன்  தந்தை  முதலியோர்  அக்  குற்றம்  குறித்துத்  தண்டிக்கற்பாலரல்லர் . இங்குக் கூறிய தண்ட  ஒழுங்குகள்  பொறுமைமிக்க  அரசனாற்  கொள்ளற் பாலனவாம் .                              95

     எப்பொழுது  அரசன்  குடிகள்  செய்யுங்  குற்றங்களைப்  பொறுத்துக்  கொள்ளாமல்  அவர்க்குக்  கடுந்  தண்டமிடுதலையும் , அவர்  தம்  பொருளைக்  கவர்தலையும்  மேற்கொள்ளுகின்றானோ , அப்பொழுது  அக்குடிகள்  அரசன்பாற்  பற்றொழிந்து  கலக்கமெய்துவர் ; அவ்வரசனுடைய  பகைவராலும்  வேறுபடுக்கப்படுவர் .                      96                                                                                    

     ஆதலின் , அரசன்  நன்கு  ஆராய்ந்து  தண்டிப்பவனாகவும் , பொறுமையாளனாகவும் , குடிகளால்  விரும்பப்படுவனாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                           97

     கட்குடிப்போன் , சூதாடுவோன் , கள்வன் , பிறன் மனை நயப்போன் , கடுஞ்சினமுடையான் , உயிர்களைத்  துன்புறுத்துவோன் , வருணாச்சிரம தருமங்களை யிழந்தோன், நாத்திகன் , கீழ்மகன் , பிறர்பாற்  பொய்ப்பழி  சுமத்துவோன் , குறளை  கூறுவோன் , பெரியோரையும்  கடவுளரையும்  பழித்துரைப்போன், பொய்பேசுவோன், அடைக்கலப்  பொருளைக்  கவர்வோன் , மற்றொருவன்  பிழைப்பிற்குக்  கேடு  செய்வோன் , பிறர்  செல்வ  முதலியன  கண்டு  பொறாதவன் , கைக்கூலி  பெறுதலில்  அவாவுடையான் , தகாதன  செய்வோன் , மந்திராலோசனைகளுக்கும்  காரியங்களுக்குங்  கேடு  விளைவிப்போன் , வெறுக்கத்தக்க  சொற்களைப்  பேசுவோன் , கடுஞ்  சொற்  கூறுவோன் , நீர்நிலைகளுக்கும்  பூஞ்சோலைகளுக்குங்  கேடு  செய்வோன் , வீண்குறி  சொல்லுவோன் , அரசனுடைய  பகைவன் , இழிந்த  அமைச்சன் , வஞ்சகச்  செயல்களை  யறிந்து  செய்வோன் , இழிந்த  மருத்துவன் , அமங்கல  சீலன் , தூய்மையில்லாதவன் , வழிகளைத்  தடை  செய்வோன் , பொய்ச்சான்று  கூறுவோன் , செருக்குமிக்க  வேடமுடையோன் , தலைவனுக்குத்  தீங்கு  புரிவோன் , பொருளை  மிகுதியாகச்  செலவு  செய்வோன் , இல்ல  முதலியவற்றில்  தீயிடுவோன் , நஞ்சிடுவோன் , விலைமகளிர்பால்  மிக்க  விருப்புடையோன் , கடுந்தண்டமிடும்  அரசியல்   வினை  செய்வோன் , மன்றோரஞ்  சொல்லுவோன் , வலிந்து  பொய்ப்பத்திரம்  எழுதி  வாங்குவோன் , நடுநிலை  பிறழ்ந்தோன் , கலகப்பிரியன் , போரில்  விருப்பற்ற  படை  வீரன் , அறிந்திருந்தும்  சான்று  கூற  ஒருப்படாதவன் தந்தை  தாய்  கற்புடை  மனைவி  நண்பனாகிய  இவர்க்குத்  தீங்கு  செய்வோன் , அழுக்காறுடையான் , தன்  தலைவருடைய  பகைவரை  யடுப்போன் , பிறர்க்கு  உயிர்நிலை  வேறுபடத்தக்க  செயலைப்  புரிவோன் , வஞ்சகன் , தன்  சுற்றத்தாரை  வெறுப்போன் , மறைந்து  தொழில்  செய்வோன் , அறத்திற்குக்  கேடு  விளைவிப்போன் , கிராமங்களைத்  துன்புறுத்துவோன் , தன்  குடும்பத்தைக்  காவாமல்  எப்பொழுதுந்  தவத்திலுங்  கல்வியிலும்  பற்று வைத் தொழுகுவோன் , புல்  விறகு  முதலியன  கொண்டு  பிழைத்தற்கு  ஆற்றலிருந்தும்  இரந்துண்போன் , பெண்ணை  விற்றுப்  பணம்  வாங்குவோன் , குடும்ப  வாழ்க்கையிற்  குறை  செய்வோன் , அறமில்லோன் , உட்பகையுடையோன் , அரசனுக்கு  வரும்  தீங்கைப்  புறக்கணிப்போன் , கற்பொழுக்கமில்லாத  பெண் , கணவனுக்கும்  புதல்வர்க்கும்  அழிவு  செய்பவள் , தன்  விருப்பின்படி  நடப்பவள் , பெரியோராற்  பழிக்கப்பட்டவள் , வீட்டுக்  காரியங்களைச்  செய்யாது  ஒழிந்தவள் , எப்பொழுதும்  தீயொழுக்கமுடையவள் , மருகியிடத்து  அன்பில்லாதவன்   ஆகிய  இயற்கையாகவே  பொல்லாங்குமிக்க  இவர்களை , அரசன்  அறிந்து  தன்னாட்டினின்றும்  வெளிப்படுத்திவிடல்  வேண்டும் .                                                           98-107

     முற்கூறிய  கட்குடிப்போன்  முதலிய  இவர்களை  அயற்றீவுகளிலிருக்கும்படி  செய்தல்  வேண்டும் ; அன்றிச்  சிறைக்கோட்டத்துட்  புகுத்தி  விலங்கிட்டு  இழிந்த  உணவைக்  குறைந்த  அளவிற்  கொடுத்து  உண்பித்துத்  தெருவலகிடன்  முதலிய  இழிதொழில்களைப்  புரியும்படி  நியமித்தலும்  பொருந்தும் .            108

     அரசன்  முற்கூறிய  கட்குடித்தல்  முதலிய  குற்றம்  புரிந்து  சிறைப்பட்டாரை  அவர்தம்  சாதிக்குத்  தக்கவாறு  சிறைக்கூடத்திற் றொழில்  செய்யும்படி  நியமித்தல்  வேண்டும் .                                         109

     அரசன்  இத்தகைய  தீயவர்களையும் , அவர்தம்  கூட்டுறவால்  தீங்கெய்தினோரையும்  தண்டித்து  எப்பொழுதும்  அவரை  நன்னெறிக்கண்  ஒழுகுமாறு  பயிற்றல்  வேண்டும் .                               110

     பகைவரின்  சூழ்ச்சியால்  அரசனுக்கும் , நாட்டிலுள்ள  குடிகளுக்கும், அமைச்சர்  முதலிய  அரசியல்  வினைசெய்வார்க்கும்  மாறுபாட்டுத்  தன்மையை  விரும்புவோரை , அரசன்  விரைந்து  அழித்துவிடல்   வேண்டும் .                                                                                                           111

     அரசன் , ஒரு  குழுவினர்  தீங்குபுரிவாராயின் , அக்குழுவினரை  ஒரே  காலத்தில்  ஒருங்கு  அழித்துவிட  விரும்பலாகாது . ஒரு  குழந்தை  பாலுண்ணுங்கால்  தனத்தை  ஒவ்வொன்றாகப்  பற்றி  உண்ணுதல்  போல , அரசனும்  அத்தீயோரை  முறையே  ஒவ்வொருவராகப்  பற்றி  அழித்துவிடக்  கடவன் .                                                                                    112

     எப்பொழுது  அரசன்  அறநெறி  பிறழ்ந்து  ஒழுகுகின்றானோ , அப்பொழுது  குடிகள் , மிக்க  வலிமை  வாய்ந்து  அறநெறிக்கண்  ஒழுகும்  பகையரசனைச்  சார்ந்து , அச்சார்பினால்  தம்  அரசனை  என்றும்  அச்சுறுத்தக்  கடவர் .                                                                         113

     அரசன்  அறமுடையனா  யிருக்குங்காறும்  அரசனாகவே  வாழ்வான். அன்றி  அறநெறி  பிறழ்ந்து  ஒழுகுவானாயின் , உலகமுங்  கேடெய்தும்;  அவ்வரசனும்  விரைந்தழிவெய்துவான் .                            114

     எவன்  தன்  தந்தை  தாய்  மனைவியாகிய  இவர்களைக்  காவாமல்  விட்டுத்  தன்  விருப்பின்  வண்ணம்  திரிகின்றானோ , அவனைக்  கால் விலங்குகளாற்  பிணித்துத்  தெருவலகிடன்  முதலிய  தொழில்களில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . அவனுக்குரிய  கூலியிற்  பாதியை  முயன்று  பிடித்து  அவன்  தந்தை  முதலியோர்  பொருட்டு  அரசன்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                    115

     ஆயிரம்  பணங்  கொண்டது  உத்தம  சாகச  மென்னுந்  தண்டமாகும் . அரசின்  முத்திரை  யிடப்பட்டதும்  பத்து  மாட  எடை  கொண்டதுமாகிய   செம்பு  பணம்  என்னும்  பெயருடைய தாகும் . அப் பணம்  ஒன்று  நூற்றைம்பது  பலகறைகளின்  விலையாகவும்  அது  காருடாபணம்  என்னும்  பெயருடையதாகவும்  அறியப்படும் .           116

     அவ்வுத்தமசாகசத்தின்   பாதியாகிய  ஐந்நூறு  பணம்  மத்திம  சாகச மெனவு, அம் மத்திம  சாகசத்தின்  பாதியாகிய  இருநூற்றைம்பது  பணம்  பிரதம  சாகச மெனவும்  முறையே  பெயர்  பெறும் . கடையாய  குற்றத்திற்குப்  பிரதம  சாகச  தண்டம்  உரியதாகும் . அங்ஙனமே  மற்றையவற்றிற்கும்  கொள்ளப்படும் . 117

( மேற் கூறப்பட்ட  இரு  சுலோகங்களிலுந்  தண்டப்  பணங்களின்  அளவுகளை  மநுஸ்மிருதி  8-ஆம்  அத்தியாயம்  138-ஆம்  சுலோகத்திலுங்  காண்க . அச்சுலோக  மொழிபெயர்ப்பு  வருமாறு ; “இருநூற்றைம்பது  பணம்  பிரதம  சாகச மெனவும், ஐந்நூறு  பணம்  மத்திம  சாகச மெனவும் , ஆயிரம்  பணம்  உத்தம  சாகச மெனவும்  எண்ணப்பட்டன . )

     இடையாய  குற்றத்திற்கு  மத்திம  சாகச  தண்டத்தையும் , தலையாய  குற்றத்திற்கு  உத்தம  சாகச  தண்டத்தையும் , அரசன்  மேற்கொள்ளல்  வேண்டும் . மிச்சிரமென்னும்  இந்  நான்காம் அத்தியாயத்திலுள்ள  முதற்  பிரகரணமாகிய  இதன் கண்  நட்டார்  பகைவர்  நொதுமலராகிய  இவர்கள்பாற்  சாம  தான  பேத  தண்டோ பாயங்களை மேற்கொள்ளு முறை இத்துணையுங்  கூறப்பட்டதாம் . 118                                                                                              

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

“நண்பர்  முதலியோரின்  இலக்கணங்கள் “  என்னும்

முதற்  பிரகரணம்  முற்றிற்று.

                            &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரண்டாம்  பிரகரணம் 

(கோச  நிரூபணம்)

1 . கருவூலம்  அமைக்கும்  முறை

     இனி, மிச்சிரமென்னும்  இந்நான்காம்  அத்தியாயத்திற்  கருவூலத்தைப்  பற்றிய  இரண்டாம்  பிரகரணத்தைக்  கூறுவேன் . ஒரு  சில  பொருள்களின்  கூட்டமே  கருவூலமாகும் . அது  தனித்தனியாக  எண்ணுங்கால்  பல்வேறு  வகைத்தாம் .                                                         1

     அரசன்  எவ்வழியாலேனும்  பொருளையீட்டல்  வேண்டும் . அங்ஙனம்  ஈட்டிய  பொருளால்  தன்  நாட்டினையும் , படைகளையும் , வேள்வி , வினை  முதலியவற்றையும்  காத்தல்  வேண்டும் .                      2

     படைகளையும் , குடிகளையும் , வேள்வி  முதலியவற்றையும்  காத்தற்  பொருட்டுச்  சேர்க்கப்படுங்  கருவூலமே  அரசனுக்கு  இம்மை  மறுமைகளில்  இன்பம்  விளைவிப்பதாகும் . இங்ஙனமல்லாது  சேர்க்கப்படுங்  கருவூலம்  துன்பந்  தருவதாகும் .                                         3

     தன்  மனைவி  மக்கள்  பொருட்டும் , தான்  இன்பம்  நுகர்தற்பொருட்டுமே  கருவூலம்  சேர்க்கப்படுமாயின் , அது  மறுமைக்கண்  நலந்தருவதன்று ; நரகத்திற்கும்  உரியதாகுமென்று  அறியப்படும் .                                                                                                           4

     ஒருவன்  மற்றொருவனிடத்தினின்றும்  நியாயமின்றிப்  பொருளை  யீட்டுவானாயின் , அவன்  அங்ஙனம்  ஈட்டப்பட்டோனது  பாவத்தை யடைவான் . சற்பாத்திரமாயினாரிடத்தினின்றும்  வாங்கப்பட்டதும்  அவர்  பொருட்டுக்  கொடுக்கப்பட்டதுமாகிய  பொருளே  வளர்ச்சி  யெய்துவதாகும் .                                                                                                    5

     பொருளை  அறத்தாறீட்டி  அவ்வழியே  செலவிடுவோனே  சற்பாத்திரமாவான் . அங்ஙனமின்றித்  தீயவழியான்  ஈட்டி  அவ்வழியே  செலவிடுவோன்  அபாத்திரமாவான் . அரசன்  அபாத்திரமாவானது  பொருள்  முழுதையுங்  கவர்ந்து  கொள்ளலாம் . அதனால்  அவன்  குற்றமுடையனாகான் .                                                                                       6

     அரசன்  மறநெறிக்கண்  ஒழுகுவோனிடத்தினின்றும்  அவன்  பொருளை  எல்லாவழியாலுங்  கவர்ந்து  கொள்ளலாம் . அங்ஙனமே  பகைவர்  நாட்டினின்றும்  அவர்தம்  பொருளையும்  வஞ்சத்தாலும் , வலிமையாலும் , களவுத்தொழிலாலும்  கவர்ந்து  கொள்ளலாம் .           7

     எவ்வரசன்  நீதிமுறையைக்  கைவிட்டுத்  தன்   குடிகளைத்  துன்புறுத்தி , அவர்தம்  பொருளைக்  கவர்கின்றானோ , அவனுடைய  அப்பொருள்  அவன்  இராச்சியத்தோடு  பகைவர்வயமாய்   விடும் .      8

     அரசன்  தனக்குத்  துன்பம்  நேராத  காலத்தில்  தண்டவருவாயையும் நிலக்கூற்றின்  வருவாயையும் , சுங்க  வருவாயையும்  மிகைப்படுத்தி  அப்பொருள்களாலும் , புண்ணியத்தலம்  தேவாலயங்களின்  காணிக்கைப்  பொருள்களாலும்  தன்  கருவூலத்தை  நிறைக்க  எண்ணலாகாது .                                                                                                       9

( துன்பம்  நேர்ந்துழி  அப்பொருள்களாற்  கருவூலத்தை  நிறைக்கலாமென்பது  கருத்து .)

     பகைவரை  யழித்தற்  பொருட்டுப்  படைகளைப்  பெருக்கிக்  காக்க  முயலுங்கால் , குடிகளிடத்தினின்றும்  தண்டம் , சுங்கம் , முதலிய  இறைப்  பொருள்களை  மிகைப்படுத்தி  வாங்கலாம் .                              10

     அரசன்  தனக்குத்  துன்பம்  நேர்ந்துழித்  தன்  குடிகளுட்  பொருள்  மிக்காரிடத்தினின்றும்  வட்டி   தருவதாகக்  கூறி   அவர்  தம்  பொருளைப்  பெற்றுக்  கொள்ளலாம் . பின்னர்  அத்துன்பம்  தீர்ந்துழி  அப்பொருளை  வட்டியோடு  அவ்வுரியாரிடத்துக்  கொடுத்து விடல் வேண்டும் .                                                                                                              11

     அரசன்  இங்ஙனம்  பொருள்  கொண்டு  படைகளைக்  காத்திலனேல், மிகப் பெருந்  தண்டத்தையுடைய  பகைவனால்  தானுங்  கேடெய்துவன் ; குடிகளும்  அரசியலும்  கருவூலமும்  அழிவெய்துவனவாம் . சுரதன்  முதலிய  அரசர்களும்  இங்ஙனமே  தம்  படைகளைக்  காவாது  மிகப்  பெருந்  தண்டத்தையுடைய  பகைவரால்  அழிவெய்தினர் .                                                                                                    12

( சுரதன் – அழகிய  தேரையுடையவன் ; இவன்  சூரிய  வமிசத்து  அரசருள்  ஒருவன். )

     அரசன்  தண்டவருவாய் , நிலக்  கூற்றுவருவாய் , சுங்கவருவாய் , ஆகிய  இவைகள்  இல்லாமலே  இருபது  யாண்டுவரை  தன்  படைகளயும்  குடிகளையும்  நன்கு  காத்தற்குத்  தக்க  பொருட்  கருவூலத்தைச்  சேர்த்து  வைத்தல் வேண்டும் .                                           13

     கருவூலம்  படைகளை  மூலமாக  வுடைத்தாம் ; படைகளும்  கருவூலத்தை  மூலமாக  வுடையனவாம் . படைகளை  நன்கு  காத்தலாற்  கருவூலம்  அரசியலாகிய  இவற்றிற்கும்  ஆக்கமும் , பகைவர்க்கு  அழிவும்  உண்டாம் ; தன்  குடிகளை  நன்கு  காத்தலால்  அம் மூன்றனோடு  மறுமையின்பமும்  உண்டாகும் .                      14-15

( கருவூலமும்   படையும்  ஒன்றுக்கொன்று  துணையாகுமாதலின்  இவ்வாறு  கூறினார் . படைகளைக்  காத்தலாற்  பொருள்  அரசியல்களின்  ஆக்கமும்  பகைவரின்  அழிவும்  உண்டாம் . எனவே  இம்மையின்பமும் , குடிகளைக்  காத்தலான்  அறமுண்டாதலின்  அதனோடு  மறுமையின்பமும்  உண்டாமென்பது  கருத்து . )

     வேள்வியின் பொருட்டுப்  பொருளும் , இம்மையின்பம் , மறுமையின்பம் , வாழ்நாள்  வளர்ச்சியாகிய  இவற்றின்  பொருட்டு  வேள்வியும்  உண்டாயினவாம் . பகைவரின்மை , படை , பொருளாகிய  இம்  மூன்றும்  அரசியல்  வளர்ச்சிக்கு  உரியனவாம் .                              16

( ஒருவன்  பொருள்  படைத்தல் , வேள்வி  முதலிய  நற்  கருமங்களினிமித்தமா மென்பது  கருத்து . வேள்வி – ஐம் பெருவேள்வி  முதலியன . இவற்றை  வடநூலார்  பஞ்சமகா யாகம்  என்ப . அவை :  பிரம யாகம் , தேவ யாகம் , மானுட யாகம் , பிதிர் யாகம் , பூத யாகம்  என்பனவாம் . அவற்றுள் , பிரம யாகம்-வேதமோதல் , தேவ யாகம்- ஓமம் வளர்த்தல் , மானுட யாகம் – விருந்தோம்பல் , பிதிர் யாகம் – நீர்க்கடனாற்றல் , பூத யாகம் – பலியீதல் .)

     பொறுமை  மிக்க  அரசனுக்கு  நீதியின்  திறமையாற்  பகைவரின்மை , படை , பொருளாகிய  இம் மூன்றும்  வளர்ச்சி  யெய்துவனவாம் . ஆதலின் , அவன்  தன்  அறிவின்  வன்மை  மிகுதிக்குத்  தக்கவாறு  அவற்றின்  பொருட்டு  முயலுதல்  வேண்டும்.17

     பூஞ்செடிகளை   நன்கு  வளர்த்து  அவற்றினின்றுங்  கிடைக்கும்  மலர்களைப்  பறித்து  மாலை  கட்டுவோனை  யொப்பத்  தன்  குடிகளை  யோம்பி  அவரிடத்தினின்றுங்  கிடைக்கும்  இறைப்பொருளாலும் , பகைவரை  வணங்கி  அவர் தருந்  திறைப்பொருளாலும்  தன்  கருவூலத்தை  நிறைக்கும்  வேந்தன்  தலையாய  அரசனாவான் . வாணிகத்  தொழிலாற்றான் கருவூலத்தை  நிறைவிப்பவன்  இடையாய  அரசனாவான் . பிறர்க்கு  வினை  செய்தலாலும் , தண்டத்தாலும் , புண்ணியத்தாலும் , திருக்கோயிற்  காணிக்கைகளாலும்  கிடைக்கும்  பொருளாற்  கருவூலத்தை  நிறைவிப்பவன்  கடையாய  அரசனாவான் .                                        18-19

     அரசன்  சுருங்கிய  பொருளுடையாரும்  நடுத்தரமான  பொருளுடையாருமாகிய  குடிகளை  வேதன  முதலியன  கொடுத்து  எப்பொழுதுங்  காத்தல்  வேண்டும் . பெரும்பொருள்  படைத்த  தலையாய  குடிகளைத்  தலைமை  அதிகாரிகளைப்  போலப்  பிரதிநிதிகளாக்கிக்  காத்தல்  வேண்டும் .                                                20

     சிறந்த  பொருள்மிக்க  செல்வர்கள்  அரசர்க்குக்  குறைந்தவருமாகார் ; அரசரினு மிக்காருமாகார் . [ அரசரோ டொப்பாவரென்றபடி. ]                                                                                     21

     குடும்பக்காப்பின்  பொருட்டுப்  பன்னீராண்டுச்  செலவிற்கு  வேண்டிய  அளவு  நிறைத்து  வைக்கப்பட்ட  பொருள்  கடையாய  தாகும் . பதினாறு  யாண்டுச்  செலவிற்கு  வேண்டிய  அளவு  நிறைத்து  வைக்கப்பட்ட  பொருள்  இடையாயதாகும் . முப்பது  யாண்டுச்  செலவிற்கு  வேண்டிய  அளவு  நிறைத்து  வைக்கப்பட்ட  பொருள்  தலையாயதாக  எண்ணப்படும் . அரசன்  தனக்கு  இடுக்கண்  நேர்ந்தவிடத்து  முற்கூறிய  பொருளாளர்பால்  அவர்  தகுதிக்கேற்பத்  தன்  பொருளை  வைத்துக்  காத்தல்  வேண்டும் .                                   22-23

( முற்கூறிய  பொருளாளர்  21-ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்டவர் .)

     வணிகர்கள்  ஓரோவமயம்  ஊதியங்  கருதாமல்  பண்டங்களின்  மூலவிலை  யளவிற்  கொள்ளல்  விற்றலைச்  செய்வர் . ஒரோவமயம்  விலையுயர்ந்திருக்குங்காற்  பண்டங்களை  விற்றலும் , விலை  குறைந்திருக்குங்காற்  பண்டங்களைக்  கொள்ளுதலுஞ்  செய்வர்.  24

     வாணிகத்தின்  பொருட்டு  வணிகற்களாற்  றொகுத்து  வைக்கப்படும்  பண்டங்களை  அரசன்  ஒரு  பொழுதும்  பொருள்  கொடுத்தன்றிக் கொள்ளலாகாது ; பொருளின்றி  வலிந்து  கவர்ந்து  கொள்ளுவானாயின் , அவன்  குடிகளாகிய  அவ்வணிகர்களின்  மனக் கலக்கம்,  அவ்வரசனைக்  குலத்தோடு  அழித்துவிடும் .                       25

2. தானியங்களைத்  தொகுத்து  வைக்கும்  முறை

     அரசன்  தன்  நலத்திற்  பொருட்டும் , தன்  நாட்டைக்  காத்தற்  பொருட்டும்  மூன்று  யாண்டுவரை  செலவிடுதற்குப்  போதிய  அளவு  தானியங்களை  உரிய  காலங்களிற்  சேர்த்துத்  தொகுத்து  வைத்தல் வேண்டும் ; செல்வமிக்கார்  அம் மூன்று  யாண்டினும் மிக்க  காலத்திற்கு  வேண்டிய  அளவு  தானியங்களைச்  சேர்த்து  வைத்தலும்  நன்றென்ப .                                                                                                            26

     பருமை, ஒளி, உலர்ச்சி , மணம் , நிறம் , சுவை , நெடுநாட் கெடாதிருத்தல்  ஆகிய  இவற்றையுடைய  உயர்ந்தசாதிப்  புதிய  தானியங்கள்  மிக்க  விலையுடையன  வெனினும் , அவற்றை  நன்கு  ஆராய்ந்து  பார்த்து  மிகுதியாக  வாங்கி  வைத்துக்  காத்தல்  வேண்டும் . இக்குணங்களில்லாத  தானியங்கள்  குறைந்த  விலைக்குக்  கிடைப்பன  வெனினும்  அவற்றைக்  கொள்ளலாகாது .                           27

     நஞ்சு ,நெருப்பு , பனி , கீட  மாகிய  இவற்றாற்  பற்றப்பட்ட  தானியங்களை  வாங்கி  வைத்தலாகாது . உள்ளீடற்ற  தானியங்களைச்  சேர்த்து  வைக்காது  செலவு  செய்துவிடல்  வேண்டும் .                                                                                                              28

     அரசன்   செலவிடப்படும்  தானியத்தின்  அளவைப்  பார்த்து  அவ்வளவின்  ஒத்த  அளவு  புதிய  தானியங்களை  ஆண்டுதோறும்  நன்கு  முயன்று  வாங்கிச்  சேர்த்து  வைத்தல்  வேண்டும் .                       29

     தானியம் , சுரங்கத்தினின்றும்  எடுக்கப்படும்  பொன்  முதலியன புல்  விறகு  முதலியன , எந்திரம்  விடுபடை  விடாப்படை  நெருப்புத்துகள்  பாண்ட  முதலியன , ஆடையாகிய  இவற்றின்  கருவியாக  உபயோகப்படுவனவற்றையும் , காரியமாக  உபயோகப் படுவனவற்றையும்  எப்பொழுதும்  தொகுத்து  வைத்தல்  வேண்டும் . அங்ஙனம்  தொகுத்து  வைத்தல்  காரிய  சித்தியை  யளிப்பதாகும்.

( 30-31. ஓஷதி  என்று  மூலத்திலுள்ளது .  ஓஷதி – ஒரு முறை காய்த்து அழியும்  செடி முதலியன . அதன்கண்  விளையும்  தானியங்களுக்காம்  என  மொழிபெயர்க்கப்பட்டது . அது  நோய் தணிக்கும்  மருந்துக்குமாம். கருவியாக  உபயோகப்படுவன – எந்திரம்  படைக் கல  முதலியன . காரியமாக  உபயோகப்படுவன – தானியம்  ஆடை  முதலியன .)

     ஈட்டப்பட்ட  பொருள்  முதலியவற்றை  முயன்று  நன்கு  காத்தல்   வேண்டும் . பொருளை  யீட்டுங்கால்  உண்டாந்  துன்பம்  பெரிதாம் .; அதனைக்  காக்குங்கால்  உண்டாந்  துன்பம்  அவ் வீட்டற்றுன்பத்தினும்  நான்கு  மடங்கு  மிக்கதாகும் . பொருள்  காக்கப்படாது  ஒரு கணப்பொழுதேனும்  புறக்கணிக்கப்படுமாயின் , அது  விரைந்து  அழிவெய்துவதாகும் .                                                                                  32-33

     ஈட்டப்பட்ட  பொருளின்  இழப்பால்  ஈட்டினவர்க்கு  எத்துணைத்  துன்ப முண்டாமோ  அத்துணைத் துன்பம்  அவன்  மனைவி  மக்கட்கும்  உண்டாகாது . அங்ஙனமாயின்  மற்றையோர்க்கு  அதனால்  எங்ஙனம்  துன்ப  முண்டாம் .                                                                                               34

( பொருளை  ஈட்டினவர்க்கே  அதன்  இழப்பால்  பெருந்துன்பமுண்டா மென்று  கூறிய  இதனால் , அப்பொருளை  ஈட்டினவனே  நன்கு  காக்கவேண்டுமென்று  வற்புறுத்தியவாறாம் .  )           

     ஒருவன்  தன்  காரியத்திற்  சோம்பலுடையனாக  இருக்குங்கால்  அவனைச்  சார்ந்த  மற்றையோர்  எங்ஙனம்  சோம்பலின்றி  இருப்பர்? [அவரும்  சோம்பலுடையராவரென்றபடி ] எவன்  தன்  காரியத்திற்  சோம்பலின்றி  விழிப்புடையனாக  விருக்கின்றானோ , அவனைப்  பற்றி  நிற்கும்  துணைவரும்  அவனை  யொப்பக்  காரியத்திற்  கண்ணுடையராகவே  இருப்பர் .                                                                   35

     எவன்  பொருளை  யீட்டு முறை  தெரிந்தும் , அங்ஙனம்  ஈட்டப்பட்ட  பொருளை  நன்கு  போற்றுமுறை  தெரியாதிருக்கின்றானோ , அவனு டைய  பொருளீட்டும்  உழைப்புப்  பயனின்றிக்  கழிதலால் , அவனினுஞ்  சிறந்த  முழுமகன்  பிறனொருவனும்   இலன் .                  36

(முழுமகன் – அறிவிலான் .)    

     ஒரே  அதிகாரத்தில்  இருவரை  அதிகாரிகளாக  நியமிப்பவனும் , உயிரோடிருக்கும்  இரண்டு  மனைவிமாரை  யுடையவனும் , யாவர்மாட்டும்  நம்பிக்கை  வைத்தொழுகுவோனும் , மிக்க  பொருட்  பற்றுடையோனும் , மடியாளனும் , பெண்வழிச்  சார்ந்தோனும் , கள்வர், பிறர்மனை  நயப்போர்,  ஆததாயிகள்  என்னும்  இப்  பெருந்தீவினையாளரைக்  குறித்துச்  சான்று  வினவுவோனும்  ஆகிய  இவரெல்லோரும்  அறிவிலராவர் .                                                              37-38

     பொருளைப்  போற்றுங்கால்  உலோபியைப்போல்  இருந்து  போற்றல்  வேண்டும் ; அதனைப்  பிறர்க்குக்  கொடுக்குங்கால்  பற்றற்றவனைப்போல்  இருந்து  கொடுத்தல்  வேண்டும் . ஈரிடத்தும்  இங்ஙனமின்றி  மாறுபட்டு  ஒழுகுவானாயின் , அவன்  பொருட்கேடெய்துதலோடு  அறிவின்மைக்கும்  ஆளாவான் .                   39

3. நவமணிகளின்  ஆராய்ச்சி

     அரசன்  பண்டங்களின்   இயல்பைத்  தானே  உண்மையாக  ஆராய்ந்தறிவதில்  எப்பொழுதும் முயற்சியுடையனாக  இருத்தல்  வேண்டும் . இரத்தின  முதலியவைகளை  அவ்வாராய்ச்சியாளரோடு  கூடித்  தானே  நன்கு  ஆராய்ந்து  பார்த்து  வாங்கிப்  போற்றல்  வேண்டும் .                                                                                                               40

     வயிரம் , முத்து , பவளம் , கோமேதகம் , இந்திர நீலம் , வைடூரியம் புட்பராகம் , மரகதம் , மாணிக்கம் , இவ்வொன்பதையும் , சிறந்த  இரத்தினங்களென்று  அறிவுடையோர்  கூறுவர் .                                       41

     இந்திர  கோபத்தைப்  போற்  செந்நிற  வொளியினையுடைய  மாணிக்கம்  கதிரவற்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . செம்மை  பொன்மை  வெண்மை  கருமையாகிய  இந்நிற  வொளிகளையுடைய முத்துக்கள்  திங்களஞ்  செல்வற்கு  மகிழ்ச்சி  தருவனவாம் .                                       

( இந்திரகோபம் – கார்காலத்துண்டாகுஞ்  செந்நிறப்  பூச்சி . இதனைத்  தம்பலப் பூச்சியென்ப .)

     பொன்மையும்  செம்மையும்  கலந்த  ஒளியோடு  கூடிய  சிறந்த  பவழம்  செவ்வாய்க்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . மயில் , காடை , இவற்றின்  இறகு  போன்ற  பசுமை  நிற  வொளியினையுடைய  மரகதம்  புதனுக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் .                                             43

      பொன்னைப்போல்  ஒளிசெய்கின்ற   மஞ்சள்  நிறத்தினையுடைய  புட்பராகம்  வியாழனுக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . விண்மீனைப்போல் மிகவும்  சிறந்த  வெண்ணிற  ஒளியினையுடைய  வயிரம்  வெள்ளிக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் .                                                                                    44

( வெள்ளி – சுக்கிரன் ,)

     நெருங்கிய  சூற்கொண்ட  மேகத்தைப்  போன்ற  கரிய  ஒளி யினையுடைய  இந்திரநீலம்  சனிக்கு  மகிழ்ச்சி   தருவதாகும் . சிறிது  பொன்மையுஞ்  செம்மையுங்  கலந்த  ஒளியினையுடைய  கோமேதகம்  இராகுவுக்கு  மகிழ்ச்சி  தருவதாகும் . பூனையின்  கண்ணைப்  போன்ற  நிறத்தினையும்  அசைகின்ற  நூல்  போன்ற  ஒளியினையுடைய  வைடூரியம்  கேதுவுக்கு  மகிழ்ச்சி   தருவதாகும் .                                45-46

     இந்  நவமணிகளுள்  வயிரமே  எல்லாவற்றினுஞ்  சிறந்ததாகும் ; கோமேதகமும்  பவழமும்  எல்லாவற்றினும்  தாழ்ந்தனவாகும் . மரகதமும் , மாணிக்கமும் , முத்தும்  தலையாய  மணிகளாம் . இந்திர  நீலமும் , புட்பராகமும் , வைடூரியமும்  இடையாய  மணிகளாகும்.   47

     பாம்பின்  பாலுள்ள  மணி  மிக்க  பேரொளியுள்ளது ; எல்லா  மணிகளினுஞ்  சிறந்தது , அது  கிடைத்தற்  கரியதாகும் .                      48

     உள்  வெடிப்பில்லாததும் , நல்ல  நிறமுடையதும் , கீற்று புள்ளி  இவை  இல்லாததும்  அழகிய  கோணங்களையுடையதும், உயர்ந்த  ஒளியுடையதும்  ஆகிய  மணியினையே  சிறந்ததென்று  இரத்தின  இயல்பு  ஆராயும்   அறிஞர்  பாராட்டுவர் .                                                   49

     அம் மணிகள்  சருக்கராபம் , சிபிடம் , தளாபம் , வருத்துலம் , என  நான்கு  வகைப்படும் , அம்  மணிகளினின்றுந்  தோன்றும்  நிறவொளிகள்  வெண்மையும் , செம்மையும் , பொன்மையும்  கருமையுமாம் .                                                                                                    50

( இச்  சுலோகத்தின்  பிற்பாதியில்  பொதுவாக  மணிகளின்  நிறவொளிகள்  கூறப்பட்டமையால்  முற்பாதியிலுள்ள  சருக்கராப  முதலிய  நான்கும்  அம்மணிகளின்  வடிவங்களைக்  குறிப்பனவாகக்  கொள்ளல்  வேண்டும் . இவற்றுள்  சருக்கராபம்  என்பது  சுக்கான்  கல்லை  உபமானமாகவுடையது  என்று  பொருள்படும் . ஆதலின் , அது  பருமையுஞ்  சிறுமையுங்  கலந்த  நேரிதல்லாத  வடிவத்தை  யுடைய தாகும் .  சிபிடம்  என்பது  அவலை  யுணர்த்தும் . ஆதலின்  அஃது  அவலை  யொப்பத்  தகட்டு  வடிவினை யுடையதாகும் .  தளாபம்  என்பதில்  தளம்  நீண்ட  பொருளை  யுணர்த்துமாதலின் , அதனை  உபமானமாக  உடையது  தளாபமாகும் . ஆகவே  அது  நீட்டியான  வடிவத்தையுடையதாகும் . வருத்துலம்  என்பது  உருண்டை  வடிவத்தை  யுணர்த்தும் . இவற்றுள்  முன்னதனை  நோக்கப்  பின்னது  சிறந்ததாக  முறையே  மதிக்கப்படுமென்று  57-ஆம்  சுலோகத்திற்  கூறுதலும்  இவ்  வடிவங்களின்  இழிவு  சிறப்புக்களை  நோக்கியாமென்பது புலப்படும் . )

     உரிய நிறத்தினையும் , உரிய ஒளியினையும் முடையதாய்க்   குற்ற மற்ற அரதனம் , தன்னை அணிவோர்க்குச் செல்வம், வன்மை, புகழ், வாழ்நாள் ஆகிய இவற்றை  வளர்ப்பதாகும் . இங்ஙனமல்லாத                      இரத்தினம் முற்கூறிய செல்வ முதலியவற்றை அழித்துவிடுவதாகும். 51                                                                                          

     ஒளியால்  நிறமும்  நிறத்தால்  ஒளியும்  விளங்குவனவாம் .               52

     செந்தாமரை  மலரைப்  போன்ற  ஒளியினையுடைய  பதுமராகம்  மாணிக்கத்தின்  வகைகளுள்  ஒன்றாகும் . புதல்வர்ப்  பேற்றை  விரும்பும்  பெண்மக்கள்  ஒருபொழுதும்  வயிரமணியை யணிதலாகாது .                                                                                                    53

     முத்தும் பவழமும் அணியப்படுமாயின்  அவற்றின்  ஒளி, உருவம், நிறம் , முதலியன நாட் செல்லச் செல்லக்  குறைந்துவிடுவனவாம் . 53இ

     குற்ற மற்ற  அரதனம்  எடைமிகுதி, ஒளி, நிறம் , அகற்சி , தோன்றுமிடம் , உருவம் , ஆகிய  இவற்றால்  மிக்க  விலையுள்ளதாகும். முத்துப்  பவழங் களல்லாத  மற்றை  அரதனங்கள்  இரும்பினாலும்  கல்லினாலும்  பெரும்பாலுங்  கீறவியலாதனவாமென்று  இரத்தின  ஆராய்ச்சி யறிவுடையோர்  கூறுவர் .                                                    54-55                  

4 . அரதனங்களின்  விலை  யளவு

     எடை  குறைந்த  பெரிய  இரத்தினம்  மிகுந்த  விலையுடையதாகும் . எடை  மிக்க சிறிய  அரதனம்  நல்ல குணமுடைய  தெனினும்  குறைந்த  விலையுடையதாகும் .                                                                                          56

    சருக்கராபமணி  கடையாய  விலையினையும் , சிபிடமணி  இடையாய  விலையினையும் , தளாபமணி  தலையாய  விலையினையும்  உடையனவாக  மதிக்கப்படும் . வருத்துல  வடிவினதாகிய  மணி , கொள்வோன்  விற்போனாகிய  இருவரது  விருப்பின்  வண்ணம்  விலை  மதிக்கப்படுவதாகும் .                               57

     முத்துப்  பவழங்களல்லாத  மற்றை  அரதனங்கள்  கால நீட்சியால்  முதுமையினை  யெய்தா . அரசன்  நெறி  பிழைத்தொழுகுதலால் , அரதனங்களின்  விலை  அளவிற்  குறைந்தும்  அளவின்  மிக்கும்  ஏற்படும் .                                                                                                                 58

     மீன் , பாம்பு , சங்கு , பன்றி , மூங்கில் , மேகம் , சிப்பி  ஆகிய  இவற்றினின்றும்  முத்துகள்  உண்டாவனவாம் . இவற்றுட்  சிப்பியினின்றும்  உண்டாகும்  முத்துக்களே  மிகுதியாகும் .                  59

     சிப்பியினின் றெடுக்கப்படும்  முத்துகள்  கருமை , வெண்மை , பொன்மை  கலந்த  செம்மை  ஆகிய  இந்நிறங்களையும், இரண்டு  நான்கு  ஏழு  கஞ்சுகங்களானாதல் , மூன்று  ஐந்து  ஏழு  கஞ்சுகங்க ளானாதல்  மூடப்படுதலையும்  உடையனவாம் . அவற்றுள் , முன்னுள்ளதனை  நோக்கப்  பின்னுள்ளது  ஒன்றுக்கொன்று  சிறப்புடையதாகும் .                                                                                            60

( கஞ்சுகம் – சட்டை . சட்டையிட்டது  போல  ஒன்றன்மேலொன்றாகச்  சூழ்ந்திருப்பது . )

     கருமை , வெண்மை , பொன்மை  கலந்த  செம்மை  ஆகிய  இந் நிறங்களையுடைய  அச்சிப்பி  முத்துக்கள் , காலநீட்சி  பற்றி  ஒளி உருவ  முதலியவற்றின்  தேய்வுகளை  முறையே  எய்துவனவாம் . அம்  முத்திறத்து  முத்துக்களையும்  முறையே  இளம்  பருவத்தது, நடுப்  பருவத்தது , முதிர் பருவத்தது  என  அறிவுடையோர்  கூறுவர் .          61

( முறையே  எய்துதல்  – அம்  மூன்றுட் கரியது  முன்னரும் , வெளியது  அதன்பின்னரும் , பின்னது  அதன்  பின்னருமாக  ஒளி  உருத் தேய்வெய்தல் . )

     அச் சிப்பிமுத்தே  துளையிடுதற் குரியதாகும் . மற்றவை  அங்ஙனம்  ஆகா . சிங்கள  தீபத்தில்  வாழும்  மனிதர் , அவ்வுண்மையான  சிப்பி  முத்துக்களை  யொப்பச்  செயற்கை  முத்துக்களைச்  செய்வர் .           62

     அவற்றுள் , ஐயமொழிந்து  உண்மையானது  இன்னதென்று  தெளிதற்  பொருட்டு  அம் முத்தை நன்கு சோதித்தல் வேண்டும் . உப்பும்  எண்ணெயுங்  கலந்த  வெந்நீரில்  அதனை  ஓரிரவு  முழுதும்  வைத்துப்  பின்னர்  எடுத்து , நெற்களோடு  சேர்த்துத்  தேய்த்தல்  வேண்டும் . அங்ஙனம்  தேய்த்துப்  பார்க்குங்கால் , அது  நிறவேற்றுமை  யெய்தாது  சிறந்த  ஒளியொடு  பொருந்தியிருக்குமாயின் , அதனை  இயற்கையான  சிப்பி  முத்தென்றும் , ஒளி  சிறிது  குறைந்து  காணப்படுமாயின் , அதனைச்  செயற்கை  முத்தென்றும்  அறிதல்  வேண்டும் .                                                                                                         63-64

     கோமேதக  மல்லாத  மற்றை  அரதனங்கள்  துலையால்  நிறுத்து  மதிக்கப்படும் விலையுடையனவாகும்.                                                        65

     நிறுத்தலளவையுள்  குமை  இருபது  கொண்ட  எடை  ஓர்  இரத்தியாகும் ; அவ் எடை முத்து அல்லாத மற்றை அரதனங்களுக்கு  உரியதாகும் . குன்றி  நான்கு  கொண்ட  எடை  மூன்று  இரத்தினங்களாகும் . அவ் எடை  முத்துக் குரியதாகும் . அவ் இரத்திகள்   இருபத்து நான்கு  கொண்ட  எடை  இடங்கம்  என்று  கூறப்படும் . இவ் எடை  பவழமல்லாத  மற்றை  அரதனங்களுக்காம் . இடங்கம்  நான்கு  கொண்ட  எடை  ஒரு  தோலாவாகும் ; இவ் எடை  எப்பொழுதும்  பொன்னுக்கும்  பவழத்திற்கும்  உரியதாகும் .                                        66-67

( குமை – க்ஷூமா . இரத்தி – ரக்தி . குன்று – கிருஷ்ணலகம் . இடங்கம் – டங்கம் .

குமை  20          —   இரத்தி-1

இரத்தி  3           — குன்றி 4

இரத்தி  24         — இடங்கம் -1

இடங்கம் 4        — தோலா -1

இவ்வளவின்படி  இடங்கம் -1 க்கு  இக்காலத்து  வழங்கும்  வராகனெடை  ஒன்றாகும் . அங்ஙனமாயின்  ஒரு  தோலா  நான்கு  வராகனெடையாகும்.; அஃது  ஒன்றேகால்  உரூபாய்  எடையாகும் . நிறுத்தலளவையுட்  குமை  மிகக்  குறந்த  அளவாதலின் , அது  முத்துப்  பவழங்க ளல்லாத  மற்றை  அரதனங்  களுக்காம் . எனவே , முத்திற்கு  இரத்தியளவும்  குன்றியளவு முரிய வென்பது  போதரும். )

     ஓர்   இரத்தி யளவு  எடையுள்ள  நன்கு  அகன்ற  தளாபம்  என்னும்  ஒரு  வயிரமணியின்  விலை  ஐந்து  பொன்களாகும் .                            68

( எண்பது  இரத்தி  கொண்டது  ஒரு  பொன்  ஆகும்  என்று  70-ஆம்  சுலோகத்திற்  கூறுவர் . ஆதலின்  வயிரமணியின்  நிறை ஒன்றுக்குப்   பொன்  நானூறு  மடங்கு  விலையென்பதும்  அஃது  ஓரிரத்தியளவுள்ள ஒரு  மணிக்கென்பதும்  உணர்க . )

     தளாப  வயிரமணி  இரத்தியாலும்  அகற்சியாலும்  சிறந்திருப்பின் , அதற்கு  விலை  முன்னையினும்  ஐந்து  மடங்கு  அதிகமாகும் . இரத்தியும் , அகற்சியுமாகிய  இவை  எவ்வளவெவ்வளவு  குறைவாக வுள்ளனவோ , அவ்வள வவ்வளவிற்குத்  தக  விலையுங்    குறைவாக  மதிக்கப்படும் .                                                                                                   69

( ஒரு  வயிரமணி  தளம் , அகற்சி , எடை  என்னும்  இவ்வெல்லா வற்றாலும்  மிகச்சிறந்ததாக  இருப்பின் , அஃது  இரத்தி  ஒன்றுக்கு  ஐந்து  முதல்  இருபத்தைந்து  பொன்கள் வரை  விலை  மதிக்கப்படுவதாகு மென்பதாம் . இது  விலையின்  மேலெல்லையாகும்.)

      அரதனங்களின்  நிறுத்தலளவையில்  எட்டு  இரத்தி  கொண்டது  ஒரு  மாடமாகும் . பத்து  மாடங்கள்  கொண்டது  ஒரு  பொன்னாகும் . எண்பது   கருட  அளவுள்ள  வெள்ளி  ஐந்து  பொன்களின்  விலையாகும்.                                                                                                    70

( இரண்டாம்  அத்தியாயம்  385-ஆம்  சுலோகத்தில்  குன்றி  பத்துக்கொண்டது  மாடம்  எனவும் , மாடம்  பத்துக் கொண்டது  கருடமெனவும்  கூறப்பட்டன. குன்றி  பத்துக்கு  இரத்தி 7 இ  ஆகும். இங்கு  எட்டென்று  கூறப்பட்டுள்ளது . ஐந்து  பொன்களின்  விலை 80- கருட  வெள்ளி  யாகுங்கால்  ஒரு  பொன்னுக்கு  16-கருடம்  முறைப்படி  ஒரு  வராகனெடை  தங்கத்தின்  விலை  ஐந்து  உரூபாயாகவும்  ஒரு  பவுன்  விலை  பதினொரு  உரூபாயாகவும்  அறியப்படும்.)

     வயிரமணி  மிக்க  பருமையுடையதாக  இருப்பின்  அதற்கு  விலை வருக்க இரத்தியைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளல் வேண்டும் . சிபிட வயிரமணியின் விலை உயர்ந்த மணியின் விலையில் மூன்றிலொரு  கூறு குறைந்ததாக மதிக்கப்படும் .                                                                  71

( வருக்கமாவது ஒத்த எண்களின் பெருக்கத்திற் கண்ட  தொகையாகும் அவை 4-க்கு 4-16. 5-க்கு 5-25 என இவ்வாறு பெருக்குதலாற்  கிடைக்கும்  எண்களாகும்.  பின் வரும் சுலோகத்தில் ஓர் இரத்திக்கு இரண்டு கொண்ட வயிரமணிக்கு விலை குறைவாகக்  கூறுதலால் , இங்குக் கூறிய விலை தனி மணிக்கென்றுணர்க . உயர்ந்தமணியின் விலையை முக்கூறுபடுத்து ஒரு கூறு தள்ளி இரு கூறு இதன் விலையாகுமென்பதாம் . )

     சருக்கராப வயிரமணியின் விலை உயர்ந்த மணியினது விலையின் அரைக் கூறாகும் . ஓர் இரத்திக்கு இரண்டு விகிதங்கொண்ட வயிரமணியின் விலை முற்கூறியவற்றின் பாதியளவாக எண்ணப்படும் .                                                                                                      72

( அரைக் கூறாதல் ஓர் இரத்தியளவுள்ள ஒரு மணிக்கென்பதும் , பாதியளவாதல் ஒருமணி ஓர் இரத்தியாகுங்கால் அதற்குள்ள விலையிற் பாதியளவு விலை இரண்டு மணி கொண்ட ஓர் இரத்திக்கு என்பதும் உணர்க . இவ்வாறே தலை  இடை  கடை  யாய  மணிகளின் விலையளவையுங்  கணக்கிட்டுக்  கொள்ளல் வேண்டும் . )

     ஓர்  இரத்தி  நிறைக்கு  வயிரமணி  பலவாக  இருப்பின்  காற்கூறு  விலையாகும் . அங்ஙனமே  இடையாய  மணி  கடையாய  மணிகளுக்குமாம் .                                                                                          72இ

( இரண்டின்மேற்  பலமணிகள்  கொண்ட  ஓர்  இரத்திக்கு  விலை  ஓர்  இரத்தியளவுள்ள  ஒரு  மணியின்  விலையிற்  காற்கூறாமென்பதும் , இடையாய  கடையாய  மணிகளும்  ஓர்  இரத்திக்குப்   பலவாக  இருப்பின் , அவ்வவற்றின்  தனிமணியின்  விலையிற்  காற்  காற்  கூறாகு மென்பதும்  உணர்க . )

     வயிரமணிகள் [ எடைமிக்கனவாகவிருப்பின் ] அவற்றின்  வருக்க இரத்திகளைப் பதினாறு  கூறுபடுத்து  ஒன்பது  கூறுகளைத்  தனியே  பிரித்து  வைத்து , எஞ்சிய   ஏழு கூறுகளோடு  ஐந்து  கூறு  சேர்த்து  அப் பன்னிரண்டு கூறுகளையும்  முப்பதால்  வகுத்து அவ் வகுப்பினின்றுங் கிடைக்கும் தான எண்ணையும், மீண்டும்  அப்பன்னிரண்டு  கூறுகளைப்  பதினாறு  கூறுபடுத்து  ஒரு  கூறெடுத்து  அதனையும் , முன் பிரித்து வைத்த ஒன்பது கூறுகளோடு  சேர்த்துக்  கூடிய  இரத்திகளுக்கு  அம் மணிகள்  குணம்மிக்கனவாயின்  தலையாய  விலையையும் , குணம் குறைந்தனவாயின்  அரைக்கூறு  விலையையும்  ஏற்படுத்தல்  வேண்டும் .                                           73-74

( ஈண்டு “வயிரமணிகள்”  எனப்  பன்மையாகக்  கூறியது – தளாபம், சிபிடம் , சருக்கராபம்  என்னும்  அம்  மணிகளின்  வகைகளை  நோக்கி  என்க . ஆதலின்  விலையின் துணிபு தனிமணிக்கென்பது  போதரும் . ஈண்டுக்கூறிய  கணிதப்படி  உதாரணமாக  எட்டு  இரத்தி  எடையுள்ள  ஒரு  வயிரமணியின்  விலை  வருமாறு :  8-க்கு  8=64-வருக்க  இத்திகளாகும் . இவ் 64-ஐ பதினாறு  கூறுபடுத்துங்கால்  கூறு  ஒன்றுக்கு 4-ஆக 9- கூறுகளுக்கு 36-ஆகும் . எஞ்சிய 7 – கூறுகளோடு 5-கூறு சேர்த்துக் கூடிய 12 –கூறுகளுக்கும்   உயரிதொகை 48 –ஆகும். அவ் 48ஐ -30ஆல்  வகுக்க  வகுப்புத்  தான  எண்  ஒன்றரையே யிரண்டுமா  ஆகும் மீண்டும் அவ் 48-ஐ  பதினாறு  கூறுபடுத்து  ஒரு  கூறெடுக்க 3-ஆகும் . இவ்விரண்டு  தொகைகளையும்  முன்பிரித்துத்  தனிப்படுத்திய 9-கூறுகளுக்குரிய 36-ஓடு  சேர்க்க  நாற்பதரையே யிரண்டுமா  ஆகும் . ஆகவே  ஓர் இரத்திக்கு 68-ஆம் சுலோகத்தின்படி  விலை ஐந்து பொன்னாக  நாற்பதரையே யிரண்டுமாவுக்கு  விலை  இருநூற்று  மூன்று  பொன்களாகும். இவ்விலை தளாபத்திற்காகும். சிபிடம், சருக்கராபங்களுக்கு 71,72 ஆம்  சுலோகங்களிற்  கூறியபடி  முறையே  இவ்விலையில்  மூன்றில்  இரண்டு  கூறும்  அரைக்கூறுமாகக்  கொள்ளல் வேண்டும் . இம் முத்திற  மணிகளும்  குணங்குறைந்தனவாக  இருப்பின்  அவ்வவற்றிற்கு  குறிப்பிட்ட  விலைகளில்  அரைக்கூறு வரை தகுதி நோக்கிக்  குறைத்துக்கொள்ளல்  வேண்டும் . பின்  வரும்  77-ஆம்  சுலோகத்தில் நூற்றுக்கு  மேற்பட்ட  வருக்க  இரத்திகளுக்கு  100க்கு  20- விகிதங்  கழித்து எஞ்சிய வற்றிற்கு  விலை  ஏற்படுத்த  வேண்டுமென்று  கூறுதலால்  ஈண்டுக் கூறியது  நூற்றுக்குட்பட்ட  வருக்க இரத்திகளுக்கென்று  கொள்ளல்  வேண்டும் .)

     முத்துக்களுக்கு , தலை  இடை  கடைத்  தரங்களை  யுணர்ந்து  அவற்றிற்குத்  தக்கவாறு  விலை  ஏற்படுத்தல்  வேண்டும் .                75

     ஒரு முத்தின் வருக்க இரத்தி ஆயிரத்திற்கு  மேற்படுமாயின்  நூற்றுக்குப்  பதினெட்டேமுக்கால்  விகிதங் கழித்து எஞ்சிய இரத்திகளுக்கு  விலை  ஏற்படுத்தல்  வேண்டும் .                                      76

( முதனூலிற்  கழிக்கப்படும்  எண்  “கலாதிரிசதகம்” என்று  கூறப்பட்டுள்ளது . திரிசதகம் – முந்நூறு . கலை – பதினெட்டே முக்காலாதல்  காண்க . வருக்கம்  இன்னதென்பதை  71-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க . ஒரு  முத்தின்  இரத்தியை வருக்கமாகப்  பெருக்கிப்  பார்க்குங்கால் அப்பெருக்க எண் ஆயிரத்திற்கு  மேற்படுமாயின் , நூற்றுக்குப்  பதினெட்டேமுக்கால்  விகிதங்கழித்து , எஞ்சிய  வருக்க இரத்திகளுக்கு  விலை  ஏற்படுத்தல்  வேண்டுமென்பது கருத்து . ஒரு  முத்து 40-இரத்தி  கொண்டதாக  இருப்பின் , வருக்க இரத்தி 40-க்கு 40 = 1600 ஆகும் . நூற்றுக்குப்  பதினெட்டேமுக்கால்  விகிதமாக  300 கழிக்க  எஞ்சிய  வருக்க  இரத்தி 1300 ஆகும் . இதற்கு  விலை  ஏற்படுத்தலாவது , 85-ஆம்  சுலோகத்திற்  கூறியபடி  ஓர் இரத்திக்கு  விலை  ஒரு பொன்னாக  பொன் 1300-ஆகுமென்று  அறிதல். ஆகவே  ஒரு  முத்து  ஓர் இரத்தி எடையுள்ளதாக  இருப்பின்  விலை  ஒரு  பொன்னாகுமெனவும் , நாற்பது  இரத்தி  எடையுள்ளதாக  இருப்பன்  விலை  நாற்பது  பொன்னாகுமென்று  கொள்ளாமல், வருக்க இரத்தி  விலைப்படி 1300- பொன்னாகுமெனவுங்  கொள்ளல்  வேண்டும் . வருக்க  இரத்தி  கூறுமிடங்களிலெல்லாம்  ஒரு  மணிக்கெனக்  கொள்ளல்  வேண்டும் . தனி  முத்தின்  எடை  அதிகமாகவாக  விலையும்  அதிகமாகுமென்பது  கருதி  இங்ஙனம்  வருக்க  இரத்தியளவு  கூறப்பட்டது . )

     ஒரு  முத்தின்  வருக்க  இரத்தி  நூற்றுக்கு  மேற்படுமாயின்  நூற்றுக்கு  இருபது  விகிதங்  கழித்து  எஞ்சிய  இரத்திகளுக்கு  விலை யேற்படுத்தல்  வேண்டும் .                                                                       76இ

( ஒரு  முத்து  இருபது  இரத்தி  எடையுள்ளதாக  இருப்பின்  வருக்க  இரத்தி 20-க்கு  20 = 400-ஆகும் . 100-க்கு  20 விகிதமாக  80- கழிக்க  எஞ்சியவை  320-ஆகும் . இதற்கு  விலை  முற்சுலோகக்  குறிப்பிற்  காட்டியபடி  320- பொன்களாகும். )

     நன்கு  அகன்ற  தளாபம்  என்னும்  ஒரு  வயிரமணியின்  வருக்க இரத்தி  நூற்றிற்கு  மேற்படுமாயின் , நூற்றிற்கு இருபது  விகிதங்  கழித்து  எஞ்சியவற்றிற்கு  விலையேற்படுத்தல்  வேண்டும் . அங்ஙனமே  அகன்ற  சிபிட  வடிவினதாகிய  ஒரு  வயிரமணிக்கும்  வருக்க  இரத்தி  நூற்றுக்கு  மேற்படுமாயின் , நூற்றுக்கு  இருபது  விகிதங்கழித்து  எஞ்சியவற்றிற்கு  விலையேற்படுத்தல்  வேண்டும்.77

( சிறந்த  வயிரமணி  ஒன்று  இருபது இரத்தி  எடையுள்ளதாக இருப்பின் வருக்க இருத்தி 20-க்கு  20-400-ஆகும் . அவற்றில்  100-க்கு  20 – விகிதமாக  80 –கழிக்க  எஞ்சியவை  320-இரத்திகளாகும் . ஆகவே  68-ஆம்  சுலோகத்திற்  கூறியபடி  ஓர் இரத்திக்கு  ஐந்து  பொன்  விலையாக  வைத்து  320- இரத்திகளுக்கு  1600-பொன் விலையெனக்  கொள்ளல்  வேண்டும் . இதனால்  ஓர்  இரத்தி  எடையுள்ள  சிறந்த  வயிரமணி  ஒன்று  ஐந்து  பொன்  விலையாகுமாயின்  20-இரத்தி  எடையுள்ள  அத்தகைய  மணியின்  விலை 20-க்கு  5-100-பொன்னென்று  கொள்ளாமல் , வருக்க இரத்தி  விலைப்படி  1600-பொன்னாகுமென்று கொள்ளல்  வேண்டுமென்பது  கூறியவாறாம் . இங்ஙனமே  சிபிடமணிக்கும் , சருக்கராபமணிக்கும்  அவ்வவற்றிற்குக்  கூறிய  வருக்க இரத்திகளின்  கழிவுகளை யறிந்து  கழித்து,  எஞ்சியவற்றிற்கு  அவ்வவற்றிற்குக்  கூறிய  விலையளவுகளின்படி  கணக்கிட்டு  அறிந்து  கொள்க.  ஈண்டும்  முற்கூறியவாறே  வயிரமணியின்  எடை  அதிகமாகவாக  விலையும்  அதிகமாகுமென்பது  கருதி , இங்ஙனம்  வருக்க  இரத்தியளவு கூறப்பட்டதாக  அறிதல்  வேண்டும் . வருக்க  இரத்தியளவு  வயிரத்திற்கும்  முத்திற்குங்  கூறப்பட்டது . மற்றை  அரதனங்களுக்கு  வருக்க  அளவு  இந்  நூலிற்  கூறப்பட்டிலது .)

     சருக்கராபம்  என்னும்  ஒரு  வயிரமணியின் வருக்க இரத்தி  நூற்றுக்கு  மேற்படுமாயின் , நூற்றுக்கு  ஐம்பது  விகிதமாதல், நாற்பது  விகிதமாதல்  கழித்து , எஞ்சியவற்றிற்கு விலையேற்படுத்தல்  வேண்டும் .                                                                                                           78

     எப்பொழுதும்  கரும்புள்ளி  செம்புள்ளிகளையுடைய  அரதனங்களை  அணிந்துகொள்ளலாகாது .                                               79

     ஓர்  இரத்தி  நிறையுள்ள  மரகதம் , மாணிக்கம் , ஆகிய  இவை  சிறந்தனவாக  இருப்பின் , அவற்றின்  விலை  தனித்தனி  ஒரு  பொன்னாகும் . ஒன்றுக்கு  மேல்  இரத்தி  எவ்வளவுள்ளவோ  அவ்வளவிற்குத்  தக்கவாறு  விலையும்  மிகுதியாகும் .                       80

     ஓர்  இரத்தி  நிறையுள்ள  புட்பராகம் , நீலம் , அசைகின்ற  மூன்று  இழைகளையுடைய  வைடூரியம்  ஆகிய  இவற்றின்  சிறந்த  விலை  தனித்தனி  அரைப்  பொன்னாகும் .                                                            81

     ஒரு  தோலா  நிறையுள்ள  பவழத்தின்  விலை  அரைப் பொன்னாகும் . கோமேதகம்  நிறுத்தலளவைக்குத்  தகுதி யுடைத்தன்றாதலின்  மிகச்   சிறிய  விலையுடையதாகும் .                 82

     வயிரமல்லாத  மற்றை  அரதனங்கள்  மிகச்  சிறியனவாக இருப்பின்  அவற்றின்  விலை  எண்ணலளவையானாகும். மிக்க  அழகு வாய்ந்தனவும் , சிறந்த  குணங்களால்  விளங்குவனவும் , கிடைத்தற்கரியனவுமாகிய  அரதனங்களின்  விலை  அளவையைப்  பற்றியதன்று ; விற்போர்  வாங்குவோர்களின்  விருப்பத்தைப்  பற்றியதாகும் .                                                                                                     83

     தனி  முத்தின்  விலையாவது , அம்  முத்தின்  வருக்க  இரத்தியைப்  பதின்மூன்றே  முக்காலாற்  பெருக்கி  இருபத்து  நான்கில்  வகுக்க  அவ்வகுப்பால்  எய்தப்படும்  எண்  எவ்வளவோ  அவ்வளவு  பொன்னாகும் .                                                                                                    84

( உதாரணமாக  எட்டு  இரத்தி  நிறையுள்ள  ஒரு  முத்தின்  விலை  வருமாறு :  வருக்க  இருத்தி 8-க்கு  8=64 – ஆகும் . அவ் 64-ஐ  பதின்மூன்றேமுக்காலாற்  பெருக்க  880-ஆகும் . அவ்வெண்ணை  24-இல்  வகுக்க  கிடைக்கும்  வகுப்புத்தான  எண்  சிறிது  கூறிய  36இ-ஆகும் . ஆகவே ,சிறந்த  குணமுள்ள  ஒரு  முத்து  8- இரத்தி  நிறையுள்ளதாக  இருப்பின் , அதன் விலை  பின்வருஞ்  சுலோகத்திற்  கூறியபடி  இரத்தி  ஒன்றுக்கு  ஒரு  பொன்னாக  வருக்க  இரத்தியில்  வகுப்புத்தான  எண்  36இ-க்குப்  பொன்  36இ-ஆகும் . ஒரு  முத்து  ஓர்  இரத்தி  எடையுள்ளதாயின் , ஒரு  பொன்  விலையாகும் . எட்டு  இரத்தி  எடையுள்ளதாயின் , எட்டுப்  பொன்னென்று  கொள்ளாமல் , இச் சுலோகப்படி  36இ- பொன்னாகு மென்று  கொள்ளல்  வேண்டும் . முத்தின்  விலையைப்பற்றி  76-ஆம்  சுலோகத்திற்  கூறியது , வருக்க  இரத்தி  ஆயிரத்து  மேற்பட்டதற்கெனவும் ,அதற்கு  அடுத்துக்  கூறியது , வருக்க  இரத்தி  நூற்றுக்குமேல்  ஆயிரத்துக்   குட்பட்டதற்கெனவும் , ஈண்டுக்  கூறியது  வருக்க  இரத்தி  நூற்றுக்குட்பட்டதற்கெனவும்  பகுத்துணர்ந்து  கொள்ளல்  வேண்டும் .)

     தலையாய  முத்து  ஓர்  இரத்தி  எடைக்கு  ஒரு  பொன்  விலையாகும். இடையாய  கடையாய  முத்துக்களின்  விலை  அவ்வவற்றின்  குணங்களுக்குத்  தக்கவாறாம் .                                                                 85

     முத்துக்கள்  செம்மை , பொன்மை , வெண்மை  நிறங்களை யுடையனவாய்  வருத்துலமாக  விருப்பின்  அவை  தலையாகவும் , தளாபம்  இடையாகவும் , சிபிடமும்  சருக்கராபமும்   கடையாகவும்  மதிக்கப்படுவனவாம் .                                                                                   86

( இதுகாறுங்  கூறப்பட்ட  நவமணிகளின்  இயல்பு  விலை  முதலியவற்றின்  சுருக்கம்  வருமாறு :

1 . வயிரமணி  எல்லா  அரதனங்களினுஞ்  சிறந்தது .

                               மற்ற  மணிகளுள்,

தலை                         இடை                         கடை

2 முத்து                        5 நீலம்                       8 கோமேதகம்

3 மரகதம்                    6 புட்பராகம்            9 பவழம்

4 மாணிக்கம்            8 வைடூரியம்

இவற்றின்  எடையும்  விலையும்

நவமணி                          எடை                          விலை

1 வயிரம்                          1-இரத்தி                   5-பொன்

2 முத்து                                ,,                                1- பொன்

3 மரகதம்                            ,,                                 ,,

4 மாணிக்கம்                     ,,                                 ,,

5 நீலம்                                   ,,                                இ-பொன்

6. புட்பராகம்                       ,,                                 ,,

7. வைடூரியம்                     ,,                                  ,,

8. பவழம்                          1-தோலா                   இ-பொன்

9.கோமேதகம்                 எடையில்லை        குறைந்தவிலை

1-முதல் 8-வரையுள்ள  மணிகளின்  விலை  ஓரிரத்தி  எடையுள்ள  ஒரு  மாணிக்கமாகும் . ஓரிரத்திக்கு  மேற்பட்ட  எடையுள்ளனவும் , குறைந்த  எடையுள்ளனவுமாகிய  மணிகளின்  விலைகளை  ஆங்காங்குணர்க . 70-ஆம்  சுலோகப்படி  ஒரு  பொன்  இக்காலத்து  வழக்கப்படி  மூன்றே  காலே யரைக்கால்  வராகனெடை [ 1இ-பவுன்] ஆகும்.  )

5 . பொன்  முதலிய  உலோகங்களின்  விலை

     அரதனங்களில்  இயற்கையாகவே  குற்றங்கள்  உள்ளன. உலோகங்களிற்  செயற்கைக்  குற்றங்கள்  இருக்கும் . ஆதலின்  அறிவுடையான்  அவ்வுலோகங்களை  நன்கு  சோதித்து  ஆராய்ந்து  அவற்றிற்கு  விலை  ஏற்படுத்தல்  வேண்டும் .                                            87

     பொன் , வெள்ளி , செம்பு , வெள்ளீயம் , காரீயம் , நாகம் , இரும்பு  ஆகிய  இவ்வேழும்  சுரங்கங்களினின்றும்  எடுக்கப்படும்  இயற்கை  உலோகங்களாகும் . மற்றவை  இவற்றின்  கலப்பானுண்டாகிய  செயற்கை  உலோகங்களாம் .                                                                      88

     இவற்றுட்  பின்னதனை  நோக்க  முன்னது  சிறந்ததாக  முறையே  அறிதல்  வேண்டும் . பொன்  இவ்வெல்லாவற்றிலும்  மிகச்  சிறந்ததாகும் . வெள்ளீயம்,  செம்பு  ஆகிய  இவற்றின்  கலப்பானுண்டாவது  வெண்கலமாகும் . செம்பு , நாகம்  ஆகிய  இவற்றின்  கலப்பானுண்டாவது  பித்தளையாகும் .                               89

     மற்றை  உலோகங்களோடு  நிறையளவில்  ஒத்திருக்கும்  பொன்  உருவத்தால்  அவற்றிலுஞ்  சிறியதாக  இருக்கும் . பொன்னோடு  ஒத்த நிறையுள்ள  மற்றை  உலோகங்கள்  உருவத்தாற்  பொன்னினும்  பருமை யுடையனவாகும் .                                                                              90

     ஒத்த  சாதி  உலோகங்களுள்  ஒரு  நிறையுள்ள  இரண்டு  துண்டுகளை  ஒரே  துவாரத்திற்  சிறிய  கம்பியாக  இழுப்பின், குற்ற மற்ற  உலோகத்தின்  கம்பி  முன்னை  நிறையளவோடு  ஒத்திருக்கும் .

( பொன்  வெள்ளி  முதலியவற்றுட்  குற்றமுடையது  இது , குற்றமில்லாதது  இது  என்று  அறிதற்கு  உபாயங்  கூறியவாறு , சம  நிறையாகவுள்ள  ஒரு  சாதி  உலோகத்துண்டுகள்  இரண்டைத்  தனித்தனி  சிறு  கம்பிகளாக  ஒரே  துவாரத்தில்   இழுத்துப் பின்னர்  நிறுத்துப் பார்க்குங்கால் , குற்றமில்லாதது  முன்னை  நிறையோடு  ஒத்தும் , குற்றமுடையது  முன்னை  நிறையில்  குறைந்துங்  காணப்படுமென்பது   கருத்து . உலோகங்களுட்  கலப்புடையது  இது,  கலப்பில்லாதது  இது  என்று  ஆராய்தற்கு , அவ்விரண்டு  தர  உலோகங்களையும்  ஒரே  துவாரத்திற்  கம்பிகளாக  இழுத்து  அக்  கம்பிகளை  ஒத்த  நீளத்தில்  துண்டித்து  நிறுத்தல்  வேண்டும் ; அங்ஙனம்  நிறுத்துப்  பார்க்குங்காற்  கலப்புடையது  எடையிற்  குறைந்தும் , கலப்பில்லாதது  எடையிற்  கூடியும்  இருக்கும்  என்று  கூறுதலும்  ஒன்று . )

     எந்திரம் , விடுபடை , விடாப்படையாகிய  இவ்வடிவங்களையுடைய  இரும்பு  மிகப்  பெரு விலை யுடையதாகும் . ஒரு மடங்கு பொன்னுக்குப் பதினாறு மடங்கு வெள்ளி விலையாகும் .                                                  92

( 70-ஆம்  சுலோகத்தில் 5-பொன்னுக்கு 80- கருட அளவு வெள்ளி விலையாகுமென்று கூறப்பட்டுள்ளது . ஒரு கருட நிறையும் , ஒரு பொன்னின் அளவும் சிறிது ஏறக் குறைய ஒத்த அளவினவாதலின்  5-க்கு  80-ஐ வகுக்க  ஒன்றுக்குப்  பதினாறாதல்  காண்க . )

     ஒரு  மடங்கு  நிறையுள்ள  வெள்ளிக்கு  எண்பது  மடங்கு  நிறையுள்ள  செம்பு  பெரும்பாலும்  விலையாக  மதிக்கப்படும்.  ஒரு  மடங்கு  நிறையுள்ள  செம்பிற்கு  ஒன்றரை  மடங்கு  நிறையுள்ள  வெள்ளீயம்  விலையாகும் . அங்ஙனமே , ஒரு  மடங்கு  நிறையுள்ள  செம்பிற்கு  இரண்டு  மடங்கு  நிறையுள்ள  காரீயமும் , மூன்று  மடங்கு  நிறையுள்ள  நாகமும் , ஆறு  மடங்கு  நிறையுள்ள  இரும்பும்  விலையாகும் . முற்காலத்தில்  ஏற்படுத்தப்பட்ட  விலையளவின்படி  இவ் விலைகள்  தனித்தனி  இங்குக்  கூறப்பட்டன .                         93-94

( ஈண்டு  வெள்ளிக்குக்  கூறப்பட்ட  செம்பின்  விலையளவு  முதலியன  இக்கால  நாணய  முறைக்கும்  விலைக்கும்  பொருத்தமுடையனவாகத்  தோன்றவில்லை. அக்காலத்தின்  விலை  நிலைமை  இவ்வாறு  போலும் . )

6 . பசு  முதலியவற்றின்  விலையளவு

     அழகிய  கொம்புகளையுடையதும் , நல்ல  நிறம்  வாய்ந்ததும் , எளிதிற்  பால்  கறக்கற்பாலதும் , மிகுதியான  பாலையுடையதும் , அழகிய  இளங்கன்றையுடையதும் , உடல்  சிறிதாயினும்  பெரிதாயினும்  இளம்பருவமுடையதும்  ஆகிய  பசு  மிகுதியான  விலை யுடையதாகும் .                                                                                      95

     பொன்  நிறம்  வாய்ந்த  இளங்கன்றையும்  நல்ல  பாலையுமுடைய  பசுவின்  விலை ஒரு  பலம்  வெள்ளியாகும் . வெள்ளாட்டின்  விலை  அப் பசுவின்  விலையிற்  பாதியாகிய  அரைப்பல  வெள்ளியாகும் . செம்மறியாட்டின்  விலை  அவ்வெள்ளாட்டின்  விலையிற்  பாதியாகிய  காற்பல  வெள்ளியாகும் .                                                                                  96

( ஒரு  பலமாவது  நான்கு  கருடமாதல் , அன்றி  நான்கு  தோலாவாதல்  கொண்ட  எடையாகும் . இவ் அளவு  இக்கால  வழக்கிற்குச்  சிறிது  மாறுபட்டுள்ளது . )

     உடல்  வன்மை  மிக்கதும் , போர்க்குணம்  வாய்ந்ததுமாகிய  செம்மறியாட்டுக்  கடாவின்  விலை  ஒரு  பலம்  வெள்ளியாகும் . பசுக்களின்  உயர்ந்த  விலை  எட்டு  அல்லது  பத்துப்பலம்  வெள்ளியாகும் .                                                                                                     97

     செம்மறியாட்டிற்கும்  வெள்ளாட்டிற்கும்   உயர்ந்த  விலை  ஒருபலம்  வெள்ளியாகும் . எருமைக்குப்  பசுவின்  விலையோடு  ஒத்த  அளவினதாதல் , அன்றி  ஒன்றரை  மடங்காதல் , உயர்ந்த  விலையாகும்.

     அழகிய  கொம்புகளையும் , நல்ல  நிறத்தையும் , உடல்வன்மையினையும் , சுமக்குமாற்றலையும் , விரைந்து  செல்லுதலையும் , எட்டுத்  தால  அளவு  உயரத்தினையு முடைய  எருதின்  விலை  அறுபது   பலம்  வெள்ளியாகும் . ..                                     99

( தாலம் – பிடி  மூன்று  கொண்டதாகும் , இதனை  இவ்வத்தியாயம்  4-ஆம்  பிரகரணம்  82- ஆம்  சுலோகத்திற்  காண்க . )

     எருமைக்கடாவின்  உயர்ந்த  விலை   ஏழு  அல்லது  எட்டுப்  பலம்  வெள்ளியாகும் . யானை , குதிரை  இவற்றின்  உயர்ந்த  விலை  இரண்டாயிரம் , மூவாயிரம் , அல்லது  நாலாயிரம்  பலம்  வெள்ளியாகும் .                                                                                                   100

( பின்னுள்ள  102-104-ஆம்  சுலோகங்களில்  முறையே  சிறந்த  குதிரைக்கும் , சிறந்த  யானைக்குங்  கூறிய  விலையளவை நோக்க, இங்குக்  கூறிய  யானை , குதிரைகளின்  விலைகளுள்  இரண்டாயிரம்  பலம்  வெள்ளியே  பொருத்தமாகத்  தோன்றுகின்றது . அதன்மேல்  மூவாயிரம்  நாலாயிரம்  பலங்  கூறியது  மிகச்   சிறந்த  யானை   குதிரைகளுக்கு  விலையளவின்  முடிந்த வெல்லையை  வரையறுத்தற் பொருட்டாம் . இரண்டாயிரம்  பலம்  வெள்ளி  எண்ணாயிரங்  கருடங்களாகும் . கருடம்  ஒன்றுக்கு  இக்கால  நாணய  முறைப்படி  உரூபாய்  ஒன்றாகும் . )

     ஒட்டகத்தின்  உயர்ந்த  விலை  எருமைக்கடாவின்  விலையோடு  ஒத்ததாகக்  கூறப்படும் .                                                                                    101

     ஒரு  நாளில்  நூறுயோசனை  தூரம்  செல்லும்  ஆற்றல்  வாய்ந்த  குதிரை  தலையாயதாகும் . அதன்  உயர்ந்த  விலை  ஐந்நூறு  பொன்களாம் .                                                                                                      102

( பொன்  ஒன்றுக்குக்  கருடம்  பதினாறாகுமென்று  70-ஆம்  சுலோகத்திற்  கூறப்பட்டது . ஆதலின் , 500-பொன்களுக்கு  8000-கருட  அளவு  வெள்ளியாகும் .)

     ஒரு  நாளில்  முப்பது  யோசனை  தூரம்  செல்லும்  வன்மை  வாய்ந்த  ஒட்டகம்  சிறந்ததாகும் . அதன்  விலை  நூறு  பலம்  வெள்ளியாகும் . 103

     வன்மையாலும் , உயரத்தாலும் , போர்ச்செயலாலும் , மதச்செருக்காலும் , தனக்கு  நிகரில்லாத  சிறந்த  யானையின்  விலை  இரண்டாயிரம்  நிட்கங்களாகும் .                                                                   104

( யானையின்  விலையளவில்  இருபது  இரத்தியளவு  எடை  கொண்டது  ஒரு  நிட்கமாகுமென்று  அடுத்த  சுலோகத்திற்  கூறுவராதலின் , இரண்டாயிரம்  நிட்கங்களுக்கு  நாற்பதினாயிரம்  இரத்திகளாகும் . 80-இரத்தி  கொண்டது  ஒரு  பொன்னாகுமென்று  70-ஆம்  சுலோகத்திற்  கூறினமையின் , நாற்பதினாயிரம்  இரத்திகளுக்கு  ஐந்நூறு  பொன்களாகும்  . ஆகவே , 500- பொன்களுக்கு  8000-கருட  அளவுள்ள  வெள்ளி  விலையாதலறிக .)

     யானையின்  விலையளவில்  ஐந்து  இரத்தி யளவு  கொண்டது  மாடம்  எனவும் , அம்மாடம்  நான்கு  கொண்ட  அளவுள்ள  பொன்  நிட்கமெனவுங்  கூறப்படும் .                                                                             105

( இங்குக்  கூறப்பட்ட  நிட்கம்  ஒன்றுக்குப்   பொன்  வராகனெடை 6-ல்   5-பங்கு  [ சற்றேறக்குறைய  முக்காலே  வீசங்  கால்வீசம் ] ஆகும் .)

     இந்  நிலவுலகத்தில்  ஒப்பற்ற  பொருள்களெல்லாம்  மிகச்  சிறந்தனவாகும் . ஆதலின் , காலம்  இடங்களை  நோக்கி  அவற்றிற்கு  ஒத்தவாறு  அச்சிறந்த  பொருள்களுக்கு  விலையேற்படுத்தல்  வேண்டும் .                                                                                                             106

     குணமில்லாதனவும்   காரியத்திற்கு  உபயோகப்படாதனவுமாகிய  பொருள்களுக்கு  விலையில்லை . அறிவுடையார்  எல்லாப்  பொருள்களுக்கும்  விலை  யேற்படுத்துங்கால் , உலகியலை யுணர்ந்து  அதற்கு  ஒத்தவாறு  அப்  பொருட்குழு   வனைத்தையும் , தலை  இடை  கடைத் தரங்களாக  எப்பொழுதும்  பகுத்துணர்ந்து  செய்தல்  வேண்டும் .                                                                                                          107

7 . இறைப்பொருள்  கொள்ளு  முறை

     பண்டங்களை   விற்போர்  கொள்ளுவோராகிய  இவர்களிடத்தினின்றும்  அரசனுக்குக்  கிடைக்கும்  இறைப்பொருள்  சுங்க மென்று  கூறப்படும் . அச் சுங்கங்  கொள்ளுதற்குரிய  விடங்கள், அதற்கென்று  வரையறுக்கப்பட்ட  எல்லைகளும்  கடைத்  தெருக்களுமாம் .                                                                                               108

( சுங்கம், கற்கம், உல்குபொருள்  என்பன  ஒரு பொருட்  சொற்கள் . “சுங்கம் –  கலத்தினுங்  காலினும்  வரும்  பண்டங்கட்கிறையாயது”   என்பர்  பரிமேலழகர். [திருக்குறள்  76-ஆம்  , அதி , 6-வது  செய்யுளுரை]  கலம் – கப்பல் , கால் – வண்டி , ஆட்சுமை , இறை –வரி. )

     அரசன், எல்லாப்பண்டங்கட்கும்  ஒருமுறை   முயன்று  சுங்கங்  கொள்ளக்கடவன் . அவன்  ஒருபொழுதும்  தன்னாட்டில்  வஞ்ச  மேற்கொண்டு  அடிக்கடி  சுங்கங்  கொள்ளுதலாகாது .                          109

     அரசன், பண்டங்களை  விற்போர்  அல்லது கொள்ளு வோரிடத்தினின்றும் , விலையளவிற்கு  மாறுபாடுண்டாகாவண்ணம், ஊதியத்தில்  முப்பத்திரண்டிலொரு கூறாதல், இருபதிலொரு  கூறாதல் பதினாறிலொரு  கூறாதல்  இறை  கொள்ளுதல்  வேண்டும் .         110                                                                               

( இவ்விறை  விகற்பங்கள்  பொருள்நிலை , காலநிலை , ஊதிய  நிலைகளைப்  பற்றினவாகும் . )

பண்டங்களை  விற்போன்  முதலுக்குக்  குறையவாதல் , ஒத்த  அளவானாதல்   விற்பானாயின்  அவனிடத்தினின்றும்  அரசன் சுங்கங்கொள்ளுதலாகாது. அவனிடத்தினின்றும் விலைக்கு  வாங்குவோன்பால் , ஊதியத்தை  அளவிட்டுக்  கண்டு அதற்குத் தக்கவாறு  எப்பொழுதும்  சுங்கங்  கொள்ளுதல்  வேண்டும்.          111

     எப்பொழுதும்  இறைப்பொருளை  விரும்புகின்ற  அரசன்  முதலில்  மிகுபயன் , நடுத்தரப்பயன் , குறைந்த  பயன்களை  விளைவிக்கும்  நிலங்களை  அளவையான்  அளவிட்டறிந்து  பின்னர்  அவற்றின்  நிலைமைக்குத்  தக்கவாறு  இறையளவைத்  திட்டஞ்  செய்தல்  வேண்டும் .                                                                                                         112

     உழவுத்தொழில்  புரிவோர்க்குக்  குறை  நேராமலிருக்குமாறு  அவர்பானின்றும் , அரசன்  மாலை கட்டுவோனை  யொப்ப  இறைப்பொருள்  கொள்ளல்  வேண்டும் ; கரி  செய்து  விற்பனை யொப்ப  இறை  கோடலாகாது .                                                                  113

     மிகுதி  நடுத்தரம்  சுருக்கமாக  பயன்களை  விளைவிக்கும்  இயல்புகளால்   நிலங்களின்  ஏற்றத்  தாழ்வுகளை  ஆராய்ந்துணர்ந்து , அவற்றிற்குத்  தக்கவாறு  செலவிட்டு  உழவுத்தொழில்  புரிவோர்க்கு , அரசற்கு  இறுக்கும்  இறை  முதலிய  செலவுகளின்  இருமடங்கு  வருவாய்  கிடைக்குமாயின் , அப் பயிர்வினை  சிறந்ததாகும் . அதனிற்  குறையுமாயின் , அவர்க்கு  அது துன்பந்தருவதாகும் .                        114

     அரசன்  எப்பொழுதும்  தடாகம் , வாவி , கிணறு ஆகிய  இவற்றின்  நீர்  பாய்ந்து  விளையும்  நிலவருவாயில்  மூன்றிலொரு  கூறும் , மழை நீரால்  விளையும்  நிலத்தின்  வருவாயில்  நான்கிலொரு  கூறும் , ஆற்றுநீர்  பாய்ந்து  விளயும்  நிலவருவாயிற்  பாதியும் , களர்  நிலத்தின்  வருவாயிலும்  , கள்  முதலியன  நிறைந்த  நிலத்தின்  வருவாயிலும்  ஆரிலொரு  கூறும்  இறையாகக்   கொள்ளுதல்  வேண்டும் .                                                                                                    115-116

( பூந்தோட்டத்துள்ள  மரம்  செடி  கொடிகளுக்குக்  கேடு  விளைக்காது, அவற்றினின்றும்  உண்டாம்  மலர்களை  யெடுத்து  மாலை  கட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்ப , அரசன்  குடிகளுக்குக்  கேடு  விளைவிக்காது அவர்பானின்றும்  இறைகோடல்  வேண்டுமென்பதும் , மரங்களால்  விளையும்  பயனை  நோக்காது  அம் மரங்களையே  சுட்டுக்  கரியாக்கி  அதனாற்  பயன்  கொள்ளுபவனை  யொப்ப , அரசன்  குடிகளால்  வரும்  இறைப்  பொருளை  நோக்காது  அக் குடிகளையே  கெடுத்துப்  பயன்பெற  நினைத்தலாகா தென்பதும்  கூறியவாறாம் . )

     உழவுத்தொழில்  செய்வோருள் , எவன்  நூறு  கருட  அளவுள்ள  வெண்பொற்காசுகளை  அரசற்கு  இறையாகக்  கொடுக்கின்றானோ , அவனுக்கு  அரசன்  இருபதிலொரு  கூறு  தள்ளிவிடல்  வேண்டும் .    117

( நூற்றுக்கு  இருபதிலொரு   கூறு  ஐந்தாகும் . இங்ஙனமின்றி  நூற்றுக்கு  இருபது  கூறு  தள்ளிவிட   வேண்டுமென்றுங்  கூறுப .)

     நிலவறையில்  எடுக்கப்படும்  அரதனம்  உலோகம்  முதலிய வற்றினின்றும்  செலவு  போக  எஞ்சிய  வருவாயிற்  பொன்னிற்  பாதியும் , வெள்ளியில்  மூன்றிலொரு  கூறும் , செம்பில்  நான்கிலொரு  கூறும் , இரும்பு  வெள்ளீயம்  காரியமாகிய  இவற்றில்  ஆறிலொரு  கூறும் , அரதனங்களிற்  பாதியும்  உப்பிற்  பாதியும்  அரசன்  இறையாகக்  கொள்ளக்கடவன் .                                                                    118

(நிலவறை – சுரங்கம் .)

     அரசன்,  உழவர்  முதலிய  வினைஞரிடத்தினின்றும்  இறை  கொள்ளுங்கால் , அவர்தம்  ஊதிய  மிகுதி  நோக்கி  அதற்குத்தக  அவ்விறைப்பொருளை  மூன்று  முறையாகவாதல் , ஐந்து  முறையாகவாதல் , ஏழு  முறையாகவாதல், பத்து  முறையாகவாதல்  கொள்ளக்கடவன் .                                                                                            119

அரசன் , புல் , விறகு  முதலியன  கொண்டு  விற்போனிடத்தினின்றும்  இருபதிலொரு  கூறும் , வெள்ளாடு , செம்மறியாடு , பசு , எருமை , குதிரை  ஆகிய  இவற்றின்  பெருக்கத்தினின்றும்   எட்டிலொரு   கூறும் , எருமை , வெள்ளாடு , செம்மறியாடு , பசு , ஆகிய  இவற்றின்  பால்  வருவாயினின்றும்  பதினாறிலொரு  கூறும்  கொள்ளக் கடவன் .     120

காருகத்தொழில்  சிற்பத்தொழில்  செய்வோரிடத்தினின்றும்  பதினைந்து  நாட்களுக்கொருமுறை  ஒரு  நாள்  வேலையைக்  கூலி யின்றிச்  செய்வித்துக்கொள்ளல்  வேண்டும் . அதுவே  அவர்பாற்  கொள்ளும்  இறையாகும் . அரசியல்  வளர்ச்சி  குறித்துத்  தடாகம்  வாவி  செயற்கையாறு  ஆகிய  இவற்றையும் , இன்னும்  இவை  போன்ற  பல  காரியங்களையும்  செய்வாராயின்  அவரிடத்தினின்றும், புதிய  நிலங்களைத்  திருத்தஞ்  செய்து  உழுவோரிடத்தினின்றும் அவர்கள்  அக்காரியங்களினிமித்தம்  செலவிட்ட  பொருட்கு  இருமடங்கு  வருவாய்  பெறுங்காறும்  அரசன்  இறைப்பொருள்  கொள்ளலாகாது .                                                                                    121-122

( காருகத்தொழில் – பருத்தி  நூல்  அமைத்து  ஆடையாக்கலும்  சுமத்தலும், அகழ்தலுமாம் – [ சிலப் 5 -17.உரை ]  சிற்பம் – தச்சுக்  கொற்றொழில்  ஓவியத்  தொழின்  முதலியன )

     நில  வருவாயின்  கூறு , வேதனம் , சுங்கம் , வட்டி , கைக்கூலி  , அரசிறையாகிய  இவ்வனைத்தையும்  அவ்வப்பொழுதே  வாங்குதல்  வேண்டும் . காலந்  தாழ்த்தலாகாது .                                                       123

( காலந்தாழ்த்தாமல்  வாங்கவேண்டுமென  இங்குக்  கூறியவற்றுள்  நில  வருவாயின்  கூறு  சுங்கம் , அரசிறை  என்னுமிவை  அரசனுக்கும் , வேதனம்  கைக்கூலி  வட்டி  என்னுமிவை  மற்றையோர்க்குங்  கொள்க. கைக்கூலி  வாங்கலாகாதென்று  பலவிடத்துங்  கூறியிருக்கின்றார் ; அதனால்  விளையும்  பாவப்பயனை  நோக்காது  வாங்கத்  துணிவார்க்குக்  கூறியதிது . )

     அரசன்  உழவுத்தொழில்   புரிவோர்க்குத்   தனித்தனியே  தன்  கையெழுத்து  முத்திரையிடப்பட்ட  பாக  பத்திரங்  கொடுத்தல்  வேண்டும் . அன்றி , ஒரு  கிராமப்  பகுதியில்  தனக்குக்  கிடைக்கவேண்டிய  இறைக்கூற்றை  இவ்வளவென்று  துணிந்து , அதனைக்  கொள்ளும்  உரிமையை  ஒரு  பெருஞ்  செல்வன்பாற்  கொடுத்து , அவனிடத்தினின்றும்  முதலில்  அவ்  விறைப்  பொருட்கு  ஒத்த பிணையையாதல் , அதற்கு  ஒத்த  பொருளையாதல்  பெற்றுக்கொள்ளல்  வேண்டும் . அதன்பின் , அவ்  விறைப்பொருளைத்  திங்கட் கொருமுறையாதல்  இரண்டு  திங்கட்கொரு முறையாதல்  ஈவு  முறையாகப்  பெற்றுக்  கொள்ளல்  வேண்டும் .                               124-125

( பாகப்பத்திரம்- ஆண்டு  இறையளவைக்  குறிப்பிடுவதாகும் .)

     அரசன்  ஒரு  கிராமத்தினின்றும்  தனக்குக்  கிடைக்கும்  இறையில்  பதினாறிலொரு கூறாதல் , பன்னிரெண்டிலொரு கூறாதல் , பத்திலொரு  கூறாதல் , எட்டிலொரு  கூறாதல் , ஆறிலொரு  கூறாதல்  கொடுத்து  அக்  கிராமத்திற்குத்  தலைமை  அதிகாரிகள்  முதலியோரை  நியமித்தல்  வேண்டும் .                                                     126

     குடிகள்  தன்  குடும்பத்தின்  பொருட்டுக்  கொள்ளும்  பசு  முதலியவற்றின்  பாலினின்றும்  அரசன்  இறை  கொள்ளலாகாது . ஆடை  தானியங்களைத்  தம்  உபயோகத்தின்  பொருட்டு  விலை  கொடுத்து  வாங்குவோரிடத்திலும்  இறை  கோடலாகாது .                   127

     அரசன்  வட்டித்தொழில்  செய்வோரிடத்தினின்றும்  வட்டி  ஊதியத்தில்  முப்பத்திரண்டில்  ஒரு  கூறு  இறை  கொள்ளக்கடவன் . உழவு  நிலத்திற்  கொப்ப  இல்லம்  தோட்டம்  முதலியவற்றிற்கு  ஆதாராமாகிய  நிலத்தினின்றும்  இறை  கொள்ளுதல்   வேண்டும் . 128

( உழவு  நிலத்தினின்றும்  கொள்ளும்  இறை  யளவுகளை  115-116-ஆம்  சுலோகங்களிற்  காண்க .)

 (நிலையியல் – தாவரம் . இயங்கியல் – சங்கமம் .)

ஆவ்வுழவு  நிலத்திற்  கொப்பவே  வாணிகம்  புரிவோரிடத்தினின்றும்  அவர்தம்  வாணிகச்  சாலையுள்ள  நிலத்திற்குஞ்  சுங்கங்  கொள்ளல்  வேண்டும் . வழிச்  செல்வோரிடத்தினின்றும்  அவ்வழியைத்  திருத்தஞ்  செய்து  காத்தற்பொருட்டுச்  சுங்கம்  வாங்குதல்  வேண்டும் .            129

     அரசன்  குடிகள்  எல்லோரிடத்தினின்றும்  தனக்குக்  கிடைக்க வேண்டிய  இறைக்  கூற்றைப்  பெற்று  நுகர்ந்து  கொண்டு , அக்குடிகளின்  பாதுகாப்பில்  தொண்டனைப்போல்  இருத்தல்  வேண்டும் . இங்ஙனம்  கருவூலப் பிரகரணம்  சுருக்கமாகக்  கூறப்பட்டது .

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்,

“கோச  நிரூபணம்”  என்னும்

இரண்டாம்  பிரகரணம்  முற்றிற்று

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மூன்றாம்  பிரகரணம்

( வித்தியா  கலா  நிரூபணம் )

1 . சாதி  ஆராய்ச்சி

     இனி, மிச்சிர  மென்னும்  இந்  நான்காம்  அத்தியாயத்தில்  நாட்டைப்பற்றிய  மூன்றாம்  பிரகரணத்தைச்  சுருக்கிக்  கூறுவேன் . மரம்  மலை  முதலிய  நிலையிற்  பொருள்களும் , மக்கள்  பசு  முதலிய  இயங்கியற்  பொருள்களும்  இங்கு  நாடு  என்னுஞ்  சொல்லாற்  கூறப்படும் .                                                                                                               1

( நிலையியல் – தாவரம் . இயங்கியல் – சங்கமம். )

     ஓரரசனுக்கு  எத்துணை  நிலவெல்லை  அவன்  ஆட்சிவயப்பட்டி ருக்கின்றதோ அத்துணை  நிலப்பரப்பு  அவ்வரசனுக்குரிய  நாடாகும். 2

     பெரும்பொருள்  படைத்தல்  மற்றை  எல்லாச்  சிறப்புக்களினும்  நூறுமடங்கு  மிக்கதாகும் . அதனினும்  மிகச்  சிறந்தது  இறைமைத்  தன்மையாகும் . இவ்விரண்டும்  குறுகிய  தவத்தின்  பயனாகா [ மிகப் பெரிய தவங்களின்  பயனாகும் .)                                                                      3

     அவ்விறைமைத்  தன்மை யுடையானே  இந்  நிலவுலகத்தில்  தேவனாக  விளங்குவான் . அத்  தன்மையில்லாத  பிறர்  அங்ஙனங்  கருதப்படுவாரல்லர் .                                                                                              4

     உலகத்து  மக்கள் , எவ்வரசனைப்  பற்றி  நிற்கின்றனரோ  அவ்வரசனை  யொப்பவே  தாமும்  ஒழுகுவர் . ஆதலின் , அந்நாட்டினராற்  செய்யப்படும்  நல்வினைப்  பயனையும்  தீவினைப்பயனையும்  அவ்வரசன்  நன்கு  நுகர்பவனாவான் .                 5

     எவ்வரசனது  நாட்டில்  மக்கள்  தத்தங்  கடமைகளிற்  பற்றுடையராக  ஒழுகுகின்றனரோ  அவ்வரசனே  அறத்தையும்  நீதியையும்  உடையனாவான் . நெடுங்காலம்  நிலைபெறும்  புகழையும்  எய்துவான் .                                                                                        6

     இந்  நிலவுலகத்தில்  எவனுடைய  புகழ்  எத்துணைக் காலம்  நிலைபெற்று  விளங்குமோ  அத்துணைக் காலம்  அவன்  விண்ணுலகத்தில்  இன்பம்  நுகர்ந்து  கொண்டிருப்பான் .                         7

     ஒருவனுக்குப்  பழியே  நரகமாகும் . அப்பழியை யன்றி  மறுமை யுலகத்தில்  நரகமென்பதொன்றில்லை . இம்மையில்  மனிதவுடலல்லாத  மற்றை  உடல்களெல்லாம்  நரகங்களேயாம் .          8

     மனக்கவலை , உடற்பிணியாகிய  இவ்   விரண்டனையும்  பெருந்தீவினைப்  பயனாக  அறிதல்  வேண்டும் . ஆதலின் , அரசன்  தான்  அறத்தில்  நிலையுடையனாயிருந்து  குடிகளையும்  அறத்தில்  நிலைப்படுத்தல்  வேண்டும் . அங்ஙனஞ்  செய்தலாற்  குடிகள்  அறநெறி  நின்று  உலகத்திற்கு  எடுத்துக்காட்டாக  விளங்கும்  அவ்வரசனைப்  பின்பற்றுவர் .                                                                           9                                                                                                         

     அரசன் , தன்  நாட்டின்  நலங்குறித்து  என்றும்  நிலையாகவுள்ள  தேயதருமம் , சாதி தருமம் , குல தரும மாகிய  இவற்றையும் , முனிவராற்  கூறப்பட்ட  பழைய  புதிய  அறங்களையும் , முயற்சியுடையனாய்  நன்கு  ஆராய்ந்தறிந்து  காக்கக்கடவன் . அவன்   இங்ஙனம்  அவ்வறங்களைக்  காத்து  நிலைப்படுத்தலால்  திருவையும்  புகழையுஞ்  சிறப்புற  எய்துவான் .                                                           10-11

( சாதி  அந்தணர்  முதலிய  வருணங்களையும் , குலம்  ஒவ்வொரு  வருணத்துள்ளும்  உள்ள  குடியையும்  உணர்த்துவனவாம் .)

     முற்காலத்திற்  பிரமனால்   தொழில்களைப்  பற்றிய  சாதிகள்  அந்தணர்  முதலிய  நான்காக  வேறுபடுக்கப்பட்டன . கலப்பில்லாத  அச்சாதிகளாலும் , அநுலோமர்  பிரதிலோமர் முதலிய  கலப்புச்  சாதிகளாலும்  சாதிகள்  அளவில்லாதனவாகும் . அவை  இத்துணையவென்று  வரையறுத்துக்  கூறப்படுவன வல்ல .              12                                                         

     பிறப்பினால்  மக்களுக்குச்  சாதிவேறுபாட்டைக்  கருதினவர்களே  அவர்தம்  பெயர்  வேறுபாட்டையும்  தொழில்  வேறுபாட்டையும்  அறிந்தோராவர் . சாதியின்  வகைகளைச்  சுருக்கிக்  கூறுங்கால்  அவை  கருப்பையிற் றோன்றுவன. முட்டையிற்  றோன்றுவன, வியர்வையிற் றோன்றுவன , வித்திற் றோன்றுவன  என  நான்கு வகைப்படும் .                                                                                                     13

( வேறுபாடு  கருதினவர்  மனு  முதலிய  பெரியோராவர் . பெயர்  வேறுபாடும்  தொழில்  வேறுபாடும்  மக்கட்  சாதியினர்க்கன்றி  மற்றைப்   புள்  விலங்கு  முதலியவற்றிற்கு  இல்லை யென்பது  கருத்து . கருப்பையிற் றோன்றுவன  முதலியவற்றை  முறையே  சராயுசம் , அண்டசம் , சுவேதசம் , உற்பிச்சம்  என்ப  வடநூலார்.)

     பிறப்பினால்  உயர்ந்தானொருவன்  இழிந்தவர்களின்  கூட்டுறவால்  இழிந்த  வருணத்தவனாவான் . பிறப்பினால்  இழிந்தானொருவன்  சேர்க்கையால்  உயர்ந்த  வருணத்தவனாகமாட்டான் . மக்களுக்கு  உயர்ந்த  தன்மையும்  இழிந்ததன்மையும்  காலநிலைக்கேற்றவாறு  அவர்தம்  செய்தொழில்  வேற்றுமையாலும்  குணங்களாலும்  உண்டாவனவாம் . வித்தைகள் , கலைகள் , ஆகிய  இவற்றைப்  பற்றி  நிற்போர்க்கு  அவற்றின்  பெயராலும்  சாதி  கூறப்படும் .                  14-15

( உயர்ந்த  வருணத்திற்  பிறந்தானொருவன்  ஒழுக்கக்கேடுடையனாயின்  இழிந்த  வருணத்தவனாவானென்பதும் , இழிந்த  வருணத்திற்  பிறந்தானொ ருவன்  நல்லொழுக்கமுடையனாயின்  அவ் வருணத்திலேயே  உயர்ந்த  குலனுடையனாதலன்றி  உயர்ந்த  வருணத்தவனாகா  னென்பதும்  கருத்து . இக்கருத்துக்களை  “ஒழுக்கமுடைமை  குடிமை  யிழுக்கம்” , அதற்குப்  பரிமேலழகர்  கூறிய  விசேட  உரையானு  முணர்க .  வருணம் – அந்தணர்  முதலிய  சாதி . குலம் – ஒவ்வொரு  சாதியுலுமுள்ள  உயர்குடி .)

2. அந்தணர்  முதலியோரின்  தொழில்கள்

     அந்தணர் , அரசர் , வணிகராகிய  இருபிறப்பாளர்  மூவர்க்கும்  பொதுவாகிய  தொழில்கள் – வேள்வி  செய்தல் , வேதமோதல் , ஈதல்  ஆகிய  இம் மூன்றுமாம் . அந்தணர்க்கு  மாத்திரம்  சிறப்பாகவுள்ள  தொழில்கள் –  ஏற்றல் , ஓதுவித்தல், வேட்பித்தல்  ஆகிய   இம் மூன்றுமாம் .                                                                                                      16

     அரசர்க்கு  மாத்திரம்  சிறப்பாகவுள்ள  தொழில்கள் – நல்லோரைக்  காத்தல் , தீயோரை  யொறுத்தல் , தமக்குரிய  இறைக்கூறு  கொள்ளல்  ஆகிய  இம்  மூன்றுமாம் . வணிகர்க்கு  மாத்திரம்  சிறப்பாகவுள்ள  தொழில்கள் –  உழவு , பசுக்  காத்தல் , வாணிகம்  புரிதல்  ஆகிய   இம்  மூன்றுமாம் .                                                                                                        17

     சூத்திரர்  முதலியோர்க்குரிய  தொழில்கள் – ஈதல் , பணி  செய்தல், சிறுதொழில்   புரிதல்  முதலியனவாம் .                                                       18

     அந்தணர்  முதலிய  எல்லோர்க்கும்  தத்தங்  குடும்பத்தைத்  தாங்குதற்  பொருட்டுப்  பல்வகைத்  தொழில்  வேறுபாட்டால்  ஏற்படுஞ்  சீவனோபாயம்  பழிக்கப்படுவதன்று . அந்தணர்  முதலியோர்க்கு  உழவுத்  தொழில்  உழவுக்  கருவியாகிய  கலப்பையின்  வேறுபாடு  பற்றி  மனு  முதலியோராற்  கூறப்பட்டுள்ளது .                                                                                               19

     அந்தணர்க்குப்  பதினாறு  எருதுகளையுடைய  ஏரும் , அரசர்க்குப்  பன்னிரண்டு  எருதுகளையுடைய  ஏரும் , வணிகர்க்கு  எட்டு  எருதுகளையுடைய  ஏரும் , சூத்திரர்களுக்கு  நான்கு  எருதுகளையுடைய  ஏரும் , அவரிற்றாழ்ந்த  பிறர்க்கு  இரண்டு  எருதுகளையுடைய  ஏரும்  உரியனவாம் . அவை  நிலங்களின்  மென்மை  நோக்கிக்  கொள்ளப்படுவனவாம் .                                         20

( இதன்கட்  கூறிய  ஓரளவு  நிலங்களின்  மென்மை  நோக்கிக்  கொள்ளப்படுமென்றமையால் , நிலங்கள்  வன்மையாக  விருப்பின்  கூறிய  அளவின்  மேற்பட்டுமிருக்கலா மென்பது  கருத்து . )

     ஐய  மேற்றுண்டு  வாழ்தல்  அந்தணர்க்கன்றிப்  பிறர்க்கு   மிகவும்  இழிவு  தருவதாகும் .                                                                                         21

(ஐயம் –பிச்சை )

     இருபிறப்பாளர்  மூவரும்  பலவகையாக  விதிக்கப்பட்ட  சிறந்த  தவங்களையும் , விரதங்களையும்  முடையராய் , உபநிடதங்களோடு  கூடிய  எல்லா  வேதங்களையும்  அறியக்கடவர் .                                    22

     எவன் , கல்விப்பயிற்சியுங்   கலையறிவு  முடையவனோ  அவனே  எல்லோர்க்கும்  ஆசிரியனாவான் . அங்ஙனம்  பயின்ற  றியாதவன்  சாதியான்  மாத்திரம்  ஆசிரியனாந்  தகுதியுடையனாகான் .              23

3. வேத  முதலியவற்றின்  வகைகள்

     வித்தைகளும்  கலைகளும்  எல்லையில்லாதனவாம் . அவை  இத்துணையவென்று  அளவிட்டுரைக்கற்பாலன வல்ல ; அவற்றுள்  வித்தைகள்  முப்பத்திரண்டும் , கலைகள்  அறுபத்து  நான்கும்   சிறந்தனவாக  எண்ணப்படும் .                                                                      24

      எக்  காரியம்  சொல்லளவான்  முற்றும்  நன்கு  நிறைவேற்றத்தக்கதோ  அது  வித்தை  என்னும்  பெயராற்  கூறப்படும் . எக் காரியம்  பேசும்  ஆற்றலில்லாத  ஊமனாலுஞ்  செய்தற்குத்  தக்கதாக வுள்ளதோ  அது  கலை  என்னும்  பெயராற்  கூறப்படும் .                                                                                                           25

( சொற்களால்  வியவரிக்கத் தக்கது  வித்தை  என்றமையால்  வேதம்  முதலியன  அதன்பாற்படும் . ஊமனாலுஞ்  செயற்பாலது  கலை  என்றமையால்  நாட்டியம்  முதலியன  அதன்பாற் படும் . இதனால்  வித்தைக்கும்   கலைக்கும்  உரிய  இலக்கணங்கள்  கூறப்பட்டன .)

     வித்தை  கலை  ஆகிய  இவற்றின்   பொதுவிலக்கணங்கள்  சுருக்கமாகக்  கூறப்பட்டன . இனிச்  சிறப்பிலக்கணங்கள்  தனித்தனியே  கூறப்படும் . இவற்றின்  பெயர்கள்  தனித்தனியாக வுள்ளன .                                                                                                                26

     இருக்கு , யசுர் , சாமம் , அதருவம்  என  வேதங்கள்  நான்காம்.  அவற்றிற்கு  முறையே   ஆயுர்வேதம் , தநுர்வேதம் , காந்தருவவேதம் , தந்திரங்கள்  என்னும்  நான்கும்  உபவேதங்களாகக்  கூறப்பட்டன .  27

( மூலத்தில்  அதருவ  வேதத்தின்  உபவேதம்  தந்திரம்  என்று  கூறப்பட்டுள்ளது . பிற  நூல்களிலெல்லாம்  இஃது  அருத்தவேதமென்று  காணப்படுகிறது . )

     சிக்கை , வியாகரணம் , கற்பம் , நிருத்தம் , சோதிடம் , சந்தசு என்னும்  இவை  ஆறும்  வேதங்களின்  அங்கங்களாகக்  கூறப்பட்டன .

     மீமாஞ்சை, தருக்கம் , சாங்கியம் , வேதாந்தம் , யோகம் , இதிகாசங்கள் , புராணங்கள் , அறநூல்கள் , நாத்திகம் , அருத்த நூல் , காம நூல் , சிற்பம் , அலங்காரம் , காப்பியங்கள் , தேயமொழி , அமயச் சொல் , யவன மதம் , ஒப்புரவறங்கள்  ஆகிய  இப் பதினெட்டும் , முற்கூறிய  வேதோபவேதங்கள்  எட்டும் , வேதாங்கங்கள்  ஆறும் , ஆக  இம்  முப்பத்திரண்டும்  வித்தைகளென்னும்  பெயராற்   கூறப்படுவனவாம் .                                                                                      29-30

( சிற்பம்  கலைகளுள்ளுங்  கூறப்படும் . அது  செயற்படுங்காற்  கலையாகும் . அதன்முறை  நூல்வாயிலாகக்  கற்கப்படுங்கால்  வித்தையின்பாற் படும் .  யவன மதம் – யவன  தேயத்தாரது  மத நூல் .  ஒப்புரவு – நூல்களானன்றி  உலக  நடையறிந்து  செல்தல் . அது  தேயங்கடோறும்  வெவ்வேறு  வகைப்பட்டு  நிகழ்வதாம். )

4. முப்பத்திரண்டு  வித்தைகளின்  இலக்கணங்கள்

     இருக்கு  முதலியவற்றிலுள்ள  மந்திரங்களுக்கும் பிராம்  மணங்களுக்கும்  வேதம்  என்னும்  பெயர்  கூறப்பட்டுள்ளது .       31

( வேதங்களெல்லாம்  மந்திரம்  பிராம்மணம் , என்னும்  இரண்டு  பிரிவினுள்  அடங்கும்  என்பது  கருத்து . )

     தேவர்களுக்கு  உவகை  தரத்தக்க  செபம், ஒமம் , அருச்சனை , ஆகிய  இவை  வேதத்தின்  எப்பாகங்களின்  உச்சரிப்பாற்  செய்யப்படுகின்றனவோ  அப்பாகங்கள்  மந்திரம்  என்று  கூறப்படும் . அம் மந்திரங்களின்  உட்கருத்துக்களையும் , அவற்றை  உபயோகப்படுத்தும்  முறைகளையும்  எடுத்துரைக்கும்  பாகங்கள்   பிராம்மணம்  என்று  கூறப்படும் .                                                                   32

( விதி , அருத்தவாதம் , அநுவாதம்  ஆகிய  இம்  மூன்றும்  பிராம்மணம்  என்று  கூறப்படும் . இப்பிராம்மணம்  இதிகாசம் , புராணம் , வித்தை , உபநிடதங்கள் , சுலோகங்கள் , சூத்திரங்கள் , வியாக்கியானங்கள் , அநு வியாக்கியானங்கள்  என  எட்டு  வகைப்படும் . )

     காற்கூறாகிய  பாதங்களாகவும்  அரைக்கூறாகவும்  படிக்கப்படும் இருக்கு  வடிவமாகிய  மந்திரங்களையும் , ஓமத்தை  நிறைவேற்றுதற் குரிய  மந்திரங்களையும்,  அழகிய  கதைகளையும்  உடையது  யாது? அஃது  இருக்குவேதமென்று  கூறப்படும் .                                                      33

( இருக்கு  வேதத்திலுள்ள  பாடல்கள்  காற்கூறாகவும், அரைக்கூறாகவும் , முற்றுமாகவும்  படிக்கப்படுதல்  அத்தியயனக்  கிரமத்தில்  ஆன்றோரான்  மேற்கொள்ளப்பட்டுள்ளது .)

     எதன்கண்  ஒன்றோடொன்று  இணைத்துப்  படிக்கப்படும்  மந்திரங்கள்  உள்ளனவோ ; விருத்த  கீதங்கள்  இல்லையோ ; அத்து வரியு என்னும் வேள்வி வினைஞனுக்குரிய  கன்மங்கள்  கூறப்பட்டுள்ளனவோ , மந்திர  பிராம்மணங்கள்  மும்முறை  படிக்கப்பட்டுள்ளனவோ  அது  யசுர்வேதமென்று  கூறப்படும் .      34

( இனைத்துப் படிக்கப்படுதலைச்  சங்கிதை  என்று  கூறுப )

     வேள்வியிற்  கூறப்படும்  சத்திர  வாக்கியங்களுக்கு  உற்கீதம்  விதிக்கப்பட்டிருப்பது  சாமவேத மென்று  கூறப்படும் .                      35

( சத்திரம் – சஸ்திரம் . சத்திர  வாக்கியங்கள் – சுரங்களின்றித்  தண்டாகாரமாகவுள்ள  வாக்கியங்கள் . உற்கீதம் – சாமவேதத்திற்  பாடப்படும்  இசை .)

     உபாசிக்கப்படும்  தேவர்களின்  உபாசனை  முறையைப்  புலப்படுத்தும்  வேதம்  அதருவாங்கிரசு  என்னும்  பெயருடையதாகும். இங்ஙனம்  நான்கு  வேதங்களின்  இலக்கணங்கள்  சுருக்கிக்  கூறப்பட்டன .                                                                                                     36

     ஒருவன்  எதனை  யறிந்து  ஒழுகுதலால்  வாழ்நாள்  மிகப்  பெறுகின்றானோ ; எதன்  அறிவால்  நோயின்  நிலையும்  அது  தணிக்கும்  மருந்தின்  நிலையும்  நன்குணர்ந்து , அவ் வுணர்ச்சி  காரணமாக  வாழ்நாளின்  அளவை  அறிகின்றானோ ; அஃது  இருக்கு   வேதத்தின்  உபவேதமாகிய  ஆயுர்வேத மென்னும் பெயரினை யுடையதாகும் .                                                                                                   37

     எதன்  அறிவாற்  போர்ச்  செயலிலும் , அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்   பயிற்சியிலும் , நால்வகைப்  படைகளின்  அணிவகுப்பிலும்  திறமையுண்டாகுமோ  அது  யசுர்வேதத்தின்  உபவேதமாகிய  தநுர்வேதமென்று  கூறப்படும் .                                     38

     உதாத்த  முதலிய  வேறுபாடுகளை யுடையனவும் , கண்டத்தினின்றுங்  கருவியினின்றுந்  தோன்றுவனவும் , தாளங்களையுடையனவும்  ஆகிய  எழுவகைச்  சுரங்களோடு  கூடிய  இசையினது  சிறப்பறிவு  எதனால்  உண்டாகின்றதோ  அது  சாமவேதத்தின்  உப வேதமாகிய  காந்தருவவேதமாகும் .                    39

     உபாசித்தற்குரிய  பலவகை  மந்திரங்களின்  உபசங்காரத்தோடுங்  கூடிய  அறுவகைப்  பிரயோகங்களும் , அவற்றின்  தரும  நியமங்களோடும் , சிறந்த  வேறுபாடுகளோடும் , எதன்கட்  கூறப்பட்டுள்ளனவோ  அதுவே  அதருவ வேதத்தின்   உபவேத மாகிய  தந்திரமென்று  கூறப்படும் .                                                                             40

( அறுவகைப் பிரயோகங்களாவன :  சாந்தி, வசீகரணம், தம்பனம்,  வித்துவேடணம், உச்சாடனம், மாரணம்,என்பனவாம் . )

     உதாத்த  முதலிய  சுரங்களாலும் , கால  அளவையாலும் , கண்டம் , நா  முதலிய  இடங்களாலும் , அங்காத்தன்  முதலிய  முயற்சிகளாலும் , உச்சரிப்பு  முதலியவற்றாலும்  எழுத்துக்களின்  பாடமுறையைப்  பயிற்றுவது  சிக்கை  என்று  கூறப்படும் .                                                    41

( அங்காத்தல் – வாயைத்திறத்தல் . உதாத்தம் , அநுதாத்தம்  சுவரிதம்  என்னும்  இவற்றை  முறையே  எடுத்தல் , படுத்தல் , நலிதல் , என்று  தமிழியனூல்  கூறும் .)

     பிராம்மண  பாகங்களால்  விநியோகங்  கூறப்படாமல்  எஞ்சிய  வேத  மந்திரங்களுக்கு  வேள்வி வினையிற்  பிரயோக  முறைகளைக்  கூறுவது  சிரெளத  கற்பமாகும் . வேள்வினையல்லாத  மற்றைக்  கன்மங்களில்  அவ்  வேத  மந்திரங்களுக்குப்  பிரயோக  முறைகளைக்  கூறுவது  சுமார்த்த  கற்பமாகும் .                                                                  42

( வேதங்களிற்  கூறப்பட்ட    மந்திரங்களின்  விநியோகமுறைகள்  பெரும்பாலும்  வேதப்பிராம்மணங்களாலேயே  கூறப்பட்டன. அங்ஙனங்  கூறப்படாமல்  எஞ்சிய  மந்திரங்களுள்  வேள்வி  வினைக்  குரியனவற்றைக்  கூறுவது  சிரெளத  கற்பமெனவும் , வேள்வியல்லாத  மற்றைக்  கன்மங்களுக்குக்  குரியவற்றைக்  கூறுவது  சுமார்த்த  கற்பமெனவுமுணர்க . )

      பிரத்தியயங்கள் , தாதுக்கள் , சந்திகள் , சமாசங்கள் , இலிங்கங்களாகிய  இவற்றாற்  சொற்களைத்  தூய்மைப்படுத்துக்  கூறுவது  வியாகரணமாகும் .                                                                            43

( பிரத்தியயம் – வேற்றுமையுருபு  வினையுருபு  சாரியை  முதலியன . தாது – பெயர்  வினைகளின்  முதனிலை . சந்தி – உயிர்  மெய்  முதலியவற்றின்  புணர்ச்சி .  சமாசம் – வேற்றுமைத்தொகை  முதலிய  தொகைநிலைகள் . இலிங்கம் – ஆண் , பெண்  நபுஞ்சகங்களாம் .)

     பிரகிருதி  பிரத்தியய  முதலியவற்றாற்  பதங்களைத்  தெளிவுறுத்திக்  கூறுவதும் , சொற்றொடர்களின்  பொருள்களை  ஒன்றுபடுத்திச்  சுருக்கிக்  கூறுவதும்  நிருத்தம்  என்று  கூறப்படும் . அது  வேதங்களின்  சொற்பொருள்களை  நன்கு  விளக்கிக்  கூறுதலால்  வேதபுருடனது  செவியுறுப்பாகும் .                                                                   44

( பிரகிருதி- பகுதி ; முதனிலை . வேதபுருடனுக்கு  சந்தசு  பாதங்களும் , கற்பம்  கைகளும் , நிருத்தம்  காதுகளும் , சிக்கை  நாசியும் , சோதிடம்  கண்களும் , வியாகரணம்  முகமுமாம் என்று கூறுப .  இதனை,”  கற்பங்  கைசந்தங்காலெண்கண் , டெற்ற நிருத்தஞ்  செவிசிக்  கைமூக் , குற்ற வியாகரணமுகம்  பெற்றுச் , சார்பிற்றோன்றா வாரண வேதம்”  என்பதனானு முணர்க . [ மணிமேகலை 27. 100 – 103 ] )

     எதன்கண்  நாள்  கோள்களின்  கதிகளாலும் , சங்கிதைகளாலும், ஓரைகளாலும் , கணிதங்களாலும்  தனித்தனியே  கால  அளவு  உணர்த்தப்பட்டுள்ளதோ  அது  சோதிடமாகும் .                                      45

( சோதிடநூல்  சங்கிதைக்  கந்தம் [ 1 ஆம்  ஹிதாஸ்கந்தம் ]  ஓரைக்கந்தம்  [ஹொராஸ்கந்தம் ] கணிதக்கந்தம் [ கணிதஸ்கந்தம் ] என  மூன்று  வகைப்படும் . சங்கிதைக்  கந்தத்தில்  உலகத்து  மக்களுடையவும் , விலங்கு  மழை  முதலிய  எல்லாப்  பொருள்களுடையவுமாகிய  ஆக்கக்  கேடுகளும் , ஓரைக்  கந்தத்தில்  சாதகம்  பிரசினம்  முகூர்த்தங்களும் , கணிதக்  கந்தத்தில்  கோளம  கணிதங்களும்  கூறப்பட்டுள்ளன. சங்கிதையும்  ஓரையும்  பலன்  கூறுமியல்பால்  ஒக்குமாயினும்  சங்கிதை  தொகுதியாகவும் , ஓரை  பகுதியாகவும் , பலன்களைக்  கூறுமென்பது  பற்றி  வேறுபடுக்கப்பட் டன . நாள் – நக்ஷத்திரம்  . கோள் – கிரகம் .)

     மகண  முதலிய  எண்வகைக்  கணங்கள் , குரு , இலகு ஆகிய  இவ்  அளவுகளால்  எதன்கட்  பாட்டிலக்கணம்  கூறப்பட்டுள்ளதோ  அது  வேதபுருடனின்  பாத  வடிவமாகிய  சந்தக  ஆகும் .                                 46

( கணங்கள்  ம, ய , ர , l , த , ஜ , ஷ, ந , என  எண் வகைப்படும் . குரு  இரண்டு  மாத்திரையுடையது . நெடிலும் , இணையெழுத்தின்  முன்னுள்ள  குறிலும் , அநுசுவாரத்தையும்  விசர்க்கத்தையும்  இறுதியினுடைய  எழுத்துக்களும்  குரு  என்று  கூறப்படும் . இலகு – ஒரு  மாத்திரையுடையது ; குறில் , வடமொழிச் செய்யுட்கள்  எழுத்துக்களைப்பற்றினவும் , மாத்திரைகளைப்பற்றினவும்  என  இருவகைப்படும் . மகண  முதலியவற்றால்  எழுத்தளவும் , குரு  இலக்குக்களால்  மாத்திரையளவும்  எண்ணப்படும் . )

     கன்மங்களின்  விதிவேறுபாட்டால் வேத  வாக்கியங்களுக்கு  எதன் கட்  பொருட்டுணிவு  செய்யப்பட்டுள்ளதோ , அது  மீமாஞ்சை யென்று  கூறப்படும் . காட்சி  முதலிய  அளவைகளால்  உண்மை  இன்மைப்  பதார்த்தங்களை  யாராய்ந்து  தெளிவுறுத்தும்  நியாயமும் , அங்ஙனமே  தெளிவுறுத்தும்  கணாதன்  முதலியோர்  மதமும்  தருக்கம்  என்று  கூறப்படும் .                                                                     47-48

( நியாயத்திற்குக்  கௌதம  முனிவரும் , வைசேடிகத்திற்குக்  கணாத  முனிவரும்  ஆசிரியராவர் .)

     புருட  தத்துவம்  ஒன்றும் , மூலப்பகுதி  முதலிய  தத்துவங்கள்  எட்டும் , மனம்  முதலிய  விகாரதத்துவங்கள்  பதினாறும்  ஆகிய  தத்துவங்கள்  இருபத்தைந்தும்  பிறவும்  எண்ணப்பட்டுக்  கூடியிருப்பது  சாங்கியம்  என்று  கூறப்படும் .                                           49

( மூலப்பகுதி  முதலிய  தத்துவங்கள்  எட்டாவன : மூலப்பகுதியும் , அதன் கட்டோன்றிய  மானும் , அதன் கட் டோன்றிய  அகங்காரமும் , அதன் கட்  டோன்றிய  தன்மாத்திரைகள்  ஐந்துமாம் . மனம்  முதலிய  தத்துவங்கள்  பதினாறாவன : மனமும் , ஞானேந்திரங்கள் ஐந்தும் , கன்மேந்திரம்  ஐந்தும்  பூதங்கள்  ஐந்துமாம் , மான் – மஹாந் ; அது  மகத்தத்துவம் . அதனைச்  சாங்கிய  நூலார்  புத்தி  என்பர் . தன்மாத்திரைகளைந்தாவன : சுவையும் , ஒளியும் , ஊறும் , ஒசையும் , நாற்றமுமாம் . மற்றவை  வெளிப்படை . இன்னும்  இவற்றின்  இயல்புகளை , “சுவையொளி யூறோசை  நாற்றமென்றைந்தின் , வகைதெரிவான் கட்டே யுலகு “   என்னும்  திருக்குறட்குப்  பரிமேலழகர்  எழுதிய  வுரையானு முணர்க .)

     ஏகமாகவும் , அத்துவிதீயமாகவும்  பிரமப்பொருள்  ஒன்றுள்ளது; அஃது  ஈண்டுப்  பலவாக  இல்லை ; அதனை யல்லாத  பிறவெல்லாம்  அறியாமையால்  உண்மையைப் போல்  விளங்கும்  பொய்ப்  பொருள்களாம்  என்று  வேதாந்திகளின்  மதம், அதுவே  வேதாந்தமென்று  கூறப்படும் .                                                                   50

( அத்துவிதீயம் – இரண்டற்றது )

     தியான  சமாதிகளாலே  பிராண  வாயுவை   யடக்கலும் , அதனாற்  சித்த  விருத்தியைப்  பொறிவழியே  புலன்களிற்   செல்லவொட்டாது  தடுத்தலும்  எதன்கண்   விளக்கப்பட்டுள்ளனவோ,  அது  யோகநூலென் றறியற்பாலது .                                                                                                   51

     ஓரரசனது  ஒழுகலாறு  முதலியவற்றைத்  தலைக்கீடாகக்  கொண்டு  அதனாற்  பண்டை  நிகழ்ச்சிகளை  எடுத்துக் கூறுவது  இதிகாசமாகும். அதுவே  புராவிருத்த மென்றுங்  கூறப்படும்.                                             52

( தலைக்கீடு – வியாஜம். புராவிருத்தம் – பண்டை  நிகழ்ச்சி .)

     உலகத்தோற்றம் , ஒடுக்கம் , முனிவர்  அரசர்   மரபு , அவர்தம்  சரிதம் , மனுவந்தரங்கள்  ஆகிய  இவற்றை  விளக்குவது  புராணமென்று  கூறப்படும் .                                                                            53

     வேதங்களுக்கு  மாறுபாடில்லாத  வருணாச்சிரம  தருமங்களை  நினைப்பூட்டுவதும் , பொருணூற்  பகுதிகளைக்  கூறுவதும்  அறநூலென்று  கூறப்படும் .                                                                               54

( அறநூல் – ஸ்மிருதி )

     உலகத்துப் பொருள்களின்  தோற்றக்  கேடுகள்  இயற்கையாக  நிகழ்வனவெனவும் , அவற்றிற்கு  ஒரு  கருத்தா  வேண்டாமையின்  கடவுள்  இல்லை யெனவும் , அக் கடவுள்  முதலிய  பொருள்களைப்  பற்றிக்  கூறும்  வேதனங்கள்  பிரமாணமாகா  வெனவும்  துணிந்து , யுத்தி  வன்மையைக்  கடைப்பிடித்து   நிகழ்வது  நாத்திகமாகும் .        55

     வேதம்,  அறநூல்களுக்கு  முரணாமல்  அரசனது  செங்கோன்முறை  முதலியவற்றை  வரையறுத்துக்  கூறுவதும் , பொருளீட்டுதற்குரிய  சிறந்த  உபாயங்களை  விளக்கிக்  காட்டுவதும்  பொருணூலென்று  கூறப்படும் .                                                                                                          56

     உயர் சாதி  முதலிய  சாதிவேறுபாட்டாலும் , குணஞ்செயல்களைப்  பற்றிய  அநுகூலன்  முதலிய  பெயர்வேறுபாட்டாலும்  தலைவரின்  இலக்கணங்களையும் ; பதுமினி  முதலிய  சாதி  வேறுபாட்டாலும் , குணஞ்  செயல்களைப்  பற்றிய  சுவீயை  முதலிய  பெயர்  வேறுபாட்டாலும்  தலைவியர்  இலக்கணங்களையும் ; அவ்விருதிறத்தாரின்  காதற்குறிப்பு  முதலியவற்றின்  இலக்கணங்களையும்  விளக்கிக்  கூறுவது  இன்பநூலாகும் .                57

( தலைவர் , சாதி வகையால்  முயல் , மான் , குதிரை , யானை  யாகிய  இந்நான்கு  திறத்தினராவரெனவும் , குணஞ்செயல்களால்  அநுகூலன்  தட்சிணன் , திருட்டன் , சடன் என  நான்கு  வகைப்படுவரெனவும் , தலைவியர் , சாதி  வகையால்  பதுமினி , சங்கினி , சித்திரிணி , அத்தினி  என  நான்கு  வகைப்படுவரெனவும் , குணஞ்  செயல்களால்  சுவகீயை , பரகீயை , சாமானியை  யென  மூன்று  வகைப்படுவரெனவும்  அறிக . இவற்றின்  விரிவுகளும் , தலைவர்  தலைவியரின்  காதற்  குறிப்பு  நிகழும்  முறைகளும்  பிறவும்  காமநூல்களில்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளன . )

     தேவாலயங்கள் , அரண்மனைகள் , பிரதிமைகள் , ஆடற்  பூஞ்  சோலைகள் , இல்லங்கள் , வாவிகள்  ஆகிய  இவை முதலியவற்றை  நன்கு  இயற்றும்  முறைகள் எதன்கண் விளக்கிக் கூறப்பட்டுள்ளனவோ  அதுவே  சிற்பநூலா குமென்று  பெரியோர்  கூறுவர் .                           58                                                                                                              

     ஒப்புக்  குறைவு  மிகுதிகளாலும் , பொதுத்தன்மை  முதலிய  வேறுபாடுகளாலும் , பொருள்களின்  ஒன்றுக்கொன்றுள்ள  குணங்களைப்  பற்றிய  அணிகள்  எதன்கண்  வருணித்துக்   கூறப்பட்டுள்ளனவோ  அஃது  அணி நூலாகும்.                                          59

( ஒப்புக் குறைவு  மிகுதிகள்  உருவக  முதலிய  அணிகளிலும் , பொதுத்தன்மை  முதலியன  உவமை  முதலிய  அணிகளிலும்  காணப்படும் . எல்லா  அணிகளும்  உவமையை  மூலமாக வுடையனவாகும் . )

     ஒன்பான்  சுவைகளையும்  உவமை  முதலிய  அணிகளையும்  உடையவாய்க்  குற்றமற்று  விளங்குஞ்  சொற்பொருள்களே  காப்பிய மென்று  கூறப்படும் . அது  செய்யுணடை, உரைநடை  முதலிய  வேறுபாடுகளை  யுடையதாய் , இவ்வுலகத்திலில்லாத  வியப்பு  மிக்க  இன்பத்தின்  காரணமாகும் .                                                                              60

( ஒன்பான்  சுவைகளாவன : காமம் , நகை , கருணை , வீரம் , உருத்திரம் , அச்சம்,  இழிப்பு , வியப்பு , சாந்த  மென்பனவாம். )

     நிகண்டுகளுடையவும் , மற்றை நூல்களை யவுமாகிய  சங்கே  தங்களாலன்றி  உலகத்து  மக்கள்  வழக்கின்  சங்கேத  ஆற்றலாற்  பொருளை  எளிதிலுணர்த்துவதும் , உலகியற்  காரியங்களுக்குத்  துணை  செய்வதுமாகிய  சொற்றிறள்  தேயமொழியாகும் .                  61

( சங்கேதமாவது – இச்சொல்லால்  இப்பொருள்  உணரற் பாலது  என்றாதல் , இச் சொல்  இப்பொருளை  யுணர்த்துக  என்றால்  இங்ஙனம்  சொற்கண்  உள்ள பொருளை  அறிவிக்கும்  ஓர்  ஆற்றலாகும் . இதனைச்  சமயவாற்றல்  எனவுங்  கூறுப . சொற்கள்  இயற்சொல் , திரிசொல் , முதலியவாகப்  பலதிறப்படும் . அவற்றுள், திரிசொற்கள்  நிகண்டுகளாலும்  மற்றை  நூல்களாலும்  அரிதுணர்  பொருளனவாய்  உணரப்படுவனவாம் .  ஆதலின் , அந்நூல்களானன்றி  உலக  வழக்கிற்  பொருளுணர்த்தும்  இயற்சொற்களின்  கூட்டமே  ஈண்டுத்  தேயமொழி  யென்று  கூறப்பட்டதாகும் . உலகியற்  காரியங்களுக்கு  இயற்சொற்கள்  துணையாதலையும் , திரிசொற்கள்  அங்ஙனமாகாமையையும்  அநுபவத்திற்  காண்க . )

     அவ்வக்  காலத்திற் கேற்பக்  கூறப்படுஞ்  சொல்  அமயச்  சொல்லாகும் .                                                                                                         62

( அமய மறிந்து  கூறப்படுஞ்  சொல்  அரிதாதலின் , அதுவும்  வித்தைகளுள்  ஒன்றாயிற்று . )

     எப்பொழுதுங்  காணப்படாத  கடவுள்  இவ்  வுலகிற்குக்  காரணமாக  உண்டு  எனவும் , தருமா தருமங்கள்  வேதம்  அறநூல்களின்  பிரமாணமில்லாமலே  உள்ளன  எனவும்  கூறுவது  யவனமத  நூலாகும் அவ் யவன மதத்தில்   வேத  முதலியவற்றிற்கு  முரணாக வுள்ள தருமங்களுங்  காணப்படும் .                                                                             63

     ஒவ்வொரு   தேயத்திலும்  ஒவ்வொரு  குலத்திலுமுள்ள  மக்களால் , எப்பொழுதும்  வேதமூலமாக  வுள்ளனவும்  அஃதில்லாதனவுமாக  மேற்கொள்ளப்பட்ட  ஒழுக்கங்கள்  யாவை ?  அவை  ஒப்புரவறங்களாம் .                                                                                              64

( ஒப்புரவு – உலகநடை  . இதனைப் பரிமேலழகர்  “உலகநடை  வேதநடை  போல  அறநூல்களுட்  கூறப்படுவதன்றித்  தாமே  அறிந்து  செய்யுந்   தன்மைத்து “  என்பர் . [ திருக்குறள் – 22-ஆம்  அதி . அவதாரிகை ] . )

     இதுகாறும் , வித்தைகளின்  இலக்கணங்கள்  தனித்தனி  நன்கு  விளக்கிக்  கூறப்பட்டன . கலைகளுக்குத்  தனியே  பெயரும்  இலக்கணங்களும்  ஈண்டில்லை . தனித்தனியே  பல்வேறு  வகைப்பட்ட  தொழில்களாற்  கலையின்  வேறுபாடுகள்  உண்டாயின . எவ்வெக்  கலைகளை  யார்  யார்  மேற்கொண்டு  ஒழுகுகின்றனரோ அவ்வக்  கலைகளின்  பெயரால்  அவரவர்  சாதி  கூறப்படும் .                         65-66

5. அறுபத்து  நான்கு  கலைகள்

     உள்ளக்  குறிப்புக்களையும் , அவற்றை  வெளிப்படுத்தற்குரிய  கண்  முதலிய  உறுப்புத்  தொழில்களையு முடைய  ஆடல் (1)  ஒரு  கலையாக  எண்ணப்படும் . [ இது நாட்டியமாகும். ] பல வகை  இசைக்  கருவிகளைச்  செய்வதிலும்  அவற்றை  வாசித்தலிலு முள்ள  அறிவு (2) ஒரு  கலையாகும் .                                                                                               67

     ஆடவர்  மகளிராகிய  இரு  திறத்தினர்க்கும்  ஆடை  அணிகலன்களால்  அழகு  மிக  ஒப்பனை  செய்தல் (3) ஒரு   கலையாகும் . பலவகை  உருவங்களைத்  தோற்றுவிக்கும்  செயற்கண்  உள்ள  அறிவு (4) ஒரு  கலையாகும் .                                                               68

( ஒப்பனை  செய்தல் – அலங்கரித்தல் . உருவங்களைத்தோற்றுவித்தல் – வேடங்  காட்டி  நடிப்பித்தல் ; இந்திரசால  முதலியனவுமாம் . )

     அமளி யமைத்தல் , கம்பலம் விரித்தல் , மலர்  முதலியன  கட்டுதல்  ஆகிய   இவை (5) ஒரு  கலையாகும் . சூது  முதலிய  பல  வகை விளை யாட்டுக்களால்  உலகத்தை  மகிழ்வித்தல் (6) ஒரு  கலையாகும் .       69

( அமளி – படுக்கை .)

     பலவகை  இருக்கைகளாலும் , புணர்ச்சிகளாலும் ,  சுரதத்தை யறிதல் (7) ஒரு  கலையாகும் . இவ்வெழுவகைக்  கலைகளும்  காந்தருவ  வேதத்தில்  நன்கு  கூறப்பட்டனவாம் .                                     70

( சுரதம் – ஆடவரும்  மகளிருங்  கூடிப்  புரியும்  இன்ப  விளையாடல் .)

     மலர்களிலுள்ள  தேன்களானாம்  குடிநீர் முதலியவற்றையும் , கள்  முதலியவற்றையும்  உண்டாக்கல் (8) ஒரு  கலையாகும் . உடலில்  தைத்த  அம்பு  முதலியவற்றை  வருத்தமுறாது மெல்ல  வெளிப்படுத்துதலிலும் , நரம்புக்  கொப்புளங்கள்  அறுத்து  ஆற்றுதலிலும்  உள்ள  அறிவு  (9) ஒரு  கலையாகும் .                              71

     பெருங்காய  முதலிய  மணப்  பொருள்கள் , உப்பு  முதலிய  சுவைப்  பொருள்கள்  ஆகிய  இவற்றின்  சேர்க்கையால்  சோறு  கறி  முதலியன வாக்கல் (10) ஒரு   கலையாகும் . மர  முதலியவற்றின்  பழ  முதலியன  உண்டாகச்  செய்தலும்  அவற்றைக்  காத்தன்  முதலிய  செயல்களும் (11)  ஒரு  கலையாகும் .                                                                                       72

( பழ  முதலியன  உண்டாக்கலை  இவ்வத்தியாயம் 4- ஆம்  பிரகரணம்  51, 52 ,53- ஆம்  சுலோகங்களிற்  காண்க.)

     மலைக் கற்களையும்  பொன்  முதலிய  உலோகங்களையும்  பிளத்தலும் , அவற்றை  நீராக்கலும் (12) ஒரு  கலையாகும் . கருப்பஞ்சாற்றினாற்  பாகு , வெல்லம் , சருக்கரை  முதலியன  செய்யுமறிவு (13) ஒரு  கலையாகும் .                                                              73

     பொன்  முதலிய  உலோகங்களையும்  மூலிகைகளையும்  ஒன்றோடொன்று  சேர்க்குமறிவு (14 ) ஒரு  கலையாகும்.  கலப்பாகவுள்ள  பொன் , வெள்ளி  முதலிய  உலோகங்களைத்  தனித்தனியே   பிரித்தெடுக்கும்  செயல் (15)  ஒரு  கலையாகும் .   74

     உலோக  முதலியவற்றின்  கலப்பைப்  புதிய  முறையில்  ஆராய்ந்தறிதல் (16) ஒரு  கலையாகும் . உப்பு  முதலியவற்றை  ஆக்கலும் , அவற்றைப்  பிற  பொருள்களினின்றும்  வெளிப்படுத்தலும் (17) ஒரு  கலையாகும் . இப்பத்துக் கலைகளும்  ஆயுர்வேதத்தின்பாற்  படுவனவாம் .                                                                                                    75

     அடி  முதலியவற்றின்  வைப்புமுறைகளை  மேற்கொண்டு  வாள்  முதலிய  படைகளாற்  குறிவைத்தெறிதல் (18) ஒரு  கலையாகும் . உறுப்புச்  சந்திகளிற்  றாக்குதல் , பிடித்திழுத்தன்  முதலிய  செயல்  வேறுபாடுகளாற்  செய்யப்படும்  மற்போர் (19) ஒரு  கலையாகும் . 76

     மற்போர்  செய்யும்  வீரர்களின்  கைப்போர் , வாள்  முதலிய  படைகளின்றி  வீரன்  மடக்கிய  கைகளாற்  செயற்பாலதாம் . அம் மற்போரில்  இறந்த  வீரனுக்கு  இம்மையிற்  புகழும்  மறுமையில்  இன்பமும்  உண்டாகா .                                                                                    77

     பகைவனுடைய  ஆற்றலும்  செருக்கும்  அழியுங்காறுஞ் செய்யப்  படும்  மற்போர்  ஒருவனுக்கு  மிக்க  புகழை  விளைப்பதாகும் . அம் மற்போரை  உயிர்க்கு  அழிவுண்டாம்  வண்ணஞ்  செய்தலாகாது .  78

     ஒருவன்  தன்  செயல்  எதிர்ச்செயல்களாலும் , மிக்க  அச்சத்தை  விளைவிக்கும்  பல்வகைக்  கைவினைகளாலும் , பகைவனை  வீழ்த்தி  மேலேறுதலாலும் , விரல்  மடக்கிக்  குத்துதலாலும் , பகைவன்  சோர்ந்திருக்குங்கால்  அவனைப்  பிசைதலாலும்  செய்யும்  மற்போர்  நிபீடனம்  என்றறியற்பாலது . அந் நிபீடத்தினின்றும்  விடுதி  பெறுதல்  பிரதிக்கிரியை   என்று  கூறப்படும் .                                                            79

     ஓரிடத்தைக்  குறிவைத்து  எந்திரம்  அம்பு  முதலியவற்றை  அங்குச்  செலுத்தல் (20)  ஒரு  கலையாகும் . போர்ப்  பறை  முதலியவற்றின்  குறிப்புகளாற்  படைகளின்  அணிவகுப்பு  முதலியன  செய்தல் (21) ஒரு   கலையாகும் .                                                                                               80

     யானை , குதிரை , தேர்  இவற்றின்  கதி  விசேடங்களாற்  போரிற்  கலத்தல் (22)  ஒரு  கலையாகும் . இவ் வைந்து  கலைகளும்  தநுர்  வேதத்தின்கண்  உள்ளனவாம் .                                                                       81

     பலவகை  இருக்கைகளாலும்  முத்திரைகளாலும்   தெய்வங்களை  மகிழ்வித்தல் (23)  ஒரு  கலையாகும் . தேர்  செலுத்துந்திறமையும்  , யானை,  குதிரைகளுக்கு  நடை  கற்பிக்குந்  தொழிலும்  (24)  ஒரு  கலையாகும் .                                                                                                     82

( இருக்கைகளாலும்  முத்திரைகளாலும் , மகிழ்வித்தலாவது : தெய்வத்  திருவுருங்களை  நிற்றல் , இருத்தன்  முதலிய  நிலைகளில்  வைத்து  அலங்கரித்துக்  கைமுத்திரை  காட்டி  உவகையுறுத்தல் . இக்கலை  தந்திரமென்னும்  உபவேதத்தின்பாற்  படுமென்று  உய்த்துணரற்பாற்று . இதன்பின்னுள்ள  24-ஆம்  கலைமுதற்  கூறப்படும்  மற்றைக்  கலைகளெல்லாம்  உபவேதங்களைச்  சாராமல்  பொதுவாக  மக்களுக்குரியனவாம் . )

     மண் , மரம் , கல் , பொன் , வெள்ளி  , முதலிய  உலோகங்களாகிய  இந்  நால்வகைப்  பொருள்களாலும்  தனித்தனியே    பாண்டம்  முதலியன  அழகுறச்  செய்தல் ( 25 , 26 , 27 , 28 ) நான்கு  கலைகளாகும் . ஓவியம்  முதலியன  வரைதல் (29)   ஒரு  கலையாகும் .                        83

     ஊருணி  வாவி  மேன்மாளிகை யமைத்தலும் , நிலத்தை  மேடு  பள்ளமின்றிச்  சமனாக்கலும், (30) ஒரு  கலையாகும் . நாழிகை  வட்டின்  முதலிய  பலவகை  எந்திரங்களையும் , வாச்சியக் கருவிகளையும்  செய்தல் (31)  ஒரு  கலையாகும் .                                                                  84

( 67-ஆம்  சுலோகத்திற்  கூறிய  இசைக்கருவிகள்  நாட்டியத்திற்குரியனவாகும். ஈண்டுக்கூறிய  வாச்சியக்  கருவிகள்  பிறவாம் . நாழிகை  வட்டில் – கடிகாயந்திரம் .)

     மிகுதி   குறைவு  சமனாகிய  அளவுகளாற்  சேர்க்கப்பட்ட  பல  வகை  வண்ணப்  பொருள்களால்  ஆடை  முதலியவற்றிற்கு  நிறம்  தீற்றல் (32)  ஒரு  கலையாகும் . நீர்  நெருப்புக்  காற்றுக்களின்  சேர்க்கையாலும் , அவற்றைத்  தடைப்படுத்திச்  செலுத்தலாலும்  செய்யப்படும்  எந்திரத்தொழில் (33)  ஒரு  கலையாகும் .                                                    85

( இத்தொழில்  இக்காலத்தில்  நீராவியால்  புகைவண்டி  முதலியவற்றைச்  செலுத்தும்  வினையை  நினைவுறுத்துவதாகும் . )

     தோணி , தேர்  முதலியன  செய்யும்  அறிவு (34)  ஒரு  கலையாகும் . நூல்  நூற்றல் , கயிறு  முறுக்கல்  முதலியன  செய்யும்  அறிவு (35)  ஒரு  கலையாகும் .                                                                                                     86

     பலவகை  நூல்களின்  இயைபால்  ஆடை  நெய்தல் (36) ஒரு  கலையாகும் . அரதனங்களைச்  சாணை  தீர்தல் , துவாரமிடல் , முதலிய  செய்தற்கண்  உள்ள  அறிவின்  ஏற்றத்தாழ்வு (37)  ஒரு  கலையாகும் .                                                                                                      87

     பொன்  முதலிய  உலோகங்களின்  உண்மை  நிலைமை ஆராய்ந் தறிதல் (38) ஒரு  கலையாகும் . செயற்கைப் பொன் , செயற்கை  அரதனங்களைச்  செய்யும்  அறிவு (39)  ஒரு  கலையாகும் .                88

     பொன்  முதலியவற்றால்  அணிகலன்கள்  செய்தல் (40)  ஒரு  கலையாகும் . உருக்கிய  பொன்  முதலியவற்றால்  மற்றை உலோகப்  பொருள்களுக்குப்  பூச்சிடல் (41)  ஒரு  கலையாகும் . தோல்களுக்கு  மென்மை  முதலிய  பதனிடல்  (42)  ஒரு  கலையாகும் .                       89

     பசு  முதலியவற்றின்  உடல்களினின்றும்  தோலுரித்தெடுத்தல் (43)  ஒரு  கலையாகும் . பசு  முதலியவற்றினின்றும்  பால்  கறத்தன்  முதல்  நெய்யுருக்குதல்வரை யுள்ள  செயல்களின்  அறிவு (44)  ஒரு  கலையாகும் .                                                                                                      90

     குப்பாயம்  முதலியன  தைத்தற்கண்  உள்ள  அறிவு (45)  ஒரு  கலையாகும் . நீரிற்  கை  முதலியவற்றால்  நீந்திக்  கடத்தல் (46)   ஒரு  கலையாகும் .                                                                                                      91

இல்லத்தின்கண்  உள்ள  பாண்டம்  முதலியவற்றைத்  தூய்மையுற  விளக்கும்  அறிவு (47)  ஒரு  கலையாகும் . ஆடைகளை யொலித்தல் (48)  ஒரு  கலையாகும் . மயிர்  களைதல்  (49) ஒரு  கலையாகும் .                  92

( ஒலித்தல் – அழுக்ககற்றல் .)

     எள்  இறைச்சி  இவற்றினின்றும்  நெய்  வெளிப்படுத்தல் (50)  ஒரு  கலையாகும் . கலப்பை  முதலியவற்றான் உழுதல் (51) ஒரு கலையாகும். மர முதலியவற்றில் ஏறுதல் (52) ஒரு கலையாகும்.       93   

     ஒருவற்கு  மன  முவக்கப்  பணிவிடை  செய்தற்கண்  உள்ள  அறிவு (53)  ஒரு  கலையாகும் . மூங்கில் , புல் , முதலியவற்றாற்  பெட்டி  முதலியன  செய்தற்கண்  உள்ள  அறிவு (54)  ஒரு  கலையாகும் .          94

     காசபாத்திரம்  முதலியன  செய்தற்கண்  உள்ள  அறிவு (55)  ஒரு  கலையாகும் . நீர் கொணர்தல் , நீர்  தெளித்தல்  முதலியன (56)  ஒரு  கலையாகும் .                                                                                                         95

( காசபாத்திரம்  –  கண்ணாடி  செய்யும்  ஒளிமிக்க  ஒருவகை   மண்ணாற்  செய்யப்படுவது . இது  பீங்கான்  பாத்திரமென்றுங்  கூறப்படும் . )

     இரும்பினால்  அம்பு  வாள்  முதலிய  ஆயுதங்கள்  செய்யும்  அறிவு (57) ஒரு  கலையாகும் . யானை ,  குதிரை ,  எருது ,  ஒட்டகம்  ஆகிய  இவற்றின்  பிடர்க்கண்  இடும்  தவிசு  முதலியன  அமைக்கும்  அறிவு (58)  ஒரு  கலையாகும் .                                                                                        96

     குழந்தைகளை  வளர்த்தலும்  தாங்குதலும் , குழந்தைகளோடு  விளையாடுதலும் (59) ஒரு  கலையாகும் . ஒருவன்  குற்றஞ்  செய்யின்  அவனை  அதற்குத்தக  ஒறுத்தல்  (60)  ஒரு  கலையாகும் .                       97

     பலதேயங்களிலும்  வழங்கும்  எழுத்துக்களை  நன்கு  எழுதப்பழகும்  அறிவு (61)  ஒரு  கலையாகும் . வெற்றிலை  பாக்கு  முதலியவற்றைச்  சித்தப்படுத்தல்  பேணுதல்  முதலியன (62) ஒரு  கலையாகும் .             98

     இக் கலைகளைக்  கொள்ளுதற்கண்  விரைவுத்தன்மையும்   கொடுத்தற்கண்  தாழ்த்தற் றன்மையும்  ஆகிய  இரு  குணங்களையும்  மேற்கொள்ளல்  வேண்டும் . இவ்விரு  குணங்களும்  (63-64)  இருகலைகளாகக்  கூறப்படும் .                                                                        99

     இங்ஙனம்  அறுபத்து  நான்கு  கலைகளும்  சுருக்கமாகக்  காட்டப்பட்டன . இக்கலைகளுள்  எதனை  யெத்தனை  எவனெவன்  திறமையோடு  மேற்கொண்டுள்ளானோ  அதனையதனை  அவனவன்  செவ்விதிற்  செய்யுந்  திறனுடையனாதல்  வேண்டும் .                            100

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்,

நாட்டைப்பற்றிய  முதலாவதாகிய

“வித்தியா  கலா  நிரூபணம்”  என்னும்

மூன்றாம்  பிரகரணம்  முற்றிற்று .   

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நான்காம்  பிரகரணம்

(உலக  தரும  நிரூபணம்)

1 . நால்வகை  ஆச்சிரமங்கள்

     அந்தணர்க்கு  முறையே  பிரமசரியம் , காருகத்தம் , வானப்பிரத்தம் , சந்நியாசம்  என்னும்  இந்  நால்வகை  நிலைகளும்  எப்பொழுதும்  உரியனவாம்  . மற்றை  அரசர் , வணிகர் , வேளாளர்  ஆகிய  மூவர்க்கும்  இறுதியதாகிய  சந்நியாச  மல்லாத  மற்றைய  மூவகை  நிலைகளும்  தனித்தனி  உரியனவாம் .                                                       1

     கல்விப் பயிற்சி  செய்தற்பொருட்டு   ஓது  நிலையும் , பிற  நிலைகளை யுடையாரெல்லோரையுங்  காத்தற்பொருட்டு  இன்னிலையும் , பொறிகளை யடக்கி  யாளுதற்  பொருட்டுக்  காடுறை  நிலையும் , வீட்டின்பந்துய்த்தற் பொருட்டுத்  துறவுநிலையும்  மேற்கொள்ளற்பாலனவாம் .                                                                               2

( ஓதுநிலை – பிரமசரிய . இன்னிலை – இல் நிலை ; காருகத்தம் . காடுறை நிலை – வானப்பிரத்தம் . துறவு நிலை – சந்நியாசம் . இவற்றைத்  தமிழ்  நூலார்  இல்லறம்  துறவறம்  என்னும்  இரண்டனுள்  அடக்குவர் . காருகத்திற்கு  முன்னர்க்  கல்வியின்  பொருட்டு  மேற்கொள்ளப்படுதலின்  பிரமசரியம்  இல்லறத்துள்ளும்,  போக நிமித்தமின்றிப்  பணிவிடைப்பொருட்டு  மனைவியோடுடனுறைதலின்  வானப்பிரத்தம்  துறவறத்துள்ளும்  அடங்கும் . )

     அந்தணர்  முதலிய  வருண  ஒழுக்கங்களையும் , பிரமசரிய  முதலிய  ஆச்சிரம  ஒழுக்கங்களையும்  பிழைத்தொழுகுவாரை  அரசன்  தண்டிக்கக்  கடவன் .                                                                           3

( பிழைத்தொழுதல் – தவறி நடத்தல் .)

     அரசன் , தத்தங்  குல  தருமங்களிற்  பிறழ்ந்தொழுகுங்  குடிகளைப்  புறக்கணித்தும் , அவரைத்  தண்டோபாயத்தால்  ஒறுத்தல்  செய்யாமலும்  இருப்பின் , உயர்குலங்கள்  இழிகுலத்தன்மையையும், இழிகுலங்கள் உயர்குலத்தன்மையையும்  எய்துவனவாம் . (எல்லோரும் தத்தம்  விருப்பின்வண்ணம்  ஒழுகுவர்  என்றபடி. )                                   4                                                                                                          

2 . மகளிர்  ஒழுக்கமுறை

     பெண்களும் , சூத்திரர்களும்  தம்  தலைவர்  பணியின்றிச்  செபம், தவம் , புண்ணிய  தல  யாத்திரை , துறவு பூணல் , மந்திர  சாதனம் , கடவுட்பூசை  யாகிய  இவற்றைச்  செய்தலாகாது . பெண்களுக்கு  அவரவர்  தலைவர்  பணியன்றி  அறம்  பொருள்  இன்பங்ளைப்  பயக்கும்  துணையாவது  வேறொன்று மின்று .                                           5

     பெண்மக்கள்  தன்  தலைவன்  துயில்  நீத்தெழுதற்கு  முன்னரே  அமளியினின்றெழுந்து , உடலைத்  தூய்மை  செய்து  கொண்டு , படுக்கையைப்  பிறிதோரிடத்தில்  எடுத்து  வைத்துப்  பின்னர்  அலகிடலாலும் , மெழுகிடலாலும்  இல்லத்தைத்  தூய்மை  செய்து , வேள்வி  முதலியவற்றிற்குரிய  பாத்திரங்களை  நெருப்பையும் , புல் லையு முடையதும்  வீட்டை  யடுத்துள்ளது மாகிய  நிலத்தில்  வைத்து  அழுக்ககற்றித்  துலக்கல்  வேண்டும் . அப்  பாத்திரங்கள்  எண்ணெய்  படிந்தனவாக  விருப்பின் , பின்னரும்  அவற்றை  வெந்நீராற்  கழுவி  உரிய  இடத்தில்  வைத்து  ஈரமுலரச்  செய்து  மீண்டும்  அவற்றில்  நீரை  நிறைத்துத்  தக்க  இடத்தில்  வைத்துக்  காத்தல்  வேண்டும் .                6-8

( அலகிடல் – துடைப்பத்தால்  இடத்தை  விளக்கல். )

     அடுக்களையிலுள்ள    பாத்திரங்க ளெல்லாவற்றையும்  இல்லத்தின்   வெளிப்புறத்தே  வைத்து , மண்   முதலியவற்றால்  தேய்த்து  அழுக்ககற்றிக்  கழுவல் வேண்டும் . பின்னர் அடுப்பை  மெழுகி  அதன்கண்  விறகிட்டுத்   தீ  மூட்டல்  வேண்டும் .                                      9

      இங்ஙனம்  முற்பகலிற்  செயற்பாலனவாகிய  செயல்களைச்  செய்து  முடித்த   அப்பெண், உபயோகத்திற்குரிய  பாத்திரங்களையும் , இரசம் , சோறு , மற்றை  உணவு  வகைகள்  ஆகிய  இவற்றிற்குரிய  பொருள்களையும்  மறவாமல்  திட்டஞ் செய்துவைத்து  மாமன் , மாமி  இருவரையும்  வணங்கல்  வேண்டும் .                                                           10

  அம்  மாமன்  மாமியாராதல் , தன்  தலைவனாதல் , தந்தை  தாயாராதல் , உடன்  பிறந்தாராதல் , அம்மான்  முதலிய  உறவினராதல்  மனமுவந்தளிக்கும்  ஆடையையும் , அரதனப்பணி  முதலிய  அணிகலன்களையும்  ஏற்று  அணிந்து கொள்ளல்  வேண்டும் .             11

( அரதனப்பணி – இரத்தினாபரணம் .)

     இல்லக் கிழத்தியாவாள் – மனம்  மொழி  செயல்களில்  தூய்மையும்  உடற்றூய்மையு முடையளாகவும் , தலைவன்  கட்டளைப்படி  ஒழுகுபவளாகவும் , அவனை  நிழல்போல்  என்றும்  பிரியாதிருப்பவ ளாகவும், அவற்கு  நலந்தரு  செயல்களில்  தோழி  போலவும் , ஏவற்றொழில்  செய்வதிற்  பணிப்பெண்  போலவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                               12

     அதன்பின்  அப்  பெண்மகள்  அடிசில்  ஆக்கித்  தன்  தலைவற்கு  அறிவித்து , வைச்சுவதேவ  பலி   கொடுத்து , எஞ்சிய  உணவை  முதற்கண்  உண்ணுதற்குரிய  மாமன்  மாமி  முதலியோரையும்  தன்  கணவனையும்  உண்பித்தல்  வேண்டும் . அதன்பின்  அக்  கணவன்  உடன்பாடு  பெற்று  எஞ்சிய  சோறு  முதலியவற்றைத்   தான்  உண்ணல்  வேண்டும் . தன்  குடும்ப  வாழ்க்கைக்குரிய  வரவு  செலவுகளை  யாராயு முகமாகப்  பிற்பகலைக்  கழித்தல்  வேண்டும் .

( வைச்சுதேவ பலியாவது  :  இருபிறப்பாளர்  நாடோறும்  இறுக்கப்படும்  ஐம்பெரும்  கேள்விகளுள்  ஒன்றாகிய  தேவ  யாகத்தின்பாற்  படும் ; அக்கினி  முதலியோரைக்  குறித்து  அவ்வக் கினியாற்  செய்யப்படும்  ஓம  காரியமாகும் .)

     கற்பிற்  சிறந்த  அப் பெண்மகள்  இங்ஙனமே  நாடோறும்  காலையிலும்  மாலையிலும்  இல்லத்தைத்  தூய்மை  செய்து  அடிசிலாக்கித்  தன்  தலைவனையும்  ஏவலாளரையும்  உண்பித்தல்  வேண்டும் .                                                                                                            15

     அதன்பின்  அளவின்மிகாத  உணவைத்  தான்  உட்கொண்டு , இல்லறமுறைக்குரிய  மற்றைக்  காரியங்களையுஞ்   செய்து  முடித்துப்  படுக்கை  விரித்துத்  தன்  தலைவன்  துயில்  செய்தற்குரிய  பணிகளை  இயற்றல்  வேண்டும் .                                                                                           16

( இதன்கண்  கூறப்பட்ட  உணவு  இரா  வுணவாகும் .)

     தலைவன்  உறங்கியபின்  அப்படுக்கையை  யடைந்து , ஆடை  நீங்கப்பெறுதல்  மெய்ம்மறத்தல் , அவாமிகுதி  யாகிய  இவை  யில்லாமற்  பொறிகளை  யடக்கிக்  கொண்டு  , அத் தலைவனை  நெஞ்சத்துளிருத்தித்  துயில்  செய்தல்  வேண்டும் .                                     17

     பெண்மகள்  இரைந்துபேசுதல் , கடுஞ்சொற்  கூறல் , பலமுறை  கூவியழைத்தல் , இன்னாச்சொற்கூறல் , எவரோடாயினும்  கலகம்  விளைத்தல் , பயனில்  சொற்கூறல்  ஆகிய  இவை  இல்லாதவளாக  இருத்தல்  வேண்டும் .                                                                                          18

      கற்பிற்  சிறந்த  பெண்  தன்  தலைவனுடைய  பொருட்கு  அழிவு  செய்யும்  இயல்பினளாகவும் , அறம்  பொருள்   ஈட்டுதற்கண்  மாறுபட்டு   ஒழுகுபவளாகவும்  இருத்தலாகாது . இன்னும்  அவள் , ஆராயாது  பேசுதல் , இறுமாந்து பேசுதல் , சினந்து  கூறல் , அழுக்காறுற்றுப்  பேசுதல் , மிகவும்  பழிக்கப்படுவனவாகிய  குறளை  கூறல் , பிறரைத்  துன்புறுத்தல் , விடயங்களின்  மிகுபற்று , அகங்காரம் செருக்கு , கடவுளும்  இம்மை  மறுமை  முதலியனவும்  இல்லை யென்னுங்  கொள்கை , வலாற்காரம் , களவு , இடம்பம்  ஆகிய  இக் குற்றங்களையும்  ஒழித்தல்  வேண்டும் .                                                   19-20

( அகங்காரமும்  செருக்கும்  ஈண்டு  முறையே  மாண்பு  நீங்கிய  மானமும்  மதமுமாம் . )

     தனக்குரிய  சிறந்த  தெய்வமாகிய  கணவற்கு  இவ்வாறு  பணி  செய்து  நல்லொழுக்கம்  நிரம்பப்  பெற்ற  அப் பெண்மகள் , இம்மையில்  நல்ல  புகழையும் , மறுமையில்  தன்  தலைவன்  இருக்கும்  உலகத்தை   யெய்தி அவனோடு  உடனுறைதலாகிய  வாழ்க்கையையும்  அடைவாள்  .                                                                      21

     இதுகாறும்  மகளிர்க்குரிய  நித்யகன்ம  ஒழுக்கங்கள்  கூறப்பட்டன . இனி, நைமித்திய கன்மங்கள்  கூறப்படும் . ஒரு  பெண்  இருது வுடைய ளாகி  வீட்டுக்கு  விலக்கானால்  முற்கூறிய  எப்பணியையுஞ்  செய்தலாகாது .                                                                                                       22

     இருதுவான  அப்பெண்  ஒரே  ஆடை  யுடையளாய் , உடல்  மெலிவுற்று , அச்சமேற்கொண்டு  , நீராடுதலையும்  அலங்கரித்துக் கொள்ளுதலையும்  ஒழித்து , நாணுடையளாய் , எவராலும்  பார்க்கப்படாதவாறு  , விரைந்து  ஓர்  அறைவீட்டினுள்  புகுந்து  இருத்தல்  வேண்டும் .                                                                                          23

( உடல் மெலிவுறுதல்  –  இருது காலத்தில்  உண்டி  சுருக்கலானாம் .  மகளிர்க்குரிய  நால்வகைக்  குணங்களுள்  நாணும் , அச்சமும்  இருதுகாலத்தில்  விசேடமாக  மேற்கொள்ளப்பட  வேண்டுமென்பது  கருத்து .)

     இன்னும்  அவள்  மெய்ம்  மறத்தலின்றி  நிலத்திற்  படுத்துறங்கல்  வேண்டும் . இவ்வாறு  மூன்று  பகல்களைக்  கழித்துப்  பின்  மூன்றா  நாள்  இரவின்  இறுதியில்  கதிரவன்  உதயமாகுங்கால்  உடுத்த  ஆடையோடு  நீராடல்  வேண்டும் .                                                                   24

     அதன்  பின்  கணவன்  முகத்தைத்  தரிசித்து  அப்  புண்ணியத்தாற்  தூய்மையுடையளாதல்  வேண்டும் . மீண்டும்  நீராடுதல்  முதலியவற்றால்  தூய்மையுடையளாய்  முன்போல  வீட்டுப்பணிகளைச்  செய்தல்  வேண்டும் .                                                   25

     இவ்வொழுக்கங்கள்  அந்தணர்  முதலிய மூன்று  வருணத்துப்   பெண்களுக்கும்  உரியனவாம் . இவற்றுட்  பெரும்பாலான  வருணத்துப்  பெண்கள்  முதலியோராலும்  மேற்கொள்ளற்பாலனவாம் . அந்  நான்காம்  வருணத்துப்  பெண்கள்  முதலியோர்,  உழவு  பண்டமாற்று  முதலிய  ஆண்மக்களின்  தொழில்களுக்குத்  துணை  செய்வதற்கும்  உரியராவர் .                                                                                                          26

    நல்ல  இசை  பாடுதலாலும் , இனிமை  மிகப்  பேசுதலாலும் , அன்பு  அளைஇய  இன்ப  விளையாடல்களாலும்  தன்  கணவன்  தனக்கு  வயமாம்வண்ணம்  செய்து  கொள்ளல்  வேண்டும் .                                27

     கணவன்  இறந்துவிடின்  தானும்  உடல்  நீத்து  அவனுடன்  செல்லல்  வேண்டும் . இன்றேல், தலைவனை   நினைவுட்கொண்டு  பிரமசரிய  ஒழுக்கமுடையளாய்ப்  பிறரில்லம்  புகாது  தன்னில்லத்தே யிருந்து , கைம்மை  நோன்பைக்  கடைப்பிடித்தொழுகல்  வேண்டும் .                 28

( இச்சுலோகக்  கருத்தைப்  பின்  வரும்  மணிமேகலைச்  செய்யுட்  பகுதியாலு முணர்க :

“ காதல ரிறப்பிற்  கனையெரி பொத்தி , யூதுலைக்  குருகினுயிர்த்  தகத் தடங்கா,  தின்னுயிரீகுவரீயாராயின் , நன்னீர்ப்  பொய்கையினளியெரி புகுவர் , நளியெரி புகாஅராயி னன்பரோ , டுடனுறை  வாழ்க்கைக்கு  நோற்றுடம் படுவர், பத்தினிப்பெண்டிர்  பரப்புநீர்  ஞாலத்து “                      ( மணிமேகலை -2-. 42-38.)  )

     தன்  கணவன்  அயலிடஞ்  சென்றிருக்குங்கால்  தான்  அலங்கரித்துக்  கொள்ளலாகாது ; கடவுள்  வழிபாட்டிலும்  கணவன்  நலத்திலும்  பற்றுடையளாக  இருத்தல்  வேண்டும் . மங்கலத்தின்  பொருட்டுச்  சில  அணிகலன்களை   மாத்திரம்  அணிந்து  கொள்ளல்  வேண்டும் .                                                                                                            29

     பெண்மகட்குக்  கணவனை  யொத்த   பற்றுக்கோடும்  இன்பப்பொருளும்  வேறில்லை . அவள்  உலகத்துள்ள  எல்லாப் பொருள்களையும்  பொருட்படுத்தா தொழித்துக்  கணவனையே  புகலிடமாக  அடைதல்  வேண்டும் . அவனே  அவளுக்கு  அவ்வெல்லாப்பொருளுமாவன் .                                                                   30

     ஒரு  பெண்ணுக்குரிய   வாழ்க்கைப்  பொருள்களின்  அவள்  தந்தை  கொடுப்பனவும் , உடன்பிறந்தார்  கொடுப்பனவும் , புதல்வர்  கொடுப்பனவும்  ஓர்  அளவுட்பட்டனவாம் . கணவன்  கொடுப்பனவே  அளவில்லாதனவாம் . அங்ஙனமாயின்  அக்கணவற்கு  வழிபாடு  செய்யாதவள்   யார்?                                                                                        31

3 . சூத்திரர்களின்  ஒழுக்க  வகைகள்

     நான்காம்  வருணத்தவராகிய  சூத்திரர்கள்   வருணத்தன்மை  யுடைமையால் , “சுவதா , சுவாகா , வெளஷ்ட்”  என்னும்  இவை  முதலியவற்றை  இறுதியில்  உடைய  வேதமந்திரங்களான்  அன்றி  “நம”  என்பதனை  இறுதியிலுடையனவும்  புராண  முதலியவற்றிற்  கூறப்பட்டனவும்  ஆகிய  மந்திரங்களான்  மாத்திரம்  தம்  வருண  தருமத்திற்குரிய  கன்மங்களைச்  செய்யக்கடவர் .                                 32

     அந்தணர்  குலத்தவனால்  மணஞ்  செய்து  கொள்ளப்பட்ட  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வன்  அவ்  வந்தணனை  யொப்பவும் , அரசர்  குலத்தவனால்   மனஞ்  செய்து  கொள்ளப்பட்ட  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வன்  அவ்வரசனை  யொப்பவும் , வணிக  குலத்தவனால்  மணஞ்  செய்து  கொள்ளப்பட்ட  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வன்  அவ்வணிகனை  யொப்பவும்  கன்மங்களைச்  செய்யக்  கடவர் .                                                           33                                                                                                

( உவமச்  சொல்லால்  இங்குக்  கூறிய  பெண்கள்   மூவரும்  அவ்வச்  சாதியினர்  அல்லர்  என்பது  போதரும் . பின்வருஞ்  சுலோகத்தில்  அந்தணர்க்கும்  அரசர்க்கும்  முறையே  வணிகப்பெண்ணிடத்தும்  சூத்திரப்பெண்ணிடத்தும்  தோன்றிய  புதல்வர்கள்  சூத்திரனையொப்பக்  கன்மஞ்  செய்பவராவரென்று  கூறப்பட்டுள்ளது . ஆதலின் , ஈண்டு  அந்தணனாற்  கொள்ளப்பட்ட  பெண்  அரசர்  குலத்தவள்  எனவும் , அரசனாற்  கொள்ளப்பட்ட  பெண்  வணிக  குலத்தவள்  எனவும் , வணிகனாற்  கொள்ளப்பட்ட பெண்  சூத்திர குலத்தவள்  எனவும்  பொருள்  கொள்ளுதல்  வேண்டும் . இவ்வாறு  பொருள் கோடலே  பின்வருஞ்  சுலோகத்தோடு  மாறுபடாமலும் , மனு  முதலிய  அறநூல்களின்  கருத்தோடு  ஒத்தும்  பொருந்துவதாகும் . அந்தணர்  முதலிய  நான்கு  வருணத்தவரும்  ஒரோவமயம்  தத்தம்  வருணத்திற்குக்  கீழ்ப்பட்ட  சாதிப்  பெண்களை  மணஞ்  செய்து  கொள்ளலாமெனினும் , தமக்கு  அப்பெண்களிடத்துப்  பிறக்கும்  புதல்வருள்  தங்  குல கன்மங்களுக்குத்  தம்மைப் போல் உரிமையுடையார்  தத்தம்  வருணத்திற்கு  அடுத்த  கீழ்வருணத்துப்  பெண்ணிடத்துப்  பிறந்த  புதல்வரேயாவர் . இதனைப்  பின்வரும்  மனுஸ்மிருதிச்  சுலோகங்களும்  வலியுறுத்துவனவாம் . அச் சுலோகங்களின்  மொழிபெயர்ப்புக்கள்  வருமாறு :  “அந்தணர்  முதலிய  இருபிறப்பாளர்  மூவர்க்கும்  அவரவர்  வருணத்திற்கு  அடுத்த  வருணத்துப் பெண்களிடத்துப்  பிறந்த  புதல்வர்கள்  தாயின்  குல  இழிவால்  தாழ்ந்தவர்களாயினும்  அவர்களைத்  தந்தையோடு  ஒத்தவர்களாகவே  பெரியோர்  கூறுவர் .”  [ மனு -10 அத். 6-4. ]  “இருபிறப்பாளர்  மூவர்க்கும்  அவர்தம்  சாதிப் பெண்களிடத்துப்  பிறக்கும்  புதல்வர்  மூவரும் , அவர்தம்  சாதிக்கு  அடுத்த  வருணத்துப்  பெண்களிடத்துப்  பிறக்கும்  புதல்வர்  மூவரும்  ஆகிய  அறுவரும்  அவர்தம்  தந்தையரையொப்பத்   துவிச  தருமமாகிய  உபநயநம்  முதலிய  கன்மங்களுக்கு  உரியராவர் . பிரதிலோமரமாகப்  பிறந்தா ரெல்லோரும்  சூத்திரர்களுக்குரிய  கன்மங்களையே  தமக்கும்  உரியவாகக்  கொள்பவராவர் . [ மனு – 10-அத்தி – 14-சு ].  )

அந்தணர்க்கும்  அரசர்க்கும்  முறையே  வணிகப்பெண்ணிடத்தும்  சூத்திரப்பெண்ணிடத்தும்  தோன்றிய  புதல்வர்கள்  சூத்திரனையொப்பக்  கன்மம்  புரிபவராவர் . தாழ்ந்த  சாதி  ஆண்மகனுக்கு  உயர்ந்த  சாதிப்  பெண்ணிடத்துப் பிறந்த  புதல்வன்  சூத்திரனினும்  இழிந்தவனாகக்  கருதப்படுவான் . அவன்  சூத்திரனுக்குரிய  மந்திரத்தினுங்  குறைந்த  நாம  மந்திரத்தால்  எப்பொழுதும்  நற்காரியங்களைச்   செய்யக்  கடவன் .                         34

( உயர்ந்த  வருணத்து  ஆண்மகனுக்குத்  தாழ்ந்த  வருணத்துப்  பெண்ணிடத்துப்  பிறந்தவர்  அநுலோமரெனவும் , தாழ்ந்த  வருணத்து    ஆண்மகனுக்கு  உயர்ந்த  வருணத்துப் பெண்ணிடத்துப்  பிறந்தவர்  பிரதிலோமரெனவுங்  கூறுப . சூத்திரனுக்குரிய  மந்திரத்தினுங்  குறைந்த  நாம   மந்திரமாவது :”நம” என்பதை  இறுதியிற்  பெறாமல்  நாம  மாத்திரையாகக்  கூறப்படுவதாகும் .

4 . யவனர்களின்  ஒழுக்க  வகைகள்

     இவ் வுலகத்தின்  ஒரு பக்கத்திற்  கலப்புச்  சாதிகளோடு  கூடிய  அந்தணர்  முதலிய  நால்வகைச்  சாதியினரும்  இருக்கின்றனர் . மற்றொரு பக்கத்தில்  யவனர்கள்  இருக்கின்றனர் . அவ் யவனர்கள்  வேத  ஒழுக்கங்களோடு  மாறுபட்ட  ஒழுக்கமுடையராய்  வடதிசை  மேற்றிசைகளில்  உள்ள  நிலப்  பரப்புக்களில்  வாழ்கின்றனர்.     35              

( வடதிசை  மேற்றிசைகளில்  என்பதனை  வடமேற்குத்  திசை  யென்றுங்  கொள்ளலாம் .)

     அவ் யவனர்க்கு  அவர்தம்  நலங்குறித்து  அவர்தம்  ஆசிரியர்களால்  யவனமத  நூல்கள் செய்யப்பட்டுள்ளன . அங்ஙனமே அவ்வாசிரியரால் அவர் மேற்கொள்ளுதற்பொருட்டு  இம்மை மறுமைகளுக்கு  மாறுபாடில்லாத  நீதி  நூல்களும்  ஆக்கப்பட்டுள்ளன .                     36

5 . சிறப்புப்  பிறப்பாலன்று : குணத்தாலாம்

     மக்களுக்குக்  குணங்களின்  சிறப்பு  இழிவுகள்  ஒரோவமயம்  விதத்தின் [ தந்தையின்]  தன்மையாலும் , ஒரோவமயம்  நிலத்தின்          [ தாயின் ]  தன்மையாலும்  உண்டாவனமாம் . ஒரோ வமயம்  வித்து நிலங்  [ தந்தை  தாயார் ] களின்  மாட்சிமையாலும்  குணங்களின்  சிறப்பு  உண்டாவதாகும் .                                                                          37

     விசுவாமித்திரர் , வசிட்டர் , மதங்கர் , நாரதர்  முதலிய  முனிவர்  எல்லோரும்  தவச்  சிறப்பாற்  பெருமை  யெய்துவோராவர் . பிறப்புப்  பற்றி  அப்பெருமை  யெய்தினாரல்லர் .                                                 38

( விசுவாமித்திரர்  முதலிய  நால்வரும்   முறையே  அரசர்  குலத்தும் , கங்கையிடத்தும் , தாழ்ந்த  குலத்தும் , பணிப்பெண்ணிடத்தும்  பிறந்து  தவவன்மையால்  முனிவர்  பெருமக்களாகச்  சிறந்து  விளங்கினோராவர் . )

     உலகத்துள்ள  சாதிகளுக்குத்   தனித்தனி  விதிக்கப்பட்டு , அவ்வச்சாதி  முன்னோரான்  மேற்கொள்ளப்பட்ட  தருமங்களையே  அவ்வச்  சாதியில்  தோன்றிய  மக்கள்  கைப்பற்றியொழுகல்  வேண்டும் . அங்ஙனமின்றித்  தம்  சாதி  தரும  நெறி  கடந்தொழுகுவோர்  அரசனால்   தண்டிக்கற்பாலராவர் . அந்தணர்  முதலிய  நால்வகை  வருணத்தினரையும்   பிரமசரிய  முதலிய  நால்வகை  நிலையினரையும்  அநுலோமர்  முதலிய  பல்வகைச்  சாதியினரையும்  வேறுபாடறிதற்குத்  தனித்தனியே  குறிகளால்        நன்கு  அடையாளமிடல்  வேண்டும் .                                                           39

6. சிற்பி  முதலிய  தொழிலாளரைக்  காத்தல்   

     அரசன் , பொன்  முதலிய  உலோகங்களால்  தொழில்  செய்வோரின்  எந்திரங்களை  யாராய்ந்து  எப்பொழுதும்  அவரைக்  காத்தல்  வேண்டும் .                                                                                                              40

     காருகர் , சிறப்பு வினைஞர்  முதலிய   குழுவினரைக்  காரியஞ்  செய்தற்கு  வேண்டியளவு  நாட்டில்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . உழவுத்  தொழிலிலும்  பணி  செய்வதிலும் , மிகுதியாக  மனிதர்களை  நியமித்தல்  வேண்டும் .                                                                                       41

( காருகர் – நெய்தற் றொழில்  செய்வோர் .)

     பொற்கொல்லர்  முதலிய  வினைஞர் , கள்வர்களுக்குத்  தந்தையராம்  நிலையிலுள்ளவராவர் . ஆதலின் , அரசன்  அன்னாரைக்  கிராமத்தினின்றும்  வெளிப்புறத்தே  தனியிடத்தில்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . அங்ஙனமே  கிராமத்தின்  வெளிப்புறத்தே  தனிமையில்  கள் விற்குமிடம்  இருத்தல்  வேண்டும் . அவ்விடத்தில்  வைத்துக்  கட்  குடிப்போரையுங்  காத்தல்  வேண்டும் .                                                         42

     நாட்டில் உள்ள எம்மனிதனும் பகற்காலத்திற் கட் குடித்தலாகாது.  43 

7 . மரங்களை  உண்டாக்கி  வளர்க்கும்  முறை

          அரசன் , கிராமங்களில்  அவற்றிற்குரியனவும் , வனங்களில்  அவற்றிற்குரியனவும்  ஆகிய  மரங்களை வைத்து  வளர்த்தல்  வேண்டும் . அவற்றுள் , தலையாய  மரங்களுக்கு  இருபது  முழ  அளவும் , இடையாய  மரங்களுக்குப்  பதினைந்து  முழ  அளவும்  கடையாய  மரங்களுக்குப் பத்து  முழ அளவும் , மிகச்சிறிய  மரங்களுக்கு  ஐந்து  முழ  அளவும்  உள்ள  நிலங்களை  இடைவெளியாக   விட்டு  வைத்தல் வேண்டும் . அம்  மரங்களை  வெள்ளாடு  செம்மறியாடு  பசு  ஆகிய  இவற்றின்  எருக்களையிட்டும் , நீர்  பாய்ச்சியும்  இறைச்சிகளை  யிட்டும்  வளர்த்தல்  வேண்டும் . 44-45

     அத்தி , அரசு , ஆல் , புளிமா [சிஞ்சம்] ,  சந்தனம் , எலுமிச்சை , வெண்கடம்பு , அசோகம் , மகிழ் , கூவிளம் , சீந்தில் , விளா , இராசாதனம் , மா , புன்னை , பூவரசு , புளி , சண்பகம் , கடம்பு , கோகாமிரம் , சரளம் , மாதுளை , கடு , பிசடம் , சிஞ்சுபம் , சிம்பு , இலந்தை , வேம்பு , நாரத்தை , பாலை , பேரீந்து , புன்கு , பேயத்தி , தமாலம் , சிம்பலளம் , மலையத்தி , வள்ளிக்கொடி , நெல்லி , கமுகு , கொம்மடிமாதுளை , இரச எலுமிச்சை , தெங்கு , வாழை , இவை  முதலிய  நல்ல  பழங்களையும்  நறுமணங்  கமழும்  மலர்களையுமுடைய  மரங்களைக்  கிராமங்களின்  அணிமையில்  வைத்து  வளர்த்தல்  வேண்டும் .     46-47

     வாழும்  இல்லத்தின்  இடப்புறத்தில்  அழகிய  ஆடற்  பூஞ்சோலை யமைத்தல்   வேண்டும் . அச் சோலைக்  கண்ணுள்ள  மரஞ் செடிகளுக்கு  முதுவேனிற்  காலத்தில்  காலை  மாலைகளிலும் ,  பனிக்காலத்தில்  ஒவ்வொரு  நாள்  இடைவிட்டும் , இளவேனிற்  காலத்திற்  பகலில்  ஐந்தாம்  முகூர்த்தமாகிய  பத்து  நாழிகைக்குள்ளும்  நீர்விடல்  வேண்டும் . மழைக்காலத்தில்  ஒருபொழுதும்  நீர்விடலாகாது .                                                                  48-50

8 . மரங்களைப்  பயன்  விளைக்கச்  செய்யுமுறை

          அம்  மரங்கள்  பயன்  தராதொழியின்  கொள்ளு , உழுந்து , பயறு , யவம் , எள்ளு  ஆகிய  இத்  தானியங்களுள்  ஒன்றை  நீர் விட்டுக்  காய்ச்சி  ஆறவைத்து , அந்நீர்  குளிர்ந்தபின்  அதனால்  அம்மரங்களை  நனைத்தல்  வேண்டும் . அங்ஙனம்  நனைத்தபின் , அம் மரங்கள்   மலர் பழம் , முதலிய பயன்களை எப்பொழுதுந்  தருவனவாம் .                       51

     மீன்  கழுவிய  நீர்  விடுதலாலும்  அம் மரங்கள்  மலர்  பழம்  முதலிய  பயன்களை  மிகுதியாகத்  தருவனவாம் .                                                       52

     மரங்களின்  அடியில்  செம்மறியாடு  வெள்ளாடுகளின்  எருப்பொடிகளையும் , யவதானியத்தின்  பொடியையும் , எள்ளினையும் , பசுவின்  இறைச்சியையும்  ஏழிரவு  இட்டு  நீர்  பெய்து  நனைத்துவரின் , அவ் வெல்லா  மரங்களும்  மலர்பழம்  முதலிய  பயன் களை  மிகுதியாகத்  தருவனவாம் .                                                                53

9. காட்டு  மரங்களை  யுண்டாக்கு  முறை

     முண் மரங்களும் , கருங்காலி  முதலிய  மற்றை  மரங்களும்  காட்டில்  இருக்கத்தக்கன வென்று  அறியற்பாலன . ஆதலின் , அம் மரங்களை  வனத்தில் உண்டாக்கி  வளர்த்தல்  வேண்டும் .                54

     கருங்காலி , மலையத்தி , தேக்கு , கோங்கு , பெருவாகை ,   வெளவுலம் , தமாலம் , ஆச்சா , வெட்பாலை , வெள்வேல் , மருது , புரசு , ஏழிலைப்பாலை , வன்னி , நந்தி , தேவதாரு , நரிமுறுக்கு , பெருங்களா , இங்குதி , பூர்ச்சம் , காஞ்சிரை , கருவேல் , ஆத்தி , குமிழ், பங்கம்பாளை, திந்துகம் , பீசகாரகம் , கடு , சே , சம்பாகம் , எருக்கு , தாமரை , அரிமேதம் மரமஞ்சள் , முள்ளிலவு , மருதோன்றி , நரவேலம் , பெருமரம், இலுப்பை  முதலிய  மரங்களும் , படர்செடி களும் , கொத்துச்  செடிகளும் , சிறு  தூறுகளும் , கொடிகளும்  ஆகிய  இவற்றுட்  கிராமத்தில்  இருத்தற் குரியவற்றைக்  கிராமத்திலும் , காட்டில்  இருத்தற்குரியவற்றைக்  காட்டிலும்  வைத்து  முயன்று  வளர்த்தல்  வேண்டும் .                                                                               55-59

10 . கிணறு  வெட்டல்  அணை கட்டல்  முதலியன

      கிணறு,  வாவி,  புட்கரிணி,  தடாகம்  ஆகிய  இவற்றை  ஆழத்தினும்  இருமடங்கு  மும்மடங்கு  மிகுதியான  அகற்சி யுடையனவாகவும் , எளிதாக  இறங்குதற்கும்  ஏறுதற்கு முரிய   படிகளை  யுடையனவாகவும்  அமைத்தல்  வேண்டும். அங்ஙனம்  அமைக்கப்படுங்  கிணறு  முதலியன , நாட்டில்  நீர்வளம்  மிகுதியாக  இருக்கும்  வண்ணம்  பலவாக விருத்தல்  வேண்டும் .                               60

( இங்குக்கூறிய  புட்கரிணி  தடாகங்களின்  அளவு  முதலியவற்றை  2-ஆம் அத்தியாயம் 159-161-ஆம்  சுலோகங்களின்  குறிப்பிற்  காண்க .  ஈண்டு  அகற்சியை  ஏற்ற  பெற்றி  கொள்க . )     

     ஆறுகளுக்கு  அழகிய  அணைகளையும் , அவ்வாற்றின்  குறுக்கே  போக்குவரவு  செய்தற்குத்  தோணி  முதலிய  நீர்  ஊர்திகளையும்  அமைத்தல்  வேண்டும் .                                                                                       61

11 .   திருக்கோயில்  முதலியன  அமைத்தல்

     எச்  சாதியினரால்  எத்  தெய்வம்  பூசிக்கப்படுகின்றதோ  அத்  தெய்வத்திற்குரிய  ஆலயத்தையும் , அத்  தெய்வ  சம்பந்தமான  வித்தைகளுக்கு  எவன்  ஆசிரியனோ  அவனுக்குரிய  ஆலயத்தையும் , அச்  சாதியினர்  வாழும்  இல்லநிரைகளின்  முன்னிடத்தில்  அமைத்தல்  வேண்டும் .                                                                                      62

கிராமத்தின்  நடுவிடத்திலாதல் , நாற்றெருக்  கூடுமிடத்திலாதல் , திருமால் , சிவபிரான் , கணபதி , சூரியன் , அம்பிகை  ஆகிய  இத்  தெய்வங்களுக்கு  முறையே   திருக்கோயில்கள்  அமைத்தல்  வேண்டும் .                                                                                                              63

    இங்ஙனம்  அமைக்கப்படும்  திருக்கோயில்கள்  மேரு  முதலிய  பதினாறு  வகைப்பட்ட  இலக்கணங்களை யுடையனவாகவும் , மிக்க  எழில்  வாய்ந்தனவாகவும் , வட்டம்  நாற்கோணம்  எந்திர  வடிவம்  என்னும்  இவற்றை  யுடையனவாகவும் , மண்டபங்களோடு  கூடினவாகவும் , திருமதில்  கோபுரம்  பரிவார  தெய்வங்களை யுடையனவாகவும் , நீட்சி  அகற்சிகளினும்  இருமடங்கு  மும்மடங்கு  மிக்க  உயரம்  வாய்ந்தனவாகவும் , உள்ளிடத்தில்  திருக்கோயிற்குத்  தக்க  அழகிய  தெய்வத்  திருவுருவங்களை யுடையனவாகவும் , நீரிற்  றோய்ந்த  அடிப்  பாகங்களை யுடையனவாகவும் , சிறந்த  ஓவியங்கள்  வரையப் பட்டனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                   64-65

( கோபுரம் – திருக்கோயிலின்  வாயிற் சிகரி .)

     ஆயிரம்  சிகரங்களையும் , நூற்றிருபத்தைந்து  மேனிலைக்  கட்டுக்களையும் , ஆயிர  முழ  அளவு  அகலத்தையும் , அவ்வளவு  உயரத்தையுங்  கொண்டு  அழகு  வாய்ந்திருப்பது  மேரு  என்னும்  பெயரினை யுடையதாகும் .                                                                                66

( மேனிலைக்கட்டு  என்பது  திருக்கோயிலின்  விமானத்தின்மேல்  அடுக்கடுக்காகக்  கட்டப்படும்  தளங்களை யுணர்த்தும் . )

     மேரு வல்லாத  பின்வரும்  மந்தர  முதலியவற்றுள்  முன்னதனை  நோக்கிப்  பின்னது  எட்டிலொரு கூறு  குறைந்த  அளவினை யுடையதாகும் .                                                                                                     67

( மேருவின்  அளவில்  எட்டிலொரு  கூறு  மந்தரம்  குறைந்ததாகும்  . அதன்  அளவில்  எட்டிலொரு  கூறு  இருக்கமாலி  குறைந்ததாகும். இங்ஙனமே  பின்  வருவனவற்றிற்கும்  அளவின் குறைவைக்  கணக்கிட்டுக்  கொள்ளல்  வேண்டும் . மந்தரம்  875  சிகரங்களையும் , 110 – மேனிலைக்  கட்டுக்களையும் , 875 – முழ  அளவு  உயர  அகலங்களையும்  உடையதாகும் . இருக்கமாலி  766 – சிகரங்களையும் , 96 – மேனிலைக்கட்டுகளையும் , 766 – முழ  அளவு  அகல  உயரங்களையும்  உடையதாகும் . பிறவும் அன்ன . )

     அப் பதினாறும்  முறையே  மேரு , மந்தரம் , இருக்கமாலி , தியுமணி , சந்திரசேகரம் , மாலியவான் , பாரியாத்திரம் , இரத்தினசிரசு , தாதுமான் , பதுமகோசம் , புட்பகாசம் , சீகரம் , சுவத்திகம் , மகாபதுமம் பதுமகூடம் , விசயம்  என்னும்  பெயர்களை யுடையனவாம் .           68-69

     அம் மேரு  முதலியவற்றிலுள்ள  மண்டபங்கள்  அவ்வவ்வற்றிற்கு  ஒப்ப  அவ்வவற்றின்  அளவில்  நான்கிலொரு  கூறு  குறைந்தனவாக  முற்பக்கத்தில்  அமைக்கப்படல்  வேண்டும் . அம்மண்டபங்களில்  தாம்  வழிபடுந்  தெய்வத்  திருவுருவங்களை  மந்திர  தியானங்களால்  பிரதிட்டை  செய்தல்  வேண்டும் .                                                                     70

12 . தெய்வத்  திருவுருவங்கள்  இயற்றும்  முறை

     வழிபடுவோர்க்குத்  தியானயோகஞ்  சித்தித்தற்பொருட்டுத்  தெய்வத்  திருவுருவ  இலக்கணங்கள்  கூறப்பட்டுள்ளன . ஆதலின் , அத்  திருவுருவங்களை  இயற்றும்  சிற்பிகள்  அத்  திருவுருவ  இலக்கணங்களை ( ஆகமங்களிற்  கூறியவாறு ) தியானிப்பதில்  மிகவும்  பற்றுடையராக  இருத்தல்  வேண்டும் . அத் தியான  நெறியான்  அன்றிக்  காட்சி  முதலிய  வேறெவ்வழியானும்  அத் திருவுருவ  இலக்கணங்களமையா  .                                                                                     71

      அத் திருவுருவம் , மணலாற்  செய்யப்படுவதும் , மாவினாற்  செய்யப்படுவதும் , ஓவியமாக  எழுதப்படுவதும் , சுதை முதலியவற்றால்  தீற்றப்படுவதும் , மண்ணாற்  செய்யப்படுவதும் , மரத்தாற்  செய்யப்படுவதும் , கல்லினா லாக்கப்படுவதும் , பொன்  முதலிய  தாதுக்களாற்  செய்யப்படுவதும்  எனப்  பலதிறப்படும் . இவற்றுள் , முறையே  முன்னதனை  நோக்கப்  பின்னது  வன்மை  மிக்கதாக  அறியற்பாலது .                                                                              72

      ஆகமங்களிற்  கூறியவண்ணம்  அவயவ  இலக்கணங்கள்  குறைவின்றி  யமைந்த  திருவுருவம்  சிறந்த  அழகுடையதாய்  வழிபடுவார்க்குப்  புண்ணியத்தைப்  பயப்பதாகும் . அத்திருவுருவம்  அவ்விலக்கணங்களிற்  குறைபாடு  உடையதாயின் , அது  வழிபடுவாரின்  வாழ்நாள் , பொருளாகிய  இவற்றைக்  குறைத்து    என்றும்   துன்பத்தை  மிகுவிப்பதாகும் .                                                      73

     நலமிக்க  தெய்வத்  திருவுருவங்கள்,  வழிபடும்  மக்கட்குத்  துறக்கவின்பந்தருவனவாம் . நலமில்லாத  அவ்வுருவங்கள்  அத்துறக்க வின்பம்  பயப்பனவல்லாம் .                                                                             74

     அத்  தெய்வத்  திருவுருவங்கள் [ ஆகமத்திற்  கூறிய ]  அளவில்  மிகினும்  குறையினும்   நலமுடையன வல்லவாம் .                                  75

     தெய்வத்  திருவுருவம்  மாறுபட்ட  இலக்கணம்  வாய்ந்ததெனினும்  அது  மக்கட்கு  நலம்  பயப்பதாகும் . மனித  உருவம்  மாறுபடாத  இலக்கணமுடையதெனினும்  அது  நலம்  பயவாததாம். [ ஆதலின்  மனித வடிவம் பிரதிட்டை  செய்து  போற்றற்குரியதன் றென்பதாம். ] 76

     தெய்வத் திருவுருவம்    சாத்துவிகம் , இராசதம் , தாமதம் என  மூன்று  வகைப்படும் . திருமால்  முதலியோரின்  திருவுருவங்களுள் , யாது  எவ்விடத்திற்குரியதோ  அதனை  அவ்விடத்தில்  வைத்து  வழிபடல்  வேண்டும் .                                                                                                               77

     எத்  திருவுருவம்  யோகமுத்திரையையும் , இயற்கைச்  சார்ந்த  நிலையையும் , அன்பர்க்கு  வேண்டுவனவும்,  அச்சமின்மையும்  அளிக்குங்  கைகளையும் , தேவேந்திரன்  முதலியோராற்  செய்யப்ப டும்  வாழ்த்து  வணக்கங்களையு முடையதாய்  விளங்குகின்றதோ  அதுவே  சாத்துவிகத்  திருவுருவம்  என்று  கூறப்படும் .                             78

      எத்  திருவுருவம்  நின்ற  நிலையினையாதல் , ஊர்தியில்  ஏறியிருக்கும்  நிலையினையாதல்  உடையதாய்ப்  பல்வகை  அணிகலன்களால்  அலங்கரிக்கப்பட்டு , அம்பு  வாள்  முதலிய  படைகளைத்  தாங்கி , அச்சமின்மையையும்  வேண்டுவனவற்றையும்  தருங்  கைகளையுடையதாய்  விளங்குகின்றதோ  அதுவே  இராசதத்  திருவுருவம்  என்று  கூறப்படும் .                                                                       79

      எத்  திருவுருவம்  அம்பு , வாள்  முதலிய  படைகளால்  அசுரர்களைக் கொல்வதாகவும் , எப்பொழுதும்  அச்சுறுத்தும்  வடிவினை யுடையதாகவும் , போர்த்தொழிலின்  மகிழ்ச்சி  மிக்கதாகவும்  விளங்குகின்றதோ அதுவே  தாமதத் திருவுருவம்  என்று  கூறப்படும். 80

      இதுகாறும்  திருமால்  முதலியோரின்  தியான  உருவம்  முதலியன  சுருக்கிக்  கூறப்பட்டன . இனி , தெய்வத்  திருவுருவங்களுடையவும்  அவற்றின்  அங்கங்களுடையவுமாகிய  அளவைகள்  நன்கு  விரித்துக்  கூறப்படும் .                                                                                                           81

     தத்தம்  கைப்பிடியின்  நான்கிலொருகூறு  அங்குலம்  என்று  கூறப்படும் . அவ்வங்குலம்  பன்னிரண்டு  கொண்டது  தாலம்  என்னும்  நீட்டலளவையாகும் .                                                                                            82

 ( தாலம்  என்பது  நீட்டப்பட்ட  அங்குட்டம்  என்னும்  பெருவிரற்கும்  நடுவிரற்கும்  இடைப்பட்ட  அளவாகம் . இது  சாண்  என்று  கூறப்படும் .)

     ஏழு  தால  அளவு  உயரமுள்ள  உருவம்  வாமனம்  எனவும் , எட்டுத் தால  அளவு  உயரமுள்ள  உருவம்  மாநுடம்  எனவும் , ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  உருவம்  தெய்விகம்  எனவும் , பத்துத்  தால  அளவு  உயரமுள்ள  உருவம்  இராக்கத மெனவுங்  கூறப்படும் .                           83

     தேய  வேறுபாட்டால்  திருவுருவங்களுக்கு  உயர  அளவு  ஏழு  தால  முதலாக  வுள்ளனவாம் . பெண்  உருவங்களுக்கு  எப்பொழுதும்  ஏழு  தால  அளவே  உயரமாகும் . திருமாலின்  வாமனவதாரத்  திருவுருவத்திற்கும்  ஏழுதால  அளவே  உயரமாகும் .                                84

     நரன் , நாராயணன் , இராமன் , நரசிங்கம்  ஆகிய    இவர்களின்  திருவுருவங்கள்  பத்துத்  தால  அளவு  உயர முடையனவாக  இருத்தல்  வேண்டும் . அங்ஙனமே   வாணசுரன் , மகாபலி , இந்திரன் , பரசுராமன் அருச்சுனன் , ஆகிய  இவர்களின்  உருவங்களும்  பத்துத்  தால  அளவு  உயர முள்ளனவாக  இருத்தல்  வேண்டும் .                                                    85

     அச்சமிக்க  சண்டிகாதேவி , வைரவன் , வேதாளம் , நரசிங்கம் , வராகம் , அயக்கீரிவன்  முதலியோரின்  திருவுருவங்கள்  பன்னிரண்டு  தால  அளவு  உயரமுள்ளனவாக  இருத்தல்  வேண்டும் . அசுரர்களின்  உருவங்களும் , பேய்  உருவங்களும் , எப்பொழுதும்  பதினாறு  தால  அளவு  உயரமுடையனவாக  இருத்தல்  வேண்டும் .                                    86

( நரசிங்க வுருவத்துக்கு  முற்சுலோகத்திற்  பத்துத்  தால  அளவுயரமும்  இதன்கண்   பன்னிரண்டு  தால  அளவுயரமும்  கூறப்பட்டமையால்  இரண்டு  அளவும்  பொருந்துமென்பது  போதரும் . )

     இரணியகசிபு , விருத்திரன் , இரணியாக்கன் , இராவணன் , கும்பகன்னன் , நமுகி , நிசும்பன் , சும்பன் , மகிடாசுரன் , இரத்த பீசன்  ஆகிய  இவ்வசுரர்  முதலியோரின்  உருவங்கள்  பதினாறு  தால  அளவு  உயரமுடையனவாக  இருத்தல்  வேண்டும் .                                                87

     பாலப்பருவத்தின்  உருவங்கள்  ஐந்து  தால  அளவு  உயர முடையனவாகவும் , குமாரப்  பருவத்தின்  உருவங்கள்  ஆறு  தால  அளவு  உயரமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                             88

     திருவுருவங்களின்  உயர  அளவுகள்  கிருதயுகத்தில்  பத்துத்  தாலமாகவும் , திரேதாயுகத்தில்  ஒன்பது  தாலமாகவும் , துவாபர யுகத்தில்  எட்டுத்  தாலமாகவும்  , கலியுகத்தில்  ஏழு  தாலமாகவும்  கூறப்பட்டுள்ளன .                                                                                                89

     ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  திருவுருவத்திற்கு  முகம்  ஒரு  தால  அளவு  உயரமுடையதாகவும் , அம்  முகத்தின்  கண்ணுள்ள  நெற்றி  நான்கங்குல  உயரமுடையதாகவும் , அதன்கீழ்  உள்ள  மூக்கும்  நான்கங்குல  உயரமுடையதாகவும்  இருத்தல்  வேண்டும் .                     90

     மூக்கின்கீழ்  அதுவரையுள்ள  அளவு   நான்கு  அங்குலமாகவும் , கழுத்தின்  உயரம்  நான்கு அங்குலமாகவும் , மார்பின்  உயர அளவு  ஒரு  தாலமாகவும்  இருத்தல்  வேண்டும்.                                                        91

( அநு – மூக்கின்  கீழிடந்  தொடங்கி  வாயின்  அடிப்பாகம்  வரையுள்ள  பாகம் .

90-94 , உருவம்  இயற்றும்  முறை :

உருப்பு                                                       உயர  அளவு

                                                    அங்                   தாலம்                 அங்குலம்

முகம்                                   நெற்றி 4                                               –

                                               மூக்கு  4                          1                    –

                                                அநு      4                                  

கழுத்து                                                                            0                   4

மார்பு                                                                               1                   0

வயிறு                                                                              1                   0

அடிவயிறு                                                                      1                   0

தொடை                                                                           2                  0

முழந்தாட்பூட்டு                                                            0                  4

கணைக்கால்                                                                2                  0

பாடு                                                                                 0                  4

                                                                                       ____________________________

                                                   ஆக  உயர  அளவு         9                      0

     மார்பின்கீழ்  ஒரு  தால  அளவு  இடம்  விட்டுக்  கொப்பூழ்  விளங்கும்படி  செய்தல்  வேண்டும் . அக்  கொப்பூழின்கீழ்  ஒரு  தால  அளவு  இடம்  விட்டு  உருவத்திற்கு  ஒத்தவாறு  ஆண்குறி  யமைத்தல்  வேண்டும் .                                                                                                               92

      தொடைகள்  இரண்டு  தால  அளவு  உயரமுடையனவாகவும் , முழந்தாட்  பூட்டுக்கள்  நான்கங்குல  உயரமுடையனவாகவும் , கணைக்கால்கள் இரண்டு தால அளவு உயரமுடையனவாகவும், அவற்றின்  பொருத்துக்களின்  கீழுள்ள  பரடுகள்  நான்கங்குல  உயரமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                         93

     இவ்வாறு  அறிவுடையோரால்  ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள   உருவம்  இயற்று  முறை  நினைக்கப்பட்டது .                                               94

     எல்லா  அளவுத்  திருவுருவங்களுக்கும்  சிகை  தொடங்கி  முடி வரையுள்ள  அளவு  மூன்றங்குலமாக  அறிதல்  வேண்டும் . இங்ஙனம்  ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  திருவுருவத்திற்குக்  கூறிய  முறைப்படி  ஏழு , எட்டு , பத்துத் , தால  உயரவளவில்  அமைக்கப்படும்  திருவுருவங்கட்குங்  கணக்கிட்டுப்  பகுத்துணர்ந்து  கொள்ளல்  வேண்டும் .                                                                                                              95

     கைகள்  விரல்  நுனிவரை  தனித்தனி  நான்கு  தால  அளவு  நீளமுடையனவாக  இருத்தல்  வேண்டும் . கழுத்திலிருந்து  முழங்கை  வரையுள்ள  அளவு  இருபது  அங்குலமாக இருத்தல்  சிறந்ததாகும் .  96

( இதுமுதல்  126-ஆம்  சுலோகம்  வரை  கூறப்படும்  உறுப்புக்களின்  அளவெல்லாம்  முற்கூறிய  ஒன்பது  தால  அளவு  உயரமுள்ள  திருவுருவத்திற்கென்றே  அறிதல்  வேண்டும். )

     கக்கத்தின்  கீழ்  முழங்கைவரையுள்ள  அளவு  பதின்மூன்றங்கு லங்களாகவும் , முழங்கையினின்று  நடுவிரல்  நுனிவரையுள்ள கையின்   அளவு  இருபத்தெட் டங்குலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                             97

     உள்ளங்கையின்  நீள  அளவு  ஏழு  அங்குலங்களாகவும் , நடுவிரலின்  நீள  அளவு  ஐந்தங்குலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் . பெருவிரல்  மூன்றரை  அங்குல  நீளத்தையும் , இரண்டு கணுக்களையு முடையதாய்ச்  சுட்டுவிரலின்  அடிக்கணுவைப்  பொருந்தி யிருத்தல் வேண்டும் . பெருவிரல்  அல்லாத  மற்றை  விரல்களெல்லாம்  தனித்தனி  மும்மூன்று  கணுக்களை யுடையனவாக  இருத்தல்  வேண்டும் . அநாமிகை  விரலின்  நீளம்  நடுவிரல்  நீளத்தில்  அரை  அங்குலங்  குறைந்ததாகவும் , சுட்டுவிரலின் நீளம் , நடுவிரல்  நீளத்தில்  ஓர்  அங்குலங்  குறைந்ததாகவும் , கடைவிரலின்  நீளம்  அநாமிகை  விரல்  நீளத்தில்  ஓர்  அங்குலங்  குறைந்ததாகவும்   இருத்தல்  வேண்டும் .                                                                                     98-99

(அநாமிகை – கடைவிரற்கு  அடுத்த   விரல் , இதனைப்  பவித்திர  விரல்  என்றுங் கூறுப .)

     அடிகள்  தனித்தனி  பதினான்கங்குல  நீளமுடையனவாகவும்  காற்பெருவிரல்  இரண்டு  அல்லது இரண்டரை  அங்குல  நீளமுடையதாகவும் , அப்பெருவிரற்கு  அடுத்த  விரலும்  அப்பெரு  விரலை  யொப்ப  இரண்டு  அல்லது  இரண்டரை  அங்குல  நீள முடையதாகவும் , மற்றை  விரல்களெல்லாம்  தனித்தனி  ஒன்றரை  அங்குல  நீளமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                          100

     கை  கால்கள்  நரம்பு  தோன்றப்  பெறாமலும் ,  பொருத்துக்கள்  வெளிப்படையாக  இல்லாமலும்  இருத்தல்  வேண்டும் .                         101                       

     திருவுருவங்களின்  இயல்புணர்ந்தோர்  எப்பொழுதும்  அவ்வுருவங்களின்  உறுப்புக்களை  எங்ஙனம்  இருக்கவேண்டுமென்று  கூறியிருக்கின்றனரோ  அங்ஙனமே  அவ் வுறுப்புக்கள் , அவ்வவறிற்குக்  கூறிய  அளவினின்றுங்  கூடுதல்  குறைதல்  இல்லாமல்  ஒத்தனவாகவும்  அழகுமிக்கனவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                             102

     அத்  திருவுருவங்களின்  உறுப்புக்களெல்லாம் , மிகப் பெரியனவாகவும் , மிகச்  சிறியனவாகவும்  இல்லாமலிருப்பின்  எல்லோருடைய  மனத்தையும்  இன்புறுத்துவனவாம் .                           103

     செய்யப்படுந்  திருவுருவங்கள்  நூறாயிரத்துள்  ஒன்றே  எல்லா  உறுப்புக்களாலும்  எல்லோருடைய  மனத்தையும்  இன்புறுத்துவதாக  அமையும் . ஆயினும் , ஆகமத்திற்  கூறிய  அளவின்படி  அமைக்கப்பட்ட  திருவுருவங்களெல்லாம்  அழகுடையனவேயாம் . அங்ஙனம்  அமைக்கப்படாத  உருவங்கள்  அழகில்லாதனவாம் .        104

ஆகம  அளவின்படி  அமைக்கப்படாத  உருவம்  அறிவுடையார்க்கு  இன்பந்  தருவதன்றாம் . எத்  திருவுருவத்தில்  எவர்  மனம்  பதிகின்றதோ  அவர்க்கு   அஃது  இன்பந்தருவதாகு மென்பது  சிலர்  கொள்கை .                                                                                                             105

     நெற்றியின்  குறுக்களவும்  புருவங்களிரண்டின்  நீளமும்  எட்டங்குலங்களாக  இருத்தல்  வேண்டும் .                                                  106

     அப்புருவங்களின்  இரேகைகள்  நடுவில்  அரையங்குல  அளவு  அகற்சியையும் , வில்லைப்போன்ற  வளைவினையும்  உடையனவாய்  நீண்டிருத்தல்  வேண்டும் . கண்கள்  தனித்தனி   மூன்றங்குல  நீட்சியும்  இரண்டங்குல  அகற்சியு முடையனவாய்  அழகுற  இருத்தல்  வேண்டும்

     அக் கண்களின்  உள்ளே  விளங்கும்  கருமணிகள்  அக் கண்  அளவின்  மூன்றிலொரு  கூறு அளவுடையனவாக  இருத்தல்  வேண்டும்.  இரண்டு  புருவங்களின்  நடுவிடம்  இரண்டங்குல  அளவினையுடையதாகவும் , மூக்கின்  அடி ஓர்   அங்குல  அளவினை  யுடையதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                      108

    மூக்கு  நுனியின்  அகலம்  ஓர்  அங்குல  அளவினை  யுடையதாகவும் , அதன்  துவாரங்கள்  இரண்டங்குல  அளவினை  யுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் . மூக்கு , கிளி மூக்கைப்   போலவும்  குமிழ  மலரைப்  போலவும்  வடிவால்  இரண்டு  வகைப்படும் . இவை  அழகுடையனவாம் .                                                                                         109

( மூக்கு  துவாரங்கள்  இரண்டங்குலம்  என்றமையால்  தனித்தனி  ஒவ்வோரங்குல மென்றறிதல்  வேண்டும் .) 

     மூக்கின்  அடிப்பக்கத்து   இருபுறமும்  மொச்சைப்  பயற்றைப்  {நிட்பாவம்} போலச்  சிறந்த  அழகுள்ளனவாகச்  செய்தல்  வேண்டும் . 

     செவிகள்  புருவங்களை யொப்ப  நான்கங்குல  நீளமுடையனவாய்  இருத்தல்  வேண்டும் . அச் செவிகளின்  அகலம் மூன்றங்குலமாகவும்  அவற்றின்  பருமை  அரையங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .    111

 மூக்குத்  துவாரங்களின்  நடுவணுள்ள  தண்டு  அரையங்குலப்  பருமையும் , ஒன்றரை  யங்குல  உயரமு முடையதாய்  வழுவழுப்பாக இருத்தல்  வேண்டும் .                                                                                        112

     கழுத்தின்  அடிப்பாகத்தினின்று  தோள்வரை  யுள்ள  அளவு  எட்டங்குலமாகவும் , மார்பின்  அகல  அளவு இரண்டு  தாலமாகவும் , தனங்களின்  நடுவிடத்தின்  அளவு  ஒரு  தாலமாகவுங்  கூறப்பட்டுள்ளன .                                                                                              113

     இரு  செவிகளுக்கும்  நடுவணுள்ள  பாகத்தின்  அளவு  பதினாறங்குலங்களாகவும் , செவிக்கும்  வாயின்  அடிப்பாகத்து  நுனிக்கும்  இடையிலுள்ள  பாகம்  எட்டங்குல  அளவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                                           114

     மூக்குக்கும்  செவிக்கும்  இடைப்பட்ட  பாகங்கள்  தனித்தனி  எட்டங்குல  அளவினவாகவும் , செவிக்கும்  விழிக்கும்  இடைப்பட்ட  பாகங்கள்  தனித்தனி  நான்கங்குல  அளவினவாகவும் , வாயின்  குறுக்களவு  நான்கங்குல  அளவினதாகவும் , அதரங்கள்  தனித்தனி  அரையங்குலக்  கனம்  உள்ளனவாகவும்  இருத்தல்  வேண்டும் .         115

     தலையின்  சுற்றளவு  முப்பத்திரண்டங்குலமாகவும் , அதன்  அகல  அளவு  பத்தங்குலமாகவும் , அதன்  நீள  அளவு  பன்னிரண்டங்குல மாகவும் இருத்தல்  வேண்டும் .                                                                        116

     கழுத்தின்  அடிப்பாகத்தின்  சுற்றளவு  இருபத்திரண்டங்குலமாகவும்  மார்பின்  நடுப்பாகத்தின்  சுற்றளவு  ஐம்பத்து நான்கங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                         117

     மார்பின்  சுற்றளவு  நாற்பத்தேழங்குலமாகவும் , தனத்திலிருந்து  விலாப்பக்கம்  முடிய  உள்ள  கனம்  பன்னிரண்டங்குல  அளவாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                        118

( மார்பின்  நடுப்பாகத்துச்  சுற்றளவு  முற்சுலோகத்திற்  கூறப்பட்டமையால்  இங்கு  மீண்டும்  மார்பின்  சுற்றளவு  என்றது  மார்பின்  கீழ்ப்பாகத்தைக்  குறிப்பிடுவதாகும் . )

      கடிதடத்தின்  சுற்றளவு  நாற்பத்து  நான்கங்குலமாகவும்  அதன்  உயரம்  நான்கங்குலமாகவும் , அதன்  அகலம்  ஆறங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                       119

    பெண்  தெய்வத்  திருவுருவங்களுக்குப்  பிற்பக்கத்து  நிதம்பம்  உயர்ச்சியினும்  அகற்சியினும்  முற்கூறிய  அளவின்  ஒவ்வோரங்குலம்  அதிகமாக  இருத்தல்  வேண்டும் . நடுச்சந்திக்கு  மேற்பட்ட  கையின்  அடிப்பாகமும்  நுனிப்பாகமும்  முறையே  பதினெட்டங்குலச்  சுற்றளவும்  பதினாறங்குலச்  சுற்றளவுமாக  இருத்தல்  வேண்டும் .  120

     நடுச்  சந்தியின்  கீழ்ப்பட்ட  கையின்  அடிப்பாகமும்  நுனிப்பாகமும்  முறையே  பதினான்கங்குலச்  சுற்றளவாகவும்  பத்தங்குலச்  சுற்றளவாகவும் , பாதம்  கரதலம்  இவற்றின்  அகலம்  ஐவைந்தங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                          121

      தொடையின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  முப்பத்திரண்டங்குல மாகவும் , அதன்  நுனிப்பக்கத்துச்  சுற்றளவு  பத்தொன்பதங்குல மாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                       122

      முழந்தாளின்  அடிப்பாகமும் , நுனிப்பாகமும்  முறையே  பதினாறங்குலச்  சுற்றளவாகவும்  பன்னிரண்டங்குலச்  சுற்றளவாகவும்  இருத்தல்  வேண்டும் . கைந்  நடுவிரலின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  நான்கங்குலமாகும் .                                     123

     சுட்டுவிரலின்   அடிப்பாகமும்  கடைவிரற்கு  அயல்  விரலி (அநாமிகையி) ன்  அடிப்பாகமும்  மூன்றரை  யங்குலச்  சுற்றளவின வாகும் . கடைவிரலின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  மூன்றங்குலமாகும் .

     இவ்  விரல்களின்  நுனிப்பக்கத்துச்  சுற்றளவுகள்  இவற்றின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவுகளின்  நான்கிலொரு  கூறு  குறைந்த  அளவினையுடையனவாகும் . கைப்பெருவிரல் [ அங்குட்டம் ]  நான் கங்குலச்  சுற்றளவினதாகவும் , காற்  பெருவிரல்  ஐந்தங்குலச்  சுற்றளவினதாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                125

     கால்  விரல்களின்  சுற்றளவு  மூன்றங்குலமாகவும் , தனங்களின்  வட்டமும்  உந்திச்சுழியும்  முறையே  ஒன்றரை  யங்குலமாகவும்  ஓரங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                      126

     படிவங்களின்  எல்லா  அவயங்களையும்  அழகு  விளங்கும்படி  செம்மையுற  இயற்றல்  வேண்டும் . அப்படிவங்கள்  மேனோக்கிய  கண்களை  யுடையனவாகவும் , கீழ்நோக்கிய  கண்களை  யுடையனவாகவும் , மூடிய  கண்களை  யுடையனவாகவும்  இருக்கும்படி  செய்தல்  கூடாது . அச்சம்  விளைவிக்கத்தக்க  பார்வையினையுடைய  வடிவத்தை  அருள்  விளைவிக்கும்  பார்வையுடையதாகச்  செய்தலாகாது .                                                      127

     அப்படிவங்களின்  உயர  அளவில்  மூன்றிலொரு  கூறாதல்  பாதியளவாதல்  இருக்கும்படி  பீடம்  அமைத்தல்  வேண்டும்               128

     திருக்  கோயிலின்  வாயில்  அக்கோயிலின்  உள்ளிருக்குந்  திருவுருவத்தின்  அளவின்  இருமடங்காதல் , மும்மடங்காதல் , நான்கு  மடங்காதல்  மிக்கிருத்தல்  வேண்டும் . திருக்கோயிற்றளம்  ஒன்று  முதல்  நான்கு  முழம்  வரை  நிலத்தினின்றும்  உயர்ந்திருத்தல்   வேண்டும் .                                                                                                             129

     திருக்கோயிற்   சுவர்  அதன்  தளத்தினின்றும்   பத்து  முழ  அளவு  உயரமுடையதாக  இருத்தல்  வேண்டும் . அத்  திருக்கோயிலின்  மேனிலவெல்லை  அத்  திருக்கோயில்  வாயில்  அளவினும்  இருமடங்கு  உயர்ந்திருத்தல்  வேண்டும் . சிகரம்  அவ்வுயரத்தோடு  ஒத்த  அளவின தாதல் , இருமடங்கு  மும்மடங்கு  மிக்க  அளவினதாதல்  இருத்தல்  வேண்டும் .                                                                                                             130

( மேல் நில வெல்லை – மேற்றளம் .  சிகரம் – அத்தளத்தினின்றும்  எடுக்கும்  முடி . திருக்கோயிலின்  முகத்துவாரத்தில் எடுப்பது  கோபுரம்  எனவும் , உட்பக்கங்களில்  எடுப்பது  சிகரம்  எனவும்  கூறப்படும். )         

     திருக்கோயிலமைப்போர்  அஃது  ஒன்றுமுதல்  நூற்றிருபத்தைந்துவரை  மேனிலைக்கட்டுக்களுடையதாக  இருக்கும்படி தம்  ஆற்றற்கு  இயைந்தவாறு  செய்தல்  வேண்டும் . அங்ஙனம்  அமைக்கப்படும்  திருக்கோயில்  எட்டுக்கோணங்களை  யுடையதாகவேனும் , தாமரைப்பூவை யொத்த  வடிவினை  யுடையதாகவேனும் , நாற்புறத்தும்  மண்டபங்களை  யுடையதாகவேனும் , சுற்றிலும்  ஒன்றுக்கொன்று  எதிர்முகமாகவுள்ள  பலவகை  அறை  வீடுகளை யுடையதாகவேனும்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                        131

மேனிலைக்கட்டுக்களை  66-ஆம்  சுலோகக்  குறிப்பிற்  காண்க .)        

     ஆயிரம்  தூண்களோடு  கூடிய  திருக்கோயில்  தலையாயதெனவும் , அவற்றிற் சில  குறைந்த  தூண்களையுடைய  திருக்கோயில்  இடையாயதெனவும் , அவற்றினுஞ்  சில  குறைந்த  தூண்களையுடைய  திருக்கோயில்  கடையாய தெனவுங்  கூறப்படும் .                                    132

     பிராசாதத்திலும்  மண்டபத்திலும்  சிகரம்  எடுக்கப்படுமாயின் , அவ்விடங்களில்  தூண்களை  நிறுத்தலாகாது , சுவர்களையே  அழகும்  வலிமையும்  பொருந்த  எடுத்தல்  வேண்டும் .                                           133

( பிராசாதம் – தெய்வத்திருவுருவம்  இருக்கும்  இடம். மண்டபங்கள்  அதன்  பக்கத்துள்ளனவாகும் .)    

     பிராசதத்தின்  உள்ளிடப்பரப்பு , அதன்கண்ணுள்ள  திருவுருவத்தின்  அளவில்  அறுமடங்காதல்  எண்மடங்காதல்  மிக்கிருத்தல்  வேண்டும் . அவ்வுள்ளிடத்தின்   முற்புறம்  மிகவும்  அதிகமாக   இருத்தல்  வேண்டும்.     

     தெய்வ ஊர்தி  அத்  தெய்வத்  திருவுருவத்தின்  அளவோடு  ஒத்த  அளவினதாதல் , ஒன்றரை  மடங்கு  அல்லது  இரண்டு  மடங்கு  மிக்க  அளவினதாத லிருத்தல்  வேண்டும் . ஒரு  தெய்வத்திற்கு  உருவம்  எங்கு  விதந்து  கூறப்படவில்லையோ  அங்கு  அத்தெய்வத்திற்கு  நான்கு   கைகள்  உள்ளனவாக  அறிதல்  வேண்டும் .                                               135

( ஒரு  தெய்வத்திற்குப்  பெயர்  மாத்திரங்  கூறப்பட்டு  வடிவிலக்கணங்கூறப்படாமலிருப்பின் , அங்கு  அத்  தெய்வத்தின்  வடிவிலக்கணம்  முன்னர்க்கூறியாங்கு  இருத்தல்  வேண்டுமென்பதும்  சிறப்பாக  அறியவேண்டுவன  நான்கு  கைகள்  என்பதும்  போதரும் . )      

     எங்கு  ஒரு  தெய்வத்திற்கு  ஆயுதங்  கூறப்படவில்லையோ  அங்கு  அத்  தெய்வத்தின்  கீழ்க்கைகளில்  முறையே  அபய  வரதங்களின்  குறிகள்  இருப்பனவாக  அறிதல்  வேண்டும் . அத்தெய்வத்தின்  மேற்கைகளில்  சங்கு , சக்கரம் , அங்குசம் , பாசம் , துடி , சூலம் , கமலம்  கலசம் , சுருவம் , மோதகம் , மாதுளம்பழம் , யாழ் , மாலை , புத்தகம்  ஆகிய  இவற்றுள்  உரியவற்றை  யமைத்தல்  வேண்டும் .              136-137

( எல்லாத்   தெய்வங்களுக்கும்  கீழ்க்கைகளில்  அபய  வரதங்கள்  இருக்க  வேண்டுமெனவும் , மேற் கையில்  அவ்வத்  தெய்வங்களுக்குரிய  சிறப்புப்  பொருள்கள்  இருக்க  வேண்டுமெனவும்  உணர்க .  சுருவம் – வேள்விக்குரிய   கருவிகளில்  ஒன்று . )

     எத்  திருவுருவத்தில்  முகங்கள்  பலவாக வுள்ளனவோ  அவ்வுருவின்கண்  அம்  முகங்களை  நிரையாக  அமைத்தல்  வேண்டும். அங்ஙனம்  அமைக்குங்கால்  அம்  முகங்கள்  தனித்தனியே  கழுத்துக்களையும் , முடிகளையும் , விளக்கமான  கண்களையும் , செவிகளையும்  உடையனவாயிருத்தல்  வேண்டும் .                              138

     எத்  திருவுருவத்திற்  கைகள்  பலவாக  வுள்ளனவோ  அவ்வுருவில்  அக்  கைகள்  பலவாதல்  பற்றித்  தோள்களையும்  பலவாக  அமைத்தலாகாது .                                                                                               139

     அங்ஙனம்  மிகுதியாகவுள்ள  கைகளின்  முழங்கைக்கு  மேலுள்ள  அடிப்பாகங்கள்  சிறியனவாகவும் , தகட்டு  வடிவினவாகவும் , வலியனவாகவும் , பக்கமூலங்களை  யொப்ப  இருத்தல்  வேண்டும் .140

    பிரமனுக்கு  நான்கு  திசையினும்  முகங்கள்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                                            141

     அயக்கிரிவர் , வராகர் , கணேசர்  ஆகிய  இவர்தம்  திருவுருவங்களில்  முகங்களல்லாத  மற்றை  யுறுப்புக்களும் , நரசிங்கத்தின்  திருவுருவத்தில்  முகமும்  நகங்களுமல்லாத  மற்றையுறுப்புக்களும்  மனித  வடிவினவாகச்  செய்தல்  வேண்டும் .142

( அயக்கிரீவர்க்குக்  குதிரை  முகமும் , வராகர்க்குப்  பன்றி  முகமும் , நரசிங்கத்துக்குச்  சிங்கமுகமும் , கணேசர்க்கு  யானை  முகமும்  உள்ளனவாம் )

     ஒருவன்  தனக்குரிய  வழிபடு  கடவுளின்  திருவுருவத்தை  அதன்  பீடத்தில்  நிற்றல் , இருத்தல் , உரிய  ஊர்தியில்  ஏறியிருத்தல்  ஆகிய  இந்நிலைகளுள்  ஒன்றனை யுடையதாகவும் , முகத்தில்  மயிரும்  இமை  மூடுதலும்  இல்லாததாகவும் , என்றும்  பதினாறு  யாண்டும்  பருவத்  தோற்றமுடையதாகவும் , அழகிய  ஆடை யணிகலன்களால்  நிறைந்ததாகவும் , விளங்குகின்ற  பலவகை  வண்ணச்  செயல்களையுடையதாகவும் , ஆடைகளாற்  பாதம்வரை  மறைக்கப்பட்டதாகவும் , சிறந்த  பிற  ஒப்பனைப்  பொருள்களால்  அலங்கரிக்கப்பட்டதாகவும் , முன்னர்க்கூறிய  இலக்கணங்கள்  நிரம்பப்  பெற்றதாகவும்  அமைத்து  வைத்தல்  வேண்டும் .          143-144

     தெய்வத்  திருவுருவங்களினுறுப்புக்கள்  இங்குக்  கூறிய  அளவிற்  குறைந்தனவாகவேனும்  மிக்கனவாகவேனும்  ஒரு  பொழுதும்  இருத்தலாகாது . அளவிற்  குறைந்த  உறுப்புக்களை யுடைய  திருவுருவம்  அதனைப்  பிரதிட்டை  செய்யும்  தலைவற்கும் , அளவின்மிக்க  உறுப்புக்களையுடைய  திருவுருவம்  அதனைச்  செய்த  சிற்பிக்கும்  கேடு  விளைவிப்பனவாம் .                                                       145

     அத்  தெய்வப்படிவம்  முற்கூறிய  அளவின்  மெலிந்துருக்குமாயின்  வறுமைத்  துன்பத்தையும் , அளவிற்  பருத்திருக்குமாயின்  நோய்த்துன்பத்தையும் , என்றுந்  தருவதாகும் . உறுப்புக்களின்  சந்திகளும் , என்புகளும் , நரம்புகளும்  வெளிப்படத்  தோன்றாமல்  மறைந்திருக்குமாயின் , அவ்  வுருவம்  எப்பொழுதும்  மிக்க  நலத்தைத்  தருவதாகும் .                                                                                                        146

     நான்கு  கைகளிலும்  முறையே  வரதம் , அபயம் , தாமரை , சங்கு , ஆகிய   இந்  நான்கனையு முடைய  திருமாலின்   திருவுருவம்  சாத்து  விகமாகவும் , நான்கு  கைகளிலும்  முறையே  மான் , வாச்சியம் , அபயம் , வரதம் , ஆகிய  இந்நான்கனையு முடைய  சிவபிரானது  திரு வுருவம்  சாத்துவிகமாகும் .                                                                            147

( இங்குச்  “சோமன்” என்று  மூலத்தில்  உள்ளது . அஃது  உமையோடு  கூடினவன்  என்னும்  பொருளதாகலின்  சிவபிராணை யுணர்த்தும் . இதற்கு  உரை வரைந்தார்   ஒருவர்  சோமன்  என்பதற்குச்  சந்திரன்  என்று  பொருள்  கொண்டார் . இப்பிரகரணத்தின்  63, 157-ஆம்  சுலோகங்களில்  விதந்து  கூறுங்கால்  சந்திரவுருவம்  கூறப்படாமையாலும்  சிவபிரான்  திருவுருவம்  கூறப்பட்டமையாலும்  அவ்வுரை  பொருந்தாமை யுணர்க .  வாச்சியம் – துடி .)

     நான்கு  கைகளிலும்  வரதம் , அபயம் , தாமரை , மோதகம்  ஆகிய  இந்  நான்கனையுமுடைய  கணபதியின்  திருவுருவம்  சாத்துவிகமாகும் .                                                                                              148

     நான்கு   கைகளிலும்  முறையே  யாழ் , பழம் , அபயம் , வரதம், ஆகிய  இந்  நான்கனையுமுடைய  திருமகளின்  திருவுருவம்  சாத்துவிகமாகும் .                                                                                               149

     உபாதி  வேறுபாட்டாலும் , தத்தம்  சையோக  விபாகங்களாலும்  எழுத்துக்களின்  சேர்க்கை  நிலை  தனி நிலைகளை யறியுமாறுபோலத்  திருமால்  முதலிய  தெய்வத்  திருவுருவங்களைச்  சத்துவ  முதலிய  குணவேறுபாடுகளாலும்  சங்கு , சக்கரம் , கதை , பதமும்  முதலிய  ஆயுதங்களாலும்  தனித்தனி  அவ்வாறு  வகைப்படுமென்று  அறிதல்  வேண்டும் .                                              150-151

( உபாதி – நிமித்தம் , இதனால்  எழுத்துக்களின்  குறுமை  நெடுமை  அளபெடைகள்  உணரப்படும்  .  சையோகம் – சேர்க்கை . விபாகம்  – பிரிவு , ஒருயிரெழுத்து.   உபாதி  வேறுபாட்டால்  மூவகைப்பட்டு  அம்  மூன்றும்  மெய்யெழுத்தோடு  கூடியும்  தனித்தும்  இயங்குதலால்  இருதிறத்தனவாய்  அறு  வகைப்படும் . அங்ஙனமே  ஒரு  தெய்வத்தின்  திருவுருவம்  சத்துவம்  முதலிய  குணவேறுபாட்டால்  மூவகைப்பட்டு  அம்  மூன்றும்  ஆயுதங்களோடு  கூடியிருத்தல்  ஆயுதங்களில்லாதிருத்தல்  ஆகிய  இரு  திறத்தனவாய்  அறுவகைப்படுதல்  காண்க . )

      ஓவியத்  தெழுதப்பட்டனவும் , சுதை  முதலியவற்றால்  தீற்றப்பட்டனவும் , மணலினாலும்  மண்ணினாலும் , மாவினாலும்  ஆக்கப்பட்டனவும் , ஆகிய  இப்படிவங்களுக்கு  இங்குக்  கூறிய  இலக்கணங்கள்  அமைந்திலவாயினும் , அது  பற்றி  யாருங்  குற்றங்  கூறலாகாது . ( இப்படிவங்கள்  அமைப்போர்   மனத்திற்கு  இயைந்தவாறு  அழகு  பொருந்தச்  செய்யத்தக்கனவாம்  என்பது கருத்து .)                                                                                                                  152

     வாணலிங்கத்திலும் , இயற்கையாகத்  தானே  தோன்றிய  திருவுருவத்திலும் , சந்திரகாந்தக்  கல்லினாலும்  இரத்தினங்களாலும் ஆக்கப்பட்ட  திருவுருவங்களிலும் , கண்டக  நதியில்  தோன்றிய  திருவுருவங்களிலும்  இங்குக்  கூறிய  இலக்கண  அளவையின்  மிகுதி  குறைவால்  ஏற்படுங்  குற்றங்கள்  எவ்வாற்றானுங் கருதற் பாலனவல்ல. கல்லினாலும் , பொன்  முதலிய  உலோகங்களினாலும்  ஆக்கப்படும்  படிவங்களிலேயே  அளவையின்  மிகுதி  குறைவால்  ஏற்படுங்  குற்றங்கள்  ஆராய்தற்பாலனவாம் .                                  153             

( கண்டக நதியில்  தோன்றுவன – சாலக்கிராமம்  முதலியன . )

     சிற்பி , கிரதயுகம்  முதலிய  நான்கு  யுகங்களிலும்  முறையே  வெண்ணிறக்கல் , பொன்னிறக்கல் , சிறிது  செந்நிறமுள்ள  கல் , கரு நிறக்கல்  ஆகிய  இவற்றால்  தெய்வப்படிவங்களைச்  செய்யக்கடவன் . இவற்றை  யன்றி  மனத்திற்கியைந்தவாறு  மரம்  முதலிய  பிற  பொருள்களாலும்  அப்படிவங்களை  ஆக்கலாம்  என்பது  நூல்களிற்  கூறப்பட்டுள்ளது .                                                                                                 154

     முற்கூறிய  இலக்கணங்களோடு  கூடிய  இத்  தெய்வப் படிவங்களுள் வெண்ணிறப்படிவம்  சாத்துவிகமெனவும் , பொன்னிறப்படிவமும் , செந்நிறப்படிவமும்  இராசதமெனவும், கருநிறப்படிவம்  தாமதமெனவுங்  கொள்ளப்படும் .                                                                 155

     கிருதயுகம்  முதலிய  நான்கு  யுகங்களிலும்  முறையே  பொன்னினாலும் , வெள்ளியினாலும் , செம்பினாலும் , பித்தளையினாலும்  திருவுருவங்கள்  ஆக்கற்பாலனவாம் .                   156

     சிவ சம்பந்தமான  திருவுருவங்களை  வெண்ணிறமுடை யனவாகவும் , திருமால்  சம்பந்தமான  திருவுருவங்களைக்  கருநிற முடையனவாகவும் , சூரியன் , சத்தி , கணேசர் , ஆகிய  இவர்தம்  திருவுருவங்களைச்  செந்நிறமுடையனவாகவும்  அமைத்தல்  வேண்டும் . இவ்வெல்லாத்  திருவுருவங்களையும்  கூறிய  இலக்கணம்  வழுவாது  இரும்பு  ஈயங்களாலும்  ஆக்கலாமென்பதும்  அறிவுடையோர்    கொள்கை .                                                                          157

     தெய்வத்  திருவுருவங்கள்  சில  நாட்  பூசித்தற்குரியனவாயினும் , என்றும் நிலைப்படுத்துப் பூசித்தற்குரியனவாயினும், முற்கூறிய  இலக்கணங்கள்  அமைந்தனவாயிருக்கும்படி திருக்கோயில்  முதலியவற்றில்  தாபித்தல்  வேண்டும் . அவ்விலக்கணங்களிற்  குறைபாடுறின்  எல்லா  நலங்களையும்  அழித்துவிடுமாதலின் , அவ்விலக்கணக்  குறைவுள்ள  படிவங்களைத்  தாபித்தலாகாது .     158                                                                                               

     தெய்வப்படிவங்களுக்கு  இலக்கணம்  வகுத்தது  ஆண்டானடிமைத்  திறங்  குறித்தேயாம் .                                                                                        159

வழிபடுவோன்  வழிபடப்படும்  தெய்வத்  திருவுருவத்தை  ஆண்டானுடையதெனவும் , தான்  அடியான்  எனவும்  உணர்ந்து , அன்பு  பூண்டொழுகுதற்கே  அத்திருவுருவங்கட்கு  இலக்கணம்  வகுக்கப்பட்டன  என்பதாம் .)          

     எப்பொழுதும்  மனத்தைத்  தெய்வத்தின்பாற்  செலுத்தி  அன்பு  பூண்டொழுகும்  பூசகனது  தவவன்மையால் தெய்வப்படிவங் களிலுள்ள  குற்றங்களெல்லாம்  விரைந்து  நீங்குவனவாம் .             160                                   

( தெய்வப் படிவங்களில்  இலக்கணக் குறை  நேர்ந்திருக்குமாயின் , அதனால்  வருங்   கேடுகளைப்  பூசகன்  தன்  தவ  வன்மையால்  ஒழித்துவிடுவான்  என்பது  கருத்து . )         

13 . தெய்வ  ஊர்திகள்  இயற்று  முறை

     தெய்வத்   திருவுருவத்தின்  முற்பக்கத்துள்ள  மண்டபத்தில்  அவ்வத்  தெய்வத்திற்கு  ஊர்தியை  அமைத்தல்  வேண்டும் .   அவ்வூர்தி  வகைகளுள்  கருட  ஊர்தி  இரண்டு  கைகளையும் , அழகிய  மூக்குக்  கண்கள்  இறகுகளையும் , மனித  உடலினையும்,  மூக்குள்ள  முகத்தினையும் , கிரீடத்தையும் , கவசம்  தோள்வளைகளையும் , கூப்பிய  கைகளையும் , வணங்கிய  தலையினையும் , ஆண்டான்  திருவடித்  தாமரைகளிற்  செலுத்திய  கண்களையுமுடையதாக  இருத்தல்  வேண்டும் .                                                                                161-162

     புட்களும் , சிங்கம் , இடபம்  முதலியவைகளும்  தெய்வங்களுக்கு  ஊர்திகளாந்  தன்மையை  யெய்துங்கால் , அவை  தம்  உருவத்தோடியைந்த  பிற  உருவங்களையும்  விரும்பியவாறு  எய்துவனவாம்.  அவற்றை  அறிவுடையார்  அவற்றின்  பெயர்க்கு  இயைந்த  வடிவினையும் , அழகினையும் , சிறந்த  அலங்காரத்தையு முடையனவாய்த்  தியான நிலையில்  தெய்வத்  திருக்கோயின்  முன்மண்டபத்தில்  எப்பொழுதும்   இருக்கும்  வண்ணம்  செய்தல்  வேண்டும் .                                                                                                     163-164

     பூனையை  யொத்த  வடிவினையும் , பொன்மை  நிறத்தினையும் , கரிய  புள்ளிகளையும் , பெரிய  உடலினையு முடையதாய்ப்  பிடர்க்கண்  மயிர்  இல்லாதது  புலி  என்று  கூறப்படும் . சிறிய  இடையினையும் , பெரிய  வடிவினையும் , அகன்ற  புருவங்களையும் , அகன்ற  கதுப்புக்களையும் , அகன்று  நீண்ட  கண்களையும் , பால  உருவினையும் , பிடரி  மயிரினையும் , சிறிது  வெளுப்பான  நிறத்தினையும் , மிக்க  வன்மையினையும் , அழகினையுமுடைய தாய்க்  கரிய  புள்ளிகள்  இல்லாதது  சிங்கமாகும் .                         165-166

     புலி, சிங்கம் , இவ்விரண்டற்கும்  வேறுபாடு  பிடரி  மயிரினாலும் , கரிய  புள்ளிகளாலும்  அறியப்படும் . உருவத்தால்  வேறுபாடின்று .   167

14 . கணபதியின்  திருவுரு வமைக்கு  முறை

     யானை  முகத்தினையும் , மனிதவுடலினையும் , தொங்குகின்ற  செவிகளையும் , பருத்த  வயிற்றினையும் , அகன்று  குறுகிய  நெருங்கிப்  பருத்த  தோள்  கால்  கைகளையும் , பருத்த  துதிக்கையினையும் , முறிந்த  இடப்பக்கத்  தந்தத்தினையும்  , தனக்குரிய  விருப்பமிக்க  ஊர்தியையும் , இடப்பக்கத்தே  சிறிது  வளைந்த  துதிக்கை  நுனியினையும் , வெளிப்படாது  மறைந்த  அவயவசந்தி எலும்பு  நரம்புகளையும்  உடையதாகவும் , அளவை  இலக்கணம்  அமைந்ததாகவும் , எப்பொழுதும்  தனக்கு  முன்   பூசிக்கப்படுவது  ஒன்றின்றித்  தானே  எல்லாவற்றிற்கு  முன்னர்ப்  பூசிக்கப்படுவதாகவும் , கணபதியின்  திருவுருவத்தை  அமைத்தல்  வேண்டும் .                                                                                                 168-169

( அகன்று  குறுகி  நெருங்கிப்  பருத்தலைக்  கால்  கைகளுக்கும்  கொள்க .)

     துதிக்கை  நாலரைத்  தால  அளவு  நீளமுடையதாகவும் , தலை  பத்து அங்குல  அளவு  உயரமுடையதாகவும் , புருவங்கள்  தனித்தனி  நான் கங்குல  அளவு  நீளமுடையனவாகவும்  இருத்தல்  வேண்டும் .              170

     மேலுதட்டு  ருவமாக வுள்ள  துதிக்கையின்  கூறு  மூக்காகவும் , அத்துதிக்கையின்  எஞ்சிய  பாகம்   புட்கரத்தோடு  கூடியதாகவும் , செவிகளின்  நீளம்  பத்தங்குலமாகவும் , அவற்றின்  அகற்சி  எட்டங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                  171

( புட்கரம் – துதிக்கையின்  நுனி )

  இரண்டு  செவிகளுக்கும்  நடுவணுள்ள இடம்  பதினான்கங்குலமா கவும் , அக்கணபதி  உருவத்தினது  தலையின்  சுற்றளவு  முப்பத்தாறங்குலமாகவும்  அறிதல்  வேண்டும் .                                     172

     கண்களின்  மேற்பக்கத்துச்  சுற்றளவு முப்பத்தாறங்குலமாகவும் , கண்களின்  கீழ்ப்பக்கத்துச்  சுற்றளவும்  துதிக்கையின்  அடிப்பாகத்துச்  சுற்றளவும்  தனித்தனி  இருபத்தாறங்குலமாகவும் , மற்றைக்  கைகளின்  நுனிப்பாகத்துச்  சுற்றளவும் , புட்கரத்தின்  சுற்றளவும்  தனித்தனிப்  பத்தங்குலமாகவும் , கழுத்தின்  உயரம்  மூன்றங்குலமாகவும் , கழுத்தின்  சுற்றளவு  முப்பதங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                173-174

     வயிற்றின்  சுற்றளவு  நான்கு  தாலமாகவும் , வயிற்றின்   உயரம்  ஆறங்குலம்  அல்லது  எட்டங்குலமாகவும்  சிற்பிகளாற்  செய்யப்படல்  வேண்டும் .                                                                                                             175

      தந்தத்தின்  நீளமும்  அதன்  அடிப்பாகத்தின்  சுற்றளவும்  அவ்வாறங்குலமாகவும் , கீழுதடு  ஆறங்குலமாகவும் , புட்கரம்  தாமரை  மலரோடு  கூடினதாகவும்  இருத்தல்  வேண்டும் .                    176

     தொடைகளின்  அடிப்பாகத்துச்  சுற்றளவு  முப்பத்தாறங்குலமா கவும் , அதன்  நுனிப் பாகத்தின்  சுற்றளவு  இருபத்து  மூன்றங்குலமா கவும் , முழங்காலின்  அடிப்பாகத்துச்  சுற்றளவு  இருபது  அங்குலமா கவும் , கைகளின்  அடிப்பாகத்துச்  சுற்றளவு  அவற்றின் நுனிப்பாகத்துச்  சுற்றளவிலும்  ஓரங்குலம்  ஈரங்குலம்  மிகுதியாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                  177-178

      செவிக்கும்  விழிக்கும்  நடுவிடம்  நான்கங்குலமாகவும் , இரண்டு  கண்களின்  அடி  நடு  நுனிகளின்  நடுவிடம் , முறையே  ஆறு, ஏழு , பத்து  அங்குலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் . இவ்வாறு  கணபதியின்  திருவுருவத்தின்  இலக்கணங்கள்  அறிவுடையோராற்   சிறப்பித்துக்  கூறப்பட்டன .                                                                             179

( இரண்டு  கண்களின்  அடிப்பாகங்களும்  மூக்கை யடுத்துள்ளனவாம் . நுனிப்பாகங்கள்  செவியை யடுத்துள்ளனவாம் .)

15 . சத்தியுருவம்  பால  தெய்வப்படிவங்கள் அமைக்குமுறை

          பெண்  தெய்வத்  திருவுருவத்திற்குத்  தனங்களின்  உயரமும்  அகலமும்  ஐவைந்தங்குலமாக  எண்ணப்படும் .                                    180

     பெண்  தெய்வப்  படிவத்தின்  இடையினது  சுற்றளவு  முப்பத்தெட்டங்குலமாகவும் , அப்படிவத்தின்  எல்லா  உறுப்புக்களும்  உள்பட  உயர  அளவு  ஏழு  தாலங்களாகவும்  இருத்தல்  வேண்டும் . 181

  ஏழு தால அளவில்  அமைந்த  அப் பெண்  தெய்வப்படிவத்திற்கு  முகம்  பன்னிரண்டங்குலமாகும். பால  தெய்வம்  முதலிய தெய்வப் படிவங்களின் உயரத்தைத்  தனித்தனியே  பகுத்தறிதல்  வேண்டும். 182

     பால  தெய்வப்  படிவத்தின்  கழுத்துக்  குறுகியும் , அதன்  தலை  பருத்தும்  இருத்தல்  வேண்டும் ; என்னை?  அப் பாலப்பருவத்தின்  பின்   கழுத்தின்  கீழ்ப்  பாகம்  எத்துணைப்  பருமை  யெய்துமோ  அத்துணைப்  பருமையைத்  தலை  யெய்தாதாகலின் .                           183

     பால  தெய்வப்  படிவத்தின்  கழுத்தின்  கீழ்  அளவு  அதன்  முகத்தின்  உயர  அளவினும்  நாலரை  மடங்கு  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் . அந்நாலரை  மடங்கு  மிகுதியில்  இருமடங்கு  ஆண்குறி  வரையிலும்  எஞ்சிய  அளவு   தொடையின்   கீழ்ப்பாகமாகவும்  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                                                          184

( 162-184 –ஆம்  சுலோக  முதலியவற்றில்  பால  தெய்வப்  படிவங்களின்  அளவு, முகத்தைப் பற்றி  மற்றை  உறுப்புக்களுக்குக்  தறுகின்றமையால் , ஈண்டுப்  பொதுவாகத்  தனித்தனியே  பகுத்தறிதல்  வேண்டும்  என்று  கூறப்பட்டது . )

     அப்  பால  தெய்வப்  படிவத்தின்  கைகள்  முகத்தின்  உயர  அளவில்  இருமடங்காதல் , இரண்டேகால்  மடங்காதல்  மிகுதியாக  இருத்தல்  வேண்டும் . அப்படிவத்தின்   பருமைக்கு அளவு  நியமம்  இன்று. அழகுறச் செய்தல் வேண்டும் .                                                                         185

     பாலப் பருவம்  ஐந்து  யாண்டுகளின்  பின்னர்  மிகவும்  வளர்ச்சி  யெய்துவதாகும் . பெண்  பதினாறு  யாண்டுகளிலும் , ஆடவன்  இருபது  யாண்டுகளிலும்  எல்லா  உறுப்புக்களும்  நிரம்பப்  பெற்றவராவர் .  186

16 . ஏழு  தால முதலிய  அளவில்  தெய்வப்  படிவங்கள் அமைக்குமுறை

     தெய்வப்படிவங்கட்குப்  பாலப்  பருவங்கடந்து  யெளவன  பருவம்  நேர்ந்துழி  ஏழு  தாலம்  முதலிய  அளவில்  உருவம்  அமைத்தல்  தக்கதாகும் . சில  படிவங்கள்  பாலப்  பருவத்திலும் , சில  படிவங்கள்  யெளவனப்பருவத்திலும் , சில  படிவங்கள்  முதுமைப்பருவத்திலும்  அழகுடையனவாக  விளங்கும் .                                                                    187

     ஏழுதால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்கு  முகத்தின்  கீழுள்ள  கழுத்து  மூன்றங்குலமாகவும் , மார்பு  வயிறு  நாபியின்  கீழ்ப் பக்கத்து  அடிவயிறு  ஆகிய  இவை  தனித்தனி ஒன்பதங்குல மாகவும் , தொடை  பதினெட்டங்குலமாகவும் , முழங்காற்சந்தி  மூன்றங்குலமாகவும் , கணைக்கால்  பதினெட்டங்குலமாகவும் , பரட்டின்  கீழ்ப்பாகம்  மூன்றங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                       188-189

     எட்டுத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்குக்  கழுத்து  நான் கங்குலமாகவும்  , மார்பு  வயிறு  நாபியின்  கீழ்ப்பக்கத்திலுள்ள  அடிவயிறு  இவை தனித்தனி  பத்தங்குலமாகவும் , தொடை  இருபத்தோரங்குலமாகவும் , முழங்காற்பூட்டு  நான்கங்குலமாகவும் , கணைக்கால்  இருபத்தோரங்குலமாகவும் , பரட்டின்  கீழ்ப்பாகம்  நான் கங்குலமாகவுமிருக்க  வேண்டுமென்று  இவ்வாறு  அளவை  கூறப்பட்டுள்ளது .                                                                                        190-192

     பத்துத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்தற்கு  முகம் , மார்பு , வயிறு , நாபியின்  கீழ்ப்பக்கத்து  அடிவயிறு  ஆகிய  இவை  தனித்தனி  பதின்மூன்றங்குலமாகவும் , பரட்டின்  கீழ்ப்பாகம்  கழுத்து  முழங்காற்பூட்டு  இவை  தனித்தனி  ஐந்தங்குலமாகவும் , தொடையும்  கணைக்காலும்  தனித்தனி  இருபத்தாறங்குலமாகவும் , தலைமணி  ஓரங்குலமாகவும் , கைகள்  தனித்தனி  ஐம்பது  அங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் .                                                                                  193-195

     பத்துத்தால  அளவிற்  குறைந்த  படிவங்களுக்கு , குறைந்த  தாலம்  ஒன்றுக்குக்  கைகளைத்  தனித்தனி  இரண்டிரண்டு  அங்குல  விகிதங்  குறைந்து  அமைத்தல்  வேண்டும் . எல்லா  அளவிலும்  அழகு  விளங்கும்  வண்ணம்  திறனுறச்  செய்தல்  வேண்டும் .                           196

( பத்துத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்குக்  கைகள்  ஐம்பது அங்குலமாயின் , ஒன்பது  தாலத்திற்குக்  கை  நாற்பத் தெட்டங்குலமாகவும் , எட்டுத்தாலத்திற்குக்  கை  நாற்பத்தாறங்குலமாகவும் , ஏழுதாலத்திற்குக்  கை  நாற்பத்து நான்கங்குலமாகவும்  இவ்வாறு  கணக்கிட்டுக்கொள்ளல்  வேண்டும் . ஏழுதாலம் , எட்டுத்தாலம்  அளவுள்ள  படிவங்களுக்குக்  கையளவு  முன்னர்க்  கூறப்பட்டமையால்  ஈண்டிவ்வாறு  கூறப்பட்டது . )

     ஒன்பது தால  அளவுள்ள  படிவத்தை  அதற்குச்  சொல்லிய அளவினின்றும்  கூடுதல்  குறைதலாகச்  செய்தலாகாது .                     197

( ஒன்பது தால  அளவு  உயரமுள்ள  படிவத்தின்  உறுப்புக்களெல்லா வற்றிற்கும்   அளவு  மேற்கூறப்பட்டமையால்  இங்கு  அவ்வளவினின்றும்  கூடுதல்  குறைதலாகா தென்று  வற்புறுத்தப்பட்டது . )

     பத்துத்தால  அளவு  உயரமுள்ள  படிவத்திற்குப்   பாதங்கள்  தனித்தனி  பதினைந்தங்குலம்   இருத்தல்  வேண்டும் . பத்துத்தால அளவிற்  குறைந்த படிவங்களுக்குக்  குறைந்த  தாலம்  ஒன்றுக்கு  ஒவ்வோரங்குலம்  விகிதம்  பாத  அளவு  குறைந்திருத்தல் வேண்டும். பத்துத்தால  அளவின்  மிகுதியான  அளவுள்ள  படிவங்களுக்கு   மிகுதியான  தாலம்  ஒன்றுக்கு  ஒவ்வோரங்குல  விகிதம்  பாத  அளவு  கூடியிருத்தல்  வேண்டும் . சிற்பஞானத்திற் சிறந்த  புலவன்  இப்படிவங்களை  முகம்  தொடங்கி  அழகுற  இயற்றல்  வேண்டும் . 198 

     நீண்ட  தொடைகளையும் , நீண்ட  கணைக்கால்களையும் , விகார  உருவத்தையும் , சினக்குறிப்பையும் , அச்சத்தை  விளைவிக்கும்  தோற்றத்தையுமுடையது  அசுரப்  படிவமாகும் . இவ்வசுரப் படிவத்திற்குக்  கூறிய  உருவம்  தோற்றம்  முதலிய  எல்லாம்  பைசாசப்  படிவத்திற்கும்  இராக்கதப்  படிவத்திற்கும்  பொருந்துவனவாம் . அன்றி  இவற்றை  மெலிந்த  வடிவினை யுடையனவாகவும்  செய்யலாம் .   199                    

     எல்லா  அளவிலும்  அமைக்கப்படும்  படிவங்கள்  எல்லாவற்றிற்கும்  கையின்  நடுவிரல்  ஐந்தங்குலத்திற்குக்  குறையாமலும்  ஆறங்குலத்திற்கு  மேற்படாமலும்  இருக்கவேண்டுமென்று  சிற்பஞானிகள்  கூறுவர் .                                                                                 200

     சிற்பஞானி  எப்பொழுதும்  பாலப்  பருவத்திற்  கியைந்ததும்  யெளவன  பருவத்திற்  கியைந்ததும்  ஆகிய  படிவங்களையே  இயற்றல்  வேண்டும் . கிழப் பருவத்திற்  கியைந்த  படிவத்தை  ஒரு  பொழுதுஞ்  செய்தலாகாது .                                                                             201

    அரசன்  தன்  நாட்டில்  எப்பொழுதும்  இத்தகைய  தெய்வத் திருவுருவங்களைப்  பிரதிட்டை  செய்வித்தல்  வேண்டும் . அத்  தெய்வங்களுக்கு  யாண்டுதோறும்  நைமித்திகமாகிய  திருவிழாக்களைச்  சிறப்புறச்  செய்தல்  வேண்டும் .                            202

     அரசன்  மேற்கூறிய  அளவிலக்கணங்களின்  வேறுபட்டனவும் , உறுப்பு  முறிந்தனவுமாகிய  படிவங்களைத்  திருக்கோயில்களில்  வைத்துப்  போற்றலாகாது . நாள் மிகுதியாற்  சிதைந்த  ஆலையங்களையும்  தெய்வப்  படிவங்களையும்  முயன்று  புதுப்பித்தல்  வேண்டும் .                                                                                  203

     அரசன்  எப்பொழுதும்  தன்  மனம்  இன்புறுதற்பொருட்டுத்  தெய்வங்களை  முன்னிட்டு  நாட்டியம்  முதலியவற்றை  நடாத்திக்  கண்டு  களித்தலாகது .                                                                                      204

     குடிகளால்  தெய்வங்களுக்குச்  செய்யப்படும்  திருவிழாக்களையும்  அரசன்  பாதுகாத்து  ஆதரித்தல்  வேண்டும் . குடிகள்  இன்புறக்கண்டு  தான்  இன்புறுதலும் , அவர்  துன்புறக்கண்டு  தான்  துன்புறுதலும்  அரசனுக்குரியனவாம்.                                                                                       205

சுக்கிர நீதி  நான்காம்  அத்தியாயத்தில்,

நாட்டைப் பற்றிய நடுவணதாகிய

“உலகதரும நிரூபணம்”  என்னும்

நான்காம்  பிரகரணம்  முற்றிற்று .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஐந்தாம்  பிரகரணம்

(இராச  தருமம்)

1 . அரசன்  நீதியியல்பு  அறிதல்

      அரசன் , குடிகளின்  வழக்குகளை  யாராய்ந்து  அறிந்து  தீயோரை  ஒறுத்தல்  வேண்டும் . தன்  கீழ்  அடங்கி  வாழும்  குடிகள்  எப்பொழுதும்   தன்  ஆணைவழி  ஒழுகுவதற்குரியராவர் .                    1

     தீயோராவார் – அரசன்  விருப்பத்திற்குக்  கேடு  விளைப்போரும் , பகைவரும் , பாவ  காரியங்களைச்  செய்யும்படி  உபதேசிப்போருமாவர் . குடிகளைக்  காத்தல்  என்பது  நியாயநெறி  பிறழாது  அவர்  விரும்பியவற்றைச்  செய்தலாகும் .                                 2

     பகைவரை  அழித்தல்  என்பது  வெறுப்பன  செய்தலினின்றும்  அவரை  ஒழிவுறச்  செய்தலாகும் . தீயோரை  ஒறுத்த லென்பது  தீயன  செய்தலினின்றும்  அவரை  ஒழிவுறச்  செய்தலாகும் .                              3

     அரசன் , எதனால்  நன்று  தீதுகளை  ஆராய்ந்தறிந்து  தன்  குடிகளை  அறத்தில்  நிலைப்படுத்துதலையும் , பிற  காரியங்களை  நன்கு   நிறைவேற்றிக்கொள்ளுதலையும்  செய்கின்றானோ  அதுவே  வியவகாரம்  என்று  கூறப்படும் .                                                                      4

( வியவகாரம்  ஈண்டு  அரசியல்  நீதியாகும் . ஒரு  பொருளைத்  தனித்தனியே  எனதென்றிருப்பார்  அதுகாரணமாகத்  தம்முள்  மாறுபட்டு  அப்பொருண்  மேற்செல்லுவதாகிய  வழக்கு  இப்பிரகரணத்தின்  68-ஆம்  சுலோகத்திற்  கூறப்படும் .)

     அரசன்  விருப்பு  வெறுப்புக்கள்  இல்லாதவனாய் , நீதிபதிகள் , அமாத்தியர் , அந்தணர்  புரோகிதர்  ஆகிய  இவர்களோடு  கூடியிருந்து  நன்கு  விழிப்புமிக்க  மனத்தினையுடையனாய்  அறநூல்களைத்  தழுவி   முறைப்படி  வழக்குகளை  ஆரய்ந்தறிதல்  வேண்டும் .                               5

      அறிவிற்  சிறந்த  அரசன் , வழக்காளிகளின்  காரியங்களைத்  தான்  தனியனாய்த்   தனியிடத்திருந்து   ஒரு பொழுதும்  ஆராய்தலும்  கேட்டலும்  கூடாவாம் . நீதிமன்றத்துள்ளாரும் , அங்ஙனமே  தனித்திருந்து  வழக்குகளை  யாராய்தலுங்  கேட்டலும்  ஆகாவாம் .      6

     நியாயம்  வழங்குவார்  ஒருதலைச்  சார்பை   மேற்கோடற்குரிய  காரணங்களாவன :  நட்பு , பொருணசை ,அச்சம் , பகைமை , வழக் காளிகளைத்  தனியிடத்திருந்து  கேட்டல்  ஆகிய  இவ்வைந்துமாம் .     7

     எவ்வரசன் , தான்மாத்திரம்  இன்புற்றிருந்து  தன்  குடிகளுக்குச்  செயற்பாலனவற்றைச்  செய்யா தொழிகின்றானோ  அவ்வரசன்  உறுதியாகக்  கொடிய  நரகத்  துன்பத்தை  அநுபவிப்பவனாவான் . இதன்கட்  சிறிதும்  ஐயமின்று .                                                                            8

   எவ்வரசன் , மயக்க வுணர்வினாற்  காரியங்களை  அறநெறி  பிறழ்ந்தவனாகச்  செய்கின்றானோ  அத்  தீய  அரசனைப்  பகைவர்  விரைந்து  தம்  வயப்படுத்திக்  கொள்வர் .                                                       9

     அரசன் , நீதிபதி  முதலியவரோடு கூடியிராமல்   தான்  தனியனாயிருந்து  வழக்காளிகளின்  சொற்களைக்  கேட்டு  ஆராய்வானாயின் , அஃது  அவற்கு  மறுமை  இன்பத்தையும்  பயவாது; பகைவருடைய  படைகளால்  அச்சத்தை  விளைவித்து  அவன்  வாழ்நாளையுங்  கெடுப்பதாகும் ; அன்றிக்  குடிகளுக்குங்  கேடு  விளைவிப்பதாகும் .                                                                                              10

     ஆதலின் , அரசன்  அறநூல்  முறையை  மேற்கொண்டு  அவ்வழியே  எல்லாக்  காரியங்களையும்  ஆராய்தல்  வேண்டும் .                                 11

     அரசன் , தான்  செய்யவேண்டிய  காரிய  முடிவுகளைத்  தானே  செய்தற்கு  இயலாதவனாக  இருப்பின் , அப்பொழுது  அவற்றைச்  செய்தற்பொருட்டு  ஓர்  அந்தணனை  நியமித்தல்  வேண்டும் . அவ் வந்தணன்  பொறியடக்கம் , உயர்குடிப்பிறப்பு , நடுவுநிலைமை , சாந்தகுணம் , அசைவின்மை, மறுமை குறித்துத் தீவினைக்கு அஞ்சுதல் , அறநிலை , முயற்சி , சினமின்மை ஆகிய  இக்குணஞ்  செயல்களை யுடையனாய்  வேதங்களின்  கரைகண்ட வனாக  இருத்தல்  வேண்டும் .                                                                                      12-13

( 12-13 . செய்யவேண்டிய  காரிய  முடிவுகள்:  வழக்காளிகள்  கூறுஞ்  சொற்களைக்  கேட்டு  ஆராய்ந்த  உண்மை  கண்டு  தீர்மானித்தல்  முதலியன . அரசன்  நீதிபதி  முதலியவரோடு  கூடியிருந்து  தீர்மானித்தல்  வேண்டும் . எக்காரியத்தை  முன்னிட்டேனும்  அவற்கு  அக்காரியங்களை  ஆராயக்  கூடவில்லையாயின் , அப்பொழுது  தனக்குப்  பிரதிநிதியாக  ஓர்  அந்தணனை நியமிக்கவேண்டுமென்பது  கருத்து . )

     வழக்காராயுங்  காரியங்களைத்  திறம்படப்புரியும்  அறிவுடை  அந்தணன்  இல்லையாயின் , அப்பொழுது  அச் செயற்கண்  அறநூலறிவிற்  சிறந்தவனாகிய  அரசர்  குலத்தவனை  யாதல்  வணிககுலத்தவனை யாதல்  நியமனஞ்  செய்யலாம் . சூத்திரனை  நியமனஞ்  செய்யாமல்  முயன்று  விலக்கல்  வேண்டும் .                        14

     அரசன்  எவ்  வருணத்திற்  றோன்றினானோ  அவ்வருணத்துள்ளாரை  எப்பொழுதும்  நியாயவிசார  காரியத்தில்  நியமித்தல்  வேண்டும் . அவ்  வருணத்திலேயே  பெரும்பாலும்  நற்குணம்  நிறைந்தோர்  உண்டாயிருப்பர் .                                                                                                  15

     வழக்கியல்பு  அறிதல் , பேரறிவுடைமை , நற்குணம் , நற்செயல் , நல்லொழுக்கம் , பகைவரையும்  நண்பரையும்   ஒப்ப  மதித்தல் , அறவுணர்ச்சி , வாய்மை  கூறல் , மடியின்மை , காமவெகுளி  உலோபங்களைக்  கடத்தல் , இன்சொற்கூறல்  ஆகிய  இக்குணஞ்  செயல்களை யுடையார்  எச்  சாதியினராயினும்  அவர்களை  அரசன்  நியாயமன்றத்தவராக  நியமித்தல்  வேண்டும் .                               16-17

     உழவர் , காருகர் , சிற்பவினைஞர் , வட்டித்தொழில்  புரிவார் , இழிந்த  சாதிக்குழுவினர் , நாட்டியம்  புரிவார் , இலிங்கிகள் , கள்வர்  ஆகிய  இவர்கள்  தம்  குழுவினர்க்குரிய  தருமமுறைப்படி  தம்  காரியங்களைத்  தாமே  தீர்மானித்துக்  கொள்ளல் வேண்டும் . அவ்வுழவர்  முதலியோர்க்குரிய  காரியங்களை  ஆராய்ந்து  தீர்மானித்தல்  பிறர்க்கு  அரிதாதலின், அரசன்  அத்தரும  இயல்புகளை   நன்கு  உணர்ந்த  அக்குழுவினராலேயே  அதனைச்  செய்வித்தல்  வேண்டும் .                                                                                                      18-19

இலிங்கி – தவவேடமுடையான் . உழவர்  முதலாக  இங்குக்  கூறப்பட்டார்  தம்  விவகாரங்களைத்   தம்  குழுவினருள்  அறிவுடைய  சிலரைக்  கொண்டு  முடிவு  செய்து கொள்ளல்  வேண்டுமென்பதும் , அவர்தம்  வழக்க  ஒழுக்கங்களை யுணர்ந்து  காரிய  நிரூபணஞ்  செய்யத்தக்க  திறமையுடையாரை  அக்குழுவினின்றும்  தெரிந்தெடுத்து  அரசன்  நியமனஞ் செய்தல்  வேண்டு மென்பதுங்  கூறப்பட்டன . )

      தனக்கு  நலத்தை  விரும்பும்  வேந்தன் , பிரமசரியம்  முதலிய  ஆச்சிரம  ஒழுக்கங்களை யுடையாரும் , காரியநிமித்தம்  தம்முன்  வழக்கிடுவாருமாகிய  இருபிறப்பாளர்  மூவர்க்குமுரிய  தருமத்தில்  மாறுபடக்  கூறலாகாது .                                                                                    20

      தவஞ்  செய்வார் , மாயை  யோகங்களை  அறிந்தார்  ஆகிய  இவர்தம்  காரியங்களை , வேதங்களை  யறிந்த  பெரியோர்களைக்  கொண்டே  செய்வித்தல்  வேண்டும் . இவர்தம்  வெகுளி  கணமேயுங்  காத்தலரிதாதலின்  அரசன்  தானே  செய்தலாகாது .                               21

( மாயை – மாயாப்பிரயோகம்  ; ஆபிசாரவேள்வி  முதலியன .)

     சிறந்த  அறிவுச்  செல்வம்  நிரம்பப்பெற்ற  அரசன் , உயர்ந்த  குடிப்பிறப்பையும் , சிறந்த  ஒழுக்கங்களையுமுடைய  குருக்கள் , ஞானாசிரியர் , தவஞ்  செய்வார்   ஆகிய  இவர்களுக்குத்  தான்  ஒன்றைக்  கட்டளையிடலாகாது .                                                                    22

( ஒன்றைச்  செய்யும்படி  அவரை  ஆணையிட்டுரைத் தலாகாது  என்பது  கருத்து.)

     காட்டில்  வாழ்வார்  அவர்  இனத்தவரோடும் , கூடி  வாணிகம்  புரிவார்  அக்  கூட்டத்தவரோடும் , போர்வீரர்  அவரினத்தவரோடும்  , கிராமத்தில்  வாழ்வார்  அவர்க்கு  இருபுறத்தும்  இருப்பவரோடுங்  கூடித்  தத்தங்   காரிய  நிருணயங்களைச்  செய்துகொள்ளல்  வேண்டும் .                                                                                                             23

( இதனாற்  பல்வேறு  வகுப்பினரும்  தத்தம்  வழக்குகளைத்  தத்தம்  வகுப்பினரைக்  கொண்டே  தீர்மானித்துக்கொள்ளல் வேண்டும்  என்பது  போதரும் . அவ்வகுப்பினரால்  தீர்மானிக்கப்படாத  காரியங்கள்  பின்னர்  அரசனால்  நியமிக்கப்பட்ட  நீதிபதி  முதலியோரால்  தீர்மானிக்கப்படும்  என்பதும்  உய்த்துணரற் பாற்றாம்.)

     யாவர்  எக்காரியத்தில்  எதன்  பொருட்டு  அரசனால்  நியமிக்கப்பட்டுள்ளாரோ  அவரே  அக்காரியத்திலுள்ள  குணங்  குற்றங்களை  ஆராய்ச்சி  செய்வோராவர் .                                                24

      யாவர்  ஏறுபோல  வழக்காகிய  சுமையைச்  சுமத்தற்கு    வலிவுடையாரோ  அத்தகைய  அறநிலை யுடையோரை  அரசன்  நன்றாக  ஆராய்ந்தெடுத்து  நீதிமன்றக்  குழுவினராக  நியமித்தல்  வேண்டும் .                                                                                                              25

2 . நியாய  மன்றம்  அமைக்கு  முறை

     உலகியல் , வேதம் , அறநூல்   ஆகிய  இவற்றிற்  சிறந்த  அறிவு  வாய்ந்த  அந்தணர்  எழுவராதல் , ஐவராதல் , மூவராதல் , எம்  மன்றத்தில்  இருக்கின்றனரோ  அம்  மன்றம்  வேள்விச்  சாலையை யொப்ப  மிக்க  தூய்மை   வாய்ந்ததாகும் .                                                  26

     அம்  மன்றத்தில் , சிறந்த  அறிவு  வாய்ந்த  வணிகர்களை  வழக்குக்  கேட்போராக  நியமித்தல்  வேண்டும் .                                                          27

( பொன்  முதலியவற்றை  நிறுத்து  ஆராய்தல்  போல  வழக்குரைப்போரின்  காரியங்களையும்  நிறுத்துணர்ந்து  ஆராய்வராதலின்  வணிகரைக்  கேட்போராக  நியமிக்க  வேண்டுமென்றார் .)

      அறநூலுணர்ந்து  அந்நூல்  நெறி  ஒழுகும்  ஒருவன்  கூறுவன  தெய்விகச்  சொல்  ஆதலால் , அவன்  அரசனால்  நியமிக்கப் பட்டவனாயினும்  நியமிக்கப்படாதவனாயினும்  வழக்கின்  சம்பந்தமாக  நியாயங்  கூறுதற்குத்  தகுதியுடைய னாவான் .           28                                    

     நியாய  மன்றத்திற்கு  ஒருவன்  சென்றால்  உண்மையையே  சொல்லுதல்  வேண்டும் . இன்றேல்  அங்குச்  செல்லலாகாது . அங்குச்  சென்றும்  உண்மை யுணர்ந்துஞ்  சொல்லாமலிருத்தலையும், மாறுபடக்  கூறுதலையுமுடைய மனிதன்  தீவினையாளனாவான்      29

( 28-29. இவ்விரண்டு  சுலோகங்களாலும்  கூறப்பட்டோர்  நியாயமன்றஞ்  சென்று  அங்கு  நிகழுங்  காரியங்களை  யாராய்ந்துணர்ந்து  உண்மை  கூறும்  பொது  மக்களாவார் . இவ்வழக்கம்  பண்டக்காலத்துள்ளது  போலும் .)

      அரசனால்  திறனுடையார்  என்று  அறியப்பட்ட  குலம் , சிரேணி , கணம்  முதலிய  நியாயத்  தீர்ப்புக்  குழுவினர்   தத்தம்  குழுவுட்பட்ட  மனிதர்களின்  கொலைகளவு  முதலியன  வல்லாத  காரியங்களை  ஆராய்ந்து  தீர்மானஞ்  செய்தற்குரியராவர் .                                               30

முதல்  விசாரகராகிய  குலக்குழுவினரால்  விசாரித்துத்  தீர்க்கமுடியாத  வழக்குகள்  சிரேணிகளாலும் , சிரேணிகளால்  விசாரித்துத்  தீர்க்கமுடியாத  வழக்குகள்  கணங்களாலும் , கணங்களால்   விசாரித்துத்  தீர்க்கமுடியாத  வழக்குகள்  அரசனால்  நியமிக்கப்பட்ட  நீதிபதி  முதலியோராலும்  விசாரித்துத்  தீர்க்கப்படுவனவாம் .                                                                                           31

( 30-31 . இவ்விரண்டு  சுலோகங்களிலும்  கூறிய  குலம் , சிரேணி , கணங்கள்  முறையே  ஒன்றற்கொன்று  உயர்ந்த  கூட்டங்களாகும் . இக்  கூட்டத்தினர்  ஓரளவு  வரையறுக்கப்பட்ட  சனங்களின்  வழக்குகளைக்  கேட்டறிந்து  தீர்க்கும்  பஞ்சாயத்தாராவர் . )

     குலம்  முதலிய  குழுவினரினும்  நியாய  மன்றத்தவர்  உயர்ந்தவராவர் . நியாய  மன்றத்தவரினும்  நீதிபதிகள்  உயர்ந்தோராவர் . தன்  கீழ்  வாழுங்  குடிகளை  அறநெறிக்கட்  செலுத்தி  மறநெறி  விலக்கி யாளும்  அரசன் , தலை யிடை  கடையாய  வழக்குகளெல்லாவற்றையும்  ஆராய்ந்து   முறை  செய்தலான்  நீதிபதி  முதலிய  எல்லோரினும்  உயர்ந்தவனாவான் . மன்னவன்  அறிவு  மற்றையோர்  அறினினும்  மேன்மேற்  சிறந்து  விளங்கும்  இயல்புடையதாகும் .                                                                                      32-33

      ஒரு  நூலை  மாத்திரங்  கற்றுணர்ந்த  மனிதன்  வழக்குகளைத்  தீர்மானிக்க  அறியான் . ஆதலின் , பல  நூல்களையுங்  கற்றுணர்ந்த  உத்தமனையே  வழக்காராயுஞ்  செயலில்  அரசன்  நியமித்தல்  வேண்டும் .                                                                                                              34

     கடவுட்டத்துவங்களை யுணர்ந்தானொருவன்  தான்  தனியாயிருந்து  எதனைக்  கூறுகின்றானோ  அதுவே  அறமாகும் .                                     35

      அரசன்  சிறந்த  நியாயமன்றத்தவரோடு  தனித்தனி  கூடியிருந்து  வழக்குகளின்  சிறுமை  பெருமைக்கேற்ப  ஒருமுறையாதல் , இருமுறையாதல் , மும்முறையாதல் , நான்கு முறையாதல்  அவ்வழக்குகளை  யாராய்ந்து  தீர்மானித்தல்  வேண்டும் .                      36

     எந்த  நீதிபதி  வாதி  பிரதிவாதிகளையும் , நியாயமன்றத்தவரையும்      எழுத்தாளரையும் , காண்போரையும் , அறவுரைகளாலின்புறுத்து கின்றானோ  அவன்  நீதிமன்றத்தைத்  தீங்கினின்றும்  விலக்குபவனாவான் .                                                                                           37

3 . நியாய  மன்றத்தின்  பத்து  அங்கங்கள் 

     அரசன் , நீதிபதி , நீதிமன்றத்தவர் , அறநூல் , கணக்காளர் , எழுத்தாளர் , பொன் , நெருப்பு , நீர் , ஏவலாளர் , ஆகிய  இப்பத்தும்  காரிய  சாதனத்துக்குரிய  அங்கங்களாம் .                                                 38

     தூய  அறிவினையுடைய  வேந்தன், எம்மன்றத்தில்  இங்குக்  கூறிய  பத்து  உறுப்புக்களையுந்  துணையாகப் பற்றி  நின்று நியாயங்களைக்  காண்கின்றானோ  அம் மன்றம்  வேள்விச்சாலையை  ஒக்கும் .      39                                                                                                                   

( பத்து   உறுப்புக்களில்  அரசனும்  ஓருறுப்பாகுமாதலின்  அரசன்  ஈண்டு  அங்கமாகவும்  அங்கியாகவும்  உள்ளான்  என்பது  அறியற்பாலது . )

     இப்பத்து  உறுப்புக்களுக்கும்  தனித்தனியே  கன்மங்கள்  உள்ளன நீதிபதி  வழக்கின்  இயல்பைக்  கூறுபவனாவான் . அரசன்  ஆணைவழி  யொழுகக்  கட்டளை யிடுபவனாவான் . நீதிமன்றத்தார்  வழக்குகளை  ஆராய்பவராவர் .                                                                                                  40

      அறநூல்கள்  வழக்குகளைத்  தீர்மானிக்கும்  முறையையும் , மந்திரமோதுதலையும் , தானத்தையும் , பொறி  முதலியன  அடக்கு தலையுங்  கூறுவனவாம் .                                                                                  41

      சூழுறவு  செய்தற்பொருட்டுப்  பொன்னும்  நெருப்பும்,  நீர் வேட்கை  தணித்தற்பொருட்டும்  கலக்கந்  தெளிவித்தற்  பொருட்டும்  நீரும்  இருத்தல்  வேண்டும் . கணக்கன்  பொருளைப்  பற்றிய  வரவு  செலவுகளையும் , எழுத்தாளன்  நியாய மன்றத்தில்  நிகழ்வனவற்றையும்  எழுதல்  வேண்டும் .                                                    42

    சொற்பொருள்களின்  உண்மை யுணர்ச்சி , கணக்காராயுந்  திறமை , தூய்மை , பல்வகை  யெழுத்துக்களின்  வேறுபாட்டை யுணரும்  அறிவு  ஆகிய  இவற்றையுடையாரைக்  கணக்காளராகவும், எழுத்தாளராகவும்  அரசன்  நியமித்தல்  வேண்டும் .                                                                     43                  

      எவ்விடத்தில்  அறிவு  நூல்களைப்  பின்பற்றிப்  பொருள்  நூல்களின்  ஆராய்ச்சி  நன்கு  நடைபெறுகின்றதோ  அவ்விடமே  அற  நிலையமாகிய  நீதிமன்றமாகும் .                                                                   44

      வழக்குகளை  யாராய்ந்து  உண்மை  காண்டலில்  விருப்பமிக்க  அரசன் , பணிவுடையனாய்ச்  சூழ்ச்சித்  திறன்  வாய்ந்த  அந்தணர்களோடும்  மந்திரிகளோடும்  நீதிமன்றத்துட்   புகுதல்  வேண்டும் .                                                                                                              45

      அரசன் , அறம்  வழங்குதற்குரிய  அரசிருக்கையில்  இருந்து  காரியங்களை  யாராய்தற்குத்  தொடங்குதல்  வேண்டும் . வாதி  பிரதிவாதிகள்பால்  நடுநிலை யுடையனாய்  அவ்விரு  வழக்காளிகளையும்  வினவுதல்  வேண்டும் .                                              46

      அரசன் , நாடோறும்  உலகியல்  நீதி  நூலாகிய  ஏதுக்களால்  சாதி , தருமம் , தேயதருமம் , சிரேணிதருமம் , குலதருமமாகிய  இவற்றை   நன்கு  ஆராய்ந்துணர்ந்து  தன்  அரசியற் றருமத்தைப்  பேணல்  வேண்டும் .                                                                                                               47

 ( சிரேணி , குலம்  என்பவற்றை  30 -31  சுலோகங்களிற்  காண்க .)

     தேயதருமம் , சாதிதருமம் , குலதருமம்  ஆகிய  இவை  பண்டு தொட்டு  எவ்வாறு  நடைபெற்று  வருகின்றனவோ  அவ்வாறே  அவற்றைப்  பாதுகாத்தல்  வேண்டும் . இன்றேல்  குடிகள்  மிகவும்  கலக்கம்  எய்துவர் .                                                                                              48

( ஈண்டுக் குலம் – குடித்தலைமை .)

     தென்னாட்டில்  வாழும்  அந்தணர்  மாமன்  மகளை  மணஞ்  செய்து  கொள்கின்றனர் . நடுநாட்டில்  வாழும்  காருகரும்  சிற்பிகளும்  பசுவின்  இறைச்சியை  உண்ணுகின்றனர் . வட  நாட்டில்  வாழும்  எல்லா  மனிதரும்  மீன்  இறைச்சியை  உண்ணுகின்றனர் . ஆங்குள்ள  பெண்கள்  வியபிசாரத்திற்  பற்றுடையராகவும் , கட்குடிப்போராகவும் , வீட்டுக்கு  விலக்காகும் [ இருது ]  நாட்களிலும்   ஆண்பாலராற்  றீண்டப் படுபவராகவும்  இருக்கின்றனர் . கச மென்னுந்  தேயத்திற்  பிறந்தோர்  உடன்பிறந்தான்  இறந்துவிடின்  அவன்  மனைவியை  மணஞ்  செய்து  கொள்கின்றனர் . இங்ஙனஞ்  செய்தலால்  அவர்க்குக்  கழுவாயாதல் , தண்டமாதல்  கிடையா .                                                                                49-51

( இம்  மூன்று  சுலோகங்களாலும்  நூன்முறைக்கு  மாறுபட்ட  தேயதருமம்  முதலியன  கூறப்பட்டன . இவற்றில்  அரசன்  தலையிடலாகாதென்பது  கருத்து . கசம்  என்னும்  நாடு  இமயமலையின்  பக்கத்தே  உள்ளது . அதன்கண்  வாழ்வார்  சிறிது  சிறிதாக  ஒழுக்கங்  குன்றப்  பெற்று  இழிந்தநிலையினை  யெய்திய  அரச  குலத்தவராவர் . )

     எவர்க்கு  எவை  பரம்பரைத்  தருமங்களாக  அவர்தம்  முன்னோர்களான்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றனவோ  அவர்க்கு அவை குற்றமுடையனவல்ல. அவற்றைப்  பிறர்  செய்தல்  குற்றமாம். 52  

     கலியுகத்திற்  செல்வமிக்கார்  பெரும்பாலும்  எப்பொழுதும்  பிறர்  மனைவியர்பாலும்  பிறர்  பொருட்கண்ணும்  பேரவாவுடையராகவும் , கட்குடித்தலில்  பற்றுடையராகவும் , சிறிது  அறிவு  படைத்த  அளவிற்  செருக்குடையராகவும் , வாமதந்திரங்களிற்  கூறப்பட்ட  கன்மங்களிற்  பற்றுடையராகவும் , வேதங்களிற்   பற்றில்லாதவராகவும்  இருப்பார்கள் . அவர்களை  அரசன்  பெருந்  தண்டத்தால்  ஒறுத்தடக்கல்  வேண்டும் .                                                                            53-54

4 . வழக்காராயு  முறைகள்

     அரசன் , நண்பகலில்  நியாய  விசாரணையையும் , முற்பகலில்  அறநூல்களின்  ஆராய்ச்சியையும்  செய்தல்  வேண்டும் . மனிதக்கொலை , களவு , பெருங்கொள்ளை , கேடு  விளைக்கும்  பிற  செயல்கள்  ஆகிய  இவை  நேர்ந்துழிக்காலை , நண்பகல் , மாலை , இரவு  என்னுங்  காலநியமங்  கருதாமல்  அப்பொழுதே  அக்காரிய  விசாரணையை  நடத்தல்  வேண்டும் .                                                       55-56

     வழக்குரைப்பான் , மந்திரிகளோடு  அறவிருக்கையிலிருக்கின்ற  அரசனைக்  கண்டு நீதிமன்றத்துட்  செல்லவேண்டும் . சென்று  அறநெறிவழுவாது தான்  தெரிவிக்கற்பாலனவற்றை  உண்மையாக  நினைவு கூர்ந்து,  விழிப்புடையனாய்   நன்கு  எழுதிக்  கைகூப்பித் தொழுது  கொண்டு , உடல்  வணக்கமுடையனாய்த்  தன்  வழக்குகளைத்  தெரிவித்துக்கொள்ளல்  வேண்டும் .                          57-58

    இங்ஙனம்  வழக்குரைப்போனை  அரசன்  அந்தணர்களோடு  உடனிருந்து  அவன்  தகுதிக்  கேற்றவாறு  பெருமைப்படுத்தி, முதலில்  இன்சொற்களால்  தேற்றிப்  பின்னர்த்  தன்  கடமையைத்  தொடங்கல்  வேண்டும் .                                                                                                              59

     அரசன்  தன்  முன்னிலையில்   வணங்கி  நிற்கின்ற  வழக்குரைப்போனை  நோக்கி  அவ்வமயத்திற்  பின்வருமாறு  வினவுதல்  வேண்டும் . “ஏ ! மானவ !  காரியம்  யாது ?  நினக்கு  வந்த  துன்பம்  என்னை?  எவ்விடத்தில்  எப்பொழுது  எக் காரணத்தால்  எத் தீயோனாற்  றுன்புறுத்தப்பட்டனை?   அஞ்சுதல்  வேண்டா; கூறுவாயாக”  என்றிவ்வாறு  வினவி , அவன்  கூறும்  உண்மையான  சொற்களை  நன்கு  கேட்டல்  வேண்டும் .                                                60-61

     அவ்  வழக்குரைப்போன்  கூறுஞ்  சொற்களை   எழுத்தாளன்  அவ்வமயம்  பிரசித்தமாக  உள்ள  எழுத்துக்களாலும்  மொழிகளாலும்  எழுதிக்  கொள்ளல்  வேண்டும் .                                                                        62

     எழுத்தாளன் , வாதி , பிரதிவாதிகளுடைய  சொற்களை  உள்ளவாறு  எழுதாமல்  வேறுபட  எழுதுவானாயின்  அவனை  அரசன்  தாழ்த்தலின்றி  விரைந்து  கள்வனை  யொப்பக்  கருதித்  தண்டித்தல்  வேண்டும் .                                                                                                               63

     நீதி மன்றத்தார்  அங்ஙனம்  பிறழ  எழுதிய  எழுத்துக்களை  ஒரு  பொழுதும்  ஏற்றுக்  கொள்ளலாகாது . இன்னும்  அவர்  வழக்குரைப் போரிடத்தினின்றும்  வலிந்து  பற்றி  எழுதி  வாங்கலுமாகாது . அங்ஙனம்  வாங்குவாராயின்  அவரையும்  அரசன்  கள்வரை யொப்பத்  தண்டித்தல்  வேண்டும் .                                                                                     64

     அரசன்  இல்லாதபொழுது  நீதிமன்றத்  தெய்தி  வழக்குரைப்போரை  நீதிபதி  முற்கூறியவாறு  வினாதல்  வேண்டும் .                                          65

     நீதிபதிக்குப் “பிராட்விவாகன்”  என்பது  பெயர் . வழக்குரைப்போரை  வினாவுதல்  பற்றி ‘பிராட்’ எனவும் , வழக்குகளை  விரித்து  விளக்கி  ஒழுங்குபடக்  கூறுதலானாதல் , அரசன்  இல்லாதபொழுது  நீதிமன்றத்தவரோடு  கூடி  நியாய  அநியாயங்களை  விசாரித்து  உணர்தலானாதல் , விசேடமாக  எடுத்துரைத்தலானாதல்  பற்றி விவாக  எனவுங்  கொண்டு  அச்  சொற்குப்  பொருளுணரப்படும் .                      66

( “பிராட்விவாக”  என்னும்  வட  சொல்  பண்புத்தொகையாகும் . முதற்கண்  உள்ள  பிராட்  என்பது  பிரச்ச  என்னும்  முதனிலையடியாகவும் , பின்னுள்ள  “விவாக”  என்பது  “வி”  என்னும்  உபசர்க்கத்தோடு  கூடிய  விவ  என்னும்  முதனிலையடியாகவும்  பிறந்தனவாம் . இச்சொற்களின்  பொருள்களே  இச்சுலோகத்தில்  விளக்கப்பட்டன . )

      நியாயமன்றத்தின்கண்  இருந்து  பிறர்க்கு  நலஞ்  செய்தல், தகுதியுடைமை , நன்மக்கட்டன்மை யாகிய  இவற்றை  யுடைய  நீதிமன்றத்தாரும்  விவாதகாரியங்களை  ஆராய்பவராவர் .                  67

     ஒருவனைப்  பிறன்  ஒருவன்  அறநூற்கும்  ஆன்றோ ராசாரத்திற்கும் மாறுபட்ட  நெறியால்  துன்புறுத்துவானாயின் , அங்ஙனந் துன்புறுத்தப்பட்டோன்  அரசன்பால்  முறையிட்டுத்  தெரிவித்துக் கொள்வது யாது – அதுவே  வழக்கு [வியவகாரம் ] என்று  கூறப்படும் .68

     அரசனாதல் , அவனைச்  சார்ந்த  அதிகாரிகளாதல்  தாமே  விவாதச்  செயல்களை  உண்டுபண்ணுதலாகாது .  அரசன்  காமம் , வெகுளி, பொருணாசை  என்னுமிவை  காரணமாக  யாரையுந்  துன்புறுத்தலாகாது . வாதி  பிரதிவாதிகளால்  தெரிவித்துக்கொள்ளப் படாத  வழக்குகளை  அரசன்  தன்  மதியால்  ஆராய்ச்சிக்கு  எடுத்துக்கொள்ளலாகாது .                                                                                 69

     அரசன் , சலங்களையும் , அபராதங்களையும் , அரசியல்  சம்பந்தமான  விவாதங்களையும்  அறிவிப்போரின்றித்  தானே  விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளல்  வேண்டும் . அன்றி , இவற்றைத்  தோபகர்  முகமாகவும்  சூசகர்  முகமாகவும் , உண்மையாகக்  கேட்டும்  ஆராய்ந்து  கொள்ளலாம் .                                                                                 70

( தோபகன் , சூசகன்  ஆகிய  இவரைப்பற்றிப்  பின்வருஞ்  சுலோகங்களிற்  காண்க . சலங்கள்  ஐம்பது  வகைப்படும் . அவற்றைப்  பின்வரும்  73-முதல்  82 வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க . அபராதம்  பத்து  வகைப்படும் . அவற்றை 83-84 ஆம்  சுலோகங்களிற்  காண்க . விவாதங்கள்  22-வகைப்படும் . அவற்றை  85-முதல்  88  வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க .)

      எவன் , அறநூல்வழி  ஒழுகுகின்றவனாய்  அரசனால்  ஏவப்படாமலே  சலம்  முதலியவைகளை  அரசற்கு  முதலில்  தெரிவிக்கின்றானோ  அவன்  தோபகன்  என்று  கூறப்படுவான் .                                                     71

( நாட்டின்கண்  நிகழும்  சலம்  முதலிய  தீங்குகளை  அரசற் குணர்த்தும்  அறவொழுக்க முடையோன்  தோபகனாவான் .)

     எவன் , பிறர்  குற்றங்களைக்  கண்டு  கூறுதற்பொருட்டு  அரசனால்  நியமிக்கப்பட்டவனாய்  அங்ஙனமே  அக் குற்றங்களை  யறிந்து  அரசற்கு  அறிவிக்கின்றானோ  அவன்  சூசகன்  என்று  கூறப்படுவான் .

5 . சலங்கள்

     [1] தெரு வழிக்குக்  கேடு  விளைத்தல் , [2] பிறரைப்  பழித்துரைத்தல் , [3] மதிற்சுவரேறிக் கடத்தல் , [4,5] தண்ணீர்ப்பந்தல், இல்லம்  இவற்றை  யழித்தல் , [6] மண்  முதலியவற்றால்  அகழியைத்  தூர்த்தல் , [7] அரசனது  தவறுதலை  வெளிப்படுத்தல் , [8 , 9 , 10 , 11] ஒருவன்  அநுமதியின்றி  அவனுடைய  இல்லம் , உவளகம் , பொருட்சாலை , அடிசிற்சாலை  ஆகிய  இவற்றுட்  புகுதல் , [12] ஒருவன்  உண்ணுங்கால்  பார்த்தல் , [13 ,14 , 15 , 16 ] இடம்  நோக்காது  விரும்பியவாறு  மலம்  மூத்திரங்களைக்  கழித்தல் , எச்சிலுமிழ்தல் , அபானவாயு  விடுதல் , [17] அரசன்  முன்னிலையில்  வீராசனமிட்டிருத்தல் , [18] அரசன்  எதிர்முகத்தைத்  தடைதடுத்தல் , [19] அரசற்குரிய  வேடத்தினுஞ்   சிறந்த  வேடந்தரித்தல் , [20] ஒருவன்  இல்லத்துள்  தடுக்கப்பட்டும்  மீறிப்புகுதல் , [21, 22]  பிறர்  இல்லத்தின்கட்  கள்ள  வழியாற்  புகுதல் , அசமயத்திற்  புகுதல் , [23 , 24 , 25 ] பிறர்  படுக்கை  இருக்கை  பாதுகைகளில்  அவர்  அநுமதியின்றிப்  படுத்தல்,  இருத்தல்,  பாதங்களாற்றீண்டல் , [26] அரசன்  படுக்கையிற்  சயனித்துக்  கொண்டிருக்குங்கால்  அருகில்  நிற்றல் , [27] தன்  அரசனுடைய  பகைவர்க்குப்  பணி செய்தல் , [28] பிறனாற்  றரப்படாத  இருக்கையைத்  தானே  பற்றிக்கொண்டு  அதன் கண்  இருத்தல் , [29, 30, 31 ] பிறர்  ஆடைகளையும் , அணிகலன்களையும், பொன்களையும்  அவரவர்  அநுமதியின்றி  உபயோகித்தல் , [32] ஒருவன்  கையிலுள்ள  தாம்பூலத்தைத்  தானே  வலிந்து  பற்றிக்கொண்டு  உபயோகித்தல் , [33] “பேசுக”  எனப்  பிறர்  வேண்டாதிருக்குங்கால்  மிகுதியாகப்  பேசுதல் , [34] தன்  அரசனைப்  பழித்துரைத்தல் , [35] அரசற்கெதிரில்  ஒற்றை  ஆடை  உடுத்துச்  செல்லல் , [36] எண்ணெய்  பூசிய  உடலுடையனாய்ச்  செல்லல் , [37]  தலைமயிரை  விரித்துக்கொண்டு  செல்லல் , [38] உடல்  முழுதையும்  மறைத்துச்  செல்லல் , [39] சித்திரம்  வரைந்த உடலொடு  சேறல் , [40]  பூமாலை  யணிந்து  செல்லல் , [41]  உடுத்த  ஆடை  அலையச்  சேறல் , [42]  தலையை  ஆடை  முதலியவற்றால்  மறைத்துச்  சேறல், [43]  பிறர்பாற்  குற்றங்காண  விரும்புதல் , [44] சூது , கள் , காமம்  முதலிய  விதனங்களில்  விருப்பம் , [45]  அரசற் கெதிரில்  ஆடையின்றிச்  செல்லல் , [46, 47, 48] அரசனுடைய  மூக்கையும்  செவிகளையும்  கண்களையும்  உற்று  நோக்கல் , [49] பற்குடைதல் , [50]  செவி , மூக்குகளைக்  குடைதல்  ஆகிய  இவ்வைம்பதும்  சலங்கள்  என்று  கூறப்படும் .                                     73-82

6 . விவாதத்  தானங்கள்

          [1]  அரசனுடைய  ஆணையைக்  கடத்தல் , [2] பெண் கொலை ,             [3]  வருணக்  கலப்பு , [4]  பிறர் மனை நயத்தல் , [5] களவு , [6] ஒரு  பெண்  தன்  தலைவனை யின்றிக்  கருப்பமுடையளாதல் , [7] கடுஞ்சொல் ,             [8]  சொல்லத்தகாதனவற்றைச்  சொல்லுதல்  முதலியன , [9] பிறரைக்   கடுமையாக  அடித்தொறுத்தல், [10] கருச்சிதைத்தல்  ஆகிய  இப்பத்தும்  அபராதங்கள்  என்று  கூறப்படும்.                                    83-84

          [1]  பிறர்க்கு  வெறுப்பு  விளைவித்தல், [2] பயிரை யழித்தல், [3] இல்லம்  முதலியவற்றில்  நெருப்பிடல் , [4] அரசற்குத்  தீங்கிழைத்தல் ,        [5]  அரச  முத்திரையை  அழித்தல் , [6] அரசனது  மறைவுச்  சூழ்ச்சியை  வெளிப்படுத்தல் , [7] சிறைப்பட்டிருப்போரை  விலங்கு  முறித்து  வெளிப்படுத்தல் , [8] உரியவன்  இல்லாத  பொருளை  விற்றல் , அதனைத்  தானஞ்  செய்தல் , அதனைக் கூறிட்டுக் கொள்ளல் , அதனைத் தண்டத்திற்குட்படுத்தல் , [9] அரசன்  ஆணை  மேற்கொண்டு  பறைசாற்றுதலை  மறைத்தல் , [10] உரியோனில்லாத  பொருளை  யழித்தல் , [11] அரசற்குக்  கிடைக்கவேண்டிய  இறைப்  பொருளைக்  கெடுத்தல் , [12] பிறர்  உறுப்புக்களை  வெட்டிக்  குறைத்தல்  என்னும்  இப்பன்னிரண்டும் ,  முற்கூறிய  அபராதம்  பத்தும் ,  ஆகிய  இருபத்திரண்டும்  அரசனால்  அறியப்படும்  விவாதத் தானங்கள்  என்று  அறிவுடையார்  கூறுவர் .                                                           85-88

( உரியவனில்லாத  பொருளை  விற்றன்  முதலிய  நான்கும்  ஒரு  பொருள்  பற்றினவாதலின்  ஒன்றன்பாற்படும்.)

     நீதிமன்றத்தில் வழக்குரைக்கும்  வாதி  கொடுந்தன்மை , கடுஞ்சொல் , அஞ்சத்தக்க  வேடம் , செருக்கு , மிகுசினம் , நீதிபதியோடு  ஒத்த  இருக்கையில்  இருத்தல் , மிக்க  இறுமாப்பு  ஆகிய  இவற்றையுடையனாயிருப்பின்  தண்டிக்கப்படுவனாவான் .             89

     வாதியால்  அரசற்குத்  தெரிவித்துக்  கொள்ளப்படுவது  ஆவேதனம்  என்னும்  பெயரையுடையதாகும் . நீதிபதி  முதலியோரிடத்துத்  தெரிவித்துக்  கொள்ளப்படுவது , எல்லாவற்றையும்  விளக்கமாகத்  தெரிவிக்கும்  “மொழி” யாகும் ;  அதுவே  பூருவபக்கமென்றுங்  கூறப்படும் . வாதியால்  வேண்டிக்கொள்ளப்பட்ட  நீதிமன்றத்தார்  அப்  பூருவபக்கத்தை  உண்மையாக  ஆராய்ந்து  அதன்  சான்றுகளிற்  குறையுள்ள தாயின்  நிறைவித்தலும் , மிகையாகவிருக்குமாயின்  விலக்குதலுஞ்  செய்தல்  வேண்டும் . அரசன்  சான்று  கூறுவாரை  வாதியாற்  குறிப்பிடச்செய்து  பின்  தனது  சிறந்த  முத்திரையால்  அடையாளமிடல்  வேண்டும் .                                                                   90-92

( மொழி – இதனைப்  பாஷை  யென்ப  முதனூலார் . முதலில்  அரசனிடத்துத்  தெரிவித்துக்கொள்ளும்  ஆவேதனத்தைப்  பற்றி விரித்து  விளக்கிக்  கூறுவது  பாஷை  அல்லது  பூர்வபக்கம்  என்று  கூறப்படு மென்பதாம் . )

     வாதியால்  அங்ஙனங்  கொணரப்பட்ட  பூருவபக்கத்தை  விருப்பம் , அச்சம் , பொருணாசை  காரணமாக  ஆராய்ந்துபாராமல்  எவ்வதிகாரிகள்  தீர்ப்புச்செய்து  விடுகின்றார்களோ  அத்தகைய  நீதிமன்றத்தார்  முதலியோரைத்  தண்டித்து  அவர்  செய்த  தவறுதலை  நினைவுறுத்தற்  பொருட்டு  அவ்வதிகாரத்தினின்றும்  அவரை  ஒழித்து விடல்  வேண்டும் .                                                                                                  93

     அரசன்  தன்பால்  வரும்  வழக்குக்களுள்  எடுத்துக்கொள்ளத்தக்கது  இன்னது  தகாதது  இன்னதென்பதை  நன்கு  ஆராய்ந்து  தக்கதாயின்  முடிவு  செய்தற்கு  எடுத்துக்கொள்ளல்  வேண்டும் . பூருவ பக்கத்தை  ஏற்றுக்கொண்ட  பின்னர்  வாதியைத்  தன்  ஆணையால்  தடைப்படுத்தல்  வேண்டும் .                                                                             94

( வாதியைத்  தடைப்படுத்தலாவது : அவனாற்  கொண்டுவரப்பட்ட  வழக்கு  ஆராய்ந்து  தீர்க்கப்படுங்காறும்  அவனைத்  தன்  ஆணக்குட்படுத்தல் . அஃது  அவன்  வழக்குப்  பொய்மை யுடைத்தாயின்  அவனை  யொறுத்தல்  குறித்தாம் . பின்  வருஞ்  சுலோக  முதலியவற்றிற்  பிரதி வாதியைத்  தடைப்படுத்தல்  கூறப்படும் . வாதி பிரதிவாதிகளிருவரும்  இங்ஙனம்  தடைப்படுத்தப்படுதலைப்  பின்வரும்  128-ஆம்  சுலோகத்தானுமுணர்க . )

7 . அரசனது  ஆணை  மேற்கொண்டு  தடுத்தல்

     வழக்குத்  தொடங்கும்  வாதி  நியாயமென்று  கூறத்தக்க  நெறியில்  நில்லாதவனும் , சொற்பிறழ்ச்சி யுடையவனுமாகிய  பிரதிவாதியை  அரசன்  வரவழைத்துக்  காணும்வரை  அரசனது ஆணை  மேற்கொண்டும்  சூளுறவு  கூறியும்  தடுத்தல்  வேண்டும் . அங்ஙனந் தடுக்குங்கால் , உண்மை யுரைத்தல் , மடியின்மை , குறிப்பறிதலாகிய  இவற்றை யுடையராய்  வன்மைமிக்க  அம்பு , வாள்  முதலிய  படைகளை  அழகுறத்  தாங்கி  நிற்கும்  சிறந்த  மனிதரைத்  துணைக்கொண்டு  செய்தல்  வேண்டும் .                                                95-96

     அரசனது  ஆணை மேற்கொண்டு  தடுத்தல்  காலம் , இடம் , தொழில், வேற்றிடம் பெயர்தல்  ஆகிய  இந்  நான்கையும்  பற்றி  நிகழ்வதால்  அது  நான்கு  வகைப்படும் . இங்ஙனந்  தடைப்படுத்தப்பட்ட  மனிதன்  அத்  தடையை  மீறலாகாது .                                                                          97

( ஒருவன்  மற்றொருவற்கு  முறைதவறித்  தீங்கு  செய்வானாயின்  செய்யப்பட்டோன்  செய்தவனை  அரசனது  ஆணைமேற்கொண்டு  தடை  செய்தலை “ஆசேதம்”  என்று  முதநூல்  கூறும் . அங்ஙனந்  தடுக்குங்கால்  கால  அளவு  குறித்தும் , இடம்  வரையறுத்தும் , தொழில்  மறுத்தும் , வேற்றிடம்  பெயர்தலை  யொழித்தும்  தடுக்கலாம்  என்பது  கருத்து . )

     ஒருவன்  பிறனொருவனை  அரசனது  ஆணை  மேற்கொண்டு  இந்திரியத்தடையாலும் , கடுஞ்சொற்களாலும் , வரம்பிகந்த  ஆணைகளாலும்  தகுதியின்றித்  தடைப்படுத்துவானாயின் , அவன்  அரசனால்  தண்டிக்கப்படுவனாவான் . இத்  தகுதியில்லாத  தடைகளை  யொழித்து  முறைப்படி  தடுப்பவன்  அங்ஙனந்  தண்டிக்கப்படுவானல்லன் .                                                                            98

( இந்திரியத்தடையாவது – மலம்  மூத்திரம்  முதலியவற்றை  யொழித்தல் கூடாதென்று  தடைப்படுத்தல் .)

     தடைப்படுத்தற்குரிய  காலத்தில்  தடைப்படுத்தப்பட்ட  ஒருவன்  அத்தடையை  மீறுவானாயின்  அவன்  தண்டத்திற்குரியனாவான் . தடை செய்வோன்  உரியதல்லாக்  காலத்தில்  அங்ஙனந்  தடை  செய்வானாயின்  அவனும்  தண்டம்  எய்துவான் .                                    99

8 . நீதிமன்றத்திற்கு  அழைக்கப்படுபவரும் அழைக்கப்படாதவரும்

     ஒருவன் , எவனைப்பற்றி  உண்மை  கண்டாதல் , ஐயத்தானாதல்  அபியோகம்  செய்துள்ளானோ  அக்குற்றவாளியை  அரசன் தன்  முத்திரையிட்ட  பத்திரத்தானாதல் , சேவகர்களானாதல் , நீதிமன்றத்திற்கு  அழைப்பித்தல்  வேண்டும் .                                      100

( அபியோகம் – ஒருவன்  தனக்குப்  பிறன்  செய்த  தீங்கை  அரசற்குத்  தெரிவித்தல் . உண்மை  ஐயங்களைப்  பின்   வருஞ்  சுலோகத்திற்  காண்க .)

     தீயவர்களின்  கூட்டுறவாலும் , முன்னைச்  செயல்களின்  அநுபவத்தாலும்  ஒருவன்  மாட்டு  ஐயத்தையும் , களவு  முதலியவற்றாற் கவர்ந்த  பொருளைக்  காட்சியளவையிற்  காண்டலால்  உண்மையையும்  அறிவுடையார்  உணர்வர் .              101

     நோயாளர் , பாலர் , வயோதிகர் , நிலைகெட்டிருப்போர் , கடக்க  முடியாத  பல்வகைச்  செயல்களில்  ஈடுபட்டிருப்போர் ,  குற்றம்  இழைத்ததாகக்  கூறப்படுங்காலத்தில்  குறித்த  இடத்தில்  இல்லாதிருப்போர் , காமம்  முதலியவற்றில்  ஈடுபட்டிருப்போர் , அரசியற்  காரியங்களையும்  திருவிழாக்  காரியங்களயும்  மேற்கொண்டிருப்போர் , கட்குடித்துக்  களித்திருப்போர் , பித்தர் , அறிவு மழுக்கமுடையோர்  , நோய்கோட்பட்ட  பணியாளர்  ஆகிய  இவர்களை  அரசன்  நீதிமன்றத்திற்கு  அழைத்தலாகாது .                  102

( இங்குக்  கூறப்பட்டோரை  இன்றியமையாத  காரியம்  நேர்ந்துழி  அழைக்கலாமென்று  பின்னர்க்  கூறுவராதலின் , ஈண்டுக்  கூறியதைப்  பொது  விதியாகக்  கொள்க . காமத்தில்  ஈடுபட்டிருப்போரை  அக்காம  இன்ப  நுகர்ச்சிக்காலத்தில்  அழைத்தலாகாதென்பது  கருத்து . )

     உற்றாரையில்லா  யுவதி , உயர்ந்த  குடிகட்  பிறந்தவள் , பிரசவித்திருப்பவள் , எல்லா  வருணத்துமுள்ள  கற்பிற்  சிறந்தார் , மணஞ் செய்யப்படாத  கன்னி , கணவன்  இன்னானென்றறியப் படாதவள்  ஆகிய  இப்பெண்களையும்  நீதிமன்றத்திற்கு  அழைத்தலாகாது .                                                                                          103

     விவாக  முயற்சியை  மேற்கொண்டிருப்பவன் , நோய்கோட்பட்டவன்  வேள்வி  வினையில்  முயன்று  கொண்டிருப்பவன் , கட்காம  முதலிய  விதனங்களில் ஈடுபட்டிருப்பவன் , பிறனொருவனால்  வழக்குத்  தொடரப்பட்டிருப்பவன் , அரசியற்  காரியத்தில்  முயற்சி  மேற்கொண்டிருப்பவன்  ஆகிய  இவர்களை  அவ்வக்  காலங்களிலும் , பசு  மேய்த்துக் கொண்டிருக்குங்கால்  இடையர்களையும் , பயிர் தொழில்  செய்து  கொண்டிருக்குங்கால்  உழவர்களையும் , சிற்பத்  தொழில்  செய்து  கொண்டிருக்குங்கால்  சிற்பிகளையும் , போர்  செய்துகொண்டிருக்குங்கால்  போர்வீரர்களையும் , பதினாறு யாண்டுகட்குட்பட்ட  இளைஞர்களையும் , தூதரையும் , தானஞ்  செய்து  கொண்டிருக்குங்கால்  அது  செய்வோரையும் , விரதமேற்  கொண்டிருப்போரையும் , நிலை  பிறழ்ந்திருப்போரையும்  யாருந்  தடைப்படுத்தலாகது ; அரசன்  இவர்களை  நீதிமன்றத்திற்  கழைத்துலுங்  கூடாது .                                                                          104-106

( இங்குத்  தடைப்படுத்தலாகாதென்பது  விதியாகவும் , நீதிமன்றத்திற் கழைத்தலாகாதென்பது  அநுவாதமாகவும்  பகுத்துணர்தல்  வேண்டும் .)  

      ஆற்றைக்  கடக்குங்காலும் , புகுதற்கரிய  காட்டிலும் , தீங்குமிக்க  இடத்திலும் , எரிகொள்ளி  வீழ்தல்  முதலிய  பொல்லாத  நிமித்தங்கள்  நிகழுங்  காலத்திலும்  ஒருவன்  மற்றொருவனால்  தடுக்கப்படுவானா யின்  அப் பிறன்  தடைக்குட்படாமல்  மீறலாம் . அதனால்  அவன்  குற்றவாளியாகான் .                                                                                        107

      அரசன்  காலம்  இடங்களையும் , காரியங்களின்  பெருமை  சிறுமை களையும்  நோக்கி , முற்கூறிய  நோயாளர்  முதலியவர்களையும்  சிவிகை  முதலியவைகளில்  ஏற்றி  மெல்ல  மெல்லக்  கொண்டுவரச்  செய்யலாம் .                                                                                                         108

( நீதிமன்றத்திற்கு  அழைக்கத்தகாதவர்களையும்  இன்றியமையாச்  சமயத்தில்  அழைக்கவேண்டுமென்பது  இதனாற்  கூறப்பட்டது . )           

     எவன்  தன்னைக்  குறித்து  வழக்குத்  தொடரப்பட்டிருத்தலையறிந்து  காட்டில்  சென்று  துறவறநிலை  முதலியவற்றை  மேற்கொண்டுள்ளா னோ  அவனையும்  இன்றியமையாப்  பெருங்காரியங்களின்  நிமித்தம்  அரசன்  சினவாது அழைப்பித்தல் வேண்டும் .                                           109

      ஒருவன்  வாதியாயினும்  பிரதிவாதியாயினும்  தான்  வழக்கில்  அறியாதவனாகவும் , பிரதி  காரியங்களில்  தலைப்பட்டவனாகவும்  இருப்பின்  அப்பொழுது  அவ்வழக்கியலுணர்ந்த  மற்றொருவனைத்  தனக்குப்  பிரதிநிதியாக  நியமனஞ்  செய்யலாம் .                                   110

( சுற்றத்தாருள்  ஒருவனாதல் , வேதனம்  பெற்று  வழக்கு  நடத்தும்  வழக்கறிஞனாதல்  பிரதிநிதியாவார் .   இதனைப்  பின்வருஞ்  சுலோகங்களாலும்  விளக்கமாகக்  காணலாம் . )        

     வழக்கு  நடத்தும்  திறனில்லாதவர்  , அறிவிலார் , பித்தர் , வயோதிகர் , பெண்கள் , பாலர் , நோயாளர்  ஆகிய  இவர்களுக்கு  இவர்தம்  சுற்றத்தாருள்  ஒருவனாதல் , இவரால்  நியமிக்கப்பட்ட  மற்றொருவனாதல்  பிரதிநிதியாக  நின்று  இவர்தம்  வழக்கு  எதிர் வழக்குகளைப்  பற்றிப்  பேசலாம் .                                                               111

      ஒருவனுக்காக  அவன்  தந்தை , தாய் , நட்டோன் , உறவினன் , உடன்பிறந்தான் , சம்பந்தி  ஆகிய  இவருள்  யாரேனும்  வழக்குக்  கொணர்வரேல்  அரசன்  அவ்வழக்கை   ஏற்று  விசாரணை  நடத்தல்  வேண்டும் .                                                                                                          112

      ஒருவன்  மற்றொருவனால்  ஏவப்பட்டு யாதாயினும்   ஒரு  காரியத்தைச்  செய்வானாயின்  , அக்காரியம்  ஏவுதற்கருத்தாவாற்  செய்யப்பட்டதாக  அறிதல்  வேண்டும் . அது  விலக்கத்  தகாததாகக்  கருதப்படுவதாகும் .                                                                                          113

      ஒருவன்  தனக்குப்  பிரதிநிதியாக  நியமிக்கப்பட்டவற்கு  வழக்கிற்குரிய  பொருளளவிற்  பதினாறில்  ஒரு  கூறாதல் , இருபதிலொரு  கூறாதல் , அதனிற்  பாதியாதல் , அப்பாதியிற்  பாதியாதல் , அதனிற்  பாதியாதல்  வேதனமாகக்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                                            114

( இருபதிலொரு  கூறுக்குப்பின் , பாதியளவாகக்  கூறப்பட்ட  மூன்றும்  முறையே  நாற்பதிலொரு  கூறு , எண்பதில்  ஒருகூறு , நூற்றறுபதிலொரு  கூறாகக்  கணக்கிட்டுக்  கொள்ளல்  வேண்டும் . இவ்வளவுகள்  வழக்குக்களின்  பெருமை  சிறுமை  நோக்கிக்  கொள்ளப்படுவனவாம் . )    

      பிரதிநிதியாகவுள்ளவன் , பல  சனங்களால்  நியமிக்கப்பட்டுக்  காரியஞ்  செய்பவனாயிருப்பினும் , அவன்  நியமனத்திற்குரிய  வழக்குப்  பொருள்  மிக  அதிகமாக  இருப்பினும் , அவற்குக்  கொடுக்கப்படும்  வேதனம்  அதற்குத்  தகக்  குறைவாகவே  இருத்தல்  வேண்டும் . அங்ஙனம்  வேதனங்  கொடுத்தற்கு  ஆற்றலில்லாதவன்  அப்பிரதிநிதிக்கு  உணவு  முதலியவற்றிற்கு  வேண்டிய  அளவாதல்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                  115

( ஒருவன்  பெரும்  பொருள்  வழக்கிற்கும் , பலராலும்  நியமிக்கப்பட்டும் , முற்கூறிய  அளவுப்படி  வேதனம்  பெறுவானாயின்  அதனாற்  பல  சனங்களுக்கும்  பொருட்குறைவு  ஏற்படும் . இது  கருதியே  அவற்கு  மிகக்  குறைவான  வேதனம்  கொடுக்க வேண்டு மென்று  கூறப்பட்டது .)          

     வழக்கியல்பு  உணர்ந்தோன் , அறநெறி  யொழுகுபவனாயின்  அவன்  பிரதிநிதியாக  நியமித்தற்குரியனாவான் . அவன்  அவ்வொழுக்கமிலானாயின்  அங்ஙனம்  நியமித்தற்குரியனாகான் . மேற்கூறிய  அளவின்  மேற்பட்ட  வேதனம்  பெறும்  பிரதிநிதியை  அரசன்  தண்டிக்கக் கடவன் .                                                                           116

    எப்பொழுதும்  அரசன் , தன்  கருத்தின் வண்ணம்  பிரதிநிதியை  நியமித்தலாகாது , [ வழக்குரைப்போரே  நியமித்தல்  வேண்டும். ]  நியமனம்  பெற்ற  பிரதிநிதி , பொருணாசையால்  அந்நியமன  காரியத்திற்கு  மாறுபடச்  செய்வானாயின்  தண்டத்திற்குரியனாவான்.

     ஒருவற்குத்  தந்தையாகவும் , உடன் பிறந்தானாகவும் , புதல்வனாகவும் , அவனால்  நியமிக்கப்பட்ட  பிரதிநிதியாகவும்  இல்லாத  பிறனொருவன் , அவன் பொருட்டு  வழக்கு  நடத்துபவனாக  முன்  வந்து  அவ்வழக்கில்  மாறுபடக்  கூறுவானாயின் , அவன்  அரசனால்  தண்டிக்கப்படுபவனாவான் .                                                    118

      அரசற்குரிய  பணிப்பெண்கள் , தாம்  விரும்பியவாறு   ஒழுகும்  பெண்கள் , பொருட்பெண்டிர் , இழிகுலத்துப்பெண்கள் , பெரும்  பாவங்களைச்  செய்து  அதனால்  விலக்குண்ட  பெண்கள்  ஆகிய  இவர்கள்  நீதிமன்றத்திற்கு  அழைக்கத்தக்கவராவர்.                             119

      வழக்கைத்  தொடங்கிய  பின்னர்  வாதி பிரதிவாதிகளாகிய  இருவரும்  இறந்துவிடுவாராயின் , அவ்  வழக்கியல்பு  உணர்ந்த  அவர்தம்  மக்கள்  அதனைத்  தொடர்ந்து  நடத்தலாம் . அவ்விருவர்க்கும்  புதல்வர்  இலரேல்  அவ்வழக்கை  ஒழித்துவிடல்  வேண்டும் .                                                                                                             120

     மனிதக்கொலை , களவு , பிறன்  இல்லாளை  வலிந்து  பற்றல் , உண்ணத் தகாதவற்றை  உண்டல் , மணஞ்  செய்யப்படாத  கன்னியைக்  கவர்ந்து  புணர்தல் , கடுஞ்சொற்  கூறி  வைதல் , கடுமையாக  அடித்தல் , வஞ்சித்தல் , அரசற்குத்  தீங்கிழைத்தல் , பெருங்கொள்ளை  முதலியனவாகிய  இந் நிகழ்ச்சி  பற்றிய  வழக்குகளில்  இவற்றைச்  செய்தானொருவன்  தனக்குப்  பிரதிநிதியாக  மற்றொருவனை  நியமித்துக்  கொடுத்தலாகாது. தானே  நீதிமன்றஞ்  சென்று  வழக்கு  நடத்தல்  வேண்டும் .          121-122

    வழக்குத்  தொடரப்பட்டானொருவன் , அவ்வழக்கில்  அரசனால்  அழைக்கப்பட்டும்  தன்  சுற்றத்தார்  துணைவலியாற்  செருக்குற்று  நீதிமன்றத்திற்கு  வராதிருப்பின்  , அவனை  அரசன்  அவ்வழக்கிற்  கூறப்பட்ட  குற்றத்தின்  பெருமை  சிறுமைக் கேற்பத்  தண்டித்தல்  வேண்டும் .                                                                                                           123

( ஒருவன்  அரசனால்  அழைக்கப்பட்டும்  நீதிமன்றத்திற்கு  வாராதிருப்பின்  அவனைப்  பற்றிக்  கொணரப்பட்ட  குற்றத்திற்குத்  தக்க  தண்டத்தை  விசாரணையின்றிச்  செய்யவேண்டுமென்பது  கருத்து .)          

9 . பிணை  வாங்கும்  முறை

      துன்புறுத்தப்பட்ட  வாதியையும் , தூதனால்  அழைக்கப்பட்டு  வந்த  பிரதிவாதியையும்  கண்டபின்  அவ்விருவர்க்கும்  தகுதியான  பிணையாட்களைப்  பற்றி  அரசன்  சிந்தித்தல்  வேண்டும் .              124

      பல  சனங்களாலும்  நம்பப்படுதல் , திறமை, ஒருவர்க்கும்  ஆட்படாமை , சிறந்த  புகழ், பெரும்பொருள் , சொல்வழி நிற்கும்  ஆற்றல்  ஆகிய  இவற்றையுடைய  தக்கானொருவன் , நீதிபதி  முதலியோரை  நோக்கி , வாதியை யாதல்  பிரதிவாதியையாதல்    குறித்து  “இவனாற்  கொடுக்கப்படாத   பொருளை  யான்  கொடுத்து  விடுவேன் ; இவனை  வேண்டுங்கால்  நுங்கள்  பக்கல்  கொணர்ந்து காட்டுவேன் ;  இவனை  ஈட்டுப் பொருள்  கொடுக்கும்படி செய்வேன்; இவனைப்  பற்றி   நீங்கள்  ஒரு  பொழுதும்  சிறிதும்  அஞ்சவேண்டுவ தின்று ; நுங்களால் ஆணையிடப்பட்டும்  இவனாற்  செய்யப்படாத  காரியத்தை  யான்  செய்வேன் ; இவன்  வாழ்க்கைப்பொருள்   நிரம்பப்  பெற்றவனாதலாலும் , சோம்பலில்லாதவனாதலாலும்  பொய் கூறத்  துணியமாட்டான் . “  என்றிவ்வாறு கூறுவானாயின் , அவனை  அவ்  வழக்கு  நிகழ்ச்சியில்  வாதிக்காதல் , பிரதிவாதிக்காதல்   பிணையாளனாக  ஏற்றுக்கொள்ளலாம் .                                            125-127

      வழக்கிற்குரிய  சாதனங்களை  யுடையவர்களும் , தம்பொருளானா தல்  பிறருதவியானாதல்  இவ்விரண்டுமின்றி  அரசன்  தரும்  வேதனத்தானாதல் , தம்மையும்  இரு  முதுகுரவர்  முதலியோரையும்  பாதுகாப்போருமாகிய  வாதி பிரதிவாதிகளைத்  தடைப்படுத்திப்  பின்னர்  அவர்தம்  சாதனங்கள்  பொய்யாங்கொலோ  என்னும்  ஐயத்தால் , உண்மையைக்  காண  விரும்பும்  அரசன் , வழக்காராயத்  தொடங்கல்  வேண்டும் .                                                                                  128

10 . பக்க  நிரூபண  முதலியன

          முதலில்  தெரிவிக்கப்படும்  மேற்கோட்  குற்றமில்லாததும் , தக்க சாதனங்களோடு  கூடியதும் , உலகியற்கு  ஒத்ததும் , ஐயமின்றித்  துணியப்பட்டதும்  ஆகிய  முறையீடு , பக்கமாகுமென்பர்  அவ்வியல்பு  உணர்ந்தோர் .                                                                                                    129

( முறையீடு – பிறரால்  நலியப்பட்டானொருவன்  அதனை  அரசற்குணர்த்தி  நீதி  செலுத்தும்  வண்ணம்  வேண்டிக்  கோடல் .)

     உரிய  பொருளை  யொழித்து  வேற்றுப்பொருளை  யறிவித்தல் , கருதிய  பொருள்  இல்லாதிருத்தல் , அளவை  நீதி  நூல்களுக்கு  ஒவ்வாமை , எழுதவேண்டிய  அளவிற்  குறைத்தெழுதல் , அவ் வளவில்  மிக்கெழுதல் , யாதாயினும்  ஒன்று  தவறிப்போதல்  ஆகிய  இவைகளே  மேற்கோண்மொழிக்  குற்றங்களாகக்  கூறப்படுவனவாம்.

( மேற்கோண்மொழிக்  குற்றங்களைப்  பாஷாதோஷம்  என்று  முதனூல்  கூறும்.)

      நிகழ்ச்சியின்மை [ அப்பிரசித்தம் ] , தனக்குக்  கேடின்மை [நிராபாதம்], பொருளின்மை [நிரர்த்தம்] , பயனின்மை [நிட்பிரயோசனம்] , இயலாமை [அசாத்தியம்] , முரண் [விருத்தம்], ஆகிய  இவை  பக்கப்  போலிகளாகும் . இவற்றை  அரசன்  ஏற்றுக்கொள்ளலாகாது .                                                                                131

( பக்கப் போலியைப்  பஷாபாஸம் என்று  முதநூல்  கூறும் .)

      உலகத்துள்ள  எவராலும்  கேட்கப்படாததும் , காணப்படாததும்  நிகழ்ச்சியின்மை [ அப்பிரசித்தம் ] என்னும்  பக்கப்  போலியாகும் . அவற்றிற்கு  உதாரணம்  முறையே  “யான்  ஊமனால்  வையப்பட்டேன்”   என்பதும், “மலடி  மகனால்  அடிக்கப்பட்டேன்”  என்பதுமாம் .                                                                                                       132

      பிரதிவாதியைப்  பற்றி  “அவன்  தன்  இல்லத்திற்  படிக்கின்றான் ; இனிய   குரலுடன்  பாடுகின்றான் ; இன்புற்று  வாழ்கின்றான் ; என்  இல்லத்திற்கு  அணிமையில்  தெருப்பக்கம்  நோக்கித்  தன்  இல்லத்திற்கு  வாயில்  அமைக்கின்றான் “  என்று  இன்னோரன்ன  நிகழ்ச்சிகளை  வாதி  தன்  பக்கத்திற்  குறிப்பிடின் , அவை  தனக்குக்  கேடின்மை  நிராபாதம்  என்னும்  பக்கப் போலிகளாகும் . அவை  பயனின்மை [ நிட்பிரயோசனம் ] என்னும்  பக்கப் போலிகளுமாகும் .

      “என்னால்  மணஞ்  செய்து  கொடுக்கப்பட்ட  என்  மகள்பால்  இம் மருகன்  இடைவிடாது  கூடி  இன்புறுகின்றான் ; அங்ஙனம்  இன்புற்றும்  கருத்தரித்திலள் ; இவள்  எக்காரணத்தால்  மலடியாயினள்? என்றிங்கனங்  கூறுதல்  இயலாமை [அசாத்தியம் ] என்னும்  பக்கப்போலியாகும் .  “உயிர்  நீங்கிய   இவன்  பேசுகின்றானில்லை  அஃது   எக்காரணத்தால்?”  என்றிங்ஙனங்  கூறுதல்  முரண்  [விருத்தம்]  என்னும்  பக்கப்போலியாகும் .                                                                     134

      “இவ்வுலகத்துள்ளார்  என்  துன்பங்கண்டு  வருந்துதலும் , என்  இன்பங்கண்டு  மகிழ்தலும்  செய்கின்றாரில்லை”  என்றிங்ஙனம்  கூறுதல்  பொருளின்மை [நிரர்த்தம்]  என்னும்  பக்கப்போலியாகும் . இது  பயனின்மை  என்னும்  பக்கப்போலியுமாம் .                                  135

      ஒரு  காரியத்தை  நீதிமன்றங்கொணர்ந்து  கேட்கச்  செய்து  பின்  விட்டொழிப்பவனும் , மாறுபடக்  கூறுவோனும் , எதிரி  பக்கத்தைக்   கடைப்பிடித்து  அதனாற்  பிறழ்ச்சி  யடைந்தோனுமாகிய  வாதிகள்  தண்டத்திற்குரியராவர் .                                                                                   136

      மேற்கோளாகக்  கொண்டுவரப்பட்ட  பூருவபக்கம்  எடுத்துக்கொள்ளத்  தக்கதா,  தகாததா  என்று  ஆராய்ந்து , எடுத்துக்கொள்ளத்  தக்கதாகத்  துணியப்பட்டபின் , அதற்குரிய  சாதனங்களால்  அதனை  வாதி  நிலைப்படுத்தல்  வேண்டும் . அதன்பின்  பிரதிவாதியை  உத்தரம்  எழுதும்படி  செய்தல்  வேண்டும் .

( பூருவபக்கமாவது : வாதி  அரசன்பால்  முதலில்  தெரிவித்த  வழக்குரையாகிய  ஆவேதனத்தைப்  பற்றிப்  பின்  நீதிமன்றத்திற்  கூறும்  விளக்கவுரையாகும் . இதனை  91-ஆம்  சுலோகத்திற்  காண்க .  உத்தரம் – பிரதிவாதி  அவ்  வழக்குரையை  மறுத்துரைத்தல் . )

      அவ் வழக்கில்  முதலில்  வாதியின்பாலும் , அதன்பின்  பிரதிவாதியின்பாலும்  கேட்கவேண்டியவற்றைக்  கேட்டல் வேண்டும் . அங்ஙனம்  அவ்விருவரையுங்  கேட்டபின் , நீதிபதி  அவ்வழக்கைப்  பற்றி  நீதிமன்றத்தார்  முதலியோர்களின்  கருத்துக்களைத்  தெரிவிக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                        138

      பிரதிவாதியால்  வாதியின்  முன்னிலையில்  வாதி  கொணர்ந்த  பூருவபக்கத்திற்கு  உத்தரம்  எழுதப்படல்  வேண்டும் . அவ்வுத்தரம்  அப்பூருவபக்கத்தை  மறுப்பதாகவும் , உறுதியுள்ளதாகவும் , ஐயமில்லாததாகவும் , தெளிவுடையதாகவும் , எளிதிற்  பொருளுணரத்  தக்கதாகவும்  இருத்தல்  வேண்டும் . இங்ஙனம்  எழுதப்படும்  உத்தரமே  குற்றமற்றதாகும் .                                                                                                139

      ஐயத்திற்கிடமானதும் , நிகழும்  விவாதத்தினின்றும்  வேறுபட்டதும் மிகச்  சுருக்கமானதும் , மிக  விரிவானதும் , பூருவபக்கத்தின்  ஏகதேசத்தைப்  பற்றியதும்  ஆகிய   உத்தரங்கள்  தக்க  உத்தரமாகா .

      அழைக்கப்பட்ட  வாதியாதல் , பிரதிவாதியாதல்  தொடங்கிய  வழக்கைப்  பற்றி  ஒன்றுஞ்  சொல்லவில்லையாயின்   தோல்வியுற்றவராய்த்  தண்டத்திற்குரியராவர் .                                       141

      பூருவபக்கம்  உண்மையாயிருக்குங்கால் , அதற்குப்  பிரதிவாதி  உத்தரங்  கொடுக்கவில்லையாயின் , அவனைச்  சாமதான  முதலிய  உபாயங்களால்  வழக்கிற்  குறிப்பிட்ட  பொருளைக்  கொடுக்கும்படி   செய்தல்  வேண்டும் .                                                                                         142

      வாதியாதல் , பிரதிவாதியாதல்  அறியாமையாலுங்  கபடத்தாலும்  தம்  பூருவபக்க  உத்தரங்களிற்  சொல்லாதொழிந்த  செய்திகளை  அவ்விருவரிடத்தும்  வினாவப்படுங்  கேள்விகளால்  அறிந்துகொள்ளல்  வேண்டும் .                                                                                                            143

11 . எதிர்மொழியின் [ உத்தரத்தின் ] வகைகள்

            உண்மை , பொய்ம்மை , பிரத்தியவற்கந்தனம் , பூருவநியாயம்  என  எதிர்மொழி  நான்கு  வகைப்படும் .                                                    144

      வாதியாற்  கூறப்பட்ட  உண்மை  மொழிகளைப்  பிரதிவாதி  உடன் படுவானாயின் , அஃது  உண்மை  உத்தர மென்றறியப்படும்.  அதனைப்  பிரதிபத்தி  என்றுங்  கூறுவர் .                                                    145

      பிரதிவாதி , வாதியாற்  கூறப்படும்  பூருவபக்க  மொழிகளைக்  கேட்டு  அவற்றைச்  சொல்லாலும்  பொருளாலும்  தடுத்துரைப்பானா யின்  அது  பொய்ம்மை  யுத்தர மென்றறியப்படும் .                               146

      “இது  முற்றும்  பொய்”  எனவும்  “இதனை யான் அறிவேனல்லேன்” எனவும் , “காரியம்  நிகழ்ந்ததாகக்  குறிப்பிட்ட  காலத்தில்  யான்  அந்நிகழ்ச்சி  இடத்தில்  இருந்ததில்லை “  எனவும், “அக்காலத்தில்  யான்  பிறந்ததே  இல்லை “  எனவும்  பிரதிவாதி  கூறும்  முறை  பற்றிப்  பொய்மை  யுத்தரம்  நான்கு  வகைப்படும் .                                             147

      வாதியா  லெழுதப்பட்ட  பூருவபக்கப்  பொருள்களைப்  பிரதிவாதி  முற்றும்  அங்கீகரித்து  அங்ஙனம்  நேர்ந்ததற்குரிய  காரணத்தைக்  கூறுதல்   பிரத்தியவற்கந்தனம்  என்னும்  உத்தரமாகும் .                      148

( இவ்வுத்தரம் , வாதியின்  வழக்கிற்  கூறப்பட்ட  பொருள்களைப்  பிரதிவாதி  உடன்பட்டு , வேறுவிதமாக  அங்ஙனம்  நேர்ந்தற்குரிய  காரணங்களைத்  தெரிவித்து , வழக்கை  விலக்கிவிடல்  வேண்டுமென்று  கூறுவதாகும் .  )

       “இவ்விடயமாக  இவனோடு  எனக்கு  முன்னரே  வழக்கு  நேர்ந்ததுண்டு ; அப்பொழுது  இவன்  தோல்வி  யெய்தினான்”   என்று  பிரதிவாதி  கூறுவானாயின் , அது  பூருவநியாய  மென்னும்  உத்தரமாகும் .                                                                                                      149

( இப்பூர்வ நியாயோத்தரம்  முன்னொரு  நீதிபதியால்  தீர்ப்புச்  செய்யப்பட்டு  அதன்  மேற்  மற்றொரு  நீதிபதியினிடத்து  அகாரணப்பட்ட  வழக்கைப்  பற்றியதாகும் . )

      “இவன்  முன்னர்   என்னால்  தோல்வியுற்றானென்பதை  வெற்றிப்  பத்திரத்தாலும் , நீதிமன்றத்தாராலும் , சான்று  கூறியவராலும்  யான்  உறுதிப்படுத்துவேன்”  என்றிங்ஙனம்  பிரதிவாதி  கூறுமுகத்தால்  பூருவ நியாய மென்னும்  உத்தரம்  மூன்றுவகைப்படும் .                      150

      வாதி பிரதிவாதிகளுடைய  பூருவபக்கமொழியையும் , உத்தரத்தையும் ஒருவர்க்கொருவர் முன்னிலையில்  வாங்கவேண்டும்.  அங்ஙனம்  வாங்காத   நீதிமன்றத்தார் , கள்வரை யொப்பத் தண்டம்  எய்துதற்குரியராவர் .                                                                                         151

( இதனால் , வாதி  தனக்குள்ள  குறையைத்  தனியே  அரசனிடம்  வந்து  தெரிவித்துக் கொள்வது  ஆவேதனம்  என்பதும் , பின்  நீதிமன்றத்தில்  பிரதிவாதி  முன்னிலையில்  அவ்  ஆவேதனத்தைப்  பற்றி  விளக்கிக்  கூறுவது  பூருவபக்கம்  என்பதும்  போதரும் . வாதி  தன்  பூருவபக்கத்தை  நீதிமன்றத்தில்  பிரதிவாதி  முன்னிலையிலும்  தெரிவிக்க  வேண்டுமென்பதாம் . )

      பூருவபக்கபத்திரமும் , உத்தரபத்திரமும் , நன்கு  ஆராயப்பட்டுக்  குற்றமில்லாதனவாயிருப்பின்  அதன்மேல்  வாதி  பிரதிவாதிகளுடைய  பத்திரம் , சான்று , ஆட்சி  முதலிய   சாதனங்களே  தீர்ப்புக்குக்  காரணங்களாகும் .                                                                                              152

( இருவருடைய  பத்திரங்களும்  குற்றமற்றனவாக  ஏற்றுக்  கொள்ளப்பட்டபின் , அவர்தம்  சான்று  முதலிய  சாதனங்களின்  வன்மை  மென்மை  நோக்கி  நீதிபதி  தீர்ப்புச்  செய்தல்  வேண்டுமென்பது  கருத்து .)

      ஒரு  வழக்கிற்குப்  பூருவபக்கம்  முதற்பாதமாகவும் , உத்தரம்  இரண்டாம்  பாதமாகவும் , சான்று  முதலிய  சாதனங்கள்  மூன்றாம்  பாதமாகவும் , தீர்ப்புச்  செய்தல்  நான்காம்  பதமாகவும்  உள்ளன .   153

      பூருவபக்கங்  காரியமெனவும் , சான்று  முதலிய  சாதனங்கள்  கிரியை  எனவும்  கூறப்படுவனவாம் . ஆதலால்  வாதி , வழக்கின்  மூன்றாம்  பாதமாகிய  கிரியையினால்  தன்  பக்கத்தை  உண்மைப்படுத்தல்  வேண்டும் .                                                                     154

      உண்மையுத்தர மில்லாத  வழக்குகளெல்லாம்  நான்கு  பாதங்களையுடையனவாகும் .                                                                        155

 ( பிரதிவாதி  வாதியின்  வழக்கை  உண்மை  யென்றுடன்பட்டு  அவன்  வேண்டுகோளை  நிறைவேற்றிவிடின் , அவ்வழக்கில்  மூன்றாம்  பாதமாகிய  கிரியையும், நான்காம்  பாதமாகிய  தீர்ப்பும்  பயனிலவாதலின்  உண்மை  உத்தரமுள்ள  அவ்வழக்கில்  எஞ்சிய  இரண்டு  பாதங்களே  உள்ளன வென்றறியப்படும் . )

      நீதிபதி  முதலியோர்  தம்பால்  வரும்  வழக்குகளை  வந்த  முறைப்படியாதல் , காரியத்தின்  பெருமை  நோக்கியாதல் , எவர்க்குத்  துன்பம்  மிகுதியாக வுள்ளன?   எக்காரியம்  மிக  அதிகமாகவுள்ளன?  என்றிவ்வாறு  பகுத்துணர்ந்தாதல், அந்தணர்  முதலிய  வருண முறை  பற்றியாதல்  முறைப்படுத்து  முதற்கட்டொடங்கி  விசாரித்தல்  வேண்டும் .                                                                                                    156-157

      நீதிமன்றத்தினர் , பிரதிவாதியினிடத்தினின்றும்  உத்தரம்  பெற்றபின் , வாதி  பிரதிவாதிகளாகிய  இருவருள்  ஒருவற்குச்  சான்று  முதலிய  சாதனங்களைப்  பற்றிச்  சிந்தித்தற்பொருட்டு  அவகாசங் கொடுத்தல்  வேண்டும் .                                                                                    158

 ( இன்ன  இன்ன  வழக்கில்  இன்னார்  இன்னார்  சான்று  முதலிய  சாதனங்காட்டல்  வேண்டுமென்று  பின்  161-ஆம்  சுலோகத்திற்  கூறுவராதலின் , அப்பொறுப்புடையாரைக்  குறித்து  ஈண்டுப்  பொதுவாகக்  கூறப்பட்டது . )

     தன்  பக்கத்தைச்   சந்தித்தற் பொருட்டு  அவகாசம்  பெற்றவன்  பத்திரம்  முதலிய  சாதனங்களால்  தான்  மேற்கொண்ட  எல்லாக்  காரியங்களையும்  உண்மையாக  உறுதிப்படுத்தல்  வேண்டும் .    159

      ஒரே வழக்கில்  சான்று  முதலிய  சாதனங்காட்டும்  பொறுப்பு , வாதி  பிரதிவாதிகளாகிய  இருவர்க்கும்  இன்று ; இவ் விருவருள்  ஒருவனே   காட்டற்பாலன் .                                                                                                  160

( இச்சுலோகத்திற்கு  இவ்வாறன்றி , “ஓரே  வழக்கில்  வாதி  பிரதிவாதிகள்  இருவரும்  காட்டும்  சான்று  முதலிய  சாதனங்களெல்லாம்  உண்மையாக  மாட்டா ; இவ் விருவருள்  ஒருவர்  காட்டும்  சாதனங்களே  உண்மையாகும் “  என்றிக் காலவியல்புக்  கேற்றவாறு  உண்மை  என்னுஞ் சொல்லை  வருவித்துப்  பொருள்  கூறுதலும்  பொருந்தும் . )

      சான்று  முதலிய  சாதனங்  காட்டும்  பொறுப்பு , பொய்ம்மை யுத்தரங்  கொடுக்கப்பட்ட  வழக்கில்  வாதியின்பாலும்  , பிரத்தியவற்கந்த னோத்தரங்  கொடுக்கப்பட்ட  வழக்கிலும்,  பூருவ  நியாயோத்தரங்  கொடுக்கப்பட்ட  வழக்கிலும்  பிரதிவாதியின் பாலும்  உள்ளதாகும் .                                                                                                      161

( இம் மூவகை  உத்தரங்களும்  இன்னவென்பதை  இப்பிரகரணத்தில்  146-முதல்  149  வரையுள்ள  சுலோகங்களிற்  காண்க . )

      வாதியாற்  கொண்டுவரப்பட்ட  பூருவபக்கமும்  சில  காரணங்களால்  ஒரோவமயம்  உத்தரபக்கத்  தன்மையை  யெய்துவதாகும் .                                                                                               162

( இதனால்  வாதியின்  வழக்குத்  தன்  பூருவபக்கத்தை  யொழித்து  எதிர்ப் பக்கத்தை  வலியுறுத்தல்  கூறப்பட்டது . )

12 . சாதனங்களின்  இயல்பு

     பிரதிவாதி  எதிர்மொழி  கொடுத்தபின், வாதி, தான்  மேற்கொண்ட  பூருவபக்கப்  பொருட்குரிய  சாதனங்களை  எழுதுவித்தல்  வேண்டும் . அச்சாதனம்  மானுடம் , தெய்விகம்  என  இருவகைப்படும் .                163

      அனுபவம் , இலிகிதம், சான்று  என  மாநுட  சாதனம்  மூன்று  வகைப்படும் . துலாக்கோன்  முதலியன  தெய்விக  சாதனமாகும்  . அது, நிகழ்ந்த  உண்மை  மாநுட  சாதனத்தால்  அறியப்படாதிருக்குங் கால் , அதனை யறிதற்பொருட்டு  மேற்கொள்ளற்பாலதாகும் .            164

      மாநுடசாதனமும் , தெய்விக  சாதனமும்  தனித்தனியே  தத்துவ மெனவும் , சலசாமெனவும் , இருவகைப்படும் . உண்மைப்பொருளை  நிகழ்ந்தவாறு  தெரிவிப்பது  தத்துவசாதனமாகும் . அவற்றைக்  கபட  முதலியவற்றால்  தெரிவிப்பது  சலசாதனமாகும் .                              165

( தத்துவசாதனம் – உண்மைச்சாதனம் ; சலசாதனம்- வஞ்சக சாதனம்.)

      அரசன்  பொருந்துமாற்றாலும் , வழியளவையாலும்  , சாம  முதலிய  உபாயங்களாலும்  சலம்  இன்னவென் றுணர்ந்து , அவற்றை யொழித்து , உண்மைச்  சாதனங்களால்  வழக்குகளை  என்றும்  ஆராய்தல்   வேண்டும் .                                                                                   166

( பொருந்துமாறு – யுக்தி . வழியளவை – அநுமானம் .)

      அரசன்  வழக்கிற்குரிய  சாதனங்களால்  காண்டலிற்  காலந்தாழ்த்தலாகாது . அங்ஙனம்  காலந்தாழ்த்தலால்  அறக்கேடாகிய  பெருங்குற்றம்  விளையும் .                                              167

      அரசன்  வாதி  பிரதிவாதிகளின்  முன்னிலையில்  சான்று  முதலிய  சாதனங்களை யறிதல்  வேண்டும் .  அவர்கள்  கண்முன்  இல்லாமல்  அச்சாதனங்களை  ஏற்றுக்கொள்ளலாகாது .                                              168

( இப்பொருள்  பற்றிய  இப்பிரகரணத்தின்  151-ஆம்  சுலோகம்  நீதிமன்றத்தாரைப் பற்றியும் , இஃதரசனைப்  பற்றியும்  கூறப்பட்டனவாதலின்  இவ்விரண்டற்கும்  வேறுபாடுண்மை யுணர்க . )

       வாதி  பிரதிவாதிகளுடைய  சாதனங்களிலுள்ள  குற்றங்களை  விசாரகாலத்தில்  முறையே  பிரதிவாதியும்  வாதியும்  நீதிநூன்  முறையைத்  தழுவி  எடுத்துரைத்தல்  வேண்டும் . அக் குற்றங்கள் அவர் களால்  வெளிப்பட்டிலவாயின் , அக் காலத்தில்  நீதிமன்றத்தார்  நீதி  நூல்களைக்  கொண்டு  அவற்றை  வெளிப்படுத்தல்  வேண்டும்.     169

  ( வாதியின்  சாதனக்  குற்றங்களைப்  பிரதிவாதியும் , பிரதிவாதியின்  சாதனக் குற்றங்களை  வாதியும்  எடுத்துரைத்தல்  வேண்டுமென்பது  கருத்து . )

     நீதிநூன்  முறையைத்  தழுவாமல்  சாதனங்களை  நிந்திக்கும்  வாதி  தான் மேற்கொண்ட  வழக்கைத்  தவறவிட்டுத்  தண்டத்திற்கும்  உரியனாவான் . ஆதலின் தன்  சாதனங்களை  நன்றாக  ஆராய்ந்து  காரிய  நிருணயத்தில்  உபயோகப்படுத்தல்  வேண்டும் .                      170

( சாதனங்கள்  ஈண்டு  வாதியின்   வழக்குரையை   மறுத்துப்   பிரதிவாதி  தெரிவிக்கும்  உத்தரத்தைப்  பற்றினவாகும் .)

     வாதியாதல் , பிரதிவாதியாதல்  கபட சாதனங்களை  உபயோகப்படுத்துவராயின் , அவ்வழக்குகளின்  பெருமை  சிறுமைக் கேற்றவாறு  தண்டம்  எய்துவர் . பொய்ச்சான்று  கூறுவோரும்  மாறுபட்டுச்  சான்றுரைப்போரும்  அத்  தண்டத்திலும்  இருமடங்கு  தண்டம்  எய்துவர் .                                                                                             171

13 . இலிகித  வகைகள்

          இனி, உள்ளவாறு  எழுதப்படும்  இலிகிதங்களை  முறையே கூறுவேன் . பிரமனால்  முன்னிகழ்ந்தவற்றை  நினைவுகூர்தற் பொருட்டு   இலிகிதம்  நிரூபிக்கப்பட்டது .                                                  172

      பத்திரம், இராசகீயம் , இலெளகிகம்  என  இரண்டு  வகைப்படும் .  அவ்விரண்டும்  தனித்தனியே  தன்  கையாலெழுதப்படுவன , பிறர் கையா லெழுதப்படுவன  என  இவ்விரண்டு  வகைப்படும் . இன்னும்  அவை  சான்றுடையன , சான்றில்லாதன  என  இவ்விரண்டு  வகைப்படுவனவாம் . இவ்விருதிறத்துப்  பத்திரங்களும்  அவ்வத்  தேய  நிலைக்கேற்ப  எழுதி  முடிக்கப்படுவனவாம் .                                          173

( இதனால்  இங்குக்  கூறிய  பத்திரங்கள்  எட்டு  வகைப்படும் . அவை  வருமாறு :  [1] தன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றுடன்  கூடியது . [2] தன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றில்லாதது . [3]  பிறன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றுடன்  கூடியது . [4]  பிறன்  கையாலெழுதப்பட்டுச்  சான்றில்லாதது  ஆகிய  இந்நான்  கினையும்  இராசகீயம் , இலெளகிகம்  என்னும்  இரண்டனோடும்  உறழ எட்டாதல்  காண்க . )

     பாகம் , தானம் , விலை கொண்டு விற்றல் , விலை கொடுத்துக்  கொள்ளல் , பெறுதல்  [ ஆதானம் ] தொழில்  நடத்தல் [சம்வித்தானம்] , கடன்  ஆகிய  இக்காரணங்களால்  இலெளகிக  பத்திரம்  பின்னரும்  எழுவகைப்படும் . கட்டளையிடுதல் , அறிவித்தல் , தீர்மானித்தல்  என்னும்  இக்காரணங்களால்  இராசகீய  பத்திரம்  பின்னரும்  மூன்று  வகைப்படும் .                                                                                                   174

      சான்றுடையதும் , தாயத்தாரால்  அங்கீகரிக்கப்பட்டதும் , நன்றாக  எழுதப்பட்டதும்  ஆகிய  பாகபத்திரம்  பயன்படுவதாகும் . அங்ஙனமல்லாத  பத்திரம்  தந்தையாற்  செய்யப்பட்டதாயினும்  ஏற்றுக்கொள்ளத்தக்க தன்றாம் .                                                                   175

      நில  முதலிய  தாவரப்  பொருள்களின்  தானம் , விற்றல் , கொள்ளல்  என்னும்  இவை  பற்றிய   பத்திரங்கள்  தாயத்தாரால்  அங்கீகரிக்கப்பட்டனவாகவும் , கிராமத்  தலைவனாற்  சான்றுக்  கைச்சாத்திடப்பட்டனவாகவும்  இருப்பின்  பயன்படுவனவாம் .        176

      அரசன்  கையாலெழுதப்பட்டதும் , அவன்  முத்திரையாலடையாள மிடப்பட்டதும் , அவன்  அநுமதி  பெற்று மந்திரி  முதலிய  பிரகிருதிகளால்  முத்திரையிடப்பட்டது மாகிய  இம்  மூன்றும்  இராசகீய  பத்திரங்களாம் .                                                                             177

      பூருவபக்க  பத்திர  முதலியவற்றில்  முறையே  விளக்கி  எழுத  வேண்டியவை  : யுகம் , ஆண்டு , திங்கள் , பக்கம் , திதி , வேளை , நாடு , தலைநகர் , நகரம் , சாதி , உருவம் , வயது , விடயம் , சான்று  முதலிய  பிரமாணம் , பொருள் , அதனளவை , தன்பெயர் , அரசன் பெயர் , இருப்பிடம் , எதிர்ப்பக்கத்துப் பெயர் , எல்லோர்க்கு  முன்னோர்களின்  பெயர்கள் , நேர்ந்த  துன்பம் , அதனை  யடைந்தவன் , அதனைக்  கொடுத்தவன் , அதனைப்  பொறுத்திருந்ததற்குரிய   அடையாளங்கள்  ஆகிய  இவையும்   மற்றை  இன்றியமையாச்  செய்திகளுமாம் . 170-180

( நாடு , தலைநகர், நகரம்  இம் மூன்றற்கும்  முறையே  உதாரணம்  வருமாறு : பாண்டிய நாடு , மதுரை , ஒருவன்  வசிக்கும்  ஊர் .)

      எப்  பத்திரத்தில்  மேற்கூறியவெல்லாம்  எழுதப்படவில்லையோ  அது  குறைவுடையதாய்ப்  பிரமாணமில்லாததாகும் . எப் பத்திரம்  முறைதவறினதாகவும் , மாறுபட்ட  பொருளுடையதாகவும் , பலவகைப்பொருள்  தருவதாகவும் , பொருளில்லாததாகவும் , நீண்ட  காலத்திற்கு  முன்  எழுதப்பட்டதாகவும்  உள்ளதோ  அப்பத்திரம்  பிரமாண  சாதனமாகாது . அங்ஙனமே  அறிவில்லாதவனாலும் , பெண்களாலும்  எழுதப்பட்டனவும் , வலிந்து  பற்றி  எழுதப்பட்டனவுமாகிய  பத்திரங்களும்  பிரமாண  சாதனமாகா. 181-82

      ஒரு  வழக்கில்  உண்மைப்  பத்திரங்களாலும், உண்மைச்  சான்றுகளாலும்,  உண்மை  ஆட்சிகளாலும் , தெய்விக  சாதனங்களாலும்  தன்  பக்கத்தை உண்மைப்படுத்தும்  மனிதன்  இம்மையிலும்   மறுமையிலும்  இன்பத்தை  நுகர்பவனாவான் .         183

14 . சான்று  கூறுவோர்  இயல்பு

     உரியவரினின்றும்  வேறானவராய்க்  காரிய நிகழ்ச்சியை யறிந்தவர்  சான்று  கூறுவோராவர் . அவர்  நிகழ்ந்தது  கண்டோன் , நிகழ்ந்தது   கேட்டோன்  எனவும் , கிரதன்  அகிருதன்  எனவும்  பலவகைப்படுவர் .                                                                               184

( கிருதன் – நிகழாத  ஒன்றைக்  கூறும்படி  கற்பிக்கப்பட்டவன். அகிருதன் – அங்ஙனம்  கற்பிக்கப்படாதவன் .)

      எவன்  முன்னரே  வாதி  பிரதிவாதிகளின்  முன்னிலையில்  ஒன்றைக்  கண்டும்  கேட்டும்  அநுபவித்தவண்ணம்  மாறுபடாமற்  கூறுகின்றானோ  அவன்  சான்று  கூறுவோனாவான் .                           185

      எவனுடைய  புத்தி , நினைவு , செவி , இவைகள்  நாள்  பலவாகியும்  கேடெய்தாமல்  இருக்கின்றனவோ  அவனே  எப்பொழுதும்   சான்று  கூறுந்  தன்மைக்குத்  தகுதியுடையனாவான் .                                            186

      எவன்  உலகில்  அநுபவ  முதிர்ச்சியையும் , உண்மை  கூறுதலையுமுடையானோ  அவனுஞ்  சான்று  கூறுந்  தன்மைக்குத்  தகுதியுடையனாவான் . உபயவாதிகளாலும்  அங்கீகரிக்கப்பட்ட  ஒருவன்  அறநெறி  யுணர்ந்தவனாயிருப்பின்   அவனுஞ்  சான்று  கூறுதற்குத்  தகுதியுடையனாவான் .                                                           187

      இல்லறநிலையி லொழுகுவார் , பிறர்வயப்படாதார் , புலமை மிக்கார் , நம்  நாட்டில்  வாழ்வார் , யெளவனப்பருவ முடையார் , ஆகிய  இவர்  எல்லோரும்  சாதி  குலங்களுக்கேற்றவாறு  எல்லா  விடயத்திலும்  சான்று  கூறத்தக்கவராவர் . பெண்கள்  பொருட்டுப்  பெண்கள்  சான்று  கூறுதற்குத்  தகுதியுடையராவர் .                                                            188-189

      கொள்ளை, களவு , வலிந்து  பற்றல் , கடுஞ்சொற் கூறி வைதல் , கடுமையாக  அடித்தல் ஆகிய இவ்வெல்லாக்  காரிய நிகழ்ச்சிகளிலும்  சான்று  கூறுவாரைச்  சோதித்து   வினாவலாகாது.                              190

      சான்று  கூற  நேருங்கால்  அறிவின்மையாற்  பாலரும் , பொய்கூறும்  இயற்கையாற்  பெண்களும், தீவினைப்  பயிற்சியால்   வஞ்சகரும் , அன்புரிமையால்  உறவினரும் , பகை  களைய  வேண்டுமென்னும்  கருத்தாற்  பகைவரும், அகங்காரத்தால்  இழிந்த  சாதியினரும் , பொருணாசையாற்  றீயோரும் , தம்  சீவனத்தொழில்  வருவாய்  சுருங்கிவிடுமென்னும்  அச்சத்தாற்  பணியாளரும்  மாறுபடக்  கூறுவராதலின், இவர்கள்  சான்று  கூறுதற்குத்  தகுதி   இல்லாதவராவர் . பொருட்  சம்பந்தமுடையாரும்  , உடன்  படித்தல்  முதலிய  கல்விச்  சம்பந்தமுடையாரும் , பெண்மக்களின்  சம்பந்தமுடையாரும்  சான்று  கூறுவோராகார் .                              191-192

      சிரேணி , வருக்கம்  என்னும்  குழுவினருள்  ஒருவன்  அவரோடு  பகை  கொள்ளுவானாயின் , அவரெல்லாரும்  அவற்குப்  பகைவராதலின் , அவர்  சான்று  கூறுதற்குத்  தகுதியுடையராகார் . 193

 ( சிரேணி  வருக்கங்களைப்  பற்றி  30-31-ஆம்  சுலோகங்களிற்  காண்க .)

      வாதி  பிரதிவாதிகளின்  முன்னிலையில் வைத்துச்  சான்று  கூறுவோரை  விசாரித்தற்கண்ணும் , வழக்கு  நிகழ்ச்சியைத்  தீர்மானித்தற் கண்ணும்  அரசன்  காலந்தாழ்த்தலாகாது . அவ்  வாதி  பிரதிவாதிகளின்  கண்ணெதிரிலேயே  சாட்சி  விசாரணை  நடத்தல்  வேண்டும் . எவ்வாற்றானும்  அவர்  பார்வையிலன்றி  நடத்தலாகாது . எவன்  அரசனாற்  கட்டளையிடப்படும்  சான்று  கூறுதலை  உடன்படுகின்றானில்லையோ  அவன்  தண்டம்  எய்துவான் . 194-195

      நீதிபதியின்  முன்னிலையில்  வாதி  பிரதிவாதிகளாற் சான்று  கூறுதற் பொருட்டுக்  காட்டப்படாதவனும் , அரசனாலழைக்கப் படாதவனும் , கட்டளை  பெறாதவனுமாகிய  இவ்விழி தக்கோர்  நீதிமன்றத்தில்  தாமே  வந்து  உண்மை  கூறினும்  பொய்  கூறினும்  தண்டம்  எய்துதற்குரியராவர் .                                                        196

      சான்று  கூறுவார்  மொழிகள்  ஒருமைப்பாடின்றி  ஐயத்திற்கிடனாகுங்கால்  பலர்  கூறும்  ஒன்றுபட்ட  மொழிகளையும்,  சான்றுரைப்பார்  இருதிறத்தும்  ஒத்த  அளவினராகுங்கால் அவருட்  குணமுடையார்  மொழிகளையும்  அவர் எல்லோருங்  குணமுடையராயிருப்பின்  அவருள்  அதிக  குணம்  வாய்ந்தார்  மொழிகளையும்  எப்பொழுதும்  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் .     197

( சான்றுரைப்பார்  ஒரு  காரியத்தில்  இருதிறப்பட்டுக்  கூறுவாராயின்  ஏற்றுக்  கோடற்குரிய  உபாயங்  கூறியவாறு .)

      ஒரு  நிகழ்ச்சியைக்  கண்டு  அல்லது  கேட்டிருக்கு மொருவன் , சான்று  கூறுதற்கண்  நியமிக்கப்பட்டில னெனினும் , அவனை  அது  பற்றிக்  கேட்பின்   அவன்  கண்டதை  அல்லது  கேட்டதனை  அவ்வாறே  எடுத்துரைத்தல்  வேண்டும் .                                                                           198

      வெவ்வேறு  காலங்களிற்  சான்று  கூறுவோரால்  அறியப்பட்ட  நிகழ்ச்சிகளின்  கூறுகளைப்பற்றி  ஆராயுங்கால் , அச் சான்றாவார்  ஒவ்வொருவரையும்  தனித்தனியே  விசாரித்தல்  வேண்டும் . இவ்விடயத்தில்  இவ்விதி   தொன்றுதொட்டு  வழங்கி வருவதாகும் .  199

15 . சான்று  கொள்ளு  முறை

     சான்று  கூறுவார்  இயற்கையாகக்  கூறும்  சொற்களையே  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் . ஒரு  பொழுதும்  வலிந்து  கூறும்படி  செய்தலாகாது . அவர்  சான்று  கூறுங்கால்  மீண்டும்  மீண்டும்  அவரைப்  பலவாறு  வினாதலாகாது .                                                         200

      சான்று  கூறுவோரை  யழைத்து  அவரைச்   சூளுறவால் மிகவும்  அடக்குவித்து  வினாதல்  வேண்டும் . இன்னும்  புராணங்களிற்  கூறப்பட்ட  உண்மை மொழிதலின்  பெருமையையும் , அறத்தின்  மாட்சியையும்  எடுத்துரைத்தலானும் , பொய்  கூறுதலால்  உண்டாகும்  மிக்க  குற்றங்களை  எடுத்து  மொழிதலானும்  அவரை  மிகவும்  மெல்ல மெல்ல  அச்சுறுத்தல்  வேண்டும் .                                                201

      சான்று  கூறுவோனை  நோக்கி “எவ்விடத்தில் , எக்காலத்தில் , எக்காரணத்தால் , எங்ஙனம் , யாது நின்னாற்  காணப்பட்டது ?    யாது  கேட்கப்பட்டது ?   யாது  எழுதப்பட்டது ? யாது  எழுதுவிக்கப்பட்டது ?  அவ் வெல்லாவற்றையும்  நிகழ்ந்தவாறே  உண்மையாகக்  கூறுக “  என்றிவ்வாறு  வினாதல்  வேண்டும் .                                                       202

( இச் சுலோக முதல் 208-ஆம்  சுலோகம்  வரை  கூறப்பட்டவையெல்லாம்  நீதிமன்றத்தார்  சான்றுரைப்போனை  நோக்கி   அவன்  உண்மை  கூறுதற்பொருட்டுக்  கூறும்   நீதிமொழிகளாம் .)

      “சான்றுரைப்போன்  உண்மை  கூறுவானாயின் , இம்மையிற்  சிறந்த  புகழையும் , மறுமையுலகத்திற்  சிறந்த  இன்பங்களையும்  அடைவான் . இவ் வுண்மைமொழி    பிரமனால்  மிகவும்  பாராட்டப்பட்டுள்ளது”                                                                                  203

      சான்றுரைப்போன் , வாய்மையினாலேயே  தூய்மை யுடையனாவான் . அவற்கு  அவ்  வாய்மையினாலேயே  அறமும்  மிகுவதாகும் . ஆதலால்  எல்லா  வருணத்தின்கண்ணுமுள்ள  சான்றாவாரெல்லாரும்  வாய்மையே  மொழியக்கடவர் “                 204

      “சீவான்மாவின்  கன்மங்களுக்கு  அதன்  உள்ளிருக்கும்  இறைவனே  சான்றாவான் . அச்  சீவான்மாவிற்குப்  புகலிடமும்  அவ் விறைவனே . ஆதலின்  மனிதர்  பொருட்டு  உத்தமமான  சான்றுரைக்குத்  தன்மையை  எய்திய  நீ  பொய்க்கரி  கூறி  அதனால்  நின்னை  அவமானத்திற் குட்படுத்தலாகாது”                                                           205

      “தீங்கு புரிவானொருவன்  தன்  செயலை  யாருங்  காணமாட்டார்  என்று  எண்ணுகின்றான் . அவன்  உள்ளிருக்கும்  இறைவனும்  மற்றைத்  தேவர்களும்  அவன்  செயல்  முழுதையும்  நன்றாகப்  பார்க்கின்றனர் “.                                                                                           206

      “பல  பிறப்புக்களிற்  சிறிது  சிறிதாக  நீ  கட்டிய  புண்ணியமெல்லாம்  பொய்ச்சான்று  கூறி  எவனைத்  தோல்வியுறச் செய்கின்றாயோ  அவனைச்  சார்ந்துவிடும்  என்பதையும்  , நின்  பொய்ச் சான்றாற் றோல்வி யுற்றான்  பல பிறப்புக்களில்  செய்த  பாவம்  எல்லாம்  நின்னைச்  சார்ந்துவிடும்  என்பதையும் அறிவாயாக “  என்றிங்ஙனம்  சான்று  கூறுவோனை  நீதிமன்றத்திற்  பலர்  முன்னிலையில்  வைத்துக்  கூறவேண்டும் .                                      207-8

      அரசன்  வாதி  பிரதிவாதிகளின்  காரிய  நிகழ்ச்சிகளுக்கு  உபயோகமான  தெய்விக  இராசகீய  நிமித்தங்களைப்  பகுத்துணர்ந்து சான்று  முதலிய  சாதனங்களை  ஒழுங்குபடுத்தித்  தன்பாற்  காட்டுதற்  பொருட்டு , அவர்க்கு  அவகாசம்  கொடுத்தல்  வேண்டும்                  209

      அரசன் , வழக்குரைப்போர்பாற்  பத்திர  சாதனமில்லையாயின் , அவர்தம்  சான்றுகளாலும் , அநுபவங்களாலும்  வழக்கை  விசாரித்தல்  வேண்டும். அப் பத்திரங்களோடு  சான்றுகளும்  இல்லையாயின் , அவர்தம்  தடையில்லாத   அநுபவ  உண்மையால்  ஆராய்தல்  வேண்டும் .                                                                                                             210

      அத்  தடையில்லாத  அனுபவமும்  இல்லையாயின் , சான்றுகளாலும்  பத்திரங்களாலும்  ஆராய்தல்  வேண்டும் . அநுபவம் , இலிகிதம் , சான்று  ஆகிய  இம்  மூன்றுனுள்  ஒன்றினால்  ஆராய்தலும்  பொருந்தும் .                                                                                                          211

      அரசன்  வழக்காராயுங்கால்  வழக்குரைக்கும்  மக்கள்நிலை , அவர்  தேயநிலை , அவர்  அறநிலை  ஆகிய  இவற்றைச்  சிந்தித்தலாகாது. 212

      திறமை  மிக்க  தீயவர்  எப்பொழுதும்  பொய்ப்  பத்திரங்களை  இயற்றுவர் . ஆதலின் , பத்திரவழி  ஒன்றை  மாத்திரம்  நம்பி  ஒரு  பக்கம்  துணிதல்  தக்கதன்று .                                                                         213

      நட்பும் , பொருணசையும் , அச்சமும் , சினமும் , வஞ்சகமும்  ஆகிய  இக்  காரணங்களாற்  சான்றுரைப்போர்பால்  ஐயம்  நிகழுமாதலின் , சான்று  கூறுவோரை  மாத்திரம்  நம்பி  எப்பொழுதுங்  காரியங்களை   முடிவு  செய்தலாகாது .                                                                                      214

   அனுபவங்களில் , தலைவனுடைய  பொருளையாதல் , தலைவனையில்லாத  பொருளையாதல்  ஒருவன்  வன்மையாலும் , செருக்கினாலும் , அனுபவிக்கக்கூடும்  என்னும்  ஐயம்  நிகழுமாதலின் , அனுபவம்  ஒன்றை  மாத்திரம்  நம்பிக்  காரியங்களை  முடிவு  செய்தலாகாது .                                                                                                   215

     ஐயப்படுதற்குரிய  வழக்குகளில்  ஐயமுறுதலும் , அல்லாத  வழக்குகளில்  அங்ஙனம்  ஐயமுறாமையும்  வேண்டும் . ஐயப்படுதற்குரிய வல்லா வழக்குகளில்  ஐயமுறும்  நீதிமன்றத்தாரை  அரசன்  கள்வரை  யொப்பக்  கருதித்  தண்டித்தல்  வேண்டும் .           216

      ஐயமுறுதற்குரியவல்லா  வழக்குகளில்  ஐயமுறின் , அதனால்  அநவத்தை யென்னும்  குற்றமுண்டாம் ; உலகமும்  வேறுபாடெய்தும் ; அறமும்  நீதியும்  குறைந்துவிடும் .                                                                 217

( அநவத்தை – எல்லை யில்லாதது .)

      தானம்  கிரயம்  முதலிய  வரவோடு  கூடியதும் , பல்லாண்டுகள்  ஆனதும் , பிறரால்  தடைப்படுத்தப்படாததும் , இடையீடில்லாததும் , எதிரியின்  முன்னிலையில்  வைத்து  அநுபவிக்கப்பட்டதும்  ஆகிய  ஒரு  பொருளின்  அநுபவம்  பிரமாணமாகும் .                                          218

( அடைமொழியனைத்தும்  அநுபவத்தைப் பற்றி நிற்பனவாம் . )

      எவன் , ஒரு  பொருளின்  அநுபவ மாத்திரம்  தனக்குண்டென்று  கூறி, அதன்  வரலாற்றை  ஒரு பொழுதும்   தெரிவிக்கின்றானில்லையோ அவன்  வஞ்சகமான  அநுபவத்தைக்  கடைப்பிடித்திருத்தலால்  கள்வனென றறியப்படுவான் .                       219

      ஒரு  பொருள்  வந்த  நெறியை யுடையதாயிருப்பினும்  , அது  சிறிதேனும்  பெற்றவனால்  அனுபவிக்கப்படாமலிருப்பின்  வலியிழந்ததாகும் .                                                                                           220

16 . நெடுங்கால  அநுபவப்  பொருள்களின்  நிலைமை

     ஒரு  பொருளுடையான் , தன்  பொருளைத்  தன்  முன்னிலையில்  வைத்துப்  பிறனொருவன்  பத்தாண்டுகள்வரை  அநுபவிக்கத்  தான்  அதனைப்  பார்த்துக் கொண்டிருப்பானாயின் , அவன்  அப்பொருட்குரியவனாகான் . [ இழந்தான்  என்பதாம் ]                         221

( இங்குத்  தன்   பொருளை  யென்றது  நிலமல்லாத  பிற பொருள்களை, பின்வரும்  சுலோகத்தில்  நிலத்திற்கு  இருபது  யாண்டு  அநுபவங்  கூறப்பட்டிருத்தலின் .)   

      அரசியல்  நடைபெறுங்கால்  இவ்வுலகத்தில்  ஒருவனுடைய  நிலம்  பிறனொருவனால்  இருபது  ஆண்டுகள்  வரை  அநுபவிக்கப்பட்டிருப்பின் , அந் நிலத்திற்குரியான்  வலியுடையனாயினும்  அவற்கு  அந் நிலம்  உரியதாகாது . [ இருபது  ஆண்டுகள்  வரை  அநுபவித்தவற்கே  உரியதாம்  என்பதாம். ]        222

      ஒருவன் , தனக்குக்  கிரயம்  தானம்  முதலிய  நெறிகளால்  வாராத  பிறன்  பொருளைக்  கவர்ந்து  நூறாண்டுகள்  வரை  அனுபவித்துளானாயினும் , அது  வெளிப்படுங்கால்  அப் பாவியைக்  கள்வனை யொப்ப  அரசன்  தண்டிக்கக்  கடவன் .                                223

     ஒருவற்கு  ஒரு  பொருள்  கிரயம் , தானம்  முதலிய  நெறிகளால் வந்ததில்லை யெனினும்  , அஃது  அவனால்  ஒழிவின்றி  இடையூறில்லாமல்  அறுபதாண்டுகள்  வரை  அனுபவிக்கப்பட்டிருப் பின் , அப்பொருள்  பிறர்  எவராலும்  பெறத்  தக்கதன்றாம் .              224

( இதன்  முற்சுலோகத்திற்  கூறப்பட்ட  அநுபவம்  இடையூறும்  ஒழிவுமுடையதெனவும் , இதன் கட்  கூறப்பட்ட  அநுபவம்  அவையில்லாத  தெனவும்  பகுத்துணர்ந்து  முரணாமை  கொள்க . அன்றியும்  முன்னது  உரியாரிருப்ப  வன்மையாற்  கவர்ந்து  கொண்டு  அநுபவிக்கப்பட்ட  தெனவும் , பின்னது  உரியாரில்லாததாக  மற்றொருவனால்  தடையின்றி  அநுபவிக்கப்பட்ட  தெனவும்  கோடலும்  பொருந்தும் . )

      பந்தகப்  பொருளும் , எல்லைநிலமும் , இளைஞர்  பொருளும் , அடைக்கலமாக  வைக்கப்பட்ட  நிலையில்  இயங்கியற்  பொருள்களும்  அரசிறைப்  பொருளும் , அந்தணர்  பொருளுமாகிய  இவ்வெல்லாம்  பிறர்  அநுபவத்தால்  உரியவரிடத்தினின்றும்  விலகினவாகா .          225

( இளைஞர் – பொருளைப்  பாதுகாத்தற்குரிய  ஆண்டு  நிரம்பப்  பெறாதவர்  .  இயங்கியல் – சங்கமம் . நிலையியல் – தாவரம் .)

      ஒரு  பொருளைப்  பிறன்  அநுபவத்திற்காக  முன்னரே  நிச்சயிக்கப்பட்ட  காலங்கடந்துவிட , அதனைப்  பொருட்படுத்தாமல்  வாளாவிருக்கும்  அப்  பொருட்குரியவன்  பின்னர்  அப்பொருட்  பயனை  அடையான் .                                                                                        226

17 . தெய்விக  சாதன  வகைகள்

     இங்ஙனம்  அநுபவத்தின்  இயல்பெல்லாம்  சுருக்கிக்  கூறப்பட்டன . இனித்  தெய்விக  சாதனங்  கூறப்படும் . கடன்  கொடுத்தவன்  விழிப்பின்மை  காரணமாக  முற்  கூறப்பட்ட  பத்திரம் , சான்று , அநுபவம்  என்னும்  மூவகைச்  சாதனங்களையும்  இழந்திருக்கும்  வழக்கிலும் , பிரதிவாதி  நிகழ்ச்சிகளை  வஞ்சிக்கும்  வழக்கிலும் , பின்வரும்  மூவகைப்பட்ட   உபாயங்களையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                     227-28

      அவ்வுபாயங்களாவன : சோதனாப்  பிரதி  காலமும் , உத்திலேசமும், சபதமுமாம் , இம் மூன்றினாலும்  முறையே  உண்மையைத்  துணிதல்  வேண்டும் .                                                                                                            229

 ( உத்திலேசத்தை ,  அடுத்து  வருஞ்  சூத்திரத்திற்  காண்க . இலிகிதம்  முதலிய  சாதனங்களில்லாத  வழக்கில்  இம் மூன்று  உபாயங்களாலும்  உண்மை  ஆராய்தல்  வேண்டுமென்பது  கருத்து . இவற்றுள்  சோதனாப் பிரதி  காலமாவது : விசாரணை  நிமித்தம்  காலத்தை  மாற்றி  யமைத்தல் . அன்றி , உண்மை யறிதல்  பொருட்டு  ஒரே  விடயத்தை  மீண்டும்  மீண்டும்  பன்முறை  கூறும்படி  ஒருவனை  வினாதலுமாம் . உத்திலேசமாவது :  சாம தான  முதலிய  உபாயங்களால்  அறநெறி  பிறழாது  ஒருவனை  உண்மை  கூறச்செய்தல் .  சபதமாவது : தெய்வத்தை  முன்னிட்டுச்  சூழுறச் செய்தல் . பின்வரும்  230-231-ஆம்  சுலோகங்களில்  உத்தியினிலக்கணமும்  வகைகளும் , 232-ஆம்  சுலோகத்திற்  சோதனாப்  பிரதிகாலமும்  கூறப்பட்டுள்ளன . சபதம்  248-ஆம்  சுலோகத்தில்  காண்க . )

      நூன்முறைகளுக்கும் , ஆன்றோர்  ஆசாரங்களுக்கும்  மாறுபடாமல்  இயைக்கப்பட்டுச்  சிறந்த  தருக்கத்தோடுங்  கூடியது  உத்தியாகும் . அதுவே  தன்  காரியசித்திக்கு  உபயோகமாகும் . இங்ஙனமல்லாதது  உபயோகமாகாது .                                                                                          230

      தானம் , சாமம் , பேதம் , பொருணசை  காட்டல் , துணிந்த  பொருளினின்றும்  மனத்தை  வேறுபடுத்தல்  ஆகிய  இவ்  வைந்தும்  காரியங்களை  ஊகித்துணர்தற்குரிய  ஏதுக்களாம் .                           331

     ஒருவன்  மீண்டும்  மீண்டும்  மும்முறை  நான்குமுறை  ஐந்து  முறை  தடைபடுத்தி  வினாவப்பட்டும் , அத்  தடை  வினாக்களுக்கு  எதிர்த்து  விடை  தாரானாயின்  பின்னர்  அவனை  வாதி  விருப்பின்படி  பொருள்  கொடுக்கச்  செய்தல்  வேண்டும் .                                                                 232

( ஒரு  நிகழ்ச்சியைப்  பற்றி  மீண்டும்  மீண்டும்  பலமுறை  கேட்கப்படுந்  தடைவினாக்களுக்கு  எதிர்த்து  விடை  தாராதவன்  தோல்வி யுற்றவனாவான்  என்பது  கருத்து . )

      இங்குக்  கூறிய  உத்தி  வகைகள்  பயன்படா தொழியுமாயின் , சூளுறன்  முதலிய  தெய்விக  சாதனங்களால்  பிரதிவாதியை  உண்மை  கூறும்படி  கட்டளையிடல்  வேண்டும் .                                   233

      உண்மை யறியமுடியாத  காரியத்தில்  வாதி பிரதிவாதிகள்   இருவரும்  தத்தம்  தூய்மையைப்  புலப்படுத்துதற்பொருட்டு  மகான்களாகிய  தேவர்களால்  உபயோகப்படுத்தப்பட்டபடியால்  அவை  தெய்விக  சாதன மென்று  கூறப்படும் .                                        234

      உண்டி  முதலிய  சிறு  செயலிலும்  தம்  தூய்மையை  வெளிப்படுத்தற்பொருட்டு  வசிட்டர்  முதலிய  முனிவர்  எழுவராலும்   இத்  தெய்விக  சாதனங்கள்  மேற்கொள்ளப்பட்டன .                              235

      எவன் , தன்  பெருமையாலும் , அறிவின்  செருக்காலும்  வசிட்டர்  முதலிய  முனிவரால்  எப்பொழுதும்  மேற்கொள்ளப்பட்ட  தெய்விக  சாதனத்தைச்  செய்கின்றானில்லையோ  அம்மனிதன்  அறக்  கள்வனாவான் .                                                                                                     236

      தெய்விக  சாதனத்தைச்  செய்ய  நேர்ந்திருக்குங்கால்  எவ்வந்தணன்  அறிவின்மை  காரணமாக  அதனைச்  செய்கின்றானில்லையோ , அவனுடைய  அறம்  பொருள்களைத்  தேவர்  கவர்ந்து  கொள்வர் . இதன்கண்  ஐயமின்று .                                237

எவன் , தன்  தூய்மையை  விரும்பிச்  சோம்பலின்றித்  தெய்விக  சாதனத்தை மேற்கொள்ளுகின்றானோ  அவன்  சிறந்த  தூய்மை யுடையனாய்  இம்மையிற்  புகழையும்  மறுமையில்  துறக்கவின்பத்தையும்  அடைவான் . அங்ஙனம்  அச்  சாதனத்தை  மேற்கொள்ளானாயின்  அவ்விருமைப்   பயனையும்  எய்தான் .          238

      நெருப்பும் , நஞ்சம் , துலையும் , நீரும் , அறம்  பாவங்களும் , அரிசியும் , சூளுறவுகளும்  ஆகிய  இவை  முனிவரால்  தெய்விக  சாதன  நிருணயத்தில்  எடுத்துக்  காட்டப்பட்டுள்ளன .                         239

( இங்குக்கூறிய  நெருப்பு  முதலியவற்றைக்  கொண்டு  ஆராயு  முறைகளை  241-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . )

      முறையே  பின்னதனை  நோக்க , முன்னது  சிறந்ததாகவுள்ள  இத்  தெய்விக  சாதனங்களை , உலகம்  நம்புதற்பொருட்டுக்  காரியங்களின்  நிலைமையை  நோக்கி  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . ஆனால் , இங்குக்  கூறப்பட்ட  தெய்விகங்களெல்லாம்  சிறந்தனவென்றே  எண்ணப்படும் .                                                            240

      பழுக்கக்  காய்ச்சிய  இருப்புக்  கோளத்தைக்  கையில்  தாங்கி  ஒன்பதடி  நடத்தல்  வேண்டும் . இன்றேல்  எரிகின்ற  தழலில்   ஏழடி  தூரம்  கால்களால்  நடத்தல்  வேண்டும் . அன்றி , இரும்பினால்  உழுந்தளவினவாகச்  செய்து  கொதிக்கின்ற  எண்ணெயில்  இடப்பட்ட  உருண்டைகளைக்  கையினால்  அள்ளி  வெளிப்படுத்தல்  வேண்டும் . இன்றேல் , பழுக்கக்  காய்ச்சிய  இருப்புத்  தகட்டை  நாவினால்  நன்றாக  நக்கல்  வேண்டும் . [ இவை  நெருப்பினால்  ஆராயப்படுவனவாம் .]                                                                              241-42

      நஞ்சை  உண்ணல்  வேண்டும் . கைகளாற்  கரும்பாம்பைப்  புற்றினின்றும்  வெளியே  இழுத்தல்  வேண்டும் . [ இவை  நஞ்சால்  ஆராயப்படுவன. ]                                                                                         143

      ஒருவன்   முதலில்  தன்னை  ஒரு  துலையில்  நிறுத்தளந்து , அவ்வளவை  ஒரு  தட்டிலிட்டுப்  பின்  மற்றொரு  தட்டில்  தான்  ஏறி நின்று , முன்னையளவையிற்  குறைதல்  கூடுதல்களை  யொழித்துச்  சமனாதல்  வேண்டும் . [ இது  துலையாலாராய்யப்படுவது .]

( இதனால்  ஒருவனை  இரண்டு  முறை  நிறுத்துப்பார்க்க  வேண்டுமென்பதும் , இரண்டாமுறை  நிறுக்குங்கால்  முதலில்  நிறுத்த  அளவிற்  குறைந்தாதல்  மிக்காதல்  காணப்படுவானாயின்  அவன்  குற்றவாளியென்று  அறிய வேண்டுமென்பதும்  கூறப்பட்டன . )

     ஒருவன்  தான்  வழிபடும்  தெய்வத்திற்குச்  செய்த  திருமஞ்சன  நீரை  முதலிற்  பருகல்  வேண்டும் . அதன்பின்  அவனை  ஓரளவு  துணிவு  செய்யப்பட்ட  காலம்  வரை  நீரில்  மூழ்கி  இருக்கும்படி  செய்தல்  வேண்டும் [ இது நீரினா லாராயப்படுவது. ]                         245

      தரும வுருவத்தையும்  அதரும வுருவத்தையும்  கண்ணாற்  பாராமல்  தொடல்  வேண்டும் [ இஃது அறம் பாவங்களா லாராயப்படுவது. ]   246

( வெள்ளியினால்  தருமவுருவத்தையும் , இரும்பினாலாதல்  காரீயத்தாலாதல்  அதருமவுருவத்தையும்  அமைத்தல்  வேண்டும். அன்றிப்  பூர்ச்ச  இலையிலாதல்  துணியிலாதல்  தருமவுருவத்தை  வெண்ணிறமாகவும் , அதருமவுருவத்தைக்  கருநிறமாகவும்  எழுதலாம் . பின்  அவ்  வுருவங்களுக்குப்  பஞ்சகவ்வியம்  தெளித்துச்  சந்தனமிட்டு  வெண்மலரால்  தருமவுருவத்தையும் , கருமலரால்  அதருமவுருவத்தையும்  பூசித்தல்  வேண்டும் . பின்னர்  மண்ணுண்டைகளிலாதல்  சாணியுண்டைகளிலாதல்   அவ் விரண்டு  உருவங்களையும்  தனித்தனி  வைத்து  அவ்  வுண்டைகளைப்  புதிய  மட்பாண்டத்தில்  யாரும்  காணாவாறு  வைத்தல்  வேண்டும் . அம் மட்பாண்டத்தைக்  கடவுளர்  அல்லது  அந்தணர்  முன்னிலையில்  தூய்மை  செய்யப்பட்ட  இடத்தில்  வைத்து  அறக்கடவுளையும்  தேவர்களையும்  உலகபாலர்களையும்  ஆவாகனஞ்  செய்து  பூசித்துப்  பின்  அப்  பாண்டத்துள்ளிருக்கும்  உண்டைகளுள்  ஒன்றைத்  தெய்விகசாதனஞ்  செய்பவனைக்  கொண்டு  எடுப்பித்தல்  வேண்டும் . அவன்  எடுக்குங்கால்  “யான்  பாவமிலனாயின்   தருமம்  என்பாலுறுக”  என்று  பிரதிக்ஞை செய்து  எடுத்தல்  வேண்டும் . எடுக்கப்பட்டது  தரும  உருவமாயின்  அவன்  தூய்மையுடையான்  எனவும் , அதரும உருவமாயின்  தூய்மையிலான்  எனவும்  தெளிந்து  கொள்ளல்  வேண்டும் . இது  வாசஸ்பத்தியத்திற்  கண்டது .)

      கருட மென்னும்  அளவினவாகிய  அரிசிகளை  ஐயமுறாமல்  மென்றுவிடல்  வேண்டும் . [இஃது  அரிசியா லாராயப்படுவது. ]   247

( ஒருவன்  அரிசியைப்  பற்றித்  தெய்விக  சாதனஞ்  செய்ய  நேர்ந்துழி , நீதிபதி  அவன்  வழிபடும்  தெய்வம்  அல்லது  சூரியன்  இவர்கட்குத்  திருமஞ்சனஞ்  செய்த  நீரை  ஒரு  மட்பாண்டத்திற்  பெய்து , ஒரு  கருட  அளவு  எடையுள்ள  வெண்மை   நிறம்  வாய்ந்த  அரிசியை  அந்  நீரில்  முதனாள்  ஊறவைத்துப்  பூசித்தல்  வேண்டும் . முதனாள்  உணவொழித்திருந்த  அவன்  பிற்றை  நாட்  காலையில்  நீராடிச்  சூரியதேவனது  ஆலயத்தில்  கிழக்குமுகமாகவிருந்து  அவ்வரிசிகளை மென்று  பூர்ச்சம்  அல்லது  அரிசிலையில்  உமிழ்தல்  வேண்டும். மெல்லுங்கால்  அவனுக்கு  உடல்  நடுக்கமும்  வாயில்  இரத்தமும்  தோன்றி  உமிழ்நீரிலும்  இரத்தங்  காணப்படுமாயின்  அவன்  குற்றஞ்  செய்தவனாவான் . உமிழ்நீர்  அரிசியின்  நிறம்  போல்  வெண்மையாகக்  காணப்படின்  குற்றமில்லாதவனாவான் . இதுவும்  வாசஸ்பத்தியத்திற் கண்டது .)

      பெரியோராகிய குரவர்களையும் , புதல்வர்  முதலியோரின்  தலைகளையும் , பொன்  முதலியவற்றையும்  தொட்டுக்கொண்டு  விரைந்து “உண்மையாகக்  கூறுகின்றேன் “ என்று  சொல்லிச்  சூளுறவு  செய்தல்  வேண்டும் . இன்னும்  “இக்  கொடுஞ்செயலை  யான்  செய்துளேனாயின்  தீவினைக ளெல்லாவற்றையும்  அடைவேன் ; நல்வினைக ளெல்லாவற்றையும்   இழந்துவிடுவேன்”  என்று  கூறுதல்  வேண்டும் .                                                                                                        248

( குரவர்களைத்  தொட்டுச்  சூளுறவு செய்யுங்கால்  “யான்  இக்  கொடுஞ்  செயலைச்  செய்துளேனாயின்  என்  குரவர்  நரகத்தில்  வீழக்கடவர்”  எனவும்  , புதல்வர்  முதலியோர்  தலைகளையும்  பொன்  முதலியவற்றையும்  தொட்டுச்  சூளுறவு  செய்யுங்காலும் , உண்மை  கூறுங்காலும் , முறையே “என்  புதல்வர்  அழிவெய்துக”  எனவும்  “பொன்   முதலியன  கேடெய்துக”  எனவும்  “என்  வாய்மையனைத்தும்  பொய்யாக”  எனவும்  இவ்வாறு  கூறிச்  சூளுறல்  வேண்டுமென்பதாம் . )

      ஒருவன்  மற்றொருவனிடத்தினின்றும்  கவர்ந்து  கொண்ட  பொருளின்  அளவு  ஆயிரமாயின்  நெருப்பினையும் , அவ் வளவிற்  காற்கூறு  குறைந்ததாயின்  நஞ்சினையும் , மூன்றிலொரு  கூறு  குறைந்ததாயின்  துலாக் கோலினையும் , அவ் வளவிற்  பாதியாயின்  நீரினையும் , காற்கூறாயின்  அறம்பாவங்களையும் , எட்டிலொரு  கூறாயின்  அரிசிகளையும் , பதினாறிலொரு  கூறாயின்  மற்றைச்  சூளுறவுகளையும்   மேற்கொள்ளல்  வேண்டும் . இவ்வாறு  தெய்விக  சாதனங்கள்  கூறப்பட்டுள்ளன .                                                  249-250

      இங்குக்  கூறிய  பொருளின்   அளவுகள்  கடையாயார்க்குரிய னவாம் . இடையாயார்க்கு  இவ்  வளவின்  இரு  மடங்கும் , தலையாயார்க்கு  இவ் வளவின்  நான்கு  மடங்கும்  மிகுதியாக  நீதிமன்றத்தார்  ஏற்படுத்தல்  வேண்டும் .                                          251

( இதனால்  முன்னர்க் கூறிய  பொருளின்  அளவு  ஆயிரத்திற்கு  நெருப்புக் கோடல்  கடையாயார்க்கெனவும் , இரண்டாயிரத்திற்கு  நெருப்புக்  கோடல்  இடையாயார்க்கெனவும் , நாலாயிரத்திற்கு  நெருப்புக் கோடல்  தலையாயார்க்கெனவும்  கொள்ளவேண்டுமென்பது  போதரும் . இங்ஙனமே  நஞ்சு  முதலிய  சாதனங்களுக்குக்  கூறிய  பொருளளவை  இடையாயர்  தலையாயர்களுக்கு  முறையே  இருமடங்கு  நான்கு  மடங்கு  மிகுதியாகக்  கணக்கிட்டு  அறிந்துகொள்க . சிறு  தொகைநிமித்தம்  தலையாயோரை  நெருப்பில்  நடத்தல்  முதலிய  கடுஞ்சூளுறவு  புரியச்  செய்தல்  தக்கதன்று  என்பது  கருதி  இவ்வாறு  கூறப்பட்டன . )

      சிரோவர்த்தி  இல்லாதிருக்குங்கால்  தெய்விக  சாதனங்  கொடுக்கத்தக்கதன்று . தெய்விக  சாதனங்  கொடுக்குங்கால்  வாதி  சிரத்தானத்திலிருப்பதால்  அவனே  சிரோவர்த்தி  என்று  கூறப்படுவான் .                                                                                              252

     வேதங்களில்  விதிக்கப்பட்டபடி  பிரதிவாதியையே  தெய்விக  சாதனங்  கொடுக்கச்செய்தல்  வேண்டும் . வாதியை  நோக்கித்  தெய்விக  சாதனங்  கொடுக்கும்படி  யாரும்  நியமனஞ்  செய்தலாகாது.                                                                                                253

      பிரதிவாதியின்  விருப்பத்திற்கிணங்க  வாதியும்  ஒரோவமயம்  தெய்விக  சாதனஞ்  செய்தற்குரியனாவான் . அங்ஙனஞ் செய்யுங்கால்  அப் பிரதிவாதி  சிரோவர்த்தியாவான் .                                                     254

      அரசால்  ஐயமுறப்பட்டாரையும்  கள்வரால்  தம்முட்  கலந்தவரெனக்  காட்டப்பட்டாரையும்  அவர்  தம்  தூய்மையைப்  புலப்படுத்துதற் பொருட்டுச்  சிரோவர்த்தி  இல்லாமலே  தெய்விக  சாதனங்  கொடுக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                        255

      பிறர்  மனையாளோடும் , சேரத்தகாத  பெண்களோடுஞ்  சேர்ந்ததனாற்  றோன்றிய  வழக்குகளிலும் , பார்ப்பனக்கொலை  முதலிய  பெரும்பாதகங்களைப்  பற்றிய  வழக்குகளிலும்  தெய்விக  சாதனங்களை  மேற்கொண்டே  ஆராய்தல்  வேண்டும் .  மற்றைச்  சாதனங்கள் இங்குப்  பயன்படா .                                                                   256

      களவு  குறித்து  ஐயமுறப்பட்ட  மனிதற்கு , உழுந்தளவினவாகச்  செய்து  கொதிக்கின்ற  எண்ணெயிலிடப்பட்ட  இருப்பு  உருண்டைகளைக்  கையினாலள்ளுதலாகிய  தெய்விகம்  விதிக்கப்பட்டுள்ளது .                                                                                      257

      உயிர்க்கொலை  சம்பந்தமான  வழக்கில்  சான்று  முதலிய  பிற  சாதனங்களிலிருப்பினும்  , பிரதிவாதி  தெய்விக  சாதனத்தைக்  கடைப்பிடிக்க  விரும்புவானாயின் , அவ்  வழக்கில்  வேறு  சாதனங்களைப்  பற்றி  வினவலாகாது .                                                    258

      ஒரு  வழக்கில்  சான்று  முதலிய  மாநுட  சாதனங்கள்  வஞ்சமுடையன வென்று  அரசனாற்  கேட்கப்படுமாயின் , அறவிருக்கையின்கண்  வீற்றிருக்கும்  அவ்வரசன்  அவ்  வழக்கைத்  தெய்விக  சாதனத்தால்  ஆராய்தல்  வேண்டும் .                                     259

      ஒரு  கடன்பத்திரம்  நாம  கோத்திரங்களால்  உண்மைப்பத்திரத்தை  ஒப்பக்  கற்பிக்கப்பட்டிருக்குமாயின் , அப்பத்திர  மூலம்  பொருள்  பெற்றுக்கொள்ளாத  பிரதிவாதியின்  பக்கத்தைத்  தெய்விக  சாதனத்தால்  ஆராய்ந்து  நிருணயித்தல்  வேண்டும் .                           260

      எவ்  வழக்கில்  மாநுட  சாதனம்  இல்லையோ  அதன்கட்  டெய்விக  சாதனத்தைக்  கொடுக்கும்படி  செய்தல்  வேண்டும் . காட்டிலும் , மக்கள்  வழங்கா  இடத்திலும் , இரவிலும் , இல்லத்தினுள்ளும்  நிகழ்ந்த  காரியங்களையும் , கொள்ளை , பெண்களின்  ஒழுக்கக்கேடு , எல்லாப்  பொருளையும்  ஒருங்கு  மறைத்தல்  ஆகிய  இவற்றைப்பற்றிய  காரியங்களையும் , இலெளகிக   சாதனங்கள்  மிகப்  பிழைபட்டிருக்குங்  காரியங்களையும்  தெய்விக  சாதனங்களால்  ஆராய்தல்  வேண்டும் .                                                                             261-262

      பெரும்   பாதகங்களைப்  பற்றிய  வழக்குகளிலும் , அடைக்கலப்  பொருள்களைக்  கவர்ந்த  வழக்குகளிலும் , சான்றுகள்  உள்ளன வெனினும்  அரசன்  தெய்விக  சாதனங்களாற்  காரியங்களை  ஆராய்தல்  வேண்டும் .                                                                                      263

      எவ்  வழக்கில்  முதற்கட்  சான்று  கூறுவாரும் , அவர்க்குப்பின்  சான்று  கூறுவாரும் , அவர்க்குப்பின்  சான்று  கூறுவாரும்  மாறுபட்டுரைக்கின்றனரோ  அவ்  வழக்கைச்  சூளுறவுகளால்  ஆராய்ந்து  முடித்தல்  வேண்டும் .                                                                264                                                                                   

      நில  முதலிய  நிலையியற்  பொருள்களைப்  பற்றிய  வழக்கிலும் , பூகம் , சிரேணி , கணம்  என்னும்  இக்  குழுவினர்  வழக்குகளிலும் ,  தானஞ்  செய்யப்பட்டும்  பின்னர்க்  கொடுக்கப்படாத  பொருளைப்  பற்றிய  வழக்கிலும் , பணியாளர்  தலைவர்  ஆகிய  இவர்  தம்முள்  நேர்ந்த  வழக்கிலும் , விற்றல்  வாங்கல்களின்  சம்பந்தமான  வழக்கிலும் , விலைப்  பொருள்  கொடுக்கப்பட்டும்  அப்  பண்டங்  கொள்ளப்படாத  வழக்கிலும்  உள்ள  நிகழ்ச்சிகளைச்  சான்று , பத்திரம் , அநுபவம்  ஆகிய  இம்  மூன்று  சாதனங்களாலும்  ஆராய்ந்து  முடிவு  செய்தல்  வேண்டும் .                                                                    265-266

( பூகம் – ஒரு வகைச்  சாதிக்  கூட்டம் . சிரேணி , கணம்  இவைகளைப் பற்றி  30-31-ஆம்  சுலோகங்களிற்  காண்க .)

      விவாகம் , திருவிழா , சூது  ஆகிய   இவற்றைப்  பற்றிய  வழக்குக்களிற்  சான்றுகளே  ஏற்றுக்கொள்ளத்தக்க  சாதனங்களாம். தெய்விகமும்  இலிகிதமும்  சாதனங்களாகா .                                          267

      வீட்டு வாயில், தெரு, நுகர் பொருள், நீர்  வெளிப்படும்  தூம்பு, ஆகிய  இவை  முதலியவற்றைப்  பற்றிய  வழக்குகளில்   அநுபவமே சிறந்த சாதனமாகும் . தெய்விகங்களும்  சான்றுகளும் அங்ஙனமாகா.          268

      ஒருவன்  மாநுட  சாதனத்தையும்   மற்றொருவன்  தெய்விக  சாதனத்தையுங்  கூறுவாராயின் , அவ்வழக்கில்  அரசன்  மாநுட  சாதனத்தையே  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும் . தெய்விக  சாதனத்தை  அங்ஙனம்  ஏற்றுக்கொள்ளலாகாது .                                                             269

      வழக்குரைக்கும்   மனிதரின்  சாதனங்களுள்  மாநுட  சாதனம்  அவ்வழக்கில்  ஏகதேசத்தைப்  பற்றியதாக  அறியப்படினும்  அதுவே  கொள்ளற்பாலதாகும் . தெய்விக  சாதனம்  முழுதும்  பற்றி  நிற்பினும்  அங்ஙனம்  கொள்ளற்பாலதன்றாம் .                                                           270

18 . வழக்குகளின்  தீர்ப்பு  வகைகள்

      காரியங்கள்  முடிவு  செய்தல்,  சான்று  முதலிய  பிரமாணங்களாலும் , தானம்  முதலிய  ஏதுக்களாலும் , வழக்க  ஒழுக்கங்களாலும் , சூளுறவாலும் , அரசன்  ஆணையாலும்  , வாதியின்  உடன்பாட்டினாலும்  ஆகும் .  ஆதலின்  இவை  பற்றி  அஃது  அறுவகைப்படும் .                                                                                               271

( தான  முதலிய  ஏதுக்களை  இப்பிரகரணத்தின்  231 –ஆம்  சுலோகத்திற் காண்க . . வழக்க ஒழுக்கங்கள் –  தேய   தருமம்  சாதி  தரும  முதலியன ; இப்பிரகரணத்தின்  49 –ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க . )

      எவ்  வழக்கில்  இலிகிதமும் , அநுபவமும் , சான்றுமாகிய  இலெளகிக  சாதனங்களும் , தெய்விக  சாதனங்களும்  இல்லையோ  அதன்கண்  அரசனது  அபிப்பிராயமே  பிரமாணமாகும் .                     272

( இலெளகிக  சாதனங்கள்  இல்லாத  வழக்கில்  ஒருவன்  தெய்விக  சாதனங்களையும்  உடன்படானாயின்  , அரசனது  அபிப்பிராயத்தின்   வண்ணம்  அவ் வழக்கு  முடிக்கப்படவேண்டுமென்பதாம் . )

      இலெளகிக  தெய்விக  சாதனங்களான்  முடிவு  செய்தற்கியலாத னவும் , ஐயப்படுதற்குரியனவும்  ஆகிய  நிலவெல்லை  முதலியவற்றைப்  பற்றிய  வழக்குகள்  இறுதியில்  அரசன்  கருத்தின்  வண்ணம்  முடிக்கப்படுவனவாம் ; என்னை? அரசனே  யாவர்க்கும்  தலைவனாதலின் .                                                                                            273

      அரசனும் , ஆராயாது  தன்  விருப்பின்  வண்ணம்  காரியங்களை  முடிப்பானாயின்  பாவமுடையனாவான் .  ஆதலின் , அறநூல்களுக்கு  மாறுபாடில்லாமற்  பொருள்  நூல்களை  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .                                                                                                           274

( இதன்  முன்னுள்ள  இரண்டு  சுலோகங்களாலும்  பிறவாற்றான்  முடிக்கப்படாத  வழக்குகளெல்லாம்  இறுதியில்  அரசன்  கருத்தின்  வண்ணம்  முடிக்கப்படுமென்பது  கூறப்பட்டது . அங்ஙனமாயின்  அரசன்  ஒன்றையும்  ஆராயாது  தன்  மனத்திற் றோன்றியபடி  செய்வானாயின் , அது  தீங்காய்  முடியுமென்று  கருதி , இச் சுலோகத்தில்  அறநூல்  வழிப்  பொருணூலை  ஆராய்ந்து  செய்யவேண்டுமென்று  வலியுறுத்துக்    கூறப்பட்டது .)

      அரசன் , அமாத்தியர்  முதலியோரின்  உலோப  குணத்தால்  வழக்காராய்ச்சி  பிழை யுடையதாகும் ; அதனால் , உலகத்து  மக்கள்  அறத்தினின்றும்  பிறழ்ந்துவிடுவர் ; வஞ்சகச்  செயலிலும்  ஒழுகத்  தலைப்படுவர் .                                                                                                   275

       மிக்க  காமம் , வெகுளி , உலோபங்களால்  ஒரு  வழக்கு  நடைபெறுமாயின்  அதனாலுண்டாம்  பாவம்  கருத்தாக்களையும் , சான்று  கூறுவோரையும் , நீதிமன்றத்தவரையும் , அரசனையும்  சாரும்  ஆதலின்  அப்  பாவத்திற்குக்  காரணமான  காம  முதலிய வற்றை யொழித்து அவ் வழக்கை  நன்கு  ஆராய்தல்  வேண்டும் .                      276

( கருத்தாக்கள் – அக்  காம  முதலிய  ஏதுக்களால்  வழக்குக்  கொணரும்  வாதியும் , அவ்வேதுக்களால்  உண்மை  வழக்கை  மறுத்துரைக்கும்  பிரதிவாதியுமாவர் . நீதிமன்றத்தாரும்  அரசனும்  அவ்வழக்கை ஏற்று நடத்துதலால்  பாவப்பயனை எய்துவரென்பதாம் .

      தீயவற்றை  நல்லனவாக  அரசற்கு  எடுத்துக்காட்டும்  அமைச்சர்களும் , அங்ஙனம்  அவர்  எடுத்துக்காட்டியவற்றைப்  பகுத்துணர்ந் தாராயமல்  உண்மையாகக்  கருதி  அவர்  கருத்தின்  வழியே  காரியங்களை  முடிக்கும்  அரசனும்,  அவ்வழக்கில்  எட்டு  மடங்கு  பாவப்  பயனை  அநுபவிப்பர் .                                                       277

      அதரும  நெறியி லொழுகும்  அரசனை  இடித்துரைத்துத்  தடை  செய்யாத  அமைச்சர்  முதலியோர்  அவ்  வரசனோடு  கூடக்  கீழ்  நோக்கிய  முகமுடையராய்  நரகத்தையடைவர் .                                    278

      குற்றஞ்  செய்தார்க்கு  இடுந்  திக்காரதண்டமும்  சொற்றண்டமுமாகிய  இவ்   விரண்டனையும்  விதிக்கும்  அதிகாரம்  நீதி  மன்றத்தார்க்குரியதாம் .  பொருட்டண்முங்  கொலைத்  தண்டமுமாகிய  இவ்விரண்டனையும்  விதிக்கும்  அதிகாரம்  அரசற்குரியதாம் .                                                                                      279

( திக்காரதண்டம் – அதட்டி  ஒறுத்தல். சொற்றண்டம் – கடுஞ் சொற்களால்   ஒறுத்தல் .)

     ஒரு  வழக்கின்  தீர்ப்பையும் , அதனால்  அரசன்  இட்ட  கட்டளையையும்  எவன்  அறநெறி  பிறழ்ந்தன வென்றெண்ணுகின்றானோ  அவன்  அத்  தீர்ப்பிற்   கூறப்பட்ட  பொருளளவின்  இருமடங்கு  பொருட்டண்டம்  இறுத்து   மீண்டும்  அக்காரியத்தை  நடத்துதல்  வேண்டும் .                                              280

      சான்றுகளின்  துணை  கொண்டு  நீதிமன்றத்தாற்  செய்யப்பட்ட  தீர்ப்புக்களிற்  குற்றம்  ஏற்படுமாயின் , அவ்வழக்குகளை  மீண்டும்  விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளல்  வேண்டும் . அரசனால்  ஆராய்ந்து  தீர்க்கப்பட்ட  வழக்குகளுக்கும்  மறு விசாரணை  விதி  உண்டு .                                                                                                          281

       அமைச்சனும் , நீதிபதியும் , மற்றை  நீதிமன்றத்தாரும்  காரியங்களை  மாறுபடச் செய்து  விடுவாராயின், அரசன்  மாறுபட்ட  அக்காரியங்க ளெல்லாவற்றையும்  ஆராய்ந்து  உண்மைத்  தீர்ப்புச்  செய்தல்  வேண்டும் . அங்ஙனம்  மாறுபடத்தீர்த்த  அமைச்சன்  முதலியோர்க்கு  ஆயிரம்  பணம்  தண்டமும்  விதித்தல்  வேண்டும். 282

( முதனூலில் “ஆயிரம்”  என்று  மாத்திரம்  உள்ளது . தண்டவிதியிற்  பண  அளவு  கூறப்பட்டமையால் “ஆயிரம்  பணம் “ என்று  இங்கு  எழுதப்பட்டது . இதனை  ஆயிரம்  பொன்  என்றுங்  கொள்ளலாம் . )

      எந்த  மனிதனுந்  தண்டமின்றி  ஒரு  பொழுதும்  நன்நெறிக்கட்  செல்லமாட்டான் . ஆதலின்  நீதிமன்றத்தாரின்  தவறுகள்  வழக்குரைப்போரால்  நன்கு  எடுத்துக்காட்டப்படின் , அரசன்  அத்  தவறுகளைப்  போக்கி  உண்மையாக  நீதி  செலுத்தல்  வேண்டும் .  283

      வாதி  தான்  மேற்கொண்ட  பூருவபக்கத்தைச்  சான்று  முதலிய  சாதனங்களால்  மெய்ப்பித்தலாலும் , நீதிபதி  முதலியோரால்  உண்மை  பற்றிப்  பாராட்டப்படுதலாலும் , வெற்றித்தீர்ப்புப்  ப்த்திரம்  பெறுதலாலும் , இவ்வுலகத்தில்  அவன்  வெற்றியாளன்  என்று  கூறப்படுவான் .                                                                                                    284

      நீதிமன்றத்தார்  முதலியோரால்  ஆராய்ந்து  தீர்க்கப்பட்டதும்  பிரதிவாதியால்  ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகிய  வழக்கு  நிகழ்ச்சியைக்  கண்டு  அரசன்  அவ்வழக்கில்  வெற்றி  பெற்ற வாதிக்கு  வெற்றிப்பத்திரம்  அளித்தல்  வேண்டும் .                              285

      ஒரு  வழக்குப்  பொய்மையானதாக  இருப்பின் , அதனைக் கொணர்ந்த  வாதியை  அப்  பொய்வழக்கின்  வன்மை  மென்மைக் கேற்பப்   பல  ஆண்டுகள்  வரை  சிறைப்படுத்தல்  வேண்டும் . அவ்வழக்கிற்  குறிக்கப்பட்ட  பிரதிவாதியைக்  கெளரவப்படுத்தல்  வேண்டும் .                                                                                                           286

      எவ்வரசன்   காம  வெகுளிகளை  அடக்கி , அறநெறி நின்று  காரியங்களை  ஆராய்கின்றானோ  அவனைக்  குடிகள்  கடலை  நோக்கிச்செல்லும்  ஆறுகளைப்  போலப்  பின்பற்றி யொழுகுவர் .    267

19 . அதிகார  உரிமை  ஆராய்ச்சி

      தந்தை  தாயார்  உயிரோடிருக்குங்கால்  புதல்வன்  வயோதிகனாயினும்  அவன்  சுதந்திரமுடையனல்லன் . அத்  தந்தை  தாயாரிருவருள்ளும்  வித்துக்குச்  சிறப்புண்மை  காணப்படுதலால்  தந்தையே  சிறந்தவனாவான் .                                                                      288

      தந்தை  இல்லையாயின்  தாய்  சிறந்தவளாவாள் . தாயும்  இல்லையாயின்  தமையன்  சிறந்தவனாவான் . அத்  தமையனுக்கே  சுதந்திரத்  தன்மை யுண்டென் றெண்ணப்படும் , தமையனாந்தன்மை  குணத்தாலும்  வயதாலுமாம் . [ ஒருவன்   குணங்கள்  வாய்க்கப்  பெறாமல்  வயதான  மாத்திரம்  மூப்புடையனாயிருப்பின்  அம்மூப்புச்  சிறந்ததன்றென்பதாம் . ]                                                                                   289

      ஒருவன்  தன்  தந்தையின்  மனைவிமார்  எல்லோரிடத்திலும்  தன்னைப்  பெற்ற  தாயிடத்துப்  போல  மதிப்புவைத்து  நடந்து கொள்ளல்  வேண்டும் . தன்  பொருளைக்  கூறிட்டுத்  தனக்கு  ஒத்த  அளவுள்ள  ஒரு  கூற்றினால்  அவ்வெல்லோரையும்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                                            290

      குடிமக்கள்  எல்லோருஞ்  சுதந்திரமுடையரல்லர் ; அரசனொருவனே  சுதந்திரமுடையனாவான் . மாணாக்கர்  சுதந்திரமுடையரல்லர் ; ஆசிரியன்பாலே  சுதந்திரத்தன்மை யுள்ளதாம் .                                      291

      மருகியை  அடக்கியாளுதற்குரிய  சுதந்திரம்  மகனுக்கேயுரியதாம்  புதல்வனை  விற்றற்கண்ணும்  தானஞ்  செய்தற்கண்ணும்  தந்தைக்குச்  சுதந்திரம்  இன்றாம் .                                                                292

( தந்தை  உயிரோடிருக்குங்கால்  புதல்வனுக்குச்  சுதந்திரமில்லையென்று  288-ஆம்  சுலோகத்திற்  கூறினர் . அதனால்  மருகியை  அடக்கியாளுஞ்  சுதந்திரமும்  மகனுக்கின்றி  அத்   தந்தைக்கே யுண்டு கொல்  என்னும்  ஐயமுண்டாம் . அவ்வையத்தை யொழித்தற்கு  இச்  சுலோகங்  கூறப்பட்டது . )

     பரதந்திரர்களாக  இங்குக்  கூறப்பட்ட  எல்லோரும்  தமக்குக்  கீழ்ப்பட்டாரை  ஏவுதற்கண்ணும் , தம்  பொருளை  ஈதற்கண்ணும்  ஈயாமைக்கண்ணும்  தாமே  தலைவராதலின்  இச்செயல்களிற்  சுதந்திரமுடையராவர் .                                                                                    293

      மணி , முத்து , பவழம் , முதலிய  மற்றை  இயங்கியற்  பொருள்  எல்லாவற்றிற்கும்  தந்தையே  உரிமை யுடையனாவான் . நிலையியற்  பொருள்  எல்லாவற்றிற்கும்  தந்தையும்  பிதாமகனும்  உரிமை யுடையராகார் .                                                                                                   294

      மனைவியும் , புதல்வனும் , பணியாளனுமாகிய  இவர்  மூவரும்  பொருட்குச்  சுதந்திரமுடையரல்லர் . அவரால்  ஈட்டப்படும்  பொருண்  முழுதும்  அவர்தம்  தலைவற்குரியனவாம் .                                               295

( புதல்வனுக்குச்  சுதந்திரமின்றென்றது  ஈண்டுத்  தந்தை  உயிரோடிருக்குங்காலெனப்  பெறப்படும் . )

      களவு  முதலியவற்றால்  ஒருவனுடைய  பொருள்  மற்றொருவன்  கையிற்  காணப்படுதலின்  ஒரு  பொருள்  ஒருவன்  கையிலிருத்தல்  பற்றி  அவனே  அப்  பொருட்குரியான்  என்னும்  நியமமன்று . ஆதலின்  பொருட்குரிய  தலைமைத்  தன்மை  நீதிநூல்  முறையால்  அன்றிக்  காட்சி  அளவை  முதலிய  அநுபவங்களாற்  பொருந்துவதன்று . இன்றேல்  ஒருவன்  பொருளை  மற்றொருவன்  கவர்ந்து  கொண்டான்  என்று  கூறுதற்கு  இயலாது .                                                                     296-297

 ( இன்றேல்  என்பதற்கு  நீதிநூல்   முறைப்படி  இப்பொருட்குரியான்  இவன்  என்னும்  நியமமில்லையாயின்  என்று  பொருள்  கொள்ளவேண்டும் . ஒருவன்  கையில்  ஒரு  பொருள்  இருக்குமானால்  அங்ஙனம்  இருத்தல்  பற்றி  அப்பொருட்குரியவன்  அவன்  என்று  கொள்ளலாகாது . அஃது  அவற்கு  எவ்வாறு  வந்ததென்று  நூன்  முறையான்  ஆராயவேண்டுமென்பதாம் . )

      பொருணூல்களில்  எல்லா  வருணங்களுக்கும்  தக்கவாறு  தனித்தனியே  பொருளீட்டும்  உபாயங்கள்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளன . அந்  நூல்களிற்  கூறப்பட்ட  தருமங்கள்  எப்பொழுதும்  மிலேச்சரானும்  மேற்கொள்ளப்பட்டன . இப் பொருளீட்டும்  உபாயங்கள்  உலகத்து  மக்களின்  வாழ்க்கைநிலை  குறித்து  அறிவிற்  சிறந்த  பண்டை  ஆசிரியராற்  கூறப்பட்டன .        298

      ஒருவன்  பொருளைக்  கூறிட்டுக்  கொள்ளுங்கால் , அவன்  மனைவி மாரும்  புதல்வரும்  ஒத்த  அளவில்  ஒவ்வொரு  கூறும் , மணஞ்  செய்யப்படாத  கன்னி  அரைக்கூறும் , தெளகித்திரன்  காற்கூறும்  பெறுதற்குரியராவர் .                                                                                          299

      தலைவன்  இறந்து விடுவானாயின்   அவன்   புதல்வர்  முதலியோர்  முற்கூறிய  அளவின்படி  அவன்  பொருளைக்  கூறிட்டுக்  கொள்ளக்  கடவர் .                                                                                                                     300

 ( முதலியோர்  என்றதனால்  முற்  சுலோகத்திற்  கூறப்பட்ட  அவன்  மனைவியரையும் , கன்னியரையும் , தெளகித்திரனையுங்  கொள்ளல்  வேண்டும் .  முற்கூறிய  அளவு – இவன்  முற் சுலோகத்திற்   கூறப்பட்டது .)

      புதல்வன்  ஒருவனாயின்  அவன்  பொருளின்  நான்கிலொரு  கூறு  தாய்க்கும் , எட்டிலொருகூறு  உடன்  பிறந்தாளுக்கும் , பதினாறிலொரு  கூறு  உடன்பிறந்தாள்  மகனுக்கும்  கொடுத்து , எஞ்சியவற்றை  எல்லாம்  தான்  எடுத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                    301

      ஒருவனுடைய  பொருளை  அவன்  புதல்வன் , பெயரன் , மனைவி , மகள் , அவள்  மகன் , தாய்  தந்தையார்  , தமையன்  தம்பிமார் , அவர்தம்  புதல்வராகிய  இவருள் முறையே  முற்கூறப்பட்டார்   இல்லையாயின்  பிற்  கூறப்பட்டார்  எய்துதற்குரியராவர் .                 302                                                 

( புதல்வன்  இல்லையாயின்  பெயரனும், அவனும்  இல்லையாயின்  மனைவியும்  என்றிவ்வாறு  முறையே  எய்துதற்குரியராவர்  என்றறிதல்  வேண்டும் .)

      ஒரு  பெண்ணுக்குக்  கிடைத்த செளதாயிகப் பொருட்கு  அவளே  சுதந்திர முடையளாவாள் . அப்பொருள்  நிலையியற்  பொருளாயினும்  அதனை விற்றற்குந்தானஞ் செய்தற்கும் அவளுக்கு உரிமையுண்டு. 303                                                                                                                                                                                                   

( செளதாயிகம் – ஸ்த்ரீதனம்  இதனைப்  பின்வரும்  சுலோகத்திற்  காண்க .) 

      மணம்  புரியப்பட்ட  பெண்களுக்கும் , அது  செய்யப்படாத  சிறுமியர்க்கும்  கணவன்  பக்கல்  நின்றும் , தந்தை  இல்லத்தினின்றும்  தாய் , தந்தை , தமையன் , தம்பி  முதலியோராற்  கொடுக்கப்படும்  பொருள்  செளதாயிகமாகும் .                                                                        304

( கணவன்  பக்கல்  நின்றுங்  கிடைக்கும்  பொருள்  மணஞ்  செய்யப்பட்ட  பெண்ணுக்காம் . அப்பொருள்  மணம்  புரிதற்கு  முன்னரே   பெண்ணின்  தந்தைதாயரால்  வேண்டப்பட்டு  அப் பெண் கோடற்குரியவனால்  கொடுக்கப்பட்டதாகும் . )

      ஒருவன் தன்  தந்தை  முதலியோரான்   பொருட்சம்பந்தமின்றித்  தான்  தனியே  ஈட்டிய   பொருண்முழுதையும்  தன்  விருப்பின்   படியே  அநுபவிக்கலாம் . அப்பொருள்  அவன்  தமையன்  தம்பி  முதலியோராற்  கூறிட்டுக்  கொள்ளத்  தக்கதன்று .                           305                              

      ஒருவன்  பொருட்கு  நீரினாலும் , கள்வராலும் , அரசனாலும் , நெருப்பினாலும் , கேடு  நேர்ந்திருக்குங்கால் , பிறனொருவன்  தன்   வன்மையால்  அக்கேட்டை  ஒழித்து  அப்  பொருளைக்  காப்பாற்றுவானாயின்  , அவன்  அப்பொருளிற்  பத்திலொரு   கூறு  பெறுதற்குரியனாவான் .                                                                                   306

20 . கூடி  வினை  செய்தல்

      பொற் கொல்லன்  முதலிய  வினைஞர்  பலர்  ஒன்றுகூடி   அணிகலன்  முதலிய  சிற்ப  வினைகளைச்  செய்வாராயின் , அக்  காரியங்களுக்கேற்றவாறும் , அவர்தம்  தகுதிக்கேற்றவாறும் ,வேதனம்  பெறக்கடவர் .                                                                                                       307

      சிற்பவினைகளை  யாராயுந்திறனும்  , அக்கலைகளிற்  சிறந்த  அறிவும்  வாய்க்கப்  பெற்றவனைச்  சிற்பி  என்று  அறிவுடையோர்  கூறுவர் .                                                                                                                 308

      அரமியம் , தேவாலயம் , சிறுகுளம், மற்றை  உபகரணப்பொருள்கள்  ஆகிய  இவற்றை  ஒருங்கு  சேர்ந்து  செய்யுந்  தொழிலாளருள்  தலைவன்  இரு  மடங்கு  வேதனம்  பெறுதற்குரியனாவான் .                309

      நாட்டியம்  ஆடுவோர்  வருவாயைக்  கூறிட்டுக்  கொள்ளுமுறைமை  பெரியோராற்  பின்வருமாறு  கூறப்பட்டுள்ளது . அந்  நடருள் , தாள  வியல்பறிந்தோன்  வருவாயிற்  பாதிப்  பொருளைப்  பெறுதற்குரியனாவான் . எஞ்சிய  பாதிப்  பொருளை  மற்றைப்பாடகர்  ஒத்த  அளவாகக்  கூறிட்டுக்  கொள்ளல்  வேண்டும்                                  310

      கள்வர் அரசன் ஆணையை மேற்கொண்டு பிற நாட்டினின்றுங்  கவர்ந்த  பொருளில்  ஆறிலொரு  கூறு  அவ் வரசற்குக்  கொடுத்து விட்டு  எஞ்சிய பொருளை ஒத்த  அளவாகக்  கூறிட்டுக்கொள்ளல் வேண்டும் .                                                                                                            311                                                                                                            

( பிற நாடு – பகைவர்  நாடு .)

      மேற்கூறிய  களவுத்  தொழிலில்  தலைப்பட்டாருள்  ஒருவன்  பிறராற்  பிடிக்கப்படுவானாயின் , அவனை  விடுவித்தற்பொருட்டுக்  கொடுக்கப்படும்  பொருளை  அக்கள்வர்  எல்லாரும்  ஒத்த  அளவாகக்  கூறிட்டுக்  கொடுத்தல்  வேண்டும் .                                                              312

      பொன் , தானியம் , சுவைப்பொருண்  முதலியவற்றால்  வாணிகம்  புரிவோர்  குறைவு , சமம் , மிகுதியாகிய  தம்  மூலப்பொருள்களின்  கூறுகட்  கேற்றவாறு  ஊதியம்  பெறக்கடவர் .                                         313

      வாணிகம்  புரியுங்கால்  முன்னரே  துணியப்பட்டபடி   சமமாகவும் , குறைவாகவும் , மிகுதியாகவும்  மூலப்பொருளைக்  கூறிட்டுத்  தொகுத்தல்  வேண்டும் . அக்கூறுகட்  கேற்றவாறு  செலவையுந்  தொழிலையுஞ்  செய்தல்  வேண்டும். அதனால்  வரும்  ஊதியத்தையும்  அங்ஙனமே  கூறிட்டுக்   கொள்ளல்  வேண்டும் .                                      314

      ( மூலப்பொருள்  எவ்வாறு  கூறிடப்பட்டதோ  அவ்வாறே  தொழிலுஞ்  செலவு  ஊதியமும்  கூறிடப்படவேண்டுமென்பது  கருத்து .)

     வாணிகம்  புரிவார்க்கும்  உழவுத்  தொழில்  செய்வார்க்கும்  இவ் விதியே  பொருந்துவதாகும் .                                                                           315

      பலர்க்கும்  பொதுவான  பொருளும் , ஒருவனிடத்தினின்றும்   திருப்பிக்  கொடுப்பதாகக்  கூறி  வாங்கிய  யாசித்தப்  பொருளும் அடைக்கலப்பொருளும் , பந்தகப்பொருளும் , அடிமையும் , அவ்வடிமையின்  பொருளும் , பிறனொருவனுக்குச்  சேரவேண்டி  ஒருவன்  தன்பால்  வைத்த  பொருளும் , சிற்பவினை  செய்தற்பொருட்டுத்  தன்பாற்  பிறர்  தந்த  பொருளும் , சந்ததி  இருக்குங்கால் அக்குடும்பத்துப்  பொருளும்  ஆகிய  இவ் வொன்பது  வகைப்பட்ட  பொருள்களையும்  அறிவுடையார்  தமக்குக்  கேடு வந்த  காலத்தும்  தானஞ்  செய்தல் , விற்றன்  முதலியவற்றால் பிறர்க்குக்  கொடுத்தலாகாது .                                                                                            316

      பெறத்தகாத  பொருளைப்  பெறுபவனும் , கொடுக்கத்தகாத  பொருளைக்  கொடுப்பவனும்  ஆகிய  இருவரும்  கள்வனை  யொப்பத்  தண்டிக்கப்படுதலோடு  உத்தம சாகச தண்டத்திற்கும் உரியராவர். 317                     

( உத்தம சாகசம் –ஆயிரம்  பணம்  இறுக்கும்படி  செய்யும்  தண்டம். இதனை  இவ்  வாத்தியாயத்தின்  முதற்பிரகரணம்  116-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      உரியரல்லாதாரிடத்தினின்றும் , கள்வரிடத்தினின்றும் , பொருள்  கொள்ளுவோனும்  , பிறர்  பொருளை  மறைவில்  விற்போனும்  ஆகிய  இருவரும்  கள்வனை  யொப்ப  அரசனாற்  றண்டிக்கப்படுவர் .        318

      குற்றமில்லாதவனும் , தனக்கு  ஒரு  கேடுஞ்  செய்யாதவனுமாகிய  இயமானனைக்  காரணமின்றி  விலக்கிய  புரோகிதனும் , அங்ஙனமே  குற்றமில்லாத  புரோகிதனைக்  காரணமின்றி  விலக்கிய  இயமானனும்  ஆகிய  இருவரும்  தண்டிக்கப்படுவர் .                            319

( இயமானன் – வேள்வித் தலைவன் . புரோகிதன் – வேள்வி  வினை   செய்வோன் . இருத்துவிக்கு  என்றுங்கூறப்படுவான் . )

      வாணிகம்  புரிவோன்  தான்  விற்பதற்காகக்  கொண்ட  பண்டத்தில்  காலம் , இடம்   முதலியவற்றை  நோக்கி , அப் பண்டங்கொள்ளுதற்  பொருட்டுச்  செலவாகிய  பொருளையும்  அறிந்து , கொண்முதற் றொகையில்  முப்பத்திரண்டிலொரு  கூறாதல் , பதினாறிலொரு  கூறாதல்  ஊதியம்  ஏற்படுத்தலாம் . இவ் வளவினும்  மிகுதியாக  ஊதியங்  கொள்ளலாகாது .                                                                              320

( வாணிகத்  தொழிலிற்  கிடைக்கும்  ஊதியத்திற்  பாதிப்பொருள்  கொடுத்தவர்க்கும் , பாதி  தொழில்  செய்தவர்க்குமாம்  என்பது  கருத்து .)

      ஒருவன் , ஊதியப் பொருளிற்  பாதி  தருவதாக  உடன்படுவானாயின் , அவற்கு  மற்றொருவன்  வாணிகம்  புரிதற்  பொருட்டு  எப்பொழுதும்  வட்டியின்றி  முதற் பொருள்  கொடுத்துதவலாம் .                                                                                            321

(வாணிகத்தொழிலிற்  கிடைக்கும்  ஊதியத்திற்  பாதிப்பொருள்  கொடுத்தவற்கும் , பாதி  தொழில்  செய்தவற்குமாம்  என்பது  கருத்து .)

      ஒருவன் , தன்பாற்  கடன் கொண்டவனிடத்தினின்றும்  முதற் பொருளுக்கு  இருமடங்கு  மிகுதியாக  வட்டி  பெற்றிருப்பானாயின்  பின்னர்  அக் கடன்  கொடுத்தவற்கு  முதற்  பொருளை  மாத்திரம்  கொடுக்கும்படி  அரசன்  தீர்ப்புச்   செய்தல்  வேண்டும் . அதனின்  மிகுதியாகக்  கொடுப்பித்தலாகாது .                                                             322

      பொருளுடையார்  வட்டிக்கு  வட்டி  சேர்த்தல்  என்னும்  வஞ்சத்தாற்  குடிகளின்  பொருளைக்  கவர்ந்து  விடுவர் . ஆதலின் , அரசன்  அப்பொருளுடையாராற்  கேடெய்தாவண்ணம்  குடிகளைப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                 323

( வட்டிக்கு  வட்டி  சேர்த்தலைச்  சக்கரவிருத்தி   என்று  முதனூல்  கூறும். )

      எவன்  ஆற்றலுடையனாயிருந்தும் , பொருளுடையானிடத்தினின் றுங்  கடனாகக்  கொண்ட  பொருளை  மீண்டும்  அவற்குக்  கொடுக்கவில்லையோ  அவனை  அரசன்  சாமோபாயத்தாலும்  தண்டோபாயத்தாலும்  முறையே  இணக்கியும்   ஒறுத்தும்  கொடுக்கும்படி  செய்தல்  வேண்டும் .                                                          324

     கடன்  கொடுத்தானொருவன்  கடன்  கொண்டவனிடத்தினின்றும்  எழுதி  வாங்கிய  கடன்பத்திரம்  தவறிவிடுமாயின்  அதனை  அவன்   அரசன்பால்  தெரிவித்துக்  கொள்ளல்  வேண்டும் . அங்ஙனந்  தெரிவிக்கப்பட்ட  அதனை  அரசன்  சான்றுகளால்  நன்கு  ஆராய்ந்தறிந்து  முன்போலக்  கடன்  கொண்டவனைப்  பத்திரம்  எழுதிக் கொடுக்கச்  செய்தல்  வேண்டும் .                                                 325

      ஒருவனாற்  கொடுக்கப்படாத  பொருளை  வலிந்து  கவர்ந்து  கொண்டவனும்  மனமொப்பிக்  கொடுத்த  பொருளை  மீண்டும்  பெற  விரும்புவோனும்  ஆகிய  இவ்விருவரும்  அறநூலுணர்ந்த  அரசனாற்  தண்டிக்கப்படுபவராவர் .                                                                                326

           எவன்  விலைப்  பண்டங்களை  வஞ்சித்து  விற்கின்றானோ அவன்  எப்பொழுதுங்  கள்வனை யொப்பத்  தண்டிக்கப்படுவான் . 327

      சிற்பிகளின்  குணஞ்  செயல்களை யறிந்து  தக்கவாறு  வேதனங்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                  328

      அரசன்  தன்  நிலத்தில்  வெள்ளி யெடுத்து விற்போனிடத்தினின்றும் நாடோறும்  அவ் வெள்ளி  விலையில்  ஐந்திலொரு  கூறாதல் , நான்கிலொரு  கூறாதல் , மூன்றிலொரு  கூறாதல் , பாதியாதல்  இறையாகப்  பெற்றுக்  கொள்ளல்  வேண்டும் . இவ்வளவின்  மிகுதியாகப்  பெறலாகாது .                                                                             329

( இது  சுரங்கப்  பொருளினின்றும்  அரசற்குக்  கிடைக்கவேண்டிய  கூறாம் .)

21 . உலோகங்களை  வஞ்சிப்போர்க்கு  இடுந்  தண்ட முறை

     கலப்பில்லாத  தூய்மை  மிக்க  பொன் நூறு  பலமாயினும்  உருக்கப்படுமாயின்  பின்னர்  எடையில்  ஒரு  சிறிதுங்  குறைவுறாது .  கலப்பில்லாத  தூய  வெள்ளி  உருக்கப்படுமாயின்  நானூற்றிலொரு  கூறும் , அத்தகைய  செம்பு  உருக்கப்படுமாயின்  நூற்றிலொரு  கூறும், வங்கமும் , ஈயமும் , சசதமும்  ஆகிய  இவை  உருக்கப்படுமாயின்  பதினாறிலொரு  கூறும் , இரும்பு  உருக்கப்படுமாயின்  எட்டிலொரு  கூறும்  எடையிற்  குறைவனவாம் . இங்குக்  கூறிய  அளவின்  மிகுதியாகக்  குறையுமாயின்  அவ்வுலோகங்களால்  வினை  செய்யுஞ்  சிற்பிகள்  அரசனாற்  றண்டிக்கப்படுவர் .                                            330-331

      நன்றாக  இயைத்துச்  செய்யும்  பணிச்  செயன்  முதலியவற்றில்  பொன்  இருநூற்றிலொரு  கூறும் , வெள்ளி  நூற்றிலொரு  கூறும்  எடை  குறையும் . அப் பொன்  வெள்ளிகளாற்  செய்யப்படும்  பணி  முதலியவற்றில்  உறுப்புக்கள்   ஒன்றோடொன்று  அழகுறச்  சேர்க்கப்படுங்கால்  அவ்வெடை  அதிகமாகும் .                                        332

( இயைத்துச்  செய்தல் – பணி  முதலியவற்றை  அராவி  மெருகிடல் . உறுப்புக்கள்  சேர்க்கப்படுங்கால்  எடை  அதிகமாதல்  பொடி வைத்து  ஊதுதலானாம் . )

      இங்குக்  கூறிய  அளவின்  மிகுதியாகக்  குறையுமாயின்  அப் பொற்கொல்லன்  பணி  செய்வதாகப் பெற்ற  பொன்னளவிற்  பதினாறிலொரு  கூறு  பொன்  தண்டம்  இறுக்கக்  கடவன் . அப்பணியில்  உறுப்புக்கள்  ஒன்றோடொன்று  சேர்க்கப்படுதலால்  மிக்க  அளவையும் , நன்றாக  இயைத்துச்  செய்தலாற்  குறைந்த  அளவையும்  ஆராய்ந்தறிந்து  கணக்கிடல்  வேண்டும் .                         333

      பொன்னாற்  செய்யப்படும்  பணிகளுள்  தலையாய  பணிக்கு  அதன்  எடையில்  முப்பதிலொரு  கூறும் , இடையாய   பணிக்கு  அதன்  எடையில்  அறுபதிலொறு கூறும் , கடையாய  பணிக்கு  அதன் எடையில்  நூற்றிருபதிலொரு  கூறுமாக  அவற்றை  இயற்றிய  பொற்கொல்லன்  கூலி  பெறக்கடவன் . கைவளைப்  பணிக்கு  அதன்  எடையில்  இருநூற்று நாற்பதி லொரு கூறும் , உருக்கிவார்த்தன்  மாத்திரஞ்  செய்யின்  அதன்  எடையில்  நானூற்றெண்பதி லொரு  கூறும்  கூலியாகும்.                                                                                         334

      வெள்ளியாற்  செய்யப்படும்  பணிகளுள்  தலையாய  பணிக்கு  அதன்  எடையிற்  பாதியும்  , இடையாய  பணிக்கு  அதன்  எடையிற்  காற்  கூறும் , கடையாய  பணிக்கு  அதன்  எடையில்   எட்டி லொரு  கூறும்  கைவளைக்கு  அதன்  எடையிற்  பதினாறி லொரு  கூறும்   கூலியாகும் .                                                                                                  335

      செம்பு , வங்கம் , சசதம் , ஆகிய  இவ்வுலோகங்களாற்  செய்யப்படும்  பாண்டம்  முதலியவற்றிற்கு  அவ்வவற்றின்  எடையிற்  காற்கூறு  கூலியாகும் . இரும்பினாற்  செய்யப்படுவனவற்றிற்கு  அவற்றின்  சிறுமை  பெருமை  நோக்கி  அவ்வெடைகளிற்  பாதியாதல்  ஒத்த  அளவாதல் , இருமடங்கு,  முதல்  எட்டு  மடங்கு வரை  மிகுதியாய்  கூலி  கொடுத்தல்  வேண்டும் .                                                                   336

( இரும்பினாற்  செய்யப்படுவனவற்றிற்கு  எட்டு  மடங்குவரை  கூலி  நியமனம் ஏற்படுத்தியது .)

      பொன்  முதலிய  உலோகங்களை  வஞ்சிக்கும்  வினைஞர்  வஞ்சிக்கப்பட்ட  அளவின்  இருமடங்கு  தண்டம் இறுக்கக்  கடவர் .  337

      உலகநடைகளால் தோன்றினவும், பண்டைக்காலத்து முனிவரால்   அறநூல்களில்  விதிக்கப்பட்டனவுமாகிய வழக்க  ஒழுக்கங்கள் பல் வேறு  வகைப்படுவன . அவை  முழுதுங்  கூறுதற்கியலாதனவாம் . 338

      நாட்டைப்பற்றிய  இவ் வைந்தாம்  பிரகரணம்  சுருக்கமாகக்  கூறப்பட்டது . இதன்கட்  கூறப்படாத  நல்லனவும் , தீயனவுமாகிய  விடயங்கள்  உலகியலாலும் , மற்றை  நீதி  நூல்களாலும்  அறிதற்பாலனவாம் .

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

நாட்டைப்  பற்றிய  இறுதியதாகிய

“இராச  தருமம்”  என்னும்

ஐந்தாம்  பிரகரணம்  முற்றிற்று .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆறாம்  பிரகரணம்

1 . அரணியல்

      இனி, அரண்களைப்  பற்றிய  ஆறாம்  பிரகரணம்  சுருக்கிக்  கூறப்படும் . பிறர்  உட்புக  இயலாதவாறு  பள்ளம் , முள் , கல்  ஆகிய  இவைகளால்  அமைக்கப்படுவது  களர்நிலவரண்  என்று  கூறப்படும் .1

( களர்நிலவரண் – நிலவரண்  வகைகளுள்  ஒன்று . இதனை  ஐரிணம்  என்று  முதனூல்  கூறும் . )

      நாற்புறமும்   மிக  அழகாகத்  தோண்டி யமைக்கப்படுவது  அகழியரணாகும் . இட்டிகைகளாலும் , கற்களாலும் , மண்ணாலும் எடுக்கப்பட்ட  சுவர்களாகிய  கோட்டை   மதிலரணாகும் .                       2

( அகழியரண் – நீர்  அரண்  வகைகளுள்  ஒன்று . இட்டிகை – செங்கல்.)

      பெரிய  முண்மரக்  கூட்டங்கள்  சூழ  அமைக்கப்படுவது  காட்டரணாகும் . நீரும் நிழலு மின்றி  நாற்புறத்துமுள்ள  மரு நிலம்  நிலவரண்  என்று  கூறப்படும் .                                                                           3

( மரு நிலம் – பாலை  நிலம் .)

     நாற்புறத்தும்  மிக்க  நீர்ப்பரப்பினை யுடையது   நீரரணாகும் . மக்கள்  வழக்கமில்லாத  இடத்தில்  நல்ல  நீரைப்  பிற்புறத்தே  கொண்டு  மிக வுயர்ந்திருப்பது  மலையரணாகும் .                                    4

     ( இதன்கட்  கூறிய  நீரரணும்  மலையரணும்  கடலாலும்  மலையாலும் இயற்கையாக  அமைவனவாதலின்  அவை  இயற்கை  யரண்களாம் . முதனூலில்  “உச்சதரம்”  என்பதனை , “உச்சகரம்”  எனப்  பாடங்கொண்டு  உயர்ந்த  இல்லங்களமையப் பெற்றிருப்பது  என்று  பொருள்கோடலும்  ஒன்று . )

     படைவகுப்பில்  தேர்ந்த  அறிவுடையோராலும்  போர்  வீரராலுஞ்  சூழப்பட்டுப்  பகைவரால்  வேறுபடுக்கப்படாதது  படையரணாகும் . துணையாக  நின்றுதவும்  வன்மைமிக்க  சுற்றத்தாரானாயது  துணையரண்  என்று  கூறப்படும் .                                                                    5

( இதன்கட்  கூறிய  இரண்டரணும்  சரப்பொருள்களாலும்  முற்கூறிய  ஏழரணும்  அசரப்பொருள்களாலும்  அமைந்தனவாம் .)

அகழரணும் , களர்நிலவரணும் , மதிலரணும் , காட்டரணும்  மருநிலவரணும் , நீரரணும் , மலையரணுமாகிய  இவ்  வெழுவகை  யரண்களும்  ஒன்றற்கொன்று  முன்னதனை  நோக்கப்  பின்னது  முறையே  சிறந்ததாக  வைத்தெண்ணப்படும் .                                            6                

( இயற்கையுஞ்  செயற்கையுமாகிய  இவ்வெழுவகை  யரண்களுள்  மதிலையே  சிறந்த  அரணெனவும் , அகழியையும்  கடலையும்  நீரரணெனவும் , களர்நிலத்தையும்  மருநிலத்தையும்  நிலவரணெனவும்  கொண்டு , மலையரண்  காட்டரண்களோடு  ஐந்தாக்கிப்  பின்னுள்ள  நீரரண்  நிலவரண்  மலையரண்  காட்டரண்  என   இயற்கையுஞ்  செயற்கையுமாக  இந்  நான்கரணுஞ்  சூழப்படுவது  சிறந்த  மதிலரணகும்  என்று கூறுவர் திருக்குறளாசிரியர் . அவர்  கருத்துப்படி  அரண்  என்னுஞ்  சொல்  மதிலையே  யுணர்த்துவதாகும் . ஏனைய  அதனைச்  சூழ்ந்திருத்தல்  பற்றி  அரணென  உபசரித்துக்  கூறப்படும் . பிறவற்றுட்  சில  இல்லாமலிருப்பினும்  மதில்  இன்றியமையாததாகலான்  அதனையே  அரணெனக்  கொண்டனர்  . இவ்வுண்மையை  “மணிநீரு மண்ணு மலையு மணிநிழற் காடு முடையதரண் “,  “உயர்வகலந் திண்மை யருமை யிந் நான் கினமைவரணென்றுரைக்கு  நூல்”  என்னுந்  திருக்குறள்களானறிக . )

      துணையரணும்  படையரணுமாகிய  இவ்விரண்டும்  மற்றையரண்களெல்லாவற்றையும்  அலங்கரிப்பனவாம்.  என்னை ? அவ்விரண்டரண்களுமின்றி  மற்றை  யரண்கள்  அரசர்க்குப்  பயன்படாவாகலின் .                                                                                           7

     மற்றை  யரண்களெல்லாம்  படையரணைத்  துணையாக வுடைமையின்  அவ்வெல்லா வரண்களினும்  படையரணே  தலை சிறந்ததென்று  அறிவுடையார்  கூறுவர் . ஆதலின் , அப்படையரணை  எப்பொழுதும்  அரசன்  காப்பாற்றுதல்  வேண்டும் .                                 8

  எவர்க்குப்  படையரணுள்ளதோ  அவன்  வயத்ததாகும்  இந்நிலவுலகம்.  படையரணில்லாத  மற்றை  யரண்கள்  சிறைச்சாலையை யொப்பனவாம் .                                                                                                    9

( போர்  வீரரை யில்லாத  மதில்  முதலிய  மற்றை யரண்கள்  பகைவர்  பொருதற்கு  எளியனவாதலின் , அவ்வரண்களுள்  இருக்கும்  அரசன்  தற்காப்பின்றிச்  சிறைக் கோட்டத் திருப்பவனை யொப்ப னென்பது  கருத்து .)

      அரசனுக்குக்  கேடு  வந்துழி  மற்றை  யரண்களும்  அவனைப்  பாதுகாத்தற்குரிய  சிறந்த  இருப்பிடங்களாகும் .                                      10

      அரணுள்  இருக்கும்  போர்வீரன்  ஆயுதமுடையவனாக விருப்பின் , அவன்  ஒருவனே  பகைவர்  நூற்றுவரோடு  போர்  செய்தற்கு  வலியுடையனாவன் . அங்ஙனமிருக்கும்  போர்வீரர்  நூற்றுவராயின்  பகைவர்  பதினாயிரவரோடு  போர்  செய்தற்கு  வலியுடையராவர் . ஆதலின் , அரசர்  அரண்களைப்  பற்றுக்கோடாகக்  கொள்ளல்   வேண்டும் .                                                                                                              11

      மிக்க  வலி  படைத்த  படையரணுக்கு  மற்றை யரண்களில்லாத  எல்லாவிடங்களும்  அரணுடையன போலவாம் . அரசன்  போர்க்குரிய  உபகரணப்  பொருள்களாலும் , தானியங்களாலும் , வீரராலும் , அம்பு  முதலிய  ஆயுதங்களாலும் , பொருளாலும்  நிறையப்  பெற்ற  அரண்களை யுடையனாயிருத்தல்  வேண்டும்.                                             12

      அரசர்க்கு  வன்மை  மிக்க  சுற்றத்தாராகிய  துணைவலி  நிறைந்த  அரண்  மிகச்  சிறந்ததாக  எண்ணப்படும் . அத் துணைவலி  நிறைந்த  அரணால்  அரசன்  வெற்றியடைதல்  ஒருதலையாம் .                               13

      எவ் வரண்கள் துணைவலி நிறையப் பெற்றுள்ளனவோ  அவை  யெல்லாம்  மிக்க  பயனுடையனவாம் . அரண்கள்  ஒன்றுக்கொன்று  துணையாக  வமைந்திருத்தல்  அரசனுக்கு  வெற்றி    தருவதாகும் .     14

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

“அரணியல்”  என்னும்

ஆறாம்  பிரகரணம்  முற்றிற்று

##########################################################################

ஏழாம்  பிரகரணம்

1 . படையியல்

      இதுகாறும்  அரண்களைப்  பற்றிய  பிரகரணம்  சுருக்கிக்  கூறப்பட்டது . இனிப் படைகளைப் பற்றிய  ஏழாம்  பிரகரணம்  கூறப்படும். அம்பு , வாள்  முதலிய  ஆயுதங்களையுடைய  காலாள்  முதலிய  கூட்டம்  படையென்று  கூறப்படுவதாகும் .                              1

     அப் படை  தானே  செல்வது , பிறவற்றாற்  செல்வது   என  இரண்டு  வகைப்படும் . அது  பின்னரும்  தெய்விகம் , ஆசுரம் , மானவம்  என  மூன்று  வகைப்படுவதாம் . இவற்றுட்  பின்னதனை  நோக்க  முன்னது  வன்மையிற்  சிறந்ததாகும் .                                                                            2

( தானே  செல்வது –  சுவகமம் . பிறவற்றாற்   செல்வது – அந்நியகமம். )

      தானே  செல்வது  பிறிதோர்  ஊர்தி  வேண்டாது  நடப்பதாம் . பிறவற்றாற்  செல்வது  ஊர்திகளிலேரிச்  செல்வதாம் . தானே  செல்வது  காலாட்  படை யொன்றே . பிறவற்றாற்  செல்வது  தேர்ப்படையும் , குதிரைப்படையும் , யானைப் படையும்  என  மூன்று  வகைப்படும் .                                                                                                        3

      படைப்பலமின்றேல்  அரசியலும்  பொருளும்  பராக்கிரமமும்  நிலைபெறாமல்  ஒழிந்துபோம் . இழிந்த  மனிதனொருவன்  பலமுடையனாக  விருப்பின்  எல்லோரும்  அவன்  வயப்பட்டொழுகுவர். அவன்  பலமில்லாதவனாக  விருப்பின்  எல்லோரும்  பகைவராவர் . அங்ஙனமாயின்  பலமுடைய  அரசனுக்கும் , பலமில்லாத  அரசனுக்கும்  உலகத்து  மக்கள்  எல்லோரும்  முறையே  வயப்பட்டொழுகுபவராகவும்  பகைவராகவும்  எங்ஙனமாகாமலிருப்பர் ?                                                 4

( உலகத்துள்ளா ரெல்லோரும்  வலிமிக்க  அரசனுக்கு  வயப்பட்டும் , வலி  குறைந்த  அரசனுக்குப்  பகைமை  மேற்கொண்டும்  ஒழுகுவரென்பது  கருத்து .) 

     உடல்  வன்மையும் , மிக்க  வீரமும் , படை  வன்மையும் , படைக்கலப்  பயிற்சி  வன்மையும் , அறிவு வன்மையும் , ஆயுள்வன்மையு மாகிய  இவ்வாறும்  எவன்பால்  அமைந்துள்ளனவோ  அவனே  திருமால்  என்றெண்ணப்படுவான் .                                                                                   5

      பகைவர்  சிறியராயினும்  அவரைப்படைப்பலமின்றி  யாரும்  வெல்ல முடியாது . தேவரும்  அசுரரும்  மனிதரும்  படைக்கலங்களாலேயே  எப்பொழுதும்  தத்தம்  வாழ்க்கையை நடத்துபவராவர் .                                                                                                 6

      ஒருவனுக்குத்  தன்  படைப்பலமே  எப்பொழுதும்  பகைவரை  மிகவும்  தோல்வியுறச்  செய்வதாகும் . ஆதலால்  அரசன்  பகைவராற்  கெடுக்கப்படாத  படைகளை  முயற்சி  மேற்கொண்டு  போற்றல்  வேண்டும் .                                                                                                             7

      படை ,  உரிமைப்படை  துணைப்படை  யெனவும் , மூலப்படை  அமயப்படை யெனவும் , வன்படை , மென்படை  யெனவும் , பயிற்சிப்படை , பயிற்சியில்படை யெனவும் , குழுப்படை , தனிப்படை யெனவும் , கருவி பெறுபடை  தன்கருவிப்படை யெனவும் , ஊர்தி  பெறுபடை  தன்னூர்திப்படை யெனவும்  பல திறப்படும் .                     8-9

      வேதன  முதவிக்  காக்கப்படுவது  உரிமைப்  படையாகும் . ( இது  கூலிப்படை யெனவுங்  கூறப்படும் . )  நட்புரிமை  பற்றிக்  காரியத்திற்குத்  துணை  செய்வது  துணைப்படையாகும் .  பல் யாண்டுகளாகத்  தொடர்ந்து நிற்பது  மூலப்படையாகும் . (இதனைத்   தொல்படை யென்ப .) அங்ஙனமின்றிச்  சின்னாட்களிற்  சேர்க்கப்படுவது  அமையப்படையாகும் . (இது  புதுப்படையாகும் . ) 10

      போர்  செய்தற்கட்  சிறந்த  மனவெழுச்சி யுடையது  வன்படையாகும் . அங்ஙனமல்லாதது  மென்படையாகும் . படை   வகுத்துப்  போர்  செய்வதில்  திறமை  வாய்ந்தது  பயிற்சிப்படையாகும்.  அத்  திறமையில்லாதது  பயிற்சியில்   படையாகும் .                                                                                                11

      அரசனால்  நியமிக்கப்படும்  படைத்தலைவனையுடையது  குழுப் படையாகும் . அப் படைத்  தலைவனை யின்றித் தனியே  தலைமை  கொண்டு  காரியம்  புரிவது  தனிப்படையாகும் . தலைவனால்  தரப்பட்ட  அம்பு , வாள் , முதலியவற்றை யுடையது  கருவிபெறுபடையாகும் . அங்ஙனந்  தரப்படாமல்  அவற்றைத்  தானே  கொண்டு  செல்வது  தன் கருவிப்படையாகும் .                                          12

      தலைவனால்  தரப்பட்ட  ஊர்தியை யுடையது  ஊர்திபெறுபடையாகும் . அங்ஙனம்  தரப்படாமல்  தானே  ஊர்ந்து  செல்வது  தன் னூர்திப்படையாகும் . படைத்தலைவனால்  திரட்டப்பட்டு  அவன்  ஆட்சியுட்பட்டதும் , அங்ஙனம் திரட்டப்படாமல்  தானே  திரண்டு  அவன்  ஆட்சியுட்படாததுமென  அது  பின்னரும்  இரு  வகைத்தாம் . வன்மை மிகுதியால்  தம் விருப்பின்படி  யொழுகும் வேடர் முதலியோரின்  குழு  காட்டுப் படையாகும் .                                13

பகைவனால்  விலக்கப்பட்டுத்  தன்  படையுட்  புகுந்ததும் , பகைவனை  வேறுபடுத்து  அவனிடத்தினின்றும்  தன்  வயமாகச்  செய்யப்பட்டதுமாகிய  படை  பகைப்படை யாகும் . இவ்விருதிறத்துப்  பகைப்படையும்  வலிகுறைந்த  படையென்று  கூறப்படும் . ஆதலின்  அவை  துணையாவன வல்லவாம் .                                                                  14

( பகைப்படைகள்  வலியுடையனவாயினும் , ஒரோவமயம்  தீங்கு  விளைக்கவுங்  கூடுமென்னும்  ஐயத்திற்கிடனாக  விருத்தலின் , அவை  ஓரரசனுக்கு  வலிகுறைந்த  படைகளாமென்பது  கருத்து . )

     அரசன்  தன்னோடொத்த  மற்போர்த் திறன்  மிக்க  வீரர்களோடு  கூடிச்  செய்யுங்  உறுப்பியக்கங்களாலும் , பெரியோர்  வணக்கங்களாலும் , நல்லுணர்வுகளாலும் , மற்போர்  செய்தற்பொருட்டு  உடல்  வன்மையைப்  பெருக்கல்  வேண்டும் . (பெரியோரை  வணங்குதலால்  அவர்  தம்  வாழ்த்துரைகளாலும்  உருப்பியக்கங்களாலும்  வன்மை  மிகுமென்பது  கருத்து .)                    15

      அரசன்  புலி  முதலிய  கொடிய  விலங்கினங்களை  வேட்டையாடுதலாலும் , இடைவிடாது  செய்யும்  அம்பு  வாள்  முதலிய  படைக்கலப்  பயிற்சியாலும் , வீரர்களின்  கூட்டுறவாலும்  தன்  வீரத்தன்மையை  நன்கு  வளர்த்தல்  வேண்டும் .                                       16

      நல்ல  வேதனங்  கொடுத்தலாற்  படைப்  பலத்தையும் , தவத்தாலும்  பயிற்சியாலும்  படைக்கலவன்மையையும் , நூற்பயிற்சித்தறமை  வாய்ந்தவர்களின்  கூட்டுறவால்  அறிவு   வன்மையையும்  எப்பொழுதும்  மிகுவித்தல்  வேண்டும் .                                                         17

( தவத்தால்  படைக்கலவன்மையை  மிகுவித்தல்  மந்திர  சாதனத்தாலாம் . )

      அரசன்  இடைவிடாது  செய்யும்  நற்செயல்களால்  தன்  இராச்சியத்தைத்  தன்  குலபரம்பரையில்  நீண்ட  காலம் நிலைத்திருக்கச்  செய்தலே  ஆயுள்வன்மையாகும் . எத்துணைக் காலம் தன்  குலவழியில்  இராச்சியம்  நிலைத்திருக்கின்றதோ  அத்துணைக்  காலமே  அவ்வரசனுக்கு  வாணாளாகும் .  

2 . நால்வகைப்  படைகளின்  அளவு  வகைகள்

     அரசன்  குதிரைப்  படையளவின்  நான்கு  மடங்கு  மிகுதியாகக்  காலாட்படையையும் , குதிரைப்படையளவின்  ஐந்திலொரு கூறு எருதுகளையும் , எட்டிலொரு  கூறு  ஒட்டகங்களையும், அவ்வொட்டகங்களின்  நான்கிலொரு  கூறு  யானைகளையும் , அவ் யானைகளின்  அளவிற்  பாதி  தேர்களையும் , அத்  தேரளவின்  இரு  மடங்கு  மிகுதியான  பெரிய  நாளிகங்களையும்  எப்பொழுதும்  வைத்துப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                    19-20

( நாளிகம் – பீரங்கி .)

      அரசன்  காலாட்படைகளை  மிக்க அளவினவாகவும் , குதிரைப்படைகளை  இடைநிகராய  அளவினவாகவும் , யானைப்படைகளைச்  சிற்றளவினவாகவும் , எருது  ஒட்டகங்களை  வேண்டுமளவினவாகவும்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . யானைகளை  மிகுதியாக  வைத்துக்  கொள்ளலாகாது .                       21

      ஓராண்டிற்கு  ஓரிலக்கங்  கருட  அளவுள்ள  பொருள் வருவாயுடைய  அரசன்  ஒத்த  வயதையும் , உறுதியான  கவசத்தையும் , சிறந்த  அம்பு  வாள்  முதலியவற்றையுமுடைய   நூறு  தனிக்  காலாட்  படைகளையும், சிறிய  நாளிகங்களை யுடைய  முந்நூறு  காலாட்  படைகளையும் , எண்பது  குதிரைகளையும் , ஒரு  தேரையும் , இரண்டு  பெரிய  நாளிகப்  பொறிகளையும், பத்து  ஒட்டகங்களையும் , இரண்டு  யானைகளையும், இரண்டு   வண்டிகளையும் , பதினாறு  எருதுகளையும் , ஆறு  எழுத்தாளர்களையும் , மூன்று  மந்திரிகளையும்  நன்றாக  வைத்துப்  போற்றல்  வேண்டும் .                                                                              22-24

3 . அரசர்க்குரிய  செலவு  வகைகள்

      ஓராண்டிற்கு  ஓரிலக்கங்  கருட  அளவு  பொருள்வருவாயுள்ள  அரசன்  திங்களொன்றிற்குச்  செலவிடும்  வகையும்  அளவும்  வருமாறு:

      தன்  குடும்பத்திற்கு  வேண்டிய  பண்டங்களைத்  தொகுத்து  வைத்தற்  பொருட்டும் , ஈதற்  பொருட்டும் , தான்  இன்பம்  நுகர்தற்பொருட்டும்  அயிரத்தைந்நூறு  [ 1500 ] கருடங்களும், எழுத்தாளர்க்கு  நூறு [100]  கருடங்களும் , மந்திரிகளுக்கு  முந்நூறு [300] கருடங்களும் , மனைவி  மக்கள்  பொருட்டு  முந்நூறு  [300]  கருடங்களும் , புலவர்  பொருட்டு  இருநூறு [200] கருடங்களும், குதிரை  வீரர் , குதிரை , காலாட்படைகளின்  பொருட்டு  நாலாயிரம்  [4000]  கருடங்களும் , யானைகளும்,  ஒட்டகங்களும் , எருதுகளும்  நாளிகங்களுமாகிய  இவற்றின்  பொருட்டு  நாநூறு [400]  கருடங்களும் செலவிடல்  வேண்டும் . செலவழித் தெஞ்சிய  ஆயிரத்தைந்நூறு  [1500]  கருடங்களை  அரசன்  கருவூலத்திற்  சேமித்து  வைத்தல்  வேண்டும் .

( 25-27 . இச்சுலோகங்களில்  கூறியபடி  திங்களொன்றிற்குக்  கூடிய  செலவுகளும்  கருவூலத்தில்  தொகுத்துவைப்பதுமாக 8300 – கருடங்களாகும் . ஆகவே , ஆண்டொன்றிற்கு  99600 –கருடங்களாதல்  காண்க . முதல்  அத்தியாயம்  315-ஆம்  சுலோகத்தில்  அரசனுக்குரிய  வருவாயிற்  பாதி  நால்வகைப் போர்ப் படைகளின்  பொருட்டுச்  செலவிடல்  வேண்டுமென்று  கூறப்பட்டுள்ளது . இங்குத்  திங்களொன்றிற்கு  4400-  படைச்  செலவாகுமென்று  கூறப்பட்டுள்ளது . இவ் விரண்டளவும்  சிறிதேறக் குறையச்  சமமாதல்  காண்க . )

      படைகள்  அணிந்து  கொள்ளும்  ஆடைகளின்  பொருட்டு  ஆண்டுதோறும்  பொருள்  கொடுத்தல்  வேண்டும் .                                  28

4 . தேர்  யானைகளின்  வகைகள்

      வன்மைமிக்க  இருப்பினா லாக்கப்பட்டதும் , எளிதிற்  செல்லுதற்குரிய  உருள்களையுடையதும் , பரியங்க  இருக்கையையுடையதும் , தாமே  தூக்கி  யசைகின்ற  படிக்கட்டுக்களை யுடையதும் , நடுவணுள்ள  இருக்கையிலிருந்து  நடாத்தும்  தேர்ப்பாகனையுடையதும் , அம்பு  வாள்  முதலிய  போர்க்கருவிகள்  பொதிந்த  நடுவிடத்தையுடையதும் , விரும்பிய  வண்ணம்  நிழலைச்  செய்வதும் , அழகு  மிக்கதும் , சிறந்த  குதிரைகளை யுடையதுமாகிய  இத்தகைய  தேரை  அரசன்  எப்பொழுதும் வைத்துப்  பேணல்  வேண்டும் .                                      29-30

(பரியங்கம் – கட்டில் .)

      நீலநிறம்  வாய்ந்த   நாவினையும்  நாவின்  நுனியினையுமுடை யதும் , மாறுபட்டு  வளைந்த  தந்தத்தினையுடை யதும் , தந்தமில்லாததும் , நெடுங்காலம்  மேற்கொண்டிருக்கும்  சினத்தினை யுடையதும் , மதநீரை  மிகுதியாகப்   பெய்வதும் , முதுகை  அசைப்பதும் , பதினெட்டிற்  குறைந்த  நகங்களை யுடையதும் , மந்தகதி யினையுடையதும் , நிலத்தைத்  துடைத்துச்  செல்லும்  வாலினையுடையதும்  ஆகிய  இக் குற்றமுள்ள  யானைகள்  கேடு  செய்வனவாம் . இக்  குற்றங்களில்லாத  யானைகள்  நலஞ்செய்வனவாம் .                                                                                  31-32

      பத்ரம் , மந்திரம் , மிருகம் , மிச்சிரம்  என  யானைகள்  சாதியால்  நான்கு  வகைப்படுவனவாம் .                                                                        33

      தேன்   போன்ற  நிறம்  வாய்ந்த  தந்தங்களையும் , மிக்க  வன்மையையும் , ஒத்த  உறுப்புக்களையும் , திரண்ட  வடிவினையும், அழகிய  முகத்தினையும் , பிறவற்றினுஞ்  சிறந்த  அவயங்களையுமுடையது  பத்திரசாதி  யானையாகும் .                       34

      பருத்த  வயிற்றினையும் , சிங்கத்தின்  பார்வை  போன்ற  பார்வையினையும் , மிகப்பருத்த  தோல்  கழுத்து  துதிக்கைகளையும்  இடை நிகராய  உறுப்புக்களையும் , நீண்ட  உடலினையுமுடையது  மந்திரசாதி  யானையாகும் .                                                                            35

      சிறிய  கழுத்து  தந்தம்  செவி  துதிக்கைகளையும்  , அகன்ற  கண்களையும் , மிகக்  குறுகிய  கீழுதட்டினையும் , ஆண் குறியையும் , குறுகிய  உடலினையுமுடையது  மிருகசாதி  யானையாகும் .               36

(“ சிறிய “என்னும்  அடையைச்  செவி  துதிக்கைகளுக்கும் , “மிகக் குறுகிய” என்பதனை  ஆண்குறிக்குங்  கொள்க . )

5 . யானைகளின்  அளவு  வகைகள்

      யானையின்  அளவில்  யவதானியத்தின்  நடுப்பாகம்  எட்டுக்கொண்டது  ஓரங்குலமாகவும் , அவ்வங்குலம்  இருபத்து  நான்கு கொண்டது  ஒரு  முழமாகவும்  அறிவுடையோர்  கூறுவர் .                       38

      பத்திரமென்னும்  யானையின்  உயர  அளவு  ஏழு  முழமும் , அதன்  நீளம்  எட்டு  முழமும் , அதன்  வயிற்றின்  சுற்றளவு  பத்து  முழமும்  ஆகும் .                                                                                                                       39

      மந்திரம்  மிருகம்  என்னும்  யானைகளின்  அளவு  பத்திரசாதி  யானையின்  அளவினின்றும்  முறையே  ஒவ்வொரு  முழம்  குறைவாகும் . பத்திரம்  மந்திரம்  என்னும்  யானைகளின்  நீள  அளவு  ஒத்ததாகு மெனப்  பெரியோர்  கூறுவர் .                                                       40

               சாதி                      உயரம்                 நீளம்                சுற்றளவு

            பத்திரம்                       7                             8                             10

             மந்திரம்                      6                             8                             9

              மிருகம்                       5                             7                             8 

        அகன்ற  புருவம்  கதுப்பு   நெற்றிகளை  யுடையதும்  எப்பொழுதும்  சிறந்த  கதியினையுடையதும்  , நல்ல  இலக்கணங்களோடு  கூடியதுமாகிய  யானை  எல்லாவற்றினுஞ்  சிறந்ததாகும் .                    41

( “அகன்ற “  என்னும்  அடையைக்  கதுப்பு  நெற்றிகளுக்குங்  கொள்க .)

6  . குதிரைகளின்  அளவு  இலக்கண  முதலியன

      குதிரையின்  அளவில்  ஐந்து  யவதானியத்தில்  நடுப்பாகங்  கொண்டது  ஓரங்குலமாகத்  தனியே  கணக்கிட்டுக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                              42

      நாற்பதங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  தலையாயவற்றுள்ளும்  தலையாயதாகும் . முப்பத்தாறங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  தலையாயதாகும் . முப்பத்திரண்டங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  இடையாயதாகும் . இருபத்தெட்டங்குல  அளவு  நீளமுள்ள  முகத்தினையுடைய  குதிரை  கடையாய  தாகும் .                             43-44

      குதிரைகளின்  முகத்தளவைக்  கொண்டு  அவற்றின்  மற்றைய  உறுப்புக்களின்  அளவுகளைக்  கணக்கிட்டறிதல்  வேண்டும் . அவற்றின்  உயர  அளவு  முற்கூறிய   முகத்தளவினும்  மும்மடங்கு  மிகுதியாகக்  கூறப்படும் .                                                                              45

      குதிரையின்  சிரோமணி  தொடங்கி  வாலின்   அடிப்பாகம்  வரையுள்ள  அதன்  நீளம் , அக் குதிரையின்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறு  கூடிய  நான்கு  மடங்கு  மிகுதியாகும் .                46

சிரோமணி – குதிரையின்  தலையிலுள்ள  ஒரு  குறி . முப்பத்தாறங்குல நீளம்  முகமுள்ள  குதிரைக்கு  அதன்  முகத்தின்  அளவை  நான்கு  மடங்காகப்  பெருக்க  144-அங்குலமாகும் . அவற்றோடு  அதன்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறாகிய  அங்குலம்  12-ஐயும்  சேர்க்க  அங்குலம்  156-ஆகும்  . இவ்வளவே  அக் குதிரையின்  நீள  அளவென்று  அறிதல்  வேண்டும் . இவ்வாறே  மற்றைக்  குதிரைகளுக்கும்  முகத்தின்  அளவைக்  கொண்டு  நீள  அளவைக்  கணக்கிட்டுக்  கொள்க . )

      குதிரையின்  வயிற்றின்  சுற்றளவு  அதன்  முகத்தளவின்  மூன்று  மடங்கு  மிகுதியும்  மூன்றங்குலமுமாகும் . இவ்வளவுகள்  பொதுவாகக்  கூறப்பட்டனவாம்.  இனி , விரிவாகச்  சிறப்பளவுகள்  கூறப்படும் .   47

      பின்வரும்  அளவுகள்  இருபத்தெட்டங்குல  நீளம்  முகமுள்ள  குதிரையைக்  குறித்துக்  கூறப்படுவனவாம் . குளம்பின்  உயரம்  மூன்றங்குலமாகவும் , அதன்மேலுள்ள  மணிக்கட்டின்  உயரம்   நான்கங்குலமாகவும்   இருத்தல்  வேண்டும் .                                             48

     மணிக்கட்டின்   மேலுள்ள  முழங்கால்  இருபத்திரண்டங்குலமாகவும்  முழங்காற்பூட்டு  மூன்றங்குலமாகவும் , தொடை  பதினான்கங்குலமாகவும்  இருத்தல்  வேண்டும் . தொடைச் சந்தியினின்றும்  தோள்வரையுள்ள  அளவு  முப்பத்தெட்டங்குலமாகும். பின்றொடை  முகத்தின்  அளவை யொப்ப  இருபத்தெட்டங்குலமாகும் . பின்  முழந்தாள்  முகத்தளவில்  நான்கிலொரு  கூறு  குறைந்தது [ 21-அங்குலம் ] ஆகும் .                                                                                        49-50

      குதிரையின்  உயர  அளவு  இதுகாறும்  கூறப்பட்டது . இனி , அதன் நீள  அளவு  நூன்முறைப்படி  கூறப்படும் .                                                   51

      அழகுற  நீண்ட  கழுத்தின்  நீள  அளவு  முகத்தளவின்  ஆறிலொரு  கூறு  கூடிய  இருமடங்காகும் . அக் கழுத்தின்  உயரம்  முற்கூறிய  முகத்தளவிற்  காலேயரைக்காற்  கூறு  குறைந்த  அளவினதாகும் .  52

( ஆறிலொருகூறு  கூடிய  இருமடங்காவது , சிறிது  கூடிய  60இ – அங்குலமாகும் .)

      பிடரடி  தொடங்கி  அண்ட  மூலம்  வரையுள்ள  உடலின்  நீளம்  கழுத்தின்  நீள  அளவோடொப்பாகும் . அவ் வண்டமூலத்தினின்று  திரிகம்  வரையுள்ள  அளவு  முகத்தளவின்  ஆறிலொரு கூறு  கூடிய  அறைக் கூறாகும் . எஞ்சிய  பிடர்வரை யுள்ள  பாகம்  முதுகாகும் .  53

( அண்டமூலம் – ஆண்குறியின்  அடிப்பாகம் ; அஃதாவது  உடலின்  இறுதி . கழுத்தின்  நீள  அளவு  60இ – அங்குலம் . “அவ்வண்ட  மூலத்தினின்று”  என்பது  நீள  அளவு  முற்றுங்கூறப்பட்ட  உடலில்  இறுதி  தொடங்கிப்  பின்னரும்  அளவு  கூறியதாகும் . திரிகம் – முதுகின்  கடையில்  இரண்டு  தொடை  எலும்புகளும்  சேர்ந்திருக்கும்  சந்தியிடம் . ஆறிலொரு  கூறு  கூடிய  அரைக்கூறு – 18இ- அங்குலமாகும் . ஆகவே  திரிகம்  தொடங்கிப்  பிடரடி  வரையுள்ள  நீள  அளவு  42- அங்குலமாகும் . )

      வாலும்  ஆண்குறியும்  முகத்தளவிற்  பாதியளவினவாகும் . அண்டங்கள்  ஆண்குறியளவிற்  பாதி யளவினவாகும் . செவியின்   நீளம்  ஆறங்குலமாகும் . சில  குதிரைகளுக்கு  ஐந்து  அல்லது  நான்கு  அங்குல  நீளமும்  உண்டு .                                                                                  54

( முகத்தளவிற்  பாதியளவு – 41-அங்குலம் . ஆண்குறியளவிற்  பாதி யளவு  7-அங்குலம் . )

      குளம்பின்  சுற்றளவு  ஓரங்குலங்  கூடிய  முகத்தளவிற்  பாதியாகும் . மணிக்கட்டின்  சுற்றளவும்  முழங்காலின்  சுற்றளவும்  குளம்பின்  சுற்றளவிற்  பாதியாகும் .                                                                                  55

( ஓரங்குலங்  கூடிய  முகத்தளவிற்  பாதி  15-அங்குலம் . குளம்பின்  சுற்றளவிற்  பாதியளவு 7இ-அங்குலம் .)

      அழகிய  முன்றொடையின்  சுற்றளவு  பதினோரங்குலமாக   அறிவுடையோர்  கூறுவர் . பின்றொடைகளின்  அடிப்பாகத்துச் சுற்றளவு  முகத்தளவின்  ஆறிலொருகூறு  கூடிய  மூன்று  மடங்கு  மிகுதியாகும் .                                                                                                        56

( ஆறிலொருகூறு  கூடிய  மும்மடங்காவது , 88இ- அங்குலமாகும் . குதிரையின்  பின்றொடை  மூலம்  மிகப்  பருத்திருத்தல்  இயல்பே . ஆயினும்  ஒருதொடை  இவ்வளவு  அங்குலச்  சுற்றளவுடையதாக  இருக்க  மாட்டாதாகலின்  இங்குக்கூறிய  அளவு  இரண்டு  தொடைகளுக்கென்று  உய்த்துணர்தல்  வேண்டும் . அங்ஙனம்   கொள்ளுங்கால்  ஒரு  தொடையின்  சுற்றளவு  44 ¼- அங்குலமாகும் . )

      பின்புறத்துத்  தொடை  தொடங்கிக்  கால் வரை யுள்ள  பாகம்  உள்ளும்  புறம்பும்  வில்லைப்  போற்  சிறிது  வளைந்து  காணப்படும் . மணிக்கட்டிலுள்ள  மணியின்  சுற்றளவு  ஒன்பதங்குலமாகும் . பிற்புறத்து  முழந்தாள்  முதலியவற்றின்  சுற்றளவு  முற்புறத்துக்  கால்களுக்குக்  கூறியபடியாம் .                                                                        57

      இரண்டு  தொடைகளின்  நடுவிற்  பக்கமூலத்துள்ள  குறியிடம் ஓர்  அங்குல  அளவினதாகும் .                                                                                   58

      கழுத்தின்  மேற்  புறத்திற்  சிரோமணி  தொடங்கித்  தோள்வரை நீண்டிருக்கும்  சிறந்த  பிடரி  மயிர்   தோன்றுமிடம்  ஒன்றரையங்குல  அகற்சியுடையதாகும் .                                                                                        59

      அழகிய  பிடரி மயிர் ஒரு முழ அளவு நீள முடையதாய்க்  கீழ்  நோக்கித்  தொங்கல்  வேண்டும் . மிக்க  வனப்பு  வாய்ந்த வால்  மயிர்  ஒன்றரை முழமாதல்  இரண்டு  முழமாதல் நீண்டிருத்தல்  வேண்டும். 60

      செவிகளின்  நீள  அளவு ஏழு  அல்லது  எட்டு  , ஒன்பது , பத்து  அங்குலங்களாகும் . அச் செவிகளின்  அகல  அளவு  மூன்றங்குலமாதல்  நான்கங்குலமாதல்  இருத்தல்  வேண்டும் .                                                   61

செவிகளின்  நீள  அளவு  இப்  பிரகரணத்தின்  54-ஆம்  சுலோகத்தி லுங்  கூறப்பட்டது . ஆகவே  அவ்வளவு  நான்கு  அங்குலம்  முதல்  பத்தங்குலம்  வரை  இருக்கலாமென்று  புலப்படுகின்றது . )

      குதிரையின்  கழுத்துத்  திரண்டதாகவும்  தகட்டு  வடிவினதாகவும்  இல்லாமல்  மயிலின்  கழுத்துப்  போலிருத்தல்  வேண்டும் . அக் கழுத்தின்  நுனிப்  பாகத்தின்  சுற்றளவு  ஒருபிடி யளவு  கூடிய  முகத்தளவோடொத்ததாகும் .                                                                            62

( பிடியளவோடு  கூடிய  முகத்தளவாவது  34இ – அங்குலமாகும் . 4-ஆம்  பிரகரணம்  82-ஆம்  சுலோகப்படி  பிடி  ஒன்றுக்கு  அங்குலம்  4-ஆகும் . இவ்வங்குலம்  யவம் 8-கொண்டதாகலின்  4-க்கு  8-32 யவங்கள்  6இ – அங்குலங்களாகும் . முகத்தளவு  28- அங்குலம் .  ஆக, 34இ – ஆதல்  காண்க . )

      கழுத்தின்  அடிப்பக்கத்துச்  சுற்றளவு  முகத்தளவின்  இருமடங்கு  மிகுதியிற்  பத்தங்குலங்  குறைந்ததாகும் . முகத்தளவின்  மூன்றிலொரு  கூறு  குறைந்த  அளவினையுடைய  அழகிய  வயிற்றிடம்  மார்பென்று  கூறப்படும் .                                                           63

( இரு மடங்கு  மிகுதியிற்  பத்தங்குலங்  குறைந்தது  46-அங்குலம் . )

      கண்களின்  மேற்புறத்துள்ள  சுற்றளவு  எட்டங்குலங்  கூடிய  முகத்தளவோடொத்ததாகும் . மூக்கின்  மேலும்  கண்களின்  கீழுமுள்ள  முகத்தின்  சுற்றளவு  முகத்தின்  நீள  அளவில்  மூன்றிலொரு  கூறு  குறைந்ததாகும் .                                                                                                    64

( எட்டங்குலங்  கூடிய  முகத்தளவு 36-அங்குலம் . மூன்றிலொரு கூறு  குறைந்தது  18-அங்குலம் . )

      கண்களின்  அகலம்  தனித்தனி  இரண்டங்குலமாகவும்  அவற்றின்  நீளம்  தனித்தனி  மூன்றங்குலமாகவும் இருத்தல்  வேண்டும் . அன்றி  அகலம்  இரண்டரை  அங்குலமாகவும்  நீளம்  நான்கங்குலமாகவும்  இருக்கலாம் .                                                                                                           65

      இரண்டு  தொடைகளுக்கும்  நடுவணுள்ள  வெளியிடம்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறாகும் . இரண்டு  கண்  நுனிகளுக்கும்  நடுவணுள்ள  பாகமும் , இரண்டு  செவிகளுக்கும்  நடுவணுள்ள  பாகமும் , செவிக்கும்  கண்ணிற்கும்  இடைப்பட்ட  பாகமும்  தனித்தனி  முகத்தளவில்  ஐந்திலொரு  கூறாகும்.  நிலத்தில்  தோய்ந்த  இரண்டு  குளம்புகளுக்கும்  இடைப்பட்ட  வெளியளவு  செவியளவோடொக்கும் .

( மூன்றிலொருகூறு  9- அங்குலம் . ஐந்திலொருகூறு  5இ –அங்குலம்.  செவியளவை  61ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      இரண்டு  கண்மணிகளுக்கும்  நடுவணுள்ள  இடமும்,  இரண்டு  புருவங்களுக்கும்  இடைப்பட்ட  இடமும் , மூக்கிற்கும்  கண்ணிற்கும்  நடுவணுள்ள  இடமும்  பின்தொடையளவின்  மூன்றிலொரு  கூறாகும் .

( பின் தொடையளவு 50-ஆம்  சுலோகத்திற்  கூறியபடி  28-அங்குலமாகும் . அதன்  மூன்றிலொரு  கூறு  சிறிது  குறைய  9இ – அங்குலமாகும் . முன்  தொடையெனக்  கொள்ளின்  கண்களுக்கும்  அவற்றின்  நடுவிடத்திற்குங்  கூறிய  அளவோடு  பொருந்தாமையாற்  பின்தொடை யெனக்  கொள்ளப்பட்டது . )

      உதடுகளோடு  கூடிய  முகத்தின்  நுனிப்பாகம்  முகத்தளவின்  மூன்றிலொரு  கூறாகும் . இரண்டு  மூக்குத்  துவாரங்களுக்கும்  இடைப்பட்ட  இடம்  முகத்தளவில்  ஒன்பதிலொரு  கூறாகும் .            69

( ஒன்பதிலொரு  கூறு  3-அங்குலம் . )

      குதிரை  உடலின்  பரப்பு  மனித  உடலின்  நீளத்தில்  அரைக்  கூறாகும் . திரிகத்தின்  பரப்பு  மார்பினளவோ டொத்ததாகும் . முற்புறத்துக்  கால்களின்  அடிப்பக்கத்தின்  கீழுள்ள இருதயம்  முகத்தளவில்  நான்கிலொரு  கூறாகும் .                                                       70

( மார்பின்  அளவு  18- அங்குலம் ; 63-ஆம்   சுலோகத்திற்  காண்க . நான்கிலொரு  கூறு 7-அங்குலம் .)

      இருதயத்தை  யடுத்துள்ள  முன்கால்களின்  இடைவெளி முகத்தளவின்  ஆறிலொரு  கூறாகும் . சிவுகத்தினின்றுங்  கீழுதட்டினுயரம்  ஒன்றரை  யங்குலமாகும் .                                              71

( ஆறிலொரு  கூறு  4இ-அங்குலம் .  சிவுகம் – கீழுதட்டோடு  கூடிய  வாயின்  கீழ்ப்பாகம் . )

      உயர்ந்த  கழுத்தையும்  தாழ்ந்த  முதுகினையுமுடைய  குதிரை  எப்பொழுதும்  அழகுற  விளங்குவதாகும் .                                                   72

      ஒருவன்  எவ்வுருவத்தைச்  செய்தற்கு  முயல்கின்றானோ  அவ்வுருவத்தை  எல்லாவகையாலும்  உற்று நோக்கிச்  செய்தல்  வேண்டும் . எவற்கும்  முன்னர்ப்  பார்க்கப்படாத வுருவம்  செய்தற்கு  இயலாததாகும் .                                                                                                73

      ஆதலின்  சிற்பத்  தொழில்  வல்லான்  முதற்கட்  குதிரையை  நினைவு  கூர்ந்து  பின்னர்  அதன்  உறுப்புக்களைச்  செய்யக்கடவன் .  இங்குக்கூறிய  அளவிலக்கண  முறைப்படி  குதிரைகளின்  எல்லா  உறுப்புக்களும்  இயற்றப்படுமாயின்  அது  நலஞ்  சிறத்தற்குக்  காரணமாகும் .                                                                                                    74

      மயிர்  நீங்கிய  முகமும்,  அழகும் , சோர்வின்மையும்,  உயர்ந்த  மூக்கும் , நீண்டுயர்ந்தனவாகிய  கழுத்தும்,  முகமும்,  குறுகிய  வயிறு  குளம்பு  செவிகளும் , விரைவுமிக்க  நடையும் , அன்னத்தையும்  மேகத்தையும்  ஒத்த  ஒலியும்  மிக்க  கொடுந்தன்மையின்மையும் , மிக்க  மந்தமின்மையும்,  தெய்வத்தன்மை  மிக்க  வன்மையும் , சிறந்த  ஒளியும் , நறுமணமும் , நன் நிறமும்  , நலம்  பயக்கும்  சுழிகளுமாகிய  இவற்றையுடைய  குதிரையே  காண்பவர்  மனத்தைக்  கவரும்  இயல்பினதாகும் .                                                                                            75-76

      இடமுகம்  வலமுகம்  என்னும்  வேறுபாட்டால்  இரண்டு வகைப்படும்  சுழிகளும்  பிரமரம்  என்று  கூறப்படும் . அச்சுழி   நிறைவுடையது  நிறைவில்லாதது  எனவும் , நீண்டது  குறுகியது  எனவும்  மீண்டும்  பலதிறப்படும் .                                                                   77

      பெண்  குதிரையின்பாலும்  ஆண்  குதிரையின்பாலும்  முறையே  இடமுமாகவும்  வலமுமாகவும் இருக்கும்  சுழிகள்  அவ்வவற்றிற்குக்  கூறப்பட்ட  பயன்களை  விளைவிப்பனவாம் . அவை  மாறியிருக்குமாயின்  அப்பயன்களை  விளைவிப்பனவாகா .               78

( அவ்வவற்றிற்குக்  கூறப்பட்ட  பயன்களை  80-ஆம்  சுலோக  முதலியவற்றிற்  காண்க .)

     அவ் விருவகைச்  சுழிகளுக்கும்  கீழ்  நோக்கிய  முகமும்  மேனோக்கிய  முகமும்  குறுக்கு  முகமும்   உள்ளனவாம் . அம்முக  வேறுபாட்டாற்  பயன்  வேறுபாடு  முண்டாகும் .                                         79

      சங்கு  சக்கரம்  கதை  பதுமம்  யாகவேதி  சுவத்திகம்  பிராசாதம்  தோரணம்  வில்  அழகிய  நிறைகுடம்  சுவத்திகமாலை  மீன்  வாள்  சீவற்சம்  ஆகிய  இவற்றின்  வடிவத்தை  யொத்து  விளங்கும்  சுழிகள்  நலம்  பயப்பனவாம் .                                                                                           80

(சுவத்திகம் – அரிசிமாவால்  முக்கோண  வடிவமாகச்  செய்யப்படும்  மங்கலப்பொருள் . பிராசாதம் – ஈண்டுக்  கோபுரத்தின்பாலதாம் .  சீவற்சம் – திருமால்  மார்பில்  பெருமை  தோன்ற  விளங்கும்  வெண்மயிராலாகிய  ஒரு  மறு . )

      மூக்கு  நுனியிலும்  நெற்றியிலும்  நெற்றியின்  மேற்புறத்தும்  கழுத்திலும்  தலையிலும்  சுழி  பொருந்திய  குதிரைகள்  மிகச்  சிறந்தனவாம் .                                                                                                  81

      மார்பிலும்  தோளிலும்  கழுத்திலும்  அரையிலும்  நாபியிலும்  வயிற்றிலும்  விலாப்பக்கங்களின்  நுனிப்  பாகத்திலும்  சுழியுள்ள  குதிரைகள்  இடையாயினவென்று  கூறப்படும் .                                    82

      நெற்றியில்  இரண்டு  சுழிகளும்  மூன்றாவதாகத்  தலையிலொரு  சுழியும்  விளங்கப்பெற்ற  குதிரை  பூரணாநந்தம்  என்னும்  பெயரினதாம் . அது   தலையாயதாம் .                                                      83

      எதன்  முதுகு  எலும்பில்   ஒரு  சுழி  தோன்றி  விளங்குகின்றதோ  அது  சூரியன்  என்னும்  பெயரினதாம் . அது  தன்னையுடையார்க்குக்  குதிரைக்  கூட்டங்களை  மேன்மேலும்  வளர்விக்கும் .                          84

      எதன்   நெற்றியில்  மூன்று  சுழிகள்  குறுக்காகத்  தோன்றி  விளங்குகின்றனவோ  அது  திரிகூடம்  என்னும்  பெயரினதாம் . அஃது  எப்பொழுதும்  தன்  தலைவற்குக்  குதிரைகளை  மிகுவிப்பதாகும் . 85

      அங்ஙனமே  மூன்று  சுழிகள்  எதன்  கழுத்தில்  தோன்றி  விளங்குகின்றனவோ  அது  குதிரைகளுட்  சிறந்ததாய்  அரண்மனையிலிருக்கத்  தகுதியுடையதாகும் .                                        86

      எதன்  கபோலங்களில்  இரட்டைச் சுழிகள் காணப்படுகின்றனவோ  அக்குதிரை  தன்னையுடையாற்குப்  புகழைப்  பெருக்குவதோடு  அவன்  அரசியலையும்  வளர்விக்கும் .                                                          87

      எதன்  இரு  கபோலங்களிலும்  ஒற்றைச் சுழி  காணப்படுகின்றதோ  அக்குதிரை  சருவநாமம்  என்னும்  பெயரினதாம் . அது  தன்  தலைவர்க்குக்  கேடு  பயப்பதாகும்.                                                               88

      எதனுடைய  வலப்  பக்கத்துக்  கபோலத்தில்  மாத்திரம்  ஒரு  சுழி  காணப்படுகின்றதோ  அது  சிவம்  என்னும்  பெயரினதாம் . அது  தன் தலைவற்குப்  பெருநலம்  பயப்பதாகும் .                                                       89

      அங்ஙனமே  இடப்பக்கத்துக்  கபோலத்தின்  மாத்திரம்  ஒரு  சுழி  யமைந்த  குதிரை  கொடுந்தன்மை  யுடையதாய்த்  தன்  தலைவன்  பொருட்குக்  கேடு  விளைவிப்பதாகும் .                                                      89இ

     குதிரையினுடைய  செவியின்  அடிப்பாகத்தில்  இரட்டைச்  சுழிகள்  காணப்படுமாயின் , அவை   இந்திராக்கம்  என்னும்  பெயரினவாய்  அரசனையும்  அரசியலையும்  வளர்விப்பனவாம் . தனங்களின்  நடுப்பாகத்தில்  இரட்டைச்  சுழிகள்  இருக்குமாயின்  அவை  விசயம்  என்னும்  பெயரினவாய்ப்  போர்  செய்யுங்  காலத்தில்  மிக்க  புகழை  விளைவிப்பனவாம் .                                                                                       90-91

      தோளின்  இருபக்கங்களிலும்  சுழிகளையுடைய  குதிரை  பதுமம்  என்னும்  பெயரினதாம் . அது  தன்  தலைவற்குப்  பதுமமென்னும்  அளவினையுடைய  பல்வகைச்  செல்வங்களையும்  தருதலோடு , இடையறா  இன்பத்தையும்  பயப்பதாம் .                                                     92

      மூக்கின்  நடுவில்  ஒரு  சுழியையாதல்  மூன்று  சுழியையாதல்  உடைய  குதிரை  பூபாலன்  என்னும்  பெயரினதாம் .  அது குதிரைகளின்  சக்கரவர்த்தி  என்றறியப்படும்.                                           93

      கழுத்திற்  பெரியதாகவும்  சிறந்ததாகவுமுள்ள  ஒற்றைச்  சுழியினையுடைய  குதிரை  சிந்தாமணி  என்னும்  பெயரினதாம் . அது  தன்  தலைவற்குக்  கருதிய  பொருள்களையும்  இன்பத்தையும்  அளிப்பதாகும் .                                                                                                      94

      நெற்றியிலும்  கழுத்திலும்  சுழிகள்  இருக்குமாயின்  அவை  கற்கம்  என்னும்  பெயரினவாய்ச்  செல்வ வளர்ச்சியையும்  புகழையும்  தருவனவாம் .                                                                                                         95

      முகத்திலும்  அடிவயிற்றிலும்  இரட்டைச்  சுழிகள்  அமையப்பெற்ற  குதிரை  விரைவில்  மரணமெய்தும் ; இன்றேல்  தன்  தலைவற்கு  அழிவு  செய்வதாகும் .                                                                                          96

    முழங்காற் பூட்டிற்  சுழிகளிருக்குமாயின்  அவை  பிரயாணத்திற்  றுன்பஞ்  செய்வனவாம் . குதிரையின்  குறியிற்  சுழியிருக்குமாயின்  அது  வெற்றித்திருவைக்  கொடுப்பதாகும் .                                                  97

      முதுகின்  கடைப்பாகமாகிய  திரிகத்திற்  சுழி யிருக்குமாயின்  அஃது  அறம்  பொருள்  இன்பங்கட்கு  அழிவு  செய்வதாகும் . வாலின்  அடிப்பாகத்திலிருக்குஞ்   சுழி  தூமகேது  என்று  சொல்லப்படும் . அது  பலவகைத்  துன்பங்களைச்  செய்வதாகும் .                                                 98

     குறி  வால்  திரிகம்  ஆகிய  மூன்றிடத்திலும்  சுழி யமையப்  பெற்ற  குதிரை  கிருதாந்தம்  என்னும்  பெயரினதாம் . அது  மிகவும்  அச்சம்  விளைவிப்பதாகும் .                                                                                               99

      குதிரையின்  விலாப்புறத்தில்  மத்தியதண்டம்  என்னும்  ஓர்  இலச்சினை  பெருவிரலளவு  நீண்டிருக்குமாயின்  மிகவுங்  கேடு  பயப்பதாகும் . அம்  மத்தியதண்டம்  பல்வகைக்  கிளைகளோடு  பிடரி  மயிரில்  தோன்றுமாயின்  அதன்  நீட்சிக்குத்  தக்கவாறு  மிக்க  துன்பம்  பயப்பதாகும் .                                                                                                      100

 ( இலச்சினை – அடையாளம் . )

      கபோலத்தின்  மேற்பாகமாகிய  அநு , கபோலம் , இருதயம் , கழுத்து, நுனி முகம் , நாபியின்  கீழுள்ள  மூத்திர  நிலயம் , அரை , நெற்றி யெலும்பு , முழங்காற்  பூட்டு , அண்டமூலம் , திமில் , நாபி , குதம்  ஆகிய  இவ்வுறுப்புக்களில்  உள்ள  சுழி  கண்ணீருதிர்க்கும்  கடுந்துன்பத்தைச்  செய்வதாகும் . வயிற்றின்  வலப்பக்கத்திலும்  வலக்காலிலுமுள்ள  சுழி  எப்பொழுதும்  தீமை  பயப்பதாகும் .           101

( இங்குக்  கூறிய  உறுப்புக்களுள்  ஒன்றாகிய  கபோலத்திலுள்ள  சுழி  தீயதென்று  கூறப்பட்டது ; மேல்  67  முதல்  89இ  வரையுள்ள  சுலோகங்களில்  கபோலச்  சுழிகளுக்கு  நல்லனவும்  தீயனவுமாகிய  பயன்கள்  கூறப்பட்டன ; இது  பொதுவும்  அவை  சிறப்புமாகிய   வேறுபாடு   பற்றி . )

      குதிரையின்  கழுத்து  நடுவிலும் , முதுகின்  நடுவிலும் , மேலுதட்டிலும் , கீழுதட்டிலும் , கண்ணிற்குஞ்  செவிக்கும்  இடையிலும், வயிற்றின்  இடப்பக்கத்திலும் , விலாப்புறங்களிலும் , தொடைகளிலும் , முற்புறத்துக்  கால்களிலும்  இரட்டைச்  சுழிகள்  இருக்குமாயின்  அவை  மிக்க  நலம்  பயப்பனவாம் .                                                                           102

      நெற்றியில்  இரண்டு  சுழிகள்  தனித்தனி  விலகியிருக்குமாயின்  அவை  சூரியன்  சந்திரன்   என்னும்  பெயரினவாய்  நற்பயனை  விளைவிக்கும் . அச்சுழிகள்  நெருங்கியிருக்குமாயின்  இடைநிகராய  பயனையும்  மிக  நெருங்கியிருக்குமாயின்  தீய  பயனையும்  விளைவிப்பனவாம் .                                                                                          103

      நெற்றியில்  மேனோக்கிய  முக முடையனவாய்  இடைவிட்டு  மூன்று  சுழிகள்  இருக்குமாயின்  அவை  நலஞ்செய்வனவாம் . அங்ஙனமே  அவ்விடத்தில்  இரண்டு  சுழிகள்  மிக  நெருங்கி யிருக்குமாயின்  தீமை  செய்வனவாம் .                                                      104

      நெற்றியில்  முக்கோண  வடிவினவாய்  மூன்று  சுழிகளிருக்குமாயின்  அவை  துன்பம்  தருவனவாம் . கழுத்தின்  நடுவில்  ஒரு  சுழியிருக்குமாயின்  அது நலம்  பயப்பதோடு  எல்லாத்  தீங்குகளையும்  போக்குவதாகும் .                                                                 105

( இங்குக் கூறியது  கழுத்தின்  நடுவிடத்திலெனவும் , 101-ஆம்  சுலோகத்திற்  கூறியது  கழுத்தில்  நடுவல்லாத  மற்றையிடங்களிலெனவும்  வேறுபாடு  உய்த்துணர்க . )

      காலில்  கீழ்  நோக்கிய  முகமுடைய  சுழியும் , நெற்றியில்  மேனோக்கிய  முகமுடைய  சுழியும்  நலஞ்  செய்வனவாம் . பல்வகைக்  கிளைகளோடு  குறுக்குமுகமாக  விளங்குஞ்  சுழி  மிக்க  தீங்கு  பயவாததாகும் .                                                                                                   106

      குறியின்  பின்பாகத்திற்  சுழியினையாதல்  தனம்  போன்ற  ஓரிலச்சினையையாதல்  உடைய  குதிரை  தீங்கு  பயப்பதாகும் . செவியின்  பக்கத்தில்  ஒற்றைச்  சுழி  யிருக்குமாயின்  அது  சிருங்கி  என்னும்  பெயரினதாய்  மிகவும்  பழிக்கப்படுவதாகும் .                        107

      கழுத்துப்பக்கங்களின்  மேற்புறத்திற்  சுழியுடையதும் , அப்  பக்கங்களின்  ஒரு  புறத்தில் “ஏகரசுமி:  என்னும்  இலச்சினை யுடையதும் , காலில்  மேனோக்கிய முகமுடைய  சுழி  பொருந்தியதும் , கட்டு  முளையைப்  பெயர்ப்பதும்  ஆகிய  இக்  குதிரைகள்  பழிக்கப்படுவனவாம் .                                                                                       108

      எதன்கண்  நன்மை  பயப்பனவும்  தீமை  பயப்பனவுமாகிய  சுழிகளுள்ளனவோ  அக் குதிரை  இடையாயதாகக்  கருதப்படும் . முகத்திலும்  நான்கு  கால்களிலும்  வெண்மை  நிறம்  வாய்ந்த  குதிரை  பஞ்சகலியாணம்  என்று  கூறப்படும்.                                                           109

     முகத்திலும்  நான்கு  கால்களிலும்  வெண்மை  நிறம்  வாய்ந்த  அக்  குதிரையே  இருதயத்திலும்  தோளிலும்  வாலிலும்  வெண்மை  நிறம்  வாய்க்கப்பெறுமாயின்  அஃது  அட்டமங்கலம்  என்று  கூறப்படும்  . உடல்  முழுதும்  ஒரே  நிறமும்  செவியில்  நீல  நிறமுமுடைய  குதிரை  சியாமகன்னம்  என்று  கூறப்படும் . அவ்  ஒரே  நிறமும்   வெண்ணிற மாக விருப்பின்  அக் குதிரை  எப்பொழுதும்  பூசிக்கத்தக்க  தூய்மையுடையதாகும் .                                                                                  110

     வைடூரிய  இரத்தினத்தைப்  போன்ற  கண்களையும் , பல்வகை  நிறத்தினையுமுடைய  குதிரை  சயமங்கலம்  என்று  கூறப்படும் . அத்தகைய  கண்களையும்  ஒரே  நிறத்தினையுமுடைய  குதிரை  அழகுடையதாக  இருக்குமாயின்  அது  பூசிக்கத்தக்கதாம் .                 111

      கருமை நிறம்  வாய்ந்த  கால்களையுடைய  குதிரையும் , ஒரு  கால்  மாத்திரம்  வெண்மை  நிறமுடைய  குதிரையும் , வெறுப்பை  விளைவிக்கும்  நிறத்தினையுடைய  குதிரையும் , சாம்பர்  நிறத்தினை யுடைய  குதிரையும் , கழுதை  நிறம்  வாய்ந்த  குதிரையும்  பழிக்கப்படுவனவாம் .                                                                                      112

      கருமை  நிறம்  வாய்ந்த  அண்ணத்தினை யுடைய  குதிரையும் , கரிய  நாவினையுடைய  குதிரையும் , கரிய  உதடுகளையுடைய  குதிரையும் , உடல்  முழுதும்   கரிய  நிறமும்   வாலில்   மாத்திரம்  வெண்ணிறமுமுடைய  குதிரையும்  விலக்கத்தக்கனவாம் .                 113

( அண்ணம் – மேல்வாய் .)

      கால்களை  உயரத்  தூக்கிச்  செல்லும்  நடையினையுடைய  குதிரையும் , யானை , புலி , மயில் , அன்னம் , சிச்சிலிப்புள் , புறா , மான்,  ஒட்டகம் , குரங்கு , எருது , ஆகிய  இவற்றின்  நடைகளைப்போன்ற  நடைகள்  வாய்ந்த  குதிரைகளும்  போற்றப்படுவனவாம் .                                                                                  114

     குதிரைப்பாகன்  மிகுதியாக  உண்டும்  மிகுதியாகக்  குடித்தும்  குதிரையை  நடத்துங்காலும்  அவனுக்குத்  துன்பஞ்  செய்யாத  அக்  குதிரையின்  நடையும்  அந்நடை  வாய்ந்த  குதிரையும்  சிறந்தனவாக  மதிக்கப்படும் .                                                                                                     115

      நெற்றியில்  வெண்ணிறம்  வாய்ந்த  திலக  இலச்சினையுடையதும்  மற்றை  உடல்  முழுதும்  வெண்மையல்லாத  நிறம்  பொருந்தியதும்  ஆகிய  குதிரை  தளபஞ்சி  என்று  கூறப்படும் . அஃது  எவன்  பாலுள்ளதோ  அவன்  பழிக்கப்படுவான் .                                                    116

(தளபஞ்சி – தன்னினத்தைக்  கெடுப்பது . )

      ஒரு  குதிரை  ஒளிமிக்க  நிறத்தினையும்  மிக்க  ஆற்றலையும்  சிறந்த  நடையினையும்  பருமையினையும்  எல்லாவுறுப்புக்களிலும்  அழகினையுமுடையதாக  இருக்குமாயின்  அது  மாறுபட்ட  நிறத்தாலுண்டாங்   குற்றங்களைப்  போக்குவதாகும் .                          117

      ஒரு  குதிரை  சுழி  முதலியவற்றாற்  குற்றமுடையதாயினும்  மிக்க  கொடுந்தன்மை  யில்லாததாயின்  அஃது  என்றும்  போற்றத்   தக்கதாம் .                                                                                                            118

      அடுத்தடுத்துச்  சுமந்து  நடக்கும்   பயிற்சியில்லாத  குதிரைகளுக்கு  மிக்க  தீங்கு  விளையும் ; மிகவும்  அதிகமாகச்  சுமந்து  நடத்தலால்  மெலிவும்  நோய்த்  தொடர்பு முண்டாம் .                                                     119

      சுமந்து  நடவாத  குதிரை  மந்த  இயல்பினதாய்  எல்லாத்  தொழில்களிலும்  விலக்கப்படுவதாகும் . வேண்டிய  அளவு  உணவு  கொடுக்கப்படாமையால்  மெலிவும் , அளவின்  மிக்க  உணவு  கொடுத்தலால்  நோயும்  குதிரைகளுக்குண்டாம் .                                   120

      குதிரை  தன்னைப்  பயிற்றுவோனுடைய  குணங்  குற்றங்களால்  எப்பொழுதும்  சிறந்த  நடையையும்  குறைந்த நடையையு  முடையதாகும் .                                                                                               121

     எவன்  முழந்தாட்  பூட்டுக்குக்   கீழே  அசைகின்ற  காலையும் , நிமிர்ந்து  நேரான  உடலையும் , அசைவற்ற  இருக்கையையும் , காலம் , இடம் , அறிந்து  செல்லுதற்குச்  சமமாகத்  தாங்கிய  கடிவாளத்தையும்  உடையனோ  அவனே  நல்ல  குதிரைப்  பாகனாவான் .                          122

      நல்ல  குதிரைப்  பாகன்  சிறந்த  குதிரையைக்  கசையினால்  மிக்க  கடுமையில்லாமல்  மெல்ல  அடித்தல்  வேண்டும் . சிறிது  கடிந்து அடிக்கவேண்டின் உறுப்புக்களில்  இடம் நோக்கி  அடிக்கக் கடவன். 123

கசை – சாட்டை .)

7 . குதிரைக்கு  வேண்டுவன  செய்து  நடத்து  முறை

      அறிவுமிக்க  குதிரைப்  பாகன்  குதிரை  கனைக்குமாயின்  அதன்  கக்கங்களிலும் , கால்  இடறி  நடக்குமாயின்  விலாப்பக்கங்களிலும் , அச்சம்  எய்துமாயின்  செவிகளின்  நடுவிலும் , வழியைவிட்டு  விலகிச்  செல்லுமாயின்  கழுத்திலும் ,  சினம்  கொள்ளுமாயின்  முற்புறத்துக்  கால்களின்  நடுவிலும் , மனக்கலக்கம்  எய்துமாயின்  வயிற்றிலும்  அடிக்கக்கடவன் . மற்றை  உறுப்பிடங்களில்  ஒரு  பொழுதும்  அடித்தலாகாது .                                                                                           124-125

( கக்கம் – முற்புறத்துக்  கால்களின்  அடிப்பாகம் .)

      அன்றிக்  கனைக்குமாயின்  தோளிலும் , இடறி  நடக்குமாயின்  அரையின்  கீழ்ப்பக்கத்திலும் , அச்சங்கொள்ளுமாயின்  மார்பிலும் , வழியை  விட்டு  விலகிச்  செல்லுமாயின்   முகத்திலும் , சினங்கொள்ளுமாயின்  வாலிலும் , மனக்கலக்கம்  எய்துமாயின்  முழங்காற்  பூட்டுக்களிலும்   அடித்தல்  வேண்டுமென்பதும்  பொருந்தும் .                                                                                                          126

      குதிரையை  உரியதல்லாத  காலத்திலும்  உரியதல்லா  வுறுப்புக்களிலும்  அடிக்கடி  அடித்தலாகாது . அங்ஙனம்  தகுதியில்லாக்  காலத்திலும்  தகுதியில்லா விடங்களிலும்  அடித்தல்  குதிரைக்குக்  குணக்கேடுகளை  யுண்டாக்குவதாகும் .                         127

      அக்  குணக்கேடுகள்  அக்குதிரை  எத்துணைநாள்  உயிரோடிருக்குமோ  அத்துணை  நாளும்  அதனைப்பற்றி  நிற்பனவாம் . கொடுங்குணம்  வாய்ந்த  குதிரையைக்  கசையினால்  அடித்து  அடக்கல்  வேண்டும் . கசையின்றிக்  குதிரையின்கண்  ஏறலாகாது .                                                                                                           128

      சிறந்த  குதிரை   பதினாறு  மாத்திரைப்பொழுதில்  நூறுவிற்கிடை  தூரம்  விரைந்து  செல்வதாகும் . அவ்வளவிற்  குறைந்த  நடையினை  யுடைய  குதிரைகள்  அந்  நடைக்  குறைவுக்    கேற்ப  இழிந்தனவாக மதிக்கப்படுவனவாம் .                                                                                      129

( மாத்திரையாவது – காலத்தின்  நுண்ணிய  ஓரளவாகும் . )

      குதிரைக்கு  நடைப்  பழக்கஞ்  செய்யுங்கால்  அதற்கு  ஆயிரம்  விற்கிடை   தூரமுள்ள  மண்டலாகாரமான  இடம்  சிறந்ததாகும் .  அதனிற்  பாதியளவுள்ள  இடம்  இடையாயதாகவும் , அப்  பாதியிற்  பாதியளவுள்ள  இடம்  கடையாயதாகவும்  எண்ணப்படும் . நூறுவிற்கடை  தூரமுள்ள  இடம்  சிறுமையாகவும் , அதனிற்  பாதியாகிய  ஐம்பது  விற்கிடை  தூரமுள்ள  இடம்  மிகச்   சிறுமையாகவுங்  கூறப்படும் .                                                            130-131

( ஒரு  விற்கிடை  நான்கு  முழமாகும் . மண்டலாகாரம் – வளைவு . அதனிற்பாதி – 500 விற்கிடை . அப்பாதியிற் பாதி  250 விற்கிடை .)      

      நாடோறும்  மண்டலாகாரமாகச்  சுற்றுதல்  ஒரு  நாளில்  நூறு  யோசனை  தூரஞ்  செல்லும்படி  குதிரைக்கு  நடைப்பயிற்சியை  மிகுவித்தல்  வேண்டும் .                                                                                  132

     முன்பனிக் காலத்திலும்   பின்பனிக்காலத்திலும்  இளவேனிற்  காலத்திலும்  காலை  மாலை  இரு  வேளைகளிலும் , முதுவேனிற்  காலத்தில்  மாலைப் பொழுதிலும்  , கூதிர்காலத்திற் காலைப்  பொழுதிலும்  குதிரைக்கு  நடைப்  பயிற்சி  செய்வித்தல்  வேண்டும். கார்  காலத்திலும் , மேடு  பள்ளம்  விரவிய  நிலங்களிலும்  சிறிதும்  நடத்துதலாகாது .                                                                      133-134

      நன்கு  நடைப்பயிற்சி  செய்வித்தலாற்  குதிரைக்கு  உதராக்கினி  பலமும்  உடல்  வன்மையும்  மிகுதலோடு  நோயின்மையும்  உண்டாம் .

      சுமையினாலும் , அதிக  வழி  நடந்தமையாலும் , இளைப்புற்ற  குதிரையை  மெல்ல  மெல்ல  நடந்து  சுற்றிவரச்செய்து , பின்னர்  ஒருவகை  எண்ணெயோடு  கலந்த  சருக்கரையையும் ,   மாவையும்  உண்பித்தல்  வேண்டும் .                                                                                 136

( “ஸ்நெஹம் “   என்று  மூலத்திலுள்ளது ,  ஒரு  வகை  எணெய்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது . )

      இன்னும் , குதிரை  உண்ணுதற்பொருட்டு  உலர்ந்தனவும் , நனைந்தனவுமாகிய  கடலைகளையும் , உழுந்துகளையும் , கொள்ளுப்பயிறுகளையும்  நன்றாக  வெந்த  இறைச்சிகளையும் கொடுப்பித்தல்  வேண்டும் .                                                                            137

      குதிரையின்  உடம்பில்  எவ்வுறுப்புச்  சிதைந்திருக்கின்றதோ  அதன்கண்  அடித்தலாகாது . மிக்க  வழி நடந்து  வந்த  குதிரைக்கு  அதன்   மேலிட்ட  கல்லணையை   இறக்குதற்கு  முன்னரே  உப்போடு  கலந்த  வெல்லத்தை  உண்ணக்கொடுத்து  அதன்  வன்மையைப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                                                 138

( கல்லணை – குதிரை  மேலிடுந்  தவிசு  , உப்போடு  கலந்த  வெல்லத்தை  உண்ணக்கொடுக்குங்கால்  கடிவாளத்தை  முற்றும்  இறக்காமல்  வாயினின்றுஞ் சிறிது  விலக்கல்  வேண்டுமென்பது  போதரும் ;, பின் வருஞ்  சுலோகத்தில்  குதிரை  அவ் வெல்லத்தை  உண்டு  தெளிவெய்திய பின்னர்  முறையே  கல்லணையையும்  கடிவாளத்தையும்  இறக்க  வேண்டுமென்றமையின் . )

       நடந்திளைந்த  குதிரை  வெயர்  நீங்கிச்  சாந்தமுற்று  உருவம்   நன்கு  தெளிவெய்தியபின்னர்  அதன்  மேலிட்ட   கல்லணை  முதலியவற்றை  இறக்கி  அதன்பின்னர்  கடிவாளத்தையும்  யிறக்குதல் வேண்டும் .                                                                                                           139

( கடிவாளத்தை  யிறக்குதல் – குதிரை  உடலினின்றும்  வேறுபடுத்தல் .)

      பின்னர்  அக் குதிரையின்  உடம்பை  நன்றாகப்  பிசைந்து  பிடித்துப்  புழுதியினிடையே  புரளச்  செய்தல்  வேண்டும் . அதன்பின்  நீராட்டி  உணவு  கொடுத்து , நீரருத்தி  நன்கு  பாதுகாத்தல்  வேண்டும் .         140

( “ ஸ்நாநபானாவகா  ஹைஸ்ச்ச” என்று  மூலத்திலுள்ளது . இப்பாடத்திலுள்ள  “ஸ்நாந அவகாஹ”  என்னுஞ்  சொற்கள்  ஒரு  பொருளனவாதலாலும்  உணவு  கூறப்பட்டமையாலும்  “ஆகார ஸ்நாத பானாஹைஸ்ச்ச”  என்று  பாடங்கொண்டு  பொருளுரைக்கப்பட்டது .)

      கள்ளும், இறைச்சிச்  சாறுங்  குதிரைக்குரிய  எல்லாக்  குற்றங்களையும்  போக்குவனவாம் . குதிரையைப்  பரிபாலிப்போன்  அதற்குத்  தன்னாலியன்றவரை  பாலும் , நெய்யும் , நீரோடு  கலந்த  மாவும்  ஆகிய  இவற்றை  உண்ணக்  கொடுத்தல்  வேண்டும் .           141

( குற்றங்கள்  ஈண்டு  உடற்கணுண்டாம்  நோய்  முதலியன .)

