பிரதாபருத்திரீயம் – நாடகவியல் Part 1

பிரதாபருத்திரீயம்

நாடகவியல்

 

கூத்துச் சிறப்புடைய பிரபந்தங்கள் விளக்கப்படுகின்றன.

கூத்தின் இலக்கணங் கூறப்படுகின்றது.

 

விறலவிநயம்[1] உறுப்பவிநயம்[2] என்னும் இவை முதலிய[3] நால்வகை விநயங்களான், தீரோதாத்தன் முதலிய தலைவரது அவத்தைகளை நடித்து அவ்வண்ணமாய் நிற்றல் சுவையினைப்[4] பற்றிய நாட்டியம்[5] என்பதாம்.                                         (க)

பொருளை[6]ப்பற்றியதோ என்னில் நிருத்தியம்[7] என்பதாம். தாளம்[8] இலயம்[9] இவற்றைப்பற்றியது நிருத்தம்[10] என்பதாம்.

இவ்வோத்து முறை, தசரூபகத்தின்கட் கூறப்பட்டதாம். நிருத்தம், நிருத்தியம் என்னுமிவை நாடகம் முதலியவற்றிற்குறுப்பாகலான்[11] அவற்றினிலக்கணம் இவ்வியலின்கட் கூறப்பட்டது. அங்ஙனமே தசரூபகத்திலுங் கூறப்பட்டுள்ளது.

“அவ்விரண்டும் இனியது வலியது என்னும் வேறுபாட்டினால் இலாசியம்[12] தாண்டவம் என்னும் இருவகையவாய் நாடகாதிகட்குதவுவனவாம்”.

அத்தகைய நாட்டியத்தாற் பத்துவகைக் காட்சிநூல்கள் நிகழ்கின்றன.

“நாடகம் பிரகரணம் பாணம் பிரகசனம்இடிமம் வியாயோகம் சமவாகாரம் வீதி

அங்கம் ஈகாமிருகம் என்னும் பத்துமாம்” என்று

நாட்டியத்தைப்பற்றியமையால் வேறுபாடில்லையென்னுஞ் சங்கை பொருத்தமன்று; கதை, தலைவன், சுவையென்னுமிவையன்றே அக்காட்சி நூல்களை வேறுபடுத்துகின்றன. (உ)

பிரக்கியாதம் உற்பாத்தியம் மிசிரம் எனக்கதை[13] முத்திறத்து. அங்ஙனமே தசரூபகத்திற் கூறப்பட்டுள்ளது.

“பிரக்கியாதம் உற்பாத்தியம் மிசிரம் என்னும் வேறுபாட்டினால் அக்கதை, மூவகைத்தாகக் கொள்ளற்பாலது” என்று.

பழங்கதையினடியாக வந்தது பிரக்கியாதமும்[14] கவியாற்கற்பிக்கப்பட்டது உற்பாத்தியமும்[15], சேர்வையால் நிகழ்ந்தது மிசிரமும்[16] என்னும் இவை முதலிய கதை வேறுபாட்டினாலும் தலைவரது வேறுபாட்டினாலும் காட்சி நூல்கள் ஒன்றற்கொன்று வேறுபட்டனவாம். அங்ஙனமே:-

நாடகத்தில் கதை பிரக்கியாதம்; தலைவன் தீரோதாத்தன்; உவகைச்சுவை பெருமிதச்சுவை யென்னுமிரண்டனுள் ஒன்று சிறந்தது. பிற சுவைகட்கு உறுப்பாந்தன்மையால் உடனிகழ்ச்சியும் ஆம். பிரகரணத்தில், கதை உற்பாத்தியம்; தலைவன் தீரசாந்தன்; உவகைச்சுவைக்கே சிறப்புடைமை. பாணத்தில், கதை உற்பாத்தியம்; தலைவன் காமவிடன்; உவகை பெருமிதம் என்னுமிவற்றின் றேற்றத்தளவையில் இனிமை. பிரகசனத்தில், கதை உற்பாத்தியம்; பாசண்டன் முதலியோர் தலைவர்கள்; நகைச்சுவை சிறந்தது. டிமத்தில் கதை பிரக்கியாதம்; கந்தருவன் பிசாசம் முதலிய தீரோத்தத்தலைவர் பதினறுவராவர். வெகுளிச்சுவை சிறந்தது. பெருமிதம் உவகை யிவற்றிற்கு உடனிகழ்ச்சியும் ஆம். வியாயோகத்தில், கதை பிரக்கியாதம்; தலைவன் தீரோத்ததன்; பெருமிதச்சுவை சிறந்தது. சமவாகாரத்தில், தேவர் அசுரர் முதலிய பன்னிருவர் தலைவர்; பெருமிதம் சிறந்தது. உற்பாத்தியமாதல் பிரக்கியாதமாதல் கதையாம். வீதியில் கதை உற்பாத்தியம். தலைவன் தீரோத்ததன்; உவகைச்சுவை தோற்றத்தளவையிற் சிறந்தது. அங்கத்தில் கதை பிரக்கியாதம்; தலைவன் கீழ்மகன்; அழுகைச் சுவை சிறந்தது. ஈகாமிருகத்தில் கதை மிசிரம். தீரோத்ததன் தலைவன்; உவகைச்சுவைக்குப் போலியாந்தன்மையும் ஆம்.

இனி அக்காட்சி நூற்களது கருவிப்பொருள்கள் விளக்கப்படுகின்றன. அவற்றுள் சந்திகன் ஐந்து; அங்ஙனமே தசரூபகத்திலும் கூறப்பட்டுள்ளது.

“முகம் பிரதிமுகம் கருப்பம் விமருசம் நிருவகணம்” என்று.

சிறப்புப்பயனுடன்[17] கூடிய கதைப்பகுதிகட்கு, பிறிதொருபயனுடைய இயைபு சந்தியென்பதாம். அவற்றுள் தொடக்கம் பீறம் இவற்றின் இயைபு முகசந்தி; முயற்சி, பிந்து, இவற்றினியைபு பிரதிமுகசந்தி; பிராத்திநசை பதாகை இவற்றினியைபு கருப்பசந்தி; பிராத்தித்துணிபு பிரகரீ யிவற்றினியைபு விமருசசந்தி; பயனெய்தல் காரியம் இவற்றினியைபு நிருவகணசந்தி; அங்ஙனமே தசரூபகத்திலும் கூறப்பட்டுள்ளது.

“பயனெய்தற்கேதுவாகிய பீறம் பிந்து பதாகை பிரகரீ காரியம் என்னுமிவ்வைந்தும் தொடக்கம் முயற்சி பிராத்திநசை பிராத்தித்துணிபு பயனெய்தல் என்னும் அவத்தை ஐந்தோடியைய, முறையே முகம் முதலிய ஐந்து சந்திகள் நிகழ்கின்றன” என்று.

 

இனி, தொடக்கம் முதலியவற்றிற்கு இலக்கணம் கூறப்படுகின்றது.

பயனைப்[18] பெரிதும் பெறற்கு நிகழும் அவா[19] மாத்திரையில் அது தொடக்கம்[20] ஆம்.                        (ங)

பயன்பேறில்[21] வழிமிக விரைந்தாற்றுஞ் செயல், முயற்சியென்பதாம். (ஙஇ)

உபாயம்[22] அபாயசங்கை யென்னுமிவைகளானிகழுஞ் செயனிகழ்ச்சி பிராத்திநசை யென்பதாம். (ச)

கேடில்[23] வழி நிகழுஞ் செயற்றுணிபு பிராத்தித்துணிபு ஆம். எல்லாப்பயனும்[24] இனிது வந்தெய்தல் பயனெய்தல் எனக் கூறப்படும். (ரு)

இனி பீசம் முதலிய ஐந்தும் விளக்கப்படுகின்றன.

சிற்றளவினதாகக் குறிக்கப்பட்டுப் பின்னர்ப் பலவாக விரியுமியல்பினதாய்ப் பயன்கட்கேதுவாகுமதைப் பீசம்[25] என்ப. உள்ளடங்கிய பிற பயன்களால் அழிவு[26] நிகழ்ந்துழி அவ்வழிவு நிகழாமைக்கேதுவைப் பிந்து என்ப.              (கா)

விரித்துரைத்தற்குரிய[27] கதையினுக் குறுப்பாய் நெடுந்தொடர்புடைய கதை, பதாகை யென்பதாம்.

சிறு தொடர்புடையதாய்ச் சிறப்புறும் பயனைத் தாங்கி நிற்பது பிரகரிகையாம்[28]. (எ)

இனி முகசந்தியின் இலக்கணம் கூறப்படுகின்றது.

பலதிறப்பட்ட பயன்கட்கும்[29] சுவைக்கும் ஏதுவாகிய பீசத்தின் உற்பத்தியே முகசந்தியாம்; இம்முகசந்திக்கு பீசம் தொடக்கம் இவற்றின் இயைபாற் பன்னிரு உறுப்புக்கள் நிகழ்கின்றன.                                                  (அ)

பீசம் தொடக்கம் இவற்றிற்கேற்ப முகசந்தியின் உறுப்புக்கள் கொள்ளற்பாலன.

உபட்சேபம் பரிகரம் பரிநியாசம் விலோபநம் யுத்தி பிராத்தி சமாதானம் விதானம் பரிபாவனை உற்பேதம் பேதம் கரணம் எனக் காரணப்பெயரான[30]மைந்த உறுப்புக்கள் நிறுத்தமுறையானே அமைத்தல் வேண்டும்.                           (கூ)

முறையேயிவற்றினிலக்கணம் கூறப்படுகின்றது;

பீசத்தின் வைப்பு உபட்சேபம். பீசத்தை வளர்த்தல் பரிகரம். பீசத்தின் சித்தி பரிநியாசம். பீசத்தின் குணங்களை வன்னித்தல் விலோபனம்.

