பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 3

(குறித்த வேடத்துடன் அரசனும் கவரிவீசுமவளும் வருகின்றனர்)

 

அரசன் — (மகிழ்ச்சியுடனும் வியப்புடனும்) ஓ!ஓ! சிவபிரானுடைய அருட்பெருக்கம்,

 

குலதெய்வமாகிய சுயம்பூதேவர் தாமே வலிய வந்து செயக்கடவதை யுபதேசித்தாராகலின், இக்காகதிக்குலம், மதிகதிர் இவர்களது பெருமைவாய்ந்த குலத்தையும் வெல்லுகின்றது; நிலமகளும், இத்தகைய எங்கள்பாற் பொருந்தி கற்பணியையெய்துகின்றாள். பிரமன் தனது வாகுவிற்[1] பிறந்த வகுப்பினரை, இதுபொழுது எங்களாற் பேறெய்தினராகக் கருதுகின்றான். (உஉ)

 

புரோகிதர் — பேரரசரே! அத்தகைய மாட்சிமிக்க சுயம்பூ தேவரது இதோபதேசத்தைப் பெறற்குத் தம் போன்றாரே மிக்கத் தகுதி வாய்ந்தவர்; அன்றேல், இஃதென்ன புதுமையா? மக்கட் கிதோபதேசம் செய்யும் உரிமை, தந்தையின் பாலதே; இவ்வுண்மை யுணர்வார் இங்ஙனமன்றே கூறுகின்றனர்.

 

உமையெனக் குறிக்கப்பட்ட அவளே சோமை[2] யென்னும் புகழ்ப் பெயரையெய்தினள். உண்மையாகவே உம்முடைய அன்னையார் சிவையும், தந்தையர் பிரமத கணங்கட்குத் தலைவனாகிய கணபதித்[3] தேவனும் ஆவர் என்று.                           (உங)

 

மந்திரிமார் — இஃதிங்ஙனமே; அன்றேல் இறைவனருளையின்றிப் பெண்பாலார்க்கு, எவ்வாற்றானும் தடைப்படாத அரசுரிமை — யாங்ஙனம் அமையும்? இங்ஙனம் மாநுட சம்புவாகிய கணபதி மகாராசன் தனது உள்ளத்தின் அநுபவத்திற்கேற்ப[4] மகளை மகன் என்றே வழங்கி வந்தான். அதனைப் பின்பற்றியே உருத்திரன்[5] எனப் பெயரிட்டனன்.

 

புரோகிதர் — (பேராவலுடன்) தேவன் கனவில் உபதேசஞ் செய்ததியாது?

 

அரசன் — (அன்புடன்) இப்பொழுது கூறுகின்றேன்.

 

ஒரு நாள் மங்கலம் பொருந்திய கங்குற்பொழுதில் முறுவலித்த முகமும், மங்கையோடியைந்த மெய்யும், நுதற்கண்ணும், முடியில் மதியும் நதியும் பொருந்தி, என்முன் தோன்றிய ஏதோ ஒன்றைப் பார்த்து, ‘இவர் சுயம்பூ தேவனே’ என்று விரைந்தெழுந்தேன்.                                                      (உச)

பின்னர்க் கனவிலேயே;

 

அவரை மெய்யாரப்படிந்து மங்கலவுரைகளால் நாவாரப்புகழ்ந்து காகதிக்குல தெய்வமாகிய அவர்க்கு அரதனவாதனத்தை யளித்தேன்.                                (உரு)

 

கவரிவீசுமவள் — ஓ! அரசரது மனத்தோற்றம்; கனவிலுங் குலதெய்வ வழிபாடே நிகழ்கின்றது.

 

புரோகிதர் — கூறுவதென்னை? காகதிக் குலவேந்தர், சுயம்பூதேவர்பால் மிகுபத்தியுடையரன்றே! பின்னருங் கூறுக.