     குதிரை , உணவுண்டு  நீர்  பருகிய  அப்பொழுதே   நடையிற்  செலுத்தப்படுமாயின்  அதற்குக்  காச  நோய் , சுவாசநோய்  முதலிய  பிணிகள்  உண்டாம் .                                                                                        142

      குதிரைக்குரிய உணவுப் பொருள்களில்  நவதானியமும்  கடலையும்  சிறந்தனவாகவும் , உழுந்தும்  கொள்ளும்  இடை   நிகரனவாகவும் , மசூரமும்  பயறும்  தாழ்ந்தனவாகவும்  எண்ணப்படும்.                 143

( மசூரம் – தானிய  வகைகளுள்  ஒன்று .  “மகுஷ்டகம்”  கொள்ளு   என்று  மொழிபெயர்க்கப்பட்டது .)

8 . குதிரைகளின்  அறுவகை  நடைகள்

      குதிரையின்  நடை  தாரை , ஆற்கந்திதம், இரேசிதம் , புலுதம் , தெளரீதகம் , வற்கிதம்  என  ஆறு   வகைப்படும் . இவ் வறுவகை  நடைகளுக்கும் இலக்கணங்கள்  தனித்தனியே  உள்ளன .              144

( இங்கு  ஆறுவகைப்படும்  என்று  கூறப்பட்ட   குதிரை  நடைகளை  2-ஆம்  அத்தியாயம்  134-135  ஆம்  சுலோகங்களில்  பதினோரு வகைப்படுத்துக்  கூறினர் . அம் மிகுதி     இவற்றுள்  அடங்கும்  போலும்)

      நடத்துவோன்  குதிக்காற்றாக்கால்  விரைந்து செலுத்தப்பட்டு  குதிரை  மயக்கமெய்தி  மிக  அதிக   விரைவோடு  செல்லுமாயின்  அச் செலவு  தாரை  என்னும்  நடையாகும் .                                                     145

      சிறிது   வளைந்த   கால்  நுனிகளால்  குதிரை  துள்ளித்  துள்ளிச்  செல்லுமாயின் , அச்  செலவு  ஆற்கந்திகம்  என்று  குதிரை  நடை யியலுணர்ந்தோர்  கூறுவர் .                                                                           146

      குதிரை  சிறிது  துள்ளித்  துள்ளித்  தொடர்ந்து  நடத்தல்  இரேசித  நடையாகும் . மானைப்போல்  நான்கு  கால்களாலும்  துள்ளிச்  செல்லல்  புலுதம்  என்னும்  நடையாகும் .                                                   147

குதிரை  தன்  கால்களைச்  சிறிதும்  வளையாமல்  விரைந்து  அழகாகச்  செல்லுமாயின்  அச்  செலவு  தெளரீதகம்  என்றறியப்படும் . அந்  நடை  தேரிழுக்குங்காற்  சிறந்ததாகும் .                                                                  148

      குதிரை  மயிலைப்போல்  உயரத்  தூக்கிய  கழுத்தினை           யுடையதாய்ப்  பாதி  உடலை யசைத்துக்கொண்டு  நன்றாக  வளைந்த  கால்களால்  நடக்குமாயின்  அந்  நடை  வற்கித  மென்று  கூறப்படும் .

9 . எருது  ஒட்டகங்களின்  இலக்கணம் 

      எருதின்  வயிற்றின்  சுற்றளவு  அதன்   முகத்தின்  நீள  அளவினும்  நான்கு  மடங்கு  மிகுதியாகும் . திமில்  முடியவுள்ள  அதன்  உயரம்  முகத்தளவின்  மூன்று  மடங்கு  மிகுதியாகும் . அதன்  உடலின்  நீளம்  முகத்தளவின்  மூன்றரை  மடங்கு  மிகுதியாகும் .                                   150

      ஏழு  தால  அளவு  உயரமுள்ள  எருது  பின்வருங்  குணங்களோடு  கூடியிருக்குமாயின்  போற்றத்தக்கதாம் .                                                   151

( தாலத்தின்  அளவு  இவ்  வத்தியாயம்  4-ஆம்  பிரகரணம்  82-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      நடக்குங்கால்  நின்றுவிடாததும் , மந்த  நடை யில்லாததும் , நன்றாகச்  சுமந்து  செல்வதும் , சிறந்த  உறுப்புக்களால்  அழகு  வாய்ந்ததும் , மிக்க  கொடுந்தன்மை  யில்லாததும் , அழகிய  முதுகினையுடையதும்  ஆகிய  எருது  எருதுகளுட்  சிறந்ததென்று  கூறப்படும் .                                                                                                         152

     நாளொன்றுக்கு  முப்பது  யோசனை  தூர  விழுக்காடு  சுமை  தாங்கிச்  செல்வதும் , ஒன்பது  தால  உயரமுள்ள  வலிய  உடம்பினை யுடையதும் , நல்ல  முகத்தினை யுடையதும்  ஆகிய  ஒட்டகம்  சிறந்ததாகும் .                                                                                                     153

10 . மனிதர்க்கும்  யானைகளுக்கும்  உரிய  வாணாள் வரையறை

      மனிதர்க்கும்  யானைகளுக்கும்  பரமாயுள்  நூறு  யாண்டுகளாகும் . மனிதர்க்கும்  யானைகளுக்கும்   உரிய  பாலப் பருவம்  இருபது  யாண்டுகள்  வரையாகும் .                                                                              154

     மனிதர்க்கு  யெளவனபருவம்  அறுபது  யாண்டுகள்  வரையாகு மென்றெண்ணப்படும் . யானைக்கு  யெளவன பருவம்  எண்பதாண்டுகள்  வரையாகும்.                                                                     155

11 . குதிரை , எருது , ஒட்டகங்களின்  ஆயுள்  வரையறை

      குதிரையின்  பரமாயுள்  முப்பத்துநான்கு  யாண்டுகளாகும் . எருது  ஒட்டகமாகிய  இவற்றின்  பரமாயுள்  இருபத்தைந்து  யாண்டுகளாகும் .

      குதிரை  , எருது , ஒட்டகமாகிய  இவற்றின்  பாலப்பருவம்  ஐந்து  யாண்டுகள்  வரையாகும் . இவற்றின்  யெளவன  பருவம்  பதினாறு  யாண்டுகள்  வரையாகும் . அவ்வளவின்  மேற்பட்ட  யாண்டுகள்  அவற்றிற்கு  முதுமைப்  பருவங்களாம் .                                                       157

      பற்களின்  தோற்றத்தாலும் , அவற்றின்  நிறங்களாலும்  எருது  குதிரைகளின்  ஆயுள்  அளவு  அறியப்படும் .                                              158

      குதிரைக்கு  முதலாம்  ஆண்டில்  வெண்மை  நிறம்  வாய்ந்த  ஆறு  பற்களுண்டாம் . இரண்டாம்  ஆண்டில்  கருமையுஞ்  செம்மையுங்  கலந்த  கீழ்வாய்ப்  பற்கள்  தோன்றும் .                                                       159

      மூன்றாவது  தொடங்கி  ஐந்தாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முன்வாய்ப்  பற்களிரண்டும்  கருமை  நிறம்  வாய்ந்திருக்கும் . நான் காம்  யாண்டில்  அப்பற்களின்  இருமருங்குமுள்ள   இரண்டு  பற்களும்  வீழ  அவ்விடத்தில்  மீண்டும்  இரண்டு  பற்கள்  தோன்றும் .                  160

      ஐந்தாம்  ஆண்டில்  கடைவாய்ப்  பற்களிரண்டும்  வீழ  மீண்டும்  அவ்விடத்தில்  இரண்டு  பற்கள்  தோன்றும் . நடு , அதன்  மருங்கு , கடை  ஆகிய  இம்  மூன்றிடத்தும்  உள்ள  பற்கள்  இரண்டிரண்டாக  ஆறாவது  தொடங்கி  எட்டாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  கருமை  நிறம்  எய்துவனவாம் .                                                 161

( நடுப்பற்களிரண்டும்  ஆறாம்  ஆண்டிலும்  அவற்றின்  இருமருங்குமுள்ள  பற்களிரண்டும்  ஏழாம்  ஆண்டிலும் , அவற்றின்  இருமருங்குமுள்ள  கடைப்பற்களிரண்டும்  எட்டாம்  ஆண்டிலும்  கருமை  நிறம்  எய்துமெனக்  கொள்க . இங்ஙனமே   பின்வருஞ்  சுலோகங்களிரண்டிற்கும்  பொருளியைத்துக் கொள்க . )

      அப்பற்கள்  ஒன்பதாவது  தொடங்கிப்  பதினொன்றாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  பொன்மை  நிறத்தினையும் , பன்னிரண்டாவது  தொடங்கிப்  பதினான்காவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  வெண்மை  நிறத்தினையும் , பதினைந்தாவது  தொடங்கிப்  பதினேழாவது  இறுதியாக  உள்ள  யாண்டுகளில்  முறையே  கண்ணாடி  போன்ற  ஒளியினையுமுடையனவாம் .                                                                         162

      மீண்டும்  அப்பற்கள்  பதினெட்டாவது  தொடங்கி  இருபதாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  தேன்  போன்ற  நிறத்தினையும் , இருபத்தொன்று  தொடங்கி  இருபத்து மூன்றாவது  இறுதியாகவுள்ள  யாண்டுகளில்  முறையே  சங்கை  ஒத்த  நிறத்தினையும்  உடையனவாம் . இருபத்து நான்கு  யாண்டு  தொடங்கி  மும்மூன்று  யாண்டுகளாக  அப்பற்கள்  முறையே  வெளிவிடுதலையும் , அசைதலையும் , வீழ்தலையும்  உடையனவாகும் .

      எக்  குதிரையின்  முகநுனியில்  வளைந்த  மூன்று  இரேகைகளுள்ள னவோ  அது  நிரம்பிய  ஆயுளையுடையதாகும் . அவ்  இரேகைகள்  குறையக்குறைய  அக்குதிரையுன்  ஆயுளும்  குறைந்ததாகும் .          164

(  162-164.  அப்பற்கள்  நடு , மருங்கு , கடை களிலுள்ளவை . நடுப்பற்களிரண்டும் , அவற்றின்  இருமருங்குமுள்ள  பற்களிரண்டும் , அவற்றின்  இருமருங்குமுள்ள  கடைப்பற்களிரண்டும்  முறையே  9-10-11  ஆம்  யாண்டுகளில்  பொன்மை நிறத்தினையும் , 12-13-14  ஆம்  யாண்டுகளில்  முறையே  வெண்மை நிறத்தினையும்  15-16-17ஆம்  யாண்டுகளில்  முறையே  கண்ணாடி  போன்ற  ஒளியினையும் , 18-19-20  ஆம்  யாண்டுகளில்  முறையே  தேன்  போன்ற  நிறத்தினையும் , 21-22-23 ஆம்  யாண்டுகளில்  முறையே  சங்கை  ஒத்த  நிறத்தினையும்  எய்துவனவெனவும் , 24-25-26 ஆம்  யாண்டுகளில்  முறையே  வெளியிடுதலையும் , 27-28-29 ஆம்  யாண்டுகளில்  முறையே  அசைதலையும் , 30-31-32  ஆம்  யாண்டுகளில்  முறையே  வீழ்தலையும்  உடையனவாமெனவும்  பகுத்துணர்ந்து  கொள்க . )

     முழங்கால்களை  மேற்றூக்கியெறிதல் , உதட்டினால்  ஒலித்தல் , முதுகை யசைத்தல் , நீர்நிலையில்  நிற்றல் , நடக்குங்கால்  இடையே   நின்று விடுதல் , முதுகு  நிலத்திற்  பொருந்த   வீழ்தல் , பின்புறமாக  நடத்தல் , கால்களை  உயரத் தூக்குதல்  ஆகிய   இக்குணஞ்  செயல்களை உடைய  குதிரைகளும் , பாம்பைப் போன்ற  நாவினையுடைய  குதிரையும் , கரடியை யொத்த  நிறம்  வாய்ந்த  குதிரையும் , அச்சமிக்க  குதிரையும்  மிகவும்  பழிக்கப்படுவனவாம் . நெற்றியில்  மறுவோடு  கூடிய  திலகம்  அமையப்  பெற்ற  குதிரை  பழிக்கப்படுவதாய்த்  தன்னையுடையார்க்குக்  கேடு  விளைப்பதுமாம்

      எருதிற்கு  நான்காம்  ஆண்டில்  வெண்மை  நிறம்  வாய்ந்த  எட்டுப்  பற்கள்  நிறைந்து  தோன்றும் . அதன்  ஐந்தாம்  ஆண்டிற்  கடைப்  பக்கங்களிலுள்ள   இரண்டு  பற்களும்  வீழ  அவ்விடத்திற்  புதிய  பற்கள்  மீண்டும்  தோன்றுவனவாம் .                                                            167

      ஆறாம்  ஆண்டில்  கடைப்பற்களின்  அயற்பற்களிரண்டும் , ஏழாம்  ஆண்டில்  அவற்றின்  அயற்பற்களிரண்டும் , எட்டாம்  ஆண்டில்  நடுப்  பற்களிரண்டும்  முறையே   வீழ , அவ்விடங்களில்  மீண்டும்  புதிய  பற்கள்  தோன்றுவனவாம் .                                                                               168

      எட்டாம்  ஆண்டின்   பின்   இரண்டிரண்டு  ஆண்டுகள்  வரை  அப்  பற்கள்  முறையே  கருமை   நிறத்தினையும் , பொன்மை  நிறத்தினையும் , வெண்மை   நிறத்தினையும் , சிறிது  சிவந்த  நிறத்தினையும் , சங்கை  ஒத்த  நிறத்தினையும்  எய்தும் . அதன்பின்  அப் பற்கள்  அசைதலையும்  வீழ்தலையும்  உடையனவாம் .               169

      இங்குக்  கூறிய வண்ணமே  ஒட்டகத்திற்கும்  ஆயுள்  வரையறை  முதலியன  அறிந்துகொள்ளல்  வேண்டும்.                                                   170

12 . யானை  முதலியவற்றை  யடக்கிக்  காக்கு  முறை

      செலுத்துதற்கும்   இழுத்து  நிறுத்துதற்குமுரிய  நுனிமுகம்  பொருந்திய  தோட்டியே  யானைகளை  நடத்துதற்குத்  தக்க  கருவியாகும் . அக் கருவியால்  யானைப்பாகர்  யானைகளை  ஒறுத்து  நன்னடை  பயிற்றல்  வேண்டும் .                                                                   171

      குதிரைக் கடிவாளத்தின்  இருமருங்குமுள்ள  பன்னிரண்டங்குல  நீளம்  வாய்ந்த  மேற்பாகங்களிரண்டும் , அவற்றின்  உட்பக்கங்களிற்  பொருந்தினவும்  வன்மை  மிக்கனவுமாகிய  நிறுத்தல்  இழுத்தற்குரிய  கருவிக்  கூறுகளோடும் , கயிறு  கோத்தற்குரிய  வளையங்களோடும்  கூடினவாக  இருத்தல்  வேண்டும் . இத்தகைய  கடிவாளத்தாற்  குதிரையை  யடக்கி  வயப்படுத்தல்  வேண்டும் .                               172-173

      எருதையும்  ஒட்டகத்தையும்  மூக்குக்  கயிறுகளால்  நன்கு  அடக்கியாளல்  வேண்டும் . குதிரை , எருது , ஒட்டகம் , ஆகிய  இவற்றின்  உடம்பிலுள்ள  அழுக்கைப்  போக்குவதற்குக்  கூர்மை   மிக்க  நுனிகளையுடைய  சப்தபாலம்  என்னும்  கருவி  உரியதாகும் .           174

      மனிதரையும்  விலங்குகளையும்  எப்பொழுதும்  தகுதியான  தண்டங்களால்  அடக்கியாளல்  வேண்டும் . விசேடமாகப்    படை வீரர்களை  அடித்தொறுக்குந்  தண்டத்தாலன்றிப்  பொருட்டண்டத்தல்  அடக்கியாள  இயலாது .                                                                                   175

      எருதுகளையும்  குதிரைகளையும்  நீர்ச்  சுரப்புள்ள  நிலப்பகுதியிலும் , யானைகளையும்  ஒட்டகங்களையும்  காட்டு  நிலத்திலும்  காலாட்படைகளை  வெப்பமும்  தட்பமும்  ஒத்த  நிலப்பகுதியிலும்  வைத்துப்  போற்றல்  வேண்டும் .                               176

      அரசன்  ஒரு  யோசனை  தூரத்திற்கு  நூறு  படைவீரர்களாகத்  தன்    இராச்சிய  முழுதிலும்   படைகளை  நியமித்துக்  காத்தல்  வேண்டும்.      

      பண்டங்களைச்  சுமந்து  செல்வதில்  யானையும் , ஒட்டகமும் , எருதும் , குதிரையும்  ஆகிய  இவை  சிறந்தனவாம் . கார்காலமல்லாத மற்றைக் காலங்களில் இவ்  வெல்லாவற்றிலும் , வண்டியே  சிறந்ததாக  எண்ணப்படும் .                                                                                                  178

13 . போர்  வென்றி  கொள்ளு  முறை

      அறிவிற்  சிறந்த  அரசன் , தன்  பகைவன்  மிகச்  சிறியனாயினும்  அவனை  வெல்லுதற்கு  மிகச்  சுருங்கிய  படைப்  பலத்தைத்  துணைக்  கொண்டு   செல்லலாகாது . வன்மை  மிக்க  அமயப்படை  பெரிதெனினும்  அதனைத்  துணைக் கொண்டு  செல்லலாகாது .       179

( அமயப்படை – போர்  குறித்து  அப்பொழுது  திரட்டப்படுவது . இதனை  இப்  பிரகரணத்தின்  10-ஆம்  சுலோகத்திற்  காண்க . ) 

       போர்ப்  பயிற்சி  யில்லாத  படையும் , வன்மை யில்  படையும் , அமயப்படையும் பஞ்சுத்துய்  போல  எளியனவா  மாதலின்  அவற்றை  மதிவலி மிக்க  அரசன்  எப்பொழுதும்  போர்த்  தொழிலல்லாத  மற்றைக்  காரியங்களிற்  சேர்ப்பித்தல்  வேண்டும் .                                180

      உயிர்க்குக்  கேடுவருங்கால்  ஆற்றலில்லாத  ஒருவன்  மாறுபட்ட  செயல்களைச்  செய்தற்கு  எப்பொழுதும்  முயல்வான் . ஆற்றல்  வாய்ந்த  ஒருவன்  அங்ஙனம்  மாறுபட்ட செயல்களைச்  செய்தற்கு  முயல்வானல்லன் .                                                                                               181

( உயிர்க்குக்  கேடு  வருங்காலென்பதனை  ஆற்றல்  வாய்ந்த  ஒருவற்குங்  கூட்டிக்  கொள்க . மாறுபட்ட  செயல்கள்  யுத்த  தருமத்திற்கு  விரோதமானவை . )

      ஒருவன்  உடல்வலி  மிக்கனாயினும்  வீரம்  இல்லாதவனாக  இருப்பின்  போர்க்  களத்தில்  நிற்றற்குத்  தகுதியில்லாதவனாவான் . அங்ஙனமாயின்  ஆற்றல்  குறைந்தவனும்   வீரம்  இல்லாதவனும்  ஆகிய  ஒருவன்  பகைவரோடு  பொருதற்கு  எங்ஙனந்  தகுதியுள்ளவனாவான் ? [ ஆகான்  என்றபடி]                                             182

      நன்கு  பயிற்சி  செய்யப்பட்ட  ஒருவன்  குறைந்த  வலியுடையனாயினும்  வீரமுடையனாயிருப்பின்  பகைவரை  வெல்லுதற்குத்  தகுதியுடையனாவான் . அங்ஙனமாயின்  மிக்க  உடல்  வன்மையும் , சிறந்த  போர்ப்பயிற்சியும் , வீரமும்  வாய்ந்த  ஒருவன்  எங்ஙனம்  பகைவர்பால்  வெற்றி  கொள்ளாதிருப்பன் ? [ வெற்றி   கொள்வான்  என்றபடி ]                                                                                    183

      போர்ச்  செயலில்  மூலப்படை  தன்னுயிர்க்குக்  கேடு   நேர்ந்தவிடத்தும்  தன்  தலைவனை  விட்டொழிதற்கு  விரும்பாதாதலின்  அரசன்  நன்கு  பயிற்சி  செய்யப்பட்ட  வன்மை மிக்க  அம்  மூலப்படையின்  துணை  கொண்டு  பகைவரைக்  குறித்துப்  போர்க்களத்தை  யடைதல்  வேண்டும் .                                   184

      சொற்கடுமையாலும்  தண்டக்கடுமையாலும் , வேதனக்குறை வாலும் , அச்சத்தாலும் , எப்பொழுதும்  வேற்றிடத்திருத் தலாலும் , மிக்க  வேலைக்  களைப்பாலும்  படைவீரர்க்கு  மனவேறுபாடுண்டாகும் .    185

      ஓரரசனுடைய  படைவீரர்  மனவேறுபாடுடையராயிருப்பின்  அவரால்  அவ்வரசற்குச்  சிறிய  வெற்றியுமுண்டாகாது . ஆதலின்  பகைவர்  படைக்கு  மனவேறுபாட்டையும் , தன்  படைக்கு  மனவேறுபாடின்மையையும்  அரசன்  ஆராய்ந்து  செய்தல்  வேண்டும் .

      அரசன்  எப்பொழுதும்  தன்  பகைவரது  படைக்கு  மறைவிற்  கொடுக்கப்படும்  வஞ்சப்  பொருட்  கொடையால்  மனவேறுபாடுண்டாம்  வண்ணம்   விரைந்து  செய்தல்  வேண்டும் . 187

      வணக்கத்தாலும்  பணிவிடை  செய்தலாலும்   மிகவுஞ்  சிறந்த  ஆற்றல்  வாய்ந்த  பகைவனையும் , பெருமைப்படுத்தலாலும்  கொடையாலும்  தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்த  பகைவனையும்  தன்  மாட்டு  அன்புடையராகச்  செய்து  கொள்ளல்  வேண்டும் . போர்ச்செயல்களால்  தன்னிற்  குறைந்த  வலியினையுடைய  பகைவனையும் , நட்புரிமையால்  தன்னோடொத்த  வன்மை  வாய்ந்த  பகைவனையும்  வயப்படுத்து  வெல்லுதல்  வேண்டும் . இவ்வெல்லாப்  பகைவரையும்  பேதோபாயங்களால்  தன்வயப்படுத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                           188

      பகைவரைத்  தன்  வயப்படுத்துதற்குரிய  உபாயம்   அவர்தம்  சிறந்த   படைகளை  வேறுபடுத்தலிலும்  வேறொன்றின்று . ஒருவன்  சிறந்த  படைகளையுடையனாயிருக்குங்காறும்  அவன்  பகைவன்  நீதியுடையனாதலோடு  பெருநெருப்பிற்குக்  காற்றுத்துணைசெய்தல்  போல  அவற்கு  நண்பனாகவும்  இருந்து  துணை  செய்வான் .            189

( சிறு   நெருப்பை  அவித்தலும்  பெரு  நெருப்பை  வளர்த்தலும்  காற்றினியல்பாம் . அது போலப்  படைவலி  குறைந்த  அரசர்க்கு  ஊறு  செய்தலும் , படைவலி  மிக்க  அரசர்க்குத்  துணை   செய்தலும்  பகையரசர்க்கு  இயல்பாம்  என்பது  போதரும் . )

      பகைவரால்  விலக்கப்பட்டு  வந்த  படையைத்  தன்  படையின்  பக்கலில்  வைத்துக்கொள்ளலாகாது . தனிமையில்  வைத்துப்  பிற  செயல்களில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .  அப்படையைப்  போர்  செய்தற்பொருட்டு  நியமிக்கவேண்டுமாயின்  முதற்கண்  ஏவுதல்  வேண்டும் , நட்புப்  படையை  முற்புறத்தால் , பிற்புறத்தால் , இருமருங் குகளினாதல்  வைத்தல்  வேண்டும் .                                                          190

14 . போர்க்குரிய  நாளிகக்  கருவிகள் 

      மந்திரத்தாலும் , எந்திரத்தாலும் , நெருப்பினாலும்  வெளிப்படுத்தெறியப்படும்  படை  விடுபடை [ அஸ்திரம் ]   எனவும் , அங்ஙனமல்லாத  வாள்  குந்தம்  முதலியன  விடாப்படை [ சஸ்திரம் ] எனவும்  கூறப்படும் .                                                                                       191

      விடுபடை  நாளிகமெனவும்  மாந்திரிகமெனவும்  இரண்டு  வகைப்படும் .                                                                                                     192

     அரசன்  தன்பால்  மாந்திரிகப்படை  இல்லாதிருக்குங்கால்  வெற்றி  குறித்து  எப்பொழுதும்  வாள்  முதலிய  விடாப்படைகளோடு  நாளிகப்  படையையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                              193                                                   

     போர்க்குரிய  கருவிகளின்  வகைகளை  யுணர்ந்தோர்  அக்கருவிகளின்  குறிய  வடிவம் , நெடிய  வடிவம் , நுதிவிசேடம்  ஆகிய  இவற்றால்  விடுபடை  விடாப்படைகளுக்குப்   புதுமையாகவும்  வேறுவேறாகவும்  பெயரிட்டு  வழங்குவர் .                                                 194

( நுதி – கூரிய  நுனி .)

      பெரு  நாளிகம் , சிறு  நாளிகம்  என்னும்  வேறுபாட்டால்  நாளிகப்படை  இரண்டு   வகைப்படும் .                                                     195

      குறுக்காய்  மேனோக்கிய  துளையின்  அடியில்  உடையதும் , ஐந்து  சாண்  அளவு  நீண்ட  குழாய்த்   தண்டினையுடையதும் , அடியிலும்  நுனியிலும்  குறி  வைத்து  அடித்தற்குரிய  திலபிந்துக்களோடு  கூடியதும் , எந்திர  தாடனத்தால்  நெருப்பை  வெளிப்படுத்துவதும் , கற்பொடிகளைத்  தாங்கியிருக்குங்  கன்னமூலத்தை யுடையதும் , நல்ல  மரத்துண்டாற்  செய்யப்பட்ட  உபாங்கத்தை  அடிப்பாகமாக வுடையதும் , நடுவில்  ஓர்  அங்குல  அளவு  அகன்ற  துவாரத்தையுடையதும் , தன்னுள்ளே  நெருப்புப்  பொடி  பொதியப் பெற்றதும் , சலாகையோடு  கூடியதும் , வன்மை  மிக்கதுமாகிய  இதுவே  சிறு  நாளிகமென்று  கூறப்படும் . இதனைக்  காலாட்படைகளும்  குதிரைப்படைகளும்  தாங்கிச் செல்லல்    வேண்டும் .                                                                                              196-198                                                                                          

      (  திலபிந்து – எள்ளைப்போற்  சிறிய  புள்ளி  வடிவமாக  அமைக்கப்படுவது . )

      நாளிகக்கருவி , மேற்றகட்டின்  வன்மைக்குத்  தக்கவாறும் , துவாரத்தின்  அகற்சிக்குத்  தக்கவாறும் , நாளத்தின்  நீளத்திற்குத்  தக்கவாறும் , கோளத்தின்  பருமைக்குத்  தக்கவாறும்  தூரத்திலுள்ள  குறியைத்  தாக்குவதற்கு  குரியதாகும் .                                                  199

      அடிப்பாகத்திலுள்ள  முளையின்  சுழற்சியால்  குறியை  ஒத்துத்தாக்கும்  நிலையினையடைவதும் , மரத்தினாலாக்கப்பட்ட  அடிச்  சட்டத்தை யுடையதுமாகிய  இது  பெருநாளிகம்  என்னும்   பெயரினையுடையதாய்  வண்டிகளாற்  சுமந்து  செல்லத்  தக்கதாகும் . இது  நன்றாகப்  பிரயோகிக்கப்படுமாயின்  வெற்றியைக்   கொடுக்கும்.                                                                                                      200

15 . நெருப்புப்பொடி  யுண்டாக்கு  முறை

      சுவர்ச்சிலவணம்  ஐந்து  பலமும் , கந்தகம்  ஒரு  பலமும் , உள்ளே  புகை  தங்கும்படி  எரித்து  நன்றாகப்  பக்குவஞ்  செய்யப்பட்ட  சதுரக்கள்ளியும்  எருக்கும்  ஆகிய  இவற்றின்  தூய்மை மிக்க  கரிக்கட்டை  ஒரு பலமும்  எடுத்துப்  பொடி  செய்து  கலந்து , சதுரக்கள்ளி  எருக்கு  வெள்ளைப்பூண்டு  இவற்றின்  இரசங்களாற்  காய்ச்சுதல்  வேண்டும் . அங்ஙனங்  காய்ச்சப்பட்ட  பின்னர்  வெயிலில்  உலர்த்திப்  பின்  சருக்கரையைப்    போற்  பிசைந்து  எடுத்தல்  வேண்டும்  .  அதுவே  நெருப்புப்  பொடி  என்று  கூறப்படும் .       201-202

( சுவர்சிலவண மென்பதை  வெடியுப்பெனக்   கொள்ளல்  வேண்டும் .) 

      நாளிகக்  கருவியின்  நிமித்தஞ்  செய்யப்படும்  நெருப்புப் பொடிக்குக்  கந்தகமும்  கரித்துண்டும்  முற்கூறியபடி  ஒவ்வொரு  பலமும் , ஆறு  பலமாதல்  நான்கு  பலமாதல்  சுவர்சிலவணமும்  சேர்த்தல்  வேண்டும் .                                                                                     203

     இரும்பினாலாக்கப்பட்ட  உண்டை [குண்டு]  தன்னுள்  குளிகைகளை யுடையதாகவும்  அவற்றை  இல்லாததாகவும்  இருக்கலாம் . சிறு  நாளிகக்  கருவியினிமித்தம்  ஈயத்தானாதல்  மற்றை  உலோகங்களானாதல்  குளிகைகளை  யமைத்தல்  வேண்டும் .       204

( “சிறு  நாளிகக்கருவியின் நிமித்தம் “ என்று  பின்னர்க்  கூறப்பட்டமையால்  இரும்பினாலாக்கப்பட்ட  உண்டை  பெருநாளிகத்திற்குரியதென்பது  போதரும். )

      வன்மைமிக்க  இரும்பினானாதல்  மற்றை  உலோகங்களினானாதல்  ஆக்கப்பட்ட  நாளிகப்படை  நாடோறும்  மாசு  துடைக்கப்பட்டுத்  தூய்மையுடையதாக  இருத்தல்  வேண்டும் . அதனை  அப்  படைவீரர்  சூழ்ந்து  காத்தல்  வேண்டும் .                     205

      கரிப்பொடியும் , கந்தகமும் , சுவர்ச்சிலவணமும் , மனோசிலையும் , அரிதாரமும் , காரீயமும் , சாதிலிங்கமும் , இருப்புத்துகளும் , கருப்பூரமும் , அரக்கும் , நீலியிலைச்  சாறு , சரளமரத்துப் பிசினும்  ஆகிய  இவற்றை   ஒத்த  அளவினவாகவும் , குறைந்த  அளவினவாகவும் , மிக்க  அளவினவாகவும்  சேர்த்துப்  பலவகையான  நெருப்புப்  பொடிகளை  அவற்றின்  இயல்புணர்ந்தோர்  நிலவொளி  முதலியவற்றைப்  போல்  ஒளிவிளங்கும்படி  செய்வர் .                 206-208

( நீலி – அவுரி .)

      அந்  நெருப்புப்  பொடியின்  தீயைப்  பற்றவைத்தலாற்  சிறந்த  நாளிகக்  கருவியின்கண்  உள்ள  உண்டையைக்  குறிக்கட்  செலுத்தல்  வேண்டும் .                                                                                                          209

முதலில்  நாளிகக்  கருவியைச்  சுத்தஞ்  செய்து  அதன்பின்  அதனுள்  நெருப்புப்  பொடியை  யிட்டு  அதன்  சலாகையால்  அக்கருவியின்  நாளமூலத்திற்  படியும்வண்ணம்  இறுகுறு  இடித்துச்  செலுத்துதல்   வேண்டும் .                                                                                                            210

     அதன்பின்  அதனுட்  சிறந்த  உண்டையையும்  , கன்ன பாகத்தில்  நெருப்புப்  பொடியையும்  பெய்து , கன்னபாகத்திலிடப்பட்ட  நெருப்புப்  பொடியின்  தீயைப்  பற்றவைத்து  உள்ளிருக்குங்  கோளத்தைக்  குறியில்  வீழ்த்தல்  வேண்டும் .                                                                       211

16 . மற்றை  விடுபடை  விடாப்படைகளின்  வகைகள்

     வில்லினது  நாணிற்  பூட்டி  வெளிப்படுத்திக்  குறியை  யெய்து  வீழ்த்துதற்குரிய  அம்பு  இரண்டு   முழ     நீளமுள்ளதாக   இருத்தல்  வேண்டும் .                                                                                                       212

      பருத்த  அடிப்பாகத்தையும் , எட்டுக்  கோணங்களையும்  , தாங்குவோன்  மார்பளவு  உயரத்தையும்  உடையது  கதை  என்று  கூறப்படும் . தாங்குவோன்  உயரமளவு  நீளத்தையும் , ஒரு  முழ  அளவுள்ள  அடிப்பாகத்தையும் , இரண்டு  பக்கத்துங்  கூரிய  முகங்களையுமுடையது  பட்டீசம்  என்னும்  ஆயுதமாகும் .              213

( ஒரு முழ  அளவு  உள்ள  அடிப்பாகம்  என்றது  அவ்வாயுதத்தின்  நடுப்பாகத்தை  உணர்த்தும் ; அஃது  இருபுறமுங்  கூரிய  முகங்களையுடைமையின் , இருபுறத்து  முகங்களையுடைய  ஆயுதத்திற்கு  அம்  முகங்களை  நோக்க  அடிப்பாகம்  நடுவிடம்  என்பது  பொருந்தும் . )

      சிறிது  வளைந்ததும் , ஒரே  நுதியினையுடையது , நான்கு  அங்குல  அகற்சியுடையதும் , மயிர்  களையுங்  கத்தியின்  கூர்மை  போன்ற  கூர்மையினையும் , தாங்குவோன்  உந்திச்  சுழியளவு  உயரத்தையும் , வன்மைமிக்க  பிடியினையும் , அழகிய  சந்திரனை  ஒத்து  விளங்கும்  காந்தியினையும்  உடையது  வாள்   என்னும்  ஆயுதமாகும் .              214

      நான்கு  முழ   உயரமுள்ள  தண்டமாகிய  அடிப்பாகத்தையும் , மயிர்  களையுங்  கத்தியின்  கூர்மை  போன்ற  கூர்மை  பொருந்திய  முகத்தினையும்  உடையது  பிராசம்  என்னும்  ஆயுதமாகும் . கொழுவைப்   போன்ற  நுனியினையும் , முளை  போன்ற  அடிப்பாகத்தையும் , பத்து  முழ  உயரத்தையும்  உடையது   ஈட்டி [குந்தம்]  என்னும்  ஆயுதமாகும் .                                                                    215

      ஆறு  முழச்  சுற்றளவையும் , கூர்மை  மிக்க  நுனிப்  பாகத்தையும் , நடுவண்  அழகிய  துளையினையுமுடையது  சக்கரப்படையாகும் . மூன்று  முழ  நீளமுள்ள  தண்டத்தினையும் , மூன்று  சிகைகளையும் , இருப்புக்  கயிறுகளையும்  உடையது பாசம்  என்னும்  ஆயுதமாகும். 216

      கோதுமை  என்னுந்  தானியத்தினளவு  பருமையுள்ள  இருப்புத்  தகட்டால்  வன்மை  பொருந்த  ஆக்கப்பட்டுத்  தலைப்பாகோடு  கூடி  உடம்பின்  மேற்பாகத்திற்கு  அழகு  செய்வது  கவசமாகும் .                 217

      சிறந்த  இரும்பினாலாக்கப்பட்டுக்  கூரிய  நுனியினையும் , வன்மையினையுமுடையது  கரசம்  என்னும்  ஆயுதமாகும் .                 218

      எவன்  மிக  நிறைந்த  உபகரணப்  பொருளையும் , சந்தி  விக்கிரகம்  முதலிய  அறுவகைக்  குணங்களையும் , சூழ்ச்சியறிவையும் , பலவகைப்பட்ட  போர்க்  கருவிகளையும்  உடையானோ  அவ்வரசனே  போர்  செய்தற்கு  விரும்புதல்  வேண்டும் . இவை யில்லாமற்  போர்  செய்வானாயின்  தன்  இராச்சியத்தையுங்  கைவிட்டுத்  துன்பமும்  எய்துவான் .                                                                                                           219

      தம்முட்  பகைமையினையுடைய  இருவர்  தத்தங்  காரியங்களை  நிறைவேற்றிக்  கொள்ளுதற்பொருட்டு  மனத்  தளர்வின்றி  அம்பு , வாள் முதலியவற்றாற்  செய்யுஞ்  செயல்  போர்ச்  செயலென்று  கூறப்படும் .                                                                                                         220

      மந்திரங்களோடு  செலுத்தப்படும்  அம்பு  முதலியவற்றாற்  செய்யப்படும்  போர்  தெய்விகமெனவும் , நாளிக முதலிய கருவிகளாற் செய்யப்படும் போர் ஆசுரமெனவும், வாள்  முதலிய  கைப்படைகளாலும்  தோள்  முதலிய  உறுப்புக்களாலும்  செய்யப்படும்  போர்  மானவம்  எனவும்  கூறப்படும் .                          221

      அப் போர்  செய்யுங்கால்  ஒருவன்  ஒருவனோடும் , இருவர்  இருவரோடும் , பலர்  பலரோடும், ஒருவன்  பலரோடும்  எதிர்த்து  நின்று  செய்யலாம் .                                                                                                        222

17 . போரில்  விருப்பமுள்ள  அரசர்க்குக்   காலம்   இட முதலிய  அறியும்  வகை

      அரசன்  உரிய  காலத்தையும் , உரிய  இடத்தையும் , பகை வலியையும் , தன்  வலியையும்  ஆராய்ந்து , அதன்பின்  சாம  பேத  முதலிய  உபாயங்களையும் , சந்தி விக்கிரக முதலிய  அறுவகைக்  குணங்களையும் , சூழ்ச்சியையும்  அறிந்து  போரில்  விருப்பமுடையனாதல்  வேண்டும் .                                                             223

( இச்  சுலோகப்பொருள்  “ வினைவலியுந்  தன்வலியும்  மாற்றான்  வலியுந்  துணை வலியுந்  தூக்கிச்  செயல் “ என்னுந்  திருக்குறளை  நினைவுறுத்துகின்றது . )

      போர்  செய்தற்குக்  கூதிர்காலமும் , முன்பனிக்காலமும் , பின்பனிக்காலமும் , தலைசிறந்தனவாம் .  இளவேனிற்காலம்  இடை யாயதாகும் . முதுவேனிற்காலம்  கடையாயதாகும் . கார்காலத்தில்  போர்  செய்தல்  கூடாதொன்றாம் . அக்காலத்திற்  போர்  செய்ய  நேரின்  சாமோபாயத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .               224-225

      அரசன்  எக்காலத்திற்  போர்ச்  செயற்குரிய  உபகரணங்கள்  நிரம்பப்  பெறுதலையும் , மிக்க  படைப்பலத்தையும் , உள்ளக்கிளர்ச்சியையும்  , சிறந்த  நற்குணமுண்டாதலையும்  உடைய னாகின்றானோ  அக்காலமே  போர்க்குரிய  நற்காலமாகும் .             226

      அரசர்க்கு  இன்றியமையாக்  காரியநிமித்தம்  போர்  செய்ய  நேர்ந்துழிக்  காலம்  நன்றாக  இல்லையாயின் , அப்பொழுது  விசுவேசனாகிய  கடவுளை  உள்ளமாகிய  கோயிலின்கண்  அன்போடிருத்திப்  போர்  குறித்துச்  செல்லல்  வேண்டும் .                227

      பசுவிற்கும் , பத்தினிப்பெண்டிற்கும், அந்தணர்க்கும்  கேடு  நேர்ந்துழிக்   காலநியமனங்  கருதாமல்  போர்க்குச்  செல்லல்  வேண்டும் .                                                                                                         228

      அரசன்  காலத்திற்கேற்றவாறு  தன்  படைகள்  போர்ப்  பயிற்சி  செய்தற்குரிய  விடங்கள்  எந்  நிலத்திலுள்ளனவோ  அந்  நிலம்  பகைவர்க்கு  மாறுபட்டதாக  இருப்பின்   அது  தலையாயதாகும் .  229

      அந்  நிலம்  தனக்கும்  பகைவர்க்கும்  ஒத்ததாக  விருப்பின்  இடையாயதாகும்  என்று  நூற்பொருளுணர்ந்தார்  கூறுவர் .             230

      பகைவருடைய  படைவீரர்  போர்ப்பயிற்சி  செய்தற்குப்  போதிய  தகுதி  வாய்ந்ததும் , தனக்கு  மாறுபட்டதும்  ஆகிய  நிலம்  கடையாயதாகும் .                                                                                            231

      பகைவரது  படை  தன்  படையினும்  மூன்றிலொரு  கூறு  குறைந்ததாகவும் , பயிற்சி  செய்யப்பட்டதாகவும் , வலியற்றதாகவும் , புதிதாகத்  திரட்டப்பட்டதாகவும்  இருக்குமாயின்  உறுதியாகத்  தனக்கு  வெற்றி  கிடைக்கும் .                                                                       232

      புதல்வனை  யொப்பப்  பாதுகாக்கப்படுவதும் , கொடையினாலும்  மற்றைச்  சிறப்புக்களாலும்   பெருமைப்படுத்தப்பட்டதும் , போர்க்குரிய  உபகரணங்கள்  நிரம்பப்  பெற்றதும்  ஆகிய  தன்  படை  வெற்றியை  அளிப்பதாகும் .                                                                         233

18 . சந்தி  விக்கிரக  முதலிய  அறுவகைக்  குணங்கள்

      சந்தி , விக்கிரகம் , யானம் ,  ஆதனம் , சமாச்சிரயம் , துவைதீபாவம்  என்னு மிவற்றை  மந்திரத்திற்குரிய  அறுவகைக்  குணங்களாக  அறிதல்  வேண்டும் .                                                                                          234

(இவற்றை  முறையே  நட்பாக்கல் , பகையாக்கல், மேற்சேரல் , இருத்தல் , கூட்டல் , பிரித்தல்  என்று  கூறுவர்   பரிமேலழகர் [ திருக்குறள், 485-உரை ] )

      எச்  செயலால்  வன்மைமிக்க  பகைவனும்  தன்மாட்டு  நட்புரிமை  யெய்துகின்றானோ  அச்  செயல்  சந்தி  என்று  கூறப்படும் . அச்செயலை  அரசன்  முயன்று  ஆராய்ந்தறிதல்  வேண்டும் .             235

     எச்  செயலாற்  பகைவன்  துன்புறுத்தப்பட்டு  தனக்கு  வயமாகின்றானோ  அச்  செயல்  விக்கிரகமாகும் . அதனை  அரசன்  அமைச்சரோடு  சூழ்ந்து  ஆராய்தல்  வேண்டும் .                                     236

      தன்  விருப்பம்  நிறைவேறுதற் பொருட்டுப்  பகைவரை  அழித்தற்குச்  செல்லுதல்   யானமாகும் . தற்காப்பும்  பகைவர்க்குக்  கேடும்  உண்டாம்  வண்ணம்  இருத்தல்  ஆதனமாகும் .                     237

ஆற்றலில்லாத  ஒருவன்  எவராற்  காக்கப்பட்டு  வன்மையுடையனாகின்றானோ   அவரைப்  பற்றி  யொழுகுதல்  சமாச்சிரயமாகும் .  தன்  படைகளைக்  கூட்டங்கூட்டமாகப்  பிரித்து  வைத்தல்  துவை தீபாவமாகும் .                                                                    238

( முதநூலில்  உள்ள  “குல்மம்”  என்பது  கூட்டம்  என்று  மொழிபெயர்க்கப்பட்டது .  குல்மம்  படையின்  ஓர்  அளவக்  குறிப்பதுமாம் . 2-ஆம்  அத்தியாயம்  140-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      ஆற்றல்மிக்க  பகைவனால்  நெருக்கப்பட்டு  அவற்கு  வேறு எதிர்ச் செயல்  செய்ய  இயலாமல்  வருந்தும்  அரசன்  இடையே சில காலத்தைக்  கழித்துப்  பின்னர்ச் சந்தி  செய்ய  முயலல்  வேண்டும். 239

( இது  முதல் 249-வரை  உள்ள  சுலோகங்களில்  எவர்பால்  எவ்வமயம்  எவ்வாறு  சந்தி செய்து கொள்ளல் வேண்டும் என்பதைப் பற்றிக்  கூறுவர்)

      இச்  சந்தி யொன்றே  இன்பஞ்  செய்யுங்  கையுறையாக  எண்ணப்படும்  . அன்பில்லாதனவாகிய   பிறவெல்லாம் , கையுறையின்  பேதங்களாகும் .                                                                     240

( இதனால்  உண்மையன்போடு  செய்யப்படும்  சந்தியாகிய  கையுறையே  சிறந்ததெனவும் , அன்பில்லாதனவாகிய  பிற  கையுறைகளெல்லாம்  அத்துணைச்  சிறந்தனவல்லவெனவும்  கூறியவாறாம் .  பிற  கையுறைகளின்னவென்பதை  242-ஆம்  சுலோகத்திற்  காண்க . )

      எதிர்த்து வரும்  பகையரசன்  ஆற்றல்  மிக்கானாயின்  கையுறை  பெறாது  திரும்புவானல்லன் . அவ் வமயம்  அக் கையுறையின்றி  வேறு  சந்தியென்பது  ஒன்று  இன்றாம் .                                                                  241

( எதிர்த்து  வருவதற்குக்  காரணம்  மண்  பெண்  பொன்  முதலியவற்றுள்  ஒன்றன்பால்  வைத்த  அவாவேயாம் .)

      பணிவிடை  செய்தற்கு  உடன்படல் , மகட்  கொடுத்தல் , நிலங் கொடுத்தல் , பொருள் கொடுத்தல்  ஆகிய  இவற்றுள்  ஒன்றைப்  பகைவனது  ஆற்றற்குத்  தக்கவாறு  கையுறையாகச்  செய்தல்  வேண்டும் .                                                                                                           242

      அரசன்  பகைவரை  வெற்றி  கொள்ளுதற்  பொருட்டு  மந்திர வன்மையால்  தன்   சாமந்த  அரசரைச்  சந்தி  செய்து  கொள்ளல்  வேண்டும் . வன்மைமிக்க  ஒருவன்  தன்னை  நெருங்கித்  தனக்குக்  கேடு  செய்யக்  கூடுமாதலின்  அவன்  இழிந்தவனாயினும்  அங்ஙனஞ்   செய்யாதவாறு   அவனோடு  சந்தி  செய்துகோடல்  நன்று .                  243

( மந்திரம் – சூழ்ச்சி .)

      நெருங்கிய  முட்கள்  சூழ்ந்த  மூங்கிற்புதர்  கூட்டமாக  விருக்குமாயின்  அதனைக்  களைதல்  இயலாத  தொன்றாம் . அங்ஙனமே  அரசனும்  அமைச்சர்  முதலிய  குழுக்களோடு  கூடியிருப்பின்  பகைவரால்  வெல்லப்படுவானல்லன் .                          244

      அரசன்  தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்த  பகைவன்  பாற்  சந்தியையும் , தன்னின்  ஒத்த  பகைவன் பால்  விக்கிரகத்தையும்  , தன்னிற்  குறைந்த  பகைவன்பால்  யானத்தையும் , நண்பரோடு  சமாச்சிரயத்தையும்  செய்துகொள்ளல்  வேண்டும் . அரண்களை  யடைந்திருத்தலாகிய  ஆதனத்தையும்  தன்  படைகளைக்  கூட்டங்கூட்டமாகப்  பிரித்து  வைத்தலாகிய  துவைதீபாவத்தையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                           245

      அறிவிற்  சிறந்த  அரசன்  தனக்குப்   பகைவர்  பலராக, அவராற்  பொதுவாக  அச்சம்  ஏற்படுமாயின்  அவருள்  ஆற்றல்  மிக்கானோடு  தக்க  காலத்திற்  சந்தி  செய்து  தன்னைப்  பாதுகாத்துக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                          246

      தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்த  பகைவனோடு   போர்  செய்தலாகாது . மேகம்  ஒரு பொழுதும்  காற்றிற்கு   எதிர்முகமாகச்  செல்வதில்லை  என்னும்  இதுவே  அதற்கு  எடுத்துக்காட்டாகும் .        247

     தன்னின்  மிக்க  ஆற்றல்  வாய்ந்தவனிடத்து  வணங்கி  ஒழுகுவோனது  செல்வமும் , உரிய  காலம்  நோக்கிப்  பராக்கிரமத்தை  மேற்கொள்வோனது  செல்வமும் , மாறுபட்டொழுகாத  ஆற்றைப்  போல  என்றும்  அவரை  விட்டு  நீங்காவாம் .                                             248

      முற்காலத்தில்  ஒருவர்க்கொருவர்  கேடு  செய்வதில்லை  என்று  நியமஞ்  செய்து  கொண்டும்  விருத்திராசுரன்  இந்திரனாற்  கொல்லப்பட்டானாதலின் , அறிவிற்  சிறந்த  அரசன்  பகைவனோடு  சந்தி  செய்து  கொள்ளினும்  அவனை   முற்றும்  நம்பலாகாது .           249

     பகைவனால்  துன்புறுத்தப்பட்டுக்  கேடெய்திய  அரசன்  தனக்கு  நலத்தை  விரும்பிக்  காலமும் , இடமும் , படையும் , ஆகிய  இவற்றைத்  தக்கவாறு  அமைத்துக்கொண்டு  விக்கிரகத்தைத்    தொடங்கல்  வேண்டும் .                                                                                                            250

      அரசன்  தன்னிற்  குறைந்த  படைப் பலத்தையும் , நட்டோரையுமுடையவனும் , அரணுள்  இருப்பவனும் , கள் , காமம் , சூது  முதலிய   விதனங்களில்  மிக்க  பற்றுடையவனும் , குடிகளின்  பொருள்களைக்  கவர்ந்து  கொள்பவனும் , மனம்  மாறுபட்ட  அமைச்சர்,  படை  வீரரை யுடையவனும்  ஆகிய  பகைவரைச்  சூழ்ந்து  போர்  செய்து  அழிக்கக்  கடவன் . இதனையே  விக்கிரக மென்றறிதல்  வேண்டும் . இஃதல்லாத  பிறவெல்லாம்  கலகமென்றெண்ணப்படும் .

      மிக்க  ஆற்றல்  வாய்ந்த  சூரனாகிய  பகைவனோடு  அவனின்  மிகக்  குறைந்த  ஆற்றல்  வாய்ந்த  அரசன்  விக்கிரகத்தை  மேற்கொள்ளலாகாது ; அங்ஙனங்  கொள்ளின்  அவன்  பொருள்  எல்லாவற்றிற்கும்  அழிவுண்டாமாதலின் .                                                253

     ஒரு   பொருளை  அடைய  வேண்டுமென்று  பலர்  மேற்கொள்ளும்  அவாவே  கலகத்திற்குக்  காரணமாகும் .  ஆதலின் , அப்பொருளை  யடைதற்கு  வேறு  உபாயம்  இல்லையாயின்  விக்கிரகத்தை  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                             254

      இனி,  யானம் ஐந்து  வகைப்படுமென்று  மதிவலிமிக்கோர்  கூறுவர்.  அவையாவன :  விகிருகிய யானம் , சந்தாய யானம் , சம்பூய யானம் , பிரசங்க யானம் , உபேட்சை யானம்  என்பனவாம் .                                 255

( இது முதல்  261-வரையுள்ள  சுலோகங்களில்  யானத்தின்  வகைகளைப்  பற்றிக்  கூறுவர் .)

      ஓர்  அரசன்  தன்  படைப்  பலத்தால்  எல்லாப்  பகைவரையும்  எப்பொழுது  போரில்  வென்று  கொண்டு  செல்லுகின்றானோ   அச்செலவை  விகிருகியயானம்  என்று  யானவியல்புணர்ந்த  பெரியார்  கூறுவர் .                                                                                             256

( விகிருகியயான மென்பது  பகைவரது  படையை  போருஞற்றிச் சிறிது சிறிதாக  வென்று  மேற்சேரலாம் ,)

      தன்  நண்பர்  எல்லாரானும்  பகைவருடைய  நண்பர்  எல்லோரையும்  போரில்  தோல்வியுறச்  செய்து  தானும்  படைப்பலத்தாற்  பகைவரை  நோக்கிச்  செல்லுதலும்    விகிருகியயானம்  என்று  கூறப்படும் .                                                        257

      வேறொரு  பகைவனை  நோக்கிப்  போர்  குறித்துச்  செல்லும்  அரசன்  தன்னைப்  பின்றொடர்ந்து  வரும்  மற்றொரு  பகைவனோடு  வெற்றியையும்  பயனையும்  விரும்பிச்  சந்தி  செய்துகொண்டு  செல்வானாயின்  அச்  செலவு  சந்தாயயானம்  என்று  கூறப்படும் .  258

     ஓர்  அரசன்  வீரமும்  வன்மையுஞ்  சிறக்கப்  பெற்றுப்  போர்த்திறன்  வாய்ந்த  தன்  சாமந்த  அரசர்  பலரோடு  கூடி  ஒரு  பகைவனை  நோக்கிச்  செல்லுதல்  சம்பூயயானமாகும் .                                               259

             ஓரிடத்தை  நோக்கிப்  புறப்பட்ட  அரசன்  பிறிதோரிடத்திற்கு  வஞ்சகமாகச்  செல்லுதல்  பிரசங்கயானம்  ஆகுமென்று  அவ்வியல்புணர்ந்த  அமைச்சர்  கூறுவர் .                                                   260

     பகைவனை  நோக்கிப்  போர்  குறித்துச்  சென்ற  வன்மைமிக்க  அரசன்  தோல்வியாகிய  மாறுபட்ட  பயனை   யெய்தி  அப் பகைவனைப்  புறக்கணித்து விட்டுத்  திரும்பிப்  போதல்  உபேட்சையானம்  என்று  கூறப்படும் .                                                        261

19 . போர்  குறித்துச்  செல்லுதலின்  வகைகள்

      அரசன் இழிகுலத்துப்  பிறந்து  தீயொழுக்கமுடையனாயினும்  கொடையாளியாக விருப்பின்  அவன்பாற்  படைவீரர்  அன்புடையராவர் . ஆதலின்  தன்  படைவீரரை , மனமுவந்து  கொடுக்கும்  பரிசிலால்  மகிழ்வித்தல்  வேண்டும் . போர்  குறித்துச்  செல்லுங்கால்  படைத்தலைவன்  சிறந்த  வீரர்  பலர்  தன்னைப்  புடை  சூழ்ந்து  வரத்  தான்  படைகளின்  முன்னணியிற்  செல்லல்  வேண்டும் . நடுவில்  மகளிரும் , கருவூலமும் , அரசனும் , சிறந்த  மற்றைப்  பொருள்களும்  போதல்  வேண்டும் . அப்  படைத்தலைவன்  தன்  படைகளை  இரவும்  பகலும்  முயன்று  பாதுகாத்தல்  வேண்டும் . 262-63 

( இதுமுதல்  284-வரையுள்ள  சுலோகங்களில்  யானத்தினிமித்தம்  செய்யப்படும்  படைவகுப்பு  முதலியவற்றைக்  கூறுவர் .)

20 . படை  வகுப்புக்களும்  அவற்றின்  செயல்களும்

      ஆறும் , மலையும் , காடும் , மதிலுமாகிய  இவ்விடங்களுள்   எங்கெங்கு  அச்சந்  தோன்றுமோ  அங்கங்கு  வியூகமாகச்  செய்யப்பட்ட  படைவீரரோடு  அப்படைத்தலைவன்  போதல்  வேண்டும் .                                                                                                            264

      படைகளின்  முன்னணியில்  அச்சமுண்டாகுமாயின்  பெரிய  மகரவியூகமாதல் , இருபக்கத்தும்  இறகுகளையுடைய  சேன வியூக மாதல் , சிறந்த  வீரராலாகிய  கூரிய  முகத்தினையுடைய  சூசி வியூகமாதல்  வகுத்துச்  செல்லல்  வேண்டும் .                                        265

( சேனம் – கழுகு .  சூசி – ஊசி .)

      படைகளின்  பின்புறத்தில்  அச்சமுண்டாகுமாயின்  சகட வியூகத்தையும் , இருமருங்கிலும்  அச்சமுண்டாகுமாயின்  வச்சிர  வியூகத்தையும் , எல்லாப்பக்கங்களிலும்  அச்சமுண்டாகுமாயின்  சருவதோபத்திர வியூகம் , சக்கர வியூகம் , வியாளவியூகங்களையும்  அவ்வந்  நிலத்திற்குத்  தக்கவாறு  பகைப்  படையைப்  பிளந்து செல்லும்  வண்ணம்  அமைத்தல்   வேண்டும் .                                        266

      வாத்திய ஒலி  விசேடத்தால்  அறிவிக்கப்படும்  படை  வகுப்பியற்றுஞ்  சங்கேதங்களைத்  தன்  படைவீரரல்லாத  வேறு  ஒருவனும்  அறியாவண்ணஞ்  செய்தல்  வேண்டும் .                              267

( சங்கேதம் – குறியீடு .)

      மதிவலி  மிக்க  அரசன்  பலவகையான  படைவகுப்புக்களை  எப்பொழுதும்  செய்வித்தல்  வேண்டும் .                                                    268

      அரசன்  குதிரைகளுக்கும் , யானைகளுக்கும் , காலாட்படைகளுக்கும்  வேறு  வேறாகவுள்ள  படைவகுப்புச்  சங்கேதங்களை  உரக்க  ஒலித்துக்  கேட்டுச்  செய்தல்  வேண்டும் .   269

      படைவீரர்  வலப்புறம் , இடப்புறம் , நடு , முற்புறம்  ஆகிய  இவ்விடங்களில்  எங்கிருப்பினும்  அப் படை வகுப்புச்  சங்கேத  ஒலிகளைக்  கேட்டு  அவ்வொலிக்  குறிப்பால்  ஆணையிட்டவாறு  செய்யக்கடவர் .                                                                                                    270

      இனிச்  சங்கேதவழிச்  செய்யப்படும்  படைவகுப்புக்களின்  செயல்களாவன : திரண்டு  கூடுதல் , பரவி நிற்றல் , நாற்புறத்துஞ்  சுற்றுதல் , நெருங்குதல் , முன்போதல் , விரைந்து போதல்,   பின்னாக  நடத்தல் , வரிசையாக  எதிர்நோக்கிப் போதல் , நேராக  எழுந்து  நிற்றல் , நிலத்திற்  புரளுதல் , அட்டதளமும்  சக்கரமும்   கோளமும்  ஊசியும்  சகடமும்  அருத்தசந்திரனும்  ஆகிய  இவற்றைப்   போல்  வடிவமைந்திருத்தல் , சிற்சிலவாகப்  பிரிந்து  நிற்றல் , ஒழுங்குபட  நிரை  நிரையாகச்  செல்லல் , விடுபடை , விடாப்படைகளைக்  கையிற்றாங்குதல் , அவற்றை  உபயோகிக்கச்  சித்தஞ்  செய்தல் , குறியைத்  தாக்குதல் , விடுபடைகளை எறிதல் , கைப்படைகளால்  தாக்குதல் , அப் படைகளை  விரைந்து  சித்தஞ்  செய்தல் , குறியில்  வீழ்த்தல் , மீண்டும்  மீண்டும்  அவற்றைப்  பற்றுதல் , விடுதல் , அம்பு , வாள் , முதலியவற்றாலும்  அடிவைப்புக்களாலும் , தற்காப்புச்  செய்து  கோடல் , எதிர்த்துத் தாக்குதல் , இரண்டு  வரிசை , மூன்று  வரிசை  அல்லது    நான்கு  வரிசைகளாகச்  செல்லுதல் , முன்  நிற்றல் , திரும்பி  வருதல் , பக்கங்களிற்  செல்லுதல்  என்பனவாம் .                             271-276

      படைவகுப்பிலுள்ள  வீரன்  அம்புகளைத்  திட்டஞ்  செய்தற் பொருட்டுப்  பின்  போந்தும் , அவற்றை  விடுதற்  பொருட்டு  முன் சென்றும்  முன்னணியில்  நின்று  அவற்றை  எறிதல்  வேண்டும் .  277

      அம்பை  விடுத்த  வீரன்  நிலத்திலிருத்தல்  , அன்றி  முன்னோக்கிச்  செல்லுதல்  வேண்டும் . தன்  எதிரில்  இருக்கின்ற  பகைவனை  அணிமையிற்  சென்று  கண்டு  அவன்பால்  தன்  அம்புகளை  ஒவ்வொன்றாகவாதல் , இரண்டிரண்டாகவாதல் , கூட்டங்கூட்ட மாகவாதல்   சங்கேதத்திற்  குறிப்பிட்டவாறு  மீண்டும்  விடுதல்  வேண்டும் .                                                                                                     278

      ஆகாயத்திற்  கிரெளஞ்சப்  புட்கள்  எங்ஙனம்  வரிசை  வரிசையாகப்  பறந்து  செல்லுமோ  அங்ஙனஞ்  செல்லுமாறு , நுண்ணிய   கழுத்தினையும் , இடைநிகராய  பின்  இறகினையும் , பருத்துத்திரண்ட  இறகுகளையும்  உடையதாக  அமைக்கப்படும் படைவகுப்பு  கிரெளஞ்ச  வியூகமாகும் , இதனை  இடத்தின்  தகுதிக்கேற்றவாறு  நடத்துதல்  வேண்டும் .                                            279இ

      பெரிய  இறகுகளையும் , இடைநிகராய  கழுத்தையும் , பின்இறகையும் , முகத்திற்  கூர்மையையும்  உடையதாக  அமைக்கப்படும்  படை  வகுப்பு , சேனவியூகமாகும் .                          280

      நான்கு  கால்களையும் , நீண்டு  பருத்த  முகத்தினையும் , இரண்டு  உதடுகளையு முடையது  மகரவியூகமாகும் . கூரிய  முகத்தினையும் , ஒத்து  நீண்ட  தண்டத்தினையும்  அதன்  அடியில்  துளையினையுமுடையது  சூசிவியூகமாகும் .                                          281

      ஒரே  வழியினையும் , எட்டு  வகையான  வளைவுகளையும்  உடையதாகச்  செய்யப்படுவது  சக்கரவியூகமாகும் . நாற்புறத்தும்  எட்டு  வளைவுகளையுடையது  சருவதோபத்திர வியூகமாகும் உட்செல்லுதற்குரிய  வழியின்மையையும் , எல்லாப்பக்கத்தும்  முகங்களையும் , எட்டு  வட்டங்களையுமுடையது  கோளவியூகமாகும் . சகட  வடிவமாக  அமைக்கப்படுவது  சகடவியூகமாகும் . பாம்பு வடிவமாக  அமைக்கப்படுவது  வியாளவியூகமாகும் .                282-283

      வழியையும்  போர்க்களத்தையும்  நோக்கி  அவற்றிற்குத்  தக்கவாறு  தன்  சிறுபடை  பெரும்  படைகளை  ஒரு  வியூகமாகவும் , இரண்டு  வியூகங்களாகவும் , பல  வியூகங்களாகவும் , கலப்பு  வியூகமாகவும்  அமைத்துக் கொள்ளல்  வேண்டும் .                                                            284

21. பகைவரை  முற்றுகையிட்டுத்  தடை  செய்தல்

     எவ்விடங்களிலிருந்து  நாளிக  முதலிய  எந்திரக்  கருவிகளாற்  பகைப் படையை  அழித்தல்  கூடுமோ  அவ்விடங்களில்  அரசன்  தன்  படை  வீரரோடு  கூடியிருத்தல்  ஆதனம்  என்று  கூறப்படும் .             285

( இது முதல் நான்கு சுலோகங்களில் சந்தி முதலியவற்றுள் ஒன்றாகிய ஆதனத்தைக் கூறுவர். )

      பகைவர்  பாதுகாப்பிற்குரிய  புல்லும் , உணவும் , நீரும் , மற்றைப்  பண்டங்களும்  ஆகிய  இவ்வெல்லாவற்றையும்  உட்செல்ல  வொட்டாமல்  நாற்புறமும்  நீண்டகாலம்  முற்றுகையிட்டிருத்தலால்  முயன்று  தடுத்து  அத்  தடையால்   தானியத்  தொகுப்பும் , நட்புப்  படைகளின்  வரவும்  ஒழியப்  பெற்றதும் , புல்லும் , விறகுங்   குறைந்ததும் , பொருது  வெல்லுதற்குரிய  சனங்களையுடையதும்  ஆகிய  பகைவன்  தேயத்தைக்  காலம்  பார்த்து வென்று  தனக்குரியதாக்கிக்  கொள்ளல்  வேண்டும் .                                   286-287

      வெற்றியை  விரும்பும்  அரசனும்  அவன்  பகைவனுமாகிய  இருவரும்  போரிற்  படைப்பலம்  முதலிய  குறையப்  பெறுவாராயின்  அப்பொழுது  அவர்  தம்முட்  சந்தி  செய்து  கொண்டு  ஒற்றுமைப்பட்டிருத்தல்  சந்தாய  ஆதனம்  என்று  கூறப்படும் .        288

      ஆற்றன் மிக்க  பகைவனால்  வேரோடு  களையப்பட்டு   அப் பகைவனை  வெல்லுதற்குரிய  உபாயமும் , எதிர்ச்செயலுமற்ற  அரசன்  நற்குலப்பிறப்பும் , உண்மையும் , மிகச்  சிறந்த  வன்மையும்,  பெருந்தன்மையும்  வாய்ந்த  மற்றோரரசனைப்  புகலாக  அடைதல்  வேண்டும் .                                                                                                          289

( இதுவும்  பின்வருஞ்  சுலோகத்திற்  கூறப்படுவதும்  சந்தி  முதலியவற்றுள்  ஒன்றாகிய  சமாச்சிரயத்தின்  வகைகளாம் . )

      வெற்றியை  விரும்பும்  அரசற்குத்  துணை  செய்தற்  பொருட்டு  முன்வந்த  நண்பரும் , சம்பந்திகளும் , சுற்றத்தாரும் , வேதனம்  பெற்றுக் கொண்டதால் , வெற்றியாற்  கிடைக்கும்  பொருளைக் கூறிட்டுக்  கொள்வதென்று  உறுதி  செய்தாதல்  துணை  செய்ய  முன்  வந்த  மற்றை  அரசரும்  சமாச்சிரயமாவர்  எனப்  பெரியோர்  கூறுவர் . அரண்களும்  சமாச்சிரயம்  என்று  கூறப்படும்.                                        290

      துணியப்படாத  உபாய  காரியத்தை யுடையவனாய்த்  தனக்கு  நன்மை  பயக்குங்  காலத்தை  எதிர்பார்த்திருக்கும்  அரசன்  துவைதீபாவம்  என்னுங்  குணத்தை  மேற்கொள்ளக்கடவன் . இன்னும்  அவன்  காகநேத்திரம்  போலப்  பிறராற்  காணப்படாதவாறு  ஒரு  காரியத்தை   வெளிப்படையிற்  காட்டிப்  பிறிதொரு  காரியத்தைக்  கடைப்பிடித்தல்  வேண்டும் .                                                                            291

( துவைதீபாவம் – சந்தி  முதலிய  அறுவகைக்  குணங்களுள்  ஒன்று . அஃது  இன்னதென்பதை  238-ஆம்  சுலோகத்திற்  காண்க . ஓரரசன்  தன்  படையைச்  சிறுசிறு  குழுவாக  பிரித்துவைத்தலாகிய  துவைதீபாவத்தை  மேற்கோடல் , பகைவன்  தன்  படைச்  சிறுமை  நோக்கி  எளிதில்  வென்றுவிடலாமென்று  கருதிப்  போர்க்குரிய  அவன்  உபகரணங்களையும்  படைகளையும்  மிகுதியாக்காமை  குறித்தாம் . காகத் திருகண்ணின்  ஒன்றே  மணி  கலக்குமாதலின்  அம்மணியின்  நிலை  இன்ன  கண்ணிலுள்ளதென்று  அறிய  வாராது . அதுபோல  அரசன்  தான்  உண்மையாகக்  கடைப்பிடித்துள்ள  காரியம்  இன்னதென்று  பிறரறியாவாறு  மேற்கொள்ளவேண்டுமென்பதாம் . )

22 . போரிற்  சாம முதலிய  உபாயங்களை  மேற்கோடல்

    சிறந்த  உபாயங்களாலும் , தக்க  சூழ்ச்சிகளாலும் , இடையறா  முயற்சிகளாலும்  சிறு  மனிதர்க்கும்  காரியங்  கைகூடுமாயின்  ஓரரசற்கு  இவற்றால்  எங்ஙனங்  கைகூடாததாகும் . [  எளிதிற்  கை கூடுமென்பது  கருத்து ]                                                                                 292

      முயற்சிகளாலேயே  காரியங்கள்  நிறைவேறுவனவாம் . எண்ணங்களான்  மாத்திரம்  நிறைவேறா . உறங்குகின்ற  சிங்கத்தின்  வாயில்  யானைகள்  தாமே  சென்று  வீழா .                                            293

( சிங்கமும்  முயன்றாலொழிய  யானைகளைக்  கவர  இயலாதென்பதாம் . )

      பிளக்கவொண்ணாத  இரும்பும்  பிறிதொருபாயத்தால்  நீர்  போல்  உருகுந்  தன்மையை  யெய்துகின்றது . நெருப்பை  அவிப்பது  நீர்   என்பது  உலகப்பிரசித்தம் . அங்ஙனமாயினும்  பிறிதொருபாயத்தால்  அமைக்கப்படும்  நெருப்பினால்  அந் நீர்  சுவறிவிடுகின்றது . மதச்  செருக்குமிக்க  யானையின்  தலையிலும்  உபாயத்தினாலேயே  மனிதனுடைய  அடி  வைக்கப்படுகின்றது .                                        294-295

( நெருப்பினால்  நீர்  சுவறவேண்டுமாயின்  அந் நீருக்கு  ஆதாரமாக  இடையில்  பாண்டம்  முதலியனவமைத்தல்  ஈண்டு  உபாயமாகும் . இவ்விரண்டு  சுலோகங்களாலும்  சாம  முதலிய  உபாயங்கள்  இன்றியமையாதனவென்று  அவற்றின்  பெருமை  கூறியவாறாம் . )

      உபாயங்களுள்  பேதோபாயஞ்  சிறந்ததாகும் . சந்தி  முதலிய அறு  குணங்களுள்  சமாச்சிரயஞ்  சிறந்ததாகும் . ஆதலால்  வெற்றியை  விரும்பும்  அரசன்  எப்பொழுதும்  இவ்விரண்டினையும்  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                                                             296

      அரசன்  இவ்விரண்டுமில்லாமல்  ஒரு  பொழுதும்  போர்  செய்யத்  தொடங்கலாகாது .                                                                                            297

      பகைவனுடைய  படைத் தலைவர் , அமைச்சர் , அவன்  குடிமக்கள் , பெண்கள்  என்னும்  இவரை  ஒருவொர்க்கொருவர் மனவேற்றுமை யுண்டாம்  வண்ணம்  பேதோபாயத்தைச்   செய்தல்  வேண்டும் .  298                                                                                                           

    அரசன்  தன்னுடைய  பகைவனுடையவுமாகிய  சாம  முதலிய  உபாயங்களையும் , சந்தி  முதலிய  குணங்களையும்  எப்பொழுதுஞ்  சீர்தூக்கி யறிந்து  தன்  உயிருக்காதல் , பொருள்  எல்லாவற்றிற்குமாதல்  கேடு  நேருங்கால்  போர்ச்  செயலை  மேற்கொள்ளல்  வேண்டும் .                                                                              299

23 . போரிற்  புறங்  கொடாமை

     பெண்களுக்கும்  அந்தணர்க்கும்  இடையூறொழித்து  அருள்  செய்யுட்காலும் , அந்தணர்க்கும்  பசுக்களுக்கும்  அழிவு  நேருங்காலும்   உண்டாம்  போரில்  அரசன்  ஒருபொழுதும்  புறக்கணிப்பாளனாக  இருத்தலாகாது .                                                                                                    300

அருள்  செய்யுங்கால்  அச்  செயற்குத்  தடையாகப்  பகைவர்  செய்யுஞ்  செயல்களாற்  போருண்டாம் . அழிவு  நேர்தல்  பகைவராலாம் . அப்பொழுது  போருண்டாதல்  அவ்வழிவை  விலக்குதல்  பற்றி யாகும் . )    

      போர்  செய்து  கொண்டிருக்குங்கால்  அதனை  யொழித்து  எவன்  செல்கின்றானோ  அவன்  தேவரால்  மிகவும்  கெடுக்கப்படுவான் .   301

      குடி  புறங்காத்  தோம்பும்  அரசன்  தன்னின்  மேற்பட்டாரும் , கீழ்ப்பட்டாரும் , தன்னோடொத்தாருமாகிய  பகைவராற்  போர்  குறித்து  அழைக்கப்படின் , அரசற்குரிய  அறத்தை  நினைவுட்  கொண்டு  போர்ச்  செயலினின்றும்  திரும்பலாகாது .                            302

      பிலத்  துவாரத்திலுள்ள  பிராணிகளைப்  பாம்பு  கொன்று  விழுங்குதல்  போலப்  போர்  செய்தற்கு  அஞ்சும்  அரசனையும் , தேய  யாத்திரை யில்லாத  அந்தணனையும்  இந்  நிலமகள்  அழித்துவிடும் .

      அரசிய லறம்  பிரம்மனிடத்தினின்றும்  தோன்றினமையின்   அந்தணன்  தனக்குக்  கேடு  நேர்ந்துழி  அவ்  வரசற்குரிய  விருத்தியாற்  சீவித்தல்  உலகத்திற்  போற்றப்படுவதொன்றாம் .                                  304

      அரசற்குப்  படுக்கையில்  நிகழும்  மரணம்  பாவ  மரணமாகும் .  எவ் வரசன்  கோழையையும்  பித்தநீரையும்  கக்கிக்  கொண்டு  எளிமையுற்று , அழுது , அம்பு  வாள்  முதலியவற்றாற்  புண்படாத  உடலோடு  மரணம்  எய்துகின்றானோ  அவ்வரசனின்  அம்மரணத்தை  அறிவுடையார்  பாராட்டுவாரல்லர் .                                                      305-306

      செல்வம்  படை  முதலியவற்றாற்  செருக்குமிக்க  அரசர்க்குப்  போர்க்களத்தன்றி  இல்லத்தில்  மரணம்  நேர்தல்  எளிமையையும் . செருக்கழிவையும் , பாவத்தையுஞ்  செய்வதாதலின்  அம்மரணம்  பாராட்டப்படுவதன்றாம் .                                                                                307

      அரசர்  குலத்துப்  பிறந்தானொருவன்  தன்  சுற்றத்தார்  சூழப்  போர்க்களத்திற்  சென்று  பகைவனை  வெல்லாது  சீவித்திருப்  பானாயின் , அவன் அம்பு , வாள்  முதலியவற்றாற்  பிளந்து  கொல்லுதற்குரியனாவான் .                                                                           308                       

      போர்க்களத்தில்  ஒருவரை யொருவர்  வெல்ல வேண்டுமென்னும்  விருப்பமுடையவராய்  மிக்க  ஆற்றலோடு  புறங்கொடாமற்   போர்  செய்யும்  வீரர்  துறக்கவின்பம்  எய்துவர் .                                              309

      எவ்வீரன்  தன்  தலைவன்  பொருட்டுப்  படையின்  முன்னணியில்  நின்று  அச்சங்  காரணமாகப்  புறங்கொடாமல்  வீரத்தோடு  போர்  செய்கின்றானோ  அவன்  அழிவில்லாத  துறக்கவின்பத்தை  யெய்துவான் .                                                                                                      310

      போர்க்களத்தில்  இறந்த  வீரன்   அப் போர்ச்  செயலால்  எல்லாப்  பாவங்களையும்  நீக்கித்  தூய்மையுடையனாய்ப்  புண்ணிய வுலகத்தை  யடைவான் .  ஆதலின்  அவ் வீரனைக்  குறித்து  ஒருபொழுதும்  துன்புறலாகாது .                                                                    311

      சிறந்த  தெய்வப்  பெண்கள்  பலர்  போர்க்களத்தில்  இறந்த  வீரனைக்  குறித்து  இவன்  நம்  கணவனாவான்  என்று  அவன்பால்  மிக  விரைந்து  சென்று  அவனை யடைவர் .                                                      312

      பெருந்தவஞ்  செய்து  முனிவரரால்  அடையப்படும்  சிறந்த  பதவியைப்  போர்க்களத்திற்  பகைவரெதிர்நின்று  போர்  செய்து  இறந்த  வீரர்  எளிதில்  விரைந்து  எய்துவர் .                                                313

      எவன்  போர்க்களத்திற்  புறங்கொடாது  போர்   செய்கின்றானோ  அவற்கு  அச்  செயலே  தவமும் , புண்ணியமும் , அழிவில்லாத  அறக் கடமையும் , பிரமசரியம்  முதலிய  நால்வகை   நிலைகளாலும்  எய்தும்  பயனுமாம் .                                                                                                            314

      மூன்று  உலகத்திலும்  வீரத்திலுஞ்  சிறந்தது  வேறு  யாதும்  இன்று .  வீரனே  எல்லோரையும்  பாதுகாப்பவனாவான் . வீரன்பாலே  எல்லாப்  பொருளும்  நிலைப்படுவனவாம் .                                                                 315

      இயங்கியற்  பொருள்களுக்கு  நிலையியற்  பொருள்கள்  உணவாகும் . கோரப்  பல்லுள்ளவற்றிற்கு   அஃதில்லாதவை யுணவாம் . கையுறுப்புள்ளார்க்கு  அஃதில்லாதவை  உணவாகும் . அங்ஙனமே  வீரர்க்கு  அச்சமுடையார்  உணவாவர் .                                                       316

( இயங்கியற்பொருள் – மனிதரும்  விலங்கு  முதலியனவுமாம் . நிலையியற்பொருள்கள் – நெல்லும்  புல்லும்  முதலியன . கோரப்பல்லுள்ளன – சிங்கம், புலி முதலியன . அஃதில்லாதவை – பசு  ஆடு  முதலியன .)            

      இவ்வுலகத்தில்  யோகநெறி யொழுகுந்  துறவியும் , போர்க்களத்திற்  பகைவர்  எதிர்  நின்று  போர்  செய்து  இறந்த  வீரனும்  ஆகிய  இவ்விருவருமே  சூரிய  மண்டலத்தைப்  பிளந்து  கொண்டு  செல்பவராவர் .                                                                                                    317

      ஆற்றன்மிக்க  போர்வீரன் , போரில்  தன்னைக்  கொல்ல  முயல்வோர்,  கற்றுணர்ந்த  அந்தணராயினும்  குரவராயினும்   அவரைக் கொன்று  தன்னைக்  காத்துக்கொள்ளக் கடவன் ; இவ்வறம்  வேதத்தில்  விதிக்கப்பட்ட  தொன்றாகலின் .                                            318

      வீரன் , தனக்குப்  பகைவராற்  பெரிய  அச்சந்  தோன்றியிருக்குமா யின் , அப்பொழுது  செய்ய  வேண்டியவற்றைப்  பற்றி  அருளுடையாரும் , பாவமில்லாரும் , அறிவிற்  சிறந்தாருமாகிய  குரவர்களை  எவ்வாற்றானும்  வினாவலாகாது .[ குரவரை யடுத்து வினாவின்  அவர்  பகைவர்க்கு  எதிச்செயல்  செய்ய    உடன்படார்  என்பது  கருத்து .]                                                                                                 319

     சிறந்த  அழகு  வாய்ந்த  அரண்மனைகளிலும் , கழகங்களிலும் , உய்யான வனங்களிலும்  இருந்து  விசித்திரமான  பல   கதைகளைச்  சொல்லி  மகிழ்வுறுத்தும்  பண்டிதர்கள்  அவ்வவ்விடங்களை அலங்கரிப்பவராவர் .                                                                                      320

( இதுமுதல்  நான்கு  சுலோகங்களில்  போர்  செயலல்லாத  பிற  காரியங்களில் துணை நின்று அலங்கரிப்பவரைக் கூறியது. அவர்கள் அவர்கட்குரிய காரியங்களினன்றிப்  போர்ச்  செயற்குரிய  சூழ்ச்சித்  துணைவராகக்  கருதலாகாதென்பது  பற்றியாம் . )                      

      மக்கள்  பலர்  கூடுங்  கழகங்களிலிருந்து  வியக்கத்தக்க  பல  செயல்களைச்  செய்கின்றவர்களும் , தத்துவ  நிருணயத்திற்  போற்றத்  தக்கவர்களுமாகிய  பண்டிதர்கள்  அவ்வவ்விடங்களை  அலங்கரிப்பவராவர் .                                                                                        321

      பகைவர்பாற்   புரைவழி  காண்டலிலும் , மனிதருடைய  ஒழுக்க  வகைகளிலும்  , யானை , குதிரை  தேர்  என்னுமிவற்றை நடத்துவதிலும் , கழுதை  ஒட்டகம்  வெள்ளாடு  செம்மறியாடு  என்னுமிவற்றைப்  பழக்குவதிலும் , பசுக்களையும்  பொருள்களையும்  பாதுகாத்தலிலும் , நடைவழி யமைத்தலிலும் , சுயம்வரம்  முதலிய  காரியங்களிலும் , ஆக்கப்பட்ட  உணவிற்  குற்றம்  ஆராய்தலிலும்  திறமை  வாய்ந்த  பண்டிதர்கள்  அவ்வவ்விடங்களை  அலங்கரிப்பவராவர் .                                                                               322-323

    அரசன்  தன்  பகைவருடைய  குணங்களைப்  பாராட்டும்  பண்டிதரைப்  பொருட்படுத்தாமல்  தானே  பகைவருடைய     குணங்களை  ஆராய்ந்தறிந்து  அப் பகைவரால்  தனக்குக்  கேடு விளையுமென்னும்  ஐயந்  தோன்றின்  அவரைக்  கொல்லுதற்குரிய  நீதி  முறையைத்  தன்  படைகளுக்குக்  கட்டளையிடல்  வேண்டும் . 324

      ஆததாயிகளின்  தன்மையை  யடைந்த  அந்தணன்   சூத்திரனை  யொப்பக்  கருதப்படுவான் . ஆதலின்  ஆததாயியின்  கொலையால்  அதனைச்  செய்வார்க்கு  ஒரு  குற்றமும்  நேராது .                                  325

      வாள்  முதலிய  கருவிகளைத்  தாங்கித்  தன்னைக்  கொலை  செய்ய  முயன்றுவரும்  ஆததாயி  சிறுவனாக  விருப்பினும்  அவனைக்  கொன்று  விடலாம் . அதனால்  பாலனைக் கொன்ற  குற்றம்  உண்டாகாது . அவனைக் கொல்லாதுவிடின் அக்குற்றம்  உண்டாம்.  326

      ஓர்  அந்தணன்  போர்க்களத்தில்  அம்பு  முதலியன  தாங்கிச்  சினமுற்று  அரசர்குலத்து வீரனை யொப்பப்  புறங்கொடாமற்  போர்  செய்வானாயின் , அவனைக்  கண்டு  கொல்வதால்  கொல்வோர்க்கு  அந்தணனைக்  கொன்ற  குற்றம்  இன்றாம் . இஃது  அறநூல்களில் துணியப்பட்ட தொன்று .                                                                                   327

      எவன்  போர்ச்  செயலினின்றும்  உயிர்  வாழ்தலை  விரும்பிப்  புறங்கொடுத்து  ஓடுகின்றானோ  அவ்  இழி  தகையாளன்  உடலோடு  கூடியிருந்தும்  இறந்தவனே யாவான் , இன்னுமவன்   அந் நாட்டிலுள்ளாரிழைத்த  பாவப்  பயனையும்  அநுபவிப்பான் .              328

       எவன்  தன்  நட்டோனையும்   தலைவனையும்  போர்க்களத்தில்  விட்டுத்  தான்  மாத்திரம்  வெளிச்  செல்கின்றானோ  அவன்  இம்மையில்  எல்லோராலும்  பழிக்கப்பட்டு , மறுமையில்  நரகத்தையும்  எய்துவான் .                                                                               329

       எவன்  தன்  நண்பன்  கேடெய்திருத்தலைக்  கண்டும்  அவற்குத்  துணை செய்யாமலிருக்கின்றானோ  , அவன்   இம்மையிற்  பழியையும்  இறந்தபின்  நரகத்தையும்  அடைவான் .                            330

       எவன்  தன்னை  நம்பித்  தன்பால்  அடைக்கலமாகப்  புகுந்தவனை  விலக்குகின்றானோ  அவ்வறிவிலான்  திசைகளும்  இந்திரர்களும்  உள்ள  காலம்வரை  கொடிய  நரகத்  துன்பத்தை யனுபவிப்பான் .    331

       அந்தணர்  ஒழுக்கக்  கேட்டினையுடைய  அரசனோடு  போர்  செய்து  அவனை  அம்பு , வாள் முதலியவற்றாற்  கொன்று  அழிப்பாராயின் , அக்கொலைச் செயலால்  அவர்  பாவம்  எய்துவாரல்லர் .                                                                                                    332

       எப்பொழுது  அரசர் குலத்தவர்  வன்மையிலராய் யொழிய  உலகம்  இழிந்தவராற்  துன்புறுத்தப்படுகின்றதோ , அப்பொழுது  அங்ஙனம்  துன்புறுத்தும்  அவ்விழிந்தாரை  அந்தணர்  போர்  செய்து  விரைந்து  அழிக்கக்  கடவர் .                                                                                               333

24 . அம்பு  வாள்  முதலியவற்றாற்  செய்யப்படும் போர்ச்  செயலின்  வகைகள்

      மந்திரவன்மை   மிக்க  படைகளாற்  செய்யப்படும்  போர்  தலையாயதாகும் . நாளிகக்  கருவி  முதலியவற்றாற்  செய்யப்படும்  போர்  இடையாயதாகும் . கைகலந்து  செய்யப்படும்  மற்போர்  கடையிற் கடையாயதாகும் .                                                               334                          

      மந்திரவன்மையால்  ஏவப்படும்  பெரிய  வேற்படை  அம்பு  முதலியவற்றாற்  பகைவரை  யழித்தல்,  மாந்திரிகப்  படையாற்செய் யும்  போராகும் . அது  மற்றைப்  போர்  எல்லாவற்றினுஞ்  சிறந்ததாக  எண்ணப்படும் .                                                                                                    335

      நாளிகப்  படையின்  தண்டில்  நெருப்புப்  பொடியைச்  சேர்த்து  அதன்கண்  உள்ள  இருப்புக்  கோளத்தைக்  குறிக்கண்   வீழ்த்துதல்  நாளிகப்படைப்  போராகும் . அது  பகைவர்க்குப்  பெரிதும்  அச்சத்தை  விளைவிப்பதாகும்.                                                                                              336

      குந்தம்  முதலிய  விடாப்  படைகளின்  கூட்டத்தாற்  பகைவரை  யழித்தல்  விடாப்படை  போரென்றறியப்படும்  . அஃது  எப்பொழுதும்  நாளிகப்படை  இல்லாவிடத்து  மேற்கொள்ளத் தக்கதாகும் .               337

25 . மற்போரும்  அதன்  வகைகளும்

     பகைவருடைய  உயிர்நிலை யுறுப்புக்களையும் , உறுப்பின்  பொருத்துக்களையும்   முறையோடு  சென்றாதல் , முறை  தவறிச்  சென்றாதல்  திறமையோடு  உராய்தலாலும் , கைகளாற்  பிணித்தலாலும்  அவரைக்  கொல்லுதல் கைகலந்து  செய்யும்  மற் போராகும் .                                                                                                          338

       அக் கைப்போர்  எட்டு வகையாக  எண்ணப்படும் . அவ் வகைகள்  வருமாறு :  [1]  தன்  இடக்கையால்  பகைவன்  தலை மயிரை  இறுகுறப்  பிடித்தல் , [2]  வன்மையால்  நிலத்தில்  வீழ்த்திப்  பிசைதல் , [3] கால்களால்  தலையில்  உதைத்தல் , [4] முழங்காலால்  வயிற்றின்  மோதுதல் , [5] வில்வப் பழம் போல்  திரண்ட  கைமுட்டியாற்  கதுப்புக்களிற்  கடுமையாகக்  குத்துதல் , [6] அடிக்கடி   முழங்கைகளால்  தாக்குதல் , [7] அங்கையால்  உடம்பில்  எப்பக்கத்தும்  அறைதல் , [8] பகைவன்  சோந்திருக்குங்கால்   கபடமாக  அவனைப்  போரிற்  சுழற்றுதல்  என்பனவாம் .                                                 339-340

       இக் கைப்போர்வகை  எட்டனுள்  நான்கு  வகைகளால்  அரசர்  குலத்துப்  பிறந்தாரையும் , ஐந்து  வகைகளால்  அக் குலத்துப்  பிறந்த  இழிதகையாளரையும் , ஆறு  வகைகளால்  வணிகரையும் , ஏழு  வகைகளாற்  சூத்திரரையும் , எட்டு  வகைகளாற்  கலப்புச்  சாதியினரையும்  பொருது  அழிக்கலாம் . இவ் வெண்வகைக்  கைப்போர்களையும்  பகைவர்பாலே  உபயோகித்தல்  வேண்டும் . நட்டார்பால்  ஒரு பொழுதும்  மேற்கொள்ளலாகாது .                               341

26 . போர்ச்  செயற்குரிய  நியமங்கள்

     மனம்  மாறுபட்ட   அமைச்சரையும்  படைகளையுமுடைய  பகைவரோடு  போர்  செய்யுங்கால்  சிறியனவும்  பெரியனவுமாகிய  நாளிகப்  படைகளை  முன்னணியில்  நிறுத்தியும் , அவற்றின்  பின்புறத்தே  காலாட் படைகளையும் , இருமருங்கிலும்  யானைப்படைகளையும்  குதிரைப்படைகளையும்  நிற்கச்  செய்தும்  போர்   தொடங்கல்  வேண்டும் .                                                                    342

      படைத்தலைவர்  பகைவர்  எதிரே  சென்றாதல் , பக்கங்களில்  விலகிச்  சென்றாதல்  போர்  செய்தற்குரிய  நிலம்  தமக்கு  அநுகூலமாம்  வண்ணம்  முதலில்  தம்  படையின்  அரைக்கூறு  கொண்டு  போர்  செய்தல்  வேண்டும் .                                                        343

      அதன்பின்  அமைச்சராற்  காக்கப்படும்  படைகள்  பகையமைச்சரோடு  போர்  செய்தல்  வேண்டும் . அதன்பின்  அரசனாற்  காக்கப்படும்  படைகள்  பொருதல்  வேண்டும் . அதன்மேல்  அரசன்  தன்  உயிர்க்கு  அழிவு  நேர்வதாக விருப்பின்  பிறருதவியின்றித்  தான்  தனியே  எதிர்த்துப்  பகைவரோடு  போர்  செய்யக்  கடவன் .                                                                                                344

( 343-344 . இவ்விருசுலோகங்களாலும்  ஒர்  அரசன்  பகைவரோடு  போர்  செய்யப்  புகுங்கால்  முதலில்  படைத்  தலைவனையும்  தன்  படைகளுட்  பாதியையும்  செலுத்த  வேண்டுமென்பதும் , அப் படைத்தலைவனால்  வெற்றியின்றாயின்  அதன்பின்  தன்  அமைச்சனையும்  அவன்  கீழ்ப்பட்ட  படைகளையும்  போக்கவேண்டுமென்பதும் , அவ்வமைச்சனாலும்  பகைவரை  வெல்ல  இயன்றிலதாயின்  அதன்பின்  தன்  காவலுட்பட்ட  படைகளை  உய்த்தல்  வேண்டுமென்பதும் , அப்  படைகளுக்குங்  கேடு  நேர்ந்து  தன்னுயிர்க்கும்  அழிவு  வரக்கூடியதாக  விருப்பின்  பிறருதவியின்றித்  தான்  தனியே   பகைவரோடு  போர்  புரிய  வேண்டுமென்பதும்  போதரும் . )   

       நீண்ட  வழி நடத்தலாற்  களைத்துப் போதல் , பசி  நீர்  வேட்கை களாற்  துன்பமுறுதல்  , நோய்  வறுமை  அகாலத்திற்  பெய்யுங்  கன  மழை  என்னுமிவற்றால்  வருந்தல், கள்வராற்  பற்றப்படுதல் , சேறு  புழுதி   நீர்  என்னுமிவற்றில்   தோய்தல் , மனம்  வருந்தல் , பெருமூச்செறிதல் , உறங்குதல் , உணவுட்கொள்ளுதல்  சுருக்கமாதல் , நிலையின்றிக்  கலங்குதல் , கொடிய  நெருப்பின்  அச்சத்தால்  நடுங்குதல் , பெருமழை , பெருங்காற்றுக்களாற்  கலங்குதல்  ஆகிய  இவை  முதலியன  நேர்ந்துழி  இவ்  விதனங்களால்  தன்  படை  பற்றப்பட்டிருக்குமாயின்  அப்பொழுது  அவற்றை  அரசன்  நன்கு  பாதுகாத்தலும் , இவற்றாற்  பகைப்படை  பற்றப்பட்டிருக்குமாயின்  அப்பொழுது  அவற்றை  அழித்தலுஞ்   செய்தல்  வேண்டும் .   345-347

( நீண்ட வழி நடந்து களைத்தன்  முதலியவாக  இங்குக்கூறப்பட்ட  நிகழ்ச்சிகளைத்  தன்  படையுடைத்தாயிருக்குமாயின்  அப்பொழுது  எளிதில்  பகைவர்  வென்று  விடுவராதலின்  அரசன்  சோர்வின்றிக்  காக்க  வேண்டுமெனவும் , இன்னோரன்ன  நிகழ்ச்சிகளைப்  பகைப்  படையுடைத்தாயிருக்குமாயின்  அப்பொழுது  தான்  வெல்லுதல்  எளிதாதலின்  அவ்வமயமறிந்து அழிக்க முயல வேண்டுமெனவும்  கூறியவாறு . )

       போர்ப்படைக்குரியனவாக  இந்  நீதி  நூலில்  அறிவுடையார்  கருத்திற் கிணங்கக்  கூறப்பட்ட  இவ்விதனங்கள்  பலவற்றுள்ளும்  ஒருவர்க்கொருவர்  மனவேற்றுமை யுண்டாம்வண்ணம்  செய்தல்  சிறந்ததாகும் . இது  மிக்க பாவச்  செயலாகும்  என்பது  பிற  பண்டிதர்  கருத்து .                                                                                                               348

( மனவேற்றுமைப்படுத்தல் , ஈண்டுப்  பகைப்  படைக்கென வறிக .)

        ஓர்  அரசற்குத்  துணை  செய்தற்  பொருட்டுப்  பல்லாற்றானும்  வந்தடைந்த  நட்புப்படை  முதலியன  பகைவரான்  மனவேற்றுமை  யெய்துமாயின்  மிக்கக் கேடு  பயப்பனவாம் . அங்ஙனமாயின்  மூலப்  படையைப்  பற்றிக்  கூறவேண்டியது  யாதுளது ? [ மூலப்படை  வேறுபடுக்கப்படுமாயின்  அதனை யுடைய  அரசற்குப்  பெருங்கேடு  விளையுமென்பது  கருத்து . ]                                                                           349

       அரசன்  தன்னுடையவும் , பகைவனுடையவுமாகிய  சாம  முதலிய  உபாயங்களையும் , சந்தி  முதலிய  குணங்களையும் , மந்திர  சூழ்ச்சிகளையும்  ஆராய்ந்தறிதல்   வேண்டும் . அங்ஙனம்  அறிந்தபின்  அறநெறியான்   இயற்றும்  போர்ச்  செயல்களானாதல் , வஞ்சகமாகச்  செய்யும்  போர்ச்  செயல்களானாதல்  பகைவனை  அழிக்கக்  கடவன் .

      அரசன்  போர்  குறித்துச்  செல்லுங்கால்  போர்த்தொழில் வல்ல  தன்  படை  வீரர்க்கு  இயல்பாகக்  கொடுக்கப்படும்  வேதனத்திற்  காற்கூறு  மிகுதியாகச்  சேர்த்துக்கொடுத்து அவரை  இன்புறுத்தல்  வேண்டும் . போர்  நிழுங்கால்  தன்  உடலைக்  கவசத்தினாலும்  தோற்  பரிசையாலும்  காத்துக்கொள்ளல்  வேண்டும் .                                         351

( தோற்பரிசை – இதனைக்  கேடகமென்றுங்  கூறுப .)

       அரசன்  தன்  படைவீரர்க்குத்  தறுகண்மையை  வளர்விக்கும்  கள்  முதலியவற்றைக்  கொடுத்து  நன்றாகக்  குடிக்கச்  செய்து  மனவெழுச்சியை  யுடையராக்கி , அவருள்  மனவேற்றுமை  சிறிதும்  இல்லாத  வீரரைப்  போரில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .             352

       நாளிகக் கருவிகளாலும்  வாள்  முதலியவற்றாலும்  காலாட்படை  வீரரும் , குந்தத்தினாலும்  அம்பினாலும்  குதிரை  வீரரும் , யானை  வீரரும் , தேர்  வீரரும் பகைவரோடு  பொருது  அழித்தல்  வேண்டும் . 353

       யானை  வீரரோடு  யானை  வீரரும் , குதிரை  வீரரோடு  குதிரை  வீரரும்,  தேர் வீரரோடு  தேர் வீரரும்,  காலாட்படை  வீரரோடு  காலாட்படை  வீரரும் ,  ஒருவனோடு  ஒருவனுமாகப்  போர்  செய்தல்  வேண்டும் . வாள்  முதலிய  விடாப்  படைகளால்  விடாப்  படைகளையும் , அம்பு  முதலிய  விடுபடைகளால்  விடுபடைகளையும்  தடைப்படுத்தல்  வேண்டும் .                                                                            354

27 . போர்க்களத்திற்  கொல்லத்  தகாதவர்

      பெரியோர்  மேற்கொண்ட  யுத்த  தருமத்தை  யறிந்த  போர்  வீரன் , போக்களத்தில்  போர்க்கு  அஞ்சிப்  பிறிதோரிடத்தை  யடைந்திருப் பவனையும் , அலியையும் , கை கூப்பி  வணங்குகின்றவனையும் , தலைமயிர்  அவிழ்ந்து  சரியப்  பெற்றானையும் , நிலத்திலிருக்கின்றவனையும் , “யான்  நினக்கு  ஆளாகின்றேன் “  என்று  கூறுகின்றவனையும் , துயில்கின்றவனையும் , கவசம்  முதலியன  பூண்டு  சித்தமாக  இல்லாதவனையும் , ஆடையில்லாதவனையும் , ஆயுதமில்லாதவனையும் , போர்  செய்யாதவனையும் , போர்ச்  செயலைப்  பார்த்துக்  கொண்டிருப்பவனையும் , பிறனொருவனோடு  போர்புரிபவனையும் , நீர்  பருகுகின்றவனையும் , உணவுட்கொள்ளுகின்றவனையும் , பிற  காரியங்களில்  முயன்றிருக்கின்றவனையும் , அச்சமுடையானையும் , புறங்கொடுத்து  ஓடுகின்றவனையும்  கொல்லலாகாது .                355-357

       யாண்டு  முதிர்ந்தாரையும் , பாலரையும் , பெண்களையும் துணையில்லாத  அரசனையும்   கொல்லலாகாது . வீரர்  தம்  தகுதிக்கேற்ற  பகைவீரரோடு  பொருது , அவரை  அழித்தலால்  அறத்தினின்றும்  வழுவினவராகார் .                                                             358

       அறத்தின்  வழிச் செய்யப்படும்  போரில்  இந் நியமங்கள்  உள்ளன. வஞ்சமாகச்  செய்யப்படும்  போர்க்கு  இந்  நியமங்கள்  இல்லை . ஆற்றல்  மிக்க  பகைவனை  யழித்தற்கு  வஞ்சகமாகச்  செய்யப்படும்  போர்ச்  செயலையன்றிப்  பிறிதோருபாயம்  இன்று .                            359

       முற்காலத்தில்  இராமனாலும் , கிருட்டிணனாலும் , இந்திரன்  முதலிய  தேவராலும்  இவ்வஞ்சகப்  போரே  மேற்கொள்ளப்பட்டது . இராமனால்  வாலியும் , கிருட்டிணனால்  யவனனும் , இந்திரனால்  நமுசியும்  வஞ்சித்துக்  கொல்லப்பட்டனர் .                                               360

28 .பகைவரை  வென்றி  கொள்ளு  முறை

       மலர்ந்த  முகத்தினாலும்  இனிய  சொற்களாலும் , தன்  பிழையை  உடன்படுதலாலும் , பணி செய்தல் , ஈதல் , வணங்கல் ,புகழ்தல்  என்னுமிவற்றாலும் , பிற  உதவிகளாலும் , நல்ல  எண்ணத்தாலும் , தெய்வஞ்  சுட்டிய  சூளுறவாலும்  பகைவனைத்  தன்பால் அன்புடை  யனாகச்  செய்தல்  வேண்டும் . கத்தியின்  கூர்மை  போன்ற  மனத்தாற்  பகைவன்  புரைவழியிலுங்  குறிவைத்தல்  வேண்டும் .           361-62

       காரியத்திற்கு  அழிவு  தேடல்  அறிவிலானது  குணமாதலின்  அறிவுடையான்  அவமானத்தை  முன்னிறுத்தி  மானத்தைப் பின்  றள்ளித்  தன்  காரியத்தை  நிறைவேற்றிக்  கொள்ளல்  வேண்டும் . 363

( இன்றியமையாக்  காரியம்  நேர்ந்துழி  அவமானம்  நேர்தல்  இயல்பெனக் கொண்டும், மானத்தைப்  பொருட்படுத்தாமலும்  முயறல் வேண்டுமென்பது  கருத்து . ஈண்டுக் காரியம் என்றது போர்ச் செயலை. )

       அரசன்  நூறு  படைவீரர்  தன்னைச்  சூழ்ந்திருக்கத்  தான்  அரசு  கட்டிலிலிருந்து  படைவீரரின்  காரியங்களை  ஆராய்தல்  வேண்டும் . அதன்பின்  தன்  நலத்தையும் , நாட்டின்  நலத்தையும்  விரும்பும்  படைவீரரை,  நாடோறும்  படை  வகுப்பிற்குரிய  சங்கேதத்தை  யறிவிக்கும்  வாத்திய  ஒலியின்  நியமனப்படி  நடத்துவித்தல்  வேண்டும் . அங்ஙனம்  நடத்துங்கால்  தன்  படை  வீரருட்  பகைவரால்  வேறுபடுக்கப்பட்டா ருளராயின்  அவரைக்  கண்டுபிடித்துக்  கொன்றுவிடல்  வேண்டும் .                                                                      364-365

( படை  வீரரை  அரசன்  நாடோறும்  சங்கேத  ஒலிப்படி  நடத்துவித்தலால்  , அவருள்  தன்மாட்டு  அன்புடையார்  இன்னாரென்பதையும்  பகைவரால்  வேறுபடுக்கப்பட்டார்  இன்னாரென்பதையும்  அறிந்துகொள்வாரென்பது  கருத்து .)

      தன்  போர்  வீரர்  அரிய  புதிய  காரியங்களைச்  செய்வாராயின்  அவர்க்கு  அரசன்  தகுதிக் கேற்ற  வண்ணம்  பொருட்பரிசும் , முறையே  அதிகார  உயர்வும்  கொடுத்தல்  வேண்டும் .                                            366

       அரசன்  பகைவர்பால்  விரைந்து  சென்று  முதலில்  அவர்க்கு  நீர் , அன்னம் , புல்  என்னுமிவற்றைத்  தடைப்படுத்துதலால்  துன்புறுத்திப்  பின்னர்  அப்  பகைவர்க்குப்  பொருந்தாத  போர்க்களத்தில்  முயன்று  பொருது   அவரை  அழித்தல்  வேண்டும் .                                                    367

       வஞ்சகமாகச்   செய்யப்பட்ட  பொன்களை  மிகுதியாகக்  கொடுத்தலாற்  பகைப்படையை  வஞ்சித்து  வேறுபடுத்து , பகையச்சங்  காரணமாக  முன்  விழித்திருந்தமையால் உண்டாகிய களைப்பினையுடையதும் , இனி  உறுதியாகத்  தனக்கு  அழிவு  வாராதென்னும்  நம்பிக்கையால்  நன்கு  துயில்கின்றதும்  ஆகிய  அப்  பகைப்  படையை  தான்  சோர்விலனாய்  நின்று  அழித்தல்  வேண்டும். அப் பகைவற்குத்  துணை  செய்ய  வந்த  அவன்  நட்புப்  படை  முதலியன  காமம்  முதலிய  விதனங்களாற்  கலக்குண்டிருப்பின்  அவற்றை  ஒரு  பொழுதும்  அழித்தலாகாது .                                       368-369

       அரசன்  தனக்கு  மிக்க  அணிமையுளுள்ள   நாட்டினைப்  பகைவன்  கொள்ளும்  வண்ணம்  ஒரு  பொழுதும்  விடலாகாது .                             370

       அரசன்  சிறிது  நேரம்  போர்க்குச்  சித்தனாய்  நிற்கவும் , சிறிது  நேரம்  போரொழிந்து  திரும்பிடவும்  வேண்டும் . மீண்டும்  சேய்மைக் கணின்றும்  போந்து  எதிர்பாரா  நிலையில்  கள்வனைப்  போல் நாற் புறமுஞ்  சூழ்ந்து  பகைவனை  வளைத்துக்  கொள்ளல்  வேண்டும் .   371

       வீரனொருவன்  தன்  பகைவனை  வென்று  அவன்பாலுள்ள  பொன், வெள்ளி  மற்றை  உலோகங்களுள்  ஒன்றைக்  கவர்ந்து  கொண்டு  வருவானாயின் , அது  கண்டு  மகிழும்  அரசன்  அப் போர்  வீரனை  மகிழ்வுறுத்தற்  பொருட்டு  அவன்  செய்த  காரியத்திற்கு  தக்கவாறு  அப்பொருளில்  ஒரு  கூறு  கொடுத்தல்  வேண்டும் .                                372

       இங்ஙனம்  பகைவரை  வென்று  அவர்பால்  அரசிறையையாதல் , அவர்தம்  நாட்டின்  ஒரு  பகுதியையாதல் , அவர்தம்  நாடு  முழுதையுமாதல்  கொள்ளல்  வேண்டும் . அங்ஙனம்  கொண்ட  பின்னர்  அந்நாட்டில்  வாழும்  குடிகளை  இன்புறுத்தல்  வேண்டும் . 373

       அதன்பின்  தூரியம்  முதலிய  மங்கல  வாத்தியங்கள்  ஒலிக்கத்  தன்  நகரத்துட்   புக வேண்டும் .  தனக்குரியராகச்  செய்யப்பட்ட  அப் பகைவன்  நாட்டிலுள்ள  குடிமக்கள்  எல்லோரையும்  தன்  புதல்வரை  யொப்பப்  பாதுகாத்தல்  வேண்டும் .                                                         374

29 . அமைச்சர்  கழக  முறை

       அரசன்  மற்றை  மந்திரச்  சூழ்ச்சியில்  தேயத்திற்கும் , காலத்திற்கும் , காரியத்திற்கும் ஒத்தவாறு  முதலிலும்  இடையிலும்  முடிவிலும்  அமைச்சர்  குழுவை  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . 375                   

( மற்றை  மந்திரச்  சூழ்ச்சியாவது : அரசன்   தான்  முதலிற்  கருதிய  காரியம்  முடிந்தபின்றை  மீண்டுஞ்  செயற்பாலன  வின்னவென் றறிதற்    பொருட்டு  அமைச்சர்  முதலியோரைச்  சூழ்வித்தல் . ) 

       அமைச்சர்  முதலிய  அதிகாரங்களில்  நியமனம்  பெற்றோர்  தம்  மந்திரச்  சூழ்ச்சியின்  பயன்  இன்னவாறாயிற்றெனவும் , இன்ன  உபாயத்தால்  காரியத்தை  நிறைவேற்றலாமெனவும்  இளவரசற்கு  அறிவித்தல்  வேண்டும் .                                                                               376

       அதன்பின்  இளவரசன் , அவ்வமைச்சர்  முதலியவரோடு  அவற்றை  அரசற்கு  அறிவித்தல்  வேண்டும் . அரசன்  முதலில்  இளவரசற்கும்  அதன்பின்  அவ்விளவரசன்  அரசன்  முன்னிலையில்  அமைச்சற்கும் , அவ்வமைச்சர்   தம்கீழ் வினைசெய்யும்  அதிகாரிகளுக்கும்  கட்டளையிடக்  கடவர் . புரோகிதன்  காரியங்களின்  நன்மை  தீமைகளைப்  பற்றி  அரசற்கு  உணர்த்தல்  வேண்டும் .                377-78

30 . படை வீரருக்குப்  பண்ட  முதலியன  வமைக்கு  முறை

       அரசன்  எப்பொழுதும்  கிராமத்திற்கு  வெளியிடத்திலாவது  அணிமையிலாவது  படைவீரரை  வைத்துப்  பாதுகாத்தல்  வேண்டும் . கிராமத்திலுள்ள மக்களுக்கும்  படை வீரர்க்கும்  கடன்  கொடுத்தலும்  கடன்  வாங்கலுமாகிய  வழக்கம்  இருத்தலாகாது .                                379

       படை வீரர்க்குரிய  பண்டங்களை  அவரிருக்குமிடத்தில்  தனியே  தொகுத்து  வைத்தல்  வேண்டும் . படை  வீரரை  ஓரிடத்தில்  ஓர்  யாண்டிற்கு  மேல்  ஒரு   பொழுதும்  இருக்கச்  செய்தலாகாது .           380

31 . படை  வீரர்க்குக்  கட்டளையிடு  முறை

          ஒரு  கணப்பொழுதில்  ஆயிரக்கணக்கான  படைவீரர் போர்க்குச்  சித்தமாம் வண்ணம்   பயிற்சி  செய்வித்தல்  வேண்டும் . எட்டு  நாட்கு  ஒருமுறை  தன்  படை வீரர்க்கு  அவரவர்க்கு  உரிய  நியமங்களைப்  பற்றிக்  கட்டளையிடல்  வேண்டும் .                                                               381

       அக் கட்டளைகளாவன :  “ கொடுந்தன்மை, ஆததாயியின் றன்மை, அரசியற்  காரியங்களிற்  காலந்  தாழ்த்தல் , அரசற்கு  நேரிடுங்  கேட்டைப்  புறக்கணித்தல் , தம்  கடமையை  மேற்கொள்ளாதிருத்தல் , பகைவரோடு  அளவளாவுதல்  என்னுமிவற்றை  வீரர்  எப்பொழுதும்  ஒழித்துவிடல்  வேண்டும் . என்  ஆணையின்றி  ஒரு  பொழுதும்  கிராமத்தினுட்  புகுதலாகாது . படைத்தலைவர்  முதலிய  அதிகாரிகளின்  குற்றங்களை  எனக்குத்  தெரிவித்தல்  வேண்டும் . எப்பொழுதும்  தலவன்  காரியத்தில்  எல்லோரோடும்  நட்புரிமை யுடையராயிருத்தல்  வேண்டும் . விடுபடை  விடாப் படைகளையும் , உடுக்கும்  ஆடைகளையும் , பல்வகை  உணவுகளை  யாக்குதற் குரிய  பிரத்த பரிமாண பாத்திரத்தையும் , உண்டியையும் , நீரையும்  அழுக்கின்றித்  தூய்மை யுடையனவாக  வைத்துப்  பாதுகாத்தல்  வேண்டும் . பகைவரிடத்தினின்றும்  பொருள்  பெற்றுக்  கொண்டு மனவேற்றுமை யுற்றோரை  எனக்குக்  காட்டல்  வேண்டும் . இன்னோரன்ன  என்  ஆணைகளைக்  கடந்து  ஒழுகுவோரை  இயமன்  உலகிற்குப்  போக்குவேன்”  என்பனவாம் .                                     

(“கொடுந்தன்மை” யெனத் தொடங்கி “போக்குவேன்” என்பது இறுதியாகக் கூறப்பட்டனவெல்லாம் அரசன் கட்டளைகளாம். பிரத்த பரிமாணத்தை 2-ஆம் அத்தியாயம் 385-ஆம் சுலோகத்திற் காண்க.)

       அரசன், படைவகுப்பு  முதலிய  போர்ச்  செயல்களுக்கேற்பப்  படைவீரரை  நாடோறும்  பயிற்சி  செய்வித்தல்  வேண்டும் . அங்ஙனமே  ஆறுமாதத்திற்கொருமுறை  அம்பின்  வீழ்ச்சிகளாற்  குறியை  அடிப்பிடித்தல்  வேண்டும் .                                                        387

       அரசன்  காலை  மாலை  இருபொழுதிலும்  படைவீரரின்  சாதி , உருவம் , வயது , தேயம் , கிராமம் , இருப்பிடங்களை  ஆராய்ந்து  கணக்கிடல்  வேண்டும் .                                                                                 388

32 . படைவீரரின்  வேதன  முறை

       அரசன்  தன்  போர்  வீரர்  வேதன  நிமித்தம்  வரையறுத்து  வேலை  செய்த  காலத்தையும்  , அவர்க்குக் கொடுக்கப்பட்டதும்  இனிக்  கொடுக்க  வேண்டியதுமாகிய  வேதனங்களையும்  பரிசிலாகக்  கொடுக்கப்பட்ட  பொருளையும்  இவ்வளவினவென்று  எழுதுவித்தல்  வேண்டும் . அவரிடத்தினின்றும்  வேதன  முதலிய  பெற்றுக் கொண்டதற்கு  அவர்  கைச்சாத்திட்ட  பத்திரம்  வாங்கல்  வேண்டும் . தான்  அவர்க்கு  வேதனத்தின்  அளவு  குறிக்கப்பட்ட  பத்திரங்  கொடுத்தல்  வேண்டும் .                                                                                  389

       போர்ப்  பயிற்சி  நன்கு  நிறைவேறப்பெற்ற  படைவீரர்  முழு வேதனமும், படைவகுப்பு  முதலிய  போர்ச்செயலில்  நியமிக்கப்பட்டுப் பயிலும்  வீரர்  பாதி  வேதனமும்  பெறுதற்குரியராவர் .               390

       குணக் கேட்டினையுடைய  படைத் தலைவனைப்  பற்றி யொழுகும்  படைவீரர் பகைவரோடு  கூடித்  தனக்கு  அழிவு  செய்வராதலின் , அரசன்  அவ்வீரருள்  யாவர்  தீய  குணங்களிற்  பற்றுடையரெனவும் , யாவர்  தன்னுடைய நற்குணங்களை  வெறுக்கின்றவரெனவும் , யாவர்  தீயகுணங்களில்  விருப்பு  வெறுப்பில்லாதவரெனவும்  ஆராய்ந்தறிந்து  அன்னாரை  யழித்துவிடல்  வேண்டும் . படைவீரர்  நற்குணமுடைய ராயினும்   எப்பொழுதும்  இன்ப  நுகர்ச்சியிற்  பற்றுடையராயிருப்பின்  அவரை  அரசன்  விலக்கிவிடல்  வேண்டும் .                                       391-392

       தூய  அந்தக்  கரணங்களை  யுடையராய்  உலகத்தாரால்  நம்பப்பட்டாரை  உவளகம்  முதலியவிடங்களில்  நியமித்தல்  வேண்டும் . அங்ஙனமே  தூய  அந்தக்  கரணங்களையும்   நம்பிக்கையையு முடையாரைப்  பொருள்  முதலிய  செலவழிக்குங்  காரியங்களில்  நியமித்தல்  வேண்டும் .                                                     393

       இன்னும் , மற்றை  அரசியற்காரியம்  எல்லாவற்றினும்  உலகத்தாரால்  நம்பப்பட்டோரையே  நியமனஞ்  செய்தல்  வேண்டும் . அங்ஙனமன்றி  நம்பிக்கை யில்லாதாரை  நியமனஞ்  செய்யின்  அவர்  அரசற்குப்  பழியையே  விளைவிப்பர் .                                                         394

       அரசன்  தன்  பகைவனிடத்தினின்றும்  வேறுபடுக்கப்பட்ட  அமைச்சர்  முதலிய  குழுவினரையும் , பகையரசனது  தீய  குணத்தால்  நாடோறும்  மானமிழந்து  வருந்தும்  படைத்தலைவரையும் , இன்னும்  பகைவரைச்  சார்ந்தாருள்  தன்  காரியத்திற்குத்  துணை  நிற்போரையும்  நல்ல  வேதனம்  உதவிக்   காத்தல்  வேண்டும் .          395

       அரசன்,  பொருள்  நசையாலும் , பணி  செய்யாமையாலும் , பகைவரிடத்தினின்றும்  வேறுபடுக்கப்பட்டு  வந்தார்க்கு  அரைக்கூறு  வேதனம்  கொடுத்தல்  வேண்டும் . பகைவனால்  விலக்கப்பட்டுத்  தன்பால்  வந்த  நற்குணமுடையாரை  நல்ல  வேதனங்  கொடுத்துக்  காத்தல்   வேண்டும் .                                                                                         396

33 .  நாடிழந்த  பகைவர்க்கு  வாழ்க்கை  நிமித்தம் உதவும்  பொருள்  வகைகள்

       ஓரரசன் , போரில்  வென்று  பகைவன்  நாட்டைத்  தனக்குரிமை யாக்கிக்  கொள்ளுவானாயின்  அன்று  தொட்டு  அந்நாட்டை    இழந்தவற்கு  வாழ்க்கைக்கு  வேண்டிய  அளவு  வேதனங்  கொடுத்தல் வேண்டும்.  அவன் புதல்வர்க்கு  அதனில்  அரைக்கூறு  வேதனமும், அவன்  மனைவிக்குக்  காற்கூறு  வேதனமுங்  கொடுத்தல்       வேண்டும்.                                                                                                          397                                                                                                    

       நாடிழந்த  பகைவனுடைய  புதல்வன்  முதலியோர்  நற்குணம்  நிறைந்தவராகவிருப்பின்  அவர்க்கு  அந்நாட்டிற்  காற்கூறும் , அவர்  நற்குண மிலராயின்  நாட்டின்  முப்பத்திரண்டிலொரு  கூறும்  கொடுத்தல் வேண்டும் .                                                                                    398

இதன்  முதற்  சுலோகத்திற்  பகைவனுடைய  புதல்வன்  முதலியோர்க்குக்  கொடுக்க  வேண்டிய பொருளளவைக்  கூறி , இதன்கட் கொள்கை வேறுபாட்டால்  நாட்டைக்  கூறிட்டுக்  கொடுக்கவேண்டிய  முறையைக்  கூறினர் .)

       நாடிழந்த  பகைவன்   சேர்த்து  வைத்த  கருவூலப்பொருள்களைத்  தான்  நுகர்தற்பொருட்டுக்  கவர்ந்து  கொள்ளலாம் . அப்பொருட்கு  முன்  கூறப்பட்ட  அளவிற்  பாதியளவு  வட்டி  ஏற்படுத்தல்  வேண்டும் . அம்முதற்பொருள்  இருமடங்காகும்  வரை  வட்டி  சேர்க்கலாம் . அதன்மேற்  சிறிதும்  சேர்த்தலாகாது .                                                   399-400

( முற்கூறப்பட்ட  அளவு? வட்டி  சேர்த்தல்  எதற்காக ? )

         நாடிழந்த  பகைவர்  நற்குணம்  நற்செயல்களை யுடையராயிருப் பின்  அரசன்  தன்  பெருமையை  வெளிப்படுத்துதற்  பொருட்டு  அவர்க்கு  அவர்தம்  முன்னை  நிலைகளாகிய  அரசியற் சிறப்புக்களை  யளித்துப்  பெருமைப்படுத்தல்  வேண்டும் . அவர் ஒழுக்கக்கேடுடை  யராயிருப்பின்  அவரைத்  துன்புறுத்தல்  வேண்டும்.                       401

34 . * யாமிகர்களை  அமைக்கும்  முறை

( * யாமிகராவர்  நகரங்களிலும்  இல்லங்களிலும்  நாடோறும்  யாமம்  யாமமாக  வகுத்து  நின்று  காவல்  செய்பவர் . யாமம் – 7இ  நாழிகை .)

       யாமங்காப்போரின்  அளவை  நோக்கி  அவ்வளவிற்குத்  தக்கவாறு  அவர்  பொருட்டுப்  பகலும்  இரவுமாகிய  ஒரு  நாளை  எட்டாக, அன்றிப்  பத்தாக , பன்னிரண்டாகக்  கூறுபடுத்தல்  வேண்டும் . இங்ஙனமன்றி  வேறுவிதமாகக்  கூறுபடுத்தலாகாது .                                                           402

( அவ்வளவிற்குத்  தக்கவாறென்றது  காலக்  கூறுகளை  யாமிகர்  மிகுதியாகவிருப்பின்  மிகுதியாகவும் , சுருக்கமாகவிருப்பின்  சுருக்கமாகவும்  செய்ய  வேண்டுமென்பது  கருதி . இதனால்  ஓர்  யாமம்  7இ- நாழிகையாகவும் , 6 – நாழிகையாகவும்  , 5- நாழிகையாகவும்  கொள்ளல்  வேண்டுமென்பது  போதரும் .)

       இங்ஙனஞ்  செய்யப்பட்ட  காலக் கூறுகளை  யாமிகர்  தம்  அளவிற்கேற்பப்  பணி  செய்தற்பொருட்டு  முதலில்  மேற்கொள்ளல்  வேண்டும் . அங்ஙனங்  கொள்ளுங்கால்  அவ்  யாமிகருள்  முதல்  யாமிகன்  இறுதியான  காலக்  கூற்றையும் , மற்றை  யாமிகர்  தத்தங்  கூறுகளின்   முற்பட்ட  கூறுகளையும்  எய்தக்  கடவர் .                         403

இங்குக் கூறிய  மாறுதல்  இரண்டாம்  நாட்டொடங்கி  மேற்கொள்ள வேண்டுமென்பது  கருத்து . இஃது  யாமிகர்  உடல்  நலம்  கருதிச்  செய்யப்பட்டதாகும் .பின்வரும்  406-ஆம்  சுலோகத்தில்  யாமிகர்  நால்வருக்குக்  குறையாதிருக்க வேண்டும்  என்று  கூறுவாராதலின்  அக்  குறைந்த  அளவினராகிய  நான்கு  யாமிகர்  நாளொன்றிற்குக்  குறைந்த  அளவிற்  கூறு  செய்யப்பட்ட  எட்டு  யாமங்களில்  நான்கு  நாள்வரை  பணி  செய்யு முறையை  இச்  சுலோகத்திற்  கூறியவண்ணம்  பின்வரும்  விளக்கத்திற்  காண்க :

நாள்                                                   யாமம்  எட்டு

                   1           2           3            4           5         6          7          8

1                 அ        இ         உ         எ         அ        இ        உ        எ

2                 இ         உ        எ          அ         இ        உ       எ       அ

3                 உ         எ         அ         இ         உ        எ        அ       இ

4                  எ         அ        இ         உ         எ         அ       இ        உ

ஈண்டு  அ , இ ,உ , எ  என்பன  யாமிகர்  நால்வரைக்  குறிக்கும் . )

       மீண்டும்  இங்ஙனமே  முதலாமவனிடம்  இறுதிக்  கூற்றையும் , இறுதிக்  கூற்றிலுள்ளவன்பால்  முற்கூற்றையுமாக  மாற்றியமைத்து  இங்ஙனம்  இரண்டா  நாட்டொடங்கி  இரண்டாமவன்  முதலியோரை   மாற்றி  நியமித்தல்  வேண்டும் .                                                                    404

(  இச்  சுலோகப் பொருள்  முற்சுலோகப்  பொருளையே  மீண்டும்  விளக்கிக்  கூறுவதாகத்  தோன்றுகிறது .)

ஒரு  நாளில்  நால்வர்க்கு  மேற்பட்ட  யாமிகர்களை  என்றும்  நியமித்தல்  வேண்டும் . அன்றிக்  காரியங்களின்  பெருமை  நோக்கி  அதற்கேற்ப  ஒரே  சமயத்திற்  பல  யாமிகரை  நியமித்தலும்  பொருந்தும் .                                                                                                       405                                                                                                            

       நால்வருக்குக்  குறைந்த  யாமிகர்களை ஒரு  பொழுதும்  நியமித்தலாகாது .                                                                                              406

       எல்லோருடைய  காரியங்களும்  யாமிகர்  கண்ணெதிரில்  நடைபெறுமாதலின்  அவர்  காக்க  வேண்டுவனவற்றைப்  பற்றியும் , பிறர்க்கு  அறிவுறுத்த  வேண்டுவனவற்றைப்  பற்றியும்  அவர்க்குக்  கட்டளையிடல்  வேண்டும் . அவ்  யாமிகரும்  அங்ஙனமே  அவற்றை  மேற்கொண்டு  செய்தல்  வேண்டும் .                                                            407

       யாமிகன்  ஓரளவு  வரையறுக்கப்பட்ட  பொன்  முதலியவற்றை  மரத்தினாலாக்கப்பட்ட  தன்  இருப்பிடத்தின்  நடுவண்  வைத்துக்  காத்தல்  வேண்டும் . தனக்குரிய  யாமத்தின்  இறுதியில்  தன்  இடத்தை   யடைந்த  மற்றொரு  யாமிகன்பால்  அப்  பொன்  முதலியவற்றின்  வரலாற்றுண்மைகளைக்  கூறி  அவற்றைக்  காட்டல்  வேண்டும் .                                                                                                           408

( ஈண்டுக் கூறிய  பொன்  முதலியன  உரியவன்  இன்னானென்று  அறியப்படாமல்  எடுக்கப்பட்டதும் , கள்வராற்  கவரப்பட்டு  வந்ததுமாம் . )

       யாமிகர்  சோர்வின்றி  யிருத்தற்பொருட்டுத்   தூரத்தினின்றும்  அவர்க்கு  அடிக்கடி  யறிவுறுத்தல்  வேண்டும் .                                          409

இதற்கு  இவ்வாறன்றி  “சனங்கள்  விழிப்புடையராயிருத்தற்  பொருட்டு  யாமிகர்  தூரத்தினின்றும்  அடிக்கடி  அவர்க்கு  அறிவுறுத்தல்  வேண்டும் “  என்றும்  பொருள்  கூறலாம் . )

35. அரசன்  அறத்தின்  வழுவாது  நின்று  குடிகளை இன்புறுத்தல்

       அரசன்  எப்பொழுது   தான்  செய்ய  வேண்டிய  அறக்கடமைகள்  எல்லாவற்றையும்  செவ்விதிற்  காக்கின்றானோ  அப்பொழுதே  அவன்  எல்லா வுலகங்களிலும்  பாராட்டப்படுபவனாவான் . அங்ஙனம்  அறங்காவல்  செய்யானாயின்  பாராட்டப்படுவானல்லன் .                  410

       இடைவிடாது  காரியம்  புரிதலும் , உறுதியாக  நல்லன கோடலும் , உறுதியாகத்  தீயன  விலக்கலும் , எவன்மாட்டு  அமைந்துள்ளனவோ  அவனே  நீண்டகாலம்  அரசியலின்பத்தை  யனுபவிப்பவனாவான் . 411                              

       நிலையில்லாத  குணஞ்  செயல்  மொழிகளையும் , நட்டோனிடத்து  எப்பொழுதும்  வஞ்சித்தொழுகுதலையும்   உடைய  அரசன்  விரைந்து  தன்  பதவியினின்றும்  இழிந்து  அழிவெய்துவான் .                                  412

       தன்  விருப்பின்  வண்ணந்  திரியும்  சிங்கத்தை  யடக்குதற்குப்  புலிகளும்  யானைகளும்  வலியுடையனவல்ல . அங்ஙனமே  தன்  விருப்பின்  வழி யொழுகும்  அரசனை யடக்குதற்கு அமைச்ச ரெல்லாரும்  வலியுடையராகார் .                                                413                                                                                         

       ஆயிரக்கணக்கான  பஞ்சுப்  பொதிகள்  யானையைத்  தடைப்படுத்தும்  ஆற்றலுடையனவாகா . அங்ஙனமே  நிறைந்த  வேதனம்  பெறும்  அமைச்சர்  முதலிய  அதிகாரிகள்  பலர்  தன்  விருப்பின்வண்ணம்  ஒழுகும்  அரசனைத்  தடைப்படுத்த  வலியிலராவர் .                                                                                                    414

       சேற்றில்  வீழ்ந்து  கிடக்கும்  ஓர்  யானையை  வெளிப்படுத்துதற்கு  மற்றொரு  வலிமிக்க  யானையே  ஆற்றலுடையதாகும் . அங்ஙனமே  நீதியினின்றும்  நழுவிய  ஓர்  அரசனை  எடுத்து  நிலைப்படுத்துதற்கு  மற்றொரு  நீதிமிக்க  அரசனே  ஆற்றலுடையனாவான் .                       415

( இதனால்  தன்  விருப்பின்  வண்ணம்  ஒழுகும்  அரசனை  நன்னெறிப் படுத்துதற்கு  அமைச்சர் முதலியோர்  வலியிரலாவர்  என்று  முன்  இரண்டு  சுலோகங்களிற்  கூறிய  பொருள்  வலியுறுத்தப்பட்டதாகும் .)

       ஆற்றன்மிக்க  அரசனிடத்து  வினைசெய்வார்  சிறியராயினும்  அவர்பால்  திருவும்  ஒளியும்  தங்குவனவாம் . ஆற்றல்  குறைந்த  அரசன்பாலும்  அவன்  அமைச்சர்  முதலியோர்பாலும்  அவை  அத்துணை  தானும்  தங்குவனவல்ல  .                                                          416

( சிறந்த  அரசனுடைய  பணியாளரிடத்திருக்கும்  திருவும்  ஒளியும்  இழிந்த  அரசன்  மாட்டும்  அவன்  அமைச்சர்  முதலியோர்  மாட்டும்  இரா வென்பது  கருத்து .)

       பல  நூல்களானாக்கப்பட்ட  ஒரு  பெருங்கயிறு  சிங்கம்  முதலிய  விலங்குகளையும்  பிணித்திழுத்தற்குரிய  வலியுடையதாகும் . அங்ஙனமே  அமைச்சர்  நட்டார்  உறவினர்  முதலிய  பலரோடும்  ஒன்றுகூடி  வாழ்தல்  அரசற்கு  மிகவும்  சிறந்த  ஆற்றலாகும் .            417

       குறைந்த  இராச்சியத்தையுடைய  அரசன்  பொல்லாத  பணியாளரை யுடையனா யிருத்தலாகாது  ; படைகளை  மிகுதியாகவுங்  வைத்துக்  கொள்ளுதலாகாது ; தன்  புதல்வர்  முதலியோரின்  நலங்  குறித்துப்  பொருட்கருவூலத்தை  எப்பொழுதும்  வளர்த்தல்  வேண்டும் .                                                                                     418

( வினைசெய்வார்  கொடியராக விருப்பின்  அவரையடக்கியாள  முடியாதென்பதும் , மிகுதியான  படைகளை  வைத்துக்  கொள்ளின்  பொருட்  செலவு  அதிகமாக  நேருமென்பதும்  கருத்து .)

       உண்டி , படுக்கை  எல்லாவற்றையும்  முறையே  பசி , உறக்கங்களுக்கு  இனியவாம்  வண்ணம்  அமைத்துக்  கொள்ளல்  வேண்டும் . இன்றேல்  விரைவில்  வறுமையாளனாவான் .                     419

       அரசன்  என்றும்  இத்தகைய  முறைமையாற்  பொருளைச்  செலவிடல்  வேண்டும் . வேற்று  வழியிற்  செலவிடலாகாது . சிறந்த  வலியையும்  அறத்தினையுமுடைய  அரசன்  தன்னிற்  குறைந்த  வலியினையுடையராய்  அறத்தையும்  நீதியையும்  இழந்த  அரசரை  எப்பொழுதும்  கள்வரை  யொப்பக்  கருதித்  தண்டித்தல்  வேண்டும் .

       எல்லா வறங்களையும்  பாதுகாத்தலாற்  சிறிய  அரசனும்  உயர்ந்த  தன்மையை யடைவான் . அவ் வறங்களை யழித்தலாற்  பெரிய  அரசனும்  இழிந்த  தன்மையை யெய்துவான் .                   421

       உலகத்து  மக்கள்  அறத்திலும்  மறத்திலும்  புகுதற்குக்  காரணம்  அரசனேயாகும் . அரசனாந்தன்மையை யடைந்தவன் யாவனாயினும்  அவனே  உலகத்தில்  மிகச்  சிறந்தவனாக  எண்ணப்படுவான் .   412

36 . இந்  நீதிநூன்  மாட்சி

       உலகத்து  மக்கள்   பொருட்டு  மனு  முதலியோரால்  ஆதரித்துக்  கூறப்பட்ட  அற  நூற்  பொருள்களைப்  பற்றியே  பிருகுவின்  புதல்வராகிய  சுக்கிரரால்  இந்  நீதி  நூலில்  இரண்டாயிரத்திருநூறு  சுலோகங்கள்  கூறப்பட்டன .                                                                       423

( இதனால்  இந்  நீதி  நூலில்  2200 –க்கு  மேற்பட்ட  சுலோகங்கள்  சுக்கிரராற்  செய்யப்பட்டனவல்லவென்பது  போதரும் .)

       சுக்கிரராற்  கூறப்பட்ட  இந்  நீதிசார்  நூலை  இடைவிடாது  ஆராயும்  அரசன்  எப்பொழுதும்  அரசியற்காரியமாகிய  சுமையைத்  தாங்குதற்கு  ஆற்றலுள்ளவனாவான் .                                                        424

       மூன்றுலகங்களிலும்   சுக்கிரரால்  அருளிச் செய்யப்பட்ட  இந்  நீதி  நூற்கு  ஒப்பான  நீதிநூல்  வேறில்லை . ஆதலாற்  சுக்கிரர்  அருளிய  நீதி  நூலே  உண்மை  நீதி நூலாகும் . மற்றை  நீதி  நூல்களெல்லாம்  உலகியலை  நடத்துவோர்க்கு  அங்ஙனம்  அல்லாதனவாம் .                425

       திறமையின்மையாலும்  பொருணாசையாலும்  இங்குக்  கூறிய  நீதிகளைக்  கடைப்பிடித்தொழுகாத  அரசர்  நல்வினைப்  பேறிலராய்  நரகத்திற்காளாவர் .

சுக்கிரநீதி  நான்காம்  அத்தியாயத்தில்

“படையியல்”  என்னும்

ஏழாம்  பிரகரணம்  முற்றிற்று

நான்காம்  அத்தியாயம்  முற்றிற்று.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

******************************************************************

ஐந்தாம்  அத்தியாயம்

( கிலநீதி )

       இனி , எஞ்சிய   இவ்  வத்தியாயத்தில்  இராச்சியத்தின்  ஏழு  அங்கங்களுக்கும்  மற்றை  மக்கள்  எல்லோர்க்கும்  நலம்  பயப்பனவும், முன்னை  நீதிநூல்களுக்கு  ஒத்தனவுமாகிய   எஞ்சிய  எல்லா  நீதிகளையுங்  சுருக்கிக்  கூறுவேன் .                                                              1

( கூறுவேன்  என்பது  சுக்கிராசாரியர்  கூற்று .)

       ஓர்  அரசன்   “நூறு  யாண்டுகள்  கடப்பினும்  பகைவனை  என்  வய மாக்குவேன் “ என்று  மனத்தால்  நினைந்து  பகைவனது  புரை  வழியை  ஆராய்தல்  வேண்டும் .                                                                       2

( பகைவன்  தன்னினும்  வலியனாயினும்  அச்சமுற்று  முயற்சியைக்  கைநழுவவிடாமல்  அவனை  வெல்லுதற்குரிய  காலத்தையும்  அவன்  தவறுதலையும்  எதிர்பார்த்திருத்தல்  வேண்டுமென்பது  கருத்து . )

       நல்ல  மந்திரச்  சூழ்ச்சியையும்  படைப்  பலத்தையுமுடைய  அரசன்  தன்  பகைவனை  அவன்  நாட்டிலுள்ளாரிடத்தும்  வினை செய்வாரிடத்தும்  நம்பிக்கையில்லாதவனாகவும்  , குறைந்த  படைப்  பலத்தையும்   குறுகிய  சூழ்ச்சித்  துணையையுமுடையனாகவும்  இருக்கும்  வண்ணம்  தன்  திறமையால்  தானே  செய்தல்  வேண்டும் . 3

       சோர்வின்மையையுடைய  அரசன்  பணி   செய்தலையும்  வாணிகத்  தொழிலையும்  தலைக்கீடாகக்  கொண்டு  , பகைவனது  நாட்டுட்  புகுந்து , அந் நாட்டின்  இயல்பை  யாராய்ந்து  கண்டு , பூனையைப்போலவும் , வேடனைப்போலவும் , கொக்கைப்போலவும் , தன்  இயல்பை  மறைத்து  நின்று , அப்  பகைவற்கு  அபயமளித்துக்  காம  முதலிய  விதங்களிற்  பற்று  வைத்தொழுகும்  மனத்தினையுடைய  அப்பகைவனை யழித்துவிடல்  வேண்டும் .        4-5

       பகைப்படையை யழித்தற்குரிய  ஆற்றல்  வாய்ந்த  தன்  படையையே  போர்ச்  செயலில்  நியமித்தல்  வேண்டும் . பகைவனது  நாட்டிலிருக்கும்  தன்  படையையும்  , மறைவில்  தன்பால்  வெறுப்புக்  கொண்டிருக்கும்  படையையும்  போர்த்தொழிலில்  நியமனஞ்  செய்தலாகாது .                                                                                                        6

( பகைவன்  நாட்டிலிருக்கும்  தன்  படையாவது  :  அப்பகைவன்  பகைமையின்றி  நண்பனாயிருக்குங்காலத்தில்  அவனுக்குத்  துணை  செய்தற்பொருட்டு  உதவப்பட்டதாகும் . அவனுக்கு  அப்பொழுது  அப்படை  நட்புப்படையாகும் . அது  தன்  கடமையை  நிறைவேற்றித்  திரும்புதற்குமுன்  அவன்  பகைவனாய்விடின்  அவன்  நாட்டிலிருக்கும்  அப்  படையை  அதற்குரிய  அரசன்  நம்பிப்  போர்க்கண்  ஏவுதல்  கூடாதென்பது   கருத்து .  ஏவக்கூடாமைக்குக்  காரணம்  அப்படை  பண்டு  மேற்கொண்ட  அன்பு  பிறழ்ந்திருக்குங்கொலோ வென்னும்  ஐயமாம் . )

       அரசன்  போர்  விருப்பமிக்கவனாய்  ஒன்றையும்  ஆராயாது  தன்  படையை  விரைந்து  போர்க்கணுய்த்து  அழித்துவிடலாகாது . வினை  செய்வான்  தனக்கு  அரசன்  கொடை  முதலிய  சிறப்புக்களைச்  செய்திலனெனினும்  அவ்வரசனை  விட்டு ஒழிதலாகாது . இன்னும்  அவன்  அமயத்தில்  உயிர்  வாழ்க்கை  கருதியாதல் , பொருணாசை யானாதல் , பகைவன்  பக்கல்  எய்தி  அவற்கு  வயமாதல்  கூடாது .     7

       பயிர்கள்  மேகம்  பொழியும்  நீரால்  எய்தும்  வளர்ச்சியை  ஆறு  முதலியவற்றின்  நீரால்  எங்ஙனம்  எய்தும் ?  குடிகள்  அரசன்  உதவும்  பொருளால்  எய்தும்  வளர்ச்சியை  மற்றைப்பொருளுடையார்  பொருளால்  எங்ஙனம்  எய்துவர் ? [ ஈரிடத்தும்  முறையே  எய்தாவென்பதுங்  எய்தாரென்பதும்  கருத்து .]                                           8

       அரசன்  தான்  வலிமிக்க  பெரிய  வீரனாயினும்  மென்மைத்தன் மையை  வெளிக்காட்டிப்  பகைவன்  நாட்டிற்  புகுந்து  முதலில்  அப்பகைவற்குக்  காரியத்துணைவனாகவிருத்தல்  வேண்டும் .             9

        அதன்  பின்  தான்  அங்கு  வேரூன்றப்பெற்று , வன்மையாற்  பகைவனை  வேரோடு  களைந்து , அவன்  இராச்சிய  முழுதையுங்  கவர்ந்து  கொள்ளல்  வேண்டும் . அப் பகைவன்பால்  வெறுப்பு  மிக்க  அவன்  உறவினரையும்  படைத்தலைவரையும்  அவ்விராச்சியத்தின்  சில  கூறுகளைக்  கொடுத்துத்  தன்வயப்படுத்திக்  கொள்ளல்  வேண்டும் .                                                                                                             10

       வேரற்ற  மரத்தின்  கிளைகள் உலர்ந்து  போதல்  போல , அரசனை யில்லாத  படைத்தலைவன்  முதலியோர்  அவ் வமயத்திலும்  நாளடைவிலுமாக  அழிந்துவிடுவர் .                                                                11

       அரசியலாகிய  மரத்திற்கு  அரசன்  வேராகவும் , அமைச்சர்  பருத்த  அடிக் கிளைகளாகவும்  படைத்தலைவர்  கிளைகளாகவும் , படைவீரர்  தளிர்களாகவும் , குடிகள்  மலர்களாகவும்  கூறப்படுவர் . நிலத்தினின்றுங்  கிடைக்குங்  கூறுகள்  பழங்களாகவும் , நிலம் வித்தாகவுங்  கூறப்படுவனவாம் .                                                                   12

       பகையரசன்  தன்பால்  நம்பிக்கையுடையனாயிருப்பினும்  தான்  அவன்பால்  நம்பிக்கை  வைத்தொழுகலாகாது . அப் பகையரசனது  இல்லத்திலாதல்  அவன்  தனித்துறையும்  இடத்திலாதல்  தான்  சிறிய  துணையுடையனாய்ச்  செல்லலாகாது .                                                         13

       அரசன்  உருவத்தாலும்  வேடத்தாலும்  தன்னைப் போன்ற சிலரை  எப்பொழுதும்  தன்  பக்கலில்  வைத்துக்  கொள்ளல்  வேண்டும் . தன்  அரசிலக்கணத்திற்குரிய  அடையாளப் பொருள்களால்  தன்னைக்  காத்துக்கொள்ளல்  வேண்டும் . வேண்டுங்காலத்தில்  மற்றைச்  சாமானிய  மனிதனைப்  போலவும்  இருத்தல்  வேண்டும் .                     14

( தன்னைப்போன்ற  சிலரைத்  தன்  பக்கத்தில்  வைத்துக்கொள்ளுதல் பகைவர்  விரைந்து  தன்னை  யறிந்து கொள்ளாமைப்  பொருட்டாம் .)

       பொருட்  பெண்டிராலும், ஆடுவோராலும் , பாடுவோராலும் , பல்வகைக்  கள்ளுக்களாலும்  பகைவன்  அறிவைக்  கெடுத்து  மயக்க முறுத்தல்  வேண்டும் .                                                                                        15

       அரசன்  அழகிய  ஆடை  யணிகலன்களை  யணிந்து  கொண்டும் , மனைவி  மக்கள்  முதலிய  குடும்பத்தோடும் , தனக்குரிய  சிறந்த அடையாளங்களையுடையனாய் , அச்சமுற்று  ஒரு  பொழுதும்  போர்க் களத்தை யடைதலாகாது .                                                                                 16

       அரசன்  தான்  ஆற்றலுடையனாயிருக்குங்காறும்    தன்  பெண்டிர் , புதல்வர் , வினை  செய்வார் , பகைவர்  என்னும்  இவரிடத்தில்  ஒருகணமேனும்  சோர்வுடையனாயிருத்தலாகாது . இன்னும்  அவன்  தன்  புதல்வன்  இயற்கையில்  நற்குணமுடையனாயிருப்பினும்  அவனுக்கு  ஒருபொழுதும்  தன்  தலைமை  முழுமையும்  அளித்தலாகாது . அங்ஙனம்  தன்  தலைமை  முழுதும்  அவனுக்கு   அளிப்பின் , அது  தனக்கும்  குடிகளுக்கும்  பெருங்கேட்டையும் , அப் புதல்வனுக்கு  மிக்கச்  செருக்கையும்  உண்டாக்கும் . இதனாலன்றே  திருமால்   முதலிய  தேவரும்  தம்  மக்கட்குத்  தம்  அதிகாரத் தன்மையைக்  கொடுத்திலர் .                                                                   17-18

       அரசன்  இறந்துவிடின்  இளவரசன்  முதலியோர்  அவ்வரசுரிமைத்  தலைமையிலுள்ள  பற்றினாலும்  மனத்தினது  மிக்க  அலைவாலும்  அரசனில்லாத  அந்  நாட்டை  ஒருகணமேனும்   ஆளுதற்குத்  திறமையில்லாதவராவர் .  ஆதலின் , அரசன்  தன்  வாழ்நாளிற் சில  நாட்கள்  எஞ்சியிருக்குங் காலத்தே  நற்குணம் , நற்செய்கை  வாய்ந்த  தன்  புதல்வன்பால்  தன்  அரசுரிமைத்  தலைமையையளித்தல்  வேண்டும் .                                                                                                           19

( இதனால்  ஓர்  அரசன்  தான்  இறத்தற்குச்  சின்னாண்  முன்னரே  தன்  மகனுக்கு  இராச்சிய பட்டாபிடேகஞ்  செய்தல்  வேண்டுமென்பது   கூறப்பட்டது. )

       அப் புதல்வன்  சிறந்த  அவ்  வரசுரிமையை  யெய்திய பின்  நல்ல  நீதிமுறையாற்  குடிகளைக்  காத்தலோடு  முன்னை  அமைச்சர்  முதலியோரைத்  தந்தையை யொப்ப  மதித்துப்  பெருமைப்  படுத்தல்  வேண்டும் .                                                                                                             20

       அவ்  வமாத்தியர்  முதலியோரும்  அவ்வரசிளங்குமரன்  கட்டளையிடுங்  காரியம்  தக்கதாயின்  அதனை  முன்னையினும்  மிகுதியாக  ஏற்றுச்  செய்தல்  வேண்டும் . அக்  காரியம்  தக்கதன்றாயின்  “இதனைப் பின்னர்ச்  செய்வோம்”  என்று  கூறிக்  காலம்  தாழ்த்தலால்  ஒழித்துவிடல்  வேண்டும் .                                       21

       அவ்  வமைச்சர் முதலியோர்  பொருணசையால்  அப் புதிய  அரசனோடு  கூடி   நீதியல்லாத  வழியில்  ஒழுகலாகாது . அவர்  அங்ஙனம்  நீதியல்லாத  வழியில்  ஒழுகுவாராயின்  அவ் வரசனோடு  ஒரு  தலையாக  அழிவெய்துவர் .                                                                     22

       தன் குல பரம்பரையில்  அன்பு  வைத்தொழுகும்  வினைசெய்வாரை  வெறுத்துப்  புதியரை யடையும்  அரசன்  பகைவர் வயமாதலோடு  தன்னுயிரையும்  பொருளையும்  இழந்து விடுவான் .  23

       புதியராய்   வந்தவர்  நற்குணம்  நற்செய்கை  நிரம்பப்  பெற்றவராகவிருப்பின் , அவரைப்  பழையோரை யொப்பப்  பரிபாலித்தல்  வேண்டும் . அவர்  ஒழுக்கங்களைச்  சோதித்  தாராய்ந்தபின்  அவரைப்  பண்டை  வினைசெய்வாரோடு  காரியத்தில்  நியமனஞ்  செய்தல்  வேண்டும் .                                           24

       வஞ்சகர்  தம்  காரியம்  முடியுங்காறும்  மிக்க  மென்மை  வாய்ந்த  பாராட்டுரைகளாலும் , வணக்கத்தாலும் , பணி  செய்தலாலும் , கொடையாலும் , இன்சொற்களாலும் , அரசனைப் போற்றுவர் . உண்மை  கூறும்  பெரியோர்  தமக்குக்  காரியம்  இன்றெனினும் , அரசன்  முன்னிலையிலும்  அவனைக் காணாத  பொழுதிலும்  உண்மையாகவே  அங்ஙனம்  போற்றுவர் . இப் பெரியார்க்கும்   அவ்  வஞ்சகர்க்குமுள்ள  வேறுபாடு  ஆகாயத்திற்கும்  நிலத்திற்கும் முள்ள  வேறுபாடு  போலாம் .                                                                                     25-26

       பலராலும்  அறியப்பட்ட  தூர்த்தரும் ,   பிறர்  மனை  நயப்போரும்  கள்வருமாகிய  இவர்களே   வஞ்சத்திற்குப்  பிறப்பிடமாவார் . இவருள்   அவ்  வஞ்சகச்  செயலிற்  சிறந்தார்  தூர்த்தரே, பிறர்  மனை  நயப்போருங்  கள்வரும்  அத்துணைச்  சிறந்தாரல்லர் .                           27

(தூர்த்தர் – புறத்தே  பிறர்  ஐயுறாத  வேடத்தையும்  அகத்தே வஞ்சக     ஒழுக்கத்தையு முடையார் .)                             

       இவ்  வுலகத்திற்  பிறர்  மனை  நயப்போரும்  கள்வரும்  பிறர்க்குரிய  பொருள்களைக்  கவர்தலால்  பழிக்கப்படுவர் . ஆனால்  அவர்  அப்  பொருள்களைப்  பிறர்  அறியாவண்ணங்  கவர்வர் . தூர்த்தரோ , அப்  பொருள்களை  அப்பொருட்குரியார்  பார்த்துக்கொண்டிருக்கும்  பொழுதே  கவர்ந்துவிடுவர் .                                                                              28

       அத்  தூர்த்தர்  எப்பொழுதும்  நல்லனவற்றைத்  தீயன  போலவும் , தீயனவற்றை  நல்லனபோலவும்  அறிவிலார்க்குக்  காட்டி  அவரிடத்தினின்றும்  தம்  காரியத்தை  நிறைவேற்றிக்கொள்வர் .        29

       இன்னும்  அத்  தூர்த்தர்  தம்பாற்  பிறரை  மிகவும்  நம்பிக்கையடையச்  செய்து  பின்னர்  அந்  நம்பினாரை  வஞ்சித்தழித்துவிடுவர் .                                                                                       30

       வேடன்  மானை  அகப்படுத்துக்  கொலை  செய்தற்பொருட்டு  முதலில்  இனிய  கீதத்தைப்  பாடி  இன்புறுத்தல்  போல , வஞ்சகர்  எவனுக்குக்  கேடு  செய்ய  விரும்புகின்றனரோ  அவனுக்கு  முதலில்  நலத்தையே  செய்வர் .                                                                                        31

       மனிதர்  விரைந்து  பெரும்பொருள்  திரட்டுவாராயின் , அது  வஞ்சத்தாலன்றி  ஆகாததொன்றாம் . பிறர்  பொருளைக்  கவர்ந்தாலன்றி   எவனும்  விரைந்து  பெரும்  பொருளாளனாக  முடியாது . வஞ்சத்தாலன்றி  ஒருவன்  விரும்பியதை  விரும்பியவாறு  அடைய இயலாது .                                                                                                32

25-ஆவது  சுலோக  முதல்  இதுவரையுள்ள   எட்டுச்  சுலோகங்களால்  வஞ்சகரின்  குணஞ்  செயல்களும் , அவர்  பொருளீட்டு  முறையும்  விளக்கிக்  கூறப்பட்டன . அரசனும்  பிறரும்  இவ்  வஞ்சவியல்புடையார்  பொய்யொழுக்கத்தில்  நம்பிக்கை  வைத்தலாகாதென்பது  கருத்து .)

       அரசர்  பிறர்பொருளைக்  கவர்தல்  சிறந்த  தம்  கடமையாகுமென்று  கருதி , அதனால் , தம்முள்  ஒருவர்க்கொருவர்  பகைமை  மேற்கொண்டு  பெரும்போர்  விளைத்து  இறுதியில்  தம்  உயிரையும்  போக்குவர் .                                                                                    33

       பிறர் பொருளைக்  கவர்தலால்  அரசனுக்குப்  பாவமின்றெனின் கள்வனுக்கும்  அதனாற்  பாவமில்லை  யென்று  முடியும் . ஆதலின்  பற்றுக்கோட்டின்  வேறுபாட்டால்  எல்லாப்  பாவங்களும் தம்  இயல்பு  மாறி  அறவுருவமாக  நிலைபெறும் .                                                            34

(  பற்றுக்கோடு  ஈண்டு  அரசனாகும் . ஓர்  அரசன்  மற்றோரசனுடைய  நாடு, பொருள்  முதலியவற்றைக்  கவர்தல்  அரசியற்  கடமையாதலின்  அவனுக்கு  அது  பாவமாகா தென்பது  கருத்து . )

       எச்  செயல்  பலராலும்  பாராட்டப்படுகின்றதோ, அஃது  அறமாகும் . எச்  செயல்  பலராலும்  பழிக்கப்படுகின்றதோ  அது  மறமாகும் . ஆராய்ந்து  துணிதற்கரிய  அறத்தின்  இயல்பை  எவரும்  அறிதற்கு  ஆற்றலுடையரல்லர் .                                                                                           35

       இவ் வுலகத்தில்  அளவின்மிக்க  கொடையும் , தவமும் , உண்மை கூறுதலும்   ஆகிய  இவை  வறுமையைச்  செய்வனவாம் . எச்  சொல்லில்  அறம்  பொருட்  பயன்களில்லையோ  அச்  சொல்  மிகவும்  வீணான தொன்றாம் .                                                                                          36

( அளவின் மிக்க  கொடையால்  வறுமை  நேர்தல்  வெளிப்படை . தவத்தால்  வறுமையுண்டாதல்  வருவாயின்றி  உள்ள  பொருள்  வேள்வி  முதலிய  நற்காரியங்களினிமித்தம்  செலவழிக்கப்படுத்தலாம் . பொருள் வரவிற்கு  வஞ்சகம்  சாதனமாதலானும், உண்மை  கூறுதலில்  அவ் வஞ்சகம்  இன்மையாலும்  உண்மை  கூறுதலால்  வறுமை  யுண்டாம் .)

       ஒரு  மனிதன்  உரிய  காலத்தையும்  உரிய  இடத்தையும்  அறிந்து , சிறிதும்  ஐயமிலனாய் , அறத்தையாதல் , பொருளையாதல்  ஈட்டவல்லனாயின்  , அவன்  எல்லாரானும்  போற்றத் தக்கவனாவான் . எப்பொழுதும்  எக்காரியத்திலும்  ஐயத்தை  மேற்கொள்பவன்  எவராலும்  விரும்பப்படான் .                                                                              37

       மனிதன்  பொருட்கு  அடிமையாவான் . பொருள்  எவர்க்கும்  அடிமையாகாது . ஆதலின்  மனிதன்  எப்பொழுதும்  சோர்வின்றிப்  பொருளீட்ட  முயலவேண்டும் . அப்  பொருளால்  அறமும் , இன்பமும் , வீடும்  மனிதர்க்கு  உண்டாவனவாம் .                                                            38

( மனிதன்  பொருட்டு  அடிமையாதல்  அஃதில்வழி  ஒரு  காரியமும்  நடைபெறாமை பற்றியாம் . )

       கையில்  அம்பு  வாள்  முதலியன  யில்லாத  வீரமும் , மனைவியில்லாத  இல்லறமும் , ஒற்றுமையில்லாத  போரும் , அறிவாரையில்லாத  திறமையும் , நல்ல  துணைவரை யில்லாத  இடையூறும் , எப்பொழுதும்  துன்பம்  பயப்பனவாம் . கேடு  நேர்ந்துழி  நல்ல  நட்பை  யொத்த  துணை  வேறு  யாதுமின்று .                                  39

       பொருட்கூறு  செய்து  கொள்ளாத  தன்  குடும்பத்து  ஞாதிகளை  அன்புரிமையாலும் , பொருட்கூறு  செய்து  கொண்ட  ஞாதிகளைத்  திங்கள்  வேதன  முதலியன  கொடுத்தலாலும் , நட்டாரைத்  தான்  துய்க்கும்  இன்பப்  பொருள்களோடு  ஒத்த  இன்பப் பொருள்களாலும்  உண்மை  பேசுதலாலும்  மகிழ்வித்தல்  வேண்டும் .                              40                

( பொருட்கூறு  செய்துகொள்ளாத  ஞாதிகள் – அவிபத்த தனத்தினர் .)

       எவன்  அரசனையும்  தன்  சம்பந்திகளையும் , பெண்களையும் , புதல்வரையும் , நட்டாரையும் , பணியாளரையும்  மகிழ்வித்துத்  தன்  பொருளை அநுபவிக்கின்றானோ அவனே  இன்ப முடையனாவான்.  41

       அரசன்  செருக்கு , கடும்பற்றுள்ளம் , மானம் , நடுக்கம் , அச்சம் , என்னுமிவற்றை  யொழித்து , தன்  காரியத்தை  நிறை வேற்றிக் கொள்ளுதற் பொருட்டுச்  சிறந்த  வேதனத்தாலும் , அன்பினாலும் , பெருமைப்படுத்தலாலும் , அதிகார  உயர்வளித்தலாலும்  வினை  செய்வாரை  மகிழ்வித்தல்  வேண்டும் . இன்றேல்  அவர்  அவன்  காரியத்திற்கு  அநுகூலமுடையராகார் .                                                    42

       அந்தணராலும்  நெருப்பினாலும்  நீரினாலும்  உண்ணப்படும்  பொருளுடையான்  என்றும்  இன்பமுடையனாய்  மகிழ்ச்சியடைவான் . அங்ஙனம்  உண்ணப்படாத  அப்பொருளுடையான்  என்றும்  துன்பம்  எய்துவான் .                                                                                                           43

( அந்தணராலுண்ணப்படுதல் – அவர்க்கு  வேண்டுவனவற்றைத்  தானமாக  வழங்குதல்  .  நெருப்பினாலுண்ணப்படுதல் – வேள்வி  முதலியவற்றிற்  செலவிடல் .  நீரினாலுண்ணப்படுதல் – தென்புலத்தார்க்கு  நீர்க்கடனாற்றுதலும்  வழிச்  செல்வார்  பொருட்டுத்  தண்ணீர்ப்பந்தல்  அமைத்துச்  செலவிடலுமாம் . )

       செல்வக் களிப்பாற்  பிறரைக்  குறைக்க விரும்புதல்  செருக்கெனவும் , யானே  எல்லாரினும்  உயர்ந்தவனென்றெண்ணுதல், மானமெனவும் , பொருளை  விடத்தகுமிடத்து  விடாமை  கடும் பற்றுள்ளமெனவும் , தனக்குக்  கேடு  வருங்கொலோவென்று  ஐயமுறுதல்  அச்சமெனவும் , மனம்  ஒன்றினும்  நிலைபெறாது  சலித்தல்  நடுக்க மெனவுங்  கூறப்படும் .                                                      44

       ஒருவன்  தாழ்ந்தவனாயினும்  அவனுக்குச்   செய்யும்  மானக்கேடு  பெரும்பகைமையை  விளைவிப்பதாகும் . கொடையும் , நிலையின்  இழியாமையாகிய  மானமும் , வாய்மையும் ,  வீரமும் , மென்மையும்  ஒருவனுக்குச்  சிறந்த  நட்பை  விளைவிக்குங்  குணங்களாம் .               45

       அரசன்  தனக்குக்  கேடு  நேர்ந்துழி , பண்டிதரும் , குரவரும் , உடன் பிறந்தாரும் , சுற்றத்தாரும் , வினை  செய்வாரும் , தாயத்தாரும் , அமைச்சர்  முதலியோருமாகிய  இவ்வெல்லாரையும்  தன்  அத்தாணி  மண்டபத்திற்கு  வருமாறு  அழைத்து , அவரைத்  தனித்தனி  தகுதிக்கேற்றவாறு  பெருமைப்படுத்தி , வணக்கமுடையனாய் , “ஐயன்மீர் ! நீவிர்  எல்லீரும்  எனக்கு  நண்பராவீர் ; இப்பொழுது  நுங்கள்பால்  வேதனம்  பெற்றுப்  பணிசெய்யுந்  தன்மையில்லை ; நமக்கு  நேர்ந்துள்ள  கேட்டைக்  கடக்கும் வண்ணம்  பொருந்துமாற்றால்  நீங்கள்  உறுதிமொழி  கூறல்  வேண்டும் ; நும்மைப்போல்  எனக்குத்  துணை  செய்வார்  பிறர்  யாருமிலர்; ஆதலின்  நீங்கள்  பெறும்  வேதனத்தில்  மூன்றிலொரு  கூறாதல்  பாதியாதல்  உணவின்  நிமித்தம்  இப்பொழுது  பெற்றுக்கொள்ளல்  வேண்டும் . வேதனத்தின்  எஞ்சிய  கூறுகளை  இக் கேட்டினின்றும்   பிழைத்தபின்  நன்றியறிவுடையனாய்த்  தருவேன் “  என்றிங்ஙனம்  வேண்டிக்கொள்ளக்  கடவன் ..                                                                   46-48

       வினை  செய்வாருள்  எவன்  பதினாறு  யாண்டுவரை  வாழ்க்கைக்கு  வேண்டிய   பொருளை யுடையனாயிருக்கின்றானோ  அவன்  எட்டு  யாண்டுவரை  வேதனம்  பெறாமல்  தன்  தலைவன்  காரியத்தைச்  செய்தல்  வேண்டும் . அத்துணைப்பொருளில்லாதவன்  தன்  பொருணிலைக்கு  ஏற்றவாறு  ஆண்டு  வரையறை  செய்து  அங்ஙனம்  பணி  செய்தல்  வேண்டும் .                                                          49

       அறவே  பொருளில்லாதார்  அரசனிடத்தினின்றும்  உண்டியும்  உடுக்கையும்  பெற்றுக்கொள்ளல்  வேண்டும்  . வேறொன்றையும்  பெறலாகாது . ஒருவன்  தன்  அரசன்  இன்புற்றிருக்குங்கால்  அவனிடத்தினின்றும்  இன்பங்களைச்  செவ்விதின்  நுகர்ந்தும் , அவன்  துன்புற்றிருக்குங்கால்  தானும்  துன்பமுற்றிலனேல்  அவனைச்  செய்ந் நன்றி  கொன்ற  தீவினையாளனென்று  அவ்வரசனும்  மற்றைச்  செய்ந்நன்றி  யறியுந்  திறத்தினராகிய  வினை  செய்வோரும்  மிகவும்  பழித்துரைப்பர் .                                                                                                     50

(  49-50.  இவ்விரு  சுலோகங்களிலும்  கூறப்பட்டவண்ணம்  வினை  செய்வார்  நடந்து  கொள்ளுதல்  அரசனுக்குக்  கேடு நேர்ந்த காலத்தென்க .)

       தன்  தலைவனது  சோற்றை யொருமுறை யுண்டு  அவ்வளவில்  நன்றியுடையனாய்  அதன்நிமித்தம்  தன்  உயிரை  விடுபவனும் , தன்  தலைவனுக்குக்  கேடு  நேர்ந்துழி  அவனைவிட்டு  விலகாதவனுமாகிய  வினை செய்வாரே  சிறந்த  புகழுடையராவர் . அத்தகைய  வினை செய்வார்க்குக்  கேடு  நேர்ந்துழி , அவர் பொருட்டுத்  தன்  உயிரையும்  ஒழிக்கும்  தலைவனே  சிறந்தவனாவான் .                                                   51

இதனால்  அரசனும்  வினை செய்வாரும்  தம்முள்  அன்புடையராய்   ஒழுகல்  வேண்டுமென்பது  கூறப்பட்டது . )

       இந் நிலவுலகத்தில்  இராமபிரானை  யொத்த  நீதி  வாய்ந்த  அரசன்  பிறனொருவனும்  இலன் . இராமபிரானது  சிறந்த  நீதியாலன்றே  குரங்குகளும்  வினை செய்வாராயின .                                                         52

       கள்வருடைய  மனவொற்றுமையே  ஒரு  நாட்டை  யழித்தற்கு  வலியுடையதாகுமாயின் , அரசனும்  அமைச்சர்  முதலிய  வினை செய்வாரும்  ஒன்றுபட்டிருப்பின்  பகைவரை  யழித்தல்  எங்ஙனம்  எளிதாகாது? [ எளிதாகுமென்பது  கருத்து . ]                                                53

       கிருட்டிணனைப் போன்ற  வஞ்சக  நீதி  வாய்ந்த  அரசன்  வேறொருவனும்  இலன் . அக்  கிருட்டிணன்  தன்  தங்கையாகிய  சுபத்திரையை  வஞ்சகத்தாலன்றே  அருச்சுனன்பாற்  சேர்ப்பித்தான் .

       தமக்கு  நலஞ்  செய்வன  யாவை?  அவையெல்லாம்  நீதியை  யறிந்தார்க்கு  யுத்தி யாகும் .                                                                             55

( யுத்தி  – பொருந்துமாறு .)

       நொதுமலனொருவன்  முதலில்  தனக்கு  நலஞ்  செய்யும்  நட்பினையும் , அதன்பின்  உற்றவிடத்து  அறவுரை  கூறித்  தன்னை  நல்வழிப்படுத்தும்  நட்பினையும்  ஆக்கிக்கொண்டு , அந்  நட்டாரால்  தனக்கு  நலஞ்  செய்யுங்  காரியங்களை  நிறைவேற்றிக்  கொள்ளக்  கடவன் .                                                                                                                    56

( நொதுமலன் – பிறர்பால்  விருப்பு  வெறுப்பில்லாதவன் . அவன்  நட்பினை யாக்கிக் கொள்ளத் தொடங்குங்கால்  முதலில்  தன்  செயற்குத்  துணைபுரியும்  நட்பினையும் , பின்னர்த்  தனக்கு  நல்லன   கூறும்  நட்பினையும்  ஆக்கிக்கொள்ள  வேண்டுமென்பது  கருத்து . )

       ஒருவன்  தனக்கும்  தன்  நண்பனுக்கும்  அன்புண்டாம் வண்ணம்  அந் நண்பனுடைய  குணங்களைப்  பாராட்டுதலும் , அவன்  விரும்பும்  உண்டி , உடுக்கை  பொருள்களால்  அவனை  இன்புறுத்தலும்  வேண்டும் . அங்ஙனஞ்  செய்தல் தனக்குக்  காரிய  சித்தியை  அளிப்பதாகும் .                                                                                                       57

      ஒரு  பெண் மகட்கு  உரியனல்லாத  மற்றோர்  ஆடவனை  இடை  நின்று  களவிற்  புணர்ப்பிக்கும்  குட்டினிகளும் , ஓர்  ஆடவற்கு  உரியனல்லாத  ஒரு  பெண்  மகளை  அங்ஙனம்  புணர்ப்பிக்கும்  விடர்களும்  மேற்கொள்ளும்  உபாயங்கள்  தெய்வஞ்  சுட்டிய  சூளுறவும் , பொய்ம்மையான  அளவளாவுதலும் , அச்சமின்மை  காட்டி  மகிழ்வுறுதலுமாம் .                                                                                               58

 ( உரியரல்லாத  ஆண்  பெண்களை  களவிற்  புணர்ப்பிக்கும்  ஆண்மகனை  மாயி  எனவும் , பெண்மகளைக்  குட்டினி  எனவும்  வழங்குப . )

       ஒருவன்  தன்னை  வஞ்சகச்  செயலினின்றும்   வெளிப்படுத்தாமல்  மறைத்துக்கொள்வதில்  யுத்தியை யாராய்ந்து  மேற்கொண்டிலனேல் , அவன்  அறிவின்மையால்  விலங்கினும்  தாழ்ந்தவனாவான் . களவிற்  புணரும்  உரியரல்லாத்  தலைவரை  மறைப்பதில்  பெண்பாலாரும் வஞ்சத்தை  மேற்கொள்வர் .                                                                             59

( பெண்களுக்கும்  அத்  திறமையுளதெனின்  ஆண்மக்கள்பால்   அஃதில்லாமை அவர்  அறிவின்மையைப்  புலப்படுத்துவதாகும் . )

       யுத்தி பெரும்பான்மை  வஞ்சத்தாலாவதெனவும் , சிறுபான்மை  உண்மையானாவதெனவும்  இரண்டு  வகைப்படும் . எவன்  வஞ்ச  ஒழுக்கமுடையானோ  அவன்பால்  வஞ்சத்தையே  மேற்கொள்ளல்  வேண்டும் . இன்றேற் பெரியார்க்கும்   ஒழுக்கக்  கேடுண்டாம் .       60இ

       இவ்வுலகத்தில்  அறிவுடையார்  பலருளர் . ஒருவன் மாத்திரம்  அறிவுடையானல்லன் . ஆதலின்  அறிவுத்  திறன்  வாய்ந்த அம் மக்கள்  உண்மையுக்தியை  முதலில்  மேற்கொண்டு , அது பயன்  செய்யாவிடின்  அதுகண்டு  பின்னர்க்  காலம் , இடம் , பாத்திரங்களுக்குத்  தக்கவாறு  பற்பலவிதமான  நீதிகளையும்  யுத்திகளையும்  படைத்துக்  கொள்வர் .                                                   61-62

       இவ்வுலகத்தில் வஞ்சகத்  திறமை  வாய்ந்த மனிதர்  மந்திரம் , மருந்து , வெவ்வேறு  வேடம் , காலம் , சொல் , பொருள் , என்னுமிவற்றைத் தக்கவாறு  பற்றி  நின்று  வஞ்சகச்  செயல்களைத்  தோற்றுவிப்பர் .                                                                                                  63

       இவ்வுலகத்தில்  விலைப்  பொருட்குக்  கொடுக்கப்படுவனவும் , விலைப்பொருள்  கொடுத்து  வாங்கப்படுவனவும் , பரிசிலாக  உதவப்படுவனவுமாகிய  ஆடை , பாண்டம் , முதலியவற்றை  அரசியல்  அதிகாரிகளின்  முன்னிலையில்  வைத்து , அவற்றில்  தத்தம்  பெயர்களால்  நெடுநாள்  இருக்கும்  வண்ணம்  அடையாளமிடல்  வேண்டும் .                                                                                                            64

       கள்வரையும்  வஞ்சகரையும்  விலக்குதற்பொருட்டு , அவ் ஆடை  முதலிய  விலைப்பொருள்கள்  அரசியல்  அதிகாரிகளால்  அறியப்பட்டனவாக  இருத்தல்  வேண்டும் . [ இன்றேற்  களவிற்  கவர்ந்து  வஞ்சித்துக்  கொணர்ந்தும்  அப்  பொருள்களை  விற்றல்  கொள்ளுதல்  செய்வரென்பது  கருத்து .]                                                  64இ

        அரசன்  தன்பால்  வைக்கப்பட்ட  அறிவிலாருடையவும் , குருடருடையவும் , பாலருடையவுமாகிய  பொருள்களுக்குரிய  வட்டியை   எப்பொழுதும்  அவரவர்க்குக்  கொடுத்தல்  வேண்டும் .   65

       பெண்கள்  கணவற்குரியவள் , பொதுநிலையள் , பிறர்க்குரியவள்  என  மூவகைப்படுதல்  போல  வேதனம்  பெற்று  வினை  செய்வாரும்  தலையாயர் , இடையாயர் , கடையாயாரென  மூன்று  வகைப்படும் . 66

கணவற்குரியவள்  அன்பு  நிரம்பியவளாதலின்  தலையாவாள் . பொதுநிலையள்  விருப்பு  வெறுப்பில்லாதவளாதலின்  இடையாவாள் . பிறர்க்குரியவள்  தலைவன் மாட்டு அன்பிலளாதலின்  கடையாவாள் . உவமேயப்  பொருள்கள்  பின்வருஞ்  சுலோகத்தில்  விளக்கப்படுவன . )

       அவ்வினை  செய்வாருள்  எவன்  தன்  தலைவனுக்கு  அன்பு  காரணமாகப்  பணி  செய்கின்றானோ  அவன்  தலையாயோனாகவும் , எவன்  மிகுதியான  வேதனத்தைப்  பெற்றுத்  தன்  தலைவற்குப்  பணி  செய்கின்றானோ  அவன்  இடையாயோனாகவும் , எவன்  வெளிப்படையில்  தன்  தலைவன்பால்  வேதனம்  பெற்று  மறைவிற்   பிறனொருவனுக்குப்  பணி  செய்கின்றானோ  அவன்  கடையாயோனாகவும்  வைத்து  எண்ணப்படுவான் .                                67

       ஒருவன்  தனக்குத்  தீங்கு  செய்த  பிறனுக்கு  நன்மை   செய்வானாயின்  அவனே  தலையாயவனாவான் . அங்ஙனமின்றித்  தனக்கு  நன்மை  செய்தார்க்குத்  தீங்கு  செய்பவன்  கடையாயவனாவான் . [ அருத்தாபத்தியால் , நன்மை  செய்தார்க்கு  நன்மையும்  தீங்கு  செய்தார்க்குத்  தீமையும்  செய்பவன்  இடையாயவனாவானென்பது  போதரும் . ]                                           67இ

( இங்குக்  கூறிய  தலையாயவன்  இயல்பை “இன்னா  செய்தாரை யொறுத்தல்  அவர்நாண  நன்னயஞ்  செய்துவிடல் “, “இன்னா  செய்தார்க்கும்  இனியவே  செய்யாக்கால் , என்ன பயத்ததோ  சால்பு “ என்னும் திருக்குறள்களிற்  காண்க . )

       இடையாயவன்  தலைவனோடொத்த  சிறப்பை  யெய்தவிரும்புவான் . கடையாயவன்  தன்  காரியம்  முடித்துக்கொள்ளுதலிலேயே  கருத்துடையனாக விருப்பான் .           68

       உபதேசமின்றி  அளவைகளால்  எல்லாவற்றையும்  அறிந்து  கொள்ளவியலாது . அறிவுடையார்  இளமைப் பருவத்தையும்  யெளவன பருவத்தையும்  தொடங்கிய  காரியத்தை  முடித்ததற்குரியனவாக  அறிதல்  வேண்டும் . வயோதிக  பருவத்தை  அதற்குரியதாக  ஒருபொழுதும்  எண்ணலாகாது . ஆதலின் , பருவம்  நோக்கி  எளிதின்  முடித்தற்குரிய  காரியத்தை  ஆராய்ந்து  அதனைத்  தொடங்கல்  வேண்டும் .                                                                                                        69-70

       ஒரே  சமயத்திற்  பல  காரியங்களைத்  தொடங்குதல்  நலமன்று . முதலிற்  றொடங்கியதொரு  காரியம்  முடிக்கப்படும்  முன்  இடையே  மற்றொரு  காரியம்  தொடங்கப்படின்  அவ்விரண்டும்  நிறைவேறா தொழியும் . ஆதலின் , காரியம்  வல்லான்  தொடங்கிய  காரியத்தைக்  கடைபோகாமல்  இடையே  மற்றொரு  காரியத்தை  மேற்கொள்ளலாகாது . எப்பொழுதும்  எளிதில்  நிறைவேற்றுதற்குரிய  காரியத்தை  யாராய்ந்து  அதனையே  செய்தல்  வேண்டும் .        71-72

       எக் கலகம்  தன்னைச்  செய்தார்க்குப்  பொருட்பேறுண்டாக்குமோ  அக்  கலகம்  சிறந்ததாகும் . அங்ஙனம்  பொருட்பேறின்றிச்  செய்யப்படுங்  கலகம்  செய்தவனுடைய  வாணாளையும் , பொருளையும் , நட்பினையும் , புகழையும் , அறத்தையும்  என்றும்  அழிப்பதாகும் .                                                                                                     73

       அழுக்காறும் , கடும்பற்றுள்ளமும் , செருக்கும் , உவகையும் , வெகுளியும் , அச்சமும் , ஆராய்ச்சியில்லாத  துணிவுமாகிய  இவ்வேழும்  ஒருவன்  ஒரு  காரியத்தைத்  தொடங்குங்கால் , அக்  காரியத்திற்கு  இடையூறு  விளைவிக்கும்  ஏதுக்களென்று  அறிவுடையார்  கூறுவர் .                                                                                    74

       ஒருவன்  ஒரு  காரியத்தைத்  தொடங்குங்கால்  அது  பிழைபடாதிருக்கும்  வண்ணஞ்  செய்தல்  வேண்டும் . அக் காரியம்  இடையூறில்லாமற்  காலங்  கடந்து  செய்யப்படினும்  அறிவுடையோராற்  குற்றமற்றதென்று  ஏற்றுக்கொள்ளத்  தக்கதாகவிருத்தல்   வேண்டும் .                                                                       75

(  இடையூறில் வழிச்  செய்யப்படுங்  காரியம்  விரைந்து  முடிக்கற்பாலதாம் . ஆயினும் , அது  பிற  காரணங்களாற்  காலந்  தாழ்த்து  முடிக்கப்படினும் ,  அறிவுடையார்  ஏற்றுக்  கொள்ளத்  தக்கவாறு  குற்றமற்றதாக  முடியவேண்டுமென்பது  கருத்து .)

       பத்துக்  கிராமங்களுக்குத்  தலைவனும்  நூறு  படை  வீரர்க்குத்  தலைவனும்  ஏவலாளரையுடையராய்க்  குதிரையிலேறிச்  சஞ்சரிக்கலாம் . ஒரு  கிராமத்திற்குத்  தலைவனாயினாரும்  குதிரையேறிச்  செல்லலாம் .                                                                           76

       ஆயிரம்  படை  வீரர்க்குத்  தலைவனும்  நூறு  கிராமங்களுக்குத்  தலைவனும்  அம்பு  வாள்  முதலியன  தாங்கிய  பத்துப்  படைவீரர்  சூழ  ஒற்றைக்  குதிரை  பூட்டிய  தேர்  ஊர்திகளிலேறிச்  செல்லலாம் . தனிக்  குதிரையிலும்  ஏறிச்  செல்லலாம் .                                                                 77

       ஆயிரம்  கிராமங்களுக்குத்  தலைவனும்  பதினாயிரம்  படை வீரர்களுக்குத்  தலைவனும்  எப்பொழுதும்  இருபது  போர்  வீரர்  சூழ்ந்துவர  நரவாகனமாகிய  சிவிகையிலும் , ஒற்றைக்  குதிரை  பூட்டிய  தேர்களிலும் , இரட்டைக்  குதிரை  பூட்டிய  தேர்களிலும் ,  யானையிலும்  ஏறிச்  செல்லலாம் .                                                                  78

       பதினாயிரங்  கிராமங்களுக்குத்  தலைவனும்  ஐம்பதினாயிரம்  படைவீரர்க்குத்  தலைவனும்  பல  வீரர்கள்  சூழ்ந்துவர  நான்கு  குதிரைகள்  பூட்டிய  தேர்களிலும் , முற்கூறிய  எல்லா  ஊர்திகளிலும்  ஏறிச்  செல்லலாம் .                                                                                              79

       அரசன்  தன்  வினை  செய்வார்க்குத்  தலைமைத்  தன்மையின்  மிகுதி  நோக்கி  அதற்கேற்றவாறு  மிக்க  சிறப்புக்களை  ஏற்படுத்தல்  வேண்டும் . அங்ஙனமே  மிக்க  பொருளுடையார்க்கும்  கல்வியறிவு  முதலிய  குணமுடையார்க்கும்  அவரவர்  தகுதியின்  மிகுதிக் கேற்பச்  சிறப்பு  அளித்தல்   வேண்டும் .                                                                         80

       தனக்கு நலத்தை  நாடும்  அரசன்  தன்  நாட்டிலுள்ள  உயர்ந்தார்க்கு  நிலையின்  இழிதலும், இழிந்தார்க்கு  நிலையின்  உயர்தலும்  நேராமலிருக்கும் வண்ணம்  எப்பொழுதும்  செய்தல்  வேண்டும் .                                                                                                             81

       அரசன்  தன்  நாட்டில்  வாழும்  கடையாயர்  இடையாயர்  தலையாயராகிய  குடிகளுக்கும் , தன்  சுற்றத்தார்க்கும் , கிராமங்களிலும்   பட்டினங்களிலும்  இல்லம்  அமைத்துக்  கொள்ளுதற்  பொருட்டு  எப்பொழுதும்  நிலங்  கொடுத்துதவல்  வேண்டும் .              82

       அங்ஙனம்  இல்லத்திற்காகக்  கொடுக்கப்படும்  நிலத்தின்  தலையாய  அளவு  அறுபத்துநான்கு  முழ  நீளமும்  முப்பத்திரண்டு  முழ  அகலமுமாம் . இடையாய  அளவு  நாற்பத்தெட்டு  முழ  நீளமும்  இருபத்து நான்கு  முழ  அகலமுமாம் . கடையாய  அளவு  முப்பத்திரண்டு  முழ  நீளமும்  பதினாறு  முழ  அகலமுமாம் . இவ்வாறு  அளவிட்டுக்  கொடுக்கப்படும்  நிலங்கள்  அவ்வக்  குடும்பத்தினரின்  பெருக்க  சுருக்கங்களுக் கேத்தவாறும்  தகுதிக் கேற்றவாறும்  குறைவு  மிகுதியின்றி யிருத்தல்  வேண்டும் .                                                                 83

       அரசனால்   அரசியல்  அதிகாரங்களில்  நியமனம்  பெற்றவர்  கிராமத்திற்கு  வெளிப்புறத்தே  வசித்தல்  வேண்டும் . போர்  வீரருள்  ஒருவனும்  அரசியற்காரிய மில்லாதிருக்குங்கால்   கிராமத்தினுட்  புகுதலாகாது .                                                                                                         84

       போர்  வீரன்   ஓரிடத்திலும்  ஒரு  பொழுதும்  கிராமத்தில்  வாழுங்  குடிகளைத்  துன்புறுத்தலாகாது   . கிராமத்தில்  வாழுங்  குடிகளும்  அப் போர்  வீரரோடு  ஒரு  பொழுதும்  அளவளாவுதலாகாது .                          85

       அரசன்  போர்  வீரர்க்கு  அஞ்சாமையை  வளர்த்தற்குரிய  அறவுரைகளையும் , சிறந்த  இசைக்  கருவிகளையும்  ஆடல்  பாடல்களையும்  எப்பொழுதுங்  கேட்கும்படி  செய்வித்தல்  வேண்டும் .

       படை  வீரரைப்  போர்  செய்தற்கண்  அன்றிப்  பிறகாரியங்களில்  ஏவுதலாகாது .                                                                                                        87

       உண்மை  நெறியிலொழுகும்  பொருளாளர்  வாணிகத்  தொழில்  முதலியவற்றால்  மெலிவடைந்திருப்பாராயின்  அவரையும் , அங்ஙனமே  மெலிவடைந்த  பயிர்த்  தொழிலாளரையும்  அரசன்  உதவி  புரிந்து  காத்தல்  வேண்டும் .                                                               88

       படை  வீரருட்  பொருளுடையார்க்கு  அவர்  தகுதிக்கேற்றவாறு  வேதனம்  உதவல்  வேண்டும் . அவர்  அயலிடஞ்  செல்லுங்கால்  அதன்  பொருட்டுச்  செலவழிக்கப்படும்  பொருளில்  அதன்  முப்பதிலொரு   கூறு  மிகுதியாகச்  சேர்த்து  அவர்க்குக்  கொடுத்தல்  வேண்டும் .        89

       அரசன்  தனிகராகிய  அப்  படைவீரரின்  பொருளைத்  தன்  கருவூலத்தை  யொப்ப   முயன்று  காத்தல்  வேண்டும் . வஞ்சித்தொழுகும்  தனிகரிடத்தினின்றும்  அவர்  பொருள்  முழுதையும்  கவர்ந்து  கொள்ளலாம் .                                                           90

       கடன்  கொடுத்தவன்  தன்  முதலுக்கு  நான்கு  மடங்கு  மிகுதியான  வட்டியைக்  கடன்  வாங்கினவனிடத்தினின்றும்  பெற்றிருப்பானாயின் பின்  அக்  கடன்  வாங்கினவனால்  கடன்  கொடுத்தவற்கு  முதற்பொருள்  கொடுக்கத் தக்கதன்று .                                                       91

சுக்கிர நீதியில் “கிலநீதி” என்னும்

ஐந்தாம்  அத்தியாயம்  முற்றிற்று

சுக்கிரநீதி  முற்றிற்று

*************************************************

                      உரைநடைக்  கோவை

             உரைநடைக்  கோவை  

                    (  இலக்கியக் கட்டுரைகள் )

ஆசிரியர்

மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

பண்டிதமணி

மு . கதிரேசச்  செட்டியார்

                                                      பொருளடக்கம்

  1. தமிழும்  தமிழ்ப்  பணியும்
  2. தமிழ்ப்  புலமை
  3. நம்  பண்டைய  நீதி   நூலாசிரியர்
  4. மாணிக்கவாசகர்
  5. சங்க  காலத்து  அங்கதம்
  6. காதற்கடிதங்கள்
  7. குறுந்தொகை
  8. மணிமேகலை

              தமிழும்   தமிழ்ப்   பணியும்

( கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்துப்  பதினாங்காம்  ஆண்டு  விழாத் தலைமைப் பேருரை )

இமிழ்கடல்  வரைப்பில்   இனிமை  சான்ற

தமிழ்மொழி  பேணுந்  தகைசால்  ஐயன்மீர் ! அன்னைமீர் !  

           செந்தமிழ்த்  தெய்வச்  சீர்நலம்  போற்றுதலே  தன்  முழு  நோக்கமாக  மேற்கொண்டு  திருவருட்பாங்கால்  தோன்றிய  இக்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின்  பதினான் காம்  ஆண்டுத்  திருவிழாவில்  யான்  தலைமை பெறத்  தந்தது  , சிறியேன்  மாட்டு  இச்சங்கத்தார்  வைத்துள்ள  பேரன்பின்  பெருமையையே  விளக்குவதாகும் . இதுகாறும்  நிகழ்ந்த  ஆண்டு  விழாக்களில்  தலைமை  பூண்டோர்  புலவர் , புரவலர் , அமைச்சர் . பொருளாளர்  என்னும்   தகுதியினராவர்.  இன்ன  தகுதியுள்  ஒன்றேனும்  வாய்க்கப்பெறாத  யான் , இவர்தம்  நிரலில்வைத்  தெண்ணப்படும்  பேறு  பெற்றமைக்குக்  காரணம் , அந்  நிரலில்  அன்பரும் அமைகவென  இச்சங்கத்தார்  கருதியதென்றே  எண்ணுகின்றேன் .

           இச்சங்கத்தார்  என்னை  உறுப்பினனாகக்  கொண்டு   சில  ஆண்டுகளாக  நடைபெற்ற  ஆண்டு  விழாக்களில்  அழைத்து  இம்  மன்றத்தில்  விரிவுரை  நடத்துவித்துச்  சிறப்பித்து  வந்தனர் .  அம்  மட்டில்  அமையாது  இற்றை  ஞான்று  தலைமையளித்துஞ்  சிறப்பிக்க  மேற்கொண்ட  அன்புடைமையை  என்னென்பேன் !  இந்நன்றி  எஞ்ஞான்றும்  மறப்பேனல்லேன் .

                                      1 .  தாய்மொழிக்   கல்வி

அன்பர்களே !

             ஒருமைக்கட்  பயிற்சியால்  எழுமைக்கண்ணும்   தொடரும்  இயல்பினதாகிய  கல்வியே  மக்களை  மக்கட்டன்மை  யுடையா ராக்கும்  என்பது  பெரியார்  துணிபு . எந் நிலத்தில் எக்  குடிக்குட்  பிறந்தாராயினும்  கல்வியுடையாரையே  உலகம்  போற்றும் என்பது  கண்கூடாக  அறியப்பட்ட தொன்று .  இத்தகைய  விழுப்பஞ்  சான்ற  கல்வியை  , எந் நிலத்தில் எம் மொழி  வழங்கப்படுகின்றதோ  அந் நிலத்தில் வாழும்  மக்கள்  அம்மொழி  மூலமாகவே  முதற்கட்  பயிலவேண்டும் .  அதுவே  அந் நிலத்து மக்கட்குத்  தாய்மொழியாகும் .  ஒரு குழந்தை  பிறந்து மொழி  பயிலுங்கால்  அதன்  தாயால் முதற்கண்  பயிற்றப்படும் மொழி யாது? அதுவே  தாய்மொழி  என்று கோடல்  பொருந்தும் .  அன்னை வாயிலாகக்  கேட்டு  மழலை  மொழிந்து தேறிய  பின்னரே  அக் குழந்தை அப்பனாலும்  ஆசிரியனாலும்  வரிவடிவிற்  பயிற்றப்பட்டு  அறிவு  விரிவெய்தப்  பெறும் .  ஒருவன்  இறைவனை  அடைந்து  பேரின்ப  நுகர்ச்சியில்  தலைப்பட  விழையுங்கால் ,  அங்கும்  அருளுருவாகிய  தாயே  முதற்கண்   இவனைப்  பண்படுத்தி அப்பனாகிய இறைவனை அறிவித்து அவன்பால்  உய்ப்பவனாவள் . இதனை , “மெய்யருளாம்  தாயுடன்  சென்று பின் தந்தையைக்  கூடிப் பின் தாயை  மறந்து , ஏயுமதே  நிட்டை”  என்னும்  முற்றத் துறந்த முனிவர் பெருமானாகிய   பட்டினத்து  அடிகள் அருண்மொழியாலும்  உணர்க .  தாய்  வழியாகத்  தந்தைக்கு  ஆளாதலை  யுணர்ந்தே , முதற்கண்  தாயைக் குறிப்பிட்டு  மணிவாசகப் பெருந்தகையாரும் “அம்மையே  அப்பா  ஒப்பிலா  மணியே”  என்று  திருவாய் மலர்ந்தருளினார் .  இத் தமிழ் நிலத்து மக்களாகிய நம்மனோர்க்கு நம் அன்னையரால் முதற்கட் பாலொடு  குழைத்து அன்போடளாவி  ஊட்டிய  அருமை மொழி அந்தமிழிலின்பம்  ஆர்தரப் புரியும் செந்தமிழ் மொழியே யாமன்றோ ! அன்னையர் அருளொடு சுரக்கும் இனிய பாலை உண்ணுங்  குழவிப்பருவத்தில் ,  அவராற்  பயிற்றப்பட்டுப் பயிலும் சிறப்புப்  பற்றியன்றே  இம்மொழி,  “பால்வாய்ப்  பசுந்தமிழ்”  என்று  பாராட்டப்படுகின்றது .  மழவிளம்  பருவத்திற்  பயிற்றப்படுதல் குறித்தே இதனைப் “பசுந்தமிழ்”  என்றார் போலும் . இயற்கையும் அன்னதே .இதனால் , நம் உடல்  பாலுண்டு  வளரும்  பருவந்தொட்டே , உடற்கண்  உறையும் உயிர் , தன் குணமாகிய  அறிவைச்  செந் தமிழ்த் தெய்வ மொழிப் பயிற்சி வாயிலாக  வளர்த்துத்  திகழும் உண்மை நமக்குப்  புலனாகின்றது . அறியாப்பருவத்தினும்  நம் உயிர்க்கு உறுதுணையாக  நின்று அறிவுச் செல்வத்தை வளர்வித்து உதவி வரும் தமிழ் மொழியின் பழமையையும், சிறப்பையும் என்னென்று  கூறுவேன் ! அவை வரையறுத்துக்  கூறுதற்கு  இயலாதன வெனினும் , அறிந்தாங்கு  ஒரு சிறிது கூறத்தொடங்குகிறேன் .

                                   2 . தமிழ்  மொழியின்  தொன்மை

          பல்லாயிரம்  ஆண்டுகட்கு  முன்னர்த்  தோன்றி  இற்றை ஞான்று  நம் கைவரப்பெற்ற  தமிழ்  நூல்கள் எல்லாவற்றிலும்   காலத்தானும் , சிறப்பானும்  முற்பட்டு  விளங்குவது  ஒல்காப்  பெரும்புகழ்த் தொல்காப்பியம்  என்னுந்  தலையாய  இயல்  நூலே  யாகும் .  இது  கூடலின்கட்  பண்டு  நிலவிய  முச்சங்கத்துள் , தலைச்சங்க காலத்தில் தோன்றியதென்பது யாவரும்  உணர்வர் .  இந் நூலின்கண்  தமிழ் வரம்பு கண்ட தண்டமிழ் முனிவராகிய தொல்காப்பியர் , வடநூலார்  நான்கென  வகுத்த உறுதிப் பயன்களை  அகம் , புறமென  இரு பிரிவினுள்  அடக்கி , மக்கள் இம்மைப்பயனாக  நுகர்தற்பாலதாய  இன்ப நிலையை அகத்தினும் , மறுமைக்குரியதாக  எய்தற்  பாலதாகிய  அறநிலையினையும் , அதற்குக்  கருவியாகிய  பொருள்  நிலையையும்  இம்  மூன்றன்  நிலையாமையையும்  உணர்ந்து ஒருவித அடைதற்  பாலதாகிய  அந்தமிலின்பத்தமிழில்  வீடாகிய  உறுதி பயக்கும்  வாயிலையும் புறத்தினும் ஒழுங்குற   வகுத்து விளக்கியுள்ளார் .  

        இங்ஙனம் மக்கள் ஒழுகலாற்றைத்  திறம்பட  நுனித்துணர்ந்து  பலபட  விரித்துரைத்தலோடு  மற்றை  உயிர்த்  தொகுதிகளின்  இயற்கைகளையும் , நிலையியற்  பொருளிய  மரம்  முதலியவற்றின்  இயல்புகளையும் , நிலப்பகுதிகளின்  பான்மைகளையும் , மற்றை  இயற்கைப்  பொருள்களின்  தன்மைகளையும் ஆராய்ந்துணர் வார்க்குப்  புலப்படும்படி  கூறியிருக்கும்  திட்பநுட்பம் , வேறு எம் மொழி இயல் நூலார்க்கும் இயலாத தொன்றாம் . ஒரு மொழிக்கு இலக்கணம் காணப்புகும் ஆசிரியர்  அம்மொழிக்கண் உள்ள “எழுத்து” “சொல்” என்னும்  இவற்றையே  ஆராய்ந்து தூய்மைப்படுத்துவர் . இவ் வியல்பு பிறமொழி இயனூலார்  யாவர்க்கும் ஒத்ததாகும் . நம் செந்தமிழ்த் தெய்வ மொழியின் இயன் முதனூல்  ஆசிரியரே  மொழியாளர் எல்லோர்க்கும்  பொதுவாகிய எழுத்து , சொற்களின்  ஆராய்ச்சிகளோடு  அமையாது .  சொல்  கருவியாக  உணரப்படும்  பொருளாராய்ச்சியிற்  பெரிதும்  தலைப்பட்ட  அப்பொருளைக்  கூரறிவாளர்  எத்துணைப்  பாகுபாடு  செய்து  உணர  விரும்புவாரோ அத்துணைப்  பகுப்புக்களும்  அமைய  மக்களின்  ஒழுகலாற்றையும்  பிற  இயங்கியல்  நிலையிற்  பொருள்களின்  தன்மைகளையும்  தெள்ளத் தெளிய   விளக்கியுள்ளார் .  

            இப்  பொருளதிகாரத்திற்  கண்ட  கந்தழி முதலிய  சொற்களை  ஆராய்வோமாயின்   அந்நூற்  காலத்துத்  தமிழரின்  கடவுட் கொள்கை  நன்கு  புலப்படும் .  ஒரு  பற்றுக்   கோடின்றி  அருவாகித்  தானே  நிற்குந்  தத்துவங்கடந்த  பொருளாக்  கடவுளைத்  தமிழர்  ஆராய்ந்து  தெளிந்துள்ளாரென்பது  அதனாற்  புலனாம் .  தொல்காப்பியர்  தமிழ் நிலத்தார்  ஒழுக்கங்கண்டு   நூல்  செய்யுங்  காலத்துத்  தமிழர்  நிலை இத்துணை மேம்பாடுற்றிருக்குமாயின்   அதற்கு முன் எத்தனையோ  ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்னரே  தமிழர்  தத்துவ  ஆராய்ச்சியில்   தலைப்பட்டிருத்தல்  வேண்டும் . நாள்  வினைகளைச்  செவ்விதின்  இறுக்கப்  பணிக்கும்  அற  நூல்களின்  வழியொழுகிப்  பண்படுத் தப்பட்ட  உள்ள நிலையுடையாரன்றே  முடிவில் தத்துவ ஆராய்ச்சியில் தலைப்படுவர் ?  அங்ஙனம் தலைப்படுவாரும்  கடவுட்குப்  பல்வகைப்  பொருந்தா  இலக்கணங்களைக் கண்டு ஒருவரோடொருவர் தம்முண்  முரண்படுவர் .  அம்முரண்பாடறுத்துக்  கடவுட்  பொருளின்  தூய  இயல் நிலையை  உள்ளவாறுணர்வார்  மிகவும் அரியர் .  இவ் வரிய உணர்ச்சியைத்  தமிழர்  எத்தணையோ  ஆயிரம்  ஆண்டுகட்கு  முன்னரே  எளிதிற்  கைவரப்  பெற்று  ஒழுகினரென்பது  அத்  தொல்காப்பிய  முதுநூலிற்  கண்ட  உண்மைத்  தெளிவாகும் .  இதனால் , தமிழின்  பழமை  காலத்தான்  அறுதியிட்டு ரைத்தல்  அரிதென்பது போதரும் . புதிய முறையில் ஆராய்ச்சி  செய்வாருள்  நுண்மாணுழைபுல  மிக்கார் சிலருக்கும் இஃது  உடன்பாடேயாகும் .  

             தொன்மை  வரலாற்று  முறையில்  நோக்கினும்  இதன்  பழமை  புலனாகும் .  ஒரு  பற்றுக் கோடின்றி   அருவாகித்   தானே  நிற்கும்  தத்துவங்  கடந்த  பழம்   பொருளாகிய  இறைவன் , மக்கள்  ஆண்  பெண்களாக இயைந்து  இன்ப  நுகர்ச்சியில்  தலைப்படும்  பொருட்டு  அருள்வழி  உருக் கொண்டு  பொற்கோட்டிமயத்தின்  கண்  மலைமகளை  வேட்டஞான்று , அமரர்  முதலியோர்  அனைவரும்  ஆங்கு   ஒருங்கு  தொக்காராகத்  தென்பால்  உயர்ந்து வடபால்  தாழ்ந்தமையின்  ,  அது  கண்டு  அப்பெரியோன் , நிலப்பரப்பின்  சமநிலை  குறித்துக்  குறுமுனியை  நொக்கிப்  பொதியிற்கு  ஏகென, அம்முனிவர் பெருமான்  முழுமுதற்பிரானை  வணங்கி , “ஐயனே ! தெற்கணுள்ளார்  தமிழ்  மொழி  வல்லாரென்றே . அவருவப்ப  யான்  அம்  மொழிப்  பயிற்சியிற்  பீடு  பெறுதல் எங்ஙனம் ?”  என  வேண்ட , இறைவன்  அதுகாலைக்  குடமுனிக்குத்  தமிழறிவுறுத்தா ரென்பது  கந்தபுராணக்கதை .  இப்புராண  வரலாற்றை  நம்புவார்க்குத்  தமிழின் தொன்மையைப்  பற்றி விரித்துரைத்தல்  மிகையே .

                            3.       தமிழ்  மொழியின்  சிறப்பு

          இனி , இங்ஙனம்  தொன்மையான  மாண்பு  மிக்க  இம் மொழியின்  சிறப்பைப்  பற்றிச்  சிறிது  ஆராய்வோம் . ஒரு  மொழிக்குச்  சிறப்பு   அதன்கண்  அமைந்துள்ள   சிறந்த  இலக்கியம் , இலக்கணம் , சமயம்  முதலியவை  பற்றிய  நூற்பரப்புக்களானும் , பிரிதொன்றன்  சார்பு  வேண்டாது  புலவர்  கருதும்  எத்தகைய  அரும்பொருள்களையும்  வழங்குதற்குரிய  சொற்களுடைமையானும்,  பிறவற்றானுமாம் .  இன்னோரன்ன  சிறப்புக்களில்  நம்  தமிழ்மொழி  யாதுங்  குறைவுடையதன்று .  இது  மற்றொரு மொழியினின்றும்  தோன்றியதென்றாதல்  , பிரிதொன்றன்  சார்பின்றி  நடைபெறா தென்றாதல்  கூறுவார்  உண்மை யாராய்ச்சி யிலாராவர் . ஆனால் , தொல்காப்பியர்  காலந் தொட்டே  வட சொற்களுட்  சில  தமிழில்  வழங்கலாயின .  அது பற்றித்  தொல்காப்பியரும்  ,

“வடசொற்  கிளவி  வடவெழுத்  தொரீஇ

யெழுத்தொடு  புணர்ந்த  சொல்லாகும்மே” 

எனவும் .

“சிதைந்தன  வரினும்  இயைந்தன  வரையார் “ 

எனவும், வட சொல் தமிழில்  வழங்கு முறையை  வரையறுத்துக்  கூறினர் .  வடமொழி  எந்நிலத்து மாந்தரும்   மேற்கோடற்குரிய   பொது  மொழியாக  உள்ளமையானும் , பொதுப்பொருளில்  வேண்டுமளவு கோடல்  முறையாதலானும் , கூடற்  சங்கத்துக்  குலவிய  பண்டைப்  புலவர்  பெருமக்களுட்  பலர் , வடமொழியினும்  வல்லராக  இருந்து  தமிழை  வளர்த்தமையானும்  அச்சங்க காலங்களில்  மிகச் சுருக்கமாகத்  தமிழில்  வடசொற்  கலப்பு  உண்டாயிற்று .  அங்ஙனம்  வடசொற்கள்  தமிழிற்  கலக்குங்காலும்  பொதுவெழுத்தான்   இயன்ற  சொற்களே  தூய தமிழுருவெய்திப்  பெரும்பாலும்  விரவலாயின .

           நாளடைவிற்  புலவர்  தனித்  தமிழ்ச்  சொற்களைத்  தெரிந்து வழங்கும்  மதுகை  யின்மையானும் ,ஓரோவழித்  தெரியினும்  அவற்றினும்  வடசொற் றொடை  செவிக்கு  இன்பம்  பயப்பனவாம்  என   மாறுகொள  உணர்ந்தமையானும் , தனித் தமிழ்ச் சுவை கண்டு  இன்புறும்  தலைவர்  அருகினமையானும் , வட மொழியாளர்  உவப்பத்  தமிழிற்  பாட்டு  உரை முதலியன இயற்ற வேண்டுமென்னும்  விழைவு   மேற்கொண்டமையானும் ,  பொதுவெழுத்தானும் , சிறப்பெழுத்தானும்  ஆய  வட சொற்கள்   பலவற்றைத்  தமிழில்  வரம்பின்றி   வழங்கி  வருபவராயினர் .  சுவையுடைமை  அவ்வம்  மொழிகளில்  தனித்த  நிலையிற்  காணப்படுதல்  போற்  கலப்பிற்  காணப்படுதல்  அரிது .  ஒரு மொழியிற்  செவ்வனம்  பயின்று  சுவை நிலை கண்டுணர்வார்க்கு  அதன்  தனி நிலையிற் போலப்  பிற மொழிக் கலப்பில் அத்துணை  இன்பம்  உண்டாகா தென்பது  உண்மை . அநுபவமுடையார்  எல்லோர்க்கும்  ஒத்ததாகும் . இதனால்  வட சொற்களை  நேர்ந்தவாறு தமிழில்  புகுத்தல்  முறையன்றென்பது  தெளிவாம் . ஒரு சில வட சொற் கலப்பு உண்மை பற்றித்  தமிழ் மொழியை  வடமொழியினின்றும் தொன்றியதென்றல்  பொருந்தாததொன்றாம் .  

               வடமொழிக்கும்  தமிழ்மொழிக்கும்  உள்ள  வேறுபாடு  மிகப்பலவாம் . வடமொழியில் தமிழிற் போலத்  திணை  பாலுணர்த்தும்  வினை விகுதிகள் இல்லை . “ப4வதி”  என்னும்  வினைமுற்று   “இருக்கின்றான்” “ இருக்கின்றாள்”  “இருக்கின்றது”  என  ஓர் ஈறே  நின்று  எழுவாய்க்கேற்றவாறு பொருள் உணர்த்தும் . தமிழில் வினை  முற்றுக்களின் ஈறே  திணை  பால்களை  உணர்த்தி  நிற்கும் .  பால்  வகுப்புத்  தமிழிற்  பொருளைப்  பற்றியும் , வடமொழியிற்  சொல்லைப் பற்றியும்  உள்ளது . ஆண் மகனைப் பற்றி  வருஞ்  சொற்களெல்லாம்  ஆண்  பாலாகவும் ,பெண்மளைப் பற்றி  வரு வனவெல்லாம்  பெண் பாலாகவும்  தமிழில்  உள்ளன . வடமொழியில் இவ்வரையறை  யில்லை ; மாறுபட்டு  வரும் . சொல்  நோக்கியதா கலின் , மனைவியைப் பற்றிய  “பா4ர்யை”  என்னுஞ் சொல் பெண் பாலாகவும் ,  “தா3ரம்  ஆண்  பாலாகவும் , “களத்திரம்”  என்னுஞ் சொல்  நபுஞ்சகப் பாலாகவும் வருதல்  காண்க .  வடமொழியில் ஒருமை  இருமை  பன்மைச்  சொற்கள்  உள்ளன . தமிழில்  ஒருமையல்லாதன வெல்லாம் பன்மையே . தினைப்  பாகுபாடு ,  குறிப்பு  வினைமுற்று முதலியன  தமிழுக்கே  உரியன . “முல்லையைக்  குறிஞ்சியாக்கி  மருதத்தை  முல்லையாக்கி”  என்னும்  கம்ப ராமாயணச்  செய்யுளை  வட மொழிக்கண்  மொழிபெயர்க்கப்  புக்க  வடமொழிப்புலமை  மிக்க  என்  நண்பரொருவர்  அத்  திணைப் பாகுபாடு  வடமொழிக்கண்  இல்லாமையால் , “நல்லனவற்றைத்  தீயனவாக்கியும் ,  தீயனவற்றை  நல்லனவாக்கியும்”  என்னும்  பொருள்பட   மொழிபெயர்த்துள்ளார் .  திணைப் பாகுபாடு  வடமொழிக்கண்  இல்லையாயினும்  பொருளா ராய்ச்சி  வன்மையால் , ஒருவாறு  பொருந்த  மொழிபெயர்க்கலாம் .  இயலாதென்பது  அவர் கருத்து போலும் . இன்னும்  உற்று  நோக்கு வார்க்கு  இலக்கண  அமைதியில்  வடமொழிக்கும்  தமிழ்  மொழிக்கும்  வேறுபாடு  பல  தோன்றும் .  இவ் வேறுபாடுகளைச்  சுருக்கி ,

“சாற்றிய  தெய்வப்  புலவோர்  மொழிக்குந்  தமிழ்  மொழிக்கும்

வேற்றுமை  கூறின்  திணைபால்  உணர்த்தும்  வினைபகுதி

மாற்றருந்  தெய்வ  மொழிக்கில்லை  பேர்க்கெழு  வாயுருபும்

தேற்றிய  லிங்கம்  ஒருமூன்றும்  இல்லை  செந்தமிழுக்கே”

என்று  பிரயோகவிவேக  நூலார்  கூறினார் .  வடமொழி  தென்மொழி  ஆராய்ச்சியிற்  புலமை  மிக்க  மாதவச் சிவஞான முனிவர்  இவ்வேறுபாடுகளை நன்கு  ஆராய்ந்து  தெளிவுபட  உரைத்தனர் . அவர்  கூறியன  வருமாறு :  “தமிழ்  மொழிப்  புணர்ச்சிக்கட்  படுஞ்  செய்கைகளும்  , குறியீடுகளும்  ,  வினைக்குறிப்பு , வினைத்தொகை  முதலிய  சில  சொல்லிலக்கணங்களும் , உயர்திணை  அஃறிணைப்  பாகுபாடுகளும்  ,  அவற்றின்  பகுதிகளும்  , வெண்பா  முதலிய  செயுளிலக்கணமும்  , இன்னோரன்ன  பிறவும்  வடமொழியிற்  பெறப்படாமையானும்  “  என்பனவாம் .  இவ்வாராய்ச்சியால்  தமிழ்  தனி  மொழி  என்பது  செவ்விதிற்  புலனாதல்  காண்க .

               இனி , இம்மொழிக்கணுள்ள  நூற்பரப்புக்களை  உற்று  நோக்குவோம் . கடல்கோள்  முதலியவற்றாற்  செற்றன  போக , எஞ்சிய  சங்க  நூல்கள்  பலவுள்ளன .தமிழின்  இயற்கைச்  சுவை  நலம்  ததும்பித்  திகழும்  பத்துப்பாட்டு ,  அகம் , புறம் , கலித்தொகை  முதலிய  சங்கத்துச்  சான்றோர் இலக்கியங்களும் , எம்மொழியினும்  இத்துணைத்  திட்ப  நுட்பங்களமைய  யாத்த  ஒரு  நூலும் உளதோ வென்று  ஆராய்வார்  வியப்புறும்  வண்ணம்  தமிழ் நிலத்தார் தவப்பயனாக  எழுந்த  திருக்குறளை  முதலாகவுடைய  நீதி நூல்  இலக்கியங்களும்  ,  பாடுவோர்க்கும்  கேட்போர்க்கும்  இறவன்  றிருவடிப்  பற்றை  விளைவித்து அன்புமயமாய்  நின்று  உள்ளுருகச் செய்யும்   தேவாரம் , திருவாசகம் , நாலாயிரப் பிரபந்தம்  முதலிய  அருட்பாடல்களும் , காப்பியச்சுவை  நலம்  கனிந்தொழுகும்   சிலப்பதிகாரம் ,சிந்தாமணி  முதலியனவும் , இறைவன்  றிருவருள்  நலத்தை அன்பர் அள்ளி உண்டு  இன்புற்ற  முறையையும்  ,  உலகியல்  நிலைகளை  வரம்பிட்டு  அழகு  பெற  உரைக்கும்  பெற்றியையும்   முறையே  மேற்கொண்டு வெளிப் போந்த சைவ  வைணவ  இலக்கியங் களாகிய   பெரிய  புராணம் , கம்பராமாயணம்  முதலியனவும் , சிவாநுபவச்  செல்வர்களாகிய  மெய்கண்ட தேவர்   முதலியோர்களால்  அளவை நூன்முறையில்   வைத்துப்  பொருள்  வரையறை  செய்து  அருளிச் செய்யப்பட்ட சிவஞானபோதம் ,சிவஞான சித்தி , திருமந்திரம்  முதலிய  சமய  நூல்களும்  சிவஞானமுனிவர் , குமரகுருபர அடிகள்  முதலியோர்  அருளிய  இனிய  நூற்றொகை களும் , பிறவும்  இதன்கண்  உள்ளன .

                   உருக்கரந்த  நூல்களினின்றுஞ்  சிதறுண்டு  அங்கு மிங்குங்  காணப்படும்  சில  செய்யுட்களைப்  பார்க்குங்கால் ,  முழுவுருவமுங்  கிடைக்கப் பெறாமை  தமிழரின்   தவக்  குறை யென்றே  இரங்க வேண்டியதாயிற்று .  சேர பாண்டிய  சோழர்களாகிய  மூவேந்தர் களையும்  தனித்தனியே  தொள்ளாயிரம்  வெண்பாக்களாற்   புகழ்ந்து  பாராட்டு முறையில்  அமைந்த  முத்தொள்ளாயிரச்  செய்யுட்களிற்   சிதறிக் கிடந்த  சிலவற்றைக் கண்டதும்  அந் நூன் முற்றுப் பெறாமை பற்றி  என் மனம் வருந்தியதுண்டு .   சிற்றுருவாகிய  வெண்பாவில்  உயர்ந்த  பொருளைச்  செப்பனிட்டமைத்துச்   சொல் வளமும் , பொருள் வளமுங்  கெழுமப்  பாடியிருக்கும்  வனப்புத்  தமிழ்ச்சுவை  நலம் துய்ப்பார்  யாவருள்ளத்தையுங்   கவரவல்லதாம் .  “வெண்பாவிற்  புகழேந்தி”   என்று  பாராட்டிய  புலவர்க்கும்  இம்  முத்தொள்ளாயிர  நூல்  காணப்பட்டிலதென்றே  எண்ணுகின்றேன் .  “பொருப்பிலே  பிறந்து தென்னன்  புகழிலே  கிடந்து “  என்று  தமிழ்  மடந்தையைப்  புனைந்து பாராட்டிய  புலவரும்  இதனைக்  கண்டிலர் .  தென்னன்  புகழின்  மட்டில்  அன்றி  மூவேந்தர் புகழிலும்  ஒருங்கு கிடந்தமை  இந் நூலாற்   கண்டிருப்பாராயின் , “பொருப்பிலே  பிறந்து மூவர்  புகழிலே  கிடந்து”  என்று  பாடியிருப்பர் .  இன்னும்  பூதங்களாலும்   காலதத்துவத்தாலுங்  கவரப்பட்டு  ஒழிந்த சிறந்த  நூல்களும் உரைகளும்  பலவாம் .  

             இலக்கண நூல்களுக்குள் எழுத்து  முதலிய  ஐந்து   இயல்களையும்  முற்ற  உரைப்பனவும் , அவற்றுள்  ஒன்றிரண்டே  நுதலுவனவுமாகிய   தொல்காப்பியம் ,  இறையனாரகப்  பொருள் , நன்னூல்  முதலிய  பலவுள்ளன .  இவற்றுள் தொல்காப்பியத்தின்  பெருமை  மேற்கூறப்பட்டது  கொண்டு  ஒருவாறு  உணரலாம் .  

              இனி , நூல்களின்  உண்மைக்   கருத்துக்களைத்   தம் மதி நுட்பத்தாற்  கண்டு  உரை  வரைந்த  ஆசிரியர்களின்  பெருமையை  என்னென்பேன் !  இளம்பூரணர் , பேராசிரியர் , சேனாவரையர் , நச்சினார்க்கினியர் , பரிமேலழகர் , அடியார்க்கு நல்லார்  முதலிய  ஆசிரியர்களின்  திறமையைத்  தனித்  தனி  விரிக்கப்  புகின்  மிக  விரியும் . இவரெல்லாம் , மிக விரைவாக  ஓடிச் செல்லும் ஒரு பேரியாற்றை எதிர்த்து நீந்தி அந்நீரோட்டத்தின்  வன்மையை இற்றென உணர முற்படுவார்  போலத்  தாம் உரையெழுத மேற்கொண்ட  சான்றோர்  செய்யுட்களிலுள்ள  சொற்களின்  செலவை  எதிர்த்தாராய்ந்து  உண்மைப் பொருள்  கண்டு  உலகிற்  குதவியவராவர் .

              பிற்காலத்தே  பொதியிற்  சாரலில்  தென்றமிழ்  நாடு  தவப் பயனாகத்  தோன்றிய மாதவச்  சிவஞான முனிவரின் மாட்சிமை கூறும் தரத்ததன்று . அம்முனிவர்  பெருமான்  வடமொழி  தென்  மொழிகளிலுள்ள  இலக்கியம்  இலக்கணம்  தருக்கம்  சமயம்  முதலிய   நூற்பாவைகளைத்  தேக்குற  உண்டு  நூலியற்றல் , உரை வரைதல் , பிறர்  புரைபட  யாத்த  நூலுரைகளின்  குற்றங்கண்டு  விலக்கல்  முதலிய  எல்லாக்  கல்வித்  துறைகளிலும்  ஒப்புயர்வின்றி  விளங்கிய   தமிழ்ப்பெரும்   தலைமணி யென்பதும் , சைவ சமயம் முதனூற்  பேருரையாசிரியரென்பதும்  இத்தமிழுலகம் அறிந்தனவே . அவர்கள்  வரம்பிட்டுரைத்த தொல்காப்பியர்  சூத்திர  விருத்தி  முதலியனவும்  , சிவஞான போதச் சிற்றுரை , பெருமை  முதலியனவும்  தமிழ்ப்  புலவர்களாலும்  சைவ  சமயப்  பெரு  மக்களாலும்  தலைமேற்  கொண்டு  போற்றற்பாலனவாம் .  

                இங்கு  கூறிய  நூலுரைகளின்  பெயர்களும்  சுருக்கம்  பற்றி  இவ்வாறு  கூறப்பட்டன . ஈண்டுக்  கூறப்படாத  பிற  நூலுரைகளைப்  பற்றியும் , ஆசிரியர்களைப்பற்றியும்  உள்ள  என்  மதிப்பு  ஒரு  சிறிதுங்  குறைந்ததன்று .  வாய்ப்புழி  விரித்துரைக்கும் அவாவுடையவனே .

               அகப்பொருள்  இயல்புகளை  அறத்தினின்றும்  பிறழாதெடுத்து நயம்பட  உரைக்கும்  அழகு  தமிழ் மொழிக்கே  சிறந்ததாகும் . தலைவன்  தலைவி , பாங்கன்  பாங்கி ,  செவிலி  நற்றாய்  முதலியோர்  இன்ன இன்ன இடங்களில் இவ் விவ் வண்ணம்   உரையாடக்  கடவரென்று  வரையறுத்த  முறை  பெரிதும்  இன்புறற்பாலது .  அகப்பொருள்  விரிவைத்  தமிழற்   பரக்கக்  கண்ட  ஒரு சிலர் ,  இம் மொழி காம  நிலையை  பற்றியதென்று  கூறினர் .  அவர்  கூற்று , “தோள்கண்டார்  தோளே  கண்டார்”  என்றாங்கு  அப்பகுதியில் ஈடுபட்டு  அதனின்றும்  பெயர  ஒண்ணாமை  பற்றி   எழுந்த  தொன்றாகும் .  சைவ  நூல்களை  முறைப்படுத்திய   நம்பியாண்டார்  நம்பிகள்   என்னும்புலவர்  பெருமான்  இறைவனையடைந்து பேரின்பம்  துய்த்தற்கு  வாயிலாகவுள்ள  அறிவுமொழி  இத்தமிழ்  மொழியெனக்  கண்டு  அக்காட்சியைத்  திருஞானசம்பந்த  பிள்ளையார்  பெருமை  கூறுமுகமாக ,

“ஆரதே  றுஞ்சடை  யான் அருள்  மேவ  அவனியர்க்கு

வீறதே  றுந்தமி  ழால்வழி  கண்டவன் “

என்று  வெளியிட்டருளினர் . “சிவபிரானது திருவருட் பேற்றை  யடைய  உலகத்தவர்க்குத்  தமிழால்  வழி  கண்டவர்”  என்னும்  இதனால்  இது  ஞானமொழி  என்பதில் ஒரு சிறிதும் ஐயமின்றாம் .  ஈண்டு  தமிழைச்  சுட்டுங்கால்  “வீறதேறுந்  தமிழ்”  என்றார் .  வீரு  என்னுஞ் சொல் ‘வேறொன்றற் கில்லா  அழகு’  என்னும்  பொருளதாம் .  இப்பொருள்  சீவக சிந்தாமணியில்   ‘வீறுயர்  கலச  நன்னீர்’ என்புழி  நச்சினார்க்கினியர்  கண்டதாகும் . வேற்று மொழிகட்கில்லாச்  சுருங்கச்  சொல்லல்  ,  விளங்க வைத்தல் முதலிய  அழகுகள்  இத்தமிழ் மொழிக்கண் மலிந்திருத்தலின்,இச்சொற்பொருள் நச்சினார்க்கினியர்  கண்ட  அவ்விடத்தினும்  இங்கு  மிகவும் இயைபுடைத்தென்பது நன்கு  விளங்கும் .

             இச்  செந்தமிழ்  மொழியாம்  நறுநீர்த்  தடாகத்திற்  பற்பல  கிளை  நூல்களாம் கொடி , இலை , அரும்பு .மலர்   முதலியன  கிளைத்தெழுதற்கு  முதலாகவுள்ளதும் , மொழியின்  தன்மையை வரம்பிட்டு  உரைக்கும்  இயல்  முதல்  நூலுமாகிய   தொல்காப்பியம்  என்னும்  மூலமும் , அதன்கட்டோன்றி  எழில்  பெற  விளங்குவதும் , இன்னும்  காலக்கூறு  எத்துணை  கழியினும்  உலக நிலையும்  மக்கள்  ஒழுகலாறும்  இன்ன  படியாக  இருத்தல் வேண்டு மென்று  புதிய புதிய எண்ணங்களை  மேற்கொண்டு  ஆராய்வார்க்கெல்லாம்  சிந்தாமணி போல் நீதிப் பொருள்களை வழங்குவதும் , நுண்பொருள் நறுமணம்  மிக்கதுமாகிய  பீடுசால்  திருக்குறள்  என்னும்  தாமரை  மலரும் , அம்மலர்க்கண்ணே   ததும்பி  வழிவதும் , விலை  வரம்பில்லா  மாணிக்கம்  போன்ற  சொன்  மணிகளானும்  உள்ளே  நோக்கி   உளம்  நெகிழ்ந்து ஆராய்வார்க்கு   “எனை  நான்  என்பதறியேன்”  என்றபடி அவர் தம் நிலையும் மறக்கச்செய்யும் பொருளொளிகளானும் , கல்லையுங்  கரைக்கும்  இசை நலத்தானுஞ்  சிறந்து திகழ்வதும்  படித்தல் , கேட்டல்  முகமாகத்  தன்னை யுண்பாரைத்  தான்  உண்டு  அன்புருவாக்கிச்  சிவநெறிக்கட்  செலுத்திப்  பேரின்பப்  பெருவாழ்வுறுத்துவதும்  ஆகிய  திருவாசகம் என்னும்  தேனும்  கைவரப்பெற்ற   தமிழ்ச்  செல்வர்க்கு  யாதுங்  குறையின்றெனினும் , கால வேறுபாட்டால்  உள்ள  நிலை  வேறுபட்டு அதனால்  விளையுங்  குறைகட்கு  அவர்  இடனாதல்  வருந்தத்  தக்கதே .

அக்குறைகளாவன :-

             நஞ்செந்தமிழ்த்  தெய்வ  மொழிக்கு  இயல்பின்  அமைந்த காட்சிகளை  விளக்கமாக  உணர்ந்து உலகினர்க்கும் உணர்த்தித்  தாமும்  பயன்  எய்துதலை விட்டு , இதற்கிலாதனவும்  வேண்டாதன வுமாகிய   சிலவற்றைச்  சிறப்பெனக்  கண்டு  இதற்கு ஏறிட முயன்று  இடர்ப்படுதலும்  இன்னோரன்ன பிறவுமாம் . வேற்று  மொழியாளர்   அறியாமையால்  நம்  மொழியைப்  பழித்துரைப்பாராயின்  தக்கவாறு  ஏதுக்களைக்  காட்டி  உண்மை நிலை யுரைத்து  அவரை  நன்நெறிப் படுத்த முயலல் வேண்டும் . அந்நெறிக்கு  வாராராயின்  “நெறியினீங்கி யோர் நீரல கூறினும் அறியாமை யென்றறிதல் வேண்டும் “  என்றாங்கு  அவர்  தன்மைக்கு  இரங்கி யொழிதலே  நாம்  மேற்கொள்ளற்பாலதாம்.  இங்ஙனமல்லாமல்  நாமும்  அவரியல்பைக்  கைப்பற்றி  அவர் மொழிக்குள் இல்லாத குறைகளை ஏறிட்டுப் பழித்துரைத்தல் நடுநிலை திறம்பாத் தமிழ்க் குடியிற் பிறந்த நமக்கு ஒல்லாத தொன்றாம் .  கலகம் விளைத்தலால் எய்தும் பயன் , நடுநிலை திறம்பா  நன் னெஞ்சைக் கோட்டமுறச்  செய்தலேயன்றி  வேறன்று .  மொழியள வின்றிச்  சமய  நிலையிலும்  இம் முறை  மேற்கொள்ளற் பாலதொன் றாம் . காய்தல்  உவத்தலின்றி  உண்மை நிலை கடைப்பிடித்துப்  பண்டை நிகழ்ச்சிகளை யாராய்ந்து வெளியிடும் இக்காலத்துத்  தமிழ்ப்  புலவர்களின் அருஞ்  செயல்கள் போற்றற்பாலவையாம் . புதிய  முறையிற்  கண்ட  கொள்கைகளும்  , பொருந்துவன இன்ன, பொருந்தாதன இன்னவென்று அறுதியிட்டு  வெளிப்படுத்தற்குரிய வழியைப் பின்னர்க் கூறுவேன் .  

                                4 .  தமிழ்  மொழியின்  நிலைமை

தமிழ்ச்  செல்வர்காள் !

            இது  காறுங்  கூறியவற்றால்  தமிழின் தொன்மையுஞ்  சிறப்பும் ஒருவாறு புலப்படுமேயன்றி முற்றவெடுத்து விளக்கப்பட்டனவாகா . தாலீ  புலாக  நியாயமாகச்  சுருங்கிய  நிலையிற்  சில  எடுத்துக்  காட்டப்பட்டன . இனி , இத்தகைய  மூலப் பொருளாகிய தமிழின் நிலை இக்காலத்தில் எங்ஙனம் உள்ளதென்று  ஆராயப்  புகுவோமாயின் , அது வருத்தந்  தருவதொன்றாகும் . இம்மொழியை முறையாகப்  பயில்வாருஞ்  சிலரே . பயிற்றுக்  கல்லூரிகளுஞ்  சிலவே . நம் அரசினர் மொழியாகிய ஆங்கிலத்தால் நெருக்குண்டு இது தன்னுருக்கரந்து  அங்குமிங்குஞ் சிறிது உறைவிடம் பெற்று ஒல்கியிருக்கின்றது . போற்றுவாரின்மையால்  வேற்றிடம் பெயர்தற்கும் வழியில்லை ; ஆர்வ மிக்குப் பயில முயல்வாரும் பொருள் வருவாயைக்  கருதிப் பின்வாங்கு கின்றனர் .  பொருள் வருவாயைப்  பொருட்படுத்தாத  தகுதியுடை யார்க்கு  இதன்கண்  விருப்பமுண்டாதல் அரிதாகின்றது . இளைஞர் சிலர் , காலத்தின் விரைவிற்கேற்றவாறு  ஒரு  நூலையேனும் அழுந்தியாராயாமல்  நுனிப்  புல்  மேய்ந்து இக்கால நாகரிகத்திற்கு ஒத்த வண்ணம் எங்கணும் உலாவித் திரியும் பத்திரிகைகளில் வெளிப்படுஞ் சில  கட்டுரைகளைப்  பயின்று , அம்மட்டில் தம் கல்வி முற்றியதாக நினைந்து , தாமும்  அம்முறையிற் காலங்கழிக்க எண்ணுகின்றனர் .  

          பண்டைக்காலம் போலக் கற்று  வல்ல பெரும் புலவர்கட்கு முற்றூட்டாக  நிலம் , பொருள்  முதலியன கொடுத்துப் பேணும்  புரவலரும் இலர் . ஆரவாரமின்றி அறிவு விளக்கங்  கருதிக் கல்வி பயின்று  அடக்க மேற்கொண்டொழுகுவாரைப்  பெருமைப்படுத்து வாரும்  சுருங்கினர் . போலிப்பயிற்சியும் போலியறிவும் , அடிப்போலி யறிவுடையாரைப்  பாராட்டுதலுமே  எங்ஙணும்  மல்கின .  

           ஆங்கில மொழிப் பயிற்சியால்  உயர்தரப் பட்டம்  பெற்றாருட்  சிலர்  தமிழையுங் கடைக்கணித்து  ஒரு சிறிது பயின்றதும் , வேற்று மொழியால்  தாம் எய்திய பெருமையை இதன் மூலமாக வெளிப்படுத்த எண்ணிப் பண்டையோர் சிறந்த முறையில் ஆராய்ந்தெழுதிய  நூலுரைகளைக்  குறைகூறத்  தலைப்பட்டு தம்குறையை வெளிப்படுத்துகின்றனர் .  அவர் குறை , அறிவுடையாருட்  சிலர்க்கன்றி ஏனையோர்க்கும் புலப்படாததாகலின் , அவ் வேனையோர் மலிந்த  இவ்வுலகத்தாராற்  பாராட்டப்படும்  பேறு பெற்று , மீண்டும்  மீண்டும் அவர் தம் இயற்கையை வெளிப்படுத்த முயல்கின்றனர் . ஒரு  நூலையோ  , உரையையோ  ஒருவர் மறுக்க  எண்ணுவாராயின்  , அந்நூலுரைகளின் பொருளுரைகளை ஆசிரியரின் கருத்தின் வழி முதலில்  அறிதல் வேண்டுமன்றோ ?  அங்ஙனம் அறிதலில் தம் உழைப்பைப் பயன்படுத்தாமல் மறுத்து ரைக்க விரைவார்  செயலை என்னென்பேன் ! வைரமணியின் தூய வெண்ணிற வொளியை  மஞ்சள்  நிறமென மாறுபடக்  கண்டு  அக்காட்சி  ஏதுவாக  “இது வைரமணி அன்றென ஒருவன் கூறுவானாயின்  அஃது அவன்  கண்ணின்  குற்றத்தாலாயதன்றி  வேறென்ன ?  

              சிலர் வேறு வழியில் தாம்  உயர்ந்த நிலையை அடந்திருப்பதாக எண்ணித் தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங் கொள்ள விழைந்து , தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர் .  அந்தோ ! அவர் பாட்டை நினையுங்கால்  தமிழ் மொழியாளர் செயல் இத்தகையது போலுமென்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே  என்று வருந்த வேண்டியதாகின்றது . “செல்வப் புதல்வரே ஈர்ங்  கவியோ”  என்றபடி புலவர்க்குப்  புலமைப் புதல்வராகப்  பிறக்கும்  இயல்பினவாகிய  பாட்டுக்களைக்  கருக்  கொள்ளாது பொறையுயிர்க்க வெண்ணின்  எங்ஙனமாம் ?

                தமிழ்த்துறையில்  ஒரு  சிறிதும் பயிலாத  தம் பதவி மேம்பாட்டால்  ஒரோ  வமயம்  இன்னோரன்ன  அவைக்களங்களில்  தலைவராக  வீற்றிருக்கும் பேறு  பெறுங்கால் அவர்  கூறும்  உபதேசம் எத்துணைப்  பயனுடையதாகுமென்பதை  நீங்கள்  அறிவீர்கள் . அவரை  உயர் பதவிக்குக் கொண்டுவந்து மொழிப் பயிற்சியில் அவர் செலவிட்ட  காலத்தையும் , முயற்சியையும் கூறுபடுத்துக்கால்  அல்லது அரைக்காற்  கூறு  தமிழுக்கு உபயொகப் படுத்தியிருப் பாராயின் , அவர்  உபதேசங்  கொள்ளற்பாலதாகும்.  அங்ஙனமின்றி, “பண்டிதர் நடை கடினமாதலிற்  பயனுடையதன்று “  என்றின்னோ ரென்ன  உபதேசங்களைச்  செய்வரேல் அவற்றை எவ்வாறு  ஏற்றுக்கொள்ளலாம் ?

                   சிறந்த  நடையில்  எழுதுவார்  மிகச் சிலரே .  அவர்களும் இவர்  ஆரவாரத்தில்  ஈடுபட்டுத்  தம்  இயற்கையைக்  கைவிடுவாரா யின்  அந் நடை வனப்பை  யாண்டுக்  காண்போம் ?  இவ்வுபதேசகர்  கருத்துப்படி  எது  நல்ல  நடையென்று தெளியப் புகின்  அது நகை விளக்கும் .  பிற  மொழிகளிலுள்ள சொற்களை மிகுதியாகக்  கலந்து இலக்கண  வரம்பின்றி  எழுதப்படுவதே   எளிய  நடை யென்பது  அவர் கருத்து .  இந் நிலையைக்  கடைப்பிடித்துள்ளாரே  இக் காலத்துப் பலராவர் . இயல்பிற்  பரந்து கிடக்கும் இவ் வெளியே கொள்கைக்கு இவர் உபதேசமும் இன்றியமையாததுகொல் !  எளிய  நடையாவது  இலக்கணப் பிழையின்றித் திரிசொற்கள் பெரிதும்  விரவாமல் இயற்சொற்களால்  இயல்வதாகும் .  இவ்வெளிய  நடையையும் , திரிசொற்கள் பெரிதும்  விரவிய  அரிய  நடையையும் எழுதப்படும்  பொருள்களுக்கு  ஏற்றவாறு  புலவர்கள்  பகுத்துணர்ந்து மேற்கொள்ளல் வேண்டும் .  

                                  5 .  இனிச்   செய்ய   வேண்டுவன

  •  நூல்கள் , ஆராய்ச்சிகள்  முதலியன

    இனி, நம் அருந்தமிழ் நன்னிலைப்படுதற்குச்  செயற்பால  காரியங்களைச் சுருக்கிக் கூறுவேன் . உலகத்து வழங்கும் பல மொழிகளிலும் உள்ள அரிய பல கலைகளெல்லாம் தமிழ் மொழியில் வரல் வேண்டும் . ஆங்கில மொழியிலும்  வடமொழி யிலுமிருந்து  மொழி பெயர்க்க வேண்டிய சிறந்த நூல்கள்  பலவுள்ளன .  உயிர்த்தொகுதிகளைப்  பற்றினவும் மற்றை  நிலையியற்  பொருள்களைப்  பற்றினவுமாகிய  நூல்களுள் , இரசாயனம் முதலிய செயற்குப் பயன்படும் நூல்களும்  ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்படல்  வேண்டும் . மேலைத் தேயத்துப்  பண்டிதர்கள்  தம்  பேருழைப்பாற்   புதிய முறையிற்  கண்ட  சிறந்த ஆராய்ச்சி  நூல்களெல்லாம்   ஒவ்வொன்றாகத்  தமிழில்  வெளிப்படல்  வேண்டும் . இதற்கு  ஆங்கிலமும்  தமிழும்  உடன்  கற்ற  புலவர்கள்  துனை  புரிய  வேண்டும் .

            வடமொழியினின்று  மொழி  பெயர்க்க  வேண்டிய  மூல  நூல்கள்  பலவுள்ளன . பல்லாயிரம்  ஆண்டுகளாக  நம்  தேயத்தாராற் பிரமாண  நூல்களாக  மேற்கொள்ளப்பட்டு வரும்  இருக்கு  முதலிய  வேதங்களும் , அவற்றின்  முடி  பொருளாக  விளங்கும்  உபநிடதங்கள் , தமிழ்  நிலத்தார்  வாழ்க்கைக்கு  இன்றியமையாச்  சிறப்பு  நூல்களாகவுள்ள  ஆகமங்களும்  ஆகிய  இன்னொரன்ன  மூல  நூல்கள்  எத்துணை  ஆயிரம்  ஆண்டுகளாகி யும்  இன்னுந்  தமிழிற்  செவ்விய  முறையில்  மொழி  பெயர்க்கப் பட்டு  வெளிவரவில்லை . ஒரோ  விடங்களிற்  சிலர்  இவற்றை மொழி  பெய்ர்க்கத்  தலைப்பட்டுச்  செவ்விய  முறையிற்  பயன்பட  இயற்றலாற்றாது  இடைக்கண்   ஒழிந்தனர் . அவர்  அத்துணை  தானும்  முயன்றது  பற்றிப்  பாராட்டக்  கடமைப்பட்டுள்ளோம்  அவர்க்குத்  துணை  புரிவாரும்  இல்லை . எவ்வாறு  வெளிப்படுத்தி னாற்   பயன்படுமென்பதைத்  தெரிந்துகொள்ள  அவர்  முயலவுமில் லை .  எத்துணையோ  ஆயிரம்  காவத  தூரங்களுக்கு  அப்பாலுள்ள  ஆங்கில  தேயத்தார்  தம்  மொழிகளில்  இவ்வரிய  வேதாகம  உபநிடதங்களைப்   பொருட்படுத்தி  மொழி  பெயர்த்துப்  பலவகைச்  சிறந்த  ஆராய்ச்சிக்  குறிப்புகளுடன்  வெளிப்படுத்தி யிருக்கின்றனர் .  தொன்றுதொட்டு  ஒற்றுமையோடு  வழங்கப்பட்டு  வரும்  நம்  தமிழ்  மிழியில்  இதுகாறும்  அவை  வெளிவராமை  ஒரு  குறையேயாம் . தெளிவான  உரைநடையிற்  பல்வகை  ஆராய்ச்சிக்  குறிப்புகளுடன்  அவை  வெளிவரல்  வேண்டும் .  

                  மூல  நூல்கள்  உள்ளவாறு  வெளிவந்தபின்  அவற்றின்  நலந்  தீங்குகளைப்  பற்றி  ஆராய்வார்  ஆராய்க . மூலம்  மற்றும்   தமிழில்  வருவதற்குமுன் , அவற்றின்  உட் பொருள்களைப்  பற்றி  ஆங்காங்குள்ள  சிற்சில  குறிப்புக்களைக்  கொண்டு   நம்  தமிழ்  வல்லார்  ஒரு  முடிபுக்கு  வருதல்  சிறந்த  முறையன்று .

                    இன்னும் , வடமொழிக்கண்ணுள்ள  அளவை  நூல்களும் , சுவையாராய்ச்சி  நூல்களும்  ,  பெருங்காப்பியங்களை  ஆராய்தற்குக்  கருவியாகவுள்ள  நூல்களும்  , பொருணூல்களும் , அறிவு  நூல்களும் , பிறவும்  மொழிபெயர்க்கப்படல்  வேண்டும் . இச்செயற்கு  வடமொழியோடு  தமிழ்  பயின்றார்  பலர் வேண்டும் .  

                        நம்  தமிழ்மொழியின்  ஆக்கத்திற்கு  ஒரு தலையாக  வேண்டுவனவற்றுள்  இம்மொழி  பெயர்ப்புச்  செயலும்  ஒன்றாம் .  இது பற்றியே  தொல்காப்பியனாரும் 

“தொகுத்தல்  விரித்தல்  தொகைவிரி மொழி பெயர்த்

 ததர்ப்பட  யாத்தலோ  டனைமர  பினவே “

என்று  நூல்  யாப்பு  வகைகளுள்  ஒன்றாக  இம்மொழிபெயர்ப் பையும்  கூறினார் . இவ்வரிய  காரியஞ்  செய்தற்குரிய  நிலையத்தை  இன்னோரன்ன  சங்கங்களின்  உறுப்புக்களுள்  ஒன்றாகக்  கொண்டு  பலர்  கூடிச்  செய்தல்  வேண்டும் .  

               இனி , ஆராய்ச்சி  , செய்யுள் , உரை  நூல்களைப்  பற்றி  ஒரு  சிறிது கூறுவேன் . சிறந்த பண்டைத் தமிழ்  நூல்களைச்  செவ்வனம்  ஆராய்ந்து  அவற்றிற்  பொதிந்து கிடக்கும்  நுண்பொருள்களைத்  தொகுத்துப் பல  ஆராய்ச்சி  நூல்கள்  வெளிப்படுதல் வேண்டும் .

 பெரும் புலவர்களால்  அரிதில்  தேடித் தொகுத்த இரத்தினக்குவியல்  போன்ற  பழந்தமிழ்  நூல்களெல்லாம்  கிளைக்கக்  கிளைக்கப்   புதிய  புதிய  சுவை  நலன்களைத்  தேற்றி  இன்புறுத்தும்  நிலையினவாகும் . அவ்வின்பச்  சுவைகளை  அழுந்தி  ஆராய்ந்து  துய்க்கும்  புலவர்கள்  “யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம்”  என்றபடி  மற்றையோர்க்கும்  அளித்தல்  வேண்டும் .  ஒரு  மொழி யின்  சிறப்பு  ,  மதிநுட்ப  நூலோடுடைய   புலவர் பெருமக்க ளின்  ஆராய்ச்சி  யுரையால்  வெளிப்படும் .  அத்துணை  வேற்று  நெறிகளால்  ஆகாது ; இந்நெறியில்  இற்றைஞான்று  தலைப்படு வார்  சிலருளர்  எனினும் , அன்னாரை  அந்நலம்  கண்டு  போற்றுவாரின்மையால் அவ்வருஞ் செயல் நன்கு  விளக்கமுறவில்லை .

                 நம்  பண்டையோர்  போலத்  திருந்திய  முறையிற்செய்யுள்  நூல்கள்  பலவற்றை  அவ்வாற்றலுடையார்  வெளியிடல்  வேண்டும் . முன்னுள்ள  செய்யுணூல்கள்  பல இருப்ப  புதியன  வேண்டுதல் மிகையெனக்  கருதுவாருமுளர் . நம்  பரத  கண்டத்து மொழிகளெல் லாம்  நிலை  பிறழாது என்றுந் திருந்திய  முறையிற்  றிகழ்தல்   மூல நூல்களெல்லாம் செய்யுட்களால்  ஆக்கப்பட்டமை  யானேயாம் .  ஒரு செய்தியைப்  புலமுடையார்  உள்ளங்கொள்ளுங்கால்  அது  செய்யுண்  முகமாகக்  கேட்கப்படுதல் போல் வழக்குச்சொல்  முகமாகக்  கேட்கப்படுதல்  இன்பம் பயவாது ;  நீண்ட  நாள் மறவாமல்  உளங்கோடற்கும்  இயலாது . ஒரு  நிகழ்ச்சியைச்  சிறந்த  புலவன்  கூறுதல்போற்  பிறர்  கூற  அறியார் .  கூறப்படும்பொருள்  சிறந்ததாக  இருப்பினுங்  கூறுவோன்  புலவன்  அல்லனேல்  அது  பிறர்  நெஞ்சில்  தங்கி  இன்புறுத்தலாற்றாது .  அரசுரிமையும்  புலமையும்  வாய்ந்த சைவ  மன்னர்  ஒருவர்   தம்  உண்மைச்  சமயக்  கொள்கையையும்  மறந்து  வேற்றுச்சமய  நூலில்  ஈடுபட  நேர்ந்தது   செய்யுளின்பத்தினாலேயாம் . மீண்டும்  அவரை  அவர்  சமய  நிலையில்  திட்பமுறப்  பிணித்து  வயமாக்கியதும்  செய்யுளின்பமேயாம் .

கல்வியே  கற்புடைப்  பெண்டிரப்  பெண்டிட்க்குச்

செல்வப்  புதல்வரே  யீர்ங்கவியாச்  —  சொல்வளம்

மல்லல்  வெறுக்கையா  மாணவை   மண்ணுறுத்துஞ்

செல்வமும்  உண்டு  சிலர்க்கு “

என்றபடி  புலமைக்கு  மகப்பேறு  ஈர்ங்கவியாயின் , கவிபாடும்  ஆற்றலில்லாதார்  புலவ ருலகத்தில்  மக்கட்பேரில்லா  வாழ்க்கையை  உடையவராவ  ரல்லரோ !  ஆதலின் , புலமை  வாழ்க்கையிற்  சிறப்பெய்த   எண்ணுவாரெல்லாம்  செய்யுள்  பாடும்  வன்மையுடையா  ராதல்  வேண்டும் . அவ்வன்மையைப்  பயிற்சி  முகமாகப்  பெருக்கிக்  கொண்டு  சிறந்த  நூல்கள்  செய்யுள் வடிவில்  எழுத  முயலல்  வேண்டும் . 

               அதனோடு  பழைய  சிறந்த  நூல்களுள்   உரையெழுதப்  படாதவைகட்கெல்லாம்   உரை  வரைதலையும்   மேற்கொள்ளல்  வேண்டும் .  நூலாசிரியரின்   அரிய   கருத்துக்களையெல்லாம்  உரையாளர்  உதவியாலேயே  உலகம்  உணர்ந்து இன்புறுகின்றது .  பேருபகாரிகளாகிய   உரையாசிரியர்களின்  உதவி  இல்லையா யின்  பண்டை  உயர்  நூல்களாம்  கருவூலங்களில்  தொகுத்து  வைத்த  விலை வரம்பில்லாப்  பொருண்மணிக்  குவியல்களை   யாம்  எங்ஙனம்  பெறுதல்  கூடும் .?  வடமொழியில்  சூத்திரகாரரா கிய  பாணினியாரினும்  உரையாளராகிய  பதஞ்சலியார்  பெருமை  சிறந்து  விளங்குதலை  அறியாதார்  யாவர் ?   நூலாசிரியர்  உள்ளக்  கிடக்கையை  நுணுகி  ஆராய்ந்து தெளிவு  பெற  எடுத்தெழுதும்  வன்மையாளரே   உண்மை உரையாசிரியராவார் .யார்  யார்  எவ்வெத்திறத்து  நூல்களிற்  பயிற்சி  மிக்குடையாரோ  அவரவர்  அவ்வத்திறத்து  நூல்களுக்கு  உரையெழுதப்  புகல் வேண்டும் . அங்ஙனமின்றிக்  கல்லாது மேற்கொண்டொழுகல்  தவறுடைத்தாம் .  சைவ நூலில்  ஒரு  சிறிதும்  பயின்றறியாதார்  ஒருவர்  சைவத்  தலைமணியாகத்  திகழும்  திருவாசகம்  திருவிசைப்பாக்களுக்கு   முற்றும்  உரையெழுதித்  தம்  புரை  நெறியை வெளிப்படுத்தியுள்ளார் .

இத்தகையர்  தம்  தகுதிக்கு  இயலாத  வுயர்  நூல்களுக்கு  உரை  காணப் புகுந்து  உண்மைப்பொருள்  காண  இயலாமல்   இடர்ப்பட்டதோடு , மரபுக்கு  முரணாகவும்  பல  எழுதினர் .   பிழைபட்ட  எல்லாவற்றையும்  கண்டு  விளக்கல்  மிகையாதலின்  ஒன்று  காட்டுவேன் . “நானார்  என்  உள்ளமார் , ஞானங்களார்  என்னை  யாரறிவார் .  வானோர்  பிரான்  என்னை  ஆண்டிலனேல்  மதிமயங்கி  ,  ஊனா ருடைதலை மேல்  உண்பலிதேர்  அம்பலவன்”  என்னும்  திருப்பாட்டில்    ‘மதிமயங்கி’ என்பதைப்  பெயராகக்  கொண்டு  ஆறாம்  வேற்றுமை  உருபு  விரித்து  மதிமயக்கமுற்ற   பிரமனது  தலையோட்டிற்  பலி  தேரும்  அம்பலவன்  என  முடித்துக்காட்ட  அறியாமல் , அதனை  வினையெச்சமாகக் கொண்டு  மதிமயக்கத்தை  அம்பலவர்க் கேற்றினர் . இன்னோரன்ன  பலவுள .  ஒரு  புலவன்  காலக்கழிவு  நோக்காது  நெடிதாராய்ந்து  தன்  வாணாளில் ஒரு  நூற்கு  உண்மையுரை  எழுதி  முடிப்பினும்   போதியதே .   பிழைபடப்  பல  வெழுதுதலிலும்   பிழையறச்  செப்பனிட்டு  ஒன்று  எழுதுதல்   நன்றாம் .

  • புலவர் , புரவலர் , செய்யுள்  முதலியன

மொழி பெயர்த்தல்  , செய்யுள்  நூல்  யாத்தல் , பண்டை  நூல்களுக்கு  விளக்கவுரை  எழுதுதல் .  ஆராய்ச்சியுரை  வரைதல்  ஆகிய  இன்னோரன்ன  துறைகளெல்லாம்   நம்  தண்டமிழ்   வளர்ச்சியுறுதற்கு  ஏற்றனவாம் . இத் துறைகளிற்  புலவர்  பெருமக்கள்  தலைப்படுதற்குத்   தக்க  பொருள்  வருவாயிருத்தல்  இன்றியமையாத  தொன்றே . இதற்கென்  செயலாம் .? தமிழ்  நாட்டுச்  செல்வர்கள்  கடைக்கணித்தல்  வேண்டும் .  இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்  போன்ற  சங்கங்களின்  வாயிலாகச்  செல்வர்கள்  தக்கவாறு  பொருளுதவி  புரிந்து , அப் புலவர்  பெருமக்களைப்  போற்றுதல்  வேண்டும் .  பொருள்  படைத்தவர்  ஒவ்வொருவரும்  தத்தம்  பெயரால்  ஒவ்வொரு  துறைக்கும்  இத்துணைப் பொருள்  கொடுப்போமென  முன்  வந்து சங்கங்களின்  வாயிலாக  வெளியிட்டுப்  புலவரை  ஊக்குதல்  வேண்டும் .  தமிழ்  நாட்டுத்  தலை நகரங்களிற்   குணங்  குற்றங்களை  ஆராய்தற்குரிய  புலவர்  கழகங்களை  அமைத்து  அக் கழகத்தார்  நடுநிலை  திறம்பாமல்  ஆராய்ந்து  மதிப்பிடும்  நூலுரை  முதலியவற்றிற்குத்  தக்கவாறு  பொருட்  பரிசிலும்  பட்டங்களும்  வழங்கல்   வேண்டும் .இச் செயன்முறை  பெரிதும்  தமிழ்நாட்டுச்  செல்வர்களைப்  பொறுத்ததாகும் .  

                 புலவர்க்கு  வறுமை  தேர்தல்  பண்டுதொட்டு  உள்ளதே . அதற்குக்  காரணம்  அவர்  புலமைச் செல்வத்தைப்  போற்  பொருட்  செல்வத்தை  ஈட்ட  விருப்பமும் , முயற்சியும் , உபாயமும் . மேற்கொள்ளாமையேயாகும். புறநானூற்றை  ஆராய்வோமாயின் , புலவர்  வறுமைத் துன்பம்  பல  வெளியாம் .  பெருஞ்  சித்திரனார்  என்னும்  புலவர்  பெருமான்  குமண வள்ளலை  நோக்கி , “வாழு  நாளோ  டியாண்டு  பலவாக” எனத் தொடங்கிக்  கூறிய  பாட்டில் ,  தம் , தாய் , மனைவி , குழந்தைகள் , சுற்றத்தாராகிய  இவர்கள்  பசியால்  வருந்துதலைக்  கூறும்  பகுதிகள்  கன்னெஞ்சையுங்  கரைப்பன  அல்லவோ !

                ஆனால் , இவர்  வருத்தங்  கண்டு  அக்காலத்து  வள்ளல்கள்  இவர்களை  எவ்வாறு  பேணினர்  என்பதற்கு  அக் குமண  வள்ளல்  வரலாறு  ஒன்றே   போதிய  சான்றாகும் . உண்மையாகவே  தம்மைப்  பாடி  வந்த  புலவர்க்கு  உயிரையும்  வழங்க  ஒருப்பட்டவ ரல்லரோ   நம்  தமிழ்  வள்லல் !  ஆ !  ஆ !  அவர்  கொடைக் குணத்தை என்னென்று  கூறுவேன் .  உள்ள  பொருளெல்லாம்  புலவர்க்கீந்து  உடன் பிறந்தார்க்கு  அஞ்சிக்  காடுறை காலைத்  “தலை  கொடு வருவார்க்கு  ஆயிரம்  பொன்  தருவேன் “  எனப்  பறைசாற்றிய  தம்பியார்  செயலை  அன்புடையார்  சிலர்  நம்  வள்ளற்  பெருமானுக்கு  மறைவிற்  கூற ,  அது  கேட்ட ஞான்று   அவ் வள்ளலார்  முகம்  மேற்கொண்ட   மலர்ச்சி ,  அரசியல்  முடிசூடத்  தொடங்குங்கால்   மந்தரை  சூழ்ச்சியால்  வனம்  போக்க  முயன்ற  கைகேயியின்  கடுஞ் சொற்  கேட்டு ,  “அப்பொழுதலர்ந்த  செந்தாமரையினை”  வென்ற  இராமபிரான்  முகமலர்ச்சியினும்  விழுமியதன்றே !  இராமபிரானுக்கு  நாடு  நீங்குதலும் , குமண வள்ளலுக்கு  உடல்  நீங்குதலும்  அம் மலர்ச்சிக்குக்   காரணங்களான மை  ஈண்டுக்  கருதற்பாலது .  அவ்வள்ளல்  தன்  மகிழ்ச்சிக்குக்  காரணமாக்  கருதியது , “இறந்த ஞான்று  பெற்ற  தாயும்  பிணமென  வெறுக்கச்  சீயோடு  புழுவும்  மணமும்  சேரும்  இச் சென்னிக்கு  ஓராயிரம்  பொன்  விலை  மதித்தனன்  என்  அருமைத்  தம்பி “   என்பதேயாகும் . இங்ஙனம்  தம்  உயிரையும்  புலவர்  பொருட்டு  வழங்க  ஒருப்பட்ட  வள்ளல்கள்  வாழ்ந்த  காலத்துப்  புலவர்  வறுமை  நெடிது  நில்லா தொழிந்திருக்குமென்பது  கூற  வேண்டா .  புலவர்மாட்டு  வள்ளல்கள்  வைத்த  மதிப்பிற்கோர்  எல்லையில்லை.

        எத்துணை  வறுமை  நேரினும்  மதிப்பிலார்  தரும்  பரிசிலைப்  பெறுதற்கு  அக்காலத்துப் புலவர் ஒருப்படுதலும்  இல்லை .  இதனால் , வறுமை  முதலியவற்றைக்  கருதித்  தம்  தகுதியினின் றும்  இழிதலாகாதென்பதைப்  புலவர்கள்  இன்றியமையாது  போற்றிக்  கோடல் வேண்டுமென்பது  போதரும் , வருந்தியும்  தங்  கடமையைச்  செய்தல் வேண்டும் . கற்றல்  பொருள்  பெறுதற்கன்று;  அறிவைப் பெருக்கி  அதனால்  இன்பம்  நுகர்தற்கேயாம் . புலவர்  கருத்து  இவ்வாறாதல்  வேண்டும்  .புரப்பார்   கருத்துப்  பொருட்கொ டையிற்   செல்லல்  வேண்டும் .  

            புலவர்களைப்  பாதுகாத்து  அவர்  செந்நாவாற்  பாராட்டப் படுதலினும்  செல்வர்  பெறும்  பேறு  வேறு  யாதுளது ? காலத்தாற்  கவரப்பட்ட  செல்வருட்  புகழுடம்பு  கொண்டு  இன்றும் நம்மோடு  அளவளாவி  இன்புறுவார் , புலவர்  பாடும்  புகழ்  படைத்தாரன்றே ! கற்றவர்க்கு  ஈத்துவக்கும்  பேறில்லாதார்  ,  செல்வம்  படைத்தும்  ஒளியும்  புகழும்  இலராய்,  விலங்கோடு  ஒப்ப  உண்டு  களித்துத்  துஞ்சும்  இயல்பினரேயாவர் .  ஆதலாற்  செல்வர்களே  !  புலவரைப்   போற்றுதல்  நும்மைப்  போற்றுதலாகும் . ஆதலின் , தமிழ்  நலம்  கருதி  இன்னோரன்ன துறையில்  இறங்குமின்கள் . செல்வம்  படைத்த  ஞான்றே  புலவர்  பக்கலிருக்க  விழைமின்கள் !  பற்பலவாற்றானுஞ்  செலவழிக்கப்படும்  நும்பொருட்  கூறுகள் ஒன்று  புலவர்க்கெனச்  செய்மின்கள் !  அவிச்சுவையினும்  இனிய  கவிச்சுவையை   நுகர்மின்கள் !  நும்  பூதவுடல்  வன்மையுற்றி ருக்கும்   ஞான்றே  புகழுடலின்  ஆக்கத்திற்கு  வேண்டுவன  புரிமின் கள்!  அழிதன்  மாலையதாகிய  செல்வத்தைக்  கொண்டு  அழியாப்  புகழை   வளர்த்தற்குரிய   நெறியைப்  பற்றுமின்கள்  !  புகழொன்றோ ,  வலவனேவா  வானவூர்தி   யெய்துதலாகிய   பண்ணியப்  பயனும்  நுங்கட்காம் .

“அர்ச்சனை  பாட்டேயாகு  மாதலால்  மண்மேல்  நம்மைச் 

 சொற்றமிழ்  பாடுகென்றார்  தூமறை   பாடும்  வாயார் “

என்று  அருண்மொழி  தேவரும் ,

“தித்திக்கு  மணிவார்த்தை  இன்னுஞ்  சின்னாள் 

 திருச்செவியில்  அருந்தவும்” 

என்று  பரஞ்சோதி  முனிவரும்  கூறியாங்கு , மறை  பாடும்  பெரும்  புலமையும்  ,  பொன்மலை  வெள்ளி மலை களாகிய  பெரும் பொருளும் , வாய்க்கப்பெற்று   எல்லாவுயிர்க்கும்  உயிராக  விளங்கும்  பரமபதியாகிய  இறைவரே    சுந்தரமூர்த்தி  நாயனார்  மாணிக்கவாசகர்   முதலிய  அருட்புலவர்   திருப்பாடல்களைக்  கேட்க  விழைந்தன ரென்றால்  அவரால்  இயக்கமுறும்  நாம்  புலவர் பாட்டில்  அவாவுறாதிருத்தல்  எங்கனம்  அமையும் ?  

  •  சங்கங்கள் , கல்லூரிகள்  முதலியன

         இனி , இக்காலத்துத்  தமிழ்  புரப்பான்  எழுந்த  சங்கங்கள்  கல்லூரிகளைப்  பற்றிச்  சிறிது  கூறுவேன் . தமிழ்  வளர்த்தலையே  பெரு நோக்கமாகக்  கொண்டு  எழுந்த  சங்கங்கள்  பலவற்றுள்   மதுரைத்  தமிழ்ச்  சங்கமும், இக்கரந்தைத்  தமிழ்ச் சங்கமும்  ,  எம்  நகரங்களிலும்   பிறவூர்களிலுந்  தோன்றிய  சங்கங்கள் பலவற்றுட்  சிலவுமே   இயன்றவரை தம்  கடமையைப்  புரிந்து வருகின்றன . இற்றைக்கு  இருபத்து மூன்று  ஆண்டுகளுக்கு  முன்னர்   ஓர்  உத்தமரின்  தூய  எண்ணத்தில்  அரும்பி   அதன்  பயனாக  இதுகாறும்  செவ்வி  குலையாது  பாதுகாக்குந்  துணைவரைப்  பெற்று  விளங்கும்   மதுரைத்  தமிழ்ச்  சங்கம் , மாணாக்கர்  பலருக்கு  உணவு  கொடுத்துத்  தமிழ்  கற்பித்து , தேர்ச்சி  பெற்றோர்க்குத்  தகுதிப்  பத்திரமும்   ஓரளவு  பொற்  பரிசும்  உதவி , தனித்  தமிழ்க் கல்விக்கு  வரம்பிட்டு  வளர்ந்து  வரும்  செய்தி  பாராட்டத்தக்கதே . இன்னும்  அது  தன் நோக்கங்களெல்லாவற்றையும்   முற்ற  நிறைவேற்றுவதற்குப்   பொருளாளர்  உதவியை  வேண்டி  நிற்கின்றது .   

            இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின்  நிலையை  இறுதியிற்  கூறுவேன் .

            எம்மனோர்  நரங்களில்   முளைத்த  சங்கங்களிற்  பல,  சில  ஆண்டுகளாகக்  கண்  விழிப்பதும்  உறங்குவதுமாகக்  காலத்தைக்  கழிக்கின்றன .  பொருட்குறை  நேராதோயென்று  நீங்கள்  நினைக் கக்கூடும் . அன்பில்  வழிப்  பொருளிருந்தும்  அது  நற்காரியத்தில்  எங்ஙனம்  பொருந்தும் ?  எம்  தனவைசியர்  கணக்கற்ற  பொருளைப்  பல்யாண்டுகளாக  இவ்விந்திய   தேயத்திலுள்ள  சைவ  வைணவ  ஆலயங்களுக்குச்  செலவிட்டிருக்கின்றனர்  .  தெய்வ  பக்தியை  மக்களுக்கு  உண்டாக்குதற்கு  இவ்வறங்கள்  பயன்படு வன வெனினும் , அதற்கு  இன்றியமையாச்  சாதனமாகிய  கல்வியையன்றோ  முதன்மையாக  வைத்துப் போற்றல்  வேண்டும் . சில  ஆண்டுகளுக்கு  முன்வரை  வடமொழி  வேத  பாடசாலை களுக்கும் , வடமொழிக் கல்லூரிகளுக்கும்  பெருஞ்  சோற்றில்லங் களுக்கும்  பொருளை  வாரி  இறைத்து  வந்தனர் .  சின்னாளாக ஆங்கிலக்  கல்லூரிகளுக்கும்  வழங்கத்  தலைப்பட்டு  வருகின்றனர்.  இவ்விரு  திறத்திலும்  செலவிடப்பட்ட  பொருட் கூறுகளில்  ஒரு  சிறு  பகுதியேனுங்  கொண்டு  நம்  அருமைச் செந்தமிழ்த்  தெய்வத்திற்குத்  திருக்கொயில்  அமைத்திலர் . தமிழ்த் தெய்வத்தை வழிபடும்  மாணாக்கர்களுக்குப்  பெருஞ்  சோற்றில் லங்கள்  அமைத்திலர் . இக்குறையை  எடுத்து  அன்பர்கள்  பலர்  அடுத்தடுத்துக்  கூறி  வந்ததன்  பயனாக  இப்பொழுது  எம்மவர்  நகரங்கள்  சிலவற்றில்  தமிழ்த் தெய்வத்  திருக் கோயில்கள்  அமைத்து , தமிழ்ப்பிளைகளுக்கு  ஓர்  அளவு  கல்வி  கற்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர் .  அக்கல்வியும்  உயர்தர  நிலையில்  இன்னும்  பயிற்றப்படவில்லை .  

                 பல்யாண்டுகளாக  வடமொழி  வேத  சாத்திர  பாடசாலை களுக்குப்  பொருள்  செலவழித்த  முறையில்  தமிழ் மொழி வளர்ச்சி குறித்துச் செலவிடாமைக்குக்  காரணம்  இதன்  பெருமையை  அவர்களுக்கு  எடுத்துச் சொல்லுவா ரில்லாமையும் , , யாரேனும்  தமிழ்ச் சுவையுணர்ந்தார்  சொல்ல  விரும்பின்  அவர்  சொல்  மதிக்கப்படுதல்   இல்லாமையும் , வடமொழியாளர்  செல்வாக்கு  இவர்களிடை  மிகுதிப்பட் டிருந்தமையுமேயாம் .  வடமொழியாளர்  தம்  மொழியைப்  பேணுதற் பொருட்டுச்  செல்வரைத்  தூண்ட  முயல்வது  அவர்  கடமையே .  அது  பற்றித்  தமிழரைப்  புறக்கணித்  தொதுக்கும்படி  அவர்கள் உபதேசிக்கவில்லை .  நாம்  நம் தாயை  மறந்திருப்போமாயின்   நமக்கு   நினைவுறுத்துவார்   யாரே ?  

               எம்  மரபினர்  புதிய   முறையில்  எவ்வறத்தையும்  முதற்கண்  தொடங்குதல்  அரிது  .  அறிவாளரொருவர்  தொடங்கு வாராயின் , அவர்  முறையைப்  பின்பற்றி  மற்றையோரும்  அந்  நற்காரியத்திற்  சேறலிற்  பெரிதும்  விரைவு  மேற்கொள்வர் .  இந்  நற்குணம்  ஒன்று  வருங்காலத்தில்   நலமளிக்கும்  தகையது . இதற்கு  எம்மவருள்  ஒருவர்  தக்கவாறு  வழிகாட்டியுள்ளார் . அவர்கள்  ஸ்ரீ நடராசர்  திருவருட்பாங்கால்   கானாடுகாத்தானிலே  எம்  தனவைசிய  மரபிலே , சிறந்த சிவஞானச் செல்வராகவும்  அருட் கவியாகவும் , விளங்கிய  பட்டினத்து  அடிகளைக்  குல முதல்வராகக் கொண்ட   செல்வப்பெருங்குடியிலே   தோன்றிய  திருவாளர்  சர்  சா  ராம  மு  அண்ணாமலைச் செட்டியாரவர்களே  ஆவர் . இவர்கள்  சிதம்பர  தலத்தில் ஆங்கில  வடமொழிகளுக்கு  அமைந்த  பெரிய   கல்லூரிகளை  யொப்பத்  தமிழ் மொழிக்கும்  ஸ்ரீ  மீனாட்சி திருப்பெயரால்  ஒரு  கல்லூரியமைத்துப்  பாதுகாத்து வருகின்றார்கள் . இது  தொடக்கம்  ஸ்ரீ நடராசர்  திருமுன்  நேர்ந்தமையால் , இனி  நம்  தமிழ்நாடு  முழுவதும் இம்முறை  மேற்கொள்ளப்படுதற்கு  இது  நன்னிமித்த  மாகுமென்பதி  ஐயமின்று . இவர்கள்  முறையைத்  தழுவி  மற்றையோரும்  தமிழ்  நாட்டிலுள்ள  ஒவ்வொரு  பெரிய  நகரங்களிலும்   நூற்றுக்கணக் கான  மாணவர்களுக்கு  உண்டி  உடை  முதலிய  உதவிகளைச்  செய்து தமிழ்  கற்பிக்கத்  தலைப்படுவாராயின் , இந் நாடு  சில  ஆண்டுகளில்  கல்விச் செல்வர்கள்  பலரைப்   பெற்றுத்  திகழ்வதாகும் .  

               தமிழ்  கற்க  விரும்பும்  நம்  நாட்டு  ஏழைச்  சிறார்க்கு   உணவு  கொடுத்தாலன்றி  அவர்கள்  கல்வியில்  தலைப்படார் . பசிப்பிணி யென்னும்  பாவியாற்  பற்றப்பட்டார்  கல்விச்சுவையை மிசைய  எங்ஙனம்  விரும்புவார் ?  மாணவர்களுக்கு  உணவு  கொடுத்துக்  கற்பிக்கும் கல்லூரி  யமைத்தலாகிய  நல்லறம்  புரிவார் ,  உலகத்து  மக்கள்  உடல்  நலத்திற்   குரியதும் உயிர்  நலத்திற்குரியதுமாகிய  இருவகைப்  புண்ணியங்களையும்  ஒருங்கு  செய்தவராவர்  . ஓரிடத்தில் ஒரு  நூறு  சிறுவர்க்கு  உணவு  கொடுத்துக்  கற்பிக்கும்  தனித் தமிழ்க் கல்லூரி இதுகாறும்  நம்  நாட்டில்  அமைந்திலதே !  இத்தகைய  நிலையம்  ஒன்றைக்கண்டு  கண்ணுங்  கருத்தும்  குளிருங்   காலம்  என்று  வாய்க்குமோ !  வேண்டுவார்  வேண்டுவன  அருளும்  இறைவன்  நும்  செவ்விய  உள்ளத்தில்  நின்று  இவ்வரும் பெருஞ்   செயலில்  நும்மை  ஊக்கி  அருளுவாராக .  

  • சமயக்  கல்வி

    நம்  செந்தமிழ்  மொழியைச்  செவ்விதிற்  பயிற்றுங் கல்லூரிகளி  லெல்லாம்  பிற  சமயங்களோடு  முரணாமல்   நம்  சமயக்  கொள்கைகளை   மாணாக்கர்களுக்கு   எளிதிற்  புலனாகும்  வண்ணங்  கற்பித்தல்  வேண்டும் . தெய்வமணங்  கமழாத  கல்வி  சிறந்த  பயனுடையதாகாது . “கற்றறியேன்  கலை  ஞானம்  கசிந்துருகே  னாயிடினும்”  என்ற  பெரியார்  திருமொழியும்  கல்வியின்  பயன்  கடவுளை  அறிந்து  நினைந்து வழிபடச் செய்தலேயாம்   என்று  அறிவுறுக்கும் .  கடவுளியல்  முதலியனவும், வழிபடுமுறை  முதலியனவும்  சமய  நூல்களைப்  பயின்றா லொழியத்   தெரியா . எல்லாம்  வல்ல  இறைவன் , “கற்றவர்  விழுங்குங் கற்பகக்கனி”  யாதலின் , அக்   கனியின்  இயல்பு  அறிதற்குரிய  வழியைக்  கல்வியின்  தொடக்கம்  முதல்  மேற்கோடலே  நன்றாம் . இக்குறிப்பை  நம்  தமிழ்  மூதாட்டியாகிய  ஒளவையார்  சிற்றுருவிற்  பெரும்பொருள்  பொதுள  அருளிய  ஆத்திசூடி , கொன்றைவேய்ந்தோன்  முதலிய  நூல்கள்  நன்கு  வலியுறுத்துவனவாம் .  மக்கட்குரிய  பொது  வொழுக்கங்களையும்  சமயம்  பற்றிய  சிறப்பொழுக்கங்களையும் ஒருவன்  ஒருங்கு  எய்துதற்குரிய  வழி  சமய நூற்  பயிற்சியானேயாம் . ஆதலின் , நம்  சிறார்  பயிலுதற்குரிய   பாடங்களுள்   சமயக்  கொள்கைகளைப்   பற்றிய  பாடமும்  ஒன்றாம்படி  செய்தல்  தமிழ்க்  கல்லூரிகளை  நடாத்தும் தலவர்களால்  மேற்கொள்ளத்தக்கதொன்றாம் .

                            6 .  கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்

      இனி , இக்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தைப்  பற்றிச்  சில  கூற  வேண்டுவது  என்  கடமையாகவுள்ளது .  இச்சங்கம்  இறைவன்  அடிசேர்ந்த  திரு . வே . இராதாகிருட்டிண பிள்ளை  அவர்கள்  நல்லுள்ளத்திற்  பதிந்த  செழுமை  மிக்க  வித்தினின்றுங்  கிளைத்தெழுந்ததாகும் . தூய்மைமிக்க  குளத்தினின்றும்  தோன்றுவது பிற்காலத்தில்  எந் நிலையிற்   செழித்து  வளரும்  என்பதற்கு  இச்சங்கமே  சான்றாகும் . அவர்கள்  பருவுடலை  யான்  அறிவேனாயினும் , அவர்களுக்கு  முன்  தோன்றியவர்களும்  இற்றை ஞான்று   இச்சங்கத்தைக்  கண்ணுங்  கருத்துமாகப்  பாதுகாத்துவருகின்றவர்களும் , என் இனிய நண்பரும்  ஆகிய   திருவாளர்  த . வே . உமாமகேசுவரம்  பிள்ளை  யவர்களின்  உயர்ந்த  குனஞ்  செயல்களே  அவர்க்கு  இளையாரின்  நிலையையும்  இற்றென்று  கிளப்பனவாம் . அவர்  நுண்ணுடம்பை  தம்  அகக்கண்  கண்டு  களிக்கின்றது .  அந் நல்லவ ருள்ளத்திற்  பதிந்து  வெளிப்பட்ட  இக்கல்விக் கழகம்  நாடோறும்  திங்கடோறும்   ஆண்டுதோறும்  புதிய புதிய திருத்தங்களை  மேற்கொண்டு  , பற்பல  அரிய  தமிழ்ப்  பணிகளை  இயற்றி  வருகின்றது .

              இது, ‘பெத்தாச்சி புகழ் நிலையம்’  என்னும்  சுவடி  நிலையம் , கைத்தொழிற்  செந்தமிழ்க் கல்லூரி , திங்கள்  வெளியீடு  முதலியவற்றைத்  தன்  உறுப்புக்களாகக்  கொண்டு  எல்லா  நலன்களும்  ஒருங்கமைந்த தலைவரைப்  பெற்றுத் , தான்  செய்யவேண்டிய  செயல்களைச்   செவ்வன  ஆற்றி  வருகின்றது; நூற்றுக்கணக்கான   மாணவர்களுக்குத்  திருந்திய  முறையிற்  கல்வியை  ஊட்டுகின்றது . இக் கழகத்தினின்றுந்  திங்கள்  வெளியீடாகத்  தோன்றிய  தமிழ்ப்  பொழிலோ   தோன்றிய  சில  திங்களுள்  தமிழன்பர்களின்  உள்ளத்தைக்  குளிர்விக்கும்  உள்ளுறையாந்  தண்ணிய  நிழலையும்  , அரும்பொன்  மணமிக்க   வேற்று மொழி விரவாத்  தண்டமிழ்ச்  சொற்றிரளாம்  நறுமலர்த் துணர்வுகளையும்  உதவித்  தமிழ்  நிலத்தாரை  மிகவும்  இன்புறுத்தி  வருகின்றது . வேற்று மொழிப்  பயிற்சியால்  வெதும்பிய  அன்பர்கள்  இப்பொழிலை  அடைவார்களாயின்  அவ்வெப்பம்  ஒழியப்பெற்றுச்   செந்தமிழ்த்  தட்பத்தால்  இன்புறுதல் ஒருதலை .

              இன்னோரன்ன  அருஞ்  செயல்களை  மேற்கொண்ட  இச்சங்கத்தின்  வேலையோ  மிகப் பெரிது . இதற்குத்  துணைக்  கருவியாகவுள்ள  பொருள்  வருவாயோ  மிகச் சுருக்கம் .  இச்சங்கத்தின்  அருமைத் தலைவராகிய  திருவாளர்  உமா  மகேசுவரம்  பிள்ளையவர்களும் , ஏனைய  அன்பர்களும்  ஆண்டுதோறும் உதவி  வரும்  பொருளைக்  கொண்டே  இஃது  இத்துணை  அரிய  வேலை ஆற்றி வருகின்றது .  இங்ஙனம்  ஆண்டுதோறும்  பலரிடத்தினின்றும்  சிறிது  சிறிதாகத்  தொகுக்கப்படும்  பொருளைக் கொண்டு  இப்பணி  நடைபெறுதல்  ஒரு வகையில் எல்லார்  அன்பிற்கும் இது நிலைக்களனாதலைப்   புலப்படுத்துமாயினும்  , இங்ஙனமே  கடைபோக  இயற்றுதல்  அரிதாகலான்  இதற்குத் தக்க பெரும் பொருள் மூலதனமாகத்  தொகுத்தமைத்தல்  இன்றியமையாததாகும் .

              பண்டைக்காலத்துப்  பெரும்  புலவர்களையெல்லாம்  பொருட் கொடையாலும்  பிறவற்றாலும்  நம்  உயிரினுஞ்  சிறப்பப்  போற்றி  வந்த  சோழ  மன்னர்கள்  வாழ்ந்த  நாடன்றோ  இது . செந்தமிழ்க்  கல்வியைச்  சைவ  சமயத்தோடு  வழங்குதற்கு  எழுந்த  சைவ  மடங்கள்  பல  விளங்கப்  பெறுகின்றதும் இந்  நாடன்றோ!  அம் மடங்கள் பண்டு செய்த தமிழ்ப் பணிகள் அளவில்  லாதனவாகும் .  அம்மடங்களில்  விளங்கிய  சைவ  சீலர்களாகிய   அத்  துறவறச்  செல்வர்களால்  வெளிப்பட்ட  செய்யுணூல்கள்  எத்தனை  !  சிறந்த  உரை  நூல்கள்  எத்தனை ! அவர்பாற்  கசடறப்  பயின்றார்  எத்துணையர் !   அம்மடங்களுக்குத்  தலைவராக  இற்றை  ஞான்றுள்ளார்   தம்முன்னையோர்  போலத்  தாம்  தமிழ்ப்  பரிபாலனத்திற்   றலைப்பட்டு  இன்னோரன்ன  தமிழ்ச்  சங்கங்களுக்கும்  உதவி  புரியலாமே !  அவர்கள்  இதனை  உளங்  கொள்ள அவர்  உளத்துறை  தெய்வத்தை யாம்  வேண்டுதலே  யன்றி  வேறென் செய்யக்  கடவோம்  !  

          மற்றை  நாடுகள்  யானைகளையும்  முத்துக்களையு முடையனவாக , மக்கட்கு  இன்றியமையாச்  சோற்றை  மிகவுடையதன்றோ  இச் சோழ வளநாடு  ?  இச் செல்வ  நாட்டில்  அருமருந்து போல்  தோன்றிய  இச்சங்கத்தை  அடுத்த  மாணவர்க்குச்  சோறிட்டுத்  தமிழ்  கற்பித்தலன்றே  இந் நாட்டின்  பெருமைக்கு  ஏற்றதாகும் .?  இங்குள்ள  பொருளாளர்  மனங் கொள்வாராயின்   இஃது   இயலாததொன்றோ  !  பிற மொழிக்   கல்லூரிகளுக்கு  ஒரு  திங்கட்கு  எத்தனை  ஆயிரமோ  செலவாக , இச் செந்தமிழ்த்  தாயின்  திருக்கோயிலுக்குத்   திங்களொன்றிற்கு  ஓராயிரமேனும்  பயன்படுத்தல்  வேண்டாமா ?  இத்துணை  வருவாயுள்ள  மூலப் பொருள்  தொகுத்தல்  பெருங்  காரியமா ?  

தமிழ்க்கண்  அன்பு  மிக்க  திருவுடையீர் !

நம்  வாழ்நாளிற்  பற்பல  பகுதியாகச்  செலவிடப்படும்  பொருட் கூறுகள் என்று  இதற்கெனத்  தனிப்படுத்துதவ  முன்  வருவீராயின்  , இது  நிறைவேறுவதற்கு  எத்துணை  நாட்  செல்லும் ? ஆ !  எம்  நகரத்து வைசியச்  செல்வருள்ஒருவர்  மனங்கொள்வாராயின்  அவருதவியே  இதற்குக்  கண்டு  மிகுவதாமே  !  தமிழ்ச்சுவைக்கு   அவாவுற்றுச்   சுந்தரர்  மாணிக்கவாசகர்  முதலிய  அருட்பெருங்கவிகளை  இரந்த  சிவபிரானுக்குத்  திருக்கோயில்  புதுக்க  எம்மவருள்  ஒரு  குடும்பத்தார்  தனிமையிற்   பதினைந்து   நூராயிரங்களுக்குமேற்   செலவிட்டிருக்கின்றனரே  !  அத்தகையார்  அப்பெருமானுக்கு  இன்சுவை  யமுதாவது  இத்தமிழென  உணர்வரேல்  இதற்கு  ஒரு  நூராயிரம் உதவல்  பெரிதாகுமோ ?

               இச் சோழவளநாட்டில்  அளவிறந்த  நிலப் பகுதிகளையு டைய   பெருஞ் செல்வர்கள் பலர்  இருக்கின்றனரே ! வேற்று  நெறியிற்  கணக்கிறந்த  பொருள்களை  வாரியிறைக்க  மனம்  ஒருப்படும்  அவர்கள்  இன்னோரன்ன  தமிழ்ச்சங்க  வளர்ச்சிக்கு  உதவி , கிடைத்தற்கரிய  புகழையும்  புண்ணியத்தையும்  கைப்பற்ற   இதுகாறுந்  தாழ்ந்திருந்த லென்னையோ !  தினைத்  துணை  நன்றியையும்  பனைத்துணையாக  ஏற்றுக்கொண்டு  பாராட்டும்  இச்சங்கத்தின்  பயின்றரு குணத்தை  யுணர்ந்த  நீவிர் . இதற்குப்  பனைத்துணை  உதவுவீராயின்  இது  கூறும்  புகழுரை  யெல்லாம்  நும்  மேலாவாமல்லவா !   இந் நாட்டுச்  செல்வர்களாகிய  நும்மனோர்  உள்ளங்களும் எம்  தனவைசியப்  புண்ணிய  சீலர்கள்  உள்ளங்களும்  இச்சங்க  வளர்ச்சியில்  ஒன்றுபட்டுப்  பொருளுதவி  புரிந்து  மகிழப்  பெருங்கருணைத்  தடங்கடலாகிய  இறைவன்  திருவருள்  பாலிப்பாராக ! 

                                         7 .  தொகுப்பும்  வாழ்த்தும்

ஐயன்மீர் !

                    இதுகாறுங்  கூறியவற்றால்  கல்வி  மக்களுக்கு  இன்றி யமையாத  தென்பதூஉம் ,  அதனைத்  தாய்மொழி யாகிய  தமிழ்  மூலம்  பயிலல்  வேண்டுமென்பதூஉம் , தமிழின்  தொன்மையும்  சிறப்புக்களும்  தொல்காப்பிய  முதலிய  இலக்கண  நூல்களானும்  பலவகை  இலக்கிய நூல்களானும்  சமய  நூல்களானும்  விளங்குமென்பதூஉம் , தமிழ்  பிறிதொன்றினின்றும்  தோன்றாத்  தனி மொழியென்பதூஉம் ,  இதன் கணுள்ள   அகப்பொருள்  முறை  வனப்புக்கள்  சிறந்தனவென்பதூஉம், இஃது  அறிவு மொழி யென்பதூஉம் , போலி முறைகளைக்  களைந்து  இதனை  வளர்க்க  வேண்டுமென்பதூஉம் ,  வளர்த்தற்குரிய  வழிகள்  மொழி பெயர்ப்பு, ஆராய்ச்சி , செய்யுணூல் , உரைநூல் , வரைதல்  முதலியன  வென்பதூஉம் ,  அத் துரைகளில்  தலைப்படும்  புலவர்களை   பொருட்பரிசல்   பட்டங்கள்  அளித்துப்  போற்றுதல்  வேண்டுமென்பதூஉம் ,  பண்டைப் புலவர்களின்  இயல்பும்  அவர்களைப்  பாதுகாத்த  வள்ளல்களின்  இயல்பும்  இன்ன வென்பதூஉம் ,  புலவராற்  பாராட்டப்படுதல்  செல்வர்க்கு  இன்றியமையாத  தென்பதூஉம் , இக்காலத்துத்  தமிழ்  வளர்ப்பான் எழுந்த  சங்கங்களின்  இயல்பு  இன்னவென்பதூஉம் ,  பெரிய  தனித்  தமிழ்க்  கல்லூரிகள்  அமைத்து   பன்னூறு மாணவர்க்கு   உணவளித்துத்  தமிழ்  பயிற்றல்  வேண்டுமென்பதூஉம் ,  தமிழ்ப்  பலகளைக் கழகம்   ஒன்று  விரைவில்   நிலைபெறச்  செய்தல்  வேண்டுமென்பதூம் ., தமிழ்ப்  பள்ளிகளில்  மொழிப்  பயிற்சியோடு  சமய  நூற்பயிற்சியும்  மாணவர்க்கு  வேண்டுமென்பதூஉம் , இக்கரந்தைத்  தமிழ்ச்  சங்கத்தின் மேம்பாடும்  இதற்கு  வேண்டுவனவும்  இன்னவென்பதூஉம் , தமிழ்  நாட்டுச்  செல்வர்கள்  தமிழ்  வளர்ச்சியிற்  பேரூக்கமுடையராய்   தக்கவாறு  பொருளுதவி  புரிந்து  போற்ற  வேண்டுமென்பதூஉம் ,  திருவருள்  முன்னிற்க  வென்பதூஉம் , பிறவுமாம் .

            இத்துணைக்காலம்  என்  சிற்றுரைக்குச்  செவிசாய்த்துப்  பொறுமை யணியை மேற்கொண்டு  விளங்கும்  பெரியீராகிய  நுங்கள்  நன்றியை  நினைவுட்  கொண்டு ,என்  உளமார்ந்த  வணக்கத்தை  நுமக்கு  உரிமைப்படுத்துகின்றேன் .

போற்றுந்  தமிழும்  புலவரும்  வாழ்கநலஞ் 

சாற்றுங்  கரந்தைத்  தமிழ்ச்  சங்கம்  —  ஏற்றமொடு

பல்லாண்டு  வாழ்க   அருல்  பாலித்  ததுபுரக்கும்

எல்லோரும்  வாழ்க  இனிது .

                                    &&&&&&&&&&&&&&&&&&&

                            2 .  தமிழ்ப்   புலமை

( துரையூரில்  ( 06 . 08 . 1932 ) கூடிய  திருச்சிராப்பள்ளி —  தஞ்சை மாகாணத்  தமிழ்ப்  புலவர்  மாநாட்டில்  நிகழ்த்திய  திறப்புரை )

ன்பர்களே ! 

                         இங்குத்  திறந்து  வைக்கப்  பெறுவது  தமிழ்ப்  புலவர்  மாநாடாகும் . நம்  அமிழ்தினுமினிய  தமிழ்  மொழி  பண்டைக்  காலத்தில்  இற்றை  ஞான்றினும்  எத்தணையோ  பன்மடங்கு  அகன்ற  நிலப்  பரப்பைத்  தனக்குரியதாகக்  கொண்டு  விளங்கிய தென்பதும் , குமரியொடு  வடவிமயத்தொருமொழி  வைத்துல காண்ட   சேரலாதனால் , குமரிமுனை  தொட்டு  இமயமலை வரையும்  இறை மொழியாக  வழங்கப்  பெற்ற  தென்பதும் , தொன்மையில்  தனக்கு  நிகராக  ,  இக்காலத்து  வழங்கும்  மொழிகளில்  மிகச் சிலவன்றி  இல்லை  யெனத்தக்க  நிலையில்  உள்ளதென்பதும்   நீவிர்  நன்றுணர்வீர்கள் .  ஆதலின் , இவை  பற்றி  யான்  விரித்தல்  வேண்டா  வென  நினைக்கிறேன் .

    செப்பமிக்க  இயலமைப்பும்   அவ்விலக்கணங்களுள்   வேறு  எம் மொழிக்கும்  இல்லாது தனக்கெனச்  சிறப்பு முறையின்  அமைந்த  பொருளிலக்கண  ஒழுங்கும்  , முதிர்நலச் சொற்களும் சிதைவில்  நுண் பொருள்களும்  தங்கி  நின்றொளிருஞ்   சங்க  நூற்றொகையும்  புன்னுனிப்  பனியல்  மன்னுமா  மலையுருத்  துன்னிநின்  றொளிர்தரல்  போலச்   சிற்றளவினவான  சொற்றொடர்களிற்  சிறந்தமைந்தனவாகிய  பெரும்  பொருள்கள்  தோன்றித் திகழும்  அறமுத  னுதலிய  திறமை  நூல்களும், அன்பினைத்  திணை  அகவொழுக்க  நேர்மையும் , தொடர்நிலைச்  செய்யுட்  சுவைநலக்  கனிவும் , குறிக்கோள் பற்றிய  அறிவியல்  நூல்களின்  திட்ப நுட்ப  அமைவும் , காதல்  மிக்கு  ஒதுவார்  கேட்பாரது  கல்லினும்  வலிய  உள்ள  நிலையையுங்  கரைத்து அவர்தமை  அன்புருவாக்கி   இறை  திருவருட்கு  இனிதின்  ஆளாக்கும்  இசை  நலந்  தழீஇய  அருட்  பாசுரப்  பகுதிகளும் , இன்னும்  பற்பல  துறைகளைப்  பற்றி  நின்று  திகழும்  நூற்றொகைகளும்   தன்பான்  மிளிர , இனிமையாங்  குணத்தை  இயைந்து  தட்பம்  தகவும்  ஒட்பமும்  ஒருங்கமையப்  பெற்ற , எல்லாம்  வல்ல  இறைநிலை  போல் என்றும்  நின்று  நிலவுவது  தென்றமிழ் மொழியே  ஆகும் . இத்தகைய  தனித்த  நந்தமிழின்  சால்பினைப்  பற்றிப்  பெரியோர்  பற்பலரும்  அவ்வப் போது  பல  கல்விக்  கழகங்களிற்  பேசியும்   எழுதியும்  வெளியிட்டுள்ளனர்  .  ஆதலின் , அதனையே  யானும்  ஈண்டு  விரித்துக் கூற  முற்படுதல்  வேண்டாதொன்றென  அமைகின்றேன் .  

  •  புலமையின்  குறிக்கோள்

          இனிப்  புலமையாவது  யாதென  ஆராய்தல்  இன்றி  யமையாத தாகும் .  ஒரு  நூலை  ஆசிரியர்  முகமாகக்  கற்ற அளவினானும் , இயன்முறை  தெரிக்கும்  நூற்பாக்களையும்  எடுத்துக்காட்டாஞ்  செய்யுட் பகுதிகளையும்  சொற்பொருள்  அறிந்து கொள்ளும்  அவ்வளவினானும்  புலமை நிரம்புவ தன்று . இவ்வெல்லாம்  , சிறந்த  புலமையின்  உறுப்புக்களாமன்றி  உறுப்பியாகா .  ஒன்றனை  ஊன்றிப்  படிக்குங்கால்   படிக்கப்படுஞ்  சொற்  குழுவின்றி உணரப்படும்   பொருட்கண்  உள்ளம்  உறைத்து  நிற்ப ,  சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மைத்தாகிய  உயிர்  , அவ்விழுமிய  பொருட்கண்  பிரிப்பின்றிக்  கலந்து  அப்பொருட்  பயனை  நுகர்தலும் ,  நுகர்ச்சிக்குப்  பின் வெளியுலகத்து  மீண்டு  நினைவு  கூர்தலும் , தீர்ந்த  உண்மைகளைக்  கடைப்பிடித்துத்  தம்  குறிக்கோளாக  ஒழுக்கியலின்  மேற்கோடலும்  மேற்காட்டிய  உறுப்புக்களோடியையுமாயின் , ஒருவாறு  புலமை  நிரம்பியதாகக்  கொள்ளலாம் .  புலமையின்   குறிக்கோள்  உலகியற் பொருள்  அளவின்  இருப்பின்  அது  சிறுமையெய்தி  மாசுடையதாகும் . அறிவை, ஒளி வலியுடைய  தாக்கி   அகலமுறச் செய்து அவ்வகன்ற   ஒளி விளக்கத்தின்  கண்ணே  முன்னர்க்  காணப்படாதனவும்  உலப்பிலா  இன்ப  விளைவிற்கேற்றன வுமாகிய  அரிய  பல  நுண்பொருளை  அகக்  கண்ணாற்  கண்டு  இன்புறுதலாகிய  வாழ்க்கையே  புலமை  வாழ்க்கை  ஆகும் .

            ஓரளவுட்பட்ட   சில  பல  நூல்களை  வினவுவார்  கருத்துக்கியைய  விடையிறுக்கு  முகமாகக்  கற்றுத்  தகுதிச்  சீட்டுப் பெரும்  அவ்வளவில் , புலமை  தன்  நிறைவை  யெய்தியதாக  எண்ணி  விடலாகாது .  பயிலுந்தோறும்  பயிலுந்தோறும்   பண்புடையாளர்  தொடர்பு  எங்ஙனம்  இனிமை  சான்று  பயன்  விளைக்குமோ , அங்ஙனமே  மீண்டும்  மீண்டும்  கற்குந்தோறும் கற்குந்தோறும்   உயரிய நூல்களின்  நுண்பொருள்  நலங்கள்   நம்  உள்ளத்தை  ஈர்த்துத்  தம்பாற்படுத்துப்  பேரின்புறுத்துவனவாம் . மிக  விரைந்தோடும்  வெள்ளப்  பெருக்கினை யுடைய  ஆற்றின்  நீர்ச் செல வாற்றலை ஒருவன்  அளக்க  நினைக்கின், அதன்கண்   அவன்  எதிரேறிச்  செல்ல  வேண்டுவதே  இன்றியமையாததாகும். அவ்வாறின்றி  அந்நீர்ச்  செலவோடியைந்து  அதனான்  ஈர்த்துச்  செல்லப்படுவானாயின்   அவ் வாற்றலின்   நிலை  இயற்றென  உணரகில்லான் . அங்ஙனமே  உயர்நிலைப்  பாவலர்  மயர்வற  ஆகிய  விழுப்பொருள்  நிறைந்த  செய்யுட்களின்  சொற்பொருளொழுக்கில் , நும்  நுண்ணறிவு  எதிரேறிச்  செல்லல் வேண்டும் . அங்ஙனஞ்  சென்று  அச் சொற் பொருள்களின்  வன்மை  வனப்புக்களை   ஆராய்ந்தளக்க  முயலின் , அச் செய்யுலாசிரியன்  ஆழ்ந்து  நினைவிற்  கண்டு  வைத்த  அரும்  பொருண்  மணிகளின்  இயலொளியை  உண்மையாகக்  கண்டு  இன்புறலாம் .  ஆராய்ந்து  தெளிவதற்கு  முன்   அச்சொற்  பொருள்  களோடு  எதிர்த்து  நிற்றலே  நன்றாம் .  

                 பொருணலத்  தெளிவின்  பின்  அச்  சொற்பொருள்  களோடு  நம்  அறிவை  இரண்டறக்  கலப்பித்து , அவற்றின்  வண்ணமாக  நின்று அசைவுறும்  நிலையெய்தி , இன்ப  வெள்ளத்துள்  திளைத்தல்  வேண்டும் . ஒரு  சிறந்த  நூலாசிரியன்  குறிக்கோள்  இன்னதெனத்  துணிந்தாலன்றி   அவன்  பலவாறு  பன்னிப்  பன்னி  உரைக்கும்  உரைப்பொருளின்  உண்மைக் கருத்து  அறியப்பட்டதாகாது .  சிறந்ததொரு  முடிபொருளைச்  செப்பனிட்டுத்  திறம்பட  உரைக்க  முற்படும்  புலவன்  , பருந்தின்  வீழ்ச்சி  போற்  சேய்மையினின்றே   முடிபொருட்குரிய  சார்வுப்  பொருள்களில்  மெல்ல  மெல்லத்  தலைப்பட்டுச்  செல்லுவன் . அச்செலவின்  நிலையை  அந் நெறி  நின்றே  உய்த்துணர்தல்  வேண்டும் .செல்வழிக்கட்  கண்டனவே   தீர்ந்த  பொருளென  எண்ணி  விடலாகாது . நூலுரையாசிரியர்களின்  கருத்துப்  படர்ச்சியில்  நம்  அறிவுத்  தொடர்ச்சி  பின்னிடுதல்  நன்றன்று  .  அயரா உழைப்பிற்கு  அகப்படாத  அரும்பொருள்  யாதுமின்று  . தொடர்  நிலைச்  செய்யுட்கலின்  உயிரனைய  சுவை நலம்  விராய  குறிப்புப்பொருளை   உனர்த்தலின்  நம்  அவா  முற்பட வேண்டும் . சுவை   நலங்  கலந்த  அத் தொனிப்  பொருள்  தங்குதற்குரிய  இனிமையாப்  பாடல்கள்  உயிரற்ற  வெற்றுடல்  போல்வனவாம் . வெற்றுடலை  அணிகலன்  புனைந்து காண்டல்  பின்னர்க்  காணலாகாத  இறுதிக்  காட்சியாக  முடியுமென்பது  அறிந்ததொன்றே ;  அங்ஙனமே  சுவைநலமளைந்த  தொனிப்பொருள்  விரவாப்  பாடல்களை  அணிநலனளவிற்  காண்டல் , மீண்டுங்  காண  வேண்டும்  என்ற  விழைவற்ற  நிலையில்  நிகழ்வதொன்றாகும் .  

              மதிவலி  மிக்க  முது  புலவனிடத்தினின்றுந் தோன்றிய  பாடல்  நங்கைக்கு  திட்ப  நுட்பம் , தெளிவு ,விளக்கம் , இனிமை  முதலிய  பண்புகளமைந்த  சொற்பொருட்குழுவே  அழகிய  உடலும் , சுவை   நலந் துறுமும்  தொனிப்  பொருளே  உயிருமாம் . இந்  நங்கைக்கு   உவமை  முதலிய  அணிகளே  அணிகலங்களாம் . அழகுக்கு  அழகு  செய்தல்  போல  வணிகள்  சேர்க்கப்படினும்  இப்பாடன்  மெல்லியற் பாவை  நல்லாளின்  இயற்கை  வனப்பு  மிக்க  நல்லுடலைச்  சார்ந்து  உவமை  முதலிய  அணிகளே  சிறந்த  அழகு  பெற்றுத்  திகழ்வனவாம் .   

             இங்ஙனம்  இயற்கை  நலம்  மிக்குச்  செயற்கை  நலனையுமேற்றுத்  திகழும்  இத்தகைய  பாடல்  நங்கையைக்  கூடி  நுகர்தற்குரிய  இளநலஞ்  சான்ற  மணமகனியல்பை  இயம்பவும்  வேண்டுங்கொல் !  அன்னான்  இலக்கிய  நூலறிவானும்  மதிநுட்பத்தானுஞ்  சிறந்து  மலர்ந்து  மணப்பருவம்  வாய்க்கப் பெற்று, கட்டழகு  வாய்ந்த  பாடல்  நங்கையைக்  காண்டலில்  காதல்  மிக்குடையனாய்  அப்பேறு  குறித்துத்  தவம்  புரிந்த  தனிப்பெருஞ்  செல்வதானல்  வேண்டும் . வேட்கை முயற்சியும்  தவப்பயனும்  ஆகூழ்  வலியும்  ஒருங்கு  கைவரப்  பெற்றாலான்றி , அப்பாடல்  நங்கையின்  பரிசுணர்தல்  அரிதாகும் .  

          இன்ன  பாடல்  நங்கையைப்  பண்புடன்  வேட்ட  காதற்  கொழுநனாங்  கலைவல  மணமகன்  ,  அந்நங்கை  நலனெலாம்  நன்னர்  நுகர்ந்து  புல  நிரம்பின்பம்   பொருந்திய  வாழ்க்கை யிற்றலைப்   படுங்கால்  அவ்விருவர்தம்  இரண்டற்ற  தன்மையி னெழுந்த  இன்ப  நிலையே  உருவெடுத்தாங்கு  மழ  விளம்பாடற்  குழவிகள்  தோன்றும்  இந்  நன்மக்கட்  பேற்றினையுடைய  நன்புல  இல்லற  வாழ்க்கையிற்  றலைப்பட்டு  நிரம்பினோரே  உண்மைப்  புலவராவார் .

          கண்  முதலிய  அறிவுக்  கருவிகளாற்   காண்டற்கியலாத  நுண்பொருள்களை  யெல்லாம்  நுண்மாணுழைபுலமாகிய  உட்கருவியாற்  செய்யுளுலகத்திற்  கண்டு  இன்புறுதல்  கூடும் . அவ்வளவின்  அமையாது  , அவ்வுட்புறக் கருவிகளுக்கும்  எட்டாது  அப்பாற்பட்ட  திருவருளாற்றலினது  சீரிய   நிலையின்  ஒரு  சிறு  கூற்றினை  யாதல்  செவ்விய  புலமை  முயற்சியின்  பயனாகிய  மெய்யுணர்விற்  கண்டு  இன்புறுதற்கு  முயல வேண்டும் . அவ்வின்பப் பேறொன்றே   நம்  புலமை  வாழ்க்கையில்  அரிதின்  முயன்று  அடைதற்பாலதாகிய  முடிந்த  பயனாகும் . முதற்கண்  மனமொழி  முதலிய  உட்புறக்கருவிகள்   செந்நிலையுறுதற் கமைந்த   விழுமிய  நூலறிவு , முடிவில்  திருவருள்  நிலையின்   தெளிவு  கைவரப்  பெறுதற்குரிய  சிறந்த  கருவியாகிய   மெய்யுணர்வைப்  பயந்து நிற்கும் . அம்மெய்யுணர்வொன்றே  தன்  பயனாகிய  உயர்வொப்பில்லாப்  பேரின்பத்தை   விளைவிப்பதாகும் .  

          உலக  வாழ்க்கை  போலப்  புலமை  வாழ்க்கையும் , இல் நிலை  , துறவு  நிலை  என  இருதிறப்பட்டு  நிகழுமாறும்  இக்குறிப்புக்களான்  உணரலாம் . கல்வியே  கற்புடை  மனைவியாகவும் ,  செல்வப் புதல்வரே  செழும்  பாடலாகவும்  , கற்றதுணர  விரித்துரைத்தலாகிய   சொல்வளனே  இந் நிலைக்கு  வேண்டிய  பொன்னிலையாகவுங்  கொண்டு இல்லறப்  புலமை  வாழ்க்கையைச்  செவ்வன்  நடாத்திய  செம்புலச்  செல்வனொருவன் , முடிவில்  மெய்யுணர்வு  கைவரப்  பெற்று  , அது  வாயிலாகத்   திருவருள்  நிலையை யுணர்ந்து , அவ்வருள்  நிலை  இன்பத்தில்  திளைப்பின் ,  அந்  நிலையே  துறவறப்  புலமை  வாழ்க்கையாகும் .  உண்மைப்  புலமையின்  சிறந்த  குறிக்கோள்   இதுவேயாகும் .   

  •  புலவரும்   புரவலரும்

         மிகச்  சிறந்த  இந் நிலைக்கு  நம்மை  ஆளாக்கும்  இப்புலமைச்  செல்வத்தை  இவ்விழுமிய  நோக்குடையாராகவே  நம்  பெரியார் மேற்கொண்டிருந்தனர் . அன்னார்  குறிக்கோள்  அன்னதாக,  அவருக்கு  இம்மை  நலம்  முட்டின்றி  நடைபெறுதற்கு  வேண்டும் . பொருள்  முதலியன  கொடுத்துப்  போற்றுதற்கு  வரையாதளிக்கும்  வள்ளன்மை  மிக்கார்  பலரை  அவ்வப்போது  திருவருளாற்றல்  உதவி  வந்தது .

           சிறந்துயர்ந்த  குறிக்கோ ளொன்றைக்  கடைப்பிடித்துத்  திருவருட்  டுணையொடு  முயல்வார்க்கு , அதனை  நிறைவேற்றி விக்கும்   இறையருள்  இடைக்கண்  வேண்டுவனவாகிய  பிறவெல்லாம்  பல்லாற்றானு முதவி  அவரைத்  தளரவிடாது  அளித்துக்  காக்கும்  என்பது  நம்  பெரியோர்  கண்ட  உண்மை . புலமையின்  குறிக்கோள்   மிகச் சிறந்துயர்ந்த  அறிவு  வளர்ச்சியான்  எய்தும்  உலப்பிலா  இன்பப்  பேறாகவும்  அதனை  மறந்து , அழிதன்  மாலையதாகிய  குறுகிய  உலக  வின்பமே  அதுவெனக்  கொள்ளப் படுமாயின் , அது  நிறைவேறுந்  துணையும்  அப் புலமை  நின்று  பின்  வளர்த்தலின்றி  ஒழியும்  இயல்பினதாகும் . அந் நிலையில்  அமைந்த  புலமையுஞ்  சிறிதேயாகும் .

            இற்றை  ஞான்று  கல்வி  பயிலும்  மாணவர்கள்  தொடக்கத்திற்  கொள்ளும்  நோக்கம் , பெரும்பாலும்  தம்  வாணாளில்  உடலோம்பலாகிய  அவ்வளவிலேயே  அமைந்துள தென்பது யாவரும்  உணர்ந்த தொன்று . இக்குறுகிய  நோக்கம்  மேற்கொண்டு  பயில்வோர்  ஒரு  வகையாகத்  தேர்வில்  வெற்றி  பெற்ற  பின்னர் ,  அக் குறுகிய  நோக்கமாகிய  பொருட் பேறு நிறைவேறுவதற்குரிய  முயற்சியிற்  றலைப்படுகின்றனரேயன்றிக்  கற்ற  கல்வியின்  விழுமிய  பயனைப்  பெருதலில்  வேட்கை யுடையராகக்  காணப்பட்டிலர் .  ஆசிரியனை  அடுத்துக்  கற்றது  அவன்தன்  புலமையளவிற்  காற் கூறாம் . அத்துணையே  யல்லது , முற்றும்  நிரம்பிய  தாகா தென்பது  நம்  பெரியோர்   கண்ட  உண்மை . காணாதனவெல்லாங்  காண்டற்கும்  , கேளாதனவெல்லாங்  கேட்டற்கும்  அறிவுலகத்து  நிகழும்  வியத்தகு  அருஞ்  செயல்களை உணர்ந்து இன்புறுதற்கும் , நிரம்பிய  புலமையே  சிறந்த  கருவியாகும் .  இவ் வுயரிய நோக்கங் களை  நிறைவேற்று வதற்குரிய  புலமையை உடலோம்பற்கு  வேண்டிய  பொருளளவிற்  பயன்படுத்த எண்ணுதல்  பொற்கொழுக் கொண்டு வரகுக்கு  உழ எண்ணுவதனோடு  ஒக்கும்  என்ப . சிறந்துயர்ந்த  நோக்கங்களை  மேற்கொண்டு  திருவருளுணர்ச்சியிற்  றலைப்படும்  புலமைச்  செல்வம்  வாய்ந்து  விளங்கிய  நம்  பண்டைத்  தமிழ்ப்  புலவர்  பெருமக்களைப்  பண்டைத்  தமிழ்  நிலவேந்தர்கள்  எத்துணைப்  பெருமை  பாராட்டிப்  போற்றி யொழுகினர் என்பதர்குப்  புறநானூறு  முதலிய  நம்  அரிய தமிழ்  நூல்களே  தக்க  சான்றாக  மிளிர்கின்றன .  

            தமிழ்  நில  மன்னர்கள்   தமிழ்ப்புலவர்களைத்  தம்  உயிரினுஞ்  சிறந்தாராக  மதித்தொழுகிய  செய்திகள்  பற்பல  உள்ளன . அம்மன்னர்க்கு  அரசியற்  சூழ்ச்சிக்குரிய  அமைச்சராகவும்  , அறிவுரை  கூறி  நன்று  தீதுணர்த்தி  நல்லாற்றின்  நிறுத்தும் ஆசிரியராகவும்  , அவர்  குடிக்கண்   உடன்றோன்றினார்  முதலியவர்பாற்  கலாம்  விளை காலை  நடுநின்று  அரிவுரை  கூறி, அதனைத் தீர்த்து   அவரை  அன்புநிலைப் படுத்தும் அகல  முதியோராகவும்  விளங்கினார்  நம்  தமிழ்ப்பெரும்  புலவரேயாவார் .  முதுமையின்  தளர்ச்சியிற்  கதுமென  நேரும்  இறப்பு  முதலியவை  பற்றிய  அச்சம்  நிகழா  வண்ணம்  உடல்,  இளமை,  பொருள்  முதலியவற்றின்  நிலையாமைகளை  நெஞ்சிற்  பதியுமாறு  எடுத்துரைத்து  மெய் யுணர்விற்   றலைப்படுத்தும்   அறவோராகவும் , காதலித்து  கைவிடப்பட்ட  கற்பரசியரை  அவர்தம்  கணவரோடியைத்து  நீதி  பல  கூறி  நெறி  பிறழா  வண்ணம்  வாழ்க்கை  நிலைப்படுத்தும்  நல்லுறவினராகவும்  விளங்கிய  பெருமை  நம்  தமிழ்ப்  புலவர்  பாலதேயாம் .தந்தை  தாயார்  முதலியோரை  இழந்து வருந்தும் இளம் பருவத்துப்  பெண்  மக்கட்கு  அத் தந்தை தாயார்  முதலிய  உறவாக  நின்று நீதி  வழாத  நிலையிற்  பாதுகாத்து  நட்புக்  கடனாற்றிய  பெரியோரும்  புலனழுக்கற்ற   நம்  தமிழ்ப்புலவர்  பெருமானே  யாவார் . புணர்ச்சி  பழகுதலின்றி   உணர்ச்சி  வாயிலாகவே  நட்பு  முதிரப்பெற்றும்   அந்நாட்டார்க்கு  இறுதி  நேர்ந்துழி  அதனைத்  தம்  உணர்ச்சிச்  சிறப்பான்  இயல்பில்  தெரிந்து  தம்  உயிரையும்  உடன்  உய்த்து  அன்புக்  கடனாற்றிய  ஆன்றவிடத்தடங்கிய  கொள்கைச்  சான்றோரும்   நம்  தமிழ்ப் புலவரே யாவர் .  

         இங்ஙனம்  அரசர்பாற்   புலவரும் , புலவர்பால்  அரசரும்  அன்பு  வழிப்பட்டு  ஒழுகிய  சிறந்த  வரலாற்றுப்  பகுதிகள்  பலவாம் . தன்னைப்பாடி  வந்த  ஒரு  புலவர்க்கு  ஏதுங்  கொடுக்கும்  நிலையில்லாத  ஒரு  வள்ளல்  ‘தலையினைக் கொண்டு போய்த்  தம்பி  கைக்  கொடுத்து  விலையினைப்  பெறுக’  எனச்  சொல்லியதும்  , அவ்வள்ளற்  பெருமான்  உள்ளமறிந்த  புலவர்  பெருமான் ‘மறப்பேனாயின்  மற்றொருவர்க்கு  இங்ஙனங்  கூறிக் கொடுக்க  நேரின்  மன்னர்  பெருமானை  இழக்க  நேருமே’  என்று  அஞ்சி , அத்தலை  தன்  உடைமை  எனவும் , அதனை ‘யான்  வேண்டுங்காற்  பெறுவே’  னெனவும் , ‘பெறுங்காறும்  யார்க்கும்  இதைக்  கொடுத்தலாகாது’  எனவுங்கூறி , அவ்வளவோடு  பகைஞனாகிய  தம்பியின்  மனத்தைக்  குழைவித்து  அன்புரிமைப் படுத்து  ஒன்றுபடச்  செய்து  இன்புற்றதும்  நினையுங்கால்  , சென்னறிப்படரும்   மன்னவருள்ளமும் , சொன்னெறிப்  புலவர்  தூய  உள்ளமும்  எத்துணைச்  சிறந்துயர்ந்த  நிலையில்  உள்ளன  என்பது  நன்கு  புலனாகும் .  இந் நிகழ்ச்சி  அறிவுடையாரகத்தை  உருக்கும்  பான்மைய தென்பதை  யாவரும்  உணர்வர் .புலனழுக்கற்ற  தூய  பெரும்  புலவர்களையும்  அருண்மிகு  நெஞ்சத்தினராகிய   புலவர்களையும்  இரு  கண்ணெனப்  பெற்றுத்  திகழ்ந்த  நம்  தமிழ்  நிலம்  இற்றை  ஞான்று  ஒற்றைக்  கன்ணிழந்து  மற்றொருகண்ணும்  ஒளி  நலங்  குன்றப்  பெற்று  ஒடுங்கிக்  கிடத்தலை  உன்னுங்கால், எத்தகைய  தமிழ்  மனிதனும்  வருந்தாமலிருக்க  முடியாது .  

            பண்டை  அரசர்பாற்  புலவர்  பெற்ற  பரிசிலை  உன்னுங்கால், அது  மிக்க  வியப்பைத்  தருவதாகும் . நூறாயிரக்கணக்கான  பொற்காசுகளையும் , முற்றூட்டாகப்  பல  நிலத் தொகுதிகளையும் , விலையுயர்ந்த  ஆடை  அணிகளன்களையும் , யானை  தேர்  முதலியவைகளையும்  வரையாது  வழங்கப்பெற்று  மகிழ்கூர்ந்த  செய்தியைப்  பண்டை  நூல்களான்  உணர்ந்தலோடு  இன்னும்  அப்பரிசில்  நிலங்களைப்  பற்றிய  ஆவணங்களானும்  அப் புலவர்  வழித்  தோன்றல்களின் ஆட்சியானும்  கண்கூடாகவுங்  காண்கின்றோம் .

         புலவர்  பாடும்  புகழுடையா ரன்றே , தானே  இயங்கும்  வானவூர்திக்கண்   இவர்ந்து  செல்லும்  நல்வினையாளர்  என  எண்ணப்பட்டனர் !  புலவராற்  பாடப் பெறுவது  ஒன்றே  தம்  வாழ்க்கையின்  பயனெனக்  கொண்டு  மகிழும்  முன்னை  வேந்தர்  நன்ன ருள்ளம்  எத்துணைச்  சிறந்த தென்பதை  விரித்துரைக்கவும்  வேண்டுங்கொல் !  “குறித்த  பகைவனை  வென்று  வெற்றி  மாலை  புனையேனாயின்  உயர்ந்த  கல்வி  கேள்விகளையுடைய  மாங்குடி  மருதன்  தலைவனாகவுள்ள  பலர்  புகழுஞ்  சிறப்பு  வாய்ந்த  புலவராற்  பாடப்  பெறாது  என்  நிலவெல்லை  நீங்குக “  என்று  சூழுரை  பகர்ந்த  தமிழ்ப் புல வேந்தன் உள்ளப்  பாங்கை  உள்ளிப் பார்மின் ! குறித்தாங்கு  இன்னது  செய்யேனாயின் , இன்ன  தீவினை  யாளனாவேன்  என்னுஞ்  சூழுரையிற்  புலவராற்  பாடப்பெறாத  தொன்று  பெருந்  தீவினைப்  பயனெனக்  கொள்ளப்படின்  அன்னார்  பாடற்பெறு  அரசர்  தம்  வாழ்க்கைக்கு  எத்துணை  விழுமியெதெனக்  கருதப்பட்டதென்பதை   உற்று  நோக்குமின்கள் !

      இத்தகைய  சிறந்த  நிலையிலிருந்த  முன்னைத்  தமிழ்ப்  புலவர்  வழித்  தோன்றல்களாகிய  இக் காலத்துப்  புலவர்   பெருமக்கள்  நிலை  சிறிது  வருந்தத்தக்கதாக உள்ளது . புலவர்க்குரிய  உயரிய  நோக்கங்களும்  வர வரக் குறுகி  வருகின்றன . அவரைப்  புரக்கும்  இயல்பினராகிய  திருவுடையார்  நிலையும்  புலமைக்கு  மதிப்பளிப்பதாக  இல்லை .  எதற்கு  எது  காரணமென்பதை  ஈண்டு  ஆராய  வேண்டா . அவரவர்  கடமையை  அறிந்து  மேற்கோடலே  சிறந்ததாகும் .  கல்வி , அறிவின்பத்தை  அளித்து வாழ்க்கையைத்  தூய்மைப்படுத்தற்குரியதாம்  என்னும்  நம்  புலமையின்  விழுமிய  நோக்கத்தைத்  தளர  விடாது  மேற்கொள்ளுவோமாயின் , நம்மை  புரத்தாற்குப்  புரவலரும்  கடவுளரும்   நம்  பக்கலில்  தாமே  அணுகித்  தம்  கடமையைப்  புரிய  முற்படுவர்  . இவ்வுண்மையை  நம்  புலவர்  பெருமக்கள்  உறுதியாகக்  கடைப்பிடித்தல்  வேண்டும்  .  

                                3  .  தவிர்தற்   குரியன

            இனிப்  பழங்கதை  பேசிக்கொண்டிருத்தலிற்  பயனின்று .  செய்வன  இன்ன , தவிர்வன  இன்ன  என்னுஞ்  சூழ்ச்சிற்  றலைப்பட்டு   நல்லன  காண்டலும்  அவற்றைத்  தாழாது  செயலின்  மேற்கொடலும்  வேண்டும் . விலக்கியன  ஒழித்தலும்  அறமென்ப வாகலின் , முதலில்  நம்  புலவர்  பெருமக்கள்  தம்  வாழ்க்கையில்  தீயகுணஞ்  செயல்கள்  நெருங்க  இடந்தராமல்  அவற்றைக்  களைதல்  வேண்டும் . தீயன  களைந்தாலன்றி  நல்லன  ஏய்தற்கு  இடனமைதல்  அரிது .   

               தவிர்வனவற்றுள்  ஒரு  சிலவற்றை  ஈங்குக்  குறிப்பிடல்  மிகையாகா  தென்றெண்ணுகிறேன் . ஒருவரை யொருவர்  புறங்கூறல் இல்லன கூறி  எள்ளி நகையாடல்  ,  தம்  அறிவினும்  மற்றைய  ரறிவு  தாழ்ந்ததென வாய்ப்பறை யறைதல் , ஆகூழால்  ஒருவர்க்குக்  கிடைக்கும்  ஊதியங்கண்டு  நெஞ்சம்  புழுங்கல் , பிறர்  அறிவிற்  கண்டுரைத்த  சுவை  நலமிக்க  சொற்பொருள்  நலங்களைக்  கேட்டுணர்ந்து  உவகை  யுறாமை  , ஒருகால்  தம்  புலமையுள்ளம்  தம்மை  அறியாது  உவகையுறத்  தொடங்கின்  ,அதனைச்  சினந்து  மேலெழ  விடாது  அடக்கிவிடுதல் , மொழியறிவுத்  துறையில்  தாம்  மேம்பட்டதாக எண்ணிக் கடவுணிலை  யுணர்ச்சியிற்  றலைப்படாதி ருத்தலே   புலமை  மாண்பெனக்  கருதல் , கடவுள் கலையுருவினன்  என்பதை  மறந்து  கல்விக்கும்  கடவுட்  கொள்கைக்கு  இயைபின்றென  எண்ணல் , “ கற்ற  கல்விக்குத்  தக  நிற்க”  என்னும்  பொருளுரையைப்  பொருட்படுத்தாமல்  கல்விக்கும்  ஒழுக்கத்திற்கும்  தொடர்பின்றெனக்  கோடல்  , இகலிலர்  எஃகுடையராய்த்  தம்மிற்  குழீஇ  இன்புறுதலை  விடுத்துப்  பல்பிறப்பினுந்  தொடர்ந்த  பகைஞர்  எனக் கொண்டு  ஒருவரை  ஒருவர்  வெறுத்தல் , தமக்கே  பிறர்  உதவி  புரியற்பாலற்  தாம்  பிறர்க்கு  ஒல்லும்  வகையானும்  உதவி  புரிய  முற்படல் , தம்  புலமை  மாண்புக்கு  ஏலாதென  நினைத்தல் , பிறர்  கூறும்  நல்லன  கொண்டு  இன்புறுதற்கு  உள்ளம்  ஒருப்படாமையோடு  அந்  நல்லனவற்றையும்  தீயனவாகத்  திரித்துக்  கூற  முற்படுதல் , உண்மை  தெளிதற்கு  நடுநின்  றாராய்ந்து  தம்கொள்கை  மறுக்கப்படுமாயின் , அதனைப்  புலமைக்கு  அழகென  ஏலாது  மறுத்தாரை  முனிந்து  வறுத்தமுறுதல்  முதலிய  இன்னோரன்ன  தீய  குணஞ்  செயல்களை  அறவே  ஒழித்தல்  நன்று .  

           பண்டைப் பிறப்பின்  தொடற்பால்  ஒரோ  வழி  அவை   முற்படினுந்  தன்  மதிவலியால்  இயன்றாங்கு  விலக்க   முயலல்  வேண்டும் .  அவ் விலக்கு  முயற்சி  பயன்பாட்டில தெனினும்  தம்பால்  நிகழ்ந்த  இவை  தீயன  என்றுணர்ந்த  அவ்வளவிற்  பயன்  உண்டென்ப  ஒரு  சாரார் .  இத்தீய  குணங்களில்  ஒரோவொன்றுடையாரும்   சிலபல  உடையாருமாகப்   பலரும்,  அறவே  இலராகச்  சிலரும்  உலகத்துக்  காணப்படுவர் . ஏதேனும்  இருப்பிற்  களைதல்  வேண்டும்  என்பதை  நினைவுறுத்தற்குக்  கூறியதேயன்றிப்  புலவரெல்லோரும்  இத்தீய  குணஞ்  செயல்கள்  உடையரெனக்  கொண்டு  கூறியதன்று  . ஒரு   பிழையுமில்லாத  தூய  தன்மை  கடவுளிடத்தன்றி  மக்களுட்  காண்டலரிது .  ஆயினும்  மக்கட்  பொதுவாக  உள்ள  பிழைகளைப்  புலமைச் சிறப்பாற்  களைதற்கு  முற்பட  வேண்டுவதே  புலமைப் பேற்றின்  கடமையாகும்.   

          ஓராராய்ச்சியில்  ஒரு  காலத்தில்  தமக்குக்  கிடைத்த  சான்றுகளைக்  கொண்டு  ஒரு  வகையாக  முடிக்கப்பட்டதொன்று , பிறிதொரு  காலத்திற்  பிற  சான்றுகளால்   தவறுடைய  தெனத்  தாமே  கண்டாதல்  பிறர்  கூறக்  கேட்டதால்  உண்மை  தெளிய வரின்  அப்பொழுது  தம்பிழைபட்ட  முன்னைக்  கொள்கையைக்  கைவிட்டு  உண்மைக்  கொள்கையைத்  தழீஇக்  கோடலே  புலமையின்  சிறப்பாகும் .  பின்னர்  எத்துணைத்  திட்ப  நுட்பமான  சான்றுகள்  கிடைப்பினும்  மாறுபட  முன்னர்க் கண்ட  முடிவினின்றும்  வேறுபடேம்  என்னுங்  கொள்கை  தவறுடையதாகும் .  உண்மைநிலை  காண்டற்குப்  பலவாறு  சூழ்ந்து  ஒரு  முடிபுக்கு  வருதலும் , பின்னர்  அது  தவறுடைத் தெனக்  கண்டவழி  அதனை  மாற்றிக் கோடலும்   நடுநிலைப்  புலமையுடையார்க்கு  இயல்பேயாம் .  

            புலவரில்  ஒரு  சிலர்  தம்மைச்  சிறந்த  ஆராய்ச்சி யாளரென  உலகம்  மதிக்கவேண்டும்  என்னும்  வேட்கையுடையராய் , பண்டை  நூலுரை   வரலாற்று  முறைகளில்  தவறில்  வழியுந்  தவறுகளை  ஏறிட்டுக்கூறி  வருகின்றனர் . அக்கூற்றுக்கள்  அவர்தம்  புலமைத்  தவறுதலையே  புலப்படுத்துவனவாம் .  அவர்  அறியாமையால்  அங்ஙனங்  கூறின் , அஃதொரு  பெருந்  தவறாகாது , அறிவுடையார்  தேற்றத்  தேறுவராகலின்.  அறிந்து  கூறுவரேல் ,அது  புலமைக்கு  இழுக்காகும். பழையன  கழிதலினும்  புதியன  புகுதலினும்  முறையே  தீமையும்  நன்மையும்  அறிந்து   கோடல்  நன்று .  கால  நிகழ்ச்சிக்கு  ஏற்பன  ஏலாதன  என்பதை  நெடிது  சூழ்ந்து  முடிவு  செய்தல்   வேண்டும் .  

            தம்  மொழிக்கு  ஏற்றங்கூற  முற்பட்டுப்  பிற  மொழிகளைப்  பழித்துரைத்தலுந்  தவறாகும் . தம்  மொழிக்கண்  இல்லாத  சிறப்பொலி  யெழுத்துக்கள்  வேற்று  மொழிக்கண்  இருத்தல்  கண்டு , ‘அவை  எதற்கு?’  என  ஒரு  புலவர்  ஒரு  பேரவையில்  எள்ளி  நகுவரேல், அவர்  புலமையி னியல்பை  எவ்வாறு  கருதலாம் !  ஒருவன்  பாலுள்ள  பொருள்  இருப்பின் , அது  பற்றி  அவன்  எள்ளப்படுதல்  யாண்டுங்  காணாததொன்று  .  ஒரு  குழுவில்  உரைக்கப்படும்  பொருளுரை  அவ்வளவினன்றிப்  பரந்த  அறிவுலகத்துக்கும்  ஏற்ப  விளங்குதலன் றோ  நலமாகும் ! 

             இன்னோரன்ன  இழுக்கு  நெறிகளில்  நம் புலமை  வாழ்க்கையை  நடத்தலாகாது  .  புனைந்து  பாடுங்கால்  , “அவர்  செய்யாதனவற்றைச்  சொல்லி  அவர்  குணங்களைக்  கூறுதலை  யறியாததாகும்  எம்மூடச்  சிறிய  செவ்விய  நா”  என்ற  புலவர்  பெருமான்  அறிவுரையை  நினையுங்கால் ,  நம்  தேனினுமினிய  செந்தமிழ்ச்  சுவையை  உணர்ந்த  நாவானது  ஒன்று  கூற  முற்படுங்கால் எவ்வளவு  நடு  நிலையுடன்  சீர்தூக்கியறியும்  உளத்தோடு  கூடியெழ வேண்டும்  என்பது  நன்கு  புலனாம் .

               கொடுக்கிலாதானைப்  பாரியே  என்று  கூறாமையும் ,  பிறர்க்கு  இன்னல்  விளைக்கும்  பொய்மொழி  புகலாமையும் , இடரினுந்  தளரினுங்  கடவுட்  கொள்கைக்கு  மாறுபடப்  பேசாமையும், நடுநிலை  மிகுந்து  நவிலாமையும் ,  பயனில்லன  பகராமையும்  ஆகிய  இன்னோரன்ன  செயல்களே  நம்  தமிழ்ச்  சுவையுணர்ந்த  நாவிற்கு  உரியனவாம்  என்பதை  உணர்ந்து  கடைப்பிடித்தல் வேண்டும் .   

                                         4  .  செயற்குரியன

    புலத்துறை  முற்றிய  நலத்  துறையும்  அன்பரீர் !

              இனி , நாம்  செயற்பாலன  இன்ன  வென்பதைப்  பற்றிச்  சிறிது  நினைவு  கூர்வோம் .  பண்டு  மிகப்  பரந்த  நிலப்  பகுதிகளைத்  தனதாகக்  கொண்டிருந்த   நம்  பால்  வாய்ப்  பசுந்தமிழ் , தன்னைப்  புரப்பார்  துணை  சுருங்கி  வந்தமயானும் ,  பிற  மொழிகள்  அம்  மொழியாளர்  பேரூக்கத்தால்  வளர்ச்சி  யெய்தித்  தன்  இடம்  சுருங்கப்பெற்றமையானும்  ,  கற்பார்  நோக்கம்  வரவரக்  குறுகி  வந்தமையானும் ,  திருவருளுணர்ச்சி  முதலிய  உயரிய  நோக்கங்கள்  சிறிது  சிறிதாகக்  கைவிடப்  பெற்று  வருகின்றமையானும் , தன்னிடத்திலுள்ள  சிறந்த  பல  முதுநூல்களைக்  கால  மாறுபாட்டால்  நீருண்ண ,  நெருப்புண்ண  ,  நிலமுண்ணக்  கொடுத்து  இழந்தமையானும்  தன்னைப்  பயில்வார்க்கு  இம்மை  இன்புதவும்  பொருட்  பேற்றுக்கு  இக்காலத்து  அரசியல்  இடந்தராமையானும் ,  பிறவற்றானும்  தன்  ஆக்கங்குன்றி  நிற்கின்றது .  

               ஒரு  நாடு  தனக்குறிய  மொழியை  ஆக்கமுற  ஓம்பிப் பாதுகாத்தலன்றித்  தான்  சிறந்த நிலை எய்துதல் அரிதாம் . மொழி வளர்ச்சி  கொண்டே  அது  வழங்கும் நாட்டின்  நலத்தையுணரலாம் .  எந்த நாடு தன் மொழிச்  சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை யெல்லா  வளங்களானும் பிற்பட்டதாகும் . ஆதலின் , தமிழ்ச் செல்வர்களும் தமிழ்ப் புலவர்களும் விழிப்புடையராய் நின்று நம் உடைமையை விளக்க முறப் பேணல் வேண்டும் .நம் மொழி வளர்ச்சியில் நாம்  செயற்பாலன பலவாகும் .  

                 முதலாவது , இற்றை நாள்  வழங்கும் நிலம் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரு  சிறந்த கல்லூரி தமிழ் நாட்டின் நடுவண் நீர் நில வளங்கள் நிறைந்த அகன்ற இடத்தில் , ஆசிரியர்களும் மாணவர்களும்  ஒருங்கிருந்து , கல்வியை உயரிய நோக்கங்களோடு பயிற்றவும் பயிலவுந் தக்க  முறையில் நிலைபெறல் வேண்டும் . இம்மை நலம் பெறற்குரிய மருத்துவம் தொழிற் கல்வி முதலிய பயிற்சிகளும் உடன் நிகழ்தல் இன்றியமையாததாகும் . அக்கல்லூரியின் உறுப்புக்களாகப் பல நிலையங்கள் அமைத்து அவற்றால் தமிழுக்கு வேண்டற்பாலனவா கிய  பிற மொழி நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டும் , புதிய உண்மையாராய்ச்சிகள் செய்யப்பட்டும் , பல நூலுரைகள் வெளிவரல் வேண்டும் . தமிழ் நாடு முழுதும் இதுகாறும் நிறுவப்பட்டனவும் , இனி நிறுவப் பெறுவனவுமாகிய பல கல்வி நிலையங்களெல்லாம் அத் தமிழ்ப் பெருங் கல்லூரிக்குக் கிளைகளாக அமைதல் வேண்டும் .

                   சிறந்த  நூலுரைகளை ஆக்கிப் புலமை யரங்கேறி னார்க்குத் தகுதியான பட்டங்களும் பரிசுகளும் வழங்கி ,அவரைப் பெருமைப் படுத்தல் வேண்டும் . தமிழின் இயல்பை நன்குணராது ஆரவார நீர்மையராய்ப் போலி நூலுரைகளை வெளிப்படுத்தித் தமிழகத்திற் கும் தமிழ் மொழிக்கும் இழுக்குண்டாக்கும் போலிப் புலவர்களை அறிந்து  அறிவுறுத்தி  அவரை  நல்லியற் புலவராக்க முயலவேண்டும் .  உண்மைத்  தமிழறிஞரை ஒடுங்கியிருக்கவிடாது  சிறப்பிடனளித்து  உவகையுறுத்தல்  வேண்டும் . இயல் வரம்புடைய நம் மொழிக் கண் அவ் வரம்பிகந்து வெளிப்படும்  புலத்துறைக் கொல்லாப்  போலி நூலுரைகள் , செவ்விதின் ஆக்கப்பட்ட சீரிய நூல்களுக்குக்  களைகளாக நெருங்கிப்  படர்ந்து தீங்கு புரிகின்ற வாதலின் அக்களை கட்டல் சொல்லே ருழவராகிய  தமிழ்ப் புலவர் கடனாகும் .  அக்களை  களையப்பட்டால் அன்றி நம் செழுந்தமிழ்ப் பைங்கூல் வளர்தற்கு இடமின்றாகும் .  தீஞ்சுவை  மிக்க  திருவருட்கனியை நம்க்கு  உதவத்  தோன்றிய  செழுந்  தமிழ்ப்  பைங்கூழைப்  பல்லாற்றானும்  போற்றிக்  காத்தலன்றோ நம் நற்பயனை  நன்கு  பெற முடியும் ?

              ஆங்கிலம் , வடமொழி முதலிய வேற்று மொழிகளிலுள்ள  பல துறைப்பட்ட  அரிய நூல்களை அவ்வம் மொழியோடு  தமிழ்  கற்ற மதிநுட்பமுடைய  புலவர்களைக் கொண்டு விளக்கமான சிறந்த முறையில்  மொழிபெயர்ப்பித்து வெளிப்படுதல் வேண்டும் . இத்துறை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும்  ஏற்ற தொன்றாம் .  வேற்று மொழிகளி லுள்ள  ஒரு  திறப்பட்ட  பல  நூல்களை நன்கு  பயின்று  அவற்றின்  திரண்ட  கருத்துக்களைத்  தொகுத்துத்  தனித் தமிழ்  நூலாக  வெளிப்படுதல்  சாலச் சிறந்ததாகும் .  இத்  துறையில்  தமிழ்ப் புலவர்  முற்படுவாராயின் , ‘மேல் வகுப்புப் பயிற்சிக்குரிய பல திறம்பட்ட நூல்கள் தமிழில்  இல்லையே ‘  என்னுங்குறை  ஒழிந்துவிடும் . மொழி  பெயர்ப்பால்  ஒரு  மொழிநூல்  வளர்ச்சி  பெறுதல் , அம்  மொழிப் புலவர்  இயன்மதியற்றற்கு  அத்துணைச் சிறப்பின் றென்பது  உண்மையெனினும் , இயற்கையாகப்  பல  புதிய  சிறந்த நூல்களை மதிவலியால் ஆக்கும்  ஆற்றல் , வளர்ச்சி யெய்துங்காறும்  மொழிபெயர்புச் செயலை  மேற்கோடலால்  இழுக்கின்று  என்பது என் கருத்து . இது  கருதியே  மொழிபெயர்த்து  அர்த்தப்பட யாத்தலையும்  நூல்  யாப்பு  வகையுள்  ஒன்றெனக்  கண்டனர்  தொல்காப்பியனாரும்  என்க .

                சென்னைப்  பல்கலைக்  கழகத்தையும் , அதனினும்  தமிழ்  வளர்ச்சிக்கு  மிக  நெருங்கிய  இயைபுடைய  அண்ணாமலைப்  பல்கலைக்  கழகத்தையும் , தெய்வத்  தமிழுஞ்  சைவத்  துறையுஞ்  செழித்தோங்க எழுந்த திருவாடுதுறை , திருப்பனந்தாள் ,  தருமபுரம்  முதலிய  செல்வமலி  சைவமடங்களில்  விளங்குந்  தலைவர்களையும்  தமிழ்  நிலத்துச்  சிற்றரசர்களையும்  ,  தமிழன்பர்களாகிய  மற்றைத்  திருவுடையாரையும்  மேற்  காட்டிய  தமிழ்  வளர்ச்சிக்கு  வேண்டுவன  செய்யும்  வண்ணம்  இன்னோரன்ன  புலவர்  மாநாடுகள்  கேட்டுக்  கொள்ள வேண்டும் . சற்றுக்  காலத்தாழ்விற்  பயன்  பெறுவதாக இருப்பினும்  அது  பற்றி  வெறுத்துப்  பேசாமல்  மீண்டும்  வேண்டிக்  கோடல்  நன்றாகும் . அன்போடு  பன்னாள்  அழைத்தால்  இறைவனும்  வெளிப்பட்டு   அருளாமலிருக்க  முடியாது . ஆதலின் , சைவாதீனத்துத்  தலைவர்களையும் , அன்பர்கள்  பிறரையும்  அன்புக் கயிற்றாற்  பிணிக்க  முயல்வதே  அறிவுடைமையாகும் .  

                                          5 .  இறுவாய்

       இம்மாநாடு , புலவர்  பெருமக்கள்  வாழ்ந்த  சோழ  வளநாட்டில்  தஞ்சை  திருச்சிராப்பள்ளித்  தலை  நகர்களுக்குரியதாக  இத்துறை யூரில்   முதலில்  தொடங்கப்  பெறினும் , திருவருட்  பாங்கால்  இது வரும்  ஆண்டு  முதல்  தமிழ்  வழங்கும்  நிலங்கள்  எல்லாவற்றுக்கும்  பொதுவெனக்  கொள்ளப்பட்டு , ஒவ்வொராண்டினும்  ஒவ்வொரு  தலை  நகரினும்  கூடித்  தமிழ்  மொழிக்கும் , தமிழ்ப்  புலவர்  முதலிய  மக்களுக்கும்  நலம்  பயக்கும்  வன்ணம்  திருவருட்  டுணைகொண்டு தமிழன்பர்கள் செய்தல் வேண்டும் . செல்வரும்   புலவருமாகிய  தமிழ் மக்கள்  தம்மில்  வேறுபாடின்றி  ஒற்றுமையுடன்  ஒருங்கியைந்து  தமிழன்னையைப்  பேண  முன்வரின், அவ்வன்னை  தன்  மக்களின்  நலம்  வளர  வாழ்த்துவள்.  அன்னையர்  வெறுப்புக்கு  மக்கள்  ஆளாதல்  நலமன்று  . தமிழன்னை  தன்  மக்களாகிய  நம்மை  உளங்குளிர்ந்து  வாழ்த்துவாளாயின்  நம்  வாழ்க்கை  சிறந்த  இன்பப்  பேறுடையதாகும்  என்பதை  உறுதியாகக்  கடைப்பிடிப்பீர்களாக.

செந்தமிழ்ப்  புலவர்காள் !

            இனிப்  புலமை  வாழ்க்கைக்கு  வேண்டுவன  பலவுளவெனினும் , புலவர்  மாநாட்டைத்  திறந்து வைக்கும் ஒருவன்  கடமை  இதனினும்  நீட்டு  சேறல்  முறையன்றாதலின் , இம்  மட்டில்  அமைகின்றேன் .  நுங்  கட்டளைப்படியே   திருவருட்டுணை  கொண்டு   இம்மாநாடு   திறக்கப்பெறுகின்றது .  இதனுட்  புகுமின் !  புகுங்கால்  முதற்கண்  எல்லாம்  வல்ல  இறைவன்  திருவருளை  நெஞ்சார  நினைமின் !  தமிழ்த்  தாயை  வாழ்த்துமின் !  யான்  கூறியவற்றுட்  கொள்ளுவன  கொண்மின் ! இன்னும்  புலமை  வாழ்க்கைக்கு  வேண்டுவன  சூழ்மின்! சூழ்ச்சி  முடிவில்  துணிவு  எய்துமின்  !   அத்துணி  பொருளைத்  தாழாது  செயலின்  மேற்கொண்மின் ! நாகரிக  மிக்க  உலகங்களால்  நம்  தமிழ்ப்புலமை  பாராட்டப்பெறும்  வண்ணம்  ஒழுகுமின் !  புலமை வாழ்க்கையின்  சிறந்த நோக்கங்கள்  நிறைவேறப்பெற்று  நல்லின்பம்  யெய்துமின் ! இதுகாறும்   என்  சிற்றுரையைச் செவியேற்று  உளங்கொண்ட  நும்  பொருமைக்கு   என்  வணக்கம்  உரியதாகுக .

                         3 .  நம்  பண்டைய  நீதி  நூலாசிரியர்

                          ( திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

      மக்கள்  வாழ்க்கைக்குப்  பயன்படும்  வண்ணம்  நம்  பெரியார்  நமக்கு  உதவிய  நூல்கள்  அறம் , பொருள் , இன்பம் , வீடு  என்னும்  உறுதிப் பொருள்கள்  நான்கனையும்  பற்றியனவேயாம் . இவ் வெல்லாம்  நீதியின்மேல்  அமைவன  வெனினும் , இவற்றுள்  பொருட்பகுதியைப்  பற்றி  யெழுந்த  நூல்களையே   ‘நீதி  நூல்’  எனப்  பெரியோர் வழங்குவர் .  அப்பொருட்  பகுதியை  மாத்திரம்  சிறப்பாக  எடுத்துக் கூறிய  ஆசிரியரும்  உளர் .  அதனோடு  அற முதலிய  ஏனைய  உறுதிப்பயன்களையும்  இயைத்துக் கூறிய  ஆசிரியர்களே  பெரும்பான்மையோராவர் . இம் முறையில்  தமிழிற்  சிறந்த  நீதிகளை   வழங்கிய   வண்மையிற்  சிறந்த  பெரியார்  திருவள்ளுவரே  யாவர் . அவருக்கு  முன்னும்  பின்னும்  நீதி  நூலருளிய  ஆசிரியர்கள்  வடமொழியிலும்  தமிழிலும்  பலரிருந்தனர் .  எனினும் ,  அன்னார்  புகழொளி  யெல்லாம்  வானத்து  விளங்கும்  மீன்களாக  , வள்ளுவர்  சீர்த்தி  அப் பன்மீன்  நடுவண்  பான்மதி  போலத்  திகழ்வதாகும் . “ எல்லாப்பொருளும்  இதன்பாலுள ; இதன்பால்  இல்லாத  எப்பொருளும்  இல்லையால்”   என்றபடி  உள்ளுநர்  உள்ளும்  பொருளெல்லாம்  வள்ளுவர்  வாய்மொழியிற்  காணப்படுவனவேயாம் . தம்  தெள்ளிய கல்வியானும்  ஒள்ளிய  மதி  நுட்பத்தானும் உலகியலையும்  மக்கள்  வழக்கவொழுக்கங்களையும்  அழுந்தியறிந்து  உள்ளத்தமைத்துத்   ‘திருக்குறள்’  என்னும்  நீதிக்  களஞ்சியத்தை  உலகமுள்ளவும்  நிலைபெற  யாத்துதவிய  பெருமையே  அப்  பொய்யில்  புலவர்  புகழொளி  விஞ்சுதற்கு  ஏதுவாயிற்று .  

                திருவள்ளுவர்  எழுதிய  நூல்  ஒழுங்கிற்கும்   ஏனையோர்  நூன்  முறைக்கும்  உள்ள  வேறுபாடுகள் பலவாம் . தாம்  கூற  மேற்கொண்ட   பொருளை  நன்றாக  ஆராய்ந்து , இவ்வாறு  தெளிவுபடுத்த  வேண்டு மென்று  உள்ளத்தமைத்துப்  பின்னர்  செய்யுள்  வடிவில்  இவர்  வெளியிட்டுள்ளார் .   பெரும்பான்மையும்  கொண்ட  பொருளின்  இலக்கணம்  , அதன்  சிறப்பு , அதனாலாம்  பயன் ,  அஃதில்  வழி  வருந் தீங்கு  என்று  இன்னோரன்ன  பாகுபாடுகளை  வரையறுத்துக் கொண்டு  கூறுதல்  இவர்  இயல்பு .  எப்பொருட்கும்  வரையறையும்  தெளிவும்  இன்றி  யமையாதன .  வரையறுத்துத்  தெளிவுபடுத்தப் படாத  பொருள்கள்  மக்கள்  உளங்கோடற்கு  ஏற்றனவாக  என்பது  பெரியார்  துணிபு.

                 இத்தகைய  சிறப்பு  வாய்ந்த  திருக்குறளுக்கு  வடமொழி  தென்மொழி  களிலுள்ள  பற்பல  நீதிநூல்களையும்  நன்கு  கற்று  ஆராய்ந்த  பரிமேலழகர்  என்னும்  புலவர்  பெருமான்  இயற்றிய  உரையே  எல்லா  உரைகளினும் சிறந்ததாகப்  போற்றப்படுவது  அவ்வுரையாளர்  ஓரிடத்து , “தேவர்க்கும்  அசுரர்க்கும்  அமைச்சுப்  பூண்ட  வியாழ  வெள்ளிகளது  துணிபு  தொகுத்துப்  பின்  நீதி  நூலுடை யார்  கூறியவாறு  கூறுகின்றமையின் “   என்று  எழுதியிருத்தலால்   வடமொழியிற்  புகழ்  மிக்கவர்களான  வியாழ  வெள்ளிகளின்  நூற்  கருத்துக்கள்  நம்  வள்ளுவர்  வாய்மொழியிற்  புலப்படுகின்றன வென்பது  பரிமேலழகர்  கருத்தாம் . ஒரு  நாட்டினர்  வழக்க  வொழுக்கங்களை  உணர்ந்து  அவற்றிற்  கேற்ப  நீதிகளை  வரையறுக்கும்  ஆசிரியர்கள்  கால  இடையறவால்  சேய்மைக்கண் உள்ளாரெனினும் , பொருள்  ஒற்றுமைக்கருத்தால் அணிமையில்  உள்ளவராகவே  கருதப்படுவர் .

                வடமொழியில்  மனு  முதலிய  நூல்களில்  அறம் , பொருள் , இன்பங்கள்  விரவக்  கூறப்பட்டுள்ளன . பொருட்பகுதியாகிய   அரசியல்  முறையைத்  தனிமையில்  விளக்க  எழுந்த  நூல்களுள்,  பிருகற்பதியாகிய  வியாழ  குருவால்  தேவர்கள்  பொருட்டு  இயற்றப்பட்ட   பாற்கபத்தியமும் , உசனஸ்  என்னும்  சுக்கிராசாரி யாரால்  அசுரர்  பொருட்டு   இயற்றப்பட்ட  ஒளசநசமும்  முதலில்  நினைக்கத்தக்கனவாம் .  இவற்றின்பின்  எழுந்தன  சந்திரகுப்தன் காலத்து  அமைச்சராக  இருந்த  சாணக்கியரால்  ஆக்கப்பட்ட  கெளடலியமும் , காமாந்தகனால்  இயற்றப்பட்ட  காமாந்தக  முதலிய  னவும்  ஆம் . இவற்றுள்  இக் காலத்துச்  சட்ட  நூல்  வல்லோராற்  பெரிதும்  தழுவப்படுவது கெளடலியம்  என்னும்  நூலேயாம் . வியழனால்  ஆக்கப்பட்ட  நூலினும்  வெள்ளியாகிய  சுக்கிரரால்  ஆக்கப்பட்ட  நூல்  தென்னாட்டு  வழக்க  வொழுக்கங்  களுக்குப்  பெரிதும்  இயைபுடையதாகும் .  இவற்றின் பின் தோன்றிய  கெளடலிய  நூலின்  தொடக்கத்தில்  அதன்  ஆசிரியர்  பூர்வாசார்ய  வணக்கமாகச்  “சுக்கிர  பிரகஸ்பதிப்யாம்  நம:”  —-  சுக்கிரற்கும்  பிருகற்பதிக்கும்  வணக்கம்”  என்று  கூறியுள்ளார் .  இதனாலேயே  வெள்ளி  நூலின்  விழுப்பம்  புலப்படுவதாகும் .  பிற்காலத்துக்  கவிஞர் பெருமானாகிய  கம்பர் “வெள்ளியும்  பொன்னும்  என்பார்  விதிமுறை வகுத்த  நூலில்”   என்று  முறைப்படுத்திக்  கூறியதும்  இதனை  வலியுறுத்தும் . இங்ஙனம்  சிறந்துள  ஒளசநசத்தின்  சுருக்கமே  ‘சுக்கிரநீதி’   என்னும்  மேற்பொருள்  நூலாகும் .

                இச்  சுக்கிரநீதியைத்  தமிழ் மக்கள்  நலங்குறித்து   மொழி பெயர்த்தபொழுது  யாம்  கண்ட  புதுமைகளும் , பழமைக்குரிய  சான்றுகளும்   பலவாம் . “புதல்வர்ப் பேற்றை  விரும்பும்  பெண்  மக்கள்  வைரமணியை  அணிதலாகாது”  என்று  கூறப்பட்டுள்ளது .  கருவைத்  தடைப்படுத்தற்கு  வைரவொளி  எங்ஙனங்  காரணமாகும்  என்பதைக்  கலவை (இரசாயன)நூலார்  ஆராய்தல்  வேண்டும் . இது  போன்றன  புதியனவாம் . நீர்ப்பொறி,  இசைப்பொறி , காற்றியக்கும் பொறி ,  கம்பி வழிச் செய்தியனுப்புங்  கருவி , நீராவியால்  இயக்கப்படும்  பொறிகள்  முதலிய  இக்  காலத்துக்  காணப்படும்  இயந்திரத்  தொழில்களைப் பற்றியும்  அந்  நூலிற்  கூறப்பட்டுள்ளன . ஆனால் , இவற்றின்  அமைப்பு  முறைகள்  வேறுபட்டிருக்கலாம் .  போர்த்  தொழில்  முறைகளும் , போர்க்கருவிகளும் ,  பொறி  வழியாக  ஆயுதங்களைச்  செலுத்தும்  முறையும் , வெடி மருந்து செய்யு முறையும் ,படைகளின்  அணிவகுப்புக்களும்   பிறவும்  செவ்வையாகக்  கூறப்பட்டுள்ளன .  மக்கள்  இயங்குஞ்சாலை  ( ROAD ) ஆமை  முதுகு   போல   இருக்க  வெண்டுமென்று  குறிப்பிடப்பட்டுள்ளது . ஆமை  முதுகு  இருமருங்கும்  தாழ்ந்து  நடுவிடம்  சிறிது  உயர்ந்திருக்கும் . இது  சாலை வழியிற்  பெய்யும்  மழை  நீரால்  அச்சாலை  கெடாமல்  இருப்பதற்குக்  கருதப்பட்டதாகும் , மேலும் , இந் நூலின்கண்   அரசனியல்பு  ,  அவன்  சுற்றங்களாகிய  அமைச்சர்  முதலியோரியல்பு, வினை  செய்யும்  ஏவலரியல்பு,  கிராம  பரிபாலனம் ,  வாணிக  முறை   நியாய  மன்றங்கள், நீதிபதியின்  அதிகாரங்கள்   வழக்கின்  இயல்புகள்  முதலியன  விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளன .   

          கரிகாற்  சோழ  அரசனைக்  குடிமக்களுள்  ஒருவனாகச்  சிலப்பதிகாரம்  கூறும். இதனால்  அரசன்  குடி மக்களின்   உயர்ந்தனவாகத்  தன்னை எண்ணலாகாது  என்பது  புலனாகும்.  செங்கோன்மை  தவறாது  செலுத்தும்  நல்லரசற்கு  அரசியற்  காரியம்  தன்னலங்  குறித்ததாகாது ; குடிமக்கள்  நலங்குறித்ததேயாம்.  இங்கே , கோவலனைக்  குற்றமில்  வழியும்  கொலை  புரிவித்த   பாண்டியனைக்  கண்ணகியார்  வெகுள ,  அது  காரணமாகப்  பாண்டியன்  உயிரிழந்தான்  என்று  தண்டமிழ்ப்  புலவர்  சாத்தனார்   செங்குட்டுவற்குக்  கூறினாராக ,  அது  கேட்ட  செங்குட்டுவன்   பாண்டியன்  தவரின்மையையும்  அரசியல்  நடாத்தும்  சிரமத்தையும்  சாத்தனார்க்குக்  கூறுமுகமாக,

“மழைவளங்  கரப்பின்  வான்பே  ரச்சம்

 பிழையுயி  ரெய்திற்  பெரும்பே  ரச்சம் 

குடிபுர  வுண்டும்  கொடுங்கோ  லஞ்சி

மன்பதை  காக்கும்  நன்குடிப்  பிறத்தல்

துன்ப  மல்லது  தொழுதக  வில்லென”

என்று  இளங்கோவடிகள்  கூறியது  நினைந்  தின்புறத்தக்கது .  “அரசன்  குடிகளினிடத்தினின்று  தனக்குரிய   அரசிறையாகிய  வேதனத்தைப்  பெறுதலால் , அக்குடிகளுக்கு  ஏவலாளர்  தன்மையுடையவனாவான்  எனவும் , “பூமரத்தை  வளர்த்து  மலர்  பறித்து  மாலை  கட்டிப்  பயன்  பெறுபவனை  யொப்பக்  குடிகளைப்  பாதுகாத்து  அவர்பால்  அரசிறை  பெற  வேண்டும்”  எனவும்,   அங்ஙனமின்றி  அம்மரத்தை  எரித்துக்  கரி  செய்து  பயன்  பெறுதல்  போலக்  குடிகளைக்  கெடுத்துச் சிறுபயன்  கொள்ளலாகாது”  எனவும்  சுக்கிர நீதி  கூறுகின்றது . இச் செய்திகள்  மிகவும்  பாராட்டற் குரியனவாம் .  

             திருக்குறட்  பொருட்பகுதியில்  அரசர் , அமைச்சர் , படைத் தலைவர் முதலியோரின்   இலக்கணங்களாகக்  கூறப்பட்டனவும்   பிறவும்  யாண்டும்  காண்டற்கரியனவாம் . ஒற்றர்  இயல்பு  கூறுங்கால் ஒற்றும் , நீதி  நூலும்   ஆகிய  இரண்டும்  அரசர்க்கு  இரு  கண்களாகும் என்று  கூறப்பட்டுள்ளது . நாட்டின்  இலக்கணங்  கூறுங்கால் .  ஒரு  நாட்டில் , வாழ்வோர்  தேடி  வருந்தாமல்  வேண்டுவனவெல்லாம்  ஆங்கே  பெறத்தக்கதாக  இருத்தல்  வேண்டும்  என்னும்  கருத்தமைய  “நாடென்ப  நாடாவளத்தன”  என்கிறார் .  பிணியின்மையையும் , நிரம்பிய  செல்வமும் , விளைவும் , இன்பமும் , காவலும்  ஆகிய  இவ்வைந்தும்  நாட்டிற்கு  அழகு  செய்வனவெனும்  கூறப்பட்டுள்ளன . இதனால்  அரசன்  தன்  நாட்டை  இத்தகுதிகளுக்கு  உரியதாக  அமைத்துக் கொள்ள  வேண்டுமென்பது  புலனாகும் . அமைச்சரியல்பு  கூறுங்கால் , வினைத்தூய்மை  ,  வினைத்  திட்பம் , வினை  செயல்  வகை   என  மூன்றதிகாரங்கள்  காணப்படுகின்றன .  இவற்றை  ஊன்றிப்  படிப்பார்குத்  தாம்  செய்ய  வேண்டிய  காரியங்களைப்  பற்றிய  தெளிவு  கல்லெழுத்துப்  போல  நெஞ்சிற்  பதிவதாம் .  திருக்குறளே  யல்லாமல்  நாலடியார் , நான்மணிக் கடிகை , திரிகடுகம்  சிறுபஞ்சமூலம்  முதலிய  சங்கமருவிய   நீதிநூல்களும்  தமிழிற்  பலவுள .  அவையெல்லாம்  மக்கள்  ஒழுங்குமுறைகளை  வரையறுத்துத்  தெளிவுபடுத்துவனவாகும்.

               நாலடியார்  என்னும்  நூல்  கற்பார்  மனதைக்  கவரவல்லது . “ஆலும்  வேலும்  பல்லிற்குறுதி , நாலு  மிரண்டுஞ்  சொல்லிற்குறுதி “  என்னும்  பழமொழியில்  நாலென்பது  நாலடியாரையும்  இரண்டு  என்பது  ஈரடியான்  அமைந்த  திருக்குறளையுங்  குறிப்பனவாம் .  ஒருவன்  சிற்சில  செயல்களிற்  செவிடனாய்க்  குருடனாய்  ஊமை யாயிருத்தல்  வேண்டுமென   நாலடி  கூறுகின்றது . இம் முறை  வியக்கத்தக்கது . இதன்  கருத்து , பிறர்  ரகசியங்களைக்  கேட்பதிற்  செவிடனாகவும் , பிறர்  மனைவியரைக்  காம  நோக்கமாகக்  காண்பதிற்  குருடனாகவும்  பிறரைப்  பற்றிக்  காணாவிடத்துப்  புறங்  கூறுவதில்  ஊமையாகவும்  இருத்தல்  வேண்டும்  என்பதாம் . இங்ஙனம்  சாதுரியமாகக்  கூறுமியல்பு  இந் நூலிற்  பல  விடங்களிற்  காணலாம் . ஒருவன்  மற்றொருவன்பால்  இல்லாத  குணங்களைப்  புகழ்வதினும்  அவனை  வைதல்  நல்லதென்கிறார் .  கடையாயர் , இடையாயர் , தலையாயர்  ஆகிய  இம்  முத்திறத்தாரும்   அஞ்சுதற்குரியன   யாவை  என்னும்  வினாவை  எழுப்பி  விடையிருக்கு முகமாக  கடையார்  பசிக்கு  அஞ்சுவரெனவும் , இடையார்  துன்பத்திற்கு  அஞ்சுவரெனவும் ,  தலையாயர்  பழிச்  சொல்லிற்கு  அஞ்சுவரெனவும்  கூறுவர் .  குலப் பெருமை  பேசுவார்க்கு , “நல்ல  குலமென்றுந்  தீய  குலமென்றுஞ்  சொல்லள  வல்லாற்  பொருளில்லை”  என்றும் , “தவங்கல்வி  ஆள்வினை  என்றிவற்றான்  ஆகும்குலம் “  என்றுங்  கூறுவர் . இன்னோரன்ன  சிறந்த  நீதிமணிகள்  பல  ஒளிசெய்தலை  இந் நூலாகிய  பொற்பேழையிற்  பரக்கக்  காணலாம் .  

               பிற்காலத்து  ஒளவைப்  பிராட்டியார்  அருளிய  ஆத்தி சூடி , வாக்குண்டாம் , நல்வழி  முதலிய  நீதி  நூல்கள்  சிறுவரும்  உணர்ந்து  இன்புறத்தக்க  நிலையில்  அமைந்த பேரறிவாளர்க்கும்  விருந்தாக  விளங்குவன . ‘இயல்வது  கரவேல்’  என்னும்  சூத்திரம்  ஒருவன்  மனமொழி  மெய்களாற்  பிறர்க்குச்  செய்யக்கூடிய  உதவியை  ஒளித்தலாகாது  என்னும்  பொருளை  உட்கொண்ட   இப்பொருளின்  விரிவுகளுக்  கெல்லாம்  நிலைக்  களமாக  நிற்றலை  நோக்குவார்க்கு  இதன்  திட்ப  நுட்பங்கள்  இனிது  விளங்கும் .   

“சில்வகை  யெழுத்திற்  பல்வகைப்  பொருளைச்

 செவ்வன்  ஆடியிற்  செறித்தினிது  விளக்கித்

 திட்ப  நுட்பஞ்   சிறந்தன  சூத்திரம் “

 என்பதனாற்  சூத்திரத்தின்  இலக்கணத்தை  அறியலாம் .  இவ்விலக்கணத்துக்குப்  பெரிதும்  இவ்  ஆத்திசூடிச்  சூத்திரங்கள்  இயைபுடையவாக  விளங்குவன . இந் நூல்  மாபாடியம்  போன்ற   விரிவுரையே  யேற்குந்  தகுதி  வாய்ந்தது . உயர்ந்த  நீதிகலைச்  சிறுவர்  எளிதிலுணர்ந்து  கொள்ளுதற்குப்  பெரும்  புலவர்கள்  பல  நிறமாக  வகுத்து  ஆராய்ந்து உரை  காண்டற்கும்  இஃது  இலக்கியமாகத்  திகழுமாயின் , இதனை  உபகரித்த  தமிழ்ச்  செல்வியின்  அறிவின்  திட்பம்  எத்துணைச்  சிறந்ததாகும்  என்பதை  அறிவுடையார்  உணர்வாராக .

             பண்டை  நீதிநூலார்  கூடிய  வரை  முயன்று  தம்  அநுபவத்திற்  கண்ட  உண்மைகளை  நெடுங்கால  மாயினும்  சிதையாம லிருத்தற் பொருட்டுச்  சூத்திர வடிவிலும்  செய்யுள்  வடிவிலும்  யாத்துள்ளனர் .  அவை  உரைநடையில்  ஆக்கப்படாமை  குறையென்பர்  ஒரு  சாரார் .  முற்காலத்தில்  இவ்வளவு  விரிவாக  அச்சிடுதற்குரிய  கருவிகளில்லை.  கற்பவர்  நெஞ்சத்திலும்   உரைநடையிலும்  செய்யுள்  நடை  நிலைபெற்று  ஞாபகத்துக்கு  நன்கு  பயன்படும் . காலந்தோறும்  மக்கள்  வழக்கவொழுக்கங்கள்   மாறுபடுதல்  இயல்பே .  அம்  மாறுபாட்டிற்கேற்ப  நீதிகளும்  திருத்தப்படுமென்பது  சொல்லாமலே  விளங்கும் .  மகாபாரத்துக் கண்ட சில அறங்கள்  இக்காலத்துக்குப்  பொருத்தமாகக்  காணப்படா . அது  பற்றிப்  பேரறிஞராகிய   வியாச  முனிவர்  இழித்துரைக்கப்படுவாரல்லர் . ஆகவே  எத்தகைய  நீதிகளையும்  காலம்  நோக்கிக்   கொள்ளுதலும்  தள்ளுதலுஞ்  செய்தல்  வேண்டும் . “பழையன  கழிதலும்  புதியன  புகுதலும்”  என்பதைக்  கடைப்பிடித்து  மனம்  போனபடி  செய்யத்  துணிதல்  நன்றன்று .  இங்ஙனம்  வடமொழி  தென்மொழிகளிற்  சிறந்த  நீதி  நூல்களை  ஆக்கிய  பெரியாருடைய  இயல்புகளை  இங்கே  கூறியன  கொண்டு  தெளிந்து  கொள்க .

                                 4 .  மாணிக்கவாசகர்

                         (  திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

  செந்தமிழ்ப்  பாண்டி  வள  நாட்டிலே  ,  சைவ  மணங்கமழுந்   திருவாதவூர்  என்னும்  திரு  நகரில் , சிவ  பக்தி மிக்க  அந்தணர்  குலத்தில்  மாணிக்கவாசக  அடிகள்  தோன்றியருளினார்கள் .  இவர்களுக்குப்  பிள்ளைத்  திருப்பெயர்   திருவாதவூரர்  என்பதாம் . இவர்கள்  தோன்றியருளினமையைக்  குறித்துக்  கடவுண்  மாமுனிவர், ‘உலகில்  மாயப்  பொங்கிருளகல   எம்மையாளுடை யான்  அன்ப ரிதய தாமரைக ளெல்லாஞ்  செம்மையாய்  மலர , ஞான  தினகரர்  உதயஞ்  செய்தார்’  என்று   சிறப்பித்துப்  பாராட்டுவர் .  திருவாதவூரர்  இளம்  பருவத்திற்  கருவி  நூல்கள் , அரசியல்  நூல்கள் , சமய நூல்கள் , முதலியவற்றை  ஐயந்திரிபறக்  கற்றுத்  தெளிந்த  அறிவுடையராக  விளங்கினர் .  அக்காலத்து  மதுரையிலிருந்து  தமிழ் நாடு புரந்த  அரிமர்த்தன  பாண்டியன்,  இவர்கள்  அறிவின்  மாண்பை   யுணர்ந்து  அழைத்துத்  தன்  அரசியல்  நடாத்துதற்குரிய  அமைச்சருள்  தலைவராக்கினான் . அவர்கள்  மதிநுட்பம்   நூலோடுடையராய்  அமைச்சருள்   தலைவராக  வீற்றிருந்து  அறநிலை  பேணித்  தம்  செயலாற்று  நாளில் , “நானார் , என்னுள்ளமார் ,  ஞானங்களார்”  என்று  இன்னோரன்ன  தத்துவ  ஆராய்ச்சியில்  தலைப்பட்டு , இருவினைக் கீடாகப்  பிறந்து  இறத்துழலும்  உயிர்த்  தொகுதிகளி னியல்பும் , அவ்வுயிர்களை  வினைப்பயன்  நுகர்வித்து  அருள்புரியும்   பரங்  கருணைத்  தடங்கடலாகிய  இறைவனியல்பும் , அவ்விறைவனை  யுணர்ந்து  இன்பம்  எய்தற்குத்  தடையாகவுள்ள   பாசப் பொருள்களினியல்பும்  உள்ளவாறுணர்ந்து  தெளிவெய்தினர் .  இந்  நிலையில்  அடிகள்  “கூத்தினர்  தன்மை  வேறு , கோலம்  வேறாகுமா போல்”பாண்டியன்  இட்ட  பணியைப்  புறத்தே  மேற்கொண்டும்  அகத்தே  பற்றற்றும்  சிவபத்தியில்  ஈடுபட்டு  ஒழுகுவாராயினர் .

            அந்நாளில்  பாண்டியற்குக்  குதிரை  வாங்கப்  பொன்  கொண்டு  சென்றவர் , திருப்பெருந்துறையில்  குருந்த  மரத்து  நீழலில் , இவர்  பந்தமறும்  எல்லையது  பார்த்தினிதிருந்த  , சிவபரம்  பொருளாகிய  குருபரனைத்  தரிசித்து  உள்ளங்கரைந்து  உலகியலை  மறந்து , “உன்னடியடைந்து  நாயேன்  உறுபவம்  ஒழித்தல் வேண்டும், என்னுயிர்க்கிறைவா”  என்று  முன்னுற  வணங்கி  நின்றார் .  இவர்  அதி  தீவிர  பக்குவ  நலையைக்  கண்டு  பெருமான்  அருள்  கூர்ந்து  சிவஞான  போதமென்னுஞ் சைவத்  தலை  நூலின்  நுண் பொருளைத்  தெளிவுறுத்திய  பின் , “இருவினைப்  பாசமும்  மலக்கல்  லார்த்தலின், வருபவக்  கடலின்வீழ்  மாக்களேறிட  , அருளுமெய் யஞ்செழுத்தை  அநுபவ  நிலையில்  உபதேசித்தருளினார் . இங்ஙனம்  குருபரன்  பாலுணர்ந்த  தம் அநுபவத்தையே  ,’ நானேயோ  தவஞ்  செய்தேன்  சிவாய  நமவெனப்  பெற்றேன் “  என்று  அடிகள்  திருவாய்  மலர்ந்தருளினார் .

          இவ்வாறாகப்  பாண்டியன்  பொருட்டுக்  குதிரை  வாங்கப்    போனவர் தொன்னுறு  பரி  கொளாமல்   கோவணங்கொண்ட  செய்தியைப்  பாண்டியன்  கேட்டு , ஓலைபோக்கி , அடிகளை  அழைப்பித்துத்   துன்புறுத்தினானாக .  அடிகள்  தஞ்  செயலற்று  எல்லாம்  இறைசெயலாகக்  கண்டிருப்பவராதலின், அவ்விறை  நினைவில்  ஈடுபட்டிருந்தனர் . பின்னர் , இவர் பொருட்டு  இறைவன்  நரியைக்  குதிரைப்  பரியாக்கி  ஞாலமெல்லாம்  நிகழ்வித்தும் , மண்  சுமந்தும் , பிரம்படியுண்டும் , அடிகள் பால்  தாம்  கொண்ட  அருட்டிறத்தை  உலகுக்கு  விளக்கியருளினார் . அடிகள்  திருவரு ளமிர்தத்தை  நிறைய  வுண்டு  , சிவாநுபவச்  செல்வராக  விளங்கிய  நிலையில் , “யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்  வையகம்”  என்ற  முதுமொழிப்படி  தம்  அருளநுபவத்தை  உலகத்துள்ள  மக்களுக் கெல்லாம்   வழங்க  ஆண்டவன்  அருள்  வழி  நினைந்து  திருவாசகம்  என்னும்  இசைப்பாடற் றொகுதியைத்  திருவாய்  மலர்ந்தருளினார் .  

            உலகப்  பற்றை  முழுதும்  துறந்த  உத்தமச்  சிவஞானச்  செல்வர், தமக்கு  இறைவன்  அருளிய  ஒப்புயர்வில்லாப்  பேரின்ப  நிலையைத்  தாம்  அநுபவித்த  அளவில்  நின்று  விடாது , உலகத்து  மக்களுக் கெல்லாம்  உபகரிக்க  நினைந்தது  பெரிதும்  பாராட்டத்தக்கது . இல்வாழ்வார்க்கு  அன்பென்னும்  அருங்குணமும்  துறவற வாழ்க்கை  யுடையார்க்கு  அருளென்னும்  பெருங்குணம்  சிறப்பாக  இருத்தல்  வேண்டும்  என்பர்  திருக்குறளாசிரியர் .  மாணிக்கவாசகப்  பெருமான்  இவ்விரு  பெருங்  குணங்களுக்கும்  நிலைக்களமாக  விளங்கிய  பெரியராவர் .

               இவர்  மேற்கொண்ட  நெறி , சரியை  கிரியை  யோகங்களுக்கு  மேலான  ஞான  நெறியாகிய  சன்மார்க்கமாகும் .  இந் நெறியில்  நின்ற  அடிகள் , காணப்படும்  இவ்வுலக  வியல்புகளைத்  தம்  கூர்த்த  மதியால்  உய்த்துணர்ந்து , பருப் பொருளாகிய  மாயா  காரியங்க ளெல்லாம் தத்தங்  கால  வெல்லையில்  அழித்தழிந்து  தேய்ந்தொழிவன  என்னும்  உண்மையையும் , இவ் வெல்லாவற்றையும்  கன்மங்களுக் கீடாகப்  படைத்தும் , காத்தும் , கரந்தும்  விளையாடும்  பேராற்றல்  வாய்ந்தது . கால  வெல்லையைக்  கடந்து  நிற்கும்  கடவுள்  ஒருவருளர்  என்பதையும் , அப்பெருமான்  சார்ந்தார்க்குத்  தண்ணிழலாய்ப்  பேரின்ப  வடிவாகத்  திகழும்  இயல்பினர் என்பதையும்  உள்ளவாறுணர்ந்து , அப்பெரும்  பெயர்க் கடவுள்  உபதேசத்தால் , தாம்  யெய்திய  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தைத்  தம்  சோதரராகிய  மக்களெல்லோரும்  துய்க்க  வேண்டுமென்னும்  பேரருளுடையராய்த்   திருவாசகம்  என்னும்  தெளிதேனைப்  பொழியும்  அருண்முகி லாயினர் .   

                 திருவாசகப்  பாடல்களில்  மாணிக்க வாசக அடிகளுடைய   சிவாநுபவ  நிறைவில்  பொங்கித்  ததும்பி வெளிப்பட்ட  முது வெள்ளமெனின்  மிகையாகாது . பிற்காலத்துச்  சிவயோக  நெறி  நின்று  இறையருளநுபவத்தில்  ஈடுபட்டு   ஒழுகிய  தாயுமான அடிகள்  “என்புருகி  நெஞ்சம்  இளகிக்  கரைந்து  கரைந்து , அன்புருவாய்  நிற்க அலைந்தேன் பராபரமே “  என்று  கூறியதற்கு  இலக்கியமாகவுள்ளவர்  மாணிக்கவாசக அடிகளே.  இவர்கள்  அன்பு  நெறியை  வியந்தே  ‘வாதவூர்  ஐயன்  அன்பை  வாஞ்சிப்பதெந்நாளோ’  என்றுங்  கூறினர் .   படிப்பவர்  கேட்பவர்  உள்ளங்களைக்  கனிவிக்கும்  கவிமழை  பொழிந்த  சமீப காலத்துக்  கவிஞர்  தலைமணியாகிய  இராமலிங்க  அடிகள்   , திருவாசகத்தைப்  பன்முறை  யோதி யுணர்ந்து  பயின்றவர்  என்பது  அவர்  அநுபவப்  பாடல்களால்  அறியலாம் .  ஒரு  சிறந்த  கவியினுள்ளத்தை  மற்றொரு  கவிதான்   உனரமுடியும் .  அந்நிலையில்   திருவாசகப்  பாடல்களில்  உள்ளந் தோய்ந்து பொருள்  நயங்களில்  ஈடுபட்ட  இராமலிங்க  அடிகள் ,

“வான்கலந்த  மாணிக்க  வாசகத்தின்  வாசகத்தை

நாங்கலந்து  பாடுங்கால்  நற்கருப்பஞ்  சாற்றினிலே

தேங்கலந்து  பால்கலந்து  செழுங்கனித்தீஞ்  சுவைகலந்து

ஊன்கலந்து  உயிர்கலந்து  உவட்டாமல்  இனிப்பதுவே “

என்று  கூறினர் .  ‘நான்  கலந்து  பாடுங்கால்’  என்றது  நினைக்கத் தக்கது .  ஒரு  பெரியார்  பாடலைப்  படிப்பவர்கள்  உள்ளமும்  அப்பாடற் பொருளும்  அத்துவித  நிலையடைதல்  வேண்டும் .  அங்ஙனம்  ஒன்றுபடுதலையே  ‘நான்  கலந்து  பாடுங்கால்’  என்றனர் .  திருவாசகச்  சுவை   ‘ஊங்கலந்து  உயிர்கலந்து  இனிப்பது ‘  என்றார் .  உயிரிற்கலந்து  தன்வயமாக்குங்  கனிவு  திருவாசகத்துக்குச்  சிறப்பியல்பாகும் .  தேன்  பால்  முதலிய  உவமைகளானன்றித்  திருவாசகச்  சுவையி னியல்பை  உள்ளபடி  கூறுக  என்பார்க்கு  விடையாக ,

“காமமிகு  காதலன்றன்  கலவிதனைக்  கருதுகின்ற

ஏமமிகும்  கற்புடையாள்  இன்பினும்  இன்பாயது” 

என்று , சொல்லொணாமையைக்  குறிப்பிட்டார் . இதற்கு  மேல்  அவ்வநுபவச்  சுவையை  எடுத்துக் கூறுதற்கு  எங்ஙனம்  இயலும் !  

               திருவாசக  திருப்பாடல்களை  ஒளடவ  ராகமாகிய  மோகனத்திற்  பொருளுணர்ந்து  பாடுவாராயின் ,கல்நெஞ்சமும்  கரையும் . “திருவாசகத்துக்கு  உருகாதார்  ஒரு  வாசகத்த்துக்கும்  உருகார்”  என்னும்  மூதுரையும்  இது  பற்றி யெழுந்ததே  கவிஞர்பெருமானாகிய  சிவப்பிரகாச  அடிகள் ,

“வாதவூ  ரன்பர்  மலர்வாய்ப்  பிறந்த

திருவா  சகமிங்  கொருகா  லோதில் 

கருங்கல்  மனமுங்  கரைந்துக்  கண்கள்

தொடுமணற்  கேணியிற்  சுரந்து  நீர்  பாய

அன்ப  ராகுந  ரன்றி 

மண்பதை  யுலகில்  மற்றைய  ரிலரே “

என்று  தம்  ஆராமையை  வெளிப்படுத்தினார் . இன்பக்  கலைகளுள்  ஒன்று  இசையென்பர்  அறிவுடையோர்   அவ்விசைக்குக்  கொழுக்கொம்பு  பொல  ஆதாரமாக  நிற்பது  இசைப்பாடல்களும் , சுவை  கனிந்த  பாடல்களிலன்றி  இசையின்  பெருமையை  உணர்தல்  இயலாது . இசை  பாடுபவன்  சுவைகளை  அநுபவித்த  உட்கோளைப்  புலப்படுத்துதர்குச்  சிறந்த  பாடல்களே  பற்றுக் கோடாகும் .

“வேதத்  தொலிகொண்டு  வீணை  கேட்பார்

 வெண்காடு  மேவிய  விகிர்தனாரே “

என்னும்  தமிழ்  மறையில்  யாழிசைக்கு  வேதப் பாடல்கள்  பற்றுக்கோடாக  விளங்கின  என்பது  புலனாகும் .  தமிழ்  நாட்டில்  இசைக்  கலை  வளர்ச்சி  யடைந்த  காலம்  தேவார  திருவாசக காலம்  என்பது  யாவர்க்கும்  உடன்பாடாகும் . ‘நாளும்  இன்னிசையால்  தமிழ்பரப்பும்  ஞான சம்பந்தர்’  என்றும்,  ‘கானத்தின்  எழுபிறப்பு’  என்றும்  திருஞானசம்பந்தர்  பெருமை  கூறப்படுகிறது .  திருவாசகப்  பாடல்களின்  சொற்களையும்  எழுத்துக்களையும்  சுரநிலங்களில்  அமைத்துப்  பாடினால்  சுரங்களுக்குப்  பாடல்  அமைந்ததோ  பாடல்களுக்குச்  சுரம்  அமைந்ததோ  என்று  இசைவல்லார் பெருவியப்பெய்துவர் .  பிறவிப்  பிணிக்குச்  சார்ந்த  மருந்தாகவுள்ள  அரும்  பொருள்களைப்  பாடல்களில்  அமைத்து  இசையாகிய  அநுபானத்தோடு  ஊட்டுதற்கு  முற்பட்டவர்  மணிவாசகப்  பெருந்தகையாவர் .

              இவர்கள்  பற்பல  சிவ   தலங்களுக்குச்  சென்று , ஆங்காங்குக்  கோயில்  கொண்டு  எழுந்தருளியிருக்கும்  இறைவனை  உள்ளத்தமைத்துப்  பாடும்  முகமாகத்  தம்  அநுபவ  உணர்வை  அன்பர்களுக்குத்  தெளிவாகப்  புலப்படுத்தியுள்ளார் .  எங்கும்  நிறைந்த  பரம்பொருளைச்  சில  இடங்களில்  மாத்திரம்  உள்ளதாகக் கொண்டு  பாடியது  பொருந்துமோ  எனின் ,  ஒரு பசுவின்  உடல்  முழுதும்  பால் பரவியிருப்பினும்  , அது  தோன்றுதற்குரிய  உறுப்பினன்றிப்  பிறிதிடத்து   வெளிப்படாதவாறு  போல , மக்கள்  வழிபாட்டிற்கிரங்கி  அருள்  புரிதற்கு   அருட்குறிகளின்  முகமாக  ஆண்டவன்  வெளிப்பட்டு  அருளுவர் .  இவ்வுணர்ச்சி  மேற்கொண்டே ,

பார்பதம்  அண்டம்  அனைத்துமாய்  முளைத்துப் 

 பரந்ததோர்  படரொளிப்  பரப்பே “ 

என்னும்  திருப்பாட்டின்  இம்  முற்பகுதியில்  இறைவனுடைய  எங்குநிறை  இயல்பைக்  கூறிப்  பிற்பகுதியில்  ,

“சீருறு  சிந்தை  யெழுந்ததோர்  தேனே

 திருப்பெருந்  துறையுறை  சிவனே

என்று  தம்  அகத்தும்  சிவ  தலத்தும் வெளிப்படும்  உண்மையைப்  புலப்படுத்தியுள்ளார் . இங்கே  எங்கு  நிறை  நிலையில்  ஒளிப்பரப்பா கவும் , உள்ளத்தில்  இனிக்குந்  தேனாகவும்  ,  திருக் கோயிலில்  மங்கலகரமான  மூர்த்தியாகவும்  பெருமான்  விளங்குவர் என்னும்  பொருணயம்  நினைந்து  இன்புறத் தக்கது .

          ஆண்டவன்  அமைப்பாகிய  அன்பு , அருள் , அறிவு  முதலிய  அரிய  குணங்களில்  ஈடுபடுத லன்றி , மக்களமைப்புக்களாகிய  சாதி  குலம் , பிறப்பு , பொருள்  முதலியவை  பற்றிய  உயர்வு  தாழ்வுகளைச்  சிறிதும்  நம்  மாணிக்கவாசகனார்  கருதியவரல்லர் . இவ்வுண்மை யைப்  புலப்படுத்துதற்கே , ‘சாதி  குலம்  பிறப்பென்னுஞ்  சுழிப்பட்டுத்  தடுமாறும்   ஆதமிலி  நாயேன்”  என்று  தம்  முற்பட்ட  இயல்பையும் , ‘குலங்  களைந்தாய்  களைந்தாய்  என்னைக்  குற்றம்’  என்று  இறைவனுக்குத்  தாம்  ஆளாய  பிற்பட்ட  இயல்பையும்  கூறுவாரா யினர் . மக்களுக்குக்  குலப்பெருமை  பேசுதல்  இயல்பென்பதும் , அதனால்  உண்டாகுஞ்  செருக்கு  ஒழியின் ,  அது  மூலமாக  உண்டாகும்  எல்லாக்  குற்றங்களும்  நீங்கி  விடும்  என்பதும்  அவர்கள்  கண்ட  உண்மைகளாம் . உடல் , பொருள் , ஆவி மூன்றனையும்  இறைவனுக்குரிய  பொருள்களாகக்  கொடுத்து , அவற்றில்  ஒரு  சிறிதும்  பற்றின்றி  ஒழுகுதலை  மேற்கொண்டன ராதலின்  ஏதும்  இடர்ப்பாடு  அடைந்திலர்  என்பது  விளங்கும் .

            ஒருவன்  எவ்வெப்   பொருள்கலிற்  பற்றொழிந்திருக்கின்றானோ, அவ்வப்  பொருள்களால்  வரும்  துன்பத்திற்கு  ஆளாகான்  என்பது  பெரியவர்கள்  கண்ட  உண்மை .அடிகள்  விருப்பு  வெறுப்பற்ற  நிலையில்  நின்றார்களெனினும்  மக்கள்  பாலுள்ள  சோதர  உரிமையை  விட்டவரல்லர் . அதற்குக்  காரணம்  அன்னாரெல்லாம்   தாம்  பெற்ற  பேரின்பப்  பெருவாழ்வில்  தலைப்பட  வேண்டுமென்னும்  கருணையேயாகும் .  இவ்வருளறத்தை  மேற்கொண்டே  , ‘காலமுண்டாகவே  காதல்  செய்துய்ம்மின்’   என்றும் , ‘மூலபண்டாரம்  வழங்குகின்றான் வந்து  முந்துமினே’  என்றும் ,  ‘முழுதுலகும்  தருவான் கொடையே வந்து  முந்துமினே’  என்றும்  உலகத்தவரை  நோக்கி  அருளமுதத்தை  உடனுண்ண  அழைப்பாராயினர் . அவர்  அன்புடன்  விடுத்த  அழைப்பிற்  கிணங்கி  வாராத  மடவோரை , உலக  நிலையா மையை  யுணர்த்தி  அஞ்சுவித்தாயினும்  அழைத்து  ஊட்ட  வேண்டு மென்னும்  அருள்  நிறைவால் , ‘நிற்பார்  நிற்க  நில்லா  உலகில்  நில்லோ மினி  நாம்  செல்வோமே’  என்று  திருவாய்  மலர்ந்தருளினார்.

                 இனி , அடிகள்  உலகியலைக்  கடந்த  நிலையில்  நின்று  மறையோனாகிய  இறைவன்  அருள்  வெள்ளத்துள்  மூழ்கிப்  பேரின்ப  நிலையில்  தடைப்பட்டு  அநுபவித்த  உண்மைகளெல்லாம்  மனம்  வாக்குகளுக்கு  அடங்காதனவாகவும் ,  அவற்றைப் பதிகரணமாக  மாறப் பெற்ற  நம் உள்ளத்தால் அறுதியிட்டுத்  தெள்ளமுத உரைகளால்   அறிவிற்  சிறியாரும்  உணர்ந்து  இன்புறும்  வண்ணம்  இசையினிமை  மிக்க  பாடல்  வடிவில்  வெளிப்படுத்திய  முறை  மிகவும்  பாராட்டற் குரியது .  அம்மானை , பொற் சுண்ண  மிடித்தல் , உந்தி , சாழல் , தெள்ளேணம் , ஊசல்  முதலிய  மகளிர்  விளையாடல்களில்  , அவர்  தம்முள உரையாடு  முகமாக , அரிய  அநுபவ  உண்மைகளை  எளிய  முறையில்  தெளிவுபடுத்தியது .  அடிகள்  ஏனைய  மக்கள்பால்  வைத்த  பெருங்  கருணைக்குப்   பெரிது  சான்றாவதாம் .  குயிலை  முன்னிலைப்படுத்தி  இறைவன்  அருட்குணங்களை  இங்ஙனம்  கூவுக  எனவும்   வேண்டுகோளை  நோக்கி  இங்ஙனம்  ஊதுக  எனவும் , அருளிச்செய்த   திருப்பாடல்களை  நோக்குங்கால் , ஓசையொலி யெல்லாம்  சிவமயமாகக்  கண்டார்  என்பது  புலனாம் .  

              தாம்  அநுபவித்த  பொருட்களின்  வரையறையும் , தெளிவும் , குழைந்த  அன்பின்  கனிவும்  ததும்ப  இடையறாது  ஒழுகும்  தேனருவி  போன்ற  ஒழுக்கமிக்க  இவர்கள் பாடல்களின்  இயல்பை  நம்மனோர்  எங்ஙனம்  எடுத்துரைக்க  இயலும் !  ஆயினும்  இவற்றிற்கெல்லாம்  எடுத்துக்காட்டாக, சிறிய  வடிவிலமைந்த  ஒரு  திருப்பாடலைக்  குறிப்பிடலாம் என்று  எண்ணுகின்றேன் . அஃதாவது ,

“இன்பம்  பெருக்கி  யிருளகற்றி  யெஞ்ஞான்றும் 

 துன்பம்  தொடர்வறுத்துச்  சோதியாய் —  அன்பமைத்துச்

சீரார்  பெருந்துறையான்  என்னுடைய  சிந்தையே 

 ராகக்  கொண்டா  னுவந்த “ 

என்பதாம் .  சுவை  மிக்க  அமிர்தத்தைப்  பெய்து  வைத்தற்குரிய  கலத்தில்  அவ்வமிர்தத்திற்கு மாறுபட்ட  பொருள்  இருத்தலாகாது . இருக்குமாயின் , முதலில்  அதனை  அறவே  ஒழித்து  விட  வேண்டும் . பின்னர் , அக்கலத்தை  உரிய  கருவி  கொண்டு  அழுக்கொழித்துத்  தூய்மைப்படுத்த வேண்டும் . அதன்பின் , நல்லமிர்தத்தைப்  பெய்து  வைத்தல்  முறயாம் . இஃது  உலகியலிற்  கண்டது . இவ்வண்மையை  நினைவு  கூர்ந்த  அடிகள்  இத்திருப்பாடலில்  ஓர்  அரிய  அநுபவத்தை  வெளியிடுவராயினர் . இறைவனார்  தம்  அருளமிர்தத்தை அடிகள்  உள்ளமாகிய  கொள்  கலத்தில்  பெய்து  வைக்கத்  திருவுளங்  கொண்டு , அதன்கண் நீண்ட  காலமாக  ஈட்டப்பட்டு  நிறைத்து  வைத்த  மாயாகாரியப் பொருள்களாகிய  துன்பங்களை  அறவே  ஒழித்துப் , பின்  மயக்க  உருவமாகப்  படிந்து  கிடந்த  இருளைத்  தன்  அருட்பார்வை  யொளியாற்  போக்கிப்  பேரின்பமாகிய  அருளமிர்தத்தைப்  பெய்து  இன்புறுத்தினாரென்பதும் . அந் நிலையில் அடிகள்  உள்ள  முழுதும்  அன்பு  மயமான  குளிர்ந்த  இடமாக  அதன்கட்  பெருமாள்  வீற்றிருந்தருளினரென்பதும்  இதன்கட்  புலனாம்  படி ,  “சோதியாய்  நின்று  இருளகற்றித்  , துன்பந்  தொடர்வறுத்து இன்பம்  பெருக்கி , அன்பமைத்து  என்னுடைய  சிந்தையே  ஊராகக்  கொண்டான் “  என  நிரனிறைப்  பொருள்கோளாக   அழகு  பொருந்தத்  திருவாய்  மலர்ந்தருளினார் .

           இங்ஙனம்  மாணிக்க வாசக  அடிகள்  நம்மனோர்  உய்யும்  பொருட்டுத்  தாம்  அநுபவித்த  சிவானந்தத்  தெள்ளமுதைச்  சொல்லினிமை  பொருளினிமைகளிற்   சிறந்த  பாடல்  வடிவில்  வெளிப்படுத்தருளிய  பேருபகாரத்தை  நினைவு  கூர்தற்கு  அறிகுறியாக  நாம்  மேற்கொள்ளத்தக்கது , அப்பாடல்களை  இசை  நலம்  பொருந்த  மெய்யன்போடு  ஓதியும்  உண்மைப்பொருள்களை  உணர்ந்தும்  இன்புறுதலேயாம் .  அன்பே  சிவம்  எனும்  அரிய  பொருளுரை  மக்கள்  உள்ளத்தில்  நிலவுவதாக .

                      5 .  சங்க   காலத்து   அங்கதம்

                       (  திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

         ஆங்கில  மொழியில்    SATIRE  (செடயர்)  என்பது  தமிழில்  அங்கதம்  என்று  வழங்கப்படும் .  தமிழிற்  காலத்தால்  முற்பட்ட   தொல்காப்பியம்  என்னும்  இலக்கன  நூலில் , இவ்வங்கதம்  பற்றி  வந்த  செய்யுளின்  இலக்கணமும்  வகையும்  இன்னவென ,

“வசையொடும்  நசையொடும்  புணர்ந்தன்  றாயின்

 அங்கதச்  செய்யு  லென்மனார்  புலவர்”

“அங்கதந்தானே  அரில்தபத்  தெரியின்

 செம்பொருள்  கரந்த  தெனவிரு  வகைத்தே”

“மொழிகரந்து  சொல்லினது  பழிகரப்  பாகும் “

என்னும்  இவை  முதலிய  சூத்திரங்களால்  தெளிய  உரைக்கப்பட்டன . ஒருவனுடைய  குறையையோ  ஒரு  சமூகத்தாரின்  குறையையோ  , அன்னார்  நெஞ்சில்  உறுத்தும்  வண்ணம் வெளிப்படையாகவும்  குறிப்பாகவும்  கூறுதல்  அங்கதமாகும் .  அங்ஙனங்  கூறுங்கால்  நகைச்  சுவை  தோன்றக்  கூறுதல்  இன்புறத் தக்க  தொன்றாகும் .

             இவ் வங்கதம் , வெளிப்படையாகக்  கூறுதல் , கரந்தமொழியிற்  கூறுதல்  என  இரு  வகைப்படும்  என்பது  முதற்கூறிய  இரண்டாம்  சூத்திரத்தால்   அறியப்பட்டதொன்று .  வாய்  காவாது  சொல்லும்  வசையே  இங்குச்  செம்பொருளங்கதம்  எனப்படும்  .  இதனைச்  செவியாலநுபவிக்கப்படுஞ்  சொற்சுவை  பொருட்சுவைகளை  யுணராது  வாயால்  நுகரப்படும்  உணவின்  சுவையிலேயெ  ஈடுபடும்  மனிதர்  செத்தால்  வரும்  இழப்பும்  வாழ்ந்தால்  வரும்  பேறும்  இன்மையால்  உலகிற்கு  அவரால்  வருவது  யாது ? என்னும்  பொருள்  தோன்றக்  கூறிய ,

“செவியிற்  சுவையுணரா  வாயுணர்வின்  மாக்கள்

  அவியினும்   வாழினு  மென் ?”

 என்னுந்  திருக்குறளால்  அறியலாம் .  இங்ஙனம்  வெளிப்படையாகக்  கூறல்  நீதி  நூற்று  இயல்பாகும் .  கவிநயந்  தோன்றக்  கூறற்குக்  கரந்த  மொழியாற்  கூறலே  சிறந்ததாகும் .  இதனையே  இங்கே  குறிப்பிட்ட  இறுதிச்  சரித்திரம்  புலப்படுத்தும் .  வசைப்பொருளினைச்  செம்பொருள்  படாமலிசைப்பது   பழிகரப்பங்கத  மென்று  பெறப்பட்டமையால்   இதுவே  SATIRE  என்று  கூறுவதற்குப்  பொருத்தமாகும் . இப்பகுதிக்கும்  திருக்குறளிற்  பல  சான்றுகள்  உள்ளன . 

“தேவரனையர்  கயவர்  அவருந்தாம்

 மேவன  செய்தொழுகய  லான் “

என்னுந்  திருக்குறளில் , நெஞ்சத்து  அவல மில்லாத  வஞ்சக்கயவர்  சாதாரண  மண்ணுலக  மக்களுக்கு  ஒப்பாகார் ;  ஆனால்  அவர்கள்  உயர்ந்த  விண்ணுலகத்து  வாழும்  தேவர்க்கு  ஒப்பாவார் .  எதனாலெனின் ,  தேவர்கள்  தம்மை  நியமிப்பாரின்றி  எண்ணியவற் றைத்  தாமே  செய்தொழுகுதல்  போல , கீழ் மக்களும்  நல்லன  தீயன  ஆராயாது  தாம்  விரும்புவனவற்றை  விலக்கற்பாடின்றிச்  செய்தொழுகும்  இயல்புடைமையான்  என்று  குறிக்கப்பட்டுள்ளது .  மறைந்த  மொழிகளாற்  கயவருடைய   கயமைக்  குணங்களை   நகைச்சுவை   தோன்ற  இடித்துரைக்கும்  வள்ளுவர்  வாய்மொழியின்  மாண்பு  இங்கே  நினைக்கத்தக்கது .  

         வசை  யெடுத்துக்  கூறுங்கால்  அவ் வசையுடையயார்  அஃதொழிந்து  திருந்த வேண்டும்  என்னும்  நோக்கத்தாற்  கூறுதல்  நன்று .  அந்  நோக்க மின்றியுங்  கூறலாம் .  இவ்விலக்கண  அமைதிப்படி , சங்க  நூல்களிற்   காணப்படுங்  குறிப்புக்களை  ஆராய்தல்  இன்பம்  பயப்பதொன்று . தொகை  நூல்களிற்  சிறந்த  புறநானூறு  என்னும்  சங்கச்  செய்யுளில்  , ஒளவையார்  என்னும்  கவியரசியின்  புலமை  நலத்தைப்  பாராட்டாதாரிலர் .  தமிழ்   நாட்டு  முடியுடை  மூவேந்தராலும்   குறுநில  மன்னராலும்  போற்றப்பெற்று  வாழ்ந்த  ஒளவைப்  பெருமாட்டி  சேரர்  குலத்தவரின்  உறவினனும்  மழவர்  என்னும்  வீரர்களுக்குத்  தலைவனும்   கடை வள்ளல்களில்  ஒருவனும்  ஆகிய  அதியமான்  நெடுமானஞ்சியினிடத்துப்  பெரிதும்   அன்புடையராய்  ,  அவனால்  ஆதரிக்கப்பட்டிருக்குங்கால் ,  காஞ்சி  நகரத்திருந்த  தொண்டைமான்  என்னும்  அரசனிடம்  தூது  விடுக்கப்பட்டு   அவன்பாற்  சென்றார் . தொண்டைமான், தன்  வீரத்தையும்  படைப்பலத்தையும்  ஒளவையார்  கண்டு  விம்மிதங்  கொள்ள  வேண்டுமென்னும்   இறுமாப்புடையனாய்  ஒளவையை  நன்கு  வரவேற்றான் ;  ஆயுத  சாலையாகிய  படைக்கலக்  கொட்டிலைக்  காட்டினான் . அங்கே  வேல்  வாள்  முதலிய  படைகள்,  திரண்ட  அழகிய  கைப்பிடிகளை  யுடையனவாய்  எண்ணெய்  பூசப்பட்டு  மயிலிறகு  மாலை  முதலியன  அணியப்பட்டுக்  காவலை யுடைய  அகன்ற  அழகிய  கட்டிடத்தில்  எவரானுந்  தொடப்படாமல்  வைக்கப்  பெற்றிருத்தலைக்  கண்டு   வியந்து  கூறுவார்  போன்று   செருக்கு  மிக்க  தொண்டைமான் நெஞ்சில்  உறுத்தும்  வண்ணம்  ஓர்  அழகிய  பாடலைக்  கூறினர் .  அப்பாடற் பகுதி ,

“இவ்வே ,

 பீலி  அணிந்து  மாலை  சூட்டிக் 

கண்டிர  ணோன்காழ்  திருத்திநெய்   யணிந்து

கடியுடை  வியனக  ரவ்வே  யவ்வே 

பகைவர்க்   குத்திக்  கோடுநுதி  சிதைந்து 

கொற்றுறைக்  குற்றில   மாதோ”

என்பதாம்  . இதன்கண், அதியமான்  அடிக்கடி  அஞ்சாது  செய்யும்  போர்ச்  செயலில்  தலைப்படுவதால்  அவனுடைய  படைகள்  போரிற்  பயன்படுத்தப்பட்டுப்  பகைவரைக்  குத்தியதால்  கங்கும்  முனையும்  சிதைந்து  கொல்லனது  பணிக்   களரியாகிய  சிறிய   கொட்டிலின்  கண்  உள்ளன  என்றும் , தொண்டைமான்  அத்தகைய  போர்ச்செயலில்  தலைப்படாமல்  அஞ்சி  யொழுகும்  இயல்பினனா தலின்  அவன்  படைக்கலங்கள்  எத்தகைய  சிதைவுமின்றி  எண்ணெய்  பூசப்பட்டு  வனப்புடன்  அழகிய  மாளிகையில்  தூங்குகின்றன  என்னும்  கூறிய  அழகு  இன்புறத்தக்கது .  தொண்டைமானுடைய  ஆயிதங்களைப்  புகழ்ந்து  கூறுதற்போற்  பழித்து  அவன்  வசையைக்  குறிப்பிற்  கூறிச்  செருக்கொழியச்  செய்த  கவியரசியாரின்  திறமை  பாராட்டத்தக்கது .  

இன்னும் ,

“உவர்க்கட  லன்ன  செல்வரு  முளரே

 கிணற்றூற்  றன்ன  நீயுமா  ருளையே”

என்று  ஒரு  புலவர்  ஒரு  கொடை  வள்ளலைப்  புகழ்ந்து  கூறுமுகமாக , கொடாத  பெருஞ் செல்வரை இழித்துக் கூறினார் . சிலர்  பரந்த செல்வ முடைய ராயினும்  அச்  செல்வம்   பிறர்க்குப்  பயன்படாது   என்பது  தோன்ற , ‘உவர்க்கட லன்ன’  என்று உவமை  கூறப்பட்டது .  இது  விளக்கமாகப்  பிறிதோரிடத்துத் , 

தெண்ணீர்ப்  பரப்பின்  இமிழ்திரைப்  பெருங்கடல் 

 உண்ணா  ராகுப  நீர்வேட்டோரே

என்று  கூறப்பட்டது . செல்வப் பரப்புடையேம்  எனச்  செருக்குறுவார்க்கு  இது  சுடு  சொல்லாகும் .

            ஏனாதி  திருக்கிளி  என்பானை  மதுரைக் குமரனார்  என்னும்  புலவர் பாடிய  ஒரு  பாடலில் , அவனுடைய  பகையரசரைப்  பழித்துரைத்த  செய்தி  வியக்கத்தக்க  முறையில்  அமைந்துள்ளது .  அப்பாடல்  வருமாறு :

“நீயே , அமர்காணின்  அமர்  கடந்தவர்

 படை  விலக்கி  யெதிர்   நிற்றலின் 

வாஅள்  வாய்த்த  வடுவாழ்  யாக்கையொடு

கேள்விக்  கினியை  கட்கின்  னாயே

அவரே , நிற்காணிற்  புறங்கொடுத்தலின் 

ஊறறியா  மெய்யாக்கையொடு

கண்ணுக்  கினியர்  செவிக்கின்  னாரே

அதனால் , நீயும் ஒன்  றினியை  அவருமொன்  றினியர்

ஒவ்வா  யாவுள  மற்றே  வெல்போர்க் 

கழல்புனை  திருந்தடிக்  கடுமான்  கிள்ளி 

நின்னை  வியக்கமிவ்  வுலகம்ஃது

என்னோ  பெரும  வுரைத்திசின்  எமக்கே “

இப் பாடற் கருத்து :

           அரசே !  நீ  போரைக்  காணின் , அப்  போரை  வென்று  பகைவரது  படையை  விலக்கி  எதிர்  நிற்றலான்  , அவர்  வாட்  படையால்   வடுபட்ட  உடலுடனே  கூடியிருத்தலின்   காண்பார்  கண்ணுக்கு  அழகுடையை யல்லை ;  கேட்ட  செவிக்கு  இனியை ,  நின்  பகைவரோ , போரில்  புறமுதுகிட்டோடுதலால்   உடம்பில்  யாதொரு  வடுவுமில்லாராய்க்  கண்ணுக்கு  இனியராவர் .; கேள்விக்கு  இன்னாராகுவார் .  அதனால்   நீயும்  ஒன்று  இனியை ; அவரும்  ஒன்று  இனியர் . இங்ஙனம்  நீயும்  நின்  பகைவரும்  ஒப்புடைய ராகும்  நிலையில் , நின்னை  வியக்கும்  இவ்வுலகம்  அஃது  என்னோ  பெரும! என்பதாம் .  பகைவர்  உடம்பில்  வடுப்படாமையால்  ,  பிறர்   கேள்விக்குப்  பழி  மிக்குடையராக  வுள்ளார்  என  அவர்  வசை  ஒரு வகை  நயந்  தோன்றக்  கூறப்பட்டது . இங்கே  நீயுமொன்றினியை  யவரு  யொன்றினியர்  ‘எனத்  தோற்றோடியவரைப்  புகழ்வது  போலப்  பழித்திருக்கும்  செய்தி  வியக்கத்தக்கதொன்று .  

         இனிச்  சங்கத்துச்  சான்றோர்  நூல்களுள்  அகப் பொருள்  பற்றி  எழுந்த  பாடல்களில் , இவ்வங்கதக்  குறிப்புக்கள்  பற்பல  இடங்களில்  மிக  நயம்படக்  கூறப்பட்டுள்ளன . கற்றறிந்தாரேத்தும்   கலித்தொகை  என்னும்  நூலில்  ,  மருதத்  திணை  பற்றிய  ‘வண்டூது  சாந்தம்  வடுக்கொள  நீவிய’  என்னும்  பாடற்  பகுதி  ஈண்டுச்  சிந்தித்து  இன்புறத்தக்கது .  பரத்தைபாற்  சென்று  வந்த  தலைமகனை  அது  குறித்து  ஊடல்  மேற்கொண்ட  தலைமகள்  , “நீ  புறத்துப்  போய்க்  கண்ட  வினோதம்  என்னை ?”  என்றாளாகத்  தலைவன்  , “யாமிருவரும்  இனிமேல்  மேற்கொள்ளத்தக்க   வானப்பிரத்த  வாழ்க்கைக்கு  உதவியாயிருக்கும்  முனிவரைக் கண்டு  அவரிடத்தே  தங்கினேன்”  என்றான் . அது  கேட்ட  தலைவி , “சோலையின்  கண்ணே மலர்  சூடிய  மான்  பேட்டினை  ஒத்தவராய்க்   கடவுட் டன்மை  உள்ளவராக  உன்னாற்  கருதப்படுவார்  பலருள் , எக்கடவுளிடம்  தங்கினாய் ? “  என்று  கேட்டாள் . அவட்கு  அவன் , நம்  மண   வாழ்க்கைக்கு  நன்னாள்  வாய்ப்பச்  சொன்ன  அந்தக்  கடவுள்  காணென்று  தன்  பரத்தைமையை  மறைத்து  மீண்டுங்  கூறினானாக. அது  கேட்ட  தலைவி  , “நீ  கூறியது  எனக்கும்  ஒக்கும்”  எனத்  தனது  ஒவ்வாமைத்  தோன்றக்  கூறுவாளாய்  , “ஐய ! தலையைச்   சாய்த்து  நாத்  தடுமாற  நீ  கூறிய  சொற்களாளேயே   நீ  அகப்பட்டுக் கொண்டாய் .  நீ  கண்ட  கடவுளரியல்பை  உண்மையாக  யான்  கூறுவேன் ; அதனைக் கேட்பாயாக’  எனத்  தொடங்கி  ,

“பெறனசை  வேட்கையி  நிங்குறி  வாய்ப்பப்

பறிமுறை  நேர்ந்த  நகையராய்க்  கண்டார்க்கு

இறுமுறை செய்யும்  உருவொடு  நும்மில்

செறிமுறை  வந்த  கடவுளைக்  கண்டாயோ?”

எனவும் ,

“நறுந்தன்  தகரமும்  நாணமும்  நாறும்

நெறிந்த  குரற்கூந்தல்  நாளணிக்  கொப்ப

நோக்கிற்  பிணிகொள்ளுங்  கண்ணோடு  மேனாணி

பூப்பலி  விட்ட  கடவுளைக்  கண்டாயோ ! “

எனவும் ,

“கண்ட  கடவுள்  தம்முளு  நின்னை

வெறிகொள்  வியன்மார்பு  வேறாகச்  செய்து

குறிகொளச்  செய்தார்  யார் ….

சிறுவரைத்  தங்கின்  வெகுள்பவர்

எனவுங்  கூறினாள் . 

இப்பாடற்  பகுதியின்  பொருள்  பின்வருமாறு : 

           ‘உன்னைப்  பெற வேண்டு மென்னும்  விருப்பத்தால்   நீ  குறிப்பிட்ட  குறியிடத்தே  தம்பால்  வந்து  முளைத்த  பற்களை  யுடையவராய்க்  கண்டவர்களுக்கு  மரணத்  துன்பத்தை  யொத்த  மயக்கத்தைச்  செய்யும்   வடிவுடையராய்  நின்  இல்லிடத்தே  சேரும்  முறைமையினையுடைய   கடவுளரைக்  கண்டாயோ?’  என்பதும் , பார்வையாலே  தம்  வயப்படுத்துங்   கண்கள்  வருத்துதலால் , மணமிக்க  குளிர்ந்த  மயிர்ச் சாந்தமும்  புகழும்  மணக்கும்  கரு மணல்  போன்ற  நெருங்கிய  கூந்தலுக்கு  நாட்காலத்துச்  செய்யும்  அலங்காரத்துக்குப்  பொருந்த  முதல்  நாளே  மலர்களைத்  தூவி  வழிபடப்  பெற்ற  கடவுளைக்  கண்டாயோ?”  என்பதும் ,  “அங்ஙனம்  கண்ட  கடவுளருள்  நின் மனத்தை  வேறாகப்  பண்ணி  வானப்பிரத்த ஆச்சிரமத்தை  மேற்கொள்ளச் செய்த முனிவரர் யாவரோ? அவர்பாற்  செல்லாது  சிறிது  பொழுது  நீ  இங்கே  தங்கினும்  அவர்  வெகுள்வர் ;  ஆதலின் , அவ்விடத்தே   செல்வாயாக’   என்பதும்  ஆம் . இப்பகுதியில் , தலை மகன்  பரத்தையர்  பாலொழுகிய  தீயொழுக்கத்தைக்  கடிந்து  அவன்  திருந்தியொழுக  வேண்டுமென்னுங்  கருத்தினளாய்த்  தலைவி  குறிப்பிற்  கூறிய  வசைமொழி  புலப்படுதலின்  இதுவும்  பழி கரப்பு  அங்கதத்தின்பாற்  படுவதாகும் .

      ஐங்குறுநூறு   என்னும்  சங்கச் செய்யுளில்  உள்ளுரையாகக்  கூறப்பட்ட  பாடற்  பகுதிகளில்  ,  இச்சுடு சொல்லாகிய  அங்கதம்  பல  இடத்தும்  நகைக்  குறிப்பு  தோன்றப்  புலப்படுத்தப்பட்டுள்ளது .  பரத்தமையாகிய  புறத்தொழுக்கத்திலே  ஒழுகி  வந்த  தலைமகனை  நோக்கி ,  தோழி  தன்  விருப்பம்  இன்னதெனக்  கூறுமுகமாக  ,

“ பூத்த  கரும்பிற்  காய்த்த  நெல்லிற்

 கழனி   யூரன்  மார்பு

பழன  மாகற்க  எனவேட்  டேமே “ 

எனக்  கூறினள் . இதன்கண் ,  பூத்து  பயன்படாக்  கரும்பினையும்  காய்த்துப்  பயன்படும்  நெல்லினையும்  உடைய  ஊரன்  என்றது ,  ஈன்று  பயன்படாப்  பொதுமகளிரையும்   குழந்தை  பெற்றுப்  பயன்படும்  குல  மகளிரையும்  ஒப்பாக  நினைப்பவன்  தலைவன்  என்று  அவனுடைய  குறை  வருணனைக்  குறிப்பில்  புலப்படுக்கப் பட்டுள்ளது . இன்னும் ,

“கரும்புநடு  பாத்தியுட்  கலித்த  ஆம்பல்

 கரும்புபசி  களையும்  பெரும்புன  லூர்”

என்று  தலைவனை  அழைக்கு  முகமாகப்  ‘பரத்தையர் தங்குதற்கு உரிய  இல்லில்  யானிருந்து  விருந்தினர்  முதலியோரை  உபசரிக்கலா னேன் ‘   என்று  தலைவி  தலைவனது தீயவொழுக்கத்தைக்  கடிந்து அவள்  நெஞ்சுற  உணர்த்தியது  புலனாம் .  இங்கே  கரும்பு  நடுவதற்காக  அமைக்கப்பட்ட  பாத்தி  என்றதனால்  , தலைவனுக்கு உகந்த  விலை  மாதர்  தங்குதர்குரியது இவ்வில்லம்  என்பதும் ,  அப்பாத்தியில்  தானே  தோன்றி  வண்டுகளின்  பசியைப்  போக்கும்   ஆம்பல்  என்றதனால் ,தலைவன்  விரும்பாத  நிலைமையில் தான்  அவ்வில்லத்தின்கண்  இருந்து  இயன்றவாறு  இல்லறம்  நடத்துபவள்  என்பதும்   இவ் வருணனையில்  உள்ளுரையாகப்  புலப்படுக்கப் பட்டுள்ளன .  

             அகநானூறு  என்னும்  அழகிய  சங்க  நூலில்  மருதத் திணை  பற்றிய  செய்யுளொன்றில் , பரத்தையர்  சேரியினின்றும்  வந்த  தலைமகன்  ,  யாரையும்  அறியேனென்றானாக, அவன்  தீயவொழுக்கத்தைத்  தலைவி  பிறிதொரு  நிகழ்ச்சியால்  அவன்  மனத்திற்  பதிய  அறிவுறுத்திய  செய்தி  பின்வருமாறு :  “ஐய !  மழலை  மொழியுடைய  இளம்  புதல்வனைத்  தேர்  வழங்கு  தெருவிற்  கண்ட  ஒருத்தி ,அப் புதல்வன்  நின்  உருவோடு  ஒத்து  விளங்குதலைக்  கண்டு  விரும்பி  அங்கே  அப்பொழுது  யாரும்  இல்லாமையால்  ‘என்  கண்ணே  வருக !” என்று  கூறிப்பெரிதும்  மகிழ்ந்து  தழுவி  எடுத்துக்  கொண்டாள் .அந் நிலையில்  ,  யான்  அங்கே  சென்று  ,”குற்றமற்ற சிறியவளே !  ஏன்  மயங்குகிறாய்  ?இவனுக்கு  நீயும்  தாயே  ஆவாய் “  என்று  கூறினேனாக , அது  கேட்டு  அவள் , தாம்  செய்த  களவு  பலர்  முன்னிலையில்  வெளிப்பட  உடன்பட்டு  நின்றாரைப்  போல  நாணமுற்றுத்  தலை  கவிழ்ந்து  நின்றாள் .  அந்  நிலையில்  அவளும்   நின் மகனுக்குத்  தாயாவாளெனக்  கொண்டு  அவளை  உபசரித்தே னன்றே “  என்று  தலைமகள்  கூறியதாகும் .இதன்கண்  தலைவனது  தீயவொழுக்கத்தைத்  தலைவி  கரந்த  மொழியிற்  பெற  வைத்தது  இன்புறத்தக்கது .

                          இனிப்  பெருங்காப்பியங்கள்  ஐந்தனுள்  ஒன்றாகிய   சீவக சிந்தாமணியில்  சச்சந்தன்   என்னும்  அரசன் , விசயை  என்னும்  தன்  மனிவியின்  காதல்  வயப்பட்டு   கட்டியங்காரன்  என்னும்  அமைச்சன்பால்  அரசியலை  விட்டு  இடையறாது   போக  நுகர்ச்சியில்   தலைப்பட்டானாக  , அந்நிலையில்  அத்தீய  அமைச்சன்  அரசனைத்  தொலைத்து  நாட்டாட்சியைத்  தன்னதாக்க  முயன்று  தன்  அமைச்சர்  பலரோடு  சூழ்ந்து  ஆலோசிக்கும்  மளவில்  தருமதத்தன்  என்னும்  நல்லமைச்சன் , இது  தகாத  காரியம்  என்று  பற்பல  நீதிகளை  எடுத்துரைக்க , அவன்  உரைகளை  மறுத்து  மதனன்  என்பான்  கட்டியங்காரன்  கருத்துக்கு  ஒத்த  முறையிற்  கூறியதாகவுள்ள  செய்தி  பின்வரும்  செய்யுளிற்  காணப்படும் .

“தோளினால்  வலிய  ராகித்  தொக்கவர்  தலைகள்  பாற

 வாளினாற்  பேச  லல்லால்  வாயினாற்  பேசல்  தேற்றேன்

 காளமே  கங்கள்  சொல்லிக்  கருணையாற்  குழைக்குங்கைகள்

வாளமர்  நீந்தும்  போழ்து  வழுவழுத்  தொழியு  மென்றான் “

       இதன்கண்  பின்  இரண்டடிகளும்  இங்கே  நினைக்கத்தக்கன . “போர்ச்  செயலைப்  பற்றிய  வீரவுரைகளைக்  காளமேகம்  போல  முழங்கக்  கூறி   அச்  செயலில்  தலைப்பட  நேர்ந்த  பொழுது   அஞ்சுவார்க்குப்  பொரிக்  கறிகளோடு   சோற்றைத்  திரட்டும்  அவர்  கைகள் அப்போர்க்கடலை  நீந்துதற்கு  இயலாது   வழுவழுத்  தொழியும்  போலும் “  என்று  போர்  குறித்துப்   பின்வாங்குவோரைச்   சுடு  சொல்லார்  பழித்துக்  கூறியதும்  அங்கத்தின்பாற்  படுவதாகும் .

                                6   .   காதற்   கடிதங்கள்

                      ( திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது )

          காதல்  என்பது  ஆடவர்  மகளிர்  இருவரும்  உலக  வாழ்க்கையில்  அறநெறி   பிறழாதொழுகி  இன்ப  நுகர்தற்குரிய  சிறந்த  குணமாகும் .  காதல்  காமம்  என்னும்  இரண்டனுள்,  காமம்  இழிந்த  நிலையில்  நிகழ்வதென்பதும் , காதல்  உயர்ந்த  நிலையில்  நிகழ்ந்த  தன்  வயப்பட்டாரை  எத்துணை  இடையூறு  நேரினும்  பிறழவிடாது  பிணித்து  இன்பத்தினும்  துன்பத்தினும்   பகிர்ந்தநுபவிக்கச்  செய்து  நெடிது  நிலைத்திருப்பதென்பது   அறிஞர்  கண்ட  உண்மைகளாம் . ஆடவர்  மகளிர்  கூடி  நுகரும்  இன்பத்தின்  இயல்பை  விளக்க  நினைத்த பெரியார் , “எஞ்ஞான்றும்   காதலிருவர்  கருத்தொருமித்து — ஆதரவு  பட்டதே  இன்பம்”  என்று  கூறினர் .  காமம்  பற்றி  ஆடவர்  மகளிரை  முறையே  காமுகன்  காமுகதி  என்று  கூறுதலினும்  காதல்  பற்றிக்  காதலன்  காதலி  என்று  கூறுதல்  அறநிலைக்கொத்த  சிறந்த  வழக்கென்பதையுங்  காணலாம் . தமிழ் மொழியிற்  சங்க  இலக்கியங் களாக  உள்ள  அகநாநூறு  குறுந்தொகை  முதலிய  அகப்பொருட்  பகுதியை  நுதலிய  நூல்களெல்லாம்  இக் காதலியல்பை  விளக்க  எழுந்தனவாம் . அறம் பொருள்  இன்பங்களை   அகம்  புறம்  என  வகுத்த  தமிழ்  இலக்கண  நூலாசிரியர்கள் , முன்னைய  இரண்டையும்  புறமெனவும்  பின்னையதாகிய  இன்பநிலையை  அகமெனவுங்  கொண்டு  பாகுபாடு  செய்தனர் . அகப்  பொருளிற்  காதலையும்  புறப் பொருளில்  வீரத்தையுமே  சிறந்தனவாக  எடுத்து  விளக்கியதனாலும்  இக்  காதலின்  பெருமையை  உணரலாம் . ஆடவர்  மகளிர்  இருவரும்  முதலில்  வாழ்க்கை  யின்பத்தில்  தலைப்படுதற்கு  ஒருவர்  பாலொருவர்  மேற்கொள்ளுங்  காதலே  சிறந்த  கருவியாம் . முதலில்  காதல்  முகிழ்த்தற்கு  ஏதுக்கள் , உடல் வனப்பு , அன்பு , அறிவு  முதலிய  சிறந்த  குணங்கள்  என்னும்  இவை  முதலியனவாம் . சில  விடங்களிற்   காதலின்  தோற்றத்திற்குக்  காரணங்  காண்டல்  அரிதாகவும்  முடியும். இக் காதல்  வயப்பட்டார்  ஒன்று  கூடுதற்கு  நீங்காத  தடை  நேரின் , அது  காரணமாகச்  சாதலும்  அவர்  பக்கல்  இனிதாகும்  என்பது  சரித்திரங்களாற் கண்டதொன்று .  

      ஆடவர்  மகளிர்  ஒருவரை  யொருவர்  காதலித்துத்  தம்முட்  கூட்டம்  நிகழ்த்தற்கு  முன்னரும் ,  கூட்டம்   நிகழ்ந்து  எக்காரணத்தாலாவது  பிரிவு  நேர்ந்த  பின்னரும்  இக் காதற்  சிறப்பு  ,  உடல்  வேறு  உயிர்  ஒன்றெனக்  கருதத்தகும்   தொடர்புடையார்க்கன்றி  வெளிப்படுத்து  நிலையில்  உள்ளதன்று .  ஆடவர் , தம்  இன்னுயிரனைய   பாங்கர் பாலும் ,  மகளிர்  கண் போற்  சிறந்த  உயிர்த்  தோழியரிடத்துமன்றி  வெளிப்படுத்துவரல்லர் .  இதன்  இயல்பைச்   சீவக சிந்தாமணி  நூலாசிரியர் ,  ‘சென்றே  படினும்  சிறந்தார்கு  உரைக்கலாவதன்று ‘  என்றார் . இதன்  கருத்து ,  இறப்பு  நேரினும்  தாயர்  முதலியோர்க்கும்  கூறத்தக்க தொன்றன்று   என்பதாம் .  காதல்  முதிர்ந்த  இடத்துக்  காதலிக்கப்பட்டாரைப்  பெறாத  நிலையில் , காணப்படும்  வெளியெல்லாம்  அன்னார்  உருவமாகவே  காண்பர்  என்பதை  அகப்  பொருட்டுறையில்  “எதிர் பெய்து பரிதல்”  என்று  இயல்  நூலாசிரியர்  கூறுவர் . விமலை யென்னும்  ஓர்  இளநங்கை , பந்து  விளையாடி னாளாக, அப்  பந்து  புறவெளியில்  வீழ்ந்தது  கண்டு  அதனை  எடுக்கச்  சென்றவள்  சீவக  குமாரன்  என்னும்  கட்டழகனைக்  கண்டு ,

“பெண்பா  லவர்கட்  கணியாய்ப்  பிரியாத  நாணுந்

திண்பால்  நிறையுந்  திருமாமையுஞ்  சேர்ந்த  சாயல்

கண்பாற்  கவினும்  விளையுங்  கவர்ந்திட்ட  கள்வன்

மண்பா  லிழித்த மலரைங்கணை மைந்த  னென்றாள்”

           இங்ஙனக்  கருதிக்  காதல்  வயப்பட்டனளாக   அந்நிலையில்  அவளைக்  கண்ணுற்ற  சீவகனும் ,

பூவுண்ட  கண்ணாள்  புருவச்சிலை  கோலி  யெய்ய

ஏவுண்ட  நெஞ்சிற்  கிடுபுண்மருந்தி  தெங்கொ  லென்னா

மாவுண்ட  நோக்கின்  மடவாளை  மறித்து  நோக்கிக்

கோவுண்ட  வேலான்  குழைந்தாற்றல  னாயி  னானே

                இங்ஙனம்  ஆற்றலனாய்த்  தான்  கண்ட  வெளிநில   மெல்லாம்  அக்காதலின்  வடிவழகே  தன்  கட்பொறிகளுக்குப்  புலனாகக்  கண்டு ,

“பைங்கண்  மணிமகர  குண்டலமும்  பைந்தோடும் 

திங்கள்  முகத்திலங்கச்  செவ்வாய்  எயிறிலங்கக் 

கொங்குண்  குழல்தாழக்  கோட்டெருத்தஞ்  செய்தநோக்

கெங்கெங்கே   நோக்கினும்  அங்கங்கே  தோன்றுமே

என்று  காதலிற்  கனிந்து  கூறியதாக  ஆசிரியர்  கவி  வடிவில்  தீட்டிய  ஓவியம்  அறிஞருள்ளத்தைக்  கனிவிப்பதாகும் .  இதனுள்  “கோட்டெருத்தஞ்  செய்த  நோக்கு”  சாய்ந்த  கழுத்துத்  தந்த  பார்வை  என்னும்  பொருளதாகும் . அவள்  தன்னை  நோக்குங்கால்  கழத்தைச்  சிறிது  சாய்த்துப்  பார்த்ததைக்  கண்டானாகலின் , அத்  தோற்றமே  அவன்  உள்ளத்தைப்  பிணித்ததென்றார் .  இது   வியக்கத்தக்க  தொன்று .   

                பிறிதோரிடத்துக்  குணமாலை  யென்பாள் , ஒரு  பெண்கள்  திலகம் , நீராடித்  திரும்புங்கால்  ஒரு  யானையால்  தாக்கப்படும்  நிலையில்  சீவகுமாரன்  சென்று  தன்  ஆண்மையால்  அவ் யானையை  அடர்த்து விலக்கி  அவளைப்  பாதுகாத்துச்  செல்ல  விடுத்தானாக , அந் நிலையில்  இருவர்க்குங்  காதல்  ததும்பியது .

“கன்னிய  ருற்றநோய்  கண்ணனார்க்கு  மஃது

 இன்னதென்  றுரையலர்  நாணி  னாதலால்

கைக  ளாற்சொலக்  கண்களிற்  கேட்டிடும் 

மொய்கொள்  சிந்தையின்  மூங்கையு  மாயினேன் .”

என்று  அவள்   கருதுவாளாயினாள் .  மூங்கை  என்பது  ஊமையாகும் . இங்கே  ஊமையின்  இலக்கணத்தை  ஆசிரியர்  ,  “கைகளாற்  பேசக்  கண்களாற்  கேட்பது  என்றும் , உள்ளச்  செய்திகளை  வெளிப்படுத்திப்  பேச  இயலாமையால்  நினைவு  பலவாக  நிறையுமாதலின்  “மொய்கொள்  சிந்தை”  என்றுங்  கூறியது  நினைந்து  இன்புறத்தக்கது  இங்ஙனம்  குணமாலை  நினைவும்  செயலும்  காதல்  வயப்பட்டுருகும்  நிலையில் , 

“வெஞ்சின  வேழ  முண்ட  வெள்ளிலின்  வெறியமாக

நெஞ்சமும்  நிறயும்  நீல  நெடுங்கணாற்  கவர்ந்த  கள்வி

என்று  அவள்  கண்ணோக்கத்தால்  காதல்  வயப்பட்டுப்  பிரிந்த  சீவகுமாரன் , தனித்திருந்து  தன்  உள்ளத்தில்  திகழும்  அவள்  அழகிய  உருவத்தை  ஓவியத்தில்  வரைய  எண்ணினான் .  அவள்  உடலுறுப்புக்கள் ஆடையணி முதலியவற்றின் நிற வேற்றுமைகளுக்கு, அவ்வந்திறத்து   இரத்தினங்களைப்  பொடித்துக்  கரைத்துப்  பசையூட்டி  வண்ணக்  குழம்பாக்கி , அக்குழம்பில்  துகிலியைத்   தோய்த்து  ஓர்  ஆடையில்  ஓவியம்  எழுதுவானாயினான் .   அங்ஙனம்  எழுதுங்கால் , அவள்  யானைக்கு  அஞ்சி  மேற்கொண்ட  நடுக்கமும் , அந்நிலையில்  தன்னை  நோக்கிய  காதல்  நோக்கமும்  அவ்வடிவில்  ஒருங்கு  புலப்படத்  தீட்டினான்  என்று  கவி  திறம்படக்  கூறுகின்றார் .  

“கூட்டினான்  பணிபல  தெளித்துக்  கொண்டவன்

 தீட்டினான்  கிழிமிசைத்  திலக  வாணுதல்

வேட்டாமல்  களிற்றிடை  வெருவி  நின்றதோர் 

நாட்டமும்  நடுக்கமும்  நங்கை  வண்ணமே “

இப்பாட்டில்  ஒன்றுக்கொன்று  முரணாகவுள்ள  அச்சத்தையும்  காதலையும்  ஒரு  வடிவிற்  புலப்படுத்தியதாகச்  சீவகனது  ஓவியநூற்  றிறமையை  ஆசிரியர்  நன் கு  புலப்படுத்தியுள்ளார் .  இச்சித்திரத்தில்  நங்கையின்  காட்சியில்  தான்  திளைத்து  மேற்கொண்ட  காதற் பெருக்கே  இங்ஙனம்  உள்ளபடி  வரைவதற்குக்  கருவியாயிற்றென்பது  தெளியத்  தக்கது .  

       இங்ஙனம்  கண்ணனாருக்கும்  இன்னதென்று  வாக்கால்  உரைக்க  இயலாத  காதலின்  இயல்பை  ஒத்த  காதலர்  இருவர்  தம்முட்  கூடுதற்கு  முன்னும் , கூட்டத்தின்பின்  பிரிவு  நேர்ந்த இடத்தும்  பிறர்  வாயிலாகவன்றிக் கடித  மூலமாக  ஒருவருக்கொருவர்  புலப்படுத்திக் கொள்ளுதல்  முற்காலத்தும்  நிகழ்ந்ததுண்டு .  காப்பியச்சுவை  நலத்தில்  திளைத்துப்  பாடும்  கவிகள்  மூலமாகவே  அக்காதற்  கடிதங்களின்   இயல்புகளை  வெளிப்படக் காணலாம் .  காதலர்  இருவர்  கருத்தொருமித்துப்  பிறர்  அறியாதவாறு  தம்  உள்ளத்து  நினைவுகளை  மறைமுகமாக  வெளிப்படுத்துள்ளாராயினும் , அச்   செய்தியை  நம்மனோர்  அறிவிற்கு  விருந்தாக  வெளிப்படுத்து  அளித்து  இன்புறுத்தியவர்கள்  புலவர்  பெருமக்களே  யாவர் .  இங்கே  வடமொழியிற்  சிறந்த  காளிதாச  மகா கவியும்  ,  செந்தமிழ்  மொழியிற்  சிறந்த  இளங்கோவடிகள்  என்னும்  புலவர்  பெருமானும்  முறையே  தாம்  மேற்கொண்ட  “சாகுந்தலம்”  என்னும்  சுவை  மலிந்த  நாடகத்தினும்   “சிலப்பதிகாரம்” என்னும்  தீந்தமிழ்க்  காப்பியத்தினும்  காதற்  கடிதங்களை  வெளிப்படுத்தியுள்ளார் .   

         இவ்விரு  பெருங்காப்பியங்களினும் , அக்கடிதம்  எழுதினார்  இருவரும் , பெண்மக்களேயாவர் .  இருவருள்  சகுந்தலை  என்னும்  பெண்மணி , துஷய்ந்தன் என்னும்  வேந்தர்  பெருமானைக்  கானகத்திற்  கண்ட  அளவிற்  காதல்  வயப்பட்டு  அந்நிலையை  எவ்வாறு  அரசர்க்குப் புலப்படுத்தலாமென்று , ஆராய்ந்து  கொண்டிருக்குங்கால் , தன் உயிர்த் தோழியால் அறிவிக்கப்பட்டுக்  காதற்  கடிதம்  எழுதத்  தொடங்கினாள் .  இஃது  அக்  காதலிருவரும்  தம்முட்  கூட்டம்  நிகழ்த்துதற்கு  முன்  நிகழ்ந்தது .  சிலப்பதிகாரத்துக் கண்ட  மாதவி  யென்னும்  நங்கையர்  திலகம்  கோவலனோடு  கூடி  இன்புற்று  ஒரு  காரணத்தால்   அவன்   தன்னைப்  பிரிய  நேர்ந்த   பொழுது , அப் பிரிவாற்றாமையைப்  புலப்படுத்து  முகமாக  ஒரு  காதற்  கடிதம்  எழுதலாயினாள் .  இது  காதலர்  கூட்டம்  நிகழ்ந்தபின்  எழுதப்பட்டதாகும் .  அக்கடிதங்களிரண்டும்   அவ்வப்  பாத்திரங்களுக் கேற்ற   முறையில்  அமைந்துள்ளன . அக்கடிதப்  பாசுரங்களுள்  சகுந்தலை  கடிதம்  வருமாறு :  அதன்  பொழிபெயர்ப்பாவது , 

“நின்னுடைய  உள்ள  நிலையறியேன்  நின்பாலே 

  மன்னுடைய  வேட்கை  மலிவுற்ற  — –  என்னுறுப்பைக்

 காமன்  இரவும்  பகலும்  கனற்றுகின்றான்

 ஏமரு ளில்லா  யிவன் “

என்பதாம் . ‘அருளில்லாத  அரசே !  நின்பாற்  கொண்ட  வேட்கை  மிக்க  உடலுறுப்புக்களை  மன்மதன்  இரவும்  பகலும்   எரிக்கின்றான் ; இந் நிலையில்  நினது  உள்ளத்தின்  நிலை  இன்னதென்று  அறிந்திலேன்’  என்பது  இப்பாடலின்  கருத்து .  இனி  மாதவி  கோவலனுக்கு  எழுதிய  கடிதம்  வருமாறு  : 

“மன்னுயி  ரெல்லாம்  மகிழ்துணை  புணர்க்கும்

இன்னிள  வேனில்  இளவர  சாளன்

அந்திப்  போதகத்  தரும்பிடர்த்  தோன்றிய

திங்கட்  செல்வனும்  செவ்விய  நல்லன்

புணர்ந்த   மாக்கள்  பொழுதிடைப்  படுப்பினும் 

தணந்த  மாக்கல்  தந்துணை  மறப்பினும்

நறும்பூ  வாளியின்  நல்லுயிர்  கோடல்

இறும்பூ  தன்றிஃ  தறிந்தீமின் “

என்பதாம் . ‘ உலகத்திலுள்ள  உயிர்களை யெல்லாம்  தாம்  மகிழுந்  துணையோடு  புணர்விக்கும்  இனிய  இளவேனிலாகிய  வசந்தனென்பான்  இளவரசனாவான் .  ஆதலால் , ஒழுங்குபடச்  செய்யான் .  அன்றி , அந்திப் பொழுதின்  கண்ணே  அரும்புகின்ற   விரக  விதனத்தின்  மேலே  வந்து  தோன்றிய  திங்களாகிய  செல்வனும் பிறப்பினுங்  கோட்டமுடையன்  ஆதலால் , கூடினோர் இடையே  சிறிது  தாழ்ப்பினும்  பிரிந்தோர்  மறப்பினும்   மணமிக்க  பூவாளிகளால் , இன்ப  நுகரும்  அவ்வுயிரைக்  கொண்டொழிதல்  அவனுக்குப்  புதியதொரு  காரியம்  அன்று . அதனை  அறியுங்கள்  என்பது  இப்பாசுரப்பகுதியின்  கருத்தாம் .

          சகுந்தலை  எழுதிய  கடிதம்  கிளியின்  வயிறு  போன்ற  பசுமை  மிக்க  மெல்லிய  தாமரையிலை  யாகும் . அதன்கண் ,அவள்  தன்  கைந்  நகங்களையெ  எழுதுகோலாகக்  கொண்டு  எழுத்துக்களைப்  பதித்தனள் என்பர் .  தாமரையின்  மெல்லிய  இலைகளால்  அவள்  வெம்மை  தணிய  அப்பொழுது  தோழியர்  விசிறிக்  கொண்டிருந்தனராதலின் ,  அவள்  இருந்த  இடத்தில்  கிடைத்த  தாமரையிலையே  எழுதுதற்குரிய கடிதமாயிற்று .  எழுதுகோல்  தேடுதற்கு அவகாசம் இன்மையாற் கைந் நகங்களாற் பதிக்கலாயினாள் .

           மாதவி  கடிதமாகக்  கொண்டது , முதிர்ந்த  அழகிய  தாழையினது  வெள்ளிய  இதழாகும் .  மாதவி  காவிரிப்பூம்பட்டினத்து  உள்ள  ளாதலானும் , அப்பட்டினம்  கடற்கரைக்  கண்ணதாதலானும் , நெய்தல் நிலத்துக்  கருப்பொருளாகிய  தாழை  மடலைக்  கடிதமாகக்  கொண்டாள் . அம்மடல் ,  நல்ல  நிறமும்  பளபளப்பும்   நறுமணமும்  , காய்ந்துலர்ந்தாலும்  கெடாத  வன்மையும்  உடையது .  எழுதுகோல்  பித்திகைக்  கொழுமுகை  ஆணி  என்றதனால் ,  நறுமணமுள்ள  பூவரும்பின்  முனையாகும் .  மை  செம்பஞ்சின்  குழம்பாகும் . ஆகவே  வெண்ணிறமான  தாழையிதலிற்  செந்நிறமான  குழம்பில்  பூவரும்பின்  முனை  கொண்டு  எழுதப்பட்ட தென்பதும் , இக் கருவிகள்  காதற்  குறிப்பிற்  கேற்றபடி  இன்பம்  விலைவிக்கும்  பொருள்களாக  அமைந்தன  என்பதும்  புலனாம் . எழுதிய  பெண் மக்கள்  இருவருள் , சகுந்தலை  அரச  குலத்தினனால்  கைப்பற்றத்  தக்கவளாயினும்  , அந்தணர்  ஆச்சிரமத்தில்  வளர்ந்தவலாவாள் . காதற்  பயனுக்கு  அநுபவமில்லாப்  புதியவளுமாவாள் .  ஆதலின்  அவள் , மன்மதன்  பகலும்  இரவும்  சுடுகின்றான் ; நின்  கருத்தறிந்திலேன் என  வெளிப்படத்  தீட்டினாள் .  தன்  கருத்தைக்  குறிப்பாற்  புலப்படுத்தினால்  தனக்குப்  புதியவனாகிய  வேந்தன்  பொருள்  வேறு  கொண்டு  புறக்கணிக்கவுங்  கூடும்  என்னும்   ஐயத்தால் , விளக்கமாக  எழுதினா ளென்று  கொள்ளலாம் . ஒருவரையொருவர்  மன நிலை அறியாத  நிலையில்  எழுதப்படுங்  கடிதத்தில் , குறிப்பு மொழி தெளிவாகப்  பொருள்  விளக்கஞ்  செய்யாதாகலிற்  பயனின்றி  யொழியவுங்  கூடும்  ஆதலானும் ,பிறரறியாமற்  காதலிக்கப்பட்டா னொருவனே  பார்க்கக்  கூடுமென்னுந்  துணிவானும்  இங்ஙனம்  விளக்கமாக  எழுதப்பட்டுள்ளது .  முடிவாகத்  தன் வேட்கையைப்  புலப்படுத்தி  இதற்குப்  பரிகாரமாகச்  செய்ய  வேண்டிய  காரியத்தில்  நின்  கருத்து  இன்னதென்று  அறிந்திலே னென்று  சகுந்தலை  எழுதியது பொருத்தமே . தாமரையிலைக்  கடிதம்  எழுதியதும் , காதலனாகிய  வேந்தன்  தாழாது  வெளிப்பட்டானாதலால்  மிகு  விரைவில்  வாடத்தக்க  அவ் விலையின்  பயன்  வீணாகவில்லை  .

             இனி , மாதவி  கணிகையர்  குலத்தவள்; கோவலன்பால்  சிறந்த  காதற்கிழமை  பூண்டொழுகியவள் ; அவள்  கடிதம்  எழுதியது  முன்  அவனோடு  கூடி  அநுபவித்த  பின்னரேயாம் . அந் நிலையில்  அவன்  உள்ளத்தைப்  பன்னாட்  பழகி  அறிந்தவலாதலின் , தன்  கருத்தைக்  குறிப்பாகப்  புலப்படுத்தினாலும்  அவன்  அறிந்து  கொள்ளுவா னென்று  அவள்  கருதுவது  இயல்பே .  இந் நிலையில்   மன்மதன்  கொடுமை  கூறுபவளாய் , அக் காமவேள்  என்னும்  அரசற்கு  மகிழ்  துணை  புணர்க்கும்  வேனிலாளன்  இளவரசன்  ஆவானென்றும் , அவன்  கொற்றக்  குடை  திங்களாதலால்  அத்  திங்கட்  செல்வன்  பிறப்பிலே  கோட்டமுடையவன்  என்றுங்  கூறி ,இப்பரிவாரங்களை  யுடைய  காமன் ,  புணர்ந்துளோர்  ஊடல்  முதலியவற்றாற்  காலம்  நீட்டிப்பினும் ,ஓதல்  முதலியன  குறித்துப்  பிரிந்துளோர்  குறித்துக்  கூறிய  பருவம்  பொய்த்துத்  தம்  துணையை  மறப்பினும்  இன்பம்  நுகரும்  அவ்வியிரைப்  பூவாளிகளாற் கொள்ளும்  இயல்பின  னென்பது  புதிய  தொன்றன்று ; இதனை  அறிவீர்களாக “  என்று  அவள்  எழுதியது  பொருத்தமே .  உண்மைக்  காதலுடையார்  இயல்பை  உலகியல்பில்  வைத்துக்  கூறுமுகமாகத்  தன்னிலையைப்  புலப்படுத்தினாள் .  இங்கே  இளவரசனாகிய  வேனிலாளன்  துணை  புணர்ப்பவ னாதலாலும் , திங்கட்  செல்வன்  பிறப்பிலே  கோட்டமுடையவனாதலாலும்  பிரிந்திருக்கும்  தனக்கு  நலஞ்  செய்யான்  என்னுங்  கருத்துத்  தொன்றக்  கூறியது  இன்புறத்தக்க தொன்று .  மாதவி  கணிகையர்  குலத்தவளாயினும்   மிக்க  நாகரிகமும்  ஒரு  வழிப்பட்ட  காதலும்  அறிவும்  உடையவளாதலின்  இங்ஙனம்  எழுதினாள் . இவளுடைய  உயர்ந்த  நிலையைக்  காதலனாகிய  கோவலன்  பிரிவால்  உலக  வாழ்க்கையைத்  துறந்து  துறவு  நிலை  பூண்டதனாலே  அறியலாம் . இவளெழுதிய  கடிதம் , கட்டப்பட்ட மலர்  மாலையினோடியைத்து   வசந்தமாலை  என்னும்  மற்றொருத்தி  வாயிலாக  கோவலற்குச்  சில  நாழிகை கழித்துச்  சேரத்தக்க  தாகலின்  தாமரையிலை  போல்  விரைவில்  வாடும்  இயல்பினதாக  அன்றி  நெடிது  நிற்பதாகிய  தாழை  மடலாக  அமைத்தது  பொருத்தமே .  சகுந்தலை , துஷ்யந்தனுடைய  காட்சியில்  ஈடுபட்டுக்  காதலால்  வெதும்பும்  போது  அவள்  சிறுமி,  ஆதலால்  தன்   காதற்  குறிப்பை  எவ்வாறு  காதலற்குப்  புலப்படுத்துவதென்றறியா ளாய்த்  துன்புறும்  நிலையில் ,பிரியம்வதை  என்னும்  உயிர்த்தோழி  சகுந்தலையை  நோக்கித் , “தோழி ! அவ் வேந்தர்க்கு  ஒரு  காதற்  கடிதம்  எழுதுக ;அதனை  ஒரு  நறுமலர்  மாலையில்  மறைய  வைத்துத்  தேவப்  பிரசாதம்  என்று  பெயரிட்டு  அவ்வரசர் பெருமானிடம்  சேர்த்து  விடுவேன்”  என்றாள் . அதனை  மற்றொரு  தோழியாகிய  அநசூயை , “யானும்  அப்படியே  நினைக்கின்றேன்”  என்று  ஆமோதித்துப்  பேசினாள்.  அதன்மேற்  சகுந்தலை , நும் கட்டளையில்  மாறுபாடேது  என்று  உடன்பட்டுக்  காதற்  பாசுரத்தை ஆராய்ந்து  எழுதினாள் . இந் நிகழ்ச்சியில்  , அவள்  தகுதிக்கேற்பக்  கவி  கருதியது பாராட்டத்தக்கதே .  இனி , மாதவி  தன்  காதலனோடு   அநுபவித்துப்  பன்னாட்  பழகியவளாதலாலும் , தனக்கு  ஒருவர்  அறிவிக்க வேண்டுவது  இல்லையாதலாலும் , மடலவிழ் கானற்  கடல்  விளையாட்டினுள்  கோவலனூடக்  கூடாதேகிய  பின் ,  மன  வேதனை  தீரத்  தன் னில்லத்துத்  தனித்திருந்து சிறிது  நேரம்  யாழை  இசைத்துப்  புறநீர்மை  என்னும்  பண்ணை  வாசிக்குங்கால் , அவ்விசை  யின்பத்திற்  காதலன்  கூடலின்பம்  தோன்ற  மயங்கித்  தெளிவுற்றுப்  பின்னர்த் , தன்  காதலற்கு  இன்ன  விதமாகத்  தன்  கருத்தைத்  தெரிவிக்க வேண்டும்  என்பதைத்  தானே  துணிந்து  திருமுகம்  போக்கும்  செவ்வியளாய்  எழுதத்  துணிந்தாள் .

             இங்ஙனம்  மாதவியின்  இயல்பை  மனத்துட்   கொண்டு , அவள்  தகுதிக்கேற்ப  ஆசிரியர்  அவள்  காதற்  கடிதத்தை  அழகுற  முடித்தது  பெரிதும்  பாராட்டத்தக்கதே .  இவ்வாறு     காதல்  வயப்பட்டவருள் , எழுதுவோர்  எழுதப்படுவோர்  இயல்புகள் , எழுதும்  வாசகங்கள் , அவ் வாசகக்  கருத்துக்கள் , கடிதம், எழுதுகோல், மை  முதலிய  கருவிகள்  என  இவ்வெல்லாவற்றையும்  புலவர்  பெருமக்கள்  செவ்விய  முறையிற்  சிந்தித்துக்  காதல்  நறுமணங்  கமழப்  புலப்படுத்தியது போற்றத்தக்கதொன்றாம் .  

                                       7  .  குறுந்தொகை

( இது  சென்னையிற்  கூடிய  குறுந்தொகை மாநாட்டில்  நிகழ்த்திய   

                                              தலைமையுரை )     

ன்புமிக்க  ஐயன்மீர் !  அன்னைமீர் ! 

                 இக்குறுந்தொகை  மாநாட்டில்  நிகழும்  அரிய  சொற்பொழிவுகள்  எல்லாவற்றையும்  ஒழியாது  கேட்டு  மகிழும்  பேற்றுக்கு  உரிய  பதவியை  எனக்கு  அன்புடன்  அளித்த   சைவ சித்தாந்த  நூற்பதிப்புக்  கழக  அமைச்சர்க்கு  என்  நன்றியறிவை  முதலிற்  பலப்படுத்திக்  கொள்ளுகின்றேன் .

                  உலகத்துப்  பருப்  பொருள்களைக்  காண்டற்குக்  கருவியாக  மக்களுக்கு  அமைந்த  புறக்கண் போல ,புறக்காட்சிக்குப்  புலனாகாத  நுண்பொருள்களை  அறிந்து  தெளிதற்குரிய  அகக்கண்  அமைதல்  இன்றியமையாததென்பது  யாவரும்  உணர்வர் . பருப்பொருள்களைக்  காணும்  புறக்கண்ணும்  அகக்கண்ணின்  துணையின்றிப்  பொருள்களின்  இயல்புகளைப்  பகுத்துணர்வதற்கு  வலிவுடைய தாகாது . ஆகவே  புறக்கண்ணும்   அகக்கன்ணும்  மக்கட் டன்மைக்குச்  சிறப்பாக  வேண்டப்படுவதென்பதை  அறிகின்றோம் . இவ்வகக்கண்  யாதாக  இருக்கலாம்  எனின் , இதற்கு  விடையாகப்  பேரறிஞர்கள்  எல்லோருங்கூறியது  ஒன்றே  . அது  கல்வி  என்பதை ,

எண்ணென்ப  ஏனை  எழுத்தென்ப  இவ்விரண்டுங் 

 கண்ணென்ப  வாழும் உயிர்க்கு

என்பதனால்  உணரலாம் . இக்கல்வி  ஒவ்வொரு  நாட்டினர்க்கும்  அவ்வந்  நாட்டு  மொழி  வாயிலாக  இருத்தல்  வேண்டும்  என்பதும், பின்னர்  வேண்டப்படும்  வேற்றுமொழிப்பயிற்சி  அறிவாற்றற்கேற்ப  இருக்கலாம் . என்பதும்  அறிஞர்  கண்ட  முடிபுகளாம் .  நமக்குரிய   நாட்டு  மொழியைப்  புறக்கணித்து  வேற்று  மொழியில்  எத்துணை  மேற்சென்றாலும்   மொழியறிவாற்  பெறும்  பயன்  முற்றும்  பெற்றதாக மாட்டாது .  இந்நிலையில்  நாம்  இன்றியமையாது  பயில வேண்டுவது  நமக்குரிய  தமிழ்  மொழியே யாகும் . இம் மொழிக்கண்  உள்ள  இலக்கிய  நூல்களுள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை  முதலிய  சங்க இலக்கியங்கள்   காலத்தால்  முற்பட்டனவாம் . மொழி  வளமும்  பொருள்களின்  இயற்கையை  உள்ளபடி  எடுத்து  விளக்கும்  ஆற்றலும்  , உவமையழகும்  ,  ஊன்றிப்  படிப்பார்க்கு   உணர்ச்சியின்பம்  ததும்பச்  செய்யும்  இயல்பும்  ஒருங்கமைந்து   விளங்குவன  சங்க  இலக்கியங்களேயாகும் .  சில்வகை  எழுத்தானாய  செந்தமிழ்ச்  சொற்களும்    தொகை  நிலைத்  தொடர்களும்  கருதிய  பொருள்களைத்   தெளிவுறுத்துவனவாக  அப்பாடல்களிற்  பரக்கக்  காணலாம் . அகமும்  புறமுமாகிய  பொருள்களை  இயநெறியில்  திறம்பாமல்  உலகியல்  ஒழுக்கத்தொடு  இயைத்துப்  புலநெறி  வழக்கமாகப்  பாடல்  செய்யுந்  திறம்   சங்ககாலத்துப்  புலவர்களுக்கு  அமைந்தது  போலப்  பிற்காலத்தவற்பாற்  காண்டலரிதாகும் .  பாடல்களில்  அமைய  வேண்டிய  ஆழமுடைமை  இனிமை  எளிமை  என்னுங்  குணங்களுள்   ஆழமுடைமையும்   இனிமையும்  சங்க  இலக்கியங்களில்  நன்கு  அமைந்துள்ளன . என்பதை  யாவரும்  எளிதில்  உணர்வர் .  எளிமை  கால  வேறுபாட்டால்  அவ்விலக்கியங் களில்   அருமையாக  மாறுதல்  அடைந்து  உள்ளது .  அப்பாடல்கள்  தோன்றிய  காலத்து  அந்  நடை  எளிமையாக  இருக்கலாம் .  அக் காலத்துப்  பயிற்சியில்  முதிர்ந்த  செந்தமிழ்ச்  சொற்கள்  இயல்பாக  வழங்கப்பட்டிருக்கக்  கூடுமாதலின் , அப்பாடல்  நடைகளும்  அங்ஙனமே  அமைந்துள்ளன  என்ற  கோடல்  பொருந்தும்  .  இற்றை  ஞான்று  மொழி  நடையில்  முதிர்ந்த  பழஞ்  சொற்களும்  தொடர்களும்   சிறிது  சிறிதாகக்  கைவிடப்பட்டு  வந்தமையால்  முன்னைப்பாடல்  நடைகள்  இப்பொழுது  நமக்கு  எளிமையில்லாதன வாகக்  காணப்படுகின்றன .சங்க  இலக்கியங்களுள்  ஒரு சிலவற்றைத்  தெளிவாகப்  பொருள்  உணர்ந்து  படித்து  அடிக்கடி  பழகி  வருவோ மாயின்  அந் நடையும்  எளிமையாக  அமையும்  .  எதுகை  மோனை  நிமித்தம்  வறிதே  அடைமொழிகளைப்  புணர்த்துப்  பொருட்சுருக்க மும்   சொற்பெருக்கமும்  அமைய  யாக்கப்படும்  பிற்காலத்தவர்  பாடல்கள்   நுண்ணறிவுடையார்க்கு  இன்பஞ்  செய்வனவாகா .  ஒரு  சிறு  சொல்லேனும்  வறிதே  விரவாமல்  உய்த்துணருந்தோறும்  “நவில்தொறும்  நூல்  நயம்  போலும்”  என்னும்  முதுமொழிக்கிணங்க  இன்பஞ்  செய்வன  சங்கப்பாடல்களேயாகும் . இத்தகைய  பொருள்வளஞ்  சான்ற  சங்க  இலக்கியங்கள்  இடையே  சில  நூற்றாண்டுகளாகத்  தமிழ்  மக்களாற்  பயிலப்படாமலிருந்தன .  இப்பொழுது  ஒரு  சில  ஆண்டுகளாக  அத் துறையில்  விழிப்புடை யராய்ப்  பயில  முற்பட்டிருப்பது  மகிழ்ச்சி  தருவதொன்று .  இற்றை  ஞான்று  ஆடவரும்  மகளிரும்  சங்க  இலக்கியங்களைப்   படிக்கவும்  அவற்றில்  கூறப்படும்  இயற்கை  முதலிய  பொருளழகுகளை  உணர்ந்து  இன்புறவும் , பெருங்  கழகங்களில்  பலருந்  தெளிய  எடுத்துரைக்கவும்  தகுதியுடையராய்  முன்வருதல் , தமிழராக்கம்  புத்துருப் பெற்று வளர்தற்கேற்ற  சான்றாகும் . இந் நிகழ்ச்சியில்  இச் சென்னை  மாநகரம்  முற்பட்டிருப்பது  சிறப்பாக  நினைக்கத்  தக்கதொன்று  .  பத்துப்பாட்டு  மாநாடு  , கலித்தொகை  மாநாடு , சங்க  இலக்கிய  மாநாடு  என  மூன்று  பேரவைகள்  இதற்கு  முன்  நடைபெற்றன  .  இன்னும்  பல  நடைபெறுதற்குரிய  முயற்சிகள்  காணப்படுகின்றன .  இன்று  கூடிய  மாநாடு  “குறுந்தொகை”என்னும்  அரிய  நூலைப்  பற்றியதாகும் .

                 குறுந்தொகை  என்பது  சங்க  இலக்கியங்களாகிய  தொகை  நூல்கள்  எட்டனுள்  ஒன்று . இது  நல்ல  குறுந்தொகை  என்று  பாராட்டப்பட்டுள்ளது . அகப்பொருள்  நுதலிய  தொகை  நூல்களுள்  அடியளவாற்  பெற்ற  பெயர்   இதுவாகும் . நாலடிச்  சிற்றெல்லை யையும்  எட்டடிப் பேரெல்லையையும்  உடையது . அடியளவாற்  குறுகிய  தன்றிப்  பொருளளவார்  பெரியதென்றே  கூறலாம் . இதன்கண்  மேற்கொண்ட  அகத்துறைகளைத்  தெளிவு  படுத்துங்  குறிப்புக்கள்  வியத்தகு  முறையில்  அமைந்து உள்ளன .  கூறப்படும்  பொருள்கள்  வரையறையும்  தெளிவுமுடையன .  வாய்ப்  பயில்வார்க்குப்  பெரிதும்  இன்பஞ்  செய்கின்றன .  இதற்குப்  பாரதம்  பாடிய  பெருந்  தேவனார்  கடவுள்  வாழ்த்துப்  பாடியுள்ளார் . அது  முருகப்பெருமானைப்  பற்றிய  வாழ்த்தாக  இந்நூன்  முகத்தே  திலகம் போல   ஒளிர்கின்றது . அப்பாடல்  வருமாறு : 

“தாமரை  புரையுங்  காமர்  சேவடிப்

பவழத்  தன்னமேனித்   திகழொளிக்  குன்றின்

நெஞ்சுபக  எறிந்த  அஞ்சுடர்  நெடுவேற் 

சேவலங்  கொடியோன்  காப்ப

ஏம  வைகல்  எய்தின்றா  லுலகை”  

என்பதாம் . இப்பாடலின்  தூய்மையை  நன்காராய்ந்த   யாப்பருங்கலக் காரிகை  உரையாசிரியர்  எல்லாக்  குற்றமும் தீர்ந்த  செய்யுட்கு  மேற்கோளாக  இதனை  எடுத்துக்  காட்டியுள்ளார் . இதன்கண்  முருகப்பெருமானுடைய  திருவடி , நிறம் , ஒளி , ஆடை , வேல் , சேவற்கொடி  என்னும்   இவை  ஆறும்  புனைந்துரைக்கப்பட்டன  முருகவேளை  நினைக்கும்  போதே  தாமரை  மலர்  முன்னிற்பதும் , அறுவகை  வருணனையில்  உள்ளஞ்  சேரலும்  புலவர்  பெருமக்களுக்கு  இயல்பாக  நிகழத்தக்கன  .  நிவந்தோங்கு  இமயத்து  நீலப்  பைஞ்சுனையாகிய  சரவணப்  பூம்பொய்கையில்  , பதுமப்  பாயலில் , அப்பெருமான்  தோன்றியமையை  நினைவுறுவார்  உளக்  கண்ணுக்குத்  தாமரை  மலர்  எங்ஙனம்  புலனாகாதிருத்தல்  கூடும்?  “நமக்  குமாராய”  என்னும்  ஆறெழுத்தடக்கிய  அறுமறைக்  கேள்வியும்  ஆங்கமை  மூவிருமுகனும்  முறைநவின்  றொழுகலும்  மனங்  கொள்ளுவார்க்கு  அறுவகை  இயைபு  எவ்வாற்றாலும்   அப்பெருமானுக்குப்  பொருந்தியதென்று  உயர்ந்த  கவிகள்  கருதல்  இயல்பே .  இதற்கேற்ப  இக்கடவுள்  வாழ்த்து  ஆறடி  களால்   ஆக்கப் பட்டிருப்பதும்  ஈண்டு  உணர்ந்து  இன்புறத்தக்கது . இனி , முதலில்  அப்பெருமானுடைய  சிவந்த  திருவடியே  புனைந்துரைக்கப்படு கின்றது .  கடவுளரைப்  பாடுங்கால்  அன்னார்  திருவடி  நினைவே  கவிகளுக்கு  முன்னிற்பதாகும் . அதனாற்  பெறும்  பயன்  நோக்கி  அங்ஙனங்  கூறல்  மரபு . யாவர்க்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையான்  திருவடியும்  , யாவர்க்கும்  கீழாம்  அடியார்  தலையும்  ஒன்று  படுவதே   வேண்டப்படுவதாகும் .  இது  கருதியே  இறைவனொடு  இரண்டறக்  கலத்தலாகிய  வீடு  நிலைக்குத்  “நாலைப்  போல்  அடங்கிநறிறல்” என்று  சைவப்  பெரியார்  எடுத்துக்   காட்டுவர் . “தாடலை”  என்னும்  தொடரில் , தாள்  என்பதினிறுதியும் ,  தலை  என்பதன்  முதலும்  ஒன்றுபட்டுத்  “தாடலை”  என்றாயவாறு  போல , இறைவன்  நிலையில்  உயிர்நிலை  தோய்ந்த  இரண்டற்ற  நிலை  யாதலே  வீடு  என்பது  புலனாம் . இங்ஙனம்  திருவடியை  முதற்கண்  தொடங்குதலம் , அத்திருவடிக்கட்  பொருண்  முடிவு  கோடலும்  ஆகிய  மரபு  குறுந்தொகைக்கண்  அன்றி  நற்றிணை , ஐங்குறுநூறு , அகநானூறு  முதலியவற்றிலும்  முறையே  “மாநிலஞ்  சேவடியாக”  எனவும் , “ஒருவன்  இருநாள்  நிழற்கீழ்”  எனவும் , “தவில்  தாள்  நிழல்  தவிர்ந்தன்றாலுலகே”  எனவுங்  கூறிய  மறையான்  உணரலாம் . குறுந்தொகை , நற்றிணை , அகநானூறு  இம்மூன்றும்  முறையே  குறுமை , இடைநிகர் , நெடுமை  ஆகிய  அடியளவு  பற்றித்  தொகுக்கப்பட்டனவாம் . இவற்றிற்கு  முறையே  பாரதம்  பாடிய  பெருந்தேவனார்  முருகன் , சிவபிரான்  இவர்களைப்  பற்றிக்  கடவுள்  வாழ்த்துக்  கூறியுள்ளார் . இம்முறையில்  ஆசிரியர்  பிரமன் , திருமால் . சிவபிரான்  அவர்களைப்பற்றிக்  கருதியிருக்கலாம் . பிரமனைக்  கூற வேண்டிய  பகுதியில்  அப்பிரமனை  மறைப்பொருள்  வினவி  அடக்கியருளிய  ஆற்றல்  முருக  வேளுக்கு  உள்ளதாலும் , நிலக்  கிழமை  பற்றியும்  இதற்கு  முருகன்  வாழ்த்துச்  சிறந்ததென  மேற்கொண்டார்  போலும் .

               இனி , நானிலத்து  ஐந்திணை  ஒழுக்கமும்   இந் நூல்  நுதலிய  பொருளாதலின் , அப்பொருளைக்  கருக்கொண்டுள்ளது  இப்பாடலென  உணர்க . இங்ஙனம்  நூல்  நுதல் பொருளைத்  தன்னகத்தடக்கி  முதற் பாடல் புலப்படுக்குமாற்றைத்   திருக்கோவையாரில்  “திருவளர்தாமரை” என்னும்  முதற்  செய்யுட்குப்  பேராசிரியர்  செய்த  நல்லுரையானும்  உணரலாம் , இக்கடவுள்  வாழ்த்துப் பாடலில்  அக்  கருப்பொருள்  அமைந்த  முறையைச்  சற்று  ஆராயத்  தொடங்குவேன்  “தாமரை  புரையுங்  காமர்  சேவடி”  என்புழி  மருத  நிலத்துக்  கருப்பொருள்  ஆகிய  தாமரையும்  , “பவழத்  தன்ன  மேனி”  என்புழி  நெய்தல்  நிலத்துக்  கருப்பொருள்  ஆகிய  பவளமும் , “குன்றி  யேய்க்கும்  உடுக்கை”   என்புழி  முல்லைக்கு  உரியதாகக்  கருதப்படும்  குன்றிமணி  கொடியும் , “குன்றின்  நெஞ்சுபக  எறிந்த”  என்றதனால் , குறிஞ்சிக்கு  உரிய  மலையும்  புலப்படுக்கப்   பட்டுள்ளன .  பாலைக்கெனத்  தனியே  நில  மின்மையாலும்  “முல்லையுங்  குறிஞ்சியும்  முறைமையில்  திரிந்து  பாலை  என்பதோர்  படிவங்  கொள்ளும் “  ஆதலானும் , அம்முறையில்  குறிப்பாக  அந் நிலமும் புலப்படுக்கப்பட்டதென்னலாம் குன்றியையும் குன்றத்தையும் ஒரே  அடியில்  இயைய  வைத்த குறிப்பும்  இதனை  வலியுறுத்து வதாகும் . ஈண்டு , குறிஞ்சியல்லா  ஏனை  நிலங்களைக்  கருப் பொருள்களாலும்,  குறிஞ்சியை  முதற்  பொருளாலும்  பெற  வைத்தது. “சேயோன்  மேய  மைவரை  யுலகமும்”  என்றபடி  அந் நிலவுரிமை  செவ்வேட்கு  உள்ளது  கருதியே .   

         முருகவேளின்  இளமையும் , அழகும் , வீரமும்  சிறப்பு  முறையில்  கவிகளின்  உள்ளத்தைக்  கவர்வனவாம் . “தாமரை  புரையுங்  காமர்  சேவடி”  என்பதனால்  இளமைச்  செவ்வி  புலனாம்  .  தாமரை  இதழ்  போன்ற  மென்மையும் , செம்மையும்  ஈண்டு  இளமையைப்  புலப்படுப்பன . “பவழத்  தன்ன  மேனித்  திகழொளி”  என்றதனால்  திருமேனி  நிறமும்  அந் நிறத்தில்  விளங்கும்  பேரொளியும்  அழகைப்  புலப்படுப்பன.  முருகனது  ஒளியின்  பெருமையை  “முன்னே  வந்து  எதிர்  தோன்றும் முருகனோ  பெருகொளியால்”  என்னும்  பெரியார்  மொழியானும்  உணரலாம் . குன்றின  நெஞ்சு  பக எறிந்த அஞ்சுடர்  நெடுவேல்”  என்பதனால்  வீரம்  புலனாம் . உலகம்  கொடியவர்களால்  துன்புறுங்கால்  தம்  வேற்படை  கொண்டு  பகையொழித்து  இன்புறுத்தற்கு  வீரம்  இன்றியமையாதது . ஆதலின்  காத்தற்  றொழிலுக்கு  உதவியாக  வீரம்  முதற்கண்  அடுத்துக்  கூறப்பட்டது .  அளியும்  தெறலும்  அரசர்க்கு  இன்றியமையாதனவாம் . அந்நிலையில்  தெய்வ  அரசராகிய  முருக  வேட்குக்  “காப்ப”  என்றதனால்  அளியும் , “குன்றின்  நெஞ்சுபக எறிந்த:  என்றதனால்  தெறலும்  உள்ளன  என  ஆசிரியர்  பெருந்தேவனார்  புலப்படுத்துள்ளார் . முருகவேளின்  காவலிற்பட்டு  உலகம்  இன்பமயமான  நாட்களைஎய்துகின்றது  என்னும்  பொருள்  தோன்ற ,”காப்ப , ஏமவைகல்  எய்தின்றாலுலகே”  என  இவ்வாழ்த்து  முடிக்கப்பட்டது . இதனால்  மக்களுக்கு  உரிய  அன்பின்  ஐந்திணை  ஒழுக்கம்  இந்நூல்  நுதலிய  பொருளாகும்  என்பது  குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . இவ்வாழ்த்துப்பாடலில்   மருத  நிலத்துக்  கருப்பொருள்  முதலிலும்   குறிஞ்சி  முதற்பொருள்  ஈற்றிலும்  அமைந்துள்ளன .இதனால்  “ஊடுதல்  காமத்திற் கின்பம் , அதற்கின்பம்   கூடி  முயங்கப்  பெறின்”  என்னும்  முதுமொழிப்படி  ஊடலும்  கூடலும்  முறையே  நிகழும்  இன்பவியல்பு புலப்படுக்கப்பட்டது என்பது  போதரும் . இங்ஙனம்  இக்குறுந்தொகைக்கு  அமைந்த  கடவுள்  வாழ்த்துப்  பாடல்  நுண்பொருள்  பலவற்றையும்  தன்னகத்து  அடக்கி  நுண்ணுணர்வினோர்க்கு  நவில்தொறும்  உணருந்தோறும்  முருகன்  திருவடி  இன்பம்  போன்ற  பேரின்பத்தைப்  பயத்தலால் இன்பவூற்றாகத்  திகழ்வதாகும் .

அன்பர்களே ! 

        இனி,  இந்  நூலின்  உட்பகுதியில்  நுழைந்து  பல  பொருள்  நயங்க ளைப்  பின்னே  சொற்பொழிவாற்ற  முன்வரும்  புலவர்  வாயிலாக  உணர்ந்து  இன்புறலாம் . ஆயினும் , நறுஞ்சுவைப்  பொருளை  நுகர்தற்கு  வேட்கை  விஞ்சினார் , பின்  அவர்  காலந்  தாழ்த்துத்  தரும்  வரை  காத்திருத்தற்கு  மனம்  ஒருப்பாடுவாரல்லர் .  ஏதோ  கைக்  கெட்டிய  அளவு  முந்துற  நுகர்தற்கு விரும்புதல்  இயல்பே . அம்முறையிற்  சிற்சில  பகுதிகளை  அறிவு  கருவியாக  நுகர்ந்து  இன்புறலாமென  நினைக்கின்றேன் .  இந்  நூலின்  இயல்பை  விளக்கமாகப்  பேச  நினைக்கிறேன் . இந்நூலின்  இயல்பை  விளக்கமாகப்  பேச  நினையின்  மிக  விரியும் . ஆதலின் , ஒரு  சில  நயங்கள்  மட்டில்  ஆராயலாமென  எண்னுகின்றேன் .  இவை :   1 உவமையழகு   2  . குணவருணனை  3 . தேற்றுமுறை  4 . உள்ளுறை   5 மக்கள் மனநிலை  6 .  காதலின்  இயல்பு  என்பனவாம். இவையும்  சுருங்கிய   அளவில்  முறையே  கூறப்படும் .    

1 .  உவமையழகு

          சங்க  இலக்கியங்களுட்  பெரும்பாலும்  அமைந்த  அணிகள்  தன்மை  நவிற்சியும்  உவமையுமாம் . பொருள்களைத்  தெளிவுறுத்து வது   உவமையாகும் . ஒரு  புடையொத்தல்  உவமமெனக்  கொண்டு  உள்ளத்  துணர்வுக்குக்  கொள்ளத்தக்க  அளவில்  அன்றி  உவமை  கூறுவர்  பிற்காலத்துப்  புலவர் .  சங்கப்புலவர்  காணும்  உவமைகள் , பொருளோடு  ஒத்த  தன்மையால்  நெருக்கம்  உடையனவாய்  நின்று , உணர்வுக்கு  இன்பஞ்  செய்வனவாம் . அவற்றுள் , இங்கே  ஒரு  சிலவற்றைக்  குறிப்பிடுவேன் .  மனையாளை  அஞ்சியொழுகும்  ஓராடவன்  இயல்பு, “கையுங்  காலுந்  தூக்கத் தூக்கும்  ஆடிப்  பாவை  போல , மேவன  செய்யும்  “  என்று  உவமை  கூறித்  தெளிவுறுத்தப் பட்டது .  கண்ணாடியின்  முன்னின்றார் , தம்  கையையும்  காலையுந்  தூக்குங்கால்  அக்கண்ணாடியில்  தோன்றும்  எதிருருவாகிய  பாவையும்  அங்ஙனமே  தூக்குமென்பது  எளிதிற்  காணப்படுவ தொன்று . அதனால்  “ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே” என்புழிப்  போல, இறைமை  தலைவி  பாலதாக, அவள்  இயக்கியாங்கு  இயங்குதல்  தெளிவுறுத்தப்பட்டது . இது  பரத்தை கூற்றாதலின்  அவள்  மனம்  வேறுபட்ட  நிலையிற்  கூறியது  பற்றித்தலைமகன்  பெருமைக்கு  இழுக்காதென்பது ஈண்டு  அறியத்தக்கது .

            பிறிதோரிடத்து , சிறிய  உயிரில்  அமைந்து  கிடக்கும்  பெரிய  காதலின்  இயல்பை  உவமிக்கக்  கருதிய  ஆசிரியர் ,  

சிறுகோட்டுப்  பெரும்பழத்  தூக்கி  யாங்கிவள்

 உயிர்  தவச்  சிறிது  காமமோ  பெரிதே “

என்கின்றார்  . வேரிற்  பழுக்கும்   பழத்தை  நீக்குதற்குக்கோடெனவும்   சிறு  பழத்தை  நீக்குவதற்குப்  பெரும்  பழமெனவுங்  கூறினர் .  மரக்  கொம்பை  மகளிர்க்கு  உவமையாக்குதல்  கவி  மரபு . இங்கே  உடலோடு  உயிர்க்குள்ள  ஒற்றுமை  கருதியும் , உயிர்  அணுவென்று  கூறப்படுதல்  பற்றியும் , தலைவியின்  இளமைச்  செவ்வி  நினைந்தும்  சிறு  கோடு  உவமையாயிற்று  . இத்தகைய  சிற்றுயிரில்  தங்கிய  வேட்கையோ  மிகப்  பெரிதென்பது  போதரவும்  , நுகருந்  தலைமக னுக்கு  அது  பேரின்பஞ்  செய்யுமென்பது  பற்றியும்  காமத்திற்குப்  பெரும்  பழம்  உவமையாயிற்று .  காமம்  நறுங்கனியாக   கூறப்படு தலை ,

“தாம்வீழ்வார்  தம்வீழப்  பெற்றவர்  பெற்றாரே

 காமத்துக்  காழில்  கனி” 

என்னுந்  திருக்குறளாலும் ,

“கன்னிமை  கனிந்து  முற்றிக்  காமுறக்  கமழுங்  காமத்

 தின்னறுங்  கனியைத்  திய்ப்பான்  எந்தலே”

என்னுஞ்  சிந்தாமணிச்  செய்யுளாலும்  உணரலாம் . காதலின்  வளர்ச்சியை  ஆடவர்  மகளிர்  பிரிவிற்  காண்டல்  போலக்  கூடற்  காலத்திற்  காண்டற்கியலாது . கூட்டத்தில்  இருவரும்  உள்ளம்  இயைந்து  இன்பம்  நுகர்வர் . அந் நிலையில்  , அவ்வின்ப நிலை ,

“மக்கட்குத்  தாய்தான்  மணாளனோ  டாடிய

சுகத்தைச்  சொல்லெனிற்  சொல்லுமா  றெங்ஙனே”

என்ற  பெரியார்  மொழிப்படி  வெளிப்படுத்துச்  சொல்லுந்தரத்தன்று . பிரிவுத்  துன்பம்  வாய்  விட்டுக்  கூறும்  இயல்பினது . இது  பற்றியே  இங்கே  தோழி   “உயிர்தவச்சிறிது  காமமோ  பெரிதே” என்றனள் .  கூடலில்  நிகழும்  இன்பத்தினும்  பிரிவின்கண்  நிகழுந்  துன்பம்  மிகப் பெரிதா மென்பதனை ,

ஏரிதலைக் கொண்ட காமத்  தின்பநீர்ப்  புள்ளி  யாற்றல்

 பிரிவிங்கட்  பிறந்த  துன்பம்  பெருங்கடலனைய  தொன்றால்”

என்னுஞ்  சிந்தாமணியாசிரியர் கூற்றாலும்  உணரலாம் . இங்கே  இன்பத்தையுந்   துபத்தையும்  நீராகக்  கொண்டு , அவ்வின்பம்  நீர்த்திவலை  யளவினதென்றும் , பிரிவுத் துன்பம்  நீர்ப்பெருக்காகிய  கடலளவினதென்றும் கூறியது  உணர்ந்து  இன்புறத்தக்கது . “காமமோ  பெரி”  தென்றதும்  பிரிந்த நிலையில்  நிகழ்வது  கருதியே  முதிர்ந்த  பெரும் பழம்  கொள்ளுவாரில்லையாயின் , தனக்கு  ஆதாரமாகிய  சிறிய  கொம்பையும்  , இறுத்துத்  தானும்  வீழும் .  அது  போலத்  தலைவியின்  காதற்  பெருங்கனியை  ,  உரிய  தலைவன் நுகர முற்பட்டிலனேல் ,  அதற்கு  ஆதாரமாகிய  தலைவியின்  சிற்றுயிரையும்  இறந்துபடச்  செய்து  தானுங்  கெடுமென்பதும்  இங்கே  உணரத்தக்கது .  

            இனி , களவொழுக்கத்தில்  தலைப்பட்டு  மீண்ட  தலை மகனது  வேறுபாடு  கண்ட  பாங்கன், அவ்வேறுபாட்டிற்குரிய  காரணத்தை  வினாவிய  பொழுது , ஓர்  இளம் பெண்ணால்  இங்ஙனம்  நேர்ந்த தென்று  தலைமகன்  கூறியதாக  ஒரு  பாடல்  உள்ளது . அது ,

“சிறுவெள்  ளரவின்  அவ்வரிக்  குருளை

கான  யானை  அணங்கி  யாஅங்கு

இளையள்  முளைவா  ளெயிற்றள்

வளையுடைக்  கயளெம்  அணங்கி  யோளே “

என்பதாம் . சிறிய  வெள்ளிய  பாம்பின்  குட்டியானது  காட்டில்  திரியும்  பெரிய  யானையை   வருத்தினாற்போல , நாணல்  முளை  போன்ற  கூறிய  பற்களையுடைய  ஓர் இள நங்கை  என்னை  வருத்தச்  செய்தாள்  என்பது  இதன்  பொருளாகும் . மிகச்  சிறிய  கோலினாற்  கொல்லத்தக்க  பாம்புக்குட்டி  மலை  போன்ற  யானையும்  வருத்துமென்பதை ,

அஞ்சனக் கோலி  நாற்றா  நாகமோ  ரருவிக்  குன்றிற்

 குஞ்சரம்  புலம்பி  வீழக்  கூர்நுதி  யெயிற்றிற் கொல்லும்”

என்னுஞ்  சிந்தாமணிச்  செய்யுளலும்  அறியலாம் . இங்கு , தலைவன்  யானையைத்  தனக்கு  உவமையாகக்  கூறியதனால் , தலைமை  யிலக்கணத்துக்குப்  பொருந்தாத  தற்புகழ்தல்  பெறப்படுகின்றதே  , அங்ஙனம்  பெற  வைகலாமோ  வெனின் , சென்றதற்கு  இரங்குகின்றானாதலின்  தற்புகழ்தல்  ஆகாதென்பது  கருத்து . இங்கே,

ஒண்ணுதற்  கோஒ  உடைந்ததே  ஞாட்பினுள்

 நண்ணாரும்  உட்குமென்  பீடு “ 

என்னுந்  திருக்குறளும்  , ‘ஞாட்பினுள்  நண்ணாரும்  உட்குமென் பீடு’  என்பதனாற்  பெறப்பட்ட  தற்புகழ்  தலைப்  பரிகரித்தற்கு  “கழித்ததற்  கிரங்கலின்   தற்புகழ்தல்  அன்றாயிற்று . என்று  கூறிய  பரிமேலழகர்  உரைப்  பகுதியும்  ஒப்பு  நோக்கி  இன்புறத்தக்கன . இங்ஙனம்  பாங்கன்  கேட்டதற்குத்  தலைமகன்  இறுத்த  விடையை  ஏற்றுக்  கொள்ளாமல் , பாங்கன் , பேராற்றல்  படைத்த  நீ  ஒரு  சிறுமகளால்    இத்தன்மையை  யாதல்  நின்  பெருமைக்கு  இழுக்காகுமென்றது  இடித்துரைத்தானாக  .  அக்  கழற்றுரையைத்  தலைமகன்  மறுத்துரைக்கு  முகமாக  ஒரு  பாடலுள்ளது . அஃது ,

“இடிக்குங் , கேளிர்  நுங்குறை  யாக

 நிறுக்க  லாறறினோ  நன்றுமற்  றில்ல

ஞாயிறு  காயும்  வெவ்வறை  மருங்கிற்

கையி  லூமன்  கண்ணிற்  காக்கும்

வெண்ணெ யுணங்கல்  போலப்

பரந்தன்  றிந்நோய்  நோன்றுகொளற்  கரிதே “

என்பது  .  இதன்கண்  ஓரழகிய  உவமை  எடுத்தாளப்பட்டுள்ளது . கதிரவனது  கடும்வெயில்  எறிக்கும்  வெப்பத்தையுடைய  பாறையின்  கண்ணே , கையில்லாத  ஊமன்  தன்  கண்னினாலே  பாதுகாக்கும்படி  வைக்கப்பட்ட  வெண்ணெய்  உருகுதல்   போல  இக்  காதல்  பரந்துள்ளது ;  பொறுத்தற்கரிதாயிற்று என்பதாம் .  ஊமன்  இலக்கணத்தைச்  சிந்தாமணியாசிடியர் ,

“கயி  னாற்சொலக்  கண்களிற்  கேட்டிடும்

மொய்கொள்  சிந்தையின்  மூங்கை” 

என்று  கூறினர் .பிறர்  கையினாற்  கூறுஞ்  செய்திகளை  ஊமன்  தன்  கண்களாற்  கேட்குமெனவும் , பேச  இயலாமையினால்  நினைத்த  கருத்துக்கள்  அளவில்லனவாக  உள்ளத்தில்  நிறைந்திருக்கு மென்பது கருதி “மொய்கொள் சிந்தையின் மூங்கை’   எனவும்  கூறினர் . இங்ஙனம்  பேச  இயலாமையோடு  கையுமில்லையானால்  வெண்ணெ  யுருகிப்  பரத்தலைக்  கண்ணினாற்  கண்டும்  பிறர்க்குத்  தெரிவிக்க  இயலாமையோடு  அவ் வெண்ணெயைப்  பெயர்த் தெடுத்துப்  பிறிதொரிடத்து  வைக்கவும்  அவ்வூமற்கு  இயலாததாம் . அது போல , இந் நோயைப்  பொறுக்கவும்  பிறர்க்கு  வெளிப்படுத்திக்  கூறி  ஆறுதலடையவும்   இயலாதவனாயினே னெனவும் , என்னை  இடித்துரைக்கும்  நண்பரே  இதனை  நும்  காரியமாக  நிறுத்தலைச்  செய்யின்  நன்றாமெனவும்  தலைமகன்  கூறினானென்பதும்  இப்பாடற்  கருத்து . இத்துணையும்  உவமை  நயங்கள்   ஒருவாறு  புலப்படுக்கப்பட்டனவாம் .

2   .  குண  வருணனை

       இனி , ஒரு  குணத்தை  யெடுத்துச்  சிறப்பித்துக்  கூறுங்கால் , அதற்குப்  பேரெல்லையாக  எம்மட்டிற்  கூறலாமோ  அத்துணையுங்  கூறி  அக்  குணத்தின்  பெருமையை  விளங்க  வைத்தலை  இந்  நூலிற்  பல  விடத்துங்  காணலாம் .  தலைமகள்  தன்  காதலனோடு  மேற்கொண்ட  நட்பைப்  பற்றிக்  கூறும்  போது , “நிலத்தினும்  பெரிதே  வானினு முயர்ந்தன்று . நீரினு மாரளவின்றே”  என்று  கூறியதாக  ஒரு  பாடற்  பகுதி  காணப்படுகிறது .  திருக்குறளிற்  பெருமைக்  கெல்லை யாக  நிலம்  வான்  கடல்கள்  கூறப்பட்டுள்ளன .  இவ்வெல்லாம்  பெருமை  யென்னும்  ஒரு  பொதுத்  தன்மை  பற்றி  வினாவிய   அநபாய  சோழ  அரசற்கு , இவை  எடுத்தாளப்பட்ட  மூன்று  திருக்குறள் களையும்  எடுத்துக் காட்டி  எழுதி  யுய்த்த  பெருமை  பற்றிச்  சேக்கிழார்  பெருமான்  திருக் கைகள் ,

மண்ணிற்  கடலின்  மலையிற்  பெரியதென

 எண்ணியெழு  திக்கொடுத்த  ஏற்றக்கை”

என்று  பாராட்டப்  பெற்றன . இங்ஙனம்  திருக்குறளில்  பெருமையொன்றே  பற்றிக்  கூறப்பட்டனவாக , இங்கே  ஒவ்வொரு  வகையினும்  வேறு  வேறு  பொதுத்  தன்மை  கண்டு  கூறியது  இன்புறத்தக்கது . சிறந்த  நட்பென்னுங்  குணம்  சுருங்கியதாக  இல்லாமற்  பரந்தும் , அப்பரப்பிற் கேற்ப  உயர்ந்தும்  அதற்கேற்ப ஆழ்ந்தும்  இருத்தல்  வேண்டும் . பிறராற்  சிதைக்க  முடியாதபடி  வேர்  ஆழ்ந்திருத்தலைப்  பிற்காலத்துப்  புலவரும் ,

“ஒருநாட்  பழகினும்   பெரியோர்  கேண்மை

இருநிலம்  பிளக்க  வேர்வீழ்க்  கும்மே”

என்று  கூறுவர் . இங்ஙனம் மூன்று  தன்மையும்  வாய்க்கப்பெற்று  எல்லாம்  வல்ல  இறைவன்  எங்கும்  நிறைந்த  நிலை  போல அகன்று  உயர்ந்து   ஆழ்ந்திருத்தற்கு  முறையே  நிலத்தையும்  விண்ணையுங்  கடலையும்  உவமையாகக்  கண்டது  பாராட்டத்தக்கதே . இம் மூன்று  தன்மைகலையும்  இறைவனுக்  குரியனவாக  ஆளுடை  அடிகள்  தம் அநுபவ  முறையிற்  கண்டு  கூறிய ,

                                        “    ……………………………………………………வேதங்கள்

ஐயா  என  ஓங்கி  ஆழ்ந்தகன்ற  நுண்ணியனே “

என்னுந்  திருவாசகப்  பகுதி  ஈண்டு  நினைந்து  இன்புறத் தக்கது .  இங்கே  நுண்மை  ஒன்று  மிகுதியாகக்  கூறப்பட்டுள்ளது . அதற்குக்  காரணம்  அணுவினும்  அணுவாய்  நிற்கும்  இறைவனிலக்கணம்  இந்  நட்புக்  குணத்திற்குப்  பொருந்தாது  என்பதே .  

3  .  தேற்று  முறை

           ஒருவர்க்கு  ஆற்றொணாத்  துயரம்  நேர்ந்தவிடத்துத்  தேற்றப்  புகுவார் , துயரமுற்றார்  உள்ளத்துட்  பதியுமாறு   ஆறுதல்  மொழி  கூற வேண்டும் . அங்ஙனங்  கூறப்படு மொழியும்  உண்மையாக  இருப்பின்  நலமாம் . இந் நிலையில்  தலைமகனுடைய  பிரிவு  கருதி  வேறுபட்ட  தலைமகளுக்குத்  தோழி  ஆறுதல்  கூறுமுகமாக  ஓர்  இனிய  பாடல்  இங்கே  காணப்படுகின்றது . அது ,

“வினையே  ஆடவர்க்  குயிரே  வானுதல்

 மனையுறை  மகளிர்க்  காடவ  ருயிரென

நமக்குரைத்  தோருந்  தாமே 

அழாஅல்  தோழி  அழுங்குவர்  செலவே “

என்பதாம். ஓரமயம்  பொருளீட்டக்  கருதிய  தலைமகன்  அச்செய்தி யை  வெளிப்படையாகக்  கூற  அஞ்சிக்  குறிப்பிற்  புலப்படுத்த  நினைத்தான் .  உண்மைக் காதலன்  எக் காரணத்தை  முன்னிட்டேனும்  தன்  உயிரனைய   காதலியைப்  பிரிய  நேரின்  அச்  செய்தியை  வெளிப்படக்  கூறினால்  அவள்  ஆற்றொணாத்  துயர  மெய்துவாளென்  றெண்ணி  முதலில்  ஒருவாறாகத்  தன்  எண்ணத்தை  அவள்  அறிந்து  கொள்ளுமாறு  குறிப்பிற்  புலப்படுத்தலும் , பின்னர்  விரைந்து  திரும்புவேன்  என்று  கூறிப்  பிரிவை  வெளிப்படுத்தலுஞ்  செய்வன்  .  இதனை.

மினிவரும்  மன்னரும்  முன்னுவ  பொன்னால்  முடியும்” 

என்று   பொதுவாக  நீதி  கூறுவான்   போன்று  பேசத்தொடங்கியதும்  தலவி  பிரிவுக்  குறிப்புணர்ந்து  அழத்தொடங்கினாள் .  என்று  கூறிய  திருக்கோவைப்  பாடலும் , அதன்பின்  ஒருவாறாகத்  தேற்றி  ‘யான்  பிரிந்து  விரைவில்  வருவேன்’  என்றானாக , அது  கேட்ட  தோழி ,  ‘பிரிந்து  போக  வல்லையாயின்  அதனை  எனக்குச்  சொல் ; அங்ஙன மின்றிப்   பிரிந்து  சென்று  விரைந்து  வருதலைச்  சொல்வையாயின்  அதனை  அப்பொழுதே  உயிர்  வாழ்வார்க்குச்  சொல்   என்றும்  கருத்துத்  தொன்ற,

“செல்லாமை  உண்டேல்  எனக்குரை  மற்றுநின்

வல்வரவு  வாழ்வார்க் குரை

என்னுந்  திருக்குறளும்  புலப்படுத்துவனவாம் .  இத்திருக்குறட்  கூற்றுத்  தோழியதாயினும்   வேறுபாடின்மை  பற்றித்  தலைவியாகக்  கொள்ளுதல்  பொருந்தும் .  இம்முறையில்  இங்கே  தன்  பிரிவைக் குறிப்பிற்  புலப்படுத்த  எண்ணிய  தலைவன்  பொதுவாக ,  “வினையே  ஆடவர்க்குயிர்”  என்றான் . இந்  நீதி  மிக  உயர்ந்தது .  தொழின்  முயற்சியின்றி  மக்கள்  வாழ்க்கை  நடைபெறுதல்   அரிதாகலின்  அஃது  ஆடவர்க்  குயிராகுமென்பது  உண்மையே .  இவ்வுயர்ந்த  குறிக்கோளைப்  பொது  நீதியாகத்  தலைவன்  கூறிய  அளவில்  அவன்  பிரியக்  கருதுகின்றான்  என்பதைக்  குறிப்பால்  அறிந்த  தலைமகள்  துயரமிக்கு  வேறுபட்டாளாக , அஃது  உணர்ந்த  தோழி  அவளை  நோக்கி ,’ஆடவர்க்கு  வினை  உயிர்  என்று  கூறிய  தலைவரே  முன்னொரு  முறை  மனையுறை  மகளிர்க்கு  ஆடவர்  உயிரென்றுங்  கூறியுள்ளார் ; கற்பரசியாகிய  நினக்கு  உயிர்  அவராக , நின்னை  விட்டு  எங்ஙனம்  பிரிந்துறைவர் ? அவர்  கொள்கைப்படி  எவ்வாற்றானும்  பிரிவாரல்லர் ;  வருந்தல்  வேண்டா  ; ஆறுதலடைக’  என்று  தேற்றுவானாயினள் .இங்ஙனம்  தேற்றும்   அறிவாற்றல் உடைய  வளாகத்  தோழியினுயர்வைப்  புலப்படுத்திய , கவியினுட்கோள்   வியத்தற்குரியது .  

4  .  உள்ளுறை

         இனி,  அகப்பொருட்  பகுதியிற்  பேசு  மக்கள் , கருத்தைக்  கருப்பொருள்  வருணனையில்  உள்ளுறை  பொருளாக  அமைத்துக்  குறிப்பிற்  புலப்படுமாறு   வலியுறுத்தலைப்  பலவிடத்துங்  காணலாம் . இவ்வழகு  மொழிக்கே  சிறந்த  தென்னலாம் . செம்பொருளினுங்  குறிப்புப்  பொருள்களே  அறிவுடையார்க்கு  இன்பஞ்  செய்வனவாம் .  தமிழ்  மொழியிலுள்ள  சங்கத்துச்  சான்றோர்  பாடல்களெல்லாம்  பெரும்பாலுங்  குறிப்புப்  பொருள்களை  உடையனவாகவே  காணப்படுவன .  இதற்கு  எடுத்துக்காட்டாக  ஒன்று  காட்டுவேன் .  தலைவியின்  இயைபு  கருதி  நள்ளிரவில்  தலைமகன்  வருதலை யறிந்த  தோழி , வழியில்  உறும்  இடையூறுகளால்  தலைவர்க்குத்  தீங்கு  நேருங்கொலோ?என்றஞ்சி  இரவில்  வருதலை  விலக்க  முற்பட்டுக்  கூறுமுகமாக  ஒரு  பாடல்  உள்ளுறை  நயந்தோன்ற  உள்ளது . அது,

கருங்கட்  டாக்கலை  பெரும்பிறி  துற்றெனக்

கைம்மை  யுய்யாக் காமர்  மந்தி

கல்லா  வன்பறழ்  கிளைமுதற்  சேர்த்தி

ஓங்குவரை  யடுக்கத்துப்  பாய்ந்துயிர்  செகுக்கும் 

சாரல்  நாட  நடுநாள் 

வாரல்  வழியோ  வருந்தும்  யாமே “

என்பதாம் .

              இதன்கண் , தலைமகனது  குறிஞ்சி  நிலத்து  வருணனையாக ,  ‘ஆண்  குரங்கு  இறந்ததாக  அதன்  பிரிவில்  கைம்மைத்  துன்பத்தை  ஆற்றாத  அதன்  பெண்  குரங்கு  தன்  இளங்குட்டியைச்  சுற்றத்திடைச்  சேர்த்து விட்டு , உயர்ந்த  மலையினின்றும்   வீழ்ந்து  உயிரை  மாய்த்துக்கொள்ளும் ‘ என்னுஞ்  செய்தி கூறப்பட்டுள்ளது . இதனால் , நின்  நிலத்துள்ள  விலங்கும்  பிரிவாற்றாது  இறந்து  படுதலை  அறிகின்றாய் ; ஆதலின்  நினக்கு  இடையூறு  நேருமேல்  தலைவி  உயிர்  வாழ்தலை  விரும்ப  மாட்டாள்  என்பது  அறிவிக்க  வேண்டிய  தொன்றன்று  என்று  தோழி  தலைமகனுக்குச்  சொல்லக்  கருதிய  செய்தி  குறிப்பிற்  புலப்படுத்தலை  அறியலாம் .

5  .  மக்கள்  மனநிலை

     இனிப்   பழங்காலத்துத்  தமிழ்  மக்கள்  மனநிலைகளை  அறிதற்குச்  சங்க  நூல்களே  சிறந்த  கருவிகளாகும் . ஒருவனும்  ஒருத்தியுந்  தம்முட்  கொண்ட  காதல்  எத்தகைய  இடையூற்றானும்  பிறழ்ச்சி  எய்துவதன்று . காதல்  வயத்தான  ஒன்று  கூடுவார்  தம்    மனத்திற்குச்  சான்றாக  வேறு  பொருள்களை  எதிர்பார்ப்பதில்லை.  அவரவர்  உள்ளங்களே  சான்றானவாம்.  களவொழுக்கத்து  நெடுங் காலம்  பயின்று  கற்பு  முறையில்  மணஞ்  செய்து  கொள்ளாதிருந்த  தலைவனியல்பைக்  குறித்துத்  தலைமகள் தோழியை  நோக்கி , “தோழி ! தலைவன்  என்னைக்  கனவில்  மணந்த  காலத்தில்  சான்றாவார்  வேறொருவருமிலர் ; தலைவர்  ஒருவரே  இருந்தனர் ; அவரே  தாம்  கூறிய  சூளுறவினின்றுந்   தப்பியொழுகுவாராயின்  யாஞ்  செய்யத்தக்கது  யாதுளது ? அவ்விடத்து  அவ்வமயம்  ஒரு நாரை  மாத்திரம்  இருந்தது  ;அதுவும்  ஓடும்  நீரில்  தானுண்ணும்  பொருட்டு  ஆரல்  மீனின்  வரவை  எதிர்பார்த்து நின்றதாகலின் , எம்  நிகழ்ச்சியைக்  கண்ணுற்றிராது ; காணாத  தொன்றைப்  பற்றிச்  சான்றாதற்குத்  தமிழ்  நிலத்துப்  புள்ளும்  ஒருப்படாது ;  வாய்மை  நெறி  யொழுகும்  இயல்பின  தாகலின் ,  என்று  தலைவி  கூறினாளாம்.  இவ்வரிய  கருத்தைப்  புலப்படுத்தும்  பாடல் :-

யாரு   மில்லைத்  தானே  கள்வன்

தானது  பொய்ப்பின்  யானெவன்  செய்கோ

நினைத்தா  ளன்ன  சிறுபசுங்  கால

ஒழுகுநீ  ராரல்  பார்க்கும்

குருகு  முண்டுதான்  மணந்த  ஞான்றே “

என்பதாம் .  இங்கே  தலைமகள் , சான்றோர்க்குத்  தகுதி  யில்லாத  அஃறிணைப்  பொருளாகிய  நாரையைக்  குறித்துக்  கூறியது  எங்ஙனம்  பொருந்தும் ? எனிற்  கூறுவேன் . தமிழ்  நிலத்துப்  பெண்மக்களுடைய  கற்பின்  பெருமை  குறித்து  அவர்  மண நிகழ்ச்சிக்கு  அஃறிணைப்  பொருள்களுள்ளும்  நிலையியற்  பொருள்களாகிய  மர  முதலிய  சான்றாகியன  நிகழ்ச்சி  , சிலப்பதிகாரத்திற்  கண்ணகி  யென்னுங்  கற்பரசி  வாயிலாக  வெளியிடப்பட்ட  ,

“வன்னி  மரமும்  மடைப்பளியுஞ்  சான்றாக

முன்னிறுத்திக்  காட்டிய  மொய்குழலாள் “

என்னுஞ்  செய்தியால்  அறிகின்றோம் .  மரமாகிய  நிலையியற்  பொருளும்  மடைப்பள்ளியாகிய   செயற்கை  பொருளுந்  தமிழ்  மகளிர்  கற்பிற்குச்  சான்றாகுமாயின் , இயங்கிற்  பொருளாகிய  நாரையைக்  குறித்தது  பொருந்தாதென்று  எங்ஙனம்  எண்ணலாம் ?  

6  .  காதலின்  இயல்பு

         உண்மைக் காதல்  வயப்பட்ட  மகளிர் , தம்  காதலர்  எக்காரணத்தாலாவது  தம்மொடு   அளவளாவுதலில்  தவிர்ந்தொழுகு வாராயினும்  அக்கணவன்மாரிடத்துள்ள   உண்மை  அன்பிற்  சிறிதுங்  குறைபாடிலராய்  ஒழுகும்  இயல்பினர்  என்பதை  இந் நூலிற்  பரக்கக்  காணலாம் . இச்செய்திக்கு  எடுத்துக்காட்டாக  ,  “குறுந்தாட்  கூதளி”  என்னுந்  தலைப்புடைய  பாடலும் , “தச்சன்  செய்த  சிறுமா  வையம்”  என்னுந்  தலைப்புடைய  பாடலும்  குறிப்பிடத்தக்கன . முறையே  அப்பாடற்  கருத்துக்கள்  வருமாறு  ; –  “ஓருயர்ந்த  மலையில்  பெரிய  தேனடையைக்  கண்ட  ஒரு  முடவன்  அதனைப்  பெருவதர்  கியலாமையால்  தன்  உள்ளங்கையைச்  சிறிய  கொள்கலமாகக்  குவித்து  அம்மலையின்  கீழிருந்தபடியே  அத்தேனிறாலைப்  பல  முறை  சுட்டித்  தன்  கையையே  நாவினாற்றுழவி  இன்புறுதல்  போலக் , காதலர்  நல்கார்  நயவாராயினும்  யான்  அவரைப்  பலமுறை  காண்டலும்  என்  உள்ளத்திற்  கினிதாகும்”  என்பதும் ,  ‘சிறு  குழந்தைகள்    நாம்  உருட்டி  விளையாடுஞ்  சிறு  வண்டியை  ஏறிச்  செலுத்தி  இன்புறாராயினும்  அவ்வண்டியை  இழுத்து  நடத்தி  அவ்வின்பத்தை  அடைதல்  போல , என்  கணவரை  மெய்யுற்று  இன்பம்  அடையப்  பெற்றேனாயினும்  அவரது  நட்பை  மேன்மேலும்  பெருக  வளர்த்து  இன்பம்  அடைந்தேன்’  என்பதும்  ஆம் . இங்கே  குறிக்கப்பட்ட  காதர்  பண்புகள்  எத்துணைச்  சிறப்புடையனவாகக்  காணப்படுகின்றன  என்பது  உணர்ந்தின்  புறத்தக்கது .   

அறிஞர்களே !

        இதுகாறுஞ்  சங்கத்துச்  சான்றோர்களின்  இலக்கியப்  பெருமையும் , அவற்றுள்  குறுந்தொகை  என்னும்  அழகிய  நூலின்  மாண்பும்  ஒருவாறு  புலப்படுத்தப்பட்டன .   இலக்கியச் சுவையே  தம்  வாழ்க்கை  நலமெனக்  கொண்டு  துய்த்தின்புறும்  உணர்வுடைப்  பெருமக்கட்கு  , இன்ப  வூற்றாகவுள்ள  இன்னோரன்ன  நூலாராய்ச் சிகள்   தேவ ரமிழ்தினுஞ்  சிறந்த  சுவை  பயப்பனவாம் .  இதுவரை  பொறுமையோடிருந்து  செவி  சாய்த்த  நும்  எல்லோருக்கும்  என்  வணக்கத்தை  உரிமைப்படுத்துகின்றேன் .  இம்மட்டில்  யாந்தரும்  சிறுசுவை  விருந்தை  நிறுத்தி  ,என்னை   அறிஞர்கள்  இந் நூன்முகமாகத்  திரட்டி  வைத்திருக்கும்  பெருவிருந்தை  நீவிர்  துய்க்குமாறு  நும்மையும் , வரையாது  வழங்குமாறு  என்  நண்பர்களாகிய  சொற்பொழிவாளர்களையும்  வேண்டுகின்றேன் .

                              தமிழ்  மொழி  நீடு   வாழ்க !

                    8.  மணிமேகலை

(25-01-1941 இல்   திருச்சிராப்பள்ளி  வானொலியிற்  பேசியது)

          மணிமேகலை  யென்பாள், கோவலன்  என்னும்  வணிக  குமரனுக்குக்  காதற்  கணிகையாகிய  மாதவி  பெற்ற  மகளாவாள் . அவள்  வரலாறு   கூறும்  காப்பியத்திற்கும்  இதுவே  பெயராகும் . இற்றைக்கு  ஆயிரத்து  எண்ணூறு  யாண்டுகளுக்கு  முன் , சோழ   நாட்டின்  தலைநகராக  விளங்கிய  காவிரிப் பூம்பட்டினத்தின்  பெருங்குடி   மரபில்  தோன்றிய  கோவலன்  என்பான் , அரசவையில்  ஆடல்  பாடல்களில்  திறமை  பெற்று  அரங்கேறிய  நாடகக்  கணிகையாகிய  மாதவியென்பாளைக்  காதலித்து , அவளுடனுறைந் தொழுகினனாக , அவனுக்கு  அவள்  வயிற்றில்  மணிமேகலை  என்னும்  பெண்மணி  பிறந்தனள் . நிகரற்ற  அழகு  வாய்ந்த  இப்பெண்கள்  திலகம்  மங்கைப்  பருவம்  எய்திருக்கு  நாளில் , தன்  அருமைத்  தந்தையாகிய  கோவலனும் , பெற்ற  தாயினும்  உற்றதாயாக  மேற்கொண்ட  கண்ணகியும்  படாத  துன்பங்களுக்கு  ஆளாகி  இவ்வுலக  வாழ்க்கையை நீத்த  செய்தி  கேட்டுத்  திடுக்கிட்டு   இவ்வுலக  இன்பத்திற்  பற்றற்று  ஒழுகத்  தலைப்பட்டாள் .

“ஆடவர்  கண்டா  லகறலு  முண்டோ

பேடிய  ரன்றோ  பெற்றியி  னின்றிடின்”

என்று  சுதமதியாற்  பாராட்டப்பட்ட  இவள்  அழகின்  சிறப்பை  நினைந்து , இவளைத்  தகாத  ஒழுக்கத்திற்கு  ஆளாக்க  முயன்ற  இவள்  அன்னையின்  தாயாகிய  சித்திராபதி  என்பாள் , ‘பாண்மகள்  பட்டுழிப்  படூஉம்  பான்மையில் , யாழினம்  போலுமியல்பினம்’  என்றும் , ‘நறுந்தா  துண்டு  நயனில்  காலை,  வறும்பூத்  துறக்கும்  வண்டு  போல்குவம்’  என்றும்  தங்  குல  ஒழுக்கத்திற்கு  ஏற்ப  நினைந்து  ஒரு  தோழி  மூலமாக  இச்செய்தியை  மாதவிக்குத்  தெரிவித்தனள் .  அது  கேட்ட  மாதவி ,

மாபெரும்  பத்தினி  மகள்மணி  மேகலை

அருந்தவப்  படுத்த  லல்ல  தியாவதுந்

திருந்தாச்  செய்கைத்  தீந்தொழிற்  படாஅள்”

என்று  மறுத்து  உரைத்தனள் . இந்  நிலையில் , இருமுது  குரவரையும்  இழந்தமையால்  மணிமேகலைக்கு நேர்ந்த  துன்பத்தை  ஆற்றுதற்  பொருட்டுச்  சுதமதி  யென்னும்  தோழி  , ‘உபவனம்’  என்னும்  ஒரு  பூஞ் சோலைக்கு  அவளை  அழைத்துச்  சென்றாள் . இவள்  கட்டழகின்  மாண்பைக்  கேட்ட  அந் நகரத்து  அரச குமாரனாகிய  உதயகுமரன்  என்பான் , காம  பரவசனாய்  அவ்வனத்திற்  சென்று  பளிக்கறையுட்  புகுந்திருக்கும்  மணிமேகலையைப்  பற்றிப் பலவாறு  பாராட்டிச்  சுதமதியால்  தெருட்டப்பட்டு  மீண்டும்  அவளை  யடையலாம்  என்னும்  துணிவுடன்  திரும்பினான் . இந்  நிலையில்  உதயகுமரன்  காட்சியில்  மணிமேகலைக்குச்  சிறிதளவு  அவன்பால்  உள்ளஞ்  சென்றது . இதனை  அவள்  ஒளியாமல்  தோழியாகிய  சுதமதியை  நோக்கி ,

கற்புத்  தானிலள்  நற்றவ  வுணர்விலள்

வருணக்  காப்பிலள்  பொருள்விலை  யாட்டியென்

றிகழ்ந்தன  னாகி  நயந்தோ என்னாது 

புதுவோன்  பின்றைப்  போனதென்  னெஞ்சம் 

இதுவோ  அன்னாய்  காமத்  தியற்கை”

என்று  கூறிய  செய்தியாலும் , பின்னர்  உதயகுமரன்  காஞ்சனனால்  வெட்டுண்டு  இறந்த   பொழுது  மனங்கலங்கி,

            “உவவன   மருங்கில்   நின்பா  லுள்ளந்

              தவிர்விலே  னாதலின் …………………………

              …………………..நின்  இடர்வினை   யொழிக்கக்

              காயசண்  டிகைவடி  வானேன்  காதல

என்று  இரங்கிப்  புலம்பினமையாலும்  அறியலாம். இங்ஙனம்   உதய குமரனால்  இழித்து  உரைக்கப்படும்  அவள்  உள்ளம்  சிறிது  காதலித்ததற்குக்  காரணம் , பண்டைப்பிறப்புக்களில்  இவ்விருவரும்  கணவனும்  மனைவியுமாக  வாழ்ந்து  வந்த  தொடர் பென்று  ஆசிரியர்  கூறுகின்றார் . காமத்தீச்  சிறிதாகப்  பற்றினும்  பெரிதாகி  வெதுப்பும்  ஆதலின் , அத் தொடர்பினின்றும்  ஒழித்தற்கு  மணிமேகலையை  அவள் குலதெய்வமாகிய  மணிமேகலா தெய்வம்  யாரும்  அறியாதபடி  எடுத்து , இலங்கையிடூ உள்ள  மணிபல்லவம்  என்னுந்  தீவிற்குக்  கொண்டு  வந்து  புத்தபீடிகையைத்  தரிசிக்கச்  செய்தது . இச் செய்தியை  ஆசிரியர்  மணிமேகலா  தெய்வத்தின்  கூற்றாக ,

ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம்

 நீங்காத்  தன்மை  நினக்குமுண்  டாகலிற்

கந்த  சாலியின்  கழிபெரு  வித்தோர்

வெந்துரு  வெண்களர்  வீழ்வது  போன்மென

அறத்தின்  வித்தாங்  காகிய  உன்னையோர்

திறப்படற்  கேதுவாச்  சேயிழை  செய்தேன்

என்று  கூறியதனால்  அறியலாம் . இங்கே  மணிமேகலையை  நோக்கிச்  சிறந்த  மணமுள்ள   கந்தசாலி  என்னும்  நெல்  வித்தை  உவர் நிலத்தில் வீழ்ந்து வீணாக்குதல்  போல  அறத்தின்  வித்தாகிய  நின்னை  இழி காமத்துக்கு  இலக்காக்குதல் தக்கதன்று  என்றெண்ணி, அறச்செல்வி  யாக்குதற்கு  ஏற்றது செய்தேன் என்னுங்கருத்துத்  தோன்றக்  கூறியது பாராட்டத்தக்கது .

     இனி , இந்நங்கையர்  திலகம்  மணிபல்லவம்  என்னுந்  தீவில்  எதிர்ப்பட்ட  தீவதிலகை யென்பாள்   உதவியால்  கோமுகி  யென்னும்  பொய்கையினின்றும்  அமுத  சுரபி  யென்னும்  அட்சய  பாத்திரத்தைப்  பெற்றாள். இப்பேறே  மணிமேகலையின்  அறச் செயற்குச்  சிறந்த முதற்  கருவியாயிற்று .தீவதிலகை,

“குடிப்பிறப்  பழிக்கும்  விழுப்பங்  கொல்லும்

 பிடித்த  கல்விப்  பெரும்புணை  விடூஉம்

 நாணணி  களையும்  மாணெழில்  சிதைக்கும்

பூம்முலை  மாதரொடு  புறங்கடை  நிறுத்தும்

பசிப்பிணி  யென்னும்  பாவிஅது  தீர்ந்தோர்

இசைச்சொல்  அளவைக்  கென்னா  நிமிராது”

எனவும் ,

மண்டிணி  ஞாலத்து  வாழ்வோர்க்  கெல்லாம்

உண்டி  கொடுத்தோர்  உயிர்கொடுத்  தோரே “

எனவுங்கூறிய  அறவுரைகளைக்  கடைப்பிடித்து , அவ்வமுத  சுரபி யினின்றும்  அள்ள  அள்ளக்  குறையாத  உண்டியை  எளிய  மக்களுக்கு  வழங்குதலாகிய  பேரறத்தை  மேற்கொண்டொழுகு வாளாயினள் . இங்ஙனம்  புரிந்த  அறச்  செயலில் ,

ஆற்றுநர்க்  களிப்போர்  அறவிலை  பகர்வோர்

 ஆற்றா  மக்கள்  அரும்பசி  களைவோர்

மேற்றே  யுலகின்  மெய்ந்நெறி  வாழ்க்கை”

என்னும்  உண்மை இவ்வம்மையால்  மேற்கொள்ளப்பட்டது . செல்வமுடையார்க்குப்  பல்வகைச்  சுவை  நிரம்பிய  உணவுகளைப்  படைத்தல்  அறமாகாதெனவும் , அஃது  ஆரவார  நீர்மையேயாமெனவும்  உணர்ந்தமையால் , அம்முறை  கைவிடப்பட்டுக்  குருடர் , முடவர் , செவிடர் , ஆதரவில்லோர் , நோய்த்  துன்பமுடையோர்  ஆகிய  எளிய  மக்களுக்கே  இவளறம்  பயன்படுவதாயிற்று. இவ் வன்னதானமாகிய  அறம்  புரிதற்கு ஏற்ற  இடமாகக்  காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள   ‘உலக  அறவி’  என்னும்  ஊரம்பலத்தைத்  தெரிந்தடைந்தனள் .

             அங்கே  உதயகுமரன்  தன்மேற்  காதலுடையனாய்  வருதலையறிந்து  அவனால்  இடையூறு  நேரவுங்கூடுமென்று  எண்ணிக்  காயசண்டிகை  என்னும்  வித்தியாதரப்  பெண்ணின்  உருவத்தை  மேற்கொண்டு , தன்  அறச்செயலைப்  புரிவாளாயினள் .  அவ்வமயம் , காயசண்டிகையின்  கணவனாகிய  காஞ்சனன்  என்பான் , தன்  மனைவியைக்  காதலித்ததாகத்  தவறுபட  நினைந்து  உதயகுமரனை  வாளாலெறிந்து  கொன்றான் . இச்செயலை  அறிந்த  உதயகுமரன்  தந்தையாகிய  அரசன் , தன்  மகன்  கொலைப்பட்டது  குறித்துச்  சினமுடையவனாய்  மணிமேகலையைச்  சிறைப்படுத் தினான் .

              அவ்வரசன்  மனைவியாகிய  இராசமாதேவி  என்பாள் , மணிமேகலைக்கு  நலஞ்செய்வதாக  வெளிக்காட்டித்  துன்புறுத்தும்  நினைவுடையவளாய்  அவளைச்  சிறையினின்றும்  விடுத்து , மயக்கும்  மருந்தை  உணவிற்  கலந்து  ஊட்டியும் , புழுக்கறையில்  அடைத்தும் , காமுகன்  ஒருவனை  விடுத்துப்  பழியுண்டாக்க  முயன்றும்  பலவாறு  கொடுமை  செய்தனள் .  மணிமேகலை  இக்கொடுந்துன்பங்களை  யெல்லாம்  பொறுத்துக்கொண்டு , தான்  எய்திய  சில  சித்திகளால்  அவ்விடையூறுகளைக்  கடந்து   சிறிதும்  வாட்டமின்றி  இருந்தனள் .  இந் நிலை  அறிந்த  இராசமாதேவி  அச்சமுற்று , ‘மகனை  இழந்த  துன்பம் பொறுக்க லாற்றாது  இத் தீங்குகளைச்  செய்தேன் பொறுத்தருள வேண்டும் ‘  என்று  மணிமேகலையை  வேண்ட , மணிமேகலை  அவள்  துன்பத்தை  யொழிக்குமுகமாக  உண்மைப்  பொருளை  மனங்கொளத்  தெருட்டி  அருளறத்தைக்   கடைப்பிடிக்கச்  செய்தனள் .

           மகனது  இறப்பால்  துயருறும்  இராசமாதேவிக்கு  மணிமேகலை  கூறிய  பொருளுரையால்  அவளறிவு  எவ்வளவு  தெளிந்த  நிலையிலுள்ள  தென்பது  புலனாம் .

“உடற்கழு  தனையோ  உயிர்க்கழு  தனையோ

உடற்கழு  தனையேல்  உன்மகன்  றன்னை

எடுத்துப்  புறங்காட்  டிட்டனர்  யாரே?