பீசத்திற்கு அநுகூலமாகப் பொருந்தும் பயனைத் துணிதல் யுத்தி. பீசத்தின் இன்பநுகர்ச்சி பிராத்தி. பீசத்தின் வெளித்தோற்றம் சமாதானம். பீசத்தின் இன்பத்துன்பங்கட்கேது விதானம். பீசத்தைப்பற்றி வியப்பெய்தல் பரிபாவனை. மறைவெய்திய பீசத்தை வெளிப்படுத்தல் உற்பேதம். பீசத்திற்குறியவற்றைத் தூண்டுதல் பேதம். பீசத்திற்குரியதாகிய செயலைத் தொடங்குதல் கரணம். இவை முகசந்தியினுடைய பன்னிரு உறுப்புக்கள்.

இவற்றுள் உபட்சேபம் பரிகரம் பரிநியாசம் யுத்தி உற்பேதம் சமாதானம் என்னும் இவை இன்றியமையாவாம்.

பிரதிமுகசந்தி

காண்டற்குரியதும்[31] காண்டற்கரியதும் ஆகிய பீசத்தின் வெளியீடு பிரதிமுகம் எனப்படும்; இப்பிரதிமுகத்திற்கு பிந்து, முயற்சி யிவற்றினியியைபாற் பதின்மூன்று உறுப்புக்கள் நிகழ்கின்றன.                                       (க0)

பிந்து முயற்சி யிவற்றிற்கேற்ப, பிரதிமுகசந்தியின் உறுப்புக்கள் கொள்ளற்பாலன.

விலாசம் பரிசருப்பம் விதூதம் சமம் நரும நருமத்தியுதி பிரகமனம் விரோதம் பரியுபாசனம் வச்சிரம் புட்பம் உபநியாசம் வருணசங்காரம் என்னும் இவையாம். (கக)

இவற்றின் இலக்கணம் வருமாறு ;-

கூடலைப்பற்றிய விருப்பம் விலாசம். தோன்றிமறைந்த பொருளைப் பின்பற்றல் பரிசருப்பம். விருப்பில் பொருளாற் கலக்கமெய்தல் விதூதம். வெறுப்பின் ஒழிவு சமம். பரிகாசவார்த்தை  நரும. ஆசையின் மலர்ச்சியால் நிகழும் உள்ள நெகிழ்ச்சி, நருமத்தியுதி. அடுத்தடுத்துக் கூறுஞ் சொற்றொடர்களால் ஆசை வித்தினை வெளிப்படுத்தல் பிரகமனம். நலமெய்தலைக் கபடமாகத் தடுத்தல் விரோதம். உறவினரின் இன்பமொழி பரியுபாசனம். பெரியோரது கடுஞ்சொல் வச்சிரம். ஆசையை வெளிப்படுத்துஞ் சீரிய சொல் புட்பம். ஆசைக்கேதுவாகிய வாக்கியங்களையமைத்தல் உபநியாசம். நான்கு வருணத்தவரை வன்னித்தல் வருணசங்காரம்.

இவற்றுள் பரிசருப்பம் பிரகமனம் வச்சிரம் உபநியாசம் புட்பம் என்னும் இவை இன்றியமையாவாம்.

கருப்பசந்தி

தோன்றிமறைந்த பீசத்தை மீண்டும் மீண்டும் தேடுதல் கருப்பசந்தியாம்;[32] பிராத்திநசை பதாகை இவற்றிற்கேற்ப இக்கருப்பசந்திக்கும் உறுப்புக்களைக் கற்பித்தல் வேண்டும்.                                              (கஉ)

பதாகை பிராத்திநசை யிவற்றிற்கேற்பக் கருப்பசந்தியினுடைய உறுப்புக்கள், கொள்ளற்பாலன.

அபூதாகரணம் மார்க்கம் உருவம் உதாகரணம் கிரமம் சங்கிரகம் அநுமானம் தோடகம் அதிபெலம் உத்துவேகம் சம்பிரமம் ஆட்சேபம் என்னுமிப்பன்னிரு உறுப்புக்களும் முறையே நிகழ்வனவாம்.                             (கங)

இவற்றின் இலக்கணங் கூறப்படுகிறது.

அமயத்திற்கேற்ப கபடத்தை மேற்கோடல் அபூதாகரணம். உண்மைப்பொருளை யுரைத்தல் மார்க்கம். ஊகத்தை வெளிப்படுக்கும் வாக்கியம் உருவம். நிகழும் மேன்மையைக் கூறல் உதாகரணம். எண்ணிய பொருளையெய்தல் கிரமம். அமயத்திற்கேற்ப சாமம் தானம் இவற்றைக் கூறல் சங்கிரகம். குறியாலுய்த்துணரல் அநுமானம். சினத்தாற் கொடுஞ்சொற்கூறல் தோடகம். உறவினர் போலமைந்து பிறரை வஞ்சித்தல் அதிபெலம். தீங்கிழைப்பவரால் உண்டாகும் அச்சம் உத்துவேகம். ஐயமும் அச்சமும் சம்பிரமம். விரும்பியபொருளை யெய்தற்குரிய வழியை நாடுதல் ஆட்சேபம்.

இவற்றுள் அபூதாகரணம் மார்க்கம் தோடகம் அதிபலம் ஆட்சேபம் என்னும் இவை யிறியமையாவாம்.

 

விமருசசந்தி

கருப்பசந்தியிற் சிறப்பெய்திய பீசப்பொருளை யாதாமொரு[33] ஏதுவாலாராய்தல் விமருச சந்தியென்று கூறப்படும். இங்கட் பிராத்தித்துணிபு பிரகரீ இவற்றினியைபால் பதின்மூன்று உறுப்புக்கள் நிகழ்கின்றன.    (கச)

பிராத்தித்துணிபு பிரகரீ யிவற்றினியைபிற்கேற்ப விமருச சந்தியின் உறுப்புக்கள் கொள்ளற்பாலன.

விமருச சந்தியில் அபவாதம் சம்பேடம் வித்திரவம் திரவம் சத்தி தியுதி பிரசங்கம் சலனம் வியவசாயம் நிரோதனம் பிரரோசனம் விசலனம் ஆதானம் என்னும் உறுப்புக்கள் பதின்மூன்றாம்.                                      (கரு)

இவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது.

குற்றத்தை வெளிப்படுத்தல் அபவாதம். சினமுற்றுரைத்தல் சம்பேடம். கொலை சிறைப்படுத்தன் முதலியன வித்திரவம். பெரியோரை யிகழ்ந்துரைத்தல் திரவம். பகைமையொழிதல் சத்தி. அச்சுறுத்தல் ஒறுத்தல் என்னுமிவை தியுதி. குலமுறை கிளத்தல் பிரசங்கம். அவமதித்தல் சலனம். தன்றிறலைப் புகழ்ந்து கூறல் வியவசாயம். சினமுற்று ஒருவரையொருவர் இகழ்ந்துரைத்தல் நிரோதனம். எதிர்கால நலத்தைச் சித்தித்ததாகக் கூறுதல் பிரரோசனம். தற்பெருமையை வெளியிடல் விசலனம். செயலை மேற்கோடல் ஆதானம்.

 

நிருவகணசந்தி

பீசத்துடன் கூடிய முகசந்தி முதலிய பொருள்கள் அவ்வவற்றிற்குரிய இடங்களிற் கூறப்பட்டனவாய் எந்தச் சந்தியிற் சிறப்புறும்[34] பயனோடியைகின்றனவோ; அது நிருவகணசந்தியாம்; அந்நிருவகணசந்திக்கு பயன்பெறுதல் காரியம் இவற்றின் இயைபிற்கேற்ப பதினான்கு உறுப்புக்கள் நிகழ்கின்றன.                    (ககா)

பயன்பெறுதல் காரியம் இவற்றின் இயைபிற்கேற்ப நிருவகணசந்திக்கு பதினாnன்கு உறுப்புக்கள் விரித்துரைக்கற்பாலன.

சந்தி விபோதம் கிரதனம் நிருணயம் பரிபாடணம் பிரசாதம் ஆநந்தம் சமயம் கிருதி ஆபாடணம் உபகூகனம் பூருவபாவம் சங்காரம் பிரசித்தி என்னும்மிப்பதினான்கும் உறுப்புக்களாம்.                 (கஎ. கஅ)

இவற்றின் இலக்கணங் கூறப்படுகின்றது.

பீசத்தை மீண்டும் இயத்தல் சந்தி. பயனைத் தேடுதல் விபோதம். பயனை யெடுத்துரைத்தல் கிரதனம். பீசத்திற்கேற்ற செய்தியை வெளியிடல் நிருணயம். ஒருவர்க்கொருவர் உரையாடல் பரிபாடணம். பணிந்துரைத்தல் பிரசாதம். விரும்பிய பொருளைக் கோடல் ஆநந்தம். துன்பமொழிதல் சமயம். கிடைத்த பொருளை நிலைப்படுத்தல் கிருதி. எய்திய பயனைப் பாராட்டிக் கூறல் ஆபாடணம். வியக்கத்தக்க பொருளை யெய்தல் உபகூகனம். நற்பயனைக் கண்ணுறல் பூருவபாவம். செயற்பயனைச் சுருங்கச் சொல்லல் சங்காரம். மங்கலங்கூறல் பிரசத்தி.

இங்ஙனம் அறுபத்து நான்கு உறுப்புக்களை யெய்திய ஐந்து சந்திகள் விரித்து விளக்கப்பட்டன. இவ்வுறுப்புக்களுக்கு[35] அறுவகைப் பயன்கள் நிகழ்கின்றன. அவை:-

கூறவேண்டிய பொருளைக் கூறல், மறைத்தற்குரிய பொருளை மறைத்தல், வெளிப்பொருளை வெளிப்படுத்தல் அவிநயத்தாலின்பநிறைவு, மகிழ்வுறுத்தல் காதைவித்தாரம் என்பனவாம்.

அவற்றுள் கதை, சூச்சியம்[36] அசூச்சியம் என இருதிறத்து. அசூச்சியமும்[37] திருசியம் சிராவியம் என இருதிறத்து. அவற்றுள் சூச்சியத்தைப் புலப்படுத்து முறை ஐவகையாம். அங்ஙனமே தசரூபகத்திற் கூறப்பட்டது.