 

அரசன் — பாயலின் றலைப்புறத்தமைத்த பூரண[6] கும்பத்தினீரால் என்னுடைய குலதெய்வத்திற்குப் பாத்திய நீரையளித்து விளக்கமிக்க மணிகளான்[7] அத்தெய்வத்தையருச்சித்தேன்.                                  (உசா)

 

பின்னரும்,

கைகளைக் கூப்பித் தலைவணங்கிய என்னைச் சுயம்பூதேவர், அபயமளிக்கவல்ல கரத்தால் வருடி உமாதேவியாராற் பாராட்டப்பட்ட ஓர்வார்த்தையைப் புன்முறுவல் விளங்கக் கூறினார்.                                              (உஎ)

 

என்னையெனில்,

இடையுலகின் அளவின்மிக்க பாக்கியங்களானும், நிலமகளின் குற்றமற்ற தவ விசேடங்களானும், மக்களுடைய நல்வினைப் பயன்களானும் நல்லொழுக்கங்களானும், இப்பிரதாபருத்திரன் இங்கண்[8] அவதரித்தான்.     (உஅ)

குழந்தாய்! காகதிக்குலவிளக்கே!

எனது ஆணையான் முன்னரே மகனாகக் கொண்ட மகண்மகன், இப்புவிப்பொறையைத் தாங்கற்குரியனாகலின் இதனை இவன்பால் அளித்தி யென்று.                                                      (உகூ)

 

புரோகிதர் (மகிழ்ச்சியுடன்[9]) அரசரே! காகதீய குலத்திற்கு நலம்புரியவல்ல சிவபெருமான் இங்ஙனங் காட்சியளித்துபதேசித்தருளினர்; தங்களது விருப்பமும் இஃதே; இப்பெருவிழா, மக்களையும் இன்புறுத்துவதொன்றாம்; முன்னரே இளவரசெய்திய பிரதாபருத்திரனது புயமுடியில், கடல்புடைசூழ்ந்த காசினியும் அமைக. மேலும்; மேலும்;

பயனைத் துணிந்து கூறலான் இது யுத்தியாம்.

 

அரசன் — நிலமகளும் அச்சொற்களைக் கேட்டு மட்டங்கா மகிழ்ச்சியின் மலர்ந்த விழிகளையுடையளாய் சிவபிரானாரது பக்கலிற் காணப்பட்டாள்.

கவரிவீசு — வேந்தனது உள்ளத்தைப் பின்பற்றும் நிலமகட்கு மகிழ்ச்சியுண்டாதல், சாலப் பொருத்தமே.

சுயம்பூதேவருடைய சொற்களைக் கேட்டு நிலமகள் இன்பமெய்தலான் இது பிராத்தியாம்.

அரசன் — காகதிக்குலநலங்களுக்குத் தேவரே, அடியீடெனத் துணிந்து அவரது கட்டளையை யான் சிரமேற்கொண்டேன்; தேவரும் அருண்மிக்கொழுகக் காட்சியளித்து மறைவெய்தினர்.

நிலத்தையடைதற்குக் காரண

மாகிய பீசத்தைச் சுயம்பூதேவன்

உபதேசிக்க, அவ்வுபதேசத்தைப்

பெறலான் இது சமாதானம்.

 

மந்திரிமார் — கனவுச் செய்தி, உலகிற்கெல்லாம் இன்பத்தை விளைவிப்பதாம்; ஆனால், காகதிக்குல முதுவேந்தர்க்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றும் அரசர், நகர்க்கண் வசித்தற்கினி விரும்பார் என்பதும், அங்ஙனமே, காகதிகுலவீரனாகிய வீரருத்திரனது, உலகத்தைப் புரக்கவல்ல தாழனையவாகுவில் அரசியற்சும்மை யமைகின்ற தென்பதும் ஆகிய இச்செய்திகளால் நமது உள்ளம் துன்ப இன்பங்களின் எல்லையைத் தொடுகின்றது.

 

இன்பத்துன்பங்கட்கு ஏது

வாகுமிது விதானம்

 

கவரிவீசு — ஆச்சரியம்! ஆச்சரியம்!

