பிரதாபருத்திரீயம் – குற்றவியல்

குற்றவியல்

((*    ) இக்குறியிடப்பட்ட அனைத்தும் தெலுங்கு மொழியில் உள்ளன. பின்னர் இவற்றையும் இங்கு தருவதற்கு முயற்ச்சிக்கிறோம்.)

 

காப்பியத்திற்குயிரெனப்பட்ட சுவையை விளக்கிக் கூறிய பின்னர், அதனையழகுபடுத்தற்கேதுவாகிய குணங்களை[1] நன்கு உணர்த்தற்பொருட்டு, குற்றங்கள் விளக்கமாகக் கூறப்படுகின்றன.

குற்றத்தின் பொதுவிலக்கணம் வருமாறு:

குற்றம் என்பது, காப்பியம்[2] இழிவுறற்கேதுவாய் அமைவது; அது, சொல் பொருள் என்னுமிவற்றைப் பற்றி நிற்பதாம்.

காப்பியம் சொற்பொருள் வடிவினதாகலின் அஃதிழிவுறற்கேதுவாய் அமையுங் குற்      றமும், சொல்லைப்பற்றியதும் பொருளைப்பற்றியதும் என இருபடித்தாம்; அச்சொற்குற்றம்[3], சொல்லைப்பற்றியதும் சொற்றொடரைப்பற்றியதுமென இருதிறத்து.

அவற்றுள் சொற்குற்றங்கள் கூறப்படுகின்றன. வழக்கின்மை (*        ) பொருட்செறிவின்மை (*         ) அசமர்த்தம் (*            ) நின்று பயனின்மை (*              ) நேயார்த்தம் (*           ) வழூவுச்சொற்புணர்த்தல் (*                 )  மயங்கவைத்தல் (*         )                அப்பிரயோசகம் (*                ) கிலிட்டம் (*       ) மறைபொருண்மை (*            ) இழிவழக்கு (*         ) வேற்றுப்பொருண்மை (*                  ) விளக்கமின்மை (*                 ) விதிச்சிறப்பின்மை (*                  ) மறுதலைப்பொருடரல் (*                  ) அமங்கலம் (*                 ) கொடுஞ்சொற்புணர்த்தல் (*              ) என்னுமிப்பதினேழும் குற்றங்களெனக்கூறப்படும்.

 

 இவற்றின் இலக்கணம் விளக்கப்படுகின்றது

வழக்கின்மை:—

கவிகள்[4] நூல்களில் எடுத்தாளாமை

வழக்கின்மையென்று வழுத்துவர். (ஙஇ)

 

பொருட்செறிவின்மை:—

சந்தர்ப்பத்திற்குரிய பயனில் பொரு

ளுடைமை, பொருட்செறிவின்மையாம். (ச)

 

அசமர்த்தம்:—

உறுப்பாற்றன் மாத்திரையிற் சிறந்

தது, அசமர்த்தம் எனக் கூறப்படும்.  (சஇ)

 

நின்றுபயனின்மை:—

அடி நிரப்பி நிற்குமளவிலமைவுறல்,

நின்று பயனின்மையென்பதாம்.  (ரு)

 

நேயார்த்தம்:—

தன்குறியளவிலடங்கிய பொருளு

டைமை, நேயார்த்தம் எனப்படும்.  (ருஇ)

 

வழூவுச் சொற்புணர்த்தல்:—

இலக்கணவமைதியின் முரணுறக்கூறல்,

வழூவுச் சொற்புணர்த்தல் என்பதாம்.  (கா)

 

மயங்கவைத்தல்:—

ஐயப்பொருளைத் தோற்றுவித்தல்,

மயங்கவைத்தல் ஆம்.  (சாஇ)

 

அப்பிரயோசகம்;—

சிறப்பினைக் கூறாதொழிவது,

அப்பிரயோசகம் ஆம்.  (எ)

சிலிட்டம்:—

சேய்மைத்தாய பொருளுணர்வு,

கிலிட்டம் ஆம்.   (எஇ)

 

மறைபொருண்மை:—

விளக்கமில்பொருளதாச் சொல்லை வழங்

குதல், மறைபொருண்மையாம்.   (அ)

 

இழிவழக்கு:—

இழிந்தோரது வழக்களவிலமைவுறல்,

இழிவழக்கென்ப.    (அஇ)

 

வேற்றுப்பொருண்மை:—

சொல்லாற்றலின் வழீஇய பொருளு

டைமை, வேற்றுப்பொருண்மை ஆம்.  (கா)

 

விளக்கமின்மை:—

சாத்திரத்தளவில் விளக்கமிக்கது,

விளக்கமின்மையாம்.   (காஇ)

 

விதிச்சிறப்பின்மை:—

விசேடணமாயது விதிக்கப்படுமேல்,

விதிச் சிறப்பின்மையாம்.  (க0)

 

மறுதலைப்பொருடரல்:—

மாறுபட்ட பொருளுணர்வு நிகழ்ந்த

வழி, மறுதலைப் பொருடரல் என்பதாம்.  (க0இ)

 

அமங்கலம்:—

அமங்கலம் என்பது அசுபம் அருவருப்

பு நாணம் இவற்றைச் செய்யும் சொற்

புணர்த்தல் ஆம்.   (கக)

 

கொடுஞ்சொற்புணர்த்தல்:—

வல்லெழுத்துக்களானாய சொற்புனர்த்

தலை கொடுஞ் சொற்புணர்த்தல் என்ப.  (ககஇ)

 

வனத்திடைவதியும் பகைமனைவியரின் சொற்களில் குற்றங்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன.

 

 

வழக்கின்மை எவ்வாறெனில்:—

துற்சியவனன் முதலிய எல்லாத் தெய்வதங்களும் நம்மை வனவீடுடையராகச் செய்தமையான் அத்தேவர்கள் நமக்குப் பகைவராயினார்.   (கஉஇ)

 

இங்கண் முதனூலில் தெய்வதங்கள் என்ற சொல் (*               யென்பது குற்றமில் சொல்லாம்; அது அலிப்பால் ஆம்.) என்று ஆண்பாலதாகவும் துற்சியவனன் என்னுஞ் சொல் இந்திரன் என்னும் பொருளதாகவும் கவிவாணரால்          வழங்கப்பட்டில.

 

பொருட்செறிவின்மை யெவ்வாறெனில்:—

பயனற்ற வெண்ணரையிற் பாதியாந் தோள்களையுடைய இந்த நமது இத்தகைய நிலையை யெங்கனந் தாங்குவோம். அம்மவோ! உயிர்வாழ்க்கை! அந்தோ கொடிது. (கஙஇ)

 

இங்கட் “கைகளிரண்டும் பயனற்றன”, எனக் கூற விரும்பிய வழி, “பயனற்ற எண்ணரையிற் பாதியாந் தோள்களையுடைய”, என்னுங் கூற்று, பொருட் செறிவின்மையென்னுங் குற்றமுடையதாம். இஃதே விதிச்சிறப்பின்மைக்கும் எடுத்துக்காட்டு ஆம். வாகுவிரண்டின் பயனின்மை, விதிப்பொருளாங்கால் அத்தோளிரண்டும் விசேடணமாகலான்.

 

அசமர்த்தம் எவ்வாறெனில்:—

அம்பு தரம் நான்கும் புடைசூழ் அவனியிதையகற்றி யாண்டே யேகுவேம்; வனத்திடை வசித்தலும் நம்பாற் றுன்பந் தருவதொன்றே.

 

இங்கட் புணரியென்னும் பொருளில் அம்பு தரமென்னுஞ் சொல் அசமர்த்தம் ஆம்.

நின்று பயனின்மை நேயார்த்தம்

வழூவுச் சொற்புணர்த்தல் மயங்

கவைத்தல் என்னுமிக்குற்றங்கள்

எவ்வாறெனில்:—

அத்தகைய வில்லங்களை விடுத்தன்று பொறிபிறழ்ந்த நவத்திடைப் போந்து பிழைக்கின்றோம். ஏந்தல் தங்கடகவாசம் எஞ்ஞான்று நிகழ்வதோ.   (கருஇ)

 

இங்கண் அன்று[5] என்னு மசைச்சொல், நின்று பயனின்மையென்னுங் குற்றமுடைத்தாம். பொறி பிறழ்ந்த[6] நவத்திடையென்னுங் கிளவியான் வனமெனும் பொருளறிவு தன்குறியளவிலடங்கியதாகலின் இது நேயார்த்தம் ஆம். நிகழ்வதோ, என்னுமிச் சொன்னிலையில் (*          ) என்று முதனூலிற் கொள்ளப்பட்டுள்ளது; இச்சொல் இலக்கண அமைதியில் (*      ) என்றாதல் வேண்டும். அங்ஙனமின்றிக் கூறியமையான் இது வழூவுச் சொற்புணர்த்தலாம். ஏந்தல் தங்கடகவாசம் என்பது, அரசர்தம் பதிக்கண் வாசமோ அன்றேல் பருப்பதச்சாரலில் வாசமோ என்னும் ஐயத்தான் மயங்கவைத்தல் ஆம்.

