பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 4

இரண்டாம் அங்கம்

(வேடசாலையில்)

ஐயன் இங்கு வரவேண்டும்; இங்கு வரவேண்டும்;

(கிழக்கஞ்சுகி வருகின்றான்)

கஞ்சுகி[1] — (மகிழ்ச்சியுடன்) முன்னரே காளைப் பருவத்தைக் கடந்தும், நற்பயனெய்திய[2] இந்த நரையுடன் திரி தருகின்றேன். நெடிது நாள் நிலைப்பெய்திய இந்நரையால் பிரதாபருத்திரனது பட்டாபிடேகமாகிய பெருவிழாவை யனுபவிக்கின்றேன்.

நண்பகலை[3] வன்னித்தலாற் றடைப்

பட்ட கதைப் பொருளை மீண்டும் ஆ

ராய்தலான் இது பிந்து.

இன்னும்,

உரை  நடை செயல் என்னுமிவற்றால் பதந்தொறும்[4] நழுவி விழுகின்ற என்னைப் பார்த்து எம்பெருமானாகிய உருத்திரவேந்தர் சிறித்தவண்ணமிருக்கின்றார்.  (க)

 

(ஆராய்ச்சியுடனும் வியப்புடனும்)

 

காகதி வேந்தருடைய அரசியற்றிருமகள், முதல்[5] இல்லத்தின் சாளரங்கள் வழியாக இளவரசரின் இல்லத்தை யிது பொழுது மெல்ல நோக்குகின்றாள்.             (உ)

 

அரசியற்றிருமகள் பிரதாபருத்திரனை

விரும்பியமையான் இது விலாசம்.

(எதிரே பார்த்து) அரசிளங்குமரனுடைய ஏவலனாகிய தாரகன் எற்குறித்தே பரபரப்புடன் வருகின்றானே.

தாரகன் — (வந்து) ஐயரே! வணக்கஞ் செய்கின்றேன்.

கஞ்சுகி — நல்லோய்! மங்கலமெய்துக, அரசிளங்குமரரது வெற்றிச்சிலவை, உருத்திரதேவர் ஒருப்பட்டனரோ?

தாரகன் — மனம் வருந்தியே ஒருப்பட்டார்.

கஞ்சுகி — உருத்திரவேந்தர், வெற்றிச்செலவிற்குரிய கருவிகளை சித்தஞ் செய்யுங்கால், அரசிளங்குமரன், அவரது சரணத்தில் வணங்கி இச்செயலினின்றும் அவரைத் தடுத்துத் தானே செலற்கெழுகின்றனர்; என்னுமிஃது அவ்வரசிளங்குமரனது பெயர்க்குப்[6] பொருத்தமே.

தாரகன் — இளவரசர், போர்ப்பயிற்சியில்லாதவர்; திசை வெற்றியோ செயற்கரிய செயலாகும்; யாது நேருமோ

கஞ்சுகி — நல்லோய்! சுயம்பூ தேவருடைய அருட்செயல்கள் தடைப்படாதனவன்றே; எண்ணரிய மாட்சிமிக்க வீரருத்திரனும் திருமாலின் அவதாரமன்றோ?

 

கண்டொழிந்த பீசத்தைப்[7] பின்பற்ற

லாகு மிது பரிசருப்பம்.

இங்கண், கனவுச்செய்தியை வெளிப்படுத்

தலாற் காண்டற்குரியதும், திசைவெற்றிச்

செலவின் முயற்சியாற் காண்டற்கரியது

மாகிய பீசத்தைத் தோற்றுவித்தலான்

உற்பேதமென்னுமிது பிரதிமுகசந்தி.

 

தாரகன் — இஃதுண்மையே! அவரது பெருமை, தெய்வத்தன்மையதே.

கஞ்சுகி — அரசிளங்குமரர் எங்கிருக்கின்றார்.

தாரகன் — காகதிக் குல தெய்வமாகிய துர்கையம்மையை வழிபடுமுகமாக வெற்றிச்செலவின் மங்கலச் செயலையாற்றி, அனுமான்மலைச்சாரலின் வெளி உய்யானத்திற் பாடி வீடமைத்துக் கொண்டு அங்கண் அமைச்சர்சூழ்தர இளவரசர் இருக்கின்றார். யான் அங்குச் செல்ல விடை தருக.