மலைமகள் கொழுநன் குல அமைச்சர் மூலமாகவே இங்ஙனம் உபதேசித்தருளினார்.

 

இது பீசத்தைப் பற்றிய வியப்பாகிய பரிபாவனை.

 

அரசன் — (மிக்க மகிழ்ச்சியுடன்) (மந்திரிகளைக் குறித்து)

காகதிக்குல நலமாகுங் கற்பகக் கொடிக்கு முனையாகிய சுயம்பூதேவரது இவ்வருட்பேற்றை, எல்லவருங் கேட்டின்புறுமாறு செய்க.

 

பீசத்தை வெளிப்படுத்தலான்

இது உற்பேதம்.

 

மந்திரிமார் — காகதீயப் பேரரசரது கட்டளைப்படியே.

 

அரசர் — இப்பொழுது செயக்கடவ செயல் யாது?

 

புரோகிதர் — வேந்தரீர்! பிரதாபருத்திரற்குப் பட்டாபிடேகஞ் செய்தற்குரிய பொருள்களைச் சித்தஞ் செய்தலையன்றிப் பிறிதொரு செயல் ஏது?

 

பீசத்திற்கேற்ப ஊக்கி

விடுதலாகும் இது பேதம்.

 

மந்திரிமார் — அரசிளங்குமரன், திசைவெற்றிச் செலவாற்றன்வயத்தாராகிய அரசர் குழாத்தினாற் கொணரப்படும் புண்ணி நீராற் சுயம்பூதேவரது அருட்பேறாக வெளிப்படுக்கப்பட்ட பட்டாபிடேகத்தை அநுபவித்தல் வேண்டும்.

 

புரோகிதர் — மந்திரிமார் தக்கதே கூறினர்.

 

அரசன் — அப்படியாயின், வெற்றிச்செலவிற்குச் சாதனமாகிய அறுவகைப் படைகளையும் சித்தஞ் செய்க; யானுஞ் சித்தமாகின்றேன்:

இது, தொடக்கம்; இது பீசத்திற்கேற்ற

தொடக்கமாகிய கரணம்.

தொடக்கம் பீசம் இவற்றின் இயைபினை

யுடையதும், உறுப்புக்களோடு கூடிய

தும் ஆகிய முகசந்தியாம்.

 

(வேடசாலையில்)

 

வைதாளிகர் — நண்பகலைச் சார்ந்த சந்தி, அரசரது நலத்திற்கே அமைக; இப்பொழுது.

 

உமது தேசுக்குழு[10], சக்கிரவாடமலை முழைக்கணுறு மிருட்குழாத்தினிறுமாப்பைப் போக்கி, எத்துணைப்புவனங்களைக் கடந்து விளையாடுகின்றதென்று, காண்டற்கு விருப்புடையன் போல இப்பகலவன், தன்செயல்[11] வருத்த  நீங்கி முழு ஒளியுடன் வானத்துச்சியையேறுகின்றான்.                               (ங0)

இன்னும், மலயவரைக்கட்சந்தணத்தருக்களிற் படர்ந்த கொடிவீடுகளில்[12] விளையாடுகின்ற நாககன்னியர் சரற்கால மதிக்கதிர்க் கற்றையின் ஒளியையுடையவாகிய உம்முடைய குணங்களைப் பாடுகின்றனர். பாடுங்கால் கூறப்படும் அவ்வவ்வெழுத்துக்கடோறும் வழிந்தொழுகும் புத்தமுதைப் பருகி, காற்றைப் பருகுமியல்பாற் றமக்கு விளைந்த அவகீர்த்தியை நீக்குகின்றனர். (ஙக)

இப்பொழுதோ;

கதிரவனுடைய கிரணங்கள்[13] யசுர்வேத நறுமணம் மிக்கவாக, அந்நறுமணத்தை நுகர்ந்த எல்லாச் சீலர்களும், நண்பகலிற் செயக்கடவ செயற்புரிய முயலுகின்றனர். (ஙஉ)

அரசன் (செவியுற்று எல்லவரையுங்குறித்து) நீங்கள், விரும்பியாங்கு செய்தற்கு முயலுக; யானும் அரண்மனையுட் செல்லுகின்றேன் (என்று முறையே எழுந்து சுற்றி வந்து எல்லவரும் சென்றனர்)

மங்கலக் கனவு என்னும் முதலங்கம் முற்றிற்று.