உயிர்க்கழு  தனையேல்  உயிர்புகும்  புக்கில்

செயப்பாட்டு  வினையால்  தெரிந்துணர்  வரியது

அவ்வுயிர்க்  கன்பினை  யாயின்  ஆய்தொடி

எவ்வுயிர்க்  காயினும்  இரங்கல்  வேண்டும் “

என்பது  அப்பொருளுரையாம் . இதன்கட்  குறிக்கப்பட்ட  பொருள் , ‘உடல்  ஒழிந்ததற்கு  அழுதேனென்றால் , அவ்வுடலைச்  சுடலையில்  இடங்கொடுத்தது  யார் ? நீயன்றோ?  அன்றி, உயிர்  நீங்கியதற்கு  அழுதேனென்றால்  ,  அவ்வுயிர்  நித்தியமாகலின்   அது  செய்த  வினைவழி  ஓர்  உடல்  எடுத்திருக்கும் ;  அவ்வுடல்  இன்னதென  நம்மால்  தெரிந்துகொள்ளுதல்  அரிது .  அவ்வுயிர்க்கு  அன்பு  செய்ய  விரும்பின்  உலகத்துள்ள  எவ்வுயிர்களுக்கும்  இரங்க்கல்  வேண்டும் ;  அங்ஙனம்  இரங்குவையாயின், பலவாகிய  அவ்வுயிர்த்  தொகுதிகளுள் நின்மகன்  உயிரும்  ஒன்றாமாதலின்  அதற்கு  அன்பு  செய்தனை  யாவை ‘  என்பதாம் .இங்ஙனம்  அவள்  துயரம்  ஒழிதற்குரிய  நெறியைக்  காட்டி , அதன்முகமாக   அருளறத்தை  மேற்கொள்ளச்  செய்த  மணிமேகலையின்  தெளிந்த  நுண்ணறிவுத்  திறனும் , அருளறத்திலுள்ள  விருப்பமும்  பாராட்டத்தக்கன .  இவள் உபதேசச்  சிறப்பைக்  குறித்து , ‘மகனை  இழந்தமையால் நேர்ந்த  துயரமாகிய  நெருப்பு , மனம்  விறகாகப்  பற்றி உள்ளத்தைச்  சுடுதலின் , ஞானமாகிய  நல்ல  நீரைத்  தெளித்து  அவித்தனள் ‘  என்னும்  பொருள்  தோன்ற ,

ஞான  நன்னீர்  நன்கனந்  தெளித்துத்

தேனா  ரோதி  செவிமுதல்  வார்த்து

மகன்றுயர்  நெருப்பா   மனவிற  காக

அகஞ்சுடு  வெந்தீ  ஆயிலை  அவிப்ப “

என்று  ஆசிரியர்  பாராட்டியுள்ளார் .

            இஃதன்றி , மணிமேகலை  தன்  ஆற்றலால்  அந்  நகரத்துள்ள  சிறைச்சாலையை  அடைந்து  தண்டிக்கப்பட்டுப்  பசியால்  வாடிய  மக்களுக்கு  வேண்டுமளவு  உணவளித்தும், அவர்களுக்கு  அறிவுரை  பகர்ந்தும்  அச்சிறைச்சாலையை  அறச்சாலையாக்கிப்  பலவகை  புண்ணியச்  செயல்களும்  நடைபெறும்படி அரசனைக்கொண்டு  செய்வித்தனள் . இக்காலத்தில்  சிறைச்சாலையைச்  சீர்திருத்துவ தற்காக  முற்படும்  விருப்பமுடைய  பெரியோர்களுக்கு  இம்மணிமேகலையின்  அருஞ்செயல்  வழிகாட்டியாக  உள்ளதாகும் . தனக்குப்  பலவகைக்  கொடுஞ்  செயல்களால்  தீங்கிழைத்த  இராசமாதேவியை  வெறாது , அவள்  அறியாமையை  ஒழித்து , அவளை  நல்வழிப்படுத்திய  பேருதவியை  நினைக்குங்கால்  திருவள்ளுவ  தேவர்  அரிதினாராய்ந்து  கூறிய ,

இன்னாசெய்  தாரை  யொறுத்தல்  அவர்நாண

  நன்னயஞ்  செய்து  விடல்”

“இன்னா  செய்தார்க்கும்  இனியவே  செய்யாக்கால்

என்ன  பயத்ததோ  சால்பு

என்னுந்  திருக்குறள்கள்  நம்  நினைவின்முன்  நிற்பனவாம் . ஒருவன்  தனக்குத்   துன்பஞ்  செய்தார்க்கு  அவர்  நாணும்படி  நன்மை  செய்தலே  அவரைத்  தண்டித்ததாகும் .  என்னும்  பொருளுரை   மணிமேகலை  வாழ்க்கையில்  தலை  நின்று  விளங்குவதொன்று .  இங்ஙனம்  மணிமேகலை  தன்  வாழ்நாளிற்  பெரும்பகுதியைப்  பிறர்க்கு நலம்  செய்தலிலேயே  கழித்தனள் .  கணிகையர்  குலத்தில்  தோன்றிக்  கட்டழகும்  யெளவனமும்  வாய்க்கப்  பெற்றும் , அரச குமரனால்  பலமுறை  விரும்பப்பட்டும் , இழிதக  வாகிய  காம  நிலையில்  உள்ளத்தைச்  செல்லவிடாது , தனக்குத்  தீங்கு  செய்தார்க் கும்  நன்மையே  செய்தும் , உரிய  சமயங்களில்  அறவுரைகளைக் கொண்டு   அறிவுக்கலக்கமுற்றாரைத்  தேற்றியிம்  அருளறத்தை  வளர்த்த  பெருமை  மணிமேகலைக்கே  சிறந்ததாகும் . திருவள்ளுவர்  தவத்தின்  இலக்கணங்கூறுங்கால்,

உற்றநோய்  நோன்ற  லுயிர்க்குறுகண்  செய்யாமை

 யற்றே  தவத்திற்  குரு “

என்றனர் . தனக்கு  நேர்ந்த  பலவகைத்  துன்பங்களையும்  பொறுத்துப்  பிறவுயிர்களுக்கு  ஒரு  சிறிதும்  துன்பஞ்  செய்யாமையோடும்   நன்மையும்  புரிந்த  தவப்பெரும்  செல்வியாக   விளங்கினமையின், மணிமேகலையே  இலக்கியமாவாள் .

       இன்னும்  இவ்வம்மை , சாவக  நாடு , இலங்கை  முதலிய  அயல்  நாட்டு  யாத்திரையையும்  , வஞ்சி , காஞ்சி  முதலிய  உண்ணாட்டுச்  செலவையும்  மேற்கொண்டு  ஆங்காங்கு  பற்பல  அறங்களைப்  புரிந்தும், ஞானம்   மிக்க  தவச்  செல்வர்களிடத்தில்   தருமோபதே சங்களைப்  பெற்றும், பற்பல  சமய  உண்மைகளைக்  கேட்டும் , சிறப்பான  பெளத்த  மத  உண்மைகளை  உணர்ந்தும்  ஒழுகுவாளாயி னாள் .  அறிவு  வளர்ச்சி  யடைதற்கு  அயல்  நாட்டு  யாத்திரை  பெரிதும்  உதவியாகு மென்னும்  உண்மையையும்   இவ்வம்மை  சரிதம்  புலப்படுத்துவதாகும் .

         சமயவாதிகள்  பற்பலரை  அடுத்து  உண்மை  தெளிதற்கு  வாதித்ததும்  ,  மாறுபட்ட  கொள்கையுடையாரைத்  திருத்தியதும்  வியப்பை  அளிப்பனவாம் . ஒரு சமயம் , காட்சியளவை  ஒன்றினையே  கடைப்பிடித்து   அநுமானப்  பிரமாணத்தை  ஏற்றுக் கொள்ளாத  பூதவாதியை யடுத்து  இவ்வம்மை  தேற்றியமுறை  அரிதினும்   அரிது . அப்பூதவாதியை  நோக்கி  அம்மையார் , நின்  தந்தை  தாயார் யாவரன , அன்னாரை  அவன்  காட்டினனாக , “காட்சியளவை  ஒன்றனையே  கடைப்பிடிக்கும்  நினக்கு  இவர்  எப்படித்  தந்தை  தாயார்  ஆவர்?  காட்சியில்  வைத்து  எவ்வாறு  காண  முடியும் ?”  என  வினவ , அவன்  கலக்கமுற்றுத் , தன்  கொள்கையைக்  கடைப்பிடிக்கும்  நிமித்தம்  தந்தை  தாயாரை  ஏற்றுக்கொள்ளாது  ஒழிப்பதா?   அல்லது  அவரை  ஏற்றுக்கொள்ளு  நிமித்தம்  தன்  கொள்கையை  விட்டு  ஒழிப்பதா ?  என்னும்  ஊசலாட்டிற்கு   ஆளாயினான் . இங்ஙனம்  தந்தை  தாயாரை  விட்டொழிக்க  மனம்  வாராத  அந்நிலையில்  மணிமேகலை ,

“தந்தை  தாயரை  அனுமானத்  தாலலது

 இந்த  ஞாலத்  தெவ்வகை   யறிவாய் “

என்று  தேற்றுவாளாயினாள் .               

         இவள் , இளமை  நிலையாமை ,  யாக்கை  நிலையாமை  முதலியவற்றை  பிறர்க்கு  எடுத்துக் காட்டி  நல்வழிப்  படுத்துந்  திறமையில்   மிகச் சிறந்தவ ளென்பதற்கு   இவ்வரலாற்றுப்  பகுதியிற்   கண்ட  வேறு சில  சான்றுகளும்  உள . அவற்றுள்  முன்னர்  காம  வேட்கையிற்  சிக்குண்ட  உதயகுமரனுக்கு  இளமை  நிலையாமையை  அறிவுறுத்த  எண்ணி , அப்பொழுது அங்கே இயல்பாக  வந்த  முதிர்  பருவத்தினளாய  ஒருத்தியைக்  காட்டிப்  பண்டு  வனப்புடையனவாக  இருந்த  அவள்  உடல்  உறுப்புக்கள்   இப்போது  வன்மை  குறைந்து  அழகிழத்தலைக்  குறித்து ,

தண்ணறல்  வண்ணந்  திரிந்துவே  றாகி

 வெண்மண  லாகிய  கூந்தல்  காணாய் “ 

என்பது  முதலாக  ஏனை  யுறுப்புக்களில்   வேறுபாட்டையும்  விளக்கிக்  காட்டி  முடிவில் ,

“பூவினுஞ்  சாந்தினும்  புலால்மறைத்  தியாத்துத்  

தூசினும் மணியினும்  தொல்லோர் வகுத்த

வஞ்சந்  தெரியாய்  மன்னவன்  மகனே

 என்று  தெளிவுறுத்தியதொன்று .

             சாவக  நாட்டரசனாகிய  புண்ணியராசனைக்  கண்டு , அவன்  முற்பிறப்பில்  ஆபுத்திரனாக  இருந்து  அருளறம்  பேணிய  செயலை  எடுத்துக் காட்டி , அவனுக்கு  நேர்ந்த  மயக்கத்தைத்  தெளிவித்துத்   தருமோபதேசஞ்  செய்து  நன்னெறிப்படுத்தியது   மற்றொன்று .

             இங்ஙனம் , பல்லாற்றானும்  பலர்க்கும்  உதவி  புரிந்து  முடிவில்  வஞ்சி  நகரத்திற்  சென்று , சமய  வாதிகள்  பற்பலரொடு  வாதப் போர்  நடத்தித் , தள்ளுவன  தள்ளிக்  கொள்ளுவன  கொண்டு , காஞ்சியம் பதிக்குச்  சென்று , அறவண  அடிகளை  யடுத்துத்  தத்துவ ஞானங்  கைவரப்பெற்றுப் , பவத்திறம்  அறுகெனத்  தவச்  செயலில்  தலைப்பட்ட   மணிமேகலையின்  சிறந்த  வாழ்க்கை  வரலாறு , அறிவுடையுலகம்  நன்னெறிப்படுதற்குச்  சிறந்த  வழிகாட்டியாக  உள்ளதென்பது  தெளிவாம் .

                                            நி றை ந் த து

நாட்டுக் கோட்டை   நகரத்தார்களின் சீ ர் தி ரு த் த ம்

                       நாட்டுக் கோட்டை   நகரத்தார்களின் சீ ர் தி ரு த் த ம்

                                               மு . கதிரேசச்  செட்டியார்.

                                                      மகிபாலன்பட்டி

                                                                 1911

                                                        அவையடக்கம்

                                                               காப்பு

                                                            வெண்பா

மன்னுந்  திருவினராய்  வாழ்வணிகர்  சீர்திருத்தம்

பன்னுமுறை  நெஞ்சிற்  பதியவே  —–  யுன்னும்

பிரணவத்தி  னுண்மை  பிறங்குங்  கணேசர்

சரணபற்பங்  கொள்க  தலை .

      மாட்சிமை  தங்கிய  அக்கிராசனாதிபதியவர்களுக்கும் , இவ்வவைக் கட்குழீஇய  அறிவுடையோர்களுக்கும் , பணிவுடன்  செய்துகொள்ளும்  அறிவிப்பு .

ஐயன்மீர் !

       சன்மார்க்கசபையென்னு மிக்கழகம்  தோன்றி   யிரண்டுவருடங் களாயின .இவ்வீராண்டிற்  பன்முறை  கூடிய  இக்கழகத்திற்  பற்பல  விடயங்களைப்பற்றி  அறிவிற்சிறந்த  பல  பண்டிதர்கள்  செய்த  உபந்நியாசங்களும் ,  சிற்றறிவுடைய  யான்  புரிந்த  உபந்நியாசங் களும்   இன்னின்னவையெனச்  சென்ற  ஆண்டின்  அறிக்கையானும் , இவ்வாண்டின்  அறிக்கையானும்  நன்கு  தெரிந்திருப்பீர்கள். அவ்வுபந்நி யாசங்களுள் , எம்  வணிகமக்களின்  சீர்திருத்தவிடயமாகப்  பொதுமை யினன்றிச்  சிறப்பாக  ஒன்றேனுமின்று .அங்ஙன மில்லாமைக்குக்  காரணம் , இவ்வவையினிடத்து  அவர்களது  அன்புரிமை   முதிர்தலை யிதுகாறும்  எதிர்நோக்கி   யிருந்தமையேயாகும் . ஒரு  தொகுதியி னரைப்பற்றிய  சீர்திருத்தத்தைப்  பேசப்புகும்பொழுது, அதனைப்  பயனுறச்செய்யும்  அக்குழுவினர்க்கு அவ் விடயத்தைக் கேட்டலில்  விருப்பம்  இருத்தல்  வேண்டும் .  அவ் வவாவும்,  அன்னார்  இக்கழகத்தில்  நன்கு மதிப்பு வைத்த பின்னரன்றி  முன்னர்  நிகழ்தற்கு  ஏதுவின்று . அந் நன்குமதிப்பும்  இவ்வகை  சின்னாளேனுஞ்   செவ்வி தினடை பெற்றுத்   திகழ்ந்தபின்னரன்றி  வாராது .  இனி , இதுவரை  இக்கழகத்தைக்  கண்டாரும்  ,  இதன்கட்  பேசப்படும்  விடயங்களைக்  கேட்டாரும்  ,  இங்ஙனங்  கண்டுங்கேட்டு  மகிழ்ந்தார்பாற்  கேட்டாரும்  ஆகிய  பல  நண்பர்கள் , சேணிடத்துள்ள   தத்தம்  ஊர்களினின்று  பன்முறை  யிங்குப்  போந்து  ஒருங்குக்கூடி   யளித்த  காட்சியால்  அன்னாரெல்லார்க்கும்  இவ் வவையினிடத்து  நன்கு   மதிப்பு  ஒருதலையாகவுள்ளது  என்று  அறிந்த  இச்சபையார் , முன்னர்ப்  பேசப்படாத  இவ்விடயம்  இப்பொழுது  பேசிற் பயனுறும்  என்னுந் துணிவுடையாரா யென்னை   யுபந்நியாசிக்கப்  பணித்தார்கள் .

             தக்க  நூலுணர்ச்சியுஞ்  சீர்திருத்தங்  கூறுதற்குரிய  அநுபவ  ஆற்றலும்  இல்லாத  யான்  இதனை  மேற்கோடல்  தகாதெனினும்  , பெரியார்  பணியை  மறுத்தல்  பிழையுடைத்தாதலின்  ,  அக்குற்றத்தினின்று  நீங்கற்கே  இதனை  யேற்றுக்கொண்டேன் . இவ்வுபந்நியாசம்தான்  பொதுவகையாக  எல்லார்க்கும்  உரியதா யினும்  சிறப்பு  வகையாக  எம்  நாட்டுக்கோட்டை  நகரத்து  வணிகமக்கட்குரியதாதலின் , அன்னார்பாற்  சேறலையே  உரிமையாக  மேற்கொண்டுள்ளது  .இங்ஙனம் ,  ஒரு  சாராரைப்பற்றிய  இஃது  இக்கழகத்திற்  படித்தற்குரியதாகுமோ   எனின் :  எம்மனோர்  நலத்தை  மேம்படுத்தலையே  முக்கிய  நோக்கமாகக் கொண்டு  இச்சபை  (மேலைச்சிவபுரிச்  சன்மார்க்கசபையின்  இரண்டாம்  ஆண்டு  நிறை வேற்றவிழாவி நிமித்தம்  விரோதகிருது  வருடம்  சித்திரத்  திங்களில்  கூடிய  மகா சங்கத்திற்  படிக்கப்பெற்றது .)  யெழுந்தமையானும் , தனிக் கூட்டத்தில்  இவ்வளவு  பெருக்கமாக்  கூடுதல்  அருமையாதலானும்  , இத்தகைய  விடயங்கள்  எம்மவர்  பலர்  நெஞ்சி னிலைபெறினன்றிப்  பயனுடையதாதல்   செல்லா தாதலானும், உரியதாகுமென்னும்   துணிவுடையேன் .

****************

   கணபதி துணை .

நகரத்தார்களின்  சீர்திருத்தம்

*********

ஆன்புநிறைந்த  எம்  வணிகமக்களே !

           நம்மவர்  சீர்திருத்தவிடயமாகக்  கருத வேண்டியவை  பலவிருப்பினும்  ,  இப்பொழுது  இன்றியமையாது  முதலிற்கொள்ள வேண்டிய  சிலவற்றையே  கூறுவான்  றோடங்குகின்றேன் . எஞ்ஞான்றும் , ஒரே  படித்தாக  அழிவின்றி  விளங்கு  மறைப்பொருளை   யுள்ளத்தமைத்துப்   பல இருடிகளாற்  செய்யப்பட்ட  அறநூல்கள்  அவ்வக்காலத்துக்கு  ஏற்றவாறு  சில  மாறுதல்களோடு  வெளிவந்திருக் கின்றனவாகலின் ,  என்னாற்  கூறப்படுவனவற்றிற்   சில  விடயங்கள் , சில  நூன்  முறைகளுக்கு   மாறுபாடாகத்  தோன்றின்  அவை யிற்றைக் காலங்கருதிப்  போந்தனவாகக்கொள்ளும்வண்ணம்  வேண்டுகின் றேன் .

                                                      க  .  க ல் வி

          கல்வியே  மக்கட்குரிய  இன்றியமையாத  பொருளாதலின் ,  அதனைப்பற்றி  முதலிற்  சில  கூறுவேன் .  முன்னரீட்டிய  இருவினைக்கீடாக  இறைவன்  கருணை  மேலீட்டாற்   றரப்பெற்ற  மக்கள்  யாக்கையுடையாரெல்லாரும்  ,  தமக்கு  இயற்கையாக  அமைந்துள்ளதும்  , ஆணவமல மறைப்பால்  வெளிப்படாததும் , எல்லாம்  வல்ல  சிவபெருமான்  றிருவருளால்  ஒவ்வோரமயம்  வெளிப்பட்டு  விளங்கும்  இயல்பினதும் , எல்லா   வுயிர்கண்மாட்டும்  ஒரே  படித்தாக   அழிவின்றி யிருப்பதும் ஆகிய  இயற்கையறிவைக்  கருவியாக் கொண்டு செயற்கையறிவாகிய  நூலறிவைப்  பெறுதல் வேண்டுவதவசியமே  .  என்னை ?  அச்செயற்கையறிவே  நம் பிறப்பு  முதலியவற்றைப்பற்றிய  ஆராய்ச்சியில்  நம்மை  முற்படுத்தி  நாம்  எய்தவேண்டிய  உறுதிப்பயன்களை  யெய்தற்குத்  துணை நின்று  அழிவிலாப் பேரின்ப  நுகர்ச்சியிற்  றலைப்படுத்துமாகலினெங்க. நூலுணர்ச்சியின்றி  யியற்கை  நுண்ணறிவுடையாரும்  பலருளரே  அன்னார்க்குக்  கல்வி  யெற்றிற்கெனின் :  “கல்லாதானொட்பங்  கழிய நன்றாயினுங் ,  கொள்ளா ரறிவு டையார்”என்பது  பொய்யில்   புலவர்   திருமொழியாகலின் , அவரெத்துணை  மதிநுட்பமுடையராயினும்   கற்றிலராயின்  அவரறிவை  நல்லறிஞர் பொருட்படுத்தாரென்க.  கல்வியின்  காரியமாகிய  பகுப்புணர் வுள்  வழியே  ஐம்பொறியுணர்ச்சி யானும்  ,  உண்டி , உறக்கம் ,பெண்விழைச்சு  முதலியவற்றானும்  ஒப்புடைய விலங்கினத்தினின்று   மனிதர்  மேம்பாடுடையராவர் . அஃதில்வழி  அவ்விலங்கினத்தோடு   ஒருங்கெண்ணப்படுவர் .  இது  கருதியன்றே  “மாவு மாக்களுமை யறிவினவே , மக்கடாமே  யாறறிவுயிரே “   என்று  வரையறைப்படுத்துக்  கூறினார்  தொல் காப்பியனாரும் . இச் சூத்திரங்களு ளிரண்டாவது  சூத்திரத்தான்  மக்கள்  எனப்படுவார்  மனவுணர்வுடையரென்பதேயன்றி  அவ்வுணர்வு  விலங்கினிடத்துக்  காணப்படின்  அதுவும்  மக்கட் டன்மை யுடையதாய் மக்கட்  பிறப்பின்பாற்  படுமென்பது  போதர “பிறவுமுளவே  யக்கிளைப்பிறப்பே”  என்றுங் கூறினார் .  ஈண்டுப்  “பிறப்பென்றதனாற்  குரங்கு  முதலாகிய  விலங்கினுள்   அறிவுடையனவெனப்படு  மனவுணர்வுடையன வுளவாயின்  அவையும்  ஈண்டு  ஆறறிவுயிரா  யடங்குமென்பது”   என்று  கூறிய  நச்சினார்க்கினியார்  நல்லுரையும்  ,  “விலங்கொடு  மக்களனையர்”  என்னுந்  திருக்குறளின்   விசேடவுரை யில்   “விலங்கின்  மக்கட்கேற்றமாகிய  வுணர்வு  மிகுதி  காணப்படுவது  கற்றார்கண்ணே  யாகலின்  கல்லாதாரும்  அவரும்  (கற்றாரும்)  ஒத்த  பிறப்பினரல்லரென்பதாம் “  என்று  வரைந்த  பரிமேலழகர்  அருமைக் கருத்தும் கருதற்பாலன . “தக்கவின்ன  தகாதன  வின்னவென்றொக்க  வுன்னலராயி  னுயர்ந்துள  மக்களும்  விலங்கே  மனுவின்  னெறிபுக்க  வேலவ்  விலங்கும்புத் தேளிரே”   என்னுங்  கம்ப நாடர்  கருத்தும்  ஈண்டுக்  கருதற்பாற்றாம் . இதனால்  அவயவச்  சிறப்பானன்றி  மனவுணர்வுடைமையானே  மக்கட்  பிறப்புப்  பயனுடையதாகு மென்பது  வெளியாம். இனி , அவ்வுணர்வுதானுங்  கல்வியானன்றி  வாராது .  என்னை ;  கல்வியே  செய்யத்தக்கது இன்னது  தகாதது  இன்னது  என்று  பகுத்துணர்தற்குக்  கருவியாகலின்  ,  இதனை , “இருவிழிகள்  வாண்முகத்தி லிருந்தாலும்  வானிரவி  யெழுந்தாலன்றிக்  கருதுநிலப்  பல்பொருளுங்  காண்டலரி  தாமுலகிற்   கண்போல்  யார்க்கும் ,  பெருகிய செல்வமு மறிவும்  பெற்றாலு நுலுணர்ச்சி  பெறாரே  யாகிற் , றிருவளர் புண்ணிய பாவ மிம்மை மறுமையும் வீடுந்  தெரியா வன்றே “   என்னுஞ்  செய்யுளானுமுணர்க .  இக்கல்வியின்   பெருமையைப்பற்றிக்  கூறுங்கால்  எல்லாப்  பொருள்களையுநுனித்து ணர்ந்து  கூறும்  இயற்கையுடைய  தெய்வப்புலவர்  திருவள்ளுவதேவர் , “தந்தை  மகற்காற்று நன்றி  யவையத்து, முந்தி யிருப்பச் செயல் “  எனவும் ,  “மகன்  றந்தைக் காற்று முதவி யிவன் றந்தை,யென் னோற்றான் கொல்லெனுஞ் சொல்” எனவுங்  கூறிய  அருமைத் திருக்குறள்களிரண்டே  போதியன .  என்னை?  தந்தை  மகனுக்குச்  செய்யவேண்டிய வுதவியும், மகன்  றந்தைக்குச்  செய்யவேண்டிய  வுதவியும்  கல்வியும்  அதன்  பயனுமாகக்  கருதப்பட்டமையானென்க .  

           இனி , தந்தையேயன்றி  நற்றாயும்  புதல்வினிடத்து  எப்பொருள் பற்றிப்  பெருமகிழ் வெய்துவாள்  எனின் : அன்னாள்  அப்புதல்வ னிறைந்த  கல்வியுடையனாதலை  நோக்கியே  யென்க . இதனை ,அந் நற்றாய்தான்  பன்னெடுநாட்  பதல்வற் பேறுகருதி  நண்ணினார்  வினையொழித்து  அன்னாரைப்   புண்ணியவுருவாப்  புரிதற்குரிய  தெண்ணீர்  யாறு  பலதிளைத்தும்  , ஆறணிசடையெம்  அண்ணலை  யனவரத மருச்சனையாற்றியும் , வறியாக் கீந்து  மாதவர்ப் பேணியும்   இன்னன பலவா முன்னருந்தவங்க்கிடந்து மிக அரிதிற்பெற்ற  அற்றை ஞான்று  “கவாஅனின்  மகற்கண்டு  தாய்மகிழ்ந்தாங்கு”  என்றபடி  யெய்திய  வரம்பிலா  மகிழ்ச்சியினும் , அப்புதல்வன்  இளம்பருவத்திற்   கல்வி  கேள்விகளான்  மேம்பாடுற்றுழி  அதுகண்ட  அறிஞர்  அச்செய்தியைக்  கூறக்கேட்டு  எய்திய வுவகை  மிக  விழுமிதா மெனவும் ,  அப் பேருவுவகை  தோன்றுதற்குக்  காரணம்  அப்புதல்வன் மாட்டு   அமைந்துகிடக்குங்   கல்வியறிவேயாமெனவும்  நன்கு தெளிந்த  நம்  செந்நாப்போதார்  தாம்  சிற்றுருப் பாக்களாற்  செய்த  தமிழ்மறையுள்  “ஈன்ற  பொழுதிற்  பெரிதுவக்குந்  தன் மகனைச் , சான்றோ னெனக் கேட்ட தாய் “  எனத்  திருவாய்மலர்ந்தருளிய  இச் செய்யுளாற்  றேற்றி விளக்கினர் . இங்ஙனம்  தந்தை  தாயார்  பெருமகிழ்ச்சிக்கு  மக்கள்  கல்வியே  யேதுவாமாயின் ,  அம்மக்களைப் பற்றி  யுலகத்தார்  மகிழ்தற்கும்  அக்கல்வி  காரணமாதல்  சொல்லாமலே  விளங்குமன்றோ ?  இன்னும்  இக்கற்றலின்  பெருமை யைப்பற்றிக்   கழறப்புகின்  விரியுமாதலின்  இதனுடனிறுத்தி  மேல்  எம்மொழியைக்  கற்றல்வேண்டுமென்பதைச்  சிறிது  கூறுவேன் .

                                                    (உ)    த மி ழ் .

            ஒவ்வொருவரும்  தத்தந் தோற்றத்திற்கு  நிலைக்களனாகிய   நாடு  எம் மொழியை யுடையதோ  அம்மொழியே  முன்னர்க்கற்றல்  வேண்டும் .  அம்மொழியே  யன்னார்க்குரிய   இயற்கை மொழியாகும் . வேற்று  நிலத்து  மொழியைக் கற்கப்புகுவார்  தொடக்கத்தில்  அவ்வந்நியப் மொழிப்பொருளை  யுளத்துக்கொள்ளுங்கால்  அப் பொருட்குரிய  வேறு  சொல்லை  யெம்மொழியாற் கூறித் தெளிகின்றனரோ அம்மொழியே  அன்னார்க்குரிய  மொழியாகும் .  ஊரிளங்குழவிக்கு  மழலைச்  சொற்பயிலும்  பருவம்  வந்துழி  அதன்  தாய்  தந்தையர்  எம்மொழியாற்  பயிற்றுகின்றனரோ   அம்மொழியே  அன்னார்க்குரிய  மொழியாகும் .  அவ்வரிய  மொழிப்பயிற்சி  சிறிது செய்தவழியன்றி   அந்நியமொழி  பயிறல்  கூடாதென்க .  இது  கருதியே  நமது  அரசினர்  தம்  மொழியாகிய  ஆங்கிலத்தைப்  பயிற்றுங்  கல்லூரி களிலெல்லாம்  அவ்வத் தேயத்திற்குரிய  மொழி  நூல்களையும்  பயிற்றி  வருவாராயினர். இனி , நம்  வணிக  மக்கட்குரிய  மொழி  தமிழே யாகுமாதலின் , அதனையே  நாம்  கற்றற்குரியவராகின்றோம் .  இறைவன்  றிருவருளாலிந்  நிலத்து  வழங்கும்  அருமைச்  செந்தமிழ் மொழியானது  வடமொழியொன்று  நீங்கலாக  மற்றைமொழிக ளெல்லாம்  தனக்கு  நிகரிலவாகவும் ,  வடமொழியொன்று  மாத்திரம்  ஒப்புடையதாகவு  நிலவத்  தன்னிடத்து  இலக்கியம் , இலக்கணம் ,  வேதாந்தம் ,சித்தாந்தம் ,கணித  முதலிய  பலவகைப்பட்ட  நூல்கள்  குறைவின்றி  நிரம்பப்  பெற்றுக்  கற்பார்க்கு   இனிமை  பயந்து  நிற்றலாற்  றமிழ்  என்னும்  பெயர்த்தாய் ,  பரமபதியாகிய  சிவபெருமான்  றிருவாக்கினின்றும் , அவரடியார்களாகிய  ஸ்ரீதிருஞான சம்பந்தமூர்த்தி  நாயனார்  முதலிய  சமயகுரவர்   சந்தானகுரவர்  முதலி யோர்  திருவாக்கினின்றும்  ,  வைணவ சமயகுரவராகிய  ஸ்ரீசடகோபர்  முதலியோர்  திருவாக்கினின்றும்  வெளிப்பட்டுப்  பற்பல  செயற்கரிய  அற்புதச்செயல்களைச்  செய்தமையான்  தெய்வீகமொழியாய் , சிவபெருமானால் , எம்மை  நீ யொப்பா , யென்று  போற்றப்பெற்ற   அகத்திய  முனிவருக்கு  உபதேசிக்கப்பட்டு  அம்முனிவர்  பெருமானால்  முதலில்  இலக்கணங்  காணப்பெற்றதாய் , முதலிடைகடை யென்னுமுச் சங்கங் கூட்டி  அவற்றிற்  பல்லாயிரமாண்டு  பாண்டியர் களால்  வளர்க்கப்பெற்றதாய்  விளங்கியுள்ளது  .  இஞ்ஞான்றும்  மடாதிபதிகளானும் , தமிழாயர்களானும் ,  புலவர்களானும்  தன்  இயனலத்திலொரு  சிறிதுங்குறைவின்றிப்  போற்றப்பட்டுவருகின்றது . ஓதுதற்குக் கடிந்நியமிலதாய் இலகுவாக்கற்றற்குரியதாய் , விரைவில்  இறைவனிடத்து  அன்பு  விளைக்கு  நூல்களையும்  ,  அறிவைப்பெருக்கு  நூல்களையும்  உடையதாய்த்  திகழ்வது மிச்செந்தமிழ்   மொழியே . இம் மொழிக்கணமைந்த  நூல்களுள்  திருக்குறள்  என்னுந்  தெய்வத்தமிழ் மறை போலெம்மொழியினிடத்துங்  காண்டலறிதாமென  நடுநிலை யுடைய  பல  பண்டிதர்கள்  கூறுகின்றனர் . இத்திருக்குறள்  இதுவரை  நாற்பதுக்கு  மேற்பட்ட  பல மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டு   அம்மொழியாளரால்  தம் மொழி நூல்களெல்லாவற்றினுமே  இலாய தென்று போற்றப்பட்டு  வருதலே  இதற்குத் தக்க சான்றாகும் . இவ்வளவு  அருமை  பெருமை  வாய்ந்த  இச் செந்தமிழ் மொழியை அருமை பாராட்டிப்  பயிலவேண்டுவது  அது  வழங்கும்  வேங்கடங்குமரி  தீம்புனற்  பெளவங்களாகிய  இவ்வெல்லைக்குட்பட்ட  நம்  தமிழ் மக்க ளெல்லார்க்கும் கடமையாயினும்  அவருள்  வணிகமக்களாகிய  நம்மனோர்க்கு  அச்செந்தமிழ்த் தெய்வத்தைச்  சங்க  நிறுவி வளர்த்த தெய்வப்பாண்டியர்  அரசுரிமை  பெற்ற  நாடே உறைவிடமாக  இருத்தலான்  நாம்  பயிறல்  மிகவும்  இன்றியமையாததாகின்றது . நம்ம னோரின்  முறையாகப்  படித்த  சிலரிடத்தன்றி   மற்றையோரிடத்து  இத் தமிழ் இயனலங்குன்றி  வேறுபட்டிருக்கிறது . எம்நிலத்து  மொழி  தமிழேயாயினும்   முறையாகச்  சின்னாளேனுங்  கற்கப்படாதேல் , அதன்  நல்லெழில்  முறையின்றிக்  கற்றார்  மாட்டுக்குன்றிப்  பிறமொழி யறிஞர்களால்  எள்ளப்பட்டு   மறைந்து  கிடக்குமென்பது  எல்லாரு மறிந்ததே  .நம்  வணிக  மக்கள்  , தஞ்சிறார்களைத்  தமிழ்  பயிலத் தொடங்கி   எண்சுவடி  யென்னும்  ஒருவகைக்  கணிதச் சிறுநூல்  பயின்றதும்   பிறவிடத்திற்  சென்று  பொருளீட்டுதற்குப்   போதிய அளவு  அறிவு  வந்ததென்று  அம்மட்டில்  நிறுத்திப்  பொருளீட்டு  முயற்சியிற்  புகுத்துகின்றனர் .  அச்சிறுவர்கள்  அவ்வமயம்  தந்தைமார்  அறியாமற்  கூறினும்  அவர்  மொழியை  யேற்று  நடத்தல்  கடனாதலின் அங்ஙனமே  செய்கின்றனர்  .பின்  காளைப்பருவம்  வந்துழிக் கற்கலாமோ வென்றால்   வெயிற்றவாமணிப்பூ ணல்லாரெனும்  பெரு விடங் கொடீமை  யெயிற்றுமா  காமப்  பாந்தன்  முதலிய  இடர்களானும் , பின்னர்ப் புதல்வர்  முதலிய  உறவினரைப்  பாதுகாத்தன் முதலிய   தொழில்களானும்  ,  பின் உடற்றளர்வு,  அறிவுத்தளர்வுகளானும்  கற்றற்குப்  போதிய  வலியின்றிப்  பிறப்பை யவமேயாக்குகின்றனர்  . அந்தோ!   நம்  மக்கள்  பல  அறிஞர்களோடு  பழகுங் காலத்து  தம்மிடத்துச்  சொற்  சோர்வு  எழுத்துப்பிழை  முதலியன  எங்கு  வந்துவிடுமோ  வென்று  நாணுகின்றனரே  !  அந்நாண்  சிறுபொழுதேனும்  முறைப்படக் கற்றிருப்பின்  உண்டாமா?  அறிஞரவைக்களத்துச்  சென்றார்  பொருட் பற்றியன்றிக்  கல்விபற்றிய  மதிப்புக்கிடைத்த  லரிதாகின்றதே ! கற்றோராற்  பெறுமதிப்புக்   கல்வி யானன்றிப்  பொருளானாதல்  பெருமையன்றே !  அறிவுடையார்  நண்பு   பொருளைப்பற்றி யொரோ வழிக்கிடைத்திருப்பின்  ,  அன்னார்க்குக்  கடிதம்  எழுதவேண்டுமானால்  முறைப்படக்கற்ற  ஒருவரைத்   தேடவேண்டுவதவசியமாகின்றதே !  அங்ஙனம்  தேடுதல்  வேண்டா வென்று  தீட்டுவரேல் அது  பிழை  பல  பொதுளி  அந்நட்டாரிடத்துத்  தம்  பெருமையைக்  குறைக்கின்றதன்றோ?  முறைப்படக்கற்காத  நம்  மக்களுட்  பொருனிலையான்  மேனிலையடைந்தார்  கடிதத்தும்  , இலக்கண  விரோதமாகிய   எழுத்துக்களும் , சொற்களும்  பரம்பரை யாக  உபயோகப்படுத்தப்பட்டும்   வழங்கப்பட்டும்  வருதலை  யிஞ்ஞான்றுங்  கண்கூடாகக்  காணலாம் . அப்பிழைபட்ட மொழிகளுட்  சில  என் நினைவிலுள்ளனவெனினும்  அவை யிற்றை  யீண்டு  விரிதற்கு  என் மனம்  நாணுகின்றதாகலின் ,  எழுதுகிற்றிலேன் .  அப்பொருள்  மிகுதியாக  வாராதா?  நம்  தமிழ்  நிலத்துள்ள  அந்தணரிற்  பெரும்பாலாரெல்லாம்  நன்கு  கற்றவரன்றோ ? கல்வியான்  மிகுத்த  பொருள்  வரவுண்டென்பதை  அரசு  நூல் கற்று   நீதிமன்றத்து  நின்று வாதிப்பாரிடத்துக்  காட்சியளவையிற்  றெளிந்திருப்பீர்களன்றோ ? கற்றுத்துறைபோய  காதலன்  அறிவுமுதிர்ந்தபின்னர்ப்  பொருளீட்டி  யொரு காதலியை  மணந்து  இல்லறம்  நடத்துதலினும்   விழுமிய  இன்பம்  வேறொன்றுண்டா ?   நம்  வணிக  மக்கட்குப்  பிறர்  நட்பு  கோடல்  பொருள்  பற்றியன்றி யறிவுபற்றியாதலருமை   யென்பது  அவரவர்  அநுபவத்தானுணரலாம் .  நம்மக்களிடத்து  இயற்கையறிவோ  மிக  நுன்ணியதாக   நிரம்பியிருக்கின்றது . இவ்வருமை  மதிநுட்பத் தைப்  பெற்றுஞ்  செவ்வைபாக்கற்றற்கு  முற்படாதிருத்தல்  , விளைநிலம்   கருவி  முதலிய  பெற்றும்  தொழிலில்  முயன்று  தொடங்காமையை  யொத்திருக்கின்றதன்றோ ?   ஓ  என்  அருமைச் சகோதரர்களே  !  நம்மனோரிற்  சிலர்  இப்பொழுது  கல்வியுடையாரும்  சிலர்  கற்க  விரும்புவாருமாக   இருக்கின்றமையின்  இவ்வமயம்  நம் குறையைக்  கூறின்  விரைவினீங்கப்பெற்று  நலனுறலாமென்னு மவாவும் , தருக்கசங்கிரகத்  தொடக்கத்தில்  அந் நூல்  கேட்டற்குரிய  அதிகாரிகளை  “இளையோரெனவும்”  இளையோராவார்  கோடலும்  உள்ளத்தமைத்தலும்  வல்லுநர்,  குழவிப் பருவத்தரல்லரென்பதாம் “   எனவுங்  கூறியாங்கு   நீயிர்  எல்லீரும்  இற்றை ஞான்று  இக்குறையைக்  கொண்டு களைதற்கும்,  கல்விவுணர்ச்சியின்  முற்படுதற்கும்  உரிய  அறிவுமாற்றலுமுள்ளீரென்னுந்  துணிவுமே  யென்னை  யித்துணையுங்  கூற  முற்படுத்தின . போதிய  அளவு  பொருள்  படைத்திருக்கு நம்மனோர்  அதற்குத்  தக்க  கல்வியுமுடையராயிருப்பின் , அப்பொருள்  புரையறு பொன்னாற் புரிதருமெழின்மலர்  விரைநனி செறிந்து விளங்குதல்போல்  விளங்கிக் காலத்துக்குத்தக்க  அறம்பலபுரியதற்குரி யதா மன்றோ?  கல்வியறிவில்லாரெத்துணையறங்களைப்  புரியினும்  அவை  தாஞ்  செதற்குறிய  பயனைச் செய்தற்கு  வலி யிலவா யொழியுமென்பதை   “பன்னும்  பனுவற் பயன்றோரறிவிலார் ,  மன்னுமறங்கள்  வலியிலவே  நன்னுகால், காழொன்றுயர்திண் கதவு வலியுடைத்தோ, தாழொன் றிலதாயிற்றான் “     எனவரும்  முன்னோர்  மொழியானுமுணர்க . இன்னும்  அறிவிலார்  அறமுடையராயினும்  ,  பொருளுடையராயினும்  இவ்விரண்டும்  ஒருங்குடையராயினும்  அவற்றாற்  பயனெய்தாரெனலை  “அறிவுடையா ரெல்லா முடையார்  அறிவிலார் ,  என்னுடையரேனுமிலர்”  என்னும்  திருக்குறளாற் றெளிக .

                                                க லா சா லை

              இனி , அறிவுக்கு  இன்றியமையாச்  சாதனமாகிய  அக்கல்வியில் லாக்  குறையை   யொழித்தற்குரிய  நெறிதான்  என்னை  யெனிற்  கூறு வேன் . நம்மவர்  உறைவிடமாகவுள்ள  ஒவ்வொரு  நகரங்களினும்  ,  கலாசாலை   நிலைபெறச்செய்து அதனில்  இலக்கிய  இலக்கணங் களைக்  கிரமமாகக்  கற்றுணர்ந்தவரையும் , போதனாமுறை  தெரிந்தவராயுமுள்ள  பண்டிதர்களை  உபாத்தியாயராக  நியமனஞ்  செய்து  அவர்களா  லக்கல்லூரியிற்  சேரும்  சிறார்களுக்கு  வேதனமின்றிக்  கல்வி  கற்பித்தல்  வேண்டும் . கலாசாலை  நடைபெறுதற்குரிய  மூலதனம்  அவ்வவ்வூராராற்  றொகுக்கப்பட்டுக்  கல்வி  செல்வங்களான்மிக்க  ஒருவர்  அல்லது  சிலர்  பொறுப்பி லிருத்தல்  வேண்டும் .  பெரிய  ஊராகவிருப்பின்  சிறுவர்கள்  மிகுதியாகச்  சேருவார்களாதலின் , தலைமைப் பண்டித  ரொருவரைத்  தவிரச்  சுருக்கமான  வேதனத்தில்  சில  உபாத்தியாயர்களை  வேண்டிய  அளவு  நியமித்தல்  வேண்டும் .  கலாசாலை  நடைபெறு  நகரத்திலுள்ள   சிறுவர்களுக்கேயன்றி   அயலூர்களிலிருந்து  வருஞ்  சிறுவர்கள்  உண்டி,  உடை  முதலிய  செலவு செய்தற்குப்  போதிய  பொருளில்லாதவராக இருப்பின் , அன்னார்  எச் சாதியராயினராயினும் , அவர்களுக்குரிய  அச்செலவையும்  கலாசாலைப்  பொதுப்  பொருளிலிருந்து  செய்து  படிப்பித்தல்  மிகுந்த  புண்ணியமாகும்.  ஆனால்  அங்ஙனம்  வருபவர்களில்  இத்தனை பெயர்க்குமட்டில்  போஷணைச்  செலவுடன்  கற்பித்தல்  வேண்டுமென்று   மூலதனத்துக்குத்  தக்கவாறு  வரையறை  செய்துகொள்ளலாம் .  மூலதனம்  தொகுக்கும்பொழுதே  இவ்விடயத் தையுஞ்  சிந்தித்துக் கொள்ளல்  வேண்டும் .  சிலர்  எம்மக்கள்  கல்விபயிறற்குரிய  பருவமிலராதலின்  , யாம்  இது பொழுது எதற்காகக் கலாசாலைக்குப்  பொருள்  தரல் வேண்டும் , பின்னர்  பார்த்துக் கொள்ளுவோமென்று  கருதுவாருமுளர் .  சிலர்  இறைவன்  எமக்கு  இதுகாறும்  புதல்வரைத்  தந்திலராதலின் , யாம்  இவ்வறச் செயலிற்   றலையிடுதலெற்றிற்கு ?  புதல்வற்பேறு  கிடைத்த பின்னர்ச்  செய்வோமென்பாரு முளர் . சிலர்  நம் மக்கள்  பல்லாண்டு  படிப்பினும்   மாத வேதனமாக உதவிவரின் , சுருக்கமான  பொருள்தானே  செல்லும்,  அங்ஙனமிருக்க  ஏன்  ஒரே  தொகையாக  மிகு பொருள்  கொடுத்தல் வேண்டும் ?  என்று  கருதுவாருமுளர் .  இங்ஙனம்  “நலமதொன்று  அடைதற் குறுமிடை  யூறு தானே  பலவுளவன்றே”    என்றாங்கு  இந் நற்காரியத்திற்குப்   பல  இடையூறுகளும்  நேர்தல்  இயற்கையே .  ஆனால் , இங்ஙனங்   கருதுவாரெல்லாம்  நாம்  இக்கலாசாலைக்குப்  பொருளீதல்   நம்வாணாளிற்  செய்தற்குக்  கடமைப்பட்ட  அறச்செயல்கள்  பலவற்றுட்சிறந்த தொன்றென்பதூஉம் , அப்பல வகைத் தருமங்களினும்  இவ்வித்தியாதான  தருமம்  சிறந்ததென் பதூஉம் ,  இது  நமக்கு  இம்மையிற்  புகழையும்  மறுமையிலுரிய பயனையும்  விளைக்குமொரு  நற்செயலென்பதூஉம் , அதனைப்  பிறர்  பயனோக்கிச்  செய்தலே  யன்றித்  தமக்குச்செய்துகோடல்  சிறந்த  தன்றென்பதூஉம் ,  ஆகிய  இவ்விடயங்களை  நினைவிற்  கொள்ளுவரேல்   பொருளீதலில்  ஒரு சிறிதும் பின்வாங்கார் .  வடமொழியிலுள்ள  அறநூல்களாகிய  மநுமிருதியிலும்  ஞானம்  வேள்வி   இவற்றினும்  தானமே  சிறந்ததென்பது  போதரும் . அத் தானம்  பலவற்றுள்ளும்   அறிவை  வளர்த்தற்கு  வித்தையும்  , அவ்வறிவின்  நிலைக்களமாகிய  உயிரிருத்தற்குரிய  உடலை  வளர்த்தற்கு  அன்னமுமுரியதாதலின் ,  அன்னதானமும் ,  வித்தியாதானமுஞ்   சிறந்தனவாகும் . அவ்விரண்டனுள்ளும்  பெறுவார்க்கு  அன்னத்தாலாம்  பயன்  சிறுபொழுது  நின்றொழிதலானும் , கல்வியானாம்  பயன்  வாணாண்முழுதுமிருத்தலோடு   “ஒருமைக்கட்டான்  கற்றகல்வி யொருவற் , கெழுமையு மேமாப்புடைத்து”  என்று  திருக்குறள்  கூறியாங்கு  எழுமையுந்  தொடர்தலானும்  மிக்க  பயன்  தருவது  வித்தியாதானமேயாகும் . “தான மெவ்வெவற்றினுந் தக்க  வித்தியா , தானமே  சிறந்தது  சாற்றுங்காலையே”  என்னுந்  தமிழ்ச்செய்யுளானு முணர்க.  ஈண்டு  ஏழைச்  சிறுவர்களுக்கு  உண்டி , உடை கொடுத்துக் கற்பித்தல்  இருவகைத்  தானப்பயனையுந்  தருமென்பது முணர்க . இத்துணை  மேம்பாடுள்ள  வித்தியாதானஞ்  செய்தற்குரிய  பொருளோ  நம்மவர்  செய்துவரும்  வேறு  தருமங்களுக்குரிய  பொருளை  நோக்க  மிகச் சுருக்கமாகும் .சுருங்கிய பொருளைக்கொண்டு  பெரும்பயனைத் தரும் புண்ணியச்செயல்  இதனையன்றி  வேறு  யாதுமிருப்பதாகத் தெரிந்திலேன் .  ஆதலின்  அவ்வவ்வூர்களில்  நிலைபெறும்  வித்தியா சாலைக்கு   அவ்வவ்வூரார்  இயன்றவளவு  பொருள் கொடுத்தல் அவர் தமக்கு  இன்றியமையாத  கடமைகளிலொன்றாகும் .  இந் நற்காரி யத்தை  முடித்தற்கு  ஒவ்வோரூரிலுமுள்ள   செல்வமிக்க  சீரியோரே  முயறல் வேண்டும் .  அவர்  தமக்குள்ள  பல வேலைகளி லீதொரு  முக்கிய  காரியமாகக்  கொள்ளல் வேண்டும் .  எவ்வளவு  பொருள்  படைத்து  எத்துணை  நாள்  வாழினும்   இத்தகைய  நற்செயலால்  வரும்  இசை யிலரேல்  அவர்  செல்வமும்  வாழ்க்கையும்  என்ன  பயனுடையவாம் ?  நண்பர்களே ! நம்  சீவியகாலத்தில்  நம்மக்கள்  எவ்வளவு  பொருளைப்  பயனின்றிச்  செலவு  செய்கின்றனர்?  பொருட்பெண்டிர்  பொய்மை  முயக்கத்திற்கு  எவ்வளவு  போகின்றன .  பொறாமை , சினம் முதலியவை  காரணமாகக்  கலாம்  விளைந்து  அதனால்  எவ்வளவு  செலவாகின்றன ?  அந்தோ ! இவற்றால்  அக்கணத்திற்  றோன்றும் ஒரு  சிற்றின்ப நோக்கிச்  செய்கின்றனரெனினும்  ,  தமக்கும்  உணவு  முதலியன  தக்ககாலத்திற்  செய்து கோடலின்றித்  தம்மைச் சார்ந்த  தாய்   தந்தையர்  பெண்டிர்  மக்கள்  வருந்த  அதனையும்  பொருட்படுத்தாது  அறிவுள்ள  தந் நண்பரைக்  கண்டால்  நாணம்  பெரிதுகொண்டு  அவரோடு    பேசுதலின்றி  மறைந்து சென்று எவ்வளவு  பொருளைச்  சூதில்  போக்குகின்றனர் ?  இவர்  செய்கை  மிகவும்  வருந்தற்பாலதாகும் .  இத்தகைய  தீயவழிகளில்  நம் பொருள்  போதற்கு  முன்னரே  நாம்  பின்னர்த்துய்க்கும்  வண்ணம்  வைத்தற்குரிய  இடத்தில்  வைக்க  முந்த வேண்டாமா ?  இனி , அக்கலாசாலைகளில்  நமக்குரிய  மொழியாகிய   தமிழைப் படிப்பித்தலோடு  நம்மையாளும்  அரையர்க்குரிய  ஆங்கில  மொழியையும்   பயிற்றல்  வேண்டும் .  ஆங்கிலம்  எக்காலத்தில்  எந்நிலத்தை  எவ்வரசர்  ஆளுகின்றனரோ  அக்காலத்தில்  அந்நிலத்துள்ளார் அவ்விராச  மொழியைக்  கற்றாலொழிய   இலெளகிக  உணர்வு , பொருளீட்டற்குரிய  வலி , பலரானு  மதிக்கப் படுதல்  முதலியவை  யுடையராதல்  அமையாது . ஆங்கிலத்திற்  சிறிது கற்றுப்பட்டம்  பெற்றாரொருவரும்  தமிழிற்  பெரும்பட்டமுடையாரொ ருவரும் , தேய  யாத்திரையாகச்  செல்லுங்கால்  புகைவண்டி  முதலியவற்றில்  முறையே  அவர்களடையும்  இன்பதுன்பங்களே   ஆங்கில  நூலுணர்வின்  அவசியத்திற்கும் , அஃதின்மைக்கும்  போதிய  சான்றுகலாம் . அன்றிப் பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்னரே  நம்  இந்திய  மக்கள் கண்டு   தெளிந்தனவும் , நூல்வடிவாகச் செய்யப்பட்டனவும்  இப்பொழுது நம்மனோரா  லறிதற்கரியனவுமாகிய   பெளதிக  தத்துவ  இயல்களையும் , எந்திரத்தொழில்களையும்   மேனாட்டார்  கருவி கொண்டு  சோதித்து அறிந்து  பலர்க்கும்  உபயோக மாம்படி  விளக்கமாக  அவ்வாங்கில  மொழியிலேயே  எழுதிவருகின் றனர் .  அங்க நூல்கள்  பல  பன்னாட்  பயின்று   அறிதற்குரிய  ஆரிய  வேதங்களின்  சீரிய பொருள்களை  யெல்லாம்  அம்மொழியில்  சிறிது  கற்றாரும்  எளிதிலுணர்ந்து  கொள்ளும்  வண்ணம்  மிக  இலகுவான  சொன்னடையில்  விளக்கி  யெழுதியிருக்கின்றனர் .நம்மனோரெல் லார்க்கும்  இக்காலத்துக்குரிய  அரச நீதி  கூறும்  நூலுணர்ச்சி  சிறிதேனுமிருத்தல்  வேண்டும் . அந் நூல்களும்  பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே  உள்ளன .  இவற்றையெல்லாம்   அறிய வேண்டின்  அம்மொழியின்  பயிற்சி  சிறிதேனும்  பெறவேண்டுவதவசியமா கின்றது .  ஆகலின்  நம்மால்  நிறுவப்படுங்  கலாசாலைகளில்  ஒரு சிறு  நேரம்  சிறார்களுக்கு  ஆங்கிலமுங்  கற்பித்து  வருதன் மிக நலமாகும் .

                                                    வ ட மொ ழி .

            இனி , வடமொழியானது , வேதாகம புராணேதிகாச  தரும சாத்திரங்களையும்  ,  கணிதம் , தருக்கம் , வைத்திய  முதலிய  நூல்களையும்  தன்னுட்கொண்டிருந்தாலும் , நமக்குரிய கிரியைகளில்  உபயோகப் படுமந்திரங்களெல்லாந்தன்மயமாக  இருத்தலானும் , பூகோளக்கோள நூல்களெல்லாந் தன்பால் விரிந்துகிடத்தலானும்  அதனையும்  நம் கலாசாலையிற் கற்பித்தலவசியமென்பது   சொல்லா மலேயமையும் . ஆனால் , இக்காலத்திற்  கற்றுணர்ந்த  அந்தணர்க ளன்றி  இப்பக்கத்திலுள்ள  மற்றையோரெல்லாம்  வடமொழி பயிறல்  தங்கள்  மரபினர்க்கேயன்றி  யேனையோர்க்கு  உரித்தன்று  என்று  கூறியும் ,  பிறர்  வட சொல் ஒன்றைத் தம் முன்னர்க்  கூறுவராயின்   அது தம் செவிக்கு   விடம்போல் வதென்று  கருதியுந்திரிகின்றனர்   அவரெல்லாம்  பிறர்  வடமொழியுணர்தற்கு  அதிகாரிகளல்லர்  என்பதை  யெந்த நூலிற்  கண்டிருக்கின்றனரோ அறியேன் .  ஆராயப் புகுவாராயின்  இங்ஙனம்  கூறார் . வேதத்தை  அந்தணர் , அரசர் , வணிகர்  ஆகிய  மூவரும்  ஓதலாம் ; சூத்திரர்  ஓதற்கு  அதிகாரிகளல்லர் என்றும்  , புராணங்களையும்  ஆகமங்களையும்   படிக்கலாமென்றும்  தருமசாத்திரங்கள்  கூறுகின்றன . சூத்திரர்  வேதத்தை யொதுதற் கதிகாரியல்லர்  என்பதற்கு  வேதத்திற்குறிப்பானன்றி   விளக்கமான  பிரமாணம்  இருப்பதாக  ஒருவருங்கூறவில்லை .  பிற்காலத்துச்  சில பயனோக்கி   அறநூலார்வரையறையப்படுத்தினர் போலும் , அவ்வற நூல்  விதிப்படி   வைசிய  மக்களாகிய  நாம்  நமது  பூர்வாசாரங் களினின்றும்  பிறழ்தலின்றி   துவிஜத்துவமுடையராயிருப்போமாயின்  வேதத்தைத் தடையின்றிப்  படித்தற்கதிகாரிகளாவேம் .  பல வருடங்க ளுக்கு  முன்னர்  நம் வைசியாசாரம்  பிறழ்ந்துவிட்டமையால்  இப்போது  சற்சூத்திர  நிலையிலிருந்து  அந் நிலைக்குரிய   ஆசாரங்களை   யநுட்டித்தற்கதிகார  முடையேமா யிருக்கின்றோம் .  அங்ஙனமாகவும் படித்த  அந்தணருட்  சிலர்  புராணங்களுள்ளும்  வேதோபநிடத  மந்திரங்களைக்  கூறும்  பாகங்களாகிய   சிவகீதை , பகவத்கீதை , வாயுசங்கிதை , முதலியவற்றையும்  சூத்திரர்  படித்தல் கூடாதென்கின்றனர் . ஈதென்னை  விபரீதம் ?  வேதத்திற்  கூறும்  விடயங்களை  நேரே யறிந்துகோடற்கு  அதிகாரிகளாகாத  சூத்திரர்  புராணமுகமாக  அறிந்துகொள்ளலாமென்றும் , அதற்காகவே  புராணங்களில்   வேதார்த்தங்கள்  விளக்கிக் கூறப் படுகின்றன வென்றுங்  கூறுகின்ற தரும சாத்திரங்களைத்  தங்களுக்குரியனவாக  வைத்துக்கொண்டும்  அவற்றை  நோக்காது கையில்  விளக்கேந்திக்   கிணற்றில்  விழுவார் செயலையொத்து மனம் போனபடி  கூறுகின்றனர் .  இவர்  கூற்றுநம்மாலொரு  பொருளாக  மதித்துக்  கண்டித்தற்குரிய தின்றெனினும்  நம்  வணிக மக்கள் சிலர்  இவர்  வஞ்ச மொழியை  நம்பி  அக்கொள்கையை யவலம்பனஞ் செய்கின்றன ராதலின்  அம்மயக்க நிவிர்த்தியின்  பொருட்டுச்  சில கூறினேன் .  இவற்றால்  மேற்காட்டிய   உண்மையை  யறிந்தடங்குவாராக ,  இனிச் சிலர் வடமொழியை  நாம்  பயிலவேண்டுதற்குக் காரணம்  நமக்குரிய  செந்தமிழ்  வடமொழியினின்றும் பிறந்தமையானென்பர் . அவர் கூறும்  காரணம்  நடுநிலையுடைய  மொழிஞான விற்பன்னர்களா  னிரசிக்கப் பட்டதொன்றாகும் .  வடமொழியிலுள்ள  துவிவசனம் தமிழில்லை . தமிழிலுள்ள  திணை பாலுணர்த்தும்   வினை விகுதி  முதலியன   வடமொழியிலில்லை . உதாரணம்  பவதி யென்னும்  வினைமுற்று   இருக்கின்றான் , இருக்கின்றாள் , இருக்கின்றது என்று  எல்லாத்திணை பாலையுங்கொண்டு  முடியும் .  வடமொழியிற்   பிரதமா விபக்தி கூறுவர். தமிழில் , எழுவாயுருபு, திரிபில் பெயரே யென்பர் . வடமொழியில்  சப்தங்களுக்கு  இலிங்கம்  வகுத்திருக்கின்றனர் .  தமிழில்  பொருட்டன்மை  நோக்கி  அப்பொருளையுடைய  சொற்குப் பால்  வகுபார்.  உதாரணம்  தாரம்  என்னும்  பெண்பாற்  பொருளுணர்த்துஞ்சொல்  வடமொழியில் ஆண்பாற்பன்மை யென்று  கூறப்படும் . தமிழில்  அங்ஙனமின்று. இன்னும்   வடமொழியையும்  செந்தமிழையும்  நன்கு  ஆராயின்  அவை  வேறு  வேறு  தனிமொழிகள்  என்பதற்குப்பல  வேறுபாடு  காணலாம் . இவ்விடயம்  நம் தமிழ்ப்பண்டிதரே  யன்றி  ஆங்கிலேய  பண்டிதர் பலரானும்  நன்கு  விளக்கப்பட்டிருக்கின்றது . இனி , நம்முன்னோர்  வடமொழி  பயிறற்கு  முக்கிய காரணம்  வேறியாதெனின்  கூறுவேன் .  வடமொழி  செந்தமிழ்போலப்  பரமசிவனாற் றரப்பட்டதாதலானும் , அலங்காரம்  தருக்க  முதலிய  நூல்களைத்  தன்பானின்றும்  பிறமொழியாளர் கோடற்குரியதாக  இருத்தலானும்  தொன்றுதொட்டு  நம்  தமிழ்க்கும்  அதற்கும்  ஒற்றுமையுண்மையானும்  நம்மத கிரந்தங்களெல்லாம்  பெரும்பாலும்  அம்மொழியிலேயே  அமைந்திருத்தலானும்  நாம்  கற்றலவசியமாகும் .  வடமொழி  உலக வழக்கிலின்றி நூல் வழக்கின்  மாத்திரம்   பயின்று  வந்தமையானும்  ,  தமிழ்  நூல்  வழக்கு   உலகவழக்கு  ஆகிய  இரண்டினும்  பயின்று  வந்தமையானும் ,  தமிழிற்  பெரும் புலவராயுள்ளாரெல்லாரும்   வடமொழியையுங்  கற்று   அதனிலுள்ள  விடயங்களைத்  தமிழிற்  கூறுங்கால்  அச்சொற்களையும்   உடன் கூறி   வந்தமையானும்  தமிழ் மொழியிற்  பல வட சொற்கள்  பழங்காலத்தே  வழங்கப்பட்டு  வந்தனவாகும் .  இவற்றையுணர்ந்து  வைத்தும்  நம்  தமிழ்ப்புலவருட் சிலர்  தமிழினும்  வடமொழி  தாழ்ந்ததென்றும் , தமிழர்க்கு  வடமொழிப்  பயிற்சி  அவசியமின்றென்றும்  வடமொழியைப் பலவாறு  இழித்துக் கூறுகின்றனர் . இவர் கொள்கை  பரவி வருதலாற்றான்  நம்  சமய  உண்மைகளை  விளக்கும்  ஆகமங்கள்  வடமொழியிற்  பல்கோடியாக  விரிந்து கிடப்பவும்  அவற்றை யாராய்வாரும்  பரிபாலிப்பாரும்   அரியராகின்றனர், இக்கொள்கையை  நம்  தமிழ்  மக்களறவே  யொழித்து விடல் வேண்டும் . இனி , வடமொழியையும்  முறையாகக் கற்கத் தொடங்கல் வேண்டும் .  அங்ஙனங்  கற்று  நம்மனோர்க்குப் போதிக்க   ஒருப்படும்  அந்தணோத்தமர்களுக்கு  வேண்டிய  உதவி  நாம்புரிதல் வேண்டும் . ஆனால்  நம்  வணிகமக்கள்  பலர்  பல இடங்களில்  வடமொழிக்கலாசாலை நிறுவி  நன்கு நடத்தி வருகின்ற னர் . கலாசாலை  தொடங்கும்பொழுதே  அந்தணர்களைத் தவிர  வேறு  ஒருவரும்  படித்தல்  கூடாதென்னும்  விதியையும்  ஏற்படுத்திவிடு கின்றனர் . அதற்குக் காரணமும்  ஒன்றுண்டு .   என்னவெனின் :  ‘கதா நுகதிகோ லோக”  என்னும்  பொது நியாயத்தை  நம்மவர்  தமக்குச்சிறப்பாக   அங்கீகரித்தமையேயாகும் . அக்கலாசாலைகளில் அந்தணச்சிறார்களே  யன்றி  மற்றவருணத்தார்  படித்தல்  கூடாதென்று  எந்த நூல்  கூறுகின்றது ?  திருவனந்தபுரத்து   மகாராஜா  அவர்கள்  அச்சமஸ்தானத்தில்   நிறுவிய  கலாசாலையிலும் , பண்டிதை  ஸ்ரீ அனிபிசன்ட்  அம்மையார் காசியில்  நிறுவிய  பெரிய  கலாசாலை யிலும்   நான்கு வருணத்தாரும்  ஆரம்பக் கல்வி முதல்  வியாகரணம்  தருக்கம்  முதலிய  எல்லாக்கிரந்தங்களையுங்  கற்கும்படி  விதிக்கின்றனரே  . அவ்விதியை  நாம் ஏன் கடைப்பிடித்தல்  கூடாது ;  இப்பொழுது  நம் குலத்துச்  சிறார்களும்  வேளாளர்  குலத்துச்  சிறுவர்களும்  படிக்க விரும்பினாற்  கலாசாலையிற்  போதகரா யிருப்போ  ருடன்படுவரா ?  ஆதிசைவப் பிராமணச்சிறுவர்களைச்  சேர்த்துக் கற்பித்தற்கும்  உடன்படுதலருமையாயின்   நம்மனோரை  யெங்ஙனம்   மதிப்பார் ?  இவற்றிற்கெல்லாங்காரணம்   நம்மவர் பாலுள்ளதேயன்றி   யவர்களிடத்திலின்று .  இனி , நம்  நாட்டில்  செந்தமிழ்க்கலாசாலைகள்  பல  ஆங்காங்கு  நிறுவி  அவற்றிலிருந்து  வடமொழியை  நம்  தமிழ்மக்கட்குப்  போதிப்பிக்கத்  தொடங்குவேமேல்   நம்  நல்லுணர்வையும்  பாஷாபிமானத்தையும்  அறிஞர்  மிகப்பீடுடைய னவாக  எண்ணுவர் . இன்றேல்  ஒருவர்  சென்றவழியாச்  செல்லும்  நம்  இயற்கை  பிறர் மதித்தற்குரியதாகாது .  நிறுத்துணர்ந்து   எக்காரியத் தையுஞ்  செய்தலே  தக்கதாகும் .  

                                                      ச பை க ள் .

          இனி , தமிழ்க்கலாசாலைகளை  யூர்கடோறுந்  தவறாமல்   நிறுவுதலோடு  பத்து  ஊர்களுக்கு  ஒன்றாக  எல்லாச் செளகரியங்களும்   நிரம்பிய  ஒவ்வொரு  பெரிய  நகரங்களினும்   பல  பண்டிதர்கள்  தத்தங்கருத்துக்களை  யுபந்நியாசித்திற்குரிய  சபைகள்  தாபித்தல் வேண்டும் .  இக்காலத்தில்  மதவகையான  திருத்தங்களும்  , அரசியற் றிருத்தங்களும் , சாதிமுறைத்  திருத்தங்களும்  பிறவுஞ்  சபைவாயி லாகவே  செய்யப்படுகின்றன . இவ்விந்திய தேயத்தில்   பலவகையுட்   சமயங்களும்  ஒருவாறாகச்  சில சில  இடங்களிற் பரவிவர  தியாசபிகள்  சங்கத்தின்  நோக்கங்கள்  மிக்க  விரைவிற்  பரந்து நம்  இந்திய  மக்களிற்  பல மேதாவிகளையும்   தன் வயப்படுத்தற்கேது , இத்தகைய  சபைகளேயன்றி   வேறன்று . ஒருவகை நூலிற்   பலர்க்கும்  பலவகை யவிப்பிராய பேதங்கள்  தோன்றுதலியற்கையே . அக்கருத்து  வேறுபாடுகளைத்  திருத்திக்  கோடற்கு  வாயில்  இச்சபைகளேயாகும் . நம்  சிறுவர்கள்   கல்வி பயிலுங்காலத்தே  பலர்  முன்னிலையில்  அஞ்சாது   பேசப் பழகுதற்குரிய தானமுமிச்சபைகளேயாகும் ”இண ரூழ்த்து நாறாமலரனையர் கற்ற துணர விரித்துரையாதார்”  என்னுங்குறை  யையொழித்து  “சொலவல்லன்  சோர்விலனஞ்சான வனை, யிகல் வெல்லல்  யார்க்குமரிது “என்று  கூறும்படி சிறுவர்களைப்  பெருமைப்படுத்தற்கு  மிதுவே  சிறந்த கருவியாகும் . உதாரணமாக  இச்சன்மார்க்க சபையை  நினைப்போம் . இது  நிலைபெறுத்தப்பட்டு  ஈராண்டுகளாயின.  இவ்வீராண்டுகள் , பிறந்தநாட்டொடங்கி  இப் பக்கங்களைக்  கண்டறியாத எத்தனை பெரியோரைக்  காண நேர்ந்தது?   அவர்  வாயிலாக  எவ்வளவு  நுண்ணிய  பல  விடயங்களைக்  கேட்கநேர்ந்தது ?  நன்னீர்  தோய்ந்து இன்சுவை யடிசிலுண்டு  மேன்மாடியிற்  சாளரவாயிலாகப்   போதருமிளங்காற்று  வீச  வெயின்முகமறியாது  பயிலும்  மெல்லியவுடலையுடைய  அறிவிற்  சிறந்த  நீவிர்  பல்லீரும்  முள்ளுங்கல்லும்   பரவிய  நீணெறி கடந்து  சேணிடத்துள்ளதாகிய   இச்சிற்றூரையெய்தி  யொருங்குகூடி  யளிக்கு மிக்கண்கவர்   காட்சி கிடைக்கப்பெற்றமைக்குக்  காரணமிக்கழகமே யன்றோ ?  இக்கழகம்  சன்மார்க்கமாதலின் , இதனை  நோக்கி  யாம்  வருதற்குரிய  நெறி சன்மார்க்கமாயினும்  அதனைப் பொருட் படுத்திலேமென்று  பல  பண்டிதர்  என்னிடம்  கூறியுள்ளார்கள் .  ஆதிபெளத்தர்  அரசமரத்தடியில்  நின்று  பலரையும்  ஒன்றுகூட்டித்  தம்  மத  போதனைகளைச்  செய்தமையானன்றோ  இக்காலத்திற்  பல வகைப் பட்ட  மதங்களை யவலம்பிக்கும் உலகத்து ஜனத்தொகையுள்  பெளத்தக் கொள்கையினர் மூன்றிலொரு பகுதியின்  மேலும்  மிக்கு  விளங்குகின்றனர் .  நம்  வணிகமக்களுரைவிடங்களாகயுள்ள  நகரங்க ளிற்  குறைந்த பக்கம்  பத்துச்சபைகளிதுபோல்  நிலைபெறுமாயின் , நம்மவர்   சில  ஆண்டுகளுக்குள்  பிறர்  கூறுங்குறைகளை யொழித்து நாகரீக நிலையில்  எல்லாரினு  மேம்பாடெய்துவரென்பதிலொரு  சிறிதும்  ஐயமின்று . அங்ஙனமாமாறு   நம்  உள்ளத்துளொளியாய்  விளங்குஞ்  சிவபெருமான் றிருவருள் புரிவரென்னுந்  துணிவு  பெரிதுடையேன்

                                                            ச ம ய ம்

           இனி,  சமயவிஷயத்தில் நம்மவர் நிலையைச்  சிறிது ஆராய்வேன். நம்  வணிகமக்களுக்குரிய  சமயம்   வேதாகமங்களில்  விதந்தெடுத்து விழுமிதாகக்கூறப்பட்ட  சைவசமயமேயாகும் .  சைவசமயம்  என்பது சிவனிடத்து இடையறாது அன்பு பூண்டு   ஒழுகுவோரது கொள்கை  யென்று  பொருள்படும் .  ஈண்டுச்  சமயமென்றது  இது  பொருளென்று தெளிந்த அவசரம் , அல்லது  பருவம்  என்று  பொருளாகும் .  சிவபிரான்  பரம்பொருளாதலை  வேதம்  பொதுவகையாகவும்  சிவாகமம்  சிறப்புவகையாகவும்  தெளிவிப்பனவாம் .  வேதத்துட் சிவபிரான் பிரமம் , பசுபதி , முதலிய  சப்தங்களாற்   பலவிடத்தும் படிக்கப்படுவன்.  பிரமசப்தத்தை யொவ்வொரு  சமயத்தாரும் தத்தங்கடவுட்கேற்றிக் கூறுகின்றாரார்களோ  எனின் , அற்றன்று  . கேநோபநிடதத்தில்   இந்திரன் , அக்கினி , வாயு  முதலியோர்   அசுரர்களைப் போரில்  வெற்றிகொண்ட   சயசீலர்  யாம்  யாம்  என்று  செருக்குற்றிருப்ப   அதனையறிந்த பரமசிவன் , அவர்கள்  முன்னிலையில்  ஓரியக்க  வேடந்தாங்கிச்சென்று  ஒரு சிறு துரும்பை  நட்டு இதனிடத்து உங்கள்  வலியைக்காட்டுங்களென்று   கூறினெனவும் , அக்கினியும் ,வாயுவும்  தம்  ஆற்றல்  சிறிதும்  செல்லாதிருத்தலை  நோக்கி  நாணி நிற்பப்  பின்  இந்திரன்  வந்தவுடன்  இயக்க வுருவினனாகிய   பரமசிவன்  மறைந் தருளினனெனவும்  , அவ்வமயத்தில்  விசும்பில்  இமவான்  மகளாகிய  உமையம்மையார்  தோன்றினாரெனவும் , அவ்வம்மையாரை  நோக்கி  அம்மே ! இவ்வியக்கன்  யாவன்  என்று  இந்திரன்  கேட்ப இவன்  பிரமம்  என்று  அம்மையார்  கூறியருளினாரெனவும்  கேட்கப் படுதலானென்க. அவ் வுபநிடதத்தில் இயக்க வுருவமாக  வந்தது  பிரமம்  என்று  காணப்படினும்  “தாயுடன் சென்று  பின் றாதையைக்கூடி”  என்றமுறைப்படி  உமாதேவியராகிய  சிவசத்தியாற்  காட்டப்பட்டமை யால்  அந்தப் பிரமம் பரமசிவனே யென்பதுணர்க . இக்கதையை  வாயுசங்கிதை  யென்னும்  புராண  நூலும்  விரித்துக்  கூறுதலையுணர்க  யஜூர்வேதத்துள்ள  சமக  மந்திரங்கள்  அரி, அயன் , இந்திரன் முதலியோரை அன்னாதிகளுடன் சேர்த்து  ஈயப்படும் பொருளாகக்   கூறுகின்றமையானும்  “பிறராற்   சாதிக்கமுடியாத முப்புரத்தை வெற்றிகொண்டு உலகங்களைக் காத்தமையான்  பசுபதி  நீயே ,  யாமெல்லாம்  பசுக்கள்  என்று  அங்கீகரித்தனர்  தேவர்கள்” என்பது  முதலிய  சுருதிகளுண்மையானும்  பசுபதி சப்தமும்   அதற்குரிய   இலக்கணங்களும்  சிவபிரானுக்கே  யுரியனவென்பதும்  தெளிக . சிவபிரான்  ஏனையதேவர்கள்  ஆற்றலெல்லாந்  தன்னுள்  வியாப்பியமா யடங்க  தான்  வியாபகசக்தியுடையனாதலை , சுருதி பிறதேவர்கள்  பெயரெலாஞ்  சிவனுக்குரியதாகக்  கோடலானும் சிவனுக்குரிய  சிறப்புப்பெயரைப்  பிறதேவர்க்குக்  கூறாமையானுமுணரலாம் . பிறதேவர்கள்  நாமம்  சிவனுக்குண்மையை  வாயுசங்கிதை  யென்னும்  நூலினாலும் , சிவன் சிறப்புப்பெயர்  பிறர்க்கின்மையை  “சிவனெனுநாமந்  தனக்கேயுடைய  செம்மேனியெம்மான்”  எனவருந் தமிழ் மறையானுமுணர்க .இங்ஙனம்  அளப்பரும்  பெருமை வாய்ந்த  நம்  சிவபெருமானைப்  பரம்பொருளென  வேதாகம விசாரத்தால் உண்மையாகத்  தெளிந்து  பக்தி செய்தல் ஒருவற்குக்  கூடுமாயின் ,  அவன்  ஒருகோடி  பிறப்பிற்செய்த  நல்வினையுடையானெனப் பெரியோர் நிச்சயிப்பர் . இதனை  சிவகீதையென்னும்  பத்ம புராணத்தாலறியலாம் . அப்பல  பிறப்பினும்  புறச்சமயங்கள்  பலவற்றை  மேற்கொண்டும் , பின்னர்  அச்சமயம்  எய்தியும் , மிருதி  கூறும்  வழிச்சென்றும் , புராண  சிரவணஞ் செய்தும் , வேதமோதியும் , வேதாந்தந்  தெளிந்தும்  மேற்சென்றார்  சைவநெறியடையலாம் இதனை  “புறச்சமயநெறி நின்று  மகச்சமயம்புக்கும்  புகன்  மிருதிவழி யுழன்றும்  புகலுமாச்சிரம  , வறத்துறைகளவையடைந்து  மருந்தவங் கள்  புரிந்து  மருங்கலைகள்  பல தெரிந்து மாரணங்கள்  படித்துஞ்  , சிறப்புடைய  புராணங்களுணர்ந்தும்  வேதசிரப்பொருளை மிகத் தெளிந்துஞ்  சென்றாற் சைவத் , திறந்தடைவரிதிற்  சரியை  கிரியா  யோகஞ்  செலுத்திய பின்  ஞானத்தாற்  சிவனடியை  சேர்வர்”  என்னுஞ் சிவஞானசித்தித்  திருவிருத்தத்தா னுணர்க . இனி , இச்சைவ சமயமானது ,  ஏனைய சமயங்களை  யெல்லாம் ஒதுக்காமல்  அவை தன்னையடைதற்குச்  சோபானமாக  இருக்குமுண்மையைக்  காட்டி  , மாறுபாடின்றித்  திகழ்தலாலிதனையே  மெய்ச்சமயமென்று  அறிஞர்  கூறுவர் .  மற்றைச்  சமயங்களெல்லாம்  ஒன்றையொன்று   வெறுத் தொதுக்கு  மியல்பினவாம் .  இத்தகைய  உண்மைநெறியை  யொருவன்  எய்தினால்  அவற்குச்   சுலப கைங்கர்யங்களாலே  எவரும்  அடைதற்கரிய  வீட்டின்பத்தைச்  சிவபெருமான் தந்தருளுவன் . இதனை  அப்பையதீக்ஷிதர்  பெருமான்  றிருவாய் மலர்ந்தருளிய  ஆத்மார்ப் பணது  தியானுமுணர்க .  இத்தகைய  எளிய  செயலால்  இறைவனை  மகிழ்விக்கும் இந்நெறியை  யியற்கையிற் பெற்றாருட் சிலர்  வேறு  மார்க்கங்களைபற்றி  நிற்றல்  என்பயன்  கருதியோ ?  அங்ஙனம்  பற்றி நிற்பார்  செயலை , சிவகீதையும் , “பரமதக் கடலுட்  டுளைகுநர்  தாமும்  பைப்பய  வுயர்ந்துமே லில்லாவரமலி  சைவ  மருவுவ  ரிதங்கண்  மரபினாலறமுத லாற்றி  விரவுவ ரிறைவன்  பாததா மரையை மேவருஞ்  சைவமே  சார்ந்து மூரமறுபுறநூலொழுகுரமிழ்த மொரீஇ விடம்பருகுநர்புரைவார்”  என்று  தணிகைப்புராண  நூலாசிரியருங்  கூறுமாற்றாலுனர்க .  

என் அருமை  நண்பர்காள் !

       இத்துணை  யருமைச்  சைவநெரியை   நாம்  விரும்பிப்   பெறுமாறின்றி  நம் குலத்திற்கே  யியற்கையிலமையத்  திருவருள்  புரிந்த சிவபிரான் பெருங்கருணையைப்  பன்முறை  வழுத்துவோமாக .

                                   நகரத்தாரும்  சைவசமயமும் .

      இனி , நம்முன்னோரெல்லாம்   இச்சைவ  நெறியையே  யவலம்பித்து  ஒழுகினவரென்பதை,  நம்  மரபினர்  சரித்திரத்தானும் , சிரமாப நோதன புர  மான்மியமென்னும் இளைசப்புராண  முதலியவற்றானும்  தெளியலாம் .  நம்மவர்  ஆதியில்  நாக  நாட்டிலே  சாந்தியாபுரி யென்னு  நகரத்திலிருக்கும்பொழுது  கோபாதீசுவரசுவாமி   தரிசனமும் ,  சதாசிவ  குருபீடத்தில் தீக்ஷாகிரியையும் , பெற்றிருந்தமையானும் ,  பின்னர்க்  கலியுகம்  ௨௦௪  ல்  தொண்டைமண்டலத்திற்   காஞ்சிபுரத்தி லிருக்கும் பொழுது  சத்திபுரீசுவரர்  தரிசனமும் , அருணகிரி  சிவசங்கராசாரியரிடத்தில்  தீக்ஷாகிரியையும் மரகத விநாயகர் பூஜையும்  பெற்றிருந்தமையானும் , பின்னர்க்   கலியுகம்  2312 ல் சோழதேயத்தில்   காவிரிப்பூம் பட்டினத்திலிருக்கும்பொழுது உருத்திர பதீசுவர  தரிசனமும்  , சிதம்பரத்திலுள்ள  பதஞ்சலி  க்ஷேத்திரத்தில்  ஈசான  சிவாசாரியரிடத்தில்  தீக்ஷாகிரியையும் பெற்றிருந்தமை யானும் , கலியுகம்  3808  முதல்  இளையாற்றங்குடி  முதலிய  ஒன்பது கோயில்  சுவாமி  தரிசனமும்  பாண்டிநாட்டில்  ஈசான  சிவாசாரியராகிய   பாண்டிநாட்டு  ஆசாரியரிடத்து தீக்ஷையும்  ,  பின்  ஒரு  காரணத்தால்  கலாமடத்து ஆசாரியர்  உத்தரவுப்படி  இல்லஞ் சேரிப்பட்டணமாகிய  பாதரக்குடிச்  சிவாசாரியரிடத்துத்  தீக்ஷையும்  , பெற்றுவருகின்றமையானும் ,தொன்றுதொட்டுச் சிவாலயப்பிர திட்டை  விபூதி , ருத்திராக்ஷதாரண  முதலியன வுள்ளமையானும்  , நம்  பழமையோரும்  நாமும்  சைவநெறியையன்றி  வேறு  நெறிகளைச்  சிறிதுங்   கைப்பற்றினேமல்லே  மென்பது  வெள்ளிடை  மலைபோல் விளங்கும் .  இளைசைப்  புராணத்தில்  நம்மவர்  சிதம்பரத்தில்  அகோர சிவாசாரியரிடம்  தீக்ஷைபெற்றுப்  பின்  அவரா ஞைப்படி  பாண்டிநாட்டில்  ஈசான சிவாசாரியரிடம்  பெற்றுவருகின்றனரென வுள்ளது . நம் முன்னோர்  வகுத்த  சாதிமுறை  நியாயங்கள்  பலவற்றுள் “சிவமதத்திலேயே  இருத்தல் வேண்டும்  அந்நிய  மதங்களிற்  சேரக்கூடாது “  என்பதுமொன்று , இதனாற்  சைவத்தினம்மவர் களுக்குள்ள  அபிமானம் இவ்வளவென்பதை  யூகிக்கலாம் . எல்லாப் பொருள்களையும்  பற்றறத்துறந்தவரும் , படித்தாரைப்  பரவசமாக்கிச்   சிவானந்த வெள்ளத்து ளமிழ்த்தும் அருட்கவி  கூறும்  ஆன்ற  நாவுடையாரும் , வரம்பிலா நிதிக்கு வையத்துரும்பென மதித்து ஒழித்தவரும் ,மகாஞானியுமாகிய  பட்டினத்தடிகளும்  நம் மரபில வதரித்துள்ளரெனின் , நம்குலமாட்சி  யெவ்வளவு  ஏற்றமுடையதாகும்?  அப்பெருமான்   நம்  மரபினரென்பதனை  ,  இன்றும்  அவ் அடிகள்   மரபினராகிய  நம்  வணிக மக்கட்குப்  பட்டின சாமியார்  என்னும்  பட்டப்பெயர்  வழங்கப்பட்டும்  விவாக  காலத்தில்  எழுதப்படும்  “இசைகுடிமானம்”  என்னும்  சாசனத்தில்  வரையப்பட்டும்  வருதலால்   ஐயமின்றித்  தெளியலாம் .  இன்னும்  நம்குலத்துப்  பண்டையோர்  மாட்சிகளை  “சிவபெருமானை  மேலாத்தெளிந்த  நல்லுள்ள முள்ளோர்”  “கொடைபொறை யடக்கம்வாய்மை  குறைவிலா விரக்கமாதி, வடுவறு குணங்கள்யாவும்  வாழ்வதற்  குறையுளானோர் “  என்பனவாதி  இளைசப்புராணச்  செய்யுட்களானும்  ,  கல்வெட்டிலும்   தாமிர  சாசனத்திலுமிருந்து  சிலவருடங்களுக்குமுன்   புத்தகவுருவமாக   வெளிப்படுத்தப்பட்ட  நம்  வைசிய மக்கள் சரித்திரத்தானும் , விளக்கமாகக்  காணலாம் .  இங்ஙனம்  தக்கசீரும்  மிக்கசெல்வமுஞ்   சிவவழிபாடும் பெற்று நல்வாழ்வெய்திய  வைசியப் பெருமக்கள்  மரபிற்பிறந்த  நம்மனோர்நிலைமை  இக்காலத்தின்  மதவிஷயத்திலும் வேறுசில விஷயத்திலும்  செவ்விதாகக்  காணப்படவில்லை . சைவசம யத்தினின்றும்   அந்நியமதப்  பிரவேசஞ்செய்தல்  நம்  மக்களிடத்துச் சிறிது மின்றெனினும்,  நமக்குரிய  சைவசமயா நுட்டானங்களிற்  சிலவற்றைக்  கைவிட்டிருக்கின்றோ மென்பது  எல்லாரானும்  ஒத்துக்கொள்லற்பாலதே . சைவசமயிகளுக்குரிய  முக்கிய  கடமைகள்  விபூதி யுருத்திராக்கதாரணம்  ,  பஞ்சாக்கரஜபம் ,  சிவாலய வழிபாடு  செய்தன் முதலியவைகளேயாம். இவற்றுள் விபூதி  யுருத்திராக்க  தாரண மகிமைகள்  பிருகஜ்ஜாபாலம்  உருத்திராக்க  ஜாபால  முதலிய  உபநிடதங்களிலும்  சிவாகமபுராணங்களிலும்  விசேடமாக்  கூறப் பட்டுள்ளன .  பாச ஞான ,  பசு ஞான  நீக்கிப்  பதி ஞானமாகிய  சிவ ஞானத்தை  யளிப்பனவும் , மகாபாதகோபபாதங்களைப் போக்கிச்  சுத்திதருவனவும்  இவைகளேயா மென்பதனை  சிவவசனமாக்  கூறப்பட்ட  வடமொழி  சுலோகத்தானும் , வாக்கியங்களானுமுணர்க . விபூதி ருத்திராக்ஷங்களைத்  தாரணஞ் செய்த  பெரியோர்களை   யெவன்  பரிகாசஞ் செய்கிறானோ  அவன்  பிறப்புக்  கலப்புள்ளதென்று  அறியவேண்டு மென்பதை வாசிஷ்டலைங்கத்தாலுணர்க . இத்துணைப் பெருமைவாய்ந்த   இச்சிவசின்னங்களைத்   தொன்றுதொட்டு  நாமும் , நம்  பெண்மக்களும் , நம்  சிறார்களும்  இடைவிடாது  அணிந்துகொள்ளு வதில்  தவறு ற்றிலேமென்பது மிக்க  மகிழ்ச்சியைத்  தருகின்றது .  இவ்விடயத்தில்  நம்  மனதை   நழுவவிடாதுபற்றி  நிற்பச்செய்த  பரமபதியைப்  பன்முறை  வழுத்துவோமாக .

                                          பஞ்சாக்கரப் பெருமை

     இனி , இவற்றிற்கெல்லாம்  உயிராகவுள்ள  பஞ்சாக்கர  உபதேசத்தை   நம்மவரிற்  சிலர்  சிலநாளாகப்  பெறக்கூடாமலிருப்பது மிகவும்  வருந்தத்தக்கதே . வேதத்தில்  மந்திர  அரசாக  விளங்குவதும் ,  பிரணவப்பொருளாகவுள்ளதும், பதி பாசங்களி நியல்களைக்காட்டு வதும் ,  தன்னை நினைப்பார்க்கு  வீட்டின்பத்தைத்  தருவதும் இப்பஞ்சாக்கரமேயாகும் . இதனை ,

“ஓது  மந்திரங்கட்கெல்லா முயர்ந்திடு  முயர்ந்துநின்ற

தீதினான்  மறையின்சார  மாகுமாற்  சிவன்ற  னன்பர்

ஏதமின்  முத்திவீட்டை  யெய்திடக்  கொடுக்குமென்று 

மாதியா  யுறையுமீச  னுருவமா  யமருமன்றே”

என்னும்  வாயுசங்கிதையானுந்  தெளிக . 

     இன்னும்  இம்மந்திரம்  வேதங்களின்   மத்தியிலவைகளுக்கு  உயிர் நிலையாக  விளங்குதலைக்  காட்டுவேன் . வேதங்கள்  இருக்கு , எஜூர் , சாமம்  என மூவகைப்படும் .அவற்றி நடுவிலுள்ளது  எஜூர்  வேதம் ;  அஃது  ஏழு காண்டங்களையுடைத்து . அவற்றுள்  நடுக்காண்டமாகிய  நாலாவதுகாண்டம்  ஏழு  சங்கிதைகளையுடைத்து ;  அவ்வேழுள்  முன்பின்  ஆறு   சங்கிதைகளை  யொழித்து  மத்திய சங்கிதையின்  மத்தியிலுள்ளது  இப்பஞ்சாக்கர  மந்திரம் .  வேத புருடனுக்கு  ஸ்ரீ ருத்திரம்  கண்ணும் பஞ்சாக்கரம்  அக்கண்மணியும்  “சிவ”  என்பது கட்பார்வையுமாமென்ப .  இது , நகாராதியாகவும்  சிகாராதியாகவும்  ஓதப்படும் . சிகாராதியாக  ஓதலே  சிறந்ததாகும் .  இதனை  ஓதுந்தோறு  மனசை  யுருக்குந்  திருவாசக  ஆசிரியராகிய  ஸ்ரீமந். மாணிக்க வாசகப் பெருமானுக்குச்  சிவபெருமான் குருமூர்த்தியாக  எழுந்தருளி  யுபதேசஞ்  செய்யும்பொழுது  நிகழ்ந்த  செய்தி  கூறும்  திருவாதவூரர்  புராணம் ,

“எவர்க்கு  மெய்ஞ்ஞானமாஞ்செழுத்தை  யுமுணர்த்த வேண்டி

யவத்தொழி லகற்றியாளுஞ் சிவத்தை முன்னாக மாறித்

தவப்பெரு வடிவங்கொண்டார் தண்டமிழ் பாடுமன்பர்

செவிப்புலன் வழியே சிந்தை யுறத்திரு வாய்மலர்ந்தார்”

என்று  கூறுதலானும்  அங்ஙனம்  உபதேசிக்கப்பெற்ற  நம்  மணி வாசகனார் “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்”  என்று  திருவாய்  மலர்ந்தருளியமையானுந்  தேறுக . ஸ்ரீ பஞ்சாக்கரத்திற்  சிகாரம்  சிவமும்  ,  வகாரம்  அருளும் , யகாரம்  ஆன்மாவும் , நகாரம்  திரொதையும் , மகார மலமுமாக  அறிதல் வேண்டும் . இவற்றுள் , முன்  இரண்டெழுத்துக்கள் பதியும்  பின்னிரண்டெழுத்துக்கள்   பாசமும்  நடுகின்ற  எழுத்தொன்று  பசுவுமாகும் . பதிக்கும்  பாசத்துக்கு மிடைப்பட்டதாய்ப்   பதியோடு  சேர்ந்து  பதியாகியும்   பாசத்தோடு  சேர்ந்து  பாசமாகியும்   அப்பாசமும்  பதியுமாகமற் சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மையுடையது  பசுவென்னு முன்மையு மிதனானிலைபெறும் .  பதியோடு  கூடிய  சம்பந்தத்தை  ஞானநடனமெனவும் , பாசத்தோடு  கூடிய  சம்பந்தத்தை  யூனநடன மெனவும்  கூறுவர்  பெரியோர் . ஊன நடனமொழிந்து  ஞான நடனந்தானே   கோடற்பாலதென   வேதாகமங்கள்   முழங்கலான் நகர  மகாரங்களாகிய   மலங்களைப்  பின்றள்ளி  யகாரமாகிய  ஆன்மா  வகாரமாகிய   அருள் கூட்டச்  சிகாரமாகிய  சிவத்தில் ஐக்கியமாகும் . சிதம்பரத்திலே   ஞானமயமாகிய   சிவகாமியம்மையார்  காண  ஆன்மாக்களுய்தற்பொருட்டு   ஆனந்த தாண்டவஞ்  செய்தருளும்  சபாநாயகர் வடிவம்  ஸ்ரீ பஞ்சாக்கர   ரூபமென்பதை  உண்மை விளக்க  முதலிய  சித்தாந்த   சாத்திரங்களானுணர்க . இனி , அருமருந்தன்ன   இப் பெருமந்திரத்தை யெல்லா  இலக்கணங்களு  நிரம்பிய   ஞானா சிரியரை  யடுத்து அவரால்  சிவாகமத்திற்  கூறிய  சைவதீக்ஷை  செய்யப்பெற்று  உபதேசமுகமாக்  கொள்ளல்வேண்டும் .

                                                     தீக்ஷாமகிமை .

             தீக்ஷையாவது, ஆன்மாக்களிடத்துள்ள  சிவசக்தியை   வெளிப் படவொட்டாது  தடையாக  மறைத்துநிற்கு  மலசக்தியைக் கெடுத்துச்   சிவதத்துவத்தைக்  கொடுப்பதாகிய   சிவசக்திக் கிரியையாகும் .  இன்னும்  இச்சிவ  தீக்ஷையினாலேயே   மோக்ஷ  முதலிய  எல்லா  நலன்களும்   சித்திக்கும்  என்னுமுண்மையை  “சைவநூலிற்   கூறப்பட்டதும்  பாசமூன்றையுந்  தவிர்ப்பதும்  மேலானது மாகிய  தீக்ஷையைத்தவிர   வேரோரு  ஆசிரமும்  இவ்வுலகத்திலே   மனிதருக்கு  மேன்மையன்று . ஆதலால்  தீக்ஷையிற்றான்  மோக்ஷம் .  ஆசிரமங் களினாலுமற்றைக்  கருமங்களினாலும்   மோக்ஷமில்லை .  அத்துவ சுத்தியின்றி   முத்தியை  விரும்பு  மனிதர்  கோலின்றி  நடக்கத்  தொடங்கிய  குருடர்  போல்வர் . தோணியின்றிக்  கடலைக்கடக்க   விரும்பினவர் போல்வர்”  எனவரும்  வாயு  சங்கிதை  முதலிய  பிரமாணங்களானும்  விரித்துக் கூறும்   சிவாகமப்  பிரமாணத்தானும்  ஐயமின்றித் தெளிக, இனி, அத் தீக்ஷையானது  ஒளத்திரி  தீக்ஷையெனவும் , மானசதீக்ஷை , சாத்திர தீக்ஷை , யோகதீக்ஷை  யெனவும்  பலதிறப்படும் .  இவற்றுள்  ஒளத்திரி  தீக்ஷையானது  ஞானவதி , கிரியாவதியென  இரண்டு  வகைப்படும்  அவ்விரண்டும்  தனித்தனி  சமயம் ,  விசேடம் ,  நிருவாணம்  என  மூன்றுவகைப்படும் . இவற்றுள்  ஒளத்திரி   தீக்ஷை  பெறுதற்குப்   பிரமக்ஷத்திரிய  வசிய  சூத்திரர்களாகிய  நால்வருணத்தாரும் .  யோக்கியராவர். இன்னும்  இதன்விரிவும்  முறையும்  சிவாகமபத்ததிகளிற்   செவ்வையாக்  காணலாம் .  

        என்  இனிய  நண்பர்களே ! சிவவழிபாட்டிற்குரிய  யோக்கியதை யைப்  பறப்பிக்கும்  இத் தீக்ஷா  கிரியையை  நம்  வணிக மக்கள்  சென்ற  பதினைந்து வருடங்களாக  பாதரக்குடி  ஆசாரிய  பரம்பரையிலுள்ள  கருத்தரின்  வியவகாரத்தால்  இழந்து  அருமையாகப் பெற்ற  பிறப்பின்  பயனைப்  பெறாதிருக்கின்றனர் .  பதினைந்து  வருடங்களுக்கு  முன்னரே  தீக்ஷை  பெறத்தக்க  பருவமுள்ளவர்களெல்லாரும்  தீக்ஷையுடையரா யிருக்கின்றனரோ  வெனின் ;  அதுவுமில்லை .  அதற்குக்  காரணம் , விவாகமுடிந்தபின்னர்  தீக்ஷை செய்து கொள்ளல்  என்னும்  வழக்கமும் ,  பன்னூற்றுவர்  ஒன்றுகூடியே  செய்துகொள்ளவேண்டுமென்னும்  வழக்கமுமேயாகும் .  இவ்வழக்கங்கள்  சில  செளகரியங்களைக்  கருதி  யாசகரிக்கப் பட்டவை களேயன்றி  நூல்களால்  ஏற்படவில்லை யென்பது  யாவரு முணர்வர் . தீக்ஷை விவாக காலத்திற்கு  முன்னரே  ஏழாம்  ஆண்டிலாவது  ஒன்பதாம்  ஆண்டிலாவது  பெறவேண்டுமென்று  ஆகமம்  கூறுதலை  நோக்காது   புத்திர  பெள த்திரர்களையெல்லாங்  கண்டுகளித்தபின்னர் அவரெல்லாம்  பக்கத்திற்  சூழ்ந்துமகிழத்  தீக்ஷை  செய்துகொள்ளும்படி  யெவ் வாகமம்  விதிக்கின்றதோ ?  அறிந்திலேன் . அஃதொன்றோ  , ஒருமுறையிற்  குண்டமண்டலமிட்டு   ஆகுதி  முதலியன  செய்து  ஒருங்கே சிலர்க்கு  தீக்ஷை  செய்யவேண்டுமாயின்   தனித்தனியும்  சில  சம்ஸ்காரங்கள்  செய்தல்வேண்டுமென  ஆகமங்கள்  கூறியிருப்ப  . அதனை  நோக்காது  பன்னூற்றுவ ரொருங்குகூடி  ஒருவரை யொருவர்  சரீரபலத்தாலும்  பொருள் வலியாலும்  பிற்படுத்தி மிக்க  சிரமத்தோடு   முந்துதல்  எப்பயன்  கருதியோ ?  இனியேனும் ,  இத்தகைய   இல்லாத  விதிகளை   வழக்கமென்று  கொள்ளாமல்   முற்குறிப்பிட்டபருவம்  வந்தவுடனே   ஆசாரியனிருக்கு மிடத்திலாவது  அன்றி  ஆலயங்களிலாவது  விதிப்படி  தீக்ஷைபெறும்  முறையை  நம் பழக்கத்திற்  கொண்டு  வரவேண்டியது  அவசியமென்று  தெரிவித்துக்கொள்கின்றேன் . அநுட்டானம்  ஜபமுதலியன  சிறு பொழுது முதல்  ஆசரித்துவந்தால்  மனம்  அவற்றிற்  பதிந்து  நிற்பப்  பயனுறுவேமேயன்றி  ,  சிவகீதையிற்  கூறியபடி  கூற்றுவனார்  இருப்புப்  பாசத்தானும் ,  சுற்றத்தார்  உறவுக் கயிற்றானும்  இழுத்தற்குரிய பருவம்  நெருங்கி வரும்பொழுது  நாம்  செய்யக்கடவது  யாதுள்ளது .  

                                               ஆசாரிய  இலக்கணம் .

           இனி , இத்தீக்ஷாகாரியஞ்  செய்தற்குத்  தக்க  ஆசாரியராவார்  யாவரெனின் ;  சமயவிசேட  நிருவாண  தீக்ஷையுடையராய் , ஆசாரியாபிக்ஷேகம்  பெற்றவராய்  இலக்கிய  இலக்கண  தருக்க  நூல்களைக்  கற்றுணர்ந்தவராய்  , வேதாகமங்களை  யோதித்  தெளிந்தவராய் ,சித்தாந்த  சாத்திர  ஆராய்ச்சியுடையரா யுள்ளவரே  யாவர் .  நான்கு  வருணத்தாரும்  ஆசாரியராதற்குத்  தக்கவரேயாவர்  . இதற்குப்  பிரமானம்  வடமொழியில்  வரும்  சைவபுராணத்தானும்  ஆகமங்களானுமுணர்க .  இந் நான் கு   வருணத்தாருள்ளும்   பிராமணர்  தம்  வருணத்தாருக்கு , மற்ற  மூன்று  வருணத்தாருக்கும்  க்ஷத்திரியர்  தம்மவர்க்கும்  மற்ற  இரண்டு வருணத்தாருக்கும்  வைசியர்  தம்மவர்க்கும்   சூத்திரர்க்கும் ,  சூத்திரர்  தஞ்சாதியினர்க்கும்  ஆசாரியராகலாம் . இவருள்  முதன் மூவர்  வேதாகமங்களை  யோதுதற் கும்  பின்னவர்  ஆகமங்களை  யோதுதற்கும்  அதிகாரிகளாவர் ..  ஆகமங்களை  யோதுதற்கு   நால் வருணத்தாரும்   சிவ  தீக்ஷை  பெற்றா லொழிய  அதிகாரிகளாகார் . பிரமசரியாசிரமம் , கிருகத்தாசிரம மாகிய   இந் நிலையுடையாரே  ஆசாரியராதற்கு  யோக்கியராவர் . வானப்பிரத்தம்  சந்நியாசம்  ஆகிய  இந்  நிலையுடையார்  ஆசாரியாரா தற்கு  அருகரல்லர் .  இதற்குப்பிரமாணம் “பிரமசரிகிருகி யென்னவே பேசு, மிருவருமேதேசிகரென்றெண்”  சந்யாசி  பாரியுட னேவனத்திற் றங்குமவ , னென்னுமிவர் தேசிகரன்றே , எனவரும்   சைவசமய  நெறி வெண்பாக்களாலுணர்க . சைவாகமத்தில்  ஞானகாண்டம்  கிரியா காண்டமாகிய  இவைகளில்  ஓரிலக்கங்கிந்தமேனும்  ஓதினவரே  ஆசாரியாரெனவும் , ஐம்பதினாயிரம்  அல்லது  இருபத்தையாயிரங்  கிரந்தமேனும்  ஓதினவராக இருத்தல்  வேண்டுமெனவு  நூல்கள்  கூறுகின்றன .  இவ்வளவும்  வடமொழியில்  தெரிந்தவராக  இருப்பினும், இது தமிழ்  நிலமாதலின்   தம்மையடைந்த  மாணாக்கர்கள்  நல்வழிப்படப்  போதித்தற்கு   அம்மாணாக்கரெல்லாம்  வடமொழிப் பயிற்சி பெற்றிருத்தல்  கூடாமையால்  தமிழிலுள்ள  இலக்கிய  இலக்கண  சித்தாந்த  சாத்திரங்களையும்  தேவார  திருவாசக  முதலிய  அருட்பாக்களையும்  ஓதித் தெளிந்தவராகவும்  இருத்த்ல்வேண்டும் .  ஜீவகாருண்ணியம் , கடவுட்பக்தி , நடு நிலை , சொல்வன்மை  , பிறர்மனைநயவாமை , வரவின் மகளிர்ச் சேராமை  முதலிய  உயர்குணங்கள்   வாய்ந்தவராகவு மிருத்தல் வேண்டும் . தம்மைச் சார்ந்த  சுற்றத்தாரைப்  பேணுதலினும்  வேறு பல உலக விடயங்களினும்  , பொருட்சேர்த்தலினுமே  முக்கிய  நோக்கமுடை யாரை   ஆசாரியராகக் கொள்ளல்  கூடாது .  அவர்  ஆசாரியராயின்  தம்மையடைந்த   மாணாக்கர்களைப்  பொருட்பற்றிக்  கருதுவாரே யன்றிஅன்னார்  நன்மையெய்தலைக்  கருதமாட்டார் .  கருத்துவகை யங்ஙனமாயின்   அவரிடத்துப்  பெறுந்தீக்கை   யுபதேசங்கள்   உரிய பயன்களைச் செய்யா .  இனி  , எல்லா  இலக்கணங்களு நிரம்பிய   ஆசா ரியரிடத்து  மாணாக்கர்கள்  நடந்துகொள்ள வேண்டியவை  பலவுல .  வடமொழிப் பிரமாணப்படி  மாணாக்கன்  உடல்  பொருள்  ஆவி  மூன்றும்  ஆசாரியர்பொருட்டுத்  தத்தஞ்  செய்தற் குரியவனாகின்றா னெனின் ;  வேறு  விரிப்பதெற்றிற்கு ?  இனி,  நம்  வணிக  மக்கட்கு  இற்றைஞான்று   ஆசாரியத்  தானங்களாகவுள்ளவை  கலாமடத்துள்ள  பரம்பரையும் , பாதரக்குடிப்  பரம்பரையுமேயாம் . இவை  ஈசான  சிவாசாரிய  பரம்பரையென்று  நமது  சரித்திரமும்  இளைசைப் புராணமுங்   கூறுகின்றன . சில வருடங்களாக  பாதரக்குடியாரும்  நாமும்  ஆசாரிய  மாணவக  முறைக்கு  விரோதமான  செய்கைகளிற் றலைப்பட்டுப்  பொருளையுங்  காலத்தையும்  வீணாக்கினோம் .  அவ்வாசாரியர்  நம்மிடத்துச்  செய்யவேண்டியவைகளிற்றவறுறினும்  , நாம்  அவரிடத்து  நடந்துகொள்ளவேண்டியவைகளிற்   பிழை படினும்  ஆசாரிய  சிஷ்ய  முறையை  நோக்கிப்பொறுத்துக்கொண்டு  நடக்க வேண்டியவைகளைச்   சீர்பெறச்  செய்தலை  விட்டு  இங்ஙனம்  கலாம்  விளைத்தல்  நம்மவர்க்கும்  அவ்வாசாரியர்க்கும்  தக்கதொரு  காரிய மன்றாகும் . கூடிய  விரைவில்  எவ்வித  நெறியானும்   அவ்வாதீன  பரம்பரயைச்   செவ்விதாக்கிச்  சிவாக மோக்தசைவா நுட்டானத்தைப்  பெறவேண்டுவது   நமது  கடமையாகும் . தற்போது  கலாமடத்திலும்   சமீபகாலத்திற்   சிவபதமெய்திய  ஆசாரியர்க்குப்பின்னர்  இன்னாரை யத்தானத்தில்  உரியவராச்  செய்தல்  என்னும்  நிச்சயம்  உண்டாகாமல்   அவ்வாதீன  சீடர்களாகிய  நம்மவரும்  தீக்ஷையின்றி  யிருக்கின்றனர் . கூடிய விரைவில்  அவ்வாசாரியமூர்த்திகளின்  சுற்றத்தாருள்  சிறுவராக  இருப்பினும்  உரிய  குணங்களும்  பிற  இலக்கணங்களும் , அமைந் திருப்பின்  அத்தானத்திலமரச்செய்து  பின்னர்க் கல்வி  விடயத்தில்  நாம்  அஜாக்கிருதையாக  இராமல்  ஒவ்வொரு நாளும் நங்  கவனத்தைச்  செலுத்தி  முன்  குறிப்பிட்ட  இலக்கணங்களெல்லாம்  அவரிடத்து நிரம்பும்படி செய்தல்வேண்டும் .  இவ்விடயத்தி லிப்பொழுதே   நம்  கவனஞ்  செல்லுதலின்றெனில்  பின்னர்  மாறுபாடு  பல  விளையு மென்பதை  நீங்களே யறிந்துகொள்வீர்கள் . ஆசாரியர்  தக்க கல்வியும்  ஒழுக்கமும்   நிரம்பினராக  இருத்தல்  நமது கல்வியொழுக்கங்களின்   விருத்திக்கேதுவாகும் .  இவ்விடயத்தில்  தக்கபடி  காலத்திற்  கேற்றவாறு   திருத்திக்கோடற்குரிய   அறிவும்  ஆற்றலு  நிரம்பிய   உங்களுக்கு  யான்  கூறவேண்டுவது  யாதுளது ?  முடிவாக்  கூறுமிடத்து  நாம்  மத  விடயமாகத்   திருந்தவேண்டியவைகளிலிது   முக்கியமான  தொன்றாகும் .  எவ்வாற்றானும்  இவ்விரண்டு  ஆதீனங்களையும்  கூடிய  சீக்கிரம்  சீர்படுத்திக் கோடல்  நம்  கடமையே .

                                                 ஜீவகாருண்ணியம் .

          இனி , எல்லா  மதத்தினரு மேற்கொள்ளத் தக்கதும் , நம்  சமயத்திற்குச்  சிறப்பாக  வுள்ளதுமாகிய  ஒழுக்கம்  ஒன்றுள்ளது .  அதுதான்  ஜீவகாருண்ணியமாகும் . இவ்வொழுக்கம்  எல்லாவற்றினுந்  தலைசிறந்த தென்பது  பல நூல்களின்  கருத்து . இதனை  மேற்கொள்ளு வோர்  இன்றியமையாது  மேற்கொள்ளவேண்டியது புலால்வுணவை  நீக்குதலேயாம் ஒருவன் இவ்வுணவைக்  கொள்ளினுஞ்  சீவர்களிடத்துக்  கருணையுடையனாதல்  கூடும்  எனக்கருதுவாருமுளர் .அவர் , “பொருளாட்சி  போற்றாதார்க் கில்லை  யருளாட்சி ,  யாங்கில்லை  யூன் றின்பவர்க்கு  “  என்னுந்  திருக்குறளையும் , அதன்  விசேடவுரையில்  “ஊன்றின்றாராயினும்  உயிர்கட்கொரு  தீங்கு நினையாதார்க்கு   அருளாடற்கிழுக்கில்லை  யென்பாரை  மறுத்து  அஃதுண்டென்பது ….. கூறப்பட்டது “  என்று  கூறிய  பரிமேலழகர்  கருத்தையுஞ்  சிந்திப்பாராக வேதங்களில்  வேள்வி  நிமித்தம்  கோறலும்  ஊனுகர்தலும்  துறக்க  வின்பங்களை விளைக்குமென்றும்   பாவச்செயலாகா வென்றும்  விதித்திருப்பவும் ,  ஒவ்வோரொழுக்கத்தையுஞ்  செவ்விதுணர்ந் திருவள்ளுவதேவர்  “அவிசொரிந்தாயிரம்  வேட்டலினொன்றன்  , உயிர் செகுத்துண்ணாமை  நன்று”  என  அவ்வேள்விகளான்  வரும்பயனினும்  இக்கொல்லா விரதத்தான் வரும் பயனே  பெரிதாமென்று  கூறினார் .  இவ்விழுமிய  அருளொழுக்கத்தை   நம்மவரிற்  சிலர்  கைநழுவ விட்டிருக்கின்றனர் . நம்  பழஞ் சரிதத்தில் வகுத்த   சாதி முறை நியாயங்கள்  பலவற்றுள்  “ஜீவவதையான  வியாபாரங்கள்  செய்கிற தில்லை” என்பது மொன்று. இதனால்  வியாபார  நிஷேதந்தானே யன்றி  உண்ணல்கூடாதென்பதின்றேயெனின்நம்மவரிடத்துப் புலாலு ண்ணல்  அக்காலத்தின்மையானும் , சமயாசாரம்  இடந்தராமையான்  அதனை யெதிர்காலத்திற்  கொள்ளற்கு  ஒருப்படாரெனுந் துணிவானும், வியாபார  நிமித்தங்  கோடல்  ஒரு சமயம்  நேரவுங்கூடும் ; அதனை  விலக்கலே  யவசியமாகுமென்னுங்  கருத்தானும்  அங்ஙனம்  எழுதினா ரென்க . முன் இல்லாத இப்புலாலுணவை  நம்மவரிற்  சிலர்  பின்  விரும்புதற்கேது  என்னை  யெனின் ;  இந்நாட்டில்  நம்மவர்  குடியேறிய பின்னர்  இடையே  சிலகாலம்  புலானுண்ணன்  முதலிய  நிஷேதாசார முடைய  அநாகரிக மாக்கள்  பழக்கத்தில் விருப்புடையரா யிருக்க நேர்ந்தமையான்  அவர்  வழக்கங்கள் நம்மவரையும் பற்றி யிருக்கலாம்  அதனாலே தான்  பரமபதியாகிய  சிவ பெருமானை யன்றி வேறு  தெய்வங்களை வழிபடுதலில்லாத நம் மக்களிற் சிலர்  பிற்காலத்தில் அற்பபிரயோஜனங்களைத்  தரக்கூடிய  காளி, கருப்பன்  முதலிய  சிறு தெய்வ வழிபாட்டையுங்  கைப்பற்றினர்போலும் .”யாதொரு தெய்வங்  கொண்டீரத்  தெய்வமாகி  யாங்கே , மாதொருபாகனார்  தாம்  வருவர்”  என்றபடி.  அப்பரமபதி  நாம்  விரும்பிய  உருவத்தைக்  கொள்ளினும்  பலனளிப்பதில்  அவ்வவ்வுருவங்களுக்குத்  தக்கபடி  கொடுக்குமியல் பினராதலானும், நிரதிசய  இன்பமாகிய  மோக்ஷத்தைத்  தரத்தக்க  அவரது உண்மையுருவத்தை வழிபாடு  செய்தற்கு   யோக்கியதையுடை யோர்  அதனை யொழித்து அற்பப்  பிரயோஜனத்தைத்  தரத்தக்க  வேற்றுருவங்களைவழிபடுதல்  தக்கதன்றாதலானும் ,  சைவர்களாகிய  நமக்கு  அவ்வழிபாடு  அவசிய மின்றென்க . அரச சக்தியொன்று  அரசன் முதல்  சிறு சேவகன்  வரைய மைந்திருப்பினும்  அரசனிடத்துப்  பெறு  நன்மை  கீழதிகாரிகளிடத்துப்  பெறுதற்குக்  கூடாதவாறு போல  பரமேசுவரனுடைய  சக்தி யெல்லா வுருவங்களினு  நிறைந்திருப்பினும்  சிவலிங்க  முதலிய  வழிபாட்டினாற்  பெறும்பயன்  வேற்றுருவங்களின்  வழிபாட்டாற்  பெறுதல் கூடாதென்க .   இது  கருதியே  ஸ்ரீ சங்கராச் சாரிய  சுவாமிகளும் தமது சிவானந்தலகரியிற்  கூறியருளினார் .  இவ் விசாரத்தால்  நம்மவரிற்  சிலர்  இடைக்காலத்தில் மேற்கொண்ட  புலாலுணவையும்  சிறு தெய்வ  வழிபாட்டையும் ஒழித்த்ல்  வேண்டு மென்பது போதரும் . ஒருவன்  குழவிப்பருவத்தே  தன்  அவயங்களில்  மறைத்தற்குரியவைகளை   மறையாமையும் , அறிவு  முதிர்ந்த பின்னர்  மறைத்துக்கோடலும்  இயல்பாதலின்   இதுவரை  மேற்கொண்ட  அவை யிற்றை யினி யொழித்தல் தகுமென்க.

                                                   பெண் கல்வி.

       இனி , நம் பெண் மக்கள் விஷயமாகக் கவனிக்க வேண்டியவை களுஞ்  சிலவுள .  எல்லாக்கற்பிலக்கணங்களு  நிரம்பப்பெற்ற  நம்  பெண்மக்களுட்   சிலர்  நம்  சமயாசாரப்படி  கிருகத்திற்  செய்ய வேண்டிய   நித்தியகாரியங்களைச்  செவ்வையாகச் செய்தலிற்   சிறிது அசிரத்தை கொள்ளுகின்றனர் .  அதனையும் ,  குணவகைகளின்   மாறுபட்டிருப்பின்  அவற்றையும்  திருத்தலும்  நித்திய  ஒழுக்கங்களைக் கற்பித்து  அவ்வழி நிறுத்தலும்  அவரவர்  புருடர்களுக்குரிய  கடனாகும். இவற்றிற்கெல்லாம்  நம்  பெண்மக்களுங்  கல்வியுடையராயிருப்பின்  மிக நலமாகும் . பண்டைக்காலத்தில்  ஒளவையார்  பூதப்பாண்டியன்   றேவியார் ,  வரதுங்கராமபாண்டியன்  தேவி  முதலிய  பெண் மக்கள் இலக்கிய  இலக்கண  வரம்பு கண்ட பெரும்  பண்டிதைகளாக   விளங்கிரென்பது  அன்னாரியற்றிய  அருமை  நூல்களானுஞ்  செய்யுட்களானும் விளங்குகின்றது . பெண்மக்கள்  கல்வியுடையவரா யிருப்பின்  நிலைபிறழ்ந்து கெடுவர்  என்று  கூறுவாருஞ்  சிலருளர் . கல்வி  யில்லாத பெண்கள்  சிலர்  முறைபிறழ்ந்து கெடுதற்கு  அவர்  கூறுங்  காரணமென்னையோ?  கல்வியுடையவராயிருப்பின்  கூடியவரை   தம்  மதிப்பைப்  பேணிக் கொள்வதிலவர்  கருத்துச்செல்லு மென்பதிலையமின்று . இப்பெண்கல்வி விடயமாக  இக்காலத்து நாகரிகமக்கள் பலர்  பல பத்திரிக்கைவாயிலாகவும்  புத்தகவாயி லாகவும்  வெளியிட்டு  வருகின்றனராதலின் , யானிதுவிஷயமாக  விரிக்காது  ஒன்று கூறி  முடிக்கின்றேன் .  அஃதாவது நம்  பெண் மக்களைச்  சிறுபருவத்தில்  தந்தைமார்களும்  பின் அவரவர்  புருடர்கலும்  கல்வியானும்  பழக்கத்தானும்  சமயாசார  நியமத்திற்   சிரத்தையுடையராகச்  செய்வதேயாம் .

                                                  விவாகமுறை

          இனி ,நம்மவர்  விவாக  முறையைப்பற்றிச்  சில  ஆராயவேண்டுத வசியமாகின்றது . விவாகமாவது , பிரமசரியம் , வானப்பிரத்தம் , சன்னியாசம் என்னு  மூவகை  நிலையிலுள்ளாரும்    அவரவரொழுக்க நெறிகளின்  முடியச்செல்லுமளவும்   அச்செலவிற்குப்  பசி நோய் குளிர் முதலியவற்றான்  வரும்  இடயூறுவராமல்  உண்டியு மருந்தும்  உறையுளு முதலியவுதவி அவ்வந்நெறியில்  வழுவாமற்  செலுத்தற்கும்   பாதுகாப் பின்றித்  துன்புறுவோர்க்கும்   வறுமையாளர்க்கும்   தென்புலத்தார்க்கும் , முறையே  களைகணாதற்கும்  உணவு  முதலிய  கொடுத்தற்கும் , நீர்க்கடன்  முதலிய  செய்தற்கும்  உரித்தான  இல்லறத்தை  நடாத்தற்கு  ஒரு  தலைவனும்   தலைவியுங்  கூடுங்  கூட்டமாகும் . இம்மணம்  எட்டுவகைப்படுமென்று  நூல்கள்  கூறுகின்றன . இவற்றுள் , சில  மணம்  உயர்ந்த வருணத்தாரானும்  சில மணம்  இழிந்தவர்களானுங்  கோடற்  பாலனவாம் . இவற்றுட்பிராசாபத்தியம்  என்னு  மணமே  மகட்கொள்ளு வோரிடத்து  கொடுப்போர்  பரிசம்  வாங்கலாமென்று  விதிக்கின்றது .  மற்றவை  இங்ஙனம்  விதித்தில . இனி , அப்பிராசாபத்திய  விவாக  விதியிற்  கூறியாங்குப்  பரிசம்  வாங்குவதானால்  எவ்வளவு  வாங்கலாம் ?  அங்ஙனம்  வாங்கியவற்றை  யென்செய்யலாமெனின்  : வாங்கும்  பரிசத்துக்கிரட்டி  சேர்த்து  தம்  மகட்குக்  கொடுத்துவிடல்   வேண்டுமென்று  அவ்விவாக விதி கூறுகின்றது .  இதனை   “அரிமதருண் கணாயிழை யெய்துதற்குரியவன்  கொடுத்த  வொண் பொருளிரட்டி , திரிவின்றந்தை  திண்ணிதிற்  சேர்த்தி , யரியதங்கிளையோடமைவரக் கொடுத்தல் ,  பிரிதலில்லாப்   பிராசாபத்தியம் .”  என்னுஞ் சான்றோர்  கூற்றானுமுணர்க . ஆனால் , இதனினின்றும்  நாம் ஊகிக்கவேண்டியது  பெண்ணுக்குரிய  சீர்  முதலியவை  கொடுத்தற்குப் போதிய  பொருளில் லாதானொருவன் , அதற்கு  வேண்டிய   அளவுமுழுதும் வரனைச் சேர்ந்தாரிடத்து  வாங்கிக்கொடுப்பினுங்  குற்றமின்றென்பதேயாம் .  இங்ஙனமின்றி  மிகுதியாகப்பொருளை  வாங்கிக்கொண்டு   பெண் கொடுத்தலும் , அப்பொருளாற்றம்  சீவனகாரியம்   நடைபெற விரும்புதலும்  மிக்க பாவச்செயலாகுமென்று  அற நூல்கள்   கூறுகின்றன . இதனை  மநுஸ்மிடுதியானும் ,  “பொருள்விழைந்த ணங்கைக் கொடுத்தவன்றனக்கும் புகன்ற  முற்குற்றமேயடுக்கும் “  எனவரும்  தமிழ்ச் செய்யுளானு முணர்க .  இவ்விலக்குச் செயல்  நம்மவரிற்  சிலரிடத்து சற்றுப்  பெருகிவரத்  தலைப்படுகின்றது.  அறிவுடையோர்  கூடியவரை  இதனைச்  சிந்தித்து  நூன்முறையையுங் குலப்பெருமையையும்  போற்றுவாராக .  இனி , நம்மவரிற்  றக்க பொரு ளுடையாரிடது  இச்செயலின்றெனினும்  வேறொன்று  அவர்கள் சிந்திக்கவேண்டியதுளது . என்னெனில் : ஓரிளைஞனுக்கு  அவன்  வயசினுமேற்பட்ட  வயசையுடைய  பெண்ணை  மணம்  புணர்த்துகின்றனர் . இவ்விவாகம்  மேற்கூறிய  எண்வகை  மணத்துள்  விலக்கியவற்றின் பாற்படும் .  ஓரிளைஞன்  தன்வயசின்  மேற்பட்ட  பெண்ணோடு  கூடுவானாயின்  அவற்குப்  பல  தீங்குகள்  நேரிடுமென்று  நூல்கள்  கூறுகின்றன .  இம்மட்டோ  அவர்களுக்கு  தேக திடம் குறையுமென்றும்  அற்ப  ஆயுளையுடைய  சந்ததி யுண்டாமென்றும்  ஆயுர்வேதங்  கூறுகின்றது . வதூவரர்களின் வயசினி யமத்தைப்பற்றிய  பண்டைக்கால  வழக்கை  நோக்கினாலிப்போது  நமக்குச்  சிறிதும்  பொருத்தமாகத்  தோற்றாது .ஆயினும்  நான்கு  வருடங்களாவது   பெண்மகட்குப்  புருடன்  மூத்தவனாக  இருத்தல்  வேண்டும் . இதனால்  வரு  நன்மையையும்  மணமக்களின்  மிக்க  சிறியபருவத்திற் செய்யப்படும்   விவாகத்தினால்  வருந் தீமைகளை யும் நன்கு  ஆராய்ச்சிசெய்த பரோடாதேயத்தரசரும்   திருவனந்தபுரத்து  அரசரும்  இது  விஷயமாகச்  சிலவிதிகளை  யேற்படுத்தி  அவை  தந்தேயங்களிற்  பரவச்செய்திருக்கின்றனர் . மிக்க  இளம்பருவத்தில்  விவாகஞ்  செய்தலே  பல  பெண்மக்கள்  “மக்களிழந்த விடும்பையினு மனையாளிழந்தவிடும்பையினும் ,மிக்கவிடும்பையோவாதவி தவையி டும்பை”   என்று  கூறியபடி  வைதவ்வியம்  அடைந்து  துன்புறற் கேதுவாகுமென்பதும் , தக்கபருவம்  வந்துழிச்செய்தல்  இவ்விடர் பெரும்பாலு நேராதென்பதும்  அவர்கள்  கருத்தாகும் .  இவ்விஷயங் களை  நம்மனோருஞ்  சிந்தித்தலவசியமாகும் .   

                               விவாக  முதலிய  சடங்கு – விதிகள்

       இனி, இவ்விவாக  காலத்திற்  செய்யப்படுங் கிரியைகளும்  கிராத்தம்  சஷ்டியப்த  சாந்தி  முதலிய  கிரியைகளும்  விதிப்படி   நடைபெறுவதாகத்  தெரியவில்லை . விதியாவது வைசிய  தர்மத்திற்குரிய  வைதிக விதியை யன்று . அத்தருமாசரணை  சிலகால முன்னர்க்   கைவிடப்பட்டிருப்பதால்  சற்சூத்திரர்க்குள்ள  சிவாகம  விதியையே  நாம்  கொள்ளவேண்டுமென்பது  என் கருத்து . நாம்  இப்பொழுது  செய்யுஞ்  சிராத்தக்கிரியை  வைதிகமுறையுமின்றி   ஆகமமுறையுமின்றிச்  செய்விக்கும்  புரோகிதர்களின்  மணமுறை யைப்  பொறுத்திருப்பதாகத்  தெரிகின்றது .  அது  விஷயமாகச்  சேகரிக்கும்  பதார்த்தங்களும்   செலவுசெய்யும்  பொருள்களும் அளவிற்கு  மேற்பட்டவைகளே . எவ்வளவு   கொடுப்பினும்  புண்ணியமுண்டென்பதில்  ஐயமின்று . அங்ஙனங்  கொடுக்கப்படு வனவற்றைக்  கிரியையை யொழுங்குற   நடத்திக்கொடுத்தால்  மிக்கநன்றாகும் .  சஷ்டியப்த  சாந்தியில்   மிக்கப்பொருளைச்  செலவு செய்கின்றோம் . அச்சாந்திக்குரிய  சிவாகம பத்ததிகளிற்  கூறப்படும்  விதிகளைக்கவனித்தல்  சிறிதுமின்று .  அந்தணர்களெல்லாம்   பதினைந்து  கலசம்  வைத்துக் கிரியை  நடத்துகின்றனர் . .  நம்மவர்  சாந்தியில்  அறுபதுக்குமேற்  கலசங்கள்   பரப்பப்படுகின்றன.  அங்ஙனம்  பரப்பும்படி  விதித்த  நூல்  யாதெனவும்  , அந்நூலிற்  கூறப்பட்ட  அச்சாந்திக்குரிய  பிறகிரியைகள் யாவெனவும்  விசாரித்துச்  செய்தல் எனலாம் .  இவ்வாராய்ச்சி  நம்மனோரைப்  பொறுத்ததே  யன்றிப் புரோகிதர்களைப்  பொறுத்ததன்று . ஒழுங்காகத்  தெரிந்து செய்யவேண்டுமென்று   புரோகிதர்களைத்  தூண்டுவேமா யின்   அவர்கள்  கவனிப்பார்கள் . இச்செயல்களை  நம்  சமய  சாத்திர  விதிப்படி   திருத்திச் செய்துகோடல்  நம்மவர்  கடமையாகுமென்பதை  ஞாபகப்படுத்துதற்கே  யீண்டுச்  சில கூறினேன் .

                                                  வி யா பா ர ம் .

இனி , வியாபார  விஷயமாகக்  கவனிக்கவேண்டியவைகளுஞ்  சிலவுள.  முற்காலத்திற்  பெரும்பாலும்  பண்டமாற்ருதலானுஞ்  சிறுபான்மை  வட்டி  வாங்குதலானும்  நம்மவர்  பொருளீட்டியதாகத்  தெரிகின்றது .  தற்காலத்திற்  பெரும்பாலும்  வட்டித் தொழிலே  செய்தலும்  தத்தமக்குள்ள  முதலளவிற்கு  எவ்வளவோ மடங்கு  அதிகமாகக்  கடன்  வாங்குதலும்   மேற்கொண்டிருக்கின்றனர் . கடன்  மிகுதியாக  வாங்குத லான்  நம்மவருட்  சிலர்க்குச்  சமீபகாலத்தினேர்ந்த  துன்பத்தை நிதரிசனமாகத்  தெரிந்திருக்கின்றோம் . அறநூல்கள்  வட்டித் தொழிலை  முற்றிலுங்கூடாதென்று   விலக்கவில்லை . ஆனால் , சில  நியமங்களைக்  கூறுகின்றன . அவற்றைக் கைக்கொண்டு  ஒழுகுதலினும்  பண்டமாற்றுத் தொழிற்  சாலைகளாற்   பொருளீட்டல்   தரும முறையாகவும்  பொருட் பெருக்கத்திற்  கேதுவாகவு மிருக்கும் .  இவ்விஷயங்களை நன்றாய்ந்து  வியாபார நடத்து மேனாட்டார்  நம்மினும்  மிக்க  பொருள்  படைத்திருத்தலைக்  காட்சியிற் றெரிந்திருக்கின்றோம் . தொழிற்சாலை  முதலியவற்றால்  நமக்கு வட்டியினுமிக்க  பொருள்  வருவாயும்  பல  ஏழைமக்கட்கு  உய்யும்  வழியும்  உண்டாகின்றன . உலகத்துள்ளா ரொவ்வொருவரும்  தாம்  செய்யும் , ஒவ்வொரு  காரியத்தினும்  தம்பயனைக்  கருதுதலோடு  பிறர்  பயனையுங் கருதவேண்டியது முக்கியமாகுமென்று  முது  நூல்கள்  கூறு கின்றன . ஆதலின்  இவ்விஷயத்தை ஆலோசித்து  நடத்தன் மிக நலமாகும் .  

                                               த ரு ம ங்  க ள்

      இனி , நம்மனோர்  தருமங்களைப்பற்றிச்  சில  கூறுவேன் .நம்  வணிக  மக்கள்  செய்துவரும்  தருமங்களுள்  முக்கியமானவை , சிவாலயத்திருப்பணி  ,  அன்னசத்திரம் , வேதபாடசாலை ,  வடமொழி வித்யாசாலை  யென்பவைகளேயாம் . இவற்றுள்  வடமொழிக்   கலாசாலைபற்றி  முன்னர்க் கூறியுள்ளேன் .  மற்றவைகளைச்  சிறிதா ராய்வேன் .  சிவாலயத்  திருப்பணி , பதி புண்ணியமாதலானும் , நம்  சமயத்தைப்  பாதுகாத்தற்கும்  உலகத்துள்ளார்  பக்திநெறிப்படுதற்கும், உரியதாகலானும்  நாம்  செய்யவேண்டிய  தருமங்களுள்  மிகமேலான   தருமமென்பதில் ஐயமின்று . ஆனால்  அவ்வாலய தருமஞ்  செய்தற் குரிய இடத்தை  நோக்கி  யளவோடு செய்தலே  போதியதாகும் .  அங்ஙனமின்றி வணங்குவார்   சிலரிருக்கும்  ஊர்களில்  இலக்ஷக்கணக் கான  திரவியங்களைச்  செலவிட்டுச் செய்தன் மிகைச் செயலேயாகும். பேரூர்க்குத்   தக்கவாறு  பெரும்பொருள் செலவிடல் கூடுமாயினும்  சிற்றூர்க்குத்  தக்கவாறு  சுருக்கமான  பொருளால்  நீண்டநாள்  நிலை பெறச் சுருக்க அளவிற்  றிருக்கோயில் அமைத்தல் போதாதோ?  இதுவரை நம் வணிகமக்கள் செய்துவந்த இச்சிவாலய  நிருமித்தல், திரு நந்தனம் வைத்தல் , பசுமடம்  தாபித்தன்  முதலிய  எல்லாத் தருமங்களும் சைவசமயத்தில் நமக்கு இருக்கும் அன்பைக்காட்டும்  அறிகுறிகளேயாகும் . இனி , இக்காலத்திற்கேற்ற   அறங்களையும்  புதியமுறையிற்  றோடங்கன் மிகநலமாம் .அவற்றுள் நம்மவர்  வசிக்கும்  இந் நாட்டில்  பலரும்  நடத்தற்குரிய  வழிகளைச் செவ்வைசெய்தல் மிக முக்கியமானதொன்றாகும் . ஆனால்  இப்புண்ணியம்  பசு புண்ணியமாதலின்  பதி புண்ணியத்திற்  றாழ்ந்தது தானே யெனின் ; அப்பதி புண்ணியத்தைப்  பயப்பித்தற்கு  இது  சாதனமாகலானும் , திருக்குறளில்  “ஒப்புரவறிதல்” என்னும்  அதிகாரத்தில் இது முதலிய  அறங்கள்  மேலானவை யென்றும்  செல்வமுடையா ரொவ்வொருவரு மேற்கொள்ளவேண்டுமென்றுங்  கூறுதலானும் இக்காலத்து  மேம்பட்டதாகத்  தோன்றுதலானும்  சிறப்புடைத்தென்க .  

           இனிச்  சத்திர தருமம்  நம் நாட்டினும்  பிற இடங்களினும்  நம்மவரால்  நன்கு நடைபெறுகின்றது . அது மிகமேலான  தருமமாயினும்   அந்தணர்களுக்கேயன்றி  மற்றைச்  சாதியார்க்கு  அன்னமுதவல்  கூடதென்னும்  விதி பொருத்தமானதன்று . துறவிகள் , தொழில்  செய்து சீவனஞ் செய்யச்  சக்தியில்லாதவர்கள் , வயோதிகர்  சிறுவர்களாகிய   இவர்கள்  எச்சாதியாராயினும்  அன்னம்  உதவற்கும்  வழிப்போக்கர்  தங்குதற்கும்  உரிய  இடமன்றோ  சத்திரம் ; இவ்வியல்களைவிட்டுப்   பிராமணருள்ளே  யொழுக்கந்  தவரினவரா யினும்  செல்வராயினும்  அவர்களுக்கு  அன்னம்  உதவலும் , பிற வருணத்தா  ரொழுக்கமுடையராயினும் , வறியராயினும் , அவர்களுக்கு  உதவுதலின்மையும்  பெரியதோர்  குற்றமாம் .  வறியார்க்கொன்  றீவதே  யீகை யென சாதியைக்  குறியாது பொதுப்படக் கூறலு  மீண்டு கருதற்பாலது .  பலவாறு  கூறுவதென்னை ? இக்காலத்திற்  சத்திர மதிகரிக்க  அந்தணருள்ளே   சிலர்  தொழில்களை விட்டும்  கருமா நுட்டானங்களை  யிழந்தும்  சோம்பராகின்றனர் .  ஆதலின் , அதனை  நடாத்துவார்  ,  மேற்கூறியபடி  யெல்லார்க்கும்  இதம்பயக்கும்  வண்ணம் ஆராய்ந்துசெய்வாராக .  

            இனி , நம்மவரிற்  பெரும்பாலார்  ஒருவர்  ஒரு    தருமத்தைச்   செய்தற்குத்   தொடங்கினால்  மற்றவர்களும்  பயனை  நோக்காது அதனையே  தொடங்கக் கருதுவதல்லது  காலநிலைக்கும் ஜன சௌகரி யத்துக்குந்  தக்கபடி  வேறோரறத்தைச்  செய்தற்குக்  கருதுவதில்லை . அதனாலேதான் மனிதற்கு  இன்றியமையாத  மருத்துவச்சாலை  இந்நாட்டில் நம்மவரா நிலைபெற்றதாக ஒன்றேனுமின்று . நம்  வணிக மக்கள் வசிக்கும் நகரங்களுட்   சற்றுப்பெரிய   ஊர்களிளெல்லாம்  நோயாளிகளுக்குப்   பணம்  வாங்குவதன்றி  வைத்தியஞ் செய்யும்படி  வைத்தியசாலை  தாபித்தல் , பிணிநிலை தெரியாது மருத்துவஞ் செய்யக்கிளம்பும்  போலி வைத்தியர்  மிகுந்த இக்காலத்தில் பெரியதோரறமாகும் .  இத் தருமத்தின்  மேனாட்டார்  மிக்க விருப்பமுள்ளவரென்பது பல  சரித்திரங்களானும்  அநுபவத்தானும்  அறிந்திருக்கின்றோம் .  “நோயிலா  வாழ்வினால்  வாழ வேண்டும் “  என்று ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்  கூறியபடி  இந்நாட்டு  ஏழைச்  சகோதரர்கள்  நோயிலா  வாழ்க்கை  பெறுதற்கு  இவ்வைத்தியசாலை  நம் நகரங்களிலடுத்தடுத்து  இருப்பின் , எவ்வளவு  உபகாரமாகும் !  இதுவரை  இத்தருமத்தில்  நம்மக்கள் கவனஞ்  சிறிதுஞ் செல்லாமலிருந்தது வியப்பே !  எவ்வகை  யறங்களையுந்  தவறாமற் செய்யும்  எண்ணமுடைய  நம்மவர்கள் இத்தருமகாரியத்தை யேன்  பிறருக்கு விடல் வேண்டும் ?  இப்பக்கத்துள்ள  மற்றையோரினும்  வணிகமக்கள்  விசேடமான   தருமசிந்தையுடையராயிருப்பவும் , இக்குறைகளை ஏன் நம்மிடத்துக் கூறவேண்டுமெனின்?  “ஊருணிநீர்  நிறைந்தற்றேயுலகவாம் , பேரறிவாளன் றிரு “  என்று  திருக்குறள் கூறியபடி  எல்லார்க்கும்  இதம்பயக்கும்  எல்லா நல்லறங்களையும்  இடைவிடாது செய்தற்கேற்ற  பெருங்குணமும்  பெருஞ்செல்வமுடைய  நம்மவரா லித்திருத்தங்  கேட்கப்படின்  பயனாமேயன்றி  நீரின்மையும்  இறங்குதுறையு மில்லாத வெறுங்கிணறு  போன்ற  பிறர்  கேட்டமையானும்  கேளாமையானும் வருவதோர்  பயனின்றென்க.

                                         வேதாகம  பாடசாலைகள்

             இனி , வேத  பாடசாலையைப்பற்றிச்  சிறிது  நினைப்போம் . இத் தென்னாட்டில்   நம் சமயம் விருத்தியாதற்கு  “வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க” என்று  அருண்மொழித் தேவரருளியாங்கு   வேதங்களையுஞ்  சிவாகமங்களையும்  விருத்தி செய்தனங்கடமையே .  வேதமுஞ்  சிவாகமும்  ஒரு பொருளனவே .  சிவபெருமான்  பெருமையும், சீவர்களினியலும் , அப்பெருமானை  அவ் வான்மாக்க லடைதற்குத்  தடை யாகவுள்ள   மலங்களின்றன்மையும் , ஆன்மாக்கள் அம்மல சக்தியைக் கெடுத்துப்  பரமசிவனை யடைதற்குரிய  உபாயங்களும்  அப்பரமபதியோடு  இரண்டறக்கலந்து அநுபவிக்கும்  பேரின்ப  நிலையும் பிறவும்  வேதத்திற் பொதுவகையாகவுஞ்  சிவாகமத்திற்  சிறப்பு  வகையாகவும் விளங்க  அவ்விரு  முதனூல்களையும்  பரமசிவனே  யருளிச்செய்தனர் . வேதம் பொருள் பலபடத் தோன்றுஞ்  சூத்திரமும்  சிவாகமம்  அதனையங்ஙனமாக  வொட்டாது தெளிந்துரைக்கும்  பாடியமும் போலச்  சிவபிரானாலருளிச் செய்யப் பட்டன  வென்பார் பெரியோர் . இவ்வேத சிவாகமங்களுக்குப்  பேதமின்மையை  வேதாந்த சூத்திர மெய்ப்பொருள்கண்ட  ஸ்ரீ நீலகண்ட சிவாசாரியரும் ,

வேதமொடாகம மெய்யாமிறைவனூல்,

ஓதும்  பொதுவுஞ் சிறப்புமென்றுன்னுக

நாதனுரையிவை  நாடிலிரண்டந் தம்

பேதம தென்பர்  பெரியோர்க்கபேதமே”

என்று  திருமூல தேவருந் திருவாய் மலர்ந்தருளியமையாலுணர்க . இங்ஙனம் அபேதார்த்த முதனூல்களான  வேத சிவாகமங்க ளிரண்டனையும்  பரிபாலித்தனங் கடமையாயிருப்ப   வேற  பாடசாலைகளை யொவ்வோரூரிலும் இரண்டு  மூன்று  நிலைபெற செய்தறகும் . ஆகம  பாடசலை யிரண்டிற்கு மேல்  நம்  தமிழ் நாட்டிலில்லாமற்  செய்தற்கும் , என்ன  நியாயமுளதோ?  “ஆகமமாகி நின்றண்ணிப்பான்றாள்  வாழ்க “  என்று  ஸ்ரீமத் , மாணிக்கவாசக சுவாமிகள்  கட்டளையிட்டருளியவாறு  சிவபிரான்  சிவாகம வுருவாகவுள்ளாராதலின்  அவ்வாகம பரிபாலனம்  சிவபூஜைப் பயனைத் தருமென்பதி லென்னை கொலையம் ! வேதபாடசாலை  நம் நாட்டிலெவ்வளவுள்ளனவோ  அவ்வளவு ஆகம பாடசாலை யிருந்தா லன்றோ  நம் சமயம் விருத்தியடையும் .  வேதபாடசாலைகளை நியமித்தற்கு  நம்மவரை யன்றிப் பிறரும்  பலருளர் .  ஆகமங்களப்  பேணுவார்  நம்மையன்றிச் சிலரேனும் இருப்பாரென்பது சந்தேகமே .  சமீப காலத்தில்  தேவி  கோட்டையுலுள்ள  சிவதரும பரிபாலகராகிய  நம் வைசிய மக்கள் சிலர் சிவாகம பரிபாலன நிமித்தம் பொருள் தொகுத்து  வைத்திருக்குஞ் செய்தி , சைவமக்கட்கெல்லாம்  பெரு மகிழ்ச்சி  விளைவிப்பதாகும் .  ஆனால்  அவ்வாகமங்களை யெல்லாம்  ஒன்று  சேர்த்துப் பூஜிக்கவேண்டுமென்பது  அவர்கள் கருத்து .  அது  மிக  நல்லதாயினும்  சிறிது சிறிதாக  அச்சிட்டு வெளிப்படுத்தி வருதலே   பரிபாலனஞ் செய்ததாகும் .  சிவாகமம்   பரிபக்குவர்க்கன்றி  யளித்தல் தகாதெனின் , வேதங்களும்  உபநிடதங்களும்  சித்தாந்த  சாத்திரங்க ளும்  பிறவும் அச்சின்   வாயிலாக வெளிப்பட்ட இக்காலத்தில்   அது பொருந்தாதென்க .பரிபக்குவரல்லாதார் குருவின் முகமாகப்  பெறுதலே கூடாது .  அச்சுப்புத்தக வாயிலாகப்பார்த்தல்  குற்றமின் றென்பது பல  அறிஞர் துணிவு .

                                                தே வா ர  பா ட சா லை

            இனித்  தமிழ் மறையாகிய  தேவராதி யருட்பாக்களை யோ துவதற்குரிய  தேவார பாடசாலைகள்  தாபித்தலும் அவசியமாகும் .  தேவார  திருவாசகங்களாற்  சமயாசாரியர் செய்தருளிய  அற்புத அருட்செயல்களும்  பிறவும்  பெரிய புராண வாயிலாக  நன்குணர்ந்த  உங்களுக்கு  யான்  கூறவேண்டிய தென்னை?  வேதாரணிய  க்ஷேத்திரத் தில்  ஆரிய வேதங்களான்  மூடப்பட்ட  கதவு தேவாரத்தாற்  றிறக்கப்படு மாயின்  தேவாரங்கள்  தமிழ் மறையென்பதில் ஐயம் யாதுளது ? “வேதநெறி  தழைத்தோங்க”  என்பதிற்கிலக்காக  இத்தமிழ்  மறைகளை யும் ஓம்பல்  நமது  கடனே .

                                                         ஒ ற் று மை

         என்னருமைச்  சகோதரமணிகளே !  யான்  இத்தனையுங்  கூறி வந்த எல்லாவற்றையுஞ் சீர் செய்து கோடற்கு  ஒரு காரிய முக்கியமாக வுள்ளது .  அது  கைவரப்பெற்றாலெல்லாஞ்  செவ்வையாகும் .  அதுதான்  யாதெனின்  ஒ ற் று மை  யென்பதே.  சிறியேனாகிய  யான்  கூறிவந்த  சீர் திருத்தங்களுள் ஒவ்வாதன  சிலவுளவாயின்  அவற்றைத் திருத்தித்தர  யான்  கேட்டலும் , அதற்கு நீயிர்  அன்புடன்  உடன்பட்டு  அங்ஙனமே  செய்தலும் ஒற்றுமைக்கு  அங்கங்களாகும் , இங்ஙனமின்றி யான்  எழுதியவற்றையே சாதிக்கவெண்ணுதலும்  நீயிர்  இவனோரு சிறுவன்  கூறுதலையா மேன்  அங்கிகிரிக்க வேண்டுமென்று  கலாம்  விளைக்கக் கருதலும் , ஒற்றுமை  யின்மைக்கு  அங்கங்களாகும் . இவை போலவே  யெவ்விக்ஷயத்திலுங் கொள்க .  இவ்வருமையாகிய  ஒற்றுமை மணியை  யெந்தத்தேயம்  பெற்றிருக்கின்றதோ, அதுவே  திகந்தம்வரை  தன்  இசையொளியைப்  பரப்பும். நாமெல்லாம்  விகற்பமின்றிச்  செய்யவேண்டியவைகளை   விடாது  தொடங்குவே மாயின், கூடியவிரைவில்  நம்  எண்ணம்  திருவருளால் நிறைவேறு மென்பதில்  ஐயமின்று .  “எண்ணியவெண்ணியாங்கெய்துப வெண்ணி யார் , திண்ணியராகப்பெரின் “  என்னும்  பொதுமறையையுஞ்  சிந்தித்து நோக்குக .  

             இவ்வியாசத்துட்  கூறியவைகளையும்  இன்னும்  நம்மவர்க்கின்றி  யமையாத  பிறவற்றையும் நாம்  எல்லாரும்  மொருங்கு  கூடிச்சூழ்ந்து  செய்தற்குரித்தாக ஒரு காரியம்  செய்யவேண்டுமென்னும்  எண்ணம்   என்  உள்ளத்திற்  பலநாளாகக்  குடிகொண்டுள்ளது .  அதனை  வெளியிடுவதற்கு  இதுவே  தக்க  சமயமென்றெண்ணுகின்றேன் .

                                                  ம கா ச பை

     என்னை யெனின் , குன்றக்குடி , கானாடுகாத்தான் , தேவிகோட்டை, காரைக்குடி ஆகிய  இப்பெருநகரங்களுள்  ஒன்றில் நம்  வணிக மக்கட்கெல்லாம்  பொதுவாக “வைசிகமகாசபை”  என்னும்  பெயரால்  ஒரு சபை   தாபித்தல்வேண்டுமென்பதூஉம் , அச்சபையின்  அங்கங்களாக  வித்தியாசாலை  ,  புத்தகசாலை  முதலியன நிறுவுதல்  வேண்டுமென்பதூஉம் , அவ்வித்தியாசாலையில்   தமிழ்  வடமொழி  ஆங்கிலம்  இப்பாக்ஷைகளை  வரு மாணாக்கர்களுக்கு  உண்டி உடை கொடுத்துக் கற்பித்தல் வேண்டுமென்பதூஉம் , நாவன்மை  மிக்க  உபந்நியாசகர் சிலரை  மாத வேதனமுதவி  உபந்நியாசராக நியமணஞ் செய்து   அவர்களைக்கொண்டு  அச்சபையிலும்  ,  ஜனக்கூட்டத்திற்கு   ஏதுவான  உற்சவம்  முதலிய விசேடமுள்ள  நம்  நகரங்களிலும் , கடவுட்பக்தி ,கல்வி , சமயாசார முதலிய பல விஷயங்களை  யுபந்நியாசிக்கச் செய்யவேண்டுமென்பதூஉம் , அக்கழகத்தைத்  தலைமையாக்கொண்டு  வேறு நம்  நகரங்களிலுள்ள  கலாசாலைக ளையும்   சபைகளையும்  கிளைகளாக அமைத்து அக்கிளைக் கலாசாலைகளிற்   கற்கு மாணவர்களை  ஆண்டுகடோறும்  பரீக்ஷித்துப்  பரிசு கொடுத்தல் வேண்டுமென்பதூஉம் , கிளைச்சபையார் விரும்பும் பொழுது  மகாசபியினின்றும்  உபந்நியாசர்களையனுப்பி  யுபந்நி யாசஞ்  செய்வித்தல் வேண்டுமென்பதூஉம் , பிறவுமாம் . இவற்றிற்கெல்லா  மூலதன  மிகுதியாக வேண்டும் . சிவாகமங்களை  வெளிப்படுத்தற்குரிய  வேலைகளும்  அம்மகாசபையிலே  செய்யலாம்  கூடுமாயின்  பத்திரிக்கையொன்று  அச்சபையினின்று  வெளிப்படுத் தலாம் .  இன்னும்  அப்போதப்போது பயனுடையவாக்கருதப்படுங்  காரியங்களையுஞ் செய்யலாம் . இவ்விஷயமாக  நம் நண்பர்க  ளுள்ளத்திற்  சிவபெருமான் விருப்பத்தை யுண்டாக்குவாராயின் , அவர்கள்  செய்யும்  பணியை  இயன்றவரை  செய்தற்கு  யானுங்  கடமைப்பட்டிருக்கின்றேனென்பதையுந்   தெரிவித்துக்கொள்கின்றேன்  எல்லாம்  வல்ல  சிவபெருமான் விரைவிற்  றிருவருள்  புரிவாராக .

                                                       மு டி வு ரை

    இதுகாறுங்  கூறியவற்றால் , வனிக  மக்களாகிய  நம்மவர்  மேற்கொள்ளவேண்டிய   திருத்தங்களுண்  முதலில் , எல்லாவற்றிற்குந்  துணைக்கருவியான   கல்வியை  முறையாகக்  கற்றல் வேண்டுமென்பதூஉம் ,  அங்ஙனங்  கல்லாமையான்  வரும்  ஏதங்களின்னவை  யென்பதூஉம் ,  முறையாகச்  சிலநாட்  கற்பினும்  அதனானலம்பலவுண்டாமென்பதூஉம் ,  அங்ஙனங் கற்கப்படு மொழிக ளுண்  முதலினமக்குரிய   இயற்கைமொழியாகிய  தமிழையே  கற்றல் வேண்டுமென்பதூஉம் , அவ்வந்நிலத்து மக்கட்குரிய  இயற்கைமொழி களின் இலக்கணங்களின்னவா மென்பதூஉம் ,  நம்மனோர்க்குரிய  செந்தமிழ்  மொழியின் பெருமைகளைப் பரியவா மென்பதூஉம் ,  அதனை யிளமையிற்  கற்றலவசிய மென்பதூஉம் ,  நம்மவர்  கல்வி நிலை சிறிது குறைவுடையதாகக் காணப்படுதலான்  விரைவிலக் குறையை  யொழித்தல்  வேண்டுமென்பதூஉம் ,  அதற்குபாயம்  நம்  நகரங்களிலெல்லாங்  கல்விச்சாலை நிறுவுதலேயாமென்பதூஉம் , அக்கலாசாலைகளை யின்னவாறு நடத்தல் வேண்டுமென்பதூஉம் ,  அதற்குப்பொருள் கொடுப்போர் பெறும் புண்ணியம்  பெரிதாமென் பதூஉம் ,  அக்கலாசாலைகளில்   ஆங்கிலமொழி  வடமொழிகளையுங் கற்பித்தலவசிய  மென்பதூஉம் , அவற்றால்   விளையு  நன்மை களின்னவை  யென்பதூஉம் , வடமொழியை  நாங்கற்பதற்கு  ஏதுஇன்னதென்பதூஉம் , நம்மவர் நிறுவிய   வடமொழிக் கலாசா லைகளை யின்னவிதம்  நடத்தல் வேண்டுமென்பதூஉம்,  கலாசாலைகளோடு  நம்  ஊர்களுட்  சிற்சில  முக்கிய  நகரங்களிற் சபை  தாபித்தலவசிய மென்பதூஉம் , நம்  சமயமாகிய  சைவத்தின் மாட்சிகளின்னவென்பதூஉம் ,  நம் முன்னோரெல்லாம் இச்சைவசமய ஒழுக்கத்தையே பற்றி நின்றவரென்பதூஉம்,  சைவர்களுக்குரிய  இலக்கணங்களுள்  உயிர் போன்றது பஞ்சாக்கர ஜபமென்பதூஉம் ,  மிக்க மகிமையுடைய  அப்பஞ்சாக்கரத்தை ஜபித்தற்குரிய அதிகாரிகள் சிவதீக்ஷை யுடையாரென்பதூஉம் , அத்தீக்ஷையின்  மகிமைகள்  இலக்கணங்களின்னவென்பதூஉம் ,  அதனைச்செய்தற்குரிய ஆசிரிய ரின்ன இலக்கணமுடையவராயிருத்தல் வேண்டுமென்பதூஉம் ,  அதனை ஒவ்வொருவரும் இன்ன காலத்தில் இன்னவிதமாகச் செய்துகோடல்  வேண்டுமென்பதூஉம் ,  இவ்விஷயத்தில்  நம் கவனமிகவிரைவிற்  செலுத்தப்படல்  வேண்டுமென்பதூஉம் , நம்  சமயா சாரத்திற்குரித்தல்லாத  புலாலுணவைச்  சிலர்  இடையே  கைப்பற்றியதற்குக்   காரணம்  இன்னதென்பதூஉம் ,  சிவவழி பாடேயன்றிச்  சிறு தெய்வ வணக்கம்  அவசியமின்றென்பதூஉம் ,  நம்மவர்  விவாக  முறையிற் றிருந்த  வேண்டியவை  யின்னவென்பதூஉம் ,  விவாகம் , சிராத்தம் , சஷ்டியப்த சாந்தி  முதலிய வற்றின் கிரியைகள்  செவ்வையாக  நடைபெறவில்லை யென்பதூஉம் ,  அவற்றைத் திருத்திக்கோடலவசியமென்பதூஉம் ,   வியாபார  விஷயத் திற்  கவனிக்கவேண்டியவை  இன்னவென்பதூஉம் , நம்மவரிதுவரை செய்து வந்த தருமகாரியங்களிற்  சிலவற்றைக்  காலத்துக்கு  ஏற்றவாறு  திருத்தி நடத்தவேண்டுமென்பதூஉம் ; வைத்தியசாலை தாபித்தல் , நடத்தற்குரிய நெறிகளைச்  சீர்படுத்தன்  முதலிய  அறங்கள்  இந் நாட்டிலிப்பொழுது செய்யத்தக்கவைகளாமென்பதூஉம் , நம்மவர்  நிறுவிய  வேதபாடசாலைகளெவ்வளவோ   அவ்வளவு  சிவகாமபாட சாலைகள்  நிலைபெறச்  செயவேண்டுமென்பதூஉம் ,  சிவாகமப் பெருமை  செப்பற்கரியதென்பதூஉம் ,  தமிழ் மறையாகிய   தேவார பாடசாலைகளின்னுந் தாபித்தல்  வேண்டுமென்பதூஉம் , இத்துணைக் காரியங்களையும் செய்தற்குரிய  சிறந்த  சாதனமாகிய  ஒற்றுமைக்   குணத்தை நாமெல்லாருமுடையராயிருத்தல்  வேண்டுமென்பதூஉம் , நம் வணிகமக்கட்கெல்லாம்  பொதுவாக  ஒரு  மகாசபை  தலை நகரினிலைபெறச்செய்தன் மிக நலமென்பதூஉம் ,  பிறவும் ஒருவாறாக  விளக்கப்பட்ட பொருள்களாம் .

         “எல்லா  நூல்களும்  பழைமைபற்றிக்  கொள்ளத்தக்கனவாதலும், இன்று ; புதுமைபற்றித்  தள்ளத்தக்கனவாதலும்  இன்று  ;  அறிவுடையார் குணங்குற்றங்களை  யாராய்ந்து  நல்லவை கொள்வர் ; அறிவில்லார் தாம்  ஒன்றையும்  ஆராயாது பிறர் கூற்றைக்  கடைப்பிடிப்பர் “ என்று  கவிகுல திலகராகிய   காளிதாசர்  கூறியபடி  இவ்வியாசத்துள்  உங்கள் நற்கருத்தைச் செலுத்திக் கொள்வன கொள்ள வேண்டுகின்றேன் .

                                                       வாழ்த்து

அருளுடைச் சிவனா ரன்பிவ் வணிநிலத் துள்ள மக்கள்

இருளறப் பொலிக வீச நிணையடி மறவா வாழ்வே

பொருளெனப் போற்று மன்பர் புகழ்நனி யோங்க வுண்மைத்

தெருடரு நெறியாஞ் சைவஞ் சிறந்துமீக் கிளர்ந்து வாழ்க.

உமிழொளிப் பாநு போற்றன் உயரிசை பரவ வோங்கித்

தமிழ்மொழி வாழ்க வெல்லா அறங்களுந் தழைத்து வாழ்க

அமிழ்துறழ் மொழியாள் பாக நருளினால் வணிக மக்கள்

இமிழ்திரை ஞாலத் தெல்லா இன்பமும் பெற்ரு வாழ்க .

                    நகரத்தாரின்  சீர்திருத்தம் முற்றிற்று .

பண்டிதமணி வாழ்க்கை வரலாறு

பண்டிதமணி

(வாழ்க்கை வரலாறு)

எழுதியது

பெருமழைப் புலவர்

திரு பொ. வே. சோமசுந்தரனார்

(வெளியீடு: 1954)

தோற்றுவாய்

பண்டைக்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சமண புத்த சமயங்கள் மிகவும் செல்வாக்கடைந்து, சைவ வைணவ சமயங்கள் பெரிதும் வீழ்ச்சியடைந்தன என்றும், அக்காலத்தே இறைவன் திருவருளாலே திருநாவுக்கரசர் முதலிய சைவசமய குரவர்களும், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களும் தமிழகத்தே தோன்றி, வீழ்ச்சியுற்ற சைவ வைணவ சமயங்களின் சிறப்புகளைப் பல்லாற்றானும் மக்கட்கு தெரியக்காட்டி அச்சமயங்கள் தழைத்தோங்குமாறு செய்தருளினர் என்றும் வரலாற்று நூல்கள் விளம்புகின்றன.

மக்கள் வாழ்க்கைக்குப் பெருமை தருவனவற்றுள் தலைசிறந்தவை சமயமும், மொழியும் எனலாம். இவ்விரண்டுமே விலங்கியல் வாழ்க்கையினின்றும் வேறு பிரித்து மக்களை உயர்திணை என்று கூறுதற்குரிய சிறப்பை நல்கி, மக்கள் வாழ்க்கையின் சீரிய பயனை எய்துவிக்கும் தெய்வீகக் கருவிகளாம். ஆதலால் இவற்றை நன்கு பேணிக்கொள்ளுதல் ஒவ்வொரு மனிதனுக்கும் முதற்கடமையாகும்.

சமயமும் மொழியின் உதவியின்றேல் வீழ்ச்சியுறும்; ஆதலின் சமயத்தினும் மொழியே சிறப்புடைக் கருவி எனலாம். இச்சிறப்புணர்ந்து போற்றும் நாடு பெரிதும் முன்னேற்றமடையும். இதைப் போற்றாத நாடு பெரிதும் வீழ்ச்சியுற்றுத் தன் ஒன்னார்க்கு அடிமைபுகும் என்பது உறுதி.

பண்டு, சைவ வைணவ சமயங்கள் வீழ்ச்சியடைந்தனவே யல்லாமல், நம் தாய்மொழி வீழ்ச்சியடைந்ததில்லை. கி. பி. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நம் நாட்டின்கண் ஒற்றுமை உணர்ச்சி குன்றி, மக்கள் தம்முட்கலகம் விளைத்துக்கொண்டு, வெள்ளையர்க்கு அடிமையாயினர். அயலோர் ஆட்சியில் நம் தமிழகமட்டும் அன்று; நம் இந்திய நாடே அடங்கிக் கிடந்தது.

இக்காரணத்தால் நாட்டில் அறியாமைப் பேரிருள் மிகுந்து, மக்கள் தந் தாய்மொழியின் அருமை பெருமைகளை உணர்ந்து போற்றும் மதுகையில்லாதவராய்த் தம் பெருமை குன்றி வீழ்ச்சியடைந்தனர். அரசியலார் மொழியாகிய ஆங்கிலமொழிக்கே பெருஞ்சிறப்பளிக்கப்பட்டது. ஆங்கிலம் கற்றவர்களுக்கே ஊதியம் வழங்கப்பட்டது. ஒரோவழித் தந்தாய்மொழிப் பற்றுடையராய் அதனைப் பயின்ற அறிஞரைப் போற்றுவார் யாருமிலர். பண்டு உலகெலாம் புகழ்வீசித்திகழ்ந்த நந்தமிழன்னை, தன்னைப் போற்றுவார் இல்லாத ஏழையாய் ஒடுங்கினாள். அவள் பழம்பெருஞ் செல்வமாகிய இலக்கியக் கருவூலங்கள் எல்லாம் அழி நிலை எய்திக் குறைந்தும் மறைந்தும் போயின. இதற்கு முன்னர் என்றும் கண்டறியாத வீழ்ச்சியை நம் தமிழன்னை எய்தினாள்.

பண்டு மெய்ந்நெறியாளர்களாகிய சமயங்கள் வீழ்ச்சியுற்ற போது, நாயனார்களும் ஆழ்வார்களும் தோன்றியதே போன்று மக்கட்கு உறுதிபயப்பதாகிய மொழி வீழ்ச்சியுற்ற அப்பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நம் தமிழகத்தே பற்பல இடங்களினும் பற்பல பெரியோர்கள் தோன்றலாயினர். நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் தோற்றுவித்துச் சைவ வைணவ சமயங்களை நிலைநிறுத்திய இறைவனே இப்பொழுதும் நமது தெய்வத் தமிழை நிலைநிறுத்தத் திருவுளங்கொண்டு, இவ்விருட்காலத்தே அறிவொளிமிக்க இப்பெரியோர்களைத் தோற்றுவித்தனனாதல் வேண்டும். இவர்கள் தாம் தோன்றியிலரேல் நம் ஒப்பற்ற சிந்தாமணியையும், சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும், பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும், இன்னோரன்ன அறிவுக் கருவூலங்கள் பிறவற்றையும் இழந்து யாம் வறியராய்க் கிடப்பது திண்ணம்.

வீழ்ச்சியுற்ற நந்தமிழ்மொழியை மீண்டும் வாழ்விப்பதே தம் பிறப்பின் குறிக்கோளாகக்கொண்டு முயன்று, தாங்கருதியபடியே தமிழ்மகளைப் பெருவாழ்வுறுத்திய இப்பெரியோர்களில் தலைசிறந்த சிலரை மட்டும் கூறுகின்றேன். உயர்திரு மறைமலையடிகளார் அவர்கள், மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், திரு வி. கலியாணசுந்தரமுதலியார் அவர்கள், திரு நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், திரு நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி திரு மு. கதிரேச் செட்டியார் அவர்கள், திரு ரா. இராகவையங்கார் அவர்கள், திருவாளர் ரா. பி. சேதுப்பிள்ளை யவர்கள் ஆகிய இவர்களும், இவர்கள் தொண்டிற்கு உறுதுணையாய் நின்ற வேறு சிலரும் ஆவர்.

பண்டு சமய வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் செய்ந்நன்றியறியும் நம்முன்னோர்கள் உருவச்சிலை செய்து திருக்கோயில்களில் அமைத்துத் தெய்வமாகப் போற்றி வருவாராயினர் அல்லரோ? அங்ஙனமே, இப்பெரியோர்களை யாமும் உருவச்சிலை எடுத்துத் தெய்வமாகப் போற்றுதல்வேண்டும். அங்ஙனம் செய்வது நமக்கே ஆக்கஞ்செய்து கொள்ளுமொரு நற்செயலாகும். எனவே மேற்கூறிய பெரியார்களுள் மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்களின் வரலாறும் சிறப்பும் விளக்கும் பொருட்டே இந் நூல் எழுந்ததென்க.

  1. நாடும் ஊரும்

“வடவேங்கடத் தெங்குமரி யாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தே” சேர சோழ பாண்டிய நாடுகளாகிய முத்தமிழ்நாட்டில் நம் பண்டிதமணியவர்கள் பாண்டி நாட்டில் தோன்றியவராவர். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிவளர்ச்சியின் பொருட்டுச் சங்கம் வைத்தும், நல்லிசைப் புலவர்கட்குச் சிறந்த பரிசில்கள் அளித்தும், பத்துப்பாட்டாதிய இலக்கியச் செல்வங்களைத் தொகுத்தும், தொல்காப்பிய முதலிய இயனூல்களைத் தோற்றுவித்தும், இன்ன பிற பணிகளாலே தமிழாக்கங் கண்ட நாடு அச்செந்தமிழ்ப் பாண்டிநாடன்றோ! தமிழ்மொழி, மூன்று தமிழ் நாட்டிற்கும் பொதுவாயினும், அதன் வளர்ச்சியிற் பெரிதும் முயன்றமை கருதி அம்மொழியைக் “கூடற்றமிழ்”  என ஆன்றோர் அழைப்பதும் உண்டு.

பாண்டி நாட்டின் கண் உள்ள உட்பகுதிகளாகிய சிறிய நாடுகளில் பூங்குன்ற நாடு என்றோர் நாடுளது. இது இருபத்து நான்கு பற்றுக்களைத் (பட்டிகள் அல்லது கிராமங்கள்) தன்னகத்தே கொண்டது. அவ்விருபத்து நான்கு பட்டிகளுக்கும் தலைமையிடமாய்த் திகழ்வது மகிபாலன்பட்டி என்னும் திருநிறைமூதூர். இம்மூதூரே நம் பண்டிதமணியவர்களை ஈன்றளித்த பெருமையுடையதாகும்.

பூங்குன்ற நாடு என்னும் இனிய சொற்கேட்டவுடன் தமிழுணர்ந்த பெரியோர்கள் உளத்தே கணியன் பூங்குன்றனார் என்னும் பண்டைநாள் நல்லிசைப் புலவர் ஒருவருடைய திருப்பெயர் நினைவில் எழா நிற்கும். புறநானூறு என்னுந் தொகைநூலின்கண், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தொடங்கும் ஒப்பற்ற பாடலை யாத்தவர் கணியன் பூங்குன்றனாரேயாவர். இப் பழம்புலவரும் இவ்வூரிலே தோன்றினவர் என்று அறிஞர் கருதுகின்றார்கள். மகிபாலன்பட்டியிலே உள்ள ஒரு திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் அம்மையின் பெயர் பூங்குன்ற நாயகி என்றே இன்றும் வழங்குகின்றது. அச்சிறு நாடும் இன்றும் பூங்குன்ற நாடென்றே வழங்கப்படுகின்றது.

புறநானூற்றின்கண்ணுள்ள நானூறு பாடல்களுள்ளும் தலைசிறந்த பாடலாகத் திகழ்வது கணியன் பூங்குன்றனார் பாடல் என்பது மிகையாகாது. ஞானத் தெளிவுடைய அப்பாடல் கடல் போன்ற ஆழமுடையது. அதனைப் பாடிய புலவரும் திறவோர் காட்சியில் முழுதும் தெளிந்து மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலராய்ச் சிறியோரை இகழ்தல் அதனினும் இலராய், வாழ்க்கை இனிதென மகிழ்தலும், இன்னாதென்று முனிதலும் இலராய் அமைந்து வாழும் சீவன்முத்தராகத் திகழ்கின்றனர். இத்தகைய ஞானத் தெளிவுமிக்க புலவரைத் தோற்றுவித்தற்குரிய சிறப்பு அந்நாட்டிற்கு – அவ்வூர்க்கு – உளது போலும். ஏனெனில் நம் பண்டிதமணியவர்களும் எவ்வாற்றானும் அக்கணியன் பூங்குன்றனாரையே ஒத்திருக்கின்றார். கணியன் பூங்குன்றனார்க்கும் “யாதும் ஊர்; யாவரும் கேளிர்.” நம் பண்டிதமணியார்க்கும் “யாதும் ஊர் யாவரும் கேளிர்”. அவ்வழகிய பனுவலிற் காணப்படும் ஏனைய சிறப்புகள் எல்லாம் நம் பண்டிதமணியும் உடையர்.

மகிபாலன்பட்டி இயற்கை காட்சியில் மிகவும் அழகான ஊராகும். தெளிந்த நீரையுடைய ஏரிகளும், ஆழ்ந்த குளங்களும், நெடிய கால்வாய்களும், அடர்ந்த மரச்சோலைகளும், ஊரைச் சூழ்ந்த குறுங்காடுகளும் ஆண்டுள்ளன. அழகுணர்ச்சியுடைய கலைஞர்கள் ஆர்வத்துடன் வாழ்தற்கேற்ற ஊராகும் அது.

அவ்வூரின்கண் தனவணிகர் பெருங்குடிகள் பலவுள்ளன. அந்நாட்டிலே பெருநிதிக் கிழவராகவும், செல்வாக்குடையவர்களாகவும், அயல் நாடுகளிலே சென்று மிகவும் பொருளீட்டும் தொழிலில் வல்லுநராகவும் உள்ளவர்கள் தனவணிகர்களே ஆவார். ஆதலால் அந்நாட்டினைத் தனவணிக நாடென்றே வழங்குகின்றனர்.

2. இருமுது குரவர்கள்

மகிபாலன்பட்டியிலுள்ள தனவணிகர் பெருங்குடியில் ஒரு குடிக்கண் நம் பண்டிதமணியார் தோன்றினார். தந்தையார் பெயர் முத்துக்கருப்பன் செட்டியார் என்ப. தாயார் பெயர் சிகப்பி ஆச்சி என்பது. தாயாதி வகையாலே தனவணிகக் குடிகள் பலவகைப்படும். அவற்றுள் முத்துக்கருப்பன் செட்டியார் குடி வயிரவன் கோயில் கேரளசிங்க வளநாடாகிய ஏழகப் பெருந்திருவான வீரபாண்டியத்திலே சிறு குளத்தூருடையார் குடி என்ப. முத்துக்கருப்பன் செட்டியார் இயற்கையிலே கடவுளன்பு மிக்கவர். எளியோரிடத்து இரக்கமுடையவர். இவர் நம் செந்தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை வழிபடு கடவுளாகக் கொண்டு அன்புடன் போற்றிவந்தார். இவர்க்கு வாழ்க்கைத் துணையாக வாய்த்த சிகப்பியாச்சியாரும் குலமகளிர்க்குரிய நற்குணங்களும் நற்செயல்களும் நிரம்பப் பெற்றவர்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும். (குறள் – 114)

என்பது பொய்யில் புலவன் பொருளுரை. “இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் தன்மை அவரவருடைய நன்மக்களது உண்மையானும், இன்மையானும் அறியப்படும்,” என்பது இத்திருக்குறளின் பொருளாம். இக்குறளின் கருத்துப்படி, முத்துக்கருப்பன் செட்டியாரும், சிகப்பியாச்சியும் நடுவுநிலைமை திறம்பாத சான்றோராதல் ஒருதலை. தம் தந்தைக்கு “இவன்றந்தை என்னோற்றான் கொல் என்னும் சொல்லை,” அளித்த நம் பண்டிதமணியவர்களை மகனாகப் பெற்ற இவர்கள் பற்பல பிறவிகளினும் சிறந்த நோன்புகளை ஆற்றிய நல்லோராக இருந்திருத்தல் வேண்டும் அன்றோ?

அன்பு கெழுமிய இக்காதலரின் இனிய வாழ்க்கையின் பயனாக நம் பண்டிதமணியவர்கள் கி. பி. 1881-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினாறாம் நாளுக்குச் சரியான, விசுயாண்டு புரட்டாசித் திங்கள் இரண்டாநாள் வெள்ளிக்கிழமை திருவாதிரை விண்மீன் நிலவிய நன்னாளிலே செந்தமிழும் சைவமும் திகழ்ந்தோங்கத் தோன்றினர்.

வரலாற்று நூலின் ஏடுகளிலே பதிவாதற்குரிய இந்நாள் ஒரு சிறந்த நன்னாளாகும். அன்று இத்தமிழுலகத்திலே சிறந்த நன்னிமித்தங்கள் பல தோன்றியிருத்தல் கூடும். தமிழ் கற்றோருடைய உள்ளங்களிலே தம்மையறியாமலே உவகை தோன்றியிருத்தல் கூடும். கருமுகில்கள் வானின்கட் குழுமி மெல்லெனத் துளித்திருத்தல் கூடும். ஏனெனில், உலகிற் சிறந்த நன்மை தோன்றுங்கால் நன்னிமித்தங்கள் தோன்றும் என்பது நம் முன்னையோர் கண்ட உண்மையாமன்றோ?

நம் பண்டிதமணியின் தந்தையார் தங்குலத்தினர் வழக்கப்படியே திரைகடலோடியும் திரவியந்தேடுவதில் குன்றாத ஊக்கமுடையவர். இவர் செந்தமிழ்க் கணித அறிவில் மேம்பாடுடையவராக விளங்கினர் என்ப. இவர் பொருளீட்டல் நிமித்தம் இலங்கையில் இருக்கும்பொழுது, அத்தீவகத்தே கதிர்காமம் என்னும் திருப்பதியில் திருக்கோயில் கொண்டருளிய கதிரேசப் பெருமானிடத்துப் பத்திமை பூண்டு அடிக்கடி சென்று வழிபடுவர் என்ப. ஒருகால், நம் பண்டிதமணியவர்கட்குக் கதிரேசன் என்னும் அழகிய திருப்பெயரை இடுதற்குத் தூண்டியது அக்கதிர்காமத்து முருகப் பெருமான் திருவருளே ஆதலும் கூடும் என ஊகித்தற்கு இடனுண்டு.

பெரும்பாலும் இருண்டு கிடக்கும் செந்தமிழ் வானத்தே திகழொளி விரித்து அறியாமை இருள் அகல நீக்கும் செங்கதிர் ஆகும் தந்திருத்தகு மகவு, என்னும் உண்மையை அத்தாய் தந்தையர் அன்று அறிந்திடுதற்கு நியாயமில்லை எனினும் நம் பண்டிதமணியவர்கட்குக் தந் தாய் தந்தையர் இட்ட பெயரும் காரணங் கருதிய சிறப்புப் பெயர் போன்றே இயற்கையில் அமைவதாயிற்று.  நம் பண்டிதமணியவர்கட்குத் தம்பியரும் இருவர் தோன்றினர்.

பண்டிதமணியவர்கள் தந் தாயாராச்சியின் பேரன்புடைமையைப் பாராட்டிப் பிற்றைநாள் பன்முறையும் கூறக்கேட்டுள்ளோம். தம் மகன் சிறந்த செல்வந்தனாவதை விடச் சிறந்த புலவனாதலையே அவர் பெரிதும் விரும்புவாராம். இவ்வருங்குணம் கல்வி தேய்ந்தொழிந்த அந்த நாளிலே பெண்பாலாராகிய ஆச்சியார்க்கிருந்தது வியத்தகு நிக்ழ்ச்சியே யாகும். ஆச்சியாருடைய அன்பைப் போற்று முறையில் நம் பண்டிதமணியார் பிற்றை நாளில் அவர்களைப் பாடிய அன்புப் பாடல் ஒன்றுளது. அவ்வொரு பாடலே ஆச்சியாரின் பெருமையை நன்கு விளக்கும். அது வருமாறு:

“என்னையீன் றெடுத்தென் உடல்நலம் பேணி

இருந்தமிழ்ப் புலவர்தங் குழுவில்

துன்னியான் இருப்பக் கண்டுளம் மகிழ்ந்து

சொலற்கரும் உதவிகள் புரிந்து

முன்னையான் செய்த நல்வினைப் பேற்றின்

முதிர்ச்சியால் நெடிதுநாட் புரந்த

அன்னையின் அருளை நினைவுறீஇ யுருகற்

கமையடை யாளம் தாமால்”

இச்செய்யுட்கு அவர்களே தந்த விளக்கம் வருமாறு:

“அறிவு வளர்தற்கு இடனாகவுள்ள என் உடலை நன்கு பேணி வளர்த்து, எனக்கு உறுதுணையாம்படி அவ்வப்பொழுது கிடைத்த அறிவுடையார் பலரையும் உபசரித்து, யான் கலைநலம் பெறுதற்குப் பெரிதுந் துணையாக இருந்தவர்களும், புலவர் குழுவிற் சிறியேனும் ஒருவனாக இருக்கும் நிலைகண்டு உளமகிழ்ந்து நீண்ட நாளாக என்னைப் பாதுகாத்து வந்தவர்களும், ஆகிய என் இனிய அன்னையார் அவர்களின் அருட்பெருக்கை உன்னியுன்னி உருகுதற்கு அடையாளமாக அவ்வருட்கு இதனை உரிமைப் படுத்துகின்றேன்”, என்பதாம்.

“இருந்தமிழ்ப் புலவர் தங்குழுவில் துன்னியான் இருப்பக் கண்டுளம் மகிழ்ந்தார்,” எனத் தம்மன்னையாரின் அருங்குணத்தை இப்புலவர் பெருமான் பெரிதும் பாராட்டுகின்றார் “எண்ணில் தனம் விரும்பும் ஈன்ற தாய்” என்பது பொய்படுமாறு எண்ணிலாக் கல்வியையே இப் பெரியார் விரும்புதல் பெரிதும் பாராட்டத்தக்கதே. இத்தகைய அன்னையை, அன்னையாய் எய்திப் பிறத்தற்குப் பண்டைப் பிறப்பில் தாம் எண்ணிலாப் புண்ணியமே இயற்றி யிருத்தல் வேண்டும் என்று இயம்பி ஆராமை கொள்கின்றார் செய்ந்நன்றி போற்றும் இப்புலவர் பெருமான். பண்டிதமணியாரை மகனாகப் பெற “இவ்வாச்சியார் என்னோற்றனரோ!” என்று உலகம் வியக்கின்றது. இவரை அன்னையாகப் பெற “யான் என்னோற்றனனோ” என்று பண்டிதமணியார் வியக்கின்றார். இருவழியும் புண்ணியம் புண்ணியத்தை எய்துதல் இயல்புதானே!

  • கல்வி

நிலநலம் முளையானே அறிந்துகொண்டோம். இனி, மேலே செல்வோம்.  ஙங்கதிரேசனாரை அக்காலத்தார் வழக்கம் போன்றே பெற்றோர்கள் அவ்வூரிலுள்ள திண்ணைப் பள்ளியில் ஓர் ஆசிரியர்பால் நன்னாளில் சுவடி தூக்கி ஓம்படை செய்தனர். அக்காலத்தே தொடக்கப்பள்ளியும், இறுதிக் கல்லூரியும் எல்லாம் அவ்வொரு திண்ணைப் பள்ளிக்கூடத்தே அடங்கிவிடும். தனவணிகர் நாட்டில் அவர்கள் குலத்தொழிலுக்கு எழுத்தைக் காட்டிலும் எண்களே இன்றியமையாதன. ஆதலின், அந்நாட்டில் திண்ணைப் பள்ளிகளில் கணிதமே சிறப்பாகக் கற்பிக்கப்படும். பெருக்கல் வாய்பாட்டிற் றொடங்கி எண்சுவடியிலே அக் கணித அறிவு முற்றுப் பெறுவதாம். சிறப்பில் பாடமாகிய எழுத்திற்கு, வேழமுகம், உலகநீதி, ஆத்திச்சூடி முதலியன பாடமாக வைக்கப்படும். எண்சுவடிப் பயிற்சிக்கு இடையே இவற்றை விரும்புவோர் கற்கலாம்; விரும்பாதவர் விட்டுவிடலாம்.

மகாமகோபாத்தியாய முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் என்னும் இப்புலவர் பெருமான், கல்வி பயின்ற ஒரே கல்லூரி மகிபாலன்பட்டியிலுள்ள அத்திண்ணைப் பள்ளியே ஆகும். அப்பள்ளியிலும் அப் பெரியார் பயின்ற காலம் ஒரோ ஒராண்டெல்லையுட்பட்டதேயாம். ஆயின், இத்துணைப் பெரிய கலைவாணராக அவர் ஆயது எப்படி?

இந் நிகழ்ச்சி பெரிதும் வியக்கத் தகுந்ததொரு நிகழ்ச்சியன்று. ஏனெனில் பண்டைக் காலமாகிய வரலாறறிந்த காலந்தொட்டு இற்றை நாள்வரை மிகப் பெரிய பல்கலைக் கழகங்களாதல் கல்லூரிகளாதல் உலகம் போற்றும் கலைவாணரைத் தம் முயற்சியால் பயிற்றி அளித்ததில்லை. மக்கள் வழக்கற்ற காட்டினூடே திரிந்த வான்மீகியும் உவச்சர் சிறுகுடிலிற் றோன்றிய கம்பநாடனும், ஐந்தாண்டுகாறும் மூங்கையாயிருந்த குமரகுருபர அடிகளாரும், கலைக்கடலாகிய இராமலிங்க அடிகளாரும், உலக மகாகவியாகிய இரவீந்திரநாத தாகூரும், வரகவி சுப்பிரமணிய பாரதியாரும் எந்தக் கல்லூரியில்? எத்தனை யாண்டுகள் பயின்றனர்? இவர்கட்கு ஆசிரியர் யார்?

எம்மன்னை கலைச்செல்வியே, இத்தகைய பெரியோர் அனைவருக்கும் நல்லாசிரியை. இவ்வாசிரியைதானும் அம்மாணவர் உள்ளமாகிய தூய வெண்டாமரையில் வீற்றிருந்தே தன் அருளாகிய ஒப்பற்ற கலையை உணர்த்தியருளினாள். இவள் திருவருளுக்கு ஆளாகின் “கல்லும் கவி சொல்லும்” என்ப.

கலைச்செல்வியின் திருவருளுக்கு ஆளாதல் தற்செயலாய் நிகழுமொரு அதிட்ட வலியன்று; நல்வினை தீவினைகளின் பயனுமன்று, நல்வினை தீவினைகளின் பயனோடொத்து இயங்கும் இயல்பினள் திருமகளேயன்றிக் கலைமகள் அல்லள். திருமகள்போலத் தகுதியில்லார்க்கும் அருள் சுரத்தலும், அருளப்பெற்றாரை மீண்டும் வறுமைப் பேரிருளிற்றள்ளிச் சினத்தலும் நங் கலைமகள்பாற் காணப்படாத பண்புகளாம். தகுதியுடைமை கண்டே அருள் சுரந்தளிப்பாள். ஒருமுறை நம் கலைத் தெய்வத்தாற் கடைக்கணிக்கப்பட்டார் பின்னொரு காலமும் அவள் அருள் நிழலை ஒருவ அவள் உடன்படாள். இவ்வுலகில் இம்மை வாழ்க்கை தொடங்கி, வீட்டின்பம் எய்துங்காறும் உள்ளத்திருந்து உயர உயர அழைத்தேகுவது நம் கலைத்தெய்வத்தி னியல்பாம்.

சமய உணர்ச்சியாதல், கலையுணர்ச்சியாதல் ஒருவற்கு ஒரு பிறப்பிலே எய்திவிடத்தகும் எளிமையுடையனவல்ல. எத்தனையோ பல பிறப்புக்களிலே அடிபட்டுப் படிப்படியாய் முதிர்வன இத் தெய்வீக உணர்ச்சிகள். முதிர்ந்த இறையன்பைச் சேக்கிழாரடிகள் வழியன்பு என்றோதுவர். பற்பல பிறப்புக்களிலே முயன்றுதான் கலைச்செல்வராதல் கூடும் என்பதை நம் தெய்வ வள்ளுவனாரும்,

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து”

(குறள் – 398 )

என்னும் அருமைத் திருக்குறளானே ஒப்புவர். இதனாலன்றோ “ “சாந்துணையும் கற்க”, என, அப் பெரியார் அறிவுறுப்பாராயினர்.

எனவே, நம் பண்டிதமணியார் பண்டும் பண்டும் பற்பல பிறப்புக்களிலே கலைமகளை வழிபட்டுத் தம் திருவுள்ளத்தை அத் தெய்வத்தின் திருக்கோயிலாக்கி வைத்தனர். அவர் பிறந்தபொழுதே கலைக் கருவூலமாகிய ஒரு சிறந்த திருவுள்ளத்தைத் தம்முடன் கொணர்ந்தார். மாறிப் பிறக்குமொரு நிகழ்ச்சியாலே மறவியின்பாற்பட்ட எழுத்துருவங்களை அவர்க்கு நினைவூட்ட ஒரு திண்ணைப் பள்ளியின் எளிய ஆசிரியனே அமையும். தம் கலைக்கருவூலத் திருவுள்ளத்தை மீண்டும் திறந்து நுகர்தற்கு எழுத்தறிதல் திறவுகோல் ஆகும். இத் திறவுகோலையே அவர் அத் திண்ணைப் பள்ளியிற் பெற்றனர். இனி, அவர் தாமே தம்முள்ளத் தமைந்த கலைச்செல்வத்தை உணர்ந்து கொள்வார்.

திரு. முத்துக்கருப்பன் செட்டியார் அவர்கட்குத் தம் மகனார் உலகம் போற்றும் உயர்மொழிப் புலவர் என்பது அச் சிறு பருவத்தே அறியக் கூடாததொன்றன்றோ. ஆதலின், தம்மயலிலுள்ள தங்குலத்தினர் போன்று திரைகடலோடியும் திரவியந்தேடிப் பெரும் பொருளீட்டிப் பெருவாழ்வு வாழ்தல் வேண்டும் என எண்ணினராய் அத்தொழில் செய்தற்குத் தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்க்குத் தம் மகனாரை உய்த்தனர்.

இராமன் செல்லுமிடமெல்லாம் அயோத்தி என்பதுபோல, நம் கதிரேசனார் செல்லுமிடமெல்லாம் கல்லூரிகளேயாகும். தோன்றி அழியும் செல்வப் பொருளீட்டுதலில் அவர் நெஞ்சம் படர்ந்திலது. தந்தையாரின் அன்புக் கட்டளையும் மேற்கொள்ளுதற்குரியது; விண்ணளாவிய மலைகளானும், பளிங்கெனத் தெளிந்த நீரருவிகளானும், மனிதர் வழக்கற்ற கானகங்களானும், கடல்சூழ் இலங்கை ஆற்றவும் அழகுடைத்தென்ப; அது காணவும் வேண்டும். எனவே, திருத்தேடுவார் போன்று நம் கதிரேசனாரும் அவ்விளம் பருவத்தே எழிலுடை இலங்கைத் தீவகம் சேர்ந்தனர்.

“யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையனாக இருக்கும் பொழுதுதான், திண்ணைப் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திச்சூடி உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச்சிறுசிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. ஆ! இவைகள் எத்துணை அழகாகவும் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோ ஒரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருளும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஆர்வத்தோடே ஒருசில திங்களிலேயே கற்று மனப்பாடஞ் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன்; உள்ளனவாயின் அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தே நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம், சிற்சில பிள்ளைத் தமிழ் இவைகளே அவ்விளம் பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன். அப்பெருநூல்களும் தஞ்செய்யுட் பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும், – ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் – பழம்பாடம் போன்று எனக்கு விளக்கமாக பொருள் புலப்படலாயின. மேலும் என் இளம்பருவத்து நண்பருக்கும், அயலுள்ளார்க்கும் அவற்றின் பொருளை எடுத்துச் சொல்லுதலும் உண்டு. நான் இவற்றை அயலார்க்குச் சொல்லுங்கால் அவர்கள் நீ யாரிடம் பாடம் கேட்டாய்? எங்கே படித்தாய்? என்று என்னை அடிக்கடி வினவுவதுண்டு. இங்ஙனம் வினவுவார்க்கு மறுமொழி கூற என்னால் இயல்வதில்லை. யான் ஒருவரிடமும் பாடங்கேட்காமலே இவற்றைத் தெரிந்து சொல்கிறேன் என்றாலோ, அவர்கள் அக்கூற்றை நம்புதலும் அரிது அன்றோ?

இவைகள் பண்டிதமணி அவர்களே கூறியவை. பண்டிதமணி யவர்கள் திண்ணைப் பள்ளிக்கூடப் பயிற்சி முடிந்தவுடனேயே தந்தையாரால் இலங்கைக்குச் செலுத்தப்பட்டார். முதன்முதலாக “நம் கதிரேசனை யான் இலங்கைக்கு அனுப்ப எண்ணுகின்றேன் என்று என் அன்னையார்க்கு என் தந்தையார் அறிவித்ததைக் கேட்ட போது என் சிறு உள்ளம் என்னுள்ளே குதூகலித்தது. அன்னையார் மறுத்துவிடுவாரோ என்றஞ்சினேன். ஒருவாறு அன்னையாரும் ஒப்புக்கொண்டனர். இலங்கைத் தீவகம் பேரழகு வாய்ந்ததென்றும், மிகப்பெரிய காடுகளும் மலைகளும் ஆங்குள்ளன என்றும், அக்காடுகளிலே புலி கரடி யானை முதலியன திரியும் என்றும், கலத்தின் கண் ஏறியே இலங்கைக்குப் போதல் வேண்டும் என்று பிறர் சொல்ல யான் கேள்விப்பட்டிருந்தேன் அல்லனோ? இவற்றை எல்லாம் நேரிற் காண்பது எவ்வளவு இன்பமாக இருக்கும். இவ்வாசை என் உள்ளத்தே பொங்கிக் கிளர்ச்சி செய்தது. பொருளீட்ட வேண்டும் என்பதிலோ ஒரு சிறிதும் என் உள்ளம் பொருந்திற்றில்லை,” என்று பண்டிதமணியவர்கள் கூறியுள்ளார்கள்.

“இருவே றுலகத் தியற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.”

(குறள் – 374)

என்பது  தமிழ்மறை. “உலகத்து ஊழினால் ஆய இயற்கை இரண்டுகூறு; ஆதலால், செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு” என்பது இதன் பொருள். “அறிவுடையர் ஆதற்கு ஆகும் ஊழ், செல்வமுடையராதற்கு ஆகாது; செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது” என்பது இதன் கருத்து. இயற்கையிலேயே பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை நம் பண்டிதமணியார் உளத்தைத் தூண்டியதில்லை. கலைச்செல்வத்தைத் தேடித் தேடி தமதாக்குதலிலேயே பண்டிதமணியார் ஒரு பேராசைக் காரராகவே இருந்தார். ஆதலின், இலங்கைத் தீவகத்துப் பொருளீட்டுந் தொழிலிலே ஈடுபட்டிருந்தபோதும், அவர் உள்ளம் கலைச்செல்வத்தையே நாடுவதாயிற்று. அக்காலத்தே திருத்தொண்டர் புராணம் கம்பராமாயணம் முதலிய இலக்கியங்களை இடையறாது பயின்றார். இவ்விலக்கியங்களேயன்றி இவற்றிற்குக் கருவி நூல்களாகிய இயனூல்களும் வேறு உள்ளன என்பதும் கேள்விவாயிலாய் அறிந்தனர். அவ்வியல் நூல்களை ஓதி யுணர்தல் வேண்டும். “அவை எங்கே கிடைக்கும்?”

இவ்வாறு நம் கதிரேசனார் கலையார்வ மிக்கு நின்ற காலம் அவர்க்குப் பதினான்காண்டகவை இளம்பருவமே யாகும். அவ்வகவையில், நம் கதிரேசனார் திடீரெனத் தம் தந்தையாரை இழக்க நேர்ந்தது. அன்புடைத் தந்தையாரின் பிரிவாலே மனம் நொந்து அரற்றினார். இக்காரணத்தாலே அவர் இலங்கையை விட்டுத் தம் தாய் நாடாகிய தமிழகத்திற்கு வரவேண்டியதாயிற்று. தம்மூராகிய மகிபாலன்பட்டிக்கு வந்து, அன்னையாரை வணங்கி அவர் வாழ்த்தும் பெற்றார். இப்பொழுது குடும்பத்தலைவராகிவிட்ட கதிரேசனார் அந்நாள் தொடங்கித் தாம்பிறந்த பொன்னாட்டிலேயே, தம் அன்புடைத் தாயோடே அன்பு கெழும அமர்ந்து, தம்தெய்வத் தாயாகிய தமிழன்னை வழிபாட்டிலே பெரிதும் ஈடுபடுவாராயினர்.

“செய்யுளின் அழகிலே, அது தரும் இன்பத்திலே ஈடுபட்டே யான் கலைகளைப் பயின்றேன் அல்லது, பொருட்பேறடைதற்குக் கல்வி ஒரு சாதனம் ஆம் என்று கருதியாதல், புகழ் பெற வேண்டுமென்றோ யான் கலை பயின்றேனில்லை” என்று நம் புலவர் பெருமான் பல விடங்களிலே கூறியுள்ளனர். மேலும் தமிழ்மொழிப் பயிற்சியாலே அக் காலத்தே ஒரு சிறிதும் பொருளீட்ட இயலாது. தமிழ் கற்றவர்களைப் புகழ்வாரும் அக்காலத்து அரியர். நம் பண்டிதமணியவர்கள் குடும்பம், தனவணிகக் குடும்பங்களில் தலைசிறந்த பொருட்பேறு மிக்க குடும்பம் அன்றெனினும், பொருட்பேறில்லாத சிறு குடும்பமும் அன்று. மகிபாலன்பட்டியில் வழிவழியாக அக் குடும்பத்திற்குப் போதிய விளை நிலங்கள் உள்ளன. பாட்டனார், தந்தையார் ஈட்டிய செல்வமும் உளது. இவற்றிற்கு மேலாக, நம் பண்டிதமணியார்க்கும், அவருடைய அறிவுமிக்க அன்னையார்க்கும் “தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழும்” அமைதியுள்ளமாகிய பொன்செய்யும் மருந்தும் கைவயமிருந்தது. அதனால், கணவனாரை இழந்த சிகப்பியாச்சியார் தம் அன்புடைய மூத்த மகனார் பொருள்தேடி உழலவேண்டா; தம்மோடிருப்பதே சாலும் எனக் கருதினர். நம் பண்டிதமணியாரோ பொய்ப் பொருளீட்டுதலிலே உவர்ப்பும், மெய்ப்பொருள் நாட்டமும் உடையவர்.

  • கலை நண்பர்கள்

“பொன்னுந் துகிரும் முத்து மன்னிய

மாமலை பயந்த காமரு மணியும்

இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்து

அருவிலை நன்கல மமைக்குங் காலை

ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்

சான்றோர் பால ராப

சாலார் சாலார் பாலரா குபவே”

(புறம் – 218)

என்பது கண்ணகனார் என்னும் நல்லிசைப் புலவர் பாட்டு. பொன்னும் பவளமும் முத்தும், நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும், ஒன்றற்கொன்று இடை நிலம்படச் சேய்மையிற் றோன்றினும், கோவை பொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யுங்காலத்தே ஓரிடத்துத் தோன்றினாற்போல, எப்பொழுதும் பெரியோர்கள் பெரியோர் பக்கத்தராவர்; சிறியோர் சிறியோர் பக்கத்திலே சேர்வர் என்பது அழகிய இப்பனுவலின் பொருள்.

இவ்வினிய பாடலிற் கூறியபடி, தம்மூரின்கண் தமதில்லத்திருந்து கலை பயிலத் தொடங்கிய நம் மணியின்பால் “பொன்னுந் துகிரும் முத்தும்” போல்வராகிய சான்றோர் சிலர் வந்து அவர்தம் இனிய நட்புரிமையைப் பெற்றனர். இவ்வாற்றால் மகிபாலன்பட்டியில் நம் பண்டிதமணியவர்களின் இல்லம் கலைமகள் கோயிலாகத் திகழ்ந்தது. நம் பண்டிதமணியவர்கள் இல்லத்திற்கு அடிக்கடி வருகின்ற அறிஞர்களுக்கு, அன்போடே உணவளித்து ஆச்சியாரவர்கள் ஆதரித்து வந்தனர். நம் பண்டிதமணியவர்களும், அவர்கட்கு இயன்ற அளவு பொருளுதவியும் செய்து வந்தனர். சில அறிஞர்கள் பற்பல நாட்கள் நம் பண்டிதமணியோடே உடனுறைவதுமுண்டு. இவ்வாற்றால், அக்காலத்தே தொடங்கி நம் பண்டிதமணி யவர்கள் புலவர்களைப் போற்றும் புரவலராகவும் ஆயினர். புலவர்களைப் புரக்குந் தொழிலை அவர்கள் எப்பொழுதும் ஒல்லும் வகையாற் செய்தே வந்துள்ளார்கள். இன்றும் நம் பண்டிதமணி யவர்களின் உதவியாலே உயர் நிலை அடைந்த புலவர்கள் நந்தமிழ் நாட்டிற் பற்பலர் உளர்.

கலைப் பெரியாராகிய நம் பண்டிதமணியவர்களின் வள்ளன்மை கண்டு அவரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடல் புனைந்து வந்து பரிசில் பெற்றாரும் உளர்.

“தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணாராகுப நீர்வேட்டோரே

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்

சேறொடுபட்ட சிறுமைத் தாயினும்

உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்.”

(புறம் – 204)

என்னும், கழைதின்யானையார் பாட்டிற்கு நம் பண்டிதமணியவர்களின் இல்லம் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது.

நம் பண்டிதமணி யவர்களுடன் நட்புரிமை பூண்டொழுகிய சான்றோர்களில்—சோழவந்தான் அரசன் சண்முகனார், கந்தசாமிக் கவிராயர், சுந்தரேசுவரையர் என்னும் புலவர்கள் குறிப்பிடத்தக்கவராவர்.

சோழவந்தான் அரசன் சண்முகனார் என்பவர், பண்டைக்காலத்தில் பேராசிரியராகத் திகழ்ந்த பரிமேலழகர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், அடியார்க்கு நல்லார் முதலிய சான்றோர்களோடு ஒருங்குவைத்து மதிக்கத்தக்க நுண் மாணுழைபுலமுடைய சான்றோர் ஆவர். தொல்காப்பியம் முதலிய இயல் நூல்களின் நுணுக்கங்கண்டு உணர்த்துவதில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். இவரை அக்காலத்துத் தமிழுலகம் நன்கு அறிந்து போற்றவில்லை. இப்புலவர் பெருமான் வறுமையால் நலிந்தனர். நம் பண்டிதமணியார் அப் புலவர் பெருமானின் பெருமையை உணர்ந்து, இவருடைய கூட்டுறவு நம் தவத்தின் பயனாம் என மகிழ்ந்து, அப்புலவர் பெருமானுக்குப் பொருள் முதலியன நல்கிப் போற்றுவாராயினர். செய்ந்நன்றி போற்றும் அப் புலவர் பெருமானும்,

“கல்விதனம் மிக்க கதிரேச னாம்வணிகன்

வல்விதன மெற்கொழித்தான் வள்ளுவரே”

என்பன போன்ற பல பாடல்களாலே பண்டிதமணியாரை ஏத்தி வாழ்த்தினர்.

“இலக்கியங்களாகிய செய்யுள்கட்கு இயல்பாகவே யான் பொருளுணர்ந்து கொண்டேன் எனினும், இயனூலாகிய தொல்காப்பிய முதலிய நூல்களோ, சேனாவரையர் முதலியவர்களின் உரைகளோ, என் அறிவிற்கெட்டாத ஆழமுடையனவாக இருந்தன. என் அறிவிற்கியலும் துணையும், அந் நூல்களை யான் பிறர் உதவியின்றிப் படித்தேன். பற்பல செய்திகள் எனக்கு விளங்காப் பிதிராகவே இருந்தன; எண்ணிறந்த ஐயங்கள் தோன்றின. இவ் வியல் நூல்களை ஐயந்திரிபறக் கற்றாலன்றிப் புலமை நிரம்பியதாகா தெனவும் அறிந்துகொண்டேன். அந் நூலின் பெயரறிவார்கூட அக்காலத்தே அரியராயினர். அவற்றைக் கற்க ஆசிரியர் வேண்டுமே! ஆசிரியர் எங்கே கிடைப்பார்?

இவ்வாறு இயனூல் கற்ற ஆசிரியரை யான் அவாவியிருந்த காலத்தே, திருவருளின் உதவியால் சோழவந்தான் அரசன் சண்முகனாரை யான் காண நேர்ந்தது. அவருடன் அளவளாவி நட்புரிமையும் கொண்டேன். அப் புலவர் பெருமானும், யானும் ஒத்த தகுதியுடைய நட்புரிமையே கொண்டிருந்தோம் எனினும், அவர் எனக்கு ஆசிரியரே ஆவர். அவருடைய நுண்மாணுழை புலத்தையும், இயனூலறிவையும் உணர்ந்து யான் பெரிதும் வியந்தேன். இவர் என்னோடு என்னில்லத்திலேயே பற்பல செவ்விகளில் பன்னாள் உடனுறைந்து இயனூலறிவில் எனக்குள்ள குறையைப் போக்கினர். இப் புலவர் பெருமானின் நட்புக் கிடைத்ததன் பயனாகத் தொல்காப்பிய முதலிய இயல் நூல்களும் எனக்கு இலக்கியம் போன்று இன்புற்றுப் பயிலும் இனிய நூல்களாயின” என்று நம் பண்டிதமணியவர்களும் அப் புலவர் பெருமானால் தாம் அடைந்த நன்மையைப் போற்றிப் பலரிடத்துங் கூறியுள்ளார்கள்.

செந்தமிழ் மொழிக்கண் உள்ள, உலகநீதி முதல் தொல்காப்பியம் இறுதியாகவுள்ள எல்லா நூல்களையும் இவ்வாறு பயின்று தேர்ந்த நம் பண்டிதமணியவர்கள், தமிழ்ப்புலமை நிரம்புதற்கு வடநூற் பயிற்சி இன்றியமையாது எனக் கண்டுகொண்டனர். மேலும், ஆசிரியர் மாதவச் சிவஞான யோகிகளின் சிவஞானபோதப் பேருரை போன்ற நூல்களையும், சைவசித்தாந்த நூல்கள் பிறவற்றையும், ஐயந்திரிபற அறிதற்கும் வடமொழிப் பயிற்சி வேண்டும்; ஆதலால், வடமொழியில் வல்லுநரான தருவை நாராயண சாத்திரியார் என்பவரைத் துணையாகக்கொண்டு ஐந்தாண்டுகள் அம்மொழியிலுள்ள உயரிய காவியங்கள், நாடகங்கள் முதலிய இலக்கியங்களையும், பாணினி வியாகரண முதலிய இயனூல்களையும் இனிதே பயின்று, வடமொழி வல்லாரும் “எற்றோ இவர்க்கு யாம்” என்று வியக்குமாறு அம்மொழிப் புலமையும் நிரம்பப் பெற்றார்கள்.

நம் பண்டிதமணியவர்கள் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் தம் இரு கண்களேபோல் எண்ணிப் போற்றியவர்கள். ஆதலால், தாமே முயன்று பயின்றிருந்தாலும், சிவஞானபோத முதலிய சைவப் பெருநூல்களையும், சிவாகம நூல்களையும், சமயத்துறை வல்ல பெரியார் துணைகொண்டு கற்றல் வேண்டும் என்று கருதினார்கள். அக்காலத்தே சைவசமயநூல் உணர்ச்சியினும், சிவபெருமானிடத்துப் பேரன்பு பூண்டு வழிபாடு செய்வதினும் சிறந்து விளங்கிய காரைக்குடி சொக்கலிங்கையா என்னும் பெரியோரை அடைந்து, அவர்கள்பால் சைவசமயப் பெருநூல்களை இரண்டாண்டு ஓதி அச்சமய நூலறிவும் ஐயந்திரிபின்றி நிரம்பப் பெற்றனர்.

இதுகாறுங் கூறியவற்றால், நம் பண்டிதமணியவர்கள் மிகப் பொறுமையுடன் நீண்டகாலம் பெருமுயற்சி செய்து, தென்மொழி, வடமொழி நூல்களையும், சமய உண்மைகளையும் அறிந்து, பெரும் புலமை எய்தினர் என்பது புலனாம். இத்தகைய முயற்சியில், அவர்கள் இருபத்தேழாம் அகவை நிரம்புங்காறும் கடைப்பிடியாக ஈடுபட்டிருந்தனர்.

“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”

(குறள் – 26)

என்பது வள்ளுவர் வாக்கு. இங்ஙனம் செயற்கரிய செயல்களைப் பொறுமையோடு கடைப்பிடியாகக் கொண்டு யாதேனுமொரு துறையில் முயன்று ஆற்றியவர்களே நம்மனோரால் பெரியோர் என்று புகழ்ந்து போற்றுதற்குரியவர் ஆகின்றனர்.

  • சீர்திருத்தம்

மக்கட்கு உறுதியளிக்கும் துறைகள் பற்பல உள்ளன. அவற்றில் யாதேனுமொரு துறைபற்றிச் சீர்திருத்த முயல்வோர், முதலில் அத்துறைக்கண் தாமே நன்கு சீர்திருத்தம் அடைந்தவராதல் வேண்டும். தம்மாற் சீர்திருத்தப்படும் துறைக்குத் தாமே எடுத்துக்காட்டாகத் திகழ்தல் வேண்டும். மொழியறிவு நிரம்பப்பெறாதவன் மொழியை சீர்திருத்த முயலுதலும், ஒழுக்கநெறி நில்லாதவன் மாந்தர்க்கு ஒழுக்கநெறி காட்ட முற்படுதலும், சமயநெறி யறியாதவன் மாந்தர்தம் சமயநெறியைச் சீர்திருத்த முயலுதலும் நகைப்பிற் கிடனாகிய பயனில் செயல்களாம் அன்றோ?

நம் பண்டிதமணியவர்கள் கல்வி கேள்விகளான் நிறைந்து முதிரும் துணையும், சீர்திருத்த முற்பட்டிலர். முதற்கண், அவர் தம்மையே சீர்திருத்திக்கொண்டனர். இனி, அப்பெரியோர் உலகைச் சீர்திருத்தக் கருதியது சாண்றாண்மைக் கேற்றதொரு நன்னினைவே ஆகும். இச்சீர்திருத்தத்தை முதன் முதலாகத் தம் மூரிலேயே செய்தற்கு முற்பட்டார்.

“அறிவுடையார் எல்லா முடையா ரறிவிலார்

என்னுடைய ரேனு மிலர்”

(குறள் – 430)

என்பது வள்ளுவர் மெய்ம்மொழி. தம் நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் மக்களின் அறியாமையே ஆகும். ஆதலால், நந் தமிழ் மக்களை நிரம்பிய அறிவுடையாராக்குதல் வேண்டும். அறிவு, கல்வியாலே பெருகுவது; எனவே, நாடு முழுதும் கல்விக் கழகங்கள் நிறுவுதல் வேண்டும். இத்தொண்டே யாம் முதலில் மேற்கொள்ளற்பாலது என்று துணிந்தனர். மகிபாலன்பட்டி ஒரு சிறு கிராமம். ஆங்குள்ள சிறார்கள் பயிலுதற்குச் சிறந்த தொடக்கப்பள்ளி வேண்டும். ஆதலால், தாம் வழிபடு கடவுளாகக் கொண்ட அவ்வூர் வீரவிநாயகர் திருப்பெயராலே, ஒரு தொடக்கப் பள்ளியைத் தம்மூரின்கண் நிறுவி, அவ்வூர் மக்களைக் கல்வி பயிலும்படி செய்தனர். அத்தொடக்கப் பள்ளியில் நல்ல ஆசிரியர்களையும் தேர்ந்து அமைத்தனர். அன்று தொடங்கி, “வீர விநாயகர் கல்விக் கழகம்” என்னும் பெயரால் இன்றும் நன்னிலையில் நிகழ்ந்து வருகின்றது.

மேலைச் சிவபுரி என்னும் மூதூரில், வ. பழ. சா. பழனியப்ப செட்டியார் என்றொரு பெருநிதிக் கிழவர் வாழ்ந்து வந்தனர். இவர் திருமகள் திருவருளுக்கு உரியராயிருந்ததனோடு, கலைமகள்பாலும் பேரன்புடையோர். கற்றவர்களை உற்றவர்களாகக் கொண்டு போற்றும் இயல்புடையார். தம்மினத்தார் பொருட்டுறையிற் போலக் கல்வித் துறையினும் மேம்படவேண்டும் என்னும் அவாவுடையர். இப்பெரியார் நம் கதிரேசனாரின்ன் பேரறிவுடைமை கண்டு அவரை நன்கு மதிப்பாராயினர்; அவர்பால் பெரிதும் நட்புரிமையும் கொண்டிருந்தனர்.

6. சன்மார்க்க சபை

நம் பண்டிதமணியவர்கள், தந் நண்பரும் பெருநிதிக் கிழவரும் இயல்பிலேயே வண்மைக் குணம் நிரம்பியவருமாகிய வ. பழ. சா. பழனியப்ப செட்டியார் அவர்களிடம் தனவணிகர் அறிவு முன்னேற்றம் பெறுதற்குத் தாங்கருதியுள்ள செயலை விளக்கமாகக் கூறினர். அவரும் ஆர்வத்துடனே அச்செயலின்கண் ஒத்துழைக்க முற்பட்டனர். சங்கங்களின் வாயிலாகவே மொழி வளர்த்தல் வேண்டும் என்பது நம் பண்டிதமணியவர்களின் கொள்கையாதலால் முதன்முதலாக மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை என்றொரு கழகத்தை நிறுவ முற்பட்டனர்.

சங்கங்களின் வாயிலாக மொழிவளர்க்கும் செயல் நமக்குப் புதிதன்று; பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிவளர்க்க முற்பட்ட நம் முன்னோராகிய பாண்டிய மன்னர்களும், சங்கங்களின் வாயிலாகவன்றோ நந்தெய்வமொழியை வளர்த்தனர்.  நந்தமிழ் இன்றுஞ் சங்கத் தமிழ் என்றன்றோ கூறப்படுகின்றது. அநுபவத்திற் கண்ட நெறியே அன்றோ அந்நெறி; ஆதலால், நம் பண்டிதமணியவர்கள் தமிழ் வளர்த்தற்குச் சங்கம் காண முற்பட்டது மிகமிகப் பொருத்தமுடைய செயலே ஆகும்.

கி. பி. 1909ஆம் ஆண்டு மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை நிறுவப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்தோங்கப் பணிபுரிவதே அச்சபையின் நோக்கமாகும். இச்சபையின் உறுப்பாகக் “கணேசர் செந்தமிழ்க் கலாசாலை” என்றொரு கலைக்கழகமும், “ தொல்காப்பியனார் புத்தகசாலை” என்றொரு நூனிலையமும் நிறுவப்பட்டன. பன்னூறு மக்கள் குழுமியிருந்து சொற்பொழிவு கேட்டற்கு ஏற்ற இடவசதியுடையதாகவும், மாணவர்க்கு வகுப்புக்கள் நடத்துதற்கு ஏற்றதாகவும் அழகிய பெரிய கட்டிடம் ஒன்றும் எடுக்கப்பட்டது. ஒருவர்பின் ஒருவராகப் பெருநிதிக்கிழவர் பலர் சபைக்குப் பொருளுதவி செய்ய முன் வருவாராயினர். சபை தோன்றிய ஐந்தாண்டகவையில் இருபதினாயிரம் வெண் பொற் காசுகள் சபைக்கு நன் கொடையாகச் செல்வர்களால் வழங்கப்பட்டன.  

நாட்டின் பல்வேறிடங்களினும் உள்ள, அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களை அடிக்கடி அழைத்து அவர்தம் அறிவுரைகளால் மக்கள் அறிவைப் பெருக்குதலும், மாணவர் பலர்க்கும் உண்டி உடை உறையுள் முதலியன வழங்கி நன்முறையிற் கல்வி பயிற்றலும், தனித்தமிழ்த் தேர்வில் சிறந்த முறையில் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்தலும் அச் சபையின் நோக்கங்களாம்.

புதியதொன்றனைப் பெரிதும் விரும்பும் இயல்புடையவர் மக்கள்; இச்சன்மார்க்க சபையும், அதன்கண் நிகழும் நிகழ்ச்சிகளும் அந்நாட்டிற்கே புதியனவாகும். இச் சன்மார்க்க சபையே தனவணிக நாட்டில் நிறுவப்பட்ட முதற்சபை என்பது நினைவுகூரற்பாலது. நாட்டின் பல திசைகளினின்றும் புதிய புதிய புலவர் பெருமக்கள் சபையாரால் அழைக்கப்பட்டனர். அவர்தம் அறிவுரைகளைக் கேட்டற்குச் சேய்மையிலுள்ள மக்களும் திரண்டு வந்து குழுமுவாராயினர். இடையிடையே நம் பண்டிதமணியவர்களும் அறிவுரை நிகழ்த்துவார்கள். இச்சபையின் வாயிலாய்த் தம்மினத்தே அறிவொளி புகுதலை அறிந்த பலர், இத்தகைய சபைகள் தத்தம் ஊரிலும் நிறுவப்படுதல் வேண்டும் என்று அவாவினர்.

இன்று, தனவணிக நாட்டிலே பற்பல தமிழ்க்கழகங்கள் தோன்றிப் பணிபுரிந்து அறிவொளி பரப்பி வருகின்றன. இந்நன்மைக்கு முதன் முதலாக வித்திட்டவர் நம் பண்டிதமணியே ஆவார். அன்று பண்டிதமணியவர்கள் தம்முள்ளத்தே கண்டிருந்தவைகள் எல்லாம், இன்று நடைமுறையில் தோன்றி நிகழக் காண்கின்றோம். பல ஆண்டுகட்கு முன்னர் நம் பண்டிதமணியார் தங்குலப் பெரியோர்களைச் சன்மார்க்க சபையிற் கூட்டி அவர்கள் முன்னிலையிலே,

“தமிழ்க் கலாசாலைகள் ஊர்தோறும் நிறுவுதல் வேண்டும்; பத்து ஊர்களுக்கு ஒன்றாக எல்லா வசதிகளும் நிரம்பிய ஒவ்வொரு பெரிய நகரங்களினும் புலவர் பெருமக்கள் அடிக்கடி வந்து அறிவுரை வழங்குதற் கேற்றனவாகக் கழகங்கள் நிறுவுதல் வேண்டும்; எடுத்துக்காட்டாக இச்சன்மார்க்க சபையை நினைவு கூர்மின். இது நிறுவப்பட்டு இரண்டாண்டுகளே ஆயின. இவ்விரண்டாண்டினுள் பிறந்த நாள் தொடங்கி யாம் கண்டறியாத எத்தனை பெரியோர்களைக் கண்டோம்; அவர் வாயிலாக எவ்வளவு நுண்பொருள்களைக் கேட்டு அறிவுப்பெருக்கம் எய்தினோம். நம் தனவணிக நகரங்களில் இச்சன்மார்க்க சபை போன்று ஒருபது சபையேனுந் தோன்றுவன வாயின், நம் மக்கள் அறிவுச் செல்வத்தை நிரம்ப எய்தி நாரிக நிலையில் மேம்படுவாரல்லரோ! பொருளுடையார் என்று நம்மைப் பிறர் புகழ்வதினும், அறிவுடையார் என்று புகழ்வதன்றோ நமக்கு மேம்பாடு தரும்.”

என்றின்னோரன்ன பொன்னுரைகளை வழங்கி ஊக்கி வந்தனர். மேலும் இச்சபையின் வாயிலாய்த் தம்மினத்தவர்களுக்குக் கல்வித்துறை யல்லாத பிற துறைகளினும் பற்பல சீர்திருத்தங்கள் செய்து வந்தார்கள்.

7. மொழிபெயர்ப்பு

இங்ஙனம் கல்வித்தொண்டின் வாயிலாய்த் தந் நாட்டவர்க்கு அறிவுச் செல்வம் பெருக்கிவந்த நம் பண்டிதமணியவர்கள், மற்றோர் வகையாலேயும் மொழியாக்கத் தொண்டு இயற்றி வந்தார்கள். தாம் கற்றின்புற்ற வட நூல்களிற் சிறந்த நூல்களை மொழி பெயர்த்து, நந்தமிழர்க்கு வழங்குதல் வேண்டும் என எண்ணினர். சன்மார்க்க சபையின் ஆதரவில் இம் முயற்சியில் ஈடுபட்டனர். வடமொழியிற் சிறந்த நாடக நூலாகிய “மிருச்சகடிகம்” என்னும் நூலை “மண்ணியல் சிறு தேர்” என்னும் பெயரானே மொழிபெயர்த்தார்கள். இந் நூல் இடையிடையே செய்யுள் விரவப்பட்ட உரைநடை நூலாக வடமொழிக்கண் உள்ளது. அவ் வடமொழிக்கண் உள்ளபடியே, தமிழில் உரையை உரையாகவும், செய்யுளைச் செய்யுளாகவும் இவர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஒரு மொழியிலுள்ள செய்யுளைப் பிறிதோர் மொழியில் செய்யுளாகவே மொழிபெயர்ப்பது மிகவும் செயற்கருஞ் செயலாகும். எற்றாலெனின், செய்யுள்கள் எதுகை மோனை முதலியவற்றை உடையனவன்றோ. இவ் வெதுகைக்கேனும், மோனைக்கேனும், இன்னுஞ் சீருக்கேனும், சொற்கள் தேர்ந்தமைக்குங்கால் முதனூற் செய்யுளிலில்லாத பொருளுடைய சொற்களைச் சேர்த்தல் அல்லது முதனூற் செய்யுளிலுள்ள பொருளை நழுவவிடுதல் முதலிய செயல்கள் இன்றியமையாதன வாகிவிடும்.

நம் பண்டிதமணி யவர்களோ தம்முடைய ஒப்பற்ற புலமை யாற்றலாலே முதனூற் செய்யுட்களிலுள்ள பொருள்கள் குறையாமலும், மிகாமலும் தமிழ்ச் செய்யுளின் எதுகை மோனை சீர் முதலிய நயங்கள் குன்றாமலும், வடநூற் செய்யுட் பகுதியைச் செந்தமிழ்ச் செய்யுளாகவே மொழி பெயர்த்துள்ளார்கள். இவ் வருமையை உணர்ந்த இருமொழிப் புலவர் பலர், நம் பண்டிதமணி யவர்களைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். மேலும் இராமேச்சுரம் வடமொழிக் கல்லூரித் தலைவராயிருந்த சுப்பிரமணி ஐயர் என்னும் வடமொழிவாணர்,

“வடமொழியில் தெளிவு குன்றிக்கிடக்கும் சில இடங்களில் இத் தமிழ் மொழிபெயர்ப்பு, தெளிவு மலிந்து காணப்படுகின்றது. இவ்வாற்றால் இது முதனூலினும் மேம்பாடுடையதாகக் கருதற்பாலது.”

என்று புகழ்ந்துள்ளார்கள் எனின், நம் பண்டிதமணி யவர்களின் மொழிபெயர்ப்பு ஆற்றற்குச் சான்று பிறிது கூறுவானேன்!

நம் பண்டிதமணியவர்கள், இம் மண்ணியல் சிறு தேரேயன்றி, மேலும் அவ் வடமொழிக்கண் உள்ள சிறந்த பொருணூலாகிய “சுக்கிர நீதி” யையும், “சுலோசனை”, “உதயண சரிதம்”, “பிரதாப ருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” என்னும் ஏனைய நூல்களையும் பொருள் பெயராது, நுண்ணிதின் மொழிபெயர்த் துதவியுள்ளனர். இந் நூல்களில் “பிரதாப ருத்திரீயம்”, “மாலதீ மாதவம்” என்னும் இரண்டு நூல்களும் இன்னும் அச்சேறவில்லை. ஏனைய அச்சேறி வெளி வந்துள்ளன. அச்சேறாதவற்றை அச்சேற்றித் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு யாம் திரு கதி. சுப்பிரமணியன் செட்டியார் அவர்களை வேண்டுகின்றோம்.

                         8. செய்யுளியற்றல்      

நம் பண்டிதமணி யவர்கள் தம் இளமைப் பருவத்தே இயற்றிய “பதிற்றுப்பத்தந்தாதி”, “சுந்தரவிநாயகர் பதிகம்”, “வீரவிநாயகர் மாலை” என்னும் சின்னஞ் சிறிய செய்யுள் நூல்களும், பிற்றை நாளில் செட்டிநாட்டரசர் சர். அண்ணாமலை வள்ளலை அவ்வப்போது பாடிய வாழ்த்தியற் செய்யுள்களும், “மண்ணியல் சிறுதேர்” என்னும் நூலின்கண் மொழிபெயர்த்தமைத்த செய்யுட்களும், வேறு சில தனிச் செய்யுள்களும், அவர்கள் சுவையுடைய செய்யுள்களை இயற்றும் ஆற்றலுடையவர்கள் என்பதனை நன்கு விளக்குகின்றன.

வீழ்ச்சியுற்ற நந்தமிழ்மொழிக்குப் புதுவாழ்வளித்தற்குச் செய்ய வேண்டிய பிற செயல்கள் அவர்கள் காலத்தைப் பெரிதும் கவர்ந்துகொண்டமையாலோ? வேறு எக்காரணத்தாலோ? இவர்கள் சிறந்த செய்யுள் நூல்கள் இயற்றுஞ் செயலில் முற்படவில்லை. தாம் முற்படாவிடினும், சிறந்த செய்யுள் நூல்களை இயற்றுதலும் நம் தமிழ் மொழிக்குச் செய்யும் சிறந்த பணியே ஆகும். ஆதலின், செய்யுள் இயற்றவல்ல தகுதியுடைய புலவர்கள் அச் செயலில் ஈடுபடுவாராக என அவ்வப்போது அறிவுறுத்தி வந்தனர்.

பிழை நிறைந்த செய்யுள்களைக் கேட்க நேர்ந்தவிடத்துப் பண்டைக்காலத்திருந்த தண்டமிழாசான் சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர், எழுத்தாணியாலே தம்தலையிற் குத்திக்கொள்வாராம். அங்ஙனமே செய்யுள் இயற்றும் வன்மையில்லாதார் பிழையுடைய செய்யுள்களை இயற்றக் கண்டால், நம் பண்டிதமணியவர்கள் தலையிற் குத்திக் கொள்ளாராயினும், உளம் புண்பட்டு வருந்தாநிற்பர்:

“சிலர் வேறுவழியில், தாம் உயர்ந்த நிலை அடைந்திருப்பதாக எண்ணித் தமிழிலும் தம் புலமை முற்றுப் பெற்றதாக உலகங் கொள்ள விழைந்து, தமிழிற் பாட்டுப் பாட முயல்கின்றனர்; அந்தோ! அவர் பாட்டை நினையுங்கால் தமிழ்மொழியாளர் செயல் இத்தகையது போலும் என்று பிறமொழியாளர் எள்ளி நகையாடற் கிலக்காகின்றதே என்று வருந்த வேண்டியதாகின்றது. ‘செல்வப் புதல்வனே ஈர்ங்கவியா’ என்றபடி புலவர்க்குப் புலமைப் புதல்வராகப் பிறக்கும் இயல்பினவாகிய பாட்டுக்களைக் கருக் கொள்ளாது, பொறையுயிர்க்க எண்ணின் எங்ஙனமாம்”, என்பன பண்டிதமணி யவர்கள் புன்கவியாளர் செயற்கு இரங்கிக் கூறியனவாம்.

அக்காலத்தே, ஒரு போலிப் புலவர் தம்மைத் தாமே “வீமகவி” என்னும் சிறப்புப் பெயராலே சிறப்பித்துக் கொண்டு, தமிழிலக்கண இலக்கியங்களைப் பொதுமுறையானும் தாம் கல்லாதவராயிருந்தும், போலிக் கவிகளைப் பாடித் தனவணிக நாட்டிற் பொருளீட்டிப் பிழைத்து வந்தார். இப்புன்கவிஞர், தனவணிகப் பெருநிதிக் கிழார்களை அண்மி, “யாம் கலைமகள் அருளை நிரம்பப் பெற்றுள்ளேம்; யாரையேனும் சினந்து ஒருபாடல் கூறுவோமாயின் உடனே அவர் வாழ்விழந்து மாள்வது திண்ணம்! அங்ஙனமே, எமக்கு நிரம்பப் பொருள் தருவாரை, வாழ்த்திப் பாடுவோமாயின், அவர் மேலும் மேலும் நிதிப் பெருக்கமெய்தி நீண்ட வாழ்நாளும் எய்துவர்!” எனக் கூறி அச்சுறுத்தியும் அவாவுறுத்தியும் வந்தனர். வஞ்சக மறியாத செல்வர்கள், அவர் வசைபாடி தம் வாழ்வைக் கெடுப்பினும் கெடுப்பர் என்று அஞ்சி, அவர் வேண்டியாங்குப் பொருளும் வழங்குவாராயினர். அவர் நினைத்தவுடனே “குருட்டுக்கண் இருட்டுக் கஞ்சாது” என்றபடி, விரைந்து நாணமின்றிப் பாடுதலாலே, பாட்டின் இயலறியா மக்கள், அவரைக் கலைமகள் அருள் பெற்றவரே என்று நம்பினர். இவ்வாறு செல்வாக்கடைந்த அவ் வீமகவியார் தலபுராணங்கள் பாடி அரங்கேற்றவும், அப் பிழைமலிந்த நூல்களை அச்சிடவும் தொடங்கினர்.

அவ் வீமகவியார் “கீழைச்சிவல்பட்டித் தலபுராணம்” என்றொரு நூலைச் செய்யுள் வடிவில் இயற்றி அச்சேற்றி வெளியிட்டனர். மேலும், “நீதிவழி” என்றொரு (72) வெண்பாவாலாகிய நூலையும் இயற்றித் தேவகோட்டை திரு. அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியார் என்னும் பெருநிதிக் கிழவர் தலைமையில் மக்களைக் கூட்டி, அந் நூலை அரங்கேற்றலாயினர். இத்தகைய செயல்களால் வீமகவியார்க்கு நிரம்பப் பொருள் வருவாயும் உண்டு.

மக்களின் அறியாமையையும், வீமகவியாரின் வஞ்சகத்தையும் கண்டு நம் பண்டிதமணியவர்கள் மிகவும் வருந்தினர். மேலும், வீமகவியாரின் தலபுராணப் புன்கவிகளும், தம்முள்ளத்தைச் சுட்டன. வீமகவியாரின் நீதிவழி நூல் அரங்கேற்று விழாவிற்குத் திரு. அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியாரவர்கள் நம் பண்டிதமணியாரவர்கட்கும் அழைப்பு விடுத்திருந்தனராகலின், அவ் வரங்கேற்று விழாவிற்கு, நம் பண்டிதமணியவர்கள் வேறுசில அறிஞர்களோடே சென்றிருந்தார்கள்.

நூல் அரங்கேற்றுங்கால்,

“புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவும் கண்ணோடி

நல்லார் வருந்தியும் கேட்பரே மற்றவன்

பல்லாருள் நாணல் பரிந்து” (நாலடி – 155)

என்றபடி வருந்தியும் பொறுமையோடு கேட்டிருந்து, பின்னர் வீமகவியாரைத் தனியே அழைத்து, ஒரு சில அறிஞரை உடன் வைத்துக் கொண்டு அவர்தம் பாடலிலுள்ள எண்ணிறைந்த பிழைகளையும் எடுத்துக்காட்டி, இங்ஙனம் கவிபாடுதல் நம் தமிழ்மொழிக்கு இழுக்குத்தரும் செயலாகும் என்றும், தலபுராணம் பாடுதல் முதலிய தொழிலை விடுக என்றும் வேண்டினர். இவ் வேண்டுகோட்கு இணங்காமல் வீமகவியார் மேலும் தன் புன்செயலை விடாது செய்வாராதலைக் கண்டு, “கீழைச் சிவல்பட்டித் தலபுராணப் பிழைகள்” என்று ஒரு நெடிய அறிக்கையை எழுதி அச்சிட்டுத் தனவணிகர் நாடு முழுதும் பரப்பினார்கள். அதே அமயத்தில், தமிழறிஞர், இராமசாமி பிள்ளை என்பவர்கள் “வீமகவியாரின் நீதிவழிப் பிழைகள்” என்றொரு அறிக்கை வெளிப்படுத்தினர். இவற்றால், மக்கட்கு வீமகவியாரிடத்து உள்ள அச்சம் போக்கப்பட்டது; கவியாரும் பின்னர் வாளா அடங்குவாராயினர்.

பின்னர், நம் பண்டிதமணியவர்கள் செவ்வி நேர்ந்த பொழுதெல்லாம், செய்யுளியற்றுந் திறலுடையாரை அச்செயலிலே ஈடுபடும்படி தூண்டி வந்துள்ளார்கள். “நம் பரதகண்டத்து மொழிகள் எல்லாம் நிலை பிறழாது என்றுந் திருந்திய முறையில் திகழ்தற்குக் காரணம் மூல நூல்கள் எல்லாம் செய்யுட்களால் ஆக்கப்பட்டமையே”, என்றும், “ஒரு செய்தியைப் புலமுடையார் உள்ளம் கொள்ளுங்கால் அது செய்யுள் முகமாகக் கேட்கப்படுதல் போல் வழக்குச் சொல் முகமாகக் கேட்கப்படுதல் இன்பம் பயவாது”, என்றும், “அரசுரிமையும் புலமையும் வாய்ந்த சைவமன்னர் ஒருவர், தம் உண்மைச் சமயக் கொள்கையையும் மறந்து வேற்றுச் சமய நூல்களில் ஈடுபட நேர்ந்தது செய்யுளின்பத்தினாலேயாம்,” என்றும் “மீண்டும் அவரை அவர் சமய நிலையில் திட்பமுறப் பிணித்து வயமாக்கியதும் செய்யுளின்பமேயாம்,” என்றும் “கவிபாடும் ஆற்றலில்லாதார் புலவருலகத்தில் மக்கட் பேறில்லா வாழ்க்கை உடையவர் ஆவார்”, என்றும் “புலமை வாழ்க்கையிற் சிறப்பெய்த எண்ணுவாரெல்லாம் செய்யுள் பாடும் வன்மை உடையராதல் வேண்டும்,” என்றும், இன்னோரன்ன அறிவுரைகளால் புலமையாளரை நம் பண்டிதமணியவர்கள் ஊக்கிவந்தனர்.

இனி, நம் பண்டிதமணியவர்கள் பாடிய தனிச் செய்யுள்கள் பலவற்றையும் தொகுத்து, ஒரு நூலாக்குதல் தமிழுக்கு ஆக்கந்தரும் செயலாகும்.

9. கட்டுரைத் திருப்பணி

பண்டிதமணியவர்கள் அவ்வப்போது அரிய கட்டுரைகள் வரைந்து, பத்திரிகை வாயிலாய் வெளியிட்டு வந்தார்கள். அக் கட்டுரைகளைத் தேடித் தொகுத்தல் வேண்டும். ஒரு சில கட்டுரைகளை மட்டும், பண்டிதமணியவர்களே தொகுத்து உரைநடைக் கோவை என்னும் பெயரானே, இரண்டு பகுதிகளாக வெளியிட்டுள்ளார்கள். அவ் விரண்டனுள், முதற்பகுதி சமயச்சார்பான உயரிய கட்டுரைகள். இரண்டாம் பகுதி இலக்கியச் சார்பான கட்டுரைகளாம். முதற்பகுதியாகிய சமயக் கட்டுரைகளின் பெருமையை

“ஈண்டுத் தொகுக்கப்பட்ட ஐந்து கட்டுரைகளும் திருவைந் தெழுத்துப் போலப் பாராட்டத் தக்கன. அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல், முத்திப்பேறு என்பவற்றின் நுட்பங்களை விளக்குவனவா யமைந்துள்ளன. இந்நூல் சைவ உண்மையை அறிய விரும்பும் தமிழ் மாணவர்க்கு எளிதிற் பெரும் பயன் தரும் இணையற்ற அறிவுக் கருவூலமாகப் போற்றற்பாலது”, என்றும், “தற்கால உரைநடைக்குத் தக்க எடுத்துக்காட்டாக இவை மிளிர்வன”, என்றும், “நிகரற்ற ஆழ்ந்த சைவசித்தாந்த நூலாராய்ச்சித் திறனோடு இந் நூலிற் காணப்படும் நுண்பொருள்போல இதுவரை எவரும் அறிவுறுத்தக் கண்டிலம்”, என்றும், தாகூர் சட்ட விரிவுரையாளராகிய அறிஞர் பெருமான் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் வரைந்துள்ள பாராட்டுரைகள் நன்கு விளக்குவனவாம்.

பண்டிதமணியவர்கள் வரைந்துள்ள ஏனைய கட்டுரைகள் அனைத்துமே இணையற்ற அறிவுக் கருவூலங்கள் என்பது மிகையன்று.

                        10. பண்டிதமணிப் பட்டம் 

நம் பண்டிதமணியவர்களால் நிறுவப்பட்ட சன்மார்க்க சபையும் நாடோறும் தழைத்து வளர்ந்து, அந்நாட்டின்கண் அறிவு பெருக்கி வந்தது. அச்சபையினால் விளைந்த நன்மைகளை யுணர்ந்து, அந்நாட்டில் மக்கள் வேறு பல சபைகளையும் தோற்றுவித்தனர். சன்மார்க்க சபையின் ஆறாம் ஆண்டு விழா மிகமிகச் சிறப்பாக நடந்தது. அக்காலத்தே மகாமகோபாத்தியாய தாட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் அவ்வாண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். தமிழ் நாட்டின் பற்பல பகுதிகளினின்றும் வந்து புலவர் பெருமக்கள் பலர் சொற்பொழிவாற்றினர். அறிவுரைகளைக் கேட்பதற்குப் பல்லாயிரம் மக்கள் வந்து குழுமினர்.

பெரியார் உ. வே. சாமிநாதையரவர்களைத் தமிழுலகம் நன்கறியும். தமிழறியாதாரே ஐயர் அவர்களையும் அறியாதவராவார். நம் தமிழன்னை புதுவாழ்வடைதற்குத் தொண்டு பூண்டு பணிசெய்தாருள் இப்பெரியாரே முதல்வர் எனலாம். ஆங்கில மொழியாலே நெருக்குண்டு புறக்கணிக்கபட்ட நம் தமிழன்னை, பண்டைநாள் தம்தவப்புதல்வர்கள் தனக்கு அன்போடே அளித்த சிந்தாமணியும் மேகலையும் சிலம்புமாகிய ஒப்பற்ற அணிகலன்களையும் இழந்து வறியளாகும் நிலையை எய்தினள். நம் ஐயரவர்கள் தமது பேருழைப்பாலே அழிநிலையிலிருந்த அவ்வணிகலன்களை எடுத்து மாசு போக்கிப் புதுப்பித்துத் தமிழன்னைக்கு அணிவித்துப் போற்றினார்கள். அத்தகைய பெரியார் நம் பண்டிதமணியாரின் ஆழ்ந்த புலமையையும், தமிழன்னைக்கு அவர் ஆற்றி வரும் மாபெருந் தொண்டினையும், கண்டு வியந்தார்கள். அவர்களோடே நட்புரிமையும் கொண்டார்கள். சன்மார்க்க சபையில் தலைமை தாங்கி நம் கதிரேசனாரின் பெருமையை எல்லோரும் அறிய எடுத்து மொழிந்தார்கள். “பண்டிதர்கள் உலகிற் பற்பலர் இருப்பினும், அவருள் நம் கதிரேசனார் மணிபோலத் திகழ்கின்றார் ஆதலின் உங்கள் முன்னிலையிலே இக் கதிரேசனார்க்கு யாம் “பண்டிதமணி”  என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டுகின்றோம்” என்றார்கள். தலைவராற் சூட்டப்பட்ட பண்டிதமணி என்னும் பெயர் சாலப் பொருத்தமுடையதே எனப் பின் பேசிய புலவரெல்லாம் மகிழ்ச்சியுடனே வழிமொழிந்து போற்றினார்கள். அன்று தொடங்கி, நம் கதிரேசனார்க்குப் “பண்டிதமணி” என்னும் சிறப்புப் பெயர் இயற்பெயர்போல வழங்குவதாயிற்று. பண்டிதமணியின் ஒளி, தாம் பிறந்த நாடாகிய தனவணிகர் நாட்டின்கண் அடங்காமல், வடவேங்கடம் தென்குமரி யாயிடைக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் பரவித் திகழலாயிற்று.

11. நாநலம்

கலைநலம் நிரம்பிய உள்ளம் பெற்ற சான்றோருள்ளும், தாம் கற்றவற்றைப் பிறர் நன்குணருமாறு கூற வல்லார் மிகச் சிலரேயாவர். இது பற்றியே “ஆயிரத்தொன்றாம் புலவர், வார்த்தை பதினாயிரத் தொருவர்,” என்று பண்டைச் சான்றோர் கூறலாயினர். நம் வள்ளுவப் பெருந்தகையாரும், இச் சொல்வன்மையை நாநலம் எனக் கூறி, இந்நலம் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது என்பதை,

“நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉ மன்று.” ( குறள் – 641)

எனத் தெரித்தோதினர். கல்வி நிரம்பப் பெற்றும் சொல்வன்மையில்லாதாரை, “இணரூழ்த்தும் நாறாமலர் அனையர்” என மணமற்ற மலரோடு ஒப்பிடுவர். கற்றோர், பிறர்க்குப் பயன்பட வாழ்தலே முறையாகவும், சொல்வன்மை யின்மையால் அவ்வாறு பிறர்க்குப் பயன்பட வாழமாட்டாமையின் அவர், “கல்லாதவரிற் கடை” என்றும் வள்ளுவர் கூறியுள்ளார்.

நம் பண்டிதமணியவர்களோ வார்த்தைகூற வல்லார் பதினாயிரவருள்ளும் மிக்க ஒருவராக விளங்கினார்கள். தம்முடைய சொல்லை ஒருமுறை கேட்டோர் மீண்டும் மீண்டும் கேட்டல் வேண்டும் என்று விரும்பும்படி இனிமையாகப் பேசுவார்கள். அடிசிற்கு உப்பு அளவறிந்து இடுமாறு போலத் தம்மினிய பேச்சிடையே அளவறிந்து நகைச்சுவை கலந்து பேசுவார்கள். அவையிடையே சொற்பொழிவாற்றும் பொழுதும், தனியே ஒருவருடன் அளவளாவி பேசும்போதும் தம் முகத்தே அன்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழியும்படி பேசுவார்கள். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு, பொருளற்ற வெறுஞ் சொற்களை மூச்சுவிடாமல் வாரி வீசும் சொற்பொழிவாளர் பலரை யாம் கண்டிருக்கின்றோமல்லமோ! அவ்வாறன்றி, நம் பண்டிதமணியவர்கள் பேசுங்கால், புன்னகை பூத்துப் பொலிவுறும் முகத்தோடே, விரையாது மெல்லன மெல்லன விழுமிய சொற்களாலே இனிமை ததும்பப் பேசுவார்கள். நீண்ட நேரம் பேசியவிடத்தும், அவர்கள் சொற்பொழிவின்கண் பொருளற்ற சொல் ஒன்றேனும் கலக்கமாட்டாது. “வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன்தருதல்” என்னும் சொல்லுக்குரிய எல்லா குணங்களும், அவர்கள் சொற்பொழிவில் நிரம்பியிருக்கும்.

நம் பண்டிதமணியவர்கள், யாதேனுமொரு கழகத்தே சொற்பொழி வாற்றுமிடத்து, அக் கழகத்தே இவர்க்கு முன்னும் பின்னும் சொற்பொழிவாற்றும் எத்தகைய அறிஞர் பேச்சினும் தம்பேச்சு மிக்குத் தலைமைத்தன்மை யுடைத்தாதலை அவையினர் நன்கு அறிந்துகொள்ளுமாறு சொற்பொழிவாற்றுந் திறமை பெற்றிருந்தார்கள். இத்திறமை இவர்கட்கு நிரம்பிய இருமொழிப் புலமையாலே ஏற்பட்டதாகும். நம் பண்டிதமணி போன்று இருமொழியினும் நிரம்பிய புலமையுடையோர் அரியரே யன்றோ!  வடநூற் புலமை மட்டும் நிரம்பியவரும், அன்றித் தென்மொழிப் புலமை மட்டும் நிரம்பியவரும், இருமொழியும் கற்றவிடத்தும், புலமை யுள்ளம் இல்லாதவரும், ஒருமொழியைச் சிறப்பாக அறிந்து மற்றைமொழியைப் பொதுவினறிந்தாரும், என இத்திறத்த அறிஞரேயன்றோ பலராவார். ஆகவே, இத்திறத்தார்க்கு ஏலாதவாறு, இருமொழிப் புலமை முதிர்வாலே, இவர் பேசுங்கால் கம்பநாடன்பாற் கண்ட நுணுக்கத்தைக் காளிதாசனிடத்தும், காளிதாசனிடத்துக் காணப்படும் நுணுக்கத்தை இளங்கோவடிகள் பாலும், இங்ஙனமாக இரண்டு மொழிகளிலும் உள்ள நல்லிசைப் புலவர்பாற் காணப்படுபவனவற்றை இவர் ஒப்புக்காட்டிப் பேசுவார்கள். இவர்கள் பேசுங்கால் பொதுமக்கள் நிற்கச் சிறந்த அறிஞர் உலகமும், இன்பக்கடலுள் ஆழ்ந்து, “என்னே இஃதென்னே! இஃதென்னே!” என வியப்புடையராய்ப் பரவசமடையா நிற்பர்.

மேலும், நம் பண்டிதமணியவர்கள் இலக்கியங்களைப் பற்றி பேசும் பொழுது, அவ்விலக்கியங்களிலே சமயக் கருத்துக்களைக் காட்டியும், சமய நூல்களிலே இலக்கியச் சுவைகளைக் காட்டியும் பேசும் அழகு, கேட்போர்க்குப் பேரின்பம் நல்குவதாம். பண்டிதமணியவர்களின் சொற்பொழிவை ஒருமுறை கேட்டோரும், தாம் அதுகாறும் நந் தாய்மொழி கல்லாது வறிதே போக்கிய நாட்கு இரங்கி, அன்றுதொட்டுத் தமிழ் நூல்களைக் கற்க முற்படுவர். முன்னரே, தமிழ் கற்ற திருவுடையோராயின், புதிய புதிய நுணுக்கங்களை அறிந்து கொள்வதோடு, தாமும் அவ்வாறு நூல்களில் நுணுக்கங்காண முற்படுவர். இந் நாநலமுடைமையால், நஞ்செந்தமிழ் மொழியின் அழகினையும், பெருமையினையும் அவர்கள் நந்தமிழ் நாட்டினர் நன்கு உணருமாறு செய்தார்கள். இதனால், தமிழகத்தே அவர்கள் புகழ் நன்கு பரவிற்று. மூன்று தமிழ்நாட்டினும் உள்ள கழகங்கள் எல்லாம், அப்பெரியாரை ஆர்வத்தோடே அழைத்து அவர்கள் இனிய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தன.

12. தாய்மொழிப்பற்று

“செப்பமிக்க இயலமைப்பும் அவ்விலக்கணங்களுள் வேறு எம்மொழிக்கும் இல்லாது தனக்கெனச் சிறப்பு முறையின் அமைந்த பொருளிலக்கண ஒழுங்கும், முதிர் நலச் சொற்களும், சிதைவில் நுண்பொருள்களும், தங்கி நின்றொளிரும் சங்க நூற்றொகையும், புன்னுனிப்பனியில் மன்னுமா மலையுருத் துன்னி நின்று ஒளிர்தரல்போலச் சிற்றளவினவான சொற்றொடர்களில் சிறந்தமைந்தனவாகிய பெரும்பொருள்கள் தோன்றித் திகழும் அறமுதனுதலிய திறமை நூல்களும், அன்பினைந்திணை அக வொழுக்க நேர்மையும், தொடர்நிலைச் செய்யுட் சுவைநலக் கனிவும், குறிக்கோள் பற்றிய அறிவியல் நூல்களின் திட்ப நுட்ப அமைவும், காதல்மிக்கு ஓதுவார் கேட்பாரது கல்லினும் வலிய உள்ள நிலையையும் கரைத்து அவர் தமை அன்புருவாக்கி இறை திருவருட்கு இனிதின் ஆளாக்கும் இசைநலந் தழீஇய அருட்பாசுரப் பகுதிகளும், இன்னும் பற்பல துறைகளைப்பற்றி நின்று திகழும் நூற்றொகைகளும் தன்பான் மிளிர, இனிமையாங்குணத்தை இயைந்து தட்பமும் தகவும் ஒட்பமும் ஒருங்கமையப்பெற்று “எல்லாம் வல்ல இறைநிலைபோல் என்றும் நின்று நிலவுவது நம் தென்றமிழ் மொழியேயாம்”, என நந்தாய்மொழியின் அருமை பெருமைகளை சென்ற சென்ற இடமெலாம் எடுத்துக் கூறி, “அந்தோ தமிழ்நாட்டீர்! இருமையும் உதவவல்ல இன்னமிழ்தம் போன்ற நந்தாய்மொழியைப் பயின்று இன்பமும் பயனுறாமல், அவமே நாள் போக்குதல் அறிவேயோ!” என்றிரங்குவார்கள், நம் பண்டிதமணியவர்கள்.

“ஒரு நாடு தனக்குரிய மொழியை ஆக்கமுற ஓம்பிப் பாதுகாத்தாலன்றித் தான் சிறந்த நிலை எய்துதல் அரிதாம். மொழி வளர்ச்சி கொண்டே அது வழங்கும் நாட்டின் நலத்தை உணரலாம். எந்த நாடு தன் மொழிச் சுவையை உணர்தலிற் பின்னடைகின்றதோ, அது மற்றை எல்லா வளங்களானும் பிற்பட்டதாகும். ஆதலால், நாம் முன்னேறவேண்டுமேல், நந்தாய்மொழியை நன்கு பேணி வளர்த்துக்கோடல் நம் முதற் கடமையாகின்றது. எனவே, இனிமை மிக்க நந்தாய்மொழியை எல்லீரும் பயிலுமின்! பயிலுமின்! என அவைகளில் முழங்கினார்.

“எந்நிலத்தில் எம்மொழி வழங்குகின்றதோ அந்நிலத்துவாழும் மக்கள் அம்மொழி வாயிலாகவே முதற்கட் பயிலவேண்டும். அதுவே அந்நிலத்து மக்கட்குத் தாய்மொழியுமாகும். ஒரு குழந்தை பிறந்து மொழிபயிலுங்கால் அதன் தாயால் முதற்கண் பயிற்றப்படும் மொழி யாது? அதுவே தாய்மொழி என்று கோடல் பொருந்தும்,” என்று இனிதின் அறிவுறுத்தினர்.

“நந்தாய்மொழியாகிய தமிழ்மொழி வடமொழி முதலிய பிறமொழிக் கலப்பின்றியே இயங்கும் பெருமையுடையதாகும். இன்றிமையாத விடத்தன்றி இயன்றவரை தூய தனித்தமிழ் மொழியிலே எழுதுதலும் பேசுதலும் நந்தாய்மொழியின் இயற்கையழகை எடுத்துக்காட்டுவதாகும். ஒரு மொழியில் செவ்வனம் பயின்று சுவை நிலை கண்டுணர்வார்க்கு, அதன் தனி நிலையிற்போலப் பிறமொழி கலப்பில் அத்துணை இன்பம் உண்டாகாது என்பது உண்மை அநுபவமுடையார் எல்லார்க்கும் ஒத்ததாகும். இதனால் வடசொற்களையாதல் பிறமொழிச் சொற்களையாதல் நேர்ந்தவாறு தமிழிற் புகுத்தல் முறையன்று”, எனத் தூய தமிழ்மொழியின் அழகைப் போற்றும் முறையை நம் பண்டிதமணியவர்கள் பலர்க்கும் அறிவுறுத்திவந்தார்கள்.

பிறமொழிக் கலப்பின்றி தனித் தமிழிலேயே எழுதவும் பேசவும் வேண்டும் என்னும் இக்கொள்கையைக் கடைப்பிடியாகக் கொண்டு அவ்வழியில் தொண்டாற்றி வந்தவர்களுள் தலைசிறந்தவர் மறைமலை அடிகளார் என்னும் புலவர் பெருமானேயாவர். நம் பண்டிதமணியவர்களும் இக்கொள்கையைப் பெரிதும் வற்புறுத்தி வந்ததோடு, தம் இனிய கட்டுரைகளையும் அவ்வாறே வரைந்து வந்தார்கள். மறைமலையடிகளார் இன்றியமையாவிடத்து வடமொழியைத் தமிழில் விரவி எழுத உடன்படமாட்டார்கள். நம் பண்டிதமணியவர்கள் இன்றியமையாவிடத்து வடமொழியைச் சிறிது விரவியும் வரைவார்கள். மறைமலையடிகளாராதல் நம் பண்டிதமணியவர்களாதல் தம் இளம்பருவத்தேயே இத் தனித்தமிழ் கொள்கையைக் கண்டு கையாண்டவர்கள் அல்லர். ஆதலால், இவர்களின் இளம்பருவத்தே எழுதப்பட்ட கட்டுரைகளாதல், நூல்களாதல் பெரிதும் வடமொழி விரவப்பட்டனவாகவே உள்ளன. இவர்கள், தம் அநுபவத்தாலே நாளடைவில் தனித்தமிழின் சுவையை உணர்ந்து அந்நலத்தைக் கைக்கொள்ளும்படி மக்களைத் தூண்டிவந்தார்கள். இதன் பயனாக, இற்றை நாளில் இனிய தூய தமிழ்நடையின் சுவையுணர்ந்து எழுதுவாரும், பேசுவாரும் நந்தமிழகத்தே பலர் உளராயினர்.

நம் பண்டிதமணியவர்களின் இளம் பருவத்து உரைநடைக்கு எடுத்துக்காட்டாக ஒன்று காட்டுவல், காண்மின்:

“என்னும் உபதேசத்தால், ஓங்காரத்தினுடைய அர்த்த ரூபமாகவுள்ளது ஸ்ரீ பஞ்சாக்கரம் என்பது வெளியாகும். சிதம்பரத்திலே ஞானமயமாகிய கனகசபையிலே சிவகாமி அம்மையார் காண ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு ஆனந்தத் தாண்டவம் செய்தருளும் சபாநாயகர் வடிவம் ஸ்ரீ பஞ்சாக்கர ரூபம் என்பதை உண்மை விளக்க முதலிய சித்தாந்த சாத்திரங்களால் உணர்க”, எனவரும்.

13. அரசர் நட்பு

நம் தமிழ்மொழி வீறுபெற்றுயர்ந்து இப்பரத கண்டம் முழுதும் செங்கோலோச்சி அரசமொழியாகத் திகழ்ந்த பண்டைக் காலத்திலே புலனுழுதுண்பாராகிய புலவர் பெருமக்களை, முடிவேந்தராகிய சேர சோழ பாண்டிய மன்னர்களும், குறுநில மன்னரும் நன்கு மதித்து, நிலம், பொருள் யானை தேர் அணிகலன்கள் உண்டி உடை உறையுள் முதலிய பெரும் பரிசில் வழங்கிப் போற்றி வந்தமையும், புலவர் பெருமக்களும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண் கீழ்க்கணக்கும் முதலிய அரிய பெரிய இலக்கிய நூல்களையும் தொல்காப்பிய முதலிய இயல்நூல்களையும் இயற்றி, மொழியை வளம்படச் செய்து நாட்டின்கண் அறிவுச்செல்வத்தைப் பெருக்கி வந்தனர் என்பதையும் நமது பழைய இலக்கிய நூல்களானே நாம் நன்கு உணர்தல் கூடும். எண்ணமாக வுள்ள அறிஞர் கருத்துக்கள், செயலாக மலர்ந்து பயன் உடையன ஆதற்குப் பொருளின் அல்லது, பொருளாளர்களின் உதவி இன்றி அமையாததாகும். இதுபற்றியே, “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்”, என்றும் “அருள் என்னும் அன்பீன்குழவி பொருள் என்னும், செல்வச் செவிலியால் உண்டு”, என்றும் ஆன்றோர்கள் கூறுவாராயினர். அறிவுச் செல்வமுடைய மேன்மக்களும், பொருட் செல்வமுடைய மேன்மக்களும் ஒத்து இயங்கியவழியே இவ்வுலகில் மிகப் பெரிய சீர்திருத்தச் செயல்கள் நிகழ்வனவாகும். பொருளாளர் உதவியின்றேல் அறிஞர்களின் சீர்திருத்த எண்ணங்கள் நினைவுமாத்திரையாய் நின்றொழிவனவாகும். மற்று, அறிஞர்களின் உதவி பெறாதபோது பொருளாளர்களுடைய பொருள், இவ்வுலகில் நன்மையை வளர்ப்பதற்கு முரணாகப் பெரிய தீமைகளையே போற்றி வளர்ப்பதாகவும் முடியும்.

நம் பண்டிதமணியவர்கள் இளைஞராயிருந்த காலத்தேயும், தன வணிகப் பெருநிதிக் கிழவர்கள் தமக்கு இயல்பாகவுள்ள அறப்பண்பின் தூண்டுதலாலே பற்பல அறச் செயல்களைப் பெரும்பொருள் செலவிட்டு ஆற்றியே வந்தனர். இவ்விந்திய நாட்டிலுள்ள சைவ வைணவத் திருக்கோயில்களைப் புதுக்கிச் சீர்திருத்துதற்கு அம்மக்கள் எண்ணிறந்த பொருள்களைச் செலவிட்டனர். வடமொழிப் பாடசாலைகள் பற்பல நிறுவி அவற்றில் பார்ப்பனச் சிறுவர்களே பயிலவேண்டும் என வரையறை செய்தனர். அரசியற் செல்வாக்குடைய ஆங்கிலக் கல்லூரிகட்கும் பெரும்பொருள் வழங்கினர். வடமொழிக் கல்லூரிகட்கும் சத்திரங்கட்கும் பொருளை வாரி இறைத்து வந்தனர். இவையெல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதுக்களேயாயினும், எல்லா நன்மைக்கும் முதற் காரணமாக அமைந்த நந் தாய்மொழியின் பொருட்டு ஒருசில உதவியேனும் அவர்கள் செய்ய முன்வரவில்லை.

இவர் “அறச்செயல் தன் தாயைப் பட்டினியாற் சாகவிட்டு செல்வமிக்க மக்கட்கு அன்னதானம் செய்யும் ஒருவனுடைய செயலையே ஒக்கும்,” என நம் பண்டிதமணியவர்கள் கூறியுள்ளார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனவணிகச் செல்வப் பெருங்குடியிலே தோன்றியவர்களும், வண்மைக் குணம் நிரம்பியவர்களும், அரசியலாரால் நன்கு மதிக்கப்பட்டவருமாகிய சர். சா. ராம. மு. அண்ணாமலைச் செட்டியார் என்னும் வள்ளல் பெருமான் சிதம்பரத்திலே, ஆங்கிலம் வடமொழிகளுக்கு அமைத்த கல்லூரிகளைப் போன்று, நாட்டின் முன்னேற்றம் தாய்மொழியாகிய தமிழ்வளர்ச்சியை இன்றி அமையாதென்னும் சீரிய கொள்கையுடையவர்களாய், ஒரு சிறந்த தமிழ்க் கல்லூரியையும் நிறுவினார்கள். இவ்வள்ளலாரே முதன்முதலாகத் தமிழன்னைக்குத் திருக்கோயில் எடுத்தவர்கள் என்னலாம். இப்பெருநிதிக் கிழவர் தங்குலத்தினராகிய பண்டிதமணியவர்களின் அறிவுப் பெருமையையும், அவர்களைத் தமிழுலகம் புகழுமாற்றையும் உணர்ந்து பெருமகிழ்ச்சியுடையராய், அவர் நட்பைப் பெரிதும் விரும்பினர். நம் பண்டிதமணியவர்களும் அவர்களின் விருப்பத்தை உணர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏது நம் நல்லூழே ஆதல் வேண்டும் என உள்ளுள்ளே உவந்தனர். மாசற்ற தூய உள்ளமுடைய இவ்விருவரும், நாளடைவில் உயிருறக் கலந்து ஒன்றி நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தனர். இவ்வாற்றால் பண்டைக் காலத்தே முடிமன்னர்களாற் போற்றப்பட்ட ஒரு நல்லிசைப் புலவர்க் குண்டாகிய நலனெல்லாம் நம் பண்டிதமணியும் பெற்றார்கள் என்பது மிகையாகாது. நந்தமிழன்னைக்குத் திருக்கோயில் கண்டவர்கள் இராசா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள். அத்திருக்கோயிலில் உறையும் தமிழ்த்தெய்வத்திற்குச் சுடர் விளக்கம் ஏற்றியவர்கள் மகா மகோபாத்தியாய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் அவர்கள்.

நம் பண்டிதமணியவர்களிடத்துச் செட்டிநாட்டரசர் அவர்கள் கொண்டிருந்த நன்குமதிப்பையும் நட்புரிமையையும் அவ் வரசர்பெருமானே கூறிய கீழ்வரும் அன்புரைகள் நன்கு விளக்குவனவாம். அவை வருமாறு:-

“தமது கல்வியின் மேம்பாட்டினால், தமிழ்நாடு முழுதும் புகழ்பெற்று விளங்கும் பண்டிதமணியவர்களைப் பாராட்டுவது நமக்கே பெரிய சிறப்பாகும். இப் பெருங் கல்வியாளர் தமது இலக்கிய இலக்கண அறிவு, சொல்வன்மை, ஆராய்ச்சித் திறன், மொழிபெயர்க்கும் ஆற்றல், போதனாசத்தி முதலிய சிறந்த குணங்களால் பெருமை பெற்று விளங்குகிறார்கள். இவர்கள் வடமொழியிலும், தென்மொழியிலும் நல்ல அறிவு வாய்ந்திருப்பதால் இவர்களுடைய மொழித்தொண்டு மேன்மையுறுகின்றது. ஒரு மொழியிலுள்ள கருத்துக்களைச் சிதைவுறாமலும் தெளிவாகவும் வேறொரு மொழியில் விளக்கி உரைப்பது எளிதன்று. சொன்னயம் பொருணயம் பொருந்தப் பேசுவதும் எழுதுவதும் யாவருக்கும் எளிதல்ல. சன்மார்க்க சபையின் விருப்பத்திற்கிணங்கி இவ் வறிஞரால் இயற்றப்பட்டுச் சன்மார்க்க சபையால் வெளியிடப்பட்டுள்ள சுலோசனை, உதயண சரிதம், சுக்கிர நீதி, மண்ணியல் சிறுதேர் என்ற நூல்கள் இவர்களுடைய சிறந்த கல்வியறிவிற்கும் நூலியற்றும் ஆற்றலுக்கும் ஏற்ற எடுத்துக்காட்டுக்களாக விளங்குகின்றன. இவைகளே யன்றி, பிரதாப ருத்திரீயம், மாலதீ மாதவம், சாகித்திய தருப்பணம் முதலிய அரிய நூல்களும் பண்டிதமணியவர்கள் முயற்சியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவைகள் விரைவில் அச்சிடப்பட்டுப் பலருக்கும் பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பண்டிதமணியவர்களுடைய நூல் இயற்றும் ஆற்றல் ஒருபுறமிருக்க, அவர்களுடைய சொல்வன்மை அதனினும் சிறந்து விளங்குகின்றது. நயம் மிகுந்து விளங்கும் அவர்களுடைய சொற்பொழிவுகள் அறிவைப் பெருக்கும் தன்மையனவாகவும் இருக்கின்றன. தேவாரம், திருவாசகம், திருக்குறள், இராமாயணம் முதலிய தெய்வீக நூல்களில் மிகுந்த சுவையான பகுதிகளையும் பண்டிதமணியவர்கள் கேட்பவர்கள் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியுமாறு பரவச்செய்வதில் தளராத ஊக்கம் உடையவர்கள். மாணவர்களுக்குப் போதிப்பதன் மூலமாகவும், கற்றோர் சபையில் சொற்பொழிவுகள் இயற்றுவதன் மூலமாகவும், இவர்கள் தமிழ்நாட்டில் கல்வி பரவப் பெரிதும் உதவி வருகிறார்கள்.

“வடமொழியிலும் தென்மொழியிலும் வல்ல புலவராகவும் மாணவர்கள் மனமுவக்கப் போதிக்கும் ஆசிரியராகவும், அரிய நூல்களை இயற்றும் நூலாசிரியராகவும், அறியாமையையும் ஐயத்தையும் போக்கவல்ல சொற்பொழிவாளராகவும் பண்டிதமனியவர்கள் திகழ்கின்றார்கள்”, என்பதாம்.

இப் பாராட்டுரைகள் நம் பண்டிதமணியவர்களின் நற்பண்புகள் அனைத்தையும் அவ் வள்ளலார் உணர்ந்திருந்தார் என்பதையும் அவர்கள்பால் சிறந்த நட்புரிமை கொண்டிருந்தார் என்பதையும் நன்கு விளக்குகின்றன.

செட்டிநாட்டரசரின் நட்புரிமையால் பண்டிதமணி எய்திய சீரும் சிறப்பும் அளவிடற்பாலன அல்ல. நம் பண்டிதமணியவர்களும், அரசர் நட்பாலே தாம் எய்திய நன்மைகளைப் பற்பலவிடத்தும் வெளிப்படையாக விளம்பி மகிழ்ந்தார்கள். “யான் உயர்ந்தவன் என்று பிறர் உணரும்படி செய்த பெருமை கனம் ராசா அவர்களைச் சார்ந்தது, நிகரற்ற செல்வமும் அறிவும் ஆட்சித் திறனும் அமைந்த பெருங் கொடை வள்ளலாகிய கனம் செட்டிநாட்டு ராசா அவர்கள் தம் உள்ளத்தில் எனக்கும் ஓர் இடனளித்துச் சிறப்பித்து வரும் பெருமையே யான் அடைந்து வரும் சிறப்புக்கள் எல்லாவற்றினும் தலைசிறந்ததாகும்.”

இவ் வன்பார்ந்த பாராட்டுரைகள் நம் பண்டிதமணியவர்கள் கூறிய நன்றியுணர்ச்சி கெழுமிய நல்லுரைகளாம்.

14. இல்வாழ்க்கை

பண்டிதமணியவர்களின் உள்ளத்தை இளமையிலேயே கலைமகள் கவர்ந்து கொண்டமையானும், அவர்கள் செயற்கரிய செயலாகிய சீர்திருத்தத் துறையிலே சென்றமையாலும் நீண்டகாலம் இல்வாழ்க்கைத் துறையில் ஈடுபட்டார்களில்லை. பண்டைக்காலத்தே அருமறை அந்தணர் நாற்பத்தெட்டாண்டு அகவை நிரம்புந்துணையும் கல்வித்துறையில் ஈடுபட்டு அறிவுச் செல்வத்தை நிரம்ப ஈட்டிக்கொள்வர் என்றும், அவ் வகவை எய்துந்துணையும் பிரமசரிய நோன்பு கொள்வர் என்றும், பின்னரே இல்லறம் புகுவர் என்றும் நம் பண்டை நூல்கள் கூறுகின்றன.

“அறுநான் கிரட்டி இளமைநல் யாண்டு

ஆறினிற் கழிப்பிய அறநவில் கொள்கை,

…..  ……. இருபிறப் பாளர்.” (180)

எனத் திருமுருகாற்றுப் படையினும் வருதல் காண்க.

நம் பண்டிதமணியவர்கள் கலை நிரம்பும் பொருட்டு இளமை நல்யாண்டு முப்பதும் கழித்தார்கள். பிறழாத பிரமசரிய நோன்பில் உறைத்து நின்றார்கள். அவ் வகவையின் பின்னரே, திருமணம் புரிந்துகொண்டார்கள். மகிபாலன்பட்டியின் அண்மையிலுள்ள வேகுப்பட்டி என்னும் ஊரிலுள்ளதொரு ஒழுக்கம் நிறைந்த தனவணிகப் பெருங்குடியில் தோன்றிய திரு. மீனாட்சி ஆச்சியாரை நம் பண்டிதமணியவர்கள் கி. பி. 1912ம் ஆண்டு, சனவரித் திங்கள் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து தம்மினிய வாழ்க்கைத் துணைவியாராகக் கைப்பற்றினார்கள்.

இல்வாழ்க்கையில் இருந்துகொண்டே செயற்கரிய செய்து புகழ்பெற்ற சான்றோர்களின் புகழிற் செம்பாதிக்கு மேலும் உரிமையுடையோர் அப்பெரியோரின் வாழ்க்கைத் துணைவியராக அமைந்த குலமகளிர்களே ஆவார்கள். காந்தியடிகளார்க்குக் கத்தூரியம்மையாரும், வள்ளுவனார்க்கு வாசுகியம்மையாரும் வாய்த்தாற்போன்று திரு. மீனாட்சியாச்சியார் நம் பண்டிதமணியார்க்கு வாழ்க்கைத் துணைவியராக வாய்த்தார்கள். நம் பண்டிதமணியவர்களின் புலமைச் சிறப்பை ஆச்சியாரவர்கள் நன்கு புரிந்துகொண்டிருந்தார்கள். ஏனைச் செல்வர் இல்லங்கட்குப் பெரும்பாலும் அவர்கள் உறவினர்களே அடிக்கடி வருவர். அவர்கள் தொகையும் மிகையாக இராது. நம் பண்டிதமணியவர்கள் இல்லத்திற்குத் தமிழ் நாட்டிற் பற்பல பகுதிகளினும் உள்ள அறிஞர் பெருமக்கள் அடிக்கடி வருவதுண்டு. அவ்வறிஞர்களும் வியக்குமாறு இன்சுவை யடிசில் சமைத்துப் பொழுதறிந்து விருந்தூட்டுவதில் நம் ஆச்சியார் மிகவும் வல்லவர்கள்.

நம் பண்டிதமணியவர்கள் இல்லத்தே எப்பொழுதும் சமையற்காரன் ஒருவன் இருந்து தொழில்செய்வன். சமையற்காரர்களை வைத்துக் கொள்ளக்கூடிய நிதிப்பெருக்கமுடையோர் மனைகளிலுள்ள மகளிர்கள், பெரும்பாலும் சமையற்றொழில் தெரியாதவர்களாகவும், தெரிந்தாலும் அத்தொழில் செய்வதில் சோம்பலுடையவர்களாகவும் இருப்பதே வழக்கம்.

தனவணிகச் செல்வக் குடும்ப மகளிர்களில் பெரும்பாலோர் மேற்கூறிய குறைபாடுடையவர்கள் என்று பண்டிதமணியவர்கள் கூறுவார்கள். மேலும் அவர்கள் இக்குறையை அகற்றவேண்டும் என்றும் பற்பல கூட்டங்களிலே கூறி வந்தனர். “இனி நம் பெண்மக்கள் பொருட்டு யாம் கருதவேண்டியவைகளும் சிலவுள்ளன; எல்லாக் கற்பிலக்கணமும் நிரம்பப்பெற்ற நம் பெண்மக்களுட் சிலர் நம் சமய முறைப்படி தம்மில்லத்தே செய்யவேண்டிய நாட்கடன்களைச் செய்தலிற் சிறிது சோம்பலுடையவராய்க் காணப்படுகின்றனர்; அதனையும் குணவகைகளின் மாறுபட்டிருப்பின் அவற்றையும் திருத்துதலும், நாட்கடன்களைக் கற்பித்து அவ்வழி நிறுத்தலும் அவரவர் கணவன்மார்களின் கடமையாகும்”, என்பது நம் பண்டிதமணியவர்கள் தம்மினத்தார் சீர்திருத்தம்பற்றிப் பேசியவற்றுள் ஒரு பகுதியாகும்.

இவ்வறிவுரைகள், மகளிர்கள் அட்டில் தொழில் வல்லராதல் வேண்டும் என்னும் அவர்கள் கருத்தைப் புலப்படுத்துகின்றனவல்லவோ!

சமயற்காரன் இருப்பினும், ஆச்சியாரவர்கள் தாமே அடுக்களையிலிருந்து அடிசில்களை நன்கு சுவையுடையனவாகவும், பதனழியாமலும் சமைப்பார்கள். அங்ஙனம் சமைத்த அடிசிலை விருந்தினர்க்கும் கணவனார்க்கும் மக்கட்கும் தம் கையாலே அன்புடன் இடுவர். சுவையுடைய அடிசில் ஆக்குவதில் ஆச்சியார் தனிச்சிறப்புடையவர். நம் பண்டிதமணியவர்களும் இன்னின்ன உணவுப் பொருளை இன்னின்ன கூட்டி இன்னின்ன பதத்திற் சமைக்க வேண்டும் என்று அடிசிற் பக்குவம் சில செவ்விகளில் கூறுவர். அவர்கள் கூறும்போதே கேட்போராகிய எம்மனோர் நாவில் நீரூறும்.

நம் பண்டிதமணியவர்கள் இல்லத்தே விருந்துண்ட அறிஞர் வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், வயிறார உண்டு மகிழ்ந்து பாராட்டிய மொழிகள் ஆச்சியாரின் அடிசிற்சிறப்பை நன்கு விளக்கும். அவர் கூறியதாவது:

“யான் சோற்றுத்துறை அடிகளில் ஒருவன்; இவருடைய அன்பு குழைந்த இன்ப விருந்துண்டு களித்து நாவில் இப்போதும் நீரூறி நிற்கின்றவர்களில் ஒருவன். மிகச்சிறந்த செல்வர்களும் அத்தகைய இனிய உணவைத் தங்கள் இல்லத்தே அமைத்துக்கொள்ள முடியாமல் விழிக்கக் கண்டிருக்கின்றேன். பண்டிதமணிக்கு அமைந்த அம்மையாரும் சுவையுலகில் வாழ்கின்றவர்கள். சுவையுலக வாழ்க்கை வாழ்வார்க்கே அனைத்தும் எளிதில் அமையும். ஆகவே, இவரிடத்தே சுவையுலக வாழ்க்கையைக் கண்கூடாகக் காணலாம். இல்வாழ்க்கையிலும் இனிமை; உடையிலும் இனிமை; ஊனிலும் இனிமை; பேச்சிலும் இனிமை; மூச்சிலும் இனிமை; எழுத்திலும் இனிமை; குழுவிலும் இனிமை; இவர் பிறரைப் புகழ்வதிலும் இனிமை; இகழ்வதிலும் இனிமை; மரத்தைப் பழத்தால் அறிக என்பர் கிறித்து; ஈதே பழம்; இனி மரத்தை அறிந்துகொள்க,” என்பதாம்.

பண்டிதமணியார்தம் பண்புடைய இல்லத்தே விருந்துண்டு களித்த அறிஞர் திரு. மீனாட்சிசுந்தரனார் அவ்வினிமையைத் தொடர்ந்து பண்டிதமணியாரின் வாழ்க்கை முழுதுமே இனிமையாதலை உணர்ந்து இன்புற்றவாறிது.

இனி, நம் பண்டிதமணியவர்கள் நம் நூல்களானே போற்றிக் கூறப்படும் இல்வாழ்க்கைக்கும் ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்தார்கள் எனலாம். யான் பண்டிதமணியவர்கள் இல்லத்தே இரண்டாண்டுகள் ஊடாடிப் பழகும் பேறு பெற்றேன். என்பால் பண்டிதமணியவர்களும், திரு. ஆச்சியார் அவர்களும் பிள்ளைமுறை கொண்டு அன்பு பூண்டொழுகினர். அண்ணாமலை நகரில் நம் பண்டிதமணியவர்கள் பேராசிரியராக இருந்த காலத்தே மாணவர் பற்பலர் பண்டிதமணியவர்களின் அன்புகெழுமிய அறிவுரைகளைக் கேட்க விரும்பி மாலைப்பொழுதினும், விடுமுறை நாட்களினும் இல்லத்திற்கு வருவார்கள். அம்மாணவர்களை நம் பண்டிதமணியாரேயன்றி, ஆச்சியாரும் மக்களை அன்போடே உபசரிக்குமாறு இன்சொற்களாலே வரவேற்று உபசரிப்பார்கள். வந்த மாணவர்கள் தத்தம் அன்புடைத் தாய்தந்தையரை அவ்விடத்தே கண்டாற்போன்றே மகிழ்வர். மாணவர்களைப் பண்டிதமணி எப்போதும் “அப்பன்” என்றே அன்பு ததும்ப அழைப்பர்.

ஆச்சியாராதல், பண்டிதமணியாராதல் தம் மக்களை இன்சொல்லாலன்றி ஒருபொழுதும் சுடுசொல்லாலே கண்டிப்பதில்லை. வீட்டுப் பணியாளரிடத்தும் மிக்க அன்புடையவர்களாகவே இருப்பர். பண்டிதமணியாரின் இல்லமே ஓர் அன்புக்கடல் என்னலாம்.

பெருந்தன்மை மிக்க பண்டிதமணியவர்கள், தம் வீட்டுக் காரியங்களை ஒருபொழுதும் எளிதென்று கருதியிராமல் சிறு காரியங்களையும் விழிப்புடன் நடத்துவார்கள். வீட்டிற்கு வேண்டிய உப்பு முதற் கருப்பூரம் இறுதியாக உள்ள எப்பொருளையும் விழிப்புடன் ஈட்டி வைத்துக் கொள்வார்கள். அவர்கள் இல்லத்தே இனிமையுடன் எளிமையும் கலந்தே இருக்கும். பொருள்களைச் சிக்கனமாகவே செலவு செய்வார்கள்.

பாமர மக்களுடனே நம் பண்டிதமணியவர்கள் கலந்து பேசும்போது அப் பாமரரோடே தாமும் ஒரு பாமரர் போலே பேசுதலைக் காணும் நமக்குப் பெரிதும் வியப்புண்டாகும். அண்ணாமலை நகரில் நம் பண்டிதமணியவர்கள் இருந்த காலத்தே, ஓர் இடைமுதுமகள் பக்கத்துக் கிராமத்திலிருந்து தயிரும் வெண்ணையும் கொணர்ந்து பண்டிதமணி இல்லத்திற்குக் கொடுத்து வந்தாள். அம்மூதாட்டி நம் பண்டிதமணியவர்களின் சிறப்பை எவ்வாறறிவாள்! அவள் பெருமைமிக்க நம் பண்டிதமணியாரை “உனக்கு எவ்வளவு வெண்ணெய் வேண்டும் நீ எனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்”, என்றிப்படிப் பேசும்போதெல்லாம் நீ, உனக்கு, என்னும் ஒருமை மொழியாலேயே பேசுவாள். அவள் பேசுவதை அயலில் இருந்து கேட்கும் எம்மனோர் உளத்தே “நீ, உனக்கு” என்னும் மொழிகள் சுறுக்கென்று தைக்கும். நம் பண்டிதமணியவர்களோ அங்ஙனம் பேசலாகாதென அவளை ஒருபொழுதும் திருத்த முற்பட்டிலர். அவள் வினாவிற்கெல்லாம் நம் பண்டிதமணியவர்களும் முகமலர்ந்து புன்சிரிப்புடன் “எனக்கு இவ்வளவு வெண்ணெய் வேண்டும், உனக்கு நான் இவ்வளவு காசு தரவேண்டும்,” என்று விடையிறுப்பர். அவர்கள் பேசுங்கால் ஒத்த தகுதியுடைய தமக்கையும் தம்பியும் அளவளாவுதல் போன்று நமக்குத் தோன்றும்.

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு” (குறள்: 60)

என்பது திருக்குறள். இக்குறளிற் கூறியாங்கு நற்குண நற்செயல்களையுடைய மனைவியாரை எய்தியிருந்த நம் பண்டிதமணியவர்கள், அறிவறிந்த மக்கட் பேற்றானும் சிறப்புடையராகவே திகழ்ந்தார்கள். பண்டிதமணியார்க்கு நிறைநாட் செல்வர்கள், சுப்பிரமணியன், கனகசபாபதி, மாணிக்கவாசகன், தியகராசன் என்னும் நான்கு ஆண்மக்களும், திருநிறை செல்வியர், மங்கயர்க்கரசி, மீனாட்சி, சகுந்தலை என்னும் பெண்மக்கள் மூவருமாக மக்கள் எழுவர் உளர்.

இம்மக்களும்,

“செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவய லூர

மகனறிவு தந்தை யறிவு”

                    (நாலடியார் 367)

என்றபடியும், “நூலைப்போலே சீலை தாயைப் போலே பிள்ளை” என்றபடியும், தம் இருமுது குரவர்களின் பண்பெல்லாம் வாய்க்கப் பெற்றவராய் மன்னுயிர்க்கெல்லாம் இனியராய்த் திகழ்கின்றனர். இவர்களில் மூத்த சுப்பிரமணியன் செட்டியார்க்கும், கனகசபாபதிச் செட்டியார்க்கும், மங்கயர்க்கரசி யாச்சிக்கும் குழந்தைகள் உளர். இவ்வாற்றால் நம் பண்டிதமணியவர்கள் நிரம்பிய மக்களையும் பேரர்களையும் உடையராயதுடன், அவர் தம்மை அன்பு கெழும வளர்த்தின்புறும் பெரும்பேறும் உடையராயினர்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)

என்னும் அருமைத் திருக்குறட்குப் பண்டிதமணியவர்கள் இலக்கியமாக விளங்கினார்கள்.

அக்காலத்தே தமிழன்பு மிக்க திரு. வே. இராதாகிருட்டிண பிள்ளை என்பவர்கள், தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பெயரால் ஒரு சிறந்த தமிழ்க்கழகம் நிறுவி, அதன் வாயிலாய் மொழிவளர்த்து வந்தார்கள். இராதாகிருட்டிணபிள்ளையவர்கள் கழகம் நிறுவிய ஒருசில ஆண்டெல்லையிலேயே இறைவன் திருவடி நிழலை எய்தினார்கள்; ஆதலின், அவர்கள் முன்தோன்றலாகிய திருவாளர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் அத் தமிழ்க் கழகத்தைத் தம்முயிரேபோற் போற்றி வளர்ப்பாராயினர். பிள்ளையவர்கள் நம் பண்டிதமணியவர்களின் புலமைச் செல்வத்தையும், தாய்மொழித் தொண்டின் ஆர்வத்தையும் அறிந்து அவர்களுடன் நட்புரிமை பூண்டனர்.

“தமிழவேள்” “செந்தமிழ்ப் புரவலர்” என்னும் சிறப்புப் பெயர்களாலே புலவர்கள் போற்றிப் புகழும்படி தமிழ்மொழியினிடத்தும் தமிழ்ப்புலவரிடத்தும் பேரன்புடையவரான திரு. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பண்டிதமணியவர்களைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுள் உறுப்பினராக இருந்து தங் கழக வளர்ச்சியினும் பங்கு கொள்ள வேண்டும் என வேண்டினர். நம் பண்டிதமணியவர்களும் அதற்கிசைந்து மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபையில் தாம் கொண்டிருந்த உரிமைபோலவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின்பாலும் உரிமைபூண்டு பொருளுதவியானும் இனிய தம் சொற்பொழிவுகளானும் அச்சங்கத்தைப் புகழுறத் தம் ஆயுள்காறும் போற்றி வந்தார்கள். அச்சங்கத்தின் பதினான்காம் ஆண்டு விழாவில் நம் பண்டிதமணியவர்கள் தலைமையேற்றுத் “தமிழும் தமிழ்ப்பணியும்” என்னும் பொருள் பற்றிப் பேசிய விரிவுரை தமிழ் வளர்ச்சிக்கான பற்பல துறைகளையும் கற்றோரும் மற்றோரும் சுவைத்துச் சுவைத்து இன்புறுமாறு நுண்பொருட் செறிவுங்கொண்டு நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.

“போற்றுந் தமிழும் புலவரும் வாழ்கநலம்

சாற்றுங் கரந்தைத் தமிழ்ச்சங்கம் – ஏற்றமொடு

பல்லாண்டு வாழ்க அருள் பாலித் ததுபுரக்கும்

எல்லோரும் வாழ்க இனிது”.

என நம் பண்டிதமணியவர்கள் தம் அருள்வாக்காலே மனமார வாழ்த்தினார்கள். அவர்கள் வாழ்த்தியவாறே அத் தமிழ்ச் சங்கம் “ஏற்றமொடு” பல்லாண்டாகத் தமிழ் வளர்த்துச் சிறந்தோங்கித் திகழ்கின்றது.

15. பேராசிரியர்

“அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” என்றபடி நம் பண்டிதமணியவர்களைச் செட்டி நாட்டரசர் பெரிதும் விரும்பி அவர்களுடன் நட்புரிமை பூண்டனர் என்று முன்பு கூறினோம். அவ்வரசர் பெருமான் தாமெடுத்த தமிழ்த் தெய்வத் திருக்கோயிலாகிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பகுதியில் நம் பண்டிதமணியார் ஆசிரியராக அமர்ந்து பணிபுரிவது உலகெல்லாம் தமிழைப் பரப்புவதற்கு ஏதுவாகும் என்றும், மேலும் தம் பல்கலைக் கழகமும் பெரிதும் சிறப்பெய்தும் என்றும் கருதியவர்களாய்ப் பண்டிதமணியவர்களைப் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்து பணிபுரியும்படி வேண்டிக்கொண்டார்கள். அக்காலத்தே யான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே ஒரு தமிழ் மாணவனாக இருந்தேன். பண்டிதமணியவர்கள் அரசர் வேண்டுகோட் கிணங்கிப் பல்கலைக் கழகத்திற்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி பரவியபோது என் போன்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர்கள் பதவியேற்பதற்கு ஒருசில கிழமைகட்கு முன்னர்ப் பல்கலைக் கழகத்தே வந்து ஒரு சொற்பொழிவாற்றியிருந்தார்கள். அவர்களுடைய ஒருநாள் ஒரு பொழுதைச் சொற்பொழிவைக் கேட்ட யாங்களும் தேனுண்ட வண்டெனக் களி துளிம்பினேம்! இனிமை மிக்க அப்புலவர் பெருமான் எமக்கு நிலைப்பான ஆசிரியர் எனக் கேட்டதும் எங்கள் மகிழ்ச்சி கடல் எனப் பெருகிற்று.

கி. பி. 1934-ம் ஆண்டில் நம் பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் ஆகிப் பணிபுரியத் தொடங்கினார்கள். பிச்சை யேற்று வயிறு வளர்க்கும் பேராசைமிக்க ஒரு ஏழைக்கு ஒரு பேரரசனுடைய தலைமைக் கருவூலத்தைத் தாழ்திறந்து “இக் கருவூலத்துக் கிடந்த பொருளெல்லாம் உன்னுடையதே” கொள்க என அவ் வரசன் வழங்கினனாக அவ் வேழை எங்ஙனம் மகிழ்வான்! அங்ஙனம் மகிழ்ந்தேம் அவர்பால் மாணவராக இருந்து அவர்தம் அறிவுரையைக் கேட்கும் பேறு பெற்ற மாணவக் குழாத்தினேம்.

நம் பண்டிதமணியவர்களிடம் மாணவராக இருந்து பயிலும் திருப் பெற்றவர்களில் ஒருவரும், தலைமாணாக்கர் இனத்தைச் சேர்ந்தவருமாகிய டாக்டர். திரு. அ. சிதம்பரநாதச் செட்டியார் எம். ஏ. அவர்கள் ஆசிரியராகிய நம் பண்டிதமணியின் நல்லாசிரியத் தன்மையைப்பற்றிக் கூறியதாவது:-

“அவர்களிடம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஏறத்தாழ இரண்டாண்டுகள் கல்வி கற்கும் பேறுபெற்ற சிலருள் யானும் ஒருவன். 1934-1935-ஆம் ஆண்டுகளில் நான் எம். ஏ. வகுப்பிற் படித்து வருங்கால் அவர்களிடம் சிலப்பதிகாரம் அகநானூறு ஆகிய உயர்ந்த இலக்கியங்களைப் பாடங் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன். அவர்கள் நடத்திய ஒவ்வொரு வகுப்பினையும் இன்று நினைத்தாலும் உள்ளத்தில் உவகையும் எழுச்சியும் உண்டாகின்றன. உரையில்லாப் பகுதியாகிய வஞ்சிக் காண்டத்திற்குத் தம்முடைய கூரிய மதியினால் அவர்கள் பொருள் கூறின திறத்தை யாங்கள் வியந்தோம். ஒப்புமைப் பகுதிகள் காட்டல், மேற்கோள் காட்டல், இலக்கண நயம் எடுத்துரைத்தல், நூனயம் நவிலுதல் ஆகிய வகையில் தம்மை ஒப்பாரும் மிக்காரும் இல்லை எனச் சொல்லுமாறு அவர்களுடைய வகுப்புக்கள் நடைபெறும்” என்பதாம்.

இனி, மைசூர் மகாராசா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் திரு. S. உருத்திராபதி என்பாரும் நம் பண்டிதமணியவர்களுடைய மாணாக்கராவார். அவர் கூறியதாவது:- “சீரிய புலமையும், சொல்வன்மையும், எழுத்து வன்மையும் வடமொழி தென்மொழி இரண்டையும் ஒருங்கே ஆய்ந்த மதிவன்மையும், வாய்க்கப்பெற்ற நம் புலவர் பெருந்தகையைக் காண்பதே இன்பமாகும். அவர்கள் நய உரையைக் கேட்பது சிந்தைக்கும் செவிக்கும் ஒருங்கே இன்பம் பயப்பதாகும். அவர்கள் மாணவர் குழுவில் யான் ஒரு கடைமாணாக்கன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குத் தனியொரு பெருமையும் இன்பமும் உண்டு என்பதாம்.

இவ்வண்ணம் மாணவர் எல்லோரும் மனமகிழ்ந்து இன்புறுமாறு நம் பண்டிதமணியவர்கள் நூற்றுக் கணக்கான மாணவர்கட்கு அரிய பெரிய செந்தமிழ் நூல்களையும் எண்பொருளவாகச் செலச்சொல்லி வந்தார்கள். இவர்கள்பாற் கற்ற மாணவர்கள் பலர் இன்று உலகின் பற்பல இடங்களிலே இருந்து பண்டிதமணியவர்கள்பால் தாங்கள் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெறும்படி பணிபுரிந்து வருகின்றனர்.

நம் பண்டிதமணியவர்கள் 1934-ம் ஆண்டு தொடங்கி 1937-ம் ஆண்டு முடியுந்துணையும், விரிவுரையாளராக இருந்து பணி புரிந்தார்கள். பின்னர், அப் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்ப் பேராசிரியராம் பெரும் பதவியையும் பெற்றார்கள். பண்டிதமணி அப் பதவியை ஏற்பதற்கு முன்பெல்லாம் அப் பதவிக்கு ஆங்கில அறிவு மிக்கவர்களே தகுதியானவர்கள்; அவ்வறிவு இல்லாதவர் அதனை ஏற்று நடத்த இயலாதென்னும் கொள்கை இருந்து வந்தது. ஆங்கிலத்திலே, எம். ஏ. முதலிய பட்டதாரிகளே அப்பதவியை ஏற்று நடத்தி வந்தனர். ஆங்கிலம் கல்லாத தமிழ்ப் புலவரும் அப்பதவி ஏற்கத் தகுதியுடையவர்களே என்பதை நம் பண்டிதமணியவர்கள் தமது செயலிலே உலகமறியக் காட்டுவாராயினர். இப் பதவியேற்று ஏனையோர் புகழும்படி ஒரு சிறு குறையுமின்றிப் பண்டிதமணியவர்கள் நடத்தினார்கள்.

ஆங்கில மொழியிலே மட்டும் பட்டதாரிகளாய்த் தமிழறிவு குறைந்துள்ளவர்களைவிட நம் பண்டிதமணியவர்கள் அப் பதவியில் வீற்றிருந்தது எத்துணையோ பெரிய நன்மை விளைத்தது. இதனால் தமிழ்ப்புலவர்கட்கே மதிப்புப் பெருகுவதாயிற்று எனலாம்.

இக்காலத்தே இவர்க்கு அணுக்கராயிருந்து தொண்டாற்றிய பெரியார் T. P. பழனியப்ப பிள்ளை B.O.L. அவர்கள். இவர்கள் திறமையைப் பாராட்டிக் கூறியவற்றைக் கேண்மின்:

“நந்தமிழகத்து முப்பெருங் கலைக் கழகங்களாகிய சென்னை, அண்ணாமலை, திருவாங்கூர்ப் பல்கலைக்கழகங்களில், மந்தணக் குழுவிலும் மந்திரக் குழுவிலும் பதவி பெற்று அவற்றுக்குரிய ப்ஃறலைப்பட்ட செயல்களைப் பல்லாற்றானும் நாடிச் சூழ்ந்து அந் நன்னர் நாட்டமுடைச் சூழ்ச்சித்துறை உறுப்பினர் உவக்க வினையாற்றும் திறம் எல்லாம் எளியேன் விழைவொடும் வியப்பொடும் கண்டு பாராட்டுவேன். வீறு பெறுமுறையில் வேறுபடு குழுவினுள் காரிய நெறிகளைக் கைக்கொள்ளுதற்கென நேரிய தாள்களை (Records) நிரல்படத் தொகுத்துக் கூரிய கொள்கையைக் குறிக்கொண்டு நடாத்தும் பெற்றியைக் கண்கூடாகக் கண்ட எளியேன் ஆங்கிலவாணரும் ஆபீசு முறைகளை இங்ஙனம் ஆற்றும் ஏற்றம் பெற்றுளர்கொல்! என்று கூறிக் கொண்டாடுவேன்”, என்பதாம்.

16. பதவிகள்

“ஆங்கிலவாணரும் ஆபீசு முறைகளை இங்ஙனம் ஆற்றும் ஏற்றம் பெற்றுளர்கொல்” என்று அறிஞர் எல்லாம் வியந்து பாராட்டும் திறமுடைய நம் பண்டிதமணியவர்கள், தம் இளம்பருவந்தொடங்கி இறுதிகாறும் ஏற்று நடத்திய பதவிகளும் சாலப்பலவாம். இப் புலவர் பெருமானின் வடமொழிப் புலமை கண்டு வியந்த இராமேச்சுர வடமொழிக் கல்லூரியுடையோர் இவரைத் தம் கல்லூரியின் மந்திரக்குழு உறுப்பினராக நியமித்திருந்தார்கள். இவர்களுடைய தமிழ்ப்புலமையின் தனிச் சிறப்பையுணர்ந்து நாடெங்கணும் உள்ள தமிழ்க் கழகங்களும், பல்கலைக் கழகங்களும் இவர்கள் உதவியை நாடினர். தம் இளம் பருவத்திலேயே மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஓர் உறுப்பினராய்ச் சங்கப் புலவராக விளங்கினார்கள். அச்சங்கத்தே பல்லாண்டுகள் தேர்வாளராகவும் திகழ்ந்தார்கள். இச்சங்கத்தின் மந்திரக்குழுவிலும் நிறைவேற்றுக்குழுவிலும் நீண்டகாலம் உறுப்பினராக விளங்கினார்கள். தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தே ஆயுட்கால உறுப்பினராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் திகழ்ந்தமை முன்னரே கூறியுள்ளோம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாடக்குழுவிலும், தேர்வுக்குழுவிலும், உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்தார்கள். இப் பல்கலைக்கழகப் பேரவையிலும், கலைக்குழுவிலும் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்கள்..

சென்னைப் பல்கலைக்கழகத்தில், பாடக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் விளங்கினார்கள்.

திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில், பாடக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் விளங்கினார்கள்.

யாழ்ப்பாணத்திலுள்ள கீழ்நாட்டுக் கல்விநிலையம் என்னும் கல்லூரியில் தேர்வாளராக இருந்தார்கள்.

இவற்றையன்றி இவர்கள் அவ்வப்போது சென்று எத்துணையோ பல கழகங்களில் அவைத் தலைமைதாங்கிப் பணிபுரிந்தார்கள். யாழ்ப்பாணம், கொழும்பு, மைசூர் முதலிய இடங்களுக்கும் சென்று தலைமையேற்றார்கள். இங்ஙனம் இவர்கள் தலைமை தாங்கிப் பணிபுரிந்த கழகங்களுள் சிறப்பாகக் குறிப்பிடற்பாலன, சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசத்தின் வெள்ளிவிழா, கரந்தைத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா, தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் பொன்விழா, துறையூர் மாநாட்டுத் திறப்பு விழா, பூவாளூர் சைவசித்தாந்த சபை விழா, சென்னைத் தமிழ்ப்புலவர் மாநாடு, குறுந்தொகை மாநாடு என்பனவாம்.

17. வினைத்திட்டம்

பெருமைமிக்க பெரும் பதவிகளை ஏற்று அவற்றில் ஒரு சிறிது தவறும் நிகழாவண்ணம் விழிப்புடன் செயல் ஆற்றுவதில் நம் பண்டிதமணியை ஒப்பார் இலர் என்றே சொல்லலாம். யாதேனுமொரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன்பே, அச்செயல் செய்தற்கு வேண்டிய பொருள், கருவி, காலம், வினை, இடன் என்னும் இவற்றை மயக்கமற ஆராய்ந்து தெரிந்த இனத்தொடு தேர்ந்து இருள்தீர எண்ணியே தொடங்குவார்கள்.

சென்னையிற் பல்கலைக் கழகத்தே பின்னாள் பாடத்தேர்வின் குழுவில் தலைமைதாங்கிச் செயல்புரியவேண்டுமாயின், இன்றே நினைந்து நினைந்து அச்செயற்கு வேண்டிய எல்லாத் தாள்களையும் செயலாற்றுதற்கேற்ற முறையில் நிரல்படுத்தி வைத்துக் கொள்வார்கள். அவ்விடத்தே ஐந்து நாட்கள் தங்கிச் செயலாற்ற வேண்டுமெனின், அந்நாட்களுக்கு வேண்டிய உடைகள் முதலியவற்றையும், பற்பொடி, நாவழிக்கும் பனையீர்க்கு முதலிய சிறு பொருள்களையும்கூட மறவாமல் ஒரு பேழையில் அடக்கஞ் செய்துகொள்வார்கள். ஆண்டுச்சென்று செய்யவேண்டிய செயலையும், நிரல்படுத்திக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார்கள். அத்துறையில் தமக்கு ஐயமாக ஏதேனும் உளதாயின், ஆங்கிலந்தெரிந்த தம் அருமை நண்பர்களிடத்தே ஐயந்தீர நன்கு வினாவித் தெரிந்துகொள்வார்கள். யாதேனுமொரு ஆங்கிலச் செய்தியை அது இன்றியமையாததெனக் கருதுமிடத்துத் தம் நண்பர்களைக்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொள்வார்கள். தமிழில் மொழிபெயர்க்குங்கால் பி. ஏ. முதலிய பட்டம் பெற்றவர்களைக் கொண்டு மொழிபெயர்த்துக் கொள்வார்கள். பொதுவாக அனுபவ அறிவாலே தாமும் ஆங்கிலச்சொற்களுக்கு நேரிய தமிழ்ச்சொற்களைக் கண்டு மொழிபெயர்ப்போர்க்குச் சொல்லுங்கால் அவ்வாங்கிலப் பட்டதாரிகளும் அத்தகைய நேரிய தமிழ்ச்சொல்லைத் தாம் கண்டு கூறமாட்டாமைக்கு நாணுவார்கள்.

மொழிபெயர்ப்போர் யாண்டேனும் ஒருசிறு சொல்லில் தவறிவிடினும், அதனை உடனே கண்டு ஏன் அச்சொல்லை விட்டுவிட்டீர்கள் அல்லது அச்சொல்லிற்கு இத் தமிழ்ச்சொல் அன்றோ நேர்பொருளுடையது என்று அவர்களையும் தெருட்டுவார்கள். ஆதலின், ஆங்கிலப் பட்டம் பெற்றோரும் நம் பண்டிதமணியவர்களிருக்குமிடத்தே மிக விழிப்புடன் நடந்துகொள்வார்கள். இன்றேல், அவர்கள் கற்றுப் பட்டம் பெற்றுள்ள ஆங்கில அறிவிலேயே அவர்கள் மட்டமானவர்கள் என்பதை நம் பண்டிதமணியவர்கள் எடுத்துக்காட்டிவிடுவார்கள்.

மறதி என்பது நம் பண்டிதமணியவர்களிடத்தே ஒருபொழுதும் நிகழ்ந்திருக்கமாட்டாது. அங்ஙனமே சோம்பலும் அவர்கள்பால் ஏற்படுவதில்லை. பல்கலைக் கழகத்துப் பேராசிரியராக ஆற்றும் செயலும் தங்குடும்பத்தில் தம் அருமை மக்களின் ஆடைகள் தூயனவாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளும் செயலும் இரண்டும் அவர்கட்கு ஒருவிதத்தில் சமமான செயலே ஆகும். முன்னையது பெருஞ்செயல் என்றும் பின்னையது எளிய செயல் என்றும் கொள்ளாமல் இரண்டு செயலையும் விழிப்புடனேயே செய்வார்கள்.

பண்டிதமணியவர்கள் தாம் செயல்புரிவதற்கெனத் தம் இல்லத்தே அமைத்துக்கொண்டுள்ள அறையை எப்பொழுதும் அழகாகவும், தூய்மையாகவுமே வைத்துக் கொள்வதில் விழிப்புடன் இருப்பார்கள். இல்லத்துக் கூரையில் யாண்டேனும் ஒருசிறு சிலந்திநூல் காணப்படினும் உடனே வேலையாளை அழைத்து அதைத் துடைத்துத் தூய்மை செய்யச் சொல்வார்கள். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்திருப்பார்கள். எழுதுகோல் முதலிய சிறு கருவிகளையும் அவ்வவை இருத்தற்குரிய இடத்திலேயே இருக்கும்படி வைப்பார்கள். எப்பொருளும் தூய்மையாகவும் அழகாகவுமே இருத்தல்வேண்டும்.

மாலைவேளைகளிலே, தம் மனைவி மக்களோடும் வருகின்ற விருந்தினரோடும் நகைச்சுவைபடப் பேசிக் கேட்போர்களை நகைக்கவைத்துத் தாமும் கலகலவென்று சிரிப்பார்கள்.

வேறு சிலர் போலாது நம் பண்டிதமணியவர்கள் ஒரே விதமான ஆடையையே எப்பொழுதும் உடுப்பார்கள். வெண்ணிறமான ஆடையே அவர்கள் உள்ளத்திற்கு மிகவும் பொருந்தியதாம். பலவண்ண ஆடைகளை அவர்கள் விரும்புவதே இல்லை. எப்போதாயினும் சிற்சில செவ்விகளில் அவர்கள் கோட்டும் தலைப்பாகையும் அணிவதுண்டு.

இளைஞர்களைப்போன்று அடிக்கடி முகத்தைச் சவரம் செய்வித்துக் கொள்வார்கள். புறவுடலைப்பற்றிய நாகரிகத்தில் புதுமைக்கும் புதுமையாக அவர்கள் பொலிவுற்றுத் திகழ்வார்கள்.

விசு. திருநாவுக்கரசு என்பவர் கூறியதுபோன்று நம் பண்டிதமணியவர்கள் பண்டைநாளிலிருந்த தனவணிகப் பெரியோர்கள்போல மழித்த தலையுடையவர்களா? இக்காலத்து இளைஞர்போன்று கத்தரிக்கபட்ட தலையினரா? என்று காண்டல் அரிது. இரண்டுக்கும் இடை நிகரானதொரு நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

                       18. பாட்டின்ப நுகர்ச்சி 

“தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும், மடங்கொன்று அறிவகற்றுங் கருவி” என்பது குமரகுருபர அடிகளாரின் வாக்கு. கல்வி தொடங்குங்கால் துன்பமாம் என்று இப்பெரியார் கூறுவது பொதுவியல்பு பற்றிப் போலும். உலகின்கண் பெரியோராகத் திகழ்ந்த புலவர்கள் எல்லாம் கல்வி தொடங்குங்கால் தமக்குப் பேரின்பமாய் இருந்தமை கண்டே மேலும் மேலும் அதனைத் தொடர்ந்து பயில்வாராயினர். கலைவாணராந் திருவுடையார்க்குக் கல்வி தொடங்குங்காலும் இன்பமே பயப்பதாம். “என் இளம்பருவத்தே சொற்பொருள்கள் தரும் இன்பத்தாலேயே நான் அவற்றை ஊக்கத்துடன் கற்றேன்”, என்று பண்டிதமணியவர்கள் பற்பலவிடத்தே கூறியுள்ளார்கள்.

தெய்வத் திருவருளுடையார்க்கே தீஞ்சுவைச் செய்யுள் இயற்ற இயலும் என்பர் சான்றோர். அச் செய்யுளிடத்தே உள்ள சுவை உணர்தற்கும் எம்மன்னை கலைச்செல்வியின் திருவருளே துணை செய்யல் வேண்டும். செய்யுளின் தீஞ்சுவையை உணர்தற்கு ஏதுவாவது நுண்மான் நுழைபுலம் உடைமையேயாம். “நுண்மான் நுழைபுலம் ஆவது, நுண்ணிதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும் சென்ற அறிவு” என்பர் பரிமேலழகர். “அறிவிற்கு மாட்சியாவது பொருள்களைக் கடிதிற் காண்டலும் மறவாமையும் முதலாயின” என்று மேலும் விளக்கமும் கூறுவர். நம் பண்டிதமணியவர்களின் பெருஞ்சிறப்புக்குக் காரணமாவதும் அவர்தம் நுண்மான் நுழைபுலனுடைமையே ஆகும்.

நம் வள்ளுவப் பெருந்தகையார் தம் அருமைத் திருக்குறளின்கண் “மதிநுட்பம்” என மற்றோரிடத்தே குறிப்பிட்டதும் இந் நுண்மான் நுழைபுலத்தையேயாம். ஆண்டும் பரிமேலழகர் “அது தெய்வந் தரவேண்டுதலின் முற்கூறப்பட்டது” என அதன் சிறப்பை விளக்குகிறார்.

நம் பண்டிதமணியவர்கள் திருவாசகம் போன்ற உயரிய நூல்களில் யாதேனும் ஒன்றைப் பயிலுங்கால், அதன் ஏடுகள் விரைந்து புரளமாட்டா. நீண்ட நேரம் அவர் அந்நூலின் ஒரே பக்கத்தில் அல்லது ஒரே செய்யுளிலேயே ஆழ்ந்திருப்பர். செய்யுளை மட்டும் பயில்கின்றவர் பலர் ஒருநாழிகைப் போதில் பன்னூறு செய்யுட்களை விரைந்து ஓதுகின்றனர். இவர்கள் கலைக்கடலில் மூழ்கும் சத்தியற்ற மிதவைக் கட்டைகள் போன்று, செய்யுளின் ஓசையாகிய அலைகளாலே உந்தப்படுகின்றவர்களே யாவார்கள். நம் பண்டிதமணியவர்கள் பற்பல நாழிகைகளை ஒரே செய்யுளினும் போக்கிப் பயில்வார்கள். அவர்கள் அலைகடலின் ஆழத்தே மூழ்கிச் சென்று ஆண்டுள்ள முத்து முதலிய மணிகளை எடுத்து வருவோரைப் போன்றவர்கள்.

இயற்கையில் நுண்மாணுழைபுலம் உடைய நல்லிசைப் புலவர்களின் ஆழ்ந்த உள்ளத்திருந்தன்றோ சுவைமிக்க செய்யுட்கள் உருவாயின! அச் செய்யுட்களைப் பயில்வோர் அச் செய்யுளின் வழியே சென்று அதனை ஆக்குதற்கு முதலாக அப்புலவனுடைய உளத்தே கிடந்த நுண்கருத்துக்கள் யாவை என ஆராய்ந்து, அக்கருத்துக்களை உணரும்போதே அவற்றின் அழகாலே தம்முடைய உள்ளத்துள்ள இன்ப ஊற்றுக்கள் கண்திறக்கப்பட்டு அளவில்லாத பேரின்பத்திலே மூழ்குகின்றார்கள். உணர்ச்சி மிக்கவர்கள் ஆழ்ந்து நோக்கநோக்க அரிய பொருள்களைச் சுரந்தளிக்கும் தெய்வத்தன்மை நல்லிசைப் புலவர்களின் செய்யுட் குளதாயதோர் பண்பாகும். இப்பண்பையே கலையிற் பெரியராய கம்பநாடரும் பம்பையாற்றினது ஆழத்திற்கு,

“கீழுறக், கற்பகம் அனைய அக்கவிஞர் நாட்டிய

சொற்பொரு ளாமெனத் தோன்றல் சான்றது”

என உவமையாக எடுத்தோதினர்.

கடலென விரிந்து பரந்த நல்லிசைப் புலவர்களின் உள்ளத்தே முத்தென ஒளிரும் நுண்ணிய ஒளியுடைய கருத்துக்களைத் தம் நுண்மாண் நுழைபுலனாலே கண்டு மகிழ்தல் ஒன்றே கலைவாணர்க்குப் போதிய ஊதியமாமன்றோ! இவ்வின்பத்தே திளைத்துத் திளைத்து முதிர்ந்த உள்ளமுடையவர் நம் பண்டிதமணியவர்கள். இத்தகைய செய்யுளின்ப நுகர்ச்சியுடைய நம் பண்டிதமணியவர்கள் தம் அனுபவத்தே கண்ட புலமைவாழ்க்கையின் சிறப்பை,

“ஒரு நூலை ஆசிரியர் முகமாகக் கற்ற அளவினனானும், இயன்முறை தெரிக்கும் நூற்பாக்களையும் எடுத்துக் காட்டாம் செய்யுட் பகுதிகளையும் சொற்பொருள் அறிந்து கொள்ளும் அவ்வளவினானும், புலமை நிரம்புவதன்று. இவ்வெல்லாம் சிறந்த புலமையின் உறுப்புக்களாமன்றி உறுப்பியாகா.

“ஒன்றனை ஊன்றிப் படிக்குங்கால் படிக்கப்படும் சொற்குழுவினின்று உணரப்படும் பொருட்கண் உள்ளம் உறைத்து நிற்பச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மைத்தாகிய உயிர் அவ்விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து அப்பொருட்பயனை நுகர்தலும், நுகர்ச்சிக்குப் பின் வெளியுலகத்து மீண்டு நினைவு கூர்தலும், தீர்ந்த உண்மைகளைக் கடைப்பிடித்துத் தம் குறிக்கோளாக ஒழுக்கியலின் மேற்கோடலும், மேற்காட்டிய உறுப்புக்களோடியையு மாயின், ஒருவாறு புலமை நிரம்பியதாகக் கொள்ளலாம்.

“புலமையின் குறிக்கோள் உலகியற் பொருளளவின் இருப்பின் அது சிறுமை எய்தி மாசுடையதாகும். அறிவை ஒளி வலியுடையதாக்கி அகலமுறச் செய்து, அவ்வகன்ற ஒளி விளக்கத்தின்கண்ணே முன்னர்க் காணப்படாதனவும் உலப்பிலா இன்பவிளைவிற்கு ஏற்றனவுமாகிய அரிய பல நுண்பொருள்களை அக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய வாழ்க்கையே புலமை வாழ்க்கை யாகும்”,

எனக் கூறிய மணிமொழிகளாலே ஒருவாறு அவர் தம் புலமையின்பச் சிறப்பை யாம் உணர்தல் கூடும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்றாற் போன்று அவருடைய மொழிகள் அவர் தன்மையை விளக்கிக் காட்டுகின்றன. அம்மொழிகள்போல் பிறர் மொழிகள் அவரியல்பை நமக்குத் தெற்றன விளக்கமாட்டுவனவல்ல.

யாம் கற்கவேண்டுவன செய்யுட்கள் அல்ல! அச்செயுள்ளின் வாயிலாகக் காலத்தானும் இடத்தானும் நமக்குச் சேயனாகிய தொரு நல்லிசைப்புலவனுடைய உள்ளத்தையே யாம் கற்றல்வேண்டும்! அப் புலவனுடைய கருத்தழகிலே, அவனுடைய உள்ளத்தின் பரப்பிலே, ஆழத்திலே, நுண்மையிலே, தெளிவிலே, ஒளியுடைமையிலே, அப் புலவன் உளத்தோடு ஒரே இனமான நம்முடைய உள்ளம் பரவியும், நுணுகியும், ஆழ்ந்தும், ஒளியேற்றும், தெளிந்தும், கலப்பதனையே ஈண்டுப் பண்டிதமணியவர்கள், “சார்ந்ததன் வண்ணமாந் தன்மைத்தாகிய உயிர் அவ்விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து” என்று சுருங்கக் கூறினார்கள்.

இம் மண்ணுலகத்தே வாழ்கின்ற மனிதர்கள் வெளித்தோற்றத்திலே ஓரினத்தவராகக் காணப்படினும், அவர்தம் வாழ்க்கை வகையாலே மூன்றுவகையினராவதைக் காணாலாம். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் இவ்வைம்புலன்கள் அளிக்கும் இன்பத்தையே முறையே நாவும் கண்ணும் மெய்யும் செவியும் மூக்குமாகிய பொறிகளானே நுகர்ந்து இன்பம் அல்லது துன்பமுற்று உழல்வார் ஒரு சாரார். இத்திறத்து மாந்தர்களே உலகில் தொகையான் மிக்கவர்கள் ஆவார். இவர்களை வாழ்க்கை வகையானே விலங்கியல்புடையார் என்று விளம்பி அவ் விலங்கியலுண்மை குறிப்பால் தோன்றுமாறு “மாக்கள்” என நூல்கள் கூறுகின்றன. இனி அகக்கருவியாகிய மனனுணர்ச்சியே தம் வாழ்க்கைக் கருவியாகக்கொண்டு உலகத்தும், நூல்களிடத்தும் அழகாக மிளிர்கின்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களை நுகர்ந்து இன்புற்று வாழ்வோர் ஒரு வகையினராவார். இவர்கள் மாந்தராயினும் தேவர்களோடு ஒப்பாவார் என்னுங் கருத்தால் நம் திருவள்ளுவப் பெருந்தகையார் “அவியுணவின் ஆன்றோ டொப்பர் நிலத்து,” என்று தெரிந்தோதுவாராயினர். ஈண்டு நம் பண்டிதமணியவர்கள் “உலப்பிலா இன்பவிளைவிற் கேதுவான அரிய பல நுண் பொருள்களை அகக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய புலமை வாழ்க்கை” என்று இயம்பியதும் இவ் அமர வாழ்கையையே என்க. இனி, மூன்றாவதாகிய வாழ்க்கை மனமாற்ற பரிசுத்தநிலை எனத் தாயுமான அடிகளாற் கூறும் சீவன் முத்த வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையை உடையோர் இவ்வுலகத்திலேயே வீட்டின்பம் கைவரப்பெற்ற மேலோர்களாகலின், மானிட உருவினின்ற இறைப் பொருளே ஆவரல்லரோ. இம் முத்திறத்த வாழ்க்கையினுள்ளே எப்பொழுதும் கலையென்னும் உண்ணா அமிழ்தத்தை மனணுணர்வாலே உண்டு உலப்பிலா வாழ்வெய்தியதொரு தேவர்கள் வாழ்க்கையை நம் பண்டிதமணியவர்கள் இவ்வுலகத்தே எய்தி நின்றார்கள்.

“ஓரளவுட்பட்ட சில பல நூல்களை வினவுவார் கருத்துக்கியைய விடையிறுக்கு முகமாகக் கற்றுத் தகுதிச் சீட்டுப் பெறும் அவ்வளவில் புலமை தன்நிறைவை எய்தியதாக எண்ணிவிடலாகாது” என நம் பண்டிதமணியவர்கள் நுண்ணிதிற் கூறியுள்ளார்கள். இங்ஙனம் எண்ணும் புலவர்களே இக்காலத்து யாண்டும் காணப்படுகின்றனர். செய்யுளில் இன்புறும் மனனுணர்ச்சி இவர்கள்பால் இயற்கையில் இல்லை; ஆதலால் அவிச்சுவை ஒன்றே அறியும் மாக்களினத்தாராகிய இவர்கள் அவ் வவிச்சுவையை நிரம்பப் பெறுதற்கு இக் கல்வியை ஒரு கருவியாகக் கொண்டு வினவுவார் கருத்துக்கியைய விடையிறுப்ப தொன்றே குறிக்கொண்டு பெருநூல்களை வருந்தி வருந்திக் கற்கின்றனர். மனனுணர்ச்சி இன்மையால் செய்யுளிடத்தின்பம் இவர்கட்குத் தோன்றாதொழிந்தது. “தொடங்குங்கால் துன்பமாய்” என்னுந்துணையும் குமரகுருபர அடிகளார் வாக்கு இவர்கட்கு நன்கு பொருந்தும். ஒருவாறு இவர்கள் தேர்விலே வென்றுவிட்டவுடன் தம் புலமை நிரம்பியதாக எண்ணிவிடுகின்றனர். இத் திறத்துப் புலவர்களே பிற்றை நாள் நாத்திகம் பேசித் திரியவும் திரிகின்றனர். இவர்கள் நாத்திகம் பேசுதல் வியப்பன்று. புலமை வாழ்க்கையின்கண் உருவெளிப்பட்டு உயிருடன் களவியல் வாழ்க்கை நடத்துபவனும், சீவன் முத்த வாழ்க்கைநிலை உயிர்த்தலைவியை வரைந்து கற்பியல் வாழ்க்கை நடத்துபவனுமாகிய எம்மிறைவன் இவ் விலங்கென்னும் வெள்ளறிவினரால் என்றென்றும் உணர்தற் கரியன் ஆதலும் இயல்புதானே!

“பயிலுந்தோறும் பயிலுந்தோறும் பண்புடையாளர் தொடர்பு எங்ஙனம் இனிமை சான்று பயன் விளைக்குமோ அங்ஙனமே மீண்டும் மீண்டும் கற்குந்தோறும் கற்குந்தோறும் உயரிய நூல்களின் நுண்பொருள் நலங்கள் நம் உள்ளத்தை ஈர்த்துத் தம்பாற்படுத்துப் பேரின்புறுத்துவனவாம்”, என்றும் “மிக விரைந்தோடும் வெள்ளப்பெருக்கினுடைய ஆற்றின் நீர்ச்செலவாற்றலை ஒருவன் அளக்க நினையின் அதன்கண் எதிரேறிச் செல்லவேண்டுவதே இன்றியமையாததாகும். அவ்வாறின்றி அந்நீர்ச் செலவோடியைந்து அதனால் ஈர்த்துச் செல்லப்படுவானாயின், அவ் வாற்றின் நிலை இற்றென உணரகில்லான். அங்ஙனமே உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருளொழுக்கில் நம் நுண்ணறிவு எதிரேறிச் செல்லவேண்டும். அங்ஙனம் சென்று அச்சொற் பொருள்களின் வன்மை வனப்புக்களை ஆராய்ந்தளக்க முயலின், அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற் கண்டு வைத்த அரும்பொருள் மணிகளின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன்புறலாம். ஆராய்ந்து தெளிவதற்கு முன் அச் சொற்பொருள்களோடு எதிர்த்து நிற்றலே நன்றாம்”, என்றும், “பொருணலத் தெளிவின்பின் அச்சொற் பொருள்களோடு நம் அறிவை இரண்டறக் கலப்பித்து அவற்றின் வண்ணமாக நின்று அசைவறும் நிலை எய்தி இன்ப வெள்ளத்துள் திலைத்தல்வேண்டும்”, என்றும், “நூலாசிரியரின் குறிக்கோள் இன்னதெனத் துணிந்தாலன்றி அவன் பலவாறு பன்னிப்பன்னி உரைக்கும் உரைப்பொருளின் உண்மைக் கருத்து அறியப்பட்டதாகாது” என்றும், “சிறந்ததொரு முடிபொருளைச் செப்பனிட்டுத் திறம்பட உரைக்க முற்படும் புலவன் பருந்தின் வீழ்ச்சிபோற் சேய்மையினின்றே முடிபொருட்குரிய சார்வுப் பொருள்களில் மெல்ல மெல்லத்தலைப்பட்டுச் செல்லுவன். அச் செலவின் நிலையை அந்நெறி நின்றே உய்த்துணர்தல் வேண்டும். செல்வழிக் கண்டனவே தீர்ந்த பொருளென எண்ணிவிடலாகாது,” என்றும், “நூலுரையாசிரியர்களின் கருத்துப் படர்ச்சியில் நம் அறிவுத் தொடர்ச்சி பின்னிடுதல் நன்றன்று,” என்றும், “அயரா உழைப்பிற்கு அகப்படாத பொருள் யாதுமின்று. தொடர்நிலைச் செய்யுட்களின் உயிரனைய சுவை நலம் விராய குறிப்புப் பொருளை உணர்தலில் நம் அவா முற்படவேண்டும்,” என்றும் நம் பண்டிதமணியவர்கள் பாட்டின்ப நுகர்ச்சியையும் அதற்குரிய நெறியையும் தமது அனுபவத்தினின்றும் எடுத்துத் தாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் எய்துகவெனக் கருதி அழகுற விளம்பியுள்ளார்கள்.

இதற்கு முன்னர் எத்தனையோ சான்றோர்கள் இலக்கியச் செல்வங்களை நுகர்ந்து அளவிலா இன்பமெய்தினர் எனினும், அவ் வின்ப நுகர்ச்சிக் குரிய வழிதுறைகளை இத்துணை நுணுக்கமாக அவருள் ஒருவரேனும் நம்மனோர்க்கு அறிவுறுத்தினாரைக் கண்டிலம். நம் பண்டிதமணியவர்கள் பாட்டின்ப நுகர்ச்சியில் தோய்ந்த தமது திருவுள்ளத்தை எஞ்சாமல் திறந்தன்றோ நமக்குக் காட்டுகின்றார்கள். அமிழ்தினும் இனிய இவ் வறிவுரைகள் இலக்கியம் நுகரும் திருவுடையார்க்கு ஒப்பற்ற வழிகாட்டியாக அமைந்துள்ளன.

மெய்யறிவு முதிர்ந்து மெய்ப்பொருளுணர்ச்சி கைவரப் பெற்ற சான்றோர்கள் சொல்லுதற் கொண்ணாத அப் பேரின்ப நிலையை நம்மனோர்க்குப் பேசப் புகுங்கால் நம் அனுபவ உணர்ச்சிக்குட்பட்ட காதலின்பத்தையே உவமையாக எடுத்துப் பேசாநிற்பர். பேரின்பம் உவமையற்றதாயினும் “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை” எனத் தொல்காப்பியனார் உவமை, பொருளினும் உயர்ந்ததாதல் வேண்டும் என விதி கூறியிருப்பினும், மெய்யுணர் வுடையோர், இவ்விதி வழி நில்லாது அழியாத பேரின்பத்திற்கு அதனிற் றாழ்ந்ததும் அழிதன்மாலைத் தாயதுமாகிய காதலின்பத்தையே உவமையாக்கிக் காட்டுகின்றனர். அங்ஙனமே ஒப்பற்ற பாட்டின்ப நுகர்ச்சிக்கும் உவமை கூறப் புகுந்த நம் பண்டிதமணியவர்களும், சிறந்த காதலனும் காதலியும் தம்முள் மனமொத்துப் புணரும் புணர்ச்சி யின்பத்தையே உவமையாகக் கூறினார்கள். “மதிவலி மிக்க முதுபுலவனிடத்தினின்றும் தோன்றிய பாடல் நங்கைக்குத் திட்பம் நுட்பம் தெளிவு விளக்கம் இனிமை முதலிய பண்புகளமைந்த சொற்பொருட் குழுவே அழகிய உடலும், சுவைநலந் துறுமும் தொனிப்பொருளே உயிருமாம். இந் நங்கைக்கு உவமை முதலிய அணிகளே அணிகலன்களாம். அழகுக்கு அழகு செய்தல்போல இவ்வணிகள் சேர்க்கப்படினும் இப்பாடன் மெல்லியற்பாவை நல்லாளின் இயற்கை வனப்புமிக்க நல்லுடலைச் சார்ந்து உவமை முதலிய அணிகளே சிறந்து அழகு பெற்றுத் திகழ்வனவாம்”,

“இங்ஙனம் இயற்கைநலம் மிக்குச் செயற்கை நலனையும் ஏற்றுத் திகழும் இத்தகைய பாடல் நங்கையைக் கூடி நுகர்தற்குரிய இளநலம் சான்ற மணமகனியல்பை இயம்பவும் வேண்டுங்கொல்? அன்னான், இலக்கிய நூலறிவானும், மதிநுட்பத்தானும் சிறந்து மலர்ந்து மணப்பருவம் வாய்க்கப்பெற்றுக் கட்டழகு வாய்ந்த பாடல் நங்கையைக் காண்டலில் காதல் மிக்குடையானாய் அப்பேறு குறித்துத் தவஞ்செய்த தனிப்பெருஞ் செல்வனாதல் வேண்டும். வேட்கை முயற்சியும் தவப்பயனாம் ஆகூழ்வலியும் ஒருங்கு கைவரப்பெற்றாலன்றி, அப்பாடல் நங்கையின் பரிசுணர்தல் அரிதாகும்.”

மெய்யுணர்வுடைய சீவன்முத்தர்கள் உயிராகிய தம்மைக் காதலியாகவும், தம்முடன் கலந்து அளவிலா இன்பத்தை நல்கும் இறைவனைத் தம் காதலனாகவும் கூறிக் களிப்பார்கள். ஈண்டுப் பண்டிதமணியவர்கள், செய்யுளைக் காதலியாகவும், அதனை நுகரும் திருவுடைய புலவனைக் காதலனாகவும் உருவகம் செய்தார்கள். தூய்நிலை அடைந்த அடியார்களை இறைவன் வலிந்து வந்து கலந்து இன்புறுகிறான்; ஈண்டுப் புலவனே காதல் வேட்கை மிக்குக் காவியப் பெருஞ் சோலையிலே செய்யுளாகிய தலைவியைத் தனிமையிற் கண்டு புணர்ந்து மகிழ்கின்றான் ஆதலின், இங்ஙனம் மாறி உருவகம் செய்தது சாலப் பொருத்தமேயாம்.

இன்ன பாடல் நங்கையை ஆகூழ்வலியாம் தவப்பயனாகப் பெற்று அந் நங்கையுடன் இரண்டறக் கலந்து இன்புற்ற தலைமகனே நம் பண்டிதமணியவர்கள். கட்பொறி முதலிய அறிவுக் கருவிகளாலே காண்டற்கியலாத நுண் பொருள்களை எல்லாம் தம் நுண்மாண் நுழைபுலனாகிய உட்கருவியாலே செய்யுளுலகத்திற் கண்டு கண்டு அளவிலா பேரின்பம் நுகர்ந்தவர்கள் நம் பண்டிதமணியவர்கள். “தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவைகண்டு ஈண்டமரர் சிறப்புக் கொண்டவர்கள் நம் பண்டிதமணியவர்கள். கற்ற கல்வியின் விழுமிய பயனைப் பெறுதற் பொருட்டே கலைமகளை வழிபட்டவர் நம் பண்டிதமணியவர்கள்”. “காணாதனவெல்லாம் கண்டு கேளாதனவெல்லாம் கேட்டு” அறிவுலகத்து நிகழும் வியத்தகும் அருஞ் செயல்களை உணர்ந்து இன்பக்கடலில் மூழ்கியவர் நம் பண்டிதமணியவர்கள். அங்ஙனமின்றி எளிய வயிறோம்பற் பொருட்டுக் கலையை ஒரு கருவியாக்கியவர்களை நோக்கி, அந்தோ! நமரங்காள்! உயரிய நோக்கங்களை நிறைவேற்றுதற்குரிய புலமையை உடலோம்பற்கு வேண்டிய பொருளளவிற் பயன்படுத்த எண்ணுகின்றீர்கள்! நுஞ்செயல் பொற் கொழுக்கொண்டு வரகுக்கு உழ வெண்ணுவோர் புன் செயலோடெக்குமன்றோ! சிறந்துயர்ந்த நோக்கங்களைக் கொண்மின்! சிறந்த கருவியைப் பெற்றிருக்கின்றீர்கள்! திருவருளுணர்ச்சியில் தலைப்பட்டுத் தேவ வாழ்க்கை புகுமின்”, எனத் தெருட்டினவர் நம் பண்டிதமணியவர்கள்.

19. சமய உணர்ச்சி

நம் பண்டிதமணியவர்கள் பிறந்த தனவணிகப் பெருங்குடி சைவ சமயத்தை மேற்கொண்டொழுகிய குடியாகும். ஆதலால் பண்டிதமணியவர்கள் சைவசமயத்தைப் பிறப்புரிமையாகப் பெற்றவர்கள். மேலும் இப்பரந்த உலகத்தே வழங்கும் சமயங்களுள், தலைசிறந்த உண்மைச் சமயங்கள் ஒருசிலவே உள்ளன. அச் சிறந்த மெய்ச்சமயங்களுள் ஒன்றாகத் திகழ்வது நம் சைவ சமயம்.

விலங்கியல் வாழ்க்கை, அமர வாழ்க்கை, கடவுள் வாழ்க்கை என முத்திறத்த வாழ்க்கையுடைமையாலே, மாந்தரும் முத்திறப்படுவர் என முன்னர் மொழிந்ததாம். அவற்றுள், இடைநின்ற புலமை வாழ்க்கையின் முதிர்வே இருதியினின்ற மெய்யுணர் வாழ்க்கையாகிய கடவுள் வாழ்க்கையாதல் வேண்டும். புலமை வாழ்க்கையிலே கலைகளிடத்தே யாம் உணரும் இன்பம் வீட்டின்பமாகிய கடவுளின்பத்தின் முழுமையாகக் கொள்ளற்கில்லை எனினும், அக்கடவுள் இன்பத்தின் ஒரு கூறே அது எனச் சான்றோர் கூறுகின்றனர். ஒரு புலவர், புலமை வாழ்க்கையைத் தமிழ் நூலாற் பேசப்படும் அகப்பொருட்கண் களவியலோடும், மெய்யுணர் வாழ்க்கையைக் கற்பியலோடும் அழகுற ஒப்பிட்டுள்ளார். காவியமாகிய பூம்பொழிலிலே, உயிர்த்தலைவியை இறைவன் களவின் வந்து மணப்பதே யாம் செய்யுளிற் காணும் இன்பம் என்பது அப்புலவர் கொள்கை.

“அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே”,

என்றும்,

“எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும்–மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்”

என்றும், நம் முன்னையோர் கல்விக்கு முடிந்த பயனாவது மெய்யுணர்ந்து வீடுபேறெய்துதல் ஒன்றே எனக் கண்டுணர்த்துவாராயினர். இதனாலன்றோ நம் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்”

என்னும் அருமைத் திருக்குறளானே கல்விப்பயன் கடவுள் உணர்ச்சி பெற்று அவன் திருவடிகளை வழிபடுதல் ஒன்றே அஃதில் வழிக் கற்றதனால் யாதொரு பயனும் இல்லை என வரையறுத் தோதுவராயினர்.

மெய்ப் புலமையையும், போலிப் புலமையையும் எளிதாகக் காண்டற்கு, அப்புலவர்தம் கடவுளுணர்ச்சியுடைமையும் அஃதின்மையும் போலச் சிறந்த சான்றாவன வேறு இல்லை. மெய்ப் புலமையுடையோரில் இறையன்பிலாதார் இலர். இறையன்பிலாதாரிடத்துப் புலமை உணர்ச்சி உளதாவதும் பொய்! பொய்யே!

நம் பண்டிதமணியவர்கள், சமய உணர்ச்சியில் – கடவுளன்புடைமையில் – அறுபான்மும்மை நாயன்மார்களோடு சேர்த்தெண்ணத் தகுந்த தகுதியுடையார் என்பது மிகையன்று. அச்சமய வுணர்ச்சிதானும், சமய நுணுக்கங்களை அறியாத பொதுவுணர்ச்சியுமன்று. சமய நுணுக்கங்களை எல்லாம் தம் நுண்மாணுழைபுலனாலே நன்கு ஆராய்ந்து தெளிந்த சிறப்புணர்ச்சியுடையவர்கள். சைவமும் தமிழும் அவர்களின் இரு கண்கள்போலப் பேணப்பட்டன எனின், சைவம் அவர்தம் வலக்கண் எனலாம்; ஏனெனில் சமயத்தை நோக்க மொழி கருவியே அன்றோ!

பண்டைக் காலத்தே சமயம் வீழ்ச்சி யுற்றபோது, நாயன்மார்களும், ஆழ்வார்களும் சமயம் வளர்க்கு முகத்தானே தமிழையும் உடன் வளர்த்து வந்தார்கள். நம் பண்டிதமணியவர்களோ இக் காலத்தே தமிழே வீழ்ச்சியுற்றமையால், தமது திருத்தொண்டில் மொழி வளர்ச்சியை முன்னிறுத்தி, அதன் வாயிலாய்ச் சமயத்தையும் உடன் வளர்த்தார்கள். சமயம் வளராதவிடத்து மொழி வளர்ப்பது பயனில்செயல்; மொழிவளராத வழிச் சமயம் வளரமாட்டாது. ஆதலின், இரண்டையும் ஒருசேர வளர்ப்பதே அறிஞர் கடனாயிற்று.

திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் போன்று நம் பண்டிதமணியவர்களும் சமயவுணர்ச்சியிற் பரந்த உள்ளமுடையவர்களே. பண்டிதமணியவர்கள் சைவ சமயத்தே தலைநின்ற சான்றோர் ஆயினும், ஏனைச் சமயங்களிடத்தும் நன்கு மதிப்புடையவராகவே இருந்தார்கள். “உலகத்துள்ளாரெல்லாரும் அவரவர்க்குரிய சமய நெறியிற் சென்றே ஒழுக்க நிலையை எய்தக்கடவர், சமயச் சார்பு வேண்டாம், ஒழுக்க மாத்திரமே போதியது என வாய்ப்பறை சாற்றுவோர் அவ்வொழுக்கத்தினும் நிலைபெறமாட்டாப் புல்லர்களே” எனச் சமயவுணர்ச்சி இம்மை யொழுக்கத்திற்கும் இன்றியமையாதாதலை நுண்ணிதின் எடுத்து விளக்கினார்கள். “மறுமைத் துன்பமும், அதனைத் தரும் ஆண்டவனியல்பும், இன்னோரன்ன பிறவுமாகிய நம்பிக்கைகளே ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவனவாம் என்றும், ஆகவே, “உயிரினும் ஓம்பப் படுவதாகிய ஒழுக்கத்தை மேற்கொள்ள நினைப்போர் யாவரும் சமயநெறி நின்றே மேற்கொள்ளக் கடவர்” என்றும் இயம்பி, மக்கள் அவ்வவர் சமய நெறியினின்றே ஒழுகும்படி அறிவுறுத்தி வந்தார்கள்.

“இறைநலம் பற்றாத வாழ்க்கை பயனற்றது; அவ்வாழ்க்கைக்கு வேண்டுவன செய்தல் பாழுக்கு நீரிறைத்தலே ஆகும்” எனச் சமயநெறி நில்லாதபொழுது மக்கள் வாழ்க்கையாற் பயனொன்றும் இல்லாமையும் காட்டினார்கள்.

“நம் புலமையும் அறிவும், கவிச் சுவையில் ஈடுபடுங்கால் இன்பம் அவலம் முதலியனவாகத் தோன்றி முடிவில் அச் சுவையனைத்தும் தெய்வ நறுங்கனித் தீஞ்சாற்றில் தோய்ந்தனவாகவே புலப்படுவனவாம்” என்னும் நம் புலவர் பெருமானின் அருள் மொழிகள் செய்யுளின்பமும், கடவுளின்பத்தின் ஒரு கூறே என்பதனை வலியுறுத்துதல் அறிக.

இந்தக் காலத்திலே கல்லாதார் நிற்கக் கற்றோர் எனப் பாடுபடுவோரும், பொல்லாத குருட்டு நாத்திக நெறிபடரும் கொடுமை நோக்கி, நம் பண்டிதமணியவர்கள் பற்பல அவையிடத்தும் நம் சமய நோக்கங்களையும், அவற்றாலே நமக்குளதாம் ஒப்பற்ற நலங்களையும், சமயம் வீழ்ச்சியுற்றால் நமக்குண்டாம் கேடுகளையும், நன்கு விளக்கிக் கூறி ஒவ்வொருவரும் “நுந்தம் சமயங்களைப் போற்றுமின்! அந் நெறியே நின் மின்! என்று வற்புறுத்தி வந்தார்கள்.

“ஆ! ஆ!! ஒரு நாட்டுக்குத் தன் பண்டைச் செல்வமாகிய சமயநிலை இழக்குங் காலம் நேரின், அந்நாட்டில் எந் நலனும் குறைவுபடுமே! அதன்கண் வாழும் மக்கள் எவ்வகை இன்பமும் இலராய் விலங்கு நிலையை எய்திக் கீழ்நோக்கித் தம் பிறப்பின் பயனை வீணாக்குவரே! செய்யத்தக்கன இன்ன, தகாதன இன்ன என்னும் பகுப்புணர்வின்றி உண்டியும் காம இன்பமுமே பொருளெனக் கொண்டு, அவற்றின் பொருட்டு மனம்போன வழியிற் சென்று தம் அறவாழ்க்கைப் பயனை ஒரு சிறிதும் எய்தாராய்க் கேடுறுவரே! அந்தோ! பொருளிலார் அதனைப் பெற முயறல் உலகியற்கை; உடையார் தம்பாலுள்ள பெறலருந் திருவை வெறுத்தொதுக்கி வறியராக முயறல் யாண்டும் காணாததொன்று! பெறலருஞ் செல்வமாகிய நம் சமயத்தைப் பெற்றிருந்தும், அதனை ஏற்று நுகர்ந்து பயன் பெறமாட்டாமையோடு, அதனை அழிக்கவும் முற்படும் பேதைமையை என்னென்பேம்!” எனப் பண்டிதமணியவர்கள் இக் காலத்தினரின் நாத்திக நெறிச் செலவு நோக்கி, உளம் வருந்திக் கூறிய மொழிகள், அவர்க்குச் சமயநெறிக்கண் உளதாகிய பற்றினை நன்கு தெரியக் காட்டுவனவாம்.

பண்டிதமணியவர்கள் நந்தமிழ்நாட்டிலே சைவ சித்தாந்த சபைகள் போன்ற அவையங்களிலே, அவ்வப்போது சைவ சமய நுணுக்கங்களை மிகவும் விரிவுபட எடுத்து விளக்கி வந்தார்கள். அவைகள் பழைய சமயநூற்கொள்கைகளே யாயினும், அப் பழங் கொள்கைகளேயே இக்காலத்தார் விரும்பி மனங்கொள்ளுமாற்றால், புதிய முறையிலே விளக்கங் கூறி வந்தார்கள். “ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயக் கடவுளைச் சிறப்பு வகையானும், பிற சமயக் கடவுளைப் பொதுவகையானுமன்பு செய்யலாம்; அன்றிச் சமநிலையாக் கோடல் இறையன்பின் இலக்கணம் அன்றாம், என்றும், “தெய்வங்கள் எல்லாம் உண்மை நிலையில் முடிவில் ஒன்றே எனினும், அவ் வுண்மை தத்துவ ஞானிகளுக்கன்றி மற்றையோர்க்கு உணர்வரிதாம்,” என்றும், “சாமானியர்கள் அந் நிலையைப் பற்றிப் பேசல், பேச்சளவேயன்றி அநுபவ அளவிற்கோடல் அரிதென்றும், சிறப்பென்பது ஓரிடத்தன்றிப் பலவிடத்துச் சேறலாகாதென்றும், பலவிடத்தும் சேறல் சாமானிய பத்தியே” என்றும் அவர்கள் கூறிய அறிவுரைகள் ஆற்றவும் இனியனவாம்.

தம் சமயக் கடவுளிடத்துக் கொள்ளும் அன்பு சிறப்பன்பாகவும், பிறசமயக் கடவுளிடத்துக் கொள்ளும் அன்பு பொது அன்பாகவும் இருத்தல் வேண்டும் என இப்புலவர் பெருமான் கூறியது பண்டைக் காலத்துச் சான்றோர்கள் கூறாததொரு புதுநெறியே யாகும். இதற்கு இவர்கள் கூறும் உவமை மிக அழகானது; அது வருமாறு:- “ஒரு பெண்மகள் தன்னைக் கைப்பிடித்த காதலினிடத்துச் செய்யும் அன்பிற்கும், தன் சோதரர் சுற்றத்தாரிடத்துச் செய்யும் அன்புக்கும் வேறுபாடு உண்டன்றோ? முன்னையது சிறப்பு அன்பும், பின்னையது பொது அன்புமாம். சிறப்பன்பை வேறோரிடத்துச் செய்யின் பிறழ்ச்சிக் குற்றம் வருதலோடு சிறப்பிலக்கணமும் பிழைபடும். பொது அன்பை உரிய சோதரர் இடத்துப்போல் மற்றையோரிடத்துஞ் செய்யலாம். அதனால் வருங்குற்றம் யாதுமின்றாம் அவ்வாறே சமயக் கடவுளிடத்துச் செய்யும் பத்தி சிறப்பும், ஏனைத் தேவர்களிடத்துச் செய்யும் பத்தி பொதுவுமாம். ஆனால், அப் பெண்மகள், தன் உயிர்க் காதலனைப் பாராட்டி, ஏனைச் சோதரர் முதலியோரையும் இகழாது உபசரித்தல் போல, நாமும் நம் சமயத் தெய்வத்தைப் பாராட்டுதலோடு மற்றைத் தேவர்களையும் இகழாது அவரவர்க்கேற்றவாறு உபசரித்துப் போற்றுதல் கடனாம். இவ்வாறு தத்தம் சமயத் தெய்வங்களிடத்து வைக்கும் சிறப்பன்பே, நல்லின்பந் துய்த்தற்கு உரியதாகும். இங்ஙனம் இன்றி எல்லாம் சமம் சமமென்று கூறுவார் ஒன்றினும் நிலைபெறாது தமக்குரிய ஆன்மப்பேற்றை இழந்தவரேயாவர்”, என்பது அவர்கள் கூறிய மணிமொழிகள். இவை, அவர்களுடைய பரந்துபட்ட சமயநோக்கத்தை நன்கு விளக்குகின்றன.

இவர்கள் வைணவ சமயத்தைக் குறிப்பிடும்போது “நமது சகோதர சமயமாகிய வைணவ சமயம்” என்றே கூறுவார்கள். இது, அவர்கள் அச் சமயத்தின்பாற் கொண்ட நன்குமதிப்பைக் காட்டுகின்றது. இனி, சமண புத்த சமயம் பற்றிய நூல்களாகிய சிந்தாமணி மணிமேகலை முதலிய பண்டைப் பெருங்காப்பியங்களை இவர்கள் பயிலுங்கால், இவர்களே சிறந்த சமண அல்லது புத்த சமயப் பெரியாராகிவிடுவார்கள். கடலென விரிந்த அக்காப்பியங்களை அருளிச் செய்த பெரியோர்களின் உளக் கருத்தை அச் சமயக் கண்கொண்டே நோக்கி நுண்ணிதிற் கண்டுணர்த்துவார்கள். அவர்கள் அறிவுறுத்தபடியே தஞ் சமய நூலாகிய திருத்தொண்டர் புராணம் திருவாசகம் முதலிய நூல்களிடத்தும் ஆசிரியர்களிடத்தும் சிறப்பன்பும், வைணவ சமய நூல்களிடத்தும் ஏனைச் சமய நூல்களிடத்தும் அவற்றின் ஆசிரியர்களிடத்தும் பொது அன்பும் உடையராய் நன்கு மதித்துப் போற்றினார்கள்.

பற்பல நாட்டுப் பெரியார் பலரும் இந்நெறி நிற்கமாட்டாது அலமருகின்றார்கள். நம் பண்டிதமணியவர்கள் எண்ணிறந்த சமயங்கள் நின்று நிலவும் இப் பேருலகத்தே சமயப் பூசலின்றி எல்லாச் சமயத்தாரும் சகோதரர்கள் போல ஒற்றுமை கொண்டு ஒருவரை ஒருவர் அன்பொடு தழுவி வாழுதற்குரிய நெறியை நுண்ணிதின் ஆராய்ந்து கூறினார்கள்.

நம் பண்டிதமணியவர்கள் நமது தமிழுக்கியற்றிய தொண்டில் சைவசமய நெறிக்கியற்றிய தொண்டு குறைந்ததன்று. உரைநடைக்கோவை முதற்பகுதியில் அடங்கிய சமயக்கட்டுரைகள் ஐந்தும், சைவ சமயத்தவர்க்குப் புதுவதாகக் கிடைத்த பெருஞ் செல்வங்களே யாகும். ஓர் அறிஞர் இவற்றைச் சைவப்பெருமக்கள் திருவைந்தெழுத்தைப் போற்றுமாறே போற்றிக்கொள்ளல் வேண்டும் என அறிவுறுத்தியது சாலப் பொருந்துவதேயாம்.

      20. கலைப் பெருங்கோயிலும் கடவுட் காட்சியும் 

இவ்வாறு சிறந்த சமயவுணர்ச்சி மிக்கவர்களாய், யாண்டும் சமய நெறியில் மக்கள் ஒழுகுமாறு அறிவுறுத்தி வந்த நம் பண்டிதமணியவர்கள், கல்லானும் உலோகங்களானும் ஆகிய திருக்கோயில் வழிபாட்டினும், திருவுருவ வழிபாட்டினும், அவ் விறைவனைத் திருவருட் பேறுடைய சான்றோர் சொற்பொருள்கொண்டு அன்பாலே இயற்றியருளிய அழிவிலாத் திருப்பாசுரத் திருக்கோயில்களைப் பன்முறை வலம் வந்து அத் திருக்கோயில்களிலே பொருள் வடிவமாக எழுந்தருளி யிருக்கின்ற இறைவன் திருவுருவத்தை அகக்கண்ணாலே கண்டு அன்பு கெழும அடிவீழ்ந்து வணங்குதலே சாலச் சிறப்புடைய வழிபாடாம் என்று கருதி, அக் கோயில்களிலே உள் நுழைந்து கருவறை வரையில் உட்சென்று கடவுளைக் கண்டு வழிபட்டு வருவார்கள். இங்ஙனம், அவர்கள் வழிபடுதற்கெனத் தேந்தெடுத்துக்கொண்ட திருக்கோயில்களில் தேவாரம் திருவாசகம் திருத்தொண்டர் புராணம் என்னும் மூன்று கலைக் கோயில்களே முதலிடம் பெற்றன.

நம் பண்டிதமணியவர்களின் இளமைப் பருவத்திலேயே இக் கலைக்கோயில்கள் தம் சிறப்பானே இப் புலவர் பெருமானைத் தடுத்தாட்கொண்டன. இராமலிங்க அடிகளார் “ஆடையிலே எனை மணந்த மணவாளா”, என்றபடி, தெருவில் ஆடாநின்ற மழவிளம் பருவத்திலேயே இவ்வினிய நூல்கள் நம் பண்டிதமணியின் உள்ளத்தைத் தம் தெய்வ மணங் காட்டித் தம்பாலீர்த்துக் கொண்டன. அவ் விளம்பருவந் தொடங்கித் தம் ஆயுளின் இறுதிகாறும் நம் பண்டிதமணியவர்கள் இக் கலைக்கோயில் வழிபாட்டைக் கைந்நெகிழ விட்டதில்லை.

திருவாசகத்தைப் பயின்றவர்களில், இராமலிங்க அடிகளாரையே நம் பண்டிதமணியவர்கட்கு உவமை கூறலாம். திருவாசக நுகர்ச்சியின்பத்தைக் கருதி உள்ளம் விம்மிதம் கொள்ளும்போதெல்லாம் ஆராமை மிக்கு நம் பண்டிதமணியவர்களின் கலைமணம் கமழும் செந்நா, இராமலிங்க அடிகளார் இயற்றிய,

“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து

ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்னும் திருவருட்பாவை யாதல்,

“வாதவூர் அன்பர் மலர்வாய்ப் பிறந்த

திருவா சகம்இங் கொருகால் ஓதின்

கருங்கல் மனமுங் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையோர் இலரே”

எனவரும் சிவப்பிரகாச அடிகளார் திருப்பாடலையாதல் மிழற்றிக்கொண்டே இருக்கும். சிற்சில அமயங்களில் நம் பண்டிதமணியவர்கள்,

“வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்

வெண்காடு மேவிய விகிர்தனரே”

“பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்

பரந்ததோர் படரொளிப் பரப்பே”

“வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்

மெய்வேடர் பெருமானைக் கண்டுவீழ்ந்தார்”

“கற்றிலேன் கலைகள் ஞானம்கற்றவர் தங்களோடும்

உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயனானேன்”

“விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்

மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்

உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

“பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்

ஆசை மேலுமொர் ஆசை அளிப்பதோர்

தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய

ஈச னாரருள் எந்நெறிச் சென்றதோ”.

எனவரும் இன்னோரன்ன திருப்பாசுரப் பகுதிகளில் யாதானும் ஒன்றை மெல்லெனப் பன்முறை திரும்பத் திரும்ப இனிதாக ஓதிக்கொண்டே இருப்பர். அப்போது அவர்கள் நாத் தழுதழுக்கும். கடைக்கண்களில் நீர் ததும்பித் துளிக்கும். அப் பாடற் பகுதியை ஓதியாங்கே தம்மை மறந்து அப் பாடற்பொருளில் நிட்டை கூடுவர்.

பொதுவாக நம் பரத கண்டத்தினும், சிறப்பாகத் தமிழகத்தினும் இறைவழிபாட்டின் பொருட்டு எடுக்கப்பட்ட திருக்கோயில்களும் திருவுருவங்களும் எண்ணிறந்தன. பண்டைக்காலந்தொட்டு இவற்றிற்காக நம் நாடு செலவிட்டிருக்கும் பொருட்குவையும் அளவிறந்தன. விண்ணளாவி நிற்கும் நாற் பெருங் கோபுரங்களோடும், பிற வுறுப்பக்களோடும் நின்று திகழும் இத் திருக்கோயில்கள் பிற நாட்டில் இருந்து வருவோர்க்கு நம் கடவுளுணர்ச்சியின் சிறப்பை விளக்குவதோடு, அவர்களை வியப்புக் கடலுள் மூழ்கவும் செய்கின்றன. இத்தகைய திருக்கோயில்கள் உலகில் நிரம்பிக் கிடக்கும் விலங்கியல் வாழ்வுடைய மாக்களைச் சமயநெறிக்கண் அழைத்து மக்களாக்கி, மேலும் மக்கட்பிறப்பின் பயனை அவர்கள் எய்திக்கொள்ளுமாறு தூண்டுதற்குரிய ஏதுக்களாம் என்று கருதியே நம் முன்னைச் சான்றோர்கள் இவற்றிற்காம் பொருட்செலவினும், பயன் சாலவும் பெரிதென இவற்றை இங்ஙனம் போற்றி வந்தனர்.

இக்கோயில்களினும், மக்கட்கே சிறந்துரிமையுடைய திருக்கோயில்கள், திருவாசகம், தேவாரம் போன்ற கலைக்கோயில்களேயாகும். கற்கோயிலைக் கட்டியவர்களோ மலவீக்கமுடைய மன்னர்களும், செல்வர்களும், சிற்பிகளுமே ஆவர். இக் கலைக்கோயில்களைக் கட்டியவர்கள் “வினையினீங்கி விளங்கிய அறிவின் முனிவர்கள்” ஆவர். ஆதலால், கலைநலம் கைவரப்பெற்றோர் திருக்கோயில் யாத்திரைக்காக உடல் வருத்தமுறுதலும், பொருட்செலவு செய்தலும் வேண்டா! ஒருசிறு பொருட்செலவின் வாயிலாய், அவர்கள் இருக்குமிடத்திலேயே மெய்ஞ்ஞானப் பூங்கோயில்கள் பலவற்றை எளிதிற் காணலாம். தவப் பேறுடையார் அப்பூங்கோயிலகத்தே காண்டற்கரிய இறைவனையும், அன்புவழிச் சென்று அகக்கண்ணாற் கண்டு போற்றலாம்.

நம் பண்டிதமணியவர்கள், “பாடுவோர்க்கும், கேட்போர்க்கும் இறைவன் திருவடிப்பற்றை விளைவித்து அன்பு மயமாய் நின்று உள்ளுருகச் செய்யும் தேவாரம், திருவாசகம், நாலாயிரப்பிரபந்தம் முதலிய அருட்பாடல்கள்,” என்றும், “அடிகள் திருவருள் அமிழ்தத்தை நிறையவுண்டு, சிவானுபச் செல்வராக விளங்கிய நிலையில் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிப்படி தம் அருளனுபவத்தை உலகத்துளுள்ள மக்களுக்கெல்லாம் வழங்க ஆண்டவன் அருள்வழி நினைந்து திருவாசகம் என்னும் இசைப்பாடல் தொகுதியைத் திருவாய்மலர்ந்தருளினார்,” என்றும் திருவாசகப் பாடல்கள் மாணிக்கவாசக அடிகளுடைய சிவானுபவ நிறைவில் பொங்கித் ததும்பி வெளிப்பட்ட அமுதவெள்ளம் என்றும் இவற்றின் சிறப்பை விளக்கியுள்ளார்கள்.

நம் செந்தமிழ் நாட்டுத் தமிழ்க் கழகங்களினும், சைவ சித்தாந்த சபை போன்ற இடங்களினும் பண்டிதமணியவர்கள் வாயிலாய்த் திருவாசக நுண்பொருள்களை உணர்ந்த அறிஞருலகம் அத் திருவாசகத்தின் அருமை பெருமைகளை உணர்ந்து பயிலத் தொடங்கிற்று. திருவாசகத் திருப்பாசுரங்கட்கு நம் பண்டிதமணியவர்கள் கூறும் நுணுக்கம் போன்று வேறு யாரும் கூறிற்றிலர் என்று அறிஞர்கள் பண்டிதமணியைப் பாராட்டுவாராயினர். பழம் பனுவல்கட்குப் பொருள்காணும் தமக்கே உரிய சிறப்பு முறையில் திருவாசகப் பாசுரங்களின் நுணுக்கத்தை அவர்கள் விளக்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் கூறியதொன்றனைக் காட்டுதும்.

“வழங்குகின் றாய்க்குன் அருளார்

அமுதத்தை வாரிக் கொண்டு

விழுங்குகின் றேன்விக்கி னேன் வினை

யேனென் விதியின்மையால்

தழங்கருந் தேனன்ன தண்ணீர்

பருகத்தந் துய்யக் கொள்ளாய்

அழுங்குகின் றேனுடை யாயடி

யேனுன் அடைக்கலமே”

என்பது திருவாசகம். இதற்கு அவர்கள் கூறும் நுண்பொருள் வருமாறு.

“இதன் அருமைப் பொருளையும் சிறிது கூறி மேற்செல்வேன். “வழங்குகின்றாய்க்கு” என்புழி குவ்வுருபு பொருட்டுப் பொருளதாம். “என்னை

யாண்டாய்க்கு” என்று, பிறாண்டும் சுவாமிகள் இதனை வெளிப்படக் கூறுவர். ஆகவே, வழங்குகின்ற நின் பொருட்டு நின் அருளாகிய ஆரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என்பதே அத்தொடரின் பொருளாம். மாணிக்கவாசக சுவாமிகள் தம்மைச் சிவபிரான் மிக வலிந்து அடிமை கொண்டார் என்பதைக்,

“கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை

நின் கழற்கன்பனாக் கினை”

எனவும்,

“ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே”

எனவும்,

“கல்லைப் பிசைந்து கனியாக்கிக் தன்கருணை

வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை”

எனவும்,

“இனையனா னென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம் பிரானானாய்க்கு”

எனவும் போந்த திருவாக்குக்களான் உணர்க.”

அவ்வாறு அடிமைகொண்டு, தங்கருணை அமிழ்தத்தை எவ்வாறு ஊட்டினார் எனின், ஒன்றும் அறியாத குழவிப்பருவத்து மகவைத் தாய் அச்சமுறுத்தி உணவு ஊட்டுமாபோலும், கல்லூரிக்கட்சென்று கல்வியின் மாட்சியுணராது கற்றற்கு மலைவுறும் சிறாரை ஆசிரியன் அடித்துத் துன்புறுத்திக் கல்வியைப் புகட்டுமாபோலும் ஊட்டினார் என்க.

இவ்வுண்மையை நம் சுவாமிகள்,

“அடித்தடித்து அக்காரம் முன்தீற்றிய அற்புதம் அறியேனே”

என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள். ஆதலின் சருக்கரை வழங்குதல் என்பதுபோலச் சிறிதும் வருந்துதலின்றி மகிழ்ச்சிமிக்கு இடையீடின்றிப் பெய்தல் கருதிக் கொடுத்தல், தருதல் முதலிய சொற்களை விடுத்து, வழங்குதற் சொல்லால் தொடுத்து அவ்வாறு கருணையமுதத்தைப் பெய்து உண்ணுக! உண்ணுக! என்று அடித்தடித்து வற்புறுத்துகின்ற நின்பொருட்டு அஞ்சியென்பார் “வழங்குகின்றாய்க்கு” எனவும், தன்னை யுண்டாரைச் சிற்றின்புறுத்தும் தேவரமுதம் போலாது சிவபிரான் அருளமுதம் பேரின்புறுத்த வல்லதாகலின், “உன் அருளாரமுதத்தை” எனவும், இயற்கையாக உண்டலின்றித் துன்புறுத்தும் நின்பொருட்டு மிக விரைந்துண்ணுகின்றேன் என்பார், “வாரிக்கொண்டு விழுங்குகின்றேன்” எனவும், அங்ஙனம் விழுங்குதலான் “விக்கினேன்” எனவும், வேண்டாத உணவை உண்டற்குத் தொடங்குமுன்னர்க் கண்டவளவிலேயே விக்கலுண்டாமாகலின், முறையே நிகழ்காலமும், இறந்த காலமும் தோன்ற, “விழுங்குகின்றேன் விக்கினேன்” எனவும், அவ்வாறு விக்குதற்குக் காரணம் நீயல்லை; வினைவயப்பட்டுழலும் எனது விதியே என்பார் “வினையேனென் விதியின்மையால்” எனவும், யான் வேண்டாதிருப்பவும், என்னைத் துன்புறுத்தி ஊட்டினையாதலின், அதனால் உண்டான விக்கலை ஒழித்தற்குத் தண்ணீர் தந்து பிழைப்பித்தல் வேண்டுமென்பார், “தண்ணீர் பருகத்தந்து உய்யக்கொள்ளாய்” எனவும், அவ்வமுதம் நின் அருளமுதமாகலின், அதனை உண்ணுதற்குரிய அதிகாரசிவத்துவம் வேண்டுமென்பார், தண்ணிய நீர்மை—சிவத்துவம் என்னும் பொருள் பொதுளத் “தண்ணீர்” எனவும், அத்தண்ணீரும் அவ்வமுதம்போல் விக்கல் முதலிய சலனங்களைத் தருதலின்றி, எற்குகந்த இனிமைச் சுவையுடன் இருத்தல் வேண்டுமென்பார், “தழங்கருந் தேன் அன்ன தண்ணீர்” எனவும், அது பெறாமையின் மிக வருந்துகின்றேன் என்பார், “அழுங்குகின்றேன்” எனவும், சிவபிரான் சேதனப் பொருள்கள் எல்லாம் தமக்கு அடிமையாகத் தாம் ஆண்டார் எனவும், அசேதனப் பொருள்கள் எல்லாம் உடைமையாகத் தாம் உடையார் எனவும் கூறப்படுவாராதலின், இந்நான்கு சொற்களைக்கொண்டு விளக்குதற்குரிய பொருள் முன்னிலை தன்மையாகிய இருசொற்களின் அமைய, “உடையாய் அடியேன்” எனவும், யான் சேதனனாயிருந்தும், சிறிதும் அன்பிலன் ஆதலின் என்னை ஆளுதல்பற்றி வரும் ஆண்டார் என்பதினும் அசேதனப் பொருள்களைப் பற்றிய உடையார் என்பது நினக்குப் பெருமையாதலின், அதனையே விளிப்பல் என்பார், “உடையாய்” எனவும், ஆண்டார் என்பது உண்மை எனினும், என்னை நோக்கி அவ்வாறு கூறற்கு நாணமுடையேனாதலின், அப்பொருள் பிறர் அறிய என்னையே கூறிக்கொள்வன் என்பார், “அடியேன்” எனவும், நின்றனக்கு உரிமையுடைய பொருளினும் அடைக்கலப் பொருளைக் காத்தல் நின் பெருந்தன்மைக்கு இயன்றதென்பார் “உன் அடைக்கலமே” எனவும் அருளினார், என்பதாம்.

அரிதரிது! செய்யுட்கண் உள்நுழைந்து ஊடுருவிச் சென்று, சொற்றொறும் சொற்றொறும் இற்றிதன் பெற்றி என்று அச் செய்யுள் இயற்றிய சான்றோரின் திருவுள்ளத்தைத் தொட்டுகாட்ட வல்லார் கலைநல முதிர்ந்த வித்தகப் பெரியார் நம் பண்டிதமணிபோல்வாரன்றி, ஏனையோர்க்கு இவ்வருஞ்செயல் இயல்வதாகுமோ! நம் பண்டிதமணியவர்களே “உயர்நிலைப் பாவலர் மயர்வற ஆக்கிய விழுப்பொருள் நிறைந்த செய்யுட்களின் சொற்பொருள் ஒழுக்கில் நம் நுண்ணறிவு எதிரேறிச் செல்லவேண்டும். அங்ஙனம் சென்று அச் சொற்பொருள்களின் வன்மை வனப்புக்களை ஆராய்ந்தளக்க முயலின் அச் செய்யுளாசிரியன் ஆழ்ந்து நினைவிற் கண்டு வைத்த அரும்பொருள் மணிகளின் இயலொளியை உண்மையாகக் கண்டு இன்புறலாம்” என நம்மனோர்க்கு அறிவுறுத்தினர் அல்லரோ! அவ்வறிவுரைக்கு எடுத்துக்காட்டாகவே இச் செய்யுட்கு அவர்கள் கூறிய நுண்பொருளுரை அமைந்திருத்தலைக் காண்க.

இவ்வாறு திருவாசகம் என்னும் தெய்வ நூலிலே தோய்ந்து தோய்ந்து, திருவாசகம் வேறு, தாம் வேறு என்பதின்றித் திருவாசகமே தாம் தாமே திருவாசகமாக இரண்டறக் கலந்தின்புற்ற பண்டிதமணியார் அக்கலைக் கோயிலிற்றானே, தம் மன மொழி மெய்களானே வணங்குதற்குரிய கடவுளையும் கண்டு வழிபாடு செய்து வந்தார்கள். மேலும், தாம் சென்ற சென்ற இடமெல்லாம் இத்திருவாசகம் என்னுந் தேனை அன்பர்கள் செவிவாயாக உண்ண வழங்கியும் வந்தார்கள். அங்கங்கே ஒருசில பாசுரங்களின் நுணுக்கங்களைக் கேட்டு வியப்புற்ற அன்பர்கள் பலர், நம் பண்டிதமணியவர்களைத் திருவாசகம் முழுதிற்கும் உரைவரைந்தருளும்படி வேண்டுவராயினர். வேண்டியும், அச்செயலில் காலமுண்டாக இறங்கினார்களில்லை.

21. பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறு

பண்டிதமணியவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தே பேராசிரியராக இருந்த பொழுது, அவர் ஏறத்தாழ அறுபதாண்டகவையை எய்தினார். இக் காலத்தே இவர்கள் புகழ் அரசியலார்க்கும் எட்டிற்று. 1941-ஆம் ஆண்டுச் சூன் திங்கள் பதினோராம் நாளாகிய மன்னர் பிறந்தநாட் கொண்டாட்ட விழாநாளில், நம் பண்டிதமணியவர்களை அரசியலார் “மகா மகோபாத்தியாயர்” என்றதொரு சிறப்புப் பெயரால் போற்றி அழைத்தனர். முன்னர் ஆங்கிலம் வல்லுநர்க்கு மட்டுமே உரியதெனக் கருதப்பட்ட பல்கலைகழகத் தமிழ்ப் பேராசிரியர்ப் பெரும்பதவியைத் தாம் ஏற்று, அப்பதவி தமிழ்வல்ல கலைவாணர்க்கும் உரித்தாம் என்பதை விளக்கினார்கள். அங்ஙனமே “மகா மகோபாத்தியாய” என்னும் இச் சிறப்புப் பெயர், பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது போன்று முன்பெல்லாம் கருதப்பட்டது. தமிழ்ப்புலவர்களிலே இச் சிறப்புப் பெயரைப் பெற்றவர்கள் உ. வே. சாமிநாதையர் அவர்கள் மட்டுமேயாவர். அவர்கள் அந்தணர்மரபினர் ஆதலால், இச் சிறப்புப் பெயர் அந்தணர் அல்லாதார்க்கும் உரியதாக அதனானும் கருத இடமில்லையன்றோ. அந்தணர் அல்லாதார்க்கும் அச் சிறப்புப்பெயர் பொருந்தும் என்பது நம் பண்டிதமணியவர்கள் அதனை ஏற்ற பின்னரே நன்கு விளங்குவதாயிற்று. செட்டி நாட்டிளவரசர் தலைமையில் நிகழ்ந்த ஒரு புலவர்குழுவில் பண்டிதமணியவர்கட்கு “முதுபெரும் புலவர்” என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்க நாட்டிலே உலகில் உயர்வறவுயர்ந்த பெரும் புகழாளரின் பெயர்களைத் தேடிப் பொறிக்கும் “கலைக் களஞ்சிய”ப் பெருநூலிலே இக்காலத்தே நம் பண்டிதமணியவர்கள் திருப்பெயரும் பொறிக்கப்பட்டமை உணர்தற்பாலது.

இனி நம் பண்டிதமணியவர்கள் பல்கலைக் கழகச் சட்ட திட்டங்கட்கு இழுக்கு வாராதபடி, தமக்கு அகவை முதிர்ந்தகாரணத்தால் தாமே தமிழ்ப் பேராசிரியர் பதவியினின்றும் விலகிக் கொண்டார்கள்.

மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையார்கள், நம் பண்டிதமணியவர்களாலே நிறுவப்பட்டு மேலும் மேலும் வளர்பிறை போன்று வளர்ச்சியுற்றுத் திகழ்வதும், தனவணிக நாட்டின்கண் அறிவுச் செல்வம் பரவுதற்கு வழிகாட்டியாக உள்ளதுமாகிய, தம் சன்மார்க்க சபையிடத்தே, நம் பண்டிதமணியவர்களின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு என்றென்றும் விளங்குதல் வேண்டும் என்று கருதினார்கள். அவ்வுருவப்படத் திறப்புவிழாவில், கனம் டாக்டர் ராசா சர். சா. ராம. மு. அ. அண்ணாமலைச் செட்டியார் அவர்களைத் தலைமையேற்றுப் படத்திறப்பும் செய்து தருமாறு வேண்டினார்கள். கனம். செட்டிநாட்டரசர் அவர்களும் சபையார் நோக்கத்தைப் பாராட்டி அவர்கள் வேண்டுகோட்கு விருப்பத்துடன் உடன்பட்டார்கள்.

1940-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஏழாம் நாள், சன்மார்க்க சபையில் நம் பண்டிதமணியவர்களின் திருவுருவப்படம் செட்டிநாட்டரசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தனவணிகப் பெருமக்களும், மகாவித்துவான் ரா. இராகவையங்கார், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கப் புரவலர் தமிழவேள் த. வே. உமாமகேசுவரம் பிள்ளை முதலியோரை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களும் குழுமிப் பண்டிதமணியவர்களைப் பாராட்டினார்கள்.

1940-ஆம் ஆண்டு, அக்டோபர்த்திங்கள் பன்னிரண்டாம் நாள் மகிபாலன்பட்டியில், நம் பண்டிதமணியவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா நடந்தேறியது. அப் பெருவிழாவிற்கும் கனம் செட்டிநாட்டரசர் அண்ணாமலை வள்ளல் அவர்களே தலைமை ஏற்று நம் புலவர் பெருமானைப் பாராட்டினார்கள்.

“நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியடையும் காலங்களில் இதுவும் ஒன்றாகும். இன்றைய தினம் பண்டிதமணியவர்களுக்கு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகி அறுபத்தோராவது ஆண்டு பிறக்கின்றது. நம்முடைய இனத்தாரில் ஒருவராகிய பண்டிதமணியவர்களுடைய பெருமையையும் குணங்களையும் பாஷா ஞானத்தையும் நம்மினத்தாரேயன்றி இந்தத் தமிழ்நாடு முழுவதும் நன்கு அறியும். இவர்களுடைய சாந்தி விழாவைச் சிறப்புடன் நடத்தி வைப்பதால் பண்டிதமணியவர்களுக்குப் பெருமையைச் செய்வதோடு நம்மையும் கௌரவித்துக் கொள்கிறோம்”. இவ்வினிய மொழிகள் செட்டிநாட்டரசர் பண்டிதமணியவர்களைப் பாராட்டியதன் ஒரு பகுதியாம்.

“அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்

மிகைமக்க ளான் மதிக்கற் பால” (நாலடி:163)

என்பர் ஆன்றோர். சான்றோரைச் சான்றோர் மதித்துப் புகழ்தலே மெய்ப்புகழாகும். புலவர் அருமையைப் புலவரே அறிந்து கூறுதல் வேண்டும். நம் பண்டிதமணியவர்களைப் புகழாத புலவர்களே இல்லை என்லாம். அவர்களுள்ளும், பண்டிதமணியவர்களோடு ஒத்த தகுதியுடைய புலவர் பெருமக்கள் சிலர், நம் பண்டிதமணியவர்களின் பண்பெல்லாம் தம் கூர்த்த அறிவாலே நன்குணர்ந்து பாராட்டியுள்ளார்கள். பண்டிதமணியவர்களின் சிறப்பை உணர்தற்கு அப் பாராட்டுரைகள் மிகச் சிறந்த ஏதுக்களாம். ஆதலின், அவையிற்றில் விரிவஞ்சி ஒருசில மட்டும் கீழே தருகின்றோம்.

“என்னுடைய அன்பரும், இயற்கையில் அமைந்த மதிநுட்பமும், வடமொழி தென்மொழி நூல்களை ஆழ்ந்து பயின்றதனால் அமைந்த பேரறிவு வாய்ந்தவர்களும், மேலைச்சிவபுரி முதலிய இடங்களில் தமிழ்க் கலாசாலைகளை நிறுவிப் பாதுகாத்துத் தமிழ்க் கல்வி பரவும்படி செய்தவர்களும், செய்யுளும் வசனமும் எழுதுவதில் ஆற்றல் மிக்கவர்களும், கேட்போர் உள்ளம் கவரும் பிரசங்கங்கள் புரிபவர்களும், அண்ணாமலைச் சர்வ கலாசாலையில் தமிழ்த் துறைத் தலைவராகவிருந்து தம் ஆராய்ச்சித் திறத்தையும் மதிவன்மையையும் வெளிப்படுத்துவர்களும் ஆகிய…………….. பண்டிதமணியவர்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திருந்து தமிழின்பம் நுகர்ந்து தமிழ் நாட்டிற்குப் பயன்படும் தொண்டுகள் புரிந்துகொண்டு விளங்கும்படி செய்விக்கும் வண்ணம் ஸ்ரீ ஆனந்த நடராசப் பெருமான் திருவருளைச் சிந்திக்கின்றேன்.” இப்பாராட்டு—-மகாமகோபாத்தியாய, தட்சிணாத்திய கலாநிதி டாக்டர் உ. வே. சாமி நாதையர் அவர்கள் கூறியதாம்.

மணிமலரிலே வெளிவந்த “ஆங்கிலவாணி” முடிபுரையிலே “ஆரியமும் தமிழும் வல்ல பண்டிதமணியார்” எனச் சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைத் தொகுத்துக் கூறிய உரைத் தொடரினை நண்பர் சிலர் வேண்டுகோளுக்கியைய விரித்துரைக்க விழைவுற்று இதனை எழுதுகின்றாம்.

வேதம் ஆகமம் முதலிய எண்ணிறந்த பல்வேறு அறிவுநூற் பெருக்கங்களையுடைய வடமொழியும், தமிழ்மொழியும் ஆகிய இருபெரு மொழிக்கும் இலக்கண முடிபுகள் பல ஒன்றி வரலாலும், தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த புலனழுக்கற்ற அறிவுடையோர் பலர் வடமொழி வல்லாராய் அம் மொழிமரபு பலவற்றை எடுத்தாண்டமையாலும், தமிழிலக்கணப் புலமை நிரம்புதற்கு வடமொழியறிவும் ஒருசார் வேண்டப்படுவதன்றோ? இக் காரணங்களினாலே ஆரிய மொழியினை விரும்பிக் கற்று, அம்மொழியிலுள்ள “சுக்கிரநீதி”, “மிருச்சகடிகம்” முதலிய சிறந்த நூல்களைத் தூய தமிழில் மொழிபெயர்த்து அச்சியற்றி நல்கியதற்காகத் தமிழுலகம் பண்டிதமணியாரைப் பாராட்டுகின்றது.

“ஆரியமும் தமிழும்” என ஆரியத்தை முதலிற் கூறியது இவரது தமிழ்ப்புலமையை இரண்டாம்படியாக வைத்ததாகாதோ? எனின், ஆகாது. “தமிழ்கள் மூன்றும் கொண்டாடி இளம்பூவைக் குழாம் தலைசாய்த்து உளமுருகும்” செந்தமிழ்ப் பாண்டிநாடு இவர் நாடாகலின், தமிழ்ப்புலமை இவர்க்குப் பிறப்புரிமையாயிற்று; ஆரிய மொழிப்புலமை சிறப்புரிமையாயிற்று. சிறப்புரிமையை முதலிற்றந்துரைக்கு முகத்தான் “ஆரியமும் தமிழும்” என வைத்தது பொருத்தமேயான் என்க.

“தமிழ் வல்லார்” என்றமையின் இவர் சொலல் வல்லார், கவிபுனைதல் வல்லார், நூலியற்றல் வல்லார், மாணவர்க்குத் தமிழறிவுறுத்தல் வல்லார் என இவரது பலதிறத்து ஆற்றல்கள் ஒருங்கு கூறப்பட்டன. இனித் தமிழ் என்னுமிடத்து இயல் இசை கூத்து என நின்ற மூன்றும், எழுத்து சொல் பொருள் யாப்பு அணியென நின்ற ஐந்தும் “தமிழ்தழீஇய சாயலவர்” என்புழிப் போந்த இனிமையும் பெறப்படுதலின், இவர் தமிழ்த்துறை பலவினும் ஆய்ந்து கண்ட அரும்பொருண் முடிபுகளை வேட்பத்தாம் சொல்லும் மாட்சியினார் என்பது உய்த்துணரவைத்தமை காண்க.

அன்பும், அறிவும், நிரம்பி ஆண்டவன் படைத்த உயிர்களை ஏற்றத்தாழ்வாக நோக்காது, ஒருபடித்தாகக் காண்போன் பண்டிதன் எனக் கண்ணபிரான் கீதையுள்ளே கட்டளையிட்டமையின், ஆன்றோர் இவர்க்கு ஈந்த பண்டிதப்பெயர், இவர் அன்போடமைந்த அறிவுடையார் என்பதைத் தெளிவு படுத்திற்று. திருவாசகத்தினும் ஏனைய திருமுறைகளினும் இவரடைந்துள்ள புலமை வாளா அறிவு மாத்திரையோடமையாது அன்புகலந்த நீர்மையதென்பது அறிஞரது துணிபு.

பெரியோர் இவரைப் பண்டிதமணி என்றது, “பொன்னும்…… தோன்றியாங்கு”, எனக் கண்ணகனார் கூறியபடி, இடைநிலம்படச் சேய் நிலத்தினராகிய தமிழ்ப் புலவர் பலர் ஒருங்கு கூடும் அவைக்களத்திலே, அப் புலவர் பொன்னும் பவளமும் முத்தும் போன்று அழகுதர, இவர் மணிபோல் ஒளிகாலும் நீர்மையர் என்பதைக் குறிப்பால் உணர்த்திற்று.”

ஆழகு! அழகு! நம் பண்டிதமணியவர்களின் புலமையழகினை இவ்வாறு அழகுற எடுத்துரைத்தவர், மலமாசு நீங்க நோற்று நின்ற நம் விபுலானந்த அடிகளார் ஆவார்.

இனி, நம் புலவர் பெருமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், நம் பண்டிதமணியாரைப் பாராட்டுதலைக் கேண்மின்:

“பண்டிதமணி கதிரேசச் செட்டியாரை யான் நீண்ட நாளாக அறிவேன். இற்றைக்கு ஏறக்குறைய முப்பதாண்டுக்கு முன்னர்த் தூத்துக்குடிச் சைவசித்தாந்த சபையிலே அவரை யான் கண்டு இன்புறும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது கதிரேசனார், தேனினும் இனிய திருவாசகத்தைப் பற்றி ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர்தம் இளமைச் செழுமையும் தமிழ்ப் பொழிவின் கொழுமையும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. அக் கவர்ச்சி அவர்க்கும் எனக்கும் உற்ற நட்புக்குக் கால்கொண்டது.

பண்டிதர் கூட்டங்கள் ஈண்டியிருக்கும்; அங்கே திரு கதிரேசனார் புன்முறுவலுடன் போதருவர். போந்த சிறிது நேரத்தில் அவர் வான்மணி எனத் திகழ்ந்து ஒளி கால்வர். பண்டிதருள் திரு. செட்டியார் வான்மணியாய் இலங்குவது கண்ட புலவர்கள், அவரைப் பண்டிதமணி எனப் போற்றலாயினர். பண்டிதமணிப் பண்பு திரு. செட்டியாருக்குக் கருவில் அமைந்த பண்பாகும்.

பண்டிதமணியின் புலமையில் பல சிறப்புக்கள் உள்ளன். அவைகளுள் குறிக்கத்தக்கது ஒன்று; அது “பாட்டின்ப நுகர்ச்சி”.

திரு. செட்டியார் வாழும் ஊர் அமைதியுடையது; இயற்கை அமைதியுடையது. அமைதிமிக்க ஊரில் அமைதிமிக்க தமிழ்க் கவிதையில் உறவு கொள்ளும் பேறு பண்டிதமணிக்குக் கிடைத்தது. இஃது அவர்தம் தவப்பயன் போலும்! அதனால் பண்டிதமணியின் மனம் தமிழ் வண்டாகிப் பாக்களாம் பூக்களுள் படிந்து இன்பத்தேன் நுகர்ந்து தன்னை மறக்கும் பயிற்சி பெறலாயிற்று.

திரு. செட்டியார் காவியங்களைப் பயிலுந்தோறும் பயிலுந்தோறும் பாவுள்ள இடங்களில் அவர் பாக்களுடன் இரண்டறக் கலப்பர், என்று யான் சொல்வது வழக்கம். பண்டிதமணி புலவர் சூழலிலே அமர்ந்து பாக்களிற் செறிந்து கிடக்கும் நுட்பங்களையும் வனப்புக்களையும் பிறவற்றையும் அகழ்ந்தகழ்ந்து எடுத்துக் காட்டும்போது, அவர் அவைகளில் இரண்டறக் கலக்கும் இயல்பினர் என்பது நன்கு விளங்கும்.

கதிரேசனார் காவியக்கடலில் மூழ்கிமூழ்கித் திளைத்துத் திளைத்து, இருமையற ஒன்றிஒன்றி அக்காவியக் கடலானவர் என்று கூறல் மிகையாகாது. “கதிரேசனார் காவியமானார்; காவியம் அவராயிற்று” என்று கூறல் பொருந்தும்; சாலப் பொருந்தும்!

பொதுக்கூட்டங்களிலும் சிறப்பாகப் புலவர் கூட்டங்களிலும், பண்டிதமணி தமது தமிழ்கொழிக்கும் நாவால் பாக்கொழிக்கும் திறங்களை வெளியிடும்போது அவர் தம் தோற்றம் ஒரு காவிய அருவிபோலப் புலனாகும். வண்டின் யாழும், குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், அருவியின் முழவும், இன்னபிறவும் ஒன்றி வழங்கும் இன்பத்தைச் செட்டியாரின் தமிழ் — பாத்தமிழ் – வழங்குதலைப் பாவாணர் புலன்கள் உணரும்.

கதிரேசனாரை ஒரு காவியப்பொழில் என்றுங் கூறலாம். அப்பொழிலில், தமிழ்ப்பறவைகள் புகுந்து பலதிறக் கனிகளின் சுவை நுகர்ந்து இன்புறுவதுண்டு. கதிரேசனார் கூட்டங்களில் நுழையும்போது “காவியம் வருகிறது” என்று அறிஞர் பேசுவதை யான் கேட்டுள்ளேன்.

இங்ஙனம், தாம் பேசப்புக்க பொருள் கேட்பார்க்குக் கண்கூடாகத் தோன்றும்படி எடுத்துக் கூறுவது திரு வி. க. அவர்கள் போல்வார்க்கே கைவந்த வித்தையாம்.

இனி நம் நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் பாராட்டுவதைக் கேளுங்கள்.

“தமிழ் அன்னையின் அருந்தவப் புதல்வராகிய முதுபெரும் புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியாரவர்கள் தமிழ்ப் புலமைக்கு வரம்பாயுள்ளவர். வடமொழிப் புலமையும் ஒருங்குடையவர். வித்தகச் சொற்பொழிவாளர்; “ஆயிரத் தொன்றாம் புலவர்” எனவும், “வார்த்தை பதினாயிரத் தொருவர்” எனவும் ஒரு பழஞ்செய்யுள் கூறுகின்றது. ஆனால், நம் பண்டித மணியோ புலவர் ஆயிரவரில் ஒருவர்; வார்த்தை வல்லார் பதினாயிரவரில் ஒருவர்; ஏனோர் அறிதற்கரிய நுண்பொருள்களை எடுத்துக் காட்டியும், நகைச்சுவை முதலிய தோன்றவும் பேசும் அவரது அரிய சொற்பொழிவைச் செவிமடுத்து இன்புற்றவர்கள், அதனை ஒருபோதும் மறத்தல் இயலாது. மற்றும், செய்யுளியற்றல் உரையெழுதுதல் முதலிய புலமைக் கூறுகள் பலவும் அவர்பாற் சிறந்து விளங்குகின்றன.

பண்டிதமணியவர்கள் தமது புலமையையும் செல்வாக்கையும் பயன்படுத்தித் தமிழ்வளர்ச்சிக்கு ஆற்றியிருக்கும் தொண்டு அளவிடற்பாலதன்று. மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையைத் தோற்றுவித்து, அதன் வளர்ச்சிக்கும் அரிய தொண்டுகட்கும் பற்றுக்கோடாயிருந்து, மற்றும் பல கழகங்களும் கல்விச் சாலைகளும் அந் நாட்டிலே தோன்றுதற்கு ஏதுவாயிருந்தமையை உணர்வோர், தனவணிகர் நாட்டிலே தமிழ்க்கல்வி பரவுதற்கு விதை விதைத்தவர் பண்டிதமணியே என்று கூறத் தயங்கார். தமிழ்ப் பணியில் ஈடுபட்டுள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு அவர்கள் செய்தும், செய்வித்தும் வரும் உதவிகள் சாலச் சிறந்தன. மற்றும் நூல்கள் இயற்றியும், சொற்பொழிவாற்றியும், மாணாக்கர்கட்குக் கல்வி கற்பித்தும், பொருளுதவி செய்வித்தும் பண்டிதமணியவர்கள் புரியும் கல்விக்கொடைக்கு, பல்கலைக்கழகம் தோற்றுவித்து வளர்த்தும், பல கலைகட்கும் பாதுகாப்பாளராயிருந்தும் புரந்துவரும் செட்டி நாட்டரசர் அவர்களது மாண்பொருட்கொடையையே ஒப்புச் சொல்லலாகும் என்பதாம்.

மகாவித்துவான், பாஷா கவிசேகரர் திரு. ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் கூறிய பாராட்டுரையாவது:

“பண்டிதமணி பேராசிரியராக இருந்து செய்த காரியங்களை என்னால் என்றுமே மறக்கமுடியாது. அவர்கள் பொருளுணர்ந்து சொல்லுதற்கரிய சேனாவரையம் என்னும் தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையை மிக எளிதாகப் போதித்ததை அடுத்த அறையிலிருந்து கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவன் நான். ஆங்கிலம் படித்தவர்கள்தாம் அந்தப் பேராசிரியர் பதவியை வகிக்க வேண்டும் என்ற நியதியைப் பண்டிதமணி மாற்றிவிட்டார் என்றே கூறவேண்டும்”, என்பதாம்.

சென்னை வித்துவான், தெ. பொ. மீனட்சிசுந்தரனார் எம். ஏ., பி. எல். எம். ஓ. எல், அவர்கள் கூறுகின்றார்கள்:

“பாட்டில் வருஞ் சொற்களைச் சுவையுலகாக மாற்றிவைக்கும் ரசமணியாவார் இவர். இவர் பேச்சைக் கேட்கும்போது கேட்போரும் ஒருமித்து அவரோடு பாட்டிற் சமாதி கூடிச் சாந்தி என்று புகழப் பெறும் மன அமைதியை அடைந்துவருதல் கண்கூடு. அந்தவகையில், இவர் ஒரு மகரிஷி; ஒரு ஆசாரியபீடம். கட பட என்றுருட்டுகின்றேன் என நினைத்தல் ஆகாது. அவ்வடசொற்கள் கருத்தைத் தெளிவாக விளக்குகின்றன. இத்தகைய சுவை வாழ்வு இவரை முழுதும் மாற்றி அமைத்துள்ளது. மெய்யுணர்வாளர்க்கு அடையாளமாகத் திருவள்ளுவர் கூறும் நகையும் உவகையும் இவரிடத்தே கூத்தாடுகின்றன. இவர் உடையிலும் அழகு; ஊணிலும் அழகு; பேச்சிலும் அழகு; மூச்சிலும் அழகு”, என்பதாம்.

நம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள் பாராட்டுரை வருமாறு.

பண்டிதமணி என்றால் தமிழகம் முழுதும் அறியும்; நாடறியும்; நகரறியும்; வீடறியும்; ஏடறியும்; கடல்கடந்த நாடுகளும் அறியும்.

கலைவானில் ஒளிவிளங்கித் தோன்றும் ஞாயிறு அவர். கடல்மடை திறந்தெனத் தட்டுத் தடையின்றிப் பேசும் நாநலம் கனிந்த நாவலர் காவலர்; பாநலம் பயின்ற பண்பினர்; வடமொழிவல்ல மாண்பினர்.

கலை ஊற்று; இன்பச் சுரங்கம்; அன்பின் ஆறு; அறிவுக் கடல்; தெருளின் ஒளி; சைவ ஞாயிறு; மெய்ம்மைக்கேணி; அறத்தின் ஆணி; மறத்தின் வாள்.

பண்டிதமணி வடமொழியில் வல்லுநராயினும் “மணிப்பிரவாளம்” என்னும் கலப்புத் தமிழ்நடை அவர்கள் எழுதிய நூல்களில் விரவுவதில்லை. அவர்கள், கலப்புத் தமிழ் நடை தமிழை வளம்படுத்தாதென்னும் ஊன்றிய கருத்துடையவர்.

ஒரு நூலின் சொற்கள் சொற்றொடர்கள் நம் போன்றோர்க்கு வெறுங் கற்பனையாக—எதுகை மோனைத் தொடைக்கமைந்த சொற்களாக—சொற்றொடர்களாகத் தோன்றும். நம் கதிரேசனார்க்கு அரிய கருத்தாகக் கற்பனையாக—கலைவிளை பயனாக—அரிய காட்சியாகக் காட்சி தரும்.

எழுத்தெண்ணி எழுத்தின் திறன் அறிந்து கற்றவர் நம் பண்டிதமணி. நுனிப்புல் மேய்வார் உலகு வேறு; கதிரேசனார் உலகு வேறு. “இரு வேறு உலகத்தியற்கை” என்னும் செந்நாப் போதார் திருமொழியைக் கடந்தவர் நம் பண்டிதமணி. இத்தகைய செம்மைசான்ற நங் கதிரேசர் கலைப் பிழிவுத் தீஞ்சாற்றை மாணவர் மனத்திலே—கலைஞர் காதகத்திலே—சுவைஞர் உளத்தடத்திலே ஓடி நிரம்பிப் பெருகி நிலைத்துநின்று மகிழுமாறு ஊட்டுவார்; ஊற்றுவார், சொற்பொழிவின் இடை இடையே நகைச்சுவை தோன்றும். அது தூங்குவோரை எழச்செய்யும் துடிப்புடையது. அதனிடையில் நுண்கருத்து, அறிவு நுட்பம் மிளிரும். பின்னர்க் கருங் கொண்மூ மின்னென மறையும். பண்டிதமணி பேச்சு எல்லையற்றது; அவர் பேச்சே தனிக்கலை. அதை அவர்களுடன் தோய்ந்து பழகினார் உணர்வர். அவர் பேச்சில் வெருஞ் சொற்கள்—வேண்டா வெறுப்புத்தரும் மொழிகள் இல்லை”, என்பதாம்.

இனி இலங்கையிலுள்ள பேராசிரியர், திரு. கா. பொ. இரத்தினம், எம். ஏ. பி. ஓ. எல்., அவர்கள் யாழ்ப்பாணத்தே நம் பண்டிதமணியார் புகழ் பரவிய விதத்தைக் கூறக் கேண்மின்:

“சொல்லுக்குச் சொல் அழகேறிய பேச்சு; மொழிக்கு மொழி தித்திக்கும் வார்த்தைகள்; கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மை; கேளாரும் விரும்பிய நயங்கள்; என்று வருணித்தார், பண்டிதமணியின் சொற்பொழிவைக் கேட்ட என்னுடைய நண்பரொருவர்.

தமிழ்க் கல்வியில் ஈடுபட்ட என்போன்ற இளைஞர்களுடைய உள்ளத்திலே அவருடைய பேச்சு பல உணர்ச்சிகளையும் பதிவுகளையும் உண்டாக்கிற்று. அவருடைய சொல்லாட்சியும், புதுமை மிக்க நயங்களைக் கூறும் மாட்சியும் சிந்தைக்கும் செவிக்கும் இனிமை பயக்கப் பேசும் ஆற்றலும் பன்னூற் பயிற்சியும், நுண்மாணுழை புலமும், உள்ளத் தெளிவைக் காட்டும் புன்முறுவல் பூத்த முகமும் எங்களைக் கவர்ந்தன.

“மூவர்கட்கு அறியான் நிற்ப முத்தமிழ்ச் சங்கத் தெய்வப்

பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நன்னாடு போற்றி”

எனும் அடிகளை அன்று எடுத்துக் காட்டிப் பண்டிதமணியவர்கள் கூறிய நயங்களும், தமிழ்ப் புலவர்களின் புலமையைப் புலப்படுத்திய அருமையும் இன்றும் என் மனத்தில் நிலைத்துள்ளன.

அவருடைய வருகையால் யாழ்ப்பாணத்திற் புத்துணர்ச்சி ஏற்பட்டது; தமிழார்வம் பெருகியது. தமிழ்மக்கள் யாவருடைய பாராட்டுக்கும் வியப்புக்கும் அவர் உரியவரானார்.

அவருடைய பேச்சிலுள்ள கனிவு குழைவு இனிமை நுட்பம் முதலிய பண்புகள் யாவற்றையும் ஒருசேரப் பிறர் பேச்சிலே காணுதல் அரிது.

எழுத்தின் திறனும் இன்சொற் பொருளின் அழுத்தமும் நன்கறிந்து அழகுற எடுத்துரைக்கும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே அமைந்துள்ளது.

அவர்களுடன் பழகியவர்கள் அவருடைய இனிய பண்புகளை நன்கறிவர். நகைச்சுவை ததும்பும்படி உரையாடி அன்பர்களை மகிழ்விப்பதில் அவருக்கு அவரே நிகராவர். சொற்பெருக் காற்றும்பொழுது மாத்திரமன்றி உரையாடும்பொழுதும் அவர் செய்யுள் நயங்களை எடுத்துக் காட்டிக் கேட்போரை இன்பமடையச் செய்வர்”, என்பதாம்.

கற்றுவல்லார் பெருமையைக் கற்றுவல்லாரே காணவும் கூறவும் வல்லுனராவார்! மேலே காட்டிய அறிஞர் பெருமக்களின் பாராட்டுரைகள் ஒருவாறு பண்டிதமணி யவர்கள்பாலமைந்த பண்புகளை நன்கு விளக்குவனவாம். நம் பண்டிதமணியவர்களை உலகிலுள்ள அறிஞர் எல்லாம் இவ்வண்ணமே புகழ்ந்துள்ளார்கள். அவற்றை ஈண்டெடுத்துக் காட்டல் மிகையாகும். நம் பண்டிதமணியவர்களைப் பாராட்டிப் புனைந்த இன்றமிழ்ச் செய்யுட்களும் பற்பல. இவ்வாறு நம் பண்டிதமணியவர்கள் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்னும் அருமைத் திருக்குறள் அடிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்.

22. அந்திமாலையில் ஆற்றிய பெரும்பணி

நம் பண்டிதமணியவர்கள் அறுபதாண்டைக் கடந்து முதிர்ந்த அகவையராயபொழுதும் முதுமையின் தளர்ச்சி அவர்களிடம் காணப்படவில்லை.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”

எனத் திருமூலர் உடல்போற்றி உயிர்போற்றி அறிவினை எய்துக என்று அறிவுறுத்திய மந்திரமொழியை நம் பண்டிதமணியவர்கள் பொன்னேபோற் போற்றுவார்கள். உடலை மருத்துவரின் உதவியின்றியே காலத்தின் தட்பவெப்ப மாறுபாட்டுக்கிணங்க உண்டி ஆடை உறையுள் முதலியவற்றாலேயே போற்றிக்கொள்வார்கள். விழித்தற்குரிய காலத்தே விழித்தலும், நாட்கடன்களைச் செய்யுங்காலத்தே செய்தலும், உண்ணுங்காலத்தே உண்ணலும், பணிபுரியும் போழ்திலே பணிபுரிதலும், ஓய்வுகொள்ளும் நேரத்திலே ஓய்வுகோடலும், உறங்கும் காலத்தே உறங்குதலும், மாறுபடாத உணவைத் தேர்ந்துண்ணலும் முதலிய செயல்களை உடற்குக் கேடுண்டாகாதபடி விழிப்புடன் செய்துவருவார்கள். ஆதலால், நம் பண்டிதமணியவர்களை நோய்கள் பற்றுதற்கு வழிகாணா தொழிந்தன. நாள் முழுதும் அவர்கள் சுறுசுறுப்போடே காணப்படுவார்கள். ஆதலால் அகவை முதிர்ந்த காலத்தும் உடலுரமுடையராகவும், ஊக்கமுடையவராகவும் ஒரு இருபதாட்டை இளைஞனைப்போலவே திகழ்ந்தார்கள்.

இங்ஙனம் உடல்நலத்தோடு திகழும் பண்டிதமணியவர்கள் தம் பல்கலைக் கழகத்தே பின்னுமிருப்பது பல்கலைக்கழகத்திற்கும் நாட்டிற்கும் நலம் பயப்பதாம் என்று கருதிய அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் மீண்டும் தம் பல்கலைக்கழகத்தே உறவுகொண்டு பணிபுரியும்படி பண்டிதமணியவர்களை ஆர்வத்துடன் வேண்டினார்கள். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையை மேற்கொண்ட நம் பண்டிதமணியவர்களும் அவ்வேண்டுகோட்கு இசைந்தார்கள்.

1941-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தே தமிழாராய்ச்சிப் பகுதியில் “அறிவுரைதருநர்” (அட்வைஸர்) என்னும் சிறந்த பதவியை ஏற்று அண்ணாமலை நகரில் இருந்து பணிபுரிந்து வந்தார்கள்.

அவ்வமயத்தே தமிழிசையியக்கம் நடைபெற்றது. அவ்வியக்கத்துக்கும் நம் பண்டிதமணியவர்கள் ஆங்குள்ள இசைக்கல்லூரியாளர்களோடு உறவுகொண்டு சிறந்த பணியாற்றிவந்தார்கள்.

வடமொழியிலே சாணக்கியர் என்னும் பேராசிரியராலே ஆக்கப்பெற்ற “கௌடலியம்” என்னும் பொருள் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்கள்.

இம்மொழிபெயர்ப்புப் பணியில் யானும், ஒரு வடமொழி வாணரும் நம் பண்டிதமணியார்க்கு அருகிருந்து துணை செய்யுமாறு நியமிக்கப்பட்டோம். அக்காலத்தே அவர்களுடன் நனி அணுக்கனாயிருந்து எளியேன் எய்திய நலங்கள் மிகப்பல.

மொழிபெயர்க்குங்கால், யாதானும் ஒரு வடசொல்லைத் தமிழாக்குமிடத்து, அவ்வடசொல் அம்மொழிக்கண் எந்த வேரிலிருந்து கிளைத்தது? அதனுடைய தாற்பரியப் பொருள்கிடக்க நேர்பொருள் யாது? என நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே, தமிழ்மொழிக்கண்ணும் அதே வேரிற்றோன்றி, அப்பொருளையே தன் நேர்பொருளாகவுள்ள திறனுடைய சொல்லையும் ஆராய்ந்து தெளிந்து, அவ் வடமொழிக்கேற்ற தமிழ்ச்சொல்லை அமைத்து எழுதுவார்கள்.

கௌடலியம் என்னும் அப்பொருள் நூல் பண்டைக்காலப் பரத கண்டத்தின்கண் நிகழ்ந்த அரசியல்வாழ்க்கை முதற்கொண்டு எளியோர் வாழ்க்கை இறுதியாகவுள்ள மக்களினது வாழ்வியல்புகளையும் நாட்டு நிகழ்ச்சிகளையும் இன்னோரன்ன பிறவற்றையும், காவியங்கள் புனைந்துரை வகையான் மிகைப்படுத்துக் கூறுதல்போலாது, தன்மை நவிற்சியாக உள்ளன உள்ளவாறே கூறுமொரு சிறந்த நூலாகும். பண்டைக்கால வரலாற்றையும், உலகியலையும் நேரிற் காண்பதுபோல் அந்நூலிற் காணலாகும். மேலும், இக்காலத்து அரசியலாரும் மக்களும் மேற்கொள்ளவேண்டிய அறங்களும் பிறவும் அதன்கண் உள்ளன. அதனை ஒருசிறு தவறும் நேராதபடி விழிப்புடன் நம் பண்டிதமணியவர்கள் மொழிபெயர்த்து நந்தமிழகத்திற்கு உதவியிருக்கின்றார்கள்.

23. கதிர்மணி விளக்கம்

சென்ற சென்ற அவைகள்தோறும் நம் பண்டிதமணியவர்கள் மணிவாசகப்பெருமானின் திருவாசகத்திற்குக் கூறிவந்த நுண்பொருள் விளக்கங்களைக் கேட்டின்புற்ற அறிஞர்கள் பண்டிதமணியவர்களைத் திருவாசகத்திற்கு உரை வரைந்து உலகிற்கு உதவும்படி வேண்டிவந்தனர் என்று முன்னர்க் கூறினோம். பண்டைக்காலத்தில் நம் நாட்டிற்றோன்றிய சிறந்த உரையாசிரியர்கள் திருவாசகத்திற்கு உரை வரைந்தாரில்லை. தேவாரங்களுக்கும் திருவாசகத்திற்கும் உரைவரைதல் கூடாது என்னும் கொள்கையும் பண்டைக்காலத்தே இருந்ததாகத் தோன்றுகின்றது. அதற்குக் காரணம் அந்நூல்களிடத்து அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பேயாகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய சீவன்முத்தர்களாகிய அப்பெரியோர்களுடைய திருவுள்ளத்தே மலர்ந்த அவ்வருட்பாடல்களின் ஆழத்தையும் நுண்பொருளையும் இருவினையுட்பட்டுழலும் கட்டு நிலையிலுள்ள மானிடர்கள் காண்டல் இயலாது என அவர்கள் கருதினார்கள்போலும்!

மணிவாசகப் பெருமான் தில்லையில் எழுந்தருளியிருந்தபோது, ஆண்டுள்ள தில்லை மூவாயிரவர் அடிகளாரை வணங்கித் திருவாசகத்திற்குப் பொருள் அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்டினர் என்றும், அவரை அடிகளார் அம்பலவாணன் திருமுன்னர் அழைத்துச் சென்று அம்பலக்கூத்தன் திருவுருவத்தைச் சுட்டிக்காட்டி நம் திருவாசகத்தின் தெளிபொருள் இதுவே காண்மின் என்று அருளிச்செய்தார்கள் என்றும், ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு உரைவகுத்தருளிய பேராசிரியப் பெருந்தகையாராதல், சிவஞானபோதத்திற்குப் பேருரை கண்ட மாதவச் சிவஞான யோகியராதல், நம் திருவாசகத்திற்கு உரை வகுத்திருந்தார்களாயின் நம் தமிழுலகமும் சிறப்பாகச் சைவவுலகமும் சிறந்த அறிவுக் கருவூலம் ஒன்றை எய்தியிருக்கும் என்பது திண்ணம்.

திருவருள் உணர்ச்சி மேலிட்டிருந்த காலத்தே, அப்பெரியோர்கள் கொண்ட கொள்கை ஏற்புடைத்தாயினும், அவ்வுணர்ச்சி குன்றிவரும் இக்காலத்தே அத் தெய்வநூல்களின் மாட்சியையும், நுணுக்கங்களையும் எடுத்துக் காட்டுதல் இன்றியமையாததாயிற்று. மேலும் சைவசித்தாந்த நுணுக்கங்களை உணராதவர்களும், நிறைந்த கல்விப் பயிற்சி இல்லாதவரும், மதிநுட்பம் இல்லாதவருமாகிய ஒருசிலர் திருவாசகத்திற்கு உரை எழுதவும் தலைப்பட்டார்கள். இத்தகையார் புன்செயலைக் கண்டு நம் பண்டிதமணியவர்கள் வருந்தியதோடு, அச்செயல் தகாத செயல் என்பதை எடுத்துக் கூறியும் வந்தார்கள். நம் பண்டிதமணியவர்கள் ஒரு பேரவைக்கண்ணே தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றும் பொழுது இத்தகைய புல்லிய உரையாசிரியரைப் பற்றி உரைத்ததைக் கேண்மின்:

“நூலாசிரியர் உள்ளக் கிடக்கையை நுணுகி ஆராய்ந்து தெளிவுபெற எடுத்தெழுதும் வன்மையாளரே உண்மை உரையாசிரியர் ஆவார். யார் யார் எவ்வெத்திறத்து நூல்களிற் பயிற்சி மிக்குடையாரோ அவரவர் அவ்வத்திறத்து நூல்களுக்கு உரை எழுதப் புகல் வேண்டும். அங்ஙனமின்றிக் கல்லாத மேற்கொண்டொழுகல் தவறுடைத்தாம். சைவ நூலில் ஒரு சிறிதும் பயின்றறியாதார் ஒருவர், சைவத் தலைமணியாகத் திகழும் திருவாசகம் திருவிசைப்பாக்களுக்கு முற்றும் உரையெழுதித் தம் புரைநெறியை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகையார், தம் தகுதிக்கு இயலாத இவ்வுயர் நூல்களுக்கு உரைகாணப் புகுந்து உண்மைப் பொருள் காண இயலாமல் இடர்ப்பட்டதோடு, மரபுக்கு முரணாகவும் பல எழுதினர். பிழைபட்ட எல்லாவற்றையும் ஈண்டு விளக்கல் மிகையாதலின் ஒன்று காட்டுவேன்.

“நானார் என் உள்ளமார் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலி தேர் அம்பலவன்.”

என்னும் திருப்பாட்டில், “மதிமயங்கி” என்பதைப் பெயராகக் கொண்டு ஆறாம் வேற்றுமை உருபு விரித்து, மதிமயக்கமுற்ற பிரமனது தலையோட்டில் பலிதேரும் அம்பலவன் என முடித்துக் காட்ட அறியாமல், அதனை வினையெச்சமாகக் கொண்டு தம் மதிமயக்கத்தை அம்பலவர்க்கேற்றினார். இன்னோரன்ன பலவுள. ஒரு புலவன் காலக் கழிவு நோக்காது நெடிதாராய்ந்து தன் வாணாளில் ஒரு நூற்கு உண்மையுரை எழுதி முடிப்பினும் போதியதே. பிழைபடப் பல எழுதுதலினும் பிழையறச் செப்பனிட்டு ஒன்று எழுதுதல் நன்றாம்,” என்பதாம்.

அக்காலத்தே திருவாசகத்துக்கு உரைகாண வல்ல தகுதியுடையாராகிய புலவர் பெருமான் மறைமலையடிகளார், தாம் ஓருரை காணத் திருவுளங்கொண்டு, திருவாசகத்தின் முற்பகுதிகளாகிய அகவல்களுக்கு ஓர் உயரிய உரை வகுத்தார்கள். அவர்கள் செயல் கண்டு அறிஞர் உலகம் அளவிலா மகிழ்ச்சி கொண்டது. ஆனால் அப்பெரியோர் எக் காரணத்தாலோ அகவற் பகுதிகளோடே உரைவரைதலை நிறுத்திவிட்டார்கள். எஞ்சிய பகுதிகட்கு உரைகாண நம் பண்டிதமணியவர்களைவிடத் தகுதியுடையோர் ஒருவரேனும் இலர்.

இக்காரணத்தால், மேலும் மேலும் அறிஞர் உலகம் நம் பண்டிதமணியவர்களை நெருக்கி வேண்டி வந்தது. கல்வி நிரம்பப் பெறாதார் உரைகளும் தோன்றித் திருவாசகத்தை மாசுபடுத்தியும் வந்தன. அதனால், நம் பண்டிதமணியவர்களும், அச் சிறந்த திருப்பணியைச் செய்யத் தூண்டுவது திருவருளே எனக் கொண்டு, மறைமலையடிகளார் உரை வரைந்த பகுதிகட்குப் பின்னுள்ள, திருச்சதகம் என்னும் பகுதியிலிருந்து உரைகாண முற்பட்டார்கள். இத் திருப்பணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழாராய்ச்சித் துறையிற் பதவி வகித்திருந்த பொழுது தொடங்கப்பட்டது.

இக்காலத்தே நம் பண்டிதமணியவர்களின் வாழ்க்கைத் துணைவியாராகிய திரு. மீனாட்சி ஆச்சியார் “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை” என்னும் திருக்குறட் கருத்திற்கு எடுத்துக்காட்டாகத் திடீரென ஒருநாள் ஒரு பொழுதிலே மண்ணுலக வாழ்வு நீத்து இறைவன் சேவடி நீழலை எய்தினார்கள். பின்னர், நம் பண்டிதமணியவர்கள், தாம் மேற்கொண்டுள்ள திருவாசகத் திருப்பணி ஒன்றையே ஆராய்ந்து அமைதியுடன் ஆற்றக் கருதியவர்களாய்ப் பதவியினின்றும் விலகி மகிபாலன்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

திருவாசக உரைத் திருப்பணியாற்றிய பொழுது பண்டிதமணியவர்கள் பிற பணிகளை எல்லம் இயன்றவரையில் நீத்தார்கள். பற்றற்றதொரு சீவன்முத்த நிலையிலிருந்தே அத் திருப்பணியை ஆற்றினார்கள். இறையருளாலே திருவாசகத் திருச்சதகமாகிய ஒரு நூறு திருப்பாசுரங்கட்கும் உரை வரைந்து முடிந்தவுடன் அப்பகுதியை அச்சேற்றி வெளியிட்டார்கள்.

நீண்ட காலமாகத் தாம் எதிர்பார்த்திருந்த திருவாசக உரை பண்டிதமணியவர்களால் வரையப்பட்டு வெளிவரக் கண்ட தமிழ் அறிஞர்கள் திருப்பாற்கடலை அரிதிற்கடைந்த காலத்தே அமிழ்தெழக் கண்ட அமரர்களைப் போன்று எல்லையற்ற மகிழ்ச்சி எய்தினார்கள். தங்கள் மகிழ்ச்சியைப் பண்டிதமணியவர்கட்கும் தம் அன்பு கெழுமிய முடங்கல் வாயிலாய் உணர்த்தினார்கள்,

“வம்மின் புலவீர் மணிவா சகத்தீந்தேன்

துய்ம்மின் சுவை நலத்தில் தோய்மினோ—மெய்ம்மைக்

கதிர்மா மணிவிளக்கம் கண்காட்டி யாண்டும்

எதிரிலா இன்புறுத்தும் ஈங்கு.”

என்று, ஒரு புலவர் ஏனைப் புலவரைச் சுவைநலங் கூட்டுணக் கூவினார்.

மற்றொரு புலவர்,

“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து

இறைவற் றொழுதலே கடன்என முன்னாள்

எல்லையில் அன்பால் அடிகளார் இசைத்த

இன்றமிழ் அறிவுரைப் படியே

மல்லல்வண் டமிழாற் சுவைநலம் விளங்க

வாசகப் பொருள்உரை பகர்வோர்

இல்லைஎன் றுரைத்த இன்மையை அகற்ற

எழுந்தது கதிர்மணி விளக்கம்.”

என்று மகிழ்ந்தார்.

மற்றொரு புலவர்,

“சொல்லியற் கரையன் போலும்

தொன்மறைக் கழகன் போலும்

புல்லிய பிறவி போக்கும்

போதக்கு முனிவன் போலும்

மெல்லியற் கோவைக் கொப்ப

விரிசெய்த ஆசான் போலும்

கல்லியல் கனியுஞ் சொற்குக்

கதிரவ மணியன் என்க.”

என நம் பண்டிதமணியவர்களைப் பண்டைநாள் உரையாசிரியப் பெருந்தகையாரோடு ஒப்பிட்டு வந்தார்.

மற்றொரு புலவர்,    

“கதிரவன் ஒளியில் ஒளியெலாம் ஒடுங்கும்

காட்சிபோல் கதிர்மணி விளக்காம்

முதுபெரும் புலவர் நல்லுரைக் கண்ணே

முன்னுள உரையெலாம் ஒடுங்கும்

அதிர்கடல் உலகிற் கற்பவர்க் கினிதாய்

அரும்பொருட் செறிவின தாகி

எதிர்தனக் கிலதாய் இலகுமிவ் வுரை நூல்

என்றென்றும் வாழிய ருலகே.”

என ஓகைகொண்டு வாழ்த்தினார்.

மற்றோர் அன்பர், “தங்கள் அரும் பேருரையை என்னென்று கூறுவது! மணிவாசகப்பெருமானார் உருவெடுத்துத் தம் கருத்துரைக்க வந்துள்ளார் என்றே தங்களைக் கருதுகின்றேன். அழகு, இனிமை, ஆற்றல், ஆழம் யாவும் சேர்ந்து உரை எங்கணும் மிளிர்கின்றன. யாண்டும் நுண்மை! யாண்டும் புலமை! முதுபெரும் புலமை! யாண்டும் யாண்டும் நுகர்வு!” என இன்பத்துள் மூழ்கி ஆராமை கொண்டார்.

இவ்வாறு அவ்வுரை கண்டு மகிழ்ந்த அறிஞர் பாராட்டுரைகளையெல்லாம் தொகுத்து ஒரு தனி நூலாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பின்னர் நம் பண்டிதமணியவர்கள் அத்திருப்பணியைத் தொடர்ந்து, “நீத்தல் விண்ணப்பம்”, “திருவெம்பாவை” என்னும் இரண்டு பகுதிகட்கும் உரை வரைந்தார்கள். நிலையாமையை எண்ணி ஒவ்வொரு பகுதியையும், நிறைவேறியவுடன் வெளியிட்டார்கள். நான்காவதாகத் திருவம்மானைப் பகுதியில் மூன்று பாசுரங்கட்கு உரையிட்டதனோடு நம் பண்டிதமணியவர்கள் உரைத் திருப்பணி நின்றது.

முழுதுணர் முதல்வனாகிய சிவபெருமான், இனி எதிர்காலத்தே தோன்றவிருக்கும் தன் அடியார் எஞ்சிய பகுதியை எழுதியுய்க என்னும் கருத்தாலே அவ்வளவின் நிறுத்திக்கொண்டான் போலும்.

24. மம்மர்கொள் மாலை

நம் பண்டிதமணியவர்கள், இக்காலத்தே ஏறத்தாழ எழுபதாண்டகவையை எய்தினார்கள். திருவாசகக் கதிர்மணி விளக்கவுரை வரைந்த காலமெல்லாம் அவர்கள் திருவுள்ளம் அத்திருவாசகத்தின் தெளிபொருளாகிய இறைவன்பால் சென்று கலந்தவண்ணமாகவே இருந்தது. தமது அந்திப்பொழுதில் இறைவனைச் சிந்தித்துய்ய இவ்வுரைத் திருப்பணி ஓர் ஏதுவாக அமையும் என்று கருதியேபோலும் அத் திருப்பணியைத் தாழ்த்துத் தொடங்கினார்கள். எஞ்சிய பகுதியை உரைத்திருப்பணி செய்யத் தாமே மீண்டும் வருதலும் கூடும். தம் உடல்நிலை வரவர வலிகுன்றிவருதலை உணர்ந்தார்கள். சிந்தனை செய்து எழுத வேண்டிய திருவாசகத் திருப்பணியை இனி யாம் மேற்கோடல் தகுதியன்று என எண்ணி அத்திருப்பணியை நிறுத்தினார்கள். இனி, எஞ்சிய காலம் சிறிது இருக்குமாயின் அதனை எம்பெருமானை இறைஞ்சிக் கழித்தலே தகுதி என்று எண்ணி இறைபணி நிற்றலாகிய அச்செயலிலே ஈடுபட்டார்கள்.

“மக்கள் வாழ்க்கை ஒரு பெரு உயிராறுபோல இயங்குதல் வேண்டும்” என உலக மகாகவியாகிய இரவீந்திரநாத தாகூர் அவர்கள் கூறியுள்ளார்கள். உயிராறானது, உயரிய மலையுச்சியில் தோன்றி நீரின் நிலையமாகத்திகழும் கடலைநோக்கி ஓய்வின்றி விரைகின்றது. இடைஇடையே எத்தனை எத்தனை அணைகளை எடுத்து மறைப்பினும், ஆண்டெல்லாம் அவ்வணைகளைக் கடக்கும் ஒரே முயற்சியுடன் தேங்கித் தன் ஆற்றலை மிகுத்துக்கொண்டு, அவ்வணைகளையும் கடந்து கடலை எய்தவே விரைகின்றது. அந்நதியின் ஒருதலை குறிஞ்சிநிலத்தே கிடக்க, மற்றோர் தலை விரிந்து பரந்த கடலிடத்தே சென்று கலந்து தானும் கடலே ஆகி அமைதிகொள்கின்றது. ஒருதலையானே அப்பேரியாறு கடலோடு கலந்து அமைதிகொள்ளும்போதே, அதன் இடைப்பகுதியிலுள்ள நீரானது நாட்டிலே பாய்ந்து உயிர்கட்கு உணவுப்பொருள்களை விளைவித்தும், தானே உண்பொருளாகியும் சிறந்த அறத்தை நிகழ்த்துகின்றது.

இங்ஙனமே, ஒரு மனிதன் ஒருசார் உலகிற்கு உபகாரம் செய்துகொண்டே, மற்றொருசார் மெய்யுணர்ந்து எல்லாம் இறைசெயலாகக்கண்டு, அப்பரம்பொருளின் திருவருளிலே அமைதியடைதல் வேண்டும் என்பது அக்கவிஞர் பெருமான் கருத்தாகும்.

நம் பண்டிதமணியவர்கள் தம் வாழ்க்கையாலே, அத்தகைய உயிராற்றினையே ஒத்தவராவார். தமிழும் சைவமும் தழைத்தோங்கி மக்கள் பெருவாழ்வுபெற்றுத் திகழுமாறு அவர்கள் செய்த திருத்தொண்டு அளவிடற்பாலவல்ல. அத்திருத்தொண்டு செய்த காலங்களில் எல்லாம் “எல்லாம் அவனுடைய செயலே” என்னுமொரு மெய்யுணர்ச்சியோடே முனைப்பின்றியே செய்துவந்தார்கள். அப் பணிகாரணமாக இறையடியை ஒருபொழுதும் மறந்தவர்கள் அல்லர். அவர்கள் தூயவுள்ளம் எப்பொழுதும் அச்சீவநதியின் ஒருதலை கடலிற் கலந்து அமைதிகொள்வதுபோன்று, இறைவன் திருவருளிலே மூழ்கி ஆறுதல் பெற்றேவந்தது.

தம்முடலின் வலி நாளடைவிற் குறைந்துவருதலை அறிந்த நம் பெரியார், இனி எதிர்காலத்தே நிகழும் ஒவ்வொரு கணமும் தம் இறுதிக்காலமாக இருத்தல்கூடும் எனக் கருதியவர்களாய், அந்நிகழ்ச்சியை ஆர்வத்தோடே எதிர்நோக்கியே அமைதியுடன் இருந்தார்கள். ஆண்டு முதிர்வாலே ஏற்படுகின்ற தளர்ச்சியே வரவர மிக்கு வந்ததல்லாமல் குறிப்பிடத்தக்கதொரு நோய் அவர்களைத் தீண்டவில்லை. இத்தகைய அமைதிநிலையில் அவர்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகளைக் கழித்தார்கள்.

இக்காலங்களிலே, நாட்டின் பல்வேறு கழகங்களில் இருந்து நம் பண்டிதமணியவர்கட்கு அழைப்பு வந்த வண்ணமாகவே இருந்தன. அந்நண்பர்கட்கெல்லாம் தம் ஏலாமையை அன்புடன் முடங்கல்வாயிலாய் அறிவித்தே வந்தார்கள். நாளடைவில் உடலின் உள்உரம் குறைந்ததே யல்லால் புறத்தோற்றத்தில் பெரிதும் மாறுபாடு உண்டாகவில்லை.

நம் பண்டிதமணியவர்கள் இறுதிக்கணம் வரையில் படுத்தபடுக்கையிலே ஒருசில நாளேனும் கிடக்கவில்லை என்பது குறிப்பிடற்பாலது. தம் இறுதிக்காலம் அண்மையிலேயே நிகழக்கூடும் என்றுணர்ந்த நம் பெரியார், தம் மக்களுள் மூத்தவராகிய திரு. சுப்பிரமணியன் செட்டியார் அவர்கட்கும் திரு. கனகசபாபதிச் செட்டியார் அவர்கட்கும் தம் கருத்து ஒன்றனைச் சில திங்கள் முன்கூட்டியே குறிப்பாகத் தெரிவித்திருந்தார்கள். அஃதாவது:

தனவணிகர் மரபிலே ஆண்டான் முதிர்ந்து மாய்வார்களை அவர்கள் தங்குடும்பத்தவர்களால் மட்டுமே பொருள் புகழ் முதலிய வகைகளில் யாதேனும் ஒன்றார் சிறந்தவர் என்று கருதியவிடத்தும், தொடுகுழிப்படுத்துதலும் (சமாதி செய்தல்) அவ்விடத்தே கட்டிடம் கட்டி அருட்குறி (சிவலிங்கம்) நடுதலும் செய்யத் தவறுவதில்லை. அவ்வழக்கம் உண்மையானால், நம் பண்டிதமணியவர்கள் தம் மக்கள் கேட்குமாறு “நம்மனோர் செய்யும் அவ்வழக்கம் நஞ்சமயத்தோடு பொருந்தியதன்று. இம்மையிலே இருவினைப் பாசமற்று வீட்டின்பம் கைவந்த சீவன் முத்தர்களின் உடலம் மட்டுமே, தொடுகுழிப்படுத்தற்கு உரியதாம். அவர்கள் உடல் அடக்கம் செய்தவிடத்தே சிவலிங்கம் நட்டுப் போற்றலே முறையாம். ஏனையோர் உடலை அங்ஙனம் செய்தல் அடாது. அத்தகைய சீவன்முத்த நிலையை எய்த நம்மனோர் இன்னும் எத்தனையோ பிறவிகள் பிறத்தல் வேண்டும்”, என்பதே.

இவ்வறிவுரைகளின் குறிப்புப்பொருளை அம்மக்கள் நன்கு உணர்ந்துகொண்டனர்.

1953-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபத்து நான்காம் நாள் பொழுது விடிந்தது. நம் பண்டிதமணியவர்களின் உடல்நிலையில் புதிதாக மாறுதல் ஒன்றும் தோன்றவில்லை. இருபத்துமூன்றாம் நாளிலிருந்து மலப்போக்கு மட்டும் தடைப்பட்டிருந்தது. இங்ஙனம் மலப்போக்குத்தடை முன்னரும் சிற்சில நாட்களில் நிகழ்ந்ததுண்டு. அப்பொழுதெல்லாம் நீரேற்றி (எனிமா)வைத்துக் குடலைத் தூய்மை செய்துகொள்வது வழக்கம்.

அன்று அஞ்சலில் நண்பர்கள் முடங்கல்களும், தமது மேலான பார்வையின்பொருட்டுப் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டு நூல்களும் வந்திருந்தன. அவற்றுள் அன்பர் முடங்கலில் இன்றியமையாவொன்றிற்கு மறுமொழியும் வரைந்து அஞ்சலில் சேர்த்தார்கள். தம் மகனார் திரு. கனகசபாபதிச் செட்டியாரிடம், தம் பார்வையின் பொருட்டு வந்த புதிய நூல்களைக் கொடுத்து, “இவற்றை மேசைமேல் வை, மாலையிற் படிக்கவேண்டும்,” என்று கூறினார்கள்.

25. கதிரவன் மறைவு

“அற்ற தறிந்து கடைப் பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து” (குறள்: 944)

என்னுந் திருக்குறட் கருத்தை எப்பொழுதும் மறவாதே கடைப்பிடித்

தொழுகும் நம் பண்டிதமணியவர்கள், மலப்போக்குத் தடைப்பட்டமையாலே அன்று நண்பகலில் ஒருசிறிதே மெல்லுணவு அருந்தினார்கள். மாலை மூன்று மணியாயிற்று; வழக்கம் போன்று நீரேற்றிக் கருவியாலே குடலைத்தூய்மை செய்துகொள்ளக் கருதி, அக்கருவியாற் குடலில் நீரேற்றிக் கொண்டார்கள். உள்ளே செலுத்தப்பட்ட நீர் புறம் போகாது உள்ளே தங்கிற்று; மணி நான்காகியும் அந்நீர் புறப்பட்டிலது. இஃதொரு புதியமாற்றம். மேலும் நெஞ்சு மிடறு முதலிய உறுப்புக்களில், சளிக்கட்டுத் திடீரென ஏற்பட்டது. மூச்சு இயல்பாக இன்றித் திணறிற்று. இது தம்முடைய இறுதி மாலைப்பொழுது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் பொழுதெல்லாம், பண்டிதமணியவர்கள் தாம் வழக்கமாக அமரும் ஒரு விசிப்பலகையின் மேலே வீற்றிருந்தார்கள். அயலிலே இரண்டாவது மகனார் கனக சபாபதியவர்களும், ஓர் ஆசிரியருமே இருந்தார்கள். அவர்கள் மூச்சுத் திணருவது பாயலிலே படுத்துக் கொண்டால் சிறிது குறைதல் கூடும் என்று படுத்துக் கொள்ளும்படி வேண்டினார்கள். பலகையினின்றும் இறங்கி மெல்ல ஆண்டு விரித்துள்ள பாயலின்கண் இறுதியாகப் படுத்துக்கொண்டார்கள்.

பாயல் கொண்ட பின்னர் மூச்சு வரவர மிக்கது. அவர்கள் நாவாலே மெல்லத் திருவைந்தெழுத்தை மூச்சின் இடையிடையே ஓதினார்கள். இல்லத்துள்ளார் எல்லோரும் வந்து குழுமினர். அவர்களை நோக்கி யாதொன்றும் கூறுதற்கு அவர்கள் ஒரு சிறிதும் முயலவில்லை.

ஐந்து நிமிடங்கள் மட்டுமே திருவைந்தெழுத்தோதவும் இயன்றது; பின்னர் அச்செயல் நின்றது. பின்னர் ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே மூச்சும் இயங்கிற்று. அப்பத்து நிமிடங்கட்குப் பின்னர்க் கண்கள் முகிழ்த்தன; மூச்சு நின்றது! உடல் அமைதியுற்றது.

அந்த ஒப்பற்ற உயிர் ஒளி, “அங்கிங்கெனாதபடி எங்கும்” உளதாகிய இறவனின் அருட் பேரொளியிலே கலந்தது.

செய்தி தந்தி வாயிலாகவும் பிறவாயில்களானும் நான்கு திசைகளிலும் விரைந்தது. தனவணிக நாட்டினர் எல்லாம் செய்தி கேட்டுத் துணுக்குற்று விரைந்து மகிபாலன்பட்டியை எய்தினர்; அந்தணர் பலர் எய்தினர்; மற்றும் வரற்பாலர் எல்லோரும் வந்தனர்; மகிபாலன்பட்டி மக்கட்கடலாயிற்று.

ஆர்வமிக்க சிலர் பண்டிதமணியின் திருவுடலைச் சமாதிசெய்தல் வேண்டும் என்றும், அவ்விடத்தே பின்னர்ச் சிறந்த திருக்கோயில் எடுத்தல் வேண்டும் என்றும் விரும்பினர். அவர்கட்கெல்லாம் தம் தந்தையார் அவர்களின் கருத்தைத் திரு. சுப்பிரமணியன் செட்டியார் உணர்த்தினார். இறுதியாகச் செய்ய வேண்டிய கடன்கள் யாவும் குறைவின்றி நிகழ்த்தப்பட்டன.

இறுதியாக, நம் மகாமகோபாத்தியாய, முதுபெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் என்னும் அச்சிறந்த ஆன்மவொளி எழுபத்து மூன்றாண்டுகள் கோயில் கொண்டருளிய அச் சிறந்த திருமேனி, எம்மையாளுடைய இறைவன் திருவுருவமாகத் திகழும் பூதவொளியாகிய பொங்கழலிலே பெய்யப்பட்டது.

உரைநடைக்  கோவை  —– சமயக் கட்டுரைகள்

உரைநடைக்  கோவை  —–  சமயக் கட்டுரைகள் .

அன்பு கெழுமிய  ஆன்றோர்களே !

            இனி வரும்  கட்டுரைகள்  அனைத்தும்  பண்டிதமணி யவர்கள்  அன்பர்களின்  அவைக்களங்களில்  ஆற்றிய  சொற்பொழிவுகளும் , எழுதிய  கட்டுரைகளும்  ஆகும் .  இவைகள்  தொகுக்கப்பெற்று  இரண்டு தொகுதிகளாக  வெளி வந்தன . அவைகள் முறையே  “உரைநடைக்கோவை  சமயக்கட்டுரைகள்”  என்றும்  , “உரைநடைக்கோவை  இலக்கியக் கட்டுரைகள் “ என்றும்  பெயர் பெற்றன . அதில் , முதற் பகுதியான  சமயக்கட்டுரைகளின்  முதல்  கட்டுரையான  சன்மார்க்கம்  ஏற்கனவே  பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ள நிலையில் .  அதன் தொடற்சியாக  ஏனைய கட்டுரைகள்  கீழே  பதிவேற்றம்  செய்ய்ப்பட்டுள்ளன .

             திரு.  கா .  சுப்பிரமணிய பிள்ளை யவர்கள்  இந் நூலுக்கு  எழுதிய   சிறப்புப்  பாயிரத்தில்  “  ஈண்டுத்  தொகுக்கப்பெற்ற  ஐந்து  கட்டுரைகளும்  திருவைந்தெழுத்துப்போல  பாராட்டத்தக்கன .அவை முறையே  கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல் , நிட்டை கூடல்   முத்திப்  பேறு  என்பவற்றின்  நுட்பங்களை  விளக்குவனவா  யமைந்துள்ளன   இந்நூல்  சைவ  உண்மையை  அறிய  விரும்பும்  தமிழ்   மாணவர்களுக்கு  எளிதிற்  பெரும்  பயன்  தரும்  இணையற்ற  அறிவுக்  கருவூலமாகப்  போற்றற்பாலது “  என்று  குறிப்பிடுகின்றார் .

                 இனி,  அடுத்துப் பதிவேற்றம்  செய்யப்படும்  கட்டுரையின்  பெயர்  “சிவபிரான்  கருணையும்  சீவர்கள்  கடமையும்”  என்பது .  இது, பண்டிதமணியவர்கள்  பூவளூர்ச்  சைவ  சித்தாந்த  சங்கத்தின்  ஐந்தாம்  ஆண்டு  நிறைவு  விழாக்  கொண்டாட்டக்காலமாகிய  7- 03 – 1915 ல் சென்னைப்  பிரஸிடென்ஸிக்  கல்லூரித்  தமிழ்ப்பண்டிதர்  மகாமகோபாத்தியாய  ஸ்ரீ  வே .  சாமிநாதையரவர்கள்   தலைமையிற்  கூடிய  பேரவையிற்  செய்த  சொற்பொழிவு .

2     சிவபிரான்  கருணையும்

     சீவர்கள்  கடமையும்

தலைவரவர்களே !  அன்புமிக்க  ஆன்றோர்களே ! 

          பெரியோர்களாகிய  நுங்கள்  அன்புரிமை  சான்ற  ஆணையைக்  கடக்க  அஞ்சி  ஒல்லும்  வகையான்  மேற்கொள்ள  விரும்பியும் , திருவருட்டுணை கொண்டும்  இப்பொழுது  செயக்கடவதாகிய  என்  கடமையை  நிறைவேற்றத்  துணிகின்றேன் .

           யான்  மேற்கொண்ட  “சிவபிரான்  கருணையும்  சீவர்கள்  கடமையும் “  என்னும்  இப்பொருளை  விரித்துக்  கூறற்கு  இடந்தரும்  தேவாரத்  திருப்பாசுரம்  வறுமாறு :-

நங்க  டம்பனைப்  பெற்றவள்  பங்கினன்

றெங்க  டம்பைத்  திருக்கரக்  கோயிலான் 

றங்க  டன்னடி  யேனையுந்  தாங்குதல் 

எங்க  டன்பணி  செய்து  கிடப்பதே .

இப்  பாசுரத்தின்  அருளொலியும்  பொருளுமே  இப்  பொருளை  விளக்கற்  குதவியாயின  வென்பதை  இறுதியிற்  கூறப்படுந்  தொகையுரைக் கண்  முடித்துக்  காட்டுவேன் .

பெரியோர்களே !

   மறை  யாகமங்களானும் , அவற்றின்  நூல்களானும்  பொதுவாகவுஞ்  சிறப்பாகவும்  விளக்கப்பட்ட  பதிப்பொருள்  சிவபிரானே யென்பது  அந்  நூல்களைச்  செவ்விதினாராயும்  நுண்ணறிஞர்க்கெல்லாம்  ஒத்த  தொன்றாம். இப்பதிப்பொருளைக்  கடவுண்  முதலிய  பொதுப்பெயர்களான்  வேத  நெறி யொழுகும்  எல்லாச்  சமயத்தார்களும்  ,  சிவன்  முதலிய  சிறப்புப்  பெயர்களாற்  சமயாதீதமாகிய  சைவநெறி  நிற்போருங்  கூறுப .  கடவுள்  என்னும்  சொற்குப்  பொருள்  கடத்தலாதலின்  அதுபற்றி  இறைவனைக்  கடந்தவரென்ப . எவற்றைக்  கடந்தவரெனின் , சுட்டியறியப்படுங்  காரிய  வுருவப்  பிரபஞ்சத்தையும்  அதனாற்  றத்துவ  தாத்துவிகங்களையும்  கடந்தவ ரென்க . இப்பொருள்  ஏனைய  தேவர்களுக்கு  உண்மையிற்  பொருந்தா தென்பது , அன்னார்  சிவாகமங்களுட்  கூறப்படும்  முப்பத்தாறு  தத்துவங்களுக்  குட்பட்டவர்க ளாதலானும் , பேராற்றலுடைய   சிவபிரா  னியக்கத்தான்  ஒவ்வோ  ரதிகாரங்களைப்  பற்றிநிற்பவ  ராகலானுமாம் . மற் றைச்  சமய  நூல்கள்  போலாது  சைவ  சமயத்திற்  குறைவின்றிக்  கூறப்பட்டுந்  தத்துவங்கள்  முப்பத்தாறாம் .  அவற்றைக் கடந்து  நிற்பவர்  பரம்பொரு ளாகிய  சிவபிரான்  ஒருவரே  யாவர் . இம்முப்பத்தாறு  தத்துவங்களும்  முப்பகுதியினவாம் . அவற்றுள்  தொடக்கப்பகுதியாகிய  ஆன்ம  தத்துவ  விரியுள்  ஒவ்வொன்றே  ஏனைய  சமயக்  கடவுளர்களின்  நிலயமாகும் .  ஆதலிற்  கடவுண்  முதலிய  சொற்களும்  உண்மையிற்  சிவபிரானையும்  உபசாரத்தான்  மற்றைத்  தேவர்களையுங்  கூறுவனவாம் . இங்ஙனமே  வட மொழிக்கட்  கூறப்படும்  பிரமசப்த  முதலியவை  உண்மையிற்  சிவபிரானையும்  உபசாரத்தாற்  பிற  தேவர்களையுங்  குறிப்பிடும்  பொருளுடைய  வென்பது ,  சுவேதாசுவதரம்  கேநம்  முதலிய  உபநிடதங்களானும் ,    அவற்றை  விரித்து  விளக்கிய  வாயுசங்கிதை  முதலிய  புராணங்களானும்  நன்குணரலாம் . இன்னும்  இப்பொருள்  குறித்து  வேதாகமாந்தங்களை  நிலைகண்டுணர்ந்த  நீலகண்டவாசிரியர் ,  அரதத்தாசிரியர்  , அப்பயதீக்கிதர்   முதலிய  சைவப்  பெரியோர்கள்  சிறிதும்  ஐயமின்றி  ஆராய்ந்துரைத்தருளிய  அரிய  வடநூல்களானுந்  தெளியலாம் . பிரபஞ்ச  நிகழ்ச்சியி  னிமித்தம்  ஒவ்வொரு  தேவர்களையும்  அதிட்டித்து  நின்று  சிவபிரான்  ஒருவரே  படைப்பு  முதலிய  அருட்டொழில்களைப்  புரிவர்  அதனாலன்றே , வடமொழி  வாயுசங்கிதை  கூறியாங்குத்  தொழிலதிகார  நிலயராகிய  முக்கியதேவர்களின்  பெயர்களெல்லாஞ்  சிவபிரானுக்குப்  பொருந்தின .  சிவனென்னும்  வாசகமோ 

 “சிவனெனு  நாமந்  தனக்கே  யுடைய  செம்மேனி  யெம்மான் “ 

என்னுந்  தமிழ்  வேதத்தான்  ஏனையோர்க்குச்  செல்லாதென்பது  போதரும் .  இதனாற்  சிவபிரானுக்குள்ள  முழுமுதன்மை,வேறு தேவர்களுக்கின்றென்பது  முணர்க .  இங்ஙனமின்றி  அழிவில்  இன்ப  மங்கலப்  பொருளுடையதாகிய  இச்  சிவ  என்னும்  சொல்லைப்  பிற சமயத்தார்  தஞ்சமய  தெய்வங்களுக்குக்  கூறிக்  கொள்ளின் ,  அஃது  உண்மைப்  பொருளைப்  பற்றிய  பெயராகப்  பொருந்தாதென்ப  துண்மை  யெனினும்  நம்  சிவபிரான்  மாட்டு  அமைந்து கிடக்கும்  உயர்  நலங்களே  அன்னாரை  அவ்வாறு  கூறச்செய்தன  வென்றும் அதனாற்  சைவ  மக்களாகிய  நம்மனொர்க்குப்  பெருமையே  யென்றும்  நினைந்து  மகிழ்வோமாக .  இத்துணையும்  ஒருவாறு  சுருக்கியுரைத்த  சிவபரத்துவப்  பொருள்  தனியான  ஓரரிய  சொற்பொழிவாக  விளக்க வேண்டிய  தொன்றாகலின் ,  இதனை  நிறுத்தி மேல்  இப்பெருமான்  கருணைத்  திறத்தைச்  சிறிது  கூறுவேன் .

  1. கருணையினிலக்கணம்

          கருணை, தயை, இரக்கம், அருள் என்பன  ஒரு பொருட்  சொற்கள் .  இது —  பரமபதியாகிய   சிவபெருமானுக்குரிய  குணங்கள்  எட்டனுள்   முக்கியமானதொன்றாகும் .  இதுவே  , அப்பெருமானிடத்து  அலுப்த  சக்தி  அல்லது  பேரருளுடைமை  யென்று  சொல்லப்படும் .  இக்கருணைக்  குணத்தின்  இலக்கணமாவது , ஒருவர்  தமக்குரியாரை  நோக்கி  “இவர்  எம்  தந்தையார் ;  இவர்  எம்  தாயார் ;  இவர்கள்  உடன் பிறப்பாளர் ; இவர்கள்  எம்  உறவினர் ;  இவள்  எம்  மனைக் கிழத்தி ; இவர்கள்  எம்  புதல்வர்கள் “  என்றின்னோரன்ன  தொடர்புபற்றி  மேற் கொள்ளும்  அன்புபோலாது  எல்லாவுயிர்கண்மாட்டும்   இயல்பாக  நிகழ் கின்ற  உள்ள  நெகிழ்ச்சியாகும் .  இவ்வுயர் குணம்  நம்மனோர்க்கு  ஒருசிறிது  வாய்க்குமாயின்  அது  தொடர்புபற்றி  யெழும்  அன்பின்  முதிர்ச்சியா  னுண்டாயதென்  றறிதல்  வேண்டும் . இது  கருதியே 

              “அருளென்னு  மன்பீன்  குழவி”

என்றார்  திருவள்ளுவ  தேவரும் .  இவ்விடத்துத்  திருத்தொண்டர்  புராணத்  திருப்பாட்டினியைபு  ஒன்றனைப்  புலப்படுத்தி  மகிழாமலிருக்கக்  கூடவில்லையாதலின்  அதனையுஞ்  சிறிது  காட்டுதல்  அவசியமாகின்றது .  திருஞானசம்பந்த  சுவாமிகளும்   திருநாவுக்கரசு சுவாமிகளும்  சீகாழியில்  திருத்தோணியப்பரையும், அம்மையாரையுந்  தரிசிப்பான்  செல்லுங்கால்  அவ்விருவர்களும்  ஒருங்கு  கூடிச்  செல்லும்  அழகிய  காட்சியை  நூலாசிரியராகிய  சேக்கிழார் சுவாமிகள் , தம்  மனத்தின்கண் , தியானமுகமாக  எழுதிப் பார்த்துப்  பார்த்து  மகிழ்ந்தின்புற்று  ,  அம்மகிழ்ச்சின்பங்களை நம்மனோருஞ்  சிறிது  பெற்றுய்யுமாறு,  தாந்துய்க்கும்  இன்பம்  பொங்கி  வெளிபடுதல்போல  ஓரருமைப்  பாசுரத்தையருளியிருக்கின் றார்கள்  .அப்பாசுரத்தின்  கருத்து  ,  அந்நாயன்மார்களிருவர்களது  ஒன்றுபட்ட  தோற்றத்துக்கு  ஒப்புக்கூறுவதேயாகும்  . அது  வருமாறு :–

“அருட்பெருகு  தனிக்கடலு  முலகுக்  கெல்லாம்

       அன்புசெறி  கடலுமா  மெனவு  மோங்கும்

 பொருட்சமய  முதற்சைவ  நெறிதான்  பெற்ற 

        புண்ணியக்கண்  ணிரண்டெனவும்  பவன  முய்ய

 இருட்கடுவுண்  டவருளு  முலக  மெல்லாம்

         ஈன்றாடன்  றிருவருளு  மெனவுங்  கூடித் 

 தெருட்கலைஞா  னக்கன்று  மரசுஞ்  சென்று

          செஞ்சடைவா  னவர்கோயில்  சேர்ந்தா  ரன்றே”

என்பதே.

                இதன்கட்   கூறப்பட்ட  உவமைகளை  யன்றிவேறு எத்துணை  நீண்டு  நினைப்பினும்  “உயர்ந்ததன்  மேற்றே  யுள்ளுங்காலை”   யென்னும்  உவமவிலக்கணத்துக்கு  மாறுபாடின்றி  ஈண்டுக்  கூறத்தக்கது யாதுளது?  என்னே  இவ்வுவமைகளின்  அருமை  நயங்கள்!  இங்ஙனங்  கூறுதலன்றே  ஆன்ற  அருட்கவிகளினியற்கை ! இப் பாசுரத்தின்  அரும் பொருள்களை  முற்றக்  கூறின்  ஈண்டு  விரியுமாதலின் , இயைபுடைய  முதலடியின்  பொருளை  மாத்திரஞ்  சுருக்கிக்  கூறுவேன் .இதனிறுதியடியில் 

        “தெருட்கலைஞா  னக்கன்றும்  அரசும்”

என்று  கூறுவதால்  நிரனிறையாகப்  பொருள்  கொள்ளுதல்  வேண்டும்.  அங்ஙனங் கொள்ளுங்கால் அருட்பெருகு தனிக்கடல்  திருஞானசம்பந்த  சுவாமிகளும்  ,  அன்புசெறிகடல்  திருநாவுக்கரசு  சுவாமிகலுமாவார் இவ்விருவரிடத்தும்  அருள்  அன்பு  என்னும்  இருகுணங்களுமுள வெனினும்  அவற்றாலாம்பயனை  நோக்கிச்  சிறப்பாக  ஆராயுங்கால்  அப்பர்  சுவாமிகள்  , சிவபிரானும்  சிவனடியார்களுமே  தமக்குரியவர் களாகக்  கொண்டு  அன்பு   செய்தமையானும்  ,  அடிமை  நெறியில்  (தாச மார்க்கத்தில்)  வெளிப்பட  நின்று  ஒழுகியமையானும் , அந் நெறியில்  ஒழுகுதற்குத்  தலைவன்  ஒருவனை  மேற்கொண்டு  அன்பு  செய்தலே  முக்கியமாதலானும் , அவர்களிடத்துள்ள  அருட்  குணத்தினும்  அன்பே  யாவர்க்கும்  வெளிப்படக்  காணப்படலான் ,  அவர்களையன்புக்கடலென்றும்  ,  திருஞானசம்பந்த  சுவாமிகளிடத்து  இவ்  அன்புளதெனினும்  அவர்கள்  மகன்மை நெறியில்(சற்புத்திர மார்க்கம்) வெளிப்பட   ஒழுகியமையானும் ,  இறைவன் குணம்  அருளே யாதலானும்,  சுவாமிகளிடத்து  எல்லாவுயிர்கண்மேலும் இயல்பாக  எழுங்கருணையே  மேலிட்டிருந்தமையானும்  ,  திருப்பெருமண  நல்லூ ரில்  தந்  திருமணக்  கோலத்தைத்  தரிசிக்க  வந்திருந்த  தகுதியு டையார்    தகுதியில்லாராகிய  எல்லோரும்  அக்  கணத்திலேயே  மல நீக்கமும்  சிவப்பேறும்  எய்திக்  கொள்ளைகொள்ள  வீடுதவிக்  கூற்றைப்  பிடர்பிடித்துத்  தள்ளித்  தம்  அருட்குணப்பயனைக்  காட்டியமையானும்  அவர்களை  அருட்கடலென்றுந்  திருவாய்  மலர்ந்தருளினார்  ஆசிரியர்  சேக்கிழார்  சுவாமிகள் .

      ஈண்டு  இன்புறத்தக்கதோர்  இயைபென்னையெனின் , அன்பினால்  அருளுண்டாவது  பற்றி  அன்பு  அப்பனும், அருள்  பிள்ளையுமாகும் . அம் முறையே  அன்புக்  கடலாகிய  நாவரையரை  அப்பரெனவும் , அருட்கடலாகிய  சம்பந்தரைப்  பிள்ளையாரெனவும்  பெரியார்  பாராட்டி  வழங்குதலேயாம் . அந் நாயன்மார்பாற்  கருணையின்மைக்குச்  சரிதங்காட்டிப்  பேசுவாருஞ்  சிலருளராலோ வெனின்  ,  அன்னார்  கூற்றுச்  சிவபிரான்  கருணையைப்  பாகுபாடு  செய்து  கூறுங்காற்  சொல்லப்படும்  தடை விடைகளாற்  சிறிதும்  பொருந்தாமை  யிணரலாம்.  இவ் வளவிற்  கருணையின்  இலக்கணம்  ஒருவாறு  சுருக்கிக்  கூறப்பட்டது .

2 . சிவபிரானே  கருணையை  முழுதும்  ஆளுதற்குரியர்

     இனி, இக்  கருணையை  முற்றும்  ஆளுதற்குரியர்  சிவபிரான்  ஒருவரேயாவ ரென்பதைப்  பற்றிக்  கூறுவேன் .

 “அருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம் 

   புல்லார்  புரள  விடல் .

என்னுந்  திருக்குறளால்  அருள்  உயர்ந்தோர்  தம்மின்  தாழ்ந்தோரிடத்தும் , அன்பு  தாழ்ந்தோர்  தம்மின்  உயர்ந்தோரிடத்தும்  செய்யுங்  குணங்களா மென்பது வெளியாம் .  இச்  சிறப்பிலக்கணப்படி  எல்லா  உலகத்துமுள்ள  எல்லா  உயிர்களிடத்தும்  ஒருங்கே  கருணை  செய்தல்  எல்லாம்  வல்லசிவபிரான்  ஒருவர்க்கே  கூடுமன்றிப்  பிற  தேவர்களுக்கின்றாம் .  வேறு  தேவர்களும்  மக்களுட்  சிறந்தார்  சிலரும்  இவ்வருட்  குணத்தை  உடையராய்க்  காட்டிய  சரிதங்களும்  உளவேயெனின் , அம் மக்கள்  தேவர்கள்  யாவருக்கும்  ஒவ்வோர்  அமயங்களில்  தம்மின்  தாழ்ந்தாரிடத்துக்  கருணை  நிகழுமாயினும் , தமெக்கெல்லாம்   உயர்ந்தாராகிய  சிவபிரான்  ஒருவரிருத்தலான் , அவரிடத்து  அன்பேயன்றி  அருள்  செய்தர்கியைபின்மையானும் , சிவபிரான்  எவரானும்  விலக்குதற் கொண்ணாத  பாற்கடற்கண்  எழுந்த  நஞ்சை  யுண்டு  யாவர்க்கும்  தாம்  தலைவரென்பதையும் ,  யாவரிடத்துங்  கருணை  செய்யத்தக்கவரென் பதையுங்   காட்டினமையானும்  கருணையின்  முழுவிலக்கணமும்  ஏனையோரிடத்தன்றிச்  சிவபிரான்  பக்கலிருப்பதை  உணரலாம் .

                இவ்வருட்  குணத்தின்  பகுதியாகிய  கண்ணோட்டத்தைப்  பற்றி  யெழுந்த 

                  “பெயக்கண்டும்  நஞ்சுண்  டமைவர்  நயத்தக்க 

                    நாகரிகம்  வேண்டு பவர் “

என்னுந்  திருக்குறளிலும்   சிவபிரான்  நஞ்சுண்ட  சரிதங்  குறிப்பிடத்  தக்கதொன்றாம் .  சிபி ,  ததீசி  முதலியோர்  சரிதக்  குறிப்புக்களைச்  சில  குறள்களிற்  கண்டு  உரைக்கட்காட்டிய  ஆசிரியர்  பரிமேலழகர்  இதனையும்  ஈண்டுக்  காட்டியிருப்பின்  மிக நன்றாகும் .  இறைவனுக்கு  எல்லாஞ்செய்யும்  ஆற்றல்  இயற்கை  யென்றொழிந்தார்  போலும் .  சிவபிரான்  றலைமையும் , அவர்  கருணைத்  திறமும்  மாணிக்கவாசக சுவாமிகள் , தாம்  அநுபவித்துத்  திருவாய்  மலர்ந்தருளிய  திருவாக்குக்களிற்  பரக்கக்  காணலாம்.    

                     “தன்மை  பிறரா  லறியாத  தலைவா “

என்பது  தலைமை  பற்றியதாகும் .  தலைவர்களை  உலகத்  தலைவரெனவுங், கடவுட்  டலைவ ரெனவும்   இருவகையாகக்  கொள்ளலாம் . இவ்விருவர்களுக்கு  முள்ள  வேறுபாட்டை  நம்  அடிகளார்  யாவரும்  வியந்தின்புறுமாறு   மிக  அழகுபெறக்  கூறியிருக்கின்றார்கள் . எங்ஙனமெனின் ; உலகத்தலைவர் களாகிய   அரசர்   முதலியோரை  உலகத்துள்ள   மற்றையோ  ரெல்லாம்  நன்கு  தெரிவர் ; அத் தலைவர்களின்  குணஞ்  செயல்களையும்  வரையறுத்துணர்வர்  அத் தலைவர்கள்  பிறரெல்லாரையும்  அறியார் . அன்னார்  குணஞ்  செயல்களையும்  நன்கு  தெரியார் .  கடவுட்  டலைவராகிய  சிவபிரானோ வெனின் , பிறரெல்லாரையும்  அறிவர் ; அன்னார்  குனஞ் செயல்களையும்  “அவனன்றி  ஓரணுவும்  அசையாது “  என்றபடி  உயிர்க்குயிராய்  நின்று  நன்குணர்வர் .  பிறர்க்கு  அப்பெருமான்  பெற்றி   உணர  அரிதாகும்  .  இப்பொருணலங்களையே  நம்  சுவாமிகள்  ,  மேற்காட்டிய  படியும் , 

                              “பெற்றி  பிறர்க்கரிய  பொம்மான் “

எனவும்  அருளிச்  செய்வாராயினர் .

                               “குறைவிலா  நிறைவே “ 

யென்பது ,  அப்பெருமான்  கருணையைப்  பற்றியதாகும் .  சிவபிரான் , தங் கருணையைப்  பிறரெறத் துணை  அள்ளிக்கொண்டாலும்  குறைவின்றி  நிரம்பியிருப்பரென்பதாம் .  இவ்விரு  பொருள்களையும்  ,

                  “தெள்ளிப்  பிறரால்  தெரிவரியான்  தங்கருணை

                     அள்ளக்  குறையா  அரன் “

என்பதனாலும்  நன்குணரலாம் .  இதனால் , தங்  கருணையைக்  கொள்ளா விட்டாற்  குறைவரே  யன்றிக்  கொள்ளக்  குறையா  ரென்பதும்  வெளியாதல்  உய்த்துணர்க . எவ்வுயிர்க்கும்  இரங்கி,  அவற்றிற்கு  வரும்  இடையூற்றை  ஒழித்து  இன்பம்  அளித்தல்  சிவபிரான்  ஒருவர்க்கே  கூடுமென்பதும் , மற்றையோர்க்கு  இயன்றவரை  கருணை  செய்தலே  கூடுமென்பதும்  ஆன்றோர்  துணிபாகும்  . இது  கருதியே  அருளைப்பற்றித்   திருமூலதேவர்  கூறுமிடத்து  ,

“ஆருயிர்  யாதொன்  றிடருறு  மாங்கதற்

கோருயிர்  போல  உருகி  உயக்கொள்ள 

நேரி  நதுமுடி  யாதெனி  நெஞ்சகத் 

தீர முடைமை  அருளி  நியல்பே “

என்று  மற்றையோர்க்  கியன்றவாறு  “முடியாதெனின்  ஈரமுடைமை  அருளினியல்பே “  எனக்  கட்டளையிட்டருளினார் .  

              சிவபிரானுக்கு  முடியாத  தொன்றின்மையின்  ,  அவரே  கருணையை  முழுவிலக்கணத்துடன்  ஆளுந்தகுதியின  ரென்பது  வெள்ளிடை  மலையென  உணரத்தக்கதொன்றாம் .  சகல தேவர்  மக்கள்  முதலிய  யாவர்க்கும்  எவற்றுக்கும்  ஈயுந்தா தா  சிவபிரானே  யாவரென்பது .  எஜூர்  வேதத்துள்ள  சமக  மந்திரங்கள்  ,  திருமால்  பிரமன்  முதலிய  தேவர்களை  அன்னத்தோடு  சேர்த்து  ஈயப்படும்  பொருளாகக்  கூறினமையானும் ,  சிவபிரானை  அங்ஙனம்  கூறாமையானும்  நன்குணரலாம் . யாவருந்  தம்பா  லிரக்கத்  தாம்  வேண்டியார்  வேண்டியாங்  கீயும்  பெருங்  கொடையாளர்  ஆதலின் , இப் பெருமானே  ,  கருணை  யென்னும்  உயர்குணத்தின்  முழுப்  பாகத்தையும்  உடையாரென்பது  தேற்றமாம் .

3.  சிவபிரான்  கருணையின்  சிறப்பு

        இனி , நம்  பெருமானுக்குரிய  எண்வகைக்  குணங்களுட்  கருணையும்  ஒன்றெனினும்  ,  இக் குணமே  ,  நாமெல்லாம்  வழிபட்  டுய்தற்குரிய   திருமேனியை  இறைவன்  கோடற்குரியதாக  இருத்தலின்  மிகச்  சிறந்ததாகும்  சிவபிரான்  உண்மைச் சொரூப  இலக்கணம் .

 “செறிசிவ  மிரண்டு  மின்றிச்  சித்தொடு

 சத்தாய்    நிற்கும் “

என்றபடி  சச்சிதாநந்தப்  பிழம்பே  யாகும் . இந் நிலை  பாசப்பிணிப்புடைய  ஆன்மாக்கள்  உணரவரியதாகலின் ,  அவ்வான்மாக்களின்  பொருட்டு  இறைவன்  அருவம் ,  உருவம் ,  அருவுருவம்  என்னும்   மூவகைத்  திருமேனியு  முடைவராய்  வெளிப்பட்டருளுவர் . இதுவே  தடத்த  நிலை  யெனப்படும் .  இத்  திருமேனிகள்  கருணையாற்  கொண்டனவேயாம் .  இவ்விருவகை  நிலையும்  இறைவனுக்குரிய  வென்பதையும் , கருணையே  வடிவமென்பதையும்  , 

“கற்பனை  கடந்த  சோதி  கருணையே  உருவமாகி”    எனவும் ,

                               “செப்பிய  மூன்றும்  நந்தங்

கருமேனி கழிக்க  வந்த  கருணையின்  வடிவு  தானே “ 

எனவும்  போந்த  திருவாக்குக்களான்  அறிக .  ஈண்டு  இக் கருணையே  தமது  இடப்பாகம்  பிரியாதுடனுறைந்து  விளங்கும்  உமாதேவியாகிய  சிவசத்தியாகும் .   இஃது  ,

                   “அருளது  சத்தியாகும்  அரன்றனக்கு”

என்பதனான்  அறிக . தமக்கமைந்த  எண்வகைக்  குணங்களுள்  ,  இவ்வருட்  குணமே  நம்  பிரானுக்குரிய  பராசத்தியாக  அமையுமாயின் , இதன்  மாட்சி யை  எவ்வாறு  பேசுவேன் !  நம்  பெருமானது  இப் பேரருள்  வெளிக்கண்ணே   எல்லா  அண்டங்களும் , அவற்றின்  உட்பொருள்களுந்  தோன்றி  நிலைபெறுவனவாம் .  இவ் வருள்  வெளிக்கண்  எல்லா உயிரும்  நிலைபெற்றிருந்தும்

வெள்ளத்துள்  நாவற்றி  யாங்குன்

       னருள்  பெற்றுத்  துன்பத்தினின்றும் ,

விள்ளக்கி  லேனை “

என்ற  திருவாக்கின்படி  நாம்  நம் வினைப்பகுதியான்   அக் கருணையினாற்  பெறவேண்டிய  பயனைப்  பெறாது  மாழ்குகின்றோம் .  இக் குற்றம்  நம்மதே யன்றி  அக்  கருணாநிதியின்  பாலதன்று .  தாழ்ந்த  நிலம்  மேட்டு  நிலமென்னும்  வேறுபாடு  கருதாது  மேகம்  நிரந்தரமாகப்  பெய்தும்  , ,அந் நீரை  மேட்டு  நிலம்  ஏற்காது  ஒதுக்கத்  தாழ்வு நிலம்  ஏற்குமாபோல , சிவபிரான்  பருகற்கினிய  பரங்  கருணைத்  தடங் கடலாக  இருந்தும்  ,  நம்  தீய  வினையாகிய  அணை  குறுக்கிட்டுக்  கிடத்தலான் , அக் கருணை வெள்ளம்  நம்பாற்  செல்லாது  உண்மை  அன்பர்  கூட்டமாகிய  நற்றடத்திற்  சென்று  நிறைகின்றது . சிவபிரான்  ஆன்மாக்கள்  உய்தற்பொருட்டுத்  தங்  கருணை யமுதத்தை  மிகவலிந்து  எத்தணையோ  உபாயங்களாலும்  ஊட்டுகின்றார் .  இவ்வுண்மையைத்  தம்  அநுபவத்தால்  உணர்ந்த  பேரன்பாளராகிய   மாணிக்கவாசக  சுவாமிகள் கட்டளையிட்டருளிய  பின்வரும்  திருவாசகத்  திருப்பாசுரத்தானும்  உணரலாம் .  அது  பின்வருமாறு :- 

“வழங்குகின்றாய்க்கு  உன்  அருள்  ஆர்

          அமுதத்தை  வாரிக்கொண்டு 

விழுங்குகின்றேன்  விக்கினேன்

          வினையேன்  என்  விதி  இன்மையால்

தழங்கு  அரும்  தேன்  அன்ன  தண்ணீர்

          பருகத்  தந்து  உய்யக்  கொள்ளாய்

அழுங்குகின்றேன்  உடையாய்

          அடியேன்  உன்  அடைக்கலமே”

இதன்  அருமைப்  பொருளையுஞ்  சிறிது கூறி  மேற் செல்வேன். வழங்குகின்றாய்க்கு  என்புழி,  குவ்வுருபு   பொருட்டுப்  பொருளதாம் . “என்னை  யாண்டாய்க்கு”  என்று  பிறாண்டுஞ்  சுவாமிகள்  இதனை  வெளிப்படக்  கூறுவர் . ஆகவே  ,வழங்குகின்ற  நின் பொருட்டு  நின்  அருளாகிய  ஆரமுதத்தை  வாரிக்கொண்டு  விழுங்குகின்றேன்  என்பதே  அத்தொடரின்  பொருளாம்  .  மாணிக்கவாசக  சுவாமிகள்  தம்மைச்  சிவபிரான்  மிகவலிந்து  அடிமை கொண்டாரென்பதைக்  “கல்லை மென்கனியாக்கும்  விச்சை  கொண்டென்னை  நின் கழற்  கன்பனாக்கினை”  எனவும் ,  “ஈர்த்தென்னை  ஆட்கொண்ட  எந்தை  பெருமானே “  எனவும் ,  “கல்லைப்  பிசைந்து  கனியாக்கித்  தங்கருணை, வெள்ளத்  தழுத்தி  வினை கடிந்த வேதியனை “  யெனவும் ,    “இனையனானென்றுன்னை  யறிவித்தென்னை  யாட்கொண் டெம்பிரா  னானாய்க்க்கு “  எனவும் ,   போந்த திருவாக்குக்களானுணர்க . அவ்வாறு   அடிமை  கொண்டு  தங்  கருணை  யமுதத்தை  எவ்வாறு  ஊட்டினா ரெனின் ;  ஒன்றும்  அறியாக்  குழவிப்  பருவத்து  மகவைத்  தாய்  அச்சமுறுத்தி  உணவூட்டுமா  போலும் , கல்லூரிகட்  சென்று  கல்வியின்  மாட்சியுணராது  கற்றற்கு  மலைவுறும்  சிறாரை  ஆசிரியன்  அடித்துத்  துன்புறுத்திக்  கல்வியைப்  புகட்டுமா போலும்  ஊட்டினாரென்க .  

                       இவ்வுண்மையையே  நம்  சுவாமிகள்   “அடித்தடித்து   அக்காரம்  முன்தீற்றிய  அற்புதமறியேனே”  என்று  திருவாய்  மலர்ந்தருளினார்கள்  . ஆதலின் ,  “சருக்கரை  வழங்குதல்”  என்பது  போலச்  சிறிதும்  வருந்துதலின்றி  மகிழ்ச்சி  மிக்கு  இடையீடின்றிப்  பெய்தல்  கருதிக்  ,  கொடுத்தல்  தருதல்  முதலிய  சொற்களை  விடுத்து  வழங்குதற்  சொல்லால்  தொடுத்து , அவ்வாறு  கருணை  யமுதத்தைப்  பெய்து  உண்ணுக  உண்ணுக வென்று  அடித்தடித்து  வற்புறுத்துகின்ற  நின் பொருட்டு  அஞ்சி  வழங்குகின்றாய்க்கு  எனவும் , தன்னையுண்டாரைச்சிற்றின்புறுத்துந்  தேவரமுதம்  போலாது   சிவபிரான ருலமுதம்  பேரின்புறுத்தவல்லதாகலின்  உன்  அருளாரமுதத்தையெனவும் , இயற்கையாக  உண்டலின்றித்  துன்புறுத்தும்  நின் பொருட்டு  மிக  விரைந் துண்ணுகின்றேனென்பார்.  வாரிக்கொண்டு  விழுங்குகின்றே  னெனவும் , அங்ஙனம்  விரைந்து விழுங்குதலான்  விக்கினேனெனவும், வேண்டாத  உணவை உண்டற்குத்  தொடங்கு  முன்னர்க்  கண்டவளவிலேயே  விக்கலுண்டாமாகலின் , முறையே  நிகழ் காலமும்  இறந்தகாலமுந்  தோன்ற  விழுங்குகின்றேன் விக்கினெனெவும்,  அவ்வாறு  விக்குதற்குக்  காரணம்  நீயல்லை ;  வினைவயப்பட்டுழலும்  எனது  விதியேயென்பார்  வினையேனென்  விதியின்மையால்  எனவும் ,  யான்  வேண்டாதிருப்பவும்  , என்னைத்  துன்புறுத்தி  ஊட்டினையாதலின்  ,  அதனாலுண்டான  விக்கலை  ஒழித்தற்குத்  தண்ணீர்  தந்து  பிழைப்பித்தல்  வேண்டுமென்பார் ,  தண்ணீர்  பருகதத் துய்யக்  கொள்ளாயெனவும் , அவ்வமுதம்  நின்னருளமுதமாதலின் , அதனை  உண்ணுதற்குரிய  அதிகார  சிவத்துவம்  வேண்டுமென்பார்  தண்ணிய  நீர்மை  சிவத்துவம்  என்னும்  பொருள்  பொதுளத்  தண்ணீரெனவும்  ,  அத்தண்ணீரும்  அவ்வமுதம்  போல்  விக்கல்  முதலிய  சலனங்களைத்  தருதலின்றி  எற்குகந்த இனிமைச்  சுவையுடனிருத்தல்  வேண்டுமென்பார்,  “தழங்கருந்  தேனன்ன  தண்ணீ “   ரெனவும் , அது பெறாமையின்  மிக  வருந்துகின்றேனென்பார் . அழுங்குகின்றே  னெனவும்  ,  சிவபிரான்  சேதனப்பொருள்களெல்லாம்  தமக்கு  அடிமையாகத்  தாம்  ஆண்டார்  எனவும் , அசேதனப்  பொருள்களெல்லாம்  உடைமையாகத்  தாம்  உடையாரெனவுங்  கூறப்படுவாராதலின்  , இந் நான்கு சொற்களைக் கொண்டு  விளக்குதற்குரிய  பொருள்  முன்னிலை   தன்மையாகிய  இரு  சொற்களினமைய  உடையாய்  அடியே  னெனவும்  ,  யான்  சேதனனாயிருந்துஞ்  சிறிதும்  அன்பிலனாதலின்  , என்னை  யாளுதல்பற்றி  வரும்  ஆண்டாரென்பதினும் , அசேதனப்பொருள்களைப்  பற்றிய  உடையாரென்பது  நினக்குப் பெருமை  யாதலின்  அதனையே  விளிப்பலென்பார்  உடையாயெனவும் , ஆண்டாரென்பது  உண்மை யெனினும்  என்னை  நோக்கி  அவ்வாறு  கூறற்கு  நாணமுடையேனாதலின் அப் பொருள்  பிறரறிய  என்னையே  கூறிக்  கொள்வ லென்பார் அடியேனெனவும்  ,  நின்றனக்குரிமையுடைய  பொருளினும் , அடைக்கலப் பொருளைக்காத்தல்  நின்  பெருந்தன்மைக்கு  இயன்ற  தென்பார்  உன் அடைக்கலமே  யெனவுந்  திருவாய்  மலர்ந்தருளினார்  சுவாமிகள் .  நண்பர்களே !  இவ்வரிய  நுண்பொருளை  நினையுங்கால்   திருவாசக  மாட்சி  சிந்தித்தற்கெவ்வாறு  ஒல்லும் ?  இவ்வருமை  நூலுக்கு  உரை வரைவேனென்று  முற்பட்டார்  சிலர்  இதன்  நுண்பொருணலங்களைப்  பிறரறியக் கூடாவாறு  செய்தமை  பெரிதும்  வருந்தத்தக்கதே .  இன்னும்  நம்  இறைவன்  அன்பர்க ளை  ஆட்கொள்ள  மேற்கொண்ட  செயல்கள்  எண்ணத்தொலையா.  அவர்  தம்  அன்பர்களுக்கு  எவ்வளவு  எளிய  நிலையிலுள்ளா ரன்பது  அச்  செயல்களான றியலாம். .  நம்  மணிவாசகர்  பொருட்டு  மண் சுமந்தார் .  “மண் முதற்  சிவமீறாகிய  முப்பத்தாறு  தத்துவங்களை யுங்  கடந்தவன்  என்று  என்னைக்  கூறுவார் ;  யானோ  என்  உண்மையன்பர்  பொருட்டுக்  கீழ்க்  கண்ட  பிருதிவி  தத்துவத்தை  அம்  முப்பத்தாறினும்  மேல்  நிற்கும்  என்  தலைமேலேற்றுங் கடப்பாடுடையேன்”   என்று  அவர்  தாம்  அடியார்க்  கெளியராம் நிலைமையை  நன்கு  புலப்படுத்தினார் போலும் !  அவர்  பெருங்கருணை  மாட்சி  நினையுங்கால்  உள்ளம்  உருகுகிறதே  !  

                            4.   அக் கருணையின்  வகை

         இனி,  அப் பெருமான்  கருணைத் திறம்  இரு வகைப்படும் . அவை  அறக்கருணை  மறக்கருணை  என்பனவாம் . ஒரு  தந்தைக்குரிய  மக்கள்  இருவருள் , ஒருவன் , “தந்தை  சொன்  மிக்க  மந்திரமில்லை”  என்றபடி  செவ்விய  நன்நெறிக்கண்  ஒழுகுகின்றான் . அதற்குத்  தந்தை  வேண்டுவன  தந்து  இன்புறுத்துகின்றான் . மற்றொருவன்  தந்தை  யுரை  கடந்து  தீய  நெறிக் கட்   செல்லுங்கால்  அவனைத்  தந்தை  அடித்துத்  துன்புறுத்தி  நன் நெறிக்கட்  செலுத்துகின்றான் .  இம் மக்கள்  இருவரிடத்துச்  செய்யும்  இவ்விரு  செயலும்  அன்பு  பற்றியனவேயாகும் . இங்ஙனமே  நம்  பரமபதியின்  செயலுமாம் .  தம்மிடத்து  அன்புபூண்டு  ஒழுகும்  அடியார்களை  அவர்    உவப்பன  செய்து  இன்புறுத்துவர்  .  அன்பின்றி  இருப்போரை  ஒறுத்து  நன்நெறிக்கட்  செல்லு மாறு   அருள் பாலிப்பர் .

         இவ்விரு  செயற்கும்  அவ்  வான்மாக்களிடத்துத்  தாம்  வைத்த  கருணையே  காரணமாகும் .  இவற்றுள்  முன்னையது  அறக் கருணையெனவும்  ,  பின்னையது  மறக் கருணையெனவுங்  கூறப்படும் . நம்  சமய  நூல்களையும்  உலகியலையும்  அறியார்  சிலர்  “யாவர்க்கும்  ஒப்பவிருத்தலன்றே  கடவுளியல் ,  அவ்வாறின்றிச்  சிலர்க்கு  இதஞ்செய்தலும், சிலர்க்கு  அகிதஞ்  செய்தலும்  என்னை?  “    என்பர் . இவ் வுலக  பரிபாலனஞ்  செய்யும்  அரசியலை  நோக்கினும்  இவ்வுண்மை  மிக  எளிதில்  அறியத்தக்க  தொன்றாகும் . இது  கருதியே  திருவள்ளுவ  தேவரும்  ,

“அறத்திற்கே  அன்புசார்  பென்ப  அறியார்  

மறத்திற்கும்  அஃதே  துணை “

என்று  கூறினர் .  இத் திருக்குறளுக்கு  மறத்தை  நீக்குதற்கும்  என்று  ஆசிரியர்  பரிமேலழகர்  உரை  கூறினார் . இதனினுஞ்  செவ்வையாக  அறத்தைச் செய்தற்கு  அன்பு  துணையாதல் போல்  ஏனை  மறத்தைச்  செய்தற்கும்  அன்பு  துணையாம் என்று  கொண்டு  இவ்விரண்டனுட்  பின்னதை  அன்பு  பற்றிய  மறமெனக்  கோடல்  சிறப்புடைத்தென்பதுணர்க.  இங்ஙனமே  நாயன்மார்கள்  செயலுமாம்    நம்  வைதிக  சைவசமய  நெறியைஅழிப்ப  முற்பட்ட  சமணர்கள் ,  பாண்டிய  அரசனால்  ஒறுக்கப்பட்டுக்  கழுவேறுங்கால் ,  அதனை  விலக்காமையால்  திருஞானசம்பந்த சுவாமிகள்  கருணையில  ரென்பர்  ஒரு  சிலர் .  அன்னார்  ஒரு  குடி  நலம்பெற  ஒருவனையும்  ,  ஓரூர்  நலம்பெற  ஒரு  குடியையும் ,  ஒரு  தேயம்  நலம் பெற  ஓரூரையுங்  கெடுத்துக்  காத்தல்  அறமாமென்று  அற  நூல்  கூறுதலையும்  உணர்ந்திலர் ;

“பொறையெனப்  படுவ  தாடவர்  தமக்குப்

             பூணெனப்  புகலினும்  பொருந்தார்

முறையறப்  புரிந்தா லக்கணத்  தவர்தம்

              முடித்தலை  துணிப்பதே  முழுப்பூண் “

என்னும்  நீதியையும்  உணர்ந்திலர் .  இன்னும்  பிரபல  நியாயங்கள் உளவெனினும்  ,  அவை  ஈண்டு  வேண்டற்பாலன   அல்லவாதலின் ,  விருத்திலன்  .  ஆகவே  , சிவபிரான்  செயல்கள்  ,

“எக்கிர  மத்தி  நாலும்  இறைசெயல்  அருளேயென்றும்”

என்றாங்க்குக்  கருணை  காரணமாக  உள்ளனவேயாம் .

                     5 . அக் கருணையால் ஆன்மா  எய்தும்  பயன் 

இனி,  அப்பெருமான்  கருணையா னுண்டாம்   பயனைச்  சிறிது  கூறுவல். ஆன்மாக்கள்  அநாதி  கேவலத்தில்  ஆணவ  மலத்தாற்  பிணிப்புண்டு  இருட்ட றையிற்  கிடக்கின்ற  கண்ணிலாக்  குழவி  போல  நினைவு  செயற்றுக்கிடக் குங்கால்  ஆற்றல்  பல  உடைய  அவ்  வாணவ  மலத்தைக்  கழுவுதற்பொருட் டுக்  கன்ம மல  மாயா  மலங்களை  அவ்வவற்றிற்கேற்ப  பயனுறச் செய்து  ,  சிறிது  அறிவெழக்கண்டு  ,  படைத்தல்  முதலிய  ஐந்தொழில்களையும்  புரிந்து,  இறுதியில்  தம்  திருவடி  இன்பத்தை  ஈதற்குக்  காரணம்  ,  தம்  அளவிலாப்  பெருங்கருணையே   யாகும் .  இவ்  வுண்மையை,  

“அருளிற்  பிறந்திட்  டருளில்  வளர்ந்திட்

டருளில்  அழிந்தினைப்  பாறி  மறைந்திட்

டருளான  ஆனந்தத்  தாரமு  தூட்டி

அருளாலென்  நத்தி  அகம்புகுந்  தானே “

என்னுந்  திருமந்திரமும்  வலியுறுத்துவதாம் . இனி,  அப்பெருமானைக்  காண்டற்கும்  அவர்   கருணையே  கண்ணாதல்  வேண்டும்  .  கேநோபநிடதத்தில்  “இந்திரன்  இயக்க  வடிவத்துடன்  வந்த  பரம்பொருளாகிய   சிவபிரானை  ஆங்குத்  தோன்றிய  உமாதேவியாராகிய  அருட் சக்தி  காட்டலால்  தெளிந்தான் “  என்று  கேட்கப்படுதலானும்  ,

                                                 “மெய்யருளாந்

     தாயுடன்  சென்றுபின்  தாதையைக்  கூடி”

என்று  பட்டினத்தடிகள்  அருளினமையானும்,

   “அவனருளே  கண்ணாகக்  காணி  னல்லால்”

எனவும்  போந்த  திருவாக்குக்களானும்  இவ்வுண்மை  நன்கு  புலனாம் .

    “ஆங்கவ  நருளாற்  பத்தி  நன்குண்டாம்”

என்றபடி  இறைவனை  அடைதற்கு  மிக  முக்கியமான  பத்தியும்  அவனருள்  வழி  யுண்டாமெனின் ; வேறிதன்  பயனை  எவ்வாறுரைப்பேன் !  அப்பெருமான்  பரங்கருணையின்  பயனாக  முடிவில்  நாம்  பெறத்தக்க  பொருள்  அப்பெருமானே  யாகும் . இதனினுஞ்  சிறந்த  பயன்  யாதுள்ளது ? சிவ  நேசர்களே ! இவ்வுலகத்தும்  விரைவில்  தோன்றி  யழிதன்  மாலையவாகிய  சிற்றின்பந்  தரும்  பொருள்களைப்  போலாது  உலப்பிலா  இன்ப  உருவமாகிய  அவ்விறைவனையே  தரும்  மாட்சி  மிக்க  அக்கருணையைப்  பெறுதற்குரிய  செயலையன்றி  வேறு  யாம் செயக்  கிடப்பது  யாதுளது ?  மணிவாசகனாரும்,

 “தந்ததுன்  றன்னைக்  கொண்டதென்  றன்னைச்

            சங்கரா  யார்கொலோ  சதுரர்

  அந்தமொ  ன்றிலா  ஆனந்தம்  பெற்றேன்

            யாது  நீ  பெற்றதொன்  ரென்பால் “

என்று  இப் பேரானந்தப்  பெருஞ்செல்வப்  பேறாகிய  அவர்  கருணையாற்  பெற்ற  தம்  அநுபவ  உண்மையை  நம்மனோரும்  உய்ய  வெளிப்படுத்தி  யருளினார்கள் . இத் திருவாசகத்தில்  ஒரு  பண்டமாற்றுச் செய்தியை நாம் அறிகின்றோம் .  அஃதாவது ,  எல்லாவறிவும்  எல்லாவற்றாலும்  நிறைந்த  மலரகிதராகிய  சிவபிரான்  தம்மைக்  கொடுத்துச்  சிற்றறிவுஞ்  சிறு  தொழிலுமுடைய  சீவனை  அதற்கு  மாற்றாகக்  கொள்கின்றா  ரென்பதே  அப் பெருமானைப்  பெற்றமையாற்  சீவன்  எய்திய  பயன்  அளப்பிலா  ஆனந்தம். இச் சீவனால்  அவ்விறைவன்  பெற்றது  யாதுமின்று  ,  என்னே  அவர் கருணைத் திறம்  !  மனத்தான்  நினைத்தற்கும்  வாயாற்  பேசற்கும்  அளவுபடுவதின்றா கலின் , இம் மட்டிற்  சிவபிரான்  கருணை  யென்னும்  பகுதியை  நிறுத்தி  மேற்  சீவர்களின்  கடமையைப்  பற்றிச்  சிறிது  கூறுவேன்  . 

6 .  சீவர்களின்  தன்மை

      ஆன்மா  எப்பொருளைச்  சார்ந்ததோ  அப் பொருளின்  வண்ணமாந்  தன்மை  உடையதென்பது  வேதாகம  சித்தாந்தம் . வெளி  இருளோடு  கூடுங்கால்  இருளாகவும் ,  ஒளியோடு  கூடுங்கால்  ஒளியாகவும்  ஆதல்போலவும் ,  ஒரு  பளிங்கு  செந்திறத்  தைச்  சார்ந்துழிச்  செம்மை யாகவும்  ,  கரு  நிறத்தைச்  சார்ந்துழிக்  கருமையாகவுந்  தோன்றுதல்  போலவும் ,  ஆன்மா ,  மலவிருளிற்  கலந்துழி  அதன்  மயமாகவும் ,  சிவ  விளக்கத்திற்  பொருந்துழிச்  சிவமயமாகவும்  விளங்கும்  . அவ்வப்பொருளைச்  சாருங்காற்  பிரிப்பின்றி  அத்துவிதமாகவே  சம்பந்தமுற்றுக்  கலந்திருக்கும்  . மலத்தோடு  சம்பந்தமுற்றுழி  அந் நிலையும்  அத்துவித நிலையாமோ வெனின் ,  அதுவும் ,  ஒன்றென்றாவது  வேறொன்றாவது  கூறப்படாமையின்  அத்துவிதமேயாம்  .  இதனை,

“ஆணவத்தோ  டத்துவித  மானபடி  மெஞ்ஞானத்

தாணுவினோ  டத்துவிதஞ்  சாருநா  ளெந்நாளோ

என்னுந்  தாயுமானார்  திருவாக்கும்  வலியுறுத்தும் . ஆகவே  தனக்கென  ஒரு  சுதந்தரமுமின்றிச்  சார்ச்சிப்பொருள்களின்  தன்மையே  தன்  தன்மையாகக்  கோடல்  ஆன்மாவினிலக்கணங்களுள் முக்கியமானதொன்றாம்.  இன்னும்  இச் சீவன்  சகச மலமாகிய  ஆணவத்தாற்  பிணிப்புண்டு  அதன்  நீக்கத்தின்  பொருட்டு  இறைவனால்  தரப்பட்ட  மாயாமல  கன்ம மலங்களின்  காரியங்களாகிய  தநு கரண  புவன  போகங்களைப்  பெற்று  மாறி  மாறிப்  பிறக்கும்  இயல்புடையதாம் . மனம்  புத்தி  அகங்காரம்  சித்தமென்னும்  அந்தக்கரணங்களாகிய  கருவிகளாற்  பொறிகளின்  வாயிலாகப்  புலன்களை   நுகர்ந்து  அதனால்  மீண்டும்  மீண்டும்  வந்தேறுகின்ற  கன்மங்களையுடைத்தாம் .  இன்பந்தருவனவற்றில்  விருப்பும் , துன்பந்தருவன வற்றுள்  வெறுப்புமுடையதாகும்.  இன்னும்  இவ்வான்மாவினிலக்கணம் , வகைவிரிகளாற்  பலதிறப்படும்.  அவை  விரிந்த  சைவநூல்களிற்  காண்க .

7 . கடமையின்  தன்மை

         இனி,  கடமையாவது  இன்னதெனச்  சிறிது  கூறுவேன் . இவ்வுலகத்து  அறிவுள்ள  ஒவ்வொருவரும் , நாம்  செய்யவேண்டியவை  இவையிவையென  நூன் முகமாகவும்  ,  பெரியார்  முகமாகவும்  உணர்ந்து  எதிர்ப்பயனைப்  பற்றிச்  சிந்தியாமல்  மேற்கொள்ளுங்காரியங்களுள் இன்றியமையாது  செய்யத்தக்கவை  எவையோ  அவை  கடமை  யெனப்படும் . நன்  மாணாக்க னொருவன்  ஆசிரியன்  ஒறுத்தல்  கருதி  வெறுப்புறாது  அவனாணைவழி  நின்று  கற்றுவருதலும்  இக்  கடமையாகும் . போர்  வீரனொருவன்  போர்  முனையிற்  சென்றவுடன்  தனக்கு  வரும்  வெற்றி  கருதி  முற்படலும் , தோல்வி  கருதிப்  பிற்படலுஞ்  செய்யாது  நிலை  நின்று  பொருதலும்  அவன்  கடமையாகும்  .  அற நூல்களில்  நித்தியகருமாநுட்டானங்களைப்  பற்றிக் கூறி, அவற்றைச்  செய்தலால்  வரும்  பயனையும்  விரித்துப்  பின் ,  இப் பயன்களைப்   ஆராய்ந்தறிந்தே  செய்தல்  வேண்டுமென்று  எவரும்  கருதல்  கூடாதெனவும் , நாடோறும்  செய்யவேண்டிய  கன்மங்களைப்  பயன்  விசாரியாதே  செய்து  தீரவேண்டுமெனவும்  ,  அங்ஙனஞ்  செய்தல்  ஒவ்வொருவனுக்குங்  கடமையாமெனவுங்  கூறுதலும்  ஈண்டுக்  கருதற்பாலது. அறிவுவலி  படைத்தார்  ,  பயனை  விசாரித்தல்  மிக  நன்றே. அஃதியலாதாயின்  விசாரித்தறியும்வரை  கன்மங்களைச்  செய்யாதொழிதல்  தவறென்பதே  ஈண்டுத்  துணியற்பாலது பயன் ,   விசாரித்தலின்றிச்  செய்யினும்  செய்தாரைச்  சார்தலொருதலை  வரையாது  கொடுக்கும்  வள்ளன்மையு டையோர், இவற்கு  இன்னது  செய்தல்  வேண்டும் ,  இதற்கு  இன்னது  செய்தல் வேண்டும்  என்னும்  நியதியின்றி  நேர்ந்த  நேர்ந்தபடி  கொடுத்தற்குக்  காரணம்  அவருள்ளத்திற்  பதிந்து  கிடக்குங்  கொடைக்  கடமையேயாகும்  .  இது  நோக்கியே  ,  அவர்  கொடைமடம்  பட்டோரென்று  கூறப்படுவர் . முல்லைக்குத் தேரும்  மயிலுக்குப்  போர்வையும்  வேண்டாதனவாகவும் , அப்பொருள்களின்  இயற்கைத்  தளர்  நிலையைக்  கண்டவுடன்  மன நெகிழ்ந்து  இரக்கமுற்று  அவற்றிற்குப்  பேரிடையூறு  வந்ததாகக்  கருதிப்  பாரி  முதலியோர்  இயைபில்லாத்  தேரும்   போர்வையும்  ஈந்தனரே  .  இவ்வீகை  பயன்  குறித்ததாமா?  அவர்  தமக்கு  இயற்கையின்  அமைந்துகிடக்குந்  தண்ணளியோடு  கூடிய  கொடைக்  கடமையேயன்றி  வேறென்  சொல்வது ?   முல்லைக்கொடி  படர் கொம்பின்றித்  தளருமேல் , தன்  ஏவலாளரைக்  கொண்டு  தக்கதொரு  கொழு  கொம்பை  நிறுத்தல்  கூடாதா?  அக்  கொழு கொம்பினும்  இத் தேரினால்  அக் கொடிக்குக்  கிடைத்த  விசேட  நலம்  யாதுளது  ?  அங்ஙனமாகவும்  தேரை  ஈந்ததற்குக்  காரணம் , பாரிவள்ளல்  தேரேறி  வருங்காற்  கொடியின்  தளர்  நிலையைக்  கண்டதும் ,  தனது  இயற்கைத்  தண்ணளியால்  இன்னது  செயற்பாலதென்றுணரும்  அத்துணையுந்  தாழ்க்க  மனமின்றி  அக்கணமே  தேரை  நிறுவினார்  என்பதே இதனானன்றே ,

      “கொடுக்கிலா  தானைப்  பாரியே  யென்று

                        கூறினுங்கொடுப்  பாரிலை”

என்று  நம்  சுந்தரமூர்த்தி  சுவாமிகள்  அவ்  வள்ளலின்  கொடைத்  திறத்தைப்  பாராட்டியருளினார்கள் .  நம்  மக்களொவ்வொருவரும்  தம்  தேயம் , மொழி , சமய  முதலியவற்றை  இயன்றவரை  பேண  முற்படலும்  தத்தங்  கடமையாகும் . இக்கடமை  உலகியற்  கடமை , சமயக்கடமை  என  இருவகைப்படும்  அவற்றுள்  ஈண்டுக்  கூறப்பட்டன  சில  உலகியற்  கடமைகளாம் . இன்னும்  இது  சம்பந்தமாகக்  கூறப்புகின்  மிகவிரியுமாதலின், எடுத்துக்கொண்ட  பொருளுக்  கியையுமாறு  நம்  சமயக்  கடவுளராகிய  சிவபிரான் மாட்டு  நாம்  செய்யவேண்டியவைகளை  ஈங்குக்  கூறுவேன் .

8 . சிவபிரானிடத்துச்  செய்யவேண்டிய  கடமைகள் .

      சைவர்களாகிய  நாமெல்லாம்  நம்  சமயக்  கடவுளாகிய  சிவபிரானை  உண்மை  அன்போடு  வழிபடுதல்  வேண்டும் . அங்ஙனம்  வழிபடுங்கால்  இதர  தெய்வங்களைப்  பழித்தல்  கூடாது . நம்  தெய்வத்தையே  போற்றுவோமாக  ஆயின் ,  ஒரு  சாரார்  எல்லாத்  தெய்வங்களும்  ஒன்றேயாதலின் , அத்  தெய்வங்க  ளெல்லாவற்றையும்  சமமாகக்  கருதி   அன்பு  செய்தல்  வேண்டு  மென்பார் . அன்னார்  கூற்று  மரபு  பிழைபட்டதொன்றாதலின் ,  பொருந்தாமை  காட்டுவதும் .ஒவ்வொருசமயத்தாருந்  தத்தஞ்  சமயக் கடவுளைச்  சிறப்பு வகையானும்  பிற  சமயக்  கடவுளைப்  பொது வகையானும்  அன்பு  செய்யலாமன்றிச்  சமநிலையாக்  கோடல்  பத்தியின்  இலக்கணமன்றாம் . தெய்வங்களெல்லாம்  உண்மை  நிலையில்  முடிவில்  ஒன்றேயெனினும்  அவ்வுண்மை  தத்துவ ஞானிகளுக்கன்றி   மற்றையோர்க்கு  உணர்வரிதாம் .  சாமாநியர்கள்  அந்  நிலையைப்  பற்றிப்  பேசல்  பேச்சளவேயன்றி  அநுபவவளவிற்  கோடல்  அரிது .  எப் பொருளும்  அநுபவத் தினன்றிப்  பேச்சளவி  னொழிதல்  பயனின்றாம் .  இன்ன  இன்ன  ஒழுக்கங்கள்  நல்லனவென்று  பேசிவிட்டு  அவற்றைக்  கடைப்பிடியாவிடின்  ,  அப்  பேச்சாற்  பயனென்னை ?

“சொல்லுதல்  யார்க்கும்  எளிய  அரியவாம்

 சொல்லிய  வண்ணம்  செயல் “

என்பதும்  ஈண்டுக்  கருதற்பாலது.  சிறப்பென்பென்பது  ஓரிடத்தன்றிப்  பல விடத்துஞ்  சேறலாகாது . பல்லிடத்துஞ்  சேறல்   சாமாநிய  பத்தியேயாகும்  ஒரு பெண்மகள்  தன்னைக்  கைப்பிடித்தகாதலனிடத்துச்  செய்யும்  அன்புக்கும்  தன்  சோதரர்  சுற்றத்தாரிடத்துச்  செய்யும்  அன்புக்கும்  வேறுபாடு  உண்டன்றோ?  முன்னையது  சிறப்பு  அன்பும் , பின்னையது  பொது  அன்புமாம் .   சிறப்பன்பை  வேறோரிடத்துச்  செய்யின் ,  பிறழ்ச்சிக்குற்றம்  வருதலோடு   சிறப்பிலக்கணமும்  பிழை படும் . பொது  அன்பை  உரிய  சோதரரிடத்துப்  போல்  மற்றையோரிடத்துஞ்  செய்யலாம் .  அதனால்  வருங்  குற்றம்  யாதுமின்றாம் .  அவ்வாறே  நமது  சமயக்  கடவுளிடத்துச்  செய்யும்  பத்தி  சிறப்பும் ,  ஏனைத்  தேவர்களிடத்துச்  செய்யும்  பத்தி  பொதுவுமாம்  .  ஆனால்  அப்  பெண்மகள்  தன்  உயிர்க்காதலனைப்  பாராட்டி  ஏனைச்  சோதரர்  முதலியோரையும்  இகழாது  உபசரித்தல்  போல  நாமும்  நம்  சமயத்  தெய்வத்தைப்  பாராட்டுதலோடு  மற்றைத்  தேவர்களையும்  இகழாது  அவரவர்க்  கேற்றவாறு  உபசரித்துப்  போற்றுதல்  கடனாம் . இவ்வாறு  தத்தஞ்சமயத்  தெய்வங்களிடத்து வைக்கும்  சிறப்பன்பே  நல்லின்பந்  துய்ப்பதற்குரியதாகும் .  இங்ஙனமின்றி  எல்லாம்  சமஞ்  சமமென்று  கூறுவார்  ஒன்றினும்  நிலைபெறாது  தமக்குரிய  ஆன்மப்பேற்றை  முடிவில்  இழந்தவரே யாவர் .  சமய  சாத்திர  விசாரத்தால்  தத்துவ  நிலை  ,  அதிகார  நிலை முதலிய  தாரதம்மியங்களைக்  கண்டு  கூறல்  அவரவர்  அன்பு  நிலைப்படுதற்கு  உபயோகமாதலானும் ,  முன்னைய  சமயாசாரியர்க   ளெல்லாரும்  அங்ஙனங்  கூறிப்  போந்தமையானும் ,  அது  நிந்தையாகாது . நிந்தையாவது  துரபிமானத் தால்  உள்ளதை  இல்லதாகவும் ,  இல்லதை  உள்ளதாகவும்  கூறிப்  பழித்தலேயாம் 

“உள்ளேன்  பிறதெய்வம்  உன்னையல்லா

   தெங்க  ளுத்தமனே “

“கற்றறியேன்  கலைஞானம்  கசிந்துருகே  னாயிடினும்

    மற்றறியேன்  பிறதெய்வம்”

என்னுந்  திருவாக்குக்கள்  நிந்தையின்றிச்  சிறப்பன்பின்  இலக்கணத்தை  வெளிப்படுத்துதலுணர்க.  ஆகவே ,  நாம்  நம்  பதியாகிய  சிவபிரானிடத்து  விசேட  பத்தியாகிய  உண்மையன்பு  செய்தல்  கடமையாம் .  பிற  தெய்வங்களையும்  உரியவாறு  போற்றுதலைப்பற்றி  விலக்கின்மையும்  உணர்தல்வேண்டும் . அஃது  அவரவர்  மன நிலைக்கேற்ப  மேற்கொள்ளத்  தக்கதொன்றாம் .  

      இனி, சைவர்களாகிய  நாம்  நம்  இறைவனை  முறைப்படி  வழிபடுதற்கு  இன்றியமையாது  மேற்கொள்ளத்தக்கது  தீக்கையேயாகும் .  தீக்கை  இல்வழி  திருவைந்தெழுத்துப்பெருமறை  முதலியவற்றைச்  செபித்ததற்குக்  கூடாமை யானும்  ,  சரியை  முதலிய  நால்வகை  நெறியொழுக்கம்  பெறப்படாமை யானும்  அஃது  இன்றியமையாத  தொன்றேயாம் .  தீக்கையாவது  ஆன்மாக்க னிடத்துள்ள  சிவசத்தியை  வெளிப்படவொட்டாது  தடையாக  மறைந்து  நிற்கும்  மலசத்தியைக்  கெடுத்துச்  சிவத்துவத்தைக்  கொடுப்பதாகிய   சிவசத்திக்  கிரியையாகும் .   இன்னும்  தீக்கையினாலேயே  வீடு  முதலிய  எல்லா  நலன்களும்   சித்திக்குமென்னும்  உண்மையை  வாயு  சங்கிதை  முதலிய  புராணங்களானும்  ,  விரித்துக்  கூறுஞ்  சிவாகமங்களானு  முணர்க இத் தீக்கை  பலதிறப்படும் .  அவற்றின்  விளக்க  விசேடங்களை  யெல்லாம்  ஆகமங்களுள்  தெளிவாக  உணரலாம் . சமய  தீக்கை  பெற்று  இறைவன்  உருவத்  திருமேனியைப்  புறத்தொழில்  மாத்திரையான்  வழிபடுதலாகிய  சரியையும்  ,  விசேட  தீக்கை  பெற்று  அருவுருவத்  திருமேனியைப்  புறத் தொழில்   அகத்தொழில் இரண்டானும்  வழிபடுதலாகிய  கிரியையும்  ,  அருவத்  திருமேனியை  நோக்கி  அகத்தொழில்  மாத்திரையான்  வழிபடுதலாகிய  யோகமும் ,  நிருவாண தீக்கை  பெற்று  இம்  மூன்றனையுங்   கடந்த  உண்மை  யறிவின்ப   வடிவமாகிய  இறைவன்  சொரூபத்தை  வழிபடுதலாகிய  ஞான  நிலையும்  ஆகிய  இந்  நால்வகை  நெறிகளுள்  ,  தம்  தகுதிக்கேற்ப  இயன்றதொன்றை  அநுட்டித்து  வருதல்  ஒவ்வோரான்மாக் களுக்கும்  உரிய  கடமையாகும்.

          அற  நூல்களிற்  கூறப்பட்ட  அருள் ,  கொல்லாமை ,  புலாலுண்ணாமை , கட்காம  நீத்தல்  முதலிய  உயர்ந்த  ஒழுக்கங்களெல்லாம்  ஈண்டுக்  கூறிய  சைவ  நெறிக்கண்  அடங்குமாதலின்  , வேறாக  விரித்திலன்  .  வைதிக  குலத்திற்   பிறந்தாருள்ளுஞ்  சில  நவீன  அறிவுடையோர்  ,  கிரியைகள்  கேவலம்  மெளட்டியர்களுக்கேயன்றி  ,  அறிவுடையார்  உண்மையுணர்ந்து  அந்தக்கரணங்களை  மாத்திரம்  திருத்திக்கோடல்  போதியதெனவுங் கூறி  நித்திய  கன்மங்களைப்  பொருட்படுத்தாது  காலத்தை  வறிதே  கழிக்கின்றனர் ;  அவரெல்லாம் ,  கன்மானுட்  டானங்களா  லன்றிச்  சித்த  சுத்தி  யுண்டாகாதென்று  அநுபவ  ஞானிகளாகிய  நம்  பண்டையோர்  கூறி  அவ்வாறே  யொழுகிய  உண்மையை   ஒரு  சிறிதும்  உணர்ந்திலர் .கீதையிற்  கண்ணபிரான்  ,  தத்துவஞானியுங்கன்மத்தை  விடல்  தவறெனவும் ,  மேற்கோ டல்   இன்றியமையாத  தொன்றெனவும்  தடைவிடைகளால்  அருச்சுனற்  குபதேசித்ததையும்  உணர்ந்திலர் .  உண்மை  ஞானி  யொருவர்  எல்லாப்  பந்தங்களையும்  ஒருவிச்  சுத்த  ஞான  வொளியி லியைந்  திருக்குங்காற்  கன்மங்கள்  அவரைத்  தாக்காமல்  தாமே  ஒழியும்  .  அந்  நிலையைப்பற்றி  ஈண்டுச்  சங்கித்தல்  இயைபின்று .  கன்மந்  தானே  ஒழியப்பெற்ற  ஒரு  மகா  ஞானியை  நோக்கி  ஒருவன்  “அடிகாள் , தேவரீர்  சந்தியோபாசனை  செய்யா திருத்த  லென்னை ? “  என்று  வினாவினானாக  , அவர்

“அஞ்ஞானத்  தாய்மரண  மானாள்  அஃதொன்றோ

மெய்ஞ்ஞானக்  கான்முளையும்  மேவினான் —  இஞ்ஞானலந்

தன்னில்  மரண  சனன இரு  சூதகத்தேன் 

உன்னலெங்ஙன்  சந்திசெயல்  ஓர் “

என்று  விடை  கூறினார்  .  அஃதாவது  :  “அஞ்ஞான  வுருவமாகிய  தாய்  இறந்தாள்;  அறிவுருவமாகிய  குழந்தை  பிறந்தது ;  இவ்   விருவகை  ஆசெளசத் தையும்  உடையனா  யிருக்குங்கால்  எவ்வாறு  யான்  சந்தியோபாசனை  செய்வல்”  என்பதாம் .  ஆதலிற்  கண்ணப்பர்  முதலிய  முறுகிய  அன்புடையார்  செயலை  விதியாகக்  கொண்டு  அத் தகுதி  யில்லாத  நாமும்  இறைச்சி  நிவேதனத்தை  இறைவனுக்குச்  செய்தல்  பொருந்துமா?  அவர்  இறைவன்  கண்ணிற்  புண்ணீர்  வார்தல்  கண்டு  வருந்தி  அதற்கு  மாற்றாகத்  தங்  கண்ணைப்  பறித்து   வைத்து  மகிழ்ந்தாரன்றே !  அத் துணிவு  நமக்கும்  வரினன்றே  அவர்  செயலை  நாமுங்  கோடலமையும் .

அன்பர்களே !

இக்  குதர்க்க  நெறியையொழித்து   நமக்கு  இறைவன்   அருளிய  வேதாகமங்களில்  விதிக்கப்பட்ட  செயல்களை  இயன்றவரை  விடாது  செய்மின்கள் ;  புலாலுண்ணல்  முதலியவற்றிற்கு  முதிர்ந்த  அன்புடைச்  சிவச்  செயலாளராகிய  அடியார்களை  உதாரணங்  காட்டிப்  புரைபடாதீர்கள் ;  சமயாசாரமாகிய  நித்திய  கன்மங்களை  விடாது  செய்ய  முந்துமின்கள் .   ஒவ்வோரோழுக்கங்களையுஞ்  சொல்லளவிற்  சுருக்கியுஞ்  செயலளவிற்  பெருக்கியுங்  காட்டுமின்கள்  ;  நம்  சமயக்கடவுளைச்  சிவலிங்காதி  திருமேனி களிடத்தும் ,  சிவனடியாரிடத்து  மிருப்பதாகக்  கண்டு  விசேட  அன்பைச்  செய்மின்கள் ;  பிற  சமயங்களும்  இறைவனரு  ளிருந்தவாறு  ஆன்ம  பக்குவ  நோக்கி  வெளிப்பட்டன  என்னும்  உண்மை  யுணர்ந்து  அவற்றை  இகழன்மின்கள் .  இளமைப் பருவம்  காமாதிகளை அனுபவித்தற்கென்றே  கருதிக்  கழிக்காது ,  நம்  பெருமானை  வழிபட்டுய்தற்கு  மிக  ஏற்றதொரு   பருவமென்றெண்ணுமின்கள் ;  ஆலய  வழிபாட்டையும்  விக்கிரகாராதனத் தையும்  இயன்றவரை  இடைவிடாது  செய்ய  விரும்புமின்கள்  ;  உரிய  கருவி  நூல்களையும்  ,  அவற்றின்  பயனாகச்  சமய  நூல்களையும்  நடுநிலையுடன்  ஆராய்மின்கள் ;  தாங்கொண்டதே  பொருளெனக்  கடைப்பிடியாது  தம்மினுந்  தாழ்ந்தார்வாய்  உண்மை  வருமாயின்  அதனை  மகிழ்ந்து  ஏற்றுக்கொண்  மின்கள் ;  நூல்களிற்  கண்டவை  ஒழுக்கத்திற்  காட்டற்கன்றிக்கலாம்  விளத்தற்  குபயோகமென்  றெண்ணாதீர்கள் ;  நம்  சமயத்தையும்  ,  மொழியையும் பிற  சமயத்தார்க்கும்  பிறமொழியாளர்க்கும்  வருத்தமுண்டா மாறின்றிப்  பேண  முற்படுமின்கள்;  பிறர்  நம்  சமயம்  மொழிகளை  அறியாமையான்  இகழின்  அவர்  மனம்  வருந்தாது  ஐயப்பாட்டிற்கு  மாத்திரந்  தக்கவாறு  மறுமொழி  தந்து  அவரைத்  திருத்துமின்கள் ;  பின்னுந்  திருந்தாராயின்  அவரறியாமைக்  கிரங்கி  அஃதொழிய  நம்கடவுளை  வேண்டுமின்கள்  ;  சிவபிரான் ,  விரும்பிக்  கருணைபாலித்தற்குரியதாக  அருளறம்  என்னும்  சிறந்த  அமிழ்தத்தை  முதலில்  நும்  நெஞ்சக்கலத்திற்  கொண்மின்கள் . நண்பர்களே ! இவையெல்லாம்  சீவர்களாகிய  நம்  கடமைகளேயாம் .  இத்துணைக்  கடமைகளுள்  மிக  முக்கியமான  கடமையொன்று  சிவபிரானை  நோக்கச்  சீவர்களுக்குண்டு.  அதனையும்  ஈண்டுக்  கூறுவேன் .

                                        9 . ஓரின்றியமையாக்  கடமை

அஃதாவது  இறைவனை  நோக்க  ஆன்மா  ஒருவித  சுதந்தரமுமின்றிப்  பர தந்திரம்  உடையதாகலின் ,  ஆணவ  மலத்தாற்  பிணிப்புண்டு  கிடக்கும்  பெத்தகாலத்தும் ,  தநுகரணங்களைப்  பெற்றுச்  சிறிது  அறிவு  விளக்கமுற்று  உபாசனாதிகளைச்  செய்யும்  மத்திய  காலத்தும் ,  மலசத்தி  அறவே   ஒழியப்  பெற்றுச்  சிவத்துவமெய்திப்  பேரின்ப  நுகரும்  முத்திக்  காலத்தும்  தன்பாலிடைவிடாதமைந்து  கிடக்கும்  அடிமைத்  தன்மையேயாம் .   அடிமையாவது ,

    “கண்டவிவை  யல்லேனா  நென்றகன்று  காணாக்

              கழிபரமு  நானல்லே  னெனக்கருதிக்   கசிந்த

      தொண்டு”

என்றபடி  காணப்படும்  பாசகாரியப்  பொருள்களும்  மேலாகிய  பதிப் பொருளும்  யானல்லே  னென்று  கருதியவழி  முன்போல  முனைத்தலின்றி  ஓங்குணர்வின்  உள்ளடங்கி  நிற்றலாம் .  இவ்வடிமையின்  முக்கிய  இலக்கணமாகக்  கருத வேண்டியது , ஆண்டவனாகிய  சிவபிரான் ,  ஒப்பாரு  மிக்காருமின்றி  யாவர்க்கு  மேலாந்  தலைவ ரெனவும்  அடிமையாகிய  யான் ,  என்னின்  ஒப்பானதுங்  கீழானதுமாகிய  பொருளொன்றுமின்றி  யானே  மிகக்  கீழானவா னெனவும்  உள்ளவா  றுணர்ந்தொழுகலேயாம்.  இது  கருதியே ,

“யாவர்க்கு  மேலாம்  அளவிலாச்  சீருடையான்

 யாவர்க்குங்  கீழாம்  அடியேனை”

என்றார்  மணிவாசகப்  பெருமானும் . நம்  சமயக்  கொள்கை  பலவற்றுள்  மிக  முக்கியமானதும்  இதுவேயாம் .  அதனாலன்றே ,

“தாழ்வெனுந்  தன்மையோடு  சைவமாஞ்  சமயஞ்சாரும்

 ஊழ்பெறலரிது”

என்று  கூறும்  சிவஞானசித்தியும் ,  இத் தொண்டு  அடிமைநெறி (தாத மார்க்கம்)  ,  தோழநெறி (சக மார்க்கம் ),  மகன்மை  நெறி (சற்புத்திர மார்க்கம்)  உயர்நன்நெறி (சன்மார்க்கம் )  ஆகிய  நால் வகை ஒழுக்கத்தினும்  ஆன்மாவை  விட்டு  நீங்காததொன்றாம் .   “எவ்விடத்தும்  இறை யடியை  “  எனவும் ,  “தொழும்பாகும்  அங்கு “  எனவுங்கூறியபடி  வீட்டு  நிலையினும்  இவ்வான்மா  அடிமையே   யாமெனின் ,  வேறிதன்  மாட்சியை  எங்ஙனம்  கூறுவேன்  !  உள்ளவாறு  ஓரான்மா  இறைவனுக்கு  யான்  என்றும்  அடிமையே  யென்றுணர்ந்து  முனைப்பின்றியொழுகுமாயின்  வீட்டின்பமாகிய  பயனைச்  சிவபிரான்  தாமே தருவர் , வீட்டு நிலையை  விரும்புதலும்  அடிமை  யிலக்கணத்துக்குக்  குற்றமா  மென்றால் ,  வேறு  கைம்மாறு  கருதல்  கூடாதென்பதைப்  பற்றிக்  கூறுதல்  மிகையே .  வீடென்பது  எல்லாவற்றையும்  விடுதலன்றே !  அவ்  வேண்டாமையை  வேண்டல்  அவசியமென்று  நூல்கள்  கூறவும் ,   அதனை  விரும்புதலுங்  குற்றமென்ப  தெங்ஙனம்  பொருந்துமெனின் ;  ஆன்மா,  தன்  கடமை  இன்னதென்றறிந்து  மேற்கொள் ளின் ,  இறைவனுந்  தன்  கடமையைச்  செய்வன்  என்பது  தேற்றமன்றே  !  அஃதுணர்ந்தும்  ,  சிறிதுஞ்  சுதந்தர  மில்லாத  இவன்  எற்கு  இன்னது  வேண்டுமென்று  விரும்புதலுந்  தவறேயாம் .  இவ்  வுண்மையை , 

“மண்மேல்  யாக்கை  விடுமாறும்

வந்துன்  கழற்கே  புகுமாறும்

அண்ணா  என்ணக்  கடவேனோ

அடிமை  சால  அழகுடைத்தே “

என்னுந்  திருவாக்கானும்  உணர்க .  அஃதாவது  யான்  அடிமையென்றுணர்ந் தபின்   நின்னை  வழிபடுதலேயன்றி  இவ்வுடல்  கழியுமாற்றையும்  நின்  திரு வடிப்பேறு  பெறும்  வழியையும்  ,  யான்  எண்ணுதற்  குரியனோ ;  அங்ஙனம்  எண்ணுவேனாயின்  என்  அடிமை  யிருந்தவாறு  மிக  அழகிது  என்பதாம் .    

“சார்புணர்ந்து  சார்பு  கெடவொழுகின்” .

என்றபடி  அடிமைநெறி  முதலிய  மூன்று  நெறிகளினும்  ஒழுகுவோர்  வீட்டின்பத்தில்  விருப்புற்று  மேன்மேற்  செல்லுவர் .  நான்காவதாகிய  சன் மார்க்கத்  தொழுகுவோர்  அவ்விருப்பமின்றித்  தங்  கடன்  இதுவென  உணர்ந்து  சிறிதும்  முனைத்தலின்றி  அடங்கிநிற்பின்  சிவபிரான் ,  தங்  கடனாகிய  பேரின்பளித்தலை  விரைந்து செய்வர் . 

           ஆசிரியர்  சேக்கிழார்  சுவாமிகளும்  இவ்வுண்மை  அடியாரைக்  கூறுங்கால் , 

“கேடும்  ஆக்கமும்  கெட்ட  திருவினார்

ஓடும்  செம்பொனும்  ஒக்கவே  நோக்குவார்

கூடும்  அன்பினில்  கும்பிட  லேயன்றி 

வீடும்  வேண்டா  விறலின்  விளக்கினார் “

என்று  பாராட்டியிருக்கின்றனர் .  இவ்  வருட் பாசுரத்தின்  அருமையை  என்னென்பேன் !  இத் திருத்தொண்டின்  மாட்சியைப்  பற்றித்  தனியே  ஒரு  வியாச  மெழுதி  வெளிப்படுத்தக்  கருதியுளே  னாதலின்  ஈண்டு  விருத்திலன். முடிவாகக்  கூறுமிடத்து , இவ் வடிமையே  ஆன்மா  பயன்  குரியாது  மேற்கொள்ள வேண்டுவ தொன்றென்பது  இவ்வாராய்ச்சியால்  விளக்கமாம் .

                                                        10 .  இதன்  பயன் 

      இனி , இவ்  வின்றியமையாக்  கடமையாகிய  அடிமையின்  பயனைப்பற்றிச்  சிறிது  கூறுவேன்  .  அதன்  பயன்  வீட்டின்பமே  யென்பது  முன்னர்ப்  பெறப்பட்டதாயினும் ,  இடைக்கண , உண்டாம்  பயன்களும்  உள . ஆன்மா , எல்லாம்  அவன்  செயலேயன்றித்  தன்  செயலென் றென் றுணர்ந்து  அருள்  வழி  நிற்பின் ,  அதனாற்  செய்யப்படுங்  கன்மங்கள்  அதனைச்  சாரா. கன்மங்கள்  கட்டு   நிலையில்  நான்  செய்கின்றே னென்று  கருதுவதால்  ஆன்மாவைத்  தாக்கும் . வீட்டு  நிலையில் யான்  எனதென்னும்  இருவகைப் பற்றுமின்றி  எல்லாம்  அவன்  செயலேயென்  றுணர்ந்து  அருள்வழி  நிற்றலால்  அக்காலத்துச்  செய்யப்படுங்  கன்மங்கள்  அவ்வான்மாவைத்  தாக்கா . பிராரத்த  வினை   அநுபவித்தே  தீரவேண்டு  மெனினும்  , அஃது  உடலூழாய்க்  கழியுமன்றி  உயிர்க்கு  இன்ப  துன்பங்களைச்  செய்யாதென்பதாம் . இவ் வுண்மையை  ,

“நாமல்ல  இந்திரிய  நம்வழியி  னல்லவழி

நாமல்ல  நாமு  மரனுடைமை  —  யாமென்னின் 

எத்தனுவி  னின்று  மிறைபணியார்க்  கில்லைவினை

முற்செய்வினை  யுந்தருவான்  முன் “

என்னும்  மெய்கண்டார்  திருவாக்கான்  உணர்க . இதனால்  எல்லாம்  அவன்  செயலென்  றிருத்தல்  மிக  நலமென்று  போதரலான் ,  தாம்  செய்யுந்  தீவினைகளுக்கும்  இதனையே  பிரமாணமாகக்  காட்ட  முற்படலாமா  வெனின் , நன்று  நன்று  !  எப்பொருளையுஞ்  சிவமயமாகக்  கண்டு  தானொரு  முதலென்பதின்றி  அவனே  தானேயாகிய  அந் நிலையில்  நிற்கும்  முத்தனுக்கும்  ,  கண்ட  பொருளெலாம்  இன்பஞ்  செய்வனவென்றும்  ,  அவை  எனக்கெனக்  கென்றும் , யானே  நுகரும்  முதலென்றுங்  கருதி  மலவாய்ப்பட்  டுழலும்  பெத்தனுக்கும்  எத்துணை  வேறுபாடுள  தென்பதை  உற்று நோக்குவார்க்கு  உண்மைபுலனாம் .  இதனால்  முடிவுவரை  பெரும்பயனைச்  செய்வது ,  இத்  திருத்தொண்டேயென்று  அதன்  மாட்சி  யுணர்ந்து அவ்வொ ழுக்கத்தை  மேற்கொள்ளுதலே  நம்  கடமையாமென்பதும் ,  விதி  விலக்கைக்  கடந்து  நிற்றல்  நம்மனோர்க்குப்  பொருந்தா  தென்பதும்  விளக்கமாம் .

என்  அன்புள்ள  சகோதரர்களே  ! 

      இத்  திருத்தொண்டை  இயன்றவரை  செய்தலே  சீவர்களின்  முக்கிய  கடமையென்றுணர்ந்து  நம்  பெருமானிடத்து  எஞ்ஞான்றும்  அன்புப்  பணி   பூண்டு  ஒழுகுமின்கள்  ;  பயன்  செய்வது  அவர்  கடமை  யென்பதை  உறுதியாக  நம்புமின்கள் ;  திருத்தொண்டு  புரிவார்  யாவரும்  நம்  உரிமைத்  தமரென்பதை  உள்ளவா  றுணர்மின்கள்  ; சிவபிரானாகிய  பரம  பிதாவினது  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தைப்  பெறுதற்குரிய  மக்கள்  நாமேயென்  றுணர்ந்து  பெற்று  இன்புறுமின்கள் ;  என்  புன்சொற்களிற்  பொதுளிய  பிழைகளை  என்  அறிவின்  சிறுமை  கருதிப்  பொறுத்துக்கொண்மின்கள் ;  இவ்வளவே  யான்  இப்பேரவைக்கண்  இன்று  செய்யவேண்டிய  கடமை  யென்பதை  உணர்ந்து  இக்  கட்டுரையிற்  பரந்து  கிடக்கும்  பொருள்களைப் பற்றிய  தொகையுரைக்குப்  பொறுமையுடன்  சிறிது  செவி  சாய்மின்கள் .