“விட்கம்பம் சூளிகை அங்காசியம் அங்காவதரணம் பிரவேசகம் என்னுமிவற்றான் சூச்சியப்பொருளைப் புலப்படுத்தல் வேண்டும்” என்று.

இவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது.

நடந்தனவும் நடப்பனவும் ஆகிய கதைப்பகுதிகளை இடைப்பாத்திரங்களின்[38] வாயிலாகச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் விட்கம்பம்[39] ஆம். (ககூஇ)

அது சுத்தம்[40] கலவையென இருவகைத்து. அவற்றுட் சுத்தம் தனித்த வடமொழியானமைந்தது; கலவை, வடமொழியும் பாகதமொழியும் விரவி வர அமைந்தது.

சூளிகை

திரைக்குளிருப்போர் பொருளையறிவித்தல் சூளிகை.    (உ0)

வேடசாலையின் உட்புறத்திருக்கும் பாத்திரங்களாற் கதைப்பொருள் தெரிவிக்கப்படுவது சூளிகையென்பதாம்.

அங்காசியம்

அங்கத்தின் முடிவில் அமையும் பாத்திரங்களான் அடுத்த அங்கத்தின் பொருளைத் தெரிவித்தல் அங்காசியம் என்பதாம்.                          (உ0இ)

முன்னைய[41] அங்கத்தின் முடிவிற் பேசுகின்ற பாத்திரங்களான் பின்வரும் அங்கத்தின் பொருள் தெரிவிக்கப்படுமாயின் அது அங்காசியம் ஆம்.

பிரவேசகம்

நடந்தனவும் நடப்பனவுமாகிய கதைப்பகுதிகளைக் கடைப்பாத்திரங்கள்[42] வாயிலாகச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் பிரவேசகம் ஆம்; அதனை முதலங்கத்திற் கூறலாகாது.                                         (உகஇ)

அங்காவதாரம்

பின்னங்கப் பொருள் முன்னங்கப் பொருளோடியைந்து அறிவிக்கப்படாத[43] பாத்திரங்களையுடையதாய் அமையுமது அங்காவதாரம் என்று கூறப்படும். (உஉஇ)

இவற்றால்[44] சூச்சியப்பொருளைத் தெரிவித்து, காட்சிப்பொருளை யங்கத்தாற் றெரிவித்தல் வேண்டும்.                                          (உங)

 

அங்கவிலக்கணங் கூறப்படுகின்றது.

தலைவனுடைய சரிதங்கள், காண்டற்குரியவாய் அவற்றைப் புலப்படுத்துவதும், பிந்துவை[45] வெளிப்படுத்தற்குக் கூறுபாடெய்தியதும், பற்பல பயன்களையுடைய காதையமைப்பு சுவை யிவற்றிற்கு நிலைக்களனுமாகியது அங்கம்[46] என்பதாம்.

ஆமுகம்[47] விளக்கப்படுகின்றது.

நடி மாரிடன் விதூடகன் என்னுமிவர்களுள் ஒருவருடன் சூத்திரதாரன்[48], தன்செயலைப்பற்றியும்[49] நிகழவிருக்குஞ்[50] செயலைப்பற்றியும் இன்பமொழியாலுரையாடல், ஆமுகம் அல்லது பிரத்தாவனை ஆம்; அதற்கு கதோற்காதம் பிரவர்த்தகம் பிரயோகாதிசயம் என மூன்று உறுப்புக்கள் உள்ளன. (உரு.உ)

இவ்வுறுப்புக்களது இலக்கணங் கூறப்படும்.

பாத்திரம், சூத்திரதாரனுடைய சொற்றொடரையாதல் அதன் பொருளையாதல் தன் செய்திக்கு நேராய ஒன்றை மேற்கொண்டு அரங்கமேடையிற் புகுமேல், அந்நிகழ்ச்சி கதோற்காதம் ஆம்; அஃது இருவகைப்படும்.[51]                (உஎ)

நிகழும் பருவகாலத்தின் குணங்களை வன்னித்தலான் அறிவிக்கப்பட்ட பாத்திரம் தானே அரங்கமேடையுட் புகுதல் பிரவர்த்தகம் ஆம். (உஅ)

சூத்திரதாரனால் ‘இவன்’ என்னுஞ் சுட்டுச் சொல்லைக் கூறி அறிவிக்கப்பட்ட பாத்திரம், அரங்கமேடையுட் புகுதல் பிரயோகாதிசயம் ஆம். (உகா)

வீதியின் உறுப்புக்களே ஆமுகத்திற்கும் உறுப்புக்களாகலான்[52] அவற்றைப் பொதுவகையாலீண்டுக் கூறுகின்றார்.                       (உஙஇ)

உற்காத்தியகம் அவலகிதம் பிரபஞ்சம் திரிகதம் சலம் வாக்கேளி அதிபலம் கண்டம் அவசியந்திதம் நாளீகம் அசத்பிரலாபம் வியவகாரம் மிருதவம் என்னுமிப் பதின்மூன்றுமாம்.                                                   (ங0.ஙக)

இவற்றின் இலக்கணம் கூறப்படுகின்றது.

உற்காத்தியகம் — மறைபொருளவாகிய சொற்களால் உரையாடல் வடிவினதும், வினாவிடை வடிவினதும் என இருதிறத்து.

அவலகிதமும் இருவகைப்படும்.

“ஒரு செயலில் முற்படுதலாற் பிறிதொரு

செயல் சித்திப்பதும், ஒரு செயலின்றொ

டர்பாற் பிறிதொரு செயல் நிகழ்வதும் என

அவலகிதம் இருதிறப்பட்டதாம்.

யாதாமொரு செயல் தலைக்கீடாகப் பிறிதொரு செயலை முயன்று புரிதலும், வேறொரு செயனிகழ்ச்சியால் விரும்பிய செயல் சித்தியாதலும் அவலகிதம்.

தோடமுள்ள[53] வார்த்தைகளால் ஒருவரையொருவர் துதிசெய்தல் பிரபஞ்சம். முன்னரங்கத்தினது உறுப்பும் பிரத்தாவனையினது உறுப்பும் எனத் திரிகதம் இருவகைத்து. முன்னரங்கத்தில் நடன் முதலியோரது[54] வார்த்தை; ஈண்டோ[55] எனில் ஒற்றுமையாற்[56] பலபொருட்சேர்க்கை திரிகதம் ஆம். இன்சொற்களை யொத்தவன் சொற்களாற் பழித்துரைத்தல் சலம். அவாய்[57] நிலையாகிய சொற்றொடரை அங்ஙனமே ஒழித்து விடுதலும், வினாவிடை வடிவினதுமாக வாக்கேளி யிருவகைத்து. ஒருவர்க்கொருவர் உரையாடுங்கால் அழுக்காறெய்திக்[58] கூறுஞ் சொற்றொடரின் மிகை, அதிபெலம். நிகழ்ச்சிக்கு முரண்பட ஆராயாது கூறல், கண்டம்[59] சுவை வயத்தாற் கூறியவற்றிற்கு வேற்றுரையுரைத்தல் அவசியந்திதம். பரிகாசத்துடனமைந்து பொருண் மறைவுடைய விடுகதை நாளிகை. இயைபிலாப்[60] பொருணிரம்பிய வார்த்தை அசத்பிரலாபம். பிறிதொரு பயனைக் குறித்து நகைவிளைக்குஞ் சொல்லைக் கூறல் வியாகாரம். குற்றத்தைக்[61] குணமென வெளிப்படுத்தல் மிரு தவம். இவற்றுள் பிரத்தாவனையில் அமைவிற்கேற்ப சிலவற்றை[62] யெடுத்தாளல் வேண்டும்.

பத்துக்காட்சி நூல்களின் இலக்கணங் கூறப்படுகின்றது.

உறுப்புக்களுடன் கூடிய முகம் பிரதிமுகம் கருப்பம் விமருசம் நிருவகணம் என்னுஞ் சந்திகளும், ஆதிகாரிகம் என்னும் கதையும், பெருமிதம் உவகையென்னு மிவற்றுளொருசுவைக்குச் சிறப்பும்,[63] பிரக்கியாதன் என்னுந் தலைவனும் பொருந்தி பிறகாட்சி நூற்களுக்குப் பகுதியாய்[64] அமையும் நூல் முதலில் நாடகம் என்று கூறப்படும்.                                         (ஙஉ.ஙங)

நாந்தியின்[65] இலக்கணம் கூறப்படுகின்றது.

எண் சொற்களானாதல், பன்னிரு சொற்களானாதல், பதினெண் சொற்களானாதல் இருபஃதிரு சொற்களானாதல் அமைந்து, காப்பியத்துள்ளுறை பொருளைச் சொற்களானாதல் பொருளானாதல் சிறிதறிவிப்பது நாந்தீஆம்.          (ஙச)

நாடகம் முதலிய காட்சி நூற்களின் றொடக்கத்தில் அமைக்கப்படுஞ் சுலோகம்[66] நாந்தீயென்று கூறப்படுகின்றது; அந்நாந்தி, வேணீசங்காரத்தில் எண்சொற்களானும், அநருக்கராகவத்தில் பன்னிருசொற்களானும், பாலராமாயணத்தில் இருபஃதிரு சொற்களானும் அமைந்ததாம். நாந்தியிற் கூறப்படுமிச் சொன்னியமத்தைச்[67] சிலர் உடன்பட்டிலர். நாந்திக்குப் பின்னர் அரங்கத்துட்புகும் சூத்திரதாரன், முன்னர் அரங்கவழிபாடியற்றிப்[68] பாரதீவிருத்தியை யெய்திய சுலோகங்களாற் காப்பியப்பொருளை யறிவித்தல் வேண்டும். அங்ஙனமே தசரூபகமும் கூறும்.

“காப்பியப் பொருளை யறிவிக்குமினிய சுலோகங்களால் அரங்கத்தை யணிப்படுத்தி, பருவகாலமொன்றைப்[69] பற்றிய பாரதீ விருத்தியைக் கோடல் வேண்டும்” என்று.

