பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 6

 நாடகவியல் – நான்காம் அங்கம்

 

(செவிலித் தாயுஞ் சேடியும் வருகின்றனர்)

 

செவிலி — (சினமுடன்) ஏடி! பட்டாபிடேக மகோற்சவத்திற் பல காரியங்களான் அரண்மனை குழப்பமெய்தியிருக்குங்காலும், இரவெலாம் யாவனோடியைந்து கழித்தாய்? இத்தகைய பெருவிலையுடைய அணிகலன்களை எங்கட் கவர்ந்தனை? இழிந்த நீயிதனை யறிந்திலையா? பிரதாபருத்திரன் மாதிரமனைத்தையும் வென்று நாற்கடல் புடைசூழ் நானிலந்தனிலுள்ள சிற்றரசர் சூழ்தர, நகரை யெய்தினன். குலதெய்வத்தின் அருளானும், பேரரசரின் ஆணையானும், புரோகிதரின் உடன்பாட்டினாலும், அமைச்சரின் தொடர்பானும், மக்களின் ஆகூழானும், நிலமகளின் றவச்சிறப்பானும், நம் போலிய பணியாளரது நல்வினைப் பரிபாகத்தானும் இளவரசர், மகுடாபிடேகத்திற்கு ஒருப்பட்டார். இங்ஙனம் மகோற்சவத்திலீடுபட்ட என்னைத் தனியாளாக விடுத்து எவ்வாறு சென்றனை?

 

இதனால், வெகுளிவயத்தாற் பிராத்

தித் துணிவை வெளிப்படுத்துமுகமாக

பீசத்தை யாராய்தலான் விமருசசந்தி.

சேமயின்பாலமைந்த குற்றத்தை

வெளிப்படுத்திக் கூறலான் இஃது

அபவாதம் என்னும் பெயரிய உறுப்பாம்.

 

சேடி — பெருமாட்டீ! குற்றத்தைப் பொருத்தருள்க; (என்று காலில் வீழ்கின்றாள்)

 

செவிலி — (புருவ நெறித்தலுடன்) இழிதகவி! அரவின் கடி விடத்தை சேலையின் தலைப்பாற்றுடைத் தென்ன, வணக்கஞ் செய்து இத்தகைய குற்றத்தை மாற்றுகின்றாய்.

 

இது சினந்து கூறலாகுஞ்

சம்பேடம்.

 

சேடி — தாங்கள் இத்தகைய இயல்புடையரே! ஆதலின் நிமித்தமின்றிச் சினமுறுந் தங்களை யான் ஒத்து நடத்தற்குப் போதியளல்லள்.

செவிலி — (சினமுடன்றலையையசைத்து) தீயொழுக்கமுள்ள கொடியவளே! காதையும் மூக்கையும் அறுத்து உன்னைக் கட்டிச் சிறைக் கூடத்திற்கு ஆளாக்குவேன். (என்று கைக்கட்டையவிநயிக்கின்றாள்).

 

இது பிணிப்பு வடிவாகிய வித்திரவம்.

 

சேடி — (அச்சத்தான் மெய்நடுக்கமுற்று) பெருமாட்டீ! புகலற்றவளும் குற்றமற்றவளுமாகிய இவ்வேழையைக் காத்தருள்க; காத்தருள்க. தங்கள் உடன்பிறந்தாள் இடும்பன் கோட்டத்திற்கேகுங்கால் என்னை வற்புறுத்தி யழைத்துச் சென்றாள்; ஊறுபடுத்துந் தெய்வத்தை

உயர்நலப்படுத்தற்கே யான் அங்கட் காலந்தாழ்த்தேன்.

 

செவிலி — (சினமுடன் உங்காரஞ் செய்து) இத்தகைய அரண்மனைப் பெருவிழாவை விடுத்துப் பேறிலளாகிய நீ, இடும்பாலயத்தின் பெருங்கற்களில் ஏன் மண்டையை உடைத்துக் கொள்ளுகின்றாய்?

 

இது கடவுளரை யிகழ்ந்துரைத்

தல் வடிவாகிய திரவம்.

 

சேடீ — பெருமாட்டீ! தாழ்வினைப் பொருத்தருள்க; தங்களாற் செயக்கடவ மங்கல வழிபாடுகளை யானே விரைவிற் செய்து முடிப்பேன். (என்று உடல் வீழ வணங்குகின்றாள்).

 

செவிலி — (கருணையுடன்) ஏடீ! எழுக; எழுக;

 

இது, விரோதம் ஒழிந்த நிலையாகுஞ் சத்தி.

 

சேடீ — (மகிழ்ச்சியுடன்) (எழுந்து) (கைலாகையளித்து) பெருமாட்டீ! இங்கு வருக; இங்கு வருக;

 

செவிலி — (சிறிது நடந்து எதிரே பார்த்து) இக்கடைகாவலன்[1], பரபரப்புடன் வெளிச்செல்லுகின்றானே; அதனால் பட்டாபிடேக நல்வேளையணித்துள்ளது போலும்; ஆதலால் மங்கலநீராசன[2] தீபமுறையை முடித்தற்கு உட்புகுவோம். (என்று சென்றனர்).

 

பிரவேசகம்.

 

(அதன்பின் வாயில் காவலன் வருகின்றான்)

 

வாயில்காவலன் — (செருக்குடன் நடந்து வாயிலிற் குழுமிய அரசரது பேரிரைச்சலைப் பொறாது பொற்பிரம்பை உயர்த்தி அவமதிப்புடன்)

ஓ! ஓ! வேந்தர்களே! கேளுங்கள்; இறைப் பொருளாகக் கொடுக்கப்பட்ட இவ்வேழக்குழுவின் உரத்த பிளிறொலியால் பொழுதறி மணியொலி செவிக்கேறுறவில்லையாகலின், அதனை நகர்ப்புறத்தமைக்க; தேர்ப்படை குதிரைப்படை யென்னுமிவற்றின் நெருக்கத்தான் நகரமக்கள், சென்றுவரற்கியலவில்லை யாகலின் அவற்றை நெடுந்தொலையில் நிறுத்துக. (க)

 

இது அதட்டியச்சுறுத்த

லாகுந் தியுதி

 

(சிறிது உரத்த குரலில்)

 

ஓ! ஓ! குலவழி வந்த பேரமைச்சர்களே! சிறப்புறும் அதிகாரிகளே! பணியாளர்களே! நகரமக்களே! எல்லவருங் கேளுங்கள். இஃது உருத்திரதேவரது ஆணை; என்னையெனில்:-

 

காகதிக் குலத்திற் பிறந்த முன்னையரசர்களாற் பாலிக்கப்பட்டு, மாநுட சம்புவாகிய கணபதி வேந்தராற் சிறப்பெய்தி, என்புயத்திலினிதிருந்து குலவரையிருக்கையை யறவே மறந்த நில மாது, இது காலை வீரருத்திரனுடைய புயங்களில் அசையா நிலையையடைக.                                                      (உ)

 

தன்குலத்துதித்தாரைப் புகழ்ந்து

கூறலான் இது பெரியாரைப்

புகழ்தலாகும் பிரசங்கம்.

 

(மீண்டும் செருக்குடன் சுற்றி வந்து)

 

அதிகாரிகளே! இப்பொழுது எச்செயற் புரியத் தொடங்குகின்றீர்கள்? சுயம்பூ தேவரது பூசனைச் செயல் தொடங்கப்பட்டதோ? நகர்த் தெய்வங்கட்கு பலிகள் அளிக்கப்பட்டனவா? வருணப் பெரியார் யாவரும் அருச்சிக்கப்பட்டனரா? பட்டாபிடேக வேதி யலங்கரிக்கப்பட்டுள்ளதா? பொற்குடங்களிற் புண்ணியப் புனல்கள் பூரிக்கப்பட்டனவா? பட்டாபிடேகத்திற்குரிய கருவிகள் அவ்வேதியினருகிற் சேர்க்கப்பட்டனவா? ஒளிநூலறிஞர், மங்கல நல்வேளையில் கருத்துடனமைகின்றனரா? தெலுங்கு நகர்ப் பெண்டிரும் தம்மையணிப்படுத்தினரா? இது பொழுது பிரதாபருத்திரர், நிலமகளின் கைப்பிடி மங்கலத்திற்குரிய மங்கல வேடம் புனைந்து காகதிவேந்தரின் அரசியற்றிருமகளந்தர்ப்புரத்தில் இருக்கின்றார்; ஆதலிற் செய்வன விரைந்து செய்க.

 

(பிறிதிடஞ் சென்று புருவநெறித்துப்பார்த்து)

 

என்னே! அரசர்கள் ஓய்வதில்லை.

(சிறிது அணிமைக்கணெய்தி)

 

ஓ! ஓ! அரசர்களே! இடத்திற்கேற்ப அமைக; இறைப் பொருட் குழுவைச் சித்தஞ் செய்க; எனது பிரம்புத் தடி வீணிரைச்சலைப் பொறாது.

 

இஃது அவமதிப்பாகுஞ் சலனம்

 

(நாற்புரமும் பார்த்து மிக்கச் செருக்குடன்)

 

ஓகோ! உலகைத் துரும்பெனக் கருதும் அரசரது மட்டடங்காப் பேரொலியைத் தடைப்படுத்திய எனது பெருமை யென்னே! அன்றேல், காகதிவேந்தரைச் சார்ந்த கடைகாவலர் அரசரைத் தடைப்படுத்தலை இளமைமுதற் பயின்றவரேயாவர்.

 

தனது திறலை வெளிப்படுத்த

லாகும் இது வியவசாயம்.

(மற்றொரு வாயில் காவலன் திரையை நீக்கிக் கொண்டு வருகின்றான்)

 

வாயில் காவலன் — (மறுப்புடன்) அடா! அமயமறியாதவன் யாவன் அரசரைத் தடைப்படுத்தினான்? பெருவிழாக்காண விரும்பும் எல்லவரும் உட்செல்லுங்கள்.

 

முதலாமவன் — (சினமுடன்) காகதிகுலத்திற் பழமையான கடைகாவலனாகிய என்னையா அமயம் அறியாதவன் என்று கூறுகின்றாய்?

 

இரண்டாமவன் — நீயாவனாயினும் அமைக; அரசர்களை உட்புகுவித்தல் வேண்டுமென்பது பேரரசரது கட்டளை.

 

இது கடைகாவலொருவர்க்

கொருவர் சினமுற்றுக் கூற

லாகும் விரோதம்.

 

முதலாமவன் — இவனுடன் வீண் கலகத்தாற் பயனென்? அரசரில்லத்தின் புறந்திண்ணையின் நடுவணமர்ந்து புரோகிதராற் பாராட்டப்படும் இளவரசரது பக்கலே சேருகின்றேன். (என்று சுற்றி வருகின்றான்)

 

இரண்டாமவன் — யானும் குறித்த செயலைச் செய்கின்றேன். (என்று சுற்றி வருகின்றான்)

 

(அதன்பின் குறித்த நிலையில் பிரதாபருத்திரன் புரோகிதர் அமாத்தியர் வருகின்றனர்.)

 

புரோகிதர் — காகதிக்குலத்திலகமே! இளவரசராகிய தாங்கள், பத்துத்திசைகளையும் விளையாட்டாகவே வென்றீர் என்னுமிதனால், இந்த யாம் கூறிய ஆசிமொழி யாவும் இதுபொழுது உண்மையாயின. மேலும்.

 

காகதிவேந்தரது குலம் மூவுலகிலும் சிறப்புறும் புகழை யிதுகாலையெய்தியது; நிலமகளும், இதுபொழுது நல்லரசுடையளாயினள்; எல்லா மக்களும் இடையூறொழிந்தனர்.                                                     (ங)

எதிர்கால நலத்தைப் பெற்றாங்கு

கூறலான் இது பிரரோசனை.

 

மந்திரிமார் — காகதிக்குல வாழ்க்கையையெய்தி அதிபதிகளாய் விளங்கும் யாமும், கதிர்மதிகளின் குல அமைச்சரது பெருமையை இது வேளை புறக்கணித்தேம்.  (சா)

 

நிகழ்ச்சிக்கேற்பப் புகழ்ந்து

கூறலான் இது விசலனம்.

புரோகிதர் — அரசிளங்குமர! இப்பட்டாபிடேகக் கருவிகள் யாவுஞ் சித்தஞ் செய்யப்பட்டன. காகதிவேந்தர் முறையே அமர்ந்த சிங்காதனம்[3], தங்கள் ஏற்றத்தை யெதிர்பார்க்கின்றது; ஆதலிற் பேரரசர், சுயம்பூ தேவரது அருள் கொண்டளிக்கு மாணையைப் பாலித்தல் வேண்டும்.

 

இது செயலை மேற் கோடலா

கும் ஆதானம்.

 

பிரதாப — ஆயின், குலதெய்வமாகிய சுயம்பூதேவரை வணக்கஞ் செய்து தந்தையாராணையைத் தாங்கி நிற்க விரும்புகின்றேன்.

 

புரோகிதர் — காகதிக்குலவிளக்காகிய தங்களுக்கு இவ்வொழுக்கம் தக்கதேயாம்; ஆனால் பட்டாபிடேகத்திற்குரிய நல்வேளை அணிமைத்தாகலின், அரசிளங்குமரன் செய்வன விரைந்தே செய்துவரல் வேண்டும். யாமும் இனிச் செயற்பாலதாகிய எஞ்சிய செயலை ஆராய்வேம்.

 

பிரதாப — காகதிக்குலத்தைத் தன்வயப்படுத்துந் தங்கள் கட்டளைப்படியே.

(என்றெழுந்து முறையே சுற்றி வந்து எல்லவருஞ் சென்றனர்.)

 

நாடகவியலில் “விரைவுறு பெருவிழா” என்னும் நான்காம் அங்கம் முற்றிற்று.

 

 

[1] கடைகாவலன் — வாயில் காப்பவன்; இவனது வருகைக்குமுன் கூறிய கதைப்பகுதிகள் நடந்தனவாம்; இனிவருங் கதையாம்.

[2] நீராசனம் — தலைவற்குக் கண்ணேறு வாராது வயதிற் பெரிய மங்கலப் பெண்டிராற் செயப்படுமோர் சடங்கு; அது, அகன்றதோர் பாண்டத்திற் செந்நீரிட்டு நடுவண் ஆவினெய் வார்த்த மாவிளக்கேற்றி அதனைக் கையிலேந்தித் தலைவனைச் சுற்றி வருதல்.

[3] சிங்காதனம் — அரசனமர்ந்து செங்கோலோச்சும் இருக்கை; இதனிலக்கணத்தை வாத்து நூலுணர்வார் இங்ஙனங் கூறுவர்.

“ஆறங்குல முயர்ச்சியும், பதினாறு அங்குல மகற்சியும், இருபத்துநான்கு அங்குல நீட்சியும் அமைதர கமலக் குறியிட்டுப் பான்மரத்திலழகுபடச் செய்யப்படும் ஆதனம்; இது அபிடேக வினையிற் பயன்படுவதாம்; இதனைப் பத்திராதனம் என்றுங் கூறுப”

இதனைச் சிங்காதனம் என வசிட்டமுனி முதலியோர் கூறுவர்.

Leave a comment