                                         11 .  தொகையுரை

       இத்துணையுங்  கூறியவற்றாற்  போந்த  பொருள்கள்  :- 

பரமகருணாநிதியாகிய  சிவபிரானே  வேதாகமங்களால்  ,  நிச்சயிக்கப்படும்  பரம்பொரு  ளென்பதூஉம் ,  அதனை  முழுவிலக்கணத்தோடு  ஆளுந்த லைமை , பிறர்க்கின்றாகச்  சிவபிரான்  ஒருவர்க்கே  உரித்தென்பதூஉம்,  அவர்  இக்  கருனையையே  சக்தியாகவும்  திருமேனிகளாகவுங்  கொண்டு  வெளிப்பட்டருளுவ  ரென்பதூஉம் .  தம் கருணையமுதை  அடியார்க்கு  வலிந்து  அச்சமுறுத்தியும்  ஊட்டுவரென்பதூஉம்  ,  அடியார்பொருட்டு  மிக எளியராம்  நிலையுடையரென்பதூஉம்  ,  அவர்  கருணை  அறக்கருணை  மறக்கருணை யென  இரு வகைப்படு மென்பதூஉம் ,  அக் கருணையின்  பயனாகவே  ஆணவ  மலத்தாற் பிணிப்புண்டு  கிடக்கும்  ஆன்மா  மாயா கமங்களாற்  சிருட்டியாதிகளையுற்று  அறிவு  விளங்கப்படு மென்பதூஉம் ,அதுவே,  இறைவனைக்  காண்டற்கும்  ,  ஆனந்த  வடிவனாகிய  அப்  பெருமானைப்  பெறுதற்கும்  கருவியாகவுள்ளதென்பதூஉம் , சீவர்களின்  தன்மை  இன்னவென்பதூஉம் , கடமையாவ திதுவென்பதூஉம்  ,  உலகியற்  கடமைகள் இவையென்பதூஉம் , சமய  சம்பந்தமாகச்  சிவபிரானிடத்துச்  செய்யுங்  கட மைகள்  இவையென்பதூஉம் , சமயங்களின்  சமரச  உண்மையை  இவ்வாறு  கோடல்  வேண்டுமென்பதூஉம் ,  தீக்கைபெறல்  சரியை  முதலிய  நெறிகளின்றும்  கன்மங்களை  விடாமற்  சிவபிரானை  வழிபடன்  முதலியவையெல்லாஞ்  சமயக்கடமைகளாமென்பதூஉம் , அவற்றுள்,முக்கிய  கடமை  ஆன்மா,  தான்  பெத்தகாலத்தும்  முத்திக்காலத்தும் மேற்கொள்ளத் தக்க  அடிமைத்  திறமேயாமென்பதூஉம் , அதன்  தன்மை  மாட்சிகள்  இன்னவென்பதூஉம் , அதனால்  ஆன்மா எய்தும்  பயன்  இன்ன  வென்பதூஉம்,  இத் திருத்தொண்டை  ஆன்மா  தன்  கடமையென  மேற்கொள்ளின்  ,  அதற்கு  வீட்டின்பந்   தருதலைச்  சிவபிரான்  தம்  கடமையென  மேற்கொள்வ  ரென்பதூஉம் , பிறவுமாம் .

அறிஞர்களே ! 

      யான்  இச்  சொற்பொழிவின்  தொடக்கத்திற்  கூறிய  தேவாரப்பாசுரத்தில்,

“தன்கடன்  அடியேனையும்  தாங்குதல்

 என்கடன்  பணிசெய்து  கிடப்பதே “

என்னும்  பிற்பகுதியாகிய  இவ்  விரண்டடிகளும்  முறையே  சிவபிரான்  கருணையையும் , சீவர்கள்  கடமையையும்  புலப்படுத்தி , இச்  சொற்பொழிவை  இனிது  நிறைவேற்றின  வென்பதையும்  ஈண்டு  ஞாபக முறுத்துகின்றேன் .  சைவ சமயமுஞ்   சிவதருமமுந்  தமிழ்மொழியும்  நீடுவாழ்க .  

                                                    ***************************

                      3 .  சைவசமய   விளக்கம் 

( சைவசித்தாந்த  மகாசமாஜத்தின்  இருபத்தைந்தாம்  ஆண்டு  வழாவின்  தலைமையுரை )

அன்புமிக்க  ஐயன்மீர்  !  அன்னைமீர்  !

       எல்லாம்  வல்ல  பரங்கருணைத்  தடங் கடலாகிய  சிவபெருமான்  திருவருட்   பாங்கால்,  இன்றைக்கு  இருபத்தைந்து  யாண்டுகளுக்குமுன்  தோன்றி , இதுகாறும்  சைவ  உலகிற்குப்  பல்லாற்றானும்  நற்பயன்  விளைத்துவரும்  இச்  சைவசித்தாந்த  மகாசமாஜத்தின்  கால்  நூற்றாண்டு  வழா  நிமித்தம்  இங்குக்  கூடிய  இம்  மாபேரவையில் ,  பேரறிஞர்களாகிய  உங்கள்  முன்னிலையில்  “தலைமை  தாங்குக”  என்று  இச்  சமாஜத்தன்பர்கள்  “வண்ணப்பணித்தென்னை  வாவென்ற  வான் கருணைக்கு”  யான்  பெரிதும்  கடமைப்பட்டுள்ளேன்  .  இது  பற்றி  என்  நன்றியறவையும்  வணக்கத்தையும்  இம் மகாசமாஜத்தார்க்  குரிமைப்படுத்துகின்றேன் .  சித்தவிருத்தி  முதலிய  கரணங்கள்  யாதுமில்லாத  கல்லுருவில் ,  தூய  உள்ளமுடைய  பெரியார்  தெய்வபாவனையைச்  செய்ய  ,  அத்தெய்வம்  அவ்வுருவிற்றங்கிப்  பயன்  விளைத்தலைக்  கண்  கூடாகக்  காண்கின்றோம் .  அங்ஙனமாயின்  ,  அறிவாற்றல்  நிறைந்த  உங்கள்  தூய  எண்ணங்களெல்லாம்  கருவி  கரணங்களோடுங்  கூடிய  சிறியோற்குத்  தலைவனாந்  தகுதி அமைகவென  நிகழுமாயின்  ,  ஏன்  அமையாது ? இவ்வுறுதி  கடைப்பிடித்தே  இப்பணியில்  தலைப்படலானேன் .

                                       1 .   இக்காலத்துச்   சமயநிலை .

             அன்பர்களே !    தற்கால  உலக  நிகழ்ச்சி  சமய நிலையிற்  பெரிதும்  பிறழ்ச்சி  யடைந்து  வருகின்றது . இந் நிலையிற்  பண்டைப்  பெரியோர்  வகுத்த  சமயவுணர்  வொழுக்கங்களில்  கால நிலை  கருதி  வேண்டுவன  இன்ன ,  வேண்டாதன  இன்னவென  ஆராய்ந்து  கோடல்  நன்றென்று  பல  அறிவுடையோர்  கருதுகின்றனர்.  அக்கருத்து  ஏற்றுக்கொள்ளத்  தக்கதெ னினும் ,  பழையன  கழிதற்கும்  புதியன  புகுதற்கும்  உரிய  தீங்கு  நலங்களை  ஊன்றி   நிறுத்துணர்தலாகிய  பொறுப்பு  ,  ஒவ்வோர்  அறிஞர்க்கும்  இன்றி யமையாத  தாகும் .  இப்பொறுப்பைக்  காய்தல்  உவத்தலின்றி  நடுவு  நிலைமை  மேற்கொண்டும்  முன்னைப்  பெரியார்பால்  நன்கு  மதிப்பை  நழுவவிடாமலும்  தாங்கல்  வேண்டும்  .  இக்கால  உலகம்  பழைய  உண்மைகளாகிய  உருவைப்  புதிய  ஆராய்ச்சி  என்னும்  எழில்  மிக்க  அணிக லன்களாற்  புனைந்து  வெளிப்படுத்துதலை  எதிர்பார்த்து  நிற்கின்றது . இவ்வேட்கைநிலை  உணர்ந்து  இச்  செயல்  மேற்கொள்ள  முற்பட்டாருட்  சிலர்  தம்  கற்பனையாற்  காணும்  அணிகலன்களுக்கு   அவ் வுண்மை  உரு இயையாமை  கண்டு  அவ் வுருவையே  களைந்துவிட  எண்ணுகின்றனர் .  இவ் வெண்ணம்  மிகத் தீங்கு  பயப்பதாகும்  . நம்  பண்டைய  உண்மைக்  கொள்கைகளை  மாசுபடச்  செய்து  அவற்றின்  சிறந்த  பயன்களை  நாம்  துய்க்கவொட்டாது  இடையூறு  விளைத்துவரும்  களைகளைக்  களைய  வேண்டுமென்னும்  எண்ணம்  சிறந்ததே .  அம் முயற்சியில்  தலைப்பட்ட  நம்  சகோதரருட்  சிலர்  அக்  களைகளோடு  பன்னாட்  பயின்ற  பிழைநோக்கி  நற்கதி  விளைக்கும்  நம்செந்நெறிப்  பயிரையும்  உடன்  களைந்  தெறிந்து விட்டு  ,  “யாது  பயனும்  வேண்டாம்   உண்டியும்  உறக்கமுமே  வேண்டுவன  “  என்று  மக்கள்  வாழ்க்கைக்கு  ஒவ்வா  நிலையை  மேற்கோடல்  மிகவும்  வருந்தத்  தக்கதே .

                        2 .  வாழ்க்கையின்   நோக்கங்கள் .

        இனி ,  மக்களிடம்  வாழ்க்கையின்  நோக்கங்கள் தாம்  யாவை ?  அந்  நோக்கங்களை  நிறைவேற்றிக்  கோடற்குரிய  நெறிகள்  எவை ?  அவற்றாலாம்  பயன்கள்  என்னை ?   என்று  இன்னோரன்ன  ஆராய்ச்சியில்  தலைப்படல்  அறிவுடையார்  யாவர்க்கும்  உரிய  முதற்  கடமையாகும் .  நம்  வாழ்க்கையின்  நோக்கமாக 

“யோசிக்கும்  வேளையிற்  பசி தீர  உண்பதுவும்

 உறங்குவது  மாக  முடியும் “

என்று  நம்  பெரியாரொருவர்  உலகஞ்  செல்லும்  கீழ்நிலை  நோக்கி  இரங்கிக்  கூறிய  பரிவுரையை  ,  அக்  கருத்துணராமற்  கடைப்பிடிப்பேமென்பார் செயல்  மிகவும்  இழிந்ததொன்றாகும் .  பசி  தீர  உண்டலும் ,  வேட்கை  தீரக்  காமவின்பம்  துய்த்ததலும்  நம்மினும்  இழிந்த  பிறப்பினவாகிய  புள்  விலங்கு  முதலியவற்றிற்கும்  குறைவறக்  கிடைத்தலான் ,  பகுப்புணர்வினாற்  சிறந்த  மக்கட்  பகுதியினர்க்கு  அச்  செயல்களால்  அவற்றினும்  விழுமிய  பெருமை  யாதுளது ? இறைவன்  நமக்கு  மனவுணர்வையும்  நூலுணர்வையும்  சிறப்பாக  அமைதர  உதவியதன்  நோக்கந்தான்  யாதோ ?   அவ் வுணர்வு  பெற்றதனால்  நம்  நோக்கம்  அதற்குத்  தக  விழுமியதாக  இருத்தல்  வேண்டுமன்றோ ? அந்  நோக்கந்தான்  அறநிலையிற்  பலதிறப்பட்டுச்  சமய நிலையில்  ஒன்றாகவே  முடியுமென்பதை  நம்  பெரியார்  ஒழுகலாற்றானும் ,  அருள்  மொழிகளானும்  உணரலாம் .

                                                3 . இல்லற   நோக்கம் 

      ஒரு  மணமகளை  ஓராடவன்  காதற்கிழமை  யொடு  மணந்து  நடாத்தும்  இல்வாழ்க்கையைப்  பெரியார்  இல்லறமென்று  சுட்டியதன்  கருத்தை  ஊன்றி  நோக்கல்  வேண்டும் .  “இல்லின்பம்”  என்னும்  வழக்குப்  பொருந்துவதாகவும் ,  “இல்லற”மென்னும்  வழக்கே  ஆட்சியிற்  பெரிதும்  காணப்படுகின்றது .  அவ்விருவரும்  துய்க்கு  மின்பம் ,  அவர்தம்  அன்பின்  தொடர்பை  வேரூன்றச் செய்து  பின்  அவ்வன்பு  ஒருங்கியைந்த  அருங்கலமாக  அவர்பால்  வெளிப் படூஉம்  மகவு  முதலியோர்மாட்டு  அதனை விரிவுபடுத்திப்  பின்னர்ப்  படிப்படியாக  உலகத்துள்ள  எல்லா  உயிர்களிடத்தும்  அவ்  வன்பைப்  பரவச்  செய்து  அருள்  என்னும்   பெயரதாக்கி  அதன்  முகமாக  அவ் வருளையே  வடி வமாகவுடைய  இறைவனோடு  இயைவித்துப்  பேரின்ப  நுகர்ச்சியிற்   றலைப் படுத்தும்  அறமாக  மாறுதலின்  இல்லின்பமென்பதனினும்  இல்லறமென்னும்  ஆட்சி  சிறந்ததெனப்  பெரியார்   கண்டனர் போலும் . கற்புக்  கடம்பூண்ட  தெய்வமெனப்  பாராட்டப்பெற்ற   வீரபத்தினியாகிய  கண்ணகி  யென்னும்  பெண்மணி ,  இளமையும்  எழிலுமிக்க  தன்  காதல்  கொழுநனாகிய  கோவலன்  கணிகை  யொருத்தியின்  வயப்பட்டு  ,  அவள்  உடனுறைவால்  தன்  இளமைப்  பயனைப்  பிறழ்ச்சி  முறையில்  நுகர்ந்து  ,  பொருளற்ற  நிலையில்  தன்பாற்போந்து  ,  “பொன்னே  மணியே  புனைபூம்  பாவாய்  காதல்  கெழீஇய  கற்பரசியாகிய  நின்னைவிட்டு  வேறொருத்திபால்  என்  இளமையைக்  கொன்னே  கழித்தேன்  !  என்னே  நின்  பொறுமை  !  இருமுது குரவர்  ஏவலும்  பிழைத்தேன்; சிறு  முதுக்குறைவிக்குச்  சிறுமையுஞ்  செய்தேன் ;  வழுவெனும்  பாரேன் ; மாநகர்  மருங்கீண்  டெழுகென  எழுந்தாய்  என் செய்தனை “ என  வியந்து  இரங்கிக்  கூறுங்கால் ,  தன்  காதலனாம்  அவன்  பிரிவால்  “பொறயிலா  அறிவு  போகப்  புணர்விலா  இளமை”  யென  இளமையின்  பயனாகக்  கூறப்பட்ட  காமவின்பம்  துய்த்தற்கு  இயைந்திலதே !  பருவம்  வறிதே  கழிந்ததே !  என்று  அவ்வின்ப  மெய்தாமை  குறித்து  வருந்தினாளல்லள்.  பின்னை  அவ்வறப்  பெருஞ்  செல்வி , 

“அறவோர்க்  களித்தலும்  அந்தண  ரோம்பலும்

துறவோர்க்  கெதிர் தலும்  தொல்லோர்  சிறப்பின்

விருந்தெதிர்  கொடலும்  இழந்த  என்னை “

எனத்  தம்  இல்வாழ்க்கையின்  உண்மைப்  பெரு நோக்கங்களையே   இனிதெ டுத்துரைத்து  ,  அவை  அவன்  பிரிவாற்  கைகூடப்பெறாமைபற்றி  இரக்க முற்றாள்  என்பதைத்  தமிழ்ப்  பெருங் காப்பியமாகிய  சிலப்பதிகாரத்தா  லுணர்கின்றோம் .  இதனாலும்  இல்லறமென்னும்  பெயரும் , அதன்  நோக்கமும்  இத்தன்மையவென  வெளிப்பட்டன .  இந்  நோக்கம்  அறநிலை  பற்றியதாகும் .

                                  4 .  சமய   வாழ்க்கையின்   நோக்கம்

           இங்ஙனமே  சமய  நிலையில்  நம்  வாழ்க்கைச்  செயல்களெல்லாம்  இன்ப  வடிவினனாகிய  இறைவனைப்  பற்றியே  நிகழ்தல்  வேண்டும் . நம்  உட லுறுப்புக்க ளெல்லாம்  அப் பெருமானை  வழிபடற்கே  அமைந்தன வென்பதை,

“வாழ்த்த  வாயும்  நினைக்க  மடநெஞ்சும்

 தாழ்த்தச்  சென்னியுந்  தந்த  தலைவனை “

என்னுந்  தமிழ்மறையானும்  உணர்ந்துளேம்.   நம்  நாட்டுச்  செயலனைத்தும்  அப் பெருமான்  நினைவே  முன்னிற்கச்  செய்தல்  வேண்டுமென்னும்  ஆன்றோராசாரம்  எத்துணை  நலமுடையது !  நம்  வாழ்க்கை  மலர்  தெய்வமணங்  கமழுமேல்   சிறந்ததாகப்  பாராட்டப்படும் .   அந்  நன்மண  மின்றேல்  , 

         “பாழுக்  கிறைத்தேன்  பரம்பரனைப்  பணியாதே” 

யென்றருளியாங்குப்  பயனற்றதாக  முடியும் .

                        5 .  மகா   கவிகளின்   உள்ளக்கிடக்கை

         நம்  புலமையும்  அறிவும்  கவிசுவையி  லீடுபடுங்கால் , இன்பம்  அவலம்  முதலியனவாகத்  தோன்றி  ,  முடிவில்  அச் சுவை  யனைத்தும்  தெய்வ  நறுங்கனித்   தீஞ்சாற்றில்  தோய்ந்தனவாக  புலப்படுவனவாம் .  இவ்வுண்  மையைப்  பெரும்புலமை  வாய்ந்த  அருங்கவிகளின்  எண்ணங்களே  வெளிப்படுத்துவன .  தெய்வமணக்கும்  செய்யுள்  யாக்கும்  திறம்  பெரிதுடைய  நம்  சேக்கிழார்  பெருமான் ,  இன்பச் சுவையை  இனிது  விளைக்கும்  செய்யுட்களினும்   தம்  உண்மை  நோக்கமாகிய  தெய்வமணங்  கமழவே  கூறுவர் ,

“வழுக்கி  வீழினுந்  திருப்பெய   ரல்லால்

 மற்று  நானறியேன்  மறுமாற்றம்”

என்பது  அநுபவ  அருளுரையன்றோ !  எழில்  நலமும்  தெய்வ  நலமும்  நிரப்பப்பெற்ற  பரவையாரைச்  சுந்தரமூர்த்திகள்  திருக்கோயிலிற்  கண்ட  காட்சியை  எடுத்துரைக்குமுகமாகச்  செந்தமிழுக்குச்  சிறப்பளித்து  நிற்கும்  இன்பத்  துறைபற்றியெழுந்த  செய்யுட்களைக்  காண்மின்கள் !  பரவையாரைக் குறித்துக் , 

“கற்பகத்தின்  பூங்கொம்போ  காமன்றன்  பெருவாழ்வோ

 பொற்புடைய  புண்ணியத்தின்  புண்ணியமோ  புயல்சுமந்து

விற்குவளை  பவளமலர்  மதிபூத்த  விரைக்கொடியோ

அற்புதமோ  சிவனருளோ  அறியேயென்  றதிசயித்தார் “

என்று  சுந்தர  மூர்த்திகள்  திருவுள்ளக்  கருத்தும்  அவ்வடிகளைக்   குறித்து , 

“முன்னேவந்  தெதிர்தோன்றும்  முருகனோ

  பெருகொளியால்

தன்னேரின்  மாரனோ  தார்மார்பின்  விஞ்சையனோ

மின்னேர்செஞ்  சடையண்ணல்  மெய்யருள் பெற்

றுடையவனோ 

என்னேயென்  மனந்திரித்த  இவன்யாரோ  என

நினைந்தார்”

என்று  பரவையார்  கொண்ட  திருவுள்ளக்  கருத்தும்  இயைந்த  அழகுதான்   என்னே !  என்னே ! 

            இச்  செய்யுட்களின்  முடிவில்  ,  “சிவனருளோ”  எனவும் ,  “மின்னேர்  செஞ்சடை யண்ணல்  மெய்யருள்  பெற்றுடையவனோ”   எனவும்  போந்த  இயைபு  அருட்பெரும்  புலவராகிய  அடிகளின்  புலமை  நோக்கத்தைத்  தெற்றெனப்  புலப்படுத்தும் .  ஓகாரங்களால்  ஐயுற்று  விலக்கப்பட்ட  உவமை   உவமைகளி  னியைபையும்  சிந்தித்துப்  பார்மின்கள் !  “கற்பகத்தின்  பூங்கொம்போ” என்னும்  அடிகள்  உரையில்  கற்பகத்  தருவில்  இந்திரனால்  வளர்க்கப்பட்ட  பூங்கொம்பு  போல்வாளாகிய  தெய்வயானையோ  என்னுங்  குறிப்புத் தோன்ற  ,  அம்மையார்  “முன்னேவந்  தெதிர்  தோன்றும்  முருகனோ”  என்றாரெனவும்  ,  அடிகள்  “காமன்  றன்  பெருவாழ்வோ”  என ,  அம்மையார்  “தன்னேரின்  மாரனோ”  என்றாரெனவும் ,  அடிகள்  “புண்ணியத்தின்  புண்ணியமோ”  என,   அம்மையார்  அதன்  நுகர்ச்சி  மிக்க  “தார்மார்பின்  விஞ்சையனோ”  என்றாரெனவும் ,  முடிவில்  அடிகள்  “சிவனருளோ”  என ,  அம்மையார்  “மெய்யருள்  பெற்றுடையவனோ”   என்றாரெனவுங்  கூறிய  கருத்தியைபுகள்  நம்  மனத்தை  மிகவுங்  கனிவிக்கின்றன .  பின்னர்ப்  பரவையார்  சற்று  மறைந்த  வுடன்  அவர்  பிரிவுபற்றி  வன்றொண்டர்  கூறியதாக  வெளிப்பட்ட 

“பாச  மாம்வினைப்  பற்றறுப்   பான்மிகும்

ஆசை  மேலுமொ  ராசை  யளித்தெனத்

தேசின்  மன்னியென்  சிந்தை  மயக்கிய

ஈச  னாரருள்  எந்நெறிச்  சென்றதே”

என்னும்  திருப்பாடலின்கட்  டோன்றும்  தெய்வமணம்  மிகவும்  சிறந்ததாகும்.  இதன்கண் , 

“பற்றறுப்பான்  மிகும்  ஆசை”

எனவும் ,  “ஈசனாரருள்”  எனவும்  போந்த  கருத்துகள்  சிந்தித்து  இன் புறத்தக்கன .

       இம்மட்டோ !  இருள்  வரவுக்கும்  நிலவெழுச்சிக்கும்  உவமங்  கூறுங்கால் , 

“ஐந்தெ  ழுத்து  முணரா  அறிவிலோர்

 நெஞ்சு  மென்ன  இருண்டது  நீண்டவான்”

எனவும்,

“அண்ணல்  வெண்ணீற்றின்  பேரொளி

 போன்றது  நீணிலா”

எனவும்  நம்  சைவ  சமய  சாதனங்களைக்  கூறியருளிய  அழகு , அன்பர்கள்  உள்ளத்தை  மிகவும்  இன்புறுத்துவதாகும் .  இன்னோரன்ன  சந்தர்ப்பங்களில்  மற்றைக்  கவிகள்  இந்  நினைவை  மேற்கொள்ளார்.  அருட்  கவிகளுக்கே  இது  வாய்ப்பதாகும்  .   இன்னும்  இத்  தெய்வச்  சுவை  மிக்க  பகுதிகள்  பல :  புலவர்  திலகமாகிய  சிலப்பதிகார  நூலாசிரியர்  இன்பம்  முதலிய  ஒன்பான்  சுவைக்கும்  நிலைக்களமாகத்  தாம்  யாத்த  அத்  தீஞ்சுவைக்  காப்பியத்தின்  இறுதியில்  , 

“தெய்வந்  தெளிமின்  தெளிந்தோர்ப்  பேணுமின்”

என்று  கூறிய  பயனுரையைச்  சிந்தித்துப்  பார்மின்கள் !  வடமொழி  மகாகவி யாகிய  காளிதாசர்  இரசபுஞ்சமாக  இயற்றிய  சாகுந்தல  நாடகத்  திறுதியில்  பரத  வாக்கியமாகக்  கூறிய  ,

“ப்ரவர்த்ததாம்  பிரகிருதி  ஹிதாய  பார்த்திவ :

ஸரஸ்வதீ  கருதி  மஹிதா  மஹீயஸாம் !

மமாபிச  க்ஷபயது  நீலலோஹித :

புனர்பவம்  பரிகத்  சக்திராத்மபூ :

என்னும்  சுலோகத்தின்  பொருளை  உற்று  நோக்குவோமாயின்  ,  காதல் மணங்  கமழ  இயற்றிய  அந்  நாடகத்  திறுதியில்  தன்னுள்ளக்  கிடக்கையை  அக் கவி எவ்வளவு  உயரிய  நோக்கத்தோடு  வெளிப்படுத்தியுள்ளா   ரென்பது  புலனாம் . இப்  பொருளாவது  “மன்னுயிர்  நலங்குறித்து  மன்னவன்  அரசு  செய்க ;  செவிப்  பொறியாற்  சிறப்புறூஉம்  மகாகவிகளின்  நூல்கள்  நின்று  நிலவுக . நீலச் செந்நிற  முடையானும்  உமையொரு  கூறனும்  சுயம்புவுமாகிய  இறைவன்  எனக்கும்  புனர்ப்பவத்தைப்  போக்கியருள்வானாக  “  என்பதாம் .  இதன்கட்   சகளமாகிய  உருமேனியும்  ,  சகள  நிட்களமாகிய  அருவுருமேனி யும் ,  நிட்களமாகிய  அருமேனியுமாகிய  மூன்றுமுடையான்  இறைவன்  என்பது  தோன்றும் .  ஈதன்றோ  புலமை  வாழ்க்கையின்  பொருள்  முடிபு .

       ஒரு  வாணிகனது  வாணிக  வாழ்க்கையின்  குறிப்பு  ஊதியமே  யாயினும் அதன்கண்ணும்   “கொள்வதூஉ  மிகை  கொளாது  கொடுப்பதூஉங்  குறை  கொடாது “  இயற்றவேண்டுமென்ப  .  இங்ஙனமே  எல்லாச் செயல்களும்  உயரிய  நோக்கத்தை  மேற்கொண்டு  இறைவனோடியையும்  இன்பநிலை  பற்றியே   நிகழ்வனவாம் . இறைநலம்  பற்றாத  வாழ்க்கை   பயனற்ற தென்றும்  அவ் வாழ்க்கைக்கு  வேண்டுவன  செய்தல்  பாழுக்கு  நீரிறைத்த  லென்றும்  பெரியார்  கூறுப.  இவ் வுயரிய  கருத்துச்  சமய  வாழ்க்கையினின்று   அவ் வுணர்  வொழுக்கம்  கைவரப்  பெற்றார்க்கன்றி  உண்டாதல்  அரிதாகும்.

                6 .  ஒழுக்கநிலைக்குச்   சமயத்தின்  இன்றியமையாமை

      உலகத்துள்ளா  ரெல்லோரும்   அவரவர்க்குரிய  சமய  நெறியிற்  சென்றே  ஒழுக்க  நிலையை  எய்தக்கடவர் .  சமயச்  சார்பு  வேண்டாம் :  ஒழுக்க மாத்திரமே  போதியது  எனச் சிலர்  எண்ணக் கூடும் .  அச்  சார்பின்றேல்  ஒழுக்கம்  உரம்  பெறல்  அரிது . விதித்தன  செய்தலும்  விலக்கியன  ஒழிதலும்  அறமாமெனவும்   அதனாற்  பெறக் கிடப்பது   இன்பமெனவும்  கொண்டு  , அதனைப்  பெறும்  அவ்வளவிலன்றிச்  சமய  நிலைக்கு  வரக் கடவேமல்லே மென்பார் சிந்திக்க  வேண்டுவன  சிலவுள ,  அன்னாரை  நோக்கி  , விலக்கியன  சில  இம்மையில்  இன்பந் தருகின்றன . ஆதலின் , அவற்றை  மேற்கோடலான்  வரும்  ஏதம்  என்னை?  என்று  வினவின்  ,  அரசியற்  றண்டம்  நேருமென்று  கூறக்கூடும் .  அரசியல்  வினைஞர்க்கும்  அறியாத  நிலைமையிற்  புரியும்  தீச்  செயல்களால்  இன்பமுண்டாமாயின் ,  ஏன்  அவற்றைச்  செய்தலாகாதெனின், மாற்றமென்  பகர்வர் ?    இந் நிலையில்  மறுமைத்  துன்பமும்  அதனைத்  தரும்  ஆண்டவனியல்பு  முதலிய  சமய  நம்பிக்கைகளுமே  ஒழுக்கத்தை  உறுதிப் படுத்துவனவாம் . ஆகவே  உயிரினும்  ஓம்பப்படுவதாகிய   ஒழுக்கத்தை  மேற் கொள்ள  நினைப்போர்  யாவரும்  சமய  நெறி  நின்றே  மேற்கொள்ளக்  கடவர். அவ்வொழுக்கங்களுக்குப்  பயன்  விளைவிக்கும்  இறைவன்  ஒருவன் உளன்  என்னும்  எண்ணம்  சமயநிலை  பற்றியே  உண்டாவதாகும் .    

                          “உன்னை  வந்திப்பதோர்

நெறியறியேன்  நின்னையே  யறியேன்”

என்ற  திருவாக்கின்படி  சமயநெறிக்கட்  செல்லாதார்க்கு  இறைவன்  நிலையை  அறிதல்  இயலாததாகும்.   

                                                 7 .  சமய   இலக்கணம் .

       அங்ஙனமாயின்  மக்கள்  ஒழுகலாற்றிற்கியைந்த  சமயம்  யாது ?  அச்சமயப்  பொருள்கள்  யாவை ?  அவற்றை  யுணர்த்தும்  நூல்கள்  யாவை ?  அவை  கூறும்  நிலையில்  நின்றார்  யாவர் ?  அவர்கள்  உண்மையிற்  கண்ட  அநுபவங்கள்  எவை ?  என்றின்னோரன்ன  ஆராய்ச்சியிற்  றலைப்படும்  அவா  எழுதலியல்பே . இவற்றிற்கு  விடைபெறு முகமாகப்  பல  உண்மைகளைத்  தெளியலாம் . 

“இதுவாகும்  அதுவல்ல   தெனும்பிணக்கதின்றி 

  நீதியினால்  இவையெல்லாம்  ஓரிடத்தே  காண 

  நின்றதியா  தொருசமயம்   அது  சமயம் “

என்று  மெய்ச்சமய  இலக்கணம்  கூறப்பட்டுள்ளது . உலகத்துள்ள  பல்வகைச்  சமயங்களினும்  கூறப்படுந்  தத்துவங்களையெல்லாம் தன்னுள்  அடக்கி  அவற்றோடு  முரணாது  தழீஇக்கொண்டு  அவ்வத் தத்துவ  நிலையினின்று  முடிவில்  தன்னைச்  சார்ந்தாரை  உலப்பிலாப்  பேரின்ப  நுகர்ச்சியில்  தலைப்படுத்தும்  இயல்நலம்  அமைந்தது   சிவநெறியாகிய  சைவ சமயமே  யாகும் .  

                          8 .  முப்பொருள்களின்  இயல்பும்    உண்மையும் 

முதலாவது  இச்  சமய  நெறிக்கட்  புகுவானொருவன்  தன்னை  நோக்கி “நான்  யார்?  எனக்கு  இவ்வுடல்  வந்தவாறென் ?  இவ்வுடற்கும்  எனக்கும்  உள்ள  இயைபு  யாது ?  என்று  இவ்வளவில்  நின்று  ஆராயத் தொடங்குவன் .  இத்தொடக்கத்தில்  இவ்வுடலையல்லாமற்  காட்சியளவையில்  வேறொன்றுங்  காணப்படாமையானும்  ,  இதற்கு  ஓர்   ஊறுபாடுண்டாயின்  எனக்குத்  துன்ப முண்டாகின்றதாகலானும்  தோல்   என்பு   நரம்பு   முதலியவற்றாலாகிய  இவ் வுடலே   யானாக  இருக்கலாம்  என்னும்  நினைவு  தோன்றப் , பின்னர்  உயிருடன்  கூடியிருக்குங்கால் உற்றதை யுணரும்  இவ்வுடல்  அவ்வுயிர்  நீங்கிய  வழித்தடிந்தெரி  யூட்டினுந் தானுணராதாகலான் ,  உடம்பிடைப்  போன  தொன்றுண்டென்னும்   உணர்ச்சி  தோன்றும் . அங்ஙனம்  உடலினின்று நீங்கியதே  அறிவுருவாகிய  உயிராகுமெனவும்  ,  இவ்வுடம்பு  மண்  நீர்  தீ  வளி  முதலிய  பூதங்களின்  சேர்க்கையாலாகிய  அறிவில்  பொருளாதலின்  ,  இஃது  அறிவுருவாகிய   உயிராகா தெனவும் ,  காட்சியொன்றானே  எப்பொருளையும்  அறிதல்  இயையாதெனவும் ,  கருதலளவையும்  உரையலளவையும்  பொருட் டுணிவிற்கு  இன்றியமையாதனவெனவும்  முறையே  உணர்வுதிக்கும் .  இவ்வுண்மையையே  பட்டினத்து அடிகள்  என்னும்  சிவஞானச்  செல்வர் ,

“மேவிய  புன்மயிர்த்  தொகையோ  அம்மயிர்

 பாவிய  தோலின்  பரப்போ  தோலிடைப்

 புகவிட்டுப்  பொதிந்த  புண்ணோ  புண்ணிடை

 யூறு  முதிரப்  புனலோ  கூறுசெய்

திடையிடை  நிற்கு  மெலும்போ  எலும்பிடை

 முடைகெழு  மூளை  விழுதோ  வழுவழுத்

துள்ளிடை  யொழுகும்  வழும்போ  மெள்ளநின்

றூரும்  புழுவி  னொழுங்கோ  நீரிடை

வைத்த  மலத்தின்  குவையோ  வைத்துக் 

கட்டிய  நரம்பின்  கயிறோ  வுடம்பிற்குட்

பிரியா  தொறுக்கும்  பிணியோ  தெரியா

தின்னதி  யானென்  றறியே  னென்னை

எங்குந்  தேடினேன்  யாதினுங்  காணேன்

……………………………….    ……………………   ……………………

மங்கை  பங்க  கங்கைநா  யகநின்

தெய்வத்  திருவருள்  கைவந்து  கிடைத்தலின்

மாயப்  படலங்  கீறித்  தூய

ஞான  நாட்டம்  பெற்றபின்  யானும்

நின்பெருந்  தன்மையுங்  கண்டேன்  காண்டலும்

என்னையுங்  கண்டேன் “

 என்னும்  செய்யுட்  பகுதியில்  நன்கு விளங்கக்  கூறினார் .

      இதனால் , இத்தத்துவ  தாத்துவிகங்க  ளெல்லாம்  சடப்பொருளாக ,  இவை  யானல்லேன்  எனக்  களைந்து  ஆராயும்  அறிவுடைப்  பொருளொன்று  நம்  உடம்பின்  வேறாக  உண்டென்பதும்  ,  அதுவே  இறைவன்  அறிவித்தால்  அறியும்  இயல்பினதாகிய  உயிரென்பதும்  போதரும் .  இவ்வுயிரினிலக்கணம்  பலவாயினும் ,  ஈது  எப்பொருளைச்  சார்கின்றதோ  அப்பொருளின்  தன்மையே  தன்  தன்மையாகக்  கொள்ளும்  இயல்பு  நோக்கி  இதனைச்  சார்ந்ததன்  வண்ணமாந்  தன்மையுடையதெனப்  பெரியார்  விதந்து  கூறுப .  இவ்விலக்கணம்  மிக  நுணுகியுணர்ந்ததொன்றாகும் .

          பளிங்கொன்று  தன்னை  அடுத்த  நிறம்  யாதாயினும்  அந் நிறமே  தன்  நிறமாகக்  கொள்ளும்  இயல்பினது . அதுபோலவே  இவ்வுயிரும்  எவ்வெப்பொருளைச்  சார்கின்றதோ  அவ்வப்  பொருண்மயமாகவே  தோன்றும் . இஃது  அறிவித்தால்  அறியும்  இயல்பினது . இனி  உலகத்துள்ள  செயற்கைப் பொருள்  ஒவ்வொன்றினையும்  நோக்கி  அதனதன்  செயற்பாட்டிற்குச்  செய்பவனையுங்  கண்கூடாகக்  கண்டு  வருகின்றோம் .  ஆதலின் ,  இந் நிலையில்  அதி விசித்திரமான  இவ்வுலகின்  ஆக்கப்பாட் டிற்குப்  பேராற்றலும்  பேரறிவுமுள்ள  இறைவனொருவன்  வேண்டுமென்பதில்  ஐயம்  யாதுளது ?  அப்பெருமான் அறிவிக்க  அறியுமியல்பினதாகிய  இவ்வுயிர்,  தன்னியல்பையும்  பேரறிவுப்  பிழப்பாகவுள்ள  தலைவனியல்பையும்  அறிதற்குத்  தடையாகத்  தன்மாட்டுள்ளது  யாதென  ஆராயப்புகின்  , அஃது  அநாதியே . தன்னைப் பற்றி  நின்று  தன்  அறிவை  மறைத்து  நிற்கும்  அழுக்கு  ஒன்று  என்பது  போதரும் .   

           அவ்வழுக்கையே  ஆணவ  மலம்  என்ப .  இவ்வாணவ  அழுக்கைக்  கழுவுதற்கே  உடல் , கரணம்  ,  இடம் , நுகர்ச்சி  என்பவற்றை  இறைவன்  நம்க்களித்துப்  பிறப்புக்களிற்  செலுத்துகின்றான் ,  உடல்,  கரணம் , இடம்  , நுகர்பொருளாகிய  இவையெல்லாம்  தோன்றுதற்கு  இறை , உயிர் , தளை  என்னுமிவற்றின்  வேறான  காரணம்  இருத்தல்  வேண்டும் . அக் காரணங் களையே  மாயா  கன்மங்களென்ப .நாம்  செய்யும்  நல்வினை  தீவினைகள்  அறம்  பாவமென்று  கட்டுற்று  இன்ப  துன்பங்களாக  நம்  அநுபவத்துக்கு  வருகின்றன .  இக்கன்மப்பயன்  நுகர்தற்கு  மாயை  என்னும்  வித்தினின்று  ,  நமக்கு  உடல்  முதலியவை  கிடைக்கின்றன . உடல்  முதலியவற்றை  உயிரே  படைத்துக்கொள்ளல்  இயலாது ;  அது  சிற்றறிவும்  சிறு  தொழிலும்  உடையதாகலான்  .  மாயா  கன்மங்கள்  அறிவில்  பொருள்கலாதலின்  தாமே  தாரா . ஆகலின்  எல்லா  ஆற்றலுமுடைய  இறைவனே  அவற்றின்  இயல் பறிந்து   கூட்டுவிப்பவனாவான் .  மாயா கன்மங்கள்  மூலமல  ஆற்றல்  கழிதற்கு  ஏதுவெனினும்  ,  அதன்  கழிவில்  தம்  காரியங்களும்  ஒழிவுற , அந் நிலையில்  கட்டனைத்தும்  விட்டு  நீங்கப்பெற்ற  உயிர் ,  சித்தம்  சிவமாகப்  பெற்று  இறைவனோடு  இரண்டறக்  கலந்து  அழிவிலாப்  பேரின்பத்திற்   றிளைத்து   நிற்கும்  இவ்வுண்மைகளையே  பலதிறப்படுத்துச்  சைவ  சித்தாந்த  நூல்கள்  வெளிப்படுத்துவனவாம் .  இறை , உயிர் , தளை  என்பவற்றை  வடநூலார்  பதி , பசு , பாசம்  என்பர் . பாசத்தின்  வகைகளை  ஆணவம் , கன்மம் , மாயை  என  முத்திறப்படுத்தும் ,  மாயேயம் , திரோதானம் ,கூட்டி  ஐவகைப்படுத்தும்  கூறுப .  “மும்மை  மலம்  அறுவித்து “  எனவும் ,  “மலங்கள்  ஐந்தாற்  சுழல்வன்”  எனவும்  மணிவாசக ஞானப் பாசுரங்கள் வெளிபடுத்தின.

                             9 . இறைவனை  அடைதற்குரிய  நெறிகள் 

            உயிர்  கட்டறுத்து  வீடு  பெறுதற்கு  நம்  அரிய  சமயத்தில்  அமைந்த  சாதனங்கள்  மிகச் சிறந்தனவாம் .  சரியை  முதலிய  நான்கு  வழிகள்  ஆன்மாக்களின்  பக்குவ  நோக்கி  அமைந்தன . அவற்றினியல்கள்  மிக்க  விரி வுடையன .  சரியை  முதலிய  நான்கு  வழிகளையும்  ஒன்றுக்கொன்று  சாதன  சாத்திய  முறையில்  வைத்து  இறுதியிலுள்ள  ஞானத்தால்  வீட்டின்பம்  அடை யலாமென உணர்த்தப்பட்டது . இவ்வுண்மையைச்   சிவயோகியாராகிய    தாயுமான அடிகள் ,

“விரும்புஞ்  சரியைமுதல்  மெய்ஞ்ஞான  நான்கும்

 அரும்புமலர்  காய்கனிபோல்  அன்றோ  பராபரமே “

என்று  கூறியருளினார் . ஒன்றனையொன்று  இன்றியமையாமைக்கு  அரும்பு  மலர்  காய்  கனி  யென  எடுத்துக்காட்டிய   அநுபவ  உவம  அழகு  மிகப்  பாராட்டற்பாலது . இந் நெறிகளை  இன்னுஞ்  சற்றுச்  சுருக்கி  அறிவுநெறி   அன்பு நெறி  யென  வகுத்து  விளக்கும்  தெளிவு  மிகச் சிறந்ததாகும்  .  இவற்றை  ஞான  மார்க்கம் ,  பத்திமார்க்கமென்றுங்  கூறுப .

                                                          10 . அறிவு  நெறி 

       அறிவு ,  நூலறிவு  அநுபவ  அறிவு  என  இரு திறப்படும்  .  இவற்றை  அபர  ஞானம் ,  பர ஞானம்  என்றுங்  கூறுப . அநுபவ  அறிவைப்  பயப்பதற்கு  நூலறிவு  சாதனமாகும் .  “நானார் ?  என்னுள்ளமார் ?  ஞானங்களார் ? “என்னும்  ஆராய்ச்சியிற்   றலைப்பட்டுச்  சிவஞானபோத  முதலிய  அறிவு  நூல்களை  ஆசிரியர்முகமாக  உணர்ந்து  உண்மைப்பொருள்  தெளிதலே  நூலறிவாகும்  . அவ்வுண்மைகளைத்  தேவாரம்  திருவாசகம்  முதலிய  துதிவடிவிலமைந்த   அருட்பாசுரங்களான்  உணர்தலும் ,  பெரியபுராண  முதலிய  வரலாற்றுண்மை கூறும்  சிவநெறி  யிலக்கியங்களான்  உணர்தலும்  அதன்பாற்படும் .  “பந்தமும்  பிரிவுந்  தெரிபொருட்  பனுவற்  படிவழிச்  சென்று  சென்றேறி  “  என்பதும்  இதனை  வலியுறுத்தும் .   இந்  நூல்கள்   நம்  பண்டைப்  பெரியார்  கருணை  கூர்ந்தளித்த  விலை  வரம்பில்லா  உயர்  மணிகள்  நிறைந்த  ஒப்பற்ற  கருவூலங்களேயாம் .  இந்  நூல்களிற்  பயின்ற  முறையை  அநுபவத்திற்  கொண்டு  செய்கையிற்  பயன்  படுத்தல்  அநுபவ  ஞானமாகும். அநுபவமென்பது  அழுந்தியறிதலாகும்  .  பொறிகளாற்  பற்றப்படும்  பொருள் களை   அறியுமுறையில்   ஈடுபட்டு  அழுந்தியறிதலே  ஈண்டு  அநுபவமாகும் . இச்  சொற்பொருளை  இங்ஙனங்  கண்டு  தமிழ்மொழியில்  தந்த  மாதவச்  சிவ ஞானமுனிவர்  பெருமை  உலகறிந்தது .

         ஒரு  பழச்சாற்றைத்  துய்க்குங்கால்  நாப்  பொறி  பொதுவாக  அறிதலினும்  அழுந்தி  அறிதலே  அநுபவமாகும் .  இங்ஙனமே  நூல்வாயிலாகக் கண்ட  சாதனங்களை  அகவுணர்வில்  அமைத்து  அழுந்தியறிதல்  சமயாநுபவ  சாதனமாகும் .  சிவோகம்பாவனை  சிவநெறியில்  முக்கிய சாதனமாகக்  கூறப் பட்டுள்ளது  .  அதனியல்பை   நூல்  வாயிலாகத்  தெளிதல்  நூலறிவாகும். அப் பாவனையை  மேற்கோடல்  அநுபவ  அறிவாகும் . சிவோகம்  என்பதன்  பொருள்  “சிவன்”  என்பதாம் .  இதனாலேயே  “நான்”   என்பதற்கு  வாச்சியமாகவுள்ள  உயிரும் ,  “சிவன்”  என்பதற்கு  வாச்சியமாகவுள்ள  இறைவனும்  எனப்  பொருள்  இரண்டு  போதரும் .  உயிராகிய  “நான்”  எதற்காகச்  சிவபாவனை  செய்தல்  வேண்டும்  எனக்  கருதுங்கால் ,  என்பாலு றைந்துள்ள  அழுக்காகிய  ஆணவத்தைப்  போக்குதற்கேயாமென்பது  புலனாகும் .  இதனாலும்  தடையாகவுள்ள  பாசம்  ஒரு  பொருளென்பதும்  வெளிப் படும் .  சிவோகமென்பதனால்  சிவனும்  உயிரும்  பொருள்வகையில்  ஒன்றாகா . மல  நீக்கப்பயன்  கருதி  அப் பாவனை  விதிக்கப்பட்டுள்ளது . பாம்பு  தீண்டுதலாலுண்டாகிய  நச்சுத்துன்பம்  ஒழிதற்கு  ,  மாந்திரிகன்  கருடோகம்  எனப்பாவித்துப்  பார்க்கவேண்டுமென்று  விதிக்கப்பட்டுள்ளது . ஆன்மா  சார்ந்ததன்  வண்ணமாந் தன்மைத்தாதலின் , அவன்  கருடனுருவ  பாவனையால்  அம் மந்திர  மூர்த்தியாகிய  நஞ்சொழிவிற்குக்  காரணமாகின்றான் .  பொருள்வகையின்  உருவு  திரிந்து  கருடனாவதில்லை .  அது  போலவே  பேரொளிப்  பிழம்பாகவுள்ள  சிவ  பாவனையில்  உயிர்  சிவனாவதில்லை .  ஆணவ  இருள்  நீங்கப்பெற்று  , உயிர்  “ஆணவத்தோ  டத்துவித   மானபடி  மெய்ஞ்ஞானத்  தாணுவினோ  டத்துவிதம்”  சார்கின்றது.  இதனைத்  திருமூலராகிய  சிவாநுபவச் செல்வர் ,

“கருட  நுருவங்  கருதும்  பொழுதிற்

 பருவிடந்  தீர்ந்து  பயங்கெடு  மாபோல்

 குருவி  னுருவம்  குறித்தவப்   பொழுதே

  திரிமலந்  தீர்ந்து  சிவனவ  னாமே”

என்று  வெளிப்படுத்தருளிச்  செய்வாராயினர். 

        இப் பாவனையில்  உறைத்து  நிற்றல்  அநுபவ அறிவாகும்  .  பாவனைக்குப்  பயனுண்டென்பதை  நம்  முன்னையோர்  மிகத்  தெளிவாக  உணர்ந்துள் ளார்கள் .  இக்காலத்து  மேலைத்  தேயத்து  அறிஞரும்  பாவனைப்  பயனைத்  தம்  அநுபவத்திற்  கண்டு  நம்பி  வருகின்றனர்  என்ப .  இச்  சிவாநுபவ  அறிவு  கைவரப்   பெற்றாரே  ஐம்புல  வேடர்களால்  நேரும்  துன்புறு  நிலையை  யொழித்துச்  சிவானந்தத்திற்   றலைப்படற்  குரியவர் .  இவ்வுண்மையை  நம்  திருநாவுக்கரசு  அடிகள் , 

“புள்ளுவ   ரைவர்கள்வர்

        புனத்திடைப்  புகுந்துநின்று

 துள்ளுவர்  சூறைகொள்வர் 

        தூநெறி  விளையவொட்டார்

முள்ளுடை  யவர்கள்தம்மை

         முக்கணான்  பாதநீழல்

உள்ளிடை  மறைந்துநின்றங்

          குணர்வினால்  எய்யலாமே “

என்னும்  அருட்  பாசுரத்தால்  வெளியிட்டருளினார்கள் .  ஐம்புலன் களையும்  வேடர்களாகிய  கள்வர்களென்றனர் ;  சிவார்ப்பணமாகக்  கொள்ளப்படும்   பொருள்களையெல்லாம்  தமவாகக்  கொண்டு  மாறி  நின்று  மயக்கி  ஆறலைத்துச்  சூறை  கோடலான் .  

             “மனமெனும்  புனமே” 

என்னும்  பட்டினத்து  அடிகள்  கருத்துப்படி, ‘புன’ மென்பது  ஈண்டு  மனமாகும். அஃது  அக்  கள்வர்க்குகந்த  இடமாகலின்  ‘துள்ளுவ’  ரென்றார் . தூநெறி —  செந்நெறி  .  அந்  நெறியைத்  தடைப்படுத்தலின்  விளையவொட்டா  ரெனவும்,  எதிர்த்தாரை  ஊறுபடுத்துங்  கொடுந்தன்மை  யுடைமைபற்றி  “முள்ளுடையவர்க” ளெனவும்  ,  அஃதுடைமையால்  மறைவில்  நின்று  அம்பெய்து  வீழ்த்த  வேண்டுதலின்,  ‘முக்கணான்  பாத  நீழல்  உள்ளிடை  மறைந்துநின்  ‘றெனவும்,  உணர்வாகிய  அம்பினால்  எய்யலாமெனவும்  கூறியருளினார் .  ஈண்டு  உணர்வு  அநுபவ  அறிவாகிய  சிவஞானமாகும்.  இன்னும்  இவ்  வநுபவத்தை  உயிரநுபவம்,  அருளநுபவம் ,  சிவாநுபவம்  என  வகைப்படுத்துரைப்பாருமுளர் .  இதனைப் , 

“பொத்திய  மூல  மலப்பிணி  தவிர்க்கும் 

        பொருள்  அருளநுபவம்  அதற்குப் 

 பத்தியம்  உயிரின்  அநுபவம்

          இதனைப்  பற்றறப்  பற்றுதி”

என்பது  முதலிய  செய்யுட்களில்  ,  சிவனேய  மிக்க  இராமலிங்க  அடிகள்   வெளிப்படுத்தியுள்ளார் .  இவ்வறிவு  நெறியையே  மணிவாசகப்  பெருமான் ,

“நெறியறியேன் நின்னையே  யறியேன்

நின்னையே  அறியும்  அறிவு  அறியேன் “

என்றருளிச்செய்வாராயினர் .  நூலறிவும்  அநுபவ அறிவுஞ்  சிறந்த  சாதனமாதலை  நம்  பெரியார்,

“கற்றிலேன்  கலைகள்  ஞானம்  கற்றவர்  தங்களோடும் 

 உற்றிலே  னாதலாலே  உணர்வுக்குஞ்   சேய  நானேன் “

எனவும் , 

“கற்றறியேன்  கலைஞானங்  கசிந்துருகே  னாயிடினும்”

எனவும் , 

“ஞானத்  தாலுனை  நானும்  தொழுவனே”

எனவும்  மிகத்  தெளிவுபடுத்தி   விளக்கியுள்ளார்கள் .

                  நூல்களைப் பற்றியும்   அநுபவம்பற்றியும்  நிகழும்  ஞானத்தையே  அறிவுநெறியெனக்  கண்டு  அந்  நெறிக்கட்  சென்றால்  இன்ப  வடிவினனாகிய  இறைவனை  யுணர்ந்து  பேரின்பத்திற்  றலைப்படலாமெனும்  உண்மையை  நம்  வாசீகப்  பெருந்தகையார் ,  சிற்றறிவினேமும்  செவ்விதிற்  றெளிந்து  உளங்கொளும்வண்ணம் , 

“உடம்பெனும்  மனைய  கத்து  உள்ளமே  தகளியாக

 மடம்படும்  உணர்நெய்  அட்டி  உயிரெனுந்  திரிம  யக்கி

இடம்படு  ஞானத்  தீயால்  எரிகொள  இருந்து  நோக்கில்

 கடம்பமர்  காளை  தாதை  கழலடி  காணலாமே

என்று  தெளிவுபடுத்தருளினார்கள் .

            இதன்  பொருள்  :  காரிட்ட   ஆணவக்  கருவறையிற்  கிடக்கின்ற  நாம்,  மெய்ஞ்ஞான  விளக்கை  ஏற்றி  அப்  பேரொளிக்கண்  அகக்கண்கொண்டு  காண்பேமாயின்  ,  இறைவன்  கழலடி  காணலா  மென்பதாம்  விளக்கிடுதற்கு  முதலில்  வீடும் , பின்  அகலும் ,  நெய்யும் ,  திரியும்  நெருப்பும் வேண்டும் .

“உடம்பை  வளர்த்தேன்  உயிர் வளர்த்  தேனே “  

என்னும்  அருளுரை  இப்பயன்  கருதியே  எழுந்த தாகும்   இவ்  வுருவகங்கள்  மனத்தை  மிகவும்  இன்புறுத்தலோடு  மெய்யநுபவத்தையும்  வெளிப்படுத்து கின்றன . ‘மடம்படும்  உணர்நெய்’  எனவும்  ‘ஞானத்தீ’  எனவும்  ஈரிடத்தும்  உணர்வு , ஞானமென  ஒரு  பொருளை  நுதலிவருஞ்  சொற்களே  உருவகப் படுத்தப்பட்டுள்ளன . ஈண்டுப் பொருள்  வேற்றுமை  வேண்டும்  .  இன்றேல்  உருவகவியல்  சிதைவுறும் . ‘மடம்படும் உணர்வு’  என்பது  அறியாமை  கெடுதற்கேதுவாகிய  நூலறி வென்பதூஉம்  ,  ‘இடம்படும் ஞானம்’  என்பது , மூலமல  விருளின்  ஆற்றல்  குன்ற  யாண்டும்  பரந்தெழூஉம்  அநுபவ  ஞான மென்பதுஉம்  போதரும் . இஞ்ஞான விளக்கொளியிற்  கான்பது  ஆன்மாவா கவும்  ,  உயிரெனுந்திரியெனக்  கூறுயது  எங்ஙனம்  பொருந்துமெனின்  ,  “நிலநீர் நெருப்புயி”  ரென்புழி  ,  உயிர்க்காற்றென்று  பொருள்பட்டாங்கு  ஈண்டுப்  பிராணவாயுவெனப்  பொருள் கோடல்  வேண்டும் .   

                                                     11.  அன்பு   நெறி

      இங்ஙனம்  நூலறிவு  சாதனமாக   அநுபவ  அறிவு  பெற்று  அதன்  வாயிலாக  வீட்டின்பமெய்தல்  ஒன்று ;  மற்றொன்று  நம்  பெரியார்  பலரும்  மேற்கொண்ட  கனிந்த  பத்தி  மார்க்கமாகிய  அன்பு  நெறியாகும்.  அன்பில்  அறிவும்  அறிவில்  அன்பும்  கலந்தனவேயாயினும்  சிறப்பு  நோக்கித்  தனித்தனியாகக்  காட்டப்பட்டன.  அன்பினியல்பைக்  கூறின்  அது  விரிந்த  ஆராய்ச்சியில்  முடியும் . சுருக்கிக்கூறின் ,  இனி யாரிடத்துக்  கொள்ளுங்  காதலே  அன்பாகு  மென்பதாம் .  இனியான் , 

“கனியி  னுங்கட்டி   பட்ட  கரும்பினும்

பனிம  லர்க்குழற்  பாவைநல்  லாரினும்

தனிமு  டிகவித்  தாளு  மரசினும் 

இனியன்  தன்னடைந்  தார்க்கிடை  மருதனே “

என்ற  அருளுரைப்படி  இறைவனேயாவான் .  அவனைக்  குழைந்த  அன்பிலே  காணலாம் .

“உரனெனும்  பொருளானை

           உருகில் உள்   ளுறைவானை “

என்பது  அருண்மொழியன்றோ  !  “இன்பமே  என்னுடைய  அன்பே “  எனவும் ,  “அன்பினில்  விளைந்த  ஆரமுதே “  எனவும் ,  போந்த  அருளுரைகளால்  அன்பிலே  தோன்றும்  இன்ப  வடிவினனாகிய  இறைவனை  அன்பெனச்  சுட்டியது  நோக்கத்தக்கது . “அன்பென்ப  தொன்றின்  தன்மை  அமரரு  மறிந்த  தன்றே “  என  உலகிய  லன்பே  இங்ஙனம்  பாராட்டப்படுமாயின் ,  இறைவனைப்பற்றி  நிகழும்  பேரன்பின்  மாட்சி  எங்ஙனம்  அளந்து  பேசுந்  தரத்ததாம் ? 

          அடியார்  ப;லரும்  ஞானநிலை  யெய்திப்  பின்  அன்பு  நெறியையே  மேற் கொண்டுள்ளாரென்பதும் ,  அவருட்  சமயகுரவர்  அருளிச்செய்த  அருட்  பாசுரங்களெல்லாம்   அன்பெனுந்  தெவிட்டா  அமிழ்த  மழையாக  வெளிப்பட்டன  வென்பதும்  உணரத்தக்கன . அக்குரவர்களின்  மன மொழி மெய்கள்  சிவ வுருவத்தில் திளைத்து  நிற்பச்  சிவ  கரணமாக  மாறிய  தம்  உள்ளக்  கிழியில்  இறைவன்  திருவுருவை  யெழுதி ,

“எனை நாளென்ப  தறியேன்பகல்

       இரவாவதும்  அறியேன்” 

என்றபடி ,  சீவபோத  மிழந்து  அனலிற்பட்ட  மெழுகுபோல்  நெஞ்சம்  நெக்குருகி  நிற்க ,  அந் நிலையில்  அப் பாசுரங்கள்  அப் பெருமக்கள்  வாயிலாகத்  தங்கு  தடையின்றி யொழுகும்  தேனொழுக்குப்போல  வெளிப் பட்டன  என்பதைப்  பெரியபுராண  படனமுடையார்  யாவரும்  இனிதுணர்வர், அவர்கள்  மெய்யநுபவத்தை   அப்பாசுரங்களிற்  காணுந்தோறும்  காணுந்தோறும்  அறியாமை  வயப்பட்டுழலுஞ்  சிறியேங்கள்  மனமுங்  கரை யுமாயின்  ,  அதன்  பெருமையை  என்னென்பேம் !  என்னென்பேம் !  சிவநேயர் களே  !  அவ்வருட்பாசுரங்களில்  திளைத்தின்புறுதலொன்றே  நம்  அறிவு  வாழ்க்கையாலெய்தும்   முடிந்த  பெறும்  பேறாகக்  கொள்ளினும்  அது  மிகையாகாது . ஆ ! ஆ !  நினையுங்கால்  நெஞ்சம்  உருகுகின்றது  ! கூறுங்கால்  என்றுங்  காணாத  இனிமை  மிக,  நா அள்ளூறித்  தித்திக்கின்றது  !  கேட்குங்காற்  செவிகள்  குளிர்கின்றன !  உடல்  தன்  வயமிழக்கின்றது !  பளிங்கனைய  ஆன்மா  அவ்வருட்  பாசுர  மயமாக  மாறுகின்றது !  சொல்லும்  பொருளும்  இசையும்  சிவமணங்  கமழ்கின்றன !  பொறி புலன்களெல்லாம்  சிவமயமாகிறன !   

          இங்ஙனந்  தித்திக்கும்  மணி  வார்த்தைகளைத்  திருச்செவியி லருந்தவே  பாட்டுக்குருகும்  பனிமலைவல்லி  பாகன்  செழியர்  மருமகனாய்த்  தென்றமிழ்  நாட்டில்  தெய்வச்  செங்கோல்  செலுத்தும்  அரசனாயினான் . அவ்வருட்  பாசுரங்களை  அருளிய  பெரியார்  திருவுருவை  உள்ளத்தெழுதிய  சேக்கிழாரென்னும்  புலவர்  பெருமான்  ,  அன்பு வயப்பட்டருளிய  திருத் தொண்டர்   புராணத்துள்ள  பின்வருஞ்  செய்யுட்களில்  அவ்வுண்மையநுபவத் தைப்  பரக்கக்  காணலாம் .

“வார்த்து  சொரிந்த  கண்ணருவி

          மயிர்க்கால்  தோறும்  வரும்புளகம்

 ஆர்த்த  மேனிப்  புறம்பலைப்ப

          அன்பு  கரைந்தென்  புள்ளலைப்பச்

 சேர்ந்த  நயனப்  பயன்பெற்றுத் 

          திளைப்பத்  திருவே  கம்பர்தமை

நேர்ந்த  மனத்தி  லுறவைத்து

          நீடும்  பதிகம்  பாடுவார் “

“தூய  வெண்ணீறு  துதைந்த  பொன்

          மேனியுந்  தாழ்வடமும்

 நாயகன்  சேவடி  தைவரு

           சிந்தையும்  நைந்துருகிப்

பாய்வது  போலன்பு  நீர்பொழி

          கண்ணும்  பதிகச் செஞ்சொன்

 மேயசெவ்  வாயு  முடையார்

          புகுந்தனர்  வீதியுள்ளே “

என்றிங்ஙனம்  இறைவனைப்  பாடினாரைப்  பாடிய  செய்யுட்களே  நம்மைப் பரவசப்படுத்துகின்றன .இப்பாசுரங்களின்  முகமாக  வெளிப்பட்ட  அன்பு நெறியை  மாசற  மேற்கொண்ட  கண்ணப்பர்  வரலாற்றுச்  செயல்களெல்லாம் அன்பின்  முழு  இலக்கணங்களுக்கும்   இலக்கியமாக  நின்றொளிர்வனவாம்

“அன்புபிழம்  பாயினா

        ரவர்  கருத்தி  னளவினரோ?”

என்றபடி  அன்புருவமே  அவர்  வடிவம் .  இவ்வுண்மையை  உள்ளவாறு  உணர்ந்தவர்கள்  சமயகுரவர்கள் .

      அவர்கள்  கலைகளிலே  பாராட்டப் பெற்றமையா  னன்றே கண்ணப்பர்  “கலை  மலிந்த  சீர்  நம்பி “யாயினார் .திருநெறித்  தமிழ்  விரகராகிய  ஞானசம்பந்தர்   திருக்காளத்தி  சென்று  முதலில்  இறைவனையும்  ,  பின்  கண்ணப்பரையும்  வணங்கியமுறையை  எடுத்துக்  கூறுந்  தொண்டர்  புராணப் பகுதி   யாவ  ருள்ளத்தையுங்  கனிவிப்பதாகும் .

“வீழ்ந்தெழுவார்  கும்பிட்ட

      பயங்காண்  பார்போல்

 மெய்வேடர்  பெருமானைக் 

      கண்டு  வீழ்ந்தார் “

என்பர் . ஞானசம்பந்தர்க்குச்  சிவதரிசனப் பயனாக  வேடர்  பெருமான்  தரிசனங்  கிடைத்ததாம் . காரணம்  சிலை  வடிவத்தில்  இறைவனைக்  காண்பதினும்  அன்புப்  பிழம்பாகவுள்ள  கண்ணப்பர்  வடிவத்திற்  காண்டல்  சிறந்ததென்பது போலும்  விதி நெறியிற்  கடியப்பட்ட  எச்சில்  ஊன்  முதலியன  அன்பு  வயப்பட்டு  இறைவற்கு  உவப்பாயின . விதிநெறியிற்  போற்றப்பட்ட  மலர் ,  நறு நீர்  அன்னம்  முதலியனவும்  ,  கண்ணப்பர்  அன்பு  நெறியிற்  கடியப்பட்டன . ஆயினும்  அப்பொருள்களும்  விதிநெறி பற்றி  யொழுகும்  சிவகோசரியாரது  அன்பின்  அளைந்தனவாதலின்  பெரியோர் களாற்  போற்றப்பட்டன .  இவ் வுண்மையை ,

“ஊனோ  டுண்டல்  நன்றென  ஊனோ  டுண்டல்  தீதெனா

ஆன  தொண்டர்  அன்பினாற்  பேசநின்ற  தன்மையான் “ 

என்னுந்  தமிழ்மறை  நன்கு  விளங்கும்  .  சித்தம்  சிவமாகப்  பெற்றால்  அன்பு  மேற்பட்டாற்  செய்வனவெல்லாம்  தவமேயா  மென்பதை  இவ்  வரலாற்றுப் பகுதி   தெளிவுறுத்துருகின்றது .

          சித்தஞ்  சிவமாகப்  பெற்றோர்க்கு  விடய வாதனைகளால்  யாதும்  ஏதம்  விளையாது .  அங்ஙனம்  புலனுகர்ச்சியும்  அவர்தம்  நெஞ்சத்தைக்  கலக்கும் .  இவ்வுண்மையை  ,

“எழிலையாழ்  செய்கைப்  பசுங்கலான்  விசும்பி

 நின்றுளி  படநனைந்  துருகி,

 அழலையாழ்  புருவம்  புனலொடுங்  கிடந்தாங்கு

என்னுந்  திருவிசைப்பாவிற்  காணலாம் . இதன்  பொருள்  சிறு  நீர்த்துளிக்குங்  கரையும்  பசு  மட்குடத்தை நெருப்பிற்  சுடப்பட்டபின்  பெரும்  புனலிலிடினும்  அஃது  உருச்சிதையாவாறு  போலத்  திருவருட்  பதிவு பெற்ற  மனம்  எத்தகைய  புலனுகர்வாலுஞ்  சிதைவுறா  தென்பதாம் . ( இப்  பாசுரப்  பகுதிக்குப்  பொருள்  வரைந்தவரோருவர்   அழலை யாழ்பு  —  உருவம்  — எனப்   பதப்பிரிவு  கொள்ளாமல்,“அழலையாழ்–புருவம்”எனப்பிரித்துப்“பொருள்வெளிப்படை “  யென்று  குறித்துள்ளார் . அவர்  செய்த  பதப்பிரிவே  அவர்  அப்பொருள்  அறியாரென்பதைப்  புலப்படுத்துவதாகும் )  ஈண்டறிந்த  அறிவுநெறி  அன்பு  நெறியாகிய  இரண்டும்  சிவ நலம்  பெறுதற்குரிய  வென்பது  முடிந்த  பொருளாம் .  இவ் விருவகைச்  சிறந்த சாதனங்களை  நம்  பெரியார்  அருள்  சுரந்து  நமக்கு  வெளியிட்டனர்  .

“விறகிற்  றீயினன்  பாலிற்படு  நெய்போல்

மறைய  நின்றுளன் மாமணிச்  சோதியான்

உறவு  கோல்நட்  டுணர்வு  கயிற்றினால்

முறுக  வாங்கிக்  கடையமுன்  நிற்குமே”

என்னும்  அப்பர்  அருண்மொழியில்  “உறவுகோ”  லெனவும் , ‘உணர்வுகயி’  றெனவுங்  கூறியது  முறையே  அன்பு  நெறியையும் அறிவுநெறியையுமேயாம். இவற்றுள்  ,  கடைதற்குக்  கயிற்றினுங்கோல்   மிக  நெருங்கிய  சாதனமாதலை உய்த்துணரின்  ,  ஞானத்தினும்  அன்பு விழுமிய  தென்பது  போதரும்  .  பாசநீக்கத்திற்  றோன்றும்  அறிவினும்  ஆண்டான்  நிலை  நோக்கி  யுண்டாம்  அன்பு  பிறப்பிடத்தானுஞ்  சிறந்துளதென்று  கூறுவாருமுளர் .

                                  12 . ஆண்டானடிமைத்   திறம்

          இன்னும்  நம்  சைவ  சித்தாந்தச்  செந்நெறியில்  ஆண்டா  னடிமைத்  திறம்  மிகத்  தெளிவாக  வலியுறுத்  துரைக்கப்பட்டுள்ளது .  கட்டு  நிலையினும்  வீட்டு  நிலையினும்  உயிரை  விட்டு  நீங்காதது  இத்  தொண்டாந் தன்மை  யொன்றே.

“கண்டவிவை  யல்லேனா  னென்றகன்று  காணாக்

கழிபரமு  நானல்லேன்  எனக்கருதிக்  கசிந்த

தொண்டு “

என்பதனால்  இத்  தொண்டினிலக்கணம்  வெளிப்படுத்தப்பட்டுள்ளது .  இறை வற்குப்  பசுக்கள்  அடிமையும்  பாசங்கள்  உடைமையாகும் .

“எல்லாம்  உன்  அடிமையே

         எல்லாம்  உன்  உடைமையே “

என்பதும்  இக்  கருத்துப்  பற்றி  யெழுந்ததாகும் . அடிமைத் தன்மையில் ஒரு சிறிதாவது  முனைப்பிருத்தலாகாது . சிறிது  முனைப்புளதேனும்  அடிமை யிலக்கணம்  பிழைபடும்  இது  பற்றியே  “தாழ்வெனுந்  தன்மையோடு  சைவமாஞ்  சமயஞ்  சார்தல்”  வேண்டு  மென்பர் . பெரியாரொருவரை  யொருவர்  சந்திக்குங்கால் , ஒருவர்  மற்றொருவரை  நோக்கித்  ‘தாங்கள்  யாவர்’?  என  வினவுங்கால் , வினவப்பட்டவர் தம்மையறிவிக்க  ,வேறொருவர்  இல்லாதவழித்  தாமே  தம்மைக்  கூற நேரின் , தம்மைக் கண்டுகொள்ளக் கூடிய  நிலையில்  எளிய  நிலையை  எடுத்துரைப்ப  ரென்பதை  நாவரையரும்  அப்பூதி  அடிகளும்  சந்தித்த  பொழு துண்டாகிய  வினா  விடைகளால்  அறியலாம் .  

            அப்பூதடிகள்  , “ எங்குரைவீர்  நீர்தாம்  யார்”  என்று  வினவ ,  வாகீசர்,

                            “பிறதுறையின்  நின்றேற 

அருளுபெருஞ்  சூலையினால்  ஆட்கொள்ள  அடைந்துய்த்த

 தெருளும்  உணர்  வில்லாத  சிறுமையேன்  யான் “

என்றார்  .  உண்மையான  தொண்டக்  குலத்தைச்  சார்ந்தார்க்குப்  பண்டைக்  குலமாகிய  சாதி  பற்றிய  வேறுபாடின்றாம் .   இவ் வுண்மையையும்  இவ்வரலாறு  நன்று  தெளிவிக்கும் .  “குலந்தரும்  செல்வந்தந்திடும் ……….நாரா யணா  என்னு  நாமம்”  என்புழி “  குலந்தருமென்பதற்கு  உயர்குலப்  பிறப்பைத்  தருமெனப்  பொருள்  கொள்ளின்  ,  இயல்பாக  உயர்குலப்  பிறப்புடையார்க்கு  இப் பயன்  வேண்டாததாக  முடியுமாகலான் ,  இங்குக்  கூறிய  குலம்  பண்டைக்  குலமன்று ;  தொண்டக்  குலமேயாமென்பர்  அப்  பாசுர  உரையாசிரியர்  பண் டைக்  குலவொழுக்கிறந்து  இத்  தொண்டக்  குலத்துச்  சிறந்த  அப்பூதியடிகள்  வரலாற்றைக்  கூறத்தொடங்கிய  நம்  அருட்பெருங்  கவிஞர் ,  இன்னவூரில்  இன்ன  குலத்தில்  இன்னாருளர்  எனக்  கூறு  முறையை  விடுத்து ,  “தாண்டவம்  புரிய வல்ல  தம்பிரா  னாருக்கன்பர் “  என  அவர்தம்  தொண்டர்க்குலச்  சிறப்பையே  சுட்டிக் கூறியருளினார் .  புகழை  ஒரு  சிறிதும்  வேண்டாத  அடிகளை  “ஈண்டிய  புகழின்  பாலா”  ரென்றது ,  அடிகள்  வேண்டாத  நிலையில்  புகழ்  தானே  நெருங்கி   வருதல்  பற்றியாகும் .

             இவ்  வாண்டா  னடிமைத்  திறத்தை  நம்  சகோதர  மதமாகிய  வைணவ  சமயம்  சேஷ  சேஷி  பாவமாக  வைத்து  விளக்கிக்  கூறும் . அடிமையி  னியல்பைப்  பற்றி  அச்  சமயத்தார்  கொண்ட  கருத்தை  ஓரெடுத்துக்காட்டால்  விளக்குவேன் .  இராம  காதையில்  ஓரிடத்தொருவர்  இலக்குமணனை  நோக்கி,  ““ராமனுக்கும்  உனக்கும்  என்ன  இயைபு “  என்று  வினவ  “அஹமஸ் யாவரோப்ராதா    குணைர்தாஸ்யம்  உபாகத ,”  என்று  இலக்குமணன்  விடை  கூறியதாக  மதுரகவியாகிய  வான்மீகியார்  வெளியிட்டுள்ளார் . இதன்  பொருள்  யான்  இவர்க்குத்  தம்பியும்  அடிமையுமாகவே  னென்பதாம் .  இங்கே  திருவாய்மொழியி  னுரையாசிரியர்  அடிமைத்  தன்மையிற்  சகோதர பாவம்  ஏறிட்டது   முரணுறுவதா  மென  ஆசங்கித்து  “அவனொருபடி  நினைப்பன் ,  யான்  ஒருபடி  நினைப்பன் “  என்பது  இலக்குமணர்  கருத்தாகக்   கொண்டு  காட்டி  அம்  முரண்பாட்டைக்   களைந்து  அடிமை  யிலக்கணம்  பிழைபடாமையை  எடுத்துக் காட்டினர் . இராமன்  பின்னே  செல்கென  இலக்குமணர்க்குச்   சுமித்திரையார்  விடை  தருங்கால் , 

 “பின்னும்  பகர்வாள்  மகனே  யிவன்பின்  செல்  தம்பி

யென்னும்  படியன்  றடியாரினேவல்  செய்தி”

என்று  இட்ட  கட்டளையால்  அடிமைத் தன்மைக்குச்   சோதரபாவ   முரண் படுவதாகு  மென்பது  வெளியாகின்றது .  மேலே  காட்டப்பட்ட   அவ்வரைச்  சுலோகத்தின்  முதற்பகுதி  இராமபிரான்  கருத்தாகவும் ,  பிற்பகுதி  தன்  கருத்தாகவும்   இலக்குமணன்  கூறியதாகக்  காட்டியது  மிகவும்  பாராட்டற்பாலது .  இவற்கு  யான்  தம்பியாவேனென்றது  ,  “இவனை  வினவினால்  என்னைத்  தம்பி  யென்பன் ;  என்  கருத்து  அஃதன்று  ;  யான்  அடிமையே  என்றானாம் . இப்பணிவு  நிலை  மிகவும்  போற்றத்தக்கதொன்று. 

              இறைவனை  நோக்கி  அடியார்  தம்  கடமை  யாகிய  “கூடுமன் தனிற் கும்பிடலேயன்றி,  வீடும்  வேண்டா  விற”  லுடைய  அடிமையியலிற்  பிழையாததாகும்.  அவ்வடியார் வீடெய்தற்குத்  தடையாகவுள்ள  தளைகளைக்  களைதற்கு  இறைவன்  திருவடி  நாட்டத்தில்  ஈடுபடுதலே  கடன் .  அதற்குப்  பயன்  விளைத்தல்  இறைவன்  கடமையாகும் .  அதனையும்  வேண்டி  நிற்றல்  அடிமைத்தன்மைக்கு  ஒவ்வாத  தொன்றாம்.

“மண்மேல்  யாக்கை  விடுமாறும்

            வந்துன்  கழற்கே  புகுமாறும்

 அண்ணா  எண்ணக்  கடவேனோ

             அடிமை  சால  அழகுடைத்தே”

என்னும்  அருண்மொழி  இவ்வுண்மையை  வலியுறுத்துவதாகும் .  இவ்வடிமைத்தன்மை   கட்டு  நிலையிற்போல  வீட்டு  நிலையினும்  ஆன்மாவிற்குரியதென்பதை  , 

“அதனி னீறலா  வொன்று  பலவாறே

தொழும்பாகு  மங்கு”

என்பதனாலும் ,

“சித்தமல  மறுவித்துச்  சிவமாக்கி  யெனையாண்ட”

என்பதனாலும்  தெளியலாம் .  ‘அங்கு’  என்பது  வீட்டு நிலையி லென்று  பொருளாதலையும் ,  சிவமாக்கிய  பின்னும்  ஆட்சி  கூறப்படுதலையும்  உற்றுணர்க .

                                                  13 .  வீட்டு   நிலை

      இனி , நம்  சமயத்தின்  வீட்டு  நிலையைப்  பற்றி  விளக்கும்  பகுதியும்  அதற்கு  எடுத்துக்  காட்டாகவுள்ள  உவமங்களும்   அளவை  நூன்  முறையிற்  சிறிதும்  பிறழ்தலின்றி  அமைந்துள்ளன .  கட்டறுத்து  வீடுபெறும்  ஆன்மா  இறைவனோ  டிரண்டறக்  கலந்து  சிவாநுபவ  நுகர்ச்சியிற்  றலைப்படுங்கால்   பொருள்  வகையா  லிரண்டாயினும்  அநுபவ  நிலையில்  அவனெனத்  தானென  வேற்றுமை  யின்றி  அத்துவித  சம்பந்தம்  பெற்று  நித்திய  வின்பத்திற்   றிளைத்து  நிற்கும் .  அத்துவிதச்  சொல்லாராய்ச்சி  மிக  விரிவுடைய  தாகலின்  ஈண்டு  விளக்க  முற்பட்டிலன் . வீட்டு  நிலையினும்   இறை  ,  உயிர் , தளை  என்னும்  முப்பொருளுண்மையை   இச் சமயம்  தெளிவு றுத்திநிற்கின்றது . நித்தியப்  பொருள்களுக்கு  யாண்டாவது  ஓரிடத்து  அழிவு  கேட்கப்படுமாயின்   நித்தியத்துவம்  நிலைபெறாது .

       முத்தி  நிலையில்  இன்ப  வடிவினனாகிய  இறைவனும்  அவனோ  டிரண்டறக்கலந்து  அவ்வின்ப நுகர்ச்சியி  லழிந்தி நிற்கும்  ஆன்மாவுமாகிய  இருபொருளுண்மை  பெறப்படுமாயினும்  , கட்டு  நிலையில்  தடையாக  இருந்து  சிவ  சாதனங்களாலொழிந்த  மலத்துக்கு  ஆண்டு  அவகாசம்  இல்லை  யாதலின்  ,  அதன்  நித்தியத்துவம்  எங்ஙனம்  நிலைபெறுமெனின் ;  முத்தி  நிலையில்  அவ் வான்மாவைப்  பாதித்திருந்த  மலத்தின்  ஆற்றல்  அறவே  யொழிந்ததன்றி  மலம்  என்னும்  பொருட்டுக்  கேடின்றெங்க.  முத்தியிற்   றலைப்படாத   மற்றை  உயிர்களிடத்து   அம்  மலவாற்றல்  காணப்படுதலின்  அப்  பொருட்டுக்  கேடு  யாண்டு  மின்றாம் .  அங்ஙனமாயின்  மல  ஆற்றல்  ஒழியப்பெற்ற  வீட்டு  நிலையில்  வைத்து ,

“முத்திதனின்  மூன்று  முதலு  மொழியங்கேள்

சுத்தவநு  போகத்தைத்  துய்த்தலணு–  மெத்தவே

இன்பங்  கொடுத்தலிறை  இத்தைவிளை  வித்தல்மலம்

அன்புடனே  கண்டுகொள்  அப்பா “

என்பது  எங்ஙனம்  பொருந்துமெனின் ,  நெடிது  நேரம்  பனியால்  நடுங்குற்றான்  ஒருவன் . தீயின்  பக்கல்  சார்ந்துழி  ஓரின்பம்  எய்துகின்றான்; அவ் வின்பத்திற்குக்  காரணம்  தீயின்  சூடும்  பனியின்  நீகமுமேயாம் . பனியாற்பற்றப்படாத  நிலையில்  தீயை  யணுகின்  இன்பந்  தோன்றாமை யின்   ஆண்டும்  பனி  நீக்கமும்  இன்பத்திற்குக்  காரணமாகும் . இத்தை  விளைவித்தல்  பனியென்புழிப்  பனியின்  நீக்கமெனக்  கொள்ளல்  வேண்டும். பனியாற்  பற்றப்பட்டு  நடுக்கமுற்ற  நிலையில்  தீயின்  சூட்டினால் அது  நீங்குங்கால்  இன்பம்  எய்தும் . அதுபோலக்  கரையற்ற காலம்  ஆணவ  மலவெதுப்பாற்  பற்றப்பட்டுத்  துபுற்று  நின்ற  ஆன்மா  தண்ணிழலாம்  பதியோடு  இணந்த பொழுது  அம்மல நீக்கமும்  அவ்வின்பத் தோற்றத்திற்குக்  காரணமாதலின்  ,  ‘இத்தை  விளைவித்தல்  மல’  மென்றார். ஆகவே  நித்தப்  பொருள்களுக்குக்  கேடில்லாத  நிலையில்  வைத்தே  வீட்டு  நிலை  நம்  சமயப்  பெரியொர்களால்   தெளிவுறுத்தப்பட்டுள்ளதெங்க.

                                                          14 .  நம்  கடமைகள்

         இன்னும்  ஆன்மாக்கள்  நன்னிலைப்படுதற்குரிய  இன்னோரன்ன  சிறந்த  உண்மைகள்  பல  நன்கு அமையப்பெற்ற  நம்  சைவ  சமயத்தின்  மாட்சி  அளவிடுந்  தரத்தன்று  .  இதனைப்  போதிக்கும்  நூல்களோ  தமிழ்  வளம்  பழுத்த  கவிச்சுவை  பொதுள  அநுபவ  அருட்புலவர்  பெருமக்களால்  அருளிச்  செய்யப்பட்டன  வாகும் .  சாத்திர  வடிவிலுந்  தோத்திர  வடிவிலும்  முறையே  அமைந்த  சிவஞானபோத  முதலியனவும்  தேவாரம்  முதலியனவும்  நம்  சமய  வுண்மைகளாகிய  மூலப்பொருள்கள்  நிரம்பிய  சிறந்த  கருவூலங்களாக  அமைந்திருக்குங்கால் நமக்கு  யாது  குறையுளது ? அக்  கருவூலப்  பொருள்களை  அறிந்து  அனுபவிக்க  வேண்டியதே  நம்  கடமையாகும் .  

         அன்பர்களே  !  இவ் வரிய  சமய  மூல  தனத்தை  நமக்குக்  கருணையுடன்  நம்  பெரியார்  அருளியிருப்பவும்,அந்  நன்றியை  மறந்து  நம்மவரிற்  சிலர்  அன்னாரைக்  குறை கூறியும்  ,  சமய  வுண்மைகளை  இகழ்ந்தும் , அந்  நூல்களை  வெறுத்துப் பேசியும்  நெறிபிறழ்ந்து  சைவ  வுலகுக்குத்  தீங்கு  புரிந்து  வருகின்றனர்  .   தாமே  தம்மைக்  கெடுத்துக்கொள்ளும்  அவ்வளவி  லமையாது  உண்மை  அறிவாற்றலில்  தலைபடும்  பருவத்தினராகிய  சைவ  இளைஞர்களையும்  கெடுக்க  முற்படுகின்றனர் .  அறவே  நம்  சமயத்தைத்  தொலைத்துவிட வேண்டுமென்பார் ஒருபுறமிருப்ப ,  சைவ வேடந்தாங்கி  நின்று  புதிய  முறையிற்  சைவத்தை  விளக்குவதாக  மேற்கொண்டு  நம்  சமய  நெறிக்கு  ஒவ்வாத  பல  கொள்கைகளைப்  பரப்ப  முற்படுவாரும்  ஒருபுறந்  தாக்குகின்றனர்  .  ஆ ! ஆ !  ஒரு  நாட்டுக்குத்  தன்  பண்டைச்  செல்வமாகிய  சமய நிலையை  இழக்குங்  காலம்  நேரின் ,  அந்  நாட்டின்  எந்  நலனுங்  குறைவுபடுமே  !  அதன்கண்   வாழும்  மக்கள்  எவ்வகை  யின்பமும்  இல்லாராய்  விலங்கு  நிலையை  யெய்திக்  கீழ்  நோக்கித்  தம்  பிறப்பின்  பயனை  வீணாக்குவரே !  செய்யத்தக்கன  இன்ன  ,  தகாதன  இன்னவெனும்  பகுப்புணர்வின்றி  உண்டியுங்  காம  இன்பமுமே  பொருளெனக்  கொண்டு  அவற்றின்  பொருட்டு  மனம்  போன  வழியிற்  சென்று   தம்  அறவாழ்க்கைப்  பயனை  ஒரு  சிறிதும்  எய்தாராய்க்  கேடுறுவரே !  அந்தோ !  பொருளில்லாதார்  அதனைப் பெற  முயறல்  உலகியற்கை  உடையார்  தம்  பாலுள்ள  பெறலருந்  திருவை  வெறுத்தொதுக்கி   வறியராக  முயறல்  யாண்டுங்  காணாததொன்று  .”காட்சியளவையிற்  கொள்ளப்படுவனவற்றை யே  கொள்வோம் ; மற்றைக்  கருதலளவை  உரையலளவைகளை  ஏற்றுக் கொள்ளோம் “ என்று  சாதிப்பார்க்கு , அவர் தம்  தாய்  தந்தையரை  எப்  பிரமா ணத்தாற்  காட்டக்கூடு “  மென்று  கேட்போமாயின்  ,  யாது  விடை  பகர்வர் ?

           காட்சி  யளவை  யொன்றனையே  கொண்டு  மற்றவற்றை   ஏற்றுக்கொள்ளாத  பூதவாதி  யொருவனை  மணிமேகலை  யென்னும்  அறிவுடை  மகள்  தேற்றுமுகமாகக்  கூறியதொன்று  ஞாபகத்துக்கு  வருகின்றது .  அது ,

“தந்தை  தாயாரை  யநுமானத்  தாலலது

 இந்த  ஞாலத்  தெவ்வகை  யரிவாய் “

என்பதாகும் .  ஈண்டு  அவன்  தன்  கொல்கையைக்  கடைப்பிடித்துத்  தந்தை  தாயாரை  விலக்குதல் தக்கதா ?  அல்லது  தந்தை  தாயரை  ஏற்றுக்கொள்ளுமுகமாகத்  தன்  கொள்கையை  விட்டு  அநுமானத்தை  ஏற்றுக்கொள்ளல்  தக்கதா?  அன்பர்களே !  சிந்தித்துப்பார்மின்கள் .  இங்ஙனங்  காட்சி  யனுமானங்களை   ஏற்றுக்கொள்ளுங்கால்  இவற்றை  விளக்குதற் குரிய   உரையளவையை  எங்ஙனம்  விலக்க  முடியும் ?

              உரையளவையாகிய  நூற்  பிரமாணங்கொண்டே  மக்கள்  தம்  அறிவைப்  பெருக்கிப்  பற்பல   நுண்ணிய  அரிய  பொருள்களையெல்லாம்   அறிந்தின்புறற்பாலர் .  ஆகவே  நூலளவையையும்  , கருதலளவையையும்  ஏற்றுக்கொண்டே  எப்பொருளையும்  அறிவுடையார்  ஆராய்தல்  வேண்டும் .  “இந் நியாய  நெறியில்  யாம்  செல்லோம்;  எம்  உளஞ்  சென்றவாறே  செல்வோம் “  என்று  வரம்பிகந்து  பேசுவார்க்கு  யாம்  தரும்  மாற்றம்  யாதுளது?

“நிற்பார்  நிற்க   நில்லா  வுலகி

 னில்லோம்  இனிநாம்  செல்வோமே “

என்னும்  அருண்மொழிப்படி  அவரவ்வளவின்  மகிழ்க  என்றமைந்து ,

“நெறியி  னீங்கியோர்  நீரல  கூறின்

 அறியா  மையென்  றறியல்  வேண்டும்”

என்பதைக்  கடைப்பிடித்து  இறைவனை  நோக்கி ,  “கடவுளே !   நன்நெறி யிகந்து   இருளதர்  செல்லும்  சோதரர்க்கு  நீக்கரும்  நிலையின்  நிற்கும்  நீ  அறிவு  விளக்கை  யளித்துக்  காத்தருளல்  வேண்டும் . “     என்று  வேண்டுதலே  யன்றி  வேறென்  செயக்கடவோம்!  நம்  சமய  அடையாளங்களாகிய  திருநீறு   கண்டிகை  யணிதலும்  ,  ஆலயவழிபாடு  செய்தலும் ,  உண்மைப் பத்தியை  விளைவிக்கும்  புராண  கதைகளைக்  கேட்டலும்  இன்றியமையாதனவாக , இவற்றையெல்லாம்  பயனற்ற  செயலெனக்  கூறித்  திரியும்  சிறு  நெறியாளர்  கெடுமதியை  என்னென்பேன்  !  என்னென்பேன் ! ! 

               புராணக் கதைகள்  அவை  தோன்றிய  காலத்து  மக்கள்  ஒழுகலாறு  நோக்கி  எழுந்தன வாதலின்  அவருட்  சில  இற்றைநாள்  மக்கள்  நாகரிகத்துக்கு  ஒவ்வாதனவாகவும்  இருத்தல்  கூடும் .  அங்ஙனம்  இயையாதன  இன்னவென்று  தெளிந்தால்  அவற்றை   விட்டுக்  கொள்வன  கொள்ளுதலன்றோ  முறை !  எல்லாம்  பொய்யெனக்  கூறுதல்  எப்  பிரமாணம்  பற்றி ?  புராண  காவியங்கள்  நிகழ்ந்தனவும்  ,  நிகழாதனவும்  ,  இரண்டுங்  கலந்தனவும்  எனப்  பலதிறப்படும் .  

                  நிகழாதனவற்றிலும்  நீதி  அறம்  கடவுட்  பத்தி  முதலிய  நலமிருப்பின்  ஏற்றுக்கொள்ளலாம் .   நிகழ்ந்தனவற்றிலும்  மக்களுக்குத்  தீங்கு  விளைப்பன   உளவேல்  அவற்றையறிந்து  ஒதுக்கிவிடலாம் . பொய்  மெய்களின்  உண்மை  இலக்கணத்தை  யறிந்தார்  இம்  முறையைக்  கோடல்  ஒருதலை .  

“வாய்மை  யெனப்படுவ  தியாதெனின்  யாதொன்றுந்

 தீமை  யிலாத  சொலல்”  

எனவும் ,

பொய்மையும்  வாய்மை   யிடத்த  புரைதீர்ந்த 

நன்மை  பயக்கு  மெனின் “ 

எனவும்  போந்த  பொய்யில்  புலவர்  பொருண்மொழிகள்  எத்துணை  ஆழ்ந்த  சிந்தனையின் மேல் வெளிப்பட்டன .  உற்று நோக்குமின்கள்  !  நிகழாதது  பற்றிப்  பொய்யெனவும்  நிகழ்ந்தது  பற்றி  வாய்மை  எனவுங்  கொள்ளப்பட வில்லை .  தீமை  பயத்தல்  நன்மை  பயத்தல்களையே   பொய்மை  வாய்மைகளுக்குப்  பொருளாகக்  கொண்ட  சிறப்பும்  நம்  முன்னையோர்  பெருமையைப்  புலப்படுத்துகின்றது .  

        வடமொழி  யியைபை  அறவே  தொலைத்து  விட  வேண்டு  மென்னுங்  கொள்கையும்  நம்  சமயப்  பாதுகாப்புக்கு  ஊறு  செய்வதாகும் . அம்  மொழிக்கண்ணுள்ள  வேதாகம  புராணேதிகாசங்களுக்குள்  நம்  சமய  வுண்மைகளை  விளக்கும்  பகுதிகள்  நமக்குப்  பிரமாணங்க   ளென்றே  நம்  பெரியார்  கொண்டு  போற்றினர் .  வட மொழிக்கண்  உள்ள  நூற்  பரப்புக்கள்   அறிவுடையுலகத்தாற்  பாராட்டப்படுகின்றன .  ஒரு  சிலர்  அம்மொழியைத்  தமக்கே  யுரியதென   அறியாமையாற்  கொண்டு  நம்மை  வெறுப்பாராயின் , அவரை  வெறுத்தொதுக்குதலே  முறையாகுமன்றி  அவர்  புரியுந்  தீங்கு  குறித்து  அம் மொழிக்கணுள்ள  சுவை  நிரம்பிய  காவியப்பகுதிகளையும்  அறிவுநூற் பகுதிகளையும்  அறிந்து  இன்புறும்  பேற்றை  யாமேன்  இழக்கவேண்டும்  ?  உண்மைப்பொருள்  எம்  மொழிக்க ணிருப்பினும்  அறி வுடையார்  கொள்ள  விரும்புத லியல்பே  .  நம்  செந்தமிழறிவு   நூல்களெல் லாம்  வடமொழிக்  குறியீடுகளையே  பெரிதுந்  தழீஇ   நிற்கின்றன . அவற்றைப்  பொருட்  பிறழ்ச்சி  நேராமல்  தமிழ்மொழியில்  ஆக்கிக்கோடல்  நன்றாயினும்  அதுபற்றி  வடமொழியை  வெறுத்தொதுக்க  வேண்டுமென் பதில்லையே  !  தமிழிலுள்ள  தலபுராணங்களிற்  பல  அம் மொழிபெயர்ப்பா யினும்  சிறந்த  காவிய  முறைகளில்  அமைந்தனவாகும் .  வடமொழியிற்  புராண  நடை வேறு ;  காவிய  நடை  வேறு .  தமிழிலுள்ள  தலபுராணங்கள்  பெரும்பாலும்  காப்பியச்சுவை    நலங் கனிந்தொழுகும்  முறையில்  அமைந்தனவே . நிகழாத  வரலாறுகளைப்  பற்றி  எழுந்தவற்றையும்  கவிச்சுவை  , அறநிலை  முதலிய  நல  நோக்கி  ஏன்  அவற்றைப்  படித்தலாகாது?  அம் முறையில்  அவைகளும்  பயன்  விளைவிப்பனவேயாம் .  கவியின்  கற்பனா லங்காரங்  கருதிக்  கூறப்பட்டவைகளைப்  பொய்யெனக் கூறி  இகழ்தல்  நூல்  நலம்  பெற  விழையும்  மதிபடைத்தாற்குப்  பொருந்துவதன்றாம்  . எவற்றினும்  நல்லன  இருப்பிற்  கொள்ளல்   வேண்டும்.  காலத்தால்  முற்பட்டது  பற்றிக்  கேட்டலும்  பிற்பட்டது  பற்றி  விலக்குதலும்  முறையல்ல .  நன்று  தீதாய்ந்து  நல்லன  கொள்ளுதலே  அறிவுடையார்  கடமை.  

“தொன்மையவா  மெனுமெவையும்  நன்றாகா  இன்று

 தோன்றியநூ  லெனுமெவையுந்  தீதாகா” 

என்பது   உமாபதிசிவாசாரியர்  உயர் மொழியாகும் .

                                       15 . வேண்டுகோள்

         சைவ  சீலர்களே !  உண்மைகளைப்  பிறழ்வித்து   உறுதிப்   பயங்களைக்  கெடுக்க  எழுந்த  சுழல்காற்றுக்  கஞ்சாதீர்கள் .  “வானந்  துளங்கிலென்  மண்கம்ப  மாகிலென் ……………………..ஒருவனுக்  காட்பட்ட  வுத்தமர்க்கே  “   என்னும்  நம்  அப்பருண்மொழியைக்  கடைப்பிடித்துச்  சமய  நிலையிற்  கொண்ட  உறுதியைத்  தவறவிடாதீர்கள் . யாண்டும்  சைவ  சித்தாந்த  உண்மைகளைப்  பரப்புமின்கள்  .  சித்தாந்த  நூல்களை  நம்  இளைஞர்கள்  செவ்வனம்  படித்தறிதற்கேற்ற  நிலையங்களை   நிலைப்படுத்துமின்கள் .  தமிழிலுள்ள  சைவ  சித்தாந்த  நூல்களும்  அவற்றின்  உரைகளும்  கவிச்சுவை  நிரம்பியுள்ளன  வாதலின்  அவற்றை  அம்  முறையிற்  படிப்பித்தல்  நன்று . தேவார  திருவாசக  முதலிய  திருமுறை  இலக்கியங்களைப்  பொரு  ளாராய்ச்  சியுடன்  தெளிவு  பெறக்  கற்பிக்கும்   அற  நிலையங்கள்  வேண்டும்  .  இக்காலத்  திளைஞர்கள்  கல்விப்பயிற்சி  செய்தற்கு  முன்னரே  “எங்கொள்கை  ஈது  நுங்கொள்கை  ஈது”  எனத்  தெளிவு  கைவரப்  பெறாமல்,  அடிப்படையிலே  கொள்கை  பற்றித்  தடுமாறுகின்றனர்  .  அன்னார்  சற்றுப்  பொறுமையுடன்  முறையாகக்  கற்றுச்  சமயநூற்  போதம்  பெறுவாராயின்  ,  உண்மை  தெளிந்து  பிற்கால  உலகுக்கு  மிகவும்  பயன்படுவர் .  ஆதலின்  அவர்களை  அறிவு நூற்பயிற்சி   யுடையராக்கி  நன்நெறிப்படுத்த  முயலவேண்டும் . 

      சமயநூ  லாராய்ச்சி  சமய  ஒழுக்கத்தோடு  செயற்பாலதாகும் .  நூலறிவும்  ஒழுக்கமும்  ஒருங்கியைந்தே  வளர்ச்சியடையும்படி  தக்க  சாதனங்களைச்   சைவ  சீலர்களாகிய  செல்வர்கள்  செய்யமுந்தவேண்டும் . செல்வம்  படைத்தார்  இச் சிறந்த  அறிவறத்தையன்றி  வேறென் செயக்  கடவர்  !  கால  நிலையோ  விபரீதமாக  மாற்ற  மடைந்து  வருகின்றது . இவ் வமயம்  அறிவுந்  திருவும்   வாய்க்கப்பெற்றோரும்  அறிவுச்  செல்வ மாத்திர   முடையோரு மாகிய  சைவ  சீலர்கள்  மன மொழி மெய்களாலும்  மற்றைப் பொருள் முதலிய  உபகரணங்களாலும்     செல்லும்வா  யெல்லாம்  ஒல்லும்  வகையான்  சிவநெறி  பேணுஞ்  செவ்விய  அறங்களைத்  தாழாது  புரிய  முன்வரல் வேண்டும் .

       இன்னோரன்ன  சைவ  மகா  சங்கங்களைத்  தமிழ்நா  டெங்கணும்  நிலைபெறச் செய்து   அறிவொழுக்கங்களிற்  சிறந்த  பெரியாரைக் கொண்டு  சமய  வுண்மைகளை  யாவரும்  உளங்கொள  வெளிப்படுத்தல்  வேண்டும்  .  சைவ  மடாதிபதிகளை  அடுத்து  அன்னார்  கடமைகளைக்  கால நோக்கித்  தாழாது  புரியும்படி  வேண்டிக்கொள்ள வேண்டும் . அன்னார்  அயர்வு  காட்டினும் ,  அவர்களை  வெறாது , அவர்தம்  உளங்கொள வேண்டுவன எடுத்துரைத்துச்  சைவப் பயிர்  தழைய  அன்னா  ரருண்மழையைப்  பெய்விக்க வேண்டும் . இன்னோரன்ன  உண்மை  முயற்சிகளில்  நாம்  தலைப்பட்டுத்  திருவருட்  டுணைகொண்டு  சைவ  நலம் பேண  முற்படுவேமாயின்  ,  வேண்டுவார்  வேண்டுவன  ஈயும்  பெருங்கருணைத்  தடங்கடலாகிய  சிவ  பெருமான்   நம்  முயற்சியைப்  பயனுறச்  செய்து  நமது சமய  வாழ்க்கையைப்  புனிதமுறத்  தந்து  இன்புறுத்திக்  காத்தருள்வா  ரென்ப  தொருதலை  . 

பெரியோர்களே ! 

“கூறுமின்  ஈசனைச்  செய்ம்மின்

            குற்றேவல்  குளிர்மின்  கண்கள்

 தேறுமின்  சித்தம்  தெளிமின்

              சிவனைச்  செறுமின்  செற்றம்

ஆறுமின்  வேட்கை  அறுமின்

          அவலம்  இவை  நெறியா

ஏறுமின்  வானத்  திருமின்

           விருந்தாய்  இமைய  வர்க்கே “ 

என்னும்  பெரியார்  அருளுபதேசத்தை  எடுத்துக்காட்டி  இம் மட்டி  லமைகின்றேன் .

           சிவநெறிச்  செல்வர்களே !  இத்துணைக்காலம்  என்  சிற்றுரைக்குச்  செவி  தந்து  பொறுமை  கொண்டிருந்த  உங்களுக்கு  என்  உளம்  இயைந்த  வணக்கம்  உரியதாகுக . 

            சைவத்  திறமுந்  தெய்வத்  தமிழும்  தழைத்தினிது  ஓங்குக ! 

                                    *************************************************

               4  .  ஞா  ன  த்  தி  ன்      தி  ரு  வு  ரு

                     (கரந்தைக்  கட்டுரையில்  வெளிவந்தது )

         உலகத்துப்  பொருள்கள்   உண்மை  மாத்திரை   உணர்த்திப்  பிழம்பு  உணர்த்தப்படாதனவும் ,  உண்மையும்  பிழம்பும்  உணர்த்தப்படுவனவும்  என  இருவகைப் படுமென்று  கூறுவர்  களவியல்  உரையாசிரியர் .  உண்மையுணர்த்தல்  அநுமான  அளவையானும்  ,  பிழம்புணர்த்தல்  காட்சியளவையானும்  பெறப்படுவனவாம் .   பிழம்பு  வடிவாதலின்  ,  அன்பு  அருள்  அறிவு  முதலிய  பண்புகளெல்லாம்  உண்மை  மாத்திரையான்   உணர்த்தப்ப்டுமல்லது  பிழம்பு  உணர்த்தப்படாதனவாம் .  ஆகவே  பிழம்பு ணர்த்தப்படாது  , உண்மை  மாத்திரை  உணர்த்தப்படும்  ,  ஞானம்  முதலிய  குணங்களுக்கு  அழகிய  வடிவு  கூறுதல்  அரிதாம்  என்பது  யாவரும்  உணர்வர்.  அவ்வருஞ்  செயலிற்   றலைப்பட்டு   நிறுவும்  ஆற்றல்  ,  செயற்கரிய  செய்யும்  புலவர்  பெருமக்கள்பால்  அமைந்துள  தென்பதை   அப்  பெரும்   புலவர்களால்  ஆக்கப்பட்ட  பொருள்  நிரம்பிய  பாடல்களிற்  காணலாம் .  திருவருட்பேறு  பெற்ற  பெரியோர்கள்  அருளிய  தெய்வ  மணங்  கமழும்  பாசுரங்களினும் , உலகியலை  நுனித்துணர்ந்தும்  ,  தெய்விக  நிலையை  அழுந்தி  யறிந்தும் ,  கற்பாருள்ளம்  அவ்வெண்ணமாமாறு  பெரும்புலவர் களாற்  பாடப்பெற்ற  பெருங்காப்பியங்களினும் , குணிப்பொருளாகிய  தெய்வங்களையும்  மக்களையும்  உயர்ந்த  நிலையில்  வைத்துப்  புனைந்து ரைக்குங்கால் ,  எக்குணத்தால்  யாவர்  சிறந்து  விளங்குகின்றனரோ அன்னாரை  அக் குணவடிவாகவே  வருணித்தல்  மரபென்பதை அவர்தம்  மொழி களால்  நன்குணரலாம் . தன்னை  அணைந்தார்க்கு  அருள்  புரிந்து  பேரின்பமளிக்கும்  இறைவனை  அவ்வருட்  குணத்தினும்  இன்பப்  பண்பினும்  சிறந்து  விளங்குதல்  பற்றியும் ,  உண்மை  அன்பர்  பத்தி  வலையிற்  படுதல் பற்றியும்   முறையே  ,  “கருணையே  வடிவ  மாகி”  எனவும் ,  “இன்பமே  என்னுடைய  அன்பே”  எனவும்  ஆன்றோர்  பாடி  இன்புறுவர் .  “அன்பே  சிவமாவது”  என்னும்  திருமூலர்  அநுபவ  மொழியும்  ஈண்டு  எண்ணத்தக்கது. புலவர்  பெருமக்கள்  பாடல்களில் ,  உவமை  கூறுங்கால் ,  உவமிக்கப்படு வோர்   இயல்பை  நன்குணர்ந்து  குணியைக்  குணமாகக்  கூறுதல்  மரபென்பதற்கு   ஒரு  சில  எடுத்துக் காட்டுதல்  ஈண்டுப்  பொருந்துவதாகும் .

            சுந்தரமூர்த்திகளைத்  தடுத்தாட்கொள்ளப்  போந்த   அந்தணரின்  மூத்த  வடிவத்தைப்  புனைந்துரைக்கப்  புக்க  தெய்வப்  புலமைச்  சேக்கிழார்  பெருமான் ,

“மொய்த்துவளர்  பேரழகு  மூத்தவடி  வேயோ

 அத்தகைய  மூப்பெனும்  அதன்படிவ  மேயோ”

என்று  கூறினார் . முதியராகிய  அந்தணர்க்கமைந்த  அழகிய  உருவத்தை  , “அழகின்  மூத்த  வடிவையோ”  எனவும் ,  ‘அம்  மூப்பெனும்  அதன்  படிவமேயோ’  எனவும்  அழகு  முதுமை  என்னும்   குணங்களாகக்  கூறினர் , மூப்பின்  முடிந்த  எல்லையையும்  ,  அழகின்  முடிந்த  எல்லையையும்  அவர்  வடிவம்  உடையதாய்  இருத்தல்  குறித்து  இங்ஙனம்  எழில் பெறப்  புனைந்துரைத்தார் .  கல்வியிற்  பெரிய  கம்ப  நாடர்  இங்ஙனம்  குணிப்பொருள்களைக்  குணங்களாக உருவகஞ்  செய்தலினும்  ,  உவமை  கூறுதலினும்  மிகத்  திறமையும்  ஆர்வமுமுடையவர்  என்பது  அவர்  பாடல்களால்  நன்கறிவதொன்று .  சீதாப்பிராட்டியைத்  தேடச்சென்ற  சொல்லின்  செல்வனாகிய  அநுமன்  இலங்கை  புக்குச்  சிறையிருந்த  செல்வியைக்  கண்கூடாகக்  கண்டு  திரும்பிவந்து  ,  அவன்  ‘வாயுடையது’  என்னுடைய  வாழ்’  வென்று  எதிர்பார்த்திருந்த  இராமபிரானுக்கு  அந்  நற்செய்தியைத்  தெரிவிக்குமுகமாகக்  கம்பர்  பாடிய  பாடல்களுல்  ஒன்று  ஈண்டு  நினைந்து  இன்புறத்தக்கது ,  அப் பாடல் ,

“விற்பெருந்  தடந்தோள்  வீர 

      வீங்குநீ  ரிலங்கை  வெற்பின் 

 நற்பெருந்  தவத்த  ளாய

       நங்கையைக்  கண்டேனல்லேன்

 இற்பிறப்  பென்ப  தொன்றும்

        இரும்பொறை  என்ப  தொன்றும்

 கற்பெனும்  பெயர  தொன்றுங்

        களிநடம்  புரியக்  கண்டேன் “

என்பதாம் .  இது  பிராட்டியார்  அநுமன்  காட்ச்சிக்குக்  கற்புடை  மகளிர்க்குச்  சிறந்த  அணிகலன்  களாகவுள்ள  உயர்ந்த  குணங்களின்  வடிவமாகக்   காணப்பட்டாளன்றிக்  குணிப்பொருளாகக்  காணப்பட்டிலள் என்பதைப்  புலப்படுத்துவதாகும் .  ஒரு  குணிப்பொருளில்  அதற்குரிய  குணங்கள்  மிகவும்  சிறந்து  காணப்படுமாயின்  ,  அக்  குணிப்பொருளைக்  காணும்  அறிஞன்  உள்ளம்  குணநிறைவில்  ஈடுபடுமென்பது  இயல்பே .  அந் நிலையிற்  சிறந்த  அறிஞனாகிய  அநுமன்  உள்ளத்தைப்  பிராட்டியின்  நற்குண  நற்செயல்கள்  மிகவும்  ஈடுபடுத்தினவாதலின்  ,  அவள்  திருவுருவைக்  குணிப்  பொருளாகக்  கண்டிலேன்  என்பான்  “நங்கையைக்  கண்டேனல்லேன்” என்றான் .  பின்னை  அவன்  காட்சிக்குப்  பொருளாக  ஆங்குக்  காணப்பட்டன  யாவையெனின்  ,  இற்பிறப்பும்  ,  இரும்பொறையும்  ,  கற்பும்  என்னும்  சிறந்த  குணங்களேயாம் . இவை   ஒருங்கு  கூடித்  தமக்கமைந்த  பற்றுக்கோட்டின்  சிறப்பால்  தம்மியல்பில்  ஒரு  சிறிதும்  குறையாது  நிரம்பி  விளங்கின  என்பதைப்  புலப்படுத்தவே  “களி  நடம்  புரியக்   கண்டேன்”  என்று  கூறினன். பிராட்டியை  உயிருடனிருக்கக்  கண்டேன்  என்று  அநுமன்  கூறுதலினும்  , அவர்  பிறந்த  குலம் ,  புக்க  குலங்களின்  பெருமைக்கேற்பக்  கற்பரசியாக  விளங்கிய  நிலையை  எடுத்துக்  கூறுதலே  இராமபிரானுக்கே  உவப்பாகும்  என்பது  கண்ட  அநுமன்  இங்ஙனம்  கூறினன் .  இவ்வுண்மையைக்  “கண்டனன்  கற்பினுக்  கணியை”  என்னும்  அநுமானது  முன்மொழியாலும்  நன்கறியலாம்  .  பிராட்டியின்பால்  சனக  குலமாகிய  உயர்குடிப்  பிறப்பிற்கேற்ற  அறிவொழுக்கங்களும் , உயர்ந்த  கற்பும்  ,  ‘அறையிருங்  கழலவற்  காணு  மாசையான் ‘  மேற்கொண்ட  பொறையும்  சிறந்து  காணப் பட்டமையால்  அநுமான்  குணிப்  பொருளாகிய  ‘நங்கையைக்  கண்டிலேன்’  எனவும்  ,  இன்ன  குணங்கள்  ஒருங்கு  கூடிச்  செழித்து  விளங்குதலைக்  கண்டேன்  எனவும்  கூறினன் .  இங்ஙனமே  ,  இராமன்  பிரிவிற்  பரதன்  எய்திய  துயர்  நிலையை  வருணிக்கப்  புக்க  கம்பர் , ‘அவலம்  ஈதென  எழுதிய  படிவ  மொத்து’  இராமபிரான்  கட்புலனுக்குக்  காணப்பட்டான்  என்பர் .   இராமபிரானும்  பிராட்டியும்  இளயபெருமாளும்  ஒருங்கு  செல்லும்  காட்சி நிலை  முறையே   வாய்மையும்  சீலமும்  பத்தியும்  உருக்கொண்டு  நடப்பன போலாமென்று  வடமொழி  நாடக  ஆசிரியராகிய  பாசகவி  கூறியதும்  ஈண்டு  நினைந்தின்புறத்தக்கது .  

            இங்ஙனம்  குணிப்  பொருளைக்  குணங்களாகிய  வருணிக்குஞ்  சிறந்த  கவிமரபு ,  செய்யுளெல்லாம் தெய்வமணங்  கமழத்  திருத்தொண்டர்  புராணத்தை  ஆக்கியருளிய   சேக்கிழார்  பெருமான் பாற்  சிறந்து  அமைந்துளதென்பதை ,  அத்  தொண்டர்  புராணத்தைப்  பயின்றார் எல்லாரும்  நன்குணர்வர் . அவர்  அடியார்களை  உவமை  முகமாகவும் ,  உருவக  முகமாகவும்  இந்  நிலையில்  வைத்துப்  புனைந்துரைப்பதைப் பல  இடங்களிற்  காணலாம் .  அடியாருட்  கண்ணப்ப நாயனார்  அன்பெனும்  குனத்தாற்  றலைசிறந்தவராவர் .  இது  ‘கண்ணப்பன்  ஒப்பதோர்  அன்பின்மை  கண்டபின்’  என்று  அன்பெனும்  ஆறு  கரை  புரளப்  பெற்ற  மணிவாசகனார்  அருளிய  திருவாசகத்திலுங்  கண்டது .  இவ்வுண்மையை  அவர்  வரலாற்றான்  நன்குணர்ந்த  சேக்கிழார்  அவரை  எங்ஙனம்  பாடுவர்  என்பது  சொல்லாமலே  விளங்கும் .  கண்ணப்பர்  காளத்தி  மலையில்  ஏறுங்கால் ,  நாணன்  என்பான்  வழிகாட்டிச்சென்றான் . ஆணையாஞ்  சிவத்தைச்  சார  அணையும்  ஐயர்  அவன்  பின்  சென்றார்  என்று  கூறுதலில்  உள்ளம்  ஒருப்படாத  சேக்கிழார் ,  நாணன்  வழிகாட்டி  மலையிற்  செல்லக்  கண்ணப்பர்  உடல்  பின்  சென்றதெனினும்  ,  அவர்  அன்புமுன்  நடந்ததென்று  முதிர்ந்த  அவ்வன்பின்  விரைவைக் குறிக்க ,

“நாணனும்  அன்பும்  முன்பு

      நளிர்வரை  யேறத்  தாமும்

 பேனுதத்  துவங்க  ளென்னும்

       பெருகுசோ  பானம்

ஏறினார்  என்றும் , மலையுச்சிக்கட்  சென்றவுடன்  அங்கணராகிய  இறைவன்  கருணை  நோக்கமாகிய  நயனத்தீக்கை  பெற்ற  அளவிற்  பிறவிக்குரிய  சார்புகளையெல்லாம்  ஒழித்துச்  சிவபிரான்  திருவடி  நீழலில்  அன்புருக்கொண்டு   விளங்கினார் என்பது  தோன்றப் 

“பொங்கிய  வொளியினீழற்  ! 

           பொருவிலன்  புருவமானார்”

என்றும்  அருளிச்  செய்வாராயினர் .  இங்கே  இறைவனை  “ஒளி”  என்னும்  குண  வடிவாகவும்  ,  கண்ணப்பரை  ‘ஒப்பற்ற  அன்பு’  என்னும்  குணவடிவாகவும்  கூறியது  அறிந்து  இன்புறத்தக்கது  .  யாண்டும்  விளங்கித்  திகழ்தல்  பற்றி  இறைவன்  ஒளியாகவும் ,  அவ்விறைநிலை  ஒன்றே  பற்றுக்கோடாகக்  கொண்டு ,  குழைந்து  உருகுதலின்  கண்ணப்பர்  அன்புருவாகவும்  கூறப்பட்டன ரென்க .  கண்ணப்பரது  முறுகிய  அன்பின்  நிகழ்ச்சியை  நாணன்முகமாகக்   கேட்ட  அவர்  தந்தை  நாகனென்பான் ,  மலைக்கட்  சென்று  அவரை  மீட்கப்  பல்லாற்றானும்  முயன்றும்  இயலாமையாற்  கைவிட்டுத்  திரும்பினான்  என்று  கூறுமிடத்து  அங்ஙனம்   மீளாமைக்குரிய  உண்மையை  உணர்ந்த  சேக்கிழார் .

“முன்புதிருக்  காளத்தி  முதல்வனார்  அருள்நோக்கால்

 இன்புறுவே  தகத்திரும்பு  பொன்னானாற்  போல்யாக்கைத்

தன்பரிசும்  வினையிரண்டுஞ்  சாருமல  மூன்றுமற

அன்பிழம்  பாய்த்திரிவார்  அவர்கருத்தின்  அளவினரோ”

என்று  பாராட்டிக்  கூறியுள்ளார் .  விதி  நெறி  நின்று  இறை  வழிபாடு  செய்த  சிவகோசரியார,  கண்ணப்பரின்  அன்புநெறி  வழிபாட்டிற்  கண்ட  இறைச்சி  முதலியவற்றை  அநுசிதம்  என்று  வெறுத்தாராக  அவர்  கனவில்  இறைவன்  எழுந்தருளிக்  கண்ணப்பரின்  குணம்  செயல்களெல்லாம்  நமக்கு  உவப்பானவாம்  என்று  திருவாய்  மலர்ந்தருளுங்கால் ,

“அவனுடைய  வடிவெல்லாம்  நம்பக்கல்  அன்பு”

என்று  அருளிய  உண்மையும்  ஈண்டுக்  கருதத்தக்கது .  கண்ணப்பர்  சிவகோசரியார்  ஆகிய  இப்பேரன்பர்கள்  இருவருடைய  வழிபாட்டுண் மையை  நன்குணர்ந்த  திருஞானசம்பந்தப்  பெருமான்  இவ்விருவர்  செயல்களும்  ஒன்றுக்கொன்று  முரண் பட்டனபோலக்  காணப்படினும்  இவற்றிற்கு   மூலகாரணமாக  உள்ளது  உண்மை  அன்பெனக்  கண்டு  தாம்  பாடிய  தேவாரத்தில்,

“ஊனொடுண்டல்  நன்றென  ஊனொடுண்டல்  தீதென

ஆனதொண்டர்  அன்பினாற்  பேசநின்ற  தன்மையான் “

என்று  அருளிச்செய்வாராயினர் .  “ஊனொடுண்டல்  நன்றென  “  என்பது  கண்ணப்பர்  கொள்கையாகவும்  ,  “ ஊனொடுண்டல்  தீதென “  என்பது  சிவகோசரியார்  கொள்கையாகவும்  குறிப்பிடப்பட்டனவாம் . அன்பு  காரணமாக  நிகழ்ந்தவளவில்  இவ்விருவர்  செயல்களும்  ஒக்குமாயினும் , கண்ணப்பர்  இறைவனை   “ஆர்வமுன்  பொங்க  ஆரா  அன்பினிற்  கண்டுகொண்டு “   பிறிதொன்றனையுங்  காணாமையானும் ,  தமக்கெனப்  பொறிகள்  புது  நுகர்ச்சியிற்   றலைப்படாமையானும் ,  கண்ணிடத்தப்பிய   எண்ணருஞ்  செயலானும் ,  ஈண்டு  அவர்  அன்பு  சிறந்துள  தென்பது  குறித்தே  அவர்  அன்புருவமாகப்  பாராட்டப்பட்டனர்  என்பது  தெளிவாம் .  இத்துணையுங்   கூறியவற்றால்  உயர்ந்த  குணங்களின்  முடிந்த  எல்லையிற்  நிற்பாரைச்  சிறந்த  கவிகள்  குணவடிவாக  வருணித்துரைப்பர்  என்னும்  கவிமரபின்  உண்மை  ஒறுவாறு  புலப்படுத்தப்பட்டவாறாம் .

        இனி , இங்கே  எடுத்துக்கொண்ட  ஞானத்தின்  திருவுருவைப்  பற்றி  ஆராய்வோம் .  இப் பொன்மொழி ,  சிவனடியார்  பெருமையைச்  செப்பமுறத்  தெளிந்துரைக்கும்  தெய்வப்  புலமைச்  சேக்கிழார்  பெருமான்  திருவாய் மலர்ந்தருளியதாகும் ,  பாண்டி  நாடும்  அரசனும்  சமண்  சமயம்  புக்குச்  சமயநெறியில்  முறை  பிறழ்ந்திருக்குங்கால்  அச் சைவச்  செங்கோலைத் தாங்கி  நின்ற  பாண்டிமா  தேவியராகிய  மங்கையர்க்கரசியாரும் ,  அமைச்சர்  பெருமானாகிய  குலச்சிறையாரும்  அமணிருளோட்டிச்  சைவக்  கதிர்  பரப்ப  எண்ணி  ஞான  இள ஞாயிறாக  விளங்கிய  திருஞானசம்பந்தப் பெருமானை  மதுரைக்கு   எழுந்தருளுவித்தனர் .  அதுகாலை ,  அப் பெருமான்  அமர்ந்த  திருமடத்தில்  அமண்கையர்  கொளுவிய  தீயின்  வெம்மை ,  திருவருட்பாக்கல் , இக்கொடுஞ்  செயற்கு  உடன்பட்ட  அரசன்  உடலைப்பற்றி வெதுப்பியது  .  அது  தீர்க்கும்  வாயிலறியாது  சமணர்  இடர்பாட்  டுழல்பொழுது  தேவியாரும்  அமைச்சரும்  அரசனையணுகித்  தீய  இப்பிணியே  யன்றிப்  பிறவியும்  தீர்த்தற்குரிய  ஞான  சம்பந்தர்  என்னும்  நாம  மந்திரத்தை  அம்மன்னவன்  செவியில்  ஓதினாராக  , அம்மந்திர  வன்மையால்  அரசன்  உணர்வுற்று  ,

“மன்னிய  சைவ  நீதி  மாமறைச்  சிறுவர்  வந்தால்

 அன்னவ  ரருளா  லென்னோய் அகலுமேல்  அழையும் “

என்று  கூறினன் .  அப்பணியை  மேற்கொண்டு   அரசியாரும்  அமைச்சரும்  விரைந்து  சென்று  திருமடத்தைச்  சார்ந்து ,   ஆங்கு  இள ஞாயிறு போல ஞான  ஒளிபரப்பி  விளங்கும்  திருஞானசம்பந்தப் பெருமானைக்  கண்களிப்பக்  கண்டனர் . இவ்வமயத்தில்  அன்னார்  காட்சிக்குத்  திருஞானசம்பந்தப் பெருமான்  எங்ஙனம்  காணப்பட்டனர்   என்பதைச்  சேக்கிழார்பெருமான் தம் உள்ளக்கிழியின்  உருவெழுதிக்  கண்டு  தெரிவிக்கப்  புக்குத்  தம்  அசக்  காட்சிக்குப்  புலனாகிய  அத்திருவுருவை  அன்பு  நலங்  கனிந்தொழுகும்  ஓர்  அருண்மொழிப்  பாடலால் விளக்கியருளினார் . அத் திருப்பாட்டின்  தலைப்பில்  இப்பொன்மொழி  விளக்கமுற்றுத்  திகழ்கின்றது . அப்  பாடலை  ஈண்டுக்  காண்பாம்  :

“ஞானத்தின்  திருவுருவை  நான்மறையின்  தனித்துணையை

வானத்தின்  மிசையன்றி  மண்ணில்வளர்  மதிக்கொழுந்தைத் 

தேன்நக்க  மலர்க்கொன்றைச்  செஞ்சடையார்  சீர்தொடுக்குங்

கானத்தின்  எழுபிறப்பைக்  கண்களிப்பக்  கண்டார்கள் “

               இப்பாசுரத்தில்   காண்டற்குரிய  செயப்படுபொருள்களைப்  புலப்படுத்தும்  இரண்டாம்  வேற்றுமை   யுருபையுடைய  சொற்கள்  நான்குள்ளன.  அவை  முறையே  “திருவுருவை”  “தனித்துணையை”   “மதிக்கொழுந்தை” “கானத்தின்  எழுபிறப்பை” என்பனவாம் . இந்  நான்கும்  தனித்தனியே  ‘கண்களிப்பக்  கண்டார்கள்’  என்புழிக்  காண்டல்  வினையைக்  கொண்டு  முடிந்தன .இரண்டாம்  வேற்றுமைக்கு   “வினையே  வினைக்குறிப்  பவ்விரு  முதலிற்   றோன்றும்”  எனவும்   ‘நோக்கலின்’  எனவும்  கூறிய  தொல்காப்பிய  விதிக்கிணங்கக்  ‘கண்டார்கள்’  என்னும்  தெரி  நிலை  வினைமுற்று  முடிக்குஞ்  சொல்லாயிற்று . இன் நான்கும்   திருஞானசம்பந்தப் பெருமானைக்  குறிப்பனவாம் .  கனிந்த  பேரன்புடைய  மங்கையர்க்கரசி யாரும்   குலச்சிறையாரும்  சம்பந்தப்  பெருமானை  ஆர்வமிகக்  காணுங்கால்,  அவர்கள்  கட்புலனுக்கு  அப் பெருமானுடைய  உள்ளமும்  மெய்யும்  மொழியுமாகிய  மூன்று  கரணங்களும்   இங்ஙனம்  புலப்பட்டனவென்று  சேக்கிழார்  பெருமான்  தெளிந்து  , ஒரு  வரையறையைத்  தம்  உள்ளத்த மைத்து   உளங்குளிரப்  பாடவாராயினார் .  உட்கருவியாகிய  தூய  உள்ளத்தின்  இயல்பைக்  குறித்து,  ‘ஞானத்தின்  திருவுருவை’  ‘நான்மறையின்  தனித்துணையை’   என்னும்  இரண்டு  தொடர்மொழிகளானும்,  மழவிளங்குழவிப்  பருவத்ததாகிய  தூய  உடலினியல்பைக்   குறித்து,  ‘வானத்தின்  மிசையன்றி  மண்ணில் வளர்  மதிக்கொழுந்தை’  என்னும்  தொடர்  மொழியானும் ,  சிவ  பரம்பொருளைப்  பற்றியே  நிகழும்  இசைத் தமிழ்  பயிலும்  திருவாயி  னின்றும்  வெளிப்படும் தூய  மொழி  இயல்பைக்  குறித்துச்  ‘செஞ்சுடையார்  சீர்  தொடுக்குங்கானத்தின் எழுபிறப்பை’  என்னும்  தொடர்  மொழியானும்  புலப்படுத்தார்  என்பது  உய்த்துணர்வார்க்கு  நன்கு  புலனாம் ,  சம்பந்தப் பெருமான்  சித்தம்  சிவமாகப்  பெற்ற  செவ்வியராதலின்  அவருள்ளத்தின்  தூய  நிலை  நோக்கி   ‘ஞானத்தின்  திருவுருவை’  என்றார் .  அன்பின்  முடிந்த  எல்லையினின்ற  கண்ணப்ப  நாயனாரை  ‘அன்பு  பிழம்பாயினார்’  பொருவிலன்  புருவமானார்’  என்று  கூறியது போலவே ,  மெய்யுணர்வின்  முடிந்த  எல்லையிற்  றிகழும்  ஞானசம்பந்தப்பெருமானை   ‘ஞானத்தின்  திருவுரு’   என்றது  மிகவும்  பொருந்தியதொன்றாம்  .  இறைவனை  அடைதற்குரிய  நெறிகள்  பலவற்றுள்  அன்பு  நெறியும்  அறிவு நெறியுமே  சிறந்தனவா  மென்பது பெரியார்  கண்ட  முடிபு  அன்பும்  ஞானமுமாகிய  இவ்விரு  குணங்களும்   கண்ணப்பர்  ஞானசம்பந்தராகிய  இருவரிடத்தும்  ஒருங்குள்ளன .  வெனினும் , வெளிப்பட்டு  விளங்கிய  சிறப்புப்பற்றி  அவ்விருவரையும்  முறையே  அன்புருவம்  எனவும் , ஞானத்தின்  திருவுரு   எனவுங்  கூறினர் . சம்பந்தப்பெருமான்  இறைவியின்  திருமுலைப்பாலுண்டு  ,  அந் நிலையில்  ஞானம்  எய்தினார் . என்பதைச்  சேக்கிழார்  பெருமான் ,

“சிவனடியே  சிந்திக்கும்  திருப்பெருகு  சிவஞானம்

பவமதனை  யறமாற்றும்  பாங்கினிலோங்  கியஞானம்

உவமையிலாக்  கலைஞானம்  உணர்வரிய  மெய்ஞானம் 

தவமுதல்வர்  சம்பந்தர்  தாமுணர்ந்தா  ரந்நிலையில் “

என்னும்  திருவிருத்தத்தால்  விளக்கினார்  .  இப்பாடலிற்  குறிக்கப்பட்ட  ஞானம் , சிவனடியே  சிந்திக்கும்  திருப்பெருகு  சிவஞானமாகிய  உவமையிலாக்  கலைஞானமும் ,  பவமதனை  அறமாற்றும்  பாங்கினில்  ஓங்கிய  ஞாமாகிய  உணர்வரிய  மெய்ஞ் ஞானமும்  என  இரண்டாகும்  ஆகவே , நூலறிவும்  அநுபவ  உணர்வுமாகிய  அபரஞான  பரஞானங்களை  ஒருங்கெய்தினார்  என்பதே  முடிந்த  பொருளாகும் .  இறைவன்  றிருவருட்  சத்தியாற்  பெற்ற  ஞானமே  சம்பந்தப்பெருமானுக்கு  உள்ளத்தின்  தூய  இயல்பாகத்  திகழ்தலை  நோக்கி ,  “ஞானத்தின்  றிருவுரு”  என்றார் .  பண்பாகிய  ஞானம்  பண்பியாகிய  ஒரு  வடிவைக்  கொள்ளப்புகின்  இதுபோலுஞ்  சிறந்த  பிழம்பு  அதற்கரிதென்பார்  ‘ஞானத்தின்  உரு,’   என்னாது  ‘திருவுரு’  என்றார் . ஈண்டு  மனமொழி  மெய்களாகிய  மூன்றனுள்  மெய்யின்  தூய்மையையும் ,  மொழியின்  தூய்மையையும்  புலப்படுத்துவார் ,  முறையே  “மதிக்கொழுந்தை”  எனவும் ,  ‘கானத்தின்  எழுபிறப்பை’    எனவும்  ஒவ்வொன் றே  கூறிய    ஆசிரியர்  உளத்  தூய்மைக்குத்  ‘திருவுருவை’   ‘தனித்துணையை’  என்று  இரண்டு  பொருள்  கூறியதன்  கருத்தை  ஆராய்தல்  வேண்டும் .

“ஞானமாவது  வீடு  பயக்கும்  உணர்வு “ 

என்பர்  பரிமேலழகர் . 

“எப்பொருள்  யார்யார்வாய்க்  கேட்பினும்  அப்பொருள்

 மெய்ப்பொருள்  காண்ப  தறிவு “

என்பது  உலகியலறிவின்   இலக்கணமாகவும் ,

“எப்பொருள்  எத்தன்மைத் தாயினும்  அப்பொருள்          

 மெய்ப்பொருள்  காண்பதறிவு “                    

என்பது  வீடு  பயக்கும்  உணர்வாகிய  மெய்யுணர்வின்  இலக்கணமாகவும்  பொய்யில்  புலவர்  பொருளுரையிற்  காணப்படுகின்றன .  பொருளிரண்டனுள்  முன்னது  சொல்லா  லறியப்படுவது ;  பின்னது  இயங்குதிணையும்  நிலைத்திணையுமாகிய  உலகத்தைக்  குறிப்பது . இவ்வுண்மை  கருதியே ,  முறையே  “யார்  யார்  வாய்க்  கேட்பினும்”எனவும் ,  “எத்தன்மைத்  தாயினும்”  எனவும்  கூறுவாராயினர் . முன்னது  ஒருவர்குக்  கல்வி  கேள்விகளானாகிய   செயற்கை  அறிவுக்குக்  காரணமாகிய  மதிநுட்பம்  என்னும்  இயற்கை  அறிவென்பதும் ,  அஃது  உயர்ந்தார்  ,  இழிந்தார்  நட்டார் ,  பகைவர்  யாவராயினும்  அவர்  வாய்க்கேட்கப்படுஞ்  சொல்லைப்  பொருளின்  பயனோக்கிக்  கொள்ளுதற்கும்  ,  தள்ளுதற்கும்  உரிய  கருவியாம்  என்பதும்  அறிகின்றோம் .  பின்னது,  இயங்கு  திணையும்  நிலைத்திணையுமாகிய  உலகத்துப் பொருள்களின்  கற்பனைகளைப்  போக்கி ,  நில  முதலிய  தத்துவங்களின்  தொகுதியென  அறிதற்கும் ,  அவற்றைத்  தத்தம்  காரணங்களுளொடுக்கிக்கொண்டு  சென்று  முடிவிற்  காரண  காரிய  மிரண்டுமின்றி  நிற்பதாகிய  பரம்பொருளை  உணர்தற்கும்  உரிய  கருவியாமென்பது  புலனாம் .  இவ்வுண்மை  யறிந்தே  முன்னது  பொருட்பாலில்  அரசியற்  பகுதியினும்  பின்னது  அறத்துப்பாலில்   துறவறப்  பகுதியினும்   அமைத்துக் கூறப்பட்டனவாம் . இவ்வுண்மையையே  சமய  நூலார்  ஞானம்  அபரம்  பரமென  இருதிறப்படுமென்று  வகுத்துக்  கூறுப . அவ்வகை  முன்னருங்  கூறப்பட்டது .அபரஞான  மென்பது  மறை  ஆகமம்  முதலிய  நூல்களின்  வாயிலாக  உண்டாவது ;  பரஞான  மென்பது  அநுபவ  வாயிலாக  நிகழ்வது ;  அபரஞானமாகிய  நூலறிவே  பரஞானமாகிய  அநுபவ   வுணர்வைப்  பயக்குமாதலான்   அவ்விரண்டும்  அழிவி  லின்ப  மெய்தும்   ஆர்வமுடைய  உயிர்க்கு  இன்றியமையாதனவாம் .  இவ்வுண்மையைப்  புலப்படுத்தற்கே  , திருநாவுக்கரசு  நாயனார்  ,

“உடம்பெனும்  மனைய  கத்து  ளுள்ளமே  தகழி  யாக

மடம்படு  முணர்நெய்  அட்டி  உயிரெனுந்  திரிம  யக்கி

இடம்படு  ஞானத்  தீயால்  எரிகொள  இருந்து  நோக்கிற் 

கடம்பமர்  காளை  தாதை  கழலடி  காண  லாமே “

என்னும்  தேவாரத்  திருப்பாசுரத்தில் , “மடம்படும்  உணர்நெய்”   எனவும் ,  “இடம்படு  ஞானத்தீ”  எனவும்  ஞானத்தை  உருவகவுறுப்பு   இரண்டாகக்  கொண்டு   திருவாய்மலர்ந்தருளினார் . ஈண்டு ,  “மடம்படும்  உண்ர்வு”  என்பது அறியாமை  கெடுதற்  கேதுவாகிய  அபரஞான  மெனவும் ,  “இடம்படு  ஞானத்தீ”  என்பது  அநுபவ  உணர்வாகிய  பரஞான  மெனவும்  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  முன்னது  நெய்யாகவும் ,  பின்னது  தீயாகவும்  உருவகஞ்  செய்யப்பட்ட  இயைபு  ஈண்டுக்  கருதத்தக்கது ,

“கற்றறியேன்  கலைஞானம்  கசிந்துருகே  னாயிடினும்”

என்று  மணிவாசகனார்  கூறியருளியதும்  இவ்வுண்மையை   நிலைப்படுத்துவதாகும் . அபர ஞானத்தைப்  பாசஞான  பசுஞானங்களாகவும்,  பரஞானத்தைப்  பதிஞானமாகவும்   சைவநூல்  கூறும் . பதி ஞானம் ,  சிவ ஞானம் ,  மெய்யுணர்வு  , அநுபவ வுணர்வு  என்பன  ஒரு  பொருளனவாம் .  சிவ ஞானமே  சிவாநுபவத்திற்கு  நேர் வாயிலாகும்  .  “ஞானத்தால்  வீடு”  எனவும் ,

“பாச ஞானத்தாலும்  பசு ஞானத்தாலும் 

         பார்ப்பரிய  பரம்பரனைப்  பதி ஞானத்தாலே 

 நேசமொடு  முள்ளத்தே  நாடி” 

எனவும்  சைவ  சித்தாந்தம்  புலப்படுக்கும் . வீட்டின்பத்திற்குச்  சிவ ஞானம்  நேர்வாயிலாதலைத்   திருநாவுக்கரசு  நாயனாரின்  முத்தி   நிலையை  விளக்க  வந்த  ஆசிரியர் ,

“நண்ணரிய  சிவானந்த  ஞானவடி  வேயாகி

 அண்ணலார்  சேவடிக்கீழ்   ஆண்டவர  செய்தினார்”

என்று  கூறினார் .  “ஞான வடிவேயாகிய”  என்பது  ஈண்டு  கருதத்தக்கது .  காமம்  முதலிய  குற்றங்களையெல்லாம்  ஒழித்தற்கும்  இச் சிவ ஞானமொன்றே  கருவியாமென்பது  ஆன்றோர்  அநுபவம் .  சேக்கிழார்  பெருமான்  இவ்  வநுபவ    வுணர்ச்சியிற்  பெரிதும்  தலைப்பட்டவர்  என்பதை  உலகியல்  நிகழ்ச்சிக்கு  உவமை  கூறுமிடத்தும் ,  அவர்  திருவாக்கில்  இவ் வுண்மை  வெளிப்படுதல்  கொண்டு  தெளியலாம் . ஏனாதிநாயனார்  அதிசூரன்  என்பவனோடு  செய்த  வாட்போரில்  அதி சூரனுடைய  படைவீரருட்  பலர்  இறந்தனராக , எஞ்சி  நின்றா ரெல்லாரும்  போர்க்களத்தை  விட்டுப் புற முதுகிட்டோடினர்  என்பதை  உவமிக்கப் போந்த  ஆசிரியர் , 

“தலைப்பட்டா  ரெல்லாரும்  தனிவீரர்  வாளிற் 

 கொலைப்பட்டார்  முட்டாதார்  கொல்களத்தை  விட்டு

நிலைப்பட்ட  மெய்யுணர்வு  நேர்பட்ட  போதில்

அலைப்பட்ட  ஆர்வமுதற்  குற்றம்போ  லாயினார் “

என்று  கூறியருளினர் .  மெய்யுணர்வின்  முன்னர்க்  காம  வெகுளி  மயக்கங்கள்  நில்லா  என்னும்  உண்மையையே  ஈண்டு  உவமையாக்கிய  நயம்  பாராட்டத்தக்கது . இன்பச் சுவையை  வருணிக்குங்காலும்  தெய்வமணங்  கமழப்  பாடும்  இப்புலவர்   பெருமான்  பாடல்களில்  இத்தகைய  உவமை  முதலியன  அமைதல்  இயல்பேயாம் .  ஆதலின்  சிவ ஞானச்  செல்வர்களாகிய  மங்கையர்க்கரசியார்க்கும்  ,  குலச்சிறையார்க்கும்  திரு ஞானசம்பந்தப் பெருமான்  காட்சியில்  உளத்தூய்மை பற்றி அப்பெருமான்  றிருவுரு  மெய்யுணர்வின்  வடிவாகப்  புலப்பட்டதென்பதைத்  தெய்வக்  கவிஞர்  திருவுள்ளம்  உணர்ந்தமையால்  ,  “ஞானத்தின்  றிருவுரு  “  என்று முதற்கட்  கூறினர் . அத்தகைய  ஞானம்  பரமாகவும்  அபரமாகவும்  இரு வகைப்படுமென்பதை  யுட்கொண்டும்  அவ்  விருவகை  ஞானத்தையும்  அம்மையா  ரருளாற்   சம்பந்தப் பெருமான்  ஒருங்கெய்தின  ரென்னும்  உண்மையை  உணர்ந்தும் ,  உளத்தூய்மைபற்றிப்  பர ஞான  வடிவமாக  விளங்குதலைக்  குறித்து   “ஞானத்தின்  றிருவுருவை”  என்றருளிய  ஆசிரியர்  அபர ஞானமும்  அவர்க்கு  எளிதிற்  கைவந்த  தென்பதைப்  புலப்படுத்தவே  , “நான் மறையின்  தனித்துணையை  “  யென்றுங்  கூறினர் .  பர ஞானமாகிய மெய்யுணர்வின்  வடிவாக  விளங்கும்  சம்பந்தப்பெருமான்  அதனின்  தாழ்ந்த  அபர ஞானமாகிய  நூலுணர்வின்  வடிவாகவும்  விளங்கினாரென்று  கூறுதல்   அப்பெருமான்  பெருமைக்கு  ஏலாததொன்றென்பது கருதியும்  ,  அந்  நான்மறை   யறிவாகிய  அபர ஞானம்  பேரின்பமெய்த  முயலும்  உயிர்களின்  பொருட்டு  என்றும்  அழியாத நிலை  பெற்றிருக்க வேண்டும்  என்பது  அப்பெருமான்  திருவுள்ளமாதலை  யுணர்ந்தும்  அவ்  வபர  ஞானத்திற்கு  அவர்  அருட்பாசுரங்களாற்  பெரிதும்  துணை  நின்றவர்  என்பதைப்  புலப்படுத்தவே  “நான்மறையின்  தனித்  துணையை”  யென்றுங்  கூறியருளினார். சம்பந்தப் பெருமான்  முதலிய  சமய  குரவரருளிய  தேவாரத்  திருப்பாசுரங்கள்  தமிழ்  மறையாக  விளங்குகின்றன வாதலால் ,  அபர ஞானத்திற்கு  ஒப்பற்ற  துணையாகவுள்ளா ரென்று   அப்பெருமானைக்  குறிப்பிட்டது  பெரிதும்  போற்றத்தக்கதே  .  பர ஞானமாகிய  மெய்யுணர்வின்  வடிவாகவும் ,  அபர ஞானமாகிய  நூலறிவிற்குச்  சிறந்த  துணையாகவும்  அப்  பெருமான்  காணப்பட்டாரென்று  மரபு  பிறழாது   வரையறைப்படுத்துரைத்த  நயம்  அறிஞருள்ளத்தை  மிகவும்  இன்புறுத்துவதாகும் . இங்ஙனமே  இப் பெருமானைத்  தோணிபுரத்தவர்  தாம்  எதிர்கொண்டு  துதிக்குங்கால் ,  “கலைஞானத் தாழிய  கடலே”  எனவும் ,  “வளர் ஞானப்  பொறையணி முகிலே”  எனவும்  இருதிறத்து  ஞான  வடிவமாகக்  கொண்டு  பாராட்டினர்  என்று  பிறிதோரிடத்தும்  ஆசிரியர்  புலப்படுத்தியுள்ளார் .  இங்ஙனம்  சம்பந்தப் பெருமான்  இவ்விரு ஞானங்கட்கும்   எல்லையாக   விளங்குதலைத்   தெளிவுறுத்தற்கே   மெய் மொழிகளின்  தூய்மைபற்றித்  தனித்தனியே  செயப்படுபொருள்  ஒரோவொன்றாகவும் ,  உள்ளத்தின்  தூயவியல்புபற்றி  அதற்கு  மாத்திரம்  செயப்படுபொருள்  இரண்டாகவும்  வகைபடுத்து ரைத்தனர் .  ஈண்டு  ஆசிரியரது  நுண்மாணுழைபுலம்  அறிஞருள்ளத்தைப்  பெரிதும்  இன்புறுத்துவதாகும் .  

            இனி , சம்பந்தப் பெருமான்  றிருமேனியின்  ஒளியும்  மழவிளங்  குழவிப்  பருவமும்  பொலிந்து  திகழ்தலைப்  புலப்படுத்தற்கே  ,  “வானத்தின்  மிசையன்றி  மண்ணில்  வளர்  மதிக்கொழுந்தை  “  என்றார் .  இஃதோரணி யாகும் .  மதி  வானத்தினூர்ந்தியங்குவது  இஞ்  ஞானமதி  மண்ணுலகிற்  றிகழ்தின்புறுத்துவது  ஈண்டு  வளர்மதியென  வினைத்தொகையாகக்  கூறியதன்  நுண்பொருள்  ஆராயத்தக்கது .  வளர்மதிக்குப்  பதினாறு  கலைகள்  நிரம்பியதும்  மேல்  வளர்ச்சியின்று . அதுபோலச்  சம்பந்தப் பெருமான்  றிருவுடல்  பதினாறியாண்டு  வளர்ச்சியுற்றுப்  பின்  பேரொளிப்  பிழம்பாகிய  இறை வடிவில்  மறைந்தது ;  இவ்  வுண்மை  புலப்படுத்தற்கே  “வளர்மதி”  யென்று  கூறினார்  போலும் .  இங்ஙனமே  ,  கண்ணப்ப  நாயனார்  புராணத்திலும்  ,

“பான்பதி  உவரி  யீன்றா  லெனமகப் பயந்தபோது”

என்று  அவர்  அவதாரத்  தொடக்கத்தில்  அன்புருவாகிய  கண்ணப்பரைப்  பான்மதியாகவும் ,  அவர்  தோன்றிய  வேடர்  குலத்தை  உவர்க் கடலாகவும்  உவமித்துக்  கூறினர் . அதற்கேற்ப  அந்  நாயனார்க்கு  வீட்டு  நிலை  யெய்தும்  தருணத்திற்  பதினாறாண்டு  நிறைவுற்றது எனக்  குறிப்பிடப்  புக்க  ஆசிரியர்,

கலைவளர்   திங்களே  போல்

 எண்ணிரண்  டாண்டின்  செவ்வி யெய்தினார் “

என்று  தெளிவுறுத்தருளினர் .  இத்தகைய  இயைபையே  திரு ஞானசம்பந்தப் பெருமான்  வரலாற்றினும்  புலப்படுத்தாரெனக்  கோடல்  பொருந்துவதாகும் .

“கண்ணிறை  கதிரே , கலைவளர்  மதியே” 

எனப்  பிரிதோரிடத்துக்  குறிப்பிடுதலும்  அறியத்தக்கது .  ஒளி  தீயினும்  மணியினும்  காணப்படினும்  தீயொளி  சுடுவதாக ,  மணியொளி  குளிர்ந்திருத்தலையும்  ,  அங்ஙனமே  ஞாயிற்றினொளி  வெய்யதாக , திங்களொளி  தண்ணிதாக  இருத்தலையும்  உணர்கின்றோம்  .  சம்பந்தப் பெருமான்  திருமேனியில்  திகழும்  ஒளி  தண்ணிதாதலையும் ,  அவ்வொளியின்  செழுமையும்  மென்மையும்  கொழுந்துபோற்   காணப்படுதலையும்  புலப்படுத்தற்கே  “மதிக்கொழுந்தை”  என்று  கூறினர் .

            இனி , சம்பந்தப் பெருமான் மொழியின் தூயவியல்பு  பற்றிக் “கானத்தின்  எழுபிறப்பை”  என்றார் .  அவர்  அவதாரப்  பயன்  கூறுமிடத்தும் , பிறிதோரிடத்தும்  முறையே

“இசைமுழுதும்  மெய்யறிவும்

          இடங்கொள்ளும்  நிலைபெருக “

எனவும் ,  “பண்ணியல்  கதியே”  எனவும்  கூறியருளினார் . அப் பெருமான்  தம்  மெய்யுணர்விற் கண்டநுபவித்த  பொருள்களை யெல்லாம்  செழுந்தமிழ்  மொழியில்  தேனினும்  இனிய  இசைப்பாடலில்  இயைந்து  உளங்  குளிர்ந்து பாடி ,  வண்டமிழ்  செய் தவம் நிரம்பச்  செய்தவராதலானும் ,  அத் திருப்பாசுரப்  பொருளெல்லாம்  சிவபரம்  பொருளையே  பற்றினவாதலானும், “தேனக்கமலர்க்  கொன்றைச்  செஞ்சுடையார்  சீர்தொடுக்குங்கானத்தின்   அழுபிறப்பை “ யென்றார் .  அப்பெருமானை,  “நாளும்  இன்னிசையால்  தமிழ்ப்  பரப்பும்  ஞானசம்பந்தன்  “  எனத்  திருநாவலூரர்  கூறிய  அடை  மொழிகளாலும் ,  அவர் தமிழிசையிற்  சிவபரம்  பொருளைப்  பாடுதலில்  மிக்க  விருப்பமுடையவ ரென்பதை  உணரலாம் .  கானத்தின்  எழுபிறப்பாவது, இசைக்குரிய  குரல்  துத்தம் முதலியனவாம் . இவற்றைச்  “ச ரி க ம ப த நி “  என்று  கூறுவர்  வட நூலார் .  பிறப்பு  அழுவகைத்தாதலின்  இசைக்கும்  எழுபிறப்புக் கூறியது  பொருத்தமே .  இவ்  வெழுவகைப்  பிறப்பையுடைய  இசை  வடிவமாகவும் , அப்பெருமான்  காணப்படுதலால் , “கானத்தின்  எழுபிறப்பை “  யென்றார் .  அக் கானமும்  உலகியற்  பொருள்  பற்றி  நிகழுமாயின்  சிறந்ததாகா  தென்னுங்  கருத்தால் , “செஞ்சுடையார்  சீர்தொடுக்கும்   கான” மென  விசேடித்  துரைக்கப்பட்டது  இறைவன்  “ஏழிசையாய்  இசைப்பயனாய் “  விளங்கு  மியல்பினராதலின்  அப்  புரமெரித்தார்   திருமகனாராகிய  சம்பந்தப்பெருமானுக்கும்  அது  பொருந்துவதாகும் .  

       இனி , மன மொழி மெய்களின்  தூயநிலை  பற்றி  இங்ஙனம்  கூறிய  பொருள்களிற்  பிறிதோரியையும்  நம்முள்ளத்தை  இன்புறுத்துவதாகும் . அஃதாவது , மன மொழி மெய்களாகிய  மூன்றன்  தூய்மைக்கும்  ஞானமே  வெளிப்படையாகவும் , குறிப்பாகவும்  இயைந்து  விளங்குதலாம் .  உளத்தூய்மை பற்றி  , “ஞாத்தின்  திருவுருவை  நான்மறையின்  தனித் துணையை “  என  வெளிபடை யாகக்  கூறினார் . உடற்றூய்மை  பற்றி  ‘மதிக்கொழுந்தை’ யெனக்  குறிப்பிற்  பெற  வைத்தார் .  மதி  கலைகளை  யுடயதென்பதனாலும் , கல்விக்கு  உவமை  கூறுங்கால்  “திங்களன்ன கல்வியும்”  என  இதனையே  ஆன்றோர்  எடுத்தாளுதலானும்  குறிப்பிற்  பெறப்பட்டதாம் .”கலை வளர் மதியே”  யென  முன்னர்  எடுத்துக்காட்டியதும்  ஈண்டு  இயைபுடைத்தாம் . சீவகன் ,  “கோள்மின்னு  மீன்போற்  குளிர்மாமதித்  தோற்றம்”  ஒத்திருந்தான் என்று  கூறிய  சீவகசிந்தாமணிப்பாடற்  குறிப்பில் ,  “ஞாயிறு  போல்வானைக்  கலையைத்  தோற்றுவிப்பதாக  இருத்தலின்  ஈண்டு  மதியை  உவமை  கூறினார்”  என்று  நச்சினார்க்கினியர்  கூறியதனாலும்  இவ்வுண்மை  புலனாம் .  மூன்றாவதாகிய  மொழித்தூய்மை  பற்றிக்  கூறிய  இடத்தில்  கானத்திற்குச்  “செஞ்சுடையார்  சீர்தொடுக்கும்”  என்று  அடைபுனர்த்ததால்  ஆண்டும்  ஞானம்  புலனாதல்  நோக்கத்தக்கது .  

         இனி , இப் பாசுரத்தில்  இரண்டாம்  வேற்றுமைக்கு  முடிக்குஞ்  சொல்லாகவுள்ள  “கண்களிப்பக்  கண்டார்கள்”  என்பது  வியப்பின்  பாலாதாகிய  இன்பத்தை அளிப்பதாகும் . இங்கே  கூறப்பட்டனவெல்லாம்  கண்களிப்பக்  காண்டற்கியலாதனவாம் . “ஞானத்தின்  திருவுருவம்  நான்மறையின்  தனித்  துணையும்  “  பொறிகளா  லறியப்படாத  குணங்களாதலானும் , மதி  கட்புலனறியத்தக்க  தாயினும்  ,  மண்ணில்  வளர்  மதிக்கொழுந்து  இல்  பொருளாக  நின்று  காணப்படாத  தொன்றாகலானும் ,  “கானத்தின்  எழுபிறப்பு”  செவியுணர்விற்கன்றிக்  கட்பொறிக்குப்  புலனாவ தொன்றன்மையானும் , இம் மூன்றும்  கண்ணாற்  காணப்படாதனவாகவும்  , அவற்றைக்  “கண்களிப்பக்  கண்டார்கள்”  என்றது  வியப்பின்பாலதாகும் .  காண்டற்  கியலாப்  பொருள்களைக்   “கண்களிப்பக்  கண்டார்கள்”என்று  கூறுதல் எவ்வாறு  பொருந்துமெனின் , கண்ட  அதிகாரிகளின்  ஞானமும்  பத்தியும்  இங்ஙனம்  காண்டற்குக்  கருவிக  ளாயினமையிற்  பொருந்து மென்க.  இஃது  இவ்வியப்பின்  பாலதாய்  நின்று  இன்பம்  விளைவிப்பதாகும் .  புறக்காட்சிக்குப்  புலனாகாத  பொருள்கள் , காணும்  அதிகாரிகளின்  சிறப்பியல்பாகிய  அகக்  காட்சிக்குப்  புலனாமென்னும்  உண்மையைக்  கண்ணப்ப நாயனார்  புராணத்திலுங்  காணலாம் .  ஞானத்தின்  திருவுருவா கிய   சம்பந்தப் பெருமான்  அன்பின்  திருவுருவாகிய  கண்ணப்ப நாயனாரின்  திருவுருவத்தைத்  தரிசித்த  முறையைக் கூறுங்கால் , மரபு  பிறழாமல்  அழகுற  இவ்வுண்மையை  புலப்படுத்தப்பட்டுள்ளது .   சம்பந்தப் பெருமான்  முதலில்  இறைவன்  திருவுருவத்தை  வணங்கிப்  பின்னர் , கண்ணப்பர்  திருவுருவத்தை  வணங்கினாரென்று  கூறும்பொழுது  கண்ணப்பர்  வணக்கம்  இறை  வணக்கத்தின்  பின்  நிகழ்ந்ததெனினும்  ,

“வீழ்ந்தெழுவார்  கும்பிட்டபயன் காண்   பார்போல்

            மெய்வேடர்  பெருமானைக்  கண்டு  வீழ்ந்தார்”

என்று  அதனை  இறை வணக்கத்தின்  பயனாகக்  கூறியது  உணர்வார்  உள்ளத்தைப்  பெரிதும்  கனிவிப்பதாகும் . ஆண்டுக்  கண்ணப்பர்  வணக்கம்  இறைவணக்கத்தின்  பயனாதற்குக்  காரணம்  என்னாங்கொல்  என்று  ஐயுறுவாரைத்  தெளிவிக்கும்  முகமாக ,

“உள்ளத்திற்  றெளிகின்ற  அன்பின்  மெய்மை

        உருவினையும்  அவ்வன்பின்  உள்ளே  மன்னும்

 வெள்ளச்செஞ்  சடைக்கற்றை  நெற்றிச்  செங்கண் 

        விமலரையு  முடன்கண்ட   விருப்பம்  பொங்கி

 ………………………………………………………………………………  வணங்குகின்றார் “

என்று  கூறியருளினர் .  கண்ணப்பர்  வடிவத்தை  அன்பின்  மெய்மை  யுருவாகவும்  ,  “அன்பிலே  விளைந்த  ஆரமுதே “  என்று  மணிவாசகனார்  திருவாய்மலர்ந்தருளியபடி ,  அவ்  அன்புருவத்தில்  இறைவன்  விளங்கு தலையுங்  கண்டார்  என்றார் . இலிங்க  உருவத்தினும்  அன்புருவத்திற்  காணப் படும்  இறைவன்  விளக்கம்  சிறந்ததாகலின்   இங்ஙனம்  கூறப்பட்டது .  கண்ணப்பர்  வடிவத்தை  அன்புருவமாகவும்  ,  அவ் வன்பிலே  இறைவன்  விளங்குதலையுங்  உள்ளுணர்வாற்  காண்டற்குரிய  தகுதி  ஞானத்தின்  திருவுருவமாகிய   சம்பந்தப் பெருமான்பால்  உள்ளதென்பது இந் நிகழ்ச்சி யாற்  புலனாம் .  இங்ஙனமே  ,  ஞானசம்பந்தப் பெருமானுடைய  உள்ளம்  உடல்  மொழிகளின்  தூய  இயல்பு  பற்றி  அவரை  ஞானத்தின் திருவுரு  முதலியவாகக்   காண்டற்குரிய  தகுதி ,  பங்கயச்செல்வியாகிய  பாண்டிமா  தேவியார்க்கும் , அடியவர்தங்களைக்  கண்டால்  குணங்கொடு  பணியும்  குலச்சிறையார்க்கும்  உளதாயிற்று  என்பது  போதரும் .

           இத்துணை  “ஞானத்தின்  திருவுரு “  என்பது  பற்றி  ஆராயு முகமாக  அப்  பொன்மொழியை  முதற்கணுடையதாக   அருண்மொழித்  தேவரருளிய  திருவிருத்தத்திற்கு   ஒறுவாறு  நுண்பொருள்  விளக்கம்  கூறியதாகும் .

             இதுகாறும்  கூறியவற்றாற்  போந்த  தொகைபொருள்  வருமாறு :- 

                                    உலகத்துப் பொருள்களுள்  ஞான முதலிய  குணங்கள்  உண்மை மாத்திரை  உணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன  என்பதூஉம் , தெய் வங்களுள்லும் ,  மக்களுள்லும்  சிறந்த  குணங்களான்   மேம்பட்டாரை  அக் குணவடிவாக  வருணித்தல்  பெரும்புலவர்  இயல்பென்பதூஉம் ,  அந்  நெறியினின்று   வளம்பெறப்  பாடிய  சேக்கிழார்  , கம்பர்  பாடல்களில்  அப் பொருள்  இன்னின்ன படியாகப்  புலனாமென்பதூஉம்  ,  கண்ணப்ப நாயனார்  முடிந்த  அன்பின்  எல்லைக்கு  இலக்காக  விளங்குதல்  நோக்கி ,  அவர்  பலவிடத்தும்  அன்பின்  திருவுருவாக   வருணிக்கப்பட்டுள்ளார்  என்பதூஉம்  ,  திரு ஞானசம்பந்தப் பெருமானை    மங்கையர்க்கரசியாரும் ,  குலச்சிறை  நாயனாரும்  தரிசிக்குங்கால் , அன்னார்  கட்புலனுக்குச்   சம்பந்தர்  ஞானத்தின்  திருவுரு  முதலியவாகக்  காணப்பட்டார்  என்பதூஉம்  ,  அப் பொன் மொழியைச்  சேக்கிழார்  முதற்கண்  அமைத்துப்பாடிய  திருவிருத் தத்தில்  அப் பெருமானுடைய  மனம் , மெய் , மொழிகளின்  தூய  இயல்புபற்றி  மூன்றுபடியாக  வருணித்துரைத்தனர்   என்பதூஉம் ,  முதலாவாதாகிய  உளத்தூய்மை  பற்றி  ,  “ஞானத்தின்  திருவுரு”  எனவும் , “நான்மறையின்  தனித் துணை”  எனவும்  கூறினாரென்பதூஉம் , அதற் கிரண்டு  பொருள்  கூறியது  பர ஞான ,   அபர ஞான  வகை பற்றி  யென்பதூஉம் , இரண்டாவதாகிய  மெய்யின்  மழவிளம்  பருவங்  குறித்து ,  “மண்ணில்  வளர் மதிக்கொழுந்து”  என்று  கூறினாரென்பதூஉம் ,  மூன்றாவதாகிய  மொழியின்  தூயவியல்புபற்றிக்  “கானத்தின்  எழு பிறப்பு “   என்று  கூறினாரென்பதூஉம் ,  இம்மூன்றன்  கண்ணும்  ஞான  விளக்கமே  வெளிப்படையினும்  ,  குறிப்பினும்  பெறப்பட்ட  தென்பதூஉம்  பிறவுமாம் .

                                              ******************************************

                     5 .   அ ன் பி ன்   தி ரு வு ரு

                                                 1 .  தோற்றுவாய்

       மக்கள்  இறைவனை  அடைதற்குரிய   நெறிகளுட்  சிறந்தன  அன்பு  நெறியும்  ஞான  நெறியுமாகும் .   இவ் விரண்டனையுமே  “உறவு  கோல்  நட்டு  உணர்வுகயிற்றினால்  முறுகவாங்கிக்கடைய  முன்னிற்குமே” என்பர்  ஆளுடைய  அரசர் . இங்கே  உறவு  அன்பும்  உணர்வு ஞானமுமாம் .  இவ் விரண்டனுள்ளும்  அன்பு நெறி  சிறந்த  தென்ப .  “முத்திநெறி  அறியாத  மூர்க்கரொடு  முயல்வேனைப்  பத்திநெறி  அறிவித்து”  என்பதூஉம்  இதனை  வலியுறுத்தும் .வேறெதுவும்  கலவாத  தூய  மெய்யன்பினால்  இறைவனை  வழிபட்டுப்  பேரின்பம்  எய்திய  பெரியார்  கண்ணப்ப  நாயனார்   என்பது  யாவரும்  உணர்ந்ததொன்று . கண்ணப்பரை  நினைப்பா ரெல்லோரும்  அவரைக்  குணிப்பொருளாகிய  அன்பர்  என்று  கருதுவதினும்  அவர்பால்  விஞ்சிநின்ற  அருங்குணமாகிய  மெய்யன்பு  பற்றி  அன்புவடிவமாக  நினைப்பதே  சிறந்ததாகும்  .  இது  கருதியே  சேக்கிழார்  பெருமானும்  “பொங்கிய  ஒளியின்  நீழற்பொருவில்அன்  புருவமானார் “  என்று  உண்மையை  வெளிப்படுத்தியுள்ளார்  .  ஆதலின் ,  இங்கே  சேக்கிழார்  காட்டிய  அன்பின்  திருவுரு  என்னுந்  தொடர்மொழியால்  கண்ணப்ப  நாயனாரைக்  குறிக்கலானேன் .  இக்  கட்டுரையில்  கண்ணப்பர்  வரலாற்றுச்  சுருக்கத்தை  முதற்கண்  கூறிப்  பின்னர்  அவ் வரலாற்றைச்  சேக்கிழார்  பாடிய  முறையிற்  காணப்படும்  நயங்களை   வகுத்துக்காட்டி  ,  முடிவில்  அவ்வரலாற்றால்  உணரத்தக்க  நுண்பொருள்களையும்  ஒருவாற்றான்  விளக்கத்  துணிகின்றேன் .  திருவருள்  துணை செய்வதாக .

                                              2 .   வரலாற்றுச்    சுருக்கம்

          வளம்பல  மிக்க  பொத்தப்பி  நாட்டிலே  மலப்பக்கத்தே  உள்ள  உடுப்பூர்  என்னும்  நகரிலே  ,  வேடர் குலத் தலைவனாகிய  நாகன்  என்பான்  தத்தை  எனப்  பெயரிய  மனைவியுடன்  இயைந்து  இல்வாழ்க்கையை  நடாத்தினான் . அவர்க்கு  மகப் பேறு  இன்றாக  அது  குறித்துத்  தம்  குலதெய்வமாகிய  முருகப்பெருமானுக்குப்  பெருவிழா  எடுத்துச்  சிறப்புச்  செய்தனர் .  அத்தவத்தின்  பயனாக  முருகன்  திருவருட்பாங்கால்  அவர்க்கு  ஓர்  அரும்பெறற்  புதல்வன்  தோன்றினான் .   அக்குழந்தையைக்  கையில்  எடுத்தபோது  திண்ணென்றிருந்தமையால்  அம்மகனுக்குத்  திண்ணனார்  என்று  பெயரிட்டனர் . திண்ணனார்  பிள்ளைமைத்  தொழிலாகிய   விளையாட்டினால்   தம்  இருமுதுகுரவரும்   உறவினர்  அனைவரும்  மனம்  மகிழ்வெய்தச்  செய்து  வளர்ந்து  வருவாராயினர் .  பின்னர் ,  அம் மரபிற்   படைக்கலத்  தொழிற்  பயிற்சியில்  மேம்பட்டார்  சிலரிடம்  விதி  முறை  வழாது  விற்றொழில்  முதலியவற்றைப்  பயின்று  வல்லராயினர் . அவர்க்கு  யாண்டு  பதினாறு  நிகழுங்கால்  ஆங்குள்ள  வேடர்கள்  விலங்குகளின்  தீங்கு  குறித்துத்  தம்  தலைவனாகிய  நாகன்பாற்  சென்று  வேட்டையாடலை  வேண்டி  நின்றனர் .  நாகன்  தன்  மூப்பின்  நிலையையும்  அருமை  மகன்  இளமை  நிலையையும்  தெரிவித்துத்  தேவராட்டியின்  வாழ்த்துடன்  பொருப்பாட்சி  உரிமையும்  தின்னனார்க்கு  வழங்கி  வேட்டையாடப்  பணித்தனன் .  

          திண்ணனார்  தந்தையின்  கட்டளைப்படி  வேட்டையாடுதற்குரிய  கோலத்தைக்கொண்டு தேவராட்டியின்  வாழ்த்துப்பெற்று  அச்செயலின்  முற் பட்டனர் .  பன்றி ,  யானை ,  புலி ,  கரடி ,  மான்  முதலிய  விலங்குகளை  வேட்டையாடி  வரும்  இடையில்  ,  ஒரு  காட்டுப்பன்றி  மிக்க  வன்மை யுடையதாய்ப்  பிறரால்  அகப்படுத்தப்படாமல்  வலை  முதையவற்றைச்  சிதைத்து  மலைச்சாரலில்  ஓடியது  கண்டு ,  திண்ணனார்  பின் தொடர்ந்து  உடைவாளால்  அதனைப்  பிளத்தனர் .  அந் நிலையில்  பொன்முகலியாற்றின்  கரையில்  அப் பன்றி  இறைச்சியை  நெருப்பிற்  காய்ச்சிப்  பக்குவப் படுத்தும்படி  உடன்  வந்த  காடனைப்  பணித்து , நாணன்   என்பவனால்  தெரிவிக்கப்பட்டபடி   திருக்காளத்தி  மலைமிசை  எழுந்தருளியிருக்கும்   குடுமித்  தேவரைக் காண்டால்  விருப்பு  மிகலால்  அவனுடன்  அம்மலையை ஏறிச்சென்றனர் . ஆங்கு  ஒளிவடிவமாய்த்  திகழும்  அப் பெருமான் அருட்பார்வை பெற்றுத்  தம்  பிறப்பின்  தொடர்பு  நீங்க  அவர்  திரு முன்  அன்புருவமாயினர் .  பின்னர் , திண்ணனார்  தம்  செயலற்று  மெய்யன்பின்  வயப்பட்டுத்  திருக்காளத்தி  யப்பரைத்  தழுவியும்  மோந்தும்  அன்புரைகள்  பல  பகர்ந்தும்  அனலிற்பட்ட  மெழுகுபோல் உருகி  நின்றனர் .  

        அப்பொழுது ,  சிவகோசரியார் விதிப்படி  செய்த  வழிபாட்டின்  இயல்பை  நாணன்  கூற  அம்முறையைக்  கடைப்பிடித்து  ,  அப்பெருமானை உண்பிப் பான் வேண்டி  அரிதிற்  பிரிந்து  பொன் முகலி  ஆற்றின்  கரையை  அண்மினார் .  காலந் தாழ்த்ததன்  காரணத்தை  வினவிய  காடன்  முதலிய  வேடர்களுக்கு  நாணன்  நங்குலத்  தலைமை  விட்டான் . நலப்பட்டான் தேவர்க் கென்று  கூறினன் .  வேடர்கள்  கூறிய  சொற்களைச்  செவிகொள்ளாராய்ப்  பன்றி   யிறைச்சியை  நெருப்பில்  வேகவைத்துத்  தம்  நாவினால்  சுவைத்துச்  சுவையில்லானவற்றை உமிழ்ந்தொழித்து  நல்லனவற்றை  இறைவன் பொருட்டு   இலைக் கலத்து  அமைத்துக்  கொண்டிருந்தனர் . இஃதுணர்ந்த  வேடர்கள் தேவுமால்  கொண்ட  இத் திண்ணனார்  மயக்கத்தைத்  தீர்க்கத்  தேவராட்டியையும்   நாகனையும்  அழைத்துவருவோமென்று  எண்ணி  அகன்றனர் .  திண்ணனார்  இலைக்கலத்து  இறைச்சியை  ஒரு  கையிலும்  வில்லையும்  அம்பையும்  மற்றொரு  கையிலும்  தாங்கிக்கொண்டும் , திருமஞ்சன  நிமித்தம்  பொன்  முகலி  நீரை   வாயிற்கொண்டும்  , மலர்  மாலையைத்  தலையிற்  கொண்டும் திருக்காளத்தி யப்பரை   அடைந்தனர் .  அப் பெருமான்  திருமுடியுலுள்ள பழ  மலரைத்  தம்  காற்  செருப்பால்  மாற்றி  வாய்க்  கலசத்து நீரை உமிழ்ந்து  ஆட்டித்  தலைமிசைக்  கொணர்ந்த  மாலையைச்  சாத்திக்  கல்லையிலுள்ள  இறைச்சியை  எதிரே  வைத்து  இன்னுரை  கூறி  அமுது  செய்வித்தனர் . இந் நிலையிற்  கதிரவன்  மறைந்தனன் .  அன்றிரவு  விடியுமளவும்   விலங்கு  முதலியவற்றால்   ஊறுபாடு  நேருங்கொலோ  என்னும்  எண்ணத்தால்  உறங்காது   புறங்காத்து  நின்றனர் .  வைகறைப்  பொழுதில்  இறைவர்க்கு  மீண்டும்  இறைச்சி  கொணர்தற் பொருட்டுக்  காடு  நோக்கிச்  சென்றார் .  

             காலையில்  சிவகோசரியார்  என்னும்  முனிவர்  திருக்காளத்தி  நாதர்   திருமுன்  வந்து  இறைச்சி  எலும்பு  முதலியன  கண்டு  அருவருத்து  வருந்தி , அவற்றைத்  திருவலகால்  மாற்றி  நீராடி  வந்து  சிவாகம  முறைப்படி  இறைவனுக்குத்  திருமஞ்சன  முதலியன  செய்து  தவ  வனத்தை  அடைந்தார். வேட்டை  குறித்துச்  சென்ற  திண்ணனார்  பன்றி  முதலிய  விலங்குகளின்  இறைச்சிகளைத்  தீயிற்  பக்குவப்படுத்தித்  தேன்  கலந்து  கல்லையிலெடுத்து  முன்பு  போலத்  திரு மஞ்சள்   நீரும்  மாமையுங்  கொண்டு  காளத்தி  நாதரை  அடைந்து  ,  சிவகோசரியார்  செய்த  வழிபாட்டுப்  பொருளை  அகற்றித்  தம்  வழிபாட்டுச்  செயலை  நிறைவேற்றினர் .  இங்ஙனம்  இராப்பொழுதில்   உறங்காமலும்  பகலில்  வேட்டையாடியும்  வழிபட்டு  வருவாராயினர் .  

               இச் செய்தியை  நாணனும்  காடனும் தெரிவிக்கக்  கேட்டு   நாகனும்  தேவராட்டியும்  வந்து  திண்ணனாரைப்  பலவாறு  போதித்தும்  ,  தம்  வழியின்  வாராத  அவர்  உளத்திண்மையை அறிந்து   கைவிட்டகன்றனர் .  திண்ணனார்  வழிபாட்டுச்  செயலை  ஒழிக்கவேண்டிய  சிவகோசரியார்  கனவில்  ,  இறைவன்  எழுந்தருளித்  திண்ணனாருடைய  சிறந்த  மெய்யன்புச் செயல்களை  எடுத்துரைத்து   அச் செயலெல்லாம்  தமக்கு  உவப்பாவன  என்று  அருளிச்  செய்தனர் .  அதுகேட்டுச்  சிவகோசரியார்  திண்ணனுடைய  மெய்யன்புச் செயல்களைக்  காண  மறைந்து  நின்றார் .   

                ஆறாம்  நாட்  காலையில்  திண்ணனார்  முன்பு போல ஊன  முதலியன  கொண்டு  வருங்கால தீய  நிமித்தங்களைக்  கண்டு  உளம்  பதைத்துக்  காளத்தியப்பரை   அடைந்தார் . அவ் விறைவன்  வலக்  கண்ணில்  புண்ணீர்  ஒழுகுதலைக்  கண்டு  துடிதுடித்து  வேடர்கள்  இத் தீங்கு  செய்தனரோ   விலங்குகள்  செய்தனவோ  என்று  வருந்திப்  ,  பலவகை  மருந்து  கொணர்ந்து  கண்ணிற்  பிழிந்தனர் .  அவற்றாற்  புண்ணீரொழுக்கு  நில்லாமை  கண்டு ,  “ஊனுக்கு  ஊனிடல்” என்னும்  பழமொழிக்  கேள்வி  நினைவில்  தோன்ற  மகிழ்ந்து  ,  அம்பினால்  தம்  வலக்  கண்ணை  இடந்து  இறைவன்  கண்ணில்  அப்பினார் . குருதி  நின்றது  கண்டு  பேருஉவகை  எய்தினர் . பின்னர்  இறைவன்  இடக்கண்ணலும்  புண்ணீர்  ஒழுகியது  கண்டு  தமது   மற்றைக்  கண்ணையும்  இடந்து  அப்ப  நினைந்து  ,  இடந் தெரிதற் பொருட்டுத்  தம்  இடக்காலை  இறைவன்  இடக்கண்ணிற்  சேர்த்து  ஓர்  அம்பைத்  தம்  கண்ணில்  ஊன்றினார் .  இச்செயற்கருஞ்செயலைக் கண்டு  பொறாது  இறைவன்  தன்  திருக்கையால்  திண்ணனார்  கையைப் பிடித்துக்  கொண்டு  “நில்லு  கண்ணப்ப !  நில்லு  கண்ணப்ப !  என்  அன்புடைத்  தோன்றல்  நில்லு  கண்ணப்ப !”  என்று  மூன்று  முறை  கூறி ,  “ஓப்பற்ற  பேரன்ப! என்  வலப்பக்கத்தே  நிற்க ! “  என்று  அருளிச்செய்தனர்  .  இவ்வற்புதச்  செயலைச்  சிவகோசரியார்  நேரிற்   கண்டு  வியப்புற்றனர் .  தேவர்கள்  மலர்மாரி  பொழிந்தனர் .  

  • .   பிறப்பின்  பெருமை

             “தெய்வ  மணக்குஞ்  செய்யுளெலாம் “  என்று  பாராட்டப்பெற்ற  திருத்தொண்டர்  புராணத்தை   ஆக்கியருளிய  அருட்கவியாகிய  சேக்கிழார்  என்னும்  புலவர்  பெருமான் பாடல்  வளத்தை  அறுதியிட்டுரைக்க   எம்மனோரால்  எங்ஙனம்  இயலும் ?  பத்திச் சுவை  நனி  சொட்டச்  சொட்டப்  பாடிய  கவி  வலவராகிய  அவர்  பாடல்  இனிமையையும்  நுண்பொருட்  பொலிவையும்  இயன்றவளவில்  தனிக்  கட்டுறையாக  எழுதி  வெளியிட  எண்ணியுள்ளேன் .   ஆதலின் ,  ஈண்டுக்  கண்ணப்ப  நாயனார்  புராணப்  பகுதியில்  என்  சிற்றறிவிற்குத்  தோன்றிய  ஒரு  சில  நயங்களை  மட்டில்  குறிப்பிடத்  துணிகின்றேன் .

               கண்ணப்பர்  பிறப்பால்  அவர்  பிறந்த  ஊரும்   அவ்வூரையுடைய  நாடும்  சிறந்தன   என்னும்  பொருள்  தோன்ற  , “கண்ணப்பர்  திரு நாடென்ப  .  ………………..பொத்தப்பி  நாடு”   எனவும் , “ஈவர்  திருப்பதி  யாதென்னில்  ………….  முதுபதி   உடுப்பூராகும்”  எனவும்  தலைமையை  இவர்பாலதாக்கி   நாட்டையும்  ஊரையும்  பின்னர்க்கூறினர்  . வரலாறு  கூறுவார்  பெரும்பாலும்  இன்ன  நாட்டிலே  இன்ன  வூரிலே  என்று  கூறுதல்  மரபு .  ஆயினும்   செயற்கருஞ்  செயல்புரிந்த  பெரியார்  தோன்றியதனாலேயே  அவர்  ஊரும்  நாடும்  பெருமை  பெற்று   விளங்குமாதலின்  ,  அம்முறை பற்றி  இங்ஙனங்  கூறப்பட்டது . 

“நாடா  கொன்றோ  காடா கொன்றோ 

 அவலா  கொன்றோ  மிசையா  கொன்றோ 

எவ்வழி  நல்லவ  ராடவர்

அவ்வழி  நல்லை  வாழிய  நிலனே “

என்னும்  புறப்பாட்டும்  (187)  இக்கருத்துப்பற்றி  எழுந்ததொன்று  .  தீய  நிலனேயாயினும்  நல்லோர்  உறையின்  நன்றெனவும்  நல்ல நிலனேயாயினும்  தீயோர்  உறையின்  தீதெனவும்  தன்னிடத்து  வாழ்வோர்  இயல்பல்லது  ,  நிலம்  தனக்கென  ஓரியல்பு  உடையதன்று  என்பது  இதன்  கருத்தாகும் .  

            கண்ணப்பர்  பிறந்த ஊர்  உடுப்பூராகவும்  ,  நம்  புலவர்  பெருமான்  “திருக்காளத்திக்  கண்ணப்ப” ரென  முதற் செய்யுளிலேயே  குறியிட்டாளத்  தொடங்கினர் .  மாயா  காரியமாகிய  அவருடல்  தோன்றிய  இடத்தினும்  ஞான வடிவமாகிய  அவருயிர்  பேரின்ப நிலை  எய்திய இடம் சிறந்ததாகலானும்  , தந்தையாரிட்ட  திண்ணனார்  என்னும்  பெயரினும்  இறைவன்  இட்ட  கண்ணப்பர்  என்னும்  பெயர்  சிறப்புடையதாகலானும்   உடுப்பூர்த் திண்ணனார்  என்னாது  , திருக்காளத்திக்  கண்ணப்பர்  என்று  கூறுவாராயினர் .

              இவர்  தந்தை  தாயாரைப்பற்றிக்  கூறுங்கால் , முறையே  “வெஞ்சின  மடங்கல்  போல்வான்”  எனவும் , “சூரரிப்  பிணவு  போல்வாள்”  எனவும்  உவமை  குறித்தனர் .  வீரர்  குடிக்குத்  தலைவனாகிய  நாகனைச்  சிங்கவேறு  போல்வான்  என்றதற்கேற்ப , அவன்   மனைவி  தத்தையைப்  பெண் சிங்கம்  போல்வாள்  என்று  கூறியது  பொருத்தமே .  அன்புருவமாம் அரும்பெறற்  புதல்வனைப்  பெற்ற  இருமுது  குரவர்க்கு  ஒப்புக்  கூறுங்கால்  அவ் வுமையினும்   பிறழ்ச்சி  வரலாகாது  என்பது  ஆசிரியர்  கருத்தாகும்  .  இங்ஙனம்  இவ்  விருவரையும்  சிங்கம்  போல்வார்  எனக்  கூறியதற்கேற்பக்   கண்ணப்பரைச்  சிங்கக்  குட்டியாகக்   கொண்டு  ‘  செங்கண் வயக்கோளரி யேறன்ன   திண்மைத்  திண்ணனார் “ எனவும் ,  “கற்றன  ரென்னை  யாளும்  கானவர்க்கரிய  சிங்கம் “  எனவும்  கூறுவர் . ஈண்டுக்  ‘கானவர்க்கு  அரிய  சிங்கம்’  என்று  குறிப்பிட்டதால்  இருமுது  குரவரும்  கானவர்க்கு  எளியர் என்பதும் , இவர் இறைவனுக்கு  உரியர்  என்பதும்  புலனாம் . பிறிதொரிடத்துக்   “கருங்கதிர் விரிக்கு  மேனிக்  காமரு  குழவி  தானும் ,  இரும்புலிப்  பறழி  நோங்கி”  என்று  குறிப்பிட்டுள்ளார் . இங்கே  புலிக்குட்டியைக்  கண்ணப்பருக்கு  உவமை  கூறியது  அவர்  குழவிப்  பருவத்தில்  தந்தை  தாயாரை  விட்டகலாமல்  அருகிலிருந்து பாதுகாப்புடன்  வளர்ந்தது  நோக்கிப்  போலும்  வீர  விலங்குகளுள்  பிறிதொன்றனால்   இடையூறு  வாராமல்  புலியால்  பாதுகாக்கப்படுதல்  அதன்  குட்டிக்கு  உள்ளது  என்பது  கருதி , இங்ஙனம்  கூறினா  ரென்றல்  பொருத்தமாகும் .”புலிதானே  புறத்தாகக்  குட்டிகோட்    படாது “  என்னுங்  கம்ப  ராமாயணச்  செய்யுளும்  இதனை  வலியுறுத்தும் .  

             நாகனும்  தத்தையும்  மகப் பேற்றிற்  சூரியகாலங்  கடந்தமையால்   தம் குல  தெய்வமாகிய  முருகப்பெருமானை   வழிபட்டுத்  தவங்  கிடந்து  கண்ணப்பரைப்  பெற்றனரென்று  ஆசிரியர்  கூறியுள்ளார் .  உலகில்  ஞானத்தாலும்  பத்தி  முதலியவற்றாலும்  உயர்ந்த  பெரியோர்களின்  பிறப்புக்களை  ஆராயின்  ,  அவர்களை  ஈன்றவர்கள்  அரிய  தவஞ்  செய்து  பெற்றனர்  என்பது  பெரும்பாலுங்  காணப்படுவதொன்று .  திருஞான சம்பந்தரைப் பெறுதற்கு  அவர்  தாய்  தந்தையர்  அருந்தவம்  புரிந்த  செய்தியைப்பற்றி  ,

“நினைவுறமுன்  பரசமய  நிராகரித்து  நீறாக்கும்

 புனைமணிப்பூண்  காதலனைப்  பெறப்போற்றும்  தவம்புரிந்தார்”

என்று  கூறியது இங்கு  நினைக்கத்தக்கது .  காதலிருவர்  கருத்தொருமித்து  இல்லற நெறி  யொழுகுங்கால்   காமங்  காரணமாகக் கூடுங்கூட்டத்திற்  பிறக்கும்  மகவினும் ,  அக்காம வேட்கை  ஒருவாறு  தணியப் பெற்றுத்  தெய்வ  நினைவுடையராய்ப்  புதல்வர்ப்பேறு   குறித்துக்  கூடும்  கூட்டத்திற்  பிறக்கும்  மகவு  இருமுது  குரவர் உளத்  தூய்மைக்  கேற்ப  அறிவு  முதலியவற்றாற்  சிறந்து  விளங்கும்   என்னும்  உண்மையும்  ஈண்டு   கருதத்தக்கது .

             வேடர்  குடியில்  தோன்றிய  தத்தை    கண்ணப்பரை  ஈன்ற  செய்தியை  ஆசிரியர்  “அளவில்  செய் தவத்தி  னாலே  பான்மதி  உவரி  யீன்றாலென மகப்  பயந்தபோது”  என்று  உவமித்தனர் , தூய்மை  மிக்க  திங்கட்கொழுந்தை  உவர்க்கடல்  பெற்றது  போல  என்று  இங்கே  கூறியது பொருத்தமே .  குற்றமே  முணமாகக்   கொள்வாரும்  கொடுமையே  தலை நின்றுள்ளாருமாகிய வேடரது  குடிக்கு உவர்க்கடலையும்  மெய்யன்பின்  வடிவினராகிய கண்ணப்பருக்குத்  தூய திங்கட்குழவியையும்  உவமையாகக்  குறித்தது நினைந்து இன்புறத்தக்கது . இனி , பான்மதி என்பதற்குப்  பால்  பகுதியெனக்  கொண்டு  பதினாறு  கலைகளில்  ஒரு  கூறாகிய பிறை  யெனக்கோடலும்  பொருந்தும் . மதி  யென்பது  கலைகள் முற்றும்  நிரம்பப்பெற்ற  திங்களை  யன்றோ  குறிக்கும் எனின் ;  “தூய வெண்மதி  சூடி” என்புழி,  கலை  குறைந்த  பிறையையும்  சுட்டுதலால்  ஈண்டும் அவ்வாறே    கொள்ளலாம் .ஆகவே , உவர்க் கடல் ஒரு கலைப் பிறையை ஈன்றது போலத்  தத்தை  அன்புருவக் குழவியை  ஈன்றாள்  என்பது  போதரும் . இதற்கேற்பக்  கண்ணப்பருக்கு  பதினாறு  யாண்டுகள்  நிரம்பினவென்று  கூறுமிடத்து ,

“கண்ணகன்  சாயல்  பொங்கக்

             கலைவளர்  திங்க  ளேபோல் ,

 எண்ணிரன்  டாண்டின்  செவ்வி  யெய்தினார் “                                    என்று  குறிப்பிட்டருளினார் . இங்கே  கலைவளர் திங்கள்  என்றது  நிறைமதியாகும் .திங்களுக்குப்  பதினாறு  கலைகளுக்கு மேல்  வளர்ச்சி யின்று .  அது  போலக்  கண்ணப்பருக்குப்  பதினாறு யாண்டு களுக்கு மேல் உடல்  வளர்ச்சி  கிடையாது . வீட்டு  நிலை யெய்தின  ராதலின்  ,  இப்பொருள்  நலம்   தோன்றவே  கண்ணப்பர்  பிறந்த நிலையில்   “ஒரு கலை மதியும்  வீட்டு  நிலை  யெய்திய பதினாறாட்டைப்  பருவம்  நிரம்பிய  நிலையில்   பதினாறு  கலைகளும்  நிரம்பிய  திங்களும்  உவமையாக  எடுத்தாளப்பட்டன .  

                                       4 .  பிள்ளைமைப்   பருவம்

             கண்ணப்பருடைய  பிள்ளைமைப்  பருவத்தைச்  சேக்கிழார்  பெருமான்  நினைந்து நினைந்து உளங்குளிர்ந்து பாடியுள்ளார் . குழந்தைக்கு  அணியக் கூடிய  தம் மரபிற்கேற்ற  அணிகலன்களைத் தாய் தந்தையர்  என்பதைப்

“புண்ணியப்  பொருளா  யுள்ள

          பொருவில்சீர்  உருவி  நானைக்

கண்ணினுக்  கணியாத்  தங்கள்

          கலன்பல  அனிந்தா  ரன்றே .”

என்று  அழகுறக்கூறினர் . கண்ணப்பர்  திருவுருவம்  சிவ  புண்ணியத்  திரட்சியாலாகிய  அன்புருவமாகும் . அன்புநிலை  என்னும்  தலைப்பில்  இது  பற்றிய  சில  உண்மைகள் விளக்கப்படும் . இத்தகைய  மெய்யன்பின்  வடிவத்தை  வேடர்கள் உணருந்  தகுதியுடைய  ரல்லராதலின்  , அவர்கள்   தம்  கண்களுக்கு  அழகு  பயக்குமாறு  புறவுடலில்  தம் மரபினருக்கு  உரிய  அணிகல்ன்கள்  பலவற்றை அணிந்து அம்மட்டில் கண்டு  மகிழ்ந்து  இன்புறுவாராயினர் .

             கண்ணப்பர்  மழலை மொழியுங்கால்   அவ்வினிய சொற்களை ஆசிரியர் ,

“புண்ணியக்  கங்கை  நீரிற்  புனிதமாம்  திருவாய்  நீரில்

உண்ணனைந்து  அமுத மூறி  ஒழுகிய  மழலைத்  தீஞ்சொல்”

என்று  பாராட்டி யுள்ளார்  .  அவர்  காளத்தியப்பரைத்  தம்  திருவாயிற்  கொணர்ந்த  நீரை  உமிழ்ந்து அன்புத்  திருமஞ்சனம்  ஆட்டினர் என்பதை  உட்கொண்டு  கங்கை  நீரினும்  தூய்மை  மிக்கது  திருவாய்நீர்  என்றும் , அந் நீரிற்றோய்ந்து  வெளிப்பட்டமையான்  இனிமை  மிக்கு  ஒழுகியது  மழலைத்  தீஞ்சொல்  என்றும்  கூறப்பட்டுள்ளன .

             விளையாடுங்கால்  பார்வை  விலங்காகவுள்ள  புலியின்  வாயில்  கண்ணப்பர்  தம்  கையை  நீட்டியது  கண்டு  தந்தை  தழைகொண்டோச்சி விலக்கினன்  என்றும் ,  அது  பொறாது  கண்ணப்பர்  அழவே  தாய்  முத்தமிட்டு  மாற்றினள்  என்றும்  ஆசிரியர்  கூறுங்கால்  ,  நீர்  மல்கிய  அவர்  கண்களை  “இரு சுடர்க்கு  உறுகண்  தீர்க்கும்  எழில்  வளர்கண்” என்று  பாராட்டினர் . இரு  சுடர்  கதிரவனும்  திங்களுமாம்  .  அவ்விரண்டும்  இறைவர்க்கு  இரு  கண்களாகும் . அக் கண்களிற்  புண்ணீர்  ஒழுகக்  கண்டு  தம்  கண்களை  இடந்து மாற்றினர்  என்பது கருதி இங்ஙனம்  கூறியருளினார் .

“தடித்தவோர்  மகனைத்  தந்தையீண்  டடித்தால் 

            தாயுடன்  அணைப்பள்தா  யடிப்பின்

 பிடித்தொரு  தந்தை  அணைப்பன்”

என்று  உலகியல்  கருதிக்  கூறிய  இராமலிங்க அடிகளின்  பாடற் பொருள்  இங்கே  நினைக்கத்தக்கது .

                                  5 .  தொழிலுரிமை   கோடல்

           கண்ணப்பர்  விற்றொழிற்  பயிற்சியை  மேற்கொள்ளுதற்கு  வேடர்கள்  நல்ல  நாளில்  அவர்  வில்லுக்குக்  காப்புக்கட்டினரென்று  கூறுங்கால் , முன்   மேருவாகிய  வில்  திருப்பாற் கடலினின்றும்  நஞ்சாகிய  உணவை  ஆக்கி  இறைவர்க்கு  அளித்தது  .  அங்ஙனமின்றி  ,  இஃது  ஊனை  அமுதமாக்கி  அளிப்பதாகும்  என்னும்  பொருள்  தோன்றச்  “செம்பொன்  மேரு  ஆனது  கடலி  நஞ்ச மாக்கிட  அவர்க்கே  பின்னும் , கானவூ  னமுதமாக்குஞ்  சிலை”  என்று  பாராட்டப்பட்டுள்ளது .  விலங்குகளால்  நேர்ந்த  ஊறுபாடு  நீங்கத்  தந்தை  சொல்  வழி  நின்று  வேட்டைத்தொழிலில்  முற்பட்டு  நிகழ்த்திய  செயல்களை   ஆசிரியர்  பற்பல  நயந்தோன்றப்  பாடியுள்ளார் .  ஓரிடத்துப்  புறத்தே   வலைத்தொழிலும்   சிலைத்தொழிலும்  நடைபெற  அகத்தேயுள்ள  பாசமாகிய  வலைப்பிணிப்பை  அறுக்கச் செல்லும்  ஐயர் என்று  பாராட்டினர் .

             மேலும்  கண்ணப்பர் முன்   பல  பார்வை  விலங்குகளைக்  கொண்டு  வேடர்  சென்றனர்  என்பதைக் ,

“கொன்றை  தங்குவேணி  யார்தமைக்

கண்னில்நீடு  பார்வை  ஒன்று

கொண்டுகாணும்  அன்பர்முன்

எண்ணில்பார்வை  கொண்டுவேடர்

எம்மருங்கும்  ஏகினார் “

என்னுஞ்  செய்யுளால்  குறிப்பிட்டுள்ளார் . இறைவன்  வலக்  கண்ணில்  ஊறுபாடு  கண்டு  தம்  வலக் கண்ணை  இடந்து  அப்பிய  பின்  இடக்கட்பார்வை  ஒன்று கொண்டு   இறைவனைக்  கண்டு  இன்புறு  நிலையினர்  முன் ,  வேடர்  பல  பார்வை  விலங்குகளைக்  கொண்டு  சென்றனர்  என்னும்  இந் நிகழ்ச்சியில்   வேற்றுப்பார்வை  யின்றி  ஒரு  பொருளையே  அகப்  பார்வையால்  ஆரா  அன்பினிற்   கண்டுகொண் டிருப்பவர்  கண்ணப்பர் என்பதும் ,  புறப்பார்வை  பலவுடையர்  வேடர்கள்  என்பதும்  தோன்றக்  கூறிய  நயம்  அறிந்து  இன்புறத்தக்கது .

            கண்ணப்பர்  வேட்டைச் செயல்   அறநிலை  பிறழாதது  என்பதை  ஆசிரியர்  “துடியடியென ………………. மறவோர் “  என்னும்  பாடலால்  தெளிவுறுத்தினார் .  சிறிய  யானைக் கன்றுகளையும்  , மற்றைய  விலங்குக் குட்டிகளையும் , சூல்  முதிர்ச்சியால்  அடி  தளர்ந்து  செல்லும்  மான்பேடு   முதலியவற்றையும்  கொலை  புரியாது  விட்டனர்  என்பது  இதன்  பொருளாகும் .  இந்  நீதி  போர்ச்செயலிலும்   மேற்கொள்ளப்பட்டது  என்பதை,

“ஆவும்  ஆனியற்  பார்ப்பன  மாக்களும்

பெண்டிரும்  பிணியுடையீரும்  பேணித்

தென்புல  வாழ்நர்க்  கருங்கட  நிறுக்கும்

பொன்போற்  புதல்வர்ப்  பெறாஅ  தீரும்

எம்மம்பு  கடிவிடுதும்  நும்மரண்  சேர்மின்”

என்னும்  புறப்பாடலால்  உணரலாம் . நாட்டிற்கு  நலிவு  செய்யும்  தீயவர்களை  ஒறுத்தல்  அரசர்க்கு  உரிய  கடமையாதல்  போல , விளை பொருள்களுக்கு  ஊறு  செய்யும்  விலங்கினங்களை  அழித்தல்  வேடர்  தலைவர்க்குரிய  கடமையாயினும்  ,  சூல்  முதிர்ந்த  பிணைமான்     முதலியவற்றைக்  கொல்லாது  விடுதல்  நீதியென்பது  உணர்ந்து அவ்வாறு செய்தனர் . இஃதுணர்ந்தே  பிறரொருவர்  ,

“பொருப்படியிற்   கண்ணப்பர்  அருள்வேட்டம்

               புரிகால்பொன்  னடியிற்   பூண்ட      

 செருப்படியிற்  சிறுமணலாய்க்  கிடவாத

               தீவினைக்கென்  செய்குவேனே”

என்னும்  பாடலில்  கண்ணப்பர்  வேட்டையை  ‘அருள்  வேட்டம்’  என்று  கூறினர் இங்கே  ,செருப்படியிற்  சிறு  மணல்  என்று  கூறியது பாராட்டத்தக்கது . செருப்படியிற்  பெரு  மணலாயிருந்தால்   நடக்குங்கால்  உதிர்ந்துபோம்  , சிறு  மணலாயின்  ,  உட்செறிந்திருந்து  பின்  இறைவன்  திருமுடியிலுள்ள  மலரை  அச் செருப்பால்  மாற்றுங்கால்  அம்  முடியைத்  தானும்  உறுதல்  பெற்று  இன்புறலாம்  என்னுங்  கருத்து  அவ்  அன்பர்க்கு  உளதாதல் போற்றத்தக்க தொன்று  . ஈண்டுக்  கண்ணப்பர்   செருப்படியிற்  படிந்திருத்தல்  சாதனமும் ,  இறைவன்  திருமுடியிற்  பொருந்துதல்  பயனுமாத லறிக .

                                             6 . பழம்   பிறப்புத்   தொடர்ச்சி

             இனி ,  கண்ணப்பரது  பண்டைப்  பிறப்பைப்  பற்றிய  செய்தி  ஒருவகையில்  உய்த்துணரப்படுதலை  இங்கே  குறிப்பிடுவேன் . வேட்டைத்தொழில்  முடிவில்  பொன் முகலி  நதிக்குச் செல்லுங்கால் ,  திருக்காளத்தி  மலையில்  “கோணமில்  குடுமித்தேவர்  இருப்பர்  கும்பிடலாம்” என்று  நாணன்  கூறியவுடன்  கண்ணப்பர்  அம்மலையை  நெருங்குந்தோறும்   தம்  உடற்  சுமை  குறைந்து  தோன்றுவதாகவும் ,  உள்ளம்  என்றுமில்லாத  வேறோர்  விருப்ப  மிக  விரைவதாகவும்  அநுபவத்திற்  கண்டு  கூறினர் .  இங்ஙனம்  தம்மை  யறியாமல்  அவர்க்கு  இந்  நிகழ்ச்சிகள் நேர்ந்தமைக்குக்  காரணம்  அவர்  பண்டைப்பிறப்பிற்  செய்த  அரிய  தவத்தின்  பயனாம்  என்பதைச்  சேக்கிழார் ,

“முன்புசெய்  தவத்தி  னீட்டம்  முடிவிலா  இன்பமான

 அன்பினை  எடுத்துக்காட்ட”

என்னும்  பாடலாற்  புலப்படுத்தியுள்ளார் .

            இங்ஙனங்  கூறியது  கொண்டும் ,  காளத்திப்  புராணத்திற்  கூறிய  வரலாற்றி லிருந்தும்  , கண்ணப்பர்  பண்டைப்பிறப்பில்  அருச்சுனனாகப்  பிறந்து  கைலை   சென்று  சிவ  வழிபாடாகிய  தவம்  பண்ணியவர்  என்று  கொள்ளுவர்  ஒரு சிலர் .  அருச்சுனன்  தவச்செயற்கு  இடையூறாக  மூகாசுரன்  என்பான்  பன்றி  உருவெடுத்து  வர , அப் பன்றியைக்  கொல்லச்   செல்லுங்கால்,  சிவபெருமான்   வேடுவராகத்  தோன்றி  அவனோடு  பொருது  முடிவில்  தம்  உண்மை  உருக் காட்டி ,  வீடு  பெற  வேண்டி  நின்ற   அவ் வருச்சுனற்குப்  பிற்றைப் பிறப்பில்  வேடுவனாகப் பிறந்து  அன்பு  வழிபாடு  செய்து  பெறுவை  என்றனராம் . இந்  நிகழ்ச்சிக்கு  ஏற்பக்  கண்ணப்பர்  புராணத்தில்  “பன்றியும்  புலியும்” ,  “ஏனமொடு  மானினங்கள்” , “ஏறுகாற்  பன்றியோடும்” ,  “”பெரும்  பன்றி  புனமேய்ந்து “  என்றிங்ஙனம்  பற்பல  இடங்களில்  பன்றியின்  செய்திகளே  கூறப்பட்டமையும்  ,  வேட்டையின்  முடிவில்  ஒரு  பன்றியைக்  கொன்று  அதனிறைச்சியையே  திருவுணவாகப்  படைத்தனர் என்று  கூறியதும்  எடுத்துக்காட்டத்தக்கனவாம் .

              “முன்புசெய்  தவத்தினீட்டம்”  என்று  சேக்கிழார்  பொதுவாகக்  கூறினாரன்றி ,  அருச்சுனன்  செய்தியைக்  குறிப்பிட்டிலர் .  அதனால் , இப்பிறப்பில்  கல்வியறிவு  முதலியவற்றுள்   ஏதுமின்றிச்  சிறந்துயர்ந்த  அன்பு  வடிவாக  நின்று  வழிபட்டு   மிக்க  விரைவில்  வீட்டினைத்  தலைப்படுதற்கு  இவர்  பண்டைப்  பிறப்பிற்  செயற்கருந்  தவம்  செய்திருக்க  வேண்டுமெனவும்,  ஏனை  விலங்குகளுடைய  இறைச்சிகளினும்  பன்றி   இறைச்சி  மிக்க  சுவையுடையதெனக்  கொண்டு  தமக்கு  உவப்பாகவுள்ள  அதனை  இறைவற்குப்  படைத்தனர்  எனவுங்  கோடலும்  பொருந்துவனவாம் .  

                                                 7 .  அ  ன்  பு     நி லை

    இனி , கண்ணப்பரது  சிறந்த  அன்பு நிலையைக்   கூறுவதென்றால்   அது  மாற்றம்  மனங்  கழிய  நின்றதொன்று .  நாணன்  வழி  காட்டி  முன் செல்ல  அவர்  அவன்  பின்னே  காளத்தி  மலையில்  ஏறி  நடந்தனர்  என்பதைக்  கூறப்புகுந்த  ஆசிரியர்  ,  முறுகிய   பேரன்பராகிய  கண்ணப்பரை  அன்ன  தகுதி  ஏதுமில்லாத  நாணன்பின்னே  நடப்பிப்பது  தக்கதன்று  என்று  கருதிக் ,  கண்ணப்பர்  உடல்  பின்னே  சென்றதாயினும்  அவர்  அன்பு  நாணனுடன்  முன் சென்றது  என்னுங்  குறிப்புத்  தோன்ற  “நாணனும்  அன்பும்  முன்பு  நளிர்வரை யேற”  என்று  திருவாய்  மலர்ந்தருளினர் . காளத்தி  மலையை  அடைந்து  இறைவன்  திருவுருவத்தைக்  கண்டதும் ,  அவர்  தம்வயம்  இழந்து  இறைவன்  வயப்பட்டு  வடிவெல்லாம்  புளகம்  பொங்க  மலர்க்கண்ணீர்  அருவி  பாயக்  கைச்சிலை  விழுந்ததை  அறியாராய்ப்   போதுவர் ;  மீண்டு  செல்வர் ;  புல்லுவர்;  மீளப் போவர் ;  காதலின்  நோக்கி  நிற்பர்;  கன்றகல் புனிற்றாய்போ  லாயினர் ,  இங்ஙனம்  இவர்  நின்ற  நிலையைக்  கண்ட  நாணன்  காலந்  தாழ்த்தது   குறித்து  வினவிய  காடனை  நோக்கி  ,  “வங்கினைப்பற்றிப்  போதா   வல்லுடும்பு  என்ன  நீங்கான்”  என்று  கூறினன் .  உடும்ம்புப்பிடி  மிக்க  வன்மையுடைய  தென்பதைச்  சீவகசிந்தாமணி   நூலாசிரியரும் ,

“தணக்கிறப்பறித்த   போதும்  தானளை  விடுத்தல் செல்லா

நினைப்புடை  உடும்பன்  னாரை  யாதினால்  நீக்க  லாமே “

என்று  கூறுவர் .  வேடன்  வாய்க்  கூறும்  உவமையை  அவன்  மரபிற்குரிய  தொழிலிற்  கண்ட  காட்சிக்கு  ஏற்ற  முறையிற் கூறியது  சேக்கிழாரின்  உலகியலறிவைப்  புலப்படுத்துவதாகும் .

       மெய்யன்பு  நிலையினராகிய  கண்ணப்பர்  உலகியல்களையும்  தமரையும்  தன்மையும்  மறந்து  இறை  நிலையில்  இயைதலாகிய  இயல்பு  ஒன்றையே  உடையராயினர் . “பரமே   பார்த்திருப்பார்  பதார்த்தங்கள்  பாரார்.”  என்பதற்கு  இவர்  எடுத்துக்காட்டாயினார்  .  இவர்  சுவைத்த  ஊன்  இறைவர்க்குத்  தேவரமிழ்தினுஞ்   சிறந்த  திருவமுது  ஆயிற்று ;  இவர்  வாயிற்  கொண்டு  உமிழ்ந்த நீர்  புண்ணியக்  கங்கைப்  புனலினும்  சிறந்த  திருமஞ்சன  நீராயிற்று ;  செருப்படி  அவ்விளம்பருவச்  சேயாகிய  முருகன்  திருவடியைப்  போற்  சிறந்ததாயிற்று  . இப் பேரன்புச்  செயல்கலைச்  சங்கராச்சாரியார்  வியந்து  தாம்  பாடிய  சிவானந்தலகரியில் ,

“மார்க்கா  வர்த்தித  பாதுகா  பசுபதேரங்யகஸ்கூர்ச்  சாயதே

கண்டூஷாம்பு  நிஷேசனம்  புரரிபோர்  திவ்யாபிஷேகாயதே !

கிஞ்சித்  பக்ஷிதமாம்ஸசே  ஷகவளம்  நவ்யோப  ஹாரயதே

பக்தி; கிம்  நகரோதியஹொ  வளசர : பக்தாவதம்  ஸாயதே!!

என்று  மனமுருகிப்  பாடியுள்ளார் .  இச்  சுலோகப் பொருள்:-

           “வழி  நடத்தற்குரிய  செருப்புப்  பசுபதியின்  திருமேனியைத்  தூய்தாக்கும்  கூர்ச்சமாயிற்று , எச்சில்  நீர்  புறப்  பகைவற்குச்  சிறந்த  திருமஞ் சனமாயிற்று .  சிறிது  சுவைத்த  இறைச்சி  புதிய  நிவேதனமாயிற்று  .  பத்தி  யாது  செய்யாது ?  ஆ !  வேடன்  பத்தருள்  தலைமணியாயினான்”  என்பதாம் . இவர்  இராப்பொழுது  விடியுமளவும்  இறைவன்  திருமேனிக்கு  விலங்கு  முதலியவற்றால்  ஊறுபாடு  நேராமைப்பொருட்டுக்  கண்னிமை  மூடாமல் உள்ளத்தில்  மெய்யன்பையும்  கையிற்   சிலையையும்  தாங்கிப்  பாதுகாத்து  நின்றனர் .  இக் காட்சியைச்  சேக்கிழார்  தம்  உள்ளத்தில்  எழுதிக்  கனிந்து  பாடிய  பாடல் ,

“சார்வருந்  தவங்கள்  செய்து  முனிவரும்  அமரர்  தாமும்

கார்வரை  அடவி  சேர்ந்தும்  காணுதற்  கரியார்  தம்மை

ஆர்வமுன்  பெருக  ஆரா  அன்பினிற்  கண்டு  கொண்டே

நேர்பெற  நோக்கி  நின்றார்  நீளிருள்  நீங்க  நின்றார் “

என்பதாகும் .  தேவர்  முனிவர்  முதலியோரும்  அருந்தவம்  புரிந்தும்  காணுதற்கரிய   பெருமானைத்  தம்  மெய்யன்பிற்  கண்டு கொண்டு  நீளிருள்  நீங்க  நின்றார்  என்பது  இதன்  கருத்து  .இங்கே  ‘நீளிருள்’  என்றது ,  மிக்க  விரைவில்  ஒழியவேண்டுமென்று  கருதிய  கண்ணப்பருக்கு   அவ்விராப்பொழுது  நீண்டதாகக்  காணப்பட்டது  பற்றிப்  புறவிருளையும் , பிறப்புத்  தொடங்க  முதல் வீட்டு  நிலை  யெய்துமளவும்  ஒழியாது  பற்றி  நின்ற  ஆணவமலம்  என்னும்  அகவிருளையும்  குறிப்பதாகும் ,  கண்ணப்பரது  சிவானுபவ  நிலையால்  அம் மலையில்  இராப்பொழுதென்பது  சிறிதும்  இன்றாயிற்றாம் .  இது ,

“செந்தழல்  ஒளியிற்  பொங்கும்  தீபமா  மரங்க  ளாலும்

 மந்திகள்  முழையில்  வைத்த  மணிவிளக்  கொளிகளாலும்

ஐந்துமா  றடங்கி  யுள்ளா  ரரும்பெருஞ்  சோதி   யாலும்

எந்தையார்  திருக்கா ளத்தி   மலையினில்  இரவொன்றில்லை”

என்னும்  பாடலால்  தெளிவுறுத்தப்பட்டது  .  புறவிருள்  ,  அகப்புறவிருள் , அகவிருள்  என  இருளை  முத்திறப்படுத்து  வெளியை  மூடியிருக்கும்  இருளைப்  புறவிருளாகவும்  ,  இல்லம்  முதலிய  உள்ளிடங்களிலுள்ள  இருளை  அகப் புற விருளாகவும்  ,  மக்கள்  உள்ளத்திற்  படிந்துள்ள  மயக்க  விருளை   அகவிருளாகவும்  கூறலாம் .  இம் முத்திறத்து  இருளையும்  ஒழித்தற்கு  உரிய  ஒளிக்  கருவிகளாக  முறையே  ,  அம் மலையிலுள்ள  ஒளி  மரங்களையும்  ,  மலை  முழைகளில்  பெண் குரங்கு  முதலியன  கொணர்ந்து  வைத்த  மணிகளையும்  ,  மாறுபட்ட  ஐம்புலன்களின்   ஆற்றலை  அடக்கி  இறை  நிலையிற்  பதிந்துநின்ற  கண்ணப்பரது  உள்ளுணர்வையும்  குறிப்பிட்டுள் ளனர் .  “ஐந்துமா  றடக்கியுள்ளார் “  அம் மலையில்  தவம்  பண்ணும்  முனிவரர்  எனவும்  கூறுவர் .  இங்கே  கண்ணப்பருடைய  அருஞ்  செயல்களைக்  குறிக்கொண்டு  கூறுதலானும் ,  மாறி  நின்று  மயக்கும்  வஞ்சப்  புலங்களின் வழி  அவருள்ளம்  செல்லாமையானும்  அக்  கண்ணப்பரைக்  கூறுதல்  பொருந்துவதாகும் . ஒளிக்கருவிகளை   முத்திறப்படுத்துக்  கூறிய  முறையில் கதிரவனும்  திங்களும்  அங்கியுமாகிய  ஒளிப்பொருள்கள்  மூன்றும்  தொனியளவில்  புலப்படுக்கப்பட்ட  உண்மையும்  உணரத்தக்கது .  

             இனி,  சிவகோசரியாருக்குக்  கண்ணப்பரது  பேரன்பின்  திறத்தைக்  காட்டற் பொருட்டு இறைவன்  முதலில்  தம்  வலக்கண்ணில்  புண்ணீர்  ஒழுக்கினாராக  , அது  கண்டதும்  கண்ணப்பர்  துடிதுடித்துப்  பற்பல  மருந்து களைப்  பறித்துக்கொண்டு ,விரைவில்  வந்து பிழிந்தனர்  என்ப . இந் நிலையில்  அவரது  விரைந்த  வருகைக்கு  ஒப்பாக  வாயுவேகம்  எங்கும்  படிந்து  செல்லுதலாற்  பொருந்தாதென்று  விடுத்துத்  தாவிச்  செல்லும்  மனோ  வேகத்தைக்  குறிப்பிடலானார் .  அதுவும்  ஊக்கமில்லாதார்  மனமாக  இருப்பின் ,  ஒவ்வாதென்று  கருதிப் “பூதநா  யகன் பால்  வைத்த  மனத்தினுங்  கடிது வந்து “  என்றார் , “இறைவன்பால்  வைத்த  தம்  மனம்போல்”  என்று  கூறுவதே  பொருந்துவதாகவும் , அதனினுஞ்  சிறந்த  ஒப்புக்  கூறவியலாமையால்  “மனத்தினுங்  கடிது”  என  உறழ்ச்சி  உவமமாகக்  கூறினர் .

               இதனால் ,  உவமையும்  ஈண்டு  மேற்கொண்ட  பொருட்குச்  சிறந்து  நின்று  பயன்  விளைத்தமையும்  உணரத்தக்கது. உவமேயமாகிய பொருளே  புலவன்  கூற  மேற்கொண்ட செய்திக்குச்  சிறந்ததாகும் . உவமை அதற்கு  ஒப்புத்தன்மையைப்  பயந்து  அவ்வளவில்  ஒழிவதாகும் . இது  மற்றைப்  புலவர்களின் புலமை  நெறியாகும் .  அருட்கவியாகிய  சேக்கிழார்  பெருமான்   உவமையும்   பொருளுமாகிய  இரண்டும்  தாம்  மேற்கொண்ட  வரலாற்றிற்குச்  சிறந்தன வாகக்  கூறும்  இயல்பினராவர் .  இதற்கு  ஈண்டுக்  கூறியதொன் றன்றிச்   “செம்பியன்  செங்கோலென்னத்  தென்னன்  கூன்  நிமிர்ந்த  தன்றே”  என்பது  முதலியனவும்  சான்றாகும்  .  பாண்டியன்  கூன்  நிமிர்ந்ததற்குச்  சோழமன்னனது  செங்கோலை  உவமையாகக்  கூறினர் . அப்பொழுது  சைவத்தை  நிலை பெறச் செய்தற்கு  மங்கையர்க்கரசியார்  முன் நின்றாராத லானும்  ,  அவர்  புக்ககத்துப்  பெருமையினும்  சைவ  முறை  வழுவாத  பிறந்தகத்துப் பெருமை  அவ்வமயம்  விஞ்சிநின்றதாகலானும்  இவ்வாறு  கூறி யருளினர் .

                 இனி ,  கண்ணப்பரது  உருவம்  அன்பின்  திருவுருவாம்  என்பது முன்னர்க்  கூறப்பட்டுள்லது . ஒரு  குணிப்பொருளைப்  புணைந்துரைக்குங் கால்   அப்பொருள்களின்கண்   விஞ்சி  நிற்கும் குண  வடிவமாகக்  கூறுதல்  பெரும்புலவர்  மரபென்பதும் ,  இது  கடைப்  பிடித்தே  திரு ஞானசம்பந்தப் பெருமானை   ஞானத்தின்  திருவுருவாகவும் ,  கண்ணப்ப நாயனாரை  அன்பின் திருவுருவாகவும்  தெளிந்து  கூறினர் சேக்கிழார்  என்பதும்  ‘ஞானத்தின் திருவுரு’  என்னுங்  கட்டுரையில்  விரித்துரைக்கப்பட்டன ,  “அன்பு  பிழம்பாய்த்  திரிவார்”   “பொங்கிய  ஒளியின்  நீழல்  பொருவில்  அன்புருவமானார்”  “படியிலாப்  பரிவுதானோர்  படிவமாம்  பரிசு  தோன்ற “  என்று  ஆங்காங்குப்  புலப்படுத்துச்  செல்லுங்  குறிப்புக்களும் ,  திரு ஞானசம்பந்தர்  கண்ணப்பரது  திருவுருவத்தை  வணங்குங்கால்  “உல்ளத்தில்  தெளிகின்ற  அன்பின்  மெய்மை , உருவினையும்  “  என்று  தெளிவுறுத்திய  உண்மையும் ,  ஊன்  முதலியன  கண்டு  வருந்திய  சிவகோசரியார்  கனவில்  இறைவன்  எழுந்தருளி  “அவனுடைய  வடிவெல்லாம்  நம்  பக்கல்  அன்பு “  என்பது  முதலியவாகக்  கூறிய  செய்திகளும்  கண்ணப்பர்  அன்பின்  திருவுருவாவர்  என்பதை  மிகத்  தெளிவாக  வலியுறுத்துவனவாம் .  

            அன்பின்  பேரெல்லைக்குக்  கண்ணப்பரே  எடுத்துக்காட்டாவார் . இதனை  அன்பு  மயமாக  உருகி  இறைவன்  திருவடி  யடைந்த  மாணிக்கவா சகப் பெருமான்  “கண்ணப்ப  னொப்பதோர்  அன்பின்மை   கண்ட பின் “  என்றருளிய  பாசுரத்தானும்  உணரலாம்  .  ஈண்டுக்  ‘கண்ணப்பனொப்பதோர்  அன்பின்மை’  என்பதற்குக்  ‘  கண்ணப்பரது  அன்போடு  ஒத்த  அன்பு  என்பால்  இல்லாமை  கண்டு”  என்று  பொருள்  கூறின்  , அவ்வன்பிற்குச்  சற்றுக்  குறைந்த  அன்பு  உண்மை  பெறப்படும்   .  அங்ஙனமாயின்  ,  அக் கருத்து  “நான்  தனக்  கன்பின்மை  நானுந்தானு  மறிவொம்”   என்பதனோடு  முரண்  படுவதாகும்  .  அதனால்  இதனை  மறுதலை  உவமையாகக் கொண்டு ,  கண்ணப்பர்  அன்பு  எத்துணை உயர்ந்ததோ  அத்துணைத்  தாழ்ந்தது  என்  அன்பு  என்று  பொருள்  கோடல்  சிறந்ததாகும்  .  கண்ணப்பர்  பேரன்பிற்கு  எடுத்துக்  காட்டாதல்போல  ,  யான்  அன்பின்மைக்கு  எடுத்துக்காட்டாவேன்  என்பது  கருத்து .

             இன்னும்  இவர்  பேரன்பின்  இயலைப்  பதினோராம்  திருமுறையிலுள்ள  நக்கீர  தேவனார்  பாடிய  திருக்  கண்ணப்ப  தேவர்  திருமறம்  என்னும்  நூலில்  நன்கு   கானலாம் . சிவகோசரியார்   கனவில்  இறைவன்  எழுந்தருளிக்  கூறிய  செய்தி   யடங்கிய  இந்  நூற்பகுதி  படித்து  இன்புறத்தக்கது .  அது  வருமாறு :- 

“குனிசிலை  வேடன்  குணமவை  யாவன

 உரிமையிற்  சிறந்தநன்  மாதவ  னென்றுணர்  அவனுகந்து,

இயங்கிய  இடம்முனி  வனமது  வேயவன்

செருப்படி  யாவன  விருப்புறு  துவலே

எழிலவன்  வாயது  தூயபொற்  குடமே

அதனின்  தங்குநீர்  கங்கையின்  புனலே

புனற்கிடு  மாமணி  யவனிரைப்  பல்லே

அதற்கிடு  தூமலர்  அவனது  நாவே

உப்புனல்  விடும்பொழு  துஞ்சிய  மீசைப்

புன்மயிர்  குசையினு  நம்மடிக்  கினிதே 

அவன்றலை ,

தங்கிய  சருகிலை  தருப்பையிற்  பொதிந்த

அங்குலி  கற்பகத்  தலரே  அவனுகந்து

இட்ட  விறைச்சி  யெனக்குநன்  மாதவர்

இட்ட  நெய்பால்  அவியே

என்பதாம் .  இதன்கண்  அவர்  வாய்  திருமஞ்சனப்  பொற்குடம்  எனவும் ,  அதன்  கண்ணுள்ள  அவர்  எச்சில்  கலந்த  நீர்  கங்கைப்  புனலெனவும் , அவருடைய  பற்களும்   நாவும்  முறையே  திருமஞ்சன  நீரில்  இடப்படும்  இரத்தினங்களும்  மலருமாம் எனவும் ,  அவர்  அப்புனலை  உமிழுங்கால்  உராய்ந்த  அவர்  மீசை  மயிர்  தூய  தருப்பைப்  புற்களாம்  எனவும்  கூறிய   செய்திகள்  அறிஞர்  உள்ளத்தை  இன்புறுத்துவன  .  இவரன்பை  அந்தமில்  இன்பமாகிய   அழிவில்  வீடு  பயக்கும்  மெய்யன்பு  என்பது  தோன்ற  “முடிவிலா  இன்பமான  அன்பு”  என்று  ஆசிரியர்  கூறுவர் . இத்தகையதே   காரைக்காலம்மையார்  வேண்டிய  இறவாத  இன்ப  அன்புமாம் .  சிவகோசரியார்   அன்பு  ஆகமநெறி   ஒழுகி  மேற்கண்ட   விதிமுகமான  அன்பாகும் .  இவரன்பு  விதி விலக்குகளைக்  கடந்து  நின்ற  தொன்றாகும்  .  “எத்தவப்  பிரியம்  ததிஹ  புண்யம்”  என்றபடி  இறைவனுக்கு  உவப்பாக  வுள்ள  இவர்  செயல்களெல்லாம்  சிவ புண்ணியச்  செயல்களாயின.  இவர்க்கும்  சிவ கோசரியார்க்கும்  உள்ள  செயல்களில்   வேறுபாடுள்ளனவன்றி,  அச்  செயல்களுக்கு  மூலமாகவுள்ள  அன்பு  ஒன்றெனவே  கொள்ளத்  தகும் . இவ் வுண்மையைத்   திருஞான சம்பந்தப்பெருமான்  ,

“ஊனொ  டுண்டல்  நன்றென  ஊனொ  டுண்டல்  தீதென

 ஆன  தொண்ட ரன்பினால்  பேச  நின்ற  தன்மையான”

என்று  தாம்  திருவாய்மலர்ந்தருளிய  தமிழ்  மறையிற்  புலப்படுத்தருளினார், 

                                     8 .   க லை ம லி ந் த      சீ ர்

சுந்தரமூர்த்திகள் தாம்  அருளிச்  செய்த திருத்தொண்டத் தொகையில்  கண்ணப்பரைக்  “கலை மலிந்த சீர்  நம்பி  கண்ணப்பர்க்  கடியேன்”  என்று  கூறினர் . இத் தொடர்க்கு  நூலறிவாகிய  அபர ஞானம் நிரம்பப் பெற்ற  சிறப்பினையுடைய   நம்பி  எனப் பொருள்  கொள்ளலாம் .  இப் பிறப்பில்  கல்விப்  பயிற்சி  சிறிதுமில்லாத  இவரை  இங்ஙனம்  கூறலமோ  எனின் , கல்வி யில்லாமையைக்  குறைவாக  ஒரு  சிலர்  கருதுவர் . என்பது  குறித்தே  இவ்வாறு  கூறினர் .  இங்ஙனமே  சிவனடியார்  திறத்துக்  குறையெனக்  கருதத் தக்க  இடங்களிலெல்லாம்  நினைவு  கூர்ந்து   அக் குறையைப்  பரிகரித்துச்  செல்லுதல்,  நம் அருட்பெரும்  புலவராகிய  நாவலூரார்  இயல்பாம் .  பிறவியிலேயே  புறக் கண்ணிழந்த  தண்டியடிகளை   “நாட்டமிகு  தண்டி “  எனவும் ,  முத்தி நாதன்  வாட்படையால்  உடல்  நீத்த  மெய்ப்பொருள்  நாயனாரை  “வெல்லுமா  மிக  வல்ல  மெய்ப்பொருள்”  எனவுங்  கூறிய  செய்திகள்  இங்கே  கருதத்தக்கன .  இவ்வடியார்களை  இவ்வாறு  கூறுதற்குத்  தக்க  ஆதாரமும்  உண்டு .  கண்ணப்பர்  பண்டைப்பிறப்பிற்   கலையறிவு முற்றுப்பெற்றதனாலேயே  இப்பிறப்பில்  அந் நூலறிவின்  பயனாகிய  அனுபவ வுணர்ச்சி விரைவிற்  கைவரப்பெற்று  மெய்ப்பொருளை  உணர்ந்தனர்  என்பதும் , தண்டியடிகள் அகக் கண்ணாலேயே  இறைவனை  வழிபட்டுப்  பின்னர்ப்  பறக்கண்ணும்   பெற்றனர் .என்பதும் , மெய்ப்பொருள் நாயனார்  சிவனடியார்  திருமடத்தையே  மெய்ப்பொருளெனக்  கொண்டவராதலின் , தம்  உடற்குப்  பகைவனால்  ஊறு  நேர்ந்த பொழுதும்  தாம்  மேற்கொண்ட  உறுதியைக்  கடைப்பிடித்து வெற்றியடைந்தனர்  என்பதும்  ஈண்டு  ஆதாரங்களாகக்  கருதத்தக்கன .

            இனி , கலைமலிந்த   சீர்  என்பதற்குப்  பலவகைக்  கலைகளிலும்  மிக்க  விளங்கும்  புகழ்  எனப்  பொருள்  கோடலும்  பொருந்தும் .  தமிழ் மறைகளாகிய  தேவார  முதலியன  தென்றமிழ்க்  கலைகளாகும்  .  அவற்றையருளிய  திருஞான சம்பந்தர்  முதலிய  மூவரும்  மாணிக்க வாசகரும்   கண்ணப்பருடைய  பேரன்பின்  திறத்தைப்  பெரிதும்  பாராட்டியுள்ளனர் . நக்கீர  தேவர்  ,  கல்லாடர் , பட்டினத்து அடிகள்  முதலிய  புலவர்களும்  பிற்காலத்துப்  புலவர்களும்  தத்தம்  பாடல்களில்  இங்ஙனமே  சிறப்பித்துப்  பாடியுள்ளார்கள் .  தென்  கலயேயன்றி  வட  கலையிலும்  இவர்  பெருமை  பாராட்டப்பட்ட  செய்தியை  முன்  காட்டிய  சங்கராச்சாரியருடைய   சிவானந்தலகரிச்  சுலோகத்தாலும்  அறியலாம் .  

              இவர்  திருவுருவத்தைத்  திருஞானசம்பந்தர்  முதலிய  பெரியோரெல் லோரும்  வணங்கி  இன்புற்றனர்  என்ப . அவ்வணக்கப்  பயனைப்பற்றிக்  கூறிய  செய்திகளுள் ,  திரு ஞானசம்பந்தர்  வணக்கத்தைப்பற்றி  “வீழ்ந்தெழுவார் குறிப்பிட்ட  பயன் காண்பார்போல்  மெய்வேடர்  பெருமானைக்கண்டு  வீழ்ந்தார் “  என்று  கூறியது   சிறப்பாக  நினைக்கத் தக்கது .  முன்னர்  இறைவன்  திருவுருவையும்  பின்னர்க்  கண்ணப்பர்  திருவுருவத்தையும்  திரு ஞானசம்பந்தர்  வனங்கிய  முறையில்  கண்ணப்பர்  திருவுருவ  வணக்கம் பின்னதாக நிகழினும் ,  அது முன்னர்ச்  செய்த  சிவ  வணக்கத்தின்  பயனைக்  கைவரப்பெற்றது போலிருந்தது  என்று குறிப்பிட்டது அறிஞர்கள்  உள்ளத்தைப்  பெரிதும்  இன்புறுத்துவதொன்று .

                                       9 .  அருஞ்செயல்களும்   இன்பப்  பேறும்

           கண்ணப்பர்   ஆறு  நாட்கள்  இரவு  பகல்  உணவையும்  உறக்கத்தையும்  அறவே  யொழித்தார் .  அருட்குறியாகிய  சிவலிங்கத்தைச்  சிவபெருமானின்  வேறாகக்  கருதினாரல்லர் . இரவெல்லாம்  வேடராலும்  விலங்குகளாலும்  ஊறுபாடு  நேரா வண்ணம்  பாதுகாத்தலிலும்  ,  பகலெல்லாம்   இறைவனுக்கு  உணவு  தேடிக் கொணர்தலிலும்  இவர்  கருத்துச் சென்றது . தாய்   தந்தை  சுற்றம்  நட்பு  முதலிய  பிறப்புத்தொடர்புகளை  யெல்லாம்  அறவே  மறந்தனர். யாவர்  எது  செய்யினும்  எது  பேசினும்  இவர்க்கு  இறையருள்  நாட்டமே யன்றிப்  பிறிதொன்றில்லை .கரண மெல்லாம்  பசுத்துவம்  நீங்கிப்  பதி கரணமாகத்  திகழ்ந்தமையால்  இவர்  செயலனைத்தும்  சிவச்  செயலாயின .  இவர்  சித்தம்  சிவமானபடியால்  செய்தனவெல்லாம்  தவமாயின.  இவரது  கரை  கடந்த  பேரன்பைச்  சிவ கோசரியார்க்கும்  உலகினர்க்கும்  காட்ட  இறைவர்  தம்  வலக்கண்ணிற்   புண்ணீர் ஒழுக்கினராக  ,  அது  கண்டதும்  இவரெய்திய  துயரம்  அளவில்  அடங்காததாயிற்று .  மருந்து  பிழிந்து  பார்த்தார்;  நோய்  தீர்ந்திலது .  ஊனுக்கு  ஊனிடல்  என்னும்  பழமொழியைக்   கேட்டவராதலின்  இறைவன்  கண்ணிலுள்ள  ஊறுபாடு  ஒழித்தற்கு  வழிகண்டு  பெரிதும்  உளம்  மகிழ்ந்து  தம்  கண்ணை  அம்பினார்  பெயர்த்து  இறைவன்  கண்ணில்  அப்பினார் . புண்ணீர்  ஒழுக்கு  நின்றது . அது கண்டு  உவகைக்  கடலுள்  மூழ்கி  உன்மத்தர்  போல்  ஆயினர் .

“கண்ணிற்  சிறந்த  உறுப்பில்லை “  என்றதனால்  மக்கள்  உறுப்புக்களுள்  கண்ணே  மிகச்  சிறந்ததாகும் .  அதன்கண்  சிறு  துகள்  படிந்தாலும்  துன்பமுண்டாம் .  இந் நிலையில்  , தம் கை அம்பினால்  தம்  கண்ணைப்  பெயர்த்து  எடுத்தனர்  என்றால்  இச்  செயற்கரும்  செயலை  எங்ஙனம்  அளவிட்டுரைக்க  முடியும் !  மீண்டும்  இறைவன்  இடக்கண்ணிலும்  புண்ணீர்  ஒழுகக் கண்டு  சிறிது  வருந்திப்  பின்  தேறித்  தம்  இடக்கண்ணையும்  அவ்வாறு  பெயர்க்கத்  தொடங்கினார்  .இவ் வருஞ்  செயலைத்  தாங்காது  இறைவன்  தம்  திருக்கையால்  அவர்  கையைப்  பிடித்துக்கொண்டு  “கண்ணப்ப  நிற்க ! நிற்க ! நிற்க !  என மும்முறை  கூறித்  தடுத்து ,  ‘ஒப்புயர்வற்ற மெய்யன்ப !  என் வலத்தே  நிற்க “  வெனத்  திருவருள்  புரிந்தனர் . அருளாளரொருவர்   மற்றோரன்பர்க்கு  உதவிபுரிய  முற்படுங்கால்  அதனைப்  பெறுபவர்  ஓரளவிற்  போதியதென்று  தடுத்தாலும்  ஏற்றுக்கொள்ளாது  மேலும்  செய்தலை  உலகியலிற்  காண்கின்றோம் .  அங்ஙனமே  ,  இங்கே  நிற்க  வென்று  இறைவன்  ஒருமுறை  கூறியொழியின்  அன்பின்  மிகுதியால்  தம்  ஆணையையுங்  கடந்து  மேற்கொண்ட  செயலைச்  செய்து  முடிப்பர்  என்னுங்  கருத்தால்  மும்முறை  கூறியருளினர் .  அவ்வருண்மொழிப்படி  இறைவன்  திருவடி  நீழலில்   இரண்டற்ற  நிலை யெய்திப்  பேரின்பம்  துய்ப்பாராயினார் .  

                                      10 .  வ ர லா ற் று    நு ண் பொ ரு ள்

அ .  முப்பொறுள்  உண்மை .

               இனி , கண்ணப்ப  நாயனார்  வரலாற்றிற்  காணப்படும்  மக்களைச்  சைவ  சித்தாந்த  நூல்  முறைப்படி  அமைந்த  தத்துவப்  பொருள்களாகக்  கொண்டு  ஒருவாற்றால்  ஆராய  முற்படுகின்றேன் .  

                சைவ சித்தாந்தத்திற்  கூறப்படும்  நித்தியப்பொருள்கள்  இறை , உயிர்,கட்டு  என்னும்  மூன்றுமாம் .  இவற்றைப்  பதி  பசு  பாசம்  எனக்  கூறுப .  இவற்றுள்  பதிப்பொருளாகிய  இறை  திருக்காளத்தி  யப்பரென்பது  கூறவேண்டியதொன்றன்று  .  உயிர்க்குச்  சார்ந்ததன்  வண்ணமாத்  தமையுடைமை  இலக்கணமாகும்  .  அவ்விலக்கணம்  அமைந்த  உயிராக ,  வீட்டு  நிலை  எய்துதற்குரிய  பக்குவம்  அமைந்த  கண்ணப்ப  நாயனாரைக்  கூறுதல்  பொருந்தும் .  கண்ணப்பர்  பிறப்பின்  சார்பால்  குற்றமே  குணமாகக் கொள்ளும்  இயல்பினரென்பதை  அவர்  தம்  மரபினர்க்குரிய  வேட்டைத் தொழிலை  மேற்கொண்டமையானும்   பல  விலங்குகளைக்  கொன்றமையானும் ,  காடன்  நாணன்  முதலிய  வேடரொடு  கூடி  அவர்  தன்மையராய்  ஒழுகினமையானும்  உணரலாம் . முடிவில்  வேடர்களாகிய   பாசங்களை  ஒருவிச்  சிவதரிசனம்  பெற்ற  மாத்திரத்தில்  உலகியலை மறந்து  இறை  நிலையில்  தோய்ந்து  நின்றதும்  அவ்விலக்கண  முடைமையைத்   தெளிவுறுத்துவதாகும் . கட்டாகிய   பாசங்களை  ஆணவம்  மாயை  கன்மம்  என  மூன்றாகவும்  , அவற்றோடு  மாயேயம்  திரோதாயி  என்பன  கூட்டி  ஐந்தாகவுங்  கூறுவர் . “இம்மலம்  மூன்றினோடும்  இருமலம்  இசைப்பன் பின்னும்”   “ஆய்வர்  இம்மலங்களைந்தும்  “  என்று  சிவஞான  சித்தியார்  கூறும். மெய்கண்டாருக்குப்   பல்லாண்டுகளுக்கு  முற்பட்ட  மாணிக்க வாசகர்   “மும்மலப்  பழ  வல்வினை”   “மலங்கள்  ஐந்தாற்  சுழல்வன்”  என்று  கூறியதும்  நோக்கத்தக்கது .   

                                         ஆ  .  ஆணவம் 

            இவற்றுள்  ,  ஆணவம்  மூலமலம்  எனப்படும் . இஃது ஒன்றாய்  எண்ணிறந்த  ஆற்றல்களை யுடையதாய்  அநாதியே  . செம்பிற் களிம்பு போல உயிர்கள் தோறும்  விரவி  நிற்பதாய்  உயிரறிவை  மறைத்து  நிற்கும்  இருளாய்த்   தன்னாற்  பற்றப்பட்ட  உயிர்  ஒளிப்பிழம்பாகவுள்ள  இறைவன்  திருமுன்   எய்திய அளவில்  உயிரை  விட்டு  நீங்கும் இயல்பினதாய்  உள்ளதாகும்  ,  இந் நிலையில்  கண்ணப்ப நாயனாருடைய  தந்தையாகிய  நாகனை  மூலமலமாகிய  ஆணவம்  என்று  குறிப்பிடலாம் .  “மகனறிவு  தந்தை யறிவு”  என்பதனால்  தந்தையின்  தொடர்பு  மகனை விட்டு நீங்காத  தொன்றாம் . கண்ணப்பரைக் குழவிப் பருவத்துத் தந்தை எடுத்துத்  தன்னின்  வேறன்மை தோன்றத்  தழீஇனான்   என்பதைக் ,

“கருவரை  காள  மேகம்  ஏந்திய  தென்னத்  தாதை

 பொருவளரத்  தோள்க  ளாரப்  புதல்வனை  எடுத்துக்கொண்டான்”

என்பதனால்  ஆசிரியர்  புலப்படுத்துள்ளார் .  இச் செயல்  “ஆணவத்தோ  டத்துவித  மானபடி”  என்று  தாயுமானவர்  கூறிய  உண்மையைக்  குறிப்பதாகும் .  உயிர்  ஆணவமலத்தாற்  பிணிப்புண்டு   பொய்யுலக  வாழ்க்கையே  மெய்யெனக்கொண்டு  அறிவு  விளக்கம்  பெறாத  நிலையைக்  கண்ணப்பர் , தந்தையாகிய  நாகன்  வயப்பட்டு  அவன்  கட்டளப்படி  பொருப்பாட்சி  யுரிமை  யேற்று  வேட்டைத் தொழில்  முதலியவற்றில்  முற்பட்ட  செய்தி  புலப்படுத்துவதாகும் .  பக்குவான்மா  ஒளி  வடிவமாகிய  இறைவன்  திருமுன்  எய்தியவுடன்  ஆணவ  மலம் , அவ் வான்மாவைப்  பற்றி நின்ற  தன்  ஆற்றல்  கெடப்  பெற்று  ஒழியும்  என்பதை , நாணனும்  காடனும்  கண்ணப்பரியல்பைக்  கூறக் கேட்ட  நாகன்  கண்ணப்பரை  அணுகித்  தன்  வயப்படுத்தப்  பலவாறு  வேறுபடுத்திப்  பார்த்தும்  தன் வழி வாராமையால் கைவிட்டகன்றான்  என்னும்  செய்தி  புலப்படுத்துவதாகும் . இதனை , “நாணனோடு  காடனும்  போய்  நாகனுக்குச்  சொல்லியபின்  ………………  பேணு மகனார்  தம்பால்  வந்தெல்லாம்  போதித்து  ……………..  தங்கள்  குறி வாராமற்  கைவிட்டார்”   என்னும்  பாடலால்  அறியலாம் . உயிர்  வீட்டு  நிலையில்  தலைப்பட்ட  அளவில்   அவ்வுயிரைப்  பற்றி  நின்ற   ஆணவ மலத்தின்   ஆற்றல்  கெடுமன்றி  அம் மலத்திற்குக்  கேடின்றென்பதை   நாகன்  முயற்சி  பயன்  பெறா  தொழிய  அவன்  மீண்டு  தன்னில்லஞ்  சேர்ந்திருந்தனன்  என்னும்  செய்தியால்  அறியலாம் .  இங்ஙனம்  பல்லாற்றானும்  ஆணவ  நிலையில்  நாகனைக்  குறித்தல்  பொருந்துவதாகும் .   

                                                   இ  .    மாயை

இனி , மாயை  யென்னும்  பாச  நிலையில்   கண்ணப்பருடைய   நற்றாயாகிய  தத்தையைக்  குறிக்கலாம் . மாயை  உலகத் தோற்றத்திற்கு  முதற்  காரணமாகும் .  குடமாகிய  காரியத்திற்கு  மண்ணும்  திரிகையும்  முறையே   முதல்  துணைக்  காரணங்களாகக்  ,  குயவன்  நிமித்த  காரணமாவான் . இங்ஙனமே  உலக  காரியத்திற்கு  மாயையும்  சிவ சக்தியும்  முதற் காரணமும்  துணைக் காரணமுமாக   இறைவன்  நிமித்த காரணமாவான் . கன்மங்களுக்கு  ஈடாக  உயிர்  கொள்ளும்  தனு  கரண  புவன  போகங்கள்  எல்லாம்  மாயையினின்றுங்  கிடைப்பனவாம் .  ஐம்பூதங்களின்  சேர்க்கையாலுண் டாகிய  உடலும் , மன  முதலிய   கரணங்களும்  ,  உடல்  தோன்றுதற்குரிய  இடமும் ,  நுகர்  பொருள்களும்  மாயையின்  காரியங்களாகும்  . இம் முறையிற்  கண்ணப்பருடைய  உடல்  தத்தையினிடத்தினின்றும்   தோன்றியதாலும்  , அவ்வுடலை  நுகர்  பொருள்களாகிய  பால்  முதலிய  உணவூட்டி  வளர்த்தவளும்   அவளாதலாலும்  அவளை  மாயை  நிலையிற்  குறிப்பது  பொருத்தமாகும் .  “மாயா  தனு  விளக்கா  மற்றுள்ளங்  காணாதேல்  ,  ஆயாதா  மொன்றை” என்னும்  சிவ ஞான போதப்படி  உயிர்  மாயா  காரியமாகிய  உடம்பு  தனக்குக்  காட்டாகக் கொண்டு   காணாதாயின்  ஒரு  விடத்தையும்  அறிவதில்லையாம் .  ஆதலால்  காட்டாய்  நின்று  விடயங்களை   அறியும்  வண்ணம்  உயிர்க்கு  அறிவை  விளக்குதலும்   மாயையின்  செய்தியாகு  மென்பது  போதரும் .  இங்கே  தந்தை  உதவிய  உடலைக் கொண்டே  கண்ணப்பர்  மெய்யுணர்வு  பெற்றனராதலின்  அம் முறையாலும்  தத்தையை  மாயை  நிலையிர்  குறிப்பிடுதலில்  தட்டின்றாம் . மாயா  காரியமாகிய  உடம்பைக் கொண்டே  உயிர்  ஞான மெய்தி  நலம்  பெறல் வேண்டு மென்பதை , 

“உடம்பா  ரழியின்  உயிரா  ரழிவர்

        திடம்பட  மெய்ஞ்ஞானஞ்   சேரவு  மாட்டார்”

என்னுந்  திருமந்திரத்தானும்  உணரலாம் .

                                                     ஈ .   கன்மம்

இனி , கன்மமலம்  அறம்  பாவ  மென்னும்  இருவகைத்தாய்ச்  , செயப்படு  பொருளாகிய  தனக்கு  மூல  கன்ம  முண்டென்பது காட்டி , நன்மை  தீமையாகிய  காரண  ஏதுவானும்  இன்ப துன்பமாகிய காரிய  ஏதுவானும் அநுமித்தறியுமாறு   நிற்பதொன்று .  இஃது  ஒன்றாயினும்  காரியப்பாட்டால்  அறம்  பாவ  மென்னும்  இரு  திறத்ததாகும் .  இக் கமத் தொடர்புள்ள  உயிர்  இறை  நிலையில்  இயையுங்கால்  முதலிற்  பாவப்பகுதி  யொழியப்  புண்ணியப்பகுதி  எஞ்சி  நின்று  தன்னைப்  பற்றிய  அவ்வுயிர்  இறைநிலை யடைதற்கு   உதவிபுரிந்து  முடிவில்  தானும்  ஒழிவெய்துவதாகும் .

“பண்ணிய  தழல்காய்  பாலனா  நீர்போற்

                 பாவமுன்   பறைந்துபா   லனைய 

 புண்ணியம்   பின்சென்று   அறிவினுக்   கறியப்   புகுந்தது “

என்னும்  ஆன்றோர்  மொழியும்  இவ்வுண்மையைப்  புலப்படுப்பதாகும் . பாலும்  நீருங் கலந்த  நிலை  புண்ணியமும்  பாவமுங்  கலந்த  கன்மத்தையும், தழல்  இங்கே  சிவஞானத்தையும்  உணர்த்துவனவாம் .  பாலும்  நீருங்  கலந்த  கலவை  தழலின் கட் பட்டுழி  முதலில்  நீர்ப்பகுதி  அறும் . பின்னர்  எஞ்சி நின்ற  பாற்கூறு  பொங்கி  அத் தழலின்கட்  பட்டுத்  தானும்  ஒழிந்துவிடும் .  இங்ஙனமே  பக்குவான்மாவைப்  பற்றி  நிற்கும்  கன்மப் பகுதியில்  பாவக் கூறு  முதலிற்  கெட்டுப்  பின்  எஞ்சிய  புண்ணியக்கூறும்   அவ் வுயிர்  சிவஞானம்  எய்திய  அளவில்  அதனெதிர்ப்பட்டு  நீங்குவதாகும் .  

           இந் நிலையில் , காடனைக்  கன்ம  மலமாகக்  குறிக்கலாம் . கண்ணப்பருடைய  கன்மக் கூற்றில்  பாவப்பகுதி  முற்பிறப்பிலேயே   ஒழிந்திருக்கலாம் . எஞ்சிய  புண்ணியக்கூறே   இப்பிறப்பிற்குக்  காரணமாகும்   இதனை  ,  “புண்ணியப்பொருளாயுள்ள  பொருவில்சீர்  உருவி  னானை”  என்பத னா லறியலாம் .  இங்கே  காடன்  அவர்  வேட்டைத்  தொழிலுக்கு  உதவியாகச் சென்றதும் ,  இறுதியில்  அவர்  ஒரு  பன்றியைக்  கொன்று  தர  அவ்விறைச்சி  யைப்  பக்குவப்படுத்துதற்குரிய  தீயைக்  கடைந்து  வைத்ததும்   அப்பன்றியின்  உறுப்புக்களை  வகுத்தெடுத்து  அவர்க்குக்  காட்டியதும் ,  “என்செய்தாய்  திண்ணா  நீதான்  என்னமால்  கொண்டா யெங்கள்  , முன்பெரு முதலி யல்லையோ”  என்று  கூறியதும்  ஆகிய  இவ்வெல்லாம் கண்ணப்பர்பால்   எஞ்சி  நின்ற  புண்ணிய  கன்ம  வியல்பைக்  குறிப்பனவாம். காடன்  கடைந்து   வைத்த  நெருப்பே  நிவேதனம்  ஆக்குதற்குரிய  கருவியாயிற்று . நிவேதனப்பொருளாகிய  இறைச்சியைச்  செவ்வை  செய்து  கொடுத்தவனும்  அவனே . இச் செயல்கள்  சிவ புண்ணியம்  தன்னைப் பற்றி  நின்ற  ஆன்மா  இறைபணி  செய்தற்குதவியாம்  என்னுங்குறிப்பைப்  புலப்படுத்துவனவாம் . “எங்கள் முன்  பெரு  முதலி  யல்லையோ “  என்றது  கண்ணப்பர்  முதிர்ந்த  சிவபுண்ணியத்தலைவர்  என்பதைக் குறிக்கும் .  முடிவில் , “தேவுமால்  கொண்டா நிந்தத்  திண்ணன்மற்  றிதனைத் தீர்க்கல்,  ஆவதொன்றறியோம் “  என்று  அவரை  விட்டு  அகன்றனன்  . இது  புண்ணிய  கன்மமும்  பொன் விலங்கு  போல  வீட்டு  நிலைக்குத்    தடையாகுமாதலின்  அதுவும்  ஒழிந்ததென்னுங்  குறிப்பைப்  புலப்படுப்பதாகும் .

                                                 உ .     மாயேயம்

           இனி , மாயேயம்  என்பது  “மாயையின்  காரியத்தை  மாயேய  மலம  தென்று”  என்று  சித்தியார் கூறியபடி  மாயா  காரியமாகும் . இது , மாயையில்  அடங்குமெனில்  ,  ஆன்மாவின்  அறி விச்சை   செயல்களை   ஏகதேசப்படுத்திப்  பத்தித்தற்கட்படும்  வேற்றுமை  பற்றி  வேறு  வைத்தெண்ணப்பட்ட  தென்ப .  மாயா மலம்  பந்தஞ்  செய்தலும்  மாயேயமலம்  ஆன்ம  அறிவை  ஏகதேசப்படுத்தலும்  தம்முள்  வேற்றுமையாம் .  சிவஞான சித்தியாரில்  மாயா  காரிய மென்று  பொதுவாகக்  கூறப்பட்டுள்ளது .  சார்பு  நூலாகிய  சிவப்பிரகாசத்தில்  “தேகமுறு  கரணமொடு  புவன போகச்  செயலாரும்  மாமாயைத்  திரட்சி  யொன்று”  என்று  இன்னும்  விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளது .  இங்கே  “மாமாயைத்  திரட்சி”  என்றது   சுத்த  மாயா  காரியமாகிய  சுத்தவித்தை  ,  ஈசுவரம்  ,  சாதாக்கியம் ,  சத்தி , சிவம்  என்னும்  சுத்த  தத்துவங்கள்  ஐந்தனையுமாம் .  இவற்றையே  மாயேய  மலமென்ப .  .  உயிர்க்குத்  தனுகரண  புவன  போகங்களை  அசுத்த  மாயா  காரணத்திலே  நின்று  சிவ  சத்திகள்  தோற்றுவிக்கும்  .  அமயம்  அவற்றோடும்  பொருந்தி  நடத்தும்  இயல்பு  நோக்கிச்  சுத்த  மாயையின்  திரட்சியாகிய  சுத்த  தத்துவங்களும்  மலமென்று  உபசரிக்கப்பட்டன .  பாவைக் கூத்தில்  மரப்பாவையும்  கயிறும்போல்   நம்  உடல்  கரணங்களுக்கு  ஆன்ம  தத்துவமும்   வித்தியா  தத்துவமும்  முறையே  அமைவனவாக ,  ஆட்டுபவனைப்  போல  நின்று  இயங்குவது  சிவ  தத்துவமாகும் .  இதனாலே  இது “பிரேரக  காண்ட” மென்றுங்  கூறப்படும் .  

          இங்ஙனம்  பிரேரக  தத்துவமாகிய  இம்மாயேய  மலத்தின்   நிலையில்  நாணனைக்  குறிப்பிடலாம் .  முதலில்  “காண நீபோதின்  நல்ல  காட்சியே  காணும்  …………….  கோணமில்  குடுமித்தேவர்  இருப்பர்  கும்பிடலாம் “  என்று  கூறியவன்  நாணனே  .  சுத்த  தத்துவங்களாகிய  சிவதத்துவங்கள்  சிவபரம்  பொருட்கு  நெருங்கிய  இயைபுடையனவாகலின்  குடுமித்தேவர்  பக்கல்  கண்ணப்பருடன்  நாணனும்  சென்றான் .  ஆன்ம  தத்துவங்களையும்   வித்தியா  தத்துவங்களையும்  கடந்தன  சிவ  தத்துவமாதலின்  கண்ணப்பர்  அத் தத்துவ  சோபானங்களில்   ஏறிச்  செல்பவர்  போல  மலையை  யடையுங்கால்  நாணனும்  உடனேறிச்  சென்றான் . “நாணனு  மன்பு   முன்பு  நளிர்வரையேற  “  என்பதனால்  இஃது  அறியப்படும் . மலமென்று  உபசரிக்கப்பட்ட   மாயேயம்  தன்னால்  பாதிக்கப்பட்ட  உயிரைக்  கடவுள்  பக்க  லியைக்கும்  பிரேரக  தத்துவ மாகலின்  ,   அந் நிலையில்  காளத்தி  யப்பருக்குச்  செய்யத்தக்கது   யாதோவென  நினைக்கும்போது   சிவகோசரி யார்   வழிபாட்டு  முறையைக்  கூறிக்  கண்ணப்பர்   அந் நெறியைக்  கடைப்பிடித்  தொழுகுமாறு  குறிப்பிட்டவனும்  நாணனே  யாவன் .  முடிவில்  உயிர்  திருவருட்  பேற்றுக்கு  உரியதாகுங்கால்  இம்  மாயேய  மலமும்  ஒழிய  வேண்டுமாதலின்  அக்குறிப்பைத்  ‘தேவுமால்  கொண்டானிந்தத்  திண்ணன்  மற்றிதனைத்  தீர்க்கல்  ஆவதொன்ற றியோம் “  என்று  கூறி  நாணனுங்  கைவிட்டகன்ற  செய்தி  புலப்படுப்பதாகும் .

                                                 ஊ  .   திரோதாயி

         இனி , திரோதாயி  என்னு மலத்தி னியல்பை  “ஏயுமும்  மலங்கள்  தத்தம்  தொழிலினை  யியற்ற  ஏவும் ,  தூயவன்  தனதொர்  சத்தி  திரோதன  கரியது”  என்று  சிவஞான சித்தியும்  ,  “முயங்கி  நின்று   பாகமிக  வுதவி  திரோதாயி யொன்று”  என்று  சிவப்பிரகாசமுங்  கூறும் . அவ்வம் மலங்களை  அவ்வத் தொழிலிற்  படுத்திப்  பாகம்  வருவிக்கும்  சிவசத்தியே   திரோதாயியாகும் .  அங்ஙனமாயின் இது  பராசத்தியில்  அடங்குமெனின்  ,  தொழில்  வேற்றுமைபற்றி  உபசாரத்தால்   திரோதாயியென  வேறுவைத்  தெண்ணப் பட்டது .கண்ணிலுள்ள  படலத்தை  நீக்குதற்குரிய  மருந்தானது  கண்ணோடு  கூடி நின்று  துன்புறுத்தி  அப்படலத்தை  யொழித்துத்  தெளிவுறுத்துவது போலச்  ,  சிவபிரானுடைய  திருவருட் சத்தி  ,  ஆன்மாவை  மறைத்திருக்கும்  மலத்தைப்  பாகமுறச்  செய்து  அம்  மல  நீக்கத்தில்  ஞானமாக  விளங்கி  இன்புறுத்துவதாகும் .  

              இந்நிலையில்  தேவராட்டியைத்  திரோதமலமென்று  குறிப்பிடலாம் .  திரோதாயி ,  மூலமலமாகிய  ஆணவத்தோடு  கூடி  நின்று  தொழிற்படுத்து  மென்பதைத்  தேவராட்டி  நாகனோடு  கூடி  நின்று  வேட்டைத்  தொழிலிற்  கண்ணப்பரை  யேவிய  செய்தி  புலப்படுத்தும் .  அங்ஙனம்  ஏவுவதற்கு  முன்  நாகனை  நோக்கி , 

“எற்றையினுங்  குறிகள்மிக  நல்ல  வான

             இதனாலே  யுன்மைந்தன்  திண்ண  னான

 வெற்றிவரிச்  சிலையோன்நின்  னளவி  லன்றி

             மேம்படுகின்றான் “ 

என்று  கூறி  வாழ்த்தியுள்ளாள் .  இவ் வாழ்த்தில்  ‘நின்  அளவினன்றி  மேம்படுகின்றான்’  என்றது,  எதிர்காலத்தில்  கண்ணப்பருக்கு  நேரும்  பேரின்பப்  பேற்றைப்  புலப்படுத்தும்  அருட்  குறிப்பாகும் . அங்ஙனம்  வாழ்த்தப்பட்ட  பின்  கண்ணப்பர்  வேட்டைக்குப்  புறப்படுங்கால் , மீண்டும்  தேவராட்டி  வந்து அட்சதை  சாத்தி  வாழ்த்துக்  கூறினள்  என்னும்  செய்தியை  ஆசிரியர் ,

“நின்றெங்கு  மொய்க்குஞ்  சினவேடர்கள்  நீங்கப்புக்குச் 

 சென்றங்கு  வள்ளல்  திருநெற்றியிற்  சேடைசாத்தி

உன்தந்தை   தந்தைக்கும்  இந்நன்மைகள்  உள்ளவல்ல

நன்றும்பெரி  துன்விறல்   நம்மள  வன்றிதென்றாள் . “

என்று  கண்ணப்பர்  பெருமை  புலப்படப்  பாடியுள்ளார் .  தெய்வ  மேறப்  பெற்றவர்களை  மக்கள்  பலர்  நெருங்கிச் சூழ்ந்து  நின்று , வாழ்த்து  நலம்பெற  முந்துதல்  உலகியலிற்  கண்டதொன்று . இங்க்கே  வாழ்த்துப்  பெறுபவராகிய  கண்ணப்பர்  நின்ற  இடத்திற்குத்  தேவராட்டி  பிற  வேடர்களை  விலக்கிக் கொண்டு  சென்று  அவர்  நெற்றியிற்  சேடை  சாத்தியதும்  ,  அவரை  நோக்கி  “உன்  தந்தை  தந்தைக்கும்  இந்  நன்மைகள்  உள்ளவல்ல”  என்றதும் ,  “மிகப் பெரிய  நின்வெற்றி   நம்மளவன்று”  என்றதும்  திரோதமலம்  பின்  அருட்சத்தியாக  மாறி  நின்று  இன்புறுத்தும்  என்னும்  இயல்பைப்  புலப்படுப் பனவாகும் .  முடிவில்  மலமாம்  நிலையில்  இதுவும்  ஒழியவேண்டுமாகலின்  ,  இதனைக்  கண்ணப்பர்  காளத்தியப்பரைப்  பற்றிவிடாது  நின்ற  நிலையில்   நாகனுடன்  தேவராட்டியும்  அங்கே  சென்று , நாகனுக்கு  அனுகூலமானவள்  போல்  தன்னைக்  காட்டிக்  கண்ணப்பரைச்  சிவனுக்கு  உரிமையாக்கி  மீண்ட  செய்தி  புலப்படுத்துவதாகும் .  தேவராட்டியின்  வாழ்த்துரைகள்  வேட்டையில்  நன்மை  விளையுமென்பது  புறப்பொருளாகவும்  ,  திருவரு ளின்பம் விளையு மென்பது  உட்பொருளாகவும்  கோடற்கு  இடனாதலை  உய்த்துணரின் , தேவராட்டியைத்   திரோதாயி யென்னும்  பாச  நிலையிற்  குறிப்பிடல்  பொருந்துவதாகும் .  

                                                எ  .   தத்துவ   நிலை

    இனி , இவ் வைவகைப்  பாசங்களையும்  ஒருவி  வீட்டு  நிலை  யெய்திய  ஆன்மா  கண்ணப்பரென்பது  தெளிவாம் . ஓருயிர்  சரியை  கிரியை யோகங்களைச்  செய்து  ஞான  மெய்திய  பின்னரே  வீட்டு  நிலையில்  தலைப்படுமென்பது சைவ  நூற்கொள்கை  .  “இவ் வான்மாக்களுக்கு  முற்செய்தவத்தால்   ஞானம்  நிகழும் “என்பது  மெய்கண்டார் நல்லுரையாகும் இங்கே  ‘முற்செய்தவம் ‘  என்றது  சரியை  முதலிய  மூன்றையும்  உனர்த்தும் .  கண்ணப்பர்  முற்பிறப்பில்  சரியை  முதலிய  தவம்  நிறைவேறப்  பெற்று  ஞான  நெறியில்  ஒழுகி  அழிவில்  இன்பத்திற்கு  ஏதுவாகிய  அன்பு  நெறியில்  தலப்பட்டவரென்பதை  , “முன்புசெய்  தவத்தி னீட்டம்  முடிவிலா  இன்பமான  ,  அன்பினை  எடுத்துக்காட்ட   என்பதினாலும் ,  நாணன்  திருக்காளத்திமலை மிசைக்  குடுமித்தேவர்  இருப்பர்   கும்பிடலாமென்று  கூறக்கேட்ட  அளவில்  உடற்சுமை  குறையப்  பெற்றவராய்த்  தம்வயம்  அழிந்து  என்றும்  நிகழாத  புதிய  விருப்ப  மிக  இறைவனைக்  காண  விரைந்தமை  யானும்  அறியலாம் . வீட்டு  நிலைக்குரிய  உயிர்  முதலில்  தன்  இயல்பையும்  பின்  தன்னுள்ளே  விளங்கும்  தலைவனியல்பையும்  அறிந்து  தலைவனைத்  தலைப்படும்  .  தன்  இயல்பை  அறிதலாவது  மண்முதற்  சிவம்   ஈறாகிய  தத்துவங்களை   ஒவ்வொன்றாக  இது நானன்று  நானன்று  என்று  அறிந்து கடந்து  மேற்சேறலாம் .  இங்ஙனம்  ஆன்ம  தத்துவங்களைக்  கடந்து  தன்னியல் பையும்  ,  அவற்றோடு  வித்தியா  தத்துவம்   சிவதத்துவங்களையும்  கடந்து  இறைவன்  இயல்பையும்  அறிதல் வேண்டும் .  இக் குறிப்பை ,

“நாணனு  மன்பு  முன்பு  நளிர்வரை  யேறத்  தாமும்

 பேணுதத்  துவங்க  னென்னும்  பெருகுசோ  பான  மேறி

ஆணையாஞ்  சிவத்தைச்  சாரா  அணைபவர்  போல  ஐயர்

நீணிலை  மலையை  யேறி  நேர்படச்  செல்லும்  போதில்”

என்னுந்  திருவிருத்தம்  தெளிவுறுத்துவதாகும்  .  இவ் வருமைப்  பாடலே  கண்ணப்பர்  வரலாற்றில்   தத்துவ  நுண்பொரு  ளாராய்தற்கு  வழி  காட்டியதாகும் . இங்கே  திருக்காளத்தி  மலையையேறிச்  சென்றது  தத்துவங்களைக்  கடந்து  சென்ற  இயல்பைக்  குறிப்பதாகும்  . அம்  மலையுச்சியிலிருப்பவர்   தத்துவாதீதராகிய  சிவபரம்  பொருளாவர்  . அவரைச்  சார்ந்த  முறையை , “ஆணையாஞ்  சிவத்தைச்  சார  அணைபவர் போல”  என்றார் . இங்கே  ஆணை  யென்றது  சிவசத்தியைக்  குறிக்கும் .  இறைவனை  அடைதற்கு  இறைவியின்  சார்பே   முதலிற்  பெறவேண்டு மென்பது  “அவனருளாலே  அவன் றாள்  வணங்கி”  எனவும் ,  அவனருளே  கண்ணாகக்  காணி னல்லால் “  எனவும்  கூறிய  அருளுரைகளால்  தெளியப் படுவதொன்று .  மெய்யருளாந்  தாயுடன்  சென்று  அவள்  காட்டத்  தந்தையை  யடைவதே   முறையென்பது  பெரியோர்  கண்டது . ஆணையாகிய  சிவம்  என்றது  இறைவியொடு  உடனாய்  இறைவனை  உணர்த்தும் .  

                                                   ஏ  .    சி வ தீ க் கை

         இனி , தீக்கையாலே  உயிர்  மல  அழுக்கைப்  போக்கித்  தூய்மையுடை யதாகு மென்ப . . தீக்கை குண்ட மண்டலங்களிட்டுத்   தீ வளர்த்துச்  செய்யப்படுங்  கிரியாவதியும்  , ஞானாசிரியர்  தம்  அருட்பார்வை  முதலியவற்றால்  செய்யப்படும்   ஞானவதியுமென  இரு வகைப்படும்  .  பின்னது  அதி தீவிர  பக்குவ  ஆன்மாக்களுக்கு  உரியது .  ஞானவதியாகிய  அருள்  நோக்கத்தை “நயன  தீக்கை”  என்ப .  இங்கே  கண்ணப்பர்  அதி தீவிர  பக்குவான்மா  வாதலின் , இறைவனே  ஞானாசிரியராக   எழுந்தருளித்  தம் அருள் நோக்கமாகிய  நயன  தீக்கையைச்  செய்து  அவரைச்  சிவ குமார  ராக்கினார்  என்பதை,

“திங்கள்சேர்  சடையார்தம்மைச்  சென்றவர்  காணாமுன்னே

அங்கணர்  கருணைகூர்ந்த  அருட்டிரு  நோக்கமெய்தத் 

தங்கிய  பவத்தின்  முன்னைச்  சார்புவிட்  டகல  நீங்கிப்

பொங்கிய  வொளியி  னீழற்  பொருவிலன்புருவ  மானார் “

என்னும்  பாடலால்  அறியலாம் . அருள்திரு  நோக்கமே  நயன  தீக்கையாகும்  .  ஒளியென்பது  காளத்தியப்பரைக்  குறிப்பதாகும் . “காளத்தியுண்ணின்ற  வொளியே”  என்பது  சுந்தரமூர்த்திகள்  திருவாக்கு . “கண்ணால்  நோக்கிக்  கண்ணப்பர்  பணியுங்கொள்   கபாலியாரே “   என்னும்  அப்பர்  தேவாரத்தா னும்   நயன  தீக்கைப்  பேறு  வலியுறுவதாகும் .  இங்ஙனம்  அருள்  நோக்கமாகிய  தீக்கையால்  கண்ணப்பரைப்  பற்றி நின்ற  பாசங்களெல்லாம் ஒருங்கு  அழிய  அவர் தூயராய்  அருள்  உருவினராகிய  இறைவனுக்கு  உரிய  அன்புருவக்  குழந்தையாயினா  ரென்பதைச்  சேக்கிழார்  பிறிதோரிடத்தில்  மிகத்  தெளிவாகக்  கூறியருளினர் .   அப் பாடல் ,

“முன்புதிருக்  காளத்தி  முதல்வனார்  அருள் நோக்கால் 

இன்புறுவே  தகத்திரும்பு  பொன்னானாற்  போல்யாக்கைத்

தன்பரிசும்  வினையிரண்டும்  சாருமல  மூன்றுமற

அன்புபிழம்  பாய்த்திரிவார்  அவர்கருத்தி  னளவினரோ”

என்பதாம் .  வேதகம்  என்பது  இரும்பு  முதலிய  உலோகங்களைப்  பொன்னாக்குவது .  அதனால்  இரும்பு  முதலியன  கறை  யொழிந்து  பொன்னாதல்  போல  இறைவன்  அருள்  நோக்கால்  கண்ணப்பர்  தம்மைப்  பற்றி  நின்ற  பாசங்களெல்லாம்  ஒழியப்பெற்றுத்  தூய  ராயினார்  என்பது  புலனாம் .  

               இங்கே ,  ‘வினையிரண்டும்  சாருமல  மூன்றும்  அற’  என்றார் . மும்மலங்களுள்  வினையும்  ஒன்றாகவும்  வினையிரண்டுமென  மீண்டும்  அதனை  வேறாகக் கூறியது  என்னையெனின் , “கன்மமும்  மூலங்  காட்டிக்  கான்மிய  மலமாய் நிற்கும் “  என்னும்  சித்தியார் கருத்துப்படி  கன்மத்தை விருப்பு  வெறுப்பாம்  நிலயில்  மூலகன்மமென  ஒன்றாகவும்  ,  செயல்  வேறுபாட்டால்  அறம் பவமென  இரண்டாகவும் கொள்ளல் வேண்டும் .  இக் கொள்கையைச்  சேக்கிழார்  “இருவினைப்  பாசமும்  மலக்கல் லார்த்தலின்”  எனப்  பிறிதோரிடத்தும் புலப்படுத்துள்லார் . இங்கே  இருவினையைக்  கயிறாகவும்  , மும்மலங்களைக் கல்லாகவும்  உருவகப்படுத்திய  செய்தி  நினைக்கத்த்கக்கது .  கண்ணப்பருக்கு  நேர்ந்த இருவினை யொப்பு   மல பரிபாகம்   முதலிய  வெல்லாம் இங்கே  புலப்படுக்கப்பட்டன .

               இங்ஙனம்  தூயராகிய  கண்ணப்பர் இறையன்பில்  தலைபட்டு  ஆறாம் நாளில்  வீட்டின்பம்  எய்தினர்  என்ப .  சைவ சித்தாந்தத்தில்   கலை , தத்துவம்  புவனம்,  வன்னம் , பதம் , மந்திரம்  என்னும்  ஆறு  அத்துவாக்கள்  கூறப்பட்டுள்ளன . அத்துவா  என்பது  வழி  என்னும்  பொருளதாகும் . “இவை  ஒரோவொன்றாகக்  கழித்துக்  கொண்டு  சிவபதத்தில்  சேற்ற்கு  வழி  போறலின்  அத்துவா  எனப்பட்டன .”  என்பர்  சிவ ஞான முனிவர் .  இதுபற்றியே  தீக்கையில்  அத்துவ சோதனை  கூறப்பட்டுள்ளது . இங்ஙனம்  சிவபதம் எய்துதற்கு  வழிபோலவுள்ள  ஆறு  அத்துவாக்களையும்  கடந்து  சென்றனர் கண்ணப்பரென்பதை   “வருமுறை  ஆறாம்  நாளில்  வருமிர வொழித்த  காலை”  ஆறு  சேர் சடையார்  தம்மை அணுக  வந்து  அடையாநின்றார் .என்னும்  செய்திகள்  புலப்படுத்துவன .  

                                       க  .  ப ரு வு ட லொ டு க் க ம்

இனி , இறைவன் தம்  வலக்கன்ணில்  ஊறுபாடு  காட்டினாராகக்  கண்ணப்பர்  தம் வலக்கண்ணைப்பெயர்த்து அப்பினர்  என்னும்  இதன் கண்  ஒரு சிறந்த நுண்பொருள்  புலப்படுவதாகும் , ஒரு  பக்குவான்மா  வீட்டு  நிலையில்  தலைப்படுங்கால் , கன்மங்  காரணமாக அதற்கமைந்த  ஐம்பூதக்  கலவையாகிய உடலிலுள்ள  அவ்வப்பூதக்  கூறுகள் அவ்வம்  மாபூதங்களில்  ஒடுங்குமெனவும்  , அந்தக்கரணங்களும்  அவ்வாறே  அவ்வம்  முதலில்  ஒடுங்குமெனவும் ,  அறிவுருவாகிய உயிர்  பேரறிவுப்  பிழம்பாகிய  இறையடி  நீழலை  எய்துமெனவும்  மரையாகமங்கள்  கூறும் . இந் நிலையில்  கண்ணப்பருடைய  கட்பொறி  தேயுவின்   கூறாகும் .  அஃது  யாண்டு  ஒடுங்குமெனின் ,”சக்ஷீ ரசதித்யம்” (கண்  ஆதித்தனை  யடையும்)  என்னும்  மறைமொழிப்படி  அது  சூரியனை  அடைய வேண்டும் . இறைவனது வலக்கண் சூரியனாகும் ,  ஆதலால் தேயுவின்  கூறாகிய  கண்ணப்பரது  கட்பொறி  இறைவனது வலக்கண்ணாகிய சூரியனை அடைந்தது

  .  

            பின்னர் , இறைவனது இடக்கண்ணிலும்  ஊறுபாடு  உண்டாகக்  கண்ணப்பர் தம்  இடக்கண்ணைப்  பெயர்த்துவைக்க  நினைந்து  முயன்றார் . அச்  செயலை  இறைவன்  தடுத்துவிட்டனர் .  ஏன்  அதனையும்  ஏற்றுக் கொள்ளலாகாதென்று  கருதுங்கால் ,  ஆண்டும்  ஒரு  நுண்பொருள்  புலப்படுவதாகும் .

“சினமிறக்கக்  கற்றாலும்  சித்தியெல்லாம்  பெற்றாலும்

 மனமிறக்கக்  கல்லார்க்கு  வாயேன்  பராஅபரமே “

என்றபடி  வீட்டு  நிலையில்  தலைப்படும்  ஆன்மாவுக்கு  மன முதலிய கரணங்களின் செயல்களும் ஒழியவேண்டும் .  மனம்  நினைவு  வடிவமாகும்  .  ஆகவே  கண்ணப்பர்  தம்  இடக்கண்ணைப்  பெயர்க்க  நினைந்தார்  .  அவ்வளவில்  அஃது  ஒழிக்கப்பட்டது .  அந் நினைவு  யாண்டுச்  சென்றதெனின், “மனஸ்  சந்திரே  நிலீயதே” ( மனம்  சந்திரனிடத்தே  இலயமாகும் )  என்னும்  மறை  மொழிப்படி  சந்திர  மண்டலத்தை  அடைந்ததென்னலாம் .  எங்ஙனமெனின் , இறைவனது  இடக்கண்  சந்திரமண்டலமாகும் .  அக் கன்ணில்  தோன்றிய  ஊறுபாட்டை  ஒழிக்கவே  கண்ணப்பரது இறுதி  நினைவு  சென்றது . ஆகவே  அக்கண்ணைப்  பெயர்த்து அப்புதலாகிய  செயல்  தடுக்கப்பட்டு  அவ்வளவில்    நினைவு  வடிவமாகிய  மனமும்  சந்திரனில்  ஒடுங்கியதாகும் ,  இங்கே  வலக்கண்  சூரியனை  அடந்ததென்பது ஏனைப்  பூதக் கூறுகளும்  பொறிகளும்  அவ்வவற்றிற்குரிய  மாபூதங்களை  எய்தின  என்பதற்கும்  ,இடக்கண்ணைப்  பெயர்க்க  நினைந்த  நினைவு  சந்திரனை அடைந்ததென்பது , ஏனைய  அகக்கரணங்கள்  அவ்வவற்றிற்குரிய  இடங்களை அடைந்தன  என்பதற்கும் உபலக்கணமாகும் .  உபலக்கணம்  என்பது  ஒரு பொருள் ,  ஒழிந்த தன் இனத்தையும் குறிப்பது . இங்கே  கூறிய  கருத்துகள்  தோன்றவே  “இருசுடர்க்  குறுகண்  தீர்க்கும்  எழில்  வளர்கண் “  என்று  கண்ணப்பருடைய  கண்கள்  குறிக்கப்பட்டன . இவ்வரலாற்றுப்  பகுதியின்   பருப்பொருள்  பற்றி  இன்றும்  இறைவனது வலக்கண்   கண்ணப்பருடையதாகு மெனக் கொண்டு ,

“முக்கண்ண  னென்றானை  முன்னோர்  மொழிவார்கள்

அக்கண்ணாற்  குள்ள  தரைக்கண்ணே  ——    மிக்க

உமையாள்கண்  ணோன்றரைமற்  றூன்வேடன் கண்ணொன் 

றமையுமித  னாலென்  றறி”

என்று  ஒரு  புலவர்  சாதுரிய  நயந்தோன்றப்  பாடியுள்ளார் .

                                            10  .  பே ரி ன் ப    நி லை

    இனி , இறைவன்  கண்ணப்பரது  கையைப்  பிடித்துக் கொண்டு  என்  வலத்தில்   மாறிலாய்  நிற்க   என்று  பேரருள்  புரிந்தனர்  என்னும்  இந் நிகழ்ச்சியால்  ,  கண்ணப்பரைத்  தம்  புதல்வராகக்  கொண்டு  பரிச தீக்கை  செய்து  தம்  பேரானந்தப்  பெருஞ்  செல்வத்தை  அவர்க்கு  அருளினர்  என்னும்  நுண்பொருள்   புலனாகும் .  முன்னர்  அருள்  நோக்காகிய   நயன  தீக்கையால் மலர்ப்பிணிப்பை  ஒழித்து  இறுதியில்  தம்  திருக்கரத்தால்  அவர்  கையைப்  பிடித்தலாகிய  பரிசதீக்கை  செய்து  சிவ  குமாரனாக்கிப்  பேரின்பம்  அளித்தனர் .  இடப்பக்கம்  அம்மையின்  கூறுதலானும்  ,  அம்மை அருள்  வடிவினளாதலானும்   அருள்  வழிச் சென்று  சிவபதம்  எய்தினர்  என்பது  புலனாக  வலத்தே  நிற்க  என்றனர் . இறைவன்  அருள்  நிறைவில்  அடங்கி  இன்புறலே  வீட்டு  நிலையாகவும்  வலம் என்று  ஒரு  பகுதியைக்  குறிப்பிட்டது,  அருள் வழிச்  சென்று  சிவபதம்  எய்திய  உண்மையைப்   புலப்படுத்து முகமாகப்  பிற்காலத்தே  வழிபடும்  அன்பர்  கண்ணப்பர்  திருவுருவை  நிலைப்படுத்தற்குரிய  இடம்  காட்டியபடியுமாம் .   

     இனி , இறைவனை  அடைதற்குரிய  சாதனமும்  அதனாற்  பெறப்படும்  பயனும்  இன்னவெனக்  கூறுமுகமாக ,  “உயிர்  தான்  முன்னே  செய்துகொள்ளப்பட்ட   புண்ணிய  விசேடத்தால்  தனக்கு  அந்தரியாமியாய்  இதுகாறும்  உண்ணின்றுணர்த்தி  வந்த  பரம்பொருளே   இப்பொழுது  குருவடிவமும்  கொண்டு  எழுந்தருளி  வந்து  சிவதீக்கை  செய்து  மன்னவ  குமாரனாகிய  நீ  ஐம்பொறிகளாகிய  வேடருட்பட்டு  வளர்ந்து  நின்  பெருந்தகைமை  அறியாது  மயங்கி  இடர்ப்பட்டாய் :  நின்  பெருந்தகைமை யாவது  ,  இவ்வியல்பிற்றென்று   அறிவுறுப்ப  அறிந்த  மாத்திரையே   அவ் வேடரை  விட்டு  நீங்கி  அன்னிய  மின்றி  அநன்னியமாந்   தன்மையின்  நிலைபெற்று   அம் முதற்வன்  திருவடிகளை  அணையும் .”  என்னும்  பொருள்  தோன்ற  எழுந்தது  சிவஞானபோதத்தின்   எட்டாம்  சூத்திரம்  . அது ,

ஐம்புல   வேடரின்  அயர்ந்தனை  வளர்ந்தெனத்

 தம்முதல்  குருவுமாய்த்  தவத்தினில்   உணர்த்தவிட்டு

அன்னியம்  இன்மையின்  அரங்கழல்  செலுமே “

 என்பதாம் ,  இச்  சூத்திரக்  கருத்துப்படி  ,  ஐம்புல வேடர்களின்  சூழலிற்  பட்டு  வளர்ந்த  திண்ணனாரை  அவர்  முன்பு  செய்  தவத்தி  நீட்டத்தால்   சிவபெருமானே  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ஞானத்தீக்கை  செய்து  உண்மை  உணர்த்திக்  கண்ணப்பராக்கித்  தம்  திருவடி  நிழலில்  இருந்திப்  பேரின்பம்  அருளினாரென்று   இவ்  வரலாற்றிற்கு  மற்றொரு  வகையால்  நுண்பொருள்  கோடலும்  பொருந்தும் .   

          இனி ,  கண்ணப்பர்  வரலாற்றிற்  கூறப்பட்ட  அவர்  தந்தை  தாயார்  அப்  பேரன்பாளரைப்  பெற்ற  நல்வினைப்  பேற்றாலும்  ,  நாணன்  முதலியோர்  அப்பெரியாருடன்  பழகிய  சிறப்பாலும்  அவரெல்லோரும்  நற்கதி  அடைந்திருப்பர்  என்பது  திண்ணமே  .  அங்ஙனமாகவும்  அந் நல்லோரைப்  பாசங்களாகவும்  ஐம்புலவேடராகவும்  குறித்தல்  எங்ஙனம்  பொருந்து மெனின் ,  கண்ணப்பராகிய  தூயவுயிரைச்  சார்ந்த  அம்மாந்தர்  செயல்களையெல்லாம்  அப் பாசங்களி னியல்பிற்  புலப்படுத்திச்  சைவ சித்தாந்த  தத்துவ   நுண்பொருள்  பல  வுணர்தற்கு  நிலைக்களனாக  இவ் வரலாறு  அமைந்திருப்பதால் ,இங்ஙனம்  குறிப்பிற்கோடல்  பொருந்து மென்க   இங்ஙனம்  தத்துவப்பொருள்  கொண்டமையால்  அன்னார்  நல்வினைப் பேற்றிற்குச்  சிறிதும்  இழுக்கின்று  என்பது  தெளிவாம் . 

             இதுகாறும்  கூறியவற்றாற்  போந்த  தொகைப் பொருள்  :-   கண்ணப்ப நாயனாரை  அன்பின்  திருவுரு  என்றால்  பொருந்து மென்பதூஉம் ,  அவர் வரலாற்றுச்  சுருக்கம்  இன்ன தென்பதூஉம்  ,  அவர் பிறப்பின்  பெருமையும்  தாய்  தந்தையர்  சிறப்பும்  இன்ன  வென்பதூஉம் , அவர்  பிள்ளைமைப்பருவம்   பற்றிய  நிகழ்ச்சியில்  அறியக்கிடக்கும்  பொருள்  நயங்களும்   பொறுப்புரிமையேற்று  வேட்டைத் தொழிலில்  தலைப்பட்டு  நடாத்திய  செயல்களும்  பழம்  பிறப்புத்  தொடர்ச்சியைப்  புலப்படுத்தும்  அடையாளங்களும்   இன்னவென்பதூஉம் , அவர்  மெய்யன்பின்  சிறப்பியல்பும்   அவ்  வன்பின்  சிறப்பை  இறைவன்  வெளிப்படுத்திய  அருமையும்  அதன்  விளைவுகளாகிய  கண்ணிடத்து  அப்புதல்  முதலிய  செயற்கருஞ்செயல்களும்  இன்ன வென்பதூஉம் , அவர்  வரலாற்றிற்  சைவ சித்தாந்த  தத்துவ  நுண்பொருள்கள்  புலப்படுமாறிங்ஙனம்  என்பதூஉம் , இறை , உயிர் , கட்டு  என்னும்  முப்பொருள்களுள்  காளத்தியப்பருங்   கண்ணப்பரும்  இறையும்  பக்குவ  முதிர்ந்த  உயிருமா  மென்பதூஉம் ,  கட்டாகிய  ஆணவம் ,  மாயை  , கன்மம்  , மாயேயம்  ,  திரோதாயி  என்னும்  ஐவகைப்படும்  பாசங்களின்  இயல்புகளை  முறையே  நாகன் , தத்தை , காடன், நாணன் ,  தேவராட்டி  என்னும்  இவர்கள்  செயல்கள்  புலப்படுத்துவன  வென்பதூஉம்  ,  திருக்காளத்தி  மலைமிசை  யேறியது  தத்துவங்  கடத்தலைப்  புலப்படுத்தூஉம்  என்பதூஉம் ,  குடுமித்தேவர்  ஞானாசிரியராக  நின்று  ஞானாவதியாகிய  நயனதீக்கையால்  கண்ணப்பரது  மலத்தொடர் பொழிந்தன  ரென்பதூஉம் , இறைவன்  தமது  வலக்கண்ணில்  ஊறுபாடு  காட்டி  இவர்  வலக்கண்ணை  யேற்றுக்கொண்டதும் , இடக்கண்ணை  யேற்றுக்கொள்ளாமல்  கையைப்பிடித்து  வலத்தெ  நிற்கவென்றதும் , கண்ணப்பர்  ஆறாம்  நாளில்  வீட்டு  நிலை  யெய்தியதும்  ஆகிய  இவையெல்லாம்  இன்னின்ன  நுண்பொருள்களைப்  புலப்படுத்துவன  வென்பதூஉம் , “ஆய்ம்புல வேடரின்  “  என்னும்  சிவஞானபோதச்  சூத்திரக்  கருத்துக்கும்  இவர்  வரலாற்றுக்குறிப்பு   ஒத்ததாகு மென்பதூஉம் , தாய் தந்தை முதலியோர்  செயல்களைக்கொண்டு  பாசங்களின்  இயல்புகளைக்  குறிப்பிட்டமையால்  அன்னார்  பெருமைக்கு  ஏதுங்  குறைவு  வாராதென்பதூஉம்   பிறவுமாம் .  

வாளா  பொழுது  கழிக்கின்றார்  மாநுடவர்

கேளரர்கொ  லந்தோ  கிறிபட்டார் —-  கீளாடை

அண்ணற்  கணுக்கராய்க்   காளத்தி  யுண்ணின்ற

கண்ணப்ப  ராவார்  கதை                                                                                          

                            >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

                                                      குறிப்புரை                                                  

இன்றியமையாமை  =  அவசியம் 

சாதனம்  =  கருவி .

கெழுமிய  =  பொருந்திய 

குரிசில்  =  உயர்ந்தோன் 

நிமித்தம்  =  காரணம்             

இயனூலாசிரியர்  =  இலக்கண மியற்றிய  ஆசிரியர்

புவனம்  =  உடல்  தோன்றுதற்குரிய  இடம்

போகம்  =  நுகர்பொருள்

தது  =  உடல்

கரணம்  =  மன முதலியன 

துய்த்தல்  =  நுகர்தல்

இறுமாந்து  =  செருக்கி

ஈடாக  =  பேறாக 

ஒருதலை  =  துணிவு 

தலைக்கூடல்  =  உண்டாதல்

அழிதன்  மாலையின  =  அழியும்  இயல்புள்ளன .

அவகாசம்  =  காலம் 

தலைப்படல்  =  அடைதல்

அண்முதல்  =  அணுகுதல் 

வினையீட்டம்  =  இருவினைகளயும்  தேடிக்கொள்ளல்

கன்மப்பயன்  =  இருவினைகளான்  எய்தும்  இன்ப  துன்பங்கள் 

உவர்  =  உப்பு  மண்

சிற் சக்தி  =  ஞான  சக்தி

அத்துவிதம்  =  இரண்டற்ற  நிலை ,

உய்த்துணர வைத்தல்  =  ஆராய்ந்தறிய  வைத்தல் .

தேக்கற  =  தெவிட்டுதல் ஒழிய 

கட்டுநிலை  =  பாசத்தோடு  கூடிய நிலை 

( பாட்டு )  தாணு   =  இறைவன்

அளவை  =  பிரமாணம்

கருதலளவை  =  அநுமானப்  பிரமாணம்

காட்சியளவை  =  பிரத்தியட்சப்  பிரமாணம்

உரையளவை  =  ஆகமப் பிரமானம்

பதிஞானம்  =  சிவஞானம்

பாசஞானம்  =  சொற்பொருட்  பிரபஞ்சம்  பற்றி  நிகழும்  ஏகதேச  ஞானம்

பசுஞானம்  =  மன முதலியவற்றைக்  கொண்டறியும்  ஆன்ம சொரூப  ஞானம்

குலாலன்  =  குயவன் 

தூலாருந்ததி  நியாயம்  =  பெரிய  நாண்மீனைக்  காட்டி  அதற்கடுத்த  நுண்ணிய  அருந்ததி  யுருவத்தைக்  குறித்தல்  போலப்  பலப்பொருள்  காட்டி  நுண்பொருள்  விளக்கும்  ஒரு நெறி .

மலபரிபாகம்  =  பாசம்  தன்  ஆற்றல்  ஒழிதற்குரிய  பக்குவம்  அடைதல் .

சடப்பொருள்  =  அசேதனப்பொருள்  . 

உவர்ப்பித்தல்  =  வெறுப்பித்தல் 

சமக  மந்திரம்  =  ஒரு ருத்திர  மந்திரம் .

சப்தம்  =  சொல்

சோபானம்  =  படி

கரதலாமலகம்  =  உள்ளங்கை  நெல்லிக்கனி

பிருதிவி  =  மண் , 

தத்துவாதீதர்  =  தத்துவங்களைக் கடந்தவர்

வியாப்பியம்  =  ஒன்றினொன்று  அடங்கிய  நிறைவு

வியாபகம்  =  எங்கும்  நிறைதல்

பரியாயம்  =  ஒரு பொருளைக் குறித்து  வழங்கும்  வேறு  பெயர்

அருவுரு  =  சகளநிட்களத்  திருமேனி

பரமுக்தி  =  இரண்டறக் கலந்த  நிலை

விழுச்சுடர்  =  சிறந்த ஒளி

சென்நெறி  =  செல்லுதற்கேற்ற  வழி 

தட்டின்று  =  தடையிலது

விழுமியது  =  சிறந்தது

ஒல்லுதல்  =  இயலுதல்

பிரபஞ்சம்  =  உலகப்பொருள்

தாத்துவிகம்  =  தத்துவங்களாலாயது

அதிட்டித்தல்  =  பற்றி  நிற்றல்

அலுப்த  சக்தி  =  பேரருளுடைமை

(பாட்டு)  இருட்கடு   =  கரிய  நஞ்சம்

மகன்மை நெறி  =  சர்புத்திர  மார்க்கம்

(பாட்டு) பெய  =  பெய்ய

நாகரிகம்  =  கண்ணோட்டம்

பிழம்பு  =  வடிவம் 

தடத்த நிலை  =  இறைவன்  அரு   உரு   அருவுரு  என்னும்  மூவகைத்  திருமேனி  கொண்டு  வெளிப்படும்  நிலை

மாழ்குதல்  =  மயங்குதல்

(பாட்டு)  அழுங்குதல்  =  வருந்துதல் 

பிறாண்டு  =  பிறவிடத்து

விச்சை  =   வித்தை

ஈர்த்து  =  இழுத்து

மலைவுறல்  =  மயங்குதல் 

அக்காரம்  =  சருக்கரை

தீற்றுதல்  =  உண்பித்தல்

சலனம்  =  அசைவு

சேதனப்பொருள்  =  அறிவுடைப் பொருள்

அசேதனப் பொருள்  =  அறிவிலாப் பொருள்

விளிப்பல்  =  அழைப்பேன்

ஒறுத்தல்  =  தண்டித்தல்

இதம்  =  நன்மை

அகிதம்  =  தீமை

(பாட்டு)  பூண்  =  அணிகலன்

கிரமம்  =   முறை

உவப்பு  =  கெடுதல்

மலரகிதர்  =  மலமில்லாதவர்

சகசமலம்  =  ஆணவம் 

நியதி  =  வரையறை

விசாரம்  =  ஆராய்ச்சி 

மெளட்டியார்  =  அறிவில்லாதவர்

சங்கித்தல்  =  ஐயுறுதல்

(பாட்டு)  கான்முளை  =  புதல்வன்

சனனம்  =  பிறப்பு 

சூதகம்  =  தீட்டு

ஆசெளசம்  =  தீட்டு 

வார்தல்  =  ஒழுகல்

புண்ணீர்  =  இரத்தம்

குதர்க்கநெறி  =  விதண்டாவாத  முறை

புரை  =  குற்றம்

கலாம்  =  கலகம்

நெஞ்சக்கலம்  =  மனமாகிய  பாத்திரம்

பரதந்திரம்  =  தன்  வயமின்றி  இருத்தல்

பெத்தகாலம்  =  பாசத்தோடு  கூடிய  நிலை

முனைத்தல்  =  செருக்கல்

தொழும்பு  =  அடிமை

(பாட்டு)  சால  =  மிக

(பாட்டு)  விறல்  =  வலிமை

முத்தன்  =  பாச விடுதி பெற்றவன்

பெத்தன்  =  பாசப்பிணிப்புடையவன்

காய்தல்  =  வெறுப்பு 

எழில்  =  அழகு

பரிவுரை  =  அன்புமொழி

ஒழுகலாறு  =  ஒழுகுநெறி

காதற் கிழமை  =  அன்புரிமை

கடம்பூண்ட  =  கடமையாக  மேற்கொண்ட 

கொன்   =   பயனின்மை 

இருமுதுகுரவர்  =  தாய்  தந்தையர் 

சிறு  முதுக் குறைவி  =  இளமையிற்  பேரறிவு  படைத்தவள் .

(பாட்டு) சென்னி  =  தலை

மடம்  =  அறியாமை 

அவலம்  =  துன்பம்

(பாட்டு) பொற்பு  =  அழகு

விரை  =  மணம்

தெற்றென  =   தெளிவாக

வன்றோண்டர்  =  சுந்தரமூர்த்திகள்

இரசபுஞ்சம்  =  சுவைத் திரட்சி

சுயம்பி  =  தானே  தோன்றியது .

புனர்ப்பவம்  =  மறுபிறப்பு 

சகளம்  =  உருவம்

நிட்களம்  =  அருவம்

ஊதியம்  =  இலாபம் 

உரம்பெறல்  =  வலியுறுதல் 

ஏதம்  =  துன்பம் 

மாற்றம்  =  சொல்

(பாட்டு)  வந்திப்பது  =  வணங்குவது

(பாட்டு)  பிணக்கு  =  மாறுபாடு

தடிதல்  =  வெட்டுதல்

வளி  =  காற்று

(பாட்டு)  பாவிய  =  பரவிய 

உதிரப்புனல்  =  இரத்தம்

முடை  =  புலால் நாற்றம் 

இழுது  =  நிணம்

குவை  =  திரட்சி

சாதனம்  =  அடைதற்கருவி

சாத்தியம்  அடையும் பேறு

அபரஞானம்  =  நூலறிவு

பரஞானம்   =  அநுபவறிவு

பனுவல்  =  நூல்

கூர்  =  மிகுதி

கருவூலம்  =  நிதியறை.

அநுபவம்  =  அழுந்தி யறிதல் 

வாச்சியம்  =  பொருள்

கருடோகம்  =  கருடன்

(பாட்டு)  திரிமலம்  =  மும்மலம்

(பாட்டு)  புள்ளுவர்  =  வேட்டுவர் 

புனம்  =  காடு

குறைகொளல்  =   கொள்ளை யிடுதல்

தூநெறி  =  சன்மார்க்கம்

சிவார்ப்பனம்  =  சிவனுக்கென்று  ஒப்பித்தல்

தம  =  தம்முடைய 

(பாட்டு)பொத்திய  =  மூடிய

(பாட்டு) கட்டி  =  சருக்கரை

பனி  =  குளிர்ச்சி

உரன்  =  திண்மை

சிவகரணம்  =  சிவத்துவம்  பெற்ற  உள்ளம் 

சீவ போதம்  =  உயிரறிவு

படனம்  =  பாராயணம்

பனிமலைவல்லி  =  பார்வதி

(பாட்டு)  புளகம்  =  மயிர் சிலிர்த்தல்

கடிதல்  =  விலக்குதல்

அளைந்தன  =   கலந்தன

விடயவாதனை  =  புலனுகர்வுத் தொடர்ச்சி

(பாட்டு)  தெருளுதல்  =  தெளிதல்

அளவை நூல்  =  தருக்க நூல்

பந்தித்தல்  =  பிணித்தல்

பூதவாதி  =  மண்  முதலிய  பூதங்களையே  பொருளெனக் கொள்பவன்

(பாட்டு)  நீரல  =  நெறி  பிறழ்ந்த சொற்கள்

அதர்  =  வழி

ஊறு  =  துன்பம்

தழீஇ  =  தழுவி

(பாட்டு)  துளங்கல்  =  அசைதல்

கம்பம்  =  நடுக்கம்

செவ்வனம்  =  நன்றாக 

அயர்வு  =  சோர்வு

(பாட்டு)   செற்றம்  =  கோபம்

நுனித்துணர்தல்  =  நுணிகி  ஆராய்தல்

குணிப்பொருள்  =  குணத்தையுடைய பொருள்

(பாட்டு)  படிவம்  =  வடிவம் 

ஆர்வம்  =  விருப்பம்

பற்றுக்கோடு  =  ஆதரவு

வாய்மை  =  உண்மை

சீலம்  =  ஒழுக்கம்

ஒருப்படாத  =  பொருந்தாத

(பாட்டு)  நளிர்  =  குளிர்

அங்கணர்  =  இறைவர்

(பாட்டு)  பொருவு  =  ஒப்பு

பரிசு  =  தன்மை

அநுசிதம்  =  தக்கதல்லாதது

இடத்தல்  =  பெயர்த்தல்

அமண்  =  சமன் சமயம்

கையர்  =  கீழ்மக்கள்

கொளுவுதல்  =  மூட்டுதல்

மழவிளங்குழவி  =  மிக்க  இளமைப்பருவமுள்ள  குழந்தை .

(பாட்டு)  பாவம்  =  பிறப்பு

பாங்கு  =  இயல்பு

இயங்குதிணை  =  சரப்பொருள் 

நிலைத்திணை  =  அசரப்பொருள்

(பாட்டு) நேர்படுதல்  =  உண்டாதல்

ஆர்வமுதற் குற்றம்  =  காமம்  முதலிய  தீங்குகள்

தோணிபுரம்  =  சீகாழி

ஆழிய  =  ஆழ்ந்த 

முகில்  =  மேகம்

செவ்வி  =  காலம்

தண்ணிது  =  குளிர்ச்சியுடையது

திருநாவலூரர்  =  சுந்தரர்

கோள்  =  கிரகம்

மீன்  =  நட்சத்திரம்

(பாட்டு)  விமலர்  =  குற்றமில்லாதவர்

இலக்கு  =  அடையாளம் 

அருண்மொழித்தேவர்  =  சேக்கிழார்

விஞ்சுதல்  =  மிகுதல்

தேவராட்டி  =  தெய்வம்  ஏறப் பெற்றவள் ;  தெய்வவழிபாடு  செய்பவள்

குடுமித்தேவர்  =  மலையுச்சியிலிருக்கும்  இறைவர் .

இலைக்கலம்  =  இலையாலமைக்கப்பெற்ற  பாத்திரம்  ,  தொன்னை

தேவுமால்  =  தெய்வ  மயக்கம்

திருமஞ்சனம்  =  நீராட்டு

கலசம்  =  குடம்

கல்லை  =  தொன்னை

ஊறுபாடு  =  துன்பமுண்டாதல்

வைகறைப்பொழுது  =  விடியற்காலம்

பேதித்தல்  =  வேறுபடுத்தல்

குருதி  =  இரத்தம்

அறுதியிட்டுரைத்தல்  =  வரையறுத்துக்  கூறல்

(பாட்டு)  அவல்  =  பள்ளம்

மிசை  =  மேடு

மடங்கல்  =  சிங்கம்

சூர்   =   அச்சம்

அரிப்பிணவு  =  பெண்சிங்கம்

வயம்  =  வலிமை

அரியேறு  =  ஆண் சிங்கம்

காமரு  =  அழகு

பறழ்  =  குட்டி

கோட்படாமை  =  கொள்ளப்படாமை

மல்கிய  =  பெருகிய

உறுகண்  =  துன்பம்

சிலை  =  வில்

(பாட்டு)  வேணி  =  சடை

சூல்  =  கருப்பம்

மான் பேடு  =  பெண் மான்

(பாட்டு)  தென்புல வாழ்நர்  =  பிதிரர்

இறுத்தல்  =  கொடுத்தல்

பிணைமான்  =  பெண்மான்

(பாட்டு)  பொருப்பு  =  மலை

ஈட்டம்  =  தொகுதி

ஏனம்  =  பன்றி

புனம்  =  காடு

போதுவர்  =  வருவர்

புல்லுவர்  =  தழுவுவர்

புளிற்றா  =  ஈற்றணிமையையுடைய பசு

வங்கு  =  மரப்பொந்து 

(பாட்டு)  தணக்கு  =  வால்

அளை  =  பொந்து

பதார்த்தம்  =  உலகியற்பொருள்

கூர்ச்சம்  =  தருப்பை

(பாட்டு)  அடவி  =  காடு

(பாட்டு)  தீபமரம்  =  சோதி விருட்சம்

மந்தி  =  பெண் குரங்கு

முழை  =  மலைக்குகை

அங்கி  =  நெருப்பு

பூத நாயகன்  =  சிவபெருமான்

செம்பியன்  =  சோழ  மன்னன்

படி  =  ஒப்பு

எடுத்துக்காட்டு  =  உதாரணம் 

(பாட்டு)  குனிசிலை  =  வளைந்தவில்

மாதவன்  =  முனிவன்

(பாட்டு)  குசை  =  தருப்பை

அங்குலி  =  பவித்திர மோதிரம்

அவி  =  தேவருணவு

துகள்  =  தூசி

ஒருவி  =  நீங்கி

(பாட்டு)  கருவரை  =  கரியமலை

காளமேகம்  =  கரியமேகம்

காட்டு  =  விளக்குவது

அநுமித்தறிதல்  =  அநுமானப்  பிரமாணத்தாலறிதல் , காரியப்பாடு செயற்படுதல்

(பாட்டு)  பாலளாநீர்  =  பால் கலந்த நீர் , பறைதல்    =  நீங்கல்

(பாட்டு)  முதலி  =  தலைவன்

மாமாயை  =  சுத்த மாயை

வித்தியாதத்துவம்  =  காலமுதலியஏழு, 

ஆன்மதத்துவம்  = மண் முதல் சித்தம்  இறுதியாகவுள்ள  இருபத்து  நான்கு

சிவதத்துவம்  =  சுத்ததத்துவம் , சிவமுதல் ஐந்து

பிரோகதத்துவம்  =  இயக்குந்  தத்துவங்கள் .

(பாட்டு)  எற்றையினும்  =  எந்த நாளினும்

வரிச்சிலை  =  கட்டமைத்த   வில்

அருட்குறி  =  சகுனம்

அட்சதை  =  மஞ்சள்  கலந்த அரிசி .

(பாட்டு)  சேடை  =  அட்சதை

குண்டமண்டலங்கள்  =  ஓமத் தீ வளர்த்தற்கு  முக்கோணம் வட்டம்  முதலிய  வடிவாக  அமைக்கப்படும்  இடங்கள்

கறை  =   களங்கம் 

கான்மியமலம்  =  மூலகன்மங் காரணமாகத் தோன்றும்  செயல்கள்

அத்துவா  =  வழி

பருவுடல்  =  தூலவுடம்பு

தேயு  =  நெருப்பு

நயனதீக்கை  =  ஆசிரியன்  பார்வையாற்  செய்வது

பரிசதீக்கை  =  ஆசிரியன்  தழுவிக்கொண்டு  செய்வது

அந்தரியாமி  =  உள்ளே கலந்து  விளங்குபவன்

அன்னியம்  =  வேறுபாடு

குழல்  =  கூட்டம்

                                               ***********************************

உதயனசரிதமும் சுலோசனையும்

உதயனசரிதமும்

சுலோசனையும்

மகாமகோபாத்தியாய  முதுபெரும்புலவர்

பண்டிதமணி

மு. கதிரேசச் செட்டியார்

பண்டிதமணி  நூற்றாண்டு விழா  வெளியீடு

சன்மார்க்க சபை

மேலைச்சிவபுரி

1983

விழாப் பதிப்புரை

        பண்டிதமணி  நூற்றாண்டு விழாக்  குழுவினர் இந் நூற்றாண்டு விழாவின் நிலைப்பயனாகப் பண்டிதமணியாரின் நூல்களையெல்லாம் மறுபடியும் பதிப்பித்து இவற்றைத் தமிழுலகிற்குக் கிடைக்கும்படி செயல் வேண்டும் எனவும் அதன் மேலும் இப்பெரும் புலவரின் நூல்களைத் தக்கோரால் திறன் செய்து அத்திற நூல்களையும் தமிழாக்கம் பெற வெளியிடல் வேண்டும் எனவும் நன்முடிவு கொண்டனர் .

         அண்மைக்காலத்துப் பெருந்தமிழ்ப்புலவர் பலரின் நூற்றாண்டு விழாக்கள் சோனைமாரிபோல நாடெங்கும் கொண்டாடப் பெறுகின்றன. கொண்டாடுவது கொண்டாடத்தக்கது என்றாலும் , அவ்வளவில் ஒரு நாளை ஆர்வமாக அது கழிகின்றது . விழாச் செலவுக்கு ஏற்ற தொடர்குறியும் தமிழ்நிலையும் இல.அப்புலவர் தம் படைப்புக்களை வெளியிடுவதையும் விழா யயர்வின் ஓரு பாங்காகக் கடைப்பிடித்தல் அவர்தம் நூல்கள் வழி வழி கிடைக்கும் . முன்னும் பின்னும் அச்சாகப்  படிகளும் தேடலின்றிக் கிடைக்கும். புலவர்களின் அறிவுடைமைகள் பொதுவுடைமைகள் அல்லவா?

              இக்குறைபாடு பண்டிதமணியார்க்கு  வாராதபடி , அவர் தம் எழுத்துடைமைகள் மறுமை பெற்றுக் காக்கப்படுகின்றன . ஆய்விற் சிறந்தோர் எழுதிய திறநூல்களும்  ஆக்க நூல்களும்  உடன் வருவதால் , அணைநீர்  பெறும் யாறு போல  இவ்விழாவினால் தமிழ்  ஊட்டம் பெறுவதை அறியலாம் . இவ்வெளி யீடுகட்குப் பல்லாயிரத்  தொகை நன்கொடை வழங்கும்  தமிழ்ப் பாரிகட்குப் பெரிதும் நன்றியுடையோம் . வண்மையின்றித் தமிழ் வளம் பெறுவதில்லை .

                பண்டிதமணியின்  பனுவல்களும் திற நூல்களும்  மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைக்கே உரிமைய . “ என்னை இப்புகழ் நிலைக்கு உருவாக்கியது சபையே “  என்பது பண்டிதமணியின் நன்றிச் சொல். பல பட்டங்கள் இருந்தாலும் 1925 இல் இச் சபை வழங்கிய “பண்டிதமணி” என்ற முதற்பட்டமே பெரும் பேராசிரியர் கதிரேசனார்க்கு  இயற்பெயரிலும் தனிப்பெயராக வழக்குப் பெற்று விட்டது .இச்சபையை பெரும்புலவர் சோழவந்தான் அரசன் சண்முகனார் தலைமையில் 1909 இல் தோற்றி வளர்த்து இன்றும் இனியும் காக்கும் வ. பழ . சா . குடும்பத்தாரின் தமிழ்த் தொண்டு தமிழ்மக்களின் தவத் தொண்டாகும் .இச்சபை இன்னும் இரண்டாண்டுகளில் பவள விழாக் கொண்டாடும் பருவம் எய்தும் .

                   சுலோசனையும் (1922 ) உதயன சரிதமும் ( 1924 ) சபையின் வெளியீடுகள் :  வடமொழிக் காப்பியம்  தழுவிய  கதைகள் :  பண்டிதமணியின்  முதல் மொழிபெயர்ப்புகள் .  இவை ஒரு நூல் வடிவாக  விழாப்பதிப்பாகின்றன. அல்லொலிகலவாமை , சொல்லாக்கம் , வடமொழிப்  பெயர்களைத் தமிழுருவாக்கல் , பெருமிதத் தமிழ்நடை , புணர்ச்சித் தொடர்கள்  , தொடர் நெடுமை , இலக்கிய  வனப்பு  என்ற  நெறிகளை  இந்நூலால்  அறியலாம் . மொழிபெயர்  கலைஞர்கட்குப்  பண்டிதமணியின் மொழிபெயர்  ஆக்கங்கள்  பாடநூல்களாகும் என்பது தெளிவு . இந் நெறிகளைப் பண்டிதமணியம்  என்று  பெயரிடலாம் . பண்டிதமணியின்  உரைநடைகளைப்  படித்தாற் போதும் , கவிதைகளாற் பெறும் இலக்கியத்  திறமை கைவந்துவிடும் .

                 உரைநடை நூல்களில்  முடிவுப்பகுதியில் பொருள் பொதிந்த வெண்பா  யாத்தல் பண்டிதமணியின் ஓர் எழுத்து மரபு.  சிலப்பதிகாரத்திலும்  பத்துப்பாட்டிலும் பண்டே  இம் மரபு தோன்றியிருப்பதைக்  காண்கிறோம் . மொழிபெயர்ப்புத்  தொடக்கத்திலேயே  என் ஆசிரியர்க்குக்  கவிதைத்  தனித்திறம் இருந்தது என்பதற்கும் பின்னே  மண்ணியல்  சிறுதேர்  போன்ற  “செய்யுள்  நடையாகவே  நூல்கள்  இயற்றும் ஆற்றலிருந்தும்  வசன நடையாகவே  இச்சரிதத்தை இவர்கள் இயற்றியதற்குக்  காரணம்   எல்லோரிடத்துமுள்ள  அன்பின்  மிகுதி என்றே சொல்லவேண்டும் “  என்பது பெரும் பேராசிரியர் அறிஞர் உ . வே . சாவின்  மதிப்புரை .

                   இந் நூற்பதிப்பிற்குத்  தக்க  நன்கொடை   வழங்குநர்  தமிழ்ப்  பேராசிரியர்  திருமுறைச்  செல்வர்  க . வெள்ளைவாரணனார் . இப் பெரும் புலவர் விபுலானந்த அடிகளின்  மாணாக்கர் ;  பன்னிரு திருமுறை  வரலாறு  கண்டவர் . இலக்கியம்  ,இலக்கணம் , சித்தாந்தம்  , கல்வெட்டு  , இசை முதலான  பல்துறை வல்லுநர் . இரக்கும்  புலவருலகில் ஒரு கொடைஞ்ர் . இந் நன்மகனார்க்குச் சபை நன்றியுடையது .

                     பண்டிதமணி  நூற்றாண்டுக்  குழுவுறுப்பினர்கட்கும் உடனிருந்து உறுதுணை புரிந்த தணிக்கையாளர்  பெரி. தியகராசனார்க்கும் , பேராசிரியர்  அறிஞர் தமிழண்ணலுக்கும் நூலச்சீட்டுக்கு  முழுதும் உதவிய அறிஞர் கதிர் மகாதேவனுக்கும் வனப்புற  அச்சிட்ட  மலரச்சகத்தார்க்கும்  உள்ளார்ந்த நன்றியம் .

                       தமிழ்ப்பண்பு  சான்ற  தமிழகவரசு  பண்டிதமணி நூற்றாண்டு விழாவினைச்  செம்மாந்த அவர் திருவுருவைத்  திறந்து வைத்து அரசு விழாவாகக்  கொண்டாடியது .தமிழவேள் மகாலிங்கனார் நிறுவிய இராமலிங்கர் பணிமன்றமும் திருவுருவக்காட்சியொடு   சிறப்பு விழா  எடுத்தது .  தேவகோட்டை  கலைக்கல்லூரி நிறுவனர் தமிழறிஞர் சேவு . அண்ணாமலையார் பெருந் தொகை வழங்கி பண்டிதமணி அறக்கட்டளையை மதுரை காமராசர்  பல்கலைக் கழகத்தில்   நிறுவினார். உலகுபுகழ்  வளரும் மதுரை காமராசர்  பல்கலைக்கழகம்  கருத்தரங்கு  மண்டபத்துக்குப்  “பண்டிதமணியரங்கு”  என்ற பெயர் வைத்துச் சிறப்பித்தது.  இச்சிறப்புக் கெல்லாம் நன்றி  ஒருவர்  கூறினார்  போதுமா? தமிழினமே  கூறும் தகைத்து . அரசும் மக்களும்  தக்கார்க்குத்  தக்க  சிறப்புச்  செய்து காட்டுவது நாட்டில்  தக்கார்  பலரை  உருவாக்கும் .

                          என் ஆசான் பண்டிதமணியின்  தொண்டுகள்  முத்திறத்தன . தமிழில்  நயங்காண் துறையைக் கண்டு  சொல்லாலும் எழுத்தாலும்  பரப்பியவர் ; புதிய வகை நூல்களை மொழிபெயர்த்து வழங்கியவர் ; உருக்கும்  திருவாசகத்திற்கு  உள்ளொளி பெருக்கும்  கதிர்மணி  விளக்கம்  கண்டவர் .

        பண்டிதமணியின்  திருவடிக்கு  வணக்கம் . 

                                                              வ சுப  மாணிக்கம்

                                              தலைவர் , பண்டிதமணி நூற்றாண்டு  விழாக்குழு .

காரைக்குடி .

16-10-1982.                           

அபிப்பிராய  பத்திரங்கள்

சென்னை மகாமகோபாத்தியாய  பிரமஸ்ரீ

வே . சாமிநாதையரவர்கள்

              மகிபாலன்பட்டி  வித்துவான் மகா  ஸ்ரீ  மு . கதிரேசன் செட்டியாரவர்கள் இயற்றிய “உதயன சரிதம்” என்னும் வசன நூலை  முற்றும் படித்துப்பார்த்து இன்புற்றேன் .

              வடமொழியில் மிக விரிவாகப் பரந்து கிடக்கும்  இச்சரிதத்தை யாவரும் எளிதிலுணரும்படி  சுருக்கமாகத் தெள்ளிய இனிய நன்னடையிற்  பலவகையான  சுவைகளை அங்கங்கே அமைத்துப் பழைய தமிழ்ச் செய்யுட்களிலும் , பண்டை உரைகளிலும் காணப்படும் இனிய வாக்கியங்களை உரிய இடங்களிற் சேர்த்துத் தமிழர்க்கு ஒரு நல்விருந்தாக  இவர்கள் இயற்றியிருத்தல் மிகப்  பாராட்டற்பாலது. இதில் இடை யிடையே வாய்த்த இடங்களில் உலகத்தாரை நோக்கிப் புலப்படுத்தும் நீதிவாக்கியங்களும் , ஒவ்வொரு பகுதியின்  இறுதியிற் கதையின்  சாரத்தைச் சுருக்கித் தெரிவித்திருக்கும்  வெண்பாக்களும் , உரிய இடங்களிற் சிவபெருமானுடைய திருவருளின் பெருமையைப்  புலப்படுத்திய பகுதிகளும் அறிந்து இன்புறற்பாலன.

                     செய்யுள் நடையாகவே  நூல்களியற்றும் ஆற்றலிருந்தும் வசன நடையாகவே இச்சரிதத்தை இவர்கள் இயற்றியதற்குக்  காரணம் எல்லோரிடத்துமுள்ள அன்பின் மிகுதியென்றே சொல்லவேண்டும் .

                     கல்வியறி வொழுக்கங்களாற் சிறந்த இவர்கள் இது போன்ற இன்னும் பற்பலவாகிய சொற்பணிகளைச் செய்து கொண்டு பலகாலம் மிக்க புகழுடன் இந்நிலவுலகில் வாழ்ந்து  விளங்கும்படிச்   செய்வித்தருளும் வண்ணம் இறைவன் திருவடிகளைச் சிந்திக்கின்றேன் ,

          “இதனையிதனா  லிவன் முடிக்கு  மென்றாய்ந்

             ததனை  யவன்கண்   விடல்

என்னும் பெரியோர் திருவாக்கிற்கிலக்காக இவ்வரிய காரியத்தைச் செய்து நிறைவேற்றும்படித்  தேர்ந்தெடுத்து  இவர்களைத் தூண்டிய மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபைத் தலைவர்களுடைய தமிழபிமானமும்  வண்மையும் மிகப் பாராட்டற்பாலன . 

தியகராஜ  விலாசம்,                                                                இங்ஙனம்,

திருவட்டீசுவரன் பேட்டை ,                                                வே . சாமிநாதையர்.

28 – 03 – 1924                

சென்னை  நியாய  கலாசாலைப்  பேராசிரியரும் ,

கல்கற்றா தாகூர்ச்  சட்ட  விரிவுரைகாரருமாகிய

Advocate  திருவாளர்

கா . சுப்பிரமணிய பிள்ளையவர்கள் , M A ., M L .

             தங்கள்  அருமைச் சிறுநூல்  கைவரப்பெற்று மகிழ்ந்தேன். அது, தமிழ்ப் பெருங்  காப்பியங்களுள்  ஒன்றாகிய பெருங்கதைக்குத்  தோற்றுவாயாகா அமைந்துள்ளது . ஆதலால் , தமிழ்  கற்பார்க்குப்  பெருநூலின்  நயத்தை  எளிதில் நன்கு  விளங்குஞ் சீர்மை  மிக்கது .  வடமொழிச் சொற்றொடர்களைத் தூய செந்தமிழ்  நலங்கனியும் வண்ணம் மொழிபெயர்த்துள்ள தங்கள் புலமைத்திறன்  கற்போருள்ளத்தைக்  கவரவல்லது .  மொழிபெயர்ப்பானமைந்த  உரைநடை  நூல்களுள்  இந்நூல்  தலைநின்று  விளங்குந்  தகுதி யுடையது .

                அரசாங்கப்  பெருமை ,  அமைச்சர் திறமைப்பாலது என்பதையும் , கற்பின்  சீர்மை   மாசுபடாது போற்றற்குரியது என்பதையும் , அருளொழுக்கம்  அளவில்  சிறப்புடைய  தென்பதையும்  , அனைய பிறவுண்மைகளையும் நிலை நாட்டு  முகத்தான்  அறிவுக்கு  நல்லுணவு  தரவல்ல  “உதயனன்  கதை”  போன்ற  நூல்களே  கலாசாலை மாணவர்க்குப்  பெரிதும் பயன்படுத்தற்குரிய   பாடங்களாக   நியமிக்கற்பாலன. 

சென்னை,                                                                                                     இங்ஙனம் ,

26 – 03 – 1924 .                                                                                          K . சுப்பிரமணியன்

இராமநாதபுரம்  சேது ஸமஸ்தான வித்துவான்

மகா- ஸ்ரீ  உப . வே

ரா. இராகவையங்காரவர்கள்

மகிபாலன்பட்டி வித்துவான் கதிரேசன் செட்டியார் தமிழிற்   சிறந்த புலமை வாய்ந்தவர் ;  வடமொழியுணர்ச்சி  மிக்கவர் ; அரிய பெரிய நூனயங்களைத்  தம் மதிநுட்பத்தானன்காராய்ந்து  தெளிந்து கல்விக் கழகத்துப் பலரும்  வியக்க எடுத்து வழங்குஞ்  சொல்  வன்மையினிதுடையர் ;நகர வணிக நன்மக்களூர்கள்  பலவற்றுட்டமிழ்க் கல்வி வளர்தற்குக்  காரணமான  கழகங்கள் , கல்லூரிகள் நிலைபெறுவித்தற்கட்டம்மினத்தாரைத் தூண்டியவர்  ஆங்காங்குள்ள  புலவர் பெரியாரை  அழைப்பித்துத்  தங்குலத் தனவாங்களைக்  கொண்டு உபகாரம்  புரிவித்து மகிழ்விப்பவர் ; தம்மினத்தார் அறிவினும் ஒழுக்கத்தினும்  திருந்திப் புகழ் எய்தி வாழ்தற்பொருட்டுத் தம் மனமொழி மெய்யொத்து முயல்கிற்பவர். செல்வப்பொருளேயீட்டும் வணிகக்குலம் இவரைப் பெற்றுக் கல்விப் பொருளையும் ஈட்ட முயல்வது காண்டற்கினியது .

  இவர்  தமிழிற் சிறந்த வசனநடையாற் பொலிவு பெற்றகத்திய நூல்களில்லாத குறையைத்  தீர்க்கக் கருதி  “ சுலோசனை “  “ உதயன சரிதம்”  என இரண்டு நூல்களை வடமொழியினின்று  மொழிபெயர்த்துதவி யுள்ளனர். நிரம்பிய கல்வி யுடைய இப் பெருந்தகையாளரால்  இயற்றியளிக்கப்பட்ட  இந்நூல்கள்  செவ்விய விழுமிய தீந்தமிழ்மொழிகள் மலிந்து குறித்த பொருளை யினிது விளக்கிச் சேறலாற் கற்பார்க்குக் கழிபேருவகை பயக்கும் பெருவிருந்தாதலொருதலை.

     இந்நல்லறிவாளர் தம்மினத்தவர்க்கும்  புலவர்க்கும் பிறர்க்கும் இங்ஙனமே  பல்லூழிநாளும்  பயனுற நின்று  வாழும் வண்ணம்  இறைவன் றிருவருளைச்  சிந்திக்கின்றோம் .

இராமநாதபுரம்                                                                                           இங்ஙனம் ,

14 – 04 – 1924  .                                                                                    ரா . இராகவையங்கார்

                                                                                            சேது ஸமஸ்தான வித்துவான்

செந்தமிழ்,  தொகுதி  உ உ .  பகுதி  @

……………………………………  கதை படிக்கத் தொடங்கும்  சிறுவர்களும் மனம் கொள்ளற் கேற்றவாறு வாக்கியங்களைச் சிறு தொடராக வமைத்தும் , செய்யிளிலும் சிறிது பயிலுமாறு  இடையிடையே சில வெண்பாக்களியற்றிச்  சேர்த்தும் இருப்பது பாராட்டத்தக்கது . செட்டியாரவர்கள் கல்வித் திறமையை  நோக்குங்கால்  இது மிகச் சிறிய காரியமாயிருப்பினும்  சிறுவர்களுக்    கெல்லாம்  கல்வியறிவளிக்கும்  சிறப்பினை நோக்குங்கால் பெரிய காரியமேயாம் .

………………………………………….

மதுரை  ஹைகோர்ட்டு  வக்கீல்  திருவாளர்

S  S  பாரதியாரவர்கள் ,  M A ., B L .

…………………………   இந்நூலின் உரைநடை  இனிமையோடு  எளிதில் தெளிவுநுதலும்   ஆசிரியர் கருத்தை யினிது வெளிப்படுத்துகின்றது . படிக்குங்கால் மொழிபெயர்ப்பு நூலென்னும் உணர்வெழவிடாது  படிப்பவர் மனத்தை யொழுகு தெள்ளினிமையாற்  களிப்பிக்குஞ்  செவ்வி  பாராட்டற்பாலது . அமைச்சு  நல்லறமாதி நலம் பல பொதுளிச்  சிறக்குமிந்நூலில்  எம்மனோர் மனத்தை  முழுதுங்  கவர்வது  கற்புயர் காதலாகும்

கணபதி துணை

முன்னுரை

*” உதயன சரிதம் “ என்னும் இது வற்ச நாட்டிலே , கெளசாம்பி நகரத்திலே , பாண்டவ குலத்திலே  சகச்சிரானீகன்  என்னும் வேந்தற்கு  மிருகாவதிபாற் றோன்றிய    உதயனனது    வரலாற்றை   விரித்தும்    அவன்புதல்வன் நரவாகனதத்தன்  வரலாற்றைச்  சுருக்கியுங்  கூறுவதாகும் .

    இதன் சுருக்கம் வருமாறு : –   “திலோத்தமை சாபத்தாற் சகச்சிரானீகன்  மிருகாவதியைப்  பதினான்கு யாண்டு பிரிந்திருக்க நேர்ந்துழி , மிருகாவதி இமயமலைச் சாரலிற்  சமதக்கினி முனிவர் ஆச்சிரமத்தில் அம்முனிவர் காப்பிற் அருமருந்தன்ன  உதயன  னென்னும்  புதல்வனை  யீன்றாள் .  முனிவரால் உதயனன்  கல்விப்பயிற்சி செய்யப்பெற்று எல்லாக் கலைகளி லும்   சிறந்து விளங்கினான்  சாபந்  தீர்ந்துழி  அக்காட்டில் உதயனன் வள்ளன்மை  காரணமாக   “ இன்னிசை “ யென்னும்  யாழைப் பெற்றுத்  தந்தை யுணர்ந்துவந்தழைப்பத்  தாயோடு தன் நகர மெய்தி மகிழ்ந்தான் . இவ்வுதயனன்  காளைப்  பருவமுற்றுழி , இவன் எழில் குணஞ் செயல்களைக்  கேல்வியுற்று  உச்சயினி  நகரத் தரசன்  சண்ட மகாசேனன் என்பான் , தன் அருமை மகள் வாசவதத்தையை  இவர்க்கு மணஞ் செய்துகொடுக்கத் துணிந்து , தன் மகட்கு  யாழ்பயிற்றுதலைத்  தலைக்கீடாகக்  கொண்டு தூதன் முகமாக   உதயனனை யழைப்ப ,  வரவுடன்படாமை   கண்டு   பொறியானை

*”உதயனன் என்பது  பிராகிருதத்தில்  உதயணன் “ என்று வரும் . தமிழிலுள்ள பெருங் கதை  முதலியவற்றுள் , பிராகிருதத்துள்ள வண்ணமே  “உதயனன்” என்று கூறப்பட்டுள்ளது . இச்சரிதம் வடமொழியினின்று  மொழிபெயர்க்கப்  படுதலின் , வடமொழியிலுள்ளபடியே  “ உதயனன்” என்று கண்டு வழங்கப்பட்டுள்ளது

ஒன்று நிருமித்துக் காட்டிற்றிரியச் செய்தான் . அதனை யுண்மையெனக்  கேட்டு  வேட்டை  விருப்பாற் போந்த உதயனன் வஞ்சகத்தாற்  கொணரப்பட்டுச்  சிறைக்கண்  யாழ் பயிற்றும் வினைஞனாயினான் . பின் , அமைச்சர்களுட் சிறந்த யெளகந்தராயணன் செய்த அரிய சூழ்ச்சிச்  செயல்களால் ,உதயனன்  நள்ளிரவில் , தன் மாட்டுக்  காதற்கிழமை  பூண்டுள்ள  வாசவதத்தையை  அழைத்துக்கொண்டு  இடையூற்றைக் கடந்து  தன் நகரம் புக்கு  அவளை மணஞ் செய்துகொண்டான் . இவ்வாழ்க்கை நிகழ்வுழி , இவன் அரசியற் செல்வத்தைப் பெருக்கக் கருதிய  யெளகந்தராயணன் , மகதராசன் மகள்  பதுமாவதியை உதயனன் மனஞ் செய்து கோடற்குச் சூழ்ந்து , இலாவாணகம்  என்னும் இன்ப நிலத்தில் வேந்தனை யிருத்தி  வாசவதத்தையை  “எரிவாய்ப் பட்டிறந்தாள்”  என்னுஞ் செய்தியை  வெளிப்படுத்திப் பிரித்துத் தனித்துறையுங் காலத்தும் , கற்பின் சான்றாம்வண்ணம்  அவளைப் பதுமாவதி பக்கல் சேர்த்தான் . வாசவதத்தையின் பிரிவால் வருந்திய உதயனனைத் தேற்றி , மகதராசன் மகள் பதுமாவதியை மணக்க உடன்படுத்தி , அவண்  மன்றலையும் முடிப்பித்தான் . மணக்காலத்திற் பதுமாவதியின்பால் வாடுதலில்லாத மலர்மாலையையும் அழகிய திலகத்தையும் உதயனன் கண்டு , அவற்றானே  பதுமாவதியுடன் தன் நகரிற் போந்து ஒருபுறத்திருந்த  வாசவதத்தையைக் கண்டு இன்புற்றான் . பின், இடையர்களாற் காட்டில் , வைப்பு நிதியும் , தன் முன்னோரின் அரியணையும் பெற்றுச் சிவ வழிபாடு புரிந்து , திசைவென்றி குறித்துப் புறப்பட்டு , அமைச்சன் , மாமன்மார்  முதலியோர் உதவியால்  நாற்றிசைக்கண்ணுள்ளாரையும் வென்று புகழோங்கப் பெற்றான் . பின்னர், புதல்வர்ப்பேறு  குறித்து நாதமுனிவர்  உபதேசத்தாற் சிவபிரானை வழிபட்டு  அப்பெருமான் றிருவருளால்  நரவாகன தத்தன்  என்னும் மகனைப் பெற்று இன்புற்றான்.  இதன்பின்  இச்சரிதத்திற்  சிறப்பாகக்  கருதி இன்புறற்பாலது, அமைச்சிலக்கணம் முழுதும் அமையப்பெற்ற பேரறிஞனாகிய யெளகந்தராயணது  சூழ்ச்சித்   திறனேயாகும் . இவன் தன்றலைவன் அரசியல் விரிவுறச் செய்த அரிய செயல்கள்  மிகப் பாராட்டற்பாலன. எரிவாய்ப்பட்டிறந்தாளென்று  வெளிப்படுத்திப் பிரிக்கப்பட்ட வாசவதத்தையைப் பின் அரசற்கு மனைவியாம் நிலையிலுள்ள பதுமாவதியின்  பக்கல் இயைந்தது , அவ் வாசவதத்தையின் அரிய கற்பொழுக்கத்திற்  பின் வேந்தன் ஐயுறாமை கருதியேயாம் . இந்நிகழ்ச்சி  மிக இன்புறற்பாலது. இதன்கண் , அரசர்க்கு வேட்டை யாடன்  முதலியவற்றால்  வருந்தீங்கும் , அறிவிற் சிறந்த அமைச்சர் சொல்வழி நிற்றலால் வரும் நலங்களும் , சிறந்த அமைச்சனின் நுண்ணிய  மதிநுட்பமும்  அரிய சூழ்ச்சி முதலிய செயல்களும் , இடுக்கட்காலத்தும் மகளிர்  கற்பு  மாசுபடலாகா தென்பதும் , ஒருவற்கு அமைந்த இருமனைவியரின் அன்பு கெழீஇய ஒற்றுமையும் , மகளிர்க்கு வேண்டும் உயர்குணங்களும் ,அரசியல் விரிவதற்குச் செயற்பாலன  வின்னவென்பதும்  சிவவழிபாட்டின் பயனும் , அறம் வழாஅநிலையும் பிறவும் புலப்படுவனவாம் .

        இத்தகைய  நலம் பல கனிந்து  திகழும் இச்சரிதம் வடமொழிக்கட்  பல புலவர்களாலும்  காவிய  முதலிய வடிவிற் கூறப்பட்டுள்ளது ; சோமதேவர் என்னுங் கவியாற்  செய்யப்பட்ட கதாசரிற்சாகரம் என்னுங்  கிரந்தத்திலும் , அவர்க்குப் பிரமாணமாக முன்னுள்ள குணாட்டியராற்   செய்யப்பட்ட பிருகற் கதையிலும்  விரித்துரைக்கப்பட்டுள்ளது . காளிதாசர்க்கு முற்பட்ட “ பாசன் “ என்னும் நாடக கவி யியற்றிய “ சொப்பன வாசவதத்தம் “  “பிரதிஞ்ஞாயெள கந்தராயணம் “ என்னும் நாடகங்கள் இச்சரிதப் பகுதிகளையே  நுதலுவன . தமிழிற் பண்டைக் காப்பியமாகிய  “பெருங்கதை” என்பதனுள்ளும் இச்சரிதமே சில வேறுபாட்டுடன்  கூறப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது . அத்தமிழ்ப் பெருங்கதை ,  கிடைத்தற்கரிய பண்டை நூல்களைச் செப்பனிட்டுப்  பல்லாண்டுகளாக வெளிப்படுத்தித் தமிழ்த் தெய்வத்தை அலங்கரித்து வரும் பெரியோராகிய  மகாமகோபாத்தியாய  ஸ்ரீ  வே . சாமி நாடையரவர்களால் ,  பற்பல ஆராய்ச்சிகளுடன் அச்சிடப்பட்டு  வெளிப்படுத்தப்  பட்டுளது . அதன்கண்  இச்சரித இனிமையைத் தமிழ்ச் செய்யுளாகிய  அமுதத்திற்  கண்டு சுவைத்தின்புற்றுக் கதை நிகழ்ச்சியின்  ஒழுங்கையும்  உணர்ந்து  கொள்ளலாம் .

                 பல்லாண்டுகளின் முன்னர் மதுரையினின்று  திங்க டோறும் வெளிப்போந்த “  ஸஹ்ருதயா”  என்னும் வடமொழிப் பத்திரிகையில் , வடமொழிப் புலமை மிக்க பண்டித ஸ்ரீ வே. அனந்தாசாரியவர்களால்  இனிமை மிக்க வடமொழி  வசன வடிவில் எழுதப்பட்டு வெளிவந்த இச்சரிதம் , புதுக்கோட்டை  ஸமஸ்தானத்தைச் சார்ந்த மேலைச் சிவபுரிக்கண்ணுள்ள  சன்மார்க்க சபையாரின் விருப்பின்படி  தமிழில் மொழிபெயர்த் தெழுதப்பட்டது .  

                 இன்னோரன்ன  நற்செயல்களில் ஊக்கித் தமிழுலகுக்குப்  பயன் விளைவித்து வரும் மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையின்  உதவி மிகப்பாராட்டற்பாலது இச்சபை, பற்பல மாணவர்க்குத் தமிழ்க் கல்வி பயிற்றியும், பல பண்டித மணிகளின்  அரிய சொற்பொழிவுகளால்  உலகத்தவரை நன்நெறிப்படுத்தியும்  உதவி வருவதோடு  வடமொழி களிலுள்ள  அரிய நூல்களைத்  தமிழில் வெளிப்படுத்தி அதனாலும் தமிழ் மக்கள்  இன்புறுதற்குரிய   செயலின் முற்பட்டிருப்பது   போற்றற்பாலதே .

                                                                                                                                அன்பன்,

                                                                                                                        மு . கதிரேசன்

                        உதயன சரிதம்  –  பெயர்  விளக்கம்

அகம்பணன் :-  மந்தரதேவ னென்னும்  வித்தியாதரனுடைய  தந்தையான                                இராஜ ரிஷி ;  தன் புதல்வி மந்தர தேவியை நரவாகனதத்தனுக்கு மணஞ் செய்து கொடுத்து அவனுக்கு இடபகிரியில் முடிசூட்டுக்  கொண்டாட்டம் நிறை வேற்றும்படி வித்தியாதரர்களுக்குக் கட்டளை யிட்டவன் .

அங்காரகன் :-   அங்காரவதியின்  தந்தை ; அசுரர் தலைவன் ; தவவன்மை யால்  வச்சிரப்படையாலும் பிளக்கவொண்ணாத  யாக்கையைப்  பெற்றவன். அரச கன்னியர் பலரைப் பணி செய்தற் பொருட்டு  வஞ்சித்துக் கொணர்ந்தவன் . தன் புதல்வி அக்காரவதியினிடத்துக் காதல் கொண்ட  சண்டமகாசேனனால் சிவபிரானை வழிபடுங்காற் கொல்லப்பட்டவன் .

அங்காரவதி :-  சண்டமகாசேனன்  மனைவி .அவனிடத்துக் கொண்ட காதலால்  தன் தந்தை அங்காரகனைக் கொலை செய்தற்கு அம்மன்னன் வழி நின்றவள் . இந்திரனருளால்   வாசவதத்தையை  ஈன்றவள் .

அசிநாவதி :-   நரவாகன தத்தனால்  இருசியமுக மலையில் மணக்கப் பெற்றவள் ; தநவதியின் மகள் ;  இவளைச் சார்ந்தவர்களின்  துணையாலேதான்  நரவாகன தத்தன்  வித்தியாதர சக்கரவர்த்தியானான் .

அத்தினாபுரம் :-   சாதனீகனுக்கு முன்னுள்ள பாண்டவகுல மன்னரிருந்து அரசு செய்த  நகர் . கங்கைக் கரையிலுள்ளது.

அபிமன்யு :-   உதயனன் மரபில் வந்த முன்னோன் ; அருச்சுனனுக்குச் சுபத்திரை வயிற்றிற் பிறந்தவன் ; பரிட்சித்துவின் தந்தை ; பரிட்சித்து  உத்தரை வயிற்றிற் கருவாயிருந்தகாலையில்  பாரதப் போரில் சயந்தனாற் கொல்லப்பட்டவன் .

அயோத்தி :-  உதயனன்  தாயாகிய  மிருகாவதி பிறந்த ஊர் ; கிருதவன்மனின் தலைநகரம் .

அரிசிகன் :-  உருமண்வனின்  புதல்வன் ; நரவாகனதத்தனுடைய  படைத்தலைவன் .

ஆசாடகன் :-  வாசவதத்தையின் யானைப்பாகன் .

ஆசாடபுரம் :- மதனமஞ்சுகையைக் கவர்ந்து சென்ற மானச வேகன் என்னும் வித்தியாதரனின் நகரம் .

ஆவந்திகை :-  வாசவதத்தை பார்ப்பனியாக வேடம் பூண்டு பதுமாவதியின் மருங்கு வசிக்கும் போது கொண்ட பெயர் .

இடபகிரி :-  நரவாகனதத்தனுக்கு  முடிசூட்டு விழா  நடை பெற்ற  இடம் .

இத்தியகன் :-  உதயனனுடைய   வாயில்   காவலரில்   ஒருவன் .

இரத்தினப்பிரபை :-  நரவாகனதத்தன்  மனைவியருள்  ஒருத்தி .

இருசியமூகம் :- ஆசாடபுரத்தினின்று  நரவாகனதத்தனையும்  மதனமஞ்சுகையையும்    வேகவதி   சேர்த்த    இடம் .

இலாணகம் :-  உதயனனுக்குரிய   நகரங்களுள் ஒன்று . பல வகை வளங்களால்    இன்பம்   பயக்கும்   பூம்   பொழில்களையுடையது ; மகத   தேயத்திற்கு   அணித்தாயது .

இன்னிசை :-  உதயனனுடைய  யாழ் ; கோடபதி யெனவும் பெயர் பெறும் ; வசு நேமியென்னும் பாம்பால் உதயனனுக்கு  அளிக்கப்பட்டது .  அவன் வாசவதத்தையின்  அன்பைப் பெறுதற்கு ஏதுவாக இருந்தது .

உச்சயினி :-   வாசவதத்தையின் தந்தையாகிய   சண்டமகாசேனனின்  தலைநகரம் ;  அவந்தி   நாட்டிலுள்ளது .

உதயனன் :-  இவன் இச்சரிதத் தலைவன் ; பாண்டவர் குலத்துப் பிறந்தவன் ; சகச்சீரானீகன்  புதல்வன் ; சமதக்கினி முனிவனால்  உபநயனம் செய்யப்பெற்று எல்லாக் கலைகளையுங்  கற்றுணர்ந்தவன் ; வள்ளன்மை மிக்கவன்; வசுனேமி என்னும்  பாம்பினால் இன்னிசையென்னும்  யாழினைப்  பெற்றவன் . சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்டுச்  சிறைபுகுந்த பொழுது யெளகந்தராயண  னென்னும் தன் முதலமைச்சன் சூழ்ச்சித்திறனால்  அவ்வரசன் புதல்வி வாசவதத்தையோடு  வெளிப்போந்து அவளை மணந்தவன் ;மகத தேசத்து அரசனைத் தனக்கு நட்பாக்க வேண்டி அமைச்சர் செய்த சூழ்ச்சியால்  அவன்  புதல்வி  பதுமாவதியையும்  மணந்து கொண்டவன் ;  தன்முன்னோர்  தம் பொருட் குழுவையும் , அரியணையையும்  நல்லூழாற்  பெற்றவன் ; அமச்சரின்  உபாயத் திறனும் மாமன்மாரிருவர்  தோள்வலியும்  துணயாகக் கொண்டு திக்குவிசயஞ்  செய்து தன் முன்னோர்  வீற்றிருந்த   அரியணைக்கணிருந்து  அரசாண்டவன் ; காமவேளின்  கூறான  நரவாகனதத்தனை  ஈன்றவன் ;  தன்னை விரும்பிவந்த கலிங்கசேனையின் மணத்தால் தீங்கு நிகழுமென்று அமச்சரால்  உணர்ந்து அவள்மீது வைத்த காதலை  யறவே  யொழித்தவன் ;  சூரியோதய காலத்துப் பிறந்தது பற்றி  “உதயனன்” என்னும்  இப்பெயரைப்  பெயற்றானென்பார்  .

உருமண்வான் :-  உதயனனுடைய  அமைச்சருள் ஒருவன் ; சுப்பிரதீகன்  என்னும்  படைத்தலைவனின் புதல்வன் ; யெளகந்தராயணனை யொப்ப  நுண்ணறிவும் போர்த்திறமையும் மிக்கவன் ; சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்ட  உதயனனைச் சிறை மீட்க  யெளகந்தராயணன்  சென்றபொழுது  கெளசாம்பி  நகரைக்  காத்தவன் .

கருப்பூரவதி :-  நரவாகனதத்தனுடைய  மனைவியருள்  ஒருத்தி .

கலிங்கசேனை :-  கலிங்கதத்தனுடைய  மகள் ; உதயனனைக்  காதலித்து  அவனை  மணக்க  எண்ணியிருக்கும்  பொழுது  அவ்வுதயன வேடம் பூண்டு வந்த  மதனவேகனென்னும்   விஞ்சையனால்    மணக்கப்பெற்றவள் .

கலிங்கதத்தன் :-  தக்கசிலை நகருக்குத்  தலைவன் ; கலிங்கசேனையின் தந்தை.

காசி நகர் :-  உதயனனுக்குப்  பகைவனான  பிரமதத்தனுடைய  தலைநகரம் .

காஞ்சனமாலை :- வாசவதத்தையின்   உயிர்த்தோழி .

காமரூபேசுவரன் :- உதயனன் திக்குவிசயஞ்  செய்த  பொழுது  அவனைக்   குடைநிழல்   பெறாத தலையால்   வணங்கி   இறைப்பொருள்  கொடுத்தவன் .

கிருதவன்மன் :-  அயோத்தி அரசன் ; மிருகாவதியின்  தந்தை .

குககன் :-  பகைவனான  பிரமதத்தனது  செயலை  யறிதற்  பொருட்டுக்  காசி நகரைக்  குறித்து யெளகந்தராயணால் அனுப்பப்பட்ட  ஒற்றர்களில்  ஒருவன் ; இவன்  ஆசிரிய  வேடம்  பூண்டு  முக்காலமு  முணர்ந்தவனாக  நடித்து  அப்பிரமதத்தனுடைய மறைபொருள்களை  யெளகந்தராயணுக்கு ஒற்றர்முகமாக அறிவித்துவந்தவன் .

கோபாலகன் :-  சண்டமகாசேனன்  புதல்வரில்  ஒருவன் ; தந்தையின் கட்டளைப்படி  தங்கையாகிய   வாசவதத்தைக்குப்  பாணிக்கிரகண விழாவை  நிறைவேற்றி   வைத்தவன் ; உதயனன்  ஆக்கங்கருதி அவன்  பதுமாவதியை  மணப்பதற்கு  உதவி  செய்தவன் ; அவனால்  விதேக  நாட்டிற்கு  அரசனாக்கப்பட்டவன் .

கோமுகன் :-  இந்தியகன்  புதல்வன் ; நரவாகனதத்தன்  வாயில்  காவலரில்  ஒருவன் .

கெளசாம்பி :-  வற்ச  நாட்டின்  தலை நகரம் ; உதயனன்  பாட்டனாகிய  சதானீகனால்  தலைநகரமாகச்  செய்யப்பட்டது ; யமுனையின் கரையிலுள்ளது ; ஆதியிற்  குசாம்பன்  என்னும்  அரசனால்  உண்டாக்கப்பட்டதனால்  இப்பெயர்  பெற்றதென்பர் .

சகச்சிரானீகன் :-  உதயனன்  தந்தை ; விட்புலஞ் சென்று   இந்திரனால்  உபசரிக்கப்பெற்றவன் ;  திலோத்தமையெனுந்  தெய்வ  மாதினால்  தன் மனைவியைப்  பதினான்கு  யாண்டுகள்  பிரிந்திருக்கும்  சாபத்தைப் பெற்றவன் ;  கருவுற்றிருந்த தன் மனையாள்   தன்னின்  நீங்கிச்  சமதக்கினி  முனிவன்  ஆச்சிரமத்தில்  பதிநான்கு  யாண்டு  நிறைவேறப்பட்ட  புதல்வனோடு   இருக்கின்றாளென்ற  செய்தியைக்  கேட்டு  அங்குச்சென்று   அவர்களோடும்  அரண்மனையை   யடைந்து  அப்புதல்வன்  மாட்டு  அரசியற்  சுமையை  வைத்து  விட்டு  மனைவியுடன்  தவஞ் செய்யச்  சென்றவன் .

சண்டமகாசேனன் :-   அவந்தி  நாட்டு  அரசன் ; வாசவதத்தையின்  தந்தை ; “மகாசேனன்”  என்னும்  இயற்பெயர்  பெற்றவன் ;  சண்டிகைபால்  வரம்  பெறற்   பொருட்டுத்  தலையறுத்தலாகிய   சண்டகன்மத்தைச்  செய்தலால்  இப்புகழ்ப்  பெயரடைந்தான் ; அத் தேவியின்  திருவருளால்   வாட்படை  பெற்றான்; தன்பால்  காதற் கிழமை  பூண்ட  அங்காரவதியின்  துணைகொண்டு   அவள்  தந்தையாகிய  அக்காரகனைக்  கொன்று  அவளை  மணந்தவன்  ;  தன்  புதல்வி  வாசவதத்தையை  மணஞ் செய்விக்க  எண்ணி  உதயனனை  வஞ்சத்தாற்  பிடித்துச்  சிறை வைக்கச்  செய்தவன் .

சாதனீகன் :-   உதயனனுடைய  பாட்டன் ; தன்  முன்னோர்  வாழ்ந்து வந்த  அத்தினாபுரத்தை  விட்டுக்  கெளசாம்பியையடைந்து  வாழ்ந்தவன் ; தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  நிகழ்ந்த  போரில்  துணை செய்தற்பொருட்டு  இந்திரன்  வேண்டச்  சென்று  அசுரர்களோடு  போருஞற்றி   அவர்களாற்  கொல்லப்பட்டவன் .

சமதக்கினி :-  உதயாசலத்தில்  வசித்த  முனிவரிற்  றலைவன் ; கருடனாற்  கவரப்பட்டுத்  தன்னிருக்கை  புகுந்த  மிருகாவதியை  எதிர்காலச்  செய்திகூறித்தேற்றி   ஆதரித்தவன் ; அவள் புதல்வனாகிய  உதயனனுக்கு  உபநயனஞ்  செய்து எல்லாக்  கலைகளையும்  கற்பித்தவன் .

சயசேனன் :-   சண்டமகாசேனன்  தந்தை .

சனமேசயன் :-  உதயனன்  முன்னோர்களில்  ஒருவன் ; பரிட்சித்துவின்  புதல்வன் ; சதானீகனுக்குத்  தந்தை .

சாந்திகரன் :-  உதயனனுடைய  புரோகிதன் .

சாந்திசோமன் :-  பிங்கலிகையின்  புதல்வரில்  ஒருவன் ; நரவாகனதத்தனுடைய  புரோகிதன் .

சிங்கவன்மன் :-    மகததேசத்து  அரசனுடைய  புதல்வன் ; பதுமாவதியின்  சகோதரன் ; உதயனனால்  சேதி நாட்டுக்கு  அரசனாக்கப்பட்டவன் .

சிராவத்தி :-  பிரசேனசித்தின்  நகரம் .

சுப்பிரதீகன் :-  சகச்சிரானீகனுடைய   படைத்தலைவன் ; உருமண்வானின்  தந்தை .

சுரபிதத்தை :-  இந்திரன்  சாபத்தாற்  கலிங்கசேனையாகப்  பிறந்த  ஒரு  தேவமாது .

சேதிநாடு :-  உதயனனால்  பதுமாவதியின்  சகோதரன்  சிங்கவன்மனுக்குக்  கொடுக்கப்பட்டது .

சோமப்பிரபை :-    மாயாசுரனுடைய  மகள் ;  கலிங்கசேனையின்  தோழி ;  அக்கலிங்கசேனை  உதயனன்பால்  காதற்கிழமை  பூணும்படி  அவன்  பெருமைகளை  யெடுத்துக்  கூறியவள் .

செளண்டிலிய முனிவன் :-  உதயனன்  பாட்டனாகிய  சதானீகனுடைய  நண்பன் ; அம்மன்னன்  புதல்வர்ப் பேறு  குறித்து  இரக்கபுதித்ரகாமேட்டி  யென்னும்  வேள்வி  யியற்றினான் .

தக்கசிலை :-    கலிங்கதத்தனது  தலைநகர் .

தபந்தகன் :-  வசந்தகனுடைய  புதல்வன் ; நரவாகனதத்தனின்  விளையாட்டுத்   தோழன் .

தம்பகன் :-  நரவாகனதத்தனுக்கு  வித்தியாதரரால்  தீங்கு  நேரா  வண்ணங்  காப்பதன்  பொருட்டுச்  சிவபிரானால்  அனுப்பப்பட்டவன் .

தநவதி :-     இருசியமூகம்  என்னும்  மலைக்கண்  வசித்த  வித்தியாதரப்பெண்; தன் புதல்வியை  நரவாகனதத்தனுக்குக்  கொடுத்தவள்.

தாராதத்தை :-   கலிங்கதத்தனின்  மனைவி .

தாளபடன் :-  சண்டமகாசேனனின்  வாயி  காவலரில்  ஒருவன் ;  வாசவதத்தையை  வஞ்சித்துக்  கவர்ந்து  சென்ற  உதயனனைத்  தடுக்க  அவனால்  கொல்லப்பெற்றவன்  .

திலோத்தமை :-  நாடகத்  தெய்வமகளிருள்  ஒருத்தி ; சகச்சிரானீகனைச்  சபித்தவள் .

நடைமலை :-  சண்டமகாசேனனது பட்டத்து  யானை .

நரவாகனதத்தன் :-    உதயனனுக்குக்  காமவேளின்  கூறாக  வாசவதத்தையின்பால்  அவதரித்தவன் ; விஞ்ஞையரால்  இடையூறு  நேராவண்ணம்  சிவபிரான்  கட்டளையால்  தம்பகன்  என்னும்  கணத்தலைவனால்  பாதுகாக்கப்பெற்றவன் .  கலிங்கசேனையின்  புதல்வி  மதனமஞ்சுகையையும்  இரத்தினப்பிரபை  முதலிய  மாதர் பலரையும்  மணந்தவன் ; தவவன்மையால்  சிவபிரானிடத்து  நினைத்த அளவில்  எல்லா விச்சைகளும்  விளங்கித்தோன்றுவதான  வரமும் , விமானமும்  பெற்றவன் ; வித்தியாதரர்களுக்குச்   சக்கரவர்த்தியானவன் .

நளகூபரன் :-  சோமப்பிரபையின்  கணவன் .

நன்மசசிவன் :-   சகச்சிரானீகனுடைய  விளையாட்டுத்  தொழிற்கும் , அந்தரங்கக்  காரியங்கட்கும்  உரிய  நண்பன் ; வசந்தகனுடைய  தந்தை ;  இவனுக்கு இப்பெயர்  தொழில்  பற்றிய  பெயர்  போலும் .

பத்திராவதி :-  வாசவதத்தையினது  பெண்யானை  ; இதன்மீதுதான்  அவளை  ஏற்றிக்கொண்டு  உதயனன்  உச்சயினியிலிருந்து  சென்றான் . செல்லுங்கால்  குடிநீரின்  குற்றத்தாலிறந்தது ;  மாயாவதி  யென்னும்  வித்தியாதரப் பெண்  சாபவயத்தால்  இப்  பெண்யானையாயினாள்.

பதுமாவதி :-   மகததேசத்து  அரசனின்  புதல்வி ; உதயனனுடைய  இரண்டாம்  மனைவி ;  சுவைபடப் பேசும்  திறமை மிக்கவள் ;  சபத்தினியாகிய  வாசவதத்தையின்பால்  மிக்க  அன்புள்ளவள்

பரிட்சித்து :-   உதயனன்  மரபில்  முன்னோன் ; அபிமன்யுவின்  புதல்வன் ; சனமேசயன்  தந்தை .

பாலகன் :-    சண்டமகாசேனன்  புதல்வரில்  ஒருவன் ;  தன் உடன்பிறந்தவளாகிய  வாசவதத்தையை  உதயனன்  கவர்ந்து  செல்லுங்கால்  தந்தையால்  ஏவப்பட்டுத்  தடை  செய்தவன் .

பிங்கலிகை :-   புரோகிதனுடைய  சகோதரன்  மனைவி ; இவள்  புதல்வர்  நரவாகனதத்தனுக்குப்  புரோகிதராயினர் .

பிரசேனசித்து :-    சிராவத்தி  நகருக்குத்  தலைவன் .  கலிங்கசேனையை  மணஞ்  செய்விப்பதாக  அவள்  தந்தையால்  கருதப்பட்டவன் .

பிரமதத்தன் :-  காசி  நகரை  யாட்சி  புரிந்த  அரசன்  ;  உதயனன்  பகைவன் ;  அவனோடு  பொருதற்காற்றாது  கையுறைப்  பொருள்  பல  தந்து  அவன்பால்  அடைக்கலம்  புகுந்தவன் .

புளிந்தகன் :-   விந்தியவனத்தில்  வசித்த  வேடர்  தலைவன் ; உதயனன்  நண்பன் ;  அவனையும்  வாசவதத்தையையும்  கள்வர்  துன்புறுத்தா வண்ணம்  தடுத்துத்  தன்  நகரை  யடைவித்து  உபசரித்தவன் .

மகததேசம் :-  பதுமாவதி  தந்தையின்  நாடு . இதன்  தலைநகர்  இராஜகிரியம்  என்ப .

மகாசேனன் :-     சண்டமகாசேனனின்  இயற்பெயர்  .

மகாமாத்திரன் :-   சண்டமகாசேனனுடைய  குதிரைச்சாலைத்  தலைவன் .

மகேந்திரவர்மன் “-  சண்டமகாசேனனுடைய  பாட்டன் .

மதனமஞ்சுகை :-  கலிங்கசேனைக்கு  இரதிதேவியின்  கூறாகப்  பிரமதேவனால்  கொடுக்கப்பட்ட  புதல்வி ; நரவாகனதத்தனின்  பட்டத்தேவி ;  மானசவேகன்  என்னும்  வித்தியதரனால்  விரும்பி  எடுத்துச்  செல்லப்பெற்று  தன் கணவனால்  மீட்கப்பட்டவள் .

மதனவேகன் :-   உதயனன்பாற்  காதற்கிழமை  பூண்ட  கலிங்கசேனையை   அவனுருவந்தாங்கிச்  சென்று   வஞ்சித்து   மணந்த   வித்தியாதரன் .

மந்தரதேவன் :-  இமயமலையின்  வடபால்  வாழ்ந்த  வித்தியாதரர்களுக்குச்  சக்கரவர்த்தி ; நரவாகனதத்தனொடு  பொருது  தன்  தங்கை  வேண்டுகோளின் படி  அவனால்  கொல்லாது  விடப்பட்டவன் .

மந்தரதேவி :-   மந்தரதேவனின்  தங்கை ;  நரவாகனதத்தனை  மணந்தவள்

மருபூதி :-  யெளகந்தராயணனுடைய  புதல்வன் ;  நரவாகனதத்தனுக்கு  அமைச்சனானவன் . 

மாதலி :-   தேவேந்திரனுடைய  சாரதி ; அவனுக்குத்  துணை செய்தற் பொருட்டுச் சென்று அசுரரால் கொல்லப்பட்ட  சதானீகன்  உடலைக்  கெளசாம்பி  நகரத்திற்  சேர்ப்பித்தவன் ; மிருகாவதியின்  பிரிவால்  வருந்திய  சகச்சிரானீகனைத்   திலோத்தமையின்  சாபச் செய்தி  கூறித்  தேற்றியவன் .

மாயாசுரன் :-  சோமப்பிரபையின்  தந்தை .

மாயாவதி :-  ஒரு  வித்தியாதரப்  பெண்  . சாபக்  குற்றத்தால்  பத்திராவதி  யென்னும்  பெண்யானையானவள் .

மானசவேகன் :-  வித்தியாதரரில்  ஒருவன் ; மதனமஞ்சுகையை  விரும்பிக்   கவர்ந்து  சென்று  நரவாகனதத்தனால்  வெல்லப்பட்டவன் .

மிருகாவதி :-   சகச்சிரானீகனுடைய  மனைவி ; அயோத்தி யரசன்  கிருதவன்மனின்  புதல்வி ;  கருவுற்றிருந்த பொழுது  செவ்வரக்கு  நீர்  தோய்ந்த  தன்னுடலை  இறைச்சிப்  பிண்டமாகக்  கருதித்  தன்னைக்  கவர்ந்து  சென்ற  கருடனால்  உதயாசலத்தில்  விடப்பட்டுச்  சமதக்கினி  முனிவனுடைய  ஆச்சிரமத்தை  யடைந்து   உதயனனைப்  பெற்றவள் ;  அப்புதல்வன்  அரசுரிமையை   ஏற்றபின்னர்  கணவனொடு  தவஞ்  செய்யக்  கானகம்  புக்கவள் .

யுகந்தரன் :-  சகச்சிரானீகனுடைய  அமைச்சரில்  ஒருவன்  ; யெளகந்தராயணனுடைய  தந்தை  .

யோககரண்டகன் :-    காசி  நகரத்து  அரசன்  பிரமதத்தனுடைய  முதல்  அமைச்சன் ; உதயனன்  படைகள்  வரும்  வழிகளில்  வஞ்சச்  செயல்கள்  பல  செய்தவன் .  

யோகேசுவரன் :-    உச்சயினி  நகர்க்கணித்தான  சுடலையில்  வாழும்  பிரமராக்கதன்  ;  யெளகந்தராயணன்பால்   நட்புக் கொண்டு  அவனுக்கு  உருவமாற்று  என்னும்  விஞ்சையை  உபதேசித்தவன் ;  கலிங்க சேனையின்  ஒழுக்க  நிலையை  மறைந்து  நின்று  அறிந்து  அவனுக்கு  அறிவித்தவன் .

யெளகந்தராயணன் :-   உதயனனுடைய  முதல் அமைச்சன் ; சூழ்ச்சித் திறமையிலும்   வில்வித்தை  முதலிய  எல்லாக்  கலைகளிலும்  வல்லவன் ; உதயனன்  சண்டமகாசேனனால்  வஞ்சித்துச்சிறைப்படுத்தப்பட்டானென்பது  கேட்டு  வேற்றுருக்கொண்டு  உச்சயினி  யடைந்து  பல  உபாயங்களால்   சிறைச்சாலையினின்றும்   அவன்  வாசவதத்தையோடும்  வெளிப்படும்  வண்ணம்  செய்தவன் ;  அவனுக்கு  வாசவதத்தையை  மணஞ்  செய்வித்ததுமின்றி   மகததேசத்து  அரசன்  நட்பாளனாக்கக்  கருதி  அவன்  மகளையும்  வேட்பித்தவன் ;  பாண்டவர்  குலத்து  அரசர்  வைத்த  நிதித்  திறளையும்  அரியணையையும்  உதயனனை  அடைவித்து   அவன்  அரசியற்றிருவைப்  பெருகச்செய்தவன் .  அவனைக் காதலித்து  வந்த  கலிங்கசேனையின் மனம்  தீங்கு  பயப்பதாகுமெனக்  கருதி  அது  நடைபெறா  வண்ணம்  தடை  செய்தவன் ;  அவ்வுதயனன்  எல்லா  நலங்கட்குங்   காரணம்  இவன்  பெருமுயற்சியே .

வசந்தகன் :-    உதயனனுடைய  அமைச்சரில்  ஒருவன்   சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்ட  உதயனனை  விடுவிக்க  யெளகந்தராயணன்  செய்த  சூழ்ச்சிகட்குத்  துணை  நின்ற  உடலின்  வேற்றுமையால்   விளையாட்டுப்  பொருள்போல  இருந்து  வாசவதத்தையின்  மனத்தை யின்புறுத்தியவன் ;  உதயனன்  பதுமாவதியை  மணப்பதற்கு யெளகந்தராயணன்  செய்த  உபாயத்தின்படி  வாசவதத்தையோடு  தானும்  வேற்றுருக்கொண்டு   பதுமாவதியை  யடைந்து  கணவற்  பிரிவால்   வாசவதத்தை  வருந்தாவண்ணம்  தேற்றியவன் ; கதை பல பொதிந்த  பொருளுரைகளைச்  சுவைபடப்  பேசும்  திறமை  மிக்கவன் .

வசுநேமி  :-  வாசுகியென்னும்  பாம்பின்  தமையன் ; உதயனனால்  வேடனின்றும்  விடுவிக்கப்பட்டு  அவனுக்கு  “இன்னிசை “  யென்னும்  யாழொன்றைக்  கொடுத்தவன் .

வற்சம்  :-  உதயனன்  அரசாண்ட  நாடு ; இதன்  தலைநகரம்  கெளசாம்பி .

வாசவதத்தை  :-  உதயனனுடைய  பட்டத்தேவி ; சண்டமகாசேனனின்  புதல்வி;    இந்திரன் ( வாசவன் ) அருளால்  உதித்தவளாதலின்   இப்பெயர்  பெற்றாள் ; உதயனன்பால்  இசைக்கலை  பயின்றவள் ;  மாலை தொடுத்தல்  முதலிய  முதலிய  கைத்தொழிலிலும்  , சிற்பவேலையிலும்  மிக்க  திறமையுள்ளவள் .  தன்பாலுள்ள  காதலால்  உதயனன்  இராசகாரியத்தை  மறந்தானென்பது  கேட்டு  அவனாக்கங்கருதி   வேற்றுருக் கொண்டு   சிலகாலம்  மறைந்திருந்தவள் ; சபத்தினியாகிய  பதுமாவதிபால்  மிக்க  அன்புள்ளவள் ;  சிவபிரான்  வழிபாட்டால்  காமவேளின்  கூறான  நரவாகனதத்தன்  என்னும்  புதல்வனைப்  பெற்றவள் .  

விண்டுமதி :-   சதானீகனுடைய  மனைவி ; செளண்டிலிய  முனிவன்  ஈந்த  தூயதான  பாயசத்தை   உண்டு  கருத்தரித்துச்  சகச்சிரானீகனைப்  பெற்றவள்;   தேவாசுரர்  போரில்  இந்திரனுக்குத்  துணை  செய்தற்  பொருட்டுச்  சென்று  அவ்வசுரரால்   கொல்லப்பட்ட  தன் கணவன்  பிரிவுக்காற்றாளாய்  அவன்  உடலோடு   சிதைக்கண்ணேறி  உடன்  இறந்துபட்டவள் .

விதேகநாடு :-   உதயனனால்  வாசவத்தை  சகோதரன்  கோபாலகனுக்குக்  கொடுக்கப்பட்டது .

விந்தியபர்வதம் :-   ஒரு  மலை ;  அழகிய  காடுகள்  சூழப்பெற்றது .

வீரபாகு :-  சண்டமகாசேனன்  வாயில்  காவலரில்  ஒருவன் ; வாசவதத்தையை  வஞ்சித்துக் கவர்ந்து சென்ற   உதயனனைத்  தடை  செய்து  அவனாற்  கொல்லப்  பெற்றவன் .

வேகவதி :-  மானசவேகன்  உடன்பிறந்தவள் ; மதனமஞ்சுகையின்  வேடங்  கொண்டு   வந்து  நரவாகனதத்தனை   மணந்தவள் .

வசுவாநரன் :-   பிங்கலிகையின்  புதல்வரில்  ஒருவன் ; நரவானகதத்தனுடைய   புரோதன் .

கணபதி  துணை

உதயன  சரிதம்

முதல்  வகுப்பு

( உதயனன்  பிறப்பு )

 

திங்கண்  மரபு  சிறக்கப்  பிறந்து நலம்

பொங்கு  முதயனன்றன்  பொற்சரிதம் – இங்கினிது

சொல்லு  முறையின்கட்   டோன்றுந்  தமிழ்ப்புலவீர்

பல்லறங்க  ளானும்  பயன் .

           வற்சம்  எனப்  பெயரிய  நாட்டிலே  கெளசாம்பி  எனப்  பெயரிய  நகரம்  ஒன்றிருந்தது . அதன்கண்   , சதானீகன்  என்னும்  அரசன் ஒருவன்  இருந்தான் .அவன்  பாண்டவகுலத்திற்  பிறந்தவன் . சனமேசயன்  புதல்வன் ; பரிட்சித்துவின்  பெளத்திரன் ; அபிமந்நியுவின்  பிரபெளத்திரன் ( பெளத்திரன் மகன் ) அவன் இளம்பருவத்தில்  விண்டுமதி என்னும்  பெண்ணை  மணந்தான்.

     அவன்  ஓர்  அமயத்தில்  வேட்டையாடல்  குறித்து வனத்தை எய்தினான் . ஆண்டு  அவர்க்குச்  செளண்டிலிய  முனிவனோடு  பழக்கமுண்டாயிற்று . அம்முனிவனைப்  புதல்வற்பேறு  குறித்து இரந்தான் . அம்முனிவன்  சதானீகனோடு  கெளசாம்பி  நகரத்தை எய்திப்  புத்திரகாமேட்டி  என்னும்  வேள்வியைச்  செய்தான் . அவ்வேள்வியினின்றும்  “மந்திரங்களாற் றூயதான இப் பாயசத்தை  உண்ணச்செய்”  என்று  அரசனுக்கு  ஈந்தான் .விண்டுமதி அப்பாயசத்தை  உண்டு  கருத்தரித்தாள் .பத்தாந் திங்களில்  ஒரு மகனைப் பெற்றாள் . அரசன் அப் புதல்வற்குச்  சகச்சிரானீகன்  என்று  பெயரிட்டான் .  பின்னர்  முறையே  சகச்சிரானீகன்  பாலப்பருவத்தைக்  கடந்து இளவரசனாயினான் . 

         அப்பொழுது  விண்ணுலகில் , தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  போர்  உண்டாயிற்று . அப்போரில்  விட்புலவேந்தன்  தனக்குத்  துணை செய்தற்பொருட்டுச்  சதானீகனை  அழைத்தான் .  சதாநீகன்  அரசியற் சுமையை  யுகந்தரன்  என்னும்  பெயரினையுடைய  அமைச்சன்பால்  வைத்து  அமரருலகு  எய்தினான் .  ஆண்டு , இயமதமிட்டிரன்  முதலிய  அரசர்கலோடு போருஞற்றி  அவர்களாற்  கொல்லப்பட்டான் . இந்திரனுடைய  சாரதியாகிய   மாதலி  சதானீகன்  உடலைத்  தேரிலேற்றிக்  கெளசாம்பி  நகரத்தை  அடைவித்தான் .  விண்டுமதி  அஞ்சத்தக்க  அக் கொடுந்  துன்பத்தை  ஆற்றாளாய்த்  தலைவனோடு   சிதைக்கண்  ஏறி ( சிதை –  சுடலைக்கண்  அடுக்கும்   விறகு  ) உடனிறந்தாள் .  சகச்சிரானீகன்  தந்தைக்குச்  செய்ய வேண்டிய  இறுதிக்கடன்களை   நிறைவேற்றித்  தாதையினது  அரியணையில்  வீற்றிருந்தான் . 

             இதற்கிடையில்  , தேவர்களுக்கும்  அசுரர்களுக்கும்  நிகழ்ந்த   போரில்  தேவேந்திரன்  வெற்றி  அடைந்தான் .  அதன்  பின்னர்த்  தன்  நண்பனுடைய  புதல்வனாகிய  சகச்சிரானீகனை  அழைத்துப்  பலவாறு  உபசரித்தான் .  அவ்வமயம்  உரையாடிக்கொண்டிருக்குங்கால்“அயோத்தியில் கிருதவன்மன்  என்னும்  பெயரினையுடைய  அரசன்  ஒருவனுளன் . அவற்கு  மிருகாவதி என்னும்  பெண்மணி  ஒருத்தி  இருக்கின்றாள் . சகச்சிரானீகன்  அதனைக் கேட்டு  அப்பொழுதே  மிருகாவதியினிடத்து  மகவும்  காதற்கிழமையுடை யனாயினான்  அதன் பின்  விண்ணவர்  இறைபால்  விடைபெற்றுக்  கொண்டு  அவன்  தேரின்கண்ணே  ஏறி  கெளசாம்பி  நகரைக்  குறித்துப்  புறப்பட்டான்.  மிருகாவதியை  நெஞ்சத்தில்  இருத்திச்  செல்கின்ற  சகச்சிரானீகனை  இடைவழியில்  திலோத்தமை  கண்டு  , “அரச ! கணப்பொழுது நின்று  எனது சொல்  ஒன்றைக் கேட்டு  அதன்பின்  செல்வாயாக “  என்று  கூறினால் . சகச்சிரானீகன்  அதனைச்  செவியேற்றிலன் . அதனாற்  சினமுற்ற  திலோதமை , சகச்சிரானீகனை  நோக்கி  , “ எவளிடத்துக்  காதலாற்  செலுத்திய  நெஞ்சத்தையுடையவனாய்   என் சொல்லைச்  செவிக் கொள்ளாமல்   விரைந்து  செல்லுகின்றாயோ  அவளிடத்தினின்றும்   பதினான்கு யாண்டுகள்  பிரிவுத் துன்பத்தை  அனுபவிப்பாய்  “  என்று  இவ்வாறு  சபித்தாள் . இச்சாபத்தையும்  வேரொன்றைப்  பற்றிய  மனத்தினையுடைய  அரசன்  கேட்டிலன் , தேவேந்திர  சாரதியாகிய  மாதலி  மாத்திரம்  கேட்டான் .

            சகச்சிரானீகன் , கெளசாம்பி  நகரத்தை  எய்தி விட்புல நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும்   அமைச்சர்களுக்குத்  தெரிவித்தான் .  அதன்பின்  அயோத்தியின்  தலைவனாகிய  கிருதவன்  மன்பால் தூதனைப்  போக்கினான். ( தூதர் :  தலை , கடையென மூவகைப்படுவர் . இவருட்  சத்திவிக்கிரகங்கட்கு   வேற்று  வேந்தரிடைச்  செல்லுங்கால்  , தானே  வகுத்துக்  கூறுபவன்  தலையாவான் .  கூறியது  கூறுவோன்  இடையாவான்.  ஓலை  கொடுத்து  நிற்போன்  கடையாவான் .  இம்முறை  வடநூலுட்   கூறப்படுவதாகும் . திருக்குறள்  தூது  என்னும்  அதிகாரத்தில்  ‘ கடனறிந்து ‘  என்னுந்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையையும்  நோக்குக . இச்சரிதத்திற்  பின்னும்  தூதன்  என  வருமிடங்கடோறும் இவ்வாறு  பகுத்துணர்க )  . கிருதவன்மன்  தன் மகளாகிய   மிருகாவதியின்பால்  சகச்சிரானீகனுக்குள்ள  காதற்கிழமை யைக் , கோப்பெருந்தேவிக்கு  அறிவுறுத்தான்.  அவள்  “தேவ !  மிருகாவதிக்கும்  சகச்சிரானீகனுக்குமுள்ள  மணமக்களாந்  தன்மை  மிகவும்  பொருத்த மானதே . விரைந்து இவ்விருவருக்கும்  மணம்  நிகழும் .  இப்பொருளையே  ஓர்  அமயம்  ஓர்  அந்தணன்  கனவிற்  போந்து  எற்கு  அறிவுறுத்தான் . “  என்று  இங்ஙனம்  கூறினாள் . கோப்பெருந்தேவியின்  இச்சொற்களைக் கேட்டு க் கிருதவன்மன்  மகிழ்ச்சியுடையனாய்த்  தூதன்முகமாக  “ என்  புதல்வி  மிருகாவதி  முன்னரே  நின்னைக்  காதலித்தாள் .  நுங்கள்  இருவீரது  ஒத்த  காதற் கிழமையைக்  கேட்டால்  இப்பொழுது  யான்  பயனுடையனாயினேன் . ஆதலின் , காலந்  தாழ்த்தலின்றி  இவண்  வந்து  மணவினையை  நிறைவேற்றல்  வேண்டும் “  என்று  இவ்வாறு  மறுமொழி  கூறி விடுத்தாள்

                  பின்னர் , சின்னாட்  சென்று  மிருகாவதி  கருத்தரித்தாள்  அவளுக்கு  முகம்  வெண்ணிறமுற்றது;  இடை  பருமை  யெய்தியது .  ஓர்  அமயம்  அவள்  கணவன்பால்  எய்தி ,  “நாத ! சிவந்தநீர்  நிரம்பிய  தடாகத்தில்  நீராடுதற்கு  விரும்புகின்றேன் “  என்று  தன்  கருப்ப  கால  வேட்கையை  இவ்வாறு  தெரிவித்தாள் .  உயர்ந்த  அறவோனும்  , உயிர்களுக்குத்  தீங்கு  செய்ய  விரும்பாதவனும்  ஆகிய  சகச்சிரானீகன்  , செவ்வரக்கு  முதலியவைகளாலாய  நீரால்  நிரம்பிய  தடாகம்  ஒன்றை  நிருமாணித்து  அவளுக்குக்  காட்டினான் .  அவள் அத்தடாகத்தில்  நீராடினால்  . நீர்  மூழ்கி  எழுந்த  மிருகாவதியினது  உடல்  செவ்வரக்கு  நீர்  தோய்ந்தமையால்  இறைச்சிப்பிண்டத்தை  யொப்ப  விளங்கியது . அப்பொழுது  விண்ணிற்  பறந்து திரியும்  பருந்து  அவளைப்பார்த்து  இஃது  இறைச்சிப்பிண்டம்  என்னுங்கருத்தால்  மூக்கினால்  கெளவிக்கொண்டு  உயரப்பறந்தது .  அதனைக் கண்ணுற்ற  அரசன்  துன்பக்கடலுள்  மூழ்கி  மயக்கமுற்று  வீழ்ந்தான் . அத்தகைய  அவனது நிலையை யோகவன்மையால்  மாதலி  யுணர்ந்து , விண்ணுலகினின்றும்  இறங்கி  , அரசனை  நோக்கி  ,”அரச ! முன்னரே  நீ  விண்ணுலகினின்றும்  நிலவுலகத்தை அடையுங்கால் திலோத்தமை  நின்னைக்  கண்டாள் ;  நின்னோடு  சிறிது அளவளாவுதற்கு   விரும்பி  நின்ற  அவளைப்  பொருட்படுத்தாமல்  மிருகாவதியின்பால்  வைத்த அவா  நிறைந்த  மனத்தினனாய்  விரைந்து  போந்தனை ; அதனாற்  சினமுற்ற  அவள்  நின்னைச்  சபித்தாள் ;  அச்சாபத்தால்  இப்பிரிவுத் துன்பம்  நேர்ந்தது பதினான்கு யாண்டுகள்  பிரிவுத்துன்பத்தை  நுகர்ந்து அதன்மேல்  மிருகாவதியோடு  சேருவாய்  “   என்றிவ்வாறு  கூறினான் .

              இங்ஙனம்  மாதலியால்  தேற்றப்பட்ட  சகச்சிரானீகன்  ,மிருகாவதியின்  பிரிவை  மிக அறிதிற்  பொறுத்து ,  “உயிர் வாழ்க்கை  யுளமகற்கு  யாண்டு  பல  கடந்தும்  இன்பம்  உறுமால் “  என்னும்  முதுமொழியை நினைவு  கூர்ந்து  மனத்திட்பத்தால்  உயிர்  தாங்கினான் .

                மிருகாவதியை  மூக்கினாற்  கவர்ந்து  உயரப் பறந்து சென்ற  கலுழன் (கருடன்)  உறுப்புக்களின்  இயக்கத்தால் இவள்  இறச்சிப்பிண்டம்  அல்லள் ; உயிருடன்  கூடிய  மானிடப்பெண்  என்று  அறிந்து அவளை  உதயாசலத்தின்   சாரலில்  விடுத்தது .  பறவை  மூக்கினின்றும்  விடுபட்ட  அம்மிருகாவதி , துணையின்றி  யாரும்  அடைதற்கரிய  மலைப்பக்கத்தில்  இருக்கும்  தன்னை நோக்கி  மிகவும்  அச்சமுற்று  வாய்திறந்து  கதறினாள் .  அவ்வமயம்  பன்னாளாகப்   பசியுற்றிருக்கும்  ஒரு  பெரும்பாம்பு  அவளை  விழுங்குதற்குத்  தொடங்கிற்று .  அவ்விடத்தில்  எதிர்பாராது  அடைந்த  ஒரு  மனிதன்  அப் பாம்பை   அம்புகளாற்  கொன்று  மிருகாவதியைக்  காத்தனன் . அதன்பின், அவள்  அத்தகைய  துன்பத்தை  ஆற்றாதவளாய்  உயிர்விடுதலே  நலமெனத்  துணிந்து  அவ்விடத்தில்  தன்  விருப்பின்  வண்ணந்  தடையின்றித்  திரியும்   ஒரு  மதயானையின்  முன்னிலையிற்  சென்று  நின்றாள் . அவ் யானை  தமியளாய்  நிற்கும்  அபலையாகிய  அப்பெண்ணை  நோக்கி  அருளுடைய  யானை  யொப்ப  விளங்கி  அவளைத்  தன்  துதிக்கை  நுனியால்  மெல்லிதாகத்  தடவிற்று .  

                 பின்னர் , அம்மிருகாவதி  கருப்பச்சுமையால்  துன்புற்று  ஆங்குள்ள  அருவியின்பக்கல்  அடைந்து  துன்பமிகுதியாற்  புலம்பினாள் . ஆண்டு ,  அணிமைக்கண்ணுள்ள  முனிவர் இருக்கையினின்றும்  ஒரு  தாபத  குமாரன்  வந்து அவளைக்  கண்டான் . அவன்  அவளது துன்பகாரணத்தைக்  கேட்டு  அநாதையாகிய  அவளைக்  கருனைகூர்ந்து  சமதக்கினி  முனிவனது  இருக்கையை  அடைவித்தான் . நிறைந்த  கருப்பச்சுமையாற்  சிரமமுற்றவளும்  வேறு  புகலில்லாதவளுமாகிய  அம்மிருகாவதி  பிரம  தேசசால்  அக்கினியைப்போற்   றிகழ்கின்ற  பெரியோனாகிய  அம்முனிவன்  பாதங்களில்  வனங்கினாள் .  அம் முனிபுங்கவன்  அவளது  துன்ப  காரணத்தை  மனவொருக்கத்தால்  உணர்ந்து அவளை  நோக்கி  , “குழந்தாய்  !  வருந்தற்க  ;  சின்னாள்  இவ்வாச்சிரமத்திலேயே  இருப்பாயாக ; எல்லா அழகும்  வாய்ந்த  புதல்வன்  பிறப்பான் ; சமீப  காலத்திலேயே  தலைவன்பக்கல்  அடைவாய் “ என்றிவ்வாறு  தேற்றினான் .மிருகாவதி  அச்சொற்களைத்  தலைவணங்கியேற்று  அவ்  வாச்சிரமத்திலேயே  தங்கினாள் . பின்னர், பேறு  கால  நிறைவில்  சக்கரவர்த்தியின்  எழில்  வாய்ந்த  புதல்வன்  ஒருவனைப்  பெற்றாள்  .  அவன்  பிறந்த  சமயத்தில்  , ஆகாயத்தில்  அசரீரியாக, “நங்காய்!  மிருகாவதி ! உதயனன்  என்னும்  பெயர்  வாய்ந்த  நின்னுடைய  இப்புதல்வன்  எல்லாவுலகங்களிலும்  புகழ்   விளங்கப்பெற்ற  சக்கரவர்த்தியாவான் “  என்னுஞ்  சொற்கள்  எழுந்தன . அவற்றைக் கேட்டு மிருகாவதி பெருமகிழ்ச்சியையும்  வியப்பையும்  அடைந்தாள் .

                                                       வெண்பா

கணவற்  பிரிந்தமிரு  காவதியோர்  காட்டிற்

றணவின்  முனியிருக்கை  சார்ந்தங்  — கணியிர்

றிகழு  முதயனனாஞ்  சேய்மணியைப்  பெற்றாள்

புகழுந்  திருவின்  புற .

                                                       ————

இரண்டாம்  வகுப்பு

( உதயனன்  அரசியற்றிருவெய்தல்)

பின்னர்ச்  சமதக்கினி  முனிவன்  அப்புதல்வனுக்குச்  சாதகன்மம்  முதலிய  எல்லாக்  கிரியைகளையும்  அவ்வக்  காலங்களிற்  செய்தான் . சிறுவனாகிய  உதயனன்  ஒத்த  பருவமுள்ள  முனிகுமாரர்களோடு   கூடிச்  சிறுவர்க்குரிய  விளையாடல்களைச்   செய்து  முறையாகக்  குழவிப்பருவத் தைக்  கடந்தான் .  அதன்பின் , அம்முனிவர்  பெருமானாலேயே    உபநயனம்  செய்யப்  பெற்று  அவன்பானின்றே  எல்லாக்  கலையுங்  கற்றுணர்ந்தான் .  முறையாகப்  பதினான்கு  வித்தைகளிலும்  வில்வித்தையிலும்  கரைகண்டவ னாயினான் ; ஓர் அமயம்  மிருகாவதி  நிறைமதி  போற்  கண்களுக்கு  இன்பத்தை  விளைவிக்கின்ற  புதல்வனைப்  பார்த்து  , அன்பு  நிறைந்த  மனத்தினளாய்  சகச்சிரானீகனது  பெயர்  குறிக்கப்பட்டுத்  தன் கையில்  அணிந்திருக்கின்ற  வளையலை  அப்புதல்வன்  கையில்  இட்டாள் .  அதன்பின்  ஒரு  நாள்  , உதயனன்  வேட்டையாடல்  குறித்துக்  காடுகளிற் றிரிந்து  ஒரு  பாம்பை  வலிந்து  இழுத்துக்கொண்டு  நிற்கும்  ஓர்  மனிதனைப்  பார்த்தான் . பாம்பினது  அத்துன்ப  நிலையை  நோக்கி  அருளுடையனாகிய  அவ்வுதயனன்  , வேடனைப்பார்த்து  ,  “ஒரு  குற்றமில்லாத  இப்பாம்பை  எதர்காகத்  துன்புறுத்துகின்றாய் ?  இதனை  விடல்  வேண்டும் ; இது  தன்  விருப்பின்படிச்  செல்க “  என்று  இங்ஙனங்   கூறினான் .  அவ் வேடன்  ,  “குமாரா !  யான்  வறியவன் ;  இதுவே  என்  வாழ்க்கைத்  தொழில் ;  மந்திரவன்மையாலும்  ,  பச்சிலைகளின்  பெருமையாலும்  இவ்விடத்திற்  பாம்புகள்  கிடைத்தர் கரியவாயின ;  நெடு நாளாக  இதனைத்  தேடிப்  பெற்றேன் ;  ஆதலின்  இதனை  விட்டு  எங்ஙனஞ்  சீவிப்பேன் ?” என்று  இங்ஙனம்  மறுமொழி  கூறினான் . 

                  இதனை  வள்ளற்றன்மையினையுடைய  உதயனன்   கேட்டுத்  தாய்  உதவிய  காப்பைக்  கையினின்றும்  கழற்றி  வேடனுக்குக்  கொடுத்து , “இக்காப்பை  வாழ்க்கைக்குரியதாக் கொண்டு  இதனை  விடுவாயாக “  என்று  கூறினான் . அவ்வேடன்  காப்பைப்பெற்று  மகிழ்ச்சி  யுடையவனாய்ப்  பாம்பய்விட்டு  அப்புதல்வனது  வள்ளற்  றன்மையைக்  கண்டு  வியந்து  தன் விருப்பின்  வண்ணஞ்  சென்றான் .

           அதன்பின் , அப்பாம்பு  உதயனனை  வணங்கி  மக்கள்  கூறுஞ்  சொற்களால்  “குமார !  யான்  வாசுகியின்  தமையனாகிய  வசுனேமி  என்னும்  பெயரினையுடையேன்  . என்பால்  “இன்னிசை”  என்னும்  பெயரினை  யுடைய  யாழ்  ஒன்று  இருக்கின்றது . அதனைப்  பெற்றுக்  கொள்வாயாக “  என்று  இங்ஙனம்  கூறிற்று  .  உதயனன்  “அங்ஙனமேயாக”  என்று  சொல்லி  அவ்யாழைப்  பெற்றுக்கொண்டான்.  வசுனேமி  உதயனன்பால்  விடைபெற்றுத்  தன்  இருப்பிடஞ்  சென்றது .  உதயனனும்  தாயின்  பக்கல்  எய்தி   இவ் வெல்லா  நிகழ்ச்சிகளையும்  தெரிவித்தான் .  மிருகாவதி  அவர்க்கு  இளமைப்பருவத்தே  இயற்கையினமைந்த  வள்ளற் றன்மையை  மகிழ்ந்து  பாராட்டினாள் .

             பின்னர் , வேடன்  அக்காப்பை  விற்றற்  பொருட்டுக்  கெளசாம்பி  நகரத்தை  அடைந்தான் . அவ் விடத்திற்  சகச்சிரானீகனது  பெயர் குறித்த  அக்காப்பைக்  கண்டு  அரசன்  காவலாளர்  , அவ்வேடனை  அரசன்  பக்கல்  கொணர்ந்தனர் .”நீ  இக்காப்பை  எவ்வாறு  அடைந்தாய் “  என்று  அரசன்  கேட்க ,  வேடன் , நிகழ்ந்த  எல்லாவற்றையும்  விளங்கக்  கூறினான் . அப் பொழுது  அசரீரிமொழி  “அரச!  நின்னைப்பற்றிய  சாபத்தின்  ஒழிவு காலம்  நெருங்கிவிட்டது .  நின்  கோப்பெருந்தேவியாகிய  மிருகாவதி  உதயாசலத்தின்  பக்கத்திலுள்ள  சமதக்கினி   முனிவனது  ஆச்சிரமத்திற்  பதினான்கு யாண்டு  நிறைவேறப் பெற்ற  நின்  அருமைப்புதல்வனோடு  சுகமாகத்  தங்கியிருக்கின்றாள் . “ என்று  இங்ஙனம்  எழுந்தது  .  அதனைக் கேட்டுச்  சகச்சிரானீகன்  முகில்  ஒலி  கேட்ட  மயில்  போல  மிகப்பெரு  மகிழ்ச்சியுடையனாயினன் .

              பின்னர் ,  அப்பொழுதே  படை வீரர்கள்  சூழப்  புறப்பட்டு  அவ்வேடன்   வழி  காட்ட  உதயாசலத்தை  அடைந்தான் .  ஆச்சிரமத்திற்கு  இடையூறு  உண்டாகாத  வண்ணம்   படைகளைச்  சேய்மைக்கண்ணே  நிறுத்தித்  தான்  தமியனாகவே  ஆசிசிரமத்தின்  உட்புகுந்து  சமதக்கினி  முனிவனைத்  தரிசித்து  வணங்கினான்  .  அம்முனிவன்  அரசற்கு  வாழ்த்துரைகூறி  நலம்  வினவினன் .  பின்னர்ப்  புதல்வனோடு  மிருகாவதியை  ஈந்தான் .  அவளைக்கண்டு  சகச்சிரானீகன்  பெரிதும்  இன்புற்றான் . இத்துனைக் காலம்  வரையும்  காணாத  தன்  அருமைப்புதல்வனை   விரைந்திழுத்துத்  தழுவி  உச்சி  மோந்து  உடல்  புளகமுற   இன்பக்கடலுண்  மூழ்கினவனாயினான் .பின்னர், முனிவன்பால்  விடைபெற்று  மிருகாவதி , உதயனன் , இவர்களோடு  கெளசாம்பி  நகரத்தை  நோக்கிப்  புறப்பட்டான் .   பதினான்கு  யாண்டுகளிலும் தான்  அநுபவித்த  நிலைகளைத்  தன்  காதலிக்கு  அறிவுறுத்தும் , அவள்  நிலையைத்  தான்  கேட்டும்  நெடுந்தூரமான  வழியைச்  சிரமம்  தோன்றா  வண்ணங்  கடந்தான் .  அப்பொழுது  கெளசாம்பி  நகரத்தில்  வாழ்கின்ற  மக்கள்  எல்லோரும்  தோரணம்  முதலியவைகளால்  நகரத்தை  அலங்கரித்தனர்  . தெருக்கடோறும்  நீர்  தெளித்தனர்  .  சந்தனம்  அகில்  முதலியவற்றின்  புகைகளாற்  எல்லாப்  பக்கங்களிலும்  மணங்கமழச்  செய்தனர் . இல்லங்களின்  வாயில்கடோறும்  நிறை  குடங்களை  வைத்தனர் . பலவகை  வாத்தியங்களை  முழக்குவித்தனர் . மங்களவாழ்த்துரைப் போராகிய   அந்தணர்களை  முன்னிட்டு  அமச்சரனைவரும்  , நகரத்து  மக்கள்  எல்லோரும்  அவனை  எதிர்கொண்டு  வரவேற்றனர்  .இங்ஙனம்  நகரத்து  மக்களால்  மிக்க  குதூகலத்துடன்  வரவேற்க்கப்பட்ட  சகச்சிரானீகன்  , புதல்வனோடும்  பெருந்தேவியோடும்   நகரத்துட்  புகுந்து  தன்  அரண்மனைக் கண்   அடைந்தான் .அதன்பின் , முறையாக  இளமைப்  பருவத்தினையடைந்த  உதயனன்  இளவரசன் ஆயினான் . அவற்கு  “யெளகந்தராயணன்” ,  “உருமண்வான்” , “வசந்தகன்”  என்னும்  மூவரும்  அமைச்சராயினர்  .  பின்னர்த்தன்  புதல்வன்  உலகாட்சியில்  , தகுதிவாய்ந்திருத்தலை  யுணர்ந்து  சகச்சிரானீகன், அப்புதல்வன் மாட்டே  அரசியற்  சுமை எல்லாவற்றையும்  வைத்துவிட்டு  மிருகவதியோடு தவஞ்  செய்தற் பொருட்டு  இமயமலையை  எய்தினான்.

வெண்பா  

மன்னுங்   கலையனைத்து   மாமுனிவன்  பாற்பயின்றங்

கின்னிசையாம்  யாழும்  இனிதேற்றே  — யன்னையொடு

தந்தை    யுறைவிடத்தைச்    சார்ந்தங்       கரியணையின்

மைந்த  னிவர்ந்தான்   மகிழ்ந்து

மூன்றாம்  வகுப்பு.

(வாசவதத்தை  பிறப்பு)

                உதயனன்  தந்தையினது  அரியணைக்கண்  வீற்றிருந்து  அறனெறி  கடவாது  குடிகளைப்  புரந்தான் . குடிகளும் அவன்  தந்தையிடத்துப்  போல  அவனிடத்தும்  அன்பு  பூண்டு  ஒழுகினர் . இங்ஙனம்  பன்னாட்கழிந்ததும்  யெளகந்தராயணன்  முதலிய  மந்திரிகள்பால்  அரசியற் சுமையை  வைத்துவிட்டுச்  சுகமாக  இருந்தான் . வசுநேமி  என்னும்  பாம்பு  தந்த  “இன்னிசை”  எனப்  பெயரிய  யாழை  இடைவிடாது  வாசித்துக்கொண்டி ருந்தான் .  வனங்களிற்சென்று  வேட்டை  யாடுவதில்  மிகவும்  குதூகலமுடைய வனாயினான் .  இன்னிசை  என்னும்  யாழின்  ஒலியால்  வயப்பட்ட  காட்டியானைகளைக்  கவர்ந்தான் . இங்ஙனம்  பல்வகை  விளையாடற்களாற்  றன்  மனத்தை  இன்புறுத்தி  வருகின்ற  வற்சதேயத்தரசனாகிய  உதயனன்  ஓர்  அமயம்  “இத்துணைக்  காலம்வரையும்  எனக்கு  எல்லாவகையானும்  ஒத்த  மனைவி  வாய்த்திலள் . வாசவதத்தை   என்பாளைக்  குலத்தாலும்  , ஒழுக்கத்தாலும்  , உருவத்தாலும்  பருவத்தாலும்  எனக்கு  ஒத்தவளாகக்  கேட்கின்றேன் . அவள்  என்  பகைவனும்  உச்சயினி  நகரத்தரசனும்  ஆகிய  சண்டமகாசேனன்  புதல்வியாவாள்  ,  ஆதலின்  அவளை  எங்ஙனம்  அடைவேன்  “  என்று  இங்ஙனம்  மனத்தாற்  சிந்தித்தான் . அவ்வமயத்திலேயே  சண்டமகாசேனனும்  “என்  புதல்வியாகிய  வாசவதத்தை  மங்கைப்பருவம்  எய்தினாள் . வற்சதேயத்தரசனே  யன்றிப்  பிறனொருவன்  அவளுக்கு  ஒத்த  கணவனாகக்  காணப்பட்டிலேன். அவ்வுதயனனோ  என்  பகைவனாவான் . எங்ஙனம்  என்பான்  மகட்கோடலை  அங்கீகரிப்பான்? மேலும்  அவன்  மானத்தையே  பொருளாக  உடையான் ; பெரிய  வீரன் ; உலோபம்  முதலிய  குற்றங்களால்  சிறிதும்  பற்றப்படாதவன் ;  நகரத்து  மக்களாலும்  அமைச்சர்களாலும்  மிகவும்  அன்பு  செய்யப்பட்டவன் .  ஆதலின் , அவனைச்  சமாதானம்  முதலிய  உபாயங்களால்  வயப்படுத்துதற்கு  இயலாது . இப்பொழுது  யாது  செயற்பாலது ?” என்று  இங்ஙனம்  மனத்தாற்  சிந்தித்தான்.நெடுநேரம்  சூழ்ந்து  முடிவில்  “வற்சதேயத்தரசன்   வேட்டை யாடுதலிலேயே  பற்றுடையனாய்  இடைவிடாது  தமியனாகவே  காட்டில்  திரிகின்றான் . விசேடமாகக்  காட்டியானைகளைப்  பிடிப்பதில் அவாவுடையனாகக்  காணப்படுகின்றான் . ஆதலின்  , அவனைப்  பொறியான்  இயன்ற  யானையால்  வயமாக்குவேன் . பின்னர் , அவன்பால்  இசை பயிலுதற்பொருட்டு  என் புதல்வியாகிய  வாசவதத்தையை  நியமனஞ்  செய்வேன் . அவன்  அவள்பாற்  காதலுடையனாவான் . உதயனனை  மருகனாகப்  பெறுதற்கு  இதனையன்றி  வேறு  வழியின்று”  என்று  இங்ஙனந்  துனிந்தான் .

                   இவ்வாறு  துணிவுற்றுச்  சண்டமகாசேனன்  சண்டிகையின்  கோயிலை  அடைந்து  தேவியை  வணங்கி  “எனது  வேண்டுகோளை  நிறைவேற்றியருள்க  “  என்று  வேண்டினான் .  அப்பொழுது  அசரீரிமொழி  , “அரச! நின்  விருப்பம்  நிறைவேறும்  ; கவலுதல்  ஒழிக “  என்று  கேட்கப்பட்டது சண்டமகாசேனன்  இதனைக் கேட்டுப்  பெரிதும்  மகிழ்ந்து  அப்பொழுதே  தூதனை  யழைத்து  , “கெளசாம்பி  நகரத்தையடைந்து  வற்சராசன்பாற்  சென்று , “நீ  இசைத்  தொழிலில்   மிகவும்  நிபுணன்  என்பது  அறிந்ததொன்றே; என் புதல்வி  வாசவதத்தை  நின்பால்  இசைபயில  விரும்புகின்றாள் ;  ஆதலின், என்பால்  நட்புலதேல்  இங்கு  வந்து  வாசவதத்தையை  நன்கு  பயிற்றல்  வேண்டும் “  என்று  கட்டளையிட்டான் .  தூதன்  கெளசாம்பி  நகரத்தை  யடைந்து  அங்ஙனமே  தெரிவித்தான் .

                   உதயனன்  பகைவன்  விடுத்த  பொருத்தமில்லாத  செய்திகளைக்  கேட்டு  யெளகந்தராயணனை  யழைத்து  மறைவிடத்திலிருந்து  , “அமைச்ச!  எக்காரணத்தாற்  சண்டமகாசேனன்  இங்ஙனம்  தூது  விடுத்தான் . செருக்கினாலா!  அன்றி  வேறு  கருத்தாலா !  ஆராய்தல்  வேண்டும்  “  என்று  இங்ஙனம்  கூறினான் .  பேரறிஞனாகிய  யெளகந்தராயணன்  வற்சநாயகனது   நலங்குரித்து, “வேந்தர்  பெரும!  நீ  வேட்டையாடுதலிலும்  ,இசைபயிலுதலிலும்   மிகவும்  பற்றுடையவன்  என்பது  எல்லாராலும்  அறிந்ததன்றே !  சண்டமகாசேனன்  தன்  பெண்மணியால்  நின்னை  வயப்படுத்தற்கு  முயல்கின்றான்  . எவன்  வேட்டையாடன்  முதலியவைகளில்  மிக்க  பற்று  வைத்திருக்கின்றானோ  அவன் , குழியில்  வீழ்த்திப்  பிடிக்கப்படும்  காட்டியானையைப்போலப்  பிறன்கைப்பட்டுப்  பெரிதும்  துன்பத்தை  அநுபவிப்பான்  .  ஆதலின் ,  இனி  வேட்டையாடன்  முதலியவைகளில்  வைத்திருக்கும்   அவாவை  விட்டொழிப்பாயாக “  என்று  இவ்வாறு  மறுமொழி  கூறினான் . இதனைக் கேட்ட  வற்சர்தலைவன்   சண்டமகாசேனனுடைய  தூதனை  நோக்கி  , “செல்!  நின்  தலைவன்பால் ;  ‘நின்  புதல்வி  இசைக்கலை  பயிலுதற்கு   விரும்புவாளாயின்  ,அவளை  ஈண்டுச்  சேர்ப்பிப்பாயாக; அவளைப் பயிற்றுவேன் ‘  என்று  இங்ஙனம்  யான்  கூறியதாகத்  தெரிவிக்கவேண்டும்”  என்று  கட்டளை  யிட்டான் . உதயனன்  இங்ஙனம்  மறுமொழி  கூறித்  தூதனபோக்கி ச்  சண்டமகாசேனன்பாற்  பெரிதுஞ்  சினமுடையனாயினான்.  அப்பொழுதே  அவனோடு  பொருதற்கு  விரும்பினான் . அவ்வமயம்  யெளகந்தராயணன்  “அரச!  இது  செய்தற்கு  ஒல்லாதது ; தக்கதும்  இன்று .  சண்டமகாசேனனோ , நின்னோடு  உறவுகோடலை  விருப்புகின்றான் ;  அவன்  பெருமையைக்  கேட்பாயாக .  “உச்சயினி  நகரத்தில்  மகேந்திரவன்மன்  என்னும்  பெயரினையுடைய  அரசன்  ஒருவன்  உளன் .  அவற்கு  ,  சயசேனன்  எனப்  பெயரிய  புதல்வன்  இருந்தான் .  அவற்குப்  புதல்வனாக  மகாசேனன்  தோன்றினான் . அவன்  ஆண்மையிலும்  , திண்மையிலும்  தன்னை  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாதபடி  இவ்வுலகத்தைக்  காவல்புரிந்தான் ;  அவன்  ஓர்  அமயம்  , ‘எனக்கு  ஒத்த  இல்லாளையும்   வாட்படையையும் , எவ்வாறு  அடைவேன்?  என்று  இங்ஙனம்  சிந்தித்தான் . அம்மனைவியையும்  வாட்படையையும்  பெறுதற்பொருட்டுச்  சண்டிகையின்  கோயிலையடைந்து  அவ்வம்மையை  வணங்கி  அவ்விடத்திலேயே  பன்னாளாகச்  செய்தற்கரிய தவத்தைச்  செய்தான். தவ  முடிவில்  ,  தன்றலையை  அறுத்துத்  தீங்கட் பெய்தான் ; அப்பொழுது  அருண்மிக்க  சண்டிகை  அவன்  கண்ணெதிரிற்  றோன்றினாள் ;  அவளை  மகாசேனன்  தரிசித்து  விரைந்தெழுந்து வணக்கம்  புரிந்து  கைகூப்பி  நின்றான்  ; சண்டிகாதேவி  அவனைப்  பார்த்து , “வேந்தே !  இத்தகைய  அருளுடையளாயினேன் ; இவ்வாட்படையைப்  பெற்றுக்கொள் வாயாக ; இதனால் , நீ  பகைவர்களான்  வெள்ளப்படாதவன்  ஆவாய் ; இன்னும்  அங்காரகன்  என்னும்  பெயரினை யுடைய  அசுரர் தலைவன்  ஒருவன்  உளன்; அவற்கு  அங்காரவதி  யென்னும்  பெயரினை யுடைய  பெண்மணி  ஒருத்தி  இருக்கின்றாள் ; அவள்   நின்  மனைவியாவாள் . நீ  என்பால்  வரங்கோடற்  பொருட்டுத்  தலையறுத்தலாகிய  சண்டகன்மத்தைச்  செய்தமையால்  ,  சண்டமகாசேனன்  என்னும்  புகழ்ப்  பெயரை  அடைவாயாக”  என்று  கூறி  அவ்வம்மை  மறைந்துவிட்டாள் .

                சண்டமகாசேனன் , தன்  அவா  பயனுறப்பெற்று  மிக்க  மகிழ்ச்சி யடைந்தான் .  அவற்கு   முன்னரே  ஒப்பற்றா மதயானை  ஒன்றுளது . இப்பொழுது  சண்டிகாதேவியின்  திருவருளால்  வாட்படையும்  கிடைத்தது .  ஆதலின் , பகைவர்களால்  அச்சுறுத்தப்படாதவன்  ஆயினான் .

                  பின்னர்,  ஓர் அமயம்  ,  சண்டமகாசேனன்  வேட்டை  யாடல்  குறித்துக்  காட்டினை  யடைந்தான் ;  அக்காட்டில்  மலையை  ஒத்த  உருவினையுடைய  ஒரு  பன்றியைக்  கண்டான் ; அது  மிக்க  சீற்றத்தோடு  அரசனை  நோக்கி  விரைந்து  ஓடி  வந்தது . அஃது  அரசன்  உய்த்த  கூரிய  பகழிகளால்  உயிர்  நிலை  உறுப்புக்கள்  அடிக்கப்பட்டும்  , அத் துன்பத்தைப்  பொருட்படுத்தாது  ,  அவன்  தேரைச்  சிதறச்செய்து  துகளாக்கியது.  அதன்பின்  ஒரு  பிலத்தின்  உட்புகுந்தது . நேர்  ஒழிந்து  காலாட்படையினை  மாத்திரம்  உடைய  அரசன்  ஆற்றொண்ணாச்  சினத்தால்  அப்பன்றியைப்  பின்றொடர்ந்து  பிலத்தினுட்  புகுந்தான் ; பன்றியோ  சிறிது  தூரம்  சென்று  காணப்படாததாயிற்று .  சண்டமகாசேனன்  அங்குமிங்கும்  பார்த்து  அகன்ற  ஒரு  காட்டினை  யடைந்தான் ;  ஆண்டு   வியப்புடையனாய்ச்  சுற்றித்  திரிந்து  மலையையொத்த  மதில்சூழ்ந்த  நகரம்  ஒன்றைக்  கண்டான் ; அந் நகரத்தின்  புறத்தே  உள்ள  உத்தியானவனத்தில்  தெளிந்த  நீர்ப்  பெருக்கினையுடைய  ஒரு  தடாகம்  இருந்தது .  அதன்  கறையிற்  சிறிது நேரம்   இருந்து  வழிநடத்தலால்  உண்டாகிய  இளைப்பைப்  போக்கினான் ,  அவ்வமயம்  அவ்விடத்தே  ,  மன்மதனது  வெற்றித்  திருவினை  யொத்து  விளங்கிப்  பற்பல  தோழிகளும்  பணிப்பெண்களும்  புடைசூழ  வருகின்ற  ஒரு  நங்கையைக்  கண்டான் ; அவள் , சேய்மைக்கண்ணே  சண்டமகாசேனனைக்  கண்டு  மிக்க  காதற்பெருக்கால்  இமைத்தலின்றி  அவனையே  உற்று  நோக்கினவளாய்  மெல்ல  மெல்ல  நடந்து  அவன்பக்கல்  எய்தினாள்.  எய்தி,  “நீ  யார்? எங்கு  வந்தனை?  யாது  செய்ய  விரும்புகின்றனை?”  என்று  வினவினாள் . சண்டமகாசேனன்  , தன்  வரலாறு  முழுவதையும், உள்ளவாறு  தெரிவித்தான்அதனைக் கேட்டு  அப்பெண்மணி  , ஒரு  காரணமுமின்றிப்  போந்த  துன்பமுடையாளாய்க்  கண்களினின்றும்  நீர்  ஒழுக  அழத்  தொடங்கினாள் .  சண்டமகாசேனன்  ,  “நீ  யார் ? எவன்  மகள் ?  எதற்காக  அழுகின்றனை? “என்று  கேட்டாள் .  அவள்,  “பெரியோய்!  கேட்பாயாக ;  நின்னாற்  பன்றியுருவமாகக்  காணப்பட்டவன்  அங்காரகன் என்னும்  பெயரினையுடைய  அசுரர்  தலைவன் ஆவான் .  யான்  அவன்  புதல்வி ; அங்காரவதி   யென்னும்  பெயரினையுடையேன் ; கண்ட  அளவினானே  நின்பாற்  காதற்  கிழமையுடையளாயினேன்; அத்தகைய  என்  தந்தை  தவவன்மையால்  வச்சிரப்  படையாலும்  பிளக்க வொண்ணாத  உடலினைப்  பெற்றான்  ;  பல  அரசர்களுடைய  உவளங்களினின்றும்  பல  பெண்மணிகளை  எற்குப்  பணிசெய்தற்பொருட்டுக்  கொணர்ந்தான்;  அவன்  இப்பொழுது  பசி  தாகங்களால்  வாட்டமுற்று  உறங்குகின்றான்.  உறக்கத்தினின்றும்  எழுந்து   நின்னைக் காண்பானாயின்  , நிச்சயமாகக்  கொன்றுவிடுவான் ;  விரைவில்  நேரக்கூடிய  நின்கேட்டைக்  கண்டு  மிகவும்  வருந்துகின்றேன் “  என்று  இங்ஙனம்  கூறினான் . 

                    இவ்வாறு  கூறிய  அங்காரவதியின்  சொற்களைக்  கேட்டுச்  சண்டமகாசேனன்  அவளை  நோக்கி , “ நங்காய் !  அஞ்சற்க.  வருவன  வந்தே  தீரும் ;  என்பால்  அன்புளதேல்  என்  சொல்வழி  நிற்பாயாக;  எப்பொழுது  இவன்  தூக்கம்  நீங்கி  விழிக்கின்றானோ  அப்பொழுது நீ  அவன்  முன்னின்று  கண்ணீர்  உதிர்ந்து  அழல்வேண்டும்  ;  அவன்  அவசியம்  நின்  துன்ப  காரணம்  யாது  என்று  வினவுவான் ; அவனை  நோக்கி  “தந்தையே  !  நின்னினும்  வலியனாகிய  ஒருவன்  போந்து  நின்னைக்  கொன்று  விடுவானாயின்   அப்பொழுது  யான்  அநாதையாக  நின்று  என்செய்வல்? “  என்று  மறு  மொழி  கூறுக :  அதனைக் கேட்டு  அவன்  கூறும்  மறுமொழியை  என்பால்  தெரிவித்தல்  வேண்டும்  ; அதன்மேல்  நினக்கும்  எனக்கும்  நலம்  உண்டாம்,”  என்று , இங்ஙனம்  கூறினான் .  இதனைக் கேட்டு  அங்காரவதி ,  “அங்ஙனமே  செய்வல்”  என்று  உடன்பட்டாள்.

                       காமவேளின்  ஏவலால்  தந்தையின்  கொலையிலும்  பெண்கள்  முயல்கின்றனர் என்னும்  இந்நிகழ்ச்சியால்  உலகத்தீர்  !  அம் மன்மதனது  கொடுமையை  உணர்வீர்களாக .

                         அதன்பின்னர் , அவள்  தன்  தந்தையால்  சண்டமகாசேனனுக்குக்  கேடுவருங்கொலோ  என்னும்  ஐயமுடையவளாய்  அவனை  ஒரு  மறைவிடத்திற்  காத்து  வைத்துத்  தூங்குகின்ற  தந்தையின்  பக்கல்  எய்தி  ,அவன்  விழிக்கும்  அமயத்தை  எதிர்பார்த்து  நின்றாள் .

                           அதன்பின்  சிறிது நேரம்  சென்றதும்   துயில்  நீத்தெழுந்த  அங்காரகன்  கண்களை  விழித்துத்  தன்  முன்னிலையிற்  கண்ணீர்  ஒழுக நிற்கின்ற  அங்காரவதியைக்  கண்டான் . “எதற்காக  இங்ஙனம்  அழுகின்றனை !”  என்று  கேட்ப,  “ஐயா!  நின்னினும்  வலிய  வீரன்  ஒருவன்  போந்து  நின்னைக் கொன்று  விடுவானாயின்  ,  அப்பொழுது  எற்குப்  புகலிடம்  யாதாம்? “  என்று  கூறினாள் .  அங்காரகன்  அதனைக்  கேட்டு  நகை செய்து , “குழந்தாய்”  என்  உடல்  முழுதும்  வச்சிர  மயம்  என்பதை அறிந்திலாய்கொல்?  மேலும்  என்  இடக்கையில்  நுண்ணிய  துளை  ஒன்று  உள்ளது ; அதன்கண்  அடிவிழுமாயின்  எனக்கு  இறப்பு  நேரும் .  என்னையன்றி  வேறொருவற்கும்  இது  தெரியாது  .இங்ஙனமிருக்குங்கால்   என்னைக்கொல்லுதற்கு  யாவன்  வலியுடையவன்  ஆவான்’   ஆதலின்  நீ  துன்புறுதல்  ஒழிவாயாக”  என்று  கூறினான் . 

                           இவ்வாறு  இவன்  கூறிய   மொழிகளை  மறைந்து  நின்ற  சண்டமகாசேனன்  கேட்டான் ..  அதன்பின்  அப்பொழுதே  அங்காரகன்  படுக்கையினின்றெழுந்து  நீராடி  முக்கண்ணனாகிய  சிவபிரானுக்குப்  பூசைசெய்யத்  தொடங்கினான் .  அவ்வமயத்தையே  பார்த்துச்  சண்டமகாசேனன்  வில்லின்கண்  அம்பைப்  பூட்டி  அங்காரகனைப்  போர்க்கழைத்தான்  .  அப்பொழுது  அங்காரகன்  மெளனவிரதத்தை  ஒழிக்க  விருப்பமற்றவனாய்த்  தனதிடக்கையைத்  தூக்கிநீட்டி,  “சிறிது  தாழ்த்தலைப்  பொறுத்திருத்தல்  வேண்டும்”  என்று  குறிப்பில்  தெரிவித்தான் சண்டமகாசேனன்  இதுவே  நல்லசமயம்  என்றெண்ணி  விரைந்து  அக்கையில்  அம்புகளைப்  பொழிந்தான் .உயிர்நிலைத்   தானத்தில்  அடிக்கப்பட்ட  அங்காரகன்  உயிர்துறந்தான்.  அதன்பின் , சண்டமகாசேனன்  அச்சமற்று  அங்காரவதியை  மணந்து  உச்சயினி  நகரத்தை  நோக்கித்  திரும்பினான் .சின்னாட்  சென்றதும்  அங்காரவதி  , பாலகன்  கோபாலன்  என்னும்  இரண்டு  புதல்வர்களைப்  பெற்றாள்.  பின்  ஓர்  அமயம்  சண்டமகாசேனன்  இந்திரனுக்குப்  பெரும்  விழாச்  செய்தான். அதனான்  மகிழ்ந்த  இந்திரன்  கண்  எதிரில்  வெளிப்பட்டுச்  சண்டமகாசேனனை  நோக்கி , “வேந்தே”  நின்பால்  மிகவும்  மகிழ்ச்சியுடையனாயினேன். ஆதலின் , என்  அருளால்  உருவத்திலும்  ,  குணத்திலும்  ஒப்புவமையற்ற  பெண் மகவை  யடைவாய்”  என்று  கூறினான் .  அங்ஙனமே  அவற்கு  ஒருபெண்மணி  பிறந்தாள் .  அப்பெண்  மகவு  பிறக்குங்கால்  விண்ணில்  அசரீரியாக  “இப்  பெண்மணியின்  வயிற்றிற்  காமவேளின்  கூறாக  ஒரு  புதல்வன்  உண்டாவான் . அவன்  வித்தியாதரர்களின்  சக்கரவர்த்தியாவான் “  என்னும்  சொற்கள்  எழுந்தன.  சண்டமகாசேனன்  அச்சொற்களைக்  கேட்டுப்  பெருமகிழ்ச்சி யெய்தினான் .  அதன்பின்  ,  வாசவன்  அருளாற்   றரப்பட்டமை யான்  அவளுக்கு  வாசவதத்தை  என்னும்  காரணப்  பெயரிட்டான் .  அப்பெண்  முற்பக்கத்துத்  திங்களஞ் செல்வன்  கலைபோல  முறையே  உறுப்புக்கள்  வளரப்பெற்றுத்  தந்தையின்  கண்களை  இன்புறுத்தினாள் . 

                          இங்ஙனம்  மிக்க  பெருமையினையுடைய  சண்டமகாசேனன்  எய்தற்கரிய  வலிமையுடைமையால்  அச்சமிலனாய்  எப்பொழுதும்  பிறரால்  வெல்லுதற்கு  அரியனாயினான்  .மேலும்  இவன்  தன்மகளை  நினக்குத்  தருதற்கு  விரும்புகின்றான் .  ஆயினும்  மானத்தால்  இரத்தற்  கேடு  வருங்கொலோ  வென்னும்  “அச்சத்தால்  முதலில்  வேண்டிக்  கோடற்கு  விரும்பவில்லை  .  வாசவதத்தைக்கு  நீயே  மணவாளன்  ஆவாய்  என்னு  மிதங்கட்  சிறிதும்  ஐயமின்று”  என்று  இங்ஙனம்  கூறி  யெளகந்தராயணன்  ஒழிவெய்தினான். இதனைக் கேட்டு  உதயனன்  வாசவதத்தையையே   இடைவிடாது  நினைவு கூர்ந்து  சில  நாட்களைக்  கழித்தான் .

வெண்பா

விண்ணோ  ரிறையருளான்  மேதினியி  லுஞ்சைநகர்க்

கண்ணா  ரெழிலெல்லை  காட்டுதல்போ —  னண்ணிய

வாசவ  தத்தை  வரலாற்  கேட்டின்ப

மாசலதி  தோய்ந்தான்  மனம் .   

நாங்காம்  வகுப்பு

(சிறைப்படல்)

               இஃது   இங்ஙனமிருக்க  வற்சதேயத்  தரசனது  தூது  மொழியை  ஏற்றுக்கொண்டு  உச்சயினி  நகரத்தை  யடைந்த  தூதன்  ,  உதயனன்  ஈந்த  மறுமொழியைச்  சண்டமகாசேனன்  பக்கல்  உள்ளவாறு  தெரிவித்தான் .  அதனைக்  கேட்ட  சண்டமகாசேனன்  “மானமுடையாரில்  தலைசிறந்தவன்  உதயனன்  .  நம்  வேண்டுகோளை  ஏற்றுக்கொள்ளான்  .  வாசவதத்தையை  அவன்பக்கல்  அனுப்புவேமாயின்  ,  அது  நம்மை  மிகவும்  சிறுமைப்படுத்துவ தாகும்  .ஆதலின்  , இப்பொழுது  வேறு  சூழ்ச்சிகளால்  உதயனனை  நம்  வயப்படுத்துதலே  தக்கதாகும் . “  என்று  இவ்வாறு  கருதினான் .  இங்ஙனந்  துணிந்து  படைத்தலைவனையழைத்து   “மிகப்பெரியதொரு  எந்திரயானை யைச்  செய்விப்பாயாக”  என்று  கட்டளையிட்டான் .  அப்படைத்  தலைவன்   நிபுணர்களான  சிற்பிகளாற்  பொறிக்களிறு  ஒன்றை  இயற்றுவித்தான்  .  சண்டமகாசேனன்  பொறியான்  இயன்ற  யானையின்  உள்ளே  பல  போர்வீரர்களை  மறைத்துவைத்து  வித்தியவனத்தில்  திரியச்செய்தான் .  யானை  பிடிப்பதில்  மிக்க  அவாவுடையனாகிய  உதயனன்பால்  வேடர்கள்  வந்து  “வேந்தர் பெரும!  விந்தியவனத்தில்  பெரிய  உருவத்தினையுடைய  மதயானை  ஒன்று  திரிகின்றது ; இத்தகைய  யானை  இதுகாறும்  எங்களான்  முன்னர்க்  காணப்படாத  தொன்று.  பெரிய  உருவத்தால்  மலைபோலக்  காணப்படுகின்றது . “  என்று  இங்ஙனந்  தெரிவித்தனர் .  இதனைக் கேட்டு  உதயனன்  பேருவகையால்  அவ்வேடவர்களுக்கு  நூறு  பொற்காசுகளைப்  பரிசிலாக  உதவினான் .  பின்னர்ச்  “சண்டமகாசேனனுக்கு ‘நடைமலை’  என்னும்  பெரிய  மதயானை  ஒன்று  இருக்கின்றது .  அதற்கு  எதிராக  இவ்யானையைக் கொணர்வேன் .  அதனாற்  சண்டமகாசேனன்  எளிதில்  வெல்லுதற்கு  உரியன்  ஆவான் “  என்று  இவ்வாறு  மனத்திற்  கருதினான் . 

                இங்ஙனம் , மனத்தின்கண்  அவாவை  மேற்கொண்டு  பிற்றைநாட்  காலையில்  அமைச்சர்கள்  தடுத்தும்  கேளானாய்  யானையைக்  கவர்தற்  பொருட்டு  வேடர்கள்  சூழ்வரச்  சென்றான் .  அமைச்சர்கள்  கணிதம்  வல்லோரை  யழைத்து  ,அவன்  புறப்பட்ட  நேரத்தின்  பயனை  வினவினர் . அக்கணிகன் , “சிறைக்கோட்டம்  புகுந்து  ஒரு  பெண்ணை  அடைவான் “ என்று  தெரிவித்தனர்  .விந்திய  வனத்தை  யடைந்த  வற்சர்  தலைவன்  படைவீரர்களைக்  கண்டு  கலக்கமுற்று  யானை  ஓடிவிடும்  என்னும்  ஐயத்தால்  அவ்வீரர்களைச்  சேய்மைக்கண்ணே   நிறுத்திச்  சில  ஏவலாளர்கள்  சூழ்ந்துவரச்  சுற்றினான். வசுநேமியாற்  றரப்பட்ட  “இன்னிசை”  எனப்  பெயரிய  யாழைக்  கேட்டற்கு  இனிமை  பயக்குமாறு  வாசித்துக்கொண்டு  உதயனன்  காட்டின்  இடையே  உயிருள்ள  யானையைப்போல  மெல்ல  மெல்லத்  திரிகின்ற  பொறியானையைக் கண்டான் .

                   உதயனன்  மிகக்  கூறிய  அறிஞனாயினும்  மாலைக் காலத்து  இருளாற்  கரிய  நிறத்தினையுடைய  காட்டில்  அம்மாயக்களிற்றை  உயிருள்ள  யானையாக  எண்ணி மெல்ல  மெல்லச்  சென்று  அதன்  பக்கலையடைந்தான். அப்பொறி யானையோ  காதுக்கு  இனிமை  பயக்கும்  அவ்  யாழிசையால் இழுக்கப்பட்டது  போல  முறம்  போன்ற  காதுகளை  மிகவும்  உயர  எடுத்து  மீண்டும்  மீண்டும்  பக்கல்  அணுகியும் , தூரச்சென்றும்  மனிதர் இல்லாத  அக்காட்டில்  அரசனை  நெடுந்தூரம்  ஈர்த்தது .முடிவில், அப்பொறியானை யினுள்ளே  யிருக்கின்ற  போர்வீரர்கள்  அரசன்  துணையில்லா திருத்தலை யுணர்ந்து  விரைந்து  வெளிப்பட்டு  வாட்படை  ஏந்திய  கையினராய்  நாற்புறமுஞ் சூழ்ந்தனர் . அவர்களை  வற்சர் தலைவன்  பார்த்துச்  சினமுற்று  உறையினின் றெடுத்த  வாளினால்  அவ்வெல்லோரையும்  வீழ்த்தினான் . இதற்கிடையில்  அக்காட்டிலுள்ள  புதரில்  மறைந்திருந்த  வேறு  சில  போர்வீரர்கள்  விரைந்து  ஓடிவந்து  பிற்பக்கத்தே  பிடித்துக்கொண்டனர் .  ஆங்காங்கு மறைந்திருக்கின்ற  பல  போர்வீரர்கள்  மேன்மேலும்  குறிப்பான்  அழைக்கப்பட்டு  ஓடிவந்து  அவனைப்  பிணித்துச்  சண்டமகாசேனன்  பக்கல்  சேர்த்தனர் . சண்டமகாசேனன்  வற்சர்தலைவனைச்  சிறப்பாகப்  பெருமைப்படுத்தி  அன்போடு  உபசரித்தான் .  பின்னர் , “ வேந்தே!  நின்  மனத்தில்   துன்புறல்  ஒழிக.  நின்பால்  எனக்குப்  பகையின்று.  என்  புதல்வி  வாசவதத்தை  இசைக்கலை  பயிலுதற்கு  விருப்பமுடையவளாக  இருக்கின்றாள் .  அவளைப்  பயிற்றுவித்தல்  வேண்டும் .  அதன்பின்,  நலம்  எய்துவாய்  “  என்று  இங்ஙனம்  கூறினான் .

               உச்சயினி  நகரத்திலுள்ள  மக்கள்  உதயனன் பாற்  பெரிதும்  அன்பு பூண்டு  ஒழுகினர் .  அதன்பின்  சண்டமகாசேனன்  ஒரு  சமயம்  உதயனனுக்கு  அமங்கலத்தைச்  செய்யவுங்கூடுமென்று  ஐயமுற்றமனத்தினராய்  ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர் .  இங்ஙனம்  நகரத்து  மக்களிடைப்  பெருகிவரும்  ஐயப்பாட்டைச்  சண்டமகாசேனன்  , ஒற்றர்களால்  உணர்ந்து  , அவர்களையழைத்து   “எனக்கு  வற்சர்தலைவன்பாற்  பகைமையின்று . அவனோடு  நட்புரிமை  கோடற்கே  இவ்வுபாயம்  என்னான் மேற்கொள்ளப் பட்டது . ஆதலின் , என்பால்  நுங்கட்கு  வேறு  வகையான  வேறுபாடு  வேண்டா”  என்று  இவ்வாறு  தெரிவித்தான் . பின்னர்ச்  சண்டமகாசேனனால்  ஏவப்பட்ட  வாசவதத்தை  உதயனன்  பக்கல்  எய்தி  இசைக்கலை  பயிலுதற்குத்  தொடங்கினாள் .  வாசவதத்தை  வற்சராசன்  இவ்விருவர்பாலும்  முன்னரே  முளைத்தெழுந்த   காதற்கிழமையானது    இப்பொழுது    துளிர்த்தெழுந்தது .

வெண்பா

பொறியா  நியன்ற  புழைக்கைமா  வீர்ப்ப

நெறியா  ருதயனன்சீர்  நீங்காச்  —  சிறைசேர்பு

மாசிரியுங்  காதன்  மடவரற்கி  யாழ்பயிற்றும்

ஆசிரிய  னாயினா   னங்கு .

ஐந்தாம்  வகுப்பு

(சிறை  வீடல்)

இதற்கிடையில்  , கெளசாம்பி  நகரத்தில்  “உதயனன், பகைவனாகிய  சண்டமகாசேனன்  கையில்  அகப்பட்டான்”  என்று  பெரிய  கிளர்ச்சி  உண்டாயிற்று .  அப்பொழுதே  படைகளைச் செலுத்தி  உச்சயினி  நகரத்தைத்  தாக்க வேண்டும் “  என்று  நனாபக்கங்களிலும்  நகரத்து  மக்கள்  பேரொலி  செய்தனர் .  அப்பொழுது  அமைச்சர்களுள்  ஒருவனாகிய  உருமண்வான்  எல்லோரையிம்  அழைத்துச்  “சண்டமகாசேனனைப்  படைகளால்  வெற்றிகோடல்  அரிது .  அவன்  சண்டகாதேவியின்  திருவருளால்  அளவற்ற  வலிமையை  அடைந்துளான் .இன்னும்  உச்சயினி  நகரத்தை  எதிர்த்துச்செல்லுவேமாயின்  அவன்  ஒருவாறு  உதயனனுக்குக்  கேடு  விளைவிக்கக்கூடும்  . ஆதலின் , இப்பொழுது  எதிர்த்துச்  சேறல்  தக்கதன்று  இக்காரியம்  நன்கு  ஆராய்ந்து  நுண்ணறிவாற்  சாதிக்கத்தக்கது,”  என்று  இங்ஙனம்  கூறினான்.  அதன்பின்  நுண்ணறிவுடைய  யெளகந்தராயணன்  “ஓ நகரத்தவர்களே !  நீங்கள்  எல்லோரும்  இவ்விடத்திலேயே  இருத்தல்  வேண்டும்.  உருமண்வான்  அரசியற்  காரியங்க ளெல்லாவற்றையும்  பார்த்துக்கொள்ளுவான் . யானோ  வசந்தகனைத்  துணையாகக்  கொண்டு  இவ் விடத்தினின்றும்  புறப்பட்டு  என்  அறிவின்  மாட்சியால் உதயனனைப்  பகைவன்  கையினின்றும்  விடுவித்து  இங்குக்கொணர்வேன் .  இதன்கட்   சிறிதும்  ஐயமின்று  . வேண்டுங் காலத்தில்  வெளிப்படுத்துதற்குரிய  மறைத்துக்கோடன்  முதலிய  விஞ்சைகள்  என்பால்  இருக்கின்றன “  என்று  இவ்வாறு  சொல்லினான்  .  இங்ஙனம்  சொல்லிவிட்டு   யெளகந்தராயணன்  எல்லோரையும்  உருமண்வான்  கையிற்  சேர்த்து  வசந்தகனோடு  உச்சயினி  நகரத்தை  நோக்கிப்  புறப்பட்டான் .  விந்திய  வனத்திற்குச்   சென்று  உதயனனுடைய  அன்புமிக்க  நண்பனாகிய  “புளிந்தகன்”  என்னும்  பெயரினையுடைய  வேடர்  தலைவனைக்  கண்டான் .  அவ்வேடன்  யெளகந்த ராயணனை  விருந்தினர் முறையில்  உபசரித்தான் .  யெளகந்தராயணன்,  தான்  செய்ய  விரும்பிய  காரியங்கள்  எல்லாவற்றையும்  அவர்க்குச்  சொன்னான் .  முடிவில்  “வற்சர்  தலைவன்  மீண்டுவருங்கால்  அவனை  நீ  காத்தல்  வேண்டும்  .  பெரிய  படைவீரர்களோடு  நீ  இவ்விடத்திலேயே  விழிப்புடையவனாக  இருத்தல்  வேண்டும் . ,”  என்று  இங்ஙனம்  வேண்டினான். புளிந்தகன்  ,  “அங்ஙனமேயாக “  என்று  உடன்பட்டான் .  அதன்பின், யெளகந்தராயணன்  வசந்தகனோடு  புறப்பட்டு  உச்சயினி  நகரத்திற்கு  அணிமையில்  அடைந்தான் ,  அவ்விடத்தில்  அஞ்சத்தக்க  உருவினையுடைய  பலவகை  வேதாளங்கள்  சூழ்ந்த  சுடலையுட்  புகுந்தான் .  அங்கு  “யோகேசுவரன்”   என்னும்  பெயரினையுடைய  வேதாளம்  ஒன்று  யெளகந்தராயணனுக்கு  நன்புடையதாயிற்று .  யெளகந்தராயணன்  வேண்டு கோட்கிணங்கி   யோகேசுவரன்  “உருவமாற்று”  என்னும்  பெயரினையுடைய  விஞ்சையை  அவற்கு  உபதேசித்தது .  அவ்விஞ்சையால்  அப்பொழுதே  வேற்றுருக்கொண்ட  யெளகந்தராயணன்  ,  யாண்டு  முதிர்வும்  குறுமையும்  பிறழ்ச்சியுணர்வும்  உடையவனாயினான்.  அவ்விஞ்சையாலேயே  வசந்தகனையும்  பருத்த  வயிறும்  வேறுபட்ட  முகமும்  உடையவனாகச்  செய்தான். அவனை  வாயிலின்கண்  நிறுத்தி  யெளகந்தராயணன்  அரண்மனையினுட்  புகுந்தான் .  அந் நகரத்துள்ள  சிறுவர்  எல்லோரும்  யெளகந்தராயணனை  மருளன்  என்று  எண்ணிக்  கைகொட்டிப்  பேரொலி  செய்து  சூழ்ந்தனர் .  அதற்கு  ஒத்தவாறே  யெளகந்தராயணனும்  ஆடிப்பாடி  அச்சிறார்களுக்குக்  குதூகலத்தை  விளைவித்தான் . இதனை  வாசவதத்தை  கேட்டுத்  தோழியை  உய்த்து  யெளகந்தராயணனை  உவளகத்திற்  கொணர்வித்தாள் .  

                பித்த  வேடங்கொண்ட  யெளகந்தராயணன்  அவ்விடத்திற்  பகைவன்  வயப்பட்டிருக்கின்ற  உதயனனைக்  கண்டு  நேத்திரங்களினின்றும்  மிகவும் கண்ணீர்  ஒழுக்கினான் . உதயனன் , அவயவக்  குறிப்புக்களால்  யெளகந்தராயணனை  வேற்றுருவில்  மறைந்திருப்பவனாக   அறிந்தான் . அதன்பின் , யெளகந்தராயணன்  விரைந்து  யோக  வன்மையால்  அவ்விடத்திலேயே  மறைந்திருந்தான் . உதயனற்கு  மாத்திரம்  கண்ணுக்குப்  புலனாமாறு  இருந்தான்  .  அங்குள்ள  எல்லோரும்  “இப்பித்தன்  யாண்டுச்  சென்றான் “  என்று  வியப்பெய்தினர் .  உதயனன்,  யெளகந்தராயணன்  தன்  கட்புலனுக்கு  மாத்திரம்  தெரிய  இருத்தலைக் கண்டு  ,  அவனொடு  அளவளாவிப்  பேசுதற்கு  உரிய  அவகாசம்  எய்துதற்கு  வாசவதத்தையை  நோக்கிப்  “பனுவலாட்டி (சரசுவதி) பூசைக்குறிய  பொருள்களைக்  கொணர்க”  என்று  கட்டளையிட்டான் . அவள், “அங்ஙனமே”  என்று  தோழிகளோடு  புறம்  போந்தாள் .

                    இதற்கிடையில்  யெளகந்தராயணன்  ‘விலங்குமுறித்த்சல்’   “வாசவதத்தையை வசீகரித்தல்”  இவை  முதலிய  யொக விஞ்சையின்  திறமைகளை  உதயனற்கு  உபதேசித்து  ,  வேற்றுருக்கொண்டு  வாயிலின் கண்  இருக்கின்ற  வசந்தகனையும்  தெரிவித்து  விரைவில்  வெளிச்சென்றான்.

                       பின்னர் , வாசவதத்தை  பூசைக்குரிய  உபகரணங்களை  எடுத்துக் கொண்டு  வந்தாள் .  உதயனன்  அவற்றைக்கொண்டு  சொற்கிறைவியை  அருச்சித்தற்குத்  தொடங்கினான் . அப்பூசையில் , “தக்கிணைப்  பொருள்  பெறுதற்குரிய  அந்தணன்  ஒருவன்  வாயிலின்கண்  இருக்கின்றான் . அவனை  இங்கு  அழைத்து  வருக  “என்று  கட்டளையிட்டான். வாசவதத்தை  , வேற்றுருக் கொண்டு  வாயிலின்கண்  இருக்கின்ற  வசந்தகனை  உள்ளே  புகுவித்தாள் . அவன்  தக்கினைப்  பொருளைப்  பெற்றுக்கொண்டு  பகைவன்  வயப்பட்டி ருக்கும்   அரசனைப்  பார்த்து  ,  அதனால்  உண்டாய  பெருந்துன்பத்தை  உள்ளே  அடக்குதற்கு  ஆற்றாதவனாய்  வாய்திறந்து  அழுதான் .  உதயனன் , “இவ்வசந்தகன்  ஒரு  சமயம்  துன்பமிகுதியாற்  காரியத்தை  மறந்து  உண்மையை  வெளிபடுத்துவாங்கொல்,”  என்னும்  ஐயமுடையவனாய்  ,  “ஓ அந்தண!  நோயால்  வேறுபட்ட  உடலினையுடைய  நின்னை  விரைவிலேயே  இயற்கை  நிலையுடையவனாகச்  செய்வேன்.  அழுதல்  வேண்டா .  இனி , இவ்விடத்திலேயே  என்  முன்னிலையில்  இருப்பாயாக”  என்று  இவ்வாறு  கூறினான்.  வசந்தகன்  “அங்ஙனமே”  என்று  கூறி  உடலின்  வேற்றுமையால்  பெண்பாலர்க்கு  விளையாட்டுப் பொருள் போல  இருந்து , இடைவிடாது குதூ கலமடைந்துவரும்   வாசவதத்தையின்  மனத்தை  இன்புறுத்திக் கொண்டிருந்தான் .

                       இங்ஙனம் சின்னாட்  சென்றதும்,  வாசவதத்தை  வற்சர்  தலைவன் பாற்  காதலுடையளாயினாள்  . அயக்காந்தத்தால்   ஊசி  இழுக்கப்படுதல்  போல   அவ்வுதயனது  உருவ  முதலிய  குணங்களால்   இழுக்கப்பட்ட  வாசவதத்தை  மனத்தால்  அவனையே  தனக்குக்  கைப்பிடி  நாயகனாக  வரித்தாள் .  பின்னர் , யெளகந்தராயணன்  இந்நிகழ்ச்சிகளை  யறிந்து  பிறர்  காணாதவாறு  வந்து  உதயனன்  முன்னின்று , “வேந்தர்  பெரும!  சண்டமகாசேனனால்  வஞ்சிக்கப்பட்ட  நீ  தகுதியில்லாததான  பிறர்  வயப்பட்ட  இந்நிலையை  அனுபவிக்கின்றாய் .சண்டமகாசேனன்  வாசவதத்தையைக் கொடுத்து  நின்னைச்  சிறப்புச்  செய்து  சிறையினின்றும்  விடுவித்தற்கு  விரும்புகின்றான் . ஆதலின் ,  அக்காலத்தை  எதிர்பார்த்து  நீ  இங்கிருத்தல்  தக்கதன்று  . இனி , வாசவதத்தையை  வலிந்து  பற்றி  இங்கிருந்து  வெளிபடுதலே  நல்லதாகும் .  அங்ஙனம்  செய்யின்  நம்மை  வஞ்சித்தவர்க்கு  எதிர்  செய்ததாகும் .  அந்நிகழ்ச்சியில்  இச்சூழ்ச்சியானது  என்னாற்  கருதப்பட்டது .  சண்டமகாசேனன்   வாசவதத்தைக்குப்  “பத்திரவதி”  என்னும்  பெயரினையுடைய  பெண்  யானையைக்  கொடுத்திருக்கின்றான் .அது  மிகவிரைவிற்  செல்லுந்  திறமை  வாய்ந்தது  .  அதற்குரிய  யானைப்பாகன்  “ஆசடகன்”  என்னும்  பெயரினையுடையான்  ஒருவன்  உளன்.  அவனை  யான்  மிகு  பொருள்  கொடுத்து  நம்  விருப்பத்திற்கு  அநுகூலமுடையவனாகச்  செய்திருக்கின்றேன் . மேலும் , இவ்விடத்தில்  “மகாமாத்திரன்”  என்னும்  பெயரினையுடைய  குதிரைச்சாலைத் தலைவன் ஒருவன்  இருக்கின்றான் .  மிக்க  திறமை  வாய்ந்த  அவன்  களிப்பு  மயக்கத்தால்  அறிவு  கெடும்  வண்ணம்   அளவின்  மேம்பட்ட  கள்ளினை  அவற்குக்கொடுத்தல்  வேண்டும் . இங்ஙனம்  முன்னரே  செய்யத்தக்க வைகளைச்  செய்து  நள்ளிரவிற் பிறராற் பார்க்கப்படாமல்   வாசவதத்தையோடு  யானைக்கன்றின்மேல்  ஏறி , அன்புமிக்க  காவலாளர்  சூழ்வர , நகரத்தினின்றும்  வெளிச்செல்லால்  வேண்டும் . யானோ ,  முன்னர்ச்சென்று  “புளிந்தகன்” என்னும்  பெயரினையுடைய  நின்  நண்பனோடு கூடி ,  வழியிடை  நேரக்கூடிய  இடையூறுகளைப்  போக்கி  நின் வரவை  எதிர்பார்த்திருப்பேன்”  என்று  இங்ஙனம்  கூறினான் .

                 இவ்வாறு  உதயனற்குச்  செய்யத்தக்கவைகளை  உபதேசித்து  யெளகந்தராயணன்  வெளிச்சென்றான் .  உதயனன்  சிறிது  நேரம்  நினைவு  கூர்ந்து  செய்யத்  தக்கவைகளைப்பற்றி  நன்றாக  ஆராய்ந்தான். பின்னர் ,  வாசவதத்தை  அவன்  பக்கலில்  வந்தாள் . அவளோடு  நெடுநேரம்  பலகதைகளைச்  சொல்லி  அவள் மனத்தைப்  பலவாறு  சோதித்து  முடிவில்  , “நம் செயற்கு  இவள்  துணை நிற்பவள்  ஆவாள் “  என்று  துணிவுற்றான் .  அவள்பால்  நம்பிக்கை  மேற்கொண்டொழுகும்  இவ்வுதயனன்  அவட்குத்  தான்  செய்யவிரும்பிய  காரியங்களைப்  பற்றிக் கூறினான்.அவள்,  மகிழ்ச்சியோடு    உதயனனைப்  பின்றொடர  உடன்பட்டாள் . பின்னர் , “ஆசாடகன்”  என்னும்  பெயரினையுடைய  யானைப்  பாகனை  யழைத்து  “பத்திரவதி”  என்னும்  யானையைப்  பிரயாணத்திற்குச்  சித்தம்  செய்து  இவ்விடத்திலேயே  நிறுத்தி வைத்துப்  பிரயாண காலத்தை  எதிர்  பார்த்திருத் தல்  வேண்டும் “  என்று  இவ்வாறு  கட்டளை  யிட்டாள் .  அதன்பிறகு , உதயனனது  விருப்பத்திற்  கிணங்கிக்  கடவுட்  பூசையைக்  காரணமாகச்  செய்து  குதிரைச்சாலைத்  தலைவனாகிய  மகாமாத்திரனுக்கும்   மற்றை  யானைப்பாகர்களுக்கும்  அளவிகந்த  கள்ளைக்  கொடுப்பித்தாள் . அதனாற்  களித்து  மயங்கிய  எல்லோரும்  அறிவிழந்தவராயினர்  .

                  பின்னர் , நள்ளிரவில்  உதயனன் ‘இன்னிசை’  என்னும்  யாழை  எடுத்துக்கொண்டு  யெளகந்தராயணன்  உபதேசித்த  யோக  வன்மையால்  விலங்கை  முறித்து  ,  அன்புமிக்க  காவலாளர்கள்  தன்னைச்  சூழ்ந்துவர ,  வசந்தகனோடு  “பத்திரவதி”  என்னும்  யானையில்  இவர்ந்தான் . வாசவதத்தையும்  மறைவான  நிகழ்ச்சிகளையும்  உள்ளே  அடக்கி  வைத்திருக்கும்   ‘காஞ்சனமாலை’  என்னும்  பெயரினையுடைய  தோழியோடு  அவ் யானையிலேயே  ஏறினாள் . அந்நால்வர்க்கும்  முன்னர்  ஐந்தாவனாக  யானைப்பாகனும்  அதன்கண்   ஏறினான் . இவ்வாறு  ஐவர்களையும்  ஏற்றிக்கொண்டு  ‘பத்திராவதி’  என்னும்  யானை  மிக்க  வேகத்தோடு  புறப்பட்டது. .

               அதன்பின்,  வீரபாகு  , தாளபடன்  என்னும்  இரண்டு  வாயில் காவலர்கள்  வழியிற்றடுத்தனர்  .  உதயனன்  அவ்விருவரையும்   வாட்படையால்  வீழ்த்தி  மிக்க  வேகத்தோடு  நகரத்தினின்றும்  வெளிப்பட்டான் . உதயனன்  நெடுந்தூரம்  கடந்ததும் , காவலாளர்  பெருங்கிளர்ச்சி  செய்தனர் . அரசனிடத்தும்  அறிவித்தனர்  .  வேந்தன் , வாசவதத்தையைக்  கைப்பற்றி  ஓடுகின்ற  உதயனனைப்  பிடிக்குமாறு  ‘பாலகன்’  என்னும்   பெயரினையுடைய  தன்   புதல்வற்குக்  கட்டளையிட்டான். அவன்  பத்திரவதியின்பால்  அன்புமிக்க  ‘நடைமலை’  என்னும்  களிற்றரசியின்மேல்  இவர்ந்து  பின்றொடர்ந்து  ஒடினான் .  உதயனன்  பின்புறத்தே  தொடர்ந்து  வருகின்ற  பாலகன்பால்  அம்பு மாரிகளை  இறைந்தான் .  ‘நடைமலை’  என்னும்  யானை  அப்பத்திரவதியைக்  கண்டு  அவாவோடு  வேகந்  தணிந்து  மெல்ல  மெல்ல  அதனைத்  தொடர்ந்து  சென்றது .

                   இதற்கிடையில்  ‘கோபாலன்’  என்னும்  பெயரினையுடைய  சண்டமகாசேனனுடைய  இரண்டாம்  புதல்வன்  தந்தையின்  கருத்திற்  கிணங்கிப்  பின்புறத்தே  விரைந்து போந்து  பாலகனைப்  போரினின்றும்  திருப்பினான் .  பாலகன்  திரும்பியதும்  வற்சர்  தலைவன்  அச்சமின்றிச்  சென்றான் . பின்னர்,  விந்திய  வனத்தின்  நடுவண்  அடைந்தான் ..இரவு  விடிந்தது .  அப்பொழுது  நெடுந்தூரம்  வழிநடத்தலால்  நீர்  வேட்கை  மிக்க  பத்திரவதி  ஆங்குள்ள  தடாகத்தில்  நீர்  உண்டது . அக்குடிநீரின்  குற்றத்தால்  அப்பொழுதே  அவ்யானை  மரணம்  எய்திற்று.  உதயனன்  வாசவதத்தையோடு  மிகவும்  துன்புற்று  , எதிர்பாராமல்  உண்டாகிய  ஆகாயச்  சொல்லாகிய  “அரச!  யான்  ‘மாயாவதி’ என்னும்  பெயரினையுடைய  வித்தியாரப் பெண்  ஆவேன் . இதுகாறும்  சாபமாகிய  குற்றத்தாற்  பெண்யானை  ஆயினேன். நினக்கு  இவ்வுதவியைச்  செய்து  அச்சானைபதினின்றும்  விடுதி பெற்றேன் .இதற்குப் பின்னரும்  நினக்குப்  பிறக்கும்  புதல்வனுக்கும்  உதவி  செவேன் “ என்னும்  இதனைக்  கேட்டான் .

                      பின்னர் , வற்சராசன்  விந்தியமலையின்  சாரலில்  இருக்கின்ற  புளிந்தகனுக்குத்  தன்  வரவைத்  தெரிவித்தற் பொருட்டு  வசந்தகனை  ஏவினான் .  பின்னர்  அவ்விடத்திலேயே  வாசவதத்தையோடு  கால்களால்  நடந்து செல்கின்றைவனைக்  காட்டிற்  றிரியும்  நூற்றைந்து  திருடர்கள்  வளைத்தனர் . வில்லை மாத்திரம்  துணையாகவுடைய  உதயனன் வாசவதத்தையின்  கண்  முன்னரே  அவர்கள்  எல்லோரையுங்  கொன்றான் . பின்னர் , மற்றைத்திருடர்கள்  ஒருங்குகூடி  அவனை  எதிர்த்து  ஓடிவந்தனர் . இதற்கிடையிற்  புளிந்தகன்  , வசந்தகன்  வழி  காட்ட   யெளகந்தராயண னோடு  அவ்விடத்தை  அடைந்தான் . அவன்  அக்கள்வர்களைத்  தடுத்து  வற்சர்தலைவனை  வணங்கி  வாசவதத்தையோடு  தன்  இருப்பிடத்தை  அடைவித்தான் .உதயனன்  அவ்விடத்திலேயே  அவ்விரவைக்  கழித்தான் .  பின்னர் , பிற்றைநாட்  காலையில்  யெளகந்தராயணன்  போக்கிய  ஒற்றனால்  எல்லா  நிகழ்ச்சிகளையும்  உணர்ந்த  ‘உருமண்வான்’  என்னும்  படைத்தலைவன்   படைவீரர்கள் எல்லோருஞ்  சூழ்ந்துவர  அவ்விடத்தை  எய்தினான் . உதயனன்  உச்சனியின்  நிகழ்ச்சிகளை  அறிதற்பொருட்டு  அவ் விந்தியவனத்திலேயே  சிறிது  காலந்  தங்கினான் . 

வெண்பா

சொற்றிறனார்  யெளகந்த  ராயணன்செய்  சூழ்ச்சியினாற்

றுற்று  மிருளிற்  றுணைப்பிடிக்கண்  —  அற்புமிகு

தேவி  யுடனிவர்ந்து  சென்றான்  சிறையொரீஇ

யாவியினு  மானமுயர்  வால் .

ஆறாம்  வகுப்பு

(வாசவதத்தை  திருமணம்)

                  இதனிடையில்  உச்சயினியின்  நிகழ்ச்சிகளை  யறிதற்  பொருட்டு யெளகந்தராயணன்  போக்கிய  வணிகன்  ஒருவன்  உச்சயினி   நகரத்தையடைந்து  எல்லாநிகழ்ச்சிகளையுமுணர்ந்து  திரும்பிவந்து  உதயனனை  நோக்கி  “வேந்தர்  பெரும! சண்டமகாசேனன்  நின்பால்  மிகவும்  அன்புடையவனாக  இருக்கின்றான் . நின்னைக் குறித்து  ஒரு  தூதனை  விடுத்தான்.  அத்தூதன்  தூதுமொழியை  மேற்கொண்டு  என்னோடு  புறப்பட்டான் .யானோ  செய்திகளைத்  தெரிவித்தற்பொருட்டு  விரைந்து வந்தேன் “ என்று  இவ்வாறு  சொல்லினான் . இதனைக் கேட்டு  வற்சர் தலைவன்  ஆனந்த  பரிதனாய்  வாசவதத்தைக்கு  உணர்த்தினான் .  அவள்  பேருவுகைக்கடலுண்  மூழ்கினவளாய் மணத்  திருநாள்  எப்பொழுது  நேரும்  என்று  மனத்தாற்  சிந்தித்துக்கொண்டிருந்தாள் பின்னர்ச்  சண்டமகாசேனனு டைய  தூதன்  வந்து  உதயனனை  வணங்கி  , “பெரும! அரசர்  பெருமானாகிய  சண்டமகாசேனன்  நட்போடு  என்  முகமாகத்  தெரிவிக்கின்றான் .அஃதாவது  ‘முன்னரே  வாசவதத்தைக்கு  நீயே  ஒத்த  மணவாளன்  என்று  எனக்கு  விருப்பம்  இருந்தது .  அவளை  நீ  பெற்றுக்கொள்ளுதற்கே  என்னால்  இச்சூழ்ச்சி  மேற்கொள்ளப்பட்டது . ஆதலின் , என் விருப்பமே  நின்னால்  நிறைவேற்றப்பெற்றது .  என் புதல்வன்  கோபாலகன்  விரைவிலேயே  அவ்விடத்தில்  வந்து  நுங்கள்  இருவீர்க்கும்  விதிப்படி  மணவினையை  நிறைவேற்றுவான் ‘  என்பதாம் “  என்றிவ்வாறு   தெரிவித்தான் .  உதயனன்பால்  தெரிவித்துவிட்டு  அத்தூதன்  வாசவதத்தைக்கும்  தந்தையின்  தூதுமொழியை  அறிய  செய்தான் .  

                 பின்னர் ,  வற்சர்  தலவன்   வாசவதத்தையோடு  கெளசாம்பி நகரத்தைக்  குறித்துப்  புறப்பட்டான் .அத்தூதனையும்  புளிந்தகனையும்  நோக்கி  “ நீவிர்  இருவீரும்  இவ்விடத்திலேயே  இருந்து  கோபாலகனுடைய வரவை   எதிர்பார்த்தல்  வேண்டும் .  அவனை  யழைத்துக்கொண்டு  கெளசாம்பி  நகரத்தை  அடைவீர்களாக . என்று  இவ்வாறு  கட்டளையிட்டான் .  கடல்  அலைகளை  ஒப்ப  யான்முன்  யான்முன்  என்று  புறப்பட்ட  அளவிறந்த  படைவீரர்கள்  சூழ்வர  உதயனன்  இரண்டு  மூன்று  நாள்வரை  வழி  கடந்து  காலப்  பொழுதிற்  கெளசாம்பி  நகரத்தை  யடைந்தான் .  அப்பொழுது  நகரத்து  மக்களனைவரும்  மிக்க  குதூகலமுடையவராய்  நகரத்தைத்  தோரண  முதலியவைகளால்  அலங்கரித்து  உதயனனது  வரவைப் பற்றி மகிழ்ச்சி  கூர்ந்தார்கள் . யாவரானும்  புகழ்ந்து  பாராட்டப்பெற்ற  கட்டழகு  வாய்ந்த  வாசவதத்தையைக்  காணும்  அவாவினராய்  அந்நகரத்து  மகளிர்  அனைவரும்  வீட்டின்  மேற்றளத்தில்  ஏறிச்  சாளரங்களில்  வரசையாக  நின்றனர் .  அந்நகரத்தவரனைவராலும்  சிறப்போடு  நல்வரவேற்கப்பட்ட  வற்சர்தலைவன்  வாசவதத்தையொடு  தன்  அரண்மனையுட்  புகுந்தான் .

             பின்னர்ச்  சிலநாட்  சென்றதும்  வாசவதத்தையின்  உடன்பிறந்தானாகிய  கோபாலகன்  தந்தையின்  கட்டளைப்படி  விந்திய  வனத்தை  யடைந்து  தூதனையும்  புளிந்தகனையும்  உடன்  அழைத்துக் கொண்டு  கெளசாம்பி  நகரத்தை  அடைந்தான் . பின்னர் , நன்மை  மிக்க  முகூர்த்தத்தில்  வாசவதத்தைக்குப்  பாணிக்கிரகண  விழாவை  நிறைவேற்றி னான் .  அவ்வமயத்தில்  அளவிறந்த  அரதனங்களையும்  உதயனற்கு  ஈந்தான். மற்றை  வேந்தர்களும்  பல வகைக்  கையுறைகளைக்  கொணர்ந்தனர் .  இவ்வாறு  எல்லா  நண்பர்களாலும்  , சுற்றத்தாராலும்  அன்போடு  சேர்ப்பிக்கப் பட்ட   பொருள்களால்  அவ்வுதயனனுடைய  பொருளுறை  இல்லங்கள்  நிறைந்தவாயின. அதனால் . அவன்  குபேரனை  ஒத்தான் .

                பின்னர் , விதிப்படி  மணவினை  நிறைவேறியதும்  உதயனன்  கோபாலகனையும்  புளிந்தகனையும்  தானே  நன்கு  உபசரித்தான் . அங்கு  வந்த மற்றை  வேந்தர்களனைவரையும்  உபசரித்தற்கு  யெளகந்தராயணனை  யும்  ,  உருமண்வானையும்  நியமனஞ்  செய்தான் . அவ்விருவரும்  எல்லா  மன்னர்களையும்  “ஒவ்வொருவரும்  தாம்  தாமே  மற்றையோரினுஞ் சிறந்த  அன்பினாற்  பெருமைப்  படுத்தப்பட்டடேம் “  என்று  எண்ணுமாறு  பெருமைப்படுத்தினர் .

                  பின்னர் , உதயனன் யெளகந்தராயணனையும்  உருமண்வானை யும்   வசந்தகனையும்  ஆடை  அணி  முதலியவைகளாற்  பலவாறு  பெருமைப் படுத்தினான் . வாசவதத்தை  தனக்கு  ஒத்த  காதலனை  அடைந்து  அவனோடு  உம்பருலகத்தினும்  பெறுதற்கரிய  போகங்களை  நுகர்ந்து  இன்புற்றிருந்தாள்.

வெண்பா

ஐம்பொறிக்கு  மின்ப   மளிக்கு  மமுதமென

நம்பு  மடவரலை  நன்றுமணந் – திம்பரிடைக்

கற்பு  முறையிற்   கலந்தின்ப  மெய்தினான்

பொற்பு  மதனிரதி  போல் .

ஏழாம்   வகுப்பு

(மந்திராலோசனை)

            இங்ஙனம்  உதயனன் வாசவதத்தையை  மணந்து  அவளோடு  இன்புற்று  யெளகந்தராயணன்  என்னும்  அமைச்சன்பாலும்  , உருமண்வான்  என்னும்  படைத்தலைவன்  பாலும்  , அரசியற்  சுமையை  வைத்துவிட்டுக்  கவலையற்றுப்  பல நாட்களைக்  கழித்தான் .

            பின்னர்,  ஓர் அமயம்  யெளகந்தராயணன், உருமண்வானை  அழைத்து  மறைவிடத்திருத்தி  “இவ்வுதயனன்  பாண்டவ குலத்திற்   பிறந்தவன் . இவர்க்குக்   குலமுறைப்படி  அத்தினாபுரம்  தலைநகராகும் .  அவ்வெல்லாம்  இப்பொழுது  முயற்சி யற்றிருக்கும்  இவனால்  விடப்பட்டன .இப்பொழுது  இவன்  இந்நிலத்தின்  ஒரு  கோடியில்  அரசனாக  இருக்கின்றான் .இடைவிடாது  இவன், மகளிர்   இன்பத்திலும்  வேட்டையாடுவதிலும்  அவாவுடையவனாய்க்  கவலையற்றிருக்கின்றான் .  அரசியல்  சுமை  எல்லாவற்றையும்  நம்  தலைக்கண்  ஏற்றினான் . ஆதலின், இவன்  இந்நிலவுலகம்  எல்லாவற்றிற்கும்   சக்கரவர்த்தியாகும்  வண்ணம்  நாம்  முயல  வேண்டும் .இங்ஙனம் செய்வோமாயின்  அரசன்பால்   நமக்குள்ள  அன்பை  வெளிப்படுத்தியதாகும். இவ்விடத்தில்  மகததேயத்  தரசன் பகைவனாக  இருக்கின்றான்  அவற்குப்  பதுமாவதி  என்னும்  பெயரினையுடைய  பெண்மணி  ஒருத்தியுள்ளாள் . அவள் நம்  உதயனர்க்கு  மனைவியாவாளாயின்  மகத தேயத்தரசனும்  நாம்  செய்ய  விரும்பிய  காரியத்திற்குத்  துணைநிற்பான் . அப்பதுமாவதியை  முன்னர்  வற்சநாயகனுக்காக  யான்  தூதன்முகமாகக்  கேட்டதுமுண்டு .  அதற்கு  மகத  தேயத்தரசன்  “வற்சராசனுக்கு  வாசவதத்தையின்பாற்  பெரிதும்  அன்புண்டு  என்பது  யாவரும்  உணர்ந்ததே .ஆதலின்  உயிரினுஞ்  சிறந்த  அன்பு மிக்க  பதுமாவதியை  அவ்வுதயனற்குக்  கொடேன் “  என்று  இவ்வாறு  தூதன்முகமாக  மறுமொழி  விடுத்தான் . “வற்சராசனும்  வாசவதத்தை  இருக்குங்கால்  வேறொருத்தியை  மணஞ்செய்துகொள்ளான் .  ஆதலின்  இச்செயலில்  நமது  அறிவின்  மாட்சியைக்  காட்டல்  வேண்டும்.  வாசவதத்தையைப்  பிறர்  அறியாவாறு  ஓரிடத்தில்  மறைத்து  வைத்து  அவள்  உறையுளைத்  தீக்கிரையாக்குதல்  வேண்டும்  .அதன்பின்  ‘வாசவதத்தை எரிந்து  நீறாயினாள்’  என்று  உலகவதந்தியைச்  செய்தல் வேண்டும் .  இங்ஙனஞ்  செய்வோமாயின்  மகததேயத்தரசன்  பதுமாவதியை  வற்சராசற்குக்  கொடுத்துவிடுவான்.  வற்சராசனும்  மனம்புரிந்து கொள்ளுவான்.  அதன்பின்  மகததேயத்தரசன்பாற்  றுணைநிற்பாராகிய  ஏனைய  அரசர்கள் எலோரும்  இவன்வயப்படுவார்கள் .  அதனால் இவன்  நிலவுலகம்  எல்லாவற்றிற்கும்  சக்கரவர்த்தியாவான் . என்று  இவ்வாறு  சூழ்ந்தான் .

                 அதனைக் கேட்டு  உருமண்வான் “இச் சூழ்ச்சி  ஒருவாறு  கேடுவிளைக்கவுங்  கூடுமென்று  அஞ்சுகின்றேன் .  காரியம்  நிறைவேறாவிடின்   அரசற்குக்  கோபம்  விளையும்  .  சனங்களும்  நம்மைப்  பரிகசிப்பார்கள்  . வாசவதத்தையின்  பிரிவால்  அரசற்கு  ஒருவாறு  அமங்கலம்  உண்டாகவுங்கூடும் .”  என்று  இங்ஙனம்  கூறினான் . 

                 அதனைக் கேட்ட  யெளகந்தராயனன்  பின்வருமாறு  கூறுவானாயினான் . “வேந்தர்கள் , தம்வயத்தார்  , அமைச்சர்வயத்தார்  என  இருவகைப்படுவர் .  தம்வயத்தராவோர்   தம்  அறிவினாலேயே  எல்லாச்செயல்களையும்  நிறைவேற்றுவார் . நம்மன்னனோ  அமைச்சர் வயத்தன்   ஆவான் .  இவர்குச்  செய்யத்தக்கவைகளில்  அமைச்சர்  அறிவே  புகலிடமாகும்  .  நாம்  முயன்றிலேமாயின்  இவற்கு  எல்லாம்  அவிந்துபோம்  .  இனி  நாம்  இப்பொழுது  சூழ்ச்சியினாலேயே  காரியத்தை  நிறைவேற்றல்  வேண்டும்.  இத்தகைய  செயல்களைச்  செய்யாமல்  வாளாவிருப்போமாயின்  அரசன்  நம்மை  அவமதிப்பான் .  மனத்திட்பமுடைய  வற்சராசன்  வாசவதத்தையின்  பிரிவிலும்  மனவுறுதி  மேற்கொண்டிருப்பான் .  முற்காலத்தில்  தேவர்கள்  இராமனால்  இராவணனைக்  கொல்லுதற்குச்  சீதா  பிராட்டியினிடத்தினின்றும்   அவனைப்பிரியும்படி  செய்தார்கள் . உயிரினுஞ்சிறந்த  அன்புமிக்க  சீதையை  நீங்கியும்  இராமன்  மனத்திண்மையால்  உயிர்தாங்கினான் . இன்னும்  இவ்விடயத்திற்  பழங்கதை  யொன்று  கேட்பாயாக .

                  அது, “முற்காலத்தில்  உச்சயினி  நகரத்தில்  ‘புண்ணியசேனன்’  எனப்பெயரிய  அரசன்  ஒருவன்  இருந்தான் . அவனை  ஓர் அமயம்  வலிமைமிக்க  பகைவன்  எதிர்த்தான். வலிமை  குறைந்த  புண்ணிய  சேனனைப்பார்த்து , அமைச்சர்கள்  ஒருங்குகூடி   ஆலோசித்து  அவனை  ஓரிடத்தில்  மறைத்து  வைத்து   “நம்  அரசன்  இறந்து  போயினான்”  என்று  யாவரும்  உணர  வெளிப்படுத்தினர் . வேறொரு  பிரேதத்தை  இஃது அரசன்  பிரேதம்  என்று  வெளிப்படுத்தி  அதற்கு  முறைப்படி  இறுதிக் கடங்களைச்  செய்தனர் .  பின்னர் , பகைவன்பக்கல்  எய்தி  “இவ்விராச்சியம்  அரசனில்லாததாயிற்று . நீயே  எங்களுக்கு  வேந்தன்  ஆதல்  வேண்டும், “  என்று  வேண்டினர் .அவன்  இவ்  வெல்லாம்  உண்மையென்று  நினைத்து  அரசனாதற்கு  உடன்பட்டான் .  பின்னர்ச்  சின்னாட்சென்றதும்  மறைவிற் சித்தம்  செய்து  வைத்திருந்த  படைவீரர்களால்   அப்பகைவனை  வேரோடு  களந்து   புண்ணிய  சேனனை  மீண்டும்  அவன்  இராச்சியத்தில்  நிலைநிறுத்திவைத்தனர்”  என்பதாம் .   

                  ஆதலின் , “அரசநீதியாற்  சூழ்ச்சிபுரிதல் இயற்கையே  , இவ்விடயத்தில்  ஐயுறல்  வேண்டா . தெய்வம்  நமக்குத்  துணைநிற்கும்”  என்று  இவ்வாறு  கூறினான் .

                     அதனை கேட்டு  உருமண்வான்  “இது  துணிவாயின்  வாசவதத்தையின்  உடன்  பிறந்தானாகிய  கோபாலகனை  ஈண்டழைத்து அவனோடு  சூழ்ந்து  இச்செயலில்  இறங்கல்  வேண்டும்”   என்று  கூறினான்.  யெளகந்தராயணன்  “அங்ஙனமே “ என்று  உடன்பட்டுக்  கோபாலகன்பால்  தூதனை  விடுத்தான் . தூதன்  விரைந்து  உச்சயினி நகரத்தை அடைந்து  கோபாலகனை  வணங்கி  “ஐய, அமைச்சர்  தலைவனாகிய  யெளகந்த ராயணன்   நின்னைச்  சிறிதும்  தாழ்த்தலின்றிக்  காண்டற்கு  விரும்புகின்றான்.  என்று  தெரிவித்தான் . அக்கோபாலகன்   அப்பொழுதே  புறப்பட்டுக் கெளசாம்பி நகரத்தையடைந்தான். யெளகந்தராயணன்  அவனை  மறைவிடத்தில்  அழைத்துத்  தான்  செய்யவிரும்பிய  காரியங்க்கள்  எல்லாவற்றையும்  உண்மையாக  அவற்கு  கூறினான் .  கோபாலகன் , முதலில்  வாசவதத்தைக்குத்  துன்பம்  தருவதாயினும்  அரசற்கு  நலத்தை  வளர்விப்பதால்  அச்சசொல்லை  ஏற்றுக் கொண்டான் .

                       பின்னர்  யெளகந்தராயணன் ,  “மகாதேயத்தின்  அணிமையில்   இலாவாணகம்   என்னும்  பெயரினையுடைய  இடம்  ஒன்று  இருக்கின்றது . அது வேட்டையாடுதற்கு  இன்பம்  விளைக்கும்  இடமாகும் .  ஆதலின் , வாசவதத்தையையும்  வற்சரசனையும்  அழைத்துக்கொண்டு  அவ்விடத்திற்கு  நாம்  செல்லல்  வேண்டும் .  எப்பொழுது  வேட்டையாடல்  குறித்து  உதயனன்  வெளிச்செல்வானோ  அப்பொழுது அரண்மனையில் தீ  வைப்போம் . வாசவ  தத்தையை  மகததேயத்தரசனது  கன்னியா  மாடத்தில்  இருக்கின்ற  பதுமாவதியின்  பக்கல்  உபாயத்தாற்  சேர்ப்பிப்போம்.  பிரிவுக்  காலத்திலேயும்  வாசவதத்தையின்  கற்பு நிலைக்குப்  பதுமாவதியே  சான்றா வாள் . இங்ஙனஞ்  செய்யின்  நாம்  செய்யவிரும்பிய  காரியம்  சிரமமின்றி  நிறைவேறிவிடும்,”  என்று  இங்ஙனம்  கூறினான் .

                          இங்ஙனம்  சூழ்ந்து , யெளகந்தராயணன் , உருமண்வான் , கோபாலகன் , என்னும்  இம்மூவரும்  , பிற்றைநாட்காலையிற்   காலைக்கடன் களை   முடித்துவிட்டு  அரசன்பக்கல்  எய்தினர் .  அரசன்  தகுதிக்குத்  தக்கவாறு  சிறப்பித்து  ஈந்த  இருக்கைகளில்  இருந்தனர் . பின்னர்  உருமண்வான்  ,  அரசனை நோக்கி  “வேந்தர்  பெரும!  இலாவாணகம்  என்னும்  இன்ப  நிலம்  ஒன்று  இருக்கின்றது .  அதனைச்  சூழ்ந்து  வேட்டையாடுதற் குரிய   நிலங்கள்  பலவுள்ளன . பக்கத்துள்ள  மகததேயத் தரசன்  எப்பொழுதும்  அவ்விடத்தை  உலைவு  செய்கின்றான் .  அதனைக்  காத்தற்கு   அவ்விடம்  அடைதல்  இவ்வமயம்  தக்கதாகும், “  என்று  இவ்வாறு  தெரிவித்தான் .  வேட்டையாடுதலில்  விருப்பம்  மிக்க  உதயணன்  அச்சொற்களை  ஏற்றான் . புறப்படல்  துணிந்ததும்   கணிதம்  வல்லோர்  பிரயாணத்திற்குரிய  நன்னாழிகையைக்  கண்டு கூறினர் .

                             அப்பொழுது  எதிர்பாராது  நாரதர்  ஆகாயத்தில்  நின்றும்  இறங்கி  வெளிப்பட்டார் . வற்சராசன்  அவரைக்கண்டு  விரைந்தெழுந்து அருக்கியம்,  பாத்தியம்  முதலியவைகளால்  உபசரித்தான் .  பின்னர்  அவரை  இருக்கையில்  வீற்றிருக்கச்செய்து வணக்கத்தோடு  கைகூப்பி  நின்றான் . நாரதர் பாரிசாதமலர்களானாகிய மாலையொன்றை அரசற்குக் கொடுத்தார்  பின்னர், வணங்கி  நிற்கின்ற  வாசவதத்தையை  நோக்கி  , “நங்காய்! , பகவானாகிய  காமவேளின்  கூறாக அவதாரஞ்செய்யும்  வித்தியாதரர்களின்  தலைவனை மகனாக  விரைந்து  பெறுவாய் “ என்னும்  வாழ்த்துரையால்  அருள்  செய்தார் .  பின்னர் அமைச்சர்களின்  முன்னிலையில்  உதயனனை  நோக்கி  “வேந்தே! தருமபுத்திரன்  முதைலிய  சகோதரர்  ஐவரும்  எனக்கு  நண்பர்களாக  இருந்தனர் . நீயும்  அவர்கள்  வழித்தோன்றினவன் .  அவ்வன்பால்  நினக்குச்  சிறிது உபதேசிக்க  யான்  இங்கு  வந்தேன் .  நீ  என்  சொல்வழி  நிற்றல்  போல்  அமைச்சர்  சொல்வழியும்  நிற்றல்  வேண்டும் . அவர்கள்  யாது  யாது  கூறுவார்களோ  அதனை  அவ்வண்ணமே  மேற்கொள்ளல்  வேண்டும்  .  அதனால்  நீ  மிக்க  நலத்தினை  அடைவாய் . சிறிது  நாட்களில்  நினக்குச் சிறிது  துன்பம்  நேரும்  . அதுவும்  இன்பவளர்ச்சியாகவே  முடியும் .  இதன்கண்  நீ  துன்புறல்  வேண்டா . என்று  இங்ஙனங் கூறினார் .  இவ்வாறு  சொல்லி  நாரதர் அவ்விடத்திலேயே  மறைந்துவிட்டார் . யெளகந்தராயணன்  முதலியோர்  நாரதமுனிவர்  சொற்களைக்  கேட்டுத்  தாங்கள்  செய்ய  விரும்பிய  காரியத்தில்  தெய்வமும்  துணைநிற்கின்றது  என்னும்  மகிழ்ச்சியால்  இருமடங்கு  உற்சாகம்  எய்தினர்.

வெண்பா

மன்ன  னரசின்  வளம்பெருக்கும்  வல்லமைச்சர்

இன்னன்  முதற்  கணிசைவித்த  — பின்னரே

மன்னிறைவ  நாக்கி  மகிழ  மதித்தனராற்

றுன்னு  மதிவலியாற்  சூழ்ந்து .

எட்டாம்  வகுப்பு

(பதுமாவதி  பரிணயம்)

        பின்னர்  அமைச்சர்களோடு   ஆலோசித்தபடி  வற்சராசன்  வாசவதத்தை யோடு  படைவீரர்கள்  சூழப்புறப்பட்டு  ‘ இலாவாணகம் ‘  என்ப்பெயரிய  சிற்றூரையடைந்தான். அவ்விடத்தில்  நாடோறும்  பக்கத்துள்ள  வனங்களிற்  சுற்றித்திரிந்து   வேட்டையாடலான்  மனம்  இன்புற்றுச்  சிலநாட்களைக்  கழித்தான் . ஓரமயம்  உதயனன்  வனத்திற்  சென்றிருக்குங்கால் , யெளகந்தராயணன், உருமண்வான் , வசந்தகன்  இம்மூவரும்  கோபாலகனை  முன்னிட்டுத்  தனித்திருக்கும்  வாசவதத்தையின்பாற்  சென்றனர் . பின்னர் , தாம்  செய்யவிரும்பிய  எல்லாக்காரியங்களையும்  கூறினார்கள்  . முன்னரே  கோபாலகன்பால்  எல்லா  நிகழ்ச்சிகளையுந்  தெரிந்த  கற்பரசியாகிய   வாசவதத்தை, தனக்குத்  துன்பந்தருவதாயினும்  தலைவற்கு  நலம்விளக்கும்  என்பது பற்றி  அவர்கள்  செய்யவிரும்பிய  காரியத்தை  ஏற்றுக்கொண்டாள் .

              பின்னர் , யெளகந்தராயணன் ‘உருவமாற்று’  என்னும்  விஞ்சையால்  வாசவதத்தையை  அந்தணர்  குலத்துப்  பெண்ணாகவும் , வசந்தகனை  ஒற்றைக்கண்  மாணவனாகவுஞ்  செய்தான் . யெளகந்தராயணன்  தானும்  யாண்டு முதிர்ந்த  அந்தணவடிவமுடையனாயினான் .  பின்னர்  யெளகந்தரா யணன்  அந்தனர்  குலத்துப்  பெண்வேடந்தாங்கிய  வாசவதத்தையையும்  ஒரு கண்  கெட்ட  மாணவகவேடந்தாங்கிய  வசந்தகனையும்  அழைத்துக் கொண்டு   மகததேயத்  தரசனது  தலைநகரை  யடைந்தான் .  வாசவதத்தை  தலைவனையே  நெஞ்சத்தால்  நினைந்து  யெளகந்தராயணனைப்  பின்றொ டர்ந்து  சென்றாள் .  

                 அவ்வமயத்தில்  உருமண்வான் , அந்தப்புரத்தில்  தீப்பெய்து  “அந்தோ! அந்தோ! தேவி  வாசவதத்தை  நெருப்புச்  சுடரால்  வெந்துபோயினாள் “  என்று  பேரொலி  செய்தான் . பின்னர் , பரிசனங்களினது  அழுகையொலி  மிகவும்  உண்டாயிற்று .  மெல்ல  மெல்ல  நெருப்புத்தணிந்தது .  அழுகையொலி  ஒவ்வொரு  கணமும்  பெருகிற்று .  வாசவதத்தையோடும்  வசந்தகனோடும்  புறப்பட்ட  யெளகந்தராயணன்  மலர்கள்  நிறந்த  உத்தியானவனத்தில்  தோழிகளோடு  விளையாடல்  செய்து கொண்டிருக்கும்  பதுமாவதியை  அடைந்தான் .  பதுமாவதிக்கு  அந்தணர்  குலத்துப்  பெண்ணுருவந்தாங்கிய  வாசவதத்தையின்பால், கண்ட  அளவினானே  பெரிதும்  நட்புண்டாயிற்று.

                       பின்னர் , பதுமாவதி  வயோதிகப்  பிராமண  உருவத்தையுடைய யெளகந்தராயணனை  நோக்கி  “பகவானே ! இப்பெண் யார் ? எதன்பொருட்டு  இங்கு  எய்தினை?’  என்று  வினவினாள் .  அவன்  “நங்காய் ! ஆவந்திகை யென்னும்  பெயரினையுடைய  இவள்  என்  புதல்வியாவாள் . இவள்  கணவன், இவளை விட்டு வேற்று  நாடடைந்தான் .  ஆதலின்  இவளை  நின்பக்கல்  இருத்தி  இவள்  கணவனைத்  தேடிக்கொணர்தற்கு விரும்புகின்றேன் . இச்சிறுவன்  இவள்  உடன்பிறந்தான் ஆவான் .  இவனையும்  இவண்மாட்டே  விடுகின்றேன் . அதனால் இவள்  தனித்திருக்கும்  துன்பத்தை  யடையாள் . “ என்று  மறுமொழி  கூறினான் . பதுமாவதி  “அங்ஙனமேயாக” என்று  உடன்பட்டாள் .

                          யெளகந்தராயணன், வாசவதத்தையையும்  வசந்தகனையும்  அவ்விடத்திலேயே  விட்டுப்  பதுமாவதியின்பால்  விடை பெற்று  அப்பொழுதே  புறப்பட்டுத்  தனது முன்  உருவத்தை  யடைந்து இலாவாணகத்தை  எய்தினான்.  இதனிடையில்  உதயனன்  வேட்டை  நிமித்தம்  நெடுந்தூரம்  காடுகளில்  அலைந்து  திரிந்து  மாலைப்பொழுதில்  இலாவாணகத்தை யடைந்தான் . அங்கு  உவளகம்  நீறாக்கப்பட்டிருத்தலைக்   கண்டும்  வாசவதத் தையையும்  நெருப்பினால்  வெந்து  போயினாள்  என்பதைக் கேட்டும்  மயக்கமுற்று  நிலத்தில்  வீழ்ந்தான் .பின்னர் ,பரிசனங்கள்  செய்த உபசாரங்களாற்  சிறிது பொழுதில்  தெளிவெய்தி  வாசவதத்தையை  நினைவு கூர்ந்து  துன்பமிகுதியாற்  பலவாறு  புலம்பினான் .

                   பின்னர்  மனத்தின்கண்  பின்வருமாறு  சிந்திப்பானாயினான்  “முன்னரே  அசரீரிச்சொல்   ‘வாசவதத்தை   வித்தியாதாச் சக்கரவர்த்தியாகும்  புதல்வனைப்  பெறுவாள்’   என்று  கேட்கப்பட்டது .  தெய்வ  முனிவராகிய  நாரதராலும்  அங்ஙனமே  கூறப்பட்டது . அது  பொய்மையாகாது . மேலும்  சில  நாள்  என்னாற்றுன்பம்  அனுபவிக்கப்படும்  என்றும்  நாரதராற்   கூறப்பட்டது. வாசவதத்தையின்  உடன்பிறந்தானாகிய   கோபாலகனுஞ்  சிறிது  துன்பமு டையவனாகக்  காணப்படுகின்றான் . யெளகந்தராயணன்  முதலிய  அமைச்சர்களுடைய  முகங்களும்  மலர்ச்சியுடையவைகளாகவே  காணப்படு கின்றன . ஆதலின், எனக்குப்  பெரிய  நலத்தை  யுண்டாக்குவதற்கு  விரும்பி அமைச்சர்கள்  செய்த  சூழ்வினைச்செயலே  இதுவாகும்  என்று  எண்ணுகின்றேன் .  ஆதலின், தேவி  வாசவதத்தை  யாண்டாயினும்  உயிருடை யவளாக  இருக்கின்றாள் என்றே  ஊகிக்கின்றேன் .  இதனால்  ஒரு சமயம்  எனக்கு  வாசவதத்தையோடு  சேர்தல்  நேரும்”  என்று  இவ்வாறு  சிந்தித்து  வற்சராசன்  சிறிது  தேறுதல்  அடைந்தான் .

                       பின்னர் மகத  தேயத்தரசன் , இலாவாணக நிகழ்ச்சிகள்  எல்லாவற்றையும்  ஒற்றன்  மூலமாக  அறிந்தான் .  பதுமாவதியை  ஏற்றுக்கொள்ளச்  செய்தற்கு  இதுவே  தக்க  சமயம்  என்று  துணிந்து  தன் கருத்தைக்  கூறித்  தூதன்  ஒருவனை  உதயனற்கு  விடுத்தான். உதயனன் , யெளகந்தராயணனது  உடன்பாட்டின்  வண்ணம் , பதுமாவதியை  மணஞ்  செய்து கொள்ளுதற்கு  அங்கீகரித்தான் . அப்பொழுது  பதுமாவதியின்  மணத்தை  நிறைவேற்றுதற்கே  வாசவதத்தை  அமைச்சர்களால்  மறைத்து வைக்கப்பட்டிருப்பாள் என்று  உதயனனது  மனத்தில்  உறுதியான  நம்பிக்கை  உண்டாயிற்று .

                        பின்னர் , யெளகந்தராயணன்  விவாகத்திற்குரிய  இலக்கினத்தை  நிச்சயித்து  மகத  தேயத்தரசற்கு   “உதயனன்  பதுமாவதியை  மணந்துகோடற்கு  உடன்படுகின்றான் ; இதற்கு  ஏழாவது  நாள்  விவாகத்தை  நிறைவேற்றுதற்கு  நின்  தலைநகரை யடைவான் “  என்று  இவ்வாறு  மறு  மொழி  விடுத்தான் .  அதனைக் கேட்டு  மகத தேயத்தரசன்  மிக்க  மகிழ்ச்சி  யுடையனாயினான் .  பின்னர்த்  தன்  புதல்வியின்மாட்டுள்ள  அன்பிற்கும்  தன்  செல்வத்திற்கும்  ஒத்தவாறு  விவாகச்  சிறப்பிற்குரிய  ஏற்பாடுகளைச்  செய்வித்தான் .  பதுமாவதி , தான்  அடைதற்கு  விரும்பிய  கணவனைப்  பெறுதலான்  மிகவும்  மகிழ்வெய்தினாள் . அப்பொழுது வாசவதத்தை  பதுமாவதியின்  மண   நிகழ்ச்சியைக் கேட்டுத்  துன்பத்தால் வேறுபட்ட  முகம்  உடையளாயினாள் . உடனிருக்கின்ற  வசந்தகன் “அன்னாய்  இம் மகத நாட்டரசனை  வயப்படுத்தற்கு  அமைச்சர்கள்  செய்த  சூழ்ச்சியிதுவாகும் . வேறுபாடு  கருதற்க”  என்று  மறைவிடத்திருந்து  தேற்றினான் . பின்னர்  விவாக  முகூர்த்தம்  அடுத்திருக்குங்கால்  வாசவதத்தை  வற்சராசன்பாற்   கற்ற விஞ்சையால்  வாடுதலில்லாத  மாலையையும்  விசித்திரமான திலகத்தையும்  செய்து பதுமாவதிக்குக்  கொடுத்தாள் . பதுமாவதி  அவற்றை  அணிந்து  தாயின்  பக்கல்  எய்தினாள் .தாய்  விசித்திரமான  மாலையையும்  திலகத்தையையும்  பார்த்து மிக்க  வியப்புடையவளாய் , “யாரால்  இவை  செய்யப்பட்டன” வென்று  பதுமாவதியை  வினவினாள் .  அவள் “அன்னாய்! ஆவந்திகை  என்னும்  பெயரினையுடைய  அந்தணர்  குலத்துப்  பெண்மகள் என்பக்கல்  இருக்கின்றாள் . அவள்  இவற்றைச்  செய்தனள் “  என்று  மறுமொழி  கூறினாள் . அதனைக்கேட்ட  தாய்  “குழந்தாய் !  மிகப் பெரியவளாகிய  இவள்  எக்காரணத்தினாலோ இங்கு  வந்த  தெய்வ மகள் ஆவாள்.  ஆதலின் , இவண்மாட்டு  விழிப்புடையவளாக  இருப்பாயாக.  .  தக்க  உபசாரங்களாற்  பெருமைப்படுத்துக “  என்று  கூறினாள் . அதுமுதல்  வாசவதத்தை  பதுமாவதி யினால்  மிகவும்  சிறப்பிக்கப்பட்டிருந்தாள் .

                   பின்னர் , வற்சர்  தலைவன்  குறிப்பிட்டவாறு  அமைச்சர்களோடு  புறப்பட்டு  மகத  தேயத்தரசனது  தலைநகரை  யடைந்தான் . மகதராசன்  அவனை  எதிர்கொண்டழைத்து  மகிழ்ச்சியோடு  தன்நகரையடைவித்தான் .  அவ்விடத்தில்  நன்  முகூர்த்தத்தில்  விவாக  மண்டபத்திற்கு  அழைத்து வரப்பெற்ற  வற்சர்  தலைவன்  , மணத்தின் பொருட்டுச்  சித்தமாக  இருக்கின்றவர்களும்  , எல்லா  அணிகலன்களாலும்  அலங்கரிக்கப்பட்ட வளும்  ஆகிய  பதுமாவதியைக்  கண்டான் .  அப்பதுமாவதியின்  உடம்பில்  வாசவதத்தையால் நிருமிக்கப்பட்ட  மாலையினையும்   திலகத்தினையுங்  கண்டு  “தேவியாகிய  வாசவதத்தையினது  கைத்திறமை  இதுவாகும் . இம்மாலையும்  திலகமும்  இவளால்  எங்கிருந்து  அடையப்பட்டனவோ “  என்று  மனத்தினாற்  சூழ்ந்தான் . இதனை  எண்ணிக்கொண்டே  மணவறை  வேதியை  எய்தி  விதிப்படி  பதுமாவதியை  மணந்தான் .

                      அவ்வமயத்தில் , மகதராசன்  யெளகந்தராயணனது வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு  “இனி  உதயனற்குக்  கனவினும்  கேடுசெய்யக்  கருதுவேனல்லேன்”  என்று  உறுதி  செய்தான் . அதன்பின்  உதயனற்கு  விலைமதிக்கொண்ணா  அளவிறந்த  அரதனங்களை  வழங்கினான் . மணத்திருவிழா  நிறைவேறியபின்  யெளகந்தராயணன்   “ஒரு  சமயம்  உதயனன்  உவளகத்திலிருக்கும்  வாசவதத்தையைக்  காணவுங்கூடும் “  என்னும்  ஐயத்தால்  அப்பொழுதே  இலாவாணகத்தைக்  குறித்துப்  புறப்படும்  வண்ணம்  செய்தான் . பதுமாவதியோடு  வற்சராசன்  புறப்பட்டவுடன்  வாசவதத்தையும்  வசந்தகனோடு  மறைவிற்  பின்றொடர்ந்து  சென்றான்  . எப்பொழுதும்  வாசவதத்தையையே  மனத்தால் நினைந்துகொண்டிருக்கும்  உதயனன்  இலாவாணகத்தையெய்தித்  தன்  இருப்பிடத்துட்  புகுந்தான்.  வாசவதத்தையோ  தன்  உடன்பிறந்தானாகிய  கோபாலகனது  இருப்பிடத்தை யடைந்து  அங்குக்  கோபாலகனைப்பார்த்துப்  பிரிவுத்துன்பத்தை   யுள்ளே  அடக்கமுடியாதவளாய்  வாய் திறந்து  அழத்தொடங்கினாள் .  அப்பொழுது யெளகந்தராயணன்  உருமண்வானோடு  அவ்விடத்தெய்தி   வாசவதத்தை யைப்  பலவாறு  தேற்றினான் .

                        இதற்கிடையில் , ஏவன்மகளிர்  விரைந்தோடி  வந்து   வற்சராசனது  முன்னிலையிற்  பதுமாவதியை  நோக்கி  “ஆவந்திகை  யென்னும்  அந்தணர்  குலமாது  எம்மைப்  புறத்தே  நிறுத்தி  விட்டுக்  கோபாலகனது  இல்லத்துட்புகுந்து  ஏதோ ஒரு துன்பத்தால் வாய்திறந்து  அழுகின்றனள்”, என்று  இவ்வாறு  தெரிவித்தனர்  . அது கேட்ட  வற்சராசன்  பதுமாவதியை நோக்கி  இம்மாலையுந்  திலகமும்  எங்கிருந்து  நின்னால டையப்பட்டன  வென்று  கேட்டான் .  அவள்  “யாண்டு  முதிர்ந்த  ஓர்  அந்தணனால்  அடைக்கலமாக  வைக்கப்பட்ட  ஆவந்திகை  என்னும்  பெயரினையுடைய  அந்தணர்குலமாது  என்பால்   இருக்கின்றாள் .  அவள்  என்னால் உண்டி  உடுக்கை  முதலிய  உபசாரங்களால்  நன்கு  போற்றப்பட்டவளாய்  என்பாலளவிகந்த  நட்புரிமை   யுடையவளா யிருக்கின் றாள் .  சிலநாட்களுக்கு  முன்னர்  எனது  மண நிகழ்ச்சி  வெளிப்படுத்தப்பட்டி ருக்குங்கால்   இம்மாலையினையுந்   திலகத்தினையும்  நிருமித்து  எனக்குதவினாள் “  என்று  இவ்வாறு  தெரிவித்துக்கொண்டாள் . அது கேட்ட  வற்சராசன்  “இஃது  உண்மையாக வாசவதத்தையினது  சிற்பத்திறமையையே   யாகும்”  என்று  துணிந்து  அப்பொழுதே  கோபாலகனது  இல்லம்  எய்தினான் .அங்கு  யெளகந்தராயணனால்  முன்னை  உருவம்  எய்தப்பெற்றவளும்  , தனக்கு  நேர்ந்த  கொடிய  பிரிவு  நிலையை  எண்ணி  மிகவும்  வருந்துகின்றவளும்   யெளகந்தராயணனாலும்   உருமண்வானாலும்  வசந்தகனாலும்  பலவாறு  தேற்றப்படுகின்றவளும்  , பிரிவுத் துன்பத்தால்  மிக  மெலிந்த  உடம்பினையுடையாளும்  ஆகிய  வாசவதத்தையைக்  கண்டான் . கண்டதும்  கண்ணீராற்றடுக்கப்பட்ட  வாயினால்   எதனையுஞ்  சொல்வதற்கு  ஆற்றலில்லாதவனாய்க்  கண்களினின்றும்  பெருகி  வழிகின்ற  நீர்த்  தாரைக ளான்  முன்னிடத்தை நனைத்துப்  பேய்  கோட்பட்டான்  போல்  நிலத்தில்  வீழ்ந்தான் .  அங்ஙனம்  வீழ்ந்த  அவனைப்பார்த்தவுடன்  நடுக்கமுற்ற  நெஞ்சினையுடையாளாகிய  வாசவதத்தையும்  அத்தகைய  துன்பத்தை  ஆற்றாதவளாய்  நிலத்தில்  வீழ்ந்தாள் .  கணப்பொழுதில்  தெளிவெய்தித்  தலைவன்  துன்பத்திற்குக்  காரணமாகிய  தன்னைப்  பலவாறு  பழித்துரைத்தாள் .

               அவ்வனயத்தில் தலைவன்  தலைவியாகிய  இவ்விருவர்களது  அத்தகைய  நிலையை  நோக்கி  மிகவருந்துகின்ற  நெஞ்சத்தையுடைய  யெளகந்தராயணனும்  கண்களினின்றும்  நீரை யொழுக்கினான் .  அங்கு  நிகழ்ந்த  குழப்பத்தைக்கேட்ட  பதுமாவதியும்  ஈதென்னை  யென்று  ஏதமுற்ற  நெஞ்சினளாய் அவ்விடத்தை யடைந்தாள் . அப்பொழுது யெளகந்தராயாணன்  வற்சராசனை  நோக்கி “வேந்தர்  பெரும !  நிலவுலக  முழுதும்  நின்வயமாக்கு தற்குரிய  உபாயத்தை  யாராய்ந்தேன் .  அதற்கு  மகத தேயத்தரசன்  ஒருவனே  தடையாயுள்ளான் .  பதுமாவதியின்  விவாகத்தையின்றி  மகதராசனைத்  துணையமைத்துக்கொள்ளக்  கூடவில்லை ;   பதுமாவதியின்  மணத்தை  முடித்துக்  கோடற்கு  என்னால்  இவ்வுபாயம்  மேற்கொள்ளப்பட்டது . இனி. மகதராசன்  கனவிலும்  நினக்கு  துன்பம்  செய்ய  எண்ணான் . யானே  நின்றுன்பத்திற்குக்  காரணமாயினேன் .  தேவி  வாசவதத்தையும்  இதன்பொருட்டு  அழைக்கப்பட்ட  கோபாலகனோடு  ஒற்றுமைப்பட்டு மிக அரிதின் இந்நிகழ்ச்சியிற்  றுணையுடையளாயினாள் . பிரிவுக்காலத்திலும்  இவள்  பதுமாவதியின்  பக்கலிலேயே இருக்கப்பெற்றாள் .  ஆதலின்  பதுமாவதியே  இவள்  கற்புடைமையிற்  சான்றாவாள் . நின்க்குத்  துன்பம்  விளைவித்த  எனது  இப்பிழையைப்  பொறுத்தருள்வாயாக” என்று  இவ்வாறு  கூறினான் .

                       அதுகேட்ட  பதுமாவதி   “யெளகந்தராயணன்  உண்மையையே கூறினான் . யான்  இவ்வாசவதத்தையின்  கற்புடைமையிற்  சான்றாவேன் . யான்  தீப்புகுதலானும்  இதனை  நம்பும்படி  செய்வேன்”  என்றிவ்வாறு கூறினாள் . பின்னர், வாசவதத்தை   “யானே  எனது கற்பு  நிலைமையில்  நம்பிக்கை  கொள்ளும்  வண்ணம்  தீப் புகுவேன் “  என்று  துணிவு  நீர்கொணர்ந்து  ஆசமித்துக்  கிழக்குமுகமாக  இருந்து  “ஏ ! உலகபாலகர்களே! யான்  வற்சராசனாகிய  உதயனற்கு  நலம்  விளைப்பதில்  உறுதி  பூண்டுளேனென்பதும், தேவி வாசவதத்தை கற்புநிலையினின்றும்  பிறழ்ந்திலள்  என்பதும்  உண்மையாயின் , அவ்விரண்டினையும்  இப்பொழுது  அறிவியுங்கள்.  இன்றேல்  தீப்புகுந்து  உயிரைப்  போக்குவேன்”  என்றிவ்வாறு  கூறினாள்.  அச்சொன்முற்றியபொழுதே  அசரீரியாக  “ஓ வற்சராச ! நினக்கு  அமச்சர்  இலக்கணம்  முற்றும்  நிரம்பிய  யெளகந்தராயணன்  மந்திரியாகவும்,  கற்பரசியும் முற்பிறப்பில்  தெய்வமுமாகிய  வாசவதத்தை  மனைவியாகவும்  வாய்ந்தமையால்  நீ மிகச்  சிறந்தவனாயினாய்  ஆதலின்  இவள்பால்  நினக்கு  வேறுபாடான  எண்ணம்  உண்டாதல்  வேண்டா”   என்னும்  இச்சொற்கள் உண்டாயின. அவை கேட்ட  எல்லோரும்  கார்காலத்து மயில்கள் போல  மிக்க  மகிழ்ச்சியுடையராயிருந்தனர் .  பின்னர் , வற்சராசன்  யெள கந்தராயணனது  உபாய  நிபுணத்தன்மையைப்  பலவாறு  பாராட்டினான் .  நில முழுதும் தங்கைப்பட்டதாக  எண்ணினான் . 

வெண்பா

க .        ஆன்ற  அறிவி  நமைவா  சவதத்தை

              யேன்ற  துயரோ  டியைகற்பின்  —  சான்றாம்

              பதுமா  வாயென்னும்  பாவைதனை  வேட்டான்

              விதுநே  ருதயனனாம்  வேந்து .

உ .          தன்றலைவற்  கண்டின்பஞ்  சார  வயலொருத்தி

                மன்றல்  கொளத்தன்  மனமிசைந்து  —  பொன்றாத

                மாலை  யொடுதிலக  மீந்தாள்  வலாரிதரு

                வேலை  யுருவமுதா  மின் .

ஒன்பதாம்  வகுப்பு

(மகதராசன்  சந்தி)

                அதன்பின்,  இரண்டு  மூன்று  நாட்  கழிந்ததும்   மகத தேயத்தரசனுடைய  தூதன்  வந்து  வற்சராசனை  நோக்கித்  “தேவா !அரசர்  பெருமானாகிய  மகதராசன்  என் முகமாகத்  தங்களுக்கு  இவ்வாறு  அறிவிக்கின்றான் .  அஃதாவது  “அரச!  உபாயத்திறன்  வாய்ந்த  நின்  அமைச்சர்களால்  யாம்  வஞ்சிக்கப்பட்டவர்களாயினேம் .  ஆதலின், யாங்கள் பதுமாவதியைக்  குறித்துக்  கவலைகொள்ளாதிருக்கச்  செய்தல் வேண்டும்  என்பதே”  என்று  இவ்வாறு  தெரிவித்தான்  .  அச்சொற் கேட்ட  வற்சராசன்  ஒற்றற்குத்  தக்கவாறு  சிறப்புச்செய்தான் .  பின்னர் “தந்தைக்கு  வேண்டிய  செய்தியைத்  தருக”  என்று  கூறிப்  பதுமாவதியின்  பக்கல்  அவனைப்  போக்கினான்.  

                  பதுமாவதி,  தந்தையின்பானின்று  வருகின்ற  அத்தூதனை  வியப்போடு  மலர்ந்த  கண்ணிணைகளாற்  சேய்மைக்கண்ணே  பார்த்து , அன்போடு  வருக!  வருக!  என்று  அழைத்துத்  “தாயுந்தந்தையும்  நலமுடையர் களாய்  இருக்கின்றார்களா?”  என்று  வினவினாள் .  தூதன் ,  “மன்னவன்  புதல்வி!  அன்னையாகிய  தேவியும்  வேந்தர் பெருமானும்  நலமுடையரே . ஆனால்  அன்னை  நின்னை  வஞ்சித்துக்  கொணர்ந்தமை  கேட்டு  அவலத்தாற்  கலக்குண்டு , நீராடல் , பருகல் , உண்டல்  ஆகிய  இவற்றிற்  பற்றில்லாதவளா யிருக்கின்றாள் .அரசர் பெருமானோ  நினக்கு  ஒருசெய்தி தந்து  என்னை  உய்த்தான் . அச்செய்தி  வருமாறு :-  “வாசவதத்தை  எரிந்து போயினாள்  என்று  பொய்யான அவச்சொல்லை  வெளிப்படுத்தி  வற்சராசன்  நின்னை  வஞ்சத்தாற்  பெற்றுக்கொண்டான் . வாசவதத்தையோ  வற்சராசற்கு  உயிரினுஞ்  சிறந்த  காதலியாவாள்   என்பது  யாவராலும்  உணரப்பட்ட  தொன்றே  . ஆதலின் , “பெண்மகப்  பெறுதல்  துன்பமாம்”  என்பதாம்”  என்று  இவ்வாறு  கூறினான் . 

                    அது கேட்ட  பதுமாவதி , “நல்லோய் ! வஞ்சத்தால்  யான்  கொணரப்பட்டேனாயினும்  இங்குச்  சுகமாகவே  இருக்கின்றேன் . நின் மருகன்  வாசவதத்தையின்பால்  மிக்க  அன்புடையவன்  என்று  யாவரானுங்  கூறப்பட்டானாயினும்  என் மாட்டு  மிகப்  பேரன்புடையவனாகவே  யிருக்கின்றான் . வாசவதத்தையும்  உடன் பிறந்தாளை  யொப்ப  என்பால்  அளவில்லாத  நட்புரிமை  கொண்டுள்ளாள் .  ஆதலின் , என்னிமித்தம்  நீங்கள்  கவலை  மேற்கொள்ளல்  வேண்டாம்  என்னும்  இச்செய்தியை  யான்  கூறியதாகத்  தந்தையின்பால்   நீ சொல்லவேண்டும் “   என்றிவ்வாறு  கூறினாள் . வாசவதத்தையும்  அத்தூதனை  நன்கு  பசரித்தாள் .  பின்னர், பதுமாவதியினது இச்செய்தியை  ஏற்றுக்கொண்டு  தூதன்  மகதராசன் பக்கல்  எய்தினான் .

                        பின்னர் , பதுமாவதி  தந்தையின்  இல்லத்தை  நினைந்து  சிறிது  அவாவிற்று  வருந்தினான் .வாசவதத்தை  வசந்தகனை  யழைத்துப்  “பதுமாவதிக்கு மகிழ்ச்சியொடு  பொழுது போதற் பொருட்டுக்  கதை  சொல்லுக . என்று  கூறினாள் . வசந்தகன்  மனத்தை  இன்புறுத்தத்தக்க  கதைகளைக்  கூறினான் .  கதை  முடிவில்   வாசவதத்தையையும்  பதுமாவதியையும்  நோக்கி “  முற்பிறப்பில்  நீவிர்  இருவீரும்  உடன்பிறந்த  தெய்வப்பெண்களாயிருந்து  ஏதோ  ஒரு  சாபப்பிழையால்  மக்கட்பிறப்பை  யடைந்தீர்கள் . ஆதலின் , உங்கள்  நெஞ்சம்  ஒன்றுக்கொன்று  துணைசெய் வதாகவே  இருக்கும் . ஒருபொழுதும்  நும்மறிவு  மாறுபடும்  நிலையில்  ஒழுகமாட்டாது” என்று  இவ்வாறு  கூறினான் .

                    அது கேட்டுப்  பதுமாவதி மிக்க  மகிழ்ச்சியுடையளாயினாள் . வாசவதத்தை  பதுமாவதி  இவ்விருவர்களின்  உள்ளங்களும்  பொறாமை  சிறிதுமின்றி  ஒன்றுக்கொன்று  அனுகூலமுடையனவாய்  ஓர் உள்ளம் போல் ஆயின .  பின்னர் , யெளகந்தராயணன்  என்னும்  அமைச்சன்  வற்சராசன்  பக்கல்  எய்தி   “வேந்தர் பெரும!  இனிப்பெரியதொரு  முயற்சி  செய்யத்தக்கதாக  இருக்கின்றது . இப்பொழுதே  சிறிதும்  தாழ்த்தலின்றிக்  கெளசாம்பி  நகரத்தைக்  குறித்துப்  புறப்படுதல்  தக்கதாகும் . மகதராசனை  யாம்  வஞ்சித்தேமாயினும்  நமக்கு  துணையில்லாதவனாகமாட்டான் . அவனோ  பதுமாவதியின்  விவாக காலத்தில்  “ இனி யான்  வற்சராசற்குக்  கனவினுங்  கேடு  செய்யக்  கருதேன் ,” என்று  தீக்கடவுள்  சான்றாக  உறுதி செய்துளான் . அன்றி  நம்மோடு  பகைத்து உயிரினுஞ் சிறந்த  பதுமாவதியை  எங்ஙனம்  புறக்கணிப்பான் ?  யானும்  ஒற்றர்களைப்போக்கி  அவள்  உள்ளத்தை  நன்குணர்ந்திருக்கின்றேன் . ஆதலின், எவ்வாற்றானும்  மகதராசன் நமக்குத்  துணைசெய்பவனாவான் .என்பது  உறுதியே  .ஆதலின்  இப்பொழுதே  புறப்பட்டுக்  கெளசாம்பியை  யடைவோமாக”  என்றிவ்வாரு  கூறினான் .

                   யெளகந்தராயணன் , இவ்வாறு  சொல்லிக்கொண்டிருக்குங்கால்  மகதராசனுடைய  தூதன்  வந்தான் .அவன் அரசனால்  அனுமதி  பெற்று  வணங்கி , “வேந்தர் பெரும ! பெருமானாகிய  மகதராசனது  செய்தியைத் தாங்கி  இங்கு  வந்துள்ளேன் . அப்பெருமான் , தன்  அருமை  மகளாகிய  பதுமாவதியின்  செய்தியைச்  தூதன்  முகமாகக்கேட்டு  மிக்க  மகிழ்ச்சியுடையனாய்த்  தூதன்  முகமாகவும், குழந்தை பதுமாவதியின்  செய்தியாலும்  அவ்விடத்து  நிகழ்ச்சிகளை  நன்றாக  அறிந்துளேம் .  நினக்கு  ஒப்பற்ற  அறிவுடையனாகிய  யெளகந்தராயணன்  அமைச்சனாக  இருத்தலின்  நீயே  எவ்வாற்றானுஞ்  சிறந்தவனாவாய் .  பதுமாவதி வஞ்சத்தாற்  கவரப்பட்டாளாயினும்  நலமுடையளாயிருக்கின்றாள்  என்றுகேட்டு  மிகவும்  மகிழ்ச்சியடைந்துள்ளேம் .  எதற்காக  இத்தகைய  ஏற்பாடுகள்  தொடங்கப் பட்டனவோ அச்செயலிற்  காலந்தாழ்த்தலின்றி   நீ  இறங்கல்  வேண்டும் . யாமும்  அந்நிகழ்ச்சியில்  துணைசெய்வோம் “  என்றிவ்வாறு  நின்பாற்றெரி வொக்கும்படி   கட்டளையிட்டருளினான் . என்று  கூறினான் .

                     அதுகேட்டு  வற்சராசன்  உள்ளத்திற்றோன்றிய  அளவலா  மகிழ்ச்சியை  உள்ளடக்கிக்கொண்டு  “தங்கள்  துணையுடைமையால்  யாம்  மிக்க  பெருமையுடையேமாயினேம் . குறிப்பிட்டபடிச்  செய்வேமாக.” என்று   மறுமொழி  கூறி  அத்தூதனை  நன்கு  உபசரித்துப்  போக்கினான் .  தூதன்  மகதராசனது  தலைநகரைக்  குறித்துப்  புறப்பட்டான் . அவ்வமயத்திலேயே  உச்சயினி  நகரத்தினின்றும்  சண்டமகாசேனனால்  அனுப்பப்பட்ட  தூதன்  வந்தான் .அவனும்  வற்சராசனால்  உட்புக  அனுமதி  பெற்றுச்சென்று  வணங்கி  “தேவ ! வேந்தர் பெருமானாகிய  சண்டமகாசேனன்  நட்புரிமையை  முன்னிட்டுத்  தங்களைக்  குறித்துத்  தெரிவித்துக்கொள்வதாவது  :-  “பதுமாவதி  விவாகம்  முதலிய  பாராட்டப்படும்  நின்செயல்கள் அனைத்தையும்  நன்கறிந்துளேன் . யெளகந்தராயணனை  அமைச்சனாகப் பெற்ற  நீ  எவ்வாற்றானும்  பாக்கியவானாவாய் . தன் தலைவனது  நலத்தையே  விரும்பித்  தனக்கு  நேரும்  துன்பத்தையும்  பொருட்படுத்தாமல்  யாருமறியாதவாறு  இருக்கும்  தாழ்ந்த  நிலையை  எய்திய  குழந்தை  வாசவதத்தையும்  மிகவும்  பாக்கியசாலியாவாள் . இன்னும்  வாசவதத்தை  பதுமாவதி  இவ்விருவர்களும்  ஒருவருக்கொருவர்  உண்மையன்புடையரா யிருத்தலைக்  கேட்டு  மிகவும்  மகிழ்ச்சியடைகின்றேன் . ஆதலின்  நும்மால்  அடையவிரும்பிய  காரியத்தில்  சிறிதும்  தாழ்த்தலின்றி  முயற்சி  மேற்கொள்ளப்படல் வேண்டும் . அக்காரியத்தில்  யாமும்  துணைசெய்வோம்’என்பதாகும் “ என்றிவ்வாறு  கூறினான் . அது கேட்ட  வற்சராசன்  சண்டமகாசேனற்குத்  தக்கவாறு  மறுமொழியீந்து தூதனைத்  திருப்பி  யனுப்பினான் .

                      அதன்பின் , யெளகந்தராயணன் கூறியவண்ணம்  வாசவதத்தை பதுமாவதி  இவ்விருவர்களோடு  கெளசாம்பிநகரத்தைக்  குறித்துப்  புறப்பட்டான் . கரை கடந்து செல்லும்  கடல் நீர் போல  அளவிடவொண்ணாப்  படைகள் அவனைப்  பின்பற்றிச்சென்றன . களிற்றரசின்  பிடர்க்கண் ஏறிச்செல்கின்ற  உதயணன்  , கீழ்க்கடன் மலையிற்றோன்றித்  திகழும்  கதிரவனை  யொப்ப  விளங்கினான் .வாசவதத்தையும்  , பதுமாவதியும்  பின்னாக  மற்றொரு  பெண்யானையின்  மீதிவர்ந்து  அவ்வுதயனனைப்  பின்றொடர்ந்து சென்றனர் .  இங்ஙனம் , வற்சராசன்  வரவைக் கேட்டுக்  குதூகலமிக்க  நகரத்து  மாந்தரெல்லோரும்  கெளசாம்பி நகரத்தைக்  அணி செய்தனர் . எவ்விடத்தும் கொடியாடைகளை  இடைவெளியின்றி  யுயர்த்தினார்கள் .இல்லங்கடோறும்  அழகு வாய்ந்த பற்பல  தோரண  வரிசைகளைக்  கட்டினார்கள் ; வீட்டு  வாயில்கள் தோறும் உயர்ந்த  நிறைகுடங்களையமைத்தார்கள் . இவ்வாறு  நகரத்து  மக்கள்  அனைவராலும்  மகிழ்ச்சியோடு  வரவேற்கப்பட்ட  உதயனன்  கெளசாம்பி  ஆரவாரிக்கின்ற  நகரத்து  மக்களால்  நிறையப்பெற்ற  கெளசாம்பி  நகரம் , திங்களஞ் செல்வன்  தோன்றுங்  காலத்துப்  பெரிய அலைகளையுடைய  கடற்கரைபோலத்  திகழ்வதாயிற்று  . இங்ஙனம்  நகரத்திலுள்ள  மாந்தர்களின்  கண்களை  இன்புறுத்தும்  உதயனன்  , வாசவதத்தை  பதுமாவதி  இவ்விருவர்களோடும்  தன்  அரண்மனையை  யடைந்தான் .

வெண்பா

மாமன்மார்  தன்சீர்  வளர்ச்சி  கருதியுய்த்த

தூய்மை  நிறைதுணையாஞ்  சொற்பெறீஇப் – பூமனெழில் 

இன்ப  நிலமா  மிலாவா  ணகமகன்று

நன்புலத்திற்  சென்றனந்  நாள் .

பத்தாம்  வகுப்பு

(அரியணையடைதல்)

          அதன்பின்னர், பிற்றைநாட்காலையில்  வற்சராசன்  காலைக்கடனை  முடித்துக்கொண்டு  அமைச்சர்களோடு  அத்தாணி  மண்டபத்தை  யலங்கரித்தான் . அப்பொழுது  ஓர்  அந்தணன்  வாயிற்புறத்தையடைந்து  “அந்தோ! அந்தோ! “என்று  கதறினான் .  உதயனன்  துன்பத்தின்  காரணத்தைக் கேட்க, அவ்வந்தணன்  “வேந்தே”  காட்டிற்  செல்கின்ற  என்புதல்வன்  குற்றம்  யாதும்  செய்யாதிருப்பவும்  அவன்  காலைக்  கொடியவர்களாகிய  இடையர்கள்  வெட்டினார்கள்  “  என்றிவ்வாறு  கூறினான் .அது கேட்டு  வற்சராசன்  அந்தணனைத்  தேற்றி  அக்கணமே  அவ்விடையர்களைக்  கொண்டு  வரச் செய்தான் . கொணர்வித்து  “எதற்காக  இத்தகைய  கொடுஞ்செயலைச்  செய்தீர்கள் ?”  என்று  வினவினன் . அவர்கள் “அரசர் பெரும! இடையர்களாகிய  யாம்  மனித  சஞ்சாரமில்லாத  காட்டில்  விளையாடிக்கொண்டிருந்தோம் . எங்களுள் , தேவசேனன்  என்னும்  பெயரினையுடைய  இடையன்  ஒருவன்  இருக்கின்றான் . அவன்  காட்டின்  ஒருபுறத்தே  கல்லான்  அமைந்ததோர்  இருக்கையைக்  கண்டு  அதன்கண்   அமர்ந்தான் .அமர்ந்த மாத்திரத்திலேயே   “யான்  இப்பொழுது  இடையர்களுக்கு  அரசனாகின்றேன் .ஆதலின் , இனி நீவிர்  விழிப்புடன்  எனது ஆணைவழி  ஒழுகுதல் வேண்டும்  “  என்று  எமக்குக்  கட்டளையிட்டான் .யாங்களும் அவ்வாணையை  அங்ஙனமே  ஏற்றுக்கொண்டோம் . அது முதல் அவன்  ஆணையை  யாம்  கடப்பதில்லை .  அவன் இங்ஙனங் காட்டில்  அரசுசெலுத்திக் கொண்டிருக்குங்கால்,  இவ்வந்தனன்  புதல்வன்  அவ்வழிக்கட்  சென்றுகொண்டிடுந்தான் . . எங்கள்  அரசனாகிய  தேவசேனனுக்கு  வணக்கஞ் செய்திலன் .யான்  அவன் பக்கல்  அணுகி  “வேந்தற்கு  வணக்கஞ்  செய்யாது  நீ  செல்லல்  கூடாது “ என்று  கூறினேம் .அவன் இங்ஙனம்  பலவாறு  வற்புறுத்து ரைக்கப்பட்டும் எம்மைப்  பொருட்படுத்தாமற்  சென்றான் .அதன்பின்  யாம்  எல்லோரும்  அவனை வலிந்திழுத்து  அரசன்  பக்கல்  சேர்ப்பித்தோம்  .  எங்கள்  தலைவனாகிய  அத்தேவசேனன்  “இறுமாந்தைவனது காலை  வெட்டி  விடுங்கள்”  என்று  எமக்குக்  கட்டளையிட்டருளினான் .  ஆதலின்  யாம்  அரசனது  ஆணையை  மேற்கொண்டேம் . அரசனது ஆணையைக்  கடத்தற்கு  எங்ஙனம்  ஆற்றலுடையேம் ஆவேம்?”  என்ன்றிவ்வாறு  தெரிவித்துக் கொண்டனர் .

            இவ்வாறு  இடையர்கள்  கூறிய  சொற்களைக்  கேட்டு  அறிஞனாகிய  யெளகந்தராயணன்,  நெடு நேரம்  மனத்தில்  ஆராய்ந்து  , வற்சராசனை  மறைவிடத்திற்கழைத்து  “வேந்த! அவ்விடத்தில்  அளவில்லாத  வைப்புப்பொருள்கள்  நிச்சயமாக  உள்ளன .  அப்பொருண்மாட்சியால் இடையனும்  அரசனை  யொப்ப  ஒழுகுதற்குரிய  வன்மையுடையவனாயினான் .ஆதலின்  இப்பொழுதே  புறப்பட்டு  அவ்விடத்தையடைந்து  சோதித்தல் வேண்டும் “  என்று  இவ்வாறு  கூறினான் . வற்சராசன்  அங்ஙனமேயாகவென்று  உடன்பாடுற்று  அக்கணத்தே  புறப்பட்டு  இடையற்களாற்  காட்டப்பட்ட  நெறியே  சென்று  அவ்விடத்தை யடைந்தான் . பின்னர்  அவ்விடத்தை  வினைஞர்களைக்  கொண்டு  தோண்டுவித்தான் . அவ்விடத்தினின்றும்  மலையை  ஒத்த  உருவத்தினை யுடைய   ஓர்  இயக்கன்  கிளம்பினான் . அவ்வியக்கன்  “அரச!  நின் குலத்து  முன்னோர்களால்  வைக்கப்பட்ட  பெரிய  நிதி  இங்குள்ளது . அதனைக்   காத்தற்கு  இத்துணைக்காலம்  ஈண்டிருந்தேன். அதனைப்  பெற்றுக்கொள் வாயாக, செல்கின்றேன்”  என்று  சொன்னான் . அது கேட்டு  மிக்க  மகிழ்ச்சியடைந்த  வற்சராசன்  இயக்கத்திற்கு  அளவின்றிப்  பூசை  செய்தான் அப்பூசனையை  ஏற்றுக்கொண்டு  அவ்வியக்கன்  மறைந்தான் . அதன்பின் , கல்லப்பட்ட  அவ்விடத்தினின்றும்  பெரிய நிதி  வெளிப்பட்டது . பின்னும்  அவ்விடத்தில்  மிக்க விலைமதிப்புள்ள  இரத்தினங்களழுத்திய  அரியணையும் 

காணப்பட்டது . ஆங் காலத்தில்  மனிதற்கு  மேன்மேலும்  மங்கள வரிசைகள்   தாமாகவே  வந்தடைவனவாம் . ஆதலின் , வற்சராசன்  இடையர்களை  நோக்கி  “இனி நீவிர்  இன்னோரன்ன  கொடுஞ்செயல்களைச்  செய்தல்  கூடாது “  என்று  கட்டளையிட்டான் .