 

அப்பிரயோசகம் கிலிட்டம் என்னுமிக்குற்றங்கள் எவ்வாறெனில்:—

வச்சிரப்படையின் புடைப்பின் முன்னர் இயங்குநிலையராகிய காலூண்பகைக் கொடியோர்க்கண்ணலின் ஏதிலர்பால் என்னே! இருக்கை யெய்துகின்றோம். (ககாஇ)

 

இங்கண், காலூண் — காற்றையுண்ணும் அரவங்கள். அவற்றிற்குப்பகை — கலுழன் — அக்கலுழனைக் கொடியாகக் கொண்டோன் உபேந்திரன். அவற்கு அண்ணல் தமையனாகிய தேவேந்திரன். அவ்விந்திரற்கு ஏதிலர் பருப்பதங்கள்; என்னும் பொருளறிவு மிக்க சேய்மைத்தாகலின் இது கிலிட்டம் ஆம்.

 

பருப்பதக்கணிருக்கை, துன்புறுத்தும் என்னும் பொருள் வேண்டுழி “வச்சிரப்படையின் புடைப்பின் முன்னர் இயங்கு நிலையராகிய” என்னும் மலைக்கட் பொருந்தும் அடைமொழி சிறப்பிலதாகலின் இது, அப்பிரயோசகம் ஆம்.

 

மறைபொருண்மை இழிவழக்கு

பிறிது பொருண்மை யெவ்வாறெனில்:—

உதிரமுளரியென்ன விழியுடையாரும் யௌவனப்பருவமிக்க கல்லம் (*      ) கடித்தலம் என்னுமிவற்றையுடையாரும் ஆகிய அரசனுடைய புதல்விமார், துயர் நெருப்பால் விதத்த மனமுடையராயினர்.   (கஎஇ)

 

இங்கண் இரத்தப் பொருளிற் சிறப்புறும் “உதிரம்” என்னுஞ் சொல்லை செந்நிறப் பொருளதாக வழங்கியிருத்தலான் இது மறைபொருண்மையென்னுங் குற்றமாம். கல்லம், கடி, என்னுமிச்சொற்கள், கதுப்பு சகனம் என்னும் இப்பொருளவாகக் கூறல், இழிவழக்காம். வித்தமனமுடையார் என்பது இன்புறுமனமுடையரென்னும் பொருள்தரு மாற்றலுடையதாய் கருகிய மனமுடையர் என்னும் பொருளைத் தாராமையான் இது பிறிது பொருண்மையாம்.

 

விளக்கமின்மை யெவ்வாறெனில்:—

குலக்குரவர் கூறிய மநூபதேசங்கள் எங்கே போயின?   (கஅ)

 

இங்கண் “மநு”, என்னுஞ் சொல் மந்திரப்பொருளதாக மந்திரநூன் மரபளவிற் சிறப்புறுவதாகலின் இது விளக்கமின்மை என்னுங் குற்றமாம்.

 

மறுதலைப் பொருடரல் எவ்வாறெனில்:—

அகாரிய[7] நண்பரும் ஒழிதலையெய்தினாருமாகிய அரசர்கள், அன்னைகாதலற்குச் செய்த வழிபாடு, யாங்ஙனம் பயனற்றதாகும்.   (ககா)

 

இங்கண் அன்னை காதலன் என்னுஞ் சொல்லால் தாயினைக் காதலித்தவன் என்னும் பொருள் தோன்றுகின்றது. அகாரிய நண்பர் என்னுஞ் சொல்லால் தீவினைகளிற் பற்றுடையார் என்னும் பொருள் புலனாகின்றது. பிரிவுத்துன்பத்தைப் பற்றி வழங்கிய ஒழிதல் என்னுஞ் சொல்லால் அழிவு என்னும் பொருள் போதருகின்றது. இதனால் இது மறுதலைப் பொருடரல் என்னுங் குற்றமாம்.

அமங்கலம் நாணம் அருவருப்பு

என்னுமிவற்றைத் தோற்றுவிக்கும்

அமங்கலம் எவ்வாறெனில்

அபிப்பிரேதபதத்தில்[8] அமைவுறல் நமக்கு எப்பொழுது நிகழுமோ? பகைவர் புரியு முற் சர்க்கமொன்றானே பிழைப்புறுமிவர்க்கச் சாதனங்களும் அற்பம் ஆம். (உ0)

 

இங்கட் பிரேதபதத்திலமைவுறல் என்னுஞ் சொல்லால் பிணவுலகில் வசித்தல் என்னும் பொருள் போதரலான் இது அமங்கலம் ஆம். அற்பம் சாதனம் — என்னுமிதனால் இழிந்து ஆண் குறியென்னும் பொருள் புலனாகலின் இது நாணுறுத்துவதாம். பகைவர் புரியுமுற்சர்க்க மொன்றானே யென்புழி உற்சர்க்கமென்னுஞ் சொல்லான் அபானவாயு என்னும் பொருள் தோற்றமெய்தலான் இஃது அருவருப்பைத் தருவதாம்.

 

கொடுமை யெவ்வாறெனில்:

காட்டில் வசிக்கும் நமக்கு, (*                   ) நற்பேறுடைமை யாங்ஙனம் அமையும்.        (உ0இ)

 

இங்கண் நற்பேறுடைமை யென்னும் பொருள் பற்றி வழங்கிய (*           ) என்பது வல்லெழுத்துக்களானாகிய[9] கொடுமையாம்.

 

இனிச் சொற்றொடர் குற்றங்கள்

 

சொற்சிதைவு முறைப்பிறழ்ச்சி சந்தியின்மை கூறியது கூறல் வியாகீருணம் வாக்கிய சங்கீருணம் நிறைவின்மை இடைத்தொடருடைமை எண் வேற்றுமை பால் வேற்றுமை உவமக்குறை உவமமிகை சந்தவழு யதிவழு உடலின்மை இயல்பின்மை விசர்க்கமின்மை வேற்றிடத் தொகைநிலை உரிய கூற்றின்மை முடிந்தது கோடல் ஏற்றமிழிவுறல் சம்பந்தமின்மை சொன்மிகை முறைமுறிவு என்னுமிவ்விருபத்து  நான்கு குற்றங்களும் சொற்றொடரைப் பற்றி நிகழ்வனவாம் என்ப.  (உசஇ)

 

இவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

 

சொற்சிதைவு:— (*                     )

சொல்லிலக்கணம் வழீஇய சொற்

றொடர், சொற்சிதைவெனச் சொல்லப்படும். (உரு)

பகைவரது சொற்றொடர் மூலமாக, எவ்வாறெனில்:—

நண்பர் கூறிய இதத்தை, அந்தோ கேட்டிலேம்; அதனாலன்றே காகதிவேந்தரை வணங்காது யாங்கெட்டொழிந்தோம்.  (உகா)

 

இங்கண் முதனூலில் (*                    [10]) என்றுள்ளதை இதத்தைக் கேட்டிலேம் என்று மொழிபெயர்த்திருக்கிறது. (*                                )

என்னுமிவ்விரண்டு சொற்களை வழங்கிக் குற்றத்தை வெளிப்படுத்தலான் சொற்றொடரே குற்றமுடைத்தன்றி. சொற்குற்றமென்னுஞ் சங்கையின்று; “ஸ0” என்னும் அடையுருபோடியைந்த “*    “ என்னும் வினைப்பகுதி ஆத்துமனேபதத்தை யெய்துங்கால் செயப்படுபொருளைக் கோடல் வேண்டா என்னுஞ் சிறப்பு விதியுண்மையான்.