நாடகத்திற்கே இது சிறப்பிலக்கணம்[70] ஆம்.

 

பிரகரணம்

உற்பாத்தியமென்னுங் கதையமைந்தும் தீரசாந்தனைச்[71] சிறப்புறுந் தலைவனாக உடையதும் நாடகத்தை யொப்ப[72] எஞ்சிய உறுப்புக்களையுடையதும் ஆகியது பிரகரணம்[73] ஆம்.                                              (ஙரு)

 

பாணம்

பாரதீவிருத்தி நிரம்பியதும் சொல்வன்மைமிக்க விடனால் வீரம் எழில் இவற்றைப் புகழ்ந்து கூறி பெருமிதம் உவகை யென்னும்மிச்சுவைகளைத் தோற்றுவித்து உற்பாத்தியமாகிய கதையால் விடனுடைய[74] சரிதம் வன்னிக்கப்படுவதும், அங்கமொன்றுடையதும் முகசந்தி நிருவகணசந்தி யிவற்றையுடையதுமாகும் நூல் பாணம்[75] என்னப்படும்.                                      (ஙகா.ஙஎ)

 

பிரகசனம்

நகைச்சுவையைச் சிறப்பாகக் கொண்டு பாணம் போல சந்தியும் சந்தியங்கமும் வன்னிக்கப்படும் நூல் பிரகசனம்[76] என்பதாம்.                     (ஙஅ)

அப்பிரகசனம், சுத்தம் விகிருதம் சங்கீருணம் என மூவகைத்து; அவற்றுள்

சுத்தம்:- பாசண்டர்[77] அந்தணர் முதலியோரும்[78] சேடீ சேடன் இவர்களும் நிறைந்து வேடம் பாடை[79]யிவற்றுடன் நகைவிளைக்குஞ் சொற்கணிரம்பிய நூல் சுத்தமாம்.                                (ஙசு)

விகிருதம்:- காமுகாதியருடன் அவரது சொற்கள் வேடங்கள் இவற்றுடனும், பேடி காவற்காரன் தவசி யிவர்களுடனும் நகைச்சுவையை விளைக்கும் அபிநயங்கணிரம்பிய நூல் விகிருதம் ஆம்.                             (ச0)

சங்கீருணம்:- வீதியின் உறுப்புக்கள் விரவியதும், தூர்த்தர்கள்[80] நிரம்பியதுமாகிய நூல் சங்கீருணம் எனப்படும்.

 

இடிமம்

பிரக்யாதம்[81] என்னுங் கதையும் கைசிகி நீங்கிய ஏனைய விருத்திகளும், தேவர் கந்தருவர் இயக்கர் அரக்கர் நாகர் பூதர் பிரேதம் பேய் முதலிய தீரோத்தர்களாகிய பதினாறு தலைவர்களும் நகை[82] உவகையென்னு மிச்சுவை நீங்கிய வெகுளிச் சிறப்புடைய பிற சுவைகளும், நான்கு அங்கங்களும், விமருச சந்தி நீங்கிய நான்கு சந்திகளும் மாயை[83] இந்திரசாலம்[84] போர் சூரியசந்திரகிரகணம் முதலியனவும்[85] பொருந்தி எஞ்சியயாவும் நாடகம் போலமையு நூல் இடிமம் என்று கூறப்படும். (சஉ. சங. சச)

 

வியாயோகம்

பிரக்கியாதம் என்னும் கதையும் தீரோத்தத் தலைவனும் கருப்பம் விமருசம் என்னுமிச்சந்திகள் நீங்கிய பிறசந்திகளும் இடிமம்[86] போலச் சுவை நிறைவும்[87] பொருந்தி ஒரு நாளில் அவிநயத்திற்குரியதாய் பெரும்போரைப்பற்றிய[88] நூல் வியாயோகம்[89] எனக் கூறப்படும்.   (சரு)

 

சமவகாரம்

நாடகம் போல ஆமுகம் விமருசம் நீங்கிய சந்திகளும் தனிப்பயனையுடைய[90] தேவர், அசுரர், முதலிய பன்னிரு தலைவரும் பெருமிதஞ் சிறக்கப் பிறசுவைகளும் மூன்று அங்கங்களும்[91] பொருந்தி, இயல்பு[92] ஊழ் பகை யென்னுமிவற்றானேருந் தீங்குகளும், நகர்முற்றுகை போர் நெருப்பு என்னும் இவையாதிய நிமித்தமாக நேரும் மூவகை வித்திரவங்களும்[93] அறம் பொருள் இன்பங்களைப் பற்றிய உவகையியல்புக்கள்[94] மூன்றும் அங்கம் மூன்றிலும் முறையே[95] அமைந்து, முதலங்கத்தில் மூன்று யாமங்களில் நிகழும் கதையும், இரண்டாம் அங்கத்தில் ஒரு யாமத்தில் நிகழும் கதையும் மூன்றாம் அங்கத்தில் யாமத்தின் பாதியில் நிகழுங்கதையும் அமைந்து வீதியங்கஞ் சிலவற்றுடன் கூடியது சமவகாரம்[96] என்பதாம். (சகா. சஎ. சஅ. சகூ)

 

வீதி

பாணம்போல உறுப்புக்களின் அமைவும் கைசிகி விருத்தியும் பொருந்தி, உவகைச்சுவை நிறைவுற அதனையறிவித்து[97] உற்காத்தியகம் முதலிய உறுப்புக்களுக்கு வீதிபோல[98] விளங்குமது வீதியெனக் கூறப்படும்.        (ரு0)

 

அங்கம்

பிரக்கியாதம்[99] என்னும் கதையும் அழுகைச்சுவைக்குச் சிறப்பும், மகளிர் விளையாட்டும் சொற்போரும் கீழ்மக்களாகிய தலைவரும் பொருந்தி, சந்தி விருத்தி முதலியன பாணத்திற்குப் போல அமைவது அங்கம் ஆம்; இதற்கு உத்சிருட்டம் என்று பிறிதொரு பெயரும் உண்டு.

 

ஈகாமிருகம்

கலவைக்கதையும் நான்கு அங்கங்களும் மூன்று[100] சந்திகளும் பொருந்தி, தெய்வப்பெண்ணைக் கைப்பற்ற விரும்புங் காமுகராகி மனிதனும் தேவனுமாகிய இருவர், தீரோத்தத்தன்மை வாய்ந்த தலைவனும் எதிர்த்தலைவனுமாக அமைந்து, போலிச்சுவையினையுடைய[101] அவரிருவர்க்கும் ஒருவருக்கொருவர் கொலை[102] நீங்கிய போரும் எங்கட் கூறப்படுகின்றதோ அந்நூல் ஈகாமிருகம்[103] என்று கூறப்படும்.

தசரூபகம் என்னும் நூலைப்பின்பற்றியே இவ்விலக்கணம்[104] கூறப்பட்டுள்ளது.

 

காட்சி நூல்களின் இலக்கணம் முற்றிற்று.

 

[1] விறலவிநயம் — பிறர் எய்திய இன்பத் துன்பங்களை யெண்ணிய வழி தன்மயமாகும் அந்தக்கரணத்தையுடைமையை விறல் என்ப; அதனால் நிகழும் அசைவற  நிற்றன் முதலிய விகாரங்களும் விறலாம்; அதன் அவிநயம்—இமைப்பில் நாட்டமுடைமை முதலியவாம்; இதனைச் சத்துவம் என்ப வடநூலார்

[2] உறுப்பவிநயம் — உறுப்புக்கள், கை கால் முதலியன; அவற்றின் செயலாகிய பதாகை முதலியவாம்; பதாகை கூத்தினிகழும் உறுப்புச் செயலின் ஓர் விகற்பம்.

[3] முதலிய என்றமையான், வாசிகாவிநயம் ஆகாரியகாவிநயம் என்னும் இரண்டுங் கொள்ளற்பாலன. அவற்றுள் வாசிகாவிநயம் — நாவாற் கூறற்குரிய காப்பியம் நாடகம் முதலிய நூல் வாசிகம் என்பதாம். அதன் அவிநயமாவது அக்காப்பிய நாடகங்களின் உள்ளுறை பொருளைக் கூறுங்கால், அவ்வச்சுவைக்கேற்றபெற்றி, மோகனம் முகாரி முதலிய இராகங்களை யாலத்தியெடுத்தலாம்; ஆகாரியகாவிநயம் — நடிக்கப்புகும் பாத்திரங்கட்குரிய வேடம்; அதற்குரிய அணிகலன் இவற்றைப் புனைந்து கோடலாம்.

[4] சுவையினைப்பற்றிய — இது, கூறப்புகும் முறைபற்றி ‘வாக்கியத்தின் திரண்ட பொருளாயமையுஞ் சுவையினைப்பற்றிய’ எனப் பொருள்படுமாகலின் இங்கட் கூறப்படுவது வாக்கியப்பொருளின் அவிநயம் என்று அறியற்பாலது.

[5] நாட்டியம் —‘ சிற்றசைவு’ என்னும் பொருளுடைய ‘நட’ என்னும் வினைப்பகுதியினடியாகப் பிறந்த சொல்லாகலின், சிற்றசைவானிகழும் அவிநயம் நாட்டியம் என்பதாம்; இதனால் இப்பொருட்கேற்ப விறலவிநயமே நாடகத்தின்கட் பெரிதும் நிகழுமெனப் புலப்படுத்தவாறு.

[6] பொருளைப்பற்றியதோ என்னில் — இது, சொற்பொருளாவமையுஞ் சுவைப்பொருளைப்பற்றியதெனப் பொருள்படும்; ஆகலின் இங்கட் சொற்பொருளின் அவிநயம் காண்டற்குரியது. சுவைப்பொருளை வடநூலார் ஆலம்பனவிபாவம் என்ப. இது நாட்டியத்தின் வேறுபட்டதென அறிவித்தற்கே ‘என்னில்’ எனக் கூறினான் என்க.