                  பின்னர் , பொருட் குழுவனைத்தையும்  எடுத்துக்கொண்டு  தன் நகரத்தைக் குறித்துப்  புறப்பட்டான் . இரத்தினங்களிழைக்கப்பட்ட   அவ்வரியணையை  நன்கு  பார்த்துக்  கெளசாம்பி  நகரத்து  மக்களெல்லோரும்  மிகவும்  வியப்பெய்தினர் . மற்றா நாள்  யெளகந்தராயணன்  வற்சராசனை  நோக்கி  “வேந்தே! நின் முன்னோர்கள்  வீற்றிருந்த  இரத்தின சிங்காதனத்தில்  ஏறி  அலங்கரிப்பாயாக “ என்றிவ்வாறு  தெரிவித்தான் . அதற்கு  வற்சராசன்,  “எனது முன்னோர்களாகிய  அரசர்கள்  நிலவுலக  முழுதையும்  தந்தோள்  வலியால் வென்று  இவ்வரியணையில்  ஏறி  வீற்றிருந்தார்கள் . யானும்  எல்லாத்  திசைகளையும்  வென்றபின்னரே  இவ்வரியணையில்  ஏறுதற்கு  விரும்புகின்றேன் .ஆதலின்  இப்பொழுதே  நாற்புறமும்  கடல்சூழ்ந்த  இந் நிலவுலகத்தை வென்று  கோடற்குப்  புறப்படல்  வேண்டும் “ என்றிவ்வாறு  மறுமொழி  கூறினான் .  

                   யெளகந்தராயணன் , அச்சொற்களை  மகிழ்ந்து பாராட்டினான் . பின்னர்  “முதலிற்  கீழ்த்திசையை  நோக்கிப்  புறப்படுவாயாக “ என்று  கூறினான் . அது கேட்டு  வற்சராசன்  “வடக்கு முதலிய  திசைகள் இருக்கக்  கீழ்த்திசையைக்  குறித்து முதலிற்  செல்லல்  வேண்டுமென்னும்  நியமம்  எதற்காகச்  செய்யப்பட்டுள்ளது “  என்று  வினவினான் .  அதற்கு  யெளகந்த ராயணன் , “வேந்த !  கேட்பாயாக  .நான்கு  திசைகளுள்  வடதிசை  எல்லாச் செல்வமும்  நிறைந்ததாயினும் , மிலேச்சர்களாற்  கவரப்பட்டிருத்தலின்  இழிந்ததாகும் ; மேற்றிசையும்  கதிரவன்  சென்று  மறைதற்குக்  காரணமாயிருத்தலிற்  சிறந்ததன்று; தென்றிசையும் இயமனால்  ஆளப்படுதலின்  உயர்ந்ததன்று ; கீழ்த்திசையிலோ  பகவானாகிய  கதிரவன்  உதயமாகின்றான் ;  அத்திசையிலேயே  எல்லாத்  தேவர்களுக்குந்  தலைவனா கிய  இந்திரன்  வீற்றிருக்கின்றான் ;  எல்லா உலகத்தையும்  தூய்மை செய்யும்  கங்கையும்  கீழ்பாலை  நோக்கி  ஓடுகின்றது .; கங்கையின்  சிறப்பைப் பற்றி   வேறு  கூறற்பாலது  என்னை?  எல்லா  நாட்டினுள்ளும்  கங்கை  நீராற்  றூய்மை செய்யப்படும்  நாடே  சிறந்ததாகப்  பாராட்டப்படுவதாகும் ; பெரும்பாலும்  அரசர்கள்  பலர்  கங்கைக்  கரைகளிலுள்ள   நாடுகளிலேயே  வாழ்கின்றனர் ; ஆதலின்  நலத்தை  விரும்பும்  அரசர்  முதலிற்  கீழ்பாலை  நோக்கிச்செல்வர் ; நின்முன்னோர்களும்  கீழ்பாற் றொடங்கியே  எல்லாத் திசைகளையும்  வென்றனர் ;  கங்கைக்கரையிலுள்ள  அத்தினாபுரத்திலேயே  வாழ்ந்தனர்  . நின்பிதாமகனாகிய  சதானீகன்  அத்தினாபுரத்தைவிட்டுக்  கெளசாம்பியை யடைந்தான் ; அத்தினாபுரத்தினும்  சிறந்த  எழில்  வாய்ந்ததாகுங்  கெளசாம்பி நகரம் ; சதானீகன்  நிலமுழுதும்  ஆளுதல்  ஆண்மையின்  பாலதாகும் ; நாடு  என் செய்யும்  என்றெண்ணி  முன்னோர்களாற்  பெறப்பட்டதாயினும்  அத்தினாபுரத்தை  யொழித்து விட்டான் ; நினக்கு  இப்பொழுது  ஊழ் நல்லதாக  இருக்கின்றது ; ஆண்மையும்  நிறைந்துள்ளது ; ஆதலிற்  சிறிதுந்  தாழ்த்தலின்றித்  திக்குவிசயத்தின்  பொருட்டுப்  புறப்படல்  வேண்டும் “  என்றிவ்வாறு  மறுமொழி  கூறினான் . இங்ஙனங் கூறிய  யெளகந்தராயணன்  சொற்களைக்  கேட்டு  வற்சராசன் , “அமைச்ச!  நலமதொன்றடைதற்குறு  மிடையூறு  நாதனே !  பலவுள”  என்பது  முதுமொழி.  ஆதலின், இடையூறுகளைப்  போக்குதற்கு  முதலிற்  பகவானாகிய  உமாநாதனை  வழிபடுதற்கு  விரும்புகின்றேன் . “  என்று  கூறினான் . யெளகந்தராயணனும்  அங்ஙனமே  செய்தல்   வேண்டுமென்று  ஒத்துரைத்தான் ,  பின்னர்  மற்றை  அமைச்சர்களும்  தழீஇக்கூற, வற்சராசன்   வாசவதத்தை, பதுமாவதி  இவ்விருவர்களோடு   நீராடித்  தூய்மையுடையனாய்  மூன்றிரவு  பட்டினி  இருந்து  பகவானாகிய  உமாகந்தனைப்  பூசித்தான் . நோன்பின்  இறுதியிற்  சிவபெருமான்  கனவிற்றோன்றி   “வேந்த ! நீ  குற்றமற்ற  மெய்யன்போடு  செய்த  வழிபாட்டினான்  மகிழ்ச்சி  யெய்தினேம் .  சிறிதும்  ஐயமின்றித்  திக்குவிசயங்  குறித்துப்  புறப்படுவாயாக  .  தடையில்லாத  வெற்றியையடை வாய் .  வித்தியாதரச் சக்கரவர்த்தியாகிய  புதல்வனையும்  விரைந்து  பெறுவாய் “  என்றிவ்வாறு  கட்டளையிட்டருளினார் . அதன்பின்  கண்விழித்த  வற்சராசன்  பெரிதும்  இன்பமுடையனாயினான் .  காலைப்பொழுதில்  இக்கனவின்  நிகழ்ச்சியை  நோன்பினாலிளைத்த  மனைவிமார்க்குங்  கூறினான் . பின்னர்  அமைச்சர்களுக்குங்  கூறினான் . அதனை  எல்லோரும்  கேட்டு  மகிழ்ச்சியின்  பேரெல்லையை   அடைந்தார்கள் . பின்  வற்சராசன்  நோன்பை  முடித்து  உணவுட்கொண்டான் .

வெண்பா

முன்னோர்தம்  வைப்பாம்  முழுமணிப்  பூண்பொருளும்

பொன்னா  ரரியணையும்  போற்றியெடுத் —  தந்நாள்

திசைவிசயஞ்  செய்தேறச்  சிந்தித்  தரனை

வசையொழியப்  பூசித்தான்  மன். 

பதினோராம்  வகுப்பு

(திக்குவிசயம்)

அதன்பின் ,  மற்றா நாள் , யெளகந்தராயணன் , வற்சராசனை  நோக்கி  “தேவ! பகவானாகிய  பார்வதீ  காந்தன்  திருவருளால்   நீ  பாக்கியவனாயினாய். ஆதலின்  இப்பொழுதே  திக்குவிசயத்தின்  பொருட்டுப்  புறப்படுவாயாக  .  தோள்வலியால்  ஈட்டப்படும்  அரசியற்றிருவை  யடைவாயாக . அறவழியான்  ஈட்டப்படுஞ்  செல்வமே  அழிவில்லாததாகும் .  மறவழியான்  ஈட்டப்படுஞ்  செல்வங்கள்  புன்னுனியிற்  பொருந்தியிருக்கும்  பனித்திவலைகளை  யொப்பச்  சிறிது பொழுதில் அழிந்துவிடும் .  ஆதலின்  அரசன்  அறவழியாற்  பொருளீட்டுதலில்  முயற்சி  செய்தல் வேண்டும் . நினக்கு  இப்பொழுது எல்லாத்  திசைகளும்  எளிதில்  வெல்லற்பாலனவாம் . நினக்கு  மாமன்மார் இருவர்களுடைய  இயைபாற்  பல அரசர்கள்  உறவினராயினர் .  அவ்வெல்லோரும்  திக்குவிசயங்  குறித்துச்  செல்லும்  நின்னோடு  பகைமை கொள்ளார் . துணை செய்தலையே  மேற்கொள்பவராவர் . காசிநகரிற்  பிரமதத்தன் என்னும்  பெயரினையுடைய  அரசன்  ஒருவன் உளன் . அவன் ஒருவனே  முதலிற்  கருதற்பாலன் . அவன்  நினக்கு  எப்பொழுதும்  பகைவனாவான் . அவனை முதலில் வென்று   பின்னர்க்  கீழ்த்திசை  தொடங்கி  எல்லாத்திசைகளையும்  வெல்லுவாயாக”  என்று  கூறினான் .

                 இங்ஙனங்கூறிய  யெளகந்தராயணன்  சொற்களைக் கேட்டு வற்சராசன் படைத்தலைவனை யழைத்து “ இப்பொழுதே  திக்குவிசயச்  செலவிற்குரிய  ஏற்பாடுகளைச்  செய்தல் வேண்டும் “  என்று  கட்டளையிட்டான் . அப்பொழுது  வாசவதத்தையின் உடன் பிறந்தவனாகிய கோபாலகனும்  பதுமாவதியின்  உடன் பிறந்தவனாகிய  சிங்கவன்மனுந்  துணை செய்தற்பொருட்டு  அவனைப்  பின்றொடர்ந்து  சென்றனர் . வற்சராசன்   கோபாலகனை  விதேக  நாட்டிற்கு  அரசனாகச்  செய்தான் . சேதி நாட்டைச்  சிங்கவன்மனுக்குக்  கொடுத்தான். பின்னர்த்  தனக்குத்  துணைசெய்தற் பொருட்டு  விந்திய மென்னும்  அடவியினாப்பண் இருக்கின்ற  வேடர்  தலைவனாகிய  புளிந்தகனைப்  பரிவாரங்களோடு  கொண்டுவரச் செய்தான் .  

                 இதற்கிடையில் , யெளகந்தராயணன்  பிரமதத்தனது  செயலை  அறிதற்பொருட்டுக்  காசிநகரைக் குறித்து  ஒற்றர்களைப்  போக்கினான் .அவர்கள்  காபாலிக  வேடந்தாங்கிக்  காசிநகரை  யடைந்தார்கள் . அவர்களுள் , குகனென்னும்  பெயரினையுடைய  ஒருவன்  ஆசாரிய  வேடம்  பூண்டான் . மற்றையோர்  அவர்க்கு  மாணவகர்  ஆயினர் . அவர்கள்  ஐயமேற்றுண்ணும்  அவ்வஞ்சக குருவை  முக்காலமு முணர்ந்தோன்  என்று  புகழ்ந்து  கொண்டாடினர் . காசிநகரத்து  மாந்தர்  அனைவரும்  எதிர்காலத்து வரும்  நன்று  தீதுகளைக்  கேட்டற்கு  வணக்கத்தோடு  அவன்பக்கல்  சூழ்ந்தனர் . எல்லாவற்றையும்  ஞானக்கண்ணாற்  காண்பவன்  போல்  அபிநயஞ்  செய்கின்ற  அக்கபட  குரு , இன்ன  இடத்தில்  நெருப்புப்  பற்றும் , இன்ன  இடத்திற்  களவுபோம்  என்று  இவை  முதலியவற்றுள்  எதனை யெதனை அம்மாந்தர்க்குச்  சொல்லுகின்றானோ  அதனை யதனை அவன் மாணவர்கள்  உண்மையாகவே  செய்தனர் . இதனால் அவன்  பெரும்புகழ்  எங்கும்  பரவுவதாயிற்று .  அவ்வமயத்தில்  வற்சராசனது திக்குவிசய  யாத்திரையின்  ஏற்பாட்டை  ஒற்றன்  முகமாக  அறிந்த பிரமதத்தன் மிகவும்  கலக்குண்ட  நெஞ்சமுடையனாயினான் . அப்பொழுது  மிக  வியக்கத்தக்க  மகிமைகளையுடைய  இக்காபாலிகவிரதி வந்திருத்தலைக்  கேட்டு  அவனை வழிபடுதற்குத்  தன் மகன் ஒருவனை யனுப்பினான் . அக்கபடகுரு  அவ்வரச குமாரனைச்  சிறந்த மாணவனாக  ஏற்றுக்கொண்டான் .பின்னர்  அவன்முகமாகப்  பிரமதத்தனுடைய  எல்லா மறைபொருள்களையும்  அறிந்தான் .

               வற்சராசன் , முதலிற்  காசிநகரை  நோக்கிப்  படையெடுத்துவருவான்  என்றுணர்ந்த  யோககரண்டகன்  என்னும்  பெயர் வாய்ந்த  பிரமதத்தனுடைய  அமைச்சன்  பல வஞ்சகச்  செயல்களைச்  செய்தான் . வழியிலுள்ள  மரங்கள் , கொடிகள் , நீர்நிலைகள் , புற்கள்  ஆகிய  இவைகளை  நஞ்சு பொருந்தச் சேர்த்துக் கெடுத்தான் . பொருட்பெண்டிர்  உருவந்தாங்கிய  நச்சுப் பெண்களை   ஆங்காங்கு  நிலைப்படுத்து இயங்கவைத்தான். இராக்காலங் களிற்  பாசறை  புகுந்து மறைவிற்  படைகளைக்  கொல்லுதற்குரிய  கொலைத் தொழில் வல்ல மாக்களைத் திட்டஞ் செய்தான் . இங்ஙனம்  பிரமதத்தனுடைய  அமைச்சனாற் செய்யப்பட்ட  வஞ்சகச்  செயல்களை யுணர்ந்து கபடமிக்க  காபாலிகன்  ஒற்றன்முகமாக யெளகந்தராயணற்கு   அறிவித்தான் .

     பின் , வற்சராசன் கணிதம் வல்லுநரால்  தெரிந்துரைக்கப்பட்ட  நன்னேரத் திற்  படைகளோடு  புறப்பட்டான் . அப்பொழுது அவர்க்கு  வெற்றியை  யறிவுறுப்பனவாகிய  நன்னிமித்தங்கள்  பல உண்டாயின. நிலவுலக  மனைத்தையும் மறைத்துக்கொண்டு  கிளம்பியதும் அளவறுக்க  ஒண்ணாதது மாகிய  அவன்படை ஊழிக்காலத்திற்  கரைகடந்தெழூஉம்   கடநீர்போலக்  காணப்பட்டது . மிகவுயர்ந்த களிற்றின் பிடர்க்கண்  ஏறி வீற்றிருக்கும்  உதயனன்  காலைபொழுதில் உதயமலையின்  உச்சியில் விளங்கித் தோன்றும்  கதிரவனை யொப்பத் திகழ்ந்தான் . முதலிற்  கிழக்குத்  திசையைக்  குறித்துப்  புறப்பட்ட  வற்சராசன் காசிநகரை நோக்கிச்  சென்றான்.

              முன்னரே,  பிரமதத்தனுடைய  அமைச்சன்  யோக கரண்ட கனாற்  செய்யப்பட்ட  வஞ்சகங்களையறிந்த  யெளகந்தராயணன்  மாற்றுச்  செயல்களால் அவ்வஞ்சகச்  செயல்களைப்  பயனில்லாதனவாம்படி  செய்தான் . நஞ்சின்  சேர்க்கையாற்  கெடுக்கப்பட்ட  புல் , நீர் முதலியவை களை எதிர்ப்பிரயோகத்தால் ஆராய்ந்து ஒழித்தான். நச்சுப்பெண்களின்  றடையைப் போக்குதற்கு , முன்னர்க்  காணப்படாத  பெண்கள் உட்புகுதலைப் படைவீட்டிற்  றடுத்தான் . மறைவிற் கொல்லுங்  கொலைத் தொழிலாளரை  உபாயங்களாற்  றேடிக்கொன்றான் . இங்ஙனம் யெளகந்தராயணன் பகைவனுடைய  வஞ்சகச் செயல்களைப்  பயனில்லாதனவாக்கி   வற்சராசனது வெற்றிச்செலவை  இடையூறில்லாததாகச்  செய்தான் . இவ்வாறு  இடையூறொழித்து  அளவில்லாத  படைகளாற்  றிசையிடங்களை  நிறைத்து வந்த  வற்சராசனைக் கண்டு செயற்பாலது இன்னதென்று  அறியாமையாற்  பாழடைந்த  நெஞ்சினனாகிய  பிரமதத்தன்  அமைச்சர்களோடு  சூழ்ந்து “வற்சராசனை வெல்லுதற்கு  முடியாது “  என்று  துணிந்தான் .  பின்னர்ப்  பல வகைக் கையுறைப்பொருள்களை  ஏந்திக்கொண்டு  தலையிற்  கைகூப்பி  வற்சராசன் பக்கல் எய்தினான் .  அடைக்கலம்  புகுந்தோரை  அன்பு செய்யும்  வற்சராசன் , அப்பிரமதத்தனை மகிழ்ச்சியாற்  பெருமைப்படுத்தி  விடுத்தான்.

               இவ்வாறு, வற்சராசன் , வணங்கினவர்களை அன்பினாற் காத்தும் , இறுமாந்தவர்களை  வேரோடு களைந்தும் ஆங்காங்கு  வெற்றிக்கொடிகளை  நாட்டிக்  கீழ்க்கடற்கரையை  யடைந்தான் . அதன்பின்  மகேந்திரநாட்டின்  தலைவனாகிய  கலிங்கனை எதிர்த்துச் சென்றான் .  அக்கலிங்கன்   நீரோட்டத்தில்  வளைந்து கொடுக்கும்  நாணற்புல்லின்  நிலையை  மேற்கொண்டு  மகேந்திர தேயத்திற்றோன்றிய   அளவிறந்த  யானைகளைக்  கையுறையாகக்  கொடுத்து வணங்கினான் .  அதன்பின்  கடற்கரை வழியாகவே  தென்றிசைகளை  வெல்லுதற்குப்  புறப்பட்டான் . அவ்விடத்துக்  காவிரியாற்றைக்  கடந்து சோழராசனை  வென்றான் . பின்னர்  முரளையாற்றின்  கரையை  விரைந்தடைந்து  வணங்கிய  சேரர்களுக்கு  அருள் செய்தான் . பின்னர் எழுவகைப் பிரிவினையுடைய  கோதாவரியைக்  கடந்து  நருமதையாற்றின்   கரையில்  இரண்டு  மூன்று  நாட்கள்  தங்கினான். பின்னர், அதனையுங்  கடந்து  உச்சயினி  நகரத்தை  நோக்கிப்  புறப்பட்டுச்  சென்றான் . சண்டமகாசேனன்  அன்போடு  எதிர்சென்று  நல்வரவேற்க  அவ்வுச்சயினி  நகரத்துட்  புகுந்தான் . அவ்விடத்தில் , தன் நாட்டை  மறக்கச்செய்யும்  மாமன்  வீட்டு  வாழ்க்கை  இன்பத்தை நுகர்ந்து சில நாட்களைப் போக்கினான் .

                அதன்பின்  மேற்றிசையைக்  குறித்துப்  புறப்பட்டுச்சென்று  இலாடதேசத்தரசர்களை  வென்றான் .  பின்னர்  மந்தரமலையைக் கடந்து வடதிசையை யடைந்தான் . அவ்விடத்திற்  சிந்து தேயத்தரசனை இருத்தி இறுமாப்புடைய  மிலேச்சர்களை ஓட்டினான் . பின்னர்ப்  பாரசீகநாட்டை  யடைந்து வணக்கமில்லாத  பாரசீகத்தரசனது தலையைக்  கூரிய  அம்புகளாற்  பிளந்து வீழ்த்தினான் .  பின்னர்  இமயமலையின்  சாரலில்  இருக்கின்ற  ஊணர்களைப்  பணியச்செய்தான் . அதன்பின், காமரூபேசுவரன் என்பான் , வற்சராசனைக்  குடைநிழல்  பெறாத  தலையால் வணங்கி  இறைப்பொருள்  கொடுத்தான் .

                     இவ்வாறு  வற்சராசன் , நிலமுழுதும் வென்று  பதுமாவதியின்  தந்தையாகிய  மகதராசனது தலைநகரை  யடைந்தான் . மகதராசன் , எல்லா  நாட்டினுஞ்  சென்று  தடுக்கப்படாத  பராக்கிரமம்  வாய்க்கப்பெற்று , வாசவதத்தை , பதுமாவதி இவ்விருவர்களோடும்  வருகின்ற  மருமகனைக் கண்டு  மிகவும்  மகிழ்ச்சியடைந்தான் . முன்னர் உவளகத்தில் மறைவாக  இருந்தவளும்  இப்பொழுது வெளிப்படையாக  வருகின்றவளுமாகிய  வாசவதத்தையை  உவளகத்து மகளிர்  அனைவரும்  வியப்புஞ்  சிறப்புமுடையராய்ப்  பார்த்தார்கள் .  அவ்விடத்தில்  மகதராசனால் . விசேட  உபகாரஞ்  செய்யப்பெற்ற  உதடனன்  அங்கிருந்து புறப்பட்டு  இலாவாணகத் தை யடைந்தான் . படைகள்  இளைப்பாறுதற்  பொருட்டுச்  சில  நாள்வரை  அங்க்குத்  தங்கினான் .  பின்னர் யாத்திரையானேர்ந்த  துன்ப  நீங்கிய  சைனியங்களை யழைத்துக்கொண்டு  கெளசாம்பியை  நோக்கிச் சென்றான். வெற்றித் திருவால்  விளங்குகின்ற  வேந்தனை  நேராகத்  தரிசனஞ்  செய்தற்குக்   குதூகல  மிக்க  நகரமாந்தர்களால்  தோரண முதலியவைகளைக்  கொண்டு  அலங்கரிக்கப்பட்டதும்  நாற்புறமும்  உயர்த்தப்பட்ட  கொடிகளையுடையதுமாகிய  கெளசாம்பி  நகரத்துட்  புகுந்தான் . பின்னர்  நகரத்து மக்களாலும்   அமைச்சர்களாலும்   அனுமதி  பெற்று  நன்முகூர்த்தத்தில்  இரத்தின  சிங்காதனத்திவர்ந்து வீற்றிருந்தான் .  அப்பொழுது திக்குவிசயத்தினால்  ஈட்டிய  பொருளனைத்தையும்  அந்தணர்க்கு  வழங்கினான் .  இவ்வாறு  தன்றோள்வலியால்  ஈட்டிய  அரசியற் றிருவினால் விளங்குகின்ற  வற்சராசன்  உருமண்வானிடத்தும், யெளகந்தராயணன்  பாலும்  அரசியற்சுமையனைத்தையும்  வைத்துவிட்டு வாசவதத்தை   பதுமாவதியாகிய  இவ்விருவர்களோடுங்  கூடி  விளையாடித் , தேவர்களும்  விரும்பத்தக்க  இன்பத்தை  நுகர்ந்து , காலங்கழித்து  வந்தான் .

வெண்பா

  ஒற்ற  ரமைச்ச  ருரன்வலியாற்  றிக்கனைத்தும்

         வெற்றிகொடு  மாமன்மார்  மேவிடஞ்சென் – றுற்ற

        நலனுகர்பு  தன்னகரின்  நண்ணினான்  றோளின்

                                வலன்மிகுதார்  வண்மைசெறி  மன் .

            முன்றோன்று  செல்வத்தை  முன்னச்  சிறந்ததுமன்

றன்றோள்  வலியாற்  றருந்திருவே— யென்று

                               கருதி  வினைமுடித்துக்  காண்டகு  பண்டை

                                யரியணைக்க  ணுற்றா  னரசு 

பன்னிரண்டாம்  வகுப்பு

( நரவாகனதத்தன்  பிறப்பு )

               அரசியலில்  கருத்தில்லாத  வற்சராசன்  சிலநேரம்  வசு நேமியாற்றரப் பட்ட  யாழை  வாசித்துக்  காலங்கழிப்பான் .  சில நேரம்  வேட்டையாடி  மனத்தை  மகிழ்விப்பான் .  சிலநேரம்  யாழோடு  ஒன்றுபட்ட  கண்டவிசையாற்  பாடுகின்ற  வாசவதத்தையின்  இசைத்தொழிற்  றிறமையைக்கண்டு  தலையசைத்து  மகிழ்வான் . சிலநேரம்  சுவைபடப்  பேசுந்திறன்  வாய்ந்த  பதுமாவதியோடு  கூடி  இன்புற்று  நெடுநேரத்தை  ஒரு கணமெனக்  கழிப்பான்.

                 பின்னர் , அரசியல்  நினைவை  மறந்து வேட்டை  யாடுதலிற்  பற்றுடையவனாய்  எப்பொழுதும்  காட்டிற்றிரிவானாயினான் . அதனையறிந்த  நாரத முனிவர்  அங்கு  வந்தார் . வற்சராசன்  அந் நாரதமுனிவரைச்  சேய்மைக்கண்ணே கண்டு , விரைந்து இருக்கையினின் றெழுந்து எதிர்கொண்டழைத்தான் . பின்னர்த் தன்  கைகளாற்  கொணர்ந்திடப்பெற்ற  இருக்கையில்  அவரை  யிருக்கச்செய்து  முறைப்படி  உபசரித்தான் .  வணக்கமுடையனாகிய  வற்சராசனாற்  செய்யப்பட்ட  வழிபாட்டை  ஏற்றுக்கொண்ட  நாரத முனிவர் ,பின்வருமாறு  கூறுவாராயினார் . “வேந்த ! நினக்கு  நலமுண்டாதலை  விரும்பிச்  சிறிது உபதேசஞ்  செய்வான் இங்குப்  போந்தேன் . வேட்டையாடுதலில்  உண்டாம்  பேரவா அரசர்களுக்குப்  பெரிதும் ஏதந்தருவதாம் . இதனாற்  பல  அரசர்கள்  துன்பம்  எய்தினர் . நின் முன்னைப்  பிதாமகனாகிய  பாண்டு  என்னும்  பெயரினையுடைய  அரசன் ஒருவன்  இருந்தான் . அவன்  நின்னை யொப்ப  வேட்டையாடுதலில்  மிகப்பற்றுடையனாக  இருந்தான் . வேட்டையாடிக்  காட்டில்  மானுருவத்தோடு  திரிந்த  கிந்தமன்  என்னும்  பெயரினையுடைய  முனிவனைக் கொன்றான் .  அம் முனிவன்  சாபத்தாற்  பாண்டு   காளைப்  பருவத்திலேயே  மரணமெய்தினான் . ஆதலின்  துன்பம்  விளைவிக்கும்  வேட்டை  விருப்பை  விடுப்பாயாக  .வாசவதத்தையோடு  பகவானாகிய  உமாகாந்தனை  வழிபடுவாயாக.  அச்சிவபிரான்  திருவருளாற்  காமதேவன்  கூறாக  ஒரு புதல்வன் நினக்கு  உண்டாவான் .  அவன்  வித்தியாதரச் சக்கரவர்த்தியுமாவான் “  என்று  கூறி  நாரத முனிவர்  வற்சராசன்பால்  விடைபெற்றுச்  சென்றார் .

                     அதன்பின்  வற்சராசன் , வாசவதத்தையோடு  மூன்றிரவு  பட்டினியிருந்து  சிவபெருமானை  ஆராதனை  செய்தான் . சிவபிரான் அவ்விருவர்களுக்குங் கனவிற்றம்  தரிசனங்கொடுத்துப்  பின்வறுமாறு  கட்டளையிட்டருளினார் .  “நுங்கள்  வழிபாட்டான்  மகிழ்ச்சியடைந்தேம் . விரைவிலேயே  காமதேவன்  கூறாகவுள்ள  புதல்வனை  யடைவீர்கள் .   ஆதலின்  நோன்பை  முடித்துக்கொள்வீர்களாக”  என்று  கூறி  மகேசுரர்  மறைந்தார் .  

                      அதன்பின் , விழிப்பெய்திய  வாசவதத்தையும்  வற்சராசனும்  பெருமகிழ்ச்சியடைந்தனர் .  பின்னர்  விதிப்படி  நோன்பை  நிறைவேற்றிக் கொண்டு   உணவுட்கொண்டனர் . சிலநாட்  சென்று  இரவில்  மிகுதுயில்  மேற்கொண்ட  வாசவதத்தையைச் , சடைமுடி  தரித்த  தேவன்  ஒருவன்  அடைந்து  தெய்வ உலகில்  உண்டாகிய  ஒரு பழத்தை அவட்குக்  கொடுத்து அப்பொழுதே  மறைந்தான் . பகவானாகிய  சிவபெருமானே  பழமென்னும்  பொருளாற்  புதல்வனை  யருளினார் என்று  கருதி வற்சராசன் மிக்க மகிழ்ச்சி  யடைந்தான் . வாசவதத்தை கருத்தரித்தாள் . அவள்  முகம்  வெண்ணிறம்  எய்திற்று ; உடலும் மெலிவுற்றது . ஓர்  அமயம்  அவள் தன்னை விண்ணில்  விமானத்தில்  ஏற்றிக்கொண்டு  போவதாகவும்  , கேட்டற் கினிமை யுண்டாம்படி  பாடுகின்ற  வித்தியாதரப்  பெண்கள்  போற்றுவதாகவும்  கனவிற்  கண்டாள் . விழிப்புற்ற  அவள்  அந் நிகழ்ச்சிகளை  நேராக அனுபவிக்க  விரும்பினாள் .  யெளகந்தராயணனும்  தனது  இந்திரசால  விச்சைத்  திறமையால்  அவள் விருப்பத்தை  நிறைவேற்றினான் .  வாசவதத்தையின்  வயிற்றிற்  கருப்பம்  முறையாக  வளர்ந்தது ; அவள்  இடை  பருத்து ; மும்மடிப்பும்  மெல்ல  மெல்ல  மறைந்தது  . அக்கருப்பத்தை  எப்பொழுதுந்  துணைநின்று  சூலபாணியாகிய  சங்கரர்  பாதுகாத்தார் .  

                   பத்தாந்  திங்களில்  வாசவதத்தை  பேறுகாலத்தின்  அணிமையுடை யளாயினாள் . நன்நேரத்தில்  மணிமயமான  விளக்குக்களாலும் , மஞ்சண்  முதலிய  மங்கலப்  பொருள்களாலும் , அணி செய்யப்பட்ட  மகப்பேறும்  இல்லத்துட் புகுந்தாள் . அவ்விடத்தில்  திங்களஞ்  செல்வனைப்போலக்  கண்களுக்கு  இன்பம்  விளைவுக்கும்  புதல்வனைப்  பெற்றாள்  .  அப்பொழுது  உவளகத்திலுள்ள  தோழிமாரனைவரும்  விரைந்து யான்முன்  யான்முன்  என்று  ஒடிவந்து  வற்சராசற்குப்  புதல்வற்பேற்றை  அறிவித்தனர் .  அது கேட்டு  மிகப்  பெருமகிழ்ச்சி  யடைந்த  வற்சராசன்  அத்தோழிமார்க்கு  மிக்க  விலை மதிப்புள்ள  இரத்தினங்களை  வழங்கினான் . பின்னர்  விருப்பத்திற்கு  மேற்பட்ட  பொற்  கொடைகளால்  அந்தணர்களை  மகிழ்வித்தான் .

                      அதன்பின் , அரசியற்  பெருந்திருவை  எய்துதற்குரிய  இலக்கணங்கள்  அமையப்பெற்றதும் , காலைப்பொழுதிற்  றோன்றிய  இளங் கதிரவனாலலர்த்தப்பட்ட  தாமரைப்  பூவைப்  போலத்  திகழ்கின்ற  சிவந்த  அதரங்களையுடையதும்  ஆகிய  தன்  குழந்தையைக்  கண்டான் . கண்டு  உவாமதியைக்கண்ட  பெருங்கடல்  போலத்  தன்னுள்  அளவிறந்த  மகிழ்ச்சியை  அடைந்தான் . பின்னர் , சாந்திகரன்  என்னும்  பெயர்  வாய்ந்த  இவனுடைய  புரோகிதன் புதல்வற்குச்  சாதகன்மம் முதலிய  கிரியைகள்  அனைத்தையும்  நிறைவேற்றினான் .  அப்பொழுது எதிர்பாராமலே  அசரீரிச்சொல்  “வேந்த ! காமதேவன்  கூறாக  அவதரித்த  நினது  இப்புதல்வன்  நரவாகனதத்தன்  என்னும்  பெயரினன்  ஆவான் . இவன் சின்னாளிலே  வித்தியாதரர்களுக்குச்  சக்கரவர்த்தியாவான் “  என்றிவ்வாறு  உண்டாயிற்று  .  அப்பொழுது விண்ணுலகத்தினின்றும்  பூமழை  பொழிந்தது .  தேவதுந்துபி  வாச்சியத்தின்  ஒலி  கேட்கப்பட்டது .  

                       பின்னர்  நகரத்து  மாந்தர் அனைவரும்  அரசனது  புதல்வற் பேற்றுத்  திருவிழாவைக்  கொண்டாடினார்கள் . அவ்வமயத்திற்  கெளசாம்பி நகர  முழுவதும்  திருவிழாப்  பொலிவுடையதாயிற்று  . வற்சராசன்  ஆகாயவாணியாற்   சொல்லப்பட்ட  வண்ணம்  இப்புதல்வற்கு  நரவாகனதத்தன் என்று  பெயரிட்டான் . நரவாகனதத்தன்  முற்பக்கத்துத்  திங்களஞ்  செல்வன்  கலை  போல  மெல்ல  மெல்ல  வளர்ச்சி  யடைந்தான் . அகாரணமாகப்  பற்களின்றித்  தோன்றும்  அவன்  சிரிப்புக்கள்  வற்சராசனை  ஆனந்த  பரவசனாகச்  செய்தன . எல்லா  மக்கள்  கண்களுக்கும்  இன்பம்  விளைக்கின்ற  அப்புதல்வன்  முழந்தாள்களாற்  றவழ்தல்  சாமந்த  அரசர்களுடைய  உள்ளங்களையும்  உவகையுறச்  செய்தது . பின்னர் , தடைப்பட்டுத்  ததும்பி  வருகின்ற  பொருள்  விளக்கமில்லாத  அப்புதல்வனுடைய  மழலைச்சொற்களைக்  கேட்டு  வற்சராசன் பெரிதும் உள்ளமகிழ்பூத்தான் . இதற்கிடையில்  யெளகந்தராயணன்  மருபூதி  என்னும்  பெயரினையுடைய  புதல்வனையடைந்தான் . உருமண்வான்  அரிசிகன்  எனப் பெயரிய  மகனைப் பெற்றான் .  வசந்தகனுக்குத்  தபந்தகன்  என்னுங்  குமாரன்  உண்டாயினான் . இத்தியகன்  என்னும்  பெயரினையுடைய  வாயில்காப்போனுக்குக்  கோமுகன்  எனப் பெயரிய  புதல்வன்  உண்டாயினான் . அதன்பின் , ஓரமயம்  நரவாகனதத்தற்குப்  பகைவரிடத்தினின்றுந்  தீங்கு  விளையுங்கொலோவென்னும்  ஐயத்தால் வற்சராசன்  மிகவும்  கவற்சியடைந்தான் . அதனையறிந்த  யெளகந்தரா யணன்  அவ் வுதயனனை  மறைவிடத்தில்  வைத்து  , “தேவ ! நின்  புதல்வனாகிய   நரவாகனதத்தனைப்  பாதுகாத்தல்  குறித்துச் சிறிதுங்  கவலு தல்  வேண்டா .  பகவானாகிய  அம்மையப்பர் , இப்புதல்வன்  எதிர்காலத்தில்  வித்தியாதரச்  சக்கரவர்த்தியாதலைத்  திருவுளங்கொண்டு  பிறப்பித்தார் .இப்புதல்வற்குத்  தீங்கிழைப்பான்  எண்ணி  முயல்கின்றனர் .ஆதலின்  உண்மைக்  கருணாநிதியாகிய  அப்பகவான்  தம்பகன்  எனப்  பெயரிய  கணத்தலைவனை  இப்புதல்வன்  பாதுகாப்பு  நிமித்தம்  விடுத்துள்ளார் . அத் தம்பகன்  இப் புதல்வனைக்  காத்துக்கொண்டு  இவ்விடத்திலேயே  பிறராற்  காணப்படாமல்  இருக்கின்றான் . இச் செய்தியை  ஓரமயம்  நாரத முனிவர்  என்பால்  வந்து  தெரிவித்தனர் “  என்றிவ்வாறு  கூறினான் .  அது கேட்ட  வற்சராசன்  கவலுதல்  ஒழிந்தான் .   

                    இங்ஙனம்  உதயனனால்  வளர்க்கப்பட்டுப்  பூருவபக்கத்துச்  சந்திரகலைபோல  மெல்ல மெல்ல  வளர்ச்சி  யெய்துகின்ற  உறுப்புக்களையுடைய   நரவாகனதத்தன்  உரிய  காலங்களில்  செளளம் உபயநயனம் முதலிய  கிரியைகள்  செய்விக்கப்பெற்றுப்  புனிதனாயினான் . தன்னோடு  ஒத்த  பருவத்தினராகிய  மந்திரி குமாரர்களோடு  கூடி  எல்லாக்  கலைகளையும்  பயின்றான் . பணிவு  முதலிய  உயர்  குணங்களால்  மிகவும்  பெருமையுற்று  விளங்கும்  நரவாகனதத்தன்  முறையே  எல்லாக்  கலைகளிலும்  திறமை யெய்தினான் .  அதன்பின்  பாலப்  பருவங்  கடந்த  அந்  நரவாகனதத்தற்கு  மணஞ்  செய்தற்குரிய  காலம் வந்ததாக  உதயனன்  எண்ணினான் .

வெண்பா

        எப்பொருளுந்  தானா  மிறைவன்  றிருவருளா

னற்பொருளாஞ்  சேய்மணியை  நண்ணினான்  — மெய்ப்பொருள்

          கொள்ளு  மறிஞனெனக்  கொண்டான்  பெருமகிழ்ச்சி

           வள்ள  லுதயனனா   மன்

                                                                 ——————-

பதின்மூன்றாம்  வகுப்பு

(கலிங்கசேனையின்  வரலாறு)

               விசும்பினை  யளாவிய  மேனில  இல்லங்கள்  சூழ்ந்த  தக்க  சிலையெனப்  பெயரிய  நகரம்  ஒன்றிருந்தது . அந் நகரின்கண், கலிங்கதத்தன்  எனப் பெயரிய  அரசன்  ஒருவன்  இருந்தான் . அவற்குத்   தாரதத்தை  என்னும்  பெயரினை  யுடையாள்  பெருந்தேவி  யாயினாள் . அவ்விருவர்க்கும்  நெடுங்காலம்  மகப்பே றிலதாயிற்று  . அதனால்  மிகவும் துன்ப  மெய்திய  கலிங்கதத்தன்  அரிதிற்  காலங்  கழித்துக்  கொண்டிருந்தான்  இதற்கிடையில்  உம்ப  ருலகத்தில்  ஒரு  பெருந்  திருவழா  நிகழ்ந்தது .  அப்பொழுது  அரமகளிர்  அனைவரும்  ஆடுதற் பொருட்டு  ஒன்று  கூடினர் . அவ் அரமகளிருள்  ஒருத்தியாகிய  சுரபிதத்தை  மாத்திரம்  அங்கு  வாராமல்  தன்  விருப்பின்  வண்ணம்  நந்தவனத்தில் ஒரு  வித்தியாதரனோடு  கூடி  இன்ப  விளையாடல்களைச் செய்துகொண்டிருந்தாள் . அதனை யறிந்த தேவேந்திரன்  அவளைத்  “தீவினையாட்டி ! நீ  மனித உலகத்தை  அடைவாயாக”  என்று  சபித்தான் . அச் சாபத்தை  யறிந்த  அவள்  விரைந்து வந்து தேவேந்திரனுடைய  திருவடிகளில்  வீழ்ந்து  “தேவ ! என்  குற்றத்தைப்  பொருத்தருளல்  வேண்டும்”  என்று  வேண்டினாள் .  தேவேந்திரன்  கருணையுடையனாய்  “நீ  ஒரு  பெண்  மகவை  ஈன்றபின்  மீண்டும்  இவ்வுலகை  யடையக்  கடவாய்”  என்று  அருள்  செய்தான் .  அச் சுரபிதத்தை  தாரதத்தையின் வயிற்றிற்  கருவுருவாகக்  புகுந்தாள்  .

                   அதன்பின் , ஒருநாள் நள்ளிரவில்  தாரதத்தை விசும்பினின்றும்  வீழ்ந்த ஒளிப்பிழம்பு  தன் வயிற்றுட்  புகுந்ததாகக்  கனவு  கண்டாள் . காலைப்பொழுதில்  விழித்து  அக்கனவைத்  தன்  தலைவற்கு  அறிவித்தாள் . அவன்  அக்கனவைக்  கேட்டு மிகவும்  மகிழ்ச்சி  யெய்தினான் .  அப்பொழுதே  தாரதத்தை  கருத்தரித்தாள் .  பத்தாந்  திங்களில்  மின்னற் கொடியை யொத்துத்  திகழும்  பெண்  மகவை ஈன்றாள் .  கூதிர்காலத்துத்  திங்கண்மண்டிலத்தைப்  போல  மக்கள்  எல்லோருடைய  கண்களுக்கும்  இன்பத்தைச்  செய்கின்ற  அப்பெண்மகவைக்  கண்டு  பெரிதும்  இன்புற்ற  கலிங்கதத்தன் கலிங்கசேனையென்னும்  பெயரையிட்டு  அழைத்தான் .  முற்பக்கத்துத்  திங்களஞ் செல்வன் கலை போல்  நாடோறும்  வளர்ச்சி  யெய்துகின்ற  அக்கலிங்கசேனை  இல்லத்தின்  முற்றங்களிலும்  மேனிலங்களிலும்  உய்யானங்களிலும்  விளையாடல்  புரிந்து முறையே  பாலப்  பருவங்  கடக்கப்  பெற்றாள் . 

                      அதன்பின்  ஒரமயம்  விசும்பில்  தெய்வ  ஊர்தியிற்  போக்கு வரவு  புரிகின்றவளும்  மாயாசுரனுடைய  மகளுமாகிய  சோமப்பிரபை  என்பாள்  அரண்மனையின்  மேனிலத்தில்  தோழிகளோடு  விளையாடல்  புரியும்  கலிங்கசேனையைக்  கண்டாள் . அக்கலிங்கசேனையின்  தெய்வீகத்தன்மை  வாய்ந்த  எழில்  நலத்தை  நோக்கிப்  பின்வருமாறு  சிந்திக்கலாயினாள் .  “ஆ ! இப்பெண்மணியின்  எழில்  நலம்  இந் நிலவுலகத்தில்  எய்தற்கரியது . இவள்  தெய்வமகளோ !  அன்றி  நாககன்னிகையோ !  கண்ணெதிரிற்  போந்த  இலக்குமிதேவியோ !  ஏதோ  ஒரு  சாபப்பிழையால்  நிலவுலகத்தையடைந்த  இவள்  உறுதியாக  ஒரு  தெய்வப்பெண்ணாக  இருத்தல்  வேண்டும்  .  இன்னும்  இவளைப்பார்த்த  அளவினானே  என்னுள்ளம்  மிகவும்  இன்புறுகின்றதா கலின்  இவள்  முற்பிறப்பில்  என்  அன்பிற்குரிய  தோழியாந்தன்மையையும்  எய்தியிருத்தல்  கூடும் .  ஆதலின்  இவளோடு  நட்புரிமையை  மேற்கொள்ளல்  வேண்டும் .  விரைந்து  இவள்  பக்கல்  அணுகுவேனாயின்  இவள் அச்சம் எய்துவாள் “   என்றிவ்வாறு  உள்ளத்திற்கருதி  அச்சோமப்பிரபை  மெல்ல  மெல்ல  விமானத்தினின்றும்  இறங்கி  மனிதப் பெண்ணுருவம்  தாங்கிக்  கலிங்கசேனையின்  பக்கல்  எய்தினாள் .  கலிங்கசேனையும்  அச்சோமப்பிரபைக்  கண்டு   “ஆ !  ஈதென்னை  வியப்பு !  இம்மாநுடப்பெண்  இவ்விடத்தை  எவ்வாறடைந்தாள்? “    என்று கூறி  விரைந்தெழுந்து  எதிர்சென்று  வருக வருக வென்று நீட்டிய  கையினை  யுடையவளாய்  அவளைத்  தழீஇக் கொண்டாள் . பின்னர் , தானே  விரைந்தோடி  இருக்கை  கொணர்ந்தாள் .அவளை இருக்கையிலிருத்தி  அவளுடைய  பெயர்  இடம்  முதலியவற்றை  வினவினாள் . அதன்பின்  அவ்விருவரும்  தம்முள்  உரையாடினர்  .  அதனால்  அவ்விருவர்க்கும்  நெருங்கிய  நட்புரிமை  யுண்டாயிற்று .  சோமப்பிரபை  அவ்விடத்திற்  சிறிது  நேரம்  இருந்து  “தோழீ!  கலிங்கசேனே  !  என்  இருப்பிடம்  இங்கிருந்து அறுபதுயோசனை  தூரத்திற்கப்பாலுள்ளது . கதிரவனும்  அத்தகிரியை  யடைகின்றான் .  ஆதலின்  எனக்கு  விடை யருள்வாயாக “  என்று  கூறிவிட்டு  எழுந்து  விமானத்திலேறிப்  போயினாள் .

                       சோமப்பிரபை  சென்ற  வழியையே  இமைத்தலில்லாத  கண்களாற்  பார்க்கின்ற  கலிங்கசேனை  விமானம்  தன்கட்  புலன் கடந்தமை யுணர்ந்து ,  “ஆ ! தெய்வ  மகளோடு  எனக்கு  நட்புரிமையுண்டாயிற்றே .  ஈதென்னை  வியப்பு !”   என்று  கூறி  அவ்வியப்பினாற்  பரவசமாயினாள் . அதன்பின் சோமப்பிரபையை  நினைவுட்  கொண்டே  இரவு  முழுதும்  கழித்தாள் . பிற்றைநாட்  காலைப்பொழுதில்  மீண்டும்  சோமப்பிரபை  கலிங்கசேனையின் பக்கலை  எய்தினாள் . எய்தி  மரத்தான்  ஆக்கப்பட்ட னவும்   வியக்கத்   தக்கனவுமாகிய  பற்பல  பாவைகள்  நிறைந்த  பேழை  ஒன்றனைக்  கலிங்கசேனைக்குக்  கொடுத்தாள் .  கலிங்கசேனை , “இப்பேழையில்  யாதுள்ளது .? “  என்று  கேட்டாள் . சோமப்பியை  பேழையைத்  திறந்து  காட்டினாள் .   அதன்கட்  சில  பாவைகள்  மலர்களான்  மாலை  தொடுத்தன ;  சில  பாவைகள்  பானீயங் (குடித்தற்குரிய  நீர்  முதலியன )  கொணர்ந்தன .; சில  ஆடின ;  சில  பாடின ; சில  வீணை  வாசித்தன .   இவ்வாறு  பற்பல  விதங்களாக  அமைந்த  பாவைகளைக்  கண்டு  கலிங்கசேனை  தன்  மனத்தில்  அளவிடற்கரிய  ஆனந்தம்  எய்தினாள் . பின்னர்ச்  சோமப்பிரபை  கலிங்கசேனைக்குத்  தெரிவித்து  விட்டுத்  தன் இருப்பிடத்தைக்  குறித்துப்  போயினாள் .  இவ்வாறு  சோமப்பிரபை  மீண்டு  மீண்டுங்  கலிங்கசேனையின்  பக்கல்  போக்கு வரவு  புரிபவளாயினாள் .  

                          பின்  ஓரமயம்  கலிங்கசேனை  தன்பால் எய்திய  சோமப்பிரபையை  நோக்கி ,  “தோழீ ! என்னுள்ளத்தோடொத்த  நின்பால் ஒரு மறைபொருளைப் பற்றித்  தெரிவித்துக்  கொள்ளுதற்கு  விரும்புகின்றேன் . மணஞ்செய்தற்குரிய  பருவம்  வாய்ந்த என்னை  அரசர் பலர் விரும்புகின் றனர் .  தந்தையோ  என்னைச்  சிராவத்தி  என்னும்  நாட்டின்  தலைவனாகிய  பிரசேனசித்து  என்னும்  பெயரினையுடைய  அரசர்க்கு  கொடுக்க  விரும்புகின்றார் . இஃது  என்  அன்னையாற்  கூறப்பட்டது ; அப்பிரசேனசித்துவை   நீ  முன்னர்க்  கண்டதுண்டா ?  அங்ஙனமாயிற்  கூறுவாயாக .  அவன்  எத்தகையன் ?  அவன்  உருவம்  எத்தகைத்து ?”  என்றிவ்வாறு  கூறினாள் .  அதனைக்  கேட்ட  சோமப்பிரபை  கைகளாற்  செவியைப்  பொத்திக்கொண்டு  “தீவினை  யொழிக ;  அமங்கலம்  நீங்குக “  என்று  கூறிக்  கண்களினின்றும்  மிகவும்  நீரை  ஒழுக்கினாள் . கலிங்கசேனை  அவளை  நோக்கி , “இங்ஙனம்  துன்புறுதற்குக்  காரணம்  என்னை?”  என்று  கேட்டாள் .  சோமப்பிரபை  கலிங்கசேனையை  நோக்கி  , “தோழீ !  மணமகன்  இலக்கணங்களாக  ஆராயப்படுவன  பருவம் , குலம் , சீலம் , கல்வி ,உருவம்  என்னும்  இவை  முதலிய  பலவாம் .  அவற்றுட்  பருவமே  சிறந்ததாகும்  .  சிராவத்தி  நாட்டின்  தலைவனாகிய  பிரசேனசித்து என்பான்   குலம் , சீலம் , கல்வி , உருவம்  என்னும்  இவைகள்  நிரம்பப்  பெற்றவனாயினும்  யாண்டு  முதிர்ந்தவனாவான் .  யாண்டு  முதிர்ந்தவன்பாற்  குலமுதலியவற்றால்  எய்தக்கடவ  பயன்  யாதுள்ளது .? ஆதலின் , அவன்  நினக்கு  ஒத்த  மணமகன்  ஆகான் .  கெளசாம்பி  என்னும்  தலைநகரில்  வாழ்கின்ற  வற்ச  தேயத்தரசனாகிய   உதயனனோ   நினக்கியைந்த  மணமகனாவான் . அவனும்  நின்னை  மிக்க வனப்புடையவள் என்று  கேட்டிருக்கின்றான் . ஆதலின்  நின்பாற்  சிறந்த  காதற்கிழமை  பூண்டுளான் .  அங்ஙனமாயினும்  அவர்க்கு  வாசவதத்தை  யென்னும்  பெயரினையுடைய  பெருந் தேவி ஒருத்தி யுள்ளாள் . அவள்பால்  அவன்  மிகப் பெரும் காதலும்  மதிப்பும்  உடையான் . அவட்கு  மனக்கலக்கம்  உண்டாகுமென்னும்  அச்சத்தால் நின்னை  வேண்டுகின்றானல்லன்”  என்றிவ்வாறு  கூறினாள் .

                  இங்ஙனங்  கூறக்கேட்ட  கலிங்கசேனை  சோமப் பிரபையை நோக்கி, “என்  அன்பிற்குரிய  தோழீ ! வற்சதேயத்தரசன்   என்னை  மணஞ்  செய்து  கோடற்கரிய  உபாயத்தை  ஆராய்தல் வேண்டும் . அன்றி , வாணாசுரன்  புதல்வியாகிய  உடையின்  பொருட்டு  அநிருத்தனைச்  சித்திரலேகை  கொணர்ந்தாங்கு  நீயே  அவ் உதயனனை இங்குக்  கொண்டுவரல் வேண்டும்”  என்றிவ்வாறு  கூறினாள் . பின்னர்ச்  சோமப்பிரபை , “அரசுப்பெண்ணாகிய  சித்திரலேகை  என்பாள்  தனக்கு  உரியனல்லாத  மற்றோராடவனை  தீண்டுதன்  முதலிய  செயல்களைச்  செய்தாள் . யான்  இத்தகைய  செயலை  எங்ஙனம்  செய்வல்?  இனி  ஒன்று  செய்வேன்  .  நீ  எனது  இவ்விமானத்தில்  ஏறிக்கொள்ளல் வேண்டும் .  முதலிற்  பிரசேனசித்துவை  நினக்குக்  காட்டி  அதன்பின்  வற்சதேயத்தரசன் பக்கல்  நின்னைச்  சேர்ப்பேன் .  ஆதலின், ஆடை அணிகலன்கள்  எல்லாவற்றையும்  எடுத்துக்கொண்டு  புறப்படுக” என்று சொல்லினாள் . கலிங்கசேனை  “அங்ஙனமேயாக”  வென்றுடன்பட்டுத்  தாய்  தந்தையர்க்குங்  கூறாமல் , குலவொழுக்கத்தையும்  பொருட்படுத்தாமல்  உலகங் கூறும்  பழிச்சொல்லையும்  புறக்கணித்து , ஆடை  அணிகலன்  பொருள்  எல்லாவற்றையும்  எடுத்துக்கொண்டு  சோமப்பிரபையோடு  விமானத்திலேறிப்  புறப்பட்டாள் .  காமநோய்  வயப்பட்டார்  வரக்கடவ  நன்மையையாதல்    தீமையையாதல்  நோக்குவாரல்லர்  .  தாம்  புரியுஞ்செயல்  நல்லதாயினும்  தீயதாயினும்  அதனை  ஆராயாமல்  துணிந்துசெய்யும்  இயல்பினரன்றே !

                 அதன்பின் , சோமப்பிரபை  கலிங்கசேனையை  விமானத்திலேற்றிக்  கொண்டு  சிராவத்தி  நாட்டை  அடைந்தாள் . அங்கே  நரை திரை மிக்க உடலினையுடைய  பிரசேனசித்து  என்னும்  அரசனைக்  காட்டினாள் . அதன்பின்  கெளசாம்பி  நகரத்தை  யடைந்து  அந்நகரத்தின்   புறத்தேயுள்ள  பூஞ்சோலையில்  விளையாடிக்கொண்டிருக்கும்  காமனை யொத்த  உருவம்  வாய்ந்த  வற்சதேயத்தரசனைக்  காட்டினாள் . அவ் உதயனனையே  நெடு  நேரம்  இமைத்தலில்லாத  கண்களாற்  பார்க்கின்ற  கலிங்கசேனை  ,  “தோழீ ! சோமப்பிரபே !  இப்பொழுதே  என்னை  இவனோடு  கூட்டுவிப்பாயாக .  யான்  இவனை  யின்றி  ஒரு  கணப்பொழுதேனும்  உயிர்  வாழேன் “  என்று  கூறினாள். சோமப்பிரபை , “தோழீ ! இப்பொழுது  தீநிமித்தங்கள்   பிற  காணப்படு கின்றன . ஆதலின் , இப் பூஞ்சோலையிலேயே  பலர்  அறியாவாறு  சிறிது நேரம்  இருப்பாயாக .  யான்  எனது இருப்பிடம்  எய்தி விரைந்து திரும்பி  வருவேன் “ என்று  கூறிப்  போயினாள் . வற்சதேயத்தரசன்  அப்  பூஞ்சோலைக் கண்ணே  நெடு நேரம்  விளையாடல்  செய்து  பின்  ஏவலாளரோடு  தன்  இருப்பிடம்  எய்தினான் . பின்னர்க்  கலிங்கசேனை  சகுனநிலை  யுணர்ந்த  சோமப்பிரபையால்  தடுக்கப்பட்டும்  காமவெறியின்  இறுதி  எல்லைக்கண்  இவர்ந்து  வற்சநாயகன்பால்  யாண்டு  முதிர்ந்த  தூதன்  ஒருவனை  ஏவினாள். அத் தூதன்  வாயில்  காப்பவனால்  விடப்பட்டு , உட்புகுந்து  வற்சதேயத்தரசனை  வணங்கி , “தேவ ! தக்கசிலை  என்னும்  நகரத்திலுள்ள  கலிங்கதத்தன்  என்னும்  அரசற்குக்  கலிங்கசேனை  என்னும்  புதல்வி  ஒருத்தி  யுள்ளாள் .  அவள்  மங்கைப்  பருவமுடையளாய்  அரசர்  பலரால்  வேண்டப்பட்டும்  நின்னையே  தனக்கு  ஒத்த  மணமகனாகத்  துணிந்துளாள் .  அன்னாள்  இப்பொழுது  சுற்றத்தார்  எல்லோரையும்  விட்டுத்  தன்  அன்புரிமைத்  தோழியும்  மாயாசுரன்  மகளும்  நளகூபரன்  மனைவியுமாகிய  சோமப்பிரபையோடு  கூடி  விமானத்திலேறி  நின் உய்யான  வனத்தில்  வந்தி ருக்கின்றாள் . இந் நிகழ்ச்சியை  யறிவித்தற் பொருட்டுத்  தேவரீர்  பக்கல்  அவள்  என்னை  விடுத்தாள் .  ஆதலின்  அவளை  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்.  திங்களும்   நிலவும்  போன்ற  நுங்கள்  இருவீரது  சேர்க்கை  மிகவும்  சிறந்து  விளங்கும் “  என்றிவ்வாறு  தெரிவித்தான் . இங்ஙனங்  கூறிய  யாண்டு  முதிர்ந்த  தூதனுடைய  சொற்களை  வற்சதேயத்தரசன்  கேட்டு  மிக்க  மகிழ்ச்சியுடையனாய் , “அங்ஙனமேயாக”  என்று  அத்தூதனுடைய  மொழிகளை  மகிழ்ந்தேற்று  ஆடை  அணிகலன்  முதலிய  பரிசில்களால் அவனை  உவப்பித்தான் . பின்னர்  அப்பொழுதே  அமைச்சருள்  தலைவனாகிய  யெளகந்தராயணனை  யழைத்து  எல்லாவற்றையும்  அறிவித்தான் .  அவ் அமைச்சன்  அரசற்கு  நலத்தை  விரும்புகின்றவனாய்ப்  பின்வருமாறு  சிறிது  நேரம்  சிந்திக்கலாயினான் .

                    “கலிங்கசேனையோ  உருவச்சிறப்பாற்  புகழ்வாய்ந்தவள் .மூவுலகத்திலும்  அவளுக்கு  ஒப்பான  அழகு  வாய்ந்தவள்  வேறொருத்தியுமிலள் . அமரரும்  அவளையடைய  விரும்புகின்றனர் .  நம்  வற்ச தேயத்தரசன்  அவள  மணம்  புரிந்து கொள்ளுவானாயின்  ,  பிறவெல்லாவற்றையும்  துறந்து அவளிடத்திலேயே  காதலுடையனாவன் . அங்ஙனமாயின்  வாசவதத்தை  நெடுநாள்  உயிர்  தாங்கியிராள் .  புதல்வனாகிய  நரவாகனதத்தற்கும்  தீங்கு  விளையும் . பதுமாவதியின்  வாழ்க்கையும்  ஐயப்பாட்டிற்குரியதாகும் .  சண்டமகாசேனனும் மகத  தேயத் தரசனும்  தம்  புதல்வியர்க்கு  நேருங்  கேட்டினால்  தம்  உயிரை  விடுவர் .அன்றி  வற்சராசன்மாட்டுப்  பகைமை  மேற்கொள்வர் .  ஆகவே  கலிங்கசேனையின்  மணத்தால் எல்லோருக்கும்  அழிவு  உண்டாம் .  அவன்  மன்றலை  அறவே  விலக்குதலும்  பொருத்தமன்று . அங்ஙனம்  விலக்கப்படின்  அரசற்குக்  காமவேதனை  மிகும் . ஆதலின் , காலந்  தாழ்த்தலே  இப்பொழுது செய்யத்தக்கதாகும் “  என்றிவை  முதலியவற்றைப்  பலபடியாக  ஆராய்ந்து  யெளகந்தராயணன்  வற்சராசனை  நோக்கி  “அரசே !  கலிங்கசேனை  நின்னையடையத்  தானே  வேண்டுகின்றமையால்  நீ  பாக்கியவானா கின்றாய் . கலிங்கதத்தனும்  நினக்கு  நண்பனாவான் .  ஆதலின் , நன் முகூர்த்தத்தில்  கலிங்கசேனையின்  மணம்  நிறைவேற்றத்தக்கது . விவாகத்திர்குரிய  சிறந்த  இலக்கினத்தைச்  சோதிடர்களைக்  கேட்டுத்  தீர்மானிப்பேன் .   அக் கலிங்கசேனையின்  செல்வச்  சிறப்பிற்கேற்றவாறு  இருப்பிடத்தையும்  மிகவுயர்ந்த  ஆடை  அணிகலன்களையும்  அளித்த்ல் வேண்டும் . அவட்குப்  பணி செய்தற் பொருட்டுப்  பணிப்பெண்களையும்  ஏவலாளரையும்  நியமித்தல் வேண்டும் “  என்றிவ்வாறு  கூறினான் .  வற்சராசனும்  யெளகந்தராயணன்  கூறியாங்குச்  செய்தான் . விரைவில்  தன்  விருப்பம்  நிறைவேறி  விடுமென்று  மகிழ்கூர்ந்தான் .

                   யெளகந்தராயணன்  சோதிடர்  எல்லோரையும்  அழைந்து  “வற்சராசனது  நலத்தின் பொருட்டு  நீவிர்  துணை செய்தல் வேண்டும் . அவன்  “கலிங்கசேனையை  மணஞ்  செய்து  கோடற்கேற்ற  நல்ல  இலக்கினத்தைத்  துணிவீர்களாக “  என்று  நும்மை  நோக்கிக்  கூறுவான் . அப்பொழுது  நீவிர் , “மணத்திற்கியைந்த  நன்முகூர்த்தம்  ஆறு  திங்களுக்கிடையில்  இல்லை “  என்று  கூறல்  வேண்டும்  .  இன்னோரன்ன  பொய்யுரையால்  தீங்கு  நேருமென்றெண்ண  வேண்டா.  “பொய்மையும்  வாய்மையிடத்த  புரைதீர்த்த, நன்மை  பயக்குமெனின் “  என்பது பொய்யில்  புலவர்  பொருளுரையாகும் “  என்றிவ்வாறு  கூறினான் .  அக் கணிகளும் (சோதிடர்)  அங்ஙனமேயாகவென்றுடன்பட்டனர் . அதன்பின் ,  பிற்றை  நாளில்  யெளகந்தராயணன்  அரசவைக்கட்  சென்று  அரசனுடைய  தூதர்களால்  ஒளிநூல் (சோதிட நூல்) வல்லார்  எல்லோரையும்  அழைப்பித்தான் . அவரும்  வந்தனர் .  யெளகந்தராயணன்  அரசன்  முன்னிலையில்  அவர்களை  நோக்கி, “விவாக நற்செயற்கு  ஏற்ற  முகூர்த்தத்தை  விரைவிற்  பாருங்கள் “  என்றிங்ங னங்  கூறினான் . அச் சோதிடர்  முன்னரே  செய்து  கொள்ளப்பட்ட  சங்கேதத்தை  மனத்தில்  வைத்துக்கொண்டு ,  “ஆறு திங்கள்  சென்றபின்  ஏழாம்  திங்களில்  நல்ல  இலக்கினங்  காணப்படுகின்றது .”  என்றிங்ஙனங்  கூறினர் . 

                  அதுகேட்டு  யெளகந்தராயணன்  பொய்மையாகச்  சினந்து , “அறிவிலாத  இவர்க்கு  ஒன்றும்  தெரியாது  .  மற்றொரு  பெரிய  பண்டிதன்  இருக்கின்றான் . எவன்  தங்களால்  அடிக்கடி  பெருமைப்  படுத்தப்பட்டு ளானோ  அவன்  இப்பொழுது  இங்கு  வரவில்லை “  என்றிங்ஙனஞ்  சொல்லினான் . அரசனும் , “ஆங்ஙனமேயாக”  வெனத்  தூதர்களால்  அப் பண்டிதனை  அழைப்பித்தான் . அப்பண்டிதனும்  யெளகந்தராயணால்  முன்னரே  சங்கேதஞ்  செய்யப்பட்டவனாதலின்  அங்ஙனமெ  கூறினான் . அதன்பின்  யெளகந்தராயணன்  மனவருத்தமுடையவன் போலாகி ,  “தேவ ! இனி  இதன்கட்   செயற்பாலது  யாது ? “  என்று  கேட்டான் .  அரசன்  கலிங்கசேனையின்  கருத்தென்னை  என்று  அறிதல்  வேண்டும்  என்று  சொல்லினான் . யெளகந்தராயணன் ,  “அங்ஙனமேயாக”  வென்று  கூறி  இரண்டு  சோதிடர்களை  யழைத்துக்கொண்டு  கலிங்கசேனையின்  பக்கல்  அடைந்தான் . அடைந்து  அவளை  நோக்கி  “தேவி ! வற்சராசன்  நின்னை  மணஞ்  செய்து  கோடற்குப்  பரபரப்புடையனாக  இருக்கின்றான் .  நல்ல  இலக்கினத்தைத்  துணிதற்பொருட்டு  இரண்டு  சோதிடர்களை  யழைத்து வந்தேன் .  நின் பிறந்த  நாளைக் (நட்சத்திரம்)  கூறுவாயாக .”  என்றிவ்வாறு  கூறினான் . அவளுடைய  ஏவன்  மகளிர்  பிறந்த  நாளைக் கூறினர் . அவ்விரு  கணிகளும்  பொய்மையாகக்  கணனஞ்  செய்து முன் போலவே  கூறினர் .  அது  கேட்டுக்  கலிங்கசேனை  கவலைக் கடலுண்  மூழ்கினாள் . அப்பொழுது  அவளுடைய  வயோதிக  தூதன் , “நல்ல  இலக்கினங்  காண்டல்  இன்றியமையாததொன்றே .  காலமே  நன்மை  தீமை  எல்லாவற்றிற்குங்  காரணமாகும் .  நன்முகூர்த்தமே  மணமக்களுக்கு  வருங்காலத்தில்  நலந்தருவதாகும் . அஃது  அணிமையிலாயினுமாக ; சேய்மையிலாயினுமாக ;  எவ்வாற்றானும்  எதிர்பார்க்கத்தக்கதே  “  என்றிங்ஙனங்  கூறினான் . யெளகந்தராயணனும் ,  “தேவி ! விலக்கப்பட்ட  நாட்களில்  நற்கன்மங்கள்  செய்தலாகாது .  அங்ஙனஞ்  செய்யப்படின் , அவை  பின்னர்ப்  பெருந்துன்பத்தை  விளைவிப்பனவாம் .  ஆதலின் , நல்லிலக்கினத்தை யாராய்ந்து  காண்டலே  நலம் “  என்று  கூறினான் . அது கேட்டு  கலிங்கசேனை, “காலம்  விலக்கற் கரியது “  என்று  துணிந்து ,  “நீவிர்  எல்லீரும்  எங்ஙனம்  அறிகின்றீர்களோ  அங்ஙனமே  செய்வீர்களாக “   என்று  சொல்லினாள் . யெளகந்தராயணன்  வற்சராசன்  பக்கல்  அணுகிக்  காலத்தை எதிர்பார்த்தலே  கலிங்கசேனையின்  கருத்தென்பதை  அவற்கு  எடுத்துக்  கூறிவிட்டுத்  தன்  இல்லத்தை  யடைந்தான் .   

             இங்ஙனம்  தன்  அறிவுவன்மையால்  கலிங்கசேனையின்  மன்றற்கு  இடையூறு  விளைத்து  எஞ்சிய  காரியத்தை  நிறைவேற்றுதற்பொருட்டுத்  தன்  நாட்டோனாகிய  யோகேசுவரன்  என்னும்  பெயரினையுடைய  பிரமராக்கதனை  நினைந்தான் . நினைந்த  அளவில்  நெருங்கி  வந்த  அவ்  யோகேசுவரன்   யெளகந்தராயணனது  முன்னிலையில்  நின்று  ,  “என்னால் ஆகவேண்டிய  காரியம்  யாது ?”   என்று  கேட்டான் .  யெளகந்தராயணன் , வற்சராசற்குக்  கேடு  விளைவிக்கத்தக்க   கலிங்கசேனையைப்  பற்றிய  நிகழ்ச்சிகளெல்லாவற்றையும்  அவற்கு  அறிவித்து  மீண்டும் ,  “நண்ப !  கலிங்கசேனையின்   விவாக  நிகழ்ச்சியில்  யான்  காலந்தாழ்த்தலைச்  செய்தேன் .  இனிக்  கலிங்கசேனையின்  பக்கலில்  நீ  மறைவாக  இருத்தல்  வேண்டும் . அவளது  ஒழுக்கத்தையும்  திறமையுடன்  ஆராய்தல்  வேண்டும் .  அவள்  மூவுலகத்திலும்  எய்தற்கரிய  எழில்  நலத்தோடு  விளங்குகின்றாள் .  அவளைச்  சித்தர்களும்  வித்தியாதரர்களும்  நிச்சயமாக  விரும்புவர் . தாம்  விருப்பியவாறு  உருக்கொள்ளும்   இயல்பினாராகிய  அவர்கள்  வேற்றுருக்  கொண்டு  அவளோடு  கூடுவர் . அதனையும்  நீ  விழிப்புடையனாயிருந்து  அறிதல்  வேண்டும் .  வேற்றுருக்கொள்வோர்   துயிலுங்கால்  தமக்குரிய  இயற்கை  யுருவத்தையே  எய்துவர் . நீ  அவளுடைய  ஒழுக்கம்  எல்லாவற்றையும்  சோர்விலனாயிருந்து அறிதல்  வேண்டும் . அதனால்  வற்சராசற்கு  அவள்பால்  விருப்பமின்மையை  விளைவித்தல்  வேண்டும் “  என்றிவ்வாறு  கூறினான் .   

               அது கேட்டுப்  பிரமராக்கதன்  ,  “இத்துணைச்  சிரமம்  எற்றிற்கு  ?  ஒழுக்க நெறியின்  வழுவிய  அவளை  உடனே  கொன்று  விடுவேன் “  என்று  கூறினான் .  யெளகந்தராயணன் ,  “அங்ஙனஞ்  செய்தலாகாது ;  பெரும்  பாவம்  விளையும் “  என்று  மறுத்துரைத்தான் . .  யோகேசுவரன் ,  “அங்ஙனமேயாக”  வென்று  அவன்  சொல்லையுடன்பட்டு  மறைந்தொழுகுதற்குரிய  விச்சையால்  மறைந்து கலிங்கசேனையின்  இல்லத்துட்புகுந்தான் , புகுந்து  அவளையே  இமைத்தலில்லாத  கண்களாற்  பார்த்துக்கொண்டிருந்தான் . இதற்கிடையில்  வாசவதத்தை  கலிங்கசேனையின்மாட்டு  அரசன்  மேற்கொண்ட  காதற்கிழமையை யறிந்து, மிகவும்  மனக்கலக்கமுற்றாள் . யெளகந்த ராயணன்  அவ் வாசவதத்தையின்பாற்  சென்று , “அரசி ! இந் நிகழ்ச்சியை  முன்னிட்டுச்  சிறிதும்  மனக்கலக்கமுறவேண்டா .  என்னுயிருள்ள  காலம்  வரையும்  பதுமாவதியை யன்றி  வேறொருத்தி   நினக்குச்  சபத்தினியாகாள் . இஃதுண்மை  .  ஆயினும்  நின்னாற்  செய்யத்தக்க  ஒரு  காரியத்தைப்பற்றிக்  கூறுவேன் . அதனை  அங்கீகரிப்பாயாக .  அரசன்  கலிங்கசேனையின்பால்  தனக்குள்ள  அவாவை  நின்பால்  தெரிவிப்பான் .  அப்பொழுது  அவன்  விருப்பத்திற்கு  இயைந்தவள்  போலாகி  அவன்பால் ,  “ஐய ! இது  தக்கதே  கலிங்கதத்தனது  இராச்சியமும்  நின் கைவயப்படும் .  ஆதலின், அவசியம் கலிங்கசேனையை  மணஞ்செய்துகொள்ளவேண்டும் “  என்றிங்ஙனங் கூறு வாயாக . .  இங்ஙனம்  கூறின்  அவன்  நின்பால்  முன்னையிலும்  மிகுதியான  மதிப்பு  வைத்தொழுகுவான் .  தன்  விருப்பத்திற்கு  இடையூறு இல்லையென்று  கருதிக்  கலிங்கசேனையின்  மன்றலில்  தளர்ந்த  முயற்சியுடையவனாவான் . அன்றித்தன்  விருப்பம்  தடைப்படுமாயின்  அடையவேண்டுமென்னும்  அவா மிகுதி  யுடையவனாவான் .  பதுமாவதிக்கும்  இச் செய்தியைத்  தெரிவிப்பா யாக “ என்றிவ்வாறு  கூறித் தேற்றினான் . வாசவதத்தையும் , “அங்ஙனமேயாக வென்றுடன்பட்டாள் .  

                        அதன்பின் , ஓரமயம்  சோமப்பிரபை  கலிங்கசேனையின்  பக்கல்  அடைந்தாள். அப்பொழுது  தன்சொல்லைக்  கடந்து  வற்சராசனைக்குறித்துத்  தூது   போக்கியதும்  ,  சோதிடர்களால்   ஆறு  திங்களின்  பின்  விவாகமுகூர்த் தம்  துணிந்ததும்  அறிந்து மிகவும்  துன்பமுற்றுப்  பின்வருமாறு  கூறுவாள்.  “தோழி ! சபத்தினிகள்  பொய்மையான  குற்றங்களை  நின்பால்  ஏற்றிடுவர்.  விவாகமுகூர்த்தம்  பல நாட்களின்  பின்  குறிக்கப்பட்டுள்ளது .  தேவர்களும்  நின்னை  மனஞ்  செய்து கோடற்கு  விரும்புகின்றனர் .  ஆதலின், எவ்வாற்றானும்  தற்காப்புச்  செய்துகொள்ளல்  வேண்டும்  .   இக்காரியத்தில்  நீ  விழிப்புடையளாக  இருத்தல்  வேண்டும்  . இனி  யானும்  கணவன்  இல்லத்தில்  வாழும்  நின்னை  அடிக்கடி  வந்து காண்டற்கியலாது .  இப்பொழுது   என்  பதியின்  அநுமதியை  மிக முயன்று  பெற்று  இங்கு வந்தேன்.  இங்கு  என்னாலாக  வேண்டியது ஒரு  சிறிதும்  இன்று . ஆதலின்,  என்  காந்தன்  பக்கல்  எய்துவேன் .  காரியங்களை  முன்னிட்டு நினைப்பின்  எதிர்ப்படுவேன் .எவ்வாற்றானும்  நின்னைக் காத்துக்கொள்வாயாக “  என்று  கூறிப்போயினாள் . அதன்பின்  வற்சராசன்  கலிங்கசேனையின்பாற்  பதிந்த  காதற்  பெருக்கினையுடைய  தன் மனத்திற்கு  ஆறுதலாகிய  மகிழ்ச்சியை  யாண்டும்  பெறாதவனாய்  வாசவதத்தையின்  இல்லத்தை யடைந்தான் .  முன்னரே  யெளகந்தராயணனாற்  கூறப்பட்ட  செய்திகளை  மனத்தில்  தாங்கியிருக்கும்  அவ்வாசவதத்தை  அரசனை  முன்னையினும்  மிகுதியான  அன்போடு  உபசரித்தாள் . அதனைக்கண்டு  அரசன்  இவள்  கலிங்கசேனையைப் பற்றிய  நிகழ்ச்சிகளை  அறியாதவள்  போற்  காணப்படுகின்றாள்  என்றெண்ணி  அந் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எடுத்துக்கூறினான் .

                   அதுகேட்ட  வாசவதத்தை  முன்னையினும்  மிகுதியான  முகமலர்ச்சியோடு  விளங்குகின்றவளாய்  ,  “ஆ ! ஆ !  அரசர் பெருமானுக்கு  எதிர்பாராமல்  நேர்ந்த  செல்வ  வரிசைகள் என்னே !  இக் கலிங்கசேனையின்  மன்றலாற்  கலிங்கதத்தனும்  நினக்கு  நண்பனாவான் .ஆதலின், கலிங்கசேனையின்  மணம்  எவ்வாற்றானும்  விலக்கத்தக்கதன்றாம் .”  என்றிங்ஙனங்  கூறினாள் . அது கேட்ட  உதயனன் மிகவும்  வியப்புடையனாய்  மனத்திங்கட்  பின்வருமாறு  சிந்திக்கலாயினான் .  “ஆ !  இவ் வாசவதத்தை மிகப் பெரியவள் ;  பதுமாவதியை  யொப்பக்  கலிங்கசேனையையும்  சபத்தினியாக  எண்ணுகின்றாள் ; இவளுக்கு  வேண்டாததொன்று  எவ்வாற்றானுஞ்  செய்யத்  தக்கதன்று . இவளது பெருந்தன்மையை  நினையுங்கால்  கலிங்கசேனையின்  விவாகத்தில்  என்  மனம்  செல்லவில்லை.”  என்று  இவ்வாறு  நினைந்து  வாசவதத்தைக்கு  அறிவித்துத்  தன்  இல்லத்தை  யடைந்தான் .அதன்பின்  மற்றை  நாளில்  பதுமாவதியின்  இல்லம்  எய்தினான் .  அவளும்  வாசவதத்தையினால்  முன்னரே  இன்னது  செயற்பாலது  என்று  அறிவிக்கப்பட்டவளாதலின்  அங்ஙனமே  அரசனை  மிக்க  சிறப்போடு  உபசரித்தாள் . இங்ஙனம்  தேவிமார்  இருவருடைய  உள்ள  நிகழ்ச்சிகளும்  ஒன்றுபட்டிருத்தலை  வற்சராசன்  உணர்ந்து  ஐயமேற்கொண்டு  யெளகந்தராயணனை  அழைத்து  அவன்பால்  எல்லாவற்றையும்  அறிவித்தான் . பேரறிவுடைய  அவ்  யெளகந்தராயணன்  கலிங்கசேனையின்  மணமாகிய  தீச்செயலினின்றும்  அரசனை  மீட்டற்கு  இதுதான்  சமயமென்றெண்னி , “தேவ !  யான்  தேவிமாரின்  கருத்துக்களை  அறிவேன் .அவர்கள்  கலிங்கசேனையின்  மன்றல்  நிகழுமாயின்  நிச்சயமாக  உயிரைத்  துரும்பென  மதித்து ஒழித்து விடுவர் .  நேர்மையான  நெஞ்சத்தையும்  உயர்ந்த  குணஞ்  செயல்களையுமுடைய  கற்புடை  மகளிர்  சபத்தினிகளாலாம்  துன்பத்தை  நெடுங்காலம்  அநுபவிப்பாரல்லர் .  ஆதலின்  கலிங்கசேனையின்  மணம்  நிறைவேறுமாயின்  தேவி  வாசவதத்தை  நிச்சயமாக  உயிரைப் போக்குவாள் . பதுமாவதியும்  அக்கதியையே  யடைவாள் . அதன்பின்  குமாரன்  நரவாகனதத்தனும்  எங்ஙனம்  உயிர்  வாழ்வான் ?  மாமன்மார்  மைத்துனர்  முதலிய  எல்லா  உறவினரும்  சினமுடையராவார் .  ஆதலின்,  கலிங்கசேனையின்  மன்றலால்  மிகப் பெருங்  கேடு  உண்டாகும் . “  என்றிவ்வாறு  கூறினான் .  யெளகந்தராயணன் ,  கூறிய  இச் சொற்களைக்  கேட்டு  வற்சராசன்  மனத்தில்  விவேகம்  தோன்றப் பெற்றவனாய் ,  “அமைச்ச !  நின்னாற்  கூறப்பட்டன வெல்லாம்  உண்மையே . கலிங்கசேனையின்  மணத்தால்  எனக்கு  விளையும்  பயன்  யாதுளது ?  இந் நிகழ்ச்சியில்  தெய்வவயத்தாற்   சோதிடர்கள்  காலத்தாழ்வு  செய்தனர் .  ஆதலின்  சுயம்வரத்தின்  பொருட்டுக்  கலிங்கசேனை  வந்தவளாயினும்  அவளை மணஞ்  செய்துகொள்ளேன் “  என்றிவ்வாறு  கூறினான் . அதன்பின்  யெளகந்தராயணன்  தன்  நீதிப்  பிரயோகம்  பலித்தது  கண்டு  மனத்தில்  அளவு  கடந்த  உவகை  மேற்கொண்டு  அரசற்கு  அறிவித்துத்   தன்  இல்லம்  எய்தினான் . பின்னர்  அரசன்  வாசவதத்தையின்  மனைக்கட்  சென்றான் . அவள்  இவ்வெல்லாம்  யெளகந்தராயணனது  சூழ்ச்சித்  திறனென்று  அரசற்குக்  கூறினாள் .  அதனைக் கேட்ட  அரசன்  அவ்வமைச்சனது   அறிவின்  திறத்தைப்  பலவாறு  புகழ்ந்துரைத்தான் .  

                  இஃதிங்ஙனமாகக்  கலிங்கசேனையின்  உருவம்  அழகு  முதலியவற்றைக்  கண்டு  அவள்பால்  வித்தியாதரர்  பலர்  அவாவுடையராயினர் .  அவருள் , மதனவேகன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரன்  ஒருவன்  கலிங்கசேனையைப்  பெறுதற்பொருட்டுத்  தவம்  புரிந்து  பகவானாகிய  உமாகாந்தனை  வழிபட்டான் .  அப்பெருமான்  அங்ஙனமே  வரங்கொடுத்தார் .  அங்ஙனம்  வரம்  பெற்றும்  அக் கலிங்கசேனை  வற்சராசன்பால்  மனத்தினை  யுடையளாய் , அவனது  நகர்ப்புறத்துப்  பூஞ்சோலைக்  கண்ணே  தங்கி  இருத்தலைக்  கண்டு  மிகவும்  வருத்தமுடையனாயினான் ;  எப்பொழுதும்  அவளைப்  பெறுதற்குரிய  உபாயத்தையே  சிந்தித்துக் கொண்டிருந்தான்  .  ஒரு நாள்  இரவில்  மதனவேகன்  கலிங்கசேனை  யிருக்கும்  இல்லத்தின்  மேற்புறத்தே  சுற்றித் திரிந்தான் . அப்பொழுது  பகவானாகிய  உமாகாந்தன்  அருளிய  விச்சையினால்  வற்சராசனைப் போல்  உருக்கொண்டு  அவ் வுருவத்தோடு  கலிங்கசேனையின்  இல்லத்துட்  புகுந்தான் . அவனை  வாயில்  காப்போர்  கண்டு  இவன்  வற்சராசன்  என்றெண்ணி  வணக்கஞ்செய்து  கைகூப்பி  நின்றனர் .  கலிங்கசேனை  இவனைக்கண்ட அளவில்  நடுக்கமும்  நாணமும்  உடையளாய்   எழுந்தாள் . அதன்பின்  மதனவேகன்  பலவகை  இன்சொற்களால்  அவளை  நம்பிக்கையுறச்  செய்து  காந்தருவ  முறைமையால்  மணந்தான் . யோகேசுவரனும்  இவன்  வற்சராசனே  யாவான்  என்றெண்ணி  யெளகந்தராயணன்பாற்  சென்று  அறிவித்தான் . யெளகந்தராயணன்   அவ்  யோகேசுவரனை  நொக்கி , “வாசவதத்தையின்  இல்லத்தில்  உதயனன்  இருக்கின்றான்  என்றாதல் , இல்லை  யென்றாதல்  மறைந்து  காணக்கடவை “  என்று  கட்டளையிட்டான்  .  யோகேசுவரனும்  அங்ஙனமே  வாசவதத்தையின்  இல்லத்தை  யடைந்து  அங்குக்  கட்டிலின்கட்   படுத்திருக்கின்ற  வற்சராசனைக்  கண்டான் .  கண்டு  யெளகந்தராயணற்குச்  சொல்லினான் .  யெளகந்தராயணன்  யோகேசுவரனை  நோக்கி  விரைந்து  “கலிங்கசேனையின்  இல்லத்தை  யடைக . கலிங்கசேனையை  விரும்பி  எய்திய  அக்காமுகன்  யாவன்  என்பதை  அவன்  துயிலுங்கால்  அறிவாயாக “  என்ரு  கட்டளையிட்டான் .  யோகேசுவரன்  அங்ஙனமே  கலிங்கசேனையின்  இல்லத்தை  யடைந்தான் .   

                     அவ் வில்லத்தின்கண்   நள்ளிரவில்  நன்றாக  உறங்கும்  கலிங்கசேனையோடு  துயில்கின்றவனும் ,  தன்  இயற்கை யுருவம்  பொருந்தப்  பெற்றவனுமாகிய  மதனவேகனைக் கண்டான் .பின்னர்  உடனே  யெளகந்தராயணன்பாற்  சென்று  ,  “அமைச்சர் பெரும !  ஆ !  நின்  நுண்ணறிவின்  மாட்சி  என்னே ! எம்மனோராற்   காண்டற்கரிய  பொருளையும்  நீ  எளிதிற்  காண்கின்றாய் .  நின்னை  அமைச்சனாகப்  பெற்றமையால்   வற்சராசன்   எவ்வாற்றானும்  பாக்கியவானாகின்றான் . நின்னால்  யாது  எவ்வாறு  எண்ணப்பட்டதோ  அஃது  அத்தகையதே .  மதனவேகன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரன்  வற்சராசனது  உருவத்தைத்  தாங்கிக்  கலிங்கசேனையோடு  கூடி  இன்புறுகின்றான் “  என்றிவ்வாறு  தெரிவித்தான் . இங்ஙனம்  கூறிய  யோகேசுவரற்கு  அவன்  விரும்பிய  இடத்தை  எய்தும்படி  யெளகந்தராயணன்  கட்டளை  யிட்டான் . அவனும்  யெளகந்தராயணனை   வணங்கிப் போயினான் .   

                  அதன்பின் ,  காலப்பொழுதில்  யெளகந்தராயணன்   வற்சராசனைக்  காண்டற்குச்  சென்றான் . அங்கு  உரையாடிக்கொண்டிருக்குங்கால் , “அரசர் பெரும !  இக்கலிங்கசேனை    அன்னிய  புருடனோடு  சேர்க்கையை   மேற்கொண்டமையால்  நின்  கையால்  தீண்டுதற்குரியளாகாள் . என்று  கூறினான் .  அதுகேட்டு  அரசன் ,  “குலமகள்  இங்ஙனந்  தகாத செயலை  எவ்வாறு  செய்வள் “  என்றான் . யெளகந்தராயணன் , “ இன்றிரவிலேயே  காட்சியளவில்  வைத்து  நினக்கு  இதனைக்  காட்டுவேன் “  என்று  மறுமொழி  கூறினான் .  வியப்பு  மிக்க  மனத்தினையுடைய  வற்சராசன்  அன்றிரவிலேயே  யெளகந்தராயணனோடு  கலிங்கசேனையின்  இல்லம்  எய்தினான் .  அவ்வில்லத்தினுட்  புகுந்து கலிங்கசேனையோடு  இன்புறத்  துயிலும்  மதனவேகனைக்  கண்டான் . பெரிதும்  சினமுற்று  அவனைக்  கொல்லுதற்கு  முயலுங்கால்  மதனவேகன்  விரைந்து  விழித்துக்கொண்டு  விசும்பை நோக்கி  எழுந்து சென்றான் .  

                     அதன்பின் , கலிங்கசேனையும்  விழித்தெழுந்தாள்  .  எழுந்து  தன் படுக்கையில்  யாரும்  இல்லாதிருத்தலைக் கண்டு , “ஆ !  துன்பம் .  முன்னரே  விழித்தெழுந்த  வற்சராசன்  என்னைத்  தனியளாக  ஒழித்துவிட்டு  எவ்விடத்தோ  சென்று விட்டான் “  என்று  அழுதாள் .  அப்பொழுது  யெளகந்தராயணன்  அரசனோடு  அவள் பக்கல் அணுகிக் , “கலிங்கசேனே !  எவனோ  ஒரு  வித்தியாதரன்  எங்கள்  அரசனது  வேடந்தாங்கி  நின்னை  வஞ்சித்து  மணந்தான் .  ஆதலின் , நீ  வற்சராசன்  மனைவியாதற்குத்  தகுதியுடையை அல்லை .  என்று  கூறினான் .   

                        அது கேட்ட  கலிங்கசேனை  கோடரியால்  தாக்கப்பட்டவள்  போலவும்  பேய்கோட்பட்டாள்  போலவும்  மிகவும்  துன்பத்தாற்  கலக்குண்டு  நீர்  ஒழுகுங்  கண்களையுடையளாயினாள் .  அதன்பின்  அரசனும்  அமைச்சனும்  தத்தம்  இல்லம்  எய்தினர் .  பின்னர்க்  கலிங்கசேனை  இனத்தினின்றும்  பிரிந்த மான் பேடு போல மிகவும் கலக்குண்ட நெஞ்சமுடையளாய்   இல்லத்தினின்றும்  புறம்போந்து  ஆகாயத்தை  நோக்கி, “யாவன்  வற்சராசன்  வேடந்தாங்கி  என்னை  மணந்துளானோ  அவன்  என்  மாட்டு  அருள்  கூர்ந்து தன் இயற்கை உருவத்தோடு வெளிப்படுக .  அவனையே  யான்  மணவாளனாக  வரிப்பேன் “  என்றிங்ஙனங்  கூறினாள் . அதன்பின்  மதனவேகன்  ஆர  கேயூர  (தோளணி)  முதலிய  சிறந்த  அணிகலன்களை  யணிந்துகொண்டு  விண்ணினின்றும்  இறங்கி  அக்கலிங்கசேனையின்  பக்கல்  எய்திப்  பின்வருமாறு  கூறுவானாயினான் . “காதலீ !   கலிங்கசேனே !  என்னை  மதனவேகன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரனென்று  அறிவாயாக. யானே  வற்சராச  வேடந்தாங்கி  நின்னை  மணந்துளேன் . முன்னொரு காலத்தில்  தந்தையின்  இல்லத்திலிருந்த  நின்னை யான்  கண்டு  அவா   மேற்கொண்டு   நின்னைப்பெறுதற்பொருட்டுச் சிவபிரானைக் குறித்து வழிபாடு  செய்தேன் . நின்னைப்  பெறுதலாகிய  வரத்தையும்  அப்பெருமான்  எனக்கு  அருளிச் செய்தார் .  அதன்பின் நீ  உதயனன்  மாட்டு  மிக்க  காதற்கிழமை  மேற்கொண்டமை  யறிந்து இதுவே  குற்றமற்ற  உபாயம்  என்றெண்ணி   வேற்றுருக்கொண்டு  நின்னை  மணந்தேன் . இனி  நீ  இவ்விடத்திலேயே  இருத்தல் வேண்டும் . மாநுடப்  பெண்ணாகிய  நின்னோடு  எம்மரபினர்  கூடி வாழ்தல்  தக்கதன்று”   என்றிங்ஙனங்  கூறி  மிகுதியான  பொன்களை  அவட்குக்  கொடுத்துவிட்டு  விசும்பிற்  சென்றான் .  இந் நிகழ்ச்சிகளை  யறிந்த  வற்சராசனும்  அவளை  அவ்விடத்திலேயே இருக்கும்படி  அநுமதி  செய்தான் . வித்தியாதரனை  மணாளனாக  எய்தப்பெற்று  உளமகிழ்ந்த  கலிங்கசேனை  கணவன்  கட்டளை   இட்டவாறு  அந் நகர்ப்புறப்  பூஞ்சோலைக்  கண்ணே  இன்புற்றிருந்தாள் .  

வெண்பா

கற்பு  நலநிறைந்த   காதலியர்  தாங்கவல

அற்பொ  டியலறத்தி  னாறொரீஇத்  —  தற்பயனா

மன்றல்  கொளலிறைக்கு  மாண்பன்  றெனமறுத்தான்

துன்று  மதியமைச்சன்  சூழ்ந்து .

விச்சா  தரன்மதன  வேக  னுதயனன்பால்

நச்சுங்  கலிங்கதத்த   னன்மகளை  —  யிச்சையினால்

நாடி  நலநுகர்ந்தா  னாதன்  சிவனருளைக்

கூடினார்க்  குண்டோ  குறை .

பதினாங்காம்  வகுப்பு

( மதன  மஞ்சுகை  மன்றல் )

      நாள்  பல  சென்றபின்  கலிங்கசேனை  கருவுற்றாள் . அதன்பின் மதனவேகன்  அவளையடைந்து  பின்வருமாறு  கூறுவான் .”கலிங்கசேனே !  கருப்பமுண்டானபின்  தேவர்கள்  மாநுடப்பெண்களோடு  சேற்கையை  விரும்புவதில்லை. .  இது  தேவர்களது  கொள்கை  .  முன்னொருகாலத்தில்  மேனகை  சகுந்தலையைப்  பெற்றபின்  விசுமாத்திர  முனிவரை  விலக்கி  விட்டுச் சென்றாள்  என்பது  புராண கதை  . ஆதலின்  யான்  செல்கின்றேன். அமயம்  நேர்ந்துழி  நினைப்பாயின்  எதிர்ப்படுவேன் “  என்று  சொல்லி  மதனவேகன்  போயினான் .  

        பகவானாகிய  மகேசுவரரால்  மன்மதன்  உடல்  நீறாக்கப்பட்ட பொழுது  இரதிதேவி  உடலோடுங்  கூடிய  கணவனை  யடைதற்  பொருட்டுத்  தவம்  புரிந்தாள் . அத்தவங்கண்டு  மகிழ்ந்த சிவபெருமான்  இரதியை  நோக்கித் ,  “தானே  மேற்கொண்ட  இறுமாப்புக்  காரணமாக  என்னால்  நீறாக்கப்பட்டு  அழிந்த  உடலினையுடைய  நின் கணவன்  கெளசாம்பி  நகரத்தில்  உதயனன்  என்னும்  அரசற்கு  நரவாகனதத்தனென்னும்  பெயரினையுடைய  மகனாகப்  பிறந்திருக்கின்றான் . நீயும்  நிலவுலகத்தில்  யோனிவாய்ப்பட்டுப்  பிறவாமற்   பெண்ணாகி  அந் நரவாகனதத்தனோடு  சேரக்கடவை “  என்றிங்ஙனங்  கட்டளையிட்டார் .  மேலும்  பிரமனை  நோக்கி , “நிலவுலகத்திலுள்ள  கெளசாம்பி  நகரத்தில்  வற்சராசனது  நகர்ப்புறத்துப்  பூஞ்சோலைக்கண் இருக்கும்  கலிங்கசேனை  சிறந்த  புதல்வனைப் பெறுவாள் .  அப்புதல்வனை  மாயையினாற் கவர்ந்து   இவ் ரதியை  யோனிவாய்ப்பட்டுப்  பிறவாத  கன்னிகையாக  நிருமித்து  அப்புதல்வன்  கிடந்த  இல்லத்தில்  வைப்பாயாக”  என்றிவ்வாறு  கட்டளையிட்டார் .  கலிங்கசேனை  எப்பொழுது  சிறந்த  புதல்வனைப்  பெற்றாளோ   அப்பொழுதே  பிரமன்  பரமசிவனது  கட்டளையை  நிறைவேற்றினான் .  அது காலை  யாவரும்  மின்னற்கொடி போல்  ஒளி  விளங்கும்  பெண்மணியைப்  பெற்றதாகக்  கண்டனர் .  வியக்கத்தக்க  எழில்  வாய்ந்த  அப்  பெண்மகளைக்  கண்டு  கலிங்கசேனை  புதல்வர்ப் பேற்றினும்  மிகுதியாக  மகிழ்ந்து  விழாக் கொண்டாடினாள் .  

            வற்சராசன்  கலிங்கசேனைக்குப்  பெண்மகவு  பிறந்த  செய்தியைக் கேட்டு  யெளகந்தராயணனோடு  வாசவதத்தையின்பாற்  சென்று , “கலிங்கசேனை  தேவர்களாலும்  விரும்பத்தக்க  உருவம்  வாய்ந்த  ஒரு  பெண்குழந்தையைப்  பெற்றாள் . அப்பெண்  நம்  அருமைமகன்  நரவாகனதத்தற்கு  மனைவியாம்  தகுதியுடையவள்”  என்றிவ்வாறு  கூறினான்.   அது  கேட்டு  வாசவதத்தை  அரசனை  நோக்கி , “தேவ !  ஈதென்னை  இவ்வாறு  கூறுகின்றனை?  இரண்டு  குலமும்  தூய்மையாகப் பெற்ற  நின் புதல்வன்  நரவாகனதத்தன்  எங்கே !  கற்புநிலை  பிறழ்ந்த  கலிங்கசேனையின்  கருப்பத்திற்  றோன்றிய  அப்பெண்  எங்கே !   கலிங்கசேனையோ  முதற்கட்  பிரசேனசித்துவையும்   அதன்பின்  நின்னையும்  அதன்பின்  மதனவேகனையும்  காதலித்துக்  கற்பிழந்தவளாயினாள் . ஆதலின்  எங்ஙனம்  நம்மோடு  சம்பந்தத்திற்குரிய ளாவாள் “  என்றிவ்வாறு  மொழிந்தாள் .

      அது கேட்டு  வற்சராசன் , “இக் கலிங்கசேனை  ஏதோ  ஒரு  சாபப் பிழையால்   இந் நிலவுலகத்திற்  போந்த  தெய்வப்பெண்ணென்று  கூறுவர் . இவள் பாற்  பிறந்த கன்னிகையும்  கடவுட்  கூறுடையளாகத்  தோன்றினவள்  என்றே  எண்ணுகின்றேன்  .மேலும்  நலனிறைந்த  கன்னியர்க்குச்  சாதி  நன்மை  தீமையில்லை’   என்பதன்றே  அறநூலின்  கட்டளை  யாகும்  .  இஃது என் ஒருவன் அபிப்பிராய மாத்திரமன்று .   விட்புலச்  சொல்லும்  இங்ஙனமே  எழுந்ததுண்டு .”  என்றிவ்வாறு   மறுமொழி  கூறினான் . அதன்பின்  யெளகந்தராயணன் , “தேவி !  அரசனாற்  கூறப்பட்ட  இஃதுண்மையே .  என்  நண்பனாகிய  யோகேசுவரன்  என்னும்  பிரமராக்கதன்  என்பால்  வந்து  கலிங்கசேனையின்  புதல்வியைப்பற்றிக்  கூறியதாவது ,  “கலிங்கசேனை முற்பிறப்பில்  பெண்ணாகி  ஒரு  சாபப் பிழையால்  இந் நிலவுலகத்திற்  போந்து கற்புநிலை  பிறழ்ந்தவள்  என்னும்  அபவாதத்தை  யடந்தாள் .  இவளுக்கு  யோனிவாய்ப்பட்டுப்  பிறவாத  கன்னிகையை  இரதியின்  கூறாகப்   பிரமன்  ஈந்தான் . இப்பெண்மணியே  உதயனன்  புதல்வனாகிய  நரவாகனதத்தற்கு  மனைவியாவாள் “  என்பதாம் ,  என்றிவ்வாறு  கூறினான் .  அது கேட்டு  வாசவதத்தை   “அங்ஙனமேயாக”  வென்றுடன்பட்டாள் . அதன்பின்  கலிங்கசேனை  தன் மகட்கு   மதனமஞ்சுகை   என்று  பெயரிட்டாள் .  அக்கன்னிகை  நாடோறும்  பூருவபக்கத்துத்  திங்களஞ்  செல்வன்  கலை போல  மக்கள்  எல்லோருடைய  கண்களுக்கும்  ஆனந்தம்   விளைப்பவளாய்  வளர்ச்சி  யெய்தினாள் . கலிங்கசேனையும்  வற்சராசனோடு  செய்துகொள்ள  விரும்பிய  சம்பந்தம்  வாய்த்ததைக்  கேட்டு  மிகவும்  மகிழ்ந்தாள் . பின்னர்  முறையே  யெளவனப்  பருவம்  வாய்க்கப்பெற்ற   நரவாகனதத்தன்  தன்  தந்தையால்  இளவரசாக  நியமனம்  பெற்றான் .  அந் நரவாகனதத்தற்கு  யெளகந்தராயணன்  புத்ல்வனாகிய  மருபூதி  என்பான்  அமைச்சனாயினான் .  உருமண்வான்  புதல்வனாகிய  அரிசிகன்  என்பான்  படைத்தலைவனாயினான் . வசந்தகன்  புதல்வனாகிய   தபந்தகன்  என்பான்  நன்மசசிவனாயினான் .  இந்தியகன்  மகன்  கோமுகன்  என்பான்  வாயில்  காப்போனாயினான் .  பிங்கலிகை  என்னும்  பெயரினையுடைய  பிராமணியின்  குமாரர்களாகிய   வைசுவானரன் ,  சாந்திசோமன்  என்னும்  இருவரும்  புரோகிதராயினர் .  நரவாகனதத்தன்  இளவரசாம்  நிலையெய்திய  பின்  வறுமையும்  நோயும்  களவும்  இந் நிலப்  பரப்பைவிட்டு  ஒழிந்தன .  

              பின்னர்  ஓரமயம்  கலிங்கசேனை  தன்  அன்புரிமைத்  தோழியாகிய  சொமப்பிரபையை  நினைந்தாள் .  நினைந்த  அப்பொழுதே  அச் சோமப்பிரபை  தன்றலைவன்  அநுமதி  பெற்று  இரவிற்  கலிங்கசேனையின்  பக்கல்  அடைந்து இனி  நிகழவிருப்பதாகிய  உதயனனோடுள்ள  சம்பந்தத்தைத்  தன்  கணவன்  முகமாகக்  கேட்டதாகத்  தெரிவித்தாள் . மேலும்  மதனமஞ்சுகையின்  பொருட்டுத்  தெய்விகத் தன்மை  வாய்ந்த  ஓர்  உய்யானத்தையும்  இயற்றினாள் . அதன்கண்  பொன்மயமான   வேதிகைகளும் , அரதனம்  இழைக்கப்பட்ட  திண்ணைகளும் ,  பொன்மயமான  மதிற்  சுவர்களும் ,  பவழமயமான  தூண்களும் , முத்துக்களாகிய  மணல்களுமாகிய  இவ்வெல்லாம்  மக்களாற்  செய்தற்கரியனவாகவும்  பெரிதும்  வியக்கத்தக்கனவாகவும்  விளங்கின .  இத்தகைய  உய்யானத்தை  மதனமஞ்சுகைக்கு  ஈந்து  சோமப்பிரபை  கலிங்கசேனையின்பால்  தெரிவித்துவிட்டுத்  தன்  இருப்பிடம்  எய்தினாள் .

                பிற்றை  நாட்காலையில்  கெளசாம்பி  நகரத்துள்ளார்  அனைவரும்  தெய்விகத்  தன்மை வாய்ந்த  அவ்  உய்யானத்தைக்  கண்டு  வியப்பெய்தினர். உதயனன்  யெளகந்தராயணன்  முதலியோர்  , “இவ்  உய்யானம்  எவ்வாறு  அடையப்பட்டது ?”  என்று  கலிங்கசேனையைக்  கேட்டனர்  .  அவள்  தனக்குச்  சோமப்பிரபையோடுண்டாகிய  நட்புரிமையும் , அவளால்  உய்யானம்  இயற்றப்பட்டதும்  ஆகிய  இவை  முதலிய  எல்லாவற்றையும்  விளங்க  உரைத்தாள் . பின்னர்  ஓரமயம்  உதயனன்  தேவாலயத்தை  யடைந்தான் .  அங்குத்  தெய்வத்தன்மை  வாய்ந்த  கன்னியர்  பலரைக் கண்டு , “நீவிர்  யார்?”  என்று  கேட்டான் . அப் பெண்கள்  “அரச ! யாம்  அறுபத்து நான்கு கலைகள்  ஆவேம் ; பகவானாகிய  உமாகாந்தன்  கட்டளையால்  நின்  புதல்வனாகிய  நவராகனதத்தனை  யடைந்து பணி  செய்தற்கு  வந்தோம் “  என்றிவ்வாறு  கூரினர் . 

             அது கேட்டு மிக்க  மகிழ்ச்சி  யெய்திய  உதயனன்  மதனமஞ்சு கையையும்   எல்லாக்  கலைகளிலும்  பயிற்சி  செய்வித்தான் .  அங்ஙனம்  எல்லாக்கலைகளிலும்  மிக்க  தறமையைப்  புலப்படுத்திவரும்   மதனமஞ்சுகையைக்  கண்டு  நரவாகனதத்தன்  அவள்பால்  அளவிகந்த  காதற்கிழமை  யுடையவனாயினான் . அவளும்  அவன்மாட்டுப்  பேரன்புடையளாயினாள் . இங்ஙனம்  ஒவ்வொரு  கணமும்  வளர்ச்சி   யெய்துகின்ற  காதற்  பெருக்கினையுடைய  அவ் விருவரும்  கணப்பொழுதேனும்  தம்முள்  ஒருவரையொருவர்  காணாமலிருக்க  ஆற்றாராயினர் .   இவ்விருவர்க்குமுள்ள  மிக்க  காதற்  கிழமையைக்  கண்டு  உதயனன்  காலந்தாழ்த்தலின்றி  இவ்விருவக்கும்  திருமணப்பெரு விழாவை  நிறைவேற்றல்  வேண்டுமென்று  துணிவுற்றான் . பின்னர் , கற்புநிலை   பிறழ்ந்தவள்  என்னும்  அபவாதத்தை  யடைந்த  கலிங்கசேனையின்  சம்பந்தத்தைக்  குறித்து உலகம்  யாது  கூறுமோவென்னும்  ஐயப்பாட்டால்  முயற்சியின்றியிருந்தான் .

                அப்பொழுது  விசும்பினின்றும்  அசரீரிச்சொல்  :-  இந் நரவாகனதத்தன்  காமன்  கூறாகப்  பிறந்தவன் .  காமன்  காதலியாகிய  இரதியே  மதனமஞ்சுகை  உருவத்தோடு  அவதரித்தாள் . ஆதலின்  இவ்விருவரது  மணமக்களாந்  தன்மை  மிகவும்  பொருத்தமுடையதே . நரவா கனதத்தன்  பகைவர்  எல்லோரையும்  வென்று  வித்தியாதரர்  எல்லோர்க்கும்  வேந்தனாகவும்  விளங்குவான்”.  என்றிவ்வாறு  எழுந்தது .  இவ்விட்  புலமொழியைக்  கேட்டு  உதயனன்  ஒரு  சிறிதும்  ஐயமின்றி  மணத்திற்குரிய  ஏற்பாடுகளைச்  செய்தான் .  

                 அதன்பின்  சோதிடர்களைக் கொண்டு  சிறந்த  நன்முகூர்த்தத்தைத்  துணிந்தான் .  வைசுவானரன் , சாந்திசோமன்  என்னும்  புரோகிதர்  இருவரும்   நரவாகனதத்தற்கு  கெளதுக (மங்கலகாரியத்  தொடக்கத்திற்  கையிற் கட்டப்படும்  நூல் ) முதலிய  மங்கல  காரியங்களை  யியற்றினர் .  விவாக  முகூர்த்தம்  வந்ததும்  நரவாகனதத்தன்  சிறந்த  அணிகலன்களால்  அலங்கரிக்கப்பட்டு  விளங்கும்  மதனமஞ்சுகையைக்  கைப்பிடித்தான் . அத்திருமணப்  பெருவிழாக்காலத்தில்  இந் நிலவுலகத்தன்றி  உம்பருலகத்தும்  பெரிய  மகிழ்ச்சிக்  கொண்டாட்டம்  நிகழ்ந்தது . மூன்றுலகமும்  திருவிழாப்பொலிவுடையன போலாயின .  இங்ஙனம்  குணம்  செயல்  பருவம்  முதலியவற்றால்  தனக்கு  ஒத்து  விளங்கும்  மதனமஞ்சுகையை  மணந்து நரவாகனதத்தன்  மிகவும்  இன்புற்றான் .  அவனைக் கண்டு  வாசவதத்தை  , வற்சராசன்  ஆகிய  இருவரும்  பெரிதும்  உவகை பூத்தனர் .  

               அதன்பின்  நரவாகனதத்தன்  இரத்தினப்பிரபை ,  கருப்பூரவதி,  அலங்காரவதி  என்னும்  இவர்  முதலிய  தெய்வ கன்னிகைகளையும்  மணந்து  அவர்களோடு  கூடிக்கலந்து  இன்புற்றான் .  

                  பின்னர்  ஓரமயம்  நல்லிரவில்  மதனமஞ்சுகை  சட்டெனக்  காணப்படாத  நிலையை   யடைந்தாள் .  அவளைத்  தேடுதற்பொருட்டு  முயன்ற  உவளகத்து  ஏவன்  மகளிர்  மிகவும்  ஆரவாரஞ்  செய்தனர் .  நரவாகனதத்தன்   மதமஞ்சுகை  சட்டென  மறைந்தாள்  என்பதை யறிந்து  மன மொழிகளைக்  கடந்த  தாபத்தை  யநுபவித்தான்  . கலிங்கசேனையும்  தன் அருமை  மகள்  காணப்படாமையைக்  கேட்டுப்  பேய் கோட்பட்டாள் போல  அறிவிழந்தவளாயினாள் ..  இந் நிகழ்ச்சிகளை  யரிந்து  கெளசாம்பி  நகரத்துள்ளாரனைவரும்  கலக்கம்  எய்தினர் . அப்பொழுது உவளகத்துள்ள  ஒரு  கிழவி  வந்து  “பல  நாட்களின்  முன்னர்  மானசவேகன்  எனப்  பெயரிய  வித்தியாதரன்  ஒருவன்  இங்கு  வந்தான் . அப்பொழுது  மதனமஞ்சுகை  மணஞ்செய்யப்படாதவளாக  இருந்தாள் . அவள்பாற்  காமமிக்க  நெஞ்சினனாகிய  மானசவேகன்  கலிங்கசேனையை  யடைந்து  அவளை  வேண்டினான் .  கலிங்கசேனையோ  “இக்கன்னிகை  முன்னரே  நரவாகனதத்தற்கு  உரியளாக  நிச்சயிக்கப்பட்டாள்”   என்று  கூறி  அவன்  வேண்டுகோளை  மறுத்துவிட்டாள் . அதனால்  மனம்  வருந்திய  மானசவேகன்  வந்த வழியே  திரும்பினான் . அவனாலேயே  இப்பொழுது  மதனமஞ்சுகை  கவரப்  பட்டிருத்தல் வேண்டும்”  என்றிவ்வாறு  கூறினாள் .  

                     அது  கேட்டு  நரவாகனதத்தன் பித்தனைப்  போலாகிப்  பரிசனங்களுக்குக்  காணப்படாமல்  தனியனாய்ப்  புறப்பட்டு  மதனமஞ்சுகையைத்  தேடிக்  காட்டில்  அங்குமிங்கும்  அலைந்து  திரிந்தான் . அக் காட்டில்  மானசவேகன்  உடன்பிறந்தாளாகிய  வேகவதியென்னும்  பெயரினையுடையாள் மதனமஞ்சுகையின்  உருக்கொண்டு  நரவாகனதத் தன்  பக்கல்  எய்தினாள் . அவளைக் கண்டு  நரவாகனதத்தன்  விரைந்தோடி , “பிரியே !  காரணமின்றி  என்னை  விட்டொழிந்த  நீ  என்  செய்தனை “  என்று  கூறி  இறுகுறத் தழீஇக்   கொண்டான் .  

                        அதன்பின்  அவள்,  “எனக்கு  மணம்  நிகழ்ந்த  அந் நாளில்  இயக்கர்க்குப்  பூசை  செய்வதாகப்  பிரதிஞ்னஞ  செய்து  கொண்டேன்  . அவ் வண்ணம்  அதனைச்  செய்திலேன் .  அது பற்றிச் சினமுற்ற  இயக்கர்கள்  என்னைக் கவர்ந்து  சென்றனர்  .  ஆதலின்  இப்பொழுது   அவ் இயக்கர்க்குப்  பூசை  செய்தற்பொருட்டு  மீண்டும்  மணவிழா  நடத்தல்  வேண்டும்  “  என்றிவ்வாறு  கூறினாள் .  நரவாகனதத்தன்  அவள்  கூறியவண்ணம்  எல்லாவற்றையும்  அங்ஙனமே  நிறைவேற்றினான் .  அதன்பின்  நடுநிசியில்  துயிலுங்கால்  தன் இயற்கை  உருவத்தோடு  படுத்திருக்கும்  வேகவதியைக் கண்டு  ஐயமுற்ற  நரவாகனதத்தன்  விழிப்புற்ற  அவளை  நோக்கி  , “நீ  யார் ?  உன்மை  கூறுக “  என்று  வினவினான் . அவள்  பின்வருமாறு  கூறுவாளாயினாள். “ஆசாடபுரம்  எனப் பெயரிய  வித்தியாதர  பட்டினம்  ஒன்றுளது .  அதங்கண்  மானசவேகன்  எனப் பெயரிய  வித்தியாதரன்  ஒருவன் உளன் .  யான்  அவன்  தங்கையாவேன் .  வேகவதி  என்பது  என்  பெயர் . என்  தமையன்  மானசவேகன்  என்பான்  நின் மனைவியாகிய  மதனமஞ்சுகை யின்   பாற்  காதல் கொண்டு  மாயையால்  அவளைக் கவர்ந்தான் .  கவர்ந்தும்  இராவணனைப்  போற்  சாபம்  எய்தப்பெற்றவனாதலின்  அவளை  வலிந்துசேர  ஆற்றலில்லாதவனாயினான் .  மதனமஞ்சுகை  அவனாற்  பலவாறு  வேண்டப்பட்டும்  அவனைத்  துரும்பென  மதித்துத்  தள்ளி  நின்பாலே  பிணிக்கப்பட்ட  உள்ளமுடையவளாய்த்  துன்புறுகின்றாள் .  இஃதிங்ஙன மிருக்குங்கால்  ஒருவரோடு  ஒருவர்  உரையாடுதலால்  மதனமஞ்சுகையோடு  எனக்கு  நட்புண்டாயிற்று  .  அவள்  முகமாக  நின் உருவம்  குணம்  முதலியவற்றைக்  கேட்டுக் காமுற்று நின் பக்கல்  யானே  வந்தடைந்தேன் . மதனமஞ்சுகையின்  பிரிவால்  பாழடைந்த  நெஞ்சினனாகிய  நின்னைக் கண்டு மணஞ் செய்து  கொள்ளுதற் பொருட்டு  இவ்வுபாயத்தை  மேற்கொண்டேன் “  என்றிங்ஙனங் கூறி  அவ்  வேகவதி  விச்சையின்  திறமையால்  நரவாகனதத்தனைத்  தூக்கிக்கொண்டு  விசும்பின்  வழியாக  ஆசாடபுரத்தை யடைந்தாள் . திடீரென்று  நரவாகனதத்தன்  காணப்படாமையால்  வற்சராசன்  முதலிய  கெளசாம்பி  நகரத்துள்ளார்  அனைவரும்  துன்ப  நிலையின்  பேரெல்லையை  யடைந்தனர் . அப்பொழுது  நாரத  மகாமுனிவர்  விண்ணினின்றும்  இறங்கி , “நரவாகனதத்தன்  நல முடையவனாக  இருக்கின்றான் ;  நலமுடையளாகிய  மதனமஞ்சுகையோடு   விரைவில்  இங்குப் போதருவான் .  கவலுதல்  வேண்டா “   என்றுகூறி  ஆறுதல்  அளித்தார் . அதனால்  அவர்கள்  தைரியத்தை  கடைப்பிடித்திருந்தனர் .  

                 ஆசாடபுரத்தில்  வேகவதியால்  கொண்டுவரப்பட்ட  நரவாகனதத்தனைக்  கண்டு  பொறாமை  மேற்கொண்ட  மானசவேகன்  அவனைக்  கொல்லுதற்கு  முயன்றான் .  அம்  மானசவேகன்   தாய்  தந்தையர்  நரவாகனதத்தனை  வேகவதியின்  கணவெனன்றறிந்து  கோறன்  முயற்சியினின்றும்  அவனைத் தடைப்படுத்தினர் .  அதன்பின்  வேகவதி  நரவாகனதத்தனை  மதனமஞ்சுகையோடு  இருசியமூகம்  எனப்பெயரிய  மலக்கண் அடைவித்தாள் . அங்குத்  தனவதி  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரப் பெண்  தன் மகள்  அசிநாவதி  எனப் பெயரிய  நங்கையை  நரவாகனதத்தற்குக்  கொடுத்தாள் .  அவளையும்  மணந்து   நரவாகனதத்தன்  தனவதியால்  அடைவிக்கப்பட்டுக்  கெளசாம்பி  நகரத்தைக்  குறித்துத்  திரும்பி  வந்தான் .  விம்மிதத்தன்  மலர்ந்த  கண்களையுடைய  உதயனன்  முதலியோர் அவனைக் கண்டு  பெரிதும்  இன்ப மெய்தினர

வெண்பா

காணுங்  குணம்பருவங்  காதலுரு  வொத்தமையான்

மாணுற்  றொளிர்மதன  மஞ்சுகையைக்   —  காணூஉ

நரவா  கனதத்த  நன்றுமணந்  தின்பப்

பெருவா  ரிதிதோய்ந்தான்  பெட்டு .

பதினைந்தாம்  வகுப்பு

( திருமஞ்சனம்  பெறுதல் )

      வித்தியாதரராகிய   சுற்றத்தார  ரனைவரும்  நரவாகனதத்தன்  பக்கல்  வந்து, “மானசவேகன்  முதலிய  வித்தியாதரர்  பலர்  நினக்குப்  பகைவரா  யுள்ளார்  .  அவர்களை  வென்று  நீயே  வித்தியாதர  சக்கரவர்த்தியாதல்  வேண்டும்  . விச்சைகள்  சித்தியெய்தற்  பொருட்டு  நீ  இங்கு  நின்றும்  புறப்பட்டுக்  கைலாயத்தை  யடைந்து  தவமியற்றல்  வேண்டும் “  என்றிவ்வாறு  கூறினர் .  

        “அங்ஙனமேயாக”  வென்றுடன்பட்டு  நரவாகனதத்தன்  பகவானாகிய  மலைமகன்  மணாளன்  வீற்றிருக்கப் பெற்றதும் , எல்லா  நலன்களும்   சித்தியாதற்குரிய  நல்லிடமுமாகிய  கைலாயத்தை  யெய்திச்  செயற்கரிய  தவத்தைச்  செய்தான் . அத் தவத்தால்  வழிபடப்பெற்ற  உமாநாதன்  காட்சியளவையில்  வெளிப்பட்டு ,  “எல்லா  விச்சைகளும்  நினைத்த  அளவில்  நினக்கு  விளங்கித் தோன்றும் “   என்று  அருளினார்  .  தாமரைப்  பூவை  யொத்த  வடிமைந்த  ஒரு  விமானத்தையும்  அருளினார் .  அவற்றைப் பெற்ற  பின்னர்  நரவாகனதத்தன்  வித்தியதரராகிய  சுற்றக்  குழிவினர்  துணைசெய்யப்  படைகளோடு  புறப்பட்டு  இமயமலையின்  தென்பால்  வாழ்கின்ற  மானசேவகன்  முதலிய  வித்தியாதர  வேந்தர்களைப்  பொருது  வென்றான் .

         இமையமலையின்  வடபால்  வாழ்கின்ற  மந்தரதேவன்  எனப்  பெயரிய  வித்தியதரச்சக்கரவர்த்தி   தென்பாலுள்ள  வித்தியாதரர்  தோல்வியுற்றனர்  எனக்  கேட்டுச்  சினமுடையனாய்  நரவாகனதத்தனோடு  போர்  செய்யச்  சித்தனாயினான் . நரவாகனதத்தன்  ஒற்றர்முகமாக   அதனையறிந்து  பகவானாகிய  பார்வதீ  மணாளன்  அநுக்கிரகத்தையே  சிறந்த  பலமாகக்  கடைப்பிடித்து  மந்தரதேவனைப்  படைகளோடு  வளைத்தான் . அப்பொழுது  வடபாலில்  மந்தரதேவர்க்கும்  நரவாகனதத்தற்கும்  பெரும் போர்  நிகழ்ந்தது . அப்போரில்  விசும்பிடமுழுதும்  கதை  வாள்  வளைதடி  ஈட்டி  சூலம்  முதலிய  ஆயுதங்கள்  நிறந்தன . நிலவுலக  முழுதும்  படைக்கலங்களால்   அறுக்கப்பட்ட  தலைகள்  நிரம்பின.  புண்ணீர்  வெள்ளம்  கார்காலத்தில்  மலயினின்றும்  வீழும்  அருவி  வெள்ளம்  போற்  பன்முகமாகப்  பெருகிற்று .  வெட்டு  குத்து  கொல்  என்னும்  இவை  முதலிய  கொடுஞ் சொற்கள்  கேட்கப்பட்டன .

        மிக்க  அச்சத்தை  விளைவிக்கும்  இத்தகைய  போரில்  நரவாகனதத்தன்  மந்தரதேவனை  நிலத்தில்  வீழ்த்திக்  கால்களால்  அவன்  மார்பிடத்தை  மிதித்து  அதிவிரைவில்  எடுக்கப்பட்ட  வாட்படையால்  அவன்  தலையை  வெட்டுதற்கு  முயன்றான் . அப்பொழுது  மந்தர தேவன்  தங்கையாகிய  மந்தரதேவியென்பாள்  விரைந்து  ஓடிவந்து  நரவாகனதத்தன்  கால்களில்  வீழ்ந்து ,  “ஐய ! கேடெய்தினாற்பால்  இரக்கம்  வைக்கும்  நின்னைப்  புகலடந்தவளாயினேன் .  என்  தமையனுக்கு  அபயம்  அருள்வாயாக . “  என்று  வேண்டினாள்  .  அதனால்  அருள்கூர்ந்த  நெஞ்சினனாகிய  நரவாகனதத்தன் அவனைக்  கொல்லுதலினின்றும்  ஒழிவடைந்தான் . பின்னர்  மந்தரதேவன்  நரவாகனதத்தனை  வணங்கி ,  “என்  குற்றத்தைப்  பொறுத்தருள்க .  வித்தியாதர  இராச்சிய  முழுதையும்  நீயே  ஆள்க “  என்று  கூறித்  தவஞ் செய்தற்பொருட்டு  வனத்தை  யடைந்தான் .  இங்ஙனம்  பகைவர்  எல்லோரையும்  வென்று  பகையற  விளங்கும்  அரசியற்றிருவை  யடைந்து  திகழும்  நரவாகனதத்தனைக்  கண்டு  மருபூதி  முதலிய  தலையாய  அமைச்சர்கள்  அளவிலாப்  பெருமகிழ்வெய்தினர் .   

        நரவாகனதத்தன்  மானசவேகன்  முதலியோரை  அவரவர்  இராச்சியத்தில்  நிலைப்படுத்தினான் . இங்ஙனம்  சுற்றத்தார்  நண்பர்  நொதுமர்  ஆகிய  இவ்  எல்லோரிடத்தும்  அன்புவைத்தொழுகும்  நரவாகனதத்தன்  அவ்வப்பொழுது  ஆகாயவாணியால்  வெளிப்படுத்தப்படும்  பிரபாவ  முண்மையாலும் ,  பகவானாகிய  சிவபெருமானிடத்தினின்றும்  அடைந்த  பெறற்கரிய  செல்வங்களை   யுடைமையாலும் , பல வித்தியாதரப்  பெண்கள்  தாமே  வர   மணஞ்செய்துகொண்டமையாலும் ,  “இவன்  மனிதனல்லன் ;  வித்தியாதர  குமாரனேயாவான் “ என்று  துணிந்து  வித்தியாதரர்  எல்லோரும்  நட்பும்  மதிப்பு முடையராய்  மகிழ்ந்து  கொண்டாட  விளங்கினான் .   

          அதன்பின்  நாரத  முனிவர்  வந்து  நரவாகனதத்தனை  நோக்கி , “அகம்பனன்  என்னும்  பெயரினையுடைய  வித்தியாதரராச  இருடி  ஒருவன்  உள்ளான் ;  அவன்  மந்தரதேவனுடைய  தந்தையாவான் ;  இப்பொழுது  காட்டில்  தவஞ்  செய்கின்றான் ;  அவனை  யடைந்து  வணங்குக . அவன்  நினக்கு  வித்தியாதர  இராச்சியாபிடேகத்துக்குரிய   ஏற்பாடுகளைச்  செய்வான் “   என்றிவ்வாறு  கூறினார் .  

              அதுகேட்டு  நரவாகனதத்தன் ,  “அங்ஙனமேயாக”   வென்றுடன்பட்டு  அப்பொழுதே  புறப்பட்டுத்  தபோவனத்தில்  தவஞ் செய்கின்ற  அகம்பனன் என்னும்  இராச  இருடியின்  பக்கல்  எய்தித்  தன் பெயரை  எடுத்துக்கூறி  வணங்கினான்  .  அவ்  இருடி  ஞானக்  கண்ணால்  எல்லாவற்றையு  முணர்ந்து  தன்  மகள்  மந்தரதேவி  எனப்  பெயரிய  கன்னிகையை நரவாகனதத்தற்குச்  சமர்ப்பித்து  அவ்விருவர்க்கும்  மண  வினையை  விதிப்படி  நிறைவேற்றினான் .  பின்னர் , “இடப கிரியில்  முடிசூட்டுக்  கொண்டாட்டம்  நிறைவேற்றற்பாலது . “   என்று  வித்தியாதரர்களுக்குக்  கட்டளையிட்டான்  .  வித்தியாதரர்  எல்லோரும்  தத்தம்  செல்வ  நிலைக்கியைந்த  ஏற்பாடுகளைச்  செய்தனர் .  நரவாகனதத்தன்  சுற்றத்தார்  நண்பர்  எல்லோரும்  புடைசூழ  மனைவிமார்  அமைச்சர்  வித்தியாதரக்  குழுவினர்  ஆகிய  இவர்களோடு  புறப்பட்டு  இடபகிரியைச்  சார்ந்தான் .  அவ்விடத்தில்  வைசுவானரன்  சாந்திசோமன்   என்னும்  புரோகிதர் இருவரும்  அணுத்துணைக்  குற்றமில்லாத  மிகச் சிறந்த  நன்முகூர்த்தத்தை  நிச்சயித்தனர் .  

             பின்னர்,  நரவாகனதத்தனுடைய  மனைவிமார்  பலருள் ,  “யாவள்  கோப்பெருந்  தேவியாம்  நிலைக்குத்  தகுதியுடையளாவாள்? “   என்னும்  ஆராய்ச்சியுண்டாயிற்று  .  அப்பொழுது , “இரதி தேவியின்  கூறாக  அவதரித்த  மதனமஞ்சுகையே  கோப்பெருந்தேவியாம்  நிலையில்  அபிடேகம்  பெறுவதற் குரியளாவாள் “  என்று  அசரீரி  சொல்  வெளிப்பட்டது .  அதுகேட்டு  எல்லோரும்  வியப்பெய்தினர் .  பின்னர்  முடிசூட்டு  விழாவிற்குரிய  முகூர்த்தம்  வந்ததும்  வித்தியாதரர்  மங்கல  வாச்சியங்களை  வாசித்தனர் . தெய்வ  மகளிர்  புகழ்ச்சிப்பாடலாகிய  இனிய  மங்கல  கீதங்களைப்  பாடினர் .  அந்தணர்  “நலம்  வளர்க”  என்று  வாழ்த்துரை  கூரினர் .  கற்பக  தருக்கள்  மலர் மழை  பெய்தன .  வித்தியாதரப்  பெரியார்  மங்கல  வாழ்த்துக்  கூறினர் .  இன்னோரன்ன  மங்கலகரமான  ஆரவாரங்களுக்கிடையே  சுருசுருப்பு  மிக்க  புரோகிதர்  இருவரும்  பெரிய  இருடிகள்  பலரோடுங்  கூடி  மதனமஞ்சுகையோடு  நரவாகனதத்தனை  இரத்தினமயமான   அரியணைக் கண்  வீற்றிருக்கச்  செய்தனர் .   

             அதன்பின்  மாட்சிமிக்க  முனிவரர்  பலர்  எல்லாத்  தீர்த்தங்க ளினின்றும்   கொணரப்பட்டுப்  பொற்கலசங்களில்  நிறைவிக்கப்பெற்றதும் ,  தூய்மை  மிக்கதும் ,  நறுமணம்  நிறைந்ததும்  ஆகிய   நன்னீரால்  நரவாகனதத்தற்கு  திருமஞ்சனம்  செய்தனர் .  அவன்  பக்கலில்  வீற்றிருக்கும்  மதனமஞ்சுகை  தேவேந்திரன்  அருகில்  வீற்றிருக்கும்  இந்திராணிபோல்  விளங்கினாள் . இங்ஙனம்  பகவானாகிய  மகேசுவரரது  திருவருட்  பாங்கால்  எல்லா  வித்தியாதரர்களுக்கும்  அதிபதியாம்  தன்மையைப்  பொதுவற வடைந்து   நிலவுலகத்திற்  பெறுதற்கரிய  போகங்களை   யநுபவிக்கின்ற  நரவாகனதத்தனைக்  கண்டு  வாசவதத்தையும்  வற்சராசனும்  மாறிலா  மகிழ்ச்சியின்  மலர்ந்தனர் . 

வெண்பா

அண்ணல்  சிவனருளா  லன்ற  மதிகுலத்துப் 

புண்ணியன்  றெவ்வர்  புரைகடந்து — நண்ணியசீர் 

விண்ணவரும்   போற்றவுயர்  விச்சா  தரவரசாய்

மண்ணின்மிசை  வாழ்ந்தான்  மகிழ்ந்து  . 

அன்ப  ருளத்தி    னகலாப்  பரனருளால்

இன்ப  மிருமையினு  மெய்தலா  —-  மென்பதே

வற்சநாட்  டேந்தன்  மகனிவர்தம்   வாழ்க்கைதிகழ்

பொற்சரிதங்  காட்டும்  பொருள் .

                                 முற்றிற்று . 

அரும்பதவுரை

அகாரணம்  —-  காரணமில்லாமை 

அசரீரி  —— ஆகாயவாணி  .

அச்சுறுத்தப்படாதவன்  —–  பயப்படுத்தப்படாதவன் .

அடவி  —–  காடு .

அணிகலம்  —– ஆபரணம் .

அணி  —–  அழகு .

அணிமை  —–  சமீபம் .

அதரம்  —–  உதடு .

அத்தகிரி  —–  சூரியன்  மறைவதற்கு  இடமாய் நிற்கும்  மலை .

அத்தாணி மண்டபம்  —–  அரசிருக்கை மண்டபம் .

அநாதை  —–  பாதுகாப்போரில்லாதவன் .

அந்தோ  —–  இரக்கத்தையுணர்த்தும்  குறிப்புமொழி  .

அபயம்  —–  பயமில்லாமை .  

அபலை  —–  வன்மையில்லாதவள் ,  எளியள் .

அமங்கலம்  —–  கேடு .

அமயம்  —–  சமயம் .

அமைச்சன்  —–  மந்திரி 

அயக்காந்தம்  —–  இரும்பையிழுப்பது .

அரசவை  —–  அரசனுடைய  சபை .

அரதனம்  —–  இரத்தினம் .

அரமகளிர்  —–  தேவமாதர் .

அரியணை  —–  சிங்காதனம் .

அருக்கியம்  —–  பெரியோர்க்கு  நீரால்  செய்யப்படும்  வழிபாடு .

அவகாசம்  —–  இயைந்த காலம் .

அவதரித்தல்  —–  பிறத்தல் .

அவம்  —–  வீண் .

அவலம்  —–  துன்பம். 

அவா  —–  விருப்பம் .

அறிவுறுத்தான்  —–  அறிவித்தான் .

அற்பு  —–  அன்பு .

ஆகாயவாணி  —–  ஆகாயத்திலிருந்து உண்டாகும்  சொல் (வாணி —  சொல்)

ஆஅங்காலம்  —–  அநுகூலமான  காலம் . 

ஆசமித்தல்  —–  ( வலக்குடங்கையால்  மந்திரப்பூர்வமாக  நீரை   மூன்று      

                                    –முறை  )  உட்கொள்ளல் .

ஆச்சிரமம்  —–  முனிவர்  இருப்பிடம் .

ஆணை  —–  ஆஞ்னஞ  ,  கட்டளை .

ஆரம்  —–  மாலை .

ஆரவாரம்  —–  ஒலி .

ஆராதனை  —–  வழிபாடு .

ஆற்றல்  —–  வலி .

ஆனந்த பரிதன்  —–  மகிழ்ச்சி மிக்கவன் . 

ஆன்ற  —–  நிறைந்த .

இகத்தல்  —–  கடத்தல் .

இடையூறு  —–  துன்பம் .

இந்திரசாலம்  —–  மாயவித்தை .

இனம்  —–  கூட்டம் . 

இம்பர்  —–  இவ்வுலகம்  .

இயக்கம்  —–  அசைவு.

இயைபு  —–  பொருத்தம் , சேர்க்கை .

இரிதல்  —–  கெடுதல் .

இருக்கை  —–  இருப்பிடம் , ஆஸனம்  .

இருமை  —–  இம்மை ,  மறுமை .

இவர்தல்  —–  ஏறுதல் .

இறுதிக்கடன்  —–  அந்திய கருமம் . மரணத்தின்பின்  செய்யும்  பிரேத கிரியை

இறுதியெல்லை  —–  முடிந்த அளவு .

இறைச்சிப்பிண்டம்  —–  தசைத்தொகுதி .

இறைப்பொருள்  —–  கப்பம் .

இன்னல்  —–  துன்பம் . 

ஈர்த்தல்  —–  இழுத்தல் .

உஞற்றல்  —–  செய்தல் .

உடுக்கை  —–  ஆடை .

உடை  —–  உஷை,  அநிருத்தன்  மனைவி ,  வாணாசுரன்  மகள் .

உதயாசலம்  —–  சூரியன்  உதித்தற்கு  இடமாய்  நிற்கும்  மலை .

உத்தியானவனம்  —–  பூஞ்சோலை .

உபாயம்  —–  தந்திரம் .

உம்பர்  —–  தேவர் .

உயிர் நிலைத்தானம்  —–  உயிர் நிலை நிற்குமிடம் .

உயிர்நிலை யுறுப்புக்கள்  —–  உயிர் நிற்கும்  விசேட அங்கங்கள் .

உய்த்தல்  —–  செலுத்துதல் . 

உய்யானம்  —–  பூஞ்சோலை .

உரன்  —–  அறிவு .

உரு  —–  வடிவு .

உருவமாற்று  —–  ஓருருவை  வேறு  உருவமாக  மாற்றும்  மந்திரம் .

உலக பாலர்கள்  —–  திக்குப்  பாலகர்கள் .

உலைவு  —–  கெடுதல் .

உவளகம்  —–  அந்தப்புரம் . அரச மகளிர்  உறைவிடம் .

உவா மதி  —–  பூரண சந்திரன் .

உறவு கோடல்  —–  நட்புக்கொள்ளல் .

உறையுள்  —–  வசிக்குமிடம் .

ஊர்தி  —–  வாகனம் .

ஊழிக்காலம்  —–  உலகம்  அழியவரும்  யுகம்  முடிவுக்காலம் .

எடுத்துக்காட்டு  —–  உதாரணம் .

எழில்  —–  அழகு .

எழூஉம்  —–  எழுகின்ற .

ஏதம்  —–  துன்பம் .

ஒரீஇ  —–  நீங்கி .

ஒல்லாதது  —–  முடியாதது .

ஒளிநூல்  —–  சோதிடநூல் .

ஒற்றன்  —–  பிறர்பால்  நிகழ்வனவற்றை  மறைந்து  நின்று  ஆராய்ந்தறிபவன்

கடவாது  —–  நீங்காது .

கட்டழகு  —–  மிக்க அழகு .

கட்புலன்  —–  கண்ணாகிய  இந்திரியம் .

கணனம்  செய்து  —–  கணக்குச் செய்து .

கணித நூல்  —–  ஜோதிட நூல் .

கண்டம்  —–  கழுத்து .

கதிரவன்  —–  சூரியன் .

கதை  —–  தண்டாயுதம் .

கபடம்  —–  வஞ்சகம் .

காத்தல்  —–  மறைத்தல் .

கலுழன்  —–  கருடன் .

கவலல்  —–  வருந்தல் .

கவற்சி  —–  வருத்தம் .

களிறு  —–  ஆண்யானை .

கன்னிமாடம்  —–  மணஞ்செய்யப்பெறாத  பெண்கள்  தனித்து  வசிக்குமிடம்

காட்சியளவை  —–  பிரத்தியஷப் பிரமாணம்  .

காணூஉ  —–  கண்டு .

காதற்கிழமை  —–  அன்புரிமை .

கந்தருவம்  —–  ஒருவனும்  ஒருத்தியும்  கொடுப்போரின்றி  அன்பினால்  தாமே                                                                               

மணந்து  கொள்ளும்  மணம்

காந்தன்  —–  கணவன் .

காபாலிகவேடம்  —–  கையில்  ஓடு  தாங்கிப்  பிச்சையேற்றுண்ணும்                                                                                                     

                                            சந்நியாச வேடம் .

காமவேள்  ,   காமன்  —–  மன்மதன் .

காமுற்று  —–  விரும்பி .

காமுகன்  —–  மிக்க  காமமுள்ளவன் .

காலத்தாழ்வு  —–  காலதாமதம் .

கிரகணம்  —–  பற்றுதல் ,  பிடித்தல் .

கிரியை   —–  சடங்கு .

கழமை  —–  உரிமை .

கீழ்கடல்  மலை  —–  கீழ்கடலின்  பாங்கருள்ள  உதயகிரி .

குதூகலம்  —–  பெருமகிழ்ச்சி.

குறுமை  —–  குறுகிய வடிவம் .

கூதிர்காலம்  —–  குளிர்காலம் .  ஐப்பசி  கார்த்திகை  மாதங்கள் .

கூறு  —–  அமிசம் .

கேயூரம்  —–  தோளணி.

கையுரை  —–  காணிக்கைப்  பொருள் .

கோப்பெருந்தேவி  —–  பட்டத்தேவி .

கோறள்  —–  கொல்லுதல்.

கெளதுகம்  —–  மங்கல  காரியத்தின்  தொடக்கத்தில்  கையிற்  கட்டப்படும்

                                 நூல் . (ரக்ஷாபந்தனம் )  .

சங்கேதம்  —–  ஏற்பாடு .

சண்டகன்மம்  —–  கடுந் தொழில் .

சண்டிகை  —–  காளி , துர்க்கை .

சந்தி  —–  பொருந்துதல் .

சபந்தினி  —–  கணவனுடைய  மற்றொரு  மனைவி .

சமர்ப்பித்தல்  —–  கொடுத்தல் .

சலதி  —–   கடல் .

சாதகன்மம்  —–  பிறந்த காலத்தில்  குழந்தைகளுக்குச்  செய்யும்  சடங்கு.

                                   ( சாதம்  —  பிறப்பு )

சாதிக்கத்தக்கது  —–  முடிக்கத்தக்கது ..

சாமந்த அரசர்  —–  சிற்றரசர் .

சாமம்  —–  இன் சொற் சொல்லுதல்.

சாளரம்  —–  சன்னல் .

சான்ற  —–  சாக்ஷி.

சிதை  —–  சுடலைக்கண்  அடுக்கும்  விறகு .

சித்தம்  செய்தல்  —–  முன்னேற்பாடு  செய்தல் .

சித்தி யெய்தல்  —–  பயனடைதல் .

சிறைவீடல்  —–  சிறையினின்றும்  விடுதலை  செய்தல் .

சினந்து  —–  கோபித்து .

சீலம்  —–  ஒழுக்கம் .

சுடலை  —–  சுடுகாடு .

சுயம்வரம்  —–  தானே  கணவனை  நிச்சயத்தல் .

சுற்றக்குழுவினர்  —–  உறவினராகிய  கூட்டத்தார் .

சூலபாணி  —–  சிவபிரான் .

சூழ்ச்சி  —–  ஆராய்ந்து செய்யும்  உபாயம்  .

சூழ்ச்சி வினைச்செயல்  —–  ஆராய்ந்து  செய்யப்படும்  செய்கை .

செய்வல்  —–  செய்வேன் .

சேய்  —–  மகன் .

சேய்மை  —–  தூரம் .

சேர்பு  —–  அடைந்து .

சைனியம்  —–  சேனைத் தொகுதி .

சொற்கிறைவி  —–  சரசுவதி .

சோதித்தல்  —–  ஆராய்ந்தறிதல் .

சோர்விலன்  —–  செயலில்  தளர்வில்லாதவன் .

செளளம்  —–  குடுமி வைக்கும்  சடங்கு .

தமியள்  —–  தனித்தவள் .

தலையாய  —–  முதன்மை  வாய்ந்த  .

தழீஇ  —–  தழுவி .

தற்காப்பு  —–  ( கற்பின்  வழுவாமல் ) தன்னைப்பாதுகாத்துக்கொள்ளல் .

தாதை  —–  தந்தை .

தாபதகுமாரன்  —–  முனி புத்திரன் .

தாபதன்  —–  மினிவன் .

தாபம்  —–  துக்கம் .

தானம்  —–  கொடுத்தல் .

திக்குவிசயம்  —–  திசையிலுள்ள  அரசரை  வெற்றி   கொள்ளுதல் .

திண்மை  —–  மனவுறுதி .

திருமஞ்சனம்  —–  அரசர்க்கு  முடி  சூட்டுமுன்  செய்யப்படும்  அபிடேகம் .

திவலை  —–  துளி .

தீக்கடவுள்  —–  அக்கினிதேவன் .

தீநிமித்தம்  —–  தீயசகுனம் .

துற்றும்  —–  நெருங்கிய .

தூதர்  —–  தலை , இடை , கடை யெனமூவகைப்படுவர்  இவருள்  சந்தி  விக்கிரகங்களுக்கு  வேற்று  வேந்தரிடைச்  செல்லுங்கால்   தானே  வகுத்துக்  கூறுபவன்  தலையாவான் ;  கூறியது  கூறுவோன்  இடையாவான்  ;  ஓலை  கொடுத்து  நிற்போன்  கடையாவான் .இம்முறை  வட நூலுட்  கூறப்படுவதாகும்  திருக்குறள்  தூது  என்னும்  அதிகாரத்தில்  “கடனறிந்து”  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையையும்  நோக்குக . இந்நூலில்  “தூதன்”  என  வருமிடங்கள்  தோறும்  இவ்வாறு  பகுத்துணர்க , இவன்  ஒற்றனின்  வேறு  பட்டவன் .

தூய்மை  —–  பரிசுத்தம் .

தெய்வ  ஊர்தி  —–  தேவ  விமானம் .

தெய்வகன்னிகை  —–  தேவ மாது .

தேசசு  —–  ஒளி .

தேயம்  —–  நாடு .

நச்சுப்பெண்கள்  —–  நம்மைச்  சார்ந்தாரை  நஞ்சூட்டிக்  கொல்லும் பெண்கள்

நட்டோன்  —–  நண்பன் .

நம்பல்  —–  விருப்பம் .

நள்ளிரவு  —–  இராப் பொழுதின்  நடுக்கூறு .

நன்புலம்  —–  நல்லிடம் .

நன்னிமித்தம்  —–  நல்ல  சகுனம் .

நன்று  —–  நன்மை .

நாப்பண்  —–  நாடு .

நாள்  —–  நக்ஷத்திரம் .

நிசி  —–  இரவு .

நிபுணன்  —–  திறமையுடையவன்  .

நிமித்தம்  —–  சகுனம் ,  காரணம் .

நியமம்  —–  நிச்சயம்  ,  முறை .

நியமனம்  —–  ஏற்பாடு .

நிருமாணித்தல்,  நிருமித்தல்  —–  உண்டாக்குதல் .

நிறைகுடம்  —–  பூரணகும்பம் .

நிறைமதி  —–  பூரணசந்திரன் .

நிதிப்பிரயோகம்  —–  நியாயமுறையில்  மேற்கொண்ட  முயற்சி  .

நீறு  —–  சாம்பல் .

நுகர்தல்  —–  அநுபவித்தல்  .

நுதல்  —–  நெற்றி .

நேரம்  —–  காலம் .

நேர்ந்துழி  —–  வாய்த்தவிடத்து .

நொதுமலர்  —–  பகையும்  நட்புமில்லாதவர் ,  அயலார் .

நோன்பு  —–  விரதம் .

பகழி  —–  அம்பு .

படைக்கலம்  —–  ஆயுதம்.

பணி  —–  ஏவல் , வேலை .

பணிப்பெண்கள்  —–  வேலைக்காரிகள் .

பண்டு  —–  முன் .

பதி  —–  தலைவன் .

பரபரப்பு  —–  மிக்க  விரைவு .

பரவசம்  —–  தன்வசமில்லாமை .

பராக்கிரமம்  —–  வீரம் .

பரிசனங்கள்  —–  ஏவலாளர் .

பரிசில்  —–வெகுமதி .

பரிணயம்  —–    கலியாணம் .

பருவம்  —–  வயது , காலம் .

பலபடி  —–  பலவிதம் .

பற்று  —–  விருப்பம்  .

பனுவலாட்டி  —–  சரசுவதி.

பாசறை  —–  பகைமேற்  சென்றோர்  தங்குமிடம் .

பாணி  —–  கை

பாணிக்  கிரகணம்  —–  கைப் பிடித்தல் .

பாத்தியம்  —–  பெரியோருக்குப் பாதம்  அலம்பக் கொடுக்கும்  நீர் .

பானீயம்  —–  குடித்தற்குரிய  நீர் முதலியன .

பிடி  —–   பெண்யானை .

பிணித்து  —–  கட்டி .

பிதாமகன்  —–  பாட்டன் .

பிரபாவம்  —–  புகழ் , பெருமை .

பிரபெளத்திரன்  —–  பேரன்  புதல்வன் .

பிரமதேஜசு  —–  தவ  வலியால்  முனிவர்க்கு  உண்டாகும்  ஒளி .

பிலம்  —–  குகை .

பிழம்பு  —–  திரட்சி.

பிறந்த நாள்  —–  ஜன்ம நட்சத்திரம் .

பிறழ்ச்சியுணர்வு  —–  வேறுபட்ட  அறிவு .

பிற்றை  நாள்  —–  மற்றாநாள் .

புகலிடம்  —–  அடைக்கலமாகப்  புகுமிடம் .

புங்கவன்  —–  உயர்ந்தவன் .

புடை  —–  பக்கம் . 

புண்ணீர்  —–  இரத்தம்  .

புதல்வற்பேற்றுத்  திருவிழா  —–  புதல்வன்  பிறந்தமைக்காகச்  செய்யும்  உவகைக்  கொண்டாட்டம் .

புத்திர காமேட்டி  —–  புதல்வற் பேறு  குறித்துச்  செய்யும்  யாகம் .

புரத்தல்  —–காத்தல் .

புரை  —–  குற்றம் .

புரோகிதன்  —–  வருங்  காரியஞ்  சொல்வோனும் , சடங்கு  செய்விப்போனும்  ஆகிய  பார்ப்பன் .

புலம்  —–  இடம் .

புலனாதல்  —–  வெளிப்படுதல் .

புழைக்கைமா  —–  யானை ( புழை  —–துவாரம் )

புளகம்  —–  மயிர்  சிலிர்த்தல் .

புறக்கணித்தல்  —–  அசட்டையாய்  வேறொன்றைக்  கருதியிருத்தல் .

பெட்டல்  —–  விரும்புதல் .

பெயரிய  —–  பெயரையுடைய .

பெருந்தேவி  —–  பட்டத்தேவி .

பெறீஇ  —–  பெற்று  .

பேரவா  —–  பெரு விருப்பம் .

பேருவகை  —–  மிக்க  மகிழ்ச்சி .

பேழை  —–  பெட்டி .

பேறுகாலம்  —–  பிரசவ காலம் .

பொருட்குழு  —–  நிதித்திரள் .

பொருட்படுத்தல்  —–  மதித்தல் .

பொருட்பெண்டிர்  —–  வேசையர் .

பொருதல்  —–  போர் செய்தல் .

பொருளுரை  —–  பயன்  நிறைந்த  மொழி .

பொருளுரையில்லம்  —–  பொக்கிச  சாலை .

பொலிவு  —–  அழகு .

பொறி  —–  இயந்திரம் .

பொறிக்களிறு  —–  இயந்திரத்தாற்  செய்யப்பட்ட  யானை .

பொற்கொடை  —–  பொன்னை  வழங்குதல் .

பொற்பு  —–  அழகு .

பொன்னாத  —–  கெடாத.

போக்கு வரவு  —–  போதல்  வருதல் .

போதரல்  வருதல் .

போந்து  —–  வந்து .

பெளத்திரன்  —–  புதல்வன் மகன் .

மகப்பெறும்  இல்லம்  —–  பிரசவ வீடு .

மகவு  —–  குழந்தை .

மகிமை  —–  பெருமை .

மடவரல்  —–  பெண் .

மணவறைவேதி  —–  விவாகம்  செய்யும்  இடத்திலுள்ள  மேடை  .

மணவிழா  —–  விவாகச் சிறப்பு .

மணவினை  —–  விவாகச்செயல்  .

மதி  —–  சந்திரன் .

மந்திராலோசனை  —–  அரசியற்  சூழ்ச்சி .

மரபு  —–  குலம் .

மருளன்  —–  பித்தன் .

மலைமகள் மணாளன்  —–  சிவபிரான் .

மழலைச் சொல்  —–  குழந்தைகளின்  பொருள்  நிரம்பாத  மென்சொல் .

மறவழி  —–  பாவமார்க்கம் .

மறை  —–  இரகசியம் .

மனத்திட்பம்  —–  மனவுறுதி .

மன்றல்  —–  கலியாணம் .

மன்னிறைவன்  —–  சக்கரவர்த்தி .

மாசு  —–  குற்றம் .

மாந்தர்  —–  மக்கள் .

மானம்  —–  தன்னிலையில்  தாழாமையாகிய  பெருமை .

முகில்  —–  மேகம் .

முதுமொழி  —–  பழமொழி .

முற்பக்கம் —–  சுக்கிலபக்ஷம் .

முன்னுதல்  —–  நினைத்தல் .

முன்னைப் பிதாமகன்  —–  முதற் பாட்டன் .

மேதினி  —–  பூமி .

மேம்பாடு  —–  சிறப்பு .

மேனில  இல்லம்  —–  மேல்மாடம் .

யாண்டு  —–  வருடம் .

யாண்டு முதிர்வு  —–  வயோதிகம் .

வசீகரித்தல்  —–  வசமாக்குதல் .

வண்மை  —–  கொடை .

வரித்தாள்  —–  கணவனாக  நிச்சயத்தாள் .

வலாரி  —–  இந்திரன் .

வள்ளல்  தன்மை  —–  கொடைத் தன்மை .

வனப்பு  —–  அழகு .

வாசவன்  —–  இந்திரன் .

வாச்சியம்  —–  வாத்தியம் .

வாட்படைய்  —–  வாளாயுதம் .

வாரிதி  —–  கடல் .

வாளா  —–  சும்மா .

விசும்பு  —–  ஆகாயம் .

விச்சை , விஞ்சை  —–  வித்தை .

விட்புலச்சொல்  —–  ஆகாயவாணி  .

விட்புலம்  —–  ஆகாயம் , தேவருலகம் .

விட்புல வேந்தன் ,  விண்ணவர்  இறை  —–  இந்திரன் .

விது  —–  சந்திரன் .

விம்மிதம்  —–  ஆச்சரியம்  .

விரதி  —–  விரதமுடையான் .

விழிப்பு  —–  கவனம் . 

வினைஞர் —–  தொழிலாளர்  .

வெல்லற்பாலன  —–  வெற்றி கொள்ளத்தக்கன .

வென்றிச் செலவு  —–  வெற்றி கொள்ளுதற்குச் செல்லும்  பிரயாணம் .

வேட்கை  —–  விருப்பம் .

வேட்டல்  —–  மணம்  செய்தல் .

வேதி  —–  திண்ணை , மேடை .

வேதிகை  —–  குறடு .

வேலை  —–  கடல் .

வேள்வி  —–   யாகம் .

வைப்பு  —–  புதையல் .

                                                        முற்றும் .

                    | |   சுலோசனை  |  |

கணபதி  துணை

அறிவித்தல்

அறிஞர்காள்  !

            சுலோசனை  யென்னும்  இச்  சிறுகதை  இராமாயண  சம்பந்தமுடைத்தென்பது  யாவரும்  அறிவர் . இராம காதையை  வடமொழிக்கட்  பெரியார்  பலர்  பற்பல  வேறுபாட்டுடன்  செய்திருக்கின்றனர் அவற்றுள்  ,  இஃது  ஏதாவதொன்றில்  அடங்குமென்று  ஊகஞ்செய்யத்தக்க  நிலையிலுள்ளது . இது கருதியே , “அறிஞர் வாயிலாகக்  கேட்கப்படுகின்றது”  என்று  இதன் றொடக்கத்திற்  கூறியதுபோலும் . எங்ஙனமாயினும்  கதை  நிகழ்ச்சி  மிக்க  சுவையிள்ளதே  . அவலச்சுவையே  இதன்கட்  சிறப்பாக  நிலவுகின்றது .சுலோசனையின்  அருங்கற்பும் , பெருங் குனங்களும் , அறிவுடைமையும், தலைவற்பிரிவாற்  றுன்புறு  நிகழ்ச்சிகளும்  படிப்பார்க்கு  வியப்பும்  உருக்கமும்  தோன்ற  இன்புறுத்துவனவாம் .  உண்மைக்  கற்பினிலை  யிற்றென்று  இதனாற்  றெள்ளிதி  லுணரலாம் . அறுபட்டனவாகிய  கையும்  தலையும் , எழுதியதும்  பேசியதும்  கற்பின்  ஆற்றலைப்  புலப்படுத்துவனவாம் .இப்பிறப்பிற்  பயிலப்படாதாரைக்  கண்டவிடத்து  ஒரோவழியுண்டாம்  அந்  நிகழ்ச்சிகளுக்கு  முற்பிறப்பின்  றொடர்பே  காரணமென்பதும் இதன்கட்  காணலாம் .

      இது , மதுரையின்கணுள்ள  இராமேசுவர  தேவஸ்தான  வடமொழிக்  கலாசாலைத்  தலைமையாசிரியர்  வித்தியாநிதி  ஸ்ரீ  ர . கிருஷ்ணமாசாரியர்  அவர்களாற்  சென்னையினின்று  திங்கடோறும்  பிரசுரிக்கப்பட்டுவரும்  “ஸகிருதயா”  என்னும்  வடமொழிப்  பத்திரிக்கையிற்  பத்து  வருடங்களுக்கு  முன்னர்  வெளியாயது .  இப்பொழுது  புதுக்கோட்டை  ஸமஸ்தானத்தைச்  சார்ந்த  மேலைச்சிவபுரியின்கணுள்ள   சன்மார்க்க சபையார்  விருப்பின்  வண்ணம்  தமிழறிஞர்களும்  படித்தின்புறற்பொருட்டு   மொழிபெயர்க்கப் பட்டது .

மகிபாலன்பட்டி                                                                                  இங்ஙனம் ,

துன்மதி—வருடம்                                                                          மு.  கதிரேசன்.

மார்கழி – மீ  கசு உ

சுலோசனை

       முதற்காப்பியமாகிய  இராமாயணப்  பயிற்சியில்  மிக்க  பற்றுடையார்க்குங்  கேட்ட வளவினானே  நிகரிலா  வியப்பைத்  தருகின்ற  இச்  சுலோசனையென்னும்  பழஞ்சரிதம்  அறிஞர்  வாயிலாகக்  கேட்கப்படு கின்றது .  “இராம”  என்னும்  அழகிய  வுடலோடு  நிலவுலகத்தி லவதரித்துத்  தந்தையார்  திருமொழியோம்பல் வேண்டுமென்னும்  உறுதியால்  அரசுதுறந்த  திருமகள் கொழுநனது மூவுலகத்தையும்  மயக்குறுத்தும்  பேரெழிலனனைச்  சூர்ப்பநகை  கண்டு  காமமயக்க  முடையவளாய் , அவ்விராமபிரானை  அப்பொழுதே  தனக்கு  மணவாளனாக  வேண்டி , அது காரணமாக இலக்குமணனாற்  றனக்கு  நேர்ந்த  மானக்கேட்டைக்  கரதூடணர்களுக்கு  அறிவுறுத்து  , அவ் விராக்கதர்களும்  கூறிய  இராமபாணத்தா லுயிர் துறப்பக் கண்டு  கரைகடைந்தெழூஉந்  துன்பக்கடலுண்மூழ்கி  மிகுவிரைவில்  ஓடித் தனது மானக்கேட்டிற்கு  ஏதுவாக  நிகழ்ந்த  செய்திகளனைத்தையும் இலங்கைக்கிறைவனாகிய  இராவணனுக்குணர்த்தினாள் .  அவ் விராவணன்  அச்  செய்திகளைக் கேட்டுக்  கூற்றுவன்போல்  மிக்கசினத்தாற்  கொதித்துப்  பொன்மானா லிராமபிரானை வஞ்சித்துச்  சானகியைக்  கவர்ந்தான் .கொடியவனாகிய  அவ்வரக்கர் தலைவன்  இழைத்த  கொடுஞ்செயலை யறிந்த  இராமபிரான்  சுக்கிரீவன்  முதலிய  குரக்குத்தலைவர்களோடு  சென்று  இலங்கையை  வலைத்தான் .பின்னர்  நிகழ்ந்த  பெரும் போரில்  இராமபிரான்  வில்லினின்றும்  வெளிப்போந்த  கொடிய  விடப்பாம்புகள்  போன்ற  அம்புகளால் , கும்ப  நிகும்ப  அதிகாய மகாகாயர்  முதலிய  இராக்கதரெல்லாம்  நீறுபட்டழிந்தவுடன்  சிறிது  அச்சமுற்ற  இராவணன் , நெடுநேரஞ்சூழ்ந்து  இந்திரசித்து  ஆகிய  தனது  குமாரனையழைத்துப்  போர்புரிதற் கேவினான் . உலகபாலரிடத்து  வெற்றிகொண்ட  அவ்  விந்திரசித்து ,பல்லாயிரவராகிய  அரக்கர்கள்  புடை சூழப்  பகைவரைப் பொருதான் . அவ் விராவணகுமாரன்  நெடுநேரம்  போருஞற்றியும்  ஓரிடத்தில்  ஒவ்வொருகணத்திலுங்   குரக்கினங்களாற்  கோறல்  செய்யப்படுந்  தனது  படைகளையும்  , மற்றோரிடத்தில்  இலக்குமணன் விடுத்த  பகழியினுறைப் பாற்  சிதறுண்ட  தன்னையுஞ்  சீர்படுத்தற்கு  வலியிலனாய்  வெற்றியின்  அவாவற்றுப்  போர்க்களத்தினின்றும்  வெளிப்போந்து  இலங்கையை  யெய்தி  இராமலக்குமணர்களுடைய  தெய்விகவன்மையையும் ,  தனக்கு  நேர்ந்த  மானக்கேட்டையுந்  தந்தைபாலுணர்த்தினான் .

                 அது கேட்ட  இராவணன்  அஞ்சத்தக்க  சினமுடையனாய்ப்  பற்களை  நெறுநெறெனக்கடித்து  “ஏட ! இழிதகவ !  விட் புல வேந்தன் முதலிய  உலகபாலகர்களையும்  வென்றும் , மிகவும்  இழிந்த  மக்களிடத்திற்  றோல்வி யுற்று  நாணமின்றி  எங்ஙனம்  ஈண்டுற்றாய்? செல் ! செல் ! என்முன்னிருத்தற்குத்  தகுதியில்லாதவனாகின்றாய்”  என்று  பேரொலியாற்  பழித்துரைத்தான் .   

                  இதனைக் கேட்ட  இந்திரசித்து  ,  பின்னரும் , “இராமலக்குமணர்கள்  உண்மையில்  மக்களல்லர் ! அவருள், இராமன், மூன்றுலகங்களுக்கும்  இன்னல்புரியும்  நின்னை  அடியோடொழித்தற்கு   நிலவுலகத்தில்  அவதாரஞ்செய்த  திருமகள்கொழுநனென் றறிவாயாக . இன்றே  சானகியை  அவன்பக்கல்  சேர்த்திலையேல்  நங்குலத்தில்  ஒரு  சிறுதுகளும்  காண்டல்  அரிது . “  என்று  கூறினான் . இராவணன்  மிக்கசினத்தாற்  கிளர்ந்து  அவ்வெகுளித்தீயால் நீறாக்கமுயல்பவன் போலத்  தன்  புதல்வனைப்  பின்னருங்  கடுஞ்சொற்களாற்  பழித்துரைத்தான் .  

                   இவ்வமயத்தில்  அவற்கு  இனிய  நண்பனாகிய  வித்தியுச் சிகுவன்  என்னும்  அமைச்சன்  இலங்கநாயகனைச்  சிறிது தேற்றி , நிகும்பிலையில் , விரும்பியவைகளைத் தரும்  ஒரு வேள்வியைச்  செய்துமுடித்தற்கு  இந்திரசித்துவைப்  போக்கினான் .இராவணகுமாரன்  அங்ஙனமே  செய்வலென்று  கூறிப் புறப்பட்டுப்  பன்னாட்குமுன்னர்கண்ட  தன்  அன்பிற்கருங்கலமாகிய  மனைவியைக்  காணவிரும்பி  அவளுறையும்  இல்லத்தை யெய்தினான் .

                     எய்திய  அவ்விந்திரசித்து , பிரிவானெய்திய  பசப்பானெழின்மிக்க கதுப்புகளைக்  கைத்தலத்தனைத்து  அளவின்  மிக்க  மூச்சுக்காற்றுக்களால்  உள்ளத்துள்ள  பிரிவுத்தீயை  விசிறுகின்றவளும்  ,  எப்பொழுதும்  பெருகி  யிடையறாதொழுகுங்  கண்ணீர்த்திரளால் நனைந்த  மேலாடையுடையாளும், “என்னையொத்த  துன்பமிக்கபெண்  இவ்வுலகத்தில்  வேறு  ஒருத்தியுமில்லை”  என்று  பலவிதமாகத்  தன்னைப்  பழிக்கின்றவளும் , தோழிமார்கள் ,  “தோழி தேறுவாயாக  .நின் பிராணபதி  அவசியம்  விரைவில்  வருவான்  . தாபத்தையும்  போக்குவான் . ஆதலின் , இவ்வவலத்தை  யொழிப்பாயாக”  என்று  அடிக்கடி  தேற்ற  ,  அவர்களை  நோக்கிப்  “பேறிலளாகிய  யான்  என் செய்வல் !  எனது  அன்புரிமைத் தலைவனது  அழகியமுக  கமலத்தை  யான்  என்றுதான்  எங்ஙனங்  காண்பேன்”  என்று  அழுங்கலிற்   றடுமாறுகின்ற  சொற்கலான்  மெல்லமெல்லப்  பேசுகின்றவளும் , சில  அணிகலன்களையுடையவளும் , இளமை  மிக்காளும் , தாமரையினி ளந்தண்டு  போன்ற  மெல்லிய  உடலை  யுடையவளும்  ,  நினைந்து நினைந்து புலம்புகின்றவளும்  ,  அழகிய  எயிறுகளையுடையாளும்  ,கற்பரசியும்  ஆகிய  சுலோசனை  என்னும்  பெயரையுடைய  தன்  காதலியைக்  கண்டான் .  

                     விரகவிதனமே  உருவெடுத்தாற்போல  அங்ஙனமிருக்கின்ற  காதலியைக்  கண்ட  அவ்  விந்திரசித்து ,  மகாவீரனாயினுந்திண்மையை  அறவே  ஒழிப்பது உம்,  நெஞ்சைப்பிளப்பதூஉமாகிய   சோகாக்கினியினால்  எரிக்கப்படுகின்ற  மனத்தையுடையனாய்த்  தோழிகள் விரைந்தெடுத்திட்ட பொன்மயமான  வேத்திரவிருக்கையில்  இருந்தான் .

                   சுலோசனையும் ,  தான்  பன்னாளாக  விரும்பிய  தலைவனை  உண்ணாநோன்புடையனபோல  விளங்குங்  கண்களாற்  பருகி,  அவசரமுற்று, வியப்பெய்திச்  சிலவெழுத்துங்  கூறுதற்கு  வலியிழந்து  காந்தனது  திருவடிகளை  வணங்கி  ,  மிகமுயன்றுங்  கன்ணீர்ப்பெருக்கைத்  தடுத்தற்கு  ஆற்றலின்றிச்  சிறிது  நேரம்  இன்னது  செயற்பாலதென்றறியாளாய்   ஓவியத்  துற்றாள்போன்று  அசைவற்றுத்  தன்வயமிழந்து  நெடுநேரம்  வாய்வாளாதிருந்தாள் .

                     இன்னல்மிகுதி  சிறிது  தணிவெய்தியபின்,  இந்திரசித்து  மிக்கொழுகுகின்ற   நீர்த்திவலைகணிரம்பிய  சுலோசனையின்  கண்களைத்  தனதுகைத்தலத்தான்  மீண்டுமீண்டுத்  துடைத்து , அவளை  நோக்கி  “ஏ காதலி அலர்ந்த தாமரையினிதழ்களை  யொத்த  அழகியவிழிகளினின்று  இந் நீர்ப்பெருக்கு  ஆறுபோல்  வழிகின்ற  தென்னை?  இளம்பருவத்  தணங்கரசே ! பெருங்காற்றான்  அலைப்புறூஉம்  இளங்காதலிபோல்  மிகமெல்லிய  நினது  இவ்வுடற்கொடி  நடுங்குதல்  எற்றிற்கு ? அன்பே ! அணிசெய்துகொள்ளாமை  யென்?  மிகக்கடியதாய புன்கணாநிரம்பிய  யோசையின்றியழுதல்  எக்காரணம்பற்றி? யான்  சிறிதெனுங்  கேடுசெய்ததாகக்  கூர்ந்தாராய்ந்து பார்த்தும்  புலப்பட்டிலதே !  அங்கனாய் ?  நினது  வருத்தத்திற்குக்  காரணமின்னதெனக்  கூறுவாயாக . இப்பொழுதே  நின்  துக்ககாரணத்தைப்  போக்குதற்கு  அடியேன்  சித்தனாக  இருக்கின்றேன் . “  என்று  கூறினான் .

                        சுலோசனையும் , சிறிதுசிவந்த  உள்ளிடத்தையுடையகண்களை  முன்றானையால்  நீவித்  தழுதழுத்தகுரலுடன்  “நாத ! அநாதையைப் போல  என்னை  விடுத்து  இத்துணைக்காலமாக  வாராதிருந்த  நின்  வன் நெஞ்சைப்  பேறிலளாகிய  யான்  என்னென்று  கூறுவேன் ?  இப்பேதை  செய்த   குற்றம்  யாது ? இப்பொழுது  அவசியம்  வருவாய் , மாலை  வருவாய்  ,  இரவில்  வருவாய்,  நாளை  வருவாய்   அதன்பின்னால்  வருவாயென  நினைந்து எத்தனையோ  கற்பம்  போன்ற  நாட்களைப்  போக்கினேன் . இன்றுதான்  என் விருப்பம்  பயனாயிற்று . என்மாட்டு  அருளுண்டாதற்கு  இத்துணை  நாட்  சென்றது .”  என்னுஞ் சொற்களைப்  புகன்றாள் .  

                           இந்திரசித்து அவள்  சொற்களைக் கேட்டு  , “மருள்விழியாய் ! நிகழ்ந்த செய்திகளனைத்தும்  உணர்ந்திருந்தும்  இங்ஙனங்  கேட்டலென்னை?  பன்னாள்  வளர்க்கப்பட்டதும் , மிக இனியதுமாகிய  நமது  காதற்கொடியை  யான்  என்றும்  மறவேன் . நின்பால்  எது பற்றியும்  எனக்குக்  கோபமின்று . காலத்தின்   மாறுபாட்டை  அறிந்திருக்கிறாயன்றோ . என்  தந்தை  சானகியைக்  கவர்ந்தமையாற்  பெரியகேடுகளின்றொடர்ச்சி  யுண்டாயது . தத்தமுள்நேர்ந்த  பகையினையுடைய  இராம  இராவண  சைன் யங்களின்  மிக  அஞ்சத்தக்க  போர்க்களத்தில்  அதிகாயன்  முதலிய  பெரிய வீரர்களும்  இறந்தனர் . மூவுலகத்தினும்   புகழ் பெற்ற  பராக்கிரமத்தையுடைய  எனது  சிறியதந்தையாகிய  கும்பகன்னனுஞ்  சரிதத்தான் எஞ்சிய  விக்கிரமனாயினான் . யானும்  அரக்கர்கள்  சூழ்வரச்சென்று  நெடுநேரம்  பொருது , இலக்குமணன்விடுத்த  கணைகளாற்  பிளக்கப்பட்ட  மார்பினையுடையனாய்  ,  மிகவுந்துன்புற்றுத்  தந்தையின்  பக்கலெய்தி  இவ்வெல்லாவற்றையுந்  தெரிவித்தேன் . இராமலக்குமணர் களுடைய  ஆண்மையை  அறியாதவனாகவே  அவ்விராவணனும்  மூவுலகத்தினும்  வெற்றியைத் தரும்  ஒரு வேள்வியை  நிகும்பிலையிற்  செய்தற்கு  இன்று  என்னை  ஏவினான் . நின்னைக்காண்டலிலவாவும்  மனத்தினையுடைய  யான்  வழியிடையே   ஈண்டுப்  போதரலானேன் . ஆதலின் , எனக்கு  விடைதருவாயாக . கவலையை  ஒழிக்க . மிகவிரைந்து திரும்புவேன் .”  என்று  இவ்வாறு  கூறினான் .  

                 அது கேட்ட  சுலோசனை  சிறிது  நீர் ததும்ப  நிலநோக்கிய  கண்களையுடையளாய்  , “உயிர்த்தலைவ !  இப்பொழுதே  இங்குப்போந்த  நினது  பிரிவை  மீண்டும்  பொறுத்தற்கு  எங்ஙனம்  ஆற்றலுடையேன் ?  நிகும்பிலையில்  வேள்வியை  முடித்துப் பின்னரும்  போர்  கருதியன்றே செல்ல  விரும்புகிறாய் .அந்தோ ! அளவில்லாத  அம்புகளின்  வீழ்ச்சியாற்  புண் பற்றிய  நினது  இவ்வுடலைக்  காண்டற்கு  என்நெஞ்சந்  துணிந்திலது . நிற்க , இவ்விடயத்திற்  சிறிது  கூறுதற்கு  என்னுள்ளந்  துணிகின்றது .மனித இயல்பைக் கடந்த  தோள் வலிமிக்க  வீரனாகிய  இராமன்  எங்கே ? நினது  தந்தை  எங்கே?  கடவுட் கூறனாகிய  இராமனைப்  போர்முனையில்  வெல்லுதற்கு  மனித  இயல்பினால் எங்ஙனம்  கூடும் ?  நீ  இவ்வெல்லாவற்றையும்  உனர்ந்தும்  போர்  கருதிப்  புறப்படமுயலல்  என்னை?  இனி இப்பயனற்ற  செயல்  அமைக . இம்முயற்சியினின்றும்  ஒழிவெய்துக . என்  மாமன்  செல்கின்ற  இல்வழி  நல்லோரால்  விரும்பத்தக்கதன்று .  அவனோ  கற்பினுக்கணியாகிய  சீதாபிராட்டியைக்  கொணர்ந்து  எரிகின்ற  நெருப்பைப்  புதர்நடுவண்  இட்டாங்கு  நகரிக்கண்வைத்தான் . தலைவர் பிரிந்த  துன்பத்தினையுடைய  அச்  சீதையின்  சோகாக்கினியானது  காட்டுத் தீப்போல  எல்லாவற்றையும்  விழுங்குகின்றது ; இங்ஙனம்  போர்  முகத்தே  மகாவீரர்களாகிய  நினது  சிறியதந்தை  முதலியோர்களையுஞ்  சரிதத்தின்  எஞ்சியவர்களாகச்செய்தது . இத்தீயே  எல்லாப்படைகளையுமுடைய  நினது தந்தையையும்  அழித்தல் உறுதி .  ஆதலின்,  கேட்டினை  விளைக்கின்ற  இப்பயனற்ற  செயலினின்றும்  ஒழிக ;  ஒழிக . அதனால்  ஒருசிறிதுங்  குற்றமின்று . தான்செய்ததீவினைப்பயனைத்  தானே  அநுபவித்தல்  என்பது  நிச்சயம் . நினது  சிறியதந்தையாகிய  விபீடணனைப்  பார்க்க .  அறவோனாகிய  அவ் விபீடணன்  தன்முன்னோனைத்  தீநெறிக்கண்ணின்றும்  மீட்டற்கு  ஆற்றலிலனாய்  இராமனையே  புகலிடமாக  அடைந்தான் . அவனே  பெறலரும்  பேறுடையான்”  என்று  இன்னோரன்ன  அழகியசொற்றொகுதிக ளால்  வணக்கமும்  ,  நலமும்,  பிரியமும்பொருந்த  உபதேசித்தாள் .

                 இந்திரசித்து ,  தன்காதலியின்  உபதேசம்  அழகியதெனினும்  அதனைப்  பொருட்படுத்தாமற்  சிறிதுசினமுடையனாய்ச்  “சிறியவளே ! இது , நினது  இளமைக்கு  ஏற்றதே ;  அரசியின்  முறைமைகளைச்  சூழ்ந்து  தெரியாமலும்  சமயத்திற்செயத்தக்கதின்னதென்று  உணராமலும்  நின்னால்  மிக்கசதுரப்பாட்டுடன்  தொடங்கப்பட்டது . பெரும்போர்  நேர்ந்திருக்கின்றது . பகைவர்களாற்  பெரிய வீரர்களும்  மாண்டனர் . யான்  சுதந்திரமில்லாதவன் .  தந்தையின்  கட்டளை பெரிதன்றே.  தெய்வசம்பந்தமான  ஊழ்  நலமெனினுந்  தீதெனினுஞ் செய்க . தந்தை சொல்மிக்க  மந்திரமில்லையன்றே .அதன்போருட்டன்றே  நமது  பகைவனாகிய  இராமன்  “அரசுதஞ்சமேயென்று  அருங்கானடைந்தான் ?  விரித்தலிற்  பயனென்?  காலங்கடக்கின்றது . இனிக்  கணப்பொழுதேனும்  ஈண்டிருத்தற்கு  என்னாற்  கூடாது . போகின்றேன் .  தெய்வம்  அருள்செய்யின்  மீள்வேன் .”    என்று  சொல்லிக்கொண்டே  நீர் நிறைந்த  கண்களையுடைய  சுலோசனையைக்  கணப்பொழுதில்  விட்டுப்புறப்பட்டான் .   

               அவன்சென்றவுடன்,  சுலோசனை  தன்தலைவனுக்குவரற்பாலதாகிய  தீமையின்றிரளை  ஐயுற்று  உள்ளத்தா லொன்றைக்  கருதி  நெடிதாகவும்  வெப்பமாகவும் பெருமூச்செறிந்து  அசைவறு நிலையை  யண்மினாள் . அதன்பின்  சேடியர்கள்  தேற்ற  அரிதிற்றொளிவெய்தி  நீர்பொழிவிழிகளை யுடைய  முக  கமலத்தை  இடதுகையிற்றாங்கி  ஒன்றுமுரையாது  கீழ்நோக்கியமுகமுடையளா யிருந்தாள் .

                இங்ஙனந்  துன்புறுமயத்தில்  எருவை( கழுகு )  யிறகா   னணிசெய்யப் பட்டதும்  பொற்பிடியான்  ஒளிசெய்கின்றதும்    இருப்பினானாக்கப்பட்ட தும், வாயுவேகத்தால்  அச்சத்தை  விளைக்கும்  ஒலியினையுடையதும்  ,  பார்த்த  அளவினானே  மயக்கத்தைப்புரிவதூஉம் ,  உருவத்தொடுங்கூடிய  கூற்றுவன்  சினம்போன்றதூஉம்,  வாளின்றன்மையெய்தப்பெற்ற   கரும் பாம்புபோன்ற   தூஉம்  ஆகிய  பெரியவாளாயுதத்தோடுங்கூடிப்பொன்னானாய  தோளணி யாற்   கவின்று  செஞ்சந்தனச்சேற்றாலணிசெய்யப்பட்ட  ஒரு  கைத்துண்டு (துணிக்கப்பட்ட  கை)  , மரகதமணியுருவாகிய  ஒரு  தூணின்றோற்றத்தைச்  செய்வதாய் ஆழிப்படைபோற்  கழன்று  அச்  சுலோசனையுன் முன்னிலையில்  வீழ்ந்தது .  

                 “ஆ ! ஆ !  ஈதியாது”  என்று  துன்புறுமுள்ளத்தாராகிய  தோழிகளினது  கலகலவொளியால்  நன்குவிழித்த  கண்களையுடைய  அப்பெண்மணி , தனது  விழித்துணையால்  முன்னர்  வீழ்ந்துகிடக்குங்  கைத்துண்டினைப்பார்த்துச்  சிறிது  ஆலோசனையுடையளாய்ப்  பொற்கோடுகளான்  வரையப்பட்ட  தன்  நாயகனது  பெயரெழுத்துக்களை  அக்கொடிபோன்ற  வாளினிடத்து  எதிர்பாராது  நோக்கி  யப்பொழுதே  கூந்தல்  சரிந்து  நிலத்திற் பரவத்  திடீரென்று  வீழ்ந்தாள் .  

                    விரைவில்  நிலத்தினின்ரும்  எழுந்து  அக் கைத்துண்டினைத்  தனது  கைக்கொடிகளாற்   றழீஇப்  பெருகுகின்ற  கண்ணீர்த்துளிகள்  விண்மீனையொத்துநிலவும்  முலைகளையும்  , மிகவும்  நெட்டுயிர்த்தலையும்  உடைய  சுலோசனை ,  “ஆ ! கொல்லப்பட்டேன்  !  ஆ !  சுடப்பட்டேன் !  ஆ !  கவரப்பட்டேன்  ஆ !  வஞ்சிக்கப்பட்டேன்  !  ஆ !  எய்திய  இத்துன்பம்  என்னை?  நோய்கோட்பட்டேன்  !  பகலிடமில்லேன் !  துன்புறுகின்றேன்  !  ஆ !  முப்பெருப்புவியுனும்  ஒப்பிலா  அழக !  எவனாற் கொல்லப்பட்டாய் ?  ஆ !  சுலோசனையாகிய  உயிரை  யுடையாய் !  என்னைத்  தலைவனையிழந்த வளாகவும்  தையளாகவும்  விட்டு  எவ்வாறு  சென்றாய் ?  அம்ம !  உயிரைப்  பொறுத்தற்கு  ஆற்றலில்லேன் .  தலைவ !  இப்பொழுது  நின்னையில்லா  எனக்கு  இவ்வுலகம்  பாழ்ங்காடு ; பிறப்புப்  பயனற்றது ;  உடல்  உலர்ந்த  விறகின்  றன்மையது .  ஏ !  பகைவனாகிய  கூற்றுவனே  !  இப்பொழுதே  எனது  உயிரைக்  கொள்வாயாக . ஆ !  சுலோசனையின்  கண்களாகிய  சகோரப்புட்களுக்குரிய  திங்களஞ்செல்வ !  புலோமசை  கேள்வனை  விளையாட்டாக  வென்று  “இந்திரசித்து”  என்னும்  பெயரினை  எங்கணும்  நிறுவிய  பெருமையினையுடைய  நினது  அவ்வலி  யாண்டுச்  சென்றது?பிறரிடத்துக்  காண்டற்கரிய  நினது  நன்று  தீது  ஆராயும்  அறிவு  எவ்விடத்துப்போயது ? “கேட்டை  விளைக்கும்  இம்முயற்சியுனின்றும்  ஒழிக  ஒழிக “  என்று  பன்முறை  பகர்ந்தேனே  .  ஏழையாகிய  என்னை  விரும்பாது சென்ற  நீ  எவ்வாற்றானும்  இன்புறுகின்றாய்.  நீ  யாண்டுள்ளாயோ  ஆண்டே  என்னையுஞ்  சேர்க்க  .  காலத்தினது  மாறுபாட்டுத்  தன்மை  என்னே !  அகாலத்தில்  எய்திய  வெதுப்பினாலே  எனது  உள்ளுறையுயிர்  சூடுற்றதுபோலும் ! உடலுறுப்புக்கள்  வெந்தனபோலும்  !  பிராணவாயுக்கள்  வெளிச்சென்றன .போலும் !  ஆ !  என்செய்வேன்  !  இன்னுயிர்த்தலைவனைப்  பின்னரும்  எங்ஙனங்காண்பேன் ?  இந் நிகழ்ச்சியின் பின்னர் , வாழ்க்கையில்  எனக்கு  ஒரு பற்றுமின்று  . இப்பொழுதே  சேர்ந்தாரைக்  கொல்லியைச்  சேர்வேன் . இன்றேல் , இப் பயனற்ற  வுடலைக்  கரையிலா  ஆழியில்  எறிவேன்.  அதாஅன்று  ,  வெதும்பிய  உயிரினையுடைய  எனது  யாக்கையைக்  கோறற்  றொழிலையுடைய  விலங்கினங்களுக்குப்  புலவுணவாக்குவேன் .”  என்று  இன்னோரன்ன  பன்மொழிகூறிப்  புன்கணுற்றுப்  புலம்புகின்ற  சுலோசனை  அவ்வமயம்  எளிதான  இயக்கமின்  மயக்கத்தான்  மூடப்பட்டாள் . 

                பின்னர் , அணிமையிலுள்ள தோழிகளுள் ஒருத்தி  சுலோசனையைத்  தாக்கினாள் . மற்றொருத்தி  பொற்கலசத்தில்  நீர்  கொணர்ந்து  அவள்  செந்தாமரையனைய  திருமுகத்தையும்  , விழித்துணையையும்  கழீஇயினாள் வேறொருத்தி,  சுறுசுறுப்போடு  பனிநீரிற்றோய்ந்த  விசிறியினால்  மெல்லமெல்ல  வீசி  இளங்காற்றைப்  பரவச்செய்தாள் .வேறு  சில  அறிவு மிக்க  பெண்கள்  “தோழீ !  சுலோசனே  !  தெளிக .  தெளிக “  என்று  அடிக்கடி  தேற்றினார்கள் .

                  அறுக்கப்பட்டு  நிலத்தில் வீழ்ந்த  கற்பகவல்லிபொன்றவளும் ,  மேகத்தினின்று  பெருங்காற்றாற்  பிடுங்கி  வீழ்த்தப்பட்டு  நிலத்திற்கிடக்கின்ற  மின்னற்கொடிபோன்றவளும்  ,  சேற்றால்  நிரம்பிய  தாமரைத்தண்டுபோலப்  புழுதியினால்  நிரம்பிய  திருமேனியையுடையாளும்  நிலைபெயர்ந்த  தாமரைக்கொடி  போலத்  தலைவற்பிரிந்த  துன்பத்தாற்  கவலுகின்ற  உடலையுடையாளும்  ஆகிய  அம்மெல்லியலைப்  பார்த்தற்கு  ஆற்றாதவர்களான  தோழிமார்கள் ,   “ஆ !  எய்தின  இத்துன்பம்  என்னை ?  என்று  கதறிக்கொண்டு  நிலத்தில்  வீழ்ந்தார்கள் .  

                       இங்ஙனம்  ஒவ்வொருகணமும்  உட்புகுந்த  சோகாக்கினியாற்  சுடப்பட்ட  உள்ளத்தையுடைய  சேடியர்களது  மிகக்  கொதிக்கின்ற  கன்ணீர் வெள்ளத்தால்  நனைக்கப்பட்ட  சரீரத்தையுடைய  சுலோசனை  அரிதிற்போந்த  அறிவையடைந்து  அக்கணத்தே  இறத்தலையே  புகலிடமாக  நினைத்து  மிகவும்  புலம்பித்  தலைவற்கெய்திய  சொல்லொணாநிலையை  நினைத்து  “ஆ !  காமசுந்தர !  பாவியாகிய  இவள்  நின்னையின்றி  எங்ஙனம்  உயிரைத்தாங்குவாள் ?  ஏ !  இன்னுயிர்த்தலைவ  !  நின்னுயிர்  நீங்கியும்  என்னுயிர்  இக்கணத்தே  வெளிச்செல்லாதிருத்தல்  என்னை?  ஐய !  இப்பொழுது  அருள்செய்வாயாக .  நின் வாசத்தானத்தில்  என்னையுஞ்  சேர்க்க . ஆ !  தோழிகளே !  மரணத்தினும்  மிக்க  இத் துன்பத்தை யநுபவிக்கின்ற  யான் பிரியபதியின்றியும்   நாணில்லாதவளாக  எப்பயன் குறித்துச்  சீவிக்கின்றேன் ?  எவனுடைய  அன்புமிக்க  அழகிய  பன்மொழிகளால்  அளவளாவிக்  காலத்தைப்  போக்குவேன் . எனது   புன்கணையார்பாற்  றெரிவிப்பேன் ?  சந்திரிகை  சந்திரனையும்  ,  மின்னல் முகிலையுஞ்  சார்தல்போல் , எல்லாத்துன்பங்களும்  ஒழிதற்பொருட்டு  யான்  எனது  உள்ளுறை  தலைவனைச்  சார்கின்றேன் . விறகுகளைக்கொணர்ந்து  சிதையை  அடுக்குங்கள் .  நெருப்பை  எழுப்புமிங்கள் .  என்னை  இறுதியான  தழுவுதலாற்  பெருமைப் படுத்துமின்கள் “  என்று  சகிகளோடுங்கூடிப்  புலம்பிப்  பின்னரும்  இயக்கமின்மயக்கம்  எய்தினாள் . அதன்பின்  முகூர்த்தப்போழ்திற்  றெளிவை  யடைந்து  சிறிதுபொழுது  “ ஆ !  நாத ! “  என்று  மார்பில்  அடித்துக்கொண்டு  புலம்பினாள் .  சிறிது பொழுது  நெடிதுங்  கொடியதுமான  பெருமூச்செறிந்தாள் .  சிறிது  போழ்து  “நின்னையே  புகலிடமாகவுடைய  இவளைத்  திடீரென்று  ஒழித்து  நினைவுமாத்திரையான  கதியை  யடைந்தனையே .  இவ்வொழுக்கந்  தக்கதன்று “  என்று  வாய்திறந்து  கதறினாள் .  

                      இத்தகைய   துன்பநிலையை  அநுபவிக்கின்ற  அழகிய  கண்களையுடைய  அச்சுலோசனையைத்  தோழி  ஒருத்தி , வணக்கத்துடன்  துன்பமும்  அநுதாபமும்  தோன்ற , “ஏடி !  சுலோசனே  !  ஊழ்வலியால்  நேர்ந்த  இந் நிகழ்ச்சியில்  யாது செயற்பாலது ?  வாடுதலில்லாத  சண்பகமலர்போன்ற  அழகிய  உடலில்  மேகமின்றியே  இடியைவீழ்த்திய  பாதகமிக்க  கொடிய  ஊழ்  நன்று  செய்திலது . ஊழ்வலியை  விலக்குதற்கு  உலகத்தில்  எவன்  வலியுள்ளான் ?  முற்பிறப்பிற்  செய்யப்பட்டதும் , கழுவாயின்றி ( பரிகாரம் )  இன்றியமையாது  நுகரத்தக்கதுமாகிய  கொடிய  தீவினையின்பயனே  இஃதென்று  நினைக்கின்றேன் . பேறிலளாகிய ( பேறு  — நல்லூழ்ப்பயன் )  நீ  மீண்டும்  நின்  அன்புக்குரிய  நாயகனைக்  காண்டற்கு  வலியற்றவளா கின்றாய் .  தலைவற்பிரிவானுண்டாய  துன்பம்  உண்மையிற்  பொறுக்கத் தகாததே ; ஆனால் , இவ் விஞ்ஞான   உலகம்   கழித்ததற்கு  இரங்குந்தன்மைத்து . அறிவறிந்த  நின்முன்னிலையிற்  பேதையாகிய  யான்  இங்ஙனங்  கூறுதற்கு  நாணம்  எய்துகின்றேன் . ஆயினும்  பன்னாட்  பழக்கத்தாற்  காரணமின்றியுண்டாய  அன்புரிமையே  என்னை  இங்ஙனஞ்  சொல்விக்கின்றது . இக்கவற்சி  நீங்குக .  தேறுதல்  எய்துவாயாக”  என்று  தேற்றினாள் .   

                 பின்னர்ச்  சுலோசனை  உடனிறத்தற்குத்  துணிந்து  ஈம  விறகு  அடுக்குதற்குத்  தோழிமார்களை அடுத்தடுத்து  வற்புறுத்தினாள் . தோழிமார் களெல்லோருந்  துன்பத்தால்  வாய்  வாளாதிருந்துழி  ,  ஒருத்தி  சுலோசனையின்  பக்கல்  மெல்லமெல்ல  எய்தி  வணக்கத்துடன் , “ஏழாய் !  முன்  நிகழ்ந்தவற்றை  யறியாமலும் ,  இறந்த  தலைவனது  முகத்தைக்  காணாமலும் ,  காதலர்க்குநேர்ந்ததை  உண்மையாகத் துணியாமலும் ,  இக்கைத்துண்டு  யாருடையதென்று  ஆராயமலும்  ,  யாரான்  எதற்காக  ஈண்டு  எரியப்பட்டதென்று  எண்ணாமலும்  இடுக்கனான்  அலந்த  நெஞ்சத்தினையுடைய  நீ , உடனிறத்தலையே  துணிவுற்று  ஆராயாது செய்கின்ற   நின்  எண்ணத்தைத்  தடுக்கின்றாயில்லை”  என்று  இங்ஙனம்  அறிவுறுத்தினாள் . அம்மொழி கேட்ட மாது “நன்குபதேசிக்கப்பட்டது”  என்று  பெருமைப்படுத்தி  ,  “நிகும்பிலையில்  வேள்வி  முடித்தற்கன்றே இங்கிருந்து  என்  நாதன்  புறப்பட்டான் .  ஏழையாகிய  யான் , அவன்செயலை  எவ்வாறு  உணர்வேன் ?  யாரை  வினவுவேன்  ?  என் தலைவனது  செய்தியை  அறிவிப்பவர்  யார் ?  யாண்டுச் செல்வேன் ? பேறிலளாகிய  யான்  காதலனது  செய்திகளை  எம்முறையான்  எங்ஙனம்  நுணுகி ஆராய்ந்து  எவ்வழியான்  உணர்வேன் .?  என்று  துன்பத்துடன்  கூறிச்  சிதறுகின்ற  தூய  முத்துக்  கூட்டங்களைப்போற்  கண்ணீர்த்திவலைகளை  யுதிர்த்துத்  துன்பமிகுதியாற்  பொறி  கலங்கித்  திங்கண்மண்டிலங்  கூதிர்காலத்து முகிலான்  மறைக்கப்பட்டது போற்  பாம்புரியன்ன  மெல்லிய  வெள்ளிய  ஆடையான் முகத்தை  மறைத்து  “தேறுதலடைவாயாக “  என்று  அணிமையுலுள்ள  தோழிகளால் அடுத்தடுத்துக்  கையினாற்  றைவரப்பட்டு, ஒவ்வொருகணமு  மெலிவெய்தி  ,  அவ்வமயஞ்  செய்யத்தக்கதின்னதென்று  அறியாளாய்ச்  சிறிது  நேரம்  பாழடைந்தமனத்தினளாயினாள் .   

                  பின்னர் , மிகச் சிரமமுற்று  மனத்தையடக்கித்  தலைவனது  செய்தியையறியும்  விருப்பமுடையளாய்த்   “தீயூழின் கேடுபயக்குஞ்செயல்  அந்தோ !  மிகக்கொடியது  .  நாயகனது  இக்  கைத்துண்டினை  நோக்கியே  அன்னான்செய்திகள்  எல்லாவற்றையும்  பற்றிக்  கேட்கிறேன் . “  என்று  துணிவுற்று , வாட்படையேந்திய  அக்கையினை  மும்முறை  வலம் வந்து  நெற்றி  நிலத்திற்றோயப்  பணிந்து  ,தலையிற்  கூப்பியகையுடன்  “எல்லாப்  பகைவர்களையுங்  கொல்லுதலாற்  றன்வலிமையை  வெளிப்படுத்துகின் றதும் , வாட்படையால்  அணிசெய்யப்பட்டதும் , விண்ணவர்தலைவனைத்  தன்புகழ்  பாடுபவனாகப்  பெற்றதுமாகிய  என் நாயகனதுகைத்துண்டிற்கு  நலமுண்டாக.ஒவ்வொருகணமும்  வளர்கின்ற  நாயகவியோகமாகிய  அக்கினியின்  எரிகொழுந்தால் எரிக்கப்படுகின்ற  உறுப்புக்களையுடை யவளும், மிகவுங்கொடிய  தீயூழாற்  பன்னாட்பழகிய  அன்பின்சுவைக்கு  நிலயமாகிய  காதலனது  உடனுறைவினின்றும்  எதிர்பாராது வேறுபடுக்கப்பட்டவளும், இறப்பினும்  மிக்க  துன்பத்தைத் தருந்தலைவனது  பிரிவை  யாற்றாதவளும், செவியைவெதுப்புகின்ற  கணவனது  மரண சரிதத்தைக் கேட்ட  அளவிலேயே  உடனிறப்பதிற்  றுணிவுற்றவளும் , தாமரை மலர் போன்ற  அவன்முகத்தைக்  காணாமல்  உடனிறப்பநினைப்பது தகுதியின்   றெனவெண்ணுகின்றவளும் , அவன்  முகத்தைக்  காண்டற்குத்  தக்க நெறி   யின்னதென்றறியாதவளும்  , வேறு  புகலிடமில்லாதவளும் , நின்னையே  புகலாக  அடைந்தவளுமாகிய  இத்தகைய  இவள்  கண்ணீரொழுகக்  கைகூப்பி  வணங்கிப்  பெருமை தோன்ற  நின்னை இரக்கின்றாள் . அருள்செய்து  சொல்வாயாக  .  ஓ !  என் தலைவனது  வலக்கையே  !  உலகத்திற்  சிறந்த வீரனும்  அடுத்தடுத்துநேர்ந்த  மிக அஞ்சத்தக்க போர்முனையில்  விண்ணவர்களை  மிகக்கூறிய  பகழிகளாற்  சிதறாடித்தவனுமாகிய  என்காதலன்  எவனாற்கொல்லப்பட்டான் ?  பேறிலனா கிய யான்  அவன் முகத்தைக் காண்டற்கு  யாதுசெய்தல் வேண்டும்?  எவ்விடத்து  அடைதல்வேண்டும் ? என்று வணக்கத்துடன்  தெரிவித்தாள் .

                ஒவ்வொருகணமும்  மறுமொழியை  யெதிர்பார்த்தும்  ஒன்றுங் கேட்கப்படாமையால்  இருமடங்கதிகமான துன்பமெய்தி  “ஏ ! வலக்கையே  ! எவ்வாற்றானுங்  கொடியையாகின்றாய் !  கண்ணோட்டமேற்கொண்டிலை . என்றலைவனதுகையென்பதும் , பேறிலளாகிய  என்னிடத்து  எனது    பிராணபதிக்கு  இயற்கையிற்றோன்றிய  அன்புண்டென்பதும் உண்மையா யின்  எனக்கு மறுமொழி  தருவாயாக “  எனக்  கூறினாள் .

                அக்கைத்துண்டு , அமங்கலமான  சொல்லை  அவள்  கேட்பதற்கு  பிரியமில்லாததுபோலப்  பின்னரும்  மோனமுற்றிருக்குங்கால்  ஆற்றொணாத் துன்பமும்  சினமுமேற்கொண்டு , சிறிது  கண்சிவந்து , தளிர்போன்ற  அதரங்கள் துடிக்க , எல்லா  உறுப்புக்களையும்பற்றிய  வெதுப்பத்தால்  உடல்நடுங்கி , மீண்டும்  எழுந்து , தலைவனை நெஞ்சால்  தியானித்து , “என்னாற் பன்முறை  வேண்டப்பெற்றும்  இக் கைத்துண்டு  எனக்கு  மறுமொழி  தந்திலது .  ஆ !  காலத்தின் மாறுபாட்டுத்தன்மை யென்னே ! நிற்க; மீண்டும்  வஞ்சினத்துடன்  கேட்கின்றேன் .  ஏ !  கைத்துண்டே !  கைப்பிடித்தவன்றுதொட்டு  இன்றுவரை  இன்பத்திலுந் துன்பத்திலும்  எனது  பிராணகாந்தனையன்றி  வேறொன்றையுங்  கருதிலேன்  என்பதூஉம்,  ஒருபொழுதும் எனது  கணவனையன்றி  வேறொருவனை  நெஞ்சத்தாலும் நினைந்திலேன் என்பதூஉம்  உண்மையாயின்  எனக்கு  மறுமொழி  தருவாயாக “  எனக்கூறி  ஒழிவெய்தினாள் .

                  பின்னர் , நொடிப்பொழுதில் , மானமிக்கோரிற்  சிறந்த  இந்திரசித்துவின்  கைத்துண்டு , கற்பரசிகளுட்சிறந்த சுலோசனையினது  மிகக்கடியதும்  முன்கேட்கப்படாததும்  ,  கேட்டவளவினானே  சல்லியபாணம் போல   நெஞ்சத்தை  வருத்திப்பிளப்பதூஉமாகிய  அச்சொல்லைக் கேட்டு  , அதிவிரைவில்  நிலத்தினின்றுமெழுந்து , மின்னர்குழுவாற்  செய்யப்பட்டது போல  ஒளிசெய்கின்ற  அவ்வாட்படையைக்  கீழ்முகமாகத்  திருப்பி  மிகக்கூறிய  அதன்  நுனியால்  “ஏடி !  சுலோசனே !  முதலில்  நின்கண்களைத்  துடைத்துக்கொள்க .  என்செய்திகளைப்  படிப்பாயாக.  இதோ  எழுதுகின்றேன்  அன்புரையாடுங் காதலீ !  அறிவுமிக்க  நின்னால்  “இக் கேட்டை விளைக்குஞ்  செயலினின்றும்  ஒழிகஒழிக “  என்று உரைக்கப்பட்டதன்றோ!  நலத்தை  விரும்புகின்ற  நின் உபதேசங்களைச்  சேய்மையின்  ஒதுக்கிப்  போர்த்தொழிலையே  மேற்கொண்டு  நிகும்பிலையில்  ஆபிசாரவிதியினாற்  செய்யப்பட்ட வேள்வித்தீயினின்றும்  விடுபடை  கைப்படை  முதலிய  ஆயுதக் கூட்டங்களானிறைந்து  மாயையான் ஆக்கப்பட்ட  தேரைப்பெற்றுப்  போர்செய்ய  விரும்பிய யான்  அவ்விடத்தையடைந்து  நெருப்பை  விரைவிற்  கிளர்வித்துப்  பொரி , எள்ளு , சமித்து , தருப்பை ,  நெய் முதலியவைகளால்  ஓமஞ்செய்து  இறுதியிற்  பெரிய  ஆட்டின் கொழுப்பினாற்  பூரணாகுதியைக் கொடுத்தற்கு முயன்று கொண்டிருக்குமிடையில் , எனது  சிறியதந்தை யிடமாக  எல்லா நிகழ்ச்சிகளையுமுணர்ந்த  இராமனால் ஏவப்பட்டு என்னைக் கொல்லவந்த இலக்குமணன்  அங்கு  விரைந்து  போந்து  மிகக்கடிய  கன்மழையினு மிகுதியாகப்  பாம்புகளின்  நஞ்சாகிய  தீயைக் கக்குகின்ற  அம்புமாரியை  என்பாற்  பொழிந்தான் .

                    அவ்வமயத்திலும் , எங்ஙனமாயினும் வேள்வியை  முடித்து  இவனோடு  போர்செய்தல் வேண்டுமென்னும்  உறுதியையும்  , வேள்விவினையிலேயே  பற்றிய  மனத்தினையுமுடைய  யான்  பெருகுகின்ற  நெய்யொழுக்கத்துடன்கூடிய   பெரிய  ஆட்டின்  கொழுப்பைக்  கையினால்  உயரவெடுத்தேன் .  இவ் வாபிசார  வேள்வி  நறைவேறுமாயின்  என்னை  என்றுங்  கொல்லமுடியாதன்பதை  உணர்ந்த  அவ்விலக்குமணன்  விரைவில்வந்து  மிக்கவிரைவுடன்  தூக்கியகாலுதையால்  அவ்வவியை  என்  கைத்தலத்தினின்றுஞ்   சேய்மைக்கண்ணெறிந்தான். அப்பொழுதே  கிளர்ந் தெழும்  சினத்தினையுடைய யான் மீண்டும்  வேள்வியின்முயலல்  அறியாமையின்  பாலதாம் என்று  துணிவுற்று  “என்  சினமாகிய  நெருப்பில்  நின்னை ஓமஞ்செய்வே  “ னென்று  அவனோடு  போர்புரியத்தொடங்கினேன் .  அப்போர்த்தொடக்கத்திற்  கிளர்கின்ற  கோபத்தையுடைய  எம்மிருவர்க்கும்   அம்புகளாலும் , தண்டங்களாலும் , கைகலத்தலாலும்  நெடுநேரம்  யுத்தம்  நடைபெற்றது .  மிக்க  மாயாவியும்  மூவுலகத்தினுஞ்  சிறந்த  வீரனுமாகிய  என்னைக்  கொல்லுதற்கு  வலியற்றவனாகிய  இலக்குமணன்  ஊழித்தீயினையொத்த  ஒரம்பை  வில்லிற்பூட்டி  “ஏ !  பகழியே !தசரத குமாரனாகிய  இராமன்  ,  அறவோனும் , உண்மையாளனும்,  ஆண்மையில்  நிகரற்றவனும்  ஆவன்  என்பது  உண்மையாயின்  இவ்  விராவணகுமாரனைக்  கொல்வாயாக . என்று  வஞ்சினங்  கூறி  என்பால்  விடுத்தான் . வில்லினின்றும்  வெளிப்பட்ட  அவ்விராமபாணம்  அச்சத்தைவிளைக்கும்  ஒலியினையுடைய தாய்ப்    பாம்பின்  நெஞ்சையொத்த  தீத்திரளைக்  கக்கிக்கொண்டு  இடிவீழ்ந்தால்போலென்பால்  வீழ்ந்து , என் தலயைத்  துணித்து , அதனை  இராமபிரானது  திருவடித்தாமரைகளிலும் ,  இவ்வலக்கையைத்  துணித்து  நின்பக்கலிலும்  வீழ்த்தியது  . அவ்வம்பாற்றுணிக்கப்பட்ட  என்றலை  ,அரக்கர்குலத்துத்  தூமகேதுவும் , கதிரவன் குலத்துத்  தலைமணியுமாகிய  இராமபிரானது  திருவடித்தாமரைகளை  யடுத்தலால்  வருமின்பத்தை  நுகர்ந்து  அளவிலாப்  பேரின்பத்தை  யடைகின்றது . நங்காய் !  நீயும்  விரைந்து  வருவாயாக. இராமபிரானது  திருவடிகளை  யெய்தலால்வரும்  இன்பத்தை நுகர்வாயாக . பிறப்பைப்  பயன்படுத்துக .மணம்  நிகழ்ந்த ஞான்று  அன்புடன்பற்றிய  எனது  இவ்வலக்கையை  யெடுத்துக்கொண்டு  விரைந்து வருவாயாக “  என  நிலத்தில்வரைந்து  மீண்டுஞ்  சுலொசனையின் முன்னிலையிற்  பூமியில்  வீழ்ந்தது . அங்ஙனமெழுதப்பட்ட  தன் றலைவனது  செய்தியை  அன்பு பெருகப்  படித்துக்  குப்பாயம்  போர்த்ததுபோல்  மயிர்ப் புளகமுற்றவுடலையும் ,  இடைவிடாது  அழுதலாற்  பருத்த  கண்களை யுமுடைய  அச்சுலோசனை  ,  பாழடைந்தாள்போலும் , மயக்கமுற்றாள் போலும் , ஓவியத்துற்றாள்போலும் ,  அசைவறுநிலையை  யண்மினாள் போலும்  , நெடுநேரம்  எல்லாப் பொறிகளின்  தொழில்களும்  ஒடுங்கப்பெற்று  இருந்தாள் .அவள் தோழிமார்களெல்லாம் மிக்க வியப்பைத்  தருகின்றதும் முன்னிகழாததுமாய  இந் நிகழ்ச்சியைப்  பார்த்துக்  கற்பரசியாகிய  அச்சுலோசனையினது  பிறரிடத்துக்  காண்டற்கரிய  கற்பின்  மேம்பாட்டைப்  பாராட்டினார்கள் .  

                     பின்னர் , இவள்  முகூர்த்தப்பொழுதிற்  கண்களை  விழித்து  “இனிக்  காலந்தாழ்த்தல்  கூடாது ; கட்டளையிட்டவாறு  நடத்தல்வேண்டும் ;  இப்பொழுது என்  மாமன்பக்கலெய்தி  இறந்த  என் கணவனது  சிரசைக்  கொணரும்படி வேண்டிக்கொள்வேன் .ஆதலிற் சிவிகையைக் கொணருங்கள். இக்கைத்துண்டினை  யேற்றுங்கள்  .  என் மாமன்  யாண்டுள்ளானோ   ஆண்டு  விரைந்துசெல்வோமாக . “  என்று  சொல்லிக்கொண்டு  பல்லக்குக்  கொணர் தற்பொருட்டுத்  தோழிகளுக்குக்  கட்டளையிட்டாள் .

                அக்கணத்திலே  கொண்டுவரப்பட்ட  இரத்தினசிவிகையில்  அக்கைத்துண்டினைச்  சிறப்புடனேற்றி  அப்பல்லக்கை  நான்கு வேலைக்காரி களாற்  றூக்குவித்துத்  தோழிகள்  சூழ  அடிவரையும் குப்பாயத்தான் (சட்டை) மறைக்கப்பட்டவுடலையும் , மூச்சுக்காற்றின்  வெம்மையால்  நிறம்  வேறுபட்ட  அதரங்களையும் , தடையின்றிப்  பெருகுகின்ற  கண்ணீர்வெள்ளத்தானனைக் கப்பட்ட  மேலாடையையும்  ,  யமுனையாற்றுவெள்ளம்  போற்  கறுத்துத்  தோட்பக்கங்களிற்  றுவண்டு  சிதறுண்டுகிடக்கின்ற  கூந்தலையும் , பன்முறை  மார்பின்கண்   அடித்துக் கொள்ளுதலாற்   றளிர்போற்  சிவந்த  கைகளையும் , நெல்லிக்கனிபோற்  பருத்த  முத்துக்களானாய  மாலையாகிய  அணிகலனையுமுடையவளும் , “ஆ !நாத !  “   என்று பன்முறை  புலம்பி , முககமலத்தைக்  கைத்தலத்தான்  மறைத்து , ஒருத்தி  தாமரை யிலையில்  நீர்  தாங்கிவர ,  ஒருத்தி  ஈரமுள்ள  வாழையிலையானாகிய  விசிரியைத்  தாங்கிவர , ஒருத்தி  மேலே  விழுகின்ற  கடுங்கதிர்க்கிரணத்தைத்  தடுக்கவிரும்பித்  தூக்கப்பட்டதும் , அத் துன்பநிலைக்குரியதுமாகிய  கறுப்புக்குடையைத்  தாங்கிவர , வேறுசிலர்  சோகத்தால் வேறுபட்டு  வாய்வாளாது  நெருக்கமின்றிச்  சூழ்ந்துவர வரம்  பிகந்த  தனது துன்பத்தால்  எல்லோருடைய  மனத்தயும்  வருத்துகின்றவளும் , இரக்கத்திற்கு  அதிட்டானதேவதை போற்  கட்புலனுக்குத்  தோன்றுகின்றவளும்  ,  கற்புருக்கொண்டாற்போல  நாயகற்  பிரிவானேர்ந்த  துன்பத்தாற்  கலக்க முறுகின்றவளும்  ,  ஒவ்வொரு கணத்திலும்   மூங்கைபோலவும்  அறிவிலாள்  போலவும் , மயக்கமுற்றாள் போலவும் , பேய்கோட்பட்டாள் போலவும் , பாழடைந்த மனத்தினள் போலவும், கவலைக்கடலுண்  மூழ்கினாள் போலவும்  தடுமாறுகின்றவளும் ,  யாவனாயினும்  ஒருவன்  தன்றலைவனது  சரிதத்தைத்  தெரிவிப்பான் என்று  புதிய  கருங்குவளைமலர்போல்  அழகிய  அகன்ற  விழிகளை  நாற்புறமும்  பரப்புகின்றவளும்  , “இன்னும்  எத்துணைத்  தூரத்தில்  என்  மாமனது  அரசிருக்கை மண்டபம்  உள்ளது “  என்று  ஒவ்வொரு கணத்திலும்  தோழிகளை  நோக்கி  வினவுகின்றவளும் , சிறிதுபொழுது  இரக்கத்துடன்  கதறுகின்றவளும் , சிறிதுபொழுது நெட்டுயிர்ப்பெறி கின்றவளும்  ஆகிய  சுலோசனை  தோழிகளான்  மிக்கச்சிரமத்துடன்  தாங்கப்பட்டு  இராக்கதசக்கிரவர்த்தியாகிய  இலங்கைநாயகனது  அத்தாணி  மண்டபத்தின்  பக்கலை  யடைந்தாள் .  

                ஆண்டுள்ள  ஒளிர்கின்ற  பொன்னாலியற்றப்பட்ட   அத்தாணிமண்ட பத்தின்  நடுவண்  நவமணிகள்  அழுத்திய  அரியணையில்  வீற்றிருக்கும்  இராவணனை  ,  மிக அணிமைக்கண்ணுள்ள  ஓர்  இருக்கையில்  வீற்றிருக் கின்ற  பதிவிரதாசிரோமணியாகிய  மந்தோதரி , இயற்கை  வனப்பு  வாய்ந்து  வணக்கத்துடன்  கூடிய  பற்பல  உபதேசமொழிகளாற்   றடுத்தும்  அவன்  சானகியின்பால்வைத்த  பற்றுள்ளமுடையனாய், “ஏடி !  அறிவிழந்த  மந்தோதரி  நீ  இங்ஙனங்கூறுதலென்னை? உயிர்விடினும்  ஒருபொழுதும்  சானகியை  விடேன் . வீரர்களுட்சிறந்த  நம் புதல்வன்  நிகும்பிலையில்  விதிப்படி  செய்யப்பட்ட  வேள்வித் தீ யினின்றும்  எய்திய  தெய்வத்தன்மை  வாய்ந்த  தேரையுடையோனாய்ப்  போர்க்களத்தில்  இராமலக்குமணர்களை  நிச்சயமாக  கொல்லுவான் .பின்னர்  வேறு  புகலில்லாது  இறத்தற்கு  அஞ்சுகின்ற  அப்பெண்மணியாகிய   சானகி , தானே  போந்து  என்னை  யின்புறுத்துவாள் . என்  அவாவையும்  நிறைவேற்றுவாள் “  என்று  கூறினான் .  

                   செவியை  வெதுப்புகின்ற  அம்மொழியைக்கேட்ட  மந்தோதரி  , “நாத !  சிவபிரானை  மகிழ்வுறுத்திய  தோள்வலியினையுடைய  நினக்கு  இஃதறமன்று  .  சனகன்புதல்வி , கற்புமிக்க  நங்கையருள்  தலைமணியன்றே!   கற்புக்  காட்டுத்தீபோன்றதன்றே !  கற்பரசிகளின்  சரிதம்  மிக்க  வியப்பினையும்  சிறப்பினையும்  உடையதன்றே ! நூற்றுக்கணக்கான  வீரர்கள்  போர்க்களத்தில்  இறந்ததை  நோக்குவாயாக . தசரதன்  புதல்வர்கள்  மக்கட்டன்மையினர்களாகவும் , சனககுலத்தை  மகிழ்விக்கும்  சீதை  சாமானியமான  ஒரு பெண்ணாகவும்  இருப்பார்களாயின் , இவையெல்லாம்  எங்ஙனம்  நிகழும்? ஆதலின்  உலகத்திற்கு  இன்பம்  பயக்கும்  இராமனை  எல்லாவுயிர்களுக்கும்  இதஞ்செய்யும்  விருப்பத்தால்  நிலத்தில்  அவதரித்த  திருமாளாகவும் , சானகியைப்  பூவுலகத்திற்குத்  தாயாகிய  பாற்கடற்பிறந்த  இலக்குமியாகவும்  அறிவாயாக . உருவமே  மனிதவியல்பைக்  கடந்ததென்று  அறிவிக்கும்  சீதையை  இராமபிரானிடம்  வணக்கத்துடன்  சேர்ப்பிப்பாயாக .  தனது  கற்பினானாகிய  புகழினாற்  பத்துத்திக்குக்களையும்  வெள்ளியவாகச்  செய்த  விதேககுலத்துக்கு  மங்கல விளக்காகிய  சீதையின்பால்  இவ்வாறு  ஐயுறுதற்கு  நின்மனம்  முயல்கின்றதென்னை ?  இத்தகைய  நின்னறிவு  நலமுடையதன்று . ஒரு பொழுதும்  இன்பந்தருவதுமன்று .  நலன்றருஞ்செய லைத்  தொடங்குகின்ற  ஆடவன்  எச்செயல்களினும்  நேரத்தக்க  நன்று  தீதுகளை  நுனித்துணர்கின்றானன்றே !  இந் நிகழ்ச்சியில்  ஈது  எடுத்துக்காட்டாகும் . மிக்க  வன்மை  வாய்ந்த  எத்தனையோ  வீரர்கள் போர்முகத்தின்  மாண்டனர் . ஆற்றொணாத்  திண்மையினையுடைய  நினது  உடன்பிறந்தானாகிய  கும்பகன்னன் , நால்வகைப் படைகளுடன்  சென்று தக்கவாறு போர்புரிந்தும்  ,விலங்கினங்களைத்  துணையாகப்பெற்ற  இராமனாற்  போர்க்களத்தில்  இறந்தான் . குமாரனாகிய  மேகநாதன்  முதலில்  மிக்க மானக்கேட்டை யடைந்து , சானகியை  விடுதற்பொருட்டு  நின்னைப்  பல்லாற்றானும்  வேண்டியும் ,நீ மறுத்துரைத்த  கடுஞ்சொற்களை  யாற்றதவனாய் ,உயிரையுந்  துரும்பாகக்  கருதிப்போர்செதற்பொருட்டு  மீண்டும்  ஓடினான் . மீண்டும்  அவனை வாழ்நாளுடையனாகக்  காண்பேனோ?காண்கிலேனோ ? அறியேன் . இன்னுந் தீ நெறிக்கட்செல்லும்  அறிவைத்  திருப்புதற்கு  ஆற்றலில்லாயாயின்  நம்குலம்  வேறோடு  கேடுறுமென்பதுறுதியே . ஆதலின் , இக்கேட்டை  விளைக்குஞ்  செலவினின்றும்  நீக்குவாயாக.  மிக்க  எழில்வாய்ந்த  இவ்விராச்சியம்  விரிவு டையது ;  நிரம்பிய  இச்செல்வமும்  பிறர்க்கு  அமையாதது .;  வணக்கமிக்க  ஏவலாளர்  பலருளர் ; ஆணயும்  விட்புலவேந்தன்  முடிமணியில்  விளங்குவது ; புகழ் எல்லாத்  திசைகளிலும்  நின்று  நிலவுகின்றது ;  வரலாறு  மக்களனை வரையும் வியப்புறச்செய்வது . அனைத்தையும்  ஓரமயத்திலேயே  பயனற்றன வாகச்செய்யற்க . விரைந்து  சானகியைச்  சமர்பணஞ் செய்வாயாக . தசரதன்  புதல்வர்களிடத்து  நட்பைக்  கொள்வாயாக .  நீண்டகாலம்  இவ்வரசுரிமைத்  திருவை  நுகர்வாயாக “    என்று  அன்புடன்  கூறினாள்.  

                    இராவணன்  தனது  செயல்  பொருத்தமற்றதென்றறிந்தும், காலமாறுபாட்டால் , அன்புடன்  கூறப்பட்டனவாயினும்  மந்தோதரியின்  மொழிகளை  வெறுத்துத்  தள்ளினான் .

                     ஆ ! ஆ ! நமது  அத்தாணிமண்டபத்தின் அணிமைக்கண்  எய்திய  சுலோசனையை மறந்து  மிகவுங்  காலங்கடந்து  விட்டோம் .  ஆண்டு  அக்கற்பரசி  எத்துணைக்  காலமிருப்பள் . ஆதலின்  அவள்  உள்ளே  புகுக.  பின்னர்  யாதுநேருமென்று  அறிவதற்கு  நாமும்  அவாவுடன்  முற்படுவோமாக .

                       சூர்கொண்ட  புதிய  மேகம்  போன்ற  கரியகுழற்கற்றையாலும் , கார்காலத்து  நிறைமதி போன்ற  அழகிய  முகத்தானும் , இளம்பிறைபோல்  எழின்மிக்க  நெற்றியானும் , விற்கொடியோவென்று  ஐயுறுத்தும்  புருவங்களானும்  ,  அசைகின்ற  கருங்குவளையிதழ்போல்  வனப்பு மிக்க  கண் களானும்  , சண்பகத்தினரும்புகொலோவென்னும்  ஐயத்தை  விளக்கும்  மூக்கானும் ,  கண்ணாடியொத்த  கதுப்புகளானும், பவளக்கொடிபோன்ற  அழகிய  அதரங்களானும் , சங்கத்தையொத்த  கழுத்தானும்  , பந்துபோற்றிரண்ட  பயோதரங்களானும் ,கொடிகளையொத்த  கைகளானும், மும்மடிப்பான்  அழகு செய்யும்  இடையானும் , புளினதலத்தையொத்த   நிதம்பத்தானும் ,வாழைத்தண்டு போலாகிய  தொடைகளானும் , தாமரப்பூ போன்ற  அடிகளானும் விளங்குகின்றவளும் , நடையால்  அன்னத்தையும் , இன்சொற்களாற்  குயிலையும் , தலைவனிடத்துள்ள  அன்பால்  அன்றிற் பேட்டையும் , யாவரையும்  தன் வயமீர்த்தலால் மந்திரசித்தியையும்   ஒத்துத்  திகழ்கின்றவளும் , அழகிய  உருவச்சிறப்பினாலும்  ,  ஒப்பற்ற  எழிலானும், இயற்கையின்  வாய்ந்த  நல்லொழுக்கத்தானும்  , மாட்சிமிக்க  கற்பினானும் –  பலவாறு  கூறுவதென்னை?  எல்லா வகையானும்  சானகியை  யொத்துவிளங்குகின்றவளுமாகிய  சுலோசனை , அத்தாணிமண்டபத்தின்  வாயிலை  மெல்ல எய்தி இராவணனது அவைக்களத்திற்   புகுந்தாள்  

                   இரங்குதற்குரிய  அச்சுலோசனையைப்  பார்த்த இராவணன்  மந்தோதரியை நொக்கி  “ஏடி !  மதியற்ற  மந்தோதரி ! நீ  சிறிதும்  அறிந்திலை. தக்கதின்ன  தகாதன  வின்னவென்று  ஆராய்ந்திலை . இந்திரசித்துவின்  வலிமையை  உண்மையிலுணர்ந்திலை  . பார்க்க !  பார்க்க !  வீரருட்சிறந்த  நம்புதல்வனாற்  போரில்  இராமலக்குமணர்கள்  இறந்தமை கேட்டு  , என்பால்  அருள்பெறற்பொருட்டுச்  சானகி  ஈண்டே  வருகின்றாள் . இப்பொழுதே  எனது  அவா  பயனுடையதாயிற்று  .  இப்பொழுதே  செயதக்க  செய்தவனைப்போல  என்னைப்  பார்க்கின்றேன் “  என்று  மொழிந்தான் . அங்ஙனம்  வருகின்ற  நங்கையை  நோக்கி  மந்தோதரியும் ,  சானகியென்று  சிறிது  மயங்கினாள் . அப்பொழுதும் ,  இராவணன்  அவளைச்  சானகியென்றே  துணிவுற்றான் . மந்தோதரி , அம்மாதை  நன்றாகப்பார்த்துத்  தன் மருகி  யென்றுணர்ந்து , “புலத்தியகுலத்தரசே !  இம்மங்கையை நீ நன்றாக  அறிந்திலை, இவள்  சானகியல்லள் .  நம் புதல்வன் மேகநாதனது  அன்புமிக்க  காதலியாகிய  நமது மருகி ; தன்னெழில்  நலத்தாற் சானகியையொப்பாள் . கதிரவன் கானார்களன்றே இராசபத்தினிகள் .  உவளகத்தில்வெயிருந்து(அந்தப்புரம்)  எங்ஙனம்  ஈண்டு  வருகின்றாள்?  நன்றாக  ஆராய்ந்து நோக்கின் , துன்பத்தால் வாடியமனத்தினள்போலக்  காணப்படுகின்றாள் .இந் நங்கை  உடலை யணிந்து  கொள்வதில்  விருப்பமற்றவளாகத்  தோன்றுகின்றாள். ஆதலானன்றே , நெற்றியிற்  றிலகங்  காணப்படவில்லை ; குழல்  பின்னப்பட்டிலது ; முககமலம்   வாட்டமுற்றிருக்கின்றது ;  கண்கள்  நீர்ப்பெருக்கான்  மலர்ச்சி  குன்றின .உடற்கொம்பு  துன்பத்தால் வாட்டமுற்றுள்ளது ; நேர்ந்த  இடையூறு  யாதோ  வறிகிலேன் . எக்காலத்தும்  இவள்  உவளகத்தினின்றும்  வெளிப்போந்திலள் .இத்தகைய  வேடத்துடன்  இங்கெய்திய  இவளைப்  பார்த்தமையான் , போர் குறித்துச்சென்ற  புதல்வனைப்பற்றி  அன்புவயப்பட்ட  என் நெஞ்சம்  அமங்கலத்தை  யையுறுகின்றது  .  ஆ !  என்செய்வல் !  இவ்வாட்டமிக்க  பெண்மணி  எத்தகைய  செய்தியைத்  தெரிவிப்பாளோ?  என்று  பகர்ந்தனள் .

               இங்ஙனஞ்  சொல்லியவுடனே  சுலோசனை  ஆண்டடைந்து  துன்பத்தான் மூடப்பட்ட  தன்னிலையை  அரிதிற்றகைந்து  , பல்லக்கிற்றாங்கி வந்த  அக் கைத்துண்டினை  , இராவணன்முன்னிலையில்  வைத்து , மாமன்  மாமி  யிருவர்களையும்  வணங்கிச்  சிறிது  தூரத்தினின்று  அடித்தலநோக்கிய  கண்களையுடையளாய்த்  தழுதழுத்தகுரலுடன்  , “அரசர் பெரும!பேரிலளாகிய நினது மருகி  சுலோசனையென்னும்  பெயரினையுடைய  யான்  இங்குப்  போந்தேன் ; எக்காரணத்தை  முன்னிட்டும்  இது காறும்  உவளகத்தினின்றும்  வெளிச்செல்லும்  நிலைமைய  ளல்லேன் ; இப்பொழுதோ  ஆற்றோணாத்  துன்பத்தால் வருந்தி , நாணத்தைச்  சேய்மைக்கணொழித்து , வணக்கமாகிய  செல்வத்தைச்  சிறிதும்  பொருட்படுத்தாமல்  நற்குலத்துதித்த  பெண்பாலரின்  இயல்பை  முற்றும்  ஒழித்து  , என்னிலையை  மிகவும்  அடக்கித்  தன்வயத்தினள் போலவும் , அறிவிலாள் போலவும், நினது திருமுன்  எய்தினேன் ; தெரிவித்துக்கொள்ளவேண்டிய தொன்றுளது . அளியால்  நனைந்த  மனத்தான்  அருள்க.   நினைவுகூர்தலாகிய  வன்மையால்  என்னை  அநுக்கிரகிக்க . என் சொற்களைக் கேட்டல் வேண்டும் . அவாவை  நிறைவேற்றவேண்டும்  . போர்க்களத்தில்  இராமலக்குமணர்களை  வெற்றி கோடற்பொருட்டு  நிகும்பிலையில்  ஆபிசாரவேள்விசெய்தற்குப்  புறப்பட்ட  என் காதலன்  வழியிடையே  என் இல்லத்தை அடைந்தான் . என் உபதேசமொழிகள்  எல்லாவற்றையும்  வெறுத்தொதிக்கி   நிகும்பிலையை அடைந்த  இந்திரசித்து , சுமித்திரை புதல்வனாற்  கொல்லப்பட்டான் .ஈதன்றே மூவுலகத்தினுஞ்  சிறந்த  வீரனாகிய  நின் புதல்வனது  கைத்துண்டு  .  யான், அவனது மரண நிகழ்ச்சி  முழுதும்  எழுதிய  பத்திரிகை  இதுவாகும் .இவ்வெல்லா  நிகழ்ச்சிகளும்  இக்கைத்துண்டினாலேயே  தன்கையிற்றாங்கிய  கூரியவான்முனையால் ,நிலத்தில்  நன்றாக  எழுதப்பட் டனவாகும்  . யானோ  என்தலைவனது  தலையைக்கண்டு  அப்பொழுதே  அவனுடன்  இறத்தலை  விரும்புகின்றேன் . ஆதலின் , அருள் செய்க. என்  தலைவனது தலையைக் கொணர்தற்பொருட்டு விரைந்து  கட்டளையிடுங்கள்”  என்று  கூறித்  தன்  கைத்தலத்துள்ள  பத்திரிக்கை யொன்றை  அவன்  முன்னிலையில்  வைத்தாள் . இந்திரசித்துவின்  மரண நிகழ்ச்சிகேட்ட  அளவினானே  மந்தோதரியின்  இதயம்  இரு கூறாகப்  பிளக்கப்பட்டது .அப்பொழுதே  அறிவை  மயக்கங்கவர்ந்தது . “ஆ ! புதல்வ ! மேகநாத ! “  என்று  கதறிப்  பெருங்காற்றான  அலைப்புண்ட  வாழைபோல  நிலத்தில் வீழ்ந்தாள் .

              இராவணனுந்  தானே  அப்பத்திரத்தைப்  படித்து  உலகம்  புகழுந்  திண்மை மிக்க  தன்  புதல்வனது  இறப்பு  நிகழ்ச்சியை  முதலில்  நம்பாமல் பத்திரிக்கையில்  வரைந்த  பொருளையும்  வெறுத்துத்தள்ளிச்  சிறிது  நினைவு கூர்ந்து , தன்  மகனது  நாமவிலச்சினையுடைய  கொடிபோன்ற  வாளால்  அணிசெய்யப்பட்ட  கைத்துண்டினையும்  பார்த்து , அசைவறு  நிலையன் போலவும் , ஓவியத்துற்றான்போலவும் , இடியாற்  கெடுக்கப்பட்டவன்  போலவும்  அசைவற்றிருந்து  , ‘ ஆ ! கேடு  விளைக்கும் அவாவினையுடைய  யான்  கெடுகின்றேன்  ‘  என்று  பத்து  முகங்களாலும்  உரக்கக்  கதறினான் . “ ஆ !  குழந்தாய் ! மேகநாதா ! யான்  உயிருடையனாயிருக்கும்  பொழுதே  நீ  நினைவுறும்  நிலையைஎய்தினாய் ;  பேரிலனாகிய  எனது  தீவினைப்  பயன்  வெறுக்கத்தக்கது ; நின்பெயர் கேட்டவளவிலே  தேவாசுரர்களையுடைய  எல்லா  உலகங்களும்  அச்சத்தால்  நடுக்கமுறும் ; அத்தகைய  நீ,  கரடி  குரங்கு  இவைகளின்  முன்னிலையில்  மனிதரில்  இழிந்த ஒருவனால்  எங்ஙனம்  கொல்லப்பட்டாய் ?  ஆ !  அஞ்சத்தக்க  திண்ணிய  நினது  கொடிய  மரணத்தைக்கேட்டு  என்  மனம்  மிகவுங்  கலக்கமுறுகின்றது .  பிறரால்  ஆற்றோணா  வலிமை  மிக்க  நீ  போரில்  அவ்  விராசகுமாரர்களை  விளையாட்டாகத்  தோல்வியுறச் செய்து மகிழ்ச்சியுடையனாய் வந்து  என்னை  யின்புறுத்துவாய்  ; அரசியலின் பத்தையும்  நுகர்வாய்  என்று  உவகையுற்றிருந்த  கெடு நினைவி னனாகிய  எனது  பேரவாவென்னும்  பெருமரம்  வேருடன்  களையப்பட்டது “  என்று  இங்ஙனம்  நெடுநேரம்  புலம்பினான் .

              பின்னர்ச்  சிறிது  நேரஞ்  சென்றதும் , சுலோசனை  மீண்டும்  தன்றலைவனது  தலையைக்  கொணர்தற்கு  இரந்தாள் . அவள்  சொற்களைக் கேட்டுப்  புத்திரசோகத்தாற்  கலக்குண்ட  எளியனாகிய  இராவணன் , சினத்தாற்  கிளர்ந்தெழுந்து ,  “ஏடி !  ஒழுங்கிழந்தவளே !  போர்க்களத்தி னின்றும் அவன்றலையைக்  கொணர்தலைப்பற்றி   இரக்கின்ற  நினது  கடுஞ் சொற்களைக் கேட்டலால்  எத்துணைத்துன்பம்  விளைகின்றதோ, அத்துணைத்  துன்பம்  வீரகுல  சூடாமணியாகிய  என்புதல்வனிறந்தான் என்னும்  இதனால்  விளைந்திலது .  அமயத்திற்  குரியசெயலைச்  சிறிதும்  ஆராயாது  இங்கெய்தி  இங்ஙனம்  கூறுதற்குரிய  நெஞ்சுறுதியை   எவ்வாறு  கடைப்பிடித்தாய் ?  அறிவிலாய் !  என் பக்கலினின்றும்  அப்புறம் செல்க “   என்று  அவளை  அச்சுறுத்தினான் .

                  சுலோசனையும் , நெஞ்சுறுதியைக்கைப்பிடித்து  ,  “அரசர் பெரும !  யான்  கூறுகின்றதனைச்  சிறிது  நினைவுற்றுக்  கேட்பாயக. சினத்திற்கும் , பிரிவிரக்கத்திற்கும்  ஈது  அமயமன்று . ஊழினாலூட்டப்படும்  வினைப்பயன்  இன்றியமையாது நுகரத்தக்கதே .  இவ்வமயத்திற்  சினத்தாற்  செய்யத்தக்கது  யாதுளது ?  போரில்  இராமலக்குமணர்களை  வெல்லுதற்கு  யாவன்  வலியான்?  இராமன்  பொருட்டுச்  சானகியை  வேண்டுதலின்றியே   சேர்ப்பிப்பாயாக . அறிவுமிக்க  அமைச்சருள்  ஒருவனையும்  இராமன்  பக்கல்  விடுப்பாயாக .  என்றலைவனது  தலையைக்  கொணர்விப்பாயாக . இப்பொழுது  யான்  அத்தலையை  அவசியம்  காண்டல் வேண்டும் .  உடனிறத்தலையும்  நிறைவேற்றல்  வேண்டும் . நற்குடிக்கட்டோன்றிய   அரச குலத்து நங்கையரது குலவொழுக்கமாகிய  ஆசாரம்  ஈதன்றே.  அரசர்பெருமகனாகிய  நீ , என் வேண்டுகோளை  முறைமையில்லாதது போல் வெறுத்தொதுக்கிச்  சினத்தாற்  கண்சிவத்தல்  என்னை?  நற்செயல்களிற்  பற்றில்லாத  அரசர்பெருமானாகிய  நீ , முதலிற்  குற்றத்தை  நன்றுகண்டிலை. மிக்க  அறிவுபடைத்த  அரசன்  பிறன்மனைவியைத்  தடுத்தற்கு  எவ்வாறு  தகுதியுளனாவன்?  இராமலக்குமணர்களால்  விடப்பட்ட  ஊழித்தீயினை யொத்த  பகழிகளின்  முன்னிற்றற்குத்  தேவதானவர்களுள்ளும்  யாவன்  ஆற்றலுடையான் ?  சனத்தானத்தின் கேட்டையுணர்ந்தும் ,  வாலியின்  இறப்பைக்கேட்டும்  , அரசர்பெருமானின்  நெஞ்சம்  நடுக்கமுறாமை  என்னை? ஆதலின், இராமச்சந்திரன்பொருட்டுச்  சானகியைத்  திருப்பிக்கொடுத்து விடுவாயாக .  நலமற்ற  இச்செயல்  இனி அமைக  “  என்று  இவைமுதலிய  பிற  அறிவுபதேசங்களையுஞ்  சொல்லிச்  சுலோசனை  ஒழிவெய்தினாள் .

                புதல்வற்பிரிவால்  வெதும்புகின்றவனும் , இயற்கையானே  சினமிக்கவனுமாகிய  இராவணன் , கற்பரசியாகிய  அச் சுலோசனையின்  மொழிகளைக்கேட்டுச்  சினத்தீக்  கிளர்ந்தெழ , ஒளிர்கின்ற  விளக்கங்களை யொத்த  கண்களினின்றும்  நெருப்புப்  பொரிகளை  யிறைத்துப்  பற்களால் உதடுகளைக்கடித்துத்  தன்  மருகியை  எரிக்கின்றவன்போல  நோக்கி ,  “ஆ !  மதியற்றவளே !  இலங்கேசுவரன்  மாட்சி  யின்னதென்  றுணராதவளே !  பல்லாற்றானும்  உபதேசித்தனை .  நீயே  எனக்குக்  கட்டளையிடுபவளா கின்றாய் ;  என்பக்கல்  எய்தித்  தடையின்றி  இவ்வாறு புலம்புதற்குப்  பேதையாகிய  நீ  எங்ஙனம்  உரியை ?  இப்பொழுதே  எனது  சந்திரகாசன்  நினது  நாவை  அறுப்பான் . அறிவிலியாகிய  நீ  மிகவும்  வெறுக்கத்தக்கவள் .உண்மையாகவே  நீ  தலைவற்பிரிவால்நேர்ந்த  துன்பத்தால் வருந்தினை யாயின்   இத்துணைக்காலம்  உயிரைத்தாங்கியிருத்தல்  என்னை?  விரைவிற் செல்க !  இக்கணமே  கிளர்கின்ற  நெருப்பின்கட்   சேர்வாயாக .  வீரனாக  நினைக்கத்தக்க  எவன்றான், பகைவன்பக்கலெய்திப்  போரிலிறந்தவனது தலையை வேண்டுதற்குத்  துணிவான் ? மீண்டும்  இங்ஙனம்   புலம்புவாயேல்  இக்கணத்தே  யானே  நின்னை  இமயனில்லத்தின்கண்  அடைவிப்பேன் .என்  அருகில்லாது  செல்க !  செல்க !  தீக்கண்  வீழ்ந்து  நின்றலைவன்  செல்லுழிச்   செல்க”  என்று  கூறினான் .  

             சுலோசனை , கண்ணீரானனைந்த  தன்  முகத்தைத்  துடைத்து , மெல்லத்  தழுதழுத்தகுரலுடன்  “மரணமெய்திய  என்றலைவனது  முகத்தைக் காணாமல் , தீக்கட்புகுதற்கு  யாங்ஙனந்  துணிவேன் ?  நினக்கு  இராமன்பக்கலெய்தி  என் றலைவனது  தலையை  வேண்டுதலில்  விருப்பமின்றேல்  எனக்கு  விடைதருவாயாக .  யானே  அவன்சந்நிதியடைந்து  என் நாதனது  சிரத்தை  வேண்டுவேன் “  என்று  தெரிவித்தாள் .  

              இராவணன் , “ஏடி !  நாணமற்றவளே  !   விலங்கினங்களின்  துணை யைப் பெற்றிருக்கும்  இராமன்  மக்களுட்   டாழ்ந்தவன் . மூவுலகத்திற்கும்  அரசனாகவும் , இராக்கதசக்கிரவர்த்தியாகவும்  உள்ள  யான் , அவன்  மனைவியைக்  கவர்ந்தேன் . அஞ்சத்தக்க  திண்ணியனாகிய  நின்நாயகனை, அவன்தம்பி  போரிற்  கொன்றான் . அங்ஙனம்  கொல்லப்பட்ட  இந்திரசித்துவின்  மனைவியும்  என்மருகியும் , சானகியை  ஒத்த  அழகுவாய்ந்தவளும்  ,  இளமையுடையாளும்  ஆகிய  நீ ,  நின் றலைவனை  இழந்திருக்குங்கால் , நம் பகைவனும் , காதலின்பிரிவாற்   றுன்புறுகின்ற வனும் , எழின்மிக்கானுமாகிய  இராமனது பக்கலை யெய்துதலென்னும்  இஃது  எங்ஙனம்  பொருத்தமுடையதாகும் ?  “புதல்வனிறத்தலாலச்சமுற்ற  இராவணன்  பகைவர்களை  உடன்படுத்தற்பொருட்டுத்  தன் மருகியை ஏவினான் . ‘ என்றன்றே  உலகம்  பழித்துரைக்கும்  .  அப்பாதகனாகிய  இராமன்  முன்  என் றங்கையை  விகாரப்படுத்தியது போல  நின்னையும்  செய்வான் .ஆதலின் , அறிவிலியாகிய  நீ  அவன்பக்கலிற்  சேருதல்  தகுதியன்று . எவ்வாற்றானும்  நின் சொல்லை  ஏற்பேனல்லேன் . என்முன்னில்லாது  விரைந்து செல்வாயாக”  என்று  உரத்த  குரலுடன்  அவளைப்  பழித்துரைத்தான் .  

                  செவியைவெதுப்புகின்ற  அவனது  கடுஞ் சொற்களைக் கேட்டுப்  பிரிவிரக்கமுஞ்  சினமும்  மிக்க  அக்  கற்பிற்சிறந்த பெண்மணி , “பொருத்தமின்றி   இங்ஙனம்  எதற்காகப்புலம்புகின்றாய் ?  நெறிபிறழ்ந்த  ஒருவன்  உலகமனைத்தையுந்  தன்னைப் போற்  காண்கின்றான் . பிறர்மனை நயத்தலிற்  பற்றுடையனாகிய  நீ  வாய்மையிற் சிறந்த  இராமனை  ஏன்  இவ்வாறு  பழித்துரைக்கின்றாய் ?இப்பொழுதே   நின்  நாவானது  நிலத்தில்  அடியோடு  வீழும் . எல்லாவுலகங்களுக்கும்  புகலிடமாயுள்ள  பெரியோ னாகிய  இராகவனது  அணிமைக்கண்  தலைவனது  தலையை  வேண்டுதற்கு  அடைகின்ற  என்னை  உலகம்  நிச்சயமாகப்  பெருமைப்படுத்தும்  .பாவியாகிய  நினது  நெஞ்சத்தின்கண்ணே  அத்தகைய  கொடுஞ்சூழ்ச்சி  தோன்றியது . விரைந்து  தீவினையின்  பயனை  நுகர்வாய் . எஞ்ஞான்றும்  தீத் தொழிலையே  புரிகின்ற  நீ  கொடிய நரகத்தில்  வீழ்தல்  உறுதியே . நினக்கு  அத்தகைய  ஊழ்  உளது  .  வீரியச்செருக்கினாலேயே  தற்புகழ்ச்சி  செய்யற்க. காட்டுத்தீயினையொத்ததும் , இராமபிரானது  வில்லினின்றும்  வெளிப்படு வதுமாகிய , பகழியாகிய  நெருப்பு  விரைந்து  போந்து  நினது  தலைக்காட்டை  நீறாக்கும் . குலத்துக்குக்  கேடு  விளைக்குஞ்  சிறுமையாளனாகிய   நீ மிகவும்  வெறுக்கத்தக்கவன்”   என்று  சொல்லிவிட்டு  இராமனையே  புகலிடமாகக் கருதி  எல்லாத்தோழிமார்களையும்  ஒழித்து  இராவணனது  சபா மண்டபத்தி னின்றும்  வெளிப்பட்டாள் . இராமன்  வானரவீரர்கள்  சூழ, வீற்றிருக்கும்  அகன்ற  ஆடையான்  அமைந்த  இல்லத்தை நோக்கிச்   சென்றாள் . இவ்வமயத்தில்  இராமபிரான்  வன்மையாளருட்சிறந்த  மாயாவியான  இந்திரசித்துவைக்  கொன்று , புண்ணீர்தோய்ந்த  உடலுடன்  வந்த  இலக்குமணனைத்  தன்  மடித்தலத்திலிருத்தி  இறுகுறத்தழீஇ  அன்புடன்  உச்சிமோந்து  , “குழந்தாய்  !  இலக்குமணா !  செயற்கரிய  செய்கின்ற  நீ  நல்லன  செய்தனை .  கெடுமதியாளனாகிய , அவ்விராவணனது  வலக்கையாகிய  இந்திரசித்துவின்  இறப்பைக்கேட்டு  இராவணனே  இறந்தானென்று  எண்ணுகின்றேன் .இன்றுதான்  பகைமையில்லாதவனா யினேன் . இப்பொழுது இராவணன்  , தானே  போர்குறித்து வெளிப்படுவான் .  அக்கொடியவனை  விரைவிலேயே  அழித்துவிடுவேன் . வீரர்களுக்குரிய  கடமையையும்  நிறைவேற்றுவேன் . தோன்றால் ! வீரருட் சிறந்த  இந்திரசித்துவின்  அன்பின்றொகுதியை  நீ  எங்ஙனம்  ஆற்றினாய் !  மிகக்கடிய  அம்பினாற் றுளைக்கப்பட்டு  ஒழுகும்  புதிய  செந்நீராற்  பூசப்பட்ட  நினது  இவ்வுடலை  நோக்கும் பொழுது என் நெஞ்சம்  வெதும்புகின்றது . இந்திரசித்து  பெரிய வீரனன்றே !  நின்னையன்றி  இவனைக்  கோறற்கு  ஒருவனும்  வலியுடையானல்லன் . அச்சிறுமையாளன்  தொலைந்தான் “  என்று சொல்லிச்  சுசேனனை  அழைத்து , “சுசேனா ! உடன்பிறந்தாரிடத்து  அன்புமிக்க  இலக்குமணனுடம்பிற்றைத்த  அம்புகளைப்  போக்கி  மிகவும்  சுகமுற்றிருக்குமாறு  உரியமருந்துகளாற்  சிகிற்சை செய்வாயாக .”  என்று  கட்டளையிட்டான் .  

            அக்  காழகவில்லத்தின் (  ஆடையானமைந்த வீடு  )  வாயில்காத்தற்குக்  கட்டளையிடப்பட்ட   அநுமானும் , விபீடணனும்  தம்முட்  பின்வறுமாறு  உரையாடினார்கள்  :- 

   “ ஓ !  விபீடணா !  போரில்  இலக்குமணனாற்  றன்புதல்வன்  இறந்த  செய்தியைக்கேட்டு  இராவணன்  அஞ்சிச்  சானகியை   விடுவானென்று  எண்ணுகின்றேன் .” 

     “ ஓ ! அறிஞருட்சிறந்தோய் !  ஒருபொழுதும்  அக்  கெடுமதியாளன்  இங்ஙனஞ்  செய்யான் . தன்னுயிரையே  விடுவான் “

       “ஓ !  விபீடண  !  சிறிதுதூரத்தே  பார்க்க .  புதல்வன்  இறந்தமையால்  அஞ்சிய  இராவணனால்  விடப்பட்டுச்  சானகி தானே  ஈண்டுப்  போதருகின்றாள்”

        “  ஆம் .  அநுமானே !  ஆச்சரியம்  !  ஈது  எங்ஙனம்  நிகழ்ந்தது ?  இவளைப்பற்றி  எனக்கு  ஐயம்  நிகழுகின்றது . நிற்க . பார்ப்போமாக .” 

           இங்ஙனம்  உரையாடிக்கொண்டிருந்த  அவ்விருவர்களும்  அணிமைக் கண்  எய்திய  அவளது  வருந்தத்தக்க  வேடத்தானும் ,  மதிக்கத்தக்க  உருவச்சிறப்பானும்  ,  வஞ்சிக்கப்பட்டவர்களாய்ச்  சிறிது  அசைவற்றிருந் தார்கள் .  அப்பெண்மணியுந்  தடையின்றி  உள்ளே  புகுந்தாள் . இராமபிரானையும்  பார்த்தாள் . இதனிடையில்  தம்  நிலையெய்திய  அநுமானும்  விபீடணனும்  அம்மங்கையைக்  காணாமையான்  வியப்புடன்  உட்புகுந்தனர் .  

            அங்ஙனம்  வந்த  பெண்மணி   இராமன் றிருவடிகளில்  வணங்கித்  தலையிற்  கூப்பிய  கையினையுடையாளாய் , “அடைக்கலம்புகுந்தார்க்கு  அருள்செய்யும்  வள்ளல் !  இராமபத்திர !  யான் ,  நிகும்பிலையில்  இலக்குமண னார் கொல்லப்பட்ட  இந்திரசித்துவின்  மனைவி .  பேறிலளாகிய  என்னைச்  “சுலோசனை” என்னும்  பெயரால்  அழைப்பார்கள் . என்  தலைவனது  அறுக்கப்பட்ட  கைத்துண்டினால் ,  ‘தலை  இராமபிரான் றிருவடித்  தாமரை களை  யடைந்து  இன்பம்  நுகர்கின்றது . ‘  என்று   எழுதப்பட்டது .பகவானே  !  அருள்க .  என் றலைவன்  தலயைக்  கொடுப்பாயாக . அதனைக்கண்ட பின்னரே  என்  பிராணபதியைத்  தீப்புகுந்து  பின்றொடர்வேன் . “  என்று வேண்டினாள் .   

        அதனைக் கேட்டுச்  சில  வானரங்கள்  , “அறுபட்ட  தலையின்  நிகழ்ச்சிகளை  அறுபட்டகை  யெழுதியது “  என்னுமிது  மிக்க வியப்பே !  என்று  சொல்லிச்  சிரித்தன . வேறு  சில  வானரங்கள் , “இராவணனால் விடப்பட்டுச்  சானகியையொப்ப  உருக்கொண்டுபோந்த  ஓர்  அரக்கியாகிய  இவள்  நம்மை  வஞ்சித்தற்கு  ஈண்டுற்றாள் .  இப்பொழுதே  இவளைக்  கொல்வோம் “  என்று   சினந்து  கூறின .  

             “போர்க்களத்தே  இறந்த வீரர்களின்  தலை  எங்ஙனம்  இங்குக்  கொணரப்படும் ?  நீ  இந்திரசித்துவின் மனைவியாயின்   நின்  தலைவனது  அறுபட்ட   தலையைக்  காண்டற்குரிய  நிகும்பிலையை  அடைவாயாக “  என்று கூறினன்  அநுமன் .

               சுலோசனையை  முதற்கட்பார்த்தவளவினானே  இலக்குமணன்  மிகவும்  கலக்கமுற்று  மனத்தாற்  பலபல  நினைந்து , நீர் நிறைந்த  கண்களையுடையனாய்த்  தன்னையுஞ்  சிறிது மறந்து, இன்னதென்று கூறொணாத  மன நோயால்  வருந்தி , நெடுநேரம்   வாய்வாளாதிருந்தான்  .  

            பின்னர் , இராகவன் , வானரங்களினது  ஆரவாரங்களை நிறுத்திப்  புன்னகை செய்து  ,  “அநுமானே !  ஏன்  இங்ஙனங்  கூறுகின்றாய் ?  உலகத்தில், இயங்கியற்பொருள்களின்  நினைக்கப்படாதெய்துவனவாகிய  பற்பல  நிகழ்ச்சிகள்  தோன்றுகின்றன . இக்கற்பரசி  மேகநாதன்  மனைவியென்ப  துண்மையாயின் , எல்லாவற்றையும்  நன்கு  ஆராய்ந்து  துணிவோமாக .  “அறுபட்டதலையின்  செய்தியை  அறுபட்ட  கை யெழுதியது “என்னும்  இஃது  இப்பெண்மணியாற்  கூறப்பட்டது . அதன் உண்மையை  வெளிப்படுத்து வோமாக “  என்று  கூறிச்  சுலோசனையை  நோக்கிக்  “கற்புடைமாதராய்  !  இவர்கள்  நின் சொல்லை  நம்புகின்றார்களில்லை .  நின்  தலைவனது  அறுபட்ட  தலை கொணரப்படுமாயின்  அது  நின் வினாக்களுக்கு  விடைகூறுங்கொலோ ?  என்று   வினவினான் .  

             எங்ஙனமேனுந்  தலையைக்  காண்டலிற்  பேரவாவினையுடைய  அச்சுலோசனை , “யான் , உண்மையாகவே  இந்திரசித்துவின் மனைவியாயின்  அறுபட்டதாகிய  என் நாதன்  தலையும்  என்னாற் கேட்கப்படும்  வினாக்களுக்கு  இன்றியமையாது  விடைகூறும் “  என்று  சொன்னாள் .  பின்னர் , இராமபிரான்  கட்டளையிட்டவாறு  மாருதி  விரைந்து சென்று ,  அறுபட்ட  இந்திரசித்துவின் றலையை   ஆண்டுக்கொணர்ந்து   அவை நடுவண்  மிகவுயர்ந்த  ஒரு  பிரப்பிருக்கையில்  வைத்தான் . நாயகனது  தலையைக்  கண்ட  அப்பொழுதே  சுலோசனை  மிக அவலமுற்றுப்  புலம்பினாள் . பின்னர்த்  தன்னிலையைமிகமுயன்றடக்கி , எழுந்து, வலஞ்சுற்றிவந்து , தலைப்பாகினையும்  , ஒளிர்கின்ற  குழைகளையுமுடைய  அத் தலையைக்  கைகூப்பிய  சிரத்தான்வணங்கி  , “நாத !  கட்டளையின் வண்ணம்  ஈண்டெய்திய  என்சொல்லில்  யாரும்  நம்பிக்கைவைத்திலர் .  நினது கைத்துண்டினால்  எழுதியெற்கறிவித்த  நிகழ்ச்சியனைத்தும்  அறிந்தும்  , ‘அறுபட்ட  கை  யெழுதியது’  என்று  என்னை  இழித்துரைக்கின் றார்கள் .  ஆதலின் ,  இவர்கள்  நம்புதற்பொருட்டு  நின்னையே  புகலிடமாகவுள்ள  என்னை  மலர்ந்த முகத்துடன்  சிறிது நோக்கி  ,  என்னுடன்  சிறிது  உரையாடல்  வேண்டும்  . அருள்க “  என்று  சொல்லினாள் .  அசைவற்றிருந்த  அத்தலையைப்பார்த்து  , “இறந்தவனது  தலை இவளோடு  எங்ஙனம்  பேசும் ?  நிலை பிறழ்ந்த  இவள்  நம்மெல்லோரையும்   ஏமாற்றுதற்பொருட்டுப்  பற்பல சூழ்ச்சிகளைச்  செய்கின்றாள் “  என்று  எல்லாவானரவீரர்களும்  பேசினார்கள் . இருமுறை  மும்முறை  வேண்டப்பட்டும்  , அவ் விந்திரசித்துவின்றலை   மெளனத்தைவிட்டிலது.  அதுகண்டு  துன்பமிக்க  அப்பெண்மணி  ,  “தலைவ  இவர்கள்முன்னிலையில்  எதற்காக  என்னை ஈர்த்துவந்து  அவமானப்படுத்துகின்றாய் .?  இலக்குமணனோடு  போர் நிகழுங்கால்  நினக்குத்  துணைசெய்தற் பொருட்டு  என்  தந்தையை  யான்  அழைத்துவந்திலனென்றோ  என்னைச்  சினக்கின்றாய்?”  என்று  கூறினாள் .  அவள் மொழிந்த  அச் சொல்லைக் கேட்டுச்  சினத்தாற்  கவரப்பட்டதுபோலவும்  ,  நாணத்தாற்  பற்றப்பட்டது போலவும்   அத்தலை  பரபரப்புடன்  ஒருமுறை  நகைத்து ,”ஏடி !  என்பிரியே !  சுலோசனே !  என்னை  நன்றாகப்பழிக்கின்றாய்.  இப்பொழுது  இவ்வெல் லோரும்  எந்தன்புரிமைக்  காதலியாக  நின்னையே  நம்புகின்றார்கள் .  என்று  மேகமுழக்கம்  போன்ற  பேரொலியாற்  கூறி யொழிவுற்றது .  

               எல்லோரும்  அதனைக் கேட்டு  வியப்புமிக்கமனத்தினராய்ச்  சுலோசனையின்  கற்பு நிலையைப்  பாராட்டினார்கள் . அநுமான் ,  சுலோசனையை  நிலத்தில்  வீழ்ந்து  வணங்கி   “யான்  செய்த  எல்லாப் பிழைகளையும்  பொறுத்தருள்க .! “  என்று  வேண்டினான் .பின்னர்ச் சுலோசனை  இராமலக்குமணர்களை  அன்புடன்  வணங்கி  வாயுபுத்திரனைத்  துணையாகப்பெற்றுத்  தன்காரியத்தை  நிறைவேற்றுதற்குப்  புறப்பட்டாள் .

              அநுமான் ,  முகூர்த்தப்பொழுது  கடந்தபின்னர்  “ஆ !  கற்பரசியாகிய  சுலோசனை  ,  தன்காதலன்  சென்றுழிச்  சென்றாள் “  என்று  தழுதழுத்த குரலுடன்   மொழிந்துகொண்டு  , மிக விரைந்து  அவ்விடத்துப்  போந்தான் . சாலவு  மிரங்கத்தக்க  அச் சுலோசனையின்  நிகழ்ச்சியால்  எல்லாருஞ்  சிறிது  நேரந்  துன்பக்கடலுண்  மூழ்கினார்கள் . அறிவுடையாரிற்  சிறந்த  வாயுகுமாரன்  இராமன்  பக்கலெய்திப்   “போர் நிகழுங்கால்  நினக்குத்  துணைசெய்தற்பொருட்டு  என்  தந்தையை  யான்  அழைத்துவந்திலேன் . “  என்று  அக்கற்பரசி சொல்லிய  அதன்  உண்மையை  என்மனம்  அறியவிரும்புகின்றது .  ஐய !  தெரிவித்தல் வேண்டும் .  எங்கள்  வேட்கையை  அகற்றல் வேண்டும்  .பகவானே   !  அருள்செய்க . “  என்று  வேண்டினான் .   

               இராகவனும் , “மிக்க  மறைபொருளாகிய  நிகழ்ச்சியையன்றே  கேட்கின்றாய் .  அதனை  வெளிப்படுத்தற்கு  என் மனம்  விரும்பவில்லை . என்னையெனின் , அச்சொல்  யாவனாயினும்  ஒருவனது உள்ளத்தை  மிகவும்  வருத்துமாதலின் “  என்று  கூறிப் புன்னகை செய்தான் .  

                அது கேட்ட  சுமித்திரைபுதல்வன்  நெடுநேரம்  மறைந்து கிடந்த  பிரிவி ரக்கமாகிய தீயால்  வெதும்பி  “ஐய !  அவ்விளம் பெண்  எப்பொழுது  எங்கண்ணுக்குப்  புலனாயினாளோ , அது முதலே  எனக்குப்  பெரிய  கவற்சியுண்டாயது . நெஞ்சம்  நிலையின்றிச்  சுழல்கின்றது .  அவள்  என்பாற்  பழக்கமுள்ளவள்  போற்  காணப்படுகின்றாள் .  இந் நிகழ்ச்சிக்குக்  காரணம்   இன்னதென்றுணர்ந்திலேன் . ஆதலின் , அவள் வரலாற்றை  அவசியம்  தெரிவித்தல்  வேண்டும் “  என்று  புகன்றான் .

               இராகவனுஞ்  சிறிது  நினைவு கூர்ந்து  , இலக்குமணனது  மார்பில் , தன்கைத்தலத்தாற்  றைவந்தான் . அப்பொழுதே  இலக்குமணன்  “ ஆ !  கெட்டேன்  !  ஆ !  குழந்தாய் !  சுலோசனே !  தீவினையாளனாகிய  யானே  யெனது  மருகனைக் கொன்றேன் . கொடியவனாகிய  யானே  நின்மரணத்திற்கும்  காரணமாயுனேன் .”  என்று  வாய் திறந்து  அழுதற்குத்  தொடங்கினான் . மீண்டும் , இராமபிரான் இலக்குமணனைத்  தேற்றுகின்றவ வன்  போலத்  தன்கைத்தலத்தால்  அவனைத்தடவினான் .  தன் இயற்கை நிலையையெய்திய  இலக்குமணன் ,  எல்லாத் துன்பங்களையும்  மறந்து , விகாரமற்றவனாய்  வாய்வாளாதிருந்தான் .  அந் நிகழ்ச்சியைக்  கண்டு  வியப்புற்றவர்களாய்   எல்லோரும் , “ஈதென்னை !”  என்று  பரபரப்புடன்  இராகவனைக்கேட்டனர் . அவனும் , “சுலோசனையோ, நாககுலத்துக்குத்  தலைமணியான   ஆதிசேடனது  புதல்வியாவாள் . திக்குவிசய  யாத்திரை நிமித்தம் நாகருலகத்தையெய்திய   இந்திரசித்துவிக்குக்  கொடுக்கப்பட்டாள்.  இலக்குமணனை  இந் நிலவுலகத்தில்  அவதரித்த  ஆதிசேடனென்று  உணர்மின்கள்  . ஆதலின்  அவ்  விலக்குவனுக்கு  உள்ளேயுள்ள  தொடர்பால்  அத்தகைய  மனக்கலக்கம் உண்டாயிர்று .  கற்புடையாருட்  சிறந்தவளென்றே சுலோசனை .  ஆ !  அச்  சுலோசனையுனது  கற்பின் மாட்சியைக்  காண்மின்கள் ! “  என்று  கூறினான் .

வெண்பா

கற்பிற்  சிறந்த  கனங்குழையார்  தம்முள்ளே

சொற்புகழின்  மிக்காள்  சுலோசனையே  —-  பொற்பிற் 

றிகழுடலைத்  தீப்பெய்து  சென்றனளா  லன்பன்

புகுமிடத்தைச்  சார்ந்தின்  புற .

                                         சுபம் !      சுபம் !

திருச்சதகம் பகுதி_4

திருச்சதகம் 

 6.   அநுபோக சுத்தி

              அநுபோக  சுத்தி  என்பது , சிவாநுபவ  நிமித்தம்  உயிர்  தன்னைத்  தூயதாக்கிக்  கொள்ளுதல்  என்னும்  பொருள்  உடையதாகும்.  அநுபவம்  என்பது அழுந்தி  அறிதல்.  சிவாநுபவம், சிவபிரானை  அழுந்தி  அறிதல்  ஆகும் . உலகியலில்  மக்கள்  அநுபவம்   பலதிறப்படும் . கண்டு  கேட்டு  உண்டு  உயிர்த்து  உற்றறியும்  ஐம்புலன்  நுகர்ச்சிகளும்  அநுபவங்களே. அவ்  அநுபவங்கள் எல்லாம்  சிறிது பொழுது நின்று  அழியும் இயல்பினவாம் . மனம் ,  பொறிவழிச்சென்று நுகரும்  அநுபவங்கள் எல்லாம்  சடப் பொருள்களைப்  பற்றின ஆதலின் , அழியும் இயல்பு உடையனவாம் . புலன் நுகர்ச்சிக்கு மேற்பட்ட  அநுபவங்களை  உயிர் , தன் இயல்பை  அழுந்தி அறிதல் , அருளை அழுந்தி அறிதல் , சிவத்தை அழுந்தி அறிதல்  என முத்திறப் படுத்து க்  கூறுவர் . “தம்மை உணர்ந்து  தமையுடைய  தன் உணர்வார் “ என்றபடி, உயிர்கள் தம் இயல்பை முதலில் உணர்ந்து,  பின் தம்மை உடைமையாக  உடைய இறைவன்  அருளையும்  அவ் அருளோடு  வேறறக் கலந்து நிற்கும் இறைவனையும் முறையே உணர்தல் வேண்டும் . பட்டினத்து அடிகள் , உயிரின் இயல்பை அறிதற்கு முற்பட்டு , “மேவிய புன் மயிர்த்தொகையோ”என்னும் , அகவற்பாட்டில் , “இன்னதுயான் என்று அறியேன் என்னை , ஏதினும் தேடினேன் யாதினும் காணேன்”  என்று கூறிப் பின்னர் , “ஞான நாட்டம்  பெற்றபின் யானும் நின் பெருந்தன்மையுங் கண்டேன் , காண்டலும் என்னையும் கண்டேன்”  என்றனர் .  இந்நிலை உயிர் அநுபவம்  ஆகும் .

                  இதன் பின்  சார்ந்ததன் வண்ணம் ஆம் தன்மை உடைய உயிர்க்குச் சிவச்சார்பு இன்றியமையாதது எனக் கண்டு , அப் பெருமான் பக்கலில் உயிரை ஈர்த்துச் சிவக்காட்சிக்கு ஆளாகும் சிவசத்தியாகிய அருள் நிலையை அறிந்து வழிபடல் இன்றியமையாததாகும் . அருட் பதிக்கு உயிர் இலக்கு ஆனால் அன்றிச் சிவக்காட்சி நேர்படல் அரிதாகும் . மூல மல ஆற்றலைக் கெடுத்து  சிவாநுபவத்திற்கு உரிய தகுதியை அளிப்பது அருளநுபவமாகும். அதன்மேல் , பேரின்பப் பிழம்பாக உள்ள சிவம் இன்ன இயல்பிற்று என்று மெய்யுணர்வினால் உணர்ந்து , ஞனாசிரியன் உபதேசவழி  ஒழுகி , அச்சிவபரம்பொருளைத் தான் என, அவன் என வேற்றுமை இன்றி ஒட்டி நின்று பேரின்பத்தில் தலைப்படல் சிவாநுபவம் ஆகும் . உயிர் மலப்பிணிப்பு ஒழிந்து , தூய நிலை அடைந்து , சிவன் திருவடி நீழல் எய்தி இன்பம் நுகர்தலே முடிந்த பயன் ஆகும் என்பர் . “உயிர்தானும்  சிவாநுபவம் ஒன்றினுக்கே உரித்து “ என்பது சிவஞானசித்தி இத்துணைச் சிறந்த சிவாநுபவத்திற்குத் தவ முதலிய  சாதனங்கள் சிறந்த ஏதுக்கள் ஆகும் . அத் தவம்  உடலோடு கூடிய வழிச் செயற்பாலதாகும் . ஆயினும் , உடலோடு கூடிய நிலையிலே, உடல் சடப்பொருள் , உயிர் சித்துப்பொருள் என்னும் வேற்றுமை அறிந்து , உடலைக் கருவியாகக் கொண்டு  செயற்பாலதாகிய தவத்தை முடித்துக்கொள்ளல்  வேண்டுமேயன்றி , அவ்வுடல் ஓம்புதலிலே  நாட்டம் செலுத்தல்  அறிவின் பயன் ஆகாது என்பது பெரியோர் கண்டது. அந்நிலையில் , அடிகள் , அழிவுடையதும்  அருவருக்கத்தக்கதும்  ஆகிய ஊனுடல்  உளதாங்காறும்  அதன்கட்  பற்று வைத்து, அதனை ஓம்புதற்கு  வேண்டுவன செய்தலிலே நோக்கம் செல்லும்  என்னும் உண்மை உணர்ந்து , அவ்வுடற்பற்று  ஒழிப்பதற்கு உடலையே வேண்டாமல் வெறுத்து  உரைத்தலை  இப் பதிகத்தில்  பல திருப்பாட்டுக்களினும் காணலாம் . தூய  சிவானுபவத்திற்கு  உடற்கற்றுத் தடை  என்பது அடிகள் கருத்தாகலின் , அத்தடை நீக்கமே ஈண்டு சுத்தி எனப்படும்   என்க  . ஊனுடலின் அருவருப்பை நினைந்து , அதனை விடுதலில் உள்ள விருப்பமும், இடையறாது ஆண்டவனைத் தியானித்தல் முதலியன செய்தலுமே சிவானுபவ நிமித்தம் செய்யப்படும் தூய்மையாம் என்பது கருதத்தக்கது . இதன் முன்னைப் பதிகத்தில் , ஆண்டவன் செய்த அளப்பரிய  பேருதவிக்குக் கைமாறாக , அடிகள் தம்  உடல்  பொருள்  ஆவிகளைக் கொடுக்க எண்ணியும் ,அவை அவன் உடைமை எனக் கண்டு , அவற்றின்  வேறாகத் தமக்கு என ஒன்றும் இல்லாமை பற்றி  வருந்திக் கூறிய செய்தியைக் கண்டாம் . இப்பதிகத்தில் அங்ஙனம் கைம்மாறு கொடுக்க இயலாவிட்டாலும் , வலிந்து ஆட்கொண்ட அப் பெருமானைச் சார்ந்து  அநுபவிக்கவும் இவ்வூன் உடல் தடைப்படுத்துகின்றதே என்று இரங்கி , இவ்வுடற் பற்றால் உண்டாம்  அழுக்கை  ஒழித்துத் தம் உயிரைத் தூய்மைப் படுத்துக் கொள்ளுமுறையை அருளிச்செய்வார்  ஆயினர் . இதனால் பதிக இயைபு  புலனாதல்  அறிக .

அறுசீர்க்  கழிநெடிலடி  ஆசிரிய விருத்தம்

பாடல் 51.

ஈச   னேயென் எம்மானே

யெந்தை  பெருமான்  என்பிறவி

நாச  னேநான் யாதுமொன்

றல்லாப்  பொல்லா  நாயான

நீச   னேனை  யாண்டாய்க்கு

நினைக்க  மாட்டேன்   கண்டாயே

தேச    னேயம்  பலவனே

செய்வ  தொன்றும்   அறியேனே.

கருத்துரை :-  இதன் முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் இறைவன் தம்மை அறிவிலாப் பருவத்தே புகுந்து ஆட்கொண்ட பேரருள் திறத்தைப் பாராட்டிய அடிகள், இப்பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண், மிக இழிந்தவனாகிய  என்னை ஆட்கொண்டு அநுபவிக்கத்தந்த  நின்னை இடையறாது நினைந்து , என் உயிரைத் தூயதாக்கிக் கொள்ளாமல் இருக்கின்றேனே என்று வருந்துகின்றார் .

பதவுரை :-  ஈசனே  = யாவர்க்கும் எவைக்கும் இறைவனே ,

என் எம்மானே  = எனக்குச் சிறப்புமுறையில் உள்ள எங்கள்  தலைவனே,

எந்தை  பெருமான்  = என் தந்தையாகிய  பெரியோனே,

என் பிறவி நாசனே  =  எனக்குப்  பிறப்பை  ஒழிப்பவனே ,

தேசனே  =  ஒளி வடிவினனே ,

அம்பலவனே  = ஞான வெளியை உடையவனே,

யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான  =  உலகத்துப்பொருள் யாதேனும்  ஒன்றிற்படாத பொல்லாமை உடைய நாய் போன்ற ,

நீசனேனை ஆண்டாய்க்கு  =   இழிந்தவனாகிய என்னை ஆட்கொண்டருளிய நின்னை,

நான் நினைக்க மாட்டேன்   = யான் நினையேன் ,

செய்வது ஒன்றும் அறியேன்  =  இனிச் செய்யத்தக்கது இன்னது என்பதையும் அறிந்திலேன்  என்பது .

விளக்கவுரை :-  இறைவன் , மக்கள் முதலிய யாவர்க்கும் , நிலம் மலை கடல் முதலிய  எவைக்கும் தலவன் என்பதை , நூல் அறிவானும் அநுபவ உணர்வானும் அடிகள் அறிந்தவர் ஆதலின் , அப் பெருமானது  பொதுவான அகண்ட ஐசுவரியத் தன்மையைக் குறித்து, “ஈசனே” எனவும் , தமக்குச் சிறப்பு முறையில் தலைவன் ஆவான் என்னும் உரிமையை நினைந்து , “ஏன் எம்மானே” எனவும் கூறினர்.  பலர்க்கும் தலைவனாக உள்ளான் ஒருவனை , அப் பலருள்ளும் ஒருவன் பணிசெய்யும் முறையில் மிக நெருங்கிய  தொடர்பு உடையனாக  இருப்பின் , அத் தலைவனது பொதுமையைப் பாராட்டும் அளவில் நில்லான் என்பதும் , சிறப்பு முறையில் என் தலைவன் என்று பாராட்டி மகிழ்வன் என்பதும் உலகியலிற் காணப்படுவன . அக் குறிப்பே ஈண்டும் கருதத்தக்கது . அடிகள் பிறிதோரிடத்து , “எங்கள் நாயகனே என்னுயிர்த்தலைவா” என்று இவ்வுண்மையைப் புலப்படக்  கூறியிருத்தலும் அறிக. உலகில் ஒருவர்க்குத் தலைவன் ஆவானும் ,தந்தையாவானும் வேறு வேறு ஆவர். தலைவன் ஆட்கொண்டு பணிகொள்ளுபவன்  தந்தை , கல்வி ,முதலியன நல்கிச் சான்றோன் ஆக்குவோன் , ஒருவன் தன் தந்தையை நோக்க,, அவன் செல்வத்திற்கு உரிய உரிமை தனக்கு உண்டு எனக் கருதுதலும் , தலைவன் நோக்க, அடிமைப்பணி செய்து அடங்கி வாழ நினைத்தலும் இயல்பே . ஈண்டுத்  தம்மை ஆட்கொண்டு  பேரின்பப் பெருஞ் செல்வத்தை  அளிக்கும் தலைவனாகவும்  தந்தையாகவும்  உள்ளான் சிவபெருமானே என்பதை நன்று தெளிந்த அடிகள், “என் எம்மானே எந்தை பெருமான் “ என்று கூறினர்.  தந்தையின் பெருமைக் குணங்களில்  ஈடுபட்டு , “எந்தை “ என்ற அளவில் ஒழியாது , “எந்தை பெருமான்” என்றனர் .

          பெருமை, செயற்கரிய செய்தலால் உண்டாவது . பெருமைமிக்க  தந்தையினிடத்து  நின்றும் தாம் பெறும் பேறுகளில் முதலாவது பிறப்பறுதல் என்பது குறித்து . “ஏன் பிரவி நாசனே”ஏன்றார் . ஞானச் செல்வர்கள் விரும்புவது பிறப்பு இறப்புக்களின் ஒழிவாகும் . அங்ஙனமாகவும் , இவ்விரண்டன் ஒழிவையும் குறியாது, பிறப்பை மாத்திரம் குறித்ததில்  ஓர் உண்மை உண்டு . இறப்பு இயற்கையாகும் . எடுத்த உடல் எப்படியும் ஒழிந்தே போகும் .  ஆதலின் , உடல் ஒழிவில் அடிகளுக்குச் சிறிதும் கவலையின்று .  வினையளவு நின்று ஒழியும் இயல்பினதாகிய  உடலை விட்டு , அழிவில்  இன்பநுகர்ச்சியில் ஈடுபாடு உடைய அடிகளுக்கு , மீண்டும் பிறவாமையே வேண்டத்தக்கது. ஆதலின் , அவ் வேண்டுகோளை  நிறைவேற்றும் தலைவனைக் குறித்து , “என் பிறவி நாசனே” என்றார் . இறப்பிலும் அச்சம் இருக்குமாயின் , மரண நாசத்தையும்  குறிப்பிட்டிருப்பார் . நோயுடை ஒருவனுக்கு , நல் உணவு அளித்து  ஆதரிக்கக் கருதுவோன் , முதலில் அந் நோய்க்கு  மருந்து உதவுதல் இன்றியமையாதது  ஆதல் போல , பேரின்பப் பெருஞ் செல்வத்தை அளிக்கக் கருதும்  ஆண்டவன் , அதற்குத்  தடையாக உள்ள  பிறப்பை ஒழித்தன்றோ செய்தல் வேண்டும் .  இந் நயம் தோன்றவே , எனக்கு இன்பம் தருவோனே  என்னாது ,  “ என் பிறவி நாசனே “ என்றார் என்பது  இன்ப நுகர்ச்சிக்குத் தடையை  விலக்கியவாறு  இது.

             இனி, தமக்கு  ஞானோபதேசம்  செய்த ஆசிரிய வடிவத்தை  நினைந்து , “தேசனே” எனவும் , அங்ஙனம் எழுந்தருளியது  வெளியான இடத்தில் என்பார், “அம்பலவனே”  எனவும் கூறி யருளினர். அம்பலம் தில்லைக்கண் உள்ளதாயினும் , திருப்பெருந்துறையில்  அன்பர் பலர் சூழ ஆண்டவன் எழுந்தருளி ஆட்கொண்டான்   ஆதலின், அதுவும் உட்கோள் ஆகும் என்க . “தான் என்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவர் “  என்பதும் நோக்குக. ஞானசிரிய வடிவம் கண்கொள்ளாக் காட்சி உடைய தாகலின் , ஞானவொளி நிலையமாகவுள்ள அவ்வுருவத்தைக் குறித்து , “தேசனே”என்றார் .  தேசு – ஒளி அம்பலம் என்பது பொது இடம் . புறவெளி , பரவெளி , ஞானாகாசம்  என்னும் பொருள்களை உணர்த்துவதாகும் .  இதுகாறும்  கூறிய விளிகள் ஆறு . இவ் ஆறு விளிகளாளும்  முறையே இறைவன் பொதுவும் சிறப்புமாகவுள்ள தலைவனாதலும்  தமக்குப் பேரின்பம் நல்கும்  தந்தையாதலும் , பிறவிப்பிணி ஒழிக்கும் மருத்துவனாதலும் , ஞானோபதேசம் செய்யும் ஞானாசிரிய னாதலும், தமக்குப் போலவே பிறர்க்கும் உபகரித்தற்கு உரிய பொது வெளிக்கண் உளனாதலும்  புலப்படுக்கப்பட்டபடியாம்.

         ஆண்டவன் பெருமையை நோக்க, அப் பெருமானுக்கு ஆட்படும் தகுதி தம்பால் ஒரு சிறிதும் இன்று என்பது  தோன்ற “நீசனேனை”  எனவும்  அவ்  இழிவுக்கு எடுத்துக்காட்டாக. “நாயான “ எனவும் , அந்த நாய்ப் பிறப்பினும்  தீ வினைப்பயன்  மிக்கது என்பது தோன்ற , “பொல்லா” எனவும் கூறினர் . நாயான என்புழி, ஆதல் உவமப்பொருட்டு , என் இழிந்த நிலைக்கு எடுத்துக்காட்டாக  வேறொன்றும் புலப்படாமையால் , பொல்லாங்கு  மிக்க நாய் உவமை  கூறப்பட்டதாயினும் , உள்ளவாறு நினையுங்கால், என் பிறப்பு  உலகத்துள்ள  அந் நாய் முதலிய  இழி பிறப்புக்களுள் ஒன்றன்பாலும் படாதது  ஆகும் என்பது  தோன்ற , “யாதும் ஒன்றல்ல”  என்றார்

          ஆண்டாய்க்கு  என்புழி , நான்கன்  உருபை இரண்டன் உருபு  ஆக்குக . ஆண்டாய் , முன்னிலை வினைப்பெயர் .  ஆட்கொண்டருளிய நினக்கு வேறு கைம்மாறு  செய்யும் ஆற்றல்  இல்லேன் ஆயினும் , அப் பேருதவியை நினையும் அளவிலாவது நன்றியறிவுடையனாதல் இன்றியமையாததாகவும் , அதுவும் செய்திலேன் என்பார் , “நினைக்கு மாட்டேன் “ என்றார்,  “போதும் பொறாவிடிற் பச்சிலையுண்டு  புனலுண்டெங்கும் , ஏதும் பெறாவிடின்  நெஞ்சுண்டன்றே”  என்றபடி ,செயலளவிற் கைம்மாறு இயற்றல் அரிதாயினும், நெஞ்சத்தாலாவது  நினைதல் எளிதாகவும் , அதுவும் செய்திலேன்  என்று இரங்கிய படியாம் .  கண்டாய் : முன்னிலை அசை .  நினைக்கமாட்டேன்  என்பதற்கு , இரண்டாம் அடியில் உள்ள நான் என்பதை  எழுவாய்  ஆக்குக .  நினையும் அளவிலாவது தலைப்படாது ஒழிந்த சிறுமையேன் , மேற்செய்யத்தக்கது  இன்னது என ஒன்றையும் அறிந்திலேன் என்பார் , “செய்வதொன்றும்  அறியேன் “ என்றார் .  இதனால் பகல் பிறிது இன்று என்பது குறிப்பு .

            இதன்கண்,  “நீசனேனை  ஆண்டாய்க்கு  நினைக்கமாட்டேன் “ என்றமையால் , சிவாநுபவத்திற்கு  உரிய உயிரின் தூய்மையில் , முதலாவது செயற்பாலது ஆண்டவன் பேருதவியை நினைவு கூர்தலாம் என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி என்னும் பதிகம் நுதலிய  பொருளும் ,  “யாதுமொன்றல்லாப் பொல்லா நாயான  நீசனேனை “  என்றதனால்  வைராக்கியமும் , ஆண்டவனை நினைதல் அவசியம் என்பது  போதரலின் , பத்தியும்  தோன்றுதலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல்  அறிக.

                     *******************************************************************

பாடல் 52.

செய்வ  தறியாச்  சிறுநாயேன்

செம்பொற்  பாத  மலர்காணாப்

பொய்யர்  பெறும்பே  றத்தனையும்

பெறுதற்  குரியேன்  பொய்யிலா

மெய்யர்  வெறியார்  மலர்ப்பாத

மேவக்  கண்டுங்  கேட்டிருந்தும்

பொய்ய  னேன்நான்    உண்டுடுத்திங்

கிருப்ப  தானேன்  போரேறே.

கருத்துரை :_  இதன் முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவனை  இடயறாது நினைந்து ,  தம் உயிரைத்  தூயதாக்கிக் கொள்ளாமைக்கு இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் நினையாமல்  இருத்தலே யன்றி , இவ்வுலக  வாழ்க்கையின் நிமித்தம் உண்டும் உடுத்தும்  உடலோம்பி  இருத்தலை நினைந்து வருந்துகின்றார் .

பதவுரை :_  

போர் ஏறே  = போரில் அரியேறு  போல்பவனே,

செய்வது அறியாச் சிறு நாயேன்  =  செய்யத்தக்கது இன்னதென்று அறிந்துகொள்ள முடியாத சிறுமையை உடைய  நாய் போல்பவனும் ,

செம்பொன் பாதமலர் காணாப் பொய்யர்  =  செம்மையாகிய பொன் போன்ற  நின் திருவடிமலரைக் காணும் பேறு இல்லாத பொய்மையாளர் ,

பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்  =  பெறுதற்கு உரிய பேறுகள் எல்லாவற்றையும் ஒருங்கு  பெறுதற்கு உரிமை உடையேனும்  ஆகிய ,

பொய்யனேன்  நான்  =  பொய்மையாளனாகிய  யான் ,

பொய்யிலா மெய்யர் வெறியார்  மலர்பாதம்  மேவ  = பொய்மை கலவாத மெய்யன்பர்கள்  மணம் பொருந்திய மலர் போன்ற நின் திருவடிகளைஅடைய ,

கண்டும் கேட்டு இருந்தும்  = நேரிற் கண்டும் அறிவுறுத்தக் கேட்டிருந்தும் ,

உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்  =  உணவு உண்டும்  ஆடை உடுத்தும்  இவ்வுலகத்தில்   வாழ்ந்திருக்கலானேன்  என்பது .

விளக்கவுரை :   அன்பர்களைக்  காம முதலிய  அறுபகையாகிய யானைகள் தாக்காவண்ணம் , அவற்றை அழித்து ஒழிக்கும் ஆண் சிங்கம் போல்வான் என்பது குறித்து , இறைவனைப்  “போர் ஏறே” என்றார் . அருள்வலிமிக்க ஓர் அரசன் , தனக்கென வேறு பகையின்று  எனினும் , தன் குடிகளைக்  கரவில் நலிய  முயலும்  பகைவரைத்  தன் பகைவராகக் கொண்டு , ஒறுத்து அடக்க முற்படுதல் போல, இறைவன் தனக்கென வேறு பகை இலன் எனினும் , தன் அன்பரை நலியும்  பகைகளைத் தன் பகை எனக் கொண்டு அழிக்கும் இயல்பு உடையான் என்பது கருத்து .

                உலகிற் செய்யத்தக்கன  இன்ன, தகாதன இன்ன என்று பகுத்து உணரும் அறிவாற்றல் இல்லாமையால், சிறுமையுடையேன் என்பார் , “செய்வதறியாச் சிறுநாயேன் “ என்றார் . அவ் வறியாமையே  சிறுமைக்கு ஏதுவாயிற்று  என்பது.  சிறுமை தகாதன செய்தல். என்  தகுதி மிக இழிந்ததாகலின் , அதற்கேற்ற பயனையே பெறுதற்கு  உரியேன் என்பது  தோன்ற , “பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றார். பொய்மை , நலம் பயப்பது எனவும் , தீமை பயப்பது எனவும் இருதிறப்படும் என்பர்  நக்கீரர் . வெளிப்படையில் பொய்மைபோல் காணப்பட்டு , உண்மையில் நலம் பயப்பதை  மெய்மை எனவே கொள்ளுவர்  திருவள்ளுவர் . “பொய்மையிம் வாய்மையிடத்த புரை தீர்ந்த, நன்மை பயக்குமெனின் “ என்பது திருக்குறள் .  ஆகவே ஈண்டு நலம் பயக்கும் பொய்மை விலக்கி , தீங்கு பயப்பதைப் புலப்படுத்தற்கே, “செம் பொற்பாத மலர் காணா” என்றனர் .  இறைவன் திருவடித்  தாமரையைச்  சிறிதும் நினைவு கூறாத பொய்யர் என்பதனால் , நலம் பயக்கும் பொய்மையின் நின்றும் இது விலக்கப்பட்டது  என்பது தெளியலாம் .  இறைவன் திருவடித் தாமரையை  அகத்தே காண  விரும்பாமையோடு , புறத்தேயும் காணாதவர் என்றபடி . அத்தகைய பொய்யொழுக்கம் உடையோர் பெரும்  துன்பப் பயனைப் பெறும்பேறு என்றது நகைச்சுவை தோன்றற்கு .  பொய்யொழுக்கத்தின் எல்லையில் நிற்போர்  பெறும் துன்பப் பயன்கள்  எல்லாவ ற்றையும்  ஒருங்கு பெறுதற்கு  உரிய சிறுமையே என்பால் உள்ளது என்பார்,  “அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றார் .  பிறிதோரிடத்து , “விச்சுக்  கேடு பொய்க் காகா தென்று இங்கு எனை வைத்தாய் “ என்று அடிகள் கூறுவர் . அதன் கருத்து, அடியேனை நில உலகத்தில் இருக்கச்செய்தற்குக் காரணம் , பொய்யொழுக்கம்  ஆகிய பயிர் செழித்து விளைதற்கு வித்துக்கேடு  இருக்கலாகாது என்னும்  குறிக்கோளேயாம்  என்பது.  நாயேனும்  உரியேனும்  என்புழி , எண்ணும்மைகள் செய்யும்  விகாரத்தால் தொக்கு நின்றன.

                மெய்யர் என்ற அளவிலே,  சத்திய சீலர் என்பது பெறப்படுமாயினும் , பொய்யில்லா  மெய்யர் என்றது.  பொய்மையை  உட்பொதிந்து , புறத்தே வேட முதலியவற்றால்  மெய்யொழுக்கம்  உடையவர்போலக்  காணப்படுவோரை  விலக்கற்கு என்க.  இதனால், முன்னர் கூறப்பட்டார்மெய்யிலாப் பொய்யர்என்பதும் தெளிவாம் .  மெய்யர்  –  உண்மை யொழுக்கமுடைய மெய்யன்பர் .  அடிகள் ஞானோபதேசம்  பெறும் காலத்து , ஞானாசிரியனாக  எழுந்தருளி இருந்த இறைவன் பக்கலில் தம் கண்காணச் சூழ்ந்து இருந்த பக்குவ முதிர்ந்த  மெய்யன்பர்களை உட்கொண்டே, பொய்யிலா மெய்யர் என்றார் . அன்னார் எல்லோரும் ஆண்டவன் திருவடி நிழலில்  இயைந்து இன்பநுகர்ந்து  இருத்தலை , அப்பெருமான் திருவருள்  துணைகொண்டு  மெய்ஞ்ஞானத்தால்  உணர்ந்தவர் ஆதலின் , “வெறியார் மலர்பாதம்  மேவக் கண்டும் “ என்றார்  அங்ஙனம் அம் மெய்யன்பர் எல்லோரும்  இறைவன் திருவடிக்கண் இன்பம் நுகர்ந்து  இருத்தலைத் தாம்  உண்முகமாகக் கேட்குமாறு அப் பெருமானே கூறியருளினர் என்னும் உணர்ச்சி தலைப்பட்டவர் ஆதலின் ,  “கேட்டிருந்தும்” என்றார் . காட்சியாலும்  கேள்வியாலும்  மெய்யன்பர்கள் அடைந்த சிறந்த பேறுகளை உணர்ந்திருந்தும் , இப் பேறு பெறுதற்கு உரிய தூய்மையை  அடைய முயலாமல் , அதற்குத் தடையாக உள்ள உடலை  ஓம்புதற் பொருட்டு  ஐம்புலன்களும்  ஆர  உண்டும் , ஆடை  அணிகலங்களால்  புனைந்து கொண்டும் ,இப்பொய்யுலக வாழ்க்கையை விரும்பி  இருக்கின்றேனே என்பார்,  “உண்டுடுத் திங்கிருப்பதானேன்”  என்றார்.

             செய்யத்தக்கது இன்னது என்று அறியாத  சிறுமை காரணமாகப் பொய்யொழுக்கம் உடையார் பெறும் பேறுகள் எல்லாவற்றையும்  ஒருங்கு  பெறுதற்கு உரியேன் ஆயினும் , மெய்யன்பர் எய்திய சிறந்த பேற்றைக் கண் கூடாகக்  கண்டும் , தெளியக் கேட்டும்  உள்ளேன்  ஆதலின், அன்னார் மேற்கொண்ட தவ நெறியில் ஒழுகி நலம் பெற முயலலாம் ; அங்ஙனம் முயலாமல் , உடல் ஓம்புதலிலே நாட்டம் செலுத்தல் ஆனேனே என்று இரங்கியபடியாம் .

                இதன்கண் , “பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன் “ என்பதில் , சிவாநுபவத்திற்குரிய  தூய்மை ,  உண்டு உடுத்து  இருத்தலால் ஏற்படாது என்பதும் , அவ்வுடல்  ஓம்புதலின் ஒழிவே தூய்மையாம் என்பதும் பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பொய்யர் பெறும் பேறு  அத்தனையும் பெறுதற்குரியேன் “ என்றதனால் , தொண்டின் பணிவும் ,  “உண்டுடுத்திங் கிருப்பதானேன்” என்றதனால் , உடற் சுமையில்  வெறுப்பும்  தோன்றி நிற்றலின் , பத்தி வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                            **********************************

பாடல் 53.                                                                      

போரே  றேநின்   பொன்னகர்வாய்

நீபோந்  தருளி  யிருள்நீக்கி

வாரே  றிளமென்  முலையாளோ

டுடன்வந்  தருள  அருள்பெற்ற

சீரே  றடியார்  நின்பாதஞ்

சேரக்  கண்டுங்  கண்கெட்ட

ஊரே  றாயிங்  குழல்வேனோ

கொடியேன்  உயிர்தான்  உலவாதே.

கருத்துரை :-

முன்னைத் திருப்பாட்டில் இறைவனை நினையாமல் , உலக வாழ்க்கையின் நிமித்தம்  உண்டு  உடுத்து  உடல் ஒம்புதலையே  கடைப்பிடித்து  இருக்கின்றேன் என்று இரங்கிய அடிகள், இத் திருப்பாட்டில்  உடலை  யான்  பற்றிக்கொண்டு  இருந்தாலும் , அவ்வுடலை விட்டு உயிர் தானே கழியலாமே!  அங்ஙனமும்  கழிந்து  இலதே! என்று இரங்குகின்றார் .

பதவுரை :-   போர் ஏறே   –  ஆணவப்போர் போர் ஏறே  = ஆணவப் போரில்  அரியேறு  போல்பவனே,

நின் பொன்னகர்வாய் = நின் சிவபுரத்திருக்கோயிலினின்றும் ,

நீ போந்தருளி  =  நீ புறப்பட்டு எழுந்தருளி ,

வார் ஏறு இளமென் முலையாளோடு உடன் வந்து  =  கச்சு யாத்த இளமை மிக்க மெல்லிய முலைகளை யுடைய அம்மையோடு  கூடி இங்கு வந்து ,

இருள் நீக்கி அருள =  ஆணவமல இருளின் ஆற்றலைக் கெடுத்து அருள் புரிய ,

அருள் பெற்ற சீர் ஏறு அடியார் =  அத் திருவருளைப் பெற்ற சிறப்பு மிக்க மெய்யன்பர்கள்,

நின் பாதம் சேரக்கண்டும்  = நின் திருவடிகளை அடையக் கண்கூடாகப் பார்த்திருந்தும் ,

கொடியேன் உயிர் உலவாது = கொடியவனாகிய என் உயிர் தானே கெட்டு ஒழியாது இருக்க ,

கண் கெட்ட ஊர் ஏறாய்  இங்கு உழல்வேனோ = கண் கெட்டுக் குருடாகிய  ஊர்ப் பொலி எருதுபோல இவ்வுலகத்தில் யான் அலைந்து திரிவேனோ? என்பது .

விளக்கவுரை :-   நீ போந்தருளி உடன் வந்து இருள் நீக்கி அருள எனக் கூட்டுக. போரின் பயனாக  இருள் நீக்கம் கூறப்பட்டிருந்தலின் , ஈண்டு  ஆணவப்போர் என்பது பெற்றாம் . மெய்யன்பர்க்கு அருளுங்கால் ,அவரைப் பற்றி நிற்கும் மூல மலமாகிய  ஆணவம் என்னும் யானைகளின் வலியழித்தற்கு ஆண் சிங்கம் போன்றலின் , “போரேறே” என்றார் .  பொன்னகர்  –  சிவபுரமும் அங்குள்ள திருக்கோயிலும்  ஆம் . எங்கும் நிறை பொருளாகிய ஆண்டவனுக்கு  ஓர் ஊரும்  ஒரு திருக்கோயிலும் உள எனக் கூறுதல் பொருந்துமா எனின் , இறைவன் வியாபகம்  எங்கும் உளது எனினும் , பசுவின் உடல் முழுதும் வியாபித்து ஊறும்  பால் , அதன் முலை வழிச் சுரத்தல் போல , பக்குவமுதிர்ந்த  மெய்யன்பர் நெருங்கிய இடத்தில் சிறப்பாக வெளிப்பட்டு அருளுவன்  ஆதலிற்  பொருந்தும் என்க . இக் கருத்துப்பற்றியே , “தில்லை வாழ் கூத்தா சிவபுரத்தரசே” என்பது முதலிய பல இடங்களிலும் சிவபுரத்தரசனாக இறைவனைப் பாராட்டி அருளினர் .  வாய் : ஏழனுருபு ; ஐந்தனுருபாகக் கொள்க.. போந்தருளுதல் –  எழுந்தருளுதல் ;புறப்பாடல் , ஒரு சொன்னீர் மைத்து .

       இந் நிலவுலகத்துள்ள  மெய்யன்பரை ஆட்கொள்ள இறைவன் எழுந்தருளுங்கால் , அம்மையை  வெளிபடையாக உடன் கொண்டு வருவான்  என்பதும் , அம்மை என்றும் ஒரு கூறு பிரியாது உறையும்  பெற்றியள் எனினும் சில  நிகழ்ச்சிகளில்  அவ்வம்மையின்  உருவத்தைத்  தன்னுட் கரந்து தோன்றுதலும்  உண்டு என்பதைக் கேட்கின்றோம் ; ஆதலின் , “உடன் வந்தருள” என்றார் . உலகம் ஈன்றும் கன்னியாய் இருப்பள் என்பது குறித்து இளமைச் செவ்வி புலப்படுக்கப்பட்டது என்க..  அம்மை, தன் மக்களுள்  மெய்யன்புமிக்க  பக்குவர்க்கு  அருள் ஞானப்பால் சுரந்து அளித்து , அப்பனைக் காட்சிப்படுத்துவள் என்பது அடைமொழிக்குறிப்பு .  “அருளது சத்தியாகும் “என்றபடி , அருள் வடிவினளாகிய  தாயை வழிபட்டு , அவள் கருணையால் தந்தையைக் காணவேண்டும் ஆதலின் , அம்மையுடன் எழுந்தருளி வந்தான் என்பது.  உமையம்மையோடு  எழுந்தருளி வந்து , மெய்யன்பர்க்குக் காட்சியளித்து , முதலிற் செய்த நலம் ,  மூலமாகிய ஆணவத்தின் ஆற்றலை  ஒழித்தது என்பார், “இருள்நீக்கி” என்றார் .

                     கட்டுக்காலத்தில் , தெளிவான பளிங்கு அனைய உயிர் அறிவை மறைத்துநிற்பது , திணிந்த இருள் உருவமான ஆணவ மலமே . அம் மலப்பணிப்பு  நீங்கினால் அன்றிச் சிவக்காட்சி புலனாகாது .ஆதலின், முதலிற் பாச நீக்கமே வேண்டுவதாயிற்று . பக்குவ முதிர்ந்த உயிரைப்பற்றிநிற்கும்  ஆணவ  ஆற்றல் கெட்டு ஒழிந்ததும் , அவ்வுயிர் சிவன் அருளில் தலைப்படும் என்பது . “இருள் நீக்கியருள அருள் பெற்ற “ என்பதனால் தெளியலாம் . ஈண்டு நீக்கலும்  அருளலும் முறையே  பாச நீக்கத்தையும் சிவப்பேற்றையும் குறிப்பனவாம் . சிவஞான போதம் பத்தாம் சூத்திர அவதாரிகையில் ,  “இனி, அச் சாதனத்தானாய பயனியல்பு வகுத்துக் கூறுவானெடுத்துக்  கொண்டார் . அப் பயனாவது  , பாசவீடும் , சிவப்பேறும் என இருவகைப்படும் “ என்பர்  சிவஞான முனிவரர் . பத்தாம் சூத்திரத்தில் , “மலமாயை தன்னொடு  வல்வினையின்றே “ என்றதனால் , பாசவீடும் , பதினோராம் சூத்திரத்தில் , “அயரா அன்பின் அரன் கழல் செலுமே” என்றதனால்  சிவப்பேறும் கூறப்பட்டன . அவ்விரண்டு பயன்களையும்  ஈண்டு மெய்யன்பர் பேறுகளாக அடிகள் , “இருள் நீக்கியருள” எனவும் ,  “அருள்பெற்ற” எனவும் முறையே கூறியருளினார் . பாசவிடுதிக்கு உயிரின் சாதனம் ஏதுவாயினும் , இறையருள் முக்கியம் என்பது  தோன்ற “இருள் நீக்கி “ என இறைவன் செயலாகவும் , அந் நீக்கத்தில் சிவப்பேறு தானே கைகூடும் என்பது தோன்ற , “அருள் பெற்ற “ என உயிரின் செயலாகவும் அடிகள் அருளிச்செய்வாராயினர் . இத்தகைய  தத்துவ நுண்பொருள்கள் , உண்மை அநுபவம் உடையார் வாக்கில் எத்துணை எளிமையாக வெளிப்படுகின்றன என்பது  உணர்ந்து இன்புறத்தக்கது .

                 இங்ஙனம் பாச நீக்கமும் சிவப்பேறும் ஒருங்கு பெறும் தகுதி உடைய மெய்யன்பரையே இங்கே , “சீரேறடியார் “ என்றனர் . சீர் ஏறுதலாவது , மல   ஆற்றல் தேயத்தேய , அத்துணை மெய்ஞ்ஞான  விளக்கம் மிகுதல் . அம்மெய்ஞ்ஞான விளக்கு ஒளியால்  நின் திருவடியைக் கண்டு அடைந்தனர் என்பார், “நின் பாதஞ் சேர “ என்றனர் .  பாதஞ்சேரல் ,தாடலைபோல்  இரண்டறக்கலந்து  இன்புறல் .  இதுவே வீடு பேறு  ஆகும் . இந் நிகழ்ச்சி , தவ முதிர்ச்சியுடைய அடிகளுக்கு அன்றிப் பிறர்க்குக் காண்டல் அரிதாம் என்க  இத்தகைய சிறந்த காட்சி  காணக்கிடைப்பதே அரிதென்பது தோன்ற , “கண்டும் “ என்று கூறப்பட்டது . உம்மை அருமை  உணர்த்தி நின்றது .

                   சுவை மிக்க நுகர் பொருள் ஒன்று பொதுவாக , அதனைப்பலரும்  பொது உரிமை பற்றிக் கூட்டுண்ண ஒருவன்  மாத்திரம் அருகு இருந்து  கண்கூடாகக் கண்டு வைத்தும் , அதனைப் பெற இயலாமல்  இருப்பதற்கு  அவன் கொடுவினையே காரணம்  ஆதல்போல் , மெய்யன்பர்கள்  ஆண்டவன்  திருவடியடைந்து  இன்புறுதலைக் கண்டு வைத்தும் ,அப்பேறு பெறாமல் , ஊன் உடலை  ஓம்பித் திரிதற்குத்  தம் கொடுவினை  காரணம் என்பார் , அது குறித்துத் தம்மை , “கொடியேன் “ என்றார் . இக்கொடுமைக்கு  ஆளாகி வாழ்தலில் , உயிர் உடலினின்றும் ஒழிதல்  இனிதாகவும் , அது தானேயும் கழித்திலதே  என்று  இரங்குவார் , “உயிர்தானுலவாது” என்றார் . உலவாது  உழல்வேனோ என முடிக்க .

                     மெய்யன்பர் எய்திய பேறு தமக்கு இல்லாமைபற்றிய  இந் நிகழ்ச்சியில் , அடிகளுக்குள்ள  வருத்தத்தையும்  ஆர்வத்தையும் , “அருளாருமுதப்  பெருங்கடல்வாய் அடியாரெல்லாம்  புக்கழுந்த , இருளார் ஆக்கை  இது பொறுத்தே எய்த்துக் கிடந்தேன் எம்மானே “ என்னும் பாடற் பகுதியானும் உணரலாம் .  ஊர்  ஏறு  –  ஊர்க்குப் பொதுவாக விடப்படும் பொலி எருது  அல்லது பொலிகாளையாகும் . இது, மேய்த்து அடக்குவார் இன்றி , வயிறார  உண்ணுதலும்  காமநுகர்ச்சியில் தலைப்படுதலும் , பிறர்க்குத் துன்பம் செய்தலுமே தொழிலாகக்கொண்டு , தன் மனம் போலக் கட்டுக்கடங்காது  அங்கும் இங்கும் அலைந்து திரிவது . இத்தகைய ஊர் ஏறு கண் கெட்டது ஆயின் நெறி தவறிப் பள்ளமேடுகள் அறியாமல் வீழ்ந்து , திரிந்து , துன்புற்று  , உழலக்காணலாம் . அங்ஙனமே  யானும் நெறி பிறழ்ந்து , நன்று தீது அறியாமல் உழல்கின்றேன் ; இந்நிலைக்கு என்னை ஆளாக்கல், ஆண்டவனே , தகுமா என்பர் , “கண்கெட்ட  ஊரேறாயிங்குழல்வேனோ” என்றார் . ஊரேறாய் என்புழி , ஆக்கம் உவமப் பொருட்டு.  “கண்டும் கண்கெட்ட” என்ற முரண் அறிந்து இன்புறத்தக்கது .  இனி, ஊரேறு  என்பதற்கு,  ஊர்ப்பன்றி என்று பொருள் கூறுவாரும் உளர் ,

                 இதன்கண் , ஊரே  றாயிங் குழல்வேனோ  கொடியேனுயிர்  தானுலவாதே “ என்றதனால் , கொடுவினைக்கு நிலைக்களமாகிய  ஊனுடலினின்றும்  உயிர் கழியின் , அது தூய்மை பெறும் என்பது பெறப்படுதலின் , அநுபோகசுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,உயிர்வாழ்தலை  வெறுத்தலின் வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக .

                                                ****************************************

பாடல் 54 .

உலவாக்  காலந்  தவமெய்தி

உறுப்பும்  வெறுத்திங்  குனைக்காண்பான்

பலமா  முனிவர்  நனிவாடப்

பாவி யேனைப்   பணிகொண்டாய்

மலமாக்  குரம்பை  யிதுமாய்க்க

மாட்டேன்  மணியே  உனைக்காண்பான்

அலவா  நிற்கும்  அன்பிலேன்

என்கொண்   டெழுகேன்  எம்மானே.

கருத்துரை :-     முன்னைத் திருப்பாட்டில் உயிர் தானேயும் கழித்திலதே  என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் கழியாத நிலையில் , மலமயமாக உள்ள இவ்வுடலை  ஒழிக்கவும்  ஒருப்படாமல் இருக்கின்றேன் . வேறு பற்றுக்கோடாக  எதனைக்கொண்டு  உய்யக்கடவேன் என்று இரங்குகின்றார் .

பதவுரை :-    மணியே எம்மானே  =  மாணிக்க மணிபோல்வானே  என் தலைவனே ,

இங்குப் பல மா முனிவர் =      இவ்வுலகிற்  பல பெரிய முனிவரர் எல்லாம் ,

உன்னைக்  காண்பான்  =    நின்னைக் காண்டற்  பொருட்டு ,

உலவாக்காலம் தவம் எய்தி =    எல்லையற்ற காலம் தவ புரிந்து ,

உறுப்பும் வெறுத்து   =   உடலையும் வெறுத்து ,

நனி வாட  =  மிகவும்  வாட்டம் எய்தா நிற்க.,

பாவியேனைப் பணி கொண்டாய்   =    பாவியாகிய என்னைத் தொண்டனாக ஏற்றுக்கொண்டனை ,

மலமாக் குரம்பை இது மாய்க்கமாட்டேன்  = மலமயமாகவுள்ள  இவ்வுடலை  ஒழிக்க  ஆற்றல்  இல்லேன் ,

உனைக் காண்பான்  =  நின்னைக் காண்டர் பொருட்டு ,

அலவா நிற்கும்  அன்பு இலேன்  = துன்புற்று  நிற்கும்  மெய்யன்பு இல்லேன் ,

என் கொண்டு  எழுகேன்  =  இந்நிலையில்  பற்றுக்கோடாக  எதனைக்கொண்டு   உய்வேன்  என்பது .

விளக்கவுரை :-      உலகத்துப் பொருள்களுள்  பொன்னும் மணியும் உயர்ந்தன  அவற்றுள்ளும்   மணி சிறந்தது  ஆகலானும் , அதனினும் சிறந்ததாகப்  பிறிதொன்று இல்லாமையானும் , இறைவனை , மணியே   எனவும்  , பின்னர்ப்  பணிகொண்டாய்  என்று  கூறியதற்கு ஏற்ப , ஆட்கொண்டவன் என்பது  போதர,  “எம்மானே”  எனவும்  கூறியருளினார் . 

                  செய்தற்கு அரிய கடுந்தவம் புரியும் பக்குவ முதிர்ந்த முனிவரர் பலரையும் ,இவ்வுலகத்தில் அடிகள் தம் கண் கூடாகக் கண்டவர்  ஆதலின் , “இங்குப்பல மாமுனிவர்”என்றார் . இங்கு  = இவ்வுலகத்தில் ,முனிவர்  = இறைவனையே  இடையறாது  நினைப்பவர் என்னும் பொருட்டு. இன்பத் துன்பங்களில் ஈடுபடாத  மனமும் , விருப்பு , வெருப்பு ,அச்சம்  முதலியன நீங்கிய இயல்பும் ,  உறுதியான  புத்தியும்  உடையார்  முனிவர்  எனப்படுவார். இத்தகைய  பக்குவமுள்ள முனிவரர் , ஆண்டவன் திருவடி  காண்டற்கு , நீர் நிலை , ஐந்தீ  நடு முதலிய பொறுத்தற்கு அரிய  தட்ப வெப்பங்களில்  நின்று தவம் இயற்றினர் என்பதும் , அவ்வரிய  தவத்தானும்  சில  நாட்கள் வரையோ எனின் , அன்று ; எண்ணில் அடங்காத காலம் என்பதும் தோன்ற, “உலவாக் காலம் தவம் எய்தி “  என்றார்.  “புற்றுமாய் மரமாய்ப்  புனல் காலே  உண்டியாய் அண்டவாணரும் பிறரும் , வற்றியாரும்  நின் மலரடி காண மன்ன”  என்பதும் அடிகள் திருவாக்கு ,  உறுப்பு  = ஆகு பெயராகநின்று  உடலை  உணர்த்தும் .அத்துணை  நெடுங்காலம்  தட்ப வெப்பங்களைப்  பொறுத்துத்  தவம் புரிதற்குக் கருவியாகவுள்ள  அத் தவவுடம்பையும்  வெறுத்து நின்றனர் என்பது தோன்ற , “உறுப்பும்  வெறுத்து “ என்றார் . “உறுப்பும் “ என்புழி  , உம்மை உயர்வு சிறப்புப் பொருளில்  வந்தது. இங்ஙனம் தவம் புரிந்தோர்  ஒருவர் இருவர் அல்லர் ; பலராகவும் , அப்பலர்க்கும்  திருவடி , காட்சிப்படாமையால் கவலை எய்தினர் என்பதும் , தவத்தின் கடுமையும் , கால நெடுமையும் , காண்டற்கு அருமையும்  காரணமாக , அக் கவலை பெருகிற்று  என்பதும் தோன்ற , “நனிவாட” என்றார் .

                 அடிகள் நிரம்பிய மெய்யன்புடையராயினும் , தம் பணியில்  தமக்குக்  குறையே  காணும் இயல்புடையர் ஆதலின, தம்மை , “பாவியேன்” எனவும் , பாவ கன்மம்  உடையோனாகவும் , நின் அருட்பெருக்கம்  காரணமாக ,  “என்னைப் பணி கொண்டாய் “எனவும் கூறினர் .ஒரு பொருட் கொடையில் , கொள்வோன் தகுதியும் , கொடுப்போன் தகுதியும்  விரவி நிற்பதாகும் . ஈண்டுக் கொடுப்போன் தகுதியே விஞ்சி நின்றது , என்றபடியாம் . பணிகொண்ட நிலையில் , நின் பக்கலில் அணுகி , நின்னைத் தரிசித்துத்  தொண்டு செய்தற்குத் தடையாக இருப்பது . இம் மல பாண்டமாகிய ஊனுடலே என்பார், “மலமாக் குரம்பை “ எனவும் , இதன் ஒழிவில் , சிவாநுபவத்திற்கு உரிய  தூய்மை எய்தும் ஆதலானும் , இது தானே ஒழியும் நிலையில் இல்லாமையால் , யனே  ஒழிக்க வேண்டியது ஆகலானும் , ஆங்ஙனம் ஒழித்தற்குப் பற்று உடைமையால் , ஆற்றல் இல்லாதவனாக  இருக்கின்றேன்  என்பார் . “ இது மாய்க்க மாட்டேன் “ எனவும்  கூறினர்.  “நின் திருவடிக் காட்சி வேண்டி  உலவாக்காலம்  அரிய தவம் புரிவோர்  முற்றத்துறந்த  புண்ணிய சீலராகிய முனிவரர் ; யானோ பாவி ; அம்முனிவரர் உடம்போ  தவ வுடம்பு ; என் உடம்போ மாமலக்குரம்பை . அத்தகைய தவ உடம்பையும்  அம்முனிவர்  பொருட்படுத்தாமல்  வெறுக்கின்றனர் ; என் மலக்கூடாகிய உடம்பை  ஒழித்தற்கு  யான் துணிந்திலேன் ; இவ் ஏற்றத்தாழ்வான  நிலையில் அம் முனிவரர் அருந்தவம் புரிந்தும் நின்னைக் காணப்பெறாமல்  மிகவும்  வாட்டம்  எய்தி நிற்ப , அவர்களுக்கு  அரியனாகிப்  பாவியாகிய என்னை  வலிய  வந்து  ஆம் கொண்டனை” என்று இவ்வாறு  அடிகள் கருதினர் என்பது .   இத் திருப்பாட்டில்  சொற்பொருள் அமைப்பில் காணப்படும் உண்மையாகும் . தவத்திற்குப்  பயன்படும்  முனிவரர்  உடம்பை  உறுப்பு எனவும் , அங்ஙனம் பயன் படாதது  எனக் கொண்டு  தம் உடம்பை  மலமாக்குரம்பை  எனவும்  அடிகள்  கூறியதும்  கருதத் தக்கது . இந்நயம் இலக்கியச் சுவை நுகர்வோர்க்கும் விருந்து ஆதல் அறிக.

                   அடிகளின் அன்பு முதிர்ச்சியும் சிவாநுபவ  நுகர்ச்சிக்கு உரிய  தகுதியும் மிகப்பெரியன . அவை நம்மனோர் உள்ளத்தைக் கவரும்  பெற்றியுடையன .  அங்ஙனமாகவும்,   அவர் தம்மைப் பல இடத்தும் மிக இழிவாகக்  கூறிக்  கொள்ளுதல் , அடிமை இயல்பு  தோன்றற்கு  என்க. அடிகள் தம்மை  இழிவாகக் கூறியவற்றை  எடுத்துக்  கூறற்கு  எம் உள்ளம்  மிகக்  கவலுகின்றது. . உரை விளக்க நிமித்தம்  மேற்கொள்ளும்  இக் குற்றம் இறைவன் திருவருளால்  பொறுக்கப்படும்  என்னும்  உறுதியுடைமை  அதற்கு  ஆறுதல் அளிப்பதாகும் .

                   மூன்றாம் அடியில் , “உனைக் காண்பான் “  என்பதை “ இடைநிலைத் தீவமாகக் கொண்டு  “உனைக் காண்பான் மலமாக்குரம்பை  இது மாய்க்கமாட்டேன் “  எனவும்,  “உனைக் காண்பான் அலவா நிற்கும் அன்பிலேன் “  எனவும் இயைத்துக் கொள்க .  அலத்தல் = துன்பம் உறுதல் . நின்னைக்  காண்டற்குரிய  நெறியறியாது  துன்பம் உறுகின்றேன் என்பார், “அலவா நிற்கும் “  எனவும் , அன்பு நெறி  சிறந்தது எனக் கேட்டும் , அந் நெறி நிற்றற்கு அன்பு சிறிதும் இல்லேன்  என்பார்,  “அன்பிலேன்”  எனவுங் கூறினர். இறைவன் காட்சி பெறாமைக்கு  வருத்தமும் , நெறி நிற்றற்கு  உரிய  அன்பு இன்மையும் உடையேன் என்பது அடிகள் கருத்து.  நெறி  பலவற்றுள்ளும்  அன்புநெறி  சிறந்ததாகவும் , எளிதாக  மேற்கொள்ளத்தக்கதாகவும்   இருப்ப , அதனை  விட்டு  , எதனைப்  பற்றுக் கோடாகக்  கொண்டு உய்யக்கடவேன்  என்பார் ,  “என் கொண்டு எழுகேன் “  என்றார் .  எழுதல் = வீழ்ச்சியினின்றும்  மேலேறி  உய்தல் .

இதன்கண்,  “மலமாக் குரம்பை இது  மாய்க்க மாட்டேன்”  என்றதனால், அதன் ஒழிவே  சிவாநுபவத்தின் நிமித்தம்  உயிர் எய்தும்  தூய்மை  என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பாவியேனைப் பணி கொண்டாய்” ,  “மலமாக்குரம்பை  இது  மாய்க்க மாட்டேன்” என்பவற்றால் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                                  ***************************************************

பாடல் 55.

மானேர்  நோக்கி  உமையாள்

பங்கா  வந்திங்  காட்கொண்ட

தேனே  அமுதே  கரும்பின்

தெளிவே  சிவனே  தென்தில்லைக்

கோனே  உன்றன்  திருக்குறிப்புக்

கூடு  வார்நின்  கழல்கூட

ஊனார்  புழுக்கூ  டிதுகாத்திங்

கிருப்ப  தானேன்  உடையானே

கருத்துரை :-     முன்னைத் திருப்பாட்டில் தம் உடலை மலமாக்குரம்பை என்றும், இதனை ஒழிக்க  மாட்டாதவனாக இருக்கின்றேன் என்றும் இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் ஊனார் புழுக்கூடு என்றும் ,அப்புழுக்களுக்கு உறையுளாகவுள்ள இதனை , எனது உயிரின் உறையுளாக எண்ணிப் பாதுகாத்திருக்கின்றேனே! எவ்வாறு  உய்வேன் என்றும் இரங்குகின்றார் .

பதவுரை :-  மான் நேர் நோக்கி உமையாள் பங்கா =   மான் விழி போன்ற விழியினை யுடையாளாகிய  உமையம்மையை  ஒரு கூற்றில் உடையவனே,

இங்கு வந்து   ஆட்கொண்ட  =  இந் நில  உலகத்து வந்து  என்னை  அடிமை கொண்டு  அருளிய ,

தேனே  அமுதே  கரும்பின்  தெளிவே =  மெய்யன்பர்க்குத்  தேனும்  அமிர்தமும்  கரும்பின்  தெளிவான  சாறுமாக  விளங்குகின்றவனே ,

சிவனே  =  பேரின்ப  வடிவினனே ,

தென் தில்லைக்  கோனே =  தென்  திசைக்  கண்ணதாகிய  தில்லையில்  விளங்கும்  அரசனே,

உடையானே  =   எல்லாம்  உடையவனே,

உன் தன்  திருக்குறிப்புக்  கூடுவார்  நின்  கழல் கூட  =  நின்  திருவுள்ளக்  குறிப்புச்  சாரப்பெற்ற  மெய்யன்பர்கள்  நின்  திருவடியை  அடைய ,

ஊன்  ஆர்  புழுக்கூடு  இது  காத்து  =  யான்  ஊன்  நிறந்த  புழுக்கூடாகிய  இவ்வுடலைப்  பாதுகாத்து,

இங்கு இருப்பது ஆனேன் = இவ்வுடலில்  தங்கி  இருத்தலை  மேற்கொண்டுள்ளேன்  ( எங்ஙனம்  உய்வேன்) என்பது.

விளக்கவுரை :-    எல்லாம்  வல்ல  ஆண்டவன் ,  மெய்யன்பர்களை   ஆட்கொள்ள, உமையம்மையோடு இந்நில வுலகத்துக்கு  எழுந்தருளுங் காலத்து , அம்மை  அருள்  வடிவினள்  ஆதலின், அடிகளைப் போன்ற    உள்ளன்பு  மிக்க  தன்  மக்கள்  இறைவனாற்  புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டுமே  என்னும்  எண்ணம்  காரணமாக , அப்பெருமாட்டி  கண்களில்  மருட்சி  தோன்றிற்றோ  என்று  கருதும்படி , “மானேர் நோக்கி  யுமையாள்” என்று  கூறப்பட்டாள்  என்க.  நன் மக்களை  விரைந்து  ஆதரிப்பதில்  தாய்மை  அருள்  முற்பட்டுச்  செல்லும்  என்பதை  உலகியலிலும்   காணலாம் .  அடிகள்,  அம்மையுடனாகவே  ஆண்டவனை  நினைவு  கூறும்  இயல்பினர்  என்பதை , “உடயாளுன்றன்  நடுவிருக்கும்”  என்பது  முதலிய  திருப்பாடல்களானும் உணரலாம் . அடிகள்   தம்மைப்  பணிகோடற்கு , அம்மையுடையான   அப்பன்  வருகையே  காட்சிப்பட்டது  என்பதைப்  புலப்படுத்துவாராய்  “ உமையாள் பங்கா”  என்றார் .  ஆட்கொள்ளும்  தலைவன்   அடிமையைத்  தன்  இடத்து  வரச்செய்தே  பணிபுரியச்செய்வன்  என்பது  உலகியலிற்  கண்டது .  ஈண்டுக்  கடவுளர்  தலைவனாகிய  ஆண்டவன்  தன்  பேரருள்  திறத்தை , உலகு  அறியக்காட்டுதற்கு ,  மிக  எளியவனாகிய  என்னை  ஆட்கொள்ள,  யான்  இருக்கும்  இடம்  நோக்கி  வந்தனன்  என்பார், “இங்கு  வந்து “  என்றார் .

                   அடிமை  கொண்டால் , அவ்வடிமையைத்  துன்புறுத்துப்  பணிபுரியச்  செய்வாரும்  உளர் .  அங்ஙனம்  இன்றி , எனக்கு  மிகவும்  இனியனாகவுள்ளான் என்பார் , “தேன்”  முதலியவகக்  கூறினர் .  அமுதம்  என்பதற்குத்  தேவர்  உணவாகிய  அமிர்தம்  எனவும்,  பால்  எனவும்  பொருள்  கொள்ளலாம்.  பிற  இடங்களிலும்  அடிகள் , “தேனாய்  அமுதமுமாய்த்  தீங்கரும்பின்  கட்டியுமாய்”  எனவும் , “தேனையும்  பாலையும்  கன்னலையும்  ஒத்து “  எனவும்,  இவ்வாறே , இம்மூன்று  பொருள்களையும்  இம்முறையே  கூறியிருக்கின்றனர் .  இனிமைப்  பொருள்களாகிய  இம்  மூன்றனையும்  இம்முறையே  கூறியதில்  ஓர்  உண்மை  இருத்தல்  வேண்டும்.  மூன்றனுள்ளும்  தேன் , வடிகட்டிய  அளவில்  எடுக்கப்படுவது;  நாவிற்  பட்டதும்  மிக்க  இனிமை  செய்வது .  பால்  காய்ச்சப்பட்ட  பின்  ஓர்  அளவு  இனிமை  பயப்பது.  கருப்பஞ்சாறு  ஆலையில்  இட்டுப்  பிழிந்து  எடுக்கப்பட்டு  ,  நன்றாகக்  காய்ச்சப்பட்ட  பின்  கட்டியாகி  இனிமை  செய்வது .  இம்  மூன்றனுள்ளும் ,  தேன்,  புழுக்களின்  எச்சில்  மயமாகவும் ,  பால்,  ஊனுடலின்  சாரமாகவும்  உள்ளவை ,  பயன்  விளைப்பதில்  தேனினும்  பால்  சிறந்தது .  “பாலொடு  தேன்  கலந்தற்றே “  என்புழி , ஓடு  உருபு  உயர்  குறித்து  வந்ததும்  அறிக .  கருப்பங்கட்டி  ,  எச்சில்  ஊன்  கலப்பு  முதலிய  அக்  குற்றமும்  இலதாய் , உடலுக்கு  நலம்  பயப்பதாகும்.  இம்  முறையில்  ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால் ,  தேனைப்போல  மிக  இனியனாய்  வெளிப்பட்டு  வயப்படுத்துப்  பாலைப்போலப்  பின்  பயன்  விளைத்துக்  கருப்பங்கட்டியைப் போலத்  தூய  இன்பம்  அளித்துப்  பாதுகாப்பான்  என்பது   அறியத்தக்கது.  தேன்  சுவை  எளிமையினும் , பாற்  சுவை  அதனிற்  சற்று  அருமையினும் , கருப்பங்கட்டிச்  சுவை  அதனினும்  அருமையினும்  அறியப்படுதல்  போல,  ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால்,  முதலில்  எளியனாகவும் ,  பின்  அவன்  சொரூப நிலையை   உணர  உணர  மேன்மேலும்  பெரியனாகவும்  கானப்படுவன்  என்னும்  உண்மையையும்  பெறப்படுதல்  அறிக. “கரும்பின்  தெளிவே”  என்பது,  தெளிந்த  சாற்றினாலாகிய  கட்டியை  உணர்த்தலின்  ஆகு  பெயர்  ஆகும் . 

               இங்ஙனம்  தேன்  எனப்  பால்  எனத்   தெளிவு  என  வெளிப்பட்டு  ஆட்கொண்டு  அருளும்  ஆண்டவன் ,  முடிவில் ,  அழிவு  இல்லாத  பேரின்புறுத்தும்  இன்ப  வடிவினன்  ஆவான் என்பது  தோன்ற , “ சிவனே” எனவும் ,  இவ்வரிய  பரம்பொருள் , தம்  அளவில்  அன்றி  ,  உலகத்து  உயிர்த்  தொகுதிகளுக்கு  எல்லாம்  பொதுவான  வெளியிடத்தில்  நின்று.  ஐந்தொழில்  திருக்கூத்து இயற்றி,  எல்லோரையும்  விழிப்பித்து  அருளும்  பெற்றியன்  என்பது  தோன்ற  ,  “ தென் தில்லைக் கோனே” எனவும்  அருளிச் செய்வார் ஆயினர்.  உயிர்கள்  செய்யும்  தவ  முதலியவெல்லாம்,  இறைவன்  திருவருட்பேற்றிற்கு  ஆளாகவும்,  தட்ப வெப்பங்களைப்  பொறுத்து  இயற்றும்  கடுந்தவம்  எல்லாம்  மூலமாகிய  மெய்யன்பின்  வலியளவே  பயன்  செய்வன.  அம் மெய்யன்பு  உள்வழியே ,  ஆண்டவன்  திருவுள்ளக்  குறிப்பின்  சார்புக்கு  ஆளாகலாம் . அத்தகைய  சார்புபெற்ற  பெரியோர்  எல்லாம்,  ஆண்டவனே ,  நின்  திருவடியை  எய்தி  இன்புற்றனர்  என்பார்,  “உன்றன்  திருக்குறிப்புக்  கூடுவார்  நின்  கழல்  கூட”  என்றார்.  திருவுள்ளக்  குறிப்பிற்  கூடினார்  திருவடி  கூடினாராக,  அச்  சொல்லளவில்  ஒற்றுமையுடைய  ஒரு  கூடு  எனக்கும்  வாய்த்தது  என்பார்,  “ஊனார்  புழுக்கூடு”  என்றார் .  என்பு , நரம்பு , தசைகளால்  ஆக்கப்பட்டுப்  புழுக்களுக்கு  உறையுளாகவுள்ள  இக் கூட்டை , யான்  தங்குதற்கு  உரிய  உறையுளாக  நினைந்து , எனது  எனக்  கடைப்பிடித்து,  இதனைப்  பாதுகாத்துக்  கொண்டு  இருக்கலானேன் ;  என்  அறியாமை  இருந்தவாறு  என்னே!  என்பார்,  “ஊனார்  புழுக்கூடு  இது  காத்திங்  கிருப்பதானேன் “   என்றார் .  இதனால்  கழல்  கூடினார்,  ஊனார்  புழுக்கூட்டை  ஒழித்துக்  கூடினார்  என்பதும்  போதரும் ,  “புழுக்கூடு  இது”  என்புழிச்  சுட்டு  இழிவு  கருதிற்று.  இங்கு  =  இவ்வுடலில்   ;  இவ்வுலக வாழ்க்கையில்  எனினுமாம் . 

             இதன்கண் , “ஊனார்  புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன்”  என்றதனால் ,  அது  சிவானுபவத்திற்குத்  தடையாதலும் , அதன்  ஒழிவு,  அதற்கு  உரிய  தூய்மை  பயப்பது  என்பதும்   போதரலின் ,  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்,  தேனே  யமுதே  என்பன  முதலிய  விளிகளாலும், புழுக்கூடு  என  உடலைக்  கூட்டியதாலும்  பத்தி  வைராக்கிய  விசித்திரம்   என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                        *******************************************

பாடல் 56.

உடையா  னேநின்  தனையுள்கி

உள்ளம்  உருகும்  பெருங்காதல்

உடையார்  உடையாய்  நின்பாதஞ்

சேரக்  கண்டிங்  கூர்நாயிற்

கடையா  னேன்னெஞ்  சுருகாதேன்

கல்லா  மனத்தேன்  கசியாதேன்

முடையார்  புழுக்கூ  டிதுகாத்திங்

கிருப்ப  தாக  முடித்தாயே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ,  “ஆண்டவனே , நின்  திருவுளக்  குறிப்புச்  சார்புடையார்  நின்  திருவடி  அடைய ,  யான்  ஊனார்  புழுக்கூடு  ஆகிய   இவ்வுடலைக்  காத்திருக்கின்றேன் “  என்ற  அடிகள்  , இத்  திருப்பாட்டில்,  உள்ளம்  உருகும்  பேரன்பு  உடையார்  நின்  திருவடி  அடையக்  கண்டும்,  யான்  தீ  நாற்றம் உடைய  புழுக்கூடு  ஆகிய  இதனைக்  காத்திருக்கும்படி  செய்தனையோ?  எங்கின்றார் .  உடலைக்  காத்தல்,  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  செயலாகவும்,  இதன்கண்  ஆண்டவன்  கட்டளையாகவும்  கொண்டு  இரங்கியபடியாம் . 

பதவுரை :-  உடையானே  =  எல்லாம்  உடைய  ஆண்டவனே ,

நின்  தனை  உள்கி  =  நினைந்து  நினைந்து, 

உள்ளம்  உருகும்  பெருங்காதல்  உடையார்  = நெஞ்சம்  உருகும்  பேரன்பு  உடையார்

உடையாய் நின்  பாதம்  சேரக்  கண்டும்   =   தம்மை  உடைமையாக  உடைய  நின்  திருவடிகளை அடைந்து  இன்புறக்  கண்டு  வைத்தும் ,

நெஞ்சு  உருகாதேன்  =  உள்ளம்  கரையாதவனும் ,

கல்லா  மனத்தேன்  =  கற்று  அறியாத  மனம்  உடையவனும்  ,

கசியாதேன்  =  உள்ளக்  கனிவு  இல்லாதவனும்  ஆகிய  நான் ,

இங்கு  ஊர்  நாயின்  கடையேன்  = இவ்வுலகத்தில்  ஊர்க்குப்  பொது  நாய்  போலக்  கடைப்பட்டவனாய் ,

முடையார்  புழுக்கூடு  இது   காத்து =  தீ  நாற்றமுடைய   புழுக்கூடாகிய  இதனைப்  பாதுகாத்துக்கொண்டு,

இங்கு  இருப்பதாக  முடித்தாயே  =  இந்நில  வுலக  வாழ்க்கையிலே  இருக்கும்படி   முடிவு  செய்தனையோ?    என்பது.

விளக்கவுரை :-    ஒரு பொருளைச்  சிறப்பு  முறையில்  குறிப்பிட்டு , அதனை  உடையான்  என்னாது , பொதுவாக  உடையான்  என்றதனால் , எல்லாம்  உடையான்  என்பது  பெறப்படும்.  குறைவற   எல்லாம்  உடையான்  இறைவன்  ஒருவனே  ஆவன் .  உள்ளம்  உருகும்  பெருங்காதல், “பானலார்  கண்ணியர்க்கும்  பதைத்துருகும்  பாழ்  நெஞ்சே”  என்றபடி , காம  நிலையில்  மகளிரை  நினைந்தும்  உண்டாவதாகும் . அதனை  விலக்குதற்கே , “நின்றுனையுள்கி”  என்றார்.   இறைவனுடைய  உருவம்  , அருவம் , அருவுருவம்  என்னும்  மூவகைத்  திருமேனிகளுள் ,  முதலில்  நெஞ்சால்  நினைதற்கு  உரியது  உருவத்  திருமேனியே  .  அவ்வுருவத்  திருமேனியின்  இயல்பு  சிவா காமங்களில்  கூறப்பட்டபடியாம் . அதனை  நெஞ்சத்  தாமரை  மலர்  நடுவண்  இருத்தி  நினைவு  கூர்தல்  வேண்டும்  என்ப .  அதனையே  ஈண்டு,  “உள்கி” என்றார்.  உள்கி  யுருகுதலாவது  ,  நினைதற்குக்  கருவியாகிய  உள்ளம் .  அந் நினைவின்  முதிர்ச்சியில்  நெகிழ்ந்து  கரைதல்  ஆகும்.  உள்ளம்  முற்றும்  கரைந்த  நிலையில் ,  உயிர்  சிவ  பாவனையில்  தலைப்பட்டு ,  மலநாசமாகிய  பயன்  எய்துவதாகும் .  பலகால்  நினைந்து  நினைந்து  உள்ளம்  உருகும்  நிலையில்  உள்ள  அன்பே  பேரன்பு   ஆகும்  என்பது  குறித்து  ,  “பெருங்காதல்” என்றார் .  அப் பேரன்பு  உடையாரே  ,  “தம்மை  யுணர்ந்து  தமையுடைய  தன்னுணர்வார்  “  ஆவர்  என்பது  தோன்ற , “பெருங்காதலுடையார்  உடையாய்”  என்று  கூறப்பட்டது  என்க .  தம்மை  உணர்ந்து  தமையுடைய   தன்னுணர்வார்  என்பதற்கு  உடைமைப்பொருளாகிய  தம்  இயல்பினை  உணர்ந்து  ,  உடையான்  ஆகிய  தலைவனை  உணரும்  தத்துவ  ஞானிகள்  என்பது  பொருள் ஆகும், “பெருங் காதலுடையார்  உடையாய்  நின்பாதம்”  என்புழிப்  பேரன்புடையார்  தம்மை  உடைமைப்பொருளாக  உடையை  ஆகிய  நின்னுடைய  திருவடிகளை  என  விரித்தல்  வேண்டும் .  உடையாய்  என்னும்  குறிப்பு  வினை முற்றுப் பெயரெச்சப் பொருள் பட்டு நின்றது.  உடையாய் ஆகிய  நின்  என  விரியும் .  அத்தகைய  பேரன்பு  உடையாரே  ஆன்மாவின்  இயல்பையும் ,  ஆண்டவன்  இயல்பையும்   உணரும்  பெற்றியர்  என்பது  தோன்றற்கு  அவ்வாறு  கூறப்பட்டது  என்க.

            அத்தகைய  பரிபக்குவம்  உடைய  மெய்யன்பர்  ,  ஆண்டவனே  ,  நின்  திருவடியைச்  சார்ந்து  இன்புறக்  கண்டு  வைத்தும்  என்பார், “நின் பாதஞ் சேரக்  கண்டும்”  என்றார் .  கண்டும்  என்புழி ,  உம்மை  தொக்குநின்றது . கண்டும்  உருகாதேன்  என முடிக்க .  ஆண்டவனே,  நின்னை  நினைந்து  உள்ளம்  உருகும்  பெருங்காதலுடையார்  எய்திய  பேற்றை  அறிந்து  இருந்தும், அப்பெருங்  காதல்  கொள்ளும்  தகுதியில்லேன்  எனினும்,  அதற்கு  ஏதுவாக  உள்ள  மனம்  உருகும்  நிலையாவது எய்தினேனோ எனின் ;  அதுவும்  இன்று  என்பார் , “ நெஞ்சுருகாதேன்” என்றார் .

              உள்ளம்  உருகும்  அநுபவம்  இன்று  எனினும்,  நின் பரம்பொருள்  தன்மையும்  அடிமையாகிய  என்  இயல்பும்,  கட்டாகவுள்ள  பாசத்தின்  இயல்பும்  முதலிய  சமய  உண்மைகளையாவது  கற்றுக்  கேட்டு  மனத்  தெளிவு  எய்தினேனோ  எனின்;  அதுவும்  இன்று என்பார் , “கல்லா  மனத்தேன்” என்றார்.  ஈண்டுக்  கல்லாமை , சமய  நூல்களைப்  பற்றியதாகும் . பரஞானமாகிய  அநுபவ  ஞானத்திற்கு  ஏதுவாகவுள்ள  அபரஞானம்  அதுவாகலின்  என்பது . நெஞ்சுருகுதல்  அநுபவஞானமாகிய  பரஞானம்  ஆகும் . கற்றல் , சமயநூல்  அறிவாகிய  அபரஞானம் ஆகும்.  இரண்டும்  இல்லேன்  என்றபடி . கல்லா  மனத்தேன்  என்பதற்கு  ,  கல்லைப் போன்ற  நெஞ்சம்  உடையேன்  என்று, உரைப்பாரும்  உளர்.  அது  நெஞ்சு உருகாதேன்  என்பதனாற்  பெறப்படுவதாகும்  என்க .  கசிதல்  =கனிதல்.  குழைதல்  என்னும்  பொருள் உடையது ;  உருகுதற்கு  முன்  நிகழும்  உள்ள  நிலையாகும்.  இவ்  வுண்மையை , “கற்றறியேன் கலைஞானம்  கசிந்துருகேனாயிடினும் “  என்னும்  பாடற் பகுதியானும்  அறியலாம் .  இப்பகுதியிற்  கூறப்பட்டவை  ,  நூல்  அறிவும் அநுபவ உணர்வும்  என்பது  தெள்ளிதின்  விளக்கம்  ஆதல்  அறிக.  முதல்  அடியில்  பெருங்காதல்  உடையார்  இயல்பு   கூறுங்கால் , அவர்க்கு  நூலறிவு  கூறப்படாமைக்குக்  காரணம்,  அநுபவ  உணர்வு  விஞ்சி  நிற்றல்  என்க.  சரியை  முதல்  மேற்கொண்டு,  ஞான நிலையடைந்தாரைச்  சரியையும்  உடையார் என்று  கூறுதல்  மிகையாம்  என்பது  ஈண்டு  நினைக்கத்தக்கது.

               நாய்ப்பிறப்பே  இழிவானது . அந்  நாயும்  ஒருவனுக்கு  உரியதாக  இருப்பின் ,  உணவு  கொடுத்தும் ,  இருப்பிடம்  அளித்தும்  பாதுகாக்கப் படுவதாகும் . அங்ஙனம்  இன்றி ,  ஊர்ப்பொதுவில்  உள்ள  நாய்  ஆயின்  ,  பாதுகாப்பார்  இல்லாமையான் ,  அங்கும்  இங்கும்  இடயறாமல்  ஓடி  அலைந்து,  பலரானும்  துன்புறுத்தப்பட்டு  ,  ஒரு  நிலையின்றித்  திரிவது  ஆகும்.  அத்தகைய  ஊர்ப்பொது  நாய்  போல, மனம்  ஒருநிலையின்றி  அலைவுறத்  திரியும்  இழிவுடையேன்  என்பார், “ஊர்நாயிற்  கடையானேன்”  என்றார்.  மேலே,  “ஊரேறாயிங்  குழல்வேனோ”  எனவும்,  இங்கே ,  “ஊர்நாயிற்  கடையானேன்”எனவும்  கூறினார் . ஆண்டு  உழலுதற்கும்  ,  ஈண்டுக்  கடைப்  படுதற்கும்  எடுத்துக்  காட்டியபடியாம் .  கடையானேன்  என்பது  முற்றெச்சம். 

                 முன்னைத்  திருப்பாட்டில் , “ஊனார்புழுக்கூடு” என்றார் .  அவ்வூனின்  பயன்  தீ  நாற்றம்  என்பார்,  இதன்கண்,  “முடையார்  புழுக்கூடு”  என்று  கூறினார் .  முன்னைப்பாட்டில்  ,  “இது  காத்து  இங்கு  இருப்பதானேன்”  எனத்  தன்  செயலாகக்  கூறினர் .  யான்  இத்  தீ  நாற்றம்  உடைய  புழுக்கூட்டை   அறியாமையால்  எனது  எனப்  பாதுகாத்துக்  கொண்டு  இருப்பினும் ,  பேரருள்  உடைய  ஆண்டவனாகிய  நீயாவது  உண்மை  உணர்த்தி , இதனை  ஒழித்து  விடலாமே?  நின்  கருணைத்  திருவுள்ளத்தில்  அவ்வாறு  கொண்டால் , எனக்கு  முடை  உடற்  கழிவும்  பேரின்பப்பேறும்  எளிதில்  ஆமே?  என்  தீவினை  காரணமாகத்  திருவுள்ளத்தில்  அக் குறிப்புத்  தோன்றாமல்,  இத்  தீ  யுடலைக்  காத்துக்  கொண்டு ,  இவ்வாழ்க்கையிலே  நிலைப்படுமாறு  செய்தனையோ? என  ஆண்டவன்  கட்டளையாகக்  கூறுவார்.  “இது  காத்திங்கிருப்பதாக   முடித்தாயோ”  என்றார்.  முடித்தாயே  என்புழி,  ஏகாரம்  வினாப்பொருளில்  வந்தது.

                  இதன்கண்,  நெஞ்சுருகாமை  முதலியனவும் , புழுக்கூடு  காத்திருத்தலும் , சிவாநுபவத்திற்குத்  தடை  என்பதும் ,  உருகுதலும்  , உடலின்  ஒழிவும்  ,  அதற்குரிய  தூய்மை  பயப்பன  என்பதும்  பெறப்படுதலின் ,  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , நெஞ்சுருகுதல்  வேண்டும்  என்னும்  குறிப்பினாலும் ,  முடையார்  புழுக்கூடு  என்னும்  வெறுப்பினாலும் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                                  ************************************************

பாடல்  57. 

முடித்த  வாறும்  என்றனக்கே

தக்க  தேமுன்  அடியாரைப்

பிடித்த  வாறுஞ்  சோராமற்

சோர   னேனிங்   கொருத்திவாய்

துடித்த  வாறுந்  துகிலிறையே

சோர்ந்த  வாறும்  முகங்குறுவேர்

பொடித்த  வாறும்  இவையுணர்ந்து

கேடென்  றனக்கே   சூழ்ந்தேனே

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டுக்களில் , “ஊனார்  புழுக்கூடு “  எனவும் “முடையார்  புழுக்கூடு”  எனவும்  இழித்துக்கூறப்பட்ட  உடலைப்  பாதுகாத்துப்  பொய்யுலக  வாழ்க்கையில்  இருக்க  நேர்ந்ததே  என்று  இரங்கிய  அடிகள் ,  இத்திருப்பாட்டில் , அவ்வுடற்பற்று  அளவில்  அன்றி,  அது  காரனமாக  விளையும்  காம  விளைவிற்கும்    ஆளாகி  அழிவேன்கொல்  என்று    வருந்துகின்றார்.

பதவுரை :-   என்  தனக்கு  முடிந்தவாறும்  தக்கதே  =  எனக்கு  (இவ்  வூன் உடலைக்  காத்து  இங்கு  இருக்கும்படி ) முடிவு  செய்ததும்  பொருத்தமே,

முன்  அடியாரைச்  சோராமல்  பிடித்தவாறும்  தக்கதே  =  முன்னர்  மெய் யன்பரைத்  தளரவிடாமல்  அணைத்துக் கொண்டதும்  பொருத்தமே ,

சோரனேன்  =  கள்வனாகிய  யான் ,

இங்கு  ஒருத்தி  வாய்  துடித்தவாறும்  =  இவ்விடத்து  ஒரு  மாயைப்  பெண்ணின்  வாய்  இதழ்  துடித்த  விதமும் ,

துகில்  இறையே  சோர்ந்த  வாறும்  =  ஆடை  சிறிது  நழுவிய  விதமும் ,

முகம்  குறுவேர்  பொடித்தவாறும்  =  முகத்தின்  நின்றும்   சிறு  வியர்  அரும்பிய  விதமும் , 

இவை  உணர்ந்து  என்  தனக்கே  கேடு  சூழ்ந்தேனே   =  ஆகிய  இவற்றை  அறிந்தும்  எனக்கே  யான்  கேடு  தேடிக்  கொள்ளல்  ஆயினேன்  என்பது .

விளக்கவுரை :-   பாசப்  பிணிப்புண்டு ,  பண்டை வினைப் பயன் நுகர வேண்டியதாக இருத்தலான் , முடையார் புழுக்கூடு  ஆகிய இவ்வுடலைக் காத்துக் கொண்டு  , என்னை  இங்கு  இருக்கும்படி  முடிவு  செய்ததும், வினை எச்சம்  இன்மையால் பிறவியிற்  புகுத்தாது,  மெய்யன்பர்களைத் தளர  விடாமல் திருவடி  நிழலில்  சேர்த்துக்கொண்டதும்  பொருத்தம்  என்றார் .

                     “முன்”  என்பது , அடிகளுக்கு  ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி , ஞானோபதேசஞ்  செய்த  காலத்தைக்  குறிக்கும் . அப்பொழுது  மெய்யன்பர்கள் பலர்  சூழ்ந்து இருந்தனர்  என்பதும் , இறைவன்  உருக் கரந்த ஞான்று , அவர்  எல்லோரையும் தன்  திருவடி நீழலில் சேர்த்துக்கொண்டனன்  என்பதும் , அடிகள் வரலாற்றானும் , “அருளாரமுதப்  பெருங்கடல்வய் அடியாரெல்லாம் புக்கழுந்த” என்னும்  பாடற்பகுதியானும்  உணரலாம் . மலக்கட்டுடையாரை , அது  நீங்குங்காறும்  கன்மப் பயனாகிய உடலோடு கூடியிருக்கச் செய்தலும் , அஃதில்லாத  மெய்யன்பரை அழிவில் இன்பத்திற்கு ஆளாக்கிக்கோடலும்  இறையருட்  செயல்கள் ஆகும்.  “தன் கடன் அடியேனையுந்  தாங்குதல் “ என்றபடி, பக்குவ முதிர்ந்த ஆன்மாக்களை , மீண்டும்  மல வாசனை பற்றாமல் காத்து  அருளுதல்  இறைவனுக்குரிய  பொறுப்பு  ஆகும் என்பது குறித்து , சோராமற் “பிடித்தவாறும்” என்றார், “தக்கதே” என்பதை, “முடித்தவாறும்”   “பிடித்தவாறும்” என்னும்  ஈரிடத்தும் இயைத்துக்  கொள்ளல் வேண்டும் .

                        வினை யெச்சம் காரணமாக , யான் இவ்வூன் உடலைக் காத்திருக்க  முடிவு  செய்தனை யாயினும் , அம்மட்டில்  அமையாமல் , இவ் வுடற்  பற்றுக் காரணமாக மேன்மேலும் வினை விளைவு  கிளைக்கின்றதே ! ஆண்டவனே , என் செய்வேன் ! என்று  அடிகள் வருத்த மேற்கொண்டு , அவ் வினை விளைவுகளுள் , ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டுவார் ஆயினர் . அந் நிகழ்ச்சி ; ஒரு பெண் , தம் முன்னிலையில் நின்று , காமச் செயல்களைக் காட்ட , அச்செயல்கள் தீங்கு பயப்பன என்று  அறிந்திருந்தும் , சிறிது மனம் சென்றதாகக்  கொண்டு  இரங்கியதாகும் . இத்தகைய நிகழ்ச்சி உலகியலில் எளிதாக நிகழ்வது உண்டு . இங்ஙனம் நிகழுங்கால் , உண்மை அறிந்து அகப்படாமல் விலகி  உய்ய வேண்டும் என்று உலகினார்க்கு அறிவுறுத்தற் பொருட்டு , அடிகள் தம் மேல்  ஏறிட்டுக் கூறுவார் ஆயினர்.  அடிகள் திருவருட் பேற்றிற்கு ஆளான பெருமை  அளவிடற்கரியது . அங்கனமாகவும் , தம்மையும் தம் செயல்களையும் மிக இழிவாகக்  கூறிய  இடங்கள் பலவாகும் . அப்படிக் கூறிய  நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அடிகளை  ஆளாக்கல் நம்மனோர்க்குத் தகுதியன்று.  மற்றை அடியார்களும் , பொதுவான மக்களியல்புகளை  ஓரோவிடங்களில்  தம் மேல் ஏற்றிக் கூறியிருப்பதை  அறிகின்றோம்.

             இனி, ஞானாசிரியனாக  எழுந்தருளிய  ஆண்டவன் , “இன்னும் சின்னாள் இருத்தி” என  உருக் கரந்தபின் , அடிகள் , இத் தீயுடலை ஒழித்து , ஆண்டவன்  திருவடியடைதல்  எப்பொழுது கூடுமோ என்று கவன்று  இருக்குங்கால் , அவர் உள்ளம்  உலகவாதனை எதிர்ப்பட்ட   நிலையிலும் , அதன்கண்  ஈடுபடாமல்  இருக்க , ஆண்டவன்  திருவுளங்கொண்ட  குறிப்பின் வழி ,  மாயையின்  படைப்பாக  ஒரு  பெண் அடிகள் முன்னிலையில் காமச்  செயல்களைக்  காட்டி  நடித்ததாகவும்  கொள்ளலாம்.  “மாயை  மயக்கமும்  செய்யுமன்றே “ என்பது   சிவஞான சித்தி , அந் நடிப்புக்களை   நஞ்ச நடிப்புக்கள் என்றே அடிகள் உணர்ந்தனர் என்பதை , இவை “யுணர்ந்தும் “ என்பதனால் அறியலாம் . அங்ஙனம்  அறிந்தும் , அக் காட்சியில்  சிறிது  மனஞ் சென்றது குறித்து , “கேடு என்றனக்கே  சூழ்ந்தேனே “ என்றார் என்க . அம் மாயைப் பெண்ணின் காமச்  செயல்கள்  பல  ஆயினும் , ஓரளவிற் சுருக்கிக்  கூறத் தொடங்குகின்றார் .  கரவிற்  கவர்ந்த பொருளைப்  பிறர் அறியாவாறு  அநுபவிக்கக்  கருதும்  கள்வர்  இயல்பை  ஒத்துத்  தனிமையில்  நடித்த அம்மாயப்பெண்ணின்  செயல்களைப்  பிறர்  அறியாத  நிலையில்  காண  நேர்ந்தது  பற்றித் தம்மை , “சோரனேன்” என்றார்.

              முதலில்  அப்பெண்  தோன்றி , என்னவோ  சில  காமச்செய்திகளைக் கூறத் தொடங்கினாளாக , காதல் மிகுதியால் தன் வயம் இழந்ததாக  நடித்து , பேச இயலாமல் வாய் இதழ் துடித்த அளவில்  நின்றாள் என்பார், “ஒருத்தி வாய்  துடித்த வாறும் “ எனவும் , பேச இயலாத நிலையில் , உடுத்த ஆடையின் ஒருகூறு சிறிது நெகிழ விட்டதாகக் கொண்டு , “துகில் இறையே சோர்ந்தவாறும் “ எனவும்  கூறினர். இவ் விருவகைச் செயல்களாலும் அடிகள் உள்ளம் நெகிழாமை  கண்டு  , இனி என் செய்வல் என்று வருத்தம் தோன்ற  நின்றாளாக , அத் துன்பநினைவினால்  அவள் முகத்தில் சிறு வியர்வு உண்டாயிற்றாம் . அதனையே  , “முகங்குறுவேர்  பொடித்தவாறும்”  என்றார் . நினைவின்  வெப்பத்தால்  சிறு வியர் அரும்புதல் இயல்பே . பொடித்தல் = அரும்புதல் .  மன மொழி மெய்களாகிய முக்கரணங்களும்  காம  வயப்பட்டன என்பதற்கே  இம்மூன்று செயல்களும் கூறப்பட்டன  என்க. வாய் துடித்தலால்  மொழியும் , துகில்  சோர்ந்தலால் மெய்யும் , முகம் வியர் பொடித்தலால்  மனமும்  காமவயப்பட்டன என்பது.

         இப் பாடற் கருத்தையே , துறவறச்  செல்வராகிய  சிவஞான முனிவரர் , கலைசைப்  பதிற்றுப்  பத்து  அந்தாதியில் அமைந்து , “சுரி குழன் மடவார் இளமுலைப் பணைப்பும்  துகிலிறை சோர்வதும்  நகையும் , வரிவிழித் தொழிலும்  சேயிதழ்த் துடிப்பும் மனத்திடை யெழுதி வைத்தழிவேன்” என்றார். இச் செயல்கள் தீமை விளைவிப்பன என்று அறிந்திருந்தும் என்பார், “இவை  யுணர்ந்தும்”என்றார்,உம்மைவிகாரத்தால் தொக்கது . இக் காமச்செயல்களில் தாம் அகப்படவில்லையாயினும் , இக் காட்சியில் சிறிது மனம் சென்றது குறித்து , அதனால் விளையும் கேட்டினை யானே தேடிக்கொண்டவன்  ஆயினேன் என்பார், “கேடென்றனக்கே சூழ்ந்தேனே” என்றார் . சூழ்தல் = ஆராய்ந்து தேடிக்கொள்ளுதல் .  ஆண்டவனே , ஊனுடலில் இருக்கச் செய்தல் , இத்தகைய காம முதலிய குற்றங்களுக்கு மேன் மேலும்  ஆளாக நேருமே , அங்ஙனம் நேராதபடி , இத் தீயுடலை  ஒழித்து , என்னை ஏற்று கொள்ளல்  வேண்டும் என்பதே இத் திருப்பாட்டிற்  போந்த கருத்து எனக் கொள்க.

            இதன்கண் “இவையுணர்ந்து  கேடென்றனக்கே சூழ்ந்தேனே” என்றதனால் , இத்தகைய செயல்களில்  ஈடுபடாமையே  சிவானுபவத்திற்கு  உரிய உயிரின் தூய்மை ஆகும் என்பது பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல் அறிக.

                                                ***********************************

பாடல் 58.

தேனைப்  பாலைக்  கன்னலின்

தெளிவை  யொளியைத்  தெளிந்தார்தம்

ஊனை  உருக்கும்  உடையானை

உம்ப  ரானை  வம்பனேன்

நானின்  அடியேன்  நீ யென்னை

ஆண்டா  யென்றால்  அடியேற்குத்

தானுஞ்  சிரித்தே  யருள  லாந்

தன்மை  யாமென்  தன்மையே

கருத்துரை :-    முடையார்  புழுக்கூடாகிய  ஊனுடலைப் பற்றி நிற்பதோடு  அமையாது , காமம்  முதலிய  குற்றங்களுக்கும்  ஆளாகி  அழிவேனோ  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக் கூறிய  அடிகள் , அத்தகைய  இழிதகவு  உடையேன் , யாவர்க்கு மேலாம்  அளவிலாச்  சீருடைய  நின் அடிமை என்றால் , அஃது  எள்ளி  நகையாடற்கு  உரியதாகும் . ஆதலின், ஆண்டான்  அடிமைப் பொருத்தம்  இன்மையைத்  திருவுள்ளம்  கொள்ளக்  கூடுமோஎன, இத் திருப்பாட்டில்  இரங்குகின்றார்.

பதவுரை :-   தேனைப்  பாலைக்  கன்னலின்  தெளிவை   =   

தன்னை  அடைந்தார்க்குத்  தேனும்  பாலும்  கருப்பஞ்சாற்றின்  தெளிவுமாக  உள்ளவனும்,

ஒளியை  =  பேரொளிப்  பிழம்பினனும் ,

தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை  =  தன்னைப் பரம் பொருள் எனத்  தெளிந்த மெய்யன்பர்களின் ஊன்  உடலை  உருக்கும் உடையவனும்,

உம்பரானை  =   மேலாகிய  சிவபுரத்து அரசனும் ஆகிய  ஆண்டவனை நோக்கி,

வம்பனேன்  =  வீணனாகிய  யான் ,

நான் நின் அடியேன்  நீ என்னை  ஆண்டாய் என்றால்   = யான் உனக்கு  அடிமையாவேன்  நீ எனக்கு  ஆண்டவன்  ஆவாய்  என்று  கூறினால் ,

அடியேற்குத்  தானும்  சிரித்தே  அருளலாம் தன்மை ஆம்  என் தன்மை  =

அடியேனைக் குறித்து  அப்பெருமான்  நகைத்தே   அருளலாம்  தன்மையாகும்  என்  இயல்பு   என்பது.

விளக்கவுரை :-  ஆண்டவன்  மெய்யன்பரை  ஆட்கொள்ளுங்கால்  தேனைப் போல  எளிமையில்  இனிமை  பயந்து  அவரை  வயப்படுத்தும் , பின்னர்த்  தன்னை உணர்ந்து  உணர்ந்து  நெருங்குந்தோறும் பாலைப்போலத்  தன்  அரிய  இயல்பையும்  பயனையும்  அவர்க்குப்  புலப்படுத்தும் , அதன்  மேல்  கருப்பஞ்சாற்றுத்  தெளிவினால்  ஆக்கப்பட்ட  கட்டியைப்  போல்  மிக  அரிய  தன்  இயல்பை  உணர்த்தித்  தூய  இன்பத்தை  அருளியும்  பாதுகாப்பன்  என்பது  தோன்ற , “தேனைப்  பாலைக்  கன்னலின்  தெளிவை  “  என்றார்.  தெளி= தெளிந்த  சாற்றினால்  ஆக்கப்படும்  கட்டியை  உணர்த்தலின்  ஆகுபெயர்  ஆகும்.  இம் மூன்று  பொருள்களையும்  இம் முறையிற்  கூறிய  கருத்தும்  பிறவும்  55  ஆம்  திருப்பாட்டின்  விளக்கத்திற்  காண்க.

                இங்ஙனம்  இனிமைப்  பொருளாக  உள்ள  அப் பெருமான்  , தூய  ஞானப்பிழம்பாக   வுள்ளான்  என்பது  தோன்ற, “ஒளியை”  என்றார்.  கதிரவன்  முதலிய  மண்டிலங்களுக்கு  எல்லாம்  ஒளி  உதவும்  மூல  ஒளியாக  உள்ளான்  இறைவன்  என்று  மறை  யாகமங்கள்  கூறும் . “காளத்தியுள்ளிருந்த   ஒளியே” என்பது  தமிழ்மறை .  ஞானமயமான  பொருள்களில்  தோன்றும்  இன்பம்  சிறந்தது  என்பது புலப்படுக்கத்  தேன்  முதலிய  இனிமைச்  சுவை  மிக்க  பொருள்களாகவும் ஒளிப்பொருளாகவும்  கூறியருளினார் . 

                   தெளிந்தார் =  இறைவனைப்  பேரின்ப  மயமான  ஞான  வடிவினன்  என்று  நூல்  அறிவினால்  ஐயம்  திரிபு  அற  அறிந்து,  ஞானாசிரியன்  உபதேச  முகமாக  அநுபவ  உணர்வினர்  தெளிந்த  மெய்யன்பர் , அங்ஙனம்  தெளிந்து, தன்  அருள்  அமுதத்தை  உண்ண   உண்ண , உள்  ஒளியைப்  பெருக்கி , ஊனுடலைக்  கரையச்செய்பவன்  என்பார், “ஊனையுருக்கும்  உடையானை” என்றார்.  ஞானாநுபவம்  உடையார்க்கு,  தவத்தினால்  ஊனுடல்  சுருங்கச்  சுருங்க,  உள்ளொளியாகிய  ஞானம்  மிகும்  என்பதை , “ஊனினை  யுருக்கி  யுள்ளொளி பெருக்கி “  என்னும்  அடிகள்  திருவாக்கானும்  அறியலாம்.  பிணியின்  நலிவினால்  ஊனுடல்   சுருங்குதலை  உலகத்து  மக்களிடைக்  காணலாம் . அதனால்  உண்டாம் பயன்  துன்பமே  அன்றிப்  பிறிது  இன்று.  தவச்  செயலினால்  ஊனுடல்  சுருங்குமாயின்,  உள்  ஒளி  பெருகப்  பெற்று , அதனால்  சிவானந்த அநுபவமாகிய  பயன்  எய்துவதாகும்.  ஒரு  மகனுக்கு  உடல்  இளைப்பு  , நோயினால்  இல்லாமல்  தவத்தினால்  உண்டாயின் , அது  சிறந்தது  ஆகும்  என்பதை,  “விரதம்தனில்  இளைத்த  மேனி” என்பதனால்  அறியலாம் .  ஊனுடலும்  இறைவன்  உடைமையாகும்  ஆதலின்,  அதனை  உருக்குதற்கு  உரிய  உரிமையும்  அப்பெருமானுக்கே  உண்டு   என்பதைப்  புலப்படுத்த , “உருக்கும்  உடையானை”  என்றார்.  ஊன்  உருகிய  நிலையில்,  இறைவன்  அவ்வுயிர்க்கு  ஒளிமயமாகிய   தன்னை  வழங்கும்  இயல்பினன்  என்பதையும்  குறிக்கொண்டே முன்னர்,  “ஒளியை”  என்று  கூறினர்  என்பதும்  ஒன்று. இந் நிலவுலகத்துள்ள  உயிர்த்  தொகுதிகளையும்  ,  பெளதிகப்  பொருள்களையும்  தனக்கு  அடிமையாகவும் , உடைமையாகவும்  கொண்டு  விளங்கும்  தலைவனாகிய  சிவபெருமானே , எல்லா உலகங்களுக்கும்  , தேவர்  முதலியோர்க்கும்  தலைவன்  என்பது  தோன்ற , “உம்பரானை”  என்றார்.  உம்பர்  =  மேல்  உலகமாகிய  சிவலோகமும்  சிவபுரமும்  ஆம்.  அதற்கு  அரசன்  என்றதனால்,  முழுமுதல்  தலைமை  பெறப்படுவதாகும் .  “உம்பர்கட்கரசே” என்பது  அடிகள்  திருவாக்கு. 

                 ஒரு  சிறந்த  குறிக்கோளை  மேற்கொண்டு  அதற்குரிய  தவச்  செயலில்  ஈடுபடாமல் ,  உடலை  ஓம்பி,  இவ்வுலக  வாழ்க்கையில்  பயன்  அற்ற  செயல்களை  மேற்கொண்டு  ஒழுகும்  இயல்பினன்  யான்  என்பார், தம்மை, “வம்பனேன்”  என்றார் . “தவஞ்செய்வார்  தங்கருமஞ்செய்வார்   மற்றல்லர் ,  அவஞ்செய்வார்  ஆசையுட்பட்டு”  என்னும்  பொருள்  உரைப்படி,  தவம்  அல்லாத  செயல்கள்  எல்லாம்  பயனற்ற  செயல்கள்  என்பது  தெளிவாம் என்க.  சரியை  முதலிய  தவச் செயல்கள்  உடையாரே,   ஆண்டவனுக்குச்  சிறந்த  அடியார்  ஆவார் . அச் செயல்கள்  இன்றி ,  அவச்செயல்களையுடைய  வீணன்  ஆகிய  யான்,  அடியாரைப் போலப்  பொய்மையாக  நடித்து,  உயிர்க்கு  உயிராக  நின்று,  அவரவர்  நன்று  தீதுகளை  உணரும்  எம்பெருமானை  நோக்கி ,  “நான் நின்  அடியேன்”  என்றால் ,  அது தவச்செயல்  இல்லாமையாகிய  குற்றத்தோடு  ,  பொய்மை  கூறிய  குற்றமும்  ஆம் என்பதும்,  அவ்வளவில்  அன்றி , ஆளுதற்கு  உரிய  தகுதியைப்  பகுத்து  உணரும்  ஆற்றல்  இறைவனுக்கு  இன்று  என்பது  பெறப்படுமாறு , “நீ  யென்னை யாண்டாய் “ என்றால் ,  அதனினும்  பெரும்  குற்றம்  ஆம்  என்பதும்  அடிகள்  கருத்து .  இன்னோரன்ன  குற்றங்கள்  விளையுமாறு  அடிகள்  ஆண்டவனை  நோக்கித்  தகுதியில்லாத  தம்மைக்  குறித்து, “நான் நின்  அடியேன்”  எனவும்,  தகுதி  உணராது  ஆட்கொண்ட  குறைதோன்ற  ,  “நீ  யென்னை  ஆண்டாய் “எனவும்  கூறினால் , அஃது  எள்ளி  நகையாடற்கு  உரியதாம்  என்பார்,  “சிரித்தே  யருளலாம்  தன்மை” என்றார் . தான்  என்பது  படர்க்கைப்  பெயர் ; அப்  பெருமான்  என்னும்  பொருட்டு.  உம்  –தவிர்வழி  வந்த  சாரியை  .  யான்  கூறிய  பொருந்தா உரைக்கு  என்னைக்  கடுந்தண்டத்தால் ஒறுத்து  அடக்க  வேண்டியது  இருக்க,  பேரருள்  உடைமையால் அங்ஙனம்  செய்யாமல் , தந்தையின்  முன்னிலையில்  அறியாப்  பருவத்துக்  குழந்தை  கூறிய  பொருந்தாஉரையைக்  கேட்டு  நகையாடல்  போல  ,  அப்பெருமான்  சிரித்து  அருள்வன்  என்பது அடிகள்  கருதியது  என்க.  அடியேற்கு  என்புழி , நான்கன்  உருபை  இரண்டன்  உருபாக்கல் வேண்டும் .  “சிரித்தே”  என்புழி,  ஏகாரம்  தேற்றப்பொருட்டு ,  இது நகைத்தற்கே  இடனாகும்  அன்றி , உண்மை  ஆகாது  என்பது.  என் இயல்பு ஆண்டவன் எள்ளிநகையாடற்கு  உரியதே  அன்றி  வேறு  பயன்  விளைப்பது  அன்று  என்பார் , “சிரித்தே யருளலாம்  தன்மையாம்  என்  தன்மையே” என்றார்.  அடிகள்  தம்  பொருந்தா  உரையைக்  கேட்டாவது  ஆண்டவன்  வெளிப்பட்டு  நகைத்து  அருளுவான்  ஆயின் , அவ்வளவிற்  பேறுடையேன்  ஆவேன்  என்பது  அவர்  தம்  உட்கோள்  என  இத்திருப்பாட்டில்  தெளியலாம்.  “ஒறுத்தல்  ஒன்றும்  போதுமே” என்னும்  அடிகள்  திருவாக்கு  ஈண்டு  நினைக்கத்தக்கது . 

               இதன்கண்,  “சிரித்தே  யருளலாம் தன்மையாமென் தன்மையே”  என்றதனால்,  சிவாநுபவத்திற்குரிய   தூய  தன்மை  மெய்யடிமையால்  உண்டாவது  என்பது  பெறப்படுதலின்  அநுபோக  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக .

                                            *****************************************

பாடல்  59.

தன்மை  பிறரால்  அறியாத

தலைவா  பொல்லா  நாயான

புன்மை  யேனை  ஆண்டையா

புறமே  போக  விடுவாயோ

என்னை  நோக்கு  வார்யாரே

யென்நான்  செய்கேன்  எம்பெருமான்

பொன்னே  திகழும்  திருமேனி

யெந்தாய்  எங்குப்  புகுவேனே.

கருத்துரை :-      முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  பெருமையையும்  தம்  சிறுமையையும்  நோக்கத்  தம்மைப்  பொறுத்த அளவில் ,  ஆண்டான்  அடிமைத்  திறத்தில்   பொருத்தம்  இன்மை  திருவுள்ளம்  பற்றக்  கூடுமோ என்று  ஐயுற்று  இரங்கிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில் , யான் சிறுமையாளனாக  இருந்தாலும் , ஆட்கொண்ட  நீ  எங்ஙனம்  கைவிடக்  கூடும்?  அங்ஙனம்  கைவிட்டால், இனி,  எங்குப்  புகல்  அடைவேன் ?  என்று  இறைவனை  முன்னிலைப்படுத்து  இரங்குகின்றார் .

பதவுரை :-  தன்மை  பிறரால்  அறியாத  தலைவா   =   தன்   இயல்பு  பிறரால்  அறியப்படாத   தலைவனே ,

பொல்லா நாயான  =  தீங்கு  மிக்க  நாய்  போன்ற ,

புன்மையேனை  ஆண்டு  =  சிறுமையுடைய  என்னை  ஆட்கொண்டருளி ,

ஐயா  புறமே  போக  விடுவாயோ  =  ஐயனே  புறத்தே  செல்லவிட்டு  ஒழிப்பாயோ,

என்னை  நோக்குவார்  யாரே  =  ( அங்ஙனம்  விடுவாய்  ஆயின் )  அடியேனைக்  கடைக்கணிப்பார்  பிறர்  யாரோ? ,

எம்  பெருமான்  =  எங்கள்  ஆண்டவனே , 

நான்  என்  செய்கேன்  =   யான்  யாது  செய்ய  வல்லேன் ,

பொன்  திகழும்  திருமேனி  எந்தாய்  =  பொன்  மயமாக  விளங்கும்  திருமேனியை  உடைய  என்  தந்தையே ,

எங்குப்  புகுவேன்  =   வேறு  எவ்விடத்தைப்  புகல்  அடைவேன்  என்பது ..

விளக்கவுரை  :-    இப் பாடலின்  தொடக்கத்தில்   கடவுள்  தலைவன்  இலக்கணம்  மிகச்  சிறந்த  முறையில்  தெளிவுறுத்தப்பட்டுள்ளது.  உலகத் தலைவன்  ,  கடவுள் தலைவன்  என  இரு  திறப்படும்  தலைவருள் , உலகத்  தலைவனாகிய  அரசனை ,  உலகத்துள்ள  மற்றை  மக்கள்  எல்லோரும்  நன்கு அறிவர் ;  அத்  தலைவன்  குணஞ்செயல்களையும்  வரையறுத்து  உணர்வர்  .  அத்  தலைவன்  பிறர்  எல்லோரையும்  அறியான் , அன்னார்  குணம்  செயல்கலையும்  நன்கு  உணரான் .  கடவுள்  தலைவனாகிய  இறைவனோ , பிறர்  எல்லாரையும்  ஒருங்கு  அறிவன் ; அன்னார்  குணம்  செயல்ளையும்   “அவனன்றி  யோரணுவும்  அசையாது”  என்றபடி , உயிர்க்கு  உயிராக  நின்று  நன்கு  உணர்வன .  பிறர்க்கு  அப்பெருமான்  பெற்றி  உணர்தல்  அரிதாகும் .  இக் கருத்துக்களை   அடக்கியே , “தன்மை  பிறரால்  அறியாத  தலைவா” என்று  சிவபெருமான்  சிறப்பிலக்கணத்தை   அருளிச்செய்வாராயினர் . “பெற்றி  பிறர்க்கரிய   பெம்மான் “  என்று  அடிகள்  பிறிதோறிடத்துக்  கூறியதும்  இக்  கருத்துப்பற்றியே .  அடிகள் , தம்மை  ஆட்கொண்ட  ஆண்டவன் ,  தலைமை  இலக்கணம்  எல்லாம்  நிரம்பப்  பெற்றவன்  என்பதைக்  குறிப்பிட்டு , அப் பெருமான்  தகுதிக்கேற்றபடி  ,  அவனால்  ஆட்கொள்ளுதற்கு  உரிய  அடிமை  இலக்கணம்  தன்பால்  சிறிதும்  இன்று  என்பதைப்  புலப்படுத்துவாராய் ,  “பொல்லாத  நாயான  புன்மையேனை  “  என்றார்.  நாய் , பிறப்பினால்  இழிவும்,  நன்றியறிவினால்  உயர்வும்  உடையதாகும் .  ஈண்டு  உயர்வுக்கு  ஏதுவாகிய  நன்றியறியும்  நலத்தை  ஒழித்துப்  பிறப்பினால்  இழிவுடையது  என்பார்,  “பொல்லா  நாய் “  என்றார்.  ஆக்கம் ,  உவமப்  பொருட்டு .

            அடிமைக்குத்  தகாத  சிறு  குணங்கள்  பலவும்  உடையோன் என்பார், “புன்மையேனை” என்றார் .  என்  புன்மையை  அறிந்தும் , நின்  பேரருள்  காரணமாக  என்னை  ஆட்கொண்டனை  எனவும்  ,  அறிந்து  ஆட்கொண்டபின், என்னைப்  புறத்தே  தள்ளிவிடல்  எவ்வாறு  அமையும்  எனவும்  கூறுவார் , “ஆண்டு  புறமே  போக விடுவாயோ” என்றார் . இதனால், இறைவனால்  ஆட்கொள்ளப்பட்டவன் , “மீளாஅடிமை  யுனக்கே யாளாய்”  என்றபடி, அவ்வடிமையினின்றும்  மீட்சி  பெற்றுப்  பிறிதிடஞ்  செல்ல  நேராது  என்பதும்  போதரும்  . “புறமே  போகவிடுவாயோ”  என்றதனால், “யான்  அடிமைக்கு  உரிய  தகுதி  இல்லேன்  “ எனினும்  என்னை  அறிந்து  ஆட்கொண்ட  நின்  பெருமை  சிறந்தது  ஆகலின் , அதற்கு  இழுக்கு  நேராவண்ணம்  என்னைப்  புறம்செல்ல  விடமாட்டாய்” என்னும்  அடிகள்  உட்கோள்  புலனாதலும்  அறிக.  இவ்  வுட்கோள்  பற்றியே , ஈண்டு, ஆண்டவனை  விளக்குங்கால் , உயர்ந்தோய்  என்னும்  பொருள்  தோன்ற , “ஐயா” என்று  அருளிச்  செய்தனர் .  ஒருவாறு  என்  பொல்லாங்கு  குறித்து  நின் பெருமையையும்  கருதாமல்  என்னைப்  புறத்தே  தள்ளிவிடுவாய்  ஆயுன் , சிறந்த தலைவனால்  ஆட்கொள்ளப்பட்டும்  , விலக்கப்பட்டவன்  என்று  கருதிப்  பிறர்  யாரும்  என்னைக்  கடைக்கனிக்க  மாட்டாரே என்பார்,  “என்னை  நோக்குவார்  யாரே”  என்றார் . ஒரு  சிறந்த  தலைவனுக்கு  ஆட்பட்டான்  ஒருவன்  எக் காரணத்தை  முன்னிட்டேனும்  விலக்கப்படுவான்  ஆயின், அத்  தலைவன்  பெருமைக்கு  அஞ்சிப்  பிறர் யாரும்  அவ்  வடிமையை  ஏற்றுக்கொள்ளமுற்படார்  என்பதும், முற்படினும், சிறந்த  தலைவனுக்கு  ஆளாயபின் , அத் துணைச்  சிறப்பில்லாத  இழிந்தார்க்கும்  ஆளாதல்  மிகவும்  இழிவு  தருவதென்று  அவ் வடிமையும்  பிறிதிடம்  செல்ல  ஒருப்படான்  என்பதும்  உலகியலில்  காணப்படுவன.  இக்  குறிப்பும்  , “என்னை நோக்குவார் யாரே” என்னும்  தொடர்  மொழியால் புலப்படுதல்  அறிக .

               ஆண்டவனே, நீ என்னைக்  கை விடுவாய்  ஆயின் , ஆதரிக்கும்  பிறர்  யாரும்  இன்மையால்,  இந்நிலையில்  யான்  செய்யத்தக்கது  யாதுளது  என்பார், “என்  நான் செய்கேன்  “ என்றார் .  ஈண்டு , என்னை  ஆண்டவனாகிய  நீ இருக்க  , அடிமையாகிய  யான்  செய்யத்தக்கது  எதுவும்  இன்று  என்பதைக் குறிக்கொண்டு  ,  “எம்பெருமான் “ என்று  விளித்தனர் .

                  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அளித்த  திருக்காட்சி, கண்கொள்ளாக்காட்சியாக  அடிகள்  கண்டு  இன்புற்றவர்  ஆதலின்,  ஞானாசிரியனாகிய  அப்  பெருமான் திருவுருவத்தை  உள்ளக்கிழியில்  எழுதிக்கொண்டு , “பொன்னே  திகழும்  திருமேனி”  என்றார்.  அத்  திருமேனியைச்  சுட்டிக்  கூறக்  கருதுங்கால்  ,  அப்  பெருமான்  தன்  பேரானந்தப்  பெருஞ்செல்வத்தை  அநுபவிக்குமாறு   சிறப்பு  முறையில்  தமக்கு  உபதேசித்த  தந்தை  எனக்கொண்டு , “எந்தாய்”  என்றார்.  சிறந்த  தந்தையின்  செல்வத்தை  அநுபவிக்கப்  பிறந்த   மைந்தனாகிய  யான் , அத்  தந்தையிடத்தை  விட்டு , வேறு  எங்குச்  செல்வேன்  என்பார், “எங்குப்  புகுவேனே” என்றார் .

                    இத்  திருப்பாட்டில்  ஒவ்வோர்  அடியிலும்  குறிப்பிட்ட  கருத்துக்கு  ஏற்ப  இறைவனை  விளித்திருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .  “தலைவா”,  “ஐயா” ,  “எம்பெருமான்” , “எந்தாய்”,  என  முறையே  நான்கு  அடிகளிலும்  கூறியிருத்தல்    காண்க.  அடிகளின்  கனிந்த  உள்ளநிலையும் , அன்பின்  பெருக்கமும்,  ஆண்டவன்  இடத்துள்ள  பேரார்வமும்  இத்  திருப்பாட்டில்  நன்கு  அமைந்துள்ளன.  வஞ்சம்  அறியாக்  குழந்தை ,  தன்னைப்  பெற்ற  தாய் , தந்தையரிடத்துத்  தன்  குறையைக்  கூறுதல்  போல் ,  அடிகள்  ஆண்டவனை  நோக்கிக்  கூறியிருக்கும்  செய்திகள்  நம்மனோர்  உள்ளத்தை  உருக்கும்  தன்மை  யுடையனவாய்  இருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .

                      இதன்கண்,  அட்கொண்ட  சிறந்த  தலைவனை  அன்றி , வேறு  புகல்  இல்லையென்று  கூறியிருத்தலால் ,  அத்  தலைவனுக்குச்   செய்யும்  தொண்டே  சிவாநுபவத்திற்கு உரிய  தூய்மை  பயப்பதாகும்  என்பது  பெறப்படுதலின் , அநுபோக சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , அடிகளின்  அன்புமொழி  பலவற்றாலும் ,  பத்தி  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக. 

                             *********************************************************

பாடல் 60.

புகுவேன்  எனதே  நின்பாதம்

போற்றும்  அடியா  ருள்நின்று

நகுவேன்  பண்டு  தோள்நோக்கி

நாணம்  இல்லா  நாயினேன்

நெகும்அன்  பில்லை  நினைக்காண

நீயாண்டருள  அடியேனுந்

தகுவ  னேயென்   தன்மையே

எந்தாய்  அந்தோ  தரியேனே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில் , ஆண்டவனை  நோக்கி , ஆட்கொண்ட  நீ  என்னைக்  கைவிட்டால் ,  யான்  வேறு  எங்குப்  புகல்  அடைவேன்  என்று  இரங்கிய  அடிகள் ,  இத்  திருப்பாட்டில்  யான்  அன்பு  இலேன்  ஆயினும் , அருமையாக  ஏற்றுக்கொண்டமையால் , நின் திருவடி  எனக்கு  உரியது  ஆகிவிட்டது  ஆதலின்  , அதன் கண்ணே  புகல்  அடயக்  கடவேன்  என்று  தம்  துணிபு  கூறுகின்றார் .

பதவுரை :-    நாணம்  இல்லா நாயினேன்  =  பழி பாவங்களுக்கு   நாணுதல்  இல்லாத   நாயின்  தன்மையுடைய  அடியேன் ,

பண்டு  போற்றும்  அடியார்  உள்  நின்று   =  முன்னர்  நின்னை  வழிபட்டு  நின்ற  மெய்யடியார்  குழுவின்  நடுவே  நின்று ,

தோள் நோக்கி நகுவேன்  =  என்  தோள்களின்  பணைப்பைப்  பார்த்து  இறுமாந்து  களித்தேன் ,

நின்னைக்  காண  நெகும்  அன்பு  இல்லை   =  நின்  திருவுருவைக்  கண்டு   இன்புறுதற்குரிய  குழைந்த  மெய்யன்பு   என்பால்  இல்லை ,

நீ  ஆண்டு  அருள  அடியேனும்  தகுவனே   =    இந் நிலையில்  நீ  அடிமை  கொண்டு  திருவருள்  புரிதற்கு  அடிமையாகிய  யானும்  தகுதி  உடையன்  ஆவேனோ ,

எந்தாய்  தன்மை  என்  =   என்  தந்தையே  என்  இயல்பு  இருந்தவாறு  என்னே,

அந்தோ  தரியேன் :-    ஐயகோ  இவ்வுலக  வாழ்வில்  பொறுத்து  இரேன் ,

எனது நின்  பாதமே  புகுவேன்  =   எனக்குரிய  நின்  திருவடிக்கண்னே  அடைவேன்  என்பது .

விளக்கவுரை :-    இழிந்த  கருமம்   காரணமாக  நாணுதல்  நன்  மக்கள்  நாணம்  என்பதும் ,  பழி  பாவங்களுக்கு  நாணவேண்டும்  என்பதும்  அறநூல்  விதி .  “நாணாமை  நாடாமை”  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  ,  “நாணவேண்டுமவை  பழி  பாவங்கள் “  என்று  எழுதிய  உரைக்குறிப்பும்  காண்க.  ஈண்டு,  உண்மை  அன்பு  இல்லாமல்  மெய்யடியார்  குழுவில்  புகுந்ததும் ,  இறுமாந்து  களித்தும் பழிக்கத்தக்கன  ஆகவும் , அவை  குறித்து  நாணம்  கொள்ளாமையின் , அடிகள்  தம்மை  , “நாணமில்லா  நாயினேன்” என்றார் . நாண  வேண்டியதற்கு  நாணாமை  நேரின் ,  அந் நாண் கெடாமைப்பொருட்டு  உயிரை  நீத்தலும்  தக்கது  என்ப.  “நாணால்  உயிரைத் துறப்பர்  உயிர்ப்பொருட்டால் , நாண்  துறவார்  நாணாள்பவர்”  என்னும்  பொருள் உரையும் , “உயிரினுஞ்  சிறந்தன்று  நாணே”  என்னும்  சன்றோர்  கூற்றும்  ஈண்டு  நினைக்கத்தக்கன.  அங்ஙனம்  ஆகவும் , இங்கே  அடிகள்  நாணம்  இழந்தும்  செருக்கு  உற்று  வாழ்ந்திருக்கின்றேனே என்று  இரங்கிய  படியாம் .  

               “பண்டு  போற்றும்  அடியார்”  என்றது,  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அடிகளுக்கு  உபதேசித்த  காலத்து, அப் பெருமான்  பக்கலில்  சூழ்ந்து  வழிபாடு  செய்துகொண்டிருந்த மெய்யன்பரைக்  குறிக்கும் . சிறிதும்  அன்பு  இல்லாத  யான் ஒதுங்கி  நில்லாது, நாணம் இன்றி , அவ்வுண்மை  அடியார் குழுவில்  நடுவில்  நின்றேன்  என்பார்,  “போற்றும்  அடியார்  உண்ணின்று “  என்றார்.  ஆண்டவன்  எல்லோரும்  அறிய  ஆட்கொண்டனன்  ஆதலின், அஃது   அறிந்த  மெய்  யடியார்  தம்  குழுவில்  என்னை ஏற்றுக் கொண்டனர்  ஆயினும்,  அன்பு  இன்மை  அறிந்த  யான்  ஒதுங்கி  இருத்தலே  தக்கது  ஆம்  என்று  அடிகள்  கருதினர்  என்க . ஆண்டவன்  ஆட்கொண்டு  உபதேசித்த  அளவில் , சித்த  விருத்தியை அடக்கிப்  பணிசெய்தல்  ஒன்றையே  கடப்பாடாகக்  கொண்டு  ஒழுக  வேண்டியவனாகவும் ,  அங்ஙனம்  இன்றிப்பலரும்  அறிய  என்  பெருமையை  வெளிப்படுத்தி , என்  தோள்களின்  பூரிப்பை  யானே  கண்டு  இறுமாந்து  இருந்தேன்  என்பார் , “  தோள் நோக்கி  நகுவேன்”  என்றார்.  மெய்யறிவு  இல்லாத  மக்கள் ,  “இன்பத்தி  லிறுமாந்து  தோணோக்கி  யீன்றமத,  துன்பத்தில்  அழுந்துவார்  தொல்லுலகில்  அறியாதார் “  என்றபடி ,  இன்பம்  நுகரும் காலத்து  இறுமாந்து , தம்  தோள்  பணைப்பை  நோக்குதலும் ,  துன்பம்  நுகரும்  காலத்துக்  கன்றி  வாடுதலும்  இயல்பாகக்  கொள்ளுவர்  என்பது  உலகியலில்  அறியப்படுவது.  நகுதல்  = களித்தல்  .  இங்ஙனம்  கொள்ளாது  , “தோணோக்கி  நகுவேன்”  என்பதற்கு ,  ஆண்டவன்  திருத்தோள்களைக்  கண்டு  சிரிக்கும்  அவ்வளவே  உடையேன்  என்றும்  பொருள்  கூறினாரும்  உளர் .  அது பொருட்  சிறப்பு  இன்மை அறிக . 

                    யான்  உண்மை  அடியார்  குழுவில்  நடுநயகமாக  இருக்கும்  தகுதி  பெற்றேன்  என்று  இறுமாந்து  களித்தேனே  அன்றி ,  ஆண்டவனே , நின்னைக் காண்டற்கு  உரிய  குழைந்த  அன்பு  பெற்றிலேன்  என்பார் .”நெகும்  அன்பு  இல்லை  நினைக்காண “ என்றார்.  இறைவன்  அன்பர்  உள்ளம்  உருகிய  நிலையிற்  காட்சி  அளிப்பவன்  ஆவான்  என்பதை ,”நெக்கு  நெக்கு  நினைபவர்  நெஞ்சுளே,  புக்கு  நிற்கும்  பொன்னார்  சடைப்புண்ணியன்”  என்னும்  தமிழ் மறையானும்  உணரலாம் .  நின்னைக்  காண்டற்கே  என்பால்  அன்பு  இல்லையானால் , நின்  திருவடியைச்  சார்ந்து  இருத்தற்கு  யான்  எங்ஙனம்  தகுதி  உடையனாவேன் என்பது  அடிகள்  குறிப்பு  என்க .

                        அத்தகைய  மெய்யன்பு  இல்லாத  நிலையில் ,  நீ  ஆட்கொள்ளுதற்கு  உரிய  தகுதி  என்பால்  எங்ஙனம்  அமையும்  எனவும் , ஆளாந்  தகுதியே  இல்லாதபொழுது , நின்  அருள்  பெறுதற்கு  எவ்வாறு  உரிமை  உடையனாவேன்  எனவும் , அடிகள்  அறிவித்துக்  கொள்ளுவாராய் , “நீ  ஆண்டு  அருள  அடியேனும்  தகுவேனே “ என்றார் .  தகுவனே  என்புழி .  ஏகாரம்  எதிர்மறை  வினாப்பொருளில்   வந்தது. 

                         யான்  தகுதி யற்றவன்   ஆயினும் , நின்  புதல்வன்  என்பதை  மனக் கொளல்  வேண்டும்  என்பது  குறித்து  , “எந்தாய்”  எனவும்,  அன்பு  இல்லாதநிலையிலும்   ஆட்கொண்டு  அருளிய  நின்  உயர்ந்த  இயல்பை  நோக்க , என்  இழிந்த இயல்பு  இருந்தவாறு  வருந்தத்தக்கதென்பார் ,  “தன்மையென்”  எனவும்  கூறினர்.  அமரர் , முனிவரர்,  முதலியோரும்  பல்லாயிரம்  ஆண்டு  கடுந்தவம்  புரிந்தும் , காண்டற்கு  அரிய  ஆண்டவன்  எளிவந்து  காட்சி  அளிக்கவும் ,  காணப்பெறும்  பேறு  இல்லாத  நிலையில்  இவ்வுலக  வாழ்க்கை  எற்றிற்கு  என்பார்,  “அந்தோ  தரியேன்” என்றார் .  தரித்தல் = பொறுத்தல் , இவ்வுலக  வாழ்க்கையைப்  பொறேன் என்ற  அடிகள், முடிவில்   ஆண்டவனை நோக்கித்  துணிந்து  கூறியது  யாது  எனின் ,”எனது  நின் பாதமே  புகுவேன் “  என்பது.  யான்  தகுதி  இல்லாதவன்  ஆயினும் , நின்  கருணை  காரணமாக  என்னை  ஆட்கொண்டமையால் , நின்  திருவடி  எனக்கு  உரியதாகும் . உரிய  இடத்தை  அடைதற்கு  ஏதும்  தடை  இன்று  ஆதலின், அத் திருவடிக்கண்ணே  கூடுவேன்  என்பார் , “எனது  நின்  பாதமே  புகுவேன்” என்றார்.  “ஏனதே  நின்  பாதம்  “   என்புழி , ஏகாரத்தைப்  பிரித்துக்கூட்டுக .  துணிபொருளைப்  பாட்டின்  தொடக்கத்திற்   கூறியது,  உறுதி  இது  எனத்  தெளிவுறுத்தற்  பொருட்டு  என்க.  இதற்கு  முன்  உள்ள  திருப்பாட்டில்  ,  “எந்தா  யெங்குப்  புகுவேனே”  என்று  வருந்திக்  கூறியதற்கு  அமைதி  கூறியவாறு  இது.

                         இதன்கண்,  “புகுவேன்  எனதே  நின்பாதம் “  என்றதனால் , திருவடி  கூடுதலே  சிவாநுபவத்திற்கு  உரிய  தூய்மை  பயப்பது என்பது  பெறப்படுதலின் ,  அநுபோக சுத்தி  என்னும் பதிகம்  நுதலிய  பொருளும்  , “எந்தாய்  அந்தோ  தரியேனே “ என்றதனால் ,  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  தோன்றுதல்  அறிக.     

7.    காருணியத்   திரங்கல்

         காருணியத்  திரங்கல்   என்பது  ஆண்டவன்  கருணையைக்  குறித்து  இரங்குதல்  என்னும்  பொருள்  உடையதாகும்,  சிவாநுபவ  நிமித்தம்  செய்து கொள்ளப்படும்  உயிர்த்தூய்மை  முன்னைப்  பதிகத்திற்  கூறப்பட்டது . பேரின்பப்  பிழம்பாகவும்  , தூய  ஞானச்  சுடர்  ஒளியாகவும்  உள்ள  இறைவனை  அநுபவித்தற்குத்  தடையாக  உள்ள  குற்றங்களைப்  போக்கி , சிவானந்தத் தேறலை  நிரப்பிக் கொள்ளுதற்குத்  தகுதியான  கொள்கலனாக  உயிர் இயல்பு  தூயதாயபின் ,வேண்டற்பாலது  சிவபெருமான்  திருவருள்  விளக்கமேயாகும்  .  பாசநீக்கத்தின்  பின்  சிவப்பேறு  உண்டாம்  என்பது சைவ  நூற் கொள்கை .  அச்  சிவப்பேறு  ஆனந்தத்து   அழுந்தல்  முதலிய  பிவரும்  மூன்று  பதிகங்களாலும்  தெளிவு  படுத்தப்பட்டுள்ளன .  அச்  சிவப்பேற்றுக்கு  முன்னரும் , பாச  நீக்கத்தின்  பின்னரும்   வேண்டற்பாலது  இறைவன்  திருவருட்  பதிவு  ஆகும்.  அவ்  அருளே  ஈண்டுக்  காருணியம்  என்று  குறிக்கப்பட்டுள்ளது.  அவ்  அருட்பேறு  கருதியே,  அடிகள்,  காத்து  அருள்க,  வணக்கம்  என்னும்  பொருளுடைய  போற்றி  என்னும்  அன்பு மொழியைப்  பாடல்  தோறும்  பலமுறை  கூறி  இறைவனை  வேண்டி  இரங்குவார்  ஆயினர். அடிகள்  இரங்கி  வேண்டிய  குறிப்பு  மொழிகள்  ஒவ்வொரு  திருப்பாட்டிலும் ,  அமைந்து  இருத்தலை  ஆங்கு  ஆங்குக்  காணலாம் . இதனாற்  பதிக  இயைபு  புலனாதல்  அறிக. 

அறுசீர்க்கழி  நெடிலடி  ஆசிரிய  விருத்தம்

பாடல் 61.

தரிக்கிலேன்  காய  வாழ்க்கை

சங்கரா  போற்றி  வான

விருத்தனே  போற்றி  எங்கள்

விடலையே  போற்றி  ஒப்பில்

ஒருத்தனே  போற்றி  உம்பர்

தம்பிரான்  போற்றி  தில்லை

நிருத்தனே  போற்றி  எங்கள்

நின்மலா  போற்றி  போற்றி

கருத்துரை :-     முன்னைப்  பதிகத்தின்  இறுதித்  திருப்பாட்டில் ,  யான்  தகுதியற்றவன்  ஆயினும் ,  என்னை  ஆட்கொண்டமையால்  எனக்கு  உரிய  நின்  திருவடிக்கண்ணே புகுவேன்  என்று  உறுதி  கூறிய  அடிகள் ,இத்  திருப்பாட்டில் ,  அங்ஙனம்  புகுதற்கு  தடையாக  உள்ள  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைச்  சிறிதும்  பொறேன்,  இதனை  ஒழித்து இன்பம்  நல்குக  என  இரங்கி  வேண்டுகின்றார் . 

பதவுரை :-   காய  வாழ்க்கை  தரிக்கிலேன்  =  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பொறேன் ,

சங்கரா  போற்றி  =  இன்பம்  செய்பவனே  காத்து  அருள்க ,

வானவிருத்தனே  போற்றி   =  நுண்ணிய  பரவெளியில்  விளங்கும்  முதியோனே  காத்து  அருள்க,

எங்கள் விடலையே  போற்றி      =   சிறியேம்  ஆகிய  எங்கள் திண்ணியோனே  காத்து  அருள்க,

ஒப்பு  இல்   ஒருத்தனே  போற்றி   =   ஒப்பற்ற   தனி  முதல்வனே  காத்து  அருள்க,

உம்பர்  தம்பிரான்  போற்றி   =  தேவர்  தலைவனே  காத்தருள்க ,

தில்லை  நிருத்தனே  போற்றி    =  தில்லை  நகரில்  அருள்  நடம்  புரியும்  கூத்தப்பெருமானே  காத்தருள்க ,

எங்கள்  நின்மலா  போற்றி  போற்றி     =  பாசப்பிணிப்பு  உடையேமாகிய  எங்கள்  தூயோனே  காத்து  அருள்க , என்பது.

விளக்கவுரை :-   சங்கரன்  =  இன்பம்  செய்பவன்  .  இறைவனை  இன்பம்  செய்பவன்  என்று  விளித்தமையால்  ,  காய  வாழ்க்கை  துன்பம்  செய்வதாகும்    என்பது  போதரும் .  துன்பம்  செய்வதாகிய  இவ்வுடலோடு  கூடிய  வாழ்க்கையை ,  “தினைத்  துணையேனும்  பொறேன்  என்றபடி , “தரிக்கிலேன்” என்றார் .  செயப்படுபொருள்  ஆகிய  காய  வாழ்க்கையைப்  பின்னும்,  முடிக்கும்  சொல்லாகிய  தரிக்கிலேன்  என்னும்  வினையை  முன்னும்  கூறினார் ; புழுக்கூடு  ஆகிய  உடலின்  அருவருப்பைப்  பொறாது  , அதனின்  நின்றும்  வெளிப்படவேண்டும்  என்னும்  ஆர்வமும்  விரைவும் குறிக்கொண்டு  என்க.  “சங்கரா போற்றி “  என்றதனால் , அவன்  காப்புப்  பேரின்பம்  செய்வதாகும்  என்பது  கருத்து ,  “போற்றி”  என்னும்  சொல் ,  வணக்கம்  என்னும்  பொருளும்  உடையது  ஆகும் . சிலப்பதிகாரத்தில் , “பொய்தீர்  காட்சிப்  புரையோய்  போற்றி” என்புழி , “போற்றி”  என்பதன் இகரத்தை  வியங்கோட்  பொருளாகக்  கொண்டு  , “போற்றுக”  என்று  அடியார்க்கு  நல்லார்  பொருள்  கூறியதும்  காண்க.  இறைவனை  விளித்துக்கூறிய  இடங்களிலெல்லாம்  , இரண்டு  பொருளும்  பொருந்தும்  ஆயினும்  ஈண்டுக்  காத்தருள்க  என்னும்  பொருள்  சிறந்ததாகும் .  ஏனையிடங்களில்  வணக்கம்  என்னும்  பொருள்  கொள்ளலாம். 

                 வானம்,  ஈண்டு  ஞானாகாயத்தை  உணர்த்தும் .  இதனை  வட  மொழியாளர்,  தகராகாசம்  எனவும் ,  அதன்கண்ணே  சிவபெருமானைக் கண்டு   வழிபடல்  தகரவித்தை  எனவும்  கூறுவர்  நுண்ணிய  ஞானப் பெருவெளியில்  விளங்கும்  பழமைபற்றி , “‘விருத்தனே”  என்றார்  .  இறைவனது  முதுமை ,  காலதத்துவத்தைக்  கடந்தது  ஆதலின்,  அளவிட்டு  அறிதற்கு  அரிது  என்ப,  திருத்தொண்டர்  புராணத்தில் , “மொய்த்துவளர்  பேரழகு  மூத்த  வடிவையோ ,  அத்தகைய  மூப்பெனும்  அதன்  படிவமோயோ, என்று  அம்  மூப்பு  வருணிக்கப்பட்டு  இருத்தல்  காண்க. சிறியேமாகிய  எங்களுக்கு , அம்  முதிய  நிலை  காண்டற்கு  அரியது  எனக்கொண்டு , காளைப்  பருவத்தன்  ஆய்  என்பார், “விடலையே”  என்றார். விடலை  என்னும்  சொல்  பதினாறு  முதல்  முப்பது  ஆண்டு  வரை  உள்ள  ஆண்மகனை  உணர்த்தும் ; யெளவன  பருவம்  உடையவன்  என்பது  மூப்பு , விடலை  முதலிய  பருவங்கள்  இறைவனுக்கும்  உளவாயின் , மக்களினின்றும்  இறைவனுக்கு  வேறுபாடு  என்னை  எனின் ,  பாலனாகி  விடலையாகிக்   கிழவனாதல்  மக்கள்  இயல்பு ;  இதற்கு  மாறாகக்  கிழவனாகிப்  பின்  காளையாய்க்  கிஞ்சுச்  செவ்வாய்  மழலை  ஆதல்  இறைவன்  திருவிளையாட்டு  என்க.  அம் முறயில், ஈண்டு  விருத்தனாகி  விடலை ஆயினான்  என்றார்.  இவ்  வேற்றுமையால்  இறைவன்  உருக்கோடல்  நம்மனோர்  நலம்  குறித்து  என்பது  போதரும். 

                    முதுமைப்  பருவம் , காளைப்பருவம்  முதலியவை  குறித்து,இறைவனை  மக்கள்  அளவில்  எண்ணிவிடல்  ஆகாது  என்பதை  மீண்டும்  வலயுறுத்தற்கு , “ஒப்பில்  ஒருத்தனே”  என்றார்,  மக்கள் ,தேவர்  முதலியோருள்  ஒப்பு  ஆவார்  யாரும்  இல்லை  என்பதோடு , தனி  முதல்வனும்  ஆவான்  என்பது  கருத்து. முதுமைப்  பருவமும்,  விடலைப்  பருவமும்  மக்களுக்கு  உரியன  ஆதலின் , ஒப்பில்  ஒருத்தன்  என்பது,  மக்களை  நோக்கக்  கொள்ளத்தக்கது;  தேவர்களுக்கு  எத்தகையன்  எனின் , அவர்க்கும்  தலைவன்  ஆவான் என்பார், “உம்பர்  தம்பிரான் “என்றார் . “விண்ணோர்  முழுமுதல்” என்பது  காண்க. 

                     தேவர்களுக்குத்  தலைவன்  ஆயினும் , அன்னார்  காண்டற்கு  அரியனாய் , மக்களுக்கு  எளியனாய்த்  தில்லை  நகர்க்கண்  எழுந்தருளி , ஐந்தொழில்  திருக்கூத்து  இயற்றும்  அருளாளன்  என்பது தோன்ற , “தில்லை  நிருத்தனே”  எனவும் , கூத்து  இயற்றல்  தற்பயன்  கருதி  அன்று ; உயிர்த்தொகுதிகள் கண்டு  உயர்தற்  பொருட்டு , என்பது  தோன்ற , “எங்கள்  நின்மலா” எனவும்  கூறினர் .  நின்மலன்  =  தற்பயன்  கருதுதல்  ஆகிய  அழுக்கு  இல்லாதவன்  என்னும்  பொருட்டு.

                        இத்  திருப்பாட்டில்  ஏழு  முறை   விளித்து , எட்டு  முறை  காத்து  அருள்க  என்றார் . ஆண்டவனை  அழைக்கும்  அளவினும்  தமக்குக்  காப்பு  வேண்டும்  அளவில்  ஆர்வம்  விஞ்சி  நிற்றலால்  என்க.

                          இதன்கண்,  சங்கரன்  முதலிய  சொற்களால்  விளித்து , போற்றி  என்று  பலமுறை  வேண்டிக்கொண்டமையின் ,  காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “தரிக்கிலேன்  காய  வாழ்க்கை  “ என்றதனால்  வைராக்கியமும் , போற்றுக  என்றமையால்  பத்தியும்  தோன்றுதலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக . 

                                                   ***************************************

பாடல்  62.

போற்றியோ  நமச்சி  வாய

புயங்கனே  மயங்கு  கின்றேன்

போற்றியோ  நமச்சி  வாய

புகலிடம்  பிறிதொன்  றில்லை

போற்றியோ  நமச்சி  வாய

புறமெனைப்  போக்கல்  கண்டாய்

போற்றியோ   நமச்சி  வாய

சய சய  போற்றி  போற்றி .

கருத்துரை  :-      முன்னைத்  திருப்பாட்டில்   உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பெற்றேன்  என்ற  அடிகள் ,  இத்திருப்பாட்டில்   அவ்வுடலை  விட்டுச்  செல்லும்  இடம்  பிறிது  இன்று  ஆதலின் , புறத்தே  என்னைப்  போக்கல்  ஆகாது ;  நின்  திருவடிக்கண்ணே  இயைத்துக்  கொள்ளல்  வேண்டும்  என்று  இரங்கி  வேண்டுகின்றார் .

பதவுரை :-     ஓம்  நமச்சிவாய  போற்றி   = ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க,

புயங்கனே  மயங்குகின்றேன்  =   பாம்பை  அணிகலனாக  உடையவனே  மயங்குகின்றேன்

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம் நமச்சிவாயனே  காத்தருள்க,

புகலிடம்  பிறிது  ஒன்று  இல்லேன்  =  யான்  புகுதற்கு  உரிய  இடனாக  வேறு  ஒன்றும்  இல்லாதவன்  ,

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க,

என்னைப்  புறம்  போக்கல்  =  என்னைப்  புறத்தே  தள்ளிவிடலாகாது ,

ஓம்  நமச்சிவாய  போற்றி  =  ஓம்  நமச்சிவாயனே  காத்தருள்க ,

சய  சய   =  வெல்க  வெல்க

போற்றி  போற்றி   =  காத்தருள்க  காத்தருள்க   என்பது .

விளக்கவுரை :-  திருவைந்தெழுத்தை  நகாரம்  முதலாக  ஓதுதல்  மறைவழக்கும்  சிகாரம்  முதலாக  ஓதுதல்  ஆகமவழக்கும்  ஆம் . திருவாசகம், தமிழ்மறை    ஆதலின் , இதன்  தொடக்கத்திலே, “நமச்சிவாய  வாழ்க” என்று  கூறப்பட்டுள்ளது .  ஏனைய  மந்திரங்கள்  எல்லாம்  பிரணவத்தோடு  கூடியே  எண்ணப்படுவன  ஆம் . சிவபெருமானைப்பற்றிய  இத்  திருவைந்தெழுத்து  மந்திரம்,  பிரணவம்  இன்றியே  எண்ணப்படுவதாகும் ;  காரணம் , திருவைந்தெழுத்திற்கும்  பிரணவத்துக்கும்  வேறுபாடு  இன்மையாம்  என்க. பிரணவம்  ஆகிய  ஓம்  என்பதன்  விளக்கமே  திருவைந்தெழுத்து  என்பர்.  அவ்  விரண்டும்  முறையே  தொகையும்  விரியுமாகக்  கொள்ளப்படுவனவாம் .அம்  முறையே  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்டது  என்க .  “ஓம்  நமச்சிவாய  போற்றி”  என்பதற்குப்  பிரணவத்தின்  வேறுபாடு  இல்லாத  திருவைந்தெழுத்தின்  வாச்சியப்  பொருளாக  உள்ள  சிவபெருமானே  காத்தருள்க  என்பது  பொருள்  ஆகும் .  இத்  திருப்பாட்டின்  ஏனைய  மூன்று  அடிகளிலும்  உள்ள , “போற்றியோ நமச்சிவாய”  என்னும்  தொடர்கலுக்கும்  இவ்வாறே  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  அடிகள்  தம்  திருமுறையில்  நகார  முதலாகக்  கூறினும் ,  ஞானாசிரியனாக  இறைவனிடத்துப்  பெற்ற  உபதேசம்  சிகார  முதலாக  என்பது ,  “நானேயோ  தவஞ்  செய்தேன்  சிவாய  நம  வெனப்  பெற்றேன் “  என்னும்  பாடற்  பகுதியால்   உணரலாம் .  இன்னும்  திருவைந்தெழுத்தின்  தூல  சூக்கும  காரண   முதலிய  நிலைகளும்  ,  நிற்குமுறை , ஓதுமுறை , முதலிய  இயல்களும்  பிறவும்,  திருமந்திர  முதலிய  நூல்களானும் , உபதேச  முறையாலும்   அறிந்து  தெளியத்தக்கன  .

                       புயங்கம்  =  பாம்பு .  நஞ்சு  காலும்  பாம்பை  அணிகலனாக  ஏற்றுக்கொண்டிருக்கும்  நீ ,  என்னை  ஏற்றுக்கொள்ளல்  ஆகாது ; என்  தகுதி  நின்னை  அணுகுதற்குப்  போதியது  ஆகாமைக்குக்  காரணம்  அறியாமல்  கலங்குகின்றேன்  என்பார் , “புயங்கனே  மயங்குகின்றேன்”எனவும்,  இம்  மயக்கத்தின்  தெளிவாக  வேற்றிடம்  செல்லலாம்  எனின் ,  என்னை  ஏற்று  கோடற்கு  உரிய  புகலிடம்  வேறு  யாதும்  இன்று  என்பார், “புகலிடம்  பிறிதொன்றில்லேன்”  எனவும் , அத்தகைய  ஓரிடத்தை  நின்னின்  வேறாக  அமைத்து , அதன்கட்  செல்லுக  என்று  கட்டளையிடல்   ஆகாது  என்பார் , “புறம்  எனைப்  போக்கல்”  எனவும்  கூறினர் .  போக்கல்  என்புழி  ,  அல்லீறு  எதிர்மறைபொருளில்  வந்தது  .  கண்டாய் என்பது  ,  முன்னிலை  அசைச்சொல் . 

                          புகலிடம்  பிறிதொன்று  இல்லேன்  எனவும், புறம்  எனைப்  போக்கல்  எனவும்  கூறியதால், “புகுவேன்  எனதே  நின்  பாதம் “  என்றபடி , எனக்குப்  புகலிடமாவது  என்னை  ஆட்கொண்ட  நின்  திருவடியே  ஆகும்  என்பதும் , அதன்  கண்ணே  புகுவேன்  என்பதும்  குறிப்பெச்சத்தாற்  கொள்ளத்   தக்கனவாம் .  “வெல்க  வெல்க ; காக்க  காக்க”  என்னும்  பொருள்  தோன்ற ,  “சய  சய  போற்றி  போற்றி  “ என்று  அடுக்காகக்  கூறப்பட்டன.  “வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம்  வாழ்வான்”  என்றபடி , இறைவனை  நோக்கிக்  கூறிய  வெற்றி  தமக்கு  உண்டாக  வேண்டுமென்பது  கருத்து .  ஈண்டு  அடிகள்  கருதிய  வெற்றி ,  “புகுவேன் எனதே  நின்பாதம்”  என்னும்  துணிவின்  பயன்  ஆகும் .  அடுக்கு , ஆர்வத்தால்  உண்டாய  விரைவு  தோன்ற  நின்றது . சிறந்த  தத்துவ   உண்மைகளைத்  தன்னுள்  அடக்கி  நிற்கும்   திருவைந்தெழுத்தைப்  பிரணவத்துடன்  பலமுறை  ஓதுதலால் ,  அழிவில்  இன்பப் பேறு  உண்டாம்  ஆதலின் ,  நான்கு  அடிகளினும்  நாநலம்  கனிய  ஓதுவார்  ஆயினர்.

                      இதன்கண்,  “புகலிடம்  பிறிதொன்றில்லேன்”,   “புறம்  என்னைப்  போக்கல்”  எனவும் ,  “மயங்குகின்றேன் “  எனவும்  கூறியவற்றால் , ஆண்டவன்  திருவருளை  வேண்டி  இரங்குதல்  பெறப்படுதலின் ,  காருணியத் திரங்கள்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக. 

                                       ***********************************************

பாடல் 63. 

போற்றியென்  போலும்  பொய்யர்

தம்மைஆட்  கொள்ளும்  வள்ளல்

போற்றிநின்  பாதம்  போற்றி

நாதனே  போற்றி  போற்றி

போற்றிநின்  கருணை  வெள்ளப்

புதுமதுப்  புவனம்  நீர்தீக்

காற்றிய  மானன்  வானம்

இருசுடர்க்  கடவு  ளானே .

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில் ,  வேறு  புகல்  இடம்  இல்லாமல்  வருந்துகின்ற  என்னைப்  புறத்தே  தள்ளிவிடல்  ஆகாது  என்று  ஆண்டவனை  நோக்கி  இரங்கிக்கூறிய  அடிகள் ,  இத்திருப்பாட்டில்  நின்  அகத்தே  என்னை  ஈர்த்து ,  அருள்  வெள்ளமாகிய  புதிய  தேனை  உண்பித்துப்  பாதுகாத்து  அருள  வேண்டும்  என்று  விண்ணப்பம்  செய்கிறார் .

பதவுரை  :-   என்போலும்  பொய்யர்  தம்மை  ஆட்கொள்ளும்  வள்ளல்  போற்றி=    என்னைப்  போன்ற  மெய்யன்பு  இல்லாரை  அடிமை  கொள்ளும்  வள்ளற்  பெருமானே  காத்தருள்க.

நின்  பாதம்  போற்றி  போற்றி  =   நின்  திருவடிக்கு  வணக்கம்  வணக்கம் ,

நாதனே  போற்றி  போற்றி   :-  எம்பெருமானே  காத்தருள்க  காத்தருள்க  ,

புவனம், நீர் , தீ , காற்று , வானம் இருசுடர்  இயமானன்  கடவுளானே  =

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , விசும்பு ,  இரண்டு  ஒளி  மண்டிலங்களாகிய  கதிரவன் , திங்கள் , உயிர் , என்னும்  எண்வகைப்  பொருள்களையும்  திருமேனியாகக்  கொண்டு  மூர்த்திமானாக  விளங்கும்  கடவுளே ,

நின்  கருணைப்  புதுமது வெள்ளம்  போற்றி  =  நினது  அருளாகிய  புதிய  தேன்  வெள்ளம்  என்னைக்  காத்தருள்வதாக  என்பது. 

விளக்கவுரை  :-    . பொய்க்கு  வித்தாக  இவ்வுலக  வாழ்க்கையில்  என்னை  வைத்தாய்  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறுவர்  ஆதலின் , தம்மைப்  பொய்மையாளர்க்கு  உவமமாகக்  குறிப்பிட்டார்.  “உயர்ந்ததன் மேற்றே  யுள்ளுங்காலை  “  என்றபடி ,  உவமேயப்  பொருளினும்  உவமம்  உயர்ந்ததாக  இருத்தல்  வேண்டும்  என்பது  விதி .  அவ்விதிப்படி,  ஏனைப்  பொய்மையாளரினும்   தம்  தகுதி  உயர்ந்தது  எனக்  கருதி, “என்  போலும்  பொய்யர்”  என்றார் .  பொய்யர்  என்றது , அகத்தே  அன்பு  இன்றிப்  புறத்தே  அன்பு  உடையராக  நடிப்போரைக்  குறிக்கும் . “நாடகத்தால்  உன்  அடியார்  போல்  நடித்து”  என்பது  அடிகள்  திருவாக்கு .  அத்தகைய  பொய்யரையும்  ஆட்கொள்ளுதலின்  , இறைவன்  வள்ளல்  எனப்பட்டான் .  கொடை  மடம்  பட்டு,  வரையாது  வழங்குவோன்  வள்ளல்  ஆவான் .  “முல்லைக்குத்  தேரும்  மயிலுக்குப்  போர்வையும்  “  வழங்கியது , வரையாது  வழங்கற்குச்  சான்றாம்  என்க . வரையாமையாவது  , தகுதி  உடையார் , தகுதி  இல்லார்  என்னும்  ஏற்றத்தாழ்வு  உணர்ந்து,  தகுதி  இல்லாரை  நீக்காமை,  மெய்யரையும்  பொய்யரையும்  ஆட்கொள்ளும்  வள்ளல்  என்பதினும்,  தகுதியில்லாரை  மாத்திரம்  குறிப்பிட்டுப்  பொய்யரை  ஆட்கொள்ளும்  வள்ளல்  என்பதே  சிறந்ததாகும் . என்னை ?  கொடை  மடம்  ஆகிய  வள்ளன்மையின்  முக்கிய  நோக்கம்  அதுவாதலின்  என்க.

                         “போற்றி  நின் பாதம்  போற்றி”  என்று  திருவடியை  நடுவண் அமைத்து ,  முன்னும்  பின்னம்  வணக்கம்  கூறியது ,  பொய்யர்க்கு  உவமமாகவுள்ள  தம்மையும்  அடிமை  கொண்டு  காட்சியளித்த  பேருதவி  கருதி  என்க.   திருவடிவாகிய  அவயவத்திற்கு  வணக்கம்  கூறி , அவயவியாகிய  இறைவனைக்  குறித்துக்  காப்பு  வேண்டுவார் ,  “நாதனே போற்றி  போற்றி “ என்றார் .  ஈண்டும்  அடுக்கு , ஆர்வம்  பற்றிய  விரைவுப்  பொருளில்  வந்தது. 

                            “புவனம்  நீர் ……இருசுடர்  “  என்பன,  செய்யுள்  இயல்பு  கருதி  முறை  பிறழ  வைக்கப்பட்டன.  ஐம்பெரும்பூதங்களும்  ,  கதிரவன்  ,  திங்கள்  என்னும்  ஒளி மண்டிலங்களும் ,  இயமானன்  எனப்படும்  உயிரும்  ஆகிய  இவ்  எண்வகைப்  பொருள்களும்  அல்லாமல் , காணப்படும்  இவ்வுலகம்  என்பது  பிறிது  இன்மையின் , இவ்வெல்லாவற்றையும்  திருமேனியாகக்  கொண்டு , இறைவன்  மூர்த்திமானாக  விளங்குவன்  என்று  மறை  ஆகமங்கள்  கூறும்.   இதனால்,  இறைவன்  எல்லாமாய்  விளங்குவன்  என்பதும் , “கடவுளானே “  என்றதனால்,  இவை  அல்லதுமாய்  உள்ளான்  என்பதும்  பெறப்படும்  என்க.

                                கடவுள்  என்பது , எல்லாவற்றையும்  கடந்து  இருப்போன்  என்னும்  பொருள்  உடையதாகும்.  இங்ஙனம்  ஆகிய  இறைவனது  அருட்குணமே  அன்பர்க்கு  இன்றியமையாத  பேரின்பப்  பயனை  விளைவிப்பதாகும்  ஆதலின் , குனிப்பொருளாகிய  இறைவனை  , அகண்ட  வடிவத்தில்  வைத்து  விளித்துக்  குணத்தை  நோக்கிக்  காப்பு  வேண்டுவார்  ஆயினர் . இறைவன்  அருட்குணத்தை, “அருளாரமுதப்  பெருங்கடல் “  என்று  பிரிதோரிடத்துக்  கூறியபடி ,  ஈண்டு  இனிமை  மிக்க  பொருள்களுள்  சிறந்த  தேனாகக்  கொண்டும் ,உலகில்  சுவைத்து   அறிந்த  தேனைப்  போள்  இல்லாமல் , என்றும்  அறியாத  புதிய  சுவையுடைய  தேனாகக்  கண்டும்  , “கருணைப்  புது  மது “  என்றார்.  உலகப்பொருள்களுள்  இனிமை  மிக்கதற்கு  வேறு  உவமம்  இல்லாமையால் . தேனெனப்பட்டது  ஆயினும்  ,  “புல்லாகிப்  பூடாய்  “  என்றபடி  ,  தாம்  எடுத்த  பிறவிகளுள்  , எப்பிறவியினும்  அறியப் படாத  சுவையுடைமை  கருதிப்  புதுமை  அடை  புணர்க்கப்பட்டது  என்க.   பிறப்பு  அறும்  நிலையில்  சுவைக்கப்படுவது  ஆதலின்,  அது  புதுமது  ஆயிற்று  என்க.  அத்தகைய  புதுமது   வெள்ளப்பெருக்குக் கரை  புரண்டு  ஓடக்கூடும்  , கொள்வார்  அரியர்  ஆயினார்  என்பதும் ,  அவ்  வருமை  நோக்கியே  தம்மைப்  போன்ற  பொய்யரையும்  ஆட்கொள்ளும்  வள்ளல் ஆகினான்  இறைவன்  என்பதும்  குறிப்பு.

                     இதன்கண்,  “போற்றி  நின்  கருணை  வெள்ளப்  புதுமது”  என்றதனால் , ஆண்டவன்  கருணைக்  குணத்தை  நோக்கிக்  காப்பு  வேண்டி  இரங்குதல்  பெறப்படுதலின் , காருணியத்திரங்கல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                           ****************************************

பாடல்  64.

கடவுளே  போற்றி  யென்னைக்

கண்டுகொண்டருளு  போற்றி

விடவுளே  உருக்கி  யென்னை

ஆண்டிட  வேண்டும்  போற்றி

உடலிது  களைந்திட்  டொல்லை

உம்பர்தந்  தருளு  போற்றி

சடயுளே  கங்கை  வைத்த

சங்கரா  போற்றி  போற்றி.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவனே ,  “நின்  கருணை  வெள்ளம்  ஆகிய  புதிய  தேனை  நுகர்வித்து  என்னைக்  காத்து  அருள வேண்டும்”   என்று  விண்ணப்பம்  செய்துகொண்ட  அடிகள், இத் திருப்பாட்டில்,அதனை  உண்டற்கு  யான்  தகுதி  உடையனாக  அருட்பார்வை  நல்கியும் ,  அகப்  புறப்பற்றை ஒழித்தும்  அருள்  புரிய வேண்டும்  எங்கின்றார்.

பதவுரை  :-.   கடவுளே  போற்றி  =  எல்லாவற்றையும்  கடந்து  நிற்கும்  இறைவனே  காத்து  அருள்க ,

என்னைக்  கண்டு  கொண்டு  அருளு  போற்றி  =  அடியேனை  அருணோக்கம்  நல்கி  ஏற்றுக்கொண்டு  அருளுக,,வணக்கம்.

விட உள் உருக்கி  என்னை  ஆண்டிட வேண்டும்  போற்றி  =  புறப்பற்று  ஒழிய  என்  உள்ளத்தை  உருக்கி  அடியேனை  ஆட்கொள்ளல்  வேண்டும்  வணக்கம் ,

உடல்  இது  களைந்திட்டு   =    உடலாகிய  இவ்  அகப்பற்றையும்  ஒழித்து  , 

ஒல்லை  உம்பர்  தந்தருளு  போற்றி  =  விரைவில்  மேலாகிய  வீட்டு  இன்பத்தைத்  தந்து  அருளுவாயாக , வணக்கம் 

சடையுளே  கங்கை  வைத்த  சங்கரா  போற்றி  போற்றி   =   சடையின்  கண்ணே  கங்கையை  வைத்து  உலகைக்காத்து   அருளிய  சங்கரனே  வணக்கம்  வனக்கம்  என்பது.

விளக்கவுரை :-   மெய்யுணர்வினாலன்றி  ,  மக்களுடைய  மன  மொழி  மெய்களுக்கு  எட்டாதவன்  என்பது  தோன்ற  , “கடவுளே”  என்றார். இதனால்,  யான்  நின்னை  அறிந்து  அணுகும்  ஆற்றல்  இல்லாதவன்  என்பது  பெறப்படுதலின்  ,  நீயே  என்னை  அருட்பார்வை  நல்கி  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்  என்பார், “கண்டுகொண்டருளு”  என்றார்.  இறைவன்  அருணோக்கமே  நயன  தீக்கை  என்ப.   “அருணோக்கில்  தீர்த்த  நீராட்டிக்கொண்டாய்  “  என்பது  தமிழ்மறை .  யாரையும்,  எவற்றையும்  கடந்து  நிற்கும்  பொருளை , ஓர்  உயிர்  அணுகி  அறிதல்  அரிது  ஆதலின்,  அவ்விறைவனே  தன்  அருட்பார்வைக்கு  இலக்கு  ஆக்கித்  தூய்மைப்படுத்து  ஏற்றுக்கொள்வன்  என்பது  கருத்து. 

                            “விட”  என்பது, புறப்பற்று  ஒழிய  என்னும்  பொருளதாம்,  பின்னர்,  அகப்பற்றாகிய  உடல்  ஒழிவு  கூறப்படுதலின்  , ஈண்டு,  ஏனைய   புலநுகர்  பொருள்கள்    ஆகிய  புறப்பற்று  என்பது  வருவித்து  உரைக்கப்பட்டது.  தான்  அல்லாத  உடம்பை  யான்  என்றும்  ,  தன்னோடு  இயைபு  இல்லாத  பொருளை  எனது  என்றும்  கருதி ,  அவற்றின்கட்  பற்றுச் செய்தல் ,  முறையே  அகப்பற்றும் , புறப்பற்றும்  ஆகும்  என்ப.  யான்  வந்தேன்;  போனேன்  என்புழி, வருதல்  போதல் உடம்பின்  செயல்களாகவும் ,  அச்  செயல்களுக்கு  வினை  முதலாக  உயிர்  யான்  எனத்  தன்னைக்  குறித்தலான் , அஃது  அகப்பற்று  ஆயிற்று ,  “பிறப்  பறுக்கல்  உற்றார்க்கு  உடம்பும்  மிகை”  என்பது  பொருளுரை,  ஐம்புல நுகர்ச்சி  நிமித்தம்  படைக்கப்பட்ட  பொருள்    எல்லாம்  தன்னோடு  இயைபு   இல்லனவாகவும் ,  எனது  எனது  என்று  கருதிப்  பற்றுச்  செய்யப்படுதலின்,  அது  புறப்பற்று  ஆகும் . புறப்பற்று  , மனம் பொறிவழிச்  சென்று  புலநுகர்ச்சியில்  ஈடுபடுதலான்  உண்டாவது.  “அடல்  வேண்டும்  ஐந்தன்  புலத்தை” என்பது  திருக்குறள். ஆகவே,  புறப்பற்று  ஒழிவிற்குப்  பொறிவழிச்  செல்லும்  மனவலி  குறைய  வேண்டும்  என்பது  போதரும்.  இது  குறித்தே  , ஈண்டு , “உள்  உருக்கி “ என்றார்.  மனம்  வலிதாக  நின்று  புலன்  நுகர்விற்  செல்லாமைப்  பொருட்டு, அதனைக்  கரைத்து , அன்பு  மயம்  ஆக்கவேண்டும்  என்பது  கருத்து.  புறப்பற்று  எல்லாம்  ஒழிய ,  எனது  என்பதற்குப்  பொருலாக  உள்ளது.   “புகுவேன்  எனதே  நின்பாதம்”  என்று  அருளியபடி ,  தம்மை  ஆட்கொள்ளுதற்கு  உரிய  இறைவன்  திருவடியே  ஆம்  என்பார்,  “என்னை  ஆண்டிடவேண்டும் “  என்றார்.

                            புலநுகர்  பொருள்களில்  உள்ள  பற்று  ஒழிந்த  அளவில் , வீட்டின்பம்  பெற  இயலாதாகலின் , யான்  என்பதற்குப்  பொருளாக  உள்ள  உடலைப் பற்றிய  அகப் பற்றும்  ஒழிய  வேண்டும் என்பார் , “உடலிது  களைந்திட்டு” என்றார்.  இது  என்பது  அகப்பற்று  என்னும்  பொருட்டு.  இதனையும்  என்று  விரித்துக்  கொள்ளல்  வேண்டும் . உடலைப்பற்றிய  பற்று  ஒழிதற்கு , உடலையே  ஒழித்தல்  வேண்டும்  என்பது  அடிகள்  கருத்து.. “பிறப்பறுக்கல்  உற்றார்க்கு   உடம்பும்  மிகை”  என்புழி.  “இவ்வுடம்புகளால்  துன்பம்  இடயறாது  வருதலை  உணர்ந்து,  இவற்றானாய  கட்டினை  இறைப்பொழுதும்  பொறாது, வீட்டின்கண்ணே  விரைதலின் ,  உடம்பு  மிகை  என்றார்”  என்று  பரிமேலழகர்  எழுதிய  உரைப்பகுதியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .  “உம்பர்”  என்பது  மேலாகிய  வீட்டின்பத்தைக்  குறிப்பதாகும்.  “தினைத்  துணையேனும்  பொறேன் “  என்பதனால், அடிகள்  புழுக்கூடாகிய  ஊனுடலை  விட்டு  ஒழிப்பதற்கு  விரைகின்றார் என்பது  அறியப் படுதலின் , ஈண்டும்,  “ஒல்லை  உம்பர்  தந்தருளு”  என்றார்.

                             இத்  திருப்பாட்டின்  முதல்  அடியில் ,  நயன  தீக்கையால்  என்  உயிரைத்  தூய்மைப்படுத்து ,  என்னை  ஏற்றுக்கொள்ளல்வேண்டும்  எனவும்,   இரண்டாம்  அடியில் ,  புறப்பற்றை  ஒழித்து, வலிய  நெஞ்சை  உருக்கி  ஆட்கொள்ளல்  வேண்டும்  எனவும் , மூன்றாம்  அடியில் , அகப்பற்றையும்  ஒழித்து , வீட்டின்பம்  நல்க  வேண்டும்  எனவும்  அடிகள் கருதிக்  கூறியபடியாம்.   “யானென  தென்னுஞ்  செருக்கறுப்பான் , வானோர்க்கு  உயர்ந்த  உலகம்  புகும்”  என்பதும்  காண்க.  திருவள்ளுவ  தேவர் ,  உயர்ந்த  உலகம்  என்று  வீட்டு  நிலையைக்  கூறியபடியே,,  இத் திருப்பாட்டில்  “உம்பர்”  என்று  அருளிச்  செய்யப்பட்டது என்க .

                                 இறைவன்  தன்னைச்  சார்ந்தாரைத் துன்பம்  ஒழித்து  இன்புறுத்தும்  இயல்பினன்  என்பது  தோன்ற , “சடையுளே  கங்கை  வைத்த  சங்கரா” என்றார் .  வான்  யாற்றின்  பெருக்கால்  உலகத்திற்குக்  கேடு  நேராவாறு, தன்  சடையின்  ஒரு  கூற்றில்  அடக்கி  இன்புறுத்தினன்  என்பது  புராண கதை.  சங்கரன்  =  இன்பம்  செய்வோன் .  அங்ஙனமே  அகப்  புறப்  பற்றுக்களால்  ஆகிய  துன்பத்தை  ஒழித்து , விரைவில்  வீட்டின்பம்  அருளி , என்னைக்  காத்து  அருளல்  வேண்டுமென்ற  இறுதி  அடியில்  உள்ள  விளியாலும்  குறிப்பிட்டு  அருளினார்  என்பது , ஈரிடத்தும்  அருளுக  என்பவற்றின்  ஈறு  தொக்கு  நின்றன.

                              இதன்கண் , “உள்  உருக்கி  யென்னை  ஆண்டிடவேண்டும்  “ எனவும் , “ஒல்லை உம்பர்  தந்து  அருளுக”  எனவும்  ஆண்டவன்  கருணையை  வேண்டி  இரங்குதலின்,  “காருணியத்திரங்கல்” என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “உடலிது  களைந்திட்டு”  என்றதனால்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாயவாறு  அறிக.

                                        *************************************************

பாடல்  65.

சங்கரா  போற்றி  மற்றோர்

சரணிலேன்  போற்றி  கோலப்

பெங்கரா  அல்குற்  செவ்வாய்

வெண்ணகைக்  கரிய  வாட்கண்

மங்கையோர்  பங்க  போற்றி

மால்விடை  யூர்தி  போற்றி

இங்கிவாழ்  வாற்ற  கில்லேன்

எம்பிரான்  இழித்திட்டேனே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  அகப் புறப் பற்றுக்களை  ஒழித்து,  விரைவில்  வீட்டின்பம்  அருளவேண்டும்  என்று  இரங்கி  வேண்டிய  அடிகள், இத்  திருப்பாட்டில் , அப் பற்றுக்கள  விளைதற்கு  உரிய  ஊனுடல்  வாழ்க்கையைப்  பெற்றேன் ; இழிவு  உடையதென  வெறுத்து  நிற்கின்றேன்  என்று  தம்  உள்ளக்  கருத்தை  வெளிப்படுத்துக்  கூறுகின்றார் .

பதவுரை :-     சங்கரா  போற்றி   = இன்பம்  செய்வோனே காத்தருள்க ,

ஓர்  சரண் மற்று  இல்லேன்  போற்றி  =  ஒரு  புகலிடம்  பிறிது  இல்லேன்  காத்தருள்க ,

பொங்கு அரா கோல  அல்குல் =  சினம்  மிக்க பாம்பின்  படம்  போன்ற  அழகிய  அல்குலையும் ,

செவ்வாய் வெள்நகை  கரியவாள்  கண்  =  சிவந்த  வாயினையும்  வெள்ளிய  பற்களையும்  கருமை  நிறம்  பொருந்திய  ஒளி  மிக்க  கண்ணினையும்  உடைய  ,

மங்கையோர்  பங்கா போற்றி  =  உமையம்மையாரை  ஒரு கூற்றில்  உடையனனே  காத்தருள்க ,

மால்விடை  ஊர்தி  போற்றி  =  திருமால்  ஆகிய  எருதினை  ஊர்தியாக  உடையவனே  காத்தருள்க ,

எம்பிரான்   =எங்கள்  தலைவனே  ,

இங்கு  இவ்  வாழ்வு  ஆற்றகில்லேன்  இழித்திட்டேன்  =  இவ்வுலகில்  இவ்வூன்  உடலோடு  கூடிய  வாழ்க்கையைப்  பொறுக்கமாட்டேன் ;  இகழ்ந்து  வெறுத்துளேன்  என்பது.

விளக்கவுரை :-   நின்னை  இன்பம்  செய்வோன்  என்று  அறிந்து  இருந்தும் , பிறிது  ஒரு  புகலிடம்  நாடுவேனோ?  நாடேன் ,  நாடினும்  , நின்னைப்  போல  அழிவில்லாத இன்பம்  பயக்கும்  ஒரு  தலைவனைப்  பெற  எங்ஙனம்  இயலும்? இயலாது  என்பார்  , “சங்கரா”  என  விளித்து  , “மற்றோர்  சரணிலேன்” என்றார். மற்றைத்  தேவர்  ,  முனிவர்  முதலிய  அனைவர்க்கும்  முடிவான  புகலிடமாக  உள்ளான்  சிவபெருமானே என்பதை  மறை யாகமங்கள்  ஆகிய  நூலறிவானும்  அநுபவவுணர்வானும்  அடிகள்  தெளிந்தவர்  ஆதலின்,  இங்ஙனம்  கூறினார்  என்க.

                           பொங்கல்   =  வெகுளல்  ,  பாம்பு.  சினமுற்றுச்  சீறும்  நிலையிலே  படம்  விரியும்  ஆதலின் ,  “பொங்கரா”  எனப்பட்டது.  அரா,  ஆகுபெயராக  நின்று  படத்தை  உணர்த்தும் .   “செவ்வாய்  வெண்ணகைக்  கரியவாட்கண்” என்பது  முரண் அணி  .  இதனால்  புன்முறுவல்  பூத்த  முகமும் , அருள்  ஒழுகும்  விழியும்  உடையவள்  உலக  அன்னையாகிய  உமையம்மை  என்பது  போதரும் ; தன்  மக்களாகிய  மெய்யன்பர்களை  இனிய  முகத்தோடு  வரவேற்றுக்  கருணை  பாலிப்பவள்  என்பது  கருத்து. 

                             அத்தகைய  அன்னை  உடனாய  அத்தனாக  விளங்கும்  நின்னை  அன்றி  வேறு  புகல்  இல்லேன்  என்பார் , “மங்கையோர்  பங்க”  என்றார். “மால்விடை யூர்தி “  என்றதனால் , திருமால்  முதலிய  தேவர்களும்  சிவ வழிபாடும்  சிவத்தொண்டும்  உடையவர்  ஆவர்  என்பதும் , அன்னாரையும் , சைவ  சீலம்  உடையார்  அம்  முறையில்   வெறாது  போற்றல் வேண்டும்  என்பதும்  போதரும்.

                              திருமால்  முதலிய  தேவர்களும்  தம்  பதங்களைச்  சிறந்தனவாக  எண்ணாமல்  நின்  தொண்டில்  ஈடுபடுவர்  ஆயின்,  சிறியேன்  ஆகிய  யான்  நிலையற்ற  இவ்வுலத்தில்  ஊனுடலோடு  கூடிய  இழிந்த  இவ்வாழ்க்கையை  எவ்வாறு  பொறுப்பேன்  என்பார்,  “இங்கு  இவ்வாழ்வு  ஆற்றகில்லேன்  “  எனவும்  , இவ்வாழ்க்கை  துன்பமிக்கது  என  அறிந்துளேன்  ஆதலின்,  வெறுத்து  இகழ்ந்தனன்  என்பார், “இழித்திட்டேன்  “   எனவும்  கூறினர்.  இவ் வாழ்வு  என்புழிச்  சுட்டு  இழிவு  தோன்ற  நின்றது.  இன்பம்  செய்யும்  பெருமானும்  ,  அருண்  மிக்க  பெருமாட்டியும் , என்றும்  பிரியாது, தம்  உயிர்க்குத்  தந்தையும் , தாயுமாகச்  சிறந்த  ஊர்தி  முதலிய  செல்வங்களுடன்  ஆதரிக்க  இருக்கும்  நிலையில் ,  அவர்களுடன்  கூடி வாழ்தலை  விட்டு  அழியும்  இயல்பினது  ஆகிய  இவ்வுடற்கு  உரிய  தாய் , தந்தையரோடு  எங்ஙனம்  வாழ்வேன் என்பார்,  “இங்கிவாழ்வாற்ற கில்லேன்”என்றார் எனினுமாம் .

                                 இதன்கண்,  “சங்கரா போற்றி  மற்றோர்  சரணிலேன் “   என்றதனால் ,  நீயே  புகலிடமாவாய்  என்பது  பெறப்படுதலின்  ,  காருணியத்திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  ,  “இழித்திட்டேனே” என்றதனால் ,  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                        ***************************************

பாடல் 66.

இழித்தனன்  என்னை  யானே

எம்பிரான்  போற்றி  போற்றி

பழித்திலேன்  உன்னை  என்னை

ஆளுடைப்  பாதம்  போற்றி

பிழைத்தவை  பொறுக்கை  எல்லாம்

பெரியவர்  கடமை  போற்றி

ஒழித்திடிவ்  வாழ்வு  போற்றி

உம்பர்நாட்  டெம்பி  ரானே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் , இவ் வுலகத்து ,  இவ் வாழ்க்கையை  இழித்திட்டேன்  என்ற  அடிகள் , இவ் வாழ்வும்  கன்மத்திற்கு  ஈடாக  இறைவன்  தத்தது  அன்றே ,  இதனை  இழித்தற்கு  உரிய  சுதந்திரம்  தானும்  நமக்கு  ஏது?  என்று  அஞ்சினராய் , என்னை  யானே  இழித்தனன் ;  அதனால்  நின்னைப்  பழித்திலேன்;  ஆயினும்  , அவ்வளவிற்  சிறியேன்  செய்த  பிழையைப்  பொறுத்து  அருளி,  நீயே  இவ் வாழ்க்கையை  ஒழித்திடவேண்டும்  என்று,  இத் திருப்பாட்டில்  மீண்டும்  வேண்டுகின்றார்.

பதவுரை :- எம்பிரான்  போற்றி  போற்றி   =  எம்பெருமானே  வணக்கம்  வணக்கம்

யானே  என்னை  இழித்தனன்   =  யானே  அடியவனாகிய  என்னை  இழிவுபடுத்தல்  ஆனேன்

உன்னைப்  பழித்திலேன்   =  ஆண்டவனாகிய  நின்னை  இகழ்ந்திலேன்,

என்னை  ஆளுடைப்பாதம்  போற்றி  =  என்னை  ஆட்கொண்டருளிய  நின்  திருவடிக்கு  வணக்கம்,

பிழைத்தவை  எல்லாம்  பொறுக்கை  =  செய்த  குற்றங்கள்  அனைத்தையும்  பொறுத்து  அருளல்,

பெரியார்  கடமை  போற்றி   =  பெரியார்  ஆயினார்க்குக்  கடமையாகும்  வணக்கம் ,

உம்பர்  நாட்டு  எம்பிரானே போற்றி  =  மேலாகிய  சிவலோகத்துள்ள  எங்கள்  தலைவனே  வணக்கம்.,

இவ்  வாழ்வு  ஒழித்திடு  =  இவ்வூன் உடலோடு  கூடிய  வாழ்க்கையை  ஒழித்து  அருள்வாயாக  என்பது ,

விளக்கவுரை:-  என்  அன்பு  இன்மையை  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவன்  அறிந்திருந்தும்  ,  கருணை  காரணமாக  யாவரும்  அறிய  என்னை  ஆட்கொண்டு  பெருமைப்படுத்தினன்  ஆயினும் , என் இயல்பை  யான்  அறிந்தவன்  ஆதலின் ,  என்னை  யானே  கீழ்மைப்படுத்தல்  ஆனேன்  என்பார்,  “இழித்தனன்  என்னை  யானே”  என்றார்.  அடிகள்  தம்  இயல்பு  குறித்துத்  தம்மைக்  கீழ்ப்படுத்தனர்  ஆயினும் , அவரை  ஆண்டவன்  ஆட்கொண்டதை  எல்லோரும்  அறிந்து  உளர்  ஆதலின் ,  பிறர்  எல்லாம்  மேன்மைப்படுத்து   மதிக்கலானார்  என்பது  பெறப்படும் .  அகத்து  அன்பு  இன்மை  குறித்து , என்னை  யான்  இழித்தனன்  ஆயினும் ,  யான்  நின்  உடைமையாதலின், அவ்விழிவு  நின்  உடைமையைப்  பற்றி  நிற்றலின் ,  அப்  பிழையைப்  பொறுத்து  அருளல்  வேண்டும்  என்பாராய் , “எம்பிரான்  போற்றி , போற்றி”  என  வணக்கத்தை  அடுக்கிக்  கூறினர் . 

                       என்னை  இழித்துக்  கூறுமுகமாக ,   நின்னை  ஒரு  சிறிதும்  குறைவாகக்   கருதிலேன்  என்பார்,  “பழித்திலேன்  உன்னை” எனவும் ,என்னை  யாரும்  அறிய  ஆட்கொண்ட  திருவடியை  எப்பொழுதும்  நினைவு  கூர்ந்து   வணக்கம்  செலுத்தும் கடப்பாடு  உடையேன்  என்பார்,  “என்னை  ஆளுடைப்பாதம்  போற்றி”  எனவும்  கூறினர் .

                        இறைவன், அடிகளை ஆட்கொண்டது உண்மை.  இதனை அடிகளே  உணர்ந்து  பலவிடத்தும்  கூறியிருக்கின்றனர் .  ஆட்கொண்டு  உபதேசித்த  காலை , அடிகளுடைய  உடல், பொருள்,  ஆவி  மூன்றும்  ஞானாசிரியனாகிய  அப்  பெருமானுக்கு  உரிய வாயின.  “அன்றே  யென்றன்  ஆவியும்  உடலும்  உடமையெல்லாமும் , குன்றேயனையா  யென்னை  ஆட்கொண்ட  போதே  கொண்டிலையோ” என்று  அடிகள்  கூறுமற்றானும்  அறியலாம். அங்ஙனம்  இறைவன்  உடைமையாகிய  தம்மை  அடிகள்  இழித்துக்  கூறியதற்குக்  காரணம் , “நான் தனக்கன்பின்மை  நானுந்  தானும்  அறிவோம்” என்று  கூறியபடி , தம்  அகத்து  மெய்யன்பு  இல்லாமை  என்கிறார்.   அடிகள்,  “யாவர்க்கும்  கீழாம்  அடியேனை  “  என்றபடி,  உலகியலில்  வைத்து , அடிமை  நிலை  கருதி  அங்ஙனம்  கூறினார்  ஆயினும்,  அடிகளுடைய  அன்பு  அளவிட்டு  உரைக்க  இயலாதது  ஒன்று.  அன்புருவமாகிய  அருள்  உருவம்  எய்தினவர்  என்ப.  அவர்  ஒரு  காரணம்  கருதி , உலகியலில்  வைத்துப்  பலவிடத்தும்  தம்மை  இழித்துக்  கூறினர் ஆயினும்,  பின்னர்,  ஆண்டவன்  உடைமையைப்  பழித்த  பெரும்பிழை  செய்ததாக  முடியுமே  என  அஞ்சி , அது  பொறுக்கவேண்டுவார், “பிழைத்தவை  பொறுக்கை  யெல்லாம்  பெரியவர்  கடமை”  என்றார். பொறுப்பவர்  பெரியவர்  என்றதனால் ,  பிழை  செய்தவர்  சிறியர்  என்பது  பெறப்படும் .  அடிகள்  செய்த  பிழை ,  இறைவன்  உடைமையாகிய  தம்மை  இழித்துக்  கூறியது  அன்றி ,  வேறு  இன்று  என்பது.  “செய்து  பிழையறியேன்  சேவடியே  கைதொழுதேன் “ என்பதனாலும்  அறியலாம் .

                       உம்பர்  நாடு  என்பது  மேல் உலகத்தைக்  குறிக்கும்.  எல்லா உலகங்களுக்கும்  மேலாகிய  சிவலோகம்  என்பது  பொருள் ,  எல்லாஉலகங்களுக்கும்  தலைவனாகிய பொருமானே  தமக்கும்  தலைவன்  ஆனமை  பற்றி  உண்டாகிய  உவமையால் , “உம்பர்  நாட்டு  எம்பிரானே” என்றார். இவ்வூன்  உடல்  வாழ்க்கை ,  திருவடி  இன்பத்திற்குத்  தடையாக  இருத்தலான், இதனை  ஒழித்தற்கு ,  ஆக்கிய  நீயே  அதிகாரி  ஆவை  என்பார்,  “ஒழித்திடிவ் வாழ்வு”  என்றார்.

                                 ஆண்டவனே ,  யான்  என்  இயல்பு  குறித்து  என்னை  இழித்தனன்  அன்றி ,  அதன்  மூலம்  நின்னைப்  பழித்திலேன் ; பழித்ததாக  முடியுமாயின் ,  அப்  பிழையைப்  பொறுத்து  அருளல்  வேண்டும் ; மேலும்  என்  வேண்டுகோள்  இவ்  வாழ்க்கையை  ஒழித்தல் வேண்டும்  என்பது.  இதுவே  இத்  திருப்பாட்டின்  அடிகள்  புலப்படுத்திய  கருத்து  என்க.

                                 இதன்கண்,  “பிழைத்தவை  பொறுக்கை  யெல்லாம்  பெரியவர்  கடமை”  என்றதனால் ,  காருணியத்திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  ,  “இழித்தனன்  என்னை” ,  “ஒழித்திடு  இவ்  வாழ்வு”  என்பன  வைராக்கியத்தையும் ,  “என்னை  யாளுடைப்  பாதம்  போற்றி” என்பது பத்தியையும்  புலப்படுத்தலின் ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  தோன்றுதல்  காண்க.

                                  *************************************************

பாடல்  67.

எம்பிரான்  போற்றி  வானத்

தவரவர்  ஏறு  போற்றி

கொம்பரார்  மருங்குல்  மங்கை

கூறவெண்  நீற  போற்றி

செம்பிரான்  போற்றி  தில்லைத்

திருச்சிற்றம்  பலவ  போற்றி

உம்பரா  போற்றி  என்னை

ஆளுடை  ஒருவ  போற்றி .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இவ்  வாழ்க்கையை  ஒழித்திட  வேண்டுமென்று  வேண்டிய  அடிகள், இதன்  ஒழிவின்பின்  எய்தும்  பேறு  குறித்திலர்;  இத்  திருப்பாட்டில்  அப் பேறு  அளித்தற்குரிய  தகுதியுடைமை   பல்லாற்றானும்  நின்  கண்ணதே  என, ஆண்டவனுடைய  பெருமைக்  குணங்களை விளக்கிக்  கூறுகின்றார் . 

 பதவுரை :-   எம்பிரான்  போற்றி  =  எங்கள்  தலைவனே  காக்க ,

வானத்து  அவர்  அவர்  ஏறு  போற்றி  =  விண்ணுலகத்துள்ள  பதவிகளில்  இருக்கும்  அவ்வத்  தேவர்களுக்கும்  ஏறு  போல்பவனே  காக்க ,

கொம்பர் ஆர்  மருங்குல்  மங்கை  கூற   =  பூங்கொம்பு   போன்ற  இடயினையுடைய   உமையம்மையாரை ஒரு  கூற்றில்  உடையவனே ,

வெள்நீற  போற்றி  =  வெள்ளிய  திருநீற்றினையுடையாய்  காக்க,

செம்பிரான்  போற்றி   =  செம்மேனியையுடைய   பெருமானே  காக்க,

தில்லை  சிற்றம்பலவ  போற்றி  =   தில்லை  நகர்க்கண்  உள்ள  அழகிய  நுண்ணிய  ஞானப்பரவெளியில்  திகழ்பவனே  காக்க,

உம்பரா போற்றி  =  சிவலோகத்  தலைவனே  காக்க ,

என்னை  ஆள்  உடை  ஒருவ  போற்றி  =  சிறியேனாகிய  என்னை  ஆட்கொண்ட  தனி  முதல்வனே  காத்தருள்க  என்பது.

விளக்கவுரை  :-   அடிகள்  மக்கட்  பிறப்பினர்  ஆகலான் , அவர்  “எம்பிரான்” என்ற  அளவில் , இறைவன்  மக்களுக்குத்  தலைவன்  ஆவான் என்பது  பெறப்படும் .  அடுத்துத்  தேவர்  உலகங்களில்  உள்ள  இந்திரன் , பிரமன் ,முதலிய  பதங்களில்  உள்ளார்  எல்லோர்க்கும்  தனித்  தனியே  தலைவன்  ஆவான்  என்பது  தோன்ற , “வானத்தவரவ ரேறு”  என்றார் . ஏறு போல்வானை  ஏறு  என்றது  உபசார  வழக்கு .  மண்ணுலகும்  விண்ணுலகும்  கூறவே ,  ஏனைய  உலகும்  அடங்கும்  என்பது .  அங்ஙனம்  தலைவனாகிய  சிவபெருமான்  , “போகியாய்யிருந்துயிர்க்குப்   போகத்தை  புரிபவன்”  என்பது  தோன்ற , “மங்கை கூற “  என்றார் . கொம்பரார்  என்புழி , அர்  போலியீறு .  ஆர் உவமப்பொருட்டு  .  “வெண்ணீற”  என்று , யோகியாய்  யோகமுத்தி  உதவுதற்கு  உரிய  குறியீடு  கூறினர் . உமையொரு  கூறனாய  காலத்தும்  , திருவெண்ணீறு  பூசிய  திருமேனி உடையன்  ஆயினும்  , அதனோடு  சந்தனக்கலவை  முதலிய  மணப்பொருள்களும்  பூசப்படுவனவாம் . யோகநிலையில்  திருவெண்ணீறு  தனிச்  சிறப்பாகப்  பூசப்படுதலின் , “வெண்ணீற”  என்ற  விளி , யோக  நிலையைக்  குறிக்கும்  என்பது. 

                      மக்கள், தேவர் முதலியோர்க்குத்  தலைவனும் , போக  யோகங்களை  அளிப்பவனும்  ஆகிய   சிவபெருமான் , நம்மனோர்  பொருட்டுக்  கருணை  கூர்ந்து  திருமேனி கொள்ளுங்கால் , செந்நிறமான  திருமேனி  உடையன்  ஆவான்  என்பது  தோன்ற,  “செம்பிரான்”  என்றார்.  “சிவன்  எனும்  நாமம்  தனக்கே  உடைய    செம்மேனி  எம்மான்”  என்பது  தமிழ்மறை .  “ஈசற்கு  யான்  வைத்த” என்னும்  திருக்கோவைச்  செய்யுளில்  ,”பூசத்  திரு நீறென  வெளுத்து  “என்புழிச்  செம்மை  திருமேனியாற்  பெறப்படும்  என்று  பேராசிரியர்  கூறியதும் அறிக. 

                          அங்ஙனம்  கொண்ட  திருமேனிகளுள்,  ஆக்கல்   முதலிய ஐந்தொழிற்கும்  தலவன்  தானே  என்பதைப்  புலப்படுத்துத்  திகழ்வது  கூத்தப்  பெருமானாக  விளங்கும் நிலையே.  அத்  திருவுருவம்  தில்லைத்  திருச் சிற்றம்பலத்தில்  சிறந்து  திகழ்வது  என்பது  குறித்து , அதனையே  குறிப்பிட்டுள்ளார் .  தில்லை  –  நகர்ப்பெயர் ;  திருச்சிற்றம்பலம் –  கோயிற்  பெயர்.  இதனைச்  சிதம்பரம்  என்பர்  வடமொழியாளர் . சிதம்பரம்  என்பது      சித்  அம்பரம்  எனப்  பிரிக்கப்பட்டு , ஞானாகாசம்  , என்னும்  பொருள்  உடையதாகும் . தமிழில்  சிற்றம்பலம்  என்பதே  பண்டை  வழக்கு .  சிறுமை  அம்பலம்  என்று  பிரிக்கப்பட்டு ,  நுண்ணிய  ஞானப்பரவெளி  என்னும்  பொருள்  உடையதாகும் . வட  மொழி  மறை  முடிவில்  கேட்கப்படும்  தகராகாசம்  என்பதற்கு  நுண்ணிய  வெளி  என்பதே  பொருள்  .  “சிற்பர  வியோமம்  ஆகுந்  திருச்சிற்றம்பலம் “ என்பர்  சேக்கிழார்  அடிகள் . “அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது”  என்றபடி,   அப்  பெருமானுடைய  அசைவாகிய  திருக்கூத்தினாலே  அண்டங்கள்  எல்லாம்  சுழன்று  நிலைபெறுவன  என்பதும்,  உயிர்த்தொகுதிகள்  இயங்குகின்றன  என்பதும் ,  பிறவும் பெரியார்  கண்ட  உண்மைகள் . ஆங்குத்  திருக்கூத்து  இயற்றும்  நிகழ்ச்சியில் , இன்னும்  பல  அரிய  நுண்பொருள்கள்  உள்ளன  என்பர்  பெரியார். விரிப்பிற்  பெருகும். 

                    செம்மேனி  எம்மான் , நம்மனோர்  பொருட்டு ,  இம்  மண்ணுலகில்  இங்ஙனம்  எளிவந்து  காட்சி   அளித்தனன்  ஆயினும், அப் பெருமானுடைய  சிறப்பிடம்  எல்லா  உலகங்களுக்கும்  மேலாகிய  சிவலோகம்  அல்லது  சிவபுரம்  என்பார்,  “உம்பரா  போற்றி” என்றார். “ உம்பரான்”  என்பதில்  ஆன்  விகுதியில்  உள்ள   ன  கரஈறு   விளிப்பொருளிற்  கெட்டது.  மேற்குறிப்பிட்ட  தலைமை  முதலிய  இலக்கணம் எல்லாம்  நிரம்பிய  ஓப்பற்ற  பரம்  பொருளே என்னை  ஆளாக்கிக்  கொண்டான்  என்னும்  உவகை  தோன்ற ,  ஈற்றில்  , “என்னை  ஆளுடை யொருவ”  என்றார் . ஒருவன்,  தனக்கு  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாதவன்  என்னும்  பொருட்டு.

                       இதன்கண்,  இறைவனுடைய  பலவகைப்  பெருமைக்  குணங்களையும்  எடுத்து  விளக்கிக்  காத்தருள்க  என்று  வேண்டினமையின் , காருணியத் திரங்கல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                       **********************************************

பாடல்  68.

ஒருவனே  போற்றி  ஒப்பில்

அப்பனே  போற்றி  வானோர்

குருவனே  போற்றி  எங்கள்

கோமளக்  கொழுந்து  போற்றி

வருகவென்  றென்னை  நின்பால்

வாங்கிட  வேண்டும்  போற்றி

தருகநின்  பாதம்  போற்றி

தமியனேன்  தனிமை  தீர்த்தே .

கருத்துரை  :-    முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பர்க்குப்  பேரின்பம்  அளித்தற்கு  உரிய  தகுதி  பலவகையானும்  சிவபெருமானுக்கு  உண்டு  என்று  விளக்கிய  அடிகள்,  இவ் வூனுடலோடு  கூடிய  வாழ்க்கை  ஒழிவில்  தமக்கு  வேண்டிய  பேறு  திருவடிச்  சார்புபற்றிய  இன்பம்  ஆகும்  என்பதை  இத்  திருப்பாட்டில்  உணர்த்துகின்றார் .

பதவுரை :-    ஒருவனே  போற்றி  =  தனி  முதல்வனே  வணக்கம் ,

ஒப்பில்  அப்பனே  போற்றி  =     நிகரற்ற  என் தந்தையே  வணக்கம் ,

வானோர்  குருவனே  போற்றி   =  தேவர்களின்  ஞானாசிரியனே  வணக்கம்

எங்கள் கோமளக்கொழுந்து  போற்றி  =   அடியேங்களது  மெல்லிய  இளந்தளிரே  வணக்கம் ,

என்னை  நின்பால்  வருக  என்று  வாங்கிட  வேண்டும்  போற்றி  =  அடியேனை  நின்  பக்கலில்  வருக  என்று  கட்டளை  இட்டு  ஏற்றுக்கொள்ளல்  வேண்டும்   வனக்கம் ,

தமியனேன்   தனிமை  தீர்த்து  =  உறுதுணையில்லாதேனைத்  தனிமை  ஒழித்து ,

நின்  பாதம்  தருக  போற்றி  =  நின்  திருவடியைத்  தந்து  அருளல்  வேண்டும்  வணக்கம் ,  என்பது. 

விளக்கவுரை  :-     இறைமை  இலக்கணம்  எல்லாவற்றினுஞ்  சிறந்தது ,  “ஒன்றே  குலமும்  ஒருவனே  தேவனும் “  என்றபடி  , ஒருவன்  ஆதலாம் .  இரண்டாம் அவனாக  மற்றொரு  தலைவனும்  உளன்  எனின்.  முழுமுதல்  தலைமை  இயல்  சிதைந்துவிடும்  என்க.   சிவனோடொக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை”   என்றபடி , மறையாகமங்களின்  ஆராய்ச்சியாலும் ,  அநுபவ  ஞானிகளின்  உபதேசத்தாலும்  சிவபெருமான்  ஒருவனே  கடவுள்  இலக்கணம்  எல்லாம்  நிரம்பப்  பெற்றவன்  என்பது  தெளியப்படும்  என்க. அத்தகைய  பரம் பொருளாகிய  நீயே  என்  தந்தை  ஆயினை  என்பார் ,  “ஒப்பில்  அப்பனே  என்றார் .  “ஒப்பில்”  என்னும்  அடயை  , “ஒருவன்”  என்பதனோடும்  கூட்டுக .  நிகரற்ற  தந்தை  என்றதனால் ,  தம்  பேரின்ப  வாழ்க்கைக்கு  வேண்டும்  செல்வங்களுள்  எதற்கும்  வேறு  யாரையும்  எதிர்  பார்க்க  வேண்டுவது  இல்லை  என்பது  அடிகள்  கருத்து  என்க.   உடற்காப்புச்செய்யும்  அவ்வளவில்  ஒழியும்  உலகியல்  தந்தை  போலாது   ஞானநெறியை  உபதேசித்து  , உயிர்க்காப்புச்செய்யும்  ஞானாசிரியனும்   ஆவான்  என்பது ,  “ஒப்பில்”  என்னும்  அடைமொழியால்  உணரத்தக்கது.

                        தம்  அளவினும் , ஏனை  மெய்யன்பராகிய  மக்கள்  அளவினும்  ஞானாசிரியன்  ஆவான்  என்பது  அன்றி , பக்குவ  முதிர்ந்த  தேவர்   முதலியோர்க்கும்  ஞான  குரு  ஆவான்  என்பது  தோன்ற  , “வானோர் குருவனே” என்றார்.  மெய்யன்பு  உடைய  அடியார்  குழுவை  உளப்படுத்து , “எங்கள்” என்றார் . கோமளம்  = மென்மை , கொழுந்து  என்பது,  செடி  கொடிகளின்  நுனியில்  உள்ள  தளிர்  ஆகும்.  மெய்யடியார்  கூட்டமாகிய  பூஞ்செடிகளின்  கொழுந்தாக  இறைவனைக்  கூறியது  ,  அச்  செடி  கொடிகளின்  வேர்க்கு  ஏற்படும்  நலந்தீங்குகளால்  உண்டாம்   மலர்ச்சியும்  வாட்டமும்  முதலிற்  கொழுந்திற்கு  உளவாதல்  போல மெய்யன்பர்க்கு  ஏற்படும்  நலந்தீங்குகளை  முதலில்  இறைவன்  தன்னுடையவாக   உணர்ந்து  கோடல்பற்றி  என்க.  வேர்க்கு  ஏற்படும்  தீங்கை  முதலிற்  கொழுந்தால்  உணர்ந்து , மற்றைப்  பகுதிகளுக்கு  அத்  தீங்கு  பற்றாமுன்  விரைந்து  பரிகரிக்கப்படுதல்  போல , மெய்யடியார்க்குப்  பண்டை  வினையால்  ஓரோவழிக்  கலக்கம்  நேரத்  தொடங்குங்கால் , அஃது  அவரைப்  பற்றா முன்னரே,  ஆண்டவன்  அறிந்து  பரிகரிப்பன்  என்பது  கருத்து, இறைவனே  கொழுந்தாகக்  கூறப்பட்டமையாலும்  , அவனின்  வேறாகப்  பரிகரிப்பான் ஒருவன்  இல்லாமையானும்  , ஈண்டு  அறிபவனும்  பரிகரிப்போனும்  அவனே  என்பது  அறியத் தக்கது.  இறைவனைக்  கோமளக்கொழுந்து  என்றது  ஏகதேசவுருவகம். 

                        மாயா  காரியமாகிய  தநு கரண புவன போகங்களில்  அகப்பட்டுத்  தவிக்கும்  என்னை , அவற்றினின்றும்  விடுவித்து ,  நின்  பக்கலில்  ஏற்றுக்கொள்ள  வேண்டுமென்பார் , “என்னை  நின்பால்  வாங்கிட  வேண்டும்”  என்றார் .  அடிகள்  தமக்கு  மாயா  காரியங்களால்  ஏற்பட்ட  துன்பத்த, ஆண்டவன்  கோமளக்  கொழுந்தாக  இருந்து , அறிந்து  இருப்பான்  என்னும்  துணிவினால்,  “வருக”  என்று  இன்சொற்கூறி  அழைத்துக்கொள்ளல்  வேண்டும்  என்றார்  என்க.  துன்பத்தாற்  பற்றப்பட்டான்  ஒருவனைக்  காப்பாற்றப்  புகுவோன் ,  முதலில்  இன்சொற்  கூறிப்  பின்  செயல்   அளவில்  ஆதரித்தல்  உலகியலிற்  காணலாம் .  அவ்வாறே , ஈண்டு  “வருக” என்று  இன்சொற்  கூறிப்பின்  வாங்கிட  வேண்டும்  என்று  வேண்டுவார்  ஆயினர் .  துன்பச்  சேற்றிற்  பதிந்து  கிடப்பவனை ,  இன்சொற்  கூறிக்  கைதூக்கி  எடுத்தபின்  , அவன்  களைப்புத்தீர ,  வேண்டுவன  செய்து , நல்லிடன்  அளித்து  இன்புறுத்தல்  அருள்  வண்மையுடையார்  இயல்பு  ஆகும்  அன்றோ?  அங்ஙனமே , அடியேனைப்  பாசப்பிணிப்பினின்றும்  விடுத்தபின் , தனிமை  தீர்த்து, இன்பம்  நுகருமாறு  நின்  திருவடியை  அளித்தல்  வேண்டும்  என்பார், “தருக  நின்  பாதம்”  என்றார் .  இறைவன்  திருவடித்துணை  பெறுங்காறும்  பற்றுக்  கோடு  இல்லாதவன்  என்பார்., “தமியனேன் “எனவும் , அத்  திருவடிப்பேறு  ஒன்றே  பேரின்புறுத்துவது  அன்றித்  துணையாக  நின்று  அத்  தனிமையையும்  தீர்ப்பதாகும்  என்பார், “தனிமை  தீர்த்து”  எனவும்  அருளிச்செய்வார்  ஆயினர் .

                               இதன்கண்,  “ வருகவென்  றென்னை  நின்பால்  வாங்கிட  வேண்டும்  ,”  “தருக  நின் பாதம்”  என்பவற்றால் இறைவன்  கருணை  குறித்து  வேண்டுதல்  பெறப்படுதலின் , காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல் அறிக.

                                         ********************************************

பாடல்  69.

தீர்ந்தஅன்  பாய  அன்பர்க்

கவரினும்  அன்ப  போற்றி

பேர்ந்துமென்  பொய்மை  யாட்கொண்

டருளிடும்  பெருமை  போற்றி

வார்ந்தநஞ்  சயின்று  வானோர்க்

கமுதம்ஈ  வள்ளல்  போற்றி

ஆர்ந்தநின்  பாதம்  நாயேற்

கருளிட  வேண்டும்  போற்றி .

கருத்துரை:-     முன்னைத்  திருப்பாட்டில்  என்னை வருக  என்று  அழைத்து , நின்  திருவடியைத்  தரல்வேண்டும்  என்று  வேண்டிய  அடிகள், அங்ஙனம்  தருதற்குத்  தடையாகவுள்ள  குற்றம்  தம்பாலதாக , அதனைப்  பொறுத்து  நலம்  செய்தல்  நின்  இயல்பு   ஆம்  என  ஆண்டவனுடைய  பெருமை,  வண்மை  முதலிய  உயர்  குணங்களை இத்  திருப்பாட்டில்  வேண்டுகின்றார்.

பதவுரை:-   தீர்ந்த  அன்பாய  அன்பர்க்கு   =  முதிர்ந்த  மெய்யன்பு  வடிவமான  அடியார்க்கு ,

அவரினும்  அன்ப  போற்றி   =  அவர்  அளவினும்  மிகுதியான  அன்புடையவனே  வணக்கம்,

என்  பொய்மை  பேர்ந்தும்   =  சிறியேனது  போய்  ஒழுக்கத்தை ஒழித்தும்,

ஆட்கொண்டும்  =  என்னை  அடிமை  கொண்டும்,

அருளிடும்  பெருமை  போற்றி  =  அருள்  புரிந்த  பெருமைக்  குணம்  உடையோனே  வணக்கம் ,

வார்ந்த  நஞ்சு  அயின்று  =  பாற்  கடலில்  ஒழுகிப்  பரந்த  நஞ்சை  உண்டு

வானோர்க்கு  அமுதம்  ஈ  வள்ளல்  போற்றி   =  தேவர்க்கு  அமுதம்  கொடுத்து  அருளிய  வள்ளலே  வணக்கம் ,

ஆர்த்தநின் பாதம்  =  அழிவில்  இன்பம்  நிறைந்த  நின்  திவடியை  ,

நாயேற்கு  அருளிட  வேண்டும்  போற்றி   =  நாயின்  தன்மையுடைய   சிறியேனுக்குத்  தந்தருள  வேண்டும்  வணக்கம்  என்பது . 

விளக்கவுரை :-  தீர்ந்த  அன்பு  –  முதிர்ந்த தலையன்பு ;  கண்ணப்ப  நாயனார்  அன்பு  போல்வது.  அன்பாய  அன்பர்  என்றதனால்  அன்பைக்  குணமாகக்  கொண்டு ,  அதனை  உடைய  அன்பர்  குணிப்பொருளாக  இல்லாமல்,  முதிர்ந்த  அன்பாகிய  குணமே  உருக் கொண்டால்  ஒத்த  மெய்யடியார்  என்பது  போதரும் .  அத்தகைய  தலையன்பு  உடையார்க்கு  என  அடிகள்  படர்க்கையில்  வைத்துக்  கூறினும் , நம்மனோற்  கொள்ளற்பாலது  அதற்குத்தகும்  தகுதியுடையார்  அடிகளேயாவர்  என்பதாம் . ஆண்டவனுக்கு  மெய்யன்பர்  செய்யும்  தொண்டுகள்  வரலாற்றுமுகமாக  அறியப்படுவன . “அன்பர்க்கு  அவரினும்  அன்ப”  என்றதனால், அத்தகைய  பேரன்பாளர்க்கு  ஆண்டவன்  செய்த  பணிகளும்  பலவாகும் .  அதற்கும்  சான்றாக  அடிகள் வறலாற்று  நிகழ்ச்சிகளையே  கொள்ளலாம் .  “மண்  சுமந்து  கூலி  கொண்டு , புண்  சுமந்த  பொன்மேனி”  உடையன்  ஆனமையும் ,  பிறவும்  ஈண்டு  உணரத்தக்கன  , “பெயர்த்தும் “  என்பது  பேர்த்தும்  என்றாகி ,  எதுகை  நோக்கி  மெலிந்து  நின்றது .  என்  பொய்மையைப்  பெயர்த்தும்  என்றபடி , நாடகத்தால்  உன்  அடியார்  போல்  நடித்த  என்  பொய் ஒழுக்கத்தை  ஒழித்தும்  என்பதாம்.  நோயினாற்  பற்றப்பட்ட  உடல்  உடையானுக்கு , அந்  நோய்  நீக்கம்  செய்தலே  பேருதவியாகும் . அவ்வளவன்றி , அவன் உடல்  வன்மையுடன்  நெடுங்காலம்  இருக்கும்படி  காய  கற்பமும்  ஈதல்  மிகப்  பேருதவி  ஆகும்  அன்றே? என்  பொய்  ஒழுக்கத்தை  ஒழித்ததோடு  அமையாது , தகுதியில்லாத  என்னை  யாவரும்  காண  ஆளாகவும்  கொண்டனையே  என்று  உள்ளம்  உருகிப்  பாராட்டுவார்,  “  ஆட்கொண்டு  “ என்றார்.  ஆட்கொண்டும்  என்புழி.  எண்ணும்மை  விகாரத்தால்  தொக்கது , “பொறுப்பர் அன்றே  பெரியோர் சிறு  நாய்கள் தம்  பொய்யினையே”  என்றபடி , பொய்மை  பொறுத்தலே  பெருமையாக  மேலும்  அதனைப்  பெயர்த்தும் ,  ஆட்கொண்டும்  அருள்  புரிதல்  எத்துனைப்  பெருமையாம் என்பது  நினைக்கத்  தக்கது . பெருமைக்  குணத்தின்  இலக்கணம்  இங்ஙனம்  ஆம்  என்பது .  இக்குறிப்புத்  தோன்றவே , “அருளிடும்  பெருமை” என்றார் .  பெருமை, ஆகுபெயராக  நின்று  , குணிப்  பொருளாகிய  ஆண்டவனை  உணர்த்தும் .

      வார்தல்  =  ஒழுகுதல் .  திருப்பாற்  கடல்  கடைந்த  ஞான்று ,  அமுதம்  தோன்றுதற்கு  முன்னரே  கடைகயிறாக  மேற்கொண்ட  பாம்பின்  வாயினின்றும்  நஞ்சு  ஒழுகி  யாண்டும்  பரவியதாக , அது  கண்டு  அஞ்சிய  தேவர்களைக்  காத்தற்பொருட்டு ,  அந் நஞ்சைத்  தான்  உண்டு , பின்னர்  தோன்றிய  அமுதத்தை    தேவர்  உண்ணக்  கொடுத்தனன்  என்பது  புராணக்கதை  .  இவ்  வரலாறு  நன்றே  சிவபெருமானுடைய  பேராற்றலையும்  பேரருளையும்  புலப்படுத்துவதாகும் .  உலகத்து  வள்ளல்  ஆவார் , தமக்குக்  கிடைத்த  அரிய  பொருளைப்  பிறர்க்கு  வழங்கும்  பெற்றியர்  ஆவர்  என்ப .  அதியமான்  நெடுமான் அஞ்சி  என்னும்  தமிழ்  நாட்டு   வள்ளல் ,  ஒளவைப்  பிராட்டிக்கு  நெல்லிக்கனி  ஈந்த  வரலாறு  இதற்குச்  சான்றாம்  என்பது,  உண்டாரைப்  பல்லாண்டு  வாழச்  செய்யும்  நெல்லிக்கனி  ஒன்று  அரிதிற்  கிடைத்ததாக ,  அதனைப்  பெற்ற  அதியமான் ,  தான்  உண்டு  நெடுங்காலம்  வாழ்தலினும் ,  சிறந்த  தமிழ்ப்  புலமை  சான்ற  ஒளவைப்  பிரட்டி  உண்டு , நீடு  வாழ்தல்  உலகத்தவர்க்குப்  பெரும்  பயன்  விளைப்பதாகும்  எனக்  கண்டு ,  அதனைப்  பாதுகாத்து  வைத்திருந்து , தன்பால்  ஒளவையார்  வந்ததும் , அந்  நெல்லிக்கனியின்  அருமையையும்  , அதனால்  விளையும்  பயனையும்  வெளிப்படுத்தாமல்  தன்  உள்ளே  அடக்கிக்  கொண்டு , அப்  பிராட்டிக்குக்  கொடுத்து  உண்ணச்  செய்தானாம்.  பின்னர், அதன்  அருமையையும்  பயனையும்  அறிந்து , ஒளவையார்  அவ்  வள்ளலைப்  பாராட்டி  வாழ்த்திய  பாடல்  அறிந்து  இன்புறத்தக்கது  .  அப்  பாடலில் , “நீலமணிமிடற்  றொருவன்  போல  மன்னுக  பெரும  நீயே…………சிறியிலை  நெல்லித் தீங்கனி  குறியாது,  ஆதல் நின்னகத்தடக்கிச்   சாதனீங்க எமக்கீந்தனையே “  என்னும்  பகுதி  மிகவும்  பாராட்டத்தக்கது.  தீங்கனி  குறியாது  என்பதற்குப்  பெறுதற்கு  அரிது  என்று  கருதாமல்  எனவும் , ஆதல்  நின்னகத் தடக்கி  என்பதற்கு  அதனால்  விளையும்  பயனை  எனக்குக்  கூறாமல்  நின்னுள்ளே  அடக்கி  எனவும்  பொருள்  கொள்ளல்  வேண்டும் .  அருமையும்  பயனும்  உண்ணுதற்கு  முன்னரே  கூறினால் , ஒளவையார்  வாங்கி , அவ்  வள்ளல்  வாயிலே  செலுத்தி  விடுவார்  என்பது  கருத்து.  தன்  சாவைப்  பொருட்படுத்தாமல் , ஒளவை சாவாமையைக்  குறித்து  இங்ஙனம்  வழங்கிய  வள்ளலை  , அப்  பிராட்டி  வாழ்த்துங்கால் , சாதற்குக்  காரணமாகிய நஞ்சுண்டும்  இறைவன்  நிலைபெற்று  இருத்தற் போல , நீயும்  சாவாது  இருத்தல்  வேண்டும்  என்னும்  கருத்துத்  தோன்ற , “நீலமணி  மிடற் றொருவன்  போல மன்னுக பொரும”   என்றாராம் .  இந்  நிகழ்ச்சியில்  , அதியமான்  ,  நலம்  விளைப்பதை  ஒளவைக்கு  ஈந்தனன்  என்பதன்றிக்  கேடு  விளைப்ப  தொன்றைத்  தான்  உண்டான்  என்பதில்லை, இறைவன்  செய்தியில்  , ஒழுகிய  பெருநஞ்சைத்  தான்  உண்டு , தேவர்க்கு  அமுதம்  ஈந்தான்  என்பது  நினைக்கத்தக்கது .  “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ வொருவரும், உண்ணாத  நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய் “ என்பது  சிலப்பதிகாரம் .  இத்தகைய  பெருவண்மை ,  இறைவனிடத்து  அன்றி  மக்கள்பால்  எதிர்பார்க்கத்தக்கது அன்று.  வண்மைக்  குணத்தின்  முடிந்த எல்லை  இது  எனக்கொண்டு , “நஞ்சயின்று  அமுதமீவள்ளல்”  என்றார் .ஈ  வள்ளல் , வினைத்தொகை.  “பெயக்கண்டும்  நஞ்சுண்டமைவர்   நயத்தக்க , நாகரிகம்  வேண்டுபவர் “  என்னும்  திருக்குறளுக்குப்  பரிமேலழகர்  எழுதிய  உரையில் , மக்களில் இந்  நிகழ்ச்சி  காணப்படாமையானும்  சிவபெருமான்  எல்லா  ஆற்றலும்  உடையன் ஆதலின் , அவர்க்கு  இஃது  எளிது ஆகலான், அச்சரித  நிகழ்ச்சியை  எடுத்துக்காட்டுதல்  வேண்டா  வென்னும்  கருத்தானும், வரலாற்றுப்  பகுதி எடுத்துக்  காட்டாது  ஒழிந்தனர்  போலும் .

       ஆர்தல்  –  நிறைதல் ;  சார்ந்தார்  எய்துதற்கு  உரிய  அழிவு இல்லாத  பேரின்ப  நிறைவைக்  குறிக்கும் .  நஞ்சுண்டு  அமுதம்  ஈந்த  வள்ளல்  ஆதலின், சிறியேன்  பிழைகள்  எல்லாவற்றையும்  அடக்கிப்  பேரின்ப  நிறைவாகிய  திருவடிகளைத்  தந்து  அருளுவை  என்னும்  துணிவு  மேற்கொண்டு  ,  வேண்டுவன்  என்பார் , “நாயேற்கு  ஆர்ந்த  நின்  பாதம்  அருளிட வேண்டும்”  என்றார் .  இழிந்த  நிலையில்  பல  குற்றங்களுக்கும்  ஆளானவன்  என்பது  தோன்ற , “நாயேற்கு”  எனவும் , நின்  வண்மைக்  குணத்தால் , அக்  குற்றங்களைக்  கருதாமல்  எனக்கு  அருளத்தக்கது பேரின்ப  நிறைவாகிய  திருவடி  இன்பம்  என்பார்,  “ஆர்ந்த  நின்  பாதம்  “ இத்  திருப்பாட்டின்  முதல்  அடிக்  கருத்து.  இரண்டாம்  அடியிற்  கூறப்பட்டதற்கும் , மூன்றாம்  அடிக்  கருத்து ,  நான்காம்  அடியிற்  கூறப்பட்டதற்கும்  ஏதுவாக  அமைந்திருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது .

                     இதன்கண், என்  பொய்மை  ஒழித்து  என்னை  ஆண்டருள வேண்டுமெனவும் , நாயேற்கு  நின்  பாதம்  அருளிட  வேண்டும்  எனவும் , இறைவனை  நோக்கி  வேண்டுதல்  காணப்படுதலின் , காருணியத் திரங்கல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக. 

                                ****************************************************

பாடல்  70.

போற்றியிப்  புவனம்  நீர்தீக்

காலொடு  வானம்  ஆனாய்

போற்றியெவ்  வுயிர்க்குந்  தோற்றம்

ஆகிநீ  தோற்ற  மில்லாய்

போற்றியெல்  லாவு  யிர்க்கும்

ஈறாயீ  றின்மை  யானாய்

போற்றியைம்  புலன்கள்  நின்னைப்

புணர்கிலாப்  புணர்க்கை  யானே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  மெய்யன்பர்  பொருட்டு  மேற்கொண்ட  அருள் , பெருமை , வண்மை  என்னும்  உயர்  குணங்களின்  சிறப்பைப்  பாராட்டிய  அடிகள், இத்  திருப்பாட்டில்  எல்லாமாய்த்  தோற்ற  வொடுக்கமின்றிப்  புலனறிவிற்கு எட்டாமல் நிற்கும்  அவ்  இறைவனுடைய  ஒப்புயர்வற்ற  தன்மைகளை  எடுத்துக்கூறிப்  பாராட்டுகின்றார் .

பதவுரை :-  இப்  புவனம்  நீர்  தீ  காலொடு  வானம்  ஆனாய்  போற்றி  = 

இந் நிலம்  நீர்  நெருப்புக்  காற்று  விண்  என்னும்  ஐம்பெரும்  பூதங்களும்  ஆயினய்  வணக்கம் ,

எவ்  உயிர்க்கும்  தோற்றம்  ஆகி  நீ  தோற்றம்  இல்லாய்  போற்றி  = 

எல்லா  உயிர்களும்  தோன்றுதற்குக்   காரணன்  ஆகி  நீ  ஒன்றில்  தோன்றுதல்  இலன்  ஆனாய்  வணக்கம்,

எல்லா  உயிர்க்கும்  ஈறாய்  ஈறு இன்மை  ஆனாய்  போற்றி   =

எல்லா  உயிர்களும்  ஒடுங்கும்  இடனாய்  நீ  ஒன்றில்  ஒடுங்குதல்  இலன்  ஆனாய்  வணக்கம் ,

ஐம்புலன்கள்  நின்னைப்  புணர்கிலாப்  புணர்க்கையானே  போற்றி   =

மனத்தோடு  இயைந்து  ஐம்பொறிகளும்  நின்னைச்  சார்தல்  இல்லாதபடி  சார்ந்திருப்பவனே  வணக்கம்  என்பது.

விளக்கவுரை  :-    நம்மாற்  காணப்படும்  இவ்வுலகம்  மண்ணுலகம்  ஆதலின், “இப்புவனம்”  என்று  முதலிற்  சுட்டிக் கூறப்பட்டது  .  முதலில்  நிலம்  கூறப்பட்டமையால் , ஒடுக்கமுறை  பற்றி , முறையே  புவனம் , நீர் , தீ , கால் , வானம்  என்றார் .  ஐம்பெரும்  பூதங்களும்  வெளிப்படக்  கூறப்பட்டமையால்,  தீயின்  கூறு  ஆகிய  ஞாயிறு  திங்களும், இங்ஙனம்  கூறுதற்கு  வினை  முதலாகிய  உயிரும்  ஆகிய  மூன்றும்  கொள்ளப்படும் என்க.  இவ்  வெண்வகைப்  பொருள்களும்  இறைவனுக்குத்  திருமேனியாகும்  என்பது.  இதனால் , இறைவன்  உலகெலாம்  ஆவானென்பது  பெறப்படும் .

                 உலகத்  தோற்றத்திற்குக்  காரணன்  ஆதல்  பரம்பொருள்  இலக்கணங்களுட்  சிறந்ததொன்று  என  மறையாகமங்கள் கூறும் . ஆதலின்,  “எவ்வுயிர்க்கும்  தோற்றமாகிய “  என்றார் .  தோற்றம் , இலக்கணைச்  சொல்லாக  நின்று , காரணன்  ஆதலை  உணர்த்தும் , உயிர்களின்  பிறப்பிற்கு  மாயையினின்றும்  உடல்  முதலியன  கிடைப்பதால், மாயை  காரணம்  ஆகாதோ எனின் ,  மாயை  தனக்கு  ஆதாரமாக  உள்ள  சிவசத்தியின்கண் நின்று  , அச்  சத்தி  இயக்கிய  வழியே  அவ்வக்காரியங்களைப்  பயக்கும்  ஆற்றல்  உடையதாகும்  ஆதலின்,  மாயா  காரியமாகிய  உலகம்  சிவ சத்தியினின்றும் தோன்றியதேயாம் என்ப. அதனால், உலகத்  தோற்றத்திற்குக்  காரணன்  சிவபெருமானே யன்றி மாயை  உண்மைக் காரணன்  ஆகாது என்க.   இவ்வுண்மையை, “வித்துண்டா  மூல முளைத்த வாதாரகமாம்” என்னும் சிவஞான  போத  வெண்பாவின் பேருரையில் , சிவஞான  முனிவர்  விளக்கி  உரைத்தமை  யானும்  உணர்க .  உலக  ஒடுக்கத்திற்கும்  இவ்வாறே  கொள்க. “ஏல்லா உயிர்க்கும்  ஈறாய்  ஈறின்மையானாய்  “ என்றது.  எல்லா  உயிர்களும்  ஒடுங்குதற்கு  முடிவு  இடனாக வுள்ளவன்  மகாருத்திரனாகிய  பரமசிவனே என்ப.  “அந்தமதி “ என்புழி  , அந்தத்தைச்செய்யும்  மகா சங்கார காரணன் பமசிவனே என்பது  தெளிவிக்கப்பட்டமை  அறிக.  எல்லாம்  முடிவில்  தன்பால்   ஒடுங்கத்  தான்  ஒன்றினும்  ஒடுங்குதல்  இன்றி , அழிவில்  பொருளாகத்  திகழ்பவன்  சிவபெருமானே யாவான்  என்பது , “ஓதத்தொலிமடங்கி  …… வேதத்தொலி  கொண்டு  வீணைகேட்பார்  வெண்காடு  மேவிய  விகிர்தனாரே”  என்னும்  தமிழ்  மறையனும்  அறிக.  உலகம்  எல்லாம்  தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும்  காரணன்  ஆகி , தான்  தோன்றுதலும்  ஒடுங்குதலும்  இல்லாத  தனி முதல்வன்  ஆவன் என்னும்  இவ் இயல்பால், இறைவன் உலகில்  வேறு ஆவான்  என்பது  பெறப்படும் என்க.

                 புலன்கள் என்பது  ஈண்டு  வாயிலாகவுள்ள  பொறிகளை  உணர்த்தும். மனம், பொறி வழிச்சென்று நுகரும் புலன்கள் எல்லாம் சடப்பொருள்களைப்  பற்றின ஆதலானும் , ஞான  வடிவமாகிய இறைவன் மெய்யுணர்வினால்  அன்றி  அற்யப்படாதவன்  ஆதலானும், ஐம்பொறிகளுக்கும்  எட்டாத  நிலையினன்  என்பது தோன்ற , “ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலா” என்றார்.  ஐம்பொறிகளும் இறைவனைப் பற்றாவாயினும் , வினைக்கு ஈடாகப் பிறந்த உயிர்கள் எல்லாம் அவ்வினைப் பயன்களை நுகர்ந்து , வினை யொழிவு பெற்று நலம் அடைய வேண்டும் என்னும் கருணை காரணமாக, இறைவன் ,அவ்வுயுர்கள் கன்மப் பயன்களை அநுபவிக்குங்கால் , அவற்றோடு உடனாக  நின்று உதவி புரிவன் என்னும் உண்மை தோன்ற, அவ் ஐம்பொறிகளோடு சார்ந்திருப்பன் என்பார் . “புணர்க்கையானே” என்றார். ஐம்பொறிகளும் ஆண்டவனைப் பற்றா, ஆண்டவன் அவ் ஐம்பொறிகளையும் சார்ந்து நிற்பன் என்பது  கருத்து. ஐம்பொறிகளால் பற்றப்படுவான் ஆயின் , மீள முடியாத நிலை ஏற்படும் . உயிர்களுக்கு  உபகரித்தல் கருதி, இறைவன் புணர்ந்து இருப்பான் ஆயின், வினைஒழிவின்பின், தானும் அவற்றைவிட்டு , அவ்வுயிரையும் விடுவித்துத் தன் திருவடி இன்பத்தில் இயைப்பன் என்பது கருத்து. இதனால், ஆண்டவன்  உலகத்தோடு  உடனாதல் பெறப்படும் என்க. இங்ஙனம்  இறைவனுக்கும்  உலக  உயிர்களுக்கும் உள்ள  இயைபு  “எட்டுத்  திசைதானாய் வேறாயுடன் ஆனான் இடம் வீழிம் மிழாலையே” என்று தமிழ்மறையும் , “உலகெலாமாகி  வேறாயுடனுமாய் “ என்று ஆகமமுடிவும் கூறியபடி, உலகெலாம் ஆதல், வேறாதல், உடனாதல் என்னும்  முத்திறப்படுத்து உரைக்கப்படும் என்பது. இம் முத்திறமும் இத் திருப்பாட்டின் முதல்  அடியிலும் , இரண்டாம், மூன்றாம் அடிகளிலும் ,நன்காம் அடியிலும் அமைந்து  இருத்தல் அறிந்து இன்புறத்தக்கது .

                   இதன்கண், உலகெலாமாகி, வேறா யுடனுமாய் விளங்கும் இறைவனை ஐம்புலன்களாலும் பற்றப்படாதவன் என்று கூறியிருத்தலின், ஐம்புலன் அளவில் அன்றி, மேற்சொல்லாத சிறியேனைக் கருணை காட்டி ஆட்கொள்ளல் வேண்டும் என்று இரங்கிக்  கூறியது பெறப்படுதலின், காருணியத்திரங்கல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                   **************************************************

8.   ஆனந்தத் தழுந்தல்

 னந்தத்து அழுந்தல் என்பது இன்பத்தில் அழுந்தி நிற்றல் என்னும் பொருளதாம். இன்பம், ஈண்டு அழிவில் இன்பம் ஆகிய பேரின்பம் ஆகும். உடல் அளவில் உயிர் நுகரும் இன்பம் ஐம்பொறிகளின் வாயிலாக அநுபவிக்கப்படும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தும் ஆம் . பொறிவழி மனம் சென்று , ஒரு புலனை அறியுங்கால் , பொது முறையில் இல்லாமல், சிறப்பு முறையில் அறிதல் அநுபவம் ஆகும். அநுபவம் என்பது அழுந்தி அறிதல் ஆகும் என்ப. எடுத்துக்காட்டாக ஒன்றை நினையலாம் . நாவாகிய பொறியால் , ஒரு பழத்தைச் சுவைக்குங்கால், இன்ன இயல்பினது என்று அழுந்தி அறியின் அஃது அனுபவம் ஆகும்.

     பொறிவழி அநுபவிக்கப்படும் இன்பங்கள் எல்லாம் விரைவில் அழியும் இயல்பினவாம் . மேலும், அவ்வின்பங்கள் அளவில் மிகும் ஆயின், கேடு விளைவிக்கவும் கூடும் . ஈண்டு, அடிகள் இன்பம் எனக் கண்டது, பொறிகளின் வாயிலாக இன்றி, மெய்யுணர்வின் வாயிலாக நுகரத்தக்க சிவானந்தம் ஆகிய அழிவில் இன்பத்தையே யாம். “உணர்வினேர் பெற வருஞ் சிவபோகம்”என்பர் சேக்கிழார். இவ் இன்பத்தையே அடிகள் ,”உலப்பிலா ஆனந்தம் “ எனவும் , “அந்தமொன்றில்லா ஆனந்தம்” எனவும் கூறுவர் , மாயா காரியமாகிய உலகப் பொருட் காட்சி  ஒழிந்து, பேரின்ப வடிவமான சிவக் காட்சியில் தலைப்படுவோர்க்கே இவ் வின்பம் புலன் ஆம் என்பது . பாசப்பிணிப்பிற் சிக்குண்டு கிடக்கும்  உயிர் , பண்டை  நல்வினை வயத்தால் அப் பிணிப்பினின்றும் விடுதலை பெற வேண்டுமென்னும் முயற்சி மேற்கொண்டு, அதற்குரிய தவத்தில் தலைப்பட்டு, மன மொழி மெய்களைத் தூயனவாக்கிக் கொள்ளல் வேண்டும். அத் தூய்மை நெஞ்சத்தால் இறைவனை இடயறாது நினைதலானும்,மொழியால் அவன் புகழைப் பாராட்டுதலானும், காயத்தால் வழிபாடு செய்தலானும் உண்டாவதாகும். அத் தூய்மை விளக்கம் மேற்பட மேற்பட  , மல இருள் நீங்கி மெய்யுணர்வு கைகூடும் . அவ்வுணர்வு  முதிர்ச்சியிலே, பொறி புலன்களின் நுகர்வு சுருங்கிச் சிவானந்த விளைவு உண்டாம் . அவ் இன்பத்தில் சிறிது தலைப்பட நேருமாயினும் , அது கிடைத்தற்கு அரியது எனக் கண்டு , மேன்மேலும் அச்சாதனங்களையே நழுவவிடாமல் பற்றி , அவ் இன்பப் பதிவில் ஆர்வம் வைத்து ஒழுகல் வேண்டும் என்பது இப் பதிகம் நுதலிய பொருளாம் . இவ் இன்ப நுகர்வின் பொருட்டு , உயிரைத்  தூய்மைப் படுத்துக் கொண்டு, ஆண்டவன் கருணை குறித்து இரங்கிய செய்தி முன்னைப்பதிகத்திற் கூறப்பட்டது.  அக் கருணையின்  பயனாகவுள்ள சிவானந்த விளைவில் திளைத்தல் இதன்கட்  கூறப்படுதலால் , பதிக இயைபு உண்மை புலனாதல் அறிக.

எழுசீர்க் கழி நெடில் அடி ஆசிரிய விருத்தம்

பாடல் 71.

புணர்ப்ப  தொக்க  எந்தை  யென்னை

யாண்டு  பூண  நோக்கினாய்

புணர்ப்  பதன்றி  தென்றபோது

நின்னொ  டென்னோ  டென்னிதாம்

புணர்ப்ப  தாக  அன்றி  தாக

அன்பு  நின்க  ழற்கணே

புணர்ப்ப  தாக  அங்க  ணாள

புங்க  மான  போகமே.

கருத்துரை :-    முன்னைப்  பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில் உலகு எலாம் ஆகி , வேறாய்  உடனுமாய்  நிற்கும் இறைவனுடைய ஒப்பு உயர்வு அற்ற தன்மைகளை எடுத்துப் பாராட்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் , அப் பெருந்தகை ஆகிய நீ என்னை ஆட்கொண்டும், சாத்தியமாகிய நின் திருவடி இன்பத்தில் இயைத்துக் கொள்ளக் கால இடையறவுதடை ஆம் ஆயின் , சாதனமாகிய மெய்யன்பே வேண்டும் என்று இரக்க விண்ணப்பம் செய்கின்றார் .

பதவுரை :-  எந்தை  =  என் தந்தையே ,

புணர்ப்பது ஒக்க =  நின்  திருவருட்  பேற்றில் என்னை  இயைவிப்பதாகிய  காலம்  பொருந்துவதாக,

என்னை  ஆண்டு  பூண நோக்கினாய்  =  அடியேனை  ஆட்கொண்டு  யான் அடிமைத்தன்மையை மேற்கொள்ளுமாறு  அருள் நோக்க செய்தாய் ,

நின்னொடு  என்னொடு இது புணர்ப்பது அன்று என்ற போது =  பின்னர்  உன்னை என்னோடு இக்காலம் இயைவிப்பது அன்று என்று நீ திருவுளங்கொண்டு புறக்கணித்த பொழுது ,

இது என் ஆம்  =  இதுகுறித்து யான் செய்யத்தக்கது யாது ஆம் ?,

இது புணர்ப்பதாக அன்றாக   =  இக் காலம்  நின்னோடு என்னை  இயைவிப்பதாக  அல்லதாக,

அங்கணாள  = அழகிய  கண்ணோட்டம் உடையவனே ,

நின் கழற்கண்  அன்பே   = நின் திருவடிக்கண் உள்ள மெய்யன்பே

புங்கம் ஆன போகம் புணர்ப்பதாக =உயர்ந்ததாகிய  சிவானந்தத்தை விளைவிப்பதாக  என்பது.

விளக்கவுரை :-   இறைவனது  பேரின்பப்  பெருஞ்  செல்வத்தை அநுபவித்தற்கு  உரிய  மைந்தன் எனத்  தம்மைக் கண்டு , “எந்தையே” என்று விளித்தார் . அடிகள் திருப்பெருந்துறை சென்ற பொழுது , அவர் பாசக்கட்டினின்று  விடுதலை பெறுதற்கு உரிய கால எல்லையை எதிர்பார்த்து, இறைவன் ஞானாசிரியனாகக் குருந்த மரத்து நீழலில்  எழுந்தருளி இருந்தான் என்று கூறுவர் வரலாற்று  ஆசிரியர் .  “பந்தம் அறும் எல்லையது பார்த்தினிதிருந்தான் “ என்பது காண்க .

       பண்டைப் பிறப்புகள் பலவற்றினும் செய்து போந்த அரிய தவத்தின் பயனாக, ஞானாசிரியனாக எழுந்தருளியிருந்த அவ் விறைவன் அருட் பார்வைக்கு இலக்காகும் காலம் தமக்கு வாய்த்தது என்பார், “புணர்ப்பது ஒக்க “ என்றார்.  புணர்ப்பது –  கூட்டுவிப்பது; அது காலத்தக் குறிக்கும் . ஆண்டவன் அருட் பார்வைக்குத் தம்மை இலக்காக்கிய அரிய அந் நற்காலத்தையே கடவுள் தன்மை  வாய்ந்தது எனக்கொண்டு , இறைவனை காலதத்துவத்தில் வைத்து , “ஞாலமே விசும்பே இவை  வந்து போம், காலமே உனைஎன்று கொல் காண்பதே” என்று போற்றி இருத்தலும் அறிக. “ஒக்க” என்பதற்கு , அந் நற்காலம் வந்து பொருந்தியதாக என்பது பொருள். ஆண்டு பூண நோக்கினாய்” என்றார் ஆயினும் , அருணோக்கம் முன்னரும் , ஆட்கோடல் பின்னரும் நிகழ்வன   ஆதலின் , நோக்கியாட்கொண்டாய் என்பதே கருத்தாகக்  கொள்க. பின்னர், “அங்கணாள” என்பதற்கேற்ப , “நோக்கினாய் “ என்றார். நோக்குதல் நயன தீக்கை ஆகும் . ஆண்டவனது அருட்பார்வையே ஆன்மாக்களின் மல இருளைக் கெடுத்துத் தூய்மைப்படுத்துவதாகிய கருவியாகும் என்ப.  “கண்ணால் நோக்கிக்  கண்ணப்பர் பணியுங்கொள் கபலியாரே” என்பது தமிழ்மறை. நோக்கிய பின்னரே பணிகோடல் என்பது ஈண்டும் அறியத்தக்கது.  நயன தீக்கையால், அடிகள் நல்லுயுரைத் தூய்மைப்படுத்து , இறைவன் பணிகொண்டனன் ஆக, அப்பணியே சிறந்த அணிகலனாக அடிகள் பூண்டனர் என்பது ,”பூண”என்னும் சொல்லால் அறியலாம். “பூண நோக்கினாய்” என்புழி, பூண என்னும் செயவென் எச்சம் காரியப் பொருட்டு; அருணோக்கு ஆகிய காரணத்தால்  நிகழ்வது பணிபூணுதல் ஆதலின் என்க.

            இறைவன் அருணோக்கால் அடிகளை  ஆட்கொண்ட பின்னர், தினைத்துணைக் காலமும் காய வாழ்க்கையைப் பொறேன் என்று அடிகள் திருவடி இன்பத்தில் தலைப்பட  விரைந்தனர் ஆக, “இன்னும் சினாள் இருந்து பின்னர்த் திலையம்பதிக்கு வந்து காண்க “என்று இறைவன் கட்டளை இட்டு  உருக்கரந்தனன் என்பது வரலாறு. “நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென, ஏலவென்னை யீங்கொழித்தருளி” என்னும் அடிகள் திருவாக்கும்  ஈண்டு நினைக்கத்தக்கது .

               இரண்டாம் அடியில் , “இது” என்னும் சுட்டு, “ஈங்கு ஒழிந்தருளி” என்றபடி ஆட்கொண்டும் திருவடியில்  இயைவித்துக் கொள்ளாமல்  நிலவுலகத்து  இருத்தற்கு ஏதுவாகிய காலத்தைக் குறிப்பதாகும் . “இது நின்னொடு என்னொடு புணர்ப்பதன்று., என்பது ஆண்டவன் கட்டளை மொழியாகும்.  “நின்னொடு” என்புழி, மூன்றாவதை இரண்டாம் உருபு ஆகக் கொண்டு , நின்னை எனவும், “என்னொடு” என்பதற்கு , ஆண்டவன் தன் திருவடி நீழலோடு எனவும் கொள்ளல் வேண்டும்.  “புணர்ப்பதன்று” என்பது, இது என்னும் சுட்டால் உணர்த்தப்படும் காலம் என்னும் எழுவாய்க்குப் பயனிலை ஆகும் ; சேர்ப்பிப்பதன்று என்பது பொருள், ஆகவே, ஆண்டவன் அடிகளை நோக்கி , “நின்னை நம் திருவடி இன்பத்தில் இயைத்துக் கொள்ளுதற்கு இது   காலம் அன்று “ என்று அருளிச் செய்தனர் என்பது கருத்து அகும். அருட் பார்வையால் தூய்மைப்படுத்து ஆட்கொண்ட ஆண்டவனே இப்பொழுது திருவடியில் இயைத்துக் கொள்ள இயலாது என்றால் ,அடியேனாகிய சிறியேன் செய்யத்தக்கது  யாது  ஆகும் என்பார், “இது என்னாம்” என்றார் . இது  என்பது ஈண்டு , ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பை உணர்த்தும் .  “என் ஆம்” என்பது, யாது ஆகும் (ஒன்றும்  இன்று) என்னும் பொருள் உடையது ஆதலின் , அதற்கேற்ப , யான் செய்யத்தக்கது என்பது வருவித்து உரைக்கப்பட்டது.

                  “புணர்ப்பதாக அன்றிதாக “ என்புழி, இது என்பது திருவடியில் இயைத்துக்  கொள்ளாமைக்கு  ஏதுவாகிய காலத்தைச் சுட்டுவதாகும் . புணர்ப்பது ஆக  –  நின் திருவடியில் இயைவிப்பதாக, அல்லது அன்றாக  இயைவிப்பது  அல்லது  ஆக  என்பது.  அடிகள் ஆண்டவன் கட்டளையை  ஏற்றுக்கொண்டு, “ஆண்டவனே, நின் திருவடி அடைதற்கு இக் காலம்  பொருந்தியது  ஆயினும் , அன்றிப் பொருந்தாதது ஆயினும்  ஆகுக.  என் முடிவான வேண்டுகோள் ஒன்று  உண்டு ; அதனை மறவாமல் ஏற்று அருளுவை என்னும் துணிவுடைமைக்கு  ஆதரவு  உண்டு”  என்பார், “அங்கணாள” என்று விளித்தார் .  அங்கணாளன் என்பதற்குக்  கண்ணோட்டம் உடையவன் என்பது பொருள் . கண்ணோட்டம்  என்பதற்கு , “தன்னொடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கமாட்டாமை. இஃது அவர் மேற் சென்ற வழி நிகழ்வது ஆகலின் அப் பெயர்த்தாயிற்று” என்று  பரிமேலழகர் விளக்கம்  கூறியுள்ளார் . கண்ணோட்டத்தையே  நாகரிகம் எனவும் கூறுப. “முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் தனி நாகரிகர் “ என்பதும்  காண்க.  ஈண்டு, ஆண்டவன் புற  உருக்கரந்த நிலையாயினும் , அடிகள் தம் உள்ளத்துளே உருவிழைத்து முன்னிலைப்படுத்துக் கூறுகின்றார் ஆதலின், கண்ணோட்டத்தின்  பயன் குறித்து  இவ்வாறு  விளித்தனர் என்பது.

                      இனி, அடிகள் தம் வேண்டுகோளை அருளிச்செய்கின்றார் . அது:- “காலம் உதவினும் உதவுக, உதவாது ஒழியினும் ஒழிக. சிறந்த  வீட்டின்பத்தைப்  பயக்கும்  மெய்யன்பே  வேண்டற்பாலது” என்பதாம்.  “அன்பு நின் கழற்கணே” என்புழி , ஏகாரத்தைப் பிரித்து , அன்பு என்பதனோடு இயைத்து , நின்கழற்கண்  அன்பே என இயைக்க வேண்டும் . ஏகாரம் தேற்றப் பொருட்டு , இதனையே  அடிகளும் , “பெறவே  வேண்டு  மெய்யன்பு “ எனப்  பிறிதோரிடத்துத்  தெளிவுபடுத்துக் கூறியிருத்தலும் அறிக.

              புங்கம்  –  சிறந்தது  என்னும்  பொருட்டு . சிறந்தது  என்னும்  அடைமொழியால்  போகம் ஈண்டுச்  சிவானந்த  அநுபவத்தை  உனர்த்தும் . திருவடிக்கண் உள்ள மெய்யன்பே  என்னைச் சிவானந்த நிறைவில்  இயைவித்து அருளல் வேண்டும்  என்பார், “அன்பே  புயங்கமான  போகம்  புணர்ப்பதாக “  என்றார் .  இதனால்  சிறந்த  சிவானந்தத்தை  விளைக்கும்  மெய்யன்பே  நின்  திருவடி  பற்றியதாக அருளல்  வேண்டும்  என்பது போதரும்.  அழிவில்  இன்பம்  பயப்பது மெய்யன்பு  என்பதை , “இறவாத  இன்ப  அன்பு  வேண்டிப் பின் வேண்டுகின்றார்”  என அம்மையார்  வேண்டுகோளாகச் சேக்கிழார்  கூறியதனாலும்  அறிக.  அழிவில்  இன்பப்  பேறு  ஆகிய  சாத்தியத்தைப் பயப்பது  மெய்யன்பு  ஆகிய  சாதனம்  ஆகும்.  “என் கடன் பணிசெய்து  கிடப்பதே” என்றபடி , சிறந்த  சாதனப்பேறே  சாத்தியமாகிய பயனை எளிதிற்  பயக்கும்  என்னும்  துணிவு  உடையராய்  இங்ஙனம் வேண்டுவார்  ஆயினர்  என்க.  இத்  திருப்பாட்டு , சொற்பொருட்  பின்வரும்  நிலை  என்னும்  அணியுடையதாகும் .

                 இதன்கண்,  “நின்  கழற்கண் அன்பே  புங்கமான  போகத்தைப்  புணர்ப்பதாக”  என்றதனால், ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “இது  புணர்ப்பதாக  அன்றாக “ எனக்  காலத்தை வெறுத்து மெய்யன்பே  வேண்டும் என்றமையால் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                              ******************************************

பாடல் : 72

போகம்  வேண்டி  வேண்டி  லேன்பு

ரந்த  ராதி  யின்பமும்

ஏக  நின்க ழலி  ணைய

லாதி  லேனென்   எம்பிரான்

ஆகம்  விண்டு  கம்பம்  வந்து

குஞ்சி  யஞ்ச  லிக்கணே

ஆக  என்கை  கண்கள் தாரை

யாற  தாக  ஐயனே .

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிப்பேற்றிற்குச்  சாதனம்  ஆகிய  மெய்யன்பே  வேண்டும்  என்று  தெறிவித்துக்கொண்ட  அடிகள் , இத்  திருப்பாட்டில், அவ்வேண்டுகோளுக்குக்  காரணம்  கூறி , அம் மெய்யன்பின்  விளைவாக உள்ள  செயல்களையும்  பெற வேண்டும்  என்று  விண்ணப்பம் செய்கின்றார்.

பதவுரை :-     ஏக       =     ஒப்பற்ற  தனி முதல்வனே,

என்  எம்பிரான்  =   என்  தலைவனே ,

ஐயனே  =  ஞானாசிரியனே ,

போகம்  வேண்டி   =  உலக  போகத்தை  விரும்பி ,

புரந்தர ஆதி  இன்பமும்  வேண்டிலேன்  =  இந்திரன்  முதலிய  தேவர்  உலக  இன்பங்களையும்  விரும்புகின்றிலேன் ,

நின்  கழல்  இணை  அலாது  இலேன்  =  நின்  திருவடித்  துணையல்லாது  வேறு  பற்றுக்கோடு  இல்லேன்

ஆகம்  விண்டு  கம்பம்  வந்து  =  உடல்  வேறுபட்டு  நடுக்கம்  தோன்ற ,

என்  கை  குஞ்சி  அஞ்சலிக்கேண்ண ஆக   = என்  கைகள்  தலைமேற்  குவித்துத்  தொழுதல்  ஆகிய  செயலின்  கண்ணே  நிகழ்வனவாக ,

என்  கண்கள்  தாரை  ஆறு  அது  ஆக  =  என்னுடைய கண்களின்  நீர்  ஒழுக்கு  ஆறாகப்  பெருகுவதாக  என்பது.

விளக்கவுரை :-  தனக்கு  ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாத  தனி முதல்வன்  ஆவான் என்பது  தோன்ற , ஏகன்  எனப்பட்டான் . அத்  தனிப்பெரு  முதல்வனே தமக்குத்  தலைவனாகவும்  ஞானாசிரியன்  ஆகவும் ஆயினான்  என்பார், “ என்  எம்பிரான் “, “ஐயனே”  என்று  அருளிச்  செய்தனர் . 

           இந்திரன் , பிரமன்  முதலிய  தேவர்களின்  பதங்கள்  பலவற்றுள்ளும் , போக  நுகர்ச்சிக்குச்  சிறந்தது  இந்திரன்  பதம்  ஆகும் . ஆதலின், “புரந்தராதி இன்பமும்”  என்றார் .  உம்மை , சிறப்புப்  பொருளில்  வந்தது. அத்துணைச்  சிறந்த  இன்பத்தையும் , போக நுகர்ச்சி நிமித்தம்  விரும்பேன்  என்பார், “போகம்  வேண்டி  வேண்டிலேன் “  என்றார்.  “புரந்தராதி “  என்புழி , ஆதி  என்னும்  சொல்லால்  சிவபோகம் அல்லாத ஏனையவெல்லாம்  கொள்ளல்  வேண்டும் .  “போகம்  வேண்டி வேண்டிலேன்” என்றதனால் , சிவ  வழிபாடு  செய்தற்கு  அப்  பதங்கள் வாய்ப்பு  உடையனவாக  இருக்குமாயின் , அது  குறித்துத்  திருவருளாலே அப்  பதங்களைப் பெற நேரினும் வெறுப்பேன் அல்லேன் என்று அடிகள் கருதினார்  என்பது  குறிப்பிற்  பெறப்படுவதாகும் .  “நரகம் புகினும்  எள்ளேன் திருவருளாலே  இருக்கப்பெறின்”  என்றாபடி, திருவருள்  வழியன்றி , அடிகள்  தாமாகப்  போக நிமித்தம்  அவ்வின்பங்களைச்  சிறிதும் விரும்பாத  இயல்பினர்  என்பது  கருத்து .

              அடிகளுக்குச்  சிவபெருமான்  திருவடித்துணையே  புகல்  இடம் ஆகும்,  ஆதலின், “நின்  கழலிணையலாது  இலேன்” என்புழி , இல்லேன் என்பதற்குப்  புகல்  இடம்  அல்லது  பற்றுக்கோடு என்பதை  வருவித்து இயைத்துக்  கொள்ளல்  வேண்டும். அல்லது , இல்லேன்  என்பன, அலாது  இலேன் எனச்  செய்யுள் விகாரத்தால்  தொக்கு  நின்றன . இனி, “ஏக” என்பதற்குச்  செல்ல  எனப்  பொருள்கொள்வாரும்  உளர் . ஆண்டவன்  திருவடியன்றித் தமக்குப்  புகல் இடம் பிறிதின்று என்னும் உறுதி  உடைமையால் , “எம்பிரான்” என்ற  அளவில் அன்றி ,”என்  எம்பிரான்”  என்றார்.

           இனி, வேண்டாமைக்குச் செயப்படு பொருளாகப்  புரந்தராதி  இன்பத்தைக்  கூறிய  அடிகள் , வேண்டும்  என ஆண்டவன்  இடத்து விண்ணப்பம்  செய்துகொள்ளப்  பட்டவை யாவை  எனின் , மெய்யன்பின்  காரியங்களாக உள்ள  தொழுதன்  முதலிய  நிகழ்ச்சிகளேயாம் . காரணம்  உள்வழியன்றே  காரியம்  நிகழ்வது ; அதனால்,  காரிய  நிகழ்ச்சியை  வேண்டவே , காரணம்  ஆகிய  மெய்யன்பு  வேண்டும் என்பது  கூறாமலே  அமையும்  என்பது.  அன்பு, புறத்தே தோன்றும்  மெய்ப்பாடுகளான் அன்றிப் பிழம்பு  உணர்த்திக்  காட்டற்பாலது அன்று.  உள்  நிகழும்  அன்பளவில்  அன்றி,  அதனால்  விளையும்  புறச்  செயல்களும்  வேண்டும்  என்று  அடிகள் விரும்பியதற்குக்  காரணம் , அகம்,  புறம்  எல்லாம் அன்பு  மயமாக  நிகழ  வேண்டும் என்பதே.  மேலும்  மெய்யன்பின்  விளைவு  ஆகிய  புறச்செயல்கள் இல்லையாயின் , அரசன்  முதலிய  உலகியலார் , அடிகளின்  உண்மை  இயல்பை அறியாமல் ,  அவரைத்  தம்மவர்  என்று நெருங்கி , உலகியற் செயல்களில் ஈடுபடுத்தக்கூடும்  என்பதும்  ஆம். கண்ணீர்  ஒழுகல்  முதலிய  புறச்செயல்களைக்  கண்டதும்  “இவர் இயல் வேறுபட்டது ; நம்க்கு  ஒவ்வார் “ என  அன்னார் எல்லாம்  விட்டு அகல்வர்  என்பது.  அன்பின்  விளைவாகவுள்ள  செயல்கள், “மெய்தானரும்பி “ என்னும்  திருப்பாட்டில்  முன்னரும்  கூறப்பட்டன. வேண்டாமையைக்  குறிப்பிட்டு , வேண்டுவன  கூற நேர்ந்ததால் ஈண்டும்  கூறுவார்  ஆயினர்.

                அன்பின்  முதிர்ச்சியில்  தன்னையும்   மறக்கும்  தன்மை  உண்டாம்.  அந்நிலையில், உடலில் ஒரு வகை வேறுபாடு உண்டாகும் ஆதலின், “ஆகம்  விண்டு” என்றார். விள்ளல்   = வேறுபடுதல் .  அவ் வேறுபாட்டோடு  நடுக்கமும்  நிகழ்தல் குறித்து, “கம்பம்  வந்து” என்றார் . வந்து  என்னும்  செய்தென்  எச்சத்தைச்  செயவென் எச்சமாகக்  கொள்ளல்  வேண்டும் . வந்து  –  வர; தோன்ற  என்பது, உடல் வேறுபாடும்  நடுக்கமும் அன்பின்  விளைவாக  அன்றி  அச்சத்தின் விளைவு  ஆகவும் ஏற்படும்  ஆதலின், அதனை  விலக்கி, அன்பின்  விளைவு  எனக் கோடற்கு , “என் கை குஞ்சி  யஞ்சலிக் கணேயாக” என்பது  முதலியன கூறப்பட்டன. “உச்சிக்கூப்பிய கையினர்”  என்பது முதலியன  முனிவர்களின் செயல்களாகக் கூறப்பட்டன .  ஈண்டு, அச் செயல்கள் தானே  நிகழவேண்டும்  என்பார், “அஞ்சலிகணேயாக, ஆறாத “ என  வியங்கோள்  வாய்ப்பாடாகக் கூறப்பட்டன.  கூப்பிய  கை தலைக்கண்ணதாக என்பதோடு  அமையாது, கண்ணீர்ப்பெருக்கு  ஆறதாக  என்றார்,  “அழுதால்  உன்னைப் பெறலாமே “ என்னும் குறிக்கோள் உடையர் ஆதலின், ஆறது  என்புழி,  அது  பகுதிப்பொருள் விகுதி .