 

முறைப்பிறழ்ச்சி:— (*                )

பொருளாதல் சொல்லாதல் முறைபி

றழ்ந்துழி, முறைப்பிறழ்ச்சியாம். (உகாகி)

பொருண் முறைப்பிறழ்ச்சி யெவ்வாறெனில்:—

யாம், காகதிவேந்தராகுந் தலைவர்க்குப் பரிகளையாதல் கரிகளையாதல் இறைப்பொருளாவளித்திலராய் தெய்வத்தால் வஞ்சிக்கப்பட்டோம்.   (உஎஇ)

 

இங்கட் கரிகளையாதல் பரிகளையாதல் எனக்கூறவேண்டுழி அம்முறை, பிறழ்ந்து கூறப்பட்டுள்ளது; பரிகளினுங் கரிகள் சிறப்புடையவாகலான். கரிகளையாதல் எனப்பின்னர்க் கூறியமையான் இது, பொருண்முறைப் பிறழ்ச்சியாம்.

 

சொன்முறைப்பிறழ்ச்சி யெவ்வாறெனில்:—

காகதிவேந்தரை நம்முள் ஒருவராய் அலகிடல் யாங்ஙனம் பொருந்தும்? ஏனெனில் அவருடைய கீர்த்தி பிரதாபம் என்னுமிவற்றுள் கதிர்மதியிருவரும் மூழ்கியொழிந்தனர்.   (உஅஇ)

 

இங்கட் கீர்த்திப்பிரதாபங்களில் மதிக்கதிர்கள் மறைந்தொழிந்தனர் என்னுஞ் சொன்முறை பொருந்துங்கால் அங்ஙனங் கூறப்பட்டிலது.

 

கீர்த்திப் பிரதாபங்களில் கதிர்மதிகள் மூழ்கினர் என்புழி இரு[11] குழுவியைந்துழி இயைபிற்கேற்ற பெற்றி பொருனியைபு போதருங்கால் பொருண்முறைப்[12] பிறழ்ச்சியின்றாம். ஆயின், சொல்வழக்களவில்[13] முறைப்பிறழ்ச்சியாம்.

 

 

 

சந்தியின்மை:— (*          )

சந்தி, சங்கிதை[14]யின்றியாதல் செவிக்

குணவின்றியாதல் அமைவது சந்தியின்மையாம்.

எவ்வாறெனில்:— முதனூலில்(*                                        ) என்புழி சந்தியின்மையாம். (*                                )என்புழி செவிக்குணவின்மையாம்.

 

கூறியது கூறல் (*                             )

சொல்பொருள் என்னுமிவற்றை மீண்

டுங் கூறியவழி அத்தொடர் கூறியது

கூறல் என்னுங் குற்றமுடையதாம்.

எவ்வாறெனில்:—

சிதைவுறுங் கானனஞ் செறிதரும் விந்தியவரைக்கண் கானனவாசிகளாயினோம்.

இங்கட் “கானனஞ் செறிதரும், கானனவாசிகள்” எனக் கூறியமையால் இது கூறியது கூறல் என்னுங் குற்றமாம்.

 

வியாகீருணம் (*              )

சொற்களுக்கு ஒன்றுக்கொன்று அந்நுவயம்

பரந்து கிடந்துழி வியாகீருணம் ஆம்.

எவ்வாறெனில்:—

வேந்தர்களே! இன்பமெய்தற்கு விரும்புவீராயின் காகதிவேந்தரது ஆணையையும் மார்பில் சிரத்திற் பன்றிக்குறியையும் தாங்கியவண்னம் இருங்கள்.

இங்கண், பன்றிக்குறியை மார்பிலும், ஆணையைச் சிரத்திலுந் தாங்கியென்பது அந்நுவயம்.

 

வாக்கிய சங்கீருணம்:— (*                     )

ஒரு தொடர்ச் சொற்கள், பிறிதுதொ

டர்ச் சொற்களுடன் கலத்தலை, வாக்

கியசங்கீருணம் என்ப.

 

எவ்வாறெனில்:—

இதன் எடுத்துக்காட்டு முதனூலிற் காண்க.

நிறைவின்மை — (*           )

 

வினைச்சொல்லின் அந்நுவயம்

நிறைவுறாத வழி நிறைவின்மை

யென்று கூறப்படும்.

எவ்வாறெனில்:—

நமக்கு இருக்கை மலைக்கண் அமைந்துள்ளது; காய்கிழங்குகளை யுணவாகக் கொண்டு உயிர் பிழைக்கின்றோம். விலங்கினத்தைச் சுற்றமாகவுடைய எங்களைக்கண்டு, விதி மகிழ்ச்சியுறுக.

 

இங்கண் மலைகளில் வசிப்பவரும் காய்கிழங்கருந்துவாரும் விலங்கினத்தைச் சுற்றமாகவுடையாருமாகிய எங்களைப் பார்த்து என்னும் இயைபு வேண்டற்பாலது; அது நிறைவுற்றிலது.[15]

 

இடைத்தொடருடைமை — (*                   )

இருதொடரிடைக்கண் பிறிதொருசொற்

றொடரமைவுறல், இடைத்தொடரு

டைமையென்ப.

எவ்வாறெனில்:—

தெலுங்கு நாட்டரசரது சினத்தீ, பொறுத்தற்கியலாதென்றுணர்ந்தும்,

“அன்றேல்[16] ஊழ்வினை கடத்தற்கரியது” அதில் யாம் வீழ்ந்தொழிந்தோம்.

 

இங்கண் சினத்தீ, பொறுத்தற்கியலாதென்றுணர்ந்தும் அதில் யாம் வீழ்ந்தொழிந்தோம், என்னும் இவ்விருதொடர்களினிடைக்கண், அன்றேல் ஊழ்வினை கடத்தற்கரியது, என்னும் பிறிதொரு தொடர் செருகியதாகலின், இஃது இடைத் தொடருடைமையாம்.

 

எண்வேற்றுமை   பால்வேற்றுமை

(*                          )

உவமை, வேற்றெண்[17] வேற்றுப்பால் என்

னுமிவற்றையுடைத்தாய் நிகழ்ந்துழி

அவ்வுவமை, எண்வேற்றுமை, பால்

வேற்றுமையென்னுங் குற்றமுடையதாம்.

இவ்விரண்டுமெவ்வாறெனில்:—

யாதவ வேந்தனது மனம் ஆழிகளென்ன ஆழமுடையதாயினும் தெலுங்கு நாட்டரசரது மலைமானும் படையாற் கலக்கப்பட்டது.

 

இங்கண், ஆழிகளென்ன[18] மனம் என்புழி யெண் வேற்றுமையாம். மலைமானும் படையென்புழி பால் வேற்றுமையாம்.

 

முதனூலில் (*      ) ஆண்பால் (*      ) பெண்பால்.

 

உவமமிகை — உவமக்குறை(*                 ) (*                  )

 

விசேடணங்களால்[19] உவமத்திற்கு

மிகையாதல் குறையாதல் அமைந்துழி

முறையே உவமமிகை உவமக்குறை ஆம்.

இவ்விரண்டும் முறையே எவ்வாறெனில்:—

உவமமிகை:—

மாலவவேந்தனுடைய மனைவியர் வனத்திடை வாட்டமிக்க முகத்தினராய் முதுவேனிற் காலத்தில் வாடிய தாமரை குவளை தாமரைக்கிழங்கு என்னுமிவை நிரம்பிய யாறுகள் போல விளங்கினர்.

 

இங்கண் வாட்டமிக்க முகத்தினராகிய மனைவியரின் உவமங்களாகிய யாறுகளுக்கு வாடிய தாமரை மலருடைமையே கூறற்பாலது; வாடிய குவளை தாமரைக்கிழங்கு என்னுமிவை நிரம்பிய யாறுகளென விசேடித்துக் கூறன்மிகையாம்.

உவமக்குறை யெவ்வாறெனில்:—

நகர்க்கண் அலங்கல், பூசும் பரிமளம் என்னுமிவற்றால் யாம் எங்ஙன் இனியரோ? அங்ஙனமே மலைகளும், அருவிகள் விரவியவாய் விளங்குகின்றன.

 

இங்கண் அலங்கலாம் நிலையில் அருவிகள் கூறப்பட்டுள்ளன; பூசும் பரிமளமாம் நிலையில் யாதுங் கூறப்பட்டிலது. இதனால் இஃது உவமக்குறையாம்.

 

சந்தவழு — யதிவழு

சந்தம் வேறுபட்டுழி சந்தவழுஆம்

யதிவழீஇய வழி யதிவழு[20]ஆம்.

எவ்வாறெனில்—

(*

)

இங்கண் (*               ) என்புழி மூன்றாம் எழுத்தில் யதி வழு ஆம்.

 

“                 “, என்புழி அடியிறுதிக்கணுள்ள யகரம் நெடிலின்மையாற் சந்தவழுஆம்.

 

உடலின்மை (*                    )

வினைச் சொல்லின்றியமையுஞ் சொற்

றொடர் உடலின் மையென்னுங்

குற்றமுடைத்தாம்.

எவ்வாறெனில்:—

மணிபதித்த திண்ணையில் விளையாடுமிப் பாண்டியச் சிறுவரை[21] முள்ளடர்ந்த காட்டில் இருப்பாராய்ப் (பார்க்கும்) பிரமன், அந்தோ அருளிலியன்றே.

 

இங்கண் பார்க்கும் என்னும் வினைச்சொல் இயைபுடையதாக அது கூறப்பட்டிலது. இஃதே[22] இயைபின்மையென்னும் குற்றமும் ஆம்.

 

இயல்பின்மை — (*                 )

சுவைக்குத் தகுதியில் இயல்பைக்

கூறியவழி இயல்பின்மை யென்னும்

குற்றமாம்.

எவ்வாறெனில்:—

(*

 

*)

இங்கண் அவலச்சுவைக்குத் தகுதியில்லாத எழுத்தின் ஆடம்பரம் ஆம்.

 

விசர்க்கமின்மை — (*                         )

விசர்க்கத்திற்கு ஓகாரமும்

ஓசையின்மையும் மிகைபடவ

மயுமத் தொடர் விசர்க்கமின்

மையென்னுங் குற்றமுடையதாம்.

எங்கண் விசர்க்கம் ஓகாரத்தையும் ஓசையின்மையையும் எய்துகின்றதோ, அது விசர்க்கமின்மையென்னுங் குற்றமுடையதாம்.

 

எவ்வாறெனில்:—

*

*

*

வேற்றிடத்தொகைநிலை:— (*                             )

தொகைநிலை வேண்டாதவழியதனை

யமைத்தல் வேற்றிடத் தொகைநிலை

யென்னுங் குற்றமாம்.

எவ்வாறெனில்:—

தீயகுணமுடைப் பிரமனுக்கு நம்பால் என்னே பராமுகம் என்று மிகச்சுழல்வுறு புருவத்தாற் குடில முகத்தை யுடையராயினர்.

 

இங்கண் பிரமனைச் சினந்து கூறும் அரசருடைய[23] சொற்களில் தொகைநிலை காணப்பட்டிலது. ஆனால் கவியின் கூற்றில், (*

) என்னும் தொகைநிலை காணப்படுகின்றது. இதனால் இது வேற்றிடத்தொகைநிலையாம்.

 

உரிய கூற்றின்மை — (*                                )

கூறற்குரியதொன்று கூறப்படாதவழி

உரியகூற்றின்மை யென்றுரைப்பர்.

எவ்வாறெனில்:—

கெட்ட நிலைமையை யெய்திய யாம்

உயிரை விரும்பினோம்.

இங்கண் கெட்ட நிலைமையை யெய்தியும்[24] என உம்மை கூட்டிக் கூற வேண்டுழி அவ்வும்மை கூறப்பட்டிலது.

 

முடிந்தது கோடலும்                 —                   ஏற்றமிழிவுறலும்

(                            )                       (                      )

ஒரு வாக்கியத்தை முடித்து, அதனையடை

மொழியான் மீண்டுங் கோடல் முடிந்தது

கோடல் ஆம்.

மேன்மை வழீஇய வழி அதனை ஏற்ற மிழிவுறல் எனக் கூறுப.

 

இரண்டற்கு மெடுத்துக்காட்டு எவ்வாறெனில்:—

ஓடும் மான்களையும் திரிதருங் கரிகளையும்[25] பாயும் புலிகளையுமுடைய விந்திய வனங்களில் இருக்கின்றேம் அவ்வனங்கள், கலக்கமுறுங் கரடிகளையுடையன.

 

இங்கண் விந்திய வனங்களில் இருக்கின்றேம் என்று சொற்றொடரை முடித்து, கலக்கமுறுங் கரடிகளையுடையன வென்னும் விசேடணத்தால் மீண்டுங் கோடலான் இது முடிந்தது கோடலாம். திரிதருங் கரிகளையும் பாயும் புலிகளையும் ஓடும் மான்களையும் எனக்கூறவேண்டுழி அங்ஙனங் கூறாமையான் இது ஏற்றமிழிவுறல் ஆம்.

 

சம்பந்தமின்மை — (*                                 )

விரும்பிய பொருளோடியைபில்வழி

சம்பந்தமின்மையாம்[26].

எவ்வாறெனில்:—

பாறைகள் பத்திராசனங்களும் தருக்கள் குடைகளுமாயின; யாமோ, நிலைகேடரசியற் பட்டாபிடேகத்தை யெய்தினோம்.

இங்கண் அரசியலிற்[27] பத்திராசனங்கள் பாறைகள் என்னும் இது முதலிய சம்பந்தம் கூறப்பட்டிலது.

 

சொன்மிகை (*                               )

சொற்களை மிகைபடக்கூறிய வழி

சொன்மிகை[28] ஆம்.

எவ்வாறெனில்:—

இக்கூர்ச்சரமகளிர், வனத்திடை தங்காதலரிற் பிரிவெய்தி தண்கதிர் மண்டில வடிவுருவின் முறையே வெளிறுபட்டொழிந்தனர்.

 

இங்கண் தண்கதிர் மண்டில வடிவென்னு மாத்திரையில் வெளிறுபடல் நிறைவுறுங்கால் உருவின் முறையென்பது மிகையாம்.

 

முறைமுறிவு (*                          )

தொடக்கத் துணிபு விடுபடு

மாங்கதை முறை முறிவென்ப.

எவ்வாறெனில்:—

குகைகள் இல்லங்களாயின; வேடுவர் உறவோராயினர்; விந்தியச்சாரல் நகரமாயது; யாறுகள் வாவிகளாயின. வனங்கள் உய்யானங்களாயின.

 

இங்கண் முதற்கட் பன்மையாகத் தொடங்கி  விந்தியச்சாரல் நகரமாயது என்பதை ஒருமையாகக் கூறியமையான் இது முறைமுறிவு என்பதாம்.

 

இனி, பொருட்குற்றங்கள்

 

பொருளின்மை (*             ) பயனின்மை (*        )

ஒருபொருளுடைமை (*              ) ஐயமுடைமை (*                   ) முறையின்மை (*                     ) வேறுபாடு (*           ) மிகுநவிற்சி

(*             ) கொடுமை (*                 ) சுவையின்மை (*              )

உவமக்குறை (*                     ) உவமமிகை (*                          ) ஒப்பிலுவமை (*                         ) வழக்கிலுவமை (*                  ) ஏதுவின்மை (*                   ) அணியின்மை (*                     ) அமங்கலம் (*                  ) மாறுகோள் (*            ) ஒத்துமுறைப்பிறழ்ச்சி (*                                         ) என்னுமிப்பதினெண் குற்றங்களும் பொருளைப் பற்றி நிகழ்வனவாம் என்ப.

 

இவற்றின் இலக்கணமும் எடுத்துக்காட்டும்

 

பொருளின்மை (*                )

சமுதாயப்பொருள்[29] இல்வழி

பொருளின்மையென்று கூறுப.

 

எவ்வாறெனில்:—

யாறுகள் ஏன் நீர் சுவறின? சோள மண்டிலத்தில் எவ்வார்த்தையுள்ளது. சேடற்கு ஆயிரம் படங்கள் உள்ளன. குலவரைகள் எத்துணைச் சுமையாம்.

இங்கண் ஒரோவொருவாக்கியப் பொருளும் புலனாகவில்லை.

 

பயனின்மை (*                     )

பாழ்படும் பயனுடையொரு பொருள்

பயனின்மையென்னுங் குற்றமுடையதாம்.

எவ்வாறெனில்:—

உங்களது குலம் கோதிலாதது; வீரம் குரை கடந்தது. புகழ் சிறப்புற்றது. அத்தகைய பாண்டியராகிய நீவிர் தெலுங்கு நாட்டரசரது பாதபடியை ஏன் வழிபடவில்லை.

 

இங்கண் பாதபடியை வழிபடல் வேண்டும் என்னும் உபதேசத்தில் குலம் கோதிலாதது என்னுமிவை முதலிய பாராட்டுரை பயனற்றது.

 

ஒரு பொருளுடைமை (*                               )

கூறிய பொருளின் வேறுபடாப் பொரு

ளுடைமை ஒரு[30] பொருளுடைமையாம்.

எவ்வாறெனில்:—

மயக்கமெய்திய பாலரைப் பார்த்து இதயம் பலபடவெடித்தது. உணர்வின்றியொழிந்த சிறுவரைக் கண்டு மனம் பலவாகப் பிளவுற்றது.

 

இங்கண் முன்பின் இருதொடரிலும் பொருள் வேறுபடாமை காண்க.

 

ஐயமுடைமை (*                           )

வாக்கியப் பொருட்கு ஐயம்

நிகழ்ந்துழி ஐயமுடைமையாம்.

எவ்வாறெனில்:—

கரிமத்தகங்கள், இளைப்பெய்திய நகிலங்களை யிதுபொழுது வெல்லுறும்; கொடிகள், மகளிருடைய வாட்டமெய்திய உடலெழில்களை யெள்ளி நகைக்கும்.

 

இங்கண் முதனூலில் (*[31]                     ) (*                       )

என்றிருத்தலான் இன்ன எழுவாய் இன்ன செயப்படுபொருள் என்பது துணியப்படாமையான் இது ஐயமுடைமையாம்.

 

முறையின்மை (*                 )

பொருள் முன்னுக்குப்பின் முரணிய

வழி முறையின்மைஆம்.

எவ்வாறெனில்:—

மடந்தையர் அங்காந்து வனத்திடையுறங்குகின்றனர்; அவ்வாயில் வீழ்தரும்புற்களான் அம்முறையில்[32] நம்மைப் பயிற்றுவாரென்னக் காணப்படுகின்றனர்.

 

இங்கண் உறக்கத்திற்குப்[33] பின்னிகழ்தற்குரிய அங்காப்பை அதற்கு முன்னிகழ்ந்ததாகக் கூறியது முறையின்மையாம்.

 

வேறுபாடு (*                    )

கூறும் பொருள்களுக்குச் சம்பந்

தமில்வழி வேறுபாடு ஆம்.

எவ்வாறெனில்:—

இலாட நாட்டினரின் நெற்றிகளில் பிரமன் நல்லெழுத்தெழுதவில்லை; அதனால் நம்முடைய குடும்பங்கள் நீரிலாவனத்தில் வருந்துகின்றனர்.

 

இங்கண் நீரிலாவனத்தில் வசித்து வருந்துவதற்கும் நெற்றிக்கண் நல்லெழுத்தின்மைக்கும் ஒருசம்பந்தமும்[34] இன்று.

 

மிகுநவிற்சி (*                   )

உலகெலாம் கடந்த நிலையிற்

கூறல் மிகு நவிற்சியாம்.

எவ்வாறெனில்:—

உலகம், ஒரு கடலாதல் வேண்டா; என்று கருதும் இலாடநாரிகள், கண்ணீரைச்[35] சுருக்கி அளவில் யாறுகளை யடவிக்கண் படைத்தனர்.

இங்கட் கண்ணீரான் உலகம் ஒரு கடல் ஆம் என்று கூறல் மிகு நவிற்சியாம்.

 

கொடுமை (*                         )

மிகக் கொடிய பொருளுடனமை

வுறல் கொடுமையென்று கூறப்படும்

எவ்வாறெனில்:—

இக்குழந்தைகளை யிக்கணமே அடவி நெருப்புக் கெரிதுரும்பாக்குக.

 

இங்கண் கனிகளையிரந்து நிற்குஞ் சிறுவரைக் குறித்துக் கூறிய கொடுஞ் சொல்லாகலான் இது கொடுமையாம்.

 

சுவையின்மை (*           )

நிகழ்ச்சிக்குப் பொருந்தாச் சுவைபடக்

கூறல் சுவையின்மையென்று சொல்லுப.

எவ்வாறெனில்:—

மதிமுகமுடையீர் அமுதம் பெருகுங் கடைக்கண்களால் எம்மைக் காண்க; வருத்தமுறல் வேண்டா; என்று கூறி, வேடுவர் சோழமகளிரைத் துன்புறுத்துகின்றனர்.

 

இங்கண் கொடிய பிரிவுத் துன்பத்தை யெய்திய மடந்தையரது புணர்ச்சியை வேடுவர் வேண்டி நிற்றல் சுவையின்மையாம்.[36]

 

உவமக்குறை (*                    )

உவமானம் அற்பமாய[37] வழி

உவமக்குறையாம்

எவ்வாறெனில்:—

மானினத்தைக் கொல்லும் நாய்களென்ன[38] நீவிர் பகைவரை வதைத்தீர். வனத்தே வசிக்கும் உமது அத்தகைய ஆண்மை இற்றைஞான்று, எங்கே சென்றது?

 

இங்கண் நாய்களென்ன நீவிர் என்பது உவமக்குறை.

 

உவமமிகை (*                    )

உவமை மிகுந்துழி உவமமிகையாம்.

எவ்வாறெனில்:—

குளக்கரையிலிருக்குமிக்கொக்கினங்கள் அசைவிலுடலுடையவாய் இருடிகளென்ன விளங்க, அவற்றையாம் இது பொழுது துன்புறுத்தினோம்.

 

இங்கண் கொக்கினங்கள் இருடிகளென்ன[39] என்பது உவமமிகை.

ஒப்பிலுவமை (*                           )

உவமை பொருந்தாதவழி

ஒப்பிலுவமை யென்பதாம்.

எவ்வாறெனில்:—

அடர்ந்தகொடிவீடுகளில் அலைதரும் அருவிப்புனலையுடைய இவ்விந்தியமலை, நுதல் விழியொளிரும் தீச்சிகையின் வீக்கமெய்திய சிவபிரானையொப்பத் திகழ்கின்றது.

 

இங்கண், கொடிவீடுகளில்[40] அலைதரும் அருவிப்புனலுடைய விந்தியமலைக்கும், நெற்றிக்கணொளிரும் நெருப்பினையுடைய சிவபிரானார்க்கும் ஒன்றற்கொன்று ஒப்பின்மையாம்.

 

வழக்கிலுவமை (*                                )

கவிகளான் வழங்கப்படாது உவமை

வந்துழி, வழக்கிலுவமை யென்னுங்

குற்றமாம்.

 

எவ்வாறெனில்:—

மகிழ்வில் மான்விழி மாதரார் மதிமுகங்கள், கண்ணீராற் கெடுங்கண்களையுடையவாய் குளிரிரும்பனிக்குத் தேம்பிதழ் குவளையை நிகர்வனவாம்.

 

இங்கண் முகங்களுக்குக் குவளைகள் உவமைகளாகக் கவியுலகிற் கூறப்பட்டில.

 

ஏதுவின்மை (*                       )

ஏதுவின்றியோர் பொருளினையியம்புதல்

ஏதுவின்மை யென்றியம்பவர் மேலோர்.

எவ்வாறெனில்:—

நன்முத்தக்குறியெய்திய[41] இவ்வழிக்கட் பின்தொடர்ந்தோடல் வறிதாயிற்று; இஃதங்கனை சென்ற நெறியின்றாகலின், அவளைத் தேடிச் சேறற்குப் பிறிது தடஞ் செல்வேன்.

இங்கண் இஃதங்கனை சென்ற நெறியின்று என்பதற்கு ஏது கூறப்பட்டிலது.

 

அணியின்மை (*                             )

அலங்காரம் இன்றி யமைவுறல்

அணியின்மையென்பதாம்.

எவ்வாறெனில்:—

பசுவின் யோநியை மோந்து உயர்த்திய முகமுடையனவும், நீண்ட ஆண்குறியுடையனவும், தொங்கியாடு மண்டத்தையுடையனவுமாகிய காளைகள், வனத்தைப் பலபுறத்துங்கலக்கின.

 

இங்கண் அணியொன்றுமிலது; சிறப்புறு விசேடணங்களின்மையான் தன்மை நவிற்சியணியும்[42] (*                          ) இன்று.

 

அமங்கலம் (*                          )

அமங்கலப் பொருளைக் கூறல்

அமங்கலம் ஆம்.

இது முன்னர் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

 

மாறுகோள் (*                       )

இடம் காலம் என்னும் இவைமுதலிய

வற்றான் முரணியவழி மாறுகோள்ஆம்.

அது பலவகைப்படும் என்ப.

எவ்வாறெனில்:—

கரைகடக்குமுவர்க்கடல் வடதிசையில் அணிமைக்கணுள்ளது.[43] மருத்தலத்தினும் கங்கையாறு நமது நீர் வேட்கையை யொழிக்கின்றது.

 

இங்கண் வடதிசையில் உவர்க்கடல் என்பது திசைமாறுகோள். மருத்தலத்துங்கங்கையென்பது இடமாறுகோள்.

காட்டெருமையின்[44] வலிய கோட்டிடைப் பிறந்த நன்முத்தங்கள், பெருவிலையவாயினும், மாதரார் முத்தணிகலன்களை யணிந்துளார்.

 

இங்கண் முத்தங்கள் எருமைக்கோட்டிடைப் பிறந்தன வென்பது உலக மாறுகோள். இங்ஙனம் பிறமாறுகோள்களையும்[45] வந்துழிக்காண்க.

 

ஓத்துமுறைப்பிறழ்ச்சி (*                              )

தகுதியில் பொருளையொரோவழி

கூறல் ஓத்துமுறைப்பிறழ்ச்சியாம்.

எவ்வாறெனில்:—

அடக்கத்தாற்[46] கல்வியும் நாணத்தால் நாரியும் காமனாற் கலவியும் கேள்வியால் அறிவும் வனத்திடை வசித்தலாற் பகைவரும் பிழைப்புறுகின்றன.

 

இங்கண் கல்வி அறிவு என்னுமிவற்றினும் நாரியும் கலவியும் இழிந்தனவாகலான் ஓத்துமுறைப்பிறழ்ச்சியாம். இங்ஙனம் பிறகுற்றங்களும் நேர்ந்துழி உய்த்துணரற்பாலன. சுவை குறிப்பு முதலியவற்றிற்கு[47] அவ்வச்சொற்கு உரிய பொருளாந்தன்மையே குற்றம் ஆம்.

 

வித்தியாநாதனாலியற்றப்பட்ட

“பிரதாபருத்திரன் புகழணி” என்னும்

அணியிலக்கணத்தில், குற்ற

வியல் முற்றிற்று.

 

[1] குணங்கள் — இது அணிகளுக்கும் உவலக்கணம் ஆம். சுவைகளை விளக்கிக் கூறிய பின்னர் அவற்றையழகுபடுத்தற் கேதுவாகிய குணம் அணியென்னுமிவை விரித்து விளக்கற்குரிய வியைபுடையவாயினும், அவற்றைத் தவிர்த்து இடையிற் குற்றவியலைக் கூறியமை அக்குணங்களை நன்கு உணர்த்தற் பொருட்டு ஓத்து முறைவைப்பென்னும் உத்தி பற்றியேயாம் என்க.

[2] காப்பியம் இழிவுறற்கேதுவாய் — சுவையையிழித்து, அதன் வாயிலாக காப்பியத்தையிழிவு படுத்தற்கேது குற்றம் என்பதாம்.

[3] சொற்குற்றம் — சுவை, விபாவம் முதலிய பொருளடியாகத் தோன்றுவதாம்; அவ்விபாவம் முதலியன சொற்றொடர் வயத்தனவாம்; அத்தொடர், சொற்றொடக்கத்தது. அதனால் சொற்கள் முதற்கண் அமைவுறுவனவாகலான் அவற்றின் குற்றங்கள் முதற்கட் கூறப்படுகின்றன.

[4]  நிகண்டுக்களிற் கூறப்பட்ட சொற்களாயினும் அவற்றைக் கவிவாணர் தம் நூல்களில் எடுத்தாளவில்லையாயின் அவை வழக்கில் சொற்களாம்; அச்சொற்களைப் பின்னுளோர் வழங்கலும், வழக்கின்மையென்னுங் குற்றமாம் என்க.

[5] யமகம் வேண்டுழி நின்று பயனின்மையென்னுங் குற்றம் வேண்டற்பாலதின்றென்பர் ஏமசந்திரனார்.

[6] பொறிபிறழ்ந்து நவத்திடை யென்புழி “நவ”, என்னுங்கிளவி எழுத்துப்பிறழ்ச்சியான் வனமெனும் பொருளை யிலக்கணையாற் றோற்றுவிக்கின்றது; அவ்விலக்கணையில், சொல்லாற்றல் நிமித்தம் இன்று கங்கையிற் சேரியென்புழிப்போல பயனும் இன்று. ஆயின் இது தன்குறியளவில் அடங்கி நிற்பதாம். அதனால் அங்ஙனம் ஆற்றலில் இலக்கணை கொள்ளற்பாலதின்று என்பான், தன்குறியளவிலடங்கியதாகலின் இது நேயார்த்தம் என்றான் என்க. பொறி எழுத்து.

[7] இந்தச் சுலோகத்தில் மறுதலைப் பொருடரல் என்னுங் குற்றத்தையெடுத்துக் காட்டிய சொற்களுக்கு இடனோக்கிய உரிய பொருள் வருமாறு காண்க:-

அகாரிய நண்பர் — காரியம், பயன் வடிவினது; அஃதில் வழி நன்பர் என்றதனால் பயன் கருதா நட்புடையர் என்பதாம்.

ஒழிதலை யெய்தினார் — ஒழிதல் — ஈண்டுமனையிற் பிரிதல்; அதனால் வருந்துன்பத்தை யெய்தினோர் என்பதாம்.

அன்னைகாதலன் — இது, உலகெலாம் பெற்றவோர் அன்னையாங் கௌரியின் காதலனாகிய சிவபிரானையுணர்த்தும்.

[8]அபிப்பிரேதபாதம் — விரும்பிய இடம். உற்சர்க்கம் — விடுதலை. சாதனங்கள் — துணைக்கருவிகளாகிய படை முதலியன.

[9] வல்லெழுத்துக்களானாகிய கொடுமை — மெல்லெழுத்துக்களானாகிய சொற்களே இங்கண் அவலச்சுவைக்குரியவாகலின் வல்லெழுத்துக்களானாய சொற்கள் அச்சுவைக்குப் பொருந்தாமையான் இது கொடுமையாம்.

[10] (*                  ), ஆத்துமநேபதம். “ஹிதம்” செயல்படுபொருள். இவ்வினைச்சொல் செயப்படுபொருள் குன்றிய வினையென்பது வியாகரண நூன்மரபு; அதனைக் கடந்து ஹித0 என்னுஞ் செயப்படுபொருளைக் கூறியிருத்தலான் இது சொற்சிதைவு என்னுங் குற்றமாம்.

[11] இருகுழு — கீர்த்திப்பிரதாபங்களில் என்பது ஒரு சொற்குழு; கதிர்மதிகள் என்பது மற்றொரு சொற்குழுஆம். இவ்விருகுழுவும், சிறப்புறு முறுப்புக்களையுடைய உம்மைத் தொகையாய் இயைந்துழியென்பது கருத்து.

[12] பொருண்முறைப்பிறழ்ச்சியின்று — பொருண்முறை, சொன்முறையைப் பின்பற்றுந் தகுதியுடையதாயினும் கவிவழக்காற் போதரும் உவமான உவமேயத்தன்மை வயத்தால் தொகையுள்ளடங்கிய கீர்த்தி முதலிய பொருள்களுக்கு முறை பிறழ்ந்து மியைபு நேர்ந்துழி முரணின்மையான் பொருள்முறைப் பிறழ்ச்சி யின்றென்பதாம்.

[13] சொல்வழக்களவில்:— நிரனிறை நியாயத்தைக் கடந்து நிற்றலான் என்பது கருத்து. அதாவது நிரன் முறைபிறழவைப்பதாகுஞ் செய்யுள் வழுவின் ஒன்றாகிய நிரனிறைவழுவென்ப.

“உம்மைத்தொகையில் தொகையுள்ளடங்கிய

சொற்களொரோவொன்றும் உடனிகழும்

பிறசொற்பொருட்களையும் அப்பொழு

தேகூறும்”

என்பது வார்த்திககாரரது கொள்கையாம். அன்னார் மதத்தில் கீர்த்தி யென்னுஞ் சொல், புகழ் பிரதாபங்களைக் கூறும்; அங்ஙனமே பிரதாபம் என்ற சொல்லும் இவ்விருபொருள்களையுங் கூறும். இங்ஙனமே “கதிர் மதி” என்புழியுங் காண்க. அதனால் சொற்கள் ஒன்றோடொன்று இயைந்துழி சென்முறைப்பிறழ்ச்சியின்றெனக் கூறுமாலெனில், அற்றன்று. தனித்த சொற்களுக்கு ஒரோவொரு பொருளைக் கூறுந்தன்மையுண்மையானும் தொகையுள்ளடங்கிய சொற்களுக்கும் பிறமதங்களான் அத்தன்மையுண்மையானும் எல்லாச்சொற்களுக்கும் அமையும் பொருளுணர்த்து மாற்றல் பெரிதும் இங்ஙனமே கொள்ளற்பாலது. ஈண்டும் அலௌகிகப் பொருள் பலவற்றையும் கூறுந்தன்மையைக் காரணமாகவுடைய முறைப்பிறழ்ச்சியைத் தவிர்த்து முறைபிறழாமையே விழிப்புடையதாகலின்.

[14] சங்கிதை எழுத்துக்கள் ஒன்றோடன்று நெருங்கி நிற்றல். இஃது அரைமாத்திரையின் மிகாது நிற்றலாம்.

[15] அது நிறைவுற்றிலது — காட்சிவினை, எங்களையென்னுஞ் சொற்பொருண் மூலமாக சுற்றமாகவுடையவென்னுஞ் சொல்லுடன் இயையுமேயன்றி, மலைக்கணிருக்கை காய் கிழங்கருந்தி வாழ்தல் என்னுமிவற்றுடனியைபுறாது அவ்வினைச்சொல்லின் அந்நுவயம் நிறைவுற்றதாகலின், இது நிறைவின்மையென்பதாம்.

[16] வாக்கியப்பொருளும் இருதொடரிடைக்கண்ணதாகலின் இங்கட் சொற்குற்றம் பொருட்குற்றம் என்னுமிரண்டும் நிகழுமாலெனின், அற்றன்று. வாக்கியப்பொருள் தோற்றமெய்துங்கால் வாக்கியம் அந்தரங்கமாகலான் அவ்வாக்கியத்தின் சிறப்பினைப் பற்றி இது வாக்கியதோடம் என்றே பெரிதும் அறிதல் வேண்டும். பகிரங்கத்தினும் அந்தரங்கம் வலியுடைத்தென்பது வடனூலார் வழக்கு. அற்பத்தை வேண்டி நிற்பது அந்தரங்கம். பலவற்றை வேண்டி நிற்பது பகிரங்கம் ஆம். பிறாண்டும் இங்ஙனமே உய்த்துணரற்பாலது.

[17] உவமையினுடைய எண்ணும் பாலும் உவமேயத்தின் எண் பால் என்னுமிவற்றின் வேறுபயனவாம் என்பதாம்.

[18] ஆழிகளென்ன மனம் — (*                   ) (*             ) உவமானம் ஆண்பால் (*         ) உவமேயம் அலிப்பால் இங்கட் பால் வேற்றுமையாயினும் (*                   ) (*         ) உவமேயம் அலிப்பால் (*       ) உவமானம் ஆண்பால் என்புழிப்போல அறிஞர்க்கு அருவருப்பைத் தாராமையான் இஃது எண்வேற்றுமைக்கே எடுத்துக்காட்டாகும் என்பான் ஆழிகளென்னமனம் என்புழி எண் வேற்றுமையாம் என்றான் என்க. அங்ஙனமே தண்டியாசிரியரும் கூறியுள்ளார்.

“வேற்றுப்பால் வேற்றெண் உவமக்குறை

உவமமிகை என்னுமிவை உவமையைக்

கெடுத்தற்குப் போதியவாகா; அங்கண்

அறிவுடையார்க்கருவருப்பு இன்மையான்” என்று.

[19] விசேடணங்களால் — விசேடணங்குறைந்த உவமை உவமக்குறை. விசேடனம் மிகுந்த உவமை உவமமிகை என்பதாம். அதனால் பொதுப்பண்பு மிகுந்தவழி உவமமிகையும் அது குறைந்த வழி உவமக்குறையும் ஆம் என்பது போதரும்.

[20] யதிவழு — நாவு சிறிது அடக்கப்படுவதால் யதியென்னும் பெயர்த்தாயிற்று. இது சந்தங்களில் நிகழ்வது; அச்சந்தங்களைக் கூறுங்கால் பதங்களின் முடிவில் இஃது அமைவுறல் அழகுறும். அன்றியிடைக்கண் அமையின் யதிவழுவென்பதாம். இதனை வகையுளியென்ப. “வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்” என்னும் பாட்டியற் செய்யுளாற் பிரபந்தமுதலிற் கூறுகின்ற மங்கலச்சொல்லிற் வரிற் குற்றமாம் என்பது புலனாம். இதனாற் பிறாண்டு அக்குற்றமின்றென்பது போதரும். வடமொழி அலங்காரசாத்திர மரபோ என்னில் இக்குற்றம், யாண்டும் நிகழலாகாதென்பதாம்.

[21] பாண்டியச் சிறுவரை யென்பது காட்சி வினை குறித்து செயப்படுபொருளாம். ஈண்டு அவ்வினைச் சொல்லைக் கூறாமையான் இது வினைச்சொல்லின்றியமைந்த சொற்றொடராம். “வினைச்சொல்லொன்றையுடையது வாக்கியம்” என்பது அதன் இலக்கணமாகலின் வாக்கியத்தன்மையின்மை கருதியே உடலின்மையென்னுங் குற்றமெனக் கூறினான் என்க.

[22] வினைச் சொல்லின்மையான் இயைபில்வழி இயைபின்மையென்னும் பிறிதொரு பெயரும் உண்டென்பான் இஃதே இயைபின்மையென்னும் குற்றமும் ஆம் என்றான் என்க.

[23] அரசருடைய சொற்களில் தொகைநிலை அமைவுறில் அஃது அவரது சினக்குறிப்பை புலப்படுத்தும் என்பதாம். தொகைநிலையாற் புலனாதற்குரிய சினம் கவியினடத்தில்லையாதலான் இது வேற்றிடத் தொகைநிலையென்பது கருத்து.

[24] இங்கண் உயிரை விடுத்தொழிதல் கூறற்குரிய பொருளாம்; அப்பொருளும் கெட்ட நிலைமையை யெய்தியும் என்புழி உம்மென்னுமிடைச்சொல்லாற் போதரும். அஃதின்றி அப்பொருள் தோன்றாதாகலின் இது உரிய கூற்றின்மை யென்னுங் குற்றமாம்.

[25] திரிதருங் கரிகளையும் பாயும் புலிகளையும் — புலிகளினும் கரிகள் சிறப்புடையனவாகலான் அவற்றை முதற்கட் கோடல் பொருந்தும். மான்கள் இழிபுடையவாகலான் அவற்றைப் பின்னர்க் கூறலே சாலப் பொருந்தும் அங்ஙனமின்றி முன்னர்க் கூறியமையான் இஃது ஏற்றமிழிவுறல் என்னுங் குற்றமாம்.

[26] சம்பந்தமின்மை — இதனைச் சாகித்திய தருப்பண நூலார் “                  “ என்பர். விரும்பியாங்கு சம்பந்தம் இன்றென்பது இச்சொல்லின் பொருளாம்.

[27] நிலைகேடரசியற் பட்டாபிடேகத்தை யெய்தினோம் என்புழி நிலைகேடரசியல் என்னுஞ் சொல், பண்புத் தொகையுள்ளடங்கியதாகலான் அது சிறப்பிலதாக அச்சொல்லின் பொருள் பத்திராசனம் முதலியவற்றுடன் இயைபுறாதென்பான் அரசியலிற் பத்திராசனங்கள் பாறைகள் என்றான் என்க.

[28] சொன்மிகை — இங்கட் சொற்களைக் குறைவுறக் கூறியவழி சொற்குறை யென்னுங் குற்றமென்பதூஉம் கொள்ளற்பாலது; இவற்றை முறையே மிகைபடக் கூறல் குன்றக் கூறல் என்ப.

[29] சமுதாயப் பொருள் — சமுதாயம் — குழு. சொற்களின் அளவையிற் பொருளமைவுறினும் சொற்குழுவடிவாகிய வாக்கிய நிலையிற் பொருனின்மையால் இது பொருளின்மையென்பதாம்.

[30] இதனைக் கூறியது கூறல் என்ப.

[31] வியாகரண முறையில் முதலிரண்டாம் வேற்றுமையின் ஆண்பால் இருமையுருபேறிய வழியும், பெண்பால் பன்மையுருபேறிய வழியும் வடிவில் வேற்றுமையின்மையான் எழுவாய் செயப்படுபொருள் என்னுமிவற்றைப்பற்றிய ஐயம், நிகழ்ந்ததென்பது கருத்து.

[32] அம்முறை — பகைவர்க்கஞ்சிப் புற்களைக் கடித்து மனங்கவலின்றித் தூங்குமுறையை.

[33] அங்காந்து உறங்குகின்றனர் என்புழி அங்காந்து என்னும் வினையெச்சம் இறந்தகாலத்தைக் காட்டுமாகலான், எதிர்காலத்தில் நிகழ்தற்குரிய அங்காப்பை முன்னிகழ்ந்ததாகக் கூறியது முறையின்மையாம். அங்காத்தல் உறக்கத்தின்பின் நிகழுமென்பது உலகியலாகலான் அங்காந்து உறங்குகின்றான் (*                                                  ) என்புழி அங்காத்தற்கு இறந்தகால நிகழ்ச்சியின்மையான் “            “ என்னும் இறந்தகால எச்சவிகுதி முரண்பட்டதாகும்; எனக்கடாவி யாசங்கித்து எதிர்கால வுறக்கத்தை நோக்கிய வழி இறந்தகால நிகழ்ச்சி யுண்மையான் முரண்பாடின்றென அவ்வாசங்கை மாபாடியத்திற் பரிகரிக்கப்பட்டுள்ளது; அங்ஙனமே கையடரும் உரைகண்டுள்ளார்.

“உறக்கம், அங்காப்பின் முன்னரே நிகழுமெனினும், அவ்வங்

காப்பின் பின்னரும் தொடர்ந்து நிகழுமுறக்கச் செயலை

நோக்கிய வழி அதற்கு இறந்தகால நிகழ்ச்சியுள்ளது”

என்று. இதனால் இங்கண் முன்னுக்குப்பின் முரண் என்பது எவ்வாறாமெனில், உண்மையே; அங்காத்தலின் முன்னைக்காலத்து உறக்கச் செயலை நோக்கிய வழி இக்கூற்று முன்னுக்குப்பின் முரண்படுமாகலின் இங்கண் முறையின்மையென்பது முதனூலாசிரியரின் உட்கிடை.

[34] ஒருசம்பந்தமும் இன்று — இங்கட் காரியகாரண சம்பந்தம் சிறிதும் இன்று என்பது கருத்து.

[35] கண்ணீரைச்சுருக்கி யெனத்தொடங்கிய தொடர்க்கு இது கருத்து. உலகம் ஒரு கடலாகும் என்னும் அச்சத்தால் கண்ணீரைச் சுருக்கியும் அளவில் பலயாறுகள் பெருக்கமெய்தின என்பது மிகவும் பொருத்தமில் பொருளை வெளிப்படுத்தலான் இது மிகுநவிற்சி யென்னுங் குற்றமேயன்றி உயர்வு நவிற்சியென்னும் அலங்காரம் இன்றென்பது கருத்து.

[36] சுவையின்மையாம் — வேடுவர் தகுதியில் செயற்புரிய முற்பட்டமையான் என்பது கருத்து. சுவை, கேடுறற்குத் தகுதியில் செயலையின்றிப் பிறகாரணம் இன்றென்பது துவனிநூலாசிரியரும்.

[37] அற்பமாயவழி — சாதியானும் அளவையானும் அற்பமாயவழியெனக் கூட்டியுணர்க. சாதி — ஈண்டு ஒரு நிகரனவாகிய பல பொருட்குப் பொதுவாயதோர் தன்மையை உணர்த்தும். இங்ஙனமே மேல்வரும் உவமமிகைக் கண்ணும் கொள்ளற்பாலது. ஈண்டிங்ஙனம் பொருள் கோடலான் முன்னர்ச் சொற்றொடர்க் குற்றங்களுட் கூறிய உவமக்குறை வடவம் மிகையென்னுமிவற்றின் இவை வேறுபட்டனவாம்..

[38] நாய்களென்ன நீவிர் என்புழி இவ்வுவமை சாதிக்குறை பற்றியதாம். “தீப்பொறியென்னத் திகழுஞ் செங்கதிர்” என்புழி அளவைக் குறை காண்க.

[39] இருடிகளென்ன இவ்வுவமை சாதியான் மிக்கதாம்;

“குகைவாயிலென்ன நின்குகாப்பூழிலங்க” என்புழி உவமை அளவையான் மிக்கதாம்.

இங்கண் யாண்டும் பொதுத்தன்மை பற்றி அவையினரை யின்புறுத்தற்கு ஒருபொருளைக் கூற வேண்டுழி அப்பொருளை நாய் முதலியவற்றுடன் உவமித்து இழிபொருளாக்கலான் அத்தகுதியின்மை கருதி குற்றமாம் என்பது கருத்து. அங்ஙனமே காப்பியப்பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“சாதி அளவை யென்னு மிவற்றைப் பற்றிக்

கூறும் உவமக்குறையாதல் உவமமிகையா

தல் அவ்வவற்றிற்கேற்ற பெற்றி, தகுதியில்

பொருளுடைமை குற்றமாம்” என்று.

[40] இங்கண் விந்தியத்திற்கும் விரூபாக்கனுக்கும் அக்குணங்களாகிய அருவி நெருப்பு என்னு

மிவற்றிற்கும் ஒப்புமை பிரசித்தியின்று; பண்பிகட்குப் பண்புவாயிலாகவும் புண்புகட்குப் பண்பிவாயிலாகவும் ஒப்புமையுண்டெனக் கூறுமாலெனில் அற்றன்று. ஒன்றையொன்று பற்றலென்னுங் குற்றம் நிகழுமாகலான்.

[41] நன்முத்தக்குறியெய்தியவழி — சிங்கம் கயங்களை வலிந்து பற்றியடிக்குங்கால் அவற்றின் மத்தகத்துறும் முத்தங்கள் அங்கட் சிதைந்து கிடக்க, அதனால் அவ்வடையாளமெய்திய வழியென்பதாம். குறி — அடையாளம். அம்முத்தங்களைக் கண்ட காதலன் இவை காதலியின் அலங்கார முத்தங்களென்று மயங்கிப் பின்னர்த் தெளிந்து அவ்வழியை விடுத்து வேற்றுவழி சென்றான் என்பது கருத்து. இங்கட் காதலி சென்றவழியைத் துணிந்து கோடற்குப் போதிய வேது கூறப்படாமையான் இஃது ஏதுவின்மையென்னுங் குற்றமாம்.

[42] தன்மை நவிற்சியுமின்று:— இதனை (*                    ) என்ப வடநூலார். வன்னிக்கப்படுபொருளின் இயல்பை யிழித்துக் கூறியமையான் அவையினர் இன்புராராகலின் தன்மை நவிற்சியுமின்றென்று கூறினான் என்க.

[43] அணிமைக்கணுள்ளது — இங்ஙனங் கூறாதொழியின் வடதிசை நூறாயிர யோசனைகளாற் சேய்மைத்தாயினும் அத்திசைக்கட் கருங்கடலமையுமாகலான் முரணின்மையென்பது கருத்து.

[44] முத்தங்கள் காட்டெருமையின் வலிய கோட்டிடைப் பிறந்தனவென்பது முரணாம். முத்துக்கள் பிறக்குமிடத்தை வருமாறு பெரியாருங் கூறுப.

“கரி இக்கு புயல் பன்றி சங்கு மீன்

அரவம் இப்பி மூங்கில் என்னுமிவற்

றில் நன்முத்துப் பிறக்குமென்பது

உலகிற் பிரசித்தமாம். ஆயினும் அவற்

றுள் இப்பியின்கட் பெரிதும் பிறக்கும்” என்று.

[45] பிறமாறுகோள் — வித்தைமாறுகோள் முதலியன.

எவ்வாறெனில்:— “அறிஞனொருவன் எப்பொழுதும் இரவில் நீராடிப் பகலெலாம் சாத்திரம் பேசுவானும் அதனைக் கேள்வியுறுவானுமாயினான்” என்புழி இரவில் நீராடல் அறநூல் விருத்தம் ஆம்.

[46] கல்வி அறிவு என்னுமிவை, அடக்கம் கேள்வியென்னுமிவற்றான் வனப்புறலாற் பல்லோரானும் கொள்ளற்பாலனவாம். நாரியும் கலவியும் நாணுடனும் காமனுடனும் அகலாவியைபுடைமையாற் இல்லோராற் கொள்ளப்பட்டு இழிந்தனவாம். வனத்திடை வசித்தலாற் பகைவரும் பிழைப்புறுகின்றனர் என்பது எல்லாவற்றினும் இழிந்தமையான் இஃது ஓரினப்பொருளை ஒரோவழிக்கூறும் ஓத்துமுறை பிறழ்ந்ததாம்.

[47] முதலிய என்றமையான் ஸ்தாயிபாவங்களும் கொள்ளற்பாலன.

Leave a comment