[7] நிருத்தியம் — இது, ‘உறுப்பசைத்தல்’ என்னும் பொருளையுடைய ‘நிருதி’ என்னும் வினைப்பகுதியினடியாகப் பிறந்த சொல்; இதனால் உறுப்புக்களை மிக்க அசைத்து நடிக்கும் உறுப்பவிநயம் இதன்கட் பெரிதும் அமைதல் வேண்டும் என்பதாம்; சுவைப்பொருளைப்பற்றியும் உறுப்பவிநயம் நிரம்பியும் உள்ள நிருத்தியம் என்னுமிக்கூத்தை ‘மார்க்கம்’ எனக் கூறுப.

[8] தாளம்—இசையை அளவு படுக்குங் கால வேறுபாடாம்; அத்தாளம், சச்சற்புடம் ஆதியாய் ஐவகைத்து.

[9] இலயம் — தாளங்களின் இடைநிகழுங்காலத்தை ‘இலயம்’ என்ப; அது விளம்பம், மத்திமம், துரிதம் என முத்திறத்து.

[10] நிருத்தம் — தாளம் இலயம் என்னுமிரண்டையும் பற்றி  நிகழுமிது தேசிகம் என்னும் பெயர்த்தாம்.

[11] உறுப்பாகலான் — சிலவிடத்து உள்ளடங்கிய சொற்பொருளவிநயத்தானும், நாடகவனப்பிற்கேதுவாகலானும் நாடகத்தில் இவையிரண்டும் பயன்படுதலான் உறுப்பெனக் கூறப்பட்டது.

[12] நிருத்தியம் இனிய சுவைப்பொருளைப் பற்றியதாகலின் இதனை இலாசியம் என்றும், நிருத்தம் வலியதானத்தைப் பற்றியதாகலின் இதனைத் தாண்டவம் என்றும் கொள்ளவேண்டும்.

[13] கதை — இதனை இதிவிருத்தம் என்றுங்கூறுப. அங்ஙனமே பாவப்பிரகாசத்திலும் கூறப்பட்டுள்ளது.

“கவிகளானிருமிக்கப்பட்ட பிரபந்தத்தின் வடிவமே இதிவிருத்தமென நாட்டியாவிநயமுணர்ந்தோர் கூறுவர்” அது ஆதிகாரிகம் பிராசங்கிகம் என இருவகைத்து; அவற்றுள் ஆதிகாரிகம்:- அதிகாரம் பயனுரிமை அதனையுடையவன் அதிகாரி — தலைவன்; அத்தலைவனைப் பற்றியது ஆதிகாரிகம் ஆம்; இதனால் இக்கதை, இராமாயணப் பெருங்காப்பியத்தில் சீதை இராமன் இவரது சரிதம்போல சிறப்புடைத்தென்பது புலனாம். பிராசங்கிகம்:- பிரசங்கம் — தொடர்பு; அதைப்பற்றி நிகழ்ந்தது ஆம்; அப்பிராசங்கிகம், பதாகை பிரகரீ என இருவகைத்து; அவற்றுள், பதாகை சுக்கிரீவன் முதலினோரது சரிதம்போல நெடுந்தொடர்புடையது. பிரகரீ — சடாயூ சபரீ முதலினோரது சரிதம்போல சிறுதொடர்புடையது. இங்ஙனம் ஒருபடித்தாகிய ஆதிகாரிகமும் இருபடித்தாகிய பிராசங்கிகமும் என்னும் முத்திறத்த கதைகளும் முன்னரே பெற்றாமெனக் கொண்டு மீண்டும் முத்திறத்தெனக் கூறினான் என்க.

[14] பிரக்கியாதம் — மகாவீரசரிதம் முதலியன.

[15] உற்பாத்தியம் — மாலதீமாதவம் முதலியன.

[16] மிசிரம் — உத்தரராமசரிதம் முதலியன.

இத்தகைய மூவகைக்கதைகளும் ஆதிகாரிகம் பதாகை பிரகரீ என்னுமிவற்றால் தனித்தனி மும்மூன்றாக அக்கதைகள் ஒன்பது வகையவாம்; அவைதாம், தேவரைப்பற்றியவும் மக்களைப்பற்றியவும் இருபேரைப்பற்றியவும் என மீண்டும் முத்திறத்தவாக்கொள்வேமெனில் வேறு பல வேறுபாடுகளையும்  நிகழ்த்தல் எளிதேயாம்; ஆயினும் அவை இலக்கியவாயிலாக உணரற்பாலனவென விரிவஞ்சியிங்குக்கூறப்பட்டில.

[17] பயன் — ஈண்டு திரிவருக்கவடிவினதாம். அத்திரிவருக்கமாவது அறம் பொருள் இன்பம் என்னும் இம்மூன்றன் குழு; இம்மூன்றனுள் ஒன்றைச் சிறப்பாக உடையதுதென்பதாம்.

[18] பயனை — திரிவருக்கமாகிய அறம் பொருளின்பங்களை. இதனால் விளையும் பயன் அற்பமில்லையென்பது போதரும்.

[19] அவா — காலத்தாழ்வைப் பொறாது ஆசைப்பெருக்கம். இதனால், தலைவன் பயனெய்தற்கியற்றுஞ் செயல் இயல்பானமையு நிலையினின்றுஞ் சிறிது மேம்பாடெய்து நிலை தொடக்கம் என்பது பெற்றாம்

[20]தொடக்கம் முதலிய எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டுக்கள் பின்வரும் நாடகத்தின்கட் கூறப்படுமாகலின் இங்கண் இலக்கணமொன்றே கூறப்படுகின்றது.

[21] பயன் பேறில் வழி அப்பயன்களைப் பெறுவதற்குரிய உபாயங்களை மிக விரைந்தாற்றுஞ் செயலென்பது கருத்து.

[22] உபாயம் — பயனெய்தற்குரிய சாதனம்; அபாயசங்கை—கேடு  நிகழுமோ என்னும் ஐயம்; இவையிரண்டும் பொருந்தலாற் பயன் பேறு துணியப்படா நிலை பிரத்திநசையென்பதாம்.

[23] இடையூறியற்றும் எதிரிகள் விலகிய வழி பயன் வந்தெய்துமென்னும் மனத்துணிவு பிராத்தித்துணிவு என்பதாம்.

[24] எல்லாப்பயனும் — அறவே ஊறுஒழிதலாற் பயனெய்தல் ஒருதலையென்பது கருத்து.

[25] பீசம் — ஈண்டு விதைபோன்ற விதையெனக்கொள்ளல் வேண்டும். அவ்விதை முதலிற் சிற்றளவிற் காணப்பட்டுப் பின்னர் அடிமரம் சினை இலை முதலிய பலவாகவிரிதல் போல, இந்த பீசமும், தலைவன், துணைத்தலைவன், எதிர்த்தலைவன் என்னும் வேறுபாடுகளான் விரிவெய்தி அறம் பொருளின்பங்கட்கேதுவாய் நிற்கும் என்பதாம்; அப்பீசமும் தன்வயத்த சித்தியுடைத் தலைவன் பால் அத்தலைவனது உற்சாகவடிவினதும், அமைச்சர் வயத்த சித்தியுடைத் தலைவன் பால் அவ்வமைச்சரது உற்சாகவடிவினதும், இருசித்தியுடைத் தலைவன் பால் இருபேரது உற்சாகவடிவினதும் ஆம் என அறியற்பாலது. இங்கண், வேட்பிப் போனது செயல் இயமானற்கே பயனை விளைத்தல் போல அமைச்சரது உற்சாகமும் தலைவற்கே பயன் விளைக்கும் என்பதாம்.

[26] அழிவு — ஈண்டுச் சந்தர்ப்பவன்மையாற் சிறப்புப் பயனுடைய அழிவையுணர்த்தும். அப்பயன் அழிவுறாமைக் கேதுவே பிந்து என்பதாம்; தைலவிந்து நீரிற் பரந்து நிற்பது போல பயனழிவுறாமைக்கு அவ்வேது விரிந்து நிற்குமென்பது கருத்து.

[27] விரித்துரைத்தற்குரிய கதையினும் குறுப்பாய் என்னும்மிவ்வடைமொழி, இராமன் முதலிய தலைவரது செயல்வடிவாகிப் பயன் கருதி நிகழ்ந்தமையாற் சிறப்பெய்திய கதைக்கு உறுப்பாதலையுணர்த்தும்; அவ்வுறுப்பாகிய கதை — சுக்கிரீவன் முதலிய துணைத்தலைவரது செயல் வடிவினதாம்.

[28] பிரகரிகை — சிறு குவியல்; அது மலர்க்குவியல் என்பதாம்; அம்மலர்க்குவியல், தனக்கொரு வனப்பின்றிப் பிறவற்றை யழகுபடுத்தல் போல, பருவச்சிறப்பு சடாயுச் செய்தி முதலிய கதைப்பகுதிகளாகிய பிரகரிகையும் தனக்கொரு பயனுமின்றிச் சிறப்புறுங்கதைக்கே பயன் விளைக்குமென்பது கருத்து.

[29] பயன்கள் — ஈண்டு அறம்பொருள் இன்பங்களை யன்றிப் பிறவற்றை; அதனால் திரிவருக்கங்களாகிய பயனற்ற பிரகசனம் முதலியவற்றில் பீசம், சுவைத்தோற்றத் தளவையில் ஏதுவாம் என்பது புலனாம்.

[30] காரணப்பெயர் — இதனால் அவ்வவ்வுறுப்பின் பெயரையுணர்த்துஞ் சொற்களின் பொருளால் அவற்றின் இலக்கணம் விளங்குமென்பதுபற்றி தனிப்பட்ட இலக்கணம் கூறவேண்டாவென்பது போதரும்.

[31] காண்டற்கரியதும் — சிறப்புறும் பயனுக்குதவியாக அங்கந்தொறும் கூறும் பல பயன்களுள் வெளிப்பட்டுத் தோன்றுஞ் சில பயன்கள் காண்டற்குரியனவும் அங்ஙனம் வெளிப்படாத சில பயன்கள் காண்டற்கரியனவும் ஆம் என்று ஒருசாரார் கூறுவர்.

[32] கருப்பசந்தி — பிரதிமுகசந்தியில் தோன்றிமறைந்த பொருளாகிய பீசம் கெட்டொழியுமோவென்னும் ஐயத்தான் மீண்டும் மீண்டும் அதனைத் தேடுதலாம்; இங்கண் பதாகை விகற்பமாகலான் அஃதில் வழி யந்நிலையில் பீசம் பிந்து இவற்றுள் ஒன்றைப் பிராத்திநசையோடியைத்துக் கோடல் வேண்டும் என்னும் இக்கருத்தை, கோகலர் என்னும் அணிநூலாசிரியர் கூறுவர்.

[33] யாதாமொரு ஏதுவால் — வெகுளி விதனம் என்னும் இவை முதலியவற்றுள் யாதாமொன்று ஏதுவாகுமென்பதாம்; இவ்வேதுவால் நிகழ்ந்ததும், கருப்பசந்தியில் வெளிப்போந்த பீசப்பொருளைப் பற்றியதும் பயன் பேறு மாத்திரையிலெஞ்சியதுமாகிய ஆராய்ச்சித் துணிபு கருப்பசந்தியாம் என்பது இதனாற் போதரும்.

[34] சிறப்புறும்பயன் — எப்பயனைப்பற்றிக் காப்பியம் நிகழ்ந்ததோ அப்பயன் என்பதாம்.

[35] உறுப்புக்களுக்கு — உபட்சேபம் முதலிய அறுபத்து நான்கு உறுப்புக்களுக்கும் யாண்டு காரிய காரண இயைபு நிகழ்கின்றதோ ஆண்டு நிறுத்தமுறை கோடற்பாலது; அவ்வியைபில்வழி அம்முறை கோடற்பாலதின்று. பொருளுண்மையை ஆராய்தலில் நிறுத்தமுறையைக் கோடற்கு காரணமின்மையானும் இலக்கியங்களில் அம்முறை காணப்படாமையானுமாம். அங்ஙனமே கூறப்பட்டுள்ளது. “கதை தலைவன் சுவை யென்னுமிவை முதலவற்றிற்கேற்ப உறுப்புக்களை இயைத்தல் வேண்டும்; இங்கண் அவ்வுறுப்புக்களை நிறுத்தமுறையானே யியைத்தல் வேண்டற்பாலதின்று” என்று. அவ்வுறுப்புக்களைச் சிறப்புறுங் கதையோடியைத்தலே தக்கதெனக் கூறுமாலெனின் அற்றன்று; மாறுபட இயைத்துக்கூறினும் குற்றமின்மையான். அங்ஙனமே நாடகப் பிரகாசத்திலுங் கூறப்பட்டுள்ளது:- “உபட்சேபம் முதலிய உறுப்புக்களைச் சிறப்புக்கதையைப் பற்றியாதல் தொடர்புக்கதையைப் பற்றியாதல் இடம் பொருட்கேற்ற பெற்றி வனப்புறும் வண்ணம் நூல்களில் அமைத்தல் வேண்டும்” என்று.

[36] சூச்சியம் — வார்த்தையளவிற் றெரிவித்தற்குரிய கதை; அது சுவையற்றதும் தகுதியற்றதும் ஆம்.

[37] அசூச்சியம் — காண்டற்குரியதும் கேடற்குரியதும் ஆகிய கதையை; அவற்றுள் காண்டற்குரியது, இனிமை பெருமை சுவை குறிப்பு என்னுமிவை நிரம்பியிருக்கும் கதையாம். கேட்டற்குரியது, யாவரானுங் கேட்டற்குரியதும் அங்ஙனம் கேழ்க்கத் தகாததும் என இருவகைத்து. அங்ஙனம் கேழ்க்கத் தகாதது என்றமையாற் குறித்த சில பாத்திரங்கள் கேட்டற்குரியல்லர் என்பது போதரும்; இதனை, சநாந்திகம் என்றும் அபவாரிதகம் என்றுங் கூறுப.

[38] பாத்திரங்கள் — ஈண்டு, நாடகத்தில் அவிநயஞ் செய்தற்குரிய தலைவன் றலைவி முதலியோரது வேடத்தைப் புனைந்து கொள்வோராவர்; அப்பாத்திரங்கள் தலையிடை கடை யென முத்திறத்தவாம்.

[39] விட்கம்பம் — “முதலங்கத்தில் முன்னுரை கூறிய பின்னர் இதனையமைத்தல் வேண்டும்” என்பது போஜராஜனது கருத்து; பின்வரும் அங்கங்களின் இடையில் அமைத்தல் வேண்டும் என்பது ஏனையோர் கருத்து.

[40] சுத்தம் — ஒரு இடைப் பாத்திரத்தானிகழ்வதும் பல இடைப்பாத்திரங்களானிகழ்வதுமென இருவகைத்து; கடையிடைப்பாத்திரங்களானிகழுங் கலவையோ, ஒரு படித்தேயாம்; இதனால் விட்கம்பத்தில் தலைப்பாத்திரங்களாகிய தலைவன் றலைவிமார்க்குப் பிரவேசம் இல்லையென்பது பெற்றாம்.

[41] முன்னைய அங்கத்தின் — இது, முதற்கண் அணிமையிலுறும் அங்கத்தையுணர்த்தும்; “யாதாமொரு முன்னைய அங்கத்தின் முடிவிலமையும் பாத்திரங்கள்” என்னும் ஐயப்பொருள் நிகழலாகாதென்பான் முன்னைய அங்கத்து முடிவில் என்றான்.

[42] கடைப்பாத்திரங்கள் — சேடன் சேடீ முதலியோர்; ஒருபாத்திரமாதல் இருபாத்திரங்களாதல் பலபாத்திரங்களாதல் இடைப்பாத்திரங்களோடியைபின்றிப் பேசுவது, பிரவேசகம் ஆம்.

[43] அறிவிக்கப்படாத — முன்னங்கத்தில் வெளிப்போந்த பாத்திரங்களே பின்னங்கத்திலும் தொடர்ந்து வருதலான் அறிவிக்கப்படாத பாத்திரமெனக்கூறினான் என்க; இதனால் இது விட்கம்பம் முதலியனவின்றி நிகழும் என்பது பெற்றாம்.

[44] இவற்றால் — விட்கம்பம் முதலியவற்றால்..

[45] பிந்து — இஃது அழிவெய்தற்குரிய பீசத்தை அழிவுறாவண்ணம் பல ஏதுக்களைப் பரவச் செய்வது; அத்தகைய பிந்துவை வெளிப்படுத்தற்குக் கூறுபாடெய்தியதென்றமையான் அங்கந்தொறும் பீசத்தின் நன்னிலையைப் புலப்படுத்தல் வேண்டும் என்பதாம்.

[46] அங்கம் — இதிற் றொலைவழி கொலை போர் நாடு நகர் முதலியவற்றின் குழப்பம் தடைப்படுத்தல் உணவு நீராடல் புணர்ச்சி நறுமணப்பூச்சு ஆடையுடுத்தல் என்னுமிவற்றைக் காட்சியளவையிற் காட்டலாகாது; தலைவனது ஒரு பகற் செய்தியைக் கூறுவது; விதூடகன் முதலிய மூன்று நான்கு பாத்திரங்களானும் நிகழ்வது ஆம். எல்லாப் பாத்திரங்களின் நீக்கம் அங்கத்தின் முடிவும் ஆம் என்னுமிது முன்னையணி நூலாசிரியர் கருத்திற்கேற்ப ஈண்டும் அதனிலக்கணம் கொள்ளற்பாலது.

[47] இனி, காப்பியப் பொருளை முற்றுந் தெரிவிக்கும் பாரதீ விருத்தி, விளக்கற்பாலது; அப்பாரதீவிருத்திக்கு, ஆமுகம் பிரரோசனை வீதி பிரகசனம் என்னும் உறுப்புக்கணான்காம்; அவற்றுள் வீதி பிரகசனம் இவ்விரண்டையும் நூற்றொடக்கத்தின்கண் மிகுதியும் எடுத்தாளாமையாற் கூறியும் கூறப்படாத அளவில் அமைதலானும், பத்துவகை யுரூபகங்களுள் இவை சிறப்புவகையாகக் கூறப்பட்டிருத்தலானும், அவ்வுரூபகங்களின் இலக்கணத்தை விளக்குங்கால் இவற்றின் இலக்கணமும் கூறப்படுமென இங்கட் கூறாது விடுத்தார். பிரரோசனைக்கோ என்னில் சிற்றிலக்கணமாகலின் நாடக எடுத்துக்காட்டிற் கூறுமவ்வளவில் அஃதமையுமென்று கூறாது விடுத்து ஆமுகத்தைக் கூறுகின்றார்; எனினும், பிரரோசனை — காப்பியம் கவி நடிகர் என்னுமிவர்களைச் சூத்திரதாரன் புகழ்ந்துரைக்குமாற்றால் அவையினரைத் தன் வயப்படுத்தி நடிக்கப்புகும் நாடகத்திலவர்க்குப் பேரவாவிளைக்குஞ் செயலாம்; என்னுமிக்குறிப்பு சந்தர்ப்பத்தை நோக்கி இங்கண் வரையப்பட்டது.

[48] சூத்திரதாரன் — நாடகத்திற்குச் சூத்திரதாரர் இருவர் உளர்; ஒருவன் முன்னரங்க வழிபாடாகிய நாந்தியென்னும் மங்கலம் பாடுவோன்; மற்றவன், நடத்தாபகன் என்னும் பிறிதொரு பெயரையும் எய்தி முதற்சூத்திரதாரனையொத்த குணம் உருவம் இவற்றையுடையனாய் பிரத்தாவனையை நடாத்துவோனாவன்; அதனை நடாத்துங்கால், நடிப்பது கடவுட் கதையாயின் அச்சூத்திரதாரன் கடவுள் வடிவினனாகவும், மக்கட்கதையாயின் மனிதவடிவினனாகவும், கலவைக்கதையாயின் அவ்விருவருள் ஒருவரின் வடிவினனாகவும் தோன்றி கதை முதலியவற்றைத் தெரிவித்தல் வேண்டும். காப்பியத் தலைவன் கவியிவரது குணங்களை விதந்து கூறியும், கதைப்பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தும், அரங்கத்தையணிப்படுத்துந் திறலமைந்தவன், சூத்திரதாரன் என்று கூறப்படும் என்று பாவப்பிரகாசநூல் கூறும். நபீ — சூத்திரதாரனுடைய மனைவி; இவள், நரப்பு கருவி முதலிய நால்வகை வாச்சிய வேறுபாடுகளையுணர்ந்தும், அக்கலைகளிற் சிறந்தும், அவிநயங்களை யுணர்ந்தும், எல்லாப்பாடைகளையும் பேசுந்திறலமைந்தும், செயற்குரிய வினைகளில் நடனைப் பின்பற்றியும் இருப்பவள் ஆம். மாரிடன் — இவனைப் பாரிபாருசுவகன் என்றுங் கூறுவர்; பலசுவைகட்கு நிலைக்களனாகிய குறிப்பைக் கூத்தர் அவிநயஞ் செய்யுங்கால், மருங்கிருந்து அதனைச் செம்மைப்படுத்துமியல்பினன் ஆவன். விதூடகன் — அமையத்திற்கேற்ப நுண்ணிய அறிவுடையனும், தலைவன் இன்பமெய்தற்குரிய நால்வகைப் பிரயோகங்களை யுணர்ந்தவனும், வேதங்களைக் கற்றுணர்ந்தவனும், நகைவிளைக்கும் இன்பமொழி கூறுவானுமாவன்.

[49] தன் செயல் — இது, அவையோர் விரும்பிய நாடகத்தை நடித்து, அவர்களை யின்புறுத்தலாகுஞ் செயலையுணர்த்தும்.

[50] நிகழவிருக்குஞ் செயல் — இது, காப்பியப்பொருள்வடிவாகிய கதை பீசம் முகம் பாத்திரம் என்னும் இந் நான்கையுமுணர்த்தும்.

[51] இருவகைப்படும் — சொற்றொடரை மேற்கோடலானும், அதன்பொருளை மேற்கோடலானுமாம்.

[52] உறுப்புக்களாகலான் — இவ்வேது வீதி ஆமுகம் என்னுமிரண்டிற்கும் உறுப்பு வேறுபாடின்மையான் ஈண்டுக்கூறல் முரண்படாவென்பதை யுணர்த்தும்; இங்ஙனமாயின் வீதி ஆமுகம் என்னும் உறுப்பிகட்குப் பெயரளவில் வேறுபாட்டைக் கொள்வேமெனின்; அற்றன்று. வீதிக்கு, கதோற்காதம் முதலிய சிறப்புறுப்புக்களின்மையும், சூத்திரதாரன் முதலியோரது சேர்க்கையின்மையும், உற்காத்தியகம் முதலிய எல்லா உறுப்புக்களின் இன்றியமையாமையும் அமைகின்றன; ஆமுகத்திற்கோ எனின் இவை யாவும் வேறுபட்டனவாமாகலின் வீதியும் ஆமுகமும் வேறுபட்டனவென்பது கருத்து.

[53] தோடங்கள் — பிறன்மனைவிழைதன் முதலியன; அத்தகைய தோடங்கள் நிரைந்த சொற்களால் ஒருவரையொருவர் துதி செய்து நகையை விளைத்தல் பிரபஞ்சம் என்பதாம்.

[54] முதலியோர் — இது மாரிடன் சூத்திரதாரன் இவர்களை. முன்னரங்கத்தில் இம்மூவரும் கூடிப்பேசுதல் திரிகதம் ஆம்.

[55] ஈண்டு — இது பிரத்தாவனையென்னும் ஆமுகத்தையுணர்த்தும்.

[56] ஒற்றுமை — ஈண்டு ஒலிகளின் ஒற்றுமையை உணர்த்தும்.

[57] அவாய்நிலை — பொருண் முடிவுறாது எஞ்சி நிற்பது. இதனை வடநூலார் ஆகாங்கிஷை என்ப.

[58] அழுக்காறெய்தல் — தத்தம் திறமையை வெளிப்படுத்தற் பொருட்டாம்.

[59] கண்டம் — பொருண் மாற்றத்தால் சந்தர்ப்பத்திற்கேற்படி பொருந்தக் கூறல் என்று தசரூபகம் கூறும்.

[60] இயைபிலாப்பொருள் — ஈண்டு இயைபின்மை, சுவை கனவு உன்மாதம் இளமை என்னுமிவை முதலியவற்றைப் பற்றி நிகழ்வதெனக் கொள்க; இதனால் இதுமாறுகொளக்கூறல் என்னும் குற்றமாகாதென்பதாம்.

[61] இது எதிர்மறைப் பொருளாகிய குணத்தைக் குற்றமாக வெளிப்படுத்தற்கும் உபலக்கணம் ஆம்.

[62] சிலவற்றை—இதனால் பிரத்தாவனையில் இவ்வுறுப்புக்களை நிறுத்த முறையானே முற்றுங் கூறவேண்டா என்பது போதரும்.

[63] சிறப்பு — பெருமிதம் உவகை யென்னுமிவற்றுள் ஒரு சுவைக்குச் சிறப்பு என்றமையான் இவற்றுள் ஒன்று உறுப்பியாகவும் பிறசுவைகள் உறுப்புக்களாகவும் அமைவனவாம்.

[64] பகுதி — ஈண்டு — இங்ஙனம் செய்யக்கடவது என்று எல்லா உறுப்புக்களுடன் சிறப்பு முறையானே எதற்கு விதி நிகழ்கின்றதோ, அது பகுதியாம். எல்லா உறுப்புக்களையும் விதிமுகத்தாற் கூறாதவழி பிறாண்டு விதிக்கப்பட்ட உறுப்புக்களைக் கூறவிரும்புங்கால் “அது போல இது செய்யக்கடவது” என்னும் அதிதேசத்தால் எதற்கு விதிக்கப்படாத உறுப்புக்கள் கூறப்படுகின்றனவோ, அது விகுதியாம்; இம்முறையே பற்றி இவ்வுழியும் ஐந்து சந்திகள் உறுப்புக்கள் முதலிய யாவற்றையும் விதி முகத்தாற் கூறி நாடக நூலை அமைத்தலான் அதிதேசத்தாற் சித்திக்கும் உறுப்புக்களையுடைமையால் விகுதிகளாகும் பிரகரணம் முதலியவற்றிற்கு நாடகம் பகுதியென்பது புலனாம்; இது பற்றியே ஆசிரியர் நாடக இலக்கணத்தை முதற்கட் கூறினர் என்க. அதிதேசம் — ஒப்புமை காட்டியுணர்த்துவது.

[65] நாந்தீ — நாடகத் தொடக்கத்தில் அஃதிடையூறின்றியினிது நிறைவுறற் பொருட்டுச் செய்யப்படும் அரங்கவழிபாடு, முன்னரங்கமென்பதாம்; அத்தகைய முன்னரங்கத்திற்கு பிரத்தியாகாரம் முதல இருபஃதிரு உறுப்புக்கள் உள்ளனவெனினும் அவற்றுள் நாந்தியின்றியமையாத உறுப்பாமாகலின் ஊறொழிவுறற்கு அதனை முதற்கட் செய்தல் வேண்டுமென்பதாம்; அதுபற்றியே அதனிலக்கணங் கூறப்பட்டதென்பதாம்.

[66] சுலோகம் — அந்நாந்திச்சுலோகம், சந்திரன் பெயர் அமைந்தும், மங்களப்பொருளவாகிய சொற்கள் பெரிதும் மலிதரவிளங்கியும், வாழ்த்து, வணக்கம், கதைத் தொடக்கம் என்னுமிவற்றுள் ஒன்றைப் பற்றியுமிருத்தல் வேண்டும் என்னுமிவ்விலக்கணமும் ஈண்டு உணரற்பாலது.

[67] சொன்னியமம் — இது இத்துணைச் சொற்கள் இருத்தல் வேண்டுமென்னுங் கட்டுப்பாடு.

[68] அரங்கவழிபாடு — நாந்தி கூறிய முதற் சூத்திரதாரன் சென்றபின்னர், அவ்வரங்கத்துட் புகுந்த இரண்டாமவனாற் செய்யப்படுவது; அதன் முறைவருமாறு:- அரங்கத்தலைவன் அமர்ந்திருக்குங்கால் திரைநீக்கப்பட அங்கண் வெளிப்போந்த பாத்திரங்கள், புட்பாஞ்சலிகளையிறைத்து அவ்வரங்கத்தை யணிப்படுத்தி, ஆடல் பாடல் வாச்சியம் என்னும் இவற்றை ஒருங்கமைத்தாதல், பாடல் வாச்சியம் என்னுமிரண்டையமைத்தாதல், மூன்றையுந் தனித்தனி புரிந்தாதல் அவ்வரங்கமாந்தெய்வத்தை வழிபடுதல், அவ்வரங்கத்துட் புகுந்தாரனைவரும் தொன்று தொட்டுச் செய்து முறையாமெனச் சங்கீதரத்தினாகரம் கூறும்.

[69] பருவகாலமொன்றை — நாடகத் தொடக்கத்திற் பாரதீவிருத்தியானமைந்த செய்யுளாற் பருவங்களாறனுள் ஒன்றைப் பற்றிப் பாடல் வேண்டுமென்பதாம்.

[70] இங்கட் கூறிய இலக்கணத்தோடு, நாடகம், ஐந்து அங்கங்கட்குக் குறைவுறாதும், பத்து அங்கங்கட்கு மிகாதும் செயற்பாலதென்னு மிஃதும் ஈண்டு அறியற்பாலது.

[71] இவ்வடைமொழி, அத்தலைவன், அமாத்தியன் அந்தணன் வைசியன் இம்மூவருள் ஒருவனும், அறம்பொருலின்பப் பற்றுடையனுமாதல் வேண்டும்; அவன்றனது பயனுகர்ச்சி, பலவிடையூறுகளாற்றடைப்பட அவை நீங்கிய வழியதனை யெய்துபவனுமாவன்; என்னுமிப்பொருளையுமுணர்த்தும். மேலும் இப்பிரகரணத்திற் றலைவி, குலமகளாதல் விலைமகளாதல் இருவருமாதல் அமைதரவேண்டும் அதற்கேற்ப விப்பிரகரணமும் மூவகைத்தாம்; இருவரும் பொருந்திய மூன்றாமதிற் சிறப்பு வகையாற் காமுகர் நிறைந்திருத்தல் வேண்டும் என்பதும் இதற்கிலக்கணம் ஆம்.

[72] நாடகத்தையொப்ப — இஃது ஒப்புமை காட்டி யுணர்த்தலான் அதிதேசம் ஆம்; இங்ஙனமே மேல் வருவனவற்றிற்கும் அமைவிற்கேற்றபெற்றி பகுதி விகுதிகள் உய்த்துணரற்பாலன. இதனால் பகுதியாகிய நாடகத்திற்குப் பிரகரணம் விகுதியென்பது போதரும்.

[73] பிரகரணம் — மிகையாக்கலென்பது இதன்பொருள்; இதற்குச் சந்தி ஆமுகம் பிரவேசகம் சுவை யென்னும் இவை முதலியவற்றைப் பிற விகுதிநூல்களினும் மிகைபடச் செய்தலான் இஃது இப்பெயர்த்தாயிற்று.

[74] விடனுடைய சரிதம் — இது, சூதன் முதலியோர்க்கும் அவரது சரிதங்கட்கும் உபலக்கணம் ஆம். விடன் தன் செய்திகளையாதல் பிறன்செய்திகளையாதல் உரைத்தல் வேண்டுமென்பதும் இங்கட் கொள்ளற்பாலது. அன்றியும் ஒரே பாத்திரத்தின் பிரவேசத்தானிகழுமிப்பாணத்தில், வானுரை செயற்பாலது; அதாவது, பிறிதொருவனுடன் உரையாடி மறுமொழி கூறியாங்கு வானத்தை நோக்கி “என்ன கூறுகின்றனை? இங்ஙனமா கூறுகின்றனை? யென மற்றவன் கூற்றையநுவதித்து அவற்கு மறுமொழி கூறுமுகமாகத் தொடங்கிய விடயத்தையெடுத்துக் கூறலேயாம்; இதனை வடநூலார் “ஆகாச பாடிதம்” என்ப.

[75] பாணம் — விடனொருவன் தன் கதையையாதல் பிறன் கதையையாதல் பணிக்கின்றான் என்னும் பொருள் பற்றி இது பாணம் என்னும் பெயர்த்தாயிற்று.

[76] பிரகசனம் — பெருநகையென்பது பொருள்; பெருநகைவிளைக்குஞ் சொற்கள், இந்நூலிற் பெரிதும் விரவியிருத்தலால் இஃது இப்பெயர்த்தாயிற்று.

[77] பாசண்டர் — பௌத்தராதியர்

[78] முதலியோரென்றமையான் வைசியர் முதலியோருமாம்.

[79] அவரவர்க்குரிய வேடம் பாடையென்பது கருத்து.

[80] தூர்த்தர்கள் — கள்வர் சூதர் முதலினோர்.

[81] பிரக்கியாதம் — முப்புரமெரித்த காதை முதலியன.

[82] நகை உவகை யென்னுமிச்சுவை நீங்கிய என்றமையான் சமநிலைக்குத் தோற்றுவாயேயின்றென்பது கருத்து.

[83] மாயை — முன்னர் இயற்கையானமைந்த உருவொன்றிலாப்பொருளை நல்லுருவுடைத்தெனத்  தொற்றுவித்தலும் ஒன்றைப் பிறிதொன்றாக்கலும் ஆம்.

[84] இந்திரசாலம் — காட்சியளவையைக் கடந்த பொருட்கு இடத்தைப்பற்றியும் காலத்தைப்பற்றியும் நிகழும் அதிருசியத்தன்மையைப் போக்கி மந்திரம் மருந்து முதலியவற்றால் அதனைக் காட்சிக்குரியவாகச் செய்தல் இந்திரசாலம் என்பதாம்.

[85] முதலியனவும் — இதனால் விண்வீழ்கொள்ளி இடியேறு முதலியன கொள்ளற்பாலன.

[86] இடிமம் — இது ‘டிம’ என்னுங் கூட்டப்பொருன வினைப்பகுதியினடியாகப் பிறந்த சொல்லாகலின் பதினாறுவராகிய தலைவரது கூட்டத்தாற் சிறப்பெய்துமிந்நூல் இடிமம் என்னும் பெயர்த்தாயிற்று.

[87] என்றமையான் — நகை உவகை சமநிலை யென்னுமிச்சுவை கணீங்கிய பிற அறுசுவைகளும் இங்கட் கொள்ளற்பாலன.

[88] பெரும்போரைப்பற்றிய — மகளிர் நிமித்தமாக நிகழாத போரை; அது, மழுவாளிவெற்றி முதலியன.

[89] வியாயோகம் — வி.ஆ. — என்னும் அடையுருபோடியைந்த ‘யுஜ்’ என்னும் வினைப்பகுதினடியாகப் பிறந்த சொல்; இது பலர் குழுமி வினை செயமுற்படலையுணர்த்தும்; இதனால் இப்பெயரிய  நூலை பலர் குழுமி நடித்துக் காட்டுவர் என்பது போதரும்.

[90] தனிப்பயனை — செயலொன்றிற் றலைப்படும் பல தலைவர்க்கு அதனால் விளையும் பயன் அவரவர் விரும்பியாங்கு வெவ்வேறென்பதாம். அங்ஙனமே பாற்கடலைக் கடைய முற்பட்ட பலதேவர்களும் அமுதம் இலக்குமி கௌத்துபம் முதலிய பயன்களைத் தனித்தனியெய்தியமை காண்க.

[91] மூன்று அங்கங்கள் — முதல் அங்கத்தில் முகசந்தியும் பிரதி முகசந்தியும், இரண்டாம் அங்கத்தில் கருப்பசந்தியும் மூன்றாம் அங்கத்தில் நிருவகணசந்தியும் அமைக்கப்படல் வேண்டும் என்பதாம்.

[92] கொடிய விலங்கினத்தானிகழுந்தீங்கு இயல்பாம்.

[93] மூவகைவித்திரவம் — அஞ்சிவிரைந்தோடல்; அது நகர் முற்றுகை போர் இவற்றானும் நெருப்பானும் கொடிய விலங்கினத்தானும் நேர்வதாமென மூவகைத்தாம்.

[94] உவகைமூன்று. விரதம் முதலியவற்றானிகழும் உவகை அறஉவகையென்றும், அரசியன் முதலிய பொருட்பற்றானிகழும் உவகை பொருளுவகையென்றும், பிறன்மனை விழைதல் கட்குடி முதலியவற்றானிகழ்வது இன்பஉவகையென்றும் மூன்றாம்.

[95] முறையே — முதல் அங்கத்தில் மூன்று கபடங்களும், இரண்டாம் அங்கத்தில் மூவகைத் துன்பங்களும், மூன்றாம் அங்கத்தில் மூவகையியல்புக்களும் கூறல் வேண்டும்.

[96] சமவகாரம் — சம் அவ. என்னும் அடையுருபோடியைந்து ‘இறைத்தல்’ என்னும் பொருளதாகிய * என்னும் வினைப்பகுதியனடியாகப் பிறந்த சொல்; பலபுறத்தும் விடயங்களைச் சிதறிய நிலையில் அமைத்திருத்தலான் இந்நூல் இப்பெயர்த்தாயிற்று.

[97] மிக்க அறிவித்து என்றமையான் பிற சுவைகள் சிறுபான்மை தெரிவிக்கற்பாலனவென்பது போதரும்.

[98] வீதிபோல — இவ்வுவமை, உற்காத்தியகம் முதலிய உறுப்புக்களை வரிசையாக அமைத்தல் வேண்டும் என்பதை உணர்த்தும்; மேலும் வீதியென்னுமிந்நூலில் பாத்திரமொன்றையாதல் இரண்டு பாத்திரங்களையாதல் அமைத்தல் வேண்டும் என்பதும் மகளிர் கூத்தின் பத்து உறுப்புக்களையும் இங்கண் அமைத்தல் வேண்டும் என்பதும், காதனிரம்பிய பொதுமகளையாதல் பிறன்மனையையாதல் தலைவியாக்கல் வேண்டுமென்பதும் கொள்ளற்பாலன. இதனால் குலமகள், இந்நூற்குத் தலைவியாகாள் என்பது புலனாம்.

[99] பிரக்கியாதமாதல், உற்பாத்தியமாதல் கதையமையுமென ஒருசாராசிரியர் கூறுவர்.

[100] மூன்றுசந்திகள் — கருப்பசந்தியும் விமருசசந்தியும் நீங்கிய மூன்று சந்திகள் என்பதாம்.

[101] போலிச்சுவை — சிறிதுங் காதற் பற்றில்லாத தலைவியைத் தலைவன் காதலித்தலாற் போலிச்சுவையென்று கூறப்பட்டது.

[102] கொலை நீங்கிய போர் — இது ஆட்டுச்சண்டை போல பயனற்றதென்பது கருத்து; இதனால் போர்ச்செயலினது பயன் கொலையென்பதாம்.

[103] ஈகாமிருகம் — பெறற்கரிய பெட்டையை விரும்பும் விலங்கினம் போல, தலைவனும் பெறற்கரிய தலைவியை விரும்புகின்றானாதலின் இந்நூல், மிருகம்போல விரும்புகின்றான் என்னும் பொருள் பற்றி இப்பெயர்த்தாயிற்று.

[104] இவ்விலக்கணம் — இது பத்துக்காட்சி நூற்களின் இலக்கணத்தை யென்பதாம்.

 

Leave a comment