                       இதன்கண், ஆண்டவன்  திருவடி இன்பத்தில் ஈடுபடுதற்கு உரிய மெய்யன்பும் , அதன்  விளைவு ஆகிய  மெய்ப்பாடுகளும்  கூறப்பட்டமையால் ஆனந்தத் தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும், புரந்தராதி இன்பமும் வேண்டிலேன் என்றமையால் வைராக்கியமும் , கை கூம்புதல் , கண்ணீர் பெருகல்  முதலியவற்றால் பத்தியும்  புலப்படுதலின் ,பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதம் நுதலிய பொருளும்   தோன்றுதல் அறிக . 

                                          **********************************************

பாடல்: 73.

ஐய  நின்ன  தல்ல  தில்லை

மற்றோர்   பற்று  வஞ்சனேன்

பொய்க  லந்த  தல்ல  தில்லை

பொய்மை  யேனென்  எம்பிரான்

மைக  லந்த  கண்ணி  பங்க

வந்து  நிங்க  ழற்கணே

மெய்க  லந்த  அன்ப  ரன்பெ

னக்கும்  ஆக  வேண்டுமே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில் மெய்யன்பையும் , அதன் விளைவு  ஆக உள்ள  செயல்களையும்  பெறவேண்டும் என்று  ஆண்டவன்  இடத்து  விண்ணப்பம்  செய்துகொண்ட  அடிகள் , அப்பேரன்பைப்  பெறுதற்கு  உரிய  தம் இயல்பையும் , அஃது யாருடைய  அன்பு  போன்றதாக  இருக்க வேண்டும்  என்பதையும்  இத்  திருப்பாட்டில்  தெரிவித்துக் கொள்ளுகிறார்

பதவுரை  :-  ஐய  என்  எம்பிரான்  =   ஐயனே  என்  தலைவனே ,

மை கலந்த கண்ணி  பங்க  = அஞ்சனம்  தோய்ந்த  கண்களை உடைய  உமையம்மையை  ஒரு  கூற்றில்  உடையவனே ,

வஞ்சனேன்  =   வஞகனாகிய  எனக்கு ,

நின்னது  அல்லது  மற்று  ஓர்  பற்று  இல்லை  =  நின்னையல்லாமல்  பிறிதொறு   பற்றுக்கோடு இல்லை , ( அங்ஙனமாகவும் ) ,

பொய்மையேன்  =  பொய்யொழுக்கம்  உடையவனாகிய  யான்,

கலந்து  பொய் அல்லது  இல்லை  =  சேரப்பெற்றது பொய்மையாகிய  அன்பே  யல்லாது  வேறு  இன்று  (ஆதலின்) ,

நின்  கழற்கண்  வந்து கலந்த  மெய் யன்பர் அன்பே  =  நின்  திருவடி  நீழலில்  வந்து  இரண்டற்ற  நிலையில்  இயைந்து இன்புறும் மெய்யன்பரது  சிறந்த  அன்பே ,

எனக்கும்  ஆக வேண்டும்  =  பொய்மையாளனாகிய  எனக்கும்  உண்டாதல்  வேண்டும்  என்பது.

விளக்கவுரை  :-  ஐயன்  என்றது  ஈண்டு,உயர்ந்தோன்  என்னும்  பொருட்டு  . ஆண்டவனை  உயர்ந்தோன்  எனத்  தெளிந்தே  பற்றுக்கோடாகக்  கொண்டமை , “ஐய”  என்று  விளித்தார்  என்பது. நினது என்பது  விரித்தல்  விகாரத்தால்  நின்னது  என்று  ஆயிற்று .  அது  என்னும் ஆறன்  உருபை  இரண்டன்  உருபு  ஆக்கி , நின்னை  எனக் கொள்க . “அல்லது  இல்லை “ என்றது துணிவு  தோன்றற் பொருட்டு .  இரண்டாம் அடியிற்  கூறியதற்கும்  ஈது  ஒக்கும். ஆண்டவனே, நின் அளவு  சிறந்த ஆதரவு  பிறிது  இல்லை ஆயினும், நின்னிற்  சிறிது  குறைந்த அளவிலாவது  ஒன்று  உளதோ எனின் , அங்ஙனம்  ஒன்றும் கண்டிலேன்  என்பார், “மற்று  ஓர்  பற்று  இல்லேன் “ஏன்றார் .

                  வஞ்சகன்  என்னும்  சொல் , நெஞ்சம் அறிந்தது  ஒன்றைச்  சொல்லினாலும், செயலினாலும்   மறைத்து  மாறுபடச் சொல்லியும் , செய்தும்  ஏமாற்றுவோன் என்னும்  பொருள்  உடையதாகும் . அம்முறையும்  அடிகள் , தம்  இயல்பு  உண்மையில்  வஞ்சிப்பதாக  இருக்குமாயின்  , அதனை  மாற்றி  உரைத்து  இருப்பர் . அங்ஙனம்  கூறாது, “வஞ்சனேன்”  என்று  தம்மை வெளிப்படக்  கூறியிருத்தலின் , அவர்  வஞ்சம் இன்மை  புலனாகும் என்பது.  அங்ஙனம்  ஆகவும் , தம்மை  இவ்வாறு  ஏன்  தாழ்த்துக் கூறவேண்டும் எனின்  பிறழ்தல்  ஆகிய  இயல்பு , ஒரு சிறிதும்  இல்லாது , நேர்மையின்  தூய்மையில்  தலை  சிறந்து  நிற்கும் கடவுளின்  முன்னிலையில்  வைத்துத்  தம்  இயல்பைக் கூறுங்கால் , யாவர்க்கும்  கீழாம்  அடியேனை  என்னும் அடிமைப் பண்பு  தோன்றற்கு  என்க.   அதற்கு  இயைய உலகியலில்  வைத்துக்  கூறியபடியாம்  என்பது. யான்  இழிகுணம்  உடையேண்  ஆயினும், நின்னை  அல்லாது  வேறு  ஒரு  பற்றுக்கோடும் இல்லாதவன்  ஆதலின் , என்னைக்  கைதூக்கி  ஆளுதல் நின்  கடன்  ஆம்  என்பது  குறிப்பிற் பெறப்படும் கருத்து  ஆகும் .  இரண்டாம்  அடியில்  பொய்மையேன் என்றதற்கும்  இதுவே  கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் . 

                       யான்  பொய்யொழுக்கம்  உடையேன் ஆதலின் , அதற்கு  ஏற்ப  என்  அன்பும்  பொய்  ஆகும்  என்பார் , “பொய்  கலந்து  அல்லது இல்லை  “  என்றார். பிறிதோரிடத்தில் , “யானே   பொய்  என் நெஞ்சம் பொய் என்   அன்பும்  பொய்” என்று  அடிகள்  தம்மைக்  கூறியிருத்தலும்  அறிக . யான்  பொய்யொழுக்கம்  உடையேனாக இருப்பினும் , என்  உயிர்க்கு  நின்று , என்  பொய்மை  அன்பை  அறிந்தும்  என்னை  ஆட்கொண்ட  தலைவன் ஆயினான் என்பார், “என்  எம்பிரான்”  என்று  சிரிப்புரிமை  தோன்ற  விளித்துக்  கூறுவார் ஆயினர் .  யான்  வஞ்சகன்  ஆயினும் , பிறிதொரு  பற்றுக்கோடு  இல்லாமையால், எனக்கு  நீயே  ஆதரவாக   அருள் செய்ய  வேண்டும்  என்று  முதல்  அடியில்  கூறியது  போலவே , ஈண்டும் என்  அன்பு  பொய்மையாயினும்,  அஃது  அறிந்தும்  ஆட்கொண்ட  தலைவனாக  இருத்தலின் , ஆட்பட்ட  என்னைப்  பாதுகாக்க  வேண்டும்  கடமை  நின்பாலதாகும்  என்பது குறிப்பிற்  பெறப்படும் கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் .

             தன்னை  அடைந்த  மெய்யன்பரைத்  தன்  திருவடி  நீழலில்  இயைத்துக்கொள்ள  முற்படுங்கால் , ஆண்டவன் , அருள்  உருவினள் ஆகிய  அம்மையுடன்  காட்சியளித்தல்  இயல்பு  ஆதலின் , அக்  கருத்துத்  தோன்ற , “மை  கலந்த  கண்ணி  பங்க” என்றார். அம்மையின்  அருட் குணம் , அவன்  திருநோக்கின்  முகமாக வெளிபடுதல்  குறித்து , “மை கழற்கணே”  என்புழி, ஏகாரத்தைப்பிரித்து , நான்காம்  அடியில் உள்ள அன்பு  என்பதனோடு  இயைத்து , “அன்பே” எனத்  தேற்றப்பொருட்டாகக்  கொள்ளல்  வேண்டும்  .வந்து  என்னும்  செய்தென்  எச்சம், “கலந்த” என்னும்  பெயெரெச்ச  வினையைக்  கொண்டு முடியும் . “மெய்” என்பதை அன்பர்க்கு அடையாகக்  கொண்டு , “கலந்த  மெய்யன்பர்  அன்பே”  என இயைத்துக்கொள்ளல்  வேண்டும் . பக்குவ  முதிர்ந்த  மெய்யன்பர், இறைவன்  திருவடி  நீழலை  அடைதற்கு  , அப் பெருமான்  அருட்குணம்  சிறந்த  ஏதுவாகும் என்பதை , “மை  கலந்த  கண்ணி  பங்க”  என்னும்  தொடரும், அம்  மெய்யன்பர் , தொடக்க  முதல்  மேற்கொண்டு  வந்த சரியை  முதலிய  தவங்களும்  அதற்குச்  சாதனம்  ஆகும்  என்பதை , “வந்து கலந்த”  என்னும்  சொற்களும் புலப்படுத்தி  நிற்றல்  அறிக.  “என்னை நினைந்து  அடிமை  கொண்டு  என்  இடர்  கெடுத்துத்  தன்னை  நினையத்  தருகின்றான் “  என்று  பெரியோர்  கண்ட  மரபும் ஈண்டு  நினைக்கத்தக்கது .  ஒரு  காரியம்  நிறைவேறுதற்கு  இறைவன்  திருவருளும், அத்  திருவருளால்  தூண்டப்பட்ட  உயிர்  முயற்சியும்  ஒத்து  இயைதல்  வேண்டும்  என்பதை  உலகியலிலும்  வைத்து  அறியலாம் .  மெய்மையான  அன்பு  இன்றி , அஃது  உடையான்  போல  நடிக்கும்  பொய்மையாளனாகிய  எனக்கு  இனி   வேண்டுவது  மெய்யன்பர்  அன்பே  யாகும் .  அஃது  இதுகாறும்  இல்லாமல் இருந்தபடியால், இனி  நின்  அருணோக்கால் உண்டாதல்  வேண்டும் என்பார், “எனக்கும்  ஆகவேண்டும் “ என்றார் . “எனக்கும்” என்புழி, உம்மை  இழிவு  சிறப்புப்  பொருட்டு  ஆம்.  இத்  திருப்பாட்டில்  கூறப்பட்ட  பொருள்கள்  மூன்று ; அவற்றிற்கேற்ப , விளி  நிலையும்  மூன்றாக  அமைந்து  இருத்தல்  ஆராய்ந்து  இன்புறத்தக்கது.

                  இதன்கண், “மெய் கலந்த  அன்பர்  அன்பு  எனக்கும்  ஆகவேண்டும் “ என்றது , ஆனந்தத்தில்  அழுந்துதற்குக் கருவியாதலின், ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும், “மற்றோர்  பற்று  இல்லை “, அன்பு  எனக்கும்  ஆகவேண்டும்”  என்பவற்றால் , முறையே  வைராக்கியமும்  , பத்தி  நிலையும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய  விசித்திரம் என்னும்  சதகம் நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக. 

                                        *********************************************

பாடல் : 74.

வேண்டும்  நின்க  ழற்கண்  அன்பு

பொய்மை  தீர்த்து  மெய்மையே

ஆண்டு  கொண்டு  நாயினேனை

ஆவ வென்ற  ருளுநீ

பூண்டு  கொண்ட  டிய  னேனும்

போற்றி  போற்றி  யென்றும்  என்றும்

மாண்டு  மாண்டு  வந்து  வந்து

மன்ன  நின்வ  ணங்கவே .

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பின்  பயனாகிய  அழிவில்  இன்பத்தை  அருளுதற்கு  உரிய  ஆண்டவன்  இடத்து  அப்  பயனை  வேண்டாமல்,  அதற்குக்  கருவியாகிய  மெய்  கலந்த  அன்பர்  அன்பே  வேண்டும்  என்ற  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  வேண்டியதற்கு  ஏதுக்  கூறுகின்றார் .

பதவுரை :-   மன்ன   =   தெய்வ  அரசே

நீ  நாயினேனை  =  நீ  நாயைப்போன்ற  இழிந்தவனாகிய   என்னை,

பொய்மை  தீர்த்து  =  பொய்யொழுக்கத்தை  ஒழித்து  ,

ஆண்டு  ஆண்டு  ஆவ  என்று  அருளு =  ஆட்கொண்டு  இரக்கக்  குறிப்புத்  தோன்ற  ஆறுதல்  மொழி  கூறி அருள்  செய்வாயாக ,

அடியேனும்  =  அடிமையாகிய  யானும் ,

பூண்டு  கொண்டும்  =  அவ்  வடிமைத்  தன்மையை  மேற்கொண்டும்,

மாண்டு  மாண்டு  வந்து  வந்தும்  =  பலகால்  இறந்து  பிறந்தும் ,

போற்றி  போற்றி  என்றும்  =  வணக்கம்  வணக்கம்  என்று  கூறியும்,

என்றும்  நின்  வணங்க  =  எக்காலமும்  நின்னை  வணங்குதற்  பொருட்டு,

நின்  கழற்கண்   =  திருவடிக்  கண்ணே ,

மெய்மை  அன்பே  வேண்டும்  =  மெய்மையாகிய  அன்பே  எனக்கு  வேண்டுவதாகும்  என்பது.

விளக்கவுரை  :-   மன்னன்  என்னும்  சொல்  ஈண்டுத்  தெய்வங்களுக்கு  அரசன்  என்னும்  பொருட்டு .  ஒரு  நாட்டிற்  பிறந்தவன், அப்  பிறப்பில்  , அந்  நாட்டு  அரசனையே  அரசுரிமையில்  வைத்துப்  போற்றுவன். அவனே  இறந்து  பிறிதொரு  நாட்டில்  பிறப்பான்  ஆயின்,  முன்னை  அரசனை  விட்டு  , மீண்டு  பிறந்த  நாட்டு  அரசனையே  உரிமை  கொள்ளக்  கடவன் .  இஃது  உலகியலிற்  காணப்படுவது.  தெய்வ  அரசின்  உரிமை,  அங்ஙனம்  அன்று  ஒருவன்  எவ்  எவ்வுலகில்  எத்துணைப்  பிறவி  எடுப்பினும்  , ஆண்டெல்லாம்  தெய்வ  அரசாகத்  திகழ்வோன் ஒருவனே  யாவன்.  இவ்வுண்மை  குறித்தே , பலகால்  இறந்து பிறந்து  வரும்  நிலையினும்  நீயே  அரசாவாய்  என்பார், ஈண்டு, “மன்ன” என  விளித்து  உரைப்பார்  ஆயினர்.

            ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கல் , அவர்  தூய நிலையுணர்ந்தே  ஆட்கொள்ளுவன் . பொய்யொழுக்கம்  உள்வழிப் பணிபுரியும்  அன்பர்  ஆதல்  இயலாத தொன்று .  அங்ஙனம்  ஆகவும், என் பொய்மை  தீர்த்து ஆட்கொள்ளல்  வேண்டும்  என்று  அடிகள்  வேண்டியது, ஆண்டவன்  அளப்பரிய பேரருள் வள்ளல்  ஆதலின் , அவ்வருள் வண்மை காரணமாகத்  தம்  பொய்மை  தீர்த்தற்கு  முன்னரே  ஆட்கொள்ளுதற்கு   முற்படவுங்   கூடும்  என்னும்  கருத்தன்  என்க. நோய்வாய்ப்பட்ட  ஒரு  மகனுக்கு  மருந்து  கொடுத்து , அந்  நோயைத்  தீர்த்தற்கு  முன்னரே,  கனிந்த  அன்பு  காரணமாகத்  தாய்  இனிய  உணவு  கொடுக்க  முற்படுதலை உலகியலிலும்  காண்கிறோம் அன்றோ?ஆடிகள்  சிறந்த  மெய்யன்புடையராயினும் , அளப்பரும்  பெருமை  மிக்க ஆண்டவன்  முன்னிலையில் , தம்மைச்  சிறுமையுடையர்  ஆகவே காணும் இயல்பினர்  ஆதலின், பலவிடத்தும்  இவ்வாறே  கூறுவாராயினர் .  “ஆவ”  என்பது , இரக்கம்  பற்றிய  குறிப்பு  மொழியாகும் . அங்ஙனம்  கூறி  இரக்கங்காட்ட  வேண்டும்  என்றது , செயற் பயனினும்  இன்சொற்பயன்  விரைவின்  முற்பட்டு  ஆறுதல் அளிக்கும்  என்பது  பற்றியாம்  “அருளுக”  என்புழி , முன்னிலை வியங்கோள்  ஈறு  தொக்கு ,”அருளு”  என்று  ஆயிற்று. அடியனேனும்  என்புழி  உம்மை, “நீ என்னை  ஆண்டு  அருளுக; யானும்  அவ்வடிமைத் தன்மையைப்  பூண்டு  கொண்டு வணங்க “ என்று கொள்ளக்கிடப்பதால் எச்ச வும்மையாகும் .  பூண்டு  கோடல் = இறைவன்  பணியை  அணிகலனாக  மேற்கொள்ளல், அடிகள்  தம்மைப்  பொய்மை  தீர்த்து  ஆண்டுகொள்ள  வேண்டுங்கால், “நாயினேனை”என இழித்தும் , அவ்விறை பணியை மேற்கொள்ளக்  குறிப்பிடுங்கால் , “அடியனேன் “என  உயர்த்தும் கூறியிருத்தல்  அறிந்து  இன்புறத்தக்கது . “பூண்டு  கொண்டும்”  என்புழி , எண்ணும்மை தொக்கு  நின்றது .

               “என்றும்  என்றும்” என்புழிப்  பின்னது  காலத்தை உணர்த்துவதாகும் .  கொண்டும், வந்தும் , என்றும்  என்றும்  நின் வணங்க  அன்பு  வேண்டும்  என  முடிக்க . இப்  பிறப்பிலே வீட்டின்பம்  எய்துதற்கு வினையெச்சம்  தடையாகுமாயின் ,  அவ்வினை  யொழிவு  பெறுங்காறும்  இறந்து  இறந்து பிறக்க  நேரும்  ஆதலின்,  அப் பிறாவிகளில்  எல்லாம் நின்  அடிமைப்  பணியை அணிகலனாக மேற்கொண்டு  வனக்கம்  வணக்கம்  என்று  நாவாரக் கூறி ,  ஆண்டவனே , நின்னை வணங்க வேண்டும் ஆதலின் , அதன்  நிமித்தம்  எனக்கு  நின்  திருவடிக்கண் மாறாத  மெய்யன்பே   தந்து  அருளல்  வேண்டும் என்பது ,இத்  திருப்பாட்டின்  முகமாக  அடிகள் கருதிக் கூறியது என்க. அழிவில்  இன்பம்  ஆகிய  முடிவான பயனையே  வேண்டும் என  இரந்தால், அது  பெறுதற்குப்  பக்குவம்  இன்று  என  ஆண்டவன்  திருவுள்ளம்  கொள்ளின், பேறு  ஒன்றும்  இன்றாய்விடும் என்னும்  ஐயத்தால், அப் பயனை  உறுதியாகப்  பயக்கும்  மெய்யன்பாகிய  சாதனத்தை  வேண்டுவார்  ஆயினர் .  இச்  சாதனப்பேறு  ஒருமுறை  ஆண்டவன்  அருளால்  கிடைத்துவிட்டால் , பிற்றைப்  பிறவிகளிலும்  தொடர்ந்து  பயன் செய்யும்  என்னும்  உறுதியுடையராய் , “மாண்டு  மாண்டு  வந்து  வந்து மன்ன நின்  வணங்க “ என்றார் .  வருதல்  = பிறத்தல் .

                  அரசனிடத்துக்  குறையிரப்பான்  ஒருவன் , முடிவான  பெரும் பயனைக்  குறிப்பிட்டு  வேண்டுதலும் , அத்துணை  பெறுதற்கு ஏதும் தடை  ஏற்படுமாயின் , அதனிற்  சிறிது  குறைந்த  அளவிலாவது  தரல்  வேண்டும்  எனத்  தெரிவித்துக்  கொள்ளுதலும்  உலகியலிற்   காண்கின்றோம் . அங்ஙனமே , முன்னர்ச்  சிறந்த  பயனாகிய  வீட்டின்பத்தை  வேண்டிய  அடிகள்  அது  பெறுதற்கு  ஒருவாறு  பக்குவம் இன்று  எனக்  கொள்ளநேரின் , அப் பயனைக்  காலந்தாழ்த்தியாவது  விளைக்கும்  மெய்யன்பே  வேண்டும்  என  நினைந்து  இரப்பார் ஆயினர் . நின்னை  வணங்க    அன்பு  வேண்டும்  என்ற  அளவே  அமைவதாக, “நின்  கழற்கண் அன்பு வேண்டும் “  என்றது , “ புழுவாய்  பிறக்கினும்  புண்ணியா  உன்  அடி  யென்மனத்தே, வழுவாதிருக்க  வரந்தரவேண்டும்”  என்றபடி. ஒருகால்  தம்  நிலை  பிறழினும் , திருவடிப் பதிவு  அதற்கு  இடம்  தராது  செம்மைப்படுத்தும் என்னும்  குறிக்கோள்  பற்றி என்க.  ஈண்டு, ஆளுடைய   அரசு , ஆண்டவன்  திருவடியைப்  பற்றிக்  கொள்ளுதற்கு  உரிய  ஆற்றல்  தம் மனத்திற்கு இல்லாமை  உணர்ந்து , “எ ன்  மனம்  உன்  அடிக்கண் வழுவாதிருக்க “  என்னாது, “உன்னடி  என்  மனத்தே  வழுவாதிருக்க” என்று  அருளிச்  செய்தமை  அறிந்து  இன்புறத்தக்கது .

       இதன்கண்,  “மன்ன  நின்  வணங்க ……….நின் கழற்கண் அன்பு  வேண்டும் “  என  வீட்டின்பத்திற்கு  ஏதுவாகிய  மெய்யன்பு  வேண்டப்பட்டிருத்தலானும் , அது  பிரவிகள்  தோறும்  தொடர்ந்து , முடிவில்  அவ்  இன்பத்தில்  இயைக்கும்  என்னும்  உறுதி  பெறப்பட வைத்தமையானும், ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக  .

                                      ***********************************************

பாடல் : 75.

வணங்கு  நின்னை  மண்ணும்  விண்ணும்

வேத  நான்கும்  ஓலமிட்

டுணங்கு  நின்னை  யெய்த  லுற்று

மற்றொ  ருண்மை  யின்மையின்

வணங்கி  யாம்வி  டேங்க  ளென்ன

வந்து  நின்ற  ருளுதற்

கிணங்கு  கொங்கை மங்கை  பங்க

எங்கொ  லோநி  னைப்பதே.

கருத்துரை :-    முன்னைத்  திருப்பாட்டில் சாதனமாகிய மெய்யன்பை  வேண்டியது, ஆண்டவன்   திருவடியை  எக் காலமும் வணங்குதற்கு  என்பது  கூறப்பட்டது .  இத்  திருப்பாட்டில் , அவ்  வணக்கத்தின்  இன்றியமையாமையும் அதனைக்  கடைப்பிடித்து  நெருங்குவோர்க்கு  ஆண்டவன்  திருவருள் பாலிக்கத்  தடையாகக்  கருதுவது யாதாக  இருக்கலாம்  என்பதும்  கூறப்படுகின்றன .

பதவுரை  :-   இணங்கு  கொங்கை  மங்கை  பங்க  =  நெருங்கிய  கொங்கைகளையுடைய  உமையம்மையை  ஒரு  பங்கில்  உடையவனே ,

மற்று  ஓர்  உண்மை  இன்மையின்  =  நின்னையன்றி  வேறாக  ஒரு  மெய்ப்பொருள்  இல்லாமையால் ,

நின்னை  மண்ணும்  விண்ணும் வணங்கும்  =  உன்னை  நிலவுலகமும்  விண்ணுலகமும் வணங்குவன ,

வேதம்  நான்கும்   நின்னை  எய்தல்  உற்று  ஓலம்  இட்டு உணங்கும்  =

நான்  மறைகளும்  உன்னை  அணுக முயன்று  (இயலாமையால்)  ஓலம் இட்டு  இளைத்து  நிற்கும்,

யாம்  வணங்கிவிடேங்கள்  என்ன  =  அடியேமாகிய  யாங்களும் நின்னை  வணங்கிடமாட்டோம் என்று   விண்ணப்பம்  செய்யவும் ,

வந்து  நின்று  அருளுதற்கு  =  வெளிப்பட்டு  நின்று  அருள்  புரிதற்கு,

நினைப்பது  என் கொல்  = தடையாகத்  திருவுள்ளம்  கொள்வது  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-   மண்,  விண்  என்பன  ஆகுபெயராக  நின்று , ஆண்டுள்ள  மக்களையும் , தேவரையும் உணர்த்தும் , உலக  மூன்றுனுள், மண்ணுலகமும்  விண்ணுலகமும்  வணங்கும்  என்றார் ; ஆண்டுள்ளார் முறையே  புண்ணிய  பாவ  கன்மங்கள்  காரணமாகவும் , மக்களாகவும் ,தேவராகவும்  பிறந்து ,இறைவனை  வழிபடுதற்கு உரிய  ஞானம் பெறும் தகுதி  வாய்ந்து  இருத்தலின், கீழ்  உலகத்தவர், பாவ  கன்மம் காரணமான  பிறப்புடையர் ஆதலின், இறைவணக்கத்திற்குரிய தகுதி  பெறல் அரிது  எனக்  கருதி  உடன்  கூறப்பட்டிலர் . மண்ணுலகத்தவர் , கலப்பு  வினைப்பயன்  நுகர்ச்சி  உடையர் ஆதலின்,  தொண்டில்  ஈடுபட்டு , உயிர்  முனைப்பு  அடங்கி  ஆண்டவனை நினைந்து  வழிபடும் இயல்பு உடையவர்  என்பதும், நல்வினைப்பயன்  ஒன்றே  நுகர்ந்து  இன்பத்தில்  இறுமாக்கும் தேவர் , ஒரே வழிக் கடவுள் நினைவையும் புறக்கனிக்கும்  இயல்புடையர்  என்பதும்  கருதி, “மண்ணும்  விண்ணும் “  என்று  முறைப்படுத்து  உரைப்பார்  ஆயினர் . இவ் விரு திற உலகத்தவரும்  முடிவான வணக்கத்திற்கு  உரிய  கடவுள் யாராக  இருக்கலாம் என  நூல்   அளவையானும் , அநுபவ உணர்வானும் நெடிது  ஆராய்ந்து , மக்கள் ,தேவர்  முதலிய  யாவரும்  ஒடுங்கிய பேரூழிக் காலத்து.  அவ்வெல்லோரையும்  எல்லாவற்றையும்  தன்னுள்  ஒடுக்கி  , அழிவு  இன்றி  நிற்பவன்  பரமசிவனே  என்னும்  உண்மை  உணர்வு  கைவரப்பெற்றவர்  என்பார், “மற்று  ஓர் உண்மையின்மையின்  மண்ணும்  விண்ணும்  வணங்கும்  “  என்றார் . “உண்மை”  இறைவனைக்  குறித்தலின்  ஆகு  பெயர் .  எல்லோரானும்  வணங்க்கப்படுபவன்  சிவபெருமானே  என்பதும் , அப்  பெருமானால் வணங்கப்படும்  தெய்வம்  பிறிது  ஒன்றும்  இல்லை  என்பதும்  மறைமுடிவுகளின்  ஆராய்ச்சியாற்  கண்ட  உண்மையாகும் .  “”செய்யானை வெண்ணீறணிந்தானைச்  சேர்ந்தறியாக், கையானை”  என்று  அடிகள்  பிறி தோரிடத்து  அருளிச்  செய்து  இருத்தல்  இதனை உறுதிப்படுத்துவதாகும் .  “மற்றோர்  உண்மையின்மையின்  “  என்பதை , மண் , விண்  , வணக்கம் , மறைகளின்  உணக்கம் , அடியார்  வணக்கம்  ஆகிய  எல்லாவற்றிற்கும்  ஏதுவாக்கிக்  கொள்ளல்  வேண்டும்.

                      ஓலம் = அபயம்  அளிக்க  வேண்டும்  என்னும்  குறிப்பு  மொழி .  மறைகள்  அணுகுதற்கு  முயன்று , இயலாமையால் ஓலம்  இட்டு  இளைத்து  நிற்கும்  என்றது,  இறைவன் பெருமையை  அளவிட்டுக்கூற  இயலாமல் , கீழ்ப்பட்ட  தெய்வங்களை  வருணித்துப்  பரம்பொருள் இது வன்று;  இதுவன்று  என்றே  கூறி  ஒழிந்தன என்பது பற்றியாம் . “ அல்லை யீதல்லை யீதென மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்து  இளைக்கும் “  என்ற  பெளராணிகர்  உரையும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  மறைகள்  தம்  சொற்பெருக்காற்  காண்டற்கு  எத்துணை  விரிந்து  செல்லினும், இறை  இயல்  அப்பாற்பட்டு  நிற்றலின் , மேற் சேரற்கு  இயலாமையால் , அச்சமுற்று  இளைத்து  நிற்றலின் , “ஓலமிட்டு  உணங்கும் “ என்றார்.

                        சொல்லுலகும்  பொருளுலகும் ( சத்தப்  பிரபஞ்சம்  அருத்தப்  பிரபஞ்சம் ) என  இரு  கூற்றில்  அடக்குவர்  உலகம்  எல்லாவற்றையும் . ஈண்டு, “மண்ணும்  விண்ணும்  “ என்பது பொருள் உலகமாகும் . “வேதம்  நான்கும்” என்பது  சொல்  உலகம் ஆகும்.  சொல்லுலகினும்  பொருளுலகு  இறைவனை  அணுகுதற்குத்  தகுதி  சிறந்ததாகலின் , “மண்ணும்  விண்ணும்  வணங்கும்  “ எனவும், அத்துனைத் தகுதியின்மையால் , “ வேத  நான்கும்  ஓலமிட்டு ணங்கும்” எனவும் கூறப்பட்டன .

                   அடியார், பொருளுலகில்  அடங்குவர்  ஆயினும் , தகுதியின்  பொதுச்  சிறப்பு  முறை  பற்றி  வேறாகக்  கூறப்பட்டனர்  என்க.  அடியார் தகுதி , மற்றைத்  தேவர் , மக்கள் தகுதியினும்  சிறப்பு  உடையது  என்பது  கருத்து.  அதனாலே , அடிகள், மற்றை  அடியாரையும்  உளப்படுத்து ,”வணங்கியாம்  விடேங்கள்  என்ன”  என்றார். மண்ணுலகத்தவரும்  விண்ணுலகத்தவரும்  உண்மை  அறிந்து  வணங்கிய  அளவில்  நின்றனர் எனவும் ; அடியேம் ஆகிய  யாங்கள் வணக்கத்தளவில்  ஒழியாது , விடாமல்  தொடர்ந்து பற்றினேம் எனவும்  கூறியது, பொதுச்  சிறப்பு  முறையை வலியுறுத்துவதாகும் .  ஆண்டவனை  விடாமற்  பிடித்தற்கு  , அடிகள் தம்  அளவில்  ஒழியாது , மெய்யன்பர்  பலரையும்  துணையாக்கிக்கொள்வாராய் , “யாம்” என  உளப்பாட்டுப்  பன்மையிற்  கூறினர் .  மேலும்,  வணக்கம் என்ற  அளவில்  ஒழியாது , “சிக்கெனப்  பிடித்தேன் “  என்றாங்கு  , விடமாட்டோம்  என்று  கூறவும் என்றார் . இனி, “விடேங்கள்  என்ன” என்பதற்கு , “நின்  திருவடி இன்பம்  பெறுங்காறும்  எம்  கடமையாகிய  இவ்  வணக்கத்தைக்  கைவிட  மாட்டோம்  என்று  விண்ணப்பம் செய்து  கொள்ளவும் “ என்று  பொருள்  கோடலும்  அமையும்  . யாமும்,  என்னவும்,  என்புழி ,உம்மைகள் செய்யுள்  விகாரத்தால்  தொக்கு  நின்றன. விடேங்கள்  என்புழி, கள்  என்பது  விகுதி மேல்  விகுதியாகும்.

                        வந்து நின்று  அருளுதல்  = வெளிப்பட்டுத்  தோன்றி  நின்று  அருள்  புரிதல் . எங்கும்  நிறை   பொருளகிய  இறைவன் , மெய்யன்பர்  வேண்டுகோளுக்கு  இரங்கி , அவர்  நினையும்  வடிவில்  வெளிப்பட்டு  அருள்  புரிதலைத்  திருத்தொண்டர்  புரான  முதலியவற்றானும்  அறியலாம் . யாங்கள் மன  மொழி  மெய்கள் ஒன்றுபட்டு  வணங்கவும்  , ஆண்டவனே  வெளிப்பட்டு  அருளுதற்குத்  தடையாகத்  திருவுள்ளம் கொள்ளுவது  என்னையோ  என்புழி, அருள் உருவினள் ஆகிய அம்மையோடு  இயைந்த  நின்னால்  தடை நேர்ந்து  இராது ; எம்  வினையெச்சத்தால் நேர்ந்து  இருக்கலாம் என்று  அடிகள் கருதினார்  என்பது குறிப்பிற்  பெறப்படும் .  இதனை, “மங்கை  பங்க” என்ற  விளி நிலையும்  உறுதிப்படுத்துவதாகும் . திருவுள்ளத்தில்  தடையாகக்  கருதியது  இன்னது  என அறியச்  செய்யின் , திருவருட்டுணை  கொண்டு அத்  தடையை  ஒழித்தற்கு  உரிய  தவத்தில் தலைப்படலாம் என்பதும் உட்கோளாகக்கொண்டு  , “ஏன் கொலோ நினைப்பது”என்றார்  என்பது .

                            இதன்கண், “மற்றொருண்மை  இன்மையின்” ,  “வணங்கி  யாம் விடேம்” என்றமையால் , பரம் பொருள்  இன்னது என்னும் தெளிவும், அதனை  வழிபட்டு  நெருங்கிப்  பற்றும் நெறியும், அந்நெறி  நின்று  அருள் அமுதம்  நுகரலாம்  என்னும்  துணிவும்  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல்  அறிக. 

                                            ******************************************

பாடல் : 76 .

நினைப்ப  தாக  சிந்தை  செல்லும்

எல்லை  யேய  வாக்கினால்

தினைத்த   னையும்  ஆவ தில்லை

சொல்ல  லாவ  கேட்பவே

அனைத்து  லகும்  ஆய  நின்னை

ஐம்பு  லன்கள்  காண்கிலா

எனைத்தெ   னைத்த  தெப்பு  றத்த

தெந்தை  பாதம்  எய்தவே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  வணக்கம்  செய்துவிடுவேம்  அல்லேம்  என்னும்  எம்மனோர்க்கு  அருள்புரியத்  தடையாகக்  கருதுவது  என்னையோ  என்று  கூறிய  அடிகள் , அத்  தடைகள்  எம்மனோர்  மன மொழி  முதலியவற்றால்  ஆயவெனினும்  , அவற்றை ஒழித்தற்குத்  திருவருள் துணை  அன்றி  எம்மால்  செய்யத்தக்கது யாதும்  இன்று  என்னும்  உட்கோள்  புலப்பட, இத்  திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-   எந்தை  =  என்  தந்தையே ,

சிந்தை  செல்லும்  எல்லை  நினைப்பது  ஆக  = என்  மனம்  செல்லும்  அளவும்  நினைவதாக,

சொல்லல்  ஆவ  கேட்பவே  =  சொல்லுதற்கு  உரியன  எல்லாம்  கேட்கப்படுவனவே (ஆதலின்) ,

ஏய வாக்கினால்  தினைத்தனையும்  ஆவது  இல்லை  =  பொருந்திய  சொற்களால்  திணையளவும்  பயன்  விளைதல்  இன்று,

அனைத்து  உலகும்  ஆய  நின்னை  = உலகெலாம்  ஆய  நின்னை ,

ஐம் புலன்கள்  காண்கிலா  =  ஐம்பொறிகளும்  காணும்  ஆற்றல்  இல்லாதன  ஆகும் ,

பாதம்  எய்த  =  நின்  திருவடி  அடையவோ ,

அது  எனைத்து  எனைத்து  =  அத்  திருவடி  எத்துணை  எத்துணை  அளாவுஉடையதோ ,

எப்புறத்து  =  எவ்விடத்ததோ ? (அறிந்திலேன்)  என்பது.

விளக்கவுரை :-   “ எந்தை  “ என்றது  ஈண்டு  மைந்தனாகிய  சிறியேனால் செய்யப்படும்  சிறு  பணியைத்  தந்தையாகிய  நீ  மனம்  உவந்து ஏற்று  அருளல்  கடமையாம்  என்னும்  குறிப்புத்  தோன்ற நின்றது.  அடிகள்  தம் மனம்  மொழி  பொறிகளால்  இறைவனைக்  காண்டற்கு, இயலாமையைக்  குறிப்பிடத்  தொடங்கி, முதலில்  மனத்தின் இயல்பைத்  தெரிவிக்கலானார் . எல்லாக்  கருவிகளும்  மனமே  கட்டிற்கும்  வீட்டிற்கும் சிறந்த  ஏதுவாம் என்ப . மனத்தின்  இயைபு  இன்றேல், மொழிகள் வெற்றுரை  ஆகும் ; பொறிகள்  புலனுகர்ச்சியின்றி  வறியனவாம் . மனம் , பொறிவாயிலாகச்  சென்று புறப்பொருள்களை  அறிதலோடு , உண் முகமாகவும்  நின்று, கண்டவை கேட்டவைகளை நினைந்து  உணரும்  இயல்பினது ஆகும்.  சிவாகமங்களின்  வாயிலாக  இறைவன் திருவுருவங்களைக்  கேட்டும் , புறத்தேயுள்ள  திருக்கோயில்களில்  அம்முறையில்  அமைக்கப்பட்ட  திருவுருவங்களைக் கண்டும், உள்ளத்து  அமைந்து  நினைதலைச்  சகுணோபாசனை  என்பர். சகுண  உபாசனையாவது, இறைவனைத்  திருவுருவில்  வைத்து  வழிபடுதல் . இவ்  வுருவ  வழிபாடு , மன்ம்  கட்பொறிவழிச்சென்று , புற  வுருவத்தைக் காண்டலானும் , செவிப்பொறி  வழிச்சென்று  சிவாகமத்திற்  கேட்டலானும் ,பொறிவழிச் செல்லாது  ஒருங்கு  இயைந்து  நினைதலானும் நிகழ்வது, உருவ  வழிபாடு   முதிர  முதிர  , நினைதற்குக் கருவியாகிய  சித்தவிருத்தி ஒடுங்கி , முடிவில்  மனோலய  சித்தி  உண்டாம் . மனம்  இறந்தநிலையில் , இறைவனுடைய  உண்மை  இயல்பை  உயிர்  உணர்ந்து  இன்புறுவதாகும் .  அவ்வுணர்வு  நிலை  நிர்க்குணோ பாசனை  ஆகும் . நிர்க்குண  உபாசனையை  அருவ  வழிபாடு  என்ப .ஆகவே  புறத்தும்  அகத்தும் வைத்துத்  திருவுருவ  வழிபாட்டில் தலைபடும்  அவ்வளவே  மனத்தால்  இயல்வதாகும் . இவ்வுண்மை  புலப்படவே , “செல்லும் எல்லை  சிந்தை  நினைப்பதாக “  என்றார். இறைவனது  உண்மை இயல்பை  மனம்  காண்டற்கு  இயலாது  எனக் கொண்டு  , இயன்ற  அளவு  திருவுருவை  நினைதற்கும் , அதனைச்  செல்லவிடாது  இருத்தல்  பெரும்  குற்றமாம்  என்ப.  இது  கருதியே , “செல்லும்  அளவும்  செலுத்துமின்  சிந்தையை “ என்பர்  திருமூலர் .

             அடிகள் , சிந்தை  தம்  வயத்தது  அன்றிச்  செல்லும்  இயல்புண்மை  குறித்தே,  “செல்லும்  எல்லை  சிந்தையால் நினைப்பேன் “  என்று  சிந்தையைக்  கருவியாகக்  கொண்டு  , தம்மை  வினை  முதலாகக்   கூறாமல் , “நினைப்பதாகச்  சிந்தை “ என, நினைத்தற்கு  வினை முதலாக  மனத்தையே  கூறுவார் ஆயினர் .  மனம்  தம் வயப்படாமல்  செல்லும்  நிலையிலும்  பழம்  நழுவிப்  பாலில்  வீழ்ந்தது  போல, அதன் செலவு  இறைவனைப்  பற்றியதாக  நேர்ந்தது, திருவருளாற்  பெற்ற  உதவி  என்பது  குறிப்பு .

             நூல்கள்  முகமாகக்  கேட்க்கப்பட்ட  செய்திகளே  பேச்சுக்கு  உரியன என்பது  தோன்ற , “சொல்லலாவ  கேட்பவே “ என்றார் . இது, “வாக்கினால்  தினைத்தனையும்  ஆவதில்லை”  என்பதற்கு  ஏதுவாகும் . இறையருளின்  அநுபவம் , பேச்சு  இறந்த  நிலை  ஆதலின்  வாக்கினாற் சிறிதும்  பயன்  இன்று  என்று  கூறப்பட்டது .  தினைத்தனை  = தினையளவு .  தினை  = சிறுமை குறிக்கும்  ஓர்  அளவை . ஏயவாக்கு = அக்  கேள்வியோடு  பொருந்திய  சொல் . செவிப்பொறி  வாயிலாகக்  கேட்கப்படுவன  எல்லாம்  ஓசை  என்னும்   புலன்  ஆதலானும் , அப் புலன்  உணர்வு  ஏதுவாக  வெளிப்படும்  சொற்களால்  மெய்யுணர்விற்குப்   புலன்  ஆகும்  இறை  இயலை  உணர  இயலாது. ஆதலானும் , “ஏய  வாக்கினால்  தினைத்தனையும்  ஆவதில்லை “என்றார் . இறவன்  உலகு  எலாம்  ஆகி  வேறாய்,  உடனும்  ஆய்  நிற்கும்  இம் மூவகை  நிலைகள்  உள்ளும் , வேறு  ஆதல் , உடன்  ஆதல் ஆகிய  இரண்டும்  பொறிகளால்  அறியப்படுவன  அல்ல, உலகு  எலாம் ஆகி  நிற்கும்  நிலை  அறியப்படுவது  ஆம்  அன்றோ?  அல்  அளவிலாது  ஐம்பொறிகளாலும்  நுகர்ந்து  இன்புறலாம்  எனின் ,  அதுவும்  இயலாது  என்பார், “அனைத்துலக  மாய  நின்னை ஐம்புலன்கள்  காண்கிலா” என்றார். “உலகெலாமாகி “ என்புழி, உலகம்  என்பது  உயிரை  உணர்த்தும்  .  கலப்பினால்  உடலின்  உயிர்போல அவ்வுயிர்களேயாய்  நிற்பன்  என்பது  கருத்து , இந் நிலையை  மாயா  காரியமாகிய  புறவுலகில்  வைத்து  எங்ஙனம்  அறிய  முடியும்  என்பது.  “அவன்  அன்றி  ஓர்  அணுவும்  அசையாது” என்றபடி .  அனைத்து  உலகும்  அப் பெருமானால் ஆயது  எனினும் , அவற்றை  இயக்கி , அவற்றின்  உள்ளும்  புறமும்  எள்ளில்  எண்ணெய்போல  நிறைந்து  நிற்கும்  அவ் இறை  இயல்பை மெய்யுணர்வினால்  அன்றிப்  பொறிகளாற்  காண்டற்கு  இயலாது என்பார், “ஐம்புலன்கள்  காண்கிலா” என்றார் . ஈண்டுப்  புலன்  என்பது  பொறி  என்னும்  பொருட்டு , முதல்  அடியில்  , “வாக்கு”  என்றது செயற்  கருவியும் (கன்மேந்திரியம்) , ஈண்டு  ஐம்புலன்கள் என்றது , அறிவுக்கருவியும் (ஞானேந்திரியம்) ஆதலால், இவை  புறக் கருவிகளுக்கும் , மனம் அகக்  கருவிக்கும்  உபலக்கணம்  ஆகும்.  ஆகவே , உயிர்களின் அகப்  புறக் கருவிகளுக்கு இறைவன்  எட்டாதவன்  என்பது  தெளிவுறுத்தப் பட்டப்படியாம். 

                      இனி,  ஆண்டவனே  , நின்  இயல்பு  முற்றும்  அறிய  இயலாதது  ஆயினும்  , நின்  திருவடியின்  பக்கலாவது, அணுகலாம்  என்றால் , அத்  திருவடி, “பாதாளம் எழினுங்கீழ்  சொற்கழிவு  பாதமலர்”  என்றபடி , அதன்  அளவும்  முடிவு  இடனும் அளந்து அறியவொண்ணா என்பார். “பாதம்  எய்த அது  எனைத்து  எப்புறத்தது “  என்றார் . “எனைத்து  எனைத்து”  என்னும்  அடுக்கு  அடியின்  அகலத்தையும் , “எப்புறத்தது” என்பது  நீளத்தையும்  குறிப்பனவாம் .  இவ்வுண்மையை  , “அகலம் அளக்கிற்  பாரில்லா  அடி “  எனவும்,  “எழுவாயிறு  வாயிலாதன  ……… ஐயாறான்  அடித்தலமே “  எனவும்  போந்த  ஆளுடைய  அரசர்  அருண்மொழிகலானும்  உணரலாம் . “எந்தை”  என்பது  அண்மை விளி .

                         இத்  திருப்பாட்டின்  திரண்ட  கருத்து :  ஆண்டவனே, நின்  இயல்பு  ஞானேந்திரிய  கன்மேந்திரியங்களால்  அளந்து  அறிய  இயலாத  தொன்று ; மனத்தால்  நினைந்து  உணர  என்றாலோ  ஓர்  அளவில்  அன்றி  அது  செல்லாது .  நின்  திருவடியை  அணுகலாம்  என்றாலோ , அதன்  அகலமும்  நீளமும் அளப்பரியன.  ஆதலால்  நின்  திருவருள்  துணை  இன்றி  , உயிர்  முயற்சி  மாத்திரம்  பயன்  விளையாது  என்பது தெளியப்படுதலின் , நீயே  ஏழைக்கு  இரங்கி  அருளல்  வேண்டும்  என்று  அடிகள் கருதினார்  என்பது.

                           இதன்கண் , மனம் , வாக்கு , பொறி ,  புலன்கள்  யாவும்  இறைவனைக்  காண்டற்குப்  போதிய  ஆற்றல்  உடையன  அல்ல  என்றதனால், ஆண்டவன்  திருவருளே  துணையாக  நின்று , வீட்டின்பத்தில்  தலைப்  படுத்துவதாகும்  என்பது பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய   பொருள் புலனாதல்  அறிக.

                                          ********************************************

பாடல் : 77.

எய்த  லாவ  தென்று  நின்னை

யெம்பி  ரானிவ்  வஞ்சனேற்

குய்த  லாவ  துன்கண்  அன்றி

மற்றொ  ருண்மை  யின்மையின்

பைத  லாவ  தென்று  பாது

காத்தி  ரங்கு  பரவிபேயற்

கீத  லாது  நின்  கண்  ஒன்றும்

வண்ணம்  இல்லை  யீசனே.

கருத்துரை :-     முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவனை  அடைதற்குத்  தம்  மனம்  மொழி  முதலியவற்றால் இயலாமை  கூறுமுகமாக, அப் பெருமானே  இரங்கி  அருளல்  வேண்டும்  என்னும்  உட்கோளைக்  குறிப்பிற்  பெற  வைத்த  அடிகள், இத்  திருப்பாட்டில் , அவ்வுட்கோள்  குறிப்பை   ஏதுக்காட்டி  வற்புறுத்து  வெளிப்பட  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  எம்பிரான்  =  எங்கள்  ஆண்டவனே ,

நின்னை  எய்தலாவது  என்று  =  (யான்)  நின்னை  அடைந்து  இன்புறுதல்  எப்பொழுது? ,

இவ் வஞ்சனேற்கு  =  இவ்  வஞ்சனாகிய  எனக்கு  ,

உன்  கண்  அன்றி  உய்தல்  ஆவது  =  நின்  பற்றுக்கோடு  அல்லாமல்  உய்தி  கூறுதற்கு  ,

மற்று  ஓர்  உண்மை  இன்மையின்  =  பிறிதொரு  மெய்யாகிய  பற்றுக்கோடு  இல்லாமையான் ,

பைதல்  ஆவது  என்று  பாதுகாத்து  இரங்கு  = (கை விடின்) துன்பம்  விளையும்  என்று  திருவுள்ளம்  கொண்டு  காப்பாற்றி  இரங்கி  அருள்வாயாக

ஈசனே   =   ஈசனே ,

ஈது  அல்லது  நின்  கண்  ஒன்றும்  வண்ணம்  இல்லை  =

 இங்ஙனம்  நீயே  இரங்கி  அருளுதல்  ஆகிய  இஃது  அல்லாமல்  நின்  திருவடி  நீழலில்  இயையும்  வகை  பிறிது  இல்லை  என்பது.

விளக்கவுரை :-   எம்மை  ஆட்கொள்ளும்  தலைவன்  என நின்னை  முன்னரே  தெளிந்துளேன்  என்பார், “எம்பிரான் “ என்றனர் .  எய்தல் –  அல்லீற்றுத்  தொழிற்  பெயர்.  ஆண்டவன்  உருக்கரந்த  நிலையில்  , அப்பிரிவு  பொறாது , அடிகள்  உள்ளம்  வருந்தி , அவ் விறைவனை  அடய  விரைதலின், “ எய்தலாவது  என்று  நின்னை”  என்றனர் .  எய்துதல்  ஆகிய  வினையையும் , என்று  எனக்  காலக்  குறிப்பையும்  செயப்படுபொருளாகிய  நின்னை  என்பதற்கு முன்னர்க் கூறியது, அடயப்படும்  பொருள் துணியப்பட்டமை  யானும் , ஏனை  இரண்டும்  அங்ஙனம்  துணியப்படாமையானும் , துணிந்த  பொருளில்  அமைதியும் , துணியப்படாதவற்றில்  விரைவும்  தோன்றியமையான்  என்க .

                     “இவ் வஞ்சனேற்கு “ என்புழிச்  சுட்டு  இழிவு  குறித்து  நின்றது .  “உன்  கண்”  என்புழி ,  கண்  –  பற்றுக்கோடு  என்னும்  பொருட்டு , “  உன்  கண்  அன்றி”  என்னும்  தொடர்க்கு, உன்  பற்றுக்கோடு  அல்லாமல்  என்பது  பொருளாயினும், பற்றுக்கோடு  உன்னையன்றி  என்பது  கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் .  உண்மை  என்பது  ஆகு  பெயராக  நின்று,  பற்றுக்கோடு  என்னும் பொருளை  உணர்த்தும் .  உலக  வாழ்க்கைக்கு  ஆதரவாகக்  கருதப்படுவன  பல  உள. அவை  எல்லாம்  எடுத்த  உடம்பு  பற்றி  உண்டானவை  ஆதலின் , அவ்வுடல்  ஒழிவில் ஒழிந்துவிடும்  இயல்பினவாம்.  “தந்தை  தாய்  தமர்தார  மகவெனுமிவை   யெலாஞ்  சந்தையிற்  கூட்டம் “  என்பர்  தாயுமானார். ஆதலின்,  உயிர்க்கு  உறுதி  பயக்கும்  உண்மையான  பற்றுக் கோடாக  வுள்ளவன்  ஆண்டவன்  ஒருவனே  என்பது  தெளிவு.  இத்  தெளிவு  கைவரப்பெற்றவர்  அடிகள்  ஆதலின் , “மற்றொருண்மையின்மையின் “ என்றார் . பாது காத்திரங்கு”  என்பதற்கு  இஃது  ஏதுவாகும் .  “பாதுகாத்திரங்கு”  என்பதை, இரங்கிப்பாதுகாத்து  அருள வேண்டும்  எனக்  கொள்ளல்  வேண்டும்.   பாதுகாத்தல்  –  பேணிக்காத்தல்.  பைதல்  –  துன்பம் .   ஆண்டவனே,  நின்னை  யன்றி  என் உயிர்க்கு  உண்மையான  பற்றுக்கோடு  பிறிது  இல்லாமையால், நீயே  என்னை  மீண்டும்  பிறவாமல்  விரைந்து  பேணிக்  காத்தருளல்  வேண்டும் .  புறக்கணிப்பாய்  ஆனால் , பிறப்பினால்  விளையும்  துன்பத்திற்கு  ஆளாவேன் .  அத்  துன்பம்  உண்டாம்  என்பது  திருவுள்ளம்  அறியுமே  என்று  அடிகள்  விண்ணப்பம்  செய்துகொள்வாராய்,  “பைதலாவதென்று  பாதுகாத்திரங்கு  “  என்றார்.  ஈண்டுப்  பாவியேன்  என்றது  துன்ப  விளைவிற்கு  ஏதுக்  காட்டியபடியாம் . 

                        உயிர்களின் முயற்சியும்  தவமும்  ஆண்டவன்  அருள்  அமுதத்தை நிறைவித்துக்  கொளுதற்குத்  தம்  உள்ளமாகிய  கொள்கலனைத்  தூய்மைப்  படுத்துக்கொள்ளும்  அவ்வளவே  பயன்  செய்வனவாம் .  வீட்டின்பப்பேற்றிற்கு  ஆண்டவன்  கருணையே  சிறந்த  காரணம்  ஆகும். இவ்வுண்மை  கருதியே, “ஈதலாது  நின்கண்  ஒன்றும்  வண்ணம்  இல்லை”  என்றார். ஈது  என்பது  இறைவன்  கருணையைச்  சுட்டும் .  ஒன்றுதல்  –  இரண்டறக்கலத்தல் ;  வீட்டு  நிலையைக்  குறிப்பதாகும்.

                        இத்  திருப்பாட்டில், எய்துதல் , உய்தல் , ஒன்றுதல் , என்னும்  மூன்று  செயல்கள்  உயிர்க்கு  வேண்டுவன  என்று  கூறப்பட்டன .  எய்துதல் –  அரிய  தவம்  கிடந்து,  இறைவன்  பக்கல்  அடைந்து  ,  சிவத்  தொண்டில்  தலைப்படுதல்.  உய்தலாவது,  இறைவன்  அகத்தும்  புறத்தும்  வைத்து  வழிபட்டுக்  கட்டறுத்துச்  சிவப்பேற்றிற்கு  உரிய  தூய்மை  பெறுதல்.  ஒன்றுதலாவது  ,  இறைவனோடு  இரண்டறக்  கலந்து   சிவானந்தத்தில்  திளைத்தல்  .  இம்  மூன்றனுள் , எய்துதற்குச்  சரியையும்  , உய்தற்குக்  கிரியை  யோகங்களும்  , ஒன்றுதற்கு  ஞானமும்  சாதனங்களாம் . எய்துதற்குக்  கலதத்துவமாகவும்  , உய்தற்குப்  பற்றுக்கோடாகவும்  , ஒன்றுதற்கு  அருள்  உருவம்  ஆகவும்  நின்று  ஆண்டவன்  உபகரிப்பன்  என்பதும்  இத்  திருப்பாட்டிற்  பெறப்பட்டவாறு  அறிக. 

                         இதன்கண்,  எய்தல் , உய்தல் , ஒன்றுதல் ஆகிய  செயல்கள்  படிமுறையிற்  கூறப்பட்டு  இருந்தாலும் , முடிவாகக்  கூறப்பட்ட  ஒன்றுதலால்  இன்பத் தோய்வு  உண்டாம் என்பது  பெறப்படுதலானும்,  ஆனந்தத்  தழுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றுதல் அறிக. 

                      &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாடல் :78.

ஈச  னேநீ  யல்ல  தில்லை

யிங்கும்  அங்கும்  என்பதும்

பேசி  னேனோர்  பேதம்  இன்மை

பேதை  யேனென்  எம்பிரான்

நீச  னேனை  யாண்டு  கொண்ட

நின்ம  லாவொர்  நின்னலால்

தேச  னேயோர்  தேவ  ருண்மை

சிந்தி  யாது  சிந்தையே.

கருத்துரை  :-    முன்னைத்  திருப்பாட்டில்   இறைவன்  திருவடிக்கண்  இயைந்து  இன்புறுதற்கு அப் பெருமான்  திருவருள்  துணைபுரியின்  அல்லது  உயிர்  முயற்சியளவில்  இயலாது  என்பது  கூறப்பட்டது. அங்ஙனமாயின் , உயிர்  முயற்சியாக  , “வாழ்த்தவாயும்  நினைக்க  மட  நெஞ்சும்  “  தந்த  இறைவனைக்  குறித்து , உயிர்  செய்யத்தக்க  கடமைகள் வேண்டாவோ  எனின்  , “ என் கடன் பணி செய்து கிடப்பதே”  என்றபடி  . உயிர்  தூய்மை  எய்துதற்கு மன மொழி மெய்கள் இடையறாது  இறை  பணியில்  தலைப்பட  வேண்டும்  என்பது  இத் திருப்பாட்டில்  கூறப்படுகின்றது .

பதவுரை :-   ஈசனே  இங்கும்  அங்கும்  நீ  அல்லது  இல்லை  யென்பதும்  =  ஈசனே, இம்மை உலகத்தும்  மறுமை  உலகத்தும்  தலைமைப்  பொருள்  நீ  அல்லாமற்  பிறிதொன்று  இல்லை  என்பதையும் ,

பேதம்  இன்மை  =  உயிர்  வேறுபாடற்கு  ஒன்றும்  வீட்டு  நிலையையும் ,

ஓர்  பேதையேன் பேசினேன்  =  ஓர்  அறிவிலியாகிய  யான்  பாராட்டிப்  பேசியது  உண்டு,

என்  எம்பிரான்  =  எனக்குச்  சிறப்புரிமை  உடைய  எங்கள்  தலைவனே ,

நீசனேனை  ஆண்டுகொண்ட  நின்மலா  =  இழிந்தவனாகிய  என்னை  ஆளாகக்கொண்ட  தூயோனே ,

தேசனே   =   பேரோளிப்  பிழம்பாக  வுள்ளவனே  ,

ஓர்  நின்  அல்லால்  =  ஒப்பற்ற  நின்னையல்லாமல் ,

ஓர்  தேவர்  உண்மை  =  அறிதற்கு  உரிய  தெய்வம்  பிறிதொன்றன்  உண்மையே  ,

சிந்தை  சிந்தியாது  =  என்  மனம்  நினையாது  என்பது.

விளக்கவுரை :-    “நீ  அல்லது  இல்லை”  என்புழி , இல்லை  என்னும்  முற்றிற்கு  வினை  முதலாக  ,  ஈசத்துவம்  உடைய  பிறிதொரு  பொருள் என்று  கோடற்கு, “ஈசனே”  என்று  அழைக்கலாயினர். நீயே  உள்ளாய் என்று  கூறுதலினும் , “ஆல்லது  இல்லை “ என்றது, தெளிவின்  துணிவை  வலியுறுத்துவதாகும் .  இம்மை , மறுமை ,வீடு  என்னும்  மூன்றனுள், முன்னைய  இரண்டும்  உலக நிலையாகக்  கொள்ளப்படுதலின்,  ஆண்டு  உள்ள  உயிர்த்தொகுதிகளை  ஆளும்  தலைமைத்  தன்மை  சிவபெருமானுக்கே  உள்ளது  என்பது , “நீ  யல்லது  இல்லை” என்பதனால்  தெளிவுறுத்தப்பட்டபடியாம் . இம்மை  மறுமை  என்னும்  இரண்டையும்  கடந்த  வீட்டு  நிலையை , “பேதம்  இன்மை” என்னும் தொடராற்  புலப்படுத்துள்ளார் . பேதம்  –  வேறுபாடு ;  இறை , உயிர் என்னும்  இரண்டையும்  பற்றியது , உயிர் , கட்டொழிந்த, திருவருள்  சார்பாக  இறையடி  நீழலில்   இரண்டறக்கலந்து  இயைதலையே , “பேதம்  இன்மை “ என்னும்  தொடர்  குறிப்பதாகும் . ஆகவே, இம்மை மறுமைகளை, “ இங்கும்  அங்கும்  “  என்னும்  சொற்களாலும் , வீட்டு  நிலையை , “ பேதம்  இன்மை” என்னும் தொடராலும்  புலப்படுத்து  அருளினார்  என்பது .

              வீட்டு  நிலையைக்  கூறிய இடத்து, மெய்யன்பர்  எல்லோர்க்கும்  தலைவனாயினும் , தமக்குச்  சிறப்புரிமை  தோன்ற , “என்  எம்பிரான் “  என்று  அடிகள்  முறிப்பிட்டது , இம்மை  மறுமைப்  பிறவி  ஒழித்து,  வீட்டு  நிலை  எய்தும்  விருப்பம்  தமக்கு  விஞ்சி  நிற்றலான் என்க. “ பேதம்  இன்மையும்”  என்புழி ,  எண்ணும்மை  தொக்கு  நின்றது. அடிகளுக்கு  இம்மைப்பயனாகிய  புகழினும் , மறுமை  இன்பம்  ஆகிய  இந்திரன்  முதலியோர்  பதங்களினும்  விருப்பம்  இல்லை  என்பதை  , “வேண்டேன்  புகழ்”  என்பதனாலும், “கொள்ளேன்  புரந்தரன்  மாலயன்  வாழ்வு”  என்றமையானும்  நன்கு  உணரலாம் . “நன்றறிவாரிற்  கயவர்  திருவுடையர்  “  என்புழி , நன்று  என்பதற்கு  , “இம்மை ,மறுமை , வீடுகட்கு  உரியவாய  புகழ் , அற ஞானங்கள்” என்று  பரிமேலழகர்  கூறிய  உரை  நயம்  ஈண்டுக்  கருதற்பாலது. புகழை  வேண்டாமையால்,  இம்மை  விருப்பம்  இன்று  என்பதும் , அறத்தை  மறுமை  நோக்கு  இன்றிச்  சிவ  புண்ணிய  நோக்காக  மேற்கொண்டமையின் , மறுமை  விருப்பமும்  இன்று  என்பதும்  போதரும் .  யான்  ஓர்  அறிவிலி  ஆயினும்  , இம்மை , மறுமை , வீடுகளைப்பற்றிய  செய்திகளையும் , அம் மும்மைக்கும்  உரிய  தலைவன்  நீயே  என்பதையும் , மறை  ஆகமங்களின் வாயிலாக  அறிந்து  பேசுதலாகிய  மொழிப்பணியை  மேற்கொண்டுள்ளேன்  என்பார், “ஓர்  பேதையேன் பேசினேன்” என்றார் .  “பற்பல பொருளாய்  உள்ள  பாசமும்  அதனை  மேவி , உற்பவ பேதமான  உடம்புயிரொடுங்குமாறும் , அற்புத  புத்தி முத்தியளித்தருளாலே  மேலாந் , தற்பரனடாத்து  மாறும்  உணர்ந்தனர்  சைவ  நூலில்”  என்று  அடிகள்  வரலாறு  கூறுதலும்  ஈண்டுக்  கருதற்பாலது .  அடிகள், மெய்யன்பு  நிறைவும் , ஆண்டவன்  அருள் பெறுதற்கு  உரிய  பக்குவ  முதிர்ச்சியும்  நன்கு  உடையவரே  யாயினும் . அவர்  தம்மை  ஆண்டவன்  முன்னிலையில்  யாவர்க்கும்  கீழாம்  அடிமை  இயல்பு  தோன்ற , “நீசனேனை” என்றார்.  அவர்  அங்ஙனம்  கூறியது  கொண்டு , நாமும்  அங்ஙனம்  கருதல்  ஆகாது, ஆண்டவன்  முன்னிலையில்  ஓர்  அடிமை  எப்படிப்  பேச  வேண்டும்  என்பதை , அம்முறையில்  வைத்து  அறிந்து  கொள்வதே  அறிவுடைமை  ஆகும்  என்க.  ஆண்டுகொண்ட  என்பதற்கு , ஆளாக  ஏற்றுப்  பணிகொண்ட  என்பது  பொருள்  ஆகும் . நோயுடை  ஒருவனுக்கு , அந்  நோய்  நீக்க  நோய்த்தொடர்பு  இல்லாத மருத்துவனே  வேண்டும் . மற்றொருவன்  கண்ணுக்கு  அறுவை  மருத்துவம்  செயப்புகுவோன் , தன்  கண்ணிலும்  படல  நோய்  உடையனாயின் , எங்ஙனம்   செய்யக்  கூடும் .  அங்ஙனமே  ,  பாசப்பிணிப்பு  ஒரு  சிறிதும்  இல்லாத ஆண்டவனே  , அப்  பிணிபுடைய  என்னை  ஆட்கொண்டான்  என்பார் , இறைவனை , “நின்மலன் “  என்றும்  ,  தம்மை  , “நீசன்”  என்றும்  கூறுவாராயினர் . நின்மலன்  –  அழுக்கற்றவன் ;  இயல்பாகவே  பாசங்களினீங்கினவன்  என்றும்  பொருட்டு.  நீசன்  –  பாசப்பிணிப்பால்  இழிந்தவன்  .  “ஆண்டு கொண்ட”  என்றதனால் , தொண்டு  மெய்தலாகிய  செயப்பணி  உடைமையும்  பெறப்படுவதாகும்.  இனி,  உள்ளப்  பணியைக்  குறிப்பிடுவாராய் , “ஓர்  நின்  அல்லால் ……….. ஓர்  தேவர்  உண்மை  சிந்தியாது  சிந்தை “  என்றார் . ஓர்  இரண்டனுள்  ,  முன்னது  ஒப்பற்ற  என்னும்  பொருள்  உடையது. , பின்னது  ஓர்தல்  என்னும்  தொழிற்  பெயரின்  விகுதி  குன்றி, “ஓர்  தேவர்”   என  வினைத் தொகையாக  நின்றது.  ஓர்  தேவர்  உண்மை  என்பது,  நூலறிவானும் , அநுபவ உணர்வானும்  அறிதற்கு  உரிய  தெய்வம்  பிறிதொன்று  உள்ளதாக  என்னும்  பொருளது . மனம்  பிறிதொன்றைச்  சிந்தியாது  என்றாதனால் , உள்ளப்பணி  புலப்படுக்கப்பட்டவாறாம் .  நின்னையல்லாமல்  என்றவிடத்து , “தேசனே”  என்ற  விளி  கொள்ளப்பட்டது. தேசன்  –  ஒளி  வடிவினன் .  மற்றைத்  தேவரும்  ஒளியுடம்பினர்  ஆதலின் , அவ்  வொற்றுமையால்  அன்னாரையும்  பரம் பொருள் எனக்  கருதுவாரும்  உளர் எனக்  கொண்டு , என்  உள்ளம்  பேரொளிப்  பிழம்பாக  உள்ள  நின்னை  அன்றி  வேறு  கருதாது  என்னும்  குறிப்புத் தோன்ற  நின்றது, “தேசன்”  என்னும்  அவ்  விளிச்  சொல்  என்க .

                இத்  திருப்பாட்டில் , அடிகள்  தம்  மன  மொழி  மெய்கள்  இறைபணியில்   தலைப்பட்டிருத்தலைக்  குறிப்பிட்டிருப்பதால்,   உயிர்  முயற்சியிற்  குறைவின்று  என்பதும்,  இனி,  ஆண்டவன்  திருவருட்  பதிவுதான்  வேண்டுவது  என்பதும்  குறிப்பெச்சமாகக்   கொள்ளக்  கிடப்பனவாம் .

                 இதன்கண், ஆண்டவனைக்  குறித்து ,  என்  அகப்  புறக்  காரணங்கள் நின்னையே  பற்றி  நிற்பன  என்று  அடிகள்  கூறி  இருத்தலின், உயிர்  தூய்மை  நிலை  எய்தியதும்  , திருவருட்பேற்றை  எதிர்பார்த்து  இருத்தலும் , அப் பேறு  காரணமாக  வீட்டின்பத்தில்  தலைப்படலாம் என்னும்  துணிவும்  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக . 

                                               *****************************************

பாடல் :79 .

சிந்தை  செய்கை  கேள்வி  வாக்குச்

சீரில்  ஐம்பு  லங்களால்

முந்தை  யான  காலம்  நின்னை

யெய்தி  டாத  மூர்க்கனேன்

வெந்தை  யாவி  ழுந்திலேன்  என்

உள்ளம்  வெள்கி  விண்டிலேன்

எந்தை  யாய  நின்னை  யின்னம்

எய்த  லுற்றி  ருப்பனே  .

கருத்துரை :-   உயிர்  எய்தும்  தூய்மைக்கு  , மன  மொழி  முதலிய  அகப்புறக்  கரணங்கள்  எல்லாம்  இறைபணியில்  தலைப்படவேண்டும்  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  கூறிய  அடிகள் , அக்கரணங்கள்  அவ்வாறு  பண்டைப்பிறப்பில்  தலைப்படாமையால்  , அத்  தூய்மையும்  திருவருட்  பதிவும்  பெறாமல் , இப்பிறப்பிலும்  வீட்டின்பப் பேறு  குறித்து  உயிர்வாழ்ந்து  இருக்கலானேன்  என்று  இரங்குகின்றார் . 

பதவுரை :-    சிந்தை  செய்கை  கேள்வி  வாக்கு  சீர்  இல்  ஐம்புலன்களால்= 

மனம்  செயல்  கேள்வி  மொழி என்னும்  இவற்றாலும்  சிறப்பில்லாத  ஐம்பொறிகளாலும்  ,

முந்தையான  காலம்  =  பழமையான  காலத்தில் ,

நின்னை  எய்திடாத  மூர்க்கனேன்  =  நின்னை  அடையப்பெறாத  அறிவிலியாகிய  யான் ,

வெந்து  விழுந்திலேன்  =  தீயில்  வீழ்ந்து  வெந்திலேன்,

என்  உள்ளம்  வெள்கி  விண்டிலேன்  =  என்  மனம்  நாணி  உடையப்பெற்றேன்  இல்லை ,

எந்தை  ஆய  நின்னை  =  என்  தந்தையாகிய  நின்னை  ,

இன்னம்  எய்தல்  உற்று  இருப்பேனே  =  இன்னமும்  அடைதற்கு  விருப்பமுற்று  வாழ்ந்து  இருக்கலானேன்   என்பது . 

விளக்கவுரை :-  இறைவன்  திருவருட்பேறு  குறித்து, உயிர்கள்  மேற்கொள்ளும்  தவங்கள், சிந்தை  முதலியவாக  இங்கே  கூறப்பட்ட  அகப்புறக்  கரணங்களால்  நிகழ்வனவாம் .  இக் கருவிகள் எல்லாவற்றுள்ளும்  மனமே  சிறந்ததாகும் .  மனம்  இல்வழி  , நிகழும்  செயல்  முதலியவெல்லாம்  பயன்  விளைப்பன  ஆகா, மன  மொழி  மெய்களாகிய  முக்கரணங்களுள்  , மொழிப்பணி    ஒருவற்குப்  பிறர்கூறக்   கேட்டலும்  , தான்  கூறலும்  என  இருதிறப்படும்  ஆதலின்,  “கேள்வி  வாக்கு”  என்றார்.  ஐம்புலங்களால்  என்புழி  ஆல்  என்னும்  மூன்றனுருபைச்  சிந்தை  முதலியவற்றோடும்  இயைந்து , எண்ணும்மைகளை  விரித்துரைத்துக்  கொள்ளல்  வேண்டும்.  சிந்தையால்  ஆண்டவன்  திருவுருவை  நினைவு  கூர்தலும், உடற்செயல்களால்  தொழுதல் , வணங்குதல்  முதலியன  செய்தலும் , இறைவன்  புகழ்  மொழிகளைப்  பிறர்   கூறக்  கேட்டலும் , அவற்றை நாவாரப் பாராட்டிக்  கூறலும்  ஆகிய  இவை  முக்கரணங்களாலும்  நிகழும்  தவச் செயல்களாகும் .  இத்  தவ  முயற்சி  உடையார்க்கு  , ஐம்பொறிகளின்  வாயிலாக நுகரப்படும்  புலன்கள்  எல்லாம்  சிவமயமாகவே  நிகழும்  என்பது   பெரியார்  அநுபவத்திற்  கண்டது .  இந் நிகழ்ச்சி  சித்தம்  சிவமாகப்  பெற்றோர்க்கு  அன்றி , மற்றையோர்க்கு  இயல்வது  அன்று,  ஐம்பொறிகளின்  வாயிலாக  உலகியற்  புலன்களை  நுகர்தற்கே   மனம்  செல்லும்  இயல்பினதாகும்.   அவ் வியல்பை , அறிவினால்  தடைப்படுத்துத்  தன்வயம்  ஆக்கல்  வேண்டும் . அஃது  அரிதிற்  செயர்பாலதாகும் . 

                   உலகியற்  பொருள்களைப்  பற்றிக்  கண்டு , கேட்டு , உண்டு , உயிர்த்து , உற்ற.றியும்  ஐம்புலங்களின்  இயல்பு  குறித்தே, “ சீரில்  ஐம்புலன்கள்” என்று  கூறப்பட்டன .  இவ்  ஐம்புலன்களையும்  சிவமயமாகக்  கண்ட   பெரிய  அன்பின்  வரகுண  தேவர்  வரலாறு  ஈண்டுக்  கருதத்தக்கது .  உதிர்ந்து  கிடந்த  வேப்பங்கனிகளைச்  சிவலிங்க  வடிவமாகக்  கண்டதும் , நீர்  நிலையில்  உள்ள  தவளைகளின்  ஒலியை  ஈசனைப்  பாடினதாகக்  கேட்டதும்  முதலிய  சிவாகாரமான   புலன்  நுகர்ச்சிகளைத்  திருவிடைமருதூர்  மும்மணிக் கோவையில்  ,   “காம்பவிழ்ந்  துதிர்ந்த   கனியுருக்  கண்டு , வேம்புகட் கெல்லாம்  விதானம்  அமைத்தும்  , குவளைப்  புனலிற்றவளை  யாற்ற , ஈசன்றன்னை  யேத்தினவென்று , காசும்   பொன்னும்  கலந்து  தூவியும்”  என்பன  முதலியவாகப்  பட்டினத்து  அடிகள்  கூறியவற்றான்  உணரலாம். இங்ஙனம்  வரகுண  தேவர்  சிவாகாரமாகப்  புலன்களை  நுகர்ந்ததோடு  அமையாது , உலகியற்  பொருள்  மூலமாக  நுகரப்படும்  ஐம்புலன்களையும்  தமக்கு  எனக்  கொள்ளாமல் , சிவார்ப்பணம்  செய்தனர்  என்பதும் ,” விரும்பின  கொடுக்கை  பரம்பரற் கென்று , புரிகுழல்  தேவியைப்  பரிவுடன்  கொடுத்த , பெரிய  அன்பின்  வரகுண தேவரும்” என்னும்  அப்பாடற்பகுதியான்  அறியலாம் .  ஒரு  சிவஞானி, உலகியலில்  நுகரப்படும்  ஐம்புல  இன்பங்களைச்  சிவார்ப்பணம்  செய்யவேண்டும்  என்பது , சிகார  முதலாக  வைது  ஓதப்படும்  திருவைந்தெழுத்தின்  பொருளாக, அப்பைய  தீக்கிதர் , சிவார்ச்சனா  சந்திரிகையில்  விளக்கி  இருந்தலாலும்  அறியத்தக்கது. சிவாய  நம ;  என்பதற்கு  ,  நுகர்  பொருள்  எல்லாம்  சிவனுக்கே ; எனக்கு  இல்லை என்பது  அவர்  விளக்கிய  பொருள்களில்  ஒன்று.  இங்ஙனம்  உலகியல் பற்றிய  ஐம் புலன்களையும்  இறைவனுக்குச்  சமர்ப்பித்து  விட்டுச்  சிவமயமாக  அப்புலன்களை  மாற்றிக் கொள்ளுதலே  ஐம்புலன்களால்  இறைவனை  அடைதல்  ஆகும்  என்பது .

                 முந்தையான  காலம்  — பண்டைப்  பிறப்புக்களைக்  குறிப்பதாகும்  . பழம்  பிறப்புகளிற்  சிந்தை  முதலிய  கரணங்களால்  இறைவனைப் பற்றியிருந்தால், இப்  பிறப்பில்  திருவடி  இன்பம்  எளிதில்  கிடைத்திருக்கும்  என்பதும் , அங்ஙனம்  பற்றி  ஒழுகாமையால்  இப்  பிறப்பில்  அரிதாகின்றது  என்பதும்  அடிகள்  கருத்து. பண்டைப்  பிறப்புகளில்  உண்மைப்பொருள்  இன்னது  எனத்  தெளிந்து  , சாதனங்களை  மேற்கொள்ளுதற்கு  உரிய  அறிவு  கைவரப்  பெற்றிலேன்  என்பார்,  தம்மை  “மூர்க்கனேன்”  என்றார்.

                    “வெந்து  விழுந்திலேன்”  என்பதை, விழுந்து  வெந்திலேன்  என  மாற்றிக் கொள்ளல் வேண்டும் .  வெந்திலேன்  என்றமையால் , வீழ்தற்கு   இடன்  தீ  ஆயிற்று  என்க . எல்லாக்  கரணங்களுக்கும்  மூலமாக  வுள்ள  மனம் , இறைவனைத்  தானும்  பற்றி, மற்றைக்  கரணங்களையும்  செலுத்த  வேண்டிய  கடமை  உள்ளதாகவும் , அக்  கடமை  செய்யாமை  பற்றி  நாணம்  எய்த  வேண்டும்  என்பதும், அக்  கடமைக்கு  மாறாக , உலகியலில்  தானும்  சென்று, மற்றைக்கரணங்களையும் செலுத்திக்  கேடு  விளைத்தலின் , உடைந்து  அழிதல்  வேண்டும் என்பதும்  கருத்து.  அங்ஙனம்  மனம்  நாணமுற்று  அழியாமல்  இருக்கப்பெற்றேன் என்று  இரங்குவார் , “என்  உள்ளம்  வெள்கி  விண்டிலேன்” என்றார்.  உடலை  நெருப்பில்  வீழ்த்தற்கு , உற்பணியாகிய  தொழுதல்  , வணங்குதல் முதலியன  செய்யாமையும் , உள்ளம்  வெள்கி  விள்ளுதற்கு , நினைவு கூர்தலாகிய  உள்ளப்  பணி  புரியாமையும்  ஏதுக்களாம். உடல் வீழ்ச்சியையும் , விள்ளுதலையும்  பற்றி  இங்ஙனம்  கூறியது .  புறக்கரணமும்  அகக்கரணமும்  உரிய  கடமைகளுக்குப்  பயன்படாமை  குறித்துச்  செய்யப்படும்  கழுவாயாம்  என்பது .

                    “எந்தையாய நின்னை” என்றதனால், ஒரு குழந்தை தன்  தந்தையை அணுகுதற்கு  இத்துணை  இடர்ப்பாடு  நேரலாமா என்பது குறிப்பு. ஆண்டவனே , நின்னை  இன்னமும்  அடையலாம் என்னும்  ஒரே  குறிக்கோள்பற்றிய   அவாக்  காரணமாகவே  இவுடலைத்  தீயில்  வீழ்த்து  இறவாமல் உயிர்  வாழ்ந்து இருக்கலானேன்  என்பார், “நின்னையின்னம்  எய்தலுற்றிருப்பனே “  என்றார்.

                    இதன்கண், மன முதலிய  கரணங்களால் பண்டு  நின்னை  அடைந்திலேன் என்று  அடிகள் இரங்கிக்  கூறியிருத்தலின்  ,  பல  பிறப்புகளில்  இறை  பணியில்  தலைப்பட்டு  ஒழுகுதலே  அழிவில்  இன்பம்  நுகர்தற்குச்  சாதனம் ஆகும்  என்பது  பெறப்படுதலின் , ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “எந்தையாய  நின்னை  இன்னம்  எய்தலுற்றிருப்பன் “  என்றதனால்  பத்தியும் , “வெந்தையா  விழுந்திலேன்” என்றதனால் , வைராக்கியமும்  அறியப்படுதலின்  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                           **************************************************

பாடல் : 80 .

இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை

ஆண்டு  கொண்ட  நின்னதாட்

கருப்பு  மட்டு  வாய்ம  டுத்தெ

னைக்க  லந்து  போகவும்

நெருப்பும்  உண்டு  யானும்  உண்டி

ருந்த  துண்ட  தாயினும்

விருப்பம்  உண்டு  நின்கண்  என்கண்

என்ப  தென்ன  விச்சையே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் பண்டைப்  பிறப்பில்  தம்  கரணங்கள்  இறை  பணியில்  தலைப்படாமையால்  திருவருட்  பதிவு  பெறாமைக்கு  இரங்கிய  அடிகள், இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  முன்னைத்  தவம்  இல்லாத  நிலையிலும், ஆண்டவன்  கருணை  கூர்ந்து  ஆட்கொண்டு , இன்ப  நிலையில்  இயல்பு  உணர்த்தினமையை அறிந்தும் , அப் பெருமான்  பிரிவைப் பொறுத்து, உயிர்  வாழ்ந்து  இருக்கலானேனே  என்று  இரங்குகின்றார் .

பதவுரை :–  இரும்பு  நெஞ்ச வஞ்சனேனை  =  இரும்பு  போன்ற  வலிய  நெஞ்சத்தை  உடைய  வஞ்சனாகிய  என்னை ,

ஆண்டு  கொண்ட  நின்னதாள்   =  ஆட்கொண்டு  அருளிய  நின்னுடைய  திருவடிகள்,

கரும்பு  மட்டு  வாய்மடுத்து =  கருப்பஞ்சாறு   போன்ற  அருள்  அமுதத்தை  உண்பித்து,

எனைக்  கலந்து  போகவும்  =  என்  உயிரிற்  கலந்து  பிரிந்து  செல்லவும்,

நெருப்பும்  உண்டு  =  தீயும்  உள்ளது ,

யானும்  இருந்தது  உண்டு  =  சிறியேனும்  உயிருடன்  இருந்தது  உண்டு ,

உண்டது  உண்டு  =  நல்ல  உணவுகளை  வயிறார  உண்டதும்  உண்டு ,

ஆயினும்  =  அங்ஙனம்  உண்டு  உயிருடன்  இருந்தும்  ,

நின்கண்  என்கண்  விருப்பும்  உண்டு  என்பது  =  நின்னிடத்து  எனக்கு  அன்பும்  உளது  என்று  கூறுதல் ,

என்ன  விச்சை  =  என்ன  மாய  வித்தையோ?  என்பது .

விளக்கவுரை  :-  அன்பினாற்  குழைந்து, இறைவனை  நினையாமையால் , “இருப்பு  நெஞ்சம்”  எனப்பட்டது. இரும்பு  கரும்பு  என்பன  எதுகை  நோக்கி  வலித்தல்  விகாரம்  பெற்றன .  நெஞ்சம்  குழையாமையால் , அதனாற்  பெறும்  பயன்  இழக்கப்பட்டதாகும்  அன்றித்  தீங்கு  விளைதற்கு  இடன்  இன்றாம் .  “நல்லது  செய்தல்  ஆற்றீராயினும் , அல்லது  செய்தல் ஒப்புமின் “  என்றபடி , இருப்பு  நெஞ்சம்  படைத்த  அவ்வளவில்  நல்லதே ; அம்மட்டில்  அமையாது , வஞ்சித்தலாகிய  தீமை  பயக்கும்  குணமும்  உடையனாயினேன்  என்பார். “இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை”  என்றார் .  நெஞ்சத்திற்  குழைவு  இன்மையால், நன்மையின்மையும் , வஞ்சம்  கலந்தமையால்  , தீமை  உண்மையும்  பெறப்படும்  என்க . அத்தகைய  தீயவன்  என  அடிகள்  தம்மைக்  கூறிக் கொண்டமையாலும்  , அஃது  உணர்ந்தும் , இறைவன் , கருணை  காரணமாகத்  தம்மை  ஆட்கொண்டு  அருளினன்  என்றமையாலும் , ஆண்டான்  அடிமைத்திறத்தில் அடிமை  இயல்பு  பிழைபட்டது  என்றும், ஆண்டான்  இயல்பு  மிகச்  சிறந்தது  என்றும்  குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் .  “நின”  என்புழி.  அகரம்  ஆறாம் வேற்றுமைப்பன்மை  உருபு  ஆகும் ; விரித்தல்  விகாரத்தால்   “நின்ன”  என்று  ஆயிற்று  .தாள் , கலந்து போதற்கு வினை முதலாகும்.

                         மட்டு  –  சாறு.  கருப்பு  மட்டு , அடையடுத்த  உவம  ஆகுபெயராக, நின்று  , அது  போன்ற  இனிமைச் சுவைமிக்க  திருவருள்  அமுதத்தை  உணர்த்துவதாகும்.  உவமம்  உயர்ந்ததாக  இருக்க  வேண்டும்  என்னும்  விதி  பிழைபடுகின்றதே எனின்,  உலகியற்  பொருள்களுள்  இனிமைச்  சுவையிற்  சிறந்தது  ஆதலானும் ,  ஈடும்  எடுப்பும்  இல்லாத  தெய்விகப்  பொருளுக்கு  எடுத்துக்காட்டப்  பிறிதொன்று  இல்லாமையானும் , ஓர்  அளவு  சுவை  இனிமை  ஒப்பு  நோக்கிக்  “கருப்பு  மட்டு” என்றார் . வாய்  மடுத்தல்  –  வாயுட்  கொள்ளல் ; உண்டல் . வாய்  மடுப்பித்து  என்பது , பிறவினை  விகுதி  குன்றி  வாய்மடுத்து  என்று  ஆயிற்று.  நின்தாள்  மடுப்பித்து,  என்னைக்  கலந்து  போகவும்  என்று  ஆம் .  நின்  –  திருவடி  அருள்  அமுதத்தை  உண்ணச்செய்து , என்னைக்  கலந்து  பிரிந்து  செல்லவும்  என்பது  பொருள் . இறைவன்  தாளை  அருட்சத்தி  என்று  ஆகமங்கள்  கூறும் . தாள்  கலத்தலாவது , உயிரிற்  சிவசத்தியாகிய  ஞான  ஒளி விரவுதல்  ஆகும்.  இறைவன் , யான்  தகுதியற்றவன்  என்பதை உணர்ந்தும் , தன்  அருட்குணமாக  என்னை  வலிய  ஆட்கொண்டு  , தன்  அருள்  அமுதத்தைத்  துய்ப்பித்து , தன்  அருள் ஒளியை  என்  உயிரில்  விரவச்  செய்து  நெடிது  நில்லாது  பிரிந்து  செல்லவும் , யான்  உடலைப்  பேணிப்  பொறுத்து  இருக்கின்றேனே  என்பார்  இங்ஙனம்  கூறினர். 

                      இறைவன்  திருவருட்  கலப்பு  ஒருகால்  நேரினும் , பிரியும்  இயல்பினது  அன்று.  அங்ஙனம்  ஆகவும் , பிரிந்து  செல்லவும்  என்றது  என்னை  எனின்  , அடிகளை  ஆட்கொண்டபின் , அவர்  தித்திக்கும்  மணி  வார்த்தைகளை  உலகத்துள்ள  மக்கள்  அறிந்து  இன்புறவேண்டும்  என்று  இறைவன்  திருவுளம்  கொண்டு, அடிகளை  இந்நிலவுலகத்து   இருத்திப்  பிரிந்தனன்  என்பது  வரலாறு  ஆதலின் , அவ்வாறு  கூறியது  என்க .

                      திருவருள்  தோய்வு , அடிகள்  உயிரிற்  கலந்து  பிரிந்திலது   எனினும் , உடனே  ஊனார்  புழுக்கூட்டை  நீத்துத்  தம்  உயிர்  , வீட்டின்பத்தில்  தலைப்படாமல்  இன்னும்  சின்னாள்  அவ்வுடலோடு  கூடியிருக்க  நேர்ந்தது  பற்றிப் பிரிவு  நேர்ந்ததாகக்  கூறிக்கொண்டு  “எனைக்கலந்து  போகவும் “  என்று  கூறுவார்  ஆயினர் .  அரிதிற்  கிடைத்த  திருவடிப்பேறு  பிரிவுற்றது  அறிந்தும், அத்  திருவடிக்கண்   இயைந்து  இன்பம்  நுகரவேண்டிய  தம்  உயிர் , இம் முடையார்  புழுக்கூட்டில்  அகப்பட்டு  வருந்துவதாயிற்றே  என  இரங்கி, அங்ஙனம்  வருந்துதற்கு  ஏதுவக  உள்ள  உடலைத்  தீவாய்ப்படுத்துச்  சுட்டு  ஒழிக்க  வேண்டுவது  யாததாகவும், அங்ஙனம்  செய்யத்  துணிவு  பிறவாமைபற்றிப்  பின் வருமாறு  கூறுகின்றார் : உடலைச்  சுட்டு  ஒழித்தற்கு, “நெருப்பும்  உண்டு”  என்றார்.  நெருப்பிற்பட்டு  விரைவில்  அழிந்து  சாம்பர்  ஆதல்  போல  ஆகாது  என்று  கருதி , நீர்  மூழ்குதல்  முதலியவற்றைக்  கூறார்  ஆயினர் .  எரிப்பதற்கு  நெருப்பு  உளதாதல்  அன்றி , எரிக்கப்படு  பொருளாக  யானும்  உயிர்  வாழ்ந்திருக்கின்றேன்  என்பார், “யானும்  இருந்ததுண்டு” என்றார். தீயில்  வீழ்தற்கு  மனம்  ஒருப்படா விட்டாலும் , உணவு  கோடலை  நிறுத்தி, உடம்பை  உலர்த்தலாமே  எனின் , அதுவும்  செய்திலேன்  என்பார் ,  “உண்டது  உண்டு”  என்றார்.  “யானும் உண்டிருந்தது  “  என்னும்  தொடரை ,  “யானும்  இருந்தது உண்டு  “ எனவும் ,  ஆண்டுள்ள  “உண்டு”  என்னும்  குறிப்பு வினை  முற்றை ,  “உண்டது” என்பதன்  பின்னும்  கூட்டி, “உண்டதுண்டு”  எனவும்  கொள்க.  எரிக்கும்  கருவியும் ,  எரிக்கப்படு  பொருளும்  யாரும்  தடைப்படுத்தாத  நிலையில்  எளியனவாக  இருந்தும் , மனம்  துணியாமையோடு ,  கருவியாகிய  நெருப்பை  உணவு  ஆக்குதற்குச்  சாதனமாகவும்  கொண்டு, நல்ல  உணவுகளை  ஆக்கி,  எரிக்கப்படு பொருளாகிய  உடலை  ஓம்புதற்கு  வயிறார  உண்டேன்  என்பார்,  “உண்டது முண்டு” என்றார் .  “உண்டதும்  “  என்புழி , உம்மை  தொக்கு  நின்றது. 

                    இங்ஙனம் பிரிவு பொறாத நிலையில் , உடலைத்  தீயில்  வீழ்த்தாமலும் ,  உணவினால்  வளர்த்துக்கொண்டு  இருந்தும் , நின்பால்  எனக்கு  அன்பு  உண்டு  என்று  யான்  கூறுதல்  என்ன  வித்தையோ  என்பார், “விருப்பும்  உண்டு  நின்கண்  என்கண் என்பதென்ன  விச்சையோ” என்றார்.  என்கண்  என்புழி , ஏழாம்  வேற்றுமை  உருபை  எனக்கு  என  நான்காவது  ஆக்குக . “நின்கண்  விருப்பும்  உண்டு” என்புழி ,  என்  உடம்பின்  அன்பு  உளதாதலே  யன்றி , நின் கண்ணும்   அன்பு  உண்டு  என்றும்  பொருள்  தரலால்  உம்மை  எச்சப்பொருட்டாம் .  என்பது – என்று  கூறுதல்  .  இதனால் , பேச்சு  அளவில்   அன்றி  , உள்ளத்தில்  மெய்யாக  அன்பு  இல்லை  என்பது  போதரும். உண்மையில்  இல்லாமல் , பேச்சளவில்  உண்டு  என்று  கூறுதல்  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவனை  ஏமாற்ற  முயன்றது  ஆகும்  எனக்கொண்டு, “என்ன  விச்சையே” என்றார்.  விச்சை  –  மாய  வித்தை  ; இல்லதை  உள்ளதாகவும்  ,  உள்ளதை  இல்லதாகவும்  காட்டுதல் .  இவ்விரு திறத்துள், இஃது இல்லதை உள்ளதாகக்  கொண்டு  கூறியதாகும் . என்  அவிச்சை  எனப்  பிரித்துப்  பொருள்  கூறுவாரும்  உளர் .  பாட்டின்  பொருட்  கிடக்கையை நோக்க  ,  அப் பொருள் சிறப்பின்றாதல்  அறிக. 

                     இதன்கண், “நின்ன  தாள்  கருப்புமட்டு  வாய்மடுத்தெனைக்  கலந்து  போகவும் “  என்றதனால், ஆனந்தத்  தழுந்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “இருப்பு  நெஞ்ச  வஞ்சனேனை   யாண்டு  கொண்ட  நின்னதாள்” என்றதனால்  பத்தியும் , “நெருப்பும்  உண்டு  யானும்  உண்டு”  என்றதனால்  உடல்  ஒழிவு  முகமாக  வைராக்கியமும் பெறப்படுதலின்  ,  பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக .                                     

                                       ************************************************

9 .   ஆனந்த   பரவசம்

           னந்தம்   என்பது   மெய்யுணர்வின்  வாயிலாக  இறை  அருளைப்  பற்றி  நின்று,  பக்குவமுதிர்ந்த  உயிர்  நுகரும்  பேரின்பம்  ஆகும் . இதன்  இயல்பு , இதன்  முன்னைப்  பதிகம்  நுதலிய  பொருளாகிய  ஆனந்தத்  தழுந்தல்  என்பதற்கு  எழுதிய  குறிப்பில்  விளக்கப்பட்டுள்ளது .  பொறி  வாயிலாக  நுகரப்படும்  புலன்கள்  ஆகிய  உலகியல்  இன்பத்தை  உவர்ந்து  , மெய்யுணர்வு   கருவியாக  அநுபவிக்கப்படும்  சிவானந்தத்தில்  தோயும்  படி  உயிர்க்கு  ஒரு சிறிது  இடங்கிடைப்பினும்  நழுவவிடாமல்  பற்றிக்கோடற்கு  ஆண்டவனை  வேண்டுதல்  முன்னைப்  பதிகம்  நுதலிய  பொருளாகும்  .  அங்ஙனம்  ஆனந்தத்து   அழுந்தல்  ஆகிய  அநுபவத்தில்  தலைப்படக்  கிடைத்ததும் , அதன்கண்  மேன் மேலும்  ஈடுபட்டுத்  தன்வசம்  அழிதல்  ஆனந்த  பரவசம்  ஆகும் .  பரவசம்  என்பதற்குப்  பிறர்  வயப்படல்  என்பது  பொருள்  ஆயினும்,  ஈண்டுத்  தன்  வசம்  அழிதலே  கருத்து  ஆகும் .  நுகரப்படும்  அழிவில்  இன்பத்திற்கு  நம்  அறிவு  கருவியாகும்  என்று  எண்ணும்  மன  நிலையின்  ஒழிவே  தன்வசம்  அழிதல்  ஆகும் .  அங்ஙனம்  இன்றித்  தன்  அறிவுக்கு  முதன்மை  நினைய  நேருமாயின் ,  யான்  என்னும்  உயிர்  முனைப்பு  முற்பட்டு , இன்பத்  தோய்விற்குப்  புறம்பாக  நேரும்  திருவருளால்  நிகழ்தலை  மறந்து , கருவிகளைக்கொண்டு  நான்  செய்கின்றேன்  என்று  எண்ணும்  உயிர்  முனைப்பு  அறவே  ஒழிதல்  வேண்டும்.  நன்றாக  உறங்குகின்றவன்  ஒருவன்  அவ்வுறக்கநிலையில் , தன்  மெய்யை  மறத்தல் , ஆண்டுத்  தன்  வயம்  இழத்தல்  ஆகும் .  இஃது  அஞ்ஞான  நிலையில்  நிகழ்வது  .  சிவானந்தத்தில்   தன்  வயம்  இழத்தல்  ஞான  நிலையில்  நிகழ்வது.  “தூங்காமல்  தூங்கிச்  சுகப்பெருமான்  நின்  நிறைவில் , நீங்காமல்  நிற்கும்  நிலை  பெறவுங்  காண்பேனோ” என்னும்  அநுபவ  மொழி  ஈண்டு  நினைக்கத்தக்கது.   உலகத்தில்  மக்கள்  பகல்முழுதும்   வேலை  செய்து  உழைத்து , அவ்வுழைப்பினால்  ஏற்படும்  இளைப்பை  ஒழித்தற்கு , இரவில்  கருவி  கரணங்கள்  எல்லாம்  அறிவு இன்றி  ஒடுங்கிய  நிலையில்  தூங்கி, அதனால்  உடலுக்கு  உறுதி  பெறுவர்  . இவ்வுலகியலைக்கடந்து , திருவருளில்  தலைப்படுவோர்  பற்பல  பிறப்புகளிலும்  ஏற்பட்ட  இளைப்பு  ஒழியப்  பெற்றுக்  கருவி  கரணங்கள்  எல்லாம்  அறிவோடு  ஒடுங்கிய  நிலையில்  அமைதி  பெற்றுப்  பேரின்பத்தில்  தலைப்பட்டுத்  தம்  உயிர்க்கு   உறுதி  பெறுவர் .  உலகியலில் மக்கள் , உறக்கம்  நீங்கி  விழிப்பு  ஏற்பட்டதும் , வினையெச்சம்  இருத்தலான் , மீண்டும்  உண்டு , உடுத்து , வாழ்தற்கு  உரிய  வேலையில்  தலைப்படுவர்  .  திருவருளில்  தோயப்  பெறுவோர் , வினையெச்சம்  இன்மையால், மீண்டு  பிறத்தலன்றி  , உலப்பிலா  இன்ப நுகர்ச்சியுடையராய்  அழிவில்லாத  வாழ்க்கையில்  தலைப்படுவர் . இதுவே  தூங்காமல்  தூங்கி  எய்தும்  சுகப்பேறு   ஆகும்  என்க .  இந்நிலையில்  “சிந்தனை  போய்  நான்  எனல்  போய்த்  தேக்க  இன்ப  மாமழையை , வந்து  பொழிந்தனை” என்றபடி , உயிர் , கருவி , கரணங்களின்  சார்பு  உண்மை  குறியாது . அவ்வின்பத்தில்  தன்  வசம்  இழந்து  தோய்தல்  வேண்டும்  என்பதும்,  எக்காரணத்தாலும் அந்நிலையினின்றும்  நழுவுதல்  கூடாது  என்பதும்  இப்பதிகம்  நுதலிய  பொருள்  ஆகும் . ஆனந்தத்  தழுந்தலின் பின்  உண்டாவது   பரவச  நிலையாதலின் , இஃது  அதன்பின்  வைக்கப்பட்டது .  இதனால் , பதிக  இயைபு  உண்மை  புலன்  ஆதலும்  அறிக .

கலிநிலைத்துறை

பாடல் :  81 .

விச்சுக்  கேடுபொய்க்  காக  தென்றிங்

கெனைவைத்தாய்

இச்சைக்  கானார்  எல்லாரும்  வந்துன்

தாள்சேர்ந்தார்

அச்சத்  தாலே  ஆழ்ந்திடு  கின்றேன்

ஆரூரெம்

பிச்சைத்  தேவா  என்னான்  செய்கேன்

பேசாயே.

கருத்துரை :-    முன்னைப் பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில்  ஆண்டவன்  கருணை  கூர்ந்து  ஆட்கொண்ட உதவியை  அறிந்தும் அப்பெருமான்  பிரிவைப்  பொறுத்து  உயிர் வாழ்ந்திருக்கலானேன் என்று  இரங்கிய  அடிகள்,  அங்ஙனம்  உயிர்  வாழ்ந்திருந்தாலும்  ஆண்டவன்  திருவுள்ளக்  குறிப்பின்  வழியென்பதும் , அதற்குக்  காரணமாகத்  தாம்  கருதியதும்  இத்  திருப்பாட்டில் அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-   ஆரூர்  எம்  பிச்சைத்  தேவா   =   திருவாரூரில்  எழுந்தருளி  இருக்கும்  ஐயம்  ஏற்கும்  திருவுருக்  கொண்ட  எங்கள்  தெய்வமே ,

பொய்க்கு  விச்சுக் கேடு  ஆகாது என்று  இங்கு  என்னை  வைத்தாய்  = பொய்மைக்கு  வித்து  அழிவு   நேர்தல்  கூடாது  என்று  இவ்வுலகவாழ்க்கையில்  அடியேனை  இருத்தினாய் ,

இச்சைக்கு  ஆனார்  எல்லோரும்  =  அன்புடன்  செய்யும்  தொண்டிற்கு  உரியராயினார்  அனைவரும்,

வந்து  உன்தாள்  சேர்ந்தார்  =  நின்பால்  வந்து  நின்  திருவடி  நிழலை  எய்தினர் ,

அச்சத்தால்  ஆழ்ந்திடுகின்றேன்  –  பிறப்புப்பற்றிய  அச்சம்  காரணமாக  வருந்துகின்றேன் ,

நான்  என்  செய்கேன்  =  யான்  என்ன  செய்வேன்? 

பேசாய்  =  சொல்லி  அருள்வாயாக என்பது.

விளக்கவுர  :-  திருவாரூர்த்  திருத்  தலம் , நில மடந்தையின்  நெஞ்சத்தாமரை   மலர்  ஆகும்.  “மேதினிக்  காதன்மங்கையிதய  கமலமாம் , மாதொர்  பாகனார்  ஆரூர்  மலர்ந்ததால்”  என்பர்  சேக்கிழார் .  அண்டத்தில்  உள்ளபடியே  பிண்டத்திலும்  ஆம்  என்பராதலின் , இஃது  உயிர்களின்  இதய  கமலத்தையும்  குறிப்பின்  உணர்த்துவது  ஆகும். ஆண்டுத்  திருக்கோயில்  கொண்டு  எழுந்தருளியிருக்கும்  இறைவன்  திருப்பெயர்  தியாகராசன்  என்பதாம் . புறத்தே  திருவாரூர்த்  திருக்கோயிலின்  கண்ணும் ,  அகத்தே  உயிர்களின்  நெஞ்சத்தின்  கண்ணும்  வீற்றிருந்து  உயிர்களுக்கு  வேண்டுவன  வழங்கும்  பெரு  வள்ளல்  ஆவான் என்பதை  அத்  திருநாமம்  உணர்த்தும் . தன்  இடத்தில்  இரப்போர்க்கு  எல்லாம்  தன்  அருள்  அமுதைக்  குறைவற  வழங்கும்  அவ்வள்ளற்   பெருமானை , “பிச்சைத் தேவா”  என்றார் ; அருட் கொடையால்  அன்பரை  இன்புறுத்தல்  போல, அவர்  அன்பை  ஏற்றும்  இன்புறுதல்  பற்றி , உலகியலில்  ஓர்  அரசன்  குடி  மக்களுக்குப்  பாதுகாப்பு  அளித்து , அவர்  இடத்தினின்றும்  இறைபொருள்  பெறுதல் போல , ஆண்டவனும்  தன்  அருள்  அமுதை  மெய்யன்பர்க்கு  வழங்கி , அவர்  அன்பை  ஏற்றுக்கொள்ளும்  இயல்பு  உடையவனாவன்.ஆனால்,அரசன் இறைப்பொருள் பெறுதல்  தன்  நலங்குறித்தாம் .  இறைவன், அன்பர்  அன்பைப்  பெறுதல்  அவர்  நலங்குறித்தாம் . இதனால், ஈதலும் ஏற்றலும்  இறைவனுக்கு  உள்ளன  என்பது அறியப்படும் . ஆரூர்  என்றமையால் , தியாகராசனாக  ஈதலும் , பிச்சைத் தேவா   என்றமையால் ஏற்றலும்  பெறப்பட்டவாறு   அறிக. உலகத்தில்  ஒரு  பயிர்  தோன்றி  வளர்தற்கு  நல்ல  வித்தை  ஆராய்ந்து , அதனை  பதுகாத்துப் பேணி  வைப்பது போல, பொய்மையாகிய  பயிர்  தோன்றிச்  செழித்துப்  பயன்  செய்தற்கு  வித்தாக  ஊன் உடம்பில்  என்னை  இருத்தி  வைத்தாய்  என்பார் , “விச்சுக் கேடு பொய்க்காக தென்றிங்கெனை  வைத்தாய்”  என்றார் . ஆகவே  உலகத்துள்ள  பொய்மை  எல்லாவற்றிற்கும்  மூலம் தாமே என்றபடியாம் . ஆண்டவன், மற்றை  அன்பர்கள்  எல்லோர்க்கும்  தன் திருவடிச் சார்பை  நல்கி, அடிகளை  ஊன்  உடலில் இருக்கச்செய்தற்கு , அடிகள்  கருதிய  காரணம்  இதுவாம் என்க . இச்சை  என்பது ஆகுபெயராக நின்று, அன்புடன் செய்யும்  தொண்டை உணர்த்துவது ஆகும்.  “எனை நினைந்தாட் கொண்டாய்க்கு என்னினியான் செயும்  இச்சைகளே “ என்பது தமிழ்மறை . ஆதல் – உரியர் ஆதல்.;  அத்தொண்டிற்குரிய  மெய்யன்பர் என்பது கருத்து. இங்ஙனம்  அன்றி, இச்சைக்கானார்  என்பதற்கு , ஆண்டவன்  விருப்பத்திற்கு  உரியர்  என்று பொருள் கொள்ளுவாரும் உளர் . மற்றை அடியார்கள் எல்லோரும் ஆண்டவனை அடைதற்குத்  தகுதி  உடையர்  ஆயினார் என்பதும் , தமக்கு அத்தகுதி இலதாயிற்று  என்பதுமே  அடிகள்  கருத்து ஆதலானும், இப்பதிகத்து  மூன்றாம்  திருப்பாட்டில் , இங்ஙனமே , “ஆடியாரானார் எல்லாரும் வந்துன்தாள்  சேர்ந்தார் “ என்று  தொண்டு  பற்றியே கூறியிருந்தலானும் , அவ்வுரை  பொருந்தாது என்க.

                   இறைவன்  ஞானாசிரியனாக எழுந்தருளி  இருக்குங்கால் , அவன்  அருகிற்  சூழ்ந்து இருந்த  அடியார்  அனைவரும் அப் பெருமானோடு  மறைந்து  அருளினமையை  நேரிற்  கண்டவர்  ஆதலின் , “இச்சைக்கானாரெல்லாரும்  வந்துன்  தாள் சேர்ந்தார் “  என்றார் . வந்து சேர்தல்  –  இறைவனோடு  வெளிப்பட்டு  வந்து  அடைதல் .  தொண்டராகக்  காணப்பட்டமையால் , “இச்சைக்கானார்” எனவும் , வெளிப்பட்டு வந்தமையால், “வந்து” எனவும் , கண்கூடாக  மறைந்தமையால் , “உன்றாள்  சேர்ந்தார்” எனவும்  கூறியருளினர். “தொண்டர் எல்லாம்”நின்  திருவடி இன்பம் எய்த , ஆண்டவனே , என்னை மாத்திரம் ஈங்கு இருக்கப்பணித்தது , பொய்க்கு  வித்துக்கேடு  உண்டாதல் ஆகாது என்பது திருவுள்ளம் ஆயின் , யான் என் செய்வேன் ? பொய்மை நீங்கி  மெய்யன்பு  உடையனாகி  நின் அருட்கு இடனாகும் காலம் என்றோ?  அக்காலம் வரை , பிறந்து , இறந்து துன்பம் உறுவேங்கொல்” என்று அடிகள் நினைந்து, பிறவித்துன்பத்திற்கு அஞ்சுவாராய் , “அச்சத்தாலே யாழ்ந்திடுகின்றேன் “ என்றார் .  ஆழ்தல்  –  வருந்துதல்; அழுந்துதலும் ஆம்.  அச்சம் காரணமாக  வருந்துகின்றேன் எனவும் , அச்சத்தில் அழுந்துகின்றேன் எனவும் கூறலாம். பின்னதற்கு மூன்றனுருபை  ஏழாவதாகக் கொள்ளல் வேண்டும் . இத் துன்பநிலையில் யான் செய்யத்தக்கது இன்னது என்று எனக்குத்  தோன்றவில்லை ; நீயே  திருவுளம் பற்றி அருளல் வேண்டும் என்பார், “என் நான் செய்கேன் பேசாயே” என்றார். கருவிகளை  இயக்குவோனும் , பயன்  விளைப்பவனும்  இறைவன்  ஆதலின் , வீட்டின்பப்பேறு  குறித்து மேற்கொள்ளவேண்டிய  சாதனங்கள் இன்னவெனத்  தெரிந்து கொள்வதற்கும் இறைவனையே  வினவுவார் ஆயினர்.

                     இதன்கண், “மெய்த்தொண்டர் எல்லாம் நின் திருவடி சார்ந்து  ஆனந்த பரவச நிலை எய்தினாராக , என்னைப் பொய்மைக்கு மூலமாக ஈங்கு இருத்தினாய்; என் செய்வல்” என்று அடிகள் கூறியிருத்தலான்,அப் பரவச நிலை  தமக்கும் எய்த வேண்டும் என்பது  பெறப்படுதலின், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பிச்சைத் தேவா என்னான்  செய்கேன் “ என்றதனாற்  பத்தியும் ,பொய்க்கு மூலமாக வைக்கப்பட்டேன் என்றதனால் வைராக்கியமும்  பெறப்படுதலின் ,பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல்  அறிக.

                                         *******************************************

பாடல் : 82.

பேசப்பட்டேன்  நின்னடி  யாரில்

திருநீறே

பூசப்பட்டேன்  பூதல  ரால்  உன்

அடியானென்

றேசப்பட்டென்  இனிப்படு  கின்ற

தமையாதல்

ஆசைப்பட்டேன்  ஆட்பட்  டேன்உன்

அடியேனே.

கருத்துரை :-    ஆண்டவன் பிரிந்த நிலையில், அப் பிரிவைப் பொறுத்துத்  தாம் உடலோடு கூடி வாழ்ந்திருத்தற்குக்  காரணம் . பொய்க்கு  வித்துக்கேடு உண்டாகாமைப் பொருட்டு, அப் பெருமான்  தம்மை  வைத்ததாகும் என்று  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள்,அங்ஙனம்  பொய்க்கு  மூலமாக வைக்கப்பட்டேனாயினும் , அடியாராலும் உலகத்தவராலும் சிவனடியாருள்  ஒருவனாக எண்ணப்பட்டமையால் , அவ் எண்ணத்தின்  பயனாக வீட்டின்பத்தில் தலைப்பட விரும்பலானேன் என்று  இத்  திருப்பாட்டில் அருளிச்செய்கின்றார்.

பதவுரை :-  நின்  அடியாரில்  பேசப்பட்டேன்  =  உன்  மெய்யடியாருள் ஒருவனாக  வைத்து மெய்யன்பராற் பாராட்டிப் பேசப்பட்டேன் ,

திருநீறு  பூசப்பட்டேன்  = ஞானாசிரியனாக  எழுந்தருளிய நின்னால் திருநீறு  பூசப்பட்டேன் ,

பூதலரால் உன்  அடியான்  என்று  ஏசப்பட்டேன் =  உலகத்தவரால்  உன்  அடியவன்  என்று  இகழப்பட்டேன் ,

இனிப்படுகின்றது  அமையாது  = இனித்  துன்பப்படுதல்  பொருந்தாது ,

ஆசைப்பட்டேன்  =  வீட்டின்பப்பேறு  குறித்து அவாவுடையேன் ,

உன் அடியேன்  ஆட்பட்டேன்  =  உன்  அடியவனாக  ஆளாயினேன்  என்பது.

விளக்கவுரை :-   பேசப்படுதல்  –  பராட்டிப்பேசப்படுதல் , பின்னர்ப்  பூதலரால்  என்றதனால் , ஈண்டு  மெய்யன்பரால் என்பதும் , ஏசப்பட்டேன்  என்றதனால் , பாராட்டப்பட்டேன்  என்பதும் பெறப்படும். இம்மை  மறுமைகட்கு  உரிய  புகழ், பொருள், அற முதலியவற்றால்  பெரியார்  எனப் பிறர்  பாராட்டுதல் அடிகளுக்கு உவந்தது அன்று என்பதும், சிவனடியாருள் ஒருவர் என்று பேசப்படுதலும் , அப் பேச்சும் உலகத்து உள்ள அரசர் , செல்வர் முதலியோரால் அன்றி, மெய்யன்பராற்  கூறப்படுதலுமே அடிகளுக்கு உவப்பு  ஆவன என்பதும் குறிப்பிற் பெறப்படுவனவாம் . விருப்பு  வெறுப்பு அற்ற  நிலையில் , ஒன்றை  உவத்தலும் , ஒன்றை  வெறுத்தலும் பொருந்துமோ , எனின் , உலகியற் பொருள்களுள்  நல்லன  தீயன குறித்து, உண்டாம் விருப்பு வெறுப்புகளைப் பற்றியது அதுவாகலின் , ஈண்டு  கருதத்தக்கதன்று . ஆண்டவன் அருட்கு இடன் ஆதலின் அடிகளுக்கு உண்டாம் மகிழ்ச்சியை ,  “பூமேலயனொடு  மாலும் புகலரிதென் றேமாறி நிற்க அடியேன் இறுமாக்க” என்பது முதலியவற்றான் அறியலாம்.

                      ஆண்டவன் குருந்த மரத்து நீழலில்  ஞானாசிரியனாக  எழுந்தருளி அடிகளை ஆட்கொள்ளுங்கால் , திருநீற்றால் அவர் உடலையும் , அருள் நோக்கால் அவர் உயிரையும் , பாசப் பிணிப்பு  ஒழித்துத்  தூய்மைப்படுத்தினன்  ஆதலின், “திருநீறே பூசப்பட்டேன் “ என்றார் . திருநீற்றுப் பூச்சை அங்கியிற் குளித்தல் என்று சிவாகமங்கள்  கூறும் .

                        பூதலர்  என்பது, ஈண்டு  நில வுலகத்துள்ள  திருவருட் பண்பு அறியாதாரைக் குறிக்கும் . அடிகள் அரசியலில் அமைச்சராக இருந்து ,சிறப்பு  எய்தியதை விட்டுச் சிவனடியாராய் ஒடுங்கி இருத்தலைக் கண்டு, அவர் எள்ளி நகையாடியதை அடிகள் காட்சியளவையிற் கண்டவர் ஆதலின் , “பூதலராலுன்  அடியானென்று  ஏசப்பட்டேன் “என்றார். இறைவனை முன்னிலைப்படுத்து , “உன் அடியான் என்று ஏசப்பட்டேன் “ என்றது.  தம்மைப்  பாதுகாக்கும்  உரிமைப் பொறுப்பு அவ் விரைவனுக்கு  மிகுதற்பொருட்டாம் என்க. இங்ஙனம் சிவனுக்கு அடியேன் ஆயினான் என்று பிறர் இகழ்ந்து உரைத்தது,அடிகளுக்கு அப் பெருமானது அரிய சார்பை வலியுறச்செய்து மகிழ்வித்தது என்பதை, “நாடவர் பழித்துரை பூணதுவாக “ என்னும் அடிகள் திருவாக்கானும் உணரலாம் . உலகத்தவர் இகழ்ந்து உரைத்ததை வெளிப்படக்கூறி , மெய்யன்பர் பாராட்டுரையைக் குறிப்பிற் பெறவைத்தது, அடிகளின் பெருமையைப் புலப்படுத்துவதாகும் . மேலும் இக்கருத்தானே , “ஏசப்பட்டேன்”  என்பதற்கு வினை முதலாகப்  “பூதலரால்” என்று வெளிப்படக் கூறியபடி , “பேசப்பட்டேன்” என்பதற்கும் , “பூசப்பட்டேன்”  என்பதற்கும் முறையே வினை முதல்களாகிய  “மெய்யன்பரால்” என்பதும் , “நின்னால்” என்பதும் வெளிப்படக் கூறாது ஒழிந்தமையும் கண்டு நினைக்கத்தக்கது . திருவருள் நாட்டம் உடைய பெரியார் , தம்மைப் பிறர் கூறும் பாராட்டுரைகளைத் தம் நாவினால் அநுபவதித்துக்  கூற ஒருப்பட்டார் என்பதும், தம்மைப் பிறர் பழித்து உரைத்தலை அணிகலனாக  ஏற்றுக் கொள்வர்  என்பதும் , தம்மைப் பிறரிடம் அறிவிக்க நேர்ந்த இடத்துச்  சிறுமை தோன்றக்  கூறுவர் என்பதும், திருத்தொண்டர் புராண முதலிய மெய்யன்பர் வரலாற்று நிகழ்ச்சிகளில் வைத்து அறியப்படுவனவாம் .

                        இத் திருப்பாட்டில், அடிகள் தாம் பெற்ற பேறுகளாகக் குறிப்பிட்டவை மூன்று.  திருநீற்றினால் தூய்மை பெற்றதும் , மெய்யன்பரால் சிவனடியாருள்  ஒருவராகப்  பேசப்பட்டதும் , உலகத்தாரால் சிவனடியான் என  ஏசப்பட்டதும்  ஆம். இவற்றுள் , உலகத்தவர் வெறுப்பு இன்றேல் , ஒரோவழி உலகப் பற்றிற்கு  ஆளாகவும்  நேரலாம் . ஆதலின் , அதுவும் அடிகளுக்கு உவப்புச் செய்யும் பேறுகளில்  ஒன்று ஆயிற்று என்க. படுகின்றது என்பது  தொழிற்பெயர் அளவில் நின்றது. படுதல் – துன்பப்படுதல் , ஆண்டவனாலும் அவன் அடியாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு , உலகத்தவரால் வெறுக்கப் பட்டபடியால் , இனிப் பிறப்பு இறப்புக்களிற்பட்டுத்  துன்பம் உறுதல் பொருந்தாது என்பார், “இனிப்படுகின்ற தமையாது”என்றும், மேற்குறிப்பிட்ட ஆதரவுகளைக் கருவியாகக் கொண்டு வீடு பெற விரும்புகின்றேன்  என்பார், “ஆசைப்பட்டேன்”  என்றும் கூறியருளினர்.

                    முடிவாக , ஆண்டவனே , பொய்க்கு  மூலமாக என்னை இருத்தினாய் ஆயினும் , வேறு புகல் இல்லாமையால் , நின்னையே  புகலிடமாக அடைந்து , மீளா அடிமையாக உனக்கே ஆளாயினேன் ; என்னை  நின் கருணை காரணமாக  ஏற்றுக்  காத்து  அருள வேண்டும்  என்பார், “உன் அடியேன் ஆட்பட்டேன் “ என்றார் . இனி, “ஆட்பட்டேன் உன்னடியேனே” என்பதற்கு , ஆளாயினேன் ; எவ்வாற்றானும் உன் அடியவனே , வேற அல்லேன் என்று கூறுதலுமாம் . இப்பொருட்கு  ஏகாரத்தைத் தேற்றப் பொருளாகக் கொள்ளல் வேண்டும் .

                        இதன்கண், “ஆசைப்பட்டேன்” என்று இன்ப நிலையில் தன் வயம் இழந்து கூறியதால், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “பேசப்பட்டேன்” , “பூசப்பட்டேன்” என்றமையால் பத்தியும் , “ஏசப்பட்டேன்” என்றமையால் , வைராக்கியமும் பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                       *******************************************

பாடல் :83

அடியேன்  அல்லேன்  கொல்லோ  தானெனை

ஆட்கொண்  டிலை கொல்லோ

அடியார்  ஆனார் எல்லாரும்

வந்துன் தாள்சேர்ந்தார்

செடிசேர் உடலம்  இது நீக்க

மாட்டேன் எங்கள்  சிவலோகா

கடியேன்  உன்னைக்  கண்ணாரக்

காணுமாறு  காணேனே .

கருத்துரை :-  ஆண்டவனை  நோக்கி வீட்டின்பத்திற்கு ஆசைப்படலானேன் என்று  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள் ,இத் திருப்பாட்டில் அடியார் எல்லாரும் நின் திருவடி அடைய என் அவா நிறைவேறாமல் இருந்ததற்குக் காரணம் என் அடிமைப் பிழைப்பா?  அன்றி  நீ ஆட்கொள்ளவில்லைய என்றும், நின்னைக் கண்குளிர  மீண்டுங் காணும் நெறி அறியாமல் இருக்கின்றேனே என்றும் இரங்குகின்றார்.

பதவுரை :-  எங்கள் சிவலோகா  =  எங்கள்  சிவலோகநாதனே ,

அடியார்  ஆனார்  எல்லாரும்  வந்து  உன்  தாள் சேர்ந்தார்  = 

மெய்யடியார் ஆயினார் அனைவரும்  நின்னை அணுகி நின் திருவடி நிழலை அடந்தனர் ,

கடியேன்  =  கடியவனாகிய  யான் ,

செடி சேர் உடலம் இது நீக்கமாட்டேன்  =  துன்பம் தரும் ஊனிடலாகிய  இதனை ஒழிக்கவு மாட்டேன் ,

உன்னைக் கண் ஆரக் காணும் ஆறும் காணேன்  =  இன்பம் தரும் நின்னைக் கண் நிறையக் காணும் நெறியையும் அறிந்திலேன் , ( இந் நிகழ்ச்சியை நினையுங்கால்)  யான்  தான்  அடியேன் அல்லேனோ ,

தான் எனை ஆட்கொண்டிலை கொல்லோ  =  நீ தான்  என்னை  ஆட்கொண்டதில்லையோ ? (இன்னதன்று அறிந்திலேன்)  என்பது.

விளக்கவுரை :-  மெய்யன்பரின் அழிவில் வாழ்க்கைப் பொருட்டு ஆண்டவன் சிவலோக ஆட்சியைக் சிறப்புரிமையாகக் கொண்டவன் என்பார், “ எங்கள் சிவலோகா” என்றார் . பின்னர், வந்துன்றாள் சேர்ந்தார்” என்புழி, வருவதற்குச் சிவலோகம் இடனாதல் பற்றியுமாம். என்க . அடியாரானார் என்புழி , ஆக்கச் சொல் , சரியை  முதலிய தவங்களால் ஆண்டவன் அருள் பெறுதற்கு உரிய தகுதி படைத்தவர் என்பதைக் குறிக்கும் . எல்லாரும் என்றதனால் , தம்மைப் போலத் தனிமைப்பட்டார் பிறர் யாரும் இலர் என்பதைப் புலப்படுத்தவாறாம். வந்து சேர்ந்தார் என்பதில் , வருதல் சாலோக முதலிய பத முத்திகளையும் , சேர்தல் இரண்டறக்கலத்தலையும்  புலப்படுப்பனவாம் .

                             கடியேன் – கடுமையான இயல்புடையேன் ; நெஞ்சம் குழையாதவன் என்னும் பொருட்டு . “கள்வன் கடியன் கலதி” என்று பிறிதோரிடத்தும் அடிகள் தம்மை இங்ஙனம் கூறியிருத்தல் அறிக.

செடி – பாவமும் அதன் பயனாகிய துன்பமுமாம் .  இது என்பது ,இறைவன் திருவடிப் பேற்றிற்குத் தடையாகவுள்ளது என்னும் பொருட்டு. தடையாக  உள்ள பாவயாக்கையை ஒழித்தற்கு உரிய உபாயமும் அறிந்திலேன் என்பது கருத்து. யாக்கையை ஒழித்தற்குத் துணிந்திலேன் ஆயினும் , அதனோடு  கூடிய நிலையில் முன் ஞானாசிரியனாக எழுந்தருளிக் காட்சியளித்த திருக்கோலத்தை மீண்டும்  கண் நிறையக் காண்டற்கு உரிய நெறியையும்  அறிந்திலேன் என்பார் , “உன்னைக் கண்ணாரக் காணும் ஆறு காணேன்”

 என்றார் .   ஆர்தல்  –  நிறைதல் , நீக்கவும் காணுமாறும்  என்னும்  இடங்களில் , உம்மைகள் தொக்கு நின்றன . இனி, “ கண்ணாரக் காணுமாறு  உன்னைக் காணேன் “ எனக் கொண்டு , ஆண்டவனே , நின் அருள் நிறைந்த திருவிழிகளால் அடியேனைக்  கடைக்கணிக்குமாறு  யான் தரிசித்திலேன் எனக்  கோடலுமாம். “தொண்டனேன் நினையுமா நினையே” என்றபடி , மெய்யன்பர் காண்டற்கு இறையருள்நோக்கம் முதற்கண் நிகழவேண்டும் என்பதும், அவ்வருள் நோக்கம் பெறுதற்கு உரிய தவத்தை உயிர்கள் மேற்கொள்ளவேண்டும் என்பதும் கருத்து. நீ என்னைக் காணும்படி யான் உன்னைக் காணேன் என்றது, நின் அருட் பார்வைக்கு இலக்காதற்கூரிய தவஞ் செய்திலேன் என்பது பற்றியாம் . இக் கருத்திற்கு ஏற்ப , அத்தொடற்குப் பொருள் கொள்ளுங்கால் , கண்  ஆர  என்பதற்குக் கண்ணோட்டம் பொருந்த எனவும்,  காணுமாறு என்பதற்கு , நீ என்னைக் காணும்படி எனவும் பொருள் கொள்ளல் வேண்டும் .

                       இத் திருப்பாட்டின்  திரண்ட கருத்தாவது  : ஆண்டவனே நின் அடியாராகிய மெய்யன்பர் அனைவரும் நின்னுடன் சிவலோகம் வந்து , நின் திருவடியில் இயைந்து இன்புறுகின்றனர் . கொடியவனாகிய யான் அங்ஙனம் வந்து எய்தும் பேறு இல்லாமையோடு , பாவப்பயனாகிய துன்பம் தரும்  இவ்வுடற்  சுமையையும் ஒழிக்கமாட்டேன் ஆயினேன் . மேலும்  இவ்வுடலைப் பற்றி நின்ற  நிலையிலாவது  நின்னைக்  கண்கள் குளிரக் காணும் பேறாவது பெற்றேனோ  எனின் , அதுவும் இன்று . இந் நிகழ்ச்சிகளையெல்லாம் நன்கு சூழ்ந்து நோக்குங்கால் , யான் தான் நினக்கு அடியனாயது உண்மையில்லையோ ? அன்றி நீதான் என்னை ஆட்கொண்டிலையோ ? இன்னது என்று துணிந்திலேன் , என் செய்வேன் என்பதாம் . இக்குறிப்பு தோன்றவே ,

கனவில் வருங் காட்சி யெனக் கருணை மூர்த்தி

காட்டி மறைத்தலும் அன்பர் கலக்கத் தாழ்ந்து

நனவு  கொல்லோ கனவு கொல்லோ

என்று அடிகள் எண்ணுவாராயினர் என்பர் பரஞ்சோதி  முனிவர் , உலகியலில் ஒரு செல்வனை நோக்கிப் பரிசு பெறாத  புலவன் வருந்திப் பாடுங்கால் , “யான் பரிசு பெறாமைக்குக் காரணம்  என்பால் புலமைத் தகுதி யில்லாமையோ? அன்றி நின்பால் என்னை ஆதரிக்கும் தகுதி இல்லாமையோ? என்று கூறலாம் . ஆண்டவனை நோக்கி , அருள் பெறாத நிலயில் , ஓர் அன்பன் அங்ஙனம் பாடுங்கால் , நின் அருள் பெறாமைக்குக் காரணம் என்பால் தொண்டன் ஆம் தன்மை இல்லாமையா  என்று கூறலாம் . நின்பால் என்னை ஆட்கொள்ளும் தகுதி இல்லையா என்று கூறுதல் கடவுட் பெருமைக்குப்  பொருந்துவது அன்று. அதனாலே, அடிகள் யான் உண்மை அடியேன் அல்லேனோ ? அன்றி நீ என்னை ஆட்கொண்டிலையோ? என்று இறைவன் பெருமைக்குச் சிறிதும் குறை நேராவாறு  கூறியருளிய நயம் நினைந்து இன்புறத்தக்கது .

            இதன்கண், “அடியாரானாரெல்லாரும் வந்துன்றாள் சேர்ந்தார்” என்றதனால் , அவர் எய்திய ஆனந்தம்  எனக்கு இலையே என்று கூறப்புகுந்த அடிகள், தம்மை  “ஆடியேனல்லேன் கொல்லோ” எனவும், இறைவனை நோக்கி, “ஆட்கொண்டிலை கொல்லோ “ எனவும் தன்வயம் இழந்து கூறியிருத்தலின் , ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                                       *******************************

பாடல்: 84 .

காணு  மாறு  காணேன்  உன்னை

அந்நாட்  கண்டேனும்

பாணே  பேசி யென்றன்னைப்

படுத்ததென்ன  பரஞ்சோதி

ஆணே  பெண்ணே ஆரமுதே

அத்தாசெத்தே   போயினேன்

ஏணாண்  இல்லா  நாயினேன்

என்கொண்  டெழுகேன் எம்மானே.

கருத்துரை :-    முன்னைத் திருப்பாட்டில் , மற்றை அடியாரைப் போல ஆண்டவன்  திருவடியை அடையப் பெறாமைக்குக்  காரணம் ,யான் தான் உண்மை அடியேன் அல்லேனோ , அன்றி நீதான் ஆட்கொள்ளவில்லையோ என்று கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் ,நீ என்னை அடிமை கொண்டது  உண்மையாயினும் , அந்நாளில் யான் நின்னைப் புகழ்ந்து பாராட்டியவெல்லாம் இச்சகப்பேச்சாக  முடிந்து , பயன் விளைவிக்கவில்லை போலும் ; அங்ஙனமாயின் எங்ஙனம் உய்வேன் என்று இரங்குகின்றார் .

பதவுரை :-   பரம் சோதி  ஆணே  பெண்ணெ  ஆர் அமுதே  அத்தா  எம்மானே  =  மேலான ஒளிப்பிழம்பாக  வுள்ளவனே  ஆணாகவும் பெண்ணாகவும்  நிறைந்த  அமுதமாகவும்  உள்ளவனே,  தந்தையே  எங்கள் தலைவனே ,

காணும் ஆறு  காணேன்  =  இப்பொழுது உன்னைக் காணும்  நெறியறியாதவனாகிய  யான் ,

உன்னை அந்நாள்  கண்டெனும்  =  நின்னை அக்காலத்திற்  கண்டு  வைத்தும் ,

பாணே  பேசி  என்  தன்னைப் படுத்தது என்ன  =  இச் சகமே பேசி எனக்கு யான் , செய்து கொண்ட நலம் யாது ,

ஏண்  நாண் இல்லா நாயினேன் =  ஆற்றலும்  நாணமும் இல்லாத  நாயனையேன் ,

செத்தே போயினேன்  =  பயனின்றி இறந்துபோம் நிலயிலுள்ளேன் ,

என் கொண்டு எழுகேன்  =  இனி, எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு உய்யக் கடவேன் ?  என்பது.

விளக்கவுரை :-  இத் திருப்பாட்டில் இறவனைப்பற்றி  விளியேற்ற   பெயர்கள் ஆறு  ஆகும் . இறைவன் எங்கும் நிறை பொருளாகவுள்ள  இயல்பை குறிக்கொண்டு , “பரஞ்சோதி “ என்றார் . அவயப்பகுப்பு  இல்லாத அருவ நிலையில்  ஒளிப்பிழம்பாகப் பொரியோர் கூறுவர் . “ஒளி வளர் விளக்கே உலப்பிலா வொன்றே “ எனத்  திருவிசைப்பாவும் , “கற்பனை கடந்த சோதி கருணையே  யுருவமாகி “ எனத் திருத்தொண்டர் புராணமும் கூறுதல் அறிக. பூதங்களுள் ஒன்றாகிய தீயின்  ஒளியை விலக்குதற்குப் “பரம்” என்ற அடை புணர்க்கப்பட்ட தென்க.

                         எப்பொருட்கும்  அப்பாலாய்த்  தத்துவங் கடந்த நிலையில்  அருவமாகவுள்ள பரம்பொருளாகிய இறைவன் உயிர்களின் நலங்குறித்துத்  திருவுருக் கொண்டு வெளிப்படுங்கால் , ஆண் வுருவாகப்  பெண்ணுருவாக அவ்விரண்டும் இயைந்த உருவாகக் காட்சியளிப்பன் என்பது குறித்து ,”ஆணே பெண்ணே “ என்றார். ஆணும் பெண்ணும்  இயைந்த வடிவமாகிய உமையொரு கூறன் என்பதை , “ஆணே  பெண்ணே “ என்பதனை இரட்டித்துக் கூறுமுகமாக  அமைத்துக் கொள்ளல் வேண்டும் . இங்ஙனம்  காட்சியளித்து  ஆட்கொள்ளப்பட்ட  மெய்யன்பர்க்கு உலப்பிலா இன்பம்  அளிக்கும் இயல்பு பற்றி , “ஆரமுதே” என்றார்.

                          இறைவனுடைய அருவம் , உருவம் , அருவுருவம் என்னும்  மூன்று  நிலைகளும் , முறையே , “பரஞ்சோதி”  , “ஆணே  பெண்ணே “ , “ ஆரமுதே” என்பவற்றாற்  புலனாதலும் அறிக. அமுதம் , கை கால்  முதலிய  உருப்புக்களின்மையால்  அருவத்  தன்மையும் பொறிகளால் நுகரப்படும் இயல்புடைமையால்  உருவத் தன்மையும் உடையதாய் , அருவுருவ நிலையில் எண்ணப்பட்டதென்க . அருவ நிலைக்குக்கூறிய  சோதியும் கட்புலனால் பற்றப்படும் இயல்பினதே  யெனின் , பூதவொளியன்று என முன்னரே கூறப்பட்டமையால்  அத் தடைக்கு இடன் இன்று என்க.ச்

                             இத்துணைப்பெருமைகளும் உடைய அப்பெருமான் , தமக்குச் சிறப்பு முறையில் ஞானாசிரியனாகவும் , தந்தையாகவும் உள்ளான் என்பது தோன்ற, “அத்தா” எனவும் , அடிமை கொண்டமையால் தமக்கும் மற்றை மெய்யன்பர்க்கும் தலைவனாதல் பற்றி ,” எம்மானே” எனவும் கூறுவாராயினர்.

                             “காணுமாறு  காணேன் “ என்பதற்கு , முன்னைத் திருப்பாட்டில் உரைத்தாங்குப் பிறிதொரு பொருளும் உரைத்துக் கொள்க . “காணேன்” என்பதை  வினையாலணையும்  பெயராகவும் , “கண்டேன்” என்பதை முற்றெச்சமாகவும்  கொள்ளல் வேண்டும் . காணேனாகிய யான் , கண்டும் பேசி யென்னைப்படுத்த  தென்ன என முடிக்க . “அந்நாள்” என்பது  குருந்த மர நீழலில் இறைவன் ஞானாசிரியனாக  எழுந்தருளிய காலத்தைக் குறிக்கும் .

                     நேரில் நின் திருக்கோலத்தைத்  தரிசித்தும் , யான் புகழ்ந்து பாராட்டிய எல்லாம் உள்ளன்போடு  நிகழாமல் இச்சக மொழி ஆயின என்பார், “பாணே பேசி” என்றார் .  பாண் – இச்சகம் ; முகமன் . என் தன்னை என்புழித் தன் அசைச் சொல் . இரண்டனுருபை  நான் காவதாக்கி , எனக்குச் செய்துகொண்ட நலம் தான் என்னவோ என்பார், “படுத்ததென்ன” என்றார் . படுத்தல்  – செய்தல் . என்ன  என்னும்  வினா மொழியால் , படுத்தது நலம் எனக் கொள்ளப்பட்டது . அடிகள் ஆண்டவனைப் பண்டு  கண்டது போல்  மீண்டும்  கானப்பெறாமையால் , கண்ட காலத்துப் பாரட்டிப் பேசியவெல்லாம் பயன் விளைக்கவில்லை எனக் கொண்டு , அவ்வுரைகள் உண்மையக இல்லாமல் உபசாரமாயினவோ என ஐயுறுவர்  ஆயினர் என்பது கருத்து.

                       திருவருட் பேற்றிற்கு உரிய தவ வன்மையும் , காண்டற்கு அரிய பொருளைக் கண்டும் , பயன் பெறாமல் அடியார் குழுவில் எண்ணப்பட்டமை  குறித்து  நாணமும்  மேற்கொள்ள  வேண்டியனவாகவும் ,கொள்ளாமையால் , “ஏண்  நாண் இல்லா  நாயினேன்” என்றார் .  ஏண்  – வலிமை . இனிப் பிறவாமைக்கு உரிய திருவருட்பதிவு  இல்லாமையால் இவ்வுடல் பயன் இன்றி இறந்து ஒழியும் நிலைமையில் உள்ளது என்பார். தெளிவு பற்றி இறந்தகால  வாய்பாட்டல் , “செத்தே போயினேன் “ என்றார் .

                          “ ஆண்டவனே   நின்னைக் காணும் நெறியும் அறிந்திலேன். முன் கண்ட காலத்துப்  பாராட்டியதும் முகமனாகப்  பயன்  செய்திலது ; தவ  வன்மையும் இல்லாதவனாய் வறிதே இறந்து போம் நிலையில் உள்ளேன் .  இந்நிலையில்  எனக்கு  ஆதரவாக மேற்கொள்ளத்தக்கது  யாதுளது? இனி எவ்வாறு உய்வேன் “ என்று அடிகள் இரங்குவாராய் , முடிவில் ,”என் கொண்டெழுகேன்”  என்றார் .

                             இதன்கண், இறைவனை , “ஆரமுதே” என விளித்து , “உன்னைக் காணுமாறு காணேன் “ என்றமையால் , அமிர்த வடிவாகவுள்ள இறைவனை , நெறி அறிந்து இயைதலே இன்பம் என்பது தெளிந்தும் , அதனைப் பெறாமையில் வைத்து , “பாணே பேசிப் படுத்ததென்ன” என்று  தன்  வயம்  இழந்து  கூறியமையால் , ஆனந்த  பரவசம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                              *******************************************

பாடல் : 85 .

மானேர்  நோக்கி  யுடையாள்பங்கா

மறையீறறியா   மறையோனே

தேனே  அமுதே  சிந்தைக்கரியாய்

சிறியேன்  பிழைபொறுக்குங்

கோனே  சிறிதே  கொடுமைபறைந்தேன்

சிவமா  நகர்குறுகப்

போனார் அடியார்  யானும் பொய்யும்

புறமே  போந்தோமே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில் , “ஆண்டவனே , அந்  நாளில்  நின்னைக் கண்டு பாராட்டியதால்  யான் பெற்ற பயன் என்னவோ எனக் கூறிய  அடிகள், அங்ஙனம்  கூறியது நின் அருள் வண்மைக்குத்  தகாத கடுஞ்சொல்லாகும்;  யான் புறம்பானது பற்றி அவ்வாறு கூறலானேன் ; பிழை பொறுக்கும் பெருமை நின் கண்ணதே “ என இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-   மான்  நேர்  நோக்கி  உடையாள்  பங்கா  = மான்  விழி  போன்ற விழிகளையுடையாளாகிய  எம்மையுடைய  அம்மையை  ஒரு  கூற்றிலுடையவனே ,

மறை ஈறு அறியா  மறையோனே  =  மறைகளும்  மறை  முடிவுகளும்  உணர  முடியாத  மறை  பொருளாகவுள்ளவனே ,

தேனே  அமுதே   =  தேனே  அமுதே ,

சிந்தைக்கு அரியாய்  =  மனத்திற்கு  எட்டாதவனே ,

சிறியேன்  பிழை  பொறுக்கும் கோனே  =  சிறுமையுடையேனாகிய  என்  குற்றங்களைப்  பொறுத்தருளும்  பெரியோனே ,

அடியார்  சிவமாநகர்  குறுகப்  போனார்  = அடியார்  எல்லாரும்  பெருமை  மிக்க  நின்  சிவபுரம் அணுகப்  போயினர் ,

யானும்  பொய்யும்  புறமே  போந்தோம்  =  யானும்  என்  பொய்யும்  புறம்பாகச்  சென்றோம் ,

சிறிது  கொடுமை  பறைந்தேன்  =  அதனாற்  சிறிது  கடுஞ்சொற்  கூறலாயினேன் (ஆதலாற்  பொறுத்தருள  வேண்டும் )  என்பது .

விளக்கவுரை :-    “மான்நேர்  நோக்கி”   என்றதனால்  தெய்வ  இள  நலமும் , “உடையாள்”  என்றதனால் தாய்மையும்  பெறப்படும் .  உடையாள்  –  உலகம் எல்லாம் தனக்கு உடைமையாகப் பெற்றவள். இறைவனையும்  இறைவியையும் உடையான்  எனவும்  உடையாள் எனவும்  அடிகள் கூறுவர். அருள்  வடிவினள் ஆகிய  அன்னையை ஒரு  கூற்றிலுடையவன்  என்றது , அருளாளனாய் அன்பர்  காட்சிக்கு எளியனானவன் என்பது குறித்தாம் . மறை  யீறு  என்பது உம்மைத் தொகை . மறை , கன்மப்  பகுதியையும், அதன்  யீறு  ஞானப்  பகுதியையும்  விளக்குவனவாம் . மறைகளும்  அதன் முடிவுகளாலும்  அறியப்படாமையால் ,  மறை பொருள்  ஆயினான் என்பது .  “நூலுணர்  வுணரா  நுண்ணியோன் “ என்பதும்  அடிகள் அருண் மொழி  .  நுண்ணியன் என்பது  பற்றியே ஈண்டு  மறையோன்  என்றனர் . கன்மயோகம்  ஞானயோகங்களால் இறைவன்  அறியப்படுவனாகவும் , அவற்றை  உணர்த்தும்  மறை  யீறுகளால்  அறியப்படாதவன்  என்று  ஈண்டுக் கூறியது  எங்ஙனம்  பொருந்தும்  எனின் , மறையும்  அதன்  யீறும்  முறையே  கன்மஞானங்களை  உணர்த்துவனவேனும், அவை நூல்  உணர்வாகிய  அபரஞானமாக முடிதலின் , அவற்றால்  அறியப்படாதவன்  என்பது  தெளிவாம் என்க.  “மறைத்திறம்  நோக்கி  வருந்தினர்க்  கொளித்தும் “ என்பதும்  காண்க.

                  தன்னை அடைந்தார்க்கு  இனிமைச் சுவை  பயந்து  நிற்றலின்  இறைவனை, “தேனே  அமுதே “ என்றனர் .  அமுதம்  –  தேவர்  உணவு . இவ்விரண்டனுள்  ஒன்று கூறிய அளவில் அமையுமே  எனின், பெறுதற்கு எளிமையும் அருமையும் பற்றி   இரண்டு  கூறப்பட்டன என்க.  அம்மையப்பனாக  மெய்யடியார்க்கு  எளி வந்து  இன்புறுத்தலின் ,”தேனே” எனவும் , மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு  நுண்ணியனாய், அரிய பொருளாக  இருத்தலின், “அமுதே”  எனவும்  கூறினர் . நூலுணர்வுக்கு  அரியன்  ஆயினும் , அவ்வுணர்வு , அநுபவ நிலைக்கு  ஆகுங்கால் , பேரின்புறுத்த  வல்லன்  என்பது  குறித்து , “அமுதே” என்றது பொருத்தமே .  “மாற்றம்  மனங்கழிய  நின்ற  மறையோன் “  என்னும்  இறை இலக்கணத்துள், மாற்றங்கழிய நின்றமை , “மறையீறறியா மறையோனே”  என்பதனாலும் , மனங்கழிய  நின்றமை , “சிந்தைக்  கரியாய்” என்பதனாலும்  பெறப்பட்டவாறு  அறிக.

                    சிறுமை , பெருமை ஆகிய  இரண்டு  குணங்களும்  முறையே குற்றஞ்  செய்தற்கும், அதனைப் பொறுத்தற்கும்  ஏதுவாகும்  ஆதலின் , சிறியேனாகிய  எனக்குப்  பிழை  செய்தலும் , பெரியோனாகிய  நினக்கு  அதனைப் பொறுத்தலும் இயல்பாம்  என்பார், “சிறியேன்  பிழை  பொறுக்குங்  கோனே “  என்றார்.  கோன்  –  பெருமைக்குணமுடையோன் .  “வெறுப்பனவே  செய்யும்  என்  சிறுமையை  நின்  பெருமையினாற்  பொறுப்பவனே “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதுங்  காண்க. “பிழையுளன  பொறுத்திடுவ  ரென்றடியேன்  பிழைத்தக்கால், பழியதனைப்  பாராதே  படலம்  என்கண்  மறைப்பித்தாய் “ என்று  தம்பிரான் தோழர்  கூறியதும் ஈண்டு  நினைக்கத்தக்கது

                     இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித்  தமக்கு  உபதேசித்து  மறைந்தபின் , அப்பெருமான் கட்டளைப்படி , திருப்பெருந்துறையில் உள்ள  ஒரு  பொய்கையில்  ஒளிப்பிழம்பாக  காணப்பட்டதாக , அதன்கண்  அடியார்  பலர்  மூழ்கி  இறை  யருளிற்  கலந்த  நிகழ்ச்சியை  அடிகள்  கண்கூடாகக்  கண்டவராதலின், “சிவமாநகர் குறுகப் போனாரடியார்” எனவும், ஆண்டவன்  உலகத்தவர்  நலம்  குறித்து அடிகளைச்  சிலகாலம்  நிலவுலகத்திருக்கப்  பணித்தமையால், “யானும்  பொய்யும்  புறமே  போந்தோமே” எனவும்  கூறினார் .  அடிகளை இருக்கப்  பணித்தது ஆண்டவன்  கட்டளையாயினும், “அருளாரமுதப்  பெருங்கடல்வாய் அடியார்  எல்லாம்  புக்கழுந்த , இருளார்  ஆக்கையிது  பொறுத்தே யெய்த்துக்  கிடந்தேன் “  என்றபடி , மெய்யடியார்க்குக்  கிடைத்த  பேறு தமக்கு  அப்பொழுதே  கிடையாமையால்  உண்டாகிய  வருத்தம்  பொறாது , தம்மைப் பொய்யோடு  சேர்த்துப்  புறம்பானோம் என்று  கூறினர்.  சிவமாநகர்  மெய்மையின்  இருப்பிடம்  ஆகும்.  ஆதலின், பொய்மைக்கு  அங்கு  இடனின்று .  பொய்க்கு  வித்தாக ஆண்டவன் தம்மை  வைத்ததாக  அடிகள்  கூறியுள்ளார்  ஆதலின் , பொய் , சிவமாநகருக்குப்  புறம்பாகுங்கால் ,  அதனோடு  பிணைக்கப்பட்டுத்  தாமும்  புறம்பானதாகக்  கூறியுள்ளார் .

                   இங்ஙனம்  அடியாரெல்லாம்  சிவமாநகர்  அணுகப்போய்  இன்புறவும் , தாம்  பொய்யோடு  பிணைக்கப்பட்டுப்  புறம்பாகித்  துன்புறவும், நேர்ந்தமை  பற்றி   உண்டாகிய  வருத்தம் பொறாது , தம்மைப்  பாசப்பிணிப்பு  ஒழித்து  ஆட்கொண்டருளிய  அருள்  வள்ளலாகிய  ஆண்டவன்  பேருதவியையும் எண்ணாமல் , அப்பெருமான் முன்னிலையில் , “பாணே  பேசி  யென்றன்னைப்  படுத்ததென்ன.” என்பது முதலிய  கடுஞ்சொற்களைப்  பேச  நேர்ந்ததென்று  தெரிவித்துப்  பொறுக்க வேண்டுவாராய் , “சிறிதே கொடுமை  பறைந்தேன் “ என்றார்.  கொடுமை  –  கடுஞ்சொல் ,  பறைதல்  –  பேசுதல். “கேள்வியினும்  வினையினும்  கடியவாய  சொல்லைக்  கடுஞ்சொல் “  என்பர்  பரிமேலழகர்  .  ஈண்டு  அடிகள்  கூறியதாகக்  குறித்த  கடுஞ்சொல் , கேள்வியளவில்  கடுமை  யுடையதேயன்றிச்  செயற்கடுமை  இன்று .  இது  கருதியே , “சிறிதே கொடுமை பறைந்தேன் “  என்று  குறிப்பிடுவாராயினர் . ஆதலிற் பொறுத்தருள வேண்டுமென்பது குறிப்பெச்சமாக  வருவித்துரைத்துக்  கொள்ளல்  வேண்டும் . அடிகள், ஆண்டவன்  முன்னிலையில்  ஒரோவமயம்  இங்ஙனம் சொல்லளவில் வெறுப்புத் தோன்றக் கூறுதல் , தந்தையின் முன்னிலையில்  அறியாப்  பருவத்து  இளங்குழவி  பேசுதல் போல்வதாகும் என்க. அடிகள் அருளிச்செய்த திருப்பாட்டுக்களில் , முன்னும்  பின்னும்  இங்ஙனம் வருவனவற்றிற்கெல்லம்  இஃதொக்கும் .

                      இதன்கண், “தேனே  யமுதே”  என்றதனால், இறைவன் ஆனந்தவடிவினன்  என்பதும் ,  “சிவமாநகர்  குறுகப்  போனாரடியார்” என்றதனால் ,அதுவே  பெறத்தக்கது  என்பதும் அப்பேறின்மை  குறித்து, “சிறிதே கொடுமை பறைந்தேன் “ஏன்றதனால் , தன்வயம் இழந்த நிலையும் பெறப்படுதலின், ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                    ***********************************************

பாடல் : 86 .

புறமே  போந்தோம்  பொய்யும்  யானும்

மெய்யன்பு

பெறவே  வல்லேன்  அல்லா  வண்ணம்

பெற்றேன்யான்

அறவே  நின்னைச்  சேர்ந்த அடியார்மற்றொன்

றறியாதார்

சிறவே  செய்து  வழிவந்து  சிவனேநின்றாள்

சேர்ந்தாரே .

கருத்துரை :-    அடிகள்  ஆண்டவன்  பெருமைக்குப்  பொருந்தாத முறையிற்  சிறிது  பிழை  செய்ய நேர்ந்ததற்கு  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறப்பட்ட  ஏதுவை , மீண்டும்  இத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :-  சிவனே  =  சிவனே ,

நின்னையே  அறச்சேர்ந்த  அடியார்  =  உன்னையே  முழுதும்  உரிமையாகச்  சார்ந்த  அடியார் ,

மற்று ஒன்று  அறியாதார் =  பிறிதொன்றனையும்  அறியாதவராய் ,

சிறவு  செய்து  வழி  வந்து நின் தாள்  சேர்ந்தார்  =  சிறந்த செயல்களைச்  செய்து  செந்நெறிக்கட்  போந்து  நின் திருவடிக்கண் இயைந்தனர் ,

யானும்  பொய்யும்  புறமே  போந்தோம்  =  யானும்  பொய்மையும்  புறம்பானோம்

யான்  = அவ்வளவினன்றி  யானோ ,

மெய்யன்பு  பெறவே  வல்லேன் அல்லா  வண்ணம்  பெற்றேன்  = 

மெய்மையாகிய  அன்பைப்  பெறுதற்கே  வன்மையுடையேன்  அல்லாத  தன்மையையும்  பெற்றுளேன் (ஏன் செயல் ! காத்தருள்க) என்பது.

விளக்கவுரை :-    சார்ந்தாரை  இன்புறுத்தும் மங்கல வுருவினன் என்னும்  பொருள் தோன்ற, :சிவனே” என்றனர் . அறவே  என்புழி , ஏகாரத்தைப்  பிரித்து, நின்னை என்பதனோடு  இயைத்துத்  தேற்றப்  பொருட்டாகக்  கொள்க,  அறவென்னுஞ் சொல் , முழுதும் என்னும்  பொருளுடையதாகும் . தம்  உடல் பொருள்  , ஆவி  எல்லாம்  ஆண்டவனுக்கே  உரிமையாக்கிய  அடியவர்  என்பார் , “அறவே நின்னைச் சேர்ந்த அடியார் “  என்றார் . நின்னைச் சேர்ந்த  என்றதனால்,  பண்டைக்குலம் ஒழிந்து , தொண்டர்க்குலம்  உடையராயினர் என்பது  போதரும் .

              உலகத்தில் தாக்கான்  ஒருவன்  ஆதரவைப்  பற்றி நிற்கும் மற்றொருவன், அந் நிலையிலே,  அவ்வாதரவினுஞ்  சிறந்த பயன் பெறுதற்குரிய பிறிதோர்  ஆதரவை  நாடுதலும்  இயல்பாம் .  அம் முறையில்  இறைவனையே  எல்லா வகையிலும் உரிமையாகப்பெற்ற அடியார், அன்நிலையில் பிறிதொன்றைப்  பற்றுக்கோடாக எண்ணும் இயபினரோ என்பார்க்கு  விடையாக, “மற்றொன் றறியாதார்” என்றார் . உலகியலில்  ஒன்றை நோக்கப்  பிறிதொன்று  உயர்வாக அன்றித்  தாழ்வாகக்  காணப்படலாம். எல்லாம் வல்ல  ஆண்டவனை நோக்கப் பிறிதொரு  பொருள் சிறந்ததாக  இல்லாமையாலும் , அப்பெருமானையே முற்றிலும்  உரிமையான  பற்றுக் கோடாகப் பெற்றமையாலும் , மற்றொன்று  அறியாதார் ஆயினர்  என்பது.

                சிறவு  –  சிறப்பு . பிறப்பு  இறப்புக்களை, பிறவு  இறவு என்றாற்போலச்  சிறப்பைச்  சிற வென்றார் . “பிறவினோ டிறவுமானான்” என்பது  தமிழ்மறை . சிறந்த செயல்களாவன, சரியை  முதலிய  தவங்கள்  ஆகும். வழி, ஞான நெறியும் அன்பு நெறியுமாகிய  செந் நெறிகளாம் . ஞானத்தால்  தெளிதலும் , மெய்யன்பினால் இறைவனோடு  கலத்தலும் உளவா மென்பது பெரியார் அநுபவமாகும் .     சரியை , கிரியை  யோக  மூன்றும் ஞானத்தைப் பெறுதற்குச்  சாதனமாகிய தவங்கள் ஆம் என்பதும், ஞானம் , இறைவனைத்  தெளிதற்கு ஏதுவாகிய செந்நெறி என்பதும், மெய்யன்பு , இரைவனோடு  கலத்தற்கு உரிய நன்னெறி என்பதும் நுண்ணிதின் ஆராய்வார்க்குப்  புலனாம் . ஆகவே அந்னெறிக்கட்  சென்றால், சேரும் இடன் இறைவன் திருவடியாம் என்பார், “நின்றாள் சேர்ந்தார் “ என்றார்.

                 மெய்யடியார் அங்ஙனம் திருவடிக்கண் இயைந்தனராக , யானும்  என் பொய்யும்  சிறிதும்  அணுகப்  பெறாமல்  புறம்பாயினோம்  என்றார் . பொய்மைக் குணப் பொருளாகவும் , அதனையுடைய  தம்மைக்  குணிப்பொருளாகவும்  கொண்டு , “பொய்யும்  யானும் “ என்றார். குண  குணிகள்  என்பன , பண்பும், பண்புடைப்  பொருளாகிய  பண்பியுமாம் . பண்பும்  பண்பியும் பிரிக்கப்படாதனவாயினும் , பண்புக்கு  ஆற்றல் மிக்க இடத்து , அதனுடைய  பண்பியைப்  பண்பாகத்  தனிபடுத்துக் கூறுதல் கவி  மரபு . எடுத்துக்காட்டாக ஒன்று கூறுதும் . அன்பு  குணமாக , அதனுடைய  அன்பன் குணிப்பொருள்  ஆவன் . அவ்வன்பனிடத்துள்ள  அன்பாகிய  குணம் சிறந்திருக்கு மாயின் , என் அன்பே என்று அழைத்தல் உண்டு . “நாணனும் அன்புமுன்பு  நளிர்வரை  யேற “ என்று  சேக்கிழார்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.  இவ்வுண்மை கருதியே , அடிகள்  குணிப்பொருளாகிய தம்மினும்  , தம்மிடத்துள்ள  குணமாகிய பொய்மை வலியுடையது  எனக் கொண்டு , “ பொய்யும்  யானும் “ என்று  பிரித்துக் கூறுவாராயினர் .

                  “மெய்யன்பு  பெறவே” என்புழி , ஏகாரம்  சாதன சாத்தியப்  பேறுகள் இரண்டனுள் , சாதனப் பேறு  பிரித்துக் கூறப்பட்டமையின் , பிரிநிலைப் பொருட்டாதல் அறிக.  வல்லேன் அல்லா வண்ணம் –  வல்லுனன்  அல்லாத தன்மை . வண்ணமும்  என்புழி , உம்மை  தொக்கு நின்றது . பொய்யும்  யானும்  புறம் போந்ததன்றிக்  குண  குணிகளாகிய அவ் விரண்டனுள் குணியாகிய யானோ , சாத்தியமாகிய  திருவடி இயைபேயன்றிச்  சாதனமாகிய  மெய்யன்பைப்  பெறுதற்கே தவ  வன்மையில்லாத  தன்மையையும்  பெற்றுள்ளேன் . எங்ஙனம் உய்வேன் என்பார், “மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம்  பெற்றேன் யான் “ என்று  கூறினார்.  வண்ணம்  – ஒரு  குணம் ஆகும்  .  பொய்மையாகிய  குணமேயன்றித் தவ வன்மைக்கு உரியதல்லாத  தன்மையையும் பெற்றேன் என்பது  கருத்து. என் செய்வல் , காத்தருள்க என்பன குறிப்பெச்சமாக  வருவித்துரைக்கப்பட்டன .

                  இத்  திருப்பாட்டின்  திரண்ட  கருத்தாவது :- ஆண்டவனே  நின்னை  முழுதும்  உரிமையாகப்  பெற்ற  மெய்யடியார் , பிறிது ஒன்றையும் எண்ணாதவராய்ச்   சரியை  முதலிய  தவச்  செயல்களைச் செய்து , நெறி  நின்று நின் திருவடி  யடைந்தனராக , யானோ பொய்யொடு புறம்பானதன்றிச் சாதனமாகிய  மெய்யன்பைப் பெறுதற்கு உரிய  தகுதியும்  பெறாத  நிலையில் உள்ளேன் . எங்ஙனம்  உய்வேன் ? காத்தருளல் வேண்டும்  என்பதாம் .

                   இதன்கண், “அடியார்  மற்றொன் றறியாதார் , சிறவே  செய்து வழி வந்து நின் தாள் சேர்ந்தார் “ என்றதனால் , இம் முறைப்படி  அடைதலே  அழிவில் இன்பம் என்பதும் , அது  பொறாமையோடு  சாதனமாகிய  மெய்யன்பையும்  பெற்றிலேன் என்றதனால், அது குறித்துத்  தன்வயம் இழத்தலும்  பெறப்படுதலின் , ஆனந்த  பரவசம் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல் அறிக.  

                                             ************************************

பாடல் : 87 .

தாராய்  உடையாய்  அடியேற்  குன்தாள்

இணையன்பு

பேரா  வுலகம்  புக்கார்  அடியார்  புறமே

போந்தேன்யான்

ஊரா  மிலைக்கக்  குருட்டா  மிலைத்தாங்குன்தாள்

இணயன்புக்

காரா  அடியேன்  அயலே  மயல்கொண்

டழுகேனே .

கருத்துரை :-   தம்  பிழைக்கு  ஏதுவாகவுள்ளவற்றை முன்னைத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறிப் பொறுத்தருள  வேண்டிய  அடிகள், அப் பிழை  பொறுத்தலோடு  தமக்கு  இன்றியமையாது வேண்டிய  சாதனத்தை அருளுமாறு  இத் திருப்பட்டில் குறிப்பிட்டு வேண்டுகிறார்

பதவுரை  :-   உடையாய்  =  ஆண்டவனே ,

அடியார்  பேரா  உலகம்  புக்கார்  =  மெய்யடியார்கள்  மீளா  வுலகமாகிய  வீட்டு  நிலையை எய்தினர் ,

யான்  புறமே   போந்தேன்  =  யானோ  அதற்குப்  புறம்பாகிய  இடத்தையே  அடைந்தேன் ,

ஊர்  ஆ  மிலைக்கக்  குருடு  ஆ  மிலத்து ஆங்கு  = ஊர்ப்பசுக்கள்  கனைக்க  குருட்டுப் பசுவும்  கனைத்தது போல ,

உன்  தாள்  இணை அன்புக்கு ஆரா  அடியேன்  =  நின் திருவடித் துணைக்கட்  செலுத்தும்  அன்பு  குறித்து அநுபவம்  பெறாத  அடியேன் ,

அயலே  மயல்கொண்டு அழுகேன்  =  மெய்யடியார்க்குப்  புறம்பாக இருந்து  ஆசைப்பட்டு  அழா நின்றேன் ,

அடியேற்கு  உன்தாள் இணை  அன்பு  தாராய்  =  ஆதலின், அடியவனாகிய  எனக்கு  நின்  திருவடித்  துணை பற்றிய  மெய்யன்பைத்  தந்தருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-   “உடையாய்” என்றது, அடிமை உடைமைகளைப்  பாதுகாக்கும் பொறுப்பு  நின்பாலது என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . பின்னர் , “அன்புக்கு  ஆரா அடியேன் “ என்று  தம்மைக் குறிப்பிட்டமையால் , ஈண்டு அடியர் என்றது , அன்பு அநுபவம் மிக்க  மெய்யடியார் எனப் புலப்படுக்கப்பட்டபடியாம் . பெயர்தல்  – பேர்தல் .   மீளா உலகம்  – அடைந்தார்  திரும்பாமைக்கு ஏதுவாகிய  வீட்டு  நிலை . வீட்டு  நிலையை உலகம் என்றது உபசார  வழக்கு . “மீண்டு  வாரா வழி”  “ மறிவறியாச் செல்வம்” என்பனவும்  அது. புறம் போந்தோர் ஒரோவமயம் உட்புகுதலும்  உண்டு. யானோஉட்புகுதற்கு வழியற்றுப் புறத்தே செல்லல் ஆனேன்  என்பார், “புறமே போந்தேன் “என்றார் . புறமே  என்புழி , ஏகாரம்  தேற்றப் பொருட்டு , மெய்யடியார்  திரும்பா  நிலையில்  உட்புக்கார்  எனவும் , யான்  உட்புகா நிலையில் புறம் போந்தேன் எனவும்  அடிகள் கருதியபடியாம் .

                     “ஊர் ஆ “என்பது  , ஓர்  ஊரில்  உள்ள பசுக்கூட்டங்களை  உணர்த்தும். மிலைத்தல்  –  கனைத்தல் . கன்றைக் கண்டதும்  தாய்ப்பசு கனைத்து ஒலித்தல் இயல்பு . கண் தெரியாத பசு , மற்றைப் பசுக்கள் கனைத்துக்  ஒலித்தலைக் கேட்டுத்  தானும் ஆங்குக் கன்றைக்  கண்டதாகக்  கனைத்தல் போல என்பதாம். “மிலைத்திங்கு” என்னும் பாடம் , எச்சத்திற்கு முடிபின்மையால் சிறந்ததன்று . இவ்வுவமை , மெய்யன்பு மிக்க  அடியார் பேராவுலகம் புக்கார் எனக் கொண்டு , அத்தகைய அன்பில்லாத யானும் அங்ஙனம் புகுதற்கு ஆசைப்பட்டுப் புறம்பாய் நின்று  அழா நின்றேன் என்னும்  உவமேயப் பொருளைத் தெளிவுறுத்துவதாகும்.  “கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர் புகுதும்” என்று உமாபதி சிவாசாரியார் கூறியதும் கண்டு நினைக்கத்தக்கது.

                    நின்  திருவடிக்கட் செலுத்தும் மெய்யன்பு  பெறுதற் பொருட்டு மேற்கொள்ளப்படும்  சரியை  முதலிய தவ ஒழுக்கமாகிய அநுபவம் இல்லாமற் பெயரளவில் அடியவன்  ஆகிய  யான் என்பார், “உன் தாளினை அன்புக்கு ஆராவடியேன்” என்றார். ஆர்தல்  –  அநுபவித்தல் . இனி, “ஆராயடியேன்” எனப் பாடங்கொண்டு , ஆராய் என்பதற்கு , எத்தன்மையுடையேனாய் எனவும் பொருள் கூறுவாரும்  உளர் .

                       அயல்  – வேற்றிடம் . மெய்யடியார்  பேரா வுலகம் புகுதற்கு அடியிட்ட செந்நெறிக்குப் புறம்பான இடம் என்பதாம் . மயல்  – அவா. மெய்யன்பர் எய்திய வீட்டு  நிலையை அடைதற்குத் தகுதி பெறாத நிலயில் , அவாக்  கொண்டு முயன்றமையால், கருதியது பெறாமல் வருந்தலானேன் என்பார் , “மயல் கொண்டழுகேன் “என்றார். இந்நிலையில்  யான் வேண்டுவது மெய்யடியார் புக்க பேராவுலகம் புகுதலையன்று., அதற்குச் சாதனமாகிய  மெய்யன்பேயாம் என்பார் , “உன்றாளிணையன்பு” என்றார் . சாதன சாத்தியமாகிய மெய்யன்பு ,வீட்டு நிலை என்னும் இரண்டனுள், வீட்டு நிலை  பெறுதற்குத் தகுதியில்லேனாயினும் , அதற்கு  ஏதுவாகிய மெய்யன்பு பெறுதற்கு அன்று  ஆட்கொண்ட முறையில் அடியவன் ஆயினேன் ஆதலின் ,அதனைத்  தந்தருள  வேண்டுமென்பார் ,, “அடியேற்கு “ எனவும்,”தாராய்” எனவும் கூறியருளினர். “தாராய்” முன்னிலை உடன்பாட்டு வினை.

                           இத்  திருப்பாட்டில் , “பேரவுலகம் “ என்பதை , மோனை நோக்கிப் “போராவுலகம் “ எனப் பாடங்கொண்டு , சொல்லுதற்கரிய  எனப்  பொருத்தமில் பொருள் கூறியும் , “மிலைக” என்னும் சொற்கு , மேய்ந்திட எனவும் , போர் செய்ய எனவும் இல்லாத  பொருள்களை  இயைபின்றிக்  கூறியும் ,”அழுகேனே”   என்பதை , “எழுகேனே “ என அந்தாதித் தொடை சிதையப்  பாடங்கொண்டும் , திருப்பாட்டின் அமைப்பையும் , சொற்பொருள் ஆற்றலையும் , கருத்து நயத்தையும் ஆராயாமற் பொருள் கூறி இடர்ப்படுவாரும் உளர் . அவையெல்லாம் பொருந்தாமை யறிக.

                              இதன்கண்,  “பேராவுலகம் புக்காரடியார்” என்றதனால், அழிவில் இன்ப நிலை அதுவென்பதும் , “ஊராமிலைக்கக்  குருட்டா மிலைத்தாங்கு”  என ஒப்புமை காட்டி, “அயலே மயல் கொண்டழுகேனே” என்றதனால் அவ்வின்பம் பற்றித் தன்வயம் அழிதலும் பெறப்படுதலின் , ஆனந்த  பரவசம் என்னும்  பதிகம்   நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        *******************************************

பாடல் : 88 .

அழுகேன்  நின்பால்  அன்பாம்  மனமாய்

அழல்சேர்ந்த

மெழுகே  யன்னார்  மின்னார்

கழல்கண்டு

தொழுதே  யுன்னைத்  தொடர்ந்தா  ரோடுந்

தொடராதே

பழுதே  பிறந்தேன் என்கொண்  டுன்னைப்

பணிகேனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன்  திருவடி  அடைதற்கு  இன்றியமையாத சாதனம்  மெய்யன்பு  எனக்  கண்டு , அதனைத்  தந்தருள வேண்டுமென வேண்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில் அஃதன்றி வேறு எதனைப் பற்றுக்கோடாக  மேற்கொள்ளக்  கடவேன் என்று மீண்டும் வற்புறுத்து  இரக்க விண்ணப்பம் செய்கின்றார் .

பதவுரை :-  நின்பால்  அன்பு  ஆம்  மனமாம்  =  நின்னிடத்து அன்புமயமான  உள்ளம்  உடையராய் ,

மின் ஆர்  பொன் ஆர்  கழல் கண்டு  =  ஒளிபொருந்திய நின் பொன்போன்ற திருவடிகளைத்  தரிசித்து ,

அழல்  சேர்ந்த  மெழுகு அன்னார்  =  தீயிடைப்பட்ட  மெழுகை  ஒத்தவராய்

தொழுதே  உன்னை  தொடர்ந்தாரோடும் தொடராது  =  வணங்கிய  நிலையிலே  நின்னைப்  பற்றித்  தொடர்ந்து  அடைந்த  மெய்யன்பரோடும்  தொடர்ந்து  வாராமல் ,

அழுகேன்  = தனிப்பட்டு  அழுவேனாயினேன் ,

பழுது  பிறந்தேன்  =  ஆதலிற்  பயைன்றிப்  பிறந்தவனாகிய  யான் ,

என்  கொண்டு  உன்னைப்  பணிகேன்  =   எதனைப்  பற்றுக்கோடகக்  கொண்டு  நின்னை  வழிபடுவேன்  என்பது.

விளக்கவுரை  :-    ஆண்டவனைத் தொடர்ந்து அடைந்த மெய்யன்பர்களின் பக்குவ முதிச்சியை அடிகள் கண்கூடாகக் கண்டவராதலின் , இத் திருப்பாட்டில் சற்று  விளக்கமாகக் கூறத்தொடங்குகின்றார் . அம் மெய்யடியார் உள்ளமெல்லாம்  குழந்தை அன்பு மயமாயின என்பார், “அன்பாம்  மனமாய்” எனவும் , அத்தகைய அன்பும் உலக வாழ்க்கையில் மனை மக்கள் முதலியோரைப்  பற்றியதன்று ; அழிவில் பொருளாகிய நின்னைப் பற்றியது என்பார், “நின்பால்” எனவும்  கூறினர் . மனம்  ஆகு  பெயராக நின்று , அதனை யுடையாரை உணர்த்தும் .

                     அங்ஙனம்  குழைந்த அன்புருவமான உள்ளம் உடைமைக்குப் பயன் கூறுவார், “மின்னார் பொன்னார் கழல் கண்டு “என்றார். ஆண்டவன்  திருவடியைச் சிவஞானம் என ஆகமங்கள் கூறும்.  ஆதலானும், ஞானத்தை ஒளியாகக் கூறுதன் மரபு  ஆகலானும், “மின்னார்” எனவும், உலகப் பொருள்களில் வைத்துப் போற்றத்தக்க பொருளாக உவமை  கூறுதற்குப் பிறிது இன்மையின் ,”பொன்னார்” எனவும் கூறினர் , “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” என்பது தமிழ் மறை .  உள்ளம் அன்பு  மயமாகக்  குழைந்த நிலையில் உண்டாம் பயன் , ஆண்டவன் திருவடிக் காட்சி என்பது போதர , “கழல் கண்டு “ என்றார். பெறுதற்கு அரிய அக் காட்சியின் பின்னர் , அம் மெய்யன்பரின் உள்ளம் எவ்வாறு ஆயிற்று  என்பதற்கு விடையாக , ‘அழல் சேர்ந்த மெழுகேயன்னார் “ என்றார். தீயிடைப்படுதற்கு  முற்பட்ட நிலையில் குழைவுடைய மெழுகு போல , ஆண்டவன்  திருவடிக் காட்சிக்கு முற்பட்ட நிலையில் அவ் விறைவனை நினைந்த துணையானே குழைவுடைய மெய்யன்பர் உள்ளம் , அக் காட்சியின் பின்னர்த் தீயிடைப்பட்ட மெழுகு உருகி வடிதல் போல உருகிக் கரையும் என்பது கருத்து.

                       அங்ஙனம் உள்ளம் உருகப்பெற்ற மெய்யன்பர், அவ் அன்பிலே விளைந்த ஆரமிர்தமாகிய இறைவன் அருட் பார்வையாற் கவரப்பட்டு , அப் பெருமான் அருள் நிறைவில் தோய்ந்து இன்புற்றனர் என்பது புலப்பட, ”தொடர்ந்தார் “ என்றார் . தொடர்தல் – விரைந்து செல்வாரைப் பின்பற்றிச் சேறல் . எங்கும் நிறை பொருளாகிய  இறைவனுக்குப் புடைபெயர்ச்சி யின்மையால் , பக்குவமுள்ள உயிர் ,உலகப் பார்வை ஒழிந்து , இறைவன் அருள் இயல்பு அறிந்து இயைதலையே அங்ஙனம்  கூறினார் என்பது . “யானுனைத் தொடர்ந்து   சிக்கெனப் பிடித்தேன்” என்று அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  இக் கருத்துப் பற்றியே . அங்ஙனம்  தொடருங்கால் , வணக்க நிலையிலே உள்ளார் என்பது தோன்ற , “தொழுதே யுன்னைத் தொடர்ந்தார் “ என்றார். தொழுதலும் தொடர்தலும் ஒருங்கு நிகழ்ந்தன என்பது அறியத்தக்கது . அக் கருத்துத் தோன்றவே ,”கொழுநற் றொழு தெழுவாள்”என்பதற்குப் பரிமேலழகர் , “தொழாநின்று என்பது தொழுதெனத் திரிந்து நின்றது” என்று உரைக் குறிப்பு எழுதலானார் .

                           இதுகாறுங் கூறிய மெய்யன்பர் இயல்பிற் புலனாகும் பிறிதோர் உண்மையும் ஈண்டு அறிந்து இன்புறத்தக்கது . அஃதாவது இத் திருப்பாட்டில் மெய்யடியாரின் அறிவு , இச்சை , செயல்கள்  இறைவனைப் பற்றி நின்றன என்பதாம் . “கழல் கண்டு “ என்றதனால் அறிவும் , “அன்பாம் மனமாய் “ என்றதனால் இச்சையும் ,”தொழுதே தொடர்ந்தார்” என்பதனால்  செயலும் பற்றி நின்றமை புலனாயவாறு  அறிக. “அயரா அன்பின் அரன் கழல் செலுமே” என்னும் சிவஞான போத நூற்பாப் பகுதியும் , அதற்கு மாதவச் சிவஞான முனிவரர் , “அறிவிச்சை செயல்களின் நிகழ்ச்சியாகிய  அயராமையும் அன்பும்  செலவும் முறையே காரண காரியங்களாய் அவ்வொரு பொருள்மேல் ஒழுங்கு நிகழும் என்பார் . “அயராவன்பின் அரன் கழல் செலுமே என்றார். “ என்று நுண்ணிதின் ஆராய்ந்து எழுதிய உரைக் குறிப்பும் ஈண்டு  உணரத்தக்கன .

                       இத்தகைய மெய்யன்பரோடு  தொடர்ந்து வரும் தவ வலி  இன்மையால் , தனிப்பட்டு வருந்தலானேன் என்பார் , “ தொடராதே அழுகேன்” என்றார். திருவருட்  பேற்றிற்கு உரிய தவம் புரிதற்கு இவ்வுடல் பயன் படாமையால் , “பழுதே பிறந்தேன் “ என்றார் . “பிறந்தேன் “என்பது வினையாலணையும் பெயராய்ப் பணிகேனே என்னும் பயனிலைக்கு எழுவாயாயிற்று . உன்னைத்  தொடர்ந்தாரோடும்  தொடர்தற்கு உரிய மெய்யன்பாகிய சாதனத்தை விட்டு ,வேறு பற்றுக்கோடாக எதனைக் கொண்டு நின்னை வழிபடுவேன் என்பார், “என்  கொண்டு உன்னைப் பணிகேனே “ என்றார்.

                            இதன்கண், மெய்யன்பரின் அறிவு , இச்சை , செயல்கள் எல்லாம் ஆண்டவனைப் பற்றி நிகழ்ந்தன என்றமையால் , அங்ஙனம் நிகழ நுகரும் இன்பமே ஆனந்தம் என்பதும் , அது பெறாமையால் ,”அழுகேன்”  “பழுதே பிறந்தேன்” என்றமையால் தன் வயம் அழிதலும் பெறப்பட்டமையால் , ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        **********************************************

பாடல் : 89 .

பணிவார்  பிணிதீர்த்  தருளிப்

பழைய  அடியார்க்குன்

அணியார்  பாதங்கொடுத்தி

அதுவும் அரிதென்றால்

திணியார்  மூங்கில்  அனையேன்

வினையைப்  பொடியாக்கித்

தணியார்  பாதம்  வந்தொல்லை

தாராய்பொய்தீர்  மெய்யானே.

கருத்துரை :-  இறைவன்  திருவடி வணக்கத்திற்கு அன்பு நெறியல்லாது  வேறு எதனைத் துணைக்கொள்ளக்  கடவேன் என்று முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய அடிகள் , அச் செந்நெறிச்  செலவிற்குத் தடையாகவுள்ளது தம் பண்டை வினை என்றும் , அதனை அறவே  ஒழித்து விரைந்து திருவடிப் பேறு அளித்தல் வேண்டும்  என்றும் இத் திருப்பாட்டில் வேண்டுகின்றார் .

பதவுரை :-  பொய் தீர் மெய்யனே  =  பொய்மையின் நீக்கத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

பணிவார்  பழைய  அடியார்க்குப்  பிணி தீர்த்து அருளி  =  வழிபடுவோராகிய  பண்டை  அடியார்க்குப்  பிறவி நோயை ஒழித்தருளி ,

உன் அணியார் பாதம் கொடுத்தி  =  நின் அழகு  மிக்க  திருவடியைக்  கொடுக்கின்றாய் ,

அது அரிது  என்றாலும்  =அங்ஙனம் தருதல் எனக்கு அரியது  ஆம்  என்றாலும் ,

திணி  ஆர்  மூங்கில் அனையேன்   =   திட்பம்  பொருந்திய மூங்கிலை  ஒத்தவனாகிய  எனது ,

வினையைப்  பொடியாக்கி  =  கன்மத்தை  நீறாக்கி ,

ஒல்லை வந்துதணி  ஆர்  பாதம்  தாராய்  = விரைந்து  வந்து  குளிர்ச்சி  பொருந்திய  நின்  திருவடியைத்  தந்தருள்வாயாக.  என்பது.

விளக்கவுரை :-  “பொய் தீர் மெய்யான்” என்புழி,  தீர் மெய்யான் என்பது வினைத்தொகை . அழியும் இயல்பினவாகிய மாயாகாரியப்  பொருள்கள் எல்லாம் பொய்ப் பொருள்களாம் , அப்பொருள்களை  வைத்துஆய்ந்து ஆழ்ந்து செல்லுங்கால் , அவ்வெல்லாம்  சென்று சென்று ,அணு அனூவாய் தேய்ந்து ஒழிய , அவற்றின் நீக்கத்தில் அவ்வெல்லாவற்றையும் கடந்து  நிற்கும் அழிவில் பொருளாகிய மெய்ப்பொருள் உண்மை பெறப்படும் . இக் கருத்துப்பற்றியே , “பொய் தீர் மெய்யானே” என்றார். “பொய் தீர் “  என்னாது , “மெய்யானே”என்ற  அளவில் இக் கருத்து அமையாதோ எனின் ,மக்கள்  ஆராய்ச்சி  காணப்படும் நிலையுதல் இல்லாத பொருளைப்பற்றியே முதலில் நிகழும் இயல்பினது ஆகலின் அமையாது  என்க. “காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் , உலகின் மேல் வைத்துக் கூறினார்” என்னும் பரிமேலழகர் உரைக்கருத்தும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . பிணி தீர்த்தற்கும்  வினையைப் பொடியாக்குதற்கும் உரிய தகுதி இறைவனிடத்து உண்மை குறித்து இங்ஙனம் கூறப்பட்டது என்பது குறிப்பிற் பெறப்படுவதாகும் .

                       பழைய அடியார் என்றதனால் , அவர்  வணக்கமும் தொன்று தொட்டு  ஏற்பட்டது என்பது போதரும். ஆகவே, பற்பல பிறப்புகளிலும் ஆண்டவனை  வழிபட்டு வழிபட்டுத் திருவருளால் தூய்மை  எய்தி ஆட்பட்ட  மெய்யன்பர்களே  பழைய அடியார் எனப்படுவார் என்பதாம் . அங்ஙனம் தொன்று தொட்டு வழிபாட்டை விடாமல் மேற்கொண்டுவரும் பழைய மெய்யன்பர்க்கு , அநாதியே பற்றிய  பாசப்பிணிப்பை எளிதின் ஒழித்துத்  தன் திருவடிகளை , ஞானவொளி மிக்க பேரெழில் வாய்ந்த நிலையிற் காட்சிப் படச்செய்து இன்புறுத்துகின்றாய்  என்பார்.  “பணிவார் பழைய அடியார்க்குப் பிணி  தீர்த்து உன் அணியார் பாதம் கொடுத்தி “ என்றார். இதனால் , பழைய மெய்யன்பர்க்குப்  பாச நீக்கமும்  சிவத்துவப் பேறும் அருளிய உண்மை புலனாம் என்பது . “பிணி தீர்த்து “ என்றதனாற்  பாச நீக்கமும் , “”அணியார் பாதம் கொடுத்தி” என்றதனாற் சிவத்துவப் பேறு அளித்தலும்  பெறப்பட்டவாறு அறிக. நோயுடை ஒருவனுக்கு முதலில் நோய் நீக்கத்திற்கு மருந்தும் , பின்னர் உடல் வன்மைக்கு உரிய உணவும் கொடுக்கப்படுதல் உலகியலிற் காண்கின்றோம் . அங்ஙனமே , பிணி தீர்த்தல் முதற்கண்ணும் , திருவடி கொடுத்தல் பின்னரும் கூறப்பட்டன . அணியார் பாதம்  என்றது , ஈண்டு இறைவனை அறிதற்கு உரிய சிவ ஞானத்தைக் குறிக்கும் .

    “அதுவும்” என்புழி , உம்மையைப் பிரித்து , “அரிதென்றால்” என்பதனோடும் இயைத்து , அது அரிது என்றாலும் எனக் கொண்டு பொருள் கூறப்பட்டது . அங்ஙனமின்றிச் சொற்கிடந்தபடியே பொருள் கூறின் , “மெய்யன்பர்க்குப் பிணி தீர்த்து அணியார் பாதம்கொடுத்து அரிதன்று”என்று அடிகள் கருதினார் என்பது பெறப்படும் . பாச நீக்க முகமாக உண்டாம் சிவத்துவப் பேறாகிய அதுவன்றி முடிந்த பயன் பிறிதொன்று இன்மையின் , அடிகள் அங்ஙனம் எளிதாகக் கருதினார் எனக் கொள்ளுதல் பொருந்தாது என்பது.  அப்பேறு தமக்கு அரிதாம் என்பதை உடன்பட்டு ,அத்துணைப் பெறுதற்குத் தமக்குத் தகுதியின்றாயினும் என்பார், “அது அரிது என்றாலும் “ என்றார். அத்துணை அரிதாகிய முடிந்த பயனைப் பெறுதற்குத் தகுதியில்லேன் ஆயினும், இப்பொழுது இன்றியமையாது வேண்டப்படும் கன்ம நாசத்தை விரைந்து அருளல் வேண்டும் என்பது பற்றிப் பின்வருமாறு  வேண்டுகின்றார்.

         திணியார் மூங்கில்  –  வன்மை மிக்க மூங்கில் ; அதனைக் கெட்டி மூங்கில் என்பர். மூங்கில் உள்ளும் புறமும் கசிவு இல்லாது ஆகும் . மேலும் குழாய் மூங்கிலினின்றும் வேறு ஆகிய திணியார் மூங்கில் ஆனதால் பிறர் வளைத்தால்  அன்றி வளையாததுமாம் . அது போல், உள்ளும் புறமும் முறையே குழைந்த அன்பும் , அது பற்றி யுண்டம் மெய்ப்பாடும்  பணிவும் இல்லாதேன் என்பார், “திணியார் மூங்கில் அனையேன்” என்று  மூங்கிலைத் தமக்கு உவமம் கூறுவார் ஆயினர் . ‘மூங்கில் அனையேன் வினையை “ என்புழி, ஆறாம் வேற்றுமை தொக்கதாகக் கொண்டு , “ஆனையேனது “ என விரித்துக் கொள்ளல் வேண்டும் . இதனால், மெய்யன்பர் உள்ளே குழைத்த அன்பும் , புறத்தே அதன் விளைவு ஆகிய செயலும் பணிவும் உடையார் என்பது பெறப்படும். மேலும் , அடிமைக்குப் பழமை கூறியமையால் , அன்புண்மையும், பணிவார் என்றதனால் வணக்கம் உண்மையும் உணரத்தக்கன . அடிகள் , தம்பால் உள்ளன்பும் வணக்கமும் இல்லாமைக்கு ஏதுவாக உள்ளது பண்டை வினையெச்சம் எனக் கண்டு , முதலில் அதனை முளைத்தல் இல்லாவாறு ஞானத் தீயால் சுட்டு எரித்தல் வேண்டும் என்பார்.,”வினையைப் பொடியாக்கி”என்றார்.  பொடியாக்குதல் – நீறாக்கல். “வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகாதென் செய்கேன்” என்னும் அடிகள் அருண்மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது .

            வினையைச் சுட்டு எரிக்குங்கால் , அவ்வினையிலே கிடக்கின்ற தம் உயிர்க்கும் அவ் வெப்பம் தாக்கும் ஆதலின் , அவ்வெம்மையின் தணிவு நிமித்தம் நின் திருவடியைக் குளிர்ந்த நிலையில் தரல் வேண்டும் என்பார் .  “தணியார்பாதம்” எனவும் ,அது தருதற்குக் காலம் தாழ்ப்பின் பொறேன் ஆதலின், விரைவில் தரவேண்டும் என்பார், “ஒல்லை” எனவும், யான் அவ் வெம்மையைத்  தாங்கி நின்பால் அணுகுதற்கு ஆற்றல் இல்லேன் ஆதலின் , நீயே என்பால் அருள் கூர்ந்து வரல் வேண்டும் என்பார், “வந்து” எனவும் கூறியருளினர் . தணி – தண்மை ; குளிர்ச்சி . “தணி புனலாடுந் தகைமிகு போர்க் கண்” என்புழி, அப்பொருட்டாதல் அறிக. வினையெச்சம் இல்லாமையால் மெய்யன்பர்க்குத் திருவடியை எழில்மிக்க ஞான நிலையில் கொடுத்து இன்புறுத்துகின்றாய் எனவும், யான் அங்ஙனம் பெறுதற்குத் தகுதி இல்லாமல் வினையோடு பிணிப்புண்டு இருத்தலின் , அதனை எரித்து ஒழித்து, அவ்வெம்மை  தாக்காமல் எனக்குத் திருவடியை விரைவில் குளிர்ந்த நிலையில் அருளிக் காக்கவேண்டும் எனவும் அடிகள் வேண்டியவாறாம் .

                 இதன்கண், “பணிவார் பிணி தீர்த்தருளிப் பழைய  அடியார்க்குன் அணியார் பாதம் கொடுத்தி” என்றதனால் , அழி வில் இன்ப நிலை இவ்வியல்பிற்று என்பதும் , அது பொறாமையால் , “திணியார் மூங்கில னையேன்” எனத் தன்வயம் அழிதலும் பெறப்படுதலின் ,ஆனந்த பரவசம் என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.

                                          ****************************************

பாடல் :90 .

யானே  பொய்யென்  நெஞ்சும்  பொய்யென்

அன்பும் பொய்

ஆனால்  வினையேன்  அழுதால்  உன்னைப்

பெறலாமே

தேனே  அமுதே  கரும்பின்  தெளிவே

தித்திக்கும்

மானே  அருளாய் அடியேன் உனைவந்

துறுமாறே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் வீட்டின்பப் பேற்றிற்குத் தடையாகவுள்ள வினையை நீறாக்கித் திருவடி நீழலை அருள வேண்டும் என்று  கூறிய அடிகள் , அப்பேறு குறித்துத் தம் கருவி கரணங்களையும் ஈடுபடுத்தற்கு  அவை நேர்மையுடையனவாக இல்லாமையானும், வேறு  பற்றுக்கோடு காணப்படாமையானும் ,தாயின் உதவி குறித்துக் குழந்த மேற்கொள்ளும் செயலைக் கடைப்பிடிக்கலாமா என்று இத்திருப்பாட்டில் குறிப்பிடுகின்றார்.

பதவுரை :-  தேனே  அமுதே  கரும்பின் தெளிவே  =  தேனும்  அமிழ்தமும்  கரும்பின் தெளிந்த சாறுமாக  உள்ளவனே ,

தித்திக்கும்  மானே =  இனிப்புச் சுவை மிக்க பெரியோனே ,

யானே  பொய் =  யான் பொய்யனே ,

என்  நெஞ்சும் பொய்  =  என் உள்ளமும் வஞ்சமுடையது ,

என் அன்பும் பொய்  = என் அன்பும் போலியாகவுள்ளது ,

ஆனால்  =  அங்ஙனமாயின் ,

வினையேன்  =  கன்மத்தையுடையேனாகிய  யான்,

அழுதால்  உன்னைப்  பெறலாமே  =  வருந்தி  அழுதால்  நின்னை அடையலாமா?

அடியேன்  உனைவந்து உறும் ஆறு அருளாய்  = அடியேன்  நின்னை வந்து எய்துமாறு  அருள்  புரிவாயாக என்பது.

விளக்கவுரை :- தேனே , அமுதே , கரும்பின் தெளிவே  என்று இறைவனை இனிமைச் சுவை மிக்க பொருள்களாக இம் முறையில் விளித்தலைப் பற்றித் திருச்சதகம் 55 ஆம்  திருப்பாட்டு உரையில் விளக்கம் கூறப்பட்டுள்ளது . ஆண்டுக் காண்க. பேரின்பப் பிழம்பாகவுள்ள  இறைவன் ,சார்ந்தார்க்கு இனிமை பயந்து நிற்கும் இயல்பு கருதி , உலகப்பொருள்களில் இனிமைச் சுவை மிக்க தேன் முதலியவாகக் கூறப்பட்ட அளவில் அமையாமை கண்டு , மீண்டும் ,”தித்திக்கும் மானே” என்றார் . மான்  – மகான் ; வட சொற்றிரிபு . மனம் , பொறிவழிப் புறத்தே சென்று நுகரும் பொருல்களுள் , தேன் முதலியன  போல அகத்தே நினையுந்தோறும் இனித்தல் குறித்து , “தித்திக்கும் “எனவும் , மக்களாற் சுவைக்கப்படும் உலகியற் பொருள்கள் எல்லாம் சுவைப்போனில் தாழ்ந்தனவாக அன்றி ,ஒத்தனவாக உள்ளன ஆதலின், அவற்றின் வேறாக , ஆண்டவன் மிக்கோன் ஆவான் என்பது தோன்ற , “மானே” எனவுங் கூறுவாராயினர் . “கனியினுங் கட்டிப்பட்ட கரும்பினும் … இனியன்” என்னும் தமிழ் மறையும் ஈண்டு நினைக்கத்தக்கது .

                    அடிகள் ஆண்டவன் திருவடிப்பேறு எய்த இயலாமையின் , தம் ஒழுக்கம் புரைபட்டது எனக் கொண்டு ,”யானே பொய்” என்றார். ஏகாரம் தேற்றப்பொருளது . தம்மைப் பொய்யன் என்ற  அளவிலே , தம் நெஞ்சும் அன்பும் பொய்மையுடையன என்பது பெறப்படுமாயினும் , ஆண்டவனை அடைதற்கு உரிய கருவி கரணங்களுள் நெஞ்சம் சிறந்தது ஆகலானும் , அன்பு இன்றியமையாதது ஆகலானும், அவ்விரண்டனையும் வேறாகப் பிரித்து ஓதினர். இங்ஙனம் கூறுதல் ஆன்றோர் வழக்கு என்பதை, “நாணனும் அன்பு முன்பு நளிர் வரை யேற “ எனவும் ,”செம்பொற்றாளே சார்வான திருமணமும் …………தாமுமாகி” எனவும் சேக்கிழார் அடிகள் கூறுமாற்றான் அறிக. மன மொழி மெய்கள் மூண்றனுள் , நெஞ்சம் பிரித்து ஓதப்பட்டமையால் , ஏனைய மொழி மெய்களின் பொய்மை, “யானே பொய் “ என்றதனாற் பெறவைத்தார்  என்பதாம். பேச்சளவில் நிகழும் போலிப் பாராட்டும், உடலளவில் நிகழும் போலி வணக்கமும் பொய்மையுடையன என்பது கருத்து. அவ்விரண்டற்கும் மூலமாக உள்ளது நெஞ்சம்  ஆதலின் , அதன் வஞ்சகம் , கேடு பயப்பதில் அவற்றினும் சிறந்தது எனக்கொண்டு ,தனித்து எடுத்து ,”என் நெஞ்சம் பொய் “ என்றார் . அன்பு என்னும் உயிர்க்குணம் முதிர்ந்த நிலையில் ஆண்டவனை அடைதற்கு  உரிய சிறந்த நெறியாக முடிதலின் , அஃது இன்றியமையாதது ஆகவும் ,அதுவும் போலியாயிற்று என்பார், “என் அன்பும் பொய் “ என்றார். “என் நெஞ்சும் பொய் ,என் அன்பும் பொய்” என ஈரிடத்தும் “என்”என்பதை இயைத்துக் கூறியது , உலகத்தில் என் அளவில் இப்படிப் போலி ஆயினவே என அடிகள் இரங்கியமை புலப்படுத்தற்கு என்க.

                  இங்ஙனம் தம் மனம் மொழி மெய்களும் அன்பும் பொய்மை உடையன ஆதற்கு ஏது , தம் தீவினை என்பார், “வினையேன் “ என உடம்பொடு  புணர்த்து ஓதினர் . உடம்பொடு புணர்த்தலாவது, சொல்லப்பட்ட இலக்கியத்திலே  சொல்ல வேண்டியது ஒன்றை உய்த்துணர வைத்தலாகும் . இதனை, “சுவையொளி  யூறோசை நாற்றமென்றைந்தின் , வகை தெரிவான் கட்டே யுலகு “ என்னுங் குறளில் , “வகை தெரிவான் கட்டென உடம்பொடு புணர்த்ததனால் , தெரிகின்ற புருடனும் , அவன் தெரிதற் கருவியாகியமான்  அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுதியும் பெற்றாம் “  என்று  பரிமேலழகர் எழுதிய உரையானும் உணர்க . ஈண்டு , யான் எனக் கூற வேண்டிய இடத்தில் வினையேன் என்றதனால் , வினை ஏதுவாமென்பது உய்த்துணர வைக்கப்பட்டவாறு  அறிக.  என் நெஞ்சும்  அன்பும் பொய்பட்டமையால் , அந் நெஞ்சத்தின் துணை பற்றி , அன்பு நெறியாக ஆண்டவன் திருவருளைப் பெறுதற்கு இயலாமையானும் , பிறிதோர் ஆறின்மையானும் , “அழுதால் உன்னைப் பெறலாமே “என்றார். உலகத்தில் எத்துணை ஆற்றல் படைத்தாரும் ஒன்றைப் பெறுதற்கு விரும்புங்கால் , தம் கருவி கரணங்கள் வலியிழந்து பயன்படாத நிலையில் மேற்கொள்ளப்படுவது அவலித்து அழுதலே யாகும்.  “பெறலாமே” என்புழி, ஏகாரம் வினாப்பொருளில் வந்தது . என் அன்பும் பொய்யானால் , அழுகையும் பொய்யாகும் ஆதலின், பொய்யாக அழுதால் உன்னைப் பெறலாமோ எனப் பொருள் கோடலுமாம் .

                     அடிகள், தம் அன்பு பொய்மையானதால் , வேறு புகல் இன்றி , “அழுதாலுன்னைப் பெறலாமே” என்றார். ஆயினும், அவர் அழுகை , பால் நினைந்தூட்டும் தாயை நினைந்து மழவிளங்குழவி  அழுதல் போல் அன்பினால் நிகழ்வதாகும் ; மற்றை அடியார்களும் இறைவன் திருவருளை வேண்டி , அன்பினால் உள்ளம் உருகிக் கண்ணீர் வடித்து அழுதமை , அன்னார் வரலாற்றான் அறியப்படும் . “புனித வாய் மலர்ந்தழுத” என ஆளுடைப் பிள்ளையாரையும் , “நைந்துருகிப் பாய்வது போலன்பு  நீர்பொழிகண்ணும் “ என்று ஆளுடை அரசையும் பற்றிச் சேக்கிழார் கூறியிருத்தல் ஈண்டு நினைக்கத் தக்கது .

                     “அழுதால் உன்னைப் பெறலாமா” எனக் கேட்ட அடிகள் , ஒருவாறு அங்ஙனம் அழுதலும்  நின்னைப் பெறுதற்கு வாயில்  ஆகாது எனின், நின்னை வந்து அடைதற்கு உரிய சிறந்த நெறி பிறிது ஒன்று இன்னது என்று காட்டியருளல் வேண்டும் என்பார், “அடியேன் உன்னை வந்து உறும் ஆறு  அருளாய் “ என்றார் . ஈண்டு அடியேன் என்றது , ஆட்கொண்டு அருளல் வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற நின்றது . “அவனருளாலே யவன்றாள் வணங்கி “ என்றபடி , அப்பெருமானை அறிந்து  வழிபடுதற்கு உரிய நெறியைக் காண்டற்கும் அவன் அருளே துணை புரியவேண்டும் ஆதலின் இங்ஙனம் கூறினார் என்க.

     இதன்கண், “தேனே யமுதே கரும்பின் தெளிவே  தித்திக்கும் மானே” என்றதனால் பரவசமாதலும் பெறப்படுதலின், ஆனந்த பரவசம்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “மானே யருளாயடியேன் உனை வந்துறுமாறு என்றதனால் பத்தியும் ,”யானே பொய், என் நெஞ்சும் பொய் ,என் அன்பும் பொய் “ என்றதனால் வைராக்கியமும் பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.

                                         *********************************************

10 .   ஆனந்தாதீதம்

                          ஆனந்தாதீதம் என்னும் வட சொற்றொடர் ஆனந்தத்தின்  அதீத நிலை என விரியும் . ஆனந்தம் , மெய்யுணர்வினால் அநுபவிக்கப்படும் அழி வில் இன்பம் என்பது  8, 9 ஆம் பதிகங்களின் வைத்து விளக்கிக்கூறப்பட்டது . அதீதம் என்னும் சொல் கடந்தது என்னும்  பொருள் உடையதாகும். ஆகவே , அத் தொடர் , அப் பேரின்பத்தின் கடந்த நிலையாகிய முடிந்த எல்லையைக் குறிக்கும் என்பது தெளிக. சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடைய உயிர் , இடையறாத சிவபாவனையால் , பாசச் சார்பை ஒழித்துச் சிவச்சார்பை யடைந்ததும் ,அப்பாச நீக்கத்தில் உண்டாம் அருள் விளக்கத்தில் தலைப்பட்டு , அது வாயிலாக ஆனந்த விளக்கம் நிகழப்பெறுவதாம் என்ப.  பாசம் நீங்கிய வழி உண்டாவது அருள் விளக்கமாகும் . அஃது இருள் நீக்கத்தின் உண்டாம் ஒளி விளக்கம் போல்வதாம். அதன்மேல் , ஆண்டவன் கருணையால் நிகழ்வது ஆனந்த விளக்கமாகும் . அவ் ஆனந்தத்தில் ஞானநிலையோடு உயிர் தோய்தல்  ஆனந்தத் தழுந்தல் என்று 8-ஆம் பதிகத்தும் ,அத் தோய்வு முதிர முதிர , அவ்வுயிர் தன்வயம் அழிதல் ஆனந்த பரவசம் என்று 9-ஆம் பதிகத்தும் கூறப்பட்டன . அங்ஙனம் தன்வயம் அழிந்த நிலையின் மேம்பட்ட நிலையே அதீத நிலை ஆகும் . இந்நிலையில் , காண்பவன் , காட்சி, காணப்படுபொருள் என்னும் வேறுபாடு இன்றாம் , தன்வயம் அழிந்த நிலையில் , ஒரோவழிப் பண்டை பாசத் தொடர்பால் யான் நுகர்கின்றேன் என்று உயிர் நினைவு முற்படுதலுங் கூடும் . அதீதமாகிய கடந்த நிலையில் ,அந் நினைவு சிறிதும் நிகழாது என்பதாம். இந் நிலையின் இயல்பை ,அடிகள் , “எனை நானென்பதறியேன் பகலிரவாவதும் அறியேன்”என்று கூறியருளிய அநுபவ உண்மையான் உணரலாம்.

            உலகியலில் ஓர் அழகிய உருவத்தைக் காணுங்கால் ,அதனை அழுந்திப் பார்ப்பவன் காண்பவன் ஆவான் ; அங்ஙனம் பார்க்கப்படும் உருவம் காணப்படு பொருள் ஆகும் காண்பவன் அறிவு காட்சியாகும் . இவ் வேறுபாடு உள் வழி ,அஃது அதீத நிலை ஆகாது . இவ்வேற்றுமையின்றி , இன்பமயமாக நிகழும் அநுபவம் ஆனந்தாதீதம் என்ப. இதனையே ,”ஆதீத நிலைக்கண்ணதாகிய சிவத்துவ விளக்கம் எனப்படும் பரமசுகம் “ என்று சிவஞான முனிவர் கூறுவர் . பரம சுகம்  – மேலான இன்பம் . இவ்வதீத நிலையில் அனுபவிக்கும் உயிர்க்குத் தன்னைக் குறித்து யான் எனது என்றலும் ,அநுபவப் பொருளாகிய இறைவனைக் குறித்து முன்னிலைப்படுத்து , நீ நினது என்றலும் ஆகிய வேற்றுமையுணர்ச்சி சிறிதும் நிகழாது என்பதாம் . இவ்வுண்மையைத் தாயுமான அடிகள் , “எனதென்பதும் போய் ,யானெனல் போய் ,எல்லாம் இறந்த இடங்காட்டும் நினதென்பதும் போய் ,நீயெனல் போய் நிற்கும் நிலைக்கே நேசித்தேன் “ என்று கூறுவர் .( இப் பாடலில் உள்ள  போய் என்னும் நான்கனையும்  பதிப்பிட்டார் , உரை எழுதினார் எல்லோரும் , பொய்  எனப்  பாடங்கொண்டு  வெளியிட்டனர் . இறைவனை நோக்கி ,” நீ யெனல் பொய் “ என்று கூறுதல் சைவ சித்தாந்த மரபிற்கு முரணுதலானும் , பொருட் சிறப்பின்மையானும் , சிறந்த பாடம் அன்று) எனது , யான் , நினது , நீ  என்னும் வேறுபாடு ஒழிந்து நிற்கும் நிலை என்பது பொருள் . இதுவே அதீத நிலையாகும் . இந் நிலையில் , உயிர் நுகரும் பேரின்பம் , கருவி கரணங்களைக் கடந்தது ஆகலின் , இதன் இயல்பு இத்தன்மைத்து எனக் கூற ஒண்ணாதது என்று திருமூலர் பிவருமாறு கூறுவர்; “மகட்குத்  தாய் தன் மணாளனோடாடிய , சுகத்தைச் சொல்லெனிற் சொல்லுமாறெங்கனே “ என்பது. இவ்வதீதமாகிய  பேரின்ப நிலை , தன்வயம் அழிந்து நுகர்தலாகிய  ஆனந்த பரவசத்தின் பின் நிகழ்வதாகலின் , இஃது அதன்பின் வைக்கப்பட்டது என்க . இதனால் பதிக இயைபுண்மை புலனாயவாறு அறிக .

எண்சீர்க்  கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 பாடல் : 91 .

மாறி  லாதமாக்  கருணை  வெள்ளமே

வந்து முந்திநின்  மலர்கொள்  தாளிணை

வேறி  லாப்பதப்  பரிசு  பெற்றநின்

மெய்மை  அன்பருன் மெய்மை  மேவினார்

ஈறி  லாதநீ  யெளியை  யாகிவந்

தொளிசெய்  மானுட  மாக  நோக்கியுங்

கீறி  லாதநெஞ்  சுடைய  நாயினேன்

கடையன்  ஆயினேன்  பட்ட  கீழ்மையே.

கருத்துரை :-    ஆண்டவன் திருவடியின்பப் பேற்றிற்கு உரிய சாதனங்களை மேற்கொள்ளத் தம் கருவி கரணங்கள் செம்மையுடையனவாக இல்லாமையால் , அழுதால் உண்ணைப் பெறலாமே என்று முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் கூறிய அடிகள், அங்ஙனம் இறைவன் அரிதிற் பெறுதற்கு இன்றி எளிமையில் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளி அருள் நோக்கம் நல்கியும் , இன்பப் பேற்றிற்குப் புறம்பாகிய நெஞ்சத்தோடு கூடிப் பொறுத்திருக்கலானேனே என்று ,இப் பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்கண் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  மாறு  இலாத  மா  கருணை  வெள்ளமே  =  வேறுபாடு  இல்லாத  பேரருட் பெருக்கே,

நின் மலர்கொள்  தாளிணை  =  உன்னுடைய  தாமரை மலர்  போன்ற  திருவடித்துணைக்கண்  ,

வேறு  இலாப்  பதப்  பரிசு பெற்ற நின் மெய்மை அன்பர்  =  வேற்றுமையின்றிக்  கலத்தற்குரிய  பக்குவத்தன்மை யடைந்த நின் மெய்யன்பர் ,

முந்தி  வந்து  =  முற்பட்டு  வந்து ,

உன்  மெய்மை  மேவினார்  =  நின் திருவடி  இன்பம்  எய்தினர்,

ஈறு  இலாத  நீ  =  அழிவில்லாத நீ ,

எளியை  ஆகி  ஒளி  செய் மானுடம்  ஆக  வந்து  நோக்கியும்  = 

எளிமையுடைமை  ஆகி  ஒளிபொருந்திய  மக்கள்  வடிவில்  ஞானாசிரியனாக  எழுத்தருளி  வந்து  அருட்பார்வை  நல்கியும்  ,

கீறு  இலாத  நெஞ்சு உடைய  நாயினேன்  =  பிளவு படாத  வலிய  நெஞ்சத்தையுடைய  நாய் போன்றவனாகிய  யான் ,

பட்ட  கீழ்மை  =  எய்திய  இவ்விழிவால் ,

கடையன்  ஆயினேன்  =  கடைப்பட்டவன்  ஆயினேன் என்பது.

விளக்கவுரை :-   இறைவனுடைய  எண்குணங்களுள் பேரருள்  உடைமை ஒன்று. அது, “மாக்கருணை” என்னப்பட்டது . அளப்பரிய அவ்வருளை மழையாகவும் கடலாகவும் கூறுதல் போல , ஈண்டு  வெள்ளமாகக்  கூறினர் . கற்பனை கடந்த சோதியாகவுள்ள ஆண்டவன் , கருணையே வடிவமாக  வுடையான் ஆதலின், இங்ஙனம் கூறினர் . கருணையை நிராகக் கொண்டு , அவ் வருண்மயமாகவுள்ள இறைவனை வெள்ளம் என்றார். உலகத்தில்  நீர்ப்பெருக்காகிய  வெள்ளம்  பெருகுதல் , சுருங்குதல் , வற்றுதல் ஆகிய வேறுபாடுகளை யுடையதாகும் . இறைவனாகிய அருள் வெள்ளம் அவ்  வேறுபாடுகள் இன்றி , எக்காலத்தும்  ஒரே படித்தாக நிறைந்து இருத்தலின் , “மாறிலாத மாக்கருணை  வெள்ளமே” என்றார் . “குறை விலா  நிறைவே “என்றதும் இக்கருத்துப் பற்றியே .

                       சார்ந்தாரை  இனிமை யுறுத்தும்பேரின்பத் தேன் நிறைந்த மலரின் தன்மையைக் கொண்டன என்பார் , “மலர்கொள்”என்றார். வேறு இலாமை  – பக்குவத்தன்மை ; ஈண்டு இருவினை யொப்பு , மலபரிபாகம் முதலிய இயல்புகளைக் குறிக்கும் ; இறைவனோடு இரண்டறக் கலத்தற்குரிய  தகுதி யென்பது கருத்து. இத் தகுதியால் ,பாசப் பிணிப்பு  ஒழிந்து , மெய்யுணர்வு பெற்றுத் தூயராயினர்  என்பதும், “மெய்மையன்பர் “ என்றதனால் , உண்மையாகிய அன்பு நெறியில் ஒழுகினார் என்பதும் பெறப்படும் . இச் செந்நெறிச் செலவினராகிய  மெய்யன்பர் , இப் பொய்யுலக வாழ்க்கையினின்றும் விடுதி பெற்று , விரைவில் முற்பட்டு எய்தினர் என்பார், “முந்தி வந்து “ என்றார். மெய்மை – ஆகு பெயரால் என்றும் நிலையுதலை யுடைய வீட்டு நிலையைக் குறிப்பதாகும்.. “நின் தாளிணை “ , “நின் மெய்யன்பர்” , “உன் மெய்மை “  எனச் சாதனம், நெறி, பயன் என்னும் மூன்றும் கூறப்பட்டபடியாம்.  இம் மூன்றிலும் சிவசம்பந்தத்தின் இன்றி யமையாமையில்  ஈடுபட்டு , “நின், உன் “ என விடாது கூறினர் .

                       “ஆதியும்  அந்தமும்  இல்லா அரும்பெருஞ்சோதி “ என்றபடி , “ஈறிலாத நீ “ என்றார். ஈறின்மை கூறவே , தோற்றம் இன்மையும் பெறப்படும் . மெய்யன்பர்க்குக்  காட்சிப்பட்டு அருள் நல்கும்  இறைவனுக்குத் தோற்றம் இன்மை கூறுதலினும் , ஈறின்மை கூறுதலே சிறந்ததாகும் . “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்னும் தமிழ் மறையும் நோக்குக . இதனால், காட்சி முதலியவற்றிற்கு  அரிய பொருள் ஆவான் ஈறிலாத  ஈசன்  ஒருவனே  என்பது தெளியப்படும் . அடிகள் பிறிதோரிடத்து , “அரியதில் அரி அரியோன் காண்க” என்று கூறியருளியதும் காண்க. இத்துணை அரிய பொருளாகவுள்ள இறைவன் ,கருணை காரணமாகத்  தமக்கு எளிமையிற்  காட்சியளித்தான் என்பது குறித்து , “எளியையாகி “ என்றார். ஈறிலாமையான் ஆகிய  அருமை  இறைவர்கு இயல்பு ஆதலையும் , மெய்யன்பர்க்கு வெளிப்படும் எளிமை  அருள் காரணமாக  நிகழ்தலையும் ,”எளியை யாகி” என்புழியுள்ள ஆக்கச் சொல் புலப்படுப்பதாகும் ,தமக்கு எளிமையாயது ,திருப்பெருந்துறையிற் குருந்த மரத்து நீழலில் ஆண்டவன் மக்கள் வடிவில் ஞானாசிரியனாக எழுந்தருளியது என்பார், “மாநுடமாக “எனவும் ,மனித வடிவில் எழுந்தருளினான் ஆயினும் ,தெய்வீக ஒளி அவ்வுருவில் திகழ்ந்தது. என்பார், “ஓளிசெய் மாநுடம்” எனவும் கூறியருளினர். இறைவனைப் பேரொளிப் பிழம்பாக முது நூல்கள் கூறும் . அந் நிலையில் காட்சியளிப்பின் , மக்கட் பிறப்பினராகிய  அடிகள் கட் புலனுக்கு அடங்காது எனக்கொண்டு ,அவ் வொளியைத் தன்னுள் அடக்கி நிற்கும் மாநுட வடிவம் ஆயினான் என்பது .  தெய்வத்தன்மையின் ஒரு சிறு கூறுடைய சாத்தன் என்பான் மக்கள் வடிவில் தோன்றி , மணந்த தேவந்தி என்பாளுக்குத் தன் இள நலத்தைக் காட்டுங்கால் , அவள் கண்கள் தன் ஒளி வடிவத்தைக் காண இயலா எனக் கண்டு ,தன் ஆற்றலால் பொறுப்பித்தான் என்று சிலப்பதிகாரம் கூறும்.  “தேவந்தி யென்பான் மனைவி யவளுக்குப் பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன் , மூவா விளநலங்காட்டி “ என்னும் பகுதியும் , அதற்கு , “மக்கள் கண்ணிற்குத் தெய்வயாக்கை காணப்பொறாதாகலின் இவள்கட்குப்  பொறுக்கக் கடவதென்று நிருமித்துக் கொண்டான்” என்று அடியார்க்கு நல்லார் எழுதிய உரையும்  ஈண்டு அறியத்தக்கன. இங்ஙனம் கடவுட் கூறு சிறிது அமைந்த சாத்தன்  ஒளியே மக்கள் கட்புலனாற் பற்றப்படாதது ஆகுமாயின் , இறை இலக்கணம் முற்றும் அமைந்த சிவபெருமான் ஒளிவடிவம் எங்ஙனம் கட்புலனுக்கு அடங்கும் என்பது உணரத்தக்கது .  இனி, “ஒளிசெய் மாநுடம் “ என்பதற்கு , ஞான ஒளியை அடிகளுக்கு அருளும் ஞானாசிரிய வடிவம் என்று பொருள் கோடலும் பொருந்தும் . ஒளி   –  ஞானம் . மல இருளை யொழித்து விளங்குதலின் , ஞானம் ஒளி எனப்பட்டது  என்க .

                 முதல் அடியில் மெய்யன்பர் தாமே இறைவனை அணுகினார் என்பது தோன்ற , அவர் செயலாக , “முந்தி வந்து “ எனவும் , மூன்றாம் அடியில்   அடிகள்பால் உள்ள அருள் காரணமாக இறைவன் நிலவுலகத்து  எளி வந்தனன் என்பது தோன்ற , இறை செயலாக ,”மாநுடமாக வந்து “ எனவும் கூறிய நயம் உணர்ந்து இன்புறத்தக்கது. அங்ஙனம் தானே வந்து காட்சி அளித்த அளவில் அமையாது , தம் உயிரைத் தூய்மைப் படுத்தற்கு உரிய  அருள் நோக்கம்  ஆகிய நயன தீக்கையும் செய்தனர் என்பார்,  “நோக்கியும்” என்றார்.  “அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்த” என்று  திருத் தொண்டர் புராணம் கூறியதும்  நயன தீக்கையே என்க . நோக்கியும் என்புழி ,உம்மை சிறப்புப் பொருளில் வந்தது .

         இங்ஙனம் ஈறிலாத அரிய பொருளாகிய இறைவன் , தம் பொருட்டு எளியனாதல் , ஒளிசெய் மாநுடமாதல் , வலிய வருதல் , நோக்குதல் ஆகிய குணஞ் செயல்களாற் கருணை காட்டிப் பேருதவி புரிந்தும் , இந் நன்றியைச்  சிறிதும் நினையாத வன் நெஞ்சு  பிளக்கப்பட்டிலது என்பார், “கீறிலாத நெஞ்சு”ஏன்றார். நாய் இழிந்த பிறப்புடையதாயினும் , நன்றி மறவாமையில்  சிறந்ததாகும் . யான் நன்றி மறக்கும் நாயின் தன்மை யுடையேன் என்னும் குறிப்புத் தோன்ற , “கீறிலாத நெஞ்சுடை நாயினேன்” என்றார். “கீறிலாத நெஞ்சுடையன் ஆயினேன் “எனப் பாடம் கொண்டு முடித்தலுமாம். .

           “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்  உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு “ என்றபடி , உய்தியில் குற்றமாகிய நன்றி மறத்தலால் , இழிவு எய்திற்று என்பார் , “பட்ட கீழ்மை “ எனவும் , அது காரணமாக உயிர்த் தொகுதியில் கடைப்பட்டவன்  ஆயினேன் என்புழி , மூன்றான் உருபு தொக்கு நின்றது .

              இதன்கண் , “வேறிலாப் பதப் பரிசு பெற்ற நின் மெய்மையன்பருன் மெய்மை மேவினார் “ஏன்றதனால் , அவர் எய்தியது அதீதமாகிய ஆனந்தம் என்பது பெறப்படுதலின் , ஆனந்தா தீதம் என்னும் பதிகம் நுதலிய பொருளும், “மாறிலாத மாக்கருணை பாராட்டியமையால் பத்தியும் , “கீறிலாத நெஞ்சுடையேன் “ஏன்றதனால் வைராக்கியமும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாயாவாறு அறிக.

                                      ******************************************

பாடல் :92 .

மையி  லங்குநற்  கண்ணி  பங்கனே

வந்தெ  னைப்பணி    கொண்ட  பின்மழக்

கையி  லங்குபொற்  கிண்ணம்  என்றலால்

அரியை  என்றுனைக்  கருதுகின்றிலேன்

மெய்யி  லங்குவெண்  ணீற்று  மேனியாய்

மெய்மை  அன்பருன்   மெய்மை  மேவினார்

பொய்யில் அங்கெனைப்  புகுத  விட்டுநீ

போவ  தோசொல்லாய்  பொருத்தமாவதே.

கருத்துரை :-  அரிய பொருளாகிய இறைவன் , தம் பொருட்டு மாநுட வடிவில் எளியனாய் வந்து அருட் பார்வை நல்கியும்  நன்றி மறந்தவனாயினேன் என்று முன்னைத் திருப்பாட்டில் இரங்கிக்கூறிய அடிகள் , அங்ஙனம்  நன்றி மறத்தலே  யன்றி , ஆட்கொண்டருளிய அப் பெருமானது அருமைப் பாட்டையும் நினையாமல் , மிக எளிய  பொருளாகவும்  கருதலானேனே என்று இத் திருப்பாட்டில் மீண்டும் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  மை இலங்கு நல் கண்ணி பங்கனே  =  அஞ்சனம் விளங்குதற்கு ஏதுவாகிய அருள் விழிகளையுடைய அம்மையை ஒரு கூற்றிலுடையவனே,

மெய் இலங்கு  வெள் நீற்று மேனியாய்  =  திருமேனியில்  விளங்குகின்ற திரு வெண்ணீற்றினால் வெண்ணிறமுடையாய் ,

வந்து  என்னைப் பணி கொண்டபின்  =  நீ  ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து அடியேனை ஆட்கொண்டருளிய  பின்னர் ,

மல கை இலங்கு  பொன் கிண்ணம் என்று அலால்  =  சிறு குழந்தை தன் கையிலுள்ள ஒளி செய்கின்ற பொற்கிண்ணத்தை எளிமையாக எண்ணுதல் போல  எளிமையாக எண்ணினேன் அல்லாமல் ,

அரியை யென்று உன்னை கருதுகின்றிலேன்  = கிடைத்தற்கு அரிய பொருள் ஆவாய் என்று நின்னை நினைத்தேன் அல்லேன்,

மெய்மை அன்பர் உன் மெய்மை மேவினார்  =மெய்யன்பர் நின் வீட்டின்பமாகிய அழி வில் வாழ்க்கையை அடைந்தனர் ,

என்னைப்  பொய்யில் புகுதவிட்டு  = சிறியேனைப் பொய்மை வாழ்க்கையில் புகும்படி விட்டு ,

நீ அங்குப் போவது பொருத்தம் ஆவதே   =  நீ சிவபுரத்திற்கு எழுந்தருளுதல் பொருத்தம் ஆகுமா ?,

சொலாய்  = கூறியருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  அஞ்சனம் அம்மையின் திரு விழிகளில் தோய்ந்து விளக்கம் பெற்றது என்பர் , “மை இலங்கு “ என்றார் . இலங்கும் கண் என்புழி , எச்சம் காரியப்பொருட்டு . அருட்குணமே சிவசத்தியின் வடிவம் ஆகும் . அவ் அருட்பண்பைத் திருவிழிகள் மூலம் புலப்படுத்தி ,உயிர்த் தொகுதிகளை உய்யக் கோடலின் , அம்மையின் கண்களை , “ நற்கண்” என்றார். நன்மை – அருட்குணத்தால் ஆகிய சிறப்பு .   அஞ்சனத்திற்கு  விளக்கமும் , ஆருயிர்த் தொகுதிக்கு  அருளும் நல்கும்  கண்களை  உடையவள்  என்றமையால் , அம்மை, தன்னைச் சார்ந்த பொருள் யாதாயினும் , அதனை விளக்க முறுத்தும்,சாரக்கடவ பொருள்களில் கருணை  காட்டியும் ஆதரிக்கும் இயல்புடையாள்  என்பது பெறப்படும் .

                     ஆண்டவன்  வலிய வந்து தம்மை ஆட்கொண்டதற்கு ஏது ,தம் தவம் அன்றி என்பதும் , அப் பெருமானிடத்து இயல்பின் அமைந்துள்ள கருணையேயாம் என்பது  புலப்படுத்துவார் , அருள் உருவினளாகிய “கண்ணி பங்கனே” என்றார், ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய ஞான்று காட்சிப்பட்ட திருக்கோலம் , அடிகள் உள்ளக்கிழியின் உருவெழுதியாங்கு , அக் கண்ணிற்குப் புலப்பட்டமையின் , “மெய்யிலங்கு வெண்ணீற்று மேனியாய் “ என்றார்.  மெய் –  ஆண்டவன் திருமேனி , மேனி – நிறம் , ஆண்டவன் செம்மேனி யெம்மானாதலின் , திருநீற்றினால் வெண்ணிறம் காணப்பட்டதென்க, ஆண்டவன் போகியா யிருந்துயிர்க்குப்  போகத்தைப் புரிதலும் , யோகியாய்  யோகமுத்தி  யுதவுதலும் உடையனாதலின் , அவ்விரண்டு தன்மைகளும் புலப்பட , முறையே , “மையிலங்கு நற் கண்ணி பங்கனே” எனவும் , “வெண்ணீற்று மேனியாய் “  எனவும்  கூறுவாராயினர் , வெண்ணீறு –  ஞான யோகத்தின் இலச்சினையாகும்.

                 ஆண்டவன், தம்மை ஆட்கொள்ளுதற்கு முன்,  அப் பெருமானுடைய  பெருமைகளை நூலுணர்ச்சி முகமாக ஆராய்ந்து, அருமை உடையன எனத் தெளிந்து போற்றியதாம் , அவ் விறைவன் வலிய வந்து பணி கொண்ட பின் , எளிமையாகக் கருத நேர்ந்ததே என இரங்குவார் , “வந்தெனைப் பணிகொண்ட பின் “ என்றார். நூலறிவு பேசிய அளவில் இறைவன் பெருமைகளை உணர்தலினும் , இறைவன் காட்சி நல்கி ஆட்கொண்டபின் உணர்தலே சிறந்ததாகும் . உலகியல் இதற்கு மாறாகும் . மக்களுள் ஒரு தலைவனைப்  புனைந்துரைப்பார் வாயிலாகக் கேட்பதினும் , நேரிற் காண்டலிற் குறைவே காணப்படும். எல்லாம் வல்ல கடவுளின் பெருமை அங்ஙனமன்று . கேள்வியளவினும் , அநுபவக் காட்சி எத்துணையோ சிறந்ததாகும் . அதற்கு மாறாக ,நூலறிவிற் கேட்கப்பட்ட அருமையை , அநுபவ உணர்வில் எளிமையாகக் கோடற்கு ஏது , என் அறியாமையே என்று இரங்குவாராயினர் . “பணி கொண்ட பின்” என்றதனால் ,நுண்ணிய இக் கருத்துகளைப்  புலப்பட வைத்தார் என்பது.

                 அடிகள், தம்மை ஆட்கொண்டபின் ஆண்டவனது அருமை  அறியாமைக்குக் காட்டிய எடுத்துக் காட்டு  நினைந்து நினைந்து இன்புறத்தக்கது . மழ என்பது குழந்தையை உணர்த்தும் . “வானுந்து மாமதி வேண்டியழு மழப்போலும்” என்னும் திருக்கோவையிலும்  இப் பொருட்டாதல் காண்க. அறியாப்பருவத்துக் குழந்தையின் கையில் , அதன் மகிழ்ச்சி கருதிப் பொன்னால் ஆக்கப்பட்ட  விலையுயர்ந்த  ஒரு கிண்ணம் கொடுக்கப்பட்டால் , அதன் அருமையை அக் குழந்தை அறியாவாறு போல என்பார், “மழக் கை இலங்கு  பொற்கிண்ணம் என்றலால் “ என்றார். இவ் எடுத்துக் காட்டிற் பிறிதோர் உண்மையும் புலனாம். அது, பொற்கிண்ணத்தின் அருமை அறியாத அம்மழவிளங் குழந்தை , அதனைக் கை நழுவவிட்டால் , அது வீழ்ந்து சிதைந்து விடுமே  என்னும் கவலை , தாய் தந்தையர்க்கு ஏற்பட்டு ,அங்ஙனம் வீழா வாறு அக் குழந்தை செல்லும் இடன் எல்லாம் தாமும் சென்று , நழுவ விடாமல் தாங்கித் துணை நின்று பாதுகாத்தல் போல ,ஆண்டவன் தன்னைத் தமக்குத் தந்த அளவில் அமையாமல் , பேணிக்கோடற் பொருட்டுத் தாம் செல்லுழி யெல்லாம் புறம் போந்து பாதுகாக்கும் கடப்பாடும் உடையனாவன் என்பதாம். இது கருதியே பிறிதோரிடத்து அடிகள் , “தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே” என்று அருளிச் செய்வாராயினர் . ஆண்டவன் ,தம் புறம்  புறம் திரிதற்கு ஏது, அடிகளுக்குத் தான் அருளிய அருளமுதத்தை அடிகள் நழுவவிடாமல் துய்த்து இன்புறுதற் பொருட்டு என்பது.  மழக்கை என்பதற்கு இங்ஙனம் பொருள் கொள்ளாது , அடிகளது மென்மையான கை என்று கூறுவாறும் உளர். அடிகள் தம் கையை அங்ஙனம் கருதி யிருப்பாராயின் , அது எடுத்துக் காட்டாதல்  அமையாமையின் ,அது பொருள் அன்மைஅறிக.

            “அரியை யென்றுனைக் கருதுகின்றிலேன் “ என்று பின்னர்க் கூறப்பட்டிருத்தலின் , “என்று அல்லால்”  என்பது  என்று எளிமையாகக் கருதியதன்றி என்னும் பொருட்டாம்.  அரியை பெறுதற்கரியை . “மெய்மை அன்பர் உன் மெய்மை மேவினார்” என்பதற்கு , முன் உரைத் தாங்கு உரைத்துக் கொள்க . மெய்யன்பர் பொய்மையாகிய வீட்டிபத்தை எய்தினாராக ,அன்னார் குழுவுட்பட்ட அடியேனைப் பொய்மையாக்கிய இவ்வுலக வாழ்க்கையில் இருத்திக் கைவிட்டுச் சேறல் நின் அருட்குணத்திற்குப் பொருந்துமா என்பார், “பொய்யில் புகுதவிட்டுப் போவது பொருத்தமாவதே” என்றார். அங்குப் போவதென இயைக்க ,  அங்கு –  சிவபுரமாகிய அவ்விடத்து. போவது – போதல் ; தொழிற் பெயர் . பொருத்தமாவதே என்புழி , ஏகாரம் வினாப்பொருட்டு. என்னை விட்டு நீ போவதோ என்றதனால் , நிங்காட்சியில் ஈடுபட்டிருக்கப்பெறின் , இவ்வுலக வாழ்க்கையும் எனக்கு இனிதாகும் என்று அடிகள் கருதினாரென்பது குறிப்பிற் கொள்ளத்தக்கது, “நரகம் புகினும் எள்ளேன் திருவருளாளே யிருக்கப்பெறின்” என்பதும் அடிகள் அருண்மொழி , “பொருத்தமாவதே” என வினா வடிவில் கேட்ட அடிகள் , பொருத்தமாகாது என்று ஆண்டவன் திருவுள்ளக் குறிப்புணராமல்  தாமே தீர்மானித்தல் தக்கதென்றெனக் கொண்டு, அவ் வினாவிற்கு உரிய விடையை ஆண்டவனே அருளல் வேண்டுமென்பார். “சொல்லாய்” என்றார் . சொல்லாய், முன்னிலை ஏவல் வினைமுற்று.

                இதன்கண்,  “மழக்கை யிலங்கு பொற்கிண்ணம் “ என்ற எடுத்துக்காட்டினால் ஆண்டவன் பெறுதற்கரியன்  என்பதும் , “ மெய்மை யன்பருன் மெய்மை மேவினார் “ என்றதனால்,  அதீதமாகிய ஆனந்தத்தின் இயல்பும் பெறப்படுதலின் , ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருளும், “பொய்யிற் புகுதவிட்டு “ என்றதனால் , வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலனாதல் அறிக.  

                                             &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 பாடல் :93 .

பொருத்தம்  இன்மையேன்  பொய்மை  யுண்மையேன்

போத  வென்றெனைப்  புரிந்து  நோக்கவும்

வருத்தம்  இன்மையேன்  வஞ்சம்  உண்மையேன்

மாண்டி  லேன்மலர்க்  கமல பாதனே

அரத்த  மேனியாய் அருள்செய்  அன்பரும்

நீயும்  அங்கெழுந்  தருளி  இங்கெனை

இருத்தி   னாய்முறை  யோஎன்  எம்பிரான்

வம்ப   னேன்வினைக்  கிறுதி  யில்லையே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருமைப்பாட்டை உணராமையோடு , மிக எளிய பொருளாகவும் நினையலானேன் என்று இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் என் அறியாமையால் நினைந்ததை உணர்த்தும் , என்னை வருக என்று விரும்பி , அருள் நோக்கம் செய்யவும் , அப் பெருமானை அணுகுதற்கு முயலாமல் வஞ்சனைக் கொள்கலனாக வாழ்ந்திருக்கலானேனே  என்று தம் வினை வலியை நினைந்து துன்புறுகின்றார் .

பதவுரை :-   கமல மலர்ப் பாதனே  =  செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையுடையாய் ,

அரத்த மேனியாய்  = செந்நிறமான திருமேனியை யுடையாய் ,

என் எம்பிரான்  = எனக்குச் சிறப்புரிமையுடைய எங்கள் தலைவனே ,

பொருத்தம் இன்மையேன்  = திருவருட் பேற்றிற்கு உரிய தகுதி இல்லாதேன் ,

பொய்மை உண்மையேன்  = பொய் யொழுக்கத்தையும் உடையேன் ,

என்னைப் போதா என்று புரிந்து நோக்கவும்  =  அத்தகைய சிறியேனாகிய என்னை வருக என்று விரும்பி அருள் நோக்கம் நல்கவும் ,

வருத்தம் இன்மையேன்  =  வருதற்கு முயற்சி இல்லாதேன் ,

வஞ்சம் உண்மையேன்  =  ஏமாற்றும் குணமுடையேன் ,

மாண்டிலேன்  =  அதனால் இறந்து ஒழிந்தேனும் அல்லேன் ,

அருள் செய் அன்பரும் நீயும் அங்கு எழுந்தருளி  = நின்னால் அருள் செய்யப்பட்ட மெய் அன்பரும்  நீயும்  சிவபுரத்திற்கு எழுந்தருளிச் சென்று,

இங்கு என்னை இருத்தினாய்  – இப் பொய்யுலக வாழ்வில் சிறியேனை இருக்கப் பணித்தாய் ,

முறையோ =  இது நியாயமாகுமா ?

வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே  =  பயனிலியாகிய என் வினைக்கு அழிவு கிடையாதா? என்பது.

விளக்கவுரை :-  ஆண்டவன் ஞானாசிரியனாக எழுந்தருளிய பொழுது, அடிகள் விரைந்து திருவடிக்கண் வீழ்ந்து வணங்கினமையின் , முதலில்  திருவடிக்காட்சியும், பின்னர் எழுந்து நின்று கண்குளிரத்  தரிசித்தமையின், அடுத்து அப் பெருமானது திருமேனிப் பொலிவும் , தம் உள்ளத்தில் விளக்கம் உற்றனவாக முறையே , “மலர்க்கமல பாதனே” எனவும்,  “அரத்த மேனியாய்” எனவும் கூறியருளினார் . மேலும் காட்சி அளவில்  திருமேனியில்  ஈடுபட்டமையான் , கட் பொறிக்குப் புலனாய் நிற வொளியைக் குறித்து , “அரத்த மேனியாய்” எனவும் , திருவடிக்கண் தம் தலை தோய வீழ்ந்து வணங்கியமையான் கட்புலனும் , மெய்ப்பொறியும் முறையே , உருவத்தினும் ஊற்றின்பத்தினும் ஈடுபட்டமை குறித்து ,”மலர்க் கமல பாத்னே “ எனவும் கூறினர் என்பதுமாம். கமல மலரை ஒப்புக் கூறினமையால் மென்மைத் தன்மையாகிய ஊறும் ,நிறவொளியாகிய உருவமும் கொள்ளப்பட்டன .

                பொருத்தம் –  தகுதி . ஆண்டவன் அருட் பேற்றிற்கு உரிய தகுதியாவது , சரியை முதலிய உண்மைத் தவ ஒழுக்கமும்  ஆகும் . அஃது இல்லாமை , அப்பொழுது அருட்பேற்றிற்கு ஆளாக்காது ஆயினும், அதனால் ஒருகா மேற்கொண்டு உய்தி பெறுதற்குத் தட்டின்றாம், அம்மட்டில் அன்றி, அத் தவ ஒழுக்கத்திற்கு மாறாகப் பொய் ஒழுக்கத்தையும் உடையவன் ஆயினேன் ; எவ்வாறு உய்வேன் என்பார், “பொருத்தம் இன்மையேன் ,பொய்மை உண்மையேன்” என்றார். “பொய்மை உண்மையேன் “ என்புழி, எச்சவும்மை தொக்கு நின்றது.  “நல்லது செய்தல் ஆற்றீராயினும் , அல்லது செய்தல்  ஒப்புமின் “ என்றபடி, நல்லது செய்யவில்லையானால் , அதனால் விளையும் இன்பப் பேறு இழந்ததாக முடியும் ; பின் ஒருகால் நல்லது செய்தற்கும் தட்டின்றாம் . அம்மட்டில் அன்றி , அல்லதும் செய்யின் , துன்பநுகர்ச்சியோடு , பிறிதொருகால் உய்தி பெறுதற்கும் வழியின்றாய் முடியும் என்பது குறிப்பு

                 தகுதியின்மையோடு  பொய்யொழுக்கமும் உடையனாக இருத்தலை  உயிர்க்கு உயிராக நின்று உணர்ந்து வைத்தும் , கருணைகாரணமாக  அருட் குரவனாக எழுந்தருளி வண்ணப் பணித்தென்னை வருக என்று விரும்பி அழைத்து , அருள் நோக்கம் நல்கினாய் என்பார், “போதவென்றெனைப் புரிந்து நோக்கவும்” என்றார்.  அறநோக்கமும் மறநோக்கமும் என இருதிறத்து நோக்கங்களுள், எனக்கு நல்கியது அறநோக்கம் என்பார், “புரிந்து நோக்கவும் “ என்றார் . புரிதல் –  விரும்புதல். உலகியலில் ஒரு தலைவன் தன் கீழ்ப்பட்ட ஒருவனை வாவென அழைத்தற்கும் பார்த்தற்கும் ஏது , அருளும் ஆகலாம் வெகுளியும் ஆகலாம் , அவ்வேது இன்னதென அத்தலைவன் முகக் குறிப்பால் அறிதல் கூடும் ; அடுத்தது காட்டும் பளிங்கு போல முகம் காட்டும் ஆதலின் , வெகுளி காரணம் என்பது உணர்ந்தால் ,என்ன தீங்கு நேருமோ என ஐயுற்று , அத் தலைவனை அவன் அணுகுதற்கு மனம் ஒருப்படான் . அருள் காரணம் என்பது புலப்பட்டால், சிறிதும் தாழாது நெருங்க முயல்வான் . இம்முறையில் ஆண்டவன் திருவுள்ளக் குறிப்பு , அருள் காரணமாக நிகழ்ந்தது என்பதை,,”புரிந்து நோக்கவும்” என்பதனால் உணர்ந்த அடிகள் ,சிறிதும் தாழாது , இறைவனை அணுகிப் பணிபுரியும் கட்டுப்பாடுடையராகவும்,   அக்கடமை குறித்து முயலாமை பற்றி இரங்குவாராய், “வருத்தமின்மையேன்” என்றார். வருத்தம் – முயற்சி . “ஆற்றின் வருந்தா வருத்தம்” என்புழி,அப் பொருட்டாதல் அறிக. அங்ஙனம் முயற்சி மேற்கொள்ளாமல் இருத்தல் மடிமைக் குற்றத்தளவில் அமையும் . அம்மட்டில் இல்லாமல் உண்மையை மறைத்துக்காட்டி ஏமாற்றும் வஞ்சகச் செயலும் உடையன் ஆயினேன் என்பார், “வஞ்சமுண்மையேன்” எனவும் கூறினர் .

                    இனி, திருவருட் பேற்றிற்கு உரிய தகுதியில்லேனாயினும் , தகுதி பெற முயலலாம் . அம் முயற்சியும் இல்லேனாயினேன் என்பார் , “பொருத்தமின்மையேன் வருத்தமின்மையேன் “எனவும் பொயொழுக்கம்  உடையேன் ஆயினும், அதனை உயிர்க்கு உயிராக விளங்கும் ஆண்டவன் அறியக்கூடுமே என அஞ்சிப் பிழை யொறுக்க  வேண்டலாம் ; அங்ஙனம் வேண்டாமல் அவ்வொழுக்கத்தையும் மறைத்து ஏமாற்ற நினைக்கின்றேன் என்பார், “பொய்மை யுண்மையேன்  வஞ்சமுண்மையேன் “ எனவும் அடிகள் கருதினார் எனக் கொண்டு , நிரனிறைப் பொருள்கோளாகக் கோடலுமாம்.

                       எவ்வாற்றானும் உய்தி பெறுதற்கு உரிய நெறி காணாமைக்கு ஏதுவாகிய தீவினைப் பயனாகிய இவ் வூனுடலாதலின் , இதனை ஒழித்துவிட்டால், பிற்றைப் பிறப்பிலாவது திருவருட் பேற்றிற்கு இலக்காகலாமே என்பார் , “மாண்டிலேன் “ என்றார்.

                       உலகத்தில் ஈகை இரப்போன் தகுதி குறித்தே நிகழும் என்பது இன்று ஈவோன் தகுதி குறித்தும் நிகழ்தல் உண்டு . சேர அரசனிடத்து ஒளவை சுரப்பாடு கேட்க , அவன் பொன்னாடு கொடுத்தான் என்பர் . “இரப்பவர் என் பெறினும் கொள்வர் . தாமுணர்வர் தங்கொடையின் சீர் “  இம்முறையில் அடிகள் , திருவருட் பேற்றிற்குஉரிய தகுதி தம்பால் இல்லை  என்பதைத் தெளிந்து தம் நிலைக்கு இரங்கினார் ; ஆயினும் தம்மை வலிந்து ஆட்கொண்டு அடியரிற் கூட்டிய ஆண்டவனது அளவில்லாத பெருமைக்கு ஏற்ப , அப் பெருமானே தம் வினை மாசு ஒழித்து அழைத்துக்கொள்ளல்முறையாகவும் அங்ஙனம் செய்யாமை குறித்துப் பின்வருமாறு  இரங்குவார் ஆயினர்.

              “அருள் செய் அன்பர்” என்றதனால் , நின்னால் ஆட்கொள்ளப்படுங்கால் , யான் மாத்திரம் நின் அருட்கு இடனாயது இல்லையோ என்பது அடிகள் குறிப்பு . ஒன்று அடியார் சூழலில் என்னை இருத்தலாம் ; அல்லது அவரையெல்லாம் சிவபுரத்திற்கு உய்த்து , நீ சிறிது தாழ்ந்து , ஆட்கொள்ளப்பட்ட என்னைத் தகுதிப்படுத்துப் பின் அழைத்துச் செல்லலாம் , அங்ஙனம் ஏதும் செய்யாது , யான் காண அம்மெய் யன்பரோடு  நீயும் எழுந்தருளிச் சென்றனையே என்பார், “அன்பரும் நீயும்  அங்கெழுந்தருளி”என்றார். “நீயும் அங்கெழுந்தருளி “ என்றாது குழந்தை யன்பிற் கூறிய மொழியாகும் . ஓர் இன்பநிலையத்திற்குச் செல்லும் தாய் தந்தையர் ,தம் மக்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்லுங்கால் , ஒரு மகனை விட்டுச் சேறல் தகாது. எக் காரணத்தாலாவது அங்ஙனம் விட நேர்ந்தால்  “ நீ பின்னர் வருக” என்று கூறலாம் . அப்படிக் கூறுதல் , அம்மகனுக்குச் சிறிது ஆறுதலாக இருக்கும் ; அதுவும் இன்றி , “நீ இங்கு இருக்க” என்று இருத்திச் சேறல் , இருமுதுகுரவர் அன்பிற்கு மாறாம் அன்றோ ? அங்ஙனமே , ஈண்டு அடிகள் தம்மை விட்டு , ஏனை அன்பருடன் ஆண்டவன் சிவபுரத்திற்கு எழுந்தருளினாலும் , “பின்வருக” என்று பணியாமல் ,” இங்கு இருக்க “ என்று கட்டளையிட்டுச் சென்றது, தமக்கு வருத்தம் விளைத்ததாகக் கொண்டு , “இங்கெனை இருத்தினாய் முறையோ” என்றார். ஈண்டு “ என் எம்பிரான் “  என்றது , ஏனையடியார்க்குத் தலைவனாதலே யன்றி  எனக்குச் சிறப்புரிமைத் தலைவன் அன்றோ? அங்ஙனமாகவும் , இங்ஙனஞ் செய்தல் முறையாகுமோ  என்னும் குறிப்புத்தோன்ற நின்றது . இவ்வுலக வாழ்க்கையை உவர்த்தும் , இறையடி நீழல் பெறாமலும்  பயனின்றி இருத்தல் பற்றி அடிகள் , தம்மை “வம்பனேன்” என்றார். ஒருவாறு என் வினையெச்சம் இப்பேற்றிற்குத்  தடையாகுமாயின் , நின் அருள்  நோக்கிற்பட்டும் , அவ் வினைக்கு அழிவு இல்லையேல் , இனி, அதற்குத்தான் முடிவு இல்லையோ என்பார், “வினைக்கு இறுதி யில்லையே” என்றார் . இல்லையே என்புழி, ஏகாரம் வினாப்பொருட்டு .

இதன்கண், “அருள் செய் அன்பரும்  நீயும் அங்கெழுந்தருளி “ என்றதனால் குறிக்கப்பட்ட வீட்டின்பம் அதீத நிலையினதாதலின் , அதுவே பெறத்தக்கது என்பது பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                        *****************************************

பாடல் :94 .

இல்லை  நின்கழற்  கன்ப  தென்கணே

ஏலம்  ஏலும்நற்  குழலி  பங்கனே

கல்லை  மென்கனி  ஆக்கும்  விச்சைகொண்

டென்னை  நின்கழற்  கன்ப  னாக்கினாய்

எல்லை  இல்லைநின்  கருணை  எம்பிரான்

ஏது கொண்டு  நான் ஏது  செய்யினும்

வல்லை  யேஎனக்  கின்னும்  உன்கழல்

காட்டி  மீட்கவும்  மறுவில்  வானனே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் அருள் நோக்கம் நல்கியும் முயாலாமல் பொய்யும் வஞ்சகமும் உடையவனாய் வாழ்ந்திருக்கலானேனே என்று வருந்திக் கூறிய அடிகள் , இத்  திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி,,என்னை அரிதின் முயன்று அன்பனாக்கினாய் ஆதலானும் , நின் கருணைக்கு  எல்லையில்லை யாதலானும் , என் பணி யாதாயினும் , அதனை யேற்று நின் திருவடிகளை மீட்டும் காட்சிப்பட அளித்துக் காத்தருளல் வேண்டும் என வேண்டுகின்றார்.

பதவுரை :-  மறு இல் வானனே  =  குற்றமற்ற நுண்ணிய பரவெளியில் உள்ளவனே,

ஏலம் ஏலும் நல் குழவி பங்கனே =  மயிர்ச் சாந்து அணிந்த அழகிய கூந்தலையுடைய  அம்மையை  ஒருபால் உடையவனே,

எம்பிரான்  = எம் பெருமானே ,

நின் கழற்கு அன்பு என் கண் இல்லை = நின் திருவடிக்கண் மெய்யன்பு என்பால் இன்று,

கல்லை மென்கனி ஆக்கும் விச்சைகொண்டு  = வலிய கல்லைக் கனிந்த பழம் ஆக்கும் வித்தையிற் பயின்று ,

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்  =  அடியேனை நின் திருவடிக்கு அன்புடையனாகச் செய்தனை ,

நான் ஏது கொண்டு ஏது செய்யினும்  = யான் எதனைக் கருவியாகக் கொண்டு எச் செயலைச் செய்யினும் ,

நின் கருணை எல்லை இல்லை  =  நின் பேரருளுக்கு வரம்பு கிடையாது ஆதலின் ,

எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்கவும் வல்லையே  =

சிறியவனாகிய எனக்கு மீண்டும் நின் திருவடிக் காட்சியளித்து இவ்வுலக வாழ்க்கையினின்று திருப்பவும் ஆற்றல் உடையை ஆவாய் அன்றோ? என்பது.

விளக்கவுரை :-  மறுவில் வான் –  நுண்ணிய ஞானப் பரவெளி. பருப்பொருளாகிய வானின் வேறு என்றற்கு , “மறுவில்” என்னும் அடை புணர்க்கப்பட்டது . கோள் , நாள் முதலிய மண்டலங்கள் இல்லாமல் , தூய ஞான மயமாக வுண்மையின் மறுவிலதாயிற்று  என்க. அதனையே ஈண்டு, “மறுவில்  வான்” எனவும் , ஆங்கு விளங்கும் இறைவனைக்குறித்து , “மறுவில் வானன்” எனவும் கூறியருளினார் . இஃது இறைவனது சிறப்பு இலக்கணம் கருதிக் கூறியபடியாம் . இறைவனுக்கு ஆகமங்களிற் கூறப்பட்ட சிறப்பு,பொது என்னும் இருவகை இலக்கணங்களுள் சிறப்பாவது , குணம் குறி இன்றி  எல்லாவற்றையும் கடந்த நிலையாகும் . பொதுவாவது , சத்தியுடன் கூடி ஐந்தொழில்களையும் செய்யும் நிலையாகும் . “ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே “ என்றது பொது இலக்கணங் கருதிக் கூறியபடியாம் .

                 “அன்பது” என்புழி, அது, பண்டறி சுட்டாக நின்று , வீட்டின் பத்திற்கு ஏதுவாகிய மெய்யன்பை உணர்த்தும் . அன்பு என்பது ஒருவருக்குத் தொடர்புடையாரிடத்து உண்டாகும் காதலாகும். இஃது உலகியலில் தாய் தந்தை , மனைவி மக்கள் முதலியோரைப் பற்றிஉண்டாகி வளர்ந்து , அன்னாரெல்லாரும் உண்மையில் தொடர்பு இலராய்  ஒழிய , முடிவில் , என்றும் நிலையான தொடர்புடைய ஆண்டவனைப் பற்றி நிலை பெறுவதாகும் . இந் நிலையில் இது மெய்யன்பாகும் . ஆகவே , அன்பு நிகழ்வதென்றால்  அதற்கு இடனும் வினைமுதலும் இன்றியமையாதன . ஈண்டு , இடன் தாம் முடிவாகக் கண்ட இறையடியாதலின் , “நின் கழற்கு” எனவும், வினை முதலாகத் தம்மைக் குறித்து , “என்கணே” எனவும் கூறினர். பொருளுடைப் பெரியோன் ஒருவன் தன்பாற் பொருளுண்டு என்று கூற நேர்ந்தால் ,அக்கருத்துக் குறிப்பிற் புலப்படக் கூறுவன் . அன்றி , என்பாற் பொருளுண்டு என்று வெளிப்படக் கூற நாணுவன் . பொருளின்மை  கூற நேர்ந்தால் ,”யான் பொருள் உடையேனல்லேன் “ஏன வெளிப்படக் கூறுவன் . இது, “பணியுமா மென்றும் பெருமை” என்றபடி , பெருமைக் குணத்தின் பயனாகும் . இம்முறை பற்றியே ,தம்பால் அன்பு இன்மை கூறத்துணிந்த அடிகள் , வெளிப்படையாக ,”இல்லை நின்கழற் கன்பதென்கணே” என்று கூறுவாராயினர் .

                    ஆண்டவனே , நின் திருவடிக்கண் உண்மை அன்பில்லேனாகிய என்னை , அன்பன் ஆக்க வேண்டுமானால் , கல்லினும் வலிய என் நெஞ்சத்தைக் குழைவித்தன்றோ செய்தல் வேண்டும் . செயற்கரிய இச்செயலைச் செய்தற்குப் பொதுவாக எல்லா ஆற்றலும் உடைய நீயும் ஓர் அரிய வித்தையிற் சிறப்பு முறையில் பயின்ற பின்னரே, அதன் முதிர்ச்சியினால் தலைப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றேன் என்பார், “கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு” என்றார். வன்மையோடு முதிரும் பழங்களின் நீக்குதற்கு , “மென்கனி’ என்றார். “மென்கனி”என்றதனால் , வலிய கல் என்பது பெறப்படும் . கல்லினும் மென்மைத் தன்மையுடைய வகையுமுண்டு . விச்சை – வித்தை . ஆண்டவன் ,பொதுவாக எல்லா ஆற்றலும் உடையனாயினும் ,அன்பர்க்கு உபகரித்தற் பொருட்டு  மேற்கொள்ளும் இன்னோரன்ன அரிய செயற்கும், சிறப்பு முறையில்  இனமாகிய வித்தையில் திறமை படைத்தமையால் அதிகாரி ஆயினான் என்பது. கல்லைக் கனியாக்கிய வரலாறு இல்லையாயினும் , மலையை வில்லாக வளைத்த வரலாறு உண்மையின், கனியாக்கும் திறமையும் படைத்திருக்கலாம் என்பது குறிப்பு.  அடிகள், திருக்கோவையில் , “தெவ்வரை மெய்யெரிகாய் சிலையாண்டு என்னை யாண்டு கொண்ட , செவ்வரை மேனியன்” என்று அருளிச் செய்திருத்தலும் , அதற்கு, “வலியனவற்றை வயமாக்கிப் பயின்று , பின் என்னை ஆண்டான் என்பது போதர, “காய்சிலையாண்டு என்னையாண்டு கொண்ட” வென்றார் ; என்னைத்தனக்கு அடிமை கொள்ளுதல் காரணமாகப் பிறிதொன்றின் மேலிட்டுக் கல்லை வளைத்தான் ; என் நெஞ்சை வளைத்தல் காரணமாக அல்லது தனக்கு ஒரு பகை யுண்டாய்ச் செய்ததன்று போலும் என்பது கருத்து ; “கல்லை மென் கனியாக்கும்  விச்சை கொண்டென்னை நின் கழற்கன்பனாக்கினாய்” என்பதும்  “அது  “ என்று பேராசிரியர் எழுதிய உரைக்குறிப்பும் காண்க. கல்லை வளைத்த புராண கதை யுண்மையால் , ஆண்டு , “சிலையாண்டு” எனச் செயற்றிறமையால்  வைத்தும் , கல்லைக் கனியாக்கிய  கதை இன்மையால் , “கல்லை மெங்கனியாக்கும் விச்சை கொண்டு” என,  ஈண்டு வித்தைத் திறமையில் வைத்தும் கூறியருளினார் என்பது .

             யான் அன்பும் செய்தற்கு ஆற்றல் இல்லேனாயினும் , நின் ஆற்றலினால் என்னை அன்பன் ஆக்கினாய் என்பார், நின் கழற் கன்பனாக்கினாய் “ என்றார். நின்னால் ஆக்கப்பட்ட  அன்பனாகிய யான் இனி, மன மொழி மெய்களுள்  எதனைக் கருவியாகக் கொண்டு  யாது செய்யினும், எல்லையில்லாத நின் கருணைக் குணத்தால், அதனையே நின்னை அடைதற்கு உரிய தவமாக ஏற்றருளும் கடமையுடையை என்பார், “ஏது கொண்டு நான் ஏது செய்யினும் நின் கருணை எல்லையில்லை என்றார். ஏது செய்யினும் என்பது, மன மொழி மெய்களால்  ஆம் பணிகளுள் எச் சிறு பணி செய்தாலும் என்னும் பொருட்டு , ஆண்டவன் கருணை இத்துணைப் பணி செய்தால்தான் ஏற்றருளும்  என்பது இன்றி , எல்லையற்ற நிலையில்  உண்மையால் , மிகச் சிறு பணியையும்  மிகப் பெரும் பணியாகக் கொண்டு பயன் அளிக்கவல்லது  என்பது கருத்து.

              ஆண்டவன் , முன்னர்க் குருந்தமரத்து நிழலில் எழுந்தருளித்  திருவடிக் காட்சி அளித்த அளவில் மறைந்துவிட்டமையால் , அப் பெருமான் திருவடிப் பேற்றிற்குத் தம் தவச்செயல் தக்கதாக இல்லை எனக் கண்ட அடிகள் , “இறைவ  அரிதின் முயன்று என்னை அன்பன் ஆக்கி விட்டமையாலும் , நின் கருணைக்கு  எல்லையில்லை யாதலாலும் , இனி, யான் எது கொண்டு ஏது செய்யினும் , அதனையே,”இயன்றதோர்  பொழுதின் இட்டது மலராச் , சொன்னது மந்திரமாக என்னையும் இடர்ப் பிறப் பிறப்பெனும் இரண்டின் கடற்படாவகை காத்தல் நின் கடனே “ என்று கூறியபடி , நின்னைஅடைதற்கு உரிய தவச் செயலாகக் கொண்டு, மீட்டும் நின் திருவடிக் காட்சியளித்து , இவ்வுலக வாழ்க்கையினின்றும்  மீட்டருளல் வேண்டும் ; இச் செயல் நினக்கு அரிது என்பார், “வல்லையே எனக்கின்னுமுன்கழல்  காட்டி மீட்கவும் “ என்றார்.  “வல்லையே” என்புழி , ஏகாரம் தேற்றம் , “இன்னும்” என்றதனால் முன்னரும் என்பது பெறப்படும்,

                 இதன்கண், “கல்லை மென்கனி  ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின்கழற் கன்பனாக்கினாய் “ என்றதனால் , அதீதமாகிய வீட்டின்பத்திற்கு அதிகாரியாதலும் , “எல்லையில்லை நின் கருணை” என்றதனால் , அப் பேற்றிற்குச் சிறந்த சாதனம் ஆண்டவனது அளப்பரிய கருணையே என்பதும் பெறப்படுதலின் , ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதல் அறிக.

                                 *******************************************

பாடல் :95 ,

வான  நாடரும்  அரியொ  ணாதநீ

மறையில்  ஈறுமுன்  தொடரொ  ணாதநீ

ஏனை  நாடருந்  தெரியொ  ணாதநீ

என்னை  யின்னிதாய்  ஆண்டு  கொண்டவா

ஊனை  நாடகம்  ஆடு  வித்தவா

உருகி  நானுனைப்  பருக  வைத்தவா

ஞான நாடகம்  ஆடு  வித்தவா

நைய  வையகத்  துடைய  விச்சையே.

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி எல்லையற்ற கருனையுடையை ஆதலின் , என் பணி யாதாயினும், அதனை ஏற்று  மீட்டும் காட்சியளித்துக் காத்தருள வேண்டும் என்று வேண்டிய அடிகள், அதற்கு ஏதுக்கூறு  முகமாக , காண்டற்கு அரிய பொருளாகிய  நீ எளியேனை முன்னர் ஆட்கொண்டு உபதேசித்ததும் , உலகப்பற்று ஒழிந்து நன்னிலை பெறுதற் பொருட்டு அன்றோ என இத் திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  வான நாடரும் அறிய ஒண்ணாத நீ  = விண்ணுலகத்தவரும்  அறிய  இயலாத நீ ,

முன் மறையில் ஈறும் தொடர ஒண்ணாத  நீ  =  பண்டை மறைகலின் முடிவாகிய ஞானக் கூறும் தொடர்ந்து பற்ற இயலாத நீ,

ஏனை நாடரும் தெரிய ஒண்ணாத  நீ  = மற்றைய உலகத்தவரும் தெரிய இயலாத  நீ ,

என்னை ஊனை நாடகம் ஆடுவித்தவா = சிறியேனை ஊனுடலைக் கொண்டு கூத்தாடும் படி  செய்தவாறும் ,

இன்னிதாய் ஆண்டு கொண்டவா =  பின் இனிமையுற  ஆட்கொண்டருளியவாறும் ,

நான் உருகி உன்னைப் பருக வைத்தவா =  யான் உள்ளம் உருகி நின் அருளமுதத்தை உண்ணும்படி  செய்தவாறும் ,

ஞான நாடகம் ஆடுவித்தவா  = அதனால் ஞானக்கூத்து ஆடும்படி செதவாறும் ,

வையகத்து உடைய இச்சை நையவே  = இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான அவா ஒழிதற் பொருட்டாம் அன்றோ ?  என்பது

விளக்கவுரை :-   ஆண்டவனது அரிய தன்மையைக் கூறப்புகுந்த அடிகள் தேவருள் ஒருவன் என்று கூறும் உபசார மொழியை உண்மை எனக் கொண்டு, தமக்கு எளியன் என்று இறுமாக்கும் அவ்விண்ணவர் காட்சிக்கு அரியன் என்பார், “வான நாடரும் அறியொணாத நீ “ என்றார். நாடரும் என்புழி , உம்மை சிறப்புப் பொருட்டு  , “ஈறும் ,நாடரும்” என்று பின் வருவனவற்றிற்கும்  இஃது ஒக்கும் .  “ஆறிய ஒண்ணாத “ என்புழி, அறிய என்னும் வினையெச்சத்தீறு தொக்கும் . ஒண்ணாத என்பது இடைக் குறையாகவும்  நின்றன. பின்வருவன வற்றிற்கும்  ஈதொக்கும் . அறிதல்  –  காட்சியளவையிற்  காண்டல்.

                மறை நூல் , கன்மக் கூறு , ஞானக் கூறு என இருதிறப்படும் . பின்னது சிறந்தது என்ப . அதனையே, “மறையிலீரும் “ என்றார். அது கூறவே, முன்னதற்கும் ஆம் என்பது , மறை முடிவாகிய ஞானக்கூற்றில் இறைவனுடைய  பண்புகள் பல திறமாகப் பாராட்டப்பட்டும் , கடை போக அளவிட்டு உரைக்க இயலாமையால் ஒழிவடைந்தன என்பார், “மறையிலீற முன் தொடரொணாத நீ “ என்றார். தொடர்தல்  –  பன்னிப் பன்னி மேற்சேறல் . இனி, “ஈறு முன் “ என்பதை , இறுதியும் முதலும் எனக் கொண்டு , மறையின் முடிவும் முதலும் ஆகிய ஞானக் கூறு கன்மக்கூறுகளுக்கு ஆக்குதலுமாம் .

                  ஏனை நாடர்  –  வான நாடர்  அல்லாத மண்ணுலகத்தவரும்  கீழுலகத்தவருமாம் . தெரிதல்  – நூலுணர்வாற்  காண்டல் . தேவர் , இறைவனைத் தமக்கு அணியனாகக் கருதி , நூலுணர்வைப் பொருட்படுத்தாமல் , காட்சியிற் காணும் தகுதியுடையேம் என்று இறுமாந்து இருத்தலின் , அவர்க்கு அறியொணாதவன்  எனவும் , மக்கள் முதலியோர் , மறை ஆகமங்களால் ஆராய்ந்து தெளியலாம் என்னும் கருத்துடையராதலின் , அவர்க்குத் தெரியொணாதவன் எனவும் ,மறைகள்  இறைவன் குணங்களைக் கூறி முடிவு காண முயறலின் ,அவற்றால் தொடரொணாதவன் எனவும் கூறப்பட்டன. இங்ஙனம் யாவர்க்கும்  எவைக்கும் அரியனாகிய பரம்பொருளாவான் , கருணை காரணமாகத் தமக்கு எளியனாக வந்து செய்த பேருதவிகளை நெஞ்சார நினைந்து  நாவாரப் புகழ்ந்து பாராட்டத் தொடங்குகின்றார் .

                    யான் பண்டு செய்த வினைக்கு ஈடாக, மாயையினின்றும்  ஊனுடலை உதவி , அதன் தொடர்பாகத் தந்தை , தாய், தமர், தாரம் , மகவு எனும் பரிவாரங்கள் சூழ , இவ்வுலகமாகிய அரங்கில் நிலையுதல் இல்லாத வாழ்க்கைக்கூத்து ஆடும்படி புரிவித்தவாரும் என்பார், “ஊனை நாடகம் ஆடுவித்தவா”என்றார். ஊன் ஆகு பெயராக நின்று உடம்பை உணர்த்தும் . “கொண்டு” என்னும் ஒரு சொல் வருவித்துரைத்தல் வேண்டும் . “ஆடுவித்தவா” என்புழி, ஆறும் என்பதன் ஈறும் எண்ணும்மையும் தொக்குநின்றன . பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும் ; உலக வாழ்க்கையில் ஈடுபடச் செய்தவாறும் என்பது கருத்து. இறைவன் உயிர்க்குச் செய்யும் உதவிகளுள்  இதுவே முதலில் எண்ணத்தக்கது. “”காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப்  போல் “ மருட் கேவல நிலையில் உள்ள உயிர்க்கு அறிவு விளக்கம் பெறுதற்பொருட்டுக் கன்மத்துக்கு ஈடாக ,உடல் முதலியவற்றை உதவித் தவச் செயல்களுக்கு ஆளாக்கி , உய்விக்கத் தொடங்கும் முதல் உபகாரம் இதுவாம் என்பது கருத்து. அடுத்துச் சரியை முதலிய தவங்களால் தூய்மை யெய்திய உயிரின் பக்குவங் கண்டு , இறைவன் ஆட்கொள்ளுதல் நிகழ்வதாகும் .அந் நிலையில் அடிகள், ஆண்டவன் ஞானாசிரியனாக எளிமையில் எழுந்தருளி , ஞானோபதேசஞ் செய்து தம்மை ஆட்கொண்டருளிய அருமையை வியந்து ,” என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா” என்றார். , “இனிது” என விரித்தால் விகாரம் பெற்றது . “இன்னிதாய்”என்புழிச் செய்தென் எச்சத்தை செயவென் எச்சமாகத் திரித்துக் கொள்ளல் வேண்டும் . இனிது என்பது மாநுட வடிவில் ஞானகுருவான எளிமையில் எழுந்தருளிக் காட்சியளித்ததைக்  குறிக்கும் .

              காட்சியளித்து உபதேசித்த அந் நிலையில் , அடிகள் நெஞ்சம் உருகி , ஆண்டவனை அமுத வடிவிற் பருகி இன்புற்றனராக , அந் நிலையும் அப் பெருமான் அருளாற் கிடைத்த பேறு ஆதலின் ,”உருகி நான் உனைப் பருகவைத்தவா” என்றார் . பருகுதற்கு உருகுதல் ஏதுவாம் என்க. உள்ளம் உருகி  உணர்வு பெருகினால் அருளமுதைப் பருகலாம் என்பது அடிகள் கருத்து . “உருகிப் பெருகியுளங் குளிர முகந்து கொண்டு , பருகற்கினிய பரங்கருணைத்  தடங்கலை” என்றும்  பிறிதோரிடத்துக் கூறிய அடிகள் அருண்மொழியும் , “உரமென்னும் பொருளானை உருகிலுள்ளுறை  வானை” என்னும் தமிழ் மறையும்  ஈண்டு நினைக்கத்தக்கன .

               உள்ளம் உருகி அருளமுதைப் பருகிய நிலையில் உலகியலை மறந்து , தம் வயம் இழந்து , எல்லாம் சிவமயமாகக் கண்டு , அக் காட்சியால்  ஆனந்தக் கூத்து  ஆடும்படி இறைவன் அருளிய பேருதவியை நினைந்து , “ஞான நாடகம் ஆடுவித்தவா” என்றார் . “நாடவர் நந்தம்மை யார்ப்ப  ஆர்ப்ப , நாமும் அவர் தம்மை யார்ப்ப ஆர்ப்ப” என்று ஆரவாரித்து ஆடியது அக் கூத்து என்க. ஊனை நாடகம் கட்டுநிலையும், ஞான நாடகம்  வீட்டு நிலையுமாம் . ஆண்டு கொண்டதும்  பருக வைத்ததும் சாதன நிலயின்பாற் படும்.

                 ஆண்டவன் , அளப்பரிய இப் பேருதவிகளைத் தமக்குச் செய்ததெல்லாம் , இவ் வுலக வாழ்க்கையில் உள்ள பற்றை  அறவே ஒழித்தற் பொருட்டு என்பார் , “நைய வையகத்துடைய  விச்சையே” என்றார். “இச்சையே”என்புழி, ஏகாரத்தைப் பிரித்து நையவே எனக்கூட்டுக. ஏகாரம் தேற்றப் பொருட்டு.  நைதல் – அறவே யொழிதல் . இறுதியில் , “ஆம்” என்னும் ஒரு சொல்லை வருவித்து முடித்தல் வேண்டும் . உலக வாழ்க்கை ஒழிதற் பொருட்டு , இப் பேறுதவிகளைச் செய்த பின்னரும் , என்னை ஈண்டு இருத்தியது என்னையோ என்பது குறிப்பெச்சமாகும். .

                     இதன்கண், ஊனை நாடகம்  ஆடுவித்ததும் , ஆண்டு கொண்டதும் , பருக வைத்ததும் , ஞான நாடகம் ஆடுவித்ததும் அதீதமாகிய சிவானந்த அநுபவத்திற்கு உரிய பேருதவிகளாகவும் , அப் பேறு பெறாமல் வருந்தலானேனே என்னும் அடிகளது இரக்கக் குறிப்புப் புலப்படுதலின் , ஆனந்தாதீதம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                      *********************************

பாடல் : 96 .

விச்ச  தின்றியே  விளைவு  செய்குவாய்

விண்ணு  மண்ணக  முழுதும்  யாவையும்

வைச்சு  வாங்குவாய்  வஞ்ச  கப்பெரும்

புலைய  நேனையுன்  கோயில்  வாயிலில்

பிச்சன்  ஆக்கினாய்  பெரிய  அன்பருக்

குரியன்  ஆக்கினாய்  தாம்வ  ளர்த்ததோர்

நச்சு  மாமரம் ஆயி  நுங்கொலார்

நானும்  அங்ஙனே  உடைய  நாதனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் , அரிய பொருளாகிய நீ எளிவந்து ஆட்கொண்டது யான் நலம் பெறற் பொருட்டன்றோ எனக் கூறிய அடிகள் , அவ் வரிய தன்மையோடு , எல்லா ஆற்றலும் நிரம்பப்பெற்ற நின்னைப்பற்றி நிற்பேனை எங்ஙனம் கைவிடல் அமையும் என இத் திருப்பாட்டில் தெரிவித்துக் கொள்ளுகின்றார்.

பதவுரை :- விச்சு  அது  இன்றியே  விளைவு செய்குவாய்  =  வித்து ஆகிய  அக் காரணம் இல்லாமலே விளைவிப்பாய் ,

விண்ணும்  மண்ணகம் யாவையும்  முழுதும் வைச்சு வாங்குவாய்  = 

விண்ணுலகம்  மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களையும் குறைவற நிலைபெறச் செய்து அழிப்பாய்,

வஞ்சகப்  பெரும்  புலையனேனை  =  (அத்தகைய நீ ) வஞ்சகனாகிய  மிக்க இழிதகவுடைய  என்னை  ,

உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்  = நின் திருக்கோயில் வாயில்  முன்னே வைத்துப் பித்தனாகச் செய்தாய்,

பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்  = பேரன்பராகிய மெய்யடியார்க்கு  உரியனாகவும்  செய்தாய் ,

தாம் வளர்த்தது ஓர் நச்சு மாமரம் ஆயினும் கொல்வார்  =  உலகத்தவர்  தம்மால் வளர்க்கப்பட்டது ஒரு முதிய நச்சு மரம் ஆயினும் தாமே வெட்டி அழிக்கமாட்டார் ,

உடைய  நாதனே  =  சிறியேனை அடிமையாகவுடைய  என் தலைவனே ,

நானும் அங்ஙனே =  யானும் அப்படியே ஆவேன் என்பது.

விளக்கவுரை :-  படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் முத்தொழிற்கும் இறைவன் தலைவனாயினும் , படைத்தல் தொழிலில் ஓர் உண்மை ஆராயத்தக்கது . வினைக்கு ஈடாக மாயை என்னும் வித்தினின்றும் உயிர்க்கு உடல் முதலியன இறைவனால் தரப்படுகின்றன என்பது சைவநூற் கொள்கை. அங்ஙனமாயின் , மருட் கேவல நிலையில் உள்ள உயிர்க்கு வினைத் தொடர்பு இன்மையால் , முதல் தோற்றத்திற்கு ஏது என்னாம் என்பது வினாவாகும் . அதற்கு விடையுளதாயினும் , அஃது அரிதின் ஆராய்ந்து  கொள்ளத்தக்கதாகும். இவ்வருமை நோக்கியே சிவஞானபோதம்  இரண்டாம் சூத்திரத்திற்கு நுதலிய பொருள் கூறப்புகுந்த மெய்கண்ட ஆசிரியர் , “புனருற்பவம்  வருமாறுணர்தல்  நுதலிற்று” என்று கூறினார் . புனருற்பவம் – மீண்டு பிறத்தல் . அஃதாவது அழித்தற்குக் காரணனாக வுள்ள  இறைவன்  இடத்தினின்றும் வினைக்கு ஈடாக உயிர் மீண்டும் தோன்றுதல் என்பது கருத்து. ஈண்டுப் பேருரை வகுத்த மாதவச் சிவஞான முனிவரர் , “அஃது அங்ஙனமாக, முதலுற்பவம் வருமாறுணர்த்தாது , புனருற்பவம் வருமாறுணர்த்துவது என்னையெனின் , பிரபஞ்சம்  அநாதியாகலின் , அம்முதற்கோடி நம்மனோரான்  அரியவராமை யானும் , ஒடுங்கியபின்  மீளவுளதாமாறே……கூறினார் என்பது “ என்று கூறிப் பின்னர், “அற்றாயினும் , முதலுற்பவம்  ஆமாறு இவ்வியல்பிற்று என்பது” எனத் தொடங்கி ,”விச்ச தின்றியே விளைவு செய்குவாய்” எனவும், “விண்ணு மண்ணக முழுதும் யாவையும்  வைச்சு வாங்குவாய் “ எனவும் ஓதிய திருவாக்கானும் இவ் இரு வேறு வகையும் கண்டு கொள்க” என்றுரைத்தார் . இரு வேறு வகையான , முதலுற்பவமும்  புனருற்பவமும் ஆம் என்பது.

           பாலையும் கோலையும் நோக்கும் குழவிக்கும் குருடர்க்கும் , அந் நோக்கம் உணர்ந்து கொடுப்பார் போல , மருட் கேவல நிலையில் மூல மலத்தாற் பிணிப்புண்டு , அசைவற்றுக்கிடக்கும் உயிர்க்கு ,இறைவன் அருளால் நுண்ணிய நிலையில் விருப்பு வெறுப்பு நிகழ , அவற்றை இறைவன் உணர்ந்து , கன்ம மாயைகளைக் கொடுத்துப் பிறப்புட் படுத்துவன் என்று முதலுற்பவத்தின்  இயல்பு கூறப்படுதலும் உண்டு. இது, நுண்ணிய நிலையில் நிகழ்வதால் , பருமை நோக்கில் ,”விச்சதின்றியே விளைவு செய்குவாய்” என்று கூறப்பட்டது  என்க. “விச்சது” என்புழி, “அது” பண்டறிந்ததாகிய காரணம் என்னும் பொருள் மேலதாம். “விச்சின்றி நாறு செய்வானும்” என்னும் தமிழ் மறைக்கும் இதுவே கருத்து என்க. இனி, அத்தொடர் , வித்தின்றி விளைவாய் எனப் பொருள்பட்டு , இறைவன் மாயையின்றியே திருமேனி கொள்ளு முறையை உணர்த்திய துமாம் எனவும் ,காலத்தானும் இடத்தானும் வேற நிற்பனவாகிய உலகத்திற் காணப்படும் வித்துப் போல் அல்லாமல் , தன்னையே  தாரகமாகக் கொண்டு , வேறின்றி உடனாய் நிற்பதாகிய மாயையினின்றும் விளைவு செய்குவாய் என, உலகத்து  வித்திற்கும்  மாயைக்கும் வேற்றுமை தோன்றக் கூறுதலே அத் திருப்பாட்டின் கருத்து ஆகலாம்  எனவும், மாதவச் சிவஞான முனிவரர்  சிவஞானபோதப் பேருரையில்  2 ஆம் சூத்திரம் , 2 ஆம் அதிகரணத்தில் தடை விடையில் வைத்து விளக்கி யிருத்தலும்  அறிக.

                விண்ணுலகம் , மண்ணுலகம் முதலிய எல்லா வுலகங்களிலும்  உள்ள உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் முற்றும் படைத்து , அளித்து , அழிக்கும் தலைமை குறித்து , “முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய்” என்றார் . வைச்சல்  – வைத்தல் ; படைத்துக் காத்தல் . வாங்குதல் –  ஒடுக்குதல் . இதனால் உலகத் தோற்றத்திற்குக் காரணன் ஆம் தன்மை முற்றும் பரமசிவனுக்கே உரியது என்பது புலப்படுக்கப்பட்டபடியாம் . உலக காரணமாந்தன்மை பரம்பொருள் இலக்கணம் என்ப.

                  வஞ்ச ஒழுக்கமும் , அதனால் மிக்க இழிதகவும் உடையேன் என்பார், “வஞ்சகப் பெரும் புலயனேனை” என்றார். பிறப்பான் அன்றி , வஞ்சகமாகிய செயலால் எய்திய இழிதகவு என்பது குறித்துப் பெருமை அடை புணர்க்கப்பட்டது. செயலால் இழிந்தவனாகிய என்னை நின் திருமுன் வைத்து, இவ்வுலகியலில்  மாறுபடச் செய்து பித்தனாக்கினாய் என்பார், உன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் “ என்றார் . பிச்சன்  – பித்தன்; பைத்தியம் பிடித்தவன் , “மத்த மனத்தொடு மாலிவன் என்ன மனநினைவில்  ஒத்தன வொத்தன சொல்லிட” என்று முன்னர்க் கூறியது , பிச்சனாக்கிய தன் பயனாகும் .

                      பெரிய அன்பர்  – அழிவுடைப் பொருள்களின் இயல்பு அறிந்து  நீங்கி , அழி வில் பொருளாகிய ஆண்டவன் இடத்து இறவாத இன்ப அன்புடைய மெய்யடியார் . ஆண்டவன், தனக்கு அன்பனாக்கியபின் ,தன் அடியவர் குழுவுள் இருக்கும் பேற்றைத் தமக்கு அளித்தனன் என்பார், “பெரிய அன்பருக்கு உரியனாக்கினாய் “ என்றார். உரியனும் என்புழி, எச்சவும்மை தொக்கு நின்றது . அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே” என்றபடி ,அடிகள் வியந்து மகிழ்ந்தது ,மெய்யன்பர் குழுவில் தம்மை இருக்க வைத்தது கருதியே யாம் .

                 ஆண்டவனால் வயப்படுத்தப்பட்டு,  அவன் அடியார் குழுவுள் இருக்கும்  உரிமையும்  பெற்றபின், தமக்கென ஒன்றுமின்றி , “நன்றே செய்வாய்  பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று இருக்கும் அடிகள், அப் பெருமானை நோக்கி ,”யான் மெய்யன்பு இல்லேனாயினும், நீ அடிமையாக ஏற்றுக் கொண்டமையால் என்னைக் கைவிடலாகாது என்பதற்கு, உலகியலில் வைத்து ஒரு நீதி எடுத்துக் காட்டுகின்றார், உலகத்தவர் தம்மால் வித்திட்டு வளர்க்கப்பட்ட மரம், எட்டி அல்லது அதனைப் போன்ற பிறிதொரு நச்சு மரம் ஆயினும், அதனை வளர்த்த தாமே வெட்டி யழிக்கத்  துணியார் . அது போல, மெய்யன்பில்லேன் ஆயினும் நின்னைச் சார்ந்தவனாதலின், என்னை வெறுத்து ஒதுக்கலாகாது என்பார், “தாம் வளர்த்ததோர் நச்சு மாமர மாயினுங் கொலார் நானும் அங்ஙனே “ என்றார். தாம் வளர்த்தது, நச்சு மரத்துள்ளும் முதுமையடைந்ததாயினும் என்றற்கு, “மா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . இக் கருத்துக் குமார சம்பவம் என்னும் வட நூலில் இரண்டாம் சருக்கத்தில் ஐம்பத்தைந்தாம்  சுலோகத்தில் மகா கவி காளிதாசராற் புலப்படுக்கப்பட்டிருத்தலும்  அறிந்து இன்புறத்தக்கது.  “உடைய நாதனே” என்னும் விளி, என்னை ஆதரிக்க வேண்டிய கடமை நின்பாலது என்று எடுத்துக்காட்டினால்  விளக்கப்பட்ட, “நானும் அங்ஙனே ‘ என்பதை வலியுறுத்து நிற்பதாகும்.

                   இதன்கண், ஆண்டவன் அடிகளைத் தன் திருக்கோயில் வாயிலிற் பிச்சனாக்கியதும், பெரிய அன்பருக்கு உரியனாக்கியதும், அதீதமாகிய சிவானந்த நுகர்ச்சிப் பொருட்டு  என்பது பெறப்படுதலின், ஆனந்தாதீதம் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                                          *******************************************

பாடல் : 97 .

உடைய  நாதனே  போற்றி  நின்னலால்

பற்று  மற்றெனக்  காவ  தொன்றினி

உடைய  னோபணி  போற்றி  உம்பரார்

தம்ப ராபரா  போற்றி  யாரினுங்

கடையன்  ஆயினேன் போற்றி  என்பெருங்

கருணை  யாளனே  போற்றி  என்னைநின்

அடியன்  ஆக்கினாய்  போற்றி  ஆதியும்

அந்தம்  ஆயினாய்  போற்றி  அப்பனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் பெறலரும் பொருளாகிய நின்னைச் சார்ந்தவனாகிய என்னை எங்ஙனம் கை விடல் அமையும் என்று ஆண்டவனை நோக்கிக் கூறிய அடிகள், நீ கைவிடத் திருவுளங்கொள்ளின், நின்னை அல்லாமல் பிறிதொரு பற்றுக்கோடு எனக்கு யாதுலது?  கூறியருள்க என்று இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-  ஆதியும் அந்தமும் ஆயினாய் போற்றி  =  முதலும் இறுதியும்  ஆக விளங்குகின்றவனே  வணக்கம் ,

உம்பரார் தம் பராபரா போற்றி  = மேல் உலகத்தவர்க்கு மேலான பரம் பொருளே வணக்கம் ,

யாரினும் கடையன் ஆயினேன் போற்றி  =  யான் எவரினும்  கடைப்பட்டவன் ஆயினேன் வணக்கம் ,

என் பெரும் கருணையாளனே போற்றி  = என்பால் பேரருளாளனே  வணக்கம் ,

என்னை நின் அடியன் ஆக்கினாய் போற்றி  = சிறியேனை நினக்கு அடிமையாகச் செய்தனை வணக்கம் ,

உடைய நாதனே அப்பனே  போற்றி  = என்னை ஆளாக உடைய தலைவனே என் தந்தயே   வணக்கம்,

எனக்கு ஆவது பற்று =  அடியேனுக்கு ஆதரவாக  வுள்ளதாகிய  பற்றுக்கோடு,

இனி நின் அல்லால் மற்று ஒன்று உடையனோ = இப்பொழுது நின்னையல்லாமற் பிறிதொரு பொருளை யான் உடையனோ,

பணி  =  கூறியருள்வாயாக ,

போற்றி  =  வணக்கம்  என்பது.

விளக்கவுரை :-  இத் திருப்பாட்டில்  விளியுருபு ஏற்று நிற்கும் சொற்றோறும் வணக்கப் பொருள் குறித்துப் “போற்றி” பல கூறப்பட்டன, ஆண்டவன் இடத்துள்ள அளப்பரிய ஆர்வத்தல் என்க.

                  அந்தமும் என்புழி, எண்ணும்மை  தொக்கு நின்றது . எல்லாப் பொருள்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணன் ஆதல் பற்றி . இறைவனை, “ஆதியும் அந்தமும் ஆயினாய்”ஏன்றார்.  “ஈறாய் முதல் ஒன்றாய்” என்பது தமிழ் மறை.

மாயையை அழி வில் பொருள்களில் ஒன்றாகக் கொண்டு , அதனிடத்தினின்றும் உலகம் தோன்றி, அதனிடத்தே ஒடுங்கும் என்று சைவ நூல் கூறும் . அங்ஙனம் மாயையில் தோன்றி ஒடுங்கும் உலகங்களை, இறைவன் இடத்துத் தோன்றி ஒடுங்கின என்றல் எங்ஙனம் பொருந்தும் எனின், மாயையும் உலகமும் வித்தும் முளையும் போலும் ஆதலின், வித்துக்கு ஆதாரமாகிய நிலம் குளிர்ந்த வழி, அதன்கண்  வித்துள்ளதாக, அதனினின்றும் முளை தோன்றியவாறு  போல, மாயை, தனக்கு ஆதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சக்தியின் கண் உள்ளதாய் நிற்றலால், அச்சத்தி சங்கற்பித்த வழி. வினைக்கு ஈடாகத் தோற்றுவிக்கும் என்பவாதலிற் பொருந்தும் என்க. இது, கிழங்கினின்றும்   தோன்றிய தாமரையைச் சேற்றினின்றும் தோன்றியது என்னும் பொருள்படப் பங்கயம் என்று கூறுதலானும் அறியலாம். இக் கருத்துப் பற்றியே “உலகவனுருவிற்றோன்றி யொடுங்கிடும் “ என்று சிவஞான சித்தி கூறியதூம் என்க. இது பரப்பொருள் இலக்கணங்களுட்  சிறந்தது .

            இவ்வியல்பிற்றாகிய பரம்பொருளைத் தேவரின் ஒருவன் என்று அறியாதார் கூறுப. அது பொருந்தது என்பதைத் தெளிவுறுத்தற்பொருட்டு, “உம்பரார் தம் பராபரா” என்றார். “தேவரினொருவனென்பர் திருவுருச் சிவனைத் தேவர் , மூவராய் நின்றதோரார்” என்று ஞான நூல் தெளிவுறுத்ததூம்  அறிக. பராபரன்  –  மேலானவனும் தனக்கு மேல் பற்றொரு பொருள் இல்லாதவனுமாம் என்னும் பொருட்டு. “யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் “என்று இறைவனையும் , “யாவர்க்கும்  கீழாம் அடியேன் “ என்று தம்மையும் அடிகள் கூறுவாராதலின் , அக்கருத்துத் தோன்ற, அடுத்து , “யாரினுங்கடைய னாயினேன் “ எனவும் , அத்துணை உயர்ந்தோன் , இத்துணை இழிந்த தம்மைப்  பணிகோடற்குக் காரணம்  அளப்பரிய கருணையே என்பார், “என்பெருங்கருணையாளனே “ எனவும் கூறினர் . கருணை செய்தற்கு உரிய தகுதி தம்பால் இல்லை எனக் கொண்டு, அங்ஙனம் இல்லாத தம்பால் நிகழ்ந்தமையால் ,அக்கருணை பெரிதாம் என்பார், “பெருங்கருணை “ என்றார். பெருங் கருணையாளனாக இருந்தமையா னன்றே, சிறியேனாகிய என்னை நினக்குத் தொண்டனாக்கிப் பணி கொண்டாய் என்பார்,” என்னை நின் அடியானாக்கினாய் “ என்றார்.

             இனி, முடிவாகத் தாம் விண்ணப்பம் செய்து கொள்ளும் செய்திக்கு ஏற்ப, ஆண்டவனை விளி கொள்ள முற்பட்டு ,”உடைய நாதனே அப்பனே” என்றார். ஆண்டவன் , தன்னை அடியன் ஆக்கியபடியால், என்னை ஆளாகவுடைய தலைவனே எனவும், அப் பெருமானது பேரானந்தப் பெருஞ் செல்வ நுகர்ச்சிக்கு மகன்மை முறையில் உரிமை தமக்கு உண்டு எனக் கொண்டு , “அப்பனே”எனவும் கூறுவார் ஆயினர்.

              இதன் முன்னைத் திருப்பாட்டில் “நச்சுமாமர மாயினுங் கொலார்  நானும் அங்ஙனே “ என்றதனால், தம்மைக் கைவிடல் ஆகாது என்று விண்ணப்பம் செய்து கொண்டவர், எக்காரணத்தாலாவது ஒருகால் என்னை நீ ஒதுக்கத் திருவுளங்கொண்டாலும், பற்றிய நின்னை யான் எவ்வாறு விடுவேன்  விட்டால் , வேறு பற்றுக் கோடு  நின்னையன்றி யாதுளது ? அங்ஙனம் ஆதரவாகவுள்ள  பற்றுக்கோடு பிறிது ஒன்று இருக்குமாயின், அஃது இன்னது என எனக்கு அறிவிக்கவேண்டிய பொறுப்பும் நின்பாலதே” என்பார், “நின்னலாற் பற்று  மற்றெனக் காவதொன்றினி யுடையனோ பணி “ என்றார். ஆவது – ஆதரவாக நின்று பயன் விளைப்பது . “இனி,’ என்றது ,என்னை அடிமை கொள்ளுதற்கு முன்னர்ப் பொய்யுலக  வாழ்க்கையில்  ஈடுபட்டு, அதனையே ஆதரவாகக்  கடைப்பிடித்தேன் ஆயினும் , அடியனாக ஆட்பட்ட இப்பொழுது என்னும் பொருள் தோன்ற  நின்றது . பணி யென்றதனால், யான் கடைப்பித்தேன் ஆயினும், அடியனாக ஆட்பட்ட இப்பொழுது என்னும் பொருள் தோன்ற நின்றது. பணி யென்றதனால், யான் கடைப்பிடித்தற்குரிய  நெறி பிறிதொன்று  உண்டெனினும் , அதனைக் காட்டுதற்கும் நீயே தலைவனாய் என்பது  போதரும் . “காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே” என்று தமிழ் மறை தெளிவுறுத் தருளியதூங் காண்க .

                இத் திருப்பாட்டில்  அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் இறைவனது முழு முதல் தன்மையும் , அதனினின்றும்  படிப்படியாக உயிர்த்தொகுதிகளுக்கு  நலம்  புரிதற்பொருட்டு எளிவரும் பேரருள் திறமும் தோன்ற, முன்னிலைப்படுத்து அழைத்திருத்தல்  அறிந்து இன்புறத்தக்கது . முதலில் ஆதியும் அந்தமும் ஆயினாய் என, உலகத் தோற்ற  ஒடுக்கங்களுக்கு காரணன் ஆதலாகிய முதன்மையும் , அடுத்து,” உம்பரார்தம் பராபரா “ எனத் தேவர்க்கு அணியனாம் பரம்பொருள் தன்மையும், பின்னர், “என் பெருங் கருணையாளனே” என, மக்கட் பிறப்பினரிடத்து  அருளுடையனாந் தன்மையும் ,அதன்பின் , உடய நாதனே “ என, அன்பர் பணி கொள்ள எழுந்தருளும் எளிமைத்தன்மையும் , முடிவில் ,”அப்பனே”எனத் தன் பேரின்பப் பெருஞ் செல்வத்திற்கு மகன்மை முறையில் உரிமையளிக்கும் தன்மையும்  புலப்பட  அருளியவாறு அறிக. செய்யுளாதலின் இம்முறை பிறழ்ந்து வந்தது .

                 இதன்கண், “ஆதியும் அந்தமு மாயினாய்” என்பது முதலிய விளியேற்று நிற்கும் சொற்களால் , உயிர்க்கு அதீதமாகிய ஆனந்தம் அருளும் வன்மையுடையான் சிவபெருமான் என்பதும் , “நின்னலார் பற்று மற்றினி யுடையனே” என்றதனால், அவனையன்றி , அப் பேறு பிறிதோர் ஆற்றல் பெற இயலாது என்பதும் பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதல் அறிக .

                                           ******************************************

பாடல் : 98 .

அப்ப  னேயெனக்  கமுத  னேஆ

னந்த  னேயகம்  நெகஅள்  ளூறுதேன்

ஒப்ப  னேயுனக்  குரிய  அன்பரில்

உரிய  னாயுனைப்  பருக  நின்றதோர்

துப்ப  னேசுடர்  முடிய  னேதுணை

யாள  னேதொழும்   பாளர்  எய்ப்பினில்

வைப்ப  னேயெனை  வைப்ப  தோசொலாய்

நைய  வையகத்  தெங்கள்  மன்னனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவனை நோக்கி  என்னைக் கைவிடின் நின்னையல்லாமல் பிறிதொறு  பற்றுக் கோடு  உடையனாக எங்ஙனம்  ஆவேன்  எனக்  கூறிய  அடிகள், அங்ஙனம்  ஆதரவற்ற  நிலையில் உள்ளவனாகிய அடியேனைப் பல்லாற்றானும் பாதுகாக்கும் உரிமையுடைய நீ,  இப் பொய்யுலக வாழ்க்கையில் நைய வைப்பது  முறையாகுமா என, இத் திருப்பாட்டில் விண்ணப்பம் செய்து கொள்ளுகின்றார்.

பதவுரை :-  எனக்கு அப்பனே  =  எனக்கு  அப்பனே,

எனக்கு அமுதனே =  எனக்குச் சாவா மருந்தாக வுள்ளவனே,

ஆனந்தனே  =  பேரின்ப மயமானவனே,

அகம் நெக அள் ஊறு  தேன்  ஒப்பனே  = உள்ளம் உருக  வாயூறுதற்கு ஏதுவாகவுள்ள  தேனைப்  போன்றவனே,

உனக்கு உரிய அன்பரில் உரியனாய் =  நினக்கு உரிமையுடைய  மெய்யன்பரைப்போல  யானும்  உரிமையுடையனாகி ,

உன்னைப் பருக நின்றது ஓர் துப்பனே  =  நின்னை நுகரும்படி எனக்குக் கிடைத்து நிற்பதாகிய ஒப்பற்ற  உணவாக  வுள்ளவனே,

சுடர் முடியனே  =  ஒளி விளங்கும் திருமுடியை யுடையவனே,

எங்கள் மன்னனே  =  அடியேமாகிய  எங்கள் அரசே,

தொழும்பாளர்  துணையாளனே  =  மெய்யடியார்க்கு  உண்மைத்  துணையாக   வுள்ளவனே ,

தொழும்பாளர் எய்ப்பினில்  வைப்பவனே  =  தொண்டர்க்குத்  தளர்ந்த நிலையில்  சேமநிதியாக  வுள்ளவனே,

வையகத்து  என்னை  நைய  வைப்பதோ  =  இப் பொய்யுலக வாழ்க்கையில்  அடியேனைத்  துன்புறும்படி வைத்தல்  முறையாகுமா? ,

சொல்லாய்  =  கூறியருள்வாயாக என்பது.

விளக்கவுரை :- இத் திருப்பாட்டில் அடிகள் ஆண்டவனைத் தமக்குச் சிறப்புரிமையில் தொடங்கி , அப்பெருமானுக்கும் தம்மை உள்ளிட்ட அடியார்க்கும் உள்ள இயைபுகளை மேன்மேலும் விளக்கி விளித்தல் முகமாகக் கூறித் தம் நாவையும் நெஞ்சத்தையும்  அருளமுதில் நனைத்து இன்புறுகின்றார் . “எனக்கு” என்பதை முன்னும் பின்னுங் கூட்டுக. அதுவென் வேற்றுமை  யுயர்தினைத் தொகைவயின் அது வெனுருபு  கெடக் குகரம் வருமே “ என்னும் விதிப்படி, “எனக்கு அப்பனே”என்னப்பட்டது. தந்தை , தன் குடிப்பொருளாகிய உடைமைக்கு உரியவனேயன்றி உடைமையாகான் . மெய்யன்பர்க்கு ,ஆண்டவன் நுகர் பொருளாகிய உடைமையும் அதற்கு உடையானும் ஆவன்  ஆதலின் , அடுத்து , “எனக்கு அமுதனே” என்றார்.  அமுதம் – நுகர் பொருளாகும் . ஆகவே, உடையானும் உடைமையும் அப் பெருமானே என்பது பெறப்பட்டவாறு அறிக.

          அமிர்தம் என்னும் சொல் , சாவைத் தவிர்ப்பது  என்னும் பொருளதாகலின், சாவா மருந்து எனப்பட்டது; சாதற்கு ஏதுவாகிய பிணி, மூப்பு முதலியவற்றைப் போக்குமே யொழிய , உண்மையில் சாதலைத் தவிர்ப்பதன்று . “விண்ணொரமுதுண்டும்  சாவ” என்று சிலப்பதிகாரம் கூறும் . இதனால் , இங்ஙனம் கூறியது உபசாரமே யன்றி உண்மையன்று  ஆதலின் , அமுதம் ஒரு கால எல்லைவரை பயன்செய்தலானும், இறைவன், என்றும் உலப்பிலா இன்பமயமாக வுள்ளான் ஆதலானும் , அதன்மேல் ,”ஆனந்தனே” என்றார்.

             சிவானந்தத்திற்கு, உலகப் பொருள்களில்  நெகிழ்ச்சியும் , மிக்க இனிமையும் உடைய தேனை ஒப்புக் கூறுதல் உண்டு . “உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து” என்பதும் அடிகள் அருண் மொழியாகும். அம் முறையில் ,”தேன் ஒப்பனே” என்றார்.  அள்ளூறல் – வாயூறல் . “அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் “ என்புழியும் அப் பொருட்டாதல் அறிக. நினைக்குங்கால் நெஞ்சம் உருகுதற்கும் ,வாயில் அமிழ்தம் ஊறுதற்கும் ஏதுவாகவுள்ளது என்பார், “அகநெக அள்ளூறு தேன் “ என்றார். “நினைத்தொறும்  காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் , அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் “ என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறிய அருண் மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது.

               இனி, “அள்”என்பது செறிவு என்னும் பொருளாதலின், “அள்ளூறுதேன்”என்பதற்கு நெருங்கிச் சுரக்கும் தேன் எனப் பொருள் கோடலும்  ஆம்.  நெருங்கிச் சுரத்தலாவது, இடையறாது  ஒழுகுதல் . இங்ஙனம் நெஞ்சம் உருக , வாயூறலுண்டாக, அத் தேன் இடையறாது ஒழுகுவதாயினும், அதனைப் பருகும் தகுதியும் இருந்தாலன்றி அதனாற் பயன்பெற  இயலாது ஆதலின் , அதற்கு உரிய தகுதியை  ஆண்டவன் தமக்கு உதவிய முறையைப் பின்வறுமாறு புலப்படுத்துவாராயினர் .

              ஆண்டவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அநுபவித்தற்கு , உரிய உரிமையுடைய மெய்யன்பர் யென்பார் , “உனக்குரிய அன்பர்”என்றார். இல் என்னும் ஐந்தனுருபு , உவமப்பொருட்டு . ஆண்டவனே,நின்னை நுகர்தற்கு உரிய  மெய்யன்பரைப்போல என்னையும் உரிமையுடையனாக்கினாய் ஆதலின் , ஆயினேன் என்பார் , “அன்பரிலுரியனாய்”எனவும் , அவ் வுரிமை கொண்டு யான் நுகர்தற்கு உரிய சிறந்த உணவுப்பொருள்  ஆயினை என்பார், “உனைப் பருக நின்றதோர் துப்பனே” எனவும் கூறினர். பருக நின்றது  – உண்ணுதற்குச் செயப்படு பொருளாக நின்றது . நின்றதென்பது  துப்பன் என்பதன் பகுதியாகிய துப்பு என்பதனோடு இயையும் , பருகுதல் – குடித்தல், நுகர்தல்  என்னும் பொருளை உணர்த்தும் . “பருகுவன் பைதனோ யெல்லாங் கெட “ஏன்னும் குறளில் நுகர்தற் பொருட்டாதல் அறிக. துப்பு – உணவுப்பொருள் . “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி”  என்புழி அப் பொருட்டாதல் அறிக.

                “பின்னர் எங்கள் மன்னனே” என்றதற்கு ஏற்ப அரசுரிமை அடையாளங்களாகிய முடி , குடை , கோல்  என்பவற்றுட்  சிறந்த முடியை உடையான் என்பார், “சுடர் முடியனே” என்றார். இம் முடி,தெய்வ அரசுக்கு உரியதாகலின் , சுடர் என்னும் அடை மொழி புணர்க்கப்பட்டது . உலகில் முடியுடை அரசனைப் பேரரசன் என்பர் . ஈண்டுக் கடவுட் பேரரசைக் குறிப்பிட்டபடியாம் . “சுடர் முடியனே” என்பதை அடுத்து , “எங்கள் மன்னனே” என்பதை இயைத்துக் கொள்ளல் வேண்டும் . எங்கள் என்றது உலக நிலைக்கு உரிய பொருட் செல்வமன்றி , வீட்டு நிலைக்கு உரிய அருட் செல்வத்தை உடைய மெய்யன்பரை  உளப்படுத்துக் கூறியதாகும் . துணை புரிதற்கும், எய்ப்பில் வைப்பாக நின்று பாதுகாத்தற்கும்  முடியுடைத் தெய்விகப் பேரரசனாக அமைதல் அரிதாகலின், இறைவனை இங்ஙனம் கூறலாயினர்.

                  உயிர்த் தொகுதிக்கு , உலகத்திற் காணப்படும் சுற்றம் , துணை எல்லாம், அவ்வுயிர், வினைக்கு ஈடாக எடுத்த உடலைப் பற்றி உண்டானவை யாதலின் , அவ்வுடல் ஒழி வில் அவை எல்லாம்  ஒழிந்துபோம் . அதனால், அத்துணை உடற்றுணை  யாகுமன்றி  உயிர்த்துணை ஆகாது. உயிர்க்கு உண்மைத்துணை பரம்பொருளாகிய இறைவனே ஆவான் . இவ் வுண்மையை உள்ளவாறு அறிவார் மெய்யடியார் ஆதலின் , “தொழும்பாளர் துணையாளனே” என்றார். தொழும்பாளர் என்பதை முன் கூட்டிப் பொருள் கொள்ளல் வேண்டும். மெய்த் தொண்டர்க்குச் சிறப்பு முறையில் துணையாளனாக இருத்தலோடு , அவர்க்குத் தளர்ச்சி நேர்ந்த இடத்து வைப்பு நிதி  போலவும் உதவும் இயல்பினன் என்பது குறித்து . “தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே”என்றார். இன்றியமையாமை  நேர்ந்தவிடத்து  எடுத்துப் பயன் படுத்தற்பொருட்டு  வைக்கப்பட்ட நிதியை வைப்பு நிதி என்ப. உலகப்பொருள் எல்லாம் அழியும் இயல்பினவாதலின் , என்றும் அழியாப் பொருளாக நின்று பயன்செய்வோன் இறைவன் என்பது குறிக்கொண்டு இவ்வாறு கூறினர்.  இங்ஙனம் சிறந்த துணையாதலையும். எய்ப்பில் வைப்பதாலையும்  வேறொரு படியாக ,” அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை” என்று ஆளுடை அரசர் அருளிச் செய்தமையாலும் அறிக. ஈண்டு அடியார் என்பதை முன்னரும் இயைத்து, அடியார்க்கு அருந்துணையே , அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை எனக் கொள்ளல் வேண்டும்.

                இத்துணையும் ஆண்டவன் பெருமைக் குணங்களையும், தமக்கும் அப் பெருமானுக்கும் உள்ள இயைபுகளையும் குறிப்பிட்டு முன்னிலைப் படுத்து, இறுதியில், தம் வேண்டுகோளை வெளிப்படையில் கூற முற்படுகின்றார் .இத்துணைப் பேரருளாளனாகிய நீ என்னை ஆட்கொண்ட பின்னரும், இப்பொய்யுலக வாழ்க்கையில்  இருத்தி, யான் துன்பம் உறச்செய்தல் முறையாகுமா என்பார், “எனை வைப்பதோ சொலாய் நைய வையகத்து “ என்றார். வைப்பது என்பதன்பின் , முறை என்னும் சொலை வருவித்து உரைத்தல் வேண்டும் . ஓகாரம் வினாப் பொருட்டு ,வையக வாழ்க்கை , இன்பனும் துன்பமும் விரவிய தாகலானும் , அதுவும் நிலையுடையதன்று ஆகலானும் , அதுபற்றி  வருந்துவேன் அல்லேன் ; இவ்வுலக வாழ்க்கையினும் சிறந்த வீட்டிப வாழ்க்கை ஒன்று உண்டு எனக் காட்டி ,  அதன்கண்  தலைப்படச் செய்யாமல் விட்டு மறைந்தது , பசியாற் களைத்து உறங்கும் ஒருவனை எழுப்பி, உணவு இல்லை என்று கைவிட்டு அகறலை ஒக்கும் ஆதலின் , அது குறித்து வருந்தலானேன் என்பார், “வையகத்து நைய வைப்பது” என்றார். வீட்டின்ப நோக்கு உடையார்க்கு இவ்வுலகியல் துன்பமேயன்றி , இன்பமும் துன்பமுமாம். ஆதலின் இவ்வாறு கூறலாயினர்.

                    இதன்கண்,  “ஆனந்தனே”  , “அகம் நெக அள்ளூறு  தேன்  ஒப்பனே “ , “உன்னைப் பருக  நின்றதோர்  துப்பனே “ என்னும் சொல்லானும்  சொற்றொடர்களானும்  ஆண்டவன் அதீதமாகிய ஆனந்த வடிவினன் என்பதும் , அதுவே தமக்குச் சிறந்த பேறாம் என்பதும் பெறப்படுதலின்  ஆனந்தாதீதம்  என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றுதல் அறிக.

                                         **************************************

பாடல் : 99 .

மன்ன  எம்பிரான்  வருக  என்னெனை

மாலும்  நான்முகத்  தொருவன்  யாரினும்

முன்ன  எம்பிரான்  வருக  என்னெனை

முழுதும்  யாவையும்  இறுதி  யுற்றநாட்

பின்ன  எம்பிரான்  வருக  என்னெனைப்

பெய்க  ழற்கண் அன்  பாயென்  நாவினால்

பன்ன  எம்பிரான்  வருக  என்னெனைப்

பாவ  நாசநின்  சீர்கள்  பாடவே.

கருத்துரை :-   அடியேனைப்  பாதுகாக்கும்  உரிமையுடைய  எம் பெருமானே , இவ்வுலக  வாழ்க்கையில்  வருந்தும்படி  என்னை  வருத்தலாகாது  என்று  முன்னைத்  திருப்பாட்டில்  தெரிவித்துக்  கொண்ட  அடிகள் , இனி, இவ் வாழ்க்கையினின்றும்  விடுவித்து ,நினக்கு  அணுக்கனாய் , அன்பு  பூண்டு , நின்  புகழ்களைப்  பாடி  இன்புறுதற்  பொருட்டு , அடியேனை  வருக  என்று  பணித்தருளல்  வேண்டும்  என்று  இத்  திருப்பாட்டில்  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார்.

பதவுரை :-   மன்ன  எம்பிரான்  எனை  வருக  என்  =  என்றும்  நிலை  பேறுடையவனாகிய  எங்கள்  தலைவனே  அடியேனை  வருக  என்று  கட்டளையிட்டருள்வாயாக,

மாலும்  நான்  முகத்து  ஒருவன்  யாரினும்  முன்ன  எம்பிரான்  = 

திருமாலும்  பிரமனும்  முதலிய  மற்றைத்  தேவர்  எவரினும்  முன்னவனாகிய  எங்கள்  தலைவனே ,

எனை  வருக  என்  =  எனை  வருக  என்று ,

யாவையும்  முழுதும்  இறுதி  உற்ற  நாள்  =  எல்லா  உலகங்களும் முற்றும்  அழிவு  எய்திய  பேரூழிக்  காலத்தின்  ,

பின்ன  எம்பிரான்  =  பின்னும்  அழிவு இன்றி  இருப்பவனாகிய  எங்கள்  தலைவனே ,

எனை  வருக  என்  =  என்னை  வருக  என்று ,

பாவநாச  எம்பிரான்  =  பாவத்தை  ஒழிப்பவனாகிய  எங்கள்  தலைவனே,

பெய்  கழற்கண்  அன்பு  ஆய்  பன்ன  =  கழல்  அணிந்த  நின்  திருவடிக்கண்  மெய்யன்பு  உடையனாய்ப்  புகழ்  பாராட்டவும் ,

நின்  சீர்கள் பாட  =  நின்  சிறப்புக்களை  இசையுடன்   பாடவும் ,

எனை  வருக  என்  =  அடியேனை  வருக  என்று  கட்டளை  யிட்டருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  சிவபெருமானது  பரம் பொருள்  தன்மையை , உலகத்தோற்றத்திற்கு  முன்னும்  பின்னும்  என்றும்  உள்ளான் என்று  கூறுமுகமாகத்  தெளிவுறுத்  துரைத்து , முன்னிலைப்படுத்து , அடியேனை  நின்  பக்கல்  அணுகக்  கட்டளையிடல்  வேண்டுமென்று  கூறுவாராய் ,முதலில்  என்றும்  நிலைபேறுடைமையைக்  குறித்து , “ மன்ன  வெம்பிரான்  வருக  வென்னெனை  “ என்றார். மன்னுதல் – நிலைபெறுதல் . மன்னன்  எனும்  சொல்  விளியுறுபு  ஏற்று , மன்ன என்றாயிற்று . இனி, மன்ன  என்பதற்கு  அரசே  எனப்  பொருள்  கோடலுமாம்.

                என்றும் நிலையுதலையுடைய  கடவுள்  முதல்வனாகிய அவ்  விறைவனே  எங்கள்  தலைவனாயினன்  என்று  அப்பெருமானது  சார்புண்மை  பற்றிய  மகிழ்ச்சியால்  அடுத்து, “எம்பிரான்” என்றார். பின்வருவனவற்றிற்கும்  இஃதொக்கும்.  “என்னை வருக என் “என்புழி,  என்பாய்  என்பது , விகுதியும்  இடைநிலையும்  புணர்ந்து  கெட்டு , “ என்”  என்றாயிற்று .  ஆகவே,  என்று  கட்டளையிடுவாய்  என்பது  பொருளாகும் .  பின்வருவனவற்றையும்  இவ்வாறே  கொள்க. 

                  இறைவன் என்றும்  நிலையுதல் உடையவன் என்பதை விளக்கிக்  கூறுமுகமாக , ‘” மாலும்  நான்முகத்  தொருவன் யாரினும்  முன்ன”என்றார்.  தேவர், மக்கள் முதலிய  எல்லா  உயிர்த்  தொகுதிகளுக்கும் முன்னோன்  ஆவான்  என்பதை , ஆக்கல் , அளித்தல் , ஆகிய  தொழில்  தலைவரைக்  குறிப்பிட்டு , அன்னாரையும்  ஆக்கி  யளிக்கும்  தலைவனாய்  முற்பட்டவனாவான்  என்றார்.  நான்முகத்தொருவனும்  என்புழி,  எண்ணும்மை தொக்கு  நின்றது.  யாரினும்  என்றது  ,அன்னாரை  யுள்ளிட்ட மற்றை  இந்திரன்  முதலிய  தேவரையும்  மக்கள்  முதலியோரையும்  குறித்து  என்க.  உயிர்களின்  தோற்றத்திற்குக்  காரணிகனாய்  முற்பட்டவன் என்பது  கருத்து .

                    உலகம்  எல்லாம்  சிறிதும்  எஞ்சுதல்  இன்றி  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்தென்பார், “முழுதும்  யாவையும்  இறுதி உற்ற  நாள்  “  என்றார். எல்லாம்  ஒடுங்கிய  மகா  சங்காரத்தின்    பின் , இறைவன் ஒருவனே  அழிவின்றி  நிற்பனாதலின் , பின்ன”  என்றார். பின்ன  என்பது  பின்னாக  எஞ்சி நிற்பவனே  என்று  பொருள்படும் . “ஓதத்தொலிமடங்கி  யூருண்டேறி  யொத்  துலக மெல்லாம்  ஒடுங்கிய பின் வேதத்  தொலிகொண்டு  வீணை  கேட்பார். வெண்காடு  மேவிய  விகிர்த்தனாரே  “  என்பதும்  இக்கருத்துப்  பற்றியதாகும். விண்ணுலக  முதலிய  எல்லா  உலகங்களும் , அறிவுடைப்பொருளும் , அறி வில்  பொருளும்  ஆகிய  இரு  கூறும்  கலந்தன  ஆதலின் ,அவ் வெல்லாவற்றிற்கும்   முன்னாவானும்  பின்னாக  நிற்பவனும்  இறைவனே  என்பதைப் புலப்படுக்கக்  கருதிய  அடிகள் , படைப்போன்  முதலியோரைப்  படைத்தலின்  முன்னவனாதலைத்  திருமால் ,நான்முகன்  முதலிய  அறிவுடைப் பொருள்களைப்  பற்றியும் , வித்தாகிய  மாயையும்  தன்  சக்தியின்கண்  ஒடுங்குதலின் பின்னவனாதலை, யாவையும்  முழுதும்  என  அறிவில்  பொருள்களைப்  பற்றியும்  குறிப்பிடுவார்  ஆயினர் . “ முன்னவன்காண்  பின்னவன் காண் மூவா  மேனி  முதல்வன் காண் “  என்னும்  அப்பர்  அருண் மொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது.

                     இறைவனது  யாண்டும்  உண்மையைக் கூறிப் பின்  அப் பெருமானால்  உயிர்க்கு  உண்டாம்  பயனைப்  புலப்படுத்துவாராய் , “பாச  நாச “ என்றார். வீட்டின்பத்திற்குப்  பாவத்தைப்  போலவே  புண்ணியமும்  தடையாம்  என்ப.  அங்ஙனமாகவும் , இரண்டையும்  ஒழிப்பவனே  என்னாது , பாவத்தை  மாத்திரம்  ஒழிப்பவனே  என்றது  என்னை  யெனின் , புண்ணியமும், பாவமும்   பாலும்  நீரும்  போலும் என்பதும், சிவஞானமாகிய நெருப்பிடைக்  காய்ச்சப்படுங்கால் , பாலோடு  கலந்த  நீர்  முதலிற்  சுவறுதல் போலப்  பாவம்  முதலில்  தேய்ந்து  ஒழியும்  என்பதும்  பின்னர்  பால்  சுவறி  நெய்யாகிப்  பயன்  விளைத்தல்  போலப்  புண்ணியம்  உலகியலினின்றும்   வேறுபட்டுச்  சிவ புண்ணியமாக  நின்று  , சிவக்  காட்சியைப்  பயப்பிக்கும்  என்பதும்  ஆன்றோர்  அநுபவத்திற்  கண்ட  உண்மைகளாம் . “பண்ணிய  தழல்  காய்  பாலளா  நீர்  போற்  பாவமுன்  பறைந்து  பாலனைய , புண்ணியம்  பின் சென்ற  றிவினுக்  கறிய”  என்னும்  திருவிசைப்பாவானும்  இவ்வுண்மை  புலனாதல்  அறியலாம் . ஆகவே,  பாவ  நாசன்  என்று  கூறுதலே  அமைவுடைத்து  என்பது.

        அங்ஙனமாயின் , அவ்விரண்டற்கும்  பொதுவாகப்  பிற  இடங்களில்  , “கன்ம  நாசன்” என்று  கூறுதல்  எங்ஙனம்  அமையும் எனின்  , அக் கன்மத்துள்  அடங்கிய  நல்வினை , “இருள்  சேரிரு வினை” யின்பாற்  படுமாதலின்  பொருந்தும் என்க. உயிர்  தற்பயன்  கருதாத  நிலையில் ,அது  சிவ  புண்ணியமாகும் .  ஆதலின்  , கன்ம நாசன்  என்னும்  இடத்துச்  சிவ  புண்ணியம்  அடங்காது  என்பது  கருத்து .

            இனி,  அடிகள் இறைவனை  நோக்கி  ,”வருகவென் எனை” என்று பல முறை  கூறியதன்  பயனை  வெளிபடுத்துக்  கூற  முற்படுகின்றார் . முதலில்  ஆண்டவன்  திருவடிக்கண்  மெய்யன்பு  உடைமையும் , அதனால் , அப்பெருமானுடைய  புகழ்  மொழிகளைத்  தம்  நாவினாற்  பாராட்டுதலும் , அப்  பாராட்டு  முதிர்ச்சியில்  உள்ளம்  உருகி  அவன்  சிறப்புக்களை இசையுடன்  கலந்து  பாடுதலும்  ஆகிய  இவற்றையே  ஈண்டுப் பயனாக  விண்ணப்பித்துள்ளார் . ஆண்டவன்  திருவடி  இன்பமே  தமக்கு  முடிந்த  பயனாயினும்  , அதனைக் குறிப்பிடாமல் , “என்  கடன்  பணி  செய்து  கிடப்பதே” என்றபடி , அதற்கு  உரிய  சாதனங்களாகிய  தம்  கடமைகளையே  குறிப்பிட்டனர் . அவ்வீட்டின்பம்  ,”தன் கடன்  அடியேனையுந்  தாங்குதல் “  என்றபடி , அப்பெருமானது  கடமையாக  அருளத்  தக்கது  என்று  ஈண்டுக்  கூறாதொழிந்தார்  என்பது.  சாதனங்களுள்  பன்னுதலும் , பாடுதலும் , முறையே  அருச்சித்து  வழிபடுதலையும்   துதிபாடலையும்  குறிக்கும் என்பதுமாம் . “பன்னவும், பாடவும்  “  என்புழி, எண்ணும்மைகள் தொக்கு  நின்றன .

                 இதன்கண், முதலும்  ஈறுமாக  விளங்கும்  ஆண்டவன்  திருவடிக்கண்  மெய்யன்பு  வைத்து  வழிபட்டு  ஒழுகுதற்கு  அவனால்  அழைக்கப்படல்  வேண்டுமென்பதும் , அவ்  அருளழைப்பே   அதீதமாகிய  இன்பப்பேற்றிற்கு  ஏதுவாகும்  என்பதும்  பெறப்படுதலின், ஆனந்தாதீதம்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                            ********************************************

பாடல் : 100 .

பாட  வேண்டுநான்  போற்றி

பாடி  நைந்துநைந்   துருகி  நெக்குநெக்

காட  வேண்டுநான்  போற்றி  அம்பலத்

தாடு  நின்கழற்  போது  நாயினேன்

கூட  வேண்டுநான்  போற்றி   இப்புழுக்

கூடு  நீக்கெனைப்  போற்றி  பொய்யெலாம்

வீட வேண்டுநான்  போற்றி  வீடுதந்

தருளு  போற்றிநின்  மெய்யர்  மெய்யனே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  இவ்வுலக  வாழ்க்கை யினின்றும்  என்னை  விடுவித்து , நின் பக்கலில் வரக்  கட்டளையிட்டருளல்  வேண்டுமென்று  இறைவனை நோக்கி விண்ணப்பம்  செய்துகொண்ட அடிகள் , அணுக்கனாயபின் , தாம்  எய்த  வேண்டிய முடிவான  பேறுகளை   அளித்தல்  ஆண்டவன்  கடமையாயினும் , வீட்டின்பத்தை  விரைவிற்  பெறும்  ஆர்வமிகுதியால்  இத்  திருப்பட்டில் தாமும்  வெளிப்படக்  கூறி  வேண்டுகின்றார்.

 பதவுரை :- நின்  மெய்யர்  மெய்யனே  =  நின்பால்  மெய்யன்புள்ள  அடியார்க்கு  மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

போற்றி  =  வணக்கம் ,

நின்னையே  நான்  பாடவேண்டும்  =  உன்னைப் பற்றியே  நான்  பாடவேண்டும் ,

நெக்கு  நெக்கு  உருகி  பாடி  நைந்து  நைந்து  நான்  ஆடவேண்டும்  = 

உள்ளம்  நெகிழ்ந்து நெகிழ்ந்து  உருகிப்  பாடிக்  கொண்டு  அவசமுற்று  யான்  கூத்து  ஆடல்  வேண்டும்

போற்றி  =  போற்றி,

அம்பலத்து  ஆடும்  நின் கழல்  போது நாயினேன்  நான்  கூட  வேண்டும் =

தில்லச் சிற்றம்பலத்தில்  திருக் கூத்தாடும்  நின்  திருவடி  மலரை  நாய்த்  தன்மையுடய  சிறியேன்  அடைதல்  வேண்டும் ,

போற்றி  = போற்றி,

என்னை  இப் புழுக்கூடு  நீக்கு  =  அது  குறித்து  அடியேனைப்  புழுக்களுக்கு  இடனாகிய  இவ்வுடலினின்றும்  விடுத்தருளல்  வேண்டும்,

போற்றி  =  போற்றி ,

நான்  பொய்யெலாம்  வீட  வேண்டும்  =  யான்  இப்பொய்யுலக  வாழ்க்கையைப்  பற்றிய  எல்லாவற்றையும்  விட்டொழிக்கச்  செய்தல்  வேண்டும் ,

போற்றி    =   போற்றி , 

வீடு  தந்து  அருளு  போற்றி  =  அழிவில்  இன்பமாகிய  வீட்டு  நிலையைத்  தந்து  அருளுவாயாக  வணக்கம்  என்பது.     

விளக்கவுரை :-    மெய்மையாகிய  அன்பும்  ஒழுக்கமும்  உடையார்  மெய்யர்  ஆயினும் , அம்  மெய்மை , சிவபெருமானைப்  பற்றியதாக  நிகழ்தல்  வேண்டும்  என்பது  குறித்து , “நின்  மெய்யர்”  என்றார். மெய்யர்க்கு  மெய்யனாதல் , ஆண்டவன்  உளன்  என  உணர்ந்து  நம்புவார்க்கு  உளனாய்  நின்று , அவர்  வேண்டுவன  அளித்துக்  காப்போனாதல் நின்னையே  என்புழி,  ஏகாரம்  தேற்றப் பொருட்டு , “நின்னையே  நான்  பாடவேண்டும்”  என்றதனால், பிற  தேவரையாதல் , மக்கள் முதலியோரையாதல் மறந்தும்  பாடலாகாது என்பதும், அதற்கும் நீயே  உதவி  புரிதல்  வேண்டும்  என்பதும்  போதரும்.  “பொய்மையாளரைப்  பாடாதே  யெந்தை  புகலூர்  பாடுமின்  புலவிர்காள் “ என்பர்  தம்பிரான்  தோழர்.  இது  மொழிப்  பணி.

        “நெக்கு  நெக்கு  உருகி” என்றதனால் , கல்லினும் வலிய நெஞ்சம் , ஆண்டவனை  நினைந்து நினைந்து , கரைந்து  உருகுதல்  வேண்டும் என்பது  போதரும் , “உருகு  மனத்தடியவர்கட்கு   ஊறுந்தேனை  “ என்பது  அப்பர்  அருண் மொழி . உள்ளம்  உருகிய  நிலையிலே  , இறைவன்  விளக்கம் உண்டாம்  என்பது  கருத்து.  நைதல் – தன்வயம்  அழிதல் . வலிய  நெஞ்சம்   இறைவனை  நினைந்து  முதலிற்  குழைதலும்  , பின்னர்  உருகுதலும் , முடிவில்  தன்வயம்  அழிதலும்  ஆகிய  மூன்று  நிலைகளையும்  எய்தும்  என்பது .  விரிந்த  நினைவுகள், குழைவு  தோன்றிய  நிலையில்  சுருங்குதலும் , சுருங்கி  எஞ்சிய  எண்ணங்கள் , உருகிய  நிலையில்  ஒடுங்குதலும்  , எண்ணங்களின்  ஒடுக்கத்தில் தன் நிலை அழிதலும்  உளவாம் என்க.  இஃது  உள்ளப்பணி.

            உருகி, நைந்து என்னும்  செய்தென்  எச்சங்கள், “சினை  வினை சினையொடு  முதலொடுஞ்  செறியும் “ என்னும்  விதிப்படி  முதலோடு  முடிந்தன.  தன் வயம்  அழிந்த  நிலையில்  ஆனந்தக்  கூத்து  நிகழும்  ஆதலின், “பாடி  நைந்து  நைந்து உருகி நெக்கு  நெக்கு  ஆடவேண்டும்  நான்” என்றார். ஆடல்  இன்றியும்  நிகழும்  பாடல்  பற்றி , முதலில்  நின்னையே  பாடவேண்டும்  எனவும்  , பாடலுடன்  நிகழும்  ஆடல்  பற்றி  , அடுத்துப்  பாடி  ஆடவேண்டும்  எனவும்  கூறப்பட்டன. இது  மெய்ப்  பணி  .

             இங்ஙனம்  முக்கரணங்களும்  ஆண்டவன்  பணியில்  ஈடுபட்டு  நிகழ்தல்  அப் பெருமான்  திருவடி  நீழலில்  இயைதற்  பொருட்டாம்  என்பார், “அம்பலத்தாடும்  நின்  கழல்  கூட  வேண்டும்”  என்றார் . ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  உபதேசித்து  மறைந்த  பொழுது, “நாயினேனை  நலமலி  தில்லையுட் கோலமார்தரு  பொதுவினில்  வருகெனக்”கட்டளையிட்டனன்  எனக் கூறுவார்  ஆதலின்,  ஆங்கு  வரப்பணித்த  குறிப்பினை  உணர்ந்த  அடிகள், ஈண்டு  தில்லையம்பலத்துத்  திருக் கூத்தாடும்  நின்  திருவடி  அடைதல்  வேண்டும்  என்று  கூறுவாராயினர்

                 கழற்போது – திருவடி மலர்.. தூய  மலரிற்  கூடுதற்குத்  தடையாக, இவ்வூனார்  புழுக்கூட்டில் இருக்கலாமா? இதனை  விரைவிற்  கழித்தருளல்  வேண்டும்  என்பார், “இப் புழுக்கூடு  நீக்கு  எனை” என்றார்.  சுட்டு, இழிவு  கருதிற்று  .  ஆண்டவன்  திருவடி  மலர் , சிவஞான  மணத்திற்கும் , பேரின்பத் தேனுக்கும்  இருப்பிடனாகும்.  உடல் , முடை நாற்றத்திற்கும்  புழுக்களுக்கும்  உறைவிடனாகும் .  ஆதலின் , முதலில்  இழிந்த  இப் புழுக் கூட்டினின்றும்  நீக்கி  யருளல்  வேண்டும்  என்றார்  என்பது.

                    பொய்யெலாம்  என்பது,  அழியும்  இயல்பினவாகிய  இவ்வுலக  வாழ்க்கைக்கு  உரிய  பொருள்களைப்  பற்றி  உண்டாம் பல  திறத்து அவாக்களையும்  குறிப்பதாகும். “ அவாவென்ப  எல்லா  உயிர்க்கும்  எஞ்ஞான்றும், தவா அப்  பிறப்பீனும்  வித்து”  என்ப  ஆதலின்,  அவ் அவா  என்னைச்  சாராதபடி  , அவற்றை  ஒழித்து  அருளல் வேண்டும் என்றார். அவாவை  ஒழித்தலே  பிறவாமைக்கு  ஏதுவாம் ஆதலின், அதன் ஒழிவில்  , என்றும்  அழிவு  இல்லாத  பேரின்பப்  பெருவாழ்வு  ஆகிய  வீட்டு  நிலையை  அளித்து  அருளல்  வேண்டும்  என்பார், “”வீடு தந்தருளு “ என்று  முடிவாக  வேண்டுவார்  ஆயினர் .

                       வீட்டின்பப்  பேற்றிற்குச்  சாதனமாகிய  மெய்யன்பு, மன  மொழி மெய்கள்  தூயனவாய்,  இறைபணியில்  தலைப்படலால்  உண்டாம் என்பதும் , அம் மெய்யன்பினால்  எய்தப்படும்  இறைவன்  திருவடி  இயைபிற்குத்  தடையாகவுள்ளது  உடற்சுமை   யாதலின்,  அதுவும் , அதுபற்றி  உண்டாய  அவாவும்  ஒழிக்கப்படல் வேண்டும்  என்பதும்  , அவ்வொழிவில்  சாத்தியமான  வீட்டின்பம்  எய்தலாம்  என்பதும் ,அடிகள்   வேண்டுகோள்  முகமாகக்  கூறிய  இத் திருப்பாட்டால்  நன்கு அறியத்தக்கனவாம்.

                           இத்  திருச்சதகத்  திருப்பாட்டுக்கள்  எல்லாவற்றிலும்  பரந்து கிடந்த பொருள்  அனைத்தையும்  இவ்விருதித்  திருப்பாட்டில்  சுருங்கச்  சொல்லி  விளங்க  வைத்திருக்கும்  அருமை  உணர்ந்து  இன்புறத்தக்கது . இறுதியில் , “மெய்யர்  மெய்யனே  “ என்றது , இத் திருச்சதகத்தின்  முதல் திருப்பாட்டாகிய  , “மெய்தான்  அரும்பி”  என்பதன்  முதலொடு  இயைந்து , அந்தாதித்  தொடையாயினமை  அறிக . இங்ஙனம்  “மெய்” யென்னும்  சொற்றொடர்  நிலையே  அன்றி,  முக்கரணங்களும் இறைவன்  வயப்படல்  வேண்டும்  என்னும்  இத் திருச்சதகத்தின் முதல்  திருப்பாட்டின்  கருத்தாகிய  பொருள்தொடர்  நிலையும்  இத் திருப்பாட்டில்  அமைந்திருத்தல்   உணர்ந்து  இன்புறத்தக்கது .

                            இதன்கண் ,”பாட வேண்டும்” , “நைந்து  நைந்துருகி  ஆடவேண்டும்”  என்பனவற்றால் பத்தியின்  இயல்பும்  “இப்புழுக்கூடு நீக்கு “, பொய்யெலாம்  வீட வேண்டும் “  என்பனவற்றால்  வைராக்கியத்தின்  இயல்பும்  பெறப்படுதலின் , பத்தி  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும் , அவா  வொழித்து , வீடுதந்து  அருளல்  வேண்டும் என்றதனால் ,  அதீதமாகிய  இன்பநிலை  பெறப்படுதலின்,  ஆனந்தாதீதம்   என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் புலனாதல்  அறிக.

                     திருவாதவூர்  அடிகள்  அருளிச்  செய்த  திருவாசகத்  திருமறைக்கண்  உள்ள  திருச்சதகத்திற்குப்  பாண்டி வள நாட்டில்  , பூங்குன்ற  நாட்டுத்  தலை நகராகிய  மகிபாலன் பட்டி , மகாமகோபாத்தியாய  முது பெரும்  புலவர்  , பன்டிதமணி  மு .  கதிரேசச்  செட்டியார்  இயற்றிய  கதிர்  மணி   விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப் பெற்றது .

                                                        திருச்சிற்றம்பலம்

                                                **********************************

திருச்சதகம் பகுதி_3

திருச்சதகம்  —அறிவுறுத்தல்

பாடல் : 12 .

யானேதும்  பிறப்பஞ்சேன்

இறப்பதனுக்  கென்கடவேன்

வானேயும்  பெறில் வேண்டேன்

மண்ணாள்வான்  மதித்துமிரேன்

தேனேயும்  மலர்க்கொன்றைச்

சிவனேயெம்  பெருமான் எம்

மானேயுன்  அருள்பெறுநாள்

என்றென்றே  வருந்துவனே.

கருத்துரை :-  ஆண்டவன்  அடியாரைக்  குறித்து  மேற்கொள்வது அருளும், அடியார்  அவ்வருளைப்  பெறுதற்கு  மேற்கொள்வது  அன்பும்  ஆகும்.  இவ் வுண்மையை ,”ஆருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம்  புல்லார்  புரளவிடல்” என்று  உலகியலில்  வைத்துத்  திருவள்ளுவர்  கூறியதனாலும் , “யாஅமிரப்பவை , பொருளும் பொன்னும் போகமுமல்ல , நின்பால்  அருளும்  அன்பும்  அறமூன்றும் “  என்னும்  பரிபாடலானும்,  “எமக்கு  வீடு  பயக்கும்  நின்னருளும் , அதனை  யுண்டாக்க  நின்னிடத்து  யாம்  செய்யும் அன்பும் , அவ்விரண்டானும்  வரும்  அறமும்  ஆகிய  இம்  மூன்றுமே” யென்னும்  அதனுரைப்  பகுதியானும்  உணரலாம்.  இம் முறையில்  அடிகள்  இதன்  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவனிடத்து  இடையறாத  மெய்யன்பை  வேண்டி , அதற்கு அப் பெருமான்  திருவருட்  பேறு  ஒன்றே  எனத்  துணிந்து  , அதனை  இத்  திருப்பாட்டில்  வற்புறுத்து  வேண்டுகின்றார்.

பதவுரை :-  யான்  பிறப்பு  ஏதும்  அஞ்சேன்  =  யான்  பிறப்பிற்கு  ஒரு  சிறிதும்  அஞ்சுவேன்  அல்லேன்,

இறப்பதனுக்கு என் கடவேன் = இறத்தற்கு என் செய்ய வல்லேன்,

பெறில்  வானேயும் வேண்டேன் =  எளிதிற் பெறக்கிடைப்பது விண்ணுலகமே  ஆயினும்  விரும்பேன் ,

மண் ஆள்வான் மதித்தும் இரேன்  =  நிலவுலகத்தை ஆளுதற்கு  நெஞ்சத்தால் நினைந்தும்  இரேன்,

தேன்  ஏயும்  மலர்க்கொன்றைச்  சிவனே  = தேன்  பொருந்திய  கொன்றை  மலர்மாலையையுடடைய  சிவபெருமானே ,

எம் பெருமான்  =  எங்கள்  தலைவனே,

எம்மானே  =  எங்கள்  தந்தையே ,

உன்  அருள்  பெறும்  நாள்  என்று  என்று  வருந்துவன்  =  நினது  திருவருளைப் பெறுதற்குரிய  நன்னாள்  எப்பொழுது  வாய்க்கும்  என்று  நினைந்து  வருந்துகின்றேன்  என்பதாம் .

விளக்கவுரை :-  பிறப்பு  இறப்பு  இரண்டனுள்ளும் , பிறத்தலைத்  தவ  முதலிய  சாதனங்களால் ஒழித்தல்  கூடும் , வீட்டு  நிலையிற்  பிறவி  யொழிவுண்டாம்  என்பது  அறிவியல்  நூலிற்  காணப்படுவது . ஆதலின்,  இறந்தவன் வினையெச்சமுடையனாயிற்  பிறத்தலும் , அஃதிலனாயிற்   பிறவாமையும்  உடையவனாமென்பதும்  புலனாம் . பிறந்தவன்  இறத்தல்  எவ்வாற்றானும்  தவிர்க்க  ஒண்ணாததொன்று . இவ்  வுண்மையை , “இறப்பெனு மெய்மையை  இம்மை  யாவர்க்கும் ,  மறப்பெனும்  அதனின் மேற்  கேடு  மற்றுண்டோ” என்னும் கம்பர்  கூற்றானும் , “உடலுடையார்க்கு  இறப்பு  இயற்கை” என்று  காளிதாச  மகாகவி  விளக்கியவற்றானும்  அறிக.  “பிறந்தவர்  இறத்தலும் , இறந்தவர்  பிறத்தலும்  புதுவதன்று  “  என்பது , பற்றற்று  எய்தும்  வீடுபேறு  மிக  அரிய தொன்றாகலின் , அதனை  விட்டு , வினையெச்ச முடையாரே  உலகத்து  பெரும்பாலர்  என்னும்  உண்மை  கருதி,  அன்னாரைக்  குறிக்கொண்டு கூறியதாகும்.  ஆகவே, பிறப்பு  நேரின், இறப்பும்  உறுதியாதலானும் , அவ்விருவகைத்  துன்பமும்  பிறப்பு  ஒன்றானே  யுண்டாதலானும் , அவ்  விரண்டனுள்ளும்  பிறப்பே  பெரிதும்  அஞ்சத்தக்க தென்பது  போதரும் . இறப்பில்  வினையெச்சம் முளதாயின்,  அவ் வுயிர்கள் மீண்டு  பிறத்தலும் , அஃதினதாயின்  பிறவாமையும்  உண்டாம் . ஆதலின்,  பிறப்பிற்கு  அஞ்சும்  அத்துணை  இறப்பிற்கு  அஞ்ச  வேண்டிய  தின்று  என்பது  விளக்கமாம் . இவ்வுண்மையை  உளங்கொண்டே , அடிகள்  பெரிதும்  அஞ்சத்தக்கதாகிய  பிறப்பிற்கே  அஞ்ச  மாட்டேன்  எனின் , அத்துணை  அஞ்சத்தகாதது  ஆகிய  இறப்பைப்  பற்றி  யான்  செய்யக் கடவது  யாதுளது  என்பார் . “இறப்பதனுக்கு  என்  கடவேன்” என்றார்.  இத்  தொடர், இறத்தலைக்  குறித்து  யான்  செய்யத்  தக்கது  யாதுளது?. அஃதொரு  பொருளன்று  என்னும்  பொருளதாம்.  இஃது  இப் பொருட்டாதலை , “வளையார்  பசியின்  வருந்தார்  பிணியின்  மதனன்  அம்புக்கு , இளையார்  தனங்கண்டிரங்கி  நில்லாரிப்  பிறப்பினில்  வந்து , அளையார்  நரகினுக்கு  என்  கடவார்”  என்னும்  பட்டினத்து  அடிகள்  திருவாக்கினும்  காண்க. “நரகினுக்கு  என்  கடவார்” என்பது.  நரகத்தைக்  குறித்து  அவர்  செய்யக்கடவது  யாது?  ஒன்றுமில்லை;  அது  குறித்து  அஞ்சமாட்டா  என்பதே  கருத்தாத லறிக . இங்ஙனமின்றி , “இறப்பதனுக்  கென்கடவேன்” என்பதற்கு , இறத்தற்கே  அஞ்சுகின்றேன்  என்று  பொருள்  கூறின் , அஃது  “பிறப்பினோடிறப்பு  மஞ்சேன் “  என்னும்  அடிகள்  கருத்தோடு  முரணுதலால்  பொருத்தமின்று  என்பது  உணர்க .

       “வானேயும்  பெறில்  வேண்டேன் “  என்பதில் , ஏயும்  என்பது  ஆயினும்  என்னும்  பொருட்டு;  “கணமேயுங்  காத்தலரிது “ என்புழிக்  கணப்பொழுதாயினும்   என்று  பரிமேலழகர்  எழுதிய உரையானும்  உணர்க.  இனி,  ஏயும்  என்புழி, உம்மையைப்  பிரித்து , வானே  பெறினும்  என  இயைத்துப்  பொருள் கோடலும்  பொருந்தும் .  ஈண்டு , ஏகாரம்  உயர்வு  சிறப்பையும் , உம்மை  பெறுதற்கு  அருமையையும்  உணர்த்தும். 

              இனி,  முதல்  இரண்டடிகளிலும்  உள்ள  வினைமுற்றுக்கள் நான்கு  ஆகும்.  முதலிரண்டனையும்  பின்னிரண்டனோடு  எதிர்  நிரல்  நிறையாக  இயைத்துப்  பொருள்  நயங்காண்டல்  இன்பம்  பயப்பதாகும் . “பிறப்பு  அஞ்சேன் “ என்பதனால், பிறந்து உலகாளும்  அரசுரிமை  பெற்றுப்  போகந்  துய்க்கலாம் என்னும்  வேட்கைக்  குறிக்கோள்  உண்மைக்  குறிப்பாற்  பெறப்படும்  ஆதலின், அதனை  விலக்குதற்கு , “மண்ணாள்வான்  மதித்து  மிரேசன் “  எனவும், இறப்பதற்கு  அஞ்சேன்  என்றதனால் , “ இறப்பன் இறந்தா  லிருவிசும்  பேறுவன்”  என்றபடி,  இப்பிறப்பை  யொழித்து , இறந்து  விண்ணுலகம்  எய்தி  இன்புறலாம் என்னும்  வேட்கைக்  குறிக்கோள்  குறிப்பாற்  பெறப்படுமாதலின்  , அதனை  விலக்குதற்கு , “வானேயும்  பெறில்  வேண்டேன் “  எனவும்  அருளிச்  செய்யப்பட்டன .  ஈண்டுப் பிறத்தலும்  இறத்தலும்  மனித  உடம்பைச்  சுட்டிக்  கூறப்பட்டனவாகக்  கொள்ளல்  வேண்டும்.  மனிதவுடம்பின்  ஒழிவு , தேவவுடம்பு  பெறுதலைக்  குறிக் கோளாகப்  புலப்படுத்தும்  என்க. மண்ணுலக  ஆட்சியினும்  விண்ணுல கின்பம்   சிறந்ததாகும்  ஆதலின், “வானேயும்  பெறில்  வேண்டேன்”  எனவும், “மண்ணாள்வான்  மதித்துமிரேன்”  எனவுங் கூறப்பட்டன . வேண்டாமை, விரும்பாமையையும்  மதியாமை , ஒரு  பொருளாக  நினையாமையையும் உணர்த்துதல்  ஈண்டுக்  கருதத்தக்கது

                 கொன்றைமலர்  இறைவனுக்குச்  சிறந்த  அடையாளப்  பூவாகும்  “கார்விரி  கொன்றைப் பொன்னேர்  புது  மலர்த்தாரன்  மாலையன்  மலைந்த கண்ணியன்”  என்னும்  அக  நானூற்றுக் கடவுள்  வாழ்த்துப்  பாடலானும் ,  “தார்  ஓர்  விசேடமாக  இடுவது; மாலை  அழகுக்கு  இடுவது;  கண்ணி  போர்ப்பூ”  என  வரும்  அதன்  உரைக்  குறிப்பானும்  உணர்க.  உலகத்துத்  தலைவராகிய  அரசர்க்கு  அடையாளப்பூ ,  போர்ப் பூ முதலியன  வெவ்வேராகும் .  கடவுட்டலைவனாகிய  இறைவனுக்கு  ,அவ்  வடையாளப் பூ  முதலியவெல்லாம்  திருக்கொன்றைப்  பூவேயாகும் . இவ்வுண்மை  குறித்தே , “தேனேயு  மலர்க்கொன்றைச்  சிவனே”  யெனக்  கொன்றை  மலர்  அப்பெரு மானுக்குச்  சிறப்புரிமையுடையதென்று புலப்படுத்துவாராயினர் .  சிவன்,  எம்பெருமான்,  எம்மான்  என்னும்  இம்மூன்றும்,  முறையே  அழிவில்லாத  இன்பவடிவினன் , சிறந்த  தலைவன்,  தந்தை  என்னும்  பொருலனவாம்.  இன்ப  வடிவினன்  சிறந்த  தலைவனாக  இருப்பின்  , அவ்வின்பம்  தலையான  பேரின்பமாகும்  ஆதலின்,  சிவனே  எம்பெருமான்  என்றும்,  அப்பேரின்பப்  பெருஞ்  செல்வத்தை  மக்களுக்கு  உரிமையாக்குபவன்  தந்தையாதலின், எம்மான்  என்றுங்  கூறியருளனர்.  எம்மான்  என்பது  தந்தை  என்னும்  பொருளது.  இதனை  “எம்மான்  எம்மனை  யென்றனக்  கெட்டனைச்  சார்வாகார்”  என்பதனாலும்  அறிக.  வேண்டாமையை  வேண்டும்  சிவஞானி  களால்  வேண்டப்படுவது  திருவருட்பேறு  ஒன்றேயாகும்  .  ஆதலானும் , அப்பேறும்  உடலோடு  கூடியிருக்கும்  நாளில்  வாய்க்குமாயின், அவ்வுடல்  ஒழிவில்  திருவருளில்  தோய்ந்து  இன்புறுதல்  கூடுமென்னும்  உறுதிப்பா  டுடைமையானும்,  “அருள்பெறு  நாள்  என்றென்றே  வருந்துவன்”  என்று  கூறுனர். எல்லாரானும்  அஞ்சத்தக்க  பிறப்பு  இறப்புக்களுக்கும்  அஞ்சேன்; மண்ணுலக  ஆட்சிகளுக்கும்  முயலேன் , ஆனால் , நின்  திருவருட்  பேற்றிற்குறிய  நன்னாள்  வாய்ப்பது  கருதியே  கவல்கின்றேன்  என்பார், “வருந்துவனே”  என்று  கூறினர். அருட்பேற்றிற்கு  வருந்துவன்  என்னாது , அதற்குரிய  காலங்கருதியது, எடுத்த உடம்பு  கால  வரையறைக்கு  உட்பட்டது  குறித்தாம்.

           இதன்கண், மண்ணுலக  ஆட்சியும்  விண்ணுலக  இன்பமும்  பெறுதற்கு  விரும்பும்  மனத்தின்  செயலை  வெறுத்து , அந்  நெறியிற்  செல்லேன்  என  இறைவனை  முன்னிலைப்படுத்துக்  கூறுமுகமாக,  அந் நெஞ்சிற்குக்  குறிப்பால்  அறிவுறுத்தமை புலனாதலின், அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  வைராக்கிய விசித்திரமாகிய  சதகம்  நுதலிய  பொருளும்  புலனதல்  அறிக.

                                             **********************************************

பாடல் :13 .

வருந்துவன்நின்  மலர்ப்பாதம்

அவைகாண்பான்  நாயடியேன்

இருந்துநல  மலர்புனையேன்

ஏத்தேன்நாத்  தழும்பேறப்

பொருந்தியபொற்  சிலைகுனித்தாய்

அருளமுதம்  புரியாயேல்

வருந்துவன்  அத்  தமியேன்மற்

றென்னே  நான்  ஆமாறே.

கருத்துரை :- முன்னைத்  திருப்பட்டிற்  குறிப்பிட்ட  திருவருட்  பேற்றிற்கு  உரிய  அன்புச்  செயல்கள் தம்பால்  இல்லாமை  காரணமாக  அருளமுதம்  பெறுதல் அரிதாகுமாயின் , யான்  எவ்வாறு  உய்தல்  கூடுமென  அடிகள்  இத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறுகின்றார். 

பதவுரை :-  பொருந்திய பொன் சிலை குனித்தய்  = பொருந்திய  மேருமலையை வில்லாக  வளைத்தவனே ,

நாய்  அடியேன்  =  நாய்  போன்ற  சிறுமையுடைய  அடியேன்,

நின்  மலர்ப்பாதம்  அவை  காண்பான்  =  நின்னுடைய  தாமரை  மலர்  போன்ற  திருவடிகளாகிய  அவற்றைக்  காணுதற்பொருட்டு ,

வருந்துவன்  =  வருந்தி  முயல்கின்றேன் ,

இருந்தும்  =  கை , நா  முதலிய  உடல்  உறுப்புக்கள் எல்லாவற்றோடும்  கூடியிருந்தும் ,

நல  மலர்  புனையேன்  =  நல்ல  மலர்களைத்   தொடுத்து  நினக்கு  அணியேன் ,

நாத்தழும்பு  ஏற  ஏத்தேன்  –  நாவில்  தழும்புண்டாம்படி  நின்  புகளைப்  பாராட்டேன் ,

அருளமுதம்  புரியாயேல்  =  நின்  கருணையாகிய  அமுதத்தை  அடியேனுக்கு  வழங்கவில்லையாயின் ,

அத்தமியேன்  = அத்தகைய  கதியற்றவனாகிய  யான் ,

வருந்துவன்  = மேன்மேலும்  வருத்தம் எய்துவேன் ,

நான்  ஆம்  ஆறு  என்னே  =  பின்னர்  யான்  உய்யுமாறு  எங்ஙனம் ? என்பது.

விளக்கவுரை :-  கடவுள் தன்மையின் அரிய ஆற்றல்  புலப்படுத்தற்கு  மேருவை  வில்லாக  வளைத்த புராண கதை அடிகளால் மேற்கொள்ளப் பட்டது . பொன் : ஆகு பெயர் , பொன் மலையை வில்லாக  வளைக்கும்  அரிய  செயல்  பரம்பொருளாகிய  சிவபெருமான்  ஒருவற்கே  பொருந்தியதாகும் ;  ஏனையோர்க்கு  இயலாததொன்று  என்பதைப்  புலப்படுத்துவான், “பொருந்திய பொற்சிலை  குனித்தாய் “ என்றார். மலையை  வில்லாக வளைத்தல் இயலாததொன்று என எண்ணி, “இமய வில் வாங்கிய ஈர்ஞ்சடை  யந்தணன் “ என்பதற்கு, “இமய  மலையிடத்துப்  பிறந்த  மூங்கிலாகிய வில்லை வளைத்த இறைவன் “ என்பர் நச்சினார்க்கினியர் . மக்கள்  ஆற்றலை  நோக்க , இங்ஙனம் கோடல் பொருந்துமாயினும் , எல்லாம் வல்ல  ஆண்டவன்  பேராற்றற்கு  மூங்கிலை வளைத்தல் சிறந்த செயலாகாதென்பது எளிதில் உணரத்தக்கது . “கூத்தனிவ்  வானுங் குவலயமும்  எல்லோமுங்,  காத்தும்  படைத்துங் கரந்தும் விளையாடி “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக் கூறியபடி உலகப்  படைப்பு முதலிய தொழில்களே இறைவர்க்கு  விளையாட்டாக  அமையுமாயின் ,மலயை  வில்லாக  வளைத்தல் எங்ஙனம் இயலாததாகும் ? அக் கலிப் பா விலேயே  கயிலையை  இராவணன் பெயர்த்த கதைப் பகுதியுள்ளது . அதற்கு  உரையாளர்  வேறுபடக்  கூறிற்றிலர்.

               நாய்  இழிபிறப்புடையதாயினும் நன்றி  மறவாமைக் குணத்திற் சிறந்ததாகும்; அது போலத் தம் சிறுமை நிலையினும் இறைவன் தமக் கருளிய  பேருதவியை  நினைந்துருகும்  இயல்பு  தமக்குண்டு என்பதைப் புலப்படுத்துவார் , “நாயடியேன்” என்றார் . “அண்ணல்தானுரைப்பக்  கேட்டே  யடுகளிற் றெருத்தினிட்ட  , வண்ணப்பூந்தவிசு தன்னை ஞமலிமே லிட்ட தொக்கும் “ என்புழி , “வேறோர் ஊர்தி  கூறாது  ஞமலியைக்  கூறினான் ; அவன் அயிராது தருதற்கு “  என்று நச்சினாக்கினியர்  கூறிய உரைக்குறிப்பு  ஈண்டுக்  கருதத்தக்கது . அகரம் சேய்மையிலுள்ள  பொருளைச்  சுட்டுமாதலின் , திருவடிகள் அகக் கண்ணாலும்  காணமுடியாத சேய்மையில் உளவென்பதைக்  குறிப்பிற் புலப்படுத்தலான் , அடிகள் இறைவனுடைய  திருவடிகளைக் காண வருந்துதற்குக்  குறிப்பேதுவாகவுள்ளது  அவை  யென்னுஞ்  சுட்டு.

          “வாழ்த்த வாயும்  நினைக்க மடநெஞ்சுந் , தாழ்த்தச்  சென்னியும்  “ இறைவனால்  தரப்பட்டும்  , அவற்றைக்கொண்டு  உரிய  பணிகளைச்  செய்திலேன்  என  இரங்குவார் . “இருந்து நலமலர்புனையேன் ஏத்தேன் நாத்  தழும்பேற”  என்றார். “ ஆரூராவென்றென்றே யலறாநில்லே”  என்புழி , அலறுதல் உரக்கக்  கூவியழைத்தலாதலின், அங்ஙனஞ் செய்திலேன் என்பார், “நாத்தழும்  பேற  ஏத்தேன்”  என்றார்.  மன மொழி மெய் யாகிய  மூன்றனுள் , எளிதிற் பணி செய்தற்குரிய  மொழியும்  மெய்யுமே  தம்  பணிகளைச் செய்யவில்லையாயின், அரிதிற் செயற்பாலதாகிய  உள்ளப் பணியைப்  பற்றிக்  கூறவேண்டாவெனக்  கருதி , அதுகுறித்து யாதும்  கூறிற்றிலர் .

மன மொழி மெய்கள் இறைவன்  வழிபாட்டிற்  பொருந்தாமையால் இறைவனது  அருளமுதம் பெறுதல் இயலாதொழியுமே  என்றும் , அருளமுதம் பெறவில்லையாயின் , யான்  என்ன  செய்வேன் என்றும்  வருத்தம் தோன்ற  , “அருளமுதம் புரியாயேல்  வருந்துவன்”  என்றார். இத்  திருப்பாட்டின்  முதலடியிற்  கூறிய  வருத்தம்  சாதனமாகிய  இறைவழிபாடு  செய்யவியலாமை குறித்தும், நான்காம் அடியிற்  கூறிய  வருத்தம்  சாத்தியமாகிய  அருளமுதம் பெறாமை  குறித்தும் உண்டாயின  என்பது  உய்த்துணரத்  தக்கது .  அறம் , பாவம்  என்பவற்றையும் , அவற்றின்  பயன்களாகிய  இன்ப  துன்பங்களையும் மேற்கொள்ள  நினையுங்கால், அறமாகிய  மூலத்தைவிட்டு , அதன் பயனாகிய  இன்பத்தை விழைதலும், பாவமாகிய  மூலத்தைச் செய்து, அதன்  பயனாகிய  துன்பத்தை  வெறுத்தலும்  மக்களுட்  சிறியோர்  இயல்பு  என்ப . இம் முறயே , “இருந்து நலமலர் புனையேன்  ஏத்தேனாத் தழும்பேற “ என  அறமாகிய மூலத்தை விட்டு, அருளமுதம் பெற  விளைகின்றேன் ; என் சிறுமை  யென்னேயென இரங்குவார்.,”வருந்துவன் “ என்றார்.

    “அத்தமியேன்”  என்புழிச்  சுட்டு , மலர்  புனையாமையும் , நாத்தழும்பேற ஏத்தாமையும் , ஆகிய அந் நிலைமையை  உணர்த்தும் . இறை  வழிபாட்டிற்  குரிய  உறுப்புக்களோடு  கூடியிருந்தும் அவ்வழிபாட்டில் தலைப்படா மையால், உறுதுணையின்றி வெறுவியனாய்த்தனியனாயினேன்  என்பார், “அத்தமியேன்” என்றார்.  மற்று;  அசை நிலை . உலகப்  பொருள்கள்  எத்துணையிருப்பினும் , இறைவனது அருளமுதம்  பெறவில்லையானால், உயிர்  உய்தற்கு  , வழியில்லையே  என்று  இரங்குவார். “நான்  ஆமாறு  என்னே”  என்றார். ஆமாறு  என்புழி,  ஆதல் , உய்தல் , என்னும்  பொருட்டு. 

        இதன்கண், இறைவன்  திருவடிக்கண்  மலர்  புனைதல், நாத்தழும்பேற ஏத்துதல் முதலிய  சாதனங்களில் தலைப்படாத  நெஞ்சின்  இயல்பு  குறித்து  வருந்தி  இறைவனை  முன்னிலைப்படுத்துக் கூறுமுகமாக , அந்நெஞ்சிற்குக் குறிப்பான்  அறிவுறுத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றியவாறறிக.

                                                ***********************************

பாடல் : 14 .

ஆமாறுன்  திருவடுக்கே

அகங்குழையேன்  அன்புருகேன்

பூமாலை  புனைந்தேத்தேன்

புகழ்ந்துரையேன்  புத்தேளிர்

கோமான்நின்  திருக்கோயில்

தூகேன்  மெழுகேன்  கூத்தாடேன்

சாமாறே  விரைகின்றேன்

சதுராலே  சார்வரானே .

கருத்துரை :-  திருவருட் பேற்றிற்குரிய  சாதனம்  தம்பால்  இல்லாமை  குறித்து முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறிய  அடிகள், இத் திருப்பாட்டில்  கட்டறுத்து உய்தி  பெறுதற்குரிய அச் சாதனம் மன மொழி மெய்களை இறை வழிபாட்டிற்கு உரிமையாக்குதல் ஆகவும் , அங்ஙனமின்றி, அவற்றை உண்டு  உடுத்து உறங்கும்  உலக  வாழ்விற்கு  உரிமைப்படுத்திப்   பயனின்றி  இறத்தற்கும்  விரையும்  என்  அறியாமை யிருந்தவாறு  என்னேயென  மீண்டும்  இரங்குகின்றார் .

பதவுரை :- புத்தேளிர்  கோமான்  =  கடவுளர்  தலைவனாகிய  சிவபெருமானே,

உன்  திருவடிக்கே  ஆமாறு  = நின்  திருவடிக்குத்  தொண்டனாம்  வண்ணம் ,

அகம்  குழையேன்  =நெஞ்சங்கனிந்திலேன் ,

அன்பு உருகேன்  =  அன்பினால்  உருகுவதும்  இல்லேன் ,

பூமாலை புனைந்து  ஏத்தேன்  =  மலர்  மாலையை அணிந்து  வாழ்த்திலேன் ,

புகழ்ந்து  உரையேன்   =  நின்  புகழைப்  பாராட்டிப்  பேசேன் ,

நின் திருக்கோயில்  தூகேன்  =  நின்  திருக்கோயில்களை  அலகிடேன் ,

மெழுகேன்  =  மெழுகுதல்  செய்யேன் ,

கூத்தாடேன்  =  உவகை  மிகுதியாற்  கூத்தாடுதல்  செய்யேன் ,

சதுராலே  சார்வான்  =  என் ஆற்றலாலே  நின்னை  யடைதற்கு ,

விரைகின்றேன்  = முந்துகின்றேன் ,

(ஆது)  சாமாறே  =  அங்ஙனம்  விரைகின்றது  பயனின்றிச்  சாதற் பொருட்டேயாம்  என்பது.

விளக்கவுரை :-  “யாங்கள்  எல்லோரும்  பசுக்கள் ; நீ  ஒருவனே  பசுபதி யென்று  உடன்பட்டனர்  தேவர்கள் “ என்னும்  மறைமொழிப்படி , கடவுளர்  தலைவன்  சிவபிரான் ஒருவனே  யாவன் ஆதலின்,  “புத்தேளிர்  கோமான்”  என்றார் , “திரு” என்பது செல்வத்தைக் குறிக்கும்; ஈண்டு  ஞானச்  செல்வத்தை , அடைந்தார்க்கு   அளிக்கும்  இறைவன் அடி  திருவடி யெனப்பட்டது. திருவடிக்கேயாதல் – அடித் தொண்டனாதல் . உலகத்துப்  பொருள்களுள் எதற்கும்  அடிமையாகாமல்  , இறைவன்  திருவடிக்கே  யடிமையாதல் உட்கோளாதலின் , ஏகாரம்  தேற்றப்  பொருளது . சிவத்  தொண்டில்  ஈடுபடுதற்கு  , மன மொழி மெய்கள் மூன்றும் இறைவன் வயப்படல்  வேண்டும் . உள்ளம்  இல்வழி, மொழியும்  செயலும்  பயன்  விளையா  ஆதலின்,  முதலில்  உள்ளத்தின் தூய  செயலைப்  புலப்படுத்தத் தொடங்கி  , “அகங்குழையேன்  அன்புருகேன்” என்றார் . குழைதல் – இளகுதல்; உள்ளம்  உருகுதற்கு  முதலில்  குழைதல்  வேண்டும் . அக்குழைவு, கல்லைப்  போன்ற  வன் நெஞ்சம் , இறைவனை இடையறாது  நினைவு  கூர்தலால்  நிகழ்வது. அதன்மேல் , இறைவன் ஒருவனே  பற்றுக்கோடு  என்னும்  உறுதிப்பாட்டால்  உண்டாகும்  அன்பு  காரணமாக  அவ்வுள்ளம் உருகும் . உருகிய  அவ்வுள்ளத்தில் இறைவன்  விளங்குவான்  என்பது  பெரியோர்கள் கண்ட  அநுபவம் . இதனை  “உரமென்னும்  பொருளானை  உருகில்  உள்ளுறைவானை “ என்பதனாலும் , “உள்ளம்  உள்கலந் தேத்தவல்  லார்க்கலால், கள்ளமுள்ள வழிக்கசிவானலன்” என்பதனாலும்  உணர்க. உள்ளத்தின் செயல்களாகிய  குழைதலும்  உருகுதலும்  இன்றியமையாத  சாதனங்களாகவும் , அவற்றை  அடைந்திலேன்  என்று  இரங்குவார், “அகங்  குழையேன்” , “அன்புருகேன்” என்றார்.

             ஏத்துதல்  –  வாழ்த்துதல் . ஏத்துதற்கு  முன்னர்ப்  பூமாலை  புனைதல்  இறை வழிபாட்டு  முறையாதலின் , “ பூமாலை  புனைந்தேத்தேன் “ என்றார்.  புகழ்ந்து  உரைத்தல் , இறைவன்  பெருமைகளைப்  பலவாறு  பாராட்டிக்  கூறல், வாழ்த்துதல், தம்  குறையைப் பரிகரிக்க  நினைந்து  வாழ்த்துருவத்தில்  இறைவனைத்  துதித்தல்  .  “வாழ்த்துவதும் வானவர்கள் தாம்  வாழ்வான் “   என்பதும்  கருதத்தக்கது.  புகழ்தல், இறைவனுடைய  திருவிளையாடல்களை  இனிய  பாட்டு  வடிவிலும்  உரை  வடிவிலும்  வைத்துப் பாராட்டடுதல் .  ஆகவே , வாழ்த்துதலும்  புகழ்ந்துரைத்தலும்  மொழிப்பணியாதலால் , அவற்றையும்  மேற்கொண்டிலேன்  என்பார், “ஏத்தேன் புகழ்ந்துரையேன்” என்றார்.

                 தூகல்  –  திருவலகிடுதல்.  நாடோறும்  திருக் கோயிலுக்குச்  சென்று  திருவலகிடுதல்  மெழுகுதல்  முதலியன  செய்தல்  உடற்பணிகளாம் . எளிமையிற் செய்யத்தக்க  அப்  பணிகளையும்  செய்திலேன்  எனவும் , இம் முக்கரணங்களாலும்  வழிபாடியற்றி , அதன்  பயனாக  இன்பத்தில்  திளைத்துப் பரவசமாக  நின்று  கூத்தாடலுஞ்  செய்திலேன்  எனவும்  இரங்குவார் , “ தூகேன் மெழுகேன் கூத்தாடேன் “ என்றார். முக்கரணங்களாலும்  நிகழ்வன , முறையே  இரண்டிரண்டு  செயல்களாக, அகங்குழைதல்  அன்புருகுதல் ,ஏத்தல் புகழ்ந்துரைத்தல் , தூகல்  மெழுகுதல் என்னும்  இவை கூறப்பட்டன.  இச் செயல்களின்  முதிர்ச்சியில்  நிகழ்வது  பரவசமாக  நின்று  இயற்றும்  இன்ப  ஆடலாகும். கூத்தாடல்  உடலின்  செயல்  எனினும் , இன்பக்  களிப்பின்  விளைவாதலின் , கரணங்கள்  மூன்றும்  இறை  வயப்பட்டபின்  நிகழ்வதாகுமென்பது  கருதத்தக்கது. சரியை  வழிபாடாகிய  அலகிடுதல்  மெழுகுதல்  ஆகிய  உடற்பணிகலும் , ஏத்துதல் புகழ்ந்துரைத்தல்  ஆகிய  மொழிப்பணிகளும்  , இவற்றின்  முதிர்ச்சியில்  நிகழும்  இன்பக்  கூத்தும்  , தொண்டற்கு  இன்றியமையாதன  என்பதை , “நிலை  பெறுமாறு  எண்ணுதியேல்  நெஞ்சே  நீ வா ,  நித்தலும்  எம்பிரானுடைய  கோயில் புக்குப்  புலர்வதன்முன்  அலகிட்டு  மெழுக்கும் இட்டுப்  பூமாலை  புனைந்தேத்திப்   புகழ்ந்துபாடித்  , தலையாரக்  கும்பிட்டுக்  கூத்துமாடி  “ என்னும்  அப்பர்  திருவாக்கானும்  உணர்க.

                 யாவருக்கும்  மேலாம்  அளவிலாச்  சீருடையானாகிய  இறைவன்  முன்னிலையில் , யாவர்க்கும்  கீழாம்  அடிமையாக  நின்று  , தொண்டு  செய்து  அடைதற்பாலதாகிய  அவ்விறையருளை, அத்  தொண்டுகளை  மேற்கொள்ளாமல்  ஆன்மாத்  தன்  ஆற்றலால்  அடையலாம்  என்று  என்ணுதல் தவறுடைத்து  என்பதைப்  புலப்படுத்த  , “சதுராலே  ‘சார்வான்’ விரைகின்றேன் “  என்றார். சதுர்  – ஆற்றல்.  சார்வனே  என்பதிலுள்ள  ஏகாரம்  ஈற்றசை.  சதுராலே  என்புழி,  ஏகாரம்  தேற்றம் . இறையருளைப்  பெறுதற் குரிய  தொண்டுகளை மேற்கொள்ளாமல்  உயிர்  தன்  ஆற்றலால்  அதனைப்  பெறக்கருதல், பயனின்றிச் சாதற்கு  முந்துவதாகும்  என்பது  கருதி  ,  “சாமாறே” என்று  கூறினர் . விரைகின்றேன் என்னும்  வினைமுற்றுச்  சார்வான்  என்னும்  எச்சத்திற்கு  முடிவாகும் .

                    இனி,  உன்  திருவடிக்கே  குழையேன்,  உருகேன்  என்றதனாலும் , ஏத்தேன் , புகழ்ந்துரையேன்  என்றதனாலும்  , திருக்கோயில் தூகேன்  மெழுகேன்  கூத்தாடேன்  என்றதனாலும் முறையே  குறிப்பாற்  பெறக்கிடப்பன ,  என்  மனைவி , மக்கள்  முதலியோர்  பொருட்டு  அகங்  குழைதலும்   உருகுதலும், பொருட்பயன்  கருதித்  தகுதியில்லாத  மனிதரை  ஏத்தலும்  புகழ்ந்துரைத்தலும் ,  அநித்திய  வாழ்க்கைக்குரிய  என்  இல்லத்தை  அலகிடுதலும்  மெழுகுதலும் , இன்னோரன்ன  உலக  வாழ்க்கை  நலத்தில்   ஈடுபட்டுக்  களித்துக்  கூத்தாடலும்  செய்கின்றேன்  என்பனவாம் . அந்தோ !  இச்செயல்கள்  எல்லாம்  ஊனடைந்த  உடம்பின்  பிறவி,  தானடைந்த  உறுதியைச்  சாராமல்  பயனின்றிச்  சாதற்கு  உரியனவாமே  என்று  இரங்குவார் , “சாமாறே விரைகின்றேன்  சதுராலே  சார்வானே”  என்றார். 

                       இதன்கண், முக்கரணங்களாலும்  நிகழும்  செயல்களுக்கு  மூலமாகவுள்ளது  நெஞ்சம்  ஆதலான் , அந்  நெஞ்சம்  இறைவயப்படாமல் , அழிதன் மாலையவாய  உலகத்துப்  பொருள்களின்பால்  விரைகின்றதே என்று  வருந்தி , இறைவனை  முன்னிலைப்படுத்து , அந் நெஞ்சிற்குக் குறிப்பான் அறிவுறுத்தவாற பெறப்படுதலின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாதல்  அறிக .     **************** 

பாடல் : 15 .

வானாகி  மண்ணாகி

வளியாகி  ஒளியாகி

ஊனாகி  உயிராகி

உண்மையுமாய்  இன்மையுமாய்க்

கோனாகி  யானெனதென்

றவரவரைக்  கூத்தாட்டு

வானாகி  நின்றாயை

யென்சொல்லி  வாழ்த்துவனே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  மன மொழி  மெய்களை  இறைவழிபாட்டிற்  பயன்படுத்தாமைக்கு  இரங்கிய  அடிகள் , அக்  காரணம்  மூன்றனுள் , மனத்தாலும்  மொழியாலும்  இறைவன்  பெருமையை  நினைந்து  வாழ்த்துதற்கு, அப் பெருமான் , மாற்ற  மனங்கழிய  நின்ற  மறையோனாதலால் , அவற்றிற்கு  எட்டாமை  குறித்து, எவ்வாறு  நினைந்து , என்  சொல்லி  வாழ்த்துவேன்  என்று இத்  திருப்பாட்டில்  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வானாகி  மண்ணாகி  வளியாகி  ஒளியாகி  =   விண் ,மண் , காற்று , தீ என்னும்  இப்  பூதங்களாகியும்  ,

ஊனாகி , உயிராகி  =  உடலும் , உயிருமாகியும் ,

உண்மையும்  ஆய்  இன்மையும்  ஆய்  = உள்பொருளாகியும்  இல்பொருளாகியும் 

கோன்  ஆகி  =  எப்பொருட்கும்  தலைவனாகியும் ,

அவரவரை  =  உலகத்துள்ள  மக்கள்  எல்லோரையும்  ,

யான்  எனது  என்று  கூத்து  ஆட்டுவான் ஆகி  = யான்  என்றும்  எனது  என்றும்  சொல்லிக்  கூத்தாடும்படி  செய்பவனாகியும் ,

நின்றாயை  =  நிற்கின்ற  நின்னைக்  குறித்து ,

என் சொல்லி  வாழ்த்துவன்  =  யாது  கூறி  வாழ்த்தக்  கடவேன் ?  என்பது.

விளக்கவுரை :-  ஐம்பெரும்  பூதங்களும்  , ஞாயிறு திங்களும் , உயிரும்  ஆகிய  எட்டும்  இறைவனுக்கு  உடல்  என்பர் . இதனை  ,”இருநிலனாய்த்  தீயாகி  நீருமாகி  இயமானனாய்  எறியுங்  காற்றுமகி ,அருநிலைய  திங்களாய்  ஞாயிறாகி  ஆகாசமாய்  அட்ட  மூர்த்தியாகி” என்னும்  நின்ற  திருத்தாண்டகத்தலும்  அறியலாம். இஃது   இவ்வெண்வகைப் பொருள்களும்  அல்லாமல்  உலகம்  என்பது  ஒன்றில்லை  யாதலின் நிற்கும்  இறைவனது  வியாபக  நிலையைக்  கூறியபடியாம் . இந் நிலையையே  அடிகள்  இத் திருப்பாட்டின்  முதற்கண்  புலப்படுத்து  வாராயினர். “வான்” என்னுஞ்சொல்  ஆகாயத்தையும்  , மேகம் என்னும்  பொருளுடையதாய்  ஆகுபெயராய் நின்று  நீரையும்  உணர்த்தும் . “ஒளி”  என்பது  தீயையும்,  ஞாயிறு  திங்களையும்  உணர்த்தும் . தீ  முதலிய  மூன்றனையும்  தனித்தனியே  கூறாமல்  ஒருங்கு  புலப்படுத்தற்கே ஒளியென்னும்  ஒரு  சொல்லாற் கூறியருளினார் ; அவையெல்லாம்  ஒளியுடைமை  பற்றி  யென்க. முதற்கண் வானாகியென்று தொடங்கியது  தோற்ற  முறைபற்றி  நீரையும்  அச்சொல்லாற்  பெறவைத்து, பிரமனுடைய  படைப்புப்பொருள்களுள் முதற்கட்  படைக்கப்பட்ட தென்னும்   சிறப்பு  நோக்கி என்க. செய்யுள் முறை நோக்கி மண்  முதலிய  பூதங்கள் பிறழ வைக்கப்பட்டன. உயிர்  உடலைப்பற்றி  நிற்கும்   நிலையிலே  “ இயமானான் “ எனப்படும்  . இவ்வுண்மை  குறித்தே , “ஊனாகி உயிராகி” என்றார். ஊன், ஆகுபெயராய்  உடலை  உணர்த்தும். ஆகவே, இறைவன் மேற்குறிப்பிட்ட  எண்வகைப்  பொருள்களையும்  தனக்கு உடலாகக் கொண்டு விளங்குபவன் என்பது புலப்படுத்தவாறாம்.

                      மெய்யன்புடையார்  அகக்  காட்சிக்குப்  புலப்படுதலின்  உள் பொருளாகவும்  அவ்  வன்பிலார்க்கு  எவாற்றானும் புலப்படாமையின்  இல்பொருளாகவும்  விளங்குவன் என்பது தோன்ற ,”உண்மையுமாய்  இன்மையுமாய் “ என்றார் . இதனைப்  பிறிதோரிடத்தும்  அடிகள் , “அன்பர்க்கு  மெய்யானை  அல்லாதார்க்கு  அல்லாத  வேதியனை  “ எனக்  கூறுவர். “சொதியனே  துன்னிருளே “என்பதும்  இக் கருத்தைப்  புலப்படுப்பதகும். இனி, பாசஞான பசுஞானங்களால் அறியப் படாமையும், பதி ஞானம்  ஒன்றானே  அறியப்படுதலும இறைவனுக்குச்  சிறப்பிலக்கணம்  என்பவாதலின், அவ்வுண்மை  தோன்ற , “உண்மையுமாய்  இன்மையுமாய் “என்றார் எனினுமாம்.  வான்  முதலிய  பூதங்களும்  உயிரும்  ஆகிய  அறிவில் பொருளும் , அறிவுடைப்  பொருளுங் கலந்த உலக உருவமாக  விளங்குவோன்  இறைவன் என்றால், அவ்வுலகத்தை  இயக்கும்  பேராற்றல்  படைத்த தனி  முதல்  வேறொரு  பொருளாக  இருக்குங்கொலோ  என்னும்  ஐயத்தை  ஒழித்து, இவ்வுலகப்  பொருட்குத்  தலைவனாக  இருப்பவனும்  அப் பெருமானே  என்பதை  வலியுறுத்தற்கு  , “கோனாகி” என்றார்.

                        யான்  என்பதை  அகங்காரம்  எனவும்,  எனது  என்பதை  மமகாரம்  எனவும்  வடநூலார்  வழங்குவர் . இவை  முறையே  அகப்பற்றும் புறப்பற்றும் ஆகும். எல்லாப் பற்றுக்களும்இவ்விரண்டனுள்  அடங்கும் . இவ் விருவகைப் பற்றுக்களும் அற்ற  நிலையே வீட்டின்ப  நிலையாகும் . இதனை , “ஆவியாக்கை யான்  எனது என்று யாதுமின்றி அறுதலே” என்னும் அடிகள் திருவாக்கானும்உணரலாம் . இவ் அகப்புறப் பற்றுக்களில்  ஈடுபட்டே உலகத்து உயிர்களெல்லாம் உழல்கின்றன என்பது  பெரியோர்  அநுபவத்திற் கண்டது. எல்லாவுயிர்களும் இப்பற்றுக்களை  யுடையன  வாயினும் , மக்கள்பாலே  விளக்கமாகக்  காணப்படுதலின் , “யான்  எனது  என்று  அவரவரை “ என்றார்.  நூற்கேள்வி  யானும்  ஞானாசிரியன்  உபதேசத்தானும்  இப்பற்றுக்களின் இயல்பை  அறிந்து , அவற்றினின்றும்  விடுதி  பெறுதற்குத்  தகுதியுடையார்  மக்கட் பிறப்பினராகலின், சிறப்பாக, “அவரவரை” என்று  உயர்திணைமேல்  வைத்துக்  கூறியது  பொருத்தமுடையதே . யான்  எனது என்னும்  இவ்விருவகைப்  பற்றுக்களாலும்  உயிர்  ஆரவாரித்துக்  களிக்கும்  இயல்புடைமை  நோக்கி , அந் நிலையைக்  கூத்தாடல்  எனவும் , இறைவன் , படைத்தல்  முதலிய ஐம்பெருந் தொழில்களுள் ஒன்றாகிய மறைத்தற் றொழிலால்  உயிர்களோடு உடனாகி  நின்று, வினைப்பயன்களை நுகர்விக்கின்றான் என்பது சைவ நூல் துணிபாகலின் “கூத்தாட்டு  வானாகி” எனவும்  கூறினர் . யானே செய்பவன்  எனக் களித்தாடும்  அகக்  கூத்தும் , எல்லாம் எனது எனக் களித்தாடும் புறக்கூத்தும்  ஆகிய  அறியாமையால் நிகழும் இருவகைக் கூத்தும் உயிருக்கு  உள்ளன  என்பதும் , அங்ஙனம்  ஆட்டுவிப்பவன்  இறைவன் என்பதும் போந்தவாறுணர்க, “ஆட்டுவித்தால்  ஆரொருவர்  ஆடாதாரே “ என்பதும் ஈண்டுக்  கருதத்தக்கது . இங்ஙனம் ஆட்டுவித்தற்குக் காரணம் உயிர்களின் வினைஒழிவு  குறித்து  இறைவனுக்கு  உண்டாகிய அருட்குணமேயாகும் .

             நின்றாய் , முன்னிலை  வினைப்பெயர் . பரம்  பொருளாகிய சிவபெருமானுக்கும் உலகத்திற்கும் உள்ள  இயைபைப்பற்றி, “எட்டுத்திசை தானாய்  வேறா  யுடன்  ஆனான்  இடம்  வீழிம்மிழலையே” எனத்  தேவாரத்  திருமறையும் , “உலகெலாமாகி  வேறாயுடனுமாய்” எனச்  சைவ  நூலும்  கூறும். முதல்வன் உலத்தோடு  கலந்திருத்தலின்  உலகெலாமாகி எனவும் , அவ்வுலகத்திற் குரிய விகாரங்கள் தன்னைப் பற்றாவாறு இருத்தலின்  வேறாய் எனவும்  ,உயிர்க்கு உயிராக  நின்று  வினைப்பயன்  நுகர்ச்சியில்  தலைப்படுதலால் உடனாகி  எனவும் கூறப்பட்டனன் .  இம்  மூன்று நிலைகளையும்  இத் திருப்பாட்டுத்  தெளிவுறுத்து நிற்றல் உய்த்துணரத்  தக்கது .

              வானாகி  என்பது  முதல்  உயிராகி  என்பதுவரை கூறப்பட்ட  செய்திகளால் , “உலகெலாமாகி “  என்பதும் ,”உண்மையுமாய்  இன்மையுமாய்க்  கோனாகி”  என்பவற்றால் , “வேறாய்” என்பதும் , “அவரவரைக்  கூத்தாட்டுவானாகி “  என்றதனால் “உடனுமாய் “ என்பதும்  புலப்படுத்தவாறு  அறிக. 

              இங்ஙனம்  வான்  முதலிய  பூதங்களாகவும் தலைவனாகவும்  விளங்குகின்ற  இறைவனுடைய  நிலைகளுள் ,  எந் நிலையை  எவ்வாறு  எடுத்துக் கூறி  வாழ்த்துவேன்  என்பார், “ என் சொல்லி  வாழ்த்துவனே” என்றார் . இறைவனுடைய  ஒரு  சில குணங்களைப் பாராட்டினால் , மற்றவை  கூறப்படாமை குன்றக் கூறல்  ஆக  முடியுமென்பதும் , எல்லாவற்றையும்  எடுத்துக்  கூறற்கு  மாற்ற மனங்கழிய  நின்றவனாகலின்  இயலாத  தொன்றாகும்  என்பதும்  கருத்து.

                  இதன்கண், வாழ்த்த வாயும் , நினைக்க  மடநெஞ்சும்  தந்த  இறைவனை  வாழ்த்துதற்கு  அவன்  குணங்கள் மாற்ற மனங்கழிய நிற்கும் இயல்பினவாகலான் , இயலாதவென  அமைதி  பெற  முயலும்  நெஞ்சத்தின் இயல்பை  வெறுத்து , இறைவனை  முன்னிலைப்படுத்துக் கூறுமுகமாக , இயன்றாங்கு  வாழ்த்துவதே  கடமை  என்பதைக் குறிப்பிற்  புலப்பட  வைத்து  நெஞ்சிற்கு அறிவுறுத்தமை பெறப்படுதலின்  , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாயவாறு  அறிக.

                                  *******************************************

பாடல் :16 .

வாழ்த்துவதும்  வானவர்கள்

தாம்வாழ்வான்  மனம் நின்பால்

தாழ்த்துவதுந்  தாம்  உயர்ந்து

தம்மையெல்லாந்   தொழவேண்டிச்

சூழ்த்துமது  கரமுரலுந்

தாரோயை  நாயடியேன்

பாழ்த்தபிறப்  பறுத்திடுவான்

யானும் உன்னைப்  பரவுவனே.

கருத்துரை :-  இறைவனுடைய  பலதிறப்பட்ட  குணங்கள் எல்லாவற்றையும்  முற்ற  எடுத்துக்  கூறி  வாழ்த்துதல்  இயலாத  தொன்றென  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறிய  அடிகள் , அங்ஙனமாயினும் , இயன்றாங்கு  வாழ்த்துதல்  கடமையென்றும், அதுவும் தேவபோக  முதலியவற்றைக்  கருதாமல் , பிறப்பறுத்தலையே  கருதியதாக  இருத்தல் வேண்டும்  என்றும் , இத் திருப்பாட்டில்  தம்  உண்மைக்  கருத்தைத்  தெரிவித்துக் கொள்ளுகின்றார் .

பதவுரை :-  மதுகரம்  சூழ்ந்து  முரலும்  தாரோயை  =  வண்டுகள் மொய்த்து  ஒலிக்கும்  கொன்றை  மாலயையுடைய  நின்னை,

வானவர்கள்  வாழ்த்துவது தாம்  வாழ்வான்  =  தேவர்கள் வாழ்த்துதல்  தாம்  நெடுங்காலம்  இன்பமாக  வாழுதற்  பொருட்டே ,

மனம்  நின்பால்  தாழ்த்துவது  =  நெஞ்சத்தை  நின்னிடத்துப்  பணிவித்தல் ,

தாம்  உயர்ந்து  எல்லாம்  தம்மைத்  தொழ வேண்டி  = தாம்  பெருமையடைய  எல்லாவுயிர்களும்  தம்மைப்  பணிய  வேண்டியே,

நாயடியேன்  யானும்   =  நாய்  போன்ற  சிறுமை உடைய  அடிமையாகிய  யானும் ,

பாழ்த்த  பிறப்பு  அறுத்திடுவான்  =  பயனற்ற  பிறப்பை  அறவே  நீக்குதற்  பொருட்டு ,

உன்னைப்  பரவுவன்  =  நின்னை  வாழ்த்துவேன்  என்பது  .

விளக்கவுரை :-   உம்மைகள்  இரண்டும்  இசை  நிறை . சூழ்த்து  என்பது  எதுகை  நோக்கி  வலித்தல்  விகாரம்  பெற்றது.  வண்டுகள் சூழ்த்து  ஆரவாரித்தல்  மலரிலுள்ள  தேனை  நுகர்ந்து  இன்புறுதற்  பொருட்டே .இக்  குறிப்பு  வானவர்  குறிக்கோளுக்கும்  இயைந்திருத்தல்  அறிக. பெரும்பாலும்  புண்ணியப்பயனையே  நுகரும்  தேவர்கள் ,  அப்பயன்  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டுப்  பிறப்பு  இறப்புத்  துன்பத்தை  மறந்து ,மேன்மேலும்  தம்  வாழ்க்கை  இன்பம்  மிகுதற்  பொருட்டே  இறை வழிபாடு  செய்யும்  இயல்பினர்  என்பதைப்  புலப்படுத்த , “வாழ்த்துவதும்  வானவர்கள்  தாம்  வாழ்வான் “ என்றார் . இறை  வழிபாடு  செய்வார்  எப்  பயன்  குறித்துச்  செய்கின்றனரோ, அப்  பயனை   அவர்க்கு  இறைவன்  அருளிச்செய்வன்  என்பது  துணிபாதலின் , தாம்  வாழ  விரும்பி  இறைவனை  வாழ்த்துதல்  தம்  வாழ்க்கை  இன்பத்தை  மிகுவிக்கும்  என்பது  தெளிவாம் .  தம்  நெஞ்சத்தைப்  பணியச்  செய்தல்  ,  எல்லா  உயிர்களும்  தம்மைப்  பணிய ,  அதனால்  தாம்  உயர்வு  அடைய  வேண்டியே  என்பது  கருத்து ; உயர  என்பது  , உயர்ந்து எனத்  திரிந்து  நின்றது .  “வானின்றுலகம்  வழங்கி  வருதலான்” என்புழி,  நிற்ப  என்பது  நின்று  எனத்  திரிந்த  நின்றது  போலக்  கொள்க.  இறைவனை  மெய்யன்போடு  வாழ்த்துவாரும்  வணங்குவாரும்  தேவர்  முதலிய  எல்லோரானும்  வாழ்த்தப்பட்டும்  வணங்கப்பட்டும்  பெருமையுடையவர்  என்பதனை , ” தொழப்படும் தேவர்  தொழப்படுவானைத்  தொழுத  பின்னை, தொழப்படுந்  தேவர்  தம்மால் தொழுவிக்கும்  தம்  தொண்டரையே” என்னும்  திருவாக்கானும்  உணர்க.

                  பிறப்பு இறப்பு அற்ற  நிலையே அழிவில்லாத  இன்பநிலை யாதலின்  அப்  பேறே  உயிர்க்கு  உண்மைப்பயனாகும்  .  அஃதல்லாதனவெல்லாம்  வினைப்  பயன்களாக நின்று  மேன்  மேலும்  வினையீட்டத்திற்கு  ஏதுவாம்  ஆதலின் , அப்  பயன்களைத்  துய்ப்பதற்குக்  கருவியாகவுள்ள  பிறப்பு  ,  பயன் அற்றதெனக்  கொண்டு ,”பாழ்த்த  பிறப்பு” என்றார். பிறப்பு அறுத்தல் – பிறவிக்கு  ஏதுவாகிய  வினையை  வேரறக்  களைதல் .  வினையெச்சம்  சிறிதிருப்பினும் , ஆலம்  வித்துப்போலப்  பிறப்பு  இறப்புக்  கிளைத்தெழும்  ஆதலின்,  இவ்வாறு  கூறப்பட்டது .  “பாசவேரறுக்கும்  பழம் பொருள் “  என்பது  அடிகள் திருவாக்கு ,  யானும்  என்புழி  உம்மை  எச்சப்பொருளது .

                    வாழ்த்துதல்  முதலிய  வழிபாட்டுச்  செயல்கள்,  பயன்  கருதிச்  செய்யப்படுவனவும் , பயன்  கருதாமல்  செய்யப்படுவனவும்  என  இரு  வகைப்படும்.  இவற்றுள் தேவர்கள் வழிபாடு  பெரும்பாலும்  போகம்  முதலிய  பயன்  கருதிச்  செய்யப்படுவனவாம் .  இவ்வுண்மையைப்  புராண  இதிகாச  முதலியவற்றிற்  பரக்கக்  காணலாம் .  அடிகள்  வழிபாடு  உலகப்  பயனைக்  குறித்தன்று ; அப்  பயனுக்குக்  கருவியாகவுள்ள  பிறப்பை  அறுத்தலையே குறித்ததாகும் .  பந்தம்  வீடு  தரும்  பரமன் “ என்றபடி,   பந்தத்திற்கு  எதுவாகிய  உலக  வாழ்க்கையையும் , வீட்டிற்கு  ஏதுவகிய  பிறப்பு  அறுத்தலையும்  தருதற்குரிய  இறைவனிடத்து  அடிகள்  பிறப்பு  அறுத்தலைக் குறித்து வேண்டியது பொருத்தமே . தேவர்களுடைய  வாழ்த்தும் வணக்கமும்  அவர்தம்  உயர்வைக்  குறித்தனவாம்  என்று  தாழ்த்துக் கூறியது  எற்றிற்கெனின், “ பாழ்த்தபிறப்  பறுத்திடுவான்  யானும்  உன்னைப்  பரவுவனே”  என்னும்  வேண்டுகோளை  ஏற்றுக்கொண்டு , மனிதப்பிறப்பை  ஒழித்துத்  தேவப்பிறப்பை  அருளி , துறக்க  இன்பத்தைத்  துய்க்கவெனக்  கட்டளையிடின், தேவ போகத்தில் மயங்கி ,மேன்மேலும் அவ்வின்பத்தையே விழைந்து , மீண்டும்  பிறப்பு  இறப்பில்  சுழலக்  கூடுமென்று  அஞ்சியே , அடிகள்  அவ் விண்ணவர்  இயல்பை  எடுத்துக்கூறி , அவ்  வாழ்க்கையில் தமக்கு  விருப்பமின்மையைக்  குறிப்பிற்  புலப்படுத்துவாராயினர் . “கொள்ளேன் புரந்தரன்  மால்  அயன்  வாழ்வு”  என்றும் , “போகம்  வேண்டி  வேண்டிலேன்  புரந்தராதி  இன்பமும்  “  என்றும்  முன்னும்  பின்னுமுள்ள  அடிகள் திருவாக்குகளும் , இதனை  வலியுறுத்துவனவாம் .

                      இதன்கண், இறைவனை  இயன்றாங்கு  வாழ்த்துங்காலும் , மேன்மேலும் போகவிழைவிற் செல்லும் தேவர்களின் இயல்பை மேற்கொளக் கருதும்  நெஞ்சத்தின் இயல்பைத்  தகாதென்று  வெறுத்து  ,இறைவனை  முன்னிலைப்  படுத்துக்  கூறுமுகமாக , அந்  நெஞ்சிற்கு  அறிவுறுத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றியவாறறிக .

                                             *************************************\

பாடல் :17 .

பரவுவார்  இமையோர்கள்

பாடுவன  நால்வேதங்

குரவுவார்  குழல்மடவாள்

கூறுடையா  ளொருபாகம்

விரவுவார்  மெய்யன்பின்

அடியார்கள்  மேன்மேலுன்

அரவுவார்  கழலிணைகள்

காண்பாரோ  அரியானே

கருத்துரை :-  இறைவனை  இயன்றாங்கு  வாழ்த்துதல்  தம்  கடமையாகும் என  முன்னைத்  திருப்பாட்டிற்  கூறிய  அடிகள் , அங்ஙனம்  வாழ்த்துதல்  முதலிய  செயல்களாலும், பிறப்பறுத்தற்கு  வாயிலாக  உள்ள  இறைவன்  திருவடிக்காட்சி  பெறுதற்கு  அரியதாகுங்கொலோவென  ஐயுற்று, அவ்  அருமைப்பாட்டை  நினைந்து  வியந்து இத்  திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார். 

பதவுரை :-  அரியானே   =  காண்டற்கு  அரியவனே ,

இமையோர்கள் பரவுவார்  =  தேவர்கள் முன்னிலைப்படுத்து  வாழ்த்துவர் ,

நால் வேதம்  பாடுவன  =  நான்கு  மறைகளும்  பாராட்டிப்  புகழ்வன ,

குரவுவார்  குழல்  மடவாள்  =  குராமலரை  அணிந்த  கூந்தலையுடைய  இறைவி ,

ஒரு  பாகம்  கூறு  உடையாள்  =  நின்  திருமேனியின்  ஒரு  கூற்றைத்  தனக்குக்  கூறாக  உடையள் ,

மெய்யன்பின்  அடியார்கள்  விரவுவார்  =  உண்மையான  அன்பினையுடைய  அடியவர்கள்  நின்னோடு  கலந்து  இன்புறுவர் ,

உன்  அரவுவார்  கழல்  இணைகள்  மேன்மேலும்  காண்பாரோ  = 

அவரெல்லாம்  ஒலிக்கின்ற  நெடிய  வீரக் கழல்களையுடைய   நின்  திருவடிகளை  மேன்மேலுங்காண்பார் கொலோ?  என்பது .

விளக்கவுரை :- மன மொழி  மெய்களான்  இயைந்து  இறைவனைக்  காண்டல்  ஞான  நிலையில்  பக்குவ  முதிர்ந்தோர்க்கும் ஒரொருகாற்  கூறுமேயன்றி  இடையறாது  நிகழ்தலின்று . ஆதலின்  , அத்தகையோரும்  மேன்மேலும்  இடையறாது  கண்டு  இன்புறுதற்கு  அரியன்  என்பார், “அரியானே” என்றார். “உணர்ந்தாற்கு  உணர்வரியோன் “  என்னும்  திருச்சிற்றம்பலக்  கோவைச்  செய்யுட்  பகுதியும் , அதற்கு , “ஒருகால் தன்னை  யுணர்ந்தவர்கட்குப்  பின்  உணர்தற்குக்  கருவியாகிய  சித்த விருத்தியும்  ஒருங்குதலான்  மீட்டு  உணர்வரியோன் “  என்னும்  பேராசிரியர்  உரையும்  இதனை  வலியுறுத்து  நிற்கும் . இத் திருப்பாட்டின்  திரண்ட  கருத்திற்கேற்ப , “அரியானே”  என்னும்  சொற்கு  இவ்வாறு  பொருள்  கோடல்  பொருத்தமாதல்  அறிக .

               இறைவனை  முன்னிலைப் படுத்துப் பாராட்டுதலைப்  பரவுதல்  எனவும்,  படர்க்கையில்  வைத்துப்  பாராட்டுதலைப்  புகழ்தல்  எனவும்  இயல் நூலார்  கூறுவர் . “பரவலும்  புகழ்ச்சியும்   கருதிய  பாங்கினும்  “ எனும்  தொல்காப்பியச்  சூத்திர  உரையில்  , “புகழ்தல்  படர்க்கைக் கண்ணும்  பரவல்  முன்னிலைக் கண்ணும்  வரும்” என்பர்  இளம்பூரணர் . ஆதலின் , தேவர்கள் எல்லோரும்  முன்னிலைப்படுத்து இறைவனைப்  பாராட்டுவர் என்பதைப்  புலப்படுத்த , “பரவுவார்  இமையோர்கள்”என்றார். மறைகள் எல்லாம் இனிய  பண்ணுடன்  இறைவன்  புகழைப்  படர்க்கையில்  வைத்துப்  பாராட்டும்  என்பார், “பாடுவன  நால்வேதம் “என்றார். இனிப்   புகழ்தான்  உரையும்  பாட்டுமென  இருவகைப்படும்  ஆதலின், இமையவர்கள் உரையாற்  பாராட்டுவர்  எனவும், மறைகள் பாட்டுக்களாற்  பாராட்டுவன எனவும்  பொருந்தும்.

               குரவு  –  குராமலர் : இது  பாலைக்குறியது ; அதற்குத்  தெய்வம்  கொற்றவை என்னும் சிவ சத்தியாகும் . ஆதலின்  உமையம்மையார்க்குக் குராமலர்  கூறப்பட்டது. கொற்றவை  சிவ சத்தியாதலை , “கங்கைமுடிக்கணிந்த  கண்ணுதலோன்  பாகத்து , மங்கை  யுருவாய்  மறையேத்தவே நிற்பாய் “ என்னும்  சிலப்பதிகாரத்தாலும்  அறியலாம் . குராமலர்  குறிக்கப்பட்ட  பாலைக்கு  உரிப்பொருள் பிரிதலாகும் . இது  மக்களைப் பற்றியது . கடவுளர் தலைவனாகிய  இறைவர்க்கும்  இறைவிக்கும்  மக்கள் ஒழுகலாற்றை  ஏற்றிடலாகாது  என்பது புலப்படுக்க, “கூறுடையா ளொருபாகம்”  எனப்  பாகம்  பிரியாமை  கூறப்பட்டது . இறைவனோடு  உள்ளங்கலத்தற்கு  உண்மையான  அன்பு  வேண்டும்  என்பதும் , அம் மெய்யன்பினாலே  சிவத்  தொண்டு  நிலை  பெறுவதாகும்  என்பதும்  புலப்படுக்க, “மெய்யன்பின்  அடியார் “ என்றார், “கண்ட  இவையல்லேன்  நான்  என்றகன்று  காணாக்  கழிபரமும்  நானல்லேன் எனக்  கருதிக் கசிந்த, தொண்டினொடும்  உளத்தவன்றான் நின்ற  கலப்பாலே  சோகமெனப்  பாவிக்கத்  தோன்றுவன் வேறின்றி”” என்னும்  சைவ  நூற்கருத்தும்   ஈண்டு  நோக்கத்தக்கது .  விரவுதல்  –  கலத்தல்; உள்ளங்கலத்தலைக்  குறிக்கும்  . இனி, அடியார்கள்  மெய்யன்பினால்  விரவுவார் எனக்  கொண்டு , கலத்தற்கு  மெய்யன்பை  ஏதுவாக்கலும்  ஒன்று. 

                    தேவரும் , மறைகளும் , இறைவியும்  அடியாரும்  மன மொழி மெய் மூன்றானும்  வழிபட்டு  இறைவனைக்  கண்டன  ரெனினும் , சிறப்பு  முறை பற்றி , மொழியால் இயைந்து கண்டவர் தேவராவர் ; மறைகளும்  அன்ன. திருமேனியில்  இயைந்து  கூறு கொண்டு கண்ட பெருமை இறைவிக்குரியது . உள்ளத்தாற் கலந்து கண்டவர்  மெய்யன்பின்  அடியார்கள்.  திருமேனியில்  இயைதல்  இறைவிக்கேயன்றி  அடியார்க்கு  ஓரளவில் உண்டு.  கண்ணப்ப  நாயனாரது  கண்  ஒன்று  இறைவன்  கண்ணில்  இயைந்தது  இதற்குச்  சான்றாகும் . ஆயினும் , எல்லா உறுப்புக்களாலும்  இறைவன்  திருமேனியில்  கூறு  கொண்டு  இயைந்த  சிறப்பு  அம்மைக்கே  உரியதாகும் . இது கருதியே, திருமேனி இயைபிற்குத்  தேவர் , மக்கள் முதலியோருள் யாரையும்  கூறாது, உமையம்மையாரை எடுத்துக் கூறினர். மேலும்,மக்கள்உடல் ஊனுடலாதலின்  அதன்கண் இறைவன் திருமேனி இயைதல் எல்லாவற்றானும் , பொருந்தா தொன்று . இறைவன் அவருள்  திருமேனிக்கு  ஊனுடல்  வேறென்பதும் , அது கலத்தற்கு  உரியதன்று என்பதும்  கருதியே , “ஊனார்  உடல்  புகுந்தான் உயிர்  கலந்தான் “என்று  கூறினர்  அடிகள். புகுதல், கலத்தல் என்னும்  இரண்டற்கும்  வேற்றுமை  பெரிதென்பது  அறிந்தது . ஓர்  இல்லினுட்  புகுந்தான் என்று கூறலாமே  யொழியக்  கலந்தான்  என்று  கூறுதல்  பொருந்தாதென்பது எளிதில் அறியத்  தக்கது . மேலும் கண்ணப்ப  நாயனார்  கண்ணொளி இறைவன் கண்ணொளியில்  இயைந்தது மேற்கூறியதற்கு  முரணாகாது . என்னை?  அறிவுருவம்  ஆகிய  உயிர் , இறைவன்  திருவடி நீழலில்  ஒடுங்குங்கால் , அவ்வுயுற்க்கு ஆதாரமாக  அமைந்த  உடற் கூறுகள் எல்லாம்  அவ்வம் மகாபூதங்களில்  ஒடுங்கும்  என்றும் , கண்ணொளி சூரிய  மண்டலத்தை  அடையும்  என்றும்  மறை முடிவிற்  கூறப்பட்ட உண்மைக்கு  ஏற்பக்  கண்ணப்பர்  கண்ணொளி , இறைவன் வலக்கண்ணாகிய  சூரிய  மண்டலத்தைச்  சார்ந்தது என்னும்  உண்மை புலப்பட  அமைந்தது அந் நிகழ்ச்சியாதலின்  என்க .

      மொழியாற் பரவிய தேவரும் , திருமேனியிற் கூறு  கொண்ட  அம்மையும்  உள்ளத்தாற் கலந்த அடியாரும் , முறையே , பரவுதல் , கூறுகோடல் , விரவுதல் என்னும்  அவ்வளவில் இயைந்து  இன்புற்றனரேயன்றி , மேன்மேலும் இடயறாது  இறைவன் திருவடிகளைக்  காணும் நிலையில் இல்லை என்பது தோன்ற  , “கழலிணைகள் காண்பாரோ” என்றார் ; உமை  மேன்மேலுங்  காணவில்லை  யென்றது , இறைவனுடன்  ஒரு கூறு  பெற்றுப்  பிறராற் காணப்படும்  நிலையில்  இருத்தலின்றித்  தான்  வேறாகநின்று  சிவத்தைக் காணும்  நிலையில்  இல்லையென்பது பற்றி  , சிவனோடு வேறறக்  கலந்திருத்தல்  பற்றிக்  “காண்பாரோ “என்றனர் . இறைவன் திருவடியைக்  கண்ட  அளவிலே , அக் காட்சி  யொழிந்து  இன்புற்று  இயைதலினும் , அக் காட்சி இடையறாது நிகழ்தல் மிக்க  இன்பம் பயப்பதாகும்  என்பது அடிகள் உட்கோளாகும் . இதனை ,

“கண்ணார்  நுதலோய்  கழலிணைகள்

கண்டேன்  கண்கள்  களிகூர

எண்ணா  திரவும்  பகலும்நான்

அவையே  யெண்ணும்  அதுவல்லால்

மண்மேல்  யாக்கை  விடுமாறும்

வந்துன்  கழற்கே  புகுமாறும்

அண்ணா எண்ணக்  கடவேனோ

அடிமை  சால  அழகுடைத்தே”

என்று  அடிகள் பிறிதோரிடத்திற் கூறிய  திருப்பாட்டு  வலியுறுத்தல் அறிக. “கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்னும்  உண்மையடியார் பெருமையும்  ஈண்டு  கருதத்தக்கது . புட்பதந்தர்  என்னும்  வட மொழிக் கவிஞர்  இடயறாத  சிவ  வழிபாட்டில்  ஈடுபட்டு  , அப்  பெருமையைப் புலப்படுக்கும்  முகமாகச்  சிவபெருமானை முன்னிலைப்          படுத்துக்  கூறிய  ஒரு  சுலோகத்தின் மொழிபெயர்ப்புப் பின்வருவது :- “முப்புரப்பகைவ, முன்னர்க்கிடைத்த எப்பிறப்பினும் ஒரு கணப்பொழுதிலும்  நின்னை  வணங்கினேன் அல்லேன் என்னும்  இவ்  உண்மை , எனது  இவ்வுடல்  தோற்றத்தால்  அனுமித்து  அறியப்பட்டது.  இப்பொழுது  யான்  வணங்கினமையின், வீடு  பெறும்  நிலையினன் ஆயினன். ஆதலால், எதிர்காலத்திலும் விடலின்மையால்  வணக்கஞ்  செய்ய  இயலாதவனாகின்றேன் ; இறைவ , சென்ற காலத்தும்  எதிர்  காலத்தும்  வணக்கம்  செய்யாமையாகிய   இக்  குற்றங்கள் இரண்டனையும்  பொறுத்து அருளல் வேண்டும்  என்பது  இதனால் , வீடு பேற்றின்பத்திலும்  அதற்குச்  சாதனமாகிய  திருவடிக்  காட்சியையே மெய்யன்பர்  வேண்டிநிற்கும்  உண்மை புலனாதல்  அறிக. இக் குறிக்கோளை உட்கொண்டே , “மேன்மேலுன் …….கழலிணைகள் காண்பாரோ” என்று அருளிச்செய்தனர் அடிகள். கழல்களுக்கு  நெடுமை  கூறியது , “பாதாளம்  ஏழினுங்கீழ்ச்  சொற்கழிவு  பாதமலர்  “ என்றபடி , திருவடிகளின் நெடுமை  குறித்து  என்க. ஒலித்தற் குறிப்பு, மடிமை  யுற்றிருப்பாரை  விழிப்பித்து  நினைவூட்டற்காம் .  காண்பாரோ  என்புழி, ஓகாரம்  ஐயப்பொருட்டு .

              இத்  திருப்பாட்டிற்குப்  பலரும்  இக்கருத்து உணராமல்  உரை  கூறியதோடு , “காண்பாரோ “என்னும்  சொல்லைக்  “காண்பு – ஆரோ  எனப்  பிரித்து  இடர்ப்படுவாராயினர்  .  அடிகள்  மனம்  குழைந்து  அமிழ்த ஒழுக்குப்  போலப்  பாடி  அருளிய  இன்னோரன்ன  திருப்பாட்டுக்களில், இங்ஙனம்  சொற்  சிதைத்துப்  பொருள்  காண்டல்  பொருந்தாதென்பது அறிக.

                 இதன்கண், இறைவனை  மன மொழி மெய்கள்  இயைந்து  இன்புறுதலினும்  , அதற்குச்  சாதனமான  திருவடிக்  காட்சி  இடையறாது  நிகழ்தல்  சிறந்ததாகும்  என்னும்  உவமை  வலியுறல்  வேண்டி, இறைவனை  முன்னிலைப்படுத்து , நெஞ்சிற்கு  அறிவுறுத்தமை  பெறப்படுதலின்  அறிவுறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் புலனாயவாறு  அறிக . 

                                     ******************************************* 

பாடல் :18 .

அரியானே  யாவர்க்கும்

அம்பரவா  அம்பலத்தெம்

பெரியானே  சிறியேனை

ஆட்கொண்ட  பெய்கழற்கீழ்

விரையார்ந்த  மலர்தூவேன்

வியத்தலறேன்  நயந்துருகேன்

தரியேன்நான்  ஆமாறென்

சாவேன்நான்  சாவேனே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்காட்சி  பெறுதற்கு அரியது ஆகுங்கொலோ என  ஐயுற்று  வியந்து  கூறிய  அடிகள் , பிறர்க்கு  அரிய அத்  திருவடிச் சார்பு , தம்மை  ஆட்கொள்ளுதற்கு  எளிதாகக்  கிடைத்ததும், அத்  திருவடிக்கண் மன மொழி மெய்கள்  ஈடுபடாமை  குறித்து இத்  திருப்பாட்டில்  இரங்குகின்றார்.

பதவுரை :- யாவர்க்கும்  அரியானே  = அமரர்  முனிவர்  முதலிய  எல்லோர்க்கும் காண்டற்கு  அரியவனே ,

அம்பரவா  = நுண்ணிய  ஞானவெளியில்  விளங்குகின்றவனே,

அம்பலத்து எம்பெரியானே  = பெரு வெளியாகிய  பொதுவில்  நின்று  அருட்  கூத்தியிற்றும்   எங்கள் பெரியோனே ,

சிறியேனை  ஆட்கொண்ட  பெய்கழல்  கீழ்  = அறிவாற்றல்களால்  சிறுமையுடைய  அடியேனைத்  தொண்டனாகக்  கொண்ட  நின்  திருவடிக்கண்ணே ,

விரை ஆர்ந்த  மலர்  தூவேன் =  மணம்  நிறைந்த  மலர்களை  இட்டு  வழிபாடு  செய்யேன் ,

வியந்து அலறேன்  =  வியப்புற்று  உரத்த  குரலில்  கூவிக்  கதறேன் ,

நயந்து  உருகேன்  =  அன்பினால்  ஈடுபட்டு  உருகேன்  ,

நான்  ஆம்  ஆறு  என்  =  யாம்  உய்யுமாறு  எங்ஙனம் ? ,

தரியேன்  =  நினக்கு  ஆளாய் வழியடிமை  செய்யாமல்  இந் நிலவுலகத்தில்  தங்கி  வாழேன் ,

நான்  சாவேன்  சாவேன்  =  யான்  இறந்துபடுவேன் ,இறந்துபடுவேன்  என்பது. 

விளக்கவுரை :-  இறைவன் மெய்ஞ்ஞானத்தாலன்றித்  தேவர் , முனிவர் முதலியோரானும் காண்டற்கு அரியன் என்பார், “அரியானே யாவர்க்கும்”  என்றார் . “பாரார் விசும்புள்ளார்  பாதாளத்தார் புறத்தார்  யாராலுங் காண்டற்கரியான் எமக்கெளிய பேராளன் “என்னும்  அடிகள்  திருவாக்கும் , “சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்  அமரர்  தாமும் .  கார்வரை யடவி சார்ந்துங்காணுதற்கரியான் “ என்னும்  பெரியபுராணச்  செய்யுளும் இதனை வலியுறுத்தும் . அம்பரம் – ஆகாயம் . ஈண்டு, நுண்ணிய ஞானவெளியைக்  குறிக்கும். இதனைச் சிதகாசம் எனவும், தகராகாசம்  எனவும் , சூக்கும வெளியெனவுங் கூறுவர் . ஞான யோகிகள் மிக்கதூய்மையுடைய  தம்  நெஞ்சத்தாமரையை அலர்வித்து , அதன் நடுவண் உள்ள நுண்ணிய வெளியாகிய  தகராகாசத்தில் , இறைவன் விளக்கத்தை  அகக் கன்ணாற் கண்டு வழிபட்டு இன்புறுவர் என்னும்  இவ்வுண்மை மறை  முடிவிற் காணப்படுவது.  இதனைத்  தகராவித்தை என்று பெரியோர் கூறுவர் . இக் காட்சி வழிபாடு ஞானயோகத்தின் முதிர்ந்த மெய்யன்பர்க்கன்றிப்  பிறர்க்கு  அரிய தொன்றாம் . இத்  தகராகாசத்தையே , “சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம் “ என்பர்  சேக்கிழாரடிகள் , சிற்பர வியொமம் என்பது ஞானப் பரவெளி என்னும்  பொருளதாகும் . இறைவன் இந் நுண்னிய பர வெளியில்  சூக்குமமாக  விளங்கும் தன்னை, எல்லோரும்  கண்டு கும்பிட்டு உய்ய வேண்டு மென்னுங் கருணை காரணமாக , அம்பலமாகிய பொதுப் பெரு வெளியில் நின்று , மேள தாளங்களுடன் அருட்கூத்தியற்றும் இயல்பைக்  குறித்தே , “அம்பரவா அம்பலத்தெம்பெரியானே “ என்றார்,யாவர்க்கும்  காண்டற்கு  அரியநிலை சிதாகாசத்தில் விளங்குவதென்பதும் , காண்டற்கு  எளிய  நிலை அம்பலப்பொதுவில்  தோன்றுவதென்பதும்  ஈண்டுப் பகுத்து  உணரத்தக்கன.  அம்பலத்தெம் பெரியானே என்றதனால் , அம்பலம் பெரிய பொதுவெளி யென்பதும் , தகராகாசமாகிய  அம்பரம் நுண்ணிய சிறப்பு வெளியென்பதும், இறைவன் ஈரிடத்தும் முறையே தூல சூக்கும நிலையில் விளங்குவான் என்பதும் புலப்படுத்தவாறாம் . “பெரியானே” என இறைவனை  விளித்து , அதற்கு அடுத்துத்  தம்மைச்  “சிறியேனை” என்று  குறிப்பிட்டது , பெருமைக்கு  எல்லையாக இறைவனையும் , சிறுமைக்கு  எல்லையாகத் தம்மையும் குறிப்பிட்டபடியாம் . “யாவர்க்கும்  மேலாம் அளவிலாச் சீருடையன், யாவர்க்குங் கீழாம் அடியேனை “என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும் இங்கே கருதத்தக்கது. ஆட்கொள்ளல்  – ஆளாகக் கொள்ளல் . ஈண்டு ஆள்  என்பது பணி  புரியும்  அடிமை ஆளைக்  குறிக்கும் . “மீளா  அடிமை  யுமக்கேயாளாய் “ என்புழிப் போலக் கொள்க. இறைவன்  திருவடிக்குத்  தொண்டு செய்யும் பேறே மெய்யன்பர்க்கு ஆட்படுந்  தன்மையை அளிப்பதாகும் . ஆதலின் , அன்பரை ஆட்கொள்ளுதற்கு இறைவன்  திருவடியே கருவியாதலும் , ஒற்றுமை நயத்தால்  வினை முதலாதலுங்கூடும். ஈண்டு , ஒற்றுமை நயமென்றது அவயவமும் அவயவியும் வேறாகாது  இயைந்திருத்தல் பற்றியாம் . கருவியாதலை ,”கண்ணார் கழல் காட்டி நாயேனை யாட்கொண்ட  அண்ணாமலையான் “ எனவும் , “ஒப்பிலாதன உவமனிலிறந்தன ஒண்மலர்த்  திருப்பாதத்து ,அப்பன் ஆண்டு” எனவும் போந்த திருவாக்குக்களானும் ; வினை  முதலாதலை , “போற்றியாம் உய்ய வாட் கொண்டருளும் பொன் மலர்கள்” என்பதனாலும்  அறியலாம் . இறைவன்  தன் திருவடியைக் காட்டி  அன்பரை ஆட்கொள்ளுவானாயினும் , ஆட்படும் அன்பர்க்குப்  பற்றுக்கோடாக இருப்பது அத்  திருவடியே   ஆதலின் , ஈண்டு  அதனை வினை முதலாக்கி , “ஆட் கொண்ட  பெய்கழல் “என்றார். பெய்கழல்  என்றது கழல்  அணியப்பட்ட திருவடியை உணர்த்தும் . கீழ் என்பது ஏழாம் வேற்றுமை உருபாயினும் , ஈண்டுக் கீழிடத்தை உணர்த்துவதாகும் . திருவடித் தொண்டிற்கு அத் திருவடியின் கீழிடத்தைக் குறித்தது. ஆண்டவன்  பெருமையும் அடியவர் சிறுமையும் புலப்படுத்தற் கென்க.ஈண்டுச் சிறுமை  என்றது இறைவன் பெருமைகருதிப் போந்ததன்றி, உலகத்தவரைக் கருதிப் போந்தது அன்றென்பது , “யாமார்க்கும் குடியல்லோம்” என்னும் திருவாக்கும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

            மணமுள்ளன இல்லன; விதிக்கப்பட்டன விலக்கப்பட்டன வென்று பகுத்தறியாமல் , பல  மலர்களையும் மிகுதியாக வாரியிறைத்தல் , ஆடம்பர  நிமித்தம் இறைவழிபாட்டில் தலைப்படுவார் இயல்பாகும் . அங்ஙனமின்றி , நறுமண மிக்க மலர்கள் சிலவாயினும் , அவற்றை விதிமுறையின்  ஆராய்ந்தெடுத்து ,மென்மையாகத்  திருவடிக்கீழ்ப் பெய்தல் மெய்யன் புடையார் இயல்பாகும் . அவ்வியல்பை மேற்கொண்டிலேன்  என்பார், “விரையார்ந்த மலர்  தூவேன் “ என்றார் . தூவுதல் – மென்மையாகப் பெய்தல். “வியந்தலறேன்” என்புழி , வியப்புப்  புதுமை பற்றி உண்டாயது . “புதுமை  பெருமை  சிறுமையாக்கமொடு , மதிமை சாலா மருட்கை  நான்கே”  என்புழி,  மருட்கை  புதுமை பற்றித் தோன்றும் என்பர் இயனூலார்.  மருட்கை என்பதற்குப் பொருள் வியப்பாகும் .புதுமை, பண்டு ஒரு காலும் கண்டறியாத நிகழ்ச்சியாகும் .  ஈண்டு அந் நிகழ்ச்சி யாதெனின் , எத்துணையும் பெரியோன்  ஒருவன் எத்துணையும்  சிறியான் ஒருவனை ஆட்கொண்டதாகும் . இறைவன்  ஆட்கொள்ளுதற்கு அடிகள் மிகவும் தகுதி யுடையவராயினும் , அவர்  தம்மைக்  கருதியது அவ்வாறு . “எம்பெரியானே சிறியேனை யாட்கொண்ட பெய்கழல்” என்றது இவ்வுண்மையைப்  புலப்படுத்தும் . இறைவன்  ஆட்கொள்ளுதற்குத் தகுதி  மிகவுடைய மெய் யன்பராதல்  வேண்டும் . இது பண்டு தொட்டுள்ளது.  ஆதலின் , இப்பொழுது அத் தகுதி சிறிதும் இல்லாத தம்மை  ஆட்கொண்டது பண்டு  நிகழாத புதுமை  எனக் கொண்டு , அப்புதுமை பற்றி , “வியந்து அலறேன்” என்றார் . எதிர்பாராத நிலையில் ஒரு  புதுமையைக்  கண்டுழி , மெய்மறந்து ஆரவாரித்தல்  மக்கட்கு இயல்பு  ஆதலின் , அது  செய்திலேன்  என்பர். “அலறேன்” என்றார்.  “நயந்து உருகேன் “ என்புழி , நயத்தல்  அன்பு செய்தலாதலின் ,அன்பினாற் கரைந்து  நெஞ்சம் உருகப் பெற்றிலேன்  என்றார். தூவல் , அலறுதல் , உருகுதல் இம்  மூன்று செயல்களும் முறையே மெய் மொழி மனம் ஆகிய முக்கரணங்களாலும் நிகழ்வனவாம் . மொழிப்  பணியாகிய வியந்தலறுதலைச்  செய்யலாம் ;அதற்கும் இயன்றிலதேல், நெஞ்சத்தளவில் நினைந்து உருகலாம் என, அருமை, எளிமை கருதி இவ்வாறு  கூறப்பட்டன. ஆனால் , உள்ளம்  உருகுதலை நோக்க  அலறுதலும் , அதனை நோக்க மலர்  தூவுதலும் எளிய செயல்களாகவும் , இவ்வாறு  கூறுதல் என்னையெனின் , பிறிதோர் உபகரணத்தைத் தேடுதலினும் , உரத்த  குரலாற் கூவிக் கதறுதல் எளிதாதலும் , மனம் அமைதியுற்று உருகுதல் அதனினும்  எளிதாதலும் கருதியென்க.  “போதும் பொறாவிடிற் பச்சிலையுண்டு புனலுண்டெங்கும் , ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்றே “ என்னும்  பெரியோர்  உரையும் இதனை வலியுறுத்துவதாகும் .

           பிறப்பு  இறப்புக்களினின்றும்  விடுதி  பெறுதற்குரிய  சாதனங்களை  இழந்திருத்தலின் , எவ்வாறு கட்டு  அற்று  உய்தி பெறுவேன் என்பார், “நான்  ஆம்  ஆறு என் “ என்றார். ஆதல் பாச ஒழிவு பெற்றுத் தூயனாதல் . மன மொழி மெய்கள் இறை வழிபாட்டில் தலைப்பட்டு  உய்தி பெறுதலே மெய்யன்பர்க்கு  உடலோடு கூடிய வாழ்க்கையின் நோக்கமாகும். அந்  நோக்கம் நிறைவேறாத நிலையில் , அவ்வுடல்  வாழ்க்கை வெறுக்கத்தக்கதாகலின் , “தரியேன்” என்றார் . “ தரிக்கிலேன் காய வாழ்க்கை” என்பதும்  இக்கருத்துப் பற்றி  எழுந்ததே . பாசப்பிணிப்பிற்பட்டு உழன்ற தம்மை , அதனின்  நின்றும்  விடுவித்துக் கருவி கரணங்களை  நன்னிலைப் படுத்து ஆட்கொண்ட  இறைவனது பேரருளைநினைந்து வழிபாடு செய்தலே கடமையாகவும், அதனை  மேற்கொள்ளாத நிலையில் வாழ்தலினும் சாதலே நன்று என்பார், “நான் சாவேன் “ என்றார். தரியேன் என்ற  அளவிலே  சாதல் பெறப்படுமா யினும் , மீண்டும்  சாவேன் என்றது.  எதிர்மறையாலும் உடன்பாட்டாலும் கருத்து வலியுறுதற்பொருட்டாம் . “புறங்கூறிப்  பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் , அறங்கூறும் ஆக்கம்  தரும்” என்றாற்போல , இறைவழிபாட்டிற்குப் பயன்படாத உடல் ஒழித்தல் , பின்னைப் பிறப்பிலாவது  அக்குற்றம்  நீங்கி அவ் வழிபாட்டில் தலைப்படல் கூடும் என்பது கருத்து .  பிற்பிறப்பினும் அது கைகூடவில்லையாயின் , கை கூடுங்காறும் சாதலே வேண்டும்  என்பார், “சாவேன்  நான்  சாவேனே” என்று  அடுக்கிக்  கூறினர். இவ் வடுக்கு , விரைவு  பற்றியதும் அம் ; என்னை : இறைவழிபாடு இல்லாத  நிலையில் ஒரு கணப்பொழுதும் அவ்வுடல்  வாழ்க்கை இருத்தலாகாதென்பது, கருத்தாகலின்.

          இதன்கண், அடிகள் தம்  சிறுமை  அறிந்தும் , திருவடித்  தொண்டனாகிய  இறைவன் பேரருளை நினைந்து , செய்ய வேண்டிய பணிகளைச் செய்தற்கு முற்படாத நிலைக்கு இரங்கி , இறைவனை முன்னிலைப்படுத்து , இந் நிலையினும் சாதலே நன்று  என்று கூறுமுகமாக நெஞ்சிற்கு  அறிவுருத்தமை  பெறப்படுதலின் , அறிவுறுத்தல் எனும்  பதிகம் நுதலிய பொருள் புலனாயவாறு  அறிக .

                                               *************************************

பாடல் :19 .

வேனில்வேள்  மலர்க்கணைக்கும்

வெண்ணகைச்செவ்  வாய்க்கரிய

பானலார்  கண்ணியர்க்கும்

பதைத்துருகும்  பாழ்நெஞ்சே

ஊனெலாம்   நின்றுருகப்

புகுந்தாண்டான்  இன்றுபோய்

வானுளான்  காணாய் நீ

மாளாவாழ்  கின்றாயே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்கண்  தம் மன மொழி மெய்கள்  ஈடுபடாமைக்கு இரங்கிய  அடிகள் , அக்கரணம் மூன்றனுள்ளும் , மனமே மக்கள் எய்தும் பேறுகள் எல்லாவற்றிற்கும்  சிறந்த காரணமாதலான் , அது  வீட்டிற்கு  ஏதுவாக இறைவனை நினைந்து உருகுதலைச்  செய்யாமல் , கட்டிற்கு  ஏதுவாக மகளிரை நினைந்து உருகுதலைக்  கண்டு , அம்மனத்தை  வெறுத்துரைக்கு முகமாக , இத் திருப்பாட்டில்  இறைவனது அருமைப்பாட்டை நினைந்து இரங்குகின்றார் .

பதவுரை :- வேனில்  வேள் மலர்க்கணைக்கும்  =  காமன்  எய்யும்  மலர் அன்பிற்கும் ,

வெண்நகை  செவ்வாய்  கரிய  பானல்  ஆர்  கண்ணியர்க்கும்  = வெள்ளிய  பற்களையும்  சிவந்த  வாயையும்  கரிய  குவளை மலர்  போன்ற  கண்களையும்  உடைய  மகளிர்  பொருட்டும் ,

பதைத்து  உருகும்  பாழ்  நெஞ்சே  =  பதைப்புற்றுக்  கரையும்  பயன் அற்ற நெஞ்சமே ,

ஊன்  எல்லாம்  உருக  =  உடல்  உறுப்புக்கள்  எல்லாம்  உருகும்படி  ,

புகுந்து  நின்று  ஆண்டான்  =  உட்புகுந்து  நிலைத்து  நின்று  ஆண்ட எம்பெருமான் ,

இன்று  போய்  வான்  உள்ளான்  =  இப்பொழுது  சென்று  நுண்ணிய  பரவெளியில்  உள்ளான் ,

நீ  காணாய்  =  நீ  கண்டிலை?  (கண்டும்) ,

மாளா  வாழ்கின்றாயே   =  கெட்டொழியாமல்  இன்னும்  வாழ்கின்றனையே  என்பது.

விளக்கவுரை :- வேள்  என்பது  முருகனையும்  உணர்த்தும்  ஆதலின்  , அவனை  விலக்கி  ஈண்டுக்  காமனை  உணர்த்துதற்கு வேனில்  என்னும்  அடை  புணர்க்கப்பட்டது . காமன்  மலர்க்கணை  மிகுதியாகப்  பெறுதற்கும், அவற்றைக்கொண்டு  மக்களைக்  காமநிலையில்  தலைப்படுத்தற்கும்  உரிய  காலம்  இளவேனில்  ஆதலின்  , ஈண்டு , “வேனில்வேன்” எனப்பட்டான். வேள் கணை என்னாது மலர்க்கணை  என்றது , “வல்லவனுக்குப்  புல்லும்  ஆயுதம்” என்றபடி ,எய்பவன் ஆற்றல் புலப்படுத்தற்கு  என்க . பவழம்  போன்ற  செவ்வாயில் , முத்து  நிரைத்தனன்  வெண்பற்களைக்  குறிப்பிட்டது, புன்முறுவல்  பூத்த முகம் என்றற்காம் .

                    பானல்  – குவளை ;  ஆகுபெயரால் மலரை  யுணர்த்திற்று .  செங்குவளையும்  உண்டு  ஆதலின்  , கரிய  என்பது இனம்  விலக்கிய  அடை மொழியாகும்  .  ஆர் : உவமப்பொருட்டு.  மகளிர்  கண்களில்  வெண்மை  செம்மை  முதலிய  நிறங்களும்  உளவேனும் , கருமையே ஆடவரை  மயலூட்டுதற்குச்  சிறந்தது  ஆதலான் , “கரிய  பானலார்  கண்ணியர்  “ என்றார். “நெஞ்சமும்  நிறையும்  நீல  நெடுங்கணாற் கவர்ந்த  கள்வி “ என்புழி, ஆடவர்  உள்ளத்தைக்  கவர்தற்குக்  கருங்கண்ணே வலியுடைய தென்று  கூறியது காண்க.  மயலுறுத்தற்குப்  புன்முறுவல் பூத்த  முகமும்  , இணக்கக்  குறிப்பைப்  புலப்படுத்தற்குக் கருங் கண்ணும்  கூறப்பட்ட படியாம் . “காதன்மை கண்ணுளே  அடக்கிக் கண் எனும்  , தூதினால் துணி  பொருள் உணர்த்தி “  என்பதும்  இதனை  வலியுறுத்தும் . காமன்  அம்புகளுள் நீல  மலரும்  ஒன்றாதலின் உவமேயப்பொருளாகிய  கண்களேயன்றி  , உவமையாகிய  அம்மலரும்  ஆடவர்க்கு  மயல்  விளைக்கும் இயல்பின்  என்பது  தோன்ற  , “கருங்கண்”  என்னாது, “கரிய  பானலார்  கண்” என்று கூறப்பட்டது . வெண்மை , கருமை , செம்மை  என்பன முரண்தொடையாக நின்று  இன்புறுத்துவனவாம் .  கணைக்கும்  கண்ணியர்க்கும்  என்புழி, உம்மைகள் எண்ணுப்  பொருளன. பதைத்தலையும்  உருகுதலையும்  நிரல் நிறையாக்கி , மலர்க்கணைக்குப்  பதைத்து , கண்ணியர்க்கு  உருகும்  நெஞ்சே  எனக்  கோடல் பொருட் சிறப்புடையதாகும் . காமன்  அம்பு  பட்ட  அளவில்  துடித்தலும் ,அதன் முதிர்ச்சியில்  மகளிரை  நினைந்து உருகுதலும்  நெஞ்சிற்கு இயல்பாதலின்  , இவ்வாறு  கூறப்பட்டது . நெஞ்சிற்குப்  பதைத்தலும்  உருகுதலும் ஆண்டவனை  முன்னிட்டு  நிகழின் நன்றாம் . அந் நிலையில்  அவை  அன்புச்செயலாக  நின்று  , இறையருளிற் கலப்பித்துப் பேரின்பத்தில் தலைப்படுத்துவனவாகும் . “வேட்ட  நெஞ்சாய்ப்  பள்ளந்தாழ்  உறுபுனலிற் கீழ் மேலாகப்  பதைத்துருகும்  அவர்”  என அடிகள்  பிறிதோரிடத்துக் கூறியதும்  ஈண்டு நினைக்கத்தக்கது . இறைவன் பொருட்டு  மேற்கொள்ளத்தக்க  பதைத்தலையும்  உருகுதலையும் இழிந்த காமங்கருதி  மேற்கோடல் மிக்க தீங்கு பயக்குமாதலின் , அந்த நெறியிற்  செல்லும் நெஞ்சத்தை வெறுத்து ,”பாழ் நெஞ்சே” என்றார்.

                “  ஊனெலாம் “ என்புழி , எல்லாம் என்பதனால் என்பு, நரம்பு முதலிய வன்மை மென்மைப்  பகுதிகள் அனைத்தையும் கொள்ளல் வேண்டும் . மெய்யன்பர்க்கு உள்ளொளி பெருக , ஊன்  உருகுமென்பது அடிகள் அநுபவத்திற் கண்டது.  “ஊனினை  உருக்கி உள் ஒளி பெருக்கி “ என்னும் திருவாக்கையும் நோக்குக . ஊனுருகி உடல் மெலிதல் இழிந்த காமத்தானன்றித் தவத்தால் நிகழுமாயின் ,அது சிறந்ததொன்றாகும் . “விரதந்தனில் இளைத்த மேனி”  “என்பெழுந்து இயங்கும் யாக்கையர்” என்பனவற்றால்  இவ்வுண்மை தெளியெலாம் , புகுந்து நின்று  ஆண்டான்  என்புழி , புகுதல் ஓரிடத்தினின்றும்  பிறிதோரிடத்தில் நுழைதலாகும்.  எங்கும்  நிறைந்த பொருளாகிய  இறைவனுக்குப் புடை பெயர்ச்சி கூறுதல் எங்ஙனம் பொருந்தும் எனிற்  கூறுவேன் . சீவ போதம் முனைத்  திருக்குங்கால்  சிவபோதம்  மேற்பட்டிருக்குங்கால் சீவ போதம் விளக்கின்முன் இருள் போல ஆற்றல் கெட்டு ஒழிதலும் பெரியோர் அனுபவத்திற் கண்டவை. “என்னுளே  உழிதர் வேனை, எம்பிரான் என்னைப்  பின்னைத் தன்னுளே சுரக்கும்” எனவும், “என்னறிவை உள்ளடக்கி என்போல் வரு மெளனி தன்னறிவுக்குள்ளே  நான்  சாருநாள்  எந்நாளோ “ எனவும் போந்த அனுபவ மொழிகள் இவ்வுண்மையைத்  தெளிவிப்பனவாம் . இங்ஙனம்  உயிரறிவு  முனைத்திருக்குங்கால் , ஆண்டுப்  புலப்படாமல் இருந்த  இறைவனது வியாபக  நிலை பண்டைத்  தவத்தால் விளக்கம்  உற  அந்நிலை கருதியே இறைவன் வெளியிடத்திருந்து  உட்புகுந்ததாகக் கூறியருளினர். இவ்வுண்மையை , “என மனமே  ஒன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே “ என்னும் பெரியார் திருமொழி புலப்படுத்தி நிற்றல் அறிக.  ஈண்டு , அடிச்சுவடு தோன்றாவாறு புக்கனன் என்பது மேற்குறிப்பிட்ட கருத்தைப் புலப்படுத்துவதாகும் . “உருகப் புகுந்தாண்டான் “ என்புழி , உருக என்னும் செயவென் எச்சம் காரியப்பொருட்டு . அருவருக்கத்தக்க ஊனுடன்புள் புகுந்தாண்டான் என்றது. இறைவனது பேரருள் உடைமையைப் புலப்படுத்தற்கு என்க. உட்புகுந்த அந்நிலை , பற்றிக்கொள்ளுதற்கு எளிதாக  இருந்தும் , நெஞ்சம் அது செய்யாமல்  தவறிவிட்டது  என்பது  குறிப்பு.  அருளுடைமையால்  அன்று  எளிதிற்  புகுந்தாண்ட இறைவன் , இன்று தம்மை விட்டு , மனத்திற்கு எட்டாத நுண்ணிய பரவெளியில் மறைந்து விட்டானே என்று இரங்குவார்  “இன்று போய் வானுளான் “ என்றார்.  வான் –  சிற்பர வியோமமாகும் . “இன்று போய்  வானுளான் “ என்றது ,அடிகளை இறைவன் இன்னும்  சின்னாள் இருத்தி யென உருக்கரந்த நிலையில் இரங்கிக்  கூறியதாம் . இறைவன் உருக்கரந்ததை நீ அறிந்திலையோ (அறிந்துளாய்)  என்பார், “காணாய் நீ “ என்றார். இப்பொருட்டாதல் ஓசை வேற்றுமையாற் காண்க. இதனை வடநூலார் “காகு” என்பர்.  காணாய் என்பது முன்னிலை அசையுமாம் . மாளாமல்  என்பது , ஈறு தொக்கு மாளா என நின்றது . பேரருளுடையமையால்  ஊனுடல் உருகப்  புகுந்தாண்ட இறைவனது  பேருதவியை நினைந்து , பதைத்து உருகாமலும் ,கைவிட்டகன்று பர வெளியில் புகுந்ததைக் கண்டு வைத்து இறவாமலும் இருக்கும்  நெஞ்சத்தின்  கொடுமையை நினைந்து ,அஃது இறவாமல் இருத்தற்கு வருந்தி , “மாளா வாழ்கின்றாயே” என்றார் . மனம் மாளுதல்  வினை விளைவு இன்மைக்கு ஏதுவாம் என்பதும் இங்கே  கருதத்தக்கது . இன்னுயிர்க் கணவனை இழந்த கற்புடையாள் உடன் இருத்தல் ,அல்லது வருத்த மேற்கொண்டு கைமை நோன்பியற்றல் அன்றி ,வாழ்க்கை நலத்தை விரும்பமாட்டாள் . அது போல, இறைவனைப் பிரிந்த நிலையில் , நெஞ்சம்  கெட்டொழிதல் அல்லது வருந்தி  வாடியிருத்தல் வேண்டுமேயன்றி , வாழ்வில் தலைப்படல் கூடாததாகவும் , அதற்கு மாறாகத் தம் நெஞ்சம் வாழ்க்கை நலத்தில் சேறலை வெறுத்து, ”வாழ்கின்றாயே”  என்று  இரங்கிக்  கூறினர் .

                   இப் பதிகத்து எழு திருப்பாட்டுக்களிலும் , தம் நெஞ்சத்தின் மாறுபட்ட நிலையை வெறுத்து , இறைவனை முன்னிலைப் படுத்துக் கூறுமுகமாக , நெஞ்சிற்குப்  பலவாறு குறிப்பால் அறிவுறுத்தும்  எட்டாவது  திருப்பாட்டில் , நெஞ்சின்  கொடுமை பொறாது , “சாவேன் நான் சாவேன்” என்று இறுதியுரை கூறியும் , அது நன்னிலைப்படாமை கண்டு  வருந்தி , இத்  திருப்பாட்டில் , அந் நெஞ்சையே முன்னிலைப்படுத்து , அதன் இழிவை எடுத்துரைத்து  அறிவுறுத்தமையின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம் நுதலிய பொருள் வெளிப்பட்டு  நிற்றல் அறிக.

                                         ******************************************

பாடல் :20 .

வாழ்கின்றாய்  வாழாத

நெஞ்சமே  வல்வினைப்பட்

டாழ்கின்றாய்  ஆழாமற்

காப்பானை  ஏத்தாதே

சூழ்கின்றாய்  கேடுனக்குச்

சொல்கின்றேன்  பல்காலும்

வீழ்கின்றாய்  நீயவலக்

கடலாய  வெள்ளத்தே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவனை நினைந்து உருகமல் உலக வாழ்க்கையில்  ஈடுபட்டு உருகும் தம் மனத்தை வெறுத்து உரைத்த அடிகள், இத் திருப்பாட்டில் இறைவனது அருமைப் பாட்டையும் பேருதவியையும்  அறியாமல் துன்பக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் அந் நெஞ்சத்தை இடித்துரைக்கும்  முகமாக , அப் பெருமான் சார்பின்மையால் நேரும் தீங்கை எடுத்துக் கூறி இரங்குகின்றார்.

பதவுரை :-  வாழாத நெஞ்சமே  =  பேரின்ப வாழ்க்கையில்  தலைப்படாத   நெஞ்சமே ,

வாழ்கின்றாய்  = கெடாமல் இருக்கின்றாய் ,

வல்வினைப்பட்டு  ஆழ்கின்றாய்  =  வலிய தீவினையின் வயப்பட்டு அதனுள்ளே அழுந்துகின்றாய் ,

ஆழாமற் காப்பவனை  ஏத்தாது  =  அங்ஙனம் அழுந்தாமற் காப்பாற்றும்  பெருமானைப்  புகழ்ந்து  பாராட்டாமல் ,

உனக்குக் கேடு  சூழ்கின்றாய்  =  உனக்கு  நீயே  கேடு  தேடிக்கொள்ளக்  கருதுகின்றாய் ,

பல்காலும்  சொல்கின்றேன்  =  உனக்குப்  பலமுறையும் இடித்துக்கூறி  வருகின்றேன் , அங்ஙனம்  கூறியும்,

அவலக் கடலாய வெள்ளத்து  =  துன்பம்  ஆகிய  கடற் பெருக்கில் ,

வீழ்கின்றாய்  =  நீ  வீழ்ந்து மூழ்குகின்றாய்  என்பது .

விளக்கவுரை :-உயிர் என்றும் அழிவில்லாத பேரின்ப வாழ்க்கையில் தலைப்பட்டு உய்தற்கும் . விரைவில் அழிந்தொழியும் இயல்பினதாகிய சிற்றின்பத்தில் அழுந்திக் கெடுதற்கும் நெஞ்சமே கருவியாகும் .இதனை முறையே , “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே “ எனவும் , “உழுத சால்வழி  யேயுழு வான் பொருட்,டிழுதை  நெஞ்சமி தென்படுகின்றதே “ எனவும் கூறிய அனுபவவுரைகள் தெளிவிப்பனவாம். இத்தகைய நெஞ்சம் தாம் கருதும் வாழ்க்கைக்குப்  பயன்படாமை  குறித்து ,அதனை ,”வாழாத  நெஞ்சமே” என விளித்து , நம்மை செய்யாமையோடு  அமையாது , தீமை செய்தற்கும் முற்படுதல் குறித்து , நீ இறவாமல்  இருக்கின்றாயே  என்பது  தோன்ற , “வாழ்கின்றாய்” என இரங்கிக் கூறினார் .

                 நெஞ்சம்  கெட்டொழியாமல் இருத்தலாலே வலிய வினைக்காட்பட்டு  அதன்கண் அழுந்த நேர்ந்ததென்பது கருத்து. வல்வினை மெல்வினை என வினைகளை இருதிறப்படுத்துரைப்பர் .  அறம்  பாவம் என்னும் இரண்டன் கண்ணும் வன்மை மென்மை யுளவெனினும் , ஈண்டு வல்வினை யென்றது  கொடிய தீவினையை . ஆற்றன்மிக்க தீவினை பயன் செய்யுங்கால்  எதனாலும் தடைப்படுத்த இயலாததாகும் . “வல்வினை வளைத்த கோலை மன்னவன் ,நிமிர்த்துச் செங்கோ லாக்கியது” என்புழி, வலியவினையின்  விளைவைப் பாண்டியன் உயிர் கொடுத்துத் தடைப்படுத்தினான். என்று  இளங்கோவடிகள்  திறம்படக் கூறியதனால் , உடலினின்றும் உயிரைப்பிரிக்கும் அத்துணையாற்றல் வல்வினைக்கு உண்டென்பதை அறியலாம் . செயலில் துன்பத்திற்கு மூலமாகிய தீவினையையும் , நுகர்ச்சியில் நல்வினைப்பயனாகிய  இன்பத்தையும் விழைதல் உலகத்து  இழிந்த மக்கள் இயல்பு.  அவர்க்குக் கொடிய  தீவினையைச்  செய்வதில் விருப்பம் உண்டாதற்குக் காரணம் , அப்பொழுது பின்வரும் பயனை நினையாமல் ,அவ்வினையால் அன்னார் மனம் உவகையடைதலே யாகும். வினைவிளைவாகிய பயனை மெய்யென உணர்ந்தவர்க்கே தீவினையில்  அச்சம் உண்டாகும் . அவ்வுண்மை உணராதார்க்கு அச்சம் இன்றாதலோடு உவகையும் உண்டாமென்பது உலகியலிற் கண்டது. பயனாகிய பெருந் துன்பத்தைச் சிறிதும் கருதாமல் , மெல்வினையையும் உவர்த்து, வல்வினை யை  மேற்கொண்டு , அதன் கண்ணும் அழுந்துதல் என்ன அறியமை என்பார், “ வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் “என்றார் . பண்டைப்  பிறப்புக்களின்  தொடர் ச்சியால்  ஆற்றல் பெற்றுத் தன்னுள் அழுத்தும் அவ்வினையினின்றும்  எவ்வாறு கரையேற  இயலுமெனின் ,” இருவினைப்பாசமும்  மலக்கடல்  ஆர்த்தலின் , வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட , அருளுமெய் அஞ்செழுத்து “ என்னும்  சேக்கிழார் அருண்மொழிப்படி , ஆண்டவனை நினைவு  கூர்தல் ஆகிய  தவத்தில் தலைப்பட்டால் உய்தி பெறலாம் . அங்ஙனம் கரையேற்றி ஆளுதற்குரிய இறைவனை நினைந்து முறையிட்டிலை  என்பார் . “ஆழாமற் காப்பானை ஏத்தாது” என்றார், ஏத்தாமையை கேடு தேடிக்கொண்டதாக முடியும் என்பது கருத்து. செய்யத் தகாததைச் செய்தலும் ,செய்யத்தக்கதைச் செய்யாமல் விடுதலும் கேட்டிற்குக் காரணம் ஆகும் .  இங்கே ,”வல்வினைப்  பட்டாழ்தல் “  தகாததைச் செய்தலும் ,”காப்பானை ஏத்தாமை “ தக்கதைச் செய்யாமல் விடுதலும் ஆகும் . ஆதலின் இரண்டு வகையானும்  கேடு  தேடிக் கொண்டனை  என்பார், “சூழ்கின்றாய் கேடுனக்கு” என்றார்.

                 உனக்கு என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு ,”உனக்குச் சொல்கின்றேன்” எனக்  கூட்டுக. கொடிய தீவினைப்பயன் விளக்குங்கால்  கொடுந்துன்பமாக  முடியும்  ஆதலின், “வல்வினைக்குள் அழுந்தற்க” என்று  பலமுறை  இடித்துரைத்தும் நன்நெறிப் பட்டிலையே என்று இரங்குவார், “உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்” என்றார். “இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் , கெடுப்பாரிலானுங் கெடும் “ என்னும்  நீதி மொழியைக் கடைப்பிடித்து , இடித்துரைத்தலின்றிக் கேடு அடையவிடுதல்  அறம்  அன்றெனக்  கொண்டு ,ஒரு முறை இருமுறையின்றிப் பலமுறையுஞ் சொல்கின்றேன் என்பார், “பல்காலும்” என்றார். இடித்துரைப்பார் ஓரளவிற்  கூறியும் ,கேட்பார் அதனை யேற்றுக்கொள்ள வில்லையானால் , அவ்வளவில் விட்டு ஒழிதல் இயல்பு. அங்ஙனம் ஒழியாது இன்னும் சொல்லி வருகின்றேன் என்பது தோன்ற , “சொல்லினேன்” என்று இறந்த காலத்தாற் கூறாது ”சொல்கின்றேன்”  என நிகழ்காலத்தாற் கூறினர். அங்ஙனம் கூறியும் கேளாமல்  வல்வினைப்பட்டு  அழுந்துவதால் விளையும் பயன் இன்னவென் பதை  நான்காம் அடியிற் கூறுகின்றார்.

              வினை வலியதாகலின் , அதற்கேற்பப் பயனை அவலக்கடல் வெள்ளமாகக் கூறினார் . வல்வினை மூலமும் , அவலம் அதன் பயனும் ஆகும். கடல் பெருகிக் கரை புரண்டு  ஓடும் நிலையில்  அதனைக் கடல் வெள்ளம்  என்று  கூறலாம் . ஆழமாயினும் , நிலையான  நீரில் வீழ்வார்  ஓரோவழி  உய்தல்  கூடும் . அந் நீர் பெருக்கெடுத்து  ஓடும் நிலையில் வீழ்வார்  உய்தலரிது. இவ்வுண்மை கருதியே , வல்வினைப்பயனாகிய துன்பம் ஆற்றொணாதது எனக் கொண்டு , “அவலக் கடலாய வெள்ளம்” என்றார். “வல்வினைப்பட்டு “  என்பதற்கேற்ப , “ அவலக்  கடலாய வெள்ளத்தே” எனவும், “ ஆழ்கின்றாய் “ என்பதற்கேற்ப , “வீழ்கின்றாய் “ எனவும் கூறியது, கருதி இன்புறத்தக்கது. செயல் முன்னரும் பயன் பின்னரும் நிகழ்தல் இயல்பு. இங்கே செயல் வலியதாகலின் , அது நிகழும் பொழுதே பயனும் உடன் நிகழ்தல்  குறித்து , “வீழ்வாய்” என்னாது , “வீழ்கின்றாய் ‘என்றார் . ஒரு வினையைச்  செய்தவனிருக்க, அவனை விட்டு , அதன் பயன் மற்றொருவனை  அடையாதாதலின் , வல்வினைக்கண் அழுந்திய  நீயே அதன் பயனையும் நுகர்தற்குரியை என்பது தெளிவுறுத்தற்கு ,” வீழ்கின்றாய்” என்னும்  முன்னிலை வினையாற் பெறத்தக்க  எழுவாயை வெளிபடுத்து , “வீழ்கின்றாய் நீ” என்று  கூறியருளினர் .

            இதன்கண், நெஞ்சை நோக்கி , “பலகாலும் இடித்துரைத்தும் கேளாமல் கொடிய  தீவினைச்  செயலில்  தலைப்படுகிறாய் ; இது பெருந்துன்பக்கடலில் மூழ்குதற்கு ஏதுவாம் “ என்று  அறிவுறுத்தமை  வெளிப்படக் கிடத்தலின் , அறிவுறுத்தல் என்னும் பதிகம்  நுதலிய பொருளும் , “வல்வினைப்பட்டு  ஆழ்கின்றாய்” , “சூழ்கின்றாய் கேடுனக்கு” என்பனவற்றால் வைராக்கியமும் , ஆழாமற் காப்பானை ஏத்தல் வேண்டும் என்றதனால் பத்தியும் பெறப்படுதலின், பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம்  நுதலிய  பொருளும்  புலனாயவாறு  அறிக .

                                           ********************************************

                                *******************************************************************

3 .  சுட்டறுத்தல்

     இ   த் திருச்சதகத்தின் முதற்பதிகத்தில்  பொய்ப்பொருள் கடிந்து , மெய்ப்பொருளாகிய கடவுள் உணர்ச்சியில்  தலைப்படுதலைக் குறித்தும், இரண்டாம் பதிகத்தில்  அதற்குத் துணை புரிய வேண்டிய மனம்  நன்நெறிப்படாமை  கண்டு , அதனை இடித்துரைத்து  அறிவுருத்தமை  பற்றியும் தெளிவுறுத்தப்பட்டன . இங்ஙனம் அறிவுறுத்தப்பட்ட நெஞ்சம் உள்ளுறக் கருதியும் , பொறிவாயிலாக வெளிப்பட்டும்  அறியும் சுட்டறிவினால் இறைவனைக்  காண்டற்கு முயன்றதாக , அம்முயற்சி  ஓரளவிற்குச் சாதனமாகுமேயன்றிக் கருதிய பயனைச் செய்ய  மாட்டாதெனவும்  , சுட்டறிவினால் அறியப்படும் பொருள் எல்லாம்  சுட்டுப்பொருள்களாகிய  நிலையில் பொருள்களாம்  எனவும் , எங்கும் நிறை  பொருளாகிய இறைவனை அறிதற்கு அச் சுட்டறிவு  கருவியாகாது எனவும் உணர்ந்து ,அச்சுட்டறிவை யொழித்தல் பற்றி இப் பதிகத்தில்  கூறுகின்றார். சுட்டறிவு என்பது , இது குடம் , இஃது ஆடையென்று கண்ட பொருளைப் பொறி  முதலிய கருவிகளுடன் கூடி நின்று அறியும் அளவையறிவாகும் . இதனை ஆன்ம  போதமென்றுங் கூறுவர். இவ்வறிவால் அறியப்படுவனவெல்லாம்  அழியும்  இயல்பினவாகும் . இவ்வுண்மையை , “ஈண்டு அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து” என மெய்கண்டாரும் , அதன் விளக்கமாக , “சுட்டறிவினால் அறியப்பட்ட சுட்டுப்பொருள் எல்லாம் அசத்து” என மாதவச்  சிவஞான  முனிவரரும்  கூறியவற்றால் தெளியலாம் . அகண்டப் பொருளாகிய இறைவன் , பொறி முதலிய கருவிகளோடு  கூடாத மெய்யுணர்வினால்  அறியப்படுபவன் ஆவான் . இம் மெய்யுணர்வைப்  பரஞானம் , தத்துவ ஞானம் , பதி ஞானம் , அநுபவவுணர்வு  எனப் பெரியோர்  கூறுவர். இறைவனை  அறிதல் மெய்யுணர்வினால் அன்றிச்  சுட்டறிவினால் இயலாதென்பதை , “அனைத்துலகுமாய  நின்னை ஐம்புலன்கள் காண்கிலா” என்னும்  அடிகள் திருவாக்கானும் உணரலாம்.  கருவிகளோடு கூடியறியும்  சுட்டறிவாகிய  உலகியலறிவிற்கும் , அவற்றின் நீங்கிச் சுட்டிறந்தறியும் மெய்யுணர்விற்கும் உள்ள வேறுபாடு கருதியே , திருக்குறள் ஆசிரியர் , முன்னதை , “அறிவுடைமை “ என்னும்  பெயரால் பொருட்பாலில் அரசியற்  பகுதியிலும் , பின்னதை , “மெய்யுணர்தல் “ என்னும் பெயரால் அறத்துப்பாலில்  துறவறப் பகுதியிலும் இரண்டு  அதிகாரங்களாக  அமைத்துள்ளார் . இறைவனது அகண்ட வடிவம் சுட்டறிவிற்கு அறியப்படாத தெனினும் , சாதனத் தொடக்கத்தில்  அப்பெருமானது திருவுருவைக் கண்டப் பொருளாகக் கொண்டு நினைவுறல் வேண்டும் . ஆதலின், அது பற்றி இறைவனது பெருமைக்கு இழுக்கு நேராது என்பது  கருதத்தக்கது.  நினைபவன்  தகுதி குறித்து அவ்வுருவத்திலும் இறைவன் விளக்கம் உள்ளது  என்பது பெரியோர் அநுபவத்திற் கண்டது. திருவுருவத்திற்  பதிந்த நினைவு முதிர முதிர , நினையும்  கருவியாகிய மனம் இறந்தொழியும்  என்பதையும் , அந் நிலையில் இறைவனது நிறைவு நிலை மெய்யுணர்விற்கு விளக்கமாம் என்பதையும் ,”உணர்ந்தார்க் குணர்வரியோன்” என்னும் திருக்கோவைச் செய்யுட்பகுதியும்  அதற்கு , “ஓருகால் தன்னை யுணந்தவர்கட்குப்  பின் உணர்தற்குக்  கருவியாக  சித்த விருத்தியும்  ஒடுங்குதலான் ,மீட்டு உணர்வரியோன் “என்று  கூறிய  பேராசிரியர்  உரைப்பகுதியும் தெளி வுறுத்துவனவாம் . இவ்வுண்மை குறித்தே , முதலில்  நெஞ்சை அறிவுறுத்துத்  திருவுருவில்  பதியச் செய்து , அதன் முதிர்ச்சியில்  அச் சுட்டறிவை யொழித்தல்  இப்பதிகம் நுதலிய பொருள் என வகுக்கப்பட்டதென்க .

எண்சீர்க் கழிநெடிலடி  ஆசிரிய  விருத்தம்

பாடல் : 21 .

வெள்ளந்தாழ்  விரிசடையாய்  விடையாய்  விண்ணோர்

பெருமானே  யெனக்கேட்டு  வேட்ட  நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ்  உறுபுனலிற்  கீழ்மேல்ஆகப்

பதைத்துருகும்  அவர்நிற்க  என்னை  யாண்டாய்க்

குள்ளந்தாள்  நின்றுச்சி  யளவும்  நெஞ்சாய்

உருகாதால்  உடம்பெல்லாங் கண்ணாய்   அண்ணா

வெள்ளந்தான்  பாயாதால் நெஞ்சங்  கல்லாம்

கண்ணிணையும்  மரமாந்தீ  வினையி  னேற்கே.

கருத்துரை :-  இரண்டாம் பதிகத்தின் இறுதித்  திருப்பாட்டில் நெஞ்சத்தின்  மாறுபட்ட நிலையை எடுத்துக்காட்டி அறிவுறுத்த அடிகள் அது தகாத நிலையிற் சேறலைக் கண்டு வைத்தும் ,பெருங்கருணையால் இறைவன் தம்மை ஆட்கொண்ட பேருதவியைக் குறித்து , அந் நெஞ்சம் மேற்கொள்ளவேண்டிய  கடமையையும் , அதன் விளைவையும் இத்  திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார்.

பதவுரை :- வெள்ளம்  தாழ்  விரிசடையாய்  =  கங்கை  நீர்ப் பெருக்குத்  தங்கிய  விரிந்த  சடையினையுடையாய் ,

விடையாய்  =  ஊர்தியாகிய  எருதினையுடையாய் ,

விண்ணோர்  பெருமானே  =  அமரர்  தலைவனே,

எனக்  கேட்டு வேட்ட நெஞ்சாய்  =  என்று  கூறக்கேட்ட  அளவிலே  வேட்கை மிக்க நெஞ்சம் உடையராய் ,

பள்ளம்  தாழ்  உறுபுனலின்  =  பள்ளத்தில்  வீழும்  மிக்க  நீரைப்போல,

கீழ் மேலாகப்  பதைத்து  உருகும்  அவர் நிற்க  =  கீழ் மேலாம்படி  துடிதுடித்து உருகும்  மெய்யன்பராகிய  அவர்கள்  ஒரு புறம் நிற்க,

என்னை  ஆண்டாய்க்கு  =  சிறியேனை  ஆளாகக்கொண்ட  நின் பொருட்டு ,

உள்ளந்தாள்  நின்று  =  உள்ளங்கால்  தொடங்கி ,

உச்சி  அளவும்  =  உச்சம்  தலைவரையும்  ,

நெஞ்சாய்  உருகாது  =  மனம்  தானாய் நின்று  உருகுதலைச்  செய்திலது,

உடம்பு  எல்லாம்  =  உடல்  முற்றும் ,

கண்ணாய்  வெள்ளம்  பாயாது  =  கண்ணாகி  நீர்ப்பெருக்குப்  பாய்ந்திலது ,

அண்ணா  =  என் தந்தையே ,

தீவினையினேற்கு  =  தீவினையுடையேனாகிய  எனக்கு ,

நெஞ்சம்  கல்  ஆம்  =  அங்ஙனம்  உருகாத நெஞ்சம்  கல்லாகும் ,

கண் இணையும் மரம் ஆம்  =  அங்ஙனம் வெள்ளம் பாயாத கண்களிரண்டும்  மரம்  ஆகும் , என் செய்வேன்  என்பது .

விளக்கவுரை :- வெள்ளம்  என்பது பெருக்கு எடுத்து வழியும் கங்கை நீரைக்  குறிக்கும் . நிலம் தாங்கலாற்றாத  அளவு விரைந்து வழிந்த கங்கைப் பெருக்கை இறைவன் தன் சடையின் ஒரு கூற்றில் அடக்கி அருளினான்  என்னும்  புராணக்கதையை  உட்கொண்டு கூறியது . சடை முழுதையும்  திரட்டி  அணையாக்கித்  தடுத்தான் அல்லன் ; அதனை விரித்து ஒரு சிறு பகுதியில் அடக்கினான் என்பது தோன்ற , “வெள்ளந்தாழ்  விரிசடையாய் “ என்றார் . இஃது அப்பெருமானது பேராற்றலைப்  புலப்படுத்தும் .

             விடையை  அறத்தின் வடிவம் என்ப.  அதனை ஊர்தியாகக்  கொண்டது.  அறத்தைப் பாதுகாத்து நடத்தும் தலைவன் என்பதைப் புலப்படுக்கும் . இறைவன் உலகத்திற்கு ஆதாரமாகியும் , ஆதேயமாகியும்  நின்று பாதுகாப்பவன் என்பதை , “சடையாய் “ , “விடையாய்”  என்பன  குறிப்பாக  அறிவுறுப்பனவாம் . எங்ஙனமெனிற் கூறுவோம் . ஆதாரம்  தாங்குதலும் , ஆதேயம்  தாங்கப்படுதலும்  ஆதலின் , இறைவன் தன்  சடையில்  கங்கைப்  பெருக்கைத்  தாங்கியும் , விடையை ஊர்ந்து , அதனால் தாங்கப்பட்டும் இருத்தலின் என்க. திங்களைச் சடையிற் சூடிப் பாதுகாத்த  புராணகதையும்  இவ்வுண்மையைத்  தெளிவிப்பதாகும் . “தோடுடைய  செவியன் விடை யேறியோர் தூவெண்மதி  சூடி” என்னும்  தேவாரத்தில்  அம்மையின் திருச்செவியைக் குறித்துத் “ தோடுடைய செவியன்” என்றதனால்  படைத்தலையும் , “ விடையேறி” , மதி சூடி “  என்பவற்றால்  காத்தலையும்  , “சுடலைப்  பொடி  பூசி” என்றதனால் அழித்தலையும் ,” “உள்ளங்கவர்  கள்வன் “ என்றதனால் மறைத்தலையும் , “ அருள் செய்த “  என்றதனால் அருளையும்  குறிப்பிட்டு , இறைவன் ஐந்தொழிற்குத்  தலைவன்  என்பதைப் பெறவைத்தார்  திருஞானசம்பந்த  சுவாமிகள் . அம்முறையில், ஏனைய தொழில்களுக்கு எல்லாம் ஒவ்வொன்று கூறிக் காத்தல் தொழிற்கு , “விடையேறி”  , “ மதி சூடி” என்னும்  இரண்டு நிகழ்ச்சி  கூறியது  இவ்வுண்மை குறித்தே என்பது தெளிவாம் . இங்ஙனம் ஆதாரமாகியும்  ஆதேயமாகியும் நின்று  காப்பவன் முழுமுதலாகிய தலைவன் என்பது தோன்ற, “விண்ணோர் பெருமானே “ என்றார். அமரர் தலைவன் என்பதனாலே மக்கள் முதலியோர்க்கும்  தலைவன் என்பது எளிதிற் பெறப்படும் . “விண்ணோர் முழுமுதல்  பாதாளத்தார்  வித்து” என்று அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  காண்க.  இங்ஙனம் , சடையாய் , விடையாய் , பெருமானே  என்று மெய்யன்பர்கள்  அணிமையில் நின்று இறைவனை விளித்தனராக , அச் சொற்களைக் கேட்ட அளவிலே நெஞ்சம் வேட்கை மிக்கு , வயம் அழிந்தது என்பார், “எனக் கேட்டு  வேட்ட நெஞ்சாய்” என்றார். கற்பு மிக்க காதலி யொருத்தி , தன் தலைவன் பெயர் கேட்ட அளவில்  தன்வயம் அழிதல் தலையன்பும், கண்ட அளவில் வயம் அழிதல் இடையன்பும் , ஊற்றின்பத்தில் வயம்  அழிதல் கடையன்பும்  ஆம்  என்பர்.  அது போல , ஈண்டு இறைவன் பெயர் கேட்ட அளவில் நெஞ்சம் வேட்கை மிக்கதாயிற்று  எனத் தலையன்பு உண்மை கூறப்பட்டது . “ முன்னம்  அவனுடைய நாமங்கேட்டாள் “ என்பதும் இக்கருத்துப் பற்றியதே . “வேட்ட நெஞ்சாய் “ என்புழி , ஆக்கம் இறைவன் பெயர் கேட்டற்கு முன் உள்ள தன்மை மாறித் தன்வயம் இழந்து , வேட்கை மீதூர  நின்ற நிலையை  உணர்த்துவதாகும் . நெஞ்சு , ஈண்டு  அதனை உடையார்க்கு  ஆயிற்று .

               “பள்ளந்தாழ் உறுபுனல் “ விரைவான  செலவிற்கும் கீழ் மேலாதற்கும்  உவமையாம் . பள்ளத்தை நோக்கி  விரைந்து செல்லும் நீர்  மிகுதியாக இருக்குமானால் , வீழ்ந்த இடத்தினின்றும்  மேலே கிளம்புதல்  இயற்கை , புனல் மிகுதி தோன்ற , “உறுபுனல்” எனப்பட்டது . ஈண்டு , நீர் வீழ்ச்சியைப் போல இறைவன் பெயர் கேட்ட அளவில் நெஞ்சம் தன்வயம் இழந்து , துடித்துக்  கரைந்தது  என்பார் , “பதைத்துருகும் “என்றார் . காம நிலையில் பதைத்துருகுதலை  ஒழித்தற்கே , “எனக் கேட்டு வேட்ட நெஞ்சமாய் பதைத்துருகுமவர் “ என்றார். மெய்யன்பினால் நெஞ்சங்கரையும் உண்மை அடியார் வேண்டி  நிற்க , அப் பெரியாரைவிட்டுக்  காமன் அம்பிற்கும்  மகளிர்க்கும்  பதைத்துருகும்  சிறியேனை ஆட்கொண்டருளிய கருணையை என் என்பேன் என்பார், “என்னை யாண்டாய்க்கு “ என்றார். குவ்வுருபு  பொருட்டுப் பொருளது.

               இத்துணைப்  பேரருளுடன்  ஆட்கொண்ட நினைக் குறித்து ,உடம்பின் உட்பகுதி முழுதும் நெஞ்சம்  ஆகி உருகுதல் வேண்டும் ; அங்ஙனம் உருகப் பெற்றிலேன் என்பார், “உள்ளந்தான் நின்றுச்சியளவும்  நெஞ்சாயுருகாது “ என்றார். நினைத்தற் கருவியாகிய மனத்திற்கு நெஞ்சம் இடனாதல் பற்றி மனத்தை நெஞ்சம் என்று கூறுதல்  தமிழ் வழக்கு . அஃது உடம்பினுள் ஒரு பகுதியாகும் . இறைவனது பேரருள் உதவி குறித்து உருகுதற்கு மனம் உடம்பின் ஒரு சிறு கூற்றை இடனாகக் கொள்ளுதல் போதிய தாகாதென்று கருதியும் ,நெஞ்சிடத்தின் உட்பகுதியே மனத்திற்கு இடனாதல் குறித்தும் , “உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் “ என்றார், மேட்டு நிலத்தில்  நின்றும் பள்ளத்திற் பாயும் நீர்போற்  கீழ் மேலாக என்றதற்கேற்ப , “உச்சியினின்றும் உள்ளந்தாள் அளவும் “ என்னாது, “உள்ளந்தாநின்றுச்சியளவும் “ என்றார். நெஞ்சம் உருகுங்கால் , புறத்தேயுள்ள கண்களினின்றும்  கண்ணீர் பெருகுவதாகும் . இதனை ,”அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் “என்பதனாலும் அறியலாம் “அழுதா லுன்னைப் பெறலாமே”  என்பதும் அடிகள் திருவாக்கு . இது கருதியே , “ அழுதடியடைந்த  அன்பன் “ என்று  பின்னுள்ளோர் அடிகளைக் குறிப்பிடுவாராயினர் . அங்ஙனம் உருகிக் கண்ணீர் வடிதற்கு முகத்திலுள்ள இரண்டு கண்கள் போதா; உடல் முழுதும் கண்களாதல் வேண்டும் என்பார், ‘உடம்பெல்லாம் கண்ணாய் வெள்ளம்  பாயாது “ என்றார் .ஆல்  இரண்டும் , அசைகள் .” உடம்பெல்லாம் “என்பதற்கு, உடம்பின்  புறம்  எல்லாம் என்று பொருள் கொள்ளல் வேண்டும் . என்னை?  நீர் ஒழுக்கும்  கண்கள் முகத்தின் உள்ளனவாதலின்.

            உருக்கத்தாற் பெருகுங் கண்ணீரில் மிகுதி தோன்ற ,”வெள்ளம்” என்றார்.  இனி, அங்ஙனம் உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாகாவிட்டாலும் , உள்ள நெஞ்சத்தானும்  சிறிதும் குழைந்திலதே  என்பது குறித்து வருந்தி ,”நெஞ்சம் கல்லாம் “என்றார்.  இரும்பு முதலிய உலோகங்களாகக்  கூறின் , தீயின் , மிகுதியான சூட்டினால் உருகக்கூடும் . ஆதலின், எவ்வாற்றானும் நெகிழாத , கல்லாகக்  கூறினர் . உடம்பெல்லாம்  கண்ணாகாவிட்டாலும் , உள்ள கண்கள் தாமும் சிறிதும் கசிந்திலவே என்பது குறித்து வருந்தி , “கண்ணிணையு மரமாம் “ என்றார் . மரத்தின் கணுக்களுக்கு  கண் என்னும் பெயருண்மையாலும் , அதற்கு ஒன்றை நினைந்து  நீர்  வடிக்கும்  அறிவின்மையானும் , அதனோடு ஒப்பித்து , “மரமாம்” என்றார். “மரக்கணேனையும்  வந்திடப்  பணியாய் “ என்று பிறி தோரிடத்து  அடிகளும் , “மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்” எனப் பிறரும்  கூறியிருத்தலும்  காண்க. நெஞ்சம்  அன்பினால் உருகாமலும் , அதன் விளைவாகக் கண்கள் நீர் கசியாமலும் இருத்தற்குக்  காரணம் என்  தீவினையே என்பார், உடம்பொடு புணர்ந்து , “தீவினையினேற்கே” என்றார்.

            இதன்கண், ஏகதேசமாகச்  சுட்டியுணர முயலும் நெஞ்சத்தை யொறுத்து, உள்ளந்தாள் நின்று  உச்சியளவும் நெஞ்சாயுருகுதல் வேண்டுமெனக்  கூறி , அதனால்  அங்ஙனம் நெஞ்சம் உருகிக்  கரைந்த நிலையிலே இறைவன் காட்சி மெய்யுணர்விற்குப் புலனாமென்பது பெறப்பட வைத்தமையான் , சுட்டறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , நெஞ்சாயுருகாதெனவும் , கண்ணாய்  வெள்ளம் பாயா தெனவும் கூறியதனால் பத்தியும் ,”நெஞ்சம் கல்லாம் கண்ணிணையு மரமாம்  தீவினையினேற்கு  “ என்றதனால்,,  வைராக்கியமும்  பெறப்படுதலின் , பத்தி வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதகம் நுதலிய பொருளும்  தோன்றியவாறு  அறிக .

                                           **************************************

பாடல் :22 .

வினையிலே  கிடந்தேனைப்  புகுந்து  நின்று

போதுநான்  வினைக்கேடன் என்பாய்போல

இனையன்நான்  என்றுன்னை  அறிவித்  தென்னை

ஆட்கொண்டெம்  பிரான்  ஆனாய்க் கிரும்பின்  பாவை

அனையநான்  பாடேன் நின்  றாடேன்  அந்தோ

அலறிடேன்  உலறிடேன்  ஆவி  சோரேன்

முனைவனே  முறையோநான்  ஆன  வாறு

முடிவறியேன்  முதலந்தம்  ஆயி  நானே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் நெஞ்சம் தனக்குரிய கடமையை  மேற்கொண்டு தமக்கு உதவி புரியாமைக்கு  இரங்கிய அடிகள் , அங்ஙனம்  கடமையை  மேற்கொள்ளாமையோடு  தம்வழியின்  அன்றி வினைவழிச்சென்று , தம்மையும்  ஈர்த்து , அவ்வினையிலே உழல்வித்ததாக , அந்நிலையில் வலிய  வந்து ஆட்கொண்ட  இறைவனது பேரருளை  நினைந்து  தாம்  மேற்கொள்ளவேண்டிய  கடமைகளைச்   செய்யாமை குறித்து இத்  திருப்பாட்டில்  இரங்குகின்றார்

பதவுரை :- முனைவனே  =  கடவுளே ,

முதல் அந்தம் ஆயினானே  =  தோற்றத்திற்கும்  இறுதிக்கும் காரணம்  ஆயினவனே ,

வினையிலே  கிடந்தேனை  =  வினைப்பகுதியிலே  கிடந்து  உழலும்  அடியேன்பால் ,

புகுந்து நின்று  =  புகுந்து  நிலையுதல்  பெற்று ,

போது  =  வருக ,

நான் வினைக்கேடன் என்பாய்  போல  =  யான்  வினையை ஒழிப்பவன்  என்று  கூறுவாய்  போல  ,

இனையன் நான் என்று  உன்னை  அறிவித்து  =  இத்தன்மையை உடையவன்  யான்  என்று  நின்னை  எனக்கு  அறிவித்து ,

ஆட்கொண்டு  =  என்னை  அடிமையாகக்  கொண்டு  ,

எம்பிரான்  ஆனாய்க்கு  =  எங்கள் தலைவனாகிய நின் பொருட்டு ,

இரும்பின் பாவை அனைய நான்  =  இரும்பினால்  ஆக்கப்பட்ட  பாவையை  ஒத்த  யான்,

பாடேன்  நின்று  ஆடேன்  =  பாடுதலைச்  செய்யேன் , நின்று ஆடுதலைச்  செய்யேன் ,

அந்தோ  அலறிடேன்  உலறிடேன்  ஆவிசோரேன்  =  கதறுகின்றிலேன்  வற்றுகின்றிலேன்  உயிர்ப்புச்சோர்கின்றிலேன் ,

நான்  ஆனவாறு  முறையோ  =  யான்  இங்ஙனம்  ஆகியது முறையாகுமா,

முடிவு அறியேன்  =  இஃது  எவ்வாறு  முடியும்  என்பதையும்  அறிந்திலேன்  என்பது .

விளக்கவுரை :-  முனைவன் என்பது  இயல்பாகவே பாசங்களின் நீங்கிய  முற்றறிவுடைய  இறைவனைக் குறிக்கும் . “வினையின்  நீங்கிவிளங்கிய  அறிவின் முனைவன் “ என்பர் தொல்காப்பியனார் . உலகத் தோற்றத்திற்கும்  ஒடுக்கத்திற்கும் காரணன் சிவபெருமான் என்று  மறைமுடிவுகள் கூறுதலின் , “முதல் அந்தம் ஆயினானே “ என்றார் . ஆதல் – காரணன்  ஆதல் . இனி, அந்தம் முதலாயினானே எனக் கொண்டு , அந்தத்தைச் செய்யும்  முதற்பொருளானவனே என்று கோடலுமாம் . உலகம்  ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற தன்னிடத்தில் நின்றே மீளத்தோன்றுதலின் , அழித்தலைச் செய்யும் மகா சங்கார காரணாகிய இறைவனே முதற்பொருள்  ஆவான் என்னும் பொருள் தோன்ற , “ஒடுங்கி  மலத்துளதாம்  அந்த மாதி “ என்று  சிவஞான போதம் கூறுதல் அறிக. வினை , ஈட்டப்படுவதும் ,சேர்க்கப்படுவதும், நுகரப்படுவதும்  என  முத்திறப்படும் . ஓர் உழவன் அத் தொழிலின் முயற்சியால் நெற்பயிரை  ஓம்பி ,விளைவித்துக் கொணர்தல் ஈட்டப்படுவதும் கொண்டுவந்த நெல்லைக் களஞ்சியத்தில் சேர்த்து வைத்தல்  சேர்க்கப்படுவதும் ,பின் அதனை உணவாக்கி உண்டல் நுகரப்படுவதும்  ஆதல்போல , வினையும் ஆம் என்பது . ஓர் உயிர் பிறவியில் தலைப்படல் தொடங்கி  வீட்டுநிலை  எய்துங்காறும் வினைத் தொடர்பிலே கிடப்பதாகும். இங்ஙனம் மாறி மாறி  ஈட்டன் முதலியவற்றைச்  செய்துகொண்டே  பிறந்து இறந்து உழலுதலின் , “வினையிலே கிடந்தேனை” என்றார் . “ அறம் பாவம்  என்னும்  அருங்கயிற்றாற் கட்டி” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதுங் காண்க .  “கிடந்தேனை” என்புழி , இரண்டாம்  உருபை  ஏழாம் வேற்றுமை  மயக்கமாகக் கொள்க.

           இத் திருப்பாட்டின் இரண்டாம் அடியில் , “என்னை யாட்கொண்டெம் பிரான்  ஆனாய் “ என்று  கூறுவதாலும் , ஆட்கொள்ளுதல் , “கட்டறுத் தெனையாண்டு “ என்றபடி வினைத் தொடரின் நின்றும் விடுவித்தே செய்யத்தக்கது ஆதலாலும் , வினையிலே கிடத்தல் ஆட்கொண்டதற்கு  முன்னுள்ள நிகழ்ச்சி எனக் கொண்டு “கிடந்தேனை “ என இறந்த காலத்தாற் கூறினர் .புகுந்து நிற்றலைப்பற்றி , “ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான், என்புழி, விளக்கிக் கூறப்பட்டு  வினையிலே பிணிப்புண்டு , அறிவு விளக்கமின்றிக் கிடந்த என்னுட் புகுந்து நின்றவன் , வினையினீங்கி  விளங்கிய  அறிவனாவான் என்பது குறிப்பிற் பெறப்படும்  ஒரு நயம் . மேலும்  “வினையிலே கிடந்தேனை” எனத் தம்மையும் , “புகுந்து நின்று” என இறைவனையும்  கூறியதில் ,கிடத்தல் பொருட்படுத்தாமல் இருந்ததையும் , நிற்றல்  பொருட்படுத்து  நின்றமையையும் புலப்படுத்தும் பிறிதொரு நயமாகும் . இவற்றானும் இறைவன் அடிகள்பால்  வைத்த பேரருளின் திறம் புலனாதல்  அறிக . புகுந்த இடம் தூயதாயின் , நிற்றல் கூடும் . ஈண்டுப்  புகுந்தது  ஊனார் உடல் ஆதலின் ,நிற்றற்குத் தகுதியில்லாததாகவும் , அதனுள் நின்று ஆண்டான் என ,இறையருட் சிறப்பை மேலும் புலப்படுத்த, ”புகுந்து நின்று “  என்றார். புகுந்து நின்ற இடம்  ஊனுடலாயினும் , தூய உடம்பினன் ஆகிய இறைவன் புகுந்தமையால் , அது சிறந்த திருக்கோயில் ஆகுமென்பது . இதனை , “வினைபடு முடல் நீ  புகுந்து நின்றமையால் விளங்கிய விமானமாயினதே “ என்னும் திருவிசைப்பாவானும் அறிக. இங்ஙனம்  இறைவன் புகுந்து நின்றதும் , வினைப்பிணிப்பால் அவனை  இன்னான்  என அறியாமல் வாய்வாளா இருந்தேனாக , அப் பெருமானே என்னை வருக என அழைத்தான் என்பார், “ போது” என்று அருளினன் எனக்  கூறினர் . ஓர் இல்லத்திற்கு  ஒரு பெரியவர் வந்தால் , அவர் முன்னர் அறியப்படாதவர்  ஆயினும் , இல்லமுடையார் அவரை வரவேற்று , “வருக”  என்று கூறி , இருக்கையளித்து உபசரித்தல் உலகியலிற் கண்டது . அதற்கு  மாறாக , உட்புகுந்த பெருமானே வாய்வாளா இருந்த தம்மை  வருக என அழைத்தான் என , அவ்விறைவன் பேரருளை ஈண்டும் புலப்படுத்தமை  அறிக .

புதியராக வந்தார் ஒருவரை ,இன்னார் என அறிமுகப்படுத்தற்கு, அறியப்பட்ட  மூன்றாமவராகப் பிறரொருவர் வேண்டும் . இஃது உலகியலிற்  கண்டது . ஈண்டு , உட்புகுந்த ஏகநாயகனை  அடிகளுக்கு  அறிமுகப்படுத்த யாரும் இல்லாமையால் , அப் பெருமானே தம்மை இன்னான் என அறிவிக்க வேண்டியதாயிற்று . “ அறிவானுந்தானே அறிவிப்பான்  தானே” என்னும் அம்மை திருவாக்கும் அறிக. அறிவித்தது எவ்வாறு எனின் , “இனையன் நான் “ என்பதாம் . இனையன் என்பதற்கு இத் தன்மையுடையேன் என்பதும் பொருள்  அத் தன்மைதான் யாதெனில் , “வினைக்கேடனாதல் “ என்பதாம் .  தன்மையின்  விளக்கம் இதுவாகும் . வினையிலே  கிடப்பவனுக்கு உபகரிப்பவன் , அப் பிணிப்பை ஒழிப்பவனாக இருக்க வேண்டும் . ஆதலின், இறைவன் தன்னை அறிவிக்குங்கால் , தன்னுடைய பலவகைப்பட்ட பெருமை களில் கன்மநாசம் பண்ணும்  ஒன்றை மாத்திரம் வெளிப்படுத்தி , “வினைக்கேடன்”  என்றானாம் . வினையிலே பிணிப்புண்டு  உழலும் என்னை விடுவித்தற்கு , என்னுட் புகுந்து நின்று , வருக என என்னை அருகில் அழைத்து, “நான் வினையை ஒழிப்பவன் “ என்று எனக்குத் தெரிவிப்பாய் போல , இத் தன்மையவன் என்று உன்னை எனக்கு அறிவித்து , என்னை ஆட்கொண்டாய்  என்பார் இங்ஙனம் கூறினர். “நான்  வினைக்கேடன் “  “நான், இனையன்” என ஈரிடத்தும் எழுவாயாகிய  நான்  என்பதை  இறைவன் வெளிப்படக்கூறியதாகக் கொண்டு கூறியது ,”எண்பொருளவாகச் செலச் சொல்லித்தான்  பிறர்வாய் , நுண்பொருள்  காண்பதறிவு. “ என்னும்  பொருளுரைப்படி மறை பாடும் வாயனாகிய இறைவன் தமக்கு விளங்க உரைக்க வேண்டுமென்னும்  கருணையினால் என்பது அடிகள் கருத்து.  உலகத்தில் ஆற்றன்மிக்கான் ஒருவன் தன் அரிய செயலைப் பயனால் வெளிப்படுத்துவானேயன்றித் தன் நாவினால் வெளிப்பட உரைப்பான் அல்லன் .  “ வாளினாற் பேசலன்றி வாயினாற் பேசல் தேற்றேன் “ என ஒரு வீரன் உரையாகச்  சிந்தாமணியாசிரியர்  கூறியதுங்  காண்க . . அம்முறையில் இறைவன் தன் பெருமையைத்  தானே கூறாது ஒழியின் , வினைப் பிணிப்பிற் கிடப்போர்  அறிதல் அருமையெனக் கருதியும் , ஓரளவிற்குக் குறிப்பாகக் கூறியே  அருள் செய்யவேண்டுமெனக் கொண்டும்  அடிகளுக்கு அவ்வமயம்  பயன்படுமுறையில்  தன் இயல்பைக் குறிப்பிற் புலப்படுத்து,  இத் தன்மையன் என்றுஅறிவித்தல் இன்றியமையாத தாயிற்றாம் . இவ்வுண்மையை அநுபவத்திற் கண்ட அடிகள் , “நான்  வினைக்கேடன் “ என்று உன்னை அறிவித்து , எம்பிரான்  ஆனாய் என்னாது வினைக்கேடன் என்பாய் போல , இனையன்  நான் என்றுன்னை யறிவித் தென்பிரான் ஆனாய்” என்று அருளிச்செய்தனர் .  “என்பாய்போல” என்றதனால் வெளிப்படக்  கூறாமல் குறிப்பிற் புலப்படுத்தான் என்பது தெளிவாம் . இத்துணையும் கூறிய அடிகள் அநுபவ நிலையும்,

வெள்ளநீர்ச்  சடைய  னார்தாம் வினவுவார் போல வந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான்புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு

வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய நாரே

என்று அருளிய அப்பர் அநுபவ நிலையும் பல்லாற்றானும் ஒன்றுபட்டிருத்தல் அறிந்து இன்புறத்தக்கது . இவ்விருவருடைய அநுபவ நிலைகளும் ஒன்றுபட்டிருக்கும் இயல்பை இத் திருப்பாட்டின்சொற்பொருளாராய்ச்சியால் ஒருவாறு தெளிவிக்கலாம் . ஆயினும் ஈண்டு விரித்தல் மிகையெனக்கருதி  மேற்கொண்டிலேம். இனி, இங்ஙனம் வினைச்சூழலிற் பட்டுழலும் என்னுட் புகுந்து நின்று ,வினையொழிவு செய்பவனைப்போல , இத் தன்மையன் என உன்னை எனக்கு அறிவித்த அளவிலாவது , நின்னை எங்கள் தலைவன் என்றறிந்து ஆட்பட வேண்டியது கடமையாகவும் , அங்ஙனம் செய்திலேனாக, அக் குற்றத்தையும் பொறுத்து, நீயே வலிய ஆளாகக் கொண்டு , எம் தலைவனாயினாய் என்பார், “என்னை யாட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு  என்றார். குவ்வுருபு பொருட்டுப் பொருளது.

              இத்தகைய பேருதவியாளானாகிய இறைவன் பொருட்டு அடிகள் தாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகளைச் செய்யாமை குறித்துப் பிவருமாறு இரங்குகின்றார் : இறைவனுக்கு  ஆட்படும் பேறு கிடைத்தற்கு அரியது ; இஃது எளிதிற் கிடைக்கப் பெற்றமை குறித்து ஆனந்த பரவசத்தால் ஆடல்  பாடல்  முதலிய செயல்களில்  தலைப்படுதல் இன்றியமையாததாகவும் , அங்ஙனம் செய்யாமைக்குக் காரணம் , யான் இரும்பினாற் செய்யப்பட்ட  பாவையை  ஒத்திருத்தல் என்பார், “ இரும்பின் பாவை யனைய நான்” என்றார். தோற்பாவை , மரப்பாவைகளாயின் பிறரால் இயக்கப்பட்டுக் கூத்தாடல் முதலிய  செய்யக் காணலாம் . “ தோற்பாவைக்கூத்தும்  தொல்லை மரப்பாவை  இயக்கமும் “ என்பது சிவஞானசித்தி . இரும்புப்பாவை  திண்ணிதாகலின் ,இயக்கப்பட்டு ஆடல்  முதலியன செய்ததாக நிகழ்ச்சியின்று . இவ்வுண்மை கருதியே தோற்பாவை மரப்பாவைகளைக் கூறாமல் ,”இரும்பின் பாவை” ஒப்புக் கூறப்பட்டது . எதிர்பாராத பேறு கிடைத்த  அளவில் , உள்ளம் உருகிப் பரவசமான நிலையில் ஒருவர்க்கு நிகழும் செயல்களுள் , முதலிற் பாடுதலும் , அதன்பின்  எழுந்து நின்று ஆடுதலும் , அதன் மேல் கதறுதலும் , அதன்பின்னர் நாப்புலர்ந்து உடல் வற்றுதலும் , அதன் முதிர்ச்சியில்  ஆவி  சோர்ந்து மூர்ச்சித்தலும் முறையே நிகழ்வனவாம் . இவ் அநுபவம் புலப்படவே , “பாடேன் நின்று  ஆடேன் அந்தோ அலறிடேன்  உலறிடேன் ஆவி சோரேன் “ என்று அருளிச்செய்தனர் . பாடுங்கால் இருந்தும் நின்றும் பாடலாம் . ஆடுங்கால்  நின்றே ஆடல் வேண்டும்  ஆதலின் , “நின்று  ஆடேன் “ என்றார் . பாடுதல் ,ஆடுதல் என்னும் இவ்விரண்டு செயல்களுக்கும் பின்னர் நிகழும் அலறுதன் முதலியன முறுகிய செயல்களாதலின் ,இடையில் ,”அந்தோ “ என இரங்கற் குறிப்புத் தோன்றக் கூறப்பட்டது. அலறுதல் – ஆடல்  பாடல்களுக்குரிய சித்த விருத்தியும் சுருங்கிய நிலையில் நிகழ்வதாகும் . உலறுதல் – உடல் வற்றுதல். “வற்றியாரும் நின் மலரடி காணா மன்ன “ என்பது அடிகள் திருவாக்கு . ஆவி சோர்தல் – மூர்ச்சித்தல் . “இங்ஙனம் என கடமையினின்றும்  வழுவுதல் முறையாகாதே ! என் செய்வல் !” என வருந்திக் கூறுவார் , “ முறையோ நான் ஆனவாறு “ என்பதற்கு யான் இங்ஙனம் என் கடமையினின்றும் வழுவுதல் என்னை ஆட்கொண்டருளிய நினக்கு முறையாகுமா? என்பது கருத்தாகக் கொள்ளலுமாம் . “ என் கடன் பணி செய்து கிடப்பதே “என்பதைப் புறக்கணித்து விட்ட இந் நிலையில் , முடிவு என்னாமோ அறிந்திலேன் என்பார், “முடிவு அறியேன்” எனவும் கூறினர் . முடிவு – கடமை யினின்றும் வழுவுதலால் விளையும் பயன் .

                 இதன்கண் ,”முனைவனே முதலந்த  மாயினானே” எனச் சுட்டறிவிற்குப் புலப்படாத இறைவன் இலக்கணம்  தோன்ற வைத்தமையானும் , முதல் இரண்டடிகளானும்  சீவபோதத்தை ஒடுக்கிச்  சிவபோதம் மேலிட்டு விளங்கிய உண்மை பெறப்பட வைத்தமையானும் , “சுட்டறுத்தல்” என்னும் பதிகம் நுதலிய பொருள் குறிப்பிற் புலனாதலும் , “பாடேன் நின்றாடேன் “ என்பன முதலியவற்றால் சதகம் நுதலிய “பத்தி விசித்திரம் “ என்னும் பொருள் வெளிப்பட்டு நிற்றலும் காண்க.

                                         *************************************

பாடல் : 23 .

ஆயநான்  மறையவனும்  நீயே  யாதல்

அறிந்தியான்  யாவரினும்  கடைய  னாய

நாயினேன்  ஆதலையும்  நோக்கிக் கண்டு

நாதனே  நானுனக்கோர்  அன்பன்  என்பேன்

ஆயினேன் ஆதலால்  ஆண்டு  கொண்டாய்

அடியார்தாம்  இல்லையே  அன்றி  மற்றோர்

பேயனேன்  இதுதான்நின்  பெருமை  யன்றே

யெம்பெருமான்  என்சொல்லிப்  பேசுகேனே.

கருத்துரை :- முன்னைத்  திருப்பாட்டில்   தம்மை வலிந்து  ஆட்கொண்டு  அருளிய இறைவனது பேருதவியை நினைந்து , தம் கடமைகளைச் செய்யாமைக்கு  இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் இறைவன் வலிய  வந்து  தம்மை  ஆட்கொண்டதற்குக்  காரணம்  , அப் பெருமானது  மிகவும்  உயர்ந்த தன்மையையும் , தமது மிகவும் இழிந்த தன்மையையும்  அறிந்துவைத்தும் , “யான்  நின் அன்பன்” என்று  நாவளவிற்  சொல்லியதே  யாமெனவும்  , அத்துணை யெளிமையில் ஆட்கொண்ட  ஆண்டவன் பெருமையை  எவ்வாறு  புகழ்ந்து பாராட்டுவேன் எனவும் வியப்புறுகின்றார் .

பதவுரை :-   நாதனே  =  கடவுளே ,

நீயே ஆய  நான்மறையவன் ஆதல் (நோக்கி) அறிந்தும்  =  நீயே யாவர்க்கும் தலைவனாய  அந்தணன் ஆதலை ஆராய்ந்துஅறிந்தும் ,

யானே  யாவரினும் கடையன் ஆய  நாயினேன் ஆதலை நோக்கிக் கண்டும்   = யானே யாவர்க்கும்  கடையவனாய நாயின் தன்மையுடையேன்  ஆதலை ஆராய்ந்து கண்டு வைத்தும் ,

நான் உனக்கு  ஓர் அன்பன் என்பேன் ஆயினேன்  =  யான்  நினக்கு  ஓர் அன்பன் என்று சொல்லுவேனாயினேன் ,

ஆதலால் ஆண்டுகொண்டாய்  =  அதுவே  காரணமாகக் கொண்டு என்னை  ஆளாகக் கொண்டாய் ,

பேயனேன்  அன்றி  மற்றோர் அடியார்  தாம் இல்லையே  =  பேயின்  தன்மையுடையேனாகிய என்னை  யன்றி  நீ  ஆட்கொள்ளுதற்கு வேறு ஓர் அடியார்  இல்லையா? ,

இது நின் பெருமை அன்றே  =  இச்செயல்  நின் பெருமையைக்  குறிப்பதன்றோ ? ,

எம் பெருமான் என்  சொல்லிப்  பேசுகேன்  =  எங்கள் தலைவனாகிய நின்னை எவ்வாறு  புகழ்ந்து பாராட்டக்கடவேன் என்பது.

விளக்கவுரை :-    “ஆயன் நான்  மறையவனும் “ எனவும் பாடபேதம் உண்டென்ப; அது பொருட் சிறப்பின்று.  வட மொழியில் நாத என்னும் பகுதி , ஐசுவரியம் என்னும் பொருளதாகலின் , “நாதன் “ என்பது ஈச்சுரத்தன்மையுடைய  கடவுளை உணர்த்துவதாகும் . “நீயே” என்புழி, ஏகாரம் தேற்றப் பொருட்டு . பின்னர் , “யாவரினுங்கடையன் “ என அடிகள் தம்மைக் கூறிக்  கொண்டதற்கியைய , “ யாவர்க்கும் தலைவன்” என்னும் மறுதலைச் சொற்களை வருவித்துரைக்கப்பட்டன . “உடையார் முன்  இல்லார் போல்  ஏக்கற்றுங்  கற்றார் , கடையரே கல்லாதவர் “ என்புழிக் கற்றார் தலையாயினார்  என முடித்து , “கடைய ரென்றதனான் அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது “ என்று அதன் விளக்கமாகப் பரிமேலழகர் கூறியிருத்தலும் அறிக. “மறையவனும் “ என்புழி ,உம்மையைப் பிறித்து , அறிந்து என்பதனோடு கூட்டுக. நான் மறையவன் என்றது , நான்கு  மறைகளுக்கும் வினை முதலாகவும் , அம்மறைகளின் முடிபொருளாகவும்  உள்ளவன் என்னும் பொருட்டு . இதனாலே இறைவன் அமரருள் அந்தணன் என்று  கூறப்பட்டான் . “யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் “ என அகநானூற்றுக் கடவுள் வாழ்த்திற்  கூறியிருத்தலும் காண்க. இறைவன் யாவர்க்கும் தலைவனாய  அந்தணன் ஆதலை , மறையாகமங்களின் ஆராய்ச்சியால்  அறியலாமென்பது  தோன்ற , “நோக்கி அறிந்தும் “ என்றார் . பின்னுள்ள  நோக்கி என்னும் எச்சத்தை  ஈண்டும்  கூட்டுக. சிவபிரானின் உயர்ந்தாருமில்லை , தம்மின் இழிந்தாருமில்லை என்பது தோன்ற ,அடிகள் தம்மை “யாவரினுங்கடையன்” என்றும் , அவ் இழிவுதானும்  எத்தன்மைத்து என்பார்க்கு , “நாயினேன்” என்றும் கூறினர். நாயின் தன்மை , பல இடங்களிலும் பயனின்றி அலைந்து திரிதலால் இழிக்கப்படும்  இயல்பாகும் . இதனை அப்பர் தம் பாடல் ஒன்றில் ,”பாட்டில்  நாய் போல நின்று பற்றதாம் பாவந்தன்னை , யீட்டினேன்” என்று அருளிச்செய்தனர் . பாடு  என்பது  உழைப்பு என்னும்  பொருளதாகலின் , வறிதே உழைத்துத் திரியும் நாய் போல  என்பது கருத்து . இங்ஙனம்  நாயின் தன்மையைத்  தம் மேல் ஏறிட்டு அடிகள் பல இடத்தும் கூறுதல் அறியலாம் . ஆதலையும் என்புழி, உம்மையையும் பிரித்து , “கண்டு” என்பதனோடு கூட்டுக. தமது புன்புலால் யாக்கையை , “சீவார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறு குடில் “ எனவும் , தம் அறிவும் செயலும் மிகச் சிறியன எனவும் , காட்சியளவையில்  எளிதின்  ஆராய்ந்து காணலாமென்பது தோன்ற ,”நோக்கிக் கண்டும்” என்றார். இறைவன்  தலைவனாதலை அறிவு கருவியாக அறிய வேண்டுதலின் , “அறிந்தும்” எனவும் , தாம் கடையனாதலைக் கண்கூடாகக் காணலாமென்பது தோன்ற ,”கண்டும்” எனவும்  கூறினர் .

             எல்ல வகையானும் பெரியான் ஒருவன்பால் அன்பு செய்து ,அவன் அருட்கு ஆளாதல் வேண்டுமாயின் , அப்பெரியான் விரும்பத்தக்க தகுதி ஓரளவாது இருத்தல் வேண்டும் . அது சிறிதும் இல்லாத கடையேனாகிய  யான், நின் உயர்வையும் என் இழிவையும் அறிந்து வைத்தும் , என்  அவாவினால் யான் உனக்கு அன்பனாவேன் என்று சொல்லளவிற் கூறத் தொடங்கினேன்  என்பார். “நானுனக்கோர் அன்பனென்பே னாயினேன் “ என்றார். “ என்பேனாயினேன்” என்றதனால் , அன்பனாதற்குரிய  செயல்களில் தலைப்படாமல் சொல்லளவிற் கூறியது என்பது பெறப்படும் . “சொல்லுதல் யார்க்கும் எளிய  அரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்” என்னும் பொருளுரைப்படி , எளிமைபற்றிச் சொல்லினேனாக , அச் சொல்லையே ஏதுவாகக் கொண்டு , என்னை  ஆட்கொண்டு  அருளினை யென்பார் , “ஆதலால்  ஆண்டுகொண்டாய் “ என்றார் . அடிகள் தாம் சொல்லளவிற்  கூறத்தொடங்கியதை  ஏற்று , ஆண்டவன் செயலளவிற் காட்டினான் என்னும் அருமைப் பாட்டைப் புலப்படுக்கவே , “என்பேனாயினேன் “ எனவும் , “ஆண்டுகொண்டாய்” எனவும் அருளிச் செய்தனர் . ஒருவாறு இறைவனுக்கு அடிமைப்பணி புரிதற்குத் தகுதியான  ஆள் அமையாமையால் , தாம் அன்பன் என்ற அளவில் , தகுதி யொன்றையும் ஆராயாமல்  தம்மை இறைவன் ஆட்படுத்துக்கொண்டனன் என்று அடிகள் கருதினரோ வெனின் , அங்ஙனங்  கருதினார் அல்லர் என்பதை , “பேயனேன்  அன்றி மற்றோர் அடியார்தாம் இல்லையே “ என்பதனால்  அறியலாம் . பாவகன்மத்தால்  இழிபிறப்புடைய பேயைப் பணி கொண்டால் துன்புறுத்துமேயன்றி  வேறு பயன் விளையாதென்னும் உண்மை கருதித் தம்மைப் பேயனேன் என்றார்.  “புற்றுமாய்  மரமாய்ப்  புனல்காலே யுண்டியாய்  அண்டவாணரும்  பிறரும் , வற்றியாரும் நின் மலரடி காணாமன்ன” என்றபடி , அரிய தவங்கிடந்து நினக்குப் பணிபுரியும் அன்பராதற்கு  அமரர் முனிவர்  முதலியோர் எண்ணிறந்தோர் உளராக , அன்னாருள் ஒருவரேனும்  அடியார் ஆதற்குத் தகுதியுடையார் அல்லரோ என்பார், “பேயனேன் அன்றி மற்றோர் அடியார்தாம் இல்லையே” என்றார்.  “இல்லையே”என்புழி, வினாப்பொருட்டாகிய  ஏகாரம் எதிர்மறைப் பொருளை உணர்த்தி நின்றது .

            பக்குவ முதிர்ந்த அடியார் எத்துணையோ தவங்கிடப்ப , அன்னாரை விட்டு , ஒரு சிறிதும் தகுதியில்லாத என்னை , யான் அன்பன் என்று சொல்லத் தொடங்கிய அளவில்  ஆட்கொண்டருளிய இவ்வருட் செயல்  நின் பெருமைக்குணத்தைப் புலப்படுத்தி நிற்பதென்பார் , “ இதுதான் நின் பெருமை யன்றே” என்றார். பெருமை, செயற்கரிய செய்தலாகும் . ஈண்டு , அருஞ்செயல் யாதெனின் , பேயனைய தம்மைப் பிறப்பறுக்க ஆண்டது என்பது அடிகள் கருத்துப் போலும் . இங்ஙனம் ஆட்கொண்டு பேருதவி புரிந்த எங்கள் தலைவனாகிய நின்னைக் குறித்து , மன மொழிகளுக்கு அடங்காத நின் பெருமைக் குணங்களை  எவ்வாறு புகழ்ந்து பாராட்டக் கடவேன் , “எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே” என்றார். எம்பெருமான் என்புழி, இரண்டன் உருபு செய்யுள் விகாரத்தால் தொக்கது.

         இதன்கண், இறைவன் யாவர்க்கும்  தலைவனாகிய  மறைமுதல்வன் எனக்  கூறியதும் , “என் சொல்லிப் பேசுகேன் “ என அப்பெருமான் இயல்பு , மன மொழிகளால் வரையறுக்கப்படாத தொன்று  என்றதும் , பதிகம் நுதலிய  பொருளாகிய  சுட்டறுத்தலைப் புலப்படுப்பனவாம்  .                                                   

பாடல் : 24 .

பேசிற்றாம்  ஈசனே  யெந்தா  யெந்தை

பெருமானே  யென்றென்றே  பேசிப் பேசிப்

பூசிற்றாம்   திருநீறே  நிறையப் பூசிப்

போற்றியெம்  பெருமானே  யென்று  பின்றா

நேசத்தாற்  பிறப்பிறப்பைக்  கடந்தார்  தம்மை

ஆண்டானே  அவாவெள்ளக்  கள்வ  னேனை

மாசற்ற  மணிக்குன்றே  யெந்தாய்  அந்தோ

என்னை நீ  ஆட்கொண்ட  வண்ணந்  தானே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவனை நோக்கி ,” யான்  நின் அன்பன் “ என்று  சொல்லிய  அளவில் , என்னை  ஆட்கொண்டு  அருளிய நின் பெருமை இருந்தவாறு  என்னே?  என வியந்து கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில்  உரையளவில் , “ நான் நின் அன்பன்” என்றேனே  அன்றி , உள்ளத்தளவில் வெள்ளத்தனைய  அவாப் பெருக்கையுடைய கள்வனாவேன் எனவும், அஃதறிந்தும் , என்னை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னே எனவும் கூறி , மேலும் வியப்புறுகின்றார்  .

பதவுரை :-   மாசு அற்ற  மணிக்குன்றே  =  குற்றம் அற்ற மாணிக்க  மலையே ,

எந்தாய்  =  என் தந்தையே ,

தாம் பேசின்  = தாம் பேசப்புகின் ,

ஈசனே  எந்தாய்  எந்தை பெருமானே  =  பரமேச்சுரனே ; எங்கள் தந்தையே;  எங்கள்  தந்தைக்கும்  தலைவனே ,

என்று  என்றே  பேசிப் பேசி  =   என்றே  பலகாலும்  சொல்லியும் ,

பூசின்  =  பூசப்புகின் ,

எம்பெருமானே  போற்றி என்று  =  எங்கள்  தலைவனே  காத்தருள்க  என்று  கூறி ,

திருநீறே  நிறையப் பூசி  =  திருநீற்றையே  குறைவறப்  பூசியும் ,

பின்றா  நேசத்தால்  =  பிறழாத  மெய்யன்பினால் ,

பிறப்பு  இறப்பைக்  கடந்தார்  தம்மை  ஆண்டானே  =  பிறத்தலையும்  இறத்தலையும்  ஒழித்த மெய்யன்பரை  ஆட்கொண்டருளியவனே  ,

அந்தோ  =  அந்தோ ,

அவாவெள்ளக்  கள்வனேனை  =  வெள்ளத்தனைய  அவாப் பெருக்கினை  யுடைய  கள்வனாகிய  என்னையும் ,

நீ  ஆட்கொண்டவண்ணம்  என்னை  =  நீ  ஆட்கொண்டருளிய  தன்மை  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-   மாசு  –   வேற்று ஒளியான் அன்றி விளங்காமை .உலகத்தில் இரத்தினக் குற்றங்களுள்  யாதும்  இன்றி  ஒளிமிக்க  எத்துணை உயர்ந்த மாணிக்கம்  ஆயினும் , ஞாயிற்றின்  கதிர்  முதலிய  பிற  ஒளிகளால் ஒளி காலுமேயன்றித்  தானே ஒளி செய்யாமை அறிகின்றோம் . செம்மேனி  யெம்மானாகிய  இறைவன்  திருவுருவம் பேரொளிப்  பிழம்பாக நின்று  , மற்றை ஒளி  மண்டிலங்களுக்கு ஒளி அளிப்பதன்றி , அம் மண்டிலங்களின் ஒளியைத் தான் பெறுவதன்று .  இவ்வுண்மையை ,

நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப வெங்கும்

பாயிரு  ளாகி  மூடப்  பரிந்துல   கினுக்கு  நெற்றித்

தூயநேத்  திரத்தி  னாலே  சுடரொளி  கொடுத்த பண்பிற்

றேயமா  ரொளிக  ளெல்லாஞ்  சிவனுருத்  தேச  தென்னார்

என்னும் சிவஞான சித்தியின் விளக்கத்தானும் அறிக. இறைவனை மணிக்குன்றாகக் கூறியதன் கருத்து. “ ஆடகச் சீர் மணிக்குன்றே “ என்புழி , விளக்கப்பட்டுள்ளது . ஆண்டுக்  காண்க.

          உலகத்திற்கெல்லாம் ஒளி விளக்கம் செய்யும் இறைவன் தமக்குச் செய்த பேருதவியை நினைந்து , அப் பெருமானைப் பொதுமை யினின்றும் அன்பு மேலீட்டால் சிறப்பு முறையிற் கொண்டு , “எந்தாய்” என்றார். இனி  பிறப்பு  இறப்பைக் கடந்தவர்களாகிய மெய்யன்பர்களின் இயல்பை விளக்குகின்றார். “தாம்” என்பது பிறப்பு இறப்பைக் கடந்த அடியாரைக் குறிக்கும் . அடியார்  பேசத்தொடங்கின் , “ஈசனே” என்பது முதலிய இறைவன் திருப்பெயர்களையும்  பெருமைகளையுமே  பேசுவர் அல்லது , வேறு ஒன்றையும் பேசார் என்பது உணர்ந்து , “பேசிற்றாம் ஈசனே எந்தாயெந்தை பெருமானே யென்றென்றே பேசிப் பேசி “ என்றார். “பிறந்து மொழி பயின்ற பின் எல்லாங்  காதல், சிறந்து நின் சேவடியே  சேர்ந்தேன் “ என்பது அம்மை திருவாக்கு . ஈசன் என்பது அமரர் , மக்கள் முதலிய எல்லோர்க்கும் தலைவன் என்பதை உணர்த்தும் . அங்ஙனம் பொதுவாகிய  பெருந்தலைவனே  தமக்குத் தந்தையாயினான் என்னும் உவகை மேம்பாட்டல் , “எந்தாய் “ என்று  கூறப்பட்டது .

                 உலகத்தில்  ஒருவனுக்குத் தந்தையாயினான் அவனை ஆட்கொள்ளும் தலைவனாகவும் இருக்க வேண்டும் என்னும் நியமம் இன்று, ஈண்டுத்  தமக்குத்  தந்தையாதலேயன்றி தம் தந்தைக்கும் தலைவன் ஆயினான் என்பது தோன்ற ,”எந்தை பெருமானே” என்று கூறப்பட்டது . “எந்தை பெருமானே” என்புழி , நான்கன் உருபும் எச்சவும்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றன . எந்தைக்கும் தலைவனே என்றது , வழிவழி அடிமையாகக் கொண்டு ஆள்பவன்  என்பதைக்  குறிப்பதாகும் . “ மூதாதை மாதாளும் பாகத்தெந்தை “ என்பதும் இக் கருத்துப் பற்றியதே . தந்தையின்  செல்வத்திற்குப்  புதல்வன் உரிமை உடையனாதல் போல் , இறைவனது பேரானந்தப் பெருஞ் செல்வத்திற்கு அன்பர் உரிமை உடையராதல் பற்றி , இறைவன் தந்தையாகவும் , அடிமையாகக் கொண்டு பணி புரிவித்துக்கொள்ளும்  தலைவனைப் போல நன்நெறிப்படுத்துத் திருத் தொண்டில்  ஈடுபடச்செய்தலின் பெருமான்  ஆகவும் ,அரசனைப்  போலிருந்து பொதுவாட்சி  முகமாகப்  பாதுகாத்தலின் ஈசனாகவும் , மெய்யன்பர்  பேசுவாராயினர் என்பது கருத்து. “என்றென்றே பேசி” என்றதனால் ,இங்ஙனம் இறைவனைப் பற்றியே பலகாலும்  பேசுவார் என்பது பெறப்படும் . ஏகாரம் தேற்றம் . அன்பர்களின் மன மொழி மெய்கள் இறைவன்பால்  ஈடுபடு முறையில்  இது , மொழியின் ஈடுபாடாகும் .

            இனி, அன்பர்  தம்  உடலிற் பூசப்புகுவாராயின் , திருநீற்றையன்றி வேறு  எதனையும்  பூசார்  என்பது தோன்ற ,” திருநீறே “ எனப்பட்டது. ஈண்டு , ஏகாரம்  பிரிநிலைப் பொருட்டு . இதனால் திருநீறு அல்லாத நறுமணக் கலவைகள் எத்துணை உயர்ந்தவை  ஆயினும் விரும்பார் என்பது போதரும் . திருநீற்றைப்பூசுங்காலும் , விருப்பம் இன்றிச் சிறிதலவு எடுத்து இடுவாரோ எனின் , அங்ஙனம் செய்யாது , பூசுதற்குரிய உடல் உறுப்பு முழுவதிலும்  மிக்க  மகிழ்ச்சியோடு பூசுவார்  என்பது ,போதர , “நிறையப்  பூசி “ என்றார். ஈண்டுத்  திருநீறு  என்பது  இனம்  பற்றி உருத்திராக்கத்தையும்  உணர்த்துவதாகும் . ஆகவே, திருநீறும்  கண்மணியுமே , முறையே அன்பர்கள் பூசுதற்கும் , புனைதற்கும்  உரியனவாம் என்பது  தெளிவாம் .  

  மீண்டும் எம்பெருமானே காத்தருள்க என்னும் பொருள் தோன்ற , “போற்றி  யெம் பெருமானே “ என்ற மொழிப் பணியாகக் கூறியது , திருநீறு  பூசுங்கால் செய்யும் வேண்டுகோளைப் புலப்படுத்துவதாகும் .  “எம்பெருமானே போற்றி” என்பதில், போற்றி என்பது வணக்கத்தைக்  குறிப்பதாகக்  கொண்டு , “சிவாய நம” என்னும் திருவைந்தெழுத்தின் விளக்கமாகக்  கொள்ளுதலும்  பொருந்தும் . “சிவாய  நம” என்பது சிவனுக்கு வணக்கம் என்னும் பொருள் உடையதாகும் .அப் பொருளே , “எம்பெருமானே போற்றி” என்னும் தொடரிலும் புலப்படுதல் அறியலாம் . இதனால்  திருவைந்தெழுத்தை ஓதி , திறுநீறு  பூசல் வேண்டும் என்னும்  விதிமுறை புலனாதலும் உணரத்தக்கது. போற்றி யெம்பெருமானே  யென்று  நிறையப் பூசி  என முடிக்க.

    பின்றுதல்  –  பிறழ்தல் : பிற்படுதலுமாம் .  ஆகவே , உண்மைஅடியார்களின் அன்பு , பிறழ்ச்சி  அடையாத  நிலையில் உள்ளது. ; அல்லது எதற்கும் பிற்படாதது என்பதாம் . எத்துணை இடையூறு நேரினும் , இயல்பின்  மாறுதல் அவ்வன்பிற்கு இன்று  என்பதைப் புலப்படுக்க. “பின்றா நேசம் “ எனப்பட்டது. இஃது உள்ளத்தின் ஈடுபாடு  . பேசிப்  பூசிப்  பின்றாத நேசத்தால் என முடிக்க. இங்ஙனம்  மனம் , மொழி , மெய்களின்  ஈடுபாட்டால் வீட்டு நிலைக்குத்  தகுதியுடையவராயினார் என்பது தோன்ற ,” பிறப் பிறப்பைக் கடந்தார் தம்மை  ஆண்டானே” என்பது எங்ஙனம் பொருந்தும் எனின், “அரசன்  முடிசூடினான் “ என்புழிப்போலப் பொருந்துமெனக் கொள்க . முடி  சூடிய பின்னன்றே அரசன் ஆதம் வேண்டும் . அரசன் ஆகியபின் முடிசூடுதல் இன்று. இதனால் குடிப்பிறப்பு , முதலியவற்றால் அரசன்  ஆதற்குத் தகுதியுடையான்  முடிசூடினான் என்பது  கருத்தாகக் கொள்ளல் வேண்டும் . அவ்வாறே , மன மொழி மெய்களின் தூய்மையால் , பிறப்பு இறப்பைக் கடத்தற்குத் தகுதியுடையாரை  ஆட்கொண்டருளினான் என்பதே கொள்ளத்தக்கது.  இறந்தவர் பிறத்தல் என்பது வீட்டு நிலையிற் செல்லாமையானும் , பிறந்தவர் இறத்தல் என்பது உறுதியாதலானும் ,பிறப் பிறப்பை என்புழிப் பிறப்பு  முதற்கூறப்பட்டது . “ அவாவென்ப எல்லா  உயிர்க்கும் எஞ்ஞான்றும் , தவாஅப்  பிறப்பீனும்  வித்து” என்னும்  பொருளுரைப்படி  , பிறவிக்கு  வித்தாகவுள்ள அவா ,வெள்ளத்து அனையதாயின் , அதனால்  உண்டாம்  பிறப்பு எல்லையற்றதாம் என்பது தெளிவாம் . வெள்ளத்தனைய அவாப் பெருக்கினை உள்ளத்தடக்கி , அவாவற்றவனைப்போல நடிக்கின்றேன் என்பார்,  “அவா வெள்ளக் கள்வனேனை” என்றார். அவாப் பெருக்குடையனா தலே  குற்றமாம் . அத்தகைய  அவாவைக்  கரந்து  நடித்தல் அதனினும் பெரிய குற்றமாம் என்பது கருத்து.  வெள்ளத்தனைய அவாவைக் கரத்தல் , சொல்லாலும் செயலாலும் நிகழ்வது  ஆதலின் , மன மொழி மெய்களின் தூய்மையின்மை பெறப்படும் . முக்கரணங்களும் தூய்மையுடையனவாய் நிகழப்பெற்ற  தகுதியுடைய மெய்யன்பரை  ஆட்கொள்ளும் இறைவன் , அம் மூன்றும் தூய்மையில்லனவாய் நிகழப்பெற்ற  தகுதியில்லாத தம்மை ஆட்கொண்டது என்னே  எனக்  காரணம்  அறியாது வியப்புறுவார் , “கள்வனேனை ஆட்கொண்ட வண்ணந்தான் என்னை” என்றார்.  “அந்தோ” என்பது வியப்பிற் பிறந்த இரக்கக் குறிப்பு . தான் இரண்டும் அசைநிலைகள் . ஏகாரம்  ஈற்றசை .

               இதன்கண், “ மாசற்ற  மணிக்குன்றே” என்பதனால் எல்லா ஒளி மண்டிலங்களுக்கும்  ஒளி உதவும் இறைவன் இயல்பு மெய்யுணர்வினால்  அன்றிச் சுட்டறிவுக்குப் புலனாகாமை பெறப்படுதலின் , “சுட்டறுத்தல் “ என்னும்  பதிகம் நுதலிய  பொருளும் ,மன மொழி மெய்களின் ஈடுபாடு  குறிக்கப்பட்டமையால் , பத்தி விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் புலப்படுக்கப்பட்டமை  அறிக .

                                             ******************************************

பாடல் :25 .