 

[1] வாகுவிற் பிறந்த வகுப்பினரை – இது சத்திரியரை

[2] சோமை — சா+உமா — என்னும் வடமொழிச் சொற்கள் குணசந்தியாற் சோமையென்றாயின. சோமையென்னுமிச்சொல் அவள் உமையென்னும் பொருள் பற்றி உருத்திர தேவியின் அன்னையர்க்குப் பெயராயிற்றென்பதாம்.

[3] கணபதி — தந்தையார் பெயர்; இது கணங்களுக்குப் பதியென்னும் பொருள்பற்றி சிவபிரான் எனப் பொருள்படும்; எனவே உருத்திரதேவருக்குச் சிவையும் சிவனும் தாய்தந்தையரென்பது பெற்றாம்.

[4] உள்ளத்தின் அநுபவம் — இது தன் மகள் பின்னர் மாட்சிமிக்க அரசுரிமைக்குரியவளாவள் என்னும் உள்ளத்தே நிகழும் தோற்றம்.

[5] உருத்திரன் — மேற்கூறிய தோற்றத்திற்கேற்ப ஆண்பால் விகுதியேற்றி உருத்திரன் என வழங்கி வந்தான். பகைவரை அழுங்கச் செய்யும் ஆற்றலுடையவன் என்பது இப்பெயரின் பொருள்.

[6] படுக்கையின் றலைப்புறத்தில் பூரணகும்பம் வைத்து கருடமந்திரங்களான் இரட்சை செய்து கொண்டு இரவிற் படுத்துறங்கவேண்டுமென்பது மிருதிரத்தினாவளியின் கருத்து.

[7] செம்பொன்மலர், வெண்பொன்மலர் மணிமலர் முதலியவற்றாற் சிவபிரானை யருச்சித்தோர், பெரும்பேரரசராவர்; என்று புட்பசாரசுதாநிதி கூறும்.

[8] இதனால், பிரதாபருத்திரன் அரசனாதற்குரியன் என்பதும், இவன் மக்களையின்புறப் புரக்குங்கால் குடிவளம் கூழ்வளம் முதலியன செழித்தோங்குமென்பதும் பெற்றாம்.

[9] மகிழ்ச்சி, தென்புலத்தார், தெய்வம், அந்தணர், பசுக்கள், துறவிகள் என்னும் இவர் கனவிற்றோன்றிக் கூறுவன யாவும், அவர் கூறியாங்கே பயனளிக்கும் என்னும் பிருகற்பதி கருத்தையுணர்ந்த புரோகிதர் மகிழ்ச்சியெய்தினர்; என்பதாம்.

[10] தேசு — ஈண்டு வீரத்தையும் ஒளியையும் உணர்த்தும்.

[11] இருளை நீக்கல் பகலவன் செயல், அச்செயலை இவ்வரசனது வீரமாகும் வெய்யவன், புரிகின்றதால் பகலவற்கு அச்செயல் வருத்தம் நீங்கிற்றென்பதாம்.

[12] ஆற்றுமணல், கடற்கரை, காடு, உய்யானம், மலை கொடிவீடு, தளிர்ப்படுக்கை யென்னுமிவை, பகல் விளையாட்டிற்குரிய விடங்களாம்; கொடிவீட்டிலமர்ந்து பாடுகின்றனர் என்று கூறுமாற்றால் நண்பகற் பொழுதென்பது போதரும்.

[13] கதிரவன், காலைப்பொழுதில், இருக்குவேதவடிவினனாகவும், நண்பகலில் யசுர்வேத வடிவினனாகவும், மாலைப்பொழுதிற் சாமவேதவடிவினனாகவும் அமைகின்றான் என்பது மறைமுடிவின் கருத்து.

Leave a comment