கஞ்சுகி — நல்லோய்! செல்லுக; யானும் அரண்மனைக்குச் செல்லுகின்றேன்.

(முறையே சுற்றி வந்து சென்றனர்)

இது சூளிகை

பிரவேசகம்

(அதன்பின், பிரதாபருத்திரன் மந்திரிமார் ஏவலன் ஆகிய இவர்கள் வருகின்றனர்)

 

பிரதாபருத்திரன் — குலத்திற்குரிய பற்றுக்கோடாகுந் தந்தையாரைச் சமநிலைக்குரியராக்கும் அரசியலான் என்?[8] அன்றியும் இதிற் பல பெருங்குற்றங்கள்[9] உள்ளனவாகப் பெரியோர் கூறுகின்றனர்; இவ்வற நெறியும் இப்பொழுது[10] சிதைக்கப்பட்டுள்ளது. இதிற்றடைப்படாமல் நடந்து செல்ல யாவரே வல்லார்; ஆதலின் இளமைப் பருவத்தில் இன்புற்று விளையாடும் எனக்கு இளவரசும்[11] விரும்பற்பாலதின்று.                                   (ங)

 

அதனால் யாம், பேரரசருடைய தாழனைய புயங்களாற்[12] பகை நீங்கிய திசைவெளிகளில் வெற்றிச் செலவென்னும் பொழுது கழிக்கும் விளையாட்டினால் இன்புறுகின்றோம்.

அரசியலில் விருப்பமின்மயைக்

கூறலான் இது விதூதம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமர! பேரரசர் எவ்வாற்றானுஞ் சிறந்த காகதிக் குலத்தின் ஊழ்வினைப்பயனால் துரந்தரனாகிய நின்னையெய்தி நெடிது  நாட்டாங்கிய சுமையைத் தளர்த்தற்குத் துணிகின்றனர்; புதல்வன் அரசியலைத் தாங்கற்குரியனாங் கால், தந்தை தவநிலை யெய்த விருப்புடையனாதல் காகதி வேந்தர்க்கியல்பான ஒழுக்கமே; குலதெய்வமாகிய சுயம்பூ தேவராலும் இங்ஙனமே உபதேசிக்கப்பட்டது. இருமுதுகுரவரது[13] மாட்சிமிக்க ஆணையைக் கடத்தல், அரசிளங்குமரற்கு தக்கதன்று; கலியுகத்தின் குற்றத்தாற் சிதைவுற்ற அறநெறியை நிலைப்படுத்தற்கும், தாங்கற்கரிய புவிப்பொறையைத் தாங்கி நிற்றற்கும், அவதரித்த காகதித் திருமாலாகிய தாங்கள், அரசியலை மறுத்தல் பொருத்தமன்று.

 

பிரதாப — (உடன்பாடுடன்)

 

சுயம்புதேவர், தந்தையர், என்னும் தேவமனிதராகிய இவ்விருவரும் எற் கிறைவராவர்; அவ்விருவருள், ஒருவர் அரசராக, யான் முற்றிலும் இளவரசனாகவே அமைவேன்.                                             (ச)

 

மந்திரிமார் — அரசிளங்குமர! சுயம்பூதேவராகிய பேரரசர்பால் உண்டாகும் இவ்வணக்கம், காகதிவேந்தர் எல்லவர்க்கும் பொதுவான இயல்பாம்.

 

(நிகழுஞ் செயலைப் பற்றிய வெறுப்பை யொழித்தலான் இது சமம் ஆம்).

 

ஏவலன் — காகதிகுலக் கிழவரும் பூசனைக்குரியருமாகிய சுயம்புதேவர் புவிப்பொறையைத் தாங்குக; அரசிளங்குமரனோ என்னில் அரசியற்றிருமகளை மடிக்கணேற்றியமைக்க.

 

பிரதாப — (புன்முறுவலுடன் ஏவலனைப் பார்க்கின்றான்)

 

இது பரிகாச வார்த்தையாகிய நரும.

 

ஏவலன் — மேதினி நெடிது பயனுடைத்தாயிற்று. குலவரைக்குடுமிகளின் வலமிக்ககன்ற பாறையில் வசித்தலான் வருந்திய உறுப்புக்களையுடைய இந் நிலமகள், பிரதாபருத்திரனது வாகுவில் வசித்தின்புறுக.                    (ரு)

 

அரிச்சந்திரனது புயத்திலும் இராமனது வாகுவிலும் இவ்வையம் இன்புற்றிருந்தாங்கு, காகதித் திருவின் கேள்வனது கைத்தலத்தினும் இருந்தின்புற்று மகிழ்க.                                                    (கா)

 

பிரதாப — (கைத்துடிப்புடன்[14] கீழ்நோக்கியவண்ணம் நிற்கின்றான்)

 

ஏவலன் சொற்களானிகழ்ந்த

இன்பமாகுமிது நருமத்தியுதி

 

மந்திரிமார் — அரசிளங்குமர! காகதித் திருமாலாகிய தங்களை மணத்தற்கு விரும்பும் அரசியற்றிருமகள், காலத்தாழ்வைப் பொறாள்.

 

ஏவலன் — இளவரசனாகிய தலைவன்பால் கலைமகட்கு நிகழுங் காதற் செயலை மிகுதியுங் கண்ட நிலமகளும் திருமகளும் காலத்தாழ்வை யெங்ஙனம் பொறுப்பர். (எ)

 

மந்திரிமார் — இவ்வண்ணமே.

அரசியற்றிருமகள் தனது மிகுவனப்பாற் பேரவைக் களத்தை யலங்கரித்து ஆர்வமிக்குடையளாய் இதுபொழுது இளவரசரது கூட்டத்தை யெதிர்[15]பார்க்கின்றாள். (அ)

 

மந்திரிமார்களுடையவும் ஏவலனு

டையவும் சொற்றொடர்களாற்பீ

சத்தின் அவாமிகையை வெளிப்

படுத்தலான் இது பிரகமம்.

 

ஏவலன் — இப்பெருவிழா, திசைவெற்றிச் செலவினாற் றடைப்படுத்தப்பட்டதோ?

 

நிகழுஞ் செயல் திசை வெற்றிச்செலவினாற் றாழ்த்தலான் இது நிரோதம்.

 

மந்திரிமார் — (அவமதிப்புடன்) தெலுங்குத் தானைத் தலைவர், ஏன் காலந்தாழ்க்கின்றனர்? அன்றேல், அவரால் என்? யாமோ, மந்திரிப்படையுடையராகுமாத்திரையில் அல்லேம்; அமர்க்கணுஞற்றும் வெற்றிச் செயலாற் றலைவரை யின்புறுத்துமாற்றலுடையேமும் ஆவேம்.[16]

இது கடுஞ் சொல் வடிவாகிய

வச்சிரம் ஆம்.

 

(வந்து) வாயில்காவலன் — வெற்றிபெறுக; இளவரசர் வெற்றிபெறுக. இத்தானைத் தலைவர், நால்வகைப் படைகளைச் சித்தஞ் செய்துகொண்டு வாயில் நிலவெளிக்கணிருக்கின்றனர்.

 

மந்திரிமார் — ஓ! விரைவில் வரச் செய்க.

 

வாயில்காவலன் — அங்ஙனமே. (என்று சென்று தானைத் தலைவருடன் மீண்டும் வருகின்றான்)

 

படைத்தலைவர் — (முறையே வணக்கஞ் செய்து) பெருமானே! காகதிகுலதிலகமே! சருவதோமுகாடம்பரத்தையுடைய[17] வாகினிகன்[18] வீரக்கடலாகிய[19] தங்களை வந்தடைந்தனவே; ஆதலின், அருள்புரியுமியல்புடைக் கடைவிழியால் நோக்குக.

 

இது கோருதல் வடிவாகிய பரியுபாசனம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமர! அப்படியானால் பகைவரை நூறும் வாரணத்திலேறியமர்க; இடைவிடாது எதிரிகளைப் புடைக்கும் படைகளைப் பார்க்க. படைத்தலைவர் எல்லாப்பகைவிடங்களையும் வேறற்குரிய போர்ச் செலவை நிகழ்த்துக.[20]

 

பிரதாப — அமைச்சர் விரும்பிய வண்ணமே.

(என்று மதவேழத்திலேறுதலை யவிநயிக்கின்றான்)

 

மந்திரிமார் — கரங்களின்[21] தேசுமிகையால்[22] எல்லாத் திசைகளையுந் தன்வயப்படுத்தற்குக் கதிரவன் உதயகிரியிலேறியாங்கு வீரருத்திரன் வேழத்திலேறுகின்றான்.                                               (கூ)

 

நிகழ்ச்சிக்கேற்ப அவாமிகக்

கூறலாகுமிது புட்பம் ஆம்.

 

(எல்லவரும் இளங்கோக்களிற்றை முன்னிட்டுக் குழுமி மெல்லெனச் சுற்றி வருகின்றனர்.)

 

படைத்தலைவர் — (உற்சாகத்துடன் வணக்கஞ் செய்து) பெருமானே! இங்கட்பார்வையை யளிக்க.

 

விரைந்து செல்லுகின்ற காலாட்படையின் காலடியாற் பொடியாகிப் பூமியினின்றும் மேற்கிளம்பும் பூழித்திரளாகும் முகிற்குழுவினிடையில் மின்னியொளிர்தரும் வாட்படையாகும் மின்னலான் மிக்க விளக்கமுறுவனவும், இரணபேரியின் முழக்கமாகிய இடியொலியாற் றிசை வெளியாவும் படபடவென்றொலிக்கவும், கரிகளின் கபோலதலத்தின் வழிந்தொழுகு மதநீராகும் மாரி நீரையுடையவுமாய்த் தானைகள், கார்கால வனப்பைச் செய்கின்றன.                          (க0)

 

(வேறிடத்திற் பார்த்து)

 

அச்சுறுத்தும் படைகள், மாதிரங்களை வேறற்குப் பரபரப்புடன் செல்லுங்கால், இந்திரன்றிசையை வெல்லுதற்கு முயன்றனவும், துணைவலியாற் பெருமிதமெய்தியவும், நெடும்பகையுடையவும் ஆகியவரைகளென்ன வேழங்கள் செல்லுகின்றன. செல்லவே, ஆதிசேடனுடைய முடிகள் பொறை மிகையான் ஒருபுறந் தாழ்ந்து மற்றொருபுறம் நிமிர்ந்து சுருங்கியமைகின்றன.           (கக)

 

ஏவலன் — (பார்த்து வியப்புடன்) தெலுங்கு வீரரது ஊக்கம் மிகப் பெரிதன்றே.

 

இருப்புலக்கையை வீசியச்சுறுத்துவாரும், அடிதொறுந் தூக்கி வீசிய வாட்படையுடையாரும், விரும்பியாங்கெறிந்த முசண்டியுடையாரும், விரைந்திழுக்கப்பட்டொலிக்கும் வில்லினையுடையாரும், சுழற்றி வெருவுறுத்தும் கதையினையுடையாரும், முற்றும் பாயும் இறுகம்பு உடையாரும், ஒளிவிளக்கும் பட்டசமுடையாருமாகிய தெலுங்குத் தானைவீரர், உருவெடுத்து வந்த உருத்திரகணங்கள்போல விளையாடுகின்றனர்.

 

மந்திரிமார் — ஓகோ! தெலுங்கரசருடைய குதிரைப் பெருக்கம்.

 

கதிரவன் குதிரையைச் சிரத்திலடித்தற்கென்ன முன்னங்கால்களை மேலே தூக்கி பின்னங்கால்களான் பரபரப்பாற் கீண்டிய தரையைத் தகர்த்து, வீசுகின்ற வால்களால் பகைப்பரிகளின் மனவலியையொழித்து இத்துரகங்கள், ஆடல் நடையானே துலங்கு மைந்தாரையின்[23] விரிவுடையனவாய்ச் செல்லுகின்றன.(கங)

 

(பார்த்து) ஓகோ! தேர்ப்படையின் ஊக்கம், பகைப்படையின் மனவலியைச் சிதைக்கின்றது.

அங்ஙனமே.

 

விரைவொடு நெருங்கிச் சுழல்வுறுந் தங்கநேமியாற் பொடிபடும் பூதலப் பூழிவானிடைப் பறக்க, அப்பூழித்திரளாகும் புயலான் கதிரவன் றேரைப் பொறாமையான் விரைந்து மறைத்த தேர்கள், இடையறாதொலிக்கும் அச்சினையுடையவாய் முழக்கஞ் செய்கின்றன.                 (கச)

 

பிரதாப — (எல்லாப் புறத்தும் பார்த்து மகிழ்ச்சியுடன்) படைகள், நிறைவுற்ற சாதனங்களையுடையனவே.

 

படைவளங்கள், பிளிறிடுங் கயங்கணிரம்பியவும், கனைக்குங் குதிரைகணிறைந்தனவும், ஒலிக்குந் தேரையுடையவும் சங்கநாதஞ் செய்யும் வீரர்களையுடையவுமாய்த் திகழ்கின்றன.                               (கரு)

 

மந்திரிமார் — இளவேந்தனைக்[24] கண்டு படைக்கடல் கரைகடந்து பொங்குகின்றது.

 

இக்காகதிக்குலக்கடல் பலபுறத்தானும் விரைந்து வருகின்ற பலவேந்தலின்[25] வாகினிகளை விரும்பியவண்ணம் உட்கொள்ளப்போகின்றது.[26]            (ககா)

 

படைத்தலைவர் — மந்திரிமார் கட்டளைப்படியே; (என்று வணக்கமுடன்) வெற்றிச் செலவில் விருப்புடைய தானைகள் இளவரசரின் ஆணயை இது பொழுது எதிபார்க்கின்றன.

 

பிரதாப — (அருள் கூர்ந்து அமைச்சரைப் பார்க்கின்றான்)

 

மந்திரிமார் — (ஊக்கமுடன்) படைகள் கீழ்த்திசையை நோக்கிச் செல்க.

 

படைத்தலைவர் — அமைச்சரது கட்டளைப்படியே (என்று செலவை நடித்து நாற்புறமும் பார்த்து மகிழ்ச்சியுடனும் வியப்புடனும்)

 

உதவிபுரியுங் காற்றால் அலைதரு துகிற்றானைகளையுடைய விருதுக்கொடிகள், குணதிசையை யெதிர்த்தற்கு முயலுகின்றன போல       (கஎ)

 

(எல்லவரும் நன்னிமித்தத்தைப் பாராட்டுகின்றனர்)

 

வெற்றிச் செலவிற்கேற்ப

நிமித்த நலனைக் கூறலான்

இஃது உபநியாசம்.

 

பிரதாப (எதிரே பார்த்து) மங்கள அரிசியைப் பொற்பாத்திரத்தில் வைத்து அதனைக் கையிலேந்தி சிறந்தவோர் அந்தணர் வந்தெய்தினரே.

 

அந்தணர் — (வந்து பணிவுடன் முன்னிலையில் நின்று நலங்கூறுமுகமாக வலக்கரத்தைத் தூக்கி) வீரருத்திரன் வெற்றி பெறுக; வெற்றி பெறுக; அரசிளங்குமர! சுயம்பூதேவரது மகோற்சவம் முதலிய கழிந்தபின்னர் மறையவர் நலங் கூறியளித்த மங்கல அரிசிகளை, காகதிப் பேரரசர் அனுப்பியுள்ளார்.

 

பிரதாப — (வணக்கமுடனும் உள்ளன்புடனும் அவ்வட்சதைகளை வாங்கித் தனது சிரத்திலும் யானை மத்தகத்திலும் வைத்து) இறைவனாகிய சுயம்பூதேவன்பால் அமைந்த நமது மெய்ப்பத்திக்கொடியும் முற்றிலும் பழுத்தது; அரசர்களின் முடிகளுக்கு மணியணியாகிய தந்தையாரணையும் அருணிரம்பியுள்ளது; அந்தணரின் ஆசிமொழிகள், மந்திரமணங்கமழ்கின்றன; நாட்டுமக்களின் விருப்பங்கள், நாடோறும் வெற்றியை நாடுகின்றன; ஆதலால் இத்திசைகள் எளிதில் வேறற்குரியவாம்.                                       (கஎ)

 

அந்தணர் அரசர் முதலியோரை

வன்னித்திருத்தலான் இது

வருணசங்காரம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமரனாகிய தங்களுடைய தாழனைய புயங்களின் வீரம் இயல்பாகவே தடைப்படாதாகலின் வெற்றிச் செலவிற்கு இத்துணை யாரவாரம் எற்றிற்கு?

 

ஏவலன் — அரசிளங்குமரனது சிரத்தில் இம்மங்கல அரிசிகள், வெற்றித் திருவின் கைப்பிடி மங்கலத் தமயத்தில் அளிக்கப்பட்டன போலக் காணப்படுகின்றன.

 

அந்தணர் — அரசிளங்குமர! அவ்வத்திசை வெற்றிச் செய்திகளைத் தூதுவர் முகமாக அடிதொறும் அனுப்ப வேண்டுமென்பது பேரரசரது கட்டளை.

 

பிரதாப — தந்தையரது கட்டளையைத் தலையாற்றாங்கினேன். (மந்திரிமாரைக் குறித்து) உங்களிற் சிலர்[27], காகதி வேந்தரின் பக்கலெய்துக; சிலர், வெற்றிச் செலவில் ஊக்கமுடையராய் முயன்று செல்லக.

 

மந்திரிமார் — (வணக்கமுடன்) அரசிளங்குமரன் கட்டளைப்படியே.

 

அந்தணர் — அரசிளங்குமரன் வெற்றிபெறுக; அவ்வெற்றிச்செலவின் வழிகள் அரசிளங்குமரற்கு மங்கலத்தையளிக்க.

 

பிரதாப — (வணக்கமுடன்) பெரியீர்! கட்டளையளிக்க; யாமும் இவணிருந்து செல்லுகின்றோம்.

என்று முறையே சுற்றி வந்து

எல்லவரும் சென்றனர்.

 

நாடகவியலில், ‘வெற்றிச்செலவின் விலாசம்’ என்னும் இரண்டாம் அங்கம் முற்றிற்று.

 

[1] கஞ்சுகி — மெய்க்காப்பாளன்

[2] நரை நற்பயனெய்தியமை, பிரதாபருத்திரனது பட்டாபிடேக மகோற்சவத்தைக் காண்டலானாம்.

[3] நண்பகலை வண்ணித்தல் முதலங்கத்திறுதியில் வன்னித்திருத்தலைக் கொண்டு கூறினான் என்க.

[4] பதந்தொறும் — இது சொற்கடோறும் கணப்பொழுதுதொறும் என்னும் இருபொருள்களையுமுணர்த்தும்.

[5] முதல் இல்லம் — இது பிரதாபருத்திரன் தந்தையாகிய உருத்திரவேந்தரது இல்லத்தை.

[6] வீரருத்திரன் என்பது இவனது பெயராகலின் தந்தையரைத் தடுத்துத் தான் வெற்றிச் செலவிற்குத் தலைப்படல் இவனது வீரத்திற்குப் பொருத்தம் என்பதாம்.

[7] பிரதாபருத்திரனது பட்டாபிடேகம் பீசம் ஆம்.

[8] தந்தையார் இவ்வரசையெற்களிப்பின் தவத்தை மேற்கொள்ளுவராகலின், அத்தந்தையரது பிரிவையளிக்கு மிவ்வரசியலான் என்ன பயன் என்பது கருத்து.

[9] குற்றங்கள் — மனக்கவலை மகிழ்ச்சியின்மை மதம் அராகம் பொறையின்மை செருக்கு எச்செயலிலும் நடுக்கம் முதலிய பல குற்றங்கள் நிரம்பியுள்ளது அரசியல்; எனப் பாரதம் சாந்திபருவங் கூறும்.

[10] இப்பொழுது — இது கலியுகத்தையுணர்த்தும். இந்த யுகத்தில் அறநெறி கால்மாத்திரையில் எஞ்சியுள்ளதென்பது கருத்து.

[11] பொறுப்பற்ற இளவரசே வேண்டற்பாலதின்றெனில் பேரரசைப் பற்றிக் கூறவேண்டியதில்லை யென்பது அருத்தாபத்தியாற் பெறப்பட்டதாம்.

[12] புயங்களாற் பகை நீங்கிய இங்ஙனங் கூறல், வெற்றிச் செலவான் இனித் தனக்கு வருத்தமில்லை யென்னும் வணக்க ஒழுக்கத்தைப் புலப்படுத்துவதாம்.

[13] இருமுதுகுரவர் — ஈண்டு தந்தையாகிய உருத்திரதேவரையும், குலதெய்வமாகிய சுயம்பூதேவரையும் உணர்த்தும்.

[14] கைத்துடிப்புடன் — ஈண்டு வலக்கைத்துடிப்பை. ஆடவரது வலக்கை துடித்தல் ஆடவர்க்கு மங்கல நிமித்தம் என்ப.

[15] இச்சுலோகத்தால், அரசியற்றிருமகளாகுந்தலைவி, வாசகசச்சிகை யென்னும் வகுப்பினள் என்பது புலனாம்.

[16] இதனால் மந்திரிமார் ஆலோசனை கூறுமவ்வன்வினமையாராய் வீரச் செயற்கு முற்படலான் வெற்றிச்செலவு இனிது நிறைவுறுமென்பதும், அதனால் தானைத் தலைவரைச் சிறிதுமதியாமற் கூறினர் என்பதும் புலனாம்.

[17] சருவதோமுகாடம்பரம் — ஈண்டு நீரின் ஆரவாரத்தையும் எவ்வாற்றானுஞ் சீரிய வீரவாதத்தையும் உணர்த்தும்.

[18] வாகினிகன் — ஈண்டு படைகளையும் யாறுகளையும் உணர்த்தும்.

[19] வீரக்கடல் — பிரதாபருத்திரனை வீரக்கடலாக உருவகஞ் செய்தமையான் அவ்வுருவகத்திற்கேற்ப சருவதோமுகம், வாகினி யென்னுஞ் சொற்களான் நீர், யாறு என்னும் பொருள்கள் குறிப்பிற் புலப்படுத்தவாறு.

[20]  நிகழ்த்துக — இத்தொடரால், போரின்றி யதன் செலவுத் தொடக்கத்திலேயே படைத்தலைவன் பகைவரையும் அவரது நாடுகளையும் தன் வயப்படுத்துமாற்றலையுடையவர் என்பது போதரும்.

[21] கரங்கள் — ஈண்டு கைகளையும் கதிர்களையும் உணர்த்தும்.

[22] தேசு — ஈண்டு வலியையும் ஒளியையும் உணர்த்தும்; இதனால் கதிரவன் உதித்து கதிரொளியால் எல்லாத் திசைகளையும் ஒளிமயமாக்கித் தன்வயப்படுத்தல் போல வீரருத்திரனும் தனது புயவலியால் துணையின்றித் திசையெல்லாவற்றையும் தன்வயமாக்குவன் என்பதாம்.

[23] ஐந்தாரைகள் — ஐந்து வகைக் குதிரை நடைகள். அவை ஆற்கந்திதம், தௌரிதகம், இரேசிதகம், வற்கிதம், புலுதம், என்பனவாம்.

[24] இளவேந்தன் — ஈண்டு இளவரசரையும் வாலசந்திரனையும் உணர்த்தும்.

[25] பலவேந்தல் — ஈண்டு பல அரசரையும் மலைகளையும் உணர்த்தும்.

[26] உட்கொள்ளுதல், தன்வயப்படுத்தலையும் தன்னகப்படுத்தலையும் உணர்த்தும்.

[27] இத்தொடரால், வெற்றிச்செலவில் விருப்புற்று உடன் வந்த அமைச்சரிற் சிலரைத் தந்தையர்பாற் போக்கியமை அவர்பாலுள்ள பத்திமிகையானும் தனது ஒப்பற்ற வீரத்தானுமாம். சிலரை உடன் வர ஒருப்படமை அரசியல்முறை பற்றியான் என்க.

Leave a comment