வண்ணந்தான்  சேயதன்று  வெளிதே  யன்ற

னேகஏகன்  அணுஅணுவில்  இறந்தா யென்றங்

கெண்ணந்தான்  தடுமாறி   யிமையோர்  கூட்டம்

எய்துமா  றறியாத  எந்தாய்  உன்றன்

வண்ணந்தான்  அதுகாட்டி  வடிவு  காட்டி

மலர்க்கழல்கள்  அவைகாட்டி  வழியற்  றேனைத்

திண்ணந்தான் பிறவாமற்   காத்தாட்  கொண்டாய்

எம்பெருமான் என் சொல்லிச்  சிந்திக்  கேனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் போலி அன்பை உனர்ந்தும் , இறைவன் தம்மை ஆட்கொண்டருளிய வண்ணந்தான் என்னே என வியந்த அடிகள் , இத் திருப்பாட்டில் அப் பெருமான் தன் வண்ணம் வடிவு முதலியவற்றைப்  புண்ணியப்பயன் நுகர்ச்சியிலே தலைப்பட்டுள்ள இமையவரும்  அறியாவாறு மயங்க வைத்து , அவாப் பெருக்கில்  அமிழ்ந்திக் கிடக்கும்  தமக்குக் காட்சியளித்து ஆட்கொண்ட அருட்டிறத்தை  எவ்வாறு நினைந்து பாராட்டுவேன் எனத்  தம் ஆராமையைப் புலப்படுத்துகின்றார்.

பதவுரை :-  எம் பெருமான்  =  எங்கள் தலைவனே ,

இமையோர் கூட்டம்  =  அமரர் குழு ,

உன் வண்ணம் தான் சேயது அன்று  =  உன் நிறம் செம்மையானது அன்று,

வெளிது அன்று  =  வெண்மையானது அன்று ,

அனேகன் ஏகன் அணு அணுவில் இறந்தய்  என்று   =  நீயே  பல உயிரும் ஆவாய் தனி முதல்வன் ஆவாய் அணுருவும்  ஆவாய்  அணுவினுங்கடந்த  நுண்ணியை  யென்று இங்ஙனம் பலவாறு  கூறி ,

அங்கு எண்ணம்தான் தடுமாறி  –  ஆண்டு நினைவு மயங்கி ,

எய்தும்  ஆறு  அறியாத எந்தாய்  = நின்னையடையும்  நெறியினின்று  அறியப்படாத  என் தந்தையே ,

உன் தன் வண்ணம்  காட்டி  வடிவு  காட்டி  மலர்க் கழல்கள்                       அவை  காட்டி  =   உன்னுடைய  உண்மையான  நிறத்தையும் , திருவுருவத்தையும்  தாமரை மலர் போன்ற  திருவடிகளையும்  உள்ளவாறு யான்  காணுமாறு  அருள் செய்து ,

வழி அற்றேனை  =  நெறியறியாது  மயங்கும்  அடியேனை ,

திண்ணம்  தான்  பிறவாமல்  காத்து  ஆட்கொண்டாய்  =   உறுதியாக   இனிப்  பிறவி  நேராமல்  காப்பாற்றி  ஆளாகக்  கொண்டனை ,

என் சொல்லிச் சிந்திக்கேன்  =  அத்தகைய  நின்னை  எங்ஙனம்  பாராட்டி  நினைவு  கூரக்கடவேன்  என்பது .

விளக்கவுரை :-  பேரொளிப்  பிழம்பாகவுள்ள  இறைவன்  திருமேனியின் வண்ணம்  , ஞான  நாட்டம் பெற்றோர்க்கு அன்றி , இமையா  நாட்டம்   பெற்றோர்க்கும் காண்டற்கு அரிதாம்  என்பார்  . “இமையோர் கூட்டம் “  என்றார்.  கூட்டம்  என்றதனால்  , ஒருவர்  அறிந்தபடி  மற்றோருவர் அறியாமல்  பலரும்  பலவகையாகக்  கருதினர் என்பது புலனாம் . இறைவன்  இயல்பை  மறை முதலிய  நூல்களான்   ஆராய்ந்து  அறியப்  புகுந்த  தேவர்கள் , பருமையில் தொடங்கி நுண்மையில் செல்ல முற்பட்டு  , முதலில்  நிறம்  இன்னது  எனத்  துணியத்  தலைப்படுவாராயினர் . “சேயதன்று “ என்றதனால்  வெண்மையா  மென்பதும் ,”வெளிதன்று” என்றதனால்  செம்மையா மென்பதும்  போதரும் . “வெண்ணீறு  சண்ணித்த  மேனி” என்றபடி , திருமேனியிற்  பூசப்பட்ட  திரு வெண்ணீறு  குறித்து ,” வண்ணந்தான்  சேயதன்று  “ எனப்பட்டது . அன்மைச்  சொல்லால்  வெண்மை நிறம்  என்று  பெறப்பட  வைத்தது .  “செம்மேனி யெம்மான்” என்று  மறை  நவின்றது பற்றியாம் .  வண்ணன்  தீவண்ணன்  எம் மிறை” என்று  கேட்க்கப்பட்டமையால்   செம்மை நிறம் எனக் கருதி இருந்தார்க்கு  , நீற்றுப்  பூச்சினால்  வெண்மை  நிறம்  கூறப்படுதல்  பற்றி  , “ சேயதன்று”  எனவும் , அவ்வெண்மை  ,நீற்றுப் பூச்சாகிய   செயற்கையாற்  காணப்படுவதன்றி  , இயற்கையிற்  செம்மையாம்  எனக் கொண்டு  , “வெளிதன்று” எனவும்  கருதுவாராயினர்  என்பது.

             பின்னர் , நிறத்தைப்பற்றிய   ஆராய்ச்சியைவிட்டுத்  தத்துவ  ஆராய்ச்சியில்  தலைப்பட்டு , “அநேகன் , ஏகன் “  என்பன  முதலியவாகக்  கருதுவாராயினராம் . உயிர்கள் பலவாக  இருத்தலின் , அப் பல்லுயிர்களும்  அவனேயாம் எனக் கொண்டு , “அநேகன்” ஆவான்  என்று  கருதின ரென்பது , அங்ஙனம்  கருதுங்கால் , அப்பல்லுயிரும்  வினைப்பகுதிகளுக்கு  ஏற்பப்  பிறந்து  இறந்து  இன்பதுன்பங்களில் ஈடுபடுதலானும்  , இறைவனுக்கு  அவை இன்மையானும்  ,அநேகன்  அல்லன், ஏகனேயாம் எனக்  கருதினாராம் . ஏகன் என்றதனால் ,ஒப்பாரும்  மிக்காரும்  இல்லாத  தனி முதல்வன் என்பதும் , அகண்ட  வடிவினன் என்பதும் பெறப்படும் . பருப்பொருள்கள் எல்லாவற்றிற்கும்  பருப்பொருளாகவுள்ள அப் பெருமானே நுண்பொருள்கள் எல்லாவற்றிற்கும் நுண்ணியனாகவும்  உள்ளவன் என்று  மறைகள்  கூறுதலின்  , “ அணு” எனவும் , “அணுவில் இறந்தாய் “ எனவும்  கூறப்பட்டன . “பரியர் நுண்ணியர்  பார்த்தற்கரியவர் “ என்று தமிழ்  மறை  கூறுதலும்  அறிக.  அளவின் மிக்க  பருமையும்  , அளவின் மிக்க  நுண்மையும்  மக்களாற்  காண்டற்கு  அரியன என்பது பற்றி  ஈண்டு ,”பார்த்தற்கரியவர்” என்று  கூறப்பட்டது. இறைவன் பரியனாக இருக்குங்கால் , அப் பருமை  வடிவில் அடங்கிய   அப் பெருமான் உயர் குணங்கள் எல்லாம் , அணுவினுங் கடந்த அவனது நுண்ணிய  வடிவினும்  அடங்கியிருக்கும் என்பதை , “நுண்ணியை எனினும்  நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்தென் ,கண்ணிணுண் மணியிற் கரந்தனை”  என்னும் திருவிசைப்பாப்  பாடற்  பகுதியானும்  உணரலாம் .  அங்கு  –  அவ்வாராய்ச்சியில் ; மறை , ஆகமம்  முதலிய  நூல்களின் ஆராய்ச்சியிற்  பல  தலையாய  உணர்வு  ஏற்பட்டமையால் , இறைவன்  இயல்பு  துணியப்பட்டிலது  என்பார் , “எண்ணந்தடுமாறி” என்றார். மாற்ற  மனங்கழிய  நின்றவன் ஆதலால் எண்ணந்தடுமாறுதல் இயல்பே. அநுபவ  அறிவினால் அன்றி , நூலறிவு  எத்துணை  நுண்ணிதாயினும் , அதனால் அறியப்பட்டான் என்பதை , “நூலே  நுழைவரியான் “ என்று  அடிகளும் , “நூலறிவு  பேசி நுழைவிலாதார்  திரிக” என்று  அம்மையும்  கூறியவாற்றான் அறியலாம் . இமையவர்க்கு  இங்ஙனம்  உளத் தடுமாற்றம் ஏற்பட்டமையால் , இறைவனை உள்ளவாறு  அடைதற்கு  உரிய  நெறி  நின்று  அறிந்து கோடல் இயலாததாயிற்று  என்பது கருதி , “எய்தும்  ஆறறியாத  எந்தாய் “ என்றார். ஆறு  அறியாத  என்புழி , ஆற்றினின்றும் என ஐந்தனுருபை   விரித்துக்கொள்ளல்  வேண்டும்  . எய்தும் நெறியையும் , அந் நெறி  நின்று  இறைவனையும்  அறிந்தில ரென்பது கருத்து. “அறியாத  “ என்னும்  செயப்பாட்டுப் பெயரெச்சவினை , “எந்தாய்” என்னும்  செயப்படுபொருளைக்  கொண்டு  முடிந்தது. “உன்” என்பது இடைநிலை  விளக்காக  நின்று  மேலுங் கூறப்பட்டது.

            புண்ணியப் பயனையே  நுகருந்  தேவர்கள் நூலறிவு கொண்டு  நுணுகி ஆராய்ந்தும்  , திருவருட்  பேரின்மையால் நெறியறியாது மயங்கி நிற்ப , அவர்க்குக் காட்சிப்படாத வண்ண முதலியவற்றைத்  தமக்குக் காட்டியருளிய முறையைக் குறிப்பிடுவாராய் , “வண்ணம் அது காட்டி வடிவு காட்டி  மலர்க் கழல்கள் அவை காட்டி “ என்றார் . ஈண்டு அது அவை என்பன பண்டறி சுட்டாக  நின்று , நூல்களின் முகமாக  முன்னர் அறியப்பட்டமையைக் குறிப்பனவாம் . அது என்பதை வடிவோடும்  இயைக்க  . காட்டி  என்றது  , அநுபவ  அறிவிற்  புலனாம்படி  காட்சி  அளித்து என்னும் பொருட்டு . ஒருவனைச்  சேய்மையினின்று  காணுங்கால் , முதலில் அவன் வடிவும் , அணுக  அணுகப் பின்னர் அவன் உறுப்புக்களும் , நிறமும் , முறையே காணப்படுவனவாம் . இது மக்கட் காட்சி , கடவுட்  காட்சியில் இறைவன் ஒளி வடிவினன் ஆதலின் , முதலில் நிறமும் ஒளியும் , அணுக அணுகப் பின்னர்  வடிவமும் முறையே காணப்படுதல் இயல்பு  ஆதலின் , அம்முறையாற் காட்சிப்பட்டு அநுபவித்ததை , இங்ஙனம் அருளிச் செய்வாராயினர் . இறைவன் ஞானாசிரியனாகக் குருந்த  மரத்தடியில் எழுந்தருளி யிருக்குங்கால் , அடிகள் முதலிய  அப் பெருமான் திருமேனியின் நிற வொளியில்   ஈடுபட்டு  , அணுகிக்  குருவுருவத்தையும் , பின்னர் தம் வணக்கத்திற்குரிய  திருவடிகளையும் கண்டு  இன்புற்ற  அநுபவ  உண்மையை இவ்வாறு  புலப்படுத்துள்ளார் என்பது அறிக . தேவர் தாம்  வண்ண  முதலியவற்றை அநுபவவுணர்விற்  கண்டு துணிதற்கு நெறி அறியாமை தடையாயின் , அத்தடையே எனக்கும் உளதாயிற்று  என்பார் , “வழியற்றேனை “ என்றார் . அங்ஙனம் நெறியறியாத என்னை  மீண்டும்  பிறவாமல்  உறுதியாக  ஆட்கொண்டு  காப்பாற்றி அருளினை என்பார் , “திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் “ என்றார் . இறைவன் திருவடிக் காட்சி சிவ புண்ணியமாக நின்று , இந்திரன்  முதலிய  இறையவர் பதங்களை  அருளுதலும் உண்டு . அந் நிலையிற்  காத்தல் , பிறவியைக்  கொடுத்துக் காப்பாற்றியதாகும் . இன்னோரன்ன  பதங்களைப் பெற்றார்  மீண்டும்  பிறத்தல் கூடும் . அங்ஙனம்  இன்றித்  தமக்கு  எவ்வாற்றானும்  பிறவாமற் காத்தது உறுதி என்பார் , திண்ணந்தான்” என்றார்.  ஆட்கொண்டு பிறவாமற் காத்தாய் என மாற்றிக் கொள்ளுதலும்  ஆம் ; ஆட்கொண்ட பின்னரே பிறவியொழிக்கப்படுதலின்  , சிந்தித்துப்  பேசுதல் , மனம் தன் வயப்பட்டிருக்குங்கால்  நிகழ்வது. ஈண்டுத்  தகுதியில்லாத நிலையில் தம்மை  ஆட்கொண்டதாக  எண்ணி , அடிகள் உள்ளம் தன்வயம் இழத்ததாதலின் ,அந் நிலையில் அன்பு மேலீட்டால் மனத்தில் தட்டாமல் முதலிற் பேச்சு  நிகழத் தலைப்பட்டனவாக  , அப் பேச்சின் நின்றும் சிந்தனைக்குச்  செல்வராய் , “என் சொல்லிச் சிந்திக்கேனே” என்றார். தான் , ஏ  என்பன  அசைகள் .  

        இதன்கண்,  நூலாராய்ச்சியாற்  சுட்டியுணர   முற்பட்ட  தேவர்க்கு , எண்ணந் தடுமாறி , அறியப்படாத இறைவன் வண்ண  முதலியன , அடிகளின் மெய்யுணர்விற்கு அநுபவ நிலையிற் புலனாயின  என்று  கூறப்பட்டமையான்  சுட்டறுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய  பொருள்  தோன்றுதல்  காண்க.

                                                **********************************

பாடல் :26 .

சிந்தனைநின்  தனக்காக்கி  நாயினேன்றன்

கண்ணிணைநின்  திருப்பாதப்  போதுக்  காக்கி

வந்தனையும்  அம்மலர்க்கே  யாக்கி  வாக்குன்

மணிவார்த்தைக்  காக்கியைம்  புலன்கள் ஆர

வந்தனையாட்  கொண்டுள்ளே  புகுந்த விச்சை

மால்அமுதப்  பெருங்கடலே   மலையே  யுன்னைத்

தந்தனைசெந்  தாமரைக்கா  டனைய  மேனித்

தனிச்சுடரே  யிரண்டுமிலித்   தனிய  னேற்கே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவன் தன் வண்ணம் வடிவு முதலியவற்றைத்  தமக்குப்  புலனாம்படி காட்டிய அருள் திறத்தில் ஈடுபட்டுக்  கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் தம் ஐம்புலன்களும்  ஆரத்  துய்க்கும் வண்ணம் தன்னையே வழங்கிய தனிப்பெருங்கருணையை வெளிப்பட அருளிச் செய்கின்றார் .

பதவுரை :-  வந்தனை  ஆட்கொண்டு  உள்ளே புகுந்த விச்சை  =  வலிய  வந்து  அடியேனை ஆளாகக் கொண்டு என் உள்ளே புகுந்தருளிய  வித்தையினையுடைய ,

மால் அமுதப் பெருங்கடலே  =  யாவரானும்  விரும்பத்தக்க  அமிழ்தப் பெருங்கடலே ,

மலையே  =  மலை  போன்றவனே ,

செந்தாமரைக்காடு  அனைய மேனி  =  செம்மையாகிய தாமரை மலர் வனம்  போன்ற திருமேனியையுடைய  ,

தனிச்சுடரே  =  ஒப்பற்ற ஒளி விளக்கே ,

நாயினேன் தன் சிந்தனை நின் தனக்கு  ஆக்கி  =  நாயினேனுடைய  நினைவெல்லாவற்றையும்  உன் பொருட்டு  நிகழ்வித்து ,

கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி  =  என் இருகண்களையும் நின் திருவடி  மலர்களுக்கு  உரிமையாக்கி ,

வந்தனையும்  அம்மலர்க்கே  ஆக்கி  =  வணக்கத்தையும்  அத் திருவடி மலர்களுக்கே  நிகழச் செய்து ,

வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி  =  வாயை  உன்னைப்பற்றிய  மணி மொழிகளுக்கு  உரிமையாக்கி ,

இரண்டும்  இல்  இத்  தனியனேற்கு  =  நூலறியும் , அநுபவ உணர்வும் இல்லாத  துணையற்ற  இவ்  வேழையேனுக்கு  ,

ஐம்புலங்கள் ஆர  உன்னைத்  தந்தனை  =  ஐம்புலங்களும்  நுகர்ந்து இன்புற  உன்னையே  தந்து அருளினாய் ( நின் அருட் பெருக்கை என் என்பேன்)  என்பது .

விளக்கவுரை :-வந்தனை புகுந்த என்புழி , வந்தனை என்பது  எச்சம் முற்றாக நின்று திரிந்த தென்னும்  கருத்தால் “ வினையெஞ்சு  கிளவியும் வேறுபல் குறிய “ என்னும் சூத்திர விதியில் அடங்கி , முற்றுத்திரிசொல் என்பர் சேனாவரையர் ,”வினைமுற்றே வினையெச்சமாகவும் “ என்றுவிதி கூறி , முற்று எச்சமாக  நின்றது என்பர் நன்னூலார் . இறைவன் ஞானாசிரியன் உருக்கொண்டு , வலிய வந்து தம்மை  ஆட்கொண்டு அருளியதை நின்னைந்து , “வந்தனை  ஆட்கொண்டு “ என்றார். “பந்தமறும் எல்லையது பார்த்தினி திருந்தார் “ என்பது வாதவூரடிகள் புராணம் . கட்டறுத்து ஆட்கொண்ட பின்னரேஅடிகளின் உள்ளத்தே இறைவன் புகுந்தானாம் . உட்புகுந்த செய்தி , “நூலே நுழைவரியான் நுண்ணியனாய்  வந்தடியேன் , பாலே புகுந்து பரிந்துருக்கும் பாவகத்தால்” என்பது முதலிய பல திருப்பாடல்களினும் காணலாம். புகுந்தன் உண்மை மேலே விளக்கப்பட்டது, கடலாகவும்  மலையாகவும்  காடாகவும்  ஒப்புக் கூறப்பட்ட  இறைவன்  தன் பருவுருவை  நுண்ணிதாக்கித்  தம்முட் புகுந்து, ஒரு மாய  வித்தை  என்பார், “புகுந்த  விச்சை”  என்றார். விச்சை  –  வித்தை ; வியக்கத்தக்க செயல் .

             மால் – அவா. கண்டாற்கு அச்சத்தை விளைவித்தல் . கடைந்தெடுக்கும் உழைப்பிற்குத்  தக நஞ்சத்துடன் சிறிது அமிழ்தத்தை யளித்தல் , ஊழின் இறுதியில் ஒடுங்கிச் சுருங்குதல் , இவையெல்லாம் பெளதிகக் கடலுக்கு உள்ளன. இச்செயல்களுக்கு  மாறாக , மெய்யன்பினால் கண்டாற்கு  மேன்மேலும் விருப்பத்தை விளைத்தல் , முற்றும் அமிழ்த மயமாதல் , எக் காலத்தும் சுருங்காமல் ஒரேபடியாக நிறைந்திருத்தல் என்னும் இவ்வியல்புகள் இறைவனுக்கு உள்ளமையால், “மால் அமுதப்  பெருங்கடலே” என்றார். கருணையை நீர்ப்பெருக்காகக் கொண்டு , அதற்கு இடனாதல் பற்றி, இறைவன் கடல் என்னப்பட்டான் . “பரங்கருணைத் தடங்கடலை “ என்பதும் ஈண்டு  நினைக்கத்தக்கது . கடலுக்குச் சலித்தல் உண்மையானும் ,இறைவன் சலிப்பறியாத் தன்மையன் ஆதலானும் , அவ்வியல்பை விளக்குதற்கு , “மலையே” என்று  கூறினர் . இறைவனுடைய திருமுகம் , கண் , வாய், கை , கால்  முதலிய  உறுப்புக்களுக்கெல்லாம்  செந்தாமரை  மலர் ஒப்புக்  கூறப்பட்டமையால் , “செந்தாமரை காடனைய மேனி” என்றார். கடல் நெய்தலையும்  , மலை  குறிஞ்சியையும் , தாமரை  மருதத்தையும் , காடு  முல்லையையும்  உணர்த்தலின் , காணப்படும்  நானில வடிவமும்  இறைவன் திருமேனியையே நினைவுறுத்தும் என்பது  புலப்படுக்கப்பட்டபடியாம் .

காலையே போன்றிலங்  கும் மேனி  கடும்பகலின்

வேலையே  போன்றிலங்கும்  வெண்ணீறு  –  மாலையின்

தாங்குருவே  போலுஞ்  சடைக்கற்றை  மற்றவர்க்கு

வீங்கிருளே  போலு  மிடறு “

என்புழி, கால  வகைகள் இவ்வாறு  நினைவுறுத்தும் என்ற அம்மை அருளியது  போலவெனக் கொள்க. முதல் கரு , உரி என்னும் மூவகைப்  பொருள்களுள் , முதற் பொருள் நிலமும் பொழுதும் ஆகும் . ஆகவே ஈண்டு நில உருவமாக அடிகளும் , ஆண்டுப் பொழுது வடிவமாக அம்மையும் கூறியது அறிந்து இன்புறத்தக்கது .

               பிற பொருள்களை அநுபவித்தற்கு  உதவியாதலோடு , தன்னையே  அநுபவித்தற்கும் தருதல் பற்றி , “தனிச் சுடரே” என்றார் . ஒரு விளக்குப் பிற  பொருளைக் காண்டற்கு உதவி புரியுமேயன்றித்  தன்னைத் தொட்டாற் சுடும் என்பது ஈண்டு  நினைக்கத்தக்கது . இனித் தம் மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களையும் இறைவன் தனக்குரிமை யாக்கிக்  கொண்ட செய்தியை அடிகள் அருளிச்செய்கின்றார். எண்ணம்  இல்  வழி  நிகழும்  செயலும்   மொழியும் சிறந்த பயனை விளையாவாதலின் , முதலில்  நினைவு  எல்லாம்  தன்னைப்  பற்றியே  நிகழுமாறு  உபகரித்ததைப் புலப்படுத்துவாராய்  , “சிந்தனை நின் தனக்காக்கி “ என்றார் . கண்  முதலியவற்றைக் குறித்துக் கூறுங்கால் ,திருவடி , உறுப்பு முதலியவற்றிற்கு ஆக்கி என்று  கூறியது போல் , சிந்தனையை  ஏதேசப்படுத்தாமல்  “நினக்கு” என  முழுதையும் புறித்து , இறைவன் திருவுருவத்தை  மனம் இடையறாது  தியானித்தல் வேண்டும் என்பதும் , அந் நினைவின் நின்றே  கண் முதலிய உறுப்புக்கள்  திருவடி முதலியவற்றைப் பற்றி நிற்றல் வேண்டும்  என்பதும் கருதியாம் . ஆக்குதற்கு வினை முதல் இறைவனாவான் . பின் வருவன வற்றிற்கும்  ஈது  ஒக்கும் .

            அன்பர் செய்யும் வழிபாட்டிற்கு  இரங்கி , அவர்க்கு  இறைவனே  தன்னை நினையத் தருதல் வேண்டுமென்பது  சைவ நூல்  துணிபு . “என்னை நினைந் தடிமை கொண்டேன்  இடர்கெடுத்துத் , தன்னை நினையத் தருகின்றான் “ என்னும்  சைவாசிரியர்  அநுபவ  உரையானும் அறிக. உடற்பணிகளுள் சிறந்தன கண்களால் காண்டலும் , கைகளால் தொழுது தலையால் வணங்கலுமாம் . தொழுதல் வணங்குதல் இரண்டும் வந்தனை என்னும் சொல்லற் பெறப்படும் . காண்டல் வந்தனை என்னும் இரண்டனுள் . முன்னதனைக் கருவியாற் பெற வைத்தார் ; காட்சி  “ஐம்புலங்களார “ என்பதனாலும் பெறப்படுதலின் . “ஐம்புலங்களார “ என்பதனாற் பெறப்படுவதை ஈண்டுங் கூறியது ஒரு நயம் பற்றி.  அஃது இன்னதென்பது பின்னர்  கூறப்படும் . இறைவன் திருவுருவம் முழுதும் காண்டற் குரியதாயினும் , திருத் தொண்டில் ஈடுபட்டவர்க்குத் திருவடிக்  காட்சியிலே கண்கள் ஈடுபடுதலும் ,வந்தனை அத் திருவடியைக்  குறித்தே செய்யப்படுவ தென்பதும் முறையாகும் . இம் மரபு வழாது இறைவன் உபகரித்த இயல்பை நினைந்து , “கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்காக்கி “ எனவும்,  “வந்தனையும்  அம்மலர்க்கே யாக்கி” எனவும்  கூறியருளினர் .

                    வாயில் நின்றும் பேச்சு வெளிப்படுமாயின் அப் பேச்செல்லாம் இறைவனுடைய புகழ் வடிவமாகவே  யாகும்படி  உபகரித்ததைக் கருதி ,  “வாக்குன் மணி வார்த்தைக் காக்கி “ என்றார். “ மாசில் மணியின் மணிவார்த்தை , பேசிப் பிறப்பறுத்தேன் “ என்பதும் அடிகள் திருவாக்கு . வார்த்தை ஈண்டுப்  புகழ்மொழி  என்னும் பொருட்டு , பொருள் ஒளிமிக்க புகழ் மொழியாதலின் , “மணிவார்த்தை” என்னப்பட்டது. மற்றைத் தேவர் மக்கள் முதலியோரைப்பற்றிய  புகழுரைகளெல்லாம்  பொருள் இல்லாதன என்பதும் , “இறைவன் பொருள் சேர் புகழ் “ என்னும் பொருளுரையானும் “இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரை உடையரெனக்  கருதி  அறிவிலார் கூறுகின்ற புகழுரைகள் பொருள்சேரா வாகலின் , அவை முற்றவுமுடைய இறைவன் புகழே பொருள்சேர் புகழ் எனப்பட்டது. “ என்னும் பரிமேலழகர் உரையானும் உணரத்தக்கன . இறைவன் பொருள்சேர் புகழ் சிறந்த மாணிக்கத்தைப் போலப் பொருள் ஒளி மிக்கு, அடிகள் திருவாக்கினின்று  வாசக  வடிவமாக வெளிப்பட்டது குறித்தே , அடிகள்  “மாணிக்கவாசகர் “ என்று அழைக்கப்பட்டனர்  போலும் .

                    கன்மேந்திரியம்  ஞானேந்திரியம்  இரண்டிற்கும் இடனாகிய  நா  ஈண்டுக்  கன்மேந்திரியமாக  கொண்டு  “வாக்கு” எனப்பட்டது. சிந்தனை முதல் வாக்கு வரை கூறப்பட்ட செய்திகளில் , இறைவன் திருவுருவத்தை நினைதலும் , காண்டலும் , தொழுது வணங்கலும் , புகழ்ந்து பாராட்டலும்  முறையே நிகழும் உண்மையும் , அந் நிகழ்ச்சிகளால்  கரணங்கள் மூன்றையும் இறைவன் தன்வயமாக்கிய செய்தியும் புலனாதல் அறிக. “இரண்டும்  இல் “ என்பதற்கு , நல்வினை  தீவினை  யில்லாத எனவும், இம்மை  மறுமை  இல்லாத எனவும்  கூறுவாரும் உளர் . அவையற்றநிலை , வீடு பெறுதற்குரியதாதலின் , அத் தகுதி தமக்குள்ளதென்று  அடிகள் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் இயல்பினர் அல்லர் என்பதையும் , தகுதியில்லாத நிலையில் ஆண்டவன் தம்மை ஆட்கொண்டனன்  என்பதே  ஈண்டு அடிகள் கருத்தாதலையும்  உணரின் , அக் கருத்துப் பொருத்தமாகாதென்பது புலனாம் , ஆகவே , அடிகள் “கற்றறியேன் கலைஞானங்  கசிந்துரு கேனாயிடினும்” என்று  பல இடங்களிலும் நூலறிவும் அநுபவ வுணர்வும்  இல்லாதவன்  எனத் தம்மைக்  கூறிக்கொள்ளுவராதலின், அவற்றையே இங்கே , “இரண்டு மில் “ என்பதனாற்  குறிப்பிட்டுள்ளார்  எனக்  கோடல் பொருத்தமாதல் அறிக. நூலறிவாகிய  அபர ஞானமும் , அநுபவ உணர்வாகிய பரஞானமும் இல்லாத நிலயில்  அருள்புரிந்த ஆண்டவன் அருள்திறமே  ஈண்டு  வியக்கத்தக்கதாயிற்று என்பது .

       “தனியன்” என்பது திருவருட்பேற்றிற்குரிய சாதனத் துணையற்றவன்  என்னும்  பொருட்டு .  இறைவனது பேரின்பப் பெருஞ்செல்வத்தை நுகர்தற்கு வாயில் மெய்யுணர்வேயன்றிப் புலங்களாகா. புலன்களால்  நுகரப்படுவன வெல்லாம் சடப் பொருள்களைப் பற்றினவே.  இவ்வுண்மையை , “பூண்ட  ஐம்புலனிற் புலப்படாவின்பம்  புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க “ என்னும்  தம்பிரான் தோழர் அநுபவத்தாலும் அறியலாம் . அங்ஙனமாகவும், இங்கே, “ஐம்புலங்களாரத்  தந்தனை” யென்றது . இறைவன் தமக்கு எளிமையில்  செய்த கருணையைக்  குறித்தாம் . ஆண்டவன்  அருட்கடலில் மூழ்கினார்க்கு , மெய்யுணர்விற்கு  நேர்படும் சிவபோகம் . இடையறாத புலனுகர்ச்சிக்கு  எளிவரும் உண்மையைத் தில்லக் கூத்தன்  தரிசனத்தில்  திருஞான சம்பந்தர் அநுபவத்தானும் உணரலாம்.   அவ்வநுபவ  நிலையை , “உணர்வின் நேர்பெறவருஞ் சிவபோகத்தை  யொழிவின்றி யுருவின்கண் , அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர வருளினை யெனப் போற்றி” என்று பெரிய புராணம் தெளிவுறுத்தமை  அறிக. ஐம்புலங்களும் நுகருமுறையை, “தலையே  நீ  வணங்காய் “ என்னும் தொடக்கத்துத்  திருவரங்க மாலையில்  அப்பர்  அருளிச் செய்தமையானும் அறியலாம்.  இனி, “ஐம்புலன்களார”  என்பதற்கு  ஐம்புலன்களும் உண்முகமாக நின்று அநுபவிக்க என்று பொருள்  கூறுதலுமாம் . இறைவனை உள்ளக்கமலத்து  எழுந்தருளிவித்து  புறப்பொறி வாயிலாக அன்றி, அகமுகமாகக்  கண்டு , கேட்டு , உண்டு , உயிர்த்து , உற்றறிதல்  ஆகிய அநுபவம்  சிவயோகிகளுக்கு உண்டென்ப, அடிகளின் ஐம்பொறிகளும் நுகர , இறைவன் அருளிய பொருள் பிறிதொன்று அன்று; தன்னையே  யென்பது குறித்து , ‘ஆரத் தந்தனை” என்றார் . “தந்துன் றன்னைக்  கொண்டதென்றன்னை”  எனப் பிறிதோரிடத்துக்  கூறியதும் காண்க. ஆக்கியென்னும் செய்தென் எச்சங்கள்  நான்கும் , ஆர என்னும் செயவென் எச்சமும் , தந்தனை  யென்னும் முன்னிலை வினையைக் கொண்டு முடிந்தன .  

              இதன்கண் , மன மொழி மெய்களைத் தன் வயப்படுமாறு  செய்து , ஐம்புலன்களும் , ஆரத் தன்னையே  வழங்கினான் என்று கூறியமையால் , இறைவன் சுட்டுணர்விற்குப் புலப்படும் இயல்பு பெறப்படுமாயினும் , அம் முறையிலும் , உணர்வினேர்  பெற  வருஞ்  சிவபோக  மாதலின் , புலங்களின் முகமாக  மெய்யுணர்வை அருளியே  நுகர்வித்தமை  புலனாதலின் , சுட்டறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றுதல் அறிக.  

                                            *******************************************\

பாடல் :27 .

தனியனேன் பெரும்பிறவிப்  பெளவத்  தெய்வத்

தடந்திரையால்  எற்றுண்டு  பற்றொன்  றின்றிக்

கனியைநேர்  துவர்வாயார்  என்னுங்  காலாற்

கலக்குண்டு  காமவான்  சுறவின்  வாய்ப்பட்

டினியென்னே  யுய்யுமா  றென்றென்  றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக்  கிடக்கின்  றேனை

முனைவனே  முதல்  அந்தம்  இல்லா  மல்லற்

கரைகாட்டி  யாட்கொண்டாய்  மூர்க்கனேற்கே.

கருத்துரை :-  மெய்யுணர்வினால் நுகரத்தக்க  சிவ போகத்தைத்  தம் ஐம்பொறி  அளவின் எளிதிற் பெற அருளிய  இறைவன்  கருணைத் திறத்தை  முன்னைத் திருப்பாட்டிற்  கூறிய அடிகள் , அங்ஙனம் இறைவன் அருளுதற்குத்  தாம் மேற்கொண்ட  சாதனம்  இன்னதென்பதையும் , அதனை  மேற்கொள்ளுங்கால்  தம் இயல்பு இருந்தவாறு  இங்ஙனம்  என்பதையும்  இத் திருப்பாட்டில்  அருளிச் செய்கின்றார்.

பதவுரை  :- முனைவனே  =  கடவுளே ,

தனியனேன்  =  யான்  உதவியற்றவனாய் ,

பிறவிப் பெரும் பெளவத்து  =  பிறவிப் பெருங்கடலில் (வீழ்ந்து) ,

எவ்வம் தடம் திரையால்  எற்றுண்டு  =  துன்பமாகிய  பெரிய  அலைகளால் அலைக்கப்பட்டு  ,

பற்று ஒன்று இன்றி  =  பற்றுக்கோடு  ஒன்றும்  இல்லாமல் ,

கனியை  நேர் துவர்  வாயார் என்னும்  காலால் கலக்குண்டு  = 

கொவ்வைப் பழத்தை ஒத்த சிவந்த வாயினையுடைய  மகளிர்  என்னும்  காற்றினால்  தடுமாற்றம் எய்தி ,

காமம்  வான்  சுறாவின்  வாய்ப்பட்டு  =  காமமாகிய  பெரிய  சுறாமீன்  வாயிற்  சிக்கி ,

இனி, உய்யும்  ஆறு  என்  என்று  என்று  எண்ணி  =  இந் நிலயில்  உய்தி பெரும்  நெறி என்னாம்  என்று  பல்கால்  நினைந்து ,

அஞ்சு எழுத்தின் புணை  பிடித்துக்  கிடக்கின்றேனை  =  திருவைந்தெழுத்தாகிய  தெப்பத்தைப் பற்றிக் கிடக்கின்றவனாகிய ,

மூர்க்கனேற்கு  =  மூடனாகிய  எனக்கு ,

முதல்  அந்தம்  இல்லா  மல்லல்கரை  காட்டி  ஆட்கொண்டாய்  =  தோற்றக்  கேடு  இல்லாத  வளமிக்க  முத்திக்  காரையைக்  காட்டி   ஆட்கொண்டு  அருளினை  (நின் அருட்பெருமை யென்னே)  என்பது .

விளக்கவுரை :-  முனைவன் என்னும் சொற் பற்றி  24 ஆம்  திருப்பாட்டில் விளக்கக்குறிப்புக்  கூறப்பட்டுள்ளது. கடலில் வீழ்வான் ஒருவனுக்கு அப்பொழுது உதவி புரியத் தக்கார்  யாரேனும் அருகில் இருப்பாராயின் , எவ்வழியானும் முயன்று  கரையேற்றவும் கூடும்.  வினைக்கீடாகப்  பிறவிக் கடலில்  வீழும் தமக்குத் துணைபுரிவார் ஒருவரும் இலர் என்னும் கருத்தால், “தனியனேன்” என்றார்.  தனிமை – உதவியற்ற நிலை . உயிர்க்கு உயிராக விளங்கும் இறைவன் துணையுளதே  எனின் , வினைக்கீடாக  மாயையினின்றும்   உடல் முதலியவற்றைக் கொடுத்துப் பிறப்பிற் செலுத்துவது,சிவசத்தியாதலின் , அது  கருதத்தக்கதன்று . ஈண்டுக்  குறித்தது பிறிதொரு துணையை என்க. உயிர்களைப் பிறவியிற் செலுத்தல் இறைவன் கருணைக்கு இழுக்கு ஆகாதோ எனின்,  பாச  நீக்கஞ் செய்து  வீட்டின்பப் பேற்றிற்கு  உரிமையாக்க வேண்டுமென்பதே இறைவன் திருவுள்ளமாதலின் இழுக்காகாது என்க .”பிறவிப்  பெளவம் “என்னாது , “பிறவிப் பெரும் பெளவம்” என்றது . பெளதிகமாகிய கடலினின்றும் பிறவிக் கடலுக்குள்ள  சிறப்பு நோக்கியென்க . என்னை சிறப்பு எனின் , “பிறவிப்பெருங்கடல் “ என்புழி, “காரண காரியத் தொடச்சியாகக் கரையின்றி வருதலிற் பிறவிப் பெருங் கடல் என்றார்” என்று பரிமேலழகர்  கூறியதே  சிறப்பென்க . காரண காரியத் தொடர்ச்சி பிறவிக்கு உண்டு . முன்னைப்  பிறப்புப்   பின்னைப் பிறப்பிற்குக்  காரணமாதலும் , இங்ஙனமே தொடர்ந்து வருதலுங் காண்க . கரையின்மை – வரம்பு இல்லாமை . உயிர்  வீட்டு  நிலை எய்துங்காறும்  பிறப்பு உண்மையின் அளவிலதாதல்  வருதல் – மேன் மேலும்  வந்து கொண்டிருத்தல் , இம் மூன்றும் பெளதிகக் கடலுக்கு  இல்லை; காரண  காரியத் தொடர்ச்சி இன்மையும் , கரை உண்மையும் , ஒரே  நிலையில் நிற்றலும்  , அதன்கட்  காணப்படுதலின். இதனாலே  பிறவிப் பெருங்கடல்  என்னப்பட்டதென்பது  கருத்து . வீழ்ந்தார் உய்தி  பெற்றுக் கரையேறுதல்  அருமை  கருதிப் பிறப்புக்  கடலாகக்  கூறப்பட்டது .

               தடந் திரையால்  எற்றுண்ணப்  படுதல் , வீழ்ந்தபின்  நிகழ்வதாகலின், “வீழ்ந்து”  என்பது  வருவித்துரைக்கப்பட்டது . கடலிற்  காணப்படும்  அலைகள் பெரியனவும் சிறியனவுமாகப் பல உள்ளன . அவற்றுட்  பேரலைகள் துன்ப மயமாகவே  உள்ளன என்பார், “எவ்வத் தடத்திரை “ என்றார் . வினைக்கு  ஈடாகவுள்ள பிறப்பில்  தீவினைப்பயன் துன்பமே , நல்வினைப்பயன்  இன்பமாயினும் , சிற்றளவினதாக  நின்று , மீண்டும்  பிறத்தற்கு ஏதுவாகிப்  பேரின்பத் திற்குத்  தடையாய்  முடிதலின் , அதுவும்  துன்பமாகவே கருதப்படும். ஆகவே  பேரலைகளைப் போன்ற துன்பங்களும் , இடையிடைய  சிற்றலைகளைப் போன்ற  அழியும் இயல்பினவாகிய  இன்பங்களும்  உளவாகிப் பிறவியுட்பட்ட  உயிர்களை  அலைக்குமென்பது கருத்து . இங்ஙனம் தாக்கப்படுதலையே , “திரையால்  எற்றுண்டு”  என்றார் .கடலுள்  வீழ்ந்தானொருவன்  அலைகளால் அங்கும் இங்கும்  அலைக்கப்படுங்கால் , பற்றுக்கோடு  ஒன்று  கிடைப்பினும்  ஒரு கால் உய்தி பெறலாகும் . அதுவும் இன்று  என்பார், “பற்றொன்றின்றி “ என்றார்.  நீர்  எப்பொழுதும் சலிக்கும்  இயல்பினது . கடல் அலைக்கோ அசைவு  மிக வுண்டென்பது சொல்ல வேண்டியதின்று .  அம் மிகுதியான  அசைவுக் காற்றும் உதவி  புரியுமானால்  அலைகளின்  கடுமை  மிகப் பெரிதாகும். அப்பொழுது வீழ்ந்தவன்  படும்பாடு  பெரிதாகுமன்றோ ? அந் நிலையே  தமக்கும் ஆயிற்றென்பார், “காலாற்  கலக்குண்டு “ என்றார்.  கால் – காற்று,  மகளிர்  காற்றாக  உருவகிக்கப்பட்டனர் ; பிறப் பிற்பட்டுப்  பழவினைப் பயன் நுகர்ச்சியில் தலைப்படுங்கால் ,வந்தேறும் புதிய கன்மங்களுட் பெரும்பாலான  மகளிரைப் பற்றியே உள்ளன வாதலின் . “கனியை நேர் துவர்  வாயார்” என்றது கலக்கம் எய்துதற்கு ஏதுக்காட்டிய படியாம் . கனி, இயைபு நோக்கி ஈண்டுக்  கொவ்வைப் பழமாகக்  கொள்ளப்பட்டது.  ஆடவர்  மயங்குதற் குரிய இனிய  சொற்கள் தோன்றுதற்கும்  வாய்  இடனாதல்  பற்றி, “கனி” ஒப்புக்கூறப்பட்டதெனினும் ஆம் . ஞானேந்திரிய  கன்மேந்திரியங்கள்  இரண்டிற்கும் உரிய இடம் வாயாதலால் , அவ்விருவகைக் கருவிகளாலும்  கலக்கம்  உறுத்தலைப்  புலப்படுக்கக்  “கனியை நேர்  துவர்  வாயர் “ என்னப்பட்டனர் .

            மகளிர் காட்சியாற்  கலக்கம் எய்தினார் , காமத்தில்  சிக்கி  உழல்வரா தலின் , “காமவான் சுறவின் வாய்ப்பட்டு “ என்றார்.  வான் சுறவு  –  பெரிய சுறாமீன் . தன்வாய்ப்பட்டார்  ஊனுடலை உண்டு உயிரைப் பற்றாது விடும் கடற் சுறவு போலாது , காமச் சுறவு , தங்கட் பட்டார் உடலோடு உயிரையும் உண்ணும் என்பது தோன்ற , “வான் சுறவு “  என்னப்பட்டது . “உயிர் உருக்கிக் குடிக்குங்  கூளி………..கடிய காமம்” என்றார் பிறரும் . தீவினையாக  நின்று  , பிற்பிறப்புக்களிலும்  உயிரைத் துன்புறுத்தும் என்பது கருத்து . பழ வினைக்கு  ஈடாகப்  பிறந்தார்க்கு , நுகரப்படுவதும் , ஈட்டப்படுவதும் , சேர்க்கப்படுவது  மாகிய  முத்திற  வினைகளும் உளவென்பதை முறையே , “எவ்வத்தடந் திரையால்  எற்றுண்டு , “வாயார் என்னும் காலாற் கலக்குண்டு” , “காமவான்  சுறாவின் வாய்ப்பட்டு” என்பன குறிப்பிற் புலப்படுத்து  நிற்றல் அறிக . எவ்வம் வினைப்பயனாதலின் , பிராரத்தமாகிய  நுகரப்படுவதாதலும் , மகளிர் என்னும் காற்றால் கலக்கம்  எய்துதல் , ஆகாமியமாகிய  ஈட்டப்படுவது ஆதலும் , காமச்சுறவு வாய்ப்படுதல் ,சஞ்சிதமாகிய  சேர்க்கப்படுவதாலும்  புலனாதல்  அறிக . காமச் சுறவு வாய்ப்பட்டு என்றது , சஞ்சித கன்மம் பக்குவம்  ஆகுங்காறும்  நுண்ணியதாய்  மாயையில் அடங்கியிருக்கும்  உண்மையைக் குறிப்பிற் புலப்படுக்கும் . காமம் பொதுவாக எல்லாப் பொருள்களினும்  செல்லும்  அவாவாயினும் , சிறப்பாக மகளிரைப் பற்றி  நிகழ்வதைக் குறிப்பதாகும் . மண் , பெண் , பொன் என்னும் மூவகைப்  பொருள்கலினும் செல்லும் ஆசைகளுட் பெண்ணாசை வலியுடைத்து என்ப. “மண்ணாசை தன்னிற்  பொருளாசையின் மாய வாழ்க்கைப் பெண்ணாசை  நீங்கலொளிதோ பெரியோர் தமக்கும்”  என்பர் கச்சியப்ப சிவாச்சாரியார் . “நடுவணதெய்த  இருதலையும் எய்தும்” என்பது  ஈண்டு கருதத்தக்கது. என்னை ? பெண் விருப்பம்  காரணமாக மண் விருப்பமும்  பொன் விருப்பமும் உளவாதல் காணப்படுதலின் .

            அலையால்  மோதப்பட்டுக் காற்றால் கலக்குண்டு , சுறாவின் வாய்ப்பட்டதும் , வேறு நெறி  அறியப்படாமையின் , எவ்வாறு உய்தல் கூடுமெனப்பாம்பின் வாய்த் தேரைப்போலப் பற்பல விதமாக எண்ணலானேன் என்பார் , “இனி உய்யுமாறு என் என்று எண்ணி” என்றார். காமச்சுறா  சிறிது விழுங்கியும்  முழுதும் விழுங்காமலும் இருக்கும் நிலையில் , ஒரு தெப்பம் அடிகளுக்கு நல்லூழ் வயத்தால் அணிமையிற்  பிடிக்கக் கிடைத்ததாம் . அது திருவைந்தெழுத்தாகிய  தெப்பமாகும் . அத் தெப்பத்தைத் தொட்டதும் , காமச்சுறாவின்  ஆற்றல் குன்றிவிட்டதென்பதும் அதனால் முற்றும் விழுங்கப்படாமையும் குறிப்பிற் புலப்படும் . காம  முதலிய தீங்குகள் எல்லாம்  திருவைந்தெழுத்தால் நீங்கும் என்பதை,

விண்ணுற  அடுக்கிய  விறகின் வெவ்வழல்

உண்ணிய  புகில்  அவை  யொன்றும் இல்லையாம்

பண்ணிய  உலகினிற் பயின்ற  பாவத்தை

நண்ணிநின்  றறுப்பது  நமச்சி  வாயவே

என்னும்  தமிழ் மறையானும் அறியலாம். பிறவிக்கடலினின்றும்  கரையேறுதற்குத்  திருவைந்தெழுத்தே  சிறந்த தெப்பமாயிற்றாம் . ஆளுடைய அரசு , கல்லோடு  பிணித்துக்  கடலில்  வீழ்த்தப்பட்டஞான்று , அவரை  அஞ்செழுத்து  அருமறை  கரையேற்றிய  செய்தியைக்  கூறுங்கால்,

இருவினைப் பாசமும்  மலக்கல் ஆர்த்தலின்

வருபவக்  கடலில்வீழ்  மாக்கள்  ஏறிட

அருளுமெய்  யஞ்செழுத் தரசை  யிக்கடல்

ஒருகல்மேல்  ஏற்றிடல்  உரைக்க வேண்டுமோ

என்று  அருண்மொழித் தேவர்  பாராட்டியதும்  ஈண்டு  கருதத் தக்கது . காமச் சுறாவின் வாய்ப்பட்டதும், இறைவன் திருவருள்கூட்டுவிக்க,அஞ்செழுத்     தாகிய  தெப்பத்தைப் பற்றினேனாக , அந் நிலையில்  சுறவு வலியிழந்து ஒழிய , அப் புணையையே  துணையாகக் கொண்டு கிடக்கின்றேன் என்பார் , “புணைபிடித்துக் கிடக்கின்றேனை” என்றார் . தெப்பத்தைப்  பிடித்தும் அதனைச் செலுத்திக்  கரை சேரலாமே , ஏன் அங்ஙனம் முயலவில்லை என்பதற்கு விடையாக ,  “மூர்க்கனேற்கு”  என்றார்.  திருவருள் துணையால் பிடித்ததே  அன்றிக், கரை சேர்தற்குரிய  அறிவாற்றல் தமக்கு  இன்று  என்பது புலப்படுக்க , அடிகள் தம்மை மூர்க்கன்  என்று  குறிப்பிட்டுள்ளார் . உலகியல்  நோக்கி  இவ்வாறு தம்மைக்  கூறிக்கொண்டனர்  போலும் .  

              அடிகள் அஞ்செழுத்தை  நெஞ்சழுத்தியதும் , மூவகைக்  கன்மங்களும் அழிந்து ஒழிந்தன வென்பதும் , வீட்டு நிலைக்குத்  தகுதியாயினாரென்பதும்  குறிப்பிற்  புலப்படுக்கப்பட்டபடியாம் . அஞ்செழுத்தின்  என்புழி இன்னும் கிடக்கின்றேனை  என்புழி ஐயும் சாரியைகளாம் . புணை பிடித்தல் தம் கடனாகவும்  , கரை சேர்தல்  இறைவன் கடனாகவும்  குறிக்கொண்டு  , “கரை  காட்டி” என்றார். அக்கரை சேர்த்தல் இறைவன் கடனாகவும் குறிக்கொண்டு , “கரை காட்டி “ என்றார். அக் கரையாவது , தோற்றக் கேடுகள் இல்லாத மிக்க வளம் பொருந்திய வீட்டின்பம் என்பது தோன்ற , “முதலந்தமில்லா மல்லற் கரை” என்றார் . மல்லல் – வளன் . வீட்டுநிலை , அழிவில் இன்பம்  ஆதலின் , “முதலந்தமில்லா” என்னும் அடை புணர்க்கப்பட்டது . மல்லல்  ஆகு பெயராக நின்று  , வீட்டு இன்பத்தை உணர்த்துவதாகும் .  கடலில் அலைப்புண்டு  தத்தளித்துக்  கிடப்பவனுக்கு வளம் பொருந்திய கரை இதோ உள்ளது என்று  காட்டுதல் முதலில் ஆறுதல் அளிப்பதாகும் . ஆதலால் , அங்ஙனம் காட்டிப்பின் ஆட்கொண்டு  கரை சேர்த்தனன்  என்பது தோன்ற , “மல்லற் கரை காட்டி  ஆட்கொண்டாய்” என்று  கூறி அருளினர் .

           இதன்கண், “முதல் அந்தம் இல்லா மல்லற் கரைகாட்டி”  என்றதனால் , வீட்டு நிலை அவன் அருளே கண்ணாகக் கொண்டு  காணத்தக்கது  அன்றிச் சுட்டறிவினால் அறியத் தக்கது அன்று  என்பது  தெளியப்படுதலின் , சுட்டறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,எவ்வத் தடந்திரையும் , துவர்  வாயார் என்னும்  காற்றும் , காமவான் சுறாவும்  வெறுக்கத்தக்கனவாகக்  கூறப்பட்டிருத்தலின் , வைராக்கிய விசித்திரம்  என்னும்  சதம்  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக. 

                                      **************************************************

பாடல் :28 .

கேட்டாரும்  அறியாதான்  கேடொன்  றில்லான்

கிளையிலான்  கேளாதே  யெல்லாங் கேட்டான்

நாட்டார்கள்  விழித்திருப்ப   ஞாலத்துள்ளே

நாயினுக்குத்  தவிசிட்டு   நாயி னேற்கே

காட்டா  தனவெல்லாங்  காட்டிப்  பின்னுங்

கேளா தனவெல்லாங்  கேட்பித் தென்னை

மீட்டேயும்  பிறவாமற்  காத்தாட் கொண்டான்

எம்பெருமான்  செய்திட்ட விச்சை தானே.

கருத்துரை :-  வீட்டு நிலைக்குச்  சாதனமாகிய திருவைந்தெழுத்தைத் தாம் கடைப்பிடித்தமையைப்  பற்றி முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய  அடிகள் , அத் திருவைந்தெழுத்து ஓதுதலால்  தாம் பெற்ற பேற்றின் வகைகளையும் , அவற்றை இறைவன் தமக்கு அருளிச்செய்த முறையினையும்  இத் திருப்பாட்டில் விளக்கிக்  கூறுகின்றார்.

பதவுரை:-  கேட்டு  ஆரும்  அறியாதான்  =  கேள்வியளவில் யாரானும்  அறியப்படாதவனும் ,

கேடு ஒன்று இல்லான்  = கேடு சிறிதும் இல்லாதவனும் ,

கிளை இலான்  =  சுற்றத் தொடர்பு இல்லாதவனும் ,

கேளாதே  எல்லாம் கேட்டான்  =  பொறி வாயிலாகக்  கேளாமலே எல்லாவற்றையும் கேட்டவனும்  ஆகிய இறைவன் ,

நாட்டார்கள் விழித்திருப்ப  =   நாட்டில் உள்ளாரனைவரும்   சோர்தலின்றி  விழிப்புடையராக  இருப்பவும் ,

ஞாலத்து உள்ளே  =  இந் நிலவுலகத்தே ,

நாயினுக்குத் தவிசு  இட்டு  =  ஒரு நாய்க்குத் தவிசு  இட்டது   போல்,

நாயினேற்கு  =  நாய்த்தன்மையுடைய  எளியேனுக்கு ,

காட்டாதன  எல்லாம் காட்டி  =  காட்டக் கூடாதனவாகிய  எல்லாவற்றையும் காட்டியும் ,

கேளாதன  எல்லாம் கேட்பித்து  =  கேட்கப்படாதன  எல்லாவற்றையும்  கேட்க்கச் செய்தும் ,

என்னை  =  தகுதியில்லேனாகிய சிறியேனை ,

மீட்டேயும்  பிறவாமல்  காத்து  ஆட்கொண்டான்  =  மீண்டும்  பிறவியிற்   புகாமல்  காப்பாற்றி  ஆட்கொண்டு  அருளினான் ,

எம்பெருமான் செய்திட்ட   விச்சைதானே  =  இஃது எங்கள் தலைவன் செய்த  மாயவித்தையே  யாகும்  என்பது .

விளக்கவுரை :-  கேடொன்றும் விழித்திருப்பவும் , காட்டியும்,கேட்பித்தும்  என்புழி  உள்ள  உம்மைகள் செய்யும்  விகாரத்தால் தொக்கன. தவிசிட்டு  என்புழி , உவம உருபை விரித்து , இட்டாங்கு எனக்கொள்க.  மீட்டேயும்  என்புழி   ஏ, தான் , ஏ  என்பனவும் அசைகளாகும் . கேட்டல் , ஈண்டு உரை யளவைக் குறிக்கும் .உரையளவையால் இறைவன் இயல்பை ஒருவாறு அறியலாமே யன்றி  முற்றும் உணர்தல் இயலாது .  “ கேட்பான் புகில்  அளவில்லை “என்பது தமிழ் மறை . மெய்யுணர்வில்  தலைப்படாதார் , நூற்கேள்வி அளவில் எத்துணை அறிவு படைத்தவராயினும் , இறைவனது உண்மை இயல்பை அறிதற்குரிய தகுதி இலராவர்  என்பது  தோன்ற , “கேட்டு ஆரும் அறியாதான்” என்றார் . உரையளவையால் முற்றும் அறியப்படுவன அழியும் இயல்பினவாகிய  மாயா  காரியப் பொருள்களேயாகும் . இவ்வுண்மை குறித்தே , இறைவன் கேள்வியளவில் அறியப்படான்  என்பதற்கு ஏது புலப்படுக்கும் முகமாக , “ கேடொன்றும்  இல்லன்” என்றார். ஒன்றும்  என்பது சிறிது என்னும் பொருட்டு . சைவசித்தாந்தம்  கூறும்  இறை , உயிர் , கட்டு  என்னும் முப்பொருள்களும் அழி வில் பொருள்கள் ஆயினும், அவற்றுள் உயிர்க்கு ஆணவ இயைபால்  அறிவு விளக்கத்திற்கு அழிவும் , வினைக்கு  ஈடாக  மாயையிலிருந்து கிடைக்கும் உடல் முதலியவற்றின் அழிவும்  காணப்படுதலானும் , கட்டின்  வகைகளாகிய ஆணவம் ,கன்மம் ,மாயை என்னும் இவற்றிற்கு , முறையே  ஆற்றல் , விளைவு  , காரியம்  என்னும்  இவற்றின் அழிவும் காணப்படுதலானும் , இறைவன் இயைபுகளுள்  எதற்கும்  அழிவு  கேட்கப்படாமையானும் , “கேடு  சிறிது  மில்லான்” என்று  கூறப்பட்டது.

       கிளை  –  தாய் , தந்தை , முதலிய  சுற்றம் . இறைவன் பிற உயிர்களுக்குச் சுற்றமாவானே  யன்றித் தனக்குச்  சுற்றமாக யாரையும் இல்லாதவன் என்பது தோன்ற , “கிளையிலான்” என்றார் . “எந்தையாய் எம்பிரான் மற்றியாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃதிலான்” என்னும் அடிகள் திருவாக்கும் நோக்குக . “தனக்கு அஃதிலான் “ என்பது தனக்கு அச் சுற்றத் தொடர்பு  இல்லாதவன்  என்னும் பொருட்டு .

         “கேளாதே  யெல்லாங்  கேட்டான் “ என்பது , செவிப்பொறி வாயிலாக  அன்றித் தன் நிறைவியலால் எல்லாவற்றையும்  ஒரே காலத்தில் ஒருங்கு அறிபவன்  என்னும்  பொருளது . உபலக்கணத்தால்  காணாதே  கண்டான் என்பது முதலியவற்றையும் கொள்ளல் வேண்டும்  “பொறிவாயில் ஐந்தவித்தான் “ என்பது, பொறிவழியாக இல்லாத  ஐம்புலன்களையும்  அவித்தவன் என்னும் பொருள்படுதலால் ,இறைவன் அறிவு பொறிகளை வாயிலாக இல்லாதது என்பது போதரும் . இறைவனது இயல்பை விளக்கப் போந்த மறை முடிவில் ,”எல்லாவற்றையும் எப்பொழுதும் தானே  காட்சி யளவையில்  ஒருங்கு அறிகின்றான் “ என்று கூறப்பட்டுள்ளது . இதனால் உயிர்த் தொகுதிகளின் குற்ற நற்றங்களை உள்ளவாறு அறிந்தே அருள் செய்பவன்  என்பது விளக்கமாம் .

           நாடு  ஞாலத்தின் ஒரு பகுதியாகும் . அப் பகுதியில் உள்ள அன்பர்கள் பலரும் இப் பேறு நமக்கு எப்பொழுது கிடைக்குங்கொலோ என்று சோர்வின்றி விழிப்புடையராக இருப்பவும் ,அவரை விட்டு , அந் நாட்டுள் பிறந்த இழிபிறப்புடைய ஒரு நாய்க்கு அந் நாட்டில் உள்ளார் காணும் அளவில் அன்றி , அத்தகைய  நாடுகள் பலவற்றையும் தன்னுட்கொண்ட உலத்துள்ளார் யாவரும் காணும்படி தவிசிட்டுப் பொருட்படுத்தியது போல் என்பார், “நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்கு தவிசிட்டு” என்றார். நாய்க்குத் தவிசிடல் என்பதற்கு , நாயிருத்தற்குச் சிறந்த இருக்கையமைத்தல் என்றும் , யானையின்  மேலிடும் அழகிய  தவிசை நாயின் மேல் அமைத்தல்  என்றும் பொருள் கொள்ளலாம் . “நாய்மேல் தவிசிட்டு  நன்றாய்ப் பொருட்படுத்த , மேனியான்” என்பது அடிகள் மணி மொழி . “அடுகளிற் றொருத்தினிட்ட , வண்ணப்பூந்தவிசு தன்னை  ஞமலிமேலிட்ட  தொக்கும்” என்பர் சிந்தாமணி நூலாசிரியர் . இனி, நாட்டம் என்பது ஈறு தொக்கதாகக்  கொண்டு , வீட்டின்பத்திலே நாட்டமுடையார் பலரும் விழிப்புடையராக இருப்பவும் , அந் நாட்டம் சிறிதுமில்லாத  ஏழையேனை உலகம் அறியப் பொருட்படுத்து ஆண்டாய் என்று கூறினார் எனினும் பொருந்தும் . “நான்றனக்கு  அன்பின்மை நானுந் தானும் அறிவோம். தானென்னை ஆட்கொண்டது எல்லாருந்தாம் அறிவார்” என்னும் மணி மொழியும் ஈண்டு நினைக்கத்தக்கது . நாயினேற்கே என்புழி ,ஏகாரம்  தேற்ற  பொருட்டு.

            உயிர்த் தொகுதிகளின் இயல்பும் , அவற்றை உடைமையாக  உடைய ஆண்டவன் இயல்பும் , கட்டறுத்து அப்பெருமான் திருவடிகளை அடையும் நெறியும் ஆகிய  இன்னோரன்னவைகளே காணாதனவும் கேளாதனவுமாம். கேட்டல் – அறிவியல் நூல்களின் வாயிலாகவும் , ஞானாசிரியன் உபதேசங்களானும்  ஆம். காண்டல் , அங்ஙனம் கேட்ட வழி அநுபவித்து உணர்தலாகும் . இவ்விரண்டனுள்ளும் , கேட்டற்குரிய தகுதியினும் காண்டற்குரிய தகுதி சிறந்த தென்பது எளிதில் அறியத்தக்கது. “ “இவ்வுண்மை குறித்தே , அடிகள் கேளாதன எனக் கேட்டற்கு வினை முதலாகத் தம்மையும் ,காட்டாதன எனக் காட்டற்கு வினை முதலாக இறைவனையும்  குறிப்பிட்டுள்ளார் .  கேளாதன கேட்பித்தலாவது , இறைவன் ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து , சிவ ஞான போத ஞான நூற்பொருளை  உணர்த்தித் திருவைந்தெழுத்தை  உபதேசித்ததாகும் .காட்டதன காட்டுதல் என்பது , அவ்வுணர்வு  உபதேசங்களின்படி அநுபவத்தல் ஆகும். “காட்டாதெனவெல்லாங் காட்டிச் சிவங் காட்டி “ என்னும்  மணி மொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது. “ தம்மையுணர்ந்து  தமையுடைய தன்னுணர்வார்” என்புழித் தம்மை உணர வைத்தல்  காட்டாதன காட்டுதலும் , தம்மையுடைய தன்னை உணரவைத்தல்  சிவங்காட்டுதலும் ஆம் என்பது தெளிவாம் . கேளாதன கேட்பித்த பின்னரன்றே  காட்டாதன  காட்டுதல் முறையாகும். அங்ஙன மின்றிக் காட்டுதலை முன்னும் கேட்பித்தலை பின்னும் கூறியதன் கருத்து என்னை யெனிற் கூறுவேம். ஆண்டவன் அடிகளுக்கு முதலில் ஞான நூற் பொருளையும் , திருவைந்தெழுத்தையும் உபதேசித்து , பின்னர் அந் நெறியே ஒழுகுமாறு அநுபவ நிலையையுங் காட்டினானாக ,அவன் காட்டிய  வழியே அநுபவத்தில் தலைப்படுங்கால் , மேன்மேலும் தெளிவுறுத்தற் பொருட்டுப் பின்னும் உண்ணின்று உபதேசித்து உணர்த்தினான் என்பது  கருத்தாகலின் அவ்வாறு கூறப்பட்டதென்க . இவ்வுண்மை புலப்படுக்கவே , “ பின்னுங் கேளாதன வெல்லாங் கேட்பித்து” என்றார் . பின்னும் என்ற எச்சவும்மையால்  கேட்பித்தல் முன்னும் நிகழ்ந்த தென்பது தெளிவாம் .

         இங்ஙனம்  கேட்பித்தும்  காட்டியும்  செய்த உதவிகள் எல்லாம் யான்  மீண்டும் பிறவாமைப் பொருட்டாம் என்பது தோன்ற ,”மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் “ என்றார் .இறைவன் காப்பு , பிறப்பித்துக் காத்தலும், பிறவியிற் புகாதபடி காத்தலும் என இருதிறப்படும். பிறப்பித்துக் காத்தல்  கட்டறுத்தற் பொருட்டாம் . பிறவியிற் புகாதபடி காத்தல் , அழிவில் இன்ப நுகர்ச்சிப் பொருட்டாம். இவ்விரண்டனுள்ளும் சிறந்த காப்பைத் தகுதி யில்லாத  தமக்குச் செய்தான் என இறைவன் அருட் சிறப்பை அடிகள் வியத்த வாறிது . காத்தாட்கொண்டான் என்பதை , ஆட்கொண்டு காத்தான் என முன்னர்  உரைத்தாங்கு  உரைத்துக்கொள்க . காட்டாதன காட்டுதலும்,  கேளாதன கேட்பித்தலும் , உலகத்தில் மாயவித்தையால் நிகழும் செயல்களாதலின் , “எம் பெருமான் செய்திட்ட விச்சைதானே” என்றார். விச்சை என்பது உலகியல் முறையில் மாய வித்தையைக்  குறிக்கு மாயினும்,உண்மையாக நோக்குங்கால் , ஞானம் என்னும் பொருளுடைய தாகும் . எம் பெருமான் தன்னை அறிந்து அநுபவத்தற்கு  எனக்கு அருளிய ஞானசத்தியே இத்துணைப் பேறுகள் எல்லாவற்றிற்கும் காரணமாம் என்பது  முடிந்த பொருளாகும் .

            இதன்கண், “கேட்டாரும் அறியாதான்” என்பது முதலிய இறை யிலக்கணங்களும் , காட்டாதன முதலிய அனுபவ இலக்கணங்களும்  சுட்டி உணரப்படுவனவாக இல்லாமல், மெய்யுணர்வினால்  தெளியத்தக்கன  ஆதலின் , சுட்டறுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக .

                             ****************************************************

பாடல் :29 .

விச்சைதான்  இதுவொப்ப  துண்டோ  கேட்கின்

மிகுகாதல் அடியார்தம்  அடியன்  ஆக்கி

அச்சந்தீர்த்  தாட்கொண்டான்  அமுதம் ஊறி

அகநெகவே  புகுந்தாண்டான்  அன்புகூர

அச்சன் ஆண்  பெண்அலியா  காசம்  ஆகி

ஆரழலாய்  அந்தமாய்  அப்பால் நின்ற

செச்சைமா  மலர்புரையு  மேனி  யெங்கள்

சிவபெருமான்  எம்பெருமான்  தேவர் கோவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன் தமக்கு அருளிய பேற்றின் வகைகளையும்  முறையினையும்  கூறிய அடிகள் , அங்ஙனம்  தாம் பெற்ற பேற்றின் வகைகளுள்ஆண்டவன் தமக்குப் புறக்காப்பும்  அகக் காப்புஞ் செய்து ஆட்கொண்டு அருளியதையும் , அக் காப்புக்களால் தமக்கு விளைந்த பயன்களையும்  இத் திருப்பாட்டில்  அருளிச் செய்கின்றார்.  

பதவுரை :-  அச்சன் ஆகி  =  எனக்குத்  தந்தையாய் ,

ஆண் பெண் அலியாகி  = அவன்  அவள்  அது  வெனும் உலகத் தொகுதியாய் ,

ஆகாசம்  ஆகி  = ஞானப் பரவெளியாய் ,

ஆர் அழலாய்  =  அரிய ஒளி வடிவாய் ,

அந்தமாய்  =  முடிவு  இடனாய் ,

அப்பால் நின்ற  =  அதற்கும் அப்பாலாக  நிலையுதல்  பெற்ற ,

செச்சை  மாமலர்  புரையும்  மேனி  =  வெட்சியின் அழகிய  மலரையொத்த  செம்மேனியை யுடைய ,

எங்கள் சிவபெருமானும் , எம் பெருமான்  =  எங்கள் தலைவனும் ,

தேவர் கோ  =  தேவர்களுக்குத்  தலைவனும்  ஆகிய  ஆண்டவன் ,

மிகு காதல் அடியார்  தம்  அடியன்  ஆக்கி  = மிக்க  மெய்யன்பினையுடைய  தன் அடியவர்களுக்கு  என்னை அடியனாகச் செய்து 

அச்சம்  தீர்த்து  ஆட்கொண்டான் =  பண்டை வாதனை இன்னும்  தாக்குங்கொலோ  என்னும்  அச்சத்தை  யொழித்து ஆளாகக் கொண்டான் ,

அமுதம்  ஊறி அகம் நெக  =  அமிழ்தம்  ஊற்றெடுத்து  நெஞ்சம் உருகவும்,

அன்புகூர  =  மெய்யன்பு  மிகவும் ,

புகுந்து  ஆண்டான்  =  என் உட்புகுந்து  ஆட்கொண்டருளினான் ,

கேட்பின்  =  இங்ஙனமாய  அப் பெருமான் செயலைக்  கேட்கப் புகின்,

இது ஒப்பது விச்சைதான் உண்டோ  =  இதனை ஒத்தாகிய  வித்தை  வேறுண்டோ (இல்லை) யென்றபடி  என்பது .

விளக்கவுரை :-   தான்  ,  அசை .  ஆகி  என்பது  முன்  ஈரிடத்துங்  கூட்டப்பட்டது.  அச்சன்  – அத்தன் ; தந்தை .  தந்தையை  அச்சன்  என்பது  குடநாட்டு  வழக்கு  . பின்னர்  ஆண் , பெண் , அலி  என்றதனால்  பெறப்படும்  உலகத்திற்கும்  தமக்கும்  தந்தை என்பது தோன்ற  , “அச்சன்”  என்றார் . ஆண்  பெண்  எனச்  சுட்டி  உணரப்படும்  உலகத்தொகுதியுட்பட்ட  தந்தையாவான் , தனக்குரிய  தந்தையைக்  குறிக்குங்கால்  மகனுமாவான் . இங்ஙனம்  தந்தையாம்  தன்மையும்  மகன்மையும்  மாறிமாறி   நிகழும்  முறைபற்றிய  தந்தை  போலாது  , எல்லாஉலகங்கட்கும்  தந்தையாவான்  என்பது  , பின்  உலக  உருவினன்  என்னும்  குறிப்பால்  உணரத்தக்கது . ஆண் , பெண் , அலி யாகி என்புழி ஆண் பெண் என்பன அவன் அவள் என்னும்  பொருளினவாகிய  உயர்திணையையும்  , அலி  என்பது  , அது  என்னும்  பொருட்டாகிய   அஃறிணையையும்   உணர்த்தும் .  ஆகவே , உயதிணையும்  அஃறிணையும்  கலந்து , அவன் , அவள் , அது  வெனச்  சுட்டியறியப்படும்  உலகத் தொகுதியுமாவான் என்பது போதரும்.  மாயா  காரியமாகிய  உலகின்  இயக்கம்  , இறைவனை  இன்றியமையாமையின் , அப் பெருமானை   உலகெலாமாயினான்  என்று  கூறுவர்.  “எல்லா உலகமும்  ஆனாய் நீயே” என்பது  தமிழ் மறை . இங்ஙனம் உலக உருவமாக இறைவனைக்  கூறியது  , உலகநிகழ்ச்சி  அவனையின்றி  நடைபெறாது என்னும்  கருத்தால் எனின், அப் பெருமான் உண்மை இயல்புதான்  எவ்வாறு  அறியத்தக்கது  என்பார்க்கு  விடையாக  ,”ஆகாசமாகி”  என்பது  முதலியவாகக்  கூறினர் . ஆகாசம்  என்பது  ஈண்டுத்  தகராகாசம்  எனப்படும்  நுண்ணிய  ஞானப்  பரவெளியாகும் . பூதாகாசம்  எனின்  “ ஆண் , பெண் , அலி “ என்னும் உலகத்  தொகுதியுள்  அடங்கும்  ஆதலின் , அஃது அன்றென்பது .  “ஆரழல்  “ என்பதற்கும்    ஈதொக்கும் . நெஞ்சத் தாமரை மலரை அலர்வித்து, அதன் நடுவண்  உள்ள  தகராகாசமாகிய  நுண்ணிய  ஞானப்  பரவெளியில் ஒளிவடிவமக  இறைவனைத்  தியானித்தல்  வேண்டும்  என்பது  மறை முடிவிற்  கண்டது . இதனைத் தகரவித்தை  என்ப . இவ்வுண்மையைப்  புலப்படுக்கவே , “ ஆகாசமாகி  ஆரழலாய்” என்றார்.  ஆர்  அழல்  – சிவ யோகிகளால் அன்றிக் காண்டற்கரிய ஒளியாகும்  . அழல்  ஆகு  பெயர் .  “ஒளியே  யுன்னையல்லால்”  எனவும் ,” பொங்கிய வொளியினீழற்   பொருவிலன் புருவமானார்” எனவும்  பெரியோர்  ஒளிவடிவாகக்  கூறிய உண்மையும் அறிக. நுண்ணிய ஞானப்  பரவெளி இறைவனுக்கு  இடனாயினும் , அதற்கும் , அதனுள் ஒளி  உருவமாக  விளங்கும்  இறைவனுக்கும்  வேற்றுமை  யின்மைபற்றி “ஆகாசமாகி ஆரழலாய்”  என்றார்.

             உலக வடிவமான  பருப்பொருளாகவும்  , நுண்ணிய  பரவெளியில்  ஒளி  உருவமாக  விளங்கும்  நுண்பொருளாகவும்  உள்ள அவ் இறைவனே  பேரூழியின்  இறுதியில்  எல்லாம்  ஒடுங்குதற்குரிய  முடிவிடனாகவும்  உள்ளான்  என்பது  தோன்ற  ,”அந்தமாய்”  என்றார் . அயன்  மால்  உருத்திரன்  என்னும்  அதிகார  தேவர்  மூவருள் ஒருவனாகிய  குணிருத்திரனும் , பிரகிருதி  புவனாந்தம்  ஒடுங்குதற்கு  முடிவிடனாகவுள்ளான்  ஆதலின் , அவனின்  நீக்குதற்கு   “ அப்பால்” என்றார். பரமசிவன்  அம்  மூவருள் ஒருவன்  அல்லன் என்றும் , மூவர்  கோனாகச்  சுத்த  மாயா  புவனாந்தம் ஒடுங்குதற்கு  இடனாக  நிற்பவன் என்றும்  மறையாகமங்கள்  கூறுவன .  இந் நிலையே  எல்லாவற்றிற்கும்  இறுதியான  இடம் .  எல்லாம் ஒடுங்கிப்  பரமசாந்தமான  நிலையில்   சிவபெருமான்  ஒருவனே தனியாக  நிலையுதலுடையனாய்  நிற்பன்  என்பது  தோன்ற  , “அப்பால்  நின்ற “ என்றார்.  இவ்வுண்மையை , “ஓதத்தொலி  மடங்கி  யூருண்டேறி   யொத்துலகமெல்லாம்   ஒடுங்கியபின் , வேதத்தொலி  கொண்டு  வீணைகேட்பார்  வெண்காடு  மேவிய  விகிர்தனாரே”  என்னும்  திருநாவுக்கரசர்  தேவாரத்தானும்   உணர்க .

            இத்துணை அரிய  பொருளாகவுள்ள  இறைவன்  மெய்யன்பர்க்கு  ஞானாசிரியனாக  உருவத் திருமேனி  கொண்டு  எழுந்தருளி  வந்து , எளியனாய்க்  காட்சி  நல்கும்  இயல்பைப்  புலப்படுத்துவார், “செச்சை மாமலர்  புரையும்  மேனி  எங்கள்  சிவபெருமான் “என்றார்.  வெட்சிமலர்  செவ்வண்ணமுடையது . மெய்யன்பர்  எல்லோரையும்  உளப்படுத்து  , “எங்கள்”  என்றார்.  சிவபெருமான்  என்றது  இன்பவடிவினன்  என்னும்  பொருட்டு.  இதனால் மெய்யன்பர்க்கு  அழி வில் இன்பம்  பயப்போன்  என்பது  புலப்படுத்தவாறாம் .  அன்பர்  எல்லோரையும்  உளப்படுத்து , எங்கள் என்று  பொதுப்படக்  கூறினாராயினும்  , தம்  சிறப்புரிமையையும்  புலப்படுத்த  ,எம்பெருமான்  என்றார் . மிகச்  சிறியேனாகிய  எனக்குத்  தலைவனாதல்   அவன்  பெருமைக்கு  இழுக்கன்றோ  எனின்  அவ்வாறு  எண்ணற்க; எல்லாத்தேவர்களுக்கும்  தலைவன்  அவனே  யாவான்  என்பார், “தேவர்  கோவே “  என்றார் .

              இனி,  இறைவன்  தம்மைப்  புறத்தும்  அகத்தும்  நின்று  ஆட்கொண்டருளியதையும்  ,  அவ்வாட்சிகளால்  விளைந்த  பயன்களையும்  அடிகள் அருளிச்  செய்கின்றார்.  புறத்தே   நின்று  ஆட்கொண்டது  மெய்யன்பர்  கூட்டத்தில்  தம்மை இயைத்துப்  பணி  செய்வித்ததாகும் .  அத்தகைய   அன்பர்  பெருமையைப்  புலப்படுத்துவார்  , “மிகு  காதலடியார்”  என்றார் . மிகு  காதல்  வினைத் தொகையாதலின்  , ஒவ்வொறு  கணத்தும்  மேன்மேலும்  மிகுகின்ற  மெய்யன்பென்பது  .  அவ்வடியார்க்கு  அடியனாகச்  செய்தமையால்  விளைந்த  பயன் , பண்டைக்  கன்ம வாதனை  இன்னும்  தாக்குங்கொலோ  எனவும்  , அதனாற்  காம  வெகுளி  மயக்கங்களும்  அவற்றின்  பயனாக  மீண்டும்  பிறப்பிறப்புக்களும்  நேருங்கொலோ எனவும்  உண்டாகும்  அச்சத்தின்  ஒழிவாகும் .  மெய்யன்பராகிய  அடியார்  சூழலில்   இருப்போர்க்கு  இத்தகைய  அச்சம்  சிறிதும்  உண்டாகாதென்பது   தெளிவு. “பாசமானவை  பற்றறுத்  துயர்ந்த  தன்  பரம்பெருங்  கருணையால்  , ஆசை  தீர்ந்து  அடியரடிக்  கூட்டிய  அற்புதம்  அறியேனே”  என்னும்  மணி மொழியும்  கண்டு  நினைக்கத்  தக்கது .  இறைவனுடைய  திருக்கைகளுள்  ஒன்று  அபயக்குறிப்பும்,  மற்றொன்று  வரதக்  குறிப்பும்   உடையனவாகக்  காணப்படும்  உண்மையும்  நோக்குக .  நோயுடையயொருவற்கு  , முதலில்  அந்நோய்  தீர்க்கும்  மருந்தும்  ,  அதன்பின்  உடல்நலத்திற்கு   நல்லுணவும்  கொடுக்கப்படல்  வேண்டும் . அங்ஙனமே  பாசப்பிணிப்பிற்கு  அஞ்சி  வந்தவனுக்கு  முதலில்  அச்சத்  தீர்வும்  ,  பின்னர்  இன்ப  அன்பும்  அருளிக்  காப்பதே  முறையாகும் . உளம்  புகுந்து   செய்யும்  அக  ஆட்சியைத் தானும்,  புற  ஆட்சியைத்  தன்  அடியாரைக் கொண்டு  இறைவன்  செய்தது  உலகியற்கும்  ஒத்தது  ஆதல்  அறிக . இறைவனுக்கும்  அவன்  அடியார்க்கும்  வேற்றுமை   கருதலாகாதென்னும் உண்மையும்  இதனாற்  புலனாம் .  

                  இனி, அகத்தே  புகுந்து  ஆண்டதன்  பயனைப்  புலப்படுத்துவார், “அமுதம் ஊறி  அகம்  நெக  அன்புகூர” என்றார். திட்பமானதொரு  பொருள்  உருகினால்,  அப்பொருள்   இயல்பினின்றும்  வேறுபடாத  திரவப் பொருளாகவே   காணப்படும்  அன்றி  வேறாகாது . இங்கே  அடிகள்  உள்ளம்  குழைந்து  உருகுங்கால்   எங்ஙனம்  ஆயிற்று எனின் , அமுதம்  ஊற்றெடுப்ப  உருகிற்றாம் .  அடிகள்  தம்  உள்ளத்தை  , “இருப்பு  நெஞ்சம்  “  , “கன்நெஞ்சம்”  “நெஞ்சங்கல்லாம்”  என்று  பலவிடத்தும்  கூறியுள்ளார்  ஆதலின், அஃது  உருகுங்கால்  ,  இருப்பு  நீராகவும்    கல்நீராகவும்   காணப்பட  வேண்டும் .  அங்ஙனமின்றி ,  ஆண்டவன்  உட்புகுந்து  ஆண்டமையால்  , இருப்புத் தன்மையும் , கற்றன்மையும்  மாறி  அமிர்தமயமாக  ஆற்றெடுத்து   உருகிற்று   என்பார் , “அமுதம்  ஊறி  அகநெக  “  என்றார் .  உட்புகுந்தாண்டதன்  இயல்பு  முன்னர்  கூறப்பட்டது  காண்க .  உள்ளம்  உருகிய  நிலையில்  ,  ஆண்டு  மிக்கது  மெய்யன்பு  என்பார் .  “அன்பு  கூர” என்றர்  .  “பெறவே  வேண்டு மெய்யன்பு”  என்பது  அடிகள்  மணி மொழி.  “அன்பே  சிவமாவது  “  என்று  திருமந்திரம்  கூறியபடி  , சிவவடிவமாக  உள்ள  மெய்யன்பு  அகங்குழைந்து  உருகிய  நிலையில்  ,  ஆண்டு  வேரூன்றி  வளர்ந்ததென்பது  அடிகள்  அநுபவம் . “உரமென்னும்  பொருளானை  உருகிலுள்ளுரைவானை “  என்பது  தமிழ்  மறை  .  இங்ஙனம்  அமுதம்  ஊறி   அகம்  நெகவும் , அன்பு  கூரவும்  புகுந்து  ஆண்டான்  என,  அகவாட்சியும்  அதன்  பயன்களும்  தெளிவிக்கப்பட்டன  . இறைவனுடைய  இத்தகைய  செயலின்  அருமைப் பாட்டைக்   கேட்கப் புகின் , இதனை  ஒப்பதாகிய  வித்தைதான்  பிறிதொன்று  உண்டோ?  என  அடிகள்  பெருவியப்பு  அடைகின்றார்  .  வித்தை  அற்புத  உலகியற்  செயலாகிய  மாய  வித்தை  எனவும்  , சிவஞானம்  எனவும்  முன்னர்க் கூறப்பட்டது .  ஒன்றை உருக்கிப்  பிறிதொன்றாக்குதல்   முதலிய  அற்புதச்  செயல்களே  ஈண்டு  மாயவித்தைக்கு  எடுத்துக்காட்டாகும்  .  இனி,  ஞானமே  இறைவன்  சத்தியாதலின்  இறைவனது  பேர் ஆற்றலே  இந்  நிகழ்ச்சிகளுக்கு   எல்லாம்  கரணம்  என்பது  போதரும் . 

           இதன்கண், புறத்தே  செச்சை  மலர்  புரையும்  திருமேனியுடைய  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ஆட்கொண்டமையால் , இறைவன்  சுட்டுப்பொருளாகக்   காணப்படினும்  ,  அகத்தே  புகுந்தாண்டதும்   ஆகாசமாகி  ஆரழலாய்  அந்த  மாய  உண்மைத்  தன்மையும்  காணப்படுதலான், சுட்டறுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக.

                                                **************************************

பாடல் :30 .

தேவர்கோ  அறியாத  தேவ  தேவன்

செழும்பொழில்கள்  பயந்துகாத்  தழிக்கு  மற்றை

மூவர்கோ  னாய்நின்ற  முதல்வன்  மூர்த்தி

மூதாதை  மாதாளும்  பாகத்  தெந்தை

யாவர்கோன்  என்னையும்  வந் தாண்டு  கொண்டான்

யாமார்க்கும்  குடியல்லோம்  யாதும்  அஞ்சோம்

மேவினோம்  அவனடியார்  அடியா  ரோடும்

மேல்மேலுங்  குடைந்தாடி  யாடுவோமே

கருத்துரை :-  இறைவன்  தம்மைப்  புறத்தும்  அகத்தும் ஆட்கொண்டருளி யமையால்  விளைந்த  அச்சத்தீர்வும்  அன்பு  மிகுதலுமாகிய பயன்களை  முன்னைத்  திருப்பாட்டிற் கூறிய  அடிகள் , அப் பயன்களைத்  தாம் அநுபவித்த முறையையும்  , அங்ஙனம்  அனுபவித்தற்கு  ஏதுவாகவுள்ள இறைவனது  அளவிறந்த பெருமைகளும் இத் திருப்பாட்டில்  அருளிச்செய்கின்றார் .

பதவுரை :-  தேவர்கோ  அறியாத  தேவ  தேவன்  =  விண்ணவர்க்கு  அரசனாகிய இந்திரனாலும்  அறியப்படாத  மகாதேவனும்  ,

செழும்  பொழில்கள்  பயந்து  காத்து  அழிக்கும்  =  வளம்  பொருந்திய உலகங்கள் அனைத்தையும்  படைத்துக்காத்து  அழித்தலைச் செய்யும் ,

மற்றை மூவர் கோனாய் நின்ற  முதல்வன்  =  அவனின் வேறாகிய  அயன்  திருமால்  உருத்திரன்  என்னும்  மூவர்க்கும்  தலைவனாக  நிலையுதல்  பெற்ற  முதற் பொருளும்,

மூர்த்தி  =  அவ் அயன் முதலியோர்  வடிவம்  எல்லாம்  தன்  வடிவாக  உள்ளவனும் ,

மூதாதை  =  பாட்டனும் ,

மாது  ஆளும் பாகத்து  எந்தை  =  உமையம்மையார்  ஆட்சிக்குரிய  ஒரு  கூற்றினையுடைய  என்  தந்தையும் ,

யாவர்  கோன்  =  எல்லோர்க்கும்  தலைவனும்  ஆகிய  சிவபெருமான்  ,

வந்து  என்னையும்  ஆண்டுகொண்டான்  =  வலிய  வந்து  மிகச்  சிறியேனாகிய  என்னையும்  ஆளாகக்கொண்டருளினான் ,

ஆதலால்  யாம்  ஆர்க்கும்  குடியல்லோம்  =  நாம்  பிறர்  எவர்க்கும்  அடிமையாக  மாட்டோம் ,

யாதும்  அஞ்சோம்  =  எதற்கும்  சிறிதும்  அஞ்சுவேம்  அல்லேம் ,

அவன்  அடியார்  அடியாரோடு  மேவினோம்  =  அப் பெருமானுடைய  அடியார்க்கு  அடியாரோடு  பொருந்தினோம் ,

மேல் மேலும்  குடைந்து  ஆடி  ஆடுவோம்  =  மேலும்  மேலும்  இன்பவெள்ளத்தில்   மூழ்கித்திளைத்து  ஆடிக்  கூத்தாடுவோமாக  என்பது .

விளக்கவுரை :-   நல்வினைப்  பயனையே  நுகரும்  தேவர்கள் , அது  காரணமாக  இறைவன்  நம்மால்  எளிதில்  அறியத்தக்கவன்  என்று  எண்ணினாராக  , அவராலும், அவர்க்கு  அரசனாக  இருத்தலால்  மிகவும்  எளிமையில்  அறியலாம்  என்று  இறுமாந்த  இந்திரனாலும்  அறியப் படாதவன்  என்பது  தோன்ற , இந்திரன்  முதலிய  தனிப் பெயர்களாற்  சுட்டாமல்  , “தேவர்க்கோ  அறியாத”  என்றார். போக  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டு  , யானே  எல்லோர்க்குந்  தலைவன்  என்று  செருக்குற்றிருந்த  இந்திரன்  அறியாமை  , கோனோபநிடதத்தில்  ஒரு  வரலாற்றில்  வைத்துப்  புலப்படுக்கப்பட்டுள்ளது . அவ் உபநிடத்தில்  பரமசிவன்  , இயக்க  உருவம்  தாங்கி  வந்து  , ஒரு சிறு  துரும்பை  நட்டு  , அதனை  அசைத்தவர்  முதற் பொருளாவார்  என்று  கூறியதாகவும்  , இந்திரன்  முதலிய  தேவர்  எல்லோரும்  மிக  முயன்றும்  , அங்ஙனம்  செய்ய  இயலாமலும்  , அவ்  இயக்கனை  இன்னான்  என்று  அறியாமலும்  மயங்கி  நிற்குங்கால் , அப் பெருமான்  மறைந்து  விட்டதாகவும் , மயங்கி  நின்ற  இந்திரனை  நோக்கி, அப்  பெருமானுடைய  சத்தியும்  இமவான்  புதல்வியும்  ஆகிய  உமையம்மையார்  , விண்ணில்  வெளிப்பட்டு  , “இவ்வியக்கன்  பிரமம்” என்று  கூறிச்  சிவபிரானது  பரம்பொருள்  தன்மையை  வெளிப்படுத்தியதாகவும்  கூறப்பட்டுள்ளன . தேவருள்  வீரிய  பலத்திற்  சிறந்தவன்  இந்திரன்  ஆதலால், அவன்  முகமாகக்  கோனோபநிடதத்தில்  இவ்வுண்மை  தெளிவிக்கப் பட்டுள்ளது . ஆதலின், ஈண்டும்  அடிகள்  ,”தேவர்கோ  அறியாத  தேவதேவன்” என்று  அருளிச் செய்தனர் .

       மக்களை  நோக்க  இந்திரனும்  அவனுக்கு  உட்பட்டாரும்  தேவராதல்  போல , அத் தேவரை  நோக்கச்  சிவபெருமான்  தேவதேவன்  ஆவான்  என்பதாம்  ; இது  பற்றியே  மகாதேவன்  என்றும்  கூறப்படுவன் . இனி, அத் தேவ தேவர் என்னும்  வரிசையில்  வைத்து, அயன்  மால்  உருத்திரன்  என்னும்  இவரும்  எண்ணப்படுதலால் , அவருள் ஓருவனாகிய  உருத்திரனைப்  பரமசிவன்  என்று  அறியாமல்  எண்ணுவார்க்கு , பரமசிவன்  அவ்  உருத்திரன்  அல்லன்; அம் மூவர்க்குந்  தலைவனாவான்  என்பது  தோன்ற  , “செழும் பொழில்கள்  பயந்து  காத்து  அழிக்கும்  மற்றை , மூவக்கோனாய்  நின்ற  முதல்வன்” என்றார் . பொழில்  என்பது  உலகம்  என்னும்  பொருட்டு  .  பல வாகலின்  ,”பொழில்கள்” எனவும்  மக்கள் தேவர்  முனிவர்  என்னும்  அறிவுடையாரையும்  தம்  அகத்துடைமையால் , “செழும்  பொழில்கள்”எனவும் கூறப்பட்டன. உலகம்  என்பது  இடத்தையும் ,அதன்கண்  வாழ்வாரையும்  உணர்த்தும் . அறிவுடைப்பொருள்  உண்மையைத்  தெளிவுறப்  புலப்படுத்தற்குச்  “ செழுமை” என்னும்  அடைபுணர்க்கப்பட்டது  என்க .  பயந்து  காத்து  அழிக்கும்  மூவர்  முறையே  அயன்  திருமால்  உருத்திரன்  என்பார்  ஆவர். மற்றை  என்பது  இந்திரன்  அல்லாத  என்னும்  பொருட்டு  , ஈண்டுக்  கூறிய  உருத்திரன்  , பிரகிருதி  புவனாந்தம்  சங்கரிக்கும்  குணிருத்திரன்  ஆவன்.  சுத்த மாயாபுவனாந்தம்  சங்கரிக்கும்  மகா  ருத்திரனே  பரமசிவனாவன் . இவ்வுண்மையை  , “நம்மவரவரே , மூவரென்றே  யெம்பிரானொடு மெண்ணி  விண்ணாண்டு  மண்மேல் , தேவரென்றே  இறுமாந்து  என்னபாவம்  திரிதவரே” என்று  அடிகளும் , “தேவரில்  ஒருவெனென்பர்  திருவுருச்  சிவனைத்  தேவர் , மூவராய் நின்ற தோரார் “ என்று  சிவஞானசித்தியும்  கூறியவற்றானும்  அறிக . சிவஞான போதம்   முதற் சூத்திரப்  பேருரைத்  தொடக்கத்தில் , மாதவச்  சிவஞான முனிவரர் இதனைத்  தடை விடைகளில்  வைத்து  விளக்கியிருத்தல் ஆண்டு  அறியத்தக்கது . அயன்  முதலிய  மூவரும்  அவ்வத் தொழில் நிலை பற்றித்  தலைவராக  எண்ணப்படினும்  , அவர்  எல்லோர்க்கும்  அத் தகுதிகளை  அளித்துத் தொழில்  புரிவிக்கும்  பெருந்தலைவன்  சிவபிரான்  ஆதலின், “மூவர்கோன்”  என்றார் . “மூவண்ணல்தன்  சந்நிதி  முத்தொழில்  செய்ய  வாளா ,  மேவண்ணல்”  என்பர்  பெளராணிகர்  . படைத்தற்றொழில்  முதலியவற்றைச்  செய்யும்  தேவரனைவரும்  பேரூழிக்  காலத்தில்  இறைவன் பால்  ஒடுங்க , அவ்விரைவன்  ஒருவனே  நிலையுடைப்  பொருளாக இருத்தலின்  , மூவர் கோன் என்ற  அளவில்  அமையாது , “நின்ற  முதல்வன் “  என்றும்  கூறினர் .  நிற்றல்  –  அழிவின்றி ஏகனாக நிலையுதல் . மூர்த்தி  –  வடிவம் . மூவர்கோன் என்றதனால் , அயன்  முதலியோர்   இறைவனின்  வேறாவர்  என்பது பெறப்படுமாயினும்  , அவரெல்லாம் மூர்த்தியாகத்  தான்  மூர்த்திமானாக, அவர் உண்ணின்று  படைத்தல்  முதலியவற்றிற்கு  ஆற்றல்  அளிப்பவன்  என்பது  தோன்ற ,”படைத்தளித்த ழிப்ப   மும்மூர்த்திகளாயினை “ என்பது  ஆளுடைய  பிள்ளையார் அருளுரை.

                இனி,  பிரமன் முதலிய  அதிகார  தேவர்  அனைவரும்  பேரூழிக்  காலத்துத்  தம்மின்  மேற்பட்ட  தத்துவங்களின்  முறையே  ஒடுங்க , இறுதியில்  அவ்வெல்லாவற்றையும் ஒடுக்கி  நின்ற  இறைவன், ஒடுக்கியவாறே  மீளத் தோற்றுவித்தல் பற்றி, அத் தேவார்க்கு  “மூதாதை” ஆயினான்  என்பது. அங்ஙனம்  தோற்றுவிக்குங்கால் , சத்தியும் சிவமும் ஆக  நின்று  தோற்றுவிப்பவன்  என்பது  தோன்ற , “ மாதாளும்  பாகத்து  எந்தை” என்றார் . இறைவன்  சத்தியும்  சிவமுமான தன்மையின் உண்மை யிதுவே . “மாதாளும்  பாகத்து எந்தை” என்றதில் மற்றொரு  குறிப்பும்  உண்டு . அஃது  ஒரு  குழந்தை முதலில் தாயை  அறிந்து , பின்  அவளாற்  காட்டப்பட்டுத்  தந்தையைக்  காண்டல்  போல , முதலில் உமையம்மையை  உபாசித்து , அவள்  அருளால்  இறைவனைக்  காண்டல்  முறையாதலின் , அம் முறைப்படி  அடிகளுக்கு  உதவிய  தாயுடன்  கூடிய  தந்தை  ஆயினான்  என்பது . “இறைவன்  ஆட்கொள்ளுதற்கு  உரிய  தகுதி  ஒரு  சிறிதும்  இல்லாத  என்னையும்  வலிய  வந்து  ஆட்கொண்டு  அருளினான்”  என்று  அடிகள் கூறத் தொடங்குங்கால் , தம்  சிறுமையையும்  அப் பெருமானது  அளவிடற்கரிய  பெருமையையும்  நினைந்தனராக , அந் நிலையிற்  பெரிதும்  வியப்புற்று , மீண்டும் , “யாவர்கோன்”  என்றார் , யாவர்கோனென்புழி, உருபும்  உம்மையும்  தொக்கு  நின்றன . என்னையும்  என்பது  மிசச்  சிறியேனாகிய  என்னையும்  எனவும் , “வந்து” என்பது  வலியவந்து  எனவும்  பொருள்பயந்து நிற்பன . “அடித்தடித்து  அக்கார  முன் தீற்றிய அற்புதம்” என்பது ஈண்டு  நினைக்கத்தக்கது . இறைவன் தம்மை  வலிய  வந்து  ஆட்கொண்டருளி யதைக்  குறிக்குங்கால் , என்னையும்  என ஒருமையிற் கூறிய  அடிகள் , அவ்வாட்சியின்  பயன்  நுகர்ச்சியைக்  கூறப்புகுந்து , தமக்கு  உண்டாகிய  இன்ப மிகுதியானும் , மெய்யடியார் குழுவில்  கலந்ததனால்  அவ்வடியாரை  உளப்படுத்தும் , “யாமார்க்குங்  குடியல்லோம் “ எனப்  பன்மையிற்  கூறத்  தொடங்குகின்றார். “மேவினோம் அவனடியார்  அடியாரோடும்  “ என்பது  சிங்க  நோக்காக  முன்னதற்கும்  பின்னதற்கும் ஏதுவாக  நிற்றல்  அறிக .

           முன்னைத்  திருப்பாட்டில்  இறைவன்  தம்மை  மிகு காதல்    அடியார்  தம்  அடியனாக்கினான்  என்றார் . அதற்கேற்ப , ஆண்டவன்  அருள்  வழி  நின்று, அப் பயனை  அநுபவிப்பவராய்  , இத்  திருப்பாட்டில்  ,”அவனடியார்  அடியாரோடும்  மேவினோம் “  என்றார் . அடியார்க்கு  அடியனாகச்  செய்ததன்  பயனாக  முன்னர்க்  கூறப்பட்ட  அச்சத்தீர்வைக்  குறித்து, “யாமார்க்கும்  குடியல்லோம்  யாதுமஞ்சோம் “ என்று  அடிகள் தாம்  அநுபவித்த  முறையைப்  புலப்படுத்தியருளினார்  .” நாமார்க்குங்  குடியல்லோம்  நமனையஞ்சோம்” என்பர் திருநாவுக்கரசர் . ஈண்டுக்  குடி என்றது  அடிமை  என்னும்  பொருட்டு . இறைவனும்  அவன்  அடியாரும்  அல்லாத  பிறர்  எவர்க்கும்  அடிமையாக  மாட்டோம்  என்பார் , “யாமார்க்கும்  குடியல்லோம்”  என்றார் .  தமக்கு  நேர்ந்த  சார்பு  வலி  நோக்கி  , இனி  எதற்கும்  சிறிதும்  அஞ்சோம் என்பது  தோன்ற  “யாதும் அஞ்சோம்” என்றார் . இஃது அச்சத்தீர்வின்  அநுபவம் ஆகும் . அவன்  அடியார்  அடியாரோடும்  மேவியது  இதற்கும்  ஏதுவாதல்  உணரத்தக்கது.

                 முன்னைத்  திருப்பாட்டில்  அகநெகவும்  அன்புகூரவும்  புகுந்தாண்டான்  பயனை  அடிகள் அநுபவித்த முறை , “ மேன்மேலுங்  குடைந்தாடி  ஆடுவோம் “ என்பதனாற்  புலப்படுக்கப்பட்டுள்ளது . உள்ளம்  அமுதம்  ஊறி  உருகிய  நிலையில்  மெய்யன்பு  பெருகியதாக  ,அதனால்  விளைந்த  பேரின்ப  வெள்ளத்துள்  முழுகித்  திளைத்தெழுந்து , இன்பக் கூத்து ஆடுவோம்  என்பது  அவ்  அநுபவ  விளக்கமாகும் , இன்பக்களிப்பினால்  ஆராமை  தோன்ற , “மேன்மேலுங்  குடைந்தாடி  யாடுவோமே”  என்றார். இங்ஙனம் அடிகள் தம்மை  ஆண்டவன் புறத்தும்  அகத்தும்  ஆட்கொண்டதன்  பயன்களாக  முன்னைத் திருப்பாட்டில்  கூறப்பட்டவற்றின்  அனுபவ நிலை  இத்  திருப்பாட்டில்  குறிப்பாக  புலப்படுக்கப்பட்டது  உணர்ந்து  இன்புறத்தக்கது  .

                   இதன்கண், தேவ தேவன், மூவர்கோன் , முதல்வன் , மாதாளும் பாகத்தெந்தை   என்பன  முதலியவாகக்  கூறப்பட்ட  இறைவனுடைய  உண்மை  இயல்புகள் , மெய்யுணர்விற்கு  அன்றிச்  சுட்டறிவிற்குப்  புலப்படாதன  ஆதலின், சுட்டறுத்தல்  என்னும்  பதிக  நுதலிய  பொருளும் , மேன்மேலுங் குடைந்தாடி  யாடுவோம்”  எனவும்  ,” யாமார்க்கும்  குடியல்லோம்”  எனவும்  கூறியவற்றால்   பத்தி   வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதக  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக .

                                    ****************************************

                    *******************************************************************

4 .  ஆத்தும  சுத்தி

ஆத்தும  சுத்தி  என்பதற்கு  உயிரினது  தூய்மை  என்பது பொருள் . முன்னைப்  பதிகத்தில்  உயிரினது  சுட்டறிவிற்கு  இறைவன்  உண்மைநிலை  புலப்படாதென்பதும் , மெய்யுணர்விற்கே  புலப்படும்  இயல்பினது  என்பதும், அதனால்  இறைவனைச்  சுட்டுப்பொருள்களுள்  ஒன்றாக  வைத்து  எண்ணலாகாது  என்பதும்  தெளிவிக்கப்பட்டன . அங்ஙனம்  சுட்டறுத்து  , இறை  நிலை  உணர்தற்குச்  சிறந்த  கருவியாகிய  மெய்யுணர்வு  விளக்கம்  பெறுதற்கு  ,உயிர்க்கு , தூய்மை  நிலை  இன்றியமையாதது  ஒன்று . அத்  தூய்மை  தானும்  யான்  எனது  என்னும்  அகப்புறப்  பற்றுக்களுக்கு  ஏதுவாகிய  வினைமாசு  நீங்கிய  நிலையில்  ஏற்படுவதாகும் . வினைமாசின்  நீக்கம்  இடையறாத  இறை பணியினால்  பெறத்தக்கது. இறை  பணிக்கு  மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களும்  ஈடுபடல்  வேண்டும்  . ஆதலின்  , அம் மூன்றுனுள்ளுஞ்   சிறந்ததாகிய  மனத்தை  முன்னிலைப் படுத்து , ஏனைய  கரணங்களின்  செயல்களும்  நிகழாமைக்கு   அதனையே  காரணமாகக்  கொண்டு , ஒறுத்துரைக்கு  முகமாக , உயிரின்  தூய்மைக்கு  உரிய  பணிகளை  இப்  பதிகத்து  முதல் ஐந்து   திருப்பாட்டுக்களாலும், அப் பணிகளின்  பயனாகக்  கிடைத்த  இறைவனது  அணுக்கம்  பண்டைப்  பாசத் தொடர்பினால்  ஒரே வழி  நெகிழ்ந்த நிலையில்  , அதுபற்றித்  தமக்கு  உண்டாகிய  ஆற்றாமையைப்  பின்  ஐந்து  திருப்பாட்டுக்களானும்  அடிகள்  அருளிச்செய்கின்றார் . தச  காரியத்துள்  ஒன்றாகிய  ஆன்ம  சுத்தி   இதுவெனக்  கூறுவாரும்  உளர் . அங்ஙனம்  கூறுதற்கு  ஈண்டு  இயைபின்மை  அறிக.  தச காரிய வுண்மை  இத்  திருச்சதகத்தில்  அமைந்திருத்தலைத்  தனியே  ஆராய்ந்து  , “திருவாசகத்தேன்” என்னும்  நூலில்  விளக்கிக்  கூறுவாம் .

அறுசீர்க்  கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாடல் : 31 .

ஆடு  கின்றிலை  கூத்துடை

யான்கழற்  கன்பிலை  யென்புருகிப்

பாடு  கின்றிலை  பதைப்பதுஞ்

செய்கிலை  பணிகிலை  பாதமலர்

சூடு  கின்றிலை  சூட்டுகின்

றதுமிலை  துணையிலி  பிணநெஞ்சே

தேடு கின்றிலை   தெருவுதோ

றலறிலை   செய்வதொன்  றறியேனே .

கருத்துரை :-  இதன்  முன்னைப் பதிகத்து  இறுதித்திருப்பாட்டில்  இறைவன்  தம்மை  ஆட்கொண்டருளியமையால் விளைந்த பயன்கள்  இன்னவெனக்  கூறப்பட்டன.  அவற்றுட்  சிறந்த  அன்பினது  மேலீட்டால்  தம்  ஆன்ம சுத்திக்கு   இன்றியமையாத  இறை  பணியாகிய  கரணங்களின் செயல்கள்  போதிய  அளவு  நிகழாமை  குறித்து ,  நெஞ்சை  முன்னிலைப்படுத்து  ஒறுத்துக்  கூறுமுகமாக  அப்  பணிச்  செயல்களைப்  புலப்படுத்து  இத் திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-   பிண நெஞ்சே  =  பிணத்தைப்போல்  செயலற்றுக்கிடக்கும்  நெஞ்சமே  ,

கூத்து  உடையான்  கழற்கு  அன்பு  இல்லை   =  இன்பத்  திருக்கூத்துடைய  சிவபெருமான்  திருவடிக்கண்  அன்பு  செய்கின்றிலை ,

ஆடுகின்றிலை  =  அன்பு  மிகுதியால்  ஆடுகின்றாயும்  இல்லை  ,

என்பு  உருகிப்  பாடுகின்றிலை  =  எலும்பு  உருகப்  பாடு கின்றாயும்  இல்லை  ,

பதைப்பதும்  செய்கிலை  =  துடித்தலையும்  மேற்கொள்ளுகின்றாய்  இல்லை ,

பணிகிலை  =  வணங்குகின்றாயும்  இல்லை ,

பாதமலர்  சூடுகின்றிலை  =  அப் பெருமான்  திருவடி மலரை  நின் தலை மேல்  சூடுகின்றாயும்  இல்லை ,

பாதமலர்  சூட்டுகின்றதும்  இல்லை  =  அப் பெருமான்  திருவடிக்கண்  மலரைப்  பெய்து  புனைவதுஞ்  செய்கின்றிலை ,

தேடுகின்றிலை  =  அப் பெருமான்  யாண்டு  உள்ளான்  என்று  தேடுகின்றாயும்  இல்லை ,

தெருவுதோறு  அலறிலை  =  ஒவ்வொரு தெருவிலும்  சென்று  அலறுகின்றாயும்  இல்லை ,

துணையிலி  =  அதனால்  துணையில்லாயுமாயினாய்,

செய்வது  ஒன்று  அறியேனே  =  இந் நிலையில்  யான்  செய்யத்தக்கது   இன்னதென்று  ஒன்றையும்  அறியேனாயினேன்  என்பது .

விளக்கவுரை :-  ஆடல்  பாடல்  முதலிய  புறச்செயல்களும் , என்பு  உருகுதல் ,  அன்பு செய்தல் முதலிய  அகச் செயல்களும்  அற்று  உயிர்  நீங்கிய  உடல் போற்  லிடத்தலின்  , “பிண  நெஞ்சே”  என  விளித்தார் . ஆண்டவன்  இன்பத்  திருக்கூத்து  , படைத்தல் முதலிய  ஐந்தொழிற்கும்  தலைமைப்  புலப்படுப்பதாகலின்  , அச் சிறப்பு  நோக்கி  ,” கூத்துடையான் “ என்றார் . அத்  திருக்கூத்தையும்  , அது  நிகழும்  அரங்கத்தையும்  .  “அண்ணலார்  தமக்களித்த  மெய்ஞ்ஞானமேயான அம்பலமுந்  தம்  உண்ணிறைந்த ஞானத்தெழும்  ஆனந்த  ஒருபெருந் தனிக்கூத்தும்  “ என்று  சேக்கிழார்  பாராட்டியிருத்தல்  ஈண்டு  அறியத்தக்கது . அரங்கத்தை மெய்யுணர்வாகவும் திருக்கூத்தை  அம்மெய்யுணர்வில்  தோன்றும்  பேரின்பமாகவும்  புனைந்துரைத்த  இயைபு  இன்புறத்தக்கது . ஆண்டவன்  திருக்கூத்து  , ஆக்கல்  முதலிய  ஐந்தொழிற்  குறிப்பைப் புலப்படுப்பதாலும்  , அத் தொழிற்  பாட்டிற்குரியது  உலகம்  ஆதலாலும்  , அவ் வுலகம்  உடைமையாக ,இறைவன்  உடையவனாவான் ஆதலின்  ,” கூத்துடையான்” என்றார். ஆடல்  பாடல்  முதலிய  செயல்கள் எல்லாவற்றிற்கும்  மூலம்  திருவடிக்கட்  செய்யும்  மெய்யன்பாதலின் , “கழற்கு  அன்பிலை” என்றார் . அகத்தேயுள்ள அன்பின்  மிகுதியால்  நிகழும்  புறச்  செயல்களுல் முதலில்  ஆடலைக்  கூறியது, இறைவன்  கூத்துடையானாதலான் , அதனையே  அன்பரும்  மேற்கோடல்  அவன் உவப்பிற்கும்  பொருத்தமாம்  சிறப்பு  நோக்கி  என்க . இறைவனைப் பாடுங்கால் , அப் பாடற்  பயனை  அழுந்தி  அறிந்து  உள்ளம்  நெகிழப்  பாடுதலே மெய்யன்பின் விளைவாகும் ஆதலின், என்புருகிப் பாடுகின்றிலை”  என்றார் . உருகி  என்னும்  செய்தென்  எச்சத்தை, செயவென் எச்சமாகக் கொள்ளல் வேண்டும் . ஆடலும்  பாடலும்  ,மெய் மொழிகளின்  செயல்கள் ஆயினும்  , அவ்வெல்லாவற்றிற்கும்   காரணம்  நெஞ்சமாதலின்  , அதன்  செயல்களாக  உபசரித்துக் கூறப்பட்டன. பின்  வருவனவற்றிற்கும்  இஃதொக்கும். பதைத்தல்  துடித்தலாகும்  .  உள்ளம்  உருகிப்  பாடுங்கால், விரைவு  தோன்றாத அமைதியே  உள்ளத்தில்  நிலைபெறுவதாகும் . அவ்  அமைதி  இறைவன் திருவடிப்பேற்றிற்குச்  சாதனம்  ஆயினும்  , பாடற் பொருளில்  நெஞ்சம்  திளைக்குங்கால் , இறைவன் திருவடிக் காட்சி  எப்பொழுது  பெறக்கூடும்  என்னும்  விரைவு  தோன்றுமாதலின்  , அவ் விரைவு  பற்றி  நிகழும்  உள்ளப்  பதைப்பு  வேண்டற் பாலதென்னும்  குறிப்புத் தோன்ற ,”பதைப்பதும்  செய்கில்லை” என்றார்.  ஆடல் , பாடல் , பதைத்தல்  என்னும் இம்மூன்று  செயல்களும்  மெய்யன்பினால்  முறையே   மெய் ,மொழி ,மனம் என்னும்  முக்கரணங்களாலும்  நிகழ்வனவாம் .  இந் நிகழ்ச்சி  குறித்து  , ஆண்டவன்  அருள்  கூர்ந்து  தன்  திருவடியை  அகக்  காட்சிக்கு  நல்கினானாக ,  அந் நிலையிலும்  நெஞ்சம்  வணங்காமை  குறித்து  இரங்குவார் , “பணிகிலை” எனவும் , அப் பணிவின்  பயனாக அப் பெருமான் திருவடி  மலரைத்  தலையிற் சூடுதலாகிய பேறு கிடத்திருப்பவும் , செய்கிலை  என்பார் , “பாத மலர் சூடுகின்றிலை”  எனவும்  கூறினர் .  பாதமலர்  இடை நிலைவிளக்காக  நின்று ,பின்வரும் ,”சூட்டுகின்றதுமில்லை” என்பதனோடும்  இயையும்  .  சூடுகின்றதும்  இலை என்புழித்  திருவடியாகிய  மலரை எனப்  பண்புருவும்  , இரண்டாம்  வேற்றுமை  உருபும்  விரித்துக் கொள்ளல்  வேண்டும் .  

           திருவடி  மலரைச்  சூடுகின்றிலை  என்பதனால்  தலைவணக்கமாகிய பணிவு  கூறப்பட்டது . இறைவன்  திருவடியைக்  கண்ட  அளவில் “காண்டலும்  தொழுது  வீழ்ந்தவுடன்  எழுந்து “ என்றபடி  தொழுது  வணங்குதலும்  , அதன் பின் மலர் கொண்டு வழிபடுதலும் முறையாதலின்  பின்னர், “ பாத மலர்  சூட்டுகின்றதும் இலை “ என்றார். ஈண்டுத்  திருவடிக்கண் மலரை  என , ஏழாம் உருபும்  இரண்டாம்  உருபும்  விரித்துக் கொள்க .  சூட்டுதல்  –  மலர் பெய்து அலங்கரித்தல் .  தேடுதல்  – உள்ளத்தே துருவி  ஆராய்தல்.  அருட்  கடலாகிய  இறைவன் திருவடிக் காட்சி அகத்தே  திகழப்பெற்ற அடிகள் , பண்டைப் பாசத் தொடர்பால்  ஓரோவமயங்களில்  அது  புலப்படாமை   நோக்கி  இரங்குதலைப்  பலவிடத்துங்  காணலாம் . அந் நிலையில் உள்ளத்தே  புக்கவன் யாண்டு  ஒளிந்தனன் என்று முயன்று தேடுதல் அடிகள் அநுபவமாகும் .  “உள்ளுருகித்  தேடுவேன்”  என்பது  அடிகள் திருவாக்கு . அங்ஙனம்  தேடுதலால்  உண்டாம்  பயனைப்  பிறிதோரிடத்து  , “பண்டே  பயில்தொறும் இன்றே  பயில்தொறும்  ,ஒளிக்குஞ்சோரனைக் கண்டனம்”  என்று  அடிகளும்  , “தேவனை என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்”  என்று  அப்பரும்  கூறியிருத்தல்  அறிக .  மீண்டும்  காட்சிப்படுதலாகிய  பயனை  நோக்கி  ,அகத்தே  தேடி உணர  முயலுதல்  இன்றியமையாதது  என்பது  கருதி , “தேடுகின்றிலை”  எனவும்  , தேடியும்  பயன்  பெறாத  நிலையில்  தன் வயம்  இழந்து  நாடவர்  பழித்துரை  பூணதுவாகக் கொண்டு  , தெருக்கள்  தோறும்  சென்று  , இறைவன்  திருப்பெயர்களைக்  கூவிக்  கதறுதலை  மேற் கொள்ளின்  , அந் நிலை  குறித்தாயினும்  இறைவன்  வெளிப்படுதல்  கூடுமே ; அதுவும்  செய்திலை  என்பார், “ தெருவு தோறலறிலை” எனவும்  கூறினர் . மேற் குறித்த  ஆடல்  பாடல்  முதலிய  அன்பின்  விளைவாகிய  செயல்களை  மேற்கொள்ளாமையால் , அழி வில்  இன்பப் பேற்றிற்குத்  துணை  செய்ய  வேண்டிய மனம் தமக்குத்  துணையாக இல்லை  என்பது  கருதி,”துணையிலி”  என்றார்.  இனி,  துணையிலி  என்னும்  சொற்கு  , நீ  துணை இழந்திருக் கின்றாய்  என நெஞ்சை  நோக்கிக்  கூறியதாகவும்  கொள்ளலாம் . நெஞ்சம்  திருவருட்  பேறு  எய்துதற்கு  இத் திருப்பாட்டில்  குறித்த  செயல்கள்  எல்லாம்  துணைக்கருவிகளாகவும்  , அத்துணையை இழந்திருக்கின்றாய் எனக்  கொள்ளுதலும்   பொருத்தமே . தம்  முயற்சிக்குப்  பெரிதும்  துணை  நிற்க வேண்டிய நெஞ்சம்  , அங்ஙனம்  நில்லாமையால்  , மேற்செய்யக்கடவது   இன்னதென்றும்   அறியேன்  என்பார் , “செய்வதொன்றறியேன்” என்றார் ,  செய்யத்தக்கது  சிறிது  அறியினும் , அந் நெறியைக் கடைப்பிடிக்கலாம் ; அத்துணை தானும் இன்று  என்பது , “ஒன்றும்” என்னும்  சொல்லாற் பெறப்படும்  . உம்மை  தொக்கு  நின்றது .

            இதன்கண்,  ஆடல்  பாடல்  முதலிய  அன்புச்செயல்களின்   இன்றியமையாமை   கூறப்பட்டிருத்தலின், பத்தி  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  , அச்செயல்கள் ஆன்மாவின்  தூய்மைக்கு  வேண்டற்பாலன  என்பதனால் , ஆத்தும சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  விளக்கமாதல்  அறிக.

                                        ****************************************

பாடல் : 32 .

அறிவி லாத  எனைப்புகுந்

தாண்டுகொண்  டறிவதை  யருளிமேல்

நெறியெ  லாம்புலம்  ஆக்கிய

எந்தையைப்  பந்தனை   யறுப்பானைப்

பிறிவி  லாத இன்  அருள்கள் பெற்

றிருந்துமா  றாடுதி  பிணநெஞ்சே

கிறியெ  லாமிகக் கீழ்ப்படுத்

தாய்கெடுத்  தாயென்னைக்  கெடுமாறே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  மெய்யன்பினால்  நிகழும்  ஆடல்  பாடல்  முதலிய  செயல்களை  மேற்கொண்டு  , தமக்குத்  துணை செய்யாமை  பற்றி  நெஞ்சத்தை  வெறுத்துக்  கூறிய  அடிகள், அந்  நிலையிலும்  இறைவன்  தன்  அருட்கு  இடனாக்கிய  பேருதவியைப்  பெற்றிருந்தும்  , அங்ஙனம்  துணை  செய்யாமையோடு  அமையாது. மாறாகவும்  நின்று  தமக்குக்  கேடு  விளைத்தலைக்  குறித்து , அந் நெஞ்சை நோக்கி  இத் திருப்பாட்டில்  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- பிண நெஞ்சே  =  பிண  நெஞ்சே ,

அறிவு  இலாத  எனை  =  மெய்யறிவு  இல்லாத  அடியேனை ,

புகுந்து ஆண்டுகொண்டு   =  வலிய  வந்து  ஆளாகக்  கொண்டு  ,

அறிவதை  அருளி  =  தன்னை அறிதற்குக்  கருவியாகிய  ஞானத்தை  நல்கி ,

மேல்  நெறியெலாம்புலம்  ஆக்கி  எந்தையை  =  மேலாகிய  வீட்டிற்கு  உரிய  வழிகள்  எல்லாவற்றையும்  விளங்கச் செய்த  என்  தந்தையும் ,

பந்தனை அறுப்பானை   =  பாசப்பிணிப்பை  ஒழிப்பவனும்  ஆகிய  சிவபெருமானை ,

பிறிவு  இலாத  இன்  அருள்கள் பெற்றிருந்தும்  =  எஞ்ஞான்றும்  நீங்குதல்  இல்லாமைக்கு  ஏதுவாகிய  இனிய  அருள்  உதவிகளை  எளிதில்  பெற்றுக்கொண்டும் ,

மாறாடுதி  =  மாறுபட  நிற்கின்றாய் ,

கிறி  எலாம்  மிக  =  பொய்மை எல்லாம்  மேலோங்கி  நிற்க ,

என்னைக்  கீழ்ப்படுத்தாய்  கெடுமாறு  கெடுத்தாய்  =  என்னைக்  கீழ்ப்படத்  தாழ்த்துக்  கெட்டு  ஒழியுமாறு  கெடுத்தாய்  என்பது .

விளக்கவுரை :-  “பிண  நெஞ்சே” என்பதை  இருமுறை  ஓதி  , முறையே  விளியாகவும்  ஏகாரத்தை  வினாப்பொருளில்  வந்த எதிர்மறையாகக் கொண்டு  பிண நெஞ்சல்லை  எனவும்  பொருள் கொள்ளல்  வேண்டும். இங்ஙனம்  மூல பாடத்தை  இருமுறை  ஓதிப் பொருள்  வேறு  கோடலைத்  தொல்காப்பியச்  சொல்லதிகாரம்  – 77 ஆம்  சூத்திரத்திற்குச்  சேனாவரையர்  கூறிய  உரையினும்  அறிக . ஆடல்  பாடல்  முதலிய  புறச்  செயல்களும்  அன்பினால்  உருகுதல்  முதலிய  அக  உணர்ச்சியும்  அற்றுத்  துணை செய்யாமற்   பிணம்  போற் கிடந்தமை நோக்கி  , முன்னைத்  திருப்பாட்டில்  ,”பிணநெஞ்சே” என்ற  அடிகள்  ,இத்  திருப்பாட்டில்  “மாறுபட்டுக்  கேடு  செய்கின்றாய் ஆதலின் , பிணம் போற்  செயலற்ற  நெஞ்சாகவும்  இல்லையே “ என  வியந்து  இரங்குவாராய் , “பிண நெஞ்சே?” என்றார்  என்பது  .  பிணம்  நற்செயலின்றி  கிடத்தல்  போலயே  தீச் செயலும்  செய்யாமற் கிடக்கும். ஈண்டு  மாறுபட்டுக்  கேடு  விளைத்தலாகிய  தீச் செயலைச்  செய்கின்ற மையின் , பிண  நெஞ்சாகவும்  இல்லையே  என்பது  உட்கோள் .

            ஆண்டவன்  அன்பரை  ஆட்கொள்ளுங்கால் , அவ்வன்பர்  உயிராகிய  தம்  இயல்பையும்  , தம்மை  உடைமையாக வுள்ள உடையனாகிய  இறைவன்  இயல்பையும்  அறியும்  அறிவுடையராக  இருத்தல்  வேண்டும் . இதுவே  ஆட்கொள்ளுதற்குரிய  தகுதியாகும் . இங்ஙனமாகவும்  , அத் தகுதியில்லாத  நிலையில் இறைவன்  வலிய  வந்து  தம்மை  ஆட்கொண்டருளிய  அருட்டிறத்தைப்  பாராட்டுவாராய்  ,” அறிவில்லாத  வெனைப்  புகுந்தாண்டு  கொண்டு “ என்றார். “அறிவிலாமையன்றே  கண்ட தாண்ட நாள்” என்று  பிறிதோரிடத்தும்  அடிகள்  அருளிச்  செய்தமை  அறிக . ஆட்கொண்ட  பின்னரே, தம்மை  உணர்ந்து  தமையுடைய  தன்னுணரும்  ஞானத்தை  இறைவன்  தமக்கு  அருளினன்  என்பார், “ அறிவதையருளி”  என்றார். ஓர்  அரசன்  அமைச்சியல்  தகுதி பெறாதான் ஒருவனை  அன்புரிமை  பற்றி  அப்  பதவியில் இருத்திப்  பின்  அவனைப்  பெருமைப் படுத்தற்கும்  தகுதி யில்லாதானைத்  தெரிந்தெடுத்த  குற்றம்  தன்னச்  சாராமைப்  பொருட்டும் , அவற்கு  அத் தகுதியையும் உதவுதல்  போல , ஆட்கொள்ளுதற்குரிய    அறிவிலாத  தம்மை  , அருட் பெருக்கால்  ஆட்கொண்டு  , பின்னர்  அதற்குத்  தகுதியாகிய  ஞானத்தையும்  இறைவன்  அருளினான்  என்பது   அடிகள்  கருத்து. மெய்யுணர்வை  அருளிய  அளவில்  அமையாது , அதனால் அடையத்தக்க  வீட்டிற்குரிய  நெறிகள் பலவற்றையும்  புலப்பட  வைத்தான் என்பார், “மேல் நெறியெலாம்  அடைதற்புலமாக்கிய  “  என்றார். இந்திரன்  முதலியோர்  பதவிகளை  அடைதற்குரிய   சிறு  நெறிகளைப் போலாது  ,அழி வில்  இன்பப்  பேற்றிற்குரிய  நெறிகள்  என்பது  புலப்பட  ,”மேல்  நெறியெலாம்  “ என்று  கூறப்பட்டது . எல்லாம்  என்பது , வீட்டு  நிலை அடைதற்குரிய  அன்புநெறி  ஞானநெறி  முதலிய உயர்நெறி  பலவற்றையும்  குறிக்கும் . அவ் எல்லா  நெறிகளும்  முடிவில்  இறைவனையடைதற்குரியவாயினும் , அவற்றுள்ளும்  இடர்ப்பாடின்றி  எளிதில்  அடைதற்குரிய  நன்நெறி  ஒன்றே  வேண்டத்தக்கதாவும்  அவெல்லா  நெறிகளையும்  புலப்பட  வைத்து  , அவறின்  அருமை  எளிமைகளை  உணர்ந்து மேற்கொள்ளுதற்கேயாம் . செவ்விய  நன் நெறி யாகிய   சிவ நெறி  ஒன்றையே  புலப்படுத்து  , அந்நெறியே  ஒழுக  உபகரித்தல்  போதியதாகவும் , பன்நெறிகளையும்  புலம்  ஆக்குதல்  எற்றுக்கெனின் , ஒழுகும்  நெறி ஒன்றே; அது  சிவநெறியாகும்  . பலநெறிகளையும்  அறிய  வைத்து  , அவ்வெல்லா நெறிகளினும்   சிவநெறியின்  சிறப்புத்  தெளிதற்கென்க . இது  கருதியே , நெறியெல்லாம் புகுவித்த  என்னாது , “நெறியெலாம்  புலமாக்கிய”  என்றார் . இத்தகைய  உண்மை  நெறிவிளக்கம்  , ஞானத்தந்தை  தன் அருமைப்  புதல்வனுக்குச்  செய்யத்தக்கதாகலின்   “எந்தையே” என்றார். ஆண்டவன்  தமக்குப்  பல நெறிகளும் புலனாதற்கு   ஏதுவாகிய  அறிவொளியை உதவிய  தந்தையாதலோடு , அந்நெறிகளுட்  சிறந்ததாகிய  சிவநெறிக்கண் சேறற்குத்   தடையாகவுள்ள  பாசப்பிணிப்பை  அகற்றும்  ஞானாசிரியனும்  ஆயினான்  என்பது தோன்ற , “பந்தனை  யறுப்பானை “ என்றார் . இத்தகைய பேருதவியாளனாகிய இறைவன் , ஞான முதலிய  சாதனங்களை உதவிய அளவில் அமையாது , இடையறாது  சாத்தியமாகிய  தன்னை  அநுபவித்தற்கும்  நெஞ்சிற்கு  இன்னருள் புரிந்தானாக , அவ்வுதவியை அடைந்திருந்தும்  என்பார், “ பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்  “ என்றார்.  பிறிவில்லாமை – ஒரு கணப்பொழுதும்  நெஞ்சில்  நின்றும்  நீங்காமை . “இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறிய  மணி மொழியும் ஈண்டு  நினைக்கத் தக்கது . இறைவன்  அன்பர்க்கு  நன்நெறி காட்டி  உபகரித்தலோடு  , அந் நெறியே   போந்து இன்பம்  நுகர்தற்குத்  தன்னையும்  வழங்கும்  பெரு வண்மையாளன்  என்பதை  , “தன்னைத்  தந்த  என்  ஆரமுதை”  என்னும்  அடிகள் மணி மொழியாலும்  ,”தன்னையே  தந்தான் என்றுந்தீபற “ என்னும்  சைவ  நூற் குறிப்பானும்  உணரலாம் . பிறிவில்லாத  என்னும்  எச்சம்  காரணப்பொருட்டு .

           இறைவனது  கருணை  , அறக்கருணை எனவும், மறக்கருணை  எனவும்  இருதிறப்படும்  . அவற்றுள்  தன்நெஞ்சில் நின்று  நீங்காமைக்கு  ஏதுவாகச்  செய்த  கருணை என்பார் , “இன்னருள்கள்” என்றார். அருள்ஒன்றாயினும்  , அதனைப் பெற்ற  நெறி  பலவாதலின்  ,அருள்கள்  எனப்  பன்மை  கூறப்பட்டது. திருவருட் பேறு  கிடையாத பொழுது , அது குறித்து வேண்டிஇரங்குவதல்லது  மாறுபட்டு  இகழுதல் , இறைவன்  திறந்து மேற்கொள்ளத் தகாததொன்றாம் . அங்ஙனம்  ஆகவும்  , அவ்வருளோ கிடைக்கப்பெற்றுள்ளது ; ஒருவாறு அது மறக்கருணையாக  இருப்பின், அறியாமையால்  மாறுபடுதலும்  பொருந்தும் . அக் கருணையோ இன்னருள்  ஆயிற்று , அதனை  முற்றும்  அடைந்திருந்தும் , நன்றி  மறந்து மாறாகவும்  நடத்தல் என்ன  அறியாமை என்பார், “ மாறாடுதி” என்றார்.  அதனால் , கீழ்ப்பட்டுத் தேய்ந்து ஒழிய வேண்டிய  எல்லாம்  மேற்பட்டு  உயரவும்  , உயர்ச்சி  பெற்றுச்  சிறப்படைய  வேண்டிய யான் கீழ்ப்பட்டுக்  கேடு  எய்தவும் நேர்ந்தன என்பார் , “கிறியெலாம் மிகக்  கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் எனை “ என்றார். நெஞ்சம்  நன்னிலைப்பட்டுத்  தூய்மை யுடையதாக  இருக்குமாயின் , வஞ்சகம் , பொய்  முதலிய  இழி குணங்கள் எல்லாம் கீழ்ப்பட்டுத்  தேய்ந்து ஒழியும்  என்பதும் , அவ்வொழிவினால்  உயிர்  நன்னிலை  எய்தி ,இறையருட் பேற்றினால்  உயர்ச்சி பெறும்  என்பதும்  ஞானநூல்  துணிபாகும் . அம் முறைக்கு  மாறாக ஆயிற்று  என்று இரங்குவார்  “ கிறியெலாம் மிக”  எனவும் , “கீழ்ப்படுத்தாய்  கெடுத்தாய் எனை “ எனவும் கூறியருளினர் . வஞ்சகம்  பொய்  முதலிய  இழி  குணங்களை  மிகுதிப்படுத்து முகமாக  , தம்மைக்  கீழ்ப்படுத்து , நெஞ்சம்  கேடு  செய்தது என்பது  கருத்து . கெடுமாறு  கெடுத்தாய்  என  முடித்தல்  வேண்டும் .  கெடும் ஆறு  –  யான்  கெடுதற்குரிய  உபாயம் . ஆறு , உபாய மென்னும்  பொருளாதலை  “ஆற்றின்  வருந்தா  வருத்தம்”  என்னும்  குறட்பகுதிக்குப்  பரிமேலழகர்  கூறிய  உரையானும்  அறிக.  இனி, “என்னை” என்பதை  இடைநிலை  விளக்காகக்  கொண்டு  , என்னைக்  கெடுத்தாய்  என  இரண்டாம்  உருபு  பெற்று  வந்த  தன்மை  ஒருமைப்பெயராகவும் ,இனிக்  கெடுமாறு  என்னை யென  வினாக்குறிப் பாகவும் கொள்ளுதல் பொருந்தும் . இப் பொருட்குக்  ககர  ஒற்று  மிகாமைப்  பாடங்  கொள்ளல்  வேண்டும் .

                    இதன்கண்,  இறைவனது  சிறந்த  பேருதவியை  நினைவு  கூறாமல்  மாறுபடும்  நெஞ்சத்தை  வெறுத்துரைக்கும்  முகமாக  , உயிரின்  தூய்மைக்கு  உரிய  பிரிவில்லாத   இனி  திருவருட் பேற்றின்  பெருமை  கூறப்பட்டிருத்தலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும் , “கிறியெலாமிகக்  கீழ்ப்படுத்தாய் “ என்பதனால்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல்  அறிக.

                                           ***********************************

பாடல் :33 .

மாறி  நின்றெனைக்  கெடக்கிடந்

தனையையெம்  மதியிலி  மடநெஞ்சே

தேறு  கின்றிலம்  இனியுனைச்

சிக்கெனச்  சிவனவன்  திரள்தோள்மேல்

நீறு  நின்றது  கண்டனை

யாயினும்  நெக்கிலை  இக்காயம்

கீறு கின்றிலை  கெடுவதுன்

பரிசிது  கேட்கவுங்  கில்லேனே .

கருத்துரை :-  தம்  நெஞ்சம்  தமக்கு  மாறக  நின்று  கேடு  விளைத்தலைக்  குறித்து  முன்னைத்  திருப்பாட்டில்  இரங்கிக்கூறிய  அடிகள் , அங்ஙனம்  மாறுபடுதற்குக்  காரணம் , அறிவுரையைக்  கேளாத  மடமை  எனக் கண்டு , அந் நிலையில்  அது  நம்புதற் குரியது  ஆகாது  என்பதையும் , அதனால்  அங்ஙனம்  மாறுபட்ட  நெஞ்சின்  வழி  நிற்றல்  இயலாததென் பதையும்  இத்  திருப்பாட்டில்  வற்புறுத்துக்  கூறுகின்றார்.

பதவுரை :-  எம் மதியிலி  மட  நெஞ்சே  =  யாம்  கூறும்  அறிவுரையை  ஏற்றுக்கொள்ளாத  அறியாமையை  உடைய  நெஞ்சமே ,

எனை மாறி நின்று  =  என்னை  மாறுபட்டு   நின்று  ,

கெடக்  கிடந்தனையை  உன்னை  =  யான்  கெடுமாறு  என்பொற் கிடந்த  நின்னை  ,

இனிச் சிக்கெனத்  தேறுகின்றிலம்  =  இனி மேல்  உறுதியாகத்  தெளியமாட்டோம் ,

சிவன்  அவன்  திறள் தோள் மேல்   =  சிவபெருமானாகிய  அவ்  இறைவனுடைய  திரண்ட  தோள்களிடத்து  ,

நீறு  நின்றது  கண்டனை   ஆயினும்  =  திருநீறு   நிலை பெற்று   விளங்குதலைக்  கண்டாய்  ஆயினும் ,

நெக்கிலை  =  உருகுகின்றாய்  இல்லை,

இக் காயம்  கீறுகின்றிலை   =  இவ் வுடலைப்  பிளவுபடச்  செய்கின்றாய்இல்லை ,

உன்  பரிசு கெடுவது  =  உன்  தன்மை  கேடு  விளைப்பதாகும்  ,

இது  கேட்கவும்  கில்லேன்   =  இதனைக்  கேட்கவும்  ஆற்றேன்  என்பது.

விளக்கவுரை :-  இத்  திருப்பாட்டில்  , “எனை”  எனவும் , “கில்லேன்” எனவும்  தம்மை  ஒருமையில்  வைத்துக்  கூறிய  அடிகள்  , “எம்மதியிலி”  எனப்  பன்மை  கூறியது , தம்  நெஞ்சு  , தாம்  கூறும்  அறிவுரையைக்  கேளாமையோடு  , மற்றை  அன்பர்  அறிவுரைகளையும்  ஏற்று  நடக்கவில்லை  என்பது  குறித்தாம் . ஒரு  குழந்தைக்குத்  தந்தை  கூறும்  அறிவுரை  விழுமிதாயினும்  , அதனை  ஏற்றுக்கொள்ளாவிட்டால் , அது குறித்துத்  தந்தை வெறான்  என்னும்  துணிவு  பற்றி  , அக் குழந்தை  அதனைப்  பொருட்படுத்தா மலிருத்தலும்  ஆசிரியர்  முதலிய  மற்றையோர்  கூறும்  அறிவுரையை  வெறுப்பிற்கு  அஞ்சியாவது  ஏற்றுக் கேட்டலும்  உலகியலிற்  கண்டவை .  அம்முறையில்  அடிகள்  தம்  நெஞ்சு  தாம்  கூறும் அறிவுரையை ஏற்றுக்  கொள்ளவில்லை  யானாலும்  ,மற்றை மெய்யன்பர்  கூறும்  அறிவுரைகளையாவது  ஏற்றுக்கொண்டிருக்கலாம் ; அப்படியும் இல்லையே  என வருந்துவார் ,அவ்வன்பரையும்  உளப்படுத்து  “எம்மதி” எனப் பன்மையாகக்  கூறினர். மடம் – அறியாமை. இயல்பாகவே  அறியாமையுடைய  நெஞ்சத்தைத்  தாமும்  பிற அன்பர்களும்  இடித்து ரைத்து  அறிவுறுத்தும்  திருந்தவில்லை  என்பது  தோன்ற  ,”மட  நெஞ்சே”  என்றார்.  “ஏவவுஞ் செய்கலான் தான்  தேறான்  அவ்வுயிர்  , போம்  அளவும்  ஓர் நோய்”  என்னும்  பொருளுரைப்படி  , நெஞ்சே , என்ற  அளவில்  அமையாது  , யெம் மதியிலி மட நெஞ்சம் தானாகவும் அறிந்திலது ; பெரியோர்  அறிவுரைகளையும்  கேட்டிலது  என்பது  கருத்து . நெஞ்சிற்கு  அறிவின்மை  கூறியது  .  உணர்ந்தபடி  ஒழுகுதற்கு  இடந்தராமை  குறித்து , “கை கவியாச் சென்று  கண் புதையாக்  குறுகி – தொடிக்கை  தைவரத்  தோய்ந்தன்று  கொல்லோ, குறுமகள்,  மென்றோள் பெறநசை  இச் சென்ற  என் நெஞ்சே “ என்று  அகப்பாட்டில்  நெஞ்சிற்குக்  கை  முதலிய  உறுப்புக் கூறியது  போலக்  கவிமரபும்  ஆம் , “வாழ்த்த  வாயிம்  நினைக்க  மடநெஞ்சும் , தாழ்த்தச் சென்னியும்  தந்த  தலைவன்” என்று தமிழ் மறை கூறியபடி ,இறைவனை  நினைந்து உய்தி பெறுதற்குக்  கருவியாகத்  தமக்குக்  கிடைத்த  நெஞ்சம்  , அங்ஙனம்  துணை நின்று  உபகரியாமையோடு  , பகைமையையும் மேற்கொண்டு  நின்றது  என இரங்குவார், “ எனை  மாறி  நின்று “ என்றார் . “எனை” என்புழி  ஐகாரம்  “செறலின்  உவத்தலின் “ என்பனவற்றுள்  செறுதற்  பொருள் பற்றி  வந்தது. “செறல் – வெகுளியது  காரியம்”  என்பர்  சேனாவரையர் .

                   வெளிப்பட  நிற்றலால் , அறிந்து  விலக்குதற்குரிய  புறப்பகையினும்  , மறைந்து  நின்று  கெடுக்கும்  அகப்பகை  கொடிது  என்பது  தோன்ற  , யான் “கெடக்கிடந்தனை” என்றார் . யான் கெடுமாறு  என்பாற்  கிடந்தனை என்றது , என்னைப் பற்றுக்கோடாகப்  பற்றி  நின்றே எனக்குக்  கேடு  விளைத்தலால்  , உய்தியில்லாத  நன்றி  மறத்தல் என்னும்  குற்றத்திற்கு  ஆளாயினை  என்று  அடிகள் நெஞ்சை  வெறுத்தவாறு இது.  கிடந்தனையை  என்பது  முன்னிலை வினையால ணையும்  பெயராய் , இரண்டன் உருபு  ஏற்று  நின்றதெனக்  கொள்ளலாம்  .  கிடந்தனையாகிய  உன்னைத்  தேறுகின்றிலம்   என முடிக்க  . ஐகாரம்  சாரியை  எனக் கோடலும்  உண்டு . உட்பகையாக  நின்று  கேடு  விளைக்கும்  உன்னை  நம்புவேம் அல்லேம்  என்பார் . “இனி  உனைத்  தேறுகின்றிலம்”  என்றார் .”உட்பகை அஞ்சித்  தற் காக்க உலைவிடத்து   மட் பகையின்  மாணத்  தெறும்” என்பது பொய்யில்  புலவர்  பொருளுரையாதலின், தற்காப்பின்  நிமித்தம்  தெளிகிலேன்  என்பார்  இங்ஙனம்  கூறினர் . மேலே  நெஞ்சிற்கு  அறிவுறுக்கும்  முகமாக, மற்றை மெய்யன்பரையும்  உளப்படுத்துக்  கூறியதற்கு  ஏற்ப , தெளியாமைக்கும்   அம் மெய்யன்பரை உளப்படுத்து ”தேறுகின்றிலம் “ என  ஈண்டும்  பன்மை  கூறினர் . யான்  நம்பாமை உனக்குப்  பொருள்  இல்லை  ஆயினும்  , மெய்யன்பரும்  நம்பமாட்டார் என்று  நெஞ்சை  இடித்துக் கூறியவாறு  இது .  வஞ்சத்தால் ஓரோவமயம் நல்லது  போல்  நடித்துத்  தேறற்கு  இடனாகலாம்  என்று  ஒரு சிறிதும்  கருதற்கும்  என்பது  தோன்ற  , “சிக்கெனத்  தேறுகின்றிலம்”என்றார். சிக்கென  என்பது  உறுதியாக  என்னும்  பொருட்டு .

       மறை  யாகமங்களால்  துணியப்பட்ட இன்ப  வடிவினனாகிய  அவ்  இறைவன்  என்பார், “சிவனவன்” என்றார். அவன்  என்னும் சுட்டுப்பெயர்  பண்டே  பரம்பொருள் என  அறியப்பட்டவன்  என்பதை  உணர்த்தி  நிற்பதாகும் , “திரள்  தோள்” என்றது, மனித வடிவில்  உருமேனி தரித்துக் கொண்டு  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சி  நல்கிய பொழுது  காணப்பட்ட  திருமேனியின்  உத்தம   இலக்கணத்தைக்  குறிப்பதாகும் . திரண்டதோள்  அளவில்  காணப்பட்டதாயின்  , சிறந்த   ஆடவருள் ஒருவனைப்  புலப்படுத்தும் அவ்வளவிலாம் .  ஈண்டு  உறுப்பு  நலங்களில்  ஏதும்  குறையில்லாத  ஞானாசிரியன்  என்பதை  , “திரள் தோள் மேல்  நீறு  நின்றது “ என்னும்  தொடர்  விளக்க முறுத்துவதாகும்  . நீறு  உபலக்கணத்தால்  உருத்திராக்க மணியையும்  உணர்த்தும் . “உருவுடலிற் கண்டிகை  நீறு”  என்பது  சைவாகமம் . இறைவன்  திருமுக மண்டலத்து இயற்கை ஒளியோடு இயைந்து ,திருநுதல் வெண்ணீற் றொளி விஞ்சி நிற்றலையும், அப் பேரொளியைத்  தம்  கண்ணொளியின் வரம்பிற்கு  அடக்கி  அறியத்  தம் நெஞ்சிற்கு  ஆற்றல்  இல்லாமையையும்  உணர்ந்து , “திரு நுதல் மேல் நீறு நின்றது  கண்டனை “  என்னாது,  “திரள் தோண்மேல்  நீறு  நின்றது  கண்டனை” என்றார். உலகத்த்ப்  பொருள்கள் எல்லாம்  முடிவில்  நீறாகும் ; நீறு  பிறிதொன்றாகாது . ஆதலின்  , அஃது  இறைவன் திருமேனியில்  நிலை பெற்று  நின்றதென்னும்  குறிப்பு  , உலகம்  முற்றும் தன்பால்  ஒடுங்க, இறைவன் ஒருவனே  தனி முதலாகத் திகழ்வன்  என்பதைப்  புலப்படுப்பதாகும் . “ அந்த மதாவது  நீறு” என்று தமிழ்  மறை இயம்புதலும்  தெளிக. “திரள்  தோள் மேல் நீறு  நின்றது கண்டனை” என  இறந்த காலத்திற்  கூறியதனால் , இப்பொழுது காண் கின்றாயில்லை  என்பது  போதரும் . இறைவன்  உருமேனி  தரித்துக் கொண்டு  ஞானாசிரியனாக எழுந்தருளி  வந்து , அடிகட்கு உபதேசித்து , இன்னுஞ்  சின்னாள் இருத்தி என்று  சொல்லி  உருக்கரந்த நிலையில் , அப் பிரிவாற்றாது வருந்திக்  கூறிய  குறிப்புக்கள் இப் பதிகத்தின்  பல  பகுதிகளிலும்  காணப்படுகின்றன . அக் குறிப்பே இத்  திருப்பாட்டிலும்  புலப்பட  வைத்தார் எனக்  கூறலாம் . அப் பெருமான் ஞானாசிரியன்  நிலையில்  வெளிப்பட்ட வமயம்  கண்டது  திரள் தோள் மேல்  நீறு  நின்றது . உருக்கரந்த  இந்நிலையில்  அக் காட்சியை நினைத்தாயினும் உருகுகின்றாயில்லை  என்பார், “ஆயினும்  நெக்கிலை “  என்றார் .

             தமக்குக்  குருவடிவில்  வந்து , அபரஞானமாகிய  சிவஞானபோத  நூல் அறிவையும் , அவ்வழி  ஒழுகுதலாகிய  பரஞானம் என்னும்  அநுபவ வுணர்வையும்  அருளிக்காத்த  இறைவனது  திருவுருவம்  , தம்கட் புலனுக்குத் தோன்றாத  நிலையில் , “தலைவனை  நனிகாணேன்  தீயில்  வீழ்கிலேன்” என்று  துடித்து வருந்திய  உண்மையைப்  பிவரும்  திருப்  பாட்டுக்களில்  பரக்கக்  காணலாம் . அம்முறையே  பரமபதியின் பிரிவை  ஆற்றாது  , “நெக்கிலை” என  உள் நிகழ்ச்சியையும்  , “இக் காயம் கீறு கின்றிலை” எனப்  புற  நிகழ்ச்சியையும்  மேற்கொண்டிலை என நெஞ்சை  முன்னிலைப்படுத்துக்  கூறுவாராயினர் . இக் காயம்  என்னும் சுட்டு , கிடைத்தற்கரிய   பேற்றை  இழந்து வெறுவிதாயிருக்கும்  நிலையைப்  புலப்படுத்துவதாகும் . இந் நிலையில் இவ்வுடல் எதற்கு  வேண்டும்? பயனற்ற  இவ்வுடலைச்  சிதைத்து விடுதலே  நலமாகவும், அங்ஙனம்  செய்தற்கு  ஒருப்பட்டிலை என்பார், “இக் காயம்  கீறு கின்றிலை “ என்றார். இங்ஙனம்  பிரிவு  பற்றி  , அகத்தும்  புறத்தும் இரக்கக்  குறிப்பு  மேற்கொள்ளாதிருக்கும்  நின் இயல்பு உனக்கும்  எனக்கும்  கேடு  செய்வதாகும்  என்பார், “கெடுவது  உன்  பரிசு” என்றார் கெடுவது தொழிற் பெயர் அளவாய்  நின்றது . “இது” என்றது உள் உருகுதல்  இல்லாமையும்,உடலைச்  சிதைத்தற்கு ஒருப்படாமையுமாகிய நெஞ்சத்தின்  கெட்ட  இயல்பைக்  குறிக்கும்  . செவி  வாயிலாகக்  கேட்டற்கும்   இயலாததொரு  கொடிய  தன்மையைக் கண்ணினால்  எங்ஙனம்  கண்டு  ஆற்றுவேன்  என்பார், “கேட்கவும் கில்லேனே “  என்றார்.

            இதன்கண் , ஆன்மாவின்  தூய தன்மைக்குக்  கேடு  விளைக்கும்  மாறுபட்ட  நெஞ்சத்தைக் குறித்து , “எம் மதியிலிமட நெஞ்சே”  என விளித்தும், அதன்  கொடிய  செயலைக்  கருதி , “இனி, உனைத் தேறு கின்றிலம் ; கெடுவதுன்  பரிசு ; இது கேட்கவுங்கில்லேன் “ என வெறுத்துரைத்தும்  அடிகள் இரங்குகின்றமையால் , இங்ஙனம்  கொடிய  நெறியிற்  செல்லும்  நெஞ்சத்தைச்  செந்நெறிப்  படுத்துத்  தூய்மை  பெற வேண்டும்  என்பது  பெறப்படுதலின் , ஆத்தும  சுத்தி என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் தோன்றியவாறு அறிக.  

                                          **************************************

பாடல் :34 .

கிற்ற  வாமன  மேகெடு  வாயுடை

யானடி  நாயேனை

விற்றெ லாமிக  ஆள்வதற்  குரியவன்

விரைமலர்த்  திருப்பாத

முற்றி  லாஇளந்  தளிர்பிரிந்  திருதுநீ

உண்டன  எல்லாமுன்

அற்ற வாறுநின்  பெருமையும்

அளவறுக்  கில்லேனே .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்   காட்சியளித்து  உருக்கரந்த  இறைவன்  பிரிவில்  உள்ளுடைந்து  வருந்தாத  நெஞ்சின்வழி   நிற்றல்  இயலாதென்ற  அடிகள் , இத் திருப்பாட்டில்  இறைவன்  பிரிவில்  நீ பெற்ற  பேறுதான்  என்னையென ,  அந் நெஞ்சை  நோக்கி  இழித்துக்  கூறுகின்றார்.

பதவுரை :-  மனமே, உடையான்  =  உலகத்துப்  பொருள்கள் எல்லாவற்றையும்  உடைமையாகவும்  அடிமையாகவும் உடையானும்  ,

அடி நாயேனை  விற்று  எல்லாம் மிக  ஆழ்வதற்கு  உரியவன்  =  அடிமையாகிய  நாய்  போன்ற  என்னை  விற்று  எனக்கு  எல்லா  நலங்களும் மிகுமாறு  ஆண்டு  கோடற்கு  உரியவனும்  ஆகிய  சிவபெருமானுடைய  ,

விரை  மலர்த்திருப்பாதம்  முற்று இலா  இளம்  தளிர் பிரிந்திருந்து = 

மணம்  பொருந்திய தாமரை  மலர்  போன்ற  திருவடிகளாகிய  முற்றுதல் இல்லாத இளம்  தளிரில்  நின்றும்  பிரிந்திருந்து,

முன் நீ  உண்டன  எல்லாம்  அற்றவாறும்   =  முன்னர்  நீ  நுகர்ந்தன  எல்லாம்  அற்றபடியையும் ,

நின் அறிவும்  நின்  பெருமையும்  =  அதனை  அறியும்  நின் அறிவையும்  அதனாலாகிய  நின்பெருமையையும்  ,

அளவு  அறுக்கில்லேன்  =  அளவிட்டு  வரையறுக்கும்  ஆற்றலுடையேன்  அல்லன்  ஆதலால் ,

கிற்றவா  =  நீ  செய்தவாறு   என்னே ,

கெடுவாய்  =  கெடுவாயாக  என்பது.

விளக்கவுரை :-    உலகத்து  ஒழுக்கம்  தவறி  நடப்பான்  ஒருவனை  உரிமை  பற்றி   அறிவுடையார்  இடித்துரைக்கப்  புகுங்கால் , முதலில்  அத்  தவறுகளை இன்னவென்று  கூறாமல் , தம்  உள்ளத்தே  கொண்டு , சுருங்கிய  வாய்ப்பாட்டில்  குறிப்பாகக்  கழறிக்  கூறல்  இயல்பாதலின்  , அம்முறையில்  நெஞ்சத்தின்  தவற்றை அடிகள் தம்  அறிவகத்தே கொண்டு  செய்தவாறு  என்னே என்று  குறிப்பாகப்  பொருள்  தோன்ற , “கிற்றவா  மனமே” என்றார். “மனமே”  என  முதலில்  விளித்துச்  செய்தவாறு  என்னே  என்று  கூறாமல்  மாற்றிக்  கூறியது , விளியளவில்  இழிதக்க  நெஞ்சம்  தன்  பெருமையை  நினைந்து  இறுமாந்து  விடாமைப்  பொருட்டாம் . குறிப்பாக  , “கிற்றவா” என்ற  அளவிலும்  நின்றுவிடுதல்  ,அதன்  இயல்பிற்குத்  தக்கதன்று  எனக்கருதி ,இந் நிலை கேடு விளைப்பதாகும்  என்னும்  பொருள்  தோன்ற , “மனமே  கெடுவாய்” என்று  கழறிக்  கூறுவாராயினர் .

         உலகத்துள்ள  அறிவில்  பொருள்கள்  எல்லாம்  உடைமையாக  , இறைவன்  உடையான்  எனவும், அறிவுடைப் பொருள்கள் எல்லாம் அடிமையாக , ஆண்டவன்  எனவும்  கூறப்படுவன் . இவ் இரு நிலைகளும் முறையே , “ஊடையான்”  என்பதனாலும் , “ஆள்வதற்குரியவன் “ என்பதனாலும் பெறப்பட  வைத்தார் . ஒப்புடையன்  அல்லனும் , ஓர் உவமன் இல்லியுமாகிய  இறைவன் பெருமையை நோக்க , தன் சிறுமையே  முன்னிற்பது  கருதி , அடிமையாகிய  இழிவுடையேன்  என்பது  தோன்ற  , “அடி  நாயேனை “ என்றார் . ஒரு பொருளை விலை கொடுத்துக்கொண்டு  ஆளுதல்   உலகத்தில்  கண்டது . விற்று  ஆளுதல்  நிகழாத  தொன்று  . ஈண்டு  இறைவன் ஆன்மாவை  வினைக்கு  ஈடாகப்  பிறப்பித்தலே  விற்றலாகும் . அங்ஙனம் பிறப்பித்தற்கு  ஏது , உயிர் வினைய்யொழிவு  பெற்றுத் தன்  திருவடி நிழல் அடைய வேண்டும் என்னும்  அருட்பெருக்கே யாதலின் , அதுவும்  ஆட்கொண்டபடியாம் என்பது  தோன்ற , “விற்று  ஆள்வதற்குரியவன் “ என்றார்.  உண்மையாக  ஆட்கொள்ளுதல்  கட்டறுத்தபின்னர் , “தந்ததுன்றன்னைக்  கொண்ட தென்றன்னை  “ என்றபடி  இறைவன்  தன்னைத்  தந்து    உயிரைக்  கொள்ளுதலாகும். இந் நிலையில்  ஆளான  உயிர்  எய்தும்  பேறு  அந்தமொன்றில்லா  ஆனந்தமாகும்  .  இது, கொண்டு  ஆட்கொள்ளுதல் . விற்று  ஆட்கொள்ளுதலால் விளையும்  பயன்  கட்டறுத்தலாகும்  . இது  கருதியே , விற்று  ஆண்டனன்  என்னாது, “ ஆள்வதற்கு  உரியவன்  “ என்றார் . “எல்லாம்  மிக” என்றது , விற்று  ஆட்கொள்ளும்  நிலையிலும், அன்பு  தவம்  முதலிய  உயரிய  நலங்கள்  எல்லாம்  அடிமையாகிய  உயிர்க்கு  மிகும்படி  என்னும்  பொருட்டு  கொண்டு  ஆட்கொள்ளுதலின்  விளையும்  பயன்  முற் கூறியபடி  அந்தமொன்றில்லா  ஆனந்தமாகும் . ஆனால், விற்று  ஆட்படுத்தும்  நிலையிலும்  உயிர்க்கு  ஊதியம்  உண்டோவெனின் , அதற்கு விடையாக  “எல்லாம்  மிக”  என்றார்.  விற்று  ஆட்கொள்ளுதலால் உயிர்க்குச்  சாதனப்பேறும்  , கொண்டு  அட்கொள் ளுதலால்   சாத்தியப்பேறும்  உண்டாம்  என்பது  தெளிவாம் . ஆண்டான்  அடிமைத்  திறத்தில் , உலகத்தொண்டு  , கடவுள் தொண்டு  என  இரண்டு வகை  நினைக்கத்தக்கன . உலகத்  தொண்டால் விளையும்  பயன்  ஆண்டானுக்கே  சிறந்தது.; கடவுள்  தொண்டினால்  விளையும்  பயன்  அடிமைக்கே  சிறந்ததாகும் .  இது  குறித்தே அடிகள் பிறிதோரிடத்து,  ”அந்தமொன்றில்லா  ஆனந்தம்  பெற்றேன்  யாது  நீ  பெற்றதொன் றென்பால் “ என்று  அருளிச்செய்தனர்.

          இனி,  ஒரு  சில பரம்பரையினர் , தம்  நிலம்  முதலிய  பொருள்களின்  வருவாயை அநுபவிகலாமே  யொழிய , அம்மூலப் பொருளை  விற்றற்கு  உரிமையிலராதலை  உலகியலிற்  காண்கிறோம். அங்ஙனமே , உயிராகிய  உடைமையை இறைவன்  ஆட்சிபுரியலாமே யன்றி  , விற்றற்கு  உரிமையிலன் ஆவனோ என்பார்க்கு  விடையாக , விற்றல்  அநுபவித்தல்  முதலிய  எல்லாவற்றிற்கும்  இறைவன் உரிமை யுடையான்  என்பது  தோன்ற   “விற்றெலாமிக  ஆள்வதற்குரியவன் “ என்றார்  என்று  கேட்டலும்  ஒன்று .  “இருந்தென்னை  ஆண்டுகொள், விற்றுக்கொள்  ஒன்றிவை  என்னின்  அல்லால்” என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறியதும்   இக் கருத்துப்  பற்றியே . இஃது உலகிய லோடு  பொருந்தக்  கண்டது.

           அடிகள்  தமக்குச்  சிறந்த பற்றுக்கோடாகவுள்ள  இறைவன்  திரு வடிகளில்  ஈடுபட்டுப்  பாராட்டுவார் , “விரை மலர்த்  திருப்பாதமுற்றிலா  இளந்தளிர் “ என்றார்.  ஈண்டு, மலர்ப்பாதம்  என்றதில்  ,உவமை  அணியும் , பாத  இளந்தளிர்  என்றதில்  உருவக  அணியும்  அமைந்திருத் தலான் , “விரை மலர்த்  திருப்பாத  முற்றில்லா  இளந்தளிர் “ என்று  கூறியது , உவம  உருவக  அணியாகும் .  இறைவன்  திருவடிக் காட்சி   தம்  உண்முகமாகவுள்ள  ஐம்புல நுகர்ச்சிக்கும்  இனிதாதலை  விளக்குவார்  இங்ஙனம்  கூறினர் . மலரிலுள்ள  தேன்  சுவைக்கும் , மலரும்  தளிரும்  ஒளி , ஊறு என்னும்  இவற்றிற்கும்  , தேன் நுகரும்  வண்டொலி ஓசைக்கும்  , விரை  நாற்றத்திற்கும்  உரியவாதல்  அறிக. தளிர்  என்னும் , அளவிலே  முற்றுதல் இன்மை  பெறப்படும் . ஆயினும் , மரம் , செடி , கொடிகளில் உள்ள  தளிர்கள் , நாள்  செல்லச்  செல்ல  முற்றி  இலையாகவும்  சருகாகவும்  கழிதல்  கூடும் . இறைவன்  திருவடியாகிய  தளிர்கள் என்றும்  இளமையும்  அழகும்  உடையனவாய்  நிலைபெற்றிருத்தலின், “ திருப்பாத  முற்றிலா  இளந்தளிர்  “ என்றார் . பிரிந்திருத்தல்  – இறைவன்  திருவடிச் சார்பை  விட்டு  உலகியற் பொருள் களைப்பற்றி  நிற்றல் . அங்ஙனம்  நிற்பதால் விளையும்  பயன்  சிறியதும்  அழிதன் மாலையதும்  ஆம்  என்பதைப்  பின்வரும்  தொடர்  மொழிகளால் விளக்குகின்றார் .  திருவடிச்  சார்பை  விட்டு  நெஞ்சம் முன்  அநுபவித்தவை  , புறப்பொருள்களைப்  பற்றிப்  பொறி வாயிலாக  நுகரப்படும்  ஐம்புல இன்பங்களேயாம் . அவ்வின்பங்கள் எல்லாம்  துன்பத்தோடு  கலந்து  அநுபவப்படுதலையும் , மறுகணத்தில்  நிலை யுதலின்றி   அழிவு  எய்துதலையும்  இயல்பாக உடையன . இவ்வுண்மை  குறித்தே  , நெஞ்சை  நோக்கி , “ முன்  நீ  உண்டனவெல்லாம் அற்றவாறும்  “  என்றார்.  அறுதல்  –  செரித்தல் ; இல்லாமற்  போதல் . திருவடிச்  சார்பு  ஒழிந்த ஞான்று , நெஞ்சம்  நுகர்ந்தன  எல்லாம் பொய்யாய்க்  கழிந்த  முறைமையும்  ,அந் நுகர்ச்சிகளையே பொருளெனக்  கண்ட சிற்றறிவும், அச் சிற்றின்பத்தையும்  சிற்றறிவையும் உடைமையால்  நெஞ்சம்  எய்திய  பெருமையும்  , தம்மால்  அளவிட்டுரைக்க   இயலாதன  எனப்  புகழ்பவர்போற்   பழித்துரைப்பர் , “அற்றவாறும்  நின்  அறிவும்  நின்  பெருமையும்  அளவறுக்கில்லேனே “ என்றார்.  “நீ உண்டன” , “நின் அறிவு” , “நின் பெருமை “ என அடுத்தடுத்து  மூன்றிடங்களிலும்   முன்னிலைப்  பெயரைக்  கூறியது , நெஞ்சத்தின்  சிறுமை கருதிக்  குறிப்பாக  இழித்தற்பொருள்  தோன்றற்கு  என்க . அறிவு , பெருமை , ஆண்மை , என்னும்  இம் மூன்று  குணங்களும்  சிறந்த  அரசற்கு உரியன . உலகத்து  மற்றோர்  அரசனுக்கும்  கீழ்ப்படாமல்  தானே  தலைவனாக  நின்று  ஆட்சிபுரியும்  தனியரசு  போல  நெஞ்சம்  தன்னைக்  கருதிக் கொண்டு  , ஆண்டவன்  திருவடிமலர்க்கும்  கீழ்ப்படாமல் ஆட்சிபுரியத் தொடங்கியது  கண்டு  இவ்வாறு  கூறினர் . இம் மூன்று  குணங்கள்  உள்ளும் , அறிவும் பெருமையும்  வெளிப்படக்  கூறப்பட்டன .  ஆண்மை  அநுபவத்திற்குரியதாகலின்  , “ஊண்டனவெல்லாம் “  என்பதனால்  அதுபெறப்படும்  நெஞ்சம்  இம் மூன்று  குணங்களையும்  போலியாகக்  கொண்டு  , போலியாட்சியில்  ,தலைப்பட்டது  கண்டு , தாமும்போலியாகப்  புகழ்வாராய்  , “அளவறுக் கில்லேனே” என்று  இழிவு  தோன்றக்  கூறினர். அறுக்ககில்லேன்  என்றது  அறுக்கில்லேன்  என்றாயிற்று . இங்ஙனமாய  விபரீதச் செயல்களை  உட்கொண்டே தொடக்கத்திலே   நீ  செய்தவாறு  என்னே  என்று  இரங்குவாராயினர் . கிற்றவாறு  என்பதில்  ஈற்றுகரம்  தொக்கு  நின்றது .  “நுகருமா  நுகரே” என்புழிப்போல . கிற்றல்  – செய்தல் . என்னே என்பது சொல் யெச்சம்,  மாறுபட்ட  இந் நெறியில்  ஒழுகத்  தலைப்படுதல் கேட்டிற்குக்  காரணம்  என்பார், “மனமே  கெடுவாய்”  என்றார்.

         இதன்கண்,  மெய்யன்புடையாரை  ஆட்கொள்ளும்  இறைவன் , அவர்  தம் உடல் , பொருள் , ஆவி  எல்லாவற்றையும்  ஏற்றுக்கொண்டு  , தன் திருவடி  மலரை  ஒருகணப் பொழுதேனும்  பிரியாதிருக்கச் செய்தலே  அவர்க்கு  உறுதி  பயப்பதாகும்  என்று  கூறுமுகமாக  , ஆன்மாவின்  தூய்மைக்குரிய  சாதனம்  கூறப்பட்டமையால்  , “ஆத்தும சுத்தி “ என்னும்  பதிகம் நுதலிய பொருள் புலப்பட  வைத்தது அறிக .

                                              ****************************

பாடல்  : 35.

அளவ  றுப்பதற்  கரியவன்

இமையவர்க்  கடியவர்க்  கெளியான்நம்

களவ றுத்துநின்  றாண்டமை

கருதினுட்  கசிந்துணர்ந்  திருந்தேயும்

உளக   றுத்துனை  நினைந்துளம்

பெருங்களன்  செய்ததும்  இலைநெஞ்சே

பளக  றுத்துடை  யான்   கழல்

பணிந்திலை  பரகதி  புகுவானே .

கருத்துரை :-   இறைவன் திருவடிச் சார்பை   விட்டுப்  போலியாட்சியில்  தலைப்படும்  நெஞ்சை  நோக்கி  முன்னைத்  திருப்பாட்டில்  இழித்துக் கூறிய  அடிகள் , அவ் இழிவையும் பொருட்படுத்தாத நிலையில்  , அந்தோ உண்மையாக  ஆட்கொண்ட  இறைவன்  இயல்பை  உணர்ந்தும்  , அவ்  இறை  பணியில்  தலைப்பட்டு  நலம்  பெற  முயலாமை  என்னே! என  மீண்டும்  இரங்கிக்  கூறுகின்றார்.

பதவுரை :-  நெஞ்சே  =  நெஞ்சே ,

அளவறுப்பதற்கு   இமையவர்க்கு  அரியவன்  =  தன்  இயல்பை  வரையறுத்து    உணர்தற்கு  அமரர்க்கு  அரியவனும் ,

அடியவர்க்கு  எளியான்  =  மெய்யன்பர்க்கு  எளியவனும்  ஆகிய  இறைவன் ,

நம்  களவு  அறுத்து ஆண்டு  நின்றமை  = நம்  வஞ்சத்தை  யொழித்து ஆட்கொண்டு  நிலை  பெற்ற  தன்மையை ,

கருத்தின்  உள் உணர்ந்து  கசிந்து இருந்தேயும்  =   உள்ளத்தில்  கொண்டு  உணர்ந்து  ஈடுபட்டு  உருகியிருந்தும் ,

பரகதி புகுவான்  =  வீட்டு  நிலையை  அடைதற் பொருட்டு  ,

உளகறுத்து  உனை  நினைந்து  =  பொறி  நுகர்ச்சிகளாக  உள்ளனவற்றை  வெறுத்து  நின்  இயல்பை  நினைந்து ,

உளம்  பெருங்களன்  செய்ததும்  இலை  =  உள்ளத்தை  இறைவன்  தங்குதற்குரிய  பெரிய  இடமாகச்   செய்ததும்  இல்லை ,

பளகு  அறுத்து  உடையான்  கழல்  பணிந்திலை  =  தடையாகிய  குற்றத்தை  ஒழித்து  ஆண்டவன்  திருவடியை  வணங்கினாயும்  இல்லை; நின் இயல்பு  இருந்தவாறு  என்னே  என்பது .

விளக்கவுரை  :-  அளவு  –  தன்மை . அறுத்தல்  –  வரையறுத்து  உணர்தல்  . அளவறுப்பதற்கு   என்பதை  ஈரிடத்துங்  கூட்டி , இமையவர்க்கு  அளவறுப்பதற்கு  அரியவன்  எனவும்  , அடியார்க்கு  அளவறுப்பதற்கு  எளியவன்  எனவும்   இயைத்துப்  பொருள்  கொள்ளல்  வேண்டும் . இறைவன்  இயல்பைத்  தேவர்  அறியாமைக்குக்  காரணம்  , புண்ணியப்  பயனாகிய  இன்பம்  ஒன்றிலே  ஈடுபட்டு  , அவ் விறைவனைத்  தம்மவருள்  ஒரு  தலைவன் என்ற  அளவில்  நினைந்து  இறுமாந்திருந்தலாகும்.  மெய்யன்பர்  தம்  எளிமையை நினைந்து , இறை பணியில்  ஈடுபட்டு  , அவ் இறைவன்  திருவருளையே பற்றுக்கோடாகக்  கொண்டு  ஒழுகுதலின்  அவர்க்கு  இறைவன்  தன்மை அறிதற்கு  எளிதாயிற்று  என்பது . “தன்மை பிறரா  லறியாத தலைவா” என்ற  இடத்தும்  , பிறர் என்றது  மெய்யன்பர்  அல்லாதார்  என்னும்  பொறுட்டு  . “வானோர்க்கரிய  மருந்தே “ எனவும், “ஏனோர்க்கெளிய   இறைவா”  எனவும்  போந்த  திருவாக்குக்களையும்  நோக்குக .  இனி , “அளவு அறுப்பதற்கு  அரியவன்” என்பதற்கு  , அளவைகளால்  வரையறுத்து  உணர்தற்கு  அரியவன்  என்றும்  , அதனால் , மெய்யுணர்விற்கு  எளியவன்  என்றும்  கொண்டு , மெய்யுணர்வில்  தலைப்படாதார்  தேவராயினும், அவர்க்கு  அரியனாவான்  எனவும் , மெய்யன்புள்ள  அடியாராயின்,  அளவை களில்  தலைப்பட்டிலர்  எனினும்  எளியவனாவான்  எனக்  கோடலும்  ஒன்று.  அளவு  –  காட்சி  முதலிய  அளவைகளை  விளக்கும்  நூல் காட்சி  , கருதல் , உரையெனவும்  வேறு  சில  வகைகளாகவும்  ஆராயப்படுவது  , அவ் வளவைகளைக் கொண்டு  இறைவன்  இயல்பை  ஒருவாறு  துணியலாமே யன்றி , முற்றும்  உணர்தல்  அரிது. மெய்யுணர்வாகிய  அநுபவ  ஞானமே   இறைவனை  உணர்தற்கு  உரிய  நன்நெறியாகும்  . “ஏதுக்களாலும்  எடுத்த மொழியாலும்  வைத்துச், சோதிக்க வேண்டா  சுடர்  விட்டுளன்  எங்கள் சோதி”  என்பது பெரியார்  திருவாக்கு  . இப்  பாசுரப் பகுதியில், ஏதுக்கள்  என்பது  அனுமான  அளவையையும் , எடுத்த  மொழி  என்பது  உரை அளவையையும்  உணர்த்துவன. இவற்றால்  ஏனைய  அளவைகளையும்  கூறிய படியாம் . இவ்வளவைகளில்  வைத்து  ஆராய்வது  பயனில்  செயல்  என்பதை  , “சோதிக்க  வேண்டா”  என்பதனாலும்  , மெய்யுணர்விற்குக்   காட்சிப்படுவன்  என்பதை , “சுடர்  விட்டுளன்  எங்கள் சோதி “ என்பதனாலும்  தெளியலாம் .

                 நல்வினைப் பயனையே  மிகுதியாக  அனுபவிக்கும்  தேவராயினும், அநுபவ  உணர்வில்  தலைபட்டிலரேல், அவர்  காட்சிக்கு  அரிய பொருளாக வுள்ள  இறைவன் , இருவினைப் பயனையும்  கலந்து   அநுபவிக்கும்  மக்கட்  பிறப்பினராயினும்  ,மெய்யன்பராயின்  , அவர் அநுபவத்திற்கு  எளியனவான் என்பது  தோன்ற  , “அடியவர்க் கெளியான் “  என்றார். தேவர்  அறிதற்கே அரியனாகிய  இறைவன் , அன்பர் அநுபவத்திற்கு  எளியனாவான்  என்று  குறிப்பாற்  புலப்படக்  கூறியது  இன்புறத்தக்கது .

            இங்ஙனம் அருமைக்கும்  எளிமைக்கும்  இறைவன்  இடனாதலை  உணர்ந்தே  , “அருமையில் எளிய  அழகே  போற்றி” என்று  அடிகள்  பிறிதோரிடத்தும்   அருளிச்  செய்வாராயினர் . களவு – வஞ்சம் முதலிய கரவொழுக்கம் ; வேட நெறி நில்லார்  வேடம்  பூணுதலும்  அது . “தவமறைந்தொழுகும்  தன்மையிலாளர் “ என்பர்  சிலப்பதிகார ஆசிரியர் . தவ வேடத்தைக்  கண்டு , அறியாத  உலகம்  மயங்கும் . அவ் வேட நெறிக்குப் பொருந்தாத   தீயொழுக்கத்தை  , உயிர்க்குயிராகிய  இறைவன்  அறிவன்  ஆதலின், அவ் வஞ்ச  ஒழுக்கத்தைக்  கொண்டு  இறைவனை  ஏமாற்ற  இயலாது .  அங்ஙனமாகவும் , நம்  வஞ்ச  ஒழுக்கத்தை  அறிந்தும்  நம்மை  ஆட்கொண்டது  , அப் பெருமான்  நம்பால்  கொண்டுள்ள  அருட் பெருக்கமாகும் ; வேறு  காரணம்  இன்று  என்று  நெஞ்சிற்கு  உணர்த்துவார், “நம் களவறுத்து நின்று  ஆண்டமை “ என்றார் . ஆட்கொண்டு  கருதிய பயன்  நிறைவேறியதும்  கைவிடும்  உலத்துத்  தலைவர்  போலாது , என்றும்  நீங்காது நம் உள்ளே உறுதுணையாக  நிலை பெற்று  நின்றான்  என்பது  தோன்ற  , “நின்று  ஆண்டமை “ என்று அருளிச் செய்தனர் .

              இறைவன்  நம்பால்  கொண்டுள்ள  அருட்பெருக்கால்  கட்டறுத்து , நம்மை  ஆட்கொண்டு  நின்றமையை நாம் உணராதிருந்தேம்  அல்லேம் . நன்றாக  உள்ளத்தால் உணர்ந்திருந்தும்  , அவ்வுணர்ச்சி  வாயிலாக  ஈடுபட்டிருந்தும்  என்பார், “ கருத்தினுட்  கசிந்துணர்ந்திருந்தேயும்  “ என்றார். இறைவன்  ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து  தமக்கு  மறை மொழி  கூறித்  தம்மை  ஆட்கொண்டதை  உலகம்  நன்கு  அறியும் . அங்ஙனம்  புறக் காட்சியால் உலகம்  அறிந்த  அளவில்  போதியதென  அமைதி அடையாமல்  , தம் அகக் காட்சியாலும்  அறிந்து  அநுபவித்த  உண்மையை  அடிகள் இங்ஙனம்  புலப்படுத்து  அருளினார் . முன்னிலைப்  படுத்த  நெஞ்சை  உளப்படுத்து .  “நம்  கருத்தினுள் “ என்று  நெஞ்சிற்கும்  நெஞ்சு  உளதாகக்  கூறினர். இங்ஙனம்  கூறுதல்  செய்யுள் மரபு . இதனை , “உறுப்புடையது போல், உணர்வுடையது போல்  நெஞ்சொடு  புணர்த்தும் “ என்னும்  விதியாலும்  , “வருந்தினை  வாழிய  நெஞ்சே ……. ஒழியச்  சூழ்ந்தனையாயின்  தவிராது , செல் இனிச்  சிறக்க நின் உள்ளம்”  என்னும்  அகப்பாட்டானும்  அறிக.  இவ்வாறு  பின்வரும்  இடங்களுக்கெல்லாம்  இலக்கணம்  எடுத்துக் காட்டுகளை  இங்ஙனமே கொள்க. உலத்தில்  ஒருவன்  செய்த நன்றியை  அறியாமலிருத்தலே  நன்று  அன்றாம் . “நன்றி  மறப்பது  நன்றன்று “ என்பது பொருளுரை .அறியாமல்  இருத்தலே  நன்றன்றாயின்  , அறிந்தும்  ஈடுபட்டும்  அந்  நன்றியைப்  பொருட்படுத்தாமல்  இருத்தல்  எத்துணைக்  குற்றமாம்  என்பது நினைக்கத்தக்கது . அம்முறையில்  அடிகள் ஆண்டவன்  அருட்  செயலைத்  தம்  நெஞ்சம்  உணர்ந்தும்  , ஈடுபட்டிருந்தும்  , அது  குறித்து  மேற்கொள்ளவேண்டியவைகளைச்  செய்யாமல்  இருத்தல் குறித்து இரங்கிச்  செய்ய  வேண்டிய  கடமைகள் இன்னவென   விளக்கிக்  கூறமுற்படு வாரா யினர் . கடமைகளைக்   கூறுதற்குப்  பயன்  இன்றியமையாததாதலின், “பரகதி புகுவான்” என்றார்.

            “ உள” என்பது உண்மையடியாகப்  பிறந்த  பன்மைப்பெயர் , அது பொறிவாயிலாக  நுகரப்படும்  சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம்  என்னும்  புலன்களை  உணர்த்தும் . கட்டு , வீடு  என்னும்  இரண்டற்கும் மனமே காரணம்  என்பர் . இறைவன்  உட்கோள் , “வாழ்த்த  வாயும்  நினைக்க  மட நெஞ்சும்  “ என்றபடி  , தன்னை  நினைந்து  , கட்டறுத்து , நலம்  பெறுதற்கே  நெஞ்சம்  வேண்டும்  என்பது. ஆகவே, இறைவன்  திருவுள்ளப்பாங்கின்படி  , பொறிவாயிலாக  நுகரப்படும்  பொருள்களை  வேண்டாமல்  என்பார் , “ உள  கறுத்து” என்றார்.  கறுத்தல்  –  வெறுத்தல்  . உனை  நினைந்து  என்பது.  நெஞ்சை  நோக்கி  , இறைவனை  நினைந்து  பணி  செய்தலாகிய   உன்  இயல்பைக்  கருதி   என்றபடியாம் . நின் இயல்பை  நினைந்த  அளவில் , நின் உள்ளத்தை  இறைவன்  எழுந்தருளுதற்கு  உரிய  பெரிய  இடமாக  அமைத்தலே  செய்யத்தக்கதென்பது  துணிவாகும்  என்றும் , நெஞ்சிற்கு   அறிவுறுத்துவாராய்  , “ உளம்  பெருங்களன்   செய்ததும்  இலை  நெஞ்சே “ என்றார். ஆண்டவன்  தங்குதற்கு  அன்பர்  நெஞ்சம்  இடனாதலை  , “நெஞ்சம்  உமக்கே  இடனாக  வைத்தேன் “ என்னும்  தமிழ்  மறையானும்  உணர்க.  “உனை  நினைந்துளம்  பெருங்களன்  செய்ததுமிலை “ என்பதற்கு  இவ்வாறு  பொருள்  கொள்ளாது , “உனை  நினைந்துளம்  “ என்பதை  முற்றாகக்  கொண்டும் , “பெருங்களன்” என்பதற்குப்  பெரிய  வஞ்சம்  என்றும்   பெரிய  நட்பு  என்றும்  பலவாறு  கூறுவாருமுளர். அவ்வுரையெல்லாம்   பொருட்  பொருத்தம்  இன்மையால்  பொருந்தாமை  உணர்க . பளகு  – குற்றம்  ; ஆண்டவன்  திருவடியை  அடைதற்குத்  தடை  , அத்  தடையைச்  சிவபாவனையால்  ஒழித்து, அப் பெருமான்  திருவடியை வணங்கினாயும்   இல்லை   என்பார் , “ பளகறுத்  துடையான்  கழல்  பணிந்திலை” என்றார் . உடையான்  என்றது , நெஞ்சத்தை உடைமையாக  உடையான் என்னும்  பொருளதாம் . “உளம் பெருங்களன்  செய்ததுமிலை” என்றதனால் , அகவழிபாடு  இன்மையும்  , “உடையான்  கழல்  பணிந்திலை “ என்றதனால்  புறவழிபாடு  இன்மையும்  கூறியபடியாம் . இறுதியில்  நின் இயல்பு  இருந்தவாறு  என்னே  என்பது  குறிப்பெச்சம் .  

            இதன்கண் , பொறிவாயிலாக  நுகரப்படும்  பலன்களை  ஒழித்து , நெஞ்சத்தைத்  தூய்மைப்படுத்து  , இறைவன்  தங்குதற்குரிய  நல் இடனாக  அமைத்தல்  வேண்டும்  என்னும்  அகவழிபாடும்  , கழல்  பணிதல்  ஆகிய  புறவழிபாடும்  , உயிர்  தூய  நிலையடைதற்கு  இன்றியமையாதன  வென்று  கூறப்பட்டிருத்தலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனாதல்  அறிக .

                                **********************************************

பாடல் :36 .

புகுவ  தாவதும்  போதர

வில்லதும் பொன்னகர்  புகப்போதற்

குகுவ  தாவதும்  எந்தையெம்

பிரானென்னை  யாண்டவன்  கழற்கன்பு

நெகு வதாவது  நித்தலும்

அமுதொடு  தேனொடு  பால்கட்டி

மிகுவ  தாவதும்  இன்றெனின்

மற்றிதற்  கென்செய்கேன் வினையேனே.

கருத்துரை :-   இதுகாறும்  தம் நெஞ்சின்  மாறுபட்ட  நிலையை நோக்கி  இரங்கிக்  கூறிய  அடிகள் , இனி, வீட்டு  நிலையை அடைதற்குத்   தடையாக  வுள்ள  கட்டு  அறுதி பெறுமாறும்  , அன்பு  நெறிச் சென்று  பேரின்ப  நிலையில்   ஈடுபட்டு  அவ் இன்ப  நுகர்ச்சியில்  தலைப்படுமாறும்  கிடைக்கப் பெறாமை குறித்து , அதற்குத்  தம்  பழவினை ஏதுவாதலை  அறிந்து இத் திருப்பாட்டில்  வருந்திக்  கூறுகின்றார்  

பதவுரை :-   புகுவது ஆவதும்  =  அடைதற்கு  உரியதும்  ,

போதரவு இல்லதும்  =  அடைந்தால்  மீண்டு  வருதற்குரிய நெறியில்லாததும்  ஆகிய ,

பொன்னகர்  புகப் போதற்கு   =  சிவ நகருள் புகுதற்பொருட்டுச் செல்லுதற்கு  ,

உகுவது  ஆவதும்  =  தடையாக வுள்ள  அகப்புறப்பற்றுக்கள் நீங்கி ஒழி வெய்துதலும் ,

எந்தைஎம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும் =

என்  தந்தையும்  எங்கள் தலைவனும்  என்னை  ஆட்கொண்டருளிய  பெருமானும்  ஆகிய  இறைவனுடைய  திருவடிகளுக்கு  அன்பு  செய்து  உருகுதலும் ,

நித்தலும் அமுதொடு தேனொடு  பால்கட்டி மிகுவது  ஆவதும்  =

இடையறாது அமிழ்தத்தோடும் தேணொடும் கலந்து பாலும்  கருப்புக்கட்டியும் ஆகிய  இவற்றின் சுவையினும் மிக்கதாகிய  இனிய சுவை உண்டாதலும் ,

இன்று  எனின்  =  இல்லையாயின் ,

இதற்கு  வினையேன் என் செய்வேன்  =  இந் நிலைக்குத்  தீவினையுடையேன்  யாது  செய்ய  வல்லேன்  என்பது.

விளக்கவுரை :-   ஒரு  வீட்டின்  உட்புகுதற்கு அமைந்த வாயில் வழியே, திரும்பி  வெளிப்படுதற்கும்  வாயிலாக அமைந்திருத்தலைக் கண்கூடாகக்  காண்கின்றோம் . அல்லது உட்புகுதற்கு ஒருவாயிலும்  ,வெளிப்படுதற்கு ஒரு  வாயிலும்  ஆக  அமைத்தலும்  உண்டு . இஃது  இல்லங்களுக்கேயன்றி  நகரங்களுக்கும்  பொருந்துவதாகும் , முத்தி  நிலையை  வீடாகவும் , நகரமாகவும்  , உலகமாகவும்  கூறுதல் உண்டு. எல்லாப் பற்றுக்களையும்  விட்ட  நிலையே வீடாகும் .  நகரமாகவும் , உலகமாகவும்  கூறுதல்  உபசார  வழக்கு . “சிவ நகர் புகப்  போகன்”, “சிவமாநகர்  குறுகப்  போனார்  “ ,   “வாராஉலகருள  வல்லான் “ என்று அடிகளும்  மற்றைப்  பெரியோரும்  கூறியிருத்தல்  அறிக . அம் முறையில் ஈண்டு  வீட்டு  நிலையைப் பொன்னகர்  என்றனர் . பொன்னகர்  என்பது பொன் போலப் போற்றத்தக்க  முத்தி நகரம் என்று  பொருள்படும் . உலகத்தில் பொன்னில்  பற்றுடையார் , அப் பற்று அற்ற  நிலையில்  அதனைப் போல்  விரும்பத்தக்கது வீட்டு  நிலை  ஆதலின் , பொன்னகர் என்றார் . உலகத்துள்ள  அழகிய நகரங்களில்  நின்றும்  வீட்டு நிலையாகிய பொன்னகரின்  இலக்கணம்  வேறுபட்டது என்பதைப்  புலப்படுத்தற்கே . “புகுவதாவதும்  போதரவில்லதும்” என்றார். உட்புகுதற்கு வழி  அமைந்தது  போலத் திரும்பி  வருதற்கு வழியில்லாதது என்பது பொருள். “மீண்டு வாரா வழியருள்  புரிபவன்”  என்பது அடிகள் திருவாக்கு .  போதரவு  –  திரும்புதல் ; ஆகு  பெயரால் வழியை  உணர்த்தும் .

         புகப்போதல்  –  உட்புகச் செல்லல் . வீட்டு  நிலையை அடைதற்குத் தடையாக  உள்ள  யான்  எனது  என்னும்  அகப் புறப்பற்றுக்கள்  ஒழிய வேண்டும்  என்பார்,  “உகுவதாவதும்” என்றார். உகுதல் – தேய்ந்து ஒழிதல் , சிறந்த  ஓரிடத்தை அடைதற்குச் செந் நெறி  காண்டலும் ,அச்செந்நெறிச்  சேறற்குத்  தடையாகவுள்ள பொருள்களைக்  களைந்து ஒழித்தலும்  வேண்டும் . ஈண்டு , வீட்டு நிலையை அடைதற்கு உரிய செந்நெறியாக அடிகள் கண்டது அன்பு நெறியே   ஆகும் . அந் நெறிச் சேறற்குத்  தடையாக  உள்ள அகப்புறப் பற்றுக்களைத்  திருவைந்தெழுத்து  ஓதுதல்  முதலிய   சாதனங்களால் ஒழித்தல் வேண்டும் . அத் தடை ஒழிந்த பின்னர்ச்  செந் நெறியாகிய  அன்பு  நெறியைக்  காண்டல்  வேண்டும் . அவ்  அன்பு  , உலகத்து மனை மக்கள் முதலிய  பற்று விளைக்கும்  பொருள்களை முன்னிட்டு  உண்டானதாக  இருப்பின், அஃது அச் செலவிற்குத் தடையாகு மாதலின், அவ்வாறு  இல்லாமல்  ஆண்டவன்  திருவடியை முன்னிட்டுத்  தோன்றியதாக  இருத்தல் வேண்டும்   என்பார்,  “எந்தை எம்பிரான் என்னை  ஆண்டவன் கழற்கு அன்பு” எண்றார் . எந்தை  முதலிய  சொற்கலின்  பொருள்  நலங்கள் முன்னைத் திருப்பாட்டுக்களில்  ஆராயப்பட்டன .

                     நெகுதல்  –  உருகுதல் . இறைவன் திருவடிக்கு  அன்பு  செய்து நெஞ்சம்  உருகுதலே அன்பு நெறியாகும் . அந் நெறிச் சென்று  எய்தும்  சிறந்த பேறு எத்தன்மையத்து என்று  அறியலுறுவார்க்கு, “நித்தலும் அமுதொடு”  என்பவை  முதலிய  சொற்களால்  விளக்கமுறுத்துவாராயினர் . இறைவன்  திருவடியில் இயைந்து நுகரும்  பேரின்பம்  அமிழ்தம்  முதலியவற்றின் நுகர்ச்சியால் உண்டாம்  இன்பம்  போல  உலப்புடையது  ஆகாது என்பார் , “நித்தலும்” என்றார்.  நித்தலும்  என்பது  எந்நாளும்  என்னும்  பொருட்டு  .   அமுதம் – தேவர்  உணவு.  தேன்,  பால், கட்டி  இம்மூன்றும்  மக்கள்  உணவு . “தேனாய்  அமுதமுமாய்த்  தீங்கரும்பின்  கட்டியுமாய் “ என்பது அடிகள் திரு வாக்கு  . இப் பாடற் பகுதியில் அமுதம்  என்றது  பாலை  உணர்த்தும் .  தேவர்  உணவு , மக்கள்  உணவு  என்னும்  வேறுபாட்டைப் புலப்படுத்தற்கே  ஒடு  உருபு  ஈரிடத்தும் போந்தது . அமரர்  உணவாகிய  அமுதத்தோடு  மக்கள்  உணவாகிய   பால், தேன், கருப்புக்கட்டி என்னும்  இவற்றையும் கலந்து  உண்டால் எத்துணை  இனிமைச்சுவை தோன்றுமோ , அத்துணைச்  சுவையினும் இறைவன்  திருவடி  இன்பம்  மேம்பட்டது  என்பார், “அமுதொடு , தேனொடு , பால்  கட்டி  மிகுவது” என்றார் . ஒப்பதும்  மிக்கதும்  இல்லாததா கிய  இறைவன்  திருவடி இன்பத்திற்கு  வேறு  எடுத்துக்  காட்டு  இல்லாமையால் , கேட்கப்பட்ட  தேவர்  உணவிலும்  , நுகரப்பட்ட  மக்கள் உணவிலும் இனிமை  மிக்கச்  சில  பொருள்களை எடுத்துக்காட்டினர் . இங்ஙனம்  கூறுதல் ஆன்றோர் கொள்கை . இறைவன்  கருணைக்குப்  பால்  நினைந்தூட்டும்  தாயின்  அன்பை  எடுத்துக் காட்டியதும்  இதனை  வலியுறுத்தும் . அமுதம் முதலிய  சுவைப்  பொருள்களை எடுத்துக் காட்டி , அவற்றினும்  மிகுவது  எனவும் , எஞ்ஞான்றும் நிலையுதல்  உடையது எனவும்  வீட்டின்பம்  குறிக்கப்பட்டது  அறிக .

          மிகுவது – மிக்கதாகிய  சுவை .  ஆவது – ஆதல் . இன்று  என்பது ,உகுவது, நெகுவது , மிகுவது  என்னும் இவற்றோடு தனித்தனி இயையும் . “கடு மொழியும்  கையிகந்த  தண்டமும்  வேந்தன் ,அடுமுதரண் தேய்க்கும்  அரம் “ என்பது தனித்தனி  இயைதல் அறிக. இவ்வாறு  முடிப்பதனை  , “பிரத்யேக பந்த அன்வயம் “ என்பர்  வடநூலார் . மற்று; அசை . , இத் திருப்பாட்டில் வீட்டு  நிலையின்  இயல்பை  விளக்கி  , அதனைச்  சார்தற்கு உரிய  செந்நெறிச் செலவும் , அதற்குத்  தடையாகவுள்ள  அகப்புறப் பற்றுக்களின் ஒழிவும் , அவற்றின் ஒழிவில் அச்செந்நெறியாகிய  அன்பு  நெறிப்   படர்தலும் , அந் நெறிச்  சென்று  எய்தும் பேரின்பப் பேறும் ஆகிய  இவற்றை முறையே  கூறி ,இவற்றுள்  ஒன்றேனும்  அடையப்  பெற்றிலேன் எனின் , இது  குறித்து யான்  செய்யத்தக்கது என்று  இரங்குவார், “ இதற்கு  என் செய்வேன்” எனவும்  , இங்ஙனம்  அடையப் பெறாமைக்கு  ஏது , என்  தீவினையே என்பார் . உடம்பொடு  புணர்ந்து , “வினையேனே” எனவும்  கூறினர் .

                  இதன்கண், பொன்னகர்  புகப் போதற்குத்  தடையாகவுள்ளன  உகுதலும் , ஆண்டவன்  கழற்கு  அன்பு  நெகுதலும்   அமுதொடு  தேனொடு  பால்கட்டி  மிகுதலும்  ஆகிய  இவை உயிரின்  தூய்மைக்கு  இன்றியமை யாதனவென்று  கூறப்பட்டிருத்தலின் , ஆத்தும சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  விளக்கமாதல்  அறிக .

                                       *****************************************

பாடல்: 37.

வினையென்  போல் உடை  யார்பிறர்

ஆர் உடை  யான் அடி  நாயேனைத்

தினையின்  பாகமும்  பிரிவது

திருக்குறிப்  பன் றுமற்  றதனாலே

முனைவன்  பாதநன்  மலர்பிரிந்

திருந்துநான்  முட்டிலேன்  தலைகீறேன்

இனையன்  பாவனை  யிரும்புகல்

மனஞ்செவி  யின்னதென்  றறியேனே.

கருத்துரை :-   கட்டறுதி பொறாமை முதலியவற்றிற்கு ஏதுவாகவுள்ள தம்  பழ  வினையை நோக்கி  முன்னைத்  திருப்பாட்டில் வருந்திக் கூறிய  அடிகள், அவ்  வினை தம்  அளவில்  மிக்க  வலி  படைத்திருத்தலை அநுபவத்திற் கண்டு  , அதனால் நேர்ந்த  இறைவன் திருவடிப் பிரிவிற்கு வருந்தித் தம் வலிய இயல்பை  இத்  திருப்பாட்டில்  வெளிப்படுத்துக்  கூறி  மேலும்  இரங்குகின்றார் .

பதவுரை :-  என்போல்  வினை  உடையார்  பிறர்  ஆர்  =   என்னைப்போலத்  தீவினையுடையார்  பிறர்  யாவர் (ஓருவரும்  இல்லை என்றபடி) ,

அடி  நாயேனை  =  அடிமையாகிய  நாய்  போன்ற  என்னை ,

தினையின்  பாகமும்  பிரிவது  –  தினையளவு  போதும்  பிரிந்திருத்தல்  ,

உடையான் திருக்குறிப்பு  அன்று  =  இறைவனுக்குத்  திருவுள்ளக்கருத்து  அன்று ,

அதனாலே – முனைவன் பாதம் நல் மலர் பிரிந்திருந்தும்  =  ஆண்டவனுடைய  திருவடிகளாகிய நல்ல  மலர்களைச்  சாராது  பிரிவுற்றிறுந்தும் ,

நான்  முட்டிலேன்  தலைகீறேன்  =  யான்  தலையை  வலிய  பொருளோடு  மோதுதல்  செய்கிலேன் , பிளத்தலும்  செய்கிலேன் ,

இனையன்  பாவனை  இரும்பு  =  இத்தகைய  எனது  நினைவு  இரும்பாகும் ,

மனம்  கல்  =  நெஞ்சம்  கல்லாகும் ,

செவி இன்னது  என்று  அறியேன்  =  செவியை  இன்ன  பொருள்  என்று  சொல்ல  அறிந்திலேன்  என்பது.

விளக்கவுரை :-  வினை  ஈண்டு  தீவினையை  உணர்த்தும் . ஆண்டவன் திருவுள்ளம் தினைத்துணைப்  போதும் தம்மை  விட்டுப்  பிரியாதிருப்ப தாகவும் , தாமே  பிரிந்து தனிப்பட்டு வருந்துதற்கு ஏதுவாகிய தீவினைப்பயன் நுகர்ச்சியில் தம்மைப் போல்  பிறர்  யாரும் உலகில்  இருக்க மாட்டார் என்னும்  கருத்தால் , “வினையென் போலுடையார் பிறரார்” என்றார். இத்தகைய  வலிய  வினைக்கு  ஆளாயினர் என்னைப்  போல் பிறர்  இருக்கமாட்டார்  என்பதை  யான்  அறிவேன் ; என்  சிற்றறிவுக்கு  அறியப் படாமல்  வேறு  யாரும்  இருப்பாராயின்  , அவ் வுண்மை உணர்ந்தாயினும் ஓராற்றான் ஆறுதல் அடையலாமே என்னும்  கருத்தால் , அடிகள் ,”பிறர்  ஆர்” என்ற  வினா வாய்ப்பாட்டால்  கூறுவாராயினர் . உடையான்  என்பது வலிய தீவினையுடைய என்னையும்  அடிமையாக  உடையான் என்னும்  பொருட்டு  , மிகவும் இழிந்தவன் என்று  என்னை  அறிந்திருந்தும்  என்னைப் பிரியாதிருக் கும்  திருவுள்ளம்   உடையான்  என்பார் , “ஆடி நாயேனை”  என்றார் .  

            தினையின்  பாகம் –  தினையளவு  கூறு. இக்கூறு  , கால அளவின்  மிக்க  சிறுமையை  உணர்த்தும் ,” இமைப்பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் “ என்னும்  அடிகள்  மணிமொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . இனி, என் அறிவில்  முழுதும்  கலந்துள்ளானே யன்றித்  தினையளவு  ஒரு  சிறு  கூறும்  விலகியிருக்கும்  குறிபுடையான் அல்லன்  என்றார் எனினுமாம் . ஆகவே, தினையின்  பாகமென்பது  ,காலத்திற்கும்  இடத்திற்கும்  பொருந்துமாறறிக  .  குறிப்பு  இறைவனாதலின் , திருக்குறிப்பு  என்னப்பட்டது .  மற்று , அசை.  அதனாலே  என்னும்  ஏது , முனைவன் பாத  நன்மலர்  பிரியாதிருத்தலே கடமையென்றற்கு ஆம் . அடியேனைத் தினையின்  பாகமும்  பிரிவது  உடையானுக்குத்  திருக்குறிப்பு  அன்று . ஆயின்  அக் குறிப்பு  உணர்ந்து ,அப் பெருமான்  திருவடி  மலர்களைப்  பிரியாது  இறுகப் பற்றிக் கோடல்  என்  கடமையாகவும்  , வலிய  தீவினையின் தடையால் பிரிந்திருக்க  நேர்ந்தது  என்று  இரங்குவார், “ முனைவன்  பாதநன்மலர்  பிரிந்திருந்தும் “ என்றார் . இங்ஙனம்  இறைவன்  திருவடிக்  காட்சியின்  பிரிவு  அடிகளுக்கு  நேர்ந்ததற்குக்  காரணம்  , இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  வந்து உபதேசித்துச் சைவச்  செந் நெறியாகிய  அன்பு  நெறியை இனிய  பாடல்களின்  மூலமாக  உலகத்தவருக்கு  விளக்கி  உபகரித்தற் பொருட்டு , “இன்னும்  சின்னாள் இருத்தி” என  இட்ட  கட்டளையே  யாகும் . இறைவன்  கட்டளை  அதுவாயினும் , அளப்பரிய  இன்பத்திற்கு  ஏதுவாக  இருந்த  திருவடிக் காட்சி  , விரைவில்  கரந்தது பொறாமல்  துடித்து  வருந்தும் நிலையினர்  ஆயினர்  என்பது  ஞானாசிரியனாக  எழுந்தருளிய  இறைவன்  திருவுருக்கரந்த  நிலையில் , அப் பிரிவாற்றாது வருந்திப்  பாடிய  பின்வரும்  பாடற் பகுதிகட்கெல்லாம் இங்ஙனமே கருத்துக்  கொள்க.  “முட்டிலேன்” , “தலை  கீறேன் “ என்புழி, தலையை ஈரிடத்துங்கொண்டு  , தலையைக் கல்  முதலிய  வலிய  பொருளோடும்   மோதுகின்றிலேன் , பிளக்கின்றிலேன்  என்று  கொள்ளல்  வேண்டும் . ஏனைய  உறுப்புக்களை  விட்டுத்  தலையை  மாத்திரம்  இங்ஙனம்  கூறியது , காட்சியில்  திளைத்தற்குரிய  கண்  முதலிய  பொறிகள் எல்லாவற்றையும்  உடைமையானும்  , இறைவன்  திருவடி மலரைச்  சூடுதற்கு  உரிமை  இருந்தும்  , அங்ஙனம்  சூடிக்கொள்ளா மையானும்  ஆம்  என்பது  சிறிதும்  தம்மைப்  பிரியாதிருத்தலே  இறைவன்  திருவுள்ளமாகவும், அதற்கு  மாறாகப்  பிரிந்திருக்க  நேர்ந்தது பற்றி  உண்டாகிய  துன்பத்தால் , “ முட்டிலேன்  தலை கீறேன் “ என்று  தம்  உடலையே மாய்த்துக் கொள்ளாத  தம் வன்கண்மையை   இவ்வாறு  புலப்படுத்தருளினர் . இனையன்  என்பது  , இத்தகைய  வன்கண்மை  உடையேன்  என்னும்  பொருட்டு .   

            இறைவன் திருவுருவைப்  பாவித்தற்கு நெஞ்சத்தின்  குழைவு  வேண்டும்  . குழைவு  இன்றேல், உள்ளம்  கடவுள்  வடிவில்   ஈடுபட்டுப்  பாவித்தற்கு  இயலாது  என்பது பெரியார்  அநுபவம் , “நெக்கு நெக்கு  நினைபவர்  நெஞ்சுளே, புக்கு  நிற்கும்  பொன்னார்  சடைப்  புண்ணியன்” என்பது  தமிழ் மறை  .ஈண்டு  அடிகள் இறைவன்  திருவுருவைப்  பாவித்தற்கு    உள்ளக் குழைவு  இன்மையால் ,”இனையன்  பாவனை  இரும்பு “ எனவும்  , பாவித்தற்கு  உரிய  குழைவு  இல்லாத  மனம்  கல்லைப்  போன்றிருத்தலின் , “கல் மனம் “ எனவும் கூறினர். இரும்பு , நெருப்பு முதலிய  சாதனங்களால் உருகும்  இயல்பினது .  அது  போலத்  தவ  ஆற்றலால் பாவனைக்குறிய  குழைவைப்  பெறக்  கூடுமாயினும் , அதற்கு  மூலமாகவுள்ள  மனம்  எதற்கும்  உருகாத  கல்லாயிற்று  என்பது  கருத்து.  மனம்  கல்லாகிய  நிலையில்  , அக முகமாக இறைவனைப்  பாவித்தல் இல்லாமையோடு  , பொறிகளின்  வழி யே சென்று , புலநுகர்விலும்  இறைவனை  அனுபவித்தற்கு  இயலாததாகும் என்னும்  குறிப்பை  , “பாவனை  இரும்பு  கல்மனம் “ எனவும் ,செவி  இன்ன தென்றறியேன்  எனவும்  கூறியவாற்றான் அறிக. பொறிகளுக்கு உபலக்கண மாக  ஈண்டு  செவி  கூறப்பட்டது . காட்சி ஒழிவில்  கேள்வி  அளவிலாவது  இறைவன்  திருப்புகழ்  அமிர்தத்தைப் பருகற்கும்  இயலவில்லையே  என்பது  குறிப்பு .  

          இதன்கண், “தினையின்  பாகமும்  பிறிவது திருக்குறிப்பு  அன்று “” என்றதனாலும் , “முனைவன் பாத  நன்மலர்  பிரிந்திருந்தும் “ என்றதனாலும்  , இடையறாது இறைவன் திருவடிக் காட்சியில்  ஈடிபட்டிருத்தல் உயிரின்  தூய  நிலைக்கு  ஏதுவாம்  என்பது போதரலின்  , ஆத்தும  சுத்தி  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  புலனால்  அறிக .

                                                  *****************************************

பாடல் : 38 .

ஏனை  யாவரும்  எய்திட

லுற்றுமற்  றின்னதென்  றறியாத

தேனை  ஆனெயைக்  கரும்பினின்

தேறலைச் சிவனையென்  சிவலோகக்

கோனை  மானன நோக்கிதன்

கூறனைக்  குறுகிலேன்  நெடுங்காலம்

ஊனை   யானிருந்  தோம்புகின்

றேன்கெடு   வேனுயிர்  ஓயாதே.

கருத்துரை :-  ஆண்டவன்  திருவடிப்  பிரிவிற்கு வருந்தித் தம்  அகப்புறக்  காரணங்களின்  வலிய  இயல்பைக்  குறித்து  முன்னைத் திருப்பாட்டில்  இரங்கிக்  கூறிய  அடிகள், மீண்டும் இறைவனை அணுகப் பெறாத நிலையில்  உடலோம்புதலின் மிகையையும்  உயிர்  ஒழிவு  பெறாமையையும் நினைந்து வருந்துகின்றார் .

பதவுரை :-   ஏனை யாவரும்  எய்திடல்  உற்றும்  =  மெய்யன்பர்  அல்லாத  மற்றைத்  தேவர்   மக்கள் முதலிய  எல்லோரும்  அடைதற்கு  முயன்றும் ,

இன்னது என்று  அறியாத  =  இத்தமை  உடையது என்று  அறியப்படாத ,

என் தேனை  ஆன்  நெய்யை  கரும்பின் இன் தேறலை =  எனக்குத் தேனும்   பசுவின்  நெய்யும்  கரும்பினது  இனிய  சாற்றின்  தெளிவும்  ஆயவனை ,

சிவனை சிவலோகக்  கோனை  மான்  அன்ன  நோக்கி தன்  கூறனை  = 

இன்பவடிவினனும்  சிவலோகனாதனும்  மான்  விழி போன்ற  கண்களையுடைய  அம்மையைத்  தன்  ஒரு  கூற்றில்  உடையவனும்  ஆகிய  இறைவனை  ,

நெடுங்காலம்  குறுகிலேன்   =   நீண்ட  காலமாக  அணுகப்பெற்றிலேன் ,

கெடுவேன்  யான்  இருந்து  ஊனை  நெடுங்காலம்  ஓம்புகின்றேன்  = 

இந் நிலையில் கேடு  அடையத்தக்க  யான்  இவ்வுலகில்  வாழ்ந்திருந்து உடலை  நீண்ட காலமாகப்  பாதுகாக்கின்றேன்,

உயிர்  ஓயாதே  =  என் உயிர் கெட்டு  ஒழியாதா?  என்பது .

விளக்கவுரை :-   ஏனை  யாவரும்  என்றதனால் , மக்கள்  தேவர்  முதலிய குழுவினருள் ஒரு சிலர் அல்லாத  மற்றைய  எல்லோரையும் கொள்ளல் வேண்டும் . அச் சிலர்தாம் யாவர்  எனின் , வினை  மாசு  நீங்கிய மெய்யன்பராவர்  என்பது . மற்று ; அசை . இறைவனை அடைதற்கு உரிய செந் நெறியாகிய அன்பு  நெறியான் அன்றி , வேற்று நெறிச் செல்வார் , எத்துணை ஆற்றலும் முயற்சியும்  உடையராயினும் , இறைவன் இயல்பை இத் தன்மைத்து என்று  அறியும்  வலியிலராவர்  என்பது தோன்ற, “ இன்னதென்று  அறியாத “ என்றார்.  அறியாத  என்னும்  பெயெரெச்சம்  ,தேன்  முதலிய  சொற்களாற்  குறிக்கப்படும்  “இறைவன்” என்னும்  பெயரைக் கொண்டு முடியும் .

               “என்” என்னும்  சொல்லைத்  தேன்  முதலிய ஆறு  இடங்களிலும் கூட்டி , எனக்குத்  தேன்  முதலியனவாக  உள்ளானை  எனக்  கொள்ளல் வேண்டும் .ஏனையோரால் இன்ன  தன்மையன்  என்று  அறியப்படாத இறைவனைத் தேன்  முதலியனவாக  அடிகள் தாம் அறிந்து கூறுதல் எங்ஙனம்  பொருந்தும்  எனின் ,  “அடித்தடித்து  அக்கார முன் தீற்றிய அற்புதம்” என்றபடி , ஆண்டவன்  வலிய  வந்து , தன் இயல்பை  அறிவித்து , அருளமுதத்தை  ஊட்டி  ஆட்கொண்டதை அடிகள் பலவிடத்தும்  குறிப்பிடுகின்றார்  ஆதலின், அம் முறையிற் பொருந்தும் என்க. அடிகள் தம்முடைய  முதிர்ந்த அன்பினால் ,”அன்பினில்  விளைந்த ஆரமுதே” என்றபடி , ஆண்டவனை  மிக இனிய பொருளாகக் கொண்டு  அனுபவித்தவர் என்பதை அறிகின்றோம் . அங்ஙனமாகவும் , அடிகள் தம் அடிமை இயல்பையும் , ஆண்டவன் அருட்  பெருக்கத்தையும்  வெளிப் படுத்தும் கருத்தினராய்த் தம்மை இழித்தும் , திருவருளை  உயர்த்துங்  கூறுதலைப்  பலவிடத்தும் காணலாம் .தேன்  பால்  கன்னல்  இம்  மூன்றனையும்  இனிமையிற் சிறந்த பொருள்களாகக் கொண்டு  , இறைவனுக்கு  ஒப்பிட்டுப் பெரும்பாலும்  இம்  முறையிற் கூறுதலைப்  பலவிடங்களிலும்  காணலாம் .  “தேனையும்  பாலையும்  கன்னலையும் ஒத்தினிய கோன்”என்பது முதலிய இடங்களிற் காண்க . இறைவன்,” அருமையில் எளிய அழகே” என்று  கூறியபடி  , தேவர்  முனிவர்  முதலியோரும் அரிய தவம் செய்தும்  காணுதற்கரிய  பொருளாகவும் , தூய  அன்பு  நெறியில்  ஒழுகும் அடியவர்க்கு  எளி பொருளாகவும் உள்ளான் என அறிகின்றோம் . அடியவர் , “பெறவே வேண்டும்  மெய்யன்பு  “  என்றபடி ,ஆண்டவனிடத்து அன்பைப்  பெருக்கிக்  கொள் வராயின் , இறைவன் அன்புவலையில்  தானே  வந்து படுவன்  ஆவன் . அங்ஙனம்  வலிய  வந்து முதலில்  எளியனாய்த்  தன் கருணைத் தேன்  காட்டி, அவ்  அடியவரைத்  தன் வயப்படுத்துத்   தன் அரிய  தன்மையைப்  படிப்படியாக உயர்த்துக்  காட்டி  தன் இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்வன் என்பது பெரியார் கண்ட உண்மை அனுபவம் .ஒரு குழந் தைக்கு இனிமைமிக்க  எளிய பொருளை முதலில்  காட்டி நுகர்வித்து , அதன்மேல் சிறிது சிறிதாக உயர்ந்த பொருள்களை உண்பித்து உடலுக்கு  நலம்  செய்வார் போல , மெய்யன்பர்க்கு  , ஆண்டவன் முதலில்  எளியனாய்க்  காட்சி யளித்துப்  படிப்படியாகத்  தன் அரிய நிலையையும் உணர வைத்து , முடிவில் இன்பத்துள் திளைப்பித்து ,அவர் தம் உயிர்க்கு  நலம்  செய்பவன்  ஆவான் என்க. இம்முறையில்  அடிகளுக்கு  ஆண்டவன்  தன்   இயல்பை  முதலில்  எளிமையில்  காட்டி  ,ஈர்த்துப் படிப்படியாக  அருமை  நிலையை உணர்த்தி ஆட்கொண்டதைப்  புலப்படுத்துவாராய் , “தேனை ஆனெயை” எனத் தொடங்கி , முறையே  கூறுவாராயினர் தேனைப்  பெற்றவுடன் , அடுதன் முதலிய செயற்படுத்தாமல்  இனிமை தோன்ற எளிதில் உண்ணலாம் . “ஆனெயை”என்றமையால் பசுவினிடத்தினின்றும்  நெய்  பெறவேண்டுமானால்  பாலை  அடுதற் செயற்படுத்துத்  தயிராக்கிப் பெறல் வேண்டும் . கரும்பின் இன் தேறல்  என்புழி , தேறல் ஆகுபெயராய்க் கட்டியை உணர்த்தும் . கரும்பின் தேறல்  பெற வேண்டுமானால் , கரும்பை  ஆலையில்  இட்டுத்  தெளிந்த  சாறு  எடுத்து ,அடுதற் செயலாற்  கட்டியாக்கிப்  பெறவேண்டும் . ஈண்டுக்  கூறிய  தேன்  நெய்  கருப்புக்கட்டி இம் மூன்றும்  இனிமைச்  சுவையில்  ஒன்றுபட்டிருந்தாலும் , முன்னதை நோக்கப் பின்னது அரிதிற் பெறத்தக் கதாக  இருத்தல்  அறியத்தக்கது . தேனை  என  அடைமொழி  இன்றியும் , ஆனையை , கரும்பின் இந்தேறலை  என  மற்றைய இரண்டிற்கும் அடைமொழி  புணர்த்தும்  கூறியது  தேனை ஆக்குஞ் செயல்  ஈக்களுக்கே அன்றி மக்களுக்கு  இன்றென்பதும் ,நெய்யும்  கருப்புக் கட்டியும்  ஆக்குஞ் செயல் மக்களுக்குரியன  என்பதும் புலப்படுத்தற் கென்க . தேன்  முதலிய  மூன்றையும்  ஆண்டவன்  இயல்பிற்கு ஒப்புமை பற்றிக்  கூறிப்  பின்னர்ப் பொருள் இயல்பு  பற்றிச் சிவன்  முதலிய  சொற்களால்  விளக்கத்  தொடங்குகின்றார்.

        சிவன்  என்பது  இன்பவடிவினன் என்னும்  பொருட்டு  , தேன் முதலியன புலன் உணவிற்கு இன்பம் செய்தல் போலப் புலன்களுக்கு  எட்டாத மெய்யுணற்விற்கு இன்பம் செய்பவன்  இறைவன்  என்பது  தெளிவித்தற்கே முதலில்  “சிவனை” என்றார். சிவபெருமான் இன்ப வடிவினன் ஆதலோடு  , அவன்  ஆட்சிக்கு  உட்பட்ட  உலகமும் இன்ப மயமான தென்பதும் , அவ் உலகத்தில் இன்பத்  தனியரசாக  விளங்கு பவன் என்பதும் புலப்படுத்தற்கு ,” சிவலோகக் கோனை” என்றார். போகியாய்  இருந்து உயிர்க்குப் போகத்தை புரிதற்கும் ,உயிர்த் தொகுதிகள் அருள் உருவினளாகிய  அன்னையை  வழிபட்டு ,அவள்  காட்டக் கண்டு  அப்பனை அடைதல் முறையாதலின் , அம் முறயில் அவ் உயிர்களுக்கு  அருளுதற் பொருட்டும் , இறைவன் உமையொரு கூறனாய் விளங்குகின்றான் என்னும்  உண்மையைப்  புலப்படுத்தற்கு , “மானன  நோக்கி தன் கூறனை” என்றார். அம்மைக்கு  நோக்கச் சிறப்புக்  கூறியது, தன் மக்களாகிய  உயிர்த் தொகுதிகளின்பால் வைத்த அருட்குணம்  அதன்முகமாக வெளிப்படுதல் பற்றி என்க.  சிவன், சிவலோகக் கோன், உமையொரு கூறன் என்னும்  இம் மூன்று  பெயர்களும் ,பொருளியல்பின் ஒன்றாயினும் , அடையும்  முறயில் , முன்னதை நோக்கப் பின்னது அருமை உடையதாதலை உய்த்துணரல் வேண்டும் . ஆண்டவன் , மெய்யன்பர்க்கு  , முதலில் தன்னை இன்பவடிவினனாகவும் , பின்னர் இன்ப உலகத் தனியரசாகவும் ,அதன்பின் உமையொரு கூறனாகவும்  காட்சியளித்து இன்புறுத்தும் உண்மை புல்னாதலறிக . அருமையில் எளிய அழகு இருந்தவாறு இது . “நெடுங்காலம்”என்பதை  இடைநிலை யாகக் கொண்டு , “குறுகிலேன்” என்பதனோடும்  கூட்டுக. குறுகுதல் – அணுகுதல்.நெடுங்காலம் குறுகிலேன் என்றது பண்டைப் பிறப்புக்களிற் சென்ற காலத்தைக் குறித்து என்க. இப்பிறப்பைக் குறித்து கூறியதாகக்  கொள்ளின் , ஆண்டவனை  அணுகாத காலம் சிறிதாயினும் , பிரிவு நிலையில் பெரிதாகத் தோன்றும் ஆதலின், அது பற்றி  நெடுங்காலம்  என்று  கூறினர் எனக் கொள்ளல் வேண்டும் .கெடுவேன்  யான்  என்பது , இந் நிலையில் கேடு அடையத்தக்க  யான் என்னும் பொருட்டு . “யான் இருந்து ஊனை ஓம்புகின்றேன்” என்றது , இப்பிறப்பில் ஆண்டவனை அணுகாத  நிலையில் உடலை மாய்த்துக் கொள்ளாமல் உயிருடன்  கூடி  வாழ்ந்து , இவ்வுடலை நீண்ட  காலமாகப்  பாதுகாக்கின்றேன் ; இஃது என்ன  அறியாமை என்பது குறித்து என்க. என் அறியாமையால் பொய்யுடலை மெய்யெனக் கொண்டு யான் ஓம்புகின்றேன் ஆயினும், ஆண்டவன் அணுக்கம் பெறாத நிலையில் , உயிராவது தானே உடலை விட்டுக் கழியலாமே ; அதுவும்  இல்லையே  என்பார், “உயிர்  ஓயாதே”  என்றார்.  ஓயாதே என்புழி , ஏகாரம் எதிர்மறைப் பொருளது. “தானேயும் கழியா  தாவி” என்னும் பெளராணிகர் உரையும் இக் குறிப்புப் பற்றிய தென்க.

       இதன்கண், ஊன் ஓம்புதலைப் பொருட்படுத்தாமல் ,இனிய பொருளாகிய  ஆண்டவனை விரைந்து அணுகுதல் உயிரின்  தூய நிலைக்கு இன்றியமையாதது என்னும் பொருள் புலப்பட்டு  நிற்றலின், ஆத்தும சுத்தி என்னும்  பதிகம் நுதலிய  பொருள் புலனாதல் அறிக.  

                                          ************************************

பாடல் : 39.

ஓய்வி  லாதன  வுவமனில்

இறந்தன  ஒண்மலர்த்  தாள்தந்து

நாயில்  ஆகிய  குலத்தினுங்

கடைப்படும்  என்னை நன்  னெறிகாட்டித்

தாயில்  ஆகிய இன்னருள்

புரிந்த  என்  தலைவனை  நனி காணேன்

தீயில்  வீழ்கிலேன்  திண்வரை

யுருள்கிலேன் செழுங்கடல்  புகுவேனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் பக்கல் அணுகப்பெறாத நிலையில் உடல் ஓம்புதலின் மிகையை நினைந்து இரங்கிக் கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் தமக்கு நன்நெறி காட்டி  இன்னருள் புரிந்த ஆண்டவனைக்  காணாமல் காலம்  மிகக் கழிதலைப்  பொறாராய்த்  தீ  முதலியவற்றால் தாம்  அழியாமல்  இருப்பது  குறித்து வருந்துகின்றார் .

பதவுரை :- ஒய்வு இலாதன  =  அழிந்தொழிதல் இல்லாதனவும் ,

உவமனில்  இறந்தன  =  உவமங்களைக்  கடந்தனவும் ஆகிய ,

ஒண்மலர் தாள்  தந்து  =  ஞான ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை  அளித்து ,

நாயில்  ஆகிய  குலத்தினுங்  கடைப்படும்  என்னை  =  இழிந்த  நாய்ப்பிறப்பினும்  கடைப்பட்ட  எனக்கு,

நல்நெறி  காட்டி   =  வீடு  அடைதற்குரிய  சிறந்த  வழியாகிய  அன்பு நெறியை அறிவுறுத்தருளி ,

தாயில்  ஆகிய  இன்னருள்  புரிந்த   =  தாயிடத்து உண்டாகிய  இனிய  அருளினும்  சிறந்த  அருளைச்  செய்த ,

என் தலைவனை நனி காணேன்  =  என் ஆண்டவனை  மிகவும்  கண்டிலேன் , (இந் நிலையில்)

தீயில்  வீழ்கிலேன்  =  நெருப்பில்  வீழ்ந்து  இறந்திலேன் ,

திண் வரை  உருள்கிலேன்  =  திண்ணிய  மலைமேலிருந்து  உருண்டிலேன் ,

செழும்  கடல்  புகுவேனே  =  நீர்ப்  பெருக்கினையுடைய  கடலினும்  சென்று  வீழ்வேனா?  ( அதுவும்  செய்யேன்  என்றபடி)   என்பது .

விளக்கவுரை :-  இறைவன் உயிர்களுக்கு  அருளும்  மெய்ஞ்ஞானத்தை இறைவன் திருவடி எனக்  கூறுதல் மரபு . அழிந்து ஒழியாதன என்னும்  பொருள் தோன்ற ,”ஓய்விலாதன”என அத் திருவடிகளின் இயல்பு கூறப்பட்டது . இங்ஙனம் கூறியது அனுமான அளவை பற்றி என்க . அனுமான அளவையின் உறுப்புக்கள் ஐந்தனுள் ,மேற்கோள் , ஏது, எடுத்துக்காட்டு  என்னும்  மூன்றும் சிறந்தனவாம் . இண்டு  மேற்கோள்  இறைவன் திருவடிகள் அழிந்தொழியாத  இயல்புடையன என்பது. அதற்கு ஏது , அத் திருவடிக்கு உரிய  முதல்வன் என்றும்  அழிவில்லாத வனாக   இருத்தலின் என்பது . இதற்கு  எடுத்துக்காட்டு  வேண்டும் . அழிவின்மையும்  எங்கும்  நிறைந்திருத்தலும்  ஆகிய  குணங்களை யுடைய  கடவுளைப்பற்றி செய்திக்கு  , அப் பொருளின் நிறைவுக்கு  உட்படாத பொருல் பிறிதொன்று  இன்மையால் , எடுத்துக்காட்டுக்  காண்டல்  அரிது. எடுத்துக்காட்டு  இல்லாமல் இருப்பின்  ,அளவை இலக்கணம்   பிழைபடும் . இத்தகைய  இடங்களில் உடன்பாட்டு  முகமாக  எடுத்துக்காட்ட  இயலாமையின் , எதிர்மறைமுகமாக   எடுத்துக்காட்டு தலை  மேற்கொள்வர்  அளவை  நூலார் . இவற்றை  முறையே அந்வய திருட்டாந்தம் , வெதிரேக திருட்டாந்தம்  என்பர்  வடநூலார் . இங்கே  ஆண்டவனுடைய  திருவடி ஞானத்திற்கு  உடன்பாட்டு  முகமாக  எடுத்துக் காட்டுதற்குப் பொருல் இல்லாமையால் ,எதிர்மறை முகமாகக் கொண்டு,  “உவமனில்  இறந்தன” என்றார்.

                ஒண்மை – ஞானம் ; இறைவன்  திருவடியைச்  சிவஞான வடிவமாகச்  சைவ  நூல்  கூறும்  . அத்தகைய  உயர்ந்த  திருவடிஞானப் பேற்றிற்கு உரிய  தகுதி ஒரு சிறிதும் இல்லாத  கடையேன்  என்பார், “நாயில்  ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை” என்றார். நாய்ப் பிறப்பினும்  இழிந்த பிறப்புடையேன்  என்று  அடிக்கடி  அடிகள் தம்மைக்  கூறிக்கொள்ளுதலின்  கருத்து  இன்னது  என்பது முன்னைத் திருப்பாட்டு களில்  விளக்கப்பட்டது . நன்மை  எல்லாவற்றினும்  சிறந்தது  வீடு  ஆதலின்  , அதற்குரிய  நெறியை  நன்நெறி  என்றார். அஃது அன்பு  நெறியாகும் . அறிவு நெறி  முதலிய  வேறு  பல நெறிகளும்  உளவேனும்  , அடிகள் சிறப்பாகக்  கண்டது , பத்தி நெறியாகிய  அன்பு நெறியேயாம் . அந்நெறியைக் காட்டுதலாவது ,அக முகமாக நின்று உணர்த்தி அவ்வழிப்  படுத்தலாம் .ஆண்டவன் அன்பர்பால் வைக்கும் அருளுக்கு, “உயர்ந்ததன்  மேற்றே  உள்ளுங்காலை “  என்னும் விதிப்படி உவமை கூறுதல் இயலாத தொன்று ஆதலின்  , அதற்கு  உலக நிகழ்ச்சியுள்  சிறந்தது ஒன்றை எடுத்துக் காட்டுதல்  பெரியோர்  கொள்கை. அவ் எடுத்துக்காட்டாவது  , அறியாப் பருவத்து  மழவிளங்குழவிபால்  தாய்  வைத்துள்ள  அருட் குணமே  யாம் . அங்ஙனம்  எடுத்துக் காட்டுங்கால் , உறழ் பொருவும் , உவமப் பொருவும்  என்னும் இருவகையுள் , உறழ் பொருவு  பற்றியே  கூறத்தக்கதாகும் . காக்கையிற்  கரிது  களம்பழம்  என்புழிக்  காக்கை யினும்  கரிது என்பது உறழ்பொருவுக்கும் , காக்கைபோலக்  கரிது என்பது உவமப் பொருவுக்கும்  உதாரணங்களாம் . ஈண்டுத்  தாய்  அருள்  போன்ற  அருள்  என்பதை  உறழ்பொருவாகக்  கொண்டு, தாய்  அருளினும்  சிறந்த  அருள் எனக்  கொள்ளுதலே  பொருத்தம்  உடைத்தாம்.  

      அறக்கருணை , மறக்கருணை  என்னும் இருவகையுள் , இறைவன்  தமக்குச் செய்தது  அறக் கருணை யென்பார்,  “இன்னருள்  “ என்றார் . ஞானாசிரியனாக  எழுந்தருளி  வந்து திருவடிக் காட்சி  அளித்துத்  தமக்கு  நன்நெறி காட்டி  இன்னருள் புரிந்த  பெருமான்  உருக்கரந்த  நிலையில்  , அப் பிரிவு  சிறு பொழுதாயினும் , அதனைப் பொறாத அடிகள் , அச் சிறு  பொழுதைப்  பெரும்  பொழுதாக நினைந்து, இத் துணைநெடுங்காலம்  கடந்தும்  காணப் பெற்றிலேனே  என்று  இரங்குவார்., “ஏன் தலைவனை நனி காணேன் “ என்றார். நனி என்னும்  உரிச்சொல் காணாமைக்கு ஏதுவாகிய  காலமிகுதியைக்  குறிக்கும் . அருமருந்தன்ன ஆண்டவன் திருவடிக் காட்சி  மறைந்த நிலையில் உயிர்  வாழ்தல் தகாது எனக் கண்ட அடிகள், தம் உடம்பை மாய்த்துக் கொள்ளாமல் இருத்தல்  பற்றிப் பெரிதும்  கவல்கின்றார். துன்பம்  பொறாத  நிலையில்  சாதற்குத்  துணிவார் , தீப் பாய்தல் ,வரையின்  நின்றும்  உருளல் , நீரில்  வீழ்தல்  முதலிய  உடற்கு  அழிவுச்  செயல்களை  மேற்கொள்ளுதல் உண்டு . இங்கே கூறப்பட்ட  மூன்றனுள் , நீரில்  வீழ்தற் குரிய  மனவலியினும் , வரையினின்றும் உருளுதற்குரிய  மன வலி சற்று மிகுதியாகவும்  , தீப் பாய்தற்குரிய  மன வலி  அதனினும் சற்று  மிகுதி யாகவும்  வேண்டும் என்பது ஊன்றி  உணர்வார்க்குப்  புலனாம் . அம் முறயில்  தலைவன்  பிறிவாற்றாமை  பற்றித்  தீப்  பாய்ந்து இறத்தலே தக்கதாகவும்  , அச் செயலின்  கடுமை நினைந்து அவ்வாறு செய்திலேன் ஆயினும் , மலையினின்றும் உருண்டு  வீழ்த்து இறத்தல் வேண்டும் ; அதற்கும்  துணிவு  தோன்ற  வில்லை  யாயினும் , கடலில் ஆயினும் முழுகி இறத்தல்  வேண்டும் ; அதுவும் செய்திலேன் என்பார் , “தீயில்  வீழ்கிலேன்  திண்வரை  உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே” என்றார். புகுவேனே  என்புழி  , ஏகாரம்  எதிர்மறைப்பொருட்டு  , நீரில்  மூழ்குதற்கு   நீர்ப் பெருக்கினையுடைய  கடலைக்  கூறினார் ; மூழ்கினார் உய்தி பெறாமைப்  பொருட்டு  , செழுங்கடல் என்புழிச்  செழுமை  , நீர்ப்பெருக்கு.

                   37 ஆம்  திருப்பாட்டில் , “பாத  நன்மலர் பிரிந்திருந்தும் “ என்றார்,  பிரிந்த அணிமை  தோன்ற  38 ஆம்  திருப்பாட்டில்  பிரிந்த பின்னர் அணுகுதல் கூடுமே ; நெடுங்காலமாகியும்  அணுகப்பெற்றி லேனே என்னும்  கருத்தால் , “குறுகிலேன்  நெடுங்காலம்  “ எனவும் , இத் திருப்பாட்டில் காலம்  மிக  நெடிதாகியும்   காணப்பெற்றிலேனே என்று இரங்குவார் ., “தலைவனை நனி காணேன் “ எனவும்  கூறினர் .  இம் முறை நினைந்து  இன்புறத்தக்கது .

                  இதன்கண், அடிகள்  தமக்கு  நன்நெறி  காட்டி  இன்னருள்  புரிந்த தலைவனது  காட்சி  இடையறாது  நிகழ வேண்டும்  என்று  கருதுகின்றார்  என்பது விளக்கமாதலின் , அங்ஙனம்  இடையறாத  திருவடிக் காட்சியே உயிரின்  தூய்மைக்கு  இன்றியமையாதது  எனப்  பதிக  நுதலிய  ஆத்தும சுத்தி என்னும்  பொருளும் , தீப் பாய்தல் , முதலியன  கூறியிருத்தலின்  வைராக்கிய  விசித்திரம்  என்னும்  சதக  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக .  

                                    *****************************************

பாடல் :40 .

வேனில் வேள்கணை  கிழித்திட

மதிசுடும்  அதுதனை  நினையாதே

மானி  லாவிய  நோக்கியர்

படிறிடை  மத்திடு  தயிராகித்

தேனி  லாவிய   திருவருள்

புரிந்த என்  சிவனகர்  புகப்போகேன்

ஊனில்  ஆவியை ஓம்புதற்

பொருட்டினும்  உண்டுடுத்  திருந்தேனே.

கருத்துரை :-   ஆண்டவன்  பிரிவில்  தாம் அழியாமல்  உயிர்  வாழ்தல்  குறித்து முன்னைத்  திருப்பாட்டில்  வருந்திக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் காமம்  முதலிய  பகை வருக்கங்களால்  இடுக்கட்பட்டு  உழலும்  ஊனுடலைப்  பேணுதற் பொருட்டுச்   சிவனகர்  புகுதற்கு  உரிய செந் நெறிச்  செலவைக்  கைவிட்டிருக்கின்றேனே  என்று மீண்டும்  வருந்துகின்றார் .

பதவுரை :-  தேன் நிலாவிய  திருவருள்  புரிந்த என் சிவன்  = 

தேன் போன்ற இனிய சுவையினையுடைய  திருவருளை  உதவியருளிய   என்  ஆண்டவனாகிய  சிவபெருமானது ,

நகர்  புகப்போகேன்  =  பொன்னகருட்  புகுதற்குச்  செல்லேனாய்  ,

வேனில்  வேள்  கணை கிழித்திட  மதி சுடும்  அதனை  நினையாது  = 

இளவேனிற்  கிழவனாகிய  காமனுடைய  மலரம்பு   என் நெஞ்சைப்  பிளந்திட   அப் புண்ணில்  திங்கட் செல்வன்சுடுகின்ற  மாறுபட்ட  அத் துன்ப  நிலையையும் கருதாமல் ,

மான்  நிலாவிய  நோக்கியர்  படிறு  இடை  =  மான் விழிபோன்ற  விழிகளையுடைய  மகளிரின் வஞ்சகச்  செயலின்  கண்ணே ,

மத்து இடு தயிர்  ஆகி  =  மத்திட்டுக்  கடையப்படும்  தயிரைப்போற்  கலக்குண்டு,

ஊனில்  ஆவியை  இன்னும்  ஓம்புதற்பொருட்டு   =  ஊனுடலின் கண்ணே  உயிரை  நிறுத்தி இன்னமும்  பாதுகாத்தற் பொருட்டு ,

உண்டு உடுத்து இருந்தேன்  =  நல்ல  உணவுகளை  உண்டும் , நல்ல  ஆடைகளை  உடுத்தும் ,இதுகாறும்  வாழ்ந்திருந்தேன் (என்  அறியாமை  இருந்தவாறு  என்னே) என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  திருவருட் பேறு , தகுதியுடையார்க்கு  அன்றி , அடைதற்கும் அனுபவித்தற்கும் அரியது . அங்ஙனம் அரிய  அருளமுதை  எளிமையும்  இனிமையும்  உடையதாக்கி , வலிய  வந்து இறைவன்  தம்மை  ஊட்டினான்  என்பதே அடிகள் அநுபவத்திற் கண்டது . எளிமையில்  இனிமைச் சுவை மிகப் பெற்றது குறித்தே ,”தேனிலாவிய  திருவருள்” என்றார். தேனின் எளிமை, ஆன் நெய் ,கருப்புக்கட்டி  என்பவற்றோடு எண்னப்பட்டுக்  கிடந்த  முன்னைத்  திருப்பாட்டில்  விளக்கிக்  கூறப்பட்டுள்ளது  காண்க . புரிந்த  என்னும் சொல் , விரும்பிச் செய்த என்னும் பொருட்டு , தம்மை  அடிமையாகக் கொள்ளுதற்கு வலிய  வந்து திருவருள்  பாலித்த  உரிமை தோன்ற , “என் சிவன்” என்றார். விரும்பி அளித்த திருவருள் தேனைப்போல் இனிமை சுரந்து  இன்பது பயந்து நிற்றலின் , அதற்கேற்ப  , முதல்வனை இன்பம்  செய்பவன் என்னும் பொருள் உடையதாகிய  சிவன் என்னும் பெயரால் குறிப்பிட்டனர் .சிவன் நகர்  என்பது அழி வில்  இன்பம் துய்த்தற்கு  உரிய  வீட்டு நிலையைக் குறிக்கும் . புகப்போதல்  –  உட்புகுதற்கு உரிய செந்நெறிச் செலவை மேற்கோடல் . போகேன் என்பது  முற்றெச்சம் ; செல்லாமல்  என்னும் பொருட்டு , அஃது  ஈற்றடியில்  உள்ள இருந்தேன்  என்னும் வினையைக் கொண்டு முடியும் , பொன்னகர் புகப் போகாமல்  இருந்தேன் என்புழி , இருத்தற்கு  இடம் இம் மண்ணுலகம் என்பது போதரும் .

          இனி, இம் மண்ணுலக வாழ்க்கையின்  பயனைப் புலப்படுத்தத் தொடங்குகின்றார் . வேள்  இருவராதலின் , செவ்வேளாகிய  முருகனின் வேறுபட்டவன்  என்பது தோன்றக் காமனை “வேனில் வேள் “ என்றார்.  – காமன்  கணையோ  மெல்லிய  மலர்களாகும் . அம் மலர் அம்பினால் நெஞ்சம்  பிளவு படும் என்றது, இவ்வுலக  இன்பநுகர்ச்சிக்கு  உரிய  கருவிகளின்  வலியின்மையைப் புலப்படுத்தற்கு என்க. மலர் அம்பு கிழித்த புண்ணில் ஆம்  பெரும் புழைக்கட்  கனல் நுழைந்தாற் போல் “ ஆயிற்று  என்றபடி , மலரம்பு நெஞ்சத்தைப் பிளத்தலும் , திங்கட் கதிர்  சுடுதலும் இயற்கைக்கு  மாறுபட்ட செய்திகளாம் . உலக  வாழ்க்கையின் நொய்ம்மை  இத் தன்மைத்து என இந் நிகழ்ச்சிகளில் வைத்து நினைக்க வேண்டியது  கடமையாகவும் , அதனை  நினையாமல்  இருந்தேன் என்பார் , “ அது தனை நினையாது “ என்றார் . மலர் அம்பினால் ஊறுண்டு , திங்கட் கதிரினால்  சூடுண்டு , ஆற்றாமை  மிக்கு மகளிரைத் தஞ்சம் அடைந்தேனாக , அந் நிலையில் அவர்தம் வஞ்சகச் செயலில்  ஈடுபட்டு , மத்தினால் கடையப்பட்ட  தயிர் போலக் கலக்குண்டேன் என்பார், “மானிலாவிய  நோக்கியர்  படிறிடை  மத்திடுதயிராகி” என்றார் . மான் நிலவிய  நோக்கியர் என்றது , ஆடவர்  நெஞ்சத்தையும்  நிறையையும் கவரும் கருவியாகிய  நோக்குடையார் என்னும் பொருட்டு . “நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி” என்னும் சிந்தாமணி நூலுடையார் கருத்தும் ஈண்டு  நினைக்கத் தக்கது . ஊறுபாடும்  சூடும் பொறாது புகலடைந்த நிலையில் மதி மயங்கி  மகளிர் இட்டதே சட்டமாக அவர் தம் மாயச் செயலிற் சிக்கி, உய்தி பெற முடியாத  நிலையில்  கலக்குண்ட செய்தியை , “மத்திடு தயிராகி “ என்பதனாற்  புலப்படுத்தார் .  

     இத்துணைத்  துன்ப நிலையிலும் இன்பம் உண்டெனக் கருதி , அழியும்  இயல்பினதாகிய  ஊனுடம்பின் கண்ணே , அழிவு  இலதாகிய  உயிரை வைத்துப் பாதுகாக்கக் கருதினேனே என்பார்., “ஊனிலாவியை ஓம்புதற் பொருட்டு “ என்றார் . அறிவு வடிவம் ஆகிய உயிரை ஓம்பல்  வேண்டுமாயின், முற்றறிவினனாகிய  இறைவன் திருவடி நீழலில் இயைதற்கு முயலல் வேண்டும் . உயிர்க்கு உண்மைப் பாதுகாப்பு அதுவே யாகும் . அதனை விட்டு, ஊனில் ஆவியை வைத்து ஓம்ப  நினைப்பது , பசு மட்குடத்தைப் பற்றி , நீர் கடக்க  முயல்வது போலாம் என்பது , ஆண்டவன் திருவருட் பதிவு  ஒரு சிறிதும் இல்லாத நிலையில் , ஊனில் ஆவியை ஓம்புதல் ஓராற்றாற்  பொருந்துவதாகும் . தேனிலாவிய திருவருள் புரிந்த பின்னரும் அங்ஙனம் ஓம்ப நினைக்கின்றேனே  என்பார் , “இன்னும்  ஓம்புதற் பொருட்டு “ என்றார் .உண்ணலும் உடுதலுமே இவ்வுலக வாழ்க்கையிற் கண்டனவெனக் கொண்டு, “உண்டுடுத்திருந்தேனே”என்று கழித்தற்கு இரங்கினார்:இனியாவது சிவனகர் புகப்போதற்கு உரிய தவச் செயலில் தலைப்படுதற்கு உரிய நல்லூழ் வாய்க்க மாட்டாதா என்னும்  குறிப்புத் தோன்ற , சிவன்  நகர் புகப் போகாமல் , அதுதனை நினையாமல் , மத்திடு  தயிராகி  இன்னும்  ஓம்புதற் பொருட்டு  உண்டுடுத்திருந்தேனே  என முடிக்க .

              இதன்கண், சிவன் நகர் புகப்போதற்கு உரிய  தவத்தை  விடுதலும் , ஊனுடல் ஓம்புதல் பொருட்டு  உயிர் வாழ்ந்திருத்தலும்  தகாத செயல்களாம் என்று கூறியிருத்தலால் , சிவநகர் புகுதற்கு உரிய தவச் செயலை உயிரின்  தூய்மைக்கு வேண்டற்பாலது என்பதும் ,மத்திடு  தயிர் போலக் கலக்குண்டு  ஊனில் ஆவியை ஓம்புதல் வெறுக்கத்தக்கது என்பதும் பெறப்படுதலின் , முறையே  ஆத்தும  சுத்தி  என்னும் பதிகம் நுதலிய  பொருளும் ,வைராக்கிய  விசித்திரம்  என்னும் சதக  நுதலிய பொருளும் புலனாதல் அறிக .

                                                   ******************************

                                   *******************************************************  

5 .  கைம்மாறு  கொடுத்தல்

     கைம்மாறு   கொடுத்தல்  என்பது  ஓர்  உதவி  செய்தார்க்குப்  பிரதியாக உதவுதல்  என்னும்  பொருளதாம் . முன்னைப்  பதிகத்தில்  உயிரினது  தூய்மைக்கு வேண்டுவன  கூறப்பட்டன . மன மொழி மெய்களாகிய முக்  கரணங்களும்  இறைபணியில்  ஈடுபடவேண்டும் என்பதும் , அவற்றுள்ளும் உள்ளப்பணி மிக இன்றியமையாதது என்பதும் கூறப்பட்டன .அங்ஙனம்  இறை  பணியினால் வினை  மாசு  நீங்கித்  தூய்மை  எய்திய  தமக்கு  , ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுத்தருளி , வெளிப்பட்டு  , ஞானத்தை உணர்த்தி , இன்பமயமாகிய  தன்  அருளமுதத்தைத் துய்ப்பித்தனனாக ,  அப் பெருமான்  திருவடிக் காட்சியில்  ஈடுபட்டு மாறிலா  மகிழ்ச்சியின் மலர்ந்திருந்த  நிலையில் , பண்டை வினைத் தொடர்பால் ஓரோவமயம்  அவ் இன்பக் காட்சி மறைந்தும் , வெளிப்பட்டும் நிகழாநிற்ப, மறைந்த  நிலையில், அப் பிரிவாற்றாது , தம் உடலையே வெறுத்து வருந்திக் கூறிய செய்தியும் , முன்னைப் பதிகத்திற் கண்டாம் . பின்னர் , வரம்  பிகந்த இனிய  அருள்  அமுதையூட்டிய  வள்ளற் பெருமானுக்குத்  தாம்  செய்யும்  கைம்மாறு  யாதென ஆராய்ந்து கொடுக்கக்  கருதினாராக , பேரின்ப  வள்ளலாகிய இறைவன்,அவ் வின்பமயமாகிய தன்னையே அடிகளுக்கு வழங்கினனானால்  அதற்குக்  கைம்மாறாக  அடிகளால் வழங்கத்தக்கது யாதுள்ளது.? அடிகளுடைய  உடல் , பொருள் , ஆவி , மூன்றும்  ஆண்டவன்  உடைமைகளே , கைம்மாறு  கொடுத்தல் என்றால் , கொடுக்கப்படுவது  கொடுப்பவனுடைய  உடைமையாகவன்றோ  இருத்தல் வேண்டும் ? கொடுப்பவராகிய  அடிகளுக்கு  என ஏதும் இல்லாத நிலையில், கைம்மாறு  கொடுக்க வேண்டும்  என்று  அடிகள் கருதுதற்குக்  காரணம் என்னையெனின் , திருவடிக் காட்சி யினின்றும் பிரிவு  நேர்ந்த பொழுது , அப் பெருமான் உதவிக்கு  ஈடாக ஏதும் செய்யாமல்  இருக்கலாமா?  செய்யவேண்டியது  கடமையென , அன்பு மேலீட்டால்  சிறிது உயிர் முனைப்புப்  பற்றி  எழுந்த எண்ணமேயாம்  என்க. பின்னர் , மீண்டும்  காட்சியில்  ஈடுபட்டு , அம்முனைப்பும்  ஒடுங்கிய   நிலையில் , தம்  உடல் , பொருள் , ஆவியெல்லாம்  அவனுடைமை என்னும்  உண்மையை உணர்ந்து , “தந்ததுன்றன்னைக்  கொண்ட  தென்றன்னைச்  சங்கரா யார்  கொலோ சதுரர் “  என்று  அருளியபடி  , கைம்மாறாக  ஏதும் கொடுக்க  இயலாதென்னும்  உண்மை அநுபவம் கைவரப் பெறுவர் . இவ் உண்மை அநுபவ நிலையிலே ,தாயுமான அடிகளும் , “சிந்தை மயக்கமறச்  சின்மயமாய் நின்றவுன்னைத்  , தந்தவுனக் கென்னயு நான் தந்தேன் பராபரமே “ என்று  அருளிச்செய்வாராயினர்  இவ்வுண்மை அநுபவத்திற்குச்  சிறிது  முற்பட்ட  நிலையே  கைம்மாறு  கொடுத்தற்கு  உரியதாகும் . இறைவனது இன்ப  அருள் அமுதை  ஓரோவழி  யுண்டு  , பிரிவு  நேர்ந்த  பொழுது  இங்ஙனம்  கருதுதல்  அன்பு  மேலீட்டால்  ஆவதாகும் . பிரிவு  நேர்தற்கு அடிகளுடைய  பண்டை வினைத்  தொடர்பு  ஓரளவு காரணமாயினும் , இறைவன் தன் அருளமுதின் நுகர்ச்சியில் அடிகளுக்கு  மேன்மேலும்  ஆர்வம்  விளைவிக்க  வேண்டு மென்னும் திருவுள்ளக் குறிப்பே  சிறந்த  காரணம்  ஆகும்  என்பது .

பாடல்: 41 .

இருகை  யானையை  யொத்திருந்  தென்னுளக்

கருவை  யான் கண்டி  லேன்கண்ட  தெய்வமே

வருக  என்று  பணித்தனை  வானுளோர்க்

கொருவ  னேகிற்றி  லேங்கிற்பன்  உண்ணவே .

கருத்துரை :- இதன் முன்னைப் பதிகத்து  இறுதித்  திருப்பாட்டில்  ஆண்டவன் பிரிவில் ஊனுடலைப்  பேணுதலையும்  , செந் நெறிச்  செலவைக்  கைவிட்டி ருக்கின்றமையையும்   கருதி வருந்திய  அடிகள் , அந் நிலையில் முன்னர்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  ,  உண்மைப்  பொருளை  உபதேசித்துத் திருவடிக் காட்சி  யளித்து  இன்புறுத்திய  இறைவனது பெறற்கரிய  பேருதவியை  நினைந்தும் , அதற்குக்  கைம்மாறாக  எதனைக் கொடுக்கலாம்  என்று  ஆராய்ந்தும் , அப் பேருதவிக்குத் தகுதியான  கைம்மாறு  கொடுத்தற் குரிய  ஆற்றல் தமக்கு இல்லாமையை எண்ணியும், உண்முகமாக  முன்னிலைப் படுத்து  இப்பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டாகிய இதன்   கண்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை :-  வான்  உள்ளோர்க்கு  ஒருவனே  =  வானுலகத்துள்ள  அமரர்க்கு  ஒப்பற்ற  முழு முதலே ,

யான் இருகை யானையை  ஒத்து இருந்து  =  நான் இரண்டு  கைகளையுடைய  யானையை  ஒத்து உயிர்  வாழ்ந்திருந்து ,

என் உள்ளக்  கருவைக் கண்டிலேன்  =  என் உள்ளத்தின்  உள்ளே  விளங்கும்  மூலப் பொருளாகிய  நின்னை நோக்கி உணர்ந்திலேன் ,

கண்டது எவ்வமே  =  யான்  கண்டது  துன்பத்தையே  ,

வருக  என்று  பணித்தனை  =  அங்ஙனமாகவும்  திருவடிக்காட்சி  நல்கி  வருக என்று  கட்டளை  இட்டனை ,

கிற்றிலேன்   =  அக் கட்டளைப் படி வருதற்கும்  அது குறித்துக்  கைம்மாறு  கொடுத்தற்கும்  ஆற்றல்  இல்லாதவனாயினேன்  ,

உண்ணக்கிற்பன்  =  மீண்டும்  பொறிவழி ப் புலனுகர்ச்சியின் தலைப்படுதற்கு   ஆற்றல்  உடையவனாகின்றேன்  என்பது .

விளக்கவுரை :-   இறைவன் , விண்  மண்  பாதாலம் என்னும்  மூன்றிடத்துள்ளார்க்கும் ஒத்த தலைவனே  யாயினும் , அம் மூவிடத்தும் உள்ளார்  முறையே  புண்ணியப்பயனையும்  , புண்ணிய  பாவப்  பயனையும், பாவப் பயனையும் நுகரும் இயல்பினராதலின் ,அன்னார் தகுதிக்கேற்பத் தன் இயல்பைப்  புலப்படுத்து விளங்குவன்  என்பது பெரியார் அநுபவத்திற்  கண்டது . இவ் வுண்மையை , “விண்ணோர் முழுமுதல் , பாதாளத்தார்  வித்து , மண்ணோர் மருந்து “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  அறிக.  அமரர்  தொகுதியுள் தன்னையும்  ஒரு  தலைவனாகக்  காட்டி , அன்னார்  புண்ணியப்  பயனுக்குக்  காட்சி  யளித்து விளங்குதல் பற்றி , “வானுளோர்க்கு  ஒருவனே  “ என்றார்., “ விண்ணோர்  முழுமுதல் “ என்றதும்  இக் கருத்துப்  பற்றியே , புண்ணியப் பயனுக்கு  அணுக்கங்காட்டிய அருட் குறிப்பை  உணராத நிலையில் , அவ்வமரர்க்கும்  அறியப்படாதவன்  ஆவான் என்பதை , “தேவர் கோவறியாத  தேவதேவன்  “  என்னும்  பாடற்  பகுதியால்  விளக்கியிருத்தலும்  அறிக .

          இருகை யானை  –  இல்  பொருளுவமை  . ஒரு  கையினால்  மிகுதியான  உணவை  வாரி  வாரி  விழுங்கி ,உலகத்தில்  உள்ள  எல்லாப் பிராணிகளிலும் மிகுதியாக  பருத்திருப்பது யானை , ஒருகையிடைய  அவ் யானையினும் சிறக்க , உடற்கு  வேண்டிய  உணவுப் பொருள்களை ஈட்டி  , உண்டு , செருக்குற்று  இருக்கின்றமையால் , யான் இரண்டு  கைகளையுடைய  யானையை ஒப்பாவேன் என்பது தோன்ற  ,”இருகை  யானையை  ஒத்திருந்து”ஏன்றார். அத்துணை உடற் பருமைக்கு  வேண்டும் உணவு  முதலியவற்றை நல்கித் தன்னைப் பாதுகாக்கும்  பாகனது நன்றியை ஒரு சிறிதும் நினையாமல் ,யானை  அப்பாகனுக்கே கேடு  விளைக்கும்  இயல்பினதாகும் . “ யானை யனையவர்  நட்பொரீஇ  நாயனையார். கேண்மை  கெழீஇக் கொளல்  வேண்டும்  – யானை, அறிந்திருந்தும்  பாகனையே  கொல்லும் “ என்பது நீதி நூல் . ஆண்டவன்  , தன்னை வழிபடுதற்கு உதவிய  உடலை  , அந் நெறியிற்  பயன்படுத்தாமலும்  , அப் பெருமானது நன்றியை  மறந்தும் ,ஆக்கைக்கே  இரை தேடி  அலமந்திருத் தலின்  , இருகை யானைக்குத்  தம்மை  ஒப்பிட்டுக்  கூறியருளினர் . இனி, யானையை  ஒத்திருந்து கண்டிலேன்  எனக்  கூட்டி  , யானை  தன்  உடலை  அறியாததுபோல் ,யான்  உள்ளக் கருவைக்  கண்டிலேன்  என்பது  கருத்து  எனக்  கூறுவாரும்  உளர் . வாழ்க்கையின்  சிறந்த  குறிக்கோளாகிய  கடவுட்  காட்சியைப் பெறாது , வறிதே  உடலோம்பி யிருக்கின்றேன்  என்பார். “இருந்து” என்றார். “ உள்ளக் கரு  “ என்றது , உயிர்க்கு  உயிராக  விளங்கும்  முதல்வனைக் குறிக்கும் . கரு – காரணம் .  உலகிற்கு இறைவன் நிமித்த  காரணன் ஆதலின் , “கரு” என்னும்  சொல்லால்  குறிக்கப்பட்டான் . நிமித்த காரணனாய் , உயிர்க்கு  உயிராக  நின்று  பாசகக்  கட்டை  ஒழித்துப்  பேரின்பம்  நுகர்விக்கும்  முதல்வனது  பேருதுவியை நினைந்து வழிபடுதலே  உயிராற்  செய்யத் தக்கது , அங்ஙனம்  செய்யாது , ,புலன்களின்  நுகர்ச்சியில்  பெரிதும்  ஈடுபட்டு  , உடல்  ஓம்புதலையே   குறிக்கோளாகக்  கொண்டேன் என்பார் , “ என்னுள்ளக்  கருவை  யான் கண்டிலேன்  கண்டது எவ்வமே “ என்றார். “கண்டிலேன்  என்றது ,உதவியை  நினைவு  கூர்ந்திலேன் என்னும்  பொருட்டு . “எவ்வம்” என்றது , இன்பம் போற் காட்டித்  துன்பமாக  முடியும் புலன் நுகர்ச்சிகளை , அவ் எவ்வத்தைக் காண்பதாவது , அந் நுகர்ச்சிக ளையே   பொருளென மதித்து  மேற்கொள்ளுதல் . யானை தன்னை நன்நெறிப்  படுத்தும்  பாகன்  உதவியை  நினைவு  கூறாது  , அவனைத் துன்புறுத்தி மதச் செருக்கால் புலன் நுகர்ச்சிகளில்  தலைப்படுதல்  போல, தனக்கு  மூல  காரணனாக நின்று  பேருதவி  புரியும்  இறைவன்  அருள் திறத்தை நினைவு கூறாது , அவனுக்கு  இடனாக உள்ளத்தைப்  பொறிவழிப்  போக்கி , இன்பமெனக்  காட்டித்  துன்பமாக  முடியும்  புலன்களில்  தலைப் படலானேன் என்பது இவ்விரண்டு அடிகளானும் பெறப்படும் கருத்தாம் என்க.  தம்  உள்ளத்தைப்  பற்றி நிற்கும்  இறையருளை  நினையாமல்  , அவ்வுள்ளத்தைத்  தீய  வழிகளில்  செலுத்தும் கொடியவன் என்று  தம் இயல்பை அறிந்தும் , வேறாது ,இன்பமயமாகவுள்ள  தன் பக்கலை அணுகுமாறு ஞானாசிரியன்  வடிவமாக எழுந்தருளிக்  கட்டலையிட்ட  பெருமையைப்  புலப்படுப்பார் , “வருக என்று பணித்தனை “ என்றார் . “வன்ணப் பணித்தென்னை  வா வென்ற  வான் கருணை “ என்று  பிறிதோரி டத்து   அடிகள் அருளிச் செய்ததும் அறிக .  பணித்தல் – கட்டளையிடுதல் . “வருக” என்னும் வியங்கோட்  சிறப்பால் , இறைவன்  மெய்யன்பர்  மாட்டு   வைத்திருக்கும் பெருங் கருணைத்திறம்  புலனாம் .

            “கிற்றிலேன்”  என்னும்  சொல் , ஆற்றலை உணர்த்தும்  கில்  என்னும்  இடைச்  சொல் அடியாகப் பிறந்த எதிர்மறை வினை முற்று ,”கிற்பன்”  அங்ஙனமாய உடன்பாட்டு  எதிர் கால  வினை முற்று .ஒருவன் தனக்கு  நலம்  செய்வான்  ஒருவனை  வெறுத்துத்  தீங்கு செய்பவனை அறியாமையாற்  பின் பற்றி  , அலைந்து திரிந்து பயன் ஒன்றும்  காணாமல்  துன்புற்று  , மீண்டும்  அந் நலம் புரிவோனை அணுகுதற்கு  நாணி ஒதுங்கிச்  சேறல்  உலகியலிற்  கண்டது . அங்ஙனம் ஒதுங்கிச் செல்வோனை , அந்நல்லோன் கண்டுழித்  தன் கருணையால் தான் அவனுக்குச்  செய்யத்தக்க  உதவியைக்  குறிக்கொண்டு, “வருக” என்று  அழைத்தல் போல , தன்னை  நினையாதிருந்த  என்னை  நலஞ் செய்வான் திருவுளங்  கொண்டு இறைவன் அழைத்தனன் என்பது . “வருக” என்னும்  சொல்லால் பெறப்படுவதாகும் . அங்ஙனம் பேரானந்தப் பெருஞ்  செல்வத்தை அருளுதற் பொருட்டு வலிந்து ,”வருக” என்று  பணித்த  பேருதவிக்குக்   கைம்மாறு  யாது  செய்ய  வல்லேன்; ஏதும் செய்தற்கு ஆற்றல் இல்லாதவனாக  உள்ளேன் என்பார் , “ கிற்றிலேன்” என்றார். இனி, அங்ஙனம்  வலிந்து அழைத்தும் , அப் பேரானந்தப் பெருஞ் செல்வத்தை அடைதற்கு  அணுக ஒருப்பட்டிலேன்  என்பார் , “கிற்றிலேன்” என்றார். எனினுமாம் , கிற்றிலேன்  என்பது, ஆற்றல்  இல்லேன்  என்னும் பொருள் பயக்குமாயினும், ஈண்டு  இலக்கணச் சொல்லாக நின்று  , வருதற்கு  உடன்  பட்டிலேன்  என்னும்  பொருள் பயந்து நிற்பதாகும் .  இறைவன்  திருவருள் அமுதத்தை உண்ணுதற்கு ஒருப்படாமல் , உடலோம்பி , இழிந்த பொறி இன்பங்களை  நுகர்தற்கு  ஆற்றல்  உடையேனாக  இருக்கின்றேன்  என்பார், “உண்ணவே கிற்பன் “என்றார். ஏகாரம்  தேற்றப் பொருட்டு . ஈண்டு  உண்டல்  , இழிந்த  போகங்களை நுகர்தல் . உள்ளக்கருவைக் கண்டு ,அக் கருவின் வழி நின்று , அழி வில்  இன்பம்  நுகராமல் துன்பம்  நுகரும் பொருள்களில் தலப்பட்டு , அழியும் இயல்பினவாகிய  இன்பங்களை நுகரத் தலைப்படுகின்றேன் ; என் அறியாமை இருந்தவாறு என்னே !  என்பது  கருத்து .

           இதன்கண், “என்னுளக்  கருவையான்  கண்டிலேன் “ என  இறைவனைத்  தாம் நினையாதிருந்த  நிலையிலும்  ,”வருக” என்று  பணித்த  பேருதவிக்குக்  கைம்மாறு  செய்யும்  கடப்பாடு  உடையனாக  இருந்தும் , அதற்கு  ஆற்றல்  இல்லாதவன்  ஆயினேன்   என்பதனால் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருளும்  , “என்னுளக்  கருவை” ,  “ வானுளோர்க்கு  ஒருவனே  என்பவற்றால்  பத்தி விசித்திரமாகிய  சதகம்  நுதலிய  பொருளும்  புலனாதல் அறிக . 

                                            **************************************

பாடல் : 42 .

உண்டோர்  ஒண்பொருள்  என்றுணர்   வார்க்கெலாம்

பெண்டிற்  ஆண்  அலி  என்றறி   யொண்கிலை

தொண்ட னேற்குள்ள  வாவந்து   தோன்றினாய்

கண்டுங்  கண்டிலேன்  என்னகண்  மாயமே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  தம்  உயிர்க்கு  உயிராக  விளங்கும்  ஆண்டவனை நினையாதிருந்தும் , வருக என்று  பணித்த அருள்திறத்தைப்  பாராட்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அவ் இறைவன்  தன்  கட்டளைப்படி  வாராதிருந்த  என்பால்  தானே  வந்து , பிறர்க்கெல்லாம்  இப்படியன்  என்று  உணர  வொண்ணாத  தன் உண்மைத்தன்மை இயல்பு காட்டிக்  காட்சியளித்த  பேருதவியைப் பாராட்டுகின்றார். முன்னைத்  திருப்பாட்டில்  , “வருக என்று பணித்தனை” என்பதும் , அக் கட்டளைப்படி  வாராமையால்  , இத் திருப்பாட்டில்  தானே வந்து தோன்றினான்  என்பதும் ஆகிய  இயைபு  கருதத்தக்கது.  

பதவுரை :-  ஓர்  ஒண்பொருள் உண்டு  என்று  உணர்வார்க்கு  எல்லாம்  = 

ஒரு சிறந்த  முதற்பொருள்  அழிவிலதாக  உள்ளது  என்று  பொது வகையில்  உணரும் அன்பர்களுக்கெல்லாம் ,

பெண்டிற் ஆண் அலி என்று அறிய ஒண்கிலை  =  அப் பொருள் பெண்ணென்றாதல்  ஆணென்றாதல்  அலியென்றாதல்  இன்னது  எனத்  துணிந்து  அறியமுடியாத  நிலையில்  உள்ளாய் ,

தொண்டனேற்கு   =  அடிமையாகிய  எனக்கு  ,

உள்ளவா  வந்து  தோன்றினாய்  =  உண்மைத் தன்மை இருந்தபடி எழுந்தருளி  வந்து காட்சிதந்து  அருளினாய் ,

கண்டும்  கண்டிலேன்  =  அங்ஙனம்  அருளிய  உண்மை இயல்பைக்  கண்டு வைத்தும்  காணாதவன்   ஆயினேன்  ,

என்ன கண் மாயம்  =  இதென்ன  கண் மயக்கமோ?  என்பது .

விளக்கவுரை :- “ஓர் ஒண் பொருள்”  என்புழி, ஓர் குறுகி  நின்றது .  தனக்கு  ஒப்பதும் , மிக்கதும் , பிறிதொன்று  இல்லாத  பரம் பொருள் என்பது தோன்ற , “ஓர் ஒண்பொருள்” என்றார். ஒருமை  தனிச்சிறப்பையும்  ,ஒண்மை இயற்கை உணர்வினன்  ஆதல்  முதலிய   எண் குணங்களையும்  குறிப்பனவாம் . இவ்விரண்டு  அடை மொழிகளும்  முதற்பொருளின்  சிறப்பியல்புகளை  நன்கு  புலப்படுத்து நிற்றல் அறிக . ஓர் உயிர் இழிந்த பல பிறவிகளினின்றும்  நல்வினைப் பயன் காரணமாக , மேன்மேற்  சென்று  அரிதின் அடைந்த  மக்கட்  பிறப்பில்  , “தெய்வம்” என்பதோர்  சித்தம்  உண்டாகப் பெறுதல் அரிது  . இது குறித்தே, “தெய்வம் தெளிமின்” என்பது சிலப்பதிகார  முடிவுரை. மக்கள் முதலிய  உயிர்த் தொகுதிகளின்  ஆற்றளினும்  எத்துணையோ சிறந்த ஆற்றலின்  விளைவைக்  காணுங்கால் , இது  கடவுள் தன்மை என்னும்  முடிவுக்கு  வருகின்றோம் . அந் நிலையில் அக் கடவுள் இயல்பை  நூல்  வாயிலாக  அறிந்து , அநுபவ வாயிலாக  உணரத் தலைப்படுவார்க்கு , அக் கடவுட் பொருள் ஒன்றாகவும் , இயற்கை உணர்வு முதலிய அருட்குணங்களு டையதாகவும்  தெளியப்படும் . தெளிந்த பின்னர் ,அப் பரம்பொருளின் உண்மைத் தன்மை , அகக்  காட்சிக்கும் , புறக்காட்சிக்கும்  ஒத்த  நிலையில்  எங்ஙனம் அறியப்படும்  எனின் , அது மாற்ற  மனங்கழிய நின்ற  நிலையாதலின்  , மெய்யுணர்விற்கு  நேர்படுவதல்லது வேறு வகையான் உணர்தற்பால தன்று .

            பின்னர் ,”பெண்டிர்   ஆண்   அலி “  என்று  அறியமுடியாதது என்றதற்கு  ஏற்ப ,”பொருள்” என்னப்பட்டது . இங்ஙனம்  முதற்பொருள் ஒன்று உண்டு என்று தெளிந்தார் சிலராக , அன்னாரும்  அத்தகைய  காட்சிப்படும்  நிலையில் பெண்ணென்றாதல் , ஆணென்றாதல் அலியென்று ஆதல் அறிய வொண்ணாத  தன்மை உடையையாய்  உள்ளாய்  என்பார், “ பெண்டிற் ஆணலி  யென்றறி யொண்கிலை “என்றார் . இறையருள் பெற  முயல்வார்க் கெல்லாம் , அருள் வடிவினளாகிய  அம்மையை முதலில்  வழிபட்டு , அவள் காட்ட, அப்பனைக் காண்டல்  முறையாகும்  . கோநோபநிடதத்தில் , இயக்க உருவம் தாங்கி  வந்த இறைவனை அக்கினி முதலாக இந்திரன் இறுதியாக வுள்ளார்  அறியாமல்  மயங்கி நிற்புழி , உமையம்மையார் தோன்றி , அது பரம்பொருள் என்று தெளிவுறுத்திய செய்தியும் இதனை வலியுறுத்துவதாகும் “அவனருளாலே  யவன் தாள் வணங்கி “ என்பதும்  அது. இங்ஙனம் , இன்ன  தன்மையன் என்று அறிய முயல்வார்க்கு , முதற் குறிப்பு அம்மையைப்  பற்றி  நிகழும்  ஆதலின் முதலிற் “பெண்டிர்”  எனவும், அடுத்து , “ஆண்”  எனவும் , கூறப்பட்டன. உலகம் , அவன் , அவள் , அது  எனும் முக்கூற்ற தென்ப. உயர்திணை  ஆணும்  பெண்ணும் அல்லாத  அஃறிணைப் பொருளை ,”அது” என்பது புலப்படுக்கும் . அவ்வுலகெலாம் ஆகி நிற்கும் இறைவன் , அம் முக்கூற்றுள் யாதன்பாற் படுவன்  என்று ஆராய்வார்க்கு  , அவற்றுள் ஒன்றன் பாற் படுபவன் அல்லன் ; அவ்வெள்ளமாய்  , அல்லதுமாய்  விளங்குபவன்  என்னும்  உண்மை  பெறப்படும் . அம் முக்கூற்றுள்  அஃறிணைக்குத்  தனியே  ஒன்றை எடுத்துக்காட்டாமல் , அலியைக்  கூறியது ஒரு  நயம்  கருதி என்க. அலி , ஆண் தன்மையும்  பெண் தன்மையும் திரிந்த உருவமாகும் .இதனைத் தன்மை திரிபொருள்   எனக் கொண்டு  , பொருள் வகையான் உயர்திணைக் கண்ணும் , சொன்முடிவால்  அஃறிணையுள்ளும்  அடக்கிக்  கூறுவர் . “தொல்காப்பியனார் , இதனால் அலி உயர்திணையாகவும்  அஃதல்லாத தாகவும் நிற்கும்  என்பது பெறப்படும் . இங்ஙனமே எல்லாமாய்   அல்லதுமாய் நிற்கும் இறை இயல்புமாம் என்பது  புலப்படும்  என்க.  இது கருதியே, ”பெண்ணாகி ஆணாய் அலியாய் “ எனப்  பலவிடத்தும்  அலியை  இயைத்தே  அடிகள் கூறியருளினர்  என்க.  இம்முறை  பிறழ்ந்தும்  ஓரோவழிக்  கூறுவர் ; கருத்து வேறுபாடு  கண்டு .

            ஓர் ஒண் பொருள்  உண்டு என்று  அறியும் அறிவு கைவரப் பெறுதலே அரிது . அங்ஙனம் பெற்றார்க்கும் நின் உண்மைத் தன்மை இன்னது என வரையறுத்துத்  தெளிதற்கு உரிய நிலையில்  காட்சிப்படுவாய்  அல்லை என்பார் , “என்று அறியொண்கிலை “ என்றார். அறிய  என்னும்  செயவென்  வாய்ப்பாட்டு  வினையெச்சத்து ஈறு தொக்கு, “ஆறியொண்கிலை” என்றாயிற்று . இங்ஙனம்  முற்றறிவு  முதலிய  குணங்களும் , தனிமைச் சிறப்பும்  உடைய கடவுட் பொருள் ஒன்று  உண்டு  என்று அறியும்  தத்துவ   ஞானிகளுக்கும் , பெண்  ஆண் அலி யென்னும்  இக் கூறுகளில் வைத்து இன்னதென்று  அறியவொண்ணாத நீ, சிற்றறிவுடைய தொண்டனாகிய எனக்கு நின் உண்மைத் தன்மை  இன்னதென உள்ளவாறு  காட்டி  வெளிப்பட்டு அருளினை என்பார், “தொண்டனேற் குள்ளவா வந்து தோன்றினாய்” என்றார்.

           முன்னைத் திருப்பாட்டில் குறிப்பிட்டபடி ,” வருக” என்று  அருளா  நிற்கவும் , அக் கட்டளைப்படி செல்லாதிருந்த அக் குற்றத்தையும் பொறுத்து, ஆண்டவன் தானே தமக்கு வலிய வந்து காட்சியளித்தனன் என்பார் , “ வந்து தோன்றினை “ என்றார். இஃது அருமையில்  எளிய  அழகுகளில் ஒன்றாகும் என்பது கருத்து. அடிகள்  தம்மைக் குறிப்பிடுங்கால்  , “ஆடியேன் “ , “தொண்டன்”  என்று  கூறிக்கொள்வதிலே பெரிதும்  விருப்பம் உடையவர் என்பது வெளிப்படும் . ஆண்டவன்  கட்டளைவழி நிற்பதல்லது , அடிமைக்கு என  யாதும்  இன்மையாலும், “ நன்றே செய்வாய்  பிழை செய்வாய்  நானோ  இதற்கு பொறுப்புக்களையும்  வீட்டுச்  சுவை நீங்கி , இறையருள் வழி நின்று  அமைதி பெறுதற்கு அவ்வடிமையே சிறந்ததொன்று ஆகலானும், திருத் தொண்டில்  உறைந்து நிற்பாராயினர் , “மறைத்திற  நோக்கி  வருந்தினர்க் கொளித்தும் ,இத் தந்திரத்திற் காணடுமென்றிருந்தோர்க்கு , அத் தந்திரத்தின் அவ்வயின்  ஒளித்தும்” என்றபடி , மறை ஆகமங்கொண்டு  காணமுயல் வார்க்கு , இறைவன் தன் இயல்பைப் புலப்படுத்தாமல் இருக்கலாம் . அன்னார் நூலறிவிற் செருக்குற்று இருக்கின்றமையின் ,மெய்த் தொண் டர்க்கு உண்மைத் தன்மை மறைக்கப்படுமாயின்  அந் நிலையிற்  காட்சிப் படுவதையே  ஆராயாமற் கடைப்பிடிப்பர்  ஆதலானும் , அஃது இறையருள் இயல்பிற்குக்  குறையாகும்  ஆதலானும், உள்ளபடி காட்சிப்படுதலே அருள் உருவினர்க்கு  முறையாகும் ஆதலானும் , அவ்வாறு  தமக்குக்  காட்சிதந்து  வெளிப்பட்ட  பேருதவியை  நினைந்து ,”தொண்டனேற்கு  உள்ளவா  வந்து  தோன்றினாய் “ என்றார். உள்ளவாறு  தோன்றுதல் – எல்லாமாய்  அல்லதுமாய் யிருக்கும் தன் உண்மைத் தன்மை புலப்பட ஞானாசிரியனாக  வெளிப்பட்டு  அருளுதல் . அங்ஙனம் காட்சி அளித்து ஞானோபதேசம் செய்த பரமபதி , ஆண்டே மறைந்து நிற்ப  , அது கண்டு வருந்திய அடிகள் , “கண்டுங் கண்டிலேன் “ என்றார். கண்ணிழந்தவன் முன்னைத் தவத்தால் தனைப் பெற்று  மீண்டும் இழத்தது  போல ,பண்டை நல்வினைப் பயனாக ஞானாசிரி யனாக  இறைவன் வெளிப்பட்டு அருளப்பெற்ற  அடிகள் , அக்காட்சி  கரந்த பொழுது துடிதுடித்துக் கதறியழுதார்  என்பது , “என் தலைவனை நனி காணேன் ,தீயில்  வீழ்கிலேன்  திண்வரையுருள்கிலேன்  செழுங்கடல் புகுவேனே” என்பது  முதலிய  பாடற் பகுதிகளால் அறியலாம் . அரிய பொருளைப் பெறாத நிலையில் ஏற்படும் வருத்தத்தைவிடப்  பெற்று  இழந்த நிலையில் ஏற்படும் துன்பம் பெரிதாகுமாதலின் , “கண்டுங் கண்டிலேன் “ என்று   தம் துன்ப மிகுதியைப் புலப்படுத்தார் என்க .

       இறைவன்  காட்சியில்  ஈடுபட்டுத் திளைத்துக் கொண்டிருக்கும் பொழுதே  அது கரந்ததாகலின் , “என்ன கண்மாயமே” என்றார். கண் மாயம் – கண் கட்டு வித்தை . இல்லாத ஒரு பொருளை இருப்பதாகக்  காட்டியும் , கண்ட பொருளைக் காணாவாறு செய்வதும்  கண் கட்டு வித்தை என்பர் . அங்ஙனமே , காண்டற்கு அரிய பொருள் காட்சிப்படக்கிடைத்தும் , கிடைத்தது உடனே மறைந்தும் ஆகிய அந் நிகழ்ச்சியைக்  குறித்து ,  “என்ன கண்மாயமே” என்றது பொருத்தமே . அன்றிக் கண்மாயம்  என்பதற்குக் கண் மயக்கம் எனக் கொண்டு என் கண் மயக்கம் இருந்தவாறு என்னே  யென்றலுமாம் . ஈண்டு , இறைவன் அழிவில்லாத  பொருளாதலால் , அவன்  காட்சி  மறைத்தற்குத்  தம் அகப் புறக்  கண்களின் குற்றமே காரணமாகலாம்  என்பது கருத்து.

          இதன்கண், “தொண்டனேற்கு  உள்ளவா  வந்து தோன்றினாய்”  என்றதனால்  இப் பேருதவிக்கு யான்  செய்யுங் கைம்மாறு  காணேன் என்பது பெறப்படுதலின் , கைம்மாறு  கொடுத்தல் என்னும்  பதிக நுதலிய பொருள்  புலனாதல்  அறிக.

                                              *************************************

பாடல் : 43 .

மேலை  வானவ  ரும் அறி  யாததோர்

கோல  மேயெனை  யாட்கொண்ட  கூத்தனே

ஞால  மேவிசும்  பேயிவை  வந்து  போங்

கால  மேயுனை  யென்றுகொல்  காண்பதே .

கருத்துரை :-   இப் பதிகத்தின்  முதல்  திருப்பாட்டில்  இறைவன்  “வருக” என்று  பணித்தனனாக , அக் கட்டளையின்  அருமைப்பாட்டை பொருட் படுத்தா திருந்தேற்குத் தன் உண்மைத் தன்மை இயல்பு காட்டித் தானே வந்து எளிமையில் வெளிப்பட்டருளினன் எனக்  கூறிய  அடிகள் , அவ்வளவின்  அமையாது , பாசப்பிணிப்பையும் அறுத்து , அறிவு தந்து ஆட்கொண்ட  அப்பெருமான் அருள்திறத்தில்  ஈடுபட்டுத்  தேடுகின்றார்.

பதவுரை :- மேலை வானரும்  =  மிக உயர்ந்த பதங்களில்  உள்ள  தேவர்களும் ,

அறியாத  ஓர்  கோலமே  =  அறியப்படாதது  ஆகிய  ஒப்பற்ற  திருவுருவமே ,

என்னை  ஆட்கொண்ட  கூத்தனே  =  எளியேன்  ஆகிய  என்னையும்  அடிமை கொண்ட  கூத்தப்பெருமானே ,

ஞாலமே  விசும்பே  இவை  வந்து போம் காலமே  =  மண்ணும்  விண்ணும்  தோன்றி  ஒடுங்குதற்குக்  காரணமான  காலவடிவமான  பெருமானே ,

உனைக்  காண்பது என்று =  அரிய  பொருளாகிய  நின்னைக்  காண்டல்  எப்பொழுதோ?  என்பது .

விளக்கவுரை :-  வானவர்  என்ற  அளவிலே , தேவர்  என்பது  பெறப்படுவதாக, ஈண்டு மேலை வானவரென்றது , இந்திர  பதத்திற்கு  மேற்பட்ட  பிரமபத முதலியவற்றில்  உள்ள  தேவர்களைக் குறிக்கும் . அன்னார்  இறைவனுடைய   அதிகாரநிலையங்களில்  தலைவராக  இருக்கின்றமையின் , அவ் வணுக்கம்  பற்றி  அவர்களுக்கு  அறிதற்கு எளியனோ என்று  கருதுவார்க்கு , அவர்க்கும்  தன்  உண்மைத் தன்மை இயல்பு அறிய வொண்ணாத  நிலையில் உள்ளான் என்பதைப்  புலப்பட வைத்தற்கு , “மேலை வானவரும் அறியாதது” என்றார். “வானோர்க்கரிய  மருந்தே” என்பது அடிகள் திருவாக்கு . வானவரும் என்புழி , உம்மை சிறப்புப் பொருளில்  வந்தது, பிரம பத முதலிய அதிகார  நிலையத் தலைவர்களாலும் , இறைவன்  இயல்பு அறிய வொண்ணாதது என்பதை “பங்கயத் தயனுமால் அறியா நீதியே “ என்பது முதலிய புராண கதையை யுட்கொண்டு  கூறிய  அடிகள்  திருப்பாடற் பகுதிகளாலும்  அறிக.  தகுதி வாய்ந்த பெரிய  அமரர் தலைவராலும்  காண்டற்கரியது என்றதனால் , இஃது இன்மைப் பொருளைப் பற்றிய  செய்தியாகுங்கொலோவென்று  ஐயுறல் ஆகாது  என்பார்,“ஓர் கோலமே” என்றார். அக் கோலம்  யாண்டுங் கண்டறியப் படாதது  ஆகிய  ஞானாசிரிய வடிவமாகும் . “கோலம்”  அழகு  என்னும் பொருள் தரும் . ஆதலின், அருமையில் எளிய அழகுக்கு எல்லையாக  விளங்கிய  அவ்வுருவத்தில்  தாம்  ஈடுபட்டதை  அடிகள் மனம் உருகிப்  பாராட்டியுள்ளார் . “கோலங்காட்டி யாண்டானை” என்பர்  பின்னும் , பேரழகு  வாய்ந்த  இறைவனது ஞானாசிரியத் திருக் கோலத்தில்  ஈடுபட்டு அணுகி யதும் , இறைவன் ஞானோபதேசம்  செய்து ஆட்கொண்டான் என்பது தோன்ற “என்னை  ஆட்கொண்ட  கூத்தனே “ என்றார். உயர்ந்த  தேவராலும்  அறியப்படாத திருக்கோலமுடைய  பரமசிவன் , அத் தேவர்  முதலிய  யாவரும்  யாவும்  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்து , அவ் எல்லோரையும்  எல்லாவற்றையும்  ஒடுக்கிக்கொண்டு  , தான் ஒருவனே  அழிவிலாப்  பொருளாக  நின்று  , படைத்தல் முதலிய  ஐந்தொழிற்கும் தானே தலைவன்  என்பது புலப்பட  , அருட் கூத்து இயற்றும்  பெற்றியன்  என்பது தோன்ற  , “ஆட்கொண்ட  கூத்தனே” என்றார்.  ஐந்தொழில்  திருக்கூத்து  இயற்றும் ஆண்டவன் திருவுருவைக் காண்டலினும், ஞானாசிரியனாக  எழுந்தருளிக் காட்சி தரும் நிலை காண்டற்கு  அரியது என்பது தோன்ற  , ஆட்கொண்ட  கூத்தனே எனக்  குணிப் பொருளாகவும்  “அறியாததோர்  கோலமே “ என  குணப்பொருளாகவும்  கூறியருளினர் . கூத்தன்  என்பதிற்  கூத்து , ஆடலாகிய  வினையை உணர்த்தும் . ஆதலின் , கூத்தன்  என்பது அவ்வினைப்பண்பை உடையான் என்று  குணிப்பொருளாகவும்  , “ கோலம்” என்பது அழகு . உருவம் என உடைமை அளவில் நிற்பதால் , குணப்பொருளாகவும் அறிதல் வேண்டும்   அறிதற்கு அருமை , கோலத்திற்குக் கூறப்பட்டமையால் , கூத்தனாம் நிலை அதனிற்  சற்று எளிமை உடைத்து  என்பது பொதரும் .  படைப்பு  முதலிய எல்லாவற்றையும் குறிக்கும் கூத்தாடல் , யாவரும் காண, “ஐயர் தாம் வெளியே  ஆடுகின்றாரை” என்றபடி , பொது வெளியில் நிகழ்வதாகும் . ஞானாசிரியனாக எழுந்தருளிப் பக்குவம் உடையார்க்கு உபதேசித்தல்  தனிமையில் நிகழ்வதாகும் . இவ் வுண்மையும்  மேற் காட்டியதற்குச் சான்று  ஆதல் அறிக.  

          “ஞாலம் விசும்பே” என்புழி, ஏகாரம்  எண்ணுப்பொருளில் வந்தன. இவற்றை இறைவனைக் குறிக்கும் விளியாகக் கொண்டு பொருள் கூறுவர் சிலர் . பின், இவை என்னும் அஃறிணைப் பன்மைச்  சுட்டு  உண்மையால், மண்ணும் விண்ணும் ஆகிய  பூதங்களை உணர்த்துவனவாகக் கோடலே பொருந்தும் என்க .பூதங்களுள்  முதலும் இறுதியும் கூறியது கொண்டு , நடுவண் உள்ள நீர்  தீக்  காற்று என்னும் இவற்றையும் கொள்ளல் வேண்டும். ஐம்பெரும் பூதங்களும் உபலக்கணமாக  நின்று , ஆன்ம  தத்துவங்கள் எல்லா வற்றையும் புலப்படுக்கும் . எல்லாத் தத்துவங்களும்  காரியப்பட்டுத் தோன்றுதற்கும்  ஒடுங்குதற்கும் காரணமாக உள்ளது  கால தத்துவம் என்ப. வந்து போதல் – தோன்றி ஒடுங்குதல் . கால தத்துவம் , ஆன்மாக்களுக்குத் தொழில் , அறிவு , இச்சைகளை முறையே விளக்கி உபகரிக்கும்  கலை , வித்தை ,அராகம் என்னும் வித்தியா தத்துவங்களையும் தன்னுள் அடக்கி  மேல்நிற்பதாகலானும் , பேரூழிக் காலத்து எல்லாம் ஒடுங்கிய ஞான்று , இறைவன் ஒருவனே அக்காலத்தின் இறுதியில் விளங்குபவன் ஆதலானும், அக் காலத்தோடு ஒற்றுமைப்படுத்து , “காலமே” என்று  விளிக்கப்பட்டுள்ளான்  உண்மையில் , காலத்தையும் கடந்த தனிப்பொருளாக நிற்றலின் ,இறைவன் கால காலன் ஆவான் . ஆன்மதத்துவங்களுக்குக் காலம் இறுதியாக உள்ளது ஆகலின் , அத் தத்துவங்களானாய  உடம்போடு கூடிய உயிர்களின் இயல்பு நோக்கி , இறைவனைக் “காலமே”  என்றார் . மேல், “கழிதரு  காலமுமாய்  அவை  காத்தெம்மைக் காப்பவனே” என்று கூறியதன்கண்ணும்  இவ் வுண்மை காண்க.  இனி, அசுத்தமாயா தத்துவம் ஆகிய காலம் காரணம் ஆகலானும் , அது சிவதத்துவங்களின் அணிமையில் உண்மையானும் , அது பற்றிக்  “காலமே” என்றார் எனினும் ஆம் .

          “என்றுகொல் காண்பதே “ என்புழி , என்று என்பது காலத்தைப் பற்றிய வினாவாகும் , கால தத்துவத்தின் எல்லையே  பெரிதாக ,அதனையும் கடந்து  கால காலனாக நிற்கும் நின்னை, இவ் வுடம்பு முகந்து நின்ற மிகச் சிறுகால எல்லையுள் வைத்து எங்ஙனம் காண்பேன் என்பார், “என்றுகொல் காண்பதே” என்றார்.  காண்பது , தொழில் அளவில் நின்றது  . கொல்  – அசை .

           இதன்கண், மேலை  வானவரும்  அறியாதோர் அரிய திருக்கோலத்தைக் காட்டி ஞானோபதேசம் பண்ணி ஆட்கொண்டு அருளியக்  கூத்தப்பெரு மானே  என்றதனால் , அப் பெருமானது பேருதவிக்குக் கைம்மாறு  கொடுத்தல்  ஆற்றேன்  என்பது. பெறப்படுதலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய பொருளும் , “ஊனையென்று கொல் காண்பதே “ என்றதனால் , சதகம் நுதலிய பத்தி விசித்திரப் பொருளும் புலனாதல்  அறிக .

                                                  ************************************

பாடல் : 44 .

காண  லாம்பர  மேகட்  கிறந்ததோர்

வாணி  லாப்பொரு  ளேயிங்கொர்  பார்ப்பெனப்

பாண  னேன்படிற்  றாக்கையை  விட்டுனைப்

பூணு  மாற்றி  யேன்புலன்  போற்றியே.

கருத்துரை :-  மேலை வானவரும் அறியாத ஓர் கோலம் என்றும் , அதனை என்றுகொல்  காண்பது என்றும்  முன்னைத் திருப்பாட்டில்  கூறிய அடிகள் , அக்கோலம்  காண்டற்கு உரியதோ  காணொணாததோ  என்று நினைவார்க்கு  விடையையும் அடைதற்கு அதனைத் தாம் விரைதலையும்  இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார்.  

பதவுரை :-  காணல்  ஆம்  பரமே  =  சிவ ஞானத்தாற்  காண்டற்கு உரியதாகிய  பரம்பொருளே ,

கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே  =  கட்புலனாற்  பற்றப்படாவாறு கடந்து நிற்பதாகிய  ஒப்பற்ற ஒளிப்பழம்பாக வுள்ள பொருளே ,

இங்கு  ஓர்   பார்ப்பு  என  = இவ்விடத்து ஒரு பறவைக் குஞ்சு  (கூடு  அல்லது முட்டை தனித்து வறிதே கிடப்ப  அதனின்றும் பறந்து சேறல் ) போல,

பாணனேன்  =  வீனன்  ஆகிய யான் ,

புலன் போற்றி  =  சுவை  ஒளி ஊறு  ஓசை நாற்றம் ஆகிய  ஐம்புல இன்பங்களையும் பரிகரித்து ,

படிறு  ஆக்கையை  விட்டு  உன்னைப் பூணுமாறு  அறியேன் = பொய்யாகிய இவ்வுடலை விட்டு வெளிப்பட்டு  மெய்யாகிய நின்னைப் பொருந்தும் நெறியை அறியாதவன் ஆகின்றேன் என்பது.  

விளக்கவுரை :-  இறைவனது பரம் பொருள் தன்மை , மன  மொழிகளைக் கடந்த தொன்று  ஆகலின் , கட்புலனாற் காணத்தக்கது அன்றாம் . அப் பெருமானது ஒளிமிக்க உருவம் ஒருவாற்றால் கட்புலனாற் காணத்தக்கது ஆகும் . அங்ஙனமாகவும் , பரம் பொருள் தன்மை காணத்தக்கது எனவும் , ஒளிஉருவம்  கட்புலனாற் காணத்தக்கது எனவும் கூறியதன் கருத்து ஆராயத்தக்கது . இறைவன் , பசு ஞானங்களால் காணப்படாதவன் எனவும் , பதி ஞானம்  ஆகிய சிவஞானம் ஒன்றாலே  காணத்தக்கவன்  எனவும் சைவ  நூல்கள் கூறும்  , “ஊனக்கண் பாசமுணராப் பதியை , ஞானக் கண்ணினிற் சிந்தை  நாடி”  என்னும்  சிவஞானபோத  சூத்திரத்தாலும் , அதன் விளக்கம்  ஆகிய  “பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய  பரம்பரனைப் பதி ஞானத்தாலே,நேசமொடும் உள்ளத்தே  நாடி” என்னும் சிவஞான சித்தியானும்  அறியலாம் . நூல்கள் முகமாக நிகழ்வது பாச ஞானம் எனவும் , நான் பிரமம் என்று  மதிக்க வருவது  பசுஞானம் எனவும்  கூறுவர். இவ்வுண்மையை ,” வேதசாத்திர மிருதி புராண கலைஞானம் ….. நாத முடிவான வெலாம்  பாசஞானம் “ எனவும் , “காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம்  கருது பசு ஞானம் “ எனவும் கூறிப்போந்த  பிரமாணங்களால் அறிக. அவன் அருளே கண்ணாகக்  காண்டல்  பதிஞானம் ஆகும் . இம் முத்திற ஞானங்களுள் , இறைவனது பரம் பொருள் தன்மை அறிதற்கு உரியது மெய்ஞ்ஞானம்  ஆகிய  பதிஞானம் ஆகும். அப்பதி ஞானத்தால் உணரத்தக்கவன்  என்பது  போதர ,  “காணலாம் பரமே”  எனவும் , பாசஞான , பசு ஞானங்களால்  அப் பெருமானது ஒளி உருவமே  முற்றும் காண்டற்கு  இயலாததொன்று என்பார் , “ கட்கிறந்த தோர் வாணிலாப்  பொருளே “ எனவும் கூறினர்.  இறைவனுடைய  அருவம்  அருவுருவம்   உருவம்  என்னும்  மூவகை நிலையுள் ,முன்னைய  இரண்டும்  மெய்யுணர்வாகிய சிவஞானத்தானும் , பின்னையது அப் பெருமான் அருணோக்கால்  ஆன்மைத்  தூய்மை பெற்ற  நிலையிலும் அறியத்தக்கன .  சிவலிங்காதி உருவங்கள் எல்லோரானும் அறியத்தக்க நிலையில்  உள்ளனவே எனின், ஈண்டுக் கூறியது அவற்றுள் ஒன்றை அன்று .; ஒளி மிக்க  ஞானாசிரிய  வடிவமே ஆகும் . அவ் வடிவத்தை  அப்பெருமான்  அருள்நோக்கால்  அறிந்தனர் ஆயினும் , அக்காட்சி நெடிது நில்லாமையானும் நின்ற  அளவிலும்  தம் கட் புலனால்  அளவிட்டு  உணரும் அளவில் இல்லாத  பேரொளிப்பிழம்பாக  உள்ளமையானும்  ,”கட்கு  இறந்ததோர்  வாணிலாப் பொருளே” என்றார். பரம்பொருள் ஆம் நிலையில் காண  இயலாது  என்பாரை நோக்கிச்  சிவஞானத்தால்  காணத்தக்கவன் என்பது  போதர , “காணலாம்  பரமே” எனவும் ,உருமேனிகள் எல்லாம் கண்ணால்  பார்க்கத்தக்கன  என்பாரை  நோக்கி ,ஞானாசிரிய வடிவ முதலியவற்றில் உள்ள ஒளி மிகுதி கட்புலனால்  முற்றும்  காண்டற்கு  இயலாதது  என்பது  போதர  , “கட்கு இறந்ததோர்  வாணிலாப் பொருளே  “ எனவும் கூறினார் என்க.

           இங்கு  –  இவ்வுலக வாழ்க்கையில்  ஒரு பறவைக் குஞ்சு உவமையை ,” குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே , யுடம்போடுயிரிடை  நட்பு “ என்னும்  திருக்குறளில் உள்ளபடி ஈண்டும்  அமைத்துக் கொள்ளல் வேண்டும் . அடிகள் தம் உயிர்க்குப் பற்றுக்கோடாக  உள்ள  ஊனார்  உடலை ஒழித்து , இறைவன் திருவடி நிழலை அடைவதில் விரைவும் விருப்பமும்  உடையார்  என்பதைத்  திருவாசகத்தில் பல இடங்களிலும் காணலாம் . வினைவயத்தால்  கிடைத்த உடலை விரைவில் விட்டுப்பின் அதனைப்பற்றிய நினைவின்றிச் சேறற்குப் பறவைக் குஞ்சு உவமை  கூறப்பட்டது . இக் கருத்திற்குப்  பரிமேலழகர் கண்டபடி , குடம்பையை முட்டை என்று பொருள் கோடல் சிறந்ததாகும் . “பார்ப்பென “ என்புழி ,உபமேயமாகிய  உயிரின் தொழிலாகிய  விட்டுச் சேறல்  என்னும் வினை , அவ் உவமைக்கண்ணும்  இயைத்துக்  கொள்ளப்பட்டது . கூடு  அல்லது  முட்டையினின்றும்  பறவைக் குஞ்சு  பருவம்  வந்ததும் பறந்து  வெளிப்படல் போல , வினைக்கு  ஈடாக  எடுத்த உடம்பினின்றும்  வினை ஒழிவு பெற்று , விரைவில் அதனைவிட்டு  நின்னைக் கூடவேண்டியவனாகவும் , அங்ஙனம்  கூடுமாறு  அறிந்திலேன் என்பார், “படிற்றாக்கையை  விட்டு உன்னைக்  கூடுமாறறிந்திலேன் “ என்றார். பார்ப்பென விட்டு  என  இயையும் . இனி, பார்ப்பு  என்பதற்குப்  பறந்து செல்லும் ஆற்றல்  படைத்த இளங்குஞ்சு  எனக் கொண்டு  , பார்ப்பென  அறியேன் என இயைத்துப் பொருள் கோடலுமாம் . பார்ப்பைப் போலப்  படிற்றாக்கையை விட்டுச்  செல்ல  அறியாதவன்  ஆயினேன்  என்பது இதற்குக்  கருத்தாகக்  கொள்க.

           அங்ஙனம் அறியாமைக்குக்  காரணமாகத்  தமக்கு  ஒரு பெயரை இட்டுக் கொண்டார் . . “பாணன் “ என்று.  பாழ் நன் –பாணன்  என்றாயிற்று ; பயன் இன்மையை உடையேன் ;  சிறந்த உறுதிப் பயனைப் பெற முயலாது  வறிதே இருக்கின்றவன் என்பது கருத்து.  ஆக்கையை , “வஞ்சினைக் கொள்கலம் “ என்பர் . அதனாலும் , மெய் எனப் பெயர் பெற்றுப் பொய்யாகக் கழிதலானும் , “படிற்றாக்கையை” என்றார் . படிறு – வஞ்சம் , பொய் . ஆக்கை என்றதனால்  வினைக்கு ஈடாக , என்பு , நரம்பு ,  முதலியவற்றால்  ஆக்கிக் காட்டப்பட்டது  என்பது பொதரும் .

            பூணுதல் – திருவடியைத் தலைமேல்  கோடல் ; தள்ளவேண்டியதும்  கொள்ள வேண்டியது,ம் கூறியபடியாம் . தள்ள வேண்டியது என்பினை  நரம்பிற் பின்னி இயைந்தது ஆகிய ஆக்கையை ; கொள்ளவேண்டியது அழி வில் இன்ப வடிவினன் ஆகிய ஆண்டவன்  திருவடியை .  உன்னைப் பூணுமாறு  என்பதற்கு , நின்னைப் பொருந்துமாறு  என்பது பொருள் . பொருந்துதல்  – திருவடியைத் தம் தலைக்கண் இயைத்தல் . அன்றி , உன்னை என்பதற்கே உன் திருவடியை என்று பொருள் கோடலும் பொருந்தும் .  ஈண்டு அவயவ  அவயவைகளின்  வேற்றுமை இன்மை கருதத் தக்கது . அறியேன் என்பதனை  படிற்றாக்கையை விடுதற்கும் . உன்னைப் பூணுதற்கும்  எனக் கொள்ளல் வேண்டும் .  

        புலன் போற்றி என்புழி, போற்றுதல் , பரிகரித்தல்  என்னும் பொருட்டு , “புறஞ் சொற் போற்றுமின் “ என்னும் இடத்து , இப் பொருளில்  வந்தது காண்க. ஐம்புல இன்பங்களைத் துய்ப்பதில்  உள்ள வேட்கை நீங்கவில்லையானால் , ஆக்கையை விடுமாறும்  திருவடியை அடையுமாறும் கூடா.  ஆதலால் , ஆக்கையை விடுதற்கும் ,திருவடியைக்  கூடுதற்கும்  புலனுகர்ச்சியின்  ஒழிவே காரணம் ஆம்  என்பது விளங்கும் புலன்களைப்  பரிகரித்துப்  பூணுமாறு  என இயையும் . இனிப் புலன் போற்றி என்பதற்கு, ஐம்புல  இன்பங்களைப் பேணி எனப் பொருள் கொண்டு  , அறியேன்  என  இயைத்துப் பேணுதல் ஆகிய  காரணத்தால்  அறியாதவன்  ஆயினேன் எனக் கோடலும் ஒன்று.  ஈண்டுப் பேணி என்னும் எச்சம் காரணப் பொருள் உடையதாகும் .

          இதன்கண், “புலன்போற்றிப்  படிற்றாக்கையைக் கைவிட்டுப் பூணுமாறறியேன் “ என்றதனால் , அத்தகைய இழிந்த நிலையில்  உள்ள என்னையும் ஆட்கொண்டருளிய பேருதவிக்கு  யாது கைம்மாறு  செய்ய வல்லேன் என்பது குறிப்பெச்சமாகக் கொள்ளக் கிடத்தலால் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் ,”பாணனேன்  படிற்றாக்கை யை விட்டு”  என்றதனால் , உடற்சுமையில்  வெறுப்புற்றது  தோன்றுதலின் , வைராக்கிய  விசித்திரம் என்னும் சதக நுதலிய  பொருளும் புலனாதல் அறிக.

                                         ****************************************

பாடல் :45 .

போற்றி  யென்றும்  புரண்டும்  புகழ்ந்து நின்

றாற்றல்   மிக்க அன்  பால்அழைக்  கின்றிலேன்

ஏற்று  வந்தெதிர்  தாமரைத்   தாளுறுங்

கூற்றம்  அன்னதோர்  கொள்கையென்  கொள்கையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  சிவஞானத்தால் அறியத் தக்க இறைவன் இயல்பை உணர்ந்து , புலனுகர்ச்சியில் பற்றற்று , ஆக்கையை  விட்டு,  அப்பெருமானை  அடையும்  நெறியைச்  சார்தற்கு  விரைதலை  மேற்கொண்ட அடிகள் , அதற்கு  ஏதுவாக  இத் திருப்பாட்டில் முதலில்  மன மொழி மெய்கள் இறை பணியினால் தூயனவாகப் பெற்று ,ஆற்றல்  மிக்க  அன்பு  நெறியில் தலைப்பட  வேண்டியதிருக்க  , அதற்கு  மாறாகச் செல்லும் கொள்கை உடையேன் ஆயினேன் ; ஆயினும் அந் நிலையிலும் என்னை ஏற்று அருளல் வேண்டும்  என்று  வேண்டுகின்றார் .

பதவுரை :- போற்றி  யென்று   =   நெஞ்சத்தாற் காத்தருள்க  என்று  நினைந்து ,

புரண்டும்  =  உடலால்  புரண்டு  வலம்  வந்தும் ,

புகழ்ந்தும்  =  நாவினால் புகழ்ந்து பாராட்டியும் ,

நின்று  =  அன்பு நெறியில்  நிலையுதல் பெற்று ,

ஆற்றல்  மிக்க  அன்பால்  அழைக்கின்றிலேன்  =  உறுதியான  மெய்யன்பினால்  கூவி  அழைக்காமல் இருக்கின்றேன் ,

என்  கொள்கை  =  இத்தகைய என் கொள்கை ,

எதிர் ஏற்று  வந்து  =  எதிராகப் பொர வந்து ,

தாமரைத் தாள்  உறும்  =  நின் தாமரை மலர் போன்ற திருவடியில்  பொருந்தப் பெற்ற  ,

கூற்றம் அன்னது ஓர் கொள்கை  =  கூற்றுவனது  கொள்கையை  ஒரு வகைக்  கொள்கையேயாம்  என்பது .

விளக்கவுரை :-  சிறந்த  அன்பின்  விளைவிற்கு  மன மொழி மெய்கள் தூயன  ஆதல் வேண்டும் . இம் மூன்று  காரணங்களாலும் முறையே  இறைவனை  நினைதலும் , புகழ்ந்து பாராட்டுதலும் , பணி செய்தலும்  ஆகிய  செயல்கள்  நிகழற்பாலன.  இந் நிகழ்ச்சிகளாலே  அவை  தூய்மை உடையன ஆம் .  நினைதல்  –  இறைவன்  பெருமையை நினைதலும் , தமக்கு  வேண்டியவற்றை  அவன்பால்  வேண்டிக்கொள்ளு முகமாக  நினைதலும்  என்று  இருவகைப்படும் . அவற்றுள் , இறைவன் பெருமையை  இடையறாது நினைதல் அன்றி , வேறு ஒன்றையும் நினையாமல்  , “நன்றே  செய்வாய்  பிழை  செய்வாய்   நானோ  இதற்கு  நாயகமே “  என்று  இருக்கும்  அடிகள் , இடையிடையே  தம்மை  உலக வாழ்க்கையினின்றும்  விடுவித்துத்  திருவடி இன்பம் நல்கிக்  காத்து  அருளல்  வேண்டும்  என்று வேண்டிக் கொள்ளுதல்  உண்டு . அம் முறையில்  ஈண்டுக்  காத்து  அருள்க  என்று  வேண்டுவார் , “போற்றி  யென்றும்” என்றார். பின்னர்ப்  “புகழ்ந்தும் “ என்று  வந்தமையால்  ,இஃது  எண்ணத்தின்பாற்படும் . நெஞ்சம்  இல்  வழி  நிகழும்  செயல்கள்  சிறந்தன  ஆகா  ஆதலின் , முதலில்  நினைவு  கூறப்பட்டது  . அந் நினைவுக்கு  ஏற்ப  , மெய்யின்  செயலும்   நாவின்  செயலும்  பின்னர்  நிகழ்ந்தன . உடல்  உறுப்புக்கள்  அனைத்தும் இறை பணியில்   ஈடுபடுதலைப்  புலப்படுக்கவே, தொழுதல் , வணங்குதல் என்னும்  செயல்களைக்  குறிப்பிடாமல்  , “புரண்டும்” என்றார்.  புரளுங்கால் , உடல் உறுப்புக்கள்  அனைத்தும்  நிலத்திற்  படியும் உண்மை அறிக. மன  மொழி  மெய்கள் ஓரோவமயம்  இங்ஙனம்  இறை பணியில்  தலைப்படுதலும் , மற்றைக்  காலங்களில்  புலனுகர்ச்சிகளில்  ஈடு படுதலும்  உண்டு . அடிகள் அங்ஙனம் ஆதலை  விரும்பாராய் , என்றும்  ஒரே படித்தாக  முக்கரணங்களும்  இறைபணியில்  நிலைப்படுதலை விரும்பும்  இயல்பினர்  ஆதலின்  , “நின்று “ என்றார்.  

             ஒரு பொருளைப் பற்றிப் பற்பல  பிறவிகளிலும்  பிறழ்ச்சி  இன்றித்  தொடர்ந்து வேர்   ஊன்றிய  அன்பே  ஆற்றல்  மிக்க  அன்பாகும் . முறிந்த  நிலையில்  இது மெய்யன்பு  ஆகும்  . இதனையே  அடிகள் “பெறவே  வேண்டும்  மெய்யன்பு  “ஏன்பார் . இத்தகைய  சிறந்த  அன்பு  விளைதற்கு  மன  மொழி  மெய்கள்  தூயன  ஆதல் வேண்டும் ஆதலின் ,  அத் தூய்மையே  முதல் அடியிற்  பெறப்பட்டது  என்க.  கரணங்கள்  தூய னவாகப்  பெற்று , முறுகிய  தலையன்பினால்   இறைவனைக்  கூவி அழைத்தல்  இன்றியமையாததாகவும் , அவ்வாறு  செய்திலேன்  என்பார், “ ஆற்றல்  மிக்க அன்பால் அழைக்கின்றிலேன் “ என்றார்.  அன்பினால்  அழைத்து  அடையும் பேறு  எனக்கு  இல்லை  ஆயினும்  அன்பினால்  கூற்றுவன் எதிர்பட்டுத்  திருவடிப் பேறு  கிடைக்கப் பெற்றது  போன்ற  ஒரு  கொள்கையிலாவது  தலைப்படமாட்டேனா  என்பது., பின் இரண்டு அடிகளின்  கருத்தாகும் . “அஞ்சியாயினும்  அன்பு பட்டாயினும் , நெஞ்சம்  வாழி  நினை நின்றியூரனை “ என்னும் தமிழ் மறையில் , அன்பு  காரணமாக  இறைவனை நினைதற்கு  இயலாதார் , அச்சம்  காரணமாக  நினைய  நேர்ந்தாலும் , அந் நினைவும் ஓரளவு நலம் பயக்கும்  என்று  கூறியபடி  , ஆற்றல்  மிக்க  அன்பினால்  அழைக்க இயலாவிட்டாலும்  மாறுபட்ட  கொள்கையை மேற்கொண்டாவது  இறைவன் சினத்திற்கு இடனாகி , அவன்பொன்னடிகளைக் காணும் பேறுபெறலாமே  என்று  கருதுகின்றார் அடிகள் .  இக்குறிப்பை , “உடையாய்  கூவிப் பணிகொள் ளாது ஒறுத்தல் ஒன்றும் போதுமே “  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியது கொண்டு  தெளியலாம் . அரசன் அவைக்களத்தில்  சென்று  , அவனால் மதிக்கப்பெற்று , அவன் திருவோலக்கத்தைக்  காண்டற்கு இயலாத ஓர் எளியவன் , அரசனுக்கு  மாறுபட்ட  செயலில்  தலைப்பட்டுக்  குற்றவாளியாகி , அரசவைக்கு  கொண்டுவரப்பட்ட நிலையில் , அவனைக்  காண்டலை ஒரு பேறாகக் கருதுதல் போல் அடிகள் கருதுகின் றார் என்பது , “ஒறுத்தல் ஒன்றும் போதுமே “ என்றதனாற் புலப்படும் . கூற்றுவன் ,மார்க்கண்டேயர்  பொருட்டு   இறைவன் திருவுள்ளக் குறிப் போடு  முரண்பட்டு  எதிர்த்துச் சென்றான்  ஆயினும் , அப்பெருமான் திருவடிப் பரிசப்பேறு  எய்தினான்  என்பதைப் பின்வரும் அப்பர் அருள் மொழியாலும் அறிக .  

மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடத்து

மாலும்  அறிந்திலன் மாலுற்ற  தேவழி  பாடு செய்யும்

பாலன் மிசைச்சென்று  பாசம்  விசிறி  மறிந்த  சிந்தைக்

காலன்  அறிந்தான்  அறிதற் கரியான் கழலடியே “

என்பது .

                “ஏற்று வந்தெதிர் “ என்பதை , எதிர் ஏற்று  வந்து  என மாற்றி உரைத்துக் கொள்க ; நேராக எதிர்த்துவந்து என்பது பொருள் , ஒருவன், தன்னினும் வலிமிகப் படைத்தவனோடு  போர் செய்ய நேர்ந்த பொழுது , மறைத்து நின்று அம்பு எய்தலைக் கேட்டிருக்கின்றோம் . கூற்றுவன் இறைவனது பேர் ஆற்றலை  அறிந்திருந்தும் , மறைந்து ஒழுக நினைந்தான் அல்லன் என்பது தோன்ற , “ஏதிரேற்று “ என்றார். ஒருவன் தன்னின்  மெலியவனோடு  போர் செய்ய   நேர்ந்துழிச்  சந்திவிக்கிரக முதலிய  அறு வகைக் குணங்களுள்  ஒன்றாகிய போர் குறித்து மேற்சேறலை  மேற் கொண்டு , அம்மெலிய பகைவன்  இருந்த இடம் நோக்கிச்  சேறல் இயல்பு . அதற்கு  மாறாகத்  தன்னின் எத்துணையோ  மிக்க  வலிபடைத்த இறைவனை  நோக்கிக்  கூற்றுவன் மேற் சென்றான்  என்பது தோன்ற  , “எதிரேற்று வந்து” என்றார்.  இங்ஙனம்  அஞ்சாமல் கூற்றுவன்  எதிர்த்து வந்ததற்குக்  காரணம் , இறைவன் அவனுக்கு இட்ட பொதுவான  கட்டளையை நிறைவேற்றுவதில்  உள்ள கடமையும் ,அதன் நிமித்தம் பிரமாதி  தேவராலும் காண்டதற்கு  அரிய  இறைவன் திருவடியைக் கண்டு  இன்புறலாம்  என்னும் ஆர்வ உட்கோளும் ஆகலாம் என்பது குறிப்பின்  அறியத்தக்கது . அக் குறிப்பின்  பயனாக , இறைவனது  தாமரை மலர் போன்ற திருவடிப் பரிசப் பேறு கிடக்கப்பெற்றான் என்பது தோன்ற , “தாமரைத்  தாளுறும் “ என்றார். உறுதல்  –  பொருந்தப் பெறுதல் . திருவடிக் காட்சியே  அருமை. பரிசிக்கப் பெறுதல்  அதனினும்  அரிது.  திருவடி அழுந்தப் பெறுதல்  கிடைத்தற்கு  அரிய பேறு  அன்றோ?  இப் பேறு ,  வன்பு நிலையில்  நிகழாது  அன்பு நிலையில்  நிகழும்   ஆயின் , அந் நிலையே  வீட்டு  இன்பமாகும் .

            “ கூற்றம் அன்னது ‘ “என்பதற்குக் கூற்றுவன் கொள்கை போன்றது என்பது பொருள் , கொள்கை போன்றதாகிய  ஒரு கொள்கை என் கொள்கை யாகும் .என முடிக்க . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்க இயலாத நிலையில்  அமைதி அடைவேனோ  எனின் , அங்ஙனம் இரேன் , இறைவன் திருவுள்ளக்குறிப்பிற்கு வெறுப்பு விளைக்கத்தக்க நிலையில் மாறுபட்டாவது  அப் பெருமான் திருவடிப்பேற்றிற்கு  ஆளாவேன் என்பது அடிகளின் பத்தி விசித்திரமாகும் .  

               இதன்கண், மன மொழி மெய்களின் தூய்மையால் உண்டாம் மெய்யன்பினால்  நின்னை  அடைய இயலாத நிலையிலும் , நின் திருவடிப் பேற்றிற்கு என்னை  ஆளாக்கப் பிறிதொரு கொள்கையை நினைவுறுத்திய  பேருதவிக்குக்  கைம்மாறு  கண்டிலேன்  என்பது போதரலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் , நேறிய அன்பு நெறியில் வழிபடும் ஆற்றல் இல்லேன்  ஆயினும் , மாறுபட்ட வன்பு நெறியிலாவது நின் திருவடியைப் பெறாமல் ஒழியேன் என்று கூறுதலின் , பத்தி விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும் தோன்றுதல் காண்க. 

                                          **************************************

பாடல் : 46 .

கொள்ளுங்  கில்லெனை  யன்பரிற்  கூய்ப்பணி

கள்ளும்  வண்டும்  அறாமலர்க்  கொன்றையான்

நள்ளுங்  கீழுளும்  மேலுளும்  யாவுளும்

எள்ளும்  எண்ணையும்  போல்நின்ற  எந்தையே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் முக்கரணங்களும் தூயனவாகப் பெற்று முறுகிய பேரன்பினால்  ஆண்டவனைக் கூவி அழைக்கப் பெறாமை பற்றி இரங்கிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் யான் அழையாத நிலையிலும் இறைவன்  தானே  என்னைக் கூவி அழைத்துப் பணிசெய் வித்துக்  கொள்ளுவானோ  என்று எண்ணி  வருந்துகின்றார் .

பதவுரை :- யாவுளும்  நள்ளும்  கீழ் உளும் மேல் உளும்  =  எல்லாப்பொருள்களிடத்தும்  நடுவணும்  கீழும்  மேலும்  ஆகிய  எவ்விடத்தும் ,

எள்ளும்  எண்ணெயும் போல் நின்ற  எந்தை  =  எள்ளும்  அதன்கண்   யாண்டும்  நிறைந்திருக்கும் எண்ணெயும் போல் நிறைந்து நிலைபெற்று  இருக்கும் என் தந்தையாகிய ,

கள்ளும்  வண்டும்  அறாமலர்க்  கொன்றையான்  =  தேனும்  அதனை நுகரும்  வண்டும்  நீங்காத  கொன்றைமலர் மாலையை உடைய ஆண்டவன் ,

கில்லேனை  =  பேரன்பினால்  அழைக்கும் ஆற்றல்  இல்லாத  என்னை  ,

அன்பரிற் கூய்ப்பணி கொள்ளும் =   மெய்யன்பரைக் கூவி அழைத்துப் பணி கொள்ளுதல்  போலக்  கூவி அழைத்து  அடிமை கொள்ளுவானோ?  என்பது.

விளக்கவுரை :- இறைவன்  என்னும்  சொல் பரமசிவனுக்கே வழங்கப்பட்டிருத்தலைப்  பண்டைப் பனுவல்களில்   பரக்கக்  கானலாம் . அச் சொல்லின்பொருள்  எங்கும் நிறைந்தவன் என்பது. இறுத்தல் – தங்குதல் ; யாண்டும் தங்குதல் . இவ்வியாபகம் , கண்டப் பொருள்களில்  தனித்தனியேயும் ,அகண்டப்பொருளில்  முழுதும் உள்ளதாகும் . எடுத்துக்காட்டாக  எள்ளில் எண்ணெயைக் காணலாம் . அது  கண்டப் பொருள் வியாபகம்  ஆகும் . கருப்பங்கழியில்  சாறும் அன்னதே .அகண்டப் பொருளின்  வியாபகம் அங்ஙனம் அன்று .  இயங்குதிணை , நிலைத்திணை  ஆகிய  எல்லாப்  பொருள்களிடத்தும்  ஏகமாக  நிறைந் திருத்தலாகும் . இந் நிலையை அடிகள் இத் திருப்பாட்டின்  பின் இரண்டு  அடிகளிலும் தெளிவாக விளக்கியுள்ளார் .

        ஒரு பொருளைப் பகுத்து வரையறை செய்யுங்கால் , முதல் இறுதி  நடு என முக்கூறுபடுத்து வழங்குவர் . அம் முக் கூறுகளில் ஒரு பகுதி அளவில் இறைவன் வியாபகம்  உள்ளதோ  என்பாரை  நோக்கி , அங்ஙனம் அன்று ; யாண்டும் உளது என்பார் , “நள்ளும் கீழுளும்  மேலுளும் “ என்றார். கீழ் மேல்  என்பவற்றில்  உள் என்பன இடப்பொரு ளிலும் ,உம்மைகள் எண்ணுப்பொருளிலும் வந்தன.  கீழும்  மேலும்  முடிந்த இடங்களாக , நடுப் பகுதி முடிவு காணப்படுவது  அன்று  ஆகலின் இறைவனது  நிறைவு எல்லை  காணப்படாதது ஒன்று  என்பதைப் புலப்படுத்த , முதலில் நள்ளும் என்றார். பின்னர் , ஆதார  ஆதேய  முறை பற்றிக் கீழும் மேலும் கூறப்பட்டன.  ஆதாரம்  தாங்குவது . ஆதேயம்  தாங்கப்படுவது . ஒரு பொருளின் அடிப்பாகம் தாங்குவதும் , நுனிப் பாகம்   தாங்கப்படுவதும் ஆதல் அறிக. நடு  கீழ் மேல்  என்னும் மூவிடத்தும் என்று கூறிய அளவில் , வியாபகம்  யாண்டும் என்பது பெறப்படுவதாகப் பின் , “யாவுளும்” என்று  கூறியது எற்றிற்கு  எனின் ,  நடு  கீழ்  மேல்  என்னும் இடங்கள் கண்டப் பொருள்களில் காணப்படுவன  ஆதலின் , இறைவன்  வியாபகம்  உலத்துள்ள  கண்டப்பொருள்களின்  அளவிற்றானோ என மயங்குவார்க்கு ,அம் மயக்கநீக்கம்  கருதி “யாவுளும் “ என்று  கூறப்பட்டது என்க.  “யாவுளும் “ என்பதற்கு எல்லாப்  பொருள்களிடத்தும் என்பது பொருள் . இயங்குதிணை , நிலத்திணை  ஆகிய  எல்லாப் பொருள்களிடத்தும் , முதல் , இறுதி , நடு  என்னும்  யாண்டும்  இறைவனது நிறைவுளது  என முழு வியாபகம் கூறியபடியாம்

       இங்ஙனம்  அகண்டமான  வியாபக  நிலையைச்  சிற்றறிவுடைய மக்கள் மனத்தால்  வரையறைப்படுத்துத் தெளிதல் அரிதாகலின் , தெளிவுறுத்தற்  பொருட்டுக்  கண்டப் பொருளில்  விளங்கத்தக்கது  ஒன்றை எடுத்துக்காட்டுவாராய் , “எள்ளும் எண்ணெயும் போல்” என்றார். கண்டப் பொருள்களுள்  ஒன்றில் ஒன்று நிறைந்து இருத்தற்கு ,எள்ளும் அதன் கண் உள்ள எண்ணெயும்போலப்  பிறிதொன்றைக் காண்டல் அரிது.  ஆமணக்கு முதலிய  வித்துக்களிலும் நெய்ப்பகுதி உள்ளதே எனின் , அப் பகுதி தோயாத  கொட்டைத் தோடு வலிதாக  உள்ளது என்பது அறியத்தக்கது . மெல்லிய தோல் உள்ள கனியையும் சாற்றையும் கூறல்  ஆகாதோ எனின் , அக்கனியில் அத் தோலோடு வித்துக்களும் இடையறவாக  உளவாகலின்  ஆகாது என்க. எள்ளில்  தோல் இருப்பினும்  மிக மெல்லியதாகும் . மேலும் , அதனைவிட  மெல்லிதாகிய  தோல்  பிறிதொன்றில்  காண்டல்  அரிது . ஆதலின், இறைவனது அகண்ட வியா பகத்திற்குக்   கண்டப்  பொருள்களுள்  எடுத்துக் காட்டத்தக்கது அதுவே  ஆதலின், “எள்ளும்  எண்ணெயும்போல் “ என்று  எடுத்துக் காட்டுவார் ஆயினர்.” திலேஷூ தைலம் “ என்று மறை முடிவு கூறுதலும்  ஈண்டு  அறியத்தக்கது .இவ்வுமையில் காணப்படும் குற்றம்  ஒன்றைப் பரிகரித்தற் பொருட்டு , “நின்ற” என்றார். நிற்றல் , காலத்தாலும்  இடத்தாலும் பிறிதொரு பொருளாலும் கேடு இன்றியும்  பிரிக்க முடியாதபடியும் நிலைத்திருத்தல் . எள்ளில் உள்ள எண்ணெய் , காலம் இடங்களால் கேடு அடைதலும் , செக்கு முதலிய  கருவிகளால்  வேறுபடுத்தப் படுதலும் காண்கின்றோம் . இறைவன் நிறைவு அன்னது அன்று என்பது புலப்படுக்க  “ எள்ளும் எண்ணெயும் போன்ற” என்னாது, “போல் நின்ற “ என்றார். “போல்” என்ற அளவில் ஒப்புப்  பெறப்பட்டது ; “நின்ற “ என்பது நிறைவு யாண்டும் ஒரே படித்தாக நிலைத்து இருத்தல்  என்னும் பொருட்டு.  

     “ எந்தையாகிய  கொன்றையான்”  என இயைக்க , கொன்றை மாலை பரமசிவனுக்குப் பலவகையானும்  சிறந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டது . அம் மலர் , தெய்வத்தைச் சார்ந்தது ஆகலின் என்றும் வாடாமல் புதிய செழுமை உடையது என்பது போதர , “கள்ளும் , வண்டும்  அறாமலர்க் கொன்றை “எனப்பட்டது . வண்டு விரும்பாத நிலையில்  கள் நிறைந்த மலரும் உளது ஆதலின் , அதனை நீக்குதற்கு “கள்ளும் வண்டும்  அறாமலர் “ எனப்பட்டது. இவ் அடை மொழிகள்  இறைவனிடத்து உலப்பு  இலா இனிமை மிக்க அருள்  அமுதம் உளது என்பதையும் , அதனைப் பக்குவமுதிர்ந்த  ஆன்மாக்கள்  பருகி இன்புறற் பொருட்டு  என்றும் நீங்காது செறிந்து  இருப்பன என்பதையும்  குறிப்பில் புலப்படுத்து நிற்றல் அறிக .  

         “கில்லேனை” என்பது “கில்லெனை” எனக் குறுகி நின்றது.; ஆற்றல்  இல்லாத என்னை என்னும் பொருட்டு . இதன் முன்னைத் திருப்பாட்டில் , “ஆற்றன்  மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்” என்று  கூறியதை வழி மொழிந்து , அத்தகைய அன்பு ஆற்றல்  இல்லாத என்னை என்பது பொருள் . ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கும் பேறு இல்லாத என்னையும் இறைவன் சிறந்த மெய்யன்பரை வலிய அழைத்துப்  பணி கொள்ளுதல்  போலக்  கூவி அழைத்துப் பணி கொள்ளுவானோ  என்பது கருத்து . “பணி கொள்ளும்” என்பதில் கொள்ளும் என்பது காகு என்னும் ஓசை வேறுபாட்டால் , எங்ஙனம் கொள்ளுவான் என்று ஐயுறுதல் புலனாகநின்றது .காகு என்பது ஒருசொல்லில் பிறிதொறு பொருள் தோன்றுதற்கு  உரிய ஓசை வேறுபாடு என்பர் வடநூலார் . இதற்கு இவ்வாறு  பொருள்  கூறாது , கொள்ளுங்கில்  எனக்கொண்டு , கொள்ளும் ஆற்றல் உடையான் எனப் பொருள் கூறுவாரும் உளர் . சொல் அமைப்பு அங்ஙனம் பொருள் கோடற்கு இடம் தராது என்பது உய்த்து உணர்வார்க்குப்  புலனாம் . எங்கும் நிறைந்த இறைவன் , அன்பர்க்கு இன்பமயமான அருள் அமுதை ஊட்டும் குறிப்புத் தோன்றுமாறு அடையாள மாலைஅணிந்து இருத்தலின்  , யான் ஆற்றன்மிக்க அன்பால் அழையாத நிலையிலும் , மெய்யன்பு உடையாரைக் கூவி அழைத்துப் பணி கொள்ளுதல் போல , என்னையும் பணி கொள்ளுவானோ என்பது இத் திருப்பாட்டின் திரண்ட கருத்து  என்க .

          இதன்கண், ஆண்டவன் மெய்யன்பரை அழைத்துப் பணி கொள்ளுமாறு போல , ஆற்றல் மிக்க அன்பு இல்லாத என்னையும் பணி கொள்ளுவானோ  என்று அடிகள் ஐயுறுதல்  கூறப்பட்டு  இருத்தலானும் , அவ் ஐயத்தின் துணிவாக , “இரும்புதரு மனத் தேனை ஈர்த்து  ஈர்த்து “ என்றபடி , வலிந்து ஆட் கொள்ளவும்  கூடும் என்பது பின்னர்ப்  பெறப்படுதலானும் , ஆங்ஙனம் ஆட்கொண்டால் அதற்குக் கைம்மாறு  யாது செய்வது  என்று கருதுமுகமாகக்  கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக, பதிகப் பொருளைப் பாட்டின் குறிப்புப் பொருளில் தோன்ற வைத்தல்  உயர்ந்த கவிமரபு என்பதும் தெளிக .

                                    ******************************************** 

பாடல் :47 .

எந்தை  யாயெம் பிரான்மற்றும்  யாவர்க்குந்

தந்தை  தாய்தம்  பிரான்தனக்  கஃதிலான்

முந்தி  யென்னுள்  புகுந்தனன்  யாவருஞ்

சிந்தை  யாலும்  அறிவருஞ்  செல்வனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஆண்டவன் மெய்யன்பரைக் கூவி யழைத்துப் பணி செய்வித்துக் கொள்ளுதல் போலத் தம்மையும்  பணி கொள்ளுவானோ என்று  ஐயுற்று  வருந்திய  அடிகள் ,இத் திருப்பாட்டில்   தாம் அடிமையாதற்கு  முன்னரே ,தம்முட்  புகுந்து ஆட்கொள்ளத் தொடங்கிய பேருதவியை நினைந்து ஆறுதல் அடைகின்றார் .

பதவுரை :-  எந்தை ஆய் எம்பிரான்   =   எனக்குத் தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆயவன் , 

மற்றும்  யாவர்க்கும்  தந்தை  தாய்  தம்பிரான்  =  மற்றைத் தேவர் மக்கள் முதலிய எல்லோர்க்கும் தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆவான் ,

தனக்கு  அஃதில்லான்  =  தனக்குத்  தந்தையும்  தாயும்  தலைவனும்  ஆகிய  அம் முறை உரிமை  இல்லாதவன் ,

யாவரும்  சிந்தையாலும் அறிவு அறும் செல்வன்  =  அமரர்  முதலிய  எல்லோரும்  மொழிகளால் அன்றி  மனத்தாலும் அறிதற்கு  அரிய  ஞான  ஐசுவரியம்  உடைய  பெருமான் ,

முந்தி யென்னுட்  புகுந்தனன்  =  யான்  அடிமை யாதற்கு  முன்னரே  என்னுட்  புகுந்து ஆட்கொள்ளத் தொடங்கினன்  என்பது.

விளக்கவுரை :-  மக்களுக்கு இம்மை வாழ்க்கையில் நெருங்கிய தொடர்பு உடையார் ,  தந்தையும்  தாயும்  தலைவனும் ஆவர். தந்தை வித்தும் , தாய்  நிலமுமாகத் தோன்றி   கான்முளை  ஆதலின் ,ஒரு மகனுக்கு  அவ் இருவரும்  இன்றியமையாத  தொடர்புடையர்  ஆவர் . பின்னர்த் தலைவன் தொடர்பு  வேண்டற்பாலது . ஒருவர்க்குத் தலைவன் , குடித்தலைவன் , கல்வித் தலைவன் தொழில்  தலைவன் ,தேயத் தலைவன் ,ஞானோபதேசத் தலைவன்  எனப்  பலவகைப்படுவன்  .  அத் தலைமைகளுட்  சிலவும் பலவும் தந்தையால் அமைதலும் உண்டு. வளர்த்தற்குத்  தாயும் , அறிவு  கொடுத்தற்குத்  தந்தையும் , நன்நெறி  நிறுத்தற்குத் தலைவனும்  ஒரு மகனுக்கு  இன்றியமை யாதவர் ஆவர். உடலைப் பற்றிய  இம் முத்திறத் தொடர்பு  உடையாரும் பிறவிதோறும்  வேறு வேறு ஆவர். உயிரைப்பற்றிய  தொடர்பை  நினையுங் கால் , அங்ஙனம்  வேறுபடாமல் , என்றும்  ஒரே நிலையில் உள்ள உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும்  சிவபெருமான்  ஒருவனே  ஆவன். அடிகள் “புல்லாகிப்  பூடாய்ப் புழுவாய் மரமாகி “ என்றபடி , தம் உயிர்க்குக் கீழ்ப்பிற விகளில் நின்றும்  இத்துணை  உயர்ந்த மக்கட்  பிறவியை  அளித்து , அறிவு நல்கி , நன்நெறிப்படுத்திய  பேருதவியை நினைந்து , உடல் உரிமையை விட்டு, உயிர் உரிமை கருதித் தமக்கு  உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும்  அப் பெருமானே  என்னும்  தெளிவு  கைவரப்பெற்றவராய் , “எந்தையாய் எம்பிரான் “ என்றார் . தம் அளவில்  சிறப்புரிமையில் முதலில் கண்டார் . பின்னர்  , மற்றையோர்க்கும்  தந்தை முதலியோராக இருத்தலை ஆராய்ந்து , அன்னார்க்கும் உயிர்த் தொடர்பை  நோக்க , உண்மைத் தந்தையும்  தாயும்  தலைவனும் அப் பரமபதியே என்பதைத் தெளிந்து , “யாவர்க்கும்  தந்த  தாய்  தம்பிரான்” என்றார்.  ஆர்வ மிகுதியால்  முதலில் தம் அளவிற்  கண்டார் . பின்னர் , எண்ணி எண்ணி முடிவாகக்  கண்டது . மற்றும் யாவர்க்கும் தந்தையும்  தாயும்  தலைவனும்  அப் பெருமானே  என்பது .

             ஒருவன், மகனை நோக்கத் தான்  அவன் தந்தை ஆதல் போல , அத் தந்தையை  மகனாகக்  கருதுங்கால் , அவற்கு உரிய தந்தையும்  தாயும்  தலைவனும்  இன்னாரென்பது  வெளியாகும் அன்றோ?  அந் நிலையில் ,தமக்கும் மற்ற எல்லோர்க்கும்  தந்தை  தாய்  தலைவனாக  உள்ள அப் பெருமானுக்கும் ,தந்தை முதலியோர் யாராக இருக்கலாம்  என்று நினைந்து கூறுகின்றார் , “தனக்கு  அஃதிலான்” என்று . “அஃது”  அஃறிணை  ஒருமைச் சுட்டு , அச்சுட்டு , தந்தை முதலிய முறை உரிமையின் மேல் நின்றது . இறைவன் தனக்கு ஒரு தந்தை  தாய்  தலைவனை  ஏன் பெறாமல் இருக்கின் றான்  எனின் , அமரர் , முனிவரர்  எல்லோர்க்கும்  பிறப்பு  இறப்புக்கள்  கேட் கப்பட்டன . பரமசிவன் ஓரிடத்துப் பிறந்தான்  இறந்தான்  என்பது கேட்கப் படாதது  ஒன்றாதலால் , பிறப்பு இல்லாதவனுக்குத் தந்தை  தாய்  என்னும் முறை உரிமை இல்லை என்பது  வெளிப்படை  அன்றோ ? தலைமை இலக்கணம்  முற்றும் அமைந்தவன்  சிவபெருமானே என்பது திருவாசகத் திருப்பாடல்கள் பலவற்றால்  அறியப்படுவதொன்று . அதனால் தனக்குத்   தலைவன் ஆம்  முறை உரிமையும் இல்லாதவன் என்பது தெளிவு ஆம் .  தந்தை  தாய்  தம்பிரான்  என்னும்  மூவரும் உயர் திணைப் பொருள் ஆகலான் , அதற்கேற்ப , “அவர் இலான் “ என்று  கூறியிருக்கலாம் . அங்ஙனம்  கூறாது  பெற்றோரே அன்றி , வளர்ப்பு  முதலியவற்றால் தந்தை முதலிய  முறை உரிமைக்கும் சிறிதும் இடம் இன்று  என்பது போதர , முறை உரிமையின்பால்  வைத்து ,அஃறிணையாக , “அஃதிலான்” என்றார் என்பது . “யாவரும் “ என்றது பிரமபதம்  அதிகார  நிலையங்களில்  அணுக்கராக  இருக்கும்  அமரர்  முதலியோரையும் , புற்றுமாய்  , மரமாய்ப்  புனல் காலே  உண்டியாக  உடைய முனிவரர்  முதலியோரையும் குறிக்கும் , அன்னார்  எல்லோரும்  கண்களால்  காண்டற்கும் , ஏதுக்களாலும்  எடுத்த  மொழிகளா லும் அளந்து அறிதற்கும் அரியன்  ஆதலே  அன்றி , மனத்தால் நினைந்து அறிதற்கும் அரியன் ஆயினான்  என்பது தோன்ற  ,”சிந்தையாலும் அறிவருஞ் செல்வன் “ என்றார். “சிந்தையாலும்” என்புழி, உம்மை  இறந்தது  தழீ இய  எச்சவும்மை . காண்டல்  அளவைக்கும் , உரை அளவைக்கும் எட்டாத  பொருளைக்  கருதல்  அளவையால் துணியலாம்  ஆயினும் , இறைவன் அங்ஙனமும் துணிதற்கு உரியவன் அல்லன் என்பது குறிப்பு . மனத்தாலும்  சிந்திக்கமுடியாத  ஒரு பொருள் , யாண்டும் இல்லாத இன்மைப் பொருளாக   அன்றோ முடியும்?  என்பார்க்கு , அங்ஙனம் அன்று ;  அறி வில் பொருள்களை  அறியும் கருவிகளைக் கொண்டு , அறிவுடைப் பொருளை அறியத் துணிதல்  இயலாத தொன்று என்பதே  ஈண்டுக் கருத்தாகும். அன்றி , மெய்யுணர்வி னால்  அறியத்தக்க இறைவன் , என்றும் உள் பொருளாக  மாத்திரம் இருத்தலே  அன்றித் தன்னை  அடைந்தார்க்கு  வழங்குதற் பொருட்டு  ஞான ஐசுவரியப் பேரானந்தப்  பெரும் செல்வமும்  உடையன் என்பது தோன்ற , “செல்வன்” என்றார்.

   இறைவன் தம் உள்ளத்தே  புகுந்து ஆட்கொண்டது , அப் பெருமான்  தங்குதற்கு உரிய தம் உள்ளத்தில் ஞானவிளக்கம் இல்லாத பொழுது என்பார், “முந்தியென்னுள் புகுந்தனன் “என்றார், “அறிவிலாமை யன்றே கண்டதாண்ட நாள் “ என்பது அடிகள் திருவாக்கு . இனி, மேற்பதங்களில்  உள்ள  பிரமன்  முதலிய அமரர்களும் , தவச் செல்வர்களாகிய முனிவரரும்  இறைவனை அறிந்து  கொள்ளுதற் பொருட்டுத் தம் சிந்தைகளை  அவன்பால் ஏவினாராக , அவற்றிற்கு எட்டாத அப்பெருமான் , அன்னார் சிந்தனைகள்  சென்று அணுகுதற்கு இல்லாத  ஓர்  ஒதுக்கிடத்தில் ஒளித்தல் கருதியே  , தம் சிந்தையுட்  புகுந்தனன் என்பார் , “முந்தியென்னுட்  புகுந்தனன் “ என்றார் என்பதுமாம்.  ஈண்டு , “முந்தி” என்பது , அமரர் முனிவரர்  சிந்தனைகள்  இறைவனைத் தொடர்ந்து பற்றுதற்கு  முன்னரே என்னும் பொருள் உடையதாகும் . உயர்  பதங்களில்  உள்ள அமரர் , முனிவரர் முதலியோர்  இறைவனை  ஆராயப் புகுங்கால்  மறைத்திறங்களை   நோக்கியும்  , தம்மின் மேலான  பதங்களில் உள்ளவர்களின்  சார்பு  பற்றியும்  முற்படுவாரே அன்றி ,  தம்மில்  கீழ்  நிலையில் உள்ளார்க்கு   இறைவன் காட்சி நேராது என்னும்  துணிபு உடையராய் , அன்னாரைக் கருதுவது இல்லை . உலகத்தில்  மிகுவிலை யுள்ள   மணியொன்றைப்  பெற விரும்புவோன் , பொருள் மிகுப்படைத்த  வாணிகர்  இடத்து அன்றிச்  சுருங்கிய  பொருளினை உடைய எளியவரைப்  பொருட்படுத்தி அடையான் என்பது அனுபவத்தில் கண்டது . அமரர், முனிவரர் சிந்தனைகள்  எல்லாம்  இறைவனை  அறிதற்குத் தொடர்ந்து செல்ல , அவர் சிந்தனை செல்லப்பெறாத இடம் என்று தம் சிந்தனையைக்  கண்டு  அவர் காணாவாறு விரைந்து மறைந்தனன்  என்னும்  குறிப்புத் தோன்ற  , “முந்தி” எனவும்  “புகுந்தனன் “ எனவும்  அருளிச் செய்தனர் . “முந்தி” என்பது ஈண்டு  விரைந்து என்னும் பொருள் பயந்து நிற்பதாகும் . தம் நெஞ்சு  இறைவன் புகுதற்கு ஊன் ஆர்  உடற் கண்ணதாயினும் , மற்றையோர் சிந்தனைக்கு  எட்டாமல்  ஒளிந்து கொள்ளும்  குறிக்கோள்  ஒன்றே   பற்றித் தமக்கு அகப்பட்டனன்  என்று  அடிகள்  கருதினார்  என்பது , “புகுந்தனன்” என்னும்  சொல் ஆற்றலால்  பெறப்படுவதாகும் .  

              இதன்கண், யாவரும்  சிந்தையாலும்  அறிவரும்  செல்வன் , முத்தி யென்னுட் புகுந்தனன் என்று கூறியதனால், அங்ஙனம்  வலிந்து புகுந்து  ஆட்கொண்ட  பேருதவிக்கு  யாது கைம்மாறு  செய்யவல்லேன்  என்பது தோன்றி நிற்றலின் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம் நுதலிய  பொருளும் , “எந்தையா யெம்பிரான் “ என்றதனால் , பத்தி விசித்திரம்  என்னும்  சதகம் நுதலிய  பொருளும் புலனாதல் அறிக .

                                         ********************************************

பாடல் :48 .

செல்வம்  நல்குர  வின்றிவிண்  ணோர்புழுப்

புல்வரம்  பின்றி  யார்க்கும்   அரும்பொருள்

எல்லை  யில்கழல்  கண்டும்  பிரிந்தனன்

கல்வ   கை மனத்  தேன்பட்ட  கட்டமே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் தாம் ஆண்டவனை அறிந்து அடிமைப்பணி செய்தற்கு முன்னரே தம் முட் புகுந்து அருளிய அருமைப்பாட்டை  வியந்து கூறிய  அடிகள் , அங்ஙனம்  வலிய  வந்து  புகுந்த  அப் பெருமானுடைய  திருவடிக் காட்சி கரந்த நிலையில் தாம் எய்திய  துன்பம் பெரிது என இத் திருப்பாட்டில் இரங்கிக் கூறுகின்றார் .   

பதவுரை :-  செல்வம்  நல்குரவு இன்றி  =  நல்வினைப்பயனாகிய  செல்வம்  உடையார் , தீவினைப்  பயனாகிய  வறுமை உடையார்  என்னும் ஏற்றத்  தாழ்வு இன்றியும் ,

விண்ணோர்  புழுப்  புல்  வரம்புஇன்றி  =  நல்வினைப்பயனே  நுகரும்  தேவர்    தீவினைப்பயனே  நுகரும்  புழுப் புல் என்னும்  வரையறை  இன்றியும் ,

யார்க்கும்  அரும்பொருள்  =  இயங்குதிணை  நிலைத்திணைகளாகிய எவர்க்கும் எவைக்கும் அடைதற்கு அரிய  பரம்பொருளினுடைய  ,

எல்லையில் கழல் கண்டும் பிரிந்தனன்  =  அளவுட் படாத திருவடிகளைத் தரிசிக்கும்  பேறு பெற்றும் நீங்கினேன் (இப்பிரிவு) ,

கல்வகை மனத்தேன் பட்ட  கட்டமே  =   கல்லின்  வகைகளுள் ஒன்று எனக்  கருதப்படும் வலிய நெஞ்சத்தை உடையேன்  எய்திய  துன்பம் ஆகும் என்பது .

விளக்கவுரை :-   யார்க்கும் அரும்பொருள் என்பது, உபலக்கணத்தால்  எவைக்கும்  அரும்பொருள் என்பதையும்  புலப்படுத்தும் . யாரும்  எவையும் என்பன , முறையே  உயர்திணைப் பொருள்களையும் ,அஃறினைப் பொருள்க ளையும்   உணர்த்தி  நிற்றலால் . இயங்குதிணை ,  நிலைத்திணையாகிய உலகம்  எல்லாவற்றையும் குறிக்கும் . நல்வினைப்பயனே  நுகர்வனவும் ,  தீவினைப்பயனே  நுகர்வனவும் , இரண்டனையும் கலந்து நுகர்வனவும்  என  உயிர்கள் முத்திறப்படும்  . அவற்றுள்  நல்வினை , தீவினை  இரண்டையும்  கலந்து நுகரும்  மக்கள் உயிர்களைக் கருதி , “செல்வம்  நல்குரவு “ என்றனர் .  புண்ணியம்  விஞ்சப் பெற்றார்  செல்வரும் , பாவம்  விஞ்சப்  பெற்றார் வறியரும்  என மக்கட் பிறப்பினர் இருதிறப்படுவர் . ஆகவே, “செல்வம்  நல்குரவு”  என்பன  ஆகு பெயராக  நின்று  , அவற்றை உடையாரை  உணர்த்தி  நின்றன.  

            இதன் முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் , “அறிவருஞ் செல்வன் “ என்று  கூறப்பட்டான் . உலகத்தில் ஒரு செல்வனைக்  காண்டல் மற்றொரு  செல்வர்க்கு  எளிது அன்றோ ? ஆதலின் , இறைவனாகிய  செல்வனை , நல்வினைப் பயன் காரணமாக உள்ள செல்வன் காண்டல்  எளிதாமே  எனின்  இறைவன்  அருட் செல்வன் ; மக்கள் பொருட் செல்வர் ; ஆதலிற் காண்டல்  எளிது அன்று என்பதைப் புலப்படுத்தவே  , இப் பாட்டில் செல்வம் என்று தொடங்கப்பட்டது . இறைவனைக் காண்டற்குப் புண்ணியப் பயனாகிய  செல்வமும் ,பாவப் பயனாகிய நல்குரவும்  காரணம் ஆகா;  மெய்யுணர்விற்கு  உரிய தவமே காரணம்  ஆகும் . ஆதலின்  , அத் தவம் இலராகிய  செல்வராற் காண்டற்கு  எளிமையும் ஏற்படலாம்  என்பது போதர , “செல்வம் நல்குரவின்றி “  என்றனர் .

                இனிப்  புண்ணியப் பயனே  நுகரும் உயிரைக் குறிக்க  , “விண்ணோர் “ எனவும் , பாவப்பயனை  நுகரும்  உயிர்களைக் குறிக்க “புழு” எனவும் கூறி அருளினர்  விலங்கின் பிறப்பை  நரக கதியாகக் கூறும் மரபு உண்மையின் , புழு என்பது நரகரைக் குறிக்கும் . இத்துணையும்  முத்திற உயிர்களுள்  இயங்கு திணைப்பாற்  பட்டவை  கூறப்பட்டன. “நிலைத் திணைக்குப்  “  “புல்”  என்றனர் . அஃது உபலக்கணத்தால் , மரம் செடி முதலிய ஏனைய பொருள்களையும் உணர்த்தும் , தேவர்கள் நல்வினை மிக்கார் ஆயினும் , இன்பமே நுகர்தலில் செருக்குற்றுநிற்றலின்  அவர்க்கும் , ஓர் அறிவு உயிர்களாகிய புழுப் புல் முதலியன மிகவும் கீழ்ப்பிறவிகள் ஆதலின் ,அவை  அபுத்தி பூர்வமாகச்  செய்யும் நல்வினை காரணமாக  , மேன்மேல் சென்று  நற் பிறப்பு  எய்தவேண்டும்  ஆதலின் ,அவற்றிற்கும் இறைவன் அடைதற்கு அரிய பொருள் ஆவான் என்பது தெளிக . நல் வினைப்பயனால்  நலம் பெற்று வாழும்விண்ணோர்க்கு இறைவன் காட்சி எளிது எனவும் ,தீவினைப்பயனால்  துன்புறும் புழு முதலியவற்றிற்கு அக் காட்சி அரிது எனவும் கொள்ளல் ஆகாது இறை அருட்பார்வைக்கு இலக்கு ஆகும் தூய்மை பெற்ற உயிர் யாது ஆயினும்  அதற்கு எளிது ஆகலாம்  என்பது புலப்படுக்க , “விண்ணோர் புழுப் புல் வரம்பின்றி” என்றார் .ஆகவே இத் திருப்பாட்டின் முதலடியில் புண்ணிய பாவப்  பயன்களைக் கலந்து நுகரும் மக்களைக் குறித்தற்கு , “செல்வம் நல்குரவு” எனவும் , புண்ணியப்பயனே நுகரும் தேவர்களைக் குறித்தற்கு  “விண்ணோர் “ எனவும் பாவப்பயனே நுகரும்  உயிர்களைக் குறித்தற்கு , “புழு” எனவும்  இம்முத்திறமும் திணைகளாக ,  நிலைத்திணையைக்  குறித்தற்கு , “புல்” எனவும் , இவ்வரையறை  தோன்றக் கூறப்பட்டன எனக் கொள்க.

              “பாதாளம் ஏழினுங் கீழ்ச் சொற்கழிவு பாதமலர் “ என்றது பற்றி , இறைவன் திருவடி , “எல்லையில் கழல்” என்று  கூறப்பட்டது . வரம்புட் பட்ட  பொருளைக் காணும் தம் கண்களுக்கு , வரம்புட் படாத இறைவன் திருவடிக் காட்சி எளிது அன்று ஆகவும் , அப் பெருமான் அருட்பார்வைக்கு இலக்காண பேறு காரணமாக  எளிதாகக் காணப்ப்பெற்றேன் என்பார், “எல்லை இல் கழல் கண்டும்” என்றார் . இனி, திருவடியை மெய்ஞ்ஞானம் எனவும் , இறைவனது அருட்சத்தி எனவும்  சிவாகமங்கள் கூறும் . ஆதலின் ”எல்லையில்  கழல்” என்பதற்கு , மாசற்ற மனங்கழிய  நின்ற  இறைவனது  திருவருள் எனக் கோடலும் ஒன்று. கண்டும் என்புழி, உம்மை , காண்டலின் அருமையைப்  புலப்படுத்து நின்றது .  பெறல் அரும் பொருளைத் தேடி  அலைவான் ஒருவன் , அப் பொருள் காணப்படாத இடங்களைக் கண்டு கண்டு நீங்கிச் சேறலும் , தன்  கருதிய பொருளை அரிதிற்  காணபெற்றான் ஆயின் , அதனைவிட்டு நீங்காமல் இருத்தலும் உலகியலில் கண்டன. ஈண்டு ,அடிகள் அரிய தவம் கிடந்தும் ,காண்டற்கு அரிய இறைவனுடைய எல்லை யில் கழல்களை  எளிதிற்  காணப்பெற்றும் பிரிய நேர்ந்ததே  என்று  அடங்காத  வருத்த மேற்கொண்டு , “கண்டும் பிரிந்தனன்” என்றார். கண்ணிலான் பெற்று இழந்த  கதை ஆயிற்று என்பது குறிப்பு .

           அரியதொரு  பொருளைப் பெறாத நிலையில் உண்டாம்  துன்பத்தினும், பெற்று இழந்த காலை உண்டாம் துன்பம் பெரிது அன்றோ? இங்ஙனம் எல்லை யில்  கழல் கண்டும் , பிரிந்த இந் நிலையே  தமக்குப் பெரும் துன்பமாக முடிந்தது என்பார் , “பட்ட கட்டம் “ என்றார். . இன்ன துன்ப நிலை ஆற்றொணாதது  என்பதை “என் தலைவனை நனி காணேன் , தீயில்  வீழ்கிலேன்  திண்வரை உருள்கிலேன்  செழுங்கடல் புகுவேனே “ என்று அடிகள் பிறிதோரிடத்து  அவலித்துக் கூறிய  செய்தியானும் அறிக.  மனம் சடப்பொருள் ஆயினும் , உருவம் உடையது அன்று .; உருவம் இல்லாது இருந்தும் , குழைவு சிறிதும் இன்மையால் , உருவம் உடையதாய்  உலகிற்  காணப்படும்  கல் வகைகளுள் ஒன்று ஆயிற்று என்பார் , “கல்வகை மனத்தேன்”  என்றார் . “கல்லை மென்கனியாக்கும்  விச்சை கொண்டு  என்னை  நின் கழற்கு அன்பன்  ஆக்கினாய் “ அன்பது அடிகள் திருவாக்கு  “கல் வகை மனத்தேன் பட்ட கட்டம் “  என்பதில் , இரங்கிக் குழையும் இயல்பு சிறிதும்  இல்லாத வன்நெஞ்சம்  உடைய தமக்கு  இத் துன்பம் நேர்தல் பொருத்தமே என்று அவலத்தில் ஆறுதல் தோன்றி  நின்ற குறிப்புண்மையும்  அறிக .  கட்டம் என்னும் பெயர்ப் பயனிலைக்கு  எழுவாய் , பிரிந்தனன் என்னும் வினை முற்றில்  தோன்றிய அப் பிரிவு என்பது ஆகும் . அப் பிரிவு எனக்குப் பெரும் துன்பம் ஆயிற்று என்பது கருத்து .  

               இதன்கண், யார்க்கும் அரும் பொருளின் எல்லையில் கழல் கண்டு  பிரிந்தனன்  என்புழி ,  அக் காட்சி அரியதாகவும் , எளி வந்த  கருணைக்கு ஈடுபட்டு வேறு கைம்மாறு செய்திலேன் ஆயினும் , அதனினின்றும்  பிரியா மையே   என்னால் ஆகிய கைம்மாறாகவும் ,  அது தானும் செய்ய இயலாத வன் ஆயினேன் என்னும் அடிகள் இரக்கக் குறிப்புத் தோன்றி நிற்றலின் , கைம்மாறு கொடுத்தல் என்னும் பதிகம்  நுதலிய  பொருள் புலனாயவாறு அறிக .

                                                ***********************************

பாடல் :49.

கட்ட  றுத்தெனை  யாண்டுகண்  ணாரநீ

றிட்ட  அன்பரொ  டியாவருங்  காணவே

பட்டி  மண்டபம் ஏற்றினை  ஏற்றினை

எட்டி  நோடிரண்  டும்அறி   யேனையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  இறைவன் திருவடிக்காட்சி  பெற்றும்  பிரிய  நேர்ந்த துன்பத்திற்கு வருந்திய அடிகள் ,இத் திருப்பாட்டில்  உண்மை அடியார்கள் கண் கூடாகக்  காணும்படி  தம்மை வித்தியா மண்டபத்தில் ஏற்றி , அறிஞரோடு  இருந்து , சமய உண்மைகளை  ஆராய்ச்சி செய்ய  உதவிப்  பெருமைப்படுத்திய நிகழ்ச்சியை நினைந்து , திருவருளைப்  பாராட்டி ஆறுதல்  அடைகின்றார்.  

பதவுரை :-  ஏற்றினை   =   ஊர்தியாகப் பெற்ற  எருதினையுடையாய் ,

எட்டினோடு  இரண்டும்  அறியேனை ,என்னை  =  எட்டும் அதனோடு   இரண்டும் சேர்த்து எண்ண அறியாத சிறியேனாகிய என்னை ,

கட்டு  அறுத்து  ஆண்டு  =  பாசப்பிணிப்பை அகற்றி  அடிமை கொண்டு  ,

நீறு  இட்ட  அன்பரொடு   யாவருங்  கண்ணாரக் காண  =   திருநீறு  அணிந்த  மெய்யடியாரொடு  மற்றை அன்பர்களும் கண் கூடாகக்  காணும்படி ,

பட்டி மண்டபம்  ஏற்றினை  =   சமய  வாதம்  புரிதற்குரிய  வித்தியா மண்டபத்தில்  ஏறி வீற்றிருக்கச் செய்தனை,

இதற்கு யான் செய்யத்தக்க  கைம்மாறு  யாது உளது?  என்பது .

விளக்கவுரை :- ஏற்றினை என்பது முன்னிலைப் பெயர் . இடப ஏறு அறத்தின் வடிவம் என்றும் , அதனை நடாத்துபவன் இறைவன் என்றும் சிவாகமங்கள் கூறும் .மேலும் , ஆதார ஆதேயப்  பாதுகாப்பிற்கு அடையாளமாக  உணரப்பட்டதும் , எடுக்கப்பட்டதும்  அவ் ஏறே  என்பார், “ஊர்திவால் வெள்ளேறே  சிறந்த , சீர் கெழு  கொடியும் அவ் ஏறு என்ப” என்பது காண்க. 

             உலகியலில் அறிவு இல்லாதவன் ஒருவனைக் குறித்து ,”எட்டும் இரண்டும் எவ்வளவு ? என்று கேட்டால் , சொல்ல அறியாதவன் என்று  இழித்து உரைத்தலைக் கேட்கின்றோம் . அதனையே அடிகள் தம்பால் ஏறிட்டு , “ எட்டினோடிரண்டும்  அறியேனை “என்று கூறினர். இனி, எட்டினோடு என்பதற்கு , அகரத்தோடு  எனவும் , இரண்டும் என்பதற்கு உகர மகரங்கள் எனவும் பொருள் கொண்டு , அகர உகர மகரங்களின் இயைபு  ஆகிய பிரணவ மந்திரம் எனக் கோடலும் ஒன்று .  தமிழில் உள்ள எண்ணைக் குறிக்கும் வடிவங்களில் , எட்டு அகர வடிவமாகவும் ,இரண்டு உகர வடிவமா கவும் , “இரண்டும்” என்புழி , இறுதி மகரவொற்றாகவும்  இருத்தல் அறிக . ஏனைய தேவர்களைக் குறிக்கும் மந்திரங்கள் பிரணவத்தோடு  எண்ணப் பட்டே , எட்டு எழுத்து முதலிய பெயர்பெறும் . சிவமந்திரமாகிய திரு ஐந்தெழுத்துப் பிரணவத்தின் விரிவே ஆதலின் , பிரணவம் இன்றியும் ஐந்தெழுத்தாக நிலைபெறுவதாகும் . ஆதலின் , பிரணவத்தின் இயல்பு அறியாதவன் என்பதற்குச் சிவமந்திரமாகிய திருவைந்தெழுத்தின்  இயல்பு  அறியாதவன் என்பது பொருள் ஆகும் என்க . இவ் வுண்மையை ,”எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் , எட்டும் இரண்டும்  அறியாத ஏழையர் , எட்டும் இரண்டும்  இரு மூன்று நான்கு  எனப்பட்டது  சித்தாந்த சன்மார்க்க பாதமே “ என்று, விளக்கிக் கூறுவர் திருமூலர் .  ஈண்டு , எட்டும் இரண்டும் பிரணவம் என்று அறியாத ஏழையர்  இரு மூன்று நான்கு என்பர் என இழித்துக் கூறியதும் அறிக .

            பட்டி மண்டபம்  –  சமய உண்மைகளைத் தடை விடைகளின் வைத்து  ஆராய்தற்கு உரிய வித்தியா மண்டபம் ஆகும் . “பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் “  என்று  சிலப்பதிகாரமும் ,”ஓட்டிய சமயத் துறு பொருள் வாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு  அறிந்து ஏறுமின் “ என்று  மணிமேகலை யும்  கூறுமாறு  அறிக . இதற்கு இவ்வாறு பொருள் கூறாது , பட்டி – நாய் ; நாயை மண்டபத்து ஏற்றியது போல  என்று  வேறுபடக் கூறுவாரும் உளர் . அக் கருத்துப் பொருந்தாது என்க. . “ எட்டினோடு   இரண்டும் அறியாத சிறியேனைச் சமய உண்மைகளை ஆராய்ந்து தெளிதற்கு உரிய சமயவா திகள்  கூடும் பட்டி மண்டபத்தில்  வீற்றிருக்கச் செய்தனை “ என்று இறைவன் அருட் பெருக்கை  வியப்பாராய் , “பட்டி மண்டபம்  ஏற்றினை “ என்றார்.  அம் மண்டபத்தில் வீற்றிருக்கும் தகுதிப் பேறு குறித்து , “கட்டறுத்தெனை யாண்டு”   என்றார்.  அறியாமைக்கு ஏதுவாகவுள்ள பாசப்பிணிப்பை ஒழித்து , ஆளாகக் கொண்டு  என்பது அத் தொடரின் பொருள். அறியாமைக்கு ஏதுவாக வுள்ள  பாச நீக்கத்தால் , சமய நூல் அறிவு முதலிய ஞான விளக்கமும் , ஆட்கொண்டமையால் அநுபவ உணர்வும்  உண்டாதல் தெளிக . எல்லாவகை யாலும்  மேம்பாடு எய்தி விளங்கும் பெரியவன் ஒருவன் , மிகவும் சிறியவன் ஒருவனைத் தனிமையில் பலபடப் பாராட்டிப் பேசி , பலர் கூடிய அவைக் களத்தில்  புறக்கணிப்பது  மிகவும் கொடிய செயல்  என்பர் . “எனைத்  துங்குறுதல் ஓம்பன் மனைக் கெழீஇ  , மன்றிற் பழிப்பார் தொடர்பு”  என்று  நீதி நூல் அத்தகைய கொடியவர்களின் தொடர்பு வெறுக்கத்தக்கது  என்று கூறுதலும்  அறிக. அங்ஙனம் அன்றிக் குற்றம் உளதேல் , தனிமையில் வைத்து  ஒறுத்துரைத்தும் , மன்றில் குணம் பாராட்டியும் பெருமைப்படுத்தலே உண்மைப் பெரியார் இயல்பு ஆகும் .  அம் முறையில் பலரும் அறியத் தம்மைப் பட்டி மண்டபம் ஏற்றியது  பெருமைப்படுத்தியது  என்பார் , ““யாவருங்காண” என்றார் . காண்பார் பலராயினும் , தகுதியுடையார் அல்லர் ஆயின் , அன்னார் காண்டலால் வரும் சிறப்பு யாதும் இன்றாம் .காண்பவர் பெருமைப் படுத்தப்படுவாரின் உள்ளம் மகிழத்தக்க தகுதி உடைய ராய் இருத்தல் வேண்டும் . உள்ளம் ஒத்தவர் மதிப்பையே தூய சிந்தை உடையார் விரும்புவர் என்பதற்குத் தம்பிரான் தோழர் காட்சியில்  ஈடுபட்ட பரவையார் இயல்பே சான்று ஆகும் .  சுந்தர மூர்த்திகளைத்  திருக்கோயிலிற்  கண்டு , காதல் அரும்பப் பெற்ற பரவையார் , தம் இல்லத்திலிருந்து  விரக தாபத்தால் வாடி , அருகு இருந்த தோழியை நோக்கி , “திருக்கோயிலிற்  காணப்பட்டவர்  யார்?  என்று கேட்டலும் , அத் தோழி , “சைவ முதற் றிருத்தொண்டர்  தம்பிரான் தோழனார் நம்பி” என்றாளாம் .இவ்வுரை கேட்ட அளவில்  பரவையார்க்கு  வன்றொண்டர்பால்  வைத்த மனக் காதல்  அளவின்றி  வளர்ந்து பொங்கிற்றாம் . இந் நிகழ்ச்சியில் ஓர் உண்மை காணப்படும் . ஒரு மணப்பெண்ணுக்குக் கனவன் இயல்பைக் கூறுவோர் , கட்டழகும்  இளமையும்  செல்வமும் உடையன் என்பராயின் , அப் பெண்ணிற்கு உளம் பூரித்துக் காதல் வரும் .அங்ஙனம் அன்றி , மணமகன் சிவபத்தன் ; திருநீறு  கண்மணி புனைவோன்  என்று கூறக்கேட்பின் ,காதல் வளர்ச்சிக்கு இடன் உண்டாமா?  இஃது உலகியற் செய்தியாகும் . இங்கே பரவையார் உள்ளமும் சுந்தரமூர்த்திகள் உள்ளமும் உலகியலைக் கடந்து, சிவபெருமானிடத்து அன்பு பூண்டு தூய்மை அடைந்தன ஆதலின் , ஒத்த இயல்பின ஆகும் .  அதனாலே , சிவனடியார் என்றலும்  காதல் வளர்ந்து பொங்கிற்று என்றார். வேறு எவ்வகையாகச்  சுந்தரர் வருணிக்கப்படினும் , அம்மையார்க்குக்  காதல் ஊன்றாது. என்க . அங்ஙனமே , ஈண்டு அடிகளின் உள்ளம் மகிழத் தக்கவர்  நல் அன்பர்  ஆதலின் , “அன்பரொடு  யாவருங்  காண” என்றார் . “ஓடு” உருபு உயர்ந்த பொருளைச் சார்ந்து  வரும்  என்ற  விதிப்படி ,”யாவரும்”  என்னும் சொல்லாற் குறிக்கப் பட்டாரினும் , அன்பர்  சிறந்தவர்  என்பது ஈண்டுக் கருதத்தக்கது .

         இனி, அன்பர் என்பது , உலகியலில் தாய் தந்தை மனைவி மக்கள்  நண்பர்  முதலியோரிடத்து அன்பு உடையாரையும் குறிக்கும் .  ஆதலின் அத்தகைய அன்பர்  காண ,அடிகள் பெருமைப்படுத்தப்பட்டார்  என்பதனால், அடிகளுக்கு வரும்  உவகை  யாதும் இன்றாம் . அடிகள் சிவனடியவரைச் சிவன் என மதிக்கும் பெற்றி வாய்ந்த பெரியார் ஆதலின் , சிவன் இடத்து அன்பு உடையாரையே பெரியார் என அவர் உள்ளம் விழையும் என்பது தெளிவு ஆம் .  அம்  முறையில்  , “நீறிட்ட அன்பர்கள்” என்று அருளிச் செய்யப் பட்டது  என்க. “ நீறிட்ட  அன்பர்கள்” என்புழி நீறிட்டமையால்  புறம் தூய்மை யும் , அன்புடைமையால்  அகம் தூய்மையும் பெற்றாம் . ஆகவே , புறமும்  அகமும்  தூய்மையுடைய  சிவனடியாரையே  ஈண்டுக் குறிப்பது  என்க . அத்தகைய சிவனடியார் , தம்மை இறைவன் பட்டி மண்டபம்  ஏற்றுங்கால்  எங்ஙனம் கண்டனர் எனின் , அவர்தம்  கண்குளிர  நேரிற்  கண்டனர் என்பார், “ கண்ணார” என்றார் . ஆகவே, தனி நிலையில் தம்மை ஒறுத்து , நன்நெறிப்படுத்து , வெளிப்புடையில்  உண்மைச் சிவனடியார்  பலருடன் மற்றையோரும்  கண்ணாரக் காணும்படி வித்தியா மண்டபத்தில்  வீற்றிருக் கச் செய்த  பேருதவிக்கு யான் செய்யக் கடவ கைம்மாறு  யாது உளது என்பது அடிகள் கருத்து என்க .

                  இதன்கண் , “எட்டினோடு இரண்டும் அறியேனைப் பட்டி மண்டபம்  ஏற்றினை “  என்று  கூறப்பட்டதால் , அப் பேருதவிக்கு  யான்  யாது கைம்மாறு  செய்ய வல்லேன்  என்பது போதரலின் , கைம்மாறு  கொடுத்தல்  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள் வெளிபட்டு நிற்றல்  அறிக .

                                          *************************************************

பாடல் : 50 .

அறிவ   னேயமு  தேஅடி நாயினேன்

அறிவ னாகக்கொண்  டோஎனை  ஆண்டது

அறிவி  லாமையன்  றேகண்ட  தாண்டநாள்

அறிவ  னோவல்ல  னோஅரு  ளீசனே..

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  , “கட்டறுத்தெனையண்டு”  என்றார். அங்ஙனம் ஆட்கொள்ளுங்கால் , ஞானவடிவினன் ஆகிய இறைவன் , ஐம்புல வேடரின் அயர்ந்து கிடந்த  ஆன்மாவை , “நீ வேடர் மகன் அல்லை; என் மகன் ஆவாய்”   என அறிவுறுத்து  அவ் அறிவுநிலை  எய்தப்பெற்ற பின்னரே  ஆட் கோடல் மரபு. ஈண்டு  , என்பால் உள்ள பேர் அருள் காரணமாக , அம் மரபிற் பிறழ  என் அறிவிலாப் பருவத்தே  புகுந்து என்னை ஆண்டனையோ  என்று அடிகள்  இறைவன்  திருவருள்  திறத்தைப் பாராட்டி  இன்புறுகின்றார்.

பதவுரை :-அறிவனே  =  ஞான வடிவு உடையவனே ,

அமுதே  =  இனிய அமிழ்த மயம் ஆனவனே ,

அடி நாயினேன்  எனை  =  அடிமையாகிய  நாயின் தன்மை உடைய என்னை ,

அறிவன் ஆகக் கொண்டோ ஆண்டது  =   அறிவுடையவனாகத்  திருவுளம்  கொண்டோ  ஆட்கொண்டது ,

ஆண்டநாள் கண்டது  அறிவிலாமையன்றோ ? =   அடியேனை ஆட்கொண்டகாலத்தில் என்பாற் கண்டது  அறிவிலாமை அன்றோ? ,

அறிவனோ  அல்லனோ  ஈசனே  அருள்  =  யான் இந் நிலையில்  அறுவுடையவனோ  அறிவி இல்லாதவனோ  எம் பெருமானே இதனைத் தெளிவித்து அருள் புரிவாயாக  என்பது .

விளக்கவுரை :-முற்றும் உணர்தல் , இயற்கை உணர்வினன் ஆதல் முதலிய அருட் குணங்கள் உடைமைபற்றி , இறைவனை , “அறிவனே” என்றார். இறைவனை ஞான வடிவினன் என்று முது நூல் கூறும் . வரம்பின் இன்பம்  உடைமை பற்றி , “அமுதே” என்றார் . “அறிவனே” என்றதனால் ஆண்டவனது அளத்தற்கு அரிய பெருமையும் , “அமுதே” என்றதனால் , அவன் தன் அன்பர்க்கு இனியனாதலும் புலப்படுக்கப் பட்டபடியாம் . ஆண்டவன்  யாராலும் அணுகுதற்கு அரிய ஞான வடிவினன் என்றதனால் , அவன் அருமையும் , அமுதம் போல அடைந்தார்க்கு இனியன்   ஆவன் என்றதனால்  அவன் எளிமையும் கூறிய படியும் ஆம் .  அறிவன் ஆதலின் ஆண்டவன் ஆகவும்  , அமுதமயமாக  உள்ளபடியால்  அடியவரை  அடிமை கொள்பவனா கவும்  உள்ளான் என்பதும் குறிப்பிற் போதரும் .  

              “அடி நாயினேன் எனை” என இயைக்க . நாயின் தன்மை போன்ற இயல்பு உடையன் ஆயினும் , நின் அடியைப் பற்றுக்கோடாக உடையேன்  ஆதலின் , விலக்கத்தக்கவன் அல்லன் என்னும் குறிப்புத் தோன்ற , “அடிநாயினேன்”  என்றார். “என்னை” என்றது , நினக்கு ஆளாதற்குச் சிறிதும் தகுதி இல்லாத என்னை என்னும் பொருள் பயந்து நிற்பதாகும் . சிறந்த தலைவன்  , மற்றொருவனைப் பணி கொள்ளுங்கால் , தன் தகுதிக்கு ஏற்றவாறு குறிப்பு அறிந்து ஒழுகும் அறிவு உடையானை  அன்றோ ஏற்றுக் கொள்ளுவான்? உலகியலிற் காணப்படுவதே இங்ஙனம் ஆயின் , ஆண்டவன் தொண்டிற்கு  உரியார் எத்துணைத் தகுதி உடையராய் இருத்தல் வேண்டும்  என்பது கூறவேண்டா. ஆட்கொண்ட பின்னும் தம்மை அறிவிலன் என்று அடிகள் கூற அஞ்சுகின்றார். ; “ அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் , குன்றே  யானையாய் என்னை ஆட்கொண்ட போதே  கொண்டி லையோ “  என்றபடி ஆட்கொண்ட காலத்தே உடல் பொருள் ஆவி எல்லாம் இறைவன் உடைமை  ஆயினபடியாலும் , அவ் இறைவன் உடைமைக்குக் குறை  கூறியதாக முடியும் ஆதலானும் என்க. இது பற்றியே “ஆண்டவன்” என்னாது ,உடனிகழ்ச்சியாக , “ ஆண்ட நாள் “ என்றார்.  ஆட்கொண்ட  நாளில் என்பாற்  கண்டது , அறிவு இலாமை அன்றோ என்ற இடத்துக் காண்டற்கு  வினைமுதல்  இன்னார் எனத் தெளிதல் வேண்டும் .  கண்டது இறைவன் எனின் இறைவன் காட்சிக்கு அஞ்ஞானம்  எப்படிப் புலன் ஆகும்?  ஞானாசிரியன் பக்குவம் உள்ள மாணவனுக்கு ஞானோபதேசம்  செய்தபின் , அவனை நோக்கி , ஆணவ மலத்தின் இயல்பை அறிவுறுத்த நிலையில் , அம் மாணவன் ,”சுடரால் இருள் தேடச்செல்லார்கள்  எந்தாய் , சுடரால் இருள் தேடச் சொன்னாய் “ என்றானாம் . விளக்கைக் கொண்டு இருளைத் தேடச்  சொல்லியபடி  என்பது கருத்து .  விளக்கின் முன் இருள்நில்லாமை போல மெய்யுணர்வின்முன் அஞ்ஞானம்  நிலைபெறாமையாற்  புலப்படாது என்பது ஞான நிலை எய்திய மாணவனுக்கே  இவ் அநுபவம் ஆயின் , மெய்ஞ்ஞான வடிவமாக வுள்ள இறைவன் காட்சிக்கு உயிரின் அறியாமை  எப்படிப் புலன்  ஆகும்  என்பது  . ஈண்டு , ஆண்டவனே  , நீஎன்னை  ஆட்கொண்ட நாளில் யான் கண்டது என்பால் அறிவு இலாமை   அன்றோ?  என்பது அடிகள் கருத்து எனக் கொள்ளல் வேண்டும் . “ஆண்ட நாள்” என்றதனால் , ஆட்கொள்ளத் தொடங்கிய   காலம்  என்பது போதரும் . அதன் பின்னர் , நினக்கு  ஆட்பட்ட மையால்  யான் அறிவுடையனாக  இருக்கலாம் . ஆனால் , ஆட்பட்டும்  பிரிய நேர்ந்த நிகழ்ச்சியை நினையுங்கால் , அறிவுடையன்  அல்லனாகவும் இருக்க லாம்  என்று அடிகள் ஐயுற்று , அவ் ஐயுறவு  தோன்ற ,”அறிவனோ அல்லனோ” என்றார். அடிகள் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளுங்கால் , “நான்தனக்  “ கன்பின்மை நானும்  தானுமறிவோம் “ என்றபடி , அடிமைப் பணிவு தோன்றக்  குறைத்துக் கூறுதலிலே  கருத்து உடையார் என்பது  காணப்படும் . ஆதலானும் , அம் முறையே  தம்மை ஈண்டும்  அறிவிலான்  என்று கூறின்  , ஆண்டவன் பெருமைக்கு இழுக்குச் செய்த குற்றம் உளதாம் என்னும் அச்சத்தானும்  ஐயுறவு  தோன்றக்  கூறினார் என்க. இத்தகைய ஐயுறவிற்குத் தெளிவு வேண்டுமாயின் , அதனைச் செய்தற்கு  ஞான ஐசுவரியச் செல்வனா கிய   இறைவனே   தலைவன்  ஆதல்  வேண்டும்  என்பார் . ஈண்டு, “ஈசனே” என்று விளித்துக் கொண்டார் என்க . விளித்து , இந் நிலையில் யான் அறிவனோ  அல்லனோ என்பதைத் தெளிவித்து  அருள்க என்பார் , “அருள்” என்றார் என்க .என்னை  ஆட்கொண்ட நாளில்  என்பால் யான் கண்டது அறிவு இலாமை  ஆகவும் , அந் நிலையில்  அறிவனாகத்  திருவுளங்கொண்டோ என்னை  ஆட் கொண்டது ?  நின் காட்சி கரந்ததாதலின் ,,இற்றை ஞான்று  யான் அறிவனோ அல்லனோ ? இதனைத் தெளிவித்து அருளல் வேண்டும் என்பதே இத் திருப்பாட்டில் அடிகள் கருதிக் கூறியது  என்க.

         இதன்கண், அடிகள் தம்மை அறிவிலாத நிலையில்  ஆட்கொண்டதாகக்  கூறி  இருத்தலின் , இதற்கு யாது கைம்மாறு  செய்யவல்லேன்  என்பது பெறப்படுதலால் , கைம்மாறு கொடுத்தல்  என்னும் பதிகம் நுதலிய பொருளும் , “அறிவனே  யமுதே “ என்றதனாலும் , “அறிவிலாமையன்றே கண்டது “ என்றதனாலும்  பத்தி வைராக்கிய விசித்திரம்  என்னும் சதகம்  நுதலிய பொருளும்  தோன்றுதல் அறிக . “அறிவனே அமுதே”  என்றதற்குப் பத்தியும் ,  “அறிவிலாமை யன்றே கண்டது”  என்றதற்கு வைராக்கியமும் ஏதுவாதல் அறிக .

                                          *****************************************

 

திருச்சதகம் பகுதி_2

சிவமயம்

திருவாசகம்   ——     திருச்சதகம்

திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகத்  திருமறைக்கண்  உள்ள  திருச்சதகத்திற்குப்  பாண்டிவள  நாட்டில்  பூங்குன்ற  நாட்டுத்  தலைநகராகிய  மகிபாலன்பட்டி,  மகாமகோபாத்தியாய  முதுபெரும்  புலவர்  சைவசித்தாந்த  வித்தகர்  பண்டிதமணி  மு.  கதிரேசனார்  இயற்றிய  கதிர்மணி  விளக்கம்  என்னும்  பேருரையில்  முதல் ஐந்து  பாடல்களும் அதற்கான உரையும்  ஜூலை 13, 2014 ஆம்  ஆண்டு  பதிவேற்றம் செய்திருந்தோம்,  அதன்  தொடர்ச்சியாக  ஏனைய  பாடல்களையும் அதற்கான  உரையையும்  கீழே  காணலாம்.

பாடல்  6

பரந்துபல்  லாய்மலர்  இட்டுமுட்

டாதடி  யேயிறைஞ்சி

இரத்தவெல்  லாமெமக்  கேபெற

லாம்  என்னும்  அன்பருள்ளம்

கரந்துநில்  லாக்கள்வ  னேநின்றன்

வார்கழற்  கன்  பெனக்கு

நிரந்தர  மாவரு  ளாய்நின்னை

யேத்த  முழுவதுமே.

கருத்துரை :-  தவஞ்  செய்தற்குரிய  பிறப்பு  வேண்டும்  என்று  முன்னைத்  திருப்பாட்டில் கூறிய  அடிகள்,  அப்பிறப்புக்  கிடைப்பினும்,  இறைவனிடத்து இடயறாத  மெய்யன்பு  சிறப்பாக  வேண்டும்  என்பதை  இத்திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார் .

பதவுரை :-  பரந்து  =  சிவ  தலங்கள்  தோறும்  திரிந்து,

ஆய்  பல்  மலர்  முட்டாது  இட்டு  = 

ஆராய்ந்தெடுக்கப்பட்ட  பலவாகிய  மலர்களைக்  குறைவுபடாது  பெய்து,

அடியிறைஞ்சி  =  திருவடியை  வணங்கி,

இரத்த  எல்லாம்  எமக்குப்  பெறலாம்  என்னும்  = 

வேண்டி  எல்லாம்  எமக்குப்  பெறுதல்  கூடும்  என்று  கருதுகின்ற,

அன்பர்  உள்ளம்  கரந்து  நில்லாக்  கள்வனே =

மெய்யன்பர்களுடைய  உள்ளத்தில்  மறைந்து  நில்லாத  கள்வனே,

நின்  வார்கழற்கு  அன்பு  = 

நின்னுடைய  நெடிய  கழலணிந்த  திருவடிக்கண்  உண்டாம்  மெய்யன்பை,

முழுவதும்  நின்னை  ஏத்த  = 

முற்றும்  நின்னையே  வாழ்த்தும்  வண்ணம்,

நிரந்தரமா =     இடையறாது  நிகழுமாறு,

எனக்கு  அருள்வாய்  =  எனக்கு  அருள்  புரிவாயாக  என்பது

விளக்கவுரை :-.   ஆராய்ந்தெடுத்தல்  –   விலக்கியன  ஒழித்து  விதித்தன  தெரிந்தெடுத்தல்.  அடியிறைஞ்சுதற்கு  ஏனைய  உபகரணங்களினும்  மலர்  சிறந்ததாகளின்  அது  கூறப்பட்டது.  உபலக்கணத்தாற்  பிறவுங்  கொள்க.  கருவியும்  பயனும்  அடங்க,  “எல்லாம்”  என்றார். கருவியாவது,  ஆண்டவன்  திருவடி  அடைதற்குரிய  ஞானம்,  பத்தி  முதலிய  சாதனங்கள்.  பயன்,  திருவடி  நீழலில்  இயைந்து  நுகரும்  பேரின்பம்.  ஆண்டவன்  திருவடியை  மெய்யன்போடு  வணங்கினால்,  யாம்  இரப்பன  வெல்லாம்  பெறலாம்  என்று  கருதும்  அன்பர்  என்றமையால்,  இறைவன்  வழிபாட்டில்  நம்பிக்கையும்  கடைப்பிடியும்  இன்றியமையாதன  என்பது  புலனாகும்.  உயிர்  அறிவில்  ஒன்றித்து  நின்றும்,  அவ்வறிவால்  அறிதற்கு  அரிய  நிலையில்  மறைந்திருத்தலின்,  இறைவனைக் கள்வன்  என்றார் . “என்  உள்ளங்கவர்  கள்வன்,” “உள்ளத்தெ  நிற்றியேனும் உயிர்ப்புளே  வருதியேனும்,  கள்ளத்தே  நிற்றியம்மா  எங்ஙனம்  காணுமாறே”  என்னும்  தமிழ்  மறைகளும், 

அருந்தவர்  காட்சியுள்  திருந்த  வொளித்தும்

ஒன்றுண் டில்லை  யென்றறி  வொளித்தும்

பண்டே  பயில்தொறும்  இன்றே  பயில்தொறும்

ஒளிக்கும்  சோரன்.”  

என்று  அடிகள்  பிறாண்டுக்  கூருதலும்  ஈண்டு  நினைக்கத்தக்கன.  அடியிறைஞ்சி  இரத்தவெல்லாம்  பெறல்  கூடும்  என்னும்  மெய்யன்பர்  உள்ளத்திற்  கரந்து  நில்லாமல்  வெளிப்பட்டு  நிற்பவன்  என்றமையால்,  அடியிறைஞ்சாமல்  எல்லாவற்றையும்  பெறலாம்  என்று  துணியும்  பொய்யன்பர்  உள்ளத்தில்  வெளிப்படாமல்  கரந்து  நிற்பவன்  என்பது  போதரும்.  கீழ்  மக்கள்  உள்ளம்,   அறம்  பாவம்  என்னும்  மூலப்  பொருள்களிலும்,  அவற்றின்  பயனாகிய  இன்ப  துன்பங்களினும்  செல்லுங்கால்,  அறம்  ஆகிய  மூலத்தைவிட்டு  அதன்  பயனையும்,  துன்பம்  ஆகிய  பயனை  விட்டு  அதன்  மூலத்தையும்  விரும்புதல்  இயல்பு.  ஆதலின்  அம்முறையில்  அடி  இறைஞ்சுதலாகிய  மூலத்தை விட்டு,  எல்லாம்  பெறுதலாகிய  பயன்  எய்துதல்  அரிதெனக்  கருதி,  மேற்கூறிய  பயன்  இரண்டனுள்  சாத்தியமாகிய  பேரின்பத்தைவிட்டுச்  சாதனங்களாகிய  பலவற்றுள்  மெய்யன்பு  ஒன்றையேனும்  தரல்  வேண்டும்  என்பார்,  “நின்கழற்கு……அன்பு  எனக்கு  அருளாய்”  எனவும்,  அவ்  அன்புதானும்  ஒருகால்  தோன்றி  ஒருகால்  மறையும்  இயல்பினதாக இன்றி,  இடையறாது  நிகழ்வதாக  இருக்க  வேண்டும்  என்பார், “நிரந்தரமா”  எனவும்,  அவ்  அன்பின்  ஒருகூறு  உலகப்  பொருள்களிடத்தும்,  மற்றொரு  கூறு  கடவுளிடத்தும்  நிகழாமல்,  முழுவதும்  கடவுளை  ஏத்துதற்கே  பயன்பட  வேண்டும்  என்பார்,  “நின்னை யேத்த முழுவதுமே”  எனவும்  அருளிச்  செய்வராயினர்  “கழற்கு” என  ஏழாம்  வேற்றுமையுருபில்  நான்காவது  மயங்கிற்று. 

         அடிகள்  இறைவன்  அடியிறைஞ்சுதலாகிய  பேறு  தமக்கு  இன்றென்பதை,  “தவமே  புரிந்திலன்  தண்மலரிட்டு  முட்டாதிறைஞ்சேன்”  என்றதனால்  புலப்படுத்தமை  யறிக.  அகத்தும்  புறத்தும்  வழிபாட்டையன்றி  வேறொன்றையும்  அறியாத  அடிகள்  இங்ஙனம்  கூறியது,  உலகியலைத்  தம்  மேலாக்கிய  பணிவு  புலப்படுத்தற்கென்க.  இங்ஙனம்  கூறப்பட்ட  பிற  இடங்களிலும்  இதுவே  கருத்தாகக்  கொள்க.

          இதன்கண், “அன்பர் உள்ளம்  கரந்து  நில்லாக்  கள்வன் “  என  இறைநிலை  இத்தகைய தென்பதும்,  அப்  பெருமான்  அருளைப்  பெறுதற்கு  உரிய  சிறந்த  சாதனம்  இடையறாத  மெய்யன்பு  என்பதும்  பெறப்படுதலின், “மெய்யுணர்தல்”  என்னும்  பதிகம்  நுதலிய  பொருள்  தோன்றுதல்  அறிக.

                       ******************************

பாடல்  7.

முழுதும்  கண்டவ  னைப்படைத்

தான் முடி சாய்த்து முன்னாள்

செழுமலர் கொண்டெங்குந் தேடஅப்

பாலன் இப் பால் எம்பிரான்

கழுதொடு காட்டிடை நாடகம்

ஆடிக் கதியிலியாய்

உழுவையின் தோலுடுத் துன்மத்த

மேல்கொண் டுழிதருமே.

 கருத்துரை :-   இறைவனிடத்து  மெய்யன்பு  சிறப்பாக வேண்டும் என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், அம் மெய்யன்பினால் அன்றி ஆற்றல் முதலிய பிற சாதனங்களால் தேவராயினும்  இறைவனை அணுக இயலாது என்பதை இத் திருப்பாட்டில் அருளிச் செய்கின்றார். 

பதவுரை :-  முன் நாள்  =  முன் ஒரு காலத்தில்,

முழுதுங் கண்டவனைப் படைத்தான்  =

உலகமுழுதும் படைத்த பிரமனைத் தன் உந்தித் தாமரையினின்றும் தோற்றுவித்த திருமால்,

செழுமலர் கொண்டு  =  அலர்ந்த தாமரை மலரை யொத்த திருவடிகளைக் காணவேண்டும் என்னும் உறுதியை உள்ளத்தே கொண்டு,

முடிசாய்ந்து எங்குந் தேட  = 

தலையைச்  சாய்த்து  யாண்டுந்தேட,

அப் பாலன் எம்பிரான்  = 

காணப்பட்டவாறு அப்பாற்பட்டவனாகிய எங்கள் சிவபெருமான்,

இப்பால்  =    இவ்விடத்தில்,

தழுதொடு காட்டிடை நாடகம் ஆடி =

பேய்க்கணங்களோடு கூடிச் சுடுகாட்டிற் கூத்தாடி,

கதியிலியாய்  =  புகலிடம் இல்லாதவனாய்,

உழுவையின் தோலுடுத்து  =  புலித்தோலை ஆடையாக வுடுத்து,

உன்மத்தம் மேல் கொண்டு உழிதரும்  =

மிக்க களிப்பை மேற்கொண்டு அலைந்து திரிவன் . [இஃதென்ன வியப்பு} என்பது.

விளக்கவுரை :-   முழுவதுங் கண்டவன் எனப் பிரமன் பெருமை கூறியது. அவன்  –  தந்தையாகிய திருமால் பெருமை தோன்றற்கு காண்டல் , இலக்கணைச் சொல்லாய் நின்று ஆக்குதலை உணர்த்தும். முற்றும் ஆக்கினான்  என்பதற்கேற்ப  உலக முழுவதும் எனச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது. செழுமலர், ஆகு பெயராய் நின்று சிவபெருமான் திருவடியை உணர்த்தும், தேடப்பட்டது அதுவாகலின்,  “சொற்கழிவு பாதமலர்” என்பர். பின்னும்  கொண்டு  –  குறிக்கொண்டு, திருமால் பன்றியுருக் கொண்டு நிலங்கிளைத்துச் சிவபிரான் திருவடியைத்  தேடிய வரலாறு இங்கே புலனாதலறிக. “எங்குந்தேடி” என்றது , இறைவன் திருவடி மலரைக் காண்டற்க நிலத்தை அகழ்ந்து அரிதின் முயன்றதைப் புலப்படுக்கும்.  “பிரமனைப் படைத்தவன்” எனத் திருமாலுக்குக் கூறிய அடையால். பிரமன் தேடியதும் பெறப்படும். பன்றி உருக்கொண்டு மருப்பினால் நிலங்கிளைத்தமை தோன்ற, “முடிசாய்த்து” என்றார். திருமால் தலை சாய்த்து அடியைத் தேடினான் என்வே, பிரமன் அன்னப் பறவையாகப் பறந்து, தலை நிமிர்ந்து சென்று இறைவன் முடியைத் தேடினான் என்பதும் பெறப்படும். பிரமன் தேடியதற்கேற்ப, “செழுமலர்” என்பதை ஆகுபெயராகக் கொண்டு, கொன்றை மாலை யணிந்த இறைவன் திருமுடி எனக் கொள்க; “போதார் புனைமுடி” என்பர். பின்னும் அடிமுடி தேடிய வரலாற்றில் செய்தியை வெளிப்படையாகக்  கூறவே, “முடிதேடிய பிரமன் அடி தேடிய திருமால்” செய்தியும் குறிப்பாகப் புலப்படுத்த படியாம். தந்தையின் இயலாமையைக் கூறியதனாலே, மைந்தன் இயலாமை எளிதில் அறியத்தக்கதென்பது கருத்து. மேலும், தேடியவன் தேவரில் வலியனாகிய திருமால், அவனால் தேடப்பட்டது  அன்பர்க்கு எளிய திருவடியாகும். அடி தேடல் முறைமையும் ஆகும். அங்ஙனம் தலைசாய்த்துத் தேடியும், அத் திருவடி காண்டற்கரிதாயிற்றெனின், அத் திருமாலினும் வலியில் தாழ்ந்த பிரமன்  முறையின்றி, எவர்க்கும் அரிய முடியைத் தலைநிமிர்ந்து தேடியறிந்திலன் என்பது வெளிப்படக் கூறவேண்டாமையும் உணர்க. தேடிய இருவர் செயலையும் கடந்து நின்றது தோன்ற, “அப் பாலன்”” என்றார்.  “பாதாளம் ஏழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருண்முடிவே” என்று அடிகள் பிறாண்டுக் கூறியதும் ஈண்டு நினைக்கத்தக்கது. ஈண்டு, “சொற்கழிவு, பொருள் முடிவு” என முறையே அடி முடிகளின் எல்லை கூறியது கொண்டு, சொற்கடந்து நின்ற நிலையை திருமாலால் அறிய முடியவில்லையெனின் , பொருண் முடிவாகிய நிலையை அவன் புதல்வனாகிய பிரமன் எங்ஙனம் அறியக்கூடும் என்பது எளிதில் உணரத்தக்க தொன்றாகலின், குறிப்பிற் புலப்படுத்தமை ஈண்டும் வலியுறுதல் காண்க. திருமால்  முதலிய வானோர்க்கரிய மருந்தாக வுள்ளான், அன்பர் ஆகிய ஏனோர்க்கு எளிய இறைவன் ஆதலைப் புலப்படுத்த,  “எம்பிரான்”  என்றார்.

       திருமால், பிரமன் முதலிய தேவர்க்கும் அறிவரிய பெருமான், கண்டார் நகையாடுதற்குரிய நிலையில் இவ்விடத்தில்  எளியனாய்த்திரிதல் வியப்பளிப்பதாகும் எனப் பின்னிரண்டடிகளினும்  மருட்கைச்சுவை தோன்றக் கூறுகின்றார் . அங்ஙனம் கூறிய சொற்களில், பழித்தல் போலப் புகழ்தற் பொருள் புலனாதல் அறிக. கழுது இழிந்த பிறப்பாகிற பேயை உணர்த்துமாயினும், ஈண்டு இறைவன் கூடியாடுதற்கேற்ப, மாயா காரியமாகிய உடல் ஒழிந்து, ஞான வடிவமாக விளங்கும் சிவகணங்களை உணர்த்துவதாகும். காரைக்காலம்மையார் இவ்வுலக வாழ்க்கையிற் பற்றொழிந்து  இறைவனை வேண்டிப் பெற்றது இப் பேய் வடிவேயாம் . “ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய்வடி வடியேனுக்குப், பாங்குற வேண்டும் என்றார்” என்னும் இதனால், இறைவன் பக்கலில் நின்று இடையறாது பாராட்டி வணங்கும் பேறு சிவகணங்களாகிய பேய்களுக்கு உண்டென்பதும் புலப்படும். இத்தனையை பேய்வடிவத்தின் பெருமையைச் சேக்கிழார், “வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய்வடிவம்” என்பார். அம்மையார் தம் திருவாக்கால், “மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன்  பேயாய- — நற்கணத்தில் ஒன்றாய நாம்” எனவும்,”காரைக்காற்பேய் செப்பிய செந்தமிழ்” “காரைக்கால் பேய் தன் பாடல்” எனவும் தம்மைப் பேய் என்று கூறிக்கொள்வதில் பெருமை வுண்டெனக் கருதியும் ஈண்டு நினைக்கத்தக்கது. எல்லாப் பற்றுக்களையும் ஒழித்து, இறைவன் ஒருவனையே குறிக்கொண்டு, இடையறாது பணி செய்தொழுகும் பேய்களின் ஆடல் இறைவன் அருட்கூத்திற்கு இயைந்ததாகலின், “கழுதொடு ……நாடகமாடி” என்றார். “பேயோடாடி” என்னும் பெயரும் இது பற்றியதே.    காடு — மகா சங்கார காலத்தில் உலகம் முதலிய எல்லாம் ஒடுங்கிய இடமாகும்.  எல்லாம் அழிந்தொடுங்கிய இடமாதல் பற்றி இதனைச் சுடலை என்று கூறுவர்.  இவ்வுண்மையை,

கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் அழிக்குங் காலை

உடல் உயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய இடம் தன்றோ

சுடலைய தாகும்  அந்தச் சுடலைகாண் அனைய சோதி

நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் தஃதே

எனவும் ,

அங்கது மன்றி எந்தை அகிலமும் முடித்த ஞான்றின்

எங்கும் வெள் ளிடையதாகி ஈமமாம்

எனவும், இப் பெருஞ்சுடலையின் உண்மை நிலையைக் குறித்து, அஃதறியாத மாக்கட்கு மெய்யுணர்வுடைய  ததீசி முனிவர் கூறிய விடையாலும் தெளியலாம். “நாடகம்” என்பது ஈண்டு எல்லாம் ஒடுங்கிய பேரூழிக் காலத்தில் இளைப்பாறிக் கிடக்கும் உயிர்களை மீண்டும் வினைக்கு ஒத்தவாறு படைப்பு முதலிய தொழிற்படுத்தற்குச் செய்யும்  அருள் இயக்கமாகும் . இதனைச் சூக்கும ஐந்தொழில் எனவுங் கூறுப.  “சூக்குமமாகிய  ஐந்தொழிலாவன, சங்கரித்த பின்னர், மேற் செய்யக் கடவனவாகிய தூல ஐந்தொழிற்கு யோக்கியமாம்படி கேவலத்தின் கண் நிகழ்த்துவனவாம்

தோற்றந் துடியதனில் தோயும் திதியமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்ஊற்றமா

ஊற்று மலர்ப்பதத்தில்  உற்றதிரோ தம்முத்தி

நான்ற மலர்ப்பதத்தே  நாடு

என்பது இவ்வுண்மையைப் புலப்படுத்துவதாகும். இனி உயிர்த்தொகுதிகளை  மும்மலக் கட்டொழித்துத் தம் திருவருளில் இயைத்துப் பேரின்பத்துள் தலைப்படுத்தும் உண்மையையும்,  இவ்வருள் நடம் புலப்படுத்தும் என்ப.  இதனை,

மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம்

சாய அமுக்கியருள் தனெடுத்துநேயத்தால்

ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்

தான் எந்தை யார்பரதந் தான்

என்னும் இதனாலறிக. “கதியிலி” என்பது, பிறப்பில்லாதவன்  என்னும் பொருளது. “பிறவா யாக்கைப் பெரியோன்” என்றார் பிறரும். புலித்தோலுடுத்தல், தமக்கு ஊறு விளைக்கக் கருதித் தாருக வனத்து முனிவரால் உய்க்கப்பட்ட புலியைக் கொன்று, அதன் தோலையுடுத்தார் என்னும் புராண கதையை உட்கொண்டு கூறியது. தம்பால் அன்பில்லாதாரை  மறக்கருணையால் ஒறுத்தல் இதனாற் புலனாம்.  உன்மத்தம் – அளவில் மிக்க களிப்பு. இஃது இறைவன் இன்பவடிவினன் என்பதைக் குறிக்கும். உழிதரல் – யாண்டும் உளனாதல். இஃது இறைவன் வியாபக உண்மையைப் புலப்படுக்கும்.

            இத் திருப்பாட்டின் இரண்டடிகளாலும், எல்லாம் ஒடுங்கிய பின் எஞ்சிநின்று, உயிர்களை மீண்டும் படைப்பு முதலிய தொழில்களுட்படுத்தல், தான் பிறவா நிலையுடையனாதல், தன்னை அடையார்க்கும் அடைந்தார்க்கும் முறையே தெறலும் அளியும் புரிதல் முதலிய அருட்செயல்களின் உண்மையியல்பு புலனாதல் அறிக.

             இதன்கண், மெய்யன்பு இன்றிப் பிற ஆற்றல்களால் இறைவனைக் காண்டல் இயலாதென்பது பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் தோன்றல் அறிக.

                          ************************

பாடல் 8.

உழிதரு காலும் கனலும்

புனலொடு மண்ணும் விண்ணும்

இழிதரு காலம்எக் காலம்

வருவது வந்ததற்பின்

உழிதரு காலத்த உன்னடி

யேன்செய்த வல்வினையைக்

கழிதரு காலமு மாயவை

காத்தெம்மைக் காப்பவனே.

கருத்துரை :-  மெய்யன்பினால் அன்றி, ஆற்றல் முதலியவற்றால் இறைவனை எய்துதல் இயலாது என முன்னைத் திருப்பாட்டிற் கூறிய அடிகள், மெய்யன்பு வாயிலாக எய்தும் இன்பநிலை தானும் வினையொழிவில் எய்தத் தக்கதாகலின், என் வல்வினை யொழிவு எக்காலம் நேருமோ என இத் திருப்பாட்டில் இரங்கிக் கூறுகின்றார்.

பதவுரை :-  உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் =

உலவுகின்ற காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்பும் ஆகிய இவ்வைம்பெரும் பூதங்களும்,

இழிதரு காலம் வந்ததற் பின்னும் =

ஒன்றனுள் ஒன்றாக முறையே ஒடுங்குகின்ற காலம் வந்த பின்னரும்,

உழிதருகால் அத்த = அருட்கூத்து இயற்றுந் திருவடிகளையுடைய தந்தையே

உன் அடியேன் செய்த வல்வினையைக் கழிதரு காலமும் ஆய்  =

நின் அடிமையாகிய யான் செய்த வலிய வினைகளைக் கழிக்கின்ற கால தத்துவமும் ஆகி,

அவை காத்து =  அவ் வினைகள் மீண்டும் என்னைப் பற்றாமல் தடுத்து,

எம்மைக் காப்பவனே = என்னையும் என்னைப்போன்ற ஏழை அடியாரையும் காப்பாற்றுகின்ற பெருமானே,

உழி தரு காலும்……….இழிதரு காலம் = உலவுகின்ற காற்றும் தீயும் நீரும் நிலனும் விசும்பும் ஆகிய இவ்வைம்பெரும் பூதங்களும் ஒடுங்குகின்ற காலம்,

வருவது எக்காலம்  =  வருதல் எப்பொழுது?  என்பது.

விளக்கவுரை :-  காற்றுக்கு உழிதரல் கூறியதனால், தீ முதலியவற்றிற்கும் சுடுதல் முதலிய குணங்கள் கூறப்பட்ட படியாம் . பிரமனது முதற் படைப்பு நீர் என மறை கூறுதலின் , புனலொடு என ஈண்டு ஒடு உருபு உயர்வு குறித்து நின்றது. “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது விதி. மக்களுக்குச் சிறந்த உணவாகவும் , ஏனைய உணவுப் பொருள்களை உண்டாக்குவதாகவும் உள்ளது நீராதலின் , ஏனைய பூதங்களினும்  நீர் முதற்படையாகக் கூறப்பட்ட தென்பது விளங்கும்.  இவ்வுண்மை கருதியே திருக்குறட் பாயிரத்திலும் கடவுள் வாழ்த்தை யடுத்து வான் சிறப்புக் கூறப்பட்டது . விண், செய்யுள் நோக்கி இறுதியிற் கூறப்பட்டதாயினும் , தோற்ற முறை பற்றி முதலிற் கொள்ள வேண்டும். “பரம் பொருளினின்றும் ஆகாயந் தோன்றி, அதனினின்றும் நிலந் தோன்றிற்று என்று வேதத்துள்ளும் கூறப்பட்டது “ என்பர் பரிமேலழகர்.  இங்கே வேதம் என்றது தைத்தரீய உபநிடதத்தைக் குறிக்கும் . {தைத்தரீயம் 2: க} அம்முறை முடிவிற்றோற்ற முறை பற்றிக் கூறப்பட்ட செய்தியே, தமிழ் மறையாகிய தேவாரத்தில் ,

இருநிலனது புனலிடை மடிதர வெரியுக வெரியதுமிகு,

பெருவெளியினி லவிதர வளிகெட வியனிடை முழுவது கெட,

இருவர்களுடல் பொறையொடு திரியெழி லுருவுடை யவனின மலர்,

மருவிய அறுபதமிசை முரல் மறைவன மமர்தரு பரமனே

{திருமறைக் காடு – 7 } என்று திருஞான சம்பந்த சுவாமிகளால் ஒடுக்கமுறை பற்றிக் கூறப்பட்டதாகும்.. தத்தம் தன் மாத்திரைகளினின்று பூதங்கள் தோன்றுமென்று சிவாகமங் கூறும். இவற்றுள் முன்னது பழந்தமிழ் நூற்கொள்கை யாகும் . இவ்விரு கொள்கைகளையும் முரண்படாமல் ஒற்றுமைப்படுத்தச் சிவஞான முனிவர் முயன்று ஆராய்ந்து எழுதிய சில குறிப்புக்கள் சிவஞானபாடியம் இரண்டாஞ் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில் உள்ளன. முனிவர் வேதக்கருத்தை இணக்கிச் சிவாகமக் கொள்கையையே உறுதிப்படுத்துள்ளார் . யாம் வடமொழி வேதம் தமிழ்மறைகளிற் கூறப்பட்ட முறைப்படி ஈண்டு கொள்ளலானோம்.

     ஐந்து குணங்களையும் உடைய நிலம் மிகவும் பருப்பொருளாய் நம்மனோர்க்கு ஆதாரமாக இருத்தலின் அதனையும் , அதனோடு தோற்ற முதலாதல் பற்றி விண்ணையும் இயைத்து , “மண்ணும் விண்ணும் “ என்றார்.  “மண்டிணிந்த நிலனும் , நிலனேந்திய விசும்பும் , விசும்பு தைவரு வளியும் , வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கு,  ஐம்பெரும் பூதத்தியற்கை” என்னும் புரநானூற்றுச் செய்யுளில் , நிலனேந்திய விசும்பென்று கூறியதும் இக்கருத்துப்பற்றி, இனி, ஒடுக்க முறையும் புலப்பட, விண்ணை இறுதியிற் கூறினர் எனினும் ஆம்.  இழிதரல் – இறங்குதல் ;  ஒடுங்குதற் பொருட்டு . இழிதரு காலம் – எல்லாம் ஒடுங்கிய பேரூழிக்காலம்.  அக்காலத்தின் பின்னும் இறைவனுடைய ஐந்தொழில் திருக்கூத்து,  சூக்கும நிலையில் நடைபெறும் என்பது புலப்பட , “உழிதருகால் அத்த” என்றார் .

        அடிகள் தம் பிறப்பிற்கு ஏதுவாகத் தம்பால் அமைந்து கிடக்கும் வினை எளிதில் கழிக்கத் தக்கதன்றெனவும் , தாம் முயலும்  தவத்தின் ஆற்றலையும்  கடந்து நிற்கும் வலியுடையதெனவும் கண்டு, அதனை, “வல்வினை” என்றார் .  அங்ஙனமாயினும் , அவ்வல்வினைக்கு முதலாகிய யான் நின் அடிமை என்பதைத் திருவுள்ளம் பற்ற வேண்டும் என்பார் , “உன் அடியேன் செய்த வல்வினை” என்றார் . கடத்தற்கரிய வல்வினை களாதலின், அவற்றை ஒழிப்பது என்னளவில் அமையாது; யான் செய்யும் தவ முயற்சி முதலிய சாதனங்கள்  எல்லாம் அவ்வினையொழிவு பெறுதற்கு ஏதுவாகிய நின் அருளைப் பெறச் செய்தற்குரிய ஆற்றலுடையனவும் அல்ல; ஆதலின், எல்லாம் ஒடுங்குதற்குரிய மகாசங்கார காலமாகிய பேரூழியில் உயிர்கள் இளைப்பாறுதற் பொருட்டு நின் அருளால் காரணமாயையில் ஒடுங்கியவழி , அவ்வுயிர்த்தொகுதிகளின் எஞ்சிய வினைகளும் சூக்குமமாய்க் காரணமாயையின் ஒடுங்கக்கூடும். ஆதலின் , அந்நிலையில் என் வல்வினையும் என்னை விட்டுக் கழிய வேண்டுமெனவும், அங்ஙனம் கழிதற்கு நீயே பேரூழிக்கால தத்துவமாகவும் நின்று உதவி புரிய வேண்டுமெனவும் வேண்டுவார், “வல்வினையைக் கழிதரு காலமுமாய் “ என்றார் . ஆன்ம தத்துவம் வித்யா தத்துவம் அனைத்தையும் தன்னுள் அடக்கி நிற்பது பேரூழியாகிய கால தத்துவம் ஆதலின் , அம்முறையில் இறைவனை , “காலமுமாய்” எனக் குறிப்பிட்டார்  “ஞாலமே விசும்பே யிவை வந்துபோம் காலமே”என அடிகள் பிறாண்டுக் கூறியதும் காண்க. பேரூழிக்காலத்து, உயிர்களின் எஞ்சிய வினைப்பகுதிகள் காரணமாயையின்  ஒடுங்கிக்கிடப்பினும் , மீண்டும் படைப்புத் தொடங்குங்கால், அவ்வினைகளே அவ்வுயிர்களுக்குத் தநு கரண புவன போகங்களின் ஏதுவாக முளைக்கும் ஆதலின் , அம்முறையில் என் வல்வினைகளும் மீண்டும் என்னைப்பற்றிப் பிறப்பிற் செலுத்தக்கூடும் ; அக் காலத்திலாவது நின்னடிமை என்பதைத் திருவுளங் கொண்டு, அவ்வினைகள் என்னைப் பற்றாவண்ணம் அவற்றைத் தடுத்து என்னைக் காக்கும் பேரருள் உடையவன் நீயே என்பார் , “அவை காத்தெம்மைக் காப்பவனே” என்றார். ஈண்டுக் காத்து என்பது வராமல் தடுத்து என்னும் பொருட்டு ; “செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் “ என்புழிப்போல. மல வெப்பத்தால் தாம் படுந் துயரம் பெரிதெனக் கண்டு, அது மற்றை அன்பரையும் பற்றாதிருக்க வேண்டும் என்னும் கருணையால் அடிகள் என்னைக் காப்பவனே என்னாது,”எம்மைக் காப்பவனே” என்று உளப்படுத்துக் கூறினார்.  இத்துணையும் கூறியவை விளிகலாம்.

இனி, “உழிதருகாலும் கனலும் புனலொடு மண்ணும் விண்ணும் இழிதரு காலம்” என்னும் தொடரை இரட்டித்து உரைத்துக் கொண்டு, அக்காலம் வருவது ப்பொழுது? என முடிக்கவேண்டும். ஐம்பெரும் பூதங்களும் ஒடுங்கிய பின்னும் அருட் கூத்தியற்றும் எந்தையே எனவும், நின்னடியேன் செய்த வல்வினையைக் கழிக்கின்ற கால தத்துவமாய் நின்று , அவ்வினைகள் மீண்டும் என்னைப் பற்றாமல் தடுத்துக் காப்பவனே எனவும், இறைவனை விளித்த அடிகள், தம் வல்வினை ஒழிவிற்குரிய காலம் மகா சங்கார காலம் ஆகுமாயின், அஃது அணிமையில் நேராதே; அது வருங்காறும்  வல்வினை வயப்பட்டுப் பிறந்திறந்து உழல் நேருமே என்று அஞ்சியிரங்குவாராய், அப் பேரூழிக்காலம் வருவது என்று கொலோ என்பார், “இழி தருகாலம்  எக்காலம் வருவது” என்றார் . வந்ததற்  பின்னும் என்புழி, எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. காலதத்துவம் பிரகிருதி மாயா காரியங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய வித்தியா தத்துவங்களுள் வியாபித்து நிற்பதொன்றாகலானும், மகா பிரளய நிலையில் எல்லாப்பொருளும் , தேவர் முதலிய எல்லோரும் ஒடுங்க, எஞ்சி நிற்கும் பரமபதியாகிய சிவபிரான் அருள் நடத்திற்கு இடனாக நிற்றலானும், அக் கால தத்துவம், தம் வல்வினை ஒழிவிற்கு ஏதுவாம் என்னும் உறுதியுடைய அடிகள், வினைக் கட்டறுத்தற்குரிய முதன்மை இறைவன் பாலதாகவும், அக் காலமும் அதற்குத் துணையாதல் பற்றித் தம் வல்வினைய்க் கழித்தற்கு இறைவன் கருத்தனாதலேயன்றித் துணையாகவுள்ள காலமுமாவன் என்னுங் கருத்தால், “கழிதரு காலமுமாய்”  என்றார்.  ஈண்டுள்ள உடம்பையும் எச்சப் பொருளதாம் .

     இதன்கண் , மாபெரும் பூதங்கள் எல்லாம் ஒடுங்கிய பேரூழிக்காலத்தும், அழிவில் பொருளாக நின்று அருட் கூத்தியற்றுவோன் இறைவன் ஒருவனே யென்பதும் , உயிர்களின் வினை யொழிவிற்கு அப் பெருமானைக், கால தத்துவமாகக்  கொண்டு வழிபடல் வேண்டுமென்பதும் கூறப்பட்டிருத்தலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக .

                     ********************************************

பாடல் 9.

பவன்எம்  பிரான்பனி  மாமதிக்

கண்ணிவிண்  ணோர்பெருமான்

சிவன்எம்  பிரான்என்னை  ஆண்டுகொண்

டான்  என  சிறுமைகண்டும்

அவன்எம்  பிரான் என்ன  நானடி

யேன்  என்ன  இப்பரிசே

புவன்எம்  பிராந்தெரி  யும்பரி

சாவ  தியம்புகவே.

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  தம் வல்வினையொழிவு  எக்காலம்  நேருங்கொலோவென  இரங்கிய  அடிகள், அதற்குப்  பரிகாரமாகத்  தம் சிறுமை  கண்டும்,  இறைவன்  ஆட்கொண்ட  பெருமை  பாராட்டத்  தக்கதென,  இத் திருப்பாட்டில்  அருளிச்  செய்கின்றார்.

பதவுரை :-   

பவன் எம்பிரான்  =  உலகத் தோற்றத்திற்குக் காரணனும் எம்பெருமானும் ,

பனி மாமதிக் கண்ணி விண்ணோர் பெருமான் = 

குளிர்ச்சியும் பெருமையும் வாய்ந்த பிறைத் திங்களை முடிமாலையாகவுடைய தேவர் முதல்வனும் ,

சிவன் எம்பிரான் =  இன்பவடிவினனும்  ஆகிய எங்கள் தலைவன்,

என் சிறுமை கண்டும்  =  எனது சிறியதன்மையை அறிந்து வைத்தும் ,

என்னை ஆண்டுகொண்டான் = என்னை  அடிமையாக ஏற்றுக்கொண்டான்

அவன் எம்பிரான் என்ன  = அத்தகைய பெரியோன் ஆண்டான் ஆகவும்,

நான் அடியேன் என்ன =சிறியேனாகிய யான் அடியேன் ஆகவும் உள்ள

இப்பரிசே  =   இவ்வாண்டான் அடிமைத் தொடர்பின் இயல்பே,

எம்பிரான்  = அவ்வெம்பெருமான் பெருமையை,

தெரியும் பரிசாவது புவனம் இயம்புக  =  அறிந்து கொள்ளும் விதமாதலை இவ்வுலகம் பாராட்டிக் கூறக்கடவது  என்பத.

விளக்கவுரை :-

பவன் என்பதற்கு, உலகத் தோற்றத்திற்கு நிலைக்களனாகவுள்ள காரணமானவன் என்பது பொருள்; அழிவில்லாதவன் என்பதுமாம் .உலக காரணனாதல் பரம் பொருட்குச் சிறந்த இலக்கணமாகு மென்றும், அது சிவபிரானுக்கே உள்ளதென்றும் , மறை யாகமங்கள் கூறும். யாவர்க்கு மேலாம் அளவிளாச் சீருடைய அத்தகைய பெருமான் , யாவர்க்குங் கீழாம் அடியேங்கட்கும் தலைவனாயினன் என்பது போதர, “பவன் எம்பிரான்” என்றார். சிறியேமாகிய எங்களுக்குத் தலைவனானது அவன் பெருமைக்குத் தக்கதன்றெனின் , அதற்கு மாற்றமாக மக்களுட் சிறியேமாகிய எமக்கு மாத்திரம் அன்று: தேவர் எல்லோர்க்கும்  தலைவனாவன் என்பதையும் புலப்படுக்க , “விண்ணோர் பெருமான்”என்றார். இங்ஙனம் பிரித்துரைக்க வேண்டிய தென்னை? மக்கள் தேவர் அனைவருக்கும் பெருமான் என்று கூறுதலே யமையும் எனின், அரியபொருளைப் பெற்றான் ஒருவன் அஃது உண்மையிற் பொதுவாயினும் , தன் அவாமிகுதியால் தனக்குச் சிறந்ததாகும்   என்று கோடல் இயல்பாதலின் , அம்முறயில் , “எம்பிரான்” என முன்னர்க் கூறிப் பின்னர் அக்கூற்றால் அப்பெருமான் பெருமைக்கு இழுக்கு நேராவண்ணம் தேவர் தலைவன் என்றுங் கூறினர்.

         விண்ணோர் பெருமான் ஆதலை விளக்குதற்கு , “மதிக்கண்ணி” என்னும் அடை புணர்க்கப்பட்டது. மதிக்கு நேர்ந்த இடுக்கணை விலக்க , அதனைச் சடையில் அணிந்து காத்தருளினான் என்பது புராணக்கதை. அம்மதி , இறைவன் சடையை அடைந்தமையால் தன் இயற்கைத் தன்மையாகிய குளிர்ச்சிக் குணமும் பெருமையும் உடையதாயிற்று என்பது புலனாக , “பனி மாமதி” எனயும் , அடைக்கலமாக அடைந்தாரை ஏற்றுக் காக்கும் அருளாளன் இறைவன் என்பதை எல்லோரும் விளக்கமாக உணர்ந்து கோடற்பொருட்டு, அப்பிறைமதி அவர்க்குச் சடையில் அணிந்து கொள்ளும் மாலையாயிற்று என்பார் “மதிக் கண்ணி”எனவும்  கூறினர்.

           இனி, உலக காரணனாதல் ஒன்றானே யாவர்க்கும் தலைவனாகலாம் ; அத் தலைவனை அடைந்தால்  எய்தும் பயன் யாதாம் என்பார்க்கு, அவன் மங்கலகரமான பேரின்பத்தை, அடைந்தார்க்கு அளிக்கும் இன்பவடிவினன் என்பது புலனாக, “சிவன் எம்பிரான்” என்றார்  ஈண்டு எம்பிரான் என்றது , சிறுமை கண்டும் விலக்காமல் ஆண்டு கொண்ட பேரருள் உடைமை குறித்தாம். உலகியல் தலைவர், அடிமையின் சிறுமையை உள்ளவாறு அறிந்து கொள்ளும் ஆற்றலுடையராதல் அரிது . அறிந்துகொண்டால் , உடனே அவ்வடி மையை விலக்கவுஞ் செய்வர்.  கடவுட்டலைவனாகிய இப்பெருமான் , அதற்கு மாறாக , உயிர்க்குயிராக நின்று, எல்லாம் அறியும் ஆற்றல் உடையவன் ஆதலின் , அடிமையின் சிறுமையை எளிதில் அறிந்து கொள்ளும் இயல்பினன் என்பதும், அறிந்த பின்னும் விலக்காமல் ஆட்கொள்ளும் அருளுடையவன் என்பதும் புலனாக, “என் சிறுமை கண்டும் ஆண்டு கொணடான்” என்று கூறினர். “அவன்” என்பது பண்டறி சுட்டாகப் பெருமை குறித்து நின்றது. ஈண்டுப் பிரான் என்றது, ஆண்டான் என்னும் பொருட்டு. “நான்” என்றது ஈண்டு அப் பெரியோன் தகுதிக்கேற்ற அடிமையாளன் அல்லன் என்பதைக் குறிப்பிற் புலப்படுத்து நின்றது. “இப் பரிசு”  என்பதிலுள்ள சுட்டு , எத்துணையும் பெரியோனாகிய அவன் , எத்துணையும் சிறியோனாகிய என்னை ஆட்கொண்ட இத் தன்மை என ஏற்றத் தாழ்வின் இயல்பைச் சுட்டி நின்றது.

           “புவன் எம்பிரான்” என்புழிப் புவனம் என்பது அம்முக்கெட்டு, உலகம் என்னும் பொருளதாய், இயம்புதற்கு வினை முதலாகிய மக்களை உணர்த்தி நின்றது . அம்முக் கெடுதல், “ஞானால் மருவிடுங்கிரியை யெல்லாம்,” “பெற்றொன்றுயர்த்த பெருமான்” என்றாற்போல்வனவற்றுள்ளுங் காண்க. அவ் வெம்பெருமான் பெருங்கருணையாளன் ஆதலை உலகம் எவ்வாறு அறிந்துகொள்ள இயலும் என்பார்க்கு “இப் பரிசே எம்பிரான் தெரியும் பரிசாவது”என்றார். எம்பிரான் என்றதில் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. அடிகள் தம் சிறுமை கண்டும் , பெருமான் தம்மை ஆண்டு கொண்ட வியத்தகும் இத் தன்மையே அப் பெருமான் பெருமையை உலகம் அறிந்துகொள்ளும் விதமாம் என்று கருதினர் என்பது கருத்து. இந் நிகழ்ச்சி இங்ஙனம் அறிந்துகொண்ட அளவின் அமையாது, மக்களால் நெஞ்சார வாயாரப் பாராட்டிக் கூறும் இயல்பினது என்பார், “உலகம் இயம்புக” என்றார்.  இனி, “புவனெம்பிரான்” என்புழி, “புவன்”என்பது வேள்வித் தீயை உணர்த்தும் என்று எசுர் வேதம் கூறும் . ஆதலின் அங்கி வடிவாக நின்று, வேள்வியுணவை யேற்று அருள் புரிபவன் எனவும் , ஒளி வடிவினன் எனவும் பொருள் கோடலுமாம். அங்ஙனம் கொள்ளுங்கால் , “இயம்புக” என்பதற்கேற்ப, உலகம் என்னும் எழுவாயை வருவித் துரைத்த்ல் வேண்டும் சைவ சித்தாந்தத்தில் , ஆண்டான் அடிமைத் திறம் சிறந்து விளங்குதலும், அடிகள் அம்முறையைத் தம் திருவாக்கால் அடிக்கடி பாராட்டிக் கூறுதலும் ஈண்டு நினைக்கத்தக்கன. தம் நல்லதெனக் கண்டு கடைப்பிடித்தொழுகும் இவ் ஆண்டான் அடிமைத் திறத்தை, உலகமும் தம்மைச் சான்றாகக் கண்டு பாராட்டி, அம்முறையில் ஒழுகி நலம் பெற வேண்டும் என்பது அடிகளின் உட்கோளாகும்.

           இதன்கண், எல்லாம் வல்ல இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறைமையும், அத்தகைய ஆண்டான் அடிமைத் திறமே சிவநெறியில் சிறந்து விளங்கும் என்னும் உண்மையும் பெறப்படுதலின் , மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருள் புலனாதல் அறிக.

                   &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பாடல் 10.

புகவே தகேன்உனக் கன்பருள்

யானென்பொல் லாமணியே

தகவே யெனையுனக் காட்கொண்ட

தன்மையெப் புன்மையரை

மிகவே உயர்த்திவிண் ணோரைப்

பணித்தி அண்ணா அமுதே

நகவே தகும்எம் பிரான்என்னை

நீசெய்த நாடகமே.

கருத்துரை :- 

தம்மை ஆட்கொண்ட இறைவனது பெருமை பாராட்டத்தக்கது  என முன்னைத் திருப்பாட்டில் வியந்து கூறிய அடிகள், அப் பெருமான் பெருமைக்குத் தகாத நிலையில் தம்மை ஆட்கொண்டது குறித்து, மீண்டும் இத் திருப்பாட்டில் வியந்து இன்புறுகின்றார்.

பதவுரை:-   

என் பொல்லா மணியே  = 

துளையிடப்படாத என் அரிய இரத்தினமே,

யான் உனக்கு அன்பருள் புகவே தகேன் =

யான் நின் அன்பர் கூட்டத்தில்  புகுதற்கே தகுதியில் லாதவன், 

என்னை ஆட்கொண்ட தன்மை உனக்குத் தகவே =

அங்ஙனம் இருந்தும் சிறியேனாகிய என்னை ஆளாகக் கொண்டது நின் பெருமைக்கு தகுதியாகுமா?

எப் புன்மையரை மிக உயர்த்தி  =

எத்தகைய இழிந்தோரையும் மிக உயரச் செய்கின்றாய்,

விண்ணோரைப் பணித்தி =

உயர்ந்தவர்களாகிய தேவர்களைத் தாழச் செகின்றாய்,

அண்ணா அமுதே எப்பிரான் =

தந்தையே , அமிழ்தம் போன்றவனே, எங்கள் தலைவனே,

நீ செய்த நாடகம்  என்னை =   நீ இங்ஙனம் இயல்பிற்கு மாறாகச்  செய்த திருக்கூத்து  இருந்தவாறு என்னை?

நகவே தகும்  = இது நகையாடுதற்கே தக்கதாகும் என்பது.

விளக்கவுரை :- 

பொள்ளல்  –  துளையிடல் ;  பொள்ளாமணி  பொல்லாமணி என மரீஇயிற்று .  துளையிடப் படல், ஏனைய மணிகளிலும் கோத்தணிதற்குரிய முத்துப் பவழங்களுக்கே சிறந்ததாகும் . ஆயினும் , இனம் பற்றி மாணிக்க முதலிய மணிகளையும் கொள்ளலாம் . அங்ஙனங் கொள்ளுங்கால், ஈண்டுப் பொள்ளல் என்பது உபலக்கணத்தால்  சாணை தீர்தல், கோணங் கூரிதாக்கல் முதலிய செயல்களையும் உணர்த்தும் . உலகிற் சிறந்த மணி கருவிகளால் மாசு நீங்கி, ஒளி கால்வதாகும் . பரமபதியாகிய இறைவன் அங்ஙனமின்றி பாசங்களினீங்கிப் பேரொளிப் பிழம்பாக விளங்குவோன் என்பது புலப்பட, “பொல்லா மணியே” என்றார் . இத்துணை அரிய இரத்தினம் தமக்கு எளிதிற் கிடைத்ததே என்று ஆராயாமல் , “என் பொல்லா மணியே” என்றார் உனக்கன்பர் என்புழி, நாங்கனுருபு ஏழாவதன் பொருட்டு , உனக்கு இனிய அன்பர் எனினுமாம். மெய்யன்பர் குழாத்துள் எல்லாவற்றானும் புகுதற்கு உரிய தகுதி என்பால் இன்றென்பார், “புகவே தகேன் “ என்றார் . ஏகாரம் தேற்றப் பொருட்டு. அன்பர் கூட்டத்துள்  அணுகவும் தகுதியில்லாத சிறியேனை அன்பருள் ஒருவனாக ஏற்று ஆட்கொண்டது  நின் பெருமைக்கும் பொருத்தமாகுமா என்பார்,  “தகவே எனை உனக்கு  ஆட்கொண்ட தன்மை” என்றார்.” தகவே” என்புழி ஏகாரம் வினாப்பொருளில் வந்து, தகவன்று என்னும் எதிர்மறைப் பொருளை உணர்த்திற்று.

             எப்புன்மையரையும் என்புழி, இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.  “பூமேலயனொடு மாலும்புகலரி தென்று , ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க “ என்று அடிகள் பிறிதோரித்துக் கூறியபடி, சிறிதும் தகுதியில்லாத தம்மை இறைவன் ஆட்கொண்டதனையும், உயர்ந்த தேவர் முதலியோர்க்கு அறிவரிய நிலையிலுள்ளதையும் நினைந்து. எப்புன்மையரை மிகவே உயர்த்தி விண்ணோரைப் பணித்தி “ என்றார் . இழிந்தாரை உயர்த்தலும் , உயர்ந்தாரைத் தாழ்த்தலும் முறைமாறிய செயல் ஆதலின், இது நகையாடற்கு உரியதென்பார், “நகவே தகும்” என்றார் . “விண்ணோரை” என்பதற்கு ஏற்றப் புன்மயரை என்னாது , “எப்புன்மையரையும்” என்றது , இழிந்தார் எத்துணைக் கீழ்நிலையுடையர் ஆயினும் , அன்னாரை உயர்த்துதலே ஆண்டவன் திருவுள்ளமாம் என்பதைப் புலப்படுத்தும் . “பணித்தி” என்பதற்கேற்ப “உயர்த்தி” என்று கூறுதலே அமையும். அங்ஙனம் கூறாமல், “”மிகவே உயர்த்தி” என்றார். உயர்ந்தோரைத் தாழ்த்தும் அளவினும் இழிந்தோரை உயர்த்தும் அளவு மிகுதி என்பது கருதி.

              இனி, உட்கோள் வருமாறு :- சிறியோரை உயர்த்தல் என்பது, சிவபோதமாகிய முனைப்பு ஒரு சிறிதுமின்றி, எல்லாம் ஆண்டவன் அருட்செயலெனக் கண்டு, அடங்கி ஒழுகும் அன்பர்க்கு, அருள்சுரந்து தன் திருவடி நீழல் இன்பத்தை நல்கிப் பெருமைப்படுத்தல் ஆகும்.  “புன்மையர்” என்பது இறைவனது அளத்தற்கரிய பெருமையை நோக்கி, அடியவர் தம் சிறுமை கருதிக் கூறியது. “விண்ணோரைப் பணித்தல் என்பது, தேவரிற் பதவி உயர்ந்தார் சிலர் தமக்குள்ள ஓரளவு அதிகாரைத்தைக் கருதாமல் தாமே எல்லாம் வல்ல தலைவராவோம் எனக் கருதிச் செருக்குற்ற நிலையில் அச் செருக்கொழிய அவரை அடக்கியாளுதலைப் புலப்படுத்தும், புன்மையர் என்றது இழிந்தோரையாதலின், அதற்கேற்ப உயர்ந்தோரென்னாது  “விண்ணோர்” என்றதனால் , தாமே பரம்பொருளென்று செருக்குற்றவர் தேவரில் ஒரு சாரார் என்பது புலனாம் . இவ்வுட்கோளுக்கேற்ப, நகவே தகும் என்பதற்கு, இறைவனது இவ்வருட் செயல் நினைந்து மகிழத்தக்கது எனப் பொருள் கொள்ளல் வேண்டும். நகுதல்  –  மகிழ்தல்,  “மெய்வேல் பறியா நகும்” என்புழி இப்பொருட்டாதல் அறிக. “அண்ணா அமுதே” என்பன நிரனிறையாக நின்று, சிறியோரை உயர்த்துங்கால் இறைவன் அவர்க்குத் தந்தை நிலையினின்று தன் பேரின்பப் பெருஞ் செல்வத்தை அருளிக் காப்பவன் என்பதையும், விண்ணோரைத் தாழ்த்துங்கால் அவரை அமிழ்தம் உண்பித்துத் தான் நஞ்சுண்டு செருக்கடக்கினன்  என்பதையும் குறிப்பிற் புலப்படுப்பன. இனி, “அண்ணா அமுதே” என்பதற்குப் பெறுதற்கரிய அமிழ்தம் போன்றவனே எனலுமாம். அண்ணுதல், ஈண்டு அணுகுதற் பொருட்டு. மண்ணில் வாழும் மக்களை விண்ணிற் காட்டுதலும், விண்ணில் வாழுந் தேவரை மண்ணிற் காட்டுதலும் நாடகத்தில் நிகழ்வன, ஆதலின், “நீ செய்த நாடகம் என்னை?” என்றார். “என்னை நீ செய்த நாடகமே” என்பதற்கு, என் பொருட்டு நீசெய்த கூத்து எனலுமாம்.

            இதன்கண்,  “என் பொல்லா மணியே” என்றதனால் பத்தியும், “புகவே தகேனக் கன்பருள் யான்” என்றதனால், புகுதற்குரிய தகுதி பொறாமைக்கு ஏதுவாக உள்ளது பொய்யுலக வாழ்க்கைப்பற்று என்பது பெறப்படுதலின், வைராக்கியமும் குறிக்கப்படுதலின், பத்தி வைராக்கிய விசித்திரம் என்னும் சதகம் நுதலிய பொருளும், இழிந்தார் உயர்தற்கும், உயர்ந்தார் இழிதற்கும் முறையே இறையருளின் உண்மை இன்மைகள் ஏதுவாம் என்னும் மெய்மை பெறப்படுதலின், மெய்யுணர்தல் என்னும் பதிகம் நுதலிய பொருளும் புலனாயவாறு அறிக.

                      **********************************************

திருச்சதகம்  —-  2.   அறிவுறுத்தல்

      உடல் முதலிய மாயா காரியப் பொருள்களின் நிலையாமை உணர்ந்து, அவற்றினின்றும் நீங்கி, என்றும் நிலையுதலுடைய மெய்ப் பொருள் உணர்ச்சியில் தலைப்பட்ட அடிகள், அவ் வுணர்ச்சி வாயிலாக ஆண்டவன் திருவருளை வேண்டி, அதற்குரிய சாதனங்களை மேற்கோடற்குத் துணைபுரிய வேண்டிய மனம், அச் சாதனங்களை விட்டு, அவற்றிற்கு எதிர்மறையான உலகியற் செயல்களிற் சேரலைக் கண்டு, அந் நெஞ்சிற்கு அறிவுறுத்துவான் தொடங்குகின்றார். ஓர் இல்லறத்தான் தான் மேற்கொண்ட அறத்திற்குத் துணை நின்று உதவி புரியவேண்டிய தன் மனைவி, உரிய உதவியைச் செய்யாமையோடு மாறாகவும் நடப்பாளாயின், அவளைக் குறிப்பால் அறிவுறுத்துமுகமாகத் தக்கார் ஒருவரை முன்னிலைப் படுத்துத் தான் பெறவேண்டிய பேறுகளை இழந்திருப்பதற்கு இரங்கிக் கூறுதலும் , அவ்விரக்கக் குறிப்புணர்ந்தும், அவள் நன்னிலைப்பட்டிலள் ஆயின் , அவளை முன்னிலைப்படுத்து இடித்துக் கூறுதலும் உலகியலிற் கண்டனவாதலின் , அம்முறையில் அடிகள் திருவருட் பேற்றிற்குத் துணை நின்று உதவி புரியவேண்டிய தம் மனம், அவ் உதவியைச் செய்யாமையோடு தடையாகவும் சேரலைக் குறித்து வருந்தி , அம் மனம் உணருமாறு ஆண்டவனை முன்னிலைப்படுத்து , அப் பேற்றின் இன்றியமை யாமையாமையையும், அது பெறுதற்குரிய சாதனங்களைப் பெறாமை பற்றியும் இப்பதிகத்தின் முதல் திருப்பாட்டுக்களில் இரங்கிக்கூறி , அக் குறிப்புணர்ந்தும் நன்னிலைப்படாத அம் மனத்தை , பின்னர் முன்னிலைப் , படுத்து ஒன்பது பத்தாம் திருப்பாட்டுக்களில் இடித்துரைத்துள்ளார் , இச் சொற்களால் குறிப்பிற் புலப்படக் கூறுதலை விரித்தும் . கடுஞ் சொற்களால் வெளிப்படக் கூறுதலைச் சுருக்கியும் கூறுதல் பெரியோர் இயல்பு ஆதலின், அம் முறையில் அவற்றை முறையே எட்டுத் திருப்பாட்டுக்களாலும் , இரண்டு திருப்பாட்டுக்களாலும் வெளிப்படுத்துள்ளார் .

பாடல் 11.

நாடகத்தால் உன்னடியார்

போல்நடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே

இடயறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத்

தந்தருள்எம் உடையானே.

கருத்துரை :-  இதன் முன்னைப் பதிகத்தின் இறுதித் திருப்பாட்டில் ஆண்டவன் பெருமைக்குத் தகாத நிலையில் தம்மை ஆட்கொண்டமை குறித்து வியந்து கூரிய அடிகள், யான் மெய்யன்பின்றி அன்புடையவனைப் போல நடித்து, உண்மையான வீட்டின்பத்தை அடைய முந்துகின்றேன் ;  அதற்குக் காரணம் என்பால் தகுதியின்மை கண்டும் என்னை ஆட்கொண்டமையே, ஆதலின் போலி அன்பை மெய்யன்பாக்கித் தந்தருளல் வேண்டுமென்று இப் பதிகத்தின் தொடக்கத் திருப்பாட்டில் வேண்டுகின்றார் .

பதவுரை :-   ஆடகச்சீர் மணிக்குன்றே  = பொன்நிலத்தில் சிறந்து திகழும் மாணிக்க மலையே,

எம் உடையானே  =  எம்மை அடிமையாகவுடைய பெருமானே,

நாடகத்தால் உன் அடியார் போல் நான் நடித்து  =

கூத்தில் நின் அடியவர் உருக்கொண்டு நடிப்பவரைப் போல யான் இவ்வுலகத்தில் நடித்து,

நடுவே வீடு அகத்துப் புகுந்திடுவான்  =  இடையே வீட்டுநிலையிற் புகுதற்கு

மிகப் பெரிதும் விரைகின்றேன்  = அளவின் மிக்க விரைவுடன் முந்துகின்றேன் ,

உனக்கு இடையறா அன்பு  = நின்னிடத்தில் இடையறவில்லாமல் நிகழும் மெய்யன்பு ,

என் அகத்து ஊடு நின்று உருக  =   என் உள்ளத்தின் நடுவே நிலைபெற்று அவ்வுள்ளம் உருகும்படி ,

தந்தருள்  = அடியேனுக்கு உதவியருள்வாயாக  என்பதாம்

விளக்கவுரை :-   ஆடகச்சீர் மணிக்குன்று. இல்பொருள் உவமை. இறைவன் ஐம்பெரும் பூதங்களும் தத்தம் நிலையழிந்து சலிக்கும் பேரூழிக்காலத்தும் , அதனால் சலிப்பறியாத்  தன்மையன் ஆதலான், அப் பெருமானை மலைபோல் வான் எனக் கூறுதன் மரபு. அத் தன்மையோடு செம்மை சான்ற பேரொளிப் பிழம்பாகவும் உள்ளான் என்பது தோன்ற , “மணிக்குன்றே” என்றார்.  “மாசற்ற மணிகுன்றே” என்பர்  பின்னும் , மணி  –  மாணிக்கம் . “கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமாகடலை , மற்றவர் அறியா மாணிக்க மலையை” என்பர் திருவிசைப்பா ஆசிரியர் . கற்றவர் விழுங்குதற்குரிய சிற்றுருவமுள்ள, கற்பகப் பொற்கனியாக விளங்கும் பெருமான் கருணைக்கடலாதலின், கல்லாதவர் மாட்டுப் பேரருளுடையனாய்  மாணிக்க மலையாகவும் உள்ளானென்றும் , அந்நிலையிலும் அவர் அறிந்திலரென்று கூறிய நயம் ஈண்டு நினைக்கத்தக்கது . பொன்னிலம் ஆதாரமாக இருத்தல் , மணிக்குன்றின் ஒளி சிறந்து விளங்குதற்கு ஏதுவாகலான் , “ஆடகச்  சீர்  மணிக்குன்றே”  என்றார் மெய்யுணர்வுடையார் உள்ளக்கமலம் பொன்னிறமாகவும் , அதன்கட் பேரொளிப் பிழம்பாக விளங்கும் இறைவன் நிலை மாணிக்க மலையாகவும்  கருதியது  உட்கோளென்க . தூய வுணர்வுடையார்  உள்ளத்து விளங்கும் அளக்கலாகா அளவும் பெருமையும் உடைய  அப் பெருமான் கருணையால் என்னை போன்ற சிறியோரையும் ஆட்கொள்ளும் இயல்பினன் என்பது தோன்ற , “எம் உடையானே” என்று அருளினார்

         சிவனடியார் வேடம் பூண்டு , கூத்தில் அபிநயிக்கின்றவனைப்

போல்  உண்மையன்பின்றி , வேடமாத்திரம் உடையேன் என்பார்,  “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து” என்றார் . “நாடகத்தின்கண்” என ஏழாவதில் மூன்றாவது மயங்கிற்று . “நான் தனக்கன்பின்மை நானுந் தானுமறிவோம்” என்று அடிகள் பிறாண்டுக் கூறியதும் காண்க. அன்புருவமாகிய அடிகள் இங்ஙனம் கூறியது, உலகியலைத் தம்மாட்டு ஏறிட்டெனக் கொள்க. பல இடங்களிலும் இங்ஙனம் கூறுதற்கும் இதுவே கருத்தென்க. நாடகத்தில் இந்திரனாக நடிக்கும் ஒருவன், நடிக்கின்ற தன் திறமைக்குரிய பயனை விரும்புவானேயன்றி , இந்திரனுக்குரிய போகங்களை விரும்புதலில்லை ; விரும்பினாலும் அப்பயனை எய்தான் .இஃது உல்கியலிற் கண்டது.  ஈண்டு அடிகள் இவ்வுலகியலை உட்கொண்டு ,ஆண்டவனே , யான் மெய்யன்புடைய சிவனடியார் உருக்கொண்டு உலகை வஞ்சிக்க நடிக்கின்றேன் ; அந் நடிப்புத்திறமைக்கு மக்களிடத்தினின்றும் பெறத்தக்க பயனை விரும்பாமல் , மெய்யன்பர் பெறத்தக்க வீட்டின்பத்தில் தலைப்பட முற்படுகின்றேன் என்பார், “வீடகத்தே புகுந்திடுவான் ……. விரைகின்றேன்” என்றார். வேடம் பூண்டு நடிப்பவனும் , நடித்தல் தொழில் முற்றுப் பெற்றபின், பயனைப்பெற விரும்புதல் முறை  . அங்ஙனமின்றி , யான் மேற்கொண்ட நடிப்பும் முற்றுப்பெறாமல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடையிலே, அதனாற் பெற இயலாத வீட்டு நிலையைப் பெற விழைகின்றேன் என்பார் , “நடுவே” என்றார். இனி, “வீடகத்து நடு” எனக்கொண்டு ஒரு வீட்டினுள்  ஒதுக்கிடமும் பெறுதற்கு உரிமையில்லாத ஒருவன் அதன் நடு இடத்தில் இருக்க விழைதல் போல, உரிமை படைத்த எல்லா வுயிர்களும் வேற்றுமை இன்றிக் கலந்து இன்புருதற்குரிய முத்திநிலையிலும், சிறிதும் தகுதியில்லாத நான் அறியாமையாற் சிறப்பிடம் பெற விரும்புகின்றேன் எனக் கோடலுமாம் .

     சாதனங்களை  முறையே மேற்கொண்டாற்கு, இறை யருளால் வீட்டுநிலை தானே எய்தும் இயல்பினதாகவும், யான் பொய்மையாக நடித்து, அதனை வலிந்து பெற முயல்கின்றேன் என்பார், “புகுந்திடுவான்” எனவும் , சிறந்ததொரு பயனைப் பெறுதற்குத் தகுதியில்லாததோடு, எதிர்மறையாகவுமுள்ள நடிப்பை மேற்கொண்டமையால், காலந்தாழ்ப்பின், அந்நடிப்பின் பொய்மை வெளிப்பட்டு விடும் என்னும் கருத்தால், “விரைகின்றேன்” எனவும், அவ்விரைவும் அளவிகந்த நிலையில் உளதென்பது தோன்ற,  “மிகப் பெரிதும்” எனவும் கூறினார்.

       அடிகள் கடைப்பிடித்தொழுகிய நெறி, அன்பு நெறியாதலின் , அழிவில் இன்பப் பேற்றிற்கு வாயிலாகவுள்ள அம்மெய்யன்பையே யாண்டும் இறைவன்பால் வேண்டுவார் , உரிய சாதனத்தை மேற்கோடலே நம் கடமை; அதற்குப் பயன் செய்தல் ஆண்டவன் திருவுள்ளத்தைப் பொறுத்தது என்னும் உண்மையைக் கடைப்பிடித்து , ஈண்டும் அம்மெய்யன்பையே வேண்டினர். அதுவும் இடையறவு படாமலும், எக்காரணத்தாலும் பிறிதொன்றைப் பற்றாமல் நின்னையே குறிக்கொண்டும், சலிப்பின்றி நிலை பெற்று நிகழ வேண்டும்  என்பார், “இடையறா அன்புனக் கென்னூடகத்தே நின்று” என்றார். உன்கண் என ஏழாவதில் உனக்கு என நான்காவது மயங்கிற்று. அவ்வன்பினால் பெறத்தக்க முடிந்த பயன் வீட்டின்பம் ஆயினும் , அடிகள், “கூடுமன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறல்” உடையராதலின், அவ்வின்பத்தை வேண்டாது, கல்லினும் வலிய நெஞ்சம் உருகுதற்கு வேண்டுமென்பார், “நின்றுருகத் தந்தருள்” என்றார் . ஒரு சாதனத்தால் பிறிதொரு சாதனத்தையே பெறவிளைதல் அடிமைத்திறத்தின் இயல்பாகும், ஆதலின் உள்ளம் உருகுதலையே அன்பின் பயனாகப் புலப்படுத்தார். “அன்பு நின்றுருக” என்புழி, உருகுதல் நெஞ்சத்தின் செயலாயினும் , உள்ளமும் அன்பும், முறையே இடமும் இடத்து நிகழ்பொருளுமாகிய ஒற்றுமை உடைமையால் அன்பின் செயலாகக் கூறப்பட்டது. “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” என்பதற்குச் சேனாவரையர் கொள்கைப்படி, செய்தென்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் வினை முதல் வினைகொள்ளாது,, பிறிதின் வினை கொண்டதெனினுமாம். அன்றி, நிற்ப என்பது நின்றெனத் திரிந்து நின்ற தெனினும் அமையும்.

      இனிப் பொய் வேடத்தால் நடிப்போரை மெய்யன்பர் உணர்ந்து, இறையருளை வேண்டிப் பொய்மை மெய்மையாக வேண்டுமென நினைவாராயின், அன்னார் நினைவாற்றல் அங்ஙனமே செய்விக்கும் என்பது முன்னை வரலாறுகளிற் காணப்படுவதொன்று. மாசு நீங்கிய தூய உள்ளமுடைய பெரியார் பாவனை, போலியை மெய்மையாக்கும் என்னும் உண்மை, அறிவியல் நூல்களிலும் தெளிவுறுத்தப் படுவதாகும். பிரமோத்தர காண்டத்தில், சீமந்தனி என்னும் சைவ செல்வியார் பாவனையால், மணமக்களாகப் போலி வேடம் பூண்டு சென்ற உடன் பிறந்த ஆண்மக்கள் இருவரும் உண்மையான மணமக்களானதும், வீர சைவ அடியார் குழுவில் சேர்ந்துண்ணும் நிமித்தம், கள்ள வேடம் புனைந்து சென்ற கள்வரெல்லாம் வசவண்ணர் நினைவு வலிமையால் களங்கமறும் உள்ளமோடு மெய்யடியாராகியதும் இதற்குச் சான்றாவனவாம். இம் முறையில் அடிகள், நாடகத்தால் சிவனடியார் போல நடித்தமையை மெய்யன்பர் கண்டு, அவர் நினைவாற்றலால் அந் நடிப்பை மெய்மையாக்கவும் கூடுமே; அங்ஙனம் மெய்மையாக்குதற்குரிய மெய்யன்பர் நினைவாற்றல் தம் மாட்டுப் பதிந்து பயன் விளைக்கும் அளவும் பெறாது, இடைக்காலத்தே வீட்டு  நிலைபெறுதற்கு விளைகின்றேன்  என்பார் , “நான்  நடுவே  வீடகத்தே புகுந்திடுவான்  விரைகின்றேன் “ என்றார் எனினுமாம் . ஈண்டு  “நடு” என்பது  காலத்தையும்  முற்கூறிய கருத்திற்கு , “நடு”என்பது இடத்தையும் குறிக்கும். 

       “ஆடகச்சீர் மணிக்குன்றே”  என்பதற்குப் பொன்னோடியைந்த அழகிய  மாணிக்க  மலையே என்று  கோடலுமாம் . இனி, மணியை நீலமணி எனக் கொண்டு, நீலமணியை ஒரு  பாலுடைய  ஆடகக்  குன்று  போல்வாய்  என  விரித்து, உமையொரு கூறனே என்று கோடலுமாம் . ஈண்டு  இறைவனை  அம்மையப்பனாக விளித்தது  மெய்யன்பு அருளுதற்குரிய  கருணையாளன்  என்பதைப்  புலப்படுத்தற்கு  என்க.

        இதன்கண், மெய்யன்புப்  பேற்றிற்கு  உறுதுணையாக  நிற்க வேண்டிய  மனம், அங்ஙனம் நில்லாமையோடு, பொய்மையாக நடிப்பதற்கும்  தூண்டுதல்  குறித்து  வருந்து முகமாக இறைவனை  முன்னிலைப்படுத்து , அந் நெஞ்சிற்குக்  குறிப்பால் அறிவுறுத்தமை  புலனாதலின் , அறிவுறுத்தல் என்னும்  பதிகம்  நுதலிய பொருளும் ,”இடையறா  அன்புனக்கென்  னூடகத்தே  நின்ருகத்  தந்தருள்” என்னும் தொடரால்  பத்தி  பெறப்படுதலின்  ,பத்தி , விசித்திரம் என்னும் சதகம்  நுதலிய  பொருளும் தோன்றியவாறறிக .

                             **********************************

திருவாசகம்  — நீத்தல் விண்ணப்பம்

கணபதி துணை

திருச்சிற்றம்பலம்

மாணிக்க  வாசக  சுவாமிகள்

அருளிச்  செய்த

திருவாசகம்  —  நீத்தல்  விண்ணப்பம்

மகிபாலன்பட்டி

மகாமகோபாத்தியாய , முதுபெரும்  புலவர்

பண்டிதமணி

மு கதிரேசச்  செட்டியார்

இயற்றிய

கதிர் மணி  விளக்கம்

என்னும் பேருரை

கணபதி துணை

பதிப்புரை

 அன்பு  நெறிச்சென்  றருளில்  திளைத்தரிய

                 இன்பமய  மாய்த்திகழும்  எம்மிறைவன் –  என்புருகீ

ஞானப்  பொருளா நவின்றமணி  வாசகமே

ஈனமிலா  வாழ்வுதரும்  ஈங்கு.

         மிழ்  மொழியும்  சைவ சமயமும்  தழைத்தினிதோங்கத்  தமிழகத்தில்  தோன்றியருளிய  சமயகுரவர் நால்வருள்  ஒருவரும் , எல்லாம்வல்ல  ஆண்டவ னை அன்பு நெறி  நின்று வழிப்பட்டுச்  சிவானந்தமாகிய  இன்பக்கடலில்  திளைத்துத் தம் அரிய சிவாநுபவ உண்மைகளையெல்லாம்  இனிய  ஞானப் பனுவல்களால் மக்கள்  உய்தற்பொருட்டு  வெளியிட்டருளியவர்களும்  ஆகிய திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகம் என்னும் தெய்வத் தமிழ்  மறயின்  பெருமை  இவ்வுலகம்   அறிந்ததொன்று .  சொல்லினிமை  பொருளினிமைகளிற்   சிறந்து இனிய இசை நலத்திற்கு இயைந்து விளங்குவ தும் , “நவில் தொறும் நூல் நயம்  போலும் “ என்ற பொருளுரைக்கு ஏற்பக்  கற்பவர்  ஊற்றி உணர உணரப் புதிய புதிய நுண்பொருள்களைப்  புலப்ப டுப்பதும்  ஆகிய   திருவாசகத் திருப்பாடல்களுக்கு உரைகண்டார்  பலராவர் . அவ்வுரைகளைக்கொண்டு  நூலின் உண்மைப்பொருளைப்பெரும்பாலும் உள்ளவாறு அறிதற்கியலாமையால் , “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் “ என்று அடிகள் ஆணையிட்டருளியபடி ,அவனருளே  கண்ணா கக் கொண்டும் ,அடிகள் திருவுருவத்தை இடையறாது நினைவு  கூர்ந்தும் கூடியவரை பொருள் கான முயன்றேன் . அம் முயற்சி திருவருளால் ஓரளவிற் பயனுடையதாயிற்று .

            இதற்குமுன்  திருச்சதகத்திற்கு ஒரு பேருரை எழுதி வெளியிட்டேன் . அவ்வுரையை ஊன்றிப் படித்துணார்ந்த அன்பர்கள் பலர் மதிப்புரை உதவி என்னை மேன்மேலும் தொடர்ந்து உரை யெழுதி வரும்படி  வற்புறுத்தினர் . சிவநேச செல்வர்களாகிய அன்பர்கள் தம் ஆணை கடத்தற்கரியதாகலின் , அன்னார் பணித்த படி, அடுத்த  நீத்தல் விண்ணப்பத்திற்கு  முன்னர்  மேற்கொண்ட முறைப்படியே  கதிர்மணி விளக்கம்  என்னும் பேருரை யெழுதி முடித்தேன் .

             உரை யெழுதிவருவதை அறிந்த அன்பருள்  தேவகோட்டை  சிவநேசச் செல்வர் , திருவாளர் பிச . அரு . அரு . அருணாசலஞ் செட்டியாரவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டித் திருவாசக வுரை வெளியீட்டிற்கு வேண்டிய உதவியைத் தாமும் செய்து வருவதாக ஆதரவு மொழி கூறி  அப்பொழுது உடனிருந்து எழுதுவார்க்கு வேண்டும் பொருளுதவியும் ஓரளவு செய்தார்கள் . திரு . அருணாசலம் செட்டியாரவர்கள் தேவகோட்டையில் தனவணிக மரபில்  செல்வப் பெருங்குடியில்  தோன்றியவர்கள் ; இளம் பருவத்திலேயே தமிழ் நூல் சைவ நூல்களிற் பயிற்சியுடையவர்கள் ; சிவவழிபாட்டில் பேரார்வமும் அடக்கமும் யாவர் மாட்டும் அன்பும்  நல்லொழுக்கமும் வாய்க்கப் பெற்றவர்கள் ; காய்தல் உவத்தல் அகற்றி ஒன்றை நடு நின்று  ஆராய்தலும் , அங்ஙனம் ஆராய்ந்து கண்ட முடிபை எத்துணை இடையூறு  நேரினும் அஞ்சாது முடிக்கும் திண்மையும் உடையவர்கள் ; கற்றவரிடத்து மதிப்பும்  சிவதருமத்திற் பற்றும் உடையவர்கள் ; நாற்பது ஆண்டுகளாக அவர்கள் தம் அரிய நட்பு எனக்குண்டு . அந் நட்புத் தொடங்கிய காலந்தொட்டு நாணாலும் வளர்ந்து வருகின்றதேயன்றி  எக்காரணத்தாலும் சிறிதும் இடையறவு பட்டதில்லை .

           இத்துணை நற்குண நற்செயல்கள்  இவர்கள்பால்  அமைந்திருப்பதற்கு  முக்கியமான  ஒரு காரணமும் உண்டு . அது கோவிலூர் துறவு சுவாமிகள் என்னும் அருணாசல ஞானதேசிக சுவாமிகளது வழித் தோன்றலாக அமைந்த தேயாகும் . துறவு சுவாமிகள்  இவர்கள் தந்தையாரின்  பிதாமகராவர் . கோவிலூர் வேதாந்த மடத்தில் இரண்டாந் தலைவராக எழுந்தருளி வேதாந்த ஞானம் கைவரப்  பெற்றவர்கள் ; மகா வித்துவான்  மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்கள்  கோவிலூர்ப் புராணத்தில் துதியாகப்பாடிய  செய்யுளால்  இப் பெரியவர் பெருமை  புலனாகும் . இத்தகைய சிறந்த குடிப்பிறந்த என் நண்பர் திரு . அருணாசலஞ் செட்டியாரவர்கள் நீத்த்ல் விண்ணப்பவுரை வெளிவருதற்கு வேண்டிய  பொருளுதவி செய்து ஆதரித்தார்கள் . இவ்வு தவியை  என்றும்  நினைவு கூர்தலோடு , அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து சிவதருமங்களைச் செய்யவும் , புகழொளி  மேன்மேலும் ஓங்கவும் , வாழையடி வாழையெனக் குலம் விளங்கவும் இறையருளை வேண்டுகின் றேன் .

                இதற்கு உரைச்சிறப்புப் பாயிரம்  அன்புடன் உதவிய  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துச் சொற்பொழிவாளர்  வித்துவான் ,திரு மு அருணாசலப் பிள்ளையவர்கட்கும் , முகவுரை வரைந்தனுப்பிய  கோயம்புத்தூர்  தமிழ்ப் புரவலர்  Dr . Sir . r.k. சண்முகஞ்  செட்டியாரவர்களும்  அணிந்துரை  எழுதி உதவிய  திருவாளர்  தெ பொ மீனாட்சி சுந்தரனார் , M A ., BL ., M.OL .  அவர்களுக்கும் என் உளமார்ந்த  நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

                இவ்வுரை யெழுதிவருங்கால்  என்னுடனிருந்து திருத்தமாகப்  படி யெழுதி  அன்புடன் உதவி செய்தவர்  மகிபாலன்பட்டி  மங்கள விநாயகர்  வித்தியாசாலைத் தலைமை யாசிரியர் , திரு. S . சீனிவாச ஐயங்காரவர்க ளாவர் . அச்சுப்பிழை நேராமல் அவ்வப்போது  திருத்தி உதவியவர்  காரைக்குடி   அழகப்பா கல்லூரித் தமிழ்த் தலைமைச் சொற்பொழிவாளர் , திரு. வ. சுப. மாணிக்கம்  M O L  ஆவர் . இவர்களுக்கும் என் நன்றியறிவைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன் .

                  இந் நீத்தல் விண்ணப்ப உரையைத் திருத்தமாக  அச்சிட்டு உதவிய காரைக்குடி செளத் இந்தியா அச்சகத் தலைவர் , திரு. சு வீர வீரப்ப செட்டியா ரவர்கள்  நன்றி  பாராட்டத்தக்கது.

                   சிற்றறிவுடையேனாகிய   என்னைச் சிறந்த இப் பணியில் ஈடுபடச் செய்து நிறைவேற்றியருளிய  திருவருளையும் , திருப்பாட்டுக்களின்  சொற்பொருளுணர்ச்சியில்  முட்டுப்பாடு நேர்ந்துழி  எல்லாம் சிறியேன் நினைவில் புலப்படுத்து அருளிய  சிவாநுபூதிச் செல்வராகிய  மாணிக்க வாசக  அடிகளின் அருட்பெருக்கையும் நினைந்து நினைந்து இன்புறுகின்றேன் .                                       

மகிபாலன்பட்டி                                                                   மு .  கதிரேசன்

1  –  7  –  1950                                                                                   

முகவுரை

கோயம்புத்தூர் , Dr . Sir . R  K  சண்முகம் செட்டியார்

எழுதியது

நூலாசிரியர்  மாணிக்கவாசக  சுவாமிகள் ; உரையாசிரியர்  பண்டிதமணி  கதிரேசன் செட்டியார் ; இப் பெருமை வாய்ந்த ஒரு பதிப்பிற்கு முகவுரை யெழுதுவது பொறுப்பும் பெருமையும் கொண்ட கடமையாகும் . இக்கடமையை  மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன் .

             திருவாசகத்தின் ஒரு பிரிவான திருச்சதகத்திற்கு , பண்டிதமணி  1947 ஆம்  ஆண்டில் ஒரு அருமையான உரையைத் தமிழகத்திற்குத் தந்தார் . இப்போது திருச்சதகத்திற்கு அடுத்த பிரிவான  நீத்தல் விண்ணப்பத்திற்கு  உரை தந்திருக்கிறார் .  

               திருச்சதகமும் , நீத்தல் விண்ணப்பமும்  மணிவாசகத்தில்  தனிப் பெருமை வாய்ந்த  இரண்டு மணிகள். ஒன்று ,இறைவன் தன்னை ஆட் கொண்டபின் மாணிக்கவாசக சுவாமிகள்  ஆனந்தக் களிப்புடன்  பாடிய  பாட்டுக்களையுடையது . மற்றொன்று இறைவன் கட்டளைப்படி  மண்ணுலக வாழ்க்கையின்  பாசத்தால் இன்னும் சில நாள்  கட்டுப்பட்டிருக்க வேண்டுமே  என்று  சுவாமிகள் முறையிடும் பாட்டுக்களையுடையது .

               மாணிக்கவாசகர்  தமிழ் நாட்டில் சைவத்தையும் , தமிழையும்  வளரச் செய்யும் சிறந்த தொண்டராய்  விளங்க வேண்டுமென்பது இறைவன் அருளால் பிறந்த ஆணை . இந்த ஆணை  நிறைவேறுவதற்குப் பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராயிருந்த  மாணிக்கவாசகர்  உபதேசம் பெறவேண்டுமல்லவா?  

              சிவபெருமானே  ஞானகுருவாய் , 999 மாணவர்களுடன் திருப்பெருந்துரையில் ஒரு சோலையில் வந்து தங்கினார் . குதிரைகள் வாங்கும் பொருட்டு அவ்வூருக்கு வந்த மாணிக்கவாசகர் , குருந்த மரத்தின் நிழலில் வீற்றிருந்த  ஞானகுருவைக் கண்டார் . குருவுக்கு அடிமையானார் , ஞானோபதேசம் பெற்றார் . குதிரைகள்  வாங்க வந்த வேலையை மாணிக்கவாசகர் மறந்ததும் ,குதிரைகள் நரிகளாய் மாறியதும் , சிவபெருமான்  கூலிக்கு மண் சுமந்ததும் , பாண்டிய மன்னன் தன் அமைச்ச ருடைய  தெய்வத் தன்மையை  அறிந்ததும்  , இறுதியாக மாணிக்கவாசகர்  உலக வாழ்க்கையை விட்டுப் பெருந்துறைக்குத் திரும்பியதும்  ஆகிய  இச்செய்திகளை யெல்லாம்  வாதவூரார் புராணத்தில் காணலாம் .

              சில நட்கள் கழிந்த பின்னர் ஞானாசிரியரான சிவபெருமான்  பெருந்துறையிலிருந்து  தன்னிருப்பிடமான  கைலாசத்திற்குத் திரும்பினர். திரும்புமுன்  999 மாணவர்களும்  இன்னும் சில நாட்களுக்கு  மானிக்கவாசகருடன்  தங்கியிருந்து , அவ்விடமிருந்த பொய்கையில் நெருப்புத் தோன்றுஞ் சமயத்தில் அவர்கள் அந் நெருப்பில் புகுந்து  மறைய  வேண்டுமென்றும்  கட்டளை யிட்டார் .  

               தன்னையும் அதே சமயத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சுவாமிகள் வேண்ட , சிவபெருமான் , “நீ இன்னும் மண்ணுலகத்தில்  சில காலம் தங்கியிருந்து  தொண்டு  செய்து  ,சைவத்தையும்  தமிழையும்  மக்களிடம்  பரப்பிய பின்னரே  என் திருவடியைச் சேர்வாய் “ என்று  ஆணை  இட்டனர் . இந்த ஆணை இறைவன் உலக மக்களுக்கெல்லாம்  இட்ட ஆணையென்று நாம் அறிய வேண்டும் . இறைவன் அருளைப்பெற்று  அற நெறியை அறிந்த ஒவ்வொருவனும் உலக மக்களுக்குத் தொண்டு செய்யக்  கடமைப்பட்டிருக்கின்றான் . தன்னுடைய ஆன்ம லாபத்தை மட்டும் கருதி , உலகத்தை வெறுத்துத் தனியே இருப்பது மேம்பட்ட வாழ்க்கை அன்று .  மக்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனை வழிபடும் சிறந்த மார்க்கம் . வள்ளுவர் அருளிய திருக்குறளின் அடிப்படையான உண்மையும் இதுதான் . “அறத்தாற்றின் இல்வாழ்க்கை  யாற்றின் புறத்தாற்றில் , போ ஓய்ப் பெறுவது எவன் “ என்பது பொய்யில் புலவவர் பொருளுரை.

               சிவபெருமானின் கட்டளைப்படி 999 மாணவர்களும் மறைந்தனர் .அச்சமயம் மாணிக்கவாசகருக்கு மனம் தளர்ந்தது . மண்ணுலகப்பற்றினால்  ஏற்படும் அபாயங்களை நினைந்து மனங்கலங்கினார் . நான்  இறைவன் அருளைப் பெற்றவனாயிருந்த போதிலும் , ஆசையின் சோதனைக்கு  ஆளாய் விடுவேன் ; அதனால் , ஆண்டவன் என்னைக் கைவிட்டு விடுவானோ?  என்று அஞ்சினர் . அந்த அச்சத்தால் சுவாமிகள் முறையிடும் பாட்டுகள் தான்  நீத்தல் விண்ணப்பம் என்னும் 50 திருப்பாட்டுகள் .

                 திருச்சதகத்தில்  பேரின்பத்தின் பெருமையைச் சொல்லி மகிழ்ந்தார்  நீத்தல் விண்ணப்பத்தில்  அப்பேரின்பத்தைப் பெறுவதற்குத் தடையாயுள்ள  உடல்  நீங்கவில்லையே  என்று நினைந்து , சிற்றின்பத்தினால் விளையும் தீங்குகளை  எடுத்துக்காட்டி , இச் சோதனைகளுக்கு இடையில் இறைவன் தன்னைக் கைவிடாமல்  ஆதரிக்க வேண்டுமென்று  புலம்புகின்றார்.

                  இந்த அருமையான நூலில் உள்ள ஆழந்த கருத்துகளைச் சாமான் யத்  தமிழன்  ஒரு துணை இல்லாமல் தெரிந்துகொள்ளுவது  கடினம் . பண்டிதமணி அவர்கள் அத்துணைவராய்த்  தோன்றி  இருக்கிறார்.  ஆயிரக்கணக்கான   தமிழ் மக்கள் திருவாசகத்தை ஓதுகின்றார்கள் . ஆனால் எத்தனை பேர் அதன் பொருளை அறிந்து அனுபவிக்கின்றார்கள் ?  பொருள் விளங்காத பாடல் இருள் மூடியேகிடக்கும் என்பது நம் முன்னோரின் கொள்கை . இந்தக் கருத்தை  அப்பர் சுவாமிகளும் ,

“சொற்பாவும் பொருள்தெரிந்து  தூய்மை நோக்கித் ,

தூங்காதார்  மனத்திருளை  வாங்காதானை “

என்று பாடி இருக்கின்றார் . இறைவன்பெருமையைப் பொருள்  தெரிந்து பாடவும் , கேட்கவும் வல்லவர்கள் தான்  பேரின்பத்தை அடைவார்கள்  என்னும் கருத்தை  வாதவூரடிகளும் , “சொல்லற்கரியானைச்  சொல்லித் திருவடிக்கீழ்ச்  சொல்லிய பாட்டின்  பொருளுணர்ந்து சொல்லுவார்  செல்வர்  சிவபுரத்தினுள்ளார்  சிவனடிக்கீழ்ப்  பல்லோரும் மேத்தப்பணிந்து “ என்பர் .  

                  நீத்தல் விண்ணப்பத்தின் பொருளை நன்றாய் அறிந்து  எல்லோரும் பேரின்பம் அடையவேண்டுமென்று , பண்டிதமணி அழகான இந்த உரையை நமக்குத் தந்துள்ளார் . உரை எளிய நடையில்  எழுதப்பட்டிருக்கின்றது. . சொல்லின் பொருளையும் , சொல் நயத்தையும்  விளக்கிக்காட்டியிருக் கின் றார் . கருத்துரை  பாட்டைத் தெளிவு படுத்துகின்றது ; பதவுரை  சொல்லின் பொருளை எடுத்துக் காட்டுகின்றது ; விளக்கவுரை  சொல்லின் நயத்தையும் , பொருளின் நுட்பத்தையும் விளக்கிக் காட்டுகின்றது . 

                   இதுதான்  உரையாசிரியர்கள் கையாள வேண்டிய சரியான முறை . இம்முறையில் தமிழ் இலக்கிய நூல்களுக்கெல்லாம் உரைகள் வெளிவந்தால்  தமிழ் மறுமலச்சியின் பயனைத் தமிழ் மக்கள் அடையலாம் . ஒரு மொழியின் பண்டைய இலக்கியங்கள் அம் மொழிக்கு உயிர் . தமிழ் இலக்கியங்களை நாம் மறந்தால் , உயிரை மறந்ததற்குச் சமானமாகும் .

                    தமிழ் இலக்கியங்களில்  தலை சிறந்த திருவாசகத்தைத் தமிழ் மக்கள்  பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம்  நமக்கு உதவிய  பண்டிதமணி  கதிரேசன் செட்டியார்  அவர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம் .

கோயம்புத்தூர்

15 – 06 – 1950 .

அணிந்துரை

திருவாளர்  தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் .M.A., BL ., M.OL.

அவர்கள் எழுதியது .

திருவாசகம்  ஒரு  தித்திக்கும்  தேன் விருந்து. பாட்டுலகில்  எழுந்த விந்தைகளில்  எல்லாம் சிறந்த  விந்தை  இதுவே  ஆம்  . பாட்டு என்றால் எண்ண  அனுபவத்தில்  ஆழ்ந்த  ஒருவன்  அந்த  அனுபவத்தின்  உண்மை  நிலையில்  பிறரையும்  ஆழ்த்தி  இன்புறுத்தும்  மந்திர  வித்தையே  பாட்டாம். மாம்பழ  அனுபவத்திலோ  மண்ணாங்கட்டி  அனுபவத்திலோ நம்மை அழுத்தி விடுவது   எளிதாகலாம் . அங்கும்  பாவலன்  மாம்பழத்திற்கும்  மண்ணாங் கட்டிக்கும்  உள்ளீடாகக்  குறைவிலா  நிறைவாம்  பேரின்பப்  பொது  நிலையில்  நம்மை  ஆழ்த்தி  விடுகின்றான்  என்பது  உண்மையே.  ஆனால் ,  “இருள் கடிந்து  எழுகின்ற  ஞாயிறே  போன்று  நின்ற  நின்  தன்மை  நினைப்பற  நினைந்தேன்   நீயலாற்  பிறிது  மற்றின்மை “  என்று  பொங்கி  வரும்   கடவுட்  காட்சி   அனுபவமோ  மாற்றம்  மனம்  கடந்த  அனுபவமாம் . அந்த அனுபவத்தில்  நம்மை  ஆழ்த்துவது  செயற்கரிய  செய்யும்  பெரியார்  செயலாம்.  கடவுளாம்  இன்பப்  பெரு வெள்ளம்  தமிழில்  போல்  வேறு  எம்  மொழியிலும்  பொங்கி  வழியக்  காணோம் . இத்  தமிழ்ப்  பெரு  வெள்ளத்திலும்  ஆனந்த  மலையாய்க்  காட்சி  யளிப்பது  திருவாசகமே ஆம்.  கடவுள்  நம்பிக்கை  இல்லாதவரும்  இந்த  நூலை  ஓதும்போது  தம்மை  மறந்து  ஓரிமைப் போதேனும்  சமாதிகூடும்  தனிப்பெரும்  காட்சியை  இன்றும்  காணலாம் . புன் புலால் யாக்கை  புரை  புரை  கனிய  என்பெலாம்  உருக்கும்  அனுபவமே  மணிவாசகனார்  பெற்ற  அனுபவம் .  தமிழ்  என்ற  மணமே  வீசாத  ஆங்கில  நாட்டில்  தமிழரை  அஞ்ஞானிகள்  என்று  எண்ணி  வந்த  பெரியார்  போப்பையர்   இந்த  நூலை  ஓதவந்ததும்  என்பெலாம்  உருக்கும்  அனுபவத்தினைத்  தாமும்  பெற்றது   வியப்பன்றோ?  எலும்பை யும்  கசி வித்துருக்கும்   நூல்  எனத்  திருவாசகத்தினை  அப் பெரியார்  புகழ்ந்தார்  .  உலகம்  முழுதும்  இதனை  ஓதி  உய்யவேண்டும்  என  மொழி பெயர்த் தருளினார்.   தம்மை  இது  காரணமாகத்  தமிழ்  மாணவன்  என  உலகம்  போற்ற  வேண்டும்  என  மிக  மிக  விரும்பினார் . இந்த  வரலாறு  ஒன்றே  திருவாசகத்தின்   பெருமைக்குச்  சிறந்த  சான்றாகும் .  

                    சீவன்முத்தரது   அனுபவத்தினை  மணிவாசகர்  போலப்  பாடிவைத்தவர்   மிகச்  சிலரே .  அத்தகைய  அருமை  நம்  தமிழில்  வெளிப்பட்டது , தமிழரது  பெரும்  பேறே  எனலாம் . சீவன்முத்தரது  நிலை  முதலில்  சொல்லொணாத  பெரு  விளக்கமாய்த்  தோன்றும் . பின்னர்ப்  பெருநிலையைப்  பிரிந்த  பேரிழவு  நரகினும்  கொடியதாய்ப்  பேரிருளாய்ச்  சூழ்ந்து வருத்தும்  , அடுத்துத்  தோன்றுவது  பேரின்பம் . முடிவாக  அனைத் தையும்  ஒன்றாகக்  கண்டு  பெரும்  பொருளோடு  ஒன்றுபட்டு  அமைந்து  விடுகின்ற  குறைவிலா  நிறைவனுபவம்  எழும் . இந்த நான்கு  வேறு  நிலைக ளில்  திருச்சதகமும்  நீத்தல்  விண்ணப்பமும்  இரண்டாம்  நிலையாகிய   பிரிவு  நிலைத் துன்பத்தின்  போக்குவீடாக  எழுந்தனவாம்  . துன்ப  உலகில்  வாழும்  நமக்குத்  துன்ப  இயல்  பாடலே  மிக  மிக   இனிக்கும் . பாலைத்திணைப்பாடல்கள்  அகநானூற்றில்   செம்பாதியாக  வருவது  . இதனாலே  அன்றோ? விப்பிரலம்பசிருங்காரம்  என்று  அதனைப்  போற்றுவார் .  

            திருச்சதகத்திற்குப்  பண்டிதமணியவர்கள்  உரை  எழுதியதனை  உலகம்  போற்றியுள்ளது  . தமிழ்  வளர்ச்சிக்  கழகத்தின் வழியே  துரைத்தனப்  பரிசினையும்   அவ்வுரை  பெற்றுள்ளது .  அப் பெரியாரே நீத்தல்  விண்ணப்பத்திற்கு    இது  போது  உரை  எழுதி  வெளியிடுகின்றார் . திருவாசகத்தில்  இலக்கியச்சுவை  ததும்பும்  பகுதி  ஒன்று  உண்டு  என்றால்  அது  நீத்தல்  விண்ணப்பமே  ஆம் . தமிழ்ச்  சுவையறிந்த  அறிஞர் இப்பகுதிக்கு  எழுதிய  உரை  மிக  மிக  இனிக்கவே  செய்கின்றது .

             திருவாசகத்திற்கு  உரை  எழுதலாகாது  என்ற  கொள்கை  வழங்கிய  நாள்  உண்டு .  சீவன்முத்தரது  அனுபவத்தினை  உரை கொண்டு  தெளிவு  படுத்த  முடியாது . இது  பற்றியே  அப்பழங்கொள்கை   எழுந்து  நடையா டியது  போலும்  . ஆனால்  சொற்களின்  பொருளையும்   நயத்தினையும்  எடுத்துரைப்பது  இயலாத  தொன்று  அன்று.   தவறும்  அன்று .  சொல்  நயம்  அறியாதாருக்கு  ஒரு  சிறந்த  வழிகாட்டியாம் .   நாலாயிரப் பிரபந்தத்திற்கு  இவ்வாறு  பெரியோர்  உரை  எழுதவில்லையா ? ஒவ்வொரு  சொல்லாகச்  சுவைத்து   அதில்  ஆழ்ந்து  பாட்டின்  அனுபவத்தில்  குதிதுத்  திளைக்க  வழி  காட்டிய  ஈட்டின்  ஆசிரியரைத்  தமிழுலகம்  மறக்கப்போமோ?  அத்தகைய  முறையில்  நம்  பண்டிதமணியவர்களும்   இன்று  திருவாசகத்திற்குக் கதிருரை  ஒன்று  எழுதி  வருவது   தமிழின் நல்லகாலமே  ஆம் .  திருவாசகத்தி னைப் பற்றி  அவர்  செய்த  சொற்பொழிவுகளையும்  “ இருதலைக்  கொள்ளி யினுள்  ளெறும்பொத்து”  என்பது  முதலிய  பகுதிகளுக்கு  அவர்  கூறிய  நயங்களையும்  கேட்டவர்கள்   “இவர்  உரை  ஒன்று  எழுதி  வெளியிட்டாரா  “  என்று  விரும்பிய  விருப்பம்  எல்லாம்  இன்று  நிறைவேறி  வருகிறது . இது  கண்டு  எந்தத்தமிழன்  மனந்தான்  மகிழாது?   

                  சீவன்முத்தரது  அனுபவம்  மாற்ற  மனங்கடந்தது  எனக்   கண்டோம் பண்டிதமணியவர்கள்   மணிவாசகர்   அனுபவம்  சைவசித்தாந்த  அனுபவம்   என விளக்குகின்றார். பிறர் பிறவகையாக விளக்குதல்  கூடும்;  விளக்குதலும்     வேண்டும்  . அதுவன்றோ   அதன்  பெருமை . அண்டப்பகுதியை  எல்லாம்  ஆண்டவனோடு  விழுங்கித்  தேக்  கெறிந்து  பாடும்  பாடல்  உலகக் கொள்கைகளை  எல்லாம்  விழுங்கிநிற்கும்  பாடல்  அன்றோ !  ஆதலின்  , அக் கொள்கைகள்  எல்லாம்  அங்குத்  தோன்றுவது  இயல்பே. 

                  சொற்களின்  நயங்களைப்   பண்டிதமணியவர்கள்  இன்பஞ்சுரக்க  எடுத்துக்காட்டும்   பகுதிகள்  நினைக்க  நினைக்க  இன்பப்  பெரு விருந்தாக  நம்மை  மகிழ்விக்கின்றன .  புராணக்  கதைகளைப்   புறக்கணிக்கும்  காலம்  இது .  ஆனால்  மணிவாசகர்  புராணக்கதகளையும்  திருவாசகத்தில்  ஓர்  இன்சுவைப்  பகுதியாக  வளாவியுள்ளார். இங்கும்  நயம் பல  காட்டுகின்றார்  நம்  உரையாசிரியர்  . “ தழ லரவு”  என்ற பகுதிக்கு  புராணத்தின்  வழியே  சொல் நயம்  காட்டும்  பகுதி  அவருடைய  அகன்ற  நூலறிவினைப்  புலப்படுத்தும் . இப்புராணக்  கதைகளுக்கு  உரையாசிரியர்   தத்துவார்த்தம்  கூறும்  இடங்களில்  அவருடைய  மெய்ந்நூலாராய்ச்சி   நன்கு  பலனா கின்றது . சங்கு , மந்தாரம், பிறை  என்பன  சிவஞானம்  , பராபத்தி , உயிர்  என்று  விளக்குவது  காண்க .  “வெண்டலை  முழையிற்  பதியுடைவாளரப்  பார்த்திறைபைத்துச்  சுருங்க”  “உன் கழல் கண்டும்  கலந்தருள  வெளி வந்திலேனை “  “ஆருளுடைச் சுடர் “  “பதமே”  “ அடியார்  பெயராத பெருமையனே “ முதலிய  பகுதிகட்கு  உரை  கூறுமிடங்களில்   உரையாசிரியரின்  பலவகைத்  திறமைகளைக்  காணலாம் . சச்சை  என்பது  சத்தா  என்பதே  என்றும்  , கடையவனே   என்பதற்கு  “கடைமைப்பட்டவனே”  என்றும்  பொருள்  கூறி  நிலை  நாட்டும்  முயற்சியினை   ஒப்புக்கொள்ளாத வர்களும்  ஆசிரியரின்  சொல்லாராய்ச்சித் தறனை  வியவாது  இரார்.  உலகினைச் சுவைத்த பண்டிதமணி  தம் அனுபவத்தின் வழியே  திருவாசகத்தின் இன்பத்தினை  விளக்கும்  பகுதிகளில்  “ஐம்புல இன்பமும்  தருவது மலர்”  என்பது போன்றவை  இன்புறத்தக்கனவாம் .

            இவற்றை  எல்லாம் ஓதும்போது   பிறபகுதிகளுக்கும்  உரை  விரைவில் வெளிவாராதோ  என்று  ஒரு  பெருங்குறை யில்  தோன்றும்  வருத்தமே  பொங்குகிறது .  கதிருரை முற்றுப்பெறும்  வண்ணம்  கதிரேசனார்  நீடூழி வாழ்க  என  நம்  மனம்  நம்மையும்  அறியாது  வாழ்த்தி  ஆண்டவனை வணங்குகிறது .

                                              ***********************************

அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்  தமிழ் விரிவுரையாளர்,

வித்துவான்  மு . அருணாசலம்  பிள்ளையவர்கள்   இயற்றிய

உரைச்  சிறப்புப்  பாயிரம் .

1 .     திருந்து பெருந்  துறைக்கண்வளர்  குருந்தடியில்  எழுந்தருளும்

                                           தேவ  தேவன்

        பரங்கருணைத்  தடங்கடலைப்  பருகியுளம்  நெக்குருகிப்

                                           பாரோ  ருய்யப்

         பொருந்துமணி  மொழிதொடுத்துப்  புகழ்வாத  வூரடிகள்

                                           புனைபா  மாலை

          அருந்தமிழின்  அமிழ்தெனலாம்  அதன்சுவைநற்   கதிர்மணிமா

                                           விளக்கம்  ஆமே.

2         அண்ணல்திரு  வாதவூர்  அடிகள்  தமை  ஆண்டவன்விட்

                                            டகன்ற  தற்பின்

           உண்ணெகிழ்ந்து  கண்கலங்கி  உலகுடலா  தியவெறுத்தே

                                             யுணர்ச்சி  மேலிட்

           டெண்ணரிய  இறைவ எனைக்  கைவிடலா  காதென்றென் 

                                              றரங்கி  நீத்தல்

            விண்ணப்பம்  செய்திருப்பாட்  டைம்பதும்பே  ருரைபெற்று

                                              மிளிர்வ  தாலோ

3          பூங்குன்ற  நன்னாட்டுத்  தலைநகராம்  மகிபால

                                               புரிக்கண்  வாழும்

            ஓங்குபெரும்  பேராசான்  உலகறிந்த  பண்டிதமா

                                               மணியென்  றோதும்

             பாங்குநிறை  கதிரேசத்  திருவாளன்  பகுத்துணர்ந்து

                                                பலர்பா  ராட்டத்

              தீங்கரும்புந்  தெவிட்டும்வண்ணம்  செய்த அப்பே  ருரைமாண்பு

                                                 செப்பற்  பாற்றோ

4.           எழுத்தெழுத்தா  ஆய்ந்தெழுதும்  சொற்பொருளும்  இலக்கணமும்

                                                   எடுத்துக்  காட்டும்

                முழுத்துணரும்  இறையுயிர்கட்   டெனுமூன்று  பொருளியல்பும்

                                                     முறையாக்  கற்றுப்

                பழுத்த இலக்  கியச்சுவையும்  பரந்தவுல  கியலறிவும்

                                                       பழுதொன்   றின்றி 

                அழுத்தமுடன்  கற்பவர்தம்  அகக்கண்ணிர்  கண்டுவகை

                                                        யடைவர்  நன்றே.

5 .            தகுதியறிந்  திருபொருளைப்  புணர்ந்திடுவன்  இறைவனெனச் 

                                                        சான்றோர்  சொல்வர்

                 முகமனன்றஃ  துண்மையெனல்  அறிந்தோமால்  மூதறிவாற்

                                                         சிவனே  யென்னப்

                 புகலடிகள்  அருள் நூலும்  கதிர்மணிமா  விளக்கவுரைப் 

                                                          பொலிவுஞ்  சேர்ந்த

                  தகலுலகில்  முழுமணியோ  டரும்பொன்சேர்ந்  தழகுசெய

                                                           லனைப்  தொன்றே .

                                                       &&&&&&&&&&&&&&&&

கணபதி  துணை

திருச்சிற்றம்பலம்

திருவாசகம்

நீத்தல்  விண்ணப்பம்

       நீத்தல்  விண்ணப்பம்  என்பது  , அருளாரமுதப்  பெருங் கடல்வாய்  அடியாரெல்லாம்  புக்கழுந்த  அடியேனை  மாத்திரம்  இங்ஙனம்  நீத்தல்  தகுமாவென்று  இறைவன்பால் முறையிட்டுக்  கொள்ளல்  என்னும்  பொருளுடையது  .  தம்மை நீத்தலைக்  குறித்துக்  கைவிடலாகாதென்று  அடிகள்  செய்து  கொண்ட  விண்ணப்பம்  என்பதாம். இக்குறிப்பு  ஒவ்வொரு  திருப்பாட்டிலும்  “விடுதி கண்டாய்”  என்று  கூறியிருத்தல்  கொண்டு  அறியத்தக்கது. திருவாசக  வுண்மையில் “மித்தையுல  கினையகற்றி  விடாமலெனை  யாண்டருளென், றத்தரறிந்  திட நீத்தல்  விண்ணப்ப மறைந்துவாம்” என்று  கூறியிருத்தலும்  இவ்வுண்மையை  வலியுறுத்துவதாகும்  .

            இஃது , இறைவன்  திருப்பெருந்துறையில்  ஞானாசிரியனாக  வெழுந்தருளி  உபதேசித்து  அடிகளை  இன்னுஞ்  சின்னாள்  இந்நிலவுலகத்து   இருக்கவெனக்   கட்டளையிட்டுத்  திருவுருக்கரந்தனனாக , அப்பெருமான்  திருவுள்ளக்  குறிபின்படி  திருவாதவூரடிகள்   திருப்பெருந்துறையினின்றும்   திருவுத்தரகோசமங்கைக்கு  வந்து அவ் விறைவனது  திருவுருக்  காட்சியை  மீண்டும்  பெறாமல்  வருந்தி  உள்ளமுருகிப்   பாடியருளியதாகும்  என்ப. . இதனை  “உத்தரகோசமங்கை  யூரினிற்  சென்று  புக்கார்”  எனவும்  , “சடையர்  கோயிலெய்தித் தம்மை  வந்தடிமை  கொண்ட , வடிவது  காணாராகி  மயங்கிவெய்துயிர்த்து  வீழ்ந்து  , விடுதிகொ லென்னை  யென்று  நீத்தல் விண்ணப்ப மென்னுந் , தொடை கெழு பாட  லோதக் காட்டினார்  தொல்லை  மேனி” எனவுங்  கடவுண்மாமுனிவர்  கூறுதலான்  அறியலாம் . இந் நீத்தல்   விண்ணப்பத்தின்  முதல்  இருபது   திருப்பாட்டுக்களிலும்   நாற்பத்தெட்டாம்  திருப்பாட்டிலும்  “உத்தரகோச  மங்கைக்கரசே”  யென்று  கூறியுருத்தலானும்  இஃது  உத்தர கோச மங்கையிலிருந்து அருளிச்  செய்யப் பட்டதென்பது  புலனாம். இப்பகுதி  ஐம்பது  திருப்பாட்டுக்களையுடையது . “கடையவனேனை  “  யெனத்  தொடங்கி  அந்தாதித்  தொடராக   அருளிச் செய்யப்பட்டது .

பிரபஞ்ச  வைராக்கியம்

நீத்தல் விண்ணப்பம்  என்னும்  இப்பகுதியின்  உள்ளுறை   பிரபஞ்ச  வைராக்கியம்  என்பதாம் . உலக  வாழ்க்கையில்  பற்றறுதி யென்பது   இத் தொடரின்  பொருளாகும் . திருச்சதகத்தில்  “பத்தி வைராக்கிய  விசித்திரம் “  என்று  பொது  முறையில்  புலப்படுக்கப்பட்டதே  , ஈண்டுப்  பிரபஞ்ச  வைராக்கியம்  எனச் சிறப்பு  முறையிற்  கூறப்படுகின்றது . இதனால் திருச்சதகத்திற்கும்   இதற்கும்  உள்ள  இயைபு  புலனாதல்  அறிக . மெய்யன்பு   , பற்றறுதி  யென்னும்  இவ்விரண்டனுள்ளும்  உலக   வாழ்க்கையைப்  பற்றிய  பற்றறுதியை  ஈண்டுச்  சிறப்பு  முறையிற்   புலப்படச் செய்ததற்கு   ஏது, ஆண்டவன்  தம்மை  ஆட்கொண்டருளிய  பின்னும்  இந்  நிலவுலகத்து  இருக்கவெனப்  பணித்தது  பொறாமையேயாம். மெய்யன்பு  ஆண்டவன்  திருவடி  அடைதற்கும்  , பற்றொழிவு   அம்மெய் யன்பு  வளர்ச்சிக்கும்  சாதனங்களாகும் . இவ்விரண்டனுள்ளும்   இப்பொய்யுலக  வாழ்க்கையை  ஒழித்தலிலே  அடிகளுக்கு  மிக்க  விரைவு  தோன்றிய  தென்னலாம்.

           ஆண்டவன்  ஆட்கொண்டவுடனே  தம்மை  ஊனார்  புழுக்கூட்டி னின்றும்  வாங்கித்  தன்  திருவடி  நீழலில்  இயைத்து  இன்புறுத்தும்  பேறு  கிடைக்குமென   உறுதி மேற் கொண்டிருந்த  அடிகளுக்கு  , இன்னும்  சில காலம்  இந்நிலவுலகத்  திருக்கவெனக்  கட்டளையிட்டது  , கடக்கமுடியாத தாயினும் தினையளவு  நேரமும்  இத்துயர்  ஆக்கையைப்  பொறேன்  என்று  அடிகள்  கூறியிருத்தலால்  மிக்க  வருத்தத்தையே  விளைவித்தது  என்னலாம். இறைவனது  அக்கட்டளை  அப்போது  அடிகளுக்கு  வருத்தம்  விளைத்த தா யினும் ,அது பொதுவாக இந்நிலவுலகமும்  சிறப்பாகத் தமிழுலகமும்  செய்த தவப்பயனால் நிகழ்ந்ததாகும் . ஆண்டவன்  உபதேசித்தவுடனே   அடிகள்  வீட்டின்பத்தில்  தலைப்பட்டிருப்பராயின்  , அவர்கள்  அநுபவத்த சிவாநுபவ உண்மைகளைத்  தன்னுள்  அடக்கித் திகழும்   திருவாசகத்தேனை  இவ்வு லகம்  எங்ஙனம்  பருகி  மாறிலா  மகிழ்ச்சியின்  மலரக்கூடும் ?  அன்று  தொட்டு  இன்று  காறும்  இன்னும்  எத்தனையோ  காலம்  வரையும்  அடிகள் அமுத மொழியை  ஓதியுணர்ந்து  உருகிப்பருகி  இவ்வுலகத்துள்ள  எண்ணி றந்த   அன்பர்களும்  எவ்வாறு  இன்புற்றிறுக்க முடியும்?  ஆண்டவன்  கட்டளை  அவ்வாறின்றேல்  அடிகள்  ஒருவரே  அழி வில் இன்பத்தில்  அப்பொழுது  தோய்ந்திருப்பர்  .  அவ்வின்பப் பேறு  அடிகளுக்கு  அப்பொழுது  தாழ்ப்பினும்  சின்னாளில்  எய்திற்று . ஆகவே, அடிகள் விருப்பம் ,  நிறைவேறுதற்கும்   உலத்ததுள்ள  அன்பர்  பலரும்  நலம்  அடைதற்கும்  திருவுளங்கொண்ட  இறைவன்  அவ்வாறு  பணித்தருளினான்  என்பது புலனாம் . அடிகள் ஆண்டவன்  பிரிவால்  நெஞ்சம்  உருகியுருகிப்  பாடியருளிய  அநுபவ  உண்மாய்களன்றோ  இற்றைப்பொழுது  சிறியேமாகிய  நம்மை  இன்புறுத்தி  உய்விக்கும்  தீந்தேனாயின .

                   இனி, நீத்தல் விண்ணப்பம்  என்னும்  இப்பகுதி  பிரபஞ்ச  வைராக்கியம்  என்னும்  இக்கருத்தை  , நுதலிய  பொருளாகக்  கொண்டிருத்தலின்  , ஒவ்வொரு  திருப்பாட்டின்  உரையின்  இறுதியிலும்  இக்குறிப்புப்  புலப்படுக்கப்படுவதாகும் .

                                                      &&&&&&&&&&&&&&&&&&&

கட்டளைக் கலித்துறை

திருச்சிற்றம்பலம்

 பாடல் : 1 .

கடையவ  னேனைக்  கருணையி  னாற்கலந்  தாண்டுகொண்ட

விடையவ  னேவிட்  டிடுதிகண்  டாய்விறல்  வேங்கையின்றோல்

உடயவ  னேமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

சடையவ  னேதளர்ந்  தேனெம்  பிரானென்னைத்  தாங்கிக்  கொள்ளே .

கருத்துரை :- இதன்  முன்னர்க்  கூறப்பெற்றுள்ள  திருச்சதகத்தின்  இறுதித் திருப்பாட்டில்  , ஊனுடலின்  ஒழிவையும், வீட்டின்பப் பேற்றையும்  வேண்டிய  அடிகள்  , இவ்வின்பப்பேற்றிற்குத்  தடையாகவுள்ள  உடற்சுமை  நீங்காமை யால்  , தமக்கு  உண்டாகிய  சோர்வைப்  புலப்படுத்தி  ஆதரவளித்தல்   வேண்டுமெனவும்  , கைவிடலாகாதெனவும்   இத் தொடக்கத் திருப்பாட்டில்   ஆண்டவனை  நோக்கி  விண்ணப்பஞ்  செய்துகொள்ளுகின்றார் .  

பதவுரை :-  கடையவனேனை  =  கடைப்பட்டவனாகிய என்னை ,

கருணையினால்  கலந்து   ஆண்டு  கொண்ட  =  கருணை  காரணமாக  உடன்  இயைந்து  ஆட்கொண்டருளிய  ,

விடையவனே  =  காளை  ஊர்தியை  யுடையவனே ,

விட்டிடுதி   =   அடியேனைக் கைவிடுவாயோ ?,

விறல் வேங்கையின்  தோல்  உடையவனே  =  வலி மிக்க  புலியின்  தோலை  ஆடையாக  உடையவனே ,

மன்னும்  உத்தர கோச மங்கைக்கு  அரசே   =   என்றும்  நிலையுதலை யுடைய   உத்தரகோசமங்கை  யென்னும்  தலத்தில்  எழுந்தருளி யிருக்கும்  இறைவனே ,

சடையவனே   =   சடைக்  கற்றையை  யுடையாய் ,

தளர்ந்தேன்   =  சோர்வு  எய்தினேன் ,

எம்பிரான்  என்னைத்  தாங்கிக்  கொள்  =   எம்  தலைவனே  அடியேனைத்  தாங்கிக்   காத்தருள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-  ஈடும்  எடுப்பும்  இல்லாத  ஆண்டவன்  பணி கொள்ளுதற்கு  உரிய  தகுதி  சிறிதும்  இல்லேன்  என்பார் , தம்மைக்  “கடையவன்” எனவும் , தலை  இடை  கடை  யாகிய  முத்திறத்துள் கடைப்பட்ட  தம்மை  அங்ஙனம்  ஆட்கொள்ளுதற்கு  ஏது , ஆண்டவன் கருணையேயன்றிப்  பிறிது  இன்று  என்பார் , “கருணையினால்”  எனவும்  கூறினார் . “ஊனா  யுயிரா  யுணர்வா  யென்னுட்  கலந்து “ என்று  அருளிச்செய்தபடி தம் உடல் உயிர் உணர்வு என்னும் இவ்வெல்லாவற்றிலும்   உடன் இயைந்து ஆட்கொண்டனன் என்பது குறித்து , “கலந்து  ஆண்டுகொண்ட  “  என்றார். உயிரிற்கலந்து ஊனை யுருக்கி   உணர்வைப் பெருக்கி  ஆட்கொண்டனன்  என்பது  கருத்து . “அற்புதமான  அமுத தாரைகள் , ஏற்புத்  துளைதொறும்  ஏற்றினன் உருகுவது , உள்ளங்கொண்டோ ருருச்செய்தாங்கெனக்கு , அள்ளூறு  ஆக்கை யமைத்தனன் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறிய  திருவாக்கால்  , அவர்தம்  ஊனையுருக்கி  அருளமுதத்தை  எலும்புத்  துளைதோறும்  புகுத்தி இன்புறுத்தினன்  என்பது  தெளியப்படும் .

              விடயை  ஊர்ந்து  பணிகொண்டது  போலத்  தம்மை   இறைவன்  வலிந்து பணிகொண்டவன் என்பது குறிப்பிற்  புலப்பட  ,”ஆண்டு கொண்ட விடையவனே”  யென்றார்.  விட்டிடுதி என்பதில்  விடு  பகுதியும் , இடு  துணை வினையும்  , இகரம்  எதிர்கால  விகுதியும்  ,தகரம்  எழுத்துப் பேறும்  ஆகும் . “அவற்றுள் , முன்னிலைக்  கிளவி ,  இ  ஐ  ஆ  யென  வருஉ மூன்றும்  , ஒப்பத்தோன்றும் ஒருவர்க்கும்  ஒன்றற்கும்  “  என்னும்  தொல்காப்பியச் சூத்திரமும்  , “ இகரம்  கடதற  ஊர்ந்து  எதிர்காலம்  பற்றி  வரும்  “ என்னும்  சேனாவரையர்  உரையும்  ஈண்டு  விதியாதலைக் காண்க . விட்டிடுதி , விடுதி,  என்னுஞ் சொற்களுக்கு   விடுவாய்  என்பது  பொருளாகும் . விடுவாய்  என்பது  ஈண்டுக்  காகு  என்னும்  ஒலி  வேற்றுமையால்  விட்டுவிடுவாயோ  என  வினாவாக  நின்று  கைவிடலாகாது  என்னும்  பொருளையுணர்த்தும் . கண்டாய்  என்பது  முன்னிலையசை . விட்டிடுதி  கண்டாய்  , விடுதி  கண்டாய்  என்று  பின் வருவனவற்றிற்கெல்லாம்  இங்ஙனமே  பொருளுரைத் துக் கொள்க .  

              தாருக  வனத்து  முனிவர்  கொடிய  வேள்வியொன்று  இயற்றி  , அதனின்றும்  தோன்றிய  புலியை  ஏவி  இறைவனை  அழிக்க  முயன்றனராக அப்புலியை   உரித்து  அதன்  தோலைத்  தன்  அரைக்கண்  உடுத்தனன் என்பது  புராண  கதை .புலித்தோலை யுடுத்து  யானைத்தோலைப்  போர்த்தனன் என்ப.  “புலித்தோலை யரைக்கசை”  என்பது தேவாரம் .  அப்புலி  முனிவர் தவ வன்மையால்  தோன்றியதாகலின்  , “விறல்  வேங்கை  “ என்னப்பட்டது .  உடை –  ஆடை  .  உத்தரகோசமங்கை  என்பது  பாண்டி நாட்டுச்  சிவதலங்களுள் ஒன்று . இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிச்  சிவாகமப்  பொருள்களைப்  பக்குவ முதிர்ந்த அன்பர்களுக்கு   உபதேசித் தற்கு  இடனாய  தலமாதலின்  ,அச்சிறப்புக்  கருதி, “மன்னும்  உத்தரகோச மங்கை “ என்னப்பட்டது .தளர்ச்சியுற்று  அடைக்கலம்  புகுத்த  திங்கட்  பிறையைத்  தாங்கிப்  பாதுகாத்தற்கு  ஆதாரமாயது   சடையாதலின்  , அங்ஙனமே  தளர்ந்து  போந்த  தம்மையும்  தாங்கிக்  காத்தருளல்  வேண்டுமென்னும்  குறிப்புத் தோன்ற  ,ஈற்றடியில்   “சடையவனே”  என்றார்.  ஈண்டு  அடிகளுக்கு  நேர்ந்த  தளர்ச்சி  , ஆண்டவன்  திருவடி  நீழல்  எய்துதற்கு  விரைந்து  முற்பட்ட  முயற்சி  தடைப்பட்டமையான்  உண்டாயது  என்பது. தளர்ந்த  நிலையிற்  பணிகோடல்   பொருந்தாதெனக்  கொண்டு  “எம் பிரான்  என்னைத்  தாங்கிக்கொள்ளே”  என்றார்.

                   இதன்கண்,  “சடையவனே  தளர்ந்தேன்” என்றதனால்   உலக  வாழ்க்கை  பற்றிய  உவர்ப்புப்   பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                             **********************************

பாடல் : 2 .

கொள்ளேர்  பிளவக  லாத்தடங்  கொங்கையர்  கொவ்வைச்  செவ்வாய்

விள்ளே  னெனினும்  விடுதிகண்டாய்நின்  விழுத்தொழுப்பின் 

உள்ளேன்  புறல்லேன்  உத்தர  கோசமங்  கைக்கரசே

கள்ளே  னொழியவுங்  கண்டுகொண்  டாண்டதெக்  காரணமே .

கருத்துரை :-   முன்னைத்  திருப்பாட்டில்  தமக்கு  நேர்ந்த  தளர்ச்சியைக்  குறித்தும்  , தாங்கிக் காத்தருளல்  வேண்டுமென்றும்  கூறிய  அடிகள்  இத்  திருப்பாட்டில்   அவ்விரண்டற்கும்  காரணங்கூறுகின்றார்.

பதவுரை :-  உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

கொள் பிளவு  அகலா  ஏர் தடம்  கொங்கையர்   =   கொள்ளு  என்னும்  கூலத்தின்  பிளவு  அளவு  இடைவெளி  இல்லாத  அழகிய  அடி  அகன்ற  கொங்கைகளையுடைய  மகளிரின் ,

கொவ்வைச்  செவ்வாய்  விள்ளேன்  எனினும்   =  கொவ்வைப்பழம்  போன்ற  சிவந்த  வாய்  இதழினின்றும்  நீங்கேன்  ஆயினும் ,

நின் விழுத்தொழும்பின்  உள்ளேன்  =  நினது  சிறந்த  தொண்டில்  ஈடுபட்டு   அதன்  அகத்தேயுள்ளேன் ,

புறம்  அல்லேன்  =  புறம்பானவன்  அல்லேன் ,

விடுதி  =  ஆதலின்  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ? (விடலாகாது),

கள்ளேன்  ஒழியவும்  =  வஞ்சகனாகிய  யான்  நின்னை  நீங்கிச் செல்லவும்,

கண்டு  கொண்டு  ஆண்டது  எக்காரணம்  =  கண்டு  பிடித்து  ஆட்கொண்டதற்குக்  காரணம்  என்னையோ?  என்பது .

விளக்கவுரை :-  “ ஈர்க்கிடை  போகா  விளமுகை “ என்றாற்  போல  இங்கே  “”கொள்ளேர்  பிளவகலாஒ கொங்கை “ யென்றனர் . “கொவ்வைச்  செவ்வாய்” என்றது  ஐம்புலநுகர்ச்சிக்குப்  பெரும்பாலும்  அஃது  இடனாதல்  பற்றியென்க. செம்மைப் பண்பு காண்டற்கும்  ,வாயிற்சொல்  கேட்டற்கும்  ,வாய்  எயிறூறிய  நீர்  உண்டற்கும்  ,உரியவாதலும்  , ஏனை  உயிர்த்தற்கும்   உற்றறிதற்கும்  ஓரோ வழி  இடனாதலும்  காண்க.  விள்ளல்  –  நீங்குதல் . அடிகள்   மகளிர்  இன்பத்தில்  ஈடுபட்டதாக  ஈண்டும்  , இத்திருவாசகத்தில்   இன்னும்  பல  இடங்களிலும்  கூறியிருக்கின்றார்..தம் தவ ஒழுக்கம்  மிகப்  பெரிதாயினும்  அதனைப்பற்றி  ஆண்டவன்  முன்னிலையில்  சிறிதும்  கூறாமல்  , தம்  குற்றம்  சிறிதாயினும்   பெரிதாகக் கொண்டு  கூறிப்  பொறுத்தருள  வேண்டுதல்  பெரியோர்  இயல்பாதலின்  , அம்முறையில்  பண்டை  வினைத் தொடர்பு  ஓரோவழித்  தம்மைத்  தாக்க  அதன்  வயப்பட்டுத்  தம்  மனம்  சிறிதளவு  நெறி  பிறழ்ந்ததாகக்  கண்டு ,அச் சிறு  பிழையைப்  பெரிதாக  ஆண்டவன்  முன்னிலையில்  விண்ணப்பஞ்  செய்து பொறுத்தருள  வேண்டுவாராய்  இங்ஙனம்  கூறியிருக்கலாம் .  அன்றி  வினைக்கு  ஈடாகப்  பிறந்து  இறந்து  உழலும்  மக்கட்  பொதுவியல்பு  நோக்கி  உயிர்  போகும்  பொதுநெறி   பொறாமல்  அங்ஙனம்  சேறல்  தீதென்பதை  உலகிற்கு  அறிவுறுத்தக்  கருதித்  தம் மேல்  ஏறிட்டுக்  கூறினாரெனக்  கொள்ளளுமாம் . இக்கருத்து  வெளிப்படும்  இடங்களுக்கெல்லாம்   இவ்வாறே  அமைத்துக்கொள்ளல்  வேண்டும் .

                தலைவர்க்குப்  பயன்  விளைக்கும்  உலகத் தொண்டு  போலாது  அடிமைக்குப்  பயன்விளைப்பது  சிவத் தொண்டு  என்பது  தோன்ற  ,”நின் விழுத்தொழும்பு”  என்றார். “உள்ளேன்  புறம்  அல்லேன்”  என்றது  , திருத் தொண்டில்  ஈடுபட்டு  அவ்வெல்லை  கடவாத  நிலையில்  உள்ளேன்  அன்றிப்  புறம்பானவன்  அல்லேன் என்னும்  பொருட்டு .  ஆண்டவனே !  உலகப் பற்றினின்றும்   நீங்கலேனாயினும்  , நின்  திருத் தொண்டினின்றும்  புறம்பானவன்  அல்லேன் ஆதலின் , என்னக்  கைவிட்டு  விடலாகாது  என்று  அடிகள்  விண்ணப்பஞ் செய்து கொண்டபடியாம் .

                நெஞ்சம்  பொய்யுலக  வாழ்க்கையைப்பற்றி  நிற்ப , புறக்கரணங்கள்  திருத்தொண்டி லீடுபட்டிருக்குமாயின்  , அது வஞ்சகச்  செயலன்றே; அஃதறிந்தும்  எங்ஙனம்  கைவிடாமலிருக்க  இயலும்  என்பது  ஆண்டவன்  திருவுள்ளம்  ஆகலாம்  எனக்கொண்டு   அது  குறித்துக் “கள்ளேன் ஒழியவுங்கண்டு  கொண்டாண்ட  தெக்காரணமே”  என்று  அருளிச்செய்தனர்  . ஆட்கொள்ளுதற்கு  முன்  நின்னைச்  சிறிதும்  நினையாமல்  விலகியிருந்த  என்னை  வலிய  வந்து கண்டு  பிடித்து  ஆட்கொண்டதற்கு  ஏது  வென்னை  யென்பது   பொருள் .  இங்ஙனம்  வினவுமுகமாகக்  கிடைத்த  பொருள்  ,ஆண்டவனது  அளப்பரிய  அருட்  குணமே  காரணம்  என்பது  போதரும் . அவ் வருட்  குணமே  அடியேனைக்  கைவிடாமல்  காத்தருளுதற்கும்  காரணம்  ஆகலாம் என்பது  குறிப்பிற்  பெறப்படுவதாகும்  .  

                   இதன்கண் , மகளிர்  இன்பத்தைப்  பற்றி  நிற்கும்  தம்மை  அதுகுறித்துக்  கைவிடாமல்  காத்தருளல்  வேண்டுமென்று  அடிகள்  விண்ணப்பஞ்  செய்து  கொண்டது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்   தோன்றியவாறு  அறிக . 

                                              **********************************

பாடல் :3 .

காருறு  கண்ணியர்  ஐம்புல  னாற்றங் கரைமரமாய்

வேருறு  வேனை  விடுதிகண்  டாய்விளங்  குந்திருவா

ரூருறை  வாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

வாருறு  பூண்முலை  யாள்பங்க  வென்னை  வளர்ப்பவனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  அடிகள்  தமக்கு  நேர்ந்த  தளர்ச்சியை  நீக்கித்  தாங்கிக்  காத்தற்குக்  கூறிய  காரணத்தையே  பிறிதொரு  வகையில்  இத்திருப்பாட்டில் மீண்டும்  கூறுகின்றார் .

பதவுரை :-   விளங்கும்  திருவாரூர் உறைவாய்  =   மிக்க  புகழால்  விளங்கும்  திருவாரூர்  என்னும்  திருத்தலத்து  எழுந்தருளியிருப்போய்,

உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

வார்  உறு  பூண்  முலையாள்  பங்க  =  கச்சுப்பொருந்திய  அணிகலன்  விளங்கும்  நகிலினையுடைய  அம்மையை  ஒரு  கூற்றிலுடையாய் ,

என்னை  வளர்ப்பவனே  =  அடியேனைப்  பாதுகாப்பவனே  ,

கார்  உறு  கண்ணியர்  ஐம்புலன்  ஆற்றங்கரை  மரமாய்  =   கருமை  நிறம்  பொருந்திய  கண்களையுடைய  மகளிரைப்  பற்றிய  ஐம்புலன்களாகிய  ஆற்றங்கரைக்கண்  மரம்  போல  ,

வேர் உறுவேனை  =  வேர்  ஊன்றி  இருப்பேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ?  (கைவிடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  அயிராவணம்  ஏறாது  ஆனேறேறி  யமரர்  நாடாளாதே  ஆரூர்  ஆண்டமையால் ,”திக்கெலா நிறைந்த  புகழ்த்  திருவாரூர்  “  என்று  அப் பதி  பாராட்டப்பட்டுள்ளது . மேலும்  புகழ்  விளக்கம்  கொடைச்  சிறப்பால்  உண்டாவதாகலானும் ,  அதற்குரிய   தியாகராசப் பெருமான்  எழுந்தருளியிருத்தலானும்  அத்தலம்  “விளங்கும்  திருவாரூர்” என்று  கூறப்பட்டது எனலுமாம் . அம்மையை  ஒரு  கூற்றில்  உடையவனே என்றது , குழந்தையாகிய  தம்மை  வளர்த்துக்  காத்தற்  பொருட்டு  அன்னையும்  அத்தனுமாக  எழுத்தருளிய  நிலையைக்  குறிப்பதாகும் . அடிகள்  விரும்பியது  உள்ளொளியாகிய  உணர்வு  வளர்ச்சியே  யன்றி  ஊனுடலின்  வளர்ச்சி  யன்று. “ஊனினையுருக்கி  உள்ளொளி பெருக்கி  “ என்பது  அடிகள் திருவாக்கு . உலகத்தவர்  உண்டி  முதலியவற்றால்  எதனைப்  பெருக்க  விரும்புகின்றார்களோ அவ்வுடல்  உருகிச்சுருங்க  வேண்டும்  என்பதும்  உள்ளுணர்வு  அருளமுத நுகர்ச்சியால்  பெருக வேண்டும் என்பதுமே  அடிகள் விருப்பமாகும் . ஆதலின் , “என்னை  வளர்ப்பவனே  “  என்பதற்கு  என்  உணர்வை  வளர்ப்பவனே  என்பது  பொருளாகும்  .  இங்ஙனம்  இறைவன்  அருள்  காரணமாக அம்மையப்பனாக  எழுந்தருளி   வந்து   என்னை  வளர்க்க  முற்பட்டு  நிற்கவும் ,யான்  பொய்யுலக  வாழ்க்கையிற்  பொருந்தி  நிற்கலானேனே என்று  இரங்குவார் , “காருறு………வேருறு  வேனை “  என்றார்  . மகளிர்  கண்களுக்கு  வெண்மை  செம்மைகளினும்  கருமை  நிறமே  ஆடவரை   வயப்படுத்தற்குச்  சிறந்ததென்ப .

               மகளிரைப்  பற்றிய   சுவை  ஒளி  ஊறு   ஓசை   நாற்றம்   என்னும்  ஐப்புல  இன்பவடிவமாகிய  காமம்  ஆறாக  உருவகஞ்  செய்யப்பட்டது . அக்காமத்திற்  கன்றிநின்றாரைப்  பிறிதோராற்றான்  உய்தி  பெறாவாறு  அஃது  ஈர்த்துச்சேறலான்  .  மிக்க  விரைவில்  அவ்வெள்ளத்தால்  வேர்  பறிக்கப்பட்டு  வீழ்ந்தொழியும்  நிலையில்  உள்ளேன்  என்பார் , அக்காமவெள்ளத்தின்  கரைக்கண்  வேர்  ஊன்றி  நிற்கும்  மரமாயினேன் என்றார் . இங்ஙனம்  மெய்மை  போலக்  காட்டி  வஞ்சித்துக் கெடுக்க  நெருங்கியிருக்கும்  இப்  பொய்யுலக  வாழ்க்கையைப்  பற்றி  அழிந் தொழியும்  நிலையில்  உள்ள  சிறியேனைப்  பாதுகாக்கும்   கடப்பாடுடைய  நீ  இந் நிலையில்  கைவிடலாகாது  என்பார் , “ வேருறுவேனை  விடுதி  கண்டாய்”  என்றார்.

                  இதன்கண்,” ஐம்புலனாற்றங்கரை  மரமாய்  வேருறுவேனை” இந் நிலையிற்  கையிடாமற்   காத்தருள  வேண்டுமென்று   விண்ணப்பம்  செய்தமை  பெறப்படுதலின்  , பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                                **********************************

பாடல் : 4 .

வளர்கின்ற  நின்கரு    ணைக்கையில்  வாங்கவு  நீங்கியிருப்பால்

மிளிர்கின்ற  வென்னை  விடுதிகண்  டாய்வெண்   மதிக்கொழுந்தொன்

றொளிர்கின்ற  நீண்முடி  யுத்தர  கோசமங் கைக்கரசே

தெளிகின்ற  பொன்னுமின்  னும்அன்ன  தோற்றச்  செழுஞ்சுடரே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன்  தம்மைக்  காத்தருளுதற்கு   அப்பெருமான்  அருட்பெருக்கே   காரணமெனக்  கூறிய  அடிகள்  , அவ்வருட் கரத்தால்  ஈர்த்துக்  கொள்ளவும்,  அகப்படாமல்  விலகும்  தம்  இயல்பு  இருந்த  படியே  இத் திருப்பாட்டில்  விண்ணப்பித்து  இரங்குகின்றார் .  

பதவுரை :-  வெள்  மதிக்கொழுந்து  ஒன்று  =  வெள்ளிய  திங்கள் இளம்பிறை  ஒன்று , 

ஒளிர்கின்ற  நீள் முடி  =  திகழுகின்ற  நீண்ட  சடை  முடியினையுடைய ,

உத்தர கோசமங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே,

தெளிகின்ற  பொன்னும்  மின்னும்  அன்ன  தோற்றம்  செழுஞ்சுடரே = 

உருக்கி  ஓட வைத்துத் தெளிந்த   பொன்னையும்  மின்னலையும்  ஒத்த  காட்சியினையுடைய  பேரொளிப் பிழம்பே ,

வளர்கின்ற  நின் கருணைக்  கையில்  வாங்கவும்   =  மேன்மேலும்  மிகுகின்ற  நின்  அருட்கரத்தால் வளைத்து  ஈர்க்கவும்  ,

நீங்கி  =  அதற்கு  அகப்படாமல்  விலகி,

இப்பால்  மிளிர்கின்ற  என்னை   =  இப் பொய்யுலக  வாழ்க்கையில்  இறுமாந்து  களிக்கின்ற  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ?(கைவிடாமற்  காத்தருளல்  வேண்டும்)  என்பது .  

விளக்கவுரை :-  மதிக்கொழுந்து   –  பிறை  .  “மதிக்கொழுந்து  ஒன்று  ஒளிர்கின்ற  நீண் முடி” என்றது  அடைக்கலம்  புகுந்தாரைத்  தலையால்  தாங்கிக்  காக்கும்   அருட்குணம்  உடைமையைப்  புலப்படுத்துவதாகும் .  தெளிகின்ற  பொன் – வேற்று  உலோகக்  கலப்பாலாகிய   மாசு  நீங்கிய  மாற்றுயர்ந்த  பொன் . “தெளிகின்ற” என்னும்  அடையை  ‘மின்’ என்பதனோடும்  இயைத்து , முகிற்  படல  முதலியவற்றால்  மறைவு  படாத  மின்னற் கொடியெனவுங் கொள்ளல்  வேண்டும் .  தோற்றம்  –  கட்  பொறியால்  வரம்பிட்டுப்  பற்ற  இயலாத  காட்சி, அத்தகைய  இறைவனது  பேரொளிப்  பிழம்பிற்கு  “உயர்ந்ததன்   மேற்றேயுள்ளுங்காலை” என்னும்  விதிப்படி  உவமங்  கூறுதல்  இயலாத  தொன்றாதலின்  , காணப்பட்ட  பொருள்களிற்  சிறந்த  பொன்னையும்   மின்னையும் கூறுவாறாயினர்  . நிறத்திற்குப்  பொன்னும்   ஒளிக்கு  மின்னுங்  கூறப்பட்டன .

                    அன்பர்க்கு  வழங்க  வழங்கக்  குறையாமல்  மேன்மேலும்  நிறைந்திருத்தல்  பற்றி  “வளர்கின்ற  கருணை  “  என்றார் . “தன்   கருணை அள்ளக்  குறையா  அரன்”  என்பதுங்காண்க.  “குறைவிலா  நிறைவே”  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியதற்கும்  இதுவே  கருத்தாதல்  அறிக.  வாங்குதல்  –  வளைத்துப்பிடித்தல்  . உலகத்தில்  ஒருவனை  வளைத்துப் பிடித்தல்  துன்புறுத்தற்  பொருட்டுமாம் . ஈண்டு  அஃது  இறைவன்  திருவுள்ளம்  அன்றென்பதைப்  புலப்படுத்தற்கு  “ கருணைக்  கையில்  வாங்கவும் “ என்றார்  . உம்மை  சிறப்புப்  பொருட்டு . ஆண்டவன்  அருணோக்கால்   தாம்  ஈர்க்கப்பட்டமையின்  கருணையைக்  கையாக  உருவகஞ் செய்யலாயினர் .  இறைவன்  அருட்கு  இடனாதற்குத்  தவங்கிடப் பார்   பலராக  என்னை  இன்புறுத்தற்பொருட்டுக்  கருணை காரணமாக  வலிந்து  பற்றவும்  ,என் அறியாமையால்  அகப்படாமல்  நீங்கலானேன்  என்று  இரங்குவார், “வாங்கவும்  நீங்கி”  என்றார் . இப்பால்  –  இவ்விடம்  .  மெய்யின்ப வாழ்வில்  தலைப்படற்கு  ஒருப்படாமல்  –  நீங்கி  இப் பொய்யுலக  வாழ்வில்இறுமாந்து  இருக்கலானேனே என்பார் . “இப்பால்  மிளிர்கின்ற  என்னை “என்றார். பேரின்புறுத்தற்கு  ஆண்டவன்  வலிந்து பற்றவும்  அகப்படாமல்  நீங்கியதே  பெரும்  பிழையாகும்  .அப் பிழைக்கு  இரங்காமை யோடு   இப் பொய்யுலக  வாழ்க்கையிற்  களித்திருத்தல்  அதனினும்  பெருங்குற்றமாகும்  . இத் தீர்வில்  பிழையைத்  திருவுளங்கொண்டு  சிறியேனைக்  கைவிட்டு  விடுவாயோ?  விடலாகாது  என்பது  கருத்து .

              இதன்கண்,  “நின் கருணைக்கையில்  என்னை  வளைந்து  பற்றவும்  நீங்கி,  இப்பொய்யுலக  வாழ்க்கையிற்  களிக்கும்   சிறியேனைக்  கைவிடலாகா  “    தென்று   விண்ணப்பஞ்  செய்துகொண்டமையால்   பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாத லறிக.   

                                                    *************************************

பாடல் :5 .

செழிகின்ற  தீப்புகு  விட்டிலிற்  சின்மொழி  யாரிற்பன்னாள் 

விழுகின்ற  வென்னை  விடுதிகண்  டாய்வெறி  வாயறுகால்

உழுகின்ற  பூமுடி  யுத்தர  கோசமங்  கைக்கரசே 

வழிநின்று  நின்னரு  ளாரமு  தூட்ட  மறுத்தனனே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  தன்  கருணைக்  கையில்  வாங்கவும்  அகப்படாமல்  நீங்கிய  இயல்பு  குறித்து  இரங்கிய  அடிகள்  , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  அகப்படாமல்  நீங்கு  நிலையில்  வழி மறித்து  அருளமுதூட்டவும்  மறுத்து  விடலானேனே யென்று  இரங்குகின்றார்.  

பதவுரை :-  வெறிவாய்  அறுகால்  உழுகின்ற  பூமுடி  =  தேன்  தோய்ந்த  வாயினவாகிய  வண்டுகள்  கிண்டுகின்ற  கொன்றைமலர்  மாலைய னிந்த  முடியினையுடைய  ,

உத்தர கோசமங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே ,

வழி நின்று  =  வழியில்  மறித்துநின்று ,

நின் அருள்  ஆர்  அமுது  ஊட்ட   =  நின்  கருணையாகிய   அரிய  அமிழ்தத்தை  வலிந்து  ஊட்டவும்  ,

மறுத்தனன்  =  ஏற்றுக்கொள்ளாமல்  மறுத்தனனாய் ,

செழிகின்ற  தீப்புகு  விட்டிலின்  =  மிகுகின்ற  தீயின்கண்   வீழும்  விட்டிற் பூச்சியைப்   போல  ,

சில்  மொழியாரின்   =  சிலவாகிய  சொற்களை  யுடைய  மகளிரிடத்து  ,

பன்னாள்  விழுகின்ற  என்னை  =  பல காலம்  விரும்பிக் கிடக்கின்ற  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது.

விளக்கவுரை :– வெறி  –  தேன் .  அறுகால்  –  அன்மொழித்தொகையாக  நின்று  ஆறு  கால்களையுடைய  வண்டையுணர்த்தும் . உழுதல்  –  தேன்  மிகுதி  பற்றி  இதழ்களைக்  கிளறுதல் . வழி  –  முன்னைத் திருப்பாட்டிற்  கூறப்பட்டபடி  இவ்வுலக  வாழ்க்கையை  நோக்கியடையும்  நெறி  .  அந் நெறியிற்  செல்ல  விடலாகாதென்று  கருணை  காரணமாக  ஆண்டவன்  தம்மை  மறித்து  நின்றமை  தோன்ற  “நின்று” என்றார் . ஒருவனை  வழி  மறித்தல்   அவனைத்  துன்புறுத்திக்  கைப்பொருளைக்  கவர்தற்கன்றே  நிகழ்வது ? இவ்வுலக  நிகழ்ச்சிக்கு  மாறாக  இங்கே  ஆண்டவன்  என்னை  வழி மறித்துத்  தடுத்தது , பெறுதற்கு  அரிய தன்  அருளமுதத்தை  எனக்கு  ஊட்டுதற் பொருட்டு  என்பார் , “  நின் அருளார்  அமுதூட்ட  “  என்றார். .ஈதல்  தருதல்  முதலிய  சொற்களின்றி  ஊட்ட  என்றது, அருளமுதத்தைக்  கையிற்  கொடுத்தல்  அதன்  அருமை  அறியாமல்  உண்ணாது  உகுத்து  விடவுங்கூடு மென்று  திருவுளங்  கொண்டமையான்  என்க.  மறுத்தனன்  என்பது  முற்றெச்சம்.  அழியும்  இயல்பினதாகிய  இவ்வுலக  வாழ்க்கையை  நச்சிச் செல்லும்  என்னை  வழிமறித்துத்  தன்  அருளமுதூட்டவும்  மறுத்துவிட்டுக்  கேடு பயக்கும்  இழிந்த  காமத்தை  விரும்பலானேன்  என்பார் , “ விழுகின்ற  என்னை  “ என்றார் . மகளிருடைய  சிலவாகிய  மொழிகளே  என்னைப்  பலகாலம்  வீழச்  செய்கின்றன  வென்பார்  , “சின்மொழியாரிற்  பன்னாள்” என்றார் .  

                  காம  வீழ்ச்சி  கடிதில்  கெடுக்கும்  இயல்பின  தென்பதற்குத்  தீப்புகும்  விட்டில்  உவமம்  ஆயிற்று  . விட்டிற்  பூச்சி  நெருப்பில்  சிறிது  வீழ்ந்து  சூடு  தாங்கித்  திருப்பினும்  , பின்னரும்  அத் தீயில்  வீழ்ந்தே  இறப்பதாகும் . அங்ஙனமே  காமத்  தோய்வு  துன்புறுத்தினும்  மறித்தும்  அதன்கட்  சென்று  கெடுதல்  மக்கள்  இயல்பென்பது  குறிப்பு . வீழ்தற்குரிய  அக்காமமும்  சிறிதன்று ., பெரிதென்பது , “செழிகின்ற  தீ”  என்னும்  உவம  அடையால்  அறியத்தக்கது . சின்மொழி  பன்னாள்  என்பது  முரண்  அணி  . விட்டிற் பூச்சி  விளக்குத்  தீயில்  சாங்காறும்  பலமுறை  வீழ்ந்து  ஒழிதல்  போல , யானும்  கெடுங்காறும்  பலநாள்  வீழ்கின்றேன்  என்பார் , “பன்னாள்  விழுகின்ற  என்னை  “  என்றார் . இப்பெரும்  பிழையைத்  திருவுளங் கொண்டு  கைவிடலாகாதென்பது   வேண்டுகோளாகும்  .

                 இதன்கண்  ,  “தீப்புகு  விட்டிலிற்  சின்மொழியாரிற்  பன்னாள்  விழுகின்ற  என்னை  “ அது  பற்றிக்  கைவிடாமற்  காத்தருள  வேண்டுமென்று  கூறப்பட்டிருத்தலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாயவா றறிக .

                                       *********************************************

பாடல்: 6 .

மறுத்தனன்  யானுன்  அருளறி  யாமையில்   என்மணியே

வெறுத்தெனை  நீவிட்  டிடுதிகண்  டாய்வினை  யின்றொகுதி

ஒறுத்தெனை  யாண்டுகொள்  உத்தர  கோசமங்  கக்கரசே

பொறுப்பரன்  றேபெரி  யோர்சிறு  நாய்கள்தம்  பொய்யினையே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  கருணை  காரணமாக  வழி  மறித்து  அருளமுதூட்டவும்  மறுத்துவிடலானேன்  என்று  இரங்கிய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  மறுத்ததற்குக்  காரணங் கூறி அப்பிழையைப்  பொருத்தருள  வேண்டுமென்று  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :-   என்  மணியே  =  என்  மாணிக்கமணியே  ,

உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே,

யான்  அறியாமையில்  உன்  அருள்  மறுத்தனன்  =  யான்  அறிவின்மையால்  நீ  ஊட்டிய  அருளமுதத்தைஉண்ண  மறுத்துவிட்டேன்,

என்னை  நீ  வெறுத்து  விட்டுடுதி  =  அது  குறித்து  அடியேனை  நீ  வெறுத்துக்  கைவிட்டு  விடுவாயோ?(விடலாகாது) ,

வினையின்  தொகுதி  ஒறுத்து  என்னை  ஆண்டுகொள்   =   கன்மக்குழுவைக்  கடிந்து அடியேனை  ஆட்கொண்டு  அருள்வாயாக ,

 பெரியார்  சிறு  நாய்கள்  தம்  பொய்யினைப்  பொறுப்பர்  அன்றே  =  பெரியராயினார்  இழிந்த  நாய்களைப்  போன்ற  சிறியவர்  பொய்மையைப்  பொறுத்தருளுவாரன்றோ ?  என்பது .

விளக்கவுரை :-  இம்மை  வாழ்க்கைக்குரிய  மணி , பொன் , நெல் , முதலிய  பலவகைப்  பொருள்களுள்ளும்    மணி  சிறந்ததாகலின்  , அந் நிலையில்  வைத்து  இறைவனை  விளித்தது, அருளாரமுதத்தை   மறுத்துச் சேறலாற்  பெறத்தக்க  இவ்வுலகப்  பொருளும்   ஆக  அப்பெருமான்  விளங்குபவன்  என்னுங்  குறிப்புத்  தோன்றற்கென்க  . உலகத்தில்  அரிதிற்  பெறத்தக்க  ஒரு  சிறந்த  பொருள்  எளிதிற்  கிடைக்கும்  இயல்பினதாக  , அதனை  ஒருவன்  வெறுத்து விடுதற்குக்  காரணம்  , அப்பொருட்கண்  இன்று ; பெறுவோனிடத்து  அப் பொருளின்  அருமை   அறிதற்குரிய  நல்லறிவு  இன்மையே  யாகும் .  இவ்வுண்மை  தோன்றவே  “ மறுத்தனன்  யான்  உன்  அருளறியாமையால் “  என்றார்.  யான்  மறுத்தற்குக்  காரணம்  என்  அறியாமையாயின், அவ்வறியா மையை  வெறுத்தொழிக்க  வேண்டும்  அன்றி   அது  பற்றி  என்னை  வெறுத்துக்  கைவிடலாமா?  என்பார், “வெறுத்தென்னை  நீ  விட்டிடுதி”  என்றார் .  

                அரியாமையை  விளைவிப்பது  ஆணவ  மலம்  ஆதலானும்  , அவ்வாணவ  உறைப்புப்  பண்டை  தீவினையால்  வலியுற்றிருத்தலானும்  , அத்  தீவனை  பல்வேறு  வகையாகச்  செய்யப்பட்டுத்  தொகுதியாக  அமைந்திருத்தலானும்  அவ்வினைக்குழுவை  ஒறுத்து  அழித்து என்னை  ஆட்கொண்டருளின், நின்  அருளமுத நுகர்ச்சியில்  தலைப்பட்டு உய்வேன் என்பார் ,”வினையின்  தொகுதி  ஒறுத்தெனை  யாண்டுகொள்” என்றார். இனி,  “ஆண்டுகொள்  உத்தரகோசமங்கைக்கு  அரசே “  என்பதற்கு  “ஆண்டுகொண்ட  “  என  விரித்துப்  பொருள்  கோடலுமாம் . அங்ஙனம்  கொள்ளுங்கால்  , என் அறியாமையை  ஒழிக்க வேண்டியது   ஆட்கொண்ட  நினக்கு  இன்றியமையாததாகவும்  , என்னை  வெறுத்து  ஒழிக்கலாமா  வென்று  பொருள்  இயைபு  கொள்ளள்  வேண்டும்  .ஈற்றடியில்  முன்னர்க் கூறிய சிறப்புப்  பொருளை  உறுதிப்படுத்துப்  ‘பொறுப்பரன்றே  பெரியோர்  சிறு நாய்கள்  தம்  பொய்யினை யே  “ என உலகறிந்த தன்மையை யேற்றி முடித்தார்   . இது வேற்றுப்பொருள் வைப்பணியாகும் . பெரியோர்  இயல்பு  செயற்கரிய  செய்தல் என்பர் . அவ் வருஞ் செயல்களில் ஒன்று  சிறியோர்  செய்த பிழைகளைப்  பொறுத்தலாகும் . சிறுமையின்  இழிவு  தோன்றச்  “சிறு  நாய்கள்” என்றார்.  பொய் –  மனத்தால்  வஞ்சித்து  மொழியாற்  பிழைக்கூறிச்  செயலால்  மாறுபட  ஒழுகும்  தீயொழுக்கம் .

     இதன்கண், உன்  அருளமுதத்தை என்  அறியாமையால்  மறுத்தேன்  எனவும் , அதற்கு  மூல  காரணம்  என்  வினைக்குழு  எனவும்  , அவ்வினைக் குழுவை  ஒறுத்து ஆட்கொள்ளல் வேண்டுமெனவும் , அது பற்றி  என்னை வெறுத்துக்  கைவிடலாகாதெனவும் கூறப்பட்டிருத்தலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                          **************************************

பாடல் :7 .

பொய்யவ  னேனைப்  பொருளென  வாண்டொன்று  பொத்திக்கொண்ட

மெய்யவ  னேவிட்  டிடுதிகண்  டாய்விட  முண்மிடற்று

மையவ  னேமன்னு  முத்தர  கோசமங்  கைக்கரசே

செய்யவ  னேசிவ  னேசிறி  யேன்பவந்  தீர்ப்பவனே .

கருத்துரை :- முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  அருளமுதை மறுத்தமைக்குக்  காரணம்  கூறிப்  பிழை  பொறுக்க  வேண்டிய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அப்பிழையுடைமை  அறிந்தும் நின் அருட்பெருக்கால் அதனை மறைத்துக்  கொண்டனையாதலின்  , அது குறித்துக்  கைவிடல்  தகுமாவென  விண்ணப்பஞ்  செய்து  கொள்ளுகின்றார் .  

 பதவுரை :-  விடம்  உண் மிடற்று  மையவனே  =   நஞ்சத்தை  உண்ட  கண்டத்தின்கண்  கரிய  நிறத்தையுடையவனே  ,

மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு அரசே ,

செய்யவனே   =   சிவந்த  மேனியை யுடையவனே ,

சிவனே  =  இன்பவடிவினனே ,

சிறியேன்  பவம்  தீர்ப்பவனே  =  சிறியவனாகிய  என்  பிறப்பை ஒழிப்பவனே ,

பொய்யவனேனைப்  பொருள்  என  ஆண்டு  =  பொய்யொழுக்கம்  உடையவனாகிய  என்னை  ஒரு  பொருளாக  மதித்து  ஆண்டருளி,

ஒன்று  பொத்திக்கொண்ட  மெய்யவனே  =  ஒப்பற்றதாகிய  நின் அருட்பெருக்கால்  (என் பொய்மையை)   மறைத்து  என்னை  ஏற்றுக் கொண்ட  மெய்ப்பொருளாக  வுள்ளவனே ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ?(விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  தேவர்  முதலிய யாவரும்  அஞ்சும்படி  யெழுத்த தீங்கு  பயக்கும்  கொடிய  நஞ்சைத் தான் உண்டு   நன்மை பயக்கும்  அமிழ்தத்தை   அவர்க்கு  அருளிக் காத்த  பெரும்  வண்மை  இறைவன்  பால்  உள்ளதென்பது  புராண கதை .”வார்ந்த  நஞ்சயின்று  வானோர்க்கமுதமீ வள்ளல்” என  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியருளியதுங் காண்க. இப்  பேரருட்டிறத்தை  உலகம்  அறிந்து  உய்தற்பொருட்டு  உண்ட  நஞ்சை  மிடற்றில்  அடக்கி  அடையாளமாக  அம் மிடறு  கரிய நிறமாகவுள்ளான்  என்பார் , “விடமுண்மிடற்று  மையவனே” என்றார். மை  –  கருமை . உயிர்த்தொகுதி களுக்கு  அச்சம்  நேர்ந்துழி , அவ்வச்சத்தைப்  போக்கி  அருள்  புரிதற்கு  அடையாளமாகக்  கண்டம்  கரியராயினரேயன்றி   அக்கரு  நிறம்   இயற்கையன் றென்பதும் , “தீவண்ணன்”, “செம்மேனியெம்மான்”  என்று  தமிழ் மறை  கூறியபடி  அப் பெருமான்  திருமேனி  செந்நிறமாகுமென்பதும்   தோன்றச்  “செய்யவனே” என்றார் .

           நோயுடை  யொருவற்கு  நோய்  நீக்கத்திற்கு  மருந்தும்  , அதன் பின் உடல்  நலத்திற்கு நல்ல  உணவும்  தரப்படுதல்  போல , நஞ்சு  முதலிய  வற்றால்  நேரும்  துன்பத்தை  யொழித்துத்  தன்  அருளமுதத்தால்  இன்புறுத்துபவன்  என்பது  புலனாக  “சிவனே” என்றார். சிவன்  –  இன்பஞ் செய்பவன்  .  அமுதம்  உண்ணும்  வேட்கை  மிக்க  தேவர்க்கு  இடையூறாகத்  தோன்றியது  நஞ்சமாதலின்  ,அதனையொழித்து  அவர்  வேண்டியதை அருளியது  போல  , நிந்திருவடி  இன்பம்  பெறும் அவா  மிக்க  எனக்குத்  தடையாகவுள்ளது  பிறவிப்பிணியாதலின்  , அதனை  யொழித்தருளும்  கடமையும்  , நின் பாலது  என்பார் , “ சிறியேன்  பவங்தீர்ப்பவனே “ என்றார் . பவம்  –  பிறப்பு  . சிறியேன் பொய்யொழுக்கம்  உடையேனாயினும்  , நீ  ஆட்கொண்டமையால்  நினக்கு  ஆளாதற்குரிய  தகுதி  படைத்துள்ளேன்  என்பார் , “ பொய்யவனேனைப்  பொருளென  ஆண்டு  “  என்றார் .                   ஒன்று  –  ஒப்பற்றதாகிய  திருவருள்  .  ஒன்றால் என்புழி  மூன்றாம்  வேற்றுமை  தொக்குநின்றது .

             பொய்யொழுக்கம்  உடைமையால்  தகுதி இல்லாத  என்னை  அஃது  உடையனவாகப்  பொருட்படுத்து  ஆட்  கொள்ளுங்கால்  ,புரையிருக்கப்  புண்  ஆற்றியது  போல  என்  பொய்மையை  அறவே  போக்காமல்   நின்  எல்லையற்ற  அருட்பெருக்கால்  அதனை  மறைத்து   ஏற்றுக் கொண்டனை  என்பார், “ஒன்று  பொத்திக்கொண்ட  “ என்றார்.  பொத்துதல்  –  மறைத்தல்  . “என்  சிறுமையை  நின்  பெருமையினாற்  பொறுப்பவனே  “  என்றாற்போ லென்க  . அங்ஙனம்  மறைக்கப்பட்ட  வினையெச்சமே  இப்பொய்யுலக  வாழ்க்கையில்  யான்  இன்னும்  இருத்தற்குக்  காரணமாயிற்று  என்பது  குறிப்பு . மறைக்கப்பட்ட  என்  பொய்மை  விளக்கின்  முன்  இருள்  போல  மெய்ப்பொருளாகிய  நின்  திருமுன்  கெட்டொழியுமாதலின்  என்னைக்  கைவிடலாகாதென்பார், “மெய்யவனே  விட்டிடுதி” என்றார் .  

              இனி,  ஒன்று  என்பதற்கு  ஒப்பற்றதாகிய  வீட்டு  நிலையெனப்  பொருள்  கொண்டு  , இரண்டாம்  உருபை  விரித்து அதனை  மறைத்துக்  கொண்ட  மெய்யவனே  என்று  கோடலுமாம் .  அங்ஙனங் கொள்ளுங்கால் , ஆட்கொண்டமையால்  ஆளாய  பயனை  அடைய  வேண்டியது  இன்றியமை யாததாகவும்  , அப்பயனாகிய  வீட்டு  நிலையை  யான்  எய்தவாறு  மறைத்த னையே  , எதனையும்  வஞ்சியாமல்  அருளும்  மெய்ப்பொருளாகிய  நினக்கு  வீட்டு  நிலையை  மறைத்தல்  தகுமா?  என்னும்  குறிப்புத் தோன்ற  , “ஒன்று  பொத்திக்கொண்ட  மெய்யவனே  “  என்றார் என்று  கருத்து  விரித்துக்  கொள்ளல்  வேண்டும்  .

                இதன்கண், “ஒன்று  பொத்திக்கொண்ட”  என்றதனால்  பிரபஞ்ச  வாதனை  தாக்குதல்  குறித்து  அடிகள்  வருந்தினா  ரென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                          ***************************************

பாடல் : 8 .

   தீர்க்கின்ற  வாறென்  பிழையைநின்  சீரரு  ளென்கொலென்று

  வேர்க்கின்ற  வென்னை  விடுதிகண்டாய்விர  வார்வெருவ

  ஆர்க்கின்ற  தார்விடை  யுத்தர  கோசமங்  கைக்கரசே     

  ஈர்க்கின்ற  வஞ்சொடச்  சம்வினை  யேனை  யிருதலையே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  நின் அருட்பெருக்கால்  மறைக்கப்பட்ட  என்  பிழையைக்  கருதி  என்னைக்  கைவிடலாகாதென்று  வேண்டிய  அடிகள் ,இத்திருப்பாட்டில்  அங்ஙனம்  மறைப்பதற்கு  ஏதுவாக வுள்ள  கருணையினாலே  அதனை  அறவே  ஒழித்தருளல்  வேண்டுமெனவும்   அஃது  எவ்வாறு  ஆம்  என்று  அறியாமையால்  வருந்துகின்றேன்  எனவும்  விண்ணப்பஞ் செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :-  விரவார்  வெருவ  ஆர்க்கின்ற  தார்  விடை  =  பகைவர்  அஞ்சுமாறு  ஒலிக்கின்ற  கிண்கிணி  மாலையனிந்த  காளையூர்தியை யுடைய  ,

உத்தரகோசமங்ககைக்கு   அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

வினையேனை  இருதலை  அஞ்சொடு  அச்சம்  ஈர்க்கின்ற   =   தீவினை யுடையேனாகிய  என்னை  இருபுறத்தும்  ஐம்புலன்களோடு  அச்சமும்  நின்று  இழுக்கின்றன  ஆதலின் ,

என் பிழையை  =   என் குற்றங்களை  ,

நின் சீர்  அருள்  =  நினது  சிறப்புமிக்க  அருட் குணம் ,

தீர்க்கின்றவாறு  எங்கொல் என்று  வேர்க்கின்ற  என்னை  =  ஒழிக்கின்றவிதம்  எவ்வாறு  என்று  அஞ்சுன்கிற  அடியேனை  ,

விடுதி  =  கை  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது.

விளக்கவுரை :-   விரவுதல்  –  கலத்தல் .  அதலின்  விரவார்  என்பது  உள்ளக்கலப்பு  இல்லாத பகைவரை  யுணர்த்தும்  , தீவினை  வயத்தால்  இறைவனை  எள்ளி  வெறுத்து நிற்பார் , இரைவனது  எருதூர்தியின்  கிண்கிணிமாலை  ஒலி கேட்ட  துணையானே  அஞ்சி  நடுங்குவார் என்பது  தோன்ற  “விரவார் வெருவ  ஆர்க்கின்ற  தார்விடை” என்றார் . தார்  –  கிண்கிணி மாலை .  இறைவனுக்கு  பகையென்றும்  ,நட்பென்றும்  இல்லை யாயினும்  , வினைவயத்தால்  வெறுப்புற்றுக்  கருதுவார்  நிலை  நோக்கி  , “விரவார்” எனப்பட்டனர்  . இறைவனை  வீரமிக்கவன்  எனவும்  மகாருத்திரன்  எனவும்  மறை  கூறும்  .

              ஐம்புல  அவாக்களின்  வயப்பட்டுத்  தாம்  துன்புறுதற்கு  ஏது  தம் பண்டைத்  தீவினையெனக்  கொண்டு   தம்மை  “வினையேனை” என்றார்.  இருதலை  –  இருபுறமும் .  உம்மை  தொக்கது . இருபுறமும் என்பது ஈண்டுத்  தமக்கு  முன்னிடத்தையும்  பின்னிடத்தையும்  உணர்த்தும் . ஈர்தல்  –  இழுத்தல் . இஃது  இரண்டற்கும்  ஒக்கும் . ஆதலின்  அஞ்சொடு  என்புழி, ஒடு  உடனிகழ்ச்சிப்  பொருட்டாயிற்று . அச்சத்தையும்  கடக்கும்  ஆற்றலுடையது . ஐம்புல  இன்பமாதலின்  ,”ஒரு வினையொடுச்சொல்  உயர்பின் வழித்தே” என்னும்  விதிப்படி “அஞ்சொடு” என ஒடு உருபு புணர்க்கப்பட்டதென்க.  அஞ்சு  –  கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களுமாம் .

              இவை முன்னர்  ஈர்த்துச் செல்ல இவற்றால்  விளையும்  துன்பம் நோக்கிய   அச்சம்  பின்னர்  ஈர்ப்ப  இவ்விருதிறத்திற்கும்  இடைப்பட்டு  வருந்தலானேன் என்பார், “ இருதலை அஞ்சொடச்சம் ஈர்க்கின்ற” என்றார். ஈர்க்கின்றன  என்னும் முற்று  அன்சாரியை  கெட்டு  ஈர்க்கின்ற  என்றாயிற்று. இனி,  ஈர்க்கின்ற  என்பது  எதுகை  நோக்கி  ஈர்க்கின்ற  என்றாயிற்று எனக் கொண்டு  ஆர்வமும்  அச்சமும் இருபுறத்தும் நின்று  என்னை  அறுக்கின்றன என்று  பொருள்  கோடலுமாம் . ஈர்தல்  –  அறுத்தல் . எல்லையற்ற  ஆர்வத்தில்  உள்ளம் ஈடுபடுங்கால்  என்ன  துன்பம்  நேரிடுமோ  வென்னும்  அச்சம்  விளைதல்  இயல்பாதலின்  இங்ஙனம்  கூறினர் . ஆர்வமும்  அச்சமும்  என்னை  அலைப்ப அதனால்  விளையும்  குற்றங்களைக்  களைதற்கு  நிந் திருவருளையன்றி  வேறு  கருவியின்மையால்  அவ்வருள்  என்  பிழைக ளைக் களையு மாறும்  , அதற்குரிய  காலமும்  இன்னவென அறிந்து கொள்ள  இயலாமையால்  நடுங்குகின்றேன்  என்பார், “தீர்க்கின்றவாறென்  பிழையை  நின்  சீரருள்   என்கொலென்று  ,வேர்க்கின்ற  என்னை” என்றார். ஆண்டவன்  திருவருள் உயிர்களின்  குற்றங்களை ஒழிக்கவேண்டுமாயின்  , அஃது  எத்தகைய  தடையுமின்றி  ஒரு  கணப்பொழுதில்   நிகழத்தக்கதாகலின் இத்துணைத்தாழ்வைக்  கருதுங்கால்  வேறு  எவ்வாறு  தீர்க்க அவ்வருட்கு  உடன்பாடோ  என  ஐயுறுவார், “என்கொல்”  என்றார். வேர்த்தல்  –  அஞ்சுதல் . அது தெளிவுபெறாமையால்  உண்டாய  கலக்கத்தால்  நிகழ்வது .

      இதன்கண்,  “அஞ்சொடச்சம்  ஈர்க்கின்றன “  எனவும் , “என்பிழையை நின் சீரருள்  தீர்க்கின்ற  வாறு  எங்கொலோ”  எனவும்  கூறப்பட்டமையால்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                                   ***********************************

பாடல் : 9

இருதலைக்  கொள்ளியி  னுள்ளெறும்  பொத்து  நினைப்பிரிந்த

விரிதலை  யேனை  விடுதிகண்  டாய்வியன்  மூவுலகிக் 

கொருதலை  வாமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

பொருதலை  மூவிலை  வேல்வல  னேந்திப்  பொலிபவனே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  என்  பிழையைத்  திருவருள்  தீர்க்குமாறு  யாங்கனம்  என்று  அறியாமையால்  வருந்துகின்றேன் என்று  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  என்   பிழையை ஒழித்தற்குத்  திருவருள் துணைசெய்யவில்லையானால் , வேறுபோக்கிடனின்றிக்  கெட்டொழிய  நேருமே என்று  இரங்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- வியன் மூ  உலகுக்கு  ஒரு  தலைவா  =  மேல்  கீழ்  நடு  வென்னும்  பெரிய  மூன்று  உலகநளுக்கும்  ஒப்பற்ற  தலவனே ,

மன்னும்  உத்தர கோச மங்கைக்கரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே 

பொரு மூ இலை தலை வேல்  =  போர்செய்தற்குரிய  மூன்று  இலை  வடிவினவாகிய   நுனிகளையுடைய  சூலப்படையை  ,

வலன் ஏந்திப் பொலிபவனே   =   வலக்கையில்  ஏந்தித்  திகழ்கின்றவனே,

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு  ஒத்து  =  இரு புறத்தும் நெருப்பினையுடைய  ஒரு கொள்ளியின் உட்பகுதியில்  அகப்பட்ட  எறும்பைப்  போன்று  ,

நினைப்பிரிந்த விரி தலையேனை  =  நின்னை  விட்டு  அகன்ற  அலங்கோல  முடயேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- மூவுலகுக்கும்  என்புழி, முற்றும்மை  தொக்கு  நின்றது .    வியன்  –  பெருமை . உலகம்  மூன்றின் ஒரு  சிறு  கூறும்  விலக்கப்படாமல்  முழுதும்  என்றற்கு  ‘வியன்’  என்னும்  அடை  புணர்க்கப்பட்டது என்க . ஈடும்  எடுப்பும்  இல்லாத  தனித்தலைமை குறித்து “ ஒரு  தலைவா “என்றார்.  அடுத்து  “உத்தரகோசமங்கைக்கு  அரசே” என்றதனால்  மூன்று  உலகங்களுக்கும்  தனிபெரும்  தலைவனா கிய இறைவன் , உத்தரகோசமங்கை  என்னும்  திருத்தலத்தை  இராசதானித்தலைநகரமாகக்  கொண்டு  எழுந்தருளினான்  என்பது பெறப்படும் 

            பொருதல்  –  போர்செய்தல் . முத்தலை வேல்  –  சூலப்படை யாகும், இலை  வடிவினவாகிய  மூன்று   நுனிகளையுடைமையால்  ,வடமொழி  மறையில்  திருவுத்திரம்  என்னும்  பகுதியின்  தொடக்கத்தில்  இறைவனுடைய  சூலப்படைக்கு   வணக்கங்கூறப்பட்டிருத்தலால்  அதன் பெருமை அறியப்படும் . வலன் ஏந்தி –  வலக்கையில்  தாங்கி  எனவும் , வெற்றி  குறித்துத்  தாங்கி  எனவும் பொருள்படும் .  வலம்  –  வலன் ; வலப்பக்கமும்  வெற்றியுமாம் . எல்லாவுலகங்களுக்கும்   தலைவனாய்  உத்தரகோசமங்கைப் பதியில் அரசாய்  வீற்றிருக்கும்  ஆண்டவன்  சூலப்படையுடன்  விளங்கு கின்றவன்  என்றதனால் , தன்  ஆட்சியுட்பட்ட  மெய்யன்பரைக்  காமம்  முதலிய  பகைவருக்கம்   அணுகாமால் பதுகாப்பவன்  என்னுங்     கருத்துக்  குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறு  அறிக .

             இருதலைக் கொள்ளி  –  இரண்டு  பக்கமும்  நெருப்புப்பற்றி யெரியும்  கொள்ளிக்கட்டை , ஒரு  கட்டையின்  இருபக்கங்களிலும்   தீப்பற்றியெரியுங்கால்  அக்கட்டையின் நடுவிடத்தில் தங்கிய  எறும்பு  இருமருங்கும்  சென்று  உய்ந்து போதற்கு  இயலாமல்  கெட்டொழிதல்  போல , இவ்வுலக  வாழ்க்கையை வெறுத்தும் நின்னை  அணுக இயலாமலும்  வருந்தி உழல்கின்றேன் என்பார், “இருதலைக்கொள்ளியினுள்ளெறும் பொத்து” என்றார். கொள்ளி நடுவண் , கொள்ளிமேல்  என்னாது  கொள்ளியுள்  என்றது  ஒரு  நயம் .

                கொள்ளி நடுவிடத்துள்ள  எறும்பு  , அங்கும்  இங்கும்  சென்று  போக்கு  வழி  பெறாமல்  உழன்று  அக்கொள்ளிக்குப்  பற்றுக்கோடாக வுள்ள  தொன்றைத்  தானும்  பற்றி ஒருவாறு  உய்யவுங்கூடும்  . அக்கொள்ளி  நிலத்திற் கிடந்தால் அவ்வெறும்பும் நிலத்தில் இறங்கலாம்  அஃது ஒன்றிற்  சார்த்தப்பட்டிருந்தால்   அச்சார்ச்சிப் பொருளைத்  தானும்  பற்றி  உய்யலாம் . அக்கொள்ளி  உட்டுளையுடைய  மூங்கிலாக  இருக்க , முன்னரே அதன்  துளையுள்  ஓர்  எறும்பு  நுழைந்திருக்குமாயின்  , இருபுறமும்  நெருப்பு  எரியுங்கால்  அதனுட்பட்ட  அவ்வெறும்புக்கு  எவ்வாற்றானும்  உய்யும்  நெறி  இன்றென்பது  கண்கூடாகக்  காணத் தக்கது . இந் நயம்  கருதியே  கொள்ளி  மேல்  நடு  என்னாது  “இருதலைக்கொள்ளியின் உள்  எறும்பொத்து .” என்றார் என்க . இதனால்  அடிகளின்  ஆராய்ச்சி  நுண்கருத்துப்  புலனாதல்  அறிந்து இன்புறத்தக் கது  . இருதலைக்கொள்ளியின்  ஒருதலை  இவ்வுலக வாழ்க்கையின்  வெறுப்பிற்கும்  ,மற்றொரு  தலை  ஆண்டவனது  பிரிவுக்கும்  உவமம்  ஆயின. ஆண்டவனது  பிரிவினால்  உண்டாய  சூடும்  ஆற்றவொண் ணா தது  என்பது  கருத்து.  விரிதலை  – துன்ப  நிகழ்ச்சியினால் உண்டாம் அலங்கோலத்தின்   அறிகுறியாகும் . இங்ஙனம்  உய்யும்  நெறி  யறியாமல்  தவிக்கின்ற  நிலையில்  என்னைக்  கைவிடலாகாதென்பது  வேண்டுகோள்  விண்ணப்பமாகும் .

             இதன்கண், “இருதலைக்கொள்ளியின்  உள்ளெறும்பு  ஒத்த விரிதலையேனை “ என்றதனால்  உலக  வாழ்க்கையில்  வெறுப்புப்  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                              ********************************

பாடல்:10 .

பொலிகின்ற  நின்றாள்  புகுதப்பெற்  றாக்கையைப்   போக்கப்பெற்று

மெலிகின்ற  வென்னை  விடுதிகண்  டாயளி  தேர்விளரி

ஒலிநின்ற பூம்பொழில்  உத்தர  கோசமங்  கைக்கரசே

வலிநின்ற  திண்சிலை  யாலெரித்  தாய்புர  மாறுபட்டே.

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  திருவருள் துணை செய்யவில் லையானால்  உய்யும்  நெறி  பெறாமல் கெட்டொழிய  நேருமே  என்று  இரங்கிக்கூறிய  அடிகள் ,இத்திருப்பாட்டில்    அவ்வருள்   வடிவமாகவுள்ள  திருவடிக்கட்  புகல்  அடைந்தும் ,பிறவிப்பயனை யெய்தப்பெறாமல்  வருந்தலானேன் என்று இரங்குகின்றார்.

பதவுரை :- அளி தேர் விளரி ஒலி நின்ற பூ பொழில்  =   வண்டுகள்  பயின்று  பாடும்  விளரி என்னும் இசை நிலை பெற்ற பூஞ் சோலைகளையுடைய ,

உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  உத்தரகோச மங்கைக்கு அரசே ,

புரம்  மாறுபட்டு  =  முப்புரங்களையும்  பகைத்து ,

வலி நின்ற திண் சிலையால்  எரித்தாய் =  வன்மை மிக்க  உறுதியான  மேருவாகிய  வில்லினால்  அழித்தவனே ,

பொலிகின்ற  நின்  தாள் புகுதப்பெற்றும்   =   விளங்குகின்ற  நின் திருவடிக்கண் அடைக்கலமாக எய்தப்பெற்றும்  ,

ஆக்கையைப் போக்கப்பெற்று  =  ஊனடைந்த  உடம்பின் பிறவியை வீணாக்கி  ,

மெலிகின்ற  என்னை  =   வருந்துகின்ற  சிறியேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  விளரி  –  எழுவகை இசைகளுள்  ஒன்று .  தேர்தல்  –  நாடோறும்  பயின்று  ஒலித்தல் . மலர்களில்  தேன்  மிகுதியாக  விளைகின்றமையால்  வண்டுகள் நிரம்ப வுண்டு  களித்துப்  பாடினவென்பது . இதனால்  உத்தரகோசமங்கைப் பதியை  அணுகப்  பெற்ற  மெய்யன்பரனைவரும்  சிவானந்தத் தேனுண்டு  ஆண்டவனை  மனம்  உருகிப்  பாடி  இன்புறுவர்  என்னும்  குறிப்புப் புலனாதலறிக .      புரம்  –  திரிபுரம் . திரிபுரத்துள்ள  அசுரர்  தேவர்  முதலியோர்க்குச்  செய்த தீங்குகளைக்  கண்டு  அருள்  வள்ளலாகிய  இறைவன்  மேருமலையை  வில்லாக  வளைத்து  , அம்பெய்து அழித்தனர்  என்பது  புராணகதை . மலையை  வில்லாக  வளைத்த  செய்தி  இறைவனது பேராற்றற்கு  எடுத்துக்காட்டாகும் .  “வலி நின்ற  திண்சிலை “ என்புழி, வலியும்  திண்மையும்  மலையாகிய  வில்லைக் குறிக்கும் அடைமொழிகளாகும் .  மாறுபடுதல்  இறைவனுக்கு  இயற்கையன்று; புரம் எரித்தற்காக  அம்மாறுபாட்டை யேற்றுக்கொண்டான்  என்பது  கருத்து .  

               ஞானாசிரியனாக  எழுந்தருளிய ஞான்று  ஆண்டவனின்  திருவடிக்காட்சி  அடிகள்  உள்ளத்தைக்  கவர்ந்ததாகலின்  ,”பொலிகின்ற நின்றாள்” என்றார் . நிகழ் காலத்தாற்  கூறியது , திருவடி விளக்கம் இடையறாது  தம்  உள்ளத்தில் நிலை  பெற்றிறுத்தல் குறித்தென்பது .  புகுதப் பெறுதல்  –  அடைக்கலமாக அடையப்பெறுதல் . உம்மை  விகரத்தாற்  தொக்கது . ஆக்கை  ஆகுபெயரால்  பிறப்பை  உணர்த்தும் . ஆண்டவன் திருவடியைப்  புகலாகச்  சார்ந்தார்க்கு  ஊனடைந்த உடம்பின்  பிறவியால்  எய்தக்கடவ உறுதிப்பயன் எளிதாமென்று  கூறுவர்  பெரியார் . யான்  அங்ஙனம்  புகுதப்பெற்றும் , பிறவிப்பய னாகிய வீட்டின்பத்தை அடையாமல் வருந்தலானேன்  என்பார் , “ ஆக்கையைப்  போக்கப்பெற்று  மெலிகின்ற  என்னை “ என்றார் . இனி, “போக்கப்பெற்றும்” எனக்கொண்டு  ஆக்கை  என்பதற்கு  உடலைப்பற்றி அவா எனப்பொருள்கொண்டு  ,நின் திருவடியைப் புகலாகப் பெற்றும் உடம்பைப்பற்றிய அவாவை  யொழித்தும்  வீட்டின்பப் பேறு இல்லாமல் வருந்தலானேன்  எனக் கோடலுமாம் . இங்ஙனம் ஆதரவற்ற நிலையில் வருந்தும் என்னை  விட்டுவிடலாகாதென்பது  விண்ணப்பமென்க .

           இதன்கண்,  “பொலிகின்ற நின்றாள் புகுதப்பெற்று  ஆக்கையைப் போக்கப்பெற்று , மெலிகின்றேன்” என்றதனால்  உலக  வாழ்க்கையில்  பற்றறுதி பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல் அறிக .  

                                                ***********************************

பாடல் :11 .

மாறுபட்  டஞ்சென்னை  வஞ்சிப்ப  யான்உன்  மணிமலர்த்தாள்

வேறுபட்  டேனை  விடுதிகண்  டாய்வினை  யேன்மனத்தே 

ஊறுமட்  டேமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

நீறுபட்  டேயொளி  காட்டும்பொன்  மேனி  நெடுந்தகையே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிகட்  புகலடைந்தும் அழிவில்  இன்பப்பேறு எய்தப்பெறாமை  குறித்து வருந்திய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  புகலடையப்பட்ட  திருவடிக்கண்  மாறுபட்டமைக்கு   ஏதுக்கூறி காத்தருள  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .  

பதவுரை :- வினையேன்  மனத்தே  ஊறும்  மட்டே  =  தீவினையுடையேன்  ஆகிய  எனது  நெஞ்சத்தில்  ஊறும்  தேனே ,

மன்னும்  உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

நீறு  பட்டு  ஒளிகாட்டும்   =  திருநீறு  பூசப்பட்டு  வெண்ணிற  ஒளி  விளங்கும்  ,

பொன்மேனி  நெடுந்தகையோ  =  பொன் போன்ற  திருமேனியினை யுடைய   பெரியோனே ,

அஞ்சு  மாறுபட்டு  என்னை  வஞ்சிப்ப  =  ஐம்புலன்களும்   முரண்பட்டுச்  சிறியேனை  வஞ்சித்தமையால் ,

யான்  உன் மணிமலர்த்தாள்  வேறுபட்டேனை   =   நின் அழகிய  மலர்போன்ற  திருவடித் தொண்டிற்கு  வேறுபட்டு  ஒழுகும்  சிறியேனாகிய  என்னை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ ?  (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-   மட்டு  –  தேன் ; இறைவன்  ஆகிய  தேன்  ஊற்றெடுக்கும்  இடம்  தவத்தால்  தூய்மையுடைய  மெய்யன்பரது உள்ளம்  ஆகும் . “உருகு  மனத்து அடியவர்கட்கு   ஊறுந்தேனை  “ என்பது  தமிழ் மறை .அங்ஙனம்  வினைமாசு  நீங்கிய  இடத்தில் ஊறும்  தீந்தேன் தீவினையுடைய  என்  உள்ளத்தும்  ஊறுவதாகும்  என்று  அடிகள் கூறியது , ஆண்டவனது அளப்பரிய  அருட் குணத்தைப்  புலப்படுத்துவதாகும் . ஆண்டவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிய பொழுது அடிகளுக்குக்  காட்சிப்பட்ட  திருமேனியின்  நிறம்  பொன்னிறமாகும் .  ஆதலின்,  “பொன்மேனி” எனவும்  , அத்திருமேனி  திருவெண்ணீற்றுப்  பூச்சினால்  வெண்ணிற  ஒளி  திகழப்  பெற்றிருந்தமை யின் , “நீறுபட்டு  ஒளிகாட்டும் “  எனவும்  கூறினார் .அடிகளுக்கு  ஆண்டவன்  சிந்தைக்கு  இனியனாய்க்  கண்ணுக்கும்  இனிய  காட்சி  தந்தமையின் , “மனத்து  ஊறும்  மட்டு “ எனவும் ,”பொன்மேனி”  எனவும்  கூறியருளினார்  . இதனால் , அகப்புறக்  கரணங்கள் ஈடுபட்டமை  குறிப்பிற்  புலனாயவாறு  அறிக .

                நெடுந்தகை –  பெரியோன்  என்னும்  பொருட்டு . சிறியவர்  செய்த  பிழைகளைப்  பொறுப்பது  பெரியோர்  கடமையாதலின்  , தம் பிழையைப்  பொறுக்கவேண்டுமென்பது  குறிப்பிற்  புலப்பட  இங்ஙனம்  அழைப்பாராயினர் .  அஞ்சு  –  ஐந்து ;  ஆகுபெயரால் ஐம்புலன்களையும்   குறிக்கும் . ஐம்புலன்களும்  சிவாகாரமாக  நிகழ்தல்  நேரிதாகும் . உலகியற் பொருள்களாக  நிகழ்தல்   அதற்கு  மாறுபாடாகும்  .  “மாறிநின்றென்னை மயக்கிடும்  வஞ்சப்புலன் ஐந்தின் வழி “  என  அடிகள் பிறிதோரிடத்து கூறியதும்  காண்க. சிறந்த  மெய்யன்பராகிய   வரகுண பாண்டியற்குச்  சுவை , ஒளி, ஊறு , ஓசை , நாற்றம்  என்னும்  ஐம்புலநுகர்ச்சியும்  சிவாகாரமாக   நிகழ்ந்த  செய்தி  பட்டினத்து  அடிகள்  கூறியவற்றான்  அறியத்தக்கதென  முன்னர்க்  கூறினாம் . அங்ஙனம்  நிகழ்தலின்றி  உலகியல்  இன்பம்  நோக்கி  மகளிரைப்  பொருளாகக் கொண்டு  , “கண்டு கேட்டு உண்டு யிர்த்து  உற்றறியும்  ஐம்புலனும்  , ஒண்டோடி கண்ணேயுள” எனக்கோடல்   நேரிது  அன்றென்பார் , “மாறுபட்டஞ்சு  “ எனவும்  , இவ் வைம்புலன்களும்  சிவாகாரமாக  நிகழ்தற்குத்  தட்டு  இன்றாகவும், வஞ்சித்துப்  பிறழ்ந்து சேறல்  பற்றி, “என்னை  வஞ்சிப்ப”  எனவும்  கூறினர் . வஞ்சிப்ப  என்னும்  செயவென்  எச்சம்  காரணப்பொருட்டு .  

          ஆண்டவனே , புலன்கள்  என்னை  வஞ்சித்து உலக  வாழ்க்கையில்  ஈடுபடச்  செய்தமையால்  ,நின் திருவடித் தொண்டிற்கு  வேறு  படலானேன்  என்பார் , “யான்  உன்  மணிமலர்த்தாள்  வேறுபட்டேனை  “எனவும்  , அது  குறித்துச்  சிறியேனைக்  கை விடலாகாது  என்பார் , “ விடுதி கண்டாய்”  எனவுங்கூறுவாராயினர். “யான்  உன்  மணிமலர்த்  தாள் வேறுபட்டேனை “  என்புழி  வேறுபட்டேனை  யென்பதிலுள்ள   இரண்டனுருபைப்  பிரித்து ,யான்  என்பதனோடு  இயைத்து  , உருபு நோக்கி யான்  என்பது என்னென்றாக  ,என்னை  யெனக்கொண்டு  வேறுபட்டவனாகிய  என்னையென   இயைத்துப்  பொருள்  கூறப்பட்டது .பின்  வருவனவற்றிற்கும்  இஃதொக்கும் .

               இதன்கண் , “ மாறுபட்டஞ்சென்னை   வஞ்சிப்ப  யானுன்  மணிமலர்த்தாள்  வேறுபட்டேன்  “  என்று  உலக  வாழ்க்கையில்  வெறுப்புத்  தோன்றக்  கூறப்பட்டமையால் , பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                            *****************************************

பாடல்: 12 .

நெடுந்தகை  நீயென்னை  ஆட்கொள்ள  யான்ஐம் புலன்கள்கொண்டு

விடுந்தகை  யேனை  விடுதிகண்  டாய்விர  வார்வெருவ

அடுந்தகை  வேல்வல  உத்தர  கோசமங்   கைக்கரசே

கடுந்தகை  யேன்உண்ணும்    தெண்ணீர்  அமுதப்  பெருங்கடலே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடித் தொண்டில்  தாம்  மாறுபட்டதற்கு  ஏது, தம்  ஐம்புலங்களின்  வஞ்சகச்செயல்   ஆகுமெனக்  கூறிய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அவ்வஞ்சகச்  செயலை அறிந்தும் , அப்புலன்களைப்  பற்றி   நின்று  ஆண்டவன்  திருத்தொண்டைக்  கைவிடக்   கருதுகின்றேனே   எவ்வாறு  உய்தி  பெறுவேன்  என்று  கவல்கின்றார் .

பதவுரை :-  விரவார்  வெருவ  =  பகைவர்  அஞ்ச  ,

அடும் தகை  வேல் வல  =  அவரை  அழிக்கும்  தன்மையினையுடைய  சூலப்படையில்  வல்ல ,

உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  உத்தர கோசமங்கைக்கு  அரசே ,

கடும் தகையேன் உண்ணும்  =  கொடுந்தன்மையுடையேனாகிய  யான்  பருகுதற்குரிய ,

தெள்நீர்  அமுதம் பெருங்கடலே  =  தெளிந்த தன்மையினையுடைய  அமிர்தமயமான  பெரிய  கடலாகவுள்ளவனே  ,

நெடுந்தகை நீ  =  பேரருட்  குணமுடைய நீ,

என்னை  ஆட்கொள்ள  =  சிறியேனை  ஆளாகக் கொள்ளவும் ,

யான்  ஐம்புலன்கள் கொண்டு  விடுந்தகையேனை  =  ஐம்புல இன்பங்களைப்  பொருளாகக் கொண்டு  நின் சார்பைக்  கைவிடும்  இயல்பினன்  ஆகிய என்னை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  ஐம்புலப் பகையை  வேரறக்  களையும்  ஆற்றல்  எனக்கு  இல்லையாயினும்  , என்னை  ஆட்கொண்ட  நினக்கு  எத்துணை  வலிய  பகைகளையும்  களையும்  ஆற்றல்  நிரம்ப உண்டு என்பார், “விரவர் வெருவ அடுந்தகை வேல் வல “ என்றார் .வேல்  –  முத்தலை வேல் ; சூலப்படை . இறைவன்  தனக்குப்  பகையென்றும்  நட்பென்றும்  இல்லையாயினும்  , தன் அன்பர்க்கு  வரும்  பகை  களைதற்காகவே  சூலப்படையை என்றும்  திருக் கையில்  ஏந்தி இருப்பன்  என்பது .  இதனாலே சூலபாணி  என்று  மறைகளிற்  பாராட்டப்பட்டுள்ளான்  .  இதனால் ,காம  முதலிய பகை வருக்கம் எல்லாம் , இறைவனை அடைக்கலம்  புகுந்த மெய்யன்பரை அணுகுதற்கு அஞ்சும் என்பது குறிப்பிற்  புலப்படும்   என்க .

                  கடுந்தகை  என்பது கொடுங்குணம்  என்று  பொருள்படும் . அடிகள் தம் கொடுமைக் குணம்  தணிதற்கு ஆண்டவனது அருளமுதம் இன்றியமையாத தென்பார் , “உன்ணும்  அமுதப் பெருங்கடலே “என்றார். ஆண்டவனது  அருள் அமுதம் ஒரு சிறிது நுகர  நேரினும்  , உயிரைப்பற்றி  நிற்கும்  தீய  குணம்  ஒழிவு  எய்துவதாகும் “அமுதக்கடலே” என்றது தம்பால் உள்ள  கொடுமைக் குணம்   அளவின்  மிக்கதெனவும் , அத்துணையும்  ஒழிவு அடைதற்கு  ஆண்டவனது  அருளமுதம்  அதற்குத்தகப்  பெருக்கமாக  இருக்கவேண்டுமெனவும்  அடிகள் கருதியமையான் என்பது . அருளமுதத்தில்  ஒரு சிறு துளி பெறினும் தம் தீமை ஒழிந்துபோம் என்னும் உண்மை யுணர்ந்தும் , அதனைக்  கடல் அளவாகக்  குறித்தது , ஆண்டவனுடைய  அளப்பரிய  கருணைப்பெருக்கத்தையும் ,அதனை  மிகுதியாகப் பெறுவதில் தமக்குள்ள  பேரார்வத்தையும் புலப்படுத்தற்கு  என்க .  

                    மழை சுருங்கிய  காலத்துப்  பெளதிகக் கடல் தன் வளம் குறைவு  படுவதாகும் , “நெடுங்கடலுந்தன்  நீர்மை  குன்றும்  தடிந்தெழிலி  , தான்  நல்காதாகி விடின் “ என்பது பொருளுரை . ஆண்டவனது  அருளமுதம் வருவாயை எதிர்  பாராமலும் , அன்பர்கள் எத்துணை முகந்து கொள்ளினும் குறைபடாமலும் ,எக்காலத்தும் ஒரே படித்தாக  நிரம்பி  நிற்றல்  பற்றி  அதனை  அமுதக்கடல்  என்னாது  “அமுதப் பெருங்கடல் “ என்றார். அருளமுதத்திற்குப்  பிறிதொன்றின் சார்பு  இன்றி  இயற்கையிலே  தெளிவும்  தூய்மையும் உண்மையானும் , தன்னை  உண்டாரை  ஞானத் தெளிவுறுத்தும் தன்மையானும்  “தெண்ணீர்” என்னும் அடை  புணர்க்கப்பட்டது . இனி,  ஈற்றடியில்  வெம்மை  மிகுதியால்  நீர்வேட்கையுடையேனாகிய  யான்  உண்ணுதற்குக்  கிடைத்த அமுதம் போன்ற  தெளிந்த நீர்ப்  பெருங்கடலே  என்னும்  ஒரு  தொனிப்பொருள்  தோன்றுதலும்  அறிக .  

               நெடுந்தகை  என்பது  ஆகுபெயராய்ப்  பெருமைக் குணம்   உடையானைக்  குறிக்கும் .  ஈண்டுப்  பெருமைக் குணமாவது  ,சிறியோர்  செய்த  பிழைகளைப்  பொறுத்து ஆட்கொள்ளும்  பேரருளுடைமையாகும் . என்  தகுதி இன்மை அறிந்தும்  நின் பேரருள் காரணமாகச்  சிறியேனை  ஆட்கொண்டனை என்பார்,  “நெடுந்தகை  நீ என்னை  யாட்கொள்ள  “ எனவும் அங்ஙனம்  ஆட்கொள்ளவும்  அவ்வருமை  அறியாமல்  என்னைக்  கீழ்நிலைப் படுத்தும் ஐம்புல இன்பங்களைப்  பொருளாகக்  கடைப்பிடித்து ,நன்னிலைப் படுத்தற்குரிய  நின்  சார்பை  விடலானேன்  என்பார் . “யான் ஐம்புலன்கள்  கொண்டு  விடுந்தகையேனை “  எனவும்  கூறினார் . யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை என்பதை முன்னைத்  திருப்பாட்டில் கூறியாங்குக் கூறி  முடித்துக் கொள்க . ஆட்கொள்ளவும்  என்புழி  உம்மை தொக்கது . ஐம்புலன்கள் கொண்டு என்றதனால் விடுதற்குச் செயப்படு பொருள் வருவித்துரைக்கப்பட்டது . ஒருவனை ஆள்வார்  இல்லாத  நிலையில் அவன்  வேறு போக்கின்றி  மனம்  போன  வழியிற்  சென்று  கேடு  அடைதலும்  கூடும்  . அங்ஙனம்  இன்றி  ஆண்டவன்  தன் அருட்கு  இலக்காகத்  தம்மை வலிந்து ஆட்கொண்டும், தாம்  ஐம்புல  இன்பங்களைப்பற்றி  அவ்வருட் பயனை  இழக்கும் நிலையில் இருக்க  நேர்ந்ததே என வருந்தி , அது  காரணமாக  ஆண்டவன்  கை விட்டு  விடுவானோ  என அஞ்சி  ,”விடுதி கண்டாய்” என்றார் .

             இதன்கண்,  “ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேன்” என்றதனால்  உலக  வாழ்க்கையில் உள்ள  பற்றறுதி பெறப்படுதலின்  ,பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .  

                                           ***********************************

பாடல் :13 .

கடலினுள்  நாய்நக்கி  யாங்குன்  கருணைக்  கடலின்உள்ளம்

விடலரி  யேனை  விடுதிகண்  டாய்விடல்  இல்லடியார் 

உடல் இல  மேமன்னும்  உதர  கோசமங்  கைக்கரசே

மடலின்மட்  டேமணி  யேயமு  தேயென்  மதுவெள்ளமே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  புலன்களைப்பற்றி  நின்று  ஆண்டவனுக்குப்  பணிசெய்து  ஒழுகுதலைக்  கைவிடக்கருதும் தம் இயல்பு  குறித்து வருந்திய  அடிகள் , இத்  திருப்பாட்டில்  அங்ஙனம்  கருதிய  நிலையி லும்  ஆண்டவன்  தன்  கருணைப்  பெருக்கைக்  கடல் போலப்  புலப்படுத்தி னனாக  அதனை  ஆரப்பருகாமல்  அருவருத்து  வாய்வைக்கலானேனே  என்  செய்வேன்  என  இரங்கி  விண்ணப்பஞ்  செய்கின்றார் .

பதவுரை  :- விடல் இல் அடியார்  =  விடுதலை  இன்றிப்  பற்றி   நிற்கும்  மெய்யடியாரது  ,

உடல்  இலமே  மன்னும்  =  உடலையே  திருக்கோயிலாகக்  கொண்டு   அதன்  கண்ணே  நிலைபெற்று   வீற்றிறுக்கும்  ,

உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

மடலின்  மட்டே  =  மலர்  இதழில்  உண்டாகும்  தேனே ,

மணியே  அமுதே  =  மாணிக்கமணியே   அமிழ்தமே  ,

என் மதுவெள்ளமே  =  எனக்குக்  கிடைத்த  கட்பெருக்கே ,

கடலின்  உள்  நாய்  நக்கி  யாங்கு  =  கடலின்  கண்ணேயுள்ள  நீரை  நாய்  நக்கி  உண்பது  போல ,

உன் கருணைக் கடலின்  உள்ளம்  விடல்  அரியேனை  =   நினது  அருட் பெருங்கடலின் கண்ணே உள்ளத்தை  விரும்பிச் செல்லவிடாத  சிறியேனை ,

விடுதி =  கை விட்டு விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  ஓரொருகால்  விட்டும்  தொட்டும்  பற்றிநிற்கும்  இடையாய  அன்பர்  போலாது , இடையறாத  தியான  உணர்வினால்  தம்  உள்ளத்தே  நழுவ விடாது  பற்றியொழுகும்  தலையாய  அன்பர்  என்பார், “விடலில்லடியார்  “ என்றார் . “நாயகன்  சேவடி  தைவரு  சிந்தையும்  “  என்பது திருத்தொண்டர்  மாக்கதை  . முறுகிய  அன்பினாற்   பிணிக்கப்பட்டு  மெய்யன்பர்  நெஞ்சத்  தாமரையில்  இறைவன்  எழுந்தருளி  இருத்தலின்  , அவர்  தம்  நல்லுடல்  இறைவனுக்கு  உகந்த திருக்கோயில்  ஆகும்  என்பார் ,   “உடல்  இலமே  மன்னும் “  என்றார் . “வினைபடும்  உடல்  நீ  புகுத்து  நின்றமையால்  விழுமிய விமான மாயினதே  “  என்பது திருவிசைப்பா  .  “இலமே” என்புழி  ஏகாரத்தைப்  பிரித்து உடல்  என்பதனோடு  இயைத்து  இரண்டனுருபை  விரித்துக் கொள்க .

                    ஆண்டவனைப்  பற்றிய  அன்பு  முதிரப்பெறுதல்  வினைமாசு  நீங்கிய  நிலையில் ஆதலின் , மாசு  நீங்கிய  மெய்யன்பரது நல்லுடல்  மிகவும்  தூயதாகும் என்ப . நெஞ்சத்தைத்  தூய்மைப்படுத்தும் நெறியைக் குறித்துப் பட்டணத்துப் பிள்ளையார் “ அன்புகொடு மெழுகி அருள் விளக்கேற்றித்  , துன்ப இருளைத்  துரந்து முன்புற  ,மெய்யெனும்  விதானம் விரிந்து நொய்ய  , கீழ்மையில்  தொடர்ந்து கிடந்த என் சிந்தைப் , பாழறை  யுனக்குப்  பள்ளியறையாக்கிச் , சிந்தைத்  தாமரைச்  செழுமலர்ப்  பூந்தவிசு  , எந்தை  நீ  இருக்க  இட்டனன்”  என்பர் . “சிந்தையே கோயில் கொண்ட வெம் பெருமான்  திருப்பெருந்துறையுறை சிவனே  , எந்தையே யீசாவுடலிடங் கொண்டாய் “ என்று  அடிகள் பிறிதோரிடத்து அருளிய திருப்பாட்டில்  , நெஞ்சத்தை த்  திருக்கோயிலாகவும் ,உடலை அக்கோயில் அமைத்தற்கு உரிய நல்லிடனாகவும் கொண்டு கூறியதும் ஈண்டு  நினைக்கத்தக்கது .

                  மடல்  –  பூ இதழ் . மட்டு –  தேன். ஈக்களின்  எச்சிலோடு  அமைக்கப்படும்  இறாலில்  தொகுக்கும்  தேன்  போலாது , மலர்  இதழில்  உண்டாம்  தேன்  தூய்மை மிக்கதென்பது அறியத்தக்கது .தன்  திருவடி நீழலில்  இயைந்து  நுகர்வார்க்குத்  தூய்மையும்  இனிமையும்  உடைய  வீட்டின்பம்  அருளுதலின்  ,” மடலின் மட்டே” எனவும்  , அவ்வின்பம்  அருளுதற்குத்  தான்  மேற்கொண்ட  திருவுருவம்  செம்மை  மிக்க  ஒளியுடைய  ஞானாசிரியத்  திருக்கோலம்  ஆதலின் , “மணியே “ எனவும்  கூறினார் . “கோகழி  யாண்ட  குருமணிதன் தாள் வாழ்க “ என்பதும் ஈண்டு  நினைக்கத்தக்கது . தன்னையடைந்தாரை  மரணம்  இலாப் பெருவாழ்வில்  இருத்தி இன்புறுத்தலின்  , “அமுதே” என்றார் .அமிர்தம்  என்பது ஈண்டு  அழி வின்மை  என்னும்  பொருட்டு . “ எனை நானென் பதறியேன் பகலிரவாவதும் அறியேன் “ என்னும்  நிலையில் இவ்வுலகை  மறந்து சிவானந்தக்  களிப்பில்  தோய்ந்திருக்கச் செய்தமையின்  , “என் மது வெள்ளமே “  என்றார் . உலகத்தில் “தேட்கடுப்பன்ன  நாட்படு  தேறல்”  சிறிது  உண்ணினும்  களிப்பு  மிக வுண்டாம் . இறைவனாகிய  மதுச் சிறிதாக இன்றி வெள்ளமாகவும் உள்ளது ; முன்னைப்  பழமைக்கும்  பழமையாயது எனின் , அதன்  விளைவாகிய  களிப்பிற்கு  எல்லையின்று  என்பது அறியத்தக்கது .

         நல்ல  நீர்  எத்துனை  மிகுதியாக  இருப்பினும்  நாய்  உண்ணுங்கால் , நக்கிச் சிறிது சிறிதாக உண்ணும் அல்லது வேண்டுமளவு விரைந்து அதனாற்  பருக இயலாது . இவ்வியல்பு  தூய  நீர்ப்  பெருக்கிலாயின்  உவர்ப்புச்  சுவையுள்ள  கடல்   நீரை வேறு  போக்கின்றி உண்ண நேரின்  , விடாய்  மிகுதியால்  நீரில்  வாய் வைத்தும் , உவர்ப்பு  மிகுதியால் அருவருத்தும்  நக்கியுண்ணும்  என்பது . இது  கருதியே  “கடலினுள்  நாய்  நக்கியாங்கு” எனத் தொழில்  உவமம்  கொள்ளப்பட்டது . ஆண்டவன்  கருணைக்கடல் அமிழ்த மயம் ஆயினும்  , தம்  வினைப்பிறழ்ச்சியால்  அது  தமக்கு  உவர்க்கடல் போல்  ஆயிற்று  என்பதும் , நாடகத்தால்  உன்னடியார் போல் நடித்து  என்றதற்கேற்ப வேறு  போக்கின்றித்  தம்  உள்ளத்தைத்  திருவருள் தோய்வில்  சிறிது செலவிடுத்தும் , வலிய  கன்மத்தடையால்  அருவருத்து  அங்ஙனஞ்  சிறிது செல்ல  முற்பட்ட  உள்ளத்தை  ஈர்த்துக்  கோடலான்  செல்லவிடாமல்  நேர்ந்தது என்பதும்  அடிகள்  கருத்து என்க. 

              இக்கருத்துப் புலப்படவே  “உன் கருணைக் கடலின்  உள்ளம் விடலரியேனை “ என்றார். கருணைக்கடல்  என்புழிக்  கடல்  ஈண்டு  மிகுதி குறித்தது . “விடலரியேன்” என்றது சிறிது மெல்ல  விடுத்தும்   விடாமையைப்  புலப்படுக்கும் . இங்ஙனம்  கிட்டுதற்கு  அரிய  கருணைக் கடலின்  அணிமை  பெற்றும்  அதன்கண்  உள்ளத்தை முற்றும்  செல்லவிடுவதற்குரிய   தவப்  பேறில்லாத  சிறியேனைக் கைவிட்டு விடுவாயோ? விடலாகாது  என்பது விண்ணப்பம்  ஆகும் . உள்ளத்தைச்  செல்லவிடாமைக்கு  ஏதுவாகிய  என்  வினையினும் , அதனை  யீர்த்துக்  கோடற்கு  ஏதுவாகிய  நின்  அருட்பெருக்கு  வலியுடையது  என்பது  குறிப்பு .

             இதன்கண்  “உன் கருணைக்கடலின் உள்ளம்  விடலரியேனை” என்றதனால்  இறைவனது அருட்பெருங்கடலில் தம் உள்ளம்  செல்லாமை  குறித்து அடிகள்  இரங்கியது பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாயவாறு  அறிக .  

                                                   ***************************************

பாடல் :14 .

வெள்ளத்துள்  நாவற்றி  யாங்குன்  அருள்பெற்றுத்  துன்பத்தின்றும்

விள்ளக்கி  லேனை  விடுதிகண்  டாய்விரும்   பும்அடியார்

உள்ளத்துள்  ளாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைகரசே

கள்ளத்து  ளேற்கரு  ளாய்களி  யாத  களியெனக்கே .

கருத்துரை :-  ஆண்டவன்  அருட்பெருக்கில் தலைப்படக் கிடைக்கப்பெற்றும் ஆர்ப்பருகாமல்  அருவருக்கலானேனே  யென்று  முன்னைத் திருப்பாட்டில்  இரங்கிக்கூறிய  அடிகள் ,இத் திருப்பாட்டில்  திருவருள்  வெள்ளத்தில்  மூழ்கியும்  உலக வாதனையாகிய  துன்பத்தினின்றும்  விடுதலை பெறாமல்  வருந்தலானேனே யென்று  இரங்குகின்றார் .  

பதவுரை :- விரும்பும்  அடியார்  உள்ளத்து  உள்ளாய்  =  நின்னை  விரும்பி  அன்பு  செய்யும்  மெய்யடியார்  நெஞ்சத்து வீற்றிருப்போய் ,

மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

வெள்ளத்துள் நாவற்றி  ஆங்கு =  நல்ல  நீர்ப்பெருக்கில்  மூழ்கிக்கிடந்தும்  ஒருவர்க்கு  நாவறட்சி  உண்டாயது போல ,

உன் அருள்பெற்று  இன்றும்  துன்பத்து விள்ளக்கிலேனை  =  நின் திருவருட் பேற்றிற்கு  ஆளாகியும் இன்றும்  உலக வாதனையாகிய  துன்பத்தினின்றும்  நீங்குதற்கு உரிய ஆற்றலில்லாத  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

கள்ளத்துள்ளேற்கு  எனக்கு  =  வஞ்சகச்  செயலுடை யேனாகிய   எனக்கு ,

களியாத  களி அருளாய்  =  பொறிபுலன்களின்  வாயிலாக  எய்தப்பெறாத   மாறிலா  மகிழ்ச்சியை அருள் புரிவாயாக  என்பது .

விளக்கவுரை :-  முன்னைத் திருப்பாட்டில்  “விடலில்  அடியார்  உடலிலமே மன்னும்” என்றார் . விடுதலும்  பற்றுதலும்  உள்ளத்தின் செயலானும், உடலுறுப்பாகிய  கைகளின் செயலாகக்  கொள்ளுதற்கும்  தட்டின்று . அதனால்  ஆண்டு அச்செயற்கு  எற்ப உடல் இலமே மன்னும்  என்று  கூறியது பொருத்தமாகிய  ஒரு நயம் என்க . இத் திருப்பாட்டில்  “விரும்பும் அடியார் “ என்புழி விரும்புதல் ஆகிய செயல்  உள்ளத்தைப்  பற்றியதே  ஆதலின் ,அதற்கு ஏற்ப, “உள்ளத்துள்ளாய் “என்று  கூறினர்  என்பது .”சிந்தையே கோயில் கொண்ட வெம்பெருமான்”  என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

             நல்ல  தண்ணீர்   பெருக்கில்  மூழ்கிக்  கிடப்பவன்  ஒருவன்  நாவறட்சியால்  துன்புறுவானாயின்  , அதற்குக்  காரணம்  நீர்க்குறையன்று  ; அவன்  வினைக் குறையே  ஆகும்  . அது போல் யாண்டும்  இடையறாது பெருக்கெடுத்து ஒழுகும்  இறைவனது  அருளில்  தோயப்பெற்றும்  , பொறி  புலன்கள் விளையும் உலகவாதனையாகிய  துன்பத்தின்  நீங்க  இயலாமை  தம்  தவக் குறையே  யன்றி  ஆண்டவன்  குறையன்று  என்பார், “வெள்ளத்துள் நாவற்றியாங்குன்  அருள் பெற்றுத்  துன்பத்தின்றும்  விள்ளக்கிலேனை “ என்றார் .  அருள் பெற்றும்  என்புழி  உம்மையும் ,துன்பத்து என்புழி நீங்கற் பொருளில்  வந்த இன் உருவும் செய்யுள்  விகாரத்தால்  தொக்குநின்றன .

              நல்ல நீர்  வெள்ளத்துள்  தோய்ந்தாற்கு  நீர்  வேட்கை  அறவே  இன்றாதலோடு  , உடற்  சூடு  தணிந்து தட்பமும்  உண்டாம் . அது போல  ஆண்டவன்  திருவருளில்  தோயப் பெற்றார்க்குப்  பொறி புலங்களால்  ஆகிய  துன்பம்  அறவே  இன்றாதலோடு  , பரமசுகம்  ஆகிய  பேரின்பமும்  உண்டாம்  இவ்வுவமையிலும்  பொருளிலும் ஒன்றன்  நீக்கமும்  ஒன்றன்  விளைவும்  ஆகிய  இரண்டு  பயன்கள் உளவாம் என்பது பெறப்பட்டது .  இப் பயன்களுள்  தட்பமும் பேரின்பமும்  முடிவானவை . அவற்றை  நோக்க  விடாய்  தணிதலும்   துன்பம்  ஒழிதலும்  தொடக்கமானவை . தொடக்கப்பயனே  இலதாயிற்று  என்பது , “நாவற்றியாங்கு” என்னும்  உவமையாலும்  “துன்பத்து  விள்ளக்கி லேன்”  என்னும்  பொருள் இயல்பாலும்  தெளிவிக்கப்பட்டது  என்க .

             ஒளியின்  தோற்றமும்  இருளின்  ஒளியும்  ஒருகணத்து  ஒருங்கு  நிகழும்  அன்றிக் கால  இடையறவுக்கு  இடன்  இன்றாம் . அது போல  ஆண்டவனாகிய  நின்  திருவருட்  பேறும்  உலகவாதனை ஆகிய  துன்ப  நீக்கமும் ஒருங்கு  நிகழவேண்டுவனவாகவும்  , அங்ஙனம்  இன்றி  என் வல்வினையின்  ஏதுவால் நின் திருவருட் பேறு  எய்தியும் ,இன்னும்  துன்ப  நீக்கம் பெற்றிலேன்  என்பார், “இன்றும் விள்ளக்கிலேனை  “ என்றார்.  விள்ளுதல்  – நீங்குதல் . கில்லேன்  என்பது  ஆற்றல்  உடையன் அல்லேன்  என்னும் பொருட்டு . இதனால் “அவனருளாலே  அவன்றாள்  வணங்கி”  என்றபடி  திருவருட் பேறும் அவன்  அருளால்  எய்துதல்  போலத்  துன்ப நீக்கமும் அப்பெருமானது  ஆற்றலால்  ஆவதன்றித்  தம் ஆற்றலால்  இயல்வது  அன்று என்று அடிகள் கருதினார்  என்பது  போதரும் . யான்  துன்பத்தினின்றும் நீங்குதற்கு  உரிய  ஆற்றல்  நின்கண்ணதாதலின்  , அதனின்  நீங்காமை குறித்து என்னைக்  கைவிடல்  தக்கது  அன்று  என்பார் “விடுதி கண்டாய் “  என்றார்.

             இனி,  கைவிடாமல்  செய்யத்தக்கது  யாது  என்னும்  வினாவிற்கு  விடையாக  “அருளாய்  களியாத  களியெனக்கு” என்றார் . களியாத களி” என்றது பொறிவாயிலாக  நுகரப்படும் புலன்களினால்  விளையும்  அழிதன்  மாலையதாகிய  இன்பம்  அல்லாத  பேரின்பத்தை . இதுகாறும்  நுகர்ந்த  இன்பக்களிப்பு  ஐம்பொறியளவில்  நுகர்ந்த  புலன்களால்  ஆகிய  சிறிய  இன்பமாகும் . அஃது  அல்லாத  அழிவில் இன்பமே களியாத  களி  எனப்பட்டது  இது மெய்யுணர்வினால்  நுகரத்தக்கது . இதனை  “உணர்வினேர் பெறவருஞ் சிவ போகம்”  எனவும், “பூண்டவைம்  புலனிற்  புலப்படா இன்பம்  புணர்ந்து  மெய்யுணர்வினிற்  பொங்க “  எனவும் சேக்கிழார் அடிகள் கூறுவர் . இத்தகைய  சிறந்த  இன்பத்தை  “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்றபடி  தவத்தில்  ஈடுபட்டுத்  தம் நெஞ்சத் தவிசில்  நின்னை  வீற்றிறுக்கச் செய்யும்  மெய்யன்பர்க்கு வலிந்து எளிதில்  அருளுவையாதலின், அதனை  வஞ்சம் உட்பொதிந்த  வல்வினையாளனாகிய   யானே  இரந்து கோடற்கு  உரியவன்  என்பார் , “ கள்ளத்துளேற்  கருளாய்” என்றார்.

              இதன்கண்,  “உன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும்  விள்ளக்கி லேனை  “ என்றதனால்  உலக வாதனையாகிய  துன்பத்திற்கு  ஆற்றாது  அடிகள் இரங்கியது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதல் அறிக .

                                         ********************************************

பாடல் :15 .

களிவந்த  சிந்தையொ  டுங்கழல்  கண்டுங்  கலந்தருள 

வெளிவந்தி  லேனை  விடுதிகண்  டாய்மெய்ச்  சுடருக்கெல்லாம்

ஒளிவந்த  பூங்கழல்  உத்தர  கோசமங்  கைக்கரசே

எளிவந்த  எந்தைபி  ரானென்னை  யாளுடை  யென்னப்பனே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  இறைவன்  அருட்கு  இடனாகியும்  உலகியல்  துன்பத்தினின்றும்  நீங்கப்பெறாமை குறித்து இரங்கிக்கூறிய  அடிகள் ,இத் திருப்பாட்டில்  இறைவன்  திருவடிக்காட்சி  பெற்றும் , அத்துவித  இன்பப்பேற்றின்  நிமித்தம்  உலக வாதனையினின்றும்  வெளிப்பட  இயலாமை குறித்து இரங்குகின்றார்.

பதவுரை :- மெய்ச்சுடருக்கெல்லாம்  =  மெய்மையான  ஒளி  மண்டிலங்களுக்கெல்லாம் ,

ஒளிவந்த   பூ கழல்  =  ஒளி  உண்டாதற்கு  ஏதுவாகிய  பொலிவு  மிக்க  திருவடியினையுடைய  ,

உத்தரகோச மங்கைக்கு அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

எளிவந்த  எந்தை பிரான்  =  எளிமையிற்  காட்சி  நல்கிய  எந்தந்தை  முதலியோர்க்கும்  தலைவனே ,

என்னை  ஆளுடை  என் அப்பனே  =  சிறியேனை  ஆளாகவுடைய  என்  தந்தையே ,

களி வந்த  சிந்தையொடு  =  மகிழ்ச்சி  மிக்க  உள்ளத்தோடு ,

உன் கழல் கண்டும்  =  நின்  திருவடியைத்  தரிசித்தும் ,

கலந்து அருள  வெளிவந்திலேனை  =  நீ  என்னோடு  இரண்டறக்கலந்து  அருளும்  வண்ணம்  வெளிப்பட்டு  வந்திலேனை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ  ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :- ஞாயிறு  திங்கள் தீ  முதலிய மண்டிலங்கள் எல்லாம் இயற்கையின்  அமைந்த  ஒளியுடையன ஆதலின் ,”மெய்ச்சுடர்” என்னப்பட்டன . அவ்வொளி மண்டிலங்களின் ஒளிக்கூறுகளே உலகத்துக்  காணப்படும் பிற வொளிகளெல்லாம்  ஆம் . ஆயினும் அம் மண்டிலங்களுக்கு  ஒளி உதவியது ஆண்டவன் திருவடி  என்பார், “ஒளி வந்த பூங்கழல் “ என்றார் . ஈண்டு  வந்த என்னும் எச்சம்  காரியப்பொருட்டு  , காரணம் திருவடியாகலின் . “ தேயமாரொளிகளெல்லாம் , சிவனுருத்தேசது  “ என்று  சித்தியாரில்  உலகத்துள்ள  ஒளிகள்  எல்லாம்  இறைவனது  திருமேனி  ஒளியே  யாகும்  எனக்  கூறியிருத்தல் அறிக . “ஓங்கொளியா   யருண்ஞான மூர்த்தியாகி  “   என்னும்  பாட்டுக்கு  மதுரைச்  சிவப்பிரகாசர்  எழுதிய  விளக்கவுரையில்  “வெளிவந்திலேனை விடுதி கண்டாய் மெய்ச்  சுடருக்கெல்லாம்  ஒளி  வந்த பூங்கழல்  ……. என்பதுங்  கண்டு  கொள்க “ என்று  இத் திருவாசகப்  பகுதியை மேற்கோளாக  எடுத்துக் காட்டி யிருத்தலும்  அறிந்து இன்புறத்தக்கது .

                    அவயவ அவயவைகளின்  வேறுபாடு  இன்மையைப்பற்றி  உருவின்  ஒளிதிருவடிமேல்  ஏற்றிக் கூறப்பட்டது என்க . “அழலார்  ஒளியன  காண்க  ஐயாறன்  அடித்தலமே” எனவும்  , “சோதியும்  செஞ்சுடர்  ஞாயிறும்  ஒப்பன்  தூமதியோடு  , ஆதியும்  அந்தமுமான ஐயாறன்  அடித்தலமே” எனவும்  போந்த  தமிழ்  மறைகளில்  இறைவன்  திருவடியையே  ஒளி  வடிவமாகக்  கூறியிருத்தலும்  அறிக . ஒளி மண்டிலங்களுக்கெல்லாம்  தன்  திருவடியினின்றும்  ஒளி உதவும் இறைவனது  வருகை  அரியதின் அரியதாகவும்  , கருணைகாரணமாகத்  தமக்கு  எளிமையிற்  கிடைத்ததென்பார் . “எளிவந்த” எனவும், அங்ஙனம்  எளிமையாதற்கு  ஏதுவாகிய  கருணை தானும்  “என் குடி முழுதாண்டு  வாழ்வற  வாழ்வித்த  மருந்தே” என்று  அடிகள்  பிறிதோரிடத்து அருளிச்செய்தபடி  தம் வழி  முதல்வராகிய  முன்னையோரை  ஆட்கொண்டு  வழிவழித்  தலைவனாக  தொடர்புடைமை  பற்றியது என்பார் , “எந்தய் பிரான் “ எனவும்  , பாசப்பிணிப்பில்  உழலும்  யான்  இறைபணி புரிதற்குரிய  தவம் உடையேன்  அல்லேன்  எனினும்  ,வழி வழித் தொண்டு கொண்ட தொடர்புடைமையால்  , எனக்கு  உண்மைத் தந்தையாகவும் நின்று  ஆட்கொண்டனன்  என்பார், “என்னையாளுடையென்  அப்பனே” எனவும்  கூறினர் . ஒருவனை ஆட்கொள்ளுவோன்  அவனுக்குத்  தந்தையாக  இருக்கவேண்டும்  என்னும்  நியமம்  இன்மையால் ஆளுடையப்பன்  என இயைத்துக்  கூறப்பட்டது என்க.

                   ஒன்றைக்  காணுங்கால் அக்காட்சி , விருப்பொடு  காண்டல்   வெறுப்பொடு  காண்டல்  என  இருதிறப்படும்  . அவ்விருவகைக்  காட்சியாலும்  விளையும்  பயன்  , முறையே  இன்பமும்  துன்பமும்  ஆம்.  உலகியலிற்  காண்பவன்  உள்ளப்  பிறழ்ச்சியால்  இன்பம் விளைக்கும் காட்சியில்  வெறுப்பும்  , துன்பம்  விளைக்கும்  காட்சியில்  விருப்பும்  நிகழ்தலும்  உண்டு . அங்ஙனம்  இன்றி  ஈண்டு இறைவன்  திருவடிக்காட்சி  அழிவில்லாத  பேரின்பம் பயப்பதென்னும்  உண்மையுணர்ந்து , மிக்க  மகிழ்ச்சியோடு  அடிகள் அதன் கண்  தலப்பட்டமையை  “ களி  வந்த சிந்தையோடு  உன்கழல்  கண்டும்”  என்னும்  தொடரால்  புலப்படுத்தரு ளினர் .

                      பாசப்பிணிப்பின்  ஆற்றலால்  சிறிதும்  வெறாது , மகிழ்ச்சி  மிக்க  உள்ளத்தோடு  திருவடிக்காட்சியில்  தலைப்பட்டனர்  என்பது அத் தொடரின்  பொருளாகும் . இஃது இறையருளிற்  கலத்தற்கு  உரிய  முதற் சாதனம்  ஆகும். இச்சாதனத்தைத்  தம்  கடமையாகவும்  இதன்பயனாகிய  திருவருட் கலப்பை  ஆண்டவன்  கடமையாகவும்  கொண்டு  “கலந்தருள்” என்றார்.  காண்டல்  அடிகளின்  செயல் . கலந்தருளல்  ஆண்டவன்  செயல்  . வெளிவரல்  –  உலகியற்  பிணிப்பினின்றும்  வெளிப்படல்  . முன்னர்த்  தன்னின்  வேற்றுமையறக்  கண்ட  உலகத்தைத்  தன்னின்  வேறாகக்  கண்டு அக்கட்டினின்றும்  வெளிப்பட்டு  இறையருளில்  வேறறத்  தோய்தலுமாம் .

                           இனி, கலந்தருள வெளிவந்திலேன் என்பதற்குக்  கலத்தற்கு உரிய  ஞானவெளிக்கட்  போந்திலேன்  எனக்  கோடலுமாம் . சாதனம் பேதசாதனம்  அபேத சாதனம்  என இருவகைப்படும் . பேதசாதனம் இறைனனைத் தன்னுள் வேறாகக்  கண்டு  நினைதல் . அபேதசாதனம் வேறறக் கண்டு  நினைதல் . இதனையே  சிவோகம்  பாவனை என்று  சிவாகமம்  கூறும் . இவ்விரண்டனுள்  முன்னதன்  முதிர்ச்சியில் பின்னது உண்டாம் . “உன் கழல் கண்டும் “ என்பது பேதசாதனமும் வெளி வருதல்  அபேத சாதனமும் ஆம் என்க . வேறற நினைதலின்  பயனே  பாசப்பிணிப்பு  ஒழிந்து பேரின்பம் நுகர்தற்கு ஏதுவாம் என்பது. “உன் கழல்  கண்டும் “ என்புழி உம்மை முதற் சாதனம் பெற்றும்  இரண்டாம்  சாதனம்  எய்தப்பெற்றிலனே என்னும் இரக்கக்குறிப்பைப்  புலப்படுத்து நிற்றல் அறிக . இங்ஙனம்  முடிவான பயனை விளைக்கும் அபேத சாதனப் பேறு  எய்தப் பெறாத குறையைக்  காரணமாகக் கொண்டு  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ? (விடலாகாது) என்பார் , “ விடுதி கண்டாய் “ என்றார் .

                    இதன்கண் , “கலந்தருள  வெளிவந்திலேனை”  என்றதனால் உலக  வாதனை குறித்து அடிகள் இரங்கியது பெறப்படுதலின் ,பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                           *************************************

பாடல் : 16 .

என்னையப்  பாவஞ்சல் என்பர்  இன்றிநின்  றெய்த்தலைந்தேன் 

மின்னையொப்  பாய்விட்  டிடுதிகண்  டாயுவ  மிக்கின்மெய்யே

உன்னையொப்  பாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

அன்னையொப்  பாயெனக்  கத்தனொப்  பாயென்  அரும்பொருளே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவன்  திருவடிக்  காட்சி  பெற்றும்  உலக  வாதனையினின்றும் வெளிபட இயலாமை  குறித்து இரங்கிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  இயலாமைக்கு ஏது  தகுதியில்லாரை  உடையராகக்  கருதி  அலைந்து இளைத்ததாகும்  என்று  கூறுமுகமாக  ஆண்டவன்  அருண்மொழியை வேண்டி  விண்ணப்பம்  செய்கின்றார் .  

பதவுரை :-  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

மின்னை ஒப்பாய்  =  காட்சிப்பட்ட அளவில்  மின்னலை  ஒப்பாய் ,

மெய்யே  உவமிக்கின்  =  மெய்மையாகவே  நினக்கு  உவமை  கூறப்புகின்  ,

உன்னை  ஒப்பாய்  =  நின்னையே  நீ ஒப்பாய்  ,

எனக்கு  அன்னை  ஒப்பாய்  அத்தன் ஒப்பாய்  =  எனக்குத்  தாயையும்  தந்தையையும்  ஒப்பாவாய் 

என் அரும்  பொருளே  =  எனக்குப்  பெறல் அரும்  பொருளாக  உள்ளவனே ,

என்னை  அப்பா  அஞ்சல்  என்பவர்  இன்றி  =  என்னை  நோக்கி  ‘அப்பா அகஞ்சாதே’ என்று  சொலுவார்  இல்லாமல் , 

நின்று  எய்த்து  அலைந்தேன்  =  வருந்தி நின்று  அலைந்து  இளைத்தேன்,

விட்டிடுதி  =  இந் நிலையில்  விட்டு விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அடிகளுக்குக் காட்சி தந்த பொழுது , அப்பெருமானது  திருமேனி  மின்னலைப் போல்  ஒளிவிட்டுக்   கண்கொள்ளாக் காட்சியாக  விளங்கினமையால் , “மின்னலை ஒப்பாய் “  என்றார் . உவமேயப்பொருளினும்  உவமம்  உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்னும்  விதி ,கடவுளுக்கு  ஒப்புக்கூறப்புகுங்கால்  வலியிழந்து  ஒழியுமாதலின் ,அந்  நிலையில்  உலகியற் பொருள்களில் சிறந்தது ஒன்றை எடுத்துக்காட்டுதல்  கவி  மரபாகும் . அம் முறயில் மின்னல்  ஈண்டுக்  கூறப்பட்டது . இறைவன் திருமேனியின்  நிறவொளி பற்றியும் ,அடிகளுக்குக்  காட்சியளித்து உபதேசித்து விரைவில்  மறைந்தருளிய தொழில் பற்றியும் வந்தமையால் , இஃது உருவும் வினையும் பற்றிய உவமம்  ஆகும் .

                     பின்னர் , “மெய்யே உவமிக்கின்”  என்றமையால் ,இவ் உவமை உபசாரமாகக்  கூறியதாகும்  அன்றி, உண்மை ஆகாதென்பது போதரும்  .உண்மையாகவே  உவமை  கூறப்புகின்  இறைவனுக்கு  உவமம்  ஆகப்  பிறிதொரு  பொருள்  யாண்டும்  இன்றாம் .இறைவனுக்கு  ஒப்பாய பொருளும்  இன்று ; இறைவன்  ஒருபொருளுக்கு ஒப்பாதலும்  இன்று. இதனை  “ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன்  ஓர் உவமன்  இல்லி” என்னும்  தமிழ் மறையில் ஒப்புடையன்  அல்லன் எனவும் , உவமன்  இல்லி  எனவும்  கூறியிருத்தலால்  அறிக . இந் நயம் தோன்றவே  அடிகள் “மெய்யே உவமிக்கின் உன்னை யொப்பாய் ‘  என்றார் .”நின்னாவார் பிறரின்றி  நீயே யானாய்” என்பதும் அப் பொருட்டு . ஈண்டு  ஆக்கச்சொல் உவமை குறித்து .

                  இறைவ , நின்னை நோக்க  நினக்கு  ஒப்பு  நீயே  யாவாய்  அன்றிப்  பிறிதொரு  பொருள் இன்று .  சிறியேனாகிய  என்னை  நோக்கி  நினக்கு  உவமம்  கூறப்புகின் , எனக்குத்  தாயும்  தந்தையும் போல்வாய்  என்பார், “ அன்னை யொப்பாய்  எனக்கு  அத்தன் ஒப்பாய் “ என்றார். ஈண்டு  எனக்கு  என்றது எடுத்த உடலோடு  கூடிய  நிலை  பற்றியாம் . ஈன்று  வளர்த்தலில்  தாயும் , சான்றோன்  ஆக்குதலில்  தந்தையும் ஒருவர்க்கு  உலகியலில்  இன்றியமையாத  உதவியாளர்  ஆவர் . ஆதலின்  , அவ்வியல்பு  குறித்துக்  கன்மத்துக்கு ஈடாக  மாயையினின்றும்  உடலுதவியமையால்  , அன்னை யொப்பாய்  எனவும் , அறிவு  உபதேசம்  செய்து நன்னிலை  நிறுத்தலின் , “அத்தன்  ஒப்பாய்” எனவும்  கூறினர் .

                      இம்மை  மறுமை இரண்டிலும் பெறுதற்கு  உரிய பொருள்களினும்  அரிய  பொருள் என்பது  கருதி “என் அரும் பொருளே “ என்றார். இம்மைக்கு உரியது புகழும் மறுமைக்கு உரியது அறமும்  ஆகும்  இவ்விரண்டனையும்  கடந்து வீட்டிற்குரிய  மெய்ஞானத்தால் அரிதிற் பெறத்தக்க பொருளே இறைவனாதலின்  இவ்வாறு  கூறப்பட்டதென்க .

                      ஆண்டவனே , எனக்கு உண்மையான  தாயும்  தந்தையும் அரும்பொருளுமாக  உடனிருந்து ஆதரிக்கும் அரும்துணை ஒப்புயர்வற்ற   பரம்பொருளாகிய  நீயே  என்பதை உணராமல் ,நின்னையல்லாத  பிற தேவர்  மக்கள் முதலியோரை உளங்கொண்டு  ,அவருள் யாரும் எனக்கு  அபயம்  அளிப்பர் இல்லையே  என்று  என்  அறியாமையால் நினைந்து , அதனால் அலைந்து  இளைத்து வருந்தலானேன்  என்பார்,  “ என்னையப்பா அஞ்சல்  என்பவரின்றி நின்று  எய்த்தலைந்தேன் “ என்றார் .  அப்பா என்பது தந்தை மகனை நோக்கிக்கூறும் செல்ல மொழியாகும் . அஞ்சல்  –  அஞ்சவேண்டா . துன்ப நீக்கமும்   இன்பப்  பேறும்  ஒருவர்க்கு  வேண்டுவனவாயினும் , முதலில்  அச்சம்  காரணமாக உண்டாம் துன்ப  ஒழிவே இன்றியமையாத தாகும் . இது  கருதியே  “அஞ்சல்  என்பவர்” என்று கூறப்பட்டது . அடிகளுக்கு இம்மை  மறுமைப்  பேறுகளைப்  பற்றிய அச்சம்  நேர்ந்திருக்குமாயின்  , மக்கள் தேவருள் யாரும் அஞ்சல் என்று கூறி  ஆதரித்தற்கு  எளிமையிற்  கிடைப்பர் .  

                        அடிகளின்  குறிக்கோள் அங்ஙனம்  இன்றி வீட்டு  நிலை  பற்றியதாகலானும்  , அதற்குத்  தடையாகவுள்ள  பாசப்பிணிப்பின்   ஒழிவிற்கு அஞ்சல்  என்று  கூற  அன்னார்  தகுதியற்றவராதலானும்  ”என்பவரின்றி”  எனவும் , அறியாமையாற்  கழிந்த பல பிறப்புக்களிலும்   தகுதியில்லாரைக்  குறிக்கொண்டு  அலைந்து இளைத்தேன் என்பார் , “ எய்த் தலைந்தேன் “ எனவும்  கூறினர் . எய்த்தலைந்தேன்   என்பதை அலைந்து எய்த்தேன்  என  மாற்றிப்  பொருள் கொள்ளல்  வேண்டும் . அலந்து  எய்த்தல்  என்பது ஈண்டு  அஞ்சவேண்டா என்று  கூறுவாரை  நாடி  நினைந்து நினைந்து  சலித்து  இளைத்தல் . இது  மனத்தின்  செயல் . என் அறியாமை யால்  உண்மைப்பொருளாகிய  நின்னைக் குறிக்கொள்ளாமல்  பிறரைக் கருதி அலைந்த பிழை காரணமாக  என்னைக்  கைவிடலாகாதென்பார் , “விட்டிடுதி”  என்றார் . இதனால் , “அப்பா  இனி  அஞ்சற்க “ என்று  ஆண்டவன்  திருவாயால்   தமக்கு  ஓர்  அபய  மொழி  கூறவேண்டும் என்பது அடிகள் திருவுள்ளம்  ஆதல்  குறிப்பிற்  பெறப்படுவதாம் .

                            இதன்கண் , “என்னை  யப்பா  அஞ்சல்  என்பவரின்றி  நின்றெய்த் தலைந்தேன்  “ என்றதனால் அடிகள்  உலகியற்   பொருள்களைக்  கருதி  வருந்தியமை  பெறப்படுதலின்   பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                             *************************************

பாடல் :17 .

பொருளே  தமியேன்  புகலிட  மேநின்  புகழ்இகழ்வார் 

வெருளே  எனைவிட்  டிடுதிகண்  டாய்மெய்மை  யார்விழுங்கும்

அருளே  யணிபொழில்  உத்தர  கோசமங்  கைக்கரசே

இருளே  வெளியே  யிகபர  மாகி  யிருந்தவனே  .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  அபய மொழி அருளுதற்குத்  தகுதியில்லாரை  உடையராகக்  கருதி உழன்று  வருந்தியதற்கு  இரங்கிய  அடிகள்  , இத் திருப்பாட்டில்  அம் மொழி  அருளுதற்கு  உரிய  தகுதியுடைய  உண்மைப்பொருளும்  தமக்குப்  புகலிடமாகவுள்ளவனும்  இறைவனே  எனத்  தாம்  தெளிந்த உண்மையை  எடுத்துக் கூறி ஏற்று  கொள்ள விண்ணப்பம்  செய்கின்றார் .

பதவுரை  :-  நின் புகழ்  இகழ்வார்  வெருளே  =  நின் மெய்ப்புகழைப்  பழித்துரைக்கும்   பொய்மையாளர்க்கு  அஞ்சத்தக்க  பொருளே  ,

மெய்யார்  விழுங்கும்  அருளே  =  புகழ்  பாராட்டும்  மெய்யாளர்க்கு  உண்ணும்  அருளமுதமே ,

அணி பொழில்  =  அழகிய  சோலை  சூழ்ந்த  ,

உத்தரகோச மங்கைக்கு  அரசே  =  உத்தரகோச மங்கைக்கு  அரசே ,

இருளே  =  மாயாகாரியப்  பொருளைப்  பற்றிப்  புறப்பார்வையால்  நோக்குவார்க்கு  மறை பொருளாக  வுள்ளவனே ,

வெளியே  =  உலகியற்  பொருள்களை  மாயாகாரியமென  உணர்ந்து விலக்கி  அகப்பார்வையால்  நோக்குவார்க்கு  வெளிப்படு  பொருளாக வுள்ளவனே  ,

இகபரம்  ஆகி  இருந்தவனே  =  எனக்கு  இம்மையும்  மறுமையுமாய்  இருந்து இதுகாறும்  உதவி  புரிந்த  பெருமானே ,

பொருளே  =  மெய்ப்பொருளாகவுள்ளவனே ,

தமியேன்  புகல்  இடமே  =  வேறு  துணையிலியாகிய  எனக்குப்  புகலிட மாகவுள்ளவனே  ,

விட்டிடுதி   =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது . 

விளக்கவுரை :-  இறைவனைப்பற்றிய  புகழே  மெய்மையானதாகும் இறைமைக்  குணம் இல்லாரைப்பற்றிய  புகழ்  பொய்மையாய்ப்  புனைந்துரையாய்  முடியும் . இவ்வுண்மையை  “இருள்சேர் இருவினை யுஞ்  சேரா  இறைவன் , பொருள்சேர்  புகழ்  புரிந்தார்  மாட்டு “ என்னும்   பொருளுரையானும்  , அதற்கு  “இறைமைக் குணங்கள் இலராயினாரை   உடையரெனக்கருதி அறிவில்லார்  கூறுகின்ற  புகழ்கள் பொருள்  சேராவாகலின்  அவை  முற்றுமுடைய  இறைவன்  புகழே பொருள்சேர்  புகழ்  எனப்பட்டது  “ என்னும்  பரிமேலழகர்  உரைப்பகுதியானும்  உணரலாம் . ஒரு பொருளைப் பற்றி  விருப்பு  நிகழ்தல்  , வெறுப்பு  நிகழ்தல்  இரண்டும் இன்றாதல் என்னும்  முத்திறத்துள்  இறைவனது பொருள் சேர்  புகழில்  விருப்பம்  நிகழ்தல்  இன்றியமையாததாகவும் , அங்ஙனம்  விரும்பாமையோடு  விருப்பு  வெறுப்பு  இரண்டும்  இன்றாம் . அவ்வளவிலும்  நில்லாது ,வெறுத்தது  இகழ்தல்  கொடிது என்பார் , “நின் புகழ் இகழ்வார்”  என்றார் . வெருள்  –  அஞ்சத்தக்கது . பின் “மெய்மையார்  விழுங்கும்  அருளே  “  என்புழி  மெய்மையார்  என்றத னால்  , புகழ் இகழ்வார் பொய்மையாளர்  என்பதும் , விழுங்குதல்  வினையால்  அமுதம்  என்பதும்  பெறப்படுதலின்  , ஈண்டு  அஞ்சத்தக்க  நஞ்சமே என்பதும் பெறப்படும் . மெய்மையார்  –  மெய்யன்பர் . இறைவன்  திருப்புகழை  மெய்யன்போடு  பாராட்டுவோர்  , பொய்மை யாளர்  புகழ் இகழ்பவராதலின்  , மெய்மையார்  புகழ்  பாராட்டுபவர்  என்பது புலனாம்  என்க .

                  இறைவன்  திருவருளைக் குறித்து அருளாரமுதம்  என  அடிகள் கூறுவாராதலானும்  , விழுங்குதல் வினையாலும்  அருள் அமுதமாக  ஈண்டுக்  கொள்ளப்பட்டது  . மாயையின்  , ஆக்கப்  பாடாகிய  உலகத்தைப் பற்றிப்  புறப்பார்வையால்  நோக்கி , அதுவே  பொருள்  என  அமைவார்க்கு  இறை  விளக்கம்  புலப்படாமையின்  , “இருளே” எனவும், அவ்வுலகியற்  பொருள்களை  மாயா  காரியம்  எனக் கண்டு  “ பரமே  பார்த்திருப்பார்  பதார்த்தங்கள்  பாரார் “ என்றபடி  பரம்பொருளைப் பற்றி  அகப்பார்வையால்  நோக்கி  உணர்வார்க்கு  அப் பொருள் நன்கு புலப்படுதலின்  , “வெளியே” எனவும்  கூற்னர் .   இவ்வுண்மையை ,

     “தன்னே  ரிலாஞான  சம்பந்தன்  தாளடைந்தார்க்

                   கென்னே   யிருள்வெளியாம்  என்பரால்  –  அன்னோன்

                             அருளாத  போதுவெளி  யாயிருந்த  வெல்லாம்

                             இருளா  யிருந்த  வெனக்கு “

                   என்னும்  குமரகுருபர  அடிகள்   அனுபவமொழியும் புலப்படுத்து வதாகும் . ஞானாசிரியன்  திருவடியைச்  சார்ந்தார்க்கு  இருள்  வெளியாகு மென்பர் ; எனக்கு  அப்பெருமான்  அருள்  பெறாத  பொழுது  வெளியாகக்  காணப்பட்ட  மாயாகாரியப் பொருளெல்லாம்  , அருட்பேறு  எய்தியதும்  புலப்படாமையின்  , இருளாயின  வென்பது  இப்பாட்டிற்  புலப்படவைத்தது என்க . மாயாகாரியமாகிய  உலகப் பொருள்களைப்  புறப்பார்வையால்  நோக்குவார்க்கு  இறை விளக்கம்  புலப்படாது என்பதையும் ,அவற்றைக்  காரணங்களுள் ஒடுக்கி  அகப்பார்வையில்  இறை விளக்கமாகக்  காண்பார்க்கு  அப் பொருள்கள்  புலப்படாவென்பதையும் ,

மரத்தை  மறைத்தது  மாமத  யானை

மரத்தின்  மறைந்தது  மாமத  யானை

பரத்தை  மறைத்தது  பார்முதற்  பூதம்

   பரத்தின்  மறைந்தது  பார் முதற்  பூதம் .

என்னும்  திருமந்திரத்தானும்  உணர்க .

               அடிகள்  தமக்கு  வாய்த்த  இப்பிறப்பில்  இறைவனை  ஞானாசிரி யனாகப்  பெறும்  பேறு  பெற்றமையாலும் , இப்பெறலரும் பேற்றிற்கு  முன்னைத்தவம்  காரணம்  ஆதலானும், அத்தவச்  செயல்கள்  இதுகாறும்  கிடைத்த  இம்மை  மறுமை  இரண்டிலும்  ஈட்டப்பட்டன  வாகலானும், அங்ஙனம்  ஈட்டுதற்கும்  அப்பெருமான் திருவருளே  துணைநின்றது  என்னும்  குறிப்புத்  தோன்ற  “இகபரமாகி  யிருந்தவனே” என்றார். இப்பிறப்பின்  ஒழிவில்  மறுமையும்  அதன்  ஒழிவில்  இம்மையுமாக  மேன்மேலும்  என்னை  இன்னும்  இம்மை  மறுமைக்கு  ஆளாக்கலாகாது ; இம்மட்டில்  இகபரச் சார்பை  ஒழித்து  இனி, வீட்டு  நிலைக்கு  ஆளாக்கவேண்டுமென்னும்  தம்  உட்கோள் உண்மை  புலப்பட  , “இகபரமாகியிருப்பவனே” என்னாது , “இருந்தவனே” என  இறந்தகாலத்தாற்   கூறியருளினர். .

                 இப்பிறவி காறும்  தமக்கு  இம்மையிலும்  மறுமையிலும்  உபகரித்து  அருளிய  பெருமானே  அவ் இம்மை  மறுமை  இரண்டையும்  கடந்த  வீட்டு  நிலையாகிய  அழிவில்  இன்பத்தை  வழங்குதற்குரிய  மெய்ப்பொருளும்  ஆவான் என்பார், “பொருளே” என்றார். பொருள்  –  மெய்ப்பொருள் . “பொருளல்லவற்றைப்   பொருலென்று  உணரும்”  என்புழிப்  பொருள்  என்னும்  சொற்கு  மெய்ப்பொருள்  என்று  பரிமேலழகர்  கூறிய  உரையானும்  அறிக .  பிறிதொரு  சார்பும்  இல்லாமல் , தனிப்பட்ட  எனக்கு  எப்பொருட்கும்  சார்பாகிய  மெய்ப்பொருளாகிய  நீயே  முடிவாக அடைதற்குரிய  இடனாவாய்  என்பார் , “தமியேன்  புகலிடமே  “ எனவும் , நின்னையே   மெய்ப்பொருள் என  உணர்ந்து புகலிடமாகக்  கருதி அடைந்தேனைக்   கைவிடில் , பிறிதொரு  பற்றுக்கோடு  இல்லாத  யான்  என்  செய்வேன் ; என்னைக்  கைவிடலாகாது  என்பார் , “விட்டிடுதி  கண்டாய்”  எனவும்  கூறினர்.

              இதன்கண் , “பொருளே  தமியேன்  புகலிடமே” என  இறைவனைச்  சுட்டிக்  கூறியமையால்  , அவன்  அல்லாத  மாயாகாரியப்பொருள்கள்  எல்லாம்  நிலை இல் பொருள் என்பதும் , அப்பொருட் சார்பு   வேண்டத்தக்க தன்று  என்பதும் பெறப்படுதலின்  ,பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                            *************************************

பாடல் : 18 .

இருந்தென்னை யாண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை                             

                                                                              யென்னினல்லால்

விருந்தின  னேனை  விடிதிகண்  டாய்மிக்க  நஞ்சமுதா 

அருந்தின  னேமன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

மருந்தின  னேபிற  விப்பிணிப்  பட்டு  மடங்கினர்க்கே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  , எனக்கு  இம்மை  மறுமைகளில்  துணை நின்று  உபகரித்தும் முடிவான  புகலிடமாகவும்   உள்ள  உண்மைப் பொருள் நீயேயென  இறைவனைக்  குறித்துக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில் , அங்ஙனம்  புகலிடமாக  அமைந்த  நீயே  அடிமையாகிய  என்னை  ஆண்டு  கொள்ளல்  முதலியவற்றிற்கும் உரிமையுடையை  ஆதலின்  அம்முறையில்  யாது  செய்யினும்  செய்க. புதியன்  எனக்கொண்டு  கைவிடல்  மட்டும்  ஆகாதென  விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .

பதவுரை :-   மிக்க  நஞ்சு  அமுதா  அருந்தினனே  =  கடலில்   தோன்றிய பெருநஞ்சை  அமிழ்த  உணவாகக்  கொண்டு  உண்டருளினவனே ,

மன்னும்  உத்தரகோசமங்கைக்கு  அரசே  =  மன்னும்  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

பிறவிப் பிணிப்பட்டு  மடங்கினார்க்கு   =  பிறப்பு  ஆகிய  நோய்வாய்ப்பட்டு  முடக்கம்  உற்றார்க்கு,

மருந்தினனே   =  நோய்  தீர்க்கும்  மருந்தாக  வுள்ளவனே ,

இருந்து  =  என் உள்ளத்தே  எழுந்தருளியிருந்து ,

என்னை  ஆண்டுகொள்  விற்றுக்கொள்  ஒற்றிவை  =  அடிமையாகிய  என்னை  ஆண்டு  கொள்க  விற்றுக்கொள்க  ஒற்றிவைத்துக்கொள்க  ,

என்னின்  அல்லால்  =  என்று  கூறுதலன்றிப்  பிறிதொன்றும் செய்தற்கு  உரிமை  யில்லாத,

விருந்தினனேனை  =  புதியவனாகிய  என்னை,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  திருப்பாற்  கடல்  கடைந்த  பொழுது  கடை  கயிறாகவுள்ள   வாசுகி யென்னும்  பாம்பின்  வாயினின்று  வெளிபட்ட  ஆலாலம் என்னும்  கொடிய  நஞ்சு  என்பது  தோன்ற, “மிக்க நஞ்சு “என்றார். மிகுதி அளவானும்  கொடுங்குணத்தானும்  ஆம்  என்க .  “ஓங்கும் ஒருவிடம்  என்புழி  , உலகம் முழுதையும் சுடும் வண்ணம் மேன்மேலும் வளர நின்றதோர்  விடம் “ எனப் பேராசிரியர்  உரை  கூறியதுங் காண்க . இறைவன்  தற்பயன்  கருதாமல் உலகம்  உய்தலில்  உவகையுடன்  என்பது  புலப்பட  ,” நஞ்சு அருந்தினன் “ என்றார். அமுதம் உண்ணுங்கால்  உண்டாம் உவகை நஞ்சும்  உண்ணுங்கால் உண்டாயிற்றென்பது  கருத்து.  “ மருந்து வானவருய்ய  நஞ்சுண்டு  உகந்திருந்தவன் “  என்பர்  திருநாவுக்கரசர் , வானவர்  மருந்துண்டு  உய்யத்  தான் உகந்து நஞ்சுண்டு இருந்தவன் என இயைத்துப் பொருள் கொள்ளல் வேண்டும் . ஈண்டு  இருந்தவன்  என்றது , விரைவில் அழிதற்குரிய  பெருநஞ்சை  யுண்டும்  , அழிவின்றி  இருந்தவன்  என்னும்  பொருட்டு  . வார்ந்த நஞ்சயின்று  வானோர்க் கமுதமீந்த புராண கதையைக்  குறிப்பிட்டது, இறைவன்  பேரருள் வண்மையைப்  புலப்படுத்தற்கென்க.

                 உடலைப்பற்றி  நின்று  துன்புறுத்தும் நோய்  போல ,உயிரைப்பற்றி நின்று  துன்புறுத்தலின்  , பிறவியைப்  பிணி  என்றார் . நோய் , துன்பத்தையே  விளைவிப்பதாகும்.பிறவி  இடையிடையே இன்பத்தையும் விளைக்குமெனின், அவ்வின்பந்தானும்  துன்பம்  விரவியதாகலானும் , வீட்டின்பத்திற்குத்  தடை  யாயிருத்தலானும்  அவ்வீட்டின்பத்தை நோக்கத்  துன்பமாகவே  முடியும்  என்பது.  மடங்குதல்  –  ஆற்றல்  குன்றி  முடக்கம்  எய்துதல் . நோய்வாய்ப்  பட்டார் கை,கால்  முதலிய  உறுப்புக்கலின்  வலி  குன்றிக் கிடத்தல்  போலப்  , பிறவிப்  பிணிப்பட்டார்  வீட்டை  யடைதற்குரிய  ஆற்றல் குன்றி  யுழல்வ ரென்பது  கருத்து.  நோய்  நீக்கத்திற்கு  நன் மருந்தின் உதவி  இன்றியமையா தது. அது போலப்  பிறவி  நோய்க்கு  மருந்தாவான் இறைவன்  என்பார், “மருந்தினனே  பிறவிப்  பிணிப்பட்டு  மடங்கினர்க்கெ “  என்றார். மருத்துவனால்  தரப்படுவதன்றே  மருந்து .  இங்கே  மருத்துவனாகிய இறைவனையே  மருந்தாகக்  கூறியது எங்ஙனம் பொருந்தும் எனின் , மருந்தின் இயல்பு கூறிய வள்ளுவர் “உற்றவன்  தீர்ப்பான்  மருந்துழைச்  செல்வான்  என்று, அப்பால் நாற்கூற்றே மருந்து “ எனத் தீர்ப்பானையும்  உடன்  கூறியமையாற் பொருந்தும் என்க.

                       இருத்தல்  –  வேறறக்  கலந்திருத்தல் . உலகத்தில்  ஒருவன்  தனக்கு  உடைமையாகவுள்ள  ஒரு  பொருளை  ஆளுங்கால் , ஆளப்படும்  அப்பொருளும்  ஆள்பவனாகிய  தானும்  வேறாக இருத்தலைக் காண்கிறோம்  இறைவன்  தன் உடைமையாகிய உயிரை ஆளுங்கால் , அவ்வுலகியற்கு  மாறாக வேறறக்கலந்து நின்று  ஆள்வன்  என்பது  போதர  , “இருந்து” என்றார். ‘கடையவனேனைக்   கருணையினாற்   கலந்தாண்டு  கொண்ட “ என்பது  அடிகள் திருவாக்கு . ஒரு  நிலம்  உடையான்  , அதனை  ஆண்டனுபவித்தல்  , விற்றல் , ஒற்றிவைத்தல்  என்னும்  இம்மூன்றுஞ் செய்தற்கு  உரிமையுடைய னாதல்  உலகியலிற்  கண்டது . ஈண்டு  அவ்வுலகியலைத்  தழுவித்  தம்  உடல்  பொருள்  ஆவி  மூன்றும் இறைவன் உடைமையெனக்  கண்ட  அடிகள் இம்மூன்றனுள்  எது  வேண்டுமானாலும்  செய்துகொள்க  என்பார், இங்ஙனம்  கூறினர் .

                       இம்மூன்றனுள் விற்றல் , விலையாகப்  பிறிதொரு  பொருளைப் பெற்றுக்கொண்டு  தன் பொருளைக் கொடுத்தல் ,அஃது  ஊதியங்  கருதிய தால்  , மாற்றப்படும்  அப்பிறிது  பொருளின்  இன்றியமையாமை   கருதியதால் செய்யப்படுவதாகும் . ஒற்றிவைத்தல்   தகுதியான  பொருள்  பெற்று  நில  முதலியவற்றை  அடமானமாக  வைத்தல் . அஃது ஒருவன்  கையில்  பொருள் இல்லாத  காலத்தில் அப்பொருள்  நிமித்தம்  செய்யப்படு வதாகும் . இவ்விரண்டும்  வேண்டுதல்  வேண்டாமை  யில்லாதவனாகிய  இறைவனுக்கு  அவசியம்  இல்லாதனவாம் . ஆண்டு  கோடல்  –  ஆண்டனுப வித்தல்  . மக்கள் ஆட்சி  ஆண்டானுக்குப்  பயன்  விளைப்பது. இறைவன்  ஆட்சி  அடிமைக்குப்  பயன்  விளைப்பது ,ஆண்டவன்  அருள்  வடிவினனா தலின்  , ஆண்டு  கொள்ளுதலிலே  நோக்க  முடையவனாவனென்பது  அடிகளின்  உட்கோளாகும் .

          இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித்  தமக்கு  உபதேசித்த பொழுதே  அடிகள் தம்  உடல் , பொருள் , ஆவி  எல்லாம்  இறைவன்  உடைமையெனக்  கண்டவராதலான் , அவ்வுரிமை  கருதி ,” நின் உடைமையை  எங்ஙனம்  செய்யினும்  செய்க” என்று  கூறும் அவ்வளவன்றி  வேறு  யாதுஞ்செய்தற்கு  யான்  உரிமை உடையேனல்லேன் என்பார் , “ஆண்டுகொள்   விற்றுக்கொள்   ஒற்றிவை  யென்னினல்லால்  “  என்றார்.  “என்னினல்லால்” என்பதன்பின்  , “பிறிதொன்றும் செய்தற்கு  உரிமையில் லாத  “  என்னும்  சொற்கள்  அவாய்  நிலையான்  வந்தன” என்று  பரிமேலழகர்  விளக்கியிருத்தலும்   ஈண்டு  அறியத்தக்கது .

            அடிகள்  தம்மை  விருந்தினன் என்று  கூறியது , தம் கண் காணா  மெய்யன்பர்  பலர்  முற்பட்டு  இறையருளிற்  கலந்து  இன்புற்றனராக  , தாம்  அப்பேறு  பெறாமல்  பிற்பட்டிருத்தல்  குறித்தென்க . இக்கருத்தை  “ பன்னாளுன்னைப்  பணிந்தேத்தும்  பழைய  வடியாரொடுங்கூடா  , தென்னாயகமே  பிற்பட்டிங்கிருந்தே  னோய்க்கு  விருந்தாயே” என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலான் அறிக . இறையருளிற்  கலந்தாரெல்லா ரையும்   பழையவடியார்  என்றதனான் எஞ்சி நின்ற  தம்மை  “விருந்தினன்” என்றார்.  பழமை  புதுமை  யென்பன  முறையே  வீட்டின்பத்திற்குரிய  தவச் செயலின்  நிறைவையும்  குறைவையும்  குறிப்பனவாம் . புதியவன்  என்னும்  காரணத்தை  முன்னிட்டு  என்னை  விட்டுவிடுவாயோ?  விடலாகாது என்பார் ,  “விட்டிடுதி கண்டாய்” என்றார் .  

                    இதன்கண் ,” இருந்தென்னை  யாண்டுகொள்  விற்றுக்கொள்  ஒற்றிவை”  என்று  கூறியிருத்தலால்  , உயிர்  மாயாகாரியமாகிய  உடல்  கருவி  இடம்  நுகர்  பொருள்களாகிய  இவற்றின்  தொடர்பை  வெறுத்துத்  தான்  இறைவன்  உடைமை  என்பதை  உள்ளவாறறிதல்  வேண்டுமென்பது பெறப்படுதலான்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                       **************************************

பாடல் : 19 .

மடங்கவென்  வல்வினைக்  காட்டைநின்  மன்னருட்  டீக்கொளுவும் 

விடங்கவென்  றன்னை  விடுதிகண்  டாயென்  பிறவியைவே

ரொடுங்களைந்  தாண்டுகொ  ளுத்தர  கோசமங்  கைக்கரசே

கொடுங்கரிக்   குன்றுரித்  தஞ்சுவித்  தாய்வஞ்சிக்  கொம்பினையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  பழைய  அடியாரொடுங்  கூடாத  புதியன்  எனக் கொண்டு  என்னைக்  கைவிடலாகாதென  விண்ணப்பஞ்  செய்துகொண்ட  அடிகள், இத் திருப்பாட்டில்  யான்  புதியனாதற்கு  ஏதுவாக  நின்று  என்னைப்  பிணித்திருக்கும் வல்வினைக்காட்டை  அருட்கனலாற்  பொடியாக்கும் பேராற்ற லுடையாய்  நீயே  யாதலின்  , என் பிறவியை வேரறக்  களைந்தருளல் வேண்டுமென்று  விண்ணப்பம்  செய்து  கொள்ளுகின்றார் .  

பதவுரை :- உத்தரகோசமங்கைக் கரசே = உத்தரகோச மங்கைக்கு அரசே,

குன்று கொடுங்கரி உரித்து  =  மலை  போன்ற  கொடிய  யானையை  யுரித்து ,

வஞ்சிக் கொம்பினை அஞ்சுவித்தாய்  =  வஞ்சிக்கொடி  போன்ற  உமையம்மையை  அச்சமுறச்  செய்தவனே  ,

என் வல்வினைக்காட்டை  =  அடியேனது  வலிய  வினையாகிய    காட்டினை,

மடங்க  =  ஒடுங்கியழியுமாறு  ,

நின் மன் அருள் தீக்கொளுவும்  =   நின் பேரருளாகிய  நெருப்பிட்டுக் கொளுத்தும் ,

விடங்க  =  ஆண்மை மிக்கவனே ,

என் தன்னை  விடுதி  =  என்னை  விட்டுவிடுவாயோ?  (விடலாகாது) ,

என் பிறவியைவேரொடுங்க ளைந்து  ஆண்டு கொள்  =  அடியேனது பிறப்பை  மூலத்தொடுங்  களைந்தொழித்து  என்னை  ஆட்கொண்டருளுவாயாக  என்பது .

விளக்கவுரை  :-  மலை  போன்ற  கொடிய  யானை யென்றது  கயாசுரனை . உருவப் பெருமையும் கொடுங்குணமும் உடைமை  பற்றிக்  கயாசுரன்  “கொடுங்கரிக் குன்று”  என்னப்பட்டான் . நல்லோர்க்குக்  கேடு  விளைத்த கயாசுரனைக்  கொன்று  அவன்  தோலைச்  சிவபிரான்  போர்த்தனன்  என்னும்  புராண கதையை  உட்கொண்டு  இங்ஙனம்  கூறப்பட்டது . “வஞ்சிக்கொம்பு  “ என்புழிக் கொம்பு  உவமம்  ஆகுபெயராய்  இறைவியை  யுணர்த்தும் . வஞ்சிக்கொடி போன்ற  மெல்லிய  இயல்பினையுடைய  உமையம்மை  யென்பது  பொருள் . எல்லாவுலகங்களையும்  காத்தும்  படைத்தும் கரந்தும்  விளையாடும்  இறைவனது பேராற்றற்குக்  கயாசுரனைக்  கொன்றது ஒரு பொருளன்று ; அவ் வீரச்செயலைக் கண்டு  மெல்லிய  இயல்பினையுடைய  அம்மை  அஞ்சியதே  கருதத்தக்கதென்பார் , “கொடுங்கரிக் குன்று ரித்தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே” என்றார்  . அம்மையின்  அச்சத்தையும்  எண்ணாது கொடிய  அசுரனைக்  கொன்றது , தற்பயன்  கருதாமல்  நல்லோர்க்கு  நேர்ந்த  இடுக்கணைக்  களைந்து  அவர்க்கு  நலஞ் செய்யவேண்டுமென்னும் பேரருள் காரணமாக  எழுந்த குறிக்கோள் பற்றியேயாம் . இக்குறிக்கோளைத்  தம் பொருட்டும் மேற்கொள்ள வேண்டுமென்பது அடிகளின்  உட்கோட் குறிப்பாகும் . அக் குறிப்பின்  விளக்கமே  பின்வருவது .

                   வினையை  வல்வினை மெல்வினை யென இருதிறப்படுத்துக் கூறுப . வல்வினை  ஆற்றன்  மிகுதியும்  பயன்  விளைப்பதில் விரைவும்  உடையது. மெல்வினை  அத்தகையதன்று . பாண்டிய அரசன்   குற்றமிலனாகிய  கோவலனைக்  கொலை  புரிவித்த குற்றத்திற்கு  ஆளானது  வல்வினை  காரணமாக  என்பது  சிலப்பதிகார  ஆசிரியர்  கருத்து . இதனை “வல்வினை வளைத்த கோலை  மன்னவன்  , செல்லுயிர்  நிமிர்த்துச்  செங்கோலாக்கியது” என்று  அவ்வாசிரியர் நயம் பெறக்  கூறிய வற்றான் அறிக . நீதி  பிழைத்தது பொறாது அரசன் உடம்பினின்றும் வெளிப்பட்டவுயிர்  வலிய வினையால் வளைக்கப்பட்ட கோலை நிமிர்த்துச்  செங்கோலாக்கியது என்று  கூறிய  நயம்  நினைந்து  இன்புறத்தக்கது .  

                        அடிகள் தம்  வல்வினையின்  மிகுதி  புலப்பட  “ வல்வினைக்  காட்டை  “ என்றார். பயன்படாத மரஞ்  செடிகளுடைய  காட்டையழித்தற்கு  நெருப்புக் கருவியாதல் போலத் ,தம் வல்வினையை யழித்தற்கு இறைவனது பேரருள் கருவியாதல் வேண்டுமென்பார்  , வினையைக்  காடாகவும்  இறை யருளைத் தீயாகவும்  உருவகஞ் செய்து கூறினார் . வினை  வலிதாகலின்  , அதனை யழித்தற்குரிய இறையருள் மன்னருளெனப்பட்டது . இறயருட்கு  ஒறுத்தலும் அளி செய்தலும் இயல்பாதலின் , ஈண்டு ஒறுத்தல் குறித்துத்  தீயாக  உருவகஞ் செய்யப்பட்டது . வல்வினைக் காட்டை அருட்கனலால் எரித்தற்கு ஆண்மை இன்றியமையாததாகலின் ,இறைவனை  ஈண்டு “விடங்க” என்றார் .விடங்கம் –  ஆண்மை . ஆண்டவனே! நின் ஒரு  கூற்றினளாகிய அம்மையின் அச்சத்தையும் பொருட்படுத்தாமல் மன்னுயிர்  நலங்குறித்துக்  கரிக்குன்று உரித்த இத்தெறுதற்  குணம்  என் வல்வினைக் காட்டை யழித்தற் கண்ணும் முற்படத்தக்கதாகவும் , என்னைக் கைவிடல்  தகுமா என்பார் , “என்றன்னை  விடுதிகண்டாய்” என்றார் . கைவிடாமற் செய்யத்  தக்கது  யாதென்னும் வினாவிற்கு விடையாகப்  போந்தது “என்பிறவியை வேரொடுங்களைந்தாண்டுகொள்” என்பது . கொல் என்பது வேண்டுகோட்  பொருளில்  வந்த வியங்கோள் .

             பிறவிக்கு  வேராவது அவாவாகும் . “அவாவென்ப வெல்லாவுயிர்க்கு  மெஞ்ஞான்றும் , தவா அப் பிறப்பீனும்  வித்து “ என்பது பொருளுரை . வெளிப்படும்  முளைக்கு  ஆக்கந்தருவது  வேராதலின் ,அதன்  சிறப்புத்  தோன்ற  ஒடு உருபு புணர்க்கப்பட்டது . வேரிருக்க முளை களையப்படு மாயின்  , மீண்டும்  அவ்வேரினின்றும் முளை தோன்றும் . அது போலப்  பிறவிக்கு  வேராக  வுயிரைப்பற்றி நிற்கும் மூல கன்மம்  ஒழிக்கப்படாமல் , எடுத்த அப்பிறவி மாத்திரம் நீக்கப்படுமாயின் , அம் மூல கன்மத்தினின்றும் மீண்டும் பிறவி யுண்டாம்  என்னும்  கருத்தினராய் “என் பிறவியை  வேரொ டுங்களைந்து “ என்றார் .

             கன்மம்  மூலகன்மம் எனவும் கான்மிய  கன்மம் எனவும்  இருவகைப் படுமென்ப.  “கன்மமும் மூலங்காட்டிக் கான்மியமலமாய் நிற்கும் “  என்று  சிவஞான சித்தியும் , முதற்காரணமாகிய  மூலவினை பதி முதலிய பொரு ளோடொப்ப  அநாதியாயுண்டென்பாரும்  “  என்று  சிவஞானமாபாடியமும்  கூறுமாறறிக . மூல கன்மம்  ஈண்டு  அவாவாகும் . அதன் காரியம் அறம்  பாவமாகவும்  , அவற்றின் பயன் இன்ப துன்பமாகவும் கூறப்படும் . அவா  மூல கன்மமாதலை  , “ செம்புறு  களிம்பென  அநாதிமல  மூழ்கியிருள் சேருமலர்விழி  யென்னவே , தெளிவற்ற கேவலத்  தசைவற்றிருந்துமல சேட்டை  யாற்  குழவிகுருடர் ,தம்பிணியினாலுற்ற  பால் கோலை நோக்க அவை  தமையளிப்பாரென்ன நான் , சார்கன்ம  மாயையை  விரும்ப  நீ  தந்திடச்சகலனாய் “ என்று  சிவஞான  முனிவர்  விளக்கியிருத்தலும் அறிக . வீட்டு  நிலைத்  தகுதியுள்ள  உயிரைப்பற்றி  நிற்கும்  தொடர்பை  யொழித் தலே   ஈண்டு  மூல கன்ம நாசமாகும்  ஆதலின் , அதுபற்றி  அக்கன்மத்தின் அநாதித்  தன்மைக்கு  இழுக்கின்றென்பது .

                  “என் பிறவியை  வேரொடுங்  களைத்தாண்டு  கொள்” என்றாரா யினும் , என்னை  ஆட்கொண்டு  என்  பிறவியைக் களைக  என்பதே கருத்தாகக்  கொள்ளல்  வேண்டும் ,  ஆட்கொண்டபின் பிறப்பொழித்தல்  முறையாதலின் .

                  இனி, “ஆண்டு கொளுத்தர கோசமங்கைக்கரசே” என இயைத்துப்  பொருள்  கோடலுமாம் . அங்ஙனம் கொள்ளுங்கால்  “கொள்……….அரசே” என்பதை  வினைத்தொகையாக்குக .

                   இதன்கண் , வல்வினைக்காட்டைக்  கொளுத்திப்  பிறவியை  வேரொடுங்  களைதல்  வேண்டும்  என்பது  கூறப்பட்டிருத்தலின் ,பிரபஞ்ச  வைராக்கியம்  வெளிப்பட்டு  நிற்றல் அறிக .

                                     ******************************************

பாடல் :20 .

கொம்பரில்  லாக்கொடி  போலல  மந்தனன்  கோமளமே

வெம்புகின்  றேனை  விடுதிகண்  டாய்விண்ணர்  நண்ணுகில்லா

வும்பருள்  ளாய்மன்னும்  உத்தர  கோசமங்  கைக்கரசே

யம்பர  மேநில  னேயனல்   காலொடப்  பானவனே.

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம்  வல்வினைக் காட்டை  அருட்கனலாற்  கொளுத்தி என்னை  ஆட்கொள்ளவேண்டுமென்று  இறைவன் பால்  விண்ணப்பஞ் செய்து கொண்ட  அடிகள் ,இத் திருப்பாட்டில்  அவ்வி னைத்  தொடர் அறாமையாற்  கொழு கொம்பில்லாத  கொடிபோற்  சுழன்று  வெதும்பலானேன் ; இந் நிலையிற்  கைவிடலாகாதென  வேண்டுகின்றார் .

பதவுரை :- விண்ணர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய்  =  தேவரும்  அணுகுதற்கு  இயலாத  மேலிடமாகிய  சிவலோகத்திருப்பவனே  ,

உத்தரகோசமங் கைக்கு  அரசே  =  உத்தரகோசமங்கைக்கு  அரசே ,

நிலனே  அம்பரமே  காலொடு  அனல்  அப்பு  ஆனவனே   =  மண்ணும்  விண்ணும்  காற்றும்  நெருப்பும்  நீரும்  ஆனவனே ,

கொம்பர் இல்லா  =  கொழுக்கொம்பில்லாத,

கோமளக்கொடி  போல்  அலமந்தனன்  =  இளங்கொடி  போலச்  சுழன்று  வெம்புகின்றேனை ; வாடுகின்ற  அடியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-   உம்பர் – மேலிடம் .  இஃது  இந்திரன் முதலிய  தேவர்கள் வாழும்  உலகங்களைக்  குறிக்கும்  ஆதலின்  , அவற்றை விலக்கிச்  சிவலோகத்தைப்  புலப்படுத்தற்கு , “விண்ணர்   நண்ணுகில்லா”  என்னும்  அடை புணர்க்கப்பட்டது . விண்ணுலக  வாழ்க்கைவுடைய  தேவர்க்கு   இருப்பிடனாதலை  விலக்கிய  அவ்வளவன்றி  , அன்னார்  அணுகுதற்கும் அரியதென்பதைப்  புலப்படுத்தற்கு  “நண்ணுகில்லா” என்று  கூறப்பட்டது . நண்ணுதல்  –  அணுகுதல் . சிவலோகம்  விண்ணுலக  முதலிய  எல்லா  வுலகங்களும் தன்னுள்  வியாப்பிய  மாக  அடங்கி  நிற்ப, தான்  அவற்றை  வியாபித்துக்  கடந்து  நிற்பதொன்றாகலின்  , இவ்வாறு  கூறப்பட்டது . திருக்கோவையில்   “ வான்  கழிதான்  கெழுமி” என்புழி வானையுங்  கடந்து  நிற்பது  என்னும்  பொருடோன்ற  , “வான்கழி  சிவலோக  மெனினும்  அமையும் “ என்று  பேராசிரியர்  உரை  கூறியதுங்  காண்க .

          புண்ணியப்  பயன்  துய்ப்பவராகிய  தேவரும்  அணுகுற்கு  அரிய  மேலிடத்துத்  திகழும்  இறைவன்  , மெய்யன்பர்க்கு  எளியனாய்   இந்  நிலவுலகத்துத் திருக்கோயில்  கொண்டு  எழுந்தருளிக்  காட்சியளிக்கும் இயல்பினன்  என்பது தோன்ற  , “ உத்தரகோசமங்கைக்கு  அரசே” என்றார் . இஃது அருமையில்  எளிய  அழகாகும். ஈற்றடியில்  கூறப்பட்ட  பூதங்களின்  வைப்பு  முறை  பொருளியையிற்கேற்ப  மாற்றிக் கொள்ளப் பட்டது , நிலமே  யம்பரமே “ எனவும் , “காலொடு  அனல்  அப்பானவனே”  எனவுங்கொள்க . எல்லாப்பொருளும்  தோன்றுதற்கு  இடனாக  இருத்தலின்  நிலத்தையும்  , அப்பொருள்களைத்  தன் அகப்படுத்து நிற்றலின்  ஆகாயத்தையும் ஒருங்கே  யியைத்து , “நிலனே  யம்பரமே” எனவும் ,அப்பொருள்களைச்  சலிப்பித்தல் சுடுவித்தல்  குளிர்வித்தல் என்னும் தொழில்  இயைபு  பற்றிக்  காலொடு  அனல்  அப்பு  எனவும்   கூறினர் . ஏகாரமும் ஒடுவும் எண்ணுப்பொருளன. “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி ,யொன்று வழியுடைய  வெண்ணினுட் பிரிந்தே” என்னும்  விதியால் ஒடுவென்னும்  எண்ணிடைச்  சொல்லை  அனலோடு அப்பொடு  என இயைக்க . இங்ஙனம்  ஈண்டு  ஐம்பெரும் பூதங்களும் ஆனவனே  என  இறைவனை  விளித்து , ஒரு  நயம்  பற்றி  யென்க.  அந் நயம்  பின்வரும் விளக்கத்தால் அறியலாம் .

             கொம்பு  –  இளங்கொடி  படர்தற்கு ஆதரவாக  அமையும் மரக்கிளை  ,கோமளம் என்பதைக்  கொடியோடியைத்து  இளங்கொடி யெனக்  கொள்ளப்பட்டது .முதிர்ந்த கொடியாயின்  அலமருதலும்  வெம்புதலும்  எளிதிற் பற்றா . அதனால்  அதனை  விலக்குதற்கு  இளங்கொடி யென்னப்பட்டது . கோமளம்  –  இளமை ; மென்மையுமாம்  . கொழுகொம்பு  இல்லாத  இளங்கொடி  சுழன்று  வாடுதல்  போல  , இறைவனது திருவருட் சார்பு  இல்லாமையால்  தமக்கு  ஏற்பட்ட  நிலை  பேறின்மையையும்  வாட்டத்தையும் புலப்படுத்துவாராய்  , “கொம்பரில்லாக்  கொடிபோலலமந்தனன்  வெம்புகின்றேனை என்றார் . அலமருதல்  –  சுழலுதல் . அலமந்தனன்  என்னும்  தன்மை  யொருமை  வினை  முற்று  . வினை யெச்சமாய் வெம்புகின்றேன் என்னும்  வினையைக்  கொண்டு   முடிந்தது . வெம்புதலாகிய  உவமேயப்  பொருளின்  அடையை உவமைக்கும்  ஏற்றி  அதற்கு  ஏது வெயில்   வெப்பமெனவும், உவமேயப்பொருளின் வாட்டத்திற்கு  ஏது  மலவெப்பமெனவும்  கொள்ளல் வேண்டும் .

               கொழுகொம்பில்லாமற்  சுழலும்  இளங்கொடி  அளிக்கத்தக்க தென்பதை  முல்லைக்கொடிக்குத்  தேரீந்த  பாரிவள்ளலின் இரக்கச் செயலான் அறியலாம் . இளங்கொடிக்குப்  பற்றுக்கோடு  இன்மையாற்  சுழற்சியும் , வெயில்  வெப்பத்தால்  வாட்டமும்  உளவாதல்  போலத்  , தமக்குத்  திருவருட்  சார்பின்மையால்  நிலையின்மையும் மலவெப்பத் தால் வாட்டமும்  உளவாயின என்பார் , இங்ஙனம்  கூறினர். இங்ஙனம்  தமக்கேற்பட்ட  திகைப்பிற்கும்   அது  நீங்கித்  தேறுதற்கும்  இறைவனே  காரணமாவான் என்னும்  உண்மை, ஈற்றடியில்  ஐம்பெரும்  பூதங்களின்  வடிவமாக  இறைவனைக்  கூறியமையாற்  குறிப்பின்  உணரப்படும் . அக்குறிப்புப்  பொருள்  வருமாறு :-

                ஒரு கொடி தோன்றுதற்கு  ஆதாரமாகவும்  வெளிப்பட்டு  வளர் வதற்கு  இடனாகவும்  உள்ளவை  முறையே  நிலமும்  வெளியுமாகும்  . அம் முறையில்  தாம்  பிறத்தற்கும் , உடலோடு  கூடிப் போக்குவரத்துச்  செய்தற்கும்  இறைவன்  ஆதாரமாகவும்  இடனாகவும்  இருத்தலின் ,             “ நிலமே யம்பரமே “  எனவும்  அக்கொடி  பற்றுக்கோடின்றிச்  சுழலுதற் குக்  காற்றும்  , வெம்புதற்குத்  தீயும் , அவ்வெப்பம்  தணிந்து குளிர்ச்சி  பெறுதற்கு நீரும்  காரணமாதல் போல , வினையெச்சத்தால்  திருவருட் சார்பு  பெறாமல்  தாம்  சுழலுதற்கும்  , வாடுதற்கும்  , அவ்வாட்டம்  நீங்கப்பெற்றுத்  திருவடி  நீழலில்  குளிர்ந்த  இன்பம்  பெறுதற்கும்  காற்றுத்  தீ  நீர்  என்னும்  பூதங்களின்  வடிவமாக  இறைவன்  விளங்குத லின்  , “ காலொடு அனல் அப்பானவனே “ எனவும்  கூறியருளினர்  என்பது .  

                மலவெப்பத்தால்  வெம்பிக்கிடக்கும்  அடியேனைக்  குளிர்ந்த   திருவருள்  வெள்ளத்தில் மூழ்குவித்து  இன்புறுத்துவதே   நின் இயல்பா கவும் , அங்ஙனம்  செய்யாமல்  கைவிடல்  தகுமா என்பார் , “ வெம்புகின் றேனை   விடுதிகண்டாய்”  என்றார். “ கோமளமே “ என்பது  அழகே  எனப் பொருள்பட்டு  இறைவனைக் குறிக்கும் என்று  கொள்வாரும்  உளர்.  ஈண்டு  இயைபின்மையால்  அஃது  உரையன்மை  அறிக .

                 இதன்கண் , கொழு கொம்பில்லாத  கொடி  போலச்சுழன்று   பாசப்பிணிப்பால்  வாடுகின்றேன் என அடிகள் உலக  வாழ்க்கையில்  வெறுப்புத் தோன்றக்  கூறியிருத்தலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாயவாறறிக .

                                            ************************************

பாடல் : 21 .

ஆனைவெம்  போரிற்  குறுந்தூ  றெனப்புல  னாலலைப்புண்

டெனையெந்  தாய்விட்  டிடுதிகண்  டாய்வினை  யேன்மனத்துத்

தேனையிம்  பாலையுங்  கன்ன  லையுமமு  தத்தைமொத்

தூனையு  மென்பினை  யும்முருக்  காநின்ற  வொண்மையனே  .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  வினைத்தொடர்  அறாமையால்  கொழு கொம்பில்லாத  கொடி போலத்  திருவருட்   சார்பு  பெறாமல்  சுழன்று  வாடுகின்றேன்  என்று  கூறிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அங்ஙனம்  சுழன்று  வாடுதற்கு  ஏது  ஐம்புலன்கலின் தாக்குதலேயாம்  என்று  விண்ணப்பம்  செய்து  கொள்ளுகின்றார் .  

பதவுரை :-  வினையேன்  மனத்து  =  தீவினையுடையேனது  உள்ளத்தில் புகுந்து ,

தேனையும்  பாலையும்  கன்னலையும்  அமுதத்தையும்  ஒத்து  =  தேன்  பால்  கருப்பஞ்சாறு  தேவாமுதம்  என்னும்  இவற்றை யொத்து  இனிமை  பயந்து,

ஊனையும்  என்பினையும்  =  என் உடல்  இறைச்சியையும்  எலும்புகளையும்  ,

உருக்கா  நின்ற  ஒண்மையனே  =  உருக்கிக்  கரையச்  செய்கின்ற  ஞானவடிவினனே ,

எந்தாய்  =  என்  தந்தையே  ,

ஆனை வெம் போரில்  =  யானைகளின்  கொடிய  போர்  நிகழ்ச்சியில்  அகப்பட்ட ,

குறுந்தூறு என  =  சிறிய  செடியை  யொப்ப ,

புலனால்  அலைப்புண்டேனை   =  ஐம்புலங்களாலும்  அலைக்கப்பட்ட  சிறியேனை  ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  இறையருட்  பேற்றிற்குரிய  தூய்மையில்லாத  மனம்  என்பார் , “வினையேன்  மனத்து” என்றார் . வினை  ஈண்டுத்  தீவினையை  யுணர்த்தும் , புலனால்  அலைப்புறுதலின் , வினைப்பயன்  நுகர்ச்சிக் கேற்ப  மக்கள்  மனநிலை திரியும் இயல்பினதாகலின்  , தீவினைப்பயனால்   துன்புறும்  நிலையில்  தம்  உள்ளம்  தூய்மையில்லாததாகும்  எனவும், இந் நிலையிலும்  ஆண்டவன்  இனியனாய்த்  தம் உள்ளத்தில்  புகுந்து அதனை  நெகிழ்வித்ததற்குக்  காரணம்  , அவன்  அருட்பெறுக்கே யெனவும்  கருதி  அடிகள்  இன்புறுகின்றார் .  இறையருள்  இனிமைக்குத்  தாம்  நுகர்ந்த   மக்களுணவாகிய  தேன்  பால்  கருப்பஞ்சாறு  என்னும்  இவற்றின்  சுவையை  ஒப்புக்கூறப்  புகுந்த  அடிகள்  , அப்பொருள்களால்  அறியப்படாத  சிறந்த  தெய்வ  நறுஞ் சுவையைத்  தம்  அனுபவத்தில் உணர்ந்தமையின்  , தேவருண வாகிய  அமுதத்தையும்  உடன்  புணர்த்துத்  “ தேனையும்  பாலையும்  கன்னலையும்  அமுதத்தையும்  ஒத்து “ என்றார் . மனத்து  என்பதன்  பின்  புகுந்து  என்னும்  சொல்லும்  , ஒத்து  என்பதன்  பின்  இனிமை  பயந்து  என்னும்  சொற்களும்  அவாய்  நிலையில்  வருவித்துரைக்கப்பட்டன . தேன்  பால்  முதலியன  தம்மை  உண்டாருடைய  ஊனையும்  எலும்புகளையும் பெருகச் செய்யுமல்லது  உருகச் செய்யா  , இறையருள் அங்ஙனமின்றிச்  சுவைத்தலின்  , தேன்  பால்  முதலியவற்றை யொத்து ஊனையும்  எலும்புகளையும்  உருக்கியதென்பது அடிகள்  அனுபவத்தில்  கண்டது .ஊன்  பெருகப் பெருக  உள்ளொளி  சுருங்குமென்பதும் , அன்பு நிலையில்  ஊன்  உருக உருக  உள்ளொளி  பெருகுமென்பதும் , அடிகள் அனுபவமென்பதனை, “ஊனினையுருக்கி  உள்ளொளி  பெருக்கி “ என்று  அடிகள்  பிறிதோரிடத்து  அருளிச்செய்த   பாடற்பகுதியும் தெளிவுறுத்தும்  . மெலிய  ஊன்  உருகுதல்  எளிது ; வலிய  எலும்பு  உருகுதல்  அரிது . ஆண்டவன்  அருள்நிலை  அவ்வலிய  என்பினையும்  கரையச்செய்யும்  என்ற  இதனால்  அடிகளின்  உள்ளக் குழைவும்   திருவருட்டோய்வுமாகிய  இவற்றின்  பெருமை  புலனாம் . எலும்புருக்கி  என்னும்  நோய்  வலிய  என்பை  எளிதில்  உருக்கும்  இயல்பினதேயெனின்  , அவ்வுருக்கத்தின்  பயன்  அடங்காத  துன்பமாக  முடியும் . அருட்பதிவால்  ஊறும்  என்பு  முருகுதல்  வரம்பிகந்த  இன்பம்  பயப்பதாகும் மேலும்  நோயினால்  என்பும்  ஊனும்  கரைந்த  நிலையில்  உள்ளொளி  உண்டாதற்குச்  சிறிதும்  இடனின்றென்பதும்  கருதத்தக்கது .  

            இறைவன்  தம்  உள்ளத்தில்  இனியனாய்  நின்று  ஊனையும்  என்பினையுமுருக்குதல்  தமக்கு   மெய்யுணர்வாகிய  உள்ளொளியைப்  பெருக்கி  நலஞ் செய்தற்பொருட்டென்பார் , அவ்வுதவிச்  செயற்கேற்ப  அப்பெருமானை  “ஒண்மையனே” எனவும்  ஞானச்செல்வத்தை  மகன்மை  முறையில்  வைத்துத்  தமக்கு  வழங்க  முற்பட்டவியல்பு  குறித்து, “எந்தாய்” எனவும்  விளிகொள்ளலானார் . ஒண்மை  –  ஞானம் . ஐம்புலங்களாலும்  தாம்  அலைக்கப்பட்டு  வருந்துதற்கு  உவமை  கூறப்புகுந்த  அடிகள் யானைப்  போரிடைப்பட்ட  சிறு கொடியைக்  கருதலானார் .  பிராணிகளுள்  உருவகத்தால்  மிகப்பெரிது  யானை  ; மதச்செருக்கு  மிக்கது . அவ்யானைகள்  ஒன்றனோடொன்று  தாக்குங்கால் , அவற்றின்  காலடியிற்  பட்ட  சிறுசெடி  மிதிபட்டுச்  சிதைந்தலைதல்  போலப்  , புலங்களின்  தாக்குதலால் அறிவு  கலங்கி  நிலை பேறின்றித்  தவிக்கலானேன்  என்பார் ,  “ஆனைவெம்போரிற்  குறுந்தூறெனப்  புலனாலலைப்புண்டேனை  “  என்றார். அப்போரிடைப்பட்ட   சிறு  புதர்  , வேர்பறிக்கப்படாமல்  அலைப்புற்றுச்  சிதைவடைதல்  போலப்  புலங்களின்  தாக்குதலால் தாம்  இறவாமல்  கலக்கமுற்று  வருந்துதலை  இங்ஙனம்  குறிப்பிடுவாராயினர்  . எம்பெருமா னே!  இங்ஙனம்  துன்புறும்  நிலையில் அடியேனைக்  கைவிடல்   அருட்கடலாகிய  நினக்குத்  தகுமாவென்பார் , “ விட்டிடுதி கண்டாய் “ என்றார் .

                  இதன்கண்,” ஆனைவெம்போரிற்   குறுந்தூறெனப்  புலனாலலைப் புண்டேனை  “ எனப்பொறி  புலன்களாகிய  துன்பத்தை  வெறுத்துக்  கூறியிருத்தலின்  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                          ***************************************

பாடல் : 22 .

 ஒண்மைய  னேதிரு  நீற்றையுத்  தூளித்  தொளிமிளிரும்

வண்மைய  னேவிட்  டிடுதிகண்  டாய்மெய்  யடியவர்கட்

கண்மைய  னேயென்றுஞ்  சேயாய்  பிறர்க்கறி  தற்கரிதாம்

பெண்மைய  னேதொன்மை  யாண்மைய  னேயலிப்  பெற்றியனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஐம்புலன் களின் தாக்குதலால்  அலைப்புண்டு  வருந்துகின்றேன் என்று  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அத்  தாக்குதலில்  அகப்படாமலிருத்தற்கு  இன்றியமையாத  நின் அணுக்கத்தை யான்  மெய்யன்பர்  குழுவுட்  படாமையால்  பெறவியலாமல்  வருந்துகின்றேன் ; காத்தருள்க என்று  குறிப்பிற்  புலப்பட  அருளிச்செய் கின்றார் . “,மெய்யடியவர்கட் கண்மையனே” என்பது இக்குறிப்பிற்குச்  சான்றாம் .

பதவுரை :-  மெய்யடியவர்கட்கு  என்றும்  அண்மையனே   =  மெய்யொழுக்கமுள்ள  தொண்டர்க்கு  எஞ்ஞான்ற்ம்  அணிமையில்  உள்ளவனே  ,

பிறர்க்கு  என்றும்  சேயாய்  =  தொண்டரல்லாத  பொய்யொழுக்கமுடை

யார்க்கு   எக்காலமும்  சேய்மையில்  உள்ளவனே ,

அறிதற்கு  அரிதாம்  தொன்மை பெண்மையனே   =  காட்சி  முதலிய  அளவைகளால்  அறிதற்கு  அரிதாகிய  பழைய  பெண்டன்மையுடை யவனே ,

ஆண்மையனே  =  அத்தகைய  ஆண்டன்மையுடையவனே  ,

அலிப்பெற்றியனே  =  அலித்தன்மை யுடையவனே ,

ஒண்மையனே  =  ஒளிப்பிழம்பாகவுள்ளவனே  ,

திருநீற்றை  உத்தூளித்து  ஒளிமிளிரும்  வெண்மையனே  =  திருநீற்றை  நிறையப்பூசி   அந் நீற்றொளியால்  விளங்கும்  வெண்னிற  முடைய வனே  ,

விட்டிடுதி  =  என்னைக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-   மெய்யடியவராவர்  தவ வேடத்தில் மறைந்தொழுகு தலின்றி  அகமும் புறமும் ஒத்த  தூய்மையுடையவராய்  , இறைவனிடத்துத்  தொண்டு  பூண்டொழுகுவோர் . யாண்டும்  நீக்கமற  நிறைந்திருக்கும் இயல்புடைய  இறைவன்  , ஒரு  சாரார்க்குச்  சேயனாதலும்  , மற்றொரு  சாரர்க்கு, அணியனாதலும்  எவ்வாறு  பொருந்துமெனின் , இடையீடின்றிப்  பெய்கின்ற  மழை நீரைப்  பள்ள நிலம்  ஏற்றுக்  கொண்டிருத்தலும்  , மேட்டு  நிலம்  ஏற்றுக்கொள்ளாமல்  வழிந்து போக  விடுதலும்  கண்கூடன்றே? அவ்வாறே  இறைவனது  நிறையருளைத்  தவத்தால்  தூய்மை  எய்தினர்  உள்ளம்  பற்றிக் கோடலும்  , ஏனையோர்  உள்ளம்  பற்றாமல்  விடுதலும்  உண்மையின்  , “மெய்யடியவர்கட் , கண்மையானே  யென்றும்  சேயாய்  பிறர்க்கு  “  என்றாராதலின்  , அது பொருந்துமென்க . “என்றும்” என்னும்  சொல்  இடைநிலை  விளக்காக  நின்று  ஈரிடத்தும்  இயையும் .

                மெய்யடியவரை  முற்பட வைத்து அவர்க்கு  அண்மையனே  என்றமையால் , இறைவன்  மெய்யன்பரை  நாடித்  தானே யடைபவன் என்பதும்  , சேயாய்  என  விலக்கத்தை  முற்படக்கூறிப்  “பிறர்க்கு” என  பிற்பட  வைத்தமையால்  மெய்யன்பரல்லாதார்க்கு  இறைவனது  விலக்கம்  முற்படும்  என்பதும் குறிப்பிற்  புலனாயவாறறிக . நல்லோரைக் கூறுங்கால் அவர்  பெருமை  வெளிப்படக்கூறுதலும்  , தீயோரைக்  கூறுங்கால்  அவர்  தீமை  வெளிபடாவாறு  வேறொருபடியாகக்  கூறுதலும்  உலகத்து உயர்ந்தோர்  வழக்கு .  ஒருவருடைய  நல்லனவுந்  தீயனவுமாகிய  குணங் களைக்  கூறுங்காலும்  , “சீரெலாந்தூற்றிச் சிறுமை புறங்காத்துக் “  கூறவேண்டு மென்னும்  நீதியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . அம்முறையே  மெய்யன்பரை  மெய்யடியவரென்றும்  , மெய்யன்பில்லாதாரைப்  பிறர்  என்றும்  கூறிய  நயம்  இன்புறத்தக்கது .  

                   இறைவனைப்  பெண்  ஆண்  அலித்தன்மைகளை யுடையவனாகக்  கூறியது, வழிபாடு செய்வார்  தகுதி நோக்கியென்க . சத்தியும் சிவனுமாக  விளங்குதலால்  பெண்மையும்  ஆண்மையுமுடைமை  அறியலாம் . பிரமம்  என்னும்  சொல்லால்  குறிக்குங்கால்  அலித்தன்மை  புலப்படும் .  சத்தி  பெண்பாலும், சிவன்  ஆண்பாலும்,  பிரமம்  ஆணும்  பெண்ணும்  அல்லாத  ஒன்றன்  பாலுமாம் . பிரமம்  என்னும்  சொல்லாற்  குறிக்கும்  அந் நிலையே  ஈண்டு  அலியெனப்  படும்  . வடநூலார்  பிரமம்,  என்னுஞ்  சொல்லை  நபுஞ்சகலிங்கம்  என்ப .  வடமொழிக்  கவிஞரொருவர்  தம் நெஞ்சை  முன்னிலைப்  படுத்திப்  , பிரமப்பொருளைப் பற்றுமாறு  சாதுரிய  முறையில்  கூறிய  ஒரு  சுலோகக்  கருத்து  ஈண்டு  நினைந்து  இன்புறத்தக்கது .

                   அது  வருமாறு :-  நெஞ்சமே! நினக்கு  வேலை  யாண்டு?  சாரக்கடவ  நெறியைக் குறித்து அடிக்கடி  அலைகின்றாய் ; ஆண்  பெண்  இருபாலார்  பக்கலிலும் அணுகுதல்  தகுதியன்று ; அடிக்கடி  மக்கட் குழுவில் செல்லக் கருதுதல்  நகைப்பிற்கிடனாகும்  ; ஆதலின், அங்ஙனம்  செல்லற்க  நின்னொடு  ஒத்த இனமும் பேரின்பம்  பயப்பதுமாகிய  பிரம்மத்தைப்  பற்றிச்  சார்ந்து  நலனெய்துக “வென்பது . இதன்கண்  நெஞ்சமும்  பரமமும்  ஒத்த  இனமென்றது, இரண்டும்  நபுஞ்சகலிங்கம்  ஆதல்  பற்றி  .  மக்கட்  குழுவிற்  செல்லுதல்  நகைப்பிற்கிடனாமென்றது  , நெஞ்சம் நபுஞ்சகப்  பாலாதலின், ஆணும்  பெண்ணுமாகிய  மக்கட்குழு  ஏற்றுக் கொள்ளமாட்டா தென்பது  குறித்தாம் .  

                      உலகத்து  மக்களுடைய  ஆண்மை  பெண்மை  களும்  அலித்தன்மையும்  காட்சி  முதலிய  அளவைகளால் அளந்தறிதற்கு  எளியன வென்பதும், கன்மத்திற்  கீடாகப்  புதிது புதிதாகப்  படைக்கப்பட்டன வென்பதும் , இறைவனுடைய  அத்தன்மைகள்  அவ்வளவைகளால்  அளந்தறிதற்கு  அரியனவென்பதும்  ,வழிபடுவார் தகுதிக் கேற்பத் தானே  படைத்துக்கொள்ளப்பட்ட  பழமையுடையன  வென்பதும் புலப்பட  , “அறிதற்கரிதாம் “ எனவும், “தொன்மை” எனவும்  கூறப்பட்டன .  “அறிதற்கரிதாம் “ என்பதையும்  “தொன்மை” என்பதையும்  பெண்மை  ஆண்மை  அலிப்பொறி  என்பவற்றோடு  தனித்தனி  இயைத்துக்கொள்ளல்  வேண்டும் . பெற்றி  –  தன்மை . இறைவனுடைய  தன்மைகள்  பிறரால்  அறியப்படாதென  வென்பதை  “தன்மை  பிறரால் அறியாத  தலைவா”  எனப்  பிறிதோரிடத்து  அடிகளும் , “இன்ன  தன்மையன்  என்றறியொண்ணா  எம்மானை “  எனச்சுந்தரமூர்த்திகளும்  கூறியவற்றான்  அறியலாம் .  

                  இறைவன்  அடிகளுக்கு  உபதேசித்த  ஞான்று  ஞானாசிரியனாக  எழுந்தருளி  அளித்த கண் கொள்ளாக்காட்சி,  அடிகள் அகத்தே  நின்று  இன்புறுத்தலின்  , அத் திருமேனியின்  செந் நிறப்  பேரொளியில்   ஈடுபட்டு , “ஒண்மையனே” எனவும்  , அச்செம் மேனியின் மேல்  பூசப்பட்ட  திருநீற்றொ ளியால்  திகழும்  வெண்ணிறப்  பேரொளியை  நினைவு  கூர்ந்து  , “திருநீற்றை  உத்தூளித்  தொளிமிளிரும்  வெண்மை யானே”  எனவுங்கூறினர். உத்தூளித்தல்  –  நீரிற்  குழையாமல்  நிறையப் பூசுதல்  . ஆண்டவனது  ஞானாசிரியத்  திருக்கோலத்தை  ஈண்டுக்  குறிப்பிட்டமையால்  ,”யார்க்கும்  அறிவரிய  திருமேனிக்காட்சி  அடியேற்கு  எளிவர  அருளுதற்கு  ஏதுவாகிய  கருணை  உளது என்னும்  உறுதி  கடைப்பிடித்தேனை  எங்ஙனம்  கைவிடல்  கூடும் “ என்னும்  உட்கோளுடையார் அடிகள் என்பதும்  , அவ்வுட்கோட் பயனை  வெளிப்படுத்துக் கூறுவாராய்  , “விட்டிடுதி கண்டாய்” என்றார் என்பதும்  புலனாம் .  

                      இதன்கண், அடிகள் இறைவனது ஞானாசிரியத்  திருக்கோலதில்  ஈடுபட்டு  உலகியலை  வெறுத்து நின்றமை  பெறப்படுதலின் , பிரபஞ்ச வைராக்கியம்  தோன்றுதல்  அறிக .  

                                                  **************************************

பாடல் :23 .

பெற்றது  கொண்டு  பிழையே  பெருக்கிச்  சுருக்குமன்   பின்

வெற்றடி  யேனை  விடுதிகண்  டாய்விடி  லோகெடுவேன் 

மற்றடி  யேன்றன்னைத்  தாங்குந  ரில்லையென்  வாழ்முதலே  

யுற்றடி  யேன்மிகத்  தேறிநின்  றேனெனக்   குள்ளவனே .

கருத்துரை  :- முன்னைத் திருப்பாட்டில்  மெய்யன்பர்  குழுவுட்  படாமையால் நின் அணுக்கத்தைப்  பெற  இயலாமல்  வருந்துகின்றேன்  என்று குறிப்பிற்  புலப்படக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  , அங்ஙனம்  மெய்யன்பர் சார்பு  பெறாமைக்குத் தம் மனமொழி மெய்கள் செந்நெறிப்படாமையே  ஏதுவாகு மென்பதை வெளிப்படக்கூறி  விண்ணப்பம்  செய்து  கொள்ளு கின்றார் .

பதவுரை :- என்  வாழ் முதலே  =  என் வாழ்க்கைக்கு  மூலகாரண மானவனே  ,

பெற்றது கொண்டு  =  நீ தரப் பெற்றவனாகிய  மனமொழிமெய்களைக்  கருவியாகக்  கொண்டு  ,

பிழையே  பெருக்கி  =  தீங்குகளையே  மிகைபடச் செய்து ,

சுருக்கும்  அன்பின்  வெறுமை  அடியேனை  =  அன்பினைச்  சுருங்கச்  செய்கின்ற  போலித்தொண்டனாகிய  என்னை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ?  ,

விடில்கெடுவேன்  =  அங்ஙனம்  கைவிடுவாயாயின்  கெட்டொழிவேன் ,

எனக்கு  உள்ளவன்   =  எனக்கு  உள்ளத்தில்  விளங்கும்  ஆதரவாளனாக  ,

அடியேன்  உற்று  மிகத்  தேறி   நின்றேன்  =  அடியேன்  ஆராய்ந்து  நின்னைப்  பெரிதும் தெளிந்துள்ளேன் ,

அடியேனைத்  தாங்குநர்  மற்று இல்லை  =  இந் நிலையில் அடியேனைக்  காப்பவராக  வேறு  யாருமில்லை  (நீயே  காத்தருளல் வேண்டும் ) என்பது .

விளக்கவுரை :- இறைவன்  எல்லாவுயிர்களுக்கும்  மாயையினின்று  கன்மத்திற்  கீடாக  உடல்  முதலியன  உதவும்  நிமித்த  காரணனாயுனும், ஈண்டு  அடிகள்  “என் வாழ்முதலே”  என்று  சிறப்பு  முறையில்  குறிப்பிட்டு  விளித்தது , பின்னர்க்  கூறப்படும்  விண்ணப்பங்களை  ஏற்றுத்  தம்மைப்  பாதுகாக்கும்  பொறுப்பு  அப்பெருமான்  பாலதாம்  என்பதைப்  புலப்படுத்தற்  கென்க  . முதல்  –  காரணம்.  பெற்றது  என்பது  ஈறு  தோன்றிய  சாதியோரு மையாக  நின்று  மன மொழி மெய்களையுணர்த்தும் , அம்மூன்றும்  காரணம்  என்னும்  ஓரின மாதலின் . “அஞ்சுவ தஞ்சாமை பேதமை “ என்னும்  குறட்பாப் பகுதியும் , அதற்குப்  “ பாவமும்  பழியுங் கேடும்  முதலாக அஞ்சப்படுவன பல வாயினும்   சாதி பற்றி  அஞ்சவது என்றார். என்று  பரிமேலழகர்  கூறிய  உரையும்  ஈண்டு  நினைக்கத்தக்கன .

                     “வாழ்த்த வாயும்  நினைக்க  மடநெஞ்சும் , தாழ்த்தச்சென்னியும் தந்த தலைவன்” என்று  தமிழ்  மறை  கூறியபடி  மன மொழி மெய்களாகிய  முக்கரணங்களும் , இறைவனை  வழிபட்டுய்தற் பொருட்டுத்  தமக்கு  அப் பெருமானால் தரப்பட்டனவாம்  என்னும்  உண்மையுணர்ந்து , அப்பேருப காரத்தைப்  புலப்படுத்துவாராய் , “பெற்றது கொண்டு”என்றார் . அக்கார ணங்களால் வழிபாடு செய்து, அன்பைப் பெருக்கி இறையருளைப்  பெற வேண்டியது கடமையாக, அக்கடமையை  மறந்தும்  ,இறைவன்  திரருவுளக்  குறிப்புக்கு  மாறாகவும்  தீங்குகளையே  மிகுதியாகச்  செய்யலானேன் என்பார் , “ பிழையை பெருக்கி”  என்றார் . உலகத்து மக்கள் செயல்கள் நல்லனவும்  தீயனவுமாகவே  பெரும்பாலும்  நிகழ்வன; என் செயலோ  நல்லது  சிறிதும்  கலவாத  தீங்காகவே  முடிந்தது  என்பார் ., “ பிழையே”  எனத்தேற்றே காரம்  இயைத்தும்  அப்பிழையும்  ஓரளவிலன்றி  மிகுதியாயிற்றென்பார் ,  “பெருக்கி”  எனவுங்  கூறினர்.

                             பிழைகளாவன  –  மன மொழி மெய்களால்  முறையே  தீயன நினைதலும்  பேசுதலும்  செய்தலுமாம் . பிழை  பெருகப்  பெருக அத்துணை  அன்பு  தேய்ந்த தென்பார் , “ சுருங்கும்  அன்பு “  என்றார் . அன்பு  அகத்ததா யினும்  , நன்மொழியும் நற்செயலும் அன்பினால்  நிகழ்வனவாதலின், அவை யும் அன்பென்ற அளவில் அடங்கும் என்பது .  சுருங்கும்  அன்பின ….அடியேன்”  என்பதனை, “சென்று  சேக்கல்லாப்புள்ள…..குளம்” என்பது  போலக் கொள்க . பிழையைச்  சுருக்கி  அன்பைப் பெருக்குதல் மெய்யடியார்  இயல்பாகும் .அவ் வியல்புக்கு  மாறாகத்  தம் செயல்  நிகழ்தலின்  , தம்மை  “வெற்றடியேன்” என்றார் . என் அடிமை  பயனற்றது  எனக்கொண்டு  என்னைக் கைவிடுவா யாயின்  , யான்  கெட்டொழிய  நேருமே  என்பார், “விடிலோகெடுவேன் “  என்றார்.  ஓகாரம்  அசை நிலை.

                             இனி, அடிகள் தம்மைக்  கைவிடலாகா  தென்பதற்குக்  காரணங்  கூற  முற்படுகின்றார் . “உள்ளவன் “  என்பது  உள்ளத்தில்  நின்று   தாங்கிக்  காப்பவன்  என்னும்  பொருட்டு.  பின்னர்த்  “தாங்குநரில்லை”  என்றதனால்  ஈண்டுத்  தாங்குபவன்  எனக்கொண்டும்  , ஆகவென்பதை  வருவித் தியைத்தும் உரைக்கப்பட்டன  . உறுதல்  –  அழுந்தி  ஆராய்தல் . தேறுதல்  –  தெளிதல்  .  அத்தெளிவு  நூலறிவானும்   அநுபவ  வுணர்வானும்  நன்கு ஆராய்ந்து மேற் கொள்ளப்பட்டது  என்பது  புலப்பட  “மிக”  எனவும்,  அது  முன்னரே  துணியப் பட்டது என்பது  தோன்ற , இறந்த  காலத்தால்  “தேறிநின்றேன்” எனவுங்  கூறினர் .  தேறுதற்குச்  செயப்படு   பொருளாக  நின்னை யென்பது  அவாய்  நிலையான்  வருவித்துரைக்கப்பட்டது .

                          ஆண்டவனே!

“என்னில்  யாரும்  எனக்கினி  யாரிலை

என்னி  லும் இனி யானொரு  வன்உளன்

என்னு  ளேயுயிர்ப்  பாய்புறம்  போந்துபுக்

கென்னு  ளேநிற்கும்  இன்னம்பர்  ஈசனே “

        என்றபடி , என் உள்ளும்  புறமும்  நின்று, என்னைப்  பாதுகாப்பவன்  நீயே  யென  ஆராய்ந்து  தெளிந்துளேனாதலின்  ,இந்நிலையில்  என்  வாழ்முதலா கவும்  , என்னால்  தெளியப்பட்ட வனாகவுமுள்ள   நின்னையன்றி  , அடியேனை  ஆதரித்துக்  காப்பாற்றுவார்  வேறு யாருமில்லை  யென்பார் ,       “ மற்றடியேன்றன்னைத் தாங்குநரில்லை “  என்றார்.  தாங்குநர்  –  மெய்யன் பின்றிப்  பிழையைப்   பெருக்கி  அதனாற்  கீழ்வீழும்  நிலையில் வீழாவாறு  எடுத்துக் காப்போர்  .  இறுதியில்  நீயே  காத்தருள வேண்டும்  என்பது  இசையெச்சமாகும் .

                   இதன்கண் , பெற்றது  கொண்டு  பிழையே  பெருக்கிச்  சுருக்கும்  அன்புடைய  வாழ்க்கை  வெறுக்கத்தக்கது  என்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக.  

                                            ************************************

பாடல் : 24 .

உள்ளன  வேநிற்க  இல்லன  செய்யுமை  யற்றுழனி

வெள்ளன  லேனை  விடுதிகண்  டாய்வியன்  மாத்தடக்கைப் 

பொள்ளனல்  வேழத்  துரியாய்  புலனின்கட்   போதலொட்டா 

மெள்ளன  வேமொய்க்கும்  நெய்க்குடந்  தன்னை  யெறும்பெனவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் தம் மன மொழி மெய்கள்செந் நெறிப்படாமையால்  நேர்ந்த இடையூற்றை  விண்ணப்பித்துக்  கொண்ட  அடிகள் , இத்திருப்பாட்டில்  அக்கரணங்களுள்  மனம் பொறி வழிச்சென்று  கொணரும்  புலன்களால்  விளயும்   தடையை  யெடுத்துக்காட்டி இரங்குகின்றார் .  

பதவுரை :-  மா தடக்கை  பொள்ளல்  நல் வேழத்து  வியன்  உரியாய்  = 

மிகப்பெரிய  துதிக்கையில்  துளையினையுடைய  நல்ல  யானையின்  அகன்ற  தோலையுடையவனே ,

நின் கண்  போதல்  ஒட்டா  =  நெஞ்சம்  நின்பாற்  சாரவொட்டாதபடி  ,

நெய்க்குடம்  தன்னை  எறும்பு  என  =  நெய்  நிறைந்த  குடத்தை  எறும்பு  மொய்த்துத்  தடை  செய்தல்  போல ,

புலன் மெள்ளன  மொய்க்கும்  =  புலன்கள்    மெல்ல  நெருங்கிச்  சூழ்ந்து தடை செய்வன ,

உள்ளன  நிற்க  =  அதனால்  தகுதியுள்ளன  நிற்ப ,

இல்லனவே  செய்யும்  =  தகுதியில்லாதனவற்றையே  செய்யும்  ,

மையல்  துழனி  வெள்ளன்  அலேனை  =  மயக்கத்தையும்  ஆரவாரத்தையும்  உடைய  தூயோனல்லாதவனாகிய  சிறியேனை  ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :- பொள்ளல்  –  துளை .  நல் வேழம்  என்றது , எல்லாம்  வல்ல  இறைவன்  திருமேனிக்கு  அதன்  தோல்  போர்வையாகப்  பயன்படும்  பேறு  குறித்தாம் .  வியன்  என்பதை  உரியோடு  இயைத்து  அடையாக்குக. யானையை  உரித்துப்  போர்த்த  புராண  கதைக்  குறிப்பை  ஈண்டுக்  குறிப்பிட்டதில்  ஒரு பொருணயம்  புலனாம் . எறும்பு  கடை  யானை  தலையென்னும்  உலக  வழக்குப்படி  பிராணிகளுள்  மிகப்பெரிய  உருவமு டையது  யானை ; மிகச்சிறிய  உருவமுடையது  எறும்பு . அத்தகைய  யானையைக் கொன்று  அடக்கிய  ஆற்றல்  படைத்த  இறைவனுக்குப்   புலங்களாகிய எறும்புகளை யொழித்தல் அரிதன்று  என்பது  அந் நயம்  என்க.

                  “நின்கட்  போத லொட்டா”  என்புழிச்  “செல்லுமளவுஞ்செலுத்து மின் சிந்தையை” என்னும்  பெரியோர்  உபதேசப்படி  இறைவ னிடத்துச்  சேரற்குரியதும் , புலன்களால்   தடைப்படுத்தப்படுவதும்  நெஞ்சம்  ஆதலின் , போதற்கு  வினை முதலாக அது  வருவித் துரைக்கப்பட்டது . நெஞ்சம்  இறைவன்  பக்கல் அணுகவொட்டாமல்  அதனைத் தடை செய்வன உலகியற் பொருள் நுகர்ச்சியாகிய  புலன்களாம் .அங்ஙனம்  தடை  செய்தற்குப்  பொருத்தமான  ஓர் உவமையை  அடிகள் எடுத்தாளுகின்றார் .

                    மட்குடத்தில்  உள்ள  நறுமணம்  மிக்க  நெய்  , உணவிற்குப்  பயன் படாவாறு  மணமும்  சுவையும்  அறிந்து எறும்புகள் பல அக்குடத்தின்  வாயில்  வழியைத்  தடை  செய்து  மொய்த்தல் போல,  அகக்  கருவியாகிய  மனம்  இறைவழிபாட்டிற்  பயன்படாவாறு  , அம்மனத்தின் இயல்பிற்  கேற்பக் கண்டு  கேட்டு உண்டு உயிர்த்து  உற்றறியும் ஐம்புலன்களும் உணர்வு  நெறியைத்  தடை  செய்கின்றன வென்பார்,  “ புலனின்கட்   போதலொட்டா  மெள்ளனவே  மொய்க்கும்  நெய்க்குடந்தன்னை  யெறும்பெனவே” என்றார் .  நெய்யிற் றோய்ந்த  எறும்பு  விலக்கற்கரிதால்  போல , நெஞ்சத்தைப்  பற்றிய  புலன்களும்  விலக்கற்  கரிதாமென்பது .  மெள்ளன மொய்க்கும்  என்றது . சிறிது  சிறிதாகச்  சென்று  நெருங்கிச்  சூழுமென்பது குறித்தாம் .  குடத்து நெய்  உடற்கணுள்ள  நெஞ்சிற்கும்  , எறும்புகள்  புலன்களுக்கும்  உவமை  களாம் . குடத்தின் வாயில்  வழியில்  மொய்த்திருக்கும்  எறும்புகள் தடையாதல்  , நெய்  தூய  நிலையில் நல்லுணவாகாமை  பற்றியாம் .

                        அதுபோல்  உடலின் கண்  உள்ள  பொறி  வாயில்களைப்  பற்றிய  புலன்கள் தடைப்படுத்துமாயின் , மனம்  தூயநிலையில்  இறைவனைப்  பற்றாதென்பதாம் . மனம் உயர்வு  வழிச்சென்று  இறையருளைப் பற்ற  வேண்டுமன்றிப்  பொறிகளின்  வாயிலாகச்  சென்று  புலனுகர்ச்சியில்  ஈடுபடலாகாதெனவும் , அங்ஙனம்  ஈடுபட்டமையால்  செய்யத்தக்கன  இன்ன  தகாதன இன்னவெனப்  பகுத்துணர  இயலாமல்  மயங்கலானேன்  எனவும்  பிவரும்  குறிப்புக்களால் அடிகள் புலப்படுத்துகின்றார் .  

                           உள்ளன – தகுதியுள்ளன . இல்லன –  தகுதியில்லாதன .  இறை வழி  பாட்டிற்குச்  செய்யத் தக்கனவாகிய  நற்செயல்கள் பல இருக்க, அவற்றுள் ஒரு  சிறிதும் மேற்கொள்ளாமல், தகாதனவற்றையே  செய்ய லானேன் என்பார் ,  “ உள்ளனவே  நிற்க  இல்லன  செய்யும்  “ என்றார் . உள்ளனவே  என்புழி  ஏகாரத்தைப்  பிரித்து இல்லன  என்பதனோடு  இயைக்க  தக்கன  தகாதென  வென்னும்  இருதிறத்துள் , ஒரு கூறு  பிரிக்கப்பட் டமை யால் ஏகாரம்  பிரி நிலைப்  பொருளது ; தேற்றமுமாம் , சரியை  முதலிய  தவச் செயல்கள்  ஆண்டவன்  திருவருட்  பேறாகிய  நற்பயனை விளைத்தலால் அவற்றை  உள்ளன வென்றும் , அவற்றிற்கு  மறுதலையாக உடலோம்புதற்  பொருட்டுச்  செய்யப்படும்  அவச்  செயல்கள் பிறப்பிறப்புக்களிற்  புகுத்தித்  துன்பமாகிய தீய பயனை விளைத்தலால் அவற்றை இல்லன வென்றும் கூறினர் .

                உலகத்து மக்கள் செயல்கள் தக்கனவும்  தகாதனவுமாக  விரவியிருக்கும்  ; என் செயலோ , அங்ஙனமாகவும் இல்லாமல் தகுதியில்லாத னவாகவே  நிகழ்ந்தன வென்பார் ,  “ இல்லனவே செய்யும் “ என்றார் .          மையல் –  காமமுதலியன  பற்றிய  மயக்கம் . இஃது அகத்தின்கண் நிகழும்  குற்றம்  . துழனி  –  ஒலி  .; ஆரவாரம் . அகக் குற்றத்தை மறைத்தற்கு மேற்கொள்ளப்படும்  ஆடம்பரச் செயல் . இது புறக்குற்றமாகும் .  “வெள்ளன்  அலேன்” என்பது கள்ளமுடையேன்  என்னும்  பொருட்டு .  “கள்ளரோ புகுந்தீரென்னக்  கலந்து  தானோக்கி  நக்கு ,வெள்ளரோ மென்று நின்றார்  விளங்கிளம் பிறையனாரே “ என்னும்  தமிழ்  மறையில்  வெள்ளர்  கபடமற்றவர் என்னும் பொருளில்  வந்திருத்தல் அறிக . கபடமற்றவன்  அல்லேன் என்பதனால் கபடமுடையவன் என்பது  பெறப்படும் .

             இங்ஙனம்  பெறப்பட வைத்தது , புறத்தேயுள்ள  ஆரவாரச்  செயல்களால் தூய்மையுடைமை  காட்டி  அகத்தே  வஞ்ச வொழுக்கம் பொதிந்திருத்தல்  தோன்றற்கென்க  . “முகத்தினினிய  நகாஅ வகத்தினா வஞ்சர் “ என்று  பொய்யில் புலவர் கூறிய  வஞ்சகரிலக்கணம்  ஈண்டு  நினைக்கத்தக்கது . வஞ்ச வொழுக்கம்  மேற்கொண்டு  நடிக்குஞ் சிறியேனை  அக்குற்றம்  கருதிக் கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாயது)  என்பார் . “ “மையல்  துழனி வெள்ளனலேனை விடுதி கண்டாய் “  என்றார் .

                இனி, மையல்  துழனி  வெள் அனலேனை  எனக்கொண்டு  மயக்கமாகிய ஆரவாரித்து ஒளி செய்யும்  நெருப்பினையுடையேனாகிய  எனப்  பதப்பொருள் கூறலும்  பொருந்தும் . இவ்வுரைக்கு  விளக்கம்  வருமாறு:-   தக்கன  இன்ன  தகாதன இன்ன வென்று  பகுத்துணர்தற்குத்  தடையாயது உலகியல்  இன்பமாகிய  காமம்  முதலியனபற்றிய  மயக்கமாகு மெனவும், அம்மயக்கமும்  நெருப்பைப்   போலச்  சுட்டெரிக்கின்ற  தெனவும் , இந்  நிலையுற்  சிறியேனைக்  கைவிடல்  தகுமாவெனவும்  விண்ணப்பித்துக் கொள்வாராய்  , “மையற்றுழனி  வெள்ளனலேனை விடுதி கண்டாய் “  என்றார் . மையல்  அனலேன்  என இயைக்க  . மையல்  – காம முதலியன  பற்றிய மயக்கம் . துழானி  –  ஒலி . வெள் – ஒளி .ஒலியும் ஒளியும் நெருப்பிற்கு  இயற்கை  யடையாகும் . “தீயின்  குணங்கள் வெப்பப்பரிசமும்  , எரிதலைத்  தெரிவிப்பதாகிய தம தம ஒலியும், ஒளி நிறமாகிய  உருவ குணமும்  என மூன்றென்ப .  காமத்தைத்  தீயாக உருவகிப்பதை ,  “ உள்ளினுஞ் சுட்டிடும்  உணருங்  கேள்வியிற்  , கொள்ளினுஞ்  சுட்டிடுங்  குறுகி  மற்றதைத் , தள்ளினுஞ் சுட்டிடும்  தன்மை யீதினாற் , கள்ளினுங்  கொடியது காமத்தீயதே “ என்று  கந்தபுராண நூலாசிரியரும் , “நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற்றன் ணெனும் , தீயாண்டுப்  பெற்றாளிவள் “  எனப் பொய்யில்  புலவரும்  கூறியவற்றான்  அறியலாம் .  

                   இதன்கண் , உலகியற் பொருள் பற்றிய புலன்கள் திருவருட்  பேற்றிற்குத்  தடையாமெனவும் , அத்தடையால்  செய்யத்தகாதன   செய்யலானேன் எனவும் கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                    *********************************************

பாடல் :25 .

எறும்பிடை  நாங்கூ  ழெனப்புல  னாலரிப்  புண்டலந்த

வெறுந்தமி  யேனை  விடுதிகண்  டாய்வெய்ய   கூற்றொடுங்க

உறுங்கடிப்  போதவை  யேயுணர்  வுற்றவ  ரும்பரும்பர்

பெறும்பத  மேயடி  யார்பெய  ராத  பெருமையனே  .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  புலன்களால் உண்டாம்  தடையை  ஓர்  உவமை  முகத்தால்  எடுத்துக்காட்டியிரங்கிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அப்புலன்களால் உண்டாம் துன்பத்தையும்  , அத் துன்ப நீக்கத்திற்குத்  துணை புரிவாரில்லாமையால்   தமக்கேற்பட்ட  தனிமையை யும்  எடுத்துக் கூறி  இரங்குகின்றார் .  

 பதவுரை :- வெய்ய  கூற்று   ஒடுங்க  =  கொடிய  கூற்றுவன்  வலி குன்றும்படி  ,

உறும்  கடிப்போது  அவையே  உணர்வுற்றவர்   =  அவனுடலிற்  பொருந்திய  மணமிக்க  திருவடி  மலர்களாகிய  அவற்றையே  பற்றுக்கோடாக  அறிந்தவர்களாகிய  சரியையாளரும்  ,

உம்பர் உம்பர்   =  அவரின்  மேம்பட்ட  கிரியையாளரும்  அவரின்  மேம்பட்ட  யோகநிலையினரும்  ஆகிய  இவர்கள்  ,

பெறும் பதமே   =  பெறுதற்குரிய  (சாலோக முதலிய) பத முத்திகளாக  விளங்குகின்றவனே  ,

அடியார்  பெயராத  பெருமையனே   =   அம் மூவரினும்  மேம்பட்ட  மெய்யன்பராகிய  சிவஞானிகள்  மீண்டு  வாராமைக்கு  ஏதுவாகவுள்ள  (சாச்சிய  முத்தி நிலையாக  விளங்கும் ) பெருமையுடையானே ,

எறும்பு   இடை  நாங்கூழ்  என  =  பல எறும்புகளின்  இடைப்பட்ட  நாங்கூழ்ப்  புழுவைப் போல , 

புலனால்  அரிப்புண்டு  அலந்த  =  ஐம்புலன்களாலும்  தின்னப்பட்டு  வருந்திய  ,

வெறும் தமியேனை  விடுதி  =  பயனற்ற  தமியனாகிய  என்னை  விட்டு விடுவாயோ?  (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-இறைவன்  கட்டளைப்படி  தன் கடமையைப் புரியும் தருமனை  “ வெய்ய  கூற்று “ என்றது , கட்டளையிட்ட  அப்பெருமான் திருஉள்ளக் குறிப்பிற்கு மாறுபடத்  தவ முதல்வராகிய மார்கண்டேயரை உயிர்  கவர முற்பட்ட  தீச்செயல்  பற்றியென்க . கடமையை மேற்கொண்டது எங்ஙனம் தீச்செயலாகும்  எனின் “ இறைவ  நிற்கு  உவந்தது அற  மெனப்படு   மற்றேனைய மறமெனப்படுமால்  “ என்னும்  சமய  உண்மைப்படி  விதி விலக்குச்  செயல்களெல்லாம்  ஆண்டவன்  முன்னிலையில்  மாறுதல்  எய்துமாதலின் , ஆகுமென்க . கண்ணப்பர்  இட்ட  உணவு  விலக்கப்பட்ட தெனக்  கொண்டு  வெறுத்த சிவ  கோசரியார்க்கு  “அவனுகந்திட்ட  விறைச்சி  யெனக்கு  நன்மாதவர் இட்ட நெய் பாலவியே “ என்று  இறைவன் உணர்த்திய  செய்தியால் , விலக்கு  விதியாயது போலக்  , கூற்றுவன் கடமையாகிய  விதி ஈண்டு இறைவற்கு  உவந்ததாக இல்லாமையால் , விலக்காயிற்றென்பது .

                     மக்கள் தேவர் முதலிய எல்லோரையும் ஒடுக்கும் ஆற்றல்  படைத்த  கூற்றுவனது ஒடுக்கத்தைக்  குறிப்பிட்டது , சிவபெருமானது முடிவிலாற்ற லுடைமையைப்  புலப்படுத்தற் கென்க .  கடிப்போது  –  மணமிக்க  மலர் ; ஆகு பெயராய்த்  திருவடியை யுணர்த்தும் , மலர் போன்ற  இறைவனுடைய  திருவடி  மெத்தெனத்  தாக்கிய  அளவில் , மிக்க  வலிபடைத்த  கூற்றுவனது திறல்  ஒடுங்கிவிட்ட தென்பது போதா., “உறுங்கடிப்போது”  என்றார்.  “அவை” யென்பது பண்டறிசுட்டு ; தம்மை யடைந்தாரது இடையூற்றைப் போக்கி  அழிவிலின்பத்தில்  தலைப்படுத்தும் இயல்பினவாகிய அத் திருவடிகளையே என்பது கருத்து . ஏகாரம் தேற்றப்பொருட்டு . “புறச் சமயநெறி நின்று …….. சிவனடியைச்  சேர்வர்  “என்று  சைவ  நூலிற்  கூறியபடி  பல  பிறவகளினும் சோபான    முறையால்   மேற் சென்று சென்று  அரிய  சித்தாந்த சைவத்தை யடைந்தவர்கள் , சரியை  முதலிய நால் வகை  நெறிகளையும் மேற்கொண்டு  முடிவில்  இறையடி நீழலில்  இயைந்து பேரின்பெய்துவர்  என்பது உண்மை யாதலின்  , அம்முறையில்  சரியையிற்றலைப்படக்கிடைக்கப்பெற்றார் .

                       அந்நெறி நின்று  இறைவன் திருவடியையே  பற்றுக்கோடாக  உணர்ந்து வழிபாடு  செய்யும்  இயல்பினராவர்  என்பது தோன்ற  ,”அவையே  யுணர் வுற்றவர்” என்றார் . பாசப்பிணிப்பாற்  பிறப்பிறப்புக்களிற்பட்டு  நெடுங்காலம்  வருந்துவோர் அத்துன்ப  ஒழிவிற்குரிய  சாதனத்தையே  முதலில்  நாடுதல்  இயல்பாதலின் ,மிருகண்டு  புதல்வர்  பொருட்டுக்  கூற்று  உதைத்த செய்தியைக்  குறிப்பிடுவாராயினர்  . இத்துணையும்  சரியை வழியொழுகுவோர் என்பது  பெறப்பட்டமையான்  மேல்  “உம்பர் உம்பர் “ என்பன கிரியையாளரையும் , யோக நிலையினரையும் உணர்த்துவனவாம் .உம்பர்  – மேல்நிலை ; ஆகு பெயராய்  அந் நிலையில்  ஒழுகுவோரைக்  குறிக்கும்  . பின்னதற்கும்  இஃதொக்கும்.

                         சரியையாளர்க்கு  மேற்பட்ட  கிரியையாளரும் அவர்க்கு  மேற்பட்ட யோக நிலையினரும் என்றபடி  ஈண்டு எண்ணும்மைகள் செய்யுள் விகாரத்தால் தொக்கன . ஆகவே சரியை கிரியை யோகம் என்னும்  மூன்று  நெறிகளினும் ஒழுகுவோர் , முறையே சாலோகம் சாமீபம் சாரூபம் என்னும் பதமுத்திகளைப் பெறுவறாதலின் ,அன்னார்க்கு  அப்பதங்களையருளும் இறைவனைக் குறித்து , “உணர்வுற்றவர் உம்பரும்பர் பெறும் பதமே” என்றார். இன்பத்தை வழங்கும்  இறைவனை வேற்றுமையின்மைபற்றி “இன்பமே” என்று  விளித்தமை போலப்  பதமுத்தியருளும் நிலையில் இறைவனைப் “பதமே” என்று  விளிகொள்ளலானார் .

                          அடியார்  என்றது  ஈண்டு  மெய்யன்பராகிய சிவஞானச் செல்வரை . அவர்கள் ஞான நெறியின்  ஒழுகு வேராதலின் அன்னார்  பெறும்  பேறு  முடிவாகிய சாயுச்சிய முத்தி நிலையாகும் . “முன்மார்க்க ஞானத்தா லெய்து  முத்தி வென்பர் மூன்றினுக்கு  முத்திபதம்  என்பர் “ என்பது  ஞானநூல் . சாலோக  முதலிய  பத முத்திகளைப்  பெற்றார்க்கு  அந் நிலையிற்  பெயர்ச்சியுண்டு . சாயுச்சிய  நிலையினர்க்குப்  பெயர்ச்சியில்லா மையால் , “அடியார்   பெயராத பெருமையனே  “ என்றார் . “பெயராத” என்னும்  எதிர்மறைப்  பெயரெச்சம் பெருமையன்  என்னும் காரணப்பெயர் கொண்டு  முடிந்தது. “ஏதுப்பொருள்  கருவிக்கணடங்கும்” என்பர்  சேனாவரையர் .  

                           மெய்யடியாராகிய  சிவஞானச் செல்வர்  எய்தும் சாயுச்சிய  நிலை மீண்டு  பெயராத நிலையாகும் . இதனையே  பிறிதோரிடத்து அடிகள்  “மறிவறியாச் செல்வம்” என்பர் . சாயுச்சியமாகிய  பரமுத்தி யெய்திய வுயிர், மீண்டு  பொறவாமைக்கு  ஏதுவாகவுள்ள  பெருமை  சிவபெருமான் கண்ணதாகலின்  ,”பெயராத பெருமையனே  “  என்றார் .பெருமை  –  ஞான நெறி  யொழுகித்  தன்னையடைந்த வுயிரை மீண்டு பிறவியிற்  செலுத்தாமல்  அழிவில் இன்பந் துய்க்கத்  தன்னை வழங்குதலாகிய  செயற்கருஞ் செயல் .

                            இவ்வாறு  இறைவனை விளித்துப்  புலன்களால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை ஒருவமையில்  வைத்து அடிகள் புலப்படுத்துகின்றார் . நாங்கூழ்  –  ஈரமுள்ள மண்ணில்  தோன்றும் ஒருவகைப்புழு . இதனை நாக்குப்பூச்சி  எனவும்  நாகப்பூச்சி  யெனவுங் கூறுவர் . இப்புழு  எறும்பினும் எத்தனையோ  மடங்கு  உருவத்தாற் பெரியதாகும் . இதனைப் பல  எறும்புகள் கூடிச்  சல்லடைக்கண்களாக  அரித்து ஈர்த்துச் செல்லுதலைக்  கண்கூடாகக்  காணலாம் . நாங்கூழ்  உருவத்தால் பெரிதாக  இருந்தும் , சிற்றெறும்புகளை அடக்கும்  ஆற்றலின்றி  அவற்றால்  துன்புறுதல் போல , யான் பருத்த வுருவமுடையனாக  இருந்தும் ,நுண்ணிய  நிலையில்  என்னுட்  புகுந்து  என்னையரித்து வருத்தும் புலன்களைக்  கடக்கும் ஆற்றலின்றி  வருந்து கின்றேன்  என்பார்,  “ எறும்பிடை நாங்கூழெனப்  புலனாலரிப்புப்புண்டலந்த” என்றார் . பூச்சி  தின்னுதலை அரித்தல் என்ப .  “காழ்சேர் முது சுவர்க் கணச்சிதலரித்த” என்புழிக்  காண்க. ஒரு பொருள் எவ்வாற்றானாவது பயன்படும் நிலையிலுள்ளதாயின் , அதற்குக்  கேடு  நேர்ந்துழி  அப்பயன்  கருதி  அக்கேட்டையொழிக்க ஒருவர் முற்படுதல் உலகியலிற்  காணப்படுவது .

                             நாங்கூழ்  பயன்படாமையால் எறும்பரிக்கக்  காண்பார் விளையாட்டுக்  காட்சியாகக்  காண்பதல்லது , துணை செய்ய  முற்படாமை போலப்  புலன்களால்  அரிப்புண்டு  துன்புறும்  யான் யார்க்கும்  பயன்படாமையால் , இத்துன்பத்தினின்றும்  விலக்கித் துணைபுரிவார்  யாரையும்  இலனாயினேன்  என்பார் ,”வெறுந்தமியேனை” என்றார்  . வெறுமை –  பயனின்மை . தமியேன் –  துணையில்லாது  தனிப்பட்டவன் , உலகியற்றுணை சிறிதுமின்றித்  தனிப்பட்டவனாகிய  சிறியேற்குத்  தோன்றாத்  துணையாக வுள்ளவன்  நீயே  யாதலின்  , இந் நிலையில்  என்னைக் கைவிடல்  தகுமா  என்பார் , “ விடுதி கண்டாய்”  என்றார் .

            இதன்கண், உலகியற்  பொருள்பற்றிய  புலன்களாலாம்  துன்பம்  பொறுக்கலாற்றாதது என்று  கூறப்பட்டிருத்தலின்  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                                     **********************************

பாடல் : 26

பெருநீ  ரறச்சிறு  மீன்றுவண்  டாங்கு  நினைப்பிரிந்த

வெருநீர்மை  யேனை  விடுதிகண  டாய்வியன்  கங்கைபொங்கி

வருநீர்  மடுவுண்  மலைச்சிறு  தோணி  வடிவின்  வெள்ளைக்

குருநீர்  மதிபொதி  யுஞ்சடை  வானக்  கொழுமணியே .

கருத்துரை :-    முன்னைத் திருப்பாட்டில்  புலன்களால்  விளையும்  துன்பத்தையும்  தம் தனிமையையும்  எடுத்துக்கூறி  இரங்கிய  அடிகள்,  இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  துன்புறுதற்கு  ஏது உயிர்த்துணையாகிய  நின்னைப்  பிரிந்திருக்க  நேர்ந்ததாகும் என்று  கூறி  அப்பிழை  பொறுக்க  வேண்டுகின்றார் .

பதவுரை :-  வியன் கங்கை   =  பெரிய  கங்கையாறாகிய ,

பொங்கி வரும் நீர் மடுவுள்  = மிக்கு  வழியும்  நீர்ப் பெருக்கையுடைய  நீர் நிலையில் ,

மலைச் சிறு தோணி  வடிவின்  =  பொருகின்ற  சிறிய  தோணியின்  உருவத்தைப்  போன்ற  ,

வெள்ளை குரு  நீர்  மதி பொதியும்  சடை  =  வெண்ணிறமுடைய  குளிர்ந்த  பிறை  அடங்கப்பெற்ற  சடையினையுடைய  ,

வானக் கொழுமணியே  =  ஞானவெளியில்  திகழும்  செழிப்புள்ள  மாணிக்கமே ,

பெரும் நீர் அற   =  பெரிய  நீர்  நீங்க ,

சிறு மீன்  துவண்டாங்கு   =  சிறிய  மீன்  துடித்தாற் போல ,

 நினைப் பிரிந்த  =  ஆதரவாகிய  நின்னைப்  பிரிந்தமையால் ,

வெரும்  நீர்மையேனை  =  அஞ்சும்  தன்மையுடைய  சிறியேனை  ,

விடுதி  =  விட்டு விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  பகீரதன்  தவத்தால் விண்ணில்  நின்றும்  தடுத்தற்கரிய  விரைவோடு வெளிப்பட்ட  தெய்வயாறு என்பார் ,  “ வியன்  கங்கை” எனவும் , அங்ஙனம் மிக்க விரைவாகப்பொங்கி வழியும்  நிலையில்  அவ் யாற்றை  மீண்டும்  பகீரதன்  வேண்டுகோட்கு இரங்கி, இறைவன்  தன் சடையின்  ஒரு  கூற்றில்  அடங்கிய  அளவில் அஃது ஒரு  சிறிய  நீர்நிலை போலக்  காண்ப்  பட்டது என்பார், “பொங்கிவரு நீர் மடு”  எனவும்  கூறினர் . பொங்கி வரு நீர்  என்றது குறைவற  நீர் நிறைந்த  மடுவின்  இயல்பைக்  குறிப்பதாகும் .  மலைத்தல்  –  அலைகளால்  அங்கும்  இங்கும்  தாக்கப்படுதல் ; அசைதல் .  இறைவன்  சடையிற்  சூடிய  பிறை  ஒரு  கலையுடைய தென்று  கந்தபுராண ஆசிரியரும் ,இரு கலையுடையது என்று  அடியார்க்கு  நல்லாரும்  கூறுவர் . இறைவன்  சடையில் கங்கையின்  அருகில் அணியப்பட்ட  பிறை , ஒரு  நீர் நிலையில்  அசைந்து விளங்கும்  வெண்ணிறமுடைய  சிறிய  தோணியைப் போற்  காணப்படுகின்றது  என்று  அடிகள் கூறிய  வருணனை  ஓர் உண்மை யைக்  குறிப்பிற் புலப்படுவதாகும் . திருவாசகத்தில்  இத்தகைய  வருண னைப்  பகுதி  மிகவும்  சுருக்கமாகவே  காணப்படும் .

                  பிறவிக்கடலுள்  மூழ்கிப்  பற்றுக்கோடு  இன்றி  வருந்தும் உயிர்களுக்கு  இக்காட்சி  ஓராற்றான்  ஆறுதலளிக்கும்  இயல்பினது . “இனியென்னே  யுய்யுமா  றென்றென்றெண்ணி  ஐந்தெழுத்தின்  புணை பிடித்துக்கிடக்கின்றேனை  “ என்று  திருச்சதகத்தில் கூறியபடி  அப்பிறவிக் கடலைக்  கடத்தற்கு  உரிய  தோணியாக  அப்பிறை அடிகளுக்குக்  காட்சியளித்த தென்பது . மேலும்  திங்களஞ் செல்வர்க்கு  நேர்ந்த சிறுமையைப்  போக்கிப்  பாதுகாத்த இறையருளை நினைவுகூர்ந்ததுமாம் .

                   வானம்  –  ஞானப் பரவெளி . கொழுமை  – செழுமை; ஒளி மிகுதியைக்  குறிக்கும் . நாண்  மீன் , கோள்   முதலியன  இல்லாத  ஞானாகாயத்தில் செந்நிற  வொளிமிக்க  மாணிக்க மணிபோலத்  திகழும்  இயல்பினது  இறைவன்  திருவுருவம்  என்பார்  “ வானக் கொழுமணியே” என்றார் . குருந்தமரத்து நீழலில்   இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளி  யளித்த  காட்சி  இதுவாகும் .  இதனைத்  தம் கண்குளிரக்  கண்ட  அடிகள்  தம்மை  இறைவன்  பிரிந்த நிலையில் “இன்று போய் வானுளான்  காணாய்” என்று  நெஞ்சிற்கு  அறிவித்துள்ளாராதலின் , அந்நிலயில் ஞான வெளியில் அப்பெருமான் திருவுருவத்தை வைத்து நினைவு  கூர்ந்து இவ்வாறு  கூறினர்  என்பது .

                     இனி,நேறிற் காட்சியளித்த  பெருமான்  பிரிவில்  தாம்  எய்திய  துன்பத்தை  ஒருவமையில்  வைத்துக் கூறுகின்றார். பறவைக்குக் கூடும்,  ஆடு,மாடு முதலிய  விலங்குகளுக்குக் கொட்டிலும் அவ்வப்பிராணிகளின்  உடலளவிற்குத்  தக்கவாறிருத்தல்  போதியதாகும் . சிறியவுருவமுள்ள  மீனுக்குச்  சிறிய அளவுள்ள  நீர் போதியதாகாது. மீன் வடிவாற்  சிறியதா யினும் வாழ்தற்குப்  பெரு  நீரே வேண்டியதாகும்  . இஃது உலகியலிற்  கண்டது .மகரம்  முதலிய  மீன்கள் பெரிய  வுருவ முள்ளனவே யெனின், அவற்றிற்குத் தக அவை  வாழ்தற்குக் கடல் அமைந்திருத்தல் கருதத்தக்கது . அக்கடற் பெருமையை நோக்க அம்மீன்கள் சிறியன  என்பது  கண்கூடு

ஆகவே  மீன் அளவிற்கு  அது வாழும்  நீரளவு  மிகுதியாக இருக்கவேண்டும் மென்பது  புலனாகும்.  

                    இவ்வுண்மை குறித்தே “பெரு  நீறரச்   சிறு மீன்  துவண்டாங்கு”  எனப்  பெருமை  சிறுமைகளாகிய அடைகள் முறையே புணர்க்கப்பட்டன . நீர்ப்பெருக்கில்  வாழும்  மீன்  அந் நீரற்ற  விடத்துத்  துடித்து வருந்துதல் போல,  பரங்கருணைத்  தடங்கடலாகிய  நின் அருள் நிறைவிலீடுபட்டு  இன்புற்றிருந்த  யான் , நின்  பிரிவில்  அஞ்சி  வருந்தலானேன் என்பார்,  “நின்னைப்பிரிந்த வெரு நீர்மையேனை” என்றார் . பிரிந்த என்னும் பெயரெச்சம்   உண்ட  இளைப்பு என்பது போலக் காரணப்பொருளில்  வந்தது. நீரற்ற  நிலையில்  மீனுக்கு  உணவும்  புறக்காப்பும்  இலவாதல் போல , இறைவன்  பிரிவால் அடிகளுக்கு உள்ளுணர் வின்பமும்  புறத்துணையும் இலவாயின வென்பதும்  ஈண்டு  கருதத்தக்கது .

                      எங்கும்  நிறைபொருளாகிய  இறைவன்  பிரிதல் எவ்வாறு  பொருந்தும் எனின் , ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சியளித்துப்  பின்  உருக்கரந்த நிலை பற்றிக் கூறியதகாலின்  பொருந்துமென்க .  மீன்  சிறியதா யினும் , அதன் வாழ்க்கைக்குப்  பெரு  நீரன்றிச்  சிறு  நீர்  ஆதரவாகாமை போலச் சிறியேனாகிய  எனக்கு , அருட்கடலாகிய  நின்னையல்லாத பிறர் ஆதரவாகார் என்று  அடிகள் விண்ணப்பித்துக் கொண்டபடியாம் . நின் பிரிவால் என் செய்வல்  என அச்சமுற்றிருக்கும் இந் நிலையில் , அபயமளிக் கும்  இயல்புடைய  நீ என்னைக்  கைவிடல்   தகுமாவென்பார் ,  “வெரு நீர்மை  யேனை விடுதி”  என்றார் . வெரு நீர்மையேன்  என்றது அபயம்  அளித்தற்கு இடன்  குறிப்பிட்டபடியாம் .

                      இதன்கண், இறைவனது  பிரிவில் பிரபஞ்ச வாதனையால் தாக்குண்டு அஞ்சி வருந்திய செய்தி  கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                              **********************************

பாடல் : 27 .

கொழுமணி  யேர்நகை  யார்கொங்கைக்  குன்றிடைச்  சென்று  – குன்றி

விழுமடி  யேனை  விடுதிகண்  டாய்மெய்ம்  முழுதுங்கம்பித் 

தழுமடி  யாரிடை  யார்த்துவைத்  தாட்கொண்  டருளியென்னை

கழுமணி  யேயின்னுங்  காட்டுகண்  டாய்நின்  புலன்  கழலே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  புலன்களால்  விளையும் துன்பத்திற்கு  ஏது  இறைவனைப்  பிரிந்திருக்க  நேர்ந்ததாகுமென்று  கூறிய  அடிகள்  , இத்திருப்பாட்டில்  அப்பிரிவு  நேராமைப்பொருட்டு  மெய்யன்ப ரோடு  தம்மை  இயைத்து வைத்து , மீண்டும்  ஞானமய மான  திருவடிக்  காட்சியளித்தல் வேண்டுமென  விண்ணப்பஞ் செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :- என்னைக்  கழும்  மணியே   =   அடியேனைத்  தூய்மைப்படுத்துகின்ற  மாணிக்கமணியே ,

கொழுமணி  ஏர்நகையர்   =   செழிப்புள்ள  முத்தை யொத்த  அழகிய  பற்களை  யுடைய  மகளிரின்  ,

கொங்கைக் குன்று  இடைச்சென்று  =  கொங்கைகளாகிய  மலைகளில்  ஏறிச்சென்று  ,

குன்றி விழும் அடியேனை  =  அறிவு  குறைந்து இடறி  விழுகின்ற  அடியேனை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

மெய்முழுதும்  கம்பித்து அழும்  அடியார் இடை  =  அன்பு  முதிர்ச்சியால்  உடல் முழுதும் நடுங்கி அழுகின்ற  மெய்யடியார்  பக்கல் ,

என்னை  ஆர்த்து வைத்து  =  அடியேனைப்  பிணித்து வைத்து ,

ஆட்கொண்டருளி  =  ஆளாக  ஏற்றுக்கொண்டு  அருள்புரிந்து ,

நின் புலன் கழல்  காட்டு  =  நின் ஞானமயமான  திருவடியைக்  காட்டியருளல்  வேண்டும்  என்பது .

விளக்கவுரை :-  கழுவுதல்  –  தூய்மை செய்தல் .  கழுவுமணி  என்பது கழுமணி யென்றாயிற்று . உலகத்து  மணிகள்   பிற  கருவிகளால்  தூய்மை செய்யப்படுவனவாம் . கடவுன்மணி  தன்னையடுத்த பொருள்களை  அழுக்கறத்  தான்  தூய்மை செய்யும் இயல்பினதாம் . இவ்வுண்மை  புலப்படவே  , “ என்னைக்  கழுமணியே  “  என்றார் . உயிரைத் தூய்மைப்படுத்தல்  பாசவழுக்கைப்  போக்கி ஞானமயமாக்குதல்  . ஆதலின், அத்தகுதி இறைவனுக் குண்மை குறித்து  இவ்வாறு  கூறப்பட்டது . கொழுமணி  –  குற்றம்  நீங்கிய  ஒளிமிக்க முத்து .  முத்து  நிரைத்தன்ன வெண்பல்லர் என்றது , இளமைச் செவ்வி புலப்பட  நின்றது . காமம்  கடியத்தக்க தென்னும்  அறிவின்றி  மகளிர்  முயக்கிடை  மயங்கி  வீழும்  இயல்பினன்  என்பார் ,”கொங்கைக்  குன்றிடைச்  சென்று  விழுமடியேனை “ சமநிலத்து நடந்து சேறலினும் , மலையேறி நடத்தலால் உடல் வலி குறைந்து  கால் இடறி வீழ்தல் கூடுமென்னும் உலகியற் செய்தியும்  ஈண்டுக்  குறிப்பிற்  புலப்பட்டவாறு  அறிக .

            வீழ்ச்சியுடையானைக் கைதூக்குதலே  அருளாளன் செய்யத்தக்கதா கலின் , “விழும்  அடியேனை விடுதி” என்றார் . வீழவிடாமற்  செய்யத்தக்கன  யாதென்னும் வினாக்களுக்கு  விடையாகப்  பின்வருவன கூறப்படுகின்றன . முறுகிய பேரன்புடைய  மெய்யடியார்க்கு  உடல்  புளகமுற்று நடுக்கம்  எய்துதலும் , நெஞ்சுருகி  அழுதலும்  நிகழ்வனவாதலின்  . “மெய்முழுதுங் கம்பித்தழுமடியார்”  என்னப்பட்டார் . ஆண்டவனைக் குறித்து   “அழுதாலுன்னைப் பெறலாமே”  என்று  அடிகளும் , அடிகளைக் குறித்து  “அழுதயடிடைந்த அன்பன்”  எனப்  பரஞ்சோதி  முனிவரும்  கூறியிருத்தல்  அறிக .  

               கம்பித்தல் – நடுங்குதல் .  நடுக்கமும் அழுகையும்  மெய்யன்பர்க்கு  அன்பு மேலீட்டால் தன்வயம்  இழந்த நிலையில் உளவாம்  என்பதை , “அழலது கண்ட மெழுகதுபோலத்,  தொழுதுளமுருகி யழுதுடல் கம்பித்து” என்று அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலானும்  அறிக . “உருகுவது, உள்ளங் கொண்டோருருச்  செய்தாங்கெனக் , கள்ளூறாக்கையமைத்தனன் “ என்றதற் கேற்ப  , இவ் அன்பு நடுக்கம்  உடலுறுப்புக்களின்  ஓரோவிடத்தன்றி உறுப்புக்கள்  முழுவதையும் பற்றியதென்பார் ,”மெய் முழுதும்”  என்றார் .

             அடிகள் தம்மை “கொங்கைக் குன்றிடைச் சென்று குன்ற விழுமடியேன்” எனவும் , மெய்யன்பரை “மெய்ம் முழுதுங் கம்பித்தழுமடியார்” எனவுங் கூறியமையால்  தம் அடிமை நாடகத்தில் நடிப்பது போன்ற  போலி யடிமையாகுமென்பதும் , மெய்யன்பர் அடிமையே  உண்மையடிமை யென்பதும்   புலப்படவைத்தபடியாம்.  “என்னை” யென்பது இடை நிலை விளக்காக  நின்று ஈரிடத்தும்  இயையும் .நிலையின்றிக் குன்றிடை யேறியும் வீழ்ந்தும் அலந்து திரியும் என்னை  ஒரு நிலைப்படுத்தற்கு  மெய்யன்பர்   கூட்டத்தில் பிணித்து வைத்தல் வேண்டுமென்பார், “அடியாரிடை  யார்த்து வைத்து “ என்றார் .

             அறிவுரை  கூறியும்  அதற்கு அடங்காமல்  அங்கும் இங்கும் திரியும் ஒருவனை ஓரிடத்துக் கட்டிவைத்து  நல்லாற்றுப்படுத்தல்  அறிஞர்  செயலா தல்  உலகியலிற் காணப்படுவதன்றோ?  அக்குறிப்பும் ஈண்டுப் புலனாதல் அறிக . அறிவு திருத்துதற்கன்றே  ஆர்த்து வைத்தற்கு  இடன்  அடியார் பக்கலாயிற்று . மெய்யடியார்  பக்கலில் இயைத்து வைத்தல்  ஆட்கொள்ளு தற்கு  ஏதுவாம் என்பார் , “ஆர்த்துவைத்தாட்கொண்டருளி” என்றார் .  ஆர்த்து வைத்து என்னும்  எச்சம் ஏதுப்பொருட்டு .

             இறைவனுடைய திருவடியையே  ஞானமயமாகச்  சைவ  நூல் கூறும் .  ஆதலின் “புலன்  கழல் “ என்னப்பட்டது.  திருவடி ஞானத்தை முன்னர்க் குருந்த நீழலில்  ஞானாசிரியனாக  எழுந்தருளி உபதேசித்த  ஞான்று  “தாட்டாமரை  காட்டி “ என்றபடி காட்டியருளியவாறே  இன்னமும் காட்டியருளல் வேண்டும் என்பார்,  “இன்னுங்   காட்டு  கண்டாய்”  என்றார்.  கண்டாய்  முன்னிலையசை . இறைவன் திருவடி  காண்டலில்  இடையறாது நிகழும் அவா  மிகுதியால் அடிகள்  இவ்வாறு  வேண்டுவாராயினர் .

                இதன்கண், “கொழுமணியேர் நகையார் கொங்கைக்  குன்றிடைச்  சென்று குன்றி விழுமடியேனை”  என்றதனால் அந் நிலை வெறுக்கத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .

                                             ***********************************

பாடல் : 28 .

புலன்கள்  திகைப்பிக்க  யானுந்  திகைத்திங்கொர்  பொய்ந்நெறிக்கே

விலங்குகின்  றேனை  விடுதிகண்  டாய்விண்ணும்  மண்ணுமெல்லாம்

கலங்கமுந்  நீர்நஞ்  சமுதுசெய்  தாய்கரு  ணாகரனே 

துலங்குகின்  றேனடி  யேனுடை  யாயென்  தொழுகுலமே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  மெய்யன்பர்  பக்கல் தம்மை  இயைத்து வைத்து மீண்டும்  திருவடிக்காட்சியளித்தல்  வேண்டுமென  விண்ணப்பஞ் செய்துகொண்ட  அடிகள்  இத்திருப்பாட்டில்  அக்காட்சி  இல்வழியுண்டாம்  தீங்குகளைக்  கூறப்புகுந்து ,முதலில்  புலன்களால்   திகைப்புண்டு  நெறிபிழைத்துச்  சேறலைக் கூறுகின்றார் .

பதவுரை :-  விண்ணும்  மண்ணும் எல்லாம் கலங்க  =  விண்ணுலகமும்  நிலவுலகமும் ஆகிய  எல்லாம் கலக்கமுறுதலைக் கண்டு ,

முந்நீர்  நஞ்சு  அமுது  செய்தாய்  =  கடலில்  தோன்றிய  நஞ்சத்தை  உண்டு  காத்தருளியவனே  ,

கருணாகரனே  =  அருட்குணத்திற்கு  இருப்பிடமானவனே ,

துலங்குகின்றேன்  அடியேன்  உடையார்  =  நிலை கலங்குகின்ற  அடியேனை  அடிமையாக  உடையவனே  ,

என் தொழுகுலமே  =  என் குலதெய்வமே ,

புலன்கள் திகைப்பிக்க  =  ஐம்புலன்களும்  மயக்கமுற ,

யான்  திகைத்து இங்கு  ஓர்  பொய்  நெறிக்கே  விலங்குகின்றேனை  =  மயங்கி  இவ்வுலகத்து நிலையற்ற  ஒரு  தீய  நெறிக்கண்ணே  விலகிச்செல்கின்ற  சிறியேனாகிய  என்னை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  அமுதத்தை  விரும்பிக்  கடல் கடைந்த பொழுது , அக்கடலில்  கொடிய  பெருநஞ்சு  தோன்றிற்றாக  , அது கண்டு  நமக்கு  என்ன கேடு  நேருமோ வென  முதலில்  நடுக்கம்  எய்தினர் தேவராதலானும்  ,அப்பெருநஞ் சின்  கொடிய  வேகத்தை  கண்டு பின் கலக்கமுற்றவர்   மக்களாதலானும்  அம் முறைக்  குறிப்புத்  தோன்ற  , “  விண்ணும்  மண்ணும்  “  என்றார் . விண் மண்  பாதாலமென்னும்  முத்திறவுலகங்களும்   நடுங்கினவாகச்  சிறப்புப்  பற்றி முதலிரண்டுங் கூறப்பட்டன .  “நஞ்ச மஞ்சி  ஆவ  வெந்தா யென்ற விதாவிடும் “ தேவர் நிலையைக் கண்டு இறைவன்  இரக்க முற்றனனாதலின், அதற்கேற்ப   “கலங்க” என்னும்  எச்சத்தின்  பின்  “கண்டு”  என்னும்  வினை யெச்சம்  வருவித்துரைக்கப்பட்டது .

         முந்நீர்  –  கடல் . ஆற்று  நீர்  , ஊற்று நீர் , மழை நீர்  என்னும்  மூன்றும்  உடையதெனவும்  , நிலத்தை  ஆக்கல்  , அளித்தல்,  அழித்தல்  ஆகிய  மூன்று  தன்மைகளை யுமுடைய தெனவும்  கூறுப . சில  உணவுப்பொருள்களிலும்   நஞ்சுண்டு . அஃது  உண்டவர்க்குச்  சிறிது  சிறிதாக   நாளடைவிற்  கேடு  விளப்பதாகும் . பாம்பு  முதலிய  பிராணிகளிடத்தும் நஞ்சுண்டு  . அது  தீண்டப்  பட்டவர்க்கு  மாத்திரம்  தீங்கு  விளைக்கும் . அங்ஙனமின்றி  உண்ணாத  நிலையில்  கணப்பொழுதில்  எல்லா  உலகங்களுக்கும்  கேடு  விளைக்கும்  கொடுநஞ்சென்பார் , “முந்நீர்  நஞ்சு”  என்றார் . நஞ்சின்  கொடுமையைத்  தணிக்கப்  புகுவார் , மணி மந்திர  மருந்துகளைக்  கருவியாகக்  கொள்ளுவர்  .இப் பெரு நஞ்சை யழிக்கப்  புகுந்த  இறைவன் , அதனையே  உணவாகக்  கொண்டனன்  என்பார் ,  “அமுது செய்தாய்” என்றார் .  இறைவன்  நஞ்சுண்ட  வரலாறு  அப் பெருமானது பேரருட்டிறத்  துக்கு   எடுத்துக்காட்டாகுமென்பது தோன்ற  அடுத்துக்  “கருணாகரனே” என்று  அருளிச்செய்தார் .

          பெருநஞ்சின்  எழுச்சி  கண்டு  கலங்கிய  உலகங்களையே  காப்பாற்றி யருளிய பேரருட்  குணமுடைய  நினக்குப்  , பிறப்பிறப்புத்  துன்பங்களுக்கு   அஞ்சிக்கலங்கும்   சிறியேனைக் காத்தல்  பெரிதன்று  என்பது  தோன்றத், “துலங்குகின்றேன்” எனவும்  , அங்ஙனம்  கலங்குகின்ற  யானோ  நின்  அடியேனாவனெனவும் , எனக்குத்  தலைவனும்   என் குலதெய்வமும் நீயே  எனவும்  புலப்படுப்பார் , “அடியேனுடை யாயென்  தொழுகுலமே “  என்றார் . துலங்குதல்  –  துளங்குதல் ; கலங்குதல் .  “அம்பலத்தா னருளில்லவர் போல், துலங்கலைச்  சென்றிதென்னோ  வள்ளலுள்ளந்  துயர்கின்றதே  “ என்புழித்  துலங்கும்  அப்பொருட்டாதலறிக .  அடியேனுடையாய்  என்புழி  இரண்டனு ருபு    விரித்துக்  கொள்க .

            தொழுகுலம்  என்பது  வணங்குதற்குரிய  தெய்வத்  திருக்கோயில்  என்னும்  பொருளிடையதாய்க்  குல தெய்வத்தை யுணர்த்தும் . நிலைவுத லில்லாத   மாயாகாரியப்  பொருள்களைப் பற்றி  நிகழும்  சுவையொழி  யூறோசை நாற்றமென்னும்  ஐம்புலங்களும்  , முதலில்  இன்பம்  போல்தோன்றி  முடிவில்  துன்பமாக  மாறுதலானும், அம்மாற்றத்தை  அறியாவாறு  அறிவை  மயக்குதலானும்  ,”புலன்கள்  திகைப்பிக்க”  என்றார் , “மாறிநின்றென்னை மயக்கிடும்  வஞ்சப் புலன்” என்று  அடிகள் பிறிதோரி டத்துக்  கூறியதும் அறிக .  திகைப்பித்தல்  –  மயக்க முறுத்தல் .  “திகைத்தாற்றேற்ற  வேண்டாவோ”  என்ற இடத்தும்  அப்பொருட்டாதல்  அறிக . “யானும்  திகைத்து “ என்புழி  உம்மை  அசை நிலை  “காமக்கடன் மன்னும் “  என்ற இடத்துப்போல . “யானுந்  திகைத்திங்கொர் பொய்ந் நெறிக்கே  , விலங்குகின்றேனை  “ என்பதை  முன்  உரைத்தாங்குரைத்து முடித்துக் கொள்க .

              புலன்களின்   மயக்கத்தால்  அழிவில்லாப்  பேரின்பம்  பயக்கும் சிவநெறிக்கட்  சேறல்  ஒழிந்து அழியும்  இயல்பினதாய  இவ்வுலக இன்பத்தில்  தலைப்படுத்தும்  அவநெறிக்கட்  செல்லலானேன் என்பார் ,  “இங்கோர் பொய் நெறிக்கே  விலங்குகின்றேனை “  என்றார் .”இங்கு” என்றது இவ்வுலக  இன்பம்  என்னும் பொருட்டு .   ஓர் பொய் நெறி  –  தீமை செய்வதில் ஒப்பற்ற  பிழை நெறி . செந்நெறிச்  செலவே  அறிவுடையார்க்கு  இயல்பாதலின்  , அவ்வியல்பின்   மாறிச்செல்லுதலால்  அச்செலவு  விலகிச்  சேறலாயிற்று . ஒரு நெறியினின்றும்  விலகிப்  பிறிதொரு  நெறிக்கட்  செல்ல  நேர்ந்துழி , அஃது  ஒரோவமயம்  மற்றொரு  நன்னெறியாகவும்  வாய்ப்பதுண்டு .

               அடியேற்கு  அங்ஙன  மின்றித்  தீயதாகவே  வாய்த்ததென்று  இரங்குவார் ,  “தீநெறிக்கே”  என்றார் . ஈண்டு  ஏகாரம்  தேற்றப் பொருட்டு செல்லும்  நெறி  தீயதாயின் , அதனை விட்டு விலகி நன்நெறிக்கட்  சேறல்  நன்றாம் . அங்ஙனமின்றி  நன்நெறிக்கட்  செல்லும்  நிலையில் அதனை விட்டு விலகித் தீநெறிக்கட்  சேறலானேன் என்று  அடிகள் இரங்கிக்  கூறியபடியாம் . இறைவ!  புலன்களின்  தாக்குதலால்  மயக்கமுற்றுத் , தீநெறிக்கட்  செல்லும்  சிறியேனைத்  தெளிவித்து , அருட் கிடனாக்குதலே   நின் பெருந்தன்மைக்கு  ஏற்றதாகவும் , இந்நிலையில்  கைவிடல் தகுமா  என்பார் ,  “விடுதி கண்டாய்” என்றார் .

               இதன்கட்  புலன்களால்  திகைப்புண்டு  நிலையுதலில்லாத உலக இன்பத்தை விரும்பிச்  செந்நெறிச்  செலவைக் கைவிட்டுப்  பொய் நெறிக்கட்  சேறல் , வெறுக்கத்தக்க தென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                                   *****************************************

பாடல் : 29 .

குலங்களைந்  தாய்களைந்  தாயென்னைக்  குற்றங்கொற்  றச்சிலையாம்

விலங்கலெந்  தாய்விட்  டிடுதிகண்  டாய்பொன்னின்  மின்னுகொன்றை 

யலங்கலந்  தாமரை  மேனியப்  பாவொப்பி  லாதவனே

மலங்களைந்  தாற்சுழல்  வன்றயி  ரிற்பொரு  மத்துறவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் இறைவன்  திருவடிக்காட்சி இல்வழி உண்டாம் தீங்குகளுள் ,புலன்களால்  மயக்கமுற்று  நெறி தவறிச்  சேறலைக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில் ஆணவ  முதலிய  மலங்களாற் பிணிக்கப்பட்டு வருந்துதலை  ஓர்  உவமை  முகமாக  எடுத்து இயம்புகின்றார்.

பதவுரை :-  பொன்னின் மின்னுகொன்றை  அலங்கல்  =  பொன்னைப்போல ஒளி விடுகின்ற திருக்கொன்றை மலர்  மாலையையுடைய  ,

அம் தாமரை மேனி அப்பா  =  அழகிய  தாமரை மலர் போன்ற திருமேனியையுடைய என் தந்தையே ,

ஒப்பு  இல்லாதவனே  =  ஒப்பற்ற பரம்பொருளே ,

மத்து உற பொரும் தயிரின்  =  மத்தினால் வலிந்து கடையப்பட்டுச்  சுழலும் தயிரைப் போல ,

மலங்கள் ஐந்தாற் சுழல்வன்  =  ஐந்து  மலங்களாலும் தாக்கப்பட்டுச்  சுழல்கின்றேன் , இந் நிலையில் (குற்றம்) 

குலம் களைந்தாய்  =  காம  முதலிய  குற்றக்  கூட்டங்களைக்   களைந்தனையாயின் ,

என்னைக் குற்றம்  களைந்தாய்  =  அடியேனுடைய  அம்மலக் குற்றங்களையும்  களைந்தனையாவாய்  ,

விலங்கல்  ஆம்  கொற்றைச்சிலை  எந்தாய்  =  மேருமலையாகிய  வெற்றி  தரும்  வில்லையுடைய  என்  தந்தையே ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  பொன் , கொன்றை மலரின்  நிறத்திற்கும்  ஒளி செய்தற்கும்  உவமையாயிற்று . மக்கட்டலைவராகிய  அரசர்க்கு  அடையாளப்பூவும்  , அழகுக்கு  அணியும்  பூவும்  , போர்ப் பூவும்  தனித்தனி வெவ்வேறாகும், இறைவர்க்கு  இம் முத்திறப்பூவும்  கொன்றாய்மலரேயாம் . இவ்வுண்மை யைக்  “ கார்விரி கொன்றைப் பொன்னேர்  புதுமலர்ந்த , தாரன்  மாலயன்  மலைந்த  கண்ணியன் “ என்பதனால் அறிக .  தார்  விசேடமாக  இடுவது;  அடையாளப் பூ .  மாலை – அழகுக்கு  இடுவது . கன்ணி  –  போர்ப் பூ . இறைவன்  நீறு அணிந்த செம்மேனியன்  ஆதலின் , நீற்று  நிறவொளிக்கு  வெண்டாமரை மலரும் , திருமேனி  நிற வொளிக்குச்  செந்தாமரை மலரும்  ஒப்பானவாம் . இவ்விரண்டு  உவமையும்  ஈண்டுப்  பெறப்படுவதற்கே  வெண்டாமரை  செந்தாமரை  யென்னாது ,அந்தாமரையென  உவமங் கூறப்பட்டது . அழகு  ஈண்டு  நிறமும் ஒளியும் செவ்வி  குலையாமை. ஞானா சிரியனாக  எழுந்தருளி  ஆட்கொண்ட  நிலையிற் கண்ட  திருவுருவக் காட்சியே  இவ்வனுபவத்திற்கு  ஏதுவாகும் .  ஞானத்தந்தையாக  எழுந்தருளி  உபதேசித் தமையால் , “அப்பா” எனவும், அப்பெருமான் தம்பொருட்டு  மக்களுருவில்  வெளிப்படினும் , எல்லா  ஆற்றலும்  படைத்தகடவுட்டலை வனாவான்  என்னும்  உண்மையுணச்சியால்  “ஒப்பில்லாதவனே  எனவும்  கூறியருளினார் .

            இனி, அடிகள் தாம்  ஆணவ  முதலிய  மலங்களால்  சுழன்று துன்புறுதற்கு  மத்திட்டுக் கடையப்படும்  தயிரை உவமையாக  எடுத்துக் காட்டுகின்றார் .  மத்திட்டு  மெத்தெனக்  கடையப்படின் , தயிரின்  சுழற்சி  மெல்ல  நிகழ்வதாகும் . அந் நிலையை  விலக்கிச்  சுழற்சி  மிகுதி தோன்ற , “மத்து உறப்பொரும்”  என்றார் .  உறப்பொருதல்  –  மிகுதியாகத்  தாக்குதல் . வலிந்து கடையுங்கால்  தயிர்  முன்னும்  பின்னுமாக  விரைந்து சுழல்வதாகும். அதுபோல  உயிர்  மலங்களால்  தாக்கப்பட்டு , கன்மத்தீற்கீடாக உடல் கரணங்களைப்  பெற்று , பற்பல புவனங்களுக்கு  மாறி மாறிச்சென்று  , பற்பல நுகர்ச்சிகளையும்  எய்திப்  பிறப்பிறப்புக்களிற் சுழலுமாதலின்  அந் நிகழ்ச்சியைத்  தம் மேலேறிட்டு  , “மலங்களைந்தாற்   சுழல்வன்  தயிரிற்பொரு மத்துறவே” என்றார் . மலங்கள்  ஐந்தாவன –  ஆணவம் , கன்மம் , மாயை , மாயேயம் , திரோதாயி  என்பன .

             ஆணவம்  என்பது , உயிரறிவைச்  சிறுமைப்படுத்தும் மூலமாகும் . கன்மம் ,  நல்வினை  தீவினையாகிய  செயல்வடிவில்  நிகழ்ந்து  பக்குவ  முற்றுப்  பின்  இன்பதுன்பங்களை  விளைப்பதாகும் . மாயை  –  கன்மத்திற் கீடாக  உயிர்க்கு  உடல்,கரணம் ,இடம்  நுகர்  பொருள்களைப்  பயப்பதாகும் .  திரோதாயி –  உயிரோடு  மறைந்து நின்று  ஏனை  மலங்களத் தொழிற்படுத் துப்  பாகம்  வருவிக்கும்  மறைப்புச்  சத்தி . குற்றம்  என்னும்  சொல்லை , குற்றக்குலங்களைந்தாயெனவும், , என்னைக்  குற்றம்  களைந்தாயெனவும்  ஈரிடத்தும் இயைத்துப்பொருள்  கொள்ளல்வேண்டும் . குற்றக்குலம் –  காம வெகுளி மயக்கம் ஆகிய  குற்றக்கூட்டம். . இவற்றை அவிச்சை  ,அகங்காரம் , அவா , ஆசை , வெகுளி  என ஐந்தாகவும்  கூறுப .

              காரணமாகிய  இக்குற்றங்கள்  களையப்படுமாயின் ,  காரியமாகிய  வினைகள்  நிகழாமையின் , அவற்றால்கூட  வரக்கடவ துன்பங்களும்  இலவாம் . மெய்யுணர்வின் பயனும்  கைகூடும் . ஆகவே  இக்குற்றங்கள்  நிகழாமற்  செய்யு முகமாக  மலநாசம்  பண்ணவேண்டுமென்னும்  கருத்து டையராய் , “குலங்களைந்தாய்  களைந்தாயென்னைக்  குற்றம் “ என்றார் . முன்வரும்  களைந்தாயென்பதன் பின் , “ஆயின்”  என்னும்  சொல்லையும்  பின் வரும் “களைந்தாய்”  என்பதன்பின்  , “ஆவாய்”  என்னும்  சொல்லையும்  அவாய்  நிலையான்  வருவித்துரைத்து க் கொள்ளல்வேண்டும் . இனிக், குலங்களைந்தாய்  என்பதற்கு  , சாதி  குடிப்பிறப்பு  முதலியவற்றால்  உயர்வுடையோமென்னும்  செருக்கை யொழித்தனையாயின்  என்று  பொருள்  கோடலும் ஒன்று . “ சாதி  குல  பிறப்பென்னும்  சுழிக்கப்பட்டுத்  தடுமாறும்,  ஆதமிலி நாயேனை” என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியதும்  ஈண்டு  நினைக்கத்தக்கது .

             என்னை  நலியும்  மலங்களும்  காம முதலிய  குற்றங்களுமாகிய   பகைகளைக்  கடிந்தொறுத்து என்னை  நன்நிலைப்படுத்தல் , மேருமலையை  வில்லாக  வளைக்கும் ஆற்றலும் , அதனால் யாண்டும்  வெற்றியே  பெறும்  இயபுமுடைய  உண்மைத்  தந்தையாகிய  நினக்குக்  கடமையாகுமென்பார், “கொற்றைச்சிலையாம்  விலங்கலெந்தாய் “  என்றார் . எந்தாய்  என்றதனால்  அடிகள்  இறைவனுடைய  புதல்வராவார்  என்பதும் ,மைந்தன் பகையைத் தன் பகையெனக்கொண்டு  களைய  வேண்டியது தந்தையின்  கடமை யென்பதும்  பெறப்படும்  .இதனையுட்கொண்டே  இந்நிலையில்  அடியேனைக்   கைவிடலாகாதென்பார் , “விட்டிடுதி  கண்டாய்” எனக் கூறியருளினர் .

          இதன்கண்,  “மலங்க ளைந்தாற் சுழல்வன்   தயிரிற்  பொருமத்துறவே  “  என்றதனால் , உலக வாழ்க்கை  ஆணவ  முதலிய  பாசப்பிணிப்பால்   நிகழ்வதென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக .  

                                                     **********************************

பாடல் : 30 .

மத்துறு  தண்டயி  ரிற்புலன்  றீக்கது  வக்கலங்கி

வித்துறு  வேனை  விடுதிகண்  டாய்வெண்  டலைமிலைச்சிக்

கொத்துறு  போது  மிலைந்து  குடர்நெடு  மாலைசுற்றித்

தத்துறு  நீறுடன்  ஆரச்செஞ்  சாந்தணி  சச்சையனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஆணவ  முதலிய  மலங்களால்  தாம் எய்தும் கலக்கத்திற்கு  , மத்தினாற்  கடையப்படும்  தயிரின்  சுழற்சியை  உவமையாகக் கூறிய   அடிகள் , இத்திருப்பாட்டில்  மத்தினாற்  கடையப்  படுங்கால் , தயிர்  தன்  குளிர்ந்த இயல்புக்கு  கேடில்லாதபடி கலக்கப்படுதல்  போல  ,உயிர்க்குணமாகிய  அறிவு  நிலைக்குக்  கேடில்லாதவாறு  என் உயிர் நிலை  கலக்கப்பட்டும்   அவ்வளவின்றி , அறிவும்  வெதும்பிக் கெடுமாறு   புலன்  தீப்பற்ற  அக்கலக்கத்தில்  ஆழலானேன்  என்று  வருந்திக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வெண் (மை) தலை மிலைச்சி  =  வெண்மை  நிறமுடைய  தலையைச்  சடையிற்  சூடி ,

கொத்து உறு போது மிலைத்து  =  பூந்துணரிற்  பொருந்திய  கொன்றை மலர்  மாலையை  யணிந்து ,

குடர்நெடு  மாலை  சுற்றி =  குடராகிய  நெடிய  மாலையைக்   கழுத்திற்  சுற்றிப்புனைந்து ,

 தத்து உறு  நீறுடன்   =  பரந்துபட்ட   திருநீற்றுடன் ,

ஆரம் செஞ்சாந்து  அணி சச்சையனே  =  சந்தனத்தினது  செம்மையான  கலவையை  யணிந்து திகழும்  மெய்ப்பொருளாகவுள்ளவனே  ,

மத்து  உறு  தண்தயிரின்   =  மத்தினால்  கடையப்படும்   குளிர்ந்த தயிரைப் போல ,

புலன் தீக்  கதுவக் கலங்கி   =  புலன்களாகிய  தீ ப்பற்றி வெதுப்பக்   கலக்கமுற்று  ,

வித்து  உறுவேனை  =  அக்கலக்கத்தில்  ஆழ்ந்து  வித்தாம்  தன்மை  யெய்திய  அடியேனை ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  தாருக  வனத்து முனிவர்கள்  வெகுளி  காரணமாக  இறைவனைக்  கொலைபுரியக்  கொடி  வேள்வியொன்றியற்றி  அதனின்றும்  தோன்றிய  வெண்டலை  யொன்றை  யேவினராக, அதனை  இறைவன்  கையினாற்  பற்றித்  தன்  சடையிற்  சூடினனென்பது புராண கதை .  மிலைத்தல்  –  சூடுதல் . வெண்டலை  மிக்க  கொடுஞ் செயலுடைய  தாகலின்   அதனால் உலகங் கேடு அடையாமைப்  பொருட்டு அதனைச்  சூடினனென்ப.  இவ்வுண்மையை  “அகிலமதிறவா வண்ணம், முக்கணனருள்  செய்தந்த  முண்ட முண்டகக்   கைபற்றிச் , செக்கரஞ் சடைமேற்  கொண்டுன்  செயலினைப்  புரிதியென்றார் “ என்பதனான்  அறிக . இதனால் எத்துணைக்  கொடிய  இடையூறும்  ஆண்டவன்  சார்பில்  அணுகாதென்னும்  உண்மை  புலப்படுக்கப்  பட்டபடியாம் .  

         கொத்து  – பூங்குலை  . குலையினின்றும்  கழன்ற பூ , புதுமைச் செவ்வி  குலைந்திருக்கு மாதலின்  , அக்குலைவின்மை  குறித்தற் பொருட்டு , “கொத்துறு போது”  என்று  கூறப்பட்டது . இனிக் குலையினின்றும்  கொய்யப் படாமல்   அக்குலையோடு  சூடப்பட்டது என்று  கோடலும்  ஒன்று . பிரமன் முதலியோர்  அழிவில்  அவர் தம் என்பு  தலை  முதலியவற்றை  மாலையாகக் கோத்தணிந்தனன் இறைவன்  என்று  கந்தபுராணம்  கூறுமாதலின் ,அவற்றின்  இனமாக  அத் தேவர்  தம்  குடர்களையும்  மாலையாக அணிந்தனன்  என்பார்  “குடர்நெடு மாலை சுற்றி” என்றார் . என்பு  மாலை முதலியவற்றை  யணிந்தத னாற்  போதரும் உண்மைப்  பொருளைக்  கந்தபுராணத்துட்  காண்க. “நூறு கோடி  பிரமர்கள்  நொந்தினார் , ஆறு  கோடி  நாராயணரங்ஙனே  , யேறு கங்கை மணலெண்ணி லிந்திரர், ஈறிலாதவன்  ஈசனொருவனே”  என்று  அப்பர்  அருளிய  தேவாரத்தானும்  இவ்வுண்மை  புலனாகும் .

          மேலும் மக்கள்  முதலியோரால்  விரும்பத்தக்கதும்  வெறுக்கத்தக்கது மாகிய   போதினையும்  குடரையும் ஒப்பப்  புனைந்தமையால், இறைவன்  ஒன்றை  விழைதலும் ஒன்றை  வெறுத்தலும் இல்லாதவன்  என்னும்  உண்மையும்  பெறப்படும் என்க . { கொடி நெடுமாலை என்று பாட வேறுபாடு இருப்பின் , தாமரை முதலிய கொடியோடு  கூடிய மாலையெனப்  பொருள்  கோடலும்  பொருந்தும் . அப்பாட வேறுபாடு  படிகளிற்  காணப்படாமையாற்  கொண்டிலம்}  தத்தல்  –  பரத்தல் . “தத்தரி நெடுங்கண்” என்புழி , அப்பொருட்டாதலறிக . இது , திருநீற்றை  நீரிற்  குழையாமல்   வரியின்றிப்  பூசுதலைக்  குறிக்கும் .  இதனை  உத்தூலனம்  என்ப . ஆரச் செஞ்சாந்து  –  செஞ்சந்தனக்  குழம்பு  .  திருநீறும்  சந்தனக் குழம்பும் முறையே  வெப்பமும்  தட்பமும்  செய்வனவாதலின்  ,ஒன்றொற்கொன்று   மாறுபட்ட  குணங்களெல் லாம்  இறைவனைச்  சார்ந்து ஒத்த  நிலை பெறும் என்னும் உண்மையை அது குறிப்பிற்  புலப்படுத்தும்  என்க .

                இனித்திருநீறும்   செஞ்சாந்தும் கூறியது , “ பால் வெள்ளை நீறும்   பசுஞ்சாந்தும் “ என்றபடி  உமை யொரு  கூறனாம்  நிலையைக்  குறிப்பிற்  புலப்படுத்து மெனக்  கோடலும் ஒன்று. இக்குறிப்புப் புலன்களால்  வெதும்பும்  தம்மைக்  கைவிடாமல்  அளிசெய்து  காத்தற்கு  அம்மையுடனாக  அப்பனை  அடிகள்  நினைவுட்  கொண்டன  ரென்பதைப்  புலப்படுத்துவதாகும் .என்றும் உள் பொருளைச்  சத்து  என்று  வட நூலார் கூறுவர் .சத்தின்  தன்மை  சத்தா வென்றாகும்  . ஆகார வீறு தமிழில் ஐகாரமாகும் . ஆதலின்  சத்தை  என்றாகி , வித்தை  விச்சை யென்றாதல்  போலச் , சத்தை சச்சை யென்றாயிற்று . ஆகவே  சச்சையன்  என்பது , சத்தாந் தன்மை யுடையவன்  என்னும்  பொருளதாம் .

                   பின் வரும் திருப்பாட்டின்  முதன் மொழிக்கும்  இதுவே  பொருளென்க . மேற்  போந்த வெண்டலை , போது , குடர்நெடுமாலை  , நீறு என்பவற்றை  அணிந்தது பற்றிய  புராண கதைகளெல்லாம் என்றும்  உள் பொருளாக வுள்ளவன்  சிவபெருமானே  யென்பதை  வலியுறுத்தற்கு  எழுந்தனவென்க.  இவ்வுண்மை குறித்தே  அவ்வரலாறுகளை   முதலில்  விளக்கி  இறுதியில்  முடி பொருளாகச்  “சச்சையனே” என அருளிச்  செவாராயினர் .  

                    இனி, இரங்கத்தக்க  தம் நிலைமையை உவமையால் விளக்கிக் கூறுகின்றார் .  மத்தினாற்  கடையப்படும்  தயிர்  போல  ஐம்புலன்களானும்  என் உயிர் கலக்கமுறுகின்றது  என முன்னைத்திருப்பாட்டில்  கூறப்பட்டத னையே   ஈண்டும்  வழிமொழிதலாகக்   கூறினரெனினும் ,ஒரு வேற்றுமை  யீண்டுண்டு  . எத்துணை  கலக்கப்படினும் தயிரின்  தட்பம்  நீங்காமை  போல   உயிர் கலக்கமுறினும்  உயிர்க்குணமாகிய   அறிவு நிலை  கலங்காதென்பது  முன்னைத் திருப்பாட்டிற்   போதரும் . அதனை விலக்கற்கே  , “தண்டயிர்” என  ஈண்டுத் தன்மை யடை  புணர்க்கப்பட்டும் , அத்தன்மை புலன்களின் வெம்மையில் ஒழிந்ததென்னும்  குறிப்புத் தோன்ற  , “புலன்  தீக்கதுவ”  என்றும்  கூறுவாராயினர் .  

                      இங்ஙனம்  கூறியதனால்  உயிர்நிலை  கலங்கியதோடு  அறிவு  கலங்க  முற்றுளதென்பது  புலனாகும் . புலன்களாகிய  தீயினால்  அறிவு நிலை  திரிந்து  வெப்பமுற்றுக்  கலங்கிய  நிலையில்  ,அக்கலக்கத்தினின்றும்   விடுதலைபெற  வியலாது , ஆழ்ந்து  பாடலானேன் என்பார் , “வித்துறுவேனை” என்றார் .வித்தாம் தன்மையடைதல்  –  வேரூன்றியழுந்துதல்  . என் உயிர் நிலையும்  அறிவு  நிலையும்  கலங்கி  வெதும்பி  ஆழ்ந்து கிடக்கும்  இத்துயர்  நிலையில் , பேரருளாளனாகிய   நீ  சிறியேனைக்  கைவிடல்  தகுமாவென் பார் ,  “விடுதி கண்டாய்”  என்றார் .  

                          இதன்கண், “புலன் தீக்கதுவக்  கலங்கி   வித்துறுவேனை “ என்றதனால்  , உலக  வாழ்க்கையில்  உயிர்  நிலையும்  அறிவு  நிலையும்  கலக்கமுறுதல்  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல்  அறிக 

                                               **************************************

பாடல் : 31 .

சச்சைய  னேமிக்க  தண்புனல்  விண்கால்   நிலநெருப்பாம்

விச்சைய  னேவிட்டிடுதிகண்  டாய்வெளி  யாய்கரியாய்

பச்சைய   னேசெய்ய  மேனிய  னே யொண்  படவரவக் 

கச்சைய  னேகடந்  தாய்தடந்  தாள  வடற்கரியே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம் உயிர் நிலையும் அறிவும்  கலக்கமுற்று  வெதும்புமாறு புலன்களாகிய  தீயிடைப்பட்டு வருந்துகின்றேன்  எனக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அத் தீமுதலிய  ஐம்பெரும்   பூதங்களாகவும்  திகழ்கின்றவன்  நீயேயாதலின்  , வெம்மை யைத்  தணிக்கும்   தண்புனலாக  நின்று  அவ்வெப்பத்தைப்  போக்கியருள  வேண்டுமென்பதைக்  குறிப்பிற்  புலப்படுத்துகின்றார் .  

பதவுரை :-   வெளியாய்  கரியாய்  பச்சையனே  செய்யமேனியனே  = 

வெண்மை  கருமை  பசுமை  செம்மையாகிய  நிறங்களையுடைய  திருமேனியையுடையாய் ,

ஒண்பட அரவக்  கச்சையனே   =  ஒளி பொருந்திய  படத்தினையுடைய   பாம்பாகிய   அரைப்பட்டிகையை  யுடையவனே ,

தடம்தாள  அடல் கரி கடந்தாய்  =   அகன்ற  அடிகளையும்   கொல்லும்  தொழிலையுமுடைய  யானையைக்  கொன்றவனே ,

சச்சையனே  =  மெய்ப்பொருளாகவுள்ளவனே ,

மிக்க தண்புனல்  விண்  கால்  நிலம்  நெருப்பு  ஆம்  விச்சையனே  = 

மிக்கதாகிய  குளிர்ந்த  நீர்  விசும்பு  காற்று  நிலம்  தீ  ஆகிய  ஐம்பெரும்  பூதங்களாகவும்  விளங்கும்  வித்தயை யுடையவனே ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- சிவபெருமானுக்கு  ஈசான  முதலிய  முகங்கள்   ஐந்துள்ளன வென்றும்  , அவை  தனித்தனி வெண்மை  முதலிய   நிறங்களுடையன வென்றும்  சிவாகமங்கள்  கூறும் . இத்திருப்பாட்டில்  கூறப்பட்ட  நான்கு நிறங்களோடு , கூறப்படாத   பிறிதொன்றையும்  இனம்  பற்றி  இயைத்து  ஐந்து  நிறங்களாகக்  கொள்ளல்  வேண்டும் .”நிறங்களோரைந்துடையாய் “ என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதும் அறிக . இந் நிற வேற்றுமை  , நினைவு  கூறும்  அன்பர்  நலங்குறித்து  இறைவன்  மேற்கொண்டபடியாம் .  

               இனி, வெளியாய்  கரியாய்  என்பன  முறையே  பதிஞானமாகிய   ஞானநாட்டத்திற்கு  வெளிப்பட்டும்  ,பசு பாச ஞானங்களாகிய  ஊன நாட்டத்திற்கு   வெளிப்படாமலும்  இருக்கும்  இறையியல்பைக்   குறிப்பன வெனவும்  , பச்சையனே  செய்ய மேனியனே என்பன  ,அருள்வடிவினளாகிய   இறைவியோடு  இயைந்து அன்பர்க்குக்  காட்சி  நல்கி அருள்புரியும்  நிலையைக்   குறிப்பனவெனவும்  கோடலுமாம் . இவ்வுண்மைகளை   “ஊனக்  கண்  பாச முணராப்  பதியை  , ஞானக்கண்ணினிற் சிந்தைநாடி “என்னும்  சிவஞானபோத  நூற்பாவானும்  , “குறையுணர்வாகிய  பசுவறிவானும்    பாசவறிவானும்   உணரப்படாத  முதல்வனை  அவனது திருவடி  ஞானத்தாற்றன்னறிவின் கண்ணே  யாராய்ந்தறிக “  என்னும்  அதனுரை யானும்  , “கரியரேயிடந்தான்   செய்யரேயொரு  பால் “ என்னும்  திருவிசைப் பாவானும்   முறையே  அறிக .

                வெண்மை  முதலியன   இறைவற்  குண்மையாயினும்  , “செய்ய மேனியனே” என  ஈண்டுத்  திருமேனியைச்  செம்மை யோடியைத்துக்  கூறியது , ஞானாசிரியனாக  எழுந்தருளி  யளித்த காட்சியிலீடுபட்டமை  பற்றியென்க .  மற்றை  மெய்யடியார்  அநுபவத்திலும்  இறைவன்  திருமேனி  செம்மை நிறமுடையதாகக்   காட்சிப்பட்ட  தென்னும்  உண்மையும்   ஈண்டு  நினைக்கத்தக்கது . .  “தீ  வண்ணன்  “  “செம்மேனி யெம்மான் “  என்பன  காண்க.   யானைத்தோல்   அகன்றதாகலின்   அது  போர்த்தற்கும்  , புலித்தோல்  அதனிற்  சிறிதாகலின்  , அஃது உடுத்தற்கும்  இயைபுடை யன வாயினாற்போலப்  பாம்பு  அரைக்கச்சாக  அமைந்தது பொருத்தமே .

                  இறைவன்  யானையையும் புலியையும் கொன்று உரித்துப்  போர்த்து  உடுத்து போலன்றிப்  பாம்பை  உயிருடன் அரைப்பட்டிகையாகக்  கொண்டனனாதலின் “ஒண்படவரம் “ என்னப்பட்டது . ஒளியுடன்  கூடிய  படம்  உயிருள்ளதற்கே  இயல்பிற்  பொருந்துவதாகும் . பாம்பைக்  கச்சாகக்  கொண்டது குண்டலினி என்னும் சுத்தமாயையை இறைவன் தனுள்ளடக்கி யிருத்தலாகிய  உண்மைப்பொருளைக்  குறிப்பதாகும் . “தடந்தாள அடற்கரி”என்றது , கொடிய கயமுகா சுரனாகிய  யானையை  . கடத்தல்  –  அழித்தல் .  கடந்தாய்  என்பது முன்னிலை வினைப்பெயர்  விளியேற்று  நின்றது . கொடிய  அசுரனை  யழித்த மிக்க வீரச்செயலைப்புலப்படுத்தியது . புலப்பகையால்  உண்டாம்  தீக்கை யொழித்தல் எளிதென்றற்கு  .  “சச்சையனே” என்பதன்  விளக்கம்  முன்னைத் திருப்பாட்டிற்  கூறப்பட்டது .   

            “மிக்க தண்புனல்”  என்புழி  மிகுதி உருவப்  பருமையையும் , தண்மை குணத்தையும் புலப்படுக்கும் .  புனலுக்கு  இவ்வாறு  கூறவே  ஏனைய  பூதங்க ளும்  காரியப்பாட்டின்  பருமையாகிய  பொதுக் குணமும் , அவ்வப்  பூதங்க ளுக்குரிய  சிறப்புக்  குணங்களும் பெறப்படும் . சத்துப்பொருளாகவும்  பெருமை  சிறுமை  தண்மை  வெம்மை  முதலிய  குணங்களில்லாதவனாக வுமுள்ள இறைவன் “இரு நிலனாய்த் தீயாகி  நீருமாகி  , யியமானனா யெறியுங்  காற்றுமாகி , அரு நிலைய திங்களாய்  ஞாயிறாகி  யாகாச மாயட்ட   மூர்த்தியாகி “ என்றபடி .

                 அசத்துப்பொருளாகவுள்ள  ஐம்பெரும்  பூதங்களாகவும்  , குணங் களை யுடையவனாகவும்  வெளிபடாமல் , மாயவித்தை  யென்பார், “சச்சையனே  மிக்கதண்புனல்  விண்கானில நெருப்பாம் விச்சையனே” என்றார் . நிலையுடைப்  பொருளாகவுள்ளவன்  நிலையில் பொருளாகவும்  வெளிப்படுதலின்  அது வித்தையாயிற்று  என்பது .

                    இதன் முன்னைத் திருப்பாட்டில்  ஐம்புலன்களும் தீயாகக்  கூறப்பட்டமையால் , அத்தீயின்  ஆற்றலை  யொழித்தற்கு  இறைவனை  இத் திருப்பாட்டில்  ஐம்பெரும்  பூதங்களுள்  வைத்து , முதற்கட் புனலாகக்  கூறி யருளினர் . நீரும்  நெருப்பும்  இயைந்துழி  மிக்க தன் கண் ஏனையது ஒடுங்கி யொழியும் ஆதலின், நெருப்புக்கு  ஏதும் அடையின்றி  “புலன்  தீக்கதுவ” என்று முன்னைத் திருப்பாட்டிற்  கூறி, இத்திருப்பாட்டில்  “மிக்கதண்புனல்” என்றார். வெம்மையை  யொழித்தற்குத்  தண்மையும்  சுருக்கத்திற்கு மிகுதியும்  கூறிய நயம் நினைந்து  இன்புறத்தக்கது .

                       இறைவ, நிலையுடைப்  பொருளாகிய  நீ ,  நிலையில் பொருளா கிய  பூதங்களாகவும் வெளிப்பட்டருளும் வித்தை யுடையையாதலின்  , அவ் வித்தை  முகமாகவும் அடியேனைப்பற்றி நிற்கும் புலப்பகையை ஒழிக்கும் ஆற்றல் நின்பாலதாகும் . அங்ஙனமாகவும்  அப்புலன்களாகிய  தீயினால்  கலக்கமுற்றிருக்கும்  இந்நிலையில் , ஏழையேனைக்  கைவிடல்  தகுமா?  கைவிடாமற்  காத்தருள வேண்டுமென்று அடிகள் விண்ணப்பஞ் செய்து கொண்டபடியாம் .  

                       இதன்கண், நிலையுடைப்பொருளாகவுள்ள   இறைவன்  , நிலையில் பொருள்களாகிய  பூதங்களாகவும்  வெளிப்படுதல் , நிலையுதலில்லா  உலக  வாழ்க்கையில்  உயிர்களுக்கு  நேரும்  புலப்பகைகளை  யொழித்தற் பொருட்டாமென்பது பெறப்படுதலின்  பிரபஞ்ச வைராக்கியம்  குறிப்பிற் புலனாதல்  அறிக .

                                           ************************************

பாடல்:32 .

அடற்கரி  போலைம்  புலன்களுக்  கஞ்சியழிந்த  வென்னை

விடற்கரி  யாய்விட்  டிடுதிகண்  டாய்விழுத்  தொண்டர்க்கல்லால்

தொடற்கரி  யாய்சுடர்  மாமணி  யேசுடு  தீச்சுழக் 

கடற்கரி  தாயெழு  நஞ்சமு  தாக்குங்  கறைக்கண்டனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  ஐம்பெரும் பூதங்களாக  விளங்கும்  நிலையில் , மிக்க தண்புனலாக  நின்று  புலன்களாகிய  தீயின்  வெம்மை யைக்   போக்கியருளவேண்டுமென்று இறைவனை வேண்டிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அப்புலன்களுக்கு  அஞ்சிக்  கலங்கும்  நிலையிற்  சிறியேனைக் கைவிடாமற்  காக்கும்  கடப்பாடு, என்னிற்  பிரியாதிருக்கும்   நின்பாலதேயென  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார்

பதவுரை :-  விழு தொண்டற்கு அல்லால்  தொடற்கு  அரியாய்  =  சிறந்த மெய்யடியார்க்கு  அன்றிப்பிறர்க்குத்  தீண்டுதற்கு  அருமையாகவுள்ளவனே ,

சுடர் மாமணியே  =  ஒளி விளங்கும் பெரிய  மாணிக்க மணியே  ,

சுடு தீ சுழல  =  சுடும் இயல்பினையுடைய   தீக்   கொழுந்து  சுழலும்படி ,

கடல் கரிதாயெழும்  =  திருப்பாற்கடலின் கண்ணே  கருமை  நிறத்தோடு  தோன்றிய ,

நஞ்சு அமுதாக்கும்  கறைக் கண்டனே  =  நஞ்சத்தை  உணவாகக்கொண்ட   கரிய  கழுத்தையுடையவனே ,

என்னை  விடற்கு  அரியாய்  =  அடியேனை  எக்காலத்தும் விட்டு  நீங்காதவனே ,

அடல் கரிபோல்   ஐம்புலன்களுக்கு  அஞ்சி  அழிந்த  என்னை  =  வலிமிக்க  யானையைப்போன்ற  ஐம்புலன்களுக்கும்  அஞ்சி  நிலை  கலங்கிய  சிறியேனை ,

விட்டிடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  சிறந்த  தொண்டின்  இலக்கணத்தை  “கண்ட விலையல்லேன் நானென்றகன்று  காணக்கழிபரமும் நானல்லே னெனக் கருதிக்  கசிந்த தொண்டு” என்று  சைவ நூல் கூறும் . உலகத்தொண்டு  கடவுட் டொண்டு என்னும் இரண்டனுள் , முன்னது அழியும் இயல்பினவாகிய  உலக இன்பங்களை  விரும்பி முனைத்து நின்று  செய்யப்படுவது . அவ்வின்பங்கள் தாமும்  அடிமைக்குக் குறைந்தும் , ஆண்டவனுக்கு  மிக்கும் உண்டாவனவாம்  பின்னதாகிய கடவுட்டொண்டு  , அழிவில் இன்பத்தை விரும்பி முனைப்பற  நின்று  செய்யப்படுவது ; அப்பேரின்பந்தானும்  ஆண்டவனுக்கின்றி   அடிமைக்கே  உரியதாகும் .  இவ்வுண்மை  யுணர்ந்து ,”நாமார்க்குங் குடியல்லோம் “ என்றபடி உலகத்தொண்டில்  தலப்படாமல்  கடவுட்டொண்டில்  ஈடுபட்டு  ஒழுகும் மெய்யடியாரையே  “விழுத்தொண்டர்” என்று  இங்கே  குறிப்பிடுவாராயினர் .  

                மேற்குறிப்பிட்ட சிவஞான சித்தியில் “கசிந்த தொண்டு “  என்பதற்கு “முனைத்து நின்று செய்யும் உலகத்தொண்டின்  நீக்குதற்குக்  கசிந்த தொண்டென விசேடித்தார்” என்று சிவஞான முனிவர்  கூறிய  குறிப்பும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . “விழுத்தொண்டர்க் கல்லால்” என்றதனால்  பிறர்க்கென்பது பெறப்படும் . பிறராவர்  வேடநெறி  நில்லாமல்  வேடம்  பூண்டிருப்போரும், நெறி நில்லாமையோடு  அவ்வேடத்தானும் இல்லோரும்  எனப்  பலதிறப்படுவர் .  தொடுதல்  –  தீண்டுதல் . விழுத்தொண்டரல்லாதார்  தீண்டுதற்கு  அரியனென்றதனால் ,விழுத்தொண்டர்க்கு   எளியனென்பது பெறப்படும்  .  கல்வி , செல்வ  முதலியவற்றால் பெரியராயினும் , கசிந்த தொண்டு  உடையரல்லரேல், இறைவன்  பக்கல்  சிறிதும் அணுக இயலாதென்பது  தெளிவு .

                 இறைவன்  மெய்யன்பராகிய  தொண்டர் தன்னைத்  தீண்டுதற்கு  எளியனாதலேயன்றி , அவர்தம் உள்ளத்தையே உறைவிடமாகக் கொண்டு வீற்றிருப்பன்  என்பதும் , மெய்யன்பரல்லாதார்  தீண்டற்கு   அரியனாதலே யன்றி அவர் தம் காட்சிக்கே அரியனாவன் என்பதும் குறிப்பிற்  புலப்படுத்த வாறாம் .  இவ்வுண்மையை “உள்ளுறும் அன்பர் மனத்தார் தாமே ……..பிறர்க் கென்றும்  காட்சியார்தாமே” என்னும் அப்பர் அருண்மொழியானும் உணர்க . “தொடற்கரியாய்”  என்றதனால்  இறைவன் தொட்டாற்  சுடும்  பரிசமுடைய   தீவடிவினனோ எனின் , பேரொளிப் பிழம்பாக வுள்ளமையால்  விழுத்தொண் டரல்லாதார்க்கு அணுகுதற்கு  அரிய  நெருப்பாகவும் ,மெய்யன்பர்க்கு அணிந்து  கோடற்குரிய  ஒளிமிக்க  மாணிக்க மணியாகவும் விளங்கும்  இயல்பினன்  என்பார் , “ தொடற்கரியாய்” என்பதனையடுத்துச்  “சுடர் மா மணியே “  என்றார் .

                  கண்ணுவர் ஆச்சிரமத்தில் கண்ட  சகுந்தலையைத்  துஷ்யந்த மன்னன்  முதலில்  அந்தணர்  குலக்கன்னி  என்று  ஐயுற்றுப்  ,பின்னர் அரசர் குலப்பாவை யென்று  தெளிந்ததும் தன் நெஞ்சத்தை நோக்கி,”நெஞ்சமே!  இப்பொழுது ஐயம் நீங்கித்  துணிவுண்டாயிற்று ;ஆதலின் விருப்பமுடையை யாகலாம் . எப்பொருளை நெருப்பென்று ஐயுற்றனையோ , அஃது அணிந்து  கோடற்குரிய  இரத்தினமாகும்  “  என்று  கூறியதாகச்  சகுந்தலா  நாடகத்தில்  காளிதாச  மகாகவி  கூறியுள்ளார் . நெருப்புத்துண்டும் மாணிக்கமணியும்   நிறத்தாலொக்குமாயினும் , முன்னது சுடும் இயல்பினது ; பின்னது அணிந்து கோடற்குரியது  என்பது உவம  விளக்கமாகும்.

                   ஈண்டு  அடிகள் இறைவனைப்பற்றிக் கூறிய  பகுதியும் , காளிதாச மகாகவி  உலகியலில் வைத்துக் கூறிய  பகுதியும்  இலக்கிய நயத்தால்  ஒற்றுமைப்பட்டு அறிஞர்க்கு  இன்பஞ் செய்வனவாகும் . அடிகள்  “அருளுடைச்  சுடரே “ என்று  பிறிதோரிடத்துக்  கூறியதன் பொருள்  நயமும்  ஈண்டு  நினைந்தின்புறத்தக்கது . ஒரு விளக்குப் பிறிதொரு  பொருளைக்  காண்டற்கு  உதவியாகுமன்றித்   தன்னைத்  தொடிற்  சுடுவதாகும் . இறைவன்  உயிர்க்குக் காட்டும் உபகாரத்தோடு  தன்னை  யனுபவிக்கவும்  தருதலால், “அருளுடைச்  சுடர்” என்னப்  பட்டானென்பது , அத்திருவாக்கின்   தெளி பொருளாகும் .  

               இனி, தன்னைப்  புகலடைந்தார்க்கு  எவராலும்  விலக்கற்கரிய  இடுக்கண்  நேரினும் , அதனை யொழித்துப் பாதுகாக்கும்  ஆற்றலும்  அருளுமுடையான்  சிவபிரான்  ஒருவனேயாவன்  என்பதற்கு ,நஞ்சுண்ட  வரலாற்றை  அடிகள்  குறிப்பிடுகின்றார் .  நஞ்செழுந்தது  திருப்பாற் கடலிலென்ப .   விண் மண் முதலிய உலகங்களையே  அழிக்கும்  கொடுமை யுடையதாக   அந்நஞ்சின்  வேகத்தில்  தீக்கொழுந்து சூழ்ந்து எழுந்ததென்பார்  “சுடுதீச் சுழல”  என்றார் .  நீர்ப்பெருக்காகிய  கடலில்  எழுந்தும் வேகந்தணி யாமை  குறித்துச்  “சுடுதீ” யென  இயற்கையடையோடு  கூறப்பட்டது . சுழலுதல் – சூழ்தல் . “சுழலுமிசை வேண்டி” என்புழி  அப்பொருட்டாதல் அறிக .  சுழலவென்னும்  செயவென்  எச்சம் எழும் என்னும்  வினைகொண்டு  முடியும்.

                   இனி,  சுடுதீயை வடவையெனக்  கொண்டு  அதுவும்  சோர்வடைய  வென்று  பொருள்  கொள்ளுவாரும்   உளர் . தீக்கொழுந்து சூழவெழுந்த  நஞ்சு   தீ  நிறமுடையதன்று ; கருநிறமுடையதே  யென்பார் , “கடற்கரிதாய்” என்றார்.  அழிக்குந்தொழில்  பற்றித்  தீக்கொழுந்து கூறப்பட்ட தன்பது . கடற்கு அரிதாய்  எனப்பலரும் பதப் பிரிவு  கொண்டனர் .  அதனால்  பொருட் சிறப்பின் றென்க . அமுதாக்கல்  –  உணவாகக்கொள்ளுதல் . அதனை அறவே யொழிக்கும் பேராற்றலிருந்தும் , உண்டு அடங்கியது எத்தகைய  கொடிய  பொருளும்  தன்னை  நலியாது என்பதை எஞ்ஞான்றும்  யாவரும்  உணர்ந்து , தன்னைச்  சார்ந்து  நலம்  எய்துதற்பொருட்டாம்  . அமுதாகக் கொண்டதற்குச்  சான்று   நீலகண்டமென்பார், “கறைக்கண்டேனே” என்றார் .  

                      “விடற்கரியாய்” என்றது , கட்டு  வீடு  என்னும்  எந்நிலையிலும்  உயிரோடு  ஒற்றித்து நிற்கும் இறையியல்பு  குறித்தாம் . இறை விளக்கம்  கட்டு  நிலையில்  அரிதாதலையும்  , சாதன நிலையில்  அதனிற்  சற்று எளிதாதலையும் , வீட்டு  நிலையில்  முற்றும்  எளிதாதலையும்  உணர்ந்து கண்ட  அப்பர் “விறகிற்றீயினன் பாலிற்படு நெய்போல், மறைய நின்றுளன்  மாமணிச்  சோதியான்” என்று அருளியிருத்தல் இங்கே  நினைந்து இன்புறத் தக்கது . வலிமிக்க யானை  மதச் செருக்கால் பாகன்  தோட்டியை நீக்குமாறு போல , ஐம்புலங்களும்  நுகர்பொருள்களைப்பற்றிநிகழும் ஆற்றலால் ,தம் அறிவைக் கடந்து சேறலின் , “அடற்கரிபோல் ஐம்புலன்கள்”  என்றார் .

                           ஒருவன் கொடிய பொருளொன்றால்  தனக்கு  தீங்கு நேரும் என்று  அறிந்து  விலக்கமுயன்றும்  பயன்படாத நிலையிலே  அசமும் கலக்கமும் எய்துவான் ; அறியாத நிலையில் அஞ்சமாட்டான் .இஃது உலகியலிற்  கண்டது .இம் முறையில் யானையைப் போலத்  தம்மைத் தாக்க  முற்படும்  புலப்பகையைக்  கடக்கத்  தம் அறிவு  வலியால்  முயன்றும்  பயன்படாமையால் , “அடற்கரிபோல்  ஐம்புலன்களுக்கஞ்சி யழிந்த வென்னை” என்றார் .

                             அச்சத்தின் முடிவே  கலக்கமாதலின் , அஞ்சுதற்குப்பின் அழிதல்  கூறப்பட்டது . “என்னை” என்பதை “விடற்கரியாய்”  “விட்டிடுதி” என்னும்  ஈரிடத்தும்  இயைத்துக்கொள்க . புலப்பகைக்கு  அஞ்சியழிந்த யான், எக்காலத்தும்  என்னிற் பிரியாதுறையும்  நின் இயல்பையுணர்ந்து  நின்னைப்பற்றி  நிற்கின்றேனாதலின் , இந்நிலையில்  சிறியேனைக் கை விடாமல் காத்தருளும்  பொறுப்புக் கரியுரி போர்த்த கறை மிடற்ற ண்ண லாகிய  நின்பாலதே யாகுமென்பார் , “விட்டிடுதி கண்டாய் “ என்றார் .  

                             இதன்கண், “அடற்கரிபோல் ஐம்புலன்களுகஞ்சி யழிந்த வென்னை “என்றதனால் , உலக வாழ்க்கையில் புலப்பகை மிக்க வலியுடையதன்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல் அறிக .

                                    *****************************************

பாடல்  : 33 .

கண்டது  செய்து  கருணைமட்  டுப்பரு  கிக்களித்து

மிண்டுகின்  றேனை  விடுதிகண்  டாய்நின்  விரைமலர்த்தாள்

பண்டுதந்  தாற்போற்  பணித்துப்  பணிசெயக்  கூவித்தென்னைக் 

கொண்டேனெந்  தாய்களை  யாய்களை  யாய  குதுகுதுப்பே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  புலன்களின்  தாக்குதற்கு  அஞ்சி வருந்தும் என்னைக்  காக்கும் பொறுப்பு , என்னிற்  பிரியாதிருக்கும் நின்பாலதாம்  என்று  இறைவனை  நோக்கிக் கூறிய அடிகள் , இத் திருப்பாட்டில்  என்னிற்  பிரியாதிருக்கும்  நிலையில் நினருட்பேற்றிற்  குரியனாக்கியும் , புலப்பகையை  வென்று  ,அப்பேற்றின் பயனை  எய்தாமல் உயிர் முனைப்பால் அதற்கு மாறாகச்  செருக்குற்று  மனஞ்சென்றவாறு  ஒழுகலானேன் ;இந் நிலையில்  மீண்டும் சிறியேனைப் பணிபுரிவித்துக் குற்றங்களைந்து  ஆட்கொண்டருளல் வேண்டுமென்று  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :-  என் எந்தாய்  =  எனக்குச்  சிறப்புரிமை  வாய்ந்த  என் தந்தையே ,

கருணைமட்டுப்  பருகி  =  நின்  அருளாகிய தேனை நிறையக்குடித்தும் ,

களித்து   = களிப்பு  மிகப்பெற்று ,

கண்டது  செய்து  மிண்டுகின்றேனை  –  மனத்தில்  தோன்றியபடி செய்து செருக்கிப்  பேசித்  திரிகின்ற  சிறியேனை  ,

விடுதி  =  கைவிட்டுவிடுவாயோ ? (விடலாகாது) ,

நின் விரை மலர்த்தாள்  =  நின்  மணமிக்க தாமரை மலர்  போன்ற  திருவடிகளை ,

பண்டு  தந்தாற் போற்  பணித்து  =  முன்னர்த்  தந்தது போலக்   கொடுத்து ,

பணி செயக்  கூவித்து  =  தொண்டு செய்யக்  கூவியழைத்து ,

என்னைக் கொண்டு  =  அடியேனை  ஆளாகக் கொண்டு ,

களையாய  குதுகுதுப்பு களையாய்  =   இடையூறாகிய  ஆசையைக்  களைந்தருள்வாயாக  என்பது .  

விளக்கவுரை :-    அடங்காப்  பிள்ளையாயினும் , உணவூட்டிப்  பிணி களைவித்து அறிவு  கொடுத்தல்  தாய்  தந்தையர்   கடமையாதலின், அம்முறையில் அடிகள் களித்துச்  செருக்கித்  திரியும்  தமக்குக்  கருணைத் தேன் ஊட்டி , உலகப்பற்றாகிய  நோயைக்  களைவித்துத்  , திருவடிக் காட்சியாகிய  ஞானத்தை அருளிப்  பாதுகாக்கும் அம்மையப்பனைக் குறித்துச்  சிறப்புரிமை  தோன்ற  , “என் எந்தாய் “ என்றார் . மட்டு  –  தேன்.  இறையருளை  மற்றொரு பொருளாக  உருவகஞ்  செய்யாமல் தேனாகக்  கூறியது , மெய்யன்பர்க்கு எளிமையில்  அறியத்தக்க  இனிப்புச்சுவையும் குடித்தற்குரிய  நெகிழ்ச்சியும் உடைமையானென்க. “என்னிற்  கருணைவான் றேன்கலக்க”  என்று  அடிகள் பிறிதோரிடத்துக்  கூறியதுங் காண்க . இனிமை யும்  நெகிழ்ச்சியுமுடைய  உணவே  குழந்தைகள்  விரும்பி யுண்டற்குரிய தென்பதை  உலகியலிலுங்  காணலாம் . உண்டல்  தின்றல் நக்கல்  பருகல்  ஆகிய  நால்வகை  உணவுகள் ,தேன்  சுருங்கிய  அளவு  நக்குதற்கும் , மிக்க அளவு  பருகுதற்கும்  உரியதாகும் . இங்கே இறைவன்  அருளிய  அருளாகிய தேனின் மிகுதி குறித்தும் ,நீரைப் போல  அதனை  வேண்டுமளவும்  தாம்  குடித்தது  குறித்தும்  “கருணை  மட்டுப் பருகி”  என்றார் . செய்யுள்  விகாரத் தால்  தொக்க உம்மையை விரித்துப்  பருகியும் என்று கொள்ளல்  வேண்டும் .

                திருவருளாகிய  தேனை நிறையக் குடித்தும் , அவ்வருட்பயனை யடையாமல் , என் அறியாமையால் அதனைக் கள் எனக் கொண்டு களிக் கின்றேன் என்பார் , “களித்து” என்றார் . மட்டு என்னும்  சொல்  கள்ளையும்  உணர்த்தும் என்பது  ஈண்டு  நினைக்கத்தக்கது . களித்தல்  கட்குடியா லுண்டாம்  மகிழ்ச்சி . அக்களிப்பால் செய்வன இன்ன தவிர்வன இன்ன வென்றுணராமல் ,மனத்தில் தோன்றியதைச்  செய்யலானேன்  என்பார் , “கண்டது செய்து “எனவும், அந்நிலையில் “ஓருவரை மதியாதுறாமைகள் பேசி”  என்றபடி யாரையும்  மதியாமல்  செருக்கிப் பேசித் திரிகின்றேன் என்பார் , “மிண்டுகின்றேனை” எனவும்  கூறினார் .மிண்டுதல்  –  செருக்கிப் பேசுதல் . “பிண்டியர்கள் மிண்டு மொழி “ எனவும்  “வானோர்  தானவர்  துற்று மிண்டுகள் பேசி” எனவும் போந்த இடங்களில் அஃது அப்பொருட்டாதல் அறிக.  “களித்து”  என்றதனால்  உள்ளமும்  “ கண்டது செய்து “ என்றதனால் செயலும்  “மிண்டுகின்றேன்” என்றதனால் மொழியும்  ஆகிய முக்கரணங்களும்  மாறுபட்டமை  புலப்பட வைத்தாறாம் .

                   இத்துணையும்  கூறியவற்றால் , இறைவன் தமக்கருளிய  அருளாகிய தேனின் அருமை அறியாது எளிய கள்ளின் இயல்பில் வைத்துப் பயனைத்  திரியக்  கொள்ளலானேன்  என்று  அடிகள் இரங்கியபடியாம் . இங்ஙனம்  இரங்குதலை “மையிலங்கு  நற்கண்ணி பங்கனே  வந்தெனைப்  பணி கொண்ட பின் மழக், கையிலங்கு பொற்கிண்ண மென்றலாலரியை  யென்றுனைக்  கருதுகின்றிலேன்”” எனவும்,, “என்னாலறியாப் பதந் தந்தாய் யானறியாதே கெட்டேன்” எனவும்  கூறிப்போந்த  திருவாக்குக்களானும் அறிக.  இங்ஙனம்  அருட் பயனை மாறுபடக் கொண்ட பிழை கருதிச் சிறியெனைக் கைவிடலாகாதென்பார் “விடுதி கண்டாய் “ என்றார் .  கை விடாமற்  செய்யத்தக்கன என்னை  யென்னும் வினாவிற்கு  விடையாகப்  பின் வருவன  கூறப்படுகின்றன .  

                    முன்னர்  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளித் தமக்கு உபதேசித்த நிலையில் , “சென்னியின் மிசை மேவிய பாதந்திருந்து கண்ணினை  சேர்த் திருக்கரத்தால் ,உன்னல் செய்திடு மிதய மேலனைவித்து வுகை கூர்ந்து மெய்யுணர்ச்சியினெழுந்தார் “என்றபடி  அப்பெருமான்  பொன்னடிகளை அடிகள் உற்றுக்கண்டு  உயிர்த்து அநுபவத்தவராதலின் , அந் நினைவு தோன்ற “நின் விரை மலர்த்தாள்” என்றார் . தாமரை மலர் மெல்லிய ஊறும் ,செந்நிறவொளியும் , நறுமணமும் உடையதாய் விளங்கி இன்பஞ் செய்தல் போலத்  திருவடிகளும்  தம் அநுபவத்திற்கு  இன்பஞ் செய்தன வென்பது  உவமைக்குறிப்பாற்  போதரும்  கருத்தாம் .

                     இறைவன்  பலகோடி ஞாயிற்று மண்டிலங்களின் ஒளியினும்  மேம்பட்ட தன் இயற்கை ஒளிப்பிழம்போடு  வெளிப்பட்டுக் காட்சியளிப்பின் , அக்காட்சி தம் கண்களாற்  காண்டற்கரியதாகும்  எனக்கொண்டு , அந் நிலை யை  வேண்டாது, முன் மக்கள் வடிவில்  ஞானாசிரியனாக எழுந்தருளித்  திருவடி  நல்கிய  நிலையையே  வேண்டுவாராய் , “பண்டு தந்தாற் போற் பணித்து” என்றார் . பணித்தல்  – கொடுத்தல் . “திருவிரல்  நெகிழ்த்து வாள் பணித்தான் “ என்புழி  அப்பொருட்டாதலறிக .

                     பாசண்டச்சாத்தன்  என்பான் மக்கள் வடிவில் வெளிப்பட்டுத்  தன் மனைவி தேவந்திகை யென்பாட்குத் தன்  இளமையுருவத்தைக் காட்டுங்கால்  அவ்வுருவின்  ஒளியை அவள் கண்கள் பொறாவென்று  கருதிப் பொறுப்பன வாக என்று  நிருமித்துக் கொண்டு காட்டினன்  என்று சிலப்பதிகாரம்  கூறும் .”தேவந்தியென்பாண் மனைவியவளுக்குப்  , பூவந்தவுண்கண்  பொறுக் கென்று மேவித்தன் , மூவாவிள நலங்காட்டி “என்பது அப்பகுதி . தெய்வக்கூறு  ஒரு சிறிது பெற்ற சாத்தன் வடிவொளியே  இங்ஙனமாயின்  , பேரொளிப் பிழம்பாகவுள்ள இறைவன் இயலொளி மக்கள் கண்களுக்கு  எங்ஙனம் அடங்கும்  என்பது .

                      கூவுவித்து என்பதிலுள்ள  பிறவனை விகுதி தொக்கு நின்றது .ஆண்டவன்  இறைமைக்கு  ஏற்பக்  கூவி யென்னாது கூவுவித்து என்றார் . கூவி  யெனப்  பிற  இடங்களில் அடிகள் அருளியிருத்தல் , இறைவன் திருவாக்காலும் தம்மை அழைத்தலில்  உள்ள அவா மிகுதியான்  அமையுமென்க.  அடிகள் தம்மை  யழைத்தற்கு ஏதுவாக வீட்டின்பத்தைக் கூறினாரல்லர் ; பணி செய்தலையே கூறினார் ,கூடுமன்பினிற்  கும்பிடலே யன்றி , வீடும்  வேண்டா  விறலின் விளங்கும்  மெய்த்தொண்டராதலின் . என்னைக் கொண்டு என்பது பணி செய்தற்குரிய ஆளாக ஏற்றுக்கொண்டு என்னும் பொருட்டு .  இறைபணி நிற்றற்கு  இடயூறாகவுள்ளது  உலக  வாழ்க் கையிலுள்ள  அவாவாகும் . ஆதலின் , அவ் ஆசையை அறவே  களைதல் வேண்டுமென்பார் ,  “களையாய் களையாய  குதுகுதுப்பே” யென்றார் . குதுகுதுப்பு  –  ஆசை .  “நாற்றங் குதுகுதுப்ப “ என்புழி அப்பொருட்டாதலறிக .  

                     “களையாய்” என வினையை முன்னர்க்  கூறியது இடையூறு களைதலில் உள்ள ஆதுராதிசயத்தானென்க . பணித்துக்  கூவுவித்துக் கொண்டு  களையாய் என்று  முடிக்கப்படுமாயினும் , என்னைப் பணியாளாக ஏற்றுக்கொண்டு , பணி செய்யக் கூவுவித்துக் ,களையாய குது குதுப்பைக் களைந்து , திருவடி  மலர்களைப்  பண்டுதந்தாற்போற் பணித்தருளல் வேண்டுமென்பதே கருத்தாகக்கொள்க .  திருவடிக்காட்சி  நல்குதற்கு உலக அவாவாகிய களையைக்  களைதல் ஏதுவாம் என்பது கருத்து . . இனிப் ‘பணிசெய” என்பதை இடைநிலை விளக்காகக் கொண்டு பணி செயக்  கூவுவித்துப் பணிசெயத் தாள் தந்து என  ஈரிடத்தும் இயைத்துக் கோடலும் ஒன்று .

                        இதன்கண், திருவருட்பேற்றின்  அருமையறியாமல் களித்துக் கண்டது  செய்து செருக்கித் திரிதல் , வெறுக்கத்தக்கதென்பது பெறப் படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதல் அறிக .

                                              *************************************

பாடல் :34 .

குதுகுதுப்   பின்றி  நின்  றென்குறிப்  பேசெய்து  நின்குறிப்பில்

விதுவிதுப்  பேனை  விடுதிகண்  டாய்விரை  யார்ந்தினிய 

மதுமதுப்  போன்றென்னை  வாழைப்  பழத்தின் மனங்கனிவித்

தெதிர்வதெப்  போது  பயில்விக்  கயிலைப்  பரம்பரனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் , நின்  அருட்பேற்றின் பயனை மாறாகக்கொண்டு செருக்குற்று மனஞ்சென்றவாறு ஒழுகலானேன் என்று  இரங்கிக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அங்ஙனம் ஒழுகுதற்கு ஏது நின் திருவுள்ளக் குறிப்பை யறிந்து நடக்க விரும்பாமல் , என் உள்ளக்  கருத்திற் கியைந்தபடியே  செய்தலாகும்  எனவும் , அது பற்றி அடியேனைக் கைவிடலாகாதெனவும் இறைவனை நோக்கி விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :-  கயிலைப்  பரம்பரனே  =  வெள்ளியங்கிரியில்  எழுந்தருளியிருக்கும்  மேலாகிய  பரம்பொருளே ,

என் குறிப்பே  செய்து நின்று  =  என் உள்ளக் கருத்துக்கு இயைந்தபடியே  ஒழுகி நின்று ,

நின் குறிப்பில்  குதுகுதுப்பின்றி  =  நின் திருவுள்ளக் கருத்திற்கு  இயைய  நடப்பதில் ஆசைப்படாமல் ,

விது விதுப்பேனை  =  (பயன் பெற) மிக  விரைகின்ற  சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

வாழைப்பழத்தின் என்னை மனம் கனிவித்து  =   வாழைப்பழத்தைப்போல அடியேன்  மனத்தைக் குழையப்பண்ணி ,

விரை ஆர்த்து இனிய மது மதுப்போன்று  =  மணம்  நிறைந்து இனிமை மிக்க  பூந் துகளோடு கூடிய  தேனைப்போல ,

எதிர்வது எப்போது  =  எனக்குக்  காட்சியளித்தல்  எப்பொழுது ?

பயில்வி  =  விரைவில் அழைப்பித்துக்கொள்வாயாக  என்பது .

விளக்கவுரை :-    சிவபெருமான் உயிர்களுய்தற்  பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்களுள் , கைலை மலை மிகச் சிறந்த தென்பது , மறையாகமங்களிற் கண்ட வுண்மையாகும் “புண்ணியந்திரண்    டுள்ளது  போல்வது “ எனவும் , “நிலவு மெண்ணிறங்களும் நீடொளி , யிலகு தண்டளிராக  வெழுந்ததோர் ,உலகமென்னும் ஒளிமணிவல்லிமேல்  , மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை “ எனவும் சேக்கிழார் பாராட்டியிருத்த லறிக . ஈண்டு  உலகமாகிய மாணிக்கக் கொடியில் எண்ணிறந்த  தலங்களெல்லாம்  தளிராக , கைலை மலை  அதன் உச்சியில் மலர்ந்த வெண்மலர் போல்வதாகும் என்று  கூறிய நயம் இன்புறத்தக்கது .

             பசுவின்  உடல்  முழுதும் பரவிய பால்  அதன் முலை வழிச் சுரந்து வெளிப்பட்டுப் பயன் செய்தல் போல எங்கும் நிறைந்த இறைவன் , தூய புண்ணிய தலங்கள் எல்லாவற்றினும் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அன்பர்க்கு இன்பளிப்பனாயினும் ,அடிகளுக்கு மக்களுருவில்  ஞானாசிரிய னாக  வெளிப்பட்டு  அருளுங்கால் , “சித்தி தரு தேசிக சிறந்த வடிவங் கொண்டுத் தம் நெடுங்கயிலை  யோங்கலது நீங்கித்  “திருப்பெருந்துறையில்  எழுந்தருளினன் என்று புராணங் கூறியபடி , முதலிடச் சிறப்பை நினைவு  கூர்ந்து  “ கைலைப் பரம்பரனே” என்றார்.

குறிப்பு –  உள்ளக்கருத்து .   குதுகுதுப்பு  –  ஆசைப்படுதல் பின்னர் “என் குறிப்பேசெய்து” என்றமையால் இங்கே  நின் குறிப்பில்  செய்ய  எனக் கொண்டு  , நின்குறிப்பின்  வழியொழுக எனப் பொருள்கொள்ளல்   வேண்டும் ஆண்டவனே!அடியேனை  ஆட்கொண்ட பொழுதே  என் உடல் பொருள் ஆவி யெல்லாம் நின்னுடைய வாயினவாதலின் , எனக்கென ஒன்று மின்றி, நின் திருவுள்ளத்திற்கு  இயைந்தபடியறிந்து  ஒழுகுதலே  கடமையாகவும், அதன்கண் விருப்பமும் இன்றி யிருக்கின்றேனே  யென்பார், “நின் குறிப்பில்  குதுகுதுப்பின்றி “ என்றார் . என் குறிப்பே  செய்து என்புழி ஏகாரம்  தேற்றப் பொருட்டு . செய்தல் – ஒழுகுதல் . ஆன்றோர் கூற்றும்   அறிவு நூலுரையும்  தம் கருத்தின்படி   நடத்தலாகிய செயலுக்கு இடந்தர வில்லையாயினும் , அது பற்றித்  தம் மனம் சலித்திலதென்பார், “நின்று” என்றார் . உயிர் முனைப் பின்படி செய்தலாகாதென்பதை  யறிந்தும் , என் எண்ணத்திற்  றோன்றிய  படியே  செயலின் மேற்கொண்டு  நின்று  , நின் திருவுள்ளக் குறிப்பிற்கு  இயைய  ஒழுகுதலாகிய  செயலை  அறவே  கைவிட்டதோடு  அதன்கண்  விருப்பமும் இன்றி இருக்கின்றேனே யென்று  அடிகள் இரங்கியபடியாம் .  

                  நல்லதெனக் கண்ட  தொன்றைச்  செய்தல் வேண்டும் . எவ்வாற்றானும் செய்தற்கு இயையாதவழி அச்செயலில் விருப்பமாவது இருத்தல் வேண்டுமென்பது அற நூற்கொள்கை . “அறத்தைச்செய்” என்று  கூறிய  வடமொழி மறையினும் சிறக்க “அறஞ்செய விரும்பு “ என்னும் சிறு சொற்றொடறில்  தெளிவு படுத்திய ஒளவை  முதுமொழியும்  ஈண்டு  நினைக்கத்தக்கது . ஆண்டவன்  திருவுள்ளத்திற்கு இயைய ஒழுகுதலில் விருப்பந்தானுமின்றி , என் கருத்துப்படி ஒழுகலானேன் என்று அடிகள் கூறிய கருத்தும் ,”ஒருவன் அறனென்று சொல்லுவதுஞ் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்  “ என்னும் பொருள் தோன்ற ,  “அறங் கூறானல்ல செயினும்” என்று  கூறிய வள்ளுவர் பொருளுரையும் ஒப்பு நோக்கி யின்புறத்தக்கன . விதுப்பு  என்னும் சொல் விரைதற்  பொருட்டாதலின் , விது விதுப்பு என்னும்  இரட்டைக்கிளவி  விரைவின் மிகுதியைக்  குறிப்பதாகும் .  

                     இறைவ! நின் திருவுள்ளத்திற்கு  இயையஒழுகுதல் இன்றியமையா ததாகவும் , அதன்கண்   விருப்பந்தானும்  இல்லாமல், உயிர்முனைப்பால் யான்  நினைந்தபடியே நடந்து நின் குறிப்பின்படி  ஒழுகுதலின்  உண்டாம் பயனைப் பெற விரைகின்றேன் ;என் அறியாமை யிருந்தவாறு  என்னே யென்பார், “ என் குறிப்பே செய்து  விது விதுப்பேனை “ என்றார் .என் குறிப்பே  செய்து என்றமையால் , விது விதுப்பின் பின் பயனைப்பெற  என்பது அவாய்  நிலையான்  வருவித்துரைக்கப்பட்டது . உலகத்து மக்கள் இயல்பில் வைத்து ,

“அறத்தை  விரும்பா  ததன்பயனைப்  பேணல்

மறத்தை  முயன்றுசெயல்  மற்றம்  –  மறத்தின்

பயனை  வெறுத்தலிப்  பாரிலுள்ள  மக்கட்

கியல்பென்ப  வென்று  மிவை

என்று கூறிய உயிர்போகு பொது நெறியும் இங்கே கருதத்தக்கது . செயலை    உயிர் முனைப்பாற்  செய்து , அதற்குப்பொருந்தாத விழுமிய  பயனைப் பெறவிரையும்  இக்குற்றங்கருதிச் சிறியேனைக்  கைவிட்டு விடுவாயோ? விடலாகாது  என்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .

            இனி, அடிகள் தமக்கு  வேண்டிய  பேற்றையும் அதற்குரிய காலத்தை யும் பற்றி இறைவனிடத்து விண்ணப்பித்து  வினவுகின்றார் . வலிய மனம் கனிந்தாலன்றி  இறையருளைப்  பெறலரிதாதலின் , வாழைப்பழத்தை உவமையாகக்  கூறினர் .வாழை  மா  பலா  இம்மூன்றும் சிறந்த சுவையுடை மையால் , அவற்றை  ஓரினமாகக் கொண்டு  , முக்கனியென்று வழங்குவர் முன்னோர் . இக்காலத்து  இவற்றினும்  சிறந்த சுவையுடைய  பழங்களிருப் பினும் , பண்டைக்காலத்து நம்  நாட்டுக்  கனிகளுள் , இவைகளே சிறப்புடையனவாக  வழங்கின வென்பது , “முக்கனிகளுட்  சுவை  முதிர்ச்சி  பெற்றுளதெக்  கனி “ என்பது முதலிய  வழக்காற்றான் அறியலாம்

              இம்மூன்றனுள்ளும்   மாவும்  பலாவும்  அகத்தே கொட்டையுடையன வாதலின் , அவற்றை விடுத்துக் கொட்டையின்றி  முற்றுங்கனிதற்கு ஏற்ற மென்மைத்தன்மையுடைமையால் ,”வாழைப்பழத்தின் மனங்கனிவித்து “  என்றார் . அகத்தே  கொட்டையுடைய   பழங்கள் உவமை  கூறின் , கனிவித்தல் ஓரளவிலன்றி  முற்றும்  அமையாமை யறியத்தக்கது . வெள்ளரிப் பழம்  போன்ற  சுவை இல்லாப்  பழத்தைக் கூறாமல்  இனிப்புச்சுவை மிக்க  வாழைக்கனியைக் கூறியது , தம் நெஞ்சம் தமக்கு இனியதாய் இறைவன்  பக்கலில்  இயைவித்து இன்புறுதற் பொருட்டு  என்க . “கல்லை  மென்கனி யாக்கும்  விச்சை கொண்டென்னை  நின் கழற்கு அன்பனாக்கி னாய்”  என்று  பிறிதோரிடத்து அடிகள் கூறியதும் உணர்க . என்னை மனத்தைக்  கனிவித்து என்புழி .  “பசுவினைப் பாலினைக்  கறந்தான் “  என்புழிப்போலச்  செயப்படு பொருள்  ஈருருபிணைதலாய்  வந்தது .  

               இங்ஙனம்  மனம்  கனிந்த நிலையில் , அதன்கண் இறைவன்  காட்சிப்   படுதலைக்  கனிந்த வாழைப்பழத்தில் சிறந்த தேன் இயைந்தது  போல எனப்  பிறிதோருவமையால் விளக்கியுள்ளார் . வாழைப்பழத்தைத் தம் மனத்துக்கு உவமை யாக்கியதால் அடைமொழி யின்றியும் , தேனை இறைவனுக்கு உவமையாக்கியதால்  “விரையார்ந்தினிய மதுமது “ வென்று சிறந்த பல அடைமொழி புணர்த்தும் கூறினர் . விரை  – மணம்  .  மது  இரண்டனுள்  முன்னது   மகரந்தத்   துகளையுணர்த்தும் . ஆகவே, இயற்கையான  இனிமை யொடு   நறுமணமும்  மகரந்தமும் கூறியதால் , இத்தேன் ஈக்களின்  எச்சில் புழு முதலியன  கலவாத  தூய மலர்களின் தோன்றியபடியிள்ள தென்பது புலனாகும் . “மதுப்போன்று எதிர்வது “  என இயைக்க .  எதிர்வது – எதிர்தல் ; தொழிற் பெயர் ; காட்சிப்படுதல்  என்னும் பொருட்டு .  

                  வாழைப்பழத்தைக் கனிவித்து அதன்கண்   தேன்  தோய்ந்தது போல  என்னுள்ளத்தைக் குழைத்து  அதன்கண்  எழுந்தருளல் வேண்டுமென்றார் .  பசு  கரணத்தைப்  பதி  கரணமாக்கி  இறைவன் விளங்குவன்  என்னும்  சைவநூற்  தோன்ற  . “காணுங்கரணங்களெல்லாம்  பேரின்பமெனப், பேணு மடியார் “ என்னும் அநுபவ மொழியும் ஈண்டு  நினைக்கத்தக்கது . கனிந்த  வாழைப்பழத்தின்  சுவையிலும் தூய  தேனின் சுவையிலும்  முறையே குறைவு  மிகுதி  காணப்படினும்  இனிமை யொன்றாதல்  போலப் , பக்குவ முள்ள  உயிரியல்பிலும் இறையியல்பிலும் முறையே சிறுமை  பெருமை  காணப்படினும் , இரண்டும்  அறிவுடைப் பொருள்  என்னும்  சாதி யொற்று மையும் இங்கே  யுணரத்தக்கது . என் நெஞ்சத்தைப்  பக்குவப்படுத்தி  அதன் கண் எழுந்தருளிக்  காட்சியளித்தலே  என்னால்  வேண்டத்தக்கது . அதுதானும் காலத் தாழ்வின்றி நிகழ்தல்  வேண்டுமேயென்பார், “எதிர்வதெப் போது” என்றார் .

             இறைவா!  மனத்தூய்மை பெற்று  யானே  நின்னை அணுகுதற்கு  என்  முயற்சி  ஆற்றலுடையதன்று . ஆதலின், சிறியேனாகிய  என்னை  நலப்படுத் தற்கு  அருள்  கூர்ந்து நீயே  அழைப்பித்துக்கொள்ளல் வேண்டுமென்பார் , “பயில்வி” என்றார் .  பயிலுதல் – அழைத்தல் ,  “பயில்வி” யெனப்  பிறவினை விகுதியொடு புணர்த்துக்  கூறியது ஆண்டவன்  பெருமையும்  அடிமையாகிய  தம் சிறுமையும்  தோன்றற்கென்க .  

              இதன்கண் , ஆண்டவன்  திருவுள்ளக்  கருத்தின்வழி யொழுகுதலே  இன்றியமையாததாகவும் , அதன்கண்  விருப்பமின்றி உயிர்  முனைப்பாற்   கருதியபடி யொழுகுதல் நலம் பயப்பதன்று  என்பது கூறப்பட்டிருத்தலின் , பிரபஞ்ச வைராக்கியம் புலனாதல்  அறிக .

                                                 **********************************

பாடல் :35 .

பரம்பர  னேநின்  பழவடி  யாரொடு  மென்படி று

விரும்பர  னேவிட்  டிடுதிகண்  டாய்மென்  முயற்கறையின்

அரும்பர  நேர்வைத்  தணிந்தாய்  பிறவியை  வாயரவம்

பொரும்பெரு  மான்வினை  யேன்மன  மஞ்சிப்  பொதும்புறவே .

கருத்துரை :-  முன்னைத்  திருப்பாட்டில் நின் திருக்குறிப்பிற்கு இயைந்தபடி நடக்க விரும்பாமல்  என் கருத்திற்கு  இயைந்தவாறு ஒழுகலானேன் ; இதனைப்  பொறுத்தருள வேண்டுமென்று இறைவனை வேண்டிய அடிகள் , இத் திருப்பாட்டில் அங்ஙனம் நெறி தவறி நடத்தற்குக் காரணம் , நன்னிலைக்கட்  சார்தற்குரிய என் உள்ளம்  நடுங்கி யொடுங்குமாறு   பிறப்பாகிய  ஐந்தலை ப்பாம்பு  பொருதலாகும் . ஆதலின் , அப்பிழையைப் பொருத்தருள வேண்டுமென  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :-  முயற்கறையின் மெல் அரும்பு  =  திங்களின்  கூறாகிய  மெல்லிய  பிறையை ,

அர நேர் வைத்து அணிந்தாய்  =   பாம்புடன்  ஒக்க வைத்துச் சடையில்  அணிந்தவனே ,

பெருமான்  =  எம்பெருமானே ,

ஐவாய் பிறவி  யரவம்  =  ஐந்து  வாய்களையுடைய  பிறவியாகிய  பாம்பு ,

வினையேன்  மனம்  அஞ்சிப்  பொதும்பு  உறப்பொரும்    =  தீவினையுடையேன்  உள்ளம்  நடுங்கி  ஒடுக்கவிடத்தைச்  சாரும்படி  தாக்குகின்றது ,

பரம்பரனே  =  மேலாகிய  பரம்பொருளே ,

நின் பழ அடியாரொடு  என் படிறும்  விரும்பு அரனே  =  நின் பழைய மெய்யடியாருடைய  தூய ஒழுக்கத்தொடு  ஒப்பச் சிறியேனது  வஞ்சவொழுக்கத்தையும்  விரும்பி  யேற்றுக்கொண்ட  சங்காரகாரணனே ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  முயற்கறை  –  அன்மொழித்தொகையாய்  முயல் உருவம்  போன்ற  களங்கத்தையுடைய  திங்களையுணர்த்தும் . மெல்லிய அரும்பு  என்றது  அத்திங்களின்  சிறு  கூறாகிய  மெல்லிய பிறையைக்  குறிக்கும் .     அர – அரா . “குறியதனிறுதிச்  சினை கெடவுகரம் , அறியவருதல்  செய்யுளுள் உரித்தே “ என்பது விதி .  திங்களையும்  பாம்பையும்  சடையில்  அணிந்தது அழகுக்கு  அன்று ; யாண்டுச்  சேரினும்  தடைபடுத்த முடியாத பகை வலியால்  அவற்றிற்குக்  கேடு விளையாமைப்   பொருட்டென்ப .  மேலும் ஒன்றனோடு  இன்று  இகலும்  இயல்பினவாகிய திங்களும் பாம்பும் இறைவன்  பக்கலில்  பகைமைக்  குணம் நீங்கி வாழ்கின்றன  வென்னும்  உண்மை  புலப்படுத்தற்குமாம் .

            நேர் வைத்தல்  – இரண்டையும்  ஒக்க வைத்தல் . ஒன்றனை யொன்று  காணுமாறு  அணிமையில்  எதிராக வைத்தலுமாம் . இதனால்  இறைவன் ,தன்னைப்  புகலடைந்தாரை எத்துணையிடையூறும்  நலியா  வண்ணம்  காக்கும் அருட்குணமும் ,தன் அணிமையில்  பகைப் பொருள்கள் பகை நீக்கப் பெற்று  வாழும்  வண்ணம்  செய்யும் ஆற்றலும்  உடையான் என்பது புலனாம் . “கங்கையு  மதியும் பாம்பும்  கடுக்கையு  முடிமேல்  வைத்த அங்கணர்” என்று  சேக்கிழார்  கூறியதும் இங்கே  நினைக்கத்தக்கது . இவ்வாறு  அடிகள் இறைவனை  விளித்தது இங்ஙனம்  தமக்கு  நேரும்  துன்பத்தினின்றும்  விடுதலை  பெறுதற் பொருட்டாம்  . அக்குறிப்புப்   பின் வரும்   விளக்கத்தாலறிக .  

பிறப்பு  என்பது , உயிர் வினைப்பயனுகர்தற்  பொருட்டு  மாயையின்  காரியமான  உடலைக்கொண்டு  வெளிபடுதலாகும் . ஆகவே  உடற்றோற்றமே  பிறப்பு  என்பது தெளிவாம் .அவ்வுடலோடு  கூடிய  உயிர்  , வினைப்பயனை எவ்வாற்றான் நுகரும் எனின் , அவ்வுடற்கணுள்ள மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகள் வாயிலாக , முறையே  ஊறு  சுவை ஒளி நாற்றம்  ஓசை யென்னும்  புலன்  வடிவில்  நுகருமென்பது . பொறிவழி யுள்ளஞ் சென்று  புலனுகர்ச்சியிற்  றலைப்படுங்காறும்  பிறவியினால் நேரும் துன்பம்  நீங்காமையின் , அப்பிறவியைப்  “பிறவியை வாயரவம் “  என்று  உருவகஞ் செய்யலானார் .

                   இக்கருத்தையே  சீவகசிந்தாமணி யாசிரியர்  “பொறியெனும் பெயரவைவாய்ப் பொங்கழரவின் கண்ணே, வெறிபுலன்  கன்றி நின்றார்  வேதனைக்  கடலுணின்றார்  “ என்று  தெளிவுபடுத்துரைத்தார் . பிறப்பாகிய  ஐவாயரவத்தின்  தாக்குதலைக்  குறிப்பிடத் தொடங்கும்  பொழுதே  அடிகள்  நடுக்கமுற்றுப்  , புகலிடம் பெற  விரைந்து ,”பொரும்  பெருமான்” என்று  துன்பச்செயலைக் குறிப்பிட்டு இறைவனைக்  கூவியழைபாராயினர்  , ஐவாயரவத்தைக் குறித்துத் தாம்  அஞ்சுதற்குக்  காரணத்தை உடம்பொடு  புணர்த்துத்  தம்மை  “வினையேன்”  என்றார் .வினையெச்சமே பிறப்பிற்கு  ஏதுவாகலின்  அவ்வாறு  கூறினர் . “வினையேன் மனமஞ்சி” யென்பது “அம்முக்  கிளவியும் சினைவினை தோன்றின் , சினையோடு  முடியா  முதலோடு  முடியினும் , வினையோரனையை வென்மனார்  புலவர் “  என்பதனான்  அமையுமென்க . சினையாகிய  மனத்தின்  செயல்  அஞ்சுதல் .அது முதற் பொருளாகிய  வினையேன்  என்பதனோடும்  இயைதலறிக .

               பொதும்பு  –  மரப்பொந்து ; இஃது  ஈண்டுப் பொந்து போன்ற ஒடுக்க இடத்திற்காயிற்று . பொதுப்புறப் பொரும் என முடிக்க .இனி, “வினையேன் மனம் “ என்பதற்கு  வினையேனது மனம் என்றும் பொருள் கொள்ளலாம் . அங்ஙனம் கொள்ளங்கால் , பாம்பின் தாக்குதற்கு  அஞ்சி மனம் மறைத்தற் குரிய  இடமென்பது போதரும் . உடம்பிலுள்ள பொறிகளும்  காரணங்களும்  ஒடுங்குங்கால் , இன்ன இன்ன இடங்களில்  ஒடுங்கும்  என்று  கூறிய  மறை முடிவில் , மனம் சந்திரமண்டலத்தில் ஒடுங்கும் என்பது காணப்படுகின்றது .

              இதனால்  மனத்திற்குச்  சந்திர சம்பந்தம் உண்டென்பது புலனாம் . ஆகவே  மனமாகிய  சந்திரன் பிறவியாகிய பாம்பு  தாக்குதற்குரிய  பகைப்  பொருளாயிற்றென்பது  குறிப்பிற்  புலப்பட  வைத்தவாறாம் . பாம்பும்  திங்களும்  பகைக்குணம்  ஒழியப்பெறும் இடம்  இறைவன்  பக்கலாதலின் , அவ்விறைவனே  பிறவிப்பகையை யொழித்துப்  பாதுகாக்கத்தக்கவன்  என்பதை யுட்கொண்டு  , அடிகள் , “மென் முயற்கறையின்  அரும்பர நேர்வைத்து  அணிந்தாய்”  என்று  முன்னர்  விளி கொள்ளலானார்  என்பது உய்த்துணரத்தக்கது .

                பரம்  என்னும்  வட சொல் மேலானது என்று பொருள் படுமாதலின்  , பரம்பரம் என்பது மிகமேலான  வீட்டு  நிலையை யுணர்த்துவதாகும் . அதனால் மெய்மையான  வீட்டு  நிலையை யருளும்  முழுமுதற் கடவுளாகிய  சிவபெருமான்  பரம்பரன் என்னப்பட்டான் .  ஈச்சுவரன்  பரம்பரன்  முதலிய  சொற்களெல்லாம் மற்றைத் தேவர்களை  உபசாரமாகவும்  , இறைவனை  உண்மையாகவும்  குறிக்கும்  என்பதை மறையாகம  ஆராய்ச்சி நூல்கள் தெளிவுறுத்துக்  கூறுவன .  

                  உண்மையான  வீட்டு  நிலை , நெடுங்காலம்  அருந்தவம்  இயற்றிப்  பெறத்தக்கதாகலின்  , அத் தவ முயற்சி  மேற்கொண்டொழுகும் மெய்யடியாரே  பழவடியாரவர் . “பன்னாளுன்னைப்  பணிந்தேத்தும் பழையவடியார்”  என்னும்  அடிகள்  திருவாக்கும்  இதனை  வலியுறுத்து வதாகும் . சிவபிரான்  பரம்பரனாதலும்  , அவனடியார் பழவடியாராதலும் இயல்பே . இறைமைக்குணம்  இல்லாரைக்  கடவுளர்  எனக்கொண்டு  அவரால்  மெய்மையான  வீட்டு  நிலையையடையலாம்  என்று  நம்பி  முயல் வோரெல்லாம்  சின்னாளில்  உண்மையுணர்ந்து  அம்முயற்சி யினின்றும்  மீள்வராதலின் , அவர்  பழவடியாராதல்  சாலாதென்க .

                    பின்னர்  “என்படிறு” என்று  கூறியதால் பழவடியார்  என்பது அவர் தம் மெய்யொழுக்கத்தைக்  குறிப்பதாகும் . “பழவடியாரொடும்” என்புழி  உடனிகழ்ச்சிப்  பொருளில்  வந்த ஒடுவுருபின்  பின்னுள்ள உம்மையைப்  பிரித்துப்  படிறு  என்பதனோடு இயைத்துக்  கொள்ளல் வேண்டும் . படிறும்  என்புழி  உம்மை இழிவு சிறப்புப்  பொருளது . ஆகவே , பன்னெடுங்காலம்  அரிய  தவ நிலையில்   தலைப்பட்டிருக்கும்  பழைய  மெய்யடியாரது தூய  வொழுக்கத்தோடு ஒப்பப்  , புதியனவாகவும்  தவநிலையில் தலைப்படாத வனாகவும்  உள்ள  அடியேனது பொய்யொழுக்கத்தையும்  என்மாட்டுள்ள  பேரருள் காரணமாக விரும்பியேற்று  ஆட்கொண்டனையென்பார் , “நின் பழவடியாரொடு  மென்படிறு  விரும்பரனே”  என்றார் .  

                    பழவடியா ரென்றதனால்  தாம் புதியவரென்பதும் ,தம் ஒழுக்கத் தைப் படிறு  என்றதனால்  பழவடியார் ஒழுக்கம் தூயது என்பதும் போதரும் . அடிகள் தம்மைப்  புதியெரென்றும்  தம் ஒழுக்கத்தைப்  படிறுடைத்து  என்றும்  கூறியது, ஆண்டவன்  முன்னிலையில்  அடிமையாகிய  அவர்தம் பணிவு  தோன்ற நின்றது . பெரியோர்களின் பணிமொழியீதென  அமைதலன்றி  , நாம்  அடிகளை அன்னாரெனக்  கனவிலுங் கருதலாகாது . சென்ற பல பிறப்புக்களிலெல்லாம்  இறைவனை  வழிபட்டு இப்பிறப்பில்   தவச்செல்வரா யினராதலின் , புதியரல்லர்; பழவடியாரே  யென்பதும் , இறைவன்  ஞானாசிரி யனாக எழுந்தருளி  வலிந்து  ஈர்ந்து  உபதேசிக்கப் பெற்றவராதலின்  , அடிகளின்  ஒழுக்கம் மிக்க  தூய்மையுடையதன்றிப்   படிறுடைத்தன் றென்பதும்  தெளியப்பட்ட வுண்மைகளாம் .

                   அடிகள் தம்மை  விரும்பி இறைவன் அடிமை கொண்டான்  என்பதை “வேண்டும்  வேண்டு மெய்யடியாருள்ளே  விரும்பி யெனையருளால் ஆண்டாய் “ என்பது முதலிய திருப்பாட்டுக்களில் வெளிப்படக்  கூறியிருத்தலறிக . அரன்  என்பது அழிப்பவன் என்னும்  பொருளுடையதாகும் . அதனை அடிகள் ஈண்டுக் கூறி  விளித்தது , பேரருள் காரணமாகத்  தம்மை ஆட்கொண்டமையால் , தம்மாட்டுள்ள படிற்றொழுக் கத்தைப்  போக்கியருள்வன் என்னுந்  துணிவு  தோன்ற  நின்றது . படிறுடை யேனாயினும்  நீ  அரனாதலின், அதனைப்போக்கித்  தூய்மைப்படுத்து நலம் புரிதலன்றிக் கைவிடல் தகுமாவென்பார் , “விட்டிடுதி”  என்றார் .

                   இதன்கட் பிறப்பை  ஐவாயரவமாகக்  கூறியதால் , அப்பிறப்பினால் உண்டாம்  உலக வாழ்க்கை  வெறுக்கத்  தக்க தென்பது பெறப்படுதலின்  ,     பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக . 

                                                    **********************************

பாடல் :36 .

பொதும்புறு  தீப்போற்  புகைந்தெரி  யப்புலன்  றீக்கதுவ

வெதும்புறு  வேனை  விடுதிகண்  டாய்விரை  யார்நறவந்

ததும்புமந்  தாரத்திற்  றாரம்  பயின்றுமந்  தம்முரல்வண்

டதுபுங்  கொழுந்தே  னவிர்சடை  வானத்  தடலரைசே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் என் மனம் அஞ்சி ஒடுங்குமாறு  பிறப்பாகிய  ஐந்தலைப் பாம்பு  பொருதலால் , நின் திருக்குறிப்பின்  வழியொழுக இயலாதாயிற்று  என்று  இறைவனை  நோக்கிக்  குறிப்பிட்ட  அடிகள் ,இத் திருப்பாட்டில்  அவ் வைவா யரவத்தாலாம் புலத் தீத் துன்பத்திற் குத்   தம் ஆற்றாமையை மீண்டும்  விளக்கிக்  கூறுகின்றார் .

பதவுரை :- விரை ஆர்  நறவம்  ததும்பும் மந்தாரத்தில்  =  நறுமணம் பொருந்திய  தேன்  நிறைந்த   மந்தார   மலரில்,

தாரம்  பயின்று  மந்தம்  முரல்  வண்டு  =  எடுத்தலிசை  பாடிப்  பின்  படுத்தலிசை ஒலிக்கும் வண்டுகள் ,

அதும்பும் கொழும் தேன்  அவிர்  சடை   =  அமிழ்தற்கு  ஏதுவாகிய செழித்த  தேன்  விளங்கும்  சடையினையுடைய ,

வானத்து அடல் அரைசே  =  சிதாகாயத்தில்  வீற்றிருக்கும் வெற்றிமிக்க  வேந்தர் பெருமானே ,

பொதும்பு  உறு தீப்   போல் புகைந்து எரி  =  மரப்பொந்திற்  பொருந்திய  நெருப்பைப் போலப்  புகைந்து எரிகின்ற ,

அப்புலன்  தீக்கதுவ  வெதும்புறுவேனை  =  அப்புலன்களாகிய   நெருப்புப்  பற்ற  அதனால்  வெதும்புதலையுடைய   சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  மந்தாரம்  என்பது கற்பக முதலிய  தேவதருக்கள் ஐந்தனுள் ஒன்று ; அஃது ஆகு பெயராய்  நின்று  மலரையுணர்த்திற்று .  அம்  மலர்  இறைவன்  சடையில்  விளங்கும்  நிலையை  , அடிகள் அகக்  கண்ணாற்  கண்டு , தம் நெஞ்சக்  கிழியில் ஓவியமாகத்  தீட்டிக்கொண்டு  , பாடல் வடிவில்  நம்மனோரையும்  நினைவு  கூர  அருளிச்செய்கின்றார் .  மலர்களில்  உள்ளவை  நாற்றமும்  தோற்றமும்   நறவமும்  ஆம் . ஈண்டு  விரையார்  என்றதனால் நாற்றமும் ,  மந்தாரம்  என்றதனால் ஆகு பெயர்  கொள்ளப்பட்ட  மலரின்  தோற்றமும் , நறவந்ததும்பும்  என்றதனால்  நறவமும்  கூறியபடி யாம் . மலரின்  வண்ணமும்  வடிவும்  தோற்றத்தின்  பாற்படும்  .

                   இத்தகைய  தெய்விகப் பூவாகிய  மந்தார மலரை இறைவன் சடையில் அணிந்திருக்குங்கால் , அதன்கண் உள்ள  தேன் பெருக்கில்  இசைபாடிச் சாரும் வண்டுகளின்  அரிய செயல்களை  , அடிகள் அழகு பொருந்தப்  புனைந்து கூறுகின்றார் . ஆண்டு  வண்டு  பாடிய  இசை  மந்தோச்ச  சமம்  என்னும்  மூன்றனுள்  , உச்சமும்  மந்தமுமாம். தாரத்தை   உச்ச சுர மெனவும்   எடுத்தலிசை எனவும் , மந்தத்தைப் படுத்தலிசை எனவும் இசை நூலார் கூறுவர் . இங்கே  வண்டுகள் மந்தார மலரையடுத்தும் , புறத்தே  சூழ்ந்து எடுத்தலிசை  பாடிப்  ,பின் அகத்தே  யணு கவணுகப்  – படுத்தலிசை பாடின வென்பதும் , ஆங்குச்  செழித்துப்   பெருகிய  தேனிற்  றோய்ந்தும்  இசை பாடுதலை ஒழித்து , அத் தேனையுண்டு  களித்து மவுன  நிலையடைந் தன  வென்பதும்  புலப்பட , “மந்தாரத்திற் றாரம்  பயின்று  மந்தம் முரல் வண்டு, அதும்புங் கொழுந்தேன் “ என்றார் .  

                       ஈண்டுப்  பயிலுதல்  பழகுதல் என்னும்  பொருளுடைய  தாகலின்  , அஃது உரத்த குரலில் அடுத்தடுத்துப்  பாடுதலையும் , முரலுதல்  அதனிற்  றாழ  மெல்லிதாக  ஒலித்தலையும் குறிப்பனவாம் . அதும்புதல்  –   அமிழ்தல்  தேன் பெருக்கில் அமிழ்ந்ததும் ஒலித்தலின்றென்பது போதரும் . “அதுவும் கொழுந்தேன் “ என்புழி  அதும்பும் என்பது செய்யும் என்னும்  வாய்ப்பாட்டுப்  பெயரெச்சமாகும் ; காரியப்பொருளில்  வந்தது .இவ் வருணையில் இதனை  உவமையாகக்  கொண்டு  அறியத்தக்க  பிறிதொரு பொருளும் , குறிப்பில் வைத்து உணரத்தக்க சிறந்த சைவ சித்தாந்த நுண்பொருளும்  அமைந்திருத் தல்  அறிந்துணர்ந்து இன்புறத்தக்கன .  அவை  முறையே  வருமாறு : மலரிலுள்ள  தேனை உண்ண வந்த வண்டு , அதனை யுண்ணாமல்  புறத்தே   சுற்றுங்கால்  ஒலி  செய்தும் ,அகத்தே படிந்துண்டதும்  ஒலியடங்கப் பெற்றும் இருத்தல்  இயல்பு ; இக்குறிப்பு  கற்றறிந்த பெரியோன் ஒருவன் இறைவனை  யணுகப்பெறாத நிலையில் தருக்கவாத முதலியன செய்வன்  என்பதையும் , இறையருளில் படிந்ததும்  அவ்வாதம் ஒழிந்து மவுன நிலையடைவான் என்பதையும் புலப்படுத்தும் என்ப .   இக்கருத்தை ,

வண்டு  மலர்ப்புறத்தே  மன்மதுவுண்  ணாதொலிக்கும்

உண்டுண்  மகிழ  வொலியடங்கும்  –  அண்டான்

தருக்கவா  தம்பகர்வான்  சார்மனத்தை யீசற் 

கொருக்கமகிழ்  வான்மவுன  முற்று “

என்னும்  வெண்பாவால் அறியலாம் . இரண்டாவதாகக் கூறப்பட்ட சைவசித்தாந்த நுண்பொருள்  வருமாறு : மந்தார  மலரிலுள்ள  வண்ணம்  சத்தையும் , நறுமணம் சித்தையும் , தேன்  ஆனந்தத்தையும்  குறிப்பின் உணர்த்த , இம் மூன்றனையும் உடைய அம்மலர் சச்சிதானந்தன் என்னும் உண்மையறிவின்ப  வடிவினனாகிய  இறைவனையும் , தேணுண்ண  வந்த  வண்டு  அவ்விறைவனை  யடைதற்குறிய  பக்குவான்மாவாகிய  உயிரையும் குறிப்பனவாம் , உயிர்க்குப்  பக்குவ முதிதற்கு  முன்  பாசஞான  பசு  ஞானங்களாகிய  அபர ஞானமும் , பக்குவ முதிர்ந்த பின் பதி ஞானமாகிய அநுபவ  வுணர்வும் உண்டாம் என்ப .  

                இக் குறிப்பை  வண்டு  தாரம் பயின்று   மந்தம்  முரன்று  கொழுந் தேனில் அமிழ்தலாகிய நிகழ்ச்சிகள் புலப்படுப்பனவாம் .எடுத்தலிசை  பாச ஞானத்தையும் , படுத்தலிசை  பசு  ஞானத்தையும் ,கொழுந்தேன்  சிவானந் தத்தையும் , வண்டு அவ்விசை யொழிந்து தேன் பெருக்கில் அமிழ்தல் , பக்குவான்மா  பாச  பசு  ஞானங்களை  விட்டுச்  சிவானந்தத்தில்  தோய்ந்து  இன்புறுதலையும்  குறிப்பனவாம் . “பாச ஞானத்தாலும்  பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே  நேசமொடு  முள்ளத்தே நாடி “ என்றபடி பாச  பசு  ஞானங்களாகிய அபரஞானத்தால்  அறியப்படாத இறைவனைப்  பதிஞானமாகிய  பரஞானத்தால்  உணர்ந்து சிவானந்தத் தழுந்தியின்புறலே  வீட்டு  நிலையென்ப .

                   இரண்டற்ற  நிலையாகிய  வீட்டின்ப  நுகர்ச்சிக்குத்  தேனிற் படிந்த  வண்டினையே  சைவ  நூல் எடுத்துக் காட்டு மென்பதையும்  ஈண்டு நினைவுறல்  வேண்டும் . இத்துணையும் இறைவன்  சடையில் விளங்கும்  மந்தார  மலரைக் கொண்டு ,அடிகள் சிற்றறிவினேமாகிய  நம்மனோர் உய்தற் பொருட்டுக் குறிப்பிற்  புலப்படுத்த உண்மைகளாகும் . வானம் – ஞானப்பரவெளி .  அதன்கண் விளங்கும் இறைவனை  வெற்றிவேந்தன் என்னும்  பொருடோன்ற  , “அடலரசு” என்றார் , “வானவூர் கொள்வோநாம்  மாயப்படைவாராமே “  என்றபடி  மாயப்படைகளை  வென்று   அருளாட்சி புரிதல் பற்றியென்க .

                   இனி, மதுப்பெருக்கில்  மூழ்கியின்புறும் வண்டு போலச்  , சிவானந்தத்தில் திளைத்து   இன்புறும்  வேட்கை  மிக்க  சிறியேனை , அப்பேறெய்தாவண்ணம்  தடைப்படுத்துப்  பிறவியாகிய  ஐவாயரவம் புலன்களாகிய  நச்சுத் தீயால் வெதுப்புகின்றதேயென  அடிகள் முறயிட்டு  ஆறுதல்  வேண்டுகின்றார் .  

                    பொதும்பு – மரப்பொந்து .  இதனைக்  காட்டிலுள்ளதென்று  கொள்ளல்  வேண்டும் . ஒரு மரத்தின் பொந்திற்பட்ட தீ புகைந்து  சிறிது சிறிதாகப்  பெருகி  முடிவில்  அப்பொந்திருந்த  மரத்தையும் எரித்தல் போல , உடம்பின் பொறிவாயிலில்  பற்றிய  புலனாகிய  நெருப்புச்  சிறிது சிறிதாகப் பெருகி , உடம்பொடு வேற்றுமையற்று நிற்கும் என் உயிரையும் சுடுகின்ற தென்பார்  , “பொதும்புறு தீப்போற் புகைந்தெரியப் புலன் தீக்கதுவ , வெதும்புறுவேனை “  யென்றார் .  ஒரு  வீட்டிற்  பற்றிய  தீயினால்  அதனைய ணைக்கப்  பலர்  விரைந்து முற்படுவர் ஆதலின், அதனை விளக்கற்குக்  காட்டிலுள்ள  மரப் பொந்திற் பற்றிய  தீயை  உவமையாக்கினர் .வீட்டருகி லுள்ள மரப்பொந்து என்று கொள்ளலாகாதோ எனின், அது பொந்துபடின் , அதன்கண்  தீங்கு செய்யும் நச்சுயிர்கள் வாழும்  எனக்கருதிப் , பொந்து படுங்காறும் அதனை  வீட்டிலுள்ளார்  வைத்திருக்கமாட்டார்  ஆதலின்  ஆகாதென்க .

                  காட்டிலுள்ள  மரப்பொந்திற்  பற்றிய   தீ  மழையானன்றித்  தணியாமை   போல  ,  என்னைப்பற்றிச்  சுடும் இப்புலனாகிய தீயை யணைத்தற்கு , ஆண்டவனே , நின் அருண்மழையல்லது  வேறு கருவி  காண்டலருமையாதலின் , நீயே  முற்பட்டு  உதவி புரிதல்  வேண்டுமென்று  அடிகள் குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . “அப்புலன்” என்புழிச்  சுட்டு  . முன்னைத் திருப்பாட்டுக்களிற்  கூறப்பட்டபடி பற்பல துன்பங்களை விளைத்த தென்பதைச் சுட்டி நின்றது .இறைவ!  நின்னாலன்றித்  தணிக்க  இயலாத புலனாகிய நெருப்பினால் சுடப்பட்டு வருந்தும் இந் நிலையில் என்னைக்  கைவிடல்  தகுமா வென்பார்  ,”விடுதி கண்டாய் “ என்றார் .  

                   இதன்கண் , “பொதும்புறு  தீப்போற் புகைந்தெரியப் புலன்  தீக்கதுவ , வெதும்புறுவேனை “ என்றதனால் , உலக  வாழ்க்கை புலன்களின்  கொடுமையால்  துன்புறத்தக்க  தென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                                            ******************************************

பாடல் :- 37 .

அரைசே  யறியாச்  சிறியேன்  பிழைக்கஞ்ச  லென்னினல்லால்

விரைசேர்  முடியாய்  விடுதிகண்  டாய்வெண்  ணகைக்கருங்கட்

டிரைசேர்  மடந்தை  மணந்த  திருப்பொற்  பதப்புயங்கா

வரைசேர்ந்  தடர்ந்தென்ன  வல்வினை  தான்வந்  தடர்வனவே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் ஐம்பொறிவாயிலாகப்  போதரும் கொடிய  புலனாகிய நெருப்பிற்குத்  தம்  ஆற்றாமையைக் குறிப்பிட்டு  ஆறுதல்  வேண்டிய  அடிகள் , இத் திருப்பாட்டில் அப்புலப்பகை   வல்வினையின் விளைவாதலின் , அவ்வினைக்குக்  காரணமாய  என்  அறியாமையால் நேர்ந்த பிழையைப்  போக்கி  எனக்கு  அபயம்  அளித்தல் வேண்டுமென்று  இறைவன்பால்  விண்ணப்பஞ் செய்துகொள்ளுகின்றார் .

பதவுரை :-  வெள் நகை  கருங்கண்  திரைசேர் மடந்தை  =  வெள்ளிய  பற்களையும்  கரிய கண்களாகிய கடலினையும் உடைய உமையமையை,   

மணந்த புயங்க  =  ஒரு கூற்றிலுடைய இறைவனே ,

திரு பொன்பதப் புயங்கா  =  வீட்டுத் திருவினையருளும்  அழகிய  திருவடிகளுடைய  பாம்பணிந்த பெருமானே ,

வரை சேர்ந்து  அடர்ந்தென்ன  =  பல மலைகள் ஒருங்கு திரண்டு வந்து   நெருங்கினாற் போல ,

வல்வினை வந்து அடர்வன  =  வலிய  தீவினைகள்திரண்டு வந்து  நெருங்குகின்றன ,

அரைசே  =  தலைவனே ,

விரைசேர்  முடியாய்  =  நறுமணம்  பொருந்திய சடை முடியினை யுடையாய் ,

 அறியாச்சிறியேன் பிழக்கு  அஞ்சல்  என்னின் அல்லால்   = 

அறிவில்லாச் சிறியவனாகிய  எனது பிழையின் நீக்கத்திற்கு  அஞ்சற்க  என்று  கூறினல்லது வேறு  கருவியின்று ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது

விளக்கவுரை :-  அம்மையப்பனாகிய  இறைவன் திருவடிச்சார்பைத்  தன் மூலம்  அடைய  விரும்பித் தன்னை  வழிபடும் மக்களுக்கு உலகன்னையாகிய இறைவி  காட்சிதருங்கால் , புன்னகை  பூத்த முகமும்  அருளொழுகு  விழியும் உடயளாய் வெளிப்படுவள்  என்னும்  உண்மை புலப்பட , “வெண்ணைக் கருங்கட்டிரைசேர் மடந்தை “என்றார் .  “வெண்ணகைக்  கருங்கண்”  என்றது  முரணணி . தன்னையடைந்தாரை  வரவேற்று  மகிழ்வுறுத்தற்கு முறுவன் முகமும், அவர்  விரும்பியது நல்குதற்கு  அருள் விழியும்  இன்றியமையாதன வென்பது  உலகிய லிலும் காணத்தக்கது . திரை –  அலை . ஆகுபெயராய்க்  கடலை யுணர்த்தும் . அம்மையின்  கருணை அள்ள அள்ளக்  குறையாதாதலின் , அருட் பெருக்கினையுடைய  அவள்  கண்களை , நீர்ப்பெருக்கினை யுடைய கடலாக  வுருவகஞ் செய்தனர் . “மடந்தை மணந்த” என்புழி இரண்டனுருபை  விரித்துக்  கொள்க .  புயங்கன்  என்பது ஈண்டும்  இயைந்து இறைவன்  என்னும்  அளவில்  நின்று  மணந்த என்னும்  எச்சத்திற்கு  முடிபாய்  விளியேற்று நின்றது .  திரு  என்பது  வீட்டுத்  திருவினையுணர்த்தும் . வடமொழியாளர் மோஷ லஷ்மி  யென்பர் . அவ்வீட்டிபத்தைத்  தருவது மெய்ஞானமாகும் .

                இறைவன்  திருவடியை ஞானவடிவம் என்று  மறையாகமங்கள் கூறுமாதலின் , “திருப்பொற்  பதம்  “ என்னப்பட்டது . உலக  வாழ்க்கைக்குப்  பொன்  இன்றியமையாமை  போல, வீட்டுலக  வாழ்க்கைக்குச்  சிவபதம்  இன்றியமையாதது   ஆதலின்  , பொற்பதமாயிற்றென்க . ஆகவே  “ மடந்தை மணந்த புயங்கா”  “திருப்பொற்பதப்   புயங்க” என்னும்  இரண்டு தொடர்க ளும்  முறையே  இறைவன்  உயிர்களுக்குப்  போகத்தையும்  வீட்டையும்  அருள்பவன் என்னும்  உண்மையைப்  புலப்படுத்து நின்றன .  “பொன்னும் மெய்ப்பொருளுந்  தருவானைப்  போகமுந் திருவும் புணர்ப்பானை “  என்னும்  ஆரூரர்  அருண்மொழியும் ஈண்டு  நினைக்கத்தக்கது .

                இத்தேவாரப் பகுதியில் பொன்னைத் தந்து  போகத்தைப்  புணர்ப்ப வன் எனவும் , மெய்ப்பொருளைத்   தந்து  வீட்டின்பத்தை யருள்பவன்  எனவும்  நிரனிறைப்  பொருள் கோளமைந்து , இறைவன்  போகியாயிருந்துயிர்க்குப்   போகத்தைப்  புரிபவன் என்பதையும் , யோகியாய்  யோக முத்தியுதவுபவன்  என்பதையும்  புலப்படுத்து  விளங்கும்  நயம்  உணர்ச்சிக்கு  இன்ப  விருந்தாகும் .  “திரைசேர் மடந்தை “ என்பதற்கு  கங்காதேவி  யெனவும் , திருமகள் எனவும் பொருள் கூறுவாறும்  உளர் , அவ்வுரையில்  இயைபும்  நயமும்  இன்மையுணர்க .

                          அடிகள்  தம்மை நலியும் வினையை  “வல்வினை” யென்றார் . விலக்க இயலாதது  என்பது  தோன்ற, வல்வினை மெல்வினை யென வினை  இருதிறப்படு மென்ப.  வல்வினை  ஈண்டுத்  தீவினையின் மேலது . பயன்  விளைக்குங்கால்  துன்பத்தின் மிகுதி குறைவுகளால் வன்மை மென்மை யுணரப்படுவன . கணவனை யிழந்து போந்த கண்ணகி ,குறப் பெண்களுக்குத்  தன்னியல்பு  கூறுங்கால் ,”மணமதுரையோடரசு  கேடுறவல் வினை  வந்துறுத்தகாலைக்  கணவனையங் கிழந்துபோந்த கடுவினையேன்  யான்” என்று  கூறினாள் எனச் சிலப்பதிகார  ஆசிரியர்  கூறுவர் .  

                      இங்கே  கணவனை யிழத்தற்கு  வல்வினை காரணமாயிற்றென் பது  தெளிவு . மீண்டும்  கண்ணகி  தன்னைக்  “கடுவினையேன் “ என உடம்பொடு  புணர்த்துக்  கூறியது , கணவனை  இழந்த துன்பம்  பொறாது இறத்தல் அறமாகவும் , இறவாமல் உயிர் தாங்கி வந்தது குறித்தாம் .சிலப்பதிகாரத்துப்  பிறிதோரிடத்து , “வல்வினை வளைத்த கோலை மன்னவன்  செல்லுயிர்  நிமிர்த்துச் செங்கோலாக்கியது “ என்று  கூறியிருத்தலும்  அறியத்தக்கது . வளையாத  செங்கோல்  வளைந்ததற்குக்  காரணம்  வல்வினையாயிற்றென்பது .

                         அசைக்கலாகா நிலையினையுடையது  மலை . அம்மலை  பல ஒருங்கு சேர்ந்து வந்து தாக்கினாற் போல , வலிய  வினைகள் பல ஒருங்கு  திரண்டு வந்து தாக்குகின்றன வென்பார் , “வரை சேர்ந்தடர்ந்தென்ன  வல் வினைதான் வந்தடர்வன”  என்றார் . சேர்ந்து, அடர்வன என்னும் சொற்களால் முறையே  மலையும் வினையும் பலவென்பது பெறப்படும் . சேர்ந்து  என்னும்  உவம வினையைப்  பொருளொடும் , வந்து  என்னும்  பொருள்வினையை  உவமத்தோடும்  இயைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும் . ஒரு மலையின்  ஒரு சிறு  கூறு  உருண்டு  வீழின்  , அதனாற்றாக்கப்பட்டார்  உய்தலரிதாம் . பல  மலைகள் திரண்டு  தாக்கின , தாக்கப்பட்டார் எங்ஙனம் உய்வர் என்பது கூறவேண்டாத  தொன்று. விலக்க  இயலாமையும்  உய்தலரு மையும்  தோன்ற  இவ்வாறு  கூறினார்  . வரை  சேர்ந்தடர்தல் இல் பொருளு வமை . இங்ஙனம் தாக்கும்  வினைபகையை  அறவே  களைதற் குரிய  ஆற்ற லுடைய  வினைக்கேடனாகிய  வேந்தர் பெருமான்  நீயே  யென்பார் .  

                 ஈண்டு  “அரைசே” எனவும் , மாயாகாரியமாகிய நிலையிலாவுலகத்தை  நிலையெனக்கொண்டு  மணி முடி பூண்டு  மருளாட்சி  புரியும் அரசர் போலாது , மாயையினீங்கி யென்றும்  நிலையு தலுடைய  இன்பமயமாக  விளங்கும்  பேராவுலகத்து ,நறுமணமிக்க  சடைமுடி  பூண்டு  அருளாட்சி   புரியும் அரசர்  பெருமான்  என்பது  புலப்பட  , “விரை சேர்முடியாய்” எனவுங்கூறி  விளித்தனர் . விரை  –  சடை முடியிற்  சூடிய  கொன்றைமலரிலுள்ள  நறு மணம்  .  மலை  திரண்டு வந்தாற் போல  வலிய  வினைகள் திரண்டு வருதற்குக்  காரணம்  சிறியேன்  குற்றமே யென்பார்.  “சிறியேன் பிழைக்கு”  எனவும்  , ஆண்டிற்  சிறியனாயினான் ஒருவன்  அறிவிற்   பெரியனாயிருந்தால் உலகத்தில் காணப்படுகின்றமை யின் , என்  சிறுமைதானும் அத்தகையதோ எனின் , அங்ஙனம்  அன்று ; அறிவிலாமையானாகிய  சிறுமையே  யென்பார் , “அறியாச் சிறியேன்” எனவுங்  கூறினர்.  

                ஈண்டுச் சிறுமை  குணஞ்  செயல்களானாய தென்பது கருத்து .  பிழைக்கு என்பதைப் பிழையின் நீக்கத்திற்கு  எனக்கொள்ளல்   வேண்டும் , “துன்பத்திற்கியாரே  துணையாவார் “  என்புழிப்போல . சிறியேனது பிழையின்  நீக்கத்திற்கு  அஞ்சற்க என்று  நீ  கூறும்  அபயமொழியல்லது வேறு  கருவியின்றென்று  அடிகள் குறிப்பிட்டபடியாம் . பிழை – மன  மொழி  மெய்களால்   நிகழும்  அனைத்துமாம் . தம் முக்கரணங்களாலும் நிகழும்  பிழயெல்லாம் இறைவன்  திருமொழி  யொன்றானே  நெருப்பிடைப்பட்ட   பஞ்சுத்துய்ப்  போல  நீங்கு  மென்று  அடிகள் துணிந்தபடியாம் . “பிழையெ லாந் தவிரப் பணிப்பானை” என்னும்  அருன்மொழியும்  இக்கருத்துப் பற்றி யெழுந்ததே . பணித்தல் –  அபயமொழியருளல் . “என்னினல்லால்” என்பதன் பின் அவாய்  நிலையான்   “வேறு  கருவியின்று “  எனபது  வருவித்துரைக்கப் பட்டது . வேறு   புகலில்லாத  சிறியேன்  , அறிவின்மையாற்  செய்த  பிழைகளைக்  களைந்து காப்பாற்றுதல்  நின் கடமையாகவும்  என்னைக்  கைவிடல் தகுமா  வென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .  

              இதன்கண், “வரை சேர்ந்தடர்ந்தென்ன  வல்வினைதான் வந்தடர்வன” என்றமையால்  உலக  வாழ்க்கை  வெறுக்கத்தக்க தென்பது  பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதலறிக .

                                                 **************************************

பாடல் :38.

அடர்புல   னால்நிற்  பிரிந்தஞ்சி  அஞ்சொல்நல்  லாரவர்தம்

விடர்விட   லேனை  விடுதிகண்  டாய்விரிந்  தேயெரியுஞ்

சுடரனை  யாய்சுடு  காட்டர  சேதொழும்  பர்க்கமுதே

தொடர்வரி  யாய்தமி  யேந்தனி  நீக்குந்  தனித்துணையே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  தம்  வல்வினைக்குக்  காரணமாய்  அரியாமையால் நேர்ந்த பிழையைப்  போக்கி அபயமளித்தல்  வேண்டு மென்று   விண்ணப்பஞ் செய்து கொண்ட  அடிகள் , இத் திருப்பாட்டில் அவ் வல்வினையின் விளைவாகவுள்ள  எல்லாப் புலநுகர்ச்சிகளுக்கும்   நிலைக் களனாகிய  மகளிர்  சார்பினாலுண்டாம்  தீங்கு  குறித்து இரங்குகின்றார் .

பதவுரை :- விரிந்து  எரியும்  சுடர்  அனையாய்   =  எங்கும்  பரவி யொளிரும்  தீப்பிழம்பை யொத்துத்  திகழ்பவனே ,

சுடுகாட்டு  அரசே  =  எல்லாம்  ஒடுங்கும்  இடமாகிய  பெருஞ் சுடலைக்கு  அரசனே ,

தொழும்பர்க்கு  அமுதே  =  மெய்யடியார்க்கு  அமுதம் போன்றவனே ,

தொடர்வு  அரியாய்  =  யாரானுந்  தொடர்ந்து பற்றுதற்கு  அரியவனே  ,

தமியேன்  தனிநீக்கும்  தனித்  துணையே  =  புகலற்றவனாகிய  அடியேனது  தனிமையை  நீக்கியருளும் ஒப்பற்ற  துணையாக வுள்ளவனே  ,

அடர் புலனால்  அஞ்சி  நின் பிரிந்து  =  என்னைத் தாக்குகின்ற  புலன்களுக்கு அஞ்சி நின்னைப்பிரிந்து ,

அம் சொல் நல்லார்  அவர்தம்  விடர்  விடலேனை  =  அழகிய  சொற்களையுடைய   மகளிருடைய  முழை  போன்ற  இடங்களை  விடாமற்  பற்றி நிற்கின்ற   சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-   உலகெலாமாகி   வேறாயுடனுமாய்  விளங்கும்  இறைவனது திருவுருவை ஞானயோகத்தின் முதிர்ந்த பெரியார் முதலிற்  பேரொளிப்  பிழம்பாகக்  கண்டு   வழிபட்டனரென்பது மறையாகமங்களிற்  கண்ட வுண்மையாகும் . “சோதியாய்த்  தோன்று  முருவமே  “ என்பது  அடிகள் திருவாக்கு . ஐம்பெரும் பூதங்களும் , ஞாயிறு  திங்களும்   உயிருமாகிய  எட்டுப் பொருள்களும்  இறைவனுக்குத் திருமேனியென்ப . இவ்வெண் வகையுள் , ஞாயிறு  திங்கள் நெருப்பு  இம்மூன்றும் ஒளி மண்டிலங்களாகும் . இம்மூன்றும் , புறவிருளைப்போக்கி  மாயாகாரியமாகிய  உலகப்  பொருள்க ளைக்   காண்டற்குத்  துணை செய்தல் போல , ஞானமயமாக விளங்கும்  இறைவன்  எக்கருவியானும் போக்கவியலாத உயிர்களின் அறியாமையாகிய அகவிருளைப்  போக்கி , மாயையினீங்கிய  தன்னியல்பை  அவ்வுயிர்களு ணர்ந்து  இன்புறுதற்குத்  துணை செய்தலின் ,எங்கும்  நிறைந்த அவ்விறை யியல்பை ஒளி மண்டிலங்களில் வைத்து வழிபடுவாராயினர் .

                    நெருப்பு  எரியுங்கால் மேனோக்குதல் இயல்பு . பிழப்பாகிய  இறைவனியல்பு  “நள்ளுங்  கீழுளும் மேலுளும்  யாவுளும்”  நிறைந்து விளங்குதல் பற்றி ,”விரிந்தே எரியும் சுடர் அனையாய் “  என்றார் . “பார்பதமண்டமனைத்துமாய்  முளைத்துப் படர்ந்ததோர்   படொரொளிப் பரப்பே “  என்று  அடிகள் பிறிதோரிடத்துக்   கூறியிருத்தலும்  அறிக .  “படரொளிப் பரப்பு”  என்பது  இங்கே  நினைக்கத்தக்கது . இறவனது ஞானமயமான  திருவுருவின்  இயல்பைக்  கூறிப்பின் அப்பெருமானது தலமைத்  தன்மையைப்  புலப்படுத்துவாராய் , “சுடுகாட்டரசே”  என்றனர் .  இங்கே  சுடுகாடு  என்பது பேரூழிக்காலத்தில் மக்கள்  தேவர்  முதலிய  யாரும்  யாவும்  ஒடுங்க்கிய இடமாகும் . அக்காலத்து அவ்விடத்துத்  தலைவனாக  விளங்கும்  தகுதி , கண்ணுதற் பெருங்கடவுட்கன்றிப்  பிற ரெவர்க்கும்   இன்றென்பது  துணி பொருளாதலின் , அவ்வாறு  கூறினர் .  மாயா காரியமாகிய  உலக நிகழ்ச்சியில் , அரசராய்  விளங்கும்  மக்கள்  தேவர்  முதலியோர் , தம்மால்  ஆளப்படுவோர்  இறந்தொழிதல் போலத் தாமும்  இறந்தொழிதலின் , அன்னார்  அரசு நிலயுதலில்லா அரசென்பதும் யாரும்  யாவையும்  ஒடுங்கிய பேரூழிக் காலத்து  “ஈறிலாதவ  நீசனொரு வனே “  என்றபடி   தானொருவனே  அழிவின்றி  நின்று  மீண்டும்  படைப்பு  முதலிய  செயல்களுக்குத்   தனித்தலைமை  மேற்கோடலின்  , சுடுகாட்டரசு   நிலையுதலுடைய தென்பதும்  குறிப்பிற்   புலப்படுத்தவாறறிக .  

              இங்ஙனம்  யாண்டும்  பரவிய  ஒளிப்பிழம்பாகவும்  ,பேரூழியிறுதியில்  பேரரசாகவும்  விளங்கும்  இறைவனைச்  சார்தல்  சிறியேமாகிய  நமக்கு  எங்ஙனம் கூடும்?  இயலாத செயலிற்றலைப்படல்  பயனின்று  எனக்கருதி  மெய்த்தொண்டில்   ஈடுபடாமலிருக்கலாமே  யெனின், அங்ஙன மிருத்தலா காது ;  அப்பெருமான்  மெய்த்தொண்டி லீடுபட்டு  ஒழுகும்  மெய்யன்பர்க்கே   இனியனாய்  எளிவந்தருளும்  இயல்புடையனாவ  னென்பதைப்  புலப்படுக்க ” தொழும்பர்க்கமுதே “ எனவும், இங்ஙனம் மெய்யன்பர்க்கு  எளிவரும்  இயல்பு நோக்கி  மெய்த் தொண்டிற்றலைப்படாமல்  அவ்விறைவனை  உயிர்  முயற்சியால்  வலிந்து பற்றிக் கொள்ளலாமெனக்  கருதுவார்க்கு  அவன்  அரியன்  என்பதை  தெளிவுறுத்தத் ,  “தொடர்வரியாய்”  எனவும்  இறைவனை  விளி  கொள்ளலானார் .  

                பத்தி வலையில் எளிதிற்  படுபவனாகிய  இறைவனை  அவன் அருட்டுணையின்றி  உயிர்  முயற்சியான்  மாத்திரம்  தொடர்ந்து பற்ற இயலாதென்பதைச்  சுந்தரமூர்த்திகள்  வரலாறு  கூறுங்கால்  சேக்கிழா ரடிகள் ,

ஆவணன்   பறிக்கச்  சென்ற  அளவினி  லந்தணாளன்

காவணத்  திடையே  யோடக்  கடிதுபின்  றொடர்ந்து  நம்பி 

பூவணத்  தவரையுற்றா  ரவரலாற்  புரங்கள்   செற்ற

ஏவணச்  சிலையினாரை  யார்தொடர்ந்  தெட்டவல்லார் “

என்னுந் திருவிருத்தத்தால்  தெளிவுறுத்தருளினார் .தம்பிரான்றோழர்   திருமணத்தில் இறைவன்  ஓர்  அந்தணனாகப் போந்து , “நீ யெனடிமை , பணி செய்தல் வேண்டும் ; ஆவணமுளது “  எனக்கூறிய  அளவில் , அதனைப் பறிக்கச் சென்ற  சுந்தர மூர்த்திகள் ,விரைந்தோடிய  இறைவனைத்  தொடர்ந்து பிடித்தனர்  என்பதும் , அத்தவமுதல்வரன்றி  இறைவனைத்  தொடர்ந்து பற்ற  வல்லார்  யாருளர்  என்பதும்   இச்செய்யுளால்  அறியப்படுவன .  “தொடர்வரியாய்” ,  “தொழும்பர்க்கமுதே” யென்பன  முறையே  இறவனுடைய   அருமையையும்  எளிமையையும்  வெளிப்படுத்து  நிற்றலின் , அருமையிலெளிய  அழகுடைய னாதல்  ஈண்டும்  புலனாதலறிக .

              சுடரனையாய்  என்பது  முதலாக  இத்துணையுங்கூறிய   நான்கு  விளி களாலும் , முறையே  எங்கும்  நிறை பொருளாகிய  இறைவன்  மெய்யன்பர்க்குக்  காட்சி யளிக்குங்கால்  பேரொளிப்பிழம்பாக  விளங்குபவ னென்பதும் , அப்பெருமானே  யாரும்  யாவும்  ஒடுங்கிய  பேரூழிக் காலத்தும் அழிவின்றி நிலைத்திருக்கும் தலைமைத்   தன்மையுடையான்  என்பதும் , மெய்த்தொண்டர்குப்  பத்தி வலையிற்படும்  எளிய னென்பதும் , ,அல்லா தார்க்கு  அணுகுதற்கரிய   னென்பதும்  ஆகிய  இறையியல்பைத்  தெளிவுறுத்து, இறுதியில் தமக்குச் சிறப்பு  முறையில்  அவ்விறைவன்  செய்தற்குரிய  பேருதவியைக்  குறிப்பிட்டு அடிகள் பாராட்டி விளிப்பாரா யினர் . தமியேன்  என்பது  வேறுபுகல்  இல்லாதவன் என்னும் பொருட்டு . “தந்தையார்  தாயார்  உடன்  பிறந்தார்  தாரமார்  புத்திரரார் தாந்தாமாரே,  வந்தவாறெங்ஙனே  போமாறேதோ  மாயமாமிதற்கேது  மகிழ வேண்டா”  என்று  அப்பர்  உபதேசித்தபடி  இவ்வுல்லக வாழ்க்கையில்   ஒருவர்க்கு  இறைவன்னல்லாத  யாரும்   துணையாகாரென்னும்  உண்மை பற்றி இவ்வாறு  கூறப்பட்டது .

                      அழியும்  இயல்பினதாகிய  உலகியலைக்  கண்டு  தம் தனிமை யை யுணர்ந்த அடிகள் , அத்தனிமையை நீக்கித்  தமக்கினிய  துணையாகத்  தம்முள்ளே  விளங்கும்  தனி முதல்  சிவபெருமானே  யெனத்  தெளிந்தமை யால் , “தமியேன்  தனி நீக்குந்  தனி முதலே “ யென்றனர். உயிர்  பாசத்தாற்  பிணிப் புண்டிருக்கும் பொழுதும் ,இறவன்  அப்பிணிப்பிற் படாமல்  அவ்வுயிரிற்   கலந்திருத்தலின்  ,அவ்வுயிர்க்குத்  தனிமை யென்பது யாண்டும்  பெறப்படாதெனின்  , அங்ஙனமன்று ; உயிர்க்குத்  தன் முனைப்பு  மேலிட்டிருக்குங்கால் , இறைவனது  கலப்புண்மை  யுணரப்படாமை யால்  துணையிலதெனக்  கொண்டு  தன்னைத்  தனியனாகக்  கருதுதலும் , தன் முனைப்பு  அற்று  இறை விளக்கம்  மேலிடப்பெற்ற நிலையில் , அக்கலப்புண்மை  யுணரப்பட்டமையால் , துணையுள தெனக்  கொண்டு  தனிமை  நீக்க  முணர்தலும்  உளவாதலின்  , இம்முறையில்   தனிமையும்  அஃதின்மையும்  பெறப்படுமென்பதும் , தனி  முதலென்றது  தனக்குப்  பிரிதொரு பொருள் ஒப்பாதலும் ,பிறிதொரு பொருட்குத்  தானொப்பாதலும்  இல்லாதவன்  என்னும் பொருட்டு . இவ் வுண்மையை , “ஒப்புடையனல்ல னொருவனல்லன் ஓரூரனல்ல னோருவமனில்லி “ என்னும்  தமிழ் மறையில்  “ஒப்புடையனல்லன்  ஒருவமனில்லி “  யென்னுந்  தொடர்களில்  அப்பர்  தெளிவுறுத்தருளியிருத்தலறிக .

                         பொறிவாயிலாகப்  போதரும்  புலனுகர்ச்சியில்  உள்ளத்தைப்  போக்காமல்  தடைப்படுத்த முயன்றும்  , அப்புலன்வலி விஞ்சிப் பொருகின்ற தென்பார் ,  “அடர்புலன்” என்றார் . புலனால்  என்புழிப்  புலனுக்கு  என  மூன்றனுருபை  நான்காவதாக்குக . அப்புலப்பகையின்   தாக்குதற்கு  அஞ்சிச்  சாருமிடம்  , அது செல்லாத  நின் திருவடியாகவும்  , இறைவ ! அச்சார்பை  விட்டுக்  , கொடிய  விலங்கிற்கு  அஞ்சி  மறைய  முயல்வானொருவன் புலி கிடந்த தூற்றை யடுத்தது போல, அப்புலப்பகைக்கு ஆக்கந்தரும்  மகளிர்  சார்பைப்  பற்றலானேன்  என்பார் , “நிற்பிரிந்து அஞ்சொனல்லாரவர்  தம் விடர் விடலேனை “  என்றார் . அஞ்சொல் என்றது விரும்பிப்  பற்றுதற்குக்  கருவி  கூறியபடியாம் . நல்லாரவர் என்புழி  அவர்  என்றது , பண்டறி  சுட்டாய்ப்  புலப் பகைக்குச்  சார்பிடனாக வுள்ளவர்  என்பதைக் குறிக்கும் .  விடர் – மலைக்குகை  .“பெருமலை விடரகத்து”என்புழி அப்பொருட்டாதலறிக  அஃது  ஆகு பெயராய்க் குகை போன்ற  சிற்றிடத்தை  யுணர்த்தும் . “நிற்பிரிந்து” என்பதற்கேற்ப  விடரைப்  பற்றினேன்  என்னாது , விடலேனை யென  எதிர்மறையாற்  பெற வைத்தது . நற்சார்பை   விடுதலினும்  தீச்சார்பைப்  பற்றுதலின்   அவாமிகுதியுண்மை  புலப்படற் கென்க .

       ஆண்டவனே !  அறியாமையால்  இவ் விடர்ப்பாட்டில்   பிணிப்புண்டுழலும்   சிறியேனைப்   பேரருளாளனாகிய   நீயே  முன் வந்து  நின்  திருவடிச் சார்பை  நல்கிக்  காத்தருளல்  வேண்டுமல்லது இந்நிலையிற்  கைவிடல்  தகுமா வென்பார் . “விடுதி கண்டாய்”  என்றார் .

        இதன்கண்,  “அடர்புலனால்நிற் பிரிந்தஞ்சியஞ்  சொல்  நல்லாரவர் தம் விடர் விடலேனை “  என்றமையால்  உலக  வாழ்க்கை புலப் பகையால்  நலியப்பட்டு  வருந்தத்தக்கது  என்பது பெறப்படுதலின், பிரபஞ்ச  வைராக்கியம்   புலனாதலறிக .

                                               ************************************

பாடல் :39 .

தனித்துணை  நீநிற்க  யான்றருக்  கித்தலை  யானடந்த

வினைத்துணை  யேனை  விடுதிகண்  டாய்வினை  யேனுடைய

மனத்துணை  யேயென்றன்  வாழ்முத லேயெனக்  கெய்ப்பில்  வைப்பே

தினைத்துணை  யேனும்   பொறேன்றுய  ராக்கையின்  திண்வலையே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  எல்லாப் புலனுகர்ச்சிகளுக்கும்  இடனாகிய  மகளிர்  சார்பினாலுண்டாம்  தீங்கு  குறித்து வருந்திய  அடிகள் , இத் திருப்பாட்டில்  மெய்த்துணையாகப்  பற்றுதற்குரிய  நின்னை  விட்டு  மகளிரைப்  பற்றியதோடு  அமையாது  , அதனாற்  செருக்குற்றுத்  தலை  கீழாகவும்  நடக்கலானேன் ; என் வினை யிருந்தபடி யென்னே  என  இரங்குகின்றார் .

பதவுரை :-  வினையேன்  உடைய மனத் துணையே  =  தீவினையுடையேனது  உள்ளத்திற்குத் துணையாக  வுள்ளவனே ,

என் வாழ்முதலே  =  எனது  வாழ்க்கைக்கு  ஆதாராமாகிய முடற்பொருளே  ,

எனக்கு எய்ப்பில் வைப்பே   =  எனக்கு  இளைப்பு  நேர்ந்தவிடத்துப்  பயன்படும்  சேமப்பொருள்  போல்பவனே ,

தனித்துணை  நீ நிற்க  =  நிகரற்ற  துணையாக  நீயிருக்க  ,

யான்  தருக்கித்  தலையால்  நடந்த வினைத்துணையேனை  =  யான்  எனச் செருக்குற்று  அதனால்  தலை கீழாக  நடந்த வினையைத்  துணையாகவுடைய சிறியேனை ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

ஆக்கை  திண்வலை  துயர்  =  உடலாகிய  திண்ணிய  வலையிற்பட்டு  எய்தும்  துன்பத்தை ,

திணைத்துணையேனும்  பொறேன்  =  தினையளவு  நேரமேனும்   பொறுக்கலாற்றேன்  என்பது .

விளக்கவுரை :-  அடிகள்  ஆண்டவன்  முன்னிலையில்  , தம்மை  அடியேன்  , சிறியேன்  ,  நாயேன்  என்னுஞ் சொற்களால்  குறிப்பிடுதலைப்  பலவிடத்துங் காணலாம் . அங்ஙனம்  குறிப்பிடல்  , யாவர்க்கு  மேலாம்  அளவிலாச்  சீருடைய  அப்பெருமான் பெருமையும்  தம் சிறுமையும் புலப்படற்கென்பது  அடிகள் கருத்தாம் . இறைவன்  ஆண்டான்  என்பது  தோன்றத்  தம்மை  யடியேன்  எனவும் ,பெரியோன்  என்பது  தோன்றச்  சிறியேன்  எனவும்  , பிறப்பிலான்  என்பது தோன்றப்  பிறப்பாலிழிந்த நாயேன்  எனவும்  கூறுவாராயினர் . அங்ஙனமே  ஈண்டு  இறைவன்  வினையினீங்கிய  தூயன்  என்பது  தோன்றத் தம்மை  “வினையேன்” என்றனர் . ஒருயிர் பிறவி தொடங்கிவிட்டு  நிலை யெய்துங்காறும்   வினையொழிவு  பெறாமையால்  அதற்கு  மற்றைக்  குறியீடுகளினும்  வினையுடைமை பற்றிய   குறியீடே  சிறப்பிற் பொருந்துவதாகும் , வினை விளைவிற்கும்  அதன் பயனுகர்ச்சிக்கும் மனமே  சிறந்த காரணமாகும் .  

                மனமில்வழி  நிகழும்  செயலை  அபுத்திபூர்வக  மெனவும்  , அஃதுள் வழி நிகழும்  செயலைப்  புத்திபூர்வகமெனவும்  , கூறபவாதாலின் , மனைவியோடு  நிகழும்  மொழியும் செயலுமே   பயன்விளைப்பனவாம் . ஆகவே  மனமொன்று  தூய்மை பெறின்  ,முக்கரணங்களும் தூய்மையுடைய னவாம்  என்பது தெளிவாம் . அத்தூய்மைதானும் , அது பொறிவழிச்  சேறலை யொழித்துத்  தன்னைப்  பற்றுமாறு  இறைவன்  அம்மனத்திற்குத்  துணைபுரி தலால் உண்டாம்  ஆதலின் , அவ்வுதவி  குறித்து , “வினையேனுடையே   மனத்  துணையே  “  என்றனர்  . இங்ஙனம்  மனத்தூய்மையை யடிப்படையாகக் கொண்டு  வாழும்  இம்மை  வாழ்க்கைக்கும் , அவ் வாழ்க்கையில்   மேற் கொள்ளப்படும்  தவம்  காரணமாக  எய்தப்பெறும்  மறுமை வாழ்க்கைக்கும் ,அத் தவத்தால்  உண்டாம்  ஞானத்தாலடையப்படும்   வீட்டின்ப  வாழ்க்கைக் கும் , ஆதாரமாகவுள்ள   முதற் பொருள்  இறைவனாதலின்  , “என் வாழ் முதலே”  என்றனர் .

                       வாழ்க்கை  இம்மை  மறுமை வீடு  மூன்றையும்  குறிக்குமா யினும் , ஈண்டு  முடிவான  வீட்டின்பம்  பற்றியதாகவே கொள்ளல்  வேண்டும் ; என்னை , “தினைத்துணையேனும்  பொறேன் றுயராக்கையின்றிண் வலையே “  என இம்மை வாழ்வு  வேண்டாமையே  இத் திருப்பாட்டிலே  கூறி யிருத்தலானும் ,”கொள்ளேன் புரந்தரன்  மாலயன்  வாழ்வு”  என்பது  முதலிய  வற்றால்  மறுமை  வாழ்வு  வேண்டாமையை  வெளிபடுத்தமையானு மென்பது .

           உலக  வாழ்க்கையில்  ஒருவற்குப்  பொருட்குறை நேர்ந்தவிடத்துப்  பயன்படுதற் பொருட்டுத்  தொகுத்து  வைக்கப்படும்  மூலப்பொருளை   வைப்புப்  பொருளென்ப . அப்பொருள் போல  வீட்டின்பம்  துய்த்தற்கு  இளைப்பு  நேர்ந்துழி  , அதனை  யொழித்து தன்னை வழங்குதலாகிய  பெரும்பயன்  விளைத்தற்கு   இறைவனுளன் என்னுந்  துணிவு  தோன்ற  அப்பெருமானை  , “எனக்கு  எய்ப்பில்  வைப்பே “  யென்றனர்  .  இம்மூன்று  விளிகளாலும்  முறையே  மனத்தூய்மையாகிய சாதனத்திற்குத்  துணையா வானும்  , அச்சாதனப்பயனாகிய  வீட்டின்ப வாழ்விற்கு   முதலாவானும்  அவ்வின்பப்  பேற்றிற்குத்  தடை  நேர்ந்துழி யுதவி புரிவானும்  சிவ பெருமானே  யென்பது புலப்படுக்கப்பட்டபடியாம் .  

         இவ்வாறு  இறைவனை  விளித்துத்  தம்  குறையை  விண்ணப்பித்துக்  கொள்ளுகின்றார் . உயிர்கட்குக்  கட்டு நிலையினும்  வீட்டு  நிலையினும்  நீங்காத  மெய்த் துணையாகவுள்ளவன்  இறைவனொருவனே , பிறவிதோறும்   அப்பிறப்புப்  பற்றியுண்டாம்  துணையெல்லாம்  அப்பிறப்பு  ஒழிவில்  தாமும்  இழிந்து போமியல்பினவாம் . அப்பிறவியினும்  இடையறாது  நிலை நின்று  பயன்  செய்வனவு மாகா; இடையிடையே  மாறி நிகழும்  இயல்புடையனவாம்  எப்பிறப்பினும்  எந்நிலையினும் விட்டு  நீங்காமல்   உடனுறைந்து  நிலை நின்று  உயிர்க்கு  உறுதுணையாகவுள்ளவன்  இறைவனாதலின், “தனித்துணை” யென்றார் .

        கட்டு  நிலையிலும்  இறைவன்  துணை  யுளதாயின்  , உயிர் இன்பத்தோடு  துன்பமும்  நுகர்தல்  எங்ஙனம்  பொருந்துமெனின் , வினைப்  பயனை  நுகர்வித்துக் கழித்து உயிர்க்கு  நலம்  புரிதலே  இறைவன்  திருவுள்ளமாதலின்  , அப்பெருமானுடைய  அறக்கருணையோடு   மறக்கருணையுங்  காரணமாக  உயிரநுபவம்  நிகழ்தலிற்  பொருந்துமென்க . உலக  நிகழ்ச்சியில்  தாய்  தந்தையர்  தம்  சொல்வழி நில்லாத  மக்களை  அடித்தொறுத்து  நல்லாற்றுப் படுத்தற்குக்  காரணம்,அம் மக்கண்மாட்டுள்ள   அன்பேயாதலை   யறிகின்றோமாதலின்  ,அம்முறையின்  எவ்வுயிர்க்கும்  தாயுந் தந்தையுமாகவுள்ள  இறைவன்  செயலுமாமென்க . இதனை ,

நிக்கிர  கங்க  டானும்  நேசத்தா  லீசன்  செய்வ

தக்கிர  மத்தாற்  குற்ற  மடித்துத்  தீர்த்  தச்சம்  பண்ணி

யிக்கிர  மத்தினாலே  யீண்டற  மியற்றி  டென்பன்

எக்கிர  மத்தினாலும்  இறைசெய  லருளே  யென்றும் “

என்னும்  சிவநெறிப்  பனுவலானும்  தெளிக .  இங்ஙனம்  தற்பயன்  கருதாமல்  உதவிபுரியும்  ஒப்பற்ற  துணையாகிய  நீ  என்னிற்  பிரியாதிருக்க  வென்பார்  “தனித்துணை நீ நிற்க “ என்றார் .  நிற்க  என்றது , உற்றுழியுதவுதலில்  விரைந்து முற்படல்  தோன்றா நின்றது .இறைவ , எனக்கு  உற்றவிடத்தும் அரிய  பெரிய  துணையாக  என்னுள்ளே  நீ முற்பட்டிருக்கவும் , நின்னை  மதியாமல்  உயிர் முனைப்பால்  யானே  தலைவன்  எனக்கருதிச்  செருக் குற்று  நெறிமுறை  பிறழ்ந்து  நடக்கலானேன் என்பார் .

                 “யான்  தருக்கித்  தலையால் நடந்த” என்றார் . “யான் தருக்கி” என்புழி இடையே  “என” வென்னும்  இடைச்சொல்லை  அவாய் நிலையாற்  கொண்டு  யான்  எனத் தருக்கி  யெனவுரைத்துக்  கொள்ளல்  வேண்டும் . யான்  என்றதனால்  , இனம்  பற்றி  எனது  என்பதையுங்  கொண்டு  , யான்  எனது  என்னும்  அகப்புறப்  பற்றுக்களால்  மயங்கி   எனக் கொள்ளுதல்  பொருந்தும் .  இனி, “யான்றருக்கித்  தலையால் நடந்த வினைத்  துணையேனை “ என்பதற்கு , தருக்கி  நடந்த  வினைத்துணை யேனாகிய  என்னை  எனப்  பொருள்  கோடலுமாம் .அங்ஙனம்  கொள்ளுங்கால் , “யான்  தருக்கித்  தலையானடந்த  வினைத் துணையேனை “ என்பதைப்  பதினோ ராந் திருப்பாட்டிற்  கூறியாங்குக்  கூறி  முடித்துக்கொள்க . இது தன்மை பற்றி  வந்தது .

                இங்ஙனமே  நாற்பத்தைந்தாம்   திருப்பாட்டில்   “நீ யொளித்தாய்க்கு” என முன்னிலைப்பற்றி   வந்த தொடர்க்கும்  கொள்க.  இவ்வாறு  வருதலை, “கருதாத வரக்கன் பெருந்தோள்கணாலைந்து மீரைந்து  முடியுமுடையானை”  என்னுஞ் சுந்தரர் தேவாரத்திலுங் காண்க . இது  படர்க்கை பற்றி  வந்தது. தருக்குதலின்  பயனாகத்  “தலையானடந்த” என்றார் . தலையானடத்தல்  என்பது நெறிமுறை தவறி யொழுகுதலைக்  குறிக்கும்  . என்றும்  அழியாத  அறிவுருவாகிய  நின்னைத்  துணையாகக்  கோடலை விட்டு , நுகர்ச்சி யாலழிவெய்துவதும்  அறிவில்லாததுமாகிய  வினையைத்  துணையாகக்  கொள்ளலானேன் ; என் அறியாமை  இருந்தவாறிது என இரங்குவார்,  “வினைத்துணையேனை  “யென்றார்  .

              முன்னர்  ஆண்டவன்  அருட்குரவனா  யெழுந்தருளித்  தமக்கு  உபதேசித்து  மறைந்தவுடன்  ,”இனவடியாருடன்  கூட்டாதே  கினாயோ  என்னையுமென்  வினையையு மிங்கிருத்தி யெந்தாய்”  என்று  அடிகள்  இரங்கிக்  கூறியதாகப்  பரஞ்சோதியார் கூறியதும்  இங்கே  நினைக்கத் தக்கது  இறைவன்  பிரிவில்  தமக்குச்  சார்பாக  நின்றது வினையென  அடிகள்  கண்டனரென்பது .  இனி, “வினைத்துணையேனை” யென்புழித்  துணையென்னுஞ் சொற்கு  இரண்டெனப்  பொருள் கொண்டு  , இருவினைக் கட்டுடையேனை   எனக் கோடலு மொன்று .  .  இறைவ! , என் அறியாமையால்  மெய்த்துணையாகிய  நின்னை  விட்டு , பொய்த்துணையாகிய  வினையைக் கொள்ளலானேன் ; இந் நிலையில் என்னைக் கைவிடலாகாதென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .

                இனி , அடிகள் வினைத்துணைமையால்  தமக்கேற்பட்ட  துயரத்தை  ஒரு சிறு  பொழுதேனும்  பொறேன் என்று  ஈற்றடியிற்   குறிப்பிடுவாராயினர் . “ஆக்கையின்  திண்வலை” யென்புழி  இன் அல்வழிச்சாரியையாகும்  , “தன் பூங்கழலின்  றுணர்ப்போது “ என்புழிப்போல  .  ஒரு வலையுட்பட்ட   பிராணி யின்   வன்மையால்  அவ்வலையறுதலுமுண்டு  .  யாக்கையுட்பட்ட வுயுர்   வினையொழிவு  பெற்று  வீட்டு  நிலை  யெய்துங்காறும்  யாக்கை  தொலை யாமையின்  யாக்கையைத்  “திண்வலை” யென்றார் .யாக்கையாகிய  வலிய  வலையிலகப்பட்டு   எய்தும் துயரத்தை ஒரு கணப்பொழுதேனும்  பொறேன்  என்பார் , “ தினைத்துணையேனும்   பொறேன் துயராக்கையின்றிண்வலயே”  யென்றார்.  திணை –  சிறுமையைக்  குறிக்கும்  ஓரளவு .  தினைத்துணை  நன்றி  செயினும்” என்புழியும்  அப்பொருட்டாதலறிக . ஈண்டுக் காலத்தைப் பற்றி  நின்றது .

                “எத்தனுவினின்று   மிறை  பணியர்க்கில்லை  வினை”  என்றபடி  மெய்யடியாராகிய  அடிகள் எவ்வினைகளைச்  செய்யினும் அவர்க்கு   அவை  பந்தமாகாவாயினும்  , இறை பணி நிற்கும் அன்னார்க்கும் ஒரோவழிப்  பயிற்சி  வயத்தால்  பிராரத்த வினை மெலிதாக  வந்து தாக்குதலும்  உண்டென்ப . இவ்வுண்மையை “இங்குளி வாங்கும்  கலம் போல ஞானிபால் , முன்செய் வினைமாயை  மூண்டிடினும்  “  என்னும்  திருவெண்பாவானும்  , “இறை பணி  நிற்பார்க்குப்  பிராரத்த வினை தாக்குதலுண்டென்பதற்குத்  “தினைத்துணையேனும்  பொறேன்  றுயராக்கையின்றிண் வலையே “ என்றற் றொடக்கத்தான்  அவர்  கூருந்  திருவாக்குகளே   சான்றாதலின் “ என்னும் சிவஞான முனிவர்  கூற்றானும்  உணரலாம் . இத் திருப்பாட்டின்  ஈற்றடி  சிறந்த சிவநெறியுண்மையைப்   புலப்படுத்து நிற்றல் உணர்ந்தின் புறத்தக்கது . இஃது ஆண்டவன்  தம்மைக்  கைவிடாமற்  காத்தற்கு  ஏதுக்  கூறியபடியாம் .  

                 இதன்கண்,  “தினைத்துணையேனும்  பொறேன் றுயராக்கையின்  றிண்வலையே”  என்றதனால்  உடலோடு கூடிய  உலக  வாழ்க்கை  வெறுக்கத் தக்க தென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம் புலனாதலறிக .

                                                    ***************************************

பாடல் : 40 .

வலைத்தலை  மானன்ன  நோக்கியர்  நோக்கின்  வலையிற்பட்டு

மிலைத்லைந்  தேனை  விடுதிகண்  டாய்வெண்  மதியினொற்றைக் 

கலைத்தலை   யாய்கரு  ணாகர  னேகயி  லாய  மென்னும்

மலைத்தலை  வாமலை  யாண்மண  வாளவென்  வாழ்  முதலே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  மெய்த்துணையாகிய நின்னை விட்டு  மகளிரைப் பற்றியதோடமையாது  அதனால்  செருக்கி நெறி பிறழ்ந்தும்  நடக்கலானேன் என்று  இறைவனை  நோக்கிக்கூறிய  அடிகள் , இத்திருப்பாட்டில்  அங்ஙனம்  நடத்தற்கு ஏதுவாகிய  மகளிர்  சார்பில்  தம்மைப்படுத்த  கருவியின்  வலிமையைக்  கூறுகின்றார் .

பதவுரை :-  வெள்மதியின்  ஒற்றைக்கலைத்  தலையாய்  =  வெள்ளிய  திங்களின்  ஒரு கலைப் பிறையைத்  தலைக்கணுடையவனே ,

கருணாகரனே  –  அருட்கு  இருப்பிடனாக  வுள்ளவனே ,

கயிலாயம்  என்னும்  மலைத்தலைவா  =  கயிலை என்று  சொல்லப்படும்  மலயில்  எழுந்தருளியிருக்கும்  தலைவனே ,

மலையாள்  மனவாளா  =  மலை  மடந்தையாகிய  உமா தேவியின்  கணவனே ,

என் வாழ்  முதலே  =  எனது  வாழ்க்கைக்கு  மூலகாரணமானவனே ,

வலைத்தலை மான் அன்ன நோக்கியர்  =  வலையிடைப்பட்ட  மானின்  கண்களைப்  போன்ற   கண்களையுடைய  மகளிரது ,

நோக்கு  வலையிற்பட்டு  =  பார்வையாகிய  வலையில்  அகப்பட்டு  ,

 மிலைத்து  அலைந்தேனை  =   மயங்கித் திரிந்த சிறியேனை ,

விடுதி  =  விட்டு விடுவாயோ ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- வெண்மதி என்றது  இனச்சுட்டில்லாப்  பண்பு கொள் பெயராகும் . ஆயுனும்  கந்தபுராண வரலாற்றை  நோக்குமிடத்து , ஒருண்மை  குறிக்கொள்ளத்தக்கது .  பதினாறு  கலைகளையுடைய  திங்கட் செல்வன் தக்கன்  சாபத்தால் பதினைந்து கலைகள் தேய்ந்தொழியப்   பெற்று  , ஒரு கலை  எஞ்சியிருக்குங்கால் , இறைவனைப் புகலடைந்து  குறையிரப்ப  , இறைவன்  அஞ்சற்கவெனக்  கூறித் தன் திருக்கைகளாற் பற்றித்  தலையிற்  சூடினானாக  , அச்சாபம்  ஆங்கு  அணுகாமையோடு  மேலும்  நாடோறும்  ஒவ்வொன்றாகக்  கலைகள் வளர்தலும்  பின்  தேய்தலுமாக  நிகழப்பெற் றான் என்ப . இவ்வரலாற்றிடையே , பதினைந்து கலைகளொழிய  எஞ்சிய  ஒரு கலையோடு   மதி இறைவனை யணூகிய  பொழுது ஒளியிழந்து  “மங்குலினிறங்கொடு வடிவம்  வேறதாம் , திங்கணின் றெம்பிராற் கினைய செப்புவான் “ என்றபடி  கரிய  மதியாயினனெனவும்  ,அந் நிலையில்  இறை யருட்கு   இடனாகிக்  கலைகள் வளரப்பெற்றுப் பழைய  வெண்மை நிறத்தை  யடைந்தானெனவும்  கூறுபவாகலின், அக்குறிப்புத் தோன்ற , “வெண்மதி “ என்றார்  என ஈண்டைக்கியைபுடைமை நோக்கிக்  கோடலுமாம் .

              கந்தபுராணத்துக் கூறியபடி  இறைவன்  தலையிற்  சூடிய  கலை யொன்றென ஈண்டுங் கூறப்பட்டது . சிலப்பதிகார  வுரையாசிரியராகிய  அடியார்க்கு நல்லார் இரண்டு கலையென்பார் ,”சூடினபிறை  இரண்டு  கலையாதலின் “ என்பது அவ்வுரைப்பகுதி . காண்பார்  கட்புலனுக்குஇரண்டு  கலைகளே  புலனாமென்பது  கருதி அவ்வாறு  கூறினார்  போலும் . திங்கட் கலையைப்  பாதுகாத்தற்குத்  தலையை  இடனாக்கியது , புகலடைந்தாரைப்  புரத்திலுள்ள  பேரருட்  குணத்தைப் புலப்படுத்துமென்க . இஃது  ஆதாரக்காப்பாகும் .

               இச்செயல்  நிகழ்ச்சிக்கு ஏதுக்  கூறுவாராய்  அடுத்துக் “கருணாகரனே” என்றனர் . அருட்கிடனானவனே  என்னும்  இதனால் இறைவன்  குணமும்  , ஒற்றைக் கலையைத்  தலைக்கணுடையாய்  என்றதனால் அக்குணத்தின் பயனாகிய  செயலும்   கூறப்பட்டபடியாம் . பயனாகிய  செயலை   முன்னரும்  அதற்கு  ஏதுவாகிய  குணத்தைப்  பின்னரும்  கூறியது  , செயலைக் கொண்டு குணவுண்மை தெளியச்செய்யும் இறைவனது அளப்பரும்  பெருமை   புலப்படற்கென்பது .

                கைலாயமென்பது  அம்மையப்பரின்  திருவிளையாடற்குரிய  பேரின்ப  நிலையம்  என்னும்  பொருளுடையதாகும் .அவ்வாறு  கூறுவன  மறையாகமங்களென்பதும் , பிறர் அதனை ஒரு மலையெனக்  கருதுவர்  என்பதும் , அப்பேரின்ப  நிலையமாகிய  சிவராசதானிக்குப்  பேரரசாக விளங்குவோன்  சிவபெருமானே  யென்பதும்  தோன்றக்  “கைலாயமென்னும்  மலைத்தலைவா “ என்றனர் . “என்னும்”  என்னும் சொல்லாற்றல்  ஈண்டு  கருதத்தக்கது . . “ அண்ணல் வீற்றிருக்கப்  பெற்றதாகலின்  ……..  புண்ணியந் திரண்டுள்ளது  போல்வது “  என்பர்  சேக்கிழார்  . மலயரசாகவுள்ள  இறைவன்  பிறிதொரு  மலையரசன் மகளையே  மணந்து போக மூர்த்தியாகவும்   விளங்குகின்றான் என்பது  புலப்பட , “மலையாண்  மணவாள “ என்றனர்  .பின்னர்  “என் வாழ் முதலே” என்று  அடிகள் கூறினாராயினும் , எல்லா வுயிர்த்  தொகுதிகளுக்கும்   வாழ்வின்  மூலகாரணமாக  விளங்குவோன்  இறைவனேயாவான்  என்பது தெளிவு . அது கைவரப் பெறாதார் இருக்கத்  தம் தெளிவு  ஈதெனக்  கூறியபடியாம் .

                    இங்ஙனங் கூறிய  விளிச்சொற்களாற் பெறப்படுவன ;- முறையே  அடைக்கலம்  புகுந்தாரை  யாதரித்துக்  காக்குஞ் செயலுடைமையும் , அச்செயற்கு  ஏதுவாகிய  அருட்குணமுடைமையும் , அக்குணஞ் செயல்களுக் கேற்ற   தலைமைத்தன்மையுடைமையும் , அத்தன்மைக்குரிய  சத்தியுடை மையும் , உயிர்ப்பன்மைகளின் வாழ்க்கைக்கு   மூலகாரணமாத  லுடைமை யுமாம் . அடிகள் என் வாழ் முதலே  யெனச்  சிறப்பு  முறையில்  விளித்துத்  தம் குறையை  யெடுத்துக் கூறிப்  பாதுகாப்பு  வேண்டுகின்றார் .

                      மகளிர்  கண்களுக்கு  மருட்சியுடைமை பற்றி   மான் விழிகளை  உவமை  கூறுப  . மான்  அன்ன  என்புழி  மான் ஆகுபெயராய்  விழியை  யுணர்த்தும் . அமைதியான நிலையிலே   மான் விழி  மருட்சியுடைய தாகும் .  அம்மான்  வேடரிட்ட  வலையிலகப்பட்ட  பொழுது விழி  அச்சத்தால் மிகவும்  மருண்டதாகுமாதலின்  , “வலைத்தலை  மானன்ன நோக்கியார் “ என்றார் . இவ்விழி  மருட்சி  பிறிதொரு    பொருள் கண்டு  கலங்கிய  நிலையிலும்   , பிறிதொரு  பொருளைக்  கலக்க முறுத்தும்  நிலையிலும் உண்டாவதாகும் .இங்கே  மகளிர் கண்கள் , ஆடவராகிய  பிறரைத்  தம் வயப்படுத்துக்  கலக்க முறுத்தற்கு   மேற்கொண்டனவென்க. . நோக்கு  –  பார்வை . நோக்கின் வலை யென்புழி  இன்  அல்வழிச்  சாரியை  .  மகளிர்  கண்களின்   நோக்கை  நோய்  செய்யும்  நோக்கெனவும் , அதற்கு  மருந்தாய நோக்கெனவும்   இருதிறப்படுத் துக்  கூறுப . “இருநோக்கிவளுண்க ணுள்ள   தொரு நோக்கு, நோய் நோக்கு மகளிர்  மனத்தினாய  காமக்  குறிப்பினை   வெளிப்படுப்பதாகும் . மருந்தாய  நோக்கு   அந்  நோய்  தீர்தற்கு  வாயிலாகிய  காதற்குறிப்பைப்  புலப்படுப்ப தாகும் .  

               இவ்விருதிறமும் ஆடவரை வயப்படுத்தும் இயல்பு  கருதி “நோக்குவலை” என்னப்பட்டது . அவ்வலையிற் சிக்குண்டு   கடக்க வியலாமையால்  மயங்கி அப்பிணிப்போடு  அங்கு மிங்கும்  அலையலா னேன்  என்பார் , “ மிலைத்தலைந்தேனை “ யென்றார். ஒரு தீய செயலைச்  செய்தவன் அதனை நினைந்து இரங்குதல் , பின் அச்செயலில் தலைப்படா மைக்கு  ஏதுவாகும் .  ஆதலின் , அம்முறையில்  கழிந்ததற்கு இரங்கலாக  “மிலைத்தலைந்தேன்” என இறந்த காலத்தாற்  கூறினர். அங்ஙனம் கழிந்ததற்கு  இரங்கினாராயினும் ,அத்தீவினைப்பயன்  காரணமாக  இறை யருட்கிடனாகாமல் , அப்பெருமானாற்  கைவிடப்படுவேன்  கொல் என அஞ்சி  “ விடுதி கண்டா” யென்றார் . இறைவ, சிறியேன் செய்த பிழையை யறிந்து நின்னைப்  புகலடைந்தேன் ; இந் நிலையில் நின் பேரருள் காரணமாக  என்னைக்  கைவிடாமற்  காத்தருள வேண்டுமென்று  அடிகள்விண்ணப்பித்துக் கொண்டவாறாம் .

              இதன்கண்,  “வலைத்தலை மானன்ன  நோக்கியார்  நோக்கின்  வலையிற்பட்டு  மிலைத்தலைந்தேன் “  என்றதனால்  உலக  வாழ்க்கை துன்புறுதற்கு  ஏதுவாமென்பது  பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                                          **************************************

பாடல்:41 .

முதலைச்செவ்  வாய்ச்சியர்  வேட்கைவெந்  நீரிற்  கடிப்பமூழ்கி

விதலைச்செவ்  வேனை  விடுதிகண்  டாய்விடக்  கூன்மிடைந்த

சிதலைச்செய்  காயம்  பொறேன்சிவ  னேமுறை யோமுறையோ 

திதலைச்செய்  பூண்  முலை  மங்கைபங்  காவென்  சிவகதியே

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில் மகளிர்  சார்பில்  தம்மைப்படுத்த கருவியின் வலிமை  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  , அக்கருவியால் பற்றப்பட்டுத்  தாம் எய்திய வீழ்ச்சி  நிலையையும் , அதனால்  நோய்த் தொடர்புடைய ஊனுடலைப்  பொறாமையையும்  புலப்படுத்து இரங்குகின் றார் . 

பதவுரை :-  திதலை  செய்  பூண் முலை  மங்கை பங்கா  =   தேமல் படர்ந்த அணிகளன் விளங்கும்  நிகில்களையுடைய  உமையம்மையை  யொரு  கூற்றிலுடையவனே  ,

என் சிவகதியே  =  எனக்கு  வீடு பேறாக வுள்ளவனே

வேட்கை  வெந்நீரில்  மூழ்கி  =  காமமாகிய  வெந்நீரில்  முழுகி ,

செவ்வாய்ச்சியர்  முதலை கடிப்ப  =   சிவந்த வாயினையுடைய  மகளிராகிய  முதலை  கடிப்ப ,

விதலை  செய்வேனை  விடுதி  =  அதனால்  நடுக்கம்  எய்துகின்ற  சிறியேனைக்  கைவிட்டுவிடுவாயோ? (விடலாகாது) ,

விடக்கு  ஊன்மிடைந்த   =  புலால்  நாற்றமிக்க  இறைச்சி  செறிந்த  ,

சிதலை  செய்  காயம்  பொறேன்  =  நோய்  விளைக்கும்  உடலைத்  தாங்கலாற்றேன் ,

சிவனே  முறையோ  முறையோ  =  சிவபெருமானே  (இவ்வுடல்  வாழ்க்கையில் என்னையிருத்தல்)  முறையாகுமா?  முறையாகுமா?  என்பது . 

விளக்கவுரை :- உமையம்மையார்க்குக்  கூறிய  அடைமொழி  உலகெலா மீண்றுங்  கன்னியாயிருக்கும்  இயல்பையும்  , அணிகலன்  என்றும்  அழியாத மங்கலத் தன்மையுடைமையையும் குறிப்பனவாம் . “மங்கை பங்கா”  வென்பதனையடுத்து  “என் சிவகதியே “ என்றனர் ; போகியாயிருந்துயுர்க்குப்   போகத்தைப்  புரிந்து , யோகியாய்  யோகமூர்த்தியுதவும் இறையியல்பு, புலப்படற் கென்பது  .  மேலும் அருளுருவினளாகிய அம்மையை வழிபட்டு அவள் மூலம்  அப்பனையடைதல் வேண்டுமென்னும் உண்மையும்  பெறப்படவைத்தவாறாம் . “அவனருளாலே  யவன்றாள்  வணங்கி” என்பதும் அது .  சிவகதி  –  வீடுபேறு . இச்சொல்லை  இப்பொருளில்  பிற சமயத்தாரும்  எடுத்தாளுவர் . “சினவரன் றேவன் சிவகதி நாயகன் “  என்பது  சிலப்பதிகாரம் . இது  பொதுவாகப்  பிற சமயத்து வீட்டு  நெறியையுங்  குறிக்குமாயினும்  , சிறப்பாகச்  சிவநெறி யின்பத்தையே  புலப்படுத்து மென்பது சொல்லாற்றலாற் கண்ட  தெளிவாகும் . இவ்வுண்மை குறிக் கொண்டே  பொது நீக்கிச்  சிவபெருமானைப்  பற்றிய  அடிகள் , “என் சிவகதியே” எனத் தம் உரிமை   தோன்றக் கூறினர் .

                      வேட்கை  மகளிரைப்பற்றியதாகலின் காமத்தைக்குறிக்கும் . விரும்பிச்சார்ந்தாரை  நோய்  முதலியவற்றால்  துன்புறுத்துச் சுடுதலாற்  காமத்தை வெந்நீரென்றார் . உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற் , கொள்ளினுஞ் சுட்டிடும்  “  என்பர்  கச்சியப்ப சிவாசாரியர் . மூழ்குதல் – அமிழ்தல் .  மூழ்குதற்குப்  பெருக்கமாகிய  நீர் நிலையிலுள்ள  தண்ணீரே  ஏற்றதென்பது , உலகியலிற்  கண்டது .  அதற்கு  மாறாக  ஈண்டு  அடிகள் தாம் மூழ்குதற்குரியது  காமப் பெருக்கமாகிய  வெந்நீராயிற்றென்றார்.  மூழ்குதலால்  உண்டாம்  துன்பத்தோடு  சுடுதற்  றுன்பமுஞ் செய்தல் பற்றி . இங்ஙனம்  மூழ்குதலானும்  வெப்பத்தானும்  துன்புறும்  நிலையில் முதலையாற்  கடிக்கப்படுதலும்  நேருமாயின்  , அப்பொழுதுண்டாம்  ஏதத்திற்கு   அளவின்றென்பது கருத்து .  செவ்வாய்ச்சியர்  என்றது .  

                 இனிய  பேச்சினாலும்  சுவையினாலும்  ஆடவர்  செவிக்கும்  நாவிற்கும்  இன்பஞ் செய்து  தம்  வயப்படுத்தும் மகளிர்  கருவிச்  சிறப்புத்  தோன்றற்கு   என்க . “நெடும்  புனலுள் வெல்லு  முதலை” என்றபடி  நீர்ப் பெருக்கில்  எல்லாப்  பிராணிகளையும்  வெல்லும்  ஆற்றல்  முதலைக்கு  உளதாதல்  போலக்  காமவயப்பட்டார் யாவராயினும்  அவரைத்  துன்புறுத் தும்  இயல்பு  மகளிர்க்கு  உளதாம்  என்பது  தோன்ற  , அவர்  முதலையாக  உருவகஞ் செய்யப்பட்டனர்   மூழ்கிய  நீர்   வெந்நீராதலானும்  ,ஆங்கு   முதலையாற்  கடிக்கப்  பட்டமையானும்   நடுக்கம்  பெரிதாயிற்றென்பார் , “விதலைச் செய்வேனை”  என்றார் .  இத் திருப்பாட்டின்  முதலடிக்குச்  செங்கிடை  போன்ற  சிவந்த வாயினையுடைய  மகளிரைப்பற்றிய   காமமாகிய  விரும்பத்தக்க  நீரில்  மூழ்கி  எனப்  பதப்பொருள்  கோடலுமாம் .  இங்ஙனம்  கொள்ளுங்கால் , முதலை  யென்னும்  சொற்குச்  செந்நெட்டி யெனவும் , கடிப்ப  என்பதற்குக்   கடியென்னும்  உரிச்சொல்லடியாகப்  பிறந்த வினைச் சொல்லாகக்  கொண்டு  அச்சந் தோன்ற   எனவும்  பொருள் கொள்ளல்  வேண்டும் .

               இறைவ!  காமக்கடலுள்  மூழ்கிக்  கடுந்துயரெய்தும்  இந்நிலையிற்  சிறியேனைக்  கைவிடலாகாதென்பார் , “ “விடுதி கண்டாய்”  என்றார் . இவ்வாறு  விண்ணப்பஞ் செய்து கொண்டு தம் ஆற்றாமையை  இறைவன் பாற்  கூறி  முறையிடுதல் பின்வருவது . முடையார்  புழுக்கூடு  , ஊனார்  புழுக்கூடு   என்று  உடலை  முன்னர்க்  கூறினர் .  ஈண்டு  இவ்வுடல்  முடை நாற்றமுள்ள   இறைச்சிச்  செறிவளவில்  இருப்பின்  அருவருக்கத்தக்க  நிலையிலாவது  இருந்தொழியும் . அங்ஙனமுமின்றி  நோய்க்கு  இடனாகவும்   அமைந்திருத்தலால்  , அருவருப்போடு   துன்பமும்  விளைத்துப்  பொறுக்கலாகா  நிலையிலிருக்கின்றதே ! என் செய்வல்  என்பார் .,  “விடக்கூன்  மிடைந்த  சிதலைச்  செய்காயம்  பொறேன் “ என்றார் .  காயத்திற்குள்ள அடைமொழிகள் அதனைப்  பொறுக்க   இயலாமைக்கு  ஏதுக்களாம் . அவ்வேதுக்களுள் ஒன்றாகிய  நோய்த்தொடர்பிற்கு  , முதலடியிற்  கூறிய   காம  வீழ்ச்சி  காரணமென்பதுங் கருதத்தக்கது . நோய்க்கு  நிலைக்களனாய்  அருவருப்பு  விளைக்கும்   உடற்பொறையைத்  தாங்கலாற்றாமையான்  உண்டாய  அவலத்தான்  இறைவனைக்  கூவிய ழைத்து  முறையிடுவாராய்ச்  , “சிவனே  முறையோ  முறையோ  “ என்றனர் .

              சிவம்  என்னுஞ் சொல்  தூய  பேரின்பத்தைக்  குறிக்குமாதலின் , தமக்கு  ஏற்பட்ட துன்ப நீக்கத்தோடு இன்பப் பேறும்  வேண்டி அப்பெயரால்  கூவி   முறையிடுவாராயினர்  .  உலகியலில்  முறையீடாவது  , ஒருவன்  தனக்குப்  பகை  முதலியவற்றால்  கடக்க  முடியாத  நலிவு  நேர்ந்தவிடத்து , அரசனை யடுத்து  நீதி  வழங்க  வேண்டுதலாகும் .  அங்ஙனமே  அழியும்  இயல்பினதாகிய  உடலோடு  கூடி  வாழ்தலில்  நோய்  முதலிய  வற்றால் நேரும்  துன்பத்தை யாற்றாமல்  , அதனொழிவோடு  அழிவிலின்பப்  பேறும்   வேண்டிக்  கடவுட்  பேரரசாகிய  இறைவனிடத்து  அருணீதி குறித்துச்  செய்த  முறையீடாகுமென்பது .

          இத்திருப்பாட்டின்  முதலடியிற்  கூறியபடி  செய்த  காம  வீழ்ச்சியாகிய  தவறு  உணரப்பட்டதென்பதும் , அவ்வுணச்சியின்  பயனாக  இரண்டு  மூன்றாம்  அடிகளிற்  கூறப்பட்டபடி  காயம்  பொறாமையாகிய  முறையீடு  செய்யப்பட்ட தென்பதும்  அடிகள் கருத்தென  உய்த்துணரத்தக்கன .

         இதன்கண், “விடக்கூன்  மிடைய்ந்த  சிதலைச்  செய்  காயம்  பொறேன் “  என்றதனால் , உலக  வாழ்க்கை வெறுக்கத்தக்கதென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                              **************************************

பாடல் : 42 .

கதியடி  யேற்குன்  கழல்தந்  தருளவும்  ஊன்கழியா

விதியடி  யேனை  விடுதிகண்  டாய்வெண்  டலைமுழையிற் 

பதியுடை  வாளரப்  பார்த்திறை   பைத்துச்  சுருங்கவஞ்சி 

மதிநெடு  நீரிற்  குளித்தொளிக்  குஞ்சடை  மன்னவனே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  காம  வீழ்ச்சியால்   நோய்த் தொடர்புடைய  ஊனுடல்  பொறாமையை  நினைந்து  இரங்கிக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  இவ்வூனுடல்  கழிதற்கு  ஏதுவாக  நின் திருவடிச்சார்பை  வழங்கியும்  , என்  வல்வினைப் பயனாகிய  ஊழ்  தடைப்படுத்து கின்றதே  யென  இரங்குகின்றார் .

பதவுரை :- வெண் தலை முழயில்  பதியுடை வாள் அர  =  வெண்மை நிறத்தாகிய   தலையின்  துளையில்  தங்குதலையுடைய  ஒளி பொருந்திய  பாம்பு ,

பார்த்து இறை பைத்து அஞ்சிச்  சுருங்க  =   அருகிலுள்ள  திங்களைப் பார்த்துச்  சிறிது படம்  விரித்துப் பின் அஞ்சிச் சுருக்கிக்கொள்ள ,

மதி பார்த்து அஞ்சி நெடுநீரில்  குளித்து  ஒளிக்கு சடை  =  அதனைத்  திங்கள் கண்டு  அஞ்சிக் கங்கை  நீரில்  முழுகி மறையும்  சடையினையுடைய  ,

மன்னவனே  =  மன்னவனே

அடியேற்கு  உன் கழல் கதி தந்தருளவும்   =    அடியேனாகிய   எனக்கு  நின் திருவடி  புகலிடம்  வழங்கியருளவும்  ,

ஊன்  கழியா =  இவ்வூனுடலைப்  போக்காமைக்கு  ஏதுவாகிய ,

விதி அடியேனை விடுதி  =  ஊழ் வலியினை  யுடைய  அடியேனை  விட்டு  விடுவாயோ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  வெண்டலையின்   வரலாற்றை  இப்பதிகத்து  முப்பதாம்  திருப்பாட்டிற்  காண்க .  முழை  – குகை  ; வெண்டலை யிலுள்ள குகை  போன்ற  சிறிய  துளையிடத்தைக்  குறிக்கும்  . பதிதல்  –  தங்குதல் . அர – அரா; பாம்பு  .  “குறியதனிறுதிச்   சினைகெடவுகரம், அறிய  வருதல் செய்யுளுளுரித்தே  “  என்பது விதி . கலுழனுக்கு  அஞ்சித்  தன்பால்  அடைக்கலம்  புக்கதும், தாருகா வனத்து முனிவர்   வேள்வியிற்றோன்றித்  தனக்குத்  தீங்கிழைக்க  வந்ததும் என இருதிறத்துப்  பாம்புகளையும்  இறைவன்  அணிந்தனன்  என்பர் பெளராணிகர் .  தன்னையடைக்கலம்  புக்கார்  கொடுஞ்செயலுடையராயினும்  அவரையும்  , தனக்குத்  தீங்கி ழைக்க  ஏவப்பட்டு  வந்த கொடியவரையும்  பாதுகாக்கும்  அருட்குணமுடைய வன் இறைவன்  என்பதை  இந் நிகழ்ச்சி   புலப்படுத்துமென்பது .

               பாம்புக்குத்  தலை முழையும்  திங்கட்கு  நீர் நிலையும் தங்குதற்கு இடனாக்கியது , காப்பு  முறையின்  சிறப்பைக்  குறிப்பதாகும்  . தக்க  இடத்தைச்  சார்ந்து கவலையற்றிருந்ததென்பார், “வாளர”  வென்றார். ஒளியுடைமை  உடல்  நலத்தைப்  புலப்படுப்பதாகும் . திங்கட்  பிறையும்  பாம்பும்  அணிமையில்  ஒன்றற்கொன்று  எதிராக  இருக்குப்படி  வைத்து , இறைவன்  சடைக்கண்  அணிந்தனன்  என்பதை  “மென்முயற்  கறையின்,  அரும்பர நேர்வைத்  தணிந்தாய்  “  என்னுந்  திருப்பாட்டில்  அடிகள் கூறி யிருத்தலான் அறிக .  அங்ஙனம்  அணிமையிலுள்ள  நிலையில்  பாம்பு  தலை முழையினின்றும்  வெளிப்பட்டுத்  திங்களைப்பார்த்து  இயல்பாகவுள்ள  பகைக் குணத்தால் சிறிது படம்  விரித்ததென்பதும் , பின்னர்  சார்பு  நிலை  நோக்கித்  தலைவற்கு  அஞ்சிச்  சுருக்கிக்கொண்ட தென்பதும் போதர , “வெண்டலை  முழையிற்  பதியுடை  வாளரப்  பார்த்திறை  பைத்துச்  சுருங்க”  என்றார் . பார்த்தற்குச்  செயப்படுபொருளாக   மதி கொள்ளப்பட்டது .

                அரவின்  செயலாகிய  பார்த்தலை மதிக்கும்  , அஞ்சி  யென்பதைச்  சுருங்கற்கும்  ஒளித்தற்கும்  ஏதுவாக  ஈரிடத்தும்   இயைத்துக் கொள்ளல் வேண்டும்  . இங்ஙனம்  அரவு  படம்  விரித்தலைக்கண்டு  , நேரிலுள்ள மதிப்பிறை   அது தன்னை விழுங்கி விடுமோவென  அஞ்சித்  தனக்கு  ஆதரவாக  அருகிலுள்ள  கங்கைப்பெருக்கில்  முழுகி மறையும் என்பார் , “அஞ்சி மதி நெடு நீரிற்  குளித்தொளிக்கும்  “  என்றார் . மெலியவன்  தன்னின்  வலிய  பகைக்கு  அஞ்சுவன்  என்பதும்  , வலியவன்  மெலியவனை  நலிய  முற்படுங்கால்  அரசியர்க்கு  அஞ்சுவனென்பதும் உலகியலிற்  காணப்படு வன . அம்முறையில்  மதி அரவிற்கு  அஞ்சிற்றென்பதும் , அரவு  இறைவர்க்கு  அஞ்சியது என்பதும் பொருத்தமே  . அரவு  தங்குதற்குரிய  வெண்டலைக்கும்  , மதி குளித் தொளித்தற்குரிய  நெடு நீர்க்கும் சடையை  யிடனாக வுதவிப்  பகைப்பொருள்கள்  தம்மிற்  பகைமை யொழித்து வாழும்  வண்ணம்  அருளாட்சி  புரியும்  கடவுட் பேரரசாவான் இறைவனே  என்பார், “ சடை மன்னவனே” என்றார் . சடை மன்னனென்றது , முடிமன்னரின்மிக்க சிறப்புத் தோன்ற  நின்றது . சிறந்த செங்கோலாட்சியிற்  பசுவும்  புலியும்   ஒரு  துறையில்  நீருண்ணும்  என்னும்  உலகியற்  செய்தியும் ஈண்டு  நினைக்கத் தக்கது .”பாம்பு  மதியும் பகை தீர்த்துடன்  கொளீஇ, நீங்கல்  கொடானே  நெடுந்தகையானே “ என்பர்  திருமூலர் .  

             இனி,  பாம்பு  மாயையையும்  , மதி யமிர்தத்தையும் குறிக்குமென்பது நுண்பொருளாகும்  .இதனால்  இறைவன்  உயிர்களுக்கு  மாயையினின்று   உடல் கரணம்  இடம்  நுகர்வென்னும்  இவற்றைக்  கொடுத்துப்  பாச நீக்கஞ் செய்து , தூய்மைப்படுத்து முடிவில்  அமிர்தமயமான அழிவிலின்பத்தில் தலைப்படுத்துவன்  என்னும்  குறிப்புப்  புலனாமென்பது . இறைவனையும் மயங்காதோவெனின், மயங்காதென்ப . இதனை “விரவுமாயை  யெம்மிடை மை  யாற்றாயினும்  விடந்தான் , அரவை யென் செயும் – குரவமாலையாயெ மக்கது  கொடாதுகாண் மயக்கம்” என்று உமையம்மைக்கு  இறைவன்  அருளிச்செய்த ஞானோபதேசத்தானும்  அறியலாம் . கதி – புகலிடம் ; வீடு . அதனைத் தருதற்கு  வினை முதலாக  இறைவன்   திருவடி  குறிப்பிடப்பட்டது ; அது ஞானமயமாதலின் ,” ஞானத்தால் வீடென்றே  நான்  மறைகள்  புராணம்  நல்லவாகமஞ் சொல்லவல்லவாம்”   என்பது சிவஞானசித்தி .  

              இனி, தருதற்கு வினை முதலாக  இறைவனைக்  கொண்டு, கதியாக உன் கழல் தந்தருளவும் எனக் கோடலும்  ஒன்று . “ திருவடியே  செல் கதியது செப்பிற், றிருவடி யேதஞ்ச முட்டெளிவார்க்கே” என்னும்  திருமந்திரத்தில் இரண்டற்கும்  வேற்றுமை யின்மை  கூறியிருத்தலினென்பது , கதி தந்தருளிய  திருவடிக்குத்  தொண்டு பூண்டொழுகுதலின், அடியேன்  என்று  தம்மைக் கூறிக்கொண்டது  ஈண்டு  இயைபுடைத் தென்க. . கதி ஈண்டுச் சீவன்  முத்தி நிலையைக்  குறிக்குமாதலின்  , அவ்வுயரிய நிலையை  இறைவன்  திருவடி  தமக்கு  எளிதாக  அளித்திருப்பவும்  , அந் நிலையினின்றும் மறிவறியாச்  செல்வம்  பெற்று  இன்புற வேண்டியதே கடமையாக , அதனை  விட்டு  அப் பேற்றிற்குத் தடையாகவுள்ள  இவ்வூனார் புழுக்கூட்டை  விடாமல்  தாங்கி யிருக்கும்  விதியுடையனாயினேனேயென்றிரங்குவார், “கதியடியேற்குன்  கழறத்  தருளவு  மீங்கழியா  விதியடியேன்”  என்றார் .

               ஊன் கழியா  விதி   –  உடலைக்  கழியாமைக்கு  ஏதுவாகிய  வூழ் . இஃது  “இங்குளி வாங்குங் கலம் போல ஞானியன்  , முன் செய்வினை மாயை  மூண்டிடினும்  “ என்னும்  ஞானப்  பனுவலின்படி   மெலிதாக  வந்து தாக்கும்  பிராரத்த வினை வாசனையா மென்பது . ஊன்  கழியா விதியுடையேனாகிய   இந் நிலையிலும்  நின் அடியனாவேனென்பதை  மறந்திலேன்  என்பார் , விதியுடையே   னென்னாது  “விதியடியே” னென்றார் . இது   தம்மைக்  கைவிடாமற் காத்தற்குரிய  ஏது குறிப்பிற்  புலப்படுத்தவாறாம் . விதியைக்  கடக்கும்  ஆற்றலில்லேனாகிய  யான்  ஊனுடலைக்  கைவிட்டிலேனாயினும் விதித் தொடர்பு  சிறிதுமில்லாத   பேரருளாளனாகிய  நீ யென்னைக்  கைவிடலாகாதென்பார் , “விடுதி கண்டாய்” என்றார் .  

                இதன்கண், “ஊன் கழியா  விதியடியேன்”  என்றதனால்   உடலோடு  கூடிய  உலக  வாழ்க்கை  நற்கதிக்குத்  தடையாமென்பது  பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                                   *****************************************

பாடல் : 43 . 

மன்னவ  னேயொன்று  மாறறி  யாச்சிறி  யேன்மகிழ்ச்சி

மின்னவ  னேவிட்  டிடுதிகண்  டாய்மிக்க  வேதமெய்ந் நூல்

சொன்னவ  னேசொற்  கழிந்தவ  னேகழி  யாத்தொழும்பர்

முன்னவ  னேபின்னு  மானவ  னேயிம்  முழுதையுமே .

கருத்துரை :-   முன்னைத் திருப்பாட்டில்  இறைவ , நின் திருவடிச் சார்பு  பெற்றும்  ஊழ் வலியால்  இவ்வூனுடலைக்  கழிக்க இயலாதவனாயினேன்  என்று  இரங்கிக்  கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  நின்னோடு  கலக்கும் நெறியறிந்தன்றோ  இவ்வுடலைக் கழித்தல் வேண்டும் . அந்நெறியையே அறியாத சிறியவனாகவுள்ளேனே ! என் செய்வல் ! என்று  வருந்துகின்றார் .

பதவுரை :-  மிக்க வேதம்  மெய்ந்நூல்  சொன்னவனே  =  சொற்பொருண்மிக்க   மறைகளையும்   மெய்மையான  சிவாகமங்களையும் சொல்லி  யருளியவனே  ,

சொல்  கழிந்தவனே  =  சொற்களுக்கு  எட்டாமல்  அப்பாற்பட்டவனே  ,

கழியாத்தொழும்பர்  முன்னவனே   =  என்றும்  நீங்காத  தொண்டினையுடைய  மெய்யன்பர்க்கு  முன்  நிற்பவனே  ,

பின்னும்  இம் முழுதும் ஆனவனே   =  அவர்க்கு  ஆதரவாகப்  பின்னிற்பவனும்  இவ்வெல்லாமும்  ஆனவனே ,

மன்னவனே  =  நிலை பேறுடையவனே  ,

ஒன்றும்  ஆறு  அறியாச் சிறியேன்  =  நின்னோடு  கலக்கும்  நெறியறியாத  சிறியவனாகிய  எனக்கு ,

மகிழ்ச்சி மின்னவனே  =  ஆனந்த விளக்கமாகத்  திகழ்பவனே  ,

விட்டிடுதி  =  கைவிட்டுவிடுவாயோ (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :- சிவநெறிக்கு  மறை  பொதுநூலும் , சிவாகமம்  சிறப்பு  நூலும்  ஆகும் . “ வேதமோடாகமம்  மெய்யாம்  இறைவனூல் , ஓதும் பொதுவுஞ்  சிறப்புமென் றுன்னுக “  என்பது  திருமந்திரம்  . வேதத்துள் உபசாரமாக  இந்திரன்  முதலிய  தேவர்களுக்கும்  தலைமை  கூறப்படும்  . சிவாகமங்க ளுள்  பரமபதியாகிய  சிவபிரான்  ஒருவனுக்கே  தலைமை  கூறப்படும்  .  வேதம் பல தேவர்களையும்   தலைவரெனக்  கூறிச்  சேறலின்  , பொருட்டெளிவு  துணிவார்க்குக்  கலக்கஞ் செய்யும்  இயல்பினதாய்ச்  சொற்பொருட்  பெருக்க  முடையதாகும்  . சிவாகமம்  மெய்ப்பொருள் விளக்கித்  தெளிவிப் பதில்  சிறந்து விளங்குவதாகும் . இக்குறிப்புத்  தோன்றவே  , “மிக்க வேதம்” எனவும்  ,” மெய்ந்நூல்” எனவும்  முறையே  கூறப்பட்டன .

          சனகர்  முதலிய  முனிவர்கள்  பல  ஆண்டுகளாக  வேதத்தைப்  பயின்றும்  , மெய்யுணர்வு  கைவரப் பெறாமையால் , இறைவனை  யணுகிக்  குறையிரப்ப  , இறைவன்  சிவாகமங்களை  அவர்க்கு   உபதேசித்து மெய்ப்பொருளுண்மை  தெளிவித்தனன்  என்று  கந்தபுராணங்கூறும் . இவ்வுண்மையை “பொருட் பெருங் கடலாம்   வேதம்  புடைதொறு மலையப்ப விந்நாள் “ , எனவும்  “முந்துறை  சனகனாதி  முனிவரர் தொழுது  கேட்ப  , அந்தமி  லாகமத்தின்னரும்பத மூன்றுங்கூறப்  , புந்திய  தொடுங்கு ஞானபோதகம் “ எனவும்  போந்த செய்யுட்  பகுதிகளால்  அறிக .  இங்ஙனம் பொதுவுஞ்  சிறப்புமாகிய   மறையாகமங்களை  அருளிச்செய்தவன்  சிவபிரானே  என்பவாதலின், “மிக்க  வேத மெய்ந்நூல்  சொன்னவனே”  என்றார் .

          சொல்  என்பது நூல்  அளவையைக்  குறிக்கும்  . நூல்களின்  வாயிலாக  இறைவனியல்பை  ஓராற்றான்  அறியலாமேயன்றி  ,ஒன்றியுணர்தலாகிய  அநுபவம்  எய்தலரிதென்ப . “நூலுணர்வுணரா  நுண்ணியோன் “ என  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறியிருத்தலும்  அறிக . இனி , வாக்கு  மனம்  இரண்டனை யும்  முறையே  பாச ஞானம்  பசு ஞானமென்று  சிவஞான  போதங்   கூறுமாத லின் , பாச ஞான பசு ஞானங்கட்கு  எட்டாதவன்  என்பதும்  பெறப்பட்ட வா றாம் .  “ஊனக்  கண்பாசம்  உணராப்பதியே” என்னும்  சூத்திரப் பகுதியானும்   “அவன்  வாக்கு  மானதீத  கோசரமாய்  நிற்றலாம் “ என்னும்  அதன்  உரைப் பகுதியானும்  உணர்க . “ வாக்கு  நாதமுடிவான  பாசஞானமும்  , மனம் பசு ஞான முமாம் “ என்பர்  சிவஞான  முனிவர் . “மாற்ற   மனங்கழிய   நின்ற  மறையோனே”  என்னும்  அடிகள் திருவாக்கும்  இவ்வுண்மையைப் புலப்ப டுத்தும் .மறையாகமங்களை  யருளிய  இறைவன்  திறாவுள்ளம், மக்கள்  அவற்றை  யோதியுணர்ந்து அநுபவ  முறையில்  ஒழுகி  நலனடைய  வேண்டு மென்பதே  யாதலின்  , அநுபவத்தில் தலைப்படாமல்  ஓதிய  அளவில்  நின்று விடுவாராயின்  , இறையருட்கு  அணுக்கராதல்  அரிதென்பது தோன்ற  “சொன்னவனே   சொற்கழிந்தவனே” யென்றார் .  கழியாமையைத்  தொழுப்பிற்  கேற்றுக  என்றும்  இடையறாத  சிவத்தொண்டென்பது . “ஈறலாவொன்று பல, வாறே தொழும்பாகுமங்கு “  என்பதனாலும்  , “சேதனப்  பிரபஞ்சம்  வீடுபேற்றின்  கண்ணும்  பலவாற்றானும்  பரம்பொருளுக்கு   அடிமையாமென்க .”  என்னும்  அதனுரையானும்  உயிர்க்கு  கட்டு வீடு  என்னும்  எக்காலத்தும்  தொழும்பு  நீங்காமையுணர்க .  

            மெய்யன்பர்  கடமை  இறைபணி  செய்தலும்  , இறையருட்  கடமை  அவரைப்  பாதுகாத்து இன்புறுத்தலுமாமென்ப  . “என் கடன் பணி செய்து கிடப்பதே “ தன் கடன்  அடியேனையுந்  தாங்குதல் “ என்பது தமிழ் மறை  . இவ்வுண்மை  தோன்றவே  , “கழியாத் தொழும்பர் “  என  மெய்யன்பரையும்  அவரைப் பாதுகாக்கும்  அருட்கடமை  யுண்மை  குறித்து அவர்க்கு  முன்னும்  பின்னும்  ஆனவனே  யென இறைவனையும்  குறிப்பிடுவாராயினர் .  செந் நெறிச்  செலவுடைய  மெய்யன்பர்க்குச்  சரியை முதலிய  நெறிகள்  சோபான முறையாக  அமந்தன வென்று  சிவநெறிப்பனுவல்  கூறும் . சோபானம்  என்பது ஒன்றன்  மேலொன்றாக அமைக்கப்படும்   படிக்கட்டுக்களை யுணர்த்தும் .

                ஆகவே  அடுக்காகவுள்ள  படிக்கட்டிலேறி  மேனிலை  யடையச்  செல்வார்க்குக்  கவர் வழி  நேர்ந்துழிச்  , செந்நெறிகாட்டும்   வழிகாட்டியாக  முன்னரொருவரும்  , படிக்கட்டில்  கால் நழுவி  வீழாவாறு  பின்னரொருவரும்  தவறி   வீழாதபடி  பக்கங்களிற்   சிலரும்  நின்று  ஆதரவளித்தல்  போல , வீட்டு  நிலையை அடையச்  சரியை முதலிய  நெறிச்  செல்வார்க்கு  ஆதரவாக  முன்னும்  பின்னும்  பக்கங்களும்   ஆகிய  இவ்வெல்லாவிடத்தும்  நின்று  பாதுகாப்பவன்  இறைவன்  ஒருவனேயாதலின்  , “முன்னவனே  பின்னுமானவனேயிம்  முழுதையுமே  “ என்றனர் . முழுதையும்  என்புழி  ஐகாரம்  சாரியையாகும்  . இம்முலுதையும்  என்புழிச்  சுட்டு  முன் பின்  என்பவற்றோடு    பக்கங்களையும்  குறிப்பதாகும் .

                 மன்னவன்  என்பது  ஈண்டு  நிலைபேறுடையவன்  என்னும்  பொருட்டு,  மன்னுதல் – நிலைபெறுதல்  . யாண்டும்  நிறை  பொருளாக  நிலையுறுதல் பெற்று  விளங்கும்  இறை நிறைவுள் இருந்தும் , கலந்து இன்பம்  நுகர்தற்கு ரிய  நெறியறியாத சிறுமையுடையேன்   என்பார் . “மன்னவனே  யொன்று  மாறறியாச் சிறியேன் “  என்றார் .  ஒன்றுதல் – கலத்தல் . சீவன்  முத்தி நிலையுலுள்ள  அடிகள் பரமுத்தியடைய  விரைகின்றனராதலின்  , அதற்குரிய நெறியறியாமை பற்றி இரங்குவாராயினர்  .மகிழ்ச்சி  மின்னவன் என்பது  ஆனந்த விளக்கமாக வுள்ளவன்  என்னும்  பொருட்டு . சாதன முற்றுப்  பெற்றவழி ஓருயிர்க்குப்  பாச நீக்கமும்  சிவப்பேறும்  உண்டாமென்ப  . இருள் நீக்கத்தாற் கண்ணுக்குப்பொருள் விளங்க முண்டாதலும் அதன்பின் அப் பொருளை யழுந்தியறிதலும் நிகழுமாறு போலப், பாச நீக்கத்தால் அருள் விளக்கமும்  அதன்பின்  சிவப்பேறாகிய ஆனந்த விளக்கமும் உண்டாவனவாம் .  

                அருள் விளக்கத்தில்  உயிர்க்கு  அறிவு  செயல்  இரண்டுந் தொழிற் படுதலும்  , ஆனந்த விளக்கத்தில் அறிவிச்சை செயல் மூன்றுந்  தொழிற் படுதலும் வேறுபாடென்ப .  ஆனந்த விளக்கமே பேரின்ப நுகர்ச்சிக்கு உரியதாகும் . அப் பேறு இறைவனோடு  ஒன்றுபட்ட வழியுண்டாவது . ஈண்டு  அடிகள் , ஒன்று  மாறறியாச்  சிறுமையுடைய  தமக்கு  இந் நிலையிலும் பெறுதற்கரிய  ஆனந்த விளக்கமாக நின்று  இன்புறுத்தும் இறைவனது பேரருட்  குணத்திலீடுபட்டு  இவ்வாறு விளிகொள்ளலானார் என்பது .  

                இங்ஙனம்  ஒன்றுபட்டு எய்தற்குரிய ஆனந்த விளக்கம் ஒன்றுபடாத நிலையிலும்  எளிவரப்பெறும் உண்மையை ,”உணர்வினேர்  பெரவருஞ் சிவபோகத்தை யொழிவின்றி யுருவின்கண் , அணையுமைம்   பொறியளவினு  மெளிவர வருளினை யெனப் போற்றி “ என்று  திருஞான சம்பந்த மூர்த்திகள் அநுபவ  நிலையில்  வைத்துச்  சேக்கிழார்  கூறியவற்றா னும்  அறிக .ஒன்றும்  நெறியறியாத சிறியவன்  என்பதை  யுணர்ந்தும் பெறு தற்கரிய   ஆனந்த விளக்கமாகக்  காட்சி  நல்கிய இந் நிலையில்  என்னைக்  கைவிடல்  தகுமாவென்பார்  , “விட்டிடுதி கண்டாய்” என்றார் . இனி, ஒன்றும்  அறியாத எனப் பொருள் கோடலுமாம் .

            இதன்கண், ஒன்றுமாற றியாச் சிறுமைக்கு ஏது உலகப்பற்றென்பது  பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                         **************************************

பாடல் : 44 .

முழுதயில்  வேற்கண்  ணியரென்னு  மூரித்  தழன்முழுகும்

விழுதனை  யேனை  விடுதிகண்  டாய்நின்  வெறிமலர்த்தாள்

தொழுதுசெல்  வானத்  தொழும்பரிற்  கூட்டிடு  சோத்தெம்பிரான் 

பழுதுசெய்  வேனை  விடேலுடை  யாயுன்னைப்  பாடுவனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  சிவப்பேற்றிற் கேதுவாக  இரைவனோடு  கலத்தற்குரிய  நெறியறியாமைக்கு இரங்கிக்கூறிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  பேரின்ப வடிவினனாகிய  இறைவனோடு  கலக்கும் நெறியறியாமையோடு  , துன்பத்தை  விளைக்கும்  காமங் காரணமாக  மகளிரோடு  கலக்கும்  சிறுமையும்  உடையனாயினேனே  யென  இரங்கி  , இந் நிலையிற்   கைவிடலாகாதென  விண்ணப்பஞ் செது கொள்ளுகின்றார் .

பதவுரை :- எம்பிரான்  =  எங்கள்  ஆண்டவனே  ,

அயில் வேல்   கண்ணியர்  என்னும்  =  கூர்மையுடைய  வேற்படை  போன்ற  கண்களையுடைய   மகளிராகிய  ,

மூரி தழல் முழுது முழுகும்  விழுது  அனையேனை  =  பெரிய  நெருப்பில்  முற்றும்  அமிழ்ந்து போம்   வெண்ணெய்   போன்ற  சிறியேனை  ,

விடுதி  =  விட்டுவிடுவாயோ ? ,

உடையாய்  =  என்னை  உடையாய்  ,

உன்னய்ப் பாடுவனே  =  நின்னைக் குறித்துப்  பாடுவேனோ?  (அது செய்திலேன்) ,

பழுது செய்வேனை  விடேல்  =  குற்றமே  புரிகின்ற  என்னைக்  கைவிடலாகாது ,

சோத்து  =  வணக்கம் ,  

நின் வெறி மலர் தாள்   =    தேன்  நிறைந்த  தாமரை  மலர்  போன்ற   நின்திருவடிகளை  ,

தொழுது  வானம்  செல்  தொழும்பரில்  கூட்டிடு  =  வணங்கிச்  சிற்பரவெளி  நோக்கிச்  செல்லுகின்ற  தொண்டரோடு  சேர்ப்பிப்பாயாக  என்பது .

விளக்கவுரை :-  அறிவுடையுலகம்  அடிமையாக  ஆண்டானெனவும்  , அறிவுலகம்  உடைமையாக  உடையானெனவும்  இறைவன்  கூறப்படுதலில் ,  “எம்பிரான்”  , “ உடையாய் “ என விளி கொள்ளலானார்.  அயில்  –  கூர்மை . உவமமாகிய  வேற்படைக்குக்  கூர்மை  கூறியது  , கடைக்கண் ஆற்றல்  புலப்படற்காம் . மகளிர் கடைக்கண்ணால் ஆடவர்  நெஞ்சைக்  கொள்ளை  கொள்வர்  என்பது குறிப்பு . “கூர்த்த நயனக்  கொள்ளையிற்  பிழைத்தும் “ என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்  கூறி  யிருத்தலும்  அறிக . நாற்பத்தொன் றாம்  திருப்பாட்டில்   மகளிர்  முதலையாக  உருவகஞ் செய்யப்பட்டனர் . முதலை  கிடக்கும்  நீர் நிலையில்  மூழ்கினவன்  முதலையாற்  கடிக்கப்படா மல்   ஒரோவழித்  தப்புதலுங்கூடும் .  நெருப்பில்  அமிழ்ந்த  வெண்ணெய்  எவ்வாற்றானும் உருகியழிந்தே விடும் .  

              இக்கருத்துப்  புலப்படவே ஈண்டு  மகளிர்  நெருப்பாக உருவகிக்கப் பட்டனர்  . முழுகும்  பொருள்  சிறிதாகவும்  அதற்கு இடனாய  பொருள்  பெரிதாகவும்  இருத்தல்  இயல்பாதலின்  ,”மூரித்தழல்” என்றார் .  மூரி – பெருமை  ; வலிமையுமாம், விழுது – வெண்ணெய்  . முழுது எஞ்சாமைப்  பொருட்டு .  முழுது முழுகும் என்றது , தீயின்  பெருக்கத்துள்  அடங்கிச்  சிறிதும் எஞ்சாமல் முற்றும்  அமிழ்ந்து அழியும்  என்னும்  குறிப்புத் தோன்ற  நின்றது . இங்ஙனம்  காம  முதலியவற்றால்  கரைந்தழியும்  நிலைமையில்  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ  என்பார் , “விடுதி கண்டாய் “ என்றனர் .  

                பாடுவனே  என்புழி ஏகாரம்  எதிர்மறை குறித்து  நின்ற  வினாப் பொருட்டு . மன மொழி மெய் மூன்றனுட்  சிறந்தது மனம் . அது மகளிர் பாலதாக  மொழியளவிலேனும்  நின்னைக் குறித்துப் பணி செய்திலேனே  யென்பார் .  “பாடுவனே”  எனவும்  , நினைத்தலும்  பாடுதலும் செய்யாமல்  மனத்தாலும்  மொழியாலும்  யான்  செய்வது தீமையே  யென்பார், “பழுது செய்வேனை “  யெனவும்  கூறினர் .  பழுது – குற்றம் .  இது மூரித்தழன்  முழுகு தலானும்  , இறைவனைப்  பாடுதலின்மையானும்  முறையே  மனத்தையும்  மொழியையும்  பற்றியதாகும்  . முக்கரணங்களுள்  மனமும் மொழியும்  பிழைபட்டனவாக  உடலளவில்  யான்  செய்யும்  வணக்கத்தை யேனும்  ஏற்றுச்  சிறியேனைக் கைவிடலாகாதென்பார், “விடேல் “எனவும்  , “சேர்த்து”  எனவும்  கூறினர் . சோத்து –  சோத்தம் ; இழிந்தார்  செய்யும்  வணக்கம் . இழிவு மனமொழி மெய்கள் வேறுபடப் பெற்றது . வணக்கம்  என்று  நாவளவிற்  கூறி  அது செய்யாமையை  உலகியலிலும்  காண்கின்றோம் . அக்குறிப்பும்  தோன்ற நின்றதென்க .

                 உலகியலில்  ஈடுபட்டார்க்குக்  புறத்தே  நிகழும்  ஐம்புல நுகர்ச்சிக்கு  உலகம்  பற்றுக்கோடாதல்  போல , உலகியற் பற்றோழித்த மெய்யுணர்வுடை யார்க்கு  அகத்தே   சிவாகாரமாக  நிகழும்  அநுபவத்திற்கு இறைவன்  திருவடி பற்றுக்கோடாம்  என்னும்  உண்மை  தோன்ற ,“நின்நெறிமார்த்தாள்” என இறைவன்  திருவடி  விசேடிக்கப்பட்டது . தேன்  நிறைந்த  மலர்  என்றதனால்   ஐம்புலநுகர்ச்சி  நுண்ணிதிற்  பெறப்படுவதாகும்  . தேனாற் சுவையும்  , வண்ணத்தால்  ஒளியும்  ,மென்மைத்தன்மையால்  ஊறும்  , தேனுகரும்  வண்டின்  ஒலியால்  ஓசையும்  , நறுமணத்தால்  நாற்றமும்  உடைமையால் , மலர்  ஐம்புல  நுகர்ச்சிக்கும்  நிலைக்களனாதல்  அறியத்தக்கது . ஆகவே  ஈண்டுப்  புறத்தே  நிகழும்  ஐம்புலநுகர்ச்சிக்கும்  மலர்  பற்றுக் கோடாயது  போல , இறைவனுடைய   மலர்  போன்ற  திருவடி  அகத்தே  நிகழும்  சிவாநுபவ  நுகர்ச்சிக்குப்  பற்றுக்கோடாகுமென்பது . ஐம்புல நுகர்வை  உண்முகமாக  வைத்து உணர்தல்  மெய்ஞ் ஞானிகள் இயல்பென்பதை  “அஞ்சு மடக்கில்  அசேதன மாமென்றிட்டு, அஞ்சு மடக்கா  அறிவறிந்தேனே”  என்னும்  திருமந்திரத்தானு முணரலாம் .அகத்தே  இறைவன்   திருவடியைப்  பற்றிய  இன்பநுகர்ச்சியிலீடுபட்ட   அப்பரடிகள் இவ்வுண்மைப்  புலப்பட   ,

மாசில்  வீணையு  மாலை  மதியமும்

வீசு தென்றலும்  வீங்கிள  வேனிலும் 

மூசு  வண்டறை  பொய்கையும்  போன்றதே

யீச  நெந்தை யிணையடி  நீழலே “

               

 

என்றருளிச்  செய்திருத்தலும்   இங்கே  நினைவு  கூறத்தக்கது , வீணையால்  ஓசையும் , மதியத்தால்  ஒளியும்  தென்றலால்  ஊறும்  ,இளவேனிலால்  நாற்றமும்  , பொய்கையால்  சுவையும்  பெறப்பட்டவாறறிக . வீணை  முதலிய  ஐந்தனையும்  போன்றது ஈசனெந்தை இணையடி  நீழல்  என்றது அப்பர்  அநுபவமாகும் .  

              பேரின்ப விளைவாகிய  இறைவனடியைப்  பற்றித் தொண்டு  பூண்டு  ஒழுகும்  மெய்யன்பர்   அத் தொண்டினால்  நுண்ணிய ஞானப்  பரவெளியை நோக்கிச்  செல்லும்  செந்நெறிச்  செலவுடையராவராதலின்  , தொழுது என்னும்  வினையெச்சம் காரணப் பொருட்டாகும் . இச் செந்நெறிச்  செலவு டைய  மெய்த்தொண்டரோடு  தம்மைச்  சேர்ப்பிக்க  வேண்டுமென்று  அடிகள் வேண்டியது , நெறி பிறழந்து  ஒழுகுதற்கு  இடனின்றி அச்செலவு   தம்மை  நலப்படுத்து மென்பது கருதி யென்க . மேயச் செல்லும்  நல்ல ஆனினத்தோடு   கண் கெட்ட ஒரு பசுவையும்  சேர்த்துவிட்டால்  ,அவ்வினத்தோடு  சேர்ந்து அதுவும்  புன் மேய்ந்து  நீருண்டு  நலமுடன்   திரும்புமென்பது  உலகியலிற்  கண்டது . இதனைக்  “கோவுடனே  கூடிய வோர் குருட்டாவும்  ஊர் புகுதும் “  என்பதனாலும்  அறியலாம் .

              பெரியார்  குழுவில்  கலந்த ஒருவன், அவரால்  வெறுக்கப்படுதற்   கஞ்சியாவது  நெறிபிறழத்  துணியான்  என்பது  அறிந்தது . இவ்வுண்மை குறித்தே   “தொழுது செல்வானத்  தொழும்பரிற்  கூட்டிடு “ என்றார் . “அன்பர் பணி செய்யவெனை யாளாக்கி  விட்டு விட்டால் , இன்பநிலைதானே   வந்தெய்தும்  பராபரமே “ என்னும்  தாயுமான அடிகள்  வேண்டுகோளும்  ஈண்டு நினைக்கத்தக்கது . . 

               இதன்கண், மகளிர்  இன்பத்திலீடுபடுவதால்  சிவலோக யாத்திரைக் குத்  தடையென்பது  பெறப்படுதலின்  , பிரபஞ்ச வைராக்கியம்  புலனாத லறிக .

                                            *********************************************

பாடல் : 45 .

பாடிற்றி  லேன்பணி யேன்மணி   நீயொளித்  தாய்க்குப்பச்சூன்

வீடிற்றி  லேனை  விடுதிகண்  டாய்வியந்  தாங்கலறித் 

தேடிற்றி  லேன்சிவ  னெவ்விடத்  தானெவர்  கண்டனரென் 

றோடிற்றி  லேன்கிடந்  துள்ளுரு  கேனின்  றுழைத்தனனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  காமங்காரணமாக   மகளிர்பால்  ஈடுபட்டுருகும்  சிறுமையுடைய னாயினேனே யென இரங்கிக்கூறிய  அடிகள், இத் திருப்பாட்டில்  அச் சிறுமையின்   தடையால்  ஆண்டவனே  ! நின்னைக் குறித்து  மன மொழி மெய்களாற் செய்யவேண்டிய  அன்புப்பணிகளைச்  செய்யாமல்  வீணாக உழைக்கலானேன் ; என் செய்வல்  என இரங்குகின்றார்.

பதவுரை :-   மணி  =  மாணிக்க மணி போன்றவனே ,

பாடிற்றிலேன்  பணியேன்  =  நின்னைப்  பாடினேலல்லேன் , வணங்கினேனல்லேன் ,

நீ ஒழிந்தாய்க்கு   =  காட்சியளிது மறைந்த நின் பொருட்டு

பசுமை ஊன்  வீடிற்றிலேனை  விடுதி  =  பச்சிறைச்சிப்  பிண்டமாகிய  இவ்வுடலை  யொழித்தி லேனாகிய  என்னைக்  கைவிட்டு  விடுவாயோ? ,

ஆங்கு  வியந்து  சிவன்  எவ்விடத்தான்  என்று  அலறித்  தேடிற்றிலேன்  = 

அப்பொழுதே  வியப்புற்றுச்  சிவபெருமான்  எவ்விடத்துள்ளான்  என்று  கதறித்  தேடினேனல்லேன் ,

எவர்  கண்டனர்  என்று  ஒடிற்றிலேன்  =  அப்பெருமானை  யாவர்  பார்த்தனர்  என்று  சொல்லிக்  கொண்டு ஓடினேன்  அல்லேன் ,

கிடந்து உள்ளுருகேன்  =  ஓய்ந்து கிடந்து உள்ளம்  உருகினேன்  அல்லேன்

நின்று  உழைத்தனனே   =   வீணாக  வுயிர்  நிலைபெற்று  உலக வாழ்க்கை குறித்து உழைக்கலானேன்  என் செய்வல் ? என்பது

 விளக்கவுரை :-  இறைவன்  ஞானாசிரியனாக  எழுந்தருளிக்  காட்சியளித்த பொழுது , அவனது ஒளி மயமான  திருமேனியிலீடுபட்ட  அநுபவம்  அடிகளுக்குப்  புலனாதலின்  , “மணி” யென்றார் . இனி, கண்மணியனையான்   எனக் கோடலுமாம் . “ கண்ணே கண்ணிற்  கருமணியே “ என்பது அப்பர்  அநுபவ  மொழி  . மன மொழி மெய் ஆகிய மூன்றனாலும்  இறைவனைக் குறித்து  முறையே  மெய்யன்போடு  நினைத்தாலும்  பாராட்டுதலும்  பணிதலும்  நிகழ்தற்பாலன . திருவுருக்  காட்சிப்படாத   பொழுது  இம் மூன்ற னுள்ளஞ்  சிறந்தது  நினைத்தலேயாகும்  . அங்ஙனம்  மெய்யன்போடு   நினைத்தலாகிய  உள்ளப் பணி  செய்யாத  நிலையிலும்  , அருளுருவினனா கிய  இறைவன்  ஞானாசிரியனாகத்  தமக்குக்  காட்சியளித்தனனாக , அக்காட்சியி லீடுபட்டாவது  பாடுதல்  பணிதல்  ஆகிய  மொழிப்பணி  உடற்பணிகளை  யேனுஞ் செய்திலேன்  என்பார் , “பாடிற்றிலேன் பணியேன்”  என்றார் . இஃது ஒளிமயமான  திருவுருக் காட்சி தோன்றிய  பின்னும்  மறைதற்கு  முன்னுமுள்ள  நிலை பற்றியதென்க  .

            அடிகள்  ஆண்டவன்  திருவுருவத்தைக் கண்டவுடன்  மனமுருகிப்   பாடிப் பணிந்தன  ரென்பது  வரலாற்றுண்மையாயினும் , தம் அன்பு அத்துணைச்  சிறந்ததன்றென்பது  அவர்  கருத்தாகும் . “நான் தனக்கன்  பின்மை  நானுந்தானு  மறிவொம் “  என்னும்  அடிகள்  திருவாக்கு  இதனை  வலியுறுத்துவதாகும் . இனி, கிடத்தற்கரிய   அக்காட்சி  மறைந்தவுடன்  அப் பிரிவாற்றாது  தாம்  மேற்கொள்ள வேண்டிய   செயல்களைப்பற்றிக்  கூறி  அவை  நிகழாமைக்கு  இரங்குகின்றார் .

               ஆண்டவனே  , பெறுதற்கு  அரிய  மணி போலத் தோன்றி மறைந்த நிலையில்  நின் பிரிவாற்றாது  என் ஊனுடலை  யொழித்துவிட  வேண்டியது  இன்றியமையாததாகவும்  , அது செய்திலனே யென்பார், “ மணி  நீ யொழித் தாய்க்குப்  பச்சூன்  வீடிற்றிலேனை  “ யென்றார் . “நீ யொளித்தாய்க்கு”  என்னுந் தொடர்  உருபு  பிரித்துக்  கூட்டிப்  பொருளுரைக்கப்பட்டது . இது பற்றிய  விளக்கம்   முன்னர்க் கூறினாம்  காண்க . இங்கே  ஆண்டவன்  திருமேனி  ஒளிமயமான தென்னும்  உயர்வு  தோன்ற  ,  “மணி” யெனவும்  , தம் உடம்பு  பச்சிறைச்சியாலாய தென்னும்  இழிவு தோன்ற  , “பச்சூன்” எனவும்  கூறியிருத்தல்  உணரத்தக்கது .

                 ஒளிமயமான  திருமேனியைப்  பறிகொடுத்து ஊன் மயமான  உடலைப்  பேணலானேனே  யென்பது இரக்கக்குறிப்பு .  உடலின் இழிவு   தோன்றப்  “பச்சூன்” எனப்பட்டது .  இழிவு  நரி  நாய்  கழுகுகளால்  விரும்பத் தக்க  நிலை . இதனை  “நிழலோடு  கதிக்கு   நிணம்  புரி முதுநரி, பச்சூன் கொள்ளை மாந்தி” என்பதனாலும்  அறிக . இறைவ , நின் திருவுருக்  கரந்த நிலையில்  என் பருவுடலை  யொழித்திருக்க வேண்டும் . அங்ஙனம்  செய்யாமல்  இவ்வுடற்  சுமையைத்  தாங்கியிருத்தலே  தகாத செயலாகும் இவ்வுடற் பற்றினால்  இதனை யொழிக்க  ஒருப்பட்டிலேனாயினும் , அரிய பொருளாகிய  நின் பிரிவில்  செய்யக்கடவ  செயல்களையும்  செய்திலேனே  யென்று  இரங்குகின்றார் .

                    ஆங்கு  –  காலத்தை யுணர்த்தும் ; திருவுருக்  கரந்த  அப்பொழுதே என்பது . வியப்பு  –  புதுமை பற்றியது .  என்னை  புதுமையெனின், ஓர் உரு மறைவதாயின்  , அது காண்பார்  கண் காணாவாறு   பிறிதிடஞ் சென்று   கரத்தலியல்பு .  ஈண்டு  இறையுரு  அடிகளுக்குக்   காட்சியளித்த இடத்தே அவர்  கண்  முன்  கரந்ததே  புதுமையாயிற்   றென்பது . எதிர்பாராத  நிலையில்  நின் திருவுருக்  கரந்ததாக  , அது குறித்து அப்பொழுதே  வியப்புற்றுப்  பிரிவு  பொறாது , கதறி நின்னைத்  தேடவண்டியது  கடமை யாகவும் , அது செய்திலேன்  என்பார் ,  “ வியந்தாங்  கலறித்  தேடிற்றிலேன் “  என்றார் . சிவன்  எவ்விடத்தான் “  என்பது  தேடப்படும் பொருளைப்பற்றிப்  பிறர்  அறியக் கூறியபடியாம் .

                      எங்கும்  நிறை பொருளாகிய  இறைவனுக்கு  “எவ்விடத்தான் “ என ஓரிடம்  குறித்து வினாயது , திருவுருக் கரந்த  நிலையில்   பிரிவாற்றாமை யாலுண்டாய  துன்பம்  பற்றியென்க . பின்னுள்ள என்று  என்பதை எவ்விடத்தான்  என்பதனோடும்  இயைத்துக் கொள்க . ஓர் இளமகவைப்  பிரிந்த தாய்  அம்மகவைத் தேடுங்கால்  “என் குழந்தையை  யாருங்  கண்டதுண்டா? என்று சொல்லிக்கொண்டு  , ஓரிடத்து நில்லாமலும்  மெல்ல நடவாமலும்  அங்கும்  இங்கும்  விறைந்தோடி   அலைதலை உலகியலிற்  காணலாம் . அவ்வாறே  அடிகள்  “ எம்பெருமானை  யாருங் கண்டதுண்டா?”  என்று  சொல்லிக்கொண்டே  பல இடங்களுக்கும்   விரைந்து  ஓடித்  திரிதல்  தம்  கடமையாகவும்   அதுவும்  செய்திலேன்  என்பார் , “ எவர் கண்டனரென்று   ஓடிற்றிலேன்  “ என்றார் . அன்பிற்  கருங்கலனாகிய   பொருளைப் பிரிந்தவர்   அலறித் தேடி ஓடியும்  காணாவிடத்து உடல் தளர்ந்து ஓரிடத்துக்  கிடக்க  நேரின்  , அக்கிடக்கையில்   பிரிவாற்றாமை  மிகப் பெற்று   அப்பொருளையே  நினைந்து நினைந்து  உள்ள முருகி  வருந்துதல்  இயல்பாதலின்  , இங்கே  கூறப்பட்ட  அன்புரிமைச்  செயல்களில் ஒன்றையும் மேற்கொள்ளாமல்  , உயிர் வாழ்தற் பொருட்டு  இவ்வுலக  வாழ்வை  நச்சி  உடலைத் தாங்கி  யுழைக்கலானேன்  என்பார் ,  “நின்றுழைத்தனனே” எனவுங் கூறினர் .

              நிற்றல்  –  உடலில்  உயிர்  நிலையுறப் பெறுதல் . உழைத்தல்  –  வருந்தி முயறல்  .  இவ்வருமைத் திருப்பாட்டில்   இறைவன்  திருவுருக் காட்சியளித்து  மறைந்த நிலையில்  அடிகள் மேற்கொண்ட  அளப்பரும்  அன்புரிமைச்  செயல்களே  குறிக்கப்பட்டன .  அச் செயல்கள் தம்பால்  நிகழவில்லையென   அடிகள் கூறியது , இறைவன்  தமக்குச்  செய்த பேரருட்  டிறத்திற்குத்  தம் தொண்டு   ஈடாகாதென்னும்  கருத்தாலென்க .   அன்புருவமாகிய  அடிகள் “என் அன்பும் பொய் “  என்று  ஓரிடத்துக்  கூறியிருத்தலும்   ஈண்டு  நினைக் கத்தக்கது . இத் திருப்பாட்டுக்  கன்னெஞ்சத்தையுங்  கரைக்க  வல்ல தென்பது  ஓதியுணர்வார்க்குப்  புலனாம் .  

             இதன்கண், இறைவனைப்  பற்றிய  அன்புச் செயல்களை  மேற்கொள்ளாமல்  , உலக  வாழ்க்கையிலீடுபடுதல்  வருந்தத்தக்க தென்பது பெறப்படுதலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                                              ***********************************

பாடல் : 46 .

உழைதரு  நோக்கியர்  கொங்கைப்   பலாப்பழத்  தீயினொப்பாய்

விழைதரு  வேனை விடுதிகண்  டாய்விடின்  வேலைநஞ்சுண்

மழைதரு  கண்டன்  குணமிலி  மானிடன்  தேய்மதியன்

பழைதரு  மாபரன்  என்றென்  றறைவன்  பழிப்பினையே .

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில்  ஆண்டவனுக்குச்  செய்யவேண்டிய  அன்புப்  பணிகளைச்  செய்யாமல்  வீணாக உயிர் நிலை பெற்று உலக  வாழ்க்கைக்கு  உழைக்கலானேன் என்று  கூறி இரங்கிய  அடிகள் , இத் திருப்பாட்டில்  அவ்வழைப்பு  இன்னதென  அதன் இழிவை யெடுத்துக் கூறி வருந்துகின்றார் .  

பதவுரை:-  உழை  தரு  நோக்கியர்  கொங்கை   =  மான் பார்வை  பொன்ற  பார்வையினராகிய   மகளிருடைய  கொங்கையை ,

பலாப்பழத்து ஈயின்  ஒப்பாய்  விழைதருவேனை  =  பலாப்பழத்தின் கண்  மொய்க்கும்  ஈயினை யொத்து  விரும்புகின்ற சிறியேனை ,

விடிதி  =  விட்டு விடுவாயோ?  

விடின்  =  கைவிடுவாயின் ,

வேலை  நஞ்சு  உண்  மழைதரு  கண்டன்  என்றும்  =  கடலிற் றோன்றிய  நஞ்சையுண்ட   நீலமேகம்  போன்ற  கழுத்தையுடையவன்  என்றும் ,

குணம்  இலியென்றும்  =  குணமில்லாதவன்  என்றும் ,

மானிடன் என்றும்  =  மக்கட்டன்மையுடையவன்  என்றும்  ,

தேய் மதியன்  என்றும்  =  குறைந்த அறிவினையுடையவன்  என்றும் ,

பழை தரு  மாபரன்  என்றும்  =  பழைய   பெரிய  பரதேசி யென்றும்  ,

என்றும்  பழிப்பினை  அறைவன்   =    எப்பொழுதும்  நின் பழியைக்  கூறுவேன்   என்பது .

விளக்கவுரை :-  உழை  –  மான் . மான்   பார்வைக்கு  ஆயிற்று .தரு  –  உவமைச் சொல் . மழைதரு என்புழியும்  ஈதொக்கும் .மான் பார்வை  இயற்கையில் மருட்சியுடையதாயினும் , ஈண்டு  உவமேயப்  பொருளாகிய  மகளிர்  கண் மருட்சி  , ஆடவரை மயக்குறுத்துங்குறிப்பின்  மேலதாகலின், செயற்கையின்பாற்  படுவதாகும் . ஆடவரைத் தம் வயப்படுத்தும் மகளிர்  உறுப்புக்களுள்  கண்ணே  சிறந்தது .  காமநோயை விளைப்பதும் அந் நோய்க்கு  மருந்தாவதும்  கண் நோக்கே   என்னும்  பொருள் தோன்ற  , “இருநோக் கிவளுண் கணுள்ள  தொரு நோக்கு , நோய்  நோக்கொன்றந் நோய் மருந்து” என்பர்  திருவள்ளுவர் .  

                 “காதன்மை கண்ணுளே  மறைத்துக்  கண்ணெனுந்  , தூதினாற்  றுணிபொருளுணர்த்தி”  யென்னும்  சிந்தாமணி ஆசிரியர்  கருத்தும்  இங்கே  நினைக்கத்தக்கது . . முதலிற்  கண்ணினால்  கவரப்பட்ட  ஆடவர்  பின்  கொங்கையிலீடு  படுவரென்னுங்  குறிப்புத்  தோன்ற  “உழைதரு நோக்கியர்  கொங்கை” யென்றனர் . கொங்கையைப் பற்றி  நிகழும் பேரவாவுடைய  தமக்குப்  பலாப்பழத்தில்  விரும்பி  மொய்க்கும்  ஈக்களை உவமையாகக்  கூறினர் . ஒப்பாய்  என்பது ஒத்து என்றபடி  . ஈயின்  என்புழி  இன், உருபு நோக்கி  வந்த சாரியை.  இரண்டனுருபு  விகாரத்தால் தொக்கது .

                      முப்பழங்களுள்  மணமிக்கது பலாப்பழம் . ஈக்கள்  மணத்தால்  கவரப்பட்டுச்  சார்ந்ததும் , பழச்சுவையிலீடுபடும்  இயல்பின .  ஓசை யொழிந்த  நான்குவகைப்   புலனுகர்ச்சியுடைய  ஈக்கள் , பலா பழத்தைச்  சார்தல் , மணமும்  சுவையுமாகிய  இரண்டு  புலன்களுக்கும்  இடனாதல்  பற்றி . அங்ஙனமே  ஆடவர்  மனம்   மகளிர்  நகிலைச்  சார்தல் , உருவமும்  ஊறுமாகிய  இரண்டு  புலன்களும் இடனாதல் பற்றி  யென்பது . முதலிற்  காட்சியால்  நகிலின்  உருவத்தைப்பற்றிப்  பின் ஊற்றின்பத்திலீடுபடுதலி யல்பு  . உவமையிலும்  பொருளிலும்  ,நுகரும்  புலன்கள்  வெவ்வேறாயினும் , சேய்மையிலும்  அணிமை  யிலும்  நிகழ்வன  ஈண்டு  என்பது ஒப்புமைபற்றிக்  கருதத்தக்கது . .உவமையாகிய  ஈக்களுக்குப்  பலாப்பழத்தின்  மணம்  சேய்மையிலும்  , சுவை  அணிமையிலும்  நுகரப்படு வனவாம் . உவமேயாகிய  ஆடவர்க்கு  மகளிரின்  கொங்கையுருவம்   சேய்மையினும்  ,ஊற்றின்பம்  அணிமையினும்  நுகரப்படுவனவா மென்பது .  புலன்களிரண்டன்  மேலும்  நிகழும்  வேட்கை ஒத்ததென்பது  காண்க .  உலக வாழ்க்கையின்  உழைப்பு  , இங்ஙனம்  அழியும் இயல்பினதாகிய  புலநுகர்ச் சியளவில்  முடிவெய்வததாகவும்  , அதனையே  விரும்பும்  சிறியேனை  அது பற்றிக் கைவிட்டு  விடுவாயோ? என்பார் , “ விழைதருவேனை விடுதி கண்டாய் “ என்றார் .

              சிறியேனது  பிழையைப்  பொறுத்து நலம்  புரிதல்  பேரருளாளனாகிய   நினக்குக் கடமையாகவும் ; அங்ஙனம்  செய்யாமல்   என்னைக்  கைவிடுவா யாயின்   , என் சிறுமைக்கு  ஏற்றபடி நின்னைப்பற்றிய   பழி மொழிகளை யெடுத்துக் கூறுவேன்  என்று  தொடங்கு வாராய், “விடின்”  என்றார் . இவ்வாறு விடுதி கண்டாய் என்பதன்  பின், “விடின்” என்று  தொடங்குதல் இப்பதிகத்துள் இருபத்துமூன்று , நாற்பத்தாறு  , நாற்பத்தெட்டு , நாற்பத் தொன்பது ஆகிய   நான்கு   திருப்பாட்டுக்களின்  மாத்திரம்  உள்ளது . இவற்றுள் இருபத்துமூன்றாம்  திருப்பாட்டில்   “விடிலோ கெடுவேன் “ என  நீ  கைவிடின் ,  அதனால்  கெட்டொழிவேன்  எனத் தமக்கு  நேரும்  கேட்டினை  எடுத்துக் கூறி  இரங்குவாராயினர்  . ஏனைய  மூன்று  திருப்பாட்டுக்களிலும்  என்னைக் கைவிடின்  என் சிறுமைக் கேற்ப  நின்னைப்  பழித்துரைப்பேன் என்று  கூறுகின்றார் .  

                 ஈண்டு  பழித்துரைத்தலாவது ,பழிப்பது போலப்  புகழ்தற் பொருடொன்றக்  கூறுதல்  ஆதாலின்  ,” அறைவன்  பழிப்பினையே  “  என்றது  சொல்லளவிலன்றி யின்று  . அடிகள் நினைவில்  ஆண்டவன்  பால்  இயல்பின் அமைந்த  பெருமையே  முன்னிற்பதாகும்  . உண்மையில்  இறைவன் பால்  பழித்தற்கு  ஏதுவாக  யாதுமின்று ; உள்ளதை மாறுபடக்  கருத்து இயல்பு அடிகளுக்கும்  இன்று . தந்தையன்பிற்குரிய  குழந்தை , தன் தகுதிக்கு  மேற்பட்ட  பொருளை  அவன்பாற்  பெற   முயலுங்கால் , தகுதி நோக்கிக் காலந்தாழ்த்த  விடத்து , அக்குழந்தை  தன் தந்தைபாற்  கண்ட  அரிய குணஞ்  செயல்களையே  பழிப்புரையாக  வழங்கி  அவனை  மகிழ்விப்பது  போல , அடிகள் ஆண்டவனைப்  பற்றித்  தம் அநுபவத்திற்  கண்ட   அரிய  குணஞ் செயல்களையே பழிப்புரை  வடிவிலெடுத்துக்  கூறி   அப்பெருமானை மகிழ் வுறுத்துவாராயினர் . இவ்வுண்மையே  பின்வரும்  நாற்பத்தெட்டு   நாற்பத் தொன்பதாம்  திருப்பாட்டுக்களுக்கும் கருத்தாகக் கொள்க .

                    இனிப்  பழிபன  போற் கூறப்பட்ட சொற்களில்  உள்ள புகழ் பொருள்  வருமாறு : –  திருப்பாற்  கடலிற்றோன்றிய  நஞ்சை யுண்ட செய்தி , சிவபெருமானுடைய பேரருளுடைமையையும் முடிவிலாற்றலுடைமையை யும்  புலப்படுப்பதாகும் . பிறிதொரு  நஞ்சாயின்  உண்பார்   ஒரோவழி யுய்தலுங்  கூடும் . தன்னை யுண்டாரைத்  தான்  உண்டேநீரும்  இயல்புடை யது   ஆலாலமென்னும்  கொடுநஞ்சு . அதனைப் பிற தேவருய்தல் குறித்து  இறைவன்  உண்டு கண்டத்தடக்கிய   அருமை தோன்ற  , “வேலை நஞ்சுண்மழை  தருகண்டன்” என்றார் . “குணமிலி” என்பது முக்குணங்களையுங் கடந்தவன்  என்னும்  பொருட்டு . சாத்துவிக முதலிய  குணங்கள்   மூன்றுங்  குணதத்துவ மென்று  கூறப்படும் .

                  குணதத்துவம்  மூலப்பகுதியின்   விருத்தியாகும்  . மூலப்பகுதியைப் பிரகிருதி மாயையென்றுங்  கூறுப .  ஆதலின்  சாத்துவிக  முதலிய  அம் மூன்றும்  உயிர்களின்  கன்மத்திற்கு  ஈடாக  உடல்  முதலியன  தருதற்கு  அமைந்த பிரகிருதி மாயையினின்றுந்   தோன்றி  , உயிர்களின்  சுக  துக்க   மோகங்கட்கு  ஏதுவாவனவாம் என்ப . இதனால் மாயாசனகமாகிய   அக்குணங்களாற்  பற்றப்படாமல்  அப்பாற்பட்டவன்  இறைவன்  என்பது  தெளிவாம் .   “ முக்குணங்களின்  மூவரைத்  தோற்றி மூவருக்கு  முத்தொழில்   வகுத்தருளி  , அக்குணங்களுக்க தீதமாய்   நிறைவாயத்து  வாக்களைக்  கடந்தவன் “  என்று  சிவஞான முனிவர்  கூறுதலும்  அறிக . “மானிடன் “  என்றது  மானை  இடக்கையில்   ஏந்தியவன்  என்னும்  பொருட்டு . தாருக  வனத்து முனிவர்  இறைவனைத்  துன்புறுத்தக்   கருதிக்  கொடிய  வேள்வியொன்று  இயற்றி  அதனினின்றுந்   தோன்றிய  ஒரு மானை  இறைவன்பாற்  போக்கினராக  ,  அதன் ஆரவாரத்தைக்  கண்ட  இறைவன்  அதனை   “வாமப் ,பொற்றடங்கையிற்   பற்றிப்  பொருக்கென வேந்தி நின்றான் “  என்று  கந்தபுராணங்  கூறுதலறிக .

                    “தேய்மதியன்”  என்றது , கலை குறைந்த சந்திரனை  முடியிற்  சூடினன்  என்னும்  பொருட்டு. தக்கன்  சாபத்தாற்  கலை குறைந்த  திங்கட் செல்வனைப்   பாதுகாத்தற்   பொருட்டுத்  தன்  சடையில்  தாங்கினனாதலின், இவ்வாறு  கூறினர் . “பழைதருமாபரன் “  என்பது  பழைய  பெரிய  பரம்  பொருள்  என்னும்  பொருட்டு . இறைவனைப்  “பழையோன்”  எனவும்  , “சொற்பதங்  கடந்த தொல்லோன் “ எனவும்,  “கருணையின்  பெருமை “  எனவும்  அடிகள்  பிற  இடங்களில்  கூறியிறுத்தல்  ஈண்டு  நினைக்கத்தக்கது . “என்று என்று “ என்னும்  இரண்டனுள்  முன்னதை  “மழைதரு கண்டன்”  என்பது  முதலியவற்றோடு  இயைத்து எண்ணும்மையை  விரித்துரைத்துக்  கொள்ளல் வேண்டும் . பின்னுள்ளதில்  முற்றும்மை  தொக்கது . “ என்றும்  அறைவேன்” என்றது என்னைக்   கைவிடினும்  யான்  இடையறாது  நின் புகழையே  கூறி  இன்புறுவேன்  என்றபடியாம் .  இஃது  உட்கோள் .  “ஈடர்களையாரேனும் , எமக்கிரங்காரேனும்  படரும்  நெறி  பணியாரேனும் …அன்பறா தென்னெஞ்சவர்க்கு  “ என்னும்  அம்மையாரருள்  மொழியும்  இங்கே  நினைவு  கூறத்தக்கது . .

                      பழைபனபோற்  கூறப்பட்ட   புகழ்மொழிகளுள்   “மழைதரு  கண்டன்”  என்பது  இறைவனுடைய  பேரருட்  பண்பையும்  ,”குணமிலி”  என்பது தத்துவாதீதத்   தன்மையையும்  , “மானிடன்”   “தேய்மதியன்” என்பன  முறையே  நிக்கிரக  அநுக்கிரகச் செயல் களையும்  , “மாபரன்”  என்பது முழுமுதற்  கடவுட் டன்மையையும்   புலப்படுத்து நீற்றல்  உய்த்துணரத் தக்கது .  

                       இதன்கண்,  “ஈயினொப்பாய்  விழைதருவேன்”  என்றதனால்  உலக  வாழ்க்கை  திருவருட்  பேற்றிற்குத்   தடையாதல்   பெறப்படுதலின் ,  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .

                          ***********************************************************

பாடல் :47 .

பழிப்பினின்  பாதப்  பழந்தொழும்  பெய்தி  விழப்பழித்து

விழித்திருந்  தேனை  விடுதிகண்  டாய்வெண்  மணிப்பணிலங்

கொழித்துமந்  தாரமந்  தாகினி  நுந்தும்பந்  தப்பெருமை

தழிச்சிறை  நீரிற்  பிறைக்கலஞ் சேர்தரு  தாரவனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்   ஆண்டவனுக்கு  அன்புப்பணி  செய்யாமல்  வீணாக  மேற்கொண்ட  உழைப்பின்  இழிவை  யெடுத்துக்  கூறி  இரங்கிய  அடிகள்  , இத் திருப்பாட்டில்  அங்ஙனம்  இழிந்த உழைப்பில்   தலையிடுதற்கு  ஏது ,  இறைபணியினின்றும்  வழுவியதாகு  மென்றுணர்ந்து, மீண்டும்  அப்பணியில்  தலைப்படுதற்கு   உபாயம்  அறியாமல்  திகைப்புற்றிருத்தலை  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :- வெண்மணி பணிலம் கொழித்து  =  முத்துக்களையுடைய சங்குகளைக் கொழித்து ,

பந்தப் பெருமை தழீஇ  =  சடையாகிய அணையின்  பெருமையைச்  சார்ந்து ,

மந்தாரம்  நுந்தும்  =   மந்தார மலர்களை யொதுக்குகின்ற ,

மந்தாகினி  சிறை நீரில்  =  கங்கையாகிய  வரம்புட்பட்ட  நீர் நிலையில்

பிறைக்கலம் சேர்தரு தாரவனே  =  பிறை மதியாகிய   தோணி பொருந்தப்பெற்ற  மாலையையுடையவனே ,

பழிப்பில்  நின்பாதம்  பழந்தொழும்பு  எய்தி  =  பழிக்கத்தகாத  நின் திருவடிக்கண்ணே   பழமையாகிய  தொண்டு  மேற்கொண்டு ,

விழப்பழித்து  விழித்திருந்தேனை  =  பின் அத் தொண்டு நழுவுதலால்   அத் திருவடியைப்  பழித்து  விழித்துக்கொண்டிருக்கின்ற   சிறியேனை

விடுதி  =  கைவிட்டு விடுவாயோ  ? (விடலாகாது)  என்பது .

விளக்கவுரை :-  வெண்மணி  –  முத்து . சங்குகள் நீர் வாழும்  உயிர்ப்பகுதியைச்  சார்ந்தனவாகலின்  , அவற்றைக் கொழித்தல்  நீர்க்கு  இயற்கையெனவும் , மந்தார மலர்கள் இறைவன்  சடையிலணியப்பட்டன வாகலின்  , அவற்றை  நுந்தல்  செயற்கையெனவும் கொள்ளல்  வேண்டும்  . இறைவன்  சடக்கண்ணுள்ள  கங்கை வெள்ளம்  தூய வெண்ணற  முடையதாகலின்  , அஃது அப்பெருமானுடைய  பேரருட்  பெருக்கையும்  , அவ்வெள்ளத்தின்  அருகில்  காணப்படும்  சங்கு  இறையியல்பை யுணர்தற் குரிய   தூய  சிவஞானத்தையும்  , மந்தார  மலர்  இறைவனைச்  சார்தற்குரிய   சிறந்த  பத்தியையும்  , பிறை மதி ஞானம்  பத்தி இரண்டனையும் துணைக் கொண்டு  இறைவனது பேரருட் பெருக்கில்  தோய்ந்து  இன்புறும்  பக்குவ முள்ள  உயிரையும்  குறிப்பிற்  புலப்படுப்பனவாம் .

         முத்துக்களையுடய  சங்கு  என்றது , சிவப்பேறாகிய  பயனைத்  தன்னுட் கொண்ட  சிவஞான  மென்றற்கு . மந்தார மலர்  அன்பு வழிபாட்டிற்குச்  சாதனமாகலானும்  , இறைவன்  சடைக்கணிருந்து  கங்கையில்   தோய்ந் ததாகலானும்  பராபத்தியைப்  புலப்படுக்கு மென்பது . ஞானம்  பாச  நீக்கத்தில் தோன்றுவதாகலின்  , அதன் தோற்றத்திற்கு   இடனாயது பக்குவமுள்ள  உயிரென்பதும் ,பராபத்தி  ஆண்டவனை  முன்னிட்டு  வெளிப்படுவதாகலின்  , அதன் தோற்றத்திற்கு  இடனாயது இறையருளென் பதும்  உய்த்துணரத் தக்கன .  இவ்வுண்மை குறித்தே  பாச  நீக்கத்திற் றோன்றும்  ஞானத்தினும்  இறையருளிற்  றோன்றும்  பத்தி சிறந்ததென்ப .  ஈண்டுக் கூறிய  பத்தி கடவுட்  பேரன்பாகிய  பராபத்தியாகும் . “ஆங்கவனருளாற்  பத்தி நன் குண்டாம்  பத்தியாலவனருளுண்டாம்” என்பது  சைவ  நூலுண்மையாகும் .

               பந்தம்  –  அணை . கங்கை நீர்ப்பெருக்கு , இறைவன்  சடைக்கட் டாகிய  அணைப் பெருமையை  நோக்க  மிகச் சிறிய  நீர் நிலை போற்  காணப்பட்டெத்தென்பார் ,  “பந்தப்பெருமை தழீஇ “ எனவும்  , “சிறை நீர்” எனவும்  கூறினர் . சிறைநீர்  என்றது  சிறியநீர் நிலை என்னுங்குறிப்புத் தோன்ற  நின்றது . முதலில்  சரியை  முதலிய  தவத்தாலுண்டாம்  ஞானம்  இறைவனையுணர்தற்குக்  கருவியாம்  என்பது புலப்பட  , “வெண்மணிப் பணிலங்  கொழித்து “ எனவும்  , ஞானம்  கருவியாக  இறையியல்புணர்ந்து  பின்னர்  அவனருளில்  திளைப்பிப்பது  பராபத்தி என்பது  புலப்பட  “மந்தாரம்  நுந்தும் “ எனவும்  கூறப்பட்டன வென்க.  அணையின்  பெருமை   நீர் நிலைக்கு   எத்துணையோ  மடங்கு  மிக்கதென்பது போதர  , “பந்தப் பெருமை” யென்றார் , “தழீஇ “  யென்னும்  வினையெச்சம் பர்றி வந்த அளபெடை விகாரத்தாற்  றொக்கது . இனி  தழிச்சு  இறைநீர் எனக் கொண்டு  தழுவிய  சிறிய  நீர் நிலை யெனக்  கோடலுமாம் .தழிச்சுதல்  –  தழுவுதல்   திங்கட்பிறை  தனக்குற்ற  இடையூறொழிந்து  கலை வளரப்  பெற்றது  இறைவன்  திருவருட்டுணையாலென்பர்   பெளராணிகர் . அச் செய்தி  ஈண்டுப்   பாசப்பிணிப்பில் துன்புற்ற உயிர் , ஞானம்  பத்தியென்னும்  நெறிகளால்  திருவருட்  பேற்றிற்  குரியதாகும் என்னும்  குறிப்பைப்  புலப்படுத்து நின்றதென்க.

           பிறையின்  நடுச் சிறிது  அகன்றும்  அதனிரு கோடுகளும்  அந்நடுவினும்  சிறியனவாய்ச்  சிறிது வளைந்தும் தோணிபோற்   காணப்படுதலின்  , “பிறைக்கலம்” என்றார் . மந்தாகினிச்சிறை   நீரிற்   பிறைக்கலம்  என்றது ,அழகிய  ஓர்  உருவக அணியாகும் . இலக்கிய  நயந்  தோன்றக்  கூறிய  இவ் வருணையில்  , பாசப்பிணிப்பில்   பட்டுழலும்  ஓருயிர், ஞானத்தால் இறையியல்புணர்ந்து , அப்பிணிப்பு  ஒழிந்து  பத்தியால்  தூய்மை  பெற்றுத்  , திருவருளில்  தோய்ந்து  பேரின்பத்தில் திளைக்கும்  உண்மையை  அகக்காட்சியிலுணர்ந்த அடிகள் குறிப்பிற்  புலப்பட  வைத்தாரென்பது  உணர்ந்து  இன்புறத்தக்கது .

                  திருவாசகத்  திருப்பாட்டுக்களில்  அநுபவ  வுண்மைகளேயன்றி  வருணனை மிகக்  குறைவாகவே  காணப்படும்  . அங்ஙனம்  சுருக்கமாகக்  காணப்படும்  வருணனை  களிலும்   இன்னோரன்ன  சைவவுண்மைகள்   குறிப்பிற் புலப்பட வைத்தல்  அடிகள் அநுபவ இயல்பென்பது  உணரத்தக்கது. “தாரவன்”  என்பது  பெயரளவாய்  நின்று  “சேர்தரு” என்னும்  எச்சத்திற்கு  முடிவாகும் .  “பிறைக்கலஞ்  சேர்தரு  தாரவன்” என்பது பிறையை  முடிமாலையாயியைத்துச்   சூடினவன்  என்னும்  பொருட்டு . “மாதர்ப்பிறைக் கண்ணியானை” யென்பது தமிழ் மறை .

                   “ஓதிய  ஞானமு  ஞானப்  பொருளும்  ஒலி சிறந்த , வேதியர் வேதமும்  வேள்வியுமான “  என்று  புகழப்படுதலல்லது , சிறிதும்  பழித்தற்கு  இடனில்லாதன  இறைவன்  திருவடியென்பார் ,  “ பழிப்பினின்  பாதம்” என்றார் .  அன்புடையார்  தன்னைப்  புகழ்தலினும் தன் திருவடியைப்  புகழ்தலில்  ஆண்டவனுக்கு  உவப்புண்டு  என்பதை  “ நாயேனைத்  தன்னடிகள்  பாடுவித்த நாயகனை “ யென்று  பிறிதோரிடத்து அடிகள்  கூறி யிருத்தலானறியலாம் . அங்ஙனம்  புகழ்ந்து போற்றத்தக்க   திருவடிக் கண்ணே  மேற்கொண்ட  தொண்டு  வாழையடி  வாழையாக  வந்த தம்  மரபுக்குரிய  தென்பார் , “பழந்தொழும்பு”  எனவும் , பண்டு செய் தவத்தால்  அத் தொண்டில்  தலைப்படக் கிடைத்தும்  திருவருட்  சார்பு  இன்மையால் அது நழுவலாயிற் றென்பார் , “ விழ” எனவுங்கூறினர் .

                       வீழ்தல் –  நழுவுதல் . விழ  என்பது காரணப்பொருட்டு . திருத்தொண்டி லீடுபட்டவுள்ளம்   சோர்வுற்றமையால்  பழிக்கத்தகாத  திருவடியைப் பழிக்கலானேன்  என்பார் , “ விழப் பழித்து “ எனவும்  , பழிக்கப்பட்ட  அத்திருவடிப்  பெருமையுணர்ந்து மீண்டும்  அதன் கண்  தொண்டு   பூண்டொழுகுதற்கு  உபாயம்   அறியாமல்  மயங்கலானேன்   என்பார் , “விழித்திருந்தேனை “ யெனவுங்  கூறினர் .  வழித்திருத்தல்  இதற்கு   என் செயலாமென்று   மருண்டு  திகைப் புற்றிருத்தல் .  திருவடித் தொண்டி லுறைத்து  நிற்கும்  அடிகளுக்கு   இடையிடையே   பிரிதலுங்  கூடலுமாகிய  இன்னோரன்ன  நிகழ்ச்சிகள்  இன்பவுணர்ச்சிக்  கேதுவாக   நிகழ்தலின் , இவ்வாறு  கூறியருளினர் .

                           இவ்வநுபவத்தைக்  “காணுமதொழிந்தேன்  நின் திருப்பாதங் கண்டு   கண்  களி கூரப்  பேணுமதொழிந்தேன்  பிதற்றும்   தொழிந்தேன் …… நீயினி வரினுங்  காணவு  நாணுவனே”  என்று  அடிகள்  பிறிதோரிடத்துக்   கூறியிருத்தலானும்  உணரலாம் .பழிக்கப்படாத  திருவடியைத்  தொண்டு  நழுவதலாற்   பழித்துப் பின்  என் செயலாமென்று   திகைப்புற்றிருக்கும்   இந் நிலையில்  எளிமைக்கு   இரங்கும்  பேரருளாளனாகிய   நீ  சிறியேனைக் கைவிடல்  தகுமா வென்பார், “ விடுதி கண்டாய்”  என்றார் .

                        இதன்கண் , “பழிப்பினின் பாதப்  பழந்தொழும் பெய்தி விழப்பழித்து  விழித்திருந்தேனை”என்றதனால்  அங்ஙனம்  இருத்தற்கு ஏது , உலகியற் பற்றென்பது  போதரலின் , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக.

பாடல் : 48 .

தாரகை  போலுந்  தலைத்தலை  மாலைத்  தழலரப்பூண்

வீரவென்  றன்னை  விடுதிகண்  டாய்விடி  லென்னைமிக்கார்

ஆரடி  யானென்னின்  உத்தர கோசமங்  கைக்கரசின் 

சீரடி  யாரடி  யானென்று  நின்னைச்  சிரிப்பிப்பனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  நழுவி  விடப்பட்ட  இறை  பணியில்  மீண்டும்  தலைப்படுதற்கு  உபாயம்  அறியாமல்  திகைப்புற்றிருத்தலை   திகைப்புற இரங்கி  அடிகள் , இத் திருப்பாட்டில்  திகைபுற்ற நிலையில் தேற்றுதற்குத் திகைப்பறியாத்  தெய்விக வீரனாகிய  நின்னைப்பற்றி  வேறு  யாருமிலர்  ஆதலின், சிறியேனைக்  கைவிடாமற்  பாதுகாக்கும்  பொறுப்பு  நின்பாலதாகு மென்பதைக் குறிப்பிற்  புலப்படுத்து விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .  “தேறும்  வகையென் சிவலோகா திகைத்தாற் றேற்ற வேண்டாவோ”  என்னும்  அடிகள்  திருவாக்கும்  ஈண்டுக் கருதியுணரத்தக்கது.

பதவுரை :-  தலை தாரகை போலும்  தலைமாலை  =  தலைக்கண்ணே விண்மீன்கலைப்  போன்ற  தலைமாலையும் ,

தழல் அரப் பூண்  =  நகஞ்சு மிக்க  பாம்புகளாகிய  அணிகளங்களையுமுடைய  ,

வீர   =  தெய்விக வீரனே ,

என்னை விடுதி  =  சிறியேனைகைவிட்டுவிடுவாயோ? (விடலாலாது)  ,

விடில்  =  கைவிடுவாயின்  ,

மிக்கார் என்னை ஆர்  அடியான்  என்னின்  =  அறிவொழுக்கமிக்க பெரியோர்  என்னை நோக்கி  , “நீ  யாருக்கு  அடியவன் “ என்று  வினவுவாயின் ,

உத்தரகோசமங்கைக்கு  அரசின் சீர் அடியார்  என்று  =  திருவுத்தரகோசமங்கையில்  வீற்றிறுக்கும்  தெய்விக  அரசாகிய  சிவபெருமானுடைய  சிறப்புப்  பொருந்திய  அடியவர்க்கு  அடியவன்  என்று  சொல்லி ,

 நின்னைச்  சிரிப்பிப்பன்  =  நின்னைக்  குறித்துச்  சிரிக்கச் செய்வேன்  என்பது .

விளக்கவுரை :-  உலகெலாம்  ஒடுங்கிய  பேரூழிக்  காலத்துப்   படைப்போன்  முதலியோரும்  ஒடுங்கினராக  , அன்னார்  தலைகளை  யெல்லாம்  மாலையாகத்  தொடுத்து இறைவன்  தன்  தலைக்கண்  அணிவன்  என்று  புராணங் கூறும்  . அணிதற்குக் காரணம்  அத் தேவரெல்லோரும்   ஊழி  யிறுதியில்  தன்பால் லொடுங்கத்  தான்  ஒருவனே  யாண்டும்  ஒடுங்காத  முழுமுதற் பொருளென்பதைப், பின்னர்த் தோன்றும்  உலகம்  உணர்ந்து தன்னை யடைந்து உய்யவேண்டு மென்பதேயாம்  

                   இவ்வுண்மையை  “நூறு கோடி  பிரமர்கணொந்தினார் , ஆறு கொடி  நாரயணரங்ஙனே,  ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் , ஈறிலாதவன்  ஈசனொருவனே  “  என்னுந் தமிழ்  மறையானும்  .” அப்பெரி யோர்  , சிரமெலாந்  தொடுத் தணியலா வணிந்ததிடும் “ எனவும் ”ஆதலாற்றனை  வியப்பதற்  கன்றவையணிதல்  ,ஈதலாதொரு திறமுளதியாவரு மெவர்க்கும்  , நாதனே  யிவனென்று தன் பாங்கரே நண்ணித், தீதெலா  மொரீஇ முத்தி பெற்றுந்திடுஞ் செயலே  “எனவும்  கந்தபுராணங் கூறுமாற்றானும்  அறிக .

                    அத்தலை யோடுகள்  வெண்ணிற  வொளி யுடையனவாகக்  காணப்படுதலின் , “தாரகை போலும்  “  என்று  உவமிக்கப்பட்டவை  .இவ்வரலாற்றுக்  குறிப்புச்  சிவபெருமான்  விண்ணோர்  முழுமுதலென்பதைப் புலப் படுப்பதாம் . “தலை மாலை  தலைக்கணிந்து தலையாலே  பலிதேருத்  தலைவன் “ என்று   தமிழ் மறை கூறுதலும்  உணர்க .  தழல் – ஈண்டு நஞ்சென்னும்  பொருட்டு , தழலுமிழரவம் “ என்புழி  அப்பொருட்டாதல்  அறிக . இறைவன்  அணிகலனாக  அணிந்த  பாம்புகள் இருவகைய ; திருமாலூர்  தியாகிய  கருடனுக்கு  அஞ்சி   இறைவனைப்  புகலடைந்தன  ஒரு வகை , மற்றொரு வகை தாருக  வனத்து முனிவர்  இயற்றிய  கொடிய  வேள்வியினின்றுந்  தோன்றி  இறைவனுக்குத்  தீங்கிழைக்க   வந்தனவாம் .இவ்விருவகையும்  , ஈண்டுக்  குறிக்கப்பட்டன. வேள்வித் தீயினின்றுந் தோன்றின வென்பது ,  “தழலர ; வெனவிசேடிக்கப்  பட்டமையானாம் . கருடனுக்கு  அஞ்சிப்  புகலடைந்தவை  கொடுந்தன்மை  யொழித்து  சாந்தமெய்தின வென்பதும் , மற்றவை  “வேள்வி யெரியழற் கிடையே யெண்ணில், பாந்தளங் கெழுந்து  தீயோர்  பணியனாற்  சீற்றத்தோடும்  போந்தன “  என்றதனால்  நஞ்சைக்  கான்று  வந்தன வென்பதும் ஈண்டுக்  கருதத்தக்கன .  

                        தலையோடு  மலர் போலத்  தொடுத்தணியத்  தக்கனவாகலின்  , அவற்றை  மாலையாகவும்  , பாந்தள் முத்தார  போலப்  பூணத்தக்கன வாகலின் , அப்பாம்புகளைப்  பூணாகக்  கொண்ட  இந் நிகழ்ச்சி பகை வலியைக்  கடக்கும் இறைவனது  வீரத்தன்மையைப்  புலப்படுத்தற்கு  எடுத்துக்காட்டாகுமென்பது .

                         இங்ஙனம்  கடவுட் டலைமைத்  தன்மையும் வீரச்செயலும்  உடைமையால் , “வீர” எனவும்  , யாது செய்வல் எனத் திகைப் புற்றிருக் கும்   இந் நிலையிற்  சிறியேனைத்  தேற்றி  யேன்று  கொள்ள வேண்டியது வீரானாகிய  நினக்குக்  கடமையாகவும்  , கைவிடல்  தகுமானென்பார் , “ என்றன்னை விடுதி கண்டாய்” எனவும்  கூறினர் . யாவர்க்கு  மேலாளவிலாச்  சீருடைய  நீ , யாவர்க்குங் கீழாம்  அடியேனைக் கைவிடின் , என் எளிமையை நோக்கி  வினவுவார்க்கு  , வாழையடி  வாழையாக வந்த என் அடிமையியல் பின் உண்மையை  யான்  கூற  நேருதெனவும் , அதனால், இவ்வேழைக்கு  யாதுங்குறை நேராதெனவும், நின் அளப்பரும்  பெருமைக்கே  குறை நேருமெனவும் குறிப்பிற்  புலப்பட  நகைச்சுவை தோன்றக்  கூறுகின்றார் .

                     நின்னாற் கைவிடப்பட்ட  நிலையில் அறிவொழுக்கங்களிற்   சிறந்த பெரியார்  என் எளிமையைக்  கண்டு  “ஏன் இப்படித் துணையின் றித்  துன்புறுகின்றாய்? அடிமைத்தன்மையும்  உளதே ; நீயார்க்கு அடியவன் “   என்று  என்னை  வினவுவராயின்  என்பார் , “  என்னை  மிக்கார்  ஆரடியானென்னின் “ என்றார் . மிகுதி ஞான சீலங்களின்  மேற்று . உலகத்தில் மெலிந்து நல் கூர்ந்தானொருவனைக்  காண்பார்  வினவ  நேரின்  , நீ எக்குடும்பத்தவன்  என்று குடும்ப இயல்பு பற்றிக் கேட்பதியல்பு .

                          ஈண்டு  அடிகளுக்குத் தந்தை  தாய்  குரவனாசான்  சங்கரனிராசை பெண்டிற் , மைந்தர்  பல்லுயிருஞ்சுற்ற  மாசிலா  வீசனென்பர்  ஆதலின்,  “என்னை மிக்கார்  ஆரடியானெனின் “ என அடிமையியல்பு  பற்றி  வினவுவாரென  அடிகள்  கருதினாரென்பது . இனி, அவ்வினாவிற்கு  விடையாக  என்னாற் கூறத்தக்கது  இன்னதெனக்  குறிப்பிடுகின்றார் .  முதலில்  தம்மை அடிமைகொண்ட   பரம்பரைக்கு  இடன்  இன்னதெனவும் , அப் பரம்பரை முதல்வன்  இன்னானெனவும்  கூறுவாராய்  , “ உதர கோச மங்கைக் கரசு “ என்றார் . அரசு  என்றதனால்  உத்தரகோச மங்கை சிவராசதானி  யென்பது பெறப்படும் .

                           தெய்வ அரசுக்குரிய  திருத்த சாங்கத்தில் ஊர்  கூறுகின்றுழி  , “பத்தரெலாம்  பார்மேற் சிவபுரம் போற்  கொண்டாடும்  , உத்தரகோச மங்கையூர் “ என்று   அடிகள் பிறிதொரிடத்துக்  கூறியிருத்த லும்   ஈண்டு  நோக்கத்தக்கது .  அப்பேரூரிலுள்ள   தெய்வ அரசாக  விளங்குபவன்  சிவபெருமானெனவும்  , அப்பெருமானுக்கு   அணுக்கராய்த் தொண்டு  பூண்டு  ஒழுகும்  மெய்யன்பரே  சிறப்பு மிக்க   மெய்யடியாராவரெனவும்   மரபின்  பெருமை  புலப்படுத்து , இப்பொழுது  அம்மரபின் முதல்வனாகிய  நின்னால்  புறக்கணிக்கப்பட்டு  ஒடுங்கிக்  கிடக்கும் யான்  அவ்வுயரிய  மரபில்  வந்த அடியார்க்கு  அடியனாவேனென்று  வெளிபடக் கூறி நின்னைப்  பரிகசிக்கச்  செவேன்  என்பார் , “அரசின் சீரடியாரடியானென்று   நின்னைச்  சிரிப்பிப்பனே” யென்றார் .

                            சிரித்தல் – பரிகசித்தல் . “சகம் பேயென்று   தம்மைச்  சிரிப்ப” என்புழியுங்  அப்பொருட்டாதலறிக .  ஓர் உயர்ந்த மரபின்   முதல்வர்  சீர்மையுடையவராக  வாழ்ந்திருப்ப  , அம் மரபிற் றோன்றிய  ஒருவன்  ஆதரவற்று  எளியனாயிருப்பின் , அந் நிலையைக்  கண்டார்   அம்மரபு  முதல்வரை  யெள்ளி நகையாடல்   உலகியலிற்  காணப்படுவ தொன்றாதலின் , அம்முறை பற்றி  இவ்வாறு  கூறினர்  . இது மழவிளங் குழவி   இருமுதுகுரவரை அன்பினாற்  கூறுங் குறை போல்வதொன்று .

இதன்கண் , யான் அரசன் சீரடியாரடியனாக  இருந்தும்  புறக்கணிக்கப்படுதற்கு  ஏதுவாக உலகியற்  பற்றுடையவனாக உழல்கின்றேன்  என்று  அடிகள்  கருதினாரென்பது பெறப்படுதலின், பிரபஞ்ச வைராக்கியம்  புலனாதலறிக .

                                                    ***********************************

பாடல் : 49 .

சிரிப்பிப்பன்  சீறும்  பிழைப்பைத்  தொழும்பையு  மீசற்கென்று

விரிப்பிப்பன்  என்னை  விடுதிகண்  டாய்விடின்  வெங்கரியின் 

உரிப்பிச்சன்  தோலுடைப்  பிச்சனஞ்  சூண்பிச்ச  னூர்ச்சுடுகாட்

டெரிப்பிச்சன்  என்னையும்  ஆளுடைப்  பிச்சனென்  றேசுவனே

கருத்துரை :- முன்னைத் திருப்பாட்டில் சிறியேன் திகைப்புற்ற  நிலையில் தேற்றுதற்குரிய  தகுதி , முழுமுதற்றலைவனும்  தெய்வீக  வீரனுமாகிய  நின்பாலதாமென்பதைக்  குறிப்பிற் புலப்படக்கூறிய  அடிகள் , இத்திருப் பாட்டில்  அத்தகைய  நின்னாற் றேற்றப்படின்  ,என் உலக  வாழ்க்கையை  யெள்ளி வெறுத்து , நின் உடனுரை  வாழ்க்கை யாகிய  திருத்தொண்டின்  பெருமையை விரித்து விளக்கிப்பாராட்டி  மகிழ்வேன்  என்று  விண்ணப்பஞ் செய்து கொள்ளுகின்றார் .

பதவுரை :- சீறும்  பிழைப்பைச்  சிரிப்பிப்பன்  =  வெறுக்கத்தக்க   என் உலக  வாழ்க்கையை எள்ளி நகையாடச்  செய்வேன் ,

தொழும்பை ஈசற்கு  என்று  விரிப்பிப்பன்   =   தொண்டு பூண்டு  ஒழுகுதலை  இறைவனுக்கே  யென்று  யாண்டும் பரவும்படி  செய்வேன் ,

என்னை  விடுதி  =  இத்தகைய  அடியேனைக் கைவிட்டு விடுவாயோ? ,   விடின்  =   கை விடுவாயின்  ,

வெம்கரியின்   உரிப்பிச்சன்  =  கொடிய யானைத்  தோலைப்  போர்த்த பித்தன் ,

தோலுடைப் பிச்சன்  =  புலித்தோலை  யுடுத்த பித்தன் ,

நஞ்சு ஊண்  பிச்சன்  =  நஞ்சை யுணவாகக்  கொண்ட  பித்தன் ,  

ஊர்ச் சுடுகாட்டு  எரிப்பிச்சன்  =  ஊர்க்குப்  பொதுவாகிய  சுடலைத் தீயில்  ஆடும்  பித்தன் , 

என்னையும்  ஆகுடைப்பிச்சன்  =  தகுதியற்றவனாகிய  என்னையும்   ஆட்கொண்ட பித்தன் ,

என்று  ஏசுவன்  =  என்று  இவ்வாறு  கூறி  இகழ்ந்துரைபேன்  என்பது .

விளக்கவுரை  :-  நரை  திரை  மூப்புப்  பிணி  சாக்காடு  என்னும்  இவற்றிற்கு   இடனாகிய  ஊனுடம்பைப்  பெற்ற  பொழுதே  அதனைக்  கடவுட்  பணியாகிய  தவத்திற்கு  உரியதாக்கல்  வேண்டும்  .  அங்ஙனம்  செய்யாமல்  உண்டுடுத்துறங்கும்  அளவில்  அமையுமாயின்  ,அவ்வுடலோடு  கூடிய  உயிர் வாழ்க்கை  வெறுக்கத்தக்கதாக  முடியுமாதலின்  ,அதனைச்  “சீறும்  பிழைப்பு” என்றார் .  சீறுதல்  –  வெகுளல் . வெறுத்தல் . இங்ஙனம்  வெறுக்கத்தக்க  வாழ்க்கையை  விரும்பத்தக்க தெனக்   கொள்ளாமல்  யான்  எள்ளியொழிப்பதொடு   பிறரும்  இவ்வுண்மையையுணர்ந்து  எள்ளி  நகை யாடற்கு  ஏற்பச்செவேன்  என்பார் , “சிரிப்பிப்பன்” என்றார் . இனி, இவ்வுடல்  கொண்டு  மன மொழி மெய்களால்  நினைந்தும்  வாழ்த்தியும்  வணங்கியும்  செய்யப்படும்  தொண்டு  , எல்லாம்  வல்ல  இறைவனைக்  குறித்தே  செய்யத் தக்கதென எப்பொழுதும்  எவ்விடத்தும் யான் முக்கரணங்களாலும்  இயன்ற வரை  பரப்புவேனென்பார் ,  “தொழும்பை யீசற்கென்று  விரிப்பிப்பன் “ என்றார் .

               ஈசற்கே  என்புழித்  தேற்றேகாரம்   விகாரத்தாற்றோக்கது .தொழும் பையும் என்புழி  உம்மை  இசை  நிறை . ஈசன் என்னும்  சொல்  சிறப்பு  முறையில் சிவபெருமானையே  யுணர்த்துமென்பது  மறை  யாகமங்களிற்  கண்டவுண்மை. மனம் பொறி புலங்களுக்கும்  , மண் , பெண் , பொன்  முதலியவற்றிற்கும் , செல்வர்  முதலியோர்க்கும்   அடிமைபட்டு  வாழ்தல்  ஆகிய  உலகத் தொண்டு   சீறும்  பிழைப்பின்பாற்  படுமாதலின்  , அதனை  விலக்கி  ஊனடைந்த  வுடம்பின்  பிறவியே  , தானடைந்த வுறுதியைச்   சார் தற்குரிய   கடவுட்டொண்டே  சிறந்த  தாகு மென்பார் ,  “ஈசற்கே” யென  வலியுறுத்துக்  கூறினர் . நலம்  தொன்றடைதற்கு  விலக்கத்தக்கதும்  மேற் கொள்ளத்தக்கதும்  இன்னவெனவுணர்ந்து , முதலில்  விலக்கத்தக்கதை  விலக்கியபின்   கொள்ளத்தக்கதைக் கொள்ளல்  வேண்டுமாதலின் அம்முறையில்  அழிவிலின்பப்   பேற்றிற்குத்   தடையாகவுள்ள   உலகத்தொண்டை யொழித்துப் பின் அப்பேற்றிற்கு இன்றியமையாச் சாதன மாகிய  சிவத்தொண்டைக் கொள்ளல்வேண்டுமென்பது  புலப்பட  அம்முறையில்  வைத்து ஊதினாரென்க .  

                      “சீறும்  பிழைப்பைச் சிரிப்பன்” எனவும்  ,”தொழும்பை  யீசற்கென்று  விரிப்பன்  “ எனவும்  தம்மளவிற்  கூறாது , “சிரிப்பிபன் “  விரிப்பிப்பன்”  எனப் பிறரையும்  அவ்வாறு  செய்யச்  செய்வன்  என்று  கூறியது , “நான் பெற்ற  வின்பம்  பெற்க விவ்வையகம் “என்னும்  உட்கோள் பற்றியென்பது . அரிய தவத்தால்  அடையத்தக்க  வீட்டின்ப நுகர்ச்சிக்கும்  பிறரை அறைகூவியழைக்கும்  பெருமை  நம்  சைவப்பெரியார்பால்  உளதென்பதை   யாவரேயறியார்?  நாம் இனியெடுத்த தேகம்  விழுமுன்   புசிப்பதற்குச்   சேரவாருஞ்   செகத்தீரே”  என்னும்  தாயுமானவர்  உரையும் , கொள்ளை கொள்ள   வீடுதவிக்  கூற்றைப்  பிடர்பிடித்துத்  தள்ளிய   திருஞான சம்பந்தர்  செயலும்  இவ்வுண்மையை   வலியுறுத்து நிற்றலறிக .  

               இங்ஙனம்  உலக வாழ்க்கையை  யானும் வெறுப்பேன் ; பிறர்  எள்ளி நகையாடுதற்   கேற்றதையும்  செய்வேன்  எனவும்  , தொண்டு  இறைவனாகிய  நின் பொருட்டே  செய்யத்தக்க  தென்பதை  யானும்  உணர்வேன் ; பிறர்  உணரவும்  விரித்து விளக்குவேன்  எனவும்  , இந் நீத்தல்  விண்ணப்பத்தின்  இறுதிப் பகுதியில்  அடிகள்  தம் முள்ளத்திற் கண்ட   மெய்களைத்  தந்தையிடத்துக்  குழந்தை  கூறுதல்  போலக்கூறி, இந் நிலையிலுள்ள  என்னைக்  கைவிடல்   தகுமாவென்பார் ., “ என்னை விடுதி கண்டாய் “ என்றார் . 

                   இவ்வுண்மையை   விண்ணப்பஞ் செய்யக் கேட்டும்  என்னைக்  கைவிடுவாயாயின்  , என் உள்ளத்தில்  நின்னைப்பற்றியறிந்த  சில செய்திகளை  யெடுத்துக் கூறி  நின்னை  ஏசுவன்  எங்கின்றார் . இறைவனை  வாழ்த்துதற்குரிய  அருஞ் செயல்களையே  அடிகள் வைதற்குரியனவாகக்  கொண்டு  கூறின  ரென்பது பின் வருவனவற்றால்  விளங்கும் .

                     ஊண் உடை உறையுள் மூன்றையும் மாறுபடக் கோடல்   பித்தர்  செயல்களாகும்  .  யானைத்  தோலைப்   போர்வையாகவும்  ,புலித்தோலை   யுடையாகவும்  கொண்ட பித்தன்  என்றதனால்  உடையின்  மாறுபாடும்  , நஞ்சுண்ட பித்தன்  என்றதனால்  உறையுளின்  மாறுபாடும்  புலனாதல் அறிக . இம் மூன்றனாலும்   முறையே  இறைவனுடைய  முடிவிலாற்றலும்  , பேரருளுடைமையும்  முழு முதற்றன்மையும்   ஆகிய  பெருமையே  வெளிப்பட்டு  நிற்றல்  அறியத்தக்கது .  சுடுகாடு  இன்னதென்பதையும்  அதன்கண், இறைவன்  நடமாடுதலின்  உண்மையையும்   திருச்சதகம்  ஏழாம் திருப்பாட்டின்  விளக்கவுரையிற்   காண்க .  ஏசுதற்குரிய  இறை செயல்களாக  இங்கே  கூறப்பட்ட  மூன்றன்   மேலும்  சிறந்ததாக  ஒன்று  கூறுகின்றார் .   

                           அஃது ஆட்கொள்ளுதற்குரிய  தகுதி ஒரு சிறிது மில்லாத  சிறியேனையும்   ஆளாகக்கொள்ளும்  பித்தன்  என்பது . என்னையும்  என்புழி உம்மை இழிவு சிறப்புப் பொருட்டு  . அன்பரைக்  குற்றங்களைந்து  ஆட்கொள்ளுதல்   இறைவனுக்கு  இயல்பினமைந்த   பேரருளுடைமை யானாகும்  . ஆதலின்  , இதுவும்   அப்பெருமானுடைய   அளப்பரும்  பெருமையையே  புலப்படுத்து மென்பதுணர்க . இங்ஙனம்  வாழ்த்தினும்  வையினும் இறைவன்  மாண்பே  அடிகள்  நெஞ்சினும்  நாவினும்  நின்று  வெளிபடு மென்பது நினைந்து இன்புறத்தக்கது .  

                             இதன்கண், “சிரிப்பிப்பன்  சீறும்  பிழைப்பை “ யென்றதனால் , உலக  வாழ்க்கை வெறுத்து யெள்ளி நகையாடற்குரிய தென்பது பெறப்படுதலின்  , பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக . 

                                             ********************************************

பாடல் : 50 .

ஏசினும்  யானுன்னை  யேத்தினும்  என்பிழைக்  கேகுழைந்து

வேசறு  வேனை  விடுதிகண்  டாய்செம்  பவளவெற்பிற் 

றேசுடை  யாயென்னை   யாளுடை  யாய்சிற்  றுயிர்க்கிரங்கிக் 

காய்சின  வாலமுண்  டாயமு  துண்ணக்  கடையவனே .

கருத்துரை :-  முன்னைத் திருப்பாட்டில்  உலக  வாழ்க்கையை எள்ளி நின் உடனுறை வாழ்க்கையாகிய  திருத்தொண்டை  விளக்கிப்  பாராட்டி  மகிழ்வேன் என்று  கூறிய  அடிகள் , இத்திருப்பாட்டில்   அப்பாராட்டு வைதல்  வாழ்த்துதலாகிய  இருதிறத்தானும்  முறையே   குறிப்பினும்  வெளிபடை யினும்  நிகழுமாதலின்  , அவ்வீரிடத்தும்  உண்டாம் என்  குற்றத்திற்கு   வருந்துகின்றேன் ; பொறுத்தருள  வேண்டுமென்று  வின்ணப்பஞ் செய்து  கொள்ளுகின்றார் .

பதவுரை :-  செம்பவள  வெற்பின்  தேசு  உடையாய்  =  செந்நிறமுடைய   பவள மலைபோல்  ஒளி விளங்கும்  திருமேனியை  யுடையவனே ,

என்னை  ஆளுடையாய்  =  சிறியேனை  ஆளாகக்  கொண்டவனே ,

அமுது உண்ணக்  கடையவன்  =  அமிழ்தம்  உண்ண  உரிமையுடையனாக  இருந்தும் ,

சிறுமை உயிர்க்கு  இரங்கி  =  சிறிய  உயிர்த்தொகுதிகளுக்கு    நேருந் துன்பத்திற்கு  இரக்கமுற்று ,

காய்  சினம்  ஆலம்  உண்டாய்  =  கொதித்தெழும்  கொடுமை மிக்க  ஆலாலமென்னும்   நஞ்சையுண்டருளியவனே

யான்  உன்னை  ஏசினும்  ஏத்தினும்  =  அடியேன்  ஆண்டவனாகிய   நின்னைக்  குறித்துப்  பழித்துரைப்பினும்  புகழ்ந்துரைப்பினும் உண்டாம்

என் பிழைக்கே  குழைந்து வேசறுவேனை  =  என் குற்றத்தையே  கருதி உள்ளமுருகி வருந்துவேனை , 

விடுதி  =  கைவிட்டு விடுவாயோ (விடலாகாது) என்பது .

விளக்கவுரை :-  இறைவன்  அருளுருக்  கொள்ளுங்கால், ”நிறங்களோரைந்து டையாய்” என்றபடி அவ்வருட்டிரு மேனிக்குப் பல  நிறங்கள்  சிவாகமங்களிற்  கூறப்பட்டிருப்பினும்  , ஞானாசிரியனாக எழுந்தருளி   அன்பர்க்குக்  காட்சியளிக்குங்கால்  மேற்கொள்வது ,செந் நிற வொளி மிக்க திருமேனி யாகும் . இவ்வுண்மையைச்  “ செம்மேனி யெம்மான்”  “தழல் வண்ணன்”  “பவளமே திருவுடம்பு “  என்பன  முதலிய  ஞானப் பனுவல்களானறியலாம் .  பவள வெற்பு –  இல் பொருளுவமை . எந் நிறத்தினும்  ஒளியுடைமையே அழகு  செய்வதாகும் .  நிறம்  ஒளி என்னும்  இரண்டனியைபும்  உடலுயிர்களின்  இயைபு  போற்  கொள்ளத்தக்க தென்க .

                      அவ்விரண்டனுள்ளும்   ஒளி சிறந்த தாகலானும்,  நிறம்  செம்மை யென்னும்  உவமையடையாற்  பெறப்பட்டமையானும்  “செம்பவள வெற்பின்  நிறமுடையாய்”  என்னாது , “தேசுடையாய் “ என்றார் . தேசு – ஒளி . இங்ஙனம்  விளித்தது ஞானாசிரியத்  திருவுருவைக்   குறிக்கொண்டென்க.   அடுத்து “என்னை யாளுடையாய்  “  என்றதனாலும்  இது வலியுறுவதாகும் . “வெற்பிற் றேசுடையாய்”  என்றதனால்  இறைவனது அளப்பரும்  பெருமையும் , “என்னையாளுடையாய்” என்றதனால்  அப்பெருமானது பேரருளுடைமையும்  புலப்படுக்கப்பட்டபடியாம் .

                       இவ்வளவில்  அடிகள்  தம்  பொருட்டு  இறைவன்  செய்த  பேருத வியைப்  புலப்படுத்து,  மேல் மக்கள்  தேவர்  முதலிய  எல்லோர்க்கும்  அப்பெருமான்  செய்த பேரருட்  செயலைக்  கூறுகின்றார் ,  இவை முறையே சிறப்பும்   பொதுவுமாகும்  .  உலகியலறம்  வகுத்த  திருவள்ளுவர்  , ஒருவன் மற்றொருவனுக்கு  உற்றுழி  யுதவுதலாகிய  சிறப்பறத்தை  ஈகையெனவும்  , பலருக்கும்   பயன்பட   உதவுதலாகிய   பொதுவறத்தை ஒப்புரவு எனவும்  வகைப்படுத்துக் கூறியிருத்தலும்   ஈண்டு  நினைக்கத்தக்கது .

                           “அமுதுண்ணக் கடையவன் “  என்புழிக் கடையவன்  என்பது  கடமையுடையவன்  என்னும்  பொருட்டு  . கடமை  ஈண்டு  உரிமைப்  பொருண்மேலதாம் . கடமை என்பதில்  “மை” விகுதி கெட்டு   இடை  அகரம்   ஐகாரமாகி  விகுதியேற்றுக்  கடையன்   கடையவன்  என்றாயிற்று , பழமைப் பகுதியினின்றும்    பழையன்   பழையவன்  என்றாயது போல  வென்க .  அமுதும்  நஞ்சும்  உண்டார்க்கு  முறையே   சாவாமையை  சாதலையும்  பயக்குமென்ப .  அவற்றுள் , அமுது கடவுளர்க்குரிய  வுயர்ந்த வுணவாதலின் ,  அதனையுண்டாற்கு  உரிமை   கடவுளர்  தலைவனாகிய   நினக்கே  யுளதாகவும்  , சிறிய வுயிர்கள்  பால்  வைத்த கருணை காரணமாகச்   சாவாமையைப்  பயப்பதாகிய  அவ்வமுதவுணவை  யொழித்துச் , சாதலைப்  பயப்பதாகிய   நஞ்சையுண்டருளினாய்  என்பது  கருத்து .

                           கடையவன்  என்பதன் பின் சில சொற்கள்  அவாய்  நிலையான்   வருவித்துரைக்கப்பட்டன . இனிக் கடையவன்  என்பதற்குக்  கடைந்த அவன், திருமால்   எனப்பொருள் கொண்டு   திருமால்  அமுதுண்ண  நஞ்சமுண்டவ னே  யெனக்  கூறுவாருமுளர் .  கடைந்தவனும்  அமுதுண்டவனும்   திருமால் ஒருவன்  மாத்திரம்  அல்லன் ; தேவரெல்லோரு  மாவ ராதலானும்  , இறைவன்  நஞ்சுண்டற்கு  ஏது  “சிற்றுயிர்க் கிரங்கி” என்பதனாற்  பெறப்பட்டமையானும்   அவ்வுரை  பொருட் சிறப்புடைய தன்றென்க .

                          சிற்றுயிர்  என்றது கன்மத்திற்  கீடாகப்  பிறப்புக்களிற்  பட்டுழலும்  சிறுமையுடைய  மக்கள் தேவர்   முதலியவுயிர்த் தொகுதிகளை  அமுதமுண்டு  அமர வாழ்வு  பெற முயன்றார்க்கு  முதலிற் றோன்றியது  ஆலால மென்னுங் கொடிய  நஞ்சாக  , அது கண்டு பெரிதுங் கலக்கமுற்ற   அவ்வுயிர்த் தொகுதிகளின்  பொருட்டு மேற்கொண்ட  இரக்கங்காரணமாக  வென்பார் , “சிற்றுயுர்க்கிரங்கி “ என்றார் . இறைவன்  தன் ஆற்றலைப்  பிறர்  அறிய வைத்தற்கு   இக்கொடிய  நஞ்சை   யுண்டானல்லன் என்பது புலப்பட  “இரங்கி”யென அருட் குணத்தைக்  காரணமாகக்  குறிப்பிட்டார்  என்க .         காய் சினம்  – வினைத்தொகை  . காய்தல் –  சுடுதல் .  சினம் – வெகுளி ., கொடுமை .  

                      இறைவன்  உண்ட  நஞ்சு  வலியிழந்ததால்  மணிமந்திர   மருந்துகளால்  ஒழிக்கத்தக்கதாதல்  அன்றென்பார் , “காய்ச்சின  வாலம் “ என்றார்  . அடிகள் “என்னையாளுடையாய் “ என்றதனால்  தமக்குச் சிறப்பு  வகையிற்  செய்த பேருதவியையும்  , “சிற்றுயிர்க்கிரங்கிக்  காய்சின  வாலமுண்டாய்”  என்றதனால் பிறவுயிர்த் தொகுதிகளின்  பொருட்டுப்  பொது வகையிற்  செய்த பேருதவியையும் குறிப்பிட்டபடியாம் .

                         இனி, இறைவனைத்  தாம்  இகழ்தல்போற்  புகழ்ந்தும் , வெளிப்படையாய்ப்  புகழ்ந்தும் கூறியவற்றில்   நேரும்  பிழைகளுக்கு   வருந்திப்  பொறுத்தருள  வேண்டுகின்றார் . , ஏசுதல்  ஈண்டு  மழைதருகண் டன்  குணமிலி மானிடன்   தேய்மதியன்  நஞ்சுண்பிச்சன்  முதலாக  ஒருவாற்றாற்   சொல்லளவிற்  பழித்துரைத்தலாகும்  .  இத் தொடர் மொழி களில்  இறைவன்  பெருமையே  புலப்படுக்கப்பட்டு ப் புகழ்தலாக முடியுமாயினும் , கேட்பார்  ஓரளவு  பழித்தலாகவும்  கருதுதற்கு  இடந்தருத லின்,  அவ்வளவிற்  பிழை  செய்தாகுமென்பது .

                             ஏத்துதல் – உயர்த்துக் கூறிப்புகழ்தல் .  இறைவன்  பெருமை  மாற்ற  மனங்கழிய  நின்றதாகலின்  , “அவன்  பூங்கழல் யாம்பேசத்  திருவார்த்தையிற்  பெருநீளம்” என்றபடி  விரித்துரைக்கப் புகின் , ஓரள விலடங்காமல்   பெருகிச் செல்லுதலாலும், தொகுத்துரைக்கப்  புகின்  , முற்றுங்கூறப்பட்டதாக  முடியாமையாலும்  குறையாகவே  கூறியதாக முடிதலின், அதுவும் பிழை  செய்ததாகுமென்பது .. எங்கும்  நிறைபொருளாக  வுள்ளவனை  ஓரிடத்து  ஒரு திருக்கோயிலுள்ளான்  எனவும்  ,எச்செயலும்  , வல்லானைச்  சிற்சில  செயல்களைக்  குறிப்பிட்டு  அவற்றில்  வல்லானெ னவும்  கூறுதல் போல்வன  புகழ்தலாயினும்  , குறையாகக்  கருதுதற்கு  இடந்தருதலின்  , பிழை செய்ததாக   முடியுமென்பது கருத்து. இவ்விருதிறத் தானுமன்றிப்  பேச்சு   நிகழ்தற்கு  இடனின்று.   

                                 ஆதலின், இவ்வீரிடத்தும்  நிகழும்  பிழைகளை  நினைந்து வேறு  போக்கிடனில்லாமையால்  உள்ள முருகி  வருந்துகின்றேன்  என்பார் . “ஏசினும் யானுன்னை யேத்தினும்  என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை” என்றார் .

                                 ஆண்டவனே !  குற்ற நற்றம் இரண்டும்  மக்களியல் பாயினும்  , நின்னைக் குறித்து , யான்  பேசுவனவெல்லாம்  குற்றமாகவே  முடிதலின்  அதற்கே  வருந்தலானேன்  என்று  அடிகள் கருதினாரென்பது  பெறப்படுதலின்  , “என் பிழக்கே “ என்புழி  ஏகாரம்  பிரிதலைப்  பொருளதாகும் . வேசறுதல் – வருந்துதல் . சிற்றறிவுடைய வுயிர்கள்  பிழை செய்தல் இயல்பாயினும்  , பின் அது பிழையென  வுணர்ந்து  வருந்திப்பிழை பொறுக்க வேண்டின்  , பொறுத்துப்  பாதுகாத்தல்   பேரருளாளனாகிய   நினக்குக்  கடனாதலின் , சிறியேன் பிழை கருதிக் கைவிடாமற்  காத்தருள  வேண்டுமென்பார் , “வேசறு வேனை விடுதி கண்டாய்”  என்றார் .  

               இனி,  “ஏசினும் …………விடுதி” என்பதற்கு , யான்  உன்னை வைதாலும்  வாழ்த்தினாலும்  அவற்றைப்  பொருட்படுத்தாமல்  , என் பிழை குறித்து  வருந்து கின்றேனாதலின்  , அதுபற்றியேனும்  என்னைக்  கைவிடலாகாது  என்று  பொருள்  கூறலுமாம் . இத் திருப்பாட்டு  நீத்தல் விண்ணப்பத்தின்   இறுதியா தலின் , ஈற்றடி  யீற்றிலுள்ள  “கடையவனே” யென்பது  தொடக்கத் திருப் பாட்டின்   முதலோடியைந்து  அந்தாதித்   தொடயாயினமை  அறிக .  

                இதன்கண் ,”ஏசினும்  யானுன்னை   யேத்தினும்  என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை”  யென்றதனால் , உலக  வாழ்க்கையைப்  பற்றி நிற்பார் செயல்  எவ்வாற்றானும்  பிழைபடுமென்பதும் ,அதற்குக்  காரணமா கிய   உலக  வாழ்க்கை  வெறுக்கத்தக்கதென்பதும்  பெறப்படுதலின்  பிரபஞ்ச  வைராக்கியம்  புலனாதலறிக .  

                   திருவாதவூரடிகள்  அருளிச்செய்த  திருவாசகத் திருமறைக் கண்ணுள்ள   நீத்தல்  விண்ணப்பத்திற்குப்  பாண்டி வளநாட்டில்   பூங்குன்றநாட்டுத்  தலைநகராகிய   மகிபாலன்பட்டி  மகாமகோபாத்தியாய  முதுபெரும் புலவர் , பண்டிதமணி  மு . கதிரேசச்   செட்டியார்  இயற்றிய  கதிர்மணி விளக்கம்  என்னும்  பேருரை  முற்றுப்பெற்றது . 

                                              திருச்சிற்றம்பலம்

                                                     முற்றும் 

                